செவ்வாய், 8 நவம்பர், 2011

மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம்


ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011 

12 திருமுறைகள்

மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம்  

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க     

மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம்

348. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
திருச்சிற்றம்பலம்
967. ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல்
கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார் இடுபலி தலைகல
னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம்
புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்திஆர் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.
தெளிவுரை : ஈசன், பேராரவாரத்துடன் பெருகி ஓங்கும் கங்கையைச் சடைமுடியில் வைத்து விளங்குபவர்; பிரம கபாலத்தைப் பிச்சை கொள்ளும் பாத்திரமாக் கொள்பவர்; அவ்வடிகள், உமாதேவியை உடனாகக் கொண்டு பகற் காலத்தில் விளங்கும் இடம், பசுமையான பொழில் சூழ்ந்த, நீர் வளம் மிக்க துருத்தியும், இரவுக் காலத்தில் விளங்கும் இடம் வேள்விக்குடியும் ஆகும்.
968. தூறுசேர் சுடலையிற் சுடர்எரி
யாடுவர் துளங்கொளி சேர்
நீறுசாந்து எனஉகந்து அணிவர்வெண்
பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந்து இளமுனை அரிவையோடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.
தெளிவுரை : ஈசன், மயானத்தில் விளங்கி நின்று எரியும் நெருப்பைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர்; ஒளி மிகுந்த திருவெண்ணீற்றைக் குழைய அணிபவர்; வெண்மையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், உமாதேவியாரை உடனாகக் கொண்டு, பகற்காலத்தில் துருத்தியில் அமர்ந்தவர். அவர், இரவில் உறைவது வேள்விக் குடியே.
969. மழைவளர் இளமதி மலரொடு
தலைபுல்கு வார்சடைமேல்
கழைவலர் புனல்புகக் கண்டவெங்
கண்ணுதற் கபாலியார் தாம்
இழைவளர் துகில்அல்குல் அரிவையோடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.
தெளிவுரை : ஈசன், குளிர்ந்த பிறைச் சந்திரனையும், மலர்களையும் சடை முடியில் கொண்டு திகழ்பவர்; கங்கையைத் தரித்த எமது கண்ணுதல்; பிரம கபாலம் ஏந்தியவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். அப்பெருமான் பகலில் துருத்தியில் விளங்குபவர். அவர் இரவுக் காலத்தில் உறையும் இடமாவது வேள்விக் குடியே.
970. கரும்பன வரிசிலைப் பெருந்தகைக்
காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க்
கொன்றையஞ் சுடர்ச் சடையார்
அரும்பன வனமுலை அரிவையொடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.
தெளிவுரை : ஈசன், கரும்பு வில்லையுடைய பெருந்தகையாகிய மன்மதனின் அழகிய வடிவத்தை அழித்தவர்; வண்டு ரீங்காரம் செய்கின்ற தேன் மணக்கும் தூய கொன்றை மலரைச் சுடரும் சடை முடியில் சூடியவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், பகலில் அமர்ந்து விளங்கும் இடம் துருத்தி. அவர், இரவில் உறைந்திருப்பது வேள்விக்குடியே.
971. வளம்கிளர் மதியமும் பொன்மலர்க்
கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங்
கண்ணுதற் கபாலியார் தாம்
துளங்குநூல் மார்பினர் அரிவையொடு
ஒருபகல் அமர்ந்த பிரான்
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.
தெளிவுரை : ஈசன், கிளர்ந்து வளரும் சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும், ஒளி மிகும் அரவத்தையும், சடை முடியில் திகழுமாறு வைத்த எமது கண்ணுதல். அவர், கபாலத்தைக் கையில் உடையவர்; முப்புரி நூலைத் திருமார்பில் கொண்டுள்ளவர்; உமாதேவியை ஒரு பாகக் கொண்டு விளங்குபவர்; அப்பெருமான், ஓரு பகலில் நீர் வளம் மிகுந்த துருத்தியில் மேவி, இரவில் உறைவது வேள்விக் குடியே.
972. பொறியுலாம் அடுபுலி உரிவையர்
வரியராப் பூண்டுஇலங்கும்
நெறியுலாம் பலிகொளும் நீர்மையர்
சீர்மையை நினைப்பரியார்
மறியுலாம் கையினர் மங்கையொடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
வெறியுலாம் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள்விக் குடியே.
தெளிவுரை : ஈசன், புலியின் தோலை உரித்து அதன் தோலை உடையாகக் கொண்டவர்; அரவத்தை ஆபரணமாக உடையவர்; பிச்சை ஏற்பதை நெறியாகக் கொண்ட தன்மையர். இத்தகைய எளிமை உடையவரானாலும், அவருடைய சிறப்பானது நினைப்பதற்கு அரியதாகும். அவர், மான் கன்றைக் கரத்தில் ஏந்தி, உமாதேவியோடு பகலில் அமர்ந்து விளங்கும் இடமாவது மணம் கமழும் துருத்தியாய் இருக்கப் பொருந்திய இரவில் உறையும் இடம், வேள்விக் குடியே.
973. புரிதரு சடையினர் புலியுரி
அரையினர் பொடியணிந்து
திரிதரும் இயல்பினர் திரிபுரம்
மூன்றையும் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொடு
ஒருபகல் அமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.
தெளிவுரை : ஈசன், முறுக்கேறிய சடையுடையவர்; புலித் தோலை அரையில் கட்டியவர்; திருவெண்ணீறு அணிந்து திரியும் இயல்புடையவர்; மூன்று புரங்களையும் நெருப்பால் சூழுமாறு வளைத்து எரித்தவர்; உமாதேவியோடு வீற்றிருப்பவர். அப்பெருமான், ஒரு பகல் துருத்தியில் வீற்றிருக்க, இரவில் உறைவது வேள்விக் குடியே.
974. நீண்டுஇலங்கு அவிர்ஒளி நெடுமுடி
அரக்கன்இந் நீள்வரையைக்
கீண்டிஇடந் திடுவன்என்று எழுந்தவன்
ஆள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்டநூல் மார்பினர் அரிவையொடு
ஒருபகல் அமர்ந்த பிரான்
வேண்டிடம் துருத்திஆர் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.
தெளிவுரை : ஒளிமிகும் நீண்ட முடியையுடைய இராவணன் இந்த கொடிய மலையைப் பெயர்த்து வைப்பேன் என முனைந்தபோது, அவ்வலிமையைக் கீழ்மைப்படுத்திய சிவபெருமான், முப்புரி நூல் அணிந்த திருமார்பினர். அவர், உமாதேவியோடு ஒரு பகல் அமர்ந்த இடம் துருத்தி; இரவில் உறைவது வேள்விக்குடியே.
975. கரைகடல் அரவணைக் கடவுளும்
தாமரை நான்முகனும்
குரைகழல் அடிதொழக் கூர்எரி
எனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம்
புகலிடம் வண்பொழில் சூழ்
விரைகமழ் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள்விக் குடியே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும், அடி முடியைத் தொழுது போற்றப் பெரியதாக ஓங்கிய நெருப்பு வடிவு கொண்ட சிவபெருமான், உமாதேவியோடு வீற்றிருப்பவர். அவர், பகலில் விளங்குவது பொழில் சூழ்ந்த துருத்தி; இரவில் உறைவது வேள்விக் குடியே.
976. அயமுக வெயில்நிலை அமணரும்
குண்டரும் சாக்கியரும்
நயமுக உரையினர் நகுவன
சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடும் கண்ணியொடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள்விக் குடியே.
தெளிவுரை : பழுக்கக் காய்ச்சிய இரும்பு போன்று சுடுகின்ற வெயில், உடலை வருத்திக் கொள்ளும் சமணரும் சாக்கியரும், நயம் மிகுந்த உரைகளையும், நகைச் சுவை விளங்கும் கதைகளையும் நவில்பவர்கள். அதனை ஏற்க வேண்டாம். உமாதேவியை உடனாகக் கொண்டு மேவுபவர் சிவபெருமான். அவர், பகலில் துருத்தியில் விளங்குபவர்; இரவில் வேள்விக் குடியில் உறைபவர், அவரை ஏத்து மின்.
977. விண்ணுலாம் விரிபொழில் விரைமணல்
துருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார்
அரிவையொடு உறைபதியை
நண்ணுலாம் புகலியுள் அருமறை
ஞானசம் பந்தன் சொன்ன
பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார்
ஆடுவார் பழியிலரே.
தெளிவுரை : விண்ணை முட்டும் உயர்ந்து விரிந்த பொழில் திகழவும் நறுமணம் கமழும் காவிரி மணல் சூழவும் மேவும் துருத்தியும் வேள்விக் குடியும் ஒலிக்குமாறு திருநடம் புரியும் சிவபெருமான், உமாதேவியோடு உறைபவர். அப்பெருமானை நண்ணிப் புகலி நகர் மேவும் ஞானசம்பந்தன் சொன்ன பண்ணிசை விளங்கும் அருந்தமிழாகிய இத்திருப்பதிகத்தைப் பாடுபவர்களும், பக்தியில் வயப்படுபவர்களும், பழி பாவம் இல்லாதவர்கள்.
திருச்சிற்றம்பலம்
349. வடகுரங்காடுதுறை (அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
978. கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடி முல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடை குரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளார்
இடமென விரும்பினாரே.
தெளிவுரை : கோங்கு, குரவம், புன்னை, முல்லை, வேங்கை, புலி நகக் கொன்றை, பாதிரி ஆகியவை விரவி வரும் காவிரியின் வடகரையில் மேவும் குரங்காடு துறையைச் சிவபெருமான் தமது இடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருப்பவர்.
979. மந்தமா யிழிமதக் களிற்றின
மருப்பொடு பொருப்பினல்ல
சந்தமார் அகிலொடு சாதியின்
பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை
யடை குரங்காடு துறை
எந்தையார் இணையடி இமையவர்
தொழுதெழும் இயல்பினாரே.
தெளிவுரை : யானைத் தந்தங்கள், மலைப் பகுதிகளில் விளங்குகின்ற நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் முதலான மரங்களும் அலைகள் வாயிலாக உந்திக் கொண்டு வந்து சேர்க்கும் காவிரியின் வடகரையில் கொண்டு வந்து சேர்க்கும் காவிரியின் வடகரையில் குரங்காடு துறை என்னும் தலத்தில் எமது தந்தையாகிய ஈசன், தேவர்கள் தொழுமாறு வீற்றிருப்பவர்.
980. முத்துமா மணியொடு முழைவளர்
ஆரமும் முகந்து நுந்தி
எத்துமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி
சடைமுடி அடிகள்தம் மேல்
சித்தமாம் அடியவர் சிவகதி
பெறுவது திண்ணமன்றே.
தெளிவுரை : முத்தும் மணியும் ஆத்தி மரமும் காவிரியில் உந்தி வர வடகரையில் உள்ள குரங்காடு துறையில், ஊமத்தம் மலரும் பிறைச் சந்திரனும் சடை முடியில் சூடிய சிவபெருமான் வீற்றிருப்பவர். அப்பெருமானைச் சித்தத்தில் பதித்து ஏத்தும் அடியவர் சிவகதியைப் பெறுவது உறுதி.
981. கறியுமா மிளகொடு கதலியின்
பலங்களும் கலந்து நுந்தி
எறியுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி
தொழுதெழ மருவும் உள்ளக்
குறியினார் அவர்மிகக் கூடுவார்
நீடு வானுலகினூரே.
தெளிவுரை : மிளகும் வாழையும் கலந்து காவிரியில் உந்திவர, வடகரையில் விளங்கும் குரங்காடு துறையில், மானைக் கையில் ஏந்திய ஈசன் விளங்குபவர். அப்பெருமானின் திருவடியைத் தொழுது பக்தியுடன் போற்றுபவர்கள், வானுலகில் சேர்ந்து மகிழ்ந்திருப்பர்.
982. கோடிடைச் சொரிந்த தேன தனொடும்
கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியும் கடறுடைப்
பண்டமும் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளார்
இடமெனப் பேணினாரே.
தெளிவுரை : மரப் பொந்துகளில் விளங்கும் தேனும், மயிற் பீலியும், மலைச் சாரலில் உள்ள பண்டங்களும் கலந்து உந்தி வரும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறையில் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர்.
983. கோலமா மலரொடு தூபமும்
சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
திருந்துமாங் கனிகள்உந்தி
ஆலுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை
நினையவல் வினைகள் வீடே.
தெளிவுரை : அழகிய நறுமலரும், தூபமும், சந்தனமும், கொண்டு போற்றி வாலியார் வழிபட்ட தலமாவது, இனிய மாங்கனிகளை உந்தித் தள்ளிவரும் காவிரியின் வடகரையை அடையும் குரங்காடுதுறை. ஆங்கு எழுந்தருளியுள்ள நீலகண்டராகிய ஈசனை, நினைத்து ஏத்துபவர்களுக்குத் தீவினை யாவும் தீரும்.
984. நீலமா மணிநிறத் தரக்கனை
இருபது கரத்தொடு ஒல்க
வரலினாற் கட்டிய வாலியார்
வழிபட மன்னு கோயில்
ஏலமோடு இலையில் வங்கமே
இஞ்சியே மஞ்சள் உந்தி
ஆலியா வருபுனல வடகரை
யவைகுரங் காடுதுறையே.
தெளிவுரை : கரிய நிறமுடைய இராவணனைத் தனது வாலால் கட்டி வீரம் விளைவித்த வாலியார் வழிபடப் பெருமை பெற்ற கோயிலாவது, ஏலம், இலவங்கம், இஞ்சி, மஞ்சள் ஆகியனவற்றை உந்தித்தள்ளி அசைத்து வரும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடு துறையே.
985. பொரும்திறல் பெருங்கைமா உரித்துஉமை
அஞ்சவே ஒருங்கு நோக்கிப்
பெருந்திறத்து அநங்கனை அநங்கமா
விழித்ததும் பெருமை போலும்
வருந்திறற் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
அருந்திறத்து இருவரை அல்லல்கண்டு
ஓங்கிய அடிகளாரே.
தெளிவுரை : போர் செய்யும் திறல் உடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை உரித்து, உமாதேவியும் வியக்குமாறு செய்தவர், ஈசன். அவர், திறமை மிக்க மன்மதனை எரித்து, அவன் எழில் உடலை இல்லாமையாகுமாறு செய்தவர். காவிரியின் வடகரையில் மேவும் வடகுரங்காடு துறையில் வீற்றிருக்கும் அப்பெருமான், பிரமனும் திருமாலும் தன்னைத் தேடிப் போற்றும் அல்லலைக் கண்டு இரங்கிப் பெருஞ் சோதியாக ஓங்கி ஒளிர்ந்தவர்.
986. கட்டமண் தேரரும் கடுக்கள்தின்
கழுக்களும் கசிவொன் றில்லாப்
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும்
பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைச்
சிட்டனார் அடிதொழச் சிவகதி
பெறுவது திண்ணமே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் மறவுரைகளை இரக்கம் இன்றி உரைப்பவர்கள். அவற்றை ஏற்க வேண்டாம். மலையிலிருந்து பண்டங்களை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடு துறையில் மேவும் சீலம் மிக்கவராய் விளங்கும் ஈசனை, ஏத்தித் திருவடியைத் தொழ, சிவகதி உறுதியாகக் கைவரப் பெறும்.
987. தாழிளங் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு
சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்
பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார்
நீடுவா னுலகின் ஊடே.
தெளிவுரை : பள்ளத்தில் வேகமாக ஓடிச் சென்று பாயும் காவிரியின் வடகரையில் மேவும் குரங்காடுதுறையில் வீற்றிருக்கும். பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியுடைய சிவபெருமானை, காழியில் திகழும் ஞானசம்பந்தன் கருதிப் போற்றிய இத்திருப்பதிகத்தை உரிய பண்ணிசையின்றி ஓதி உரைத்தாலும் அவர்கள் வானுலகின் இடையில் உயர்வாக வைக்கப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
350. திருநெல்வேலி (அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி)
திருச்சிற்றம்பலம்
988. மருந்தவை மந்திர மறுமைநன்
னெறியவை மற்றும்எல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே
சிந்தைசெய் நன்நெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன்
சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி
யுறை செல்வம்தாமே.
தெளிவுரை : நல்ல நெஞ்சமே ! ஈசனின் திருநாமத்தைச் சிந்தித்து இருப்பாயாக. அத் திருநாமமானது மருந்தாக இருந்து பிணியைத் தீர்க்கும்; மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும்; மறுமையின்கண் நற்கதியை விளைவிக்கும்; மற்றும் தோன்றுகின்ற எல்லாத் துயரங்களையும் நீக்கும். அத் திருநாமத்துக்குரிய ஈசன், குளிர்ச்சி மிக்க சோலையில் கொன்றை மலரின் பொன் மகரந்தங்கள் சொரிய மேவும் பொன்மலரைத் தரித்துத் திருநெல்வேலியில் உறையும் செல்வராய் விளங்குபவர். அவரை ஏத்துமின் என்பது குறிப்பு.
989. என்றுமோர் இயல்பினர் எனநினை
வரியவர் ஏறதுஏறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும்
பலிகொளும் இயல்பதுவே
துன்றுதண் பொழில் நுழைந்து எழுவிய
கேதகைப் போதளைந்து
தென்றல்வந்து உலவிய திருநெல்வேலி
யுறை செல்வர்தாமே.
தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய பொழில்களில் தாழை மணம் கமழத் தென்றல் உலவும் திருநெல்வேலியில் உறையும் செல்வராகிய சிவபெருமான், இத்தன்மையைக் கொண்டு விளங்குபவர் என்று மொழிவதற்கு அரியவர்; இல்லங்கள் தோறும் சென்று பிச்சை ஏற்ற இயல்பினை உடையவர். அப் பெருமானை ஏத்துக என்பது குறிப்பு.
990. பொறிகிளர் அரவமும் போழிள
மதியமும் கங் கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச்
சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி
யவர்மனம் கவர்வர் போலும்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.
தெளிவுரை : செறிந்த பொழில் திகழும் திருநெல்வேலியில் உறையும் செல்வராகிய சிவபெருமான், படம் கொண்டு ஆடும் அரவமும், பிறைச் சந்திரனும், கங்கை என்கிற நங்கையும் சடையின் மீது விளங்குமாறு பொருந்தியவர்; திருநீறு பூசியும் பிறர் மயங்குமாறு நடை பயிலவும் விளங்குபவர்; தாருகவனத்தில் விளங்கிய மங்கையரின் மனத்தைக் கவர்ந்தவர். அப் பெருமானை ஏத்துக.
991. காண்தகு மலைமகள் கதிர்நிலா
மறுவல்செய்து அருளவேயும்
பூண்டநா கம்புறங் காடுஅரங்
காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை
மீதுஎழு கொடிமதியம்
தீண்டிவந்து உலவிய திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.
தெளிவுரை : மாட மாளிகைகளில் நெடிய வெண்கொடிகள் விளங்க மேவும் திருநெல்வேலியில் வீற்றிருக்கும் சிவபெருமான், முழுநிலவு போன்ற ஒளியுமிழும் முறுவல் காட்டும் தன்மையில் உமாதேவியார் இனிது இருக்க, அதனைப் பேணாது, மயானத்தில் நாகத்தை அணிந்து நடம்புரிதலை உடையவர் ஆனார். அவரை ஏத்துமின் என்பது குறிப்பு.
992. ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ்
மத்தமும் இளஅரவும்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர்
கொல்புலித் தோலுடையார்
ஆனின்நல் ஐந்துஉகந்து ஆடுவர்
பாடுவர் அருமறைகள்
தேனில்வண்டு அமர்பொழில் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.
தெளிவுரை : தேன் அருந்தும் வண்டு அமரும் பொழில் சூழ்ந்த திருநெல்வேலியில் உறையும் சிவபெருமான், பன்றியின் கொம்பு, ஊமத்த மலர், இளமையான அரவம், வளைந்த பிறைச் சந்திரன் ஆகியவற்றைத் தரித்த சடையுடையவர்; புலித்தோலை உடையாகக் கொண்டவர். அவர், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தை அபிடேகமாகக் கொண்டு மகிழ்ந்து அரிய வேதங்களை ஓதுபவர். அவரை ஏத்துக.
993. வெடிதரு தலையினர் வேனல்வெள்
ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதள்
ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர்
மாதரை மையல்செய்வார்
மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி
யுறை செல்வர்தாமே.
தெளிவுரை : புதர்களுடைய பொழில் சூழ்ந்த திருநெல்வேலியில் உறையும் செல்வராகிய ஈசன், மண்டை ஓட்டினை மாலையாகக் கொண்டு விளங்குபவர்; சினம் மிகுந்த வெள்ளை இடபத்தை உடையவர்; விரிந்து மேவும் சடையுடையவர்; திருநீறு அணிந்து விளங்கும் மார்பினர்; புலித் தோலை ஆடையாகக் கொண்டு இருப்பவர்; அரவத்தை அணிந்து இருப்பவர்; அழகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு திகழ்பவர்; அப்பெருமான் தாருகவனத்து மகளிரை மையல் செய்தவர் ஆவார். அவரை ஏத்துமின்.
994. அக்குஉலாம் அரையினர் திரையுலா
முடியினர் அடிகள் அன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய
சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு
வண்டுபண் முரலும் சோலைத்
திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.
தெளிவுரை : வண்டு, பண்ணிசைக்கும் சோலைகளும், எல்லாத் திசைகளிலும் புகழ் சாற்றும் பெருமையும் உடையது திருநெல்வேலி. ஆங்கு உறையும் ஈசன், எலும்பினை அரையில் கட்டியவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர்; தக்கனின் வேள்வியைத் தகர்த்த சதுரர்; ஒளிர் விடுகின்ற சடையுடையவர். அவரை ஏத்துமின்.
995. முந்திமா விலங்கல் அன்று எடுத்தவன்
முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி ஒருவிரல்
உகிர்நுதி யால்அடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள்
பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.
தெளிவுரை : நறுமணம் கமழும் பொழிலில் மந்திகள் தாவிப்பாய, தேன் விளங்கும் மலர்கள் சிந்து பூந்துறை என்னும் தீர்த்தமானது கமழும் திருநெல்வேலியில் உறையும் செல்வர், சிவபெருமான். அப் பெருமான், கயிலை மலையை எடுத்த இராவணனுடைய முடிகளும் தோளும் நெரியுமாறு திருப்பாத விரலால் அடர்த்தவர். அவரை ஏத்துக.
996. பைங்கண்வாள் அரவணை யவனொடு
பனிமல ரோனும்காணா
அங்கணா அருளென அவரவர்
முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர
அரிவையர் ஆடல் பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணப் பெறாத ஈசனை, அங்கணனே ! அருள் புரிவீராக  ! என அனைவரும் ஏத்தி நிற்கும் தன்மையில், நான்கு மறைகளும் வல்ல அந்தணர்கள் வேதங்களால் போற்றுகின்றனர்; மகளிர் நடனம் புரிகின்றனர். நித்திய விழாக்களும் மாத விழாக்களும் பெருகி ஓங்கும் திருநெல்வேலியில் அப்பெருமான் செல்வராக உறைபவர். அவரை ஏத்துமின்.
997. துவருறு விரிதுகில் ஆடையர்
வேடமில் சமணர் என்னும்
அவர்உறு சிறுசொலை அவம்என
நினையும்எம் அண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச்
சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் உரைக்கும் சிறுமையான சொற்களைப் பயனற்றது எனக் கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர், எமது அண்ணலாகிய ஈசன். கவரும் தன்மையில் வண்ணக் கொடிகள் மல்கும் மாளிகைகளும், அவற்றின் மேற் புறத்தில், விளங்குகின்ற மயில்கள் ஆடவும், தேவர்கள் திகழ மதி தவழும் திருநெல்வேலியில், அப்பெருமான் உறைபவர். அவரை ஏத்துக.
998. பெருந்தண்மா மலர்மிசை அயனவன்
அனையவர் பேணு கல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி
யுறை செல்வர் தம்மைப்
பொருந்து நீர்த் தடமல்கு புகலியுள்
ஞானசம் பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியடக்
கெடும் அருவினையே.
தெளிவுரை : பெருமைக்குரிய குளிர்ச்சி பொருந்திய தாமரை மலரில் மேவும் பிரமனுக்கு நிகரான அந்தணர்கள் விளங்குகின்ற திருநெல்வேலியில் உறையும் சிவபெருமானை ஏத்தி நீர் வளம் மிகுந்த புகலியுள் விளங்கும் ஞானசம்பந்தன் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதக் கொடிய வினை யாவும் தீரும்.
திருச்சிற்றம்பலம்
351. திருஅம்பர்மாகாளம் (அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
999. படியுளார் விடையினர் பாய்புலித்
தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார்
படையினர் பூண் நூலர்
கடிகொள் மா மலர்இடும் அடியினர்
பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.
தெளிவுரை : ஈசன் பூவுலகத்தில் பொருந்தி விளங்குகின்ற இடபத்தை வாகனமாக உடையவர்; புலியின் தோலை ஆடையாக உடுத்தியவர்; திருநீற்றினைத் திருமேனியில் தரித்தவர்; மன்னுயிரின் பாவங்களைப் போக்கியவர்; பூதகணங்களைப் படையாக உடையவர்; முப்புரி நூலைத் திருமார்பில் தரித்தவர்; மணம் கமழும் மலர்கள் கொண்டு அடியவர்களால் ஏத்தப் பெறும் திருவடியுடையவர். உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் அப்பெருமான், அருள் புரிந்து தமது இருப்பிடமாகக் கொண்டு விளங்குவது, அம்பர் மாகாளமே.
1000. கையின்மா மழுவினர் கடுவிடம்
உண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனியர் ஊனமர்
உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர்
தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோடு இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.
தெளிவுரை : ஈசன், கையில் பெருமையான மழுப் படையுடையவர்; கொடிய விடத்தை உட்கொண்டு கரிய கண்டத்தைப் பெற்றவர்; சிவந்த திருமேனியர்; பிரம கபாலம் ஏந்திப் பலியேற்றுத் திரிந்தவர்; உலகத்தில் பொதுவில் விளங்கி இருந்து, அந்தணர்கள் தொழுது போற்ற நடனம் புரிபவர். தலைவனாகிய அப்பெருமான், உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, அம்பர் மாகாளமே.
1001. பரவின அடியவர் படுதுயர்
கெடுப்பவர் பரிவிலார் பால்
கரவினர் கனல்அன உருவினர்
படுதலைப் பலிகொடு ஏகும்
இரவினர் பகலெரி கானிடை
ஆடிய வேடர் பூணும்
அரவினர் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம் தானே.
தெளிவுரை : ஈசன், தன்னை வணங்கும் அடியவர்களுடைய துயரத்தைத் தீர்ப்பவர்; அன்பில்லாதவர்கள் பால் தோன்றாத நிலையில் மறைந்து இருப்பவர்; நெருப்புப் போன்ற வண்ணம் உடையவர்; பிரமகபாலம் ஏந்திப் பலி ஏற்பவர்; மயானத்தில் இரவில் நெருப்பு ஏந்தி ஆடுபவர்; அரவத்தை ஆபரணமாகக் கொண்டவர். அப்பெருமான் உமாதேவியோடு இருப்பிடமாகக் கொண்டு விளங்குவது, அம்பர் மாகாளமே.
1002. நீற்றினர் நீண்டவார் சடையினர்
படையினர் நிமலர் வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர்
புரத்துள்ளார் உயிரை வவ்வும்
கூற்றினார் கொடியிடை முனிவுறு
நனிவரும் குலவுகங்கை
ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே
தெளிவுரை : ஈசன், திருநீறு தரித்து மேவுபவர்; நீண்ட சடையுடையவர், மழு, சூலம் முதலான படை உடையவர்; நிமலர்; வெள்ளை இடபத்தை உடையவர்; எரியும் நெருப்பைக் கரத்தில் கொண்டு விளங்குபவர்; முப்புரத்து அசுரர்களை மாய்த்தவர். அப்பெருமான், கொடியிடை உடைய மலைமகள் முனிந்து நிற்குமாறு முடியின்கண் தரித்து விளங்குபவர். அவர் உமாதேவியோடு இருக்கும் இடமாவது, அம்பர் மாகாளமே.
1003. புறத்தினர் அகத்துளர் போற்றிநின்று
அழுதெழும் அன்பர் சிந்தைத்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித்
தக்கன்றன் வேள்வி செற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக்கு
ஆலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம் தானே.
தெளிவுரை : ஈசன், வெளியேயும் இருப்பவர்; சிந்தையிலும் இருப்பவர்; உள்ளம் உருகிப் போற்றிக் கசிந்து கண்ணீர் மல்கும் அன்பருடைய சிந்தையில் விளங்குபவர்; அறிவற்ற தக்கனின் வேள்வியைத் தடுத்து அழித்து வீரம் காட்டியவர்; சனகாதி முனிவர்களாகிய நால்வருக்குக் கல்லாலின் கீழ் இருந்து அறப் பொருள் நல்கி அருள் புரிந்தவர். அப்பெருமான், உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, அம்பர் மாகாளமே.
1004. பழகமா மலர்பறித்து இண்டைகொண்டு
இறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந்து ஏத்துவார்
அவர்பலர் கூட நின்ற
கழகனார் கரியுரித்து ஆடுகங்
காளர்நம் காளியேத்தும்
அழகனார் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.
தெளிவுரை : ஈசன், நாள்தோறும் மலர் பறித்து இண்டை தொடுத்து ஏத்தும் அடியவர்பால் விளங்கி நிற்பவர்; தொண்டர்கள் புகழ்ந்து ஏத்த, அவர்களுடன் ஒருவராய் விளங்கி நிற்பவர்; யானையின் தோலை உரித்தும் எலும்பு மாலையை அணிந்தும் இருப்பவர்.  காளி பூசித்து வழிபட, அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது அம்பர் மாகாளமே.
1005. சங்கவார் குழையினர் தழல்அன
உருவினர் தமது அருளே
எங்குமா இருந்தவர் அருந்தவ
முனிவருக்கு அளித்துகந்தார்
பொங்குமா புனல்பரந்த அரிசிலின்
வடகரை திருத்தம் பேணி
அங்கமாறு ஓதுவார் இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.
தெளிவுரை : ஈசன், சங்கினால் ஆகிய குழையைக் காதில் அணிந்தவர்; நெருப்புப் போன்ற சிவந்த வண்ணம் உடையவர்; தமது அருளே எல்லா இடத்திலும் பொலியுமாறு விளங்குபவர்; தவ முனிவர்களுக்குத் தம்மை அளித்து விளங்குபவர். அரிசில் ஆற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு விளங்கும் அவர், வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருக்கும் இடமாவது, அம்பர் மாகாளமே.
1006. பொருசிலை மதனனைப் பொடிபட
விழித்தவர் பொழில் இலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழ்உற
அடர்த்தவர் கோயில் கூறில்
பெருசிலை நவமணி பீலியோடு
ஏலமும் பெருக நுந்தும்
அரிசிலின் வடகரை அழகமர்
அம்பர்மா காளம்தானே.
தெளிவுரை : ஈசன், கரும்பு வில்லைப் போர் வில்லாகக் கொண்ட மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு, நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர்; இலங்கையின் வேந்தனாகிய இராவணனை கயிலை மலையின்கீழ், நெரியுமாறு அடர்த்தவர். அப் பெருமானுடைய கோயிலானது, மயிற் பீலியும்ஏலமும் பெருக நுந்தும் அரிசில் ஆற்றின் வடகரையில், அழகுடன் விளங்கும் அம்பர் மாகாளமே.
1007. வரியரா அதன்மிசைத் துயின்றவன்
தானும்மா மலருளானும்
எரியரா அணிகழல் ஏத்தஒண்
ணாவகை உயர்ந்து பின்னும்
பிரியராம் அடியவர்க்கு அணியராய்ப்
பணிவிலா தவருக்கு என்றும்
அரியராய் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஏத்தி நிற்கப் பேரழல் ஆகி உயர்ந்து, அவர்களுக்குத் தோன்றாதவராகிப் பின்னும் அடியவர்களுக்குப் பிரிதல் கொள்ளாத அண்மையுடையவராய் விளங்குபவர், ஈசன் அப் பெருமான், பணியாதவர்களுக்குத் தொலைவில் உள்ளவராய், விளங்குகின்ற அவர் மேவும் இடமாவது அம்பர் மாகாளமே.
1008. சாக்கியக் கயவர்வன் தலைபறிக்
கையரும் பொய்யினா நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை
ஆதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையான்
இச்சையா னவர்கட் கெல்லாம்
ஆக்கிய அரன்உறை அம்பர்மா
காளமே அடைமினீரே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கூறுபவை பிழை ஆகும். அதனை ஏற்க வேண்டாம்.  அரவத்தைக் கச்சையாகக் கொண்டுள்ள சிவபெருமான், தன்னை வழிபடுபவர்களுக்கு அருள் புரிந்து நலம் செய்பவர். அப் பெருமான் உறையும் அம்பர் மாகாளத்தை அடைந்து வழிபடுவீராக.
1009. செம்பொன்மா மணிகொழித்து எழுதிரை
வருபுனல் அரிசில் சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா
அணங்கினோடு இருந்தகோனைக்
கம்பினார் நெடுமதில் காழியுள்
ஞானசம் பந்தன் சொன்ன
நம்பிநாள் மொழிபவர்க்கு இல்லையாம்
வினைநலம் பெறுவர் தாமே.
தெளிவுரை : பொன்னும் மணியும் கொழித்து வரும் நீர்ப் பெருக்குடைய அரிசில் ஆறு சூழ்ந்த அம்பர் மாகாளத்தைக் கோயிலாகக் கொண்டு, உமாதேவியோடு வீற்றிருக்கின்ற தலைவன், சிவபெருமான். அப்பெருமானை ஏத்திச் சுண்ணாம்பு கலந்து கட்டப் பெற்ற நெடிய மதில் உடைய காழி நகரில் மேவும் ஞானசம்பந்தன் சொன்ன இத் திருப்பதிகத்தை, நம்பிக்கையுடன் நாள்தோறும் தொழுபவர்களுக்கு, வினையின் துயர் இல்லை; எல்லா நலன்களும் உண்டாகும். இது உறுதி.
திருச்சிற்றம்பலம்
352. வெங்குரு (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1010. விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீர்உம தொழுகழல்
எண்ணவல் லார்இடர் இலரே.
தெளிவுரை : தேவர்கள் தொழுது போற்றுகின்ற வெங்குரு என்னும் பதியில் திருவெண்ணீறு அணிந்து மேவும் ஈசனே ! யாவராலும் தொழப் பெறும் உமது திருக்கழலை எண்ணித் துதிக்க வல்லவர்கள் இடர் இல்லாதவர்கள் ஆவார்கள்.
1011. வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே
ஆதிய அருமறையீர்உமை அலர்கொடு
ஓதியர் உணர்வுடை யோரே.
தெளிவுரை : வேத விற்பன்னர்களாகிய வெங்குரு என்னும் பதியில் மேவிய ஆதியும் அருமறையும் ஆகிய ஈசனே ! தேவரீரை மலர்கொண்டு தூவிப் போற்றி வழிபடுகின்றவர்கள், மக்கட் பிறவியின் உணர்வினை உடையவர்கள் ஆவார்கள்.
1012. விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீர்உமது இணையடி
உளங்கொள உறுபிணி இலரே.
தெளிவுரை : தண்பொழில் விளங்கும் வெங்குருவில் இளம்பிறைச் சந்திரனைச் சடையில் சூடி மேவும் ஈசனே ! உமது திருவடியை மனத்தில் கொண்டு விளங்கும் அடியவரின் பிறவிப் பிணியானது விலகும்.
1013. விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீர்உமை வாழ்த்தும்அத்
தொண்டர்கள் துயர்பிணி இலரே.
தெளிவுரை : நன்கு விரிந்து மலரும் பொழில் சூழ்ந்த வெங்குருவில், மலர் மாலை அணிந்த சடை முடி உடையவராய் விளங்கும் ஈசனே ! உம்மைப் போற்றி வாழ்த்தும் திருத்தொண்டர்களுக்குத் துயர் தரும் பிணி எதுவும் இல்லை.
1014. மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவசைத் தீரே
அக்கினொடு அரவசைத் தீர்உமது அடியினை
தக்கவர் உறுவது தவமே.
தெளிவுரை : அன்பும் அறிவும் மிகுந்து விளங்கும் பெருமக்கள் தொழுது ஏத்துகின்ற வெங்குருவில், எலும்பும் அரவமும் கொண்டு மேவும் ஈசனே ! உமது திருவடியை நித்தமும் போற்றி வழிபடுபவர் பெறுவது நல்ல தவமே ஆகும்.
1015. வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தம்இல் பெருமையி னீரே
அந்தம்இல் பெருமையினீர்உமை அலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.
தெளிவுரை : எல்லையற்ற பெருமை உடையவராய்த் திருவெண்ணீற்றினைத் தரித்து வெங்குருவில் வீற்றிருக்கும் பெருமானே ! உம்மை மலர் கொண்டு ஏந்திச் சிந்தை குளிரத் தியானம் செய்பவர்களுக்கு வினையானது சிதைந்து விலகும்.
1016. விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழல்மல்கும் அங்கையி னீரே
அழல் மல்கும் அங்கையி னீர்உமை அலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே.
தெளிவுரை : பொழில் சூழவும், விழாக்கள் மல்கவும் விளங்கும் அணி திகழும் வெங்குருவில் நெருப்பினைக் கையில் ஏந்திய ஈசனே  ! உம்மை, மலர் கொண்டு அருச்சித்து வழிபடத் துயரம் யாவும் தீரும்; இது உறுதி.
1017. வித்தகமறை யவர்வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீர்உமது அடிதொழும்
சித்தமது உடையவர் திருவே.
தெளிவுரை : மறைவல்ல அந்தணர்கள் விளங்குகின்ற வெங்குருவில், ஊமத்த நன்மலரைப் புனைந்து மேவும் ஈசனே ! உமது திருவடியைத் தொழும் சிந்தனை உடையவர்கள் எல்லாச் செல்வங்களும் உடையவர்கள் ஆவர்.
1018. மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீர்உமது அடிதொழும்
சீலமது உடையவர் திருவே.
தெளிவுரை : அருள் தன்மையில் சிறந்தோங்கும் மேலோர்கள் தொழுது ஏத்தும் வெங்குருவில், ஆலகால விடத்தை, மணி போன்று ஒளி திகழ, மிடற்றில் தேக்கி அருள் புரிந்த ஈசனே ! உமது திருவடியைத் தொழுகின்ற சீலத்தை உடையவர்கள், செல்வத்திற்கு ஒப்பாவார்கள்.
1019. விரைமல்கு பொழில்அணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அலைமல்கு புலியத ளீர்உமது அடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே.
தெளிவுரை : நறுமணம் கமழும் பொழிலின் எழில் மிகுந்த வெங்குருவில் புலித் தோலை அரையில் கட்டிய ஈசனே ! உமது திருவடியைப் புகழ்ந்து ஏத்துபவர் உயர்ந்த நிலையைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
353. திருஇன்னம்பர் (அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1020. எண்திசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் கும்சடை யீரே
வண்டிசைக் கும்சடை யீர்உமை வாழ்த்துவார்
தொண்டிரைக் கும்தொழி லோரே.
தெளிவுரை : எட்டுத் திசைகளிலும் புகழ் பெருகும் இன்னம்பர் என்னும் தலத்தில், வண்டு இசைக்க விளங்கும் சடை முடியுடைய ஈசனே ! உம்மை வாழ்த்தும் அடியவர்கள், திருத்தொண்டின் சிறப்புடன் விளங்கும் பணி செய்த, மேம்படும் தன்மையரே.
1021. யாழ்நரம் பின்இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யிர்உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.
தெளிவுரை : யாழின் இசை போன்று இனிமை உடைய இன்னம்பரில் நீண்டு தாழ்ந்த சடை முடி உடைய ஈசனே ! உம்மைச் சார்ந்து பக்தி செய்பவர்கள் துயரைத் தருகின்ற தீவினை அற்றவர்கள். துயரம் அற்றவர் என்பது குறிப்பு.
1022. இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீர்உமை வாழ்த்துவார்
உளமதி மிகஉடை யோரே.
தெளிவுரை : பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, வளர்கின்ற சந்திரனைச் சடைமுடியில் தரித்து இன்னம்பரில் மேவிய ஈசனே ! உம்மை வாழ்த்துபவர்களே மதி மிகுந்தவர் எனப்படுபவர் ஆவர்.
1023. இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீர்உம கழல்தொழும்
அடியவர் அருவினை இலரே.
தெளிவுரை : இடிகுரல் போன்று முரசு, முழவு  முதலான வாத்தியங்கள் முழங்கும் இன்னம்பரில் மணம் கமழும் சடை முடியுடைய ஈசனே ! உமது திருக்கழலைப் போற்றும் அடியவர்களுக்கு வினைத் துன்பம் எதுவும் இல்லை.
1024. இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீர்உமை உள்குவார்
அமைகில ராகிலர் அன்பே.
தெளிவுரை : தேவர்கள் தொழுது போற்றும் பதியாகிய இன்னம்பரில், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு அர்த்தநாரியாய் மேவும் ஈசனே ! உம்மை உள்ளத்தில் கொண்டு வழிபடுபவர், அன்பு உடையவராய் விளங்குவர்.
1025. எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணரும் சடைமுடி யீரே
தண்ணரும் சடைமுடி யீர்உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடை யோரே.
தெளிவுரை : எண்ணும்தோறும் பெரும் புகழின் வயத்தராய் மேவிய பேரருளைச் செய்யும் தண்மை மிகும் சடை முடியுடையவராய் இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனே ! உம்மைச் சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைபவர்கள் ஆவார்கள்.
1026. எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீர்உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.
தெளிவுரை : எழில் திகழும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த இன்னம்பரில் ஒளி திகழும் திருமேனியுடைய ஈசனே ! உம்மை நினைப்பவர்களுடைய நெறியற்ற தன்மையில் வாட்டும் குழம்பிய தீவினையானது கெட்டழியும்.
1027. ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீர்உமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே.
தெளிவுரை : ஏத்துதற்கு அரிய புகழுடைய இன்னம்பரில் மேவிய ஈசனே ! தூர்த்தனாகிய இராவணனை அடர்த்த பரமனே ! உம்மைத் தொழுபவர், பேரறிவும் நற்குணமும் உடையவர் ஆவர்.
1028. இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால்அறிவரி யீரே
அயனும் மால்அறி வரி யீர்உமது அடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே.
தெளிவுரை : இயல்பாகவே தொழுது போற்றும் பக்தி உடைய பெருமக்கள் விளங்குகின்ற இன்னம்பரில், திருமாலும் பிரமனும் அறிவதற்கு அரிய ஈசனே ! உமது திருவடியைப் போற்றும் இயல்பு உடையவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.
1029. ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீர்உமைச் சேர்பவர்
ஆர்துயர் அருவினை யீரே.
தெளிவுரை : எழில் மிக்க பொழில் விளங்கும் இன்னம்பரில் மேவி, சமண் சாக்கிய நெறிகளைப் பயனற்ற தாக்கிய ஈசனே ! உமது திருவடியைப் போற்றி வணங்குபவர்களுக்குத் துயரமும் தீவினையும் இல்லை.
1030. ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி இலரே.
தெளிவுரை : இதழ் கொண்ட மலர்கள் விளங்கும் பொழில் சூழ்ந்த இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனை, ஏத்திய ஞானசம்பந்தனது நற்றமிழாகிய இத்திருப்பதிகத்தை பாட வல்லவர்கள், பழியற்றவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
354. திருநெல்வெண்ணெய் (அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை, விழுப்புரம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1031. நல்வெணெய் விழுதுபெய்து ஆடுதிர் நாள்தொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீர்உமை நாள்தொறும்
சொல்வண்ணம் இடுவது சொல்லே.
தெளிவுரை : நெல்வெண்ணெய் என்னும் தலத்தில் மேவும் ஈசனே ! நல்ல நெய் முதலான பஞ்ச கௌவியத்தை பூசிக்கப் பெறும் பொருளாகக் கொண்டு நாள்தோறும் ஆடுபவர் நீவிர். உம்மைத் தினந்தோறும் போற்றிச் சொல்லும் மந்திரச் சொல்லே காத்தருள் புரியும் சொல்லாகும்.
1032. நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீர்உமைக் காண்பவர்
அச்சமோடு அருவினை இலரே.
தெளிவுரை : அடியவர்கள் தினமும் தொழுது போற்ற நெல்வெண்ணெயில் இளமையான அரவத்தைக் கட்டி வீற்றிருக்கும் ஈசனே ! உம்மைக் கண்டு தரிசிப்பவர்களுக்கு அச்சமும் வினையும் இல்லை.
1033. நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத்தீர் உமை அலர்கெடு
உரைவிரிப் போர் உயர்ந் தோரே.
தெளிவுரை : பெருகி விளங்குகின்ற தொல் புகழை வரிசையாகக் கொண்டு, கோவணத்து ஆடை உடுத்தியவராய் நெல்வெண்ணெயில் மேவும் ஈசனே ! உம்மை மலர் தூவிப் போற்றிப் புகழ்ந்து ஏத்துபவர்கள், யாவற்றிலும் உயர்ந்து விளங்குபவர்கள் ஆவார்கள்.
1034. நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீர்உமை உள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே.
தெளிவுரை : நீர் வளம் பெருகும் நெல்வெண்ணெய் மேவி, தலத்தின் சிறப்புத் தோன்ற வீற்றிருக்கும் ஈசனே ! உம்மை நினைத்துப் போற்றுதல், பாரில் புகழ் மிக்கவர்களுடைய பண்பாகும். இது, புகழ் மிகுந்தவர் ஈசனை ஏத்தி வணங்கும் இயல்பினர் ஆவர் என்பதனை உணர்த்திற்று.
1035. நீடுஇளம் பொழில்அணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீர்உமை அன்பொடு
பாடுஉளம் உடையவர் பண்பே.
தெளிவுரை : நெடிய பொழில் சூழ்ந்த நெல்வெண்ணெய் மேவிய ஈசனே ! ஆடுகின்ற இளம் அரவத்தைக் கட்டிய பெருமானே ! உம்மை அன்போடு, போற்றிப் பாடுகின்ற உள்ளம் உடைமையே  நற்பண்பாகும். முந்தைய திருப்பாட்டில் புகழ்ந்து உரைத்தலும், இத் திருப்பாட்டில் பாடுதலும் நற்பண்பாதல், உரைத்தருளப் பெற்றது.
1036. நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீர்உமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தம் கடனே.
தெளிவுரை : நெற்றியில் கண்ணும், பெற்றி கொள் பிறைச் சந்திரனும் கொண்டு நெல்வெண்ணெயில் மேவும் ஈசனே ! உம்மைப் போற்றிப் பாராட்டி வழிபட்டு அன்பு கொண்டு நிற்பது, கற்றவர்கள் கடமையாகும்.
1037. நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீர்உமைக் காண்பவர்
உறைவதும் உம்அடிக் கீழே.
தெளிவுரை : நிறைந்த சீலமுடையவர் தொழும் நெல்வெண்ணெயில் நீலகண்டராக விளங்கும் ஈசனே ! உம்மைக் கண்டு தரிசிப்பவர் உறையும் இடமாவது, உமது திருவடியின்கீழ் உள்ள இனிமையான இடமே.
1038. நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவிய
அரக்கனை  அசைவுசெய் தீரே
அரக்கனை அசைவுசெய் தீர்உமை அன்புசெய்து
இருக்கவல் லார்இடர் இலரே.
தெளிவுரை : அடர்த்தியான பொழில் சூழ்ந்த நெல்வெண்ணெயில் இராவணனை நெரித்து வீற்றிருக்கும் ஈசனே ! உம்மை ஏந்தி அன்புடன் வழிபடுபவர்களுக்கு இடர் என்பது இல்லை.
1039. நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்று
இருவரை இடர்கள் செய்தீரே
இருவரை இடர்கள் செய்தீர்உமை இசைவொடு
பரவவல் லார்பழி இலரே.
தெளிவுரை : வரிசையாகச் சடை முடிகளை உடைய ஈசனே ! திருமால், பிரமன் ஆகியோர் காணுதற்கு அரியவராய் விளங்கி நெல்வெண்ணெயில் மேவி விளங்குபவரே ! உம்மை, விருப்பத்துடன் பரவிப் போற்றுபவர்களுக்குத் துன்பம் தரும் வினை எதுவும் இல்லை.
1040. நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கொடுத்தீரே
சாக்கியச் சமண்கொடுத்தீர் உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.
தெளிவுரை : வறட்சியை நீக்கிய நீர்வளம் மிகுந்த நெல்வெண்ணெயில் மேவும் ஈசனே ! சாக்கியமும் சமணமும் நீரே கொடுத்தவர். உம்மைச் சார்ந்து வணங்கி அடியவர் ஆக வேண்டுமானால் அதற்குப் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இது, அனைத்தும் ஈசனால் வகுக்கப் பெறுதலை உணர்த்திற்று.
1041. நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துயர் இலரே.
தெளிவுரை : பூவுலகில் தொன்மையான புகழ் கொண்டு மேவும் நெல்வெண்ணெயில் வீற்றிருக்கும் ஈசனை, நலம் மல்கிய ஞானசம்பந்தன் செந்தமிழால் ஏத்திய இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள், துயர் அற்றவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
355. திருச்சிறுகுடி (அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், செருகுடி,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1042. திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீர்உமைப் பணிபவர்
அடைவதும் அமருலகு அதுவே.
தெளிவுரை : வலிமையான மதில் கொண்ட சிறுகுடியில், படம் கொண்ட அரவத்தை அணியாகக் கொண்டு மேவும் ஈசனே ! உம்மைப் பணிபவர்கள் அடைவது, பெருமையான தேவர் உலகமே.
1043. சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீர்உம தொழுகழல்
உற்றவர் உறுபிணி இலரே.
தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு சடை முடி திகழச் சிறுகுடியில் மேவும் ஈசனே ! உமது திருக்கழலைச் சார்ந்து பணிபவர்களுக்குப் பணி எதுவும் இல்லை.
1044. தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீர்உம தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே.
தெளிவுரை : தெளிந்த நீர் வளம் உடைய சிறுகுடியில், மானைக் கரத்தில் ஏந்தி மேவும் ஈசனே ! உமது திருக்கழலை எண்ணிப் பணியும் அடியவர்கள், எல்லா நலன்களையும் பெறுவார்கள்.
1045. செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீர்உமை உள்குவார்
சொல்நலம் உடையவர் தொண்டே.
தெளிவுரை : செந்நெல் விளையும் வயல் வளம் மேவும் சிறுகுடியில் மேவிய ஈசனே ! பகைத்துச் செருத்த முப்புர அசுரர்களை எரித்த பரமனே ! உம்மை நினைத்துப் போற்றும் திருத்தொண்டர்கள் திருவைந்தெழுத்தாகிய நலச் சொல்லை ஓதும் பெருமை உடையவர்கள்.
1046. செற்றினில் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீர்உமைப் பேணிநஞ்சு
அற்றவர் அருவினை யிலரே.
தெளிவுரை : சேற்றில் நீர் மல்கி மேவும் சிறுகுடியில் பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய ஈசனே ! உம்மை அன்புடன் போற்றிப் பணி செய்பவர்களின் வினையானது நைந்து விலகும்.
1047. செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை இடம்உடை யீரே
மங்கையை இடம்உடையீர் உமை வாழ்த்துவார்
சங்கையது இலர் நலர்தவமே.
தெளிவுரை : கயல் விளங்கும் நீர் வளம் கொண்ட சிறுகுடியில், உமாதேவியை இடமாகக் கொண்டு மேவும் ஈசனே ! உம்மை வாழ்த்தும் அடியவர்கள், மனத் தெளிவு உடையவராகவும், நலம் மிக்கவராகவும் தவப்பேறு உடையவராகவும் விளங்குவார்கள்.
1048. செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீர்உமை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோர்உயர்ந் தோரே.
தெளிவுரை : அடர்த்த பொழில் திகழும் சிறுகுடியில், நறுமணம் கமழும் சடை முடியராய் வீற்றிருக்கும் ஈசனே ! உம்மை விரும்பி, மெய்ந்நெறியை உணர்ந்தவர்கள் உயர்வுடையோர் ஆவர். இது சிவநெறியால் உணரப்படும் மெய்ந்நெறியே உயர்வுடையதென உணர்த்தப் பெற்றது.
1049. திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரநெரித் தீரே
தசமுகன் உரநெரித் தீர்உமைச் சார்பவர்
வசையறும் அதுவழி பாடே.
தெளிவுரை : எண் திசையில் உள்ளவர்களும் தொழுது ஏத்தும் சிறுகுடியில் மேவிய ஈசனே ! இராவணனுடைய வலிமையை நெரித்த நாதனே ! உம்மைச் சார்ந்து பக்தியுடன் விளங்கக் குற்றம் யாவும் தீர்ந்து, குணம் பெருகும். அதுவே வழிபடும் முறையும் ஆகும்.
1050. செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய் தீரே
இருவரை அசைவுசெய் தீர்உமை ஏத்துவார்
அருவினை யொடுதுயர் இலரே.
தெளிவுரை : வயல் வளம் பெருகும் சிறுகுடியில் மேவிய ஈசனே ! திருமால் பிரமன் ஆகிய இரு மூர்த்திகளையும் தளர்வு கொள்ளச் செய்த நாதனே ! உம்மை ஏத்துபவர், வினை அற்றவராயும் துயர் அற்றவராயும் விளங்குவர். இது அடியவர்கள் இம்மை நலனும் மறுமை நலனும் இனிது பெற்று மகிழ்ந்திருப்பார்கள் என்பதாம்.
1051. செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண்புறத் தீரே
புத்தரொடு அமண்புறத் தீர்உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.
தெளிவுரை : வயல்களில் நீர் நிலவும் சிறுகுடியில் மேவிய ஈசனே ! புத்தர் அமணர்களுக்குப் புறம்பாக இருப்பவரே ! பக்தர்கள் உம்மை போற்றிப் பரவுதல், அவர்களுடைய செவ்விய இயல்பாகும்.
1052. தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீர்உமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.
தெளிவுரை : தேன் மணம் கமழும் பொழில் திகழும் சிறுகுடி, மேவி, மானைக் கரத்தில் கொண்டு விளங்கும் ஈசனே ! உம்மை வாழ்த்தியது ஞானசம்பந்தனது தமிழே. இது, ஞானத் தமிழ் என்பதும், இதனை ஓத, இகபர நலன்கள் கைவரப் பெறும் என்பதும், குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
356. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1053. வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை
ஒண்மதி யணியுடை யீரே
ஒண்மதி யணியுடை யீர்உமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே.
தெளிவுரை : வெண்மதி தவழும் உயர்ந்த மதிலை உடைய மிழலையில் மேவும் ஈசனே ! சடை முடியில் ஒளி கொண்டு வளரும் சந்திரனை அணிந்த நாதனே ! உம்மைத் தியானம் செய்து உணரும் அடியவர்கள் சிவஞானத்தை பெறுவார்கள்.
1054. விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிர்உடையீர்உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.
தெளிவுரை : ஆசார அனுட்டானங்களை விதிப்படி ஒழுகி வரும் அந்தணர்கள் வாழும் மிழலையுள் மேவி, தாள ஒத்து தவறாது திருநடம் புரியும் ஈசனே ! உம்மைச் சத்துவகுணம் உடைய ஞானிகள் போற்றிப் புகழும் சிறப்பானது, தனிப் பெருமை உடையது.
1055. விரைமலி பொழிலணி மிழலையு ளீர்ஒரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதொர் வலதுடை யீர்உமை
உரைசெயும் அவை மறை யொலியே.
தெளிவுரை : நறுமணம் கமழும் பொழிலை அணி கொள மேவும் மிழலையுள் விளங்கும் ஈசனே ! கயிலை மலையில் வீற்றிருக்கும் பெருமைக்கு உரியவரே ! உம்மைப் போற்றி உரைக்கும் சொற்கள் யாவும் வேத ஒலியே.
1056. விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
இட்டுஎழில் பெறுகிறது எரியே
இட்டுஎழில் பெறுகிறது எரியுடையீர்புரம்
அட்டது வரைசிலை யாலே.
தெளிவுரை : மிகுந்த எழில் பெறும் புகழுடைய மிழலையுள் வீற்றிருக்கும் ஈசனே ! உமது கையில் பொருந்தப் பெற்ற எரியானது எழில் உடையதே. ஆயினும், மூன்று புரங்களை எரிக்கும் தன்மையில் அவர்களை வீழ்த்துவதற்கு மேருமலையை வில்லாகக் கொண்டதும் அக்கினியைக் கணை தொடுத்ததும் ஆகும்.
1057. வேல்நிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
பால்நிகர் உருவுடை யீரே
பால்நிகர் உருவுடை யீர்உம துடன்உமை
தான்மிக உறைவது தவமே.
தெளிவுரை : வேல் போன்ற கண்ணுடைய மகளிர் மேவும் மிழலையுள் பால் போன்ற வண்ணம் கொண்டுள்ள ஈசனே ! தேவரீருடன் உமாதேவி உறைவது தவச்சிறப்பு உடையதாகும்.
1058. விரைமலி பொழிலணி மிழலையு ளீர்செனி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதொர் நெறியுடை யீர்உமது
அரையுற அணிவன அரவே.
தெளிவுரை : நறுமணப் பொழில் சூழ்ந்த மிழலையுள் விளங்கும் ஈசனே ! தலை மாலை அணிந்த பரமனே ! உமது அரையில் அசைத்துக் கட்டியது அரவமே.
1059. விசையறு புனல்வயல் மிழலையுளீர்அரவு
அசையுற அணிவுடை யீரே
அசையுற அணிவுடை யீர்உமை அறிபவர்
நசையுறு நாவினர் தாமே.
தெளிவுரை : விரைந்து ஏகி வற்றாத நீர்வளம் கொண்ட வயல்களை உடைய மிழலையுள் அரவத்தை அணியாகக் கொண்டு மேவும் ஈசனே ! உம்மை அறிபவர், விருப்பத்துடன் திருவைந்தெழுத்தை ஓதிப் போற்றும் அடியவரே.
1060. விலங்கல்ஒண் மதிளணி மிழலையு ளீர்அன்றவ்
இலங்கைமன் இடர்கெடுத் தீரே
இலங்கைமன் இடர்கெடுத் தீர்உமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.
தெளிவுரை : மலை போன்ற உறுதியான மதிலை உடைய மிழலையுள் மேவும் ஈசனே ! இராவணன் கயிலையின்கீழ் நெரிப்பட்டபோது அவன் ஏத்திப் போற்ற, இடர் கொடுத்த நாதனே ! உம்மை ஏத்துபவர்கள், புலன்களை அடக்கி ஆளும் பெற்றி உடையவர்களே.
1061. வெற்பமர் பொழிலணி மிழலையு ளீர்உமை
அற்புதன் அயன்அறி யானே
அற்புதன் அயன்அறி யாவகை நின்றவ
நற்பதம் அறிவது நயமே.
தெளிவுரை : மலை போன்ற மாளிகைகளும், உயர்ந்த பொழில்களும் கொண்ட மிழலையுள் மேவும் ஈசனே ! திருமாலும் பிரமனும் அறிவதற்கு அரியவனே ! உமது திருவடியின் மேன்மை நலன்களை அறிதலே பெருமை உடையது.
1062. வித்தக மறையவர் மிழலையு ளீர்அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே
புத்தரொடு அமண் அழித் தீர்உமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.
தெளிவுரை : மறைவல்ல அந்தணர்கள் மேவும் மிழலையுள் வீற்றிருக்கும் ஈசனே ! புத்தமும் அமணும் வீழுமாறு செய்த இறைவனே ! உம்மைப் போற்றுபவர்கள் பக்தியுடைய நன் மனம் உடையவர்களே.
1063. விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனைச்
சண்பையுள் ஞானசம் பந்தன்
சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே.
தெளிவுரை : உயர்ந்து ஓங்கும் பொழில் கொண்ட மிழலையுள் விளங்கும் ஈசனை ஏத்திய சண்பையின் ஞானசம்பந்தனின் தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஒண்பொருளாக உணர்ந்து ஓதுதல் நல்லுணர்வு ஆகும். இது மக்கட் பிறவியின் பெருமைக்கு உரியதாம் என்பது குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
357. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1064. முரசதிர்ந்து எழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீர்உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.
தெளிவுரை : முரசு எழும்ப விழாக்கள் நிகழும் முதுகுன்றத்தில் மழுப்படை ஏந்திய ஈசனே ! உம்மைப் பரவி ஏத்துபவர்கள், உலகத்தில் அரச போகத்தை அடைவார்கள்.
1065. மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்அசைத் தீரே
பையர வம்அசைத் தீர்உமைப் பாடுவார்
நைவிலர் நாள்தொறு நலமே.
தெளிவுரை : அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, முதுகுன்றம் மேவி அரவத்தை அரையில் கட்டி விளங்கும் ஈசனே ! உம்மைப் போற்றிப் பாடுபவர்கள், இகழ்ச்சி அற்றவர்கள்; எல்லா நாளும் நலத்தையே பெறுபவர் ஆவர்.
1066. முடிவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுஉடை யீரே
மழவிடை யதுஉடை யீர்உமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே.
தெளிவுரை : முழவு ஒலிக்கவும், பொழில் சூழவும் விளங்கும் முதுகுன்றத்தில் மேவிய ஈசனே ! இடப வாகனத்தில் வீற்றிருப்பவரே ! உம்மை ஏத்தும் அடியவர்களுக்குப் பழியும் இல்லை, பிறர் பகைமை கொண்டு இடர் செய்வதும் இல்லை.
1067. முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீர்உமை ஓதுவார்
திருவொடு தேசினர் தாமே.
தெளிவுரை : நறுமணம் கமழும் அழகிய பொழிலின் எழில் மேவும் முதுகுன்றத்தில், அழகிய சடை முடி விளங்க வீற்றிருக்கும் ஈசனே ! உம்மை ஓதுபவர்களுக்குச் செல்வமும் அழகிய மேனியும் அமையும்.
1068. முத்தி தரும்உயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீர்உமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே.
தெளிவுரை : முத்தி நல்கும் உயர்ந்த திருத்தலமாகிய முதுகுன்றத்தில் மேவிய ஈசனே ! இராவணனுடைய பத்துத் தலைகளையும் அடர்த்த பெருமானே ! உம்மைப் பாடிப் போற்றும் அடியவரே நல்ல சித்தம் உடையவர் ஆவர்.
1069. முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்று
இயன்றவர் அறிவரி யீரே
இயன்றவர் அறிவரி யீர்உமை ஏத்துவார்
பயன்தலை நிற்பவர் தாமே.
தெளிவுரை : தமக்குள் போட்டி வைத்துத் தேடிய திருமாலும் பிரமனும் காணுதற்கு அரியவராகிய ஈசனே ! தவத்தின் வழி முயன்ற முனிவர்களுக்கு அருள் வழங்கிய பெருமானே ! முதுகுன்றம் மேவிய நாதனே ! உம்மை ஏத்தி வழிபடுபவர்கள், மேலான பயனைக் கொண்டு விளங்குவார்கள்.
1070. மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக் காய்ந்தீரே
கட்டமண் தேரைக் காய்ந் தீர்உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே.
தெளிவுரை : பொழில் திகழும் முதுகுன்றத்தில், அமணும் பௌத்தமும் துன்புறுமாறு செய்து மேவும் ஈசனே ! உம்மைச் சந்தித்து ஏத்தும் முனிவர் முதலான  சீலத்தோர் சிறப்பினை பெறுவார்கள்.
1071. மூடிய சோலைசூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி இலரே.
தெளிவுரை : அடர்த்தியான சோலை சூழ்ந்த முதுகுன்றத்தில் விளங்கும் ஈசனை நாடிய ஞானசம்பந்தன் ஏத்திய செந்தமிழாகிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்களுக்குப் பழி முதலான துன்பங்கள் எதுவும் அணுகாது.
திருச்சிற்றம்பலம்
358. திருத்தோணிபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1072. கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற்
காரிகை மாட்டு அருளி
அரும்பமர் கொங்கை யோர்பால் மகிழ்ந்த
அற்புதம் செப்பரிதால்
பெரும்பக லேவந்துஎன் பெண்மை கொண்டு
பேர்த்தவர் சேர்ந்த இடம்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத்
தோணி புரந்தானே.
தெளிவுரை : சிவபெருமான், கரும்பு வில்லை உடைய மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து, அவன் மனைவியாகிய இரதிக்கு அருள் புரியும் தன்மையால் உயிர் பெறச் செய்தவர்; உமாதேவியை ஒரு பக்கத்தில் பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாக விளங்குபவர்; யாவரும் அறியுமாறு என் உள்ளத்தைக் கவர்ந்து என்னை ஆட்கொண்டவர். அப்பெருமான் பொருந்தி விளங்குகின்ற இடமாவது, வண்டு அமரும் சோலை சூழ்ந்த செம்மை பெருகும் தோணிபுரமே.
1073. கொங்கியல் பூங்கழல் கொவ்வைச் செவ்வாய்க்
கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனி யெங்கும்
பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்துஎன்
சாயல்கொண் டார்தமது ஊர்
துங்கியல் மாளிகை சூழ்ந்த செம்மைத்
தோணி புரந்தானே.
தெளிவுரை : ஈசன், தேன் மணம் துளிர்க்கும் மென்மையான கூந்தலும், கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயும் விளங்கும் அழகிய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, பால் போன்ற திருவெண்ணீற்றை அணிந்து திகழ்பவர். அப் பெருமான், எனது உள்ளத்தில் புகுந்து, எனது வளையலைக் கழன்று விழுமாறு இளைக்கச் செய்தவர். அவரது ஊராவது, உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்து விளங்குகின்ற செம்மையுறு தோணிபுரமே.
1074. மத்தக் களிற்றுரி போர்க்கக் கண்டு
மாதுமை பேதுறலும்
சித்தம் தெளியநின்று ஆடி ஏறூர்
தீவண்ணர் சில்பலிக்கொன்று
ஒத்தபடி வந்து என்உள்ளம் கொண்ட
ஒருவர்க்கு இடம் போலும்
துத்தநல் இன்னிசை வண்டு பாடும்
தோணி புரந்தானே.
தெளிவுரை : ஈசன், யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; உமாதேவி மகிழுமாறு திருநடனம் புரிந்தவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்கும் தீவண்ணர்; பலி ஏற்கும் தன்மையில் திரிந்து எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். ஒப்பற்ற அத்தகைய ஈசனுக்கு இடமாவது, துத்தம் என இசை எழுப்பி வண்டு பாடும் தோணிபுரமே.
1075. வள்ளல் இருந்த மலை யதனை வலம்
செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன்று
எடுத்தோன் உரநெரிய
மெள்ள விரல் வைத்து என்னுள்ளம் கொண்டார்
மேவும் இடம் போலும்
துள்ளொலி வெள்ளத்தின்மேல் மிதந்த
தோணி புரந்தானே.
தெளிவுரை : கயிலை மலையை வலம் செய்தல் வேண்டும் என நினையாது, உள்ளம் கொதித்தெழ எடுத்த இராவணனின் வலிமையை அடர்த்து, அவன் நெரியுமாறு திருப்பாத விரலால் மெள்ள வைத்த சிவபெருமான், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். அப்பெருமான் மேவும் இடமாவது, மகாப்பிரளய காலத்தில் வெள்ளத்தின்மேல் மிதந்து நிலை பெறும் தோணிபுரமே.
1076. வெல்பற வைக்கொடி மாலும் மற்றை
விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாய்உயர்ந்தும் பன்றிய
தாய்ப் பணிந்தும்
செல்வற நீண்டுஎம் சிந்தை கொண்ட
செல்வர் இடம்போலும்
தொல்பற வைசுமந்து ஓங்கு செம்மைத்
தோணி புரந்தானே.
தெளிவுரை : கருடக் கொடியுடைய திருமாலும், மற்றும் பிரமனும் முறையே பன்றியாய்ப் பூமியில் படிந்து குடைந்தும், அன்னப் பறவையாய் உயர்ந்து சென்றும் காணற்று அரியவராகிய ஈசன், என் சிந்தையைக் கவர்ந்த செல்வர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பிரளய காலத்திலும் அழியாது ஓங்கும் தோணிபுரமே.
1077. குண்டிகை பீலிதட்டோடு நின்று
கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி
யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்து எருது ஏறிவந்துஎன்
எழில் கவர்ந்தார் இடமாம்
தொண்டிசை பாடல் அறாத தொன்மைத்
தோணி புரந்தானே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் வாய்ச் சொற்கள் அடங்குமாறு, இண்டை மாலை புனைந்து, இடபத்தில் ஏறி விளங்கும் சிவபெருமான், என் எழிலைக் கவர்ந்தவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது, தொண்டர்கள் இசை பாடிப் போற்றும் தொன்மை நகராகிய தோணிபுரமே.
1078. தூமரு மாளிகை மாட நீடு
தோணி புரத்துஇறையை
மாமறை நான்கினொடு அங்கம்ஆறும்
வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும்
ஞானசம்பந் தன் சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும் வல்லார்
பார்முழு தாள்பவரே.
தெளிவுரை : தூய வெள்ளை மருவும் வண்ண மாளிகைகளும் மாடங்களும் நிறைந்த தோணிபுரத்தில் வீற்றிருக்கும் ஈசனை ஏத்தி நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் வல்லவராகி, வாய்மையும் கேள்வி ஞானமும் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இப்பூவுலகை ஆளும் பேறுடையவர்கள் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
359. திருஇராமேச்சுரம் (அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1079. திருதரு மாமணி நாகமாடத்
திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக்க எரியேந்தி யாடு
நலமே தெரிந்து உணர்வார்
எரிகதிர் முத்தம் இலங்குகானல்
இராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி
விமலர் செயும்செயலே.
தெளிவுரை : மாணிக்கத்தை உடைய நாகம் அசைந்து ஆட, நரிகள் திரியும் மயானத்தில் நெருப்பைக் கையில் ஏந்தி ஆடும் தன்மையுடையவர், சிவபெருமான். அவர், முத்துக்கள் விளங்கும் கடற் சோலையுடைய இராமேச்சுரத்தில், ஒளிக்கதிர் வீசும் வெண்மையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் தரித்த விமலர்.
1080. பொறிகிளர் பாம்பரை ஆர்த்துஅயலே
புரிவோடு உமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந்து எல்லியாடும்
திறமே தெரிந்து உணர்வார்
எறிகிளர் வெண்திரை வந்துபேரும்
இராமேச் சரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகைஎம்
மணாளர் செய்யும் செயலே.
தெளிவுரை : படம் கொண்டு விளங்கும் அரவத்தை நன்கு கட்டிய ஈசன், உமாதேவியார் பண்ணிசை பாட, இரவில் நடம் புரிபவர். அவர், கடலலைகள் வீசுகின்ற இராமேச்சுரத்தில் மானும் மழுவும் ஏந்தியவராகிய எமது மணாளர். அவருடைய செயல்கள் யாவும் திருவரும் தன்மையுடையதே.
1081. அலைவலர் தண்புனல் வார்சடைமேல்
அடக்கி ஒரு பாகம்
மலைவளர் காதலி பாடஆடி
மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ் விரியும்
இராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடும்
தலைவர் செயும் செயலே.
தெளிவுரை : கங்கையைச் சடை முடியின்மீது தரித்து, ஒரு பாகத்தில் உமாதேவி திகழ்ந்து மேவி இனிமையாகப் பாடத் திருநடம் புரிந்து மாட்சிமையுடன்  விளங்குபவர், சிவபெருமான். தாழை விரிந்து மேவி மணம் கமழும் இராமேச்சுரத்தில் அப்பெருமான், மண்டை ஓடுகளை மாலையாகக் கொண்டு விளங்குபவர். இத்தன்மையானது தலைவராகிய அப்பரமனின் செயலேயாகும். அதன் காரணம் அறிய ஒண்ணாதது என்பது குறிப்பு.
1082. மாதன நேரிழை ஏர்தடங்கண்
மலையான் மகள் பாடத்
தேதெரி அங்கையில் ஏந்தியாடும்
திறமே தெரிந்து உணர்வார்
ஏதமிலார் தொழுது ஏத்திவாழ்த்தும்
இராமேச்சுர மேயார்
போதுவெண் திங்கள்பைங் கொன்றைசூடும்
புனிதர் செயும் செயலே.
தெளிவுரை : அகன்ற விழியுடைய உமாதேவியார் இசை பாட, எரியும் நெருப்பை அழகிய கையில் ஏந்தி ஆடும் ஈசன், அனைத்தும் வல்லவர். அவர் பாவங்கள் யாவும் தீர்க்கப் பெற்ற அடியவர்களால் ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், பிறைச்சந்திரனும் கொன்றை மலரும் சூடும் புனிதர்.
1083. சூலமோடு ஒண்மழு நின்றிலங்கச்
சுடுகாடு இடமாகக்
கோலநன் மாதுடன் பாடஆடும்
குணமே குறித்து உணர்வார்
ஏல நறும்பொழில் வண்டுபாடும்
இராமேச் சுரமேய
நீலமார் கண்டம் உடையஎங்கள்
நிமலர் செயும் செயலே.
தெளிவுரை : ஈசன், சூலமும் மழுவும் விளங்கச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு, உமாதேவி பண் இசைத்துப் பாட நடனம் புரிபவர். அவர் நறுமணம் கமழும் பொழிலில் வண்டு பாடும் இராமேச்சுரத்தில் மேவி விளங்குபவர். அப் பெருமான் நீலகண்டத்தை உடைய எங்கள் நிமலர்.
1084. கணை யிணை வெஞ்சிலை கையில்ஏந்திக்
காமனைக் காய்ந்தவர் தாம்
இணைபிணை நோக்கிநல் லாளோடுஆடும்
இயல்பின ராகிநல்ல
இணைமலர் மேல்அன்னம் வைகுகாணல்
இராமேச் சுரமேய
அணைபிணை புல்கு கரந்துசூடும்
அடிகள் செயும் செயலே.
தெளிவுரை : ஐந்து மலர்கணைகளை இணைத்துத் தொடுக்க வில்லேந்திய மன்மதனை எரித்த சிவபெருமான், உமாதேவியோடு ஆடுகின்ற இயல்பினராகி, அன்னப் பறவை வைகும் சோலையுடைய இராமேச்சுரத்தில் மேவியவர். அவர் சேர்த்துக் கட்டப் பெற்ற கரந்தை மாலை சூடும் அடிகள் ஆவார்.
1085. நீரினார் புன்சடை பின்புதாழ
நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும்
உவகை தெரிந்துணர்வார்
ஏறினார் பைம்பொழில் வண்டுபாடும்
இராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் திங்கள் சூடும்
கடவுள் செயும் செயலே.
தெளிவுரை : கங்கை தரித்த புன்சடை பின்புறம் தாழ வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடி இரவில் மயானத்தில் ஆடுகின்ற சிவபெருமான், வண்டு பாடும் பொழில் சூழ்ந்த இராமேச்சுரத்தில் மேவி விளங்குபவர். அப் பெருமான், கார் காலத்தில் விளங்கும் கொன்றை மலருடன் வெண்திங்கள் சூடும் கடவுள் ஆவார்.
1086. பொன்திகழ் சுண்ணவெண் ணீறுபூசிப்
புலித்தோல் உடையாக
மின்திகழ் சோதியர் பாடலாடல்
மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவி யேத்தும்
இராமேச் சுரமேயார்
குன்றினால் அன்று அரக் கன்தடந்தோள்
அடர்த்தார் கொளும் கொள்கையே.
தெளிவுரை : சுடர் பெருகும் திருவெண்ணீறு பூசிப் புலித் தோலை உடையாகக் கொண்டு, மின்னலைப் போன்ற செவ்வண்ணத்தவராகிய சிவபெருமான், பாடலும் ஆடலும் மிகுந்து புரிபவர். அவர், சிறப்புடையோர் பரவி ஏத்தும் இராமேச்சுரத்தில் மேவியவர். அப் பெருமான் கொண்ட கொள்கையானது, இராவணனைக் கயிலை மலையைக் கொண்டு அடர்த்ததாம்.
1087. கோவலன் நான்முகன் நோக்கொணாத
குழகன் அழகாய
மேவலன் ஒள்ளெரி யேந்தியாடும்
இமையோர் இறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும்
இராமேச்சுர மேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம்
இறைவர் செயும் செயலே.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் நோக்கிக் காண முடியாத குழகன், சிவபெருமான். அப் பெருமான் அழகிய வடிவுடையவராய் ஒளிகொண்டு எரியும் நெருப்பை விரும்பி ஏந்தி ஆடுபவர்; இமையவர்தம் இறைவன்; அம்பைச் செலுத்துவதில் வல்லவராகிய இராமபிரான் ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரத்தில் மேவியவர்; வலிமையான இடபத்தை வெற்றி தரும் கொடியாகக் கொண்டு விளங்குபவர். இத்தன்மையில் உடையவர் ஈசன்.
1088. பின்னொடு முன்னிடு தட்டைச் சாத்திப்
பிரட்டே திரிவாரும்
பொன்னெடும் சீவரப் போர்வை யார்கள்
புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண்டு யாழ்முரலும்
இராமேச் சுரமேவிய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும்
பரமர் செயும் செயலே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் புறச் சொற்களைக் கேட்க வேண்டாம். நீண்ட சோலையில் வண்டு யாழின் ஓசை போன்று இசை எழுப்பும் இராமேச்சுரத்தில் மேவிய சிவபெருமான், மண்டை ஓட்டினை மாலையாகக் கொண்டு கபாலம் ஏந்தித் திரியும் பரமர் ஆவர். அவரை ஏத்துக என்பது குறிப்பு.
1089. தேவியை வவ்விய தென்னிலங்கை
அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும்
இராமேச் சுரத்தாரை
நாவியல் ஞானசம் பந்தனல்ல
மொழியால் நவின்றுஏத்தும்
பாவியல் மாலைவல்லார் அவர்தம் வினை
யாயின பற்றறுமே.
தெளிவுரை : சீதாப் பிராட்டியைக் கவர்ந்த இராவணனின் வலிமையை வாட்டி, சிறந்த அம்பினைச் செலுத்தும் வில்லுடைய அண்ணலாகிய இராமபிரான் நண்ணிய இராமேச்சுரத்தில் மேவிய சிவபெருமானை ஏத்தி, ஞானசம்பந்தன் நன்மொழியால் நவின்று ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வினை யாவும் தீரும்.
திருச்சிற்றம்பலம்
360. திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1090. காம்பினை வென்றமென் தோளி பாகம்
கலந்தான் நலம்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவின்
திருநாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்சடை யான்
புலியின் னுரி தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன்
பாதம் பணி வோமே.
தெளிவுரை : மெல்லிய மூங்கிலினும் மென்மையான தோளுடைய உமாதேவியைப் பாகமாக உடைய சிவபெருமான், நலம் பெருக்கும் தீர்த்த மகிமையுடைய இனிய புனல் சூழ்ந்த திருநாரையூர் மேவியவர். அவர், கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; புலியின் தோலை ஆடையாக உடையவர்; பாம்பினை அரையில் கட்டிப் பண்டரங்கம் என்னும் திருக்கூத்தினை ஆடுபவர். அப் பெருமானுடைய திருப்பாதத்தைப் பணிவோமாக.
1091. தீவினை யாயின தீர்க்க நின்றான்
திருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடி யான்புடை
சூழப் பலபூதம்
ஆவினில் ஐந்துங்கொண்டு ஆட்டுகந்தான்
அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை எய்துஅழித்தான் கழலே
பரவா எழுவோமே.
தெளிவுரை : சிவபெருமான், மன்னுயிர்களின் தீய வினைகளைத் தீர்த்து அருள்பவர்; திருநாரையூர் என்னும் தலத்தில் மேவுபவர்; பூக்களை மாலையாகத் தொடுத்துச் சடை முடியில் புனைபவர்; பூத கணங்கள் புடை சூழ விளங்குபவர்; பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தைப் பூசையாக ஏற்று மகிழ்பவர். அப்பெருமான், அடங்கி நிற்காது திரிந்து தீமை செய்த மூன்று அசுரர்களுடன், அவர்களுடைய கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு, அம்பு தொடுத்து அழித்தவர். அவருடைய திருக்கழலைப் பரவிப் போற்றி நலம் பெறுவோமாக.
1092. மாயவன் சேயவன் வெள்ளியவன்
விடம்சேரு மைமிடற்றன்
ஆயவ னாகியொர் அந்தர மும்அவன்
என்று வரையாகம்
தீயவன் நீரவன் பூமியவன்
திருநாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர் மேல்
வினையாயின வீடுமே.
தெளிவுரை : ஈசன், மறைந்து நிற்கும் தன்மை உடையவர்; மிகத் தொலைவிலும் விளங்குபவர்; பேரொளியாய்த் திகழ்பவர்; நஞ்சினை மிடற்றில் தேக்கிக் கறை விளங்குமாறு திருக்காட்சி நல்கி, நீலகண்டன் ஆகியவர்; உயர்ந்த வேள்வி ஆகியவர்; நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்கள் ஆகியவர். திருநாரையூரில் மேவும் அப் பெருமானைத் தொழுபவர்களுடைய வினை யாவும் தீரும்.
1093. துஞ்சிருள் ஆடுவர் தூமுறுவல்
துளங்கும் உடம்பினராய்
அஞ்சுடர் ஆரெரி ஆடுவர்ஆர்
அழலார் விழிக்கண்
நஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர்
நலன் ஓங்கு நாரையூர்
எம்சிவ னார்க்கு அடி மைப்படு வார்க்கு
இனி இல்லை ஏதமே.
தெளிவுரை : சிவபெருமான், நள்ளிருளில் நடம் புரிபவர்; தூய முறுவல் கொண்டு அசைக்கும் திருமேனியராய், அழகிய சுடரானது நன்கு எரியுமாறு கைகளை வீசி ஆடுபவர்; நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; நலம் பெருகச் செய்யும் நாரையூரில் மேவும் எமது சிவனாகிய அப் பெருமானுக்கு அடிமைப்படுபவர்களுக்கு எவ்விதமான துன்பமும் இல்லை.
1094. பொங்கு இளங்கொன்றையினார் கடலில்
விடம்உண்டு இமையோர்கள்
தங்களை ஆரிடர் தீரநின்ற
தலைவர் சடைமே லோர்
திங்களை வைத்து அனல் ஆடலினார்
திரு நாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீறு அணியவல்லார்
அவரே விழுமியரே.
தெளிவுரை : சிவபெருமான், பூரித்து விளங்கும் கொன்றை மலரைச் சூடியவர்; பாற்கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு தேவர்களின் பெருந்துயரைத் தீர்த்த தலைவர்; சடை முடியின் மீது சந்திரனைத் தரித்து நெருப்பைக் கையில் கொண்டு ஆடுபவர். திருநாரையூரில் வீற்றிருக்கும், திருவெண்ணீறு அணிந்த அப்பெருமானே யாவற்றிலும் விழுமியர் ஆவார். தேவர் தம் துயர் தீர்த்த தலைவரும் விழுமியரும் ஆகிய ஈசனைத் தொழுது ஏத்துதல் நலம் பயக்கும் என்று உணர்த்துதல் ஆயிற்று.
1095. பாருறு வாய்மையினார் பரவும்
பரமேட்டி பைங்கொன்றைத்
தாருறு மார்புடையான் மலையின்
தலைவன் மலை மகளைச்
சீருறு மாமறுகிற் சிறைவண்டு
அறையும் திரு நாரை
யூர்உறை எம்இறைவர்க்கு இவை
ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.
தெளிவுரை : சிவபெருமான், பூவுலகத்தில் மெய்யுணர்வு உடையவர்களால் பரவி ஏத்தப் பெறும் பரம் பொருள்; கொன்றை மாலையை மார்பில் தரித்தவர்; கயிலை மலையின் நாதனாக விளங்குபவர்; உமாதேவியைச் சிறப்பாக ஏற்றுப் பாகமாகக் கொண்டு திகழ்பவர். சிறகுகளை உடைய வண்டு, வீதிகளில் உள்ள பூஞ்செடிகளில் வட்டம் இட்டு, ரீங்காரம் செய்யும் திருநாரையூரில் வீற்றிருப்பவர், எம் இறைவனாகிய அப்பெருமான். அவர் ஏற்று விளங்கும் பொருள்கள், ஒன்றுக்கொன்று ஒவ்வாதனவாகும்.
1096. கள்ளி யிடுதலை யேந்துகையர்
கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடைதன்மேல்
மிளிர் ஆடரவு ஆர்த்து
நள்ளிருள் நட்டமது ஆடுவர்
நன்னலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில் எம்மேல்வரு
வல்வினை யாயின ஓடுமே.
தெளிவுரை : சிவபெருமான், கள்ளிச் செடிகள் விளங்கும் மயானத்தில் மண்டை ஓட்டைத் தரித்திருப்பவர்; கோவண ஆடை உடையவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; நள்ளிருளில் நடம் புரிபவர். அப்பெருமான், நல்ல நலன்களை ஓங்கச் செய்யும் நாரையூரில் வீற்றிருப்பவர். அவரை நினைத்த அளவில் கொடிய வினைகள் யாவும் விலகி ஏகும்.
1097. நாமம் எனப்பல வும்உடையான்
நலன்ஓங்கு நாரையூர்
தாமொம் எனப் பறையாழ் குழல்
தாளார் கழல் பயில
ஈமவிளக்குஎரி சூழ்சுடலை
இயம்பும் இடுகாட்டில்
சாமம் உரைக்கநின்று ஆடுவானும்
தழலாய் சங்கரனே.
தெளிவுரை : சிவபெருமான், பல திருநாமங்களைக் கொண்டு விளங்குபவர்; நலம் திகழும் நாரையூரில் பறை, யாழ், குழல் ஒலிக்க, மயானத்தில் எரியும் கொள்ளியை விளக்காகக் கொண்டு நடம் புரிபவர்; அப்பெருமான், நெருப்பு வண்ணத்தில் மேவும் சங்கரனே.
1098. ஊனுடைவெண் தலைகொண்டு உழல்வான்
ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண் மதிவைத்து உகந்தான்
வரிவண்டு யாழ்முரலத்
தேனுடைமா மலரன்னம் வைகும்
திருநாரை யூர்மேய
ஆனிடை ஐந்து உகந்தான் அடியே
பரவா அடைவோமே.
தெளிவுரை : சிவபெருமான், மண்டை ஓட்டைக் கரத்தில் ஏந்தித் திரிபவர்; ஒளி கொண்டு திகழும் சடை முடியின் மீது வெண்மையான சந்திரனைத் தரித்தவர்; வரிவண்டு யாழ் போன்று இசைத்து ரீங்காரம் செய்யவும், தேன் மணம் கமழும் மலரில் அன்னம் வைகவும் விளங்கும் திருநாரையூரில் மேயவர். பசுவினிட மிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தை விரும்பிப் பூசனை கொள்ளும் அப் பெருமானைப் பரவி, நற்கதியை அடைவோமாக.
1099. தூசுபுனைதுவ ராடை மேவும்
தொழிலார் உடம்பினிலுள்
மாசு புனைந்துஉடை நீத்தவர்கண்
மயல்நீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின்
திருநாரை யூர்தன்னில்
பூசுபொடித் தலைவர் அடியார்
அடியே பொருத்தமே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கின்ற சொற்கள் மயல் கொண்டவை. அவற்றை ஏற்க வேண்டாம். மெய்யுணர்வுடைய அன்பர்களே ! திருவெண்ணீறு பூசி விளங்குகின்ற சிவபெருமான் திருநாரையூரில் வீற்றிருப்பவர். ஆங்கு சென்று அடைவீர்களாக. அப்பெருமான் திருவடியே பொருத்தமான நலன்களை அளிக்க வல்லது. அதனை நாடுவீராக.
1100. தண்மதி தாழ் பொழில்சூழ் புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர் சடையான் உறையும்
திருநாரை யூர்தன்மேல்
பண்மதியாற் சொன்ன பாடல் பத்தும்
பயின்றார் வினைபோகி
மண்மதியாது போய்வான் புகுவர்
வானோர்எதிர் கொளவே.
தெளிவுரை : திங்கள் தவழும் பொழில் சூழ்ந்த புகலியில் விளங்கும் தமிழ் ஞானசம்பந்தன், ஒளி மிக்க சந்திரனைச் சூடிய சடை முடியுடைய ஈசன் உறையும் திருநாரையூரில் மீது பண்ணிசையின் ஞானம் பெருகச் சொன்ன இத் திருப்பதிகத்தை  ஓதுபவர்கள், வினை யாவும் நீங்கப் பெற்றவராவார்கள்; இம் மண்ணுலகத்தின் வாழ்க்கையானது நிலையற்றதென உணர்ந்து தேவர்கள் எதிர் கொண்டு அழைக்க, வானுலகை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
361. திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1101. கொடியுடை மும்மதில் ஊடுருவக்
குனிவெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர் பிரான்
அடியார் இசைந்து ஏத்தத்
துடிஇடை யானையொர் பாகமாகத்
துதைந்தார் இடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும்
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : கொடி கட்டிப் பறந்த மூன்று கோட்டை மதில்களும் சிதைந்து அழியுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு தொடுத்து எரித்தவர், சிவபெருமான். அப்பெருமான் அடியவர்கள் ஏத்தி வணங்க பொருந்த ஏற்று விளங்குகின்ற இடமாவது, எருமைகள் அழகிய வயல்களில் படியும் வலம்புர நன்னகரே.
1102. கோத்தகல் லாடையும் கோவணமும்
கொடுகொட்டி கொண்டு ஒருகைத்
தேய்த்தன்று அநங்கனைத் தேசழித்துத்
திசையார் தொழுது ஏத்தக்
காய்த்தகல் லாலதன் கீழ் இருந்த
கடவுள் இடம் போலும்
வாய்த் முத் தீத் தொழில் நான்மறையோர்
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : சிவபெருமான், காவி ஆடை யுடையவர்; கோவணமும் கொண்டு மேவுபவர்; ஒரு கரத்தில் கொடு கொட்டி என்னும் வாத்தியத்தைக் கொண்டு வாசிப்பவர்; மன்மதனுடைய உடலை அழித்தவர்; சனகாதி முனிவர்கள் தொழுது ஏத்தக் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் அமர்ந்திருப்பது அறப் பெருளை உரைத்தருளியவர். அக்கடவுள் வீற்றிருக்கும் இடமாவது, மூவகையான தீயை வளர்க்கும் நான்மறையோர் மேவும் வலம்புர நன்னகரே.
1103. நொய்யதொர் மான்மறி கைவிரலின்
நுனைமேல் நிலையாக்கி
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி
விரிபுன் சடைதாழ
மையிருஞ் சோலை மணங்கமழ
இருந்தார் இடம் போலும்
வைகலும் மாமுழவம் அதிரும்
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : ஈசன், மென்மையான மான் கன்றைக் கையின் நுனியில் ஏந்தி, நெருப்பு வண்ணம் போன்ற திருமேனியில் திருவெண்ணீறு பூசி, விரிந்து பரவும் சடை தாழ விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, நாள்தோறும் விழா பெருக, முழவு அதிரும் சிறப்புடையதாய், அடர்ந்த சோலையின் மணம் கமழும் வலம்புர நன்னகரே.
1104. ஊனமர் ஆக்கை உடம்பு தன்னை
உணரிற் பொருளன்று
தேனமர் கொன்றையி னான்அடிக்கே
சிறுகாலை யேத்துமினோ
ஆன்அமர் ஐந்தும் கொண்டு ஆட்டுஉகந்த
அடிகள் இடம் போலும்
வானவர் நாள்தொறும் வந்துஇறைஞ்சும்
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : ஊன் பெருகி மேவும் யாக்கை எனச் சொல்லப்படும் இவ்வுடம்பை, நன்கு ஆயந்து உணர்ந்தால், இது நிலையுடைய பொருள் ஆகாது என விளங்கும். எனவே, இவ்வுடலைப் பேணும் தன்மையில் வாழ்க்கையைக் கருதாது, தேன் மணம் கமழும் கொன்றை மலர் சூடிய சிவபெருமானின் திருவடியையே இளமை முதற் கொண்டு ஏத்துவீராக. அப்பெருமான், பசுவிலிருந்து பெறப்படும் நஞ்ச அவ்வடிகள் மேவும் இடமாவது, தேவர்கள் நாள்தோறும் வணங்கித் துதிக்கின்ற வலம்புர நன்னகரே.
1105. செற்று எறியும் திரையார் கலுழிச்
செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறியாது அனல்ஆடு நட்டம்
அணியார் தடங்கண்ணி
பெற்றறிவார் எருதுஏற வல்ல
பெருமான் இடம் போலும்
வற்றறியாப் புனல்வாய்ப்புஉடைய
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : அலை வீசும் கங்கையைச் சிவந்த சடை முடியின் மீது வைத்த சிவபெருமான், முடிவு அறியாத அனலைக் கைக் கொண்டு நள்ளிருளில் நடனம் புரிபவர்; அணி கொண்டு திகழும் உமாதேவியை ஒருபால் கொண்டு திகழ்பவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது நீர் வளம் பெருகி மேவும் வலம்புர நன்னகரே.
1106. உண்ணவண் ணத்துஒளி நஞ்சம்உண்டு
உமையோடு உடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச்
சுடர்ச் சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணி செய்யப்
பயின்றார் இடம் போலும்
வண்ணவண் ணப்பறை  பாணியறா
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : சிவபெருமான், கரிய வண்ணம் பெருகும் நஞ்சினை உண்டு நீலகண்டர் ஆகியவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு வெண்ணீற்றைத் திருமேனியிப் பூசிச் சுடர்விடும் சோதி வண்ணமாய் விளங்குபவர்; பண்ணின் இசை வண்ணம் பெருகப் பாடி ஆடுபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வண்ண வண்ணமான வாத்திய வகைகளாகிய முழவு, பறை முதலானவை எஞ்ஞான்றும் விளங்கும் வலம்புர நன்னகரே.
1107. புரிதரு புன்சடை பொன்தயங்கப்
புரிநூல புரண்டிலங்க
விரைதரு வேழத்தின் ஈருரி ÷õல்
மேல்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூத்துகில் ஆரணங்கை
அமர்ந்தார் இடம் போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : சடை முடியானது பொன்போன்று ஒளிர, முப்புரி நூல் திருமார்பில் புரள, யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு விளங்குபவர், சிவபெருமான். அவர், மூங்கிலைப் போன்ற மெல்லிய தோளுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர். அப்பெருமான் உறையும் இடமாவது, மலை போன்ற உயர்ந்த புகழ் விளங்கும் அடியவர்தம் வாழும் வலம்புர நன்னகரே.
1108.தண்டுஅணை தோள்இருபத்தினொடும்
தலைபத்து உடையானை
ஒண்டுஅணை மாதுஉமைதான்நடுங்க
ஒருகால் விரல்ஊன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல
விகிர்தர்க்கு இடம் போலும்
வண்டு அணை தன்னொடு வைகுபொழில்
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : தண்டு முதலான ஆயுதங்களை உடைய இருபது தோளும் பத்துத் தலையும் உடைய இராவணன், கயிலையைப் பேர்த்த போது, உமாதேவி வெருவி நடுங்கி நிலையில், சிவபெருமான், தனது திருப்பாத விரல் ஒன்றினால் ஊன்றி அவ்வரக்கனது செருக்கினை அடக்கிப் பின்னர் அருளும் வகையில், வாளும் வாழ்நாளும் அளித்தார்.
1109. தாருறு தாமரை மேலயனும்
தரணி யளந்தானும்
தேர்வுஅறி யாவகை யால்இகலித்
திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வுஅறி யாவகை யால்நிமிர்ந்த
பெருமான் இடம்போலும்
வார்உறு சோலை மணம்கமழும்
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : தாமரை மலரின் மீது விளங்கும் பிரமனும், உலகத்தை அளந்த திருமாலும் அறியாத வகையால் அயர்ந்தும் திகைத்தும் ஏத்தி நிற்கச் சோதி மயமாய் ஓங்கிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, நீண்ட சோலையின் மணம் கமழும் வலம்புர நன்னகரே.
1110. காவிய நற்றுவர் ஆடையினார்
கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப்
பழந் தொண்டர் உள்ளுருக
ஆவியுள் நின்றருள் செய்யவல்ல
அழகர் இடம்போலும்
வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய
வலம்புர நன்னகரே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கடுமையான விரதத்தைச் சொல்பவர்கள். அதனை ஏற்காது விளங்குபவர் பழமையான திருத்தொண்டர்கள். அவர்கள், உள்ளம் உருகி ஏத்த, உயிரிற் கலந்து நின்று அருள் புரிபவர், சிவபெருமான். அத்தகைய அழகராகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, குளங்களிலிருந்து வயல்களுக்குப் பெருகிச் செல்லும் நீர் வளம் உடைய வலம்புர நன்னகரே.
1111. நல்லியல் நான்மறை யோர்புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடை யினான்
வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும்சொல்ல
வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச்
சிவலோகம் சேர்வாரே.
தெளிவுரை : ஆசார சீலங்களைக் கடைப் பிடித்து நன்கு ஒழுகுகின்ற வேத விற்பன்னர்கள் விளங்கும் புகலியின் தமிழ்ஞானசம்பந்தன், புலித் தோலை ஆடையாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கும் வலம்புர நன்னகரைச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓது வல்லவர், தொல்வினை நீங்கப் பெறுவர். அவர்கள் ஈசன் திருவடியைச் சார்ந்து, சிவலோகத்தில் பொருந்தி விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
362. திருப்பரிதி நியமம் (அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1112. விண்கொண்ட தூமதி சூடிநீடு
விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப்
பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொடு ஏர்கவர்ந்த
கள்வர்க்கு இடம் போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : சிவபெருமான், பிறைச் சந்திரனைச் சூடி மென்மையான சடை முடி தாழ, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழும் மார்பில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; பாராட்டுவதற்கு ஒவ்வாத பிச்சையை ஏற்றுக் கண்ணைக் கவரும் எழில் கொண்ட வடிவினராய் வந்து என்னைக் கவர்ந்தவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வண்டினம் பண் இசைத்து மகிழ்ந்து திரியும் பரிதி நியமமே.
1113. அரவொலி வில்லொலி அம்பின்ஒலி
அடங்கார் புரமூன்றும்
நிரவ வல்லார் நிமிர்புன் சடைமேல்
நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்துஎன் எழில்கவர்ந்த
இறைவர்க்கு இடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும்
பரிதிந் நியமமே
தெளிவுரை : வாசுகி என்னும் அரவம் நாணாக மேவ அதன் ஒலியும்; மேரு என்னும் மலை வில்லாகத் திகழ அதன் ஒலியும்; திருமால், வாயு, அக்கினி ஆகிய மூவரும் அம்பாக விளங்க அவ்வொலியும், மேம்பட்டு ஒலிக்க, அடங்கி நிற்காத மூன்று அசுரர்களின் புரங்களையும் எரித்து சாம்பலாக்கிய வல்லமை கொண்டவர், சிவபெருமான். அவர், சடைமுடியின் மீது பிறைச் சந்தினைச் சூடி, என் எழிலைக் கவர்ந்த இறைவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பரவிப் போற்றும் அடியவர்களின் வினை தீர்க்கும் பரிதி நியமமே.
1114. வாள்முக வார்குழல் வாள்நெடுங்கண்
வளைத்தோள் மாதுஅஞ்ச
நீள்முக மாகிய பைங்களிற்றின்
உரிமேல் நிகழ்வித்து
நாண்முகம் காட்டி நலம்கவர்ந்த
நாதர்க்கு இடம் போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : ஒளி மிகுந்த திருமுகமும், நீண்ட நறுங் கூந்தலும் ஒளி மிக்க அகன்ற விழியும் சங்கு போன்ற கழுத்தும் விளங்க மேவும் உமாதேவி அஞ்சுமாறு, நீண்ட துதிக்கையுடைய யானையின் தோலை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டவர், சிவபெருமான். அப்பெருமான், நான் நாணம் கொண்டு விளங்குமாறு என்னைக் கவர்ந்தவர்; என்னுடைய நலத்தை இழந்து, அவரையே பற்றுமாறு செய்தவர். அத் தலைவர் வீற்றிருக்கும் இடமாவது, வண்டினம் பண் இசை பாடும், பரிதி நியமமே.
1115.வெஞ்சுரம் சேர்விளை யாடல்பேணி
விரிபுன் சடைதாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலும்
துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும்பு ஆர்குழல் சோரஉள்ளம்
கவர்ந்தார்க்கு இடம் போலும்
பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : மயானத்தில் நின்று ஆடலை விரும்பிய சிவபெருமான், சடை முடி விரிந்து பரவ, இரவிலும், மாலையிலும், நண்பகலிலும் கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர். அவர் பூதகணங்கள் சூழ விளங்குபவர்; என் உள்ளத்தைக் கவர்ந்தவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வண்டினம் யாழ் போன்று பண் இசை முரலும் பரிதி நியமமே.
1116. நீர்புல்கு புன்சடை நின்றிலங்க
நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில் வெண் ணீறணிந்து
தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில் கவர்ந்த
இறைவர்க்கு இடம் போலும்
பார்புல்கு தொல்புக ழால் விளங்கும்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : ஈசன், மென்மையான சடையில், கங்கையும், வெண்மதியும் தரித்தவர்; மலர் மாலை திகழும் திருமார்பில், திருவெண்ணீறு அணிந்தவர்; பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்பவர். அப்பெருமான் எழில் மேவும் வடிவம் கொண்டு என்னைக் கவர்ந்தவர். அவ் இறைவனுக்கு உரிய இடமாவது, தொன்மையான புகழைப் பூ வுலகில் கொண்டு விளங்கும், பரிதி நியமமே.
1117. வெங்கடுங் காட்டகத்து ஆடல்பேணி
விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடிமேல் விளங்கத்
திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த
சைவர்க்கு இடம் போலும்
பைங்கொடி முல்லை படர்புரவிற்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : ஈசன், மயானத்தில் நடம் புரிந்து, சடை முடியானது விரிந்து விளங்கப் பிறைச் சந்திரனைச் சூடியவர்; எல்லாத் திசைகளிலும் சென்று பலி ஏற்றுத் திரிந்தவர்; என் எழிலைக் கவர்ந்த சைவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது முல்லைக் கொடி பரவும் பரிதி நியமமே.
1118. பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப்
பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி
மனைகள் பலிதேர்வார்
இறைவனை சோர எழில்கவர்ந்த
இறைவர்க்கு இடம் போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : ஈசன், பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியுடையவர்; பெருமையுடன் ஒளி திகழும் மழுப் படையுடையவர்; வேதம் ஓதுபவர்; திருவெண்ணீறு பூசி மனைகள் தோறும் சென்று பலி ஏற்பவர். அப்பெருமான் என் கைவளை நெகிழ்ந்து விழுமாறு என் எழிலைக் கவர்ந்த இறைவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது பறையொலியும் சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் மலிந்து மேவும் பரிதி நியமமே.
1119. ஆசடை வானவர் தானவரோடு
அடியார் அமர்ந்து ஏத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி
மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரஉள்ளம்
கவர்ந்தார்க்கு இடம் போலும்
பாசடைத் தாமரை வைகு பொய்கைப்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : பற்றுக் கேடாடாக விளங்குகின்ற தேவர்களும் அசுரர் - வித்தியாதரர்களும் உடன் திகழ, அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபட, மாசு நீக்கும் திருவெண்ணீற்றைப் பூசி மனைகள் தோறும் பலி ஏற்றுத் திரிபவர், சிவபெருமான். அவர் மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை நழுவி விழுமாறு என்னைத் தளர்ச்சியுறச் செய்து உள்ளத்தைக் கவர்ந்தவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பசுமை திகழும் இலையும் தாமரையும் விளங்கும் பொய்கையுடைய பரிதி நியமமே.
1120. நாடினர் காண்கிலர் நான்முகனும்
திருமால் நயந்து ஏத்தக்
கூடலர் ஆடலர் ஆகிநாளும்
குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர எழில்கவர்ந்த
இறைவர்க்கு இடம் போலும்
பாடலர் ஆடல ராய்வணங்கும்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும் காண முடியாது அயர்ந்து நிற்க, ஆடுகின்றவராய் மேவிய அழகராகிய சிவபெருமான், கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர், அவர் என் எழிலைக் கவர்ந்த இறைவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்ந்து ஆடல் மேவி வணங்கும் பரிதி நியமமே.
1121. கல்வளர் ஆடையர் கையில் உண்ணும்
கழுக்கள் இழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா
சுடுநீ றதுஆடி
நல்வளை சோர நலங்கவர்ந்த
நாதர்க்கு இடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப்
பரிதிந் நியமமே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் சொற்களை வளம் உடையது என நினைக்க வேண்டாம். சிவபெருமான், திருவெண்ணீற்றை நன்கு குழையப் பூசி வளையல் சோர்ந்து விழுமாறு என் எழிலைக் கவர்ந்த தலைவர் ஆவார். அவர் வீற்றிருக்கும் இடமாவது, முல்லை வனம் திகழும் பரிதி நியமமே. அப் பெருமானை ஏத்துவீராக.
1122. பையர வம்விரி காந்தள்விம்மு
பரிதிந் நியமத்துத்
தையலொர் பாகம் அமர்ந்தவனைத்
தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்த பத்தும்
பரவிப் புகழ்ந்து ஏத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல்
அவலம் அடையாவே.
தெளிவுரை : காந்தள் மலர் திகழும் பரிதி நியமத்தில் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருக்கும் சிவபெருமானைத் தமிழ் ஞானசம்பந்தன், பொய்மை அற்றவாறு ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓதி ஏத்துபவர்களுக்குப் பிறவாமை என்னும் பெரும் பேறு வாய்க்கப் பெறும் என்பதில் ஐயம் இல்லை. இம்மையில் அவர்களுக்குத் துன்பம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
363. திருக்கலிக்காமூர் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1123. மடல்வரை யின்மது விம்முசோலை
வயல்சூழ்ந்து அழகாரும்
கடல்வரை யோதம் கலந்து முத்தம்
சொரியும் கலிக்காமூர்
உடல்வரை இன்னுயிர் வாழ்க்கையாய
ஒருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும்
இறைவன் அருளாமே.
தெளிவுரை : அகன்ற பூ இதழ்களும், தேன் மணம் கமழும் சோலைகளும் பெருகி, வயல் சூழ்ந்து அழகிய கடலின் ஓதம் கலந்து, முத்துக்களைச் சொரியும் வளப்பம் உடையது கலிக்காமூர். ஆங்கு வீற்றிருக்கும் சிவபெருமான், உடலின்கண் உள்ள உயிரில் பொருந்தி விளங்கும் தன்மையர். அப் பெருமானுடைய திருக்கழலை ஏத்தி வணங்க, இடர் தரும் வினையானது தொடராது; விலகும். அத்தகைய பாங்கில் இறைவன் திருவருள் கைகூடும்.
1124. மைவரை போல்திரை யோடுகூடிப்
புடையே மலிந்து ஓதம்
கைவரை யால்வளர் சங்கம் எங்கும்
மிகுக்கும் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்றன்னை
விரும்ப உடல்வாழும்
ஐவரை ஆசறுத்து ஆளும்என்பர்
அதுவும் சரதமே.
தெளிவுரை : கரிய மலை போன்று உயர்ந்து எழும் அலைகளின் வழியாகச் சேரும் சங்குகளின் வளப்பம் உடையது கலிக்காமூர். ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசன், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானை விரும்பி  ஏத்த, ஐம்புலன்களால் உண்டாகும் குற்றங்கள் விலகும்.
1125. தூவிய நீர்மலர் ஏந்திவையத்
தவர்கள் தொழு தேத்தக்
காவியி னேர்விழி மாதர்என்றும்
கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை
விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி
அமரர் பெருமானே.
தெளிவுரை : ஈசனைத் தூய நீரும் மலரும் கொண்டு மண்ணுலகத்தவர் தொழுது ஏத்தவும், மாதர்கள் போற்றித் துதிக்கவும் எழில் கொண்டு விளங்குவது, கலிக்காமூர். அப் பெருமானை விரும்பி ஏத்துபவர் பால் விளங்கித் திகழும் அவர், ஆதிமூர்த்தியாய் விளங்கும் தேவர் பெருமான், ஆவார்.
1126. குன்றுகள் போல்திரை யுந்திஅந்தண்
மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா அம்மனைசூழ்
கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊழியும் வாழும்எந்தை
பெருமான் அடி யேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார்
நீசர் நமன்தமரே.
தெளிவுரை : குன்றுகளைப் போன்ற உயர்ந்த அலைகளை வீசும் கடலிலிருந்து மணிகளைக் கொண்டு வந்து சேர்க்கவும், எருமையின் கன்றுகள் சேர்ந்து விளங்கும் வளப்பமும் மிக்கது கலிக்காமூர் என உணர்வாயாக. ஆங்கு, ஊழிக் காலத்திலும் வீற்றிருக்கும் எந்தையாகிய சிவபெருமான் திருவடிக் கமலத்தை ஏத்தி நின்று வழிபடும் அடியவர்களை ஏத்துக அவ்வாறு ஏத்தாதவர்கள் கீழ்மக்கள். அத்தகையோர், இம்மண்ணுலகில் பிறப்பும் இறப்பும் கொண்டு உழலுபவர்கள் ஆவர்.
1127. வானிடை வாள்மதி மாடம்தீண்ட
மருங்கே கடலோதம்
கானிடை நீழலிற் கண்டல்வாழும்
கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்துஉகந்து ஆடினானை
அமரர் தொழுதேத்த
நானடை வாம்வணம் அன்புதந்த
நலமே நினைவோமே.
தெளிவுரை : சந்திரனைத் தொடுகின்ற உயர்ந்த மாடங்களும், கடலின் ஓதம் பெருகும் சோலைகளில் தாழை மணம் கமழவும் விளங்குகின்ற பதி, கலிக்காமூர். ஆங்கும் எழுந்தருளியுள்ள ஈசன், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தைப் பூசைப் பொருளாக ஏற்று ஆடியவர்; அமரர்கள் தொழுது ஏத்த, நான் அடைந்த நலன்களைப் போன்று அன்பு செய்து அனைவருக்கும் அருள்பவர். அப்பெருமானின் இத்தகைய கருணையை ஏத்திப் பரவுவோமாக.
1128. துறைவளர் கேதகை மீதுவாசம்
சூழ்வான் மலி தென்றல்
கறைவள ருங்கடல் ஓதம் என்றும்
கலிக்கும் கலிக்காமூர்
மறைவள ரும்பொருள் ஆயினானை
மனத்தால் நினைந்து ஏத்த
நிறைவன ரும்புகழ் எய்தும்வாதை
நினையா வினைபோமே.
தெளிவுரை : கடற்கரைச் சோலைகளில் விளங்குகின்ற தாழையில் தென்றல் படிந்து மணத்தைக் கொண்டு சேர்க்கும் தன்மையுடைய கலிக்காமூரில், வேதங்களால் ஏத்தப் பெறும் சிவபெருமான், விள்கி மேவுபவர். அப் பெருமானை நினைத்து வணங்க நிறை புகழ் வளரும்; நம்மை வருத்தும் துன்பம் எதுவும் இல்லை; வினை யாவும் விலகும்.
1129. கோலநன் மேனியின் மாதர்மைந்தர்
கொணர்மங் கலியத்திற்
காலமும் பொய்க்கினும் தாம்வழுவாது
இயற்றும் கலிக்காமூர்
ஞாலமும் தீவளி ஞாயிறாய
நம்பன் கழலேத்தி
ஓலம் இடாதவர் ஊழியென்றும்
உணர்வைத் துறந்தாரே.
தெளிவுரை : அழகிய மேனியுடைய மகளிரும் ஆடவரும் பூசைக்குரிய மங்கலப் பொருள்களை வழுவாது கொண்டு வந்து சேர்த்துப் பூசை நடத்தும் பெருமை உடையது கலிக்காமூர் என்னும் பதியாகும். ஆங்கு வீற்றிருக்கும் சிவபெருமான், நிலம், நெருப்பு, காற்று, சூரியன் மற்றும் சந்திரன், நீர், ஆகாயம், உயிர் ஆகிய நம்பர். அப் பெருமான் திருக்கழலை ஏத்தி, அரநாமத்தை ஓதி உரைக்காதவர்களுக்கு எந்தக் காலத்திலும் சிவஞானம் கைவரப் பெறாது. இது, அரநாமத்தை ஓதி உரைக்க சிவஞானம் கைகூடும் என உணர்த்தப் பெற்றது.
1130. ஊரா வந்தலை நீள்முடியான்
ஒலிநீர் உலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும்
பதியாம் கலிக்காமூர்
தேரர வல்குல்அம் பேதையஞ்சத்
திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாதம்
உடையான் இடமாமே.
தெளிவுரை : சிவபெருமான், அரவத்தைச் சடை முடியின் மீது திகழ வைத்து, உலகம் யாவையும் ஆட்சி கொண்டு இயக்குபவராய் அருள் புரிபவராகி வீற்றிருக்கும் இடமாவது, ஒலிக்கும் கடல் சூழ விளங்கும் பதியாகிய கலிக்காமூர் ஆகும். அது, உமாதேவி அயருமாறு மலையைப் பெயர்த்த இராவணனைத் திருப்பாதத்தால் அழுத்திய அப் பெருமான் விளங்கும் இடமே.
1131. அருவரை யேந்திய மாலு மற்றை
அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய்
எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை
உணர்வால் தொழுது ஏத்தத்
திருமரு வும்சிதை வில்லைச் செம்மைத்
தேசுண் டவர்பாலே.
தெளிவுரை : கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், தாமரை மலர் மீது உறையும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சுமாறு சோதி வடிவாய் விளங்கியவர், சிவபெருமான். அவர் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாய்க் கலிக்காமூர் என்னும் பதியில் வீற்றிருப்பவர். அப் பெருமானை உள்ளம் ஒன்றி ஏத்தித் தொழுபவர்களுக்குச் செல்வம் பெருகும்; எல்லாச் செயலும் இடரின்றிக் கைகூடும்; செம்மையான புகழும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகும்.
1132. மாசு பிறக்கிய மேனியாரும்
மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும்
அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும்
வளமார் கலிக்காமூர்
ஈசனை எந்தைபி ரானைஏத்தி
நினைவார் வினைபோமே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் ஈசனை அறியாதவர். நீர் வளம் மிகுந்த கலிக்காமூர் என்னும் பதியில் மேவும் ஈசன், எமது தந்தையாவார். அவரை ஏந்திப் பரவுபவர்களுக்கு வினையானது விலகிச் செல்லும்.
1133. ஆழியுள் நஞ்சமுது ஆரஉண்டு அன்று
அமரர்க்குள அமுதுஉண்ண
ஊழிதொறும் உளரா அளித்தான்
உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம் பந்தன் சொன்ன
தமிழாற் கலிக்காமூர்
வாழிஎம் மானை வணங்கி யேத்த
மருவா பிணிதானே.
தெளிவுரை : கடலில் தோன்றிய நஞ்சினை அமுதம் எனப் பொருந்துமாறு உட்கொண்டு, தேவர்களுக்கு அமுதத்தை அளித்து ஊழிக் காலம் தோறும் நிலைத்திருக்குமாறு அருள் செய்தவர், சிவபெருமான். அப் பரமன் விளங்குகின்ற காழியில் மேவும் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தைக் கொண்டு, கலிக்காமூரில் வீற்றிருக்கும் எம் தலைவராகிய ஈசனை வணங்கி ஏத்தப் பிணி எதுவும் அணுகாது. இது இம்மையில் உடற்பிணியும், மனப் பிணியும் நீக்கி, மறுமையில் முத்திபேற்றுக்குத் தடையாக உள்ள பிறவிப் பிணியும் தீர்க்கும் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
364. திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1134. பள்ளமதாய படர்சடை மேற்
பயிலும் திரைக்கங்கை
வெள்ளமது ஆர விரும்பி நின்ற
விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று
மருவி நினைந்தேத்தி
உள்ளம் உருக உணருமின்கள்
உறுநோய் அடையாவே.
தெளிவுரை : ஈசன், படர்ந்து மேவும் சடைமுடியின் மீது, அலைகளையுடைய கங்கையைத் தரித்தவர்; இடப வாகனத்தின் மீது ஏறி அமரும் வள்ளல்; வலஞ்சுழியில் விளங்குபவர். அப் பெருமானை உள்ளம் உருகி நின்று ஏத்துக. உறுநோய் உங்களை அணுகாது. இது இப்பிறவியில் வரும் துன்பமும், மீண்டும் உறுகின்ற பிறவி நோயும் நீங்கும் என்பதாம்.
1135. காரணி வெள்ளை மதியம் சூடிக்
கமழ்புன் சடைதன்மேல்
தாரணி கொன்றையும் தண்ணெருக்கும்
தழைய நுழைவித்து
வாரணி கொங்கைநல் வாள்தன்னொடும்
வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த
உவகை அறியோமே.
தெளிவுரை : ஈசன், வானத்திற்கு அணியாக விளங்குகின்ற வெண்மதியை, கமழ்கின்ற சடைமுடியின் மீது சூடியவர்; கொன்றை மாலையும் குளிர்ந்த எருக்கம் பூவும் தழையத் தரித்தவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு வலஞ்சுழியில் மேவியவர். அவர் கபாலம் ஏந்தி, ஊர்தொறும் அழகு பொலியப் பலி ஏற்று மகிழ்ந்த பெருமையை, யாம் அறிந்து கொள்ளுதல் இயலாது.
1136. பொன்னிய லும்திரு மேனிதன் மேல்
புரிநூல் பொலிவித்து
மின்னிய லும்சடை தாழவேழ
உரிபோர்த்து அரவுஆட
மன்னிய மாமறை யோர்கள் போற்றும்
வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு
உயர்வாம் பிணிபோமே.
தெளிவுரை : ஈசன், பொன்னை ஒத்த அழகிய திருமேனியில் முப்புரி நூல் பொலியுமாறு விளங்குபவர்; மின்னலைப் போன்று ஒளி திகழும் சடை முடியைத் தாழுமாறு விரித்திருப்பவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர்; ஆடுகின்ற அரவத்தை அணியாகப் பெற்றிருப்பவர்; புகழ் மிக்க மறையவர்கள் போற்றும் வலஞ்சுழியில் வீற்றிருப்பவர்; அப்பெருமானைச் சிந்தையால் ஏத்தும் அடியவருக்கு, எல்லா மேன்மையும் உண்டாகும்; பிணி யாவும் நீங்கும்.
1137. விடையொரு பால்ஒரு பால்விரும்பு
மெல்லியல் புல்கிய தோர்
சடையொரு பால்ஒரு பால்இடங்கொள்
தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பால்ஒரு பால்சிலம்பு
நாளும் வலஞ்சுழி சேர்
அடையொரு பால்அடை யாதசெய்யும்
செய்கை அறியோமே.
தெளிவுரை : ஈசனுக்கு, இடப வாகனம் ஒரு பக்கம் விரும்பிச் சேர்ந்த கங்காதேவி ஒரு பக்கம்; விரிந்து பரந்த சடை ஒரு பக்கம்; தாழ்ந்த கூந்தலை உடைய உமாதேவி ஒரு பக்கம்; திருநடை பயிலும் திருவடி ஒரு பக்கம்; திருப்பாதத்தில் மேவும் சிலம்பு ஒரு பக்கம்; வலஞ்சுழியில் அடைந்து வீற்றிருக்கும் பெற்றி ஒரு பக்கம்; இவை யாவும் வேறிடத்தில் சென்றடையாத பெருமையும் ஒரு பக்கம் என விளங்கும் சிறப்பானது யாம் அறிய இயலாதது.
1138. கையம ரும்மழ நாகம் வீணை
கலைமான் மறி யேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசும்
குழையார் தரு தோடும்
பையம ரும்அரவு ஆடஆடும்
படர்சடை யார்க்கு இடமாம்
மையம ரும்பொழில் சூழும் வேலி
வலஞ்சுழி மாநகரே.
தெளிவுரை : ஈசன், கையில் மழு, நாகம், வீணை, மான் ஆகியவற்றை ஏந்தியவர்; மெய்யில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; வீசியாடுகின்ற குழையும் தோடும் காதில் அணிந்தவர்; ஆடுகின்ற அரவத்தை அணிந்து நடனம் புரிபவர். சடை முடியுடன் விளங்கும் அப் பெருமானுக்கு உரிய இடமாவது, நாற்புறமும் வேலி போன்று பொழிலால் சூழப்பட்ட வலஞ்சுழி மாநகரே.
1139. தண்டொடு சூலம் தழைய ஏந்தித்
தையல் ஒருபாகம்
கண்டிடு பெய்வலி பேணிநாணார்
கரியின் உரிதோலர்
வண்டிடு மொய் பொழில் சூழ்ந்தமாட
வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற
தொடர்பைத் தொடர்வோமே.
தெளிவுரை : ஈசன், சூலப் படையை நன்கு பொருந்த ஏந்தி, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; வண்டு மொய்க்கும் பொழில் சூழ்ந்த வலஞ்சுழியில் விளங்குபவர். அப்பெருமான், திருத்தொண்டர்களுடன் விளங்கும் அருளை ஏத்தி, அவ்வாறு விளங்குவோமாக. இது, சிவபெருமானுக்கு உரிய அணுக்கத் தொண்டராகும் அருட் குறிப்பை உணர்த்தியதாயிற்று.
1140. கல்லிய லும்மலை அங்கை நீங்க
வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதில் மூன்றும் செற்ற
சுடரான் இடர்நீங்க
மல்லிய லும்திரள் தோள்எம்ஆதி
வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி
இருப்பவர் புண்ணியரே.
தெளிவுரை : ஈசன், மேரு மலையை வில்லாக வளைத்து மூன்று அசுரர்களின் புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர்; திரண்ட தோள் உடைய எம் ஆதியாகி, வலஞ்சுழியில் வீற்றிருந்து அருள் புரிபவர். அப் பெருமானைச் சார்ந்து ஏத்தி வணங்குபவர், புண்ணியரே.
1141. வெஞ்சின வாளரக்கன் வரையை
விறலால் எடுத்தான் தோள்
அஞ்சும் ஒரு ஆறுஇரு நான்கும் ஒன்றும்
அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதர் என்று
நணுகும் இடம் போலும்
மஞ்சுஉல வும்பொழில் வண்டுகொண்டும்
வலஞ்சுழி மாநகரே.
தெளிவுரை : சிவபெருமான், கொடிய சினத்தையுடைய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவனது இருபது தோளும் நெரியுமாறு அடர்த்தவர்; நஞ்சு அருந்திய அழகிய கண்டத்தை உடைய நாதர் அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, உயர்ந்த பொழில் திகழும் வலஞ்சுழி மாநகரே.
1142. ஏடியல் நான்முகன் சீர் நெடுமால்
என்நின்று அவர் காணார்
கூடிய கூர்எரி யாய்நிமிர்ந்த
குழகர் உலகேத்த
வாடிய வெண்டலை கையில் ஏந்தி
வலஞ்சுழி மேயஎம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யும்
சரிதை பலபலவே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியபோது காண்பதற்கு அரியவராகிய பெருஞ்சேதிப் பிழம்பாய் ஓங்கி சிவபெருமான், உலகம் யாவும் ஏத்துமாறு பிரம கபாலம் ஏந்தி வலஞ்சுழியில் மேவி விளங்குபவர். அப் பெருமானைப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவிளையாடல்கள் பலவாகும்.
1143. குண்டரும் புத்தரும் கூறையின்றிக்
குழுவார் உரைநீத்துத்
தொண்டரும் தன்தொழில் பேணநின்ற
கழலான் அழலாடி
வண்டம ரும்பொழில் மல்கு பொன்னி
வலஞ்சுழி வாணன் எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்து செற்ற
பரிசே பகர் வோமே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் உரைகளை நீக்கித் தொண்டர் போற்றும் தன்மையில் மேவும் ஈசனாகிய வலஞ்சுழி நாதனை ஏத்துவீராக. அப் பெருமான், தக்கனது தீய வேள்வியை முனிந்து அவனை அழித்து நன்மை புரிந்தவர். அதன் பெருமையைப் பகர்வீராக.
1144. வாழியெம் மான்எனக்கு எந்தைமேய
வலஞ்சுழி மாநகர் மேல்
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
கருத்தின் தமிழ் மாலை
ஆழிஇவ் வையகத்து ஏத்தவல்லார்
அவர்க்கும் தமருக்கும்
ஊழியொருபெரும் இன்பம்ஓர்க்கும்
உருவும் உயர்வாமே.
தெளிவுரை : வாழ வைக்கும் என் தலைவனும் தந்தையுமாகிய ஈசன் மேவிய வலஞ்சுழி மாநகர்மீது, காழியில் விளங்கும் ஞானசம்பந்தன் சொன்ன, கருத்தின் தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை ஏத்த வல்லவரும், அவருடைய இனத்தவரும் இவ்வையகத்தில் பேரின்பம் கொண்டு விளங்குவர்; அழகிய வடிவம் பெறுவர்; ஊழிக் காலத்திலும் நனி விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்
365. திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1145. கடலிடை வெங்கடு நஞ்சம்உண்ட
கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லான்
உமையோடு ஒரு பாகன்
அடலிடை யிற்சிலை தாங்கிஎய்த
அம்மான் அடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துஉகந்தான் இடம்
நாரை யூர்தானே.
தெளிவுரை : கடலிடை தோன்றிய நஞ்சினை உண்ட கடவுள், இடப வாகனத்தில் ஏற்ற திருமேனியில் திருவெண்ணீறு பூசிய ஈசன் ஆவார். அவர், முப்புர அசுரர் களை அடர்த்தபோது, மேருமலையை வில்லாகத் தாங்கிக் கணை தொடுத்து எரித்தவர். அப் பெருமான், அடியவர்களின் துன்பம் தரும் தீய வினைகளைக் களைந்து அருள் புரிந்து வீற்றிருக்கும் இடமாவது, நாரையூரே.
1146. விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம்
விரிபூ மலர்கொன்றை
பெண்ணின் முன் னேமிக வைத்துகந்த
பெருமான் எரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடும்
திருநாரை யூரான்என்று
எண்ணுமின் நும்வினை போகும்வண்ணம்
இறைஞ்சும் நிறைவாமே.
தெளிவுரை : விண்ணில் ஒளிரும் சந்திரனும், நாகமும், கொன்றை மலரும், கங்கையும் சடை முடியின் மீது திகழுமாறு வைத்த மகிழ்ந்த சிவபெருமான், நெருப்பினைக் கையில் ஏந்தி நடம் புரிபவர். தன் அடியவர்களுடன் மேவும் அப் பெருமானை எண்ணி, ஏத்துமின். உங்கள் வினை விலகும்; எல்லா நலன்களும் நிறைந்து விளங்கும்.
1147. தோடுஒரு காதுஒரு காதுசேர்ந்த
குழையான் இழை தோன்றும்
பீடு ஒரு கால்பிரி யாது நின்ற
பிறையான் மறையோதி
நாடொரு காலமும் சேரநின்றதிரு
நாரை யூரானைப்
பாடுமின் நீர்பழி போகும் வண்ணம்
பயிலும் உயர்வாமே.
தெளிவுரை : சிவபெருமான், ஒரு காதில் தோடு அணிந்திருப்பவர்; ஒரு காதில் குழை அணிந்திருப்பவர்; பெருமை குறையாத பிறைச் சந்திரனைத் தரித்திருப்பவர்; மறைகளை ஓதுபவர்; அப்பெருமான், நாடும் காலத்தில் பொருந்தி மேவும் நாரையூரில் விளங்குபவர். அவரைப் போற்றிப் பாடுவீராக. உமது பழி அகலும்; வண்ணம் திகழும்; உயர்வு கை கூடும்.
1148. வெண்ணிலவு அம்சடை சேர வைத்து
விளங்கும் தலை யேந்திப்
பெண்ணில் அமர்ந்து ஒரு கூறதாய
பெருமான் அருளார்ந்த
அண்ணல் மன்னியுறை கோயிலாகும்
அணிநாரை யூர்தன்னை
நண்ணல் அமர்ந்துஉறை வாக்குமின்கள்
நடலை கரிசு அறுமே.
தெளிவுரை : ஈசன், வெண்மையான சந்திரனைச் சடை முடியில் சேர வைத்துக் கபாலத்தை ஏந்தி, உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் அருள் புரியும் அண்ணலாய்க் கோயில் கொண்டு உறையும் இடம் அழகு திகழும் நாரையூர் ஆகும். அத் தலத்தை நண்ணி இருந்து, தலவாசம் செய்து ஈசனை ஏத்துமின். உமது துயரம் நீங்கும்.
1149.வானமர் தீவளி நீர் நிலனாய்
வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குற்றம்
உறைவால் பிறிது இன்றி
நானம ரும் பொருளாகி நின்றான்
திருநாரை யூர்எந்தை
கோனவ னைக் குறு கக் குறுகா
கொடுவல் வினைதானே.
தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற இவ்வுடம்பில், உயிரானது இயங்கித் தீங்கும் குற்றமும் புரியும் வயமாகின்றது. அத்தன்மையில் உயிரின்கண் ஒன்றி வேறுபாடு இன்றி விளங்கி, நான் நற்கதிக்கு அடையும் பொருளாகி நிற்பவர், திருநாரையூரில் வீற்றிருக்கும் எந்தையாகிய ஈசன். தலைவனாக மேவும் அப் பெருமானை அடைந்தால், கொடிய வினையானது நம்மை அணுகாது.
1150. கொக்கிற கும்குளிர் சென்னிமத்தம்
குலாய மலர்சூடி
அக்குஅர வோடுஅரை யார்த்து உகந்து
அழகன் குழகாக
நக்கம ரும்திரு மேனியாளன் திரு
நாரையூர் மேவிப்
புக்குஅம ரும்மனத் தோர்கள் தம்மைப்
புணரும் புகல்தானே.
தெளிவுரை : சிவபெருமான், கொக்கிறகைத் தரித்தவர்; கங்கை திகழும் குளிர்ந்த சடை முடியில் ஊமத்தம் மலரைத் தழையச் சூடியவர்; எலும்பை அரவத்துடன் சேர்த்து அரையில் கட்டி மகிழும் அழகர்; இளமை திகழத் திகம்பரனாய் விளங்கும் திருமேனியுடையவர். அப்பெருமான், திருநாரையூரில் வீற்றிருந்து அருள் புரிபவர். அவரைப் போற்றித் துதிப்பவர்கள் உரைக்கும் சொற்களே, நல்லுரை ஆகும்.
1151. ஊழியும் இன்பமும் காலம்ஆகி
உயரும் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை
வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர்
நாரையூர் தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும்
வகையின் விளைவாமே.
தெளிவுரை : சிவபெருமான், ஊழிக்காலமாக விளங்குபவர்; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனும் பருவ காலமாகத் திகழ்பவர்; கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் ஞான வகையாகிய உயர்ந்த தவம் ஆகியவர்; ஏழிசையாகவும் அதன் இனிய பயனாகவும் விளங்குபவர்; வாழ்கின்ற வாழ்க்கையில் வினையை உயிரின்பால் சேர்த்துச் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியர் என வகுக்கும் மெய்ப் பொருளாகத் திகழ்பவர்; நாழிகையும், பலவாகிய நாள்களும் ஆகியவர். அவர் குளிர்ச்சி பொருந்திய நாரையூரில் திகழ்ந்து மேவும் அழகராய் விளங்குபவர். அனைத்தும் அப் பெருமான் புரியும் திருவிளையாடலே ஆகும்.
1152. கூசம்இலாது அரக்கன் வரையைக்
குலுங்க எடுத்தான் தோள்
நாசம தாகி இறஅடர்த்த
விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற
பெரியோன் இடம் போலும்
தேசம் உறுப்புகழ் செம்மைபெற்ற
திருநாரை யூர்தானே.
தெளிவுரை : தவறான செயலைச் செய்வதற்குக் கூச்சம் கொள்ளாது, கயிலை மலையைப் பெயர்த்தவன் இராவணன். அவனுடைய தோள் நெரியுமாறு அடர்த்த திருப்பாத விரல் உடையவர் சிவபெருமான். அப் பெருமான், தூய்மையான அடியவர்கள் போற்றுமாறு வீற்றிருக்கும் இடம், உலகம் போற்றும் புகழின் செம்மை பெற்ற திருநாரையூரே.
1153. பூமகனும் அவ னைப்பயந்த
புயலார் நிறத்தானும்
ஆமள வும்திரிந்து எத்திக்காண்டல்
அறிதற்கு அரியான்ஊர்
பாமருவும் குணத் தோர்கள் ஈண்டிப்
பலவும் பணிசெய்யும்
தேமரு வும்திகழ் சோலைசூழ்ந்த
திருநாரை யூர்தானே.
தெளிவுரை : மேக வண்ணம் உடைய திருமாலும், திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் தம்மால் இயன்ற அளவு திரிந்து ஏத்தியும் கண்டு அறிவதற்கு சிவபெருமான் வீற்றிருக்கும் ஊரானது, புகழ்ப் பாடல்களைப் பாடும் அடியவர்கள் பணி செய்யும், பெருமை திகழும் சோலை சூழ்ந்த திருநாரையூரே.
1154. வெற்றரை யாகிய வேடங்காட்டித்
திரிவார் துவராடை
உற்றரை யோர்கள் உரைக்கும் சொல்லை
உணராது எழுமின்கள்
குற்றம்இ லாததோர் கொள்ளையெம்மான்
குழகன் தொழிலாரப்
பெற்றர வாட்டி வரும் பெருமான்திரு
நாரை யூர்சேர்வே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும் சொல்லைப் பொருள் உடையதெனக் கொள்ள வேண்டாம். எம் தலைவராகிய ஈசன், குற்றம் இல்லாத கொள்கை உடையவர்; அழகு மிக்கவராய், அன்புக்குக் குழைந்து அருள்பவர். அத்தகைய அருளும் தொழிலைப் புரியும் பாங்கில், அரவத்தை ஆட்டி விளங்குபவர். அவர் வீற்றிருக்கும் திருநாரையூர் சார்ந்து ஏத்தி உய்வீராக.
1155. பாடிய லும்திரை சூழ்புகலித்
திருஞான சம்பந்தன்
சேடிய லும்புகழ் ஓங்குசெம்மைத்
திருநாரை யூரான்மேல்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும்
பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கும்
அவலக் கடல் தானே.
தெளிவுரை : ஓய்தல் இன்றி ஆர்க்கும் அலைகளை உடைய கடல் சூழ்ந்த புகலியில் மேவும் திருஞான சம்பந்தன், பெருமை பொருந்திய புகழ் விளங்கும் செம்மையான திருநாரையூரில் வீற்றிருக்கும் ஈசன் மீது பாடிய தண்டமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பரவி ஓதுபவர்களுக்குக் கடல் போன்ற பெருந் துன்பமும் விலகிச் செல்லும்.
திருச்சிற்றம்பலம்
366. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
திருச்சிற்றம்பலம்
1156. வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லிஅமணொடு தேரரை
வாதில் வென்று அழிக் கத்திரு உள்ளமே
பாதி மாதுடன் ஆயபரமனே.
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு அர்த்தநாரியாய் விளங்கும் பரமனே ! வேதத்தின் வழி நடத்தப் பெறும் வேள்வியை நிந்தனை செய்யும் அமணரொடு தேரர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருஉள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் உறையும் ஆதி மூர்த்தியே ! இவ் உலகமானது உமது புகழையே பேச வேண்டும் திருவருள் புரிவீராக.
1157. வைதிகத்தின் வழியொழு காதஅக்
கைதவம் உடைக் கார்அமண் தேரரை
எய்தி வாதுசெயத் திருவுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : கருமையான கண்டத்தை உடைய மணிகண்டனே ! வைதிகத்தின் வழி நில்லாத சமணர் சாக்கியர்பால் எய்தி, வாது செய்தவற்குத் திருவுள்ளம் யாது கொல் ! அழகிய ஆலவாயில் உறையும் எம் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழையே ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.
1158. மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாம்கையின் மாமழு வாளனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்திய மழுப் படையாளனே ! வேத நெறியில் கூறப்படும் வழக்கத்தைக் கொண்டிராத சமணர் சாக்கியர்பால் சென்று வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் உறையும் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழையே ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.
1159. அறுத்த அங்கம்ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ்அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாதுசெயத்திரு உள்ளமே
முறித்த வாள்மதிக் கண்ணி முதல்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : ஒளி திகழும் பிறைச் சந்திரனைத் தரித்த நாதனே ! வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கையை வெறுத்த சமணர் சாக்கியர்பால் சென்று வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் உறையும் எம் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழையே ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.
1160. அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத்திரு வுள்ளமே
வெந்த நீறது அணியும் விகிர்தனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : திருவெண்ணீறு தரித்து மேவும் விகிர்தனே ! அந்தணர்கள் புரியும் அரிய மறை வழி மேவும் செயல்களைச் சிந்தை செய்து ஏத்தாத சமணர்பால் சென்று வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் ஆதியே ! இவ்வுலகம் நின்புகழையே ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.
1161. வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டுஅமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு வீரம் விளைவித்து என் உள்ளத்தில் உறையும் ஈசனே ! விரும்பி ஏத்தப்படும் வேள்வியை இகழும் முரட்டுத்தனம் உடைய சமணர்பால் சென்று நான் வாது செய்வதற்குத் திருஉள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் ஆதியே ! இவ்வுலகில் உமது புகழையே மிக விரும்பி ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.
1162. அழலது ஓம்பும் அருமறை யோர்திறம்
விழலது என்னும் அருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : தழல் போன்ற திருவடிவம் கொண்ட மேவும் சிவபெருமானே ! வேள்வியினை ஓம்புதல் செய்யும் வேதத்தின் பெருமையைப் பயனற்றது எனக் கூறும் சமணர்களிடம் சென்று நான் வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாதுகொல். அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் எம் ஆதியே ! இவ்வுலகமானது உமது புகழையே மிக விரும்பி ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.
1163. நீற்று மேனியர் ஆயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : ஆற்றல் மிக்க அரக்கனாகிய இராவணனுக்கு அருள் செய்த பரமனே ! திருவெண்ணீறு பூசிய திருமேனியை உடைய தூயவர்களைக் காண்பதற்கும் நாடாத சமணர்பால் சென்று வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாது கொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் எம் ஆதியே ! இவ்வுலகமானது உமது புகழையே மிக விரும்பி ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.
1164. நீலமேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலும் நான்முகனும் காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : திருமாலும், நான்முகனும் காண்பதற்கு அரிய திருக்கோல மேனியராய்ச் சோதிமலை யாகிய ஈசனே ! சமணர்பால் சென்று வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாது கொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் எம் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழையே மிக ஏத்த வேண்டும். அருள் புரிவீராக.
1165. அன்று முப்புரம் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்று வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
தெளிவுரை : சிறுமை கொண்ட சாக்கியங்களால் காண முடியாத தலைவனே ! முப்புரத்தை எரித்த அழகனே ! உமது பொற்கழலைப் போற்றாத சமணர்களை வாதி வென்று சிதறும்படி செய்வதற்குத் திருவுள்ளம் யாது கொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் எம் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழை ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.
1166. கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.
தெளிவுரை : கூடல் நகரில் மேவும் ஆலவாயில் வீற்றிருக்கும் தலைவனை ஏத்திச் சமணரை வாதம் புரிந்து வெற்றி கொள்ளும் வகையில், அருள் பெற்றுப் பாடிக் காழியில் மேவும் ஞானசம்பந்தன் ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர், பாக்கியம் பெற்றவராவர்.
திருச்சிற்றம்பலம்
367. திருக்கயிலாயமும், திருவானைக்காவும் - திருமயேந்திரமும், திருவாரூரும்.
திருச்சிற்றம்பலம்
1167. மண்ணது உண்டரி மலரோன் காணா
வெண்ணாவல் விரும்பும் யேந்திரமும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூர்ஆதி ஆனைக்காவே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் காணற்கு அரிய சிவபெருமான், வெண்ணாவல் மரத்தின்கீழ், விரும்பிய திருஆனைக்காவில் விளங்குபவர்; மயேந்திரத்தில் திகழ்பவர்; கயிலை மலையில் வீற்றிருப்பவர். அவர் ஆரூர் மேவிய அண்ணலே.
1168. வந்துமால் அயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறுஅணி மயேந்திரமும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தண் ஆரூர்ஆதி ஆனைக்காவே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவர், சிவபெருமான். அவர், திருவெண்ணீறு பூசியவராய் மயேந்திரத்திலும், மணம் கமழும் சடை உடையவராய்க் கயிலையிலும், குளிர்ச்சி மிக்க ஆரூரிலும், தொன்மை ஆனைக்காவிலும் விளங்குபவர்.
1169. மாலயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலையது ஓங்கும்வெண் ணாவலாரும்
ஆலையா ரூர்ஆதி ஆனைக்காவே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிய சிவபெருமான், மயேந்திரத்தில் விளங்குபவர்; காலனை மாய்த்த கயிலை நாதர்; பஞ்ச பூதத்தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக மேவும் ஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் விளங்குபவர்; ஆரூரில் வீற்றிருப்பவர்.
1170. கருடனை யேறுஅரி அயனோர் காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரரும்
கருள்திரு கண்டத்துஎம் கயிலையாரும்
அருளன் ஆரூர்ஆதி ஆனைக்காவே.
தெளிவுரை : கருட வாகனம் கொண்ட திருமாலும், மற்றும் பிரமனும் காண முடியாதவராகிய சிவ பெருமான், இடப வாகனத்தில் விளங்குகின்ற மயேந்திரர்; கரிய கண்டத்தையுடைய கயிலைநாதர்; அருளாக மேவும் ஆரூரர்; ஆதியாகிய ஆனைக்காவில் மேவுபவரே.
1171. மதுசூதன நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன் ஆரூர்ஆதி ஆனைக்காவே.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் கண்டு வணங்குவதற்கு அரியவராகிய சிவபெருமான், வேதாகமம் முதலான அறிவு சார்ந்த அறங்களை ஓதி அருளிய மயேந்திரர்; உமாதேவியை உடனாகிய கயிலை நாதர்; யாவர்க்கும் மேலாகிய ஆரூரார்; ஆனைக்காவில் விளங்குபவர்.
1172. சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரமும்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவர்ஆரூர் ஆனைக்காவே.
தெளிவுரை : சக்கராயுதத்தை நாடிய திருமாலும், பிரமனும் காணாத வகையில் மிகுதியாக உயர்ந்து ஓங்கிய சிவபெருமான், கயிலையிலும் மயேந்திரத்திலும் திகழ்பவர்; தக்கனது தலையை அரிந்தவராய், நெருப்பின் வடிவத்தினராகி, எலும்பு மாலை அணிந்தவர்; ஆரூரிலும் ஆனைக்காவிலும் வீற்றிருப்பவர்.
1173. கண்ணனும்நான் முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல் ஆரூர்ஆதி ஆனைக்காவே.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவராகிய சிவபெருமான், வெண்ணாவல் மரத்தை விரும்பும் மயேந்திரராயும், கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை நாதராயும் விளங்குபவர். எங்கள் அண்ணலாகிய அவர் ஆரூரிலும் ஆனைக் காவிலும் வீற்றிருப்பவர்.
1174. கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை அரக்கனைத் தலைநெரித்தார்
விடமது உண்டஎம் மயேந்திரரும்
அடல்விடை ஆரூர்ஆதி ஆனைக்காவே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான், இராவணன் தலையை நெரித்த கயிலை நாதர்; நஞ்சினை உண்டு காத்தருளிய மயேந்திரர்; விடையேறும் ஆரூரர்; ஆனைக்காவில் மேவும் ஆதி மூர்த்தி.
1175. ஆதி மால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்
காதிலோர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூர்எந்தை ஆனைக்காவே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் ஏத்தப் பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலை நாதரும், ஆதியாகிய ஆரூர் எந்தையும் ஆகியவர். அவர் ஆனைக்காவில் வீற்றிருப்பவர்.
1176. அறிவில் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்
வெறியமான் கரத்து ஆரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.
தெளிவுரை : சமணரும் புத்தரும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டாம். திருமாலும், பிரமனும் தேட அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான், மானைக் கரத்தில் ஏந்தியவராய் ஆரூரிலும், மயேந்திரத்திலும் வீற்றிருந்து கயிலைநாதராய் மேவுபவர்; ஆனைக் காவில் விளங்குபவர்.
1177. ஏனமால் அயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூர்அதி ஆனைக்காவை
ஞானசம் பந்தன் தமிழ் சொல்லுமே.
தெளிவுரை : ஏனம் உருவு கொண்ட திருமால், மற்றும் பிரமன் ஆகிய இருவரும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலை விளங்கும் கயிலையும், நல்ல மயேந்திரமும், யாவும் கைகூடப் பெறும் திருவாரூரும், திருவானைக்காவும் வீற்றிருந்து, அருள் புரிபவர். இதனை ஓதிய ஞானசம்பந்தரின் இத் தமிழ் மாலையைச் சொல்பவர்கள், பெறலரும் பிறவிப் பயனைப் பெறுவார்கள் என்பது குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
368. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1178. வரம மே கொளா உரம தேசெயும்
புரமெ ரித்தவன் பிரம நற்புரத்து
அரன்நல் நாமமே பருவுவார்கள்சீர்
விரவு நீள் புவியே.
தெளிவுரை : பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த மூன்று அசுரர் புரங்களையும் எரித்தவர், சிவபெருமான். அவர் நன்மை விளங்கும் பிரமபுரத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானின் நல்ல திருநாமமாக விளங்கும் அரநாமத்தைப் பரவி ஏத்துபவர்கள், பூமியில் புகழுடன் விளங்குவார்கள்.
1179. சேண்உலாமதில் வேணு மண்ணுளோர்
காண மன்றலார் வேணுநற்புரத்
தாணுவின் கயல் பேணுகின்றர்
ஆணிஒத் தவரே.
தெளிவுரை : தேவர்கள் இறங்கி மண்ணுலகத்தைக் காணுமாறு உயர்ந்த மதில்களை உடைய வேணுபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் திருக்கழலைப் பேணுவார்கள், ஆணிப் பொன் போன்று உயர்வுடையவர்கள் ஆவார்கள்.
1180. அகல மார்தரைப் புகலுநான்மறைக்கு
இகலியோர்கள் வாழ் புகலிமாந்கர்ப்
பகல்செய் வோன் எதிர்ச் சகல சேகரன்
அகில நா யகனே.
தெளிவுரை : இப் பூவுலகில், புகலப்படும் நான்கு மறைகளிலும் ஆய்ந்து தேர்ந்தவர்கள் வாழும் புகலி நகரில் மேவும் சந்திரசேகரனாக விளங்கும் சிவபெருமானே உலக நாயகர் ஆவார்.
1181. துங்க மாகரி பங்க மாஅடும்
செங்கை யான்நிகழ் வெங்குருத் திகழ்
அங்க ணான்அடி தம்மகையால் தொழத்
தங்கு மோ வினையே.
தெளிவுரை : உயர்ந்த யானையானது இழிவுற்று அழியுமாறு, அதனைத் திருக்கரத்தால் அடர்த்து அதன் தோலை உரித்த சிவபெருமான் இருப்பிடமாவது, வெங்குருவாகும். ஆங்கு, அப் பெருமானுடைய திருவடியைத் தமது கைகளால் கூப்பித் தொழ, வினை யாவும் விலகிச் செல்லும்.
1182. காணி ஒண்பொருட் கற்றவர்க்(கு) ஈகை
உடைமையோர்அவர் காதல் செய்யுநல்
தோணி வண்புரத்து ஆணி என்பவர்
தூமதி யினரே.
தெளிவுரை : ஒண் பொருளைக் காட்டும் வேதப் பொருளைக் கற்ற பெருமக்களுக்குப் பொருள் நல்கிப் பாராட்டும் ஈகைக் குணம் உடைய வள்ளல்கள் விரும்பும் பதி, தோணிபுரம். ஆங்கு ஆணிப் பொன் போன்று விளங்குபவர்கள், அத்தகைய அறிவு சார்ந்த கல்வியில் சிறந்து ஒளிரும் தூயவர்களே.
1183. ஏந்து அராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப்
பூந்தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழு மாந்தர் மேனிமேற்
சேர்ந்திரா வினையே.
தெளிவுரை : படம் கொண்டு அரவத்தை போன்றும் மூங்கிலை ஒத்த நுண்மையும் கொண்ட இடை உடையவராய் மென்மையான கூந்தலையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான் விளங்கும், பூந்தராய் என்னும் பதியைத் தொழுபவர்களுக்கு, வினைத் துன்பம் இல்லை.
1184. சுரபுரத்தினைத் துயர்செய் தாரகன்
துஞ்ச வெஞ்சினக் காளியைத் தரும்
சிரபுரத்துளான் என்ன வல்லவர்
சித்தி பெற்றவரே.
தெளிவுரை :  தேவர் உலகத்தைத் துன்புறுத்திய தாருகாசுரனை அழிக்குமாறு வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்த ஈசன், சிரபுரத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் திருநாமத்தை ஓத வல்லவர்கள் அட்டமாசித்திகளை வாய்க்கப் பெறுவார்கள்.
1185. உறவும் ஆகி அற் றவர்களுக்குமா
நெதி கொடுத்து நீள் புவி இலங்குசீர்ப்
புறவ மாநகர்க்கு இறைவனே எனத்
தெறகிலா வினையே.
தெளிவுரை : புறவம் என்னும் மாநகரில் விளங்கும் மாந்தர்கள் எல்லாரிடமும் கலந்த அன்பினராய் விளங்கி, அற்றவர்களுக்குத் திரண்ட செல்வத்தை வழங்கிப் பூவுலகில் புகழுடன் திகழ்பவர்கள். ஆங்கு வீற்றிருக்கும் இறைவன் திருநாமத்தை ஓதுபவர்களுக்கு, வினையானது துன்பத்தைக் கொடுக்காது.
1186. பண்புசேர்இலங் கைக்கு நாதனன்
முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
சண்பை ஆதியைத் தொழு மவர்களைச்
சாதியா வினையே.
தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய முடிகள் பத்தும் நெரியுமாறு செய்தவர், சண்பையில் வீற்றிருக்கும் ஆதியாகிய சிவபெருமான். அப்பெருமானைத் தொழுது போற்றும் பக்தர்களுக்கு வினைத் துன்பம் இல்லை.
1187. ஆழிஅங்கையிற் கொண்ட மால்அயன்
அறிவொணாத தோர் வடிவுகொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே
கற்றல் நற் றவமே.
தெளிவுரை : சக்கரப் படை உடைய திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் அறியாதோர் வடிவு தாங்கிய சிவபெருமான், காழி நகரில் விளங்கும் கடவுள் ஆவார். அப் பெருமானின் திருநாமத்தை ஓதி உரைப்பது நற்றவப் பயனை நல்கும்.
1188. விச்சையொன்றிலாச் சமணர் சாக்கியப்
பிச்சர் தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சை மாநகர்க்கு அன்புசெய்பவர்
குணங்கள் கூறுமினே.
தெளிவுரை : அன்பில்லாத சமணர் சாக்கியர்களைப் பெருமை இழக்குமாறு செய்த சிவபெருமான், விளங்கும் இடம் கொச்சை மாநகர் ஆகும். அதன்பால் அன்பு கொள்பவர்கள் செம்மையுடையவர்கள், அவர்களை ஏத்துவீராக.
1189. கழுமலத்தினுள் கடவுள் பாதமே
கருதுஞானசம் பந்தனின்தமிழ்
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும்
முக்கண்எம் இறையே.
தெளிவுரை : கழுமலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் பாதத்தைக் கருதும் ஞானசம்பந்தனின் தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்கு, முக்கண்நாதனாகிய அப்பெருமான், பேரின்பத்தை அருளிச் செய்பவர்.
திருச்சிற்றம்பலம்
369. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1190. வேலினேர்தரு கண்ணி னாள்உமை
பங்கன் அங்கணன் மிழலைமாநகர்
ஆல நீழலின் மேவினான் அடிக்கு
அன்பர்துன் பிலரே.
தெளிவுரை : வேல் போன்ற விழியுடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான், ஆலநிழற் கீழ் இருந்து அறம் உரைத்தவர்; மிழலை மாநகரில் வீற்றிருப்பவர். அவர் திருவடியை அன்புடன் ஏத்துபவர்களுக்குத் துன்பம் இல்லை.
1191. விளங்கு நான்மறை வல்ல வேதியர்
மல்குசீர்வளர் மிழலை யான்அடி
உளங்கொள் வார்தமை உளம்கொள்வார் வினை
ஒல்லை ஆசுஅறுமே.
தெளிவுரை : நான்கு மறைகள் வல்ல வேதியர்கள் விளங்கும் புகழ் மிக்க மிழலையில் வீற்றிருக்கும் ஈசன் திருவடியை உள்ளத்தில் பதிப்பவர்கள், சிவனடியார்கள். அவ்வடியார்களை ஏத்தும் அன்பர்களின் குற்றமானது, விரைவில் நீங்கும்; இம்மையும், மறுமையும் நலம் தரும் என்பதாம்.
1192. விசையி னோடுஎழு பசையுநஞ்சினை
அசைவுசெய்தவன் மிழலைமாநகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால்
மிசையொ வினையே.
தெளிவுரை : யாவரும் நடுங்கிச் கலங்குமாறு எழுந்த நஞ்சினை அருந்திய சிவபெருமான், மிழலை நகரில் புகழ் கொண்டு விளங்கும் பெருமான் ஆவார். அப் பெருமானை விருப்பத்துடன் நாடி வணங்கினால், வினையானது, உயிரின் மீது பற்றி, உடம்பை ஏற்றுப் புரியும் இடரைச் செய்யாது. வினை யாவும் கெட்டழியும் என உணர்த்தப் பெற்றது.
1193. வென்றிசேர் கொடி மூடுமாமதிள்
மிழலை மாநகர் மேவி நாள்தொறும்
நின்ற ஆதிதன் அடி நனைப்பவர்
துன்பம்ஒன்று இலரே.
தெளிவுரை : மன்னுயிர்களுக்கு அருளும் புரிதலாலும் தேவர்களின் துயரங்களைத் தீர்த்தலாலும் பெருமையுடன் அருள் புரியும் தன்மையில், வெற்றிக் கொடிகள் பாலவற்றை உடையவர், ஈசன், அத்தகைய கொடிகள் மலிந்து, மதில்களை மறைக்கப் பெறும் அளவில் உயர்ந்து திகழ்வது, வீழிமிழலை மாநகர். ஆங்கும் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நினைத்து ஏத்துபவர்களுக்குத் துன்பம் என்று சொல்லப்படுமாறு எதுவும் இல்லை.
1194. போதகந்தனை உரிசெய் தோன்புயல்
நேர்வரும் பொழில் மிழலை மாநகர்
ஆதரம் செய்த அடிகள் பாதம்
அலால்ஓர் பற்று இலமே.
தெளிவுரை : யானையின் தோலை உரித்த ஈசன், மேகம் படியும் பொழில் திகழும் மிழலை மாநகரில் விரும்பி வீற்றிருக்கும் அடிகள் ஆவார். அப் பெருமானின் திருப்பாத மலரை அன்றி, யாம் பற்றுதற்கு உரிய வேறு பொருள் ஒன்றும் இல்லை.
1195. தக்கன் வேள்வியைச் சாடினார் மணி
தொக்கமாளிகை மிழலைமேவிய
நக்கனார்அடி தொழுவார் மேல்வினை
நாள்தொறும் கெடுமே.
தெளிவுரை : தக்கனின் தீய வேள்வியைத் தகர்த்த ஈசன், மணிமாடங்களும் மாளிகைகளும் உடைய மிழலையில் தினமும் தொழுகின்ற அடியவர்கள்பால், வினையானது பற்றி நிற்காது.
1196. போர்அணாவு முப்புரம் எரித்தவன்
பொழில்கள் சூழ்தரு மிழலைமாநகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர்
தீவினை கெடுமே.
தெளிவுரை : போர்க் குணத்தை விரும்பி அதனையே மேற்கொண்ட முப்புர அவுணர்களை எரித்த சிவபெருமான், பொழில்கள் சூழ்ந்த மிழலை மாநகரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார். அவரைச் சிந்தையில் கொண்டு ஏத்தும் அடியவர்கள், தீவினை நீங்கப் பெற்றவர் ஆவர்.
1197. இரக்கம் இல்தொழில் அரக்கனாருடல்
நெருக்கினான்மிகு மிழலை யான்அடி
சிரக்கொள் பூவென ஒருக்கினார் புகழ்
பரக்குநீள் புவியே.
தெளிவுரை : இரக்கம் அற்ற தொழில் புரியும் அரக்கனாகிய இராவணன் உடலானது நெரியுமாறு கயிலை மலையின்கீழ் அடர்த்த சிவபெருமான், மிழலையில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார். அப்பெருமானின் திருவடிக் கமலத்தைச் சிரசின்மேல் வைத்த மலர் போலக் கொண்டு, நெஞ்சில் பதித்து ஏத்துபவர்கள், உலகில் புகழ் மேவி விளங்குவார்கள்.
1198. துறைபூமகன் பன்றியானவன்
ஒன்றும் ஓர்கிலா மிழலையான்அடி
சென்று பூம்புனல் நின்று துவினார்
நன்று சேர் பவரே.
தெளிவுரை : பிரமனும், திருமாலும் தேடியும் அறிவதற்கு அரிய ஈசன், மிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானை அடைந்து தூய நீர் கொண்டு பூசித்தும், மலர் தூவிப் போற்றியும் வணங்குபவர்கள், முத்தி நலனைப் பெறுவார்கள்.
1199. புத்தர்கைச்சமண் பித்தர் பொய்க்குவை
வைத்த வித்தகன் மிழலைமாநகர்
சித்தம் வைத்தவர் இத்தலத்தினுள்
மெய்த்தவத் தவரே.
தெளிவுரை : புத்தரும் சமணரும் கூறும் உரைகளை ஏற்காதவர், சிவபெருமான். அப்பெருமான் விளங்குகின்ற மிழலை மாநகரை நினைத்து ஏத்துபவர், இப்பூவுலகத்தில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர்.
1200. சந்தமார் பொழில் மிழலை ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில்
பந்தமார்தமிழ் பத்தும் வல்லவர்
பத்தம் ஆகுவரே.
தெளிவுரை : சந்தன மரங்களின் மணம் கமழும் பொழில் திகழும் மிழலையில் வீற்றிருக்கும் ஈசனைச் சண்பையில் மேவும் ஞானசம்பந்தன், திருவாய் மலர்ந்து நவின்ற, திருவருளால் பிணிக்கப்படும் தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதுவல்லவர்கள், பக்தர் எனப்படும் பெருமை உடையவர்கள் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
370. திருப்பல்லவனீச்சரம் (அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1201. பரசு பாணியர் பாடல்வீணையர்
பட்டினத்துறை பல்லவ னீச்சரத்து
அரசு பேணி நின்றார்
இவர்தன்மை அறிவார்ஆர்.
தெளிவுரை : ஈசன்,மழுப்படை ஏந்தியும் இசைத்துப் பாடும் வீணையும் கொண்டு, கடற்கரையில் உறையும் பல்வனீச்சரத்தில் ஆட்சி புரிந்து வீற்றிருப்பவர். இப் பெருமான் புரியும் திருவினை யாடலை அறிபவர் யார் !
1202. பட்டநெற்றியர் நட்டம்ஆடுவர்
பட்டினத் துறை பல்லவனீச்சரத்து
இட்டமா இருப்பார்
இவர்தன்மை அறிவார்ஆர்.
தெளிவுரை : சிவபெருமான், போர் வீரர்களுக்குரிய நெற்றிப் பட்டயம் அணிபவர்; இரவில் நடனம் புரிபவர்; இவர், பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருப்பவர்; இவரது தன்மையை அறிபவர் யார் !
1203. பவளமேனியர் திகழு நீற்றினர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அழகரா இருப்பார்
இவர்தன்மை அறிவார் ஆர்.
தெளிவுரை : ஈசன், பவளம் போன்ற செம்மேனியர்; திகழும் திருவெண்ணீறு தரித்தவர்; அவர் பல்லவனீச்சரத்தில் வீற்றிருக்கும் அழகர்; இவர் தன்மையை அறிபவர் யார் !
1204. பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அண்ணலாய் இருப்பார்
இவர்தம்மை அறிவார் ஆர்.
தெளிவுரை : ஈசன், யாழ் மீட்டிப் பண்ணுடன் வாசிப்பவர்; மொந்தை என்னும் வாத்தியத்தை இயக்குபவர்; அவர், கடற்கரைப் பட்டினமாகிய பல்லவனீச்சரத்தில் அண்ணலாய் வீற்றிருப்பவர்; இவர் தன்மையை அறிபவர் யார் !
1205. பல்லில் ஓட்டினர் பலிகொண்டு உண்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எல்லி ஆட்டு உகந்தார்
இவர்தன்மை அறிவார் ஆர்.
தெளிவுரை : ஈசன், மண்டை ஓட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு, பலி ஏற்று உண்பவர். அவர் பல்லவனீச்சரத்தில் இரவில் நடனம் புரிந்து மகிழ்ந்த பெருமான். இவரது தன்மையை அறிபவர் யார் !
1206. பச்சை மேனியர் பிச்சைகொள்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இச்சையாய் இருப்பார்
இவர்தன்மை அறிரார் ஆர்.
தெளிவுரை : ஈசன், பசுமையான திருமேனி உடையவர்; கபாலம் ஏந்தி பிச்சை கொள்பவர்; அவர் கடற்கரைத் துறைப் பட்டினமாகிய பல்லவனீச்சரத்தில் விருப்பமாக வீற்றிருப்பவர்; இவரது தன்மையை அறிபவர் யார் !
1207. பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர்
பட்டினத்துறை பல்லவநீச்சரத்து
எங்குமாய் இருப்பார்
இவர் தன்மை அறிவார் ஆர்.
தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தை உடையவர்; சந்திரனைச் சூடியவர்; குரு, இலிங்க, சங்கமங்களில் திகழ்பவராய் விளங்கும் அப்பெருமான், பல்லவனீச்சரத்தில் வீற்றிருப்பவர்; இவர் தன்மையை அறிபவர் யார் !
1208. பாதம் கைதொழ வேதம் ஓதுவார்
பட்டினத் துறை பல்லவனீச்சரத்து
ஆதியாய் இருப்பார்
இவர்தன்மை அறிவார் ஆர்.
தெளிவுரை : ஈசன், யாவரும் கைதொழுது ஏத்தும் தன்மையில் வேதத்தை உபதேசித்து அருள் புரிபவர். அவர், பல்லவனீச்சரத்தின் ஆதிமூர்த்தியாய் வீற்றிருப்பவர். இவர் தன்மையை அறிபவர் யார் !
1209. படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர்
பட்டினத்துறை பல்லனீச்சரத்து
அடிகளாய் இருப்பார்
இவர்தன்மை அறிவார் ஆர்.
தெளிவுரை : ஈசன், பல்வேறு திருவடிவங்களில் காட்சி தருபவர்; மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடியவர். அவர் பல்லவனீச்சரத்தில் வீற்றிருப்பவர். இவர் தன்மையை அறிபவர் யார் !
1210. பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்
பட்டினத் துறை பல்லவ னீச்சரத்து
இறைவரா இருப்பார்
இவர்தன்மை அறிவார் ஆர்.
தெளிவுø ர : ஈசன் முழங்கும் பறையைக் கொண்டிருப்பவர்; பிறைச் சந்திரனை முடியில் சூடியவர். அவர் கடல் துறைப் பட்டினமாகிய பல்லவனீச்சரத்தில் வீற்றிருக்கும் இறைவன். இவர் தன்மையை அறிபவர் யார் !
1211. வானம்ஆள்வதற்கு ஊனம் ஒன்றிலை
மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம் பந்தன் நற்றமிழ்
சொல்லவல்லவர் நல்லவரே.
தெளிவுரை : அழகிய பல்லவனீச்சரத்தில் மேவும் பெருமானை, ஞானசம்பந்தன் நற்றமிழால் சொல்லிய இத் திருப்பதிகத்தைக் கொண்டு ஏத்த வல்லவர், மறுமையில் உயர்ந்ததாகிய வானுலகில் இருந்து மகிழ்வதற்கும் யாதொரு குறைவும் இல்லை.
திருச்சிற்றம்பலம்
371. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1212. உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னரும் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
கனல்வழி காய்வது காமனையே
அற்ற மறைப்பதும் உன்பணியே
அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்றம் உகந்தது கந்தனையே
பிரம புரத்தை உகந்தனையே
தெளிவுரை : ஈசனே ! உமாதேவியார் உம்மைப் பிரியாது பொருந்தி இருப்பது உமது திருமேனியையே ! மெய்ஞ் ஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது மெய்த் தன்மை உடைய பேரருளையே ! கற்றுணர்ந்த ஞானிகள் வெறுப்பது பந்தம் உடைய மனைவி மக்கள் முதலாக மேவும், குடும்ப வாழ்க்கையே ! நீவிர் நெற்றிக் கண்ணால் சினந்தது மன்மதனையே ! உமது திருமேனியில் எழிலை மறைத்து விளங்குவது, பாம்பே ! தேவர்கள் செய்வதும் உமக்குப் பணிவிடையே ! நீவிர் பெற்று, அழகுடன் முகிழ்த்தது முருகப் பெருமானையே ! தேவரீர் பிரமாபுரத்தினை உகந்தவரே !
1213. சதிமிக வந்த சலந்தரனே
தடிசிரம் நேர்கொள் சலந்தரனே
அதிர்ஒளி சேர்திகி ரிப்படையால்
அமர்ந்தனர் உம்பர்து திப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே
மருவிடம் ஏற்பது கைச்சிலையே
விதியினில் இட்ட இரும்பரனே
வேணு புரத்தை விரும்பரனே.
தெளிவுரை : வஞ்சனை கொண்டு வந்தவன் சலந்தராசுரன். அவனைத் தடிந்து அழித்தவர் கங்கையைத் தரித்த ஈசன். கண்டவர்கள் அதிரும்படியான வலிமை மிக்க சக்கரப் படையை (ஈசன் பாதத்தால் வட்டமிக்க சக்கரப் படையாக மாறி சலந்தரனை அழித்தது) வானவர்கள் கண்டு மகிழ்ந்து துதித்து ஏத்தினர். சந்திரனைத் தொடும் உயர்ந்த மேரு மலையை ஈசன், கையில் வில்லாகக் கொண்டவர். அவர், விடத்தினை ஏற்று அருந்தியதில் எத்தகைய கைப்பும் கொள்ளவில்லை. ஆகம விதியில் மிகவும் விருப்பத்துடன் விளங்கும் அவர், வேணுபுரத்தை விரும்பி வீற்றிருக்கும் அரனே.
1214. காதம ரத்திகழ் தோடினனே
கானவ னாய்க்கடிது ஓடினனே
பாதம தால்கூற்று உதைத்தனனே
பார்த்தன் உடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே
சார்ந்த வினையது அரித்தனனே
போதம் அமரும் உரைப்பொருளே
புகலி அமர்ந்த பரம்பொருளே.
தெளிவுரை : ஈசன், காதில் தோடு அணிந்தவர்; காட்டில் வேடுவராய்த் திரிந்தவர், காலனைத் திருப்பாதத்தால் உதைத்தவர்; பார்த்தனுக்கு உடற்கவசமாக அத்திரங்களை அருளியவர்; மகரந்தங்களையுடைய கொன்றை மலர் மாலை தரித்தவர்; அடியவர்களின் தீவினைகளை நீக்கியவர்; ஞானவாசகத்தின் பொருளாக விளங்குபவர். அவர் புகலியில் வீற்றிருக்கும் பரம்பொருளே.
1215. மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே
மகிழ்ந்து அரைசேர்வத மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேல்மதியே
வேதமது ஓதுவர் மேல்மதியே
பொய்த்தலை யோடுஉறு மத்தமதே
புரிசடை வைத்தது மத்தமதே
வித்தகர் ஆகிய எங்குருவே
விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே.
தெளிவுரை : ஈசன், கரிய நஞ்சினை உமிழும் பாம்பை மகிழ்ந்து அரையில் சேர்த்துக் கட்டித் திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர்; சடை முடியின்மீது சந்திரனைத் தரித்தவர்; மேன்மையான ஞானம் அருளும் வகையில் வேதப் பொருளை ஓதுபவர்; மண்டை ஓடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர்; சடை முடியின்மீது ஊமத்த மலர் சூடியவர்; வித்தகர் ஆகிய அவர், எமது குருவானவர்; அவர், விரும்பி அமர்ந்து இருப்பது வெங்குருவே.
1216. உடன்பயில் கின்றனன் மாதவனே
உறுபொறி காய்ந்துஇசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே
திரிகுண மேவிய கண்டனனே
படங்கொள் அரவுஅரை செய்தனனே
பகடுஉரி கொண்டுஅரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்குஒரு நஞ்சுஇவனே
தோணி புரத்துறை நம்சிவனே.
தெளிவுரை : ஈசன், திருமாலைத் தம்முடன் இருக்கும்படி செய்பவர்; இந்திரியங்களை அடக்கிப் பெருமையுடன் மேவும் சிறந்த தவத்தை உடையவர்; உறுதி பயக்கும் சிறந்த வேதங்களைக் கண்டவர்; முக்குண வயத்ததாய் மேவிக் குற்றத்தைப் பெருக்கும் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர்; படம் கொண்ட அரவத்தை அரையில் பொருத்திக் கட்டியவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாகத் தரித்துக் கொண்டவர்; வினைப் பயனால் நேரும் துன்பங்களால் அடியவர்கள் நலியாதவாறு காப்பவர்; இவர், தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானே.
1217. திகழ்கைய தும்புகை தங்குஅழலே
தேவர் தொழுவதும் தங்கழலே
இகழ்பவர் தாம்ஒரு மானிடமே
இருந்தனு வோடு எழில் மானிடமே
மிகவரு நீர்கொளும் அஞ்சடையே
மின்னிகர் கின்றதும் அஞ்சடையே
தகவிர தம்கொள்வர் சுந்தரரே
தக்க தராய்உறை சுந்தரரே.
தெளிவுரை : ஈசன், திகழ்கின்ற கையில் புகை கொண்டு எழும் நெருப்பினை உடையவர்; தேவர்கள் தொழுது ஏத்தும் திருக்கழலை உடையவர்; தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை, இடக்கரத்தில் ஏந்தியவர்; தாம் திருவருள் புரியும் தன்மையில் உடல் கொண்டு காட்சி தருவது மானிட உடம்பே; மிகுந்த கங்கையை அழகிய சடை முடியில் ஏற்றவர்; மின்னலைப் போன்று சடை முடியுடையவர்; தகுந்த விரதம் கொண்டு காத்தருளும் சுந்தர வடிவினர். அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து விளங்கும் பூந்தராய் என்னும் பதியில் வீற்றிருக்கும் அழகரே.
1218. ஓர்வரு கண்கள் இணைக்கயலே
உமையவள் கண்கள் இணைக்கயலே
ஏர்மருவும் கழல் நாகமதே
எழில்கொள் உதாசனன் ஆகமதே
நீர்வரு கொந்தள கம்கையதே
நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதியம் பகனே
சிரபுர மேய தியம்பகனே.
தெளிவுரை : நெஞ்சே ! ஈசனையன்றிப் பிறவற்றைக் காணுமாறு கண்களைச் செலுத்தற்க. அவ்வாறு செலுத்துதல் புறம்பானது எனக் கொள்க. உமாதேவியின் கண்கள் இரண்டும் இணையாக மேவி, கயல்கள் போன்று தம் குஞ்சுகளைப் பார்வையால் கனிந்து நோக்கும் தன்மையில், மன்னுயிர்களைக் கனிவுடன் நோக்கி வாழவைக்கும் பாங்குடையன. ஈசன், அழகிய கழலில் நாகத்தைக் கட்டி இருப்பவர். அவருடைய திருமேனி யானது நெருப்பு வண்ணம் உடையது. நீர்மயமான ஈசனின் சடை முடியானது, அலங்கரிக்கப்பட்டு ஒழுங்குடன் திகழக்கூடியது. நெடுஞ் சடையில் கங்கையைத் தரித்த அப் பரமன், யோக நிலையில் தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் தாங்கி, அறப்பொருளை இயம்பியவர். அவர் சிரபுரத்தில் வீற்றிருக்கும் நெருப்புக்கண்ணுடையவரே.
1219. ஈண்டு துயிலமர் அப்பினனே
இருங்கண் இடந்துஅடி அப்பினனே
தீண்டலரும் பரிசு அக்கரமே
திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத் தலையே
மிகைத்தவ ரோடு நகைத்தலையே
பூண்டன சேரலும் மாபதியே
புறவம் அமர்ந்த உமாபதியே.
தெளிவுரை : பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால் தனது அகன்ற தாமரை போன்ற கண்ணை இடந்து ஈசன் திருவடியில் பதித்து அருச்சித்து, நெருங்குவதற்கு அரிய பெருமையுடைய சக்கரப் படையைத் தனது கரத்தில் விளங்கும் ஆயுதமாகப் பெற்றார். அத்தகைய அரிய படையை அளித்த சிவபெருமான், தன்னை ஏளனம் செய்த தாருகவனத்து முனிவர்களை நோக்கி, ஏளனமாக நகை செய்யுமாறு மண்டை ஓடுகளைக் கோர்த்து மாலையாகக் கொண்டவர். அவர் உமாபதியாக வீற்றிருக்கும் சிறப்புடைய பதியாவது புறவமே.
1220. நின்மணி வாயது நீழலையே
நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே
ஒளியத் னோடுரு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே
கடல்விடம் உண்டக ருங்களனே
மன்னிவ ரைப்பதி சண்பையதே
வாரி வயல்மலி சண்பையதே.
தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீருடைய திருவருளைச் சாற்றி விளங்கும் திருக்கோயிலின் மணி வாசலையே தங்கும் அருளிடமாகக் கொண்ட, நேசம் உடைய அடியவர்தம் அடிச்சுவட்டை எண்ணி, மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே, அடியவர் திருக்கூட்டம் எனத் தக்கதாகும். நீவிர், தாருகவனத்தில் மேவிய மகளிரின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர்; கரிய விடத்தைக் கண்டத்தில் திகழுமாறு செய்தவர். கடல் வளமும் வயல் வளமும் உடைய சண்பை நகரானது, தேவரீர் வீற்றிருக்கும் பதியே.
1221. இலங்கை அரக்கர் தமக்குஇறையே
இடந்து கயிலை எடுக்க இறையே
புலன்கள் கெடஉடன் பாடினனே
பொறிகள் கெடஉடன் பாடினனே
இலங்கிய மேனி இராவணனே
எய்து பெயரும் இராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே
காழி அரனடி மாவசியே.
தெளிவுரை : இலங்கையில் அரக்கர்களின் வேந்தனாகிய இராவணன் கயிலை மலையை இடந்து பெயர்த் தெடுக்க, நொடிப் பொழுதில் இராவணன். தனது புலன்களை அடக்கிப் பாடிப் போற்ற, ஈசன் உடன்பட்டு அருள் செய்தனர். வலிமையாகத் திகழும் உடலைக் கொண்ட அவன், கசிந்து பாடிய தன்மையால் (அழுதவன் - இராவணன்) இராவணன் என்னும் பெயரை அடைந்தனன்; கூர்மையான வாட்படையைக் பெற்றனன். அத்தகைய பெருமான் மேவி விளங்கும் இடம், காழி. ஆங்கு வீற்றிருக்கும் ஈசன் திருவடியே வசீகரம் உடையது.
1222. கண்ணிகழ் புண்டரி கத்தின னே
கலந்து இரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரிசு ஏனமதே
வானகம் ஏய்வகை சேனமதே
நண்ணி அடிமுடி எய்தலரே
நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே
பசுமிக ஊர்வர் பசுபதியே.
தெளிவுரை : தாமரை போன்ற கண்ணுடைய திருமாலும், தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமனும் பூமியைக் குடைந்து செல்லும் ஏனமாகவும் வானத்தில் பறந்து செல்லும் பருந்தாகவும் முனைந்து சென்றும் ஈசனின் திருவடியும் முடியும் எய்த, இயலாதவராயினர். அத்தகைய பெருமான், குளிர்ந்த சோலையில் பூசைக்குரிய மலர்கள் திகழவும், பண்ணின் இசை பெருகவும் விளங்குகின்ற கொச்சைவயத்தில் உயிர்களின் தலைவராய் வீற்றிருப்பவர். அவர் இடப வாகனத்தில் விளங்கும் ஈசனே.
1223. பருமதில் மதுரைமன் னவை எதிரே
பதிகமது எழுதிலை அவைஎதிரே
வருநதி யிடை மிசை வருகரனே
வசையொடும் அலர்கெட வருகரனே
கருதலில் இசைமுரல்தரும் அருளே
கழுமலம் அமர்இறை தரும்அருளே
மருவிய தமிழ்விர கனமொழியே
வல்லவர் தம்மிடர் திடமொழியே.
தெளிவுரை : அகன்ற மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவையில் திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வையை நதியின் மீது செலுத்த, அதனை எதர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தை உடையவர் சிவபெருமான். அவர், வசையும் பழியும் கெடுமாறு செய்தவர்; அரிய பெரும் புகழை ஈட்டித் தந்தவர். கழுமலத்தில் வீற்றிருக்கும் அப்பரமனை ஏத்திய தமிழ் வீரகனாகிய ஓத வல்லவர்தம் வினையானது, விலகிச் செல்லும்.
திருச்சிற்றம்பலம்
372. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)
திருச்சிற்றம்பலம்
1224. பாயுமால் விடை மேலொரு பாகனே
பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே
சோதி மால் எரிவேதத் துவனியே
ஆயுநன் பொருள் நுண்பொருள் ஆதியே
ஆலநீழல் அரும்பொருள் ஆதியே
காய வின்மதன் பட்டது கம்பமே
கண்ணுதற் பர மற்கு இடம் கம்பமே.
தெளிவுரை : ஈசன், பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தின் மீது அமர்ந்து; உமாதேவியைத் ஒரு கூறாகப் பெற்றிருப்பவர்; வானவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனி (ஓசை) யானவர்; சுடர் விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித் தீ ஆனவர். ஆய்வு செய்யப் பெறும் நற்பொருளாயும் மேவும் ஆதியானவர்; ஆல் நிழலின்கீழ் இருந்து தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்களுக்கு அரும் பொருள் ஆகிய முதல்வர்; மன்மதனை  எரித்த ஏகம்பர். நெற்றிக் கண்ணுடைய அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, ஏகம்பமே.
1225. சடையணிந்து வெண்டலை மாலையே
தம்மு டம்பிலும் வெண்டலை மாலையே
படையில் அங்கையிற் சூலமது என்பதே
பரந்திலங்கையிற் சூலமது என்பதே
புடைப்பரப்பன பூதக ணங்களே
போற்றி சைப்பன பூதக ணங்களே
கடைகள் தோறும் இரப்பது மிச்சையே
கம்பமேவி இருப்பதும் இச்சையே.
தெளிவுரை : ஈசன், சடை முடியில் அணிந்து இருப்பது வெண்மையான மண்டை ஓடு உடைய தலைமாலை; உடம்பிலும் தலை மாலை அணிந்தவர்; அழகிய கையில் சூலப் படையுடையவர்; பரந்து விளங்கும் கையினைப் படை போன்று கூர்மையாகக் கொண்டு பகையைத் தோண்டி எடுப்பவர்; பூத கணங்கள் பக்கத்தில் சூழப் பரவி நின்றும் போற்றித் துதி செய்யவும் விளங்குபவர்; அப்பெருமான் வாயில்கள் தோறும் சென்று உணவை இரப்பவராய் ஏகம்பத்தில் விரும்பி விருப்புடன் இருப்பவரே.
1226. வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சையே
வேறுமுன் செலத் தும்பை மிலைச்சையே
அள்ளி நீறது பூசுவ தாகமே
ஆன மாசுண மூசுவது ஆகமே
புள்ளியாடை உடுப்பது கத்துமே
போனஊழி உடுப்பது கத்துமே
கள்ளுலா மலர்க்கம்பம் இருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.
தெளிவுரை : வெள்ளெருக்கமும் தும்பையும் சூடிய ஈசன், தும்புக் கயிற்றைக் கொண்டு இடபத்தைக் கட்டியவர்; திருநீற்றினை விரும்பிப் பூசுபவர்; விரும்பிச் சூழும் பாம்புகளால் தேகத்தை மறைக்குமாறு விளங்குபவர்; புள்ளிகளை உடைய ஆடையை உடுத்துபவர்; ஊழிதோறும் உயிர்களைத் தமது திருமேனியில் பொருந்திக் கொள்பவர். அப் பெருமான், தேன் கமழும் நறுமண மலர்கள் கொண்ட காஞ்சி மாநகரில் மேவும் திருவேகம்பத்தில்  வீற்றிருப்பவர்.
1227. முற்றலாமை யணிந்த முதல்வரே
மூரியாமை அணிந்த முதல்வரே
பற்றி வாளரவு ஆட்டும் பரிசரே
பாலு நெய்யுகந்து ஆட்டும் பரிசரே
வற்றல் ஓடு கலம் பலி தேவர்வதே
வானினோடு கலம்பலி தேவர்வதே
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.
தெளிவுரை : ஈசன், முற்றிய ஆமை ஓட்டை அணிந்த முதற் பொருள்; வலிமையாகிக் கரியதாகிய நஞ்சினை மிடற்றில் அணிந்த ஆதியானவர்; அரவத்தைப் பற்றி ஆட்டுகின்ற தன்மையுடையவர்; பாலும் நெய்யும் கொண்டு பூசிக்கப் பெறும் பெருமையுடையவர்; பிரம கபாலத்தைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்பவர்; தேவர்களால் போற்றி ஏத்தப் பெறுபவர்; அப் பெருமானை ஏத்திப் போற்றுவதற்கு அறியா தவர்கள், கம்பத்திற்கு ஒப்பானவர்கள். அவர் வீற்றிருக்கும் இடமாவது, காஞ்சி மாநகரில் விளங்குகின்ற திருவேகம்பமே.
1228. வேடனாகி விசையற்கு அருளியே
வேலை நஞ்சமிசையற் கருளியே
ஆடும் பாம்பரை ஆர்த்தது டையது
அஞ்சு பூதமும் ஆர்த்த துடையது
கோடு வன் மதிக் கண்ணி ஆழகிதே
குற்றமில் மதிக் கண்ணி அழகிதே
காடுவாழ்பதி யாவதும் உம்மதே
கம்பமா பதி யாவதும் உம்மதே.
தெளிவுரை : ஈசனே ! தேவரீர் வேட்டுவ வடிவம் தாங்கி அருச்சுனருக்கு அருள் புரிந்தவர்; கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கருமை கொண்டவர்; ஆடும் பாம்பை அரையில் ஆர்த்து உடையாகக் கட்டியவர். ஐம்பூதங்களாகி விளங்கும் உலகத்தைப் பிரளய காலத்தில் அழியுமாறு செய்பவர்; வளைந்த பிறைச் சந்திரனை அழகு மிளிரத் தரித்தவர்; குற்றமில் ஞானத்தின் வயமாய் விளங்குபவர். சுடுகாட்டினை உமது வாழும் பதியாக உடைய தேவரீர்; திருவேகம்பத்தை உமது பதியாகவும் கொண்டு மேவுபவரே.
1229. இரும்பு கைக்கொடி தங்குஅழல் கையதே
இமய மாமகள் தம்கழல் கையதே
அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே
ஆழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகல் நட மாடுதல் செய்துமே
பேதைமார் மனம் வாடுதல் செய்துமே
கரும்பு மொய்த்தெழு கம்பம் இருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.
தெளிவுரை : ஈசன் கொடி போன்று பெரிய புகையுடன் எழும் நெருப்பைக் கையில் கொண்டிருப்பவர்; உமாதேவியாரால் பூசித்து வழிபடப் பெறுபவர்; அடியவர்களால் அரும்பும் மலரும் கொண்டு பூசிக்கப் படுபவர்; சக்கரப் படையுடைய திருமாலால் பூசிக்கப் படுபவர்; தாருக வனத்தில் நடனம் புரிந்து, மங்கையரின் மனத்தைக் கவர்ந்தவர். அவர் உமாதேவியாரால் பூசிக்கப் பெற்று, கரும்பின் இனியராய்க் காஞ்சி மாநகரில் மேவும் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவரே.
1230. முதிரமங்கை தவம்செய்த காலமே
முன்புமங்கை தவம்செய்த காலமே
வெதிர்க ளோடகில் சந்த முருட்டியே
வேழமோடு அகில் சந்தம்உருட்டியே
அதிரஆறு வரத்துஅழு வத்தொடே
யானையாடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள் பூண்முலைதக் கம்பம்இருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.
தெளிவுரை : உமாதேவியார், ஈசனை நோக்கித் தவம் செய்த காலத்தில், மூங்கில், அகில், சந்தனம் மற்றும் உறுதியான காட்டு மரங்கள், கரும்பு, நாணல் முதலானவை அதிருமாறு கம்பை ஆற்றில் ஆரவாரத்தின் ஒலியோடு அடித்து வர, பூசைக்குரிய இலிங்க மூர்த்தியைத் தழுவிக் கொண்டார் அத் தன்மையில் தேவி தழுவிய சுவடு விளங்கக் குழைந்த ஈசன் காஞ்சி மாநகரில் மேவும் ஏகம்பத்தில் வீற்றிருப்பவரே.
1231. பண்டரக்கன் எடுத்த பலத்தையே
பாய்ந்தரக்கன் எடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே
கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டர் தலையிலே
உடுபதிக்கிடம் உண்டத் தலையிலே
கண்ட நஞ்சம் அடக்கினை கம்பமே
கடவுள்நீ இடம் கொண்டது கம்பமே.
தெளிவுரை : ஈசனே ! தேவரீர் இராவணன், மலை எடுத்த பலத்தை அவ்வரக்கன் பலமற்றவன் எனக் காட்டும் தன்மையில் உமது திருப்பாத விரலால் அழுத்தியவர்; தாருக வனத்து முனிவர்கள், கொல்வதற்காக ஏவிய மானை ஏந்திக் கொண்டவர்; மண்டை ஓட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்று உணவு கொண்டவர்; சந்திரனைத் தலையில் சூடி, இடம் அருளியவர்; நஞ்சினைக் கண்டத்தில் அடக்கித் தூண் போன்று உறுதியாய்க் காத்தவர். நீவிர் கடவுளாக இடும் கொண்டு விளங்குவது, ஏகம்பமே.
1232. தூணியான சுடர்விடு சோதியே
சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே
பித்தனான் பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே
சித்தமோடு கீழூழி திரிந்துமே
காண நின்றனர் உற்றது கம்பமே
கடவுள்நீ யிடம் உற்றது கம்பமே.
தெளிவுரை : தேவரீரின் நெற்றிக் கண்ணிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பொறிகளால் தூய்மையான ஞானச் சுடராகக் கந்தக் கடவுள் தோன்றியவர். உம்மைப் பேணும் பிரமன் பெரிய பறவை வடிவம் தாங்கி ஆகாயத்திலும், திருமால் பன்றி வடிவில் பாதாளத்திலும் முறையே செருக்கின் கீழ்மையுடன் திரிந்தும் உம்மைக் கண்டுற்றது அக்கினிக் கம்பமே. பரம்பொருளாகிய நீவிர் இடமாகக் கொண்டு விளங்குவது ஏகம்பமே.
1233. ஓருடம்பினை ஈருரு வாகவே
உன்பொருள் திறம் ஈருரு ஆகவே
ஆரும்எய்தற் கரிது பெரிதுமே
ஆற்றல் எய்தற்குஅரிது பெரிதுமே
தேரரும் மறியாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே
கடவுள்நீ இடம் கொண்டது கம்பமே.
தெளிவுரை : தேவரீர், யானையின் தோலை உரித்து உமது பொருளும் திறமும் இரண்டாக விளங்குமாறு சிவமும் சக்தியாகியவர்; எய்துதற்கு அரிய கரிய நிறமுடைய தேவி விளங்க, உம்மை எய்துதற்கு அரியவராகியவர். தேரரும் சமணரும் உம்மை அறியாது திகைப்பவர். அவர்கள் சித்தமும் மாறாதவராய்த் திகைத்திருப்பார்கள். அத்தகையோர் உம்மைத் துதிப்பதற்குக் கைப்பர் (வெறுப்பவர்); உம்மைக் கண்டு நடுங்குவர். கடவுளாகிய நீவிர் இடம் கொண்டு விளங்குவது திருவேகம்பமே.
1234. கந்தமார் பொழில் சூழ்தரு கம்பமே
காதல் செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்வது விரும்பிப் புகலியே
பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில் பொருள் ஆயின கொண்டுமே
அண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின் னியல் பாடிய பத்துமே
பாட வல்லவர் ஆயின பத்துமே.
தெளிவுரை : மணம் கமழும் பொழில் சூழ்ந்து விளங்கும் திருவேகம்பத்தை விரும்பி ஏத்துபவர்களுக்குத் துன்பம்யாவும் தீரும் எனப் புந்தியில் ஈசன் செயலாகக் கொண்டு, புகலியில் விளங்கும் பூசுரனாகிய திருஞானசம்பந்தர் விரும்பிப் புகன்ற இத் திருப்பதிகத்தை, ஈசனின் மெய்ப் பொருளாக ஏற்று ஓதுபவர்கள், பத்தியின் வயப்பட்டவராய் விளங்கி, எல்லாம் கைவரப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
373. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
திருச்சிற்றம்பலம்
1235. ஆலநீழல் உகந்தது இருக்கையே
ஆனபாடல் உகந்தது இருக்கையே
பாலினேர் மொழி யாளொரு பங்கனே
பாதமோதலர் சேர்புர பங்கனே
கோல நீறணி மேதகு பூதனே
கோதிலார் மனமேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே
ஆலவாய் உறை அண்டர் களத்தனே.
தெளிவுரை : ஈசன், ஆல் நிழலில் உகந்து இருப்பிடமாகக் கொண்டவர்; வேதபாடல்களில் இருக்கு வேதத்தை உகந்தவர்; பால் போன்ற இனிய மொழி பகரும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்; தனது திருவடியைப் பணியாத முப்புர அசுரர்களை எரித்தவர்; அழகிய திருநீறு அணிந்தவராய் மேன்மை உடைய பூதகணங்களைப் படையாக உடையவர்; குற்றமற்ற மனத்தின்கண் பூதப் பொருளாய் விளங்குபவர்; ஆலகால விடத்தைக் கண்டத்தில் கொண்டு விளங்குபவர். அவர் ஆலவாயின்கண் வீற்றிருக்கும் தேவர்களின் தலைவரே.
1236. பாதியா உடல் கொண்டது மாலையே
பாம்புதார் மலர்க் கொன்றைநன் மாலையே
கோதிநீறது பூசிடும் ஆகனே
கொண்டநற் கையின் மானிடம் ஆதனே
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆனையே
நாடிஅன்று உரி செய்ததும் ஆனையே
வேதநூல் பயில் கின்றது வாயிலே
விகிர்தன் ஊர் திருஆலநல் வாயிலே.
தெளிவுரை : ஈசன் திருமாலைத் தமது உடம்பில் ஒரு பாதியாகக் கொண்டு சங்கர நாராயணராக விளங்குபவர்; பாம்பும் கொன்றை மலரும் மாலையாகக் கொண்டவர்; திருநீற்றினை நன்கு தேகத்தில் பதியப் பூசுபவர்; திருக்கையில் மான் விளங்கி நிற்குமாறு ஆக்கியவர்; தலைவராய் விளங்கி, நாள்தொறும் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தைப் பூசையாக ஏற்று மகிழ்பவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; வேத நூல்களைத் திருவாயால் ஓதும் பண்பினர். விகிர்தராகிய அவர் நன்மை விளங்கும் திரு ஆலவாய் என்னும் பதியைத் தமது ஊராகக் கொண்டு திகழ்பவர்.
1237. காடுநீட துறப்பல கத்தனே
காதலால் நினை வார்தம் அகத்தனே
பாடுபேயொடு பூதம சிக்கவ
பல்பிணத் தசை நாடிய சிக்கவ
நீடுமாநட மாடவி ருப்பனே
நின்னடித்தொழ நாளுமிருப்பனே
ஆடநீள் சடை மேவிய அப்பனே
ஆலவாயினின் மேவிய அப்பனே.
தெளிவுரை : ஈசன, மயானத்தில் விளங்கி எல்லாவற்றுக்கும் தலைவனாய் இருப்பவர்; விரும்பிப் போற்றும் அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவர்; பாடுகின்ற பேய் மற்றும் பூதகணங்களுடன் உண்ண, நடனம் ஆடிக் கொண்டு இருப்பவர்; அதில் எப்போதும் விருப்பம் உடையவர். திருவடியைத் தொழுபவர்களுக்கு இருந்து அருள் வழங்குபவர்; ஆடுகின்ற சடை முடியில் கங்கையைத் தரித்திருப்பவர்; அவர் ஆலவாயினில் விளங்கும் தந்தையே.
1238. பண்டயன்தலை யொன்று மறுத்தியே
பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி இருத்தியே
தூயவெள்ளெரு தேறிஇ ருத்தியே
கண்டு காமனை வேவ விழித்தியே
காதலில்லவர் தம்மை இழித்தியே
அண்ட நாயகனேமிகு கண்டனே
ஆலவாயினில் மேவிய கண்டனே.
தெளிவுரை : ஈசன், பிரமன் தலைகள் ஐந்தில் ஒன்றை அறுத்து நான்முகனாகச் செய்தவர்; தனது திருப்பாதங்களைத் தொழும் அன்பர்களின் பாவங்களை நீக்கியவர்; பிறைச் சந்திரனைச் தலை முடியில் சூடியவர்; தூய வெள்ளை இடபத்தின் மீது ஏறி இருப்பவர்; மன்மதனைச் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர்; அன்பு இல்லாதவர்களை இழிவு கொள்ளுமாறு செய்பவர்; உலகம் பல திகழும் அண்டங்களுக்கெல்லாம் நாயகனாய் விளங்கிக் கறையுடைய நீலகண்டனாகத் திகழ்பவர். அவர் ஆலவாயில் விரிந்து மேவுபவரே.
1239. சென்றுதாதை உகுத்தனன் பாலையே
சீறிஅன்பு செகுத்தனன் பாலையே
வென்றி சேர் மழுக் கொண்டுமுன் காலையே
வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்ற மாணியை யோடின கங்கையால்
நிலவமல்கி உதித்தன கங்கையால்
அன்று நின்னுரு ஆகத் தடவியே
ஆலவாய்அர னாகத் தடவியே.
தெளிவுரை : தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்கு உரிய பாலைக் கவிழ்த்துவிட, அச் செயலைக் கண்ட அவன் புதல்வராகிய விசாரசருமர் சினந்து, தந்தையின்பால் வெகுண்டு, வெற்றியுடைய மழுவைக் கொண்டு முன் கால்களை வீழுமாறு வெட்டினார். அந்த ஞான்று, ஆங்கு சிவபூசை ஆற்றிய பிரமச்சாரிய யாகிய அவ் விசாரசருமருக்கு கங்கை முதலானவற்றை அணிந்த திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான். அப் பரமன், தனது தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின் பாவத்தை நீக்கித் தமது திருக்கையால் வருடிச் சிவமயமாய் விளங்கச் செய்து, அருள் புரிந்தவர். அவர் தமது தேகத்தில் பூசிக்கப் பெறும் மலர் முதலான நைவேத்தியங்களை, அவ் அடியாருக்கு உரியதாகச் செய்தவர். அப்பெருமான் ஆலவாயின்கண் வீற்றிருக்கும் அரனே.
1240. நக்கம் ஏகுவர் நாடுஓர் ஊருமே
நாதன் மேனியின் மாசுணம் ஊருமே
தக்க பூமனைச் சுற்றக் கருளொடே
தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே
மெல்ல நல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கலன் ஓடுமே
ஆலவாய் அரனார் உமை யோடுமே.
தெளிவுரை : ஈசன், பலி ஏற்கும் பாங்கில் ஊர்தொறும் ஆடையற்றவராய்த் திரிபவர்; திருமேனியில் பாம்பு ஊர்ந்து விளங்குமாறு நிகழ்பவர்; திருநீலகண்ட யாழ்ப்பாணரை அழைத்து வரும் பொருட்டு அடியவர்களின் கனவில் தோன்றி அருள் செய்து பின்னர் அப்பாணர் பாடும் போது பொற்பலகை அருளி அமரச் செய்தவர்; தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு மங்கிலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர்; திருத்தொண்டர்களுக்கு, அண்மையாய் விளங்குபவர்; எலும்பு மாலை அணிந்தவர்; திரு ஓட்டினை உண்ணும் கலனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் ஆலவாயின்கண் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவரே.
1241. வெய்யவன் பல் லுகுத்தது குட்டியே
வெங்கண் மாசுணம் கையது குட்டியே
ஐயனேஅனல் ஆடிய மெய்யனே
அன்பினால் நினை வார்க்கு அருள் மெய்யனே
வையம்உய்ய அன்று உண்டது காளமே
வள்ளல் கையது மேவுகங் காளமே
ஐயமேற்பது உரைப்பது வீணையே
ஆலவாய் அரன் கையது வீணையே.
தெளிவுரை : ஈசன், சூரியனுடைய பல்லை உதிருமாறு கையால் புடைத்துக் குட்டி அடர்த்தவர்; கையில் பாம்புக் குட்டியை அணிந்து விளங்குபவர்; தலைவராக விளங்குபவர்; அனலில் மேவி ஆடும் திருமேனியுடையவர்; அன்பு கொண்டு ஏத்தும் அடியவர்களுக்கு அருள் வழங்கும் மெய்மையானவர்; உலகமானது உய்யும் பொருட்டு விடத்தை உட் கொண்டவர்; வரையாது வள்ளலாய் விளங்குபவர்; எலும்புக் கூட்டைப் பொருந்த வைத்திருப்பவர்; பிச்சை ஏற்பவர்; இசை போன்று இனிமையாக உரைப்பவர். அப்öருமான், ஆலவாயின் கண் கையில் வீணையேந்தி வீற்றிருப்பவரே.
1242. தோள்கள் பத்தொடு பத்து மயக்கியே
தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்கன் நிலத்துக் களித்துமே
நீள்பொருப்பை எடுத்தஉன் மத்தனே
ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ
ஆலவாய் அரன் உய்த்தது மெய்கொலோ.
தெளிவுரை : தனது இருபது தோள்கள் விளங்குகின்ற வலிமையால் திகழத் தேவர்களின் வலிமையை அழித்த அரக்கனாகிய இராவணன், பூவுலகத்தில் களித்து நிற்க, எதிர் நின்ற பெரிய கயிலை மலையைக் கண்டு வெகுண்டு, பாய்ந்து சென்று, அதனைப் பெயர்த்து எடுத்த உன்மத்தன் ஆகினான். அந்த நிலையில் அவ்வரக்கனுடைய செருக்கை, அழியச் செய்தவராய்த் திருப்பாத விரலை ஊன்றி நெரித்தவர் ஈசன். அவ்வரக்கனை அழியுமாறு செய்தது மெய்கொல் ! ஆலவாயில் வீற்றிருக்கும் அரனே ! அவ்வரக்கனை உய்யுமாறு செய்து வாளும் அருளியது மெய்கொல் !
1243. பங்கயத்துள நான்மகன் மாலொடே
பாதநீள்முடி நேடிட மாலொடே
துங்க நற்றழலினனுரு வாயுமே
தூய பாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கி னார்இடு பிச்சையே
சென்று கொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே
ஆலவாய் அரனார திடக்கையே.
தெளிவுரை : பிரமன் திருமாலோடு அடிமுடி தேடிய போது, மயங்கிய நிலையில் தளர்ந்து தூய பாடல்களால் ஏத்திப்பாட, உயர்ந்த சோதிப் பிழம்பாகியவர், சிவபெருமான். அப்பெருமான், மகளிர் இட்ட பிச்சைப் பொருள்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குப் பித்தினை உண்டாக்கியவர். அவர் நெருப்பை இடதுகையில் கொண்டு விளங்குபவராய், ஆலவாயில் திடமாக வீற்றிருப்பவரே.
1244. தேரரோடு அமணர்க்குநல் கானையே
தேவர்நாள்தொறும் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே
கொண்ட நீள்கழல் புண்ட ரிகத்தையே
நேரிலூர்கள் அழித்தது நாகமே
நீள்சடைத் திகழ்கின்றது நாகமே
ஆரமாக உகந்ததும் என்பதே
ஆலவாய்அர னாரிடம் என்பதே
தெளிவுரை : ஈசன் தன்னை ஏத்தாத தேரர்களுக்கும் அமணர்களுக்கும் அருள் நல்காதவரே ! தேவர்கள் நாள்தொறும் சென்று வணங்குவது கடம்ப வனத்தையே ! சிவபெருமான், வெற்றி கொண்டு வீழ்த்தியது புலியையே ! திருமால் ஈசனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரையையே ! பகைமை கொண்ட மூன்று புரங்களை அழித்தது ஈசனின் மேருமலை வில்லே ! பெருமானின் நீண்ட சடை முடியில் திகழ்வது நாகமே ! ஈசன் மாலையாகக் கொண்டு விளங்குவது எலும்பே ! அப்பெருமான் வீற்றிருக்கும் இடம் ஆலவாய் எனப்படுவதே !
1245. ஈனஞானிகள் தம்மொடு விரகனே
ஏறுபல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுள் ஞானசம் பந்தனே
ஆலவாயினில் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினுள் அத்தனே
அன்பர்ஆனவர் வாயினுளத்தனே
வல்லவர்க்குஇவை நற்றமிழ் பத்துமே.
தெளிவுரை : ஈசன், நல்லறிவு அற்றவர் பால் பொருந்தாத கொள்கையுடையவர். முத்தமிழின் கண் வல்லவரான காழியில் மேவும் ஞான சம்பந்தன், ஆலவாயில் மேவிப் பொருந்தி விளங்கும், தேவர்களின் போற்றுதற்கு உரிய அன்பராகியும், அடியவர்கள் வாயால் பாடித் துதிக்க இனிய உள்ளத்தில் மேவியவருமாகிய ஈசனை, உரைத்த செந்தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஓதுவல்லவர்களுக்கு, எல்லா நன்மையும் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
374. திருவீழிமிழலை  (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1246. துன்று கென்றைநஞ் சடையதே
தூய கண்டநஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே
கல்லின் மானிடக் கையதே
என்றும் ஏறுவது இடவமே
என்னி டைப்பலி இடவமே
நின்றதும் மிழலை யுள்ளுமே
நீர்எனைச் சிறிதும் உள்ளுமே.
தெளிவுரை : சிவபெருமான் ! கொன்றை மலர் மலையைத் தேவரீர் சடைமுடியில் சூடி இருப்பவர்; தூய்மையான கண்டத்தில் நஞ்சினை அடைவாகக் கொண்டிருப்பவர்; மான் கன்றினை இடக்கையில் வைத்திருப்பவர்; மலைமகளாகிய உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டிருப்பவர்; அக்காலத்திலும் இடபத்தை வாகனமாகக் கொண்டிருப்பவர்; எனக்கு அருள் செய்யும் பொருட்டு வருவதற்கு நின்ற இடமாகிய வீழி மிழலையை உள்ளம் கொள்வீர் ! என்னையும் உள்ளுவீராக !
1247. ஓதிவாயதும் மறைகளே
உரைப்பதும்பல மறைகளே
பாதிகொண்டதும் மாதையே
பணிகின்றேன் மிகமாதையே
காதுசேர்கனம் குழையரே
காதலார்கனங் குழையரே
வீதிவாய்மிகும் வேதியா
மிழலை மேவிய வேதியா.
தெளிவுரை : ஈசன், வாயானது வேதங்களை ஓதும்; உரைப்பதும் வேத உரைகள்; பாகமாகப் பெற்றது உமாதேவியையே. அத்திருவழகு மிக்க காட்சியைப் பணிகிறேன். காதில் குழை யணிந்த தேவரீர் மகளிர் விரும்புமாறு வீதியில் வேதம் பாடித் திரிந்தவர். வேதங்களாகிய தேவரீர் மிழலையில் வீற்றிருப்பவர்.
1248. பாடுகின்ற பண் டாரமே
பத்த ரன்னபண் டாரமே
சூடுகின்றது மத்தமேய
தொழுத என்னையுன் மத்தமே
நீடுசெய்வதும் தக்கதே
நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே
நாக நஞ்சழலை யூருமே
தெளிவுரை : சிவபெருமான், வேதம் ஓதுகின்ற பண்டார சன்னதியாவர்; பக்தர்களின் பெரு மகிழ்ச்சிக்குரியவராயும் தேவைக்குரியவராயும் உரியவர்; ஊமத்த மலர் சூடுபவர்; என்னைப் பித்தனாக்கி நீண்டு நினைத்துத் தியானித்தும், போற்றுமாறும், செய்பவர்; அரையில் அக்குமணி தரித்தவர். மிழலையில் நாகமும். கண்டத்தில் நஞ்சும், கரத்தில் நெருப்பும் பொருந்தி நிலவும்.
1249. கட்டுகின்ற கழல்நாகமே
காய்ந்ததும் மதனன் ஆகமே
இட்டமாவது இசை பாடலே
இசைந்த நூலின்அமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே
குலாயசீர் மிழலை வாணனே
நட்டம் ஆடுவது சந்தியே
நான்உய்தற்கு இரவு சந்தியே.
தெளிவுரை : ஈசன், திருப்பாதத்தில் வீரக்கழலாக நாகத்தைக் கட்டுபவர்; மன்மதனுடைய தேகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்; அடியவர்கள் பாடும் இசைப் பாடலில் விருப்பம் உடையவர்; நூல்களில் கூறியவாறு இசைந்து ஆடல் புரிபவர்; கொட்டும் முழவு விளங்க மிழலையின்கண் வாழ்பவர்; நள்ளிரவில் மயானத்தில் நடம்புரிபவர். அவர் நான் உய்வதற்கு, என்னை ஆட்கொண்டு சேர்ந்தவரே.
1250. ஓவி லாதிடும் கரணமே
உன்னும் என்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே
அருளி னின்னபொற் றாள்நையே
பாவி யாதுரை மெய்யில்
பயின்ற நின்னடி மெய்யில்
மேவி னான்விறற் கண்ணனே
மிழலை மேயமுக் கண்ணனே.
தெளிவுரை : ஈசனே ! ஓய்வின்றி இயக்கும் கருவியாய் விளங்குபவரே ! நினைத்து ஏத்தும் என் பொறிகளாகியவரே ! அருளாணையால் யாவற்றையும் ஏவிச் சேர்ப்பவரே ! அருளின் வண்ணமாகிய தேவரீரின் பொற்றாள், என் துன்பத்தை நீக்கும்; உம்மைக் கருதாது உரைப்பது மெய்ம்மையாகாது; வலிமையுடைய திருமால் உமது திருவடியைப் போற்றிப் பேறு பெற்றவர். நீவிர் மிழலையில் வீற்றிருக்கும் முக்கண்ணரே.
1251. வாய்ந்த மேனியெரி வண்ணமே
மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே
கடுநடம் செயும் காலனே
போந்தது எம்மிடை இரவிலே
புகுமிடைக் கள்வம் இரவிலே
வேய்ந்ததும் மிழலை என்பதே
விரும்பி யேஅணிவது என்பதே.
தெளிவுரை : ஈசனே ! தேவரீர் திருமேனி, நெருப்பின் வண்ணம் உடையது ! நீவிர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணம் உடைய பாடல்கள் ! உம்மால் உதையுண்டு வீழ்ந்தவன் காலன் ! தேவரீர் உயர்ந்து விளங்கும் திருநடம் புரியும் பாதங்களை யுடையவர்; எம்மை இரவில் போந்து உள்ளம் புகுந்து கவர்ந்தவர், மிழலையில் வீற்றிருக்கும் நீவிர் விரும்பி அணிவது எலும்பு மாலையே.
1252. அப்புஇ யன்றகண் ணயனுமே
அமரர் கோமானும் அயனுமே
ஒப்பிலின் றமரர் தருவதே
ஒண்கையால் அமரர் தருவதே
மெய்ப்ப யின்றவர் இருக்கையே
மிழலை யூர்உமது இருக்கையே
செப்புமின் எருது மேயுமே
சேர்வுமக் கெருது மேயுமே.
தெளிவுரை : ஈசனே ! பாற்கடலில் துயிலும் கண் நயனம் உடைய திருமாலும், தேவேந்திரனும், பிரமனும், ஒப்பற்ற தேவ தருவாகிய கற்பக மரமும் ஆகியவற்றுக் கெல்லாம் ஒளி மிக்கு வழங்கும் தன்மையால் தேவரீரின் திருக்கரம் கற்பகத்தருவாகும். மெய்த்தவம் உடையவர்கள் தம் உள்ளக் கோயிலில் வீற்றிருக்கும் நீவிர் மிழலை என்னும் ஊரில் வீற்றிருப்பவர். ஐயனே ! செப்பு மின் விளை நிலமாகிய என் மன நலத்தில் எருது புகுந்து கேடு விளைவித்தல் நன்றோ ! தேவரீரிடம் எருதினை ஆட் கொள்ளும் தன்மை உண்டல்லவா !
1253. தானவக்குலம் விளக்கியே
தாரகைச் செலவு இளக்கியே
வான டர்த்த கயிலாயமே
வந்து மேவும் கயிலாயமே.
தானெ டுத்தவல் லரக்கனே
தடமுடித் திரள ரக்கனே
மேன டைச்செல விருப்பனே
மிழலை நற்பதி விருப்பனே.
தெளிவுரை : சிவபெருமான், பகைத்து நிற்கும் அசுரர்கள் அழிவர் என்பதனை விளக்கியவர்; ஒளி திகழும் தாரகை முதலானவற்றைத் தனது பேரொளியால் ஒளியிழக்கச் செய்தவர்; வானை முட்டும் உயர்ந்த மலையாகிய கயிலையைத் தனது வல்லமையால் எடுத்த அரக்கனாகிய இராவணனுடைய பெரிய முடிகளைத் திருப்பாத விரலால் அழுத்தியவர். அவர், நடை கொண்டு திரிந்து மனை தொறும் செல்லும் விருப்பம் உடையவர். அப்பெருமான் மிழலை என்னும் நற்பதியில் விரும்பி வீற்றிருப்பவரே.
1254. காய மிக்கதொரு பன்றியே
கலந்த நின்னவுரு பன்றியே
ஏய இப்புவி மயங்கவே
இருவர் நாமன மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே
தோன்றி நின்றமணி கண்டனே
மேய இத்துயில் விலக்கணா
மிழலை மேவிய இலக்கணா
தெளிவுரை : ஈசனே ! பன்றியின் உடம்பையுடைய திருமால், பிரமன் ஆகிய இருவரும் சேர்ந்து தேடவும், உருவத் திருமேனியைக் காணுதற்கு இயலாதவராய் இப் புவியில் மயங்கி நின்று, மனம் கலங்கிய நிலையில் நீவிர் தூய்மையாகிய சோதித் திரளாக அகண்ட திருமேனியராய்த் தேன்றியவர். எம் தலைவனே ! அஞ்ஞான நிலையை நீக்கி அருள் புரிவீராக ! நீர் மிழலையில் மேவி விளங்கும் அழகரே !
1255. கஞ்சியைக் குவு கையரே
கலக்கமார் அமணர் கையரே
அஞ்ச வாதில்அருள் செய்யநீ
அணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்ச னேவரவும் வல்லையே
மதித்து எனைச்சிறிதும் வல்லையே
எஞ்சல் இன்றிவரு வித்தகா
மிழலை சேரும்விறல் வித்தகா.
தெளிவுரை : சிவபெருமானே ! சமணர் அஞ்சுமாறு வாதில் வெற்றி கொள்ள அருள் செய்தவர் நீவிர். பிறர் செய்யும் சூழ்ச்சியை அறிய வல்லவரும் நீவிர். என் உரையை மதித்து வருவதற்கு இல்லையாயில் இது தகாது. தேவரீர் மிழலையில் வீற்றிருக்கும் வலிமை மிக்க வித்தகரே !
1256. மேய செஞ்சடையின் அப்பனே
மிழலை மேவியஎன் அப்பனே
ஏயு மாசெய விருப்பனே
இசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே
காழிஞானசம் பந்தனே
வாயுரைத்த தமிழ் பத்துமே
வல்லவர்க்கும் இவை பத்துமே.
தெளிவுரை : ஈசன் சிவந்த சடை முடியின் கண் கங்கை தரித்தவர்; மிழலையில் வீற்றிருக்கும் என் தந்தையானவர்; ஐந்தொழில் ஆற்றும் தன்மையில் வீற்றிருப்பவர்; தனக்கு இசைந்தவாறு போற்றித் துதிக்கும் பக்தர்களுக்கு விருப்பமானவர்; பஞ்ச பூதங்களின் வாயிலாகக் கலந்து விளங்குபவர். அப்பெருமானை ஏத்திக் காழியின் ஞானசம்பந்தன் திருவாய் மலர்ந்து உரைத்த இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், பத்து நற்குணங்களையும் பெறுவார்கள். இது போதும் குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
375. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1257. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
தெளிவுரை : ஈசனே ! யாம் உயிர்கள்; நீவிரே தலைவர்; நீவிர் இனிமையான யாழ் கொண்டு மீட்டி எம்மை வசீகரிப்பவர். தேவரிர், மன்மதனைக் கண்களுக்குப் புலனாகாதவாறு செய்தவர்; நாகத்தைக் காணுமாறு ஆபரணமாகப் பூண்டவர்; பெருமையுடைய காழிப்பதியில் விளங்குபவர்; உயிர்களுக்கு, யாவும் மெய்யென்று தோன்றுமாறு மாயத்தைப் புரிபவர். நீவிர், எக்காலத்திலும் மாயையில் சாராத மாண்பு உடைய வராய்ப் பெருமையுடன் திகழ்பவரே.
1258. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
தெளிவுரை : ஈசனே ! தேவரீர், வேதத்தால் ஏத்தப் பெறும் வேள்வியாய் விளங்குபவர்; யாழ் வாசித்து இனிமை யருள்பவர்; ஏத்திப் போற்றும் அடியவர்களுக்குத் துன்பத்தின் வடு காணாதவாறு காக்கும் தாயாகியவர்; உயிர்களுக்கு ஆதாயம் செய்து நற்கதிக்கு உரித்தாகச் செய்பவர்; ஆய்ந்து அறிவதற்கு அப்பாற்பட்ட உயர்பொருளாய் விளங்குபவர்; மணம் கமழும் மாலையணிந்து மேவுபவர்; எல்லா வடிவங்களிலும் தோய்ந்து விளங்குபராகிக் காழிப் பதியில் நிலையாக வீற்றிருப்பவரே.
1259. தாடரமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
தெளிவுரை : ஈசனே ! தேவரீர், நெருப்புப் போன்ற திருமேனியுடையவர்; எக்காலத்திலும் மூப்புக் கொள்ளாத தன்மையுடையவர்; குருமூர்த்தமாய் விளங்குகின்ற ஆசானாய்த் திகழ்பவர்; காழிப் பதியின் நாதராகியவர்; தேவரீர் மன்னுயிர்களின் தாயாய் விளங்குபவர்; மதம் கொண்டு வந்த பெரிய விலங்காகிய யானையை அடர்த்து, அதன் தோலைப் போர்த்திக் கொண்டவர்; எவ்விதமான குற்றமும் யாராலும் சொல்லப்படாத தூய்மையானவர். நீவிர், பிணக்குக் கொண்ட குற்றம் புரிந்த மூன்று அசுரர் புரங்களை அழித்து விளங்கியவரே.
1260. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழியாகாயா வாவாநீ
தெளிவுரை : ஈசனே ! தேவரீர், எக்காலத்திலும் நீக்கப் பெறாத மெய்த் தன்மையுடைய பொருளாக விளங்குபவர்; யாழ் கொண்டு இசைத்து இனிமை புரிபவர்; வானவர்கள் துன்புற்று வருந்தாது, மேரு மலையை வில்லாகக் கொண்டு, பெருந் துயரைத் தீர்த்தருளும் பாங்கில், முப்புரங்களை அழித்தவர்; ஆக்கும் தன்மையில் விளங்கும் காழிப் பதியின் கண், விமானத்தில் வீற்றிருக்கும் நாதனே நீவிர் விரைவில் வருகை புரிவீராக ! அருள் புரிவீராக !
1261. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா மேலாகா ழீதேமேகா போலேமே.
தெளிவுரை : ஈசனே ! மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சென்ற காலனைத் தடுத்து எழில் மிகுந்த திருப்பாதத்தால் உதைத்து அழித்துக் காலனுக்குக் காலனாக விளங்கிய தேவரீர், சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கு, மெய்ப் பொருளை உபதசம் செய்து அருளியவர். பிரளய காலத்திலும் அழியாது மேவும் காழிப் பதியில் வீற்றிருக்கும் கடவுளாகிய நீவிர், மேகம் போன்று குளிர்ச்சியாக விளங்கி, உயிர்களுக்கு இனிமை செய்பவரே.
1262. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா மீதேமேகா போலேமே.
தெளிவுரை : ஈசனே ! மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சென்ற காலனைத் தடுத்து எழில் மிகுந்த திருப்பாதத்தால் உதைத்து அழித்துக் காலனுக்குக் காலனாக விளங்கிய தேவரீர், சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கு, மெய்ப் பொருளை உபதேசம் செய்து அருளியவர். பிரளய காலத்திலும் அழியாது மேவும் காழிப் பதியில் வீற்றிருக்கும் கடவுளாகிய நீவிர், மேகம் போன்று குளிர்ச்சியாக விளங்கி, உயிர்களுக்கு இனிமை செய்பவரே.
1263. நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
தெளிவுரை : ஈசனே ! நீவிர், பிரிந்து செல்லாதவாறு மானைக் கரத்தில் வைத்திருப்பவர்; எல்லா உயிர்களுக்கும் பொருந்திய தாயாய் விளங்கிக் காப்பவர்; ஏழேழு உலகங்களையும் காப்பவர்; காழிப் பதியில் விளங்கும் வேத நாயகர்; எம்மை வாட்டுகின்ற பிறவி முதலான பெருந் துன்பத்தை மாய்த்தருள்பவர். எனவே தேவரீர் உம்மீது அன்பு செலுத்தும் பாங்கினை அருளிச் செய்வீராக !
1264. நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசை யாழவி ராவணனே.
தெளிவுரை : ஈசனே ! அன்பின் மிக்க அடியவர்கள் தேவரீருடைய திருவடியின்கண் இருந்து ஆசை முதலான குற்றங்களைத் துறந்து விளங்குகின்றனர். வேகமாக ஓடுகின்ற மான் தோலின் மீது வீற்றிருக்கும் பெருமானே ! ஓடுகின்ற மான் தோலின் மீது வீற்றிருக்கும் பெருமானே ! எம்பால் போந்து காத்தருள் வீராக. காழிப் பதியில் வீற்றிருக்கும் நாதனே ! மிக இழிந்ததாகவும், குற்றத்தின் வயத்ததாகவும், செய்த இராவணனுடைய ஏழிசையும் ஏற்று அருள் புரிந்த பரமனே ! எமக்கு அருள் புரிவீராக.
1265. காலேமேலே காணீகா ழிகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலாகா
தெளிவுரை : ஈசன், மகாப்பிரளய காலத்திலும் அழியாது கடலின் மீது மிதந்து விளங்குகின்ற காழியில் வீற்றிருப்பவர்; காற்றுப் போல் எங்கும் பரவி நிற்பவர்; பெருமையுடன் விளங்கி மேவுபவர். அப்பெருமான், பூவின் மேல் திகழும் பிரமனும் மற்றும் பெருமையுடைய திருமாலும் ஆகாயத்திலும் பாதாளத்திலும் ஏகிச் சென்று தேடியும், காணுதற்கு அரியவர். அப்பெருமானை ஏத்துக என்பது குறிப்பு.
1266. வேரிபுமேணவ காழியொயே யேனைநிணேமடளோ காதே
தேரக ளோடம ணேநினையே யேயொழி காவண மேயுரிவே
தெளிவுரை : தேரர்களும் சமணர்களும் கூறும் சொற்களில் மனத்தைச் செலுத்த வேண்டாம். நறுமணமும் பெருமையும் திகழும் காழிப்பதியை ஏத்துவீராக. அதுவே அன்பு நெறியும், யோக நெறியும் பெறுவதற்கு உரியதாகும்.
1267. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளாளின யேனினயே தாமிசயாதமி ழாகரனே.
தெளிவுரை : நேர்மையை அகழ்ந்து எடுக்கும் மனத்தின் கண் எழுகின்ற குற்றத்தைப் போக்குபவராகி, நன்மை புரிவதில் மிகுந்து விளங்கும் பரமனாகிக் காழியுள் வீற்றிருக்கும் நாதனை, நினைத்துப் பாடிய ஞான சம்பந்தனின் இத்திருப்பதிகத்தை ஓதுபவர்களுக்கு, எத்தகைய தாழ்வும் நாடாது.
திருச்சிற்றம்பலம்
376. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1268. மடல்மலி கொன்றை துன்றுவாள் எருக்கும்
வன்னியும் மத்தமும் சடைமேல்
படல்ஒலி திரைகள் மோதிய கங்கைத்
தலைவனார் தம்மிடம் பகரில்
விடல்ஒலி பரந்த வெண்திரை முத்தம்
இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடல்ஒலி யோத மோதவந்து அலைக்கும்
கழுமல நகர்என லாமே.
தெளிவுரை : ஈசன் கொன்றை மலர், எருக்கம் பூ, வன்னிப் பத்திரம், ஊமத்த மலர் என விளங்கின்ற சடை முடியின் மீது, கங்கை சூடிய தலைவர் ஆவார். அப்பெருமான், வீற்றிருக்கும் இடமாவது, கடல் அலைகள், வெண் முத்துக்களைச் சிப்பிகளுடன் கொண்டு சேர்க்கவும், ஒதம் வந்து அலைக்கவும் உள்ள, கழுமல நகர் என்பதாகும்.
1269. மின்னிய அரவும் வெறிமலர் பலவும்
விரும்பிய திங்களும் தங்கு
சென்னியது உடையான் தேவர்தம் பெருமான்
பொன்னியல் மணியும் உரிகரிமருப்பும்
சந்தமும் உந்துவன் திரைகள்
கன்னியர் ஆடக் கடலொலி மலியும்
கழுமல நகரென லாமே.
தெளிவுரை : ஈசன், மின்னல் போன்று ஒளி திகழும் அரவத்தைத் தரித்தவர்; நறுமணம் கமழும் மலர்கள் பலவற்றைச் சூடியவர்; விரும்பிய சந்திரனைத் திருமுடியின் கண் வைத்து விளங்குபவர்; தேவர்களைக் காத்தருள்பவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, பொன்னும், மணியும், யானையின் தந்தமும், சந்தனமும் திரைகள் வாயிலாகக் கரையில் உந்திச் சேர்க்கவும், கன்னியர் நீராடவும், கடலின் ஒலி பெருகி யோங்கும் கழுமல நகர் என்பதே.
1270. சீருறு தொண்டர் கொண்டடி போற்றச்
செழுமலர் புனலொடு தூபம்
தாருறு கொன்றை தம்முடி வைத்த
சைவனார் தங்கிடம் எங்கும்
ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி
ஒலிபுனல் கௌவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க
கழுமல நகரென லாமே.
தெளிவுரை : செம்மையான புகழும் பிறவியின் நற்பயனும் கொண்டு மேவும், திருத்தொண்டர்கள் திருவடியைப் போற்றிச் செழுமையான மலர் தூவி, நன்னீர் ஆட்டித் தூபம் சேர்த்து வழிபடப் பெற்ற சிவபெருமான், கொன்றை மாலையைச் சடை முடியில் சூடியவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது, மகாப்பிரளய காலத்தில், நீரால் சூழப் பெற்றாலும் நீரில் மிதந்து விளங்குகின்ற சிறப்புடையதும், வறுமைக் காலத்திலும் செம்மையான மழை வளம் நன்மையாய்க் காணும் சிறப்புடையதும் ஆகிய கழுமல நகர் ஆகும்.
1271. மண்ணினார் ஏத்த வானுளார் பரச
அந்தரத்து அமரர்கள் போற்றப்
பண்ணினார் எல்லாம் பலபல வேடம்
உடையவர் பயில்விடம் எங்கும்
எண்ணினான் மிக்கார் இயல்பினால் நிறைந்தார்
ஏந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டுஒளி பரக்கும்
கழுமல நகர்என லாமே.
தெளிவுரை : ஈசன், பூவுலகத்தில் உள்ளவர்களால் ஏத்தப் படுபவர். உயர்ந்த உலகத்தில் உள்ளவர்களால் துதிக்கப் படுபவர்; தேவர்களால் போற்றப் படுபவர; பலவாகிய திருவேடப் பொலிவு உடையவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது, ஈசன் என்னும் இயல்பினில் அப்பெருமானை ஆடவரும் மகளிரும் சென்று தரிசித்து மகிழும் கழுமல நகர் ஆகும்.
1272. கருதியான் தலையும் நாமகள் மூக்கும்
சுடரவன் கரமும்முன் னியங்கு
பரிதியான் பல்லும் இறுத்தவர்க்கு அருளும்
பரமனார் பயின்றுஇனிது இருக்கை
விருதினான் மறையும் அங்கமோர்ஆறும்
வேள்வியும் வேட்டவர் ஞானம்
கருதினார் உலகில் கருத்துடை யார்சேர்
கழுமல நகர்என லாமே.
தெளிவுரை : ஈசன், வேதனாகிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் களைந்தவர்; நாமகள் மூக்கை அரிந்தவர்; அக்கினித் தேவன் கரங்களை வெட்டியவர்; சூரியன் பற்களைச் சிதற வைத்தவர். அவ்வாறு புரிந்த அப்பெருமான் இனிது வீற்றிருக்கும் இடமாவது நால்வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் சாற்றும் நெறியில் வேள்விகள் புரிந்து விளங்கவும் சிவஞானிகள் சேர்ந்து திகழவும் உள்ள கழுமல நகர் ஆகும்.
1273. புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட
புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியம் சடையிடை வைத்த
படிறனார் பயின்றுஇனிது இருக்கை
செற்றுவன் திரைகள் ஒன்றொடுஒன்று ஓடிச்
செயிர்த்து வண்சங்கொடு வங்கம்
கற்றுறை வரைகள் கரைக்குவந்து உரைக்கும்
கழுமல நகரெனலாமே.
தெளிவுரை : ஈசன், அரவத்தையும் ஆமை ஓட்டினையும் ஆபரணமாகப் பூண்டவர்; கொன்றை மலரையும் சந்திரனையும் சடை முடியில் வைத்தவர்; என் உள்ளத்தைக் கவர்ந்தவர். அவர் இருப்பிடமாவது, அலைகள் மோதிக் கரையில் சேர்க்கவும், கப்பல்கள் நாடவும் விளங்கும் கழுமலம் ஆகும்.
1274. அலைபுனல் கங்கைதங்கிய சடையார்
அடல்நெடு மதிலொரு மூன்று
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட
குழகனார் கோயிலது என்பர்
மலையின்மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு
மற்றுமற் றிடையிடை எங்கும்
கலைகளித் தேறிக் கானலில் வாழும்
கழுமல நகரென லாமே.
தெளிவுரை : ஈசன், கங்கை தங்கிய சடை உடையவர்; முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவ் அழகிய பெருமான் விளங்கும் கோயில் என்பது, உயர்ந்த மரக்கலங்களில் சரக்குகள் வந்து சேரவும், கடற் சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஆடவும் விளங்குகின்ற கழுமல நகராகும்.
1275. ஒருக்கமுன் னினையாத் தக்கன்றன் வேள்வி
உடைதர உழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றல்அன்று அழித்த
அழகனார் அமர்ந்துஉறை கோயில்
பரக்குவண் புகழார் பழியவை பார்த்துப்
பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமாறு அறியா வண்மையால் வாழும்
கழுமல நகர்என லாமே.
தெளிவுரை : ஈசன், தக்கன் செய்த தீய வேள்வியைக் கெடுமாறு செய்தவர்; இராவணனுடைய வலிமையைக் கயிலை மலையின் மீது, திருப்பாத விரலால் ஊன்றி அழித்த அழகர். அப் பெருமான் அமர்ந்து விளங்கும் கோயிலாவது, வள்ளல் தன்மையும், பழிக்கு அப்பாற்கட்ட புகழ் கொண்ட அறங்களையும் ஆற்றிக் கரத்தல் அறியாத பெருமக்கள் மேவும் கழுமல நகர் ஆகும்.
1276. அருவரை பொறுத்த ஆற்றலி னானும்
அணிகளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரியுறு வான
இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவர்இவ் வுலகில் வாழ்கிலா வண்ணம்
ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்கும்
கழுமல நகர்என லாமே.
தெளிவுரை : கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து விளங்கியவர் திருமால், தாமரை மலர்மீது வீற்றிருப்பவர், பிரமன். இருவரும் ஏத்தி நிற்கச் சோதிப் பிழம்பாகத் தோன்றி, அடியும் முடியும் காணுதற்கு அரியவராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, மகாப் பிரளயத்தில் யாவும் கடலில் மூழ்கினாலும், தான் அழுந்தாது மதிக்கும் பெருமையுடைய கழுமல நகர் ஆகும்.
1277. உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும்
அத்துகில் போர்த்துழல் வாரும்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்
செம்மையார் நன்மையால் உறைவாம்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை
மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும்
கழுமல நகர்என லாமே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சொல்கின்ற புன் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவராகிய சிவபெருமான், செம்மையுடன் நல்லருள் புரியும் பாங்கில் வீற்றிருக்கும் இடமாவது, கோங்கு, முல்லை, மல்லிகை சண்பகம், வேங்கை ஆகிய மலர்களைக் கொய்து மகிழும் மங்கையர்கள் விளங்குகின்ற, கழுமல நகர் என்பதாகும்.
1278. கானலங் கழனி ஓதம்வந்து உலவும்
கழுமல நகர்உறை வார்மேல்
ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை
நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத்து உறுபிணி நீங்கி
உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வார் மண்மிசைப் பிறவார்
மற்றுஇதற்கு ஆணையும் நமதே.
தெளிவுரை : கழனிகளில் ஓதமான கடற்கரைச் சோலைகளில் உலவும் கழுமல நகரில் உறையும் ஈசன் மீது, ஞானசம்பந்தன் நன்மை விளங்குமாறு உரைத்த நற்றமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், உடற் பிணி அற்றவர்கள் ஆவர்; உள்ளம் ஒருமித்து ஈசனைப் போற்றி வாழ்வார்; உயர்ந்த வானுலகத்தில் மறுமையில் இன்புற்று விளங்குவர்; மண்ணுலகில் மீண்டும் பிறப்பை அடையாதவர். இது நமது ஆணை.
திருச்சிற்றம்பலம்
377. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1279. புள்ளித்தோல் ஆடை பூண்பது நாகம்
பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளித்தீ விளக்கக் கூளிகள் கூட்டம்
காளியைக் குணம்செய்கூத் துடையோன்
அள்ளற்கார் ஆமைஅகடுவான் மதியம்
ஏய்க்கமுள் தாழைகள் ஆனை
வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில்வீழி
மிழலையான் எனவினை கெடுமே.
தெளிவுரை : ஈசன், புலித் தோலை ஆடையாக உடையவர்; நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்; மணம் கமழும் திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர்; மயானத்தில் கொள்ளிக் கட்டையினை விளக்காகக் கொண்டு கூளிகள் கூட்டத்தில் காளியுடன் நடனம் புரிந்தவர். அவர், சேற்றில் விளங்கும் கரிய ஆமையின் வயிறு போன்ற சந்திரனும், யானையின் கொம்பு போன்ற தாழையும் விளங்கும் விரிந்த பொழில் மேவும் வீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானின் திருநாமத்தை ஓத, வினை யாவும் கெடும்.
1280. இசைந்தவாறு அடியார் இடுதுவல் வானோர்
இழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய்
பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி அலர்கயன் முதலோடு
அடுத்தரிந்து எடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மியவீழி
மிழலையான் எனவினை கெடுமே.
தெளிவுரை : அடியவர்கள், பக்திப் பெருக்குடன் மலர் தூவிப் போற்றவும், தேவர்கள் நறுமணம் கமழும் பொற்றாமரை மாலைகளைச் சாத்தவும், அன்பர்கள் நிஷ்காமியமாகப் பத்தி செய்யும் விளங்க ஊற்று நீர் பாயும் கழனிகளில், மலர்களும் கயல்களும் திகழ, அரிந்த கதிர்களிலிருந்து தூற்றும் நெல்லானது வானத்திலிருந்து உதிர்வன போன்று, வளம் பெருக விளங்குவது வீழிமிழலை. அத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருநாமத்தை ஓதவினை தீரும்.
1281. நிருத்தன்ஆ றங்கள் நீற்றன்நான் மறையன்
நீலமார் மிடற்றன் நெற் றிக்கண்
ஒருத்தன் மற் றெல்லா உயிர்கட்கும் உயிராய்
உளனிலன் கேடிலி உமைகோள்
திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை
சிறியவர் அறிவினின் மிக்க
விருத்தரை அடிவீழ்ந்து இடம்புகும்வீழி
மிழலையான் எனவினை கெடுமே.
தெளிவுரை : சிவபெருமான், நடம்புரிபவர்; வேதத்தின் அங்கமாக விளங்குபவர்; திருவெண்ணீறு தரித்தவர்; நான்கு மறைகளாகுபவர்; நீலகண்டத்தை உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; ஒப்பற்ற ஒருவராக இருப்பவர்; எல்லா உயிர்களுக்கும் உயிராக இருந்து காத்து இயக்குபவர்; கெடுதிகளை நீக்குபவர்; உமாதேவியின் தலைவர்; புனித தீர்த்தத்தால் நாள்தோறும் பூசிக்கப்படுபவர். அப்பெருமான், இளைஞர்கள் அறிவுசால் சான்றோரின் திருப்பாதத்தை அட்டாங்க நமஸ்காரமாக வணங்கிப் போற்றச் சீலம் மிக்கவர்கள் வாழும் வீழிமிழலையில் வீற்றிருப்பவர். அவருடைய திருநாமத்தை ஓத வினைதீரும்.
1282. தாங்கரும் காலம் தவிரவந்து இருவர்
தம்மொடும் கூடினார் அங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோல்எல்லாம்
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயிற் புகா வீழி
மிழலையான் எனவினை கெடுமே.
தெளிவுரை : மகாசங்கார காலத்தில், திருமால், பிரமன் ஆகிய இருவரையும் தமது காயத்தில் ஏற்றுப் பின்னர், முன் போன்று அவ்விருவரையும் தம்தம் தொழில்களைப் புரியுமாறு செய்விப்பவர், சிவபெருமான். அவர், பாக்கு, தென்னை, செண்பகம், பலா, இலுப்பை, வேங்கை, மகிழம் ஆல் ஆகியன சேர்ந்த, வெயில் புகாத பொழில் சூழும் வீழிமிழலையில் விளங்குபவர். அப்பெருமானுடைய திருநாமத்தை ஓத, வினை யாவும் நீங்கும்.
1283. கூசுமா கோயில்வா யிற்கண்
குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூசிமெல் லோதி
பாதிநற் பொங்கரவு அரையோன்
வாசமாம் புன்னை மௌவல் செங்கழுநீர்
மலரணைந்து எழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழிற் றேன் துவலைசேர் வீழி
மிழலையான் எனவினை கெடுமே.
தெளிவுரை : எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற மயானத்தில், பெரிய வயிற்றையுடைய பூதங்கள் நறுமணம கமழும் சாந்துகளைப் பூசியும், கூந்தலில் தடவியும் விளங்க, ஆடுகின்ற பாம்பினை அரையில் கட்டி மேவுபவர், சிவபெருமான். அவர், நறுமணம் கமழும் புன்னை, முல்லை செங்கழு நீர் மலர் ஆகிய மணங் கமழும் மலர்களதில் தென்றல் கலந்து வீசும் பொழில்களிலிருந்து தேன் துளிகள் சிதறும் வீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானுடைய திருநாமத்தை ஓத,வினை யாவும் தீரும்.
1284. பாதிஓர் மாதர் மாலும்ஓர் பாதர்
பங்கயத்து அயனும்ஓர் பாகர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற
அடிகளார் அமரர்கட்கு அமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத்து ஒலியறா வீழி
மிழலையான் எனவினை கெடுமே.
தெளிவுரை : ஈசன், உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; திருமாலும் பிரமனும் ஒருபாகமாகக் கொண்டு ஏகபாத திரி மூர்த்தியாய் விளங்குபவர்; ஆதியாகவும் அந்தமாகவும் விளங்கி, இடை நின்றும் விளங்குபவர்; தேவர்களின் கடவுளாய் விளங்குபவர். புரூரச்சக்கர வர்த்தியால் திருப்பணி செய்யப் பெற்றுப் பிரமனை நிகர்த்த வேதியர்கள் வேதம் ஓதுகின்ற வீழி மிழலையில், அப்பெருமான் வீற்றிருப்பவர். அவருடைய இனிய திருநாமத்தை ஓத, வினை யாவும் கெட்டழியும். இது, அடியவர்கள், இனிமையான வாழ்க்கையினை இம்மையிலும், முத்திப் பேற்றை மறுமையிலும் பெறுவார்கள், என்பது குறிப்பதாயிற்று.
1285. தன்றவம் பெரிய சலந்தரன் உடலம்
தடிந்தசக் கரம்எனக்கு அருள்என்று
அன்றுஅரி வழிபட்டு இழிச்சிய விமானத்து
இறைவன் பிறையணி சடையன்
நின்ற நாள் காலை இருந்தநாள் மாலை
கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவ÷ தியர்கள் விழவறா வீழி
மிழலையான் என்வினை கெடுமே.
தெளிவுரை : சிவபெருமான் திருவருளால் தோன்றி சக்கரப்படை, சலந்தராசூரனை அழித்த செயலினைக் கண்ட திருமால், அத்தகைய சக்கரப் படையைப் பெறுவதன் பொருட்டுத் தேவலோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து பூசித்தவர். அச்சிறப்புடைய பதியானது, எல்லாக் காலத்திலும் மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற அந்தணர்கள் விளங்குகின்ற விழவு அறா வீழிமிழலையாகும். அத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனுடைய திருநாமத்தை ஓத, வினை யாவும் தீரும்.
1286. கடுத்தவாள் அரக்கன் கைலையன் றெடுத்த
கரமுரஞ் சிரநெரிந்து அலற
அடுத்ததோர் விரலால் அஞ்செழுத்து உரைக்க
அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட்டு இருந்தபைங் கிளிகள்
பதங்களை ஓதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில்வீழி
மிழலையான் எனவினை கெடுமே.
தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணன், கரமும் சிரமும் நெரிந்து அலறக் திருவைந்தெழுத்து ஓதி, ஈசனிடமிருந்து நெடிய வாளைப் பெற்றான். அத்தகைய மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்கள் ஓதக் கேட்ட கிளிகள், அப்பதங்களை ஓத விளங்கும் விரிந்த பொழில்களை உடையது வீழிமிழலை. ஆங்கு வீற்றிருக்கும் ஈசனின் திருநாமத்தை ஓத, வினை யாவும் தீரும்.
1287. அளவிடலுற்ற அயனொடு மாலும்
அண்டமண் கெண்டியும் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த
முக்கண்எம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னம்
தன்னினம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரிவீசவீற் றிருக்கும்
மிழலையான் எனவினை கெடுமே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் அளந்து பார்க்கும் தன்மையில் மேவ, அறிவரியவராய்ச் சோதிப் பிழம்பாகியவர், ஈசன். அப்பெருமான், யாவர்க்கும் முதல்வனாகத் திகழ்பவர். அவர், தாமரை மலரின் மீது அன்னப் பறவை தனது பெடையுடன் இருக்க, நெற் கதிர்கள் கவரி வீசுவதைப் போன்று விளங்கும் வயல்களை உடைய மிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானுடைய நாமத்தை ஓத, வினை தீரும்.
1288. கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை
உண்டுஅம ரர்க்குஅமுது அருளி
இஞ்சிக்கே, கதலிக் கனிவிழக் கமுகின்
குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
மிழலையான் என்வினை கெடுமே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும் மொழிகளை ஏற்க வேண்டாம். தேவர்கள் அச்சம் கொள்ளுமாறு தோன்றிய நஞ்சினை உண்டு, அவர்களுக்கு அமுதத்தை வழங்கியவர், ஈசன். உயர்ந்து ஓங்கிய வாழைக் கனிகள், மதிலின் மீது விழ, அது, கமுகின் குலையொடு விழ, உயர்ந்த தென்னையில் மேகம் பதியும் வீழிமிழலையில் அப்பெருமான் வீற்றிருப்பவர். அவர்தம் திருநாமத்தை ஓத, வினை தீரும்.
1289. வேந்தர்வந்து இறைஞ்ச வேதியர் வீழி
மிழலையுள் விண்ணிழி விமானத்து
ஏய்ந்ததன் தேவியோடு உறை கின்ற
ஈசனை எம்பெரு மானைத்
தோய்ந்த நீர்த் தோணிபுரத்துஉறை மறையோன்
தூமொழி ஞானசம்பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை
வானவர் வழிபடு வாரே.
தெளிவுரை : தேவேந்திரன் முதலானோர் வந்து ஏத்த மறையவர்கள் வாழும் வீழிமிழலையும், விண்ணிழி விமானத்தில் உமாதேவியோடு வீற்றிருக்கும் எம்பெருமானாகிய ஈசனை, நீர்வளம் மிகுந்த தோணிபுரத்தில் மேவும் தூயமொழி சாற்றும் ஞானசம்பந்தன் ஏத்தி உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வானவர்களால் போற்றப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
378. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
திருச்சிற்றம்பலம்
1290. மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : மங்கையர்க்கரசி என்பவர், சோழர் குலத்தில் தோன்றிய நங்கை; கையில் வளையல் அணிந்தவராய், மடப்பம் என்னும் பண்பும் பெருமையும் உடையவர்; தாமரை மலரில் மேவும் திருமகளுக்கு ஒப்பானவர்; பாண்டிய மன்னனின் பட்டத்தரசியானவர். அத்தகையவர், நாள்தோறும்போற்றிப் பணி செய்யும் பெற்றியுடைய அப்பெருமான், எரியும் நெருப்பின் வண்ணத்தவர்; பூத கணங்களின் தலைவர்; நான்கு வேதங்களையும் அதன் பொருள்களையும் அருளிச் செய்த பரமன்; அங்கயற்கண்ணியாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அவர் வீற்றிருக்கும் ஆலவாய் எனப்படுவது, இதுவே !
1291. வெற்றவே அடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீறு அணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய
குலச்சிறை குலாவிநின்று ஏத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்
உலகினில் இயற்கையை ஒழித்திட்
டற்றவர்க்கு அற்ற சிவனுறை கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : பாண்டிய மன்னனின் மந்திரியாகிய குலச்சிறை எத்தகைய புறப்பற்றும் இல்லாதவராய், வெற்று உள்ளத்தினர்; சிவனடியார்களின் திருவடியில் வீழ்ந்து வணங்கும் மாண்புடையவர்; திருவெண்ணீறு அணிபவர். அத்தகைய பாங்குடையவர் மகிழ்ந்து ஏத்தும் சிவபெருமான், வெள்ளை இடபத்தின் மீது வீற்றிருப்பவர்; தேவர்களுடைய தலைவர். உலகத்தில் தோன்றும் பந்த பாசத்தை நீக்கிய, உற்ற மெய்யடியார்களுக்கு உரியவராகிய அப்பெருமான் உறைகின்ற ஆலவாய் என்பதும் இதுவே.
1292.செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
பணிசெயப் பாரிட நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தம்
தண்ணெரும் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : திருநீற்றுச் செந்நெறியை வளர்க்கும் பாண்டிமாதேவி, நாள்தொறும் ஈசனின் இனிய பணி செய்து போற்றி வருபவர். பூதகணங்கள் நிலவ, முத்து, பாம்பு, கங்கை, ஊமத்தம் பூ, எருக்கம் மலர், வன்னி, பிறைச் சந்திரன் ஆகியவற்றைச் சடை முடியில் கொண்டு மேவ, சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலவாய் என்பது, இதுவே.
1293. கணங்களாய் வரினும் தமியராய் வரினும்
அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும்
கோபுரம் சூழ்மணிக் கோயில்
மணங்குமழ் கொன்றை வாளரா மதியம்
வன்னிவன் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : ஈசனின் அடியவர்கள் ஒருமித்துத் திருக்கூட்டமாக வந்தாலும், தனித்தவராய் வந்தாலும் மகிழ்ந்து பணிந்து ஏத்தும் பெருங் குணத்தவர், குலச்சிறையார். அவர் ஏத்துகின்ற ஈசன், உயர்ந்த கோபுரம் கொண்டு மேவும் மணிக் கோயிலில், கொன்றை மலர், நாகம், வன்னி, வில்வம், கங்கை ஆகியவற்றைச் சடை முடியில் ஏற்று, வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.
1294. செய்யதா மரைமேல் அன்னமே அனைய
சேயிழை திருநுதற் செல்வி
பையரா அல்குல் பாண்டிமா தேவி
நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த
வெய்யவேல் சூலம் பாசம்அங் குசமான்
விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : பாண்டிமாதேவியார், செந்தாமரையில் மேவும் திருமகளைப் போன்றவர்; ஞானம் விளங்கப் பெற்றவர். அவர் நாள்தோறும் பணிந்து ஏத்தச் சூலம், பாசம், அங்குசம், மான், மழு ஆகியவற்றைத் தரித்த ஈசன். உமாதேவியோடு வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.
1295.நலமில ராக நலமதுஉண் டாக
நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுஉண் டாக
தவம்பணி குலச்சிறை பரவுக்
கலிமலி கரத்தன் மூவிலை வேலன்
கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : நலமற்றவர், நலம் உண்டாக நாடுதலும்; குலமற்றவர், குல மேன்மையடைத் தவம் செய்தலும் ஆகிய சத்துவ குணத்தாரைப் பரவும் குலச்சிறை ஏத்த, மான், சூலம், யானையின் தோல், நீலகண்டர், கங்கை சேர் சடைமுடி ஆகியன மேவிய ஈசன் வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.
1296. முத்தின்தாழ் வடமும் சந்தனக் குழம்பு
நீறும் தன் மார்பினில் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனார் உமையோடு இன்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : முத்து மாலையும், சந்தனப் பூச்சும், திருநீற்றின் வண்ணமும் விளங்கப் பத்தியுடன் திகழும் பாண்டிமாதேவி, பாங்கோடு பணி செய்கின்ற, பளிங்கின் பெருமலை போன்ற ஈசன், சுடர் விடும் மரகதம் போன்ற உமாதேவியாருடன் வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.
1297. நாவணங்கு இயல்பால் அஞ்செழுத் தோதி
நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்
தொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள்
இருபது நெரிதர ஊன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : நாவில் பொருந்தச் சேரும் இயல்பினை உடைய, திருவைந்தெழுத்தை, முறைப்படி ஓதிச் சிவஞானம் கைவரப் பெற்றவராகி, ஈசன் திருவடிவமாகிய கோவண ஆடை, திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி முதலிய சாதனங்கள் கொண்டு மேவும் அடியவர்களைக் கண்டால், தொழுது போற்றுபவராய் விளங்குபவர், குலச்சிறை. அவர் போற்றுகின்ற ஈசன், இராவணனை நெரியுமாறு விரலால் ஊன்றி அடர்த்துப் பின்னர் நன்மையாகும் வண்ணம் செய்து, வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.
1298. மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னும்
மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினோர் மொழியாள் பாண்டிமா தேவி
பாங்கினால் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும்
அளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : இப் பூவுலகமெல்லாம் பெருமை கொள்ளும் மன்னனாய் விளங்கிய, சோழப் பேரரசின் மகளாகிய பண் போன்ற உயர்ந்த சொல் வழங்கும் பாண்டிமாதேவி பணி செய்து பரவ, திருமாலும், பிரமனும் அளப்பரிதாக நின்ற ஈசன், உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.
1299. தொண்டராய் உள்ளோர் திசைதிசை தோறும்
தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டு நாள்தோறும் இன்புறு கின்ற
குலச்சிறை கருதி நின்று ஏத்தக்
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள்
குறியின்கண் நெறியிடை வாரா
அண்டநா யகன்றான் அமர்ந்சதுவீற் றிருந்த
ஆலவா யாவதும் இதுவே.
தெளிவுரை : திருத் தொண்டர்கள் எல்லா இடங்களிலும் சென்று ஈசனைத் தொழுது போற்றி, அப்பெருமானுடைய அருட் செயல்களை மகிழ்ந்து கூறக் கேட்டு, நாள்தோறும் இன்புறும் பெற்றியுடையவர், குலச்சிறை. அவர், பக்திச் சிரத்தையுடன் ஏத்தச் சமணரும் சாக்கியரும் அப் பண்பின்பால் வாரா நிலையில், அண்ட நாயகன் அமர்ந்து வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.
1300. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை யெனும்இவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன்
திருவடி ஆங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர்
ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.
தெளிவுரை : இப் பூவுலகமெல்லாம் பெருமை கொள்ளும் மன்னனாய் விளங்கிய, சோழப் பேரரசனின் மகளாகிய பண் போன்ற உயர்ந்த சொல் வழங்கும் பாண்டிமாதேவி பணி செய்து பரவ, திருமாலும், பிரமனும் அளப்பரிதாக நின்ற ஈசன், உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.
திருச்சிற்றம்பலம்
379. திருப்பந்தணைநல்லூர் (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1301. இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மகிமை
இவைசொல்லி உலகெழுந்து ஏத்தக்
கடறினார் ஆவர் காற்றுளார் ஆவர்
காதலித்து உறைதரு கோயில்
கொடிறனார் யாதும்குறைவில்லார் தாம்போய்க்
கோவணம் கொண்டுகூத் தாடும்
படிறனார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : சிவபெருமான், காலனை உதைத்து அழித்தவர்; அசுரர்களுடைய முப்புரங்களை எரித்தவர்; உலகத்தவர் ஏத்த மயானத்தில் விளங்குபவர்; காற்றாகி, உயிர்ப்புச் சக்தியாக விளங்குபவர்; உலகத்தவர் விரும்பி ஏத்தும் பூச நாளுக்கு உரியவர்; குறைவற்றவராக விளங்குபவராயினும், கோவணத்தை அணிந்த பிறர் பழிக்குமாறு ஆடுவர் போலும். அவர் பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் எம் பசுபதியாரே.
1302. காழியுளார் எனவும் கடலுளார் எனவும்
காட்டுளார் நாட்டுளார் எனவும்
வழியுளார் எனவு மலையுளார் எனவும்
மண்ணுளார் விண்ணுளார் எனவும்
சுழியுளார் எனவும் சுவடுதாம் அறியார்
தொண்டர்வாழ் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : ஈசன், மிகுந்திருப்பவர்; கடலில் இருப்பவர்; சுடுகாட்டில் இருப்பவர்; ஊரின்கண் இருப்பவர்; நிலவும் வழியில் இருப்பவர்; மலையில் இருப்பவர்; விண்ணில் இருப்பவர்; சுழலும் தன்மையில் இருப்பவர். அப்பெருமான் இவ்வாறு  எல்லா இடத்திலும் இருப்பவர் எனச் சொல்லப் பெற்றாலும், அதன் சுவட்டினை அறிவது அரியதாய், தொண்டர் பெருமக்களால், வாழ்த்தும் வணக்கமும் சொல்லப்படுபவர். அவர் பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் எம் பசுபதீஸ்வரரே.
1303. காட்டினார் எனவும் நாட்டினார் எனவும்
கடுந் தொழில் காலனைக் காலால்
வீட்டினார் எனவும் சாந்தவெண் ணீறு
பூசியோர் வெண்பதி சடைமேல்
சூட்டினார் எனவும் சுவடுதாம் அறியார்
சொல்லுள சொல்லுநால் வேதப்
பாட்டினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : ஈசன், காட்டில் உள்ளவர்; நாட்டில் உள்ளவர்; காலனைக் காலால் மாய்த்தவர்; நறுமணம் கமழும் திருவெண்ணீறு பூசியவர்; வெண்மையான சந்திரனைச் சடை முடியின் மீது சூடியவர். அப்பெருமானை இவ்வாறு ஏத்தப் பெற்றாலும் அதன் சுவட்டினை அறிவதற்கு அரியவராய் எல்லாக் காலத்திலும் நிலைத்தும் மேவும் நான்கு வேதங்களையும் சொல்பவர். அவர் பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் எம் பசுபதீஸ்வரரே.
1304. முருகினார் பொழில்சூழ் உலகினார் ஏத்த
மொய்த்தபல் கணங்களின் துயர்கண்டு
உருகினார்ஆகி உறுதிபோந் துள்ளம்
ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்தத்
கடலுள்நஞ்சு அமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : அழகிய பொழில் சூழ்ந்து விளங்கும் உலகத்தவர் ஏத்தச் சூழ்ந்து விளங்கிய பலகணத்தவர்களின் துயரம் கண்டு இரக்கம் உற்றுத் தனது திருமிடறானது கருகுமாறு, கடலில் தோன்றிய நஞ்சினை வாங்கிப் பருகிய ஈசன், பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் எம் பசுபதியாரே.
1305. பொன்னினார் கொன்றை இருவடம் கிடந்து
பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவ
மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க்கு அறம்அமர்ந்து அருளித்
தொன்மையார் தோற்றமும் கேடும்
பன்னினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : ஈசன், பொன்ற போன்ற பெருமையுடைய பெரிய கொன்றை மாலை அணிந்தவர்; திருமார்பில் முப்புரி நூல் திகழ, ஒளி கொண்டு மேவும் அரவத்தை மாலையாக உடையவர்; திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும் அறப்பொருளை உபதேசித்தவர். தொன்மைக் கோலத்தை உடைய அப்பெருமான், பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியாரே.
1306. ஒண்பொனார் அனைய அண்ணல் வாழ்கஎனவும்
உமையவள் கணவன் வாழ்க எனவும்
அண்பினார் பிரியார் அல்லு நன்பகலும்
அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லர் என்றுஏத்த
அல்லவர் தீயர்என்று ஏத்தும்
பண்பினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : ஒளி மிக்க பொன் போன்று திகழும் அண்ணலாகிய ஈசன் வாழ்க என்வும், உமாதேவியின் கணவர் வாழ்க எனவும், அன்பிலிருந்து மாறுபடாத கொள்கையுடைய அடியவர்கள் ஏத்தித் தொழுவார்கள். இடையறாத அன்பும் பக்தியும் உடையவர்கள், ஈசன் எல்லார்க்கும் நல்லவர் என்று ஏத்தி மகிழ்வார்கள். அவ்வாறு இல்லாதவர்கள், தீயம் என்று ஏத்தும் பண்பினராவர். இத்தகைய மாண்புடையவர், பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியாரே.
1307. எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை
இருநிலம் வானுலகு எல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச்
செருமலைந்து அடியிணை சேர்வான்
முற்றினார் வாழும் மும்மதில் வேவ
மூவிலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : தமக்கு எத்தகைய துன்பமும் செய்யாத தேவர்களையும் மண்ணுலக மாந்தர்களையும் துன்புறுத்திய முப்புர அசுரர்கள், எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் சிவபெருமான். அவர் சூலமும் மழுப் படையும் ஏந்திப் பந்தணைநல்லூரில் மேவும் பசுபதியாரே.
1308. ஒலிசெய்த குழலின் முழவமது இயம்ப
ஓசையால் ஆடல்அறாத
கலிசெய்த பூதம் கையினால் இடவே
காலினால் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர் புலியின் உரிகொள்வர் ஏனை
வாழ்வுநன் றானுமோர் தலையில்
பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : குழலும் முழவும் ஒலிக்கும்படி ஆரவாரம் உடைய இராவணன், குயிலை மலையைக் கையால் எடுக்க, திருப்பாத விரலால் அவனுடைய செருக்கினை அடக்கியவர் புலித் தோலையுடைய சிவபெருமான். அவர், நற்றிறத்தைப் பெற்றிருப்பினும் பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி கொள்பவராகிப் பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியாரே.
1309. சேற்றினார் பொய்கைத் தாமரையானும்
செங்கண்மால் இவர்இரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை அறியார்
துணைமையும் பெருமையும் தம்மில்
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்னச்
சரண்கொடுத்து அவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் இரு பக்கமாக மேல்நோக்கி வானிலும், கீழ்நோக்கிப் பாதாளத்திலும் சென்று தம்தம் பெருமையும்  வலிமையும் காட்டுமாறு புரியச் சிவபெருமானுடைய தொன்மைத் தன்மையை அறியாது இருந்தனர். பின்னர், அவர்கள் தமது பிழையை உணர்ந்து வேண்டித் துதிக்க, அக்குற்றத்தைப் போக்கியவர் பந்தணை நல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியாரே.
1310. கல்லிசை பூணக் கலையொலி யோவாக்
கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளர
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாயப் படுதலை யேந்தி
மேவிய பந்தணை நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல்
தொல்வினை சூழ்கி லாவே.
தெளிவுரை : வேதத்தை ஓதும் ஒலியும், வேள்வி முதலான கிரியைகளும், திருவிழாக்களும் இடையறாது நிகழும் கழுமல நகரில், நற்புகழுக்குரியவராகவும், புன்மை தரக்கூடிய சொற்களை கேளாதவராகவும் விளங்கும், நற்றமிழின் வயலாகிய ஞானசம்பந்தன், மண்டை ஓட்டினை ஏந்தி மேவிய ஈசன் வீற்றிருக்கும் பந்தணைநல்லூரினைச் சொல்லிய, இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள்பால், தொல்வினை அடையாது.
திருச்சிற்றம்பலம்
380. திருஓமாம்புலியூர் (அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர், கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1311. பூங்கொடி மடவாள் உமையொரு பாகம்
புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடும்எம் விகிர்தர்
விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச்
செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; சடை முடி உடையவர்; அடர்ந்த இருளில் நடனம் ஆடுபவர். எமது விகிர்தர். அவர் விருப்பத்துடன் வீற்றிருக்கும் இடமாவது, யாது என வினவினால், அது தேன் மணம் கமழும் பொழிலில் செழுமையான மலர்களைக் கோதி, வண்டு இசை பாட, புகழின்மிக்கு ஓங்கியும் உள்ள  ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.
1312. சம்பரற்கு அருளிச் சலந்தரன் வீயத்
தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானார் இமையவர் ஏத்த
இனிதின் அங்கு உறைவிடம் வினவில்
அம்பர மாகி அழல்உமிழ் புகையின்
ஆகுதி யால்மழை பொழியும்
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : ஈசன், சலந்தரனை அழியச் செய்த சக்கரப் படையைத் திருமாலுக்கு வழங்கி அருளியவர்; தேவர்களால் ஏத்தப் பெறுபவர். அப் பெருமான் இனிது வீற்றிருக்கும் இடமாவது, வேள்வி ஆற்றி அதன் புகை மண்டலமானது வானில் சென்று மழை பொழியவும் தேவர்களால் ஏத்தப் பெறவும் விளங்கும் ஓமாம் புலியூர் உடையவர் வடதளியே.
1313. பாங்குடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப்
படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத்து இழித்த
தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்குஎரி மூன்றும் அமர்ந்துஉடன் இருந்த
அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : பகீரதச் சக்கரவர்த்தி, தனது மூதாதையர்களுக்குப் பிதுர்க்கடன் ஆற்றும் தன்மையில் தவம் புரியப் பெருகி வந்த கங்கையைத் தன் சடை முடியில் ஏற்றும், மண்ணுலகம் தாங்கிக் கொள்ளும் வகையில் அதனை அருளிச் செய்த ஈசன் உறையும் இடமாவது, மூன்று வகையான தீயை வளர்ந்து வேதங்களை ஓதி வேள்வியைப் புரிந்து மேவும் மறையவர்கள் திகழும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.
1314. புற்றரவு அணிந்து நீறுமெய் பூசிப்
பூதங்கள் சூழ்தர ஊரூர்
பெற்றம்ஒன்று ஏறிப் பெய்பலி கெள்ளும்
பிரானவன் உறைவிடம் வினவில்
கற்றநால் வேதம் அங்கம்ஓர் ஆறும்
கருத்தினார் அருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : அரவத்தை அணிந்து, திருநீறு பூசிப் பூதகணங்கள் சூழ்ந்து வர, இடப வாகனத்தில் ஏறி ஊர்கள் தோறும் ஏகிப் பலிகெள்ளும் சிவபெருமான் உறையும் இடமாவது, நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் நன்கு கற்றுத் தேர்ந்து அதன் கருத்தினை அறிந்த புகழ் மிகுந்த மறையவர்கள் விளங்கும் ஓமாம் புலியூர் உடையவர் வடதளியே.
1315. நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர்
துயர்கெட நெடியமாற்கு அருளால்
அலைத்தவல் லசுரர் ஆசற ஆழி
அளித்தவன் உறைவிடம் வினவில்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
தன்மையார் நன்மையால் மிக்க
உலப்பில்பல புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : பூவுலகத்தவர்களும் தேவலோகத்தில் விளங்குபவர்களும் பாதாளலோகத்தில் இருப்பவர்களும் காக்கப்படுமாறும், கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறும் காத்தல் தொழில் மேவும் திருமாலுக்குச் சக்கரப் படையை அருளிச் செய்தவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, குற்றம் பொருந்திய செயலால் பொருளை ஈட்டுதல் செய்யாத நல்லொழுக்கச் சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் மேவும் சான்றோர்களும் விளங்குகின்ற ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.
1316. மணந்திகழ் திசைகள் எட்டும்ஏ ழிசையும்
மலியும்ஆறு அங்கம்ஐ வேள்வி
இணைந்தநால் வேதம் மூன்றுஎரி இரண்டும்
பிறப்பென ஒருமையால் உணரும்
குணங்களும் அவற்றின் கொள்பொருள்குற்றம்
அற்றவை யுற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : எண் திசையாகவும், ஏழிசையாகவும், ஆறு அங்கமாகவும் ஐந்து வேள்வியாகவும், நான்கு வேதமாகவும், மூன்று வகையான நெருப்பாகவும், இரு பிறப்பெனவும் ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றம் அற்றனவும் உற்றனவும் என யாவும் உணர்ந்த ஈசன் வீற்றிருக்கும் இடம் ஓமாம்புலியூரில் உடைய அவர்தம் வடதளியே.
1317. தலையொரு பத்தும் தடக்கையது இரட்டி
தானுடை அரக்கன்ஒண் கயிலை
அலைவது செய்த அவன்திறல் கெடுத்த
ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென ஓங்கு மாளிகை நிலவு
மாமதில் மாற்றலர் என்றும்
உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : பத்துத் தலையும் இருபது பெரிய கையும் கொண்டு ஒளி மிகுந்த கயிலயை அசைத்த இராவணனுடைய செருக்கினையும் வலிமையையும் அழித்த ஆதி நாயகராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, உயர்ந்த மாட மாளிகைகள் விளங்கும் புகழ் மிக்க ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.
1318. கள்ளவிழ் மலர்மேல் இருந்தவன் கரியோன்
என்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி உருவர் உமையவ ளோடும்
உகந்துஇனிது உறைவிடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப்
பனிசலர்ச் சோலைசூழ் ஆலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் என இவர்கள், காண்பதற்கு அரிதாய்ச் சோதிப் பிழம்பின் வண்ணத்தராகிய சிவபெருமான், உமாதேவியோடு மகிழ்ந்து இனிது வீற்றிருக்கின்ற இடமாவது, பள்ளத்தில் மேவும் நீரில் வாளை பாய, கழனிகளில் பனி மலர் விளங்கச் சோலை சூழ்ந்து மேவும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.
1319. தெள்ளியர் அல்லாத் தேரரோடு அமணர்
தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட்கு அருளாக்
கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து
நலந்திகழ் மூன்றுஎரி யோம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
தெளிவுரை : தேரரும் சமணரும் உரைப்பனவாகிய பொய்யுரைகளை ஏற்காதவராகிய ஈசன் உறையும் இடமாவது, நான்கு மறைகளை நன்கு ஓதி, நலம் திகழும் மூவகையான தீயை வளர்ந்து வேள்விகளைப் புரியும் பெருமை மிக்கவர் வாழும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.
1320. விளைதரு வயலுள் வெயில்செறி பவள
மேதிகள் மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி அரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக்
காழியுள் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள்
அமரலோ கத்திருப் பாரே.
தெளிவுரை : நல்ல விளைச்சல்கள் உடைய நிலத்தில் பவளம் போன்று சுடர் மிகும் வெயிலின் ஒளி மலர, எருமைகள் படிந்து மேய்ந்து இடற விளங்கும் ஓமாம் புலியூர் உடையவர், வடதளியில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஏத்தித் களிப்பை உண்டாக்கும் செல்வக் காழியுள் மேவும் ஞானசம்பந்தன், அன்பினால் வழங்கிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தேவ லோகத்தில் திகழ வீற்றிருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
381. திருக்கோணமலை (அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், திருக்கோணமலை, இலங்கை)
திருச்சிற்றம்பலம்
1321. நிரைகழல் அரவம் சிலம்பொலி யலம்பு
நிமலர்நிறு அணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர கொடியணி விடையர்
கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பரும் கனமணி வரன்றிக்
குறைகடல் ஓத நித்திலம் கொழிக்கும்
கேணமா மலையமர்ந்தாரே.
தெளிவுரை : ஈசன், ஒலிக்கும் கழலும், அரவமும், சிலம்பும் திருப்பாதத்தில் திகழும் வண்ணம் அணிந்தவர்; திருநீறு அணிந்த திருமேனியராகிய நிமலர்; மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; இடபக் கொடி உடையவர். அவர், கடற்கரையில் சந்தனம், அகில் கட்டைகள், மதிப்பு மிக்க மணிகள் வரம்பின்றிப் பெருகி மேவ, முத்துக்கள் கொழிக்கும் கோணமா மலையில் அமர்ந்து இருப்பவர். அப்பெருமானை ஏத்துக என்பது குறிப்பு.
1322. கடிதென வந்த கரிதனை உரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநு தலவளொடும் உடனாய்க்
கொடிதெனக் கதறும் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமுன் நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமா மலையமர்ந் தாரே.
தெளிவுரை : வேகமாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்திக் கொண்ட ஈசன், பெண் யானை போன்ற நடையும் பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியும் உடைய உமாதேவியை உடனாகக் கொண்டவர். பிறர், கொடியதெனக் கண்டு அச்சம் தரக்தக்க கடல் சூழ்ந்து விளங்க, முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் கடல் அலைகள் பெருகித் தோன்றும் கோணமா மலையில், அப் பெருமான் வீற்றிருப்பவரே.
1323. பனித்து இளம் திங்கள் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளம் துவர்வாய்க் காரி கைபாக
மாகமுன் கலந்தவர் மதில்மேல்
தனித்தபேர் உருவ விழித்தழல் நாகம்
தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரகைடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
தெளிவுரை : ஈசன், குளிர்ச்சியான பிறைச் சந்திரனையும், நாகத்தையும் படர்ந்த சடைமுடியின் மீது வைத்தவர்; உமாதேவியைப் பாகமாக உடையவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டு வாசுகி என்னும் நாகத்தை நாணாகப் பூட்டி, அக்கினித் தழலைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த ஆற்றுலுடையவர் அவர், கடல் சூழ்ந்த கோண மலையில் வீற்றிருப்பவர்.
1324. பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மானனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றும் செழுங்கடல் தரளம்
செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்துவன் திரைகள் கரையிடைச்
சேர்க்கும் கேணமா மலையமர்ந் தாரே.
தெளிவுரை : ஈசன், பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிச் பின்னர், அவனுடைய மனைவியாகிய இரதிதேவி வேண்ட உய்யுமாறு செய்த விமலர்; தாமரை போன்ற மலரடிகளை உடையவர். அப் பெருமான், ஆரவாரம் செய்து அலைகளின் வாயிலாக முத்தும் மணியும் பொன்னும் சிப்பியும் சேர்க்கும் கரையில் விளங்கும் கோணமா மலையில் வீற்றிருப்பவர்.
1325. தாயினும் நல்ல தலைவர்என்று அடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றுஅகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பணியும் தொழில்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
தெளிவுரை : ஈசன், அடியவர்களால், தாயிலும் இனிய நன்மையைச் செய்பவர் என ஏத்தப்படுபவர்; அடியவர்களின் உள்ளத்தில் உறைந்து அவர்களின் சொல்லாகவும், எண்ணமாகவும் மருவி விளங்குபவர்; பல வடிவங்களைப் பெற்று விளங்குபவர்; பிணி நீக்கி அருள்பவர்; முப்புரி நூல் அணிந்த திருமார்பினர். அப் பெருமான், கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்து மேவும் கோணமா மலையில் வீற்றிருப்பவர்.
1326. பரிந்துநன் மனத்தால் வழிபடு மாணி
தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்த வற்கு அருளும்
செம்மையார் நம்மையாளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்தி செண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே.
தெளிவுரை : பக்தி பெருகும் நன்மனத்தால், அன்பு பெருக வழிபடும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனை, உதைத்து அழித்துப் பாலனைக் காத்தருளும் செம்மை உடையவர், நம்மை ஆளும் சிவபெருமான். அவர் மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், முல்லை ஆகியவை விளங்கும் பொழில் சூழ்ந்த கோணமா மலையில் வீற்றிருப்பவர்.
1327. எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்
ஏத்திட ஆத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும்
இறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர்
கோணமா மலையமர்ந் தாரே.
தெளிவுரை : ஈசன், கயிலையை எடுத்த இராவணனுடைய செருக்கத்தை திருப்பாத விரலால் அழித்து, அவன் ஏத்திப் போற்ற, அன்பு மிகுந்த நிலையில் விருப்பத்துடன் வாளும் வாழ்நாளும் அருளியவர்; ஆதியும் அந்தமும் அற்றவர்; தக்கன் புரிந்த வேள்வியைத் தடுத்தவர்; வனப்பு மிகுந்த உமாதேவியைக் கருணையுடன் பாகம் வைத்தவர். பெருமையுடன் தமது புகழைக் கூறும் அடியவர்களுக்கு அருள் புரியும் அப்பெருமான், கோண மலையில் வீற்றிருப்பவர்.
1328. அருவரை தொருகை வெண்டலை யேந்தி
அகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம் ஒள் ளெரியாய்
உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே.
தெளிவுரை : ஈசன் அருவருப்பு இன்றி, வெண்மையான மண்டை ஓட்டினை ஏந்தி, மனைதோறும் சென்று பலி ஏற்றவர்; பாற்கடலில் அரவணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறியாத வண்ணம் பெரிய சோதிப் பிழம்பு ஆகி, மேலே உயர்ந்தவர்; உலகளந்த மாலுக்கும் குருவாய் விளங்கியவர். அப்பெருமான், தமது திருக்கழலை அடியவர்கள் வணங்கி அருள் பெறும் தன்மையில், கோணமா மலையில் வீற்றிருப்பவர்.
1329. நின்றுணும்சமணும் இருந்தணும் தேரும்
நெறியலா தனபுறம் கூற
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால்
மெல்லிய லொடும்உட னாகித்
துன்றும்ஒண் பௌவ மவ்வலும் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றும்ஒண் கானல் வாசம்வந்து உலவும்
கோணமா மலையமர்ந் தாரே.
தெளிவுரை : சமணரும் தேரரும் கூறும் புறமொழிகளை ஏற்க வேண்டாம். நஞ்சினை உண்ட பெருமையுடைய ஈசன், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கி, கடலும் மல்லிகைச் சோலையும் கடற்சோலையும் திகழும் கோண மலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்துக என்பது குறிப்பு.
1330. குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
தெளிவுரை : மன்னுயிரின் குற்றங்களை இல்லாமையாக்கும் பாங்கினராய்க் கடல் சூழ்ந்த கோணமா மலையில் வீற்றிருக்கும் ஈசனை ஏந்தி, கற்று நன்கு உணர்ந்தும், கேள்வி ஞானம் பெற்றும், காழியில் மேவும் ஈசனின் திருக்குறிப்பையுடைய ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் - ஓதக் கேட்பவர்கள் உயர்ந்தோர் ஆவார்கள்; அத்தகையவர்தம் தொல்வினை நீங்கப் பெற்றவராய் விளங்கித் தேவர் உலகத்தில் பொலிந்து விளங்குவர். இது, ஓதுபவர்கள் சுற்றத்துடன் இம்மை, மறுமை நலனைப் பெறுவார்கள் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
382. திருக்குருகாவூர் வெள்ளடை (அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1331. சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்து
எண்ணரும் பல்கணம் ஏத்தநின்று ஆடுவர்
விண்ணவர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.
தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு அணிந்த திருமார்பில் தோலாடை புனைந்து விளங்குபவர்; எண்ணுதற்கு அரிய புகழ் உடைய பல்வேறு கணத்தவரும் ஏத்தும் பாங்கில் நின்று நடனம் புரிபவர்; தேவர்கள் வந்து சேர்ந்து மேவும் பசுமையான பொழில் சூழ்ந்த வெள்ளடை என்னும் திருக்கோயிலுள் மேவியவர். அப்பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் பிஞ்ஞகனாரே.
1332. திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாளரவு ஆட்டுகந் தீரே.
தெளிவுரை : ஈசனே, நீவிர் கங்கையைச் சடைமுடியின் மீது வைத்தவர்; மலைமகளாகிய உமாதேவியோடு உடன் நின்று ஆடுபவர்; மணம் கமழும் தண்பொழில் சூழ்ந்த வெள்ளடை என்னும் கோயிலில் மேவியவர். தேவரீர், அரவத்தை அரையில் கட்டி ஆடும் நடனத்தை விரும்பியவரே.
1333. அடையலர் தொன்னகர் மூன்று எரித்து அன்ன
நடைமட மங்கையொர் பாகம் நயந்து
விடையுகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.
தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பகைமை கொண்டு எதிர்த்த மூன்று அசுரர்களையும், புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர்; அன்னம் போன்ற நடை உடைய உமாதேவியை விரும்பி ஒரு பாகமாகப் பெற்றுத் திகழ்பவர்; இடபத்தை உகந்து ஏறி வாகனமாகக் கொண்டவர்; வெள்ளடை என்னும் கோயிலில் மேவி வீற்றிருப்பவர்; தேவரீர், வெற்பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய சங்கரனே.
1334. வளம்கிளர் கங்கை மடவர லோடு
களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை எம்பெரு மானே.
தெளிவுரை : வளமையைக் கிளர்ந்து வழங்குகின்ற கங்கை அன்னையைச் சடை முடியில் பதிய வைத்து, மயானத்தை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற பெருமானே ! தேவரீர், குளிர்ச்சியான பொழில் சூழ்ந்த வெள்ளடையில், இளமையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய எமது பெருமானே.
1335. கரிகுழல் நல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை எந்தை பிரானே.
தெளிவுரை : சுருண்ட கூந்தலை உடைய உமாதேவியோடு சேர்ந்து, வெப்பம் மிகுந்த மயானத்தில் நடம் புரிகின்ற ஈசனே ! தேவரீர், பைம்பொழில் விரிந்து சூழ்ந்த வெள்ளடை என்னும் கோயிலில், மழுப்படை மேவிய எந்தை பெருமானே !
1336. காவியங் கண்மட வாளொடும் காட்டிடைத்
தீயக லேந்தி நின்று ஆடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்துகொண்டு ஆட்டுஉகந் தீரே.
தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு சுடுகாட்டின் இடையில் எரியும் நெருப்பைங் பரவ ஏந்தி நின்று ஆடுகின்ற தேவரீர், தேன் விளங்கும் மலர்கள் கொண்ட தண் பொழில் சூழ்ந்த வெள்ளடையில், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தைப் பூசனையாக ஏற்று மகிழந்து மேவுபவரே.
திருச்சிற்றம்பலம்
383. திருநல்லூர்ப்பெருமணம் (அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1337. கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் காட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.
தெளிவுரை : திருத்தொண்டர்கள் சூழ விளங்குகின்ற நல்லூர்ப் பெருமணத்தில் மேவிய சிவபெருமானே ! அம்மிக் கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பல உடைய திருமணம் எனக்கும் வேண்டாம்; கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய மணம் மிகுந்த புகழ்ப் பாடல்களின் வாயிலாக என்னுடைய விருப்பமானது மெய்யாகத் தெரியவில்லையோ ! தேவரீர் எனது சொல்லாகிய பாடல்கள் காட்டும் பெருமணத்தினை நீர் ஏற்றுக் கொள்ளடவில்லையோ ! அருள் புரிவீராக ! என்பது குறிப்பு.
1338. தருமணல் ஓதம்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் நல்லார்கள்
வருமணம் கூட்டி மணம்செயு நல்லூர்ப்
பெருமணத் தான்பெண் ணோர்பாகம் கொண்டானே.
தெளிவுரை : ஈசனே ! கடலின் ஓதம் காணும் மணலின் முத்துக்கள் சேர்ந்து விரவச் சிறுமியர்கள் மணம் கட்டி விளையாடும் மணம் பெருக விளங்குவது, நல்லூர்ப் பெருமணம். அத்தகைய பெருமை மிக்க பெருமணத்தில் உமாதேவியைப் பாகம் கொண்டு விளங்கும் தேவரீர் ! அருள் புரிவீராக.
1339. அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு  நல்லூர்ப் பெருமண மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.
தெளிவுரை : ஈசன்பால் அன்பு செலுத்தும் சிந்தை உடைய அடியவர்கள், நன்மையே உறுகின்ற நல்லூர்ப் பெருமணத்தில் மேவி விளங்கும் எம் தந்தையாகிய ஈசனின் திருவடியை ஏத்துபவர்கள் ஆவர். அத்தகைய சீலத்தை உடையவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் ஈசனுக்குத் தொண்டு புரியும் திருத்தொண்டர்களாக விளங்குவார்கள்.
1340. வல்லியம் தோலுடை ஆர்ப்பது போர்ப்பது
கொல்லியர் வேழத்து உரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கைஎம் புண்ணிய னார்க்கே.
தெளிவுரை : சிவபெருமான், புலித்தோலை உடையாகக் கொண்டு விளங்குபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; கோவணத்தை அணிந்து இருப்பவர்; அப்பெருமான், ஆசார சீலங்களை உடையவர்களாய் எல்லாக் காலங்களிலும் அன்புறு சிந்தை உடையவர்களாய், ஈசன் திருப்புகழை ஏத்தும் பெருமை உடையவர்களாய் விளங்கும் மெய்யடியார்கள் தொழுது ஏத்தும் நல்லூர்ப் பெருமணத்தில், பொருந்தி விளங்குபவர். இதுவே எம் புண்ணியனாராகிய பரமனின் இயல்பாகும். புண்ணியனார் - ஈசன், போக்கும் வரவும் புணர்வம் இலாப் புண்ணியனே ! என்னும் திருவாசக வாக்கினைக் காண்க.
1341. ஏறுகந் தீர்இடு காட் டெரியாடிவெண்
ணீறுகந் தீர்திரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீர்உமை கூறுகந் தீரே.
தெளிவுரை : ஈசனே ! தேவரீர், இடப வாகனத்தை உகந்து ஏறி வாகனமாகக் கொண்டவர்; சுடுகாட்டில் உகந்து நின்று நெருப்பினைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர்; திருவெண்ணீற்றை உகந்து திருமேனியில் பூசி விளங்குபவர்; வரிசையாக அழகுடன் விளங்குகின்ற தேன் கமழும் கொன்றை மலரின் நறுமணத்தை உகந்தவர். செல்வம் பெருகும் நல்லூர்ப் பெருமணத்தை உகந்த நீவிர், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்தவரே.
1342. சிட்டப்பட் டார்க்குஎளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட்டும் சென்னி யான்பதி யாவது
நாட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்து
இட்டப்பட் டால்ஒத்தி ரால்எம்பி ரானிரே.
தெளிவுரை : ஈசனே ! தேவரீர், ஆசார சீலத்தையுடைய சிவஞானிகளுக்கு எளியவர்; வேட்டுவ கோலத்தை மேற்கொண்டவராய்த் தலையில் பட்டம் கட்டிக் கொண்டு திகழ்பவர். உமது பதியாவது நடனம் புரிவதற்கு உரிய கொட்டு வாத்தியம் ஓயாது விளங்கும் நல்லூர்ப் பெருமணம். நீவிர், விரும்பினால் பிற இடங்களிலும் தோன்றி விளங்குபவர். நீரே எமது பெருமான்.
1343. மேகத்த கண்டன்எண் தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.
தெளிவுரை : ஈசன், மேகம் போன்ற அருள் வழங்கும் கரிய கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை உடையவர்; வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; புலித் தோலை உடையாகக் கொண்டவர்; நாகத்தை இறுகக் கட்டி உள்ளவர். அப்பெருமான் நல்லூர்ப் பெருமணத்தில் நல்ல போகம் உடையவராகி, மன்னுயிர்களுக்கு யோகத்தை புரிந்து விளங்குபவரே.
1344. தக்கிருந் தீர்அன்று தாளால் அரக்கனை
உக்கிருந்துஒல்க உயர்வாரைக் கீழிட்டு
நக்கிருதீர்இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீர்எமைப் போக்கரு ளீரே.
தெளிவுரை : ஈசனே ! தேவரீர், அடியவர்களுக்குத் திருக்காட்சி நல்கித் தகவாய் வீற்றிருந்தபோது, கயிலையை எடுத்த இராவணனைத் திருப்பாத விரலால் கலங்குமாறு செய்து, நகை கொண்டு விளங்கியவர், இப்போது நல்லூர்ப் பெருமணத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பெருமானே ! உமது திருப்பாத மலரின்கண் சேர்வதற்கு அருள் புரிவீராக.
1345. ஏலும்தண் தாமரையானும் இயல்புடை
மாலும்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலும்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலும்தம் கோயில் புரிசடை யார்க்கே.
தெளிவுரை : பிரமனும், திருமாலும் தமது ஆற்றலை அறியாதவராகி, ஈசனைத் தேடி நைந்தனம். அத்தகைய பெருமையுடைய சடை முடியுடன் மேவும் ஈசன் பாடிய நான்கு வேதங்களும் அவருடையனவே; நல்லூர்ப்பெருமணம் என்னும் திருக்கோயிலும் அவருடையதே.
1346. ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமண மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே.
தெளிவுரை :  சமணரும் சாக்கியரும் சொல்லும் உரைகள் பொருத்தமற்றவை, அவற்றைக் கொள்ள வேண்டாம். நாதனாகியும் நல்லூர்ப்பெருமணத்தில் மேவும் வேத நாயகனாகவும் விளங்கும் ஈசனின் தாள் தொழ, முத்திப் பேறு எளிதாகக் கைகூடும். அனைவரும் வருக.
1347. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும்பழி பாவம் அவலம் இலரே.
தெளிவுரை :  நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த காழியுள் மேவும் ஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்தி வழங்குகின்ற நல்லூர்ப்பெருமணத்தில் வீற்றிருக்கும் ஈசனைப் போற்றி, அத்தகைய பதத்தை உறுமாறு பொருளாகச் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்குப் பழியும் பாவமும் அறும்; துயரமும் இல்லை. இது, இம்மையில் இனிய வாழ்க்கையும் மறுமையில் முத்தி நலனையும் அருளிச் செய்யும் என்பதாம்.
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் மூன்றாம் திருமுறை மூலமும் உரையும் முற்றிற்று
பிற்சேர்வு
1. திருமறைக்காடு - காவிரித் தென்கரைத்தலம் (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1. விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனியவாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரமயோகீ
கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காடமர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளினாலே
தெளிவுரை : பகை கொண்ட முப்புர அசுரர்களை அழித்த பரமனே ! பரம யோகி ! மறைக் காட்டில் அமர்ந்த பெருமானே ! உமது வாயிலில் புகுந்து நின்றோம் தாள் இட்டுத் திருக்கதவை அடைத்திடுவீராக.
2. முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்கமூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல் வறைக்காமர்ந்தாய்
அடைத்திடும் கதவை என்றிங்கு அடியனேன் சொல்லவல்லே
அடைத்தனை தேவி தன்னோடுஎம்மையாள் உகக்குமாறே.
தெளிவுரை : பிரம கபாலம் ஏந்திப் பலி கொள்ளும் முக்கண்ணுடைய ஈசனே ! தாமரை மலர் திகழ்ந் தோங்கும் வயல் உடைய மறைக் காட்டில் வீற்றிருக்கும் நாதனே ! கதவை அடைத்துக் கொள்க என அடியேன் சொல்ல அவ்வாறே அடைத்துக் கொண்ட பெருமானே ! உமாதேவியார் உடனாக மேவி விளங்க, எம்மை உகந்து அருள் புரிபவர், தேவரீரே அன்றோ !
3. கொங்கணா மலர்கள் மேவும் குளிர்பொழில் இமயப்பாவை
பங்கணா வுருவினாலே பருமணி யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்டதிகழ் மறைக் காடமர்ந்தாய்
அங்கணா இதுவன்றோதான் எம்மையாள் உகக்குமாறே.
தெளிவுரை : தேன் மணம் கமழும் மலர்மேவும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த இமய மலையின் பாவையாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட ஈசனே ! பெரிய மணி போன்ற மாணிக்கத்தை உமிழும் அரவத்தை ஆபரணமாகப் பூண்டு மறைக் காட்டில் அமர்ந்து விளங்கும் பெருமானே ! யாம் வேண்டியவாறு கதவை அடைத்த செயலன்றோ எம்மை உகந்து ஆட்கொண்ட பாங்காயிற்று.
4. இருளுடை மிடற்றினானே எழில்மறைப் பொருள்கள் எல்லாம்
தெருள்பட முனிவர்க்கு ஈந்த திகழ் மறைக்காடமர்ந்தாய்
மருள்உடை மனத்தனேனும் வந்தடிபணிந்து நின்றேற்கு
அருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்குமாற.
தெளிவுரை : கரிய கண்டத்தையுடைய பெருமானே ! எழில் மிகுந்த வேதப் பொருள்களை ஓதியருளி மறைக் காட்டில் அமர்ந்த வேத நாயகனே ! மருள் கொண்ட மனத்தினால் அடி பணிந்த அடியேற்கு அருள் புரிந்த பரிசன்றோ எம்மை ஆளாகக் கொண்டு உகந்த செய்கை யாயிற்று.
5. பெருத்தகை வேழந்தன்னைப் பிளிறிட உரிசெய்தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காடமர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவதன்றோ எம்மையாள் உகக்குமாறே.
தெளிவுரை : பெருத்த கையாகிய துதிக்கை உடைய யானையின் தோலை உரித்த நாதனே ! நறுமணம் கமழும் பொழில்கள் சூழும் பெருமை உடைய மறைக்காட்டில் வீற்றிருக்கும் பரமனே ! மெய்க் கருத்தின்றித் தேவரீரைப் பணிந்து நின்ற என்னை நன்கு அறிந்து உகந்து அருள் புரிந்தீர் !
6. செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளும் தேசோடு
ஒப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக்காட மர்ந்தாய்
அப்பமர் சடையினானே அடியனேன் பணியுகந்த
அப்பனே அளவில் சோதீ அடிமையை உகக்கு மாறே.
தெளிவுரை : தாருகவனத்தில் உள்ள மங்கையரைக் கவர்ந்து வளையல்களைக் கொள்ளும் எண்ணத்தில் ஒப்பற்ற பலியேற்கும் பரமனே ! ஒளி திகழ்கின்ற மறைக்காட்டில்  வீற்றிருக்கும் ஈசனே ! கங்கையைத் தரித்த சடை முடியுடைய பெருமானே ! அடியவனின் பணியை உகந்து அருள் புரிந்த எம் தந்தையே ! அளவு காண்பதற்கு அரிய சோதிப் பொருளாய் விளங்கும் நீவிர், எம்மை உகந்தவரே யாவர்.
7. மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னியானே
கதியொன்றும் ஏற்றினானே கலிமறைக் காடமர்ந்தாய்
விதியொன்று பாவின்மாலை கேட்டருள் வியக்குந்தன்மை
இதுவன்றோ உலகின்நம்பி எம்மையாள் உகக்குமாறே.
தெளிவுரை : சந்திரன், பொருந்திய கொன்றை மலர், ஊமத்தம்பூ ஆகியவற்றை ஒளி திகழும் சென்னியில் மேவிய ஈசனே ! தாள நடை கொண்டு மேவும் இடபத்தையுடைய நாதனே ! ஆர்த்தெழும் ஒலி மேவும் மறைக் காட்டில் வீற்றிருக்கும் பெருமானே ! விதிக்கப்பட்ட மரபும், இலக்கணமும் கொள்ள, ஓதும் பாடல்களைக் கேட்டு மகிழும் தன்மையானது, இக்கதவினைத் தாளிடுமாறு அடைத்த செயல் அல்லவா ! உலகின் கண் எம்மை உகந்து ஆட்கொள்ளும் தன்மையும் இதுவே அன்றோ !
8. நீசனாம் அரக்கன் திண்டோள் நெரிதர விரலால் ஊன்றும்
தேசனே ஞானமூர்த்தீ திருமறைக் காடமர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட்டு அவனடி பரவமெய்யே
ஈசனார்க்கு ஆளதானான் என்பதை அறிவித்தாயே.
தெளிவுரை : இராவணன் தோளை நெரியுமாறு திருப்பாத விரலால் ஊன்றும் ஒளிமயமாகிய ஞான மூர்த்தீ ! திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனே ! பிற பொருள்கள் மீது பற்றின்றி, ஈசனையே பற்றும் வகையானவன் எனவும், ஈசனுக்கு ஆளாகியவன் எனவும் என்னை அறிவித்தது தேவரீரின் திருவருளே அல்லவா !
9. மைதிகழ் உருவினானும் மலரவன் தானும் மெய்ம்மை
எய்துமாறு அறிய மாட்டார் எழில் மறைக் காடமர்ந்தாய்
பொய்தனை இன்றி நின்னைப் போற்றினார்க்கு அருளைச் சேரச்
செய்தனை எனக்கு நீஇன்று அருளிய திறத்தினாலே.
தெளிவுரை : ஈசனே ! திருமாலும் பிரமனும் மெய்ம்மையான தேவரீரைக் காணாதவராய் நிற்க, நீவிர் மறைக் காட்டில் வீற்றிருந்நீர். எனக்கு இன்று அருள் செய்த திறனாவது, பொய்ம்மையில்லாது, உண்மையாகப் போற்றுபவர்களுக்கு, நீவிர் அருள்புரிபவர் என்பது, வெளிப்படை யாயிற்று.
10. மண்டலத் தமணர்பொய்யும் தேரர்கள் மொழியும் மாறக்
கண்டனைய களஎன்றும் கலிமறைக் காடமர்ந்தாய்
தண்டியைத் தானாவைத்தான் என்னும் அத்தன்மையாலே
எண்டிசைக்குஅறிய வைத்தாய் இக்கதவு அடைப்பித்தன்றே.
தெளிவுரை : மண்ணுலகத்தில் சமணரும் சாக்கியரும் சொல்லும் உரைகள் அகற்றப்படுபவை எனக் கொண்டு, மறைக் காட்டில் வீற்றிருக்கும் பெருமானே ! கதவைத் தானாகவே அடைப்பித்துத் தேவரீர், உமது பெருமையை எட்டுத் திசைகளிலும் பரவச் செய்தீர்.
11. மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டுளானைக்
கதவடைத் திறமும் செப்பிக் கடிபொழிற்காழி வேந்தன்
தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
பதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக்கு அடியர் தாமே.
தெளிவுரை : மதம் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்ட பெருமைக்குரிய மறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனை ஏத்திக் கதவு அடைக்கப் பெற்ற திறத்தைச் செப்பிக் காழி வேந்தனும் தமிழ் விரகனும் ஆகிய திருஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பரமனின் அடியவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2. திருவிடைவாய் (அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல், திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
12. மறியார் கரத்து எந்தையம் மாதுஉமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடம்என்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.
தெளிவுரை : மான் ஏந்திய கரத்துடைய எந்தை சிவபெருமான், உமையம்மையோடு வேறுபாடு இல்லாதவாறு உடனாகி உறையும் இடமாவது, தேன் அருந்திய வண்டு தன் பெடையோடும் சேர்ந்து நறுமணம் கமழும் மலரில் துயிலும் வளப்பம் உடைய விடைவாயே.
13. ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செல்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.
தெளிவுரை : பொருந்த வைத்துக் கொள்வதற்கு ஒவ்வாத எலும்பும், திங்களும் சடை முடியில் வைத்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற இடமாவது, எல்லாப் பக்கங்களிலும் கோடல் மலரும் எழில் மிகுந்த விடைவாயே.
14. கரையார் கடல் நஞ்சமுது உண்டவர் கங்கைத்
திரையார் சடைத் தீ வண்ணர் சேர்விடம் என்பர்
குரையார் மணியும் குளிர் சந்தமும் கொண்டு
விரையார் புனல் வந்திழியும் விடைவாயே.
தெளிவுரை : பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, கங்கையைச் சடை முடியின் மீது வைத்த தீவண்ணம் உடைய ஈசன் வீற்றிருக்கும் இடம் என்பது, மணியும் சந்தனமும் கொண்டு உந்தித்தள்ளிவரும் நறுமணம் கமழப் புனல் வளம் மிகுந்த ஆற்றின் நலம் பெருகும், விடைவாயே.
15. கூசத்தழல்போல் விழியா வரு கூற்றைப்
பாசத் தொடும் வீழஉதைத்தவர் பற்றாம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சாமரை யேபோல்
வீசக் களியன்ன மல்கும் விடைவாயே.
தெளிவுரை : யாவரும் கண்டு நடுக்கம் கொள்ளுமாறு மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை அவனுடன் உள்ள பாசக் கயிற்றோடும் மாய்ந்து வீழும் படித் திருப்பாதத்தால் உதைத்தவர், சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, சாலி என்னும் வளம் மிக்க நெற்கதிர்கள், வெண் சாமரம் போன்று வீச மகிழ்ந்த அன்னப் பறவை, அவ் வயலில் களித்து மகிழ்ந்திருக்கும் விடைவாயே.
16. திரிபுரம் புரமூன்றையும் செந்தழல் உண்ண
எரியம்பு எய்த குன்ற வில்லிஇடம் என்பர்
கிரியும் தரு மாளிகைச் சூளிகைதன் மேல்
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே.
தெளிவுரை : எல்லாப் பக்கங்களிலும், வரையறை இல்லாது திரிந்து மூன்று புரங்களும், எரிந்து சாம்பலாகுமாறு, மேருமலையை வில்லாகவும் அக்கினியைக் கணையாகவும் கொண்டு எய்தவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடம் என்பது மலை போன்று உயர்ந்த மாளிகையின் மேல் தளத்தில் வானளவு உயர்ந்த கொடி மேவி அழைக்கும் விடைவாயே.
17. கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளி தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச் செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடம்செய் விடைவாயே.
தெளிவுரை : உமாதேவியானவர் தாட்சாயணி என்னும் நங்கையாய்த் தோன்றித் தக்கனின் புதல்வியாக விளங்கி, ஈசனைத் திருமணம் கொண்டனர். தனது தந்தை ஆற்றும் தீய, யாகத்தைக் கைவிடுமாறு புகன்ற தாட்சாயணியின் அறிவுரையைக் கேளாது, இகழந்தனன் தக்கன். அவனை வேள்வித் தீயில் தள்ளி அழித்த ஈசன், சார்ந்து மேவும் இடமாவது, விடைவாயே.
18. பாதத் தொலி பாரிடம் பாட நடம்செய்
நாதத் தொலியர் நவிலும் இடம்என்பர்
கீதத்த தொலியும் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.
தெளிவுரை : நடம் செய்யும் பாதத்தில் விளங்கும் கழல் ஒலியும், பூதகணங்கள் பாட நடம் செய்யும் நாதத்தின் ஒலியும் விளங்க மேவும் ஈசன், வீற்றிருக்கும் இடமாவது, யாழின் இசையொலியும் முழவத்தின் ஒலியும், வேதம் ஓதும் ஒலியும் விளங்கும், விடைவாயே.
19. எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்மார் தருபாடல் உகந்தவற் பற்றாம்
கண்ணமார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும் வந்திறைஞ்சும் விடைவாயே.
தெளிவுரை : ஈசனின் பேராற்றலையும் தனது இயல்பினையும் எண்ணாத இராவணனுடைய வலிமையை அழித்து அவனுடைய தோளும் தலையும் நெரித்தப் பின்னர், அவன் பண்ணிசை பெருக ஏத்திய பாடலுக்கு உகந்து அருள் புரிந்தவர் எம்பெருமான். அவர், பற்றி வாழும் இடமாவது, கண்ணுக்கு இனிய திருவிழாக்களைக் காணும் தேவர்கள், வீதிகள் தோறும் வந்து ஈசனை ஏத்தும் விடைவாயே.
20. புள்வாய் பிளந்தான் அயனபூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க்கு இடமாம்
தெள்வார் புனற்செங்கழு நீர்முகை தன்னில்
விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் திருவடியும் திருமுடியும் முறையே நிலத்திலும் வானிலும் தேடியும் காண முடியாதவாறு விளங்கி, ஒப்பற்றவராகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, தெளிந்த நீரில் உள்ள மலரில் தேனை உண்டு உலவும் விடைவாயே.
21. உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார்புரும் வேவ மூவர்க்கு அருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே.
தெளிவுரை : சமணர் சாக்கியர் ஆகியோருக்கு அறியப்படாதவரின் இடமாவது, முப்புர அசுரர்களை எரித்த காலத்தில், அக்கோட்டைகளில் இருந்து பக்தியுடன் ஏத்திய மூன்று அசுரர்களைக் காத்தருளிய இடக் கொடியுடைய ஈசனின் அழகிய விடைவாயே.
22. ஆறும் மதியும் பொதிவேணியன் ஊரா
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.
தெளிவுரை : கங்கையும் சந்திரனும் சடை முடியில் தரித்து மேவும் ஈசனின் ஊராகிய மாறுதல் இல்லாத பெருஞ் செல்வம் மல்கும் விடைவாயைக் காழியில் மேவும் ஞானசம்பந்தன் ஏத்திய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் குற்றம் அற்றவரே.
திருச்சிற்றம்பலம்
3. திருக்கிளியன்னவூர் (அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர், விழுப்புரம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
23. தார்சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
சீர்சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர்சிறக்கும் பெருமொழி உய்வகை
ஏர்சிறக்கும் கிளியன்ன வூரனே.
தெளிவுரை : ஈசனின், சடை முடிக்கு, அணியாக மேவும் மாலை சிறப்புறும் வள்ளலாகிய அப்பெருமானின் திருப்பாதத்தை ஏத்தச் சீரும் செல்வமும் சிறப்புறும். அவ் இறைவனை நினைத்துப் போற்றுவோர்க்குப் பேரும் புகழும் சிறப்புறும். அவர்தம் பெருமொழியாகிய திருவைந் தெழுத்தானது, பிறவிப் பயனை அடையும் பெரும் புகழைச் சிறப்புறச் சேர்க்கும். இவ்வாறு சிறப்புக் கெல்லாம் தலைவராகி அருள் புரிபவர், கிளியன்னவூரில் வீற்றிருக்கும் சிவபெருமானே.
24. வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே
புன்மைக் கன்னியர் பூசல்உற் றாலுமே
நன்மை உற்ற கிளியன்ன வூரனே.
தெளிவுரை : நன்மையே உற்ற கிளியன்னவூரில் வீற்றிருக்கும் ஈசன், வறுமைக் காலத்தை அதனைக் கெடுத்து அருள்பவர்; பகைவர்களை அழித்து நட்பை விளைவிப்பவர்; பூசலும் புன்மையும் தீர்த்து இல்லத்தில் இனிமை சேர்ப்பவர்.
25. பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.
தெளிவுரை : கிளியன்னவூரில் மேவும் பரமன், சிவஞானம் நல்கும் கருத்துக்களை உள்ளத்தில் நின்று ஓதியருள்பவர்; நினைத்து ஏத்தப் பேரின்பத்தை வழங்குபவர்.
26. அன்பர் வேண்டும் அவைஅளி சோதியான்
வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதல்
துன்பம் தீர்த்துச் சுகம்கொடு கண்ணுதல்
இன்பம் தேக்கும் கிளியன்ன வூரனே.
தெளிவுரை : இன்பத்தை நிலைக்கச் செய்தருளும் கிளியன்னவூரில் மேவும் ஈசன், சோதிப் பொருளாய் விளங்கி அன்பர்களுக்கு வேண்டிய யாவும் அளிப்பவர்; வன்மையடையவர் நெஞ்சில் மருவாதவர்; துன்பத்தைத் தீர்த்தருள்பவர்; சுகம் தரும் கண்ணுதலே.
27. செய்யும் வண்ணம் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணம் இங்குஉன் அருள்நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ந வூரனே.
தெளிவுரை : கிளியன்னவூரில் மேவும் ஈசன், முப்புரத்தைப் புன்முறுவலால் அழித்தவர்; அழகிய பெருந்தகையானவர், அனைவரும் உய்யுமாறு அருள்பவரும், அப்பெருமானே.
28. எண்பெறா வினைக்கு ஏதுசெய் நின்னருள்
நண்பு உருப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொரு முழுச் செல்வமும் மல்குமால்
புண்பொருத கிளியன்ன வூரனே.
தெளிவுரை : துன்பத்தைத் தீர்க்கும் கிளியன்னவூரில் மேவும் ஈசனே ! எண்ணில் அடங்காத வினைகளைத் தீர்த்து அழித்து உயிர்களைக் காப்பது தேவரீரின் இன்னருளே ஆகும். அது அன்பு கொண்டு இனிது ஏத்த இப்பூவுலகத்துச் செல்வங்களை இனிதாகச் சேர்க்க வல்லது. இது, இம்மை நலனையும் மறுமை நலனையும் அடையும் உபாயத்தை ஓதுதலாயிற்று.
29. மூவர் ஆயினும் முக்கண்ண நின்னருள்
மேவு றாது விலக்கிடற் பாலரோ
தாஉறாது உனது ஐந்தெழுத்து உன்னிட
தேவர் ஆக்கும் கிளியன்ன வூரனே.
தெளிவுரை : கிளியன்னவூரில் வீற்றிருக்கும் ஈசனே ! தேவரீருடைய திருவைந்தெழுத்தை மனத்தில் இருத்தி ஏத்தத் தேவராக உயர்வளிக்கும். தேவரீருடைய அருளால் கிடைக்கக் கூடிய பயனை அடைய முடியாதபடி தடுப்பதற்கு யார் உளர் ? யாரும் இல்லை என்பது குறிப்பு.
30. திரம் மிகுத்த சடைமுடி யான்வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால்
வரம் மிகுத்த கிளியன்ன வூரனே.
தெளிவுரை : கிளியன்னவூரில் எழுந்தருளியுள்ள ஈசன், ஒளியும் உறுதியும் உடைய சடைமுடி உடையவர்; வலிமை மிகுந்த இராவணன், மலையைப் பெயர்க்க, அவனைத் திருப்பாதத்தால் நெரித்துப் பின்னர் திருநாமத்தை ஓதி ஏத்தித் துதிக்க வரம் அருளியவர். அப்பெருமானை ஏத்தும் என்பது குறிப்பு.
31. நீதி உற்றிடும் நான்முகன் நாரணன்
பேதம் உற்றுப் பிரிந்து அழலாய்நிமிர்
நாதன் உற்றன நல்மலர் பாய்இருக்
கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.
தெளிவுரை : நான்முகனும் திருமாலும் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு கொண்டு போட்டியை ஏற்படுத்தி ஈசனைத் தேடிச் சென்றனர். அப்பெருமான், சோதிப் பெரும் பிழம்பால் ஓங்கி, நாதன் எனப் பலரும் ஏத்துமாறு இருப்பவர். அவர் கிளியன்னவூரில் மேவும், பரமனே.
32. மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை
பொங்கு அழல்சுரம் போக்குஎன பூழியன்
சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்
இங்கு உரைத்த கிளியன்ன வூரனே.
தெளிவுரை : மங்கையர்க்கு அரசியும் குலச்சிறையாரும், பாண்டிய மன்னனைப் பீடித்துள்ள வெப்பு நோயைப் போக்கி அருளுமாறு வேண்ட அவ்வாறே அதனைத் தீர்த்துச் சமணரின் எழிலைத் தாழ்த்திய ஈசன், கிளியன்னவூரில் வீற்றிருக்கும், அரனே.
33. நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே
குறையிலாது கொடுமை தவிர்வரே.
தெளிவுரை : வளம் நிறைந்து மேவும் கிளியன்னவூரில் மேவும் ஈசனை ஏத்திய ஞானசம்பந்தன் சொல்லிய சீர்மிக்க இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்குக் கொடுமை முதலான வன்செயல்கள் அணுகாது; அவர்கள் குறைவற்ற வாழ்க்கையை உடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
பிற்சேர்வு முற்றிற்று.
திருஞானசம்பந்தர் தேவாரம் முற்றுப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக