வியாழன், 24 நவம்பர், 2011

மகாபாரதம் ( இரண்டாம் பாகம் )


ராதே கிருஷ்ணா 25-11-2011

மகாபாரதம் ( இரண்டாம்  பாகம் )

மகாபாரதம் பகுதி-18 



பரமாத்மா மட்டுமா வந்தார்! அவரது தந்தை வசுதேவர், தாய் தேவகி, குந்தியின் தந்தை குந்திபோஜன் மற்றும் உறவுகளெல்லாம் வந்தனர். பெரிய துக்கமல்லவா! கண்ணனுக்கு குந்தி அத்தை. ஏனெனில், அர்ஜூனன் கண்ணனின் சகோதரி சுபத்ராவைத் திருமணம் செய்தவன். மைத்துனரின் தந்தையல்லவா மரணமடைந்திருப்பவர். மகளின் துக்கத்தில் பங்குகொள்ள குந்திபோஜனும் வந்துவிட்டான். எல்லோரும் நெருங்கிய சொந்தங்கள்.
பீஷ்மர், விதுரன் ஆகிய மகாத்மாக்கள் கூட குந்தி புத்திரர்களின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். பரமாத்மா கண்ணன் மட்டும் பாரதத்தின் எந்த மூலையிலும், ஏன் அவரது இந்த அவதாரத்தில் எங்குமே கண்ணீர் வடித்ததில்லை. அவர் ஒரு புன்னகை மன்னன். ஏனெனில், நடக்கின்ற சம்பவங்கள் அனைத்துக்கும் காரணமே அவர் தானே! மேலும், அழ வேண்டியதையெல்லாம் இதற்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்திலேயே அழுது தீர்த்துவிட்டாரே! போதாதா! கண்ணனின் தாய் தேவகி துக்கத்தில் ஆழ்ந்திருந்த குந்திக்கு சொன்ன ஆறுதல் மொழிகள் கொஞ்ச நஞ்சமல்ல! பெண்கள் ஒருபுறமிருக்க, ஆண்கள் ஒருபுறம் எதிர்காலம் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தார்கள். திருதராஷ்டிரனின் அண்ணன் மகாத்மா விதுரர், கண்ணா! பூபாரம் தீர்க்க வந்தவனே! உன் உதவி இருக்கும்போது பாண்டவர்களுக்கு என்ன கவலை. நீ தான் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும், என்றார். கண்ணனும் அதை ஆமோதித்தார்.
வந்த விஷயம் முடிந்ததும், அவர்கள் திரும்பி விட்டனர். துக்கவீட்டில் ரொம்ப நாள் தங்கக்கூடாது. வந்தோமா, போனோமா என்று இருக்க வேண்டும் என்ற நீதி இங்கே எடுத்துச் சொல்லப்படுகிறது. இப்படியிருக்க, ஆரம்பத்தில் துரியோதன சகோதரர்கள், பாண்டு புத்திரர்களுடன் நன்றாகத்தான் இருந்தனர்.  ஆனால், பீமன் மட்டும் யாருடனும் ஒத்துப்போக மாட்டான். சிறுவன் தான் என்றாலும், துரியோதன சகோதரர்களை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதற்காக அவன் வம்பு செய்வதில்லை. ஒதுங்கி இருந்து கொண்டான். இந்தப்போக்கு துரியோதனனுக்கு பிடிக்கவில்லை. அவன் தன் மாமா சகுனியிடம் ஓடினான். காந்தாரியின் அண்ணன் தான் இந்த சகுனி. தங்கை வீட்டில் தங்கியிருப்பவன். மாமா! இந்த பீமன் மட்டும் எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. பெரிய முரடன். ஏதாவது பேசினால் முறைக்கிறான். வம்புக்கு போனால் வேறு வினையே வேண்டாம். அவன் என் மீது விழுந்தாலே போதும். நான் தரையோடு தரையாக நசித்துப் போய்விடுவேன். அரண்மனையில் வேகும் அரிசியில் பாதிக்கு மேல் இவனுக்கே போய்விடுகிறது. இந்தப்பயலை அடக்க ஒரு வழி சொல்லுங்களேன், என்றான். இந்த சகுனிக்கு பாண்டு புத்திரர்களின் நாட்டையும் சேர்த்து கொள்ளையடிக்க ஆசை. அதற்கு தடையாக இருந்த பாண்டு ஒழிந்து விட்டான். குந்தியோ, இவர்கள் பிடியில். இந்த சிறுவர்களாலும் ஏதும் செய்ய முடியாது. காலம் கனியட்டும் என காத்திருப்பவன். மருமகனே! இதென்ன பிரமாதம்! இதோ! உன் நண்பன் கர்ணன் இங்கே தான் படுத்திருக்கிறான். அவனை துணைக்கு வைத்துக் கொள். பீமன் தூங்கும் போது அவனை கட்டு. அப்படியே தூக்கிக் கொண்டு போய் கங்கையின் நடுவில் வீசிவிடு, என அந்த பிஞ்சுமனத்தில் கொலை வெறியை விதைத்தான்.
கர்ணனும், துரியோதனனும் விரைந்தனர். உறங்கிக் கொண்டிருந்த பீமனை காட்டுக்கொடிகளைக் கண்டு கட்டினர். பீமன் திமிறினான். அவனை ஒரு
படகில் ஏற்றி, கங்கையின் நடுவே தள்ளிவிட்டனர். பீமனாவது, இதற்கெல்லாம் மசிவதாவது! தண்ணீரில் மூழ்கியவன், ஏதோ சந்தோஷமாகக் குளிப்பவன் போல தலையை இங்கும் அங்கும் அசைத்தான். தன் பலத்தை ஒன்றுதிரட்டி கையை உதறினான். காட்டுக்கொடி போன இடம் தெரியவில்லை. ஒரே மூச்சில் வெளியே வந்தான். கர்ணனும், துரியோதனனும் அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் வருவதற்கு முன்பே, அரண்மனை சிம்மாசனத்தில் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருந்தான். ஆசாமிகள் இருவருக்கும் கடும் அதிர்ச்சி! இவனை தண்ணீரீல் வீசினால், நாம் திரும்புவதற்குள் இவன் வந்து விட்டானே. ஏ கர்ணா! இவன் கண்ணில் படாதே. பட்டால், இந்த இடத்திலேயே அடிப்பான். இங்கே வந்தால், நாம் 101 பேரும் சேர்ந்து தான் வரவேண்டும் புரிகிறதா? என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். மறுநாள் பீமனுடன் சமாதானம் செய்வது போல் நடித்துக்கொண்டான். பீமா! நீ எவ்வளவு பலசாலி என்பதை நேற்றே தெரிந்து கொண்டேன். வா! இன்றும் விளையாடப் போகலாம், என்று அழைத்தான். பீமனும் கிளம்பிவிட்டான். அவனுக்குத் தெரியும்! துரியோதனன் ஏதோ சதித்திட்டத்துடன் தான் அழைக்கிறான் என்று! அன்றும் கங்கையில் தான் விளையாட்டு. தண்ணீர் அலைகளை வாரி இறைத்துக்கொண்டு மின்னலென போய்க் கொண்டிருந்தது. முதலில் துரியோதனன் கங்கையில் குதித்து நீராடினான். பீமா! நீ இந்த இடத்தில் குதி, என ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினான். பீமனின் கண்கள் ஆழ்ந்த பார்வை கொண்டவை. துரியோதனன் குதிக்க சொன்ன இடத்தில் ஏதோ நீட்டிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. மேற்பகுதியில் ஏதோ வண்டு போலவும் இருந்தது. ஆராய்ந்து பார்த்ததில் அத்தனையும் ஈட்டிகள் என்பதும், பீமன் குதித்ததும் அவை அவனை குத்திக்கிழிப்பது போலவும் நேராக நடப்பட்டிருந்தன. பீமன் சுதாரித்து விட்டான். எந்த இடம் வரை ஈட்டிகள் நடப்பட்டிருந்ததோ, அதைத் தாண்டி குதித்து, ஒன்றுமே தெரியாதவன் போல கரையேறி விட்டான். துரியோதனின் இந்த திட்டமும் வீணானது. துரியோதனன் துடிதுடித்தான். இவனுக்கு இதெல்லாம் சரி வராது. இந்தப்பயலைக் கொல்ல ஒரே வழி சாப்பாடு தான். இவனோ சாப்பாட்டு ராமன். சாப்பாட்டில் விஷம் கலந்து விட்டால், இஷ்டத்துக்கு அள்ளித்தின்று எமலோகம் போய்விடுவான் என திட்டமிட்டான். நினைத்தது போலவே நடத்தியும் காட்டினான். உணவில் விஷம் கலந்தது தெரியாமல், பீமன் அத்தனையையும் சாப்பிட்டான். அவனது கண்கள் சுழன்றன.



மகாபாரதம் பகுதி-19


பீமன் மயங்கி விட்டான். இனி அவன் இறப்பது உறுதி என முடிவு செய்த துரியோதனனுக்கு உள்ளத்தில் திடீரென சந்தேகம் ஏற்பட்டது. யாராவது இவனைப் பார்த்து காப்பாற்றிவிட்டால்.... சந்தேகம் பெரிய வியாதி. அது இருப்பவன் எதிலும் திடமான முடிவெடுக்க முடியாது. அந்த சந்தேகம் அவர்களையே அழித்து விடும். துரியோதனன் என்ற இந்த சந்தேகப்பேர்வழி என்ன செய்தான் தெரியுமா? மயக்கமடைந்த பீமனை கயிறால் கட்டி, மீண்டும் கங்கையில் தூக்கி வீசிவிட்டான். மயக்கமடைந்து விட்ட பீமன், தண்ணீரின் அடிக்கே போய் விட்டான். அவன் போன இடத்தின் அடிப்பாகம் மிகப்பெரிய துவாரமாக இருந்தது. அந்த துவாரத்தினுள் புகுந்து விட்ட அவனை அங்கிருந்த நாகங்கள் கடித்தன. அதனால் நிலைமை எதிர்மறையானது.  நாகங்கள் கக்கிய கடும் விஷம், ஏற்கனவே அவனது உடலில் இருந்த விஷத்தை முறிக்கவே, அவன் மயக்கம் தெளிந்தான். தண்ணீரின் அடியில் கிடப்பதைப் பார்த்து சுதாரித்துக் கொண்டான். தன்னைச் சுற்றிலும் கிடந்த நாகங்களைப் பிடித்து விளையாட ஆரம்பித்து விட்டான். நாகங்கள் அந்த பலசாலியைக் கண்டு நடுங்கின. சில நாகங்கள் ஓடிப்போய் தங்கள் தலைவனிடம் விஷயத்தைக் கூறின. நாகராஜன் விரைந்து வந்தான். வந்திருப்பது பீமன் என்பது அவனுக்குத் தெரியும். அவனது பெயர் வாசுகி. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது, மேருமலைக்கு மத்தாக இருந்தவன் இந்த வாசுகி. அதற்குப் பரிசாக அமுதத்தை குடம் குடமாகப் பெற்றிருந்தான். அதை கங்கைக்குள் இருக்கும் தன் சாம்ராஜ்யத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தான்.
கங்கையில் அப்படி என்ன விசேஷம் என்பவர்கள் இந்த இடத்தை உற்றுக்கவனிக்க வேண்டும். அமுதம் ஆயுளை அதிகரிக்கக் கூடியது. சாகாவரம் தருவது. தேவர்கள் சாகாமல் இருப்பார்கள். மனிதர்களுக்கு அது கிடைத்தால், தீர்க்காயுளுடன் வாழ்வதுடன், அதன்பின் பிறப்பற்ற நிலையடைந்து பரமானந்தம் பெறுவார்கள். அதனால் தான் கங்கையில் ஒரு தடவையாவது நீராடி விட வேண்டும் என துடிக்கிறார்கள் பக்தர்கள். வாசுகி, பீமனின் பலம் பற்றி அறிந்தவன். அவன் நினைத்தால் தங்கள் இனத்தையே நசுக்கி விடுவான் என அவனுக்குத் தெரியும். அவன் தன் லோகத்துக்கு அவனை அழைத்துச் சென்று குடம் குடமாக அமுதம் கொடுத்து உபசரித்தான். இதைக் குடித்ததால், பீமனின் மேனி ஒளிபெற்றது. அவன் தீர்க்காயுளுடன் வாழும் வரத்தை பெற்று விட்டான். அழிக்க நினைத்து ஆற்றுக்குள் வீசப்பட்டவன் இங்கே ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். வாசுகி அவனை எட்டு நாட்கள் தன்னுடன் தங்க வைத்தான். சாப்பிடப் போன பிள்ளை திரும்பவில்லை என்றதும், குந்தி கவலையடைந்தாள். நாட்கள் அதிகமாகவே அழ ஆரம்பித்து விட்டாள். விதுரர் அவளைத் தேற்றினார். அண்ணன் தர்மரும், மற்ற தம்பிகளும் காடு, ஆற்றங்கரை என எங்கெல்லாமோ சுற்றிப்பார்த்து ஆளைக் காணாமல் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தனர். அம்மாவோ பீமன் இல்லாமல் யாரும் வீட்டுப்பக்கம் வரக்கூடாது என விரட்டி விட்டாள். துரியோதனனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம், நாள் எட்டைக் கடந்து விட்டதால். எதுவுமே தெரியாதவன் போல, அவனும் நல்லவன் போல், பீமனைத் தேட ஆரம்பித்தான். அவன் முகத்தை வைத்தே, அவன் தான் பீமனுக்கு தீங்கிழைத்து விட்டான் என்பதை பாண்டவர்கள் புரிந்து கொண்டனர். இருந்தாலும் கேட்க முடியாத நிலை.
இந்நிலையில் குந்தி பிள்ளையை காணாமல் சாப்பிட மறுத்து விட்டாள். பீஷ்மருக்கு தெரிந்து விட்டது. பீமன் பத்திரமாக நாகலோகத்தில் இருக்கிறான் என்று. ஏனெனில், அவர் முக்காலமும் அறிந்த ஞானி. இருந்தாலும், இதை வெளியிடவில்லை. பிற்காலத்தில் அவன் நிகழ்த்தப்போகும் அற்புதங்களுக்கு அவனுக்கு நாகலோகத்தில் கிடைக்கும் அமிர்தமே பலம் என்பதை அவர் அறியாதவரா என்ன! குந்தி! கவலைப்படாதே, பீமன் வந்து விடுவான், என தேற்றினார். இக்காலத்தில் கோயில்களில் சாமியாடி குறி சொல்கிறார்கள் இல்லையா? அந்த வழக்கம் அப்போதும் இருந்தது. அரண்மனையில் உள்ள சில சாமியாடுபவர்கள், ஆட்டம் போட்டு, பீமன் வருவான் என்று குறி சொன்னார்கள். இருந்தாலும், பெற்ற மனம் பிள்ளையைக் காணாமல் தவித்தது. அது சரி...கங்கையில் மூழ்கியவனுக்கு மூச்சு அடைக்காதா! அவன் எப்படி தண்ணீருக்குள் அப்படி கிடக்க முடிந்தது, என்றும் நீங்கள் கேட்பீர்கள். பீமன் யாருடைய மகன்? வாயு பகவானின் மகனல்லவா! பிறகென்ன கவலை! காற்றின் மைந்தனை அந்த காற்றே கொல்லுமா? அதனால் அவன் அனாயசமாகத் தண்ணீரில் கிடந்தான். எட்டுநாள் கழிந்ததும், பல வலிமை மிக்க நாகங்களை அழைத்த வாசுகி, பீமனை மேற்பரப்பு வரை சுமந்து சென்று கொண்டுவிட உத்தரவிட்டான். பீமன் அவனிடம் விடைபெற்று, மேலே வந்து சேர்ந்தான். அம்மா தன்னைத் தேடி அழுவாள் என்று அவனுக்குத் தெரியும். ஒரு தாய்க்கு தான் பெற்ற எல்லா குழந்தைகளையுமே பிடிக்கும். அதிலும், அதிகமாகச் சமர்த்தாக சாப்பிடும் பிள்ளைகளை ரொம்பவே பிடிக்கும். சில பிள்ளைகள் எனக்கு அவியல் வேண்டாம், எனக்கு சாம்பார் பிடிக்காது, எனக்கு தேங்காய் சட்னி பிடிக்காது, எனக்கு சப்பாத்தி ஒத்துவராது என அடம்பிடிப்பார்கள். இவர்களை சமாதானம் செய்து சாப்பிட வைப்பதற்குள் அம்மாவுக்கு போதும் போதுமென்றாகி விடும். நம்ம பீமன் இருக்கிறானே! அவன் அப்படிப்பட்ட ரகம் கிடையாது. என்ன கொடுத்தாலும் சரி... ஐம்பது, நூறு என வயிற்றுக்குள் அடுக்கி விடுவான். அப்படிப்பட்ட சமர்த்து பிள்ளையைத் தாய் மனம் தேடாதா என்ன! அவன் வேகமாக வந்தான். அம்மாவின் பாதத்தில் விழுந்தான். மற்ற பிள்ளைகள் என்றால் என்ன சொல்வார்கள்? அம்மா! அவன் என்னை ஆற்றுக்குள் பிடித்து தள்ளி விட்டான். அவன் பள்ளிக்கூடத்தில் என்னை கிள்ளி விட்டான், என்று. பீமன் தன் தம்பி அண்ணன் துரியோதனனைக் காட்டிக் கொடுக்கவில்லை. அங்கு போனேன், இங்கு போனேன் என சமாளித்து விட்டான். எப்படியோ, மகன் வந்தானே...என்று குந்தியும் மகிழ்ந்து போனாள்.


மகாபாரதம் பகுதி-20


துரியோதனனுக்கு கடும் அதிர்ச்சி. இவனுக்கு விஷம் கொடுத்தோம். சாகாவிட்டாலும் பரவாயில்லை. விஷம் தாக்கி கருப்பாகவாவது மாறியிருக்கிறானா? சூரியனைப் போல் செக்கச்செவேலென மின்னுகிறானே! இவன் எப்படி பிழைத்திருக்க முடியும்? என்ன நடந்தது... அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி சகோதரர்களுக்கு இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்க, தன் பேரக் குழந்தைகளுக்கு வித்தை கற்றுக் கொடுக்க ஆசாரியர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார் தாத்தா பீஷ்மர். கிருபாச்சாரியார் என்பவர் அரண்மனையில் ஏற்கனவே குருவாக இருந்தார். இவர் சாதாரணப்பட்டவர் அல்ல. தவத்தில் சிறந்த கவுதம முனிவரின் பேரன். இவரது தந்தையின் பெயர் சரத்துவான். சிறந்த வில்வித்தையாளர். இவரிடம் 105 பேரும் வில்வித்தையை சரளமாகக் கற்றனர். இன்னும் மற்போர், போரில் வியூகம் அமைக்கும் முறை என பல கலைகளையும் கற்றுத்தந்தார் கிருபர். கிருபாச்சாரியாருக்கு ஒரு தங்கை உண்டு. பெயர் கிருபி. இவரைத் துரோணர் என்னும் பெரும் வில்வித்தையாளருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். துரோணர் ஆங்கிரஸ முனிவரின் குலத்தில் தோன்றியவர். ஆங்கிரஸரின் வம்சாவளியில் வந்த பரத்துவாஜ முனிவர், ஒருமுறை கங்கா தீரத்தில் நீராடிக் கொண்டிருந்த போது, தேவகன்னிகையான மேனகையைக் கண்டார். அவளைப் பார்த்தவுடனேயே தவம் மறந்து உடலில் கிளர்ச்சி ஏற்பட்டது. தன் மோகத்தை ஒரு கலசத்தில் செலுத்தினார். அந்த கலசத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே துரோணர். ரிஷிகளுக்கு அக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சக்தி இருந்திருக்கிறது.
துரோணரின் இளமைக்கால வரலாறை இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கிவேச முனிவர் என்பவரிடம் பரத்வாஜர் தன் இளம் மகன் துரோணனை பாடம் கற்க அனுப்பி வைத்தார். அங்கிவேசரின் குருகுலத்தில் தங்கிப் படித்த போது துரோணனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் பாஞ்சால தேசத்து அரசன் பிருஷதனின் மகன். பெயர் யாகசேனன். இவனை துருபதன் என்று பட்டப்பெயரிட்டு அழைப்பார்கள். அப்பெயரே அவனுக்கு கடைசி வரை நிலைத்தது. நட்பென்றால் அப்படி ஒரு நட்பு. நகமும் சதையும் போல் பிரியாமல் இருவரும் சுற்றித்திரிவார்கள் இந்த சிறுவர்கள். குருகுல படிப்பு முடிந்து அவரவர் இடத்திற்கு திரும்பும்நாளில் நண்பர்கள் இருவரும் மிகவும் வருத்தப்பட்டனர். துருபதன் தன் நண்பன் துரோணனை அணைத்தபடி, துரோணா, நீ எப்போது வேண்டுமானாலும் என்னைப் பார்க்க பாஞ்சால தேசத்திற்கு (இன்றைய பஞ்சாப்)வரலாம். என் தந்தையின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு நான் அரசன் ஆவேன். அப்போது, என் நாட்டில் பாதியை உனக்குத்தந்து உன்னையும் அரசனாக்குவேன். இது சத்தியம், என்றான். நண்பனின் உபசார வார்த்தைகள் கேட்டு துரோணன் நெகிழந்து போனான். இப்படியாக காலம் கழிந்து விட்டது. கிருபி துரோணருக்கு மனைவியானாள். அவர்களுக்கு சிவபெருமானின் பேரருளால் அஸ்வாத்தாமன் என்ற மகன் பிறந்தான். பிறந்தது கடவுளின் அருளால் என்றாலும் கூட, பிராமணரான துரோணரால் மகனை வளர்க்கும் அளவுக்கு சம்பாதிக்க இயலவில்லை. தவம், யாகம், பூஜை என சுற்றிக் கொண்டிருந்த அவர், பாலுக்காக ஏங்கியழும் மகனைக் கண்டு வருத்தப்படுவார். கிருபி அதை விட நூறு மடங்கு வருந்துவாள். ஐந்து வயது வரை அந்தக் குழந்தை எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை.
ஒருநாள் நண்பன் துருபதனின் ஞாபகம் துரோணருக்கு வந்தது. இளம்வயதில் அவன் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வரவே, பாஞ்சால தேசம் நோக்கி புறப்பட்டார் அவர். இப்போது துருபதன் பாஞ்சால தேசத்தின் மன்னனாக இருந்தான். நண்பனிடம் நாடு கேட்பதற்காக அவர் போகவில்லை. ஒரு பசுவை வாங்கி வந்தால், குழந்தை பசித்து அழும்போது பாலாவது கொடுக்கலாமே என்ற எண்ணத்துடன் புறப்பட்டார். அரண்மனைக்குச் சென்று துருபதனைச் சந்தித்தார். நீண்ட காலத்திற்கு பிறகு பார்க்க வருவதால், நண்பன் ஓடோடி வந்து அணைத்துக் கொள்வான் என நம்பிச் சென்றார் துரோணர். அரண்மனைக்குள் சென்றதும், துருபதன் அவரைப் பார்த்தான். அவன் கேட்ட முதல் கேள்வியே துரோணரின் நெஞ்சில் அம்பாய்ப் பாய்ந்தது.  அந்தக் கேள்வி என்ன தெரியுமா? நீ யார்? என்பது தான். நீண்ட நாளாகி விட்டதால் அவன் தன்னை மறந்திருப்பானோ என்று, நண்பா! நான் துரோணன்... என்று இழுக்கவே, எந்த துரோணன்? என்று துருபதன் பதில் கேள்வி கேட்கவும் நொந்து நைந்து விட்டார் துரோணர். அப்போது ஜாதி துவேஷத்தைக் கிளப்பினான் துருபதன். நீ ஜாதியில் பிராமணன் என்பது உன்னைப் பார்த்ததுமே தெரிகிறது. நான் க்ஷத்திரியன். உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? என்றான். இதன் மூலம் தான் ஒரு மன்னன் என்றும், துரோணர் ஏழை அந்தணன் என்றும் குத்திக்காட்டினான். அடுத்து அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பரிகாசச் சொல்லாய் அமைந்தது. கேவலம் பசி தீர்க்க இவனிடம் உதவி கேட்க வரப்போய் நிலைமை இப்படியாகி விட்டதே! துரோணரின் உடல் கூனிக்குறுகியது. அதுவே ஆவேசமாக பொங்கி எழ, அட நம்பிக்கைத் துரோகியே! நீ எனக்கு இளம்வயதில் நாடு தருவதாகச் சொன்னாய். நான் ஒரு பசுவை யாசகமாக கேட்க வந்தேன். என் ஏழ்மையை பரிகசித்தாய். இப்போது சொல்கிறேன் கேள். நான் உன் நாட்டில் பாதியை நீ சொன்னபடி நிச்சயமாக அடைவேன். உன்னுடன் போர் செய்வேன். உன்னைத் தோற்கடித்து தேர்க்காலில் கட்டி தெருத்தெருவாக இழுத்துச் செல்வேன். இது சத்தியம், என்று சபதம் செய்தார். அப்போது பல நாட்டு அரசர்கள் அவையில் இருந்தனர். துரோணரின் கர்ஜனை அவர்களை அசர வைத்தது. துருபதனின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.


மகாபாரதம் பகுதி-21



நண்பனால் வஞ்சிக்கப்பட்ட இந்த துரோணர் தான் பாண்டவ, கவுரவர்களுக்கு குருவாக பொறுப்பேற்கிறார். அவரை கிருபாச்சாரியார் சந்தித்தார். பீஷ்மர் அவரை வணங்கினார். சுவாமி! சிநேகிதன் ஒருவன் உங்களுக்கு செய்த துரோகம் எங்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. இதோ! இவர்கள் எல்லாருமே என் பேரன்கள். இவர்களை தாங்கள் வில்வித்தையிலும், சகல போர்க்கலைகளிலும் வல்லவர்களாக்கி, இவர்களின் உதவியுடன் தங்கள் சபதத்தையும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள், என்றார். துரோணர் மகிழ்ந்தார். அவரை மேலும் மகிழ்விக்கும் வகையில் பீஷ்மர் அவரிடம், துரோணர் பெருமானே! தாங்கள் துருபதனால் நாடு கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டீர்கள். ஆனால், நாங்கள் உங்களை எங்கள் தேசத்து அரசனாகவே பாவிக்கிறோம். ஆம்...இனி நீங்களும் எங்கள் தேசத்து அரசர் தான். இதோ! வெண் கொற்றக்குடையையும், அரசருக்கு கிரீடம், செங்கோல் முதலான சின்னங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்,என்றார். பீஷ்மரின் அன்பில் துரோணர் நெகிழ்ந்து விட்டார். தன் குழந்தையின் பசிதீர்க்க ஒரு குவளை பாலுக்கு அலைந்த அவர், இன்று ராஜாவாகி விட்டார். மனிதர்களின் நிலைமையே இப்படித்தான். நேற்று வரை கஞ்சிக்கும். கூழுக்கும் அலைபவன் இன்று காரில் பவனி வருவான். மனிதனின் நிலையை காலம் மாற்றி விடுகிறது. அவனது திறமைக்கும், கல்விக்கும் உரிய புகழ் என்றேனும் ஒருநாள் கிடைத்தே தீருகிறது, அவனோ அவனது முன்னோரோ புண்ணியங்கள் செய்திருக்கும் பட்சத்தில்!
பொறுப்பேற்ற நாளிலேயே பாடங்களை ஆரம்பித்து விட்டார் துரோணர். ஒரு செயலைச் செய்வதாகப் பொறுப்பேற்ற பிறகு, காலநேரம் பார்ப்பது, தயங்குவது இவையெல்லாம் இருக்கவே கூடாது என்பது இந்த இடத்தில் மகாபாரதம் நமக்கு கற்றுத்தரும் பாடம். பாண்டவ, கவுரவர்கள் ஆர்வத்துடன் துரோணரிடம் போர் வித்தைகளைக் கற்றனர். எல்லாருமே வித்தைகளைத் தெளிவாகப் படித்தனர் என்றாலும், ஒரு வகுப்பில் முதல் தர தேர்ச்சி பெறும் மாணவனைப் போல, அர்ஜூனன் எல்லாரையும் விட ஆயுத வித்தைகளில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். குறிப்பாக, வில் வித்தையில் அவனே ஜெயக்கொடி நாட்டினான். அவனை விஜயன் என செல்லமாக அழைப்பார் துரோணர். ஒருநாள் கங்கையில் நீராடி கொண்டிருந்தார் துரோணர். அப்போது, அவரது கால்களைக் கவ்விக் கொண்டது ஒரு முதலை. ரத்தம் பெருக்கெடுத்து தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்தது. துரோணர் அலற ஆரம்பித்தார். கரையில் பாண்டவ, கவுரவர்கள் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். குருவின் அலறல் சத்தம் கேட்டதும், விஷயத்தைப் புரிந்துகொண்டு, என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர். தண்ணீருக்குள் முதலை எந்த இடத்தில் கிடக்கிறது என தெரியாமல், வில், அம்பை எடுத்து குறி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அர்ஜூனன் தன் வில்லை வளைத்தான். முதலை இருக்குமிடத்தை குறிப்பால் அறிந்தான். அவ்விடத்தில் அம்பைச் செலுத்தினான். முதலை துடிதுடித்து தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்து விட்டது. அம்புகளை சரமாரியாகப் பாய்ச்சி அதைக் கொன்று விட்டான். துரோணர் பிழைத்தார். யானையாகப் பிறந்த நாராயண பக்தனான கஜேந்திரன், முதலையிடம் சிக்கித்தவித்த போது, அந்த ஆதிமூலமே வந்து காப்பாற்றினான். அதுபோல், நீயும் என் உயிரைக் காத்தாய், என அவனை உச்சிமோந்தார். அத்துடன் தன்னிடம் இருந்த அரியவகை அஸ்திரம் ஒன்றை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.
ஒருவழியாக ஆயுதப்பயிற்சி நிறைவடைந்தது. துரோணர் தன் சீடர்களிடம், பாண்டவ, கவுரவர்களே! இத்துடன் பயிற்சி முடிந்து விட்டது. இனி பரிட்சை நடத்தப் போகிறேன். அதாவது, பொதுமக்கள் முன்னிலையில் நீங்கள் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட இது ஒரு போட்டி போலவே அமையும். உங்களுக்குள்ளேயே நீங்கள் மோதிக் கொள்ள வேண்டும். இந்தப் போட்டியை ஆரோக்கியமாக நடத்த வேண்டும். ஒருவர் இன்னொருவரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. போட்டி விதிகளை எள்ளளவும் மீறக்கூடாது, என்றார். சீடர்கள் ஆர்வத்துடன் தலையசைத்தனர். இதையடுத்து பீஷ்மர் தன் பேரன்களின் வித்தையைப் பார்க்க ஆர்வத்துடன் ஏற்பாடுகளைச் செய்தார். யுத்த அரங்கம் அலங்கரிக்கப்பட்டது. மக்கள் அமர்ந்து பார்க்க மேடைகள் அமைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் இரண்டு கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன் ஏக்கப்பெருமூச்சு விட்டான். ஜாதியால் தாழ்ந்து பிறந்தோமே! இதோ! இந்த அந்தணர் தன் அந்தண சீடர்களுக்கு ஏராளமான ஆயுதக்கலைகளை அளிக்கிறாரே! காட்டில் வசிக்கும் வேடர் குலத்தில் பிறந்த நமக்கு இப்பயிற்சிகள் கிடைக்க வில்லையே! இவர் இந்த இளைஞர் களுக்கு கற்றுத்தந்த கலையை தினமும் கண்கொட்டாமல் கவனித்து, நாமும் ஓரளவு உயரிய நிலையில் தான் இருக்கிறோம். இருப்பினும், இதை யார் ஒத்துக் கொள்வார்கள்? உன் குரு யார் எனக் கேட்பார்களே! ஆயினும், முயற்சி நல்வினை தரும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அந்த மகானை அணுகுவோம், என்றவனாய் துரோணரின் முன்னால் வந்து நின்றான் அந்த இளையவேடன். ஐயா! என் பெயர் ஏகலைவன். தாங்கள் இந்தக்காட்டிற்கு வந்து, தங்கள் சீடர்களுக்கு வில்வித்தைக் கற்றுக் கொடுப்பதை கவனித்தேன். நீங்கள் கற்றுக் கொடுத்தவற்றில் வில்வித்தையை நான் முழுமையாக கவனித்தேன். இதோ பாருங்கள்! என் வித்தையைப் பார்த்தபிறகு, முறையாக இவற்றை எனக்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் சீடர்களிலேயே உயர்ந்தவனாக நான் இருப்பேன், என்றவனாய் சில வித்தைகளையும் செய்து காண்பித்தான். அர்ஜூனனின் வித்தையை விட அது மிகவும் நேர்த்தியாக இருந்தது. துரோணர் இந்த இளைஞனுக்கு வித்தை கற்றுத்தர இயலாத நிலையில் இருந்தார். அதற்கு காரணம் ஜாதியல்ல! அர்ஜூனனிடம் அவர் ஒரு வாக்கு கொடுத்திருந்தார். அர்ஜூனா! உன்னிலும் மேம்பட்ட ஒரு மாணவனை நான் பார்த்ததில்லை. உன்னை விட ஒரு உயர்வான மாணவனை நான் இனி உருவாக்கவும் மாட்டேன், என்று சொல்லியிருந்தார். என்ன செய்வதென யோசித்தார்.


மகாபாரதம் பகுதி-22


ஏகலைவா! நீ என் மாணவனாக இருக்க அனுமதிக்கிறேன். நான் நேரடியாக உனக்கு பயிற்சி கொடுக்க அவகாசமில்லை. எனினும், நீ என் மாணவன் தான். என்னை மானசீக குருவாகப் பாவித்து பயிற்சி எடுத்து வா! அதன்பின் உனக்கு தேர்வு வைக்கிறேன், என்றார். ஏகலைவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவன் காட்டுக்குள் சென்றான். துரோணரைப் போலவே ஒரு பொம்மை செய்தான். அந்தப் பொம்மையை தன் குருவாகவே கருதி, பயிற்சி எடுத்தான். அவனது வித்தை அர்ஜூனனை விட மேம்பட்டதாக இருந்தது. இதையடுத்து அவன் துரோணரிடம் வந்தான். தேர்வு வைக்கச் சொன்னான். துரோணர் அவனிடம், என் அன்பு மாணவனே! உனக்கு தேர்வு வைக்கும் முன்பு, நீ என் முன்னால் எடுத்த பயிற்சிக்கான குருதட்சணையை தந்து விடு, என்றார். என்ன வேண்டும் சுவாமி? என அவன் கேட்க, ஏகலைவா! உன்னிடம் ஏராளமான பொன் பொருள் கேட்பேன் எண்ணி விடாதே. உன்னிடம் இருக்கும் ஒன்றைத் தான் கேட்கப் போகிறேன், என்ற துரோணரிடம், குருவே! தாங்கள் கேட்பது என்னிடம் இருக்குமானால், அதை மறுக்காமல் தருகிறேன், இது சத்தியம், என்றான். துரோணர் சிரித்தார். ஏகலைவா! உன் வலதுகை பெருவிரலை என்னிடம் கொடு, என்றார் துரோணர். ஏகலைவன் தயக்கமே கொள்ளவில்லை. அவர் கண் முன்னாலேயே தன் கட்டைவிரலை வெட்டிக் கொடுத்து விட்டான். இதன்பின் தேர்வு ஆரம்பித்தது. மிக சிறப்பாக அம்பு வீசினாலும் கூட, கட்டைவிரல் இல்லாததால், அர்ஜூனனனைப் போல் அவனால் முழு சக்தியுடன் அம்பு வீச இயலவில்லை.
துரோணர் மனதிருப்தி அடைந்தார். அவரது சத்தியமும் பலித்தது. ஒரு மாணவனை நிராகரித்தோம் என்ற அவப்பெயரும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வின் மூலம் பாரதம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. ஒரு மாணவனிடம் சிரத்தை இருந்தால், அவன் ஆசிரியர் இல்லாமலே பாடங்களைப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம். நம் மாணவர்களும், பள்ளிக்கு ஆசிரியர் வரவில்லைல, பாடம் நடத்தவில்லை, புரியவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. சுயமுயற்சியே வாழ்க்கையை பலமாக்கும் என்பதை இந்நிகழ்ச்சி மூலம் உணர வேண்டும். மேலும், ஒருவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற இன்னும் சிலர் பாதிக்கப்படுவதனால், அந்த பாதிப்பை பெரிதெனக் கொள்ளாமல், சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதையும் இந்நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. அதே நேரம் பாவம் செய்தவர் அதற்குரிய பலனைப் பெற்றே தீர வேண்டும். இன்னும் சில நாட்களில் துரோணர் இதற்குரிய பலனைப் பெறப் போகிறார். என்ன பலன் அது? படித்துக் கொண்டே செல்வோமே! குறிப்பிட்ட நாளில், கவுரவர்களும், பாண்டவர்களும் யுத்த அரங்கத்தில் கூடினர். துரோணர், கிருபர், பீஷ்மர், திருதராஷ்டிரன், அவனது தம்பி விதுரன் என ஏகப்பட்ட முக்கியஸ்தர்கள் அங்கே குவிந்தனர். போட்டி துவங்கியது. எல்லாரும் தங்கள் வித்தையை சிறப்பாகக் காட்டினர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் நடந்த போட்டியை, பிரமாதம், பிரமாதம் என மக்கள் புகழ்ந்தனர். சிலர் தேரில் ஏறி மின்னல் வேகத்தில் செலுத்தி வீரத்தை வெளிப்படுத்தினர். எல்லாருக்குமான வித்தைகள் முடிந்த வேளையில் துரியோதனனுக்கும், பீமனுக்கும் கதாயுதப்போர் நடந்தது. இருவரும் கடுமையாக மோதினர். பீமனை துரியோதனனுக்கு பிடிக்காது என்பதால், துரியோதனன் மிகுந்த ஆக்ரோஷத்துடன் நிஜமாகவே தாக்க ஆரம்பித்தான். பீமன் என்ன சாதாரணமானவனா! விடாக்கண்டனாயிற்றே! அவனும் துரியோதனனை உதைக்க ஆரம்பித்தான். அந்த இருவரும் பத்தாயிரம் யானை பலம் கொண்டவர்கள் போல் தாக்கிக் கொண்டனர் என்று சொல்கிறது வில்லிப்புத்தூரார் பாரதம்.
சற்று நேரத்தில் இருவரும் போர்விதிகளை மறந்து விட்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். உடனே, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அவர்களிடையே புகுந்தான். வீரர்களே! இது போர் அல்ல! போட்டி! போதும், போதும், உங்கள் விளையாட்டு. இருவரும் வெளியேறுங்கள், என்றான். ஒருவரை ஒருவர் முறைத்தபடி இரண்ட மாவீரர்களும் களத்திற்கு வெளியே சென்றனர். பின்னர் அர்ஜூனன் தன் வித்தையைக் காட்ட ஆரம்பித்த போது அரங்கமே அதிரும் வகையில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் மக்கள். அதிபயங்கர அஸ்திரங்களை மேலே எய்து, அவற்றின் உக்கிரத்தை மற்ற அஸ்திரங்களை எய்வதன் மூலம் தணித்தான். இப்படி கூட்டத்தினர் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஒரு மாவீரன் தன் ஆசனத்தில் இருந்து எழுந்தான். துரோணாச்சாரியார் முன்னால் சென்றான். அவரது பாதங்களில் பணிந்தான். பெருமானே! நானும், இந்த யுத்த அரங்கத்தில் என் வில் வித்தையைக் காட்ட விரும்புகிறேன். அனுமதி கொடுங்கள், என்றான். துரோணர் தலையசைத்தார். என்ன அதிசயம்! அந்த வீரன் வில்வித்தையில் அர்ஜூனனை மிஞ்சி விட்டான். அர்ஜூனனின் வித்தைகள் இவன் வித்தைக்கு முன்னால் தூசு துரும்பாக இருந்தது. ஏகலைவனை அடக்கி அனுப்பி விட்டோம். அந்தப் பாவம் என்னை இந்த புதிய வீரனின் வடிவத்தில் தாக்குகிறதோ....? துரோணர் அதிசயித்து போய்விட்டார். அர்ஜூனனும் தனது நிலைக்காக வெட்கப்பட்டான். இவ்வளவு அரிய கலைகளை இவன் எப்படி படித்தான்? நமக்கு இதில் ஏதும் தெரியாதே? அவன் தலை குனிந்து நின்றான். கூடியிருந்த மக்களெல்லாம், அர்ஜூனனை விட புதிய வீரனே சிறந்தவன் என கொண்டாடினர். இந்த புதிய வீரன் துரியோதனனின் உயிர் நண்பன். பரிதாபத்திற்குரிய பிறவி. ஒரு தாய் செய்த தவறின் விளைவாக உருவான பிள்ளை. அரண்மனையில் வளர வேண்டிய இவன், ஒரு தேரோட்டியின் வீட்டில் வளர்கிறான்.


மகாபாரதம் பகுதி-23


கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் குணம் கொண்டவன். பிறக்கும் போதே காதில் குண்டலமும், மார்பில் கவசமும் கொண்டவன். சந்தர்ப்பவசத்தால் துரியோதனனை நட்பாக்கி கொண்டவன். பெயர் கர்ணன். அந்த மாவீரனை அனைவரும் கொண்டாடியதும், அவன் அர்ஜூனனிடம், ஏ அர்ஜூனா! நீ மாபெரும் வீரன் என அனைவரும் கொண்டாடினர். இப்போது என்னைக் கொண்டாடுகின்றனர். இப்போது நடந்தது தனிப்பட்ட வித்தைப் பயிற்சி தான்! இப்போது, நீயும் நானும் நேருக்கு நேர் நின்று போர் செய்வோம். நம்மில் யார் வெற்றி பெறுகிறார் என்பதைக் கொண்டு போட்டியின் முடிவு அமையட்டும், என்றான். பாண்டவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த துரியோதனனுக்கு கர்ணனின் இந்தப் பேச்சு அமுதமாய் இனித்தது. அவன் கர்ணனை வாழ்த்தினான். நண்பா! உன்னை வெல்ல வல்லவர் யார்? என்று அன்பு ததும்ப கூறி மார்போடு அணைத்துக் கொண்டான். அர்ஜூனனுக்கும் கோபம்! அடேய் கர்ணா! வெறும் வார்த்தைகள் போட்டியின் முடிவைத் தீர்மானிக்காது. என் அந்தஸ்துக்கு நீ எவ்வகையிலும் தகுதியில்லாதவன், என்றான். கர்ணன் விடவில்லை.அடக்கோழையே! முதலில் போருக்கு அறைகூவல் விடுத்தவனே நான் தான். நீ மட்டும் அதற்கு தயார் என்றால் தோற்கப்போகும் உன் தலையை வெட்டி, ரத்தத்தால் இந்த யுத்த களத்தில் வழிபாடு நடத்துவேன், என்றான். இந்நேரத்தில் கிருபாச்சாரியார் குறுக்கிட்டார்.
கர்ணா! நீ சாதாரண தேரோட்டியின் மகன். அரச குலத்தவன் அல்ல! அரசகுலத்தவர் தான் அரச குலத்தவரோடு வீரம் பேச தகுதியுள்ளவர்கள். நீ அர்ஜூனனிடம் பேசியது குற்றம், என்றார். உடனே துரியோதனன் கொதித்தெழுந்தான். ஆச்சாரியரே! தாங்கள் சொல்வதை ஏற்க மாட்டேன். படித்தவர்கள், பேரழகிகள், கொடையாளர்கள், வீரர்கள். மன்னர்கள், ரிஷிக்களுக்கு ஜாதியோ, மதமோ கிடையாது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் பேசுவது முறையல்ல. ஏனெனில், நீங்களே ஒரு நாணல் புல்லில் இருந்து பிறந்தவர் தான். நாராயணர் நரசிம்மராக பிறந்தது ஒரு தூணில் இருந்து. சிவபெருமான் மூங்கிலில் இருந்து அவதரித்தார். அகத்தியமாமுனியும், துரோணரும் பிறந்தது கும்பத்தில் இருந்து! எனவே தாங்கள் பேசுவது ஏற்புடையதல்ல. சரி...ஒருவேளை அரசகுலத்தில் பிறந்தவன் தான் அர்ஜூனனனுடன் சண்டையிட வேண்டுமானால், இப்போதே இந்தக் கணமே கர்ணனும் அரசன் தான். இதோ! என் தேசத்துக்கு உட்பட்ட அங்கதேசம் இனி கர்ணனுக்குரியது. அவனே அங்கநாட்டின் மன்னன். அவனுக்கு தன் கிரீடத்தையே எடுத்து சூட்டினான். தன் சிம்மாசனத்தில் அவனை அமர வைத்து, அவன் அருகிலேயே சரிசமமாக அமர்ந்து கொண்டான். இப்படி நட்புக்கு இலக்கணமாக விளங்கிய துரியோதனனை நன்றிப் பெருக்குடன் ஆனந்தக்கண்ணீர் விழிநுனியில் தொக்கி நிற்க பார்த்தான் கர்ணன். அத்துடன் யுத்த அரங்க போட்டி வேளை முடியவே பிரச்னையும் முடிந்து விட்டது. மறுநாள் துரோணர் தன் சீடர்கள் எல்லோரையும் அழைத்தார்.
என் அன்பு மாணவர்களே! நீங்கள் நேற்று போர் அரங்கத்தில் காட்டிய வித்தைகளை நினைத்து பெருமிதமடைகிறேன். இப்போது நீங்கள் எனக்கு குருதட்சணை தர வேண்டும். என்னை பாஞ்சால தேசத்து மன்னன் துருபதன் அவமானப்படுத்தினான். அவனை நீங்கள் கைது செய்ய வேண்டும். அவன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது. அவனைக் கொல்லாமல் உயிரோடு தேர்க்காலில் இட்டுக்கட்டி இழுத்து வாருங்கள். இதைச் செய்வீர்களா? என்றார். அனைவரும் ஆர்வமுடன் செய்கிறோம் குருவே என்றனர். சற்று கூட தாமதிக்காமல், பாண்டவ, கவுரவ சேனை புழுதிப்படலத்தைக் கிளப்பிக்கொண்டு கிளம்பியது. பாஞ்சாலதேசம் முற்றுகையிடப்பட்டது. துருபதன் இதுகண்டு கலங்கவில்லை. அவனும் மாபெரும் வீரன் தான். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து திடீர் தாக்குதல் நடத்தினாலும் கூட அஞ்சாநெஞ்சம் கொண்ட அந்த மாவீரன், பாண்டவ கவுரவப் படையைச் சந்திக்க, தனது சேனையை குறுகிய காலத்தில் திரட்டிக்கொண்டு எதிர்த்து போரிட வந்தான். இந்த இடத்தில் மகாபாரதம் நமக்கு கற்றுத்தரும் பாடத்தைக் கவனிக்க வேண்டும். மனித வாழ்க்கை என்பதே துன்பம் நிறைந்தது தான். எதிர்பார்த்த துன்பத்தை நாம் எப்படியோ சகித்துக் கொள்கிறோம். ஆனால், எதிர்பாராமல் வரும் துன்பங்களை நம்மால் சகிக்க முடிவதில்லை. நிலை குலைந்து போய்விடுவோம். இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தின் தலைவர் திடீரென இறந்து விட்டார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரது வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தது அந்தக் குடும்பம். அவரது மறைவால், அவர்கள் உலகமே இருண்டு விட்டது போன்ற நிலையை அடைந்து விடுகின்றனர். பின்விளைவுகளை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட கொடும் துன்பம் தாக்கும் நேரத்தில் கூட, தோல்வியோ, வெற்றியோ...எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் போராட பழக வேண்டும் என்பதையே துருபதனின் எதிர்போராட்டம் எடுத்துச் சொல்கிறது. துருபதன் தன்னை தாக்க வந்தவர்களுடன் கடுமையாகப் போராடினான். அவனது தாக்குலைத் தாக்கு பிடிக்க முடியாமல் துரியோதனும், அவனது சகோதரர்கள் 99பேரும் திணறினர். துரியோதனனின் படைகள் பின்வாங்கின. ஒரு கட்டத்தில் உயிருக்குப் பயந்து அவர்கள் அஸ்தினாபுரத்துக்கே ஓடி விட்டார்கள். துருபதனின் அம்புமழையை ஒரே ஒருவன் தான் தாக்குப் பிடித்தான். அந்தமாவீரனுடன் ஆனந்தமாக அனுபவித்து போர் செய்தான் துருபதன். ஆனால், எதிர்பாராதவிதமாக அர்ஜூனன் விட்ட அம்பு துருபதன் மீது பாய்ந்தது. அவன் சாய்ந்து விழுந்தான். அவனைக் கைது செய்த அர்ஜூனன், அவனைத் தேர்க்காலில் சேர்த்துக் கட்டினான். தேரை அஸ்தினாபுரத்துக்கு விரட்டினான். துரோணாச்சாரியார் தன் சிஷ்யப்பிள்ளைகள் பாய்ந்தோடி வருவதைப் பார்த்தார். தேர்க்காலில் துருபதன் அவமானம் குன்ற கிடந்தான். தேர்ச்சக்கரங்கள் சுற்றியதில் அவன் களைத்துப் போயிருந்தான். துரோணர் அவனை நோக்கி ஏளனமாகச் சிரித்தார். ஏ துருபதா! நம்பிக்கை துரோகியே! நான் நினைத்தால் இப்போதே உன்னை கொன்று ஒழிக்க முடியும். என் பிள்ளைக்கு பசிக்கிறது என உன்னிடம் வந்து நின்ற போது, ஒரு அந்தணன் என்றும் பாராமல் என்னை விரட்டியடித்தாயே! இப்போது உன் நிலையைப் பார்த்தாயா? உனக்கு நான் சமஎதிரியல்ல! என் சிஷ்யர்களிடமே நீ சிக்கிக் கொண்டது அவமானமாக இருக்கிறதல்லவா! உன்னை வென்றதன் மூலம் பாஞ்சால தேசம் இன்றுமுதல் எனக்குச் சொந்தம். இருந்தாலும், நீ சொன்னபடி பாதி ராஜ்யத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். உனக்கு உயிர்பிச்சையும் தருகிறேன். இவனை விடுதலை செய்துவிடுங்கள். உயிர்ப்பிச்சை கொடுக்கிறேன், என்றார்.


மகாபாரதம் பகுதி-24


துருபதனை அவிழ்த்து விட்டான் அர்ஜூனன். அவன் தலைகுனிந்தபடியே அங்கிருந்து பாஞ்சாலம் நோக்கி நடந்தான். செல்லும் வழியில் அவமானம் அவனைப் பிடுங்கித்தின்றது. இந்த துரோணனைக் கொன்றே தீர வேண்டும். அவன் உயிர்போகும் நாள் தான் எனக்கு இனிய நாள். ஐயோ! கடவுளே! என் வாழுநாளுக்குள் அது நிறைவேறாவிட்டால், என் வம்சாவழியினராவது அவனைக் கொல்ல வேண்டும். ஆனால், எனக்கு பிள்ளை வரம் இதுவரை இல்லையே. என்ன செய்வேன்? என புலம்பினான். அத்துடன் அர்ஜூனனின் வில்லாற்றல் பற்றிய நினைவும் எழுந்தது. மிகச்சிறந்த அந்த இளைஞன் என்னை கலக்கி எடுத்து விட்டானே! வீரர்கள் போற்றுதற்குரியவர்கள். இப்படிப்பட்ட வீரன் எனக்கு மருமகனாக இருந்தால், எப்படியிருக்கும்? ஆனால், எனக்கு பெண் குழந்தையும் இல்லையே! இப்படி பல சிந்தனைகளுடன் நடந்தவனின் கால்கள் திசைமாறின.
நாட்டுக்கு போக வேண்டிய அவன் கங்கை கரைக்குச் சென்றான். அங்கே ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்த ரிஷ்யசிருங்கர், உபயாஜர், யாஜர் ஆகிய முனிவர்களைச் சந்தித்தான். இவர்களில் யாஜரிடமும், உபயாஜரிடமும் தனக்கு குழந்தையில்லாத நிலையை எடுத்துச் சொன்னான். அவன் மீது அவர்கள் இரக்கம் கொண்டனர். மன்னா! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். யாகத்தை நாங்களே வெற்றிகரமாக நடத்தித் தருகிறோம். யாகத்தின் ஹவிஸை உன் மனைவியிடம் காடுப்போம். அதை அவள் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டு விட்டால், உனக்கு பிள்ளை பாக்கியம் உறுதி, என்றனர். துருபதன் அவர்களிடம் ஆசிபெற்று நாடு திரும்பினான். அந்த தர்மனை நான் விரட்டி விடுகிறேன், என சவால் விட்டான். திருதராஷ்டிரன் கடகடவென சிரித்தான்.


மகாபாரதம் பகுதி-25


தந்தையே! நீங்கள் சிரிப்பது எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இது உங்களுக்கு சொந்தமான பூமி. இந்த பூமியை பாண்டவர்களின் வசம் ஒப்படைப்பதில் எந்த நியாயமும் இல்லை. தர்மன் முன்பு போல இப்போது இல்லை. அவனது தம்பிமார்கள் அகங்காரம் பிடித்து அலைகின்றனர். அவர்களால் எனக்கு இப்போது அரசாங்கத்தில் செல்வாக்கு இல்லை. பெருமை மிகவும் குறைந்து விட்டது. எனவே, இந்த ராஜ்யத்திற்கு என்னை யுவராஜா ஆக்குவதே முறையானது, என்றான் துரியோதனன். துரியோதனன் தன் நிலையை தானே குறைத்து சொன்னது திருதராஷ்டிரனுக்கு அவமானமாக இருந்தது. தம்பி புத்திரர்கள் பெருமையில் மேலோங்கி இருப்பதை தானே ஒப்புக்கொண்ட தன் மகனைப் பற்றி அவன் வருத்தப்பட்டான். இருப்பினும், அவன் மனுநீதி தவற விரும்பவில்லை. துரியோதனா! நீ நினைப்பது தவறு. இந்த ராஜ்யம் எனக்கு சொந்தமானது அல்ல. இது இறந்து போன என் தம்பி பாண்டுவுக்கு உரியது. எனவே, அவனது பிள்ளைகள்தான் இந்த ராஜ்யத்தை ஆளுவதற்கு உரிமை பெற்றவர்கள். அவர்கள் சிறியவர்களாக இருப்பதால் தம்பியின் ராஜ்யத்தை நான் பொறுப்பேற்று ஆண்டு வருகிறேன். சில காலம் நான் ஆண்டேன் என்பதற்காக ராஜ்யம் எனக்கு சொந்தம் என்று சொன்னால் பெரியோர்கள் பழிப்பார்கள். நீ ஆத்திரப்படுவதில் அர்த்தம் ஏதும் இல்லை. எனவே, பாண்டவர்களை அனுசரித்து செல். தர்மன் ஆண்டால் என்ன? நீ ஆண்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான். பாண்டவர்களுக்கு சொந்தமான இந்த பூமியை அவர்களோடு இணைந்து நீங்களும் ஆளுவதற்கு உரிமையுடைவர்கள் தான். ஆனால், தலைமை பொறுப்பு அவர்களிடம் தான் இருக்க வேண்டும். இதுதான் ராஜநீதி, என்றான் திருதராஷ்டிரன்.
துரியோதனனுக்கு கோபம் இன்னும் அதிகமானது. தந்தையின் கருத்தை ஏற்றுக்கொள்ள அவன் மறுத்து விட்டான்.  அப்பா! எனக்கு என் தம்பிமார்கள் இருக்கிறார்கள். மாமா சகுனி சிறந்த ஆலோசகராக இருக்கிறார். என் தாயின் சகோதரனான அவர் எப்போதும் என் நலத்தையே விரும்புகிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் மேல் என் நண்பன் கர்ணன் என் மீது உயிரையே வைத்திருக்கிறான். இவர்களின் கருத்துப்படி இந்த நாடு எனக்குத்தான் சொந்தம். அவர்களின் உதவியோடு இந்த நாட்டை நான் கைப்பற்றி விடுவேன். பாண்டவர்கள் என் ஜென்ம விரோதிகள். அந்த சிறுவர்களோடு நான் ஒருபோதும் சேரமாட்டேன். நீங்களாக எனக்கு பட்டம் சூட்டுகிறீர்களா அல்லது நானாக எடுத்துக் கொள்ளட்டுமா? 99 பேரை தம்பிகளாக கொண்ட நான் யாருக்கு பயப்பட வேண்டும்? அத்துடன் மிகப்பெரிய தம்பியாக என் நண்பன் கர்ணன் இருக்கிறான். அனைவருமே மாபெரும் வீரர்கள். எனக்காக உயிரையும் கொடுப்பவர்கள். பாண்டவர்களுடன் யுத்தம் செய்து நாட்டை எனக்கு வாங்கி கொடுப்பார்கள். இப்படியெல்லாம் ஒரு நிலைமை உருவாவதை விட நீங்களே பாண்டு புத்திரர்களிடம் நயமாக பேசி நாட்டை என்னிடம் வாங்கி கொடுங்கள், என சற்றும் நியாயம் இல்லாமல் பேசினான். திருதராஷ்டிரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவனது மனம் அலைபாய்ந்தது. பீஷ்மரையும், தன் தம்பி விதுரனையும் வரச்சொல்லி ஆள் அனுப்பினான். அவர்கள் அவசரமாக வந்து சேர்ந்தனர். ஆட்சி சூத்திரத்தில் சிறந்தவர்களே! நான் இப்போது சிக்கலான நிலையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். நீதி பெரிதா? பாசம் பெரிதா? என்ற கேள்விகள் என்னை வட்ட மிடுகின்றன. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் அல்ல. ஏற்கனவே என் பிள்ளைகளுக்கும், என் தம்பி பாண்டுவின் பிள்ளைகளுக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அதிலும், பலசாலியான பீமனைக் கண்டால் என் மகன் துரியோதனனுக்கு அறவே பிடிப்பதில்லை. அர்ஜுனனின் வில் வீரம் கண்டு மற்ற பிள்ளைகள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
என் தம்பி குமாரர்கள் எல்லா வகையிலும், உயர்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். என் பிள்ளைகள் என்பதற்காக துரியோதனாதிகளை நான் உயர்த்திப் பேச விரும்பவில்லை. அதேநேரம், இந்த இருவரின் பகைமையையும் தீர்த்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதற்கு உங்களின் ஆலோசனை வேண்டும். இப்போதைக்கு அவர்கள் சேர்ந்திருப்பது நல்லதல்ல. இருதரப்பாரையும் பிரித்து வைக்க வேண்டும். நான் இப்படி செய்வதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபம் இருக்கிறதா? என கேட்டான்.  பீஷ்மரும், விதுரரும் ஆலோசித்தார்கள். அவர்களுக்கும் திருதராஷ்டிரனின் நிலைமை நன்றாக புரிந்தது. இருவரும் திருதராஷ்டிரரிடம், கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இளமைக் காலத்தில் இருந்தே போராட்டம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக கவுரவர்கள் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள். எனவே, அவர்கள் மனம் போன படி நடக்கட்டும். இது விஷயத்தில் எங்கள் முடிவை எதிர்பார்க்க வேண்டாம். நீங்களே உங்கள் விருப்பம் போல் செய்து விடுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்து விட்டனர். சிறந்த அரசியல் ஆலோசகர்களான பீஷ்மரும், விதுரருமே இப்பிரச்னையை கை கழுவியதும் திருதராஷ்டிரனுக்கு குழப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது. குழப்பதின் முடிவில் பிள்ளைப்பாசமே ஜெயித்தது. வஞ்சகம் செய்து தன் குழந்தைகளுக்கே நாடு சேர வேண்டும் என முடிவு செய்து விட்டான். துரியோதனனையும் தனது மந்திரி புரோசனனையும் அழைத்தான். சதி ஆலோசனை துவங்கியது. துரியோதனன் மிக மெதுவாக தன் தந்தையிடம், தந்தையே! பாண்டவர்களை எங்கோ ஒரு இடத்திற்கு அனுப்பி வைப்பதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில் அவர்கள் மீண்டும் திரும்பி வந்து ராஜ்யத்தில் பங்கு கேட்பார்கள். எனவே, நான் சொல்வதை கேளுங்கள். வாரணாவத நகரத்துக்கு அவர்களை அனுப்புங்கள். அவர்கள் அங்கே சென்றதும் அவர்களை நான் தீர்த்துக்கட்டி விடுகிறேன். பாண்டவர்கள் சாகவேண்டும். அப்போதுதான் எங்களால் நிம்மதியாக நாட்டை ஆள முடியும் என்றான். திருதராஷ்டிரனனும் வேறு வழியின்றி இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டான். மந்திரி புரோசனன் வாரணாவத நகரத்திற்கு புறப்பட்டான். பாண்டவர்களை நம்ப வைப்பதற்கு அந்நகரில் மாடமாளிகைகளை எழுப்பினான். இந்திரலோக தலைநகரான அமராவதி கூட இந்த அளவுக்கு அழகாக இருக்குமா? என்று பிறர் சொல்லும் அளவிற்கு பல இடங்களில் கோபுரங்களை கட்டினான். எங்கு பார்த்தாலும் சிற்பங்கள். மாளிகைகளைச் சுற்றி சோலைகளை அமைத்தான். அந்த நகரம் புதுப்பிக்கப்பட்ட பிறகு தர்மரை அழைத்தான் திருதராஷ்டிரன்.


மகாபாரதம் பகுதி-26


தர்மரை வரவேற்பது போல் நடித்தான் திருதராஷ்டிரன். மகனே! தர்மா! நீயும் உன் தம்பியரும் தங்கியிருக்க வாராணவத நகரத்தை புதுப்பித்து வைத்திருக்கிறேன். சிறிது காலம் நீ அங்கே சென்று உன் சகோதரர்களுடன் இரு. உங்களுக்கு உதவியாக என் மந்திரி புரோசனன் உங்களுடன் வருவான். அவன் இனி உனக்கு அமைச்சர். அரசியல் விஷயங்களில் கைதேர்ந்தவன். ஆட்சி விவகாரங்களில் கண்டிப்பாக இருப்பவன், என்று சொல்லி விட்டு அருகில் நின்ற புரோசனனிடம், புரோசனா! நீ இவர்களுடன் சென்று தங்கியிரு. இவர்களது பகைவர்களை அழித்து விடு. இந்த மண்ணைதர்மன் அரசாள வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய், என்று உத்தரவிட்டான். புரோசனன் தலைதாழ்த்தி உத்தரவை ஏற்றான். புரோசனனை திருதராஷ்டிரன் பாண்டவர்களுடன் அனுப்பி வைக்க காரணமுண்டு. அவர்களுடன் சேர்ந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்று ஐவரையும் கொலை செய்து விட வேண்டும்.
இது ஏற்கனவே திருதராஷ்டிரனால் புரோசனனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்பாவி போல நடித்த புரோசனன் குந்திதேவியின் அறைக்குச் சென்றான். தாயே! நாம் வாரணாவத நகரம் புறப்படுகிறோம். தர்மரை யுவராஜாவாக்க மன்னர் கட்டளை பிறப்பித்துள்ளார். வாரணாவதத்தில் தனித்திருந்து ஆட்சி சூட்சுமங்களை தர்மர் அறிந்து கொள்ளவே இந்த ஏற்பாடு. தாங்களும் எங்களுடன் புறப்பட வேண்டும். தாய் அருகில் இருந்தால், சேய்கள் இன்னும் மகிழ்வார்கள் அல்லவா? என்றான். புரோசனனின் வன்மம் குந்திக்கு தெரியாதே! தன் மகன்களுடன் தானும் பலிகடாவாக்க அழைக்கப்படுகிறோம் என்பதை அறியாத குந்தி, அவர்களுடன் புறப்பட்டாள். ஐந்து ரதங்களில் பாண்டவர்கள், ஒரு ரதத்தில் குந்தி, புரோசனன் ஒரு ரதத்தில் இவர்களை வழிநடத்திச் சென்றான். புரோசனனின் தேருக்குள் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அவனுடன் பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான படையினர் வந்தனர். அவர்கள் அனைவரது தேரிலும் ஆயுதக்குவியல். எல்லாருமே புரோசனனின் நம்பிக்கைக்குரியவர்கள். அவன் இட்ட கட்டளையைச் செய்யக்கூடியவர்கள். இந்த பெரும்படையைக் கொண்டு ஐந்து தனிநபர்களை அழிப்பதென்பது மிகச்சாதாரணமாக பட்டது புரோசனனுக்கு. தேர்கள் வாரணாவதத்தை அடைந்தன.
அவர்கள் முதலில் நகரில் இருந்த சிவன் கோயிலுக்குச் சென்றனர். சிவபெருமானை பாண்டவர்கள் பக்தியுடன் வணங்கினர். பின்னர் புதிய மாளிகைக்குள் சென்றனர். பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அந்த மாளிகையின் அழகு சொல்லவொண்ணாததாக இருந்தது. ஆனால், அந்த அழகுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்தை பாண்டவர்கள் உணரவில்லை. அந்த மாளிகையை முழுக்க முழுக்க அரக்கால் கட்டியிருந்தான் புரோசனன். அரக்கில் தீப்பிடித்தால் அப்படியே உருகி பாண்டவர்களைக் கொன்று விடும். தப்ப முயல்வதற்குள் உருகி அவர்களை மூடிவிடும். இதுதான் புரோசனனின் திட்டம். ஆனால், பார்ப்பதற்கு அரக்கு போல் தெரியவில்லை. வெண்ணிறக் கற்களால் கட்டப்பட்டது போன்ற மாயையை கலைஞர்கள் தங்கள் திறமையால் உருவாக்கியிருந்தனர். பாண்டவர்கள் வாரணாவத நகரத்தை திறம்பட ஆட்சி செய்தனர். புரோசனனும் அவர்களிடம் நல்லவன் போல் நடித்து வந்தான். அந்த நடிப்பு நீண்டகாலம் எடுபடவில்லை. முகக்குறிப்பைக் கொண்டே துல்லியுமாக பிறர் குணநலம் அறியும் சகாதேவனுக்கு புரோசனனின் முகமே காட்டிக் கொடுத்து விட்டது. சகாதேவன் மிகப்பெரிய ஜோதிடன் என்பதை பாரதம் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், பாண்டவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நடிப்புக்கு மாற்று மருந்தும் நடிப்பு தானே! புரோசனனின் திட்டத்தை அறிவதற்கான முயற்சியில் இறங்கினர். தர்மர் எந்தளவுக்கு பொறுமைசாலியோ அந்தளவுக்கு திறமையானவரும் கூட. பொதுவாகவே பொறுமை இருக்கும் இடத்தில் திறமைக்கு பஞ்சமிருக்காது. தர்மர் விரைவிலேயே தாங்கள் தங்கியிருப்பது அரக்கு மாளிகை என்பதைத் தெரிந்து கொண்டார். தம்பிகளை அழைத்தார். சகோதரர்களே! கவனமாய் கேளுங்கள். நம்மோடு வந்திருக்கிறானே புரோசனன்! அவன் நமக்காக கட்டியிருக்கும் இந்த அரண்மனையைப் பரிசோதித்தேன். இது கல் மாளிகை அல்ல. அரக்கு மாளிகை, என்றார். ஆ என வாய் பிளந்தனர் பாண்டவர்கள். தர்மர் தொடர்ந்தார். ஏதோ ஒரு காரணத்துடன் தான், அவன் நம்மை அரக்கு மாளிகையில் தங்க வைத்திருக்கிறான். நம்மைக் கொலை செய்வது அவன் திட்டமாக இருக்கக்கூடும். இனிமேல் அவன் தரும் பானங்கள். உணவு, சந்தனம். மாலைகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் பரிசோதனைக்கு பிறகே அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றார். பாண்டவர்கள் தலையசைத்தனர். இந்த பூமி வஞ்சகம் நிறைந்தது தான். ஆனால், கடவுள் ஒரே ஒரு நல்லவனை அந்த வஞ்சக கூட்டத்தில் வைத்து விடுகிறார். அவன் ஒருவன் மூலமாக நடக்கும் ஒரே ஒரு நன்மை பலரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
ரயில் பாலத்தில் குண்டு வைக்கிறது 15 பேர் கொண்ட ஒரு கூட்டம். அதை ஒரு நல்லவன் பார்த்து விடுகிறான். கூட்டத்தினர் சென்றவுடன் அவ்வழியே வந்த ரயிலை அவன் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தி விடுகிறான். தீமை அங்கே முறியடிக்கப்பட்டு விடுகிறது. இதேபோல் தான், இதுபோல், புரோசனன் கட்டிய அரண்மனையில் பணி செய்த ஒரு சிற்பிமட்டும் நல்லவனாக இருந்தான். ஒருநாள் அவன் பீமனைச்சந்தித்தான். பாண்டவச் செம்மலே! பலம் கொண்ட சிங்கமே! ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல வேண்டும், என்றான். சிற்பியே, விஷயத்தைச் சொல்லும், என்றான் பீமன். ஐயனே! இந்த மாளிகையைக் கட்டிய சிற்பிகளில் நானும் ஒருவன். புரோசனன் எங்களிடம் இதை அரக்கால் கட்டச் சொன்னான். நாங்கள் காரணம் கேட்டபோது, மன்னர் திருதராஷ்டிரன் உத்தரவு என்றான், என்றதும், மனதிடம் மிக்க, யாருக்கும் அஞ்சாத பீமனே அதிர்ந்துவிட்டான். பெரியப்பா ஏன் இப்படி செய்தார்? என்ற சிந்தனை ஒரு புறம் புரள சிற்பி இன்னும் சொன்னதைக் கேட்டு அவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டான்.


மகாபாரதம் பகுதி-27


உங்களைக் கொல்ல சதி செய்யப்படுகிறது என்பதை பீமன் புரிந்து கொண்டான். அதை உறுதிப்படுத்தும் வகையில் சிற்பி மேலும் சொன்னான். பீமராஜா! தங்கள் முகக்குறிப்பு உணர்த்துவது சரிதான். பாண்டவ வம்சத்தை பூண்டோடு அழிப்பது துரியோதனனின் திட்டம். அதற்கு திருதராஷ்டிரரும் சூழ்நிலைக் கைதியாகி தலையசைத்து விட்டார். அரக்கு எளிதில் தீப்பிடிக்கும் என்பதால், அதைத் தேர்ந்தெடுத்தான் புரோசனன். இதை விதுரர் தெரிந்து கொண்டார். அவர் என்னிடம் ரகசியமாக, பாண்டவர்கள் தப்பிச் செல்லும் வகையில், ஒரு சுரங்கப்பாதை அமைத்து விடு என்றார். அதை நானும் செய்தேன். அந்தப்பாதை வெகுதூரம் செல்லும். அந்தப்பாதை ஒரு காட்டில் போய் முடியும். அதை இடும்பிவனம் என்பர். குகையின் வாசல் தெரியாமல் இருப்பதற்காக அந்த இடத்தை மறைத்து ஒரு தூண் அமைத்துள்ளேன். பராக்கிரமசாலியான நீங்கள் அதை உடைத்து நொறுக்கி விடுவீர்கள் என எனக்குத் தெரியும். அந்த தூணை அகற்றிவிட்டால் நீங்கள் சுரங்கத்துக்குள் நுழைந்து விடலாம், என்றான்.
பாண்டவர்களிடம் இந்த சதிதிட்டம் பற்றி சொன்னான். அவர்கள் சுதாரித்துக் கொண்டனர். புரோசனனிடம் இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் போல் காட்டிக் கொண்டனர். அவனது ஆலோசனைகளை அப்படியே செயல்படுத்தினர். அவனை வெளியே அனுப்பாமல் தங்களுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். ஒருநாள் இரவில், ராஜாங்க விவகாரங்களை அவனுடன் பேசுவது போல நடித்துவிட்டு, புரோசனரே! தாங்கள் எங்கும் போகக்கூடாது. எங்களுடன் தான் இன்று படுத்துக் கொள்ள வேண்டும், என்றான் பீமன். புரோசனனும் வேறு வழியின்றி அவர்களின் அறையிலேயே தங்கி அயர்ந்து உறங்கி விட்டான். உடனே பீமன் சுரங்கப்பாதை வாசலுக்கு சென்று அங்கிருந்த தூணை பெயர்த்தான். வாசலை திறந்து வைத்து விட்டு, தாய் குந்தியையும் சகோதரர்களையும் எழுப்பி, அவர்களுடன் அதன் வழியாக தப்பிவிட்டான். குகையைத் தாண்டியதும் அவர்களை விட்டு விட்டு மீண்டும் அரண்மனைக்குள் வந்தான். அரண்மனைக்கு தீ வைத்தான். அரக்கு மாளிகை என்பதால் வேகமாகத் தீப்பற்றியது. அவன் குகைக்குள் நுழைந்து வெளியேறி விட்டான். சகோதரர்களுடன் இடும்பிவனம் நோக்கிச் சென்றான்.
மறுநாள் காலையில் வாரணாவத நகரத்து அரண்மனை சாம்பாலாகிக் கிடப்பதை மக்கள் கண்டார்கள். பாண்டவர்கள் மற்றும் குந்திதேவியின் மறைவுக்காக கண்ணீர் விட்டார்கள். ஏழுபேர் அங்கு கருகிக்கிடந்ததையும் அவர்கள் பார்த்தனர். புரோசனன் மட்டும் தானே உள்ளே இருந்தான்! எப்படி ஏழு பேர் என நீங்கள் கேட்பீர்கள். அரண்மனை பணிகள் முடிந்ததும் ஒரு சில பணியாட்களைத் தவிர மற்றவர்களை புரோசனன் அஸ்தினாபுரத்துக்கு அனுப்பி விட்டான். அந்த பணியாட்களும் அரண்மனைக்கு வெளியே தான் இரவு நேரத்தில் காவல் செய்வார்கள். மற்ற பணியாளர்கள் பகலில் தான் வருவார்கள். புரோசனனின் ஏற்பாட்டின்படி ஐந்து வேடர்களும், அவர்களின் தாயும் பாண்டவர்களுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்காக அரண்மனைக்கு வந்திருந்தனர். அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தான் தீயில் கருகி விட்டார்கள். தன் வினை தன்னைச்சுடும் என்பது போல புரோசனனும் இறந்து விட்டான். இதைப் பார்த்த வாரணாவத நகர மக்கள் வேடர்களை பாண்டவர்கள் என்றும், அவர்களது தாயை குந்தி என்றும் நினைத்துக் கொண்டனர். அவர்களுக்கு பரிதாப முடிவு ஏற்பட்டதாகக் கருதி கண்ணீர் வடித்தனர்.
இந்தத் தகவல் பல நாடுகளுக்கும் பரவியது. எல்லா தேசத்து மன்னர்களும், வீரம் மிக்க குருகுலம் அழிந்ததே என வருத்தப்பட்டார்கள். இங்கே இப்படியிருக்க அஸ்தினாபுரம் அரண்மனையில், மகிழ்ச்சி வெள்ளம் தாண்டவமாடியது. துரியோதனனும் அவன் தம்பிகளும் துள்ளிக்குதித்தனர். ஆனால், மக்கள் முன்பும், பெரியோர்கள் முன்பும் வரும்போது கண்ணீர் வடித்து, ஐயோ! எங்கள் சகோதரர்களை இழந்தோமே! என அழுவது போல் நடித்தனர். முக்கியமாக, பீமன் இறந்துபோனான் என நினைத்து துரியோதனனுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சிறுவயது முதல் பலவிதத்திலும் தப்பித்து வந்த அவன் இப்போது மடிந்தது குறித்து இறுமாப்பும் ஏற்பட்டது. அந்த தடியன் பீமன் சத்துருகாதினி என்ற கதாயுதத்தை வைத்துக் கொண்டு என்னமாய் நம்மை மிரட்டினான், இப்போது அரக்கோடு அரக்காக ஒட்டி உருகிப் போய்விட்டான், எனச் சொல்லி அட்டகாசமாக சிரித்தான். பாண்டவர்கள் சரித்திரம் முடிந்தது என எல்லா நாட்டு அரசர்களுமே அவர்களை மறக்கத் தொடங்கியிருந்த வேளையில், தப்பிச் சென்ற பாண்டவர்கள், பீமன் முன்னால் செல்ல பின் தொடர்ந்தனர். ஒரு இடத்தில், அதிபயங்கரமாக சிரித்தபடி ஒரு அரக்கி பீமனின் முன்னால் வந்தாள். அழகுத்திலகமே! உன்னைப் போன்ற பலசாலியையும், கட்டழகனையும் நான் கண்டதில்லை.
நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? எப்படி இந்த காட்டுக்குள் நுழைந்தாய்? உன் பின்னால் வரும் இவர்கள் யார்? என்றாள். பீமன் அவளையும் விடஅதிரும் குரலில் சிரித்தான். ராட்சஷப் பெண்ணே! நாங்கள் எங்கள் வழியில் போய்க் கொண்டிருக்கிறோம். முதலில் நீ யார் என்பதை என்னிடம் சொல். அதன் பிறகு நான் இங்கு வந்த கதையைச் சொல்கிறேன்,என்றாள். பீமனை பார்த்தவுடனேயே அவனை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ராட்சஷி, அவன் கேட்டதற்கு பதில் சொன்னாள். மன்மதனின் எழிலை உன்னில் கொண்டவனே! எனது அண்ணன் இடும்பனுக்குரியது இந்த வனம். என் பெயர் இடும்பி. நீங்கள் வருவதை என் சகோதரன் பார்த்து விட்டான். உடனே, என்னை அனுப்பி உனக்கு நல்ல தீனி வருகிறது. அவர்கள் எல்லாரையும் விழுங்கிக் கொள் எனச் சொல்லி அனுப்பினான். ஆனால், உன்னைப் பார்த்ததும் நான் உன் மீது காதல் கொண்டு விட்டேன். என்னை நீ திருமணம் செய்து கொள். நீங்கள் இங்கிருந்து தப்பிக்க வழி செய்கிறேன். என் அண்ணன் கோபக்காரன். அவன் சொன்னதைச் செய்யாவிட்டால், உங்களை மட்டுமல்ல! என்னையும் கொன்று விடுவான். என்ன சொல்கிறீர்கள்? என்றாள்.


மகாபாரதம் பகுதி-28



பீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் ? இந்த திருமணத்தை இரண்டு குலங்களுமே ஏற்றுக் கொள்ளாது, என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, இவர்களின் குரல் கேட்டு இடும்பன் வந்து விட்டான். அவன் தன் தங்கையைக் கரித்துக் கொட்டினான். நான் இவர்களைப் பிடித்து தின் என அனுப்பி வைத்தால், நீ இங்கு வந்து காதல் வசனமா பேசிக்கொண்டிருக்கிறாய். அரக்க குலத்தைக் கெடுக்க வந்தவளே ! ஒழிந்து போ ! என அவளை கொல்ல முற்பட்டான். பீமன் அவனுக்க நல்ல வார்த்தைகளைச் சொன்னான். இடும்பன் கேட்கவில்லை. அடேய் மானிடப்பதரே ! அவள் மீது உனக்கும் காதல் என்றால், என்னோடு போருக்கு வா ! என்னைக் கொன்றுவிட்டு அவள் கரம்பிடி, என வம்புச்சண்டைக்கு இழுத்தான். பாண்டவர்களைத் தாக்கினான். பீமன் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டான். இந்தப் போர் வெகுநேரம் நீடித்தது. மரங்களை வேரோடு பிடுங்கி இருவரும் சண்டை போட்டனர்.
பீமனின் தாக்குதலை இடும்பனால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் அடிபட்டு சாய்ந்தான். சற்றுநேரத்தில் உயிர் போய்விட்டது. அண்ணன் மறைந்த துக்கத்தை இடும்பியால் தாங்கமுடியவில்லை என்றாலும், பீமனின் வீரம் கண்டு மகிழ்ந்தாள். தனக்கு துணையாக வாய்க்கப்போகிற வன் அரக்கர்களையே அழிக்கும் வல்லமையுள்ளவன் என்பது கண்டு நெஞ்சு பூரித்தது. இப்போத முன்பை விட அதிகமாக பீமனை நச்சரிக்க ஆரம்பித்தாள். அவளது நிலை தர்மருக்கு நன்றாகப் புரிந்தது. இடும்பி ! கவலைப்படாதே ! என் தம்பி உனக்கு மணாளன் ஆவான், என ஆறுதல் சொன்னார். குந்திதேவியும் இடும்பிக்கு ஆறுதல் கூறினாள். இவர்கள் இருவரது வற்புறுத்தலால் இடும்பியை அந்த வனத்திலேய திருமணம் செய்து கொண்டான் பீமன். இப்படியே சில காலம் கழிந்தது. இடும்பி ஒரு தங்கமகனைப் பெற்றாள். வீரத்தில் பீமனையும் தாண்டியவன் அவன். அவனுக்கு கடோத்கஜன் என பெயர் சூட்டினர். ஒருநாள் கடோத்கஜன் தந்தையிடம் வந்தான். என் அன்புத் தந்தையே ! இனியும் நாங்கள் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நான் என் தாய் இடும்பியுடன் மீண்டும் இடும்ப வனத்துக்கே போய்விடுகிறேன்.
நீங்கள் எப்போது என்னை நினைத்தாலும், அங்கே வந்து நான் நிற்பேன். என் தந்தைக்குரிய பணிவிடைகளைச் செய்வேன் என்றான். பீமனும் பாண்டவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இடும்பி கண்ணீர் மல்க கணவனிடமிருந்து விடைபெற்றாள். இதன்பிறகு, வியாசமுனிவர் அங்கு வந்தார். அவர் பாண்டவர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனை சொன்னார். அதன்படி அவர்கள் வேத்திரகீயம் என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே பிராமணர்கள் நிறைந்திருந்தனர். அதற்கேற்றாற்போல், பாண்டவர்களும் பிராமணர்களைப் போலவே வேடமிட்டு அவ்வூருக்குள் சென்றனர். அவ்வூர் பிராமணர்கள் கருணை மிக்கவர்கள். ஊருக்கு புதிதாக வந்த விருந்தினர்களை வரவேற்று தினமும் ஒரு வீட்டில் தங்க வைத்தனர். இனிய உணவைப் பரிமாறினர். ஒருநாள், ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அவ்வீட்டுப் பெண் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள், குந்திதேவி அதைக் கவனித்து, தாயே ! எல்லா மகிழ்ச்சியும், வசதியும் நிறைந்த ஊர் இது. இங்கேயும் கண்ணீரா ? நீ ஏன் அழுகிறாய் ? என்றாள். அப்பெண் குந்தியிடம், தாயே ! இவ்வூரைப் பிடித்த சாபத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.
இவ்வூர் காட்டில் பகாசுரன் என்பவன் வசிக்கிறான். கோரைப் பற்களும், அவலட்சணமான முகமும் கொண்ட அவனுக்கு நரமாமிசம் என்றால் உயிர். எங்கள் ஊர் பிராமணர்களை இஷ்டம் போல் பிடித்து தின்பான். ஒருநாள், என் தந்தை, அவனை நேரில் சந்தித்து, பகாசுரா ! நீ கண்டபடி மனிதர்களை உண்ணாதே. நாங்கள் தினமும் உனக்கு ஒரு வண்டி நிறைய அறுசுவை உணவும், நீ கடித்து சாப்பிட ஒரே ஒரு மனிதனையும் அனுப்பி வைக்கிறோம். எல்லாரையும் ஒரே சமயத்தில் கொல்லாதே என பேசினார். பகாசுரனும் ஒப்புக்கொண்டான். இன்று என் வீட்டு முறை. எனக்கு ஒரே மகன். அவனை அனுப்பினால், எனக்கு கொள்ளி வைக்க பிள்ளையில்லாமல் போகும். என் மருமகளை அனுப்புவது கூடாத செயல். ஏனெனில், அவள் நல்வாழ்வு வாழ்வதற்காக பிறர் வீட்டில் இருந்து வந்தவள். அவளை கடைசி வரை காப்பாற்றுவது புகுந்த வீட்டின் கடமை. என் கணவரைத் தான் அனுப்ப வேண்டும். ஆனால், அவர் இன்றி நான் இருக்க மாட்டேன். நானாகப் போய் விடலாம் என்றால் என் கணவரை கவனிக்க என்னை விட்டால் ஆளில்லை, என்றாள். குந்திக்கு நிலைமை புரிந்தது. அந்த பிராமண பெண்ணுக்கு ஆறுதல் சொன்னாள். மகளே ! இதற்காகவா கவலைப்படுகிறாய். நீங்கள் யாருமே பகாசுரனுக்கு இரையாக வேண்டாம். நான் ஐந்து பிள்ளைகளைப் பெற்றவள்.
உன் வீட்டின் சார்பில் அவர்களில் ஒருவரை பகாசுரனுக்கு உணவாக அனுப்புகிறேன், என்றாள். அவளது தியாகம் கண்டு பூரித்த பிராமணப்பெண், விருந்தினர்களாக வந்தவர்களை பலி கொடுக்க தங்கள் மனம் ஒப்புக் கொள்ளாது என்றாள். இருந்தாலும் குந்தி அந்தப் பெண்ணிடம், என் மகன்களில் ஒருவன் முரடன். சக்தியில் அனுமானைப் போன்றவன். அவனைக் கண்டால் அரக்கர்களே அஞ்சுவார்கள். இடும்பன் என்ற அரக்கனைக் கொன்று அவனது தங்கையையே மணம் முடித்தவன் அந்த பலவான். அவனை அனுப்பி, பகாசுரனைக் கொன்று, உங்கள் ஊருக்கே விடுதலை அளிக்கிறேன், என்றாள் குந்தி. அந்தப் பெண் மகிழ்ந்தாள். மலைபோல உணவு தயாரானது. அதை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டான் பீமன். பகாசுரன் வசித்த யமுனை நதிக்கரைக்கு சென்றான். அங்கே, பகாசுரன் பசியுடன் காத்திருந்தான். அடேய் மூடா ! ஏனடா தாமதம் ! என் பசியைப் பற்றி உனக்கு என்ன தெரியும் ? என்றவனாய் பீமனை விழுங்கப் பாய்ந்தான். பீமன் அவனைக் கண்டு கொள்ளவில்லை. வண்டியின் மீது ஏறினான். அதிலுள்ள உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டான்.


மகாபாரதம் பகுதி-29



பீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும்? இந்த திருமணத்தை இரண்டு குலங்களுமே ஏற்றுக் கொள்ளாது, என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, இவர்களின் குரல் கேட்டு இடும்பன் வந்து விட்டான். அவன் தன் தங்கையைக் கரித்துக் கொட்டினான். நான் இவர்களைப் பிடித்து தின் என அனுப்பி வைத்தால், நீ இங்கு வந்து காதல் வசனமா பேசிக்கொண்டிருக்கிறாய். அரக்க குலத்தைக் கெடுக்க வந்தவளே! ஒழிந்து போ! என அவளை கொல்ல முற்பட்டான். பீமன் அவனுக்கு நல்ல வார்த்தைகளைச் சொன்னான். இடும்பன் கேட்கவில்லை. அடேய் மானிடப்பதரே! அவள் மீது உனக்கும் காதல் என்றால், என்னோடு போருக்கு வா! என்னைக் கொன்றுவிட்டு அவள் கரம்பிடி, என வம்புச்சண்டைக்கு இழுத்தான். பாண்டவர்களைத் தாக்கினான். பீமன் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டான். இந்தப் போர் வெகுநேரம் நீடித்தது. மரங்களை வேரோடு பிடுங்கி இருவரும் சண்டை போட்டனர். பீமனின் தாக்குதலை இடும்பனால் நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் அடிபட்டு சாய்ந்தான். சற்றுநேரத்தில் உயிர் போய்விட்டது.
அண்ணன் மறைந்த துக்கத்தை இடும்பியால் தாங்கமுடியவில்லை என்றாலும், பீமனின் வீரம் கண்டு மகிழ்ந்தாள். தனக்கு துணையாக வாய்க்கப்போகிறவன் அரக்கர்களையே அழிக்கும் வல்லமையுள்ளவன் என்பது கண்டு நெஞ்சு பூரித்தது. இப்போது முன்பை விட அதிகமாக பீமனை நச்சரிக்க ஆரம்பித்தாள். அவளது நிலை தர்மருக்கு நன்றாகப் புரிந்தது. இடும்பி! கவலைப்படாதே! என் தம்பி உனக்கு மணாளன் ஆவான், என ஆறுதல் சொன்னார். குந்திதேவியும் இடும்பிக்கு ஆறுதல் கூறினாள். இவர்கள் இருவரது வற்புறுத்தலால் இடும்பியை அந்த வனத்திலேயே திருமணம் செய்து கொண்டான் பீமன். இப்படியே சில காலம் கழிந்தது. இடும்பி ஒரு தங்கமகனைப் பெற்றாள். வீரத்தில் பீமனையும் தாண்டியவன் அவன். அவனுக்கு கடோத்கஜன் என பெயர் சூட்டினர். ஒருநாள் கடோத்கஜன் தந்தையிடம் வந்தான். என் அன்புத் தந்தையே! இனியும் நாங்கள் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நான் என் தாய் இடும்பியுடன் மீண்டும் இடும்ப வனத்துக்கே போய்விடுகிறேன். நீங்கள் எப்போது என்னை நினைத்தாலும், அங்கே வந்து நான் நிற்பேன்.
என் தந்தைக் குரிய பணிவிடைகளைச் செய்வேன், என்றான். பீமனும் பாண்டவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இடும்பி கண்ணீர் மல்க கணவனிடமிருந்து விடைபெற்றாள். இதன்பிறகு, வியாசமுனிவர் அங்கு வந்தார். அவர் பாண்டவர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனை சொன்னார். அதன்படி அவர்கள் வேத்திரகீயம் என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே பிராமணர்கள் நிறைந்திருந்தனர். அதற்கேற்றாற்போல், பாண்டவர்களும் பிராமணர்களைப் போலவே வேடமிட்டு அவ்வூருக்குள் சென்றனர். அவ்வூர் பிராமணர்கள் கருணை மிக்கவர்கள். ஊருக்கு புதிதாக வந்த விருந்தினர்களை வரவேற்று தினமும் ஒரு வீட்டில் தங்க வைத்தனர். இனிய உணவைப் பரிமாறினர். ஒருநாள், ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அவ்வீட்டுப் பெண் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். குந்திதேவி அதைக் கவனித்து, தாயே! எல்லா மகிழ்ச்சியும், வசதியும் நிறைந்த ஊர் இது. இங்கேயும் கண்ணீரா? நீ ஏன் அழுகிறாய்? என்றாள். அப்பெண் குந்தியிடம், தாயே! இவ்வூரைப் பிடித்த சாபத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். இவ்வூர் காட்டில் பகாசுரன் என்பவன் வசிக்கிறான். கோரைப்பற்களும், அவலட்சணமான முகமும் கொண்ட அவனுக்கு நரமாமிசம் என்றால் உயிர். எங்கள் ஊர் பிராமணர்களை இஷ்டம் போல் பிடித்து தின்பான்.
ஒருநாள், என் தந்தை, அவனை நேரில் சந்தித்து, பகாசுரா! நீ கண்டபடி மனிதர்களை உண்ணாதே. நாங்கள் தினமும் உனக்கு ஒரு வண்டி நிறைய அறுசுவை உணவும், நீ கடித்து சாப்பிட ஒரே ஒரு மனிதனையும் அனுப்பி வைக்கிறோம். எல்லாரையும் ஒரே சமயத்தில் கொல்லாதே, என பேசினார். பகாசுரனும் ஒப்புக்கொண்டான். இன்று என் வீட்டு முறை. எனக்கு ஒரே மகன். அவனை அனுப்பினால், எனக்கு கொள்ளி வைக்க பிள்ளையில்லாமல் போகும். என் மருமகளை அனுப்புவது கூடாத செயல். ஏனெனில், அவள் நல்வாழ்வு வாழ்வதற்காக பிறர் வீட்டில் இருந்து வந்தவள். அவளை கடைசி வரை காப்பாற்றுவது புகுந்த வீட்டின் கடமை. என் கணவரைத் தான் அனுப்ப வேண்டும். ஆனால், அவர் இன்றி நான் இருக்க மாட்டேன். நானாகப் போய்விடலாம் என்றால், என் கணவரை கவனிக்க என்னை விட்டால் ஆளில்லை, என்றாள். குந்திக்கு நிலைமை புரிந்தது. அந்த பிராமண பெண்ணுக்கு ஆறுதல் சொன்னாள். மகளே! இதற்காகவா கவலைப்படுகிறாய். நீங்கள் யாருமே பகாசுரனுக்கு இரையாக வேண்டாம். நான் ஐந்து பிள்ளைகளைப் பெற்றவள். உன் வீட்டின் சார்பில் அவர்களில் ஒருவரை பகாசுரனுக்கு உணவாக அனுப்புகிறேன், என்றாள்.
அவளது தியாகம் கண்டு பூரித்த பிராமணப்பெண், விருந்தினர்களாக வந்தவர்களை பலி கொடுக்க தங்கள் மனம் ஒப்புக்கொள்ளாது என்றாள். இருந்தாலும் குந்தி அந்தப் பெண்ணிடம், என் மகன்களில் ஒருவன் முரடன். சக்தியில் அனுமானைப் போன்றவன். அவனைக் கண்டால் அரக்கர்களே அஞ்சுவார்கள். இடும்பன் என்ற அரக்கனைக் கொன்று அவனது தங்கையையே மணம் முடித்தவன் அந்த பலவான். அவனை அனுப்பி, பகாசுரனைக் கொன்று, உங்கள் ஊருக்கே விடுதலை அளிக்கிறேன், என்றாள் குந்தி. அந்தப் பெண் மகிழ்ந்தாள். மலைபோல உணவு தயாரானது. அதை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டான் பீமன். பகாசுரன் வசித்த யமுனை நதிக்கரைக்கு சென்றான். அங்கே, பகாசுரன் பசியுடன் காத்திருந்தான். அடேய் மூடா! ஏனடா தாமதம்! என் பசியைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்றவனாய் பீமனை விழுங்கப் பாய்ந்தான். பீமன் அவனைக் கண்டுகொள்ளவில்லை. வண்டியின் மீது ஏறினான். அதிலுள்ள உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டான்.



மகாபாரதம் பகுதி-30


உணவு முழுவதையும் தின்று தீர்த்தான் பீமன். பகாசுரனுக்கு ஆத்திரம் அதிகமானது. அடேய் துஷ்டா! இந்த உணவை உட்கொண்ட உன்னை அப்படியே விழுங்கி விடுகிறேன் பார், என்று அருகே நெருங்கினான். இருவருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. அசுரன் என்பதால் சற்றே உக்கிரமாகப் போரிட்டான் பகாசுரன். ஆனால், அவனது தலையைப் பிய்த்து எறிந்தான் பீமன். அவனது உடலை எரித்தபிறகு மீண்டும் வேத்தீரகியத்திற்கு திரும்பினான். அவ்வூர் அந்தணர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பீமனை அவர்கள் திருமாலாகவே பார்த்தனர். ஊரெங்கும் விளக்கேற்றி விழா கொண்டாடினர். இங்கே இவர்கள் இப்படியிருக்க, துரோணரால் அவமானப்படுத்தப்பட்டு தோற்றோடிய துருபதன் ஒரு மகளைப் பெற்றான். அவள் அக்னியில் இருந்து தோன்றியவள். அவளுக்கு திரவுபதி என பெயர் சூட்டினான். அர்ஜூனனின் வில்வித்தையை அவன் ஏற்கனவே அறிந்தவன் அல்லவா? அந்த வீரனுக்கே தன் மகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான். ஆனால், பாண்டவர்கள் தீ விபத்தில் இறந்து விட்டார்கள் என்று அவனும் நம்பியிருந்தான்.
திரவுபதி பிறந்ததும் அசரீரி தோன்றி, இவள் பஞ்சபாண்டவருக்கு உரியவள் என்று சொல்லியிருந்தது. அதையும் நினைத்து பார்த்தான் துருபதன். இறைவனின் அனுக்கிரஹம் இப்படியிருக்கும் போது, பாண்டவர்கள் எப்படி இறந்திருக்க முடியும்? அவர்கள் தப்பியிருக்கவும் செய்யலாம்! என்ற சந்தேகமும் அவனுள் இருந்தது. திரவுபதிக்கும் இதேநிலை. தன்னை பஞ்ச பாண்டவர்களுக்கு உரியவள் என அப்பா இளமை முதலே சொல்லி வளர்த்திருக்கிறார். அவர்களில் அர்ஜூனன் மிகமிக திறமைசாலி. அழகன்... அவனைத் தான் திருமணம் செய்ய வேண்டும், என்று நினைத்திருந்தாள். அவன் மீது அவளுக்கு தீராத காதல். இதுவரை அவள் அர்ஜூனனைப் பார்த்ததே இல்லை. ஆனால், மனதார அவனைக் காதலித்தாள். இந்த நிலையில் பாண்டவர்களைப் பற்றிய தகவல் தெரியாததால், துருபதன் தன் மகளுக்கு வேறு மாப்பிள்ளை தேர்ந்தெடுக்க முடிவு செய்தான். சுயம் வரம் நடத்த ஏற்பாடு செய்தான். மகளே தனக்கு பிடித்த மாப்பிள்ளையை தேர்வு செய்யட்டும் என்பது அவனது எண்ணம். திரவுபதியோ பதறினாள். ஜோதிடர்கள் முன்பு சொன்னதை நினைத்துப் பார்த்தாள். எப்படியும் அர்ஜூனன் வந்துவிடுவான் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இந்த விஷயம் ஒரு அந்தணர் மூலமாக பாண்டவர்களுக்கு போய் சேர்ந்தது.
அவர்கள் பாஞ்சால தேசத்திற்கு புறப்பட்டனர். வழியில் வியாசமுனிவர் எதிர்ப்பட்டார். மக்களே! நீங்கள் புறப்பட்ட நேரம் நல்லநேரம். அதனால் தான் நானே உங்கள் எதிரே வந்திருக்கிறேன். நல்ல நிகழ்வுகளை நிச்சயிக்க செல்லும்போது, மகான்கள் எதிர்ப்பட்டால்,. அது நிச்சயம் நடக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. எக்காரணம் கொண்டும் நீங்கள் எங்கும் தங்கக்கூடாது. இரவிலும் கூட நடக்க வேண்டும். அப்படி சென்றால், சுயம்வர நேரத்துக்குள் பாஞ்சாலத்தை அடைந்து விடுவீர்கள். வழியில் உங்களுக்கு தேவையான உதவிகள் தானே தேடிவரும், என ஆசிர்வதித்து மறைந்தார். வியாசரின் ஆசிர்வாதம் பாண்டவர்களுக்கு உத்வேகத்தைத் தந்தது. அவர்கள் வேகமாக நடந்தனர். கங்கைக்கரையை அவர்கள் அடைந்ததும் வருணன் மனம் மகிழ்ந்து குளிர்ந்த காற்றை வீசினான். அவர்கள் வந்த களைப்பே தெரியவில்லை. தன் நண்பனான அக்னியின் மகளைத் திருமணம் செய்ய வந்தவர்கள் என்பதால் மனம் மகிழ்ந்து அவன் தென்றலாய் வீசினானானாம். தொடர்ந்து அவர்கள் நடந்தனர். வழியில் சித்ரரதன் என்ற கந்தர்வன் அவர்களை மறித்தான். அவர்களை வலுச்சண்டைக்கு இழுத்தான். அவனை அர்ஜூனன் தோற்கடித்தான்.
ஒரு மனித ஜென்மம், கந்தர்வனான தன்னை ஜெயித்ததைப் பாராட்டி, பாஞ்சால தேசத்துக்கு செல்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டி உதவினான் சித்ரரதன். பாஞ்சாலத்துக்குள் நுழைந்ததும். அந்தணர்கள் போல் வேடமணிந்தனர் பாண்டவர்கள். ஏனெனில், ஊரே தங்களை இறந்து விட்டதாக நினைத்திருக்க, அந்த நினைப்பே எல்லாரிடமும் இருக்கட்டும். அப்படியானால் தான் வந்த காரியம் நல்லபடியாக முடியும் என திட்டமிட்டனர். பாஞ்சால தேசத்து மதிலைக் கடந்து நகரத்துக்குள் அவர்கள் புகுந்தனர். தங்கள் இளவரசிக்கு சுயம்வரம் என்பதால் மக்கள் மங்கல வாத்தியங்களை இசைத்து கொண்டிருந்தனர். பலநாட்டுஅரசர்களையும் வரவேற்கும் வகையில் சங்குகள் முழங்கின. பாண்டவர்களுடன் குந்தியும் வந்திருந்தாள். அவள் தங்களுடன் அரண்மனைக்கு வந்தால் யாராவது அடையாளம் கண்டுகொள்ளக்கூடும் என்பதால் அவளை ஒரு மண்பாண்டத் தொழிலாளியின் வீட்டில் தங்க வைத்தனர். நாடாண்ட அந்த மகாராணி, இன்று ஒரு ஓட்டை குடிசையிலே இருந்தாள். பிள்ளைகளுக்காக நம் நாட்டு தாய்மார்கள் செய்த தியாகங்கள் எத்தனையோ... இன்றும் அவர்கள் அதைச் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். குந்திதேவியை அந்த குடிசையில் விட்டுவிட்டு, அரண்மனைக்குச் சென்றனர் பாண்டவர்கள். அங்கே பல சிம்மாசனங்கள் போடப்பட்டிருந்தன. பாண்டவர்களின் கண்கள் அவற்றை மேய்ந்தன. அப்போது திருஷ்டத்தும்னன் யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.
அரசர்களே! இங்கே நீங்கள் சுயம்வரத்துக்காக வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் அழகிலும் பராக்கிரமத்திலும் விஞ்சியவர்கள். ஆனால், என் தங்கை உங்களில் மிகுந்த பராக்கிரமசாலியோ அவர்களுக்கே மாலையிடுவாள். முதலில் உங்களை என் தங்கைக்கு அறிமுகம் செய்து வைப்போம். அதன்பின் இதோ! உச்சியிலே சுற்றுகிறதே ஒரு சக்கரம். அதன் நடுவிலுள்ள யந்திரத்தை இங்கிருக்கும் வில்லால் அடித்து நொறுக்க வேண்டும். அவரே என் தங்கைக்கு கணவனாக முடியும், என்றான். திரவுபதியின் பேரழகில் மயங்கி, காம எண்ணத்துடன் வந்திருந்த அத்தனை அரசர்களின் சுருதியும் குறைந்து போனது. இந்த சுயம்வரத்துக்கு வந்திருந்த துரியோதனன், துச்சாதனன் மற்ற தம்பிகள் முகத்தில் ஈயாடவில்லை. சகுனியும் இந்த சுயம்வரத்திற்கு வந்திருந்தான். அவன் தலை குனிந்து உட்கார்ந்து விட்டான். தானத்தில் சிறந்த கர்ணன் அதை குறி வைக்கலாமா? குறி தவறாமல் இருக்க என்ன யுக்தியைக் கடைபிடிக்க வேண்டும் என கண்களை மேலே நோட்டமிட்டான்.மற்ற அரசர்கள் கதிகலங்கி விட்டனர். அர்ஜூனன் நிச்சயித்து விட்டான். திரவுபதி தனக்குத்தான் என்று.


மகாபாரதம் பகுதி-31



ஆசை யாரையும் விட்டதில்லை. எல்லா அரசர்களுமே திரவுபதியின் கண்ணம் பிற்கு பலியாகி விட்டனர். அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசையில் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தனர். திரவுபதி சபைக்கு அழைத்து வரப்பட்டாள். அவள் கையில் மாலை இருந்தது. அம்பெய்து மேலே சுழலும் சக்கரத்தை வீழ்த்துபவருக்கு அந்த மாலை விழ வேண்டும். இதயமெல்லாம் படபடக்க அர்ஜூனன் அவையில் இருக்கிறானா என நோட்டமிட்டாள். பிராமண வேடத்தில் இருந்த அவன் கண்ணில் படவில்லை. கலக்கத்துடன் இருந்த அவளுக்கு பணிப்பெண்கள் அங்கு வந்திருந்த துரியோதனன், துச்சாதனன், இதர கவுரவர்கள், சகுனி, அஸ்வத்தாமன், கர்ணன், கண்ணனின் அண்ணன் பலராமன், கண்ணபிரான், கண்ணபிரானின் தம்பியும், போஜகுலத்தலைவனுமான சாத்தகி, கண்ணனின் எதிரி சிசுபாலன், மாவீரன் ஜராசந்தன், பகதத்தன், சல்லியன், நீலன் ஆகியோரை அறிமுகம் செய்தனர். கண்ணபிரான், பிராமண வடிவில் வந்திருப்பவர்கள் பாண்டவர்களே என புரிந்து கொண்டு தன்னோடு வந்த யதுகுல அரசர்களை போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சொல்லிவிட்டார். அவர்கள் விலகிக் கொண்டனர். ஒரு சிலர் முயற்சித்து பார்த்து தோற்றனர். எந்த அரசரும் வெற்றி கொள்ள இயலாத நிலையில் அர்ஜூனன் எழுந்தான்.
திருஷ்டத்தும்யுனா! நான் பிராமணன். எனினும் வித்தையறிந்தவன். நான் இங்கே சுழலும் மீன் சக்கரத்தை வீழ்த்தினால், எனக்கு உன் தங்கையைத் தருவாயா? என்றான். ஒரு பிராமணன் என் தங்கையை மணப்பது பாக்கியத்திலும் பாக்கியம், என்றான் திருஷ்டத்யும்னன். அர்ஜூனன் போட்டி விதிப்படி அந்த சக்கரத்தை பார்க்காமலேயே, பின்புறமாக திரும்பி நின்று ஒரே அம்பில் வீழ்த்தினான். சிவபெருமான் மேருமலையை வீழ்த்தியது போல் இருந்ததாம் இந்தக்காட்சி. பிராமண வடிவில் வந்து சக்கரத்தை வீழ்த்தியவன் அர்ஜூனனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று புரிந்து கொண்ட திரவுபதி அவன் கழுத்தில் மாலையிட்டாள். இதுகண்டு அரசர்கள் கொதித்தனர். நாமெல்லாம் க்ஷத்திரியர்கள். மாபெரும் வீரர்கள். நம் கண்முன்னால் ஒரு பிராமணன் க்ஷத்திரியக் குல பெண்ணை இழுத்துப் போகிறான். இது தகாது. அவனைக் கொன்று திரவுபதியை மீட்போம், என்றபடியே அர்ஜூனன் மீது பாய்ந்தனர். முதலில் கர்ணன் தான் பாய்ந்தான். அடேய் பிராமணா! நான் எமனை எதிரில் வந்தாலும் அவனோடு போரிடுபவன். உன்னை இந்த மண்ணில் வைத்து தேய்த்து விடுகிறேன், என்று கர்ஜித்தான்.
அர்ஜூனன் அவன் தோளில் ஒரு அம்பை விட்டான். வலி தாங்காமல் சாய்ந்தான் கர்ணன். அடுத்து சல்லியன் அவன் மீது பாய்ந்தான். அவனை பீமன் தூக்கி வீசினான். மார்பில் உதைத்தான். அவனது நெஞ்செலும்புகள் நொறுங்கி விட்டன. எனவே மற்ற அரசர்கள் மொத்தமாக அவர்கள் மீது பாய்ந்தனர். அப்போது கண்ணபிரான் குறுக்கிட்டான். மன்னர்களே! வந்திருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல! அவர்களும் க்ஷத்திரியர்களே. பஞ்சபாண்டவர்கள் இறந்து விட்டதாக உலகம் கருதி கொண்டிருக்கிறது. அவர்கள் தான் இவர்கள். அர்ஜூனனனே சக்கரத்தை வீழ்த்தி, திரவுபதியை கை பிடித்தவன், என்றார். அரசர்கள் அமைதியாக அமர்ந்து விட்டனர். பின்னர் துருபதனிடம் விடைபெற்று, திரவுபதியுடன் குந்திதேவி தங்கியிருந்த குயவன் வீட்டுக்குச் சென்றனர் பாண்டவர்கள். தர்மர் வாசலில் நின்றபடியே, அம்மா! நாங்கள் வந்து விட்டோம். ஒரு கனி கொண்டு வந்திருக்கிறோம், என்றார். உள்ளிருந்த குந்தி, அப்படியா! ஐந்து பேரும் பங்கு வைத்துக் கொள்ளுங்கள், என்றாள். தர்மர் இக்கட்டான நிலையில் இருந்தார். ஐயோ! தென்ன விபரீதம், நாம் கொண்டு வந்தது ஒரு பெண்ணை. அவளை கனிக்கு ஒப்பிட்டு சொன்னோம். தாயோ பங்கு வைத்துக் கொள்ள சொல்கிறாள். இவளை ஐந்து பேரும் மணக்காவிட்டால், தாய் சொல்லை மீறியதாகும்.
ஐவரும் மணந்தால், ஊர் உலகம் சிரிக்கும். திரவுபதியால் வெளியே தலைகாட்டவே முடியாது. என்ன செய்வது? என யோசித்துக் கொண்டிருக்கும் போதே குந்தி வெளியில் வந்தாள். தான் செய்த தவறை உணர்ந்தாள். தாய் சொன்னதை வேதவாக்காக ஏற்று, ஐவரும் அவளை மணக்க முடிவாயிற்று. திரவுபதியின் தந்தை துருபதன், குயவன் வீட்டில் இருந்த பாண்டவர்களை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். ஐவரும் அவளை மணம்முடிக்க இருந்ததைக் கேட்டு வருத்தப்பட்டான். அவன் மனம் குழம்பியிருந்த வேளையில் அங்கே வியாசர் வந்தார். மகரிஷி! சரியான சமயத்தில் வந்தீர்கள். என் இக்கட்டான நிலையை சொல்லுகிறேன். விடை சொல்லுங்கள், என்றதும், முக்காலமும் உணர்ந்த வியாசர் துருபதனிடம், மன்னா! நடந்ததையும், நடக்க இருப்பதையும் நானறிவேன். இந்த பந்தம் பூர்வஜென்ம பலனால் ஏற்பட்டது. உன் மகள் முற்பிறவியிலும் இவர்கள் ஐந்து பேருக்கே மனைவியாக இருந்தாள். அதற்கு முன் இவள் நளாயினி என்ற பெயரில் இப்பூவுலகில் வசித்தாள். இவளை அந்தணர்களின் தலைவரான மவுத்கல்ய முனிவர் மணம் செய்திருந்தார். தன் மனைவியின் பொறுமையையும், கற்புத்திறனையும் சோதிக்க இவளுக்கு பல சோதனைகள் வைத்தார்.
ஒரு கட்டத்தில் தனக்கு தொழுநோய் வந்தது போல நடித்தார். அப்போதும் அவரது மார்பையே தழுவினாள் இந்தப் பெண். ஒரு சமயம் தொழுநோயால் அழுகிய தன் விரலை உணவில் போட்டு வைத்து விட்டார். அதையும் அமிர்தமாய் நினைத்து உண்டாள் இந்தப் பெண். இதனால், மவுத்கல்யர் ஆனந்தம் கொண்டார். தன் பழைய சுந்தர வடிவை எடுத்து, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். அப்போதும் இவள், உங்கள் மாறாத அன்பு வேண்டும், என்றுதான் கேட்டாள். அதன்பின் நளாயினி இறந்துவிட்டாள். மறுபிறவியில் இவள் இந்திரசேனை என்ற பெயரில் பிறந்தாள். முற்பிறவியில் மணந்த மவுத்கல்யர் இவள் கன்னிப்பருவம் அடையும் வரை உயிருடன் தான் இருந்தார். அவரைச் சந்தித்து முற்பிறவியில் தான் அவரது மனைவியாக இருந்ததைச் சொல்லி, இப்பிறவியிலும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டினாள். அவரோ, அப்போது குடும்ப வாழ்வை வெறுத்து தவவாழ்வை மேற்கொண்டிருந்தார். எனவே அவளை மணக்க மறுத்து விட்டார். எனவே சிவபெருமானை நினைத்து தவமிருக்க காட்டுக்குச் சென்று விட்டாள், என்ற வியாசர் கதையைத் தொடர்ந்தார்.


மகாபாரதம் பகுதி-32



இந்திரசேனையின் முன்னால் சிவபெருமான் தோன்றினார்.மகளே! நீண்ட காலமாக தவமிருக்கும் உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். அவள் சிவனிடம், சுவாமி! எனக்கு நல்ல கணவரைத் தரவேண்டும், என ஐந்து முறை கேட்டாள். சிவபெருமானும் அப்படியே அருள்பாலித்தார். நீ ஐந்து முறை என்னிடம் கணவன் வேண்டும் என கேட்டதால் ஐந்து சிறந்த கணவர்கள் உனக்கு கிடைப்பார்கள், என்றார். இந்திரசேனை பதறிவிட்டாள். நான் தங்களிடம் ஐந்து முறை கேட்டதன் காரணம் மிகச்சிறந்த கணவர் அமைய வேண்டும் என்பதால்தான். தாங்கள் சொன்னதுபோல் ஐந்து கணவர்களை கேட்கவில்லை, என்றாள். நான் காரண காரியத்துடன்தான் எதையும் செய்வேன். உன்னை அவ்வாறு சொல்ல வைத்ததும் நான்தான். உலக நலன் கருதி நீ ஐந்து பேருக்கு மனைவியாக வேண்டி உள்ளது. அவர்கள் ஒற்றுமையுடன் இருந்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட இந்த அரிய தியாகத்தை செய்ய வேண்டி உள்ளது. ஒரு நல்ல செயலுக்காக விதிகளை மீற வேண்டி உள்ளது. எனவே எனது கட்டளைப்படி நீ நடக்க வேண்டும், என்று சொல்லி மறைந்தார்.
இந்திரசேனை மிகுந்த வருத்தமடைந்தாள். கங்கைக்கு சென்று நீராடி தான் ஏதேனும் பாவம் செய்திருந்தால் அது நீங்க வேண்டும் என கங்காதேவியை பிரார்த்தித்துக்கொண்டாள். ஆற்றில் குளிக்கும்போதே அவள் கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் கொட்டியது. அந்த கண்ணீர்த்துளிகள் தங்கத் தாமரைகளாக மாறின. அப்போது தேவலோகத்திலிருந்து இந்திரன் அங்கு வந்தான். அவன் இந்த அதிசயக் காட்சியைக் கண்டான். குளித்துவிட்டு கரையேறிய இந்திரசேனையை பின் தொடர்ந்தான். அப்போது சிவபெருமான் எதிரே வந்தார். அவரைக்கூட கவனிக்காமல் அந்த அதிசயப் பெண்ணைப் பற்றி சிந்தித்தபடியே இந்திரன் நடந்து கொண்டிருந்தான். இதனால் கோபமடைந்த சிவபெருமான், இந்திரனை சிறையிலடைத்தார். அங்கே ஏற்கனவே நான்குபேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்திரலோக அரசர்களாக இருந்தவர்கள். சிவபெருமான் இந்திரசேனையிடம், நான் குறிப்பிட்ட ஐந்து கணவர்களும் இவர்கள்தான். அடுத்த பிறவியில் இந்திரர்களாக இருந்த இவர்கள் ஐந்து பேரும் உன்னை மனைவியாக அடைவார்கள், என்றார். இந்திரசேனையின் ஆயுட்காலம் முடிந்தது. அவள் துருபதனான உனது மகளாக பிறந்தாள்.
 நீ பாஞ்சால தேசத்தை ஆள்வதால் மக்கள் அவளை பாஞ்சாலி என அழைத்தனர். நீ திரவுபதி என செல்லப் பெயரிட்டு அவளை அழைத்து வருகிறாய். இப்போது இந்த ஐந்துபேருக்குமே சிவபெருமானின் கட்டளைப்படி உலக நன்மை கருதி நீ அவளை மணம் முடித்து வைக்க வேண்டும், என்றார் வியாசர்.வியாசரின் வார்த்தைகளைக் கேட்ட துருபதன் உலக நலனுக்காக தன் மகளை பஞ்சபாண்டவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்க சம்மதம் தெரிவித்தான். அழகிய திருமண மண்டபம் அமைக்கப்பட்டது. அங்கே ஐந்து பேருக்கும் அவளை தனித்தனியாக திருமணம் செய்து கொடுத்தனர். தன் மருமகன்களுக்கு ஏராளமான படைபலத்தையும், நாடுகளையும், செல்வத்தை யும் அள்ளிக்கொடுத்தான். இந்தச்செய்தி துரியோதனனை எட்டியது. அவன் மிகுந்த ஆத்திரமடைந்தான். இறந்துபோனதாக கருதப்பட்ட பாண்டவர்கள் மீண்டும் உயிரோடு வந்ததை அவனால் தாங்கமுடியவில்லை. பொறாமையால் அவன் பாஞ்சால தேசத்தின்மீது படையெடுத்தான். துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன், துரியோதனனை எதிர்த்தான். இரண்டு படைகளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. கவுரவப்படை பின்வாங்கியது. ஆனால் போர்க்களத்தில் கர்ணனும், சகுனியும் திருஷ்டத்யும்னனை தொடர்ந்து எதிர்த்தனர். இவர்களில் கர்ணனை நகுலன் எதிர்த்தான். அவனுடைய அம்புமழை கர்ணனை கடுமையாகத் தாக்கியது. காயமடைந்த அவன் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிவிட்டான்.
சகாதேவன் சகுனியை விரட்டியடித்தான். பீமன் தனித்து நின்று துரியோதனன் உள்ளிட்ட நூறு கவுரவர்களையும் அடித்து நொறுக்கினான். தோற்றுப்போன துரியோதனப்படை தன் நாட்டை நோக்கி ஓடிவிட்டது. இந்த நேரத்தில் கண்ணபிரான் பாஞ்சால நாடு வந்து சேர்ந்தார். அவர் பாண்டவர்களுடன் இணைந்து அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லி வந்தார். பாண்டவர்கள் தங்களுக்கு கிடைத்த சீதன நாடுகளை நல்ல முறையில் ஆண்டனர். இந்நேரத்தில் அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் தன் தம்பி விதுரனுடன் ஆலோசனை செய்தான். பாண்டவர்களுக்கு உரிய நாட்டை கொடுத்து விடுவதே சிறந்தது என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி ஒரு தூதுவனை அனுப்பி பாண்டவர்களை அஸ்தினாபுரிக்கு வரவழைத்தான். அவர்களுக்குரிய ராஜ்ய பாகத்தை ஒப்படைத்து விட்டான். இதன்பிறகு தர்மருக்கே முடிசூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. தர்மரின் பட்டாபிஷேக நாளும் நெருங்கியது. வியாசரும் இன்னும் பல முனிவர்களும் தர்மரின் பட்டாபிஷேகத்தைக் காண வந்திருந்தார்கள். பட்டாபிஷேக நிகழ்ச்சிக்குப்பிறகு திருதராஷ்டிரன் தர்மரை அழைத்தான். மகனே! நீ உன் தம்பிகளுடன் காண்டவபிரஸ்தம் நகருக்கு செல். அங்கே தங்கியிரு, என்றான்.
தர்மருக்கு அந்நகருக்கு எப்படி செல்வதென யோசனை எழுந்தது. ஏனெனில் அந்த நகரம் காட்டுப்பகுதியில் இருந்தது. ஊரே பாழடைந்து போய்விட்டது. மனிதர்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை. இருந்தாலும் தம்பிகளை அழைத்துக் கொண்டு தர்மர் அங்கு புறப்பட்டார். கண்ணபிரானும் உடன் சென்றார். அவர் விஸ்வகர்மாவையும், இந்திரனையும் அழைத்தார். அவர்கள் கண்ணனை வணங்கி நின்றனர். இந்த காட்டை அழித்து இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அழகிய நகரத்தை நிர்மாணித்துக் கொடுங்கள். மூவுலகிலும் இதுபோன்ற நகரம் இருக்கக்கூடாது, என ஆணையிட்டார் கண்ணன். அதன்படி இந்திரனின் மேற்பார்வையில் விஸ்வகர்மா காண்டவபிரஸ்த நகரை அடையாளம் தெரியாமல் மாற்றிவிட்டார். இரவு நேரத்தில்கூட அந்த நகரம் ஜொலித்தது. எங்கு பார்த்தாலும் தங்கத்தாலான மாட மாளிகைகள், அழகிய அரண்மனைகள், பெரிய மதில்கள், தோரண வீதிகள், பூஞ்சோலைகள், தடாகங்கள் என அருமையாக அமைக்கப்பட்டிருந்தது அந்நகரம். கண்ணபிரான் அந்நகரை சுற்றிப்பார்த்தார். இந்திரனின் மேற்பார்வையில் கட்டப்பட்டதால் அந்த ஊருக்கு இந்திரப்பிரஸ்தம் என பெயர் சூட்டினார்.





















































மகாபாரதம் பகுதி-33





பேரழகுடன் விளங்கிய இந்திரபிரஸ்தம் நகரில் இந்திரலோகத்தில் கிடைக்காத பொருட்கள் கூட கிடைத்தன. அந்த பரந்தாமனே எழுப்பிய நகரம் அல்லவா? திலோத்துமை என்ற இந்திரலோகத்து பேரழகியும் அங்கே இருந்தாள். வயல்களில் மிக அதிகமாக கரும்பு விளைந்து, தேவைக்கு அதிகமானதால், வெட்டத் தேவையின்றி சாய்ந்து, அதில் இருந்து புறப்பட்ட சாறு ஆறாய் ஓடி, குளங்களை ஏற்படுத்தி யது. அன்னப்பறவைகள் அந்த கருப்பஞ்சாற்று குளங்களில் நீந்திய காட்சி பிரம்மிக்கத்தக்கதாக இருந்தது. இந்திரபிரஸ்தத்தில் ஏராளமான மக்கள் குடியேறினர். இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் பல தொழில் புரிந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். இந்த நேரத்தில் நாரத மகரிஷி இந்திரபிரஸ்தத்திற்கு வந்தார். இந்த கலகக்காரருக்கு இங்கே என்ன வேலை? அவர் வந்தால், ஏதோ ஒரு கலகம் நடந்தாக வேண்டுமே! ஆம்...அதை நடத்தி வைத்ததன் மூலம், பிற்காலத்தில் ஏற்படப்போகும் பாரதப்போரில் பாண்டவர்களுக்கு வெற்றியைத் தரும் சில நன்மையான செயல்களையும் நடத்தவே அவர் வந்து சேர்ந்தார். அவரை பாண்டவர்களும், குந்திதேவியும் வரவேற்று, ரத்தின சிம்மாசனத்தில் அமர வைத்தனர். ராஜோபசாரத்தை ஏற்றுக்கொண்ட நாரதர் திரவுபதியை அழைத்தார். மகளே!...நீ ஐவருக்கு மனைவியாய் இருக்கிறாய்.
ஒரே நேரத்தில் அவர்கள் ஐந்துபேரும் ஏதாவது கட்டளையிட்டால், நீ என்னதான் செய்வாய்? உலகில் ஒருத்திக்கு ஒருவன் என்பதே சமாளிக்க சிரமமான விஷயம். அந்த ஒருவன் சொன்னதை நிறைவேற்றவே, நம் தாய்மார்கள் சிரமப்படுகிறார்கள். உனக்கோ ஐந்து பேர். ஆளுக்கொரு வேலையைச் சொல்வார்கள். யார் சொன்னதை செய்ய முடியாமல் போனாலும் உன்னைத் திட்டுவார்கள். இந்த நிலைமை உனக்கு சிரமமாய் இருக்குமோ இல்லையோ? அது மட்டுமல்ல! இன்னும் சில பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வந்துவிடக்கூடாதே, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். திரவுபதி பதிவிரதை. சுவாமி! உங்கள் ஆசி இருக்கிறது, என் சகோதரன் கண்ணன் இங்கிருக்கிறார். அந்த பரந்தாமனின் அருளுடன் நான் எந்த சூழலையும் சமாளிப்பேன், என சொல்லிவிட்டாள். நாரதர் அவளது நம்பிக்கையை மனதுக்குள் மெச்சினார். ஆனாலும், பிரச்னையை அவர் விடவில்லை. பாண்டவர்களை அழைத்தார். அவர்களிடமும் இதே விஷயத்தைச் சொன்னார். சுவாமி! நீங்கள் சொல்வது நியாயம் தான். இதற்குரிய பாதையையும் நீங்களே காட்டிவிடுங்கள், என்றனர். தர்ம சகோதரர்களே! ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். நாராயணனால் வதம் செய்யப்பட்ட இரண்யகசிபுவை பற்றி நீங்கள் அறிவீர்கள்.
அவனது பேரன்கள் சுந்தன், உபசுந்தன். இரண்டு சகோதரர்களும் பிரிக்கமுடியாத அன்புடன் திகழ்ந்தனர். அவர்கள் மூன்று லோகங்களையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வர விரும்பினர். இதற்காக கடும் தவமிருந்து மும்மூர்த்திகளையும் வரவழைத்து வரமும் பெற்று விட்டனர். அது மட்டுமா! யாராலும் தங்களுக்கு அழிவுவரக்கூடாது என்ற வரமும் பெற்றனர். பிறகென்ன! அட்டகாசம் தான், அமர்க்களம் தான்! இவர்களது தொல்லையைப் பொறுக்கமுடியாமல் தேவர்கள் திலோத்துமை என்ற அழகியைப் படைத்து சுந்த, உபசுந்தர்கள் கண்ணில் படும்படி நடமாட வைத்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. அன்றுவரை ஒற்றுமையாக இருந்த அந்த சகோதரர்கள் மனதில், இவளை யார் முதலில் அடைவது என்ற எண்ணம் உண்டாயிற்று. சுந்தன் அவளது கையைப் பிடித்து இழுத்தான்.  உபசுந்தன் அவனிடமிருந்து அவளைப் பறித்தான். சுந்தன் தன் தம்பியிடம், அடேய்! அவள் உனக்கு அண்ணன் மனைவி. தாய் போன்றவள். தாயின் கையை பிடித்து இழுக்கிறாயே, என்றான். உபசுந்தன் அவனிடம், உஹூம்... அவள் என்னுடையவள். நீ என் அண்ணன். எனக்கு தந்தை போன்றவன். அவ்வகையில், அவள் உனக்கு மருமகள் ஆகிறாள். மருமகளை கையைப் பிடித்து இழுக்கிறாயே! வெட்கமாய் இல்லை, என்றான். வந்தது வினை. இருவரும் அந்தப் பெண்ணுக்காக கடும் போரிட்டனர். ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தனர்.
இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்பது இப்போது புரிந்து விட்டதா? உங்கள் ஐந்து பேருக்குள்ளும், திரவுபதியைக் குறித்து சண்டை வந்துவிடக்கூடாது. அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறை அவளுடன் வாழ வேண்டும். அப்படி ஒருவர் அவளுடன் வாழும் போது, இன்னொருவர் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. அப்படி பார்க்க நேர்ந்தால், அவர் ஒரு வருடம் மாறுவேடம் பூண்டு தீர்த்த யாத்திரை போய்விட வேண்டும். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்குத் தான் நல்லது, என்றார். தர்ம சகோதரர்களுக்கு அது சரியெனப்பட்டது. திரவுபதிக்கும் முழு மனநிறைவு. அவர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர். நாரதர் அவர்களிடம் விடைபெற்று கிளம்பி விட்டார். பாண்டவர்களும் இந்த விதிமுறையை எவ்வித பிசகுமின்றி கடைபிடித்தனர். ஆனால், விதி யாரை விட்டது? ஒருநாள், ஒரு அந்தணன், அரண்மனை வாசலில் நின்று, ஏ பாண்டவர்களே! நீங்கள் ஆளுவது நாடா இல்லை காடா? என்ன அரசாங்கம் நடத்துகிறீர்கள். பிரஜைகளை பாதுகாப்பவனே மன்னன். ஏ தர்மா! வெளியே வா! நியாயம் சொல், என்று கத்தினார். அந்தணரின் சப்தம் ஆயுதசாலைக்குள் இருந்த தர்மருக்கு கேட்க வில்லை. ஆனால், அரண்மனை உப்பரிகையில் உலவிக்கொண்டிருந்த அர்ஜூனனின் காதில், அந்தணனின் அவலக்குரல் கேட்டது. அவன் வேகமாக அந்தணன் நிற்குமிடத்துக்கு வந்தான்.
அந்தணரே! மன்னிக்க வேண்டும். அண்ணா ஆயுதசாலையை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். தங்களுக்கு நியாயம் சொல்ல அவர் வரவேண்டும் என்பதில்லை. நானே பிரச்னையைத் தீர்த்து விடுகிறேன். தங்களுக்கு ஏதும் அநியாயம் நேர்ந்து விட்டதா? என்றான் கவலை தொனிக்க. வில்லாளி வீரனே! என் கறவைப் பசுக்களை இடையன் ஒருவன் பொறுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்பினேன். சில கள்வர்கள் அவனை அடித்துப் போட்டு விட்டு பசுக்களை ஓட்டி சென்று விட்டனர். செழிப்பு மிக்க ராஜாங்கம் நடத்துவதாக மார்தட்டுகிறீர்கள்! ஆனால், திருடர்கள் நம் நாட்டுக்குள் வந்து விட்டார்களே! என் மாடுகளை மீட்டுத்தா, என்றார். இவ்வளவுதானே! உமது பசுக்களை மீட்டுத்தருவது என் கடமை. நீங்கள் அமைதியாக இல்லத்துக்கு செல்லுங்கள். பசுக்கள் வந்து சேரும், என உறுதியளித்தான். அவசரமாக ஆயுதசாலைக்குள் புகுந்தான். அங்கே தற்செயலாக வந்திருந்த திரவுபதி அண்ணன் தர்மரின் அணைப்பில் இருந்தாள். அவளது முகத்தை கூட அர்ஜூனன் பார்க்கவில்லை. அண்ணனின் கால்களும், திரவுபதியின் சின்னஞ்சிறு அழகிய கால்களும் ஒன்றிணைந்திருப்பதைப் பார்த்து விட்டான். அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக