வெள்ளி, 25 நவம்பர், 2011

18 சித்தர்கள்

ராதே கிருஷ்ணா 25-11-2011


18 சித்தர்கள்


18 சித்தர்கள்
 
temple

வல்லபசித்தர்நவம்பர் 10,2010

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ ... மேலும்
 
temple

அகத்தியர்நவம்பர் 10,2010

தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, ... மேலும்
 
temple

போகர்நவம்பர் 11,2010

இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் ... மேலும்
 
temple

காலாங்கிநாதர்நவம்பர் 12,2010

திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ... மேலும்
 
temple

கொங்கணர்நவம்பர் 12,2010

திருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை  தாக்கியது.ஆம்...அதே தான்! எனக்கு தேவையான அஷ்டமாசித்திகளை அருளும் தேவதை அங்கு தான் இருக்கிறது. ... மேலும்
 
temple

காக புஜண்டர்நவம்பர் 12,2010

சக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் ... மேலும்
 
temple

கோரக்கர்பிப்ரவரி 02,2011

பெண்ணே ! இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே ! அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ என்ன ! எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் ? என்ணார் மச்சேந்திர சித்தர். ... மேலும்
 
temple

கருவூரார்பிப்ரவரி 02,2011

என்ன கருவூராரைக் காணவில்லையா ? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் ...மேலும்
 
temple
மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் ... மேலும்
 
temple

தேரையர்பிப்ரவரி 02,2011

தலையைப் பிளந்து  அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ... மேலும்
 
temple

இடைக்காடர்பிப்ரவரி 02,2011

நவக்கிரகங்களில் குருவைத் தவிர அனைவரும் பதறிப் போனார்கள். நாம் சரியான இடத்தில் தானே நேற்றிரவு படுத்திருந் தோம், இன்று இடம் மாறியிருக்கிறோம். எப்படி இது நிகழ்ந்தது? நமது ... மேலும்
 
temple

திருமூலர்பிப்ரவரி 02,2011

சீடனே! அவள் அழுது புலம்புவதை என்னால் தாங்க முடியவில்லை. கணவனைத் தனது தெய்வமாகக் கருதி வழிபட்டவள் அந்த மகாராணி. அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அநேகமாக துக்கம் தாளாமல் அவளும் ...மேலும்
 
temple

சட்டைமுனிபிப்ரவரி 02,2011

ரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்த பாழும் மனிதர்களின் சந்தேகத்தை தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் ... மேலும்
 
temple

ராமதேவர்பிப்ரவரி 02,2011

மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே ... மேலும்
 
temple

சிவவாக்கியர்பிப்ரவரி 02,2011

பெண்ணே! இந்த மணலையும், கசப்புமிக்க இந்த சுரைக்காயை கசப்பு நீக்கி ருசியாகவும் சமைத்து தர உன்னால் முடியுமா? சிவவாக்கியர், அந்த குறவர் குலப்பெண்ணிடம் கேட்டார். அவள் பதிலேதும் ... மேலும்
 




வல்லபசித்தர்



தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.
ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.
அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.
மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள். அவளது விருப்பம் அவரை மிகவும் கவர்ந்தது. அவர் அவளிடம், மகளே! கலங்காதே. உன் விருப்பம் விரைவில் நிறை வேறும். உன் வீட்டிலுள்ள பாத்திரங்களை எடுத்து வா. சிலைசெய்ய நான் வகை செய்கிறேன், என்றார்.அவள் அந்த சோகத்திலும் நகைத்தாள். சுவாமி! என்னிடம் பித்தளையும், செம்பும், சிறு வெள்ளி பாத்திரமுமே உள்ளன. இதை விற்றால் வெற்றிலை வாங்கக்கூட பணம் கிடைக்காதே, என்றாள். மகளே! நான் சொல்வது உனக்குப் புரியவில்லை. பாத்திரங்களை என் முன்னால் எடுத்து வை. நான் அவற்றில் திருநீறு தூவுகிறேன். இன்றிரவு, அவற்றை தீ மூட்டி அதற்குள் தூக்கிப் போடு. அவை அனைத்தும் என்ன எடை இருக்கிறதோ, அதில் பாதியளவுக்கு தங்கமாக மாறிவிடும். அதைக் கொண்டு நீ சிலை செய்து விடலாம். சாதாரண சிலை வடிக்க இருந்த நீ, உன் பெயரிலுள்ள பொன்னைப் போல, பொன்னாலேயே சிலை வடித்து விடலாம், என்றார். அடியவரின் வாக்கை சிவவாக்காக கருதிய பொன்னனையாள், பாத்திரங்களை எடுத்து வைத்தாள். அவர் திருநீறைத் தூவினார். அவள் அடியவரிடம், சுவாமி! தாங்கள் இன்று இரவு என் வீட்டிலேயே தங்க வேண்டும். பாத்திரங்களை நெருப்பில் போடும்போது, நீங்களும் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும், என்றாள். தாதியின் பேச்சை மறுத்த அடியவர், அம்மா! சிவனடியார்கள் யார் வீட்டிலும் இரவு நேரத்தில் தங்குவதில்லை. நான் மதுரைக்கு புறப்படுகிறேன். அங்குள்ள ஆலயத்தில், சோமசுந்தரக் கடவுளின் பிரகாரத்தில் தங்கியிருப்பேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் அங்கு வா, எனச் சொல்லி கிளம்பி விட்டார். பொன்னனையாள் அன்றிரவில் பாத்திரங்களை நெருப்பில் போட்டாள். என்ன ஆச்சரியம்!
தீயிலிட்ட பாத்திரங்கள் உருகி பொன் மட்டும் வெளிப்பட்டது. தீ அணைந்ததும், பொன்னை வாரி எடுத்த பொன்னனையாள், அதை ஒரு சிறந்த சிற்பியிடம் ஒப்படைத்து,சிவனின் உற்சவர் சிலையை வடிக்கச் சொன்னாள். அந்தச்சிற்பியும் அழகிய சிலை வடிவமைத்தார். அதைப் பார்த்த அவளது கண்களில் ஆனந்தக்கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. சிலையின் அழகில் சொக்கிப்போன அவள், அதன் மேல் ஆசை கொண்டவளாய், சிலையில் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள். தன் வீட்டுக்கு வந்து, இந்த அதிசயம் நிகழக்காரணமாக இருந்த சிவனடியாரிடம் சிலையைக் காட்டுவதற்காக எடுத்துக்கொண்டு, மதுரை சென்றாள். இதனிடையே மதுரைக்கு வந்த அந்த அடியவர்,நகர வீதிகளில் அலைந்து திரிந்தார். அப்போது, அவர் ஒரு ஆணை பெண்ணாக்கினார். ஒரு முதியவரை இளைஞனாக்கினார். இரும்பை தங்கமாக்கினார். பிறவியிலேயே பேசாத ஒருவனை பேச வைத்தார். ஊசியை தரையில் நிறுத்தி, அதன் மேல் கால் கட்டை விரலை வைத்து நடனமாடினார். இவரது சித்து வேலைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஊரெங்கும் இவரைப் பற்றி எழுந்த பேச்சு, அப்போது மதுரையை ஆண்ட அபிஷேகப் பாண்டியனையும் எட்டியது. சித்தரை அழைத்து வர ஆட்களை அனுப்பி வைத்தான். என்னைப் பார்க்க வேண்டுமானால், உன் மன்னனை இங்கே வரச்சொல், என சொல்லிவிட்டார் சித்தர்.
மன்னனும் வந்து பார்த்தான். அவரைப் பற்றி அவன் அவரிடமே கேட்டான். என்னை எல்லாம் வல்ல சித்தர் என்று நீ அழைக்கலாம். நானே ஆதியும், அந்தமும் ஆவேன்,என்றார். சித்தரே! உம் சித்து வேலைகளை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீரே கடவுள் என்பதைப் போல் பேசுகிறீரே! எங்கே! இந்தக் கோயிலில் இருக்கும் கல்லால் செய்யப்பட்ட இந்த யானை, உம் சக்தியால் கரும்பு தின்னுமா? என்று கேட்டான். ஒரு கட்டு கரும்பை வரவழைக்கச் சொன்னார் சித்தர். கல்யானையின் முன்னால் போட்டார். சாப்பிடு என கண்ஜாடை காட்டினார். அம்மட்டிலே அது உயிர் பெற்று எழுந்து சாப்பிட ஆரம்பித்து விட்டது. மன்னன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அவனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. சித்தரிடம் தன் குறையைச் சொன்னான். அடுத்த ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானான். இப்படி பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த சித்தரைக் காண வந்த பொன்னனையாள், மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி விட்டு, பிரகாரத்தில் இருப்பதாகச் சொன்ன அடியவரை தேடி அலைந்தாள்.
துர்க்கை சன்னதி அருகில், ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை உற்று நோக்கிய போது, அவள் வீட்டுக்கு வந்த அடியவர் தான் என்பதில் சந்தேகமில்லாமல் போயிற்று. அவரை வணங்கிய அவள், சுவாமி! என்னை நினைவிருக்கிறதா? தாங்கள், சில மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு அமுதுண்ண வந்திருந்தீர்கள். அப்போது, சிவனின் சிலை செய்யும் என் லட்சியத்தை வெளியிட்டேன். ஞாபகப் படுத்திப் பாருங்கள், என்றாள். ஓ! பொன்னனையாளா? நலமாக இருக்கிறாயா? உன் ஆசை பூர்த்தியாகி விட்டதா? என்றார் ஏதுமறியாதவர் போல.அவள் அந்தச்சிலையை அவர் முன்னால் எடுத்து வைத்தாள். பார்த்தாயா! நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம். நீ, நான் சொன்னதை நம்பி பாத்திரங்களை தீயில் இட்டிருக்கிறாய். நினைத்ததை சாதித்து விட்டாய், என்றதும், சுவாமி, தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன? தாங்கள் துறவு மேற்கொண்ட கதையை எனக்குச் சொல்ல வேண்டும், என்றாள் பொன்னனையாள். பெரியவர் சிரித்தார். எனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக அழைப்பார்கள். சிலர் சிவனே என்பார்கள். சிலர் பரமசிவா என கூப்பிடுவார்கள். இருந்தாலும், இந்தக் கோயிலில் உள்ளவர்கள் சுந்தரேசா என்பார்கள். ஆனால், இந்த எளிய மானிடன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் வல்லபன்,என்றார். அவள் அவரது பாதத்தை மீண்டும் நமஸ்கரித்து, அவரைச் சுற்றிலும் தான் கொண்டு வந்த பூக்களால் பந்தல் போல் அலங்கரித்தாள். அந்த சமயத்தில், அவர் தியானத்தில் இருந்தார். நீண்டநேரம் அப்படியே இருக்கவே, அவரிடம் விடை பெறுவதற்காக, தியானத்தைக் கலைக்க முற்பட்டாள் பொன்னனையாள். ஆனால், அவர் எழவே இல்லை. அப்படியே கற்சிலையாக மாறி விட்டார். அவள் அழுது தீர்த்தாள்.
சுவாமி! தங்களை வணங்க வந்தேன். தங்களையே எங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று, இச் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தேன். தாங்களோ கல்லாய் சமைந்து விட்டீர்களே! இனி,நான் என்ன செய்வேன்? என அவர் மீது விழுந்து கதறினாள். அப்போது அசரீரி ஒலித்தது. மகளே! கலங்காதே. உன் வீட்டுக்கு வந்த நானே சிவன். சித்தராய், இப்பூவுலகில் அமர்ந்து கருணை செய்யவே வந்தேன். மதுரையம்பதியில், நான் இதே பிரகாரத்தில் சித்தராய் இருப்பேன். எனக்கு நீ பூப்பந்தல் இட்டு அலங்காரம் செய்ததைப் போல், யாரெல்லாம் எனக்கு பூப்பந்தல் வழிபாடு செய்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் நடக்காது என ஒதுக்கி வைத்த செயல் களைக் கூட வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவேன், என்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் செல்பவர்கள் சுவாமி பிரகாரத்தில், துர்க்கை சன்னதியை ஒட்டியுள்ள வல்லப சித்தரை தரிசிக்கலாம். சன்னதியில் தியானகோலத்தில் இவர் அமர்ந்திருப்பார். இப்போதும் பூப்பந்தல் வழிபாடு நடக்கிறது. பூக்கூடார வழிபாடு என்று இப்போது சொல்கிறார்கள். இவருக்கு வல்லபசித்தர் என்ற பெயர் தவிர சிவசித்தர், சுந்தரானந்தர் என்ற பெயர்களும் உண்டு. குழந்தையில்லாத பெண்களும், கணவனைப் பிரிந்திருக்கும் பெண்களும், கல்வியில் முதல்நிலைக்கு வர வேண்டும் என விரும்பும் மாணவர்களும் இந்த சித்தரை வணங்கி பூக்கூடாரமிட்டு வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.


அகத்தியர்



தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.
தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,  என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன்  கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.
இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.
மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு,  கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.
குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய  வேண்டியிருந்ததைக் கருத்தில்  கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.
அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள்  தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார்.  ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய  தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன்  முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன்  தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும்  அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.
ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும்,  முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.
பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி  ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர்,  தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை  மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள்  அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை  வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.  சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்? 
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.
லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.
ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி  விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர்  குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.
பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட  லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி நிலையடைந்தார்.


போகர்



இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செய்தேனும் அந்த மந்திரத்தைக் கற்றே தீருவேன், அல்லது இறையருளால் அதை பெற்றே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டார். இந்த போகசித்தர் சீனாவில் பிறந்தவர். தமிழகம் இவரது முன்னோரின்  பூர்வீகம் என்றாலும், அவர்கள் பிழைப்புக்காக சீனா சென்று விட்டனர். இவரது பெற்றோர் சீனாவில் சலவைத்தொழில் செய்து வந் தனர்.
அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இவருக்கு போ-யாங் என பெற்றவர்கள் பெயர் வைத்தனர். மற்றொரு கருத்தின்படி, போகர் தமிழகத் தில் தான் பிறந் தார் என்றும், இவரது பெற்றோர்  இவரது பிறப்புக்கு பிறகே சீனா சென்றனர் என்றும், அங்கே போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்பதால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அகஸ்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூலில் வரும் பாடலில், சித்தான சித்து முனி போகநாதன் கனமான சீனப்பதிக்கு உகந்த பாலன் என சொல்லப்பட்டுள்ளதில் இருந்து, இவரது சீனத்தொடர்பை தெரிந்து கொள்ள முடிகிறது. சீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்த இவர், இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாயகம் வந்தார். மேருமலை, இமயமலையில் தங்கியிருந்த சித்தர்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இவரது முக்கிய நோக்கம் பாரதத்தின் மலைப்பகுதிகளில் மக்களின் கண்ணுக்கு  தெரியாமல் மறைந்து கிடக்கும் செல்வத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், நோய்கள் தாக்கியோரை மீண்டும் அவை தாக்காமல் இருக்க வழி செய்வதுமாகும்.
இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர். மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.
அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள  முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர  மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி. இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.போகரே! நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? என்றனர்.
உலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே! இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம்! போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான். போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே! இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே! இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே! என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா! எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே! அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.ஐயையோ! இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே! இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில்,  அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே! இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது! கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.
போகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே! யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும்  முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார். அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே! என ஆரம்பித்ததும்,  சுவாமி! என் பெயர்  தங்களுக்கு எப்படி தெரியும்? என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே! தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே! தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள்? என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது? என சித்தர் கேட்கவே, சித்தரே! இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.
நான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா? என்ற சித்தர், போகனே! உன் குறிக்கோளையும் நான் அறிவேன்.  முதலில், அதோ தெரிகிறதே! அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா! இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார். போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.
போகனே! நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்!இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின. போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி  விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்! மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான்! எதற்கும் ஒரு அளவு வேண்டும். போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்! அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா! என்ன இது! மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக! இந்த மூலிகைகளை நீ பறித்துச்  சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.
சித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்....  வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார். அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்? இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க  முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார். போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன்  வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால் முருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.
நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார்.  முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயிலாகவும் இது விளங்குகிறது. போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அவர் சீனாவுக்கும் அடிக்கடி வானமார்க்கமாக சென்றார்.  ஒரு கட்டத்தில் சீன அழகிகள் சிலருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு, தனது சக்தியை இழந்தார். புலிப்பாணி அங்கு சென்று, அவரை மீட்டு வந்து மீண்டும் சக்தி  பெற ஏற்பாடு செய்தார்.  கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழநியில் தங்கிய போகசித்தர், அங்கேயே சமாதி அடைந்தார்.


காலாங்கிநாதர்



திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பிட்டு விட்டேன். அடுத்த கணமே என் முதுமை மறைந்தது. நான் இளம்பிள்ளையாகி விட்டேன், என்றார் காலாங்கி.திருமூலருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.சோறு என்ன ஆனாலும், என்னிடமல்லவா சொல்லியிருக்க வேண்டும். உண்மையை மறைப்பதற்காக அதை சாப்பிட்டிருக்கிறாய். குருவிடம் சீடன் எதையும் மறைக்க நினைப்பது பாவம். இந்த பாவத்திற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள், என சொல்லி விட்டு அங்கிருந்து அகல முயன்றார். காலாங்கி, திருமூலரின் காலைப் பிடித்தார்.
குருவே! இந்த சிறுவனை மன்னியுங்கள். என்னை பிரிந்து சென்றுவிட்டால், நான் உயிர் தரிக்கமாட்டேன். சற்று பொறுங்கள். உங்கள் முன்னாலேயே என் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறேன், என்றவர் தொண்டைக்குள் விரலை விட்டார். சாப்பிட்ட சோறை வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த திருமூலர், அவர் வாந்தியெடுத்ததை எடுத்து அப்படியே சாப்பிட்டு விட்டார். அடுத்த கணமே அவரும் இளைஞராகி விட்டார். காலாங்கிநாதரும் இளமை மாறாமல் அப்படியே இருந்தார். வயதில் முதியவர்களாக இருந்தாலும், வாலிப முறுக்கைப் பெற்ற இவர்கள் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் தங்கியிருந்தனர். திருமூலரின் காலத்துக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மதுரை அருகில் ஏராளமான சித்தர்கள் வசித்த சதுரகிரி மலைக்குச் சென்றார் காலாங்கி.அந்த மலையில் ஒரு சிவாலயம் கட்டும் பணியில் வணிகர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மிக உயரமான, மனிதர்கள் மிக எளிதில் நுழைய முடியாத காட்டுப்பகுதியில் கோயிலைக் கட்டி வந்ததால், அவர் கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது. யாரிடமாவது உதவி பெற்று கோயில் பணியை முடிக்க வணிகர் முடிவு செய்திருந்தார். இந்நேரத்தில் காலாங்கிசித்தர் அங்கு வரவே, அவரிடம், சுவாமி! தாங்கள் தான் இந்தக் கோயிலை கட்டி முடிக்க செல்வத்தை தந்தருள வேண்டும், என்றார். காலாங்கியோ துறவி. அவரிடம் ஏது பணம்? அவர் அந்த வணிகரிடம், நான் அருட்செல்வத்தை தேடி அலைபவன். மக்கள் நன்றாக வாழ அவர்களின் கர்மவினைகளை ஏற்று, என்னை வருத்திக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன், என்றார். வணிகரோ விடவில்லை. அவருடனேயே தங்கி அவருக்கு பல சேவைகள் செய்து வந்தார். அந்த வணிகரின் குரு பக்தியையும், கோயில் கட்ட வேண்டும் என்ற மனஉறுதியையும் மெச்சிய காலாங்கிநாதர், அந்த மலையில் கிடைத்த பலவித மூலிகைகளை பறித்து வந்தார். அவற்றில் இருந்து தைலம் தயாரித்தார். அந்த தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்தார். அதில் கோயில் கட்ட தேவையான அளவு வணிகருக்கு கொடுத்தார். மீதி தங்கம் ஏராளமாக இருந்தது.
ஒரு பெரிய பள்ளத்தில் அதைப் போட்டு மூடி, பெரும்பாறை ஒன்றால் மூடிவிட்டார். கெட்டவர்களின் கையில் அது கிடைத்தால், அதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் அப்படி செய்தார். மேலும் அந்தப் பாறையை சுற்றி காளி, கருப்பண்ணன், வராஹி, பேச்சியம்மன் என்ற காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து அந்தப் பொன்னை பாதுகாக்கச் செய்தார். பழநியில் முருகனுக்கு சிலை செய்த போகர் இவரது சீடர்களில் ஒருவர். சதுரகிரி மலையில் பல சித்தர்களை அவர் கண்டார். இந்த சித்தர் காற்றைப் போன்றவர் என்பதால் பறக்கும் சக்தி பெற்றிருந்தார் என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அடிக்கடி சீனா சென்று வந்துள்ளார். இவர் அங்கேயே சமாதி அடைந்ததாக ஒரு தகவல் இருக்கிறது.இன்னும் சிலர், தான் தன் குருவுடன் வசித்த கஞ்சமலையில் இரும்புத்தாதுவாக மாறி அங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். இப்போதும் கஞ்சமலையில் லிங்கவடிவில் அருள் செய்வதால், இந்த லிங்கத்தை சித்தேஸ்வரர் என்கின்றனர். அமாவாசை அன்று இவரை தரிசிப்பது விசேஷம். கஞ்சமலையை பவுர்ணமியன்று மாலையில் கிரிவலமும் வருகின்றனர். இம்மலையிலுள்ள மூலிகை காற்று பல நோய்களை தீர்ப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இம்மலையின் சுற்றளவு 18 கி.மீ.,பிரம்மலோகத்திற்கே இவர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். அந்த லோகத்தில், ஒரு வில்வமரத்தூண் இருக்கிறது. இதை காலங்கி நாதர் கால் என்பர். இந்த தூணில் அவர் உறைந்திருப்பதாகவும், பிரம்மனை வழிபடுபவர்களுக்கு காலாங்கிநாத சித்தரின் அருள் கிடைக்குமென்றும், அவர்களின் தலைவிதி மாற்றப்பட்டு ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.இன்னும் சில நூல்களில், இவர் காஞ்சிபுரத்தில் சமாதி அடைந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.காலாங்கி முனிவர் காலத்தை வென்றவர். ஒருமுறை உலகமே தண்ணீரால் அழிந்த வேளையில், இவர் மேருமலையில் ஏறி அங்கிருந்த சித்தர்களுக்கு காயகல்ப வித்தைகள் பலவற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு கோபம் கட்டுப்படும். திறமைசாலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.


கொங்கணர்



திருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை  தாக்கியது.ஆம்...அதே தான்! எனக்கு தேவையான அஷ்டமாசித்திகளை அருளும் தேவதை அங்கு தான் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஒளி கிளம்பியதோ, அந்த இடத்துக்கு நான் சென்றாக வேண்டும். அந்த தேவதையின் தேஜஸே, இப்படி ஒரு வெளிச்சமாக என் கண்களில் பரவியிருக்க வேண்டும். புறப்படுவோம். என் ஆன்மிக சந்தேகங்கள் அனைத்துக்கும் அங்கு தான் விடை கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ந் தான் அந்த இளைஞன்.இன்றைய கேரளத்தில், கொங்கணப்பிரதேசம் என்று சொல்லக்கூடிய பகுதியிலுள்ள காட்டில் அவனது குடில் இருந்தது. அவனது பெற்றோர் வேட்டைக்காரர்கள். வேடர் பரம்பரையில் பிறந்தவன் அந்த இளைஞன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இரவோடு இரவாக காட்டை விட்டு கிளம்பியவன், நாட்டுப்புறத்துக்குள் நுழைந்தான். உலகமக்கள் ஆசையில் மூழ்கி, செல்வத்தை சேர்க்க அங்குமிங்கும் ஓடுவதைக் கண்ட அவனுக்கு சிரிப்பும், அழுகையுமாய் மாறிமாறி வந்தது.அட உலகமே! நீ செல்வத்தை சேர்த்து என்ன சாதிக்கப் போகிறாய். சித்திகளை படித்து தேர்ந்தால், இறைவனை அடைந்து விடலாமே! இறைவனிடம் சென்று விட்டால், உனக்கேது பசி, பட்டினி, ஆசை, தூக்கம், துக்கம் இதெல்லாம்... எதன் மீதுமே பற்றின்றி வாழலாமே, என சிந்தித்தபடியே, ஒளி வந்த திசை நோக்கி நடந் தான் அந்த இளைஞன்.தமிழகத் துக்குள் நுழைந்த அவன், தஞ்சாவூர் இருக்கும் பகுதியைத் தாண்டி வந்த போது, திருவாவடுதுறை என்ற புண்ணிய தலம் தென்பட்டது. அங்கே, தன் மீது ஒளியைப் பாய்ச்சிய ஒரு சித்தர் தவத்தில் அமர்ந்திருந்தார். அவரது பாதங்களில் விழுந்து, அவர் கண் விழிக்கட்டுமே என காத்திருந்தான்.அவர் கண்களைத் திறந்தார். வா இளைஞனே! நீ இங்கு வருவாய் என்பதை நான் அறிவேன். உன் பெயர் இன்னதென்று கூட எனக்குத் தேவையில்லை.
நீ கொங்கண தேசத்தில் இருந்து வந்தவன் என்பதால், உன்னை நான் கொங்கணா என்றே அழைப்பேன். அஷ்டமாசித்திகளை அடைய விரும்பி நீ வந்துள்ளாய், அவையே உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் என நம்புகிறாய். அஷ்டமாசித்திகள், என்பவை மனித குலத்துக்கு நீ பல பயனுள்ளவற்றைச் செய்யவும் பயன்படும் என்பதை மறக்காதே, என்றதும், தான் வந்த நோக்கத்தை அப்படியே இந்த சித்தர் புட்டுபுட்டு வைக்கிறாரே! என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த அந்த இளைஞன், குருவே! தங்களை யாரென நான் அறிந்து கொள்ளலாமா? தங்களுக்கு சித்தமானால், இந்த சிறியவனிடம் அதுபற்றி சொல்லுங்கள், என்றான் இளைஞன்.சித்தர் கலகலவென சிரித்தபடியே, கொங்கணா! இந்தக் கட்டையை  போகர் என்று அழைக்கிறது இந்த உலகம், என்றதும், ஆ...போகரா! தாங்கள் சித்தர்களிலேயே உயர்ந்தவர் அல்லவா! உமையவளின் கட்டளைக் கிணங்க, அவளது மகனுக்கே சிலை செய்தவராயிற்றே தாங்கள். நானும் அம்பாள் உபாசகன்... என்று தொடரும் போதே, இடைமறித்த போகர், கொங்கணா! அதையும் நான் அறிவேன். அம்பிகையின் பல வடிவங்களை நேரில் தரிசிக்க நீ எண்ணுகிறாய். அது நடக்குமோ நடக்காதோ என கலங்குகிறாய். அதற்காக அஷ்டமாசித்திகளைக் கற்று, அவற்றில் ஏதேனும் ஒரு வழிமூலம் அவளைப் பார்த்து விடத் துடிக்கிறாய். ஒன்றை மட்டும் மறந்து விடாதே. அம்பிகையை நேரில் காண ஒரே வழி தவம். நீ மனிதர்களே இல்லாத இடத்துக்குச் செல். அங்கே அமர்ந்து தவம் செய். இவ்வுலக சஞ்சாரத்தை மறந்து விடு. அம்பிகை உன்னைக் காண நேரில் வருவாள், என ஆசியருளினார். போகரிடம் பிரியாவிடை பெற்ற கொங்கணர், ஒரு மலைக்குச் சென்றார். அனைவரும் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ தான் தவம் செய்வர். ஆனால், கொங்கணர் ஒரு மலை உச்சியிலுள்ள பாறையில் படுத்து விட்டார். படுத்த நிலையிலேயே கண்மூடினார். அப்படியே, தவத்தில் ஆழ்ந்து விட்டார். போகர் சொன்னபடியே நடந்தது. அம்பாளின் பல வடிவங்களை அவர் நேரில் கண்டார்.அம்பிகையின் வடிவங்களை நேரில் கண்டதன் மூலம், தனது சக்தி அதிகரித்தது போல உணர்ந்த கொங்கணர், தவத்தில் இருந்து எழுந்தார். அவர் கண் திறக்கவும், தன் முன் ஒரு சமாதி இருப்பதைப் பார்த்தார். அந்த சமாதியை மூடியிருந்த பாறை தானாக உருண்டது. அதன் உள்ளிருந்து ஒரு முனிவர் வெளிப்பட்டார். அவரை கொங்கணர் வணங்கினார்.
கொங்கணா! நீ அவசரக்காரனாக இருக்கிறாயே! அம்பிகையின் ஒரு சில வடிவங்களைப் பார்த்ததுமே உன் சக்தி அதிகரித்து விட்டதாக., நீயாகவே கருதிக் கொண்டு, தவத்தைக் கலைத்து விட்டாயே! அம்பிகைக்கு விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமான வடிவங்கள் உண்டு. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டாய். மீண்டும் தவம் செய். அவற்றை நீ காண்பாய், என்றார். அந்த முனிவர் யாரென கொங்கணர் விசாரித்த போது, நான் தான் கவுதமர் என்றார் அம்முனிவர். கண் விழித்து தவம் கலைந்ததால், அம்பிகையின் இன்னும் பல வடிவங்களைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்தாலும், ரிஷி தரிசனமாவது கிடைத்ததே என ஆறுதல் கொண்ட கொங்கணர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால், அந்த தவம் சில காலமே நீடித்தது. சித்திகளை அடைய வேண்டும் என்ற மனஉணர்வு, தவத்தைக் கெடுத்து விட்டது. கொங்கணர் அங்கிருந்து புறப்பட்டு, தில்லையம்பதியான சிதம்பரத்தை அடைந்தார். இறைவன் ஆகாயமாக எழுந்தருளியிருக்கும் அந்த புண்ணிய பூமியில் அஷ்டமாசித்திகள் வேண்டி யாகம் தொடங்கினார்.அப்போது, யாக குண்டத்தின் முன்னால், இதற்கு முன்னதாகப் பார்த்த கவுதமர் தோன்றினார். கொங்கணா! மீண்டும் தவறு செய்கிறாய். அஷ்டமாசித்திகளை அடைவதால் பலனேதும் இல்லை. அவற்றைப் பயன்படுத்தினால், நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற ஆணவமே உன்னுள் வளரும். தவமே இறைவனை அடைய உயர்ந்த பாதை. தவம் என்றால் கண்மூடி ஓரிடத்தில் அமர்வது என பலரும் தவறாகப் பொருள் புரிந்து கொண்டிருக்கின்றனர். தவத்தின் உண்மைப் பொருளை நீ தெரிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும். காத்திரு, என சொல்லிவிட்டு மறைந்தார். கவுதமரின் இந்த விமர்சனம், கொங்கணரைக் கவலை கொள்ளச் செய்தது. நாம், ஏன் இந்த பூமிக்கு வந்தோம். தவத்தின் பொருள் தெரிய சந்தர்ப்பங்கள் வரும் என்றாரே கவுதமர். அதை அறிந்து கொள்ள எங்கே செல்ல வேண்டும்? எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? இப்படி பல சிந்தனைகள் அவரைக் குழப்பின. ஆனால், தவத்தின் பொருளை அவருக்கு உணர்த்த, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியில் காத்திருந்தாள் ஒரு பெண்.
ஒருமுறை தியானத்தில் அமர்ந்திருந்த கொங்கணர் மீது, உயரே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று எச்சம் போட்டது. பறக்கும் போதே எச்சமிடுவது பறவை களின் இயல்பு தான். நாம் கூட மரத்தடிகளில் நின்றால், பறவைகள் எச்சமிட்டு நம் உடைகள் அழுக்காகும். அதை துடைத்து விட்டு நடையைக் கட்டுவோம். கொங்கணர் சகல வல்லமை படைத்தவர் இல்லையா? ஆணவத்துடன் அவர் கொக்கை நோக்கிப் பார்த்தார். அவரது பார்வையின் தீட்சண்யம் தாளாமல் கொக்கு சாம்பலாகி உதிர்ந்து விட்டது.தன் தியானத்தைக் கெடுத்த கொக்கை சாம்பலாக்கிவிட்டதில் கொங்கணருக்கு பரமதிருப்தி, அகந்தை எல்லாம் ஏற்பட்டது. தான் தியானம் செய்யும் போது, யாராவது தனக்கு இடைஞ்சல் செய்தால், அவர்களுக் கும் இதே தான் கதி என்பது போல அவரது செய்கை அமர்ந்தது. இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள், அவர் திருவள்ளுவரின் இல்லத்துக்குச் சென்றார்.யார் உள்ளே! எனக்கு பிச்சைப் போடு, பசிக்கிறது. நிறைய வேலை இருக்கிறது, என்று அதட்டலாகப் பேசினார். வள்ளுவரின் மனைவி வாசுகி, வெளியே இருந்து வந்த குரலைக் கேட்டார். அதிகார தோரணையுள்ள முகத்துடன் ஒரு துறவி நிற்பதைப் பார்த்தாள். அவர் கோபத்தில் பேசினாலும், அவள் அடக்கமாக, துறவியே! பொறுக்க வேண்டும், எனது கணவருக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். பர்த்தாவுக்கு பரிமாறும் போது, இடையில் எழுந்து வந்ததே தவறு. இருப்பினும், நீர் ஒரு துறவி என் பதால், என் பர்த்தா இதை பொருட்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். சற்று நேரம் திண்ணையில் அமரும். அவர் சாப்பிட்டதும், உமக்கு உணவெடுத்து வருகிறேன், என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென வீட்டுக்குள் நடந்தாள். கொங்கணருக்கோ கோபம் எல்லை மீறி விட்டது. மீண்டும் கத்த ஆரம்பித்தார். ஏ பெண்ணே! துறவிகளுக்கு அன்னமிடுவது முதல் கடமை என்பது உனக்குத் தெரியாதா? அதிலும் நான் யார்? சகல சித்திகளும் கைவரப்பெற்றவன். என் தவத்தின் வலிமையை அறியாமல் பேசுகிறாய். உம்... இப்போது, உணவெடுத்து வருகிறாயா?  இல்லை...  உன்னையும்... என்று அவர் சொல்லி முடிக்கவும், கோபமடைந்த வாசுகி, மீண்டும் வெளியே வந்தாள்.
கொங்கணரே! உமக்கு மரியாதை தந்தது தவறாகப் போயிற்றே! என்னை என்ன செய்து விட முடியும் உம்மால்? பதிபக்தியே ஒரு பத்தினிப் பெண்ணுக்கு உயரிய குணம் என்பதை  கூட உணராத துறவியே! என்னைக் கொக்கென்று நினைத்துக் கொண்டீரா? என்றதும், கொங்கணருக்கு தூக்கி வாரிப்போட்டது. இவளுக்கு எப்படி தெரிந்தது என் பெயர் கொங்கணன் என்று! அத்துடன், இவள் கொக்கை எரித்த விஷயத்தை எப்படி அறிந்தாள்? அவர் அதிர்ச்சியுடன் அவள் முகத்தை ஏறிட்ட போது, கொங்கணரே! உம் சிந்தனை எனக்குப் புரிகிறது. ஒரு பெண் இறைவனை அடைய வேண்டுமானால், தவம் எதுவும் செய்யத் தேவையில்லை, பூஜை, புனஸ்காரங்கள் தேவையில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதே ஒரு பெண்ணுக்கு உயரிய தவம். நீர் தவம் என்றால் என்ன என்பது பற்றி அறியத்தானே இப்படி சுற்றித் திரிகிறீர்! என்னையும் விட உயர்ந்த ஒரு தபஸ்வி இந்த ஊரில் இருக்கிறார், என்றதும் கொங்கணர் அவள் முகத்தை ஆர்வத்துடன் நோக்கினார். தாயே! நீ என் அறிவுக்கண்ணை திறந்தது போல் இருக்கிறது. என் ஆணவம் அழிந்தது. அந்த தபஸ்வியை நான் பார்க்க வேண்டும். தவம் பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் தவம் செய்து கொண்டிருப்பார்? என்றதும், வாசுகி கலகலவென சிரித்தாள். சுவாமி! அவர் தாடியும், ஜடாமுடியும் தரித்து கண்மூடி தியானத்தில் இருப்பார் என நினைக்கிறீரா! இல்லை...இல்லை...ஊர் எல்லையில் ஒரு இறைச்சிக்கடை இருக்கிறது. அந்தக்கடையின் உரிமையாளர் வீட்டில் போய் பிச்சை கேட்பது போல் நடியும், தவம் பற்றி இன்னும் தெரிந்து கொள்வீர், என்றாள். அவளிடம் பிச்சை வாங்கி அருந்திவிட்டு, அவர் ஆச்சரியத்துடன் இறைச்சி வியாபாரி வீட்டுக்குச் சென்றார். அதே அதிகாரத்தோரணையுடன், பிச்சை போடு எனக்கூவினார். வியாபாரி வெளியே வந்தான்.
ஐயா, கொக்கை எரித்த கொங்கணரே! வாசுகி அம்மையார் உம்மை அனுப்பினாரா? சத்தம் போடாதீரும். உள்ளே என் வயோதிகப் பெற்றோர் நோயின் கடுமையால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கை, கால்களை அமுக்கிவிட்டு, விசிறி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உமக்கு  தெரியாதா? பெற்றவர்களுக்கு சேவை செய்வதே ஒரு மகனின் முக்கிய கடமையென்று. ஆணாகப் பிறந்த ஒருவன், தன்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை அடைந்து விடலாம். அதை விட உயர்ந்த தவம் ஏது? என்று அவன் சொன்னதும், கொங்கணருக்கு சுரீர் என முதுகெலும்பில் உறைத்தது போல் இருந்தது. ஆஹா! இவனுக்கு எப்படி நம்மைத் தெரிந்தது? வாசுகி வீட்டுக்குப் போய் வந்ததை இவன் எப்படி அறிந்தான்? என சிந்தித்தவர், உன் பெயர் என்ன? என்றார். தர்மவியாதன் என்று பதிலளித் தான் அவன். தர்மா! என்னை எப்படி உனக்குத்தெரியும்? என்றார்.ஐயனே! என்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதையே உயரிய தவமாக நினைக்கிறேன். அந்த தவப்பலனால், முக்காலமும் உணரும் சக்தி எனக்கு இயற்கையாகவே வந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன். அதனாலேயே உம்மை எளிதில் அடையாளம் காண முடிந்தது, என்றான்.ஹா...ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையைச் செய்வதே தவத்திற்கு சமமானது, இதைப்புரிய இவ்வளவு நாளாகி இருக்கிறதே! என்றவர், தனக்கு நேர்ந்த அனுபவங்கள் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில், அவற்றை நூல்களாக எழுதி வைத்தார். பின்னர் அவர் ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதிக்குச் சென்றார். அங்கே வலவேந்திரன் என்ற மன்னன் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு தவம் என்றால் கடமை என்பது பற்றி விளக்கினார். இது அவனுக்குப் பிடித்துப் போகவே, அவரது சீடன் ஆனான். அங்கேயே சிலகாலம் தங்கியிருந்து பல நூல்களையும் எழுதிய அவர் திருவேங்கடமலையிலேயே சமாதியானார்.


காக புஜண்டர்



சக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
உஜ்ஜயினியில் உள்ள மகாகாலர் (சிவன்) கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார். ஓம் நமசிவாய என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி. ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார். கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார். போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார். எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை. பொறுமைமிக்க குரு, திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக்கொண்டிருந்தபோது, அவரது குரு வந்தார். காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழக்கூட இல்லை. திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அது. குருவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமி யில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார்.
அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அழைந்தார். அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர். ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள்.


கோரக்கர்



பெண்ணே ! இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே ! அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ என்ன ! எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் ? என்ணார் மச்சேந்திர சித்தர். மச்சேந்திரன் பிறப்பு அலாதியானது. சிவபெருமான் ஒருமுறை பார்வதிதேவிக்கு ஒரு கடற்கரையில் அமர்ந்து மந்திர உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீன், ஒரு மந்திரத்தை அப்படியே கிரகித்துக் கொண்டது. அந்த மந்திரம் மனித வடிவாக மீனின் வயிற்றில் உருவாகி வெளிப்பட்டது. மீனுக்கு மச்சம் என்ற பெயரும் உண்டு. அந்தக் குழந்தைக்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்ட சிவன், நீ சித்தனாகி மக்களுக்கு நலப்பணி செய்வாயாக என அருளினார். சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன். ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர். என் நிலைமைக்கு தீர்வு எப்படி வரப்போகிறதோ என கலங்குகிறேன், என்றாள் கண்ணீர் சிந்தியபடியே. அம்மா ! அழாதே. இதோ! திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார். திருநீறுடன் தெருவில் சென்று கொண்டிருந்தவனை அவளது தோழி ஒருத்தி பார்த்தாள். சாமியார் திருநீறு தந்த விபரத்தை அந்தப்பெண் தோழியிடம் சொன்னாள். தோழி அவளிடம், அடிபைத்தியக்காரி ! யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா ! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய். அந்த சாமியார் உன்னை தன் தவறான இச்சைக்கு ஆட்படுத்தி விடுவார். இதை வீசி எறிந்து விடு, என்றாள். தோழி சொன்னதிலும் <உண்மையிருக்குமோ என்று பயந்து போன அந்தப் பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.
சில ஆண்டுகள் கடந்தன. அந்தப் பெண், இப்போதும் அழுது கொண்டிருக்க, மச்சேந்திரர் வந்தார். அப்போது தான், மேற்கண்ட கேள்வியைக் கேட்டார். சுவாமி ! என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் கொடுத்த திருநீறை என் தோழி சொன்னதால் பயத்தில் அடுப்பில் போட்டு எரித்து விட்டேன். எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை. என்னை மன்னிக்க வேண்டும் என்றாள். அவளது நிலைமையில் யார் இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்கவில்லை. சரியம்மா ! உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டுவீர்கள் ? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா ? என்றார். இல்லை சுவாமிஜி அடுப்புச்சாம்பலை இதோ அந்த எருக்குழியில் (கழிவுகளை உரமாக்கும் தொட்டி போன்ற அமைப்பு)  போட்டு வைத்திருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு  ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்து சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது, என்றாள். மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகமிருக்கிறது, என்றவர், எருக்குழியில் அருகே போய், கோரக்கா ! என குரல் கொடுத்தார். என்ன சித்தரே ! என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா, என்றார் சித்தர். அப்போது, சாம்பலைக் கொடுத்த நாளில் இருந்து, இதுவரை கடந்த பத்தாண்டுகளைக் கடந்த நிலையில், பத்து வயது சிறுவன் ஒருவன், தெய்வ லட்சணங்களுடன் எழுந்து வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர். சுவாமி ! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமை அறியாமல், வீசி எறிந்தேன். இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன். என அழுதவள், மகனை அரவணைத்துக் கொண்டாள். ஆனால், அந்த சிறுவனோ அன்னையின் பிடியில் இருந்து தன்னை உதறிக்கொண்டு வெளிப்பட்டான். தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாய். நான் இந்த நாற்றம்பிடித்த குழியில் இவ்வளவு நாளும் கிடந்தேன். என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. மேலும், நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன். இருப்பினும், நான் இந்த பூமிக்கு வர காரணமாக இருந்ததற்கும், என் தாய் என்ற முறையிலும் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.
கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்காமல் போனாலும், மகனின் உறுதியான பேச்சால் ஆடிப்போன அந்தத்தாய், வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின் கோரக்கர் நாலா திசைகளிலும் அலைந்தார். அவருக்குள் மனிதனையும் பிற உயிர்களையும் படைக்கும் பிரம்மனின் தொழிலை தானே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த சக்தியைப் பெறுவதற்காக அவர் தனது நண்பரான பிரம்ம முனியுடன் இணைந்து ஒரு யாகத்தைத் துவக்கினார். படைக்கும் தொழில் இந்த சித்தர்களின் கைக்கு போய் விட்டால், தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமே என அஞ்சிய தேவர்கள் வருணனையும், அக்னியையும் அனுப்பி யாகத்தை அழித்து விட உத்தரவிட்டனர். அவர்களும் வந்து யாகத்தில் தொல்லை செய்ய, யாககுண்டத்தில் போட்ட பொருட்கள் இரண்டு பெண்களாக உருமாறி வெளிப்பட்டன. அவர்கள் முனிவர்களைச் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆனால், இன்ப வாழ்வை முற்றிலுமாக வெறுத்த கோரக்கரும், பிரம்ம முனியும் கமண்டலத்தை எடுத்து, எங்கள் யாகத்தை அழிக்க நீங்கள் பிறப்பெடுத்தீர்களா ? என்று சொல்லி கமண்டல நீரை தெளிக்க இரண்டு செடிகளாக மாறிவிட்டனர். அவை காயகல்ப செடிகள் எனப்பட்டன. சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி, சித்தர்களே! நீங்கள் தவவலிமை மிக்கவர்கள் என்றாலும், யாகத்தில் இடையூறு ஏற்பட்டது பற்றி என்னிடம் முறையிடாமல், நீங்களே யாக குண்டத்தில் பிறந்த பெண்களை செடிகளாக மாற்றினீர்கள். சித்தர்களுக்கு கோபம் ஆகாது. கோபம் கொண்டவன் தன் பலத்தை இழப்பான். நீங்களும் உங்கள் தவவலிமையை பெருமளவு இழந்து விட்டீர்கள். இனி இந்த காயகல்பத்தைக் கொண்டு, உலக உயிர்கள் பல காலம் வாழ்வதற்குரிய மருந்துகளைத் தயாரியுங்கள், என்றார். அவர்கள் வருத்தப்பட்டாலும், சிவன் சொன்னவாறே செய்தனர். சதுரகிரி மலைக்கும் அவர்கள் வந்ததாக ஒரு தகவல் உண்டு. பல சித்துவேலைகள் செய்து மக்களுக்கு வாழ்வளித்த கோரக்கர், புதுச்சேரி அருகிலுள்ள கோர்க்காடு என்ற ஊரில் சித்தியடைந்தார் என்கின்றனர்.


கருவூரார்



என்ன கருவூராரைக் காணவில்லையா ? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் செய்த தவறுக்கு வேண்டுமானால், என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள், மன்னன் புலம்பினான்.அவன் புலம்புமளவுக்கும், போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது ?கருவூரார் சோழநாட்டிலுள்ள போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கும் அப்படி என்ன நடந்து விட்டது ? கருவூரார் சோழநாட்டிலுள்ள கருவூரில் (இன்றைய கரூர்) ஒரு அந்தணத்தம்பதியரின் மகனாக அவதரித்தவர். இளமையிலேயே ஞானம் தேடி அலைந்தார். அவருக்கு பழநியில் நவபாஷண முருகன் நிலை செய்த போகரின் தரிசனம் ஒருமுறை கிடைத்தது. அவரிடம், இந்த உலக வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். கருவூரா! மக்கள் சேவையே மகேசன் சேவை. ஒவ்வொரு மனிதனும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் சோவை செய்வதற்காக  படைக்கப்பட்டவளே ! சேவையில் நீ கடவுளைக் காணலாம். பராசக்தியை நீ வழிபடு. வாழ்க்கை பற்றிய அரிய ஞானத்தைப் பெறுவாய், என ஆசிர்வதித்தார். பல காலமாக தொண்டு செய்து வந்தார் கருவூரார். இந்நிலையில், வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் , ஒருமுறை தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். ஒருமுறை அவன் தண்ணீருக்குள் கண்டான். பெரும் பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. ஆனால், சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை  விட்டு அகல மறுத்தது.
எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால், அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான். சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, நான் கண்ட காட்சியைக்ஞூ கூறி, நடன சிவன் சிலை வடிக்க வேண்டுமென்றும், அதற்கு 48 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதாகவும் உத்தரவு போட்டுவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைப்பதனால் செம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். மன்னனோ, எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும், என்ன வித்தை செய்தேனும், தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஏதோ ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டன. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவான் ! அவன் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது ! சிறையில் அடைத்து விடுவானே சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து, சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா ! நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைøப் பணியை முடித்துக் கொடு, என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில், சிற்பிகள் முன்பு ஒரு துறவியின் வேடத்தில் போய் நின்றார். சிற்பிகளே ! உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில்  (சுமார் முக்கால் மணி நேரம்) சிலையை நான் தயார் செய்து விடுகிறேன். துறவியே ! நீர் யாரோ எவரோ ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து  முடிக்க முடியாததை உம்மால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும் ? நீர் எங்களைக் கேலி செய்கிறீரா ? இல்லை... உமக்கு மாயமந்திரங்கள் தெரியுமா ? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துவது அடியாரான உமக்கு அழகாகுமோ ? என கோபமாகக் கேட்டனர்.
அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை. அவர்களின் நிலையில் யார் இருந்தாலும் அப்படித்தான் பேசுவர் என்பது அந்த சித்தாந்திக்கு தெரியாதா என்ன ! அவர் தன் வாதத்தில் உறுதியாக இருந்தார்.என்னதான் நடக்கிறதென பார்ப்போமே என சிற்பிகளும் தலையாட்டினர். கருவூரார் அறைக்கும் சென்றார். யாரும் உள்ளே வரக்கூடாது என கட்டளையிட்டார். அது மிகுந்த பாதுகாப்பு மிக்க இடம் என்பதால், தங்கத்தை எடுத்துக் கொண்டு அவர் வேறு வழியில் செல்லவே வழியில்லை என்பதால் அதற்கும் சிற்பிகள் சம்மதித்தனர். சொன்னபடி இரண்டே நாழிகையில் அறைக்கதவு திறந்தது. சிற்பிகளே ! உள்ளே போய் பாருங்கள். சிலை தயாராகி விட்டது, என்றார் சிற்பிகள் ஓடிச்சென்று பார்த்தனர். ஜெலித்தார் நடராஜப் பெருமான். ஆஹா... இப்படி ஒரு சிலையை எங்கள் வாழ்வில் பார்த்தில்லையே, என சிற்பிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஆனந்த சிவனைப் போலவே இவர்களும் தாண்டவமாடினர். கருவூராரிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டனர். மறுநாள் மன்னன் இரணியவர்மன் வந்தான். நடராஜரைப் பார்த்ததும், தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ, அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை வானளவு பாராட்டினான். அந்த நேரத்தில் தான் அமைச்சர் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். அமைச்சரே ! நீர் சொல்வதும் சரிதான் ! அப்படியே செய்து பாரும் என்றான் இரணியவர்மன்.
அமைச்சர் அறைக்குள் சென்றாள், தங்கத்தை பரிசேதிக்கும் அதிகாரியை அழைத்தார். சிலை பரிசோதிக்கப்பட்டது. அதிகாரி அமைச்சரிடம், அரசே ! இது முழுமையான தங்கச் சிலை இல்லை. இதில் குறிப்பிட்ட அளவு செம்பு கலக்கப்பட்டிருக்கிறது, என்றார். அமைச்சர் கொதித்துப்போனார். அரசரிடம் ஓடிவந்தார். இரணிய ராஜ மகாபிரபு ! தங்களையே இந்த சிற்பிகள் ஏமாற்றி விட்டார்கள். சிலையில் செம்பு கலக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முழுமையான தங்கச்சிலை  வேண்டும் என்ற உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. மேலும், எஞ்சிய தங்கம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. தாங்கள், தகுந்த விசாரணை நடத்தி இந்த சிற்பிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்றார். சிற்பிகள் நடுங்கி விட்டனர். அவர்களது உடல் அனலில் இட்ட புழுவாய் துடித்தது. இந்த துறவியை நம்பி மோசம் போனோமே ! முழுமையான தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்ற கட்டளையை இவன் மீறியதால் தானே, நமக்கு வினை வந்து சேர்ந்தது என யோசித்தவர்கள், மன்னரின் காலடியில் விழுந்தனர். மகாபிரபோ ! தவறு நடந்து விட்டது. நாங்கள், இதோ நிற்கிறானே ! இந்தத் துறவியை நம்பிமோசம் போனோம். பெருமானின் சிற்பத்தை வடிக்க சுத்த தங்கத்தால் பலநாள் முயற்சித்தோம். நாங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. தங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் கூட எங்களுக்கு உயிர்ப்பிச்சை தந்திருப்பீர்கள். ஆனால், கடைசி நேரத்தில் வந்த இவன், சில நாழிகைகளுக்குள் சிலைப்பணியை முடித்து விட்டான். அதுகண்டு, நாங்களே ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் கொண்டாடினோம். அவன் தனிமையில் அந்த அறையில் அமர்ந்து சிலை செய்தான். எங்களை அனுமதிக்கவில்லை. எனவே என்ன நடந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னித்து விடுவியுங்கள், என்று கதறினர். மன்னனுக்கு கோபம் அதிகமானது.
துறவி வேடமிட்டு தங்கத்தை அபகரித்த அந்தக் கயவனை இழுத்துச் செல்லுங்கள். சிறையில் தனியறையில் வைத்து சித்ரவதை செய்யுங்கள். இந்த சிற்பிகளையும் விசாரணை முடியும் வரை சிறையில் வையுங்கள், என்றான். எல்லாச்சிற்பிகளும் கைகூப்பி தில்லையம்பலத்தானை வணங்கி, அன்புக்கடலே ! அருள்வடிவே ! நீ எல்லாம் அறிவாய். உண்மை விரைவில் வெளிப்பட வேண்டும். சாவுக்கு நாங்கள் கலங்கவில்லை. ஆனால், திருடர்கள் என்று களங்கம் எங்கள் பரம்பரையைச் சாரும் வகையில் எங்களைக் கொன்று விடாதே, என்று பிரார்த்தித்தவாறு சென்றனர். இந்தத் தகவல் போகர் சித்தரின் ஞான அறிவுக்கு எட்டியது. அவர் தன் சீடர்களுடன் வானமார்க்கமாக கணநேரத்தில் தில்லையம்பலத்தை அடைந்தார். கோபமாக இரணியராஜன் முன்பு தோன்றினார். தன் முன்னால் திடீரென கோபக்கனல் பொங்க நின்ற ஒரு துறவியைக் கண்டு அதிசயித்தனர் இரணிய ராஜன். ராஜா! என்ன நினைத்து என் சீடனை சிறையில் அடைத்தாய். தங்கத்தை வளைக்க செம்பு தேவை என்ற அடிப்படை ஞானமில்லாத நீ, இப்படிப்பட்ட முட்டாள்தனங்களைச் செய்வாய் என்பதிலும் ஆச்சரியமில்லை தான் ! இருப்பினும் குற்றமற்ற என் சீடன் செய்த செயலை மனதில் கொள்ளாமல், தக்க விசாரணை செய்யாமல் சிறையில் தள்ளி விட்டாய். மூடனே ! அவனை உடனே வெளியே அனுப்பு. நான் போக சித்தர். இப்போதாவது புரிந்து கொண்டாயா? என்றதும், இரணியரஜன் கலங்கி விட்டான். சித்தரே! தங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன். தங்கள் சீடனை வேண்டுமென்றே அடைக்கவில்லை. தங்கத்தால் சிலை செய்ய முடியாது என்ற தகவலை சிற்பிகள் பயத்தில் மறைத்திருக்கின்றனர். தங்கள் சித்தர் கருவூராரும் அதையே செய்யவே இப்படி செய்து விட்டேன், என்றான். சரி... சரி... இப்போதே என் பக்தனை விடுதலை செய், என்று அவர் கூறவும், ஆணைகள் பறந்தன. காவலர்கள் சிறைக்குச் சென்றனர். அங்கே கருவூர் சித்தரைக் காணவில்லை. அவர்கள் ஓடிவந்து தகவல் கூறினர். போகர் இன்னும் கோபமானார்.
இரணியராஜா ! விளையாடுகிறாயா ? கருவூரான் இன்னும் ஒரு நாழிகைக்குள் வந்தாக வேண்டும். தங்கத்துக்காக தானே அவனை சிறையில் அடைத்தாய். இதோ பிடி தங்கம் ! அந்த சிலையை தூக்கி இந்தத் தராசில் வை. அந்த சிலையையும் விட மேலான அளவுக்கு உனக்கு நான் தங்கம் தருகிறேன், என்றனர் சீடர்களை பார்க்க, அவர்கள் சிலையை எடுத்து தராசில் வைத்தனர். நடராஜர் சிலையின் எடைக்கும் மேலாக தங்கத்தை வைத்தார் போகர். உம்... இதோ நீ விரும்பும் தங்கம், எடுத்துக் கொள், என் சீடனை என்னிடம் ஒப்படைத்துவிடு, என்றார். மன்னன் நடுங்கினான். தில்லையம்பலத்தானை மனம் உருகி வேண்டினான். அவனது நிலையை கண்ட போகர் மனமிரங்கினார். இரணியராஜா கலங்காதே. கருவூரான் சிறையில் தான் இருக்கிறாள். சித்தர்களுக்கே உரித்தான சில யோகங்கள் மூலம் அவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான். நான் அழைத்தால் வருவான், என்றார். பின்னர், கருவூரா வெளியே வா, என்றார் போகர். அக்கணமே அவர் முன்னால் வந்த கருவூரார், குருவே ! தாங்கள் கற்றுக் கொடுத்தபடி குறுகிய இடைவெளி வழியே வெளியே வரும் கலை மூலம் சிறையில் இருந்து வெளிப்பட்டேன், என்றார். பின்னர் போகர் மன்னனிடம், நடராஜர் சிலை அமைய வேண்டிய முறை, கோயில் எழுப்ப வேண்டியே முறை ஆகியவற்றை போதித்து கருவூராருடன் மறைந்து விட்டார். பின்னர் கருவூரார் தனித்தே பல தலங்களுக்கு சென்றார். ஒருநான் ஒரு காகம் அவர் முன்னால் ஒலைச்சுவடியைப் போட்டது. அதைப் பிரித்து படித்தார் கருவூரார்.
அந்த ஓலையை குருநாதர் போகர் அனுப்பியிருந்தார். அதில், கருவூரா! உடனே தஞ்சாவூருக்குச் செல் அங்குள்ள கோயிலில் சிவலிங்கத்தை நிலைநிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, என எழுதப்பட்டிருக்கறது. கருவூராரும் தஞ்சாவூர் சென்றடைந்தார். கோயிலுக்குள் சென்று கருவறையை அடைந்தார். அங்கே திருப்படி முடிந்து, லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் பயங்கர சிரிப்பொலி கருவூராரின் காதில் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தபோது, ஒரு ராட்சஷி அங்கு நிற்பது கருவூராரின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. பக்திமார்க்கம் தழைப்பதை விரும்பாத அந்த ராட்சஷியைக் கொண்டு சிவபெருமான் ஏதோ ஒரு நாடகத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த கருவூரார், உடனடியாக  அவளை நோக்கி, ஏ பூதமே ! ஒழிந்து போ, என்று அøõ நோக்கி உமிழ்ந்தார். அவரது எச்சில் அனலாய் மாறி அவளைத் தகித்தது. அவள் சாம்பலாகி விட்டாள். பக்தர்கள், கருவூராரின் அசைவுகளையும் கோபக்கனல் பொங்கும் கண்களையும் கவனித்தார்கள். ஆனால், என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது லிங்கத்தை அஷ்டபந்தனம் சாத்தி பரதிஷ்டை செய்யுங்கள், என்று அர்ச்சகர்களிடம் சொன்னார் கருவூரார். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய, லிங்கம் தனது இடத்தில் அமர்ந்தது. மேலும், அதில் இருந்து வெளிப்பட்ட ஜோதி, கருவூராரின் நெஞ்சில் பாய்ந்தது. கருவூரார் இனம்புரியாத பரவசநிலைக்கு ஆளானார். ஒருமுறை தான் பிறந்த கருவூருக்கு அவர் சென்றார். அவ்வூர் மக்களில் பெரும்பகுதியினர் அவரது மகிமையை உணர்ந்து கொள்ளவில்லை. அவரை உதாசீனப்படுத்தினர். அவர் நிகழ்த்திய அற்புதங்களை சித்துவேலை என்று குற்றம் சாட்டினர். கருவூரார் மனம் வருந்திய போது போகர் அங்கு தோன்றினார். சீடனே ! கவலை கொள்ளாதே. சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் பிறரது சொல்லடிக்காக வருத்தும் கொள்ளக்கூடாது. அவர்கள் நம்மைத் தூற்றினாலும், நாம் அவர்களது  நன்மை கருதியே செயல்பட வேண்டும். மனம் தளராமல் உன் கடமைகளைச் செய், என்றார். குருவின் இந்த போதனையை ஏற்ற கருவூரார் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், நீங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். போனால் கிடைக்காதது காலம் மட்டுமே ! உங்களைத் தேடி எமதர்மன் எந்த நேரமும் வந்தது விடுவான். அதற்கும் வந்து கடமையை முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலைக் காக்க கல்ப சாதனை செய்யுங்கள் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். செல்வம்.... செல்வம் என அலையாதீர்கள். சம்பாதிக்க மட்டுமே நீங்கள் பிறக்கவில்லை. அப்படி சம்பாதிப்பதில் பயனும் இல்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களுடன் வரப்போவதில்லை. அம்பாள் மட்டுமே நிலையான செல்வம், என் போதிப்பார்.
இதை ஒரு சாரார் மட்டுமே ஏற்றுக்கொண்டார். பெரும்பாலானவர்கள் அவரைத் தொடர்ந்து விமர்சித்தனர். இந்த சாமியார் வேண்டாததை எல்லாம் மக்களிடம் சொல்கிறான். மக்களை சோம்பேறியாக்கப் பார்க்கிறான். உழைத்தால் தானே அந்த அம்பாளுக்கு கூட பூஜை செய்ய முடியும் ? வெறும் கை முழம் போடுமா ? சரியான வேஷக்காரன், என்றெல்லாம் திட்டித்தீர்த்தனர். ஆனால், போகரின் அறிவுரை தந்த மனஉறுதியால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. தனது மகிமையை நிரூபிக்க அவர் சில அதிசயங்களைச் செய்து காட்ட வேண்டியாதியிற்று. ஒரு கோடைகாலத்தில் மழை பெய்யச் செய்தார். அவ்வூர் அம்மன் கோயில் கதவைத் தானாகத் திறக்கச் செய்தார். இதையும், சித்து வேலை என்றே அவ்வூர் மக்கள் கூறவே, அவர்களைத் திருத்த முடியாது எனக்கருதிய கருவூரார், சில காலம் மட்டும் கருவூரில் தங்கியிருந்து விட்டு, அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். மக்களிடம் எவ்வளவோ எடுத்துக்சொல்லியும் அவர்கள் ஆன்மிகத்தின் பக்கம் வர மறுக்கின்றனர் என்ற ஆதங்கத்தை அம்பாளிடமே அவர் சொல்லி அழுதார். இதன் பிறகு அவர் திருக்கூருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரி பெருமாள் கோயிலுக்குச் சென்றார். அவ்வூர் பக்தர்களின் கனவில் தோன்றிய நாராயணன், தன் பக்தன் அங்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அவர்கள் ஊர் எல்லையில் கருவூராரை வரவேற்ற போது, பெருமாளின் லீலையால் தனக்கு கிடைத்த வரவேற்பை எண்ணி கருவூரார் பெருமைப்பட்டார். பின்னர் அவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று, சுவாமியின் பெரைச் சொல்லி இங்கே வா என மூன்று முறை அழைத்தார். நெல்லையப்பர் வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர், இவ்வூரில் இனிநெல் முறைக்ககூடாது, எருக்கஞ்செடி முளைக்கட்டும் என சாபமிட்டு விட்டு, அருகிலுள்ள மானூருக்கு சென்று விட்டார். தன் பக்தனை அதற்கும் மேலாக சோதிக்க விரும்பாத நெல்லையப்பர், அவரை நேரில் சென்று கோயிலுக்கு அழைத்து வந்தார். அவர் அங்கே வந்ததும் எருக்கங்காடு மறைந்து, வயல்களில் மறைந்திருந்த நெற்கதிர் வெளிப்பட்டது. பின்னர் கருவூரார் திருப்புடைமருதூர் என்ற தலத்திற்கு சென்றார். தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் ஆற்றைக் கடந்து கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அங்கு நின்றபடியே நாறும்பூ நாதா என்று சுவாமியின் பெயரைச் சொல்லி அழைத்தார். லிங்கள் சற்றே சாய்ந்து, அவரது இரலைக் கேட்டது. இப்போதும் இவ்வூர் லிங்கம் கருவறையில் சாய்ந்துள்ளது இறிப்பிடத்தக்கது. அதே ஊரிலுள்ள கஜேந்திர வரதப்பெருமாளையும் அவர் தரிசித்தார். பின்னர் திருச்சி அருகிலுள்ள திருவானைக்கவலுக்குச் சென்றார். அங்கே ஒரு பெண் இவரது வாழ்வில் குறுக்கிட்டாள்.
அவளது பெயர் அரபஞ்சி. அவள் ஒரு பொதுமாது. தனது இல்லத்திற்கு வரும்படி அவள், கருவூராரை அழைத்தான். மக்கள் செய்யும் தொழிலை மகான்கள் பார்ப்பதில்லை. எல்லோரையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பார்கள். சிறந்த தொழில் செய்யும் அனைவருமே நல்லவர்கள் என சொல்வதற்கில்லை. அதுபோல மோசமான தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அரபஞ்சியும் அந்த ரகம்தான். அவளது தொழில் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமான் மீது அவளுக்கு அளவு கடந்த பக்தி உண்டு. தங்கள் ஊருக்கு வரும் அடியவர்கள் தனது வீட்டிற்கு வர மாட்டார்களா என அவள் ஏங்குவாள். ஆனால், பொதுமாது தொழிலைச் செய்யும் பெண்ணின் வீட்டிற்கு யார்தான் வருவார்கள் ? கருவூராரோ அவளது இல்லத்திற்கு வர சம்மதித்தார். அவள் ஆனந்தக் கூத்தாடினாள். தனது இல்லத்தை மெழுகி, ரங்கநாதரின் படத்திற்கு தூபதீபம் காட்டி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பகல் முழுவதும் அவர் வரவில்லை. இரவாகி விட்டது. அரபஞ்சி மிகவும் சோர்ந்து போனாள். சித்தர் தன்னை ஏமாற்றிவிட்டாரோ அல்லது இரவுப்பொழுதில் அவரது ஒரு சாதாரண மனிதரைப் போல, தன்னிடம் நடந்து கொள்வாரோ என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தான். அவள் நினைத்தது போல, இரவு வெகுநேரம் கழித்து சித்தர் அவளது வீட்டிற்கு வந்தார். அவளுடன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர்களது பேச்சில் ஆன்மிகத்தை தவிர வேறு எதுவும் இடம்பெறவில்லை. விடிய, விடிய ஒரு மோசமான அனுபவத்தைச் சந்தித்த அரபஞ்சிக்கு அன்றைய இரவு நல்லிரவாக கழிந்தது. விடியும் வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். கருவூரார் அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினார். அப்போது ஒரு நவரத்தின மாலையை வரவழைத்து அவளுக்கு கொடுத்தார். அதை அன்புடன் பெற்றுக்கொண்ட அவள், நீராடிவிட்டு ரங்கநாதர் முன்னால் வைத்து வணங்கி அணிந்து கொண்டாள்.
அன்று காலையில் ஸ்ரீரங்கம் முழுவதும் களேபரமாக இருந்தது. ரங்கநாதரின் நவரத்தின மாலை தொலைந்துவிட்டதாம், களவு போய்விட்டதாம், கோயிலுக்குள் கொள்ளை நடந்திருக்கிறது.... இப்படி பலவாறாக மக்கள் பேசிகொண்டனர். கோயில் அதிகாரி அர்ச்சகர்களை அழைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அனைவரும் தங்கள் மீது எந்தக் குற்றுமும் இல்லையென்றும், தாங்கள் காலம் காலமாக ரங்கநாதருக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்வதைத் தவிர, வேறு எதுவும் அறியமாட்டோம் என்றும் கண்ணீர் வடித்தனர். அந்த நேரத்தில் அரபஞ்சி கோயிலுக்குள் பக்தி ததும்ப நுழைந்தாள். அவளது கழுத்தில் நவரத்தின மாலை ஒன்று மின்னியது. அர்ச்சகர்கள் மட்டுமின்றி, கோயில் அதிகாரியும் அதைக்கண்டு அசந்து போனார். அர்ச்சகர்களையும், ஊழியர்களையும் கடுமையான பார்வை பார்ததார். அவருடைய பார்வையின் பொருள் இதுதான். யாரோ ஒருவர், ரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்டிருந்த நவரத்தின் மாலையைத் திருடிச் சென்று அரபஞ்சியிடம் சந்தோஷமாக இருப்பதற்காக அவளுக்கு பரிசளித்திருக்கிறார்கள் என்பதுதான் ! அரபஞ்சியைக் கண்டதும் கோயில் ஊழியர்கள் அவளை இழுத்து வந்து, அதிகாரியின் முன்னால் நிறுத்தினர். அவர் அரபஞ்சியிடம் இந்த நவரத்தின மாலையை உன்னிடம் யார் கொடுத்தார்கள் ? என்று கேட்டார். அவள் மிகவும் அமைதியாக, நமது ஊருக்கு வந்திருக்கும் கருவூர் சித்தர் பெருமான் இதை எனக்குத் தந்தார். அவரது பேரருளால் கிடைத்த இந்த மாலையை நான் பிரசாதமாகக் கருதி அணிந்திருக்கிறேன், என்றாள். அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது. அவரைப் பழிக்காதே ! அவர் பெரிய மகான். அவரைப் போன்றவர்கள் உன் வீட்டின் பக்கம்கூட எட்டிப்பார்க்க மாட்டார்கள். உண்மையைச் சொல் ! எனக் கண்டித்தார். அரபஞ்சியோ தனது பதிலில் உறுதியாக இருந்தாள். வேறு வழியின்றி கருவூர் சித்தரை விசாரணைக்கு அழைக்கும்படியான நிர்பந்தத்திற்கு அதிகாரி ஆளானார். கருவூராரை காவலர்கள் அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடந்தது. அதிகாரியோ ! அரபஞ்சி சொல்வது உண்மைதான். நேற்றிரவு நான் அவளது வீட்டில்தான் இருந்தேன். ரங்கநாதப்பெருமான் என்னிடம் அவரது நவரத்தின மாலையைக் கொடுத்து, தனது பக்தையான அரபஞ்சியிடம் ஒப்படைக்கச் சொன்னார், அதையே நான் செய்தேன், என்றார் அனைவரும் சிரித்தனர். சித்தரின் பேச்சை யாரும் நம்பவில்லை.
சித்தரிடம் அதிகாரி, கருவூராரே ! நீர் சொல்வது உண்மையானால், அதை அனைவர் முன்னிலையிலும் நிரூபிக்க வேண்டும், என்றார். கருவூரார் சற்றும் தயங்காமல், ரங்கநாதா... ரங்கநாதா.. இங்கிருப்பவர்களுக்கு உண்மையை சொல், என்று கூவினார். அப்போது அசரீரி எழுந்தது.கருவூரான் சொல்வது உண்மைதான். அரபஞ்சி எனது ஆத்ம பக்தை. அவளுக்கு நானே எனது ரத்தின மாலையை கருவூரான் மூலமாக அனுப்பிவைத்தேன், என்று சொல்ல அடங்கியது.அனைவரும் ரங்கநாதப் பெருமானை துதித்ததுடன் கருவூராரிடமும், அரபஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு கருவூரார், தான் பிறந்த கருவூருக்குச் சென்றார். அவரது செல்வாக்கு கண்டு பொறாமை கொண்டிருந்த அவ்வூர் மக்களில் சிலர், அவரது பெரைக் கெடுக்க எண்ணினார். இதற்காக மன்னனிடம் சென்று, கருவூராரின் வீட்டில் மது வகைகள் இருப்பதாகவும், அவர் எந்நேரமும் போதையில் திரிவதாகவும் புகார் கூறினர். மன்னன் காவலர்களை அனுப்பி சோதனை செய்தான். கருவூராரின் வீட்டில் பூஜைப் பொருட்களைத் தவிர எதுவுமே இல்லை. புகார் சொன்னவர்களை அழைத்த மன்னன், அவர்களைக் கடுமையாகக் கண்டித்தான். கருவூராரை வரவழைத்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான். ஆனாலும், கருவூரார் மீது கொண்ட பொறாமையால், அவரைக் கொலை செய்ய சிலர் முடிவு செய்தனர். ஆயுதங்களுடன் அவரது வீட்டிற்குச் சென்றனர். இப்படிப்பட்ட மக்களின் மத்தியில் கருவூராருக்குப் பிடிக்கவில்லை. அவர் அந்த மக்களுக்குப் பயந்து ஓடுவது போல நடத்தார். அவ்வூரிலுள்ள ஆனிலையப்பர் கோயிலுக்குள் சென்று சிவலிங்கத்தை அணைத்து கொண்டார். கோயில் என்றும் பாராமல், கொலைகாரர்கள் அங்கும் நுழைந்தனர். அப்போது அவர்களின் கண்முன்னாலேயே கருவூரார் லிங்கத்துடன் ஐக்கியமாகிவிட்டார். இதுகண்டு கொலைகாரர்கள் மனம் திருந்தினர். அவரது சக்தியை எண்ணி வியந்தனர்.


பாம்பாட்டி சித்தர்



மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறான். இப்போது, நம் பாம்பினத்திற்கே பெருமை தரும் வகையில் ஒளிவீசும் நவரத்தினங்களை உள்ளடக்கிய ரத்தினப் பாம்பைப் பிடிக்க வருகிறான். அது மட்டும் அவனிடம் சிக்கி விட்டால், அவன் இந்த உலகத்திலேயே பெரிய செல்வந்தனாகி விடுவான். மன்னாதி மன்னரெல்லாம் கூட அவனிடம் சரணடைந்து விடுவார்கள், என்றது. எல்லாப்பாம்புகளும் வருத்தப் பட்டதே ஒழிய, அந்த இளைஞனுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடத் தயங்கின. இவை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, காலடி ஓசை கேட்டது. தங்கள் உணர்வலைகளால், வருபவன் அந்த இளைஞனே என்பதை உணர்ந்து கொண்ட பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஓடின. பாம்புகளின் தலைவனும் உயிருக்கு அஞ்சி எங்கோ சென்று மறைந்து கொண்டது. இப்படி பாம்புகளையே கலங்கடித்த அந்த இளைஞனுக்கென பெயர் ஏதும் இல்லை. பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி ஆடச்செய்பவன் என்பதால், பாம்பாட்டி என்றே அவனை மருதமலை பகுதி மக்கள் அழைத்தனர். அந்த இளைஞனே பாம்பாட்டி சித்தர் என்ற பெயரில் பிற்காலத்தில் மக்களால் வணங்கப்பட்டார்.
அவர் திருக்கோகர்ணம் என்னும் புண்ணிய தலத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத்தலம் கர்நாடக மாநிலத்தின் உட்பகுதியில் இருப்பதாகவும், ஒரு சாரார், அவர் அங்கே பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் புதுக்கோட்டை நகர எல்லையிலுள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் பிறந்த ஊர் பற்றிய ஆதாரம் சரியாக இல்லை.இவர் இளைஞராக இருந்த காலத்தில் தான் பாம்புகளைப் பிடித்து அவற்றின் நாக ரத்தினங்களை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டு மருந்து தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது, நவரத்தின பாம்பு பற்றிக் கேள்விப் பட்டு, அதைப் பிடித்து அதனுள் இருக்கும் ரத்தினங்களை எடுத்து விற்றால், உலகத்தின் முதல் பணக் காரராகி விடலாம் என்ற எண்ணம் கொண்டார்.அவர் தான் இப்போது காட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்.பாம்புகள் மறைந்து ஓடின. அப்போது ஓரிடத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. ஆஹா....நவரத்தின பாம்பு தான் அவ்விடத்தில் மறைந்திருக்கிறது. அது தன் உடலை முழுமையாக மறைக்க முடியாததால், அதன் உடல் ஒளிவீசுகிறது என பாம்பாட்டி சித்தர் நினைத்துக் கொண்டார். ஆனால், ஒளி வெள்ளம் சற்று மங்கி, அவர் முன்னால் ஒரு மனிதர் நின்றார். அவரிடம், மகானே! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் பிரகாசிக்கிறதே. ஒருவேளை நான் தேடி வந்த பாம்பாக இருந்த நீங்கள், என்னிடம் சிக்காமல் இருக்க மனித உருவம் கொண்டீர்களோ! என்றவர், அவரது தேஜஸைப் பார்த்து, தன்னையும் அறியாமல் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்த மகான் பாம்பாட்டி சித்தரை ஆசிர்வதித்தார். இளைஞனே! நீ இந்த சாதாரண பாம்புகளைப் பிடிப்பதற்காகவா இந்த உலகத்தில் பிறந்தாய். உன் பிறப்பின் ரகசியமே வேறு. நீ தேடி வந்த செல்வத்தின் அளவு பெரியது தான்.
செல்வமே உலகத்தை ஆட்டிவைக்கும் கருவி என நீ நினைக்கிறாய். எல்லா மக்களுமே இப்படி நினைப்பதால், நீயும் நினைப்பது இயற்கையே. எனவே, சாதாரண செல்வத்தை தேடி இங்கு வந்திருக்கிறாய், என்றவரை இடைமறித்த பாம்பாட்டி சித்தர், சுவாமி! தாங்கள் யார்? தங்கள் உடலே பொன்போல் மின்னுகிறதே, என்றார்.மகனே! உடலைக்கூட பொன்னாகக் கருதி பார்க்கும் அளவுக்கு, உன் மூளையில் செல்வம் தேடுவதின் தாக்கம் தெரிகிறது. சரி...இந்த உடல் என்றாவது அழியத்தானே போகிறது. அப்போது அது தீயில் கருகியோ, மண்ணில் நைந்தோ உருத்தெரியாமல் போய்விடுமே. அப்போது பொன்னை எங்கே தேடுவாய், என்றார்.அவரது அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதைத் தொட்டன.சுவாமி! இந்த அரிய உபதேசத்தை செய்த தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளும் தகுதியுடையவனா? என பாம்பாட்டியார் பணிவுடன் கேட்டதும், அவனது மனம் செல்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்பதை வந்தவர் உணர்ந்து கொண்டார்.மகனே! நான் தான் சட்டைமுனி சித்தர். இந்தக் காடுகளில் வசிக்கிறேன். நீ நவரத்தின பாம்பைத் தேடி வந்துள்ளதை நான் அறிவேன். அந்தப்பாம்பு உனக்கு பல லட்சம் கோடி தங்கம் வாங்குமளவு செல்வத்தைத் தரும். அதனால் அதை ஆட்டி வைக்க வந்துள்ளாய். ஆனால், அதையும் விட உயர்ந்த பாம்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? என்றதும், பாம்பாட்டியாரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.அப்படியா? அப்படியும் ஒரு பாம்பினம் இருக்கிறதா? அப்படியானால், எனக்கு இந்த சாதாரண நவரத்தின பாம்பு வேண்டாம். தாங்கள் சொல்லும், அந்த உயரிய இனமே வேண்டும், என்ற பாம்பாட்டியாரிடம், அப்படியா! அந்தப் பாம்பு உன் உடலுக்குள்ளேயே இருக்கிறது, என்றார் சட்டைமுனி.இதைக் கேட்டு ஆ...வென மலைத்து விட்டார் பாம்பாட்டியார்.
சுவாமி! தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. மனிதர்களின் உடலுக்குள் எப்படி பாம்பு இருக்கும்? பாம்பாட்டியார் சந்தேகம் எழுப்பினார். சட்டைமுனி அவரிடம், மகனே! உன்னுள் மட்டுமல்ல. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடமும் இந்தப்பாம்பு இருக்கிறது. அதன் பெயர் குண்டலினி. அந்த பாம்பை நீ ஆட்டுவித்தால் போதும். உன்னிலும் உயர்ந்தவர் யாரும் இருக்க முடியாது. அதை மட்டும் நீ அடக்கிவிட்டால், மாபெரும் சித்தனாகி விடுவாய். சித்தர்களுக்கு உலகப்பொருள்கள் மீது ஆசை வருவதில்லை. அவர்களால் தங்கத்தையே உருவாக்க முடியும். ஆனால், அதைத் தாங்கள் பயன்படுத்தாமல், உலக நன்மைக்காக பயன் படுத்துவர். அப்படிப்பட்ட மனப் பக்குவத்தை தருவதே குண்டலினி. உலகத்தில் உள்ள எல்லாருமே பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால், நிஜமான செல்வம் உன் உடலுக்குள் இருக்கிறது. அதைத் தேடு, என்றார். பாம்பாட்டியார் அவரது உபதேசத்தை ஏற்றார். சுவாமி! தாங்கள் சொல்வது இப்போது எனக்கு விளங்குகிறது. செல்வத்தை அடைந்து தனியொரு மனிதனாக ஆட்சிசெய்வதில் இல்லாத சந்தோஷம், தாங்கள் சொல்லும் குண்டலினியை எழுப்புவதன் மூலம் கிடைக்குமென நம்புகிறேன். தங்கள் உபதேசப்படி நடப்பேன், என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். செல்வமே பெரிதெனக் கருதிய ஒருவன், தன் கருத்தை ஏற்று, உடனடியாக தன்னைச் சரணடைந்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்த சட்டைமுனி, மகனே! உடலுக்குள்  குண்டலினி என்னும் சக்தி பாம்பு போல தொங்கிக் கொண்டிருக்கும். இந்தப் பாம்பு எப்போதுமே தூங்கிக் கொண்டிருக்கும். இது தூங்குவதால் தான் மனிதன் உலக வாழ்க்கை நிரந்தரமென எண்ணி, அறியாமையில் மூழ்கித்தவிக்கிறான். இதை தட்டி எழுப்ப வேண்டுமானால், தெய்வசிந்தனை எந்நேரமும் இருக்க வேண்டும். அப்போது அந்தப் பாம்பு விழிக்கும். நமது ஜீவனுக்குள் அது அடைக்கலமாகும். அப்போது, உனக்குள் இருக்கும் ஆத்மா இது தான் உலகம், இது தான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொள்ளும். அப்போது, நீ தேடியலையும் பொருள் தரும் ஆனந்தத்தை விட பேரானந்தம் உனக்கு கிடைக்கும், என்றார்.
பாம்பாட்டியார் சட்டைமுனிவரின் பேச்சைக் கேட்டு பரவசமடைந்தார்.சித்தரே! இப்படி ஒரு அரிய உபதேசத்தை வழங்கி, என்னை அறிவீனத்தில் இருந்து மீட்ட தாங்களே எனது குருநாதர். தாங்கள் சொன்ன சொல்படி நடப்பேன். இது உறுதி, என்றார் பாம்பாட்டியார். அவரது மனஉறுதி கண்டு மகிழ்ந்த சட்டை முனிவர் பாம்பாட்டியாருக்கு அருள்வழங்கி, மகனே! நீ பாம்பாட்டியே பிழைத்ததால், அந்த  பெயரே உனக்கு நிலைத்து விட்டது. இனி உலகமக்கள் உன்னை பாம்பாட்டி சித்தர் என வழங்குவர் எனச்சொல்லி விட்டு மறைந்து விட்டார். இதன்பிறகு, அஷ்டமாசித்திகள் எனப்படும் கூடுவிட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட அனைத்து சித்து வேலைகளும் பாம்பாட்டி சித்தருக்கு கைவந்த கலையாயின. குண்டலினியை தட்டி எழுப்பும் வகையில் கடும் தியானங்களிலும் அவர் ஈடுபட்டார். பின்னர், தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் ரசவாதம் எனப்படும் வித்தை அவருக்கு தெரிந்தது. நவரத்தினக் கற்களைத் தேடி ஓடிய காலம் போய், அவர் வெறும் கற்களைத் தொட்டாலும் அவை நவரத்தினங்களாக மாறின. அதனால் தனக்கு என்ன பயன் என்று, அவற்றை வீசிவிட்டார். வானத்தில் நடந்து செல்லும் பயிற்சியும் அவருக்கு கிடைத்து விட்டது. ஒருமுறை அவர் வானத்தில் நடந்து சென்ற போது, ஒரு அரண்மனையைக் கண்டார். அந்நாட்டு  அரசன் இறந்து விட்டதால், மகாராணி தன் கணவனின் உடலில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தாள். ஊரே சோகமயமாக இருந்தது. அப்போது வானத்தில் இருந்தபடியே இறந்துபோன ஒரு பாம்பை மன்னனை சுற்றிநின்ற மக்களின் கூட்டத்தில் வீசினார் பாம்பாட்டி சித்தர். கூட்டத்தினர் அலறி அடித்து ஓடினர். ஆனால், ராணி மட்டும் மிரளவில்லை. அவள் அங்கேயே நின்றாள். அப்போது, பாம்பாட்டி சித்தர் தன்னை மறையச்செய்து, மன்னனின் உடலுக்குள் புகுந்தார். இறந்து கிடந்த மன்னன் உருவில் சித்தர் எழுந்து நின்றார். ராணிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரை அணைத்துக் கொள்வதற்காக வேகமாக அவரருகில் சென்றாள். மன்னன், வடிவிலுள்ள சித்தரோ, அவளைத் தடுத்து விட்டார். அவர் இறந்து கிடந்த பாம்பின் அருகில் சென்று, பாம்பே எழுந்திரு, என்றார். அது உயிர் பெற்றது. மகிழ்ச்சியுடன் தனது கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தது. அதை தடுத்து நிறுத்திய மன்னர், பாம்பே! நீ வாழும் காலத்தில் உன் கூட்டம் எந்தளவுக்கு உன்னை அவமானம் செய்தது? ஆனாலும், உயிர் பெற்றதும் உன் கூட்டத்தை தேடி ஓடுகிறாயே! இந்த உலக வாழ்வில் அப்படி என்ன சுகத்தைக் கண்டுவிட்டாய்? என்றார்.
இதைக் கண்ட ராணியும், அமைச்சர்களும் இறந்தவர் உயிர் பிழைத்து எழுந்ததால் இவருக்கு சித்தசுவாதீனம் இல்லாமல் போய்விட்டதோ! அதே நேரம், இறந்த பாம்பை இவர் உயிர் பிழைக்க வைத்தது எப்படி? என்று குழம்பிப் போனார்கள். அரசிக்கு ஒரு சந்தேகம்.மன்னர் சாகும் முன்பு, நான் ஒருத்தி போதாதென்று, ஏராளமான பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சிற்றின்பத்திலேயே மூழ்கிக்கிடப்பார். பணம் வரி கிஸ்தி என எந்நேரமும் செல்வத்தின் நினைப்பிலேயே கிடப்பார். இப்போதோ, ஓடுகிற பாம்பை நிறுத்தி, உலக வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என தத்துவம் பேசுகிறார். இதென்ன குழப்பம், என அதிர்ந்து நின்றாள். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தர் பாட ஆரம்பித்தார். நாடும், வீடும், மனைவியும், உறவும் உயிர் போன பிறகு கூட வராது என்ற பொருளில் அவரது பாடல் அமைந்தது. நான் மனதில் நினைத்தது இவருக்கு எப்படி தெரிந்தது? நம் எண்ணத்திற்கு தக்க பதில் போல் இந்தப் பாடல் இருக்கிறதே என அவள் மேலும் அதிர்ச்சியடைந்தாள். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, மன்னரே! தாங்கள் எப்படி உயிர் பெற்றீர்கள்? இங்கு நான் காண்பது கனவா, நிஜமா? எனக்கேட்டாள். அதற்கு மேலும் அங்குள்ள மக்களை குழப்ப விரும்பாத சித்தர், மகாராணி! உன் கணவனின் உடலில் புகுந்திருக்கும் என் பெயர் பாம்பாட்டி சித்தர். நீ மன்னனைப் பிரிந்த துயரத்தில் அழுதாய். இறப்பு சாதாரண மான ஒன்று. அது நிச்சயம் எனத்  தெரிந்த பிறகும், இறந்தவர்களுக்காக அழக்கூடாது என்பதை உனக்கும், உலகுக்கும் அறிவிக்கவே இந்த விளையாடலைச் செய்தேன், என்றார்.சித்தரின் உண்மை மொழிகளால் ராணி மனம் தேறினாள்.பின்னர் மன்னனின் உடலில் இருந்து விடுபட்டார் சித்தர். மன் னனின் உடல் மீண்டும் சாய்ந்தது.இப்படி உலகுக்கு அளப்பரிய தத்துவத்தை தந்த பாம்பாட்டி சித்தர், மருதமலையில் சித்தியடைந்தார் என்றும், விருத்தாச்சலம் அருகிலுள்ள பழமலையில் என்று சிலரும், துவாரகையில் அவர் சித்தியடைந்ததாகவும் கூறுகிறார்கள்.


தேரையர்



தலையைப் பிளந்து  அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.
அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது.
ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.சுவாமி! இந்த வலிக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சொல்லி அருளுங்களேன் என்றான் மன்னன்.அது உனக்கெதற்கு? வியாதியஸ்தனுக்கு மருந்தும் சுகமும் தானே தேவை. நீ புறப்படு, என்றவரிடம், மன்னன் மிகவும் பணிவுடன் கேட்டான். மன்னா! சொல்ல வேண்டாம் என நினைத்தேன். சொல்ல வைத்து விட்டாய். உன் தலைக்குள் தேரை ஒன்று இருக்கிறது, என்றார். தேரை என்பது தவளை வகையில் ஒன்று. தேரையா! அதெப்படி தலைக்குள் நுழைய முடியும், என்று மன்னன் கேட்கவே, நீ தூங்கும்போது, உன் மூக்கின் வழியாக குஞ்சு ஒன்று நுழைந்திருக்க வேண்டும். அது தலையை இப்போது அடைந்ததால், வலி வந்திருக்கிறது, என்றதும், மன்னன் அதிர்ந்தான். சுவாமி! என்னால் நம்பவே முடிய வில்லையே. இப்படி ஒரு கொடிய நிலைமையா எனக்கு? தலைக்குள் இருக்கும் தேரையை எப்படி வெளிக்கொண்டு வர முடியும்? என்று பதட்டப்பட்டு கேட்ட மன்னனிடம், பயப்படாதே. நாளை உனக்கு கபால சிகிச்சை செய்யப் போகிறேன். உன் தலையைப் பிளந்து, உள்ளிருக்கும் தேரையை எடுக்க முயற்சிக்கிறேன், என்ற தேரையரை இடைமறித்த அரசன், ஐயோ சுவாமி! தலையை உடைத்த பின் எப்படி என் உடலில் உயிர் தங்கும்? என உடல் வெடவெடக்க கேட்டான்.
அகத்தியர் அவனைத் தைரியப் படுத்தினார். மன்னா! தலையைப் பிளக்கவும், அதை மூடவும் என்னிடம் மூலிகைகள் உள்ளன. இதனால் உனக்கு வலி தெரியாது. மேலும், சில மூலிகைகளைக் கொடுத்து உன்னை மயக்கமடையச் செய்து விடுவேன். என்ன நடக்கிறது என்பதை நீ அறியமாட்டாய். என்னிடம் வைத்தியம் பார்க்க வந்த எவரும் இதுவரை குணமாகாமல் திரும்பியதில்லை, என்றார். அகத்தியரின் தெய்வசக்தியை மன்னனும் அறிவான். எனவே, அவன் சிகிச்சைக்கு சம்மதித்தான். அகத்தியர் மன்னனின் மூக்கருகே ஏதோ ஒரு மூலிகையை நீட்டினார். அதன் வாசனைபட்டதுமே, மன்னன் படிப்படியாக மயக்கநிலையில் ஆழ்ந்தான். ஏதோ ஒரு மூலிகையை எடுத்து அரைத்து மன்னனின் தலையில் தடவிய அகத்தியர், அவனது தலையின் ஒரு பகுதியை பவ்யமாக உடைத்து திறந்தார். என்ன அதிசயம்! மன்னனின் மூளையில் ஒரு தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. அது மிரள மிரள விழித்தது. இதை எப்படி வெளியேற்றுவது...கை படக்கூடாது. ஏதாவது குச்சியால் தட்டினால் அது ஏதாவது ஒரு இடத்தில் போய் பதுங்கிக் கொண்டால், பின்னர் மன்னனின் உயிருக்கு ஆபத்தாகி விடும்! வைத்திய மாமேதையான அகத்தியரே கலங்கி விட்டார். இந்த சமயத்தில், அருகில் நின்ற தேரையர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். மன்னன் தலையருகே வைத்து, கைகளை தண்ணீருக்குள் விட்டு அளைந்தார். தண்ணீரின் சல சல சத்தம் கேட்ட தேரை தலையில் இருந்து குதித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது. உடனே பாத்திரத்தை அங்கிருந்து அகற்றி விட்டார் தேரையர். தன் சிஷ்யனின் அபார அறிவு திறனை அகத்தியர் பாராட்டினார். தேரையா! தன்னைச் சார்ந்தவனுக்கு இக்கட்டான நிலையில் கை கொடுப்பவனே உலகில் உயர்ந்தவன். நீ செய்த காரியத்தால், என் மானமும், மன்னனின்  உயிரும்காப்பாற்றப்பட்டன. என் மருந்துப்பெட்டி யிலுள்ள சந்தானகரணி மூலிகையை எடு, என்றார். சந்தானகரணியை எடுத்த தேரையர், குருவே! இதன் குணம் என்ன? என்றார். உடைந்த தலையை ஒட்டவைக்கும் அரியவகை மூலிகை இது, என்ற அகத்தியர் அதன் சாறைப் பிழிந்து தலையில் ஊற்றினார். சிறிது நேரத்திலேயே தலை ஒட்டிக்கொண்டது.
அகத்தியரே இந்த சிகிச்சையை செய்தார் என்றாலும் கூட, தேரை வெளியேற தேரையரே காரணமானார். தேரையுடன் சம்பந்தப்பட்டவர் என்பதால் தான் இவருக்கு தேரையர் என்ற பெயரே ஏற்பட்டது. இன்னொரு சமயத்திலும் அகத்தியருக்கு பெரும் உதவி செய்தார் தேரையர். அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.
ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார். அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன்.  நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார்.
குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய்யுமளவுக்கு தகுதி பெற்று விட்டாய். அதனாலேயே உன்னை வெளியே அனுப்புகிறேன். கடந்த வாரத்தில், உன் கைங்கர்யத்தால் காட்டில் இருக்கும் முனிவர் ஒருவரின் வயிற்று வலி நீங்கியது! என்றார். ஆம்...மன்னனுக்கு கூன் நிமிர்ந்த பிறகு, தீராத வயிற்றுவலி இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு முனிவர் அகத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். அதி அற்புதமான திரவ மருந்தொன்றை அவருக்கு கொடுத்த அகத்தியர், பத்திய முறைகளின் படி இதைச் குடித்து வர, வலி பறந்தோடி விடும் என சொல்லி விட்டார். அகத்தியரின் மருந்துக்கு மறுமருந்து உண்டா? முனிவரும், அதை குடித்தார். உஹும்...வலி தீரவில்லை.இரண்டு நாள் கழித்து முனிவர், தன் சீடன் ஒருவனை அகத்தியரிடம் அனுப்பினார். அவன் அகத்தியரிடம் வந்து, அகத்திய சித்தரே! தங்கள் மருந்தாலேயே எங்கள் குருவின் வியாதியைக் குணப்படுத்த முடியவில்லை என்றால், இனி யாரால் மருந்து தர இயலும்? குரு வயிற்றுவலி தாளாமல், இன்னும் பிதற்றிக் கொண்டிருக்கிறார், என்றான். அகத்தியருக்கு ஆச்சரியம். சரியான மருந்தைத் தானே கொடுத்தேன். சரி.. சரி... உன்னோடு, தேரையனை அழைத்துச் செல். அவன் என்ன ஏதென்று பார்ப்பான், எனச்சொல்லி தேரையரை அனுப்பி வைத்தார். தேரையர் அங்கு சென்று முனிவரைச் சோதித்தார். கொருக்கை என சொல்லப்படும் குச்சியை எடுத்தார். அந்தக் குச்சியின் நடுவில் துவாரம் இருக்கும். அதாவது, இப்போது நாம் குளிர்பானம் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்டிரா போல! அதன் மூலமாக, அகத்தியர் கொடுத்த அதே மருந்தை உறிஞ்சி குடிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! வலி உடனே பறந்து விட்டது.
தேரையர் மகிழ்ச்சியுடன் ஆஸ்ரமத்துக்கு வந்து, அகத்தியரிடம் நடந்ததைச் சொன்னார். அகத்தியர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் பெயரைக் காப்பாற்றினாய், என்று சொல்லி பாராட்டினார். இப்படி அகத்தியர் பல மருந்துகளைக் கண்டுபிடிக்க, அதைப் பயன்படுத்தும் வித்தையை தேரையர் பல்வேறு விதங்களில் கையாள...பல நோயாளிகள் பயன் பெற்றனர். இந்தக் காரணத்தாலேயே அகத்தியர், தேரையரை வெளியில் அனுப்ப உத்தேசித்தார். இந்தக் காலத்தில் தொழில் தெரிந்த ஒருவர், தன்னைப் போலவே ஒருவர் அதே தொழிலைச் செய்ய முற்படுகிறார் என்றால், அவரை எப்படி கவிழ்க்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்து விடுவார். ஆனால், மகான்கள் பிறர் நன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.குருவின் கட்டளையை ஏற்று தேரையரும் கிளம்பி விட்டார். அகத்தியர் இருந்த இடத்தை விட்டு வெகு தொலைவிலுள்ள காட்டுக்குச் சென்றார். அங்கு பல முனிவர்களுக்கு வைத்தியம் செய்து அவர்களின் பிணி நீக்கினார். இந்நிலையில், பாண்டியநாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தங்களுக்கு தங்கம் கிடைத்தால், அதை வேற்று நாட்டவரிடம் விற்று, உணவுப் பொருள் வாங்கிக் கொள்வதாக மக்கள் தேரையரைச் சந்தித்துக் கூறினார்.தேரையரும் தங்கம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் அமைத்த பட்டறைகளில் இருந்து எழுந்த புகை, அப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களுக்கு இடைஞ்சலைக் கொடுத்தது. அவர்களில் சிலர், அகத்தியரிடம் வந்து, உங்கள் சீடன் செய்த காரியத்தால், எங்கள் தியானம் கலைந்தது என புகார் செய்தனர். அகத்தியருக்கு கடும் கோபம். தேரையரை வரவழைத்தார். அவரிடம் பேசக்கூட இல்லை. இரண்டாக அவரைக் கிழித்தார். தேரையரின் உயிர் பறந்து விட்டது. தேரையர் தன் சீடர்களுக்கு முன்கூட்டியே, இப்படி ஒரு நிலை வந்தால், உடலை ஒட்ட வைத்து மீண்டும் உயிரூட்டும் கலையைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி தேரையரை உயிர் பெறச் செய்து விட்டனர் சீடர்கள். அதன்பின் அகத்தியருக்கு பயந்து தலைமறைவாக இருந்தார் தேரையர். சீடனின் திறமையையும், சமயோசிதத்தையும் கேள்விப் பட்டு மகிழ்ந்தார். ஆண்டுகள் ஓடின. அகத்தியருக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது. அவர் சீடர்களை அழைத்து, தேரையனை மருந்துடன் வரச்சொல்லுங்கள். அவன் வந்தால் தான் எனக்கு கண் குணமாகும், என்றார். சீடர்களும் பல மைல் தூரம் சென்று, தேரையரை அழைத்து வந்தனர். தேரையர் தன் குருநாதரின் கண்களில், ஒரு மூலிகையைப் பிழிந்து விட, கண் முன்பை விட தெளிவாகத் தெரிந்தது. தன் சீடனை அப்படியே அணைத்துக் கொண்டார் அகத்தியர். தேரையா! நீ முன்னிலும் தேறி விட்டாய். உன்னை நான் கொன்றும் கூட, புத்திசாலித் தனத்தால் உயிர் பெற்றாய். என்னை பழி வாங்க எண்ணாமல், தக்க வைத்தியம் செய்தாய். உயிர் போகும் அளவிலான துன்பம் செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்பவனே உலகில் உயர்ந்தவன். அத்தகைய நற்குணத்தை நீ பெற்றுள்ளாய். நீ கண்டுபிடித்த மருத்துவக்குறிப்புகள் வீண் போகக்கூடாது. அவற்றை ஒரு நூலாக எழுதி வை. எதிர்கால வைத்தியர்கள் உன்னை தலைதலைமுறையாக வாழ்த்துவர், என்றார்.தேரையரும், 21 நூல்களை எழுதினார். பலகாலம் வாழ்ந்த அவர், முன்பு கேரளத்தில் இருந்ததும், தற்போது தமிழகத்தில் தென்காசி அருகில் உள்ளதுமான தோரணமலையில் சமாதியானதாக ஒரு குறிப்பு கூறுகிறது.


இடைக்காடர்



நவக்கிரகங்களில் குருவைத் தவிர அனைவரும் பதறிப் போனார்கள். நாம் சரியான இடத்தில் தானே நேற்றிரவு படுத்திருந் தோம், இன்று இடம் மாறியிருக்கிறோம். எப்படி இது நிகழ்ந்தது? நமது மாறுபாட்டான நிலையால், கொடும் பஞ்சம் சம்பவிக்க வேண்டிய ஒரு மாமாங்க காலத்தின் நடுப்பகுதியிலேயே, மழை கொட்டிக் கொண்டிருக்கிறதே! இனி நாம் முந்தைய நிலையை அடைந்தாலும், மழை நிற்குமா? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.குரு சிரித்தார்.கிரகங்களே! நீங்கள் பேசுவது நகைப்புக்குரியதாய் இருக்கிறது. நாம் ஒருமுறை இடம் மாறி விட்டால், குறிப்பிட்ட காலம் வரை அதே இடத்தில் தான் சஞ்சரிக்க முடியும் என்ற விதியைக் கூட மறந்து விட்டீர்களா? விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதான்! இந்த விளையாட்டுக்கு காரணமானவர் யார் தெரியுமா? இடைக்காடர்... ஆம்... நேற்று வரை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர், இன்று மாபெரும் சித்தர். சிவனருள் பெற்றவர். அவரது மதி பலம் மட்டுமல்ல... நமக்கெல்லாம் படியளக்கும் சிவபெருமான் மீது அவர் கொண்டிருக்கும் பக்தியும் இதற் கொரு காரணம், என்றதும், ஆ... என வாயைப் பிளந்த கிரகங்கள், ஆடு மேய்த் தவர் சித்தரானது எப்படி? குருதேவா! எங்களுக்கு விளக்கியருள வேண்டும்? என்றனர். குரு இடைக்காடரின் வரலாறை விவரித்தார். இடைக்காடர், காஞ்சிபுரம் அருகிலுள்ள இடையன் மேட்டைச் சேர்ந்தவர் என்று ஒரு சாராரும், சிவகங்கை அருகிலுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எப்படியிருப்பினும், ஊரின் பெயரே இவருக்கு நிலைத்திருக்கிறது. இவரது தந்தை நந்தக்கோனார், தாய் யசோதா. இந்தப் பெயர் களைக் கொண்டு, இவரைப்பெருமாளின் ஒரு அம்சம் என்று கூறுபவர்களும் உண்டு.
கண்ணன் பசுக்களை மேய்த்தார், இவரே ஆடுகளை மேய்த்தார். கல்வியறிவு அறவே இல்லை. இந்த ஆடுகள் அங்குமிங்கும் பாய்கின்றனவே! தனக்கு வரும் ஆபத்தை உணராமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, முன்னால் செல்ல துடிக்கின்றனவே! இவற்றின் மந்தபுத்தியால், இவை தனக்கும், பிறருக்கும் சிரமத்தைத் தருகின்றனவே! ஓ...ஆண்டவனே! இந்த ஆடுகளின் ஸ்பாவத்தைப் போலவே தானே, உன்னைப் போன்ற மனிதர் களின் ஸ்பாவமும் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறாயோ! மனிதன் கடவுளுக்கு பயப்படவா செய்கிறான்? ஆடுகளைப் போல குறுக்கு வழியில் முன்னேறத்தானே நினைக்கிறான்! இந்த ஆடுகளை நான் நல்வழிப்படுத்தி, அவரவர் வீட்டில் ஒப்படைப்பது போல, மனித ஜீவன்களையும் ஒழுங்குபடுத்தி, உன்னிடம் ஒப்படைக்கத்தான் எனக்கு இந்தப் பிறவியைத் தந்துள்ளாயோ! படிப்பில்லாவிட்டாலும் கூட, இடைக்காடரின் மனதில் ஆழ்ந்த ஞானத்தைத் தரும் இந்தக் கேள்வி எழும்பியதும், இதற்கு விடை தேடி அலைந்தார். ஆடுகளை ஓரிடத்தில் மேயவிட்டு, கோலை ஊன்றி, ஒற்றைக்காலை உயர்த்தி, தவ நிலையில் இருப்பார். சிவபெருமானே! என் கேள்விக்கு விடை வேண்டும், இந்த சமூகத்தை நான் ஒழுங்குபடுத்த வேண்டும். கல்வி எனக்கில்லை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அது அவசியமும் இல்லை. எனக்கு, மனித வாழ்வின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியைக் கொடு, இந்த சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் உபாயத்தைச் சொல்,.... இப்படி அன்றையப் பொழுது முழுவதும் பல மாதங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள், அவர் முன்னால் அதிபயங்கர மின்னல் போன்ற பிரகாசமான ஒளி வீசியது. அது இடைக்காடரின் உடலில் பாய்ந்தது. இடைக் காடருக்கு ஏதோ தனக்குள் மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது அசரீரி ஒலித்தது. சேவை... சேவை... சேவை... இதுவே மனிதன் என்னை அடைவதற்கான வழி...பிறருக்கு சேவை செய். அதற்குரிய உபாயத்தைக் காண். மகனே! இதோ, ஞானநூல்கள் அனைத்தையும் கற்ற பெருமைக்குரியவர்களின் வரிசையில் உன்னையும் சேர்க்கிறேன்.
நீ இன்று முதல் பெரிய மகான். சாதாரண இடைக்காடன் அல்ல... இடைக்காட்டு சித்தன்... இடைக்காட்டு சித்தன்... ஒலி நின்றுவிட்டது. சிவனருளால் இடைக்காடர் இப்படி சகல ஞானமும் பெற்றதும், அவரால் நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது. ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது, கொடிய பஞ்சம் வரப்போவதை அறிந்தார். அந்த பஞ்சம் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதைக் கணித்தார்.ஆஹா...நதிகள் வற்றப்போகின்றன. ஊற்று தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் இல்லாவிட்டால் உலகமேது. இந்தப் பஞ்சத்தால் பல உயிர்கள் அழிவது உறுதியாகி விட்டது. நானும் அதில் ஒருவனாகத்தானே இருப்பேன்! ஒருவேளை நான் உயிர் பிழைத்தேன் என்றால், ஏதாவது செய்து இந்த மக்களுக்கு நல்வழி பிறக்கச் செய்யலாம். இறைவனின் கட்டளையை மாற்ற என்னால் முடியாது. ஆனாலும், மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் கஷ்டம் வரும் நேரத்தில் தானே சேவை செய்யச் சொல்லி இறைவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறான். அந்த சேவையைச் செய்ய எனக்கு உயிர் தேவை... இந்த சிந்தனையுடன், அவரது மூளை வேகமாக வேலை செய்தது. தன் ஆடுகளுக்கு எருக்க இலைகளை பறித்துப் போட்டார். கேழ்வரகு (கேப்பை) எனப்படும் தானியத்தை மண்ணுடன் சேர்த்து குழைத்து, ஒரு குடிசை கட்டினார். ஊர்மக்கள் இவரது செய்கையை வித்தியாசமாகப் பார்த்தனர். இடைக்காடனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. எவனாவது விஷத் தன்மையுள்ள எருக்க இலைகளை ஆடுகளுக்கு பறித்துப் போடுவானா? மேலும், கேழ்வரகைக் குழைத்து வீடு கட்டுவானா? என்று பேசிக் கொண்டாலும், இடைக்காடர் ஏன் இப்படி செய்கிறார் என்ற சந்தேகமும் ஏற்பட்டது. தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள, அவர்கள் இடைக் காடரிடம் விளக்கம் கேட்டனர். கொடிய பஞ்சம் வரப்போகிறது. பஞ்சகாலத்தில், பச்சிலைகளுக்கு எங்கே போவது? எனவே, ஆடுகளுக்கு கடும் கோடையிலும் காயாத எருக்க இலைகளை சாப்பிட பழக்குகிறேன், என்றதும், ஊரே சிரித்தது.
மக்கள் தன் பேச்சை நம்பாவிட்டாலும், ஏளனமும் செய்கிறார்களே... ஐயோ! இவர்களையும் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் தன்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான் என்று நொந்து கொண்டார் இடைக்காடர். என்ன ஆச்சரியம்! அவர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. கொஞ்சநாள் இப்படி இருக்கும்... அப்புறம் சரியாய் போய்விடும் என மக்கள் நினைத்தனர். உஹூம்... மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை. ஒரு வருடம், இரண்டு வருடம் என காலம் நீடித்தது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர். கால்நடைகள் மெலிந்து நூலாகி விட்டன. இடைக்காடர் வளர்த்த ஆடுகள் மட்டும் எருக்க இலையைச் சாப்பிட பழகியிருந்ததால், உயிர் பிழைத்துக் கொண்டன. ஆனால், அந்த இலையைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டுக் கொண்டார் இடைக்காடர். தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால், தான் குடியிருந்த இடத்தின் அருகில் இருந்த ஆற்றில், ஒரு ஆழமான பகுதியில் ஊற்று தோண்டி வைத்துக் கொண்டார். கிடைக்கிற தண்ணீரைச் சிக்கனமாக வைத்துக் கொண்டார். இந்த சமயத்தில், வானுலகில் இருந்து நவக்கிரகங்கள் பூலோகத்தில் தாங்கள் ஏற்படுத்திய வறட்சி நிலை சரியாக இருக்கிறதா? மக்கள் எந்தளவுக்கு சிரமப்படுகிறார்கள்? பாவம் செய்த மக்களுக்கு, சரியான தண்டனை வழங்கும்படி, இறைவன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு தாங்கள் செய்த செயல்கள் ஒழுங் காக நடைபெறுகின்றனவா? என்று ஆய்வு செய்தனர். ஓரிடத்தில் இடைக்காடர் திவ்யமாக கேப்பைக்கூழ் காய்ச்சுவது கண்டும், ஆடுகள் எவ்வித சிரமமும் இல்லாமல் உலாவுவது கண்டும் ஆச்சரியப்பட்ட அவர்கள், கிரகச் சூழ்நிலைகளை சமயோசிதத்தால் வெற்றி கொண்ட சித்தருக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு அவரது குடிசைக்கு வந்தனர்.
அவர்களை வரவேற்றார் இடைக்காடர். அவர்களைக் கண்டதுமே, ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் ஆறு ஆண்டுகள் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே! அவர் மூளை வேகமாக வேலை செய்தது. கிரகங்களே! நீங்கள் அனைவரும் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும். இதுவே நீங்கள் என் மீது கொண்ட அன்பின் அடையாளத்தை வெளிக்காட்டுவதாக அமையும், என்றார் இடைக்காடர்.சித்தரை மீறிச் சென்றால், அவரை அவமதித்தது போலாகும். மேலும், அடியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், இறைவனின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும் என பயந்த கிரகங்கள், அதற்கு சம்மதித்தனர். இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் களைத்து படுத்து விட்டனர். நள்ளிரவில் அயர்ந்து உறங்கிய அவர்களை, தன் சக்தியால் எழ விடாமல் செய்த இடைக்காடர், அவர்களை தூக்கி, மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்த கிரகங்கள், அனல்காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும், விடிய விடிய பெய்த பெரும் மழையில், ஆற்றில் தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என நம்பிய அவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.இந்த சம்பவத்தை அறிந்த மக்கள், இடைக்காடரை நோக்கி வந்தனர். தங்களைக் காப்பாற்றியமைக்காக நன்றி கூறினர். இடைக்காடர் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.முன்பொரு முறை தன்னை நம்பாத மக்கள், இப்போது நம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இவர்கள் நேரத்திற்கு நேரம் தங்கள் நடைமுறையையும், பேச்சையும் மாற்றுபவர்களாக அல்லவா இருக்கிறார்கள்? என்று எண்ணியே வருத்தப்பட்டார்.
இருப்பினும் அவர் மக்களுக்காக இறுதிவரை சேவையே செய்தார். ஒருமுறை, மதுரை வந்த இடைக்காடர், அன்றைய மன்னன் குலசேகரப் பாண்டியனைச் சந்தித்தார். இவரது ஏழ்மையான தோற்றம் கண்ட மன்னன். இவரைக் கண்டுகொள்ளவே இல்லை.நாடாளும் மன்னன் ஏழைகளை அவமதிக்கிறான். ஏ சுந்தரேசா! நீ இவ்வளவு பெரிய கோயிலில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயா? என்று இறைவனைக் கடிந்து கொண்டார்.அதுகேட்டு மீனாட்சியம்மன் கோயிலில் இருந்த சுந்தரேஸ்வரர், அவருடன் கிளம்பி விட்டார். அவர்கள் கோயிலில் இருந்து சற்று தள்ளியுள்ள சிம்மக்கல் என்ற இடத்தில் தங்கினர். தற்போது அவ்விடத்திலுள்ள ஆதிசொக்கநாதர் கோயிலில் இடைக்காடருக்கும் சன்னதி இருக்கிறது. பின்னர் மன்னன் மன்னிப்பு கேட்டு, சுந்தரேஸ் வரரை மீண்டும் கோயிலுக்கு அழைத்து வந்தானாம்.இவர் திருவண்ணாமலைக்கும் சென்றிருக்கிறார். அங்கு கிரிவலம் வந்த அவர், கோடி யுகங்களுக்கு முன்புள்ள கார்த்திகை தீபக்காட்சிகளைக் கூட தரிசித்தார். இவர் இங்கு வந்த பிறகு தான் அண்ணாமலையில் வசித்த மான்களும், சிங்கங்களும் அங்கிருந்த தடாகங்களில் ஒன்றாகத் தண்ணீர் குடித்ததாம். இப்படி மக்களின் பஞ்சம் போக்க தன்னையே ஈந்த இடைக்காடர், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரிலேயே சமாதியானார். ஒருசாரார், அவர் திருவிடைமருதூரில் (தஞ்சாவூர் மாவட்டம்) சமாதியானதாகச் சொல்கிறார்கள்.


திருமூலர்



சீடனே! அவள் அழுது புலம்புவதை என்னால் தாங்க முடியவில்லை. கணவனைத் தனது தெய்வமாகக் கருதி வழிபட்டவள் அந்த மகாராணி. அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அநேகமாக துக்கம் தாளாமல் அவளும் இறந்து போவாள் என்று தான் கருதுகிறேன். அதற்குள் அவளை காப்பாற்றியாக வேண்டும். எனவே, நான் அந்த அரசனின் உடலில் புகப்போகிறேன். உயிர்களைக் காக்கவே, இறைவன் சில மாய வித்தைகளை உருவாக்கியிருக்கிறான். சித்தர்களும், முனிவர் களும் அதைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். எனக்கும் ஒரு கலை சித்தித்திருக்கிறது. அதில் ஒன்றான பரகாயப் பிரவேசம் எனக்கு தெரியும். அதாவது என் உடலை ஓரிடத்தில் கிடத்திவிட்டு, உயிரை மட்டும் வேறு ஒரு உடலில் செலுத்தி விட்டால் அது உயிர் பெற்று விடும். கூடுவிட்டு கூடு பாயும் வித்தை என்றும் இதைச் சொல்வர், என்றதும், சீடன் ஆச்சரியம் தாளாமல் கேட்டான். இந்த உரையாடல் திருமூலருக்கும் அவரது சீடனான குருராஜனுக்கும் இடையே நிகழ்ந்தது. இந்த உரையாடலுக்கு காரணம் என்ன? இறந்தது யார்? அழுகின்ற அரசி யார்? அதை முதலில் தெரிந்து கொள்வோம். பாண்டியநாட்டில் ராஜேந்திரபுரி என்ற பகுதி இருந்தது. இதை தவேதன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது பட்டத்தரசி சுந்தரவல்லி. இவளுக்கு வீரசேனன் என்ற மகன் பிறந்தான். சந்திரவதனி என்பவளையும் அவளது பேரழகுக்காக அவன் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தார்கள். தவேதன் தனது இறுதிக்காலத்தில் பட்டத்து ராணியின் பிள்ளையான வீரசேனனுக்கு பட்டம் சூட்டி விட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தான். வீரசேனனுக்கு குணவதி என்ற மனைவி வாய்த்தாள். இரண்டாம் தாரத்தின் பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்தது. குணவதி- வீரசேனன் தம்பதியர் அன்பில் சிறந்து விளங்கினர். அரசசபையிலும் கூட இருவரும் இணைந்தே அமர்ந்திருப்பர். கணநேரம் கூட பிரியாத மனைவியை, அவ்வப்போது நகர்வலம் செல்லும் போது மட்டுமே அரண்மனையில் விட்டுச் செல்வான் வீரசேனன்.ஒருநாள் இரவில் மாறுவேடம் தரித்து நகர்வலம் சென்றான்.
திரும்பி வந்ததும் அந்தப்புரத்துக்கு வேகமாகச் சென்றவன் மயங்கினான். வாயில் நுரை தள்ளியது. குணவதி பதறிப்போனாள். அரண்மனை வைத்தியர்கள் விரைந்தனர். அதற்குள் வீரசேனனின் உயிர் பிரிந்து விட்டது. குணவதியின் கதறல் ஒலி அரண்மனையில் மட்டுமல்ல, வானத்தில் பறந்து கொண்டிருந்த திருமூலர் சித்தரின் காதிலும் விழுந்தது. ஐயோ! எவ்வளவு அன்பாக இருந்தனர் இந்த தம்பதிகள்! சின்ன வயதிலேயே மன்னனின் விதி முடிந்து விட்டதே! இவள் இனி உயிர் வாழ மாட்டாள். இதுபோன்ற உயர்ந்த பெண்மணிகள் மடிந்து விடக்கூடாது. என்ன செய்யலாம்? என்ற யோசனையுடன் மிக வேகமாக தான் தங்கியிருந்த சதுரகிரி மலைக்குப் பறந்தார் திருமூலர் குருராஜனிடம் மேற்கண்டபடி பேசினார். குருராஜனும் சம்மதிக் கவே, சீடனே! நான் மன்னனின் உடலில் புகுந்து, அந்நாட்டு ராணியின் மனம் மகிழும் வகையிலும், நாட்டு மக்களை தெய்வீக வழியில் திருப்பும் வகையிலும் சேவையாற்றி திரும்ப சில ஆண்டுகள் ஆகும். அதுவரை என் உடலை இந்த மலைக் குகைக்குள் பத்திரமாகப் பாதுகாத்து வா! இது கெட்டுப் போகாது. ஏனெனில், நான் கல்பசாதனை செய்து என் உடலை வைரம் பாய்ந்த மரம் போல் மாற்றியிருக்கிறேன். மிருகங்களால் இதற்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள், என சொல்லிவிட்டு ராஜேந்திரபுரிக்கு கணநேரத்தில் சென்று விட்டார். எல்லோரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக மன்னனின் உடல் அசைந்தது. ஆ... மன்னரின் உடல் அசைகிறது. அவர் இறக்கவில்லை, மயக்கநிலையில் தான் இருந்திருக்கிறார், என்று எல்லோரும் கூவினர். குணவதியோ இந்திரலோகத்தில் வசிப்பது போன்ற உணர்வை அடைந்து, சோக நீரை ஆனந்த நீராக கண்களில் இருந்து வடித்தாள். மன்னனின் உடலில் திருமூலர் புகுந்து விட்டார்.
எழுந்து அமர்ந்ததும், மகாராணி அவரைத் தன் கணவனெனக் கருதி தழுவிக் கொள்ள முயற்சித்தாள். சற்று ஒதுங்கி அமர்ந்த கணவரிடம், அன்பரே! தங்களுக்கு என்னாயிற்று? தாங்கள் இறந்து போய் விட்டதாக கருதியல்லவா இப்படி அரற்றி அழுதோம்! நடந்ததைச் சொல்லுங்கள், என்றார். மன்னர் பேச ஆரம்பித்தார்.குணவதி! நான் நகர்உலா முடித்து, காற்று வாங்கலாம் என எண்ணி நமது நந்தவனத்திற்குள் புகுந்தேன். அப்போது, ஒரு ரோஜா செடியின் மீது பாம்பு ஒன்று ஓடியது. அதன் முள் பாம்பு மீது படவே, சீறி எழுந்த பாம்பு அதில் இருந்த ரோஜாமலரில் கொத்தியது. அதன் விஷம் அந்த மலரில் பாய்ந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன். நான் அந்த மலரைப் பறித்து முகர்ந்து பார்த்தேன். எனக்கு தலை சுற்றியது.சிரமப்பட்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தேன். அதன் பின் என்ன நடந்ததென எனக்குத் தெரியவில்லை. இப்போது விழித்துக் கொண்டேன், என்றார். இடையில் நடந்ததை குணவதி மன்னரிடம் விளக்கினாள். மக்களும் மகிழ்ச்சியடைந்து திரும்பி விட்டனர். திருமூல மன்னரோ, குணவதியை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதால் விலகியே இருந்தார். மன்னர், முன்பு போல் தன்னிடம் பிரியமாக இல்லையே என்று குணவதியின் மனதில் ஆற்றாமை தாங்கவில்லை. அவரது நடவடிக்கைகளே வித்தியாசமாக இருந்தன. அவரை நெருங்கும் நேரத்தில், தத்துவங்களை உதிர்க்க ஆரம்பித்தார்.இதென்ன, இந்த வயதிலேயே இவ்வளவு தத்துவங்கள்! ஒருவேளை மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியதால் இந்த மாற்றமோ? மக்கள் மத்தியிலும், அமைச்சர்களிடமும் போர், வாள் என எந்நேரமும் முழங்குபவர், இப்போது அன்பு, ஆன்மா, ஆன்மிகம் என்று பேசுகிறாரே! இவருக்கு என்னாயிற்று? அவர் தானா இவர்? அவளது மனதில் சந்தேகப்பொறி தட்டியது.
அவள் அவரிடமே கேட்டு விட்டாள். அதற்கு மேலும் விதுரசேன திருமூலர் அவளிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை. பெண்ணே! நீ சரியாகத்தான் கணித்திருக்கிறாய். நான் உன் கணவன் வீரசேனன் அல்ல! நான் ஒரு சித்தன். பெயர் திருமூலர். உன் கணவன் இறந்ததைப் பார்த்து நீயும், உன் நாட்டு மக்களும் அழுது புலம்பியதை  காண சகிக்காமல், நான் அவனது உடலில் புகுந்தேன். நான் செய்தது தவறுதான். அதற்காக என்னை மன்னித்து விடு. அதேநேரம், உன்னிடம் இதுவரை நான் எவ்விதத்திலும் ஒழுக்கக்கேடாக நடந்தததில்லை. மேலும், உன் உடல் வீரசேனனுக்குரியது என்பதை நான் அறிவேன், என்றார். ராணிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இருப்பினும், அந்த நேரத்தில் அவளது மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் ஓடியது. இந்த சித்தர் இருக்கும் வரை, நமது சுமங்கலித் தன்மையை காத்துக் கொள்ளலாம். மேலும், இவரது ஆட்சியும் நன்றாகவே இருக்கிறது. மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள். இவரே இங்கிருக்கட்டும், என சிந்தித்தவள், சித்தரே! நீங்களே தொடர்ந்து நாட்டை ஆளுங்கள், என்றாள். ஒருவேளை சித்தர் மனம் பாதித்து, ஊரை விட்டு ஓடிவிட்டால் என்ன செய்வதென நினைத்து, அவரது உண்மையான உடலை அழித்து விட எண்ணி, நாசூக்காக பேச்சு கொடுத்தாள். சித்தரே! என் கணவரின் உடலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் நிஜ உடல் எங்கே? அது பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலையிலேயே கேட்கிறேன், என்றாள். அவள் நிஜமாகவே அக்கறையுடன் தான் கேட்கிறாள் என்றெண்ணிய சித்தர், ராணி! அது சதுரகிரி மலையில் இருக்கிறது. அதை என் சீடன் பாதுகாத்து வருகிறான். எனது உடலை சில பொருட்களைத் தடவி வில்வ இலை மற்றும் மரத்தடிகளால் எரித்தால் மட்டுமே அது எரியும், என உண்மையைச் சொல்லிவிட்டார்.ராணி அதன்பிறகு எதுவும் கேட்கவில்லை. சில பணியாளர்களை அழைத்து, நீங்கள் சதுரகிரி மலை குகையிலுள்ள ஒரு உடலை எரித்து விட வேண்டும். இதுபற்றி யாரிடமும் மூச்சுவிடக்கூடாது, என சொல்லி விட்டாள்.
பணியாளர்களும் புறப்பட்டனர். அந்நேரத்தில் குருராஜன் நீண்டநாளாக காணாமல் போன குருவைத் தேடி புறப்படவே, அனாதையாகக் கிடந்த உடலை பணியாளர்கள் சிரமமின்றி எரித்து விட்டனர். இதையறிந்த சித்தர் ராணியிடம், நீ இப்படி செய்வாய் என கனவிலும் நினைக்கவில்லை. இருப்பினும், உன் நிலையில் இருந்து பார்த்தால், சாதாரண மனிதர்கள் யாரும் இப்படி தான் செய்வார்கள். இருப்பினும், உனக்கு வேண்டும் வரம் கேள் தருகிறேன், என்றார். ராணி அவரிடம், நான் நித்ய சுமங்கலியாக இருக்க வேண்டும், என்றாள். சித்தர் அங்கேயே தங்க வேண்டும் என்ற அடிப்படையில் அவள் அப்படி கேட்கிறாள் என்பதை  புரிந்து கொண்ட சித்தர் அவள் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டார். அன்றிரவில், தன் வாழ்வில் ஏன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்பதைப் பின்னோக்கி திரும்பிப் பார்த்தார்.கடந்த பிறவியில், திருமூலர் நந்திதேவரின் மாணவராய் இருந்தார். அஷ்டமாசித்திகளைப் பெற்றிருந்தார். அவர் சிவத்தலங்களைப் பார்க்க எண்ணம் கொண்டு, தென்திசை நோக்கி வந்தார். தற்போது திருவாவடுதுறை என்னும் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அருள்பாலிக்கும் கோமுக்தீஸ்வரரை வழிபட்டு விட்டு, சாத்தனூர் என்ற இடம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தார்.அங்கே, மூலன் என்பவன் ஊர் மக்களின் பசுக்களை மேய்த்து வந்தான். பசுக்களுக்கு அவன் மீது பிரியம் அதிகம். ஒருநாள் விதிவசத்தால் அவன் இறந்து போகவே, பசுக்கள் கண்ணீர் சொரிந்தன. இதை அவ்வழியே வந்த திருமூலர் பார்த்தார். பசுக்கள் மேய்ப்பன் இல்லாமல் அல்லாடுவதை  காண அவருக்கு சகிக்கவில்லை. அவர்  ஓரிடத்தில் படுத்து உடலை மறைத்து விட்டு, தன் உயிரை மூலனின் உடலில் செலுத்தினார். மூலன் உயிர் பெற்றதும் பசுக்களும் மகிழ்ந்தன. பின்னர் பசுக்களை ஊருக்குள் ஓட்டி வந்ததும், மூலனின் மனைவி, அவரைத் தன் கணவன் எனக்கருதி வீட்டுக்கு வரச்சொன்னாள்.
சித்தர் நடந்த உண்மையை அவரிடம் சொல்ல, அவளும் மற்றவர்களும் நம்பவில்லை. தன் கணவனுக்கு ஏதோ சித்தபிரமையோ என அவள் எண்ணினாள். பின்னர் நடந்த உண்மையை ஊராரிடம் நிரூபித்த திருமூலர் தன் சுயஉடலைத் தேடி வந்தார். அதைக் காணவில்லை. பின்னர், திருவாவடுதுறை திரும்பிய அவர் மூலனின் உடலுடன் சிவ தியானத்தில் அமர்ந்து விட்டார்.அது போன்ற சம்பவமே இப்பிறவியிலும் தொடர்ந்தது. பசுக்களை  பாதுகாத்ததால், ராஜயோகத்தை அனுபவிக்கும் யோகமும் அவருக்கு கிடைத்தது.இப்போது வீரசேன திருமூலர், அரண்மனை வாழ்வை துறக்க முடிவு செய்தார். திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் அருகில் வந்த அவர், வீரசேனனின் உடலை ஒரு மரத்தில் ஒளித்து வைத்து விட்டு, உயிரை அங்கு வந்து உயிர்விட்ட ஒரு அந்தணனின் உடலில் செலுத்தினார். பின்னர் சதுரகிரி வந்து அங்கு தங்கி விட்டாள். நித்ய சுமங்கலியாக இருக்க வேண்டும் என ராணி கேட்டதால் சித்தர் ஏதோ ஒரு வடிவில் உயிர் வாழ வேண்டியது அவசியமாயிற்று. ராணி சித்தரைக் காணாமல் சதுரகிரி மலைக்கு வந்தாள். அங்கு யாரோ ஒரு சித்தர் இருந்தார். அவரே  திருமூலர் என அறியாத ராணி, தன் கணவனை எங்கே எனக்கேட்டாள். அவளிடம் உண்மையைச் சொல்ல விரும்பாத சித்தர், அவன் ஒரு மரமாக திருவானைக்காவலில் யோகநிலையில் இருக்கிறான். அரசனின் மரம் என்பதால் அது அரச மரம் என்று பெயர் பெறும். அதை சுற்றி வந்து, நீ நற்பயன்களைப் பெறு. கணவன் மரமாகி விட்டானே என்பதற்காக நீ சுமங்கலி நிலையில் இருந்து மாறமாட்டாய். நீயே உன் நாட்டை ஆண்டுகொள், எனச் சொல்லி அனுப்பி விட்டார். இப்படி மக்களை நல்வழிப்படுத்தவும், பசுக்களை வாழ வைக்கவும் பிறந்த திருமூலர் சித்தர் திருவாவடுதுறையிலேயே சமாதியானதாகக் கருதப்படுகிறது. சிலர் அவர் இன்னும் சதுரகிரியில் வசிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.


சட்டைமுனி



ரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்த பாழும் மனிதர்களின் சந்தேகத்தை தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! அப்படிப்பட்ட எனக்கு, இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன். கயிலையிலே சிவபெருமானை காணச்செல்லும் சித்தர்களில் நானும் ஒருவன். அங்கே செல்லும் போது, குளிர் தாங்க முடியவில்லை என்பதற்காக கம்பளிச் சட்டை அணிந்தேன். அதையே நிரந்தரமாக எங்கு சென்றாலும் அணிந்து கொள்கிறேன். அதனால் தானே என்னை சட்டை முனி என்றே எல்லாரும் அழைக்கிறார்கள்! இந்த உடையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்! நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, என கதறினாரோ இல்லையோ, அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்களெல்லாம் பதறிப் போனார்கள். மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.யார் இந்த சட்டை முனி?கடல்சூழ் இலங்கையிலே சிங்கள தாசிப்பெண் ஒருத்திக்குப் பிறந்தவர் சட்டை முனி. இந்தப் பெண்மணியும், அவரது கணவரும் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். மகனைச் சீர்திருத்தி, இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச் செய்ய மிகவும் போராடினர் பெற்றோரான சிங்கள தம்பதியர். மிகவும் கட்டாயப்படுத்தி மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.ஆனால், இறைவன் சித்தமோ வேறு மாதிரியாய் இருந்தது. சட்டைமுனிக்கு இல்லறத்தில் அறவே நாட்டமில்லை. துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். காடு, மலைகளில் திரிந்த அவர் போகர், திருமூலர், அகத்தியர் ஆகிய சித்தர்களைத் தரிசித்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டினார்.
ஒருமுறை உரோமசர் என்ற முனிவரை பொதிகை மலையில் தரிசித்தார். கயிலைக்குச் செல்லாமல் பொதிகைக்கு சிவபெருமானை வரவழைக்கும் அற்புதமான தவத்தில் ஈடுபட்டிருந்தவர் இந்த முனிவர். ஒருமுறை சிவன் இவருக்கு காட்சி கொடுத்து, முனிவரே! கயிலையில் கங்கைக்கு ஈடான பலன் கொடுக்கும் நதி ஒன்று அகத்தியரால் இங்கு பிறக்கும். தாமிரபரணி எனப்படும் அந்த நதி வற்றாத ஜீவநதியாக ஓடும். அந்நதியில் நீ ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடு. அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் அமைத்து வழிபடு. கயிலைக்கு அடுத்தபடியாக பொதிகையும் என் இருப்பிடங்களில் ஒன்றாக உன் விருப்பப்படியே அமையும், என்று அருள்பாலித்தார். (இந்த தலங்களே தற்போது நவகைலாயங்கள் என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன).இப்படி சிவதரிசனம் பெற்ற உரோமசரைச் சந்தித்த சட்டை முனி, முனிவரே! இந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக உள்ளனர். அடுத்தவர்களின் குறைகளைக் காணுகிறார்களே தவிர தங்கள் குறையைக் களைவது பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த மக்களை நேர்வழிப்படுத்த விரும்புகிறேன். அதற்கு தாங்களே வழிசெய்ய வேண்டும், என்றார். அன்பனே! உன் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானே இதற்கு உனக்கு வழிகாட்ட இயலும். அவரது தரிசனம் வேண்டுமானால் நீ கயிலைக்குச் செல். அவரை வழிபடு. கயிலைக்கு நீ இங்கிருந்து நடந்து செல்ல முயற்சிக்காதே. கடுமையான தவமிரு. அஷ்டமாசித்திகளை உன்னுள் வரவழைக்க கடும் பயிற்சி மேற்கொள். அவற்றை நீ அடைந்து விட்டால், உன் உடம்பைப் பஞ்சாக்கி நீ எந்த இடத்திற்கும் செல்ல முடியும், என அருளுரை வணங்கினார்.சட்டைமுனி சதுரகிரி எனப்படும் மலைக்கு வந்தார். அங்கே பல சித்தர்களின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு சேவை செய்து, அவர்களின் நம்பிக்கையை  பெற்று அஷ்டமாசித்திகளை அடைந்தார். கடும் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து சென்றார்.
கயிலைமலையான் இவரது முயற்சியைக் கண்டு, நண்பன் போல இவருடன் பேசினார்.சிவதரிசனம் பெற்ற சட்டைமுனி மீண்டும் தென்னகம் வந்தார். மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக்குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார். இறந்தவர்களை எழுப்பும் கலையை சித்தர்கள் சங்கேத மொழியிலேயே குறித்து வைப்பர். ஏனெனில், சித்தர்களின் குறிப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். சட்டை முனி பகிரங்கமாக எழுதியதால் ஆத்திரப்பட்ட சில சித்தர்கள் அந்தக் குறிப்புகளை கிழித்து எறிந்து விட்டனர். எனவே, அவரது மருத்துவக் குறிப்புகளும், இன்னும் சில பயனுள்ள தகவல்களும் மட்டுமே எஞ்சின. மேலும், சட்டைமுனிவர் பற்றி சிவபெருமானிடமும் புகார் சொல்லி, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.இந்நிலையில் ஸ்ரீரங்கம் வந்த சட்டைமுனி ரங்கநாதனைச் சேவிக்கச் செல்லும்முன் அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டு விட்டது. சட்டைமுனி வெளியில் இருந்தபடியே, ரங்கநாதா! உன்னை இன்றைக்குள் தரிசிக்க அவசர அவசரமாக வந்தேனே! பயனின்றி போய் விட்டதே, எனச் சொல்லி அரற்றினார்.தன் பக்தனின் அபயக்குரலைக் கேட்ட பெருமாள் நடையைத் திறக்கச் செய்தார். சித்தர் கருவறை அருகே சென்றதும், தனது அணிகலன்களை அவருக்கு சட்டை போல் அணிவித்தார்.(இதனாலும் இவர் சட்டைமுனி என பெயர் பெற்றார் என்பதுண்டு). அப்போது, ஊர் மக்கள் அவரைத் திருடனென சந்தேகித்து அரசனிடம் கொண்டு போய்விட, மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்தது. இவர் திருவரங்கம் அல்லது சீர்காழியில் சமாதியாகி இருக்கலாம் என நம்புகின்றனர். சித்தர்களில் குறிப்பிட்ட நாளில் விரதம் இருப்பது இவருக்கு மட்டுமே. திருவோணம், புனர்பூசம், பூசம், திருவாதிரை நட்சத்திர நாட்களிலும், புதன்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் வாஸ்து தினத்தன்றும் ஸ்ரீசட்டைநாத மாமுனி தர்ப்பயாமி என்று குறைந்தது 18 முறையும், அதிகபட்சமாக 108 முறையும் சொல்லி வழிபட்டால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.


ராமதேவர்





மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர். யார் இவர்? ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர  பெற்றவர். சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள். ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர். முயற்சி... முயற்சி... முயற்சி... இதுவே அவரது தாரக மந்திரம். இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது. ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார். ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது. அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார். சில சித்தர்
களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.அவர்கள் ராமதேவரிடம், சித்தனே! நீ மெக்கா செல். அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் உன்னதமான பணியைச் செய், என்று வற்புறுத்தினர். அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார். புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது என்று கூறி அவரை திரும்பி விடும்படி எச்சரித்தனர். நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்று அவர் அவர்களிடம் சொல்லவே, மிக நல்லது, அப்படியானால், நீங்கள் எங்கள் மதத்தில் இணைந்து விட வேண்டியது தானே! குர்ஆனையும் நீங்கள் ஓத வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் இங்கிருக்க அனுமதி தருகிறோம், என்று மக்கள் கூறினர்.
அவ்வளவுதானே! அதை நான் செய்கிறேன், என்றார் ராமதேவர். அவருக்கு யாக்கோபு என்று பெயரிட்டு தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டனர் அரபு மக்கள். ராமதேவ சித்தர் இப்போது யாக்கோபு சித்தர் ஆகிவிட்டார். அரபுநாட்டில் கிடைத்த பலவகை மூலிகைகளை ஆய்வு செய்து அவற்றின் குணம், குணப்படுத்தும் நோய்கள் ஆகியவை குறித்து எழுத ஆரம்பித்தார். சிறிது காலத்திலேயே அரபு மொழியையும் கற்று, அந்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வைத்திய சிந்தாமணி என்னும் நூலை அரபு மொழியில் எழுதினார். அரபு மக்கள் அவரை போற்றத் துவங்கினர். அவரிடம் பலர் மருத்துவ முறைகளையும் கற்றுக் கொண்டனர். இந்நிலையில், போகர் சித்தர் அவர் முன்பு தோன்றினார். ராமதேவா! நீ வைத்திய முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு விட்டாய். இனி நீ நாடு திரும்பு. சதுரகிரி மலைக்குச் சென்று இந்த மூலிகைகளை ஆய்வு செய்தது குறித்து எழுது. மேலும், இம்மூலிகைகளை ஆய்வு செய், என்றார். அதன்படி ராமதேவர் சதுரகிரி மலை வந்து சேர்ந்தார். தனது சீடர்களிடம், போகரின் அறிவுரைப்படி நான் பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்யப் போகிறேன். நான் வரும் வரை நீங்கள் சமாதி வாசலில் காத்திருங்கள், என்றார்.பத்தாண்டு காலம் சமாதிக்குள் இருக்கும் ஒருவர் எப்படி திரும்புவார்? இது சாத்தியமல்ல என்று நினைத்த சீடர்கள், அவர் சமாதிக்குள் சென்றதும் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும் தனது குரு நிச்சயம் திரும்புவார் என நம்பி சமாதி வாசலில் காத்திருந்தார். சமாதிக்குள் சென்ற சித்தர், மூலிகைகளை ஆய்வு செய்தார். சமாதிக்குள் இருந்தே யாரும் அறியாத வண்ணம் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். ஒருமுறை  சமாதிக்குள் இருந்த காலங்கிநாத சித்தரைத் தரிசித்தார். அவர் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ராமதேவருக்கு போதித்தார். ஆக, ராமதேவ சித்தர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார்.
எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்ற பிறகு, அவர் சொன்னபடியே சமாதிக்குள் இருந்து பத்தாண்டுகள் கழித்து வெளிப்பட்டார். தன்னுடைய சீடர்களே தன்னை நம்பாமல் சென்றது பற்றி அவர் சிறிதும் வருந்தவில்லை. ஒரே ஒரு சீடன் விசுவாசத்துடன் தங்கியிருந்தது பற்றி சந்தோஷம் கொண்ட அவர், சீடனே! மற்றவர்கள் என்னைத் தூற்றி விட்டு சென்றது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் எத்தனை ஆண்டுகாலம் இந்த சமாதிக்குள் தங்கி மூலிகை ஆய்வு செய்தாலும், நோய்கள் தற்காலிகமாக குணப் படுத்தப்பட்டாலும், பல நூறு ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தாலும், ஒருநாள் மரணம் சம்பவிக்கத்தான் செய்யும். இந்தக் கருத்தின்படி பார்த்தால், நமது குரு தேவையில்லாமல் சமாதிக்குள் அமர்ந்து, மூலிகை ஆய்வு செய்கிறார் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கும். அது நியாயமான சிந்தனை தானே! இருப்பினும், வாழும் காலத்தில் மனிதன் சுகமாக வாழவே இந்த ஆய்வை மேற்கொள்கிறேன். நான் மேலும் முப்பதாண்டுகள் சமாதியில் இருக்கப்போகிறேன். மூலிகை ஆய்வைத் தொடர்வேன், எனச் சொல்லிவிட்டு சமாதிக்குள் சென்று விட்டார்.அந்த சீடனும் அங்கேயே காத்திருந்தான். முப்பதாண்டுகள் கழித்து வெளிப்பட்ட சித்தர், பொறுமைக்கார சீடனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் போதித்தார். அந்த சீடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவனது பொறுமைக்கு மிகுந்த பரிசு கிடைத்தது. இதனிடையே ராமதேவர் சமாதிக்குள் சென்ற பிறகு, அவரை நம்பாமல் சென்ற சீடர்களின் பார்வை பறிபோய் விட்டது. அவர்களும் சித்தரை வணங்கி மன்னிப்பு கேட்டு பார்வை பெற்றனர். அவர்களிடம், நான் இப்போது நிரந்தர சமாதிக்குச் செல்கிறேன். அழகர் மலையில் (மதுரை அருகிலுள்ளது) சமாதியாகி மக்களுக்கு அருள் செய்வேன், என சொல்லிவிட்டு சென்றார். அங்கேயே சமாதியானார்.


சிவவாக்கியர்



பெண்ணே! இந்த மணலையும், கசப்புமிக்க இந்த சுரைக்காயை கசப்பு நீக்கி ருசியாகவும் சமைத்து தர உன்னால் முடியுமா? சிவவாக்கியர், அந்த குறவர் குலப்பெண்ணிடம் கேட்டார். அவள் பதிலேதும் பேசவில்லை. அவர் கொடுத்ததை பயபக்தியுடன் கைநீட்டி வாங்கினாள். அடுப்பு பற்ற வைத்தாள். மணலை அரிசி களைவது போல களைந்தாள். மண் பானையில் போட்டாள். குறிப்பிட்ட நேரத்திலேயே அது சாதமாகி விட்டது. அடுத்து சுரைக்காயை சமைத்தாள். கறி மிக ருசியாக இருந்தது. கசப்புத்தன்மை அறவே இல்லை. பெரியவர்கள் எதையாவது சொன்னால், ஏன் ஏதென்று கேட்காமல் செய்வது அக்காலத்தில் சிறியவர்களின் வழக்கமாக இருந்தது. அதிலும், இவரோ தவசிரேஷ்டர் போல இருக்கிறார். இளவயது வேறு. முகத்தில் தேஜஸ் ஜொலிக்கிறது. இந்த சிவவாக்கிய சித்தர் பிறந்த இடம் பற்றிய தகவல் இல்லை என்றாலும், இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பது மட்டும் சில நூல்களில் இருந்து தெரிய வருகிறது. பிறக்கும் போதே குழந்தை சிவவாக்கியர் சிவசிவ என்று சொன்னாராம். சிவன் என்ற வாக்கியத்தைச் சொன்னதால் சிவவாக்கியர் என்று இவரது பெற்றோர் பெயர் வைத்து விட்டனர். சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், சிவபெருமானை நமசிவாய என்று சொல்லி வழிபடுபவர்களின் உயிர் பிரிந்து விட்டால் கூட மீண்டும் உயிர் பிழைத்து விடுவார் என்ற அடிப்படையில் ஒரு பாடல் பாடியுள்ளார். சிவபித்தரான இவர், சித்தர்களைப் பற்றி அறிந்தார். யாராவது ஒரு சித்தரை தனது குருவாக அடைய வேண்டும் எனக்கருதி காசிக்கு சென்று விட்டார். அங்கே ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அந்த சித்தர் காசிக்கு வரும் பக்தர்களின் காலணி பழுதாகி விட்டால், அதை சரி செய்து கொடுப்பார். சிலருக்கு, அவர்களது காலின் அளவைப் பார்த்தே காலணி செய்து கொடுத்து விடுவார். அந்தளவுக்கு தொழிலில் திறமைசாலி. காலணி செய்யும் தொழில் செய்தாலும், பிராணாயமம், தியானம், யோகா என அவருக்குத் தெரியாத வித்தைகள் இல்லை. அவர் தியானத்தில் ஆழ்ந்து போனால், அவராக எழுந்தால் தான் உண்டு.
யாராலும் அவ்வளவு எளிதில் அவரை எழுப்ப முடியாது. தியானத்தில் திறமைசாலி என காசி மக்களிடையே அவருக்கு பெயர் இருந்தாலும், அவர் செய்யும் தொழிலால் பெரும்பாலோர் அவருக்கு மரியாதை செய்வதில்லை. ஒரு சிலர் அவரைக் கடவுள் போல நினைத்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அவரைப் பற்றி கேள்விப்பட்டார் சிவவாக்கியர். அவரிடம் சென்று, குருவே! தங்கள் மாணவன் வந்திருக்கிறேன், தங்களுக்கு பணிவிடை செய்வதில் எனக்கு ஆனந்தம். தங்கள் மூலமாக இறைவனைக் காண விரும்புகிறேன், என்றார். சிவவாக்கியரை சித்தர் ஒரு பலகையில் அமரச்சொன்னார். அவ்வளவுதான்! பலகை பறக்கத் தொடங்கி விட்டது. ஏதோ ஒரு பரவசம் சிவவாக்கியரை ஆட்கொண்டது. உயர உயரப் பறந்தார். வானமண்டலத்தை அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு. அங்கே தான் தெய்வங்கள் இருக்கும் என்பார்களே! தெய்வங் களைப் பார்க்க வேண்டும் என்று சித்தரிடம் ஒரு வார்த்தை தானே சொன்னோம். அவர் தேவலோகத் திற்கே கூட்டி வந்து விட்டாரே! நட்சத்திர மண்டலங்களின் மத்தியில் மிதந்தார் சிவவாக்கியர். தெய்வங்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என ஆராய்ந்தார். சற்று நேரமானது. கடவுளைக் காண்பதற்குள்ளாகவே பலகை வேகமாக கீழ் நோக்கி இறங்கியது. சிவவாக்கியரின் உடல் நடுங்கியது. கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் வேறு. அந்த உணர்வு திடீரென நின்றது. சிவவாக்கியர் கண் திறந்தார். இப்போது உடலில் பரவசநிலையும் இல்லை. பலகை மேலே பறக்கவுமில்லை. இருந்த இடத்தில் அப்படியே இருந்தார். நான் நிஜமாகவே வானமண்டலத்திற்கு பறந்தேனா சுவாமி? என்றார். இல்லையே! நீ வந்ததில் இருந்தே என் முன்னால் தான் இருக்கிறாய்? என்ற சித்தர், சிவவாக்கியா! நீ கடவுளைக் காண ஆசைப்படுகிறாய். அது எளிதான காரியமல்ல. அதே நேரம், இப்போது பலகையில் பறப்பது போல உணர்ந்தாயே! அந்த உணர்வு நிரந்தரமாக உடலில் தங்கினால் நீ கடவுளை  காணலாம்.
 அதே நேரம் உனக்கு அதற்குரிய பக்குவம் வரவில்லை. நான் ஒரு பரிட்சை வைக்கிறேன். இந்த தேர்வில் தேறினால், நீ கடவுளைப் பார்த்து விடலாம், என்றார்.என்ன தேர்வு? என ஆவலுடன் சிவவாக்கியர் கேட்க, கங்கைக்குச் செல்.செருப்பு தயாரித்து இங்கே நான் சேர்த்து வைத்துள்ள இந்தக் காசை வாங்கிச்செல். என் குருநாதரின் காணிக்கை இது, என அவளிடம் சொல். அவள் வாங்கிக்கொள்வாள், வரும் போது இந்த தோல்பையில் கங்காதீர்த்தம் கொண்டு வா, என்று சொல்லி அனுப்பி வைத்தார். சிவவாக்கியரும் கங்கையிடம் சென்று, தாயே! என் குருநாதரின் இந்த காணிக்கையை ஏற்றுக்கொள், என்றார்.கங்கைக்குள் இருந்து இரண்டு வளையல் அணிந்த கரங்கள் வெளிப்பட்டன. சிவவாக்கியர் காசை அந்தக் கைகளில் வைத்தார். அதை வாங்கியதும் கைகள் தண்ணீருக்குள் போய் விட்டன. தோல்பையில் தண்ணீரை முகர்ந்து வந்த சிவவாக்கியரிடம் சித்தர், சிவவாக்கியா! நீ இந்த பையிலுள்ள கங்காதீர்த்தத்திடம், நான் கொடுத்த காசை திருப்பிக் கேள். அவள் தந்ததும் வாங்கிக் கொள், என்றார். சிவவாக்கியர் ஏன் எதற்கென்று குருவிடம் கேட்காமல், அவர் சொன்னது போலவே காசைக் கேட்டார். தோல் பைக்குள் உள்ள தீர்த்தத்தில் இருந்து எழுந்த கைகள் பெற்ற பணத்தை அப்படியே தந்து விட்டன. காசைக் கொடுக்கும் போதும், பெறும்போதும் சிவவாக்கியரின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டதை சித்தர் கவனித்து விட்டார். சிவவாக்கியா! அந்தக் கைகளை ஏன் அப்படியொரு பார்வை பார்த்தாய்? உனக்கு பெண்ணாசை இருக்கிறது. அதனால் தான் அந்தக் கைகளை அப்படி ரசித்தாய்! நான் சொல்வது சரிதானே! என்றதும், சிவவாக்கியருக்கு தூக்கி வாரிப்போட்டது.
அவர் தலை குனிந்து நின்றார்.சித்தர் அவரிடம், சிவவாக்கியா! உனக்கு இல்லறத்தில் நாட்டமிருக்கிறது. அது ஒன்றும் தவறல்ல. நீ திருமணம் செய்து கொள், எனச் சொல்லி அனுப்பிவிட்டார். குரு இப்படி சொல்லிவிட்டாரே என வருந்தினாலும், அவரது கட்டளையை ஏற்ற சிவவாக்கியர் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், தவ வாழ்வையே தொடர்ந்தார். தன் குலத்தொழிலான குறவர்கள் செய்யும் பல்வேறு பணிகளைச் செய்து, அதில் கிடைத்த குறைந்த வருமானத்தில், நிறைவான வாழ்வு நடத்தினார்.  ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளையும் வெற்றி பெறச் செய்யும் பின்னணியில், அவனது மனைவியின் செயல்பாடே முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வகையில், சிவவாக்கியரின் மனைவியும் கணவரின் தவ வாழ்வுக்கு உற்ற துணையாக விளங்கினார்.பொதுவாக பெண்கள் பொன் நகைக்கு ஆசைப்படுவார்கள். சிவவாக்கியரின் மனைவி என்ன செய்தார் என கேளுங்கள். ஒருமுறை, சிவவாக்கியர் மூங்கில் காட்டுக்கு கம்பு ஒடிக்கச் சென்றார். அவர் கம்பை அறுக்கும் வேளையில், அந்த மரத்தில் இருந்து பொன் துகள்கள் சிந்தின. சிவவாக்கியர் அதிர்ந்து விட்டார். இதென்ன கொடுமை! நாமோ தவம் செய்து, இறையடியை நிரந்தரமாக அடைய விரும்புகிறோம். இங்கோ பொன் கொட்டுகிறது. இதைக் கொண்டு ஆனந்தமாக வாழலாம் என்று நினைப்பவர்களே உலகத்தில் அதிகம். நான் அந்த ரகமில்லையே, என் முன்னால் பொன் துகளைக் கொட்ட வைத்து, என்னை இறைவன் ஆசைப்படுகுழியில் தள்ளப் பார்க்கிறானே. பொன்னாசை மரண குழியின் வாசலாயிற்றே என்று நினைத்தவர், அங்கிருந்து சற்று தள்ளி நின்று கொண்டார். அப்போது, நான்கு பேர் அங்கே வந்தனர். அவர்கள் அங்கு சிந்திய பொன்குவியலைப் பார்த்தனர். பொன்னைப் பார்த்தால் விடுவார்களா? ஐயா! அங்கே பொன் துகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதை நாம் ஐந்து பேரும் பங்கிட்டுக் கொள்வோமே! என்றதும், வேண்டாம்... வேண்டாம்... உங்களுக்கும் அது வேண் டாம், எனக்கும் வேண்டாம். இது ஆளைக் கொன்று விடும் விஷத்திற்கு சமமானது, என்று அறிவுரை சொன்னார் சிவவாக்கியர்.அட பைத்தியமே! உனக்கு வேண்டாம் என்றால் ஓடிப்போ. எங்களை வாழவிடாமல் செய்வதில் உனக்கென்ன ஆனந்தம்! என்று கடிந்து கொண்டனர் அந்த நால்வரும்.
சிவவாக்கியர் வருத்தப்பட்டார்.இந்த உலகம் ஆசையில் இருந்து என்றுதான் மீளப்போகிறதோ? சித்தர்கள் இரும்பையும், தகரத்தையும் பொன்னாக்கும் ரசவாத வித்தையை படித்தது வறுமையைப் போக்குவதற்காக அல்ல! தங்கத்தை மக்கள் மத்தியில் காட்டி, அவர்கள் அதை வெறுத்து ஒதுக்கும் காட்சி கண்டு மனம் மகிழ்ந்து, அவர்களை ஆன்மிகப்பாதையில் திருப்பி விடுவதற்காகவே! தங்கத்தை வெறுக்கும் மனப்பக்குவத்தை எவன் பெறுகிறானோ, அவனே ஆன்மிக வாழ்வுக்கு தகுதியுடையவன் ஆகிறான். இவர்களைப் போல் மக்கள் இருப்பதால் தானே சித்தர்கள் யார் கண்ணிலும் படாமல் வாழ்கிறார்கள்! இந்த மக்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்கிறார்களே! ஆனால், உலக நடப்பைப் பார்த்தால் அவர்கள் எப்போது தான் வெளிப்படுவார்களோ! உலகம் திருந்தும் நாள் எப்போது? என்று வேதனையும் அடைந்தார். பின்னர் அங்கிருந்து போய்விட்டார்.தங்கத்தை மூடை மூடையாக கட்டிய நால்வருக்கும் பசி ஏற்பட்டது. இருவர் தங்கமூடைகளை பார்த்துக் கொள்வதென்றும், இருவர் ஊருக்குள் சென்று உணவு கொண்டு வருவதென்றும் முடிவாயிற்று. அதன்படி உணவு கொண்டு வரச்சென்றவர்கள் சாப்பிட்டு விட்டு, இரண்டு பொட்டலம் உணவை எடுத்து வந்தனர். வரும் வழியில் இருவரும், ஏய்! நாம் இருவரும் ஆளுக்குப் பாதியாக தங்கத்தைப் பங்கு போட்டுக் கொள்வோம். அவர்களுக்கு இந்த உணவில் விஷம் கலந்து கொடுத்து விடுவோம், என்று திட்டமிட்டனர். உணவில் விஷம் கலக்கப் பட்டது. அங்கேயும் இதே போல் ஒரு சதித்திட்டம் உருவானது. உணவு கொண்டு வருபவர்களை தண்ணீர் எடுத்து வரச்சொல்லி அந்த கிணற்றுப் பக்கம் போகச் சொல்வோம். அவர்கள் குனிந்து தண்ணீர் இறைக்கும்போது, உள்ளே தள்ளி விட்டு விடலாம். நாம் இருவரும் தங்கத்தைப் பங்கிட்டுக் கொள்வோம் என்று முடிவெடுத்தனர். இருதரப்பு முடிவும் வெற்றிகரமாக நிறைவேறியது. திட்டமிட்டபடியே, இருவரையும் கிணற்றுக்குள் தள்ளி வெளியே நின்றவர்கள் கொலை செய்தனர். அவர்கள் விஷ உணவைச் சாப்பிட்டு உயிரை விட்டனர்.
மறுநாள் அங்கு வந்த சிவவாக்கியர் அதைக்கண்டு வருத்தப்பட்டார்.ஆளைக் கொல்லும் விஷம் இந்த தங்கம் என்று சொன்னேனே! நால்வரும் கேட்காமல் தங்கள் அரிய உயிரை விட்டார்களே! என்று மனதுக்குள் அழுதார்.ஒருநாள், சிவவாக்கியரின் வீட்டுக்கு கொங்கணச்சித்தர் வந்தார். அப்போது வாக்கியர் வீட்டில் இல்லை. அவரது இல்லத்தரசி கொங்கணரை வரவேற்று உபசரித்தாள். அவர், சில இரும்புத் துண்டுகளை கொண்டு வரச் சொல்லி அவற்றைத் தங்கமாக மாற்றி அவளிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். சிவவாக்கியர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி நடந்ததைச் சொல்லி தங்கத்தை கணவரிடம் கொடுத்தார். அதைத் தொடவும் விரும்பாத சிவவாக்கியர், மனைவியிடம், இது உன்னையும், என்னையும் கொன்றுவிடும் விஷம், இதை கிணற்றில் வீசிவிடு, என்றார்.அந்த கற்புடைய நங்கையும் கணவர் சொல்லுக்கு மறுசொல் பேசாமல், அவ்வாறே செய்து விட்டார். சிவவாக்கியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
செல்வத்தால் நன்மையை விட சீரழிவே அதிகம் என்பதை வலியுறுத்தி சில நூல்களையும் அவர் எதிர்கால தலைமுறைக்காக எழுதினார். பற்றற்று இல்லறம் நடத்திய அவர், கும்பகோணம் ÷க்ஷத்ரத்துக்கு ஒருமுறை வந்தார். அங்கேயே அவர் சமாதியாகி விட்டார்.சிவவாக்கியரின் வரலாறை படித்த நாம், செல்வத்தை வெறுக்கும் பக்குவத்தைப் பெறுவோம். வரதட்சணையாக தங்கத்தைப் பெறும் பேராசையை ஒதுக்கித்தள்ளி, உழைத்து வாழ முடிவெடுப்போம்.





























































































புலிப்பாணி



நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்!
ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக, அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர், புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று.
ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர், புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார். புலிப்பாணியும் அவரது கட்டளையை ஏற்று, சிலையின் காவலர் ஆனார்.ஒருமுறை. சீனதேசத்தில் இருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண்ணின்பத்தில் சிக்கி, தவ வலிமையை இழந்து விட்டார், என்றனர். அதிர்ச்சிய டைந்த புலிப்பாணி தவ சிரேஷ்டராகிய தன் குருவைக் காப் பாற்ற சீனா சென்றார். அவரை அங்கிருந்து பழநிக்கு அழைத்து வந்து, மீண்டும் தவ வலிமை பெறுவதற்குரிய வழிகளைச் செய்தார். போகருக்கே ஞானம் வழங்கிய பெருமை புலிப்பாணிக்கு உண்டு. சில நாட்களில் போகர் இறந்து விடவே, அவரது சமாதிக்கு பூஜை செய்யும் பணியை அவர் கவனித்தார். சமாதிக்கு பூஜை செய்பவர், முருகனின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, எங்கள் குருவுக்கு குரு முருகப்பெருமான், எனக்கு குரு போகர் சித்தர். நான் அவரது சமாதியையே பூஜிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன், என அவர்களிடம் தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளில் பலரை மூலிகை வைத்தியம் மூலம் காப்பாற்றிய பெருமை உண்டு. நோயுற்றவர்கள் புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தால், அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம். புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டதாக தகவல் உள்ளது.


குதம்பை சித்தர்



அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது. இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார். ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.
குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி...இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார். அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை. அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்... தவம்... தவம்... எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.
குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன்.  இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும். என்றான். குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. யார் வாசியோகம் என்ற  கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். அவரது திருவுருவத்தை மயூரநாதர் கோயிலில் தரிசிக்கலாம். மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!


பிண்ணாக்கீசர்



கோபாலா, எனக்கு பசிக்கிறதே! யாராவது உணவு தாருங்களேன், என்று அரற்றினார் பிண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால், பிண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம். பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும். நல்லதை எண்ணியிருந்தால், தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ, கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும். டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு, சர்க்கரை, உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும். காரணம் என்ன தெரியுமா? எண்ணங்களின் வண்ணம் தான்! கெட்ட எண்ணங்கள், பிறரை வஞ்சிக்கும் குணம், பணத்தைப் பற்றிய நினைப்பு, அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும், அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை. சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம், செழிப்புடன் திகழ்வார்கள். இதே போல், பிண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார். அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுவார்.
இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர், தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார். கண்ணா, கண்ணா, கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது. பசி வந்தால் கோபாலா, எனக்கு உணவு கொடேன், எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால், பழம் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு பழம், கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார். பசி தீர்ந்து விடும். மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து, இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார். இப்படியே காலம் கடந்த வேளையில், ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார். சீடனே, பொந்தில் இருந்து வெளியே வா, என்றார். கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார். கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார். கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார். உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் பிண்ணாக்கீசர். இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின. ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார். தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார். நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார். அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன. சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது. சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார். அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது. மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின. இதனால், அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார்.
தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம், உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார். அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். தங்களைச் சீடர்களாக ஏற்று, அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர். அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும், உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர், அதற்கு மறுத்து விட்டார். மேலும், தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். பின்னர், ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர். அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான். உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ, புதைக்கவோ செய்தால் இந்த  கோவணம் உன்னோடு வருமா? கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார். அவற்றைப் பாடல்களாக வடித்தார். ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார். அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர், அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை. ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது. சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள், அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர். 18 சித்தர்கள் தொடரை படித்த நாம், அவர்களை தினமும் மனதார வணங்கி, தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக