வெள்ளி, 25 நவம்பர், 2011

ஐம்பெரும்காப்பியம் - மணிமேகலை ( முதல் பகுதி )


ராதே கிருஷ்ணா 26-11-2011

ஐம்பெரும்காப்பியம் -  மணிமேகலை ( முதல் பகுதி )


ஐம்பெரும் காப்பியம் 
ஐம்பெரும் காப்பியம்
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




மணிமேகலை
temple
தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் கதையின் ... மேலும்

1. விழாவறை காதைநவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு
அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ஒருங்கு கூடி அந் நகரத்திலே வாண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற ... மேலும்

2. ஊரலருரைத்த காதைநவம்பர் 11,2011

இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு
அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் நாணுத்தக வுடைத்து என யாண்டும் பழிதூற்றுதல் கேட்ட சித்திராபதி ... மேலும்

மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு
அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது மணிமேகலை புத்த படிமத்திற்கு அணிய வேண்டிய மலர் மாலை தொடுக்கும் ... மேலும்

நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு
அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை புகுந்தனளாக, அவள்பால் பெருங்காதல் கொண்டிருந்த ... மேலும்

ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு
அஃதாவது: பளிக்கறைக் குள்ளிருக்கின்றாள் மணிமேகலை என்றறிந்த ... மேலும்

ஆறாவது மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டம் உரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன பாட்டு
அஃதாவது-அரசன் மகன் சென்ற பின்னர் அங்குப் பதியகத் துறையுமோர் ... மேலும்

ஏழாவது மணிமேகலா தெய்வம் உவவனம் புகுந்து சுதமதியைத் துயிலெழுப்பிய பாட்டு
அஃதாவது: மணிமேகலையை உவவனத்தினின்றும் எடுத்துப் போய் முப்பது யோசனைத் தொலைவில் ... மேலும்

எட்டாவது மணிமேகலை மணிபல்லவத்துத் துயிலெழுந்து துயருற்ற பாட்டு
அஃதாவது: மணி பல்லத்தின்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாமலே வைத்துப் போன பின்னர் ... மேலும்

ஒன்பதாவது மணிமேகலை மணிபல்லவத்திடைப் பீடிகை கண்டு பிறப்புணர்ந்த பாட்டு
அஃதாவது மணிமேகலை மணிபல்லவத்தில் நறுமலர்ப் பள்ளியினின்றும் துயிலுணர்ந்தவள் அவ்விடத்துப் ... மேலும்

பத்தாவது மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி மந்திரங் கொடுத்த பாட்டு
அஃதாவது: மணிமேகலையை மணிபல்லவத்திடை வைத்து நீங்கிய மணிமேகலா தெய்வம் அவள் மாமலர்ப் பள்ளியினின்றும் ... மேலும்























































தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம்


தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது. இவ்வுண்மையை சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரை எடுத்துக் கூறுகிறது. அதனால் காப்பியங்களில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்றொரு பெயரும் உண்டு. இக்காப்பியத்தின் கதாநாயகியே மணிமேகலை.  சிலப்பதிகாரத்தின் கதைத்தலைவனான கோவலனுக்கும், ஆடலரசியான மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலை. கோவலனின் குலதெய்வமான மணிமேகலையின் பெயரை தன் மகளுக்கு சூட்டினான். தன் பாட்டி சித்ராபதியையும், தாய் மாதவியையும் போல கணிகையாக வாழ மணிமேகலைக்கு  விருப்பமில்லை. கற்புக்கரசி கண்ணகியைப் போன்று அறவழியில் அவள் வாழ்ந்தாள்.
சக்கரவாளக்கோட்டம் என்னும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த மணிமேகலையை அவளுடைய குலதெய்வமான மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் சென்றது. அங்குள்ள புத்தக்கோயிலை வணங்கி தன் பழம்பிறப்பைப் பற்றி அவள் தெரிந்து கொண்டாள். முற்பிறவியில் இலக்குமி என்னும் பெயரில் வாழ்ந்ததை அறிந்தாள். முழுமதி நாளான வைகாசி விசாகநாளில் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைப் பெற்றாள். பசியின் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பதற்காக அந்த பாத்திரத்தைப் பயன்படுத்தினாள். அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறிவுரை கேட்டு, ஆதிரை என்னும் கற்புக்கரசியிடம் முதன் முதலில் பிச்சை ஏற்றாள். அன்று முதல் அந்த பாத்திரத்தில் அள்ள அள்ளஅன்னம் குறையாமல் வந்தது.
இக்காப்பியம் 30 காதைகளைக் கொண்டதாகும். முதல் காதையான விழாவறை காதையில் கூறப்படும் இந்திர விழாவே, தற்கால பொங்கல் பண்டிகை எனக்கருதப்படுகிறது. இவ்விழா 28 நாட்கள் நடந்துள்ளது. சிறைச்சாலையை அறச்சாலையாக்கிய பெண்மணி மணிமேகலை. பசிக்கொடுமையைப் போக்கியவளின் புகழை, என் நாவால் உரைக்க முடியாது என்று சாத்தனார் மணிமேகலையின் பெருமையை இந்நூலில் புகழந்துள்ளார். உலக வாழ்வில் இளமையோ, செல்வமோ நிலையில்லாதவை. வீடுபேறு என்னும் மோட்சத்தை பிள்ளைகளாலும் பெற்றுத் தர முடியாது. அறம் என்னும் தர்மசிந்தனை ஒன்று மட்டுமே நமக்கு சிறந்த துணை என்பதே மணிமேகலை காப்பியத்தின் சாரமாகும்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் வரி இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறப்பான பாடல் வரியாகும். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் நூலாசிரியர் சாத்தனாரின் புலமையைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
பதிகம் (கதைபொதி பாட்டு)
அஃதாவது-இந்நூலின்கட் போந்த பொருளை நிரலாகத் தொகுத்துக் கூறும் சிறப்புப் பாயிரம் என்றவாறு
பதிக்க கிளவி பல்வகை பொருளைத்
தொகுதி யாக்க சொல்லுத றானே
என்பது முணர்க.
இனி, பதிகம் என்ற சொல் பாயிரம் என்னும் பொருட்டுமாகும் என்பதனை.
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தத்துரை புனைந்துரை பாயிரம்
என வரும் நன்னூற் சூத்திரத்தால் உணர்க.
பாயிரம் பொதுவும் சிறப்பும் என இரு வகைத்து. அவற்றுள் இப்பதிகம் நூற்கேயுரிய சிறப்புப் பாயிரம் ஆகும்.
இனி இதன்கண் மணிமேகலை என்னும் இப்பெருங் காப்பியத்தின் பிறப்பிடமாகிய காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறும் அதனைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டைப் புரக்கும் காவிரி என்னும் பேரியாற்றின் வரலாறும், காவிரிப்பூம்பட்டினத்தின்கண் ஒரு நூறு கேள்வி யுரவோனாகிய இந்திரனுக்கு விழாவெடுத்தற்கு முரசறைதல் தோற்றுவாயாகவும் மணிமேகலை பிறப்பற வேண்டி நோன்பு மேற்கொள்ளல் இறுவாயாகவும் அமைந்த கதையைத் தம் மகத்துட் கொண்ட உள்ளுறுப்புக்களும் நிரல்படுத்திக் கூறப்பட்டுள்ளன.
இளங்கதிர் ஞாயீ றெள்ளுந் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்தவிக் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று -5
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு வெண்பாள் சம்பா பதியனள்
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட - 10
அமர முனிவன் அகத்தியன் றனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல்
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள் - 15
ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு
ஆணு வீசும்பின் ஆகாய கங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப்
பின்னலை முனியாய் பொருந்தவன் கேட்டீங்கு
அன்னை கேளிவ் வருந்தவ முதியோள் - 20
நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப்
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை - 25
தொழுதனள் நிறபவத் தொன்மூ தாட்டி
கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து
தெய்வக் கருவுந் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
என்பெயர்ப் படுத்த இவ் விரும்பெயர் மூதூர் - 30
நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென
இருபாற் பெயரிய உருகொழு மூதூர்
ஒருநூறு வேள்வி உரவோன் றனக்குப்
பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச்
சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான் - 35
வயந்த மாலையான் மாதவிக் குரைத்ததும்
மணிமே கலைதான் மாமலர் கொய்ய
அணிமலர்ப்  பூம்பொழில் அகவயிற் சென்றதும்
ஆங்கப் பூம்பொழில் அரகிளங் குமரனைப்
பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும் - 40
பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்
மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும்
உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வம் -45
சுதமதி தன்னைத் துயலெடுப் பியதூஉம்
ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள்
தான் றுயி லுணர்ந்து தனித்துய ருழந்ததும்
உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப்
பழம்பிறப் பெல்லாம் பான்மையி ணுணர்ந்ததும் -50
உணர்ந்தோள் முன்னர் உயிர்தெய்வந் தோன்றி
மணங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும்
தீப திலகை செவ்வனந் தோன்றி
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு - 55
யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும்
அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம்
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபூத் திரன்பால்
சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் - 60
மற்றப் பாத்திரம் மடக்கொடி யேந்திப்
பிச்சைக் கவ்வூர்ப் பெருந்தெரு வடைந்ததும்
பிச்சைக் யேற்ற பெய்வளை கடிஞையிற்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று - 65
ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழை யென்றே
கொங்கலர் நறுந்தார் கோமகன் சென்றதும்
அம்பல மடைந்த அரசிளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையின் மகள்வடி வாகி - 70
மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்
அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன்
ஆயிழை தன்னை அகலா தணுகலும்
வஞ்ச விஞ்சையின் மன்னவன் சிறுவனை - 75
மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும்
ஐயரி யுண்கண் அவன்றுயர் பொறாஅள்
தெய்வக் கிளவியிற் றெளிந்த வண்ணமும்
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
சிறைசெய் கொன்றதுஞ் சிறைவீடு செய்ததும் - 80
நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு
ஆய்வளை ஆபூத் திரனா டடைந்ததும்
ஆங்கவன் றன்னோ டணியிழை போகி
ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும்
உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப் - 85
பொற்கொடி வஞ்சியற் பொருந்திய வண்ணமும்
நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்
சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும்
ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும் -90
புக்கவள் கொண்ட பெய்யுருக் களைந்து
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
நவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்
பவத்திற மறுகெனப் பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப - 95
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென்
உரை
தோற்றுவாய்
1-8: இளங்கதிர் .........பதியினள்
(இதன் பொருள்) பொன் திகழ் நெடுவரை உச்சி இத்தீவைத் தெய்வதம்-பொன் மயமாக விளங்குகின்ற நெடிய மேருமலையின் உச்சியின்கண் இந்த நாவலந் தீவின் காவல் தெய்வமானது;  இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி தோன்றி - இளமையுடைய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலத்தையும் இகழ்தற்குக் காரணமான பேரொளியோடு காணப்படுகின்ற விளக்கமான ஒளிப் பிழம்பாகிய திருமேனியையும் விரிந்த சடையையும் உடையவளாய் அருளுருவங் கொண்டு தோன்றி; மாநில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு - பெரிய நிலமகளுக்கு அரக்கர்களால் உண்டாகின்ற துன்பங்களைத் தன்பால் முறையிடுகின்ற அமரர்கள் வாயிலாய்க் கேள்வியுற்று வெம்திறல் அரக்கர்க்கு வெம்பகை-வெவ்விய ஆற்றலுடைய அவ்வரக்கர்களுக்கும் அச்சமுண்டாக்கும் பகையாவதற்குரிய ஆற்றலைப் பெறும் பொருட்டு; சாகை சம்பு தன்கீழ் நின்று நோற்ற - கிளைகளை யுடைய நாவல் மரத்தின் கீழே நின்று தவம் செய்தமையாலே; சம்பு என்பாள்- சம்பு என்று பெயர் பெற்றவள்; தென்திசை பெயர்ந்த சம்பா பதியினள் - அம் மேருமலையினின்றும் தெற்குத் திசையை நோக்கி எழுந்தருளிய காலத்தே சம்பாபதி என்னும் தன் பெயரோடு படைக்கப்பட்டிருந்த பூம்புகார் நகரத்திலே திருக்கோயில் கொண்டு வீற்றிருப்பாளாயினள்; என்க.
(விளக்கம்) ஞாயிறு திருமேனிக்கும் கதிர் விரிசடைக்கும் உவமை. இஃது எதிர் நிரல் நிறை உவமை. ஆகவே ஞாயிற்றை எள்ளும் மேனியையும் அதன் இளங்கதிரை எள்ளும் சடையையும் உடைய அருளுருவம் கொண்டு பொன்வரை உச்சியில் தோன்றித் துயர் கேட்டுச் சம்புவின் கீழ் நின்று நோற்றமையால் சம்பு எனப் பெயர் பெற்று, பொன் மலையினின்றும் தென்றிசை நோக்கிப் பெயர்ந்து வந்து தென்றிசையின்கண் தனக்கெனப் பிரமனால் தன் பெயரோடே படைக்கப்பட்டிருந்த சம்பாபதி என்னும் நகரத்தில் எழுந்தருளி இருப்பாளாயினள் என்பது கருத்தாகக் கொள்க.
இதனால் காவிரி ஒரு பேரியாறாகக் காட்சி தருதற்கு முன்பு சம்பாபதி என்னும் பெயரையுடையதாய் இருந்த அந்நகரமே காவிரியாறு சோழ மன்னர்களால் பெரிய யாறாகச் செய்யப்பட்ட பின்னர் காவிரிப்பூம்பட்டினம் எனவும் காவிரி கடலொடு கலக்கம் சிறப்புக் கருதிக் பூம்புகார் நகரம்  எனவும் பெயர் பெற்றது என்று உணரப்படும்.
இதனை (26-30) ஆம் அடிகளில் கூறுமாற்றான் அறியலாம் ஆகவே, சம்பு வென்பாள் சம்பாபதியினள் என்றது, சம்பு என்னும் அக்காவற்றெய்வம் பொன்வரையுச்சியினின்றும் தென்திசைப் பெயர்ந்து வந்து நான்முகன் தன் பெயர்ப்படுத்த சம்பாபதி என்னும் இடத்திலே உறைந்தது என்றவாறு. இத் தெய்வம் காவிரியாறு தோன்று முன்பே அவ்வடத்திலே எழுந்தருளி யிருந்தது என்பதும் பின்னர்க் கூறுமாற்றானுணரலாம்.
காவிரியின் தோற்றம்
6-18 செங்கதிர் ........வாவென
(இதன் பொருள்.) செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் வேட்கையின் காந்தமன் - சிவந்த ஒளியையுடைய கதிரவன் வழித் தோன்றிய தெய்வத் தன்மையுடைய தான் பிறந்த குலத்தினைப் புகழால் உலகுள்ள துணையும் விளக்க வேண்டும் என்றெழுந்ததொரு விருப்பங் காரணமாகச் சோழர் குலத்திலே தோன்றிய காந்தன் என்னும் மன்னவன்; அமர முனிவன் அகத்தியன் கஞ்சம் வேண்ட -தேவமுனிவனாகிய அகத்தியன்பாற் சென்று தன்னாட்டை வளம் படுத்துதற்கு இன்றியமையாத நீர் வழங்க வேண்டுமென்று வேண்டா நிற்றலால்; தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை- அம் முனிவன், நீர் பேரியாறாகப் பெருகிச் சென்று அச் சோழ நாட்டினை வளம்படுத்தத் திருவுளங் கொண்டு அதற்குக் கால்கோள் செய்பவன் தன்னுடைய நீர் கரத்தைக் குடக மலையுச்சியிலே சென்று கவிழ்த்தமையாலே அதிலிருந்து ஒழுகிய நீர் அம்முனிவன் கருதியாங்குப் பேரியாறாகப் பெருகிக் காவிரிப்பாவை என்னும் பெயரோடு; செங்குணக்கு ஒழுகி-நேர் கிழக்குத் திசை நோக்கி ஒழுகி; அச் சம்பாபதி அயல் பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற -சம்பாபதி என்னும் தெய்வம் எழுந்தருளியிருந்த சம்பாபதி என்னும் அத்திருப்பதியின் மருங்கே மிக்க நீரையுடைய கடற்பரப்பிலே புகுந்து பொலியா நிற்ப; ஆங்கினிதிருந்த -அச் சம்பாபதியிலே மகிழ்ந்தெழுந்தருளியிருந்த; அருந்தவ முதியோள் -அரிய தவத் தினையுடைய பழையோளாகிய அச் சம்பாபதி என்னும் தெய்வம்; உவந்து - அந் நதி நங்கை வரவு கண்டு பெரிதும் மகிழ்ந்து; ஓங்கு நீர்ப் பாவையை எதிர் கொண்டு -உயரிய தெய்வத் தன்மையுடைய அக் காவிரி நங்கையை எதிர் சென்று அன்புடன் வரவேற்று; ஆங்கு ஆணுவிசும்பின் ஆகாய கங்கை-அவ்விடத்திலேயே தன்னோகை கூறுபவள் ஆருயிர்களின்பால் அன்பு மிக்கவளே! விசும்பாகிய உயர் குலத்துப் பிறந்த ஆகாய கங்கையாகிய நங்கையே; வேணவாத்தீர்த்த விளக்கே -சோழ மன்னனும் அவன் குடிமக்களும் நீண்ட காலமாகத் தம்முட் கொண்டிருந்த பேரிய அவாவினை நிறைவேற்றி அவர்களுடைய துன்பவிருளைத் துவரப் போக்கிய ஒளி விளக்கே ;வா என வருக வருக என்று பாராட்டி வரவேற்ப என்க.
(விளக்கம்) திருக்குலம் -தெய்வத் தன்மையுடைய குலம். சோழ மன்னர்,கதிரவன் குலத்து மன்னர் என்பது நூனெறி வழக்கம். காவிரி தோன்று முன்னர்ச் சோழர் நாடு நீர் வளம் பெறாது வறுமையுற்றுக் கிடந்தமையால் அந்த நாட்டரசனாகிய காந்தன் அக் குறை தீர்த்துத் தான் பிறந்த அந்த நாட்டையும்  தான் பிறந்த சோழர் குலத்தையும் புகழுடைய தாக்க விரும்பி அகத்தியன்பாற் சென்று வரம்வேண்டினனாக அவன் வேண்டுகோட் கிணங்கிய அகத்தியன் அந் நாட்டினை நீர் நாட்டாக்கத் திருவுளங் கொண்டு அந் நாட்டினைப் புரக்கும் ஒரு போறியாற்றைப் படைத்து வழங்க விரும்பி அதற்குக் கால்கோள் செய்பவன் குடகமலை யுச்சியில் ஏறிச் சென்று தன் கரக நீரை கவிழ்த்துவிட, அந்நீர் பெருகிப் பேராறாகிச் செங்குணக் கொழுகிச் சோணாட்டிற் புக்குக் புனல் பரப்பி வளஞ் செய்து சம்பாபதியின் மருக்கே கடலிற் பாய்ந்தது எனவும் அக் காவிரி வருகையால் மகிழ்ந்த சம்பாதி என்னும் தெய்வம் அந் நீர் மகளை எதிர் சென்று வரவேற்று மகிழ்ந்தான் எனவும் இப் பகுதி காவிரியின் தோற்றமும் காரணமும் கட்டுரைத்த படியாம்.
கம்சம்- நீரை பிறப்பித்தல். கஞ்ச வேட்கை எனச் சொற் கிடந்தாங்கே நீருண்டாக்கும் விருப்பத்தால் எனினுமாம். கஞ்சம் என்பதே நீர் என்னும் பொருட்டென லுமாம். (கஞ்சம் கலங்குவன என்பது நளவெண்பா) காந்தன்-சோழர் குலத்து மன்னருள் ஒருவன்.மன்-அரசன். பகீரதன் தானே தவம் செய்து கங்கையை நிலவுலகிற்குக் கொணர்ந்தனன். காந்தன் தவத்தினால் பேராற்றுலுடைய அகத்தியனை வணங்கி அவன்பால் வரமாகப் பெற்று அவ்வாகாய கங்கையையே காவிரிப் பாவையாகச் சோழநாட்டிற்குக் கொணர்ந்தான் என்க. அகத்தியன் கடல் குடித்தவன். அவன் பேரியாறு படைத்தல் பெரிதில்லை. தன் கரத்திலிருந்த ஆகாய கங்கையாகிய நீரையே காவிரிப்பேரியாறாகப் பெருகிவரச் செய்தான் ஆதலின் அவன் கரக நீர் ஆகாய கங்கை என்பது தோன்ற அமர முனிவன் அகத்திழன் என்று விதித்தார். ஆணு:பண்பாகு பெயர்; விளி.அன்பே என்று விளித்தப்படியாம். ஆணுவே! ஆகாய கங்கையே! விளக்கே! வா! என்று தன் ஆர்வந் தோன்ற மும்முறை விளித்தப்படியாம்.பொங்குநீர்ப் பரப்பு என்னும் பன்மொழித் தொடர், கடல் என்னும் ஒருபொருள் மேனின்றது மலைத்தலைய கடற்காவிரி என்பது பட்டினப்பாலை (9).விளக்கு என்றமையால் துன்பவிருள் போக்கும் விளக்கு என்று கூறக் கொள்க. வேணவா -மிக்க அவா.
அகத்தியன் காவிரிநங்கைக்கு அத் தெய்வத்தை
அறிமுகப் படுத்துதலும், காவிரி வணங்குதல்
19-26: பின்னலை..........நிற்ப
(இதன் பொருள்.) பின்னிலை முனியாய் பெருந்தவன்-தன்னாற் படைக்கப்பட்டுச் செங்குணக்காக இயங்கி வருகின்ற அக் காவிரிப் பாவையின் பின்னே அவளது இயக்கங் கண்டு மகிழ்தற்கு அவள் பின்னரே தொடர்ந்து வருவதனை வெறாமல் விருப்பத்தோடு வந்த பெரிய தவத்தையுடைய அவ்வமா முனிவர்; கேட்டு-சம்பாபதி அந் நதிமகளை வரவேற்கும் பாராட்டுரையினைக் கேட்டு மகிழ்ந்து; அன்னை கேள் இ அருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தன்மையள் வணங்கு என-மன்னுயிர்க் கெல்லாம் அன்னையாகிய காவிரி மகளே கேள். நின்னை பாராட்டும் இந்த அரிய தவத்தை யுடைய இவள் கன்னிகையாகக் காணப்படினும் நிலமடந்தையின் காவல் தெய்வமாகிய கொற்றவை ஆதலின் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையோளாகிய இறைவியே ஆதலின உன்னால் வணங்கப்படுதற் கியன்ற பெருமையுடையாள் காண்! ஆதலால் அத் தெய்வத்தை வணங்குவாயாக என்று பணித்தலாலே; பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர் தங்குலக் கொடி-நல்லிசைப் புலவராலே பாடுதற் கமைந்த பொருஞ் சிறப்பமைந்த இப் பாரத நாட்டிலே புகழாலுயர்ந்ததும் எஞ்ஞான்றும் வளைந்திலாதது மாகிய செங்கோலையுடைய சோழ மன்னருடைய குலத்திற்கே உரிமைபூண்ட பூங்கொடிபோல் வாளும்; கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நீலை திரிபாத் தமிழ்ப்பாவை -கோள்கள் நன்னிலை பிறழ்ந்து கோட்டைக் காலமே நீண்டாலும். தான் தனது புனலாலே மன்னுயிர் புரக்கும் தனது நிலை பிறழா தவளும் குளிர்ந்த தமிழ் மொழியைத் தனது வளத்தாலே வளர்ப்பவளும் திருமகள் போல்பவளுமாகிய அக் காவிரி நங்கை அம் முனிவன் பணித்தாங்கு; தொழுதனள் நிற்ப - சம்பாபதியைக் கைகுவித்துத் தொழுது தலையாலே வணங்கி நிற்ப என்க.
(விளக்கம்) தன்னாற் படைக்கப்பட்ட காவிரி ஒழுகும் வனப்பினைக் கண்டுகளிக்கும் கருத்தாலே அம் மாபெருந்தவனும் பின்னலை முனியாது  விரும்பி அவளைப் பின் தொடர்ந்து வந்தான் என்றவாறு. அவன் பின்னிற்றற்கு ஒண்னாத பெருமையுடையான் என்பது தோன்ற பெருந்தவன் என்றார். காவிரியின் பால் மகவன்பு கொண்டு அவனும் பின்னலை முனியாது அவளைத் தொடர்ந்தான் என்று அவனுடைய அன்பின் நிலை கூறியவாறு. அன்னை என்று  விளித்தான் தன்மகளாதலின். உயிர்கட் கெல்லாம் அன்னை என்பது பற்றி அங்ஙனம் விளித்தான் எனினுமாம். பாரத நாட்டிலமைந்த ஏனைமன்னர் செங்கோள்களினும் காட்டில் உயர்ந்த செங்கோல்; எஞ்ஞான்றும் கோட்டாச் செங்கோல் என்று தனித் தனி இயையும் ஏனை மன்னரால் கைப்பற்ற வியலாமை பற்றிச் சோழர் தங்குலக்கொடி என்றார்.
இனி, கோணிலை திரிந்து...பாவை என்னும் இதனோடு- வசையில் புகழ் வயங்கு வெண்மீன்-திசைதிரிந்து தெற்கேகினும்-தற்பாடிய தளியுணவின் -புட்டோம்பப் புயன்மாறி-வான்பொய்ப்பினும் தான்பொய்யாமலைத் தலைய கடற் காவிரி -புனல் பரந்து பொன் கொழிக்கும் எனவும்,(பட்டினப்-1-7) இலக்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண்காவிரி வந்து கவர்பூட்ட எனவும் (புறம். 357-8) கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்......காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலே எனவும் (சிலப்-10:1092-8) வரும் பிறசான்றோர் பொன்மொழிகளையும் ஒப்பு நோக்குக. வளமில்வழி மொழிவளனும் கலைப்பெருக்கமும், உண்டாத லின்மையின் தமிழ் மொழியின் ஆக்கத்திற்கும் காவிரி காரணமாதல் பற்றி, தண்டமிழ்ப் பாவை என்றொரு பெயரும் கூறினர் தொமுத்தனள். தொழுது,
சம்பாபதி காவிரி வாழ்த்துதல்
26-31: அத்தொல்.........வாழியவென
(இதன் விளக்கம்) அத்தொல் மூதாட்டி கழுமிய உவகையின் கவான் கொண்டு இருந்து- அவ்வாறு காவிரிப் பாவையாலே தொழப்பட்ட மிக்க முதுமையையுடைய அச் சம்பாபதி என்னும் தெய்வந் தானும் அந்நதிமகளோடு உளம் ஒன்றிய அன்பினாலே மகிழ்ந்து அக் காவிரிப் பாவையைத் தழுவித் தன் மடிமிசை இருத்திக் கொண்டிருத்து கூறுபவன் அன்னையே!; செம்மலர் முதியோன் செந்தாமரை மலரில் உறையும் முதுபெருங் கடவுளாகிய பிரமன் உலகங்களைப் படைக்கத் தொடங்கி; தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்-மகாராசிகலோக முதலிய அறுவகை உலகங்களையும் அவற்றில் வாழும் தெய்வகணப் பிண்டங்களையும் நான்கு திசைகளினும் அமைந்துள்ள இருபது வகைக்கப்பட்ட பிரமகணப் பிண்டங்களையும் படைத்துப் பின் இந்நிலவுலகத்தையும் இதன்கண் வாழும் மக்கட் பிண்டங்டளையும்; செய்த அந்நாள் - படைத்த அப் பண்டைக் காலத்திலேயே; என் பெயர்ப்படுத்த இவ் இரும்பெயர் மூதூர் - சம்பாபதி என்னும் எனது பெயரோடு படைத்தருளிய பெரிய புகழையும் பழைமையையும் உடைய இந்த ஊரினை; நின் பெயர் படுத்தேன் - இற்றை நாள தொடங்கியான காவிரிப் பூம்பட்டினம் என வழங்குமாறு நினது பெயரோடும் இணைத்தேன் காண; நீ வாழிய என - நீடுழி வாழ்வாயாக என்று வாழ்த்தியருள என்க.
(விளக்கம்.) படைப்புக் காலத்திலேயே படைப்புக் கடவுள் முக்காலமும் உணர்ந்தவன் ஆதலின் இந்நகரத்தை யான் இருத்தற்கியன்ற இடமாகப் படைத்துச் சம்பாபதி என்னும் பெயரும் சூட்டினன். ஆதலின் யானும் எனக்குரிய பொன்வரையுச்சியிலே தோன்றி நில மடந்தைக்கு அரக்கரால் அழிவு வரும் என்று பிறதெய்வங்கள் கூறக் கேட்டு அவர்கள் அஞ்சத்தகுந்த பேராற்றலை அப் பொன்வரையுச்சியில் நிற்கும் சாகைச்சம்புவின் கீழ் நெடுங்காலம் தவம்செய்து பெற்றுப் பின்னர், இச் சம்புத்தீவன் காவற்றெய்வமாகிய கொற்றவையாகி இச் சம்பாபதி நகரத்திலே வதிகிறேன். ஆதலின் இந் நகரம் மாபெருஞ் சிறப்புடையதாம். இற்றைநாள் தொடங்கி இம்மூதூர் காவிரி பூம்பட்டினம் என்னும் பெயரோடும் நிலவுக! நீ வாழ்க! என்று அத்தெய்வம் அந்நகர் வரலாறும் பெருமையும் பழமையும் காவிரிக்கு அறிவுறுத்து வாழ்த்திற்று என்க.
இனி உலகங்கள் முப்பத்தொன்று என்பதும் அவைபொன்மலையை நடுவண் கொண்டு அதன் மேலும் கீழும் நடுவிலும் உள்ளன என்பதும் பௌத்தர் கொள்கையாம். இவற்றைப் படைப்புக் கடவுள் படைக்கும் பொழுது தெய்வலோக முதலிய மேலுலகத்தைப் படைத்துப் பின்னர் மக்கள் உலகாகிய இந்நிலவுலகத்தைப் படைத்தான் என்பதும் அங்ஙனம் நிலவுலகத்தைப் படைக்கும் பொழுதும் சம்புத்தீவையே முற்படப் படைத்து அதன் தென்றிசைமருக்கில் அதன் காவற்றெய்வமாகிய சம்பு என்னும் தெய்வம் உறைதற் பொருட்டுச் சம்பாபதி என்னும் பெயரோடு ஒரு நகரையும் படைத்தான் என்பதும் இப்பகுதியில் பாட்டிடை வைத்த குறிப்புப் பொருளாகக் கொள்க. ஈண்டுத் தெய்வக் கரு என்றது ஆறுவகைப்பட்ட தெய்வங்களையும் அவர் வாழும் உலகங்கங்களையுமாம்; திசைமுகக் கரு என்றது, இருபது வகைக்கப்பட்ட பிரமலோகங்களையும் அவற்றின் உறையும் பிரமகணங்களையும் என்க. இனி இவ்விருவகை உலகங்களையும் படைத்துழி என்பெயர்ப்படுத்த இவ்விரும் பெயர் மூதூர் என்றமையின் பின்னர் நிலவுலகத்தைப் படைக்கும் பொழுது முற்படப் புகார் நகரம் படைக்கப்பட்டது என்பதும் பெற்றாம். எனவே புகார் நகரம் படைப்புக் காலந்தொட்டு அதனை ஆளும் அரசரால் சோழமன்னரால் வழிவழி ஆளப்பட்டுப் பதியெழுவறியாய் பழங்குடி கெழீஇய பண்பாட்டோடு புகழையும் பெற்று வருகிறதென்றவாறாயிற்று. இதனோடு,
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரிதல் இன்று
என்னும் குறளிற்கு ஆசிரியர் பரிமேலழகர் வகுத்த விளக்கவுரையில் தொன்று தொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்பதனைக் ஒப்பு நோக்கி இரண்டற்குமுள்ள உறவுணர்ந்து மகிழ்க.
இனி இவ்வுலகங்களை பற்றிய விரிவான விளக்கம் சக்கரவாளக் கோட்ட முரைத்தகாதையில் தரப்படும். அவற்றைக் ஆண்டுக் கண்டு கொள்க.
இப் பெருங்காப்பியத்தின் உள்ளுறுப்புக்கள்
32-44: இருபால் ................... உய்த்ததும்
இதன் பொருள் : இருபால பெயரிய உருகெழு மூதூர்- இவ்வாற்றால் சம்பாபதி என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் இருவகையான பெயர்களைக் கொண்டு பகைவர்க்கு அச்சத்தைத் தரும் பழைய ஊராகிய அந்த நகரத்தே; ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்கு பெருவிழா அறைந்ததும்-ஒப்பற்ற நூறு வேள்விகளைச் செய்து முடித்தமையாலே அமரருக்கு அரசனாம் பேறு பெற்ற ஆற்றலுடைய இந்திரனுக்குப் பெரிய விழா வெடுத்தற் பொருட்டு மன்னவன் பணிமேற் கொண்டு தொல்குடி வள்ளுவன் முரசறைந்த தூஉம்; அலர் பெருகியது என சிதைந்த நெஞ்சின் சித்திராபதிதான் வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும் -மாதவி துறவு பூண்டமையால் தங்குடிக்குப் பழி பெரியதாயிற்றென்று கருதியதனாற் கலங்கிய நெஞ்சதையுடைய சித்திராபதி வயந்தமாலை என்னும் கூனியை ஏவி அப்பழியை மாதவிக்கு அறிவுறுத்திய தூஉம்; மணிமேகலை தான் மாமலர் கொய்ய அணிமலர்  பூம்பொழில் அகவயின் சென்றதும் மாதவியால் துறவிற் புகுத்தப்பட்ட மணிமேகலை புத்தருக்கு அணிவித்தற்குச் சிறந்த புதுமலர் கொய்துவரும் பொருட்டு அழகிய மலர்வனத்தினுள்ளே சென்று புகுந்ததூஉம்; ஆங்கு அப் பூம்பொழில் அரசிளங் குமரனைப் பாங்கிற் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் - அப்பொழுது அம் மலர்வனத்தினூடே மன்னிளங்குமரனாகிய உதயகுமரன் தன் பக்கலிலே வருதலை அவன் தேர் ஒலியாற் கண்டு அம் மணிமேகலை அங்கிருந்த பளிக்கறையினுட் புகுந்து கொண்டதூஉம்; பளிக்கரை புக்க பாவையைக் கண்டவன் - பளிக்கறையின்கட் புகுந்திருந்த மணிமேகலையைப் பளிங்கிணூடே கண்ட அம் மன்னிளங்குமரன்; துளக்குறுநெஞ்சில் துயரொடு போய பின் - காமத்தாலே கலங்கிய நெஞ்சில் நிறைந்த துன்பத்தோடே அம் மலர்வனத்தைவிட்டுச் சென்ற பின்னர்; மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்-மணிமேகலா தெய்வம் அங்கு மக்களுருக் கொண்டு வந்து தோன்றிய தூஉம்; மணிமேகலையை மணி பல்லவத்து உய்த்ததும்-அத்தெய்வம் மணிமேகலையை உறங்கும்பொழுது எடுத்துப் போய் மணி பல்லவம் என்னும் சிறியதொரு தீவின்கண் வைத்ததும் என்க;
(விளக்கம்) இருபாற் பெயரிய: சம்பாபதி, காவிரிப்பூம்பட்டினம் என்னும் இரண்டு பெயர்களையுடைய.நூறு பெருவேள்வி செய்து முடித்தவனே இந்திரனாம் தகுதிபெறுவான் ஆதலின் அவ் வரலாறு தோன்ற வாளாது இந்திரன் என்னாது ஒருநூறு வேள்வி உரவோன் என்றார். இந்திரவிழா ஆண்டுதோறும் சித்திரா பருவத்திலே தொடங்கி இருபத்தெட்டு நாள் நிகழ்த்தப்பட்டுக் கடலாட்டோடு நிறைவுறும் ஒருமாபெருந்திருவிழா ஆகலின் பெருவிழா என்றார். அலர்- பழி.அஃதாவது வேத்தியல்.......உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய ஒரு நாடகக்கணிகை நற்றவம் புரிந்தது நாணுடைத்து என மாக்கள் தூற்றும் பழிச்சொல். சித்திராபதி-மாதவியின் தாய். வயந்தமாலை-மாதவியின் பணிமகள். மணிமேகலை - கோவலனுக்கும் மாதவிக்கும் தோன்றியவள். இக் காப்பியத்தலைவியுமாவாள்.அரசிளங்குமரன் - உதயகுமரன். பளிங்கு அறை - வேற்றுமைப் புணர்ச்சியால் மென்றொடர் வன்றொடராயிற்று. பளிங்கினாலியன்ற அறை என்க. பாவை: மணிமேகலை. மணிமேகலா தெய்வம் - இந்திரன் பணிமேற்கொண்டு மணிபல்லவம் முதலிய சில தீவுகளைக் காக்குமொரு தெய்வம்; கோவலனுடைய குலத்தெய்வமுமாம். இத் தெய்வம் தன் முன்னோன் ஒருவனைக் கடலில் மூழ்கி இறைவாவண்ணம் செய்த உதவியைக் கருதி அத் தெய்வத்தின் நினைவுக்குறியாகவே தன் மகட்குக் கோவலன் மணிமேகலை என்னும் பெயரும் சூட்டினான்.
இதுவுமது
45-50 : உவவன..............உணர்ந்ததும்
(இதன் பொருள்) உவவனம் மருங்கின் அவ் உரை சால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்- அம் மலர்வனத்தின் பக்கத்திலே அப் புகழ் மிக்க மணிமேகலா தெய்வம் மீண்டும் வந்து ஆங்குத் தூங்கு துயிலெய்திக் கிடந்த சுதமதி என்பவளைத் துயிலுணர்த்தியதும்; ஆங்கு அத் தீவகத்து ஆயிழை நல்லாள் தான் துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும் - மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாவண்ணம் எடுத்துப் போய்த் துயிலக்கிடத்தி வந்த அவ்விடத்தே (அஃதாவது-அம் மணிபல்லவத் தீவின் கண்ணே) அழகிய அணிகலன் அணிதற்கியன்ற பெண்ணின் நல்லாளாகிய மணிமேகலை வழி நாட் காலையிலே தானே துயிலுணர்ந்து தனக்கு நேர்ந்த தென்னென்றறியாமையாலே மாபெருந் துன்பத்தாலே வருந்தியதும் உழந்தோள் ஆங்கண் பான்மையின் ஓர் ஒளி மணி பீடிகை பழம் பிறப்பு எல்லாம் உணர்ந்ததும் - அவ்வாறு துன்ப மெய்திய அம் மணிமேகலை ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையால் அவ்விடத்தேயிருந்த ஓர் ஒளியுடைய மணிகளாலியன்ற புத்த பீடிகையைக் கண்டு தொழுதமையால் தன் பழம் பிறப்பும் அதன் கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுமாகிய அரிய செய்திகள் பலவற்றையும் தானே உணர்ந்து கொண்டதும் என்க.
(விளக்கம்) உவவனம் -மக்களால் உண்டாக்கப்பட்ட பூம்பொழில். உரை - புகழ். சுதமதி - மாதவியின் தோழியும் மணிமேகலைக்குறுதுணையாய்ச் சென்றவளும் ஆகிய ஒரு பார்ப்பனப் பெண் துறவி (பிக்குணி).துயிலெடுப்பியது-துயிலினின்றும் எழுப்பியது. அத்தீவகம் - முன் கூறப்பட்ட மணிபல்லவம். உழந்தோள் : பெயர்.பீடிகை - புத்தபீடிகை.பான்மையின் -ஏது நிகழ்ச்சி எதிர்ந்தமையின்; ஊழ்வினை நிகழ்ச்சியை ஏது நிகழ்ச்சி என்பது பௌத்தருடைய வழக்கு.
இதுவுமது
51-58: உணர்ந்தோள்.........உரைத்ததும்
(இதன் பொருள்) உணர்ந்தோள முன்னர் உயர்தெய்வம் தோன்றி மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் - பழம் பிறப்புணர்ந்த அம் மணிமேகலையின் முன்னர்ச் உயரிய பண்புடைய மணிமேகலா தெய்வம் தானே எளிவந்து தோன்றி மகளே! நின்நெஞ்சத்துத் துன்பங்களை யெல்லாம் ஒழித்திடுக என ஆறுதல் கூறி, அரிய மூன்று மறை மொழிகளை அறிவுறுத்ததும்; தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக் கொடிக்கு அளித்ததும் - தீவ திலகை என்னும் மற்றொரு தெய்வம் மணிமேகலை முனனர்த் தோன்றிச் செவ்விதாக மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரம் ஒன்றனை இளங்கொடி போல்வளாகிய அம் மணிமேகலைக்கு வழங்கியதும் பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு யாப்புறும் மாதவத்து அறவணர்த் தொழுததும் - அமுதசுரபியைப் பெற்று மறைமொழியினுதவியாலே அம் மணிமேகலை வான் வழியாகப் பறந்துவந்து புகார் நகரம் எய்தித் தன் தாயராகிய மாதவியோடும் சுதமதியோடும் கூடிக் கட்டமைந்த பெரிய தவவொழுக்கத்தையுடைய அறவணவடிகளைக் கண்டு வணங்கியதும்; நறுமலர்க் கோதைக்கு - நறிய மலர் மாலையணியத் தகுந்த இளமையுடைய மணிமேகலைக்கு; அறவணவடிகள் ஆபுத்திரன் திறம் நன்கனம் உரைத்ததும் - அறவணவடிகளார் அமுதசுபிக்குரியவனான ஆபுத்திரன் என்பானுடைய வரலாறும் பண்புமாகிய செய்திகளை யெல்லாம் விளக்கமாக விளம்பியதும் என்க.
(விளக்கம்) உணர்ந்தோள் :பெயர்; மணிமேகலை. தீய தெய்வமும் உளவாகலின் அவற்றினீக்குதற்கு உயர் தெய்வம் என்றார்; அஃதாவது - மணிமேகலா தெய்வம். கவல் - துன்பம். மந்திரம் - மறைமொழி. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு வேற்றுரு வெய்தவும்; வானத்தே இயங்கவும் பசிபிணியின்றி இருத்தற்கும் வேண்டிய ஆற்றல் தரும் மூன்று அரிய மந்திரங்களை செவியறிவுறுத்தது; இவற்றை ஈந்தமையால் இனி நீ மணங்கவல வேண்டா என்று ஆறுதலும் கூறிற்று என்க. செவ்வனம்-செம்மையாக. திருவுருவங்கொண்டு தோன்றி என்க. வேண்டுவார் வேண்டும் உண்டியை வேண்டுமளவும் சுரந்தளிக்கும் மிகக் பெரிய சிறப்புடைய பாத்திரம் என்றவாறு பெருமை ஈண்டு அதன் அளவின் மேல் நில்லாது சிறப்பின் மேனின்றது. மடக்கொடி என்றது அவளது இளமையை விதந்தபடியாம். பைந்தொடி : மணிமேகலை. சுதமதி மணிமேகலையின் பால் தாய்மை யன்புடையாளாதல் பற்றி அவளையும் உளப்படுத்துத் தாயர் எனப் பன்மைச் சொல்லாற் கூறினர். பிறாண்டும் இங்கனமே கூறுதல் காணலாம். யாப்புறுமாதவம் - பொறிபுலன்களைக் கட்டியொழுகும் பெரிய தவம். ஆபுத்திரன்- இக் காப்பிய வுறுப்பினுள் சிறந்தோர் உறுப்பாக அமைத்தவன்; அமுதசுரபியைத் தெய்வத்திடம் முதன்முதலாகப் பெற்றவன்; தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை; ஆவால் பாலூட்டி வளர்க்கப்பட்டவன். நன்கனம் -நன்கு; நன்றாக.
இதுவுமது
59-68 : அங்கை ...........சென்றதும்
(இதன் பொருள்) அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் - தன் அகங்கையி லேந்திய அமுதசுரபி என்னும் பிச்சை பாத்திரத்தை ஆபுத்திரனுடைய அருளுடைமை கண்டிரங்கிய கலைமகளாகிய சிந்தாதேவி என்னும் தெய்வம் அவன்பால் கொடுத்த திறமும்; மற்று அப்பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும் -மேலும் அவ்வமுத சுரபியை மணிமேகலை அங்கையிலிலேந்தி முதன்முதலாக அதன்கண் பிச்சை ஏற்கும் பொருட்டு அகன்ற புகார் நகரத்துத் தெருவிலே எய்தியதும்; பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையின் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் -அவ்வாறு பிச்சைபுக்க மணிமேகலை ஏந்திய அம்மாபெரும் பாத்திரத்தின்கண் முதன் முதலாகச் சிறந்த கற்புடைய மகளாகிய ஆதிரை நல்லாள் பலரும் பகுத்துண்டற் கியன்ற உணவினைப் பிச்சையாகப் பெய்ததும்; காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும் - அழகுமிக்க மணிமேகலை அமுத சுரபியில் ஏற்ற பிச்சை யுணவினை ஊட்டிக் காயசண்டிகை என்பவளை நீண்ட காலமாகப் பற்றி வருத்திய ஆனைத்தீ என்னும் வயிற்று நோயை தீர்த்துப் பின்னர் உலகவறவி என்னும் அம்பலத்தை எய்தியதும்; ஆயிழை அம்பலம் அடைந்தாள் என்று கொங்கு அலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும் - மணிமேகலை உலக வறவி என்னும் அம்பலம் எய்திய செய்தி கேட்டுத்தேனோடு மலர்ந்த நறிய ஆத்திமாலை சூடிய சோழமன்னன் மகனாகிய உதயகுமரன் அவளைத் கைப்பற்றும் கருத்தோடு அவ்வம்பலத்திற்குச் சென்றதும்; என்க
(விளக்கம்) அங்கை - அகங்கை; உள்ளங்கை. அகம் என்னும் நிலைமொழி ஈற்றுயிர்மெய்கெட்டது சிந்தாதேவி - தலைமகள். நகரமாதலின் பெருந்தெரு என்றார். பத்தினிப் பெண்டிர் என்றது ஆதிரையை; பத்தினி ஆகலின் ஒருவரைக் கூறும் உயிர்மொழியாகக் கருதிப் பன்மைக்கிளவியால் கூறினர். பன்னையொருமை மயக்கம் எனினுமாம். பாத்தூண் - பகுத்துண்ணும் உணவு. காரிகை - அழகு அம்பலம் - உலக அறவி என்னும் பெயருடையதாய்ப் புகார் நகரத்திருந்ததொரு பொதுவிடம். ஆங்கு இரவலர் வந்து குழுமுவர் ஆதலின் அவர்க்கூட்டும் பொருட்டு அங்கு மணிமேகலை எய்தினன் என்பது கருத்து. அயிழை: மணிமேகலை அவள் உலகவறவி புகுந்தாள் என்று கேள்வியுற்று அரசிளங்குமரன் அவளைக் கைப்பற்றி வருங் கருத்துடன் அம்பலம் அடைந்தான் என்பது கருத்து.
இதுவமது
69-78: அம்பலம்............ வண்ணமும்
(இதன் பொருள்.) அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவாகி - தன்னைப் பெரிதும் கரமுற்று அவ்வம்பலம் புக்க அக் கோமகன் முன் அவன் தன்னைக் அறியா வண்ணம் வஞ்சித்துப் போகும் பொருட்டு விச்சாதரன் மனைவியாகிய காயசண்டிகையின் உருவத்தை மேற்கொண்டு அவனைப் போக்கியபின் அவ் வுருவத்தோடு அந்நகரத்துச் சிறைக் கோட்டம் புகுந்து ஆங்குப் பசியால் வருந்துவோர் துயர் களையு மாற்றால்; மறஞ்செய் வேலோன் வான் சிறைக் கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய வண்ணமும் - வீரப்போர் செய்யும் வேலேந்திய சோழ மன்னனுடைய உயர்ந்த சிறைக் கோட்டத்தையே அறக் கோட்டமாக மாற்றிய செய்கையும்; விஞ்சைக் காஞ்சனன் காய சண்டிகை என - மணிமேகலை காயசண்டிகை யுருவத்தோடு அம்பலத்திலே வந்த அரசிளங்குமரனோடு சொல்லாட்டம் நிகழத்தியபொழுது அவளைக் காணவந்தவனாகிய விச்சாதரன் அவளைத் தன் மனைவியாகிய காய சண்டிகை என்றே கருதி அவள் ஒழுக்கத்தை ஐயுற்று அவ்வையந் தீர்க்குக் கரந்துறைபவன்: ஆயிலை தன்னை அகலாது அணுகலும் -அரசன் மகன் மணிமேகலையை காணும் வேட்கையால் அறங்கேட்டும் அகலாதவனாய் மீண்டும் அங்கு வந்தமையால்: வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனைக் மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் - வஞ்சத்தாலே கரந்திருந்த அவ்விச்சாதரன் மனைவன் மகனாகிய உதயகுமரனை வலிமை மிக்க வாளால் எறிந்து போனதும்; மை அரி யுண்கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும் - கரிய நிறமும் செவ்வரியும் உடையவாய்க் கண்டோர் நெஞ்சத்தைப் பருகும் பேரெழில் படைத்த கண்ணையுடைய மணிமேகலை அரசன் மகன் இறந்தமையா லெய்திய துன்பத்தைப் பெறாமல் வழிந்திப் பின்னர்க் கந்திற் பாவையாகிய தெய்வம் வருவதுரைத்துத் தேற்றத் தெளிந்த தன்மையும்; என்க.
(விளக்கம்) வஞ்சத்தாலே விஞ்சையான் மகள் வடிவாகி என்க. விஞ்சையன் - விச்சாதரன். மகள் - மனைவி. மனைவியை மகள் என்னும் வழக்கு இந்நூல் பிறாண்டும் காணப்படும். கதைத்தொடர்பு நன்கு விளங்குதற் பொருட்டு ஈண்டைக்கு வேண்டுவன சில சொற்கள் தந்துரைக்கப்பட்டன. இவ்வாறு தந்துரைப்பன இசையெச்சத்தாற் கொள்ளப்படுவன. யாண்டும் இதனைக் அறிந்து கடைப்பிடிக்க. வேளோன் : சோழமன்னன் மக்களைச் சிறைசெய்தலும் வேந்தற்கு வடுவன்று அவனுக்கியன்ற கடமை என்பார் மறஞ்செய் வேலோன் என மன்னனை விதந்தார். கோட்டம் இரண்டும் ஈண்டுக் கட்டிடம் என்னுந் துணையாம். வாளில் தப்புதல் - வாளாலெறிந்து கொல்லுதல். மை அரி உண் கண் என்னும் பன்மொழித் தொடர் மணிமேகலை என்னும் துணையாய் நின்றது. அவன் என்றதும் உதயக்குமரனை. மணிமேகலை பற்பல பழம் பிறப்புக்களிலே அவன் மனைவியாகி அவனோடு வாழ்ந்தவளாதலின் பழம் பிறப்பணபுணர்ச்கியுடைய மணிமேகலை அவன் இறந்தமை பொறாது வருந்தனள் என்பது கருத்து. தெய்வம் - கந்திற் பாவையினிற்குந் தெய்வம். கிளவி - சொல்.
இதுவுமது
79-88: அறைகழல்........ கேட்டதும்
(இதன் பொருள்) அறை கழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய் கென்றதும் - ஆரவாரிக்கும் வீரக்கழலணிந்த சோழ மன்னன் மணிமேகலையைச் சிறையிடச் செய்ததும்; சிறைவீடு செய்ததும் - பின்னர்ச் சிறைவீடு செய்வித்ததும்; ஆய்வளை நறுமலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு ஆபுத்திரன் நாடு அடைந்ததும் - சிறை வீடு பெற்ற மணிமேகலை நறிய மலர் மாலையணிந்த கோப்பெருந் தேவிக்கு நல்லனவாகிய அறங்கள் பல வற்றையும் அறிவுறுத்து அப்பால் ஆபுத்திரன் மறுமையில் மன்னவனாகி அருளாட்சி செய்கின்ற சாவக நாட்டிற்குச் சென்றதும் அணியிழை ஆங்கு அவன் தன்னோடு போகி ஓங்கிய மணி பல்லவத்திடை உற்றதும் - மணிமேகலை அந் நாட்டரசனாகிய ஆபுத்திரனோடு சென்று உயர்ந்த மணி பல்லவத் தீவினகட் புகுந்ததும்; உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியின் பொருந்திய வண்ணமும் - மணி பல்லவத்தை எய்திய மணிமேகலை அவ்வாசனை அவனாட்டிற்குப் போக்கி அப்பால் அத் தீவினின்றும் ஓர் உயரிய தவவொழுக்க முடைய துறவோன் வடிவத்தை மேற்கொண்டு அழகிய கொடியுயர்த்தப் பட்ட வஞ்சிமா நகரத்தே வந்துற்ற செய்தியும்; நவை அறுநன் பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும் அவ் வஞ்சிமா நகரத்திலே அம்மாதவன் வடிவத்தோடே சென்று, பிறப்புப்பிணி அறுதற் கியன்ற நன்மை தருகின்ற நுமது தத்து வங்களைக் கூறுங்கோள்! என்று பல்வேறு சமயத் தலைவர்களையும் தனித்தனியே கண்டு வினவி, அவ்வவர் சமயங்கட்கியன்ற தத்துவங்களை யெல்லாம் கேட்டறிந்ததும் என்க.
(விளக்கம்) அறை கழல்: வினைத்தொகை. சிறைவீடு. சிறைக்கோட்டத்தினின்றும் விடுதலை செய்தல். நறுமலர்க் கோதை: கோப் பெருந்தேவி. ஆய்வளை: மணிமேகலை. அவன் நாடு - ஆபுத்திரன் மறுபிறப்பில் அரசனாகி ஆட்சி செய்கின்ற நாடு. அஃதாவது சாவகநாடு. பொற்கொடி வஞ்சி - அழகிய கொடியுயர்த்திய வஞ்சிநகரம் என்க. வெளிபடை. நவை - பிறவிப்பணி. நன்பொருள் - தத்துவம். சமயக் கணக்கர் - சமய முதல்வர்.
இதுவுமது
89-98: ஆங்க ......வைத்தான்
(இதன் பொருள்) ஆங்கு அத்தாயரோடு அறவணர்த் தேர்ந்து - அவ் விடத்திலே தன் தாயராகிய மாதவியையும் சுதமதியையும் நல்லாசிரியராகிய அறவணடிகளாரையும் கண்டு அடிவணங்க விரும்பியும்; பூங்கொடிகச்சி மாநகர் புக்கதும் - மணிமேகலை ஆங்குத் துறவியாயிருந்த மாசாத்துவான் வேண்டுகோட் கிணங்கியும் வானத்தே இயங்கிக் காஞ்சிமா நகரத்தே சென்று புகுந்ததும்; புக்கவன் கொண்ட பொய்யுருக் களைந்து - காஞ்சியிற் புகுத்தவள் தான் மேற்கொண்டிருந்த மாதவன் வடிவத்தைத் துறந்து; மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் - தான் காணவிரும்பிய தாயாரும் அடிகளாரும் தன்னைத்தேடி வந்தவரைக் கண்டு மகிழ்ந்து அவரடிகளிலே வீழ்ந்து வணங்கிய வண்ணமும்; தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு - தவக்கோலம் பூண்டு அறவணவடிகளார்பால் பௌத்த தருமங்களைக் கேட்டுணர்ந்தும்; பாவை பவத்திறம் அறுகென நோற்றதும்; மணிமேகலை தருமங் கேட்ட பின்னர்ப் பிறப்பிற்குக் காரணமாக பழவினைத் தொகுத்து துவரங் கெடுவதாக என்னும் குறிக்கோளோடு பொருளகளின்பால் பற்றறுதற்குரிய நெறியில் அதற்கியன்ற நோன்புகளைக் கடைபிடித் தொழுகியதும் ஆகிய இவற்றை யெல்லாம்; இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப - இளங்கோ வடிகளார் என்னும் சேரமுனிவன் தலைமை வீற்றிருந்தருளி விரும்பிக் கேளாநிற்ப; வளம்கெழு கூல வாணிகன் சாத்தன் - வளம் பொருந்திய மதுரைக் கூல வாணிகனாகிய தண்டமிழ்ப் புலவன்; ஆறு ஐம் பாட்டினுள் -முப்பது காதைகளிலே அரங்கேற்றி; மணிமேகலை துறவு மாவண் தமிழ்த் திறம் அறிய வைத்தனன்.- மணிமேகலை துறவு என்னும் இத் தொடர்நிலைச்செய்யுளா லியன்ற மணிமேகலை துறவு என்னும் பெயரையுடைய இவ் வனப்பியல் நூல் வாயிலாக எழுத்து வளமும் சொல்வளமும் பொருள்வளமும் ஆகிய வளம் பலவும் பெற்றுச் சிறந்துள்ளமையாலே பெருவளமுடைய மொழியாக விளங்குகின்ற நந்தமிழ் மொழியானது சிறப்பினை உலகுள்ள துணையும் மக்கள் அறியும்படி மாபெருங் காப்பியமாக இயற்றி நிறுவினன் என்பதாம்.
(விளக்கம்) பொய்யுரு -வேற்றுருவம். இளங்கோ வேந்தன் என்றது இளங்கோவடிகளாரை. இளங்கோ என்ற பின்னரும் வேந்தன் என்று வேண்டாது கூறியது, அவர் தாமும் சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து அந்தம் இல் அரசாள் வேந்தாக இருத்தலைக் கருதிக் காணுமாறு தாம் வேண்டிய தொன்றனை முடித்தற் பொருட்டென்க. கண்ணகித் தெய்வமே அவரை இளங்கோ வேந்தனாகவே கண்டு பாராட்டியதனை(சிலப், வர - 180 -3 சிலப்பதிகாரத்தில் காண்க.
மணிமேகலை துறவு என்பதே இக் காப்பியத்திற்கு ஆசிரியரிட்ட பெயர் என்பதனை இப் பதிகத்தால் அறியலாம். இவ்வாறே நீலகேசித் தெருட்டு என அதன் ஆசிரியர் இட்ட பெயர் இறுதிச்சொல் மறைந்து நீலகேசி என்று வழங்கிவருவதும் நினைக.
கூலவாணிகன் சாத்தனார் கொள்கை பௌத்த தருமத்தை மக்கள் அறியவைத்தலே யாகும். ஆயினும் அவருடைய கருத்து நிறைவேறிற்றில்லை. மற்று மணிமேகலையால் எய்திய பயன், மானண் தமிழ்த் திறமே யாய் முடிந்தது. அத் தமிழ்த்திறம் பற்றியே இந்நூல் தமிழகத்தே தமிழ் மொழி நிற்கும் அளவும் நின்று நிலவும் ஆற்றில் பெற்றுத் திகழ்கின்றது என்பதில் ஏதும் ஐயமில்லை.
இப் பாயிரம்(பதிகம்) பிறராற் செய்யப்பட்டது. சாத்தன் என ஆசிரியரைப் படர்க்கையாகப் பேசுவதே இதற்குச் சான்று. இனி இப் பாயிரத்தில் ஆக்கியோன் பெயர் சாத்தன் என்பதனாலும் வண்டமிழ்த்திறம் என்றதனால் அதற்கியன்ற எல்லையே இதற்கும் எல்லை என்பதும் போந்தன. முதனூலாகலின் வழிகூற வேண்டாவாயிற்று. மணிமேகலை துறவு என்பதும் நூற்பெயர். காலம் களம் காரணம் என்னும் பாயிரவுறுப் புக்கள் பலவும் அமைந்துள்ளமையும் அறிக.
பதிகம் முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



1. விழாவறை காதை

முதலாவது விழாவறைந்த பாட்டு
அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ஒருங்கு கூடி அந் நகரத்திலே வாண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இந்திர விழா என்னும் பெருவிழா எடுத்தற்குரிய சித்திரைத் திங்களின் முழுமதி நாள் அணுகி வருதலானே அவ் விழாவிற்குக் கால் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதனை நகரமக்கட்கு அறிவிக்கும் படி வழக்கம் போல விழா முரசம்  அறையும் முதுகுடிப் பிறந்த வள்ளுவனுக்கு அறிவிப்பு, அது கேட்ட வள்ளுவன்றாணும் வச்சிரக் கோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற மணங்கெழு முரசத்தைக் கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றித் தானும் ஏறியிருந்து அவ் விழா நிகழப் போவதனையும் அதற்குக் கால் கோள் செய்யும் நாளையும் விழாவின் பொருட்டு நகரத் தெருக்கள் தோறும் முரசறைந்த செய்தியைக் கூறும் பாட்டு என்றவாறு. இக் காதையினால் இற்றைக் கிர்கடாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழகத்து மாந்தர் விழா நிகழ்த்தும் முறையும், அவர் ஒப்பற்ற நாகரிகமும் இனிது விளங்கும்.
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்  01-010
மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்  01-020
மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை  01-030
முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க! என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்  01-040
பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்  01-050
பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்  01-060
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்  01-072
இந்திர விழாவின் வரலாறு
1-10: உலகம்..........ஆகலில்
(இதன் பொருள்) உலகம் திரியா ஓங்கு உயிர் விழுச்சீர் பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய - சான்றோர் சென்ற நெறிநின்றொழுகுதலில் ஒரு பொழுதும் பிறழா தொழுகுதல் காரணமாகப் பெரிதும் உயர்ந்துள்ள தனது மாபெரும் சிறப்பினைப் பிறநாட்டிலுள்ள சான்றோர் பலரும் புகழாநிற்றற் கிடமான பழைய ஊராகிய புகார் நகரத்தின் தெய்வத் தன்மை காலந்தோறும் மேம்பட்டு வளர்தற் பொருட்டாக; ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்ப - வானுற உயர்ந்து புகழானும் உயர்ந்த பொதிய மலையின்கண் இறைவன் ஏவலாலே எழுந்தருளியிருக்கும் செய்தற்கரிய தவங்களைச் செய்துயர்ந்த அகத்தியமுனிவன் பணிப்ப: தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் - வானத்திலே இயங்குகின்ற மதில்களை அழித்த வீர வலைய மணிந்த சோழ மன்னன் ஒருவன்; விண்ணவர்தலைவனை வணங்கி முன்னின்று - தனக்கு நன்றிக் கடன்பட்டுள்ள அமரர்கோமனை வணங்கி அவன் முன்னிலையிலேயே நின்று; மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் - நிலவுலகத்திலமைந்த என்னுடைய தலை நகரத்தினுள்; மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என - விண்ணவரும் கரந்துரு வெய்தி வந்து கரண்டற்கு விரும்புதற்குக் காரணமான பெரிய தொரு திருவிழாவை நினைக்கு யாங்கள் எடுத்தலை மேற்கொண்ட இருபத்தெட்டு நாளினும் நீ அந்நகரத்தே அவ்விழாவினை ஏற்றுக் கொண்டு உறுதியாக அங்கேயே இனிதாக வீற்றிருந்தருளல் வேண்டும் இது யான் நின்பால் பெற விரும்பும் வரம் என்று வேண்டா நிற்ப; அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது - தேவர் கோமனும் மறாஅது அவ்வாறே தந்த வரத்திற்கு; கவராக் கேள்வியோர் - ஐயுறாமைக்குக் காரணமான மெய்ந்நூற் கேள்வியினையுடைய சான்றோர்; கடவார் ஆதலின் - மாறுபட்டொழுகாராதலின் என்க.
(விளக்கம்) உலகம் என்றது சான்றோருடைய ஒழுக்கத்தை,ஓங்குயர் விழுச்சீர், என்று ஒருபொருட்பன்மொழி பலவற்றை அடைபுணர்த்தோதினர். புகார் நகரத்துப் புகழ் சாலவும் உயர்ந்த புகழ்; தனக்குத் தானே நிகரான புகழ் என்றுணர்த்தற்கு. அப் புகழ் அத்தகையதாதலை புறவிற்காகத் துலாம் புக்கதும் ஆன்கன்றிற்கு மகனை ஆழியின் மடித்ததும் தூங்கெயில் எறிந்து அமரரைப் புரந்ததும் ஆகிய இன்னோரன்ன அந்நாட்டு மன்னர் செயற்கரிய செயல்களாலறிக. நாகநீள் நகரொடும் போகநீள் புகழ்மன்னும் புகார் என இளங்கோவடிகளாரும் (மங்கல) பாராட்டுதலறிக. பலர் அயல் நாட்டுச் சான்றோர் பலரும் என்க என்னை புகழத்தகுந்தவர் அவரேயாகலான். பண்பு - தெய்வப்பண்பு. அருந்தவன் - அகத்தியன். அகத்தியன் சோழனுடைய மூதூர் மேம்படுதற் பொருட்டுச் செம்பியன்பால் நீ இவ்வரத்தைக் கேள் என்றுரைத்தமையாலே செம்பியன் இந்திரன்பால் நீ விழாக்கோள் எடுத்த நாலேழ் நாளினும் என் பதியில் நன்கினிதுறைதல் வேண்டும் என வரங் கேட்டான்; அவனும் செய்ந்நன்றிக் கடன்பட்டிருத்தலான் அவ் வரத்தை மறாது நேர்ந்தனன் என்றவாறு. வானத்தே இயங்கு மதிலினுள் இருந்து அரக்கர் வானவர் ஊரெல்லாம் புகுந்து அவர்க்குக் கேடு விளைத்தனர். அம் மதிலை ஒரு சோழன் அழித்து அமரரைப் பாதுகாத்தனன். இவ்வாற்றல் நன்றிக் கடன்பட்ட இந்திரன் நீ விரும்பும் வரங்கேள் என்ன அச்சோழன் அகத்தியர் அறிவுறுத்தபடி வரம்கேட்டனன். அவனும் நேர்ந்தனன் என்க.
இவ் வீரச் செயல்பற்றி அச்சோழமன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான்.
விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி என்று பாட்டிடைவைத்த குறிப்பினாலே வரங்கேட்டது வானவருலகத்திலே என்பதும் பெற்றாம். இச் சோழன் அசுரர் மதிலை அழித்து அமரரைக் காத்தமையால் அடுதல் அவர்க்கு ஒரு புகழாகாது என மாறோக்கத்து நப்பசலையார் நவில்வர்.
ஒன்னு ருட்கும் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்த நின்னூங்க ணோர்நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே
என்பது அந் நல்லிசைப்புலவர் மணிமொழி.
மேலோர் - அமரர்.
விழாக்குழுவினர்
11-18: மெய்த்திறம் .......குழீஇ
(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு என்னும் இத்திறம் தம் தம் இயல்பில் காட்டும் - மெய்ந்நூல் வழக்கும் உலகியல் வழக்கும் நன்மைதருகின்ற துணி பொருளும் வீடுபேறும் ஆகிய இவையிற்றைச் சொல்லான் மட்டும் அறிவுறுத்துதலே யன்றித் தம் தம் ஒழுக்கத்தானும் நன்கு தெரியக் காட்டும் சிறப்புடைய; சமயக் கணக்கரும் - பல்வேறு சமயக் குரவர்களும்; தம் துறை போகிய அமயக் கணக்கரும் தமக்குரிய கணிதத்துறையில் கற்று மிகுந்த புகழுடைய காலக் கணிவரும்; அகலாராகி கரந்துரு வெய்திய கடவுளாளரும் - தமக்குரிய விண்ணவர் பதியினும் இந்நகரம் சிறந்ததென்று கருதித் தம்முருவம் கரந்து மக்களுருவிற் றிரிகின்ற தேவர்களும்; பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் - வணிகத் தொழிலின் பொருட்டு உலகத்துள்ள நாடெல்லாம் சென்று மீண்டு வந்து ஒருங்கு கூடியிருக்கின்ற பல்வேறு மொழி பேசுகின்ற வேற்று நாட்டு வணிகத்தலைவரும்; ஐம்பெருங் குழுவும் - அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவினுள்ளாரும்; எண் பேராயமும் - கரணத்தியலவர் முதலிய எண் பேராயத்தாரும் ஆகிய கோத் தொழிலாளரும்; வந்து ஒருங்கு குழீஇ -ஊரம்பலத்தே வந்து ஒருங்கே கூடியிருந்து என்க.
(விளக்கம்) மெய்திறம் - மெய்ந்நூல் வழக்கு; வழக்கு -உலகியல் வழக்கு; நன்பொருள் - தத்துவங்கள். வீடு - வீட்டினியல்பு. இத்திறம் தம்தம் இயல்பில் காட்டுதலாவது இவற்றின் வழி நின்று ஒழுக்கத்கதைத் தம்தம்மிடத்தேயே பிறர் அறிந்து கொள்ளுமாறு ஒழுகுமாற்றால் பிறரை அறியச்செய்யும் சிறப்புடையோராதல். எனவே சொல்லுதல் யார்க்கும் எளிதாதலால் இவர் தம்தம் சமயத்தைத் தமது ஒழுக்கத்தாலேயே அறிவுறுத்துபவர் என அவர் பெருமையை விதந்தோதிய படியாம்.
சோழநாடு நீர் நாடாகலின் மருதத்திணைத் தெய்வத்தின் பெயரால் பெருவிழா எடுப்பதாயிற்று; ஆயினும் இவ்விழா நிகழும் போது அந்நகரத்தமைந்த பல்வேறு சமயஞ்சார்ந்த கடவுளர்க்கும் அவ்வவ் முறைப்படியே விழா நிகழ்த்தும் வழக்கம் உண்மையின் விழா வெடுத்தற்குப் பல்வேறு சமயக் கணக்கர்களும் வந்து குழுமினர் என்றுணர்க. இதனால் அக்காலத்தே சமயப் பூசலில்லாமை நன்குணரப்படும். இரப்போரும் ஈவாரும் இல்லாமையால் தமக்குரிய விண்ணுலக வாழ்க்கையை வெறுத்துக் கடவுளாளரும் பூம்புகாரில் கரந்துருவெய்தி மக்களூடே மக்களாய் வாழ்த்தினர் என்க. அவர்க்கே விழா வெடுக்கப் போவதால் அவரும் அக்குழுவினுள் கலந்து கொண்டனர் என்க.
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கோத்தொழிலாளராவார். அவருள் ஐம்பெருங்குழு அமைச்சரும் புரோகிதரும் சேனாபதியரும் தூதுவரும் ஒற்றரும் என்னும் இவர்கள் குழு. எண்பேராயம் - கரணத்தியலவர் கருமவிதிகள் கனகச்சுற்றம் கடைகாப்பாளர் நகரமாந்தர் நளிபடைத்தலைவர் யானைவீரர் இவுளி மறவர் இனையர் என்க.
இப்பகுதியால் பண்டைக்காலத்தே ஊர்ப்பொதுக் காரியங்களை நகர் வாழ் மக்களும் சான்றோரும் அரசியற் சுற்றத்தாறும் பிறநாட்டு வணிகத்தலைவரும் ஒருங்குகுழுமியே எண்ணித்துணியும் வழக்கமிருந்தமை அறியப்படும். இஃது அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். குழீஇ -கூடி.
விழாக்கோள் மறப்பின் விளையுந் தீமைகள்
18-26: வான்பதி........கொள்கென
(இதன் பொருள்) விழாக் கோள் மறப்பின் நம் தலை நகரத்தே இந்திர விழா வெடுத்தலை நம்மனோர் மறந்தொழியின்; வான்பதி தன்னுள் கொற்றவன் துயரம் விடுத்த பூதம் - பண்டு அமராபதியிடத்தே நம் வேந்தனாகிய முசுகுந்தனுக்கு அசுரரால் நேர்ந்த துன்பத்தைத் துடைத்த நாளங்கடியிடத்துப் பூதமானது மடித்த செவ்வாய் வல் எயிறு இலங்க இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் - சினத்தாலே மடித்த சிவந்த தன் வாயின் வலிய பற்கள் திகழும்படி இடிபோன்ற தன் குரலாலே முழக்கஞ் செய்து மாந்தருக்கு துன்பஞ் செய்யாநிற்கும்; தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் - அதுவுமின்றித் தன் கைக் கயிற்றினாலே நமது பழைய இந்நகரத்திலுள்ள கயமாக்களைக் கட்டிக்கொடுபோய்ப் புடைத்து விழுங்குமாற்றால் நன்மை செய்திடும் சதுக்கப் பூதமும் அத் தொழிலில் பொருந்தாது நல்லோருக்கும் இடும்பை செய்யும்; மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் ஆயிரம் கண்ணோன் விழாக் கால் கொள்கென - ஆதலின் இப்பேருலகத்து பன்னரெல்லாம் வந்து கூடுதற்குக் காரணமான இத்திரவிழாவிற்குக் கால் கோள் செய்க என்று முடிவு செய்யாநிற்ப என்க.
(விளக்கம்) வான்பதி - வானநாட்டுத் தலைநகரம், அமராபதி. கொற்றவன் - முசுகுந்தன் என்னும் சோழமன்னன். இவன் இந்திரனுக்கு உற்றழியுதவச் சென்று அமராபதியைக் காத்துநின்ற பொழுது அசுரர் இருட்கணையால் அவன் கண்ணை மறைத்தபொழுது அவ்விடுக்கணை ஒரு பூதம் போக்கியது. அப்பூதம் இந்திரனால் ஏவப்பட்டுப் புகார் நகரத்தே நாளங்காடியிடத்தே இருந்து அந்நகரத்தைக் காவல் செய்துவந்தது என,(சிலப் -6: 13) இச்செய்தி கூறப்பட்டுளது. புடைத்துணும் பூதம் - சதுக்கப்பூதம். இதனியல்பினை தவமறைந் தொழுதும் தன்மையி லாளர் அவமறைந் தொழுகும் அலவைப்பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்தணும் பூத சதுக்கமும் எனவரும் சிலப்பதிகாரத்தானு மறிக. (5: 128-36).
ஞாலத்துள்ள அரசர் முதலாக அனைவரும் வந்தீண்டும் விழா என்க. ஆயிரங்கண்ணோன்- இந்திரன். கொள்க என்று முடிவுசெய்ய என்க.
இனி இந்திரவிழாவை மறந்து கைவிடத்தகுந்த சூழ்நிலை அந்நகரத் திருந்தமையால் இங்ஙனம் கூடி முடிவுசெய்தல் வேண்டிற்று. என்னை கோவலன் அந் நகரத்தை நீங்கியதற்கே அந்நகரத்து மாந்தர் இராமன் வனம் போன நாள் அயோத்தி மாந்தர் அவலமுற்றாற்போல அவல முற்றனர் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது. இதனை
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும்   (சிலப்-95-9)
எனவரும் கோசிகமாணி கூற்றாலறிக. அப்பாலும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த நிகழ்ச்சிகளும் அதுகேட்டு மாசாத்துவானும் மாநாய்கனும் துறவு பூண்டமையும் இருவர் மனைவிமாரும் இறந்தமையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மாதவி துறவு பூண்டமையும் அம்மாநகரத்திற்குப் பேரிழவாகத் தோன்றியிருத்தல் கூடும் என்பதும், இக் காரணத்தால் அவர் விழா வெடுத்தற்கண் ஊக்கமின்றி இருத்தல் கூடும் என்பதும் ஈண்டு நுண்ணுணர்வாற் கண்டு கொள்ளல் கூடும் அன்றோ. இது விழாக்கோள் மறப்பின் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் போந்த பொருளாம். எனவே விழாக்கொள்ளாது விடலாம். விட்டால் இன்னின்ன இன்னல் உண்டாகும் ஆதலால் விழாவெடுத்தலே நன்று என்று அக்குழுவினர் முடிவு செய்தபடியாம். ஈண்டு இக்குறிப்புப் பொருள் கொள்ளாக்காலை இப்பகுதி வேண்டா கூறலாய் முடியும் என்க.
வள்ளுவன் விழாவறையத் தொடங்குதல்
27-34: வச்சிரக்...........ஆகுக
(இதன் பொருள்) வச்சிரக் கோட்டத்து மணங் கெழு முரசம்- வச்சிரக் கோட்டத்திலே முரசு கட்டிலில் வைக்கப்பட்டு நாள் தோறும் வழிபாடு செய்துவருதலாலே நறுமணங் கமழாநின்ற விழா முரசினை; கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி - கச்சை கட்டிய அரச யானையின் பிடரிடத்தே ஏற்றிவைத்து; ஏற்றுரிபோர்த்த இடி உறுமுழக்கின் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை முரசு கடிப்பு இடும் முதுகுடிப் பிறந்தோன் - தன்னோடு ஒத்த ஆனேற்றினோடு பொருது வென்ற இளையஆனேற்றினது தோலை உரித்துப் போர்த்துக் கட்டப்பட்டதும் இடிபோன்று முழங்கும் முழக்கத்தையுடையதும் கூற்றுவினைத் தான் முழங்குமிடத்திற்கு அழைப்பதும் பகைவர் குருதியைக் காணும் வேட்கையையுடைதுமாகிய வீரமுரசத்தைக் குறுந்தடியால் முழக்கும் உரிமை பூண்ட பழைய குடியிற் பிறந்த வள்ளுவன் தானும் ஏறியிருந்து. திருவிழைமூதூர் வாழ்க என்று ஏத்தி திருமகள் எப்பொழுதும் விரும்பி வீற்றிருததற்குக் காரணமான பூம்புகார் நகரம் நீடுழி வாழ்க என்று முதன் முதலாக நகரத்தை வாழ்த்திப் பின்னர்; வானம் மும்மாரி பொழிக மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக - வானம் திங்கள் தோறும் மும்முறை மழை பொழிவதாக என்றும் மன்னன் கோள்கள் நிலைதிரியாமல் நன்னெறியில் இயங்குதற்குக் காரணமான செங்கோன்மை உடையான் ஆகுக என்றும் வாழ்த்திப் பின்னர் விழாவறிவுறுப்பவன்; என்க.
(விளக்கம்) விழாமுரசம் எப்பொழுதும் வச்சிரக்கோட்டத்தில் முரசு கட்டிலில் வைக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் நறுமலர் சூட்டி நறுமணப்புகையும் எடுத்தல் தோன்ற மணங்கெழு முரசும் என்றார் வச்சிரக்.....ஏற்றி என்னும் இந்த இரண்டடிகளும் இளங்கோவடிகளாருடைய மணிமொழியைப் பொன்போல்ப் போற்றித் தண்டமிழாசான் சாத்தனார் ஈண்டுப் பொதிந்துவைத்துள்ளனர். (சிலப்- 5:141-2) வச்சிரக்கோட்டம் -இந்திரனுடைய வச்சிரப்படை நிற்குங்கோயில். கச்சை - யானையின் கீழ்வயிற்றிற் கட்டும் கயிறு. பிடர்த்தலை என்புழித்தலை. ஏழாவதன் சொல்லுருபு.
வீரமுரசத்திற்கு வீரப்பண்புமிக்க ஆனேற்றின் வளங்கெழுமிய தோலை மயிர்சீவாது போர்த்தல் ஒரு மரபு; இதனை ஏறிரண்டுடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த......முரசம் என்பதனானும் (புரநா-288) உணர்க. முழக்கினாலே கூற்றினைத் தன்னிடத்திற்கு வருமாறு அழைக்கும் முரசு எனினுமாம். குருதிவெள்ளத்தைக் காணும் வேட்கை என்க. மன்னனுடைய வீரமுரசத்தை முழக்கும் உரிமை பெறுதல் வள்ளுவர்க்கு ஒரு பேறு. வழிவழியாக அம்முரசம் முழக்கும் உரிமையுடையோன் என்பார் முதுகுடிப்பிறந்தோன் என்றார்.
விழாச் சிறப்பு
35-42: தீவக.........ஆதலில்
(இதன் பொருள்) தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்- இந் நாவலந் தீவினுள்ள மாந்தர் எல்லாம் பகை பசி பிணி முதலியவற்றால் இடுக்கணுறாமைப் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தியாகிய இப்பெருவிழா நிகழ்த்தா நின்ற இருபத்தெட்டு நாள் முடியும் துணையும்; ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குள நால் வேறு தேவரும் இந்நகரத்திலே இனிது உறைவதாக வரமீந்த இந்திரனோடு அவ்வானுலகத்தே வதிகின்ற நால் வேறு வகைப்பட்ட தேவர்களும்; நலத்தகு சிறப்பின் பால் வேறு தேவரும் - தத்தமக்கே சிறந்துரிமையுடைய பல்வேறு நன்மைகள் காரணமாகப் பல்வேறு பகுதியினராகிய ஏனைய தேவர்களும்; இப்பதிப் படர்ந்து - இந்நகரத்திருத்தலாலுண்டாகும் இன்பத்தை நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள் - இந் நகரத்து மன்னனாயிருந்த கரிகாற் சோழன் வடநாட்டரசரைப் போரில் வென்று புகழ் பெறக் கருதி வடநாட்டின் மேல் சென்ற நாளிலே; இந் நகர் போல்வது ஓரியல்பினது ஆகி - இப் பூம்புகார் நகரம் வறிதாய்க்  கிடந்ததொரு தன்மையுடையதாய்; பொன்னகர் வறிதா போதுவர் -தாம் வாழுகின்ற பொன்னகரமாகிய அமராபதி நகரம் வறிதாகக் கிடக்கவிட்டு இப் புகார் நகரத்திற்கு வந்திடுவர் என்பது; தொல்நிலை உணர்த்தோர் துணி பொருள் ஆதலில் - பண்டும் பண்டும் இத் திருவிழாக் காலத்துத் தன்மையைக் கூர்ந்துணர்ந்த சான்றோர் தெளிந்ததோருண்மை யாதலாலே (என்றான்) என்க.
(விளக்கம்) தீவகம் - நாவலந்தீவு. இத் தீவகத் தெய்வத்தின் பெயரால் படைப்புக் காலத்திலேயே சம்பாபதி என்னும் நகரம் படைக்கப் பட்டமையான் அதன்கண் நிகழ்த்தும் சாந்தி இத் தீவக முழுமைக்கும் உரியதாம் என்பார் தீவகச் சாந்தி என்றார். ஆயிரங் கண்ணோன் அப் பெருவிழா நிகழ்தரு நாலேழ் நாளும் அங்கு வந்து இனிதிருப்பதாக வரந்தந்தமையால் அங்கு வரும் கடப்பாடுடையான் ஆதலின் அவன் வரவு கூறாமலே அமையு மாகலின் ஏனைய தேவர் வரவை உடனிழகழ்ச்சி ஒடு உருபு கொடுத்தோதினன், நால் வேறு தேவர் என்றது, வசுக்களும் கதிரவரும் உருத்திரரும் மருத்துவருமாய் நால்வகைப்பட்ட தேவர் என்றவாறு.
பால் வேறு தேவர் என்றது பதினெண் வகைப்பட்ட தேவர்களை. படர்ந்து - நினைந்து கரிகால்வளவன்  நீங்கிய நாள் என்றது - கரிகாற் சோழன் வடநாட்டரசரை வென்று வாகை சூடக் கருதி நால்வேறு படைகளோடும் புகார் நகரத்தினின்றும் வடதிசையிற் சென்று விட்டமையால் புகார் நகரம் பொலிவற்று வறிதாய்க் கிடந்த அந்த நாளில் போல என்றவாறு. இந்திரன் முதலியோர் வந்துவிட்டமையால் வறிதே கிடக்கும் பொன்னகரத்திற் குவமையாதல் வேண்டி இங்ஙனம் கூறினர். இவ் வரலாற்றினை இருநில மருங்கின்.......அந்நாள் எனவரும் சிலப்பதிகாரத்திற் காண்க (5: 86-94) தொன்னிலை - பண்டு இப் பெருவிழாவிற்கு அத் தேவர் அவ்வாறு வந்த நிலைமை
வள்ளுவன் நகர் அணி செய்யுமாறு அறிவித்தல்
1. விழாவறை காதை
(முதலாவது விழாவறைந்த பாட்டு)
அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ஒருங்கு கூடி அந் நகரத்திலே வாண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இந்திர விழா என்னும் பெருவிழா எடுத்தற்குரிய சித்திரைத் திங்களின் முழுமதி நாள் அணுகி வருதலானே அவ் விழாவிற்குக் கால் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதனை நகரமக்கட்கு அறிவிக்கும் படி வழக்கம் போல விழா முரசம்  அறையும் முதுகுடிப் பிறந்த வள்ளுவனுக்கு அறிவிப்பு, அது கேட்ட வள்ளுவன்றாணும் வச்சிரக் கோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற மணங்கெழு முரசத்தைக் கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றித் தானும் ஏறியிருந்து அவ் விழா நிகழப் போவதனையும் அதற்குக் கால் கோள் செய்யும் நாளையும் விழாவின் பொருட்டு நகரத் தெருக்கள் தோறும் முரசறைந்த செய்தியைக் கூறும் பாட்டு என்றவாறு. இக் காதையினால் இற்றைக் கிர்கடாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழகத்து மாந்தர் விழா நிகழ்த்தும் முறையும், அவர் ஒப்பற்ற நாகரிகமும் இனிது விளங்கும்.

உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்  01-010
மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்  01-020
மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை  01-030
முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க! என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்  01-040
பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்  01-050
பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்  01-060
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்  01-072

விழாவறை காதை
உரை
இந்திர விழாவின் வரலாறு
1-10: உலகம்..........ஆகலில்
(இதன் பொருள்) உலகம் திரியா ஓங்கு உயிர் விழுச்சீர் பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய - சான்றோர் சென்ற நெறிநின்றொழுகுதலில் ஒரு பொழுதும் பிறழா தொழுகுதல் காரணமாகப் பெரிதும் உயர்ந்துள்ள தனது மாபெரும் சிறப்பினைப் பிறநாட்டிலுள்ள சான்றோர் பலரும் புகழாநிற்றற் கிடமான பழைய ஊராகிய புகார் நகரத்தின் தெய்வத் தன்மை காலந்தோறும் மேம்பட்டு வளர்தற் பொருட்டாக; ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்ப - வானுற உயர்ந்து புகழானும் உயர்ந்த பொதிய மலையின்கண் இறைவன் ஏவலாலே எழுந்தருளியிருக்கும் செய்தற்கரிய தவங்களைச் செய்துயர்ந்த அகத்தியமுனிவன் பணிப்ப: தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் - வானத்திலே இயங்குகின்ற மதில்களை அழித்த வீர வலைய மணிந்த சோழ மன்னன் ஒருவன்; விண்ணவர்தலைவனை வணங்கி முன்னின்று - தனக்கு நன்றிக் கடன்பட்டுள்ள அமரர்கோமனை வணங்கி அவன் முன்னிலையிலேயே நின்று; மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் - நிலவுலகத்திலமைந்த என்னுடைய தலை நகரத்தினுள்; மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என - விண்ணவரும் கரந்துரு வெய்தி வந்து கரண்டற்கு விரும்புதற்குக் காரணமான பெரிய தொரு திருவிழாவை நினைக்கு யாங்கள் எடுத்தலை மேற்கொண்ட இருபத்தெட்டு நாளினும் நீ அந்நகரத்தே அவ்விழாவினை ஏற்றுக் கொண்டு உறுதியாக அங்கேயே இனிதாக வீற்றிருந்தருளல் வேண்டும் இது யான் நின்பால் பெற விரும்பும் வரம் என்று வேண்டா நிற்ப; அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது - தேவர் கோமனும் மறாஅது அவ்வாறே தந்த வரத்திற்கு; கவராக் கேள்வியோர் - ஐயுறாமைக்குக் காரணமான மெய்ந்நூற் கேள்வியினையுடைய சான்றோர்; கடவார் ஆதலின் - மாறுபட்டொழுகாராதலின் என்க.
(விளக்கம்) உலகம் என்றது சான்றோருடைய ஒழுக்கத்தை,ஓங்குயர் விழுச்சீர், என்று ஒருபொருட்பன்மொழி பலவற்றை அடைபுணர்த்தோதினர். புகார் நகரத்துப் புகழ் சாலவும் உயர்ந்த புகழ்; தனக்குத் தானே நிகரான புகழ் என்றுணர்த்தற்கு. அப் புகழ் அத்தகையதாதலை புறவிற்காகத் துலாம் புக்கதும் ஆன்கன்றிற்கு மகனை ஆழியின் மடித்ததும் தூங்கெயில் எறிந்து அமரரைப் புரந்ததும் ஆகிய இன்னோரன்ன அந்நாட்டு மன்னர் செயற்கரிய செயல்களாலறிக. நாகநீள் நகரொடும் போகநீள் புகழ்மன்னும் புகார் என இளங்கோவடிகளாரும் (மங்கல) பாராட்டுதலறிக. பலர் அயல் நாட்டுச் சான்றோர் பலரும் என்க என்னை புகழத்தகுந்தவர் அவரேயாகலான். பண்பு - தெய்வப்பண்பு. அருந்தவன் - அகத்தியன். அகத்தியன் சோழனுடைய மூதூர் மேம்படுதற் பொருட்டுச் செம்பியன்பால் நீ இவ்வரத்தைக் கேள் என்றுரைத்தமையாலே செம்பியன் இந்திரன்பால் நீ விழாக்கோள் எடுத்த நாலேழ் நாளினும் என் பதியில் நன்கினிதுறைதல் வேண்டும் என வரங் கேட்டான்; அவனும் செய்ந்நன்றிக் கடன்பட்டிருத்தலான் அவ் வரத்தை மறாது நேர்ந்தனன் என்றவாறு. வானத்தே இயங்கு மதிலினுள் இருந்து அரக்கர் வானவர் ஊரெல்லாம் புகுந்து அவர்க்குக் கேடு விளைத்தனர். அம் மதிலை ஒரு சோழன் அழித்து அமரரைப் பாதுகாத்தனன். இவ்வாற்றல் நன்றிக் கடன்பட்ட இந்திரன் நீ விரும்பும் வரங்கேள் என்ன அச்சோழன் அகத்தியர் அறிவுறுத்தபடி வரம்கேட்டனன். அவனும் நேர்ந்தனன் என்க.
இவ் வீரச் செயல்பற்றி அச்சோழமன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான்.
விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி என்று பாட்டிடைவைத்த குறிப்பினாலே வரங்கேட்டது வானவருலகத்திலே என்பதும் பெற்றாம். இச் சோழன் அசுரர் மதிலை அழித்து அமரரைக் காத்தமையால் அடுதல் அவர்க்கு ஒரு புகழாகாது என மாறோக்கத்து நப்பசலையார் நவில்வர்.
ஒன்னு ருட்கும் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்த நின்னூங்க ணோர்நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே
என்பது அந் நல்லிசைப்புலவர் மணிமொழி.
மேலோர் - அமரர்.
விழாக்குழுவினர்
11-18: மெய்த்திறம் .......குழீஇ
(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு என்னும் இத்திறம் தம் தம் இயல்பில் காட்டும் - மெய்ந்நூல் வழக்கும் உலகியல் வழக்கும் நன்மைதருகின்ற துணி பொருளும் வீடுபேறும் ஆகிய இவையிற்றைச் சொல்லான் மட்டும் அறிவுறுத்துதலே யன்றித் தம் தம் ஒழுக்கத்தானும் நன்கு தெரியக் காட்டும் சிறப்புடைய; சமயக் கணக்கரும் - பல்வேறு சமயக் குரவர்களும்; தம் துறை போகிய அமயக் கணக்கரும் தமக்குரிய கணிதத்துறையில் கற்று மிகுந்த புகழுடைய காலக் கணிவரும்; அகலாராகி கரந்துரு வெய்திய கடவுளாளரும் - தமக்குரிய விண்ணவர் பதியினும் இந்நகரம் சிறந்ததென்று கருதித் தம்முருவம் கரந்து மக்களுருவிற் றிரிகின்ற தேவர்களும்; பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் - வணிகத் தொழிலின் பொருட்டு உலகத்துள்ள நாடெல்லாம் சென்று மீண்டு வந்து ஒருங்கு கூடியிருக்கின்ற பல்வேறு மொழி பேசுகின்ற வேற்று நாட்டு வணிகத்தலைவரும்; ஐம்பெருங் குழுவும் - அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவினுள்ளாரும்; எண் பேராயமும் - கரணத்தியலவர் முதலிய எண் பேராயத்தாரும் ஆகிய கோத் தொழிலாளரும்; வந்து ஒருங்கு குழீஇ -ஊரம்பலத்தே வந்து ஒருங்கே கூடியிருந்து என்க.
(விளக்கம்) மெய்திறம் - மெய்ந்நூல் வழக்கு; வழக்கு -உலகியல் வழக்கு; நன்பொருள் - தத்துவங்கள். வீடு - வீட்டினியல்பு. இத்திறம் தம்தம் இயல்பில் காட்டுதலாவது இவற்றின் வழி நின்று ஒழுக்கத்கதைத் தம்தம்மிடத்தேயே பிறர் அறிந்து கொள்ளுமாறு ஒழுகுமாற்றால் பிறரை அறியச்செய்யும் சிறப்புடையோராதல். எனவே சொல்லுதல் யார்க்கும் எளிதாதலால் இவர் தம்தம் சமயத்தைத் தமது ஒழுக்கத்தாலேயே அறிவுறுத்துபவர் என அவர் பெருமையை விதந்தோதிய படியாம்.
சோழநாடு நீர் நாடாகலின் மருதத்திணைத் தெய்வத்தின் பெயரால் பெருவிழா எடுப்பதாயிற்று; ஆயினும் இவ்விழா நிகழும் போது அந்நகரத்தமைந்த பல்வேறு சமயஞ்சார்ந்த கடவுளர்க்கும் அவ்வவ் முறைப்படியே விழா நிகழ்த்தும் வழக்கம் உண்மையின் விழா வெடுத்தற்குப் பல்வேறு சமயக் கணக்கர்களும் வந்து குழுமினர் என்றுணர்க. இதனால் அக்காலத்தே சமயப் பூசலில்லாமை நன்குணரப்படும். இரப்போரும் ஈவாரும் இல்லாமையால் தமக்குரிய விண்ணுலக வாழ்க்கையை வெறுத்துக் கடவுளாளரும் பூம்புகாரில் கரந்துருவெய்தி மக்களூடே மக்களாய் வாழ்த்தினர் என்க. அவர்க்கே விழா வெடுக்கப் போவதால் அவரும் அக்குழுவினுள் கலந்து கொண்டனர் என்க.
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கோத்தொழிலாளராவார். அவருள் ஐம்பெருங்குழு அமைச்சரும் புரோகிதரும் சேனாபதியரும் தூதுவரும் ஒற்றரும் என்னும் இவர்கள் குழு. எண்பேராயம் - கரணத்தியலவர் கருமவிதிகள் கனகச்சுற்றம் கடைகாப்பாளர் நகரமாந்தர் நளிபடைத்தலைவர் யானைவீரர் இவுளி மறவர் இனையர் என்க.
இப்பகுதியால் பண்டைக்காலத்தே ஊர்ப்பொதுக் காரியங்களை நகர் வாழ் மக்களும் சான்றோரும் அரசியற் சுற்றத்தாறும் பிறநாட்டு வணிகத்தலைவரும் ஒருங்குகுழுமியே எண்ணித்துணியும் வழக்கமிருந்தமை அறியப்படும். இஃது அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். குழீஇ -கூடி.
விழாக்கோள் மறப்பின் விளையுந் தீமைகள்
18-26: வான்பதி........கொள்கென
(இதன் பொருள்) விழாக் கோள் மறப்பின் நம் தலை நகரத்தே இந்திர விழா வெடுத்தலை நம்மனோர் மறந்தொழியின்; வான்பதி தன்னுள் கொற்றவன் துயரம் விடுத்த பூதம் - பண்டு அமராபதியிடத்தே நம் வேந்தனாகிய முசுகுந்தனுக்கு அசுரரால் நேர்ந்த துன்பத்தைத் துடைத்த நாளங்கடியிடத்துப் பூதமானது மடித்த செவ்வாய் வல் எயிறு இலங்க இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் - சினத்தாலே மடித்த சிவந்த தன் வாயின் வலிய பற்கள் திகழும்படி இடிபோன்ற தன் குரலாலே முழக்கஞ் செய்து மாந்தருக்கு துன்பஞ் செய்யாநிற்கும்; தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் - அதுவுமின்றித் தன் கைக் கயிற்றினாலே நமது பழைய இந்நகரத்திலுள்ள கயமாக்களைக் கட்டிக்கொடுபோய்ப் புடைத்து விழுங்குமாற்றால் நன்மை செய்திடும் சதுக்கப் பூதமும் அத் தொழிலில் பொருந்தாது நல்லோருக்கும் இடும்பை செய்யும்; மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் ஆயிரம் கண்ணோன் விழாக் கால் கொள்கென - ஆதலின் இப்பேருலகத்து பன்னரெல்லாம் வந்து கூடுதற்குக் காரணமான இத்திரவிழாவிற்குக் கால் கோள் செய்க என்று முடிவு செய்யாநிற்ப என்க.
(விளக்கம்) வான்பதி - வானநாட்டுத் தலைநகரம், அமராபதி. கொற்றவன் - முசுகுந்தன் என்னும் சோழமன்னன். இவன் இந்திரனுக்கு உற்றழியுதவச் சென்று அமராபதியைக் காத்துநின்ற பொழுது அசுரர் இருட்கணையால் அவன் கண்ணை மறைத்தபொழுது அவ்விடுக்கணை ஒரு பூதம் போக்கியது. அப்பூதம் இந்திரனால் ஏவப்பட்டுப் புகார் நகரத்தே நாளங்காடியிடத்தே இருந்து அந்நகரத்தைக் காவல் செய்துவந்தது என,(சிலப் -6: 13) இச்செய்தி கூறப்பட்டுளது. புடைத்துணும் பூதம் - சதுக்கப்பூதம். இதனியல்பினை தவமறைந் தொழுதும் தன்மையி லாளர் அவமறைந் தொழுகும் அலவைப்பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்தணும் பூத சதுக்கமும் எனவரும் சிலப்பதிகாரத்தானு மறிக. (5: 128-36).
ஞாலத்துள்ள அரசர் முதலாக அனைவரும் வந்தீண்டும் விழா என்க. ஆயிரங்கண்ணோன்- இந்திரன். கொள்க என்று முடிவுசெய்ய என்க.
இனி இந்திரவிழாவை மறந்து கைவிடத்தகுந்த சூழ்நிலை அந்நகரத் திருந்தமையால் இங்ஙனம் கூடி முடிவுசெய்தல் வேண்டிற்று. என்னை கோவலன் அந் நகரத்தை நீங்கியதற்கே அந்நகரத்து மாந்தர் இராமன் வனம் போன நாள் அயோத்தி மாந்தர் அவலமுற்றாற்போல அவல முற்றனர் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது. இதனை
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும்   (சிலப்-95-9)
எனவரும் கோசிகமாணி கூற்றாலறிக. அப்பாலும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த நிகழ்ச்சிகளும் அதுகேட்டு மாசாத்துவானும் மாநாய்கனும் துறவு பூண்டமையும் இருவர் மனைவிமாரும் இறந்தமையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மாதவி துறவு பூண்டமையும் அம்மாநகரத்திற்குப் பேரிழவாகத் தோன்றியிருத்தல் கூடும் என்பதும், இக் காரணத்தால் அவர் விழா வெடுத்தற்கண் ஊக்கமின்றி இருத்தல் கூடும் என்பதும் ஈண்டு நுண்ணுணர்வாற் கண்டு கொள்ளல் கூடும் அன்றோ. இது விழாக்கோள் மறப்பின் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் போந்த பொருளாம். எனவே விழாக்கொள்ளாது விடலாம். விட்டால் இன்னின்ன இன்னல் உண்டாகும் ஆதலால் விழாவெடுத்தலே நன்று என்று அக்குழுவினர் முடிவு செய்தபடியாம். ஈண்டு இக்குறிப்புப் பொருள் கொள்ளாக்காலை இப்பகுதி வேண்டா கூறலாய் முடியும் என்க.
வள்ளுவன் விழாவறையத் தொடங்குதல்
27-34: வச்சிரக்...........ஆகுக
(இதன் பொருள்) வச்சிரக் கோட்டத்து மணங் கெழு முரசம்- வச்சிரக் கோட்டத்திலே முரசு கட்டிலில் வைக்கப்பட்டு நாள் தோறும் வழிபாடு செய்துவருதலாலே நறுமணங் கமழாநின்ற விழா முரசினை; கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி - கச்சை கட்டிய அரச யானையின் பிடரிடத்தே ஏற்றிவைத்து; ஏற்றுரிபோர்த்த இடி உறுமுழக்கின் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை முரசு கடிப்பு இடும் முதுகுடிப் பிறந்தோன் - தன்னோடு ஒத்த ஆனேற்றினோடு பொருது வென்ற இளையஆனேற்றினது தோலை உரித்துப் போர்த்துக் கட்டப்பட்டதும் இடிபோன்று முழங்கும் முழக்கத்தையுடையதும் கூற்றுவினைத் தான் முழங்குமிடத்திற்கு அழைப்பதும் பகைவர் குருதியைக் காணும் வேட்கையையுடைதுமாகிய வீரமுரசத்தைக் குறுந்தடியால் முழக்கும் உரிமை பூண்ட பழைய குடியிற் பிறந்த வள்ளுவன் தானும் ஏறியிருந்து. திருவிழைமூதூர் வாழ்க என்று ஏத்தி திருமகள் எப்பொழுதும் விரும்பி வீற்றிருததற்குக் காரணமான பூம்புகார் நகரம் நீடுழி வாழ்க என்று முதன் முதலாக நகரத்தை வாழ்த்திப் பின்னர்; வானம் மும்மாரி பொழிக மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக - வானம் திங்கள் தோறும் மும்முறை மழை பொழிவதாக என்றும் மன்னன் கோள்கள் நிலைதிரியாமல் நன்னெறியில் இயங்குதற்குக் காரணமான செங்கோன்மை உடையான் ஆகுக என்றும் வாழ்த்திப் பின்னர் விழாவறிவுறுப்பவன்; என்க.
(விளக்கம்) விழாமுரசம் எப்பொழுதும் வச்சிரக்கோட்டத்தில் முரசு கட்டிலில் வைக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் நறுமலர் சூட்டி நறுமணப்புகையும் எடுத்தல் தோன்ற மணங்கெழு முரசும் என்றார் வச்சிரக்.....ஏற்றி என்னும் இந்த இரண்டடிகளும் இளங்கோவடிகளாருடைய மணிமொழியைப் பொன்போல்ப் போற்றித் தண்டமிழாசான் சாத்தனார் ஈண்டுப் பொதிந்துவைத்துள்ளனர். (சிலப்- 5:141-2) வச்சிரக்கோட்டம் -இந்திரனுடைய வச்சிரப்படை நிற்குங்கோயில். கச்சை - யானையின் கீழ்வயிற்றிற் கட்டும் கயிறு. பிடர்த்தலை என்புழித்தலை. ஏழாவதன் சொல்லுருபு.
வீரமுரசத்திற்கு வீரப்பண்புமிக்க ஆனேற்றின் வளங்கெழுமிய தோலை மயிர்சீவாது போர்த்தல் ஒரு மரபு; இதனை ஏறிரண்டுடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த......முரசம் என்பதனானும் (புரநா-288) உணர்க. முழக்கினாலே கூற்றினைத் தன்னிடத்திற்கு வருமாறு அழைக்கும் முரசு எனினுமாம். குருதிவெள்ளத்தைக் காணும் வேட்கை என்க. மன்னனுடைய வீரமுரசத்தை முழக்கும் உரிமை பெறுதல் வள்ளுவர்க்கு ஒரு பேறு. வழிவழியாக அம்முரசம் முழக்கும் உரிமையுடையோன் என்பார் முதுகுடிப்பிறந்தோன் என்றார்.
விழாச் சிறப்பு
35-42: தீவக.........ஆதலில்
(இதன் பொருள்) தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்- இந் நாவலந் தீவினுள்ள மாந்தர் எல்லாம் பகை பசி பிணி முதலியவற்றால் இடுக்கணுறாமைப் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தியாகிய இப்பெருவிழா நிகழ்த்தா நின்ற இருபத்தெட்டு நாள் முடியும் துணையும்; ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குள நால் வேறு தேவரும் இந்நகரத்திலே இனிது உறைவதாக வரமீந்த இந்திரனோடு அவ்வானுலகத்தே வதிகின்ற நால் வேறு வகைப்பட்ட தேவர்களும்; நலத்தகு சிறப்பின் பால் வேறு தேவரும் - தத்தமக்கே சிறந்துரிமையுடைய பல்வேறு நன்மைகள் காரணமாகப் பல்வேறு பகுதியினராகிய ஏனைய தேவர்களும்; இப்பதிப் படர்ந்து - இந்நகரத்திருத்தலாலுண்டாகும் இன்பத்தை நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள் - இந் நகரத்து மன்னனாயிருந்த கரிகாற் சோழன் வடநாட்டரசரைப் போரில் வென்று புகழ் பெறக் கருதி வடநாட்டின் மேல் சென்ற நாளிலே; இந் நகர் போல்வது ஓரியல்பினது ஆகி - இப் பூம்புகார் நகரம் வறிதாய்க்  கிடந்ததொரு தன்மையுடையதாய்; பொன்னகர் வறிதா போதுவர் -தாம் வாழுகின்ற பொன்னகரமாகிய அமராபதி நகரம் வறிதாகக் கிடக்கவிட்டு இப் புகார் நகரத்திற்கு வந்திடுவர் என்பது; தொல்நிலை உணர்த்தோர் துணி பொருள் ஆதலில் - பண்டும் பண்டும் இத் திருவிழாக் காலத்துத் தன்மையைக் கூர்ந்துணர்ந்த சான்றோர் தெளிந்ததோருண்மை யாதலாலே (என்றான்) என்க.
(விளக்கம்) தீவகம் - நாவலந்தீவு. இத் தீவகத் தெய்வத்தின் பெயரால் படைப்புக் காலத்திலேயே சம்பாபதி என்னும் நகரம் படைக்கப் பட்டமையான் அதன்கண் நிகழ்த்தும் சாந்தி இத் தீவக முழுமைக்கும் உரியதாம் என்பார் தீவகச் சாந்தி என்றார். ஆயிரங் கண்ணோன் அப் பெருவிழா நிகழ்தரு நாலேழ் நாளும் அங்கு வந்து இனிதிருப்பதாக வரந்தந்தமையால் அங்கு வரும் கடப்பாடுடையான் ஆதலின் அவன் வரவு கூறாமலே அமையு மாகலின் ஏனைய தேவர் வரவை உடனிழகழ்ச்சி ஒடு உருபு கொடுத்தோதினன், நால் வேறு தேவர் என்றது, வசுக்களும் கதிரவரும் உருத்திரரும் மருத்துவருமாய் நால்வகைப்பட்ட தேவர் என்றவாறு.
பால் வேறு தேவர் என்றது பதினெண் வகைப்பட்ட தேவர்களை. படர்ந்து - நினைந்து கரிகால்வளவன்  நீங்கிய நாள் என்றது - கரிகாற் சோழன் வடநாட்டரசரை வென்று வாகை சூடக் கருதி நால்வேறு படைகளோடும் புகார் நகரத்தினின்றும் வடதிசையிற் சென்று விட்டமையால் புகார் நகரம் பொலிவற்று வறிதாய்க் கிடந்த அந்த நாளில் போல என்றவாறு. இந்திரன் முதலியோர் வந்துவிட்டமையால் வறிதே கிடக்கும் பொன்னகரத்திற் குவமையாதல் வேண்டி இங்ஙனம் கூறினர். இவ் வரலாற்றினை இருநில மருங்கின்.......அந்நாள் எனவரும் சிலப்பதிகாரத்திற் காண்க (5: 86-94) தொன்னிலை - பண்டு இப் பெருவிழாவிற்கு அத் தேவர் அவ்வாறு வந்த நிலைமை
வள்ளுவன் நகர் அணி செய்யுமாறு அறிவித்தல்
43-54: தோரண...சேர்த்துமின்
(இதன் பொருள்) தோரண வீதியும் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் - தோரணங்களையுடைய பெருந்தெருக்களிடத்தேயும் குற்றமற்ற அறவோர் கூடும் ஊர்மன்றங்களிடத்தும் நிறை குடங்களையும் பொற்பாலிகைகளையும் பாவை விளக்குகளையும் பலப்பலவாக ஒருங்கே வைத்து அணி செய்யுங்கோள் எனவும்; காய்க்குலைக் கமுகும் வாழையும்  வஞ்சியும் பூங்கொடி வல்லியும் கரும்பும் நடுமின - காய் நிரம்பிய குலைகளோடு கூடிய கமுகுகளையும் வாழைகளையும் வஞ்சிக்கொடிகளையும் அழகிய மலர்க்கொடிகளையும் கரும்புகளையும் நட்டு அணி செய்யுங்கோள்! எனவும் பத்தி வேதிகைக் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு காற்றுமின் - நிரலாகத் தெற்றிகளிலே நிறுத்தப்பட்டுள்ள பசும்பொன்னாற் செய்யப்பட்ட தூண்கள் தோறும் முத்து மாலைகளை நிரல்படத் தூக்கி அணி செய்யுங்கோள் எனவும்; விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்- திருவிழா மிக்கு நிகழ்தற் கிடமான பழைய இந் நகரத்துச் சிறப்பு வீதிகளிடத்தும் சிறப்பு மன்றங்களிடத்து முள்ள பழைய மணலை மாற்றி அவ்விடமெல்லாம் புதிய மணல் கொணர்ந்து அழகாகக் பரப்புங்கோள் எனவும்; கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் கோத்துக் கட்டும் கதலிகைக் கொடிகளையும் மூங்கிற் கோலை ஊன்றி அதன் உச்சியிற் கட்டுதற்குரிய கொடிகளையும் இல்லந்தோறும் மதலை மாடங்களினும் முன்றிலினும் நிரலே உயர்த்துங்கோள்! எனவும் என்க.
(விளக்கம்) தோரண வீதி என்பது தோரணத்தால் அழகு செய்தற்கியன்ற சிறப்பான வீதிகளை. தோரணங் கட்டுதல் கூறாமலே அமையும் ஆதலின் தோரணங் கட்டுமின் என்னாது உடம்படுத்துத் தோரண வீதி என்றான். அல்லது எஞ்ஞான்றும் தோரணம் கட்டப்பட்ட வீதி எனக் கோடலுமாம். நன்மக்கள் குழுமியிருத்தற்குரிய மன்றங்கள் என்பான்தோம் அறு கோட்டி என்றான். தோம் - களவு முதலிய குற்றங்கள் கோட்டி - கூட்டம். கூடுமிடத்தை ஆகுபெயரால் கோட்டி என்றான். பொலம் - பொன். பாவை விளக்கு - படிமம் கையிலேந்திய விளக்கு காய்க் குலையை வாழைக்கும் கூட்டுக. வஞ்சி - பொன்னிறமான ஓர் அழகிய பூங்கொடி. இதனைப் பொற் கொடிப் பெயர் வஞ்சி என வெளிப்படைப் பொருளுக்கு அடைபுணர்த்தலான் அறிக. இதனை ஒரு வகை மரமாகக் கருதுவாரும் உளர்.
பத்தியாக வேதிகையில் நிறுத்தப்பட்ட பொற்றூண். தூணம்- தூண். முத்து மாலைகளையும் அழகாக நாலவிடுதல் வேண்டும் என்பான் முறையொடு நாற்றுமின் என்றான். மூதூரில் விழவு மலிதற் கிடமான வீதியும் மன்றமும் என்றவாறு.
கதலிகைக் கொடிமதலை மாடத்தும் வாயிலில் காழூன்றுவிலோதமும் சேர்த்துமின் என்ற குறிப்பினால் கதலிகைக் கொடி யென்றது நூலிலே கோத்துத் தோரணம் போன்று கட்டப்படும் துகிற் கொடி என்க. காழ் - கோல். விலோதம் என்பது உருவினாற் பெரிய துகிற் கொடி போலும். இதனைக் கோல் உச்சியிற் சேர்த்துயர்த்து நடப்படும் என்பது தெரித்தோதப் பட்டது. வினை வேறுபடுதலால் சேர்த்துமின் எனப்பொது வினையால் அறிவித்தனன்.
மதிலை மாடம் - மாளிகையின் முகப்பிலமைந்த சிறு மாடம்.
இதுவுமது
54-63: நுதல்விழி......அகலுமின்
(இதன் பொருள்) நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக - நெற்றிக் கண்ணையுடைய கடவுள் முதலாக இந்நகரத்திலே வதிகின்ற சதுக்கப்பூதம் ஈறாக வமைந்த தெய்வங்கட்கெல்லாம் தம்முன் வேறு வேறு வகைப்பட்ட விழாக்களையும் வேறு வேறு வகையான செய்தொழில்களையும்; ஆறு அறிமரபின் - செய்யும் நெறியினை அறிந்தவர்கள் அவ்வவற்றிற் கேற்ப நிகழ்த்துங்கோள் எனவும்; தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் - குளிர்ந்த புதுமணல் பரப்பட்ட பந்தரிடத்தும் தங்குதற்கியன்ற பொதியில்களிலும் அறமாகிய நன்மொழியை அறிவுறுத்தற்கு அறிந்த சான்றோர் சென்று சேருங்கோள் எனவும்; ஒட்டிய உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் - யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து தத்தமக்குப் பொருந்திய பொருளைச் சொற்போரில் வென்று நிலை நாட்டும் சமயவாதிகள் ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது விலகிச் செல்லுங்கோள் எனவும் என்க.
(விளக்கம்) நெற்றியில் தோற்றுவித்துக் கொண்டு விழித்த கண்ணையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் என்க. பெருந் தெய்வத்திற்கு சிவபெருமானையும் சிறு தெய்வதிற்குச் சதுக்கப் பூதத்தையும் எடுத்தோதியபடியாம். எனவே, இந்திரனுக்கு எடுக்கும் அவ்விழா நாட்களிடையே அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்க மூண்மை பெற்றாம். இதனை,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்
என்றற் றொடக்க முதலாக
வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்
என்னுந் துணையும் நிகழும் இளங்கோவடிகளார் திருமொழியானும் (5:169-78) அறிக. ஆறு அறி மரபின் அறந்தோர் என்றது- விழா நிகழ்த்தும் நெறியினை அறியும் முறையானே அறிந்தோர் என்றவாறு. நிருத்தம் முதலிய ஆறங்களையு முணர்ந்த முறைமையுடைய அந்தணர் என்பாருமுளர். இவ்வுரை பொருந்தாது. என்னை வேத நெறிப்படாத பாசண்டிகள் தெய்வங்களும் உளவாகலின் என்க. ஈண்டுப் புண்ணிய நல்லுரை அறிவர் பொருந்துமின், என்றதற் கேற்பச் சிலப்பதிகாரத்தினும் திறவோர் உரைக்கும் செயல் சிறந் தொருபால் (5:181) என வருதலும் நினைக. ஒட்டிய - சூளுரைத்த. பட்டி மண்டபம் - சொற்போர் நிகழ்த்தும் முறைமை. பற்றா மாக்கன் - பகைவர். செற்றம் - தீராச் சினம். கலாம்- கலகம்; போர்.
இதுவுமது
64-72: வெண்மணல்........மருங்கென்
(இதன் பொருள்) நன்கு அறிந்தோர் வெள்மணல் குன்றமும் விரிபூஞ்சோலையும் தண்மணல் துருத்தியும் தாழ் பூந்துறைகளும் - நன்மை யறிந்த மாந்தர்களே வெள்ளிய மணற் குன்றுகளிடத்தும் மலர்ந்த பூம்பொழில்களிடத்தும்; குளிர்ந்த மணற்பரப்புக்களையுடைய ஆற்றிடைக் குறைகளிடத்தும் ஆழ்ந்த அழகிய நீர்த்துறைகளிடத்தும் விழாக் காண்டற்கு; தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நால் ஏழ் நாளினும் - தேவர்களும் மக்களும் தம் முள் வேற்றுமை பாராட்டாமல் ஒருங்கே திரிதற்குக் காரணமான விழா நிகழும் இருபத்தெட்டு நாள்களும், எனவும் எடுத்துக் கூறி; ஒளி றுவாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி - விளங்குகின்ற வாட்படை ஏந்திய மறவரும் தேவர்களும் குதிரைகளும் களிற்றியானைகளும் தன்னைச் சூழ்ந்து வருமாறு குறுந்தடியாலே அவ்விழா முரசின் முகத்திலே தாக்கி முழக்கி; பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என - (இறுதியில்) மக்கள் பசிப்பிணியும் உடற்பிணியும் தம்முள் மாறுபட்டுப் பகைக்கின்ற பகைமையும் நீக்கப் பெற்று நாடெங்கணும் மழையும் தென் முதலிய பொருள் வளமும் மிகுவனவாக என்று வாழ்த்தி; அகநகர் மருங்கு அணி விழா அறைந்தனன் - அகநகரத்தும் புறநகரத்தும் அவ்வள்ளுவன் அழகிய இந்திர விழாவை முரசறைந்து அறிவித்தனன்; என்பதாம்.
(விளக்கம்) மணற் குன்றம், பட்டினப் பாக்கத்திலுள்ளவை. துருத்தி, காவிரியின் கண்ணுள்ளவை. துறை என்றது. காவிரியில் நீராடுதுறையும் கடலின்கட் டுறையும் நீர்நிலைகளிற் றுறையும் ஆகிய அனைத்திற்கும் பொது. தேவர் கரந்துரு வெய்தி மக்கட் குழுவினுட் புகுந்து திரிதலின் ஒத்துடன் திரிதரும் என்றார். முரசறையும் வள்ளுவன் தொடக்கத்தினும் முடிவினும் இங்ஙனம் நாடு அரசன் மக்கள் முதலியோரை வாழ்த்துதன் மரபு. பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென எனவரும். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தும் இவ்வாறே நிகழ்தலுமறிக. (சிலப்- 5: 72-3).
இனி இக்காதையை - அருந்தவன் உரைப்ப செம்பியன் வானவர் தலைவனை உறைகென நேர்ந்தது கடவாராதலின் சமயக்கணக்கர் முதலியோர் குழீஇ, கால்கொள்கெனப் பிறந்தோன் ஏற்றி இயம்பி ஏத்தி வாழ்த்தி பொழிக ஆகுக பரப்புமின் நடுமின் நாற்றுமின் மாற்றுமின் பரப்புமின் சேர்த்துமின் செய்யுமின் பொருந்துமின் ஏறுமின் அகலுமின் என அணிவிழா நகரினும் மருங்கினும் அறைந்தனன் என இயைத்திடுக.
விழாவறை காதை முற்றிற்று
(இதன் பொருள்) தோரண வீதியும் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் - தோரணங்களையுடைய பெருந்தெருக்களிடத்தேயும் குற்றமற்ற அறவோர் கூடும் ஊர்மன்றங்களிடத்தும் நிறை குடங்களையும் பொற்பாலிகைகளையும் பாவை விளக்குகளையும் பலப்பலவாக ஒருங்கே வைத்து அணி செய்யுங்கோள் எனவும்; காய்க்குலைக் கமுகும் வாழையும்  வஞ்சியும் பூங்கொடி வல்லியும் கரும்பும் நடுமின - காய் நிரம்பிய குலைகளோடு கூடிய கமுகுகளையும் வாழைகளையும் வஞ்சிக்கொடிகளையும் அழகிய மலர்க்கொடிகளையும் கரும்புகளையும் நட்டு அணி செய்யுங்கோள்! எனவும் பத்தி வேதிகைக் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு காற்றுமின் - நிரலாகத் தெற்றிகளிலே நிறுத்தப்பட்டுள்ள பசும்பொன்னாற் செய்யப்பட்ட தூண்கள் தோறும் முத்து மாலைகளை நிரல்படத் தூக்கி அணி செய்யுங்கோள் எனவும்; விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்- திருவிழா மிக்கு நிகழ்தற் கிடமான பழைய இந் நகரத்துச் சிறப்பு வீதிகளிடத்தும் சிறப்பு மன்றங்களிடத்து முள்ள பழைய மணலை மாற்றி அவ்விடமெல்லாம் புதிய மணல் கொணர்ந்து அழகாகக் பரப்புங்கோள் எனவும்; கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் கோத்துக் கட்டும் கதலிகைக் கொடிகளையும் மூங்கிற் கோலை ஊன்றி அதன் உச்சியிற் கட்டுதற்குரிய கொடிகளையும் இல்லந்தோறும் மதலை மாடங்களினும் முன்றிலினும் நிரலே உயர்த்துங்கோள்! எனவும் என்க.
(விளக்கம்) தோரண வீதி என்பது தோரணத்தால் அழகு செய்தற்கியன்ற சிறப்பான வீதிகளை. தோரணங் கட்டுதல் கூறாமலே அமையும் ஆதலின் தோரணங் கட்டுமின் என்னாது உடம்படுத்துத் தோரண வீதி என்றான். அல்லது எஞ்ஞான்றும் தோரணம் கட்டப்பட்ட வீதி எனக் கோடலுமாம். நன்மக்கள் குழுமியிருத்தற்குரிய மன்றங்கள் என்பான்தோம் அறு கோட்டி என்றான். தோம் - களவு முதலிய குற்றங்கள் கோட்டி - கூட்டம். கூடுமிடத்தை ஆகுபெயரால் கோட்டி என்றான். பொலம் - பொன். பாவை விளக்கு - படிமம் கையிலேந்திய விளக்கு காய்க் குலையை வாழைக்கும் கூட்டுக. வஞ்சி - பொன்னிறமான ஓர் அழகிய பூங்கொடி. இதனைப் பொற் கொடிப் பெயர் வஞ்சி என வெளிப்படைப் பொருளுக்கு அடைபுணர்த்தலான் அறிக. இதனை ஒரு வகை மரமாகக் கருதுவாரும் உளர்.
பத்தியாக வேதிகையில் நிறுத்தப்பட்ட பொற்றூண். தூணம்- தூண். முத்து மாலைகளையும் அழகாக நாலவிடுதல் வேண்டும் என்பான் முறையொடு நாற்றுமின் என்றான். மூதூரில் விழவு மலிதற் கிடமான வீதியும் மன்றமும் என்றவாறு.
கதலிகைக் கொடிமதலை மாடத்தும் வாயிலில் காழூன்றுவிலோதமும் சேர்த்துமின் என்ற குறிப்பினால் கதலிகைக் கொடி யென்றது நூலிலே கோத்துத் தோரணம் போன்று கட்டப்படும் துகிற் கொடி என்க. காழ் - கோல். விலோதம் என்பது உருவினாற் பெரிய துகிற் கொடி போலும். இதனைக் கோல் உச்சியிற் சேர்த்துயர்த்து நடப்படும் என்பது தெரித்தோதப் பட்டது. வினை வேறுபடுதலால் சேர்த்துமின் எனப்பொது வினையால் அறிவித்தனன்.
மதிலை மாடம் - மாளிகையின் முகப்பிலமைந்த சிறு மாடம்.
இதுவுமது
54-63: நுதல்விழி......அகலுமின்
(இதன் பொருள்) நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக - நெற்றிக் கண்ணையுடைய கடவுள் முதலாக இந்நகரத்திலே வதிகின்ற சதுக்கப்பூதம் ஈறாக வமைந்த தெய்வங்கட்கெல்லாம் தம்முன் வேறு வேறு வகைப்பட்ட விழாக்களையும் வேறு வேறு வகையான செய்தொழில்களையும்; ஆறு அறிமரபின் - செய்யும் நெறியினை அறிந்தவர்கள் அவ்வவற்றிற் கேற்ப நிகழ்த்துங்கோள் எனவும்; தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் - குளிர்ந்த புதுமணல் பரப்பட்ட பந்தரிடத்தும் தங்குதற்கியன்ற பொதியில்களிலும் அறமாகிய நன்மொழியை அறிவுறுத்தற்கு அறிந்த சான்றோர் சென்று சேருங்கோள் எனவும்; ஒட்டிய உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் - யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து தத்தமக்குப் பொருந்திய பொருளைச் சொற்போரில் வென்று நிலை நாட்டும் சமயவாதிகள் ஆங்காங்குள்ள பட்டி மண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது விலகிச் செல்லுங்கோள் எனவும் என்க.
(விளக்கம்) நெற்றியில் தோற்றுவித்துக் கொண்டு விழித்த கண்ணையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் என்க. பெருந் தெய்வத்திற்கு சிவபெருமானையும் சிறு தெய்வதிற்குச் சதுக்கப் பூதத்தையும் எடுத்தோதியபடியாம். எனவே, இந்திரனுக்கு எடுக்கும் அவ்விழா நாட்களிடையே அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்க மூண்மை பெற்றாம். இதனை,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்
என்றற் றொடக்க முதலாக
வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்
என்னுந் துணையும் நிகழும் இளங்கோவடிகளார் திருமொழியானும் (5:169-78) அறிக. ஆறு அறி மரபின் அறந்தோர் என்றது- விழா நிகழ்த்தும் நெறியினை அறியும் முறையானே அறிந்தோர் என்றவாறு. நிருத்தம் முதலிய ஆறங்களையு முணர்ந்த முறைமையுடைய அந்தணர் என்பாருமுளர். இவ்வுரை பொருந்தாது. என்னை வேத நெறிப்படாத பாசண்டிகள் தெய்வங்களும் உளவாகலின் என்க. ஈண்டுப் புண்ணிய நல்லுரை அறிவர் பொருந்துமின், என்றதற் கேற்பச் சிலப்பதிகாரத்தினும் திறவோர் உரைக்கும் செயல் சிறந் தொருபால் (5:181) என வருதலும் நினைக. ஒட்டிய - சூளுரைத்த. பட்டி மண்டபம் - சொற்போர் நிகழ்த்தும் முறைமை. பற்றா மாக்கன் - பகைவர். செற்றம் - தீராச் சினம். கலாம்- கலகம்; போர்.
இதுவுமது
64-72: வெண்மணல்........மருங்கென்
(இதன் பொருள்) நன்கு அறிந்தோர் வெள்மணல் குன்றமும் விரிபூஞ்சோலையும் தண்மணல் துருத்தியும் தாழ் பூந்துறைகளும் - நன்மை யறிந்த மாந்தர்களே வெள்ளிய மணற் குன்றுகளிடத்தும் மலர்ந்த பூம்பொழில்களிடத்தும்; குளிர்ந்த மணற் பரப்புக்களையுடைய ஆற்றிடைக் குறைகளிடத்தும் ஆழ்ந்த அழகிய நீர்த்துறைகளிடத்தும் விழாக் காண்டற்கு; தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நால் ஏழ் நாளினும் - தேவர்களும் மக்களும் தம் முள் வேற்றுமை பாராட்டாமல் ஒருங்கே திரிதற்குக் காரணமான விழா நிகழும் இருபத்தெட்டு நாள்களும், எனவும் எடுத்துக் கூறி; ஒளி றுவாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி - விளங்குகின்ற வாட்படை ஏந்திய மறவரும் தேவர்களும் குதிரைகளும் களிற்றியானைகளும் தன்னைச் சூழ்ந்து வருமாறு குறுந்தடியாலே அவ்விழா முரசின் முகத்திலே தாக்கி முழக்கி; பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என - (இறுதியில்) மக்கள் பசிப்பிணியும் உடற்பிணியும் தம்முள் மாறுபட்டுப் பகைக்கின்ற பகைமையும் நீக்கப் பெற்று நாடெங்கணும் மழையும் தென் முதலிய பொருள் வளமும் மிகுவனவாக என்று வாழ்த்தி; அகநகர் மருங்கு அணி விழா அறைந்தனன் - அகநகரத்தும் புறநகரத்தும் அவ்வள்ளுவன் அழகிய இந்திர விழாவை முரசறைந்து அறிவித்தனன்; என்பதாம்.
(விளக்கம்) மணற் குன்றம், பட்டினப் பாக்கத்திலுள்ளவை. துருத்தி, காவிரியின் கண்ணுள்ளவை. துறை என்றது. காவிரியில் நீராடுதுறையும் கடலின்கட் டுறையும் நீர்நிலைகளிற் றுறையும் ஆகிய அனைத்திற்கும் பொது. தேவர் கரந்துரு வெய்தி மக்கட் குழுவினுட் புகுந்து திரிதலின் ஒத்துடன் திரிதரும் என்றார். முரசறையும் வள்ளுவன் தொடக்கத்தினும் முடிவினும் இங்ஙனம் நாடு அரசன் மக்கள் முதலியோரை வாழ்த்துதன் மரபு. பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென எனவரும். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தும் இவ்வாறே நிகழ்தலுமறிக. (சிலப்- 5: 72-3).
இனி இக்காதையை - அருந்தவன் உரைப்ப செம்பியன் வானவர் தலைவனை உறைகென நேர்ந்தது கடவாராதலின் சமயக்கணக்கர் முதலியோர் குழீஇ, கால்கொள்கெனப் பிறந்தோன் ஏற்றி இயம்பி ஏத்தி வாழ்த்தி பொழிக ஆகுக பரப்புமின் நடுமின் நாற்றுமின் மாற்றுமின் பரப்புமின் சேர்த்துமின் செய்யுமின் பொருந்துமின் ஏறுமின் அகலுமின் என அணிவிழா நகரினும் மருங்கினும் அறைந்தனன் என இயைத்திடுக.
விழாவறை காதை முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



2. ஊரலருரைத்த காதை

இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு
அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் நாணுத்தக வுடைத்து என யாண்டும் பழிதூற்றுதல் கேட்ட சித்திராபதி அப் பழி பிறந்தமையை வயந்த மாலையை ஏவி மாதவிக்கு அறிவித்த செய்தியைக் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.
இதன்கண் -விழாவறைந்த வண்ணமே பூம்புகார் நகரம் மக்களால் அணிசெய்யப்பட்டது. உரியநாளிலே  இந்திர விழாவும் தொடங்கி நிகழ்வதாயிற்று. இறந்த யாண்டில் இவ் விழாவிற் கலந்து கொண்டு மக்கட்குக் கிடைத்தற்கரிய கலையின்பம் நல்கிய தன் மகள் மாதவி, கோவலனுக்கும் கண்ணகிக்கும் ஊழ்வினை உருந்து வந்தூட்டிய கொடுந்துயர் கேட்டு மணிமேகலையை வான் துயர் உறுக்கும் கணிகையர் கோலம் காணா தொழிகெனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்தறங் கொண்டமையாலே இவ் விழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் வாராமையாலே சித்திராபதி பெரிதும் வருந்தியவளாய் மாதவியின் தோழியாகிய வயந்த மாலையை அழைத்து நீ மாதவியின்பாற் சென்று இம்மாநகரத்து மக்கள் அவளைப் பற்றித் தூற்றாநின்ற பழிச் சொல்லை எடுத்துக் கூறுக; என்று பணித்தமையும் அத்தோழியும் அவள் துறவுக்குப் பெரிதும் வருந்தியிருந்தமையாலே அவ்வாறே சென்று மாதவியிருந்த தவப் பள்ளியில் மலர் மண்டபத்தே சென்று அவள் வாடிய மேனிகண்டு உளம் வருந்தி அந் நகரத்து மாந்தர் எல்லாம் நாடகக்கலை கற்றுத் துறைபோகிய நீ நற்றவம் புரிந்தது நாணுத் தகவுடைத்து என்று தூற்றும் பண்பில்லாப் பழி மொழியை எடுத்துக் கூறித் தனனோடு வருமாறு அழைத்த செய்தியும்
அதுகேட்ட மாதவி தான் உயிரோடிருந்ததே நாணம் அற்ற செயலாம் என்று வருந்துபவள் பத்தினிப் பெண்டிரியல்பு கூறி அவருள் கண்ணகி தலை சிறந்தமையும் கூறி அவள் மகளாகிய மணிமேகலை இழி தகவுடைய நாடகக் கணிகையாகாள், யானும் இத் துறவினின்று மீண்டு வருவேன் அல்லேன் காண் என்றியம்பி அறவண அடிகளார் தனக்கு அறங்கூறி ஒருவா றுய்வித்தலாலே உயிரோடிருக்கின்றேன். யான் இனி இப் பள்ளியினின்று வருவேனல்லேன் எனக் கூறி விடுப்பதும் வயந்தமாலை கையறவுடையளாய் மீண்டு செல்லுதலும் ஆகிய இச்செய்திகள் கூறப்படும்.
நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை வருக எனக் கூஉய்
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு  02-010
அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!
உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்  02-020
தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த   02-030
ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு
போதல்செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து  02-040
நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்  02-050
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்
ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி   02-060
அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக! என்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன்
மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த  02-070
சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என்  02-075
உரை
1-9: நாவல்........உரையென
(இதன் பொருள்) நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள் - நாவன் மரம் உயர்ந்து நிற்பதனால் நாவல்தீவு எனப் பெயர் பெற்ற மிகவும் பெரிய இத்தீவின்; காவல் தெய்வம் தேவர் கோற்கு எடுத்த தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - முதல் முதலாகச் சம்பாபதி என்னும் காவல் தெய்வமானது பொதுவாக இத்தீவில் வாழ்வோர்க்கு அரக்கர் முதலியோராலுண்டாகும் தீங்கு அகலவும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் உடையராய் இனிது வாழ்தற் பொருட்டும் அமரர்க்கரசனாகிய இந்திரனுக்குச் செய்த பெருவிழா இவ்வாண்டினும் நிகழ்த்தப் பெற்று வருகின்ற நன்மையுடைய நாளிலே; சித்திராபதி மணிமேகலையொடு மாதவி வாராத் தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வா - சித்திராபதி மானவள் மணிமேகலையும் மாதவியும் வந்து கலந்து கொள்ளாமையாலே வேறெவ்வாற்றானும் தணிக்க வொண்ணாத துன்பம் நினைக்குந்தோறும் ஒருகாலைக்கு ஒருகால் பெருகியே வருதலானே ; செல்லல் உற்று இரங்கி -பெரிதும் வருந்தி அவர் திறத்திலே மிகவும் இரக்கமெய்தி; அரிதத்து நெடுங்கண் தன் மகள் தோழி - செவ்வரி படர்ந்த நெடிய கண்ணை யுடைய தன் மகளாகிய மாதவியின் உசாஅத்துணைத் தோழியாகிய; வயந்த மாலையை வருக எனக் கூஉய் - வயந்த மாலை என்பாளைத்  தன்பால் வருக என்று அழைத்து; பயம்கெழு மாநகர் அலர் எடுத்து உரைஎன வயந்தமாலாய் நீ இப்பொழுதே மாதவியின்பாற் சென்று பயன் மிக்க இப்பெரும் நகரத்துள் வாழும் மாந்தர் இடந்தொறும் இடந்தொறும் அவள் திறத்திலே தூற்றுகின்ற பழியை அவள் உளங்கொள்ளுமாற்றால் எடுத்துக் கூறுவாயாக என்று ஏவா நிற்றலாலே; என்க.
(விளக்கம்) காவல் தெய்வம் - சம்பாபதி. தீவகத்தே வாழ்வோரைக் காத்தலே தன் கடமை யாதலின் அவர்கட்குத் தீங்கு வாராமைப் பொருட்டும் நலம் பெருகுதற் பொருட்டும் மருதத்திணைத் தெய்வமாகிய இந்திரனைக் குறித்து முதன் முதலாகத் தொடங்கிய விழா வென்க சோழனாடு மருதவைப்பு மிக்க நாடாதலின் அந்நாட்டுத் தலை நகரத்தில் இவ் விழா வெடுத்தல் பொருத்தமாதலுணர்க.
செய்தருநாள் என்னும் வினைத்தொகை: செய்கின்ற நிகழ்காலங் குறித்து நின்றது. சித்திராபதி, மாதவியின் கலை நல வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட நற்றாய் ஆகலானும் மாதவியின் துறவு காரணமாக மாதவியையும் அவள் மகளாகிய மணிமேகலையையும் அவர் தம் கலைச்செல்வத்தையும் ஒருசேர இழந்தவளாதலானும் அவட்கெய்திய துன்பம் தணியாத் துன்பமாய் தலைத்தலை மேல்வர என்றார். தலைத்தலை என்றது நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் எனக் காலத்தின் மேனின்றது. செல்லல் - துன்பம். மாதவி கண்ணழகில் மிகவும் சிறப்புடையள் ஆதலால் அவள்தன்கண்ணே அவள் நினைவின் முன்னிற்றல் தோன்ற, தத்தரி நெடுங்கண் தன் மகள் என்றார். ஆசிரியர் இளங்கோவடிகளாரும் அவளைக் குறிப்பிடுந்தோறும் மறவாமே மாமலர் நெடுகண் மாதவி என்றே இனிதி னியம்புவர். கூஉய்-கூவி; அழைத்து மாதவி வாராள் என்னும் நினைவால் உரைத்து அழைத்து வருதி என்னாது, உரை என்றொழிந்தாள். அவள் பழியஞ்சும் பண்புடையாள் ஆதலின் வருவதாயின் இது கேட்டுவருதல் கூடும் என்னும் கருத்தினால் அலர் எடுத்துரை என்றாள். தன் துயர முதலிய கூறற்க என்பது குறிப்பு.
வயந்த மாலையின் அன்பு
10-15: வயந்த.........வருந்தி
(இதன் பொருள்) வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய அழிவினன் ஆதலின் - அவ் வயந்தமாலை என்னும் தோழி தானும் மாதவியின்பால் பேரன்பு கொண்டவளாதலின் அவள் மேற்கொண்ட துறவொழுக்கத்திற்குச் சித்திராபதியினுங் காட்டில் மிகவும் நெஞ்சழிந்து ஊணும் உறக்கமும் அருகி உடல் மெலிதற்குக் காரணமான துன்பமுடையளாதலாலே; மணிமேகலை மாதவியிருந்த அணிமலர் மண்டபத்து அகவயின் செலீஇ- ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே புத்தப் படிமத்திற்கு அணிதற்குரிய மலர்மாலை தொடுக்கு மிடமாகிய மண்டபத்திற்குள்ளே புகுந்து; ஆறிய சாயல் ஆய் இலை மடந்தை வாடிய மேனி கண்டு உளம் வருந்தி - பண்டு அசைத்த சாயலையும் அழகிய அணிகலன்களையுமுடைய அயகிய இளையளாயிருந்த அம் மாதவியினுடைய துயரத்தாலும் நோன்பாலும் வாடியிருந்த திருமேனியைக் கண்டு மேலும் வருந்திக் கூறுபவள் என்க.
(விளக்கம்) துறவி- துறவு. மாதவியின்பாற் சென்ற வயந்தமாலை அவளைத் தனியிடத்தேயும் காணலாம்; அவ்வாறன்றி இவள்வாயிலாய் மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையின் அதற்கிணங்க மணிமேகலையோடிருந்ததொரு செவ்வியற் காண்பாளாயினள் என்பது குறிப்பு.
ஆடிய சாயல் - அசைந்த மென்மை. மடந்தை - ஈண்டு இளைமை யுடையோள் என்னும் குறிப்புப் பொருள் மேனின்றது. செலீஇ- சென்று.
வயந்தமாலை மாதவிக்குக் கூறுதல்
16-26: பொன்னே.......கணக்கும்
(இதன் பொருள்) பொன் நேர் அனையாய் - திருமகளையே ஒக்கும் நங்காய்; புகுந்தது கேளாய் - உன் செயல் காரணமாக இப்பொழுது நம் மாநகரத்தே நிகழ்ந்ததொரு செய்தியைக் கூறுவேன் கேட்டருள்க; உன்னோடு இவ்வூர் உற்றது உண்டு கொல் நாடக மேத்தும் ஆடலணங் காகிய நின்னோடு இம் மாநகரத்து மரந்தர்க் குண்டான பகைமை ஏதேனும் உளதோ! இல்லையன்றே அங்ஙனமாகவும்; வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து கூத்தும் - பாட்டும் தூக்கும் துணிவும் வேந்தர்க்காடும் கூத்தும் எல்லா மாந்தர்க்கும் பொதுவாக ஆடும் கூத்தும் என்று வகுத்துக் கூறப்படுகின்ற இருவகைப்பட்ட  கூத்துக்களின் இலக்கணங்களும், அவற்றிற் கியன்ற பண் வகையும் செந்தூக்கு முதலிய ஏழுவகைப் பட்ட தூக்கு வகையும் தாளவகையும்; பண்யாழ் கரணமும் - பண்ணுறுத்திய யாழ்க் கரணங்களும்; பாடைப் பாடலும் - அகக் கூத்தும் புறக் கூத்துமாகிய இருவகைக் கூத்திற்குமுரிய உருக்கள் எனப்படும் பாடல்களும் தண்ணுமைக் கருவியும் - தண்ணுமை முதலிய தோற் கருவி வாசிக்கும் வகையும்; தாழ் தீங்குழலும் - மந்த இசையினாற் சிறப்பெய்தும் வேய்ங்குழல் வாசிக்கும் வகையும்; கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும் - பந்தாடுதலின்கண் சிறந்த கருத்து வகையும், அட்டில் நூலறிவும் அடிசல் சமைக்கும் தொழில் வகையும்; சுந்தரச் சுண்ணமும் - அழகு தருகின்ற பொற் சுண்ணம் முதலியன செய்தலும்; தூநீராடலும் - தூய நீர்விளையாட்டு வகையும்; பாயல் பள்ளியும் - காதலரோடு இனிதாகப் பள்ளி கொள்ளுதற்கியன்ற கலைகளும்; பருவத்து ஒழுக்கமும் - வேனிற் பருவம் முதலிய அறுவகைப் பருவங்கட்கும் ஏற்ப ஒழுகும் ஒழுக்கமும்; காயக் கரணமும் - உடம்பினாற் கலவிப் பொழுதின் நிகழ்த்தும் அறுபத்துநான்கு வகைத் தொழின் முறைகளும்; கண்ணியது உணர்த்தலும் - குறிப்பறிந்து கொள்ளும் திறமும்; கட்டுரை வகையும் - பொருள் பொதிந்த சொற்களாலே பேசுகின்ற வகைகளும்; கரந்துறை கணக்கும் - பிறர் அறியாவண்ணம் மறைந்து வதியும் முறையும் என்க.
(விளக்கம்) வேத்தியல் - அரசர் பொருட்டுச் சிறப்பாக ஆடும் கூத்து. பொதுவியல் - பொதுமக்கள் எல்லாரும் கண்ட களிக்க ஆடும் கூத்து. இங்ஙனம் கூறுவர்(சிலப்) அரும்பதவுரையாசிரியர். அடியார்க்கு நல்லார், இவையிரண்டும் நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து; எனவும் இவற்றை வசைக்கூத்தும் எனவும் விளக்குவர். பாட்டு - பண். இவற்றியல்பெலாம் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் கண்டுகொள்க.
தூக்கு - தாளங்களின் வழிவரும் செந்தூக்கு மதலைத்தூக்கு துணி புத்தூக்கு கோயிற்றூக்கு நிவப்புத்தூக்கு கழாற்றூக்கு நெடுந்தூக்கு என்னும் ஏழுதூக்குக்களுமாம். துணிவு - தாளம். அவை - கொட்டும், அசையும், தூக்கும், அளவும். இவற்றுள் கொட்டென்பது அரை மாத்திரை; வடிவு க அசையென்பது ஒரு மாத்திரை; வடிவு, எ தூக்கென்பது இரண்டு மாத்திரை; வடிவு உ அளவு என்பது மூன்று மாத்திரை; வடிவு ஃ என்பர். பண்ணியாழ்: வினைத்தொகை. கரணம் - செய்கை. படைப்பாடல் - அகக்கூத்திற்கும் புறக்கூத்திற்கும் இயன்ற இசைப்பாடல்கள். இசைப்பாடல் எனினும் உருக்கள் எனினும் ஒக்கும். இக்காலத்தார் உருப்படி எனலும் காண்க. தண்ணுமை, இதனை அகப்புறவு முழவு என்ப. குழல் - வேய்ங்குழல் கந்துகம் - பந்து மடைநூல் சமையற்கலை பற்றிய நூல். செய்தியும் - மடைநூலும் மடைத்தொழிற் செய்கியும் என்க. பாயற் பள்ளி - இடக் கரடக்கல். பருவம் - வேனில் முதலிய பருவம். மகளிர்க்குரிய பேதை பெதும்பை முதலியனவுமாம். காயக்கரணம்: இடக்கர் அடக்கு. கட்டுரை - சொல்லாட்டம். கரந்துறை கணக்கு - மறைந்து வதிதற்கியன்ற முறை.
இதுவுமது
27-37: வட்டிகை........உரைக்கும்
(இதன் பொருள்) வட்டிகைச் செய்தியும் - எழுதுகோல் கொண்டியற்றும் தொழிற்றிறமும்; மலர் ஆய்ந்து தொடுத்தலும் மலர்களை வண்ணம் வடிவம் மணம் முதலியவற்றால் ஆராய்ந்து அழகாகத் தொடுத்தலும்; கோலங்  கோடலும் - உள்வரிக் கோலம் புனைந்து கொள்ளலும்; கோøயின் கோப்பும் - முத்துப் பவழம் முதலியவற்றைக் கோவைப் படுத்தலும்; காலக் கணிதமும் - காலக்கணக்கிய லறிதலும்; கலைகளின் துணிவும் - அறுபத்துநான்கு வகைப்பட்ட கலைகளை அறிந்து தெளிதலும்; நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் - நாடகமாடும் மகளிர் பயில்வதற் கென்றே அறிஞர்களால் நன்றாக வகுத்து வரையப்பட்ட ஓவியங்களையுடைய செவ்விய நூலில் அவை கிடக்கும் முறையே அறித்தலும் ஆகிய இக் கலைகளை எல்லாம்; கற்றுத் துறைபோய் பொற்றொடி நங்கை - நன்கு ஐயந்திரிபறப் பயின்று அந் நாடகத் துறையில் தலைவரம்பாகத் திகழ்கின்ற பொன்தொடி யணிந்த நாடகமகளிரிற் றலைசிறந்த நாடகக் கணிகை யொருத்தி; நல்தவம் புரிதல் சிறந்த தவவொழுக்கத்தை மேற்கொள்வது; நாண் உடைத்து ஆராயுங்கால் நாணுதற்குரியதொரு செயலாகும் என்று சொல்லி; அலகில் மூதூர் ஆன்றவர் அல்லது - அளவில்லாத மாந்தர் வாழுகின்ற நந்தம் பழைய நகரத்தின்கண்ணுறைகின்ற ஆன்றவிந்தடங்கிய சான்றோரை யல்லதும்; பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி - பிறரும் இடந்தொறும் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்து பேசுகின்ற பண்பாடு இல்லாத உண்மையோடு கூடிய பழமொழி; நயம்பாடு இல்லை - நம்மனோர்க்கு அழகுண்டாக்குதல் இல்லை யாகலின்; நாணுடைத்து என்ற - அதனைக்கேட்கும் நம்மனோர்க்கும் நாணந் தருதலைத் தன்பாலுடைய தாகவே உளதுகாண்! என்று கூறிய; வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும் - வயந்த மாலைக்க மறு மொழியாக அவளை நோக்கி மாதவி கூறுகின்றாள் என்க.
(விளக்கம்) வட்டிகை - எழுதுகோல். கோலம் - உள்வரிக்கோலம்; அஃதாவது பல்வேறு வேடங்களும் புனைந்து கொள்ளும் திறம். காலக் கணிதம் - காலத்தைக் கணிக்கும் தொழில். துணிவு - தெளிவு. ஓவியச் செந்நூல் - நாடகமகளிர்க் கியன்ற நிற்றல் இருத்தல் முதலியவற்றையும் ஒற்றைக்கை இரட்டைக்கை முதலிய அவினய வகைகளையும் ஓவியமாக வரைந்து காட்டப்பட்ட நூல் என்க. அவ்வோவியங்கள் முறைபடுத்திக்கிடத்தப்பட்டு அவற்றின் விளக்கவுரைகளும் வரையப்பட்டிருத்தலும் இந்நூல் நாடக மகளிர் பொருட்டே ஆக்கப்பட்டது என்பதும் தோன்ற நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கை என்று விதந்தோதினார். இப்பழி கூறுதற்குரியோர் ஆன்றவிந்தடங்கிய சான்றோரேயாவர், அவரையன்றியும் ஏனையோரும் தூற்றுகின்றனர் என்பாள் ஆன்றவரல்லது பலர்தொகுப்புரைக்கும் வாய்மொழி என்றாள். பிறர்பழிதூற்றும் மொழி தீயமொழியாதலின் பண்பில் மொழி என்றாள். வாய்தந்தன கூறுகின்றனர் என்பாள் வாய்மொழி என்றாள். அவர்மொழியில் வாய்மையும் உளது என்பாள் அங்ஙனம் கூறினன் என்பதும் ஒன்று. என்னைச் அச் செயல் வாய்மையாகவே நாணுத் தருவ தொன்றே என்பது அவட்கும் உடம்பாடாகலின் என்க.
மாதவி வயந்தமாலைக்குக் கூறும் மறுமொழி
38-48: காதலன்.......பெண்டிர்
(இதன் பொருள்) நற்றொடி நங்காய் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டே செய்யா உயிரொடு நின்றே - அழகிய வளையலணிந்த நங்கையாகிய தோழியே கேள்! யான் துறவினால் நாணுந்துறந்தேனல்லேன் எளியேன் என் ஆருயிர்க் காதலனாகிய கோவலன் எய்திய பெரிய துயரச் செய்தியைக் கேட்டிருந்தேயும் யாக்கையை விட்டுத் தானே போகமாட்டாத புல்லிய உயிரைத் தாங்கிப் பின்னும் வாழ்வுகந்திருக்கின்றமையால்; பொன் கொடி மூதூர் பொருள் உரை இழந்து - அழகிய கொடியுயர்த்தப்பட்ட இப் பழைய நகரத்துள் வாழும் மாந்தர் எல்லாம் ஒருவாராய் என்னைப் பாராட்டுதற் கியன்ற பொருள் பொதிந்த புகழ் மொழியையும் இழந்து; நாணுத்துறந்தேன் - நாணத்தைக் கைவிட்டவளே ஆகின்றேன் காண்! பத்தினிப் பெண்டிர் - வாய்மையான பத்தினி மகளிரின் இயல்பு கேள்; காதலர் இறப்பின் - தம்மாற் காதலிக்கப்பட்ட தங்கேள்வர் ஊழ்வினை காரணமாக இறந்துபடின்; கனை எரி பொத்தி - மிக் கெரியுமாறு நெருப்பை மூட்டி; உலை ஊது குருகின் உயிர்த்து - கொல்லனுலையில் ஊதப்படுகின்ற துருத்தியின் மூக்குக் கனலோடு உயிர்க்கும் உயிர்ப்புப் போன்று வெய்தாக உயிர்த்து; அகத்து அடங்காது - தம்முள்ளத்தே அடங்க மாட்டாமையாலே; இன் உயிர் ஈவர் - தமதினிய உயிரைக் நீத் தொழிவர்; ஈயாராயின் - அவ்வாறு உயிர் நீத்திலராய விட்டதே; நல்நீரப் பொய்கையின் நளி எரி புகுவர் - குளிர்ந்த நீர்நிலை புகுந்து மாய்ந்தொழிவர்; நளி எரி புகாஅர் ஆயின அன்பரோடு உடனுரை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர் - அவ்வாறு செறிந்த தீயினுள் முழுகி மாயாதவிடத்தே இறந்துபட்ட தம் காதலரோடு மறுமைக்கண் கூடியுறையும் வாழ்க்கையை எய்தும் பொருட்டுக் கைம்மை நோன்பின் மேற்கொண்டிருந்து இம்மை மாறியபொழுது அக் காதலரோடு கூடி வாழா நிற்பர்காண் என்றான் என்க.
(விளக்கம்) வயந்தமாலை கற்றுத்துறை போகிய நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்து என்று ஊர் அலர் தூர்க்கின்றது என்றாளாதலின், மாதவி அங்ஙனம் அலர்தூற்றுதற்குக் காரணம், அவர் தவறு மன்று; நான் தவம் புரிந்ததுமன்று. காதலன் கொலையுண்ட செய்தி கேட்டபின்னரும் யான் நாணம்கெட்டவளாகின்றேன். அவர் தூற்றம் அலரும் இவ்வகையால் வாய்மையை ஆகின்றது. எனவும், வாய்மை யாகவே யான் பத்தினிமகளாயிருந்தால் கடுந்துயர் கேட்டவுடன் என் உயிர் தானே போயிருத்தல் வேண்டும்;  அங்ஙனம் போந்துணிவற்ற புல்லுயிர் தாக்கிப் பின்னும் வாழ்வு கந்தருக்கின்றமையாலே புகழையும் இழந்தேன். பழியையும் சுமந்தேயிருக்கின்றேன் என்று தன்னையே நொந்துரைக்கின்ற இம்மொழிகள் அவளுடைய பேரன்பை மிகத் தெளிவாகக் காட்டுதலுணர்க. நற்றொடிநங்காய் என்று விளித்தது இகழ்ச்சிக் குறிப்பு.
கனை எரி - மிக்க நெருப்பு. எரி - உலையின்கண்ணிடப்பட்ட நெருப்பு. இதனைத் துன்பமாகிய தீ மூளப்பட்டு என்பாருமுளர். அவ்வுரை பொருந்தாமை யுணர்க நளி - செறிவு. எரிபுகுவர் என்றது தீயின மூழ்கி இறப்பர் என்றவாறு. உடம்பு அடுவர் எனக் கண்ணழித்து உடம்பை வருத்துவர் என்பாருமுளர்.
இனி, இம்மாதவி கூற்றிற்கு,
ஓருயிராக உணர்க உடன்கலந் தோர்க்(கு)
ஈருயி ரென்ப ரிடைதெரியார்-போரில்
விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே யுலந்த துயிர்  (புற-வெண்பாமாலை, 268)
என வரும் வரலாற்று வெண்பாவிற் றலைவியும்,
அரிமா னேந்திய அமளிமிசை யிருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க கோதை தன்துயர் பொறாஅன்
மயங்கினன் கொல்லென மலரடி வருடித்
தலைத்தா ணெடுமொழி தன்செவி கோளாள்
கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்
தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்
பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள்
என வரும் நெடுஞ்செழியன் பெருந்தேவியும் காதலர் இறந்தவுடன் இன்னுயிர்ந்தமைக்கும், நன்னரீப்பொய்கையின் நளிபெயரிபுக்கமைக்கு,
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டீமம்
நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளித ழவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே                 (புறம்-246)
எனக் கூறித் தன் கணவன் பூதப்பாண்டியன் இறந்துழி தீப்பாய்ந்திறந்த பெருங்கோப்பெண்டு என்னும் புலமையாட்டியும் சிறந்த எடுத்துக் காட்டாவார். மேலும், உடனுறைவாழ்க்கைக்கு நோற்கும் நோன்பினியல்பை,
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிபெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிர்                                              (புறம் 246)
எனவரும். அப்பெருங்கோப் பெண்டின் கூற்றே சான்றாதலும் உணர்க.
மாதவி மணிமேகலை நாடகக்கணிகை யாகாளெனல்
48-57: பரப்பு.....படாஅள்
(இதன் பொருள்) பரப்பு நீர் ஞாலத்து அத்திறத்தாளும் அல்லள்-கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தேயான் கூறிய அத்தகையபத்தினிப் பெண்டிர் போலவாளும் அல்லள்; எம் ஆயிழை - எங்கள் கண்ணகி நல்லாள்; கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்-தன் காதலனுக்கு எய்திய பெருந்துன்பத்தைக் கேட்டு நெஞ்சுபொறுக்கொணாத துன்பமுடையளாகி; மணம்மலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீராடிய கதிர் இளவனமுலை - நறுமண மிக்குக் கமழ்கின்ற தன் கூந்தல் சரிந்து தன் முதுகினை மறைப்பவும்; தன் கண்ணினின்றும் வீழ்ந்த துன்பக் கண்ணீரின் மூழ்கிய ஒளியுடைய அழகிய இளமுலையில் ஒன்றனைத் தன் கையாலேயே; தண்ணிதின திருகி - திட்பமாகப் பற்றித் திருகி வட்டித்து எறிந்து; தீ அழல் பொத்தி - தீயாகிய அழலைக் கொளுவி; காவலன் பேரூர் கனை எரி மூட்டிய - பாண்டிய மன்னனுடைய தலை நகரமாகிய மதுரை முழுவதும் பெரிய தீயை மூட்டிய தெய்வத்தன்மையுடைய; மாபெரும் பத்தினி-மிகப் பெரிய பத்தின்யல்லளோ?; மகள் மணிமேகலை - அக் கற்புத் தெய்வத்தின் மகள் ஆவாள் இம் மணிமேகலை; அருந்தவப் படுத்தல் அல்லது - ஆதலின் அக் கற்புத் தெய்வத்தின் சிறப்பிற் கேற்ப இம் மணிமேகலையை அரிய தவவொழுக்கத்தின் பால் செலுத்துவதல்லது; யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் - சிறிதும் உளம் திருந்துதற்குக் காரணமாகத் தீய செய்கைகளையுடைய பரத்தைமைத் தொழிலில் ஈடுபடாள் காண் என்றாள் என்க.
(விளக்கம்) தன் அன்புரிமை தோன்றக் கண்ணகியை மாதவி எம்மாயிழை என்கிறாள். எம் மென்னும் பொதுப் பெயர் கோவலனையும் மணிமேகலையையும் உளப்படுத்தியது. திருகுதல் அருமை தோன்றத் திண்ணிதிற்றிருகி என்றாள். எம் மாயிழை ஞாலத்துள்ள யான் கூறிய பத்தினிப் பெண்டிரின் திறத்தினும் மேம்பட்டுப் பேரூர் எரிமூட்டிய தெய்வக் கற்புடையாள். அத்தகைய பத்தினி மகள் மணிமேகலை. ஆதலின் தவப்படுத்தற்கே உரியள் தீத் தொழிலில் ஈடுபடாள் என மணிமேகலையைக் கண்ணகி மகளாகவே கொண்டு கூறினள். என்னை கோவலன் என்னோடு கேண்மை கொண்டிராவிடின் இவள் அவள் திருவயிற்றிலேயே கருவாகிப் பிறந்திருப்பாள் மன்! என்னும் கருத்தால். இப்பொழுது நிலம் இழந்ததேனும் வித்து உயர்ந்ததாகலின் அஃது இந்நிலத்தினும் தனக் கியன்ற விளைவையே செய்யும் என்பாள் தீத் தொழிற் படாள் என்றாள்.
மாதவி அறவணர்பால் அறங்கேட்டு அமைதி கொண்டமை கூறத் தானும் மீளாமையைக் குறிப்பாக அறிவித்தல்
58-63: ஆங்கனம்.......கூற
(இதன் பொருள்) ஆங்கனம் அன்றியும் - அவ்வாறு மணிமேகலை நிலையிருப்பதுமல்லாமல்; ஆயிழை கேளாய் - வயந்தமாலாய் இனி என்னிலைமை இயம்புவேன் கேட்பாயாக; ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புகுந்தேன் - யான் கணிகையே ஆதலின் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செல்லாவுயிரொடு நின்றேனாயினும் ஆற்றெணாத் துயருழந்து அதற்கு ஆறுதல் தேடி இங்கு இப் பௌத்த சங்கத்தார் உறைகின்ற இத் தவப் பள்ளியிற் புகுந்தேன் காண் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாதலாற் போலும். இவ்விடத்தே; மறவணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணவடிகள் அடிமீசை வீழ்ந்து - தீவினையின் நிழலும் ஆடாவண்ணம் அவற்றைத் துவரக் கடிந்தமையால் மாசு அற்ற அறக் கேள்வியையுடைய அறவணடிகள் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற அறவோரைக் காணப்பெற்று அவர் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி; மாபெருந் துன்பம் கொண்டு - மிகப் பெரிய துன்பத்தைச் சுமந்து கொண்டு ஆற்றாமையாலே; உளம் மயங்கி - நெஞ்சழித்து செய்வதறியாமல் மயங்கி அவர்பால்; காதலன் உற்ற கடுந்துயர் கூற - என ஆருயிர்க் காதலன் கொலைக்களப் பட்ட மிக்க துன்பத்தைக் கூறாநிற்றலாலே; என்க
(விளக்கம்) ஆங்கனம் அன்றியும் என்றது மணிமேகலை அவ்வாறு ஆதலன்றியும் இனி என்றிறம் உரைப்பேன் என்பதுபட நின்றது. ஆயிழை: வயந்தமாலை; அண்மைவிளி. எனக்கும் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாதலாற் போலும் ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புக்கேன் என்பது அவள் கருத்தாகக் கொள்க. மறவணம்-மறத்தின் வண்ணம். தீவினையின் தன்மை நீத்த அறவண அடிகள். மாசறு கேள்வி அறவண அடிகள் எனத் தனித்தனி இயையும் . அறவணன் - அறத்தின் திருவுருவமானவன். எனவே இஃது அச் சங்கத்தாரீப்த சிறப்புப் பெயர் என்பதுணரப்படும்.சாதலில் இன்னாததில்லை ஆகலின் கொலையுண்டமையைக் கடுந்துயர் என்றாள்.
அறவணர் அருவிய அறவுரைகள்
64-66: பிறந்தோர்........அருளினன்
(இதன் பொருள்) பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் - அது கேட்ட அடிகளார் அடிச்சிக்குப் பெரிதும் இரங்கி என் துயரத்திற்கு ஆறுதல் கூறுபவர் அளியோய் வருந்தற்க! உலகின் கண் பிறப்பெடுத்துழலவோர் யாவரேனும் எய்துவது ஒருகாலைக் கொருகால் மிகுத்து வரந்துன்பமட்டுமே காண்; பிறவார் உறுவது பெரும் பேரின்பம் - இன்ப பிறவாநிலை எய்னோர் யாவர் அவர்க்கு மட்டுமே எய்துவதாம் மக்கள் அவாவுகின்ற மாபெரும் பேரின்பம்; முன்னது பற்றின் வருவது - துன்பம் அனைத்திற்கும் பிறப்பிடமாகிய முற் கூறப்பட்ட பிறப்புப் பற்றினாலே வருவதொன்றும்; பின்னது பின்னே கூறப்பட்ட இன்பநிலைகளமாகிய பிறவாமையோ; அற்றோர் உறுவது அறிக - பற்றற்றோர்க்குத் தானே எய்துவதொன்றாம்; அறிக என்றருளி- இவ்வாய்மைகள் நான்கினையும் நன்கு அறிந்து கொள்ளக் கடவாய் என்று முற்பட இவற்றை அறிவித்துப் பின்னர்; ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - பற்றறுதிக்குக் காரணமான ஐந்து வகைப்பட்ட ஒழுக்கங்களி னிலக்கணங்களையும் நன்கு அறிவுறுத்து; இவை உய்வகை கொள் என்று உரவோன் காட்டினன்-இவையே நீ எய்திய மாபெருந் துன்பக்கடலினின்றும் கரையேறி உறுதியாகக் கடைப்பிடித்துக் கொள்ளக் கடவாய் என்று அப் பேரறிவாளர் திருவாய் மலர்ந்தருளினர் காண் என்றாள் என்க
(விளக்கம்) ஆதலால் யான் ஒருவாறு அம் மாபெருந் துன்பத்தினின்றும் நீங்கி அமைதி பெற்றுள்ளேன் காண் என்பது இதனாற் போந்த குறிப்புப் பொருளாம் என்க.
இப்பகுதியில் புத்தபெருமான் போதி மூலத்துப் பொருந்தியிருந்துழிக் கண்ட மெய்க் காட்சிகள் நான்கும் சுருங்கக்கூறி விளங்க வைத்திருக்கும் தண்டமிழ் ஆசான் சாத்தனார்தம் புலமை வித்தகம் நினைந்து நினைந்து மகிழற்பாலதாம்.
பௌத்த சமயத்தின் உயிராக விளங்குவன இந்த நான்கு வாய்மைகளேயாம். அவை, துன்பம், துன்பந் துடைத்தல், துன்பவருவாய், துன்பம் துடைத்தல் நெறி என்னும் இவையேயாம்.
இவையிற்றுள்-பிறப்பு துன்பங்கட் கெல்லாம் நிலைக்களனாதலின் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என முதல் வாய்மை கூறப்பட்டது பிறவாமையே இன்பநிலையம் ஆதலின் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என இரண்டாம் வாய்மை இயம்பப்பட்டது. முன்னது என்றது பிறப்பினை; அதற்குக் காரணம் பற்றுடைமை ஆதலின், முன்னது பற்றின் வருவது என மூன்றாவதாகிய வாய்மை துன்ப வருவாய்(வரும் வழி) கூறப்பட்டது. பிறவாமையே துன்பம் துடைக்கும் நெறி ஆகலின் பின்னது-பற்றறுதி. பின்னது அற்றோர் உறுவது என்பதனால் நான்காம் வாய்மை நவிலப்பட்டமை நுண்ணிதின் உணர்க. இவ் வாய்மைகள் நான்கும் உலகிலுள்ள எல்லாச் சமயங்கட்கும் எல்லா நாட்டிற்கும் எக் காலத்திற்கும் பொருந்தும் சிறப்புடையன வாதலும் உணர்க.
இங்ஙனம் துணிபொருள் கூறியவர் அவற்றை எய்துதற்குரிய ஏதுவும் இயம்பினர் என்பாள் ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி அருளினன் என்றாள். சீலம்-ஒழுக்கம். அவையாவன: காமம் கொலைகள் பொய் களவு என்னும் ஐந்து தீவினைகளையும் துவரக் துயந்தொழுகுதலாம். காமத்தைத் துறந்தபொழுதே துன்பம் இல்லையாக; இவ்வாற்றல் யான் ஈண்டு ஒருவாறு துன்பந் துடைக்கும் நெறிநிற்றலால் உயர்ந்திருக்கின்றேன் என்று மாதவி வயந்த மாலைக்குத் தன்னிலை கூறத் தானும் வரமாட்டாமையைக் குறிப்பினால் கூறியபடியாம். தான் உழந்த மாபெருந் துன்பத்தை ஆற்றுவித்த அறவண அடிகளின் அறிவாற்றலின் சிறப்புத் தோன்ற அவரை உரவோள் என்று அறியும் ஆற்றலும் ஒருங்கே உணர்த்தும் பெயரால் கூறினள் என்க.
வயந்தமாலை வறிதே மீண்டுபோதல்
70-75: மைத்தடங்கண்..........திறத்தென்
(இதன் பொருள்) நீ மைத்தடங் கண்ணார் தமக்கும் என் பயந்த சித்திராபதிக்கும் என்னிலைமையைக் கூறுவாயாக என்று ஆங்கு அவள் உரை கேட்டு அவ்விடத்தே மாதவி கூறிய மொழியைக் கேட்டவளவிலே; வயந்த மாலையும் காரிகை திறத்துக் கையற்று-மாதவியை மீட்டுச் செல்லும் கருத்தோடு வந்த அவ் வயந்தமாலை தானும் அம் மாதவி திறத்திலே தான் பின் ஏதும் சொல்லவா செய்யவோ இயலாத கையாறு நிலையுடையளாகி; அரும் பெறல் மாமணி ஓங்கு திசைப் பெருங்கடல் வீழ்த்தோர் போனறு அரிதாகப் பெற்றதொரு மாணிக்க மணியை உயர்ந்த அலைகளையுடைய பெரிய கடலிலே போகட்டுவிட்டவர் போலே; மையல் நெஞ்சமொடு பெயர்ந்தனள்-பெரிதும் மயக்கமுற்ற நெஞ்சத்தோடே வறிதே செல்வாளாயினள்; என்பதாம்.
(விளக்கம்) தன் தோழிமார் தன் கூற்றிற்குப் பொருளுணரார் ஆயினும் அவர்க்கும் கூறுக என்னும் இகழ்ச்சி தோன்ற அவரை மைத்தடங்கண்ணார் என்றாள். என்னை அழகு செய்த புறக்கண்ணேயுடையர் அகக் கண்ணில்லா அவர்க் கெல்லாம் இவை விளங்க மாட்டா என்பதே அவள் கருத்தாதலின் என்க.
இனி இத்துணைத் துன்பத்திற்கும் ஆளாகும் என்னைப் பெற்றமையாலும் அவள் கருதியது நிறைவேறாமையாலும் அவள் தீவினையாட்டியே ஆதல்வேண்டும் என்பது குறிப்பாகத் தோன்றற் பொருட்டு அன்னைக்கு என்னாது தனக்கும் அவட்கும் அயன்மை விளங்கித் தோன்ற எற்பயந்த சித்திராபதி எனத் தன் நற்றாயைக் கூறினள். இதனால் அவட்குப் பற்றறுதி கைவந்தமையும் புலப்படுதலறிக. வயந்தமாலையும் அன்பு பொருளாக அன்றிப் பொருட்பொருட்டே அழைக்கவந்தவள் ஆதலின் அவட்கு மாமணியை இழந்தவர் உவமையாக எடுக்கப்பட்ட நயமுணர்க.
இனி இக்காதையை-நன்னாளில் மாதவி வாராத்துன்பம் மேல்வர, சித்திராபதி இரங்கி வயந்தமாலையைக் கூவி அலரை மாதவிக்கு உரைஎன அவள் சென்று மாதவியைக் கண்டு வருந்தி அனையாய் கேளாய் வாய்மொழி நாணுடைத்து என அவட்கு மாதவி உரைக்கும் துறந்தேன் மணிமேகலை தீத்தொழில் படாஅள் யான் புகுந்து வீழ்ந்து மயங்கிக் கூற உரவோன் அறிகென்று நாட்டி, அருளினன். இதனைக் கண்ணார்க்கும் சித்திராபதிக்கும் நீ சென்று செப்பு என வயந்தமாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் என இயைத்திடுக.
ஊரலர் உரைத்த காதை முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


3. மலர்வனம் புக்க காதை

மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு
அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது மணிமேகலை புத்த படிமத்திற்கு அணிய வேண்டிய மலர் மாலை தொடுக்கும் செயலீடுபட்டிருந்தாளாக, அவர்கள் சொல்லாட்டத்திடையே மாதவி கூற்றில் தன் அன்புத் தந்தையாகிய கோவலன் உற்ற கொடுந்துயரும் பேசப்பட்டமையால் அச் செய்தியால் அவள் உள்ளத்தே துன்ப நினைவுகள் தோன்ற அவன் உகுத்த கண்ணீர் மலர்மாலையில் வீழ்ந்து அதனை வாலாமையுடையதாக்கியது. அதனால் அற்றே நாள் வழி பாட்டிற்குப் புதிய மலர் பறித்து வந்து தொடுக்க கருதி அம்மலர் பறித்து வருதற்கு மாதவி மணிமேகலையை ஏவினள்; அவட்குத் துணையாகச் செல்வதற்குச் சுதமதி என்னும் அன்புமிக்க பிக்குணி தானே முன்வந்தளள். ஆகவே மணிமேகலையும் சுதமதியும் புதியமலர் கொண்டு வருதற் பொருட்டுத் தீதற்றதாகக் கருதப்படும் உவவனம் என்னும் மலர் வனத்தில் சென்று புகுந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.
இதன்கண்- மணிமேகலைக்குத் தந்தையின் பாலுள்ள அன்பின் தன்மையும்; அவளுடைய பேரழகின் சிறப்பும் சாத்தனாரால் வியத்தகுமுறையில் கூறப்பட்டுள்ளன.
மேலும் சுதமதி தன் வரலாறு கூறுதலும்; அந்நகரத்திலுள்ள மலர்ப்பொழில்கள் பலவற்றின் பல்வேறு தன்மைகளைக் கூறுதலும் உவவனத்திலுள்ள பளிக்கறை பற்றிய வரலாறு கூறுதலும் பெரிதும் சுவை பயப்பனவாம். சுதமதியும் மணிமேகலையும் மலர் வனம் நோக்கிச் செல்லும் பொழுது வழியிலே நிகழும் ஒரு களிமகன் செயல் நகைச்சுவை தருவதாம் மணிமேகலையைக் கண்டிரங்குவார் மொழிகள் வாயிலாய்ப் புலவர் மணிமேகலையின் பேரழகைப் புலப்படுத்தும் வித்தகப் புலமை பெரிதும் இன்பம் பயப்பதாம். இவ்வாறு இக் காதையில் பல்வேறு சுவைகள் நிரம்பியுள்ளன.

வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட  03-010
மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும்
மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்  03-020
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
பாராவாரப் பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்  03-030
ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி  03-040
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்  03-050
கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்  03-060
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்  03-070
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
ஈங்கு இதன் காரணம் என்னை? என்றியேல்
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும்
வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்  03-080
செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய்! யானும் போவல் என்று
அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கணம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்  03-090
மண்ணா மேனியன் வருவோன் தன்னை
வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்  03-100
கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்ம் என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்  03-110
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
பவளச் செவ் வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை  03-120
அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய  03-130
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர  03-140
தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
காண்மினோ என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்  03-150
மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்  03-160
திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்  03-171
உரை
மணிமேகலை தந்தையையும் தாயையும் நினைத்து வருந்துதல்
1-6: வயந்த.......வெதுப்ப
(இதன் பொருள்) மாமலர் நாற்றம் போல் பெரிய நாளரும்பு மலர்ந்துழி அதன்கண் மணம் தோன்றுமாறு போலே; மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலை முற்பிறப்பிலே செய்த வினைத்தொகுதி அவளுள்ளே முதிர்ந்து தன் பயனை ஊட்டுதற்கியன்ற செவ்வி பெற்றிருத்தலாலே; வயந்தமாலைக்கு மாதவி உரைத்த-சித்திராபதியின் ஏவலாலே தனக்கு ஊரலர் உரைத்துக் தொருட்டவந்த வயந்த மாலைக்கு மறுமொழியாக மாதவி கூறிய; உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி-வாடுதற்குக் காரணமான நோயாகிய துன்பக்கிளவியை நிலைக்களனாகக் கொண்டு பிறந்து; தந்தையும் தாயும் தாம் நனி உழத்த வெம்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-தன் தந்தையும் தாயுமாகிய கோவலனும் கண்ணகியும் பெரிதும் நுகர்ந்த வெவ்விய துன்பத்தோடு கூடிய தீச் சொல்லாகிய நெருப்பு அவளுடைய செவியினுட் புகுந்து நெஞ்சத்தைச் சுடா நிற்றலாலே, என்க.
(விளக்கம்) வயந்தமாலைக்கு மாதவியுரைத்த உரை. உயங்குநோய் வருத்தத்து உரை எனத் தனித்தனி இயையும். உயங்குதல்-வாடுதல். நோயாகிய வருத்தத்தைத் தன் பொருளாகக் கொண்ட உரையை ஒற்றுமை கருதி வருத்தத்து உரை என்றார். வருத்தத்தின் மிகுதிதோன்ற உயங்கு நோய்வருத்தம் என ஒரு பொருட்பலசொல் அடுக்கி அடை புணர்த்தார்.
பருவமெய்தி மலரும் மலரின்கண் நாற்றம் தோன்றுதல் முதிர்ந்து செவ்விபெற்ற வினையினின்றும் அதன் பயனாகிய நுகர்ச்சி தோன்றுதற்கு உவமை. ஊழ்வினை ஏது நிகழ்ச்சி எதிர்தல் என்பது பௌத்த நூல் வழக்கு.
மாதவி முன்னைக் காதையில் உரைத்த உயங்கு நோய் வருத்தத்து உரை என்றது அவள் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்போதல் செய்யா வுயிரொடு நின்றேன் என்றும் கணவற்குற்ற கடுந்துயர் பொறாஅள்....கூந்தல் புதைப்பத்....திருகி எரியூட்டிய பத்தினி என்றும் கூறிய உரைகளை என்க. இவை செவியுட்புகுந்து அவள் தந்தைதாயார் பட்ட துயரமெல்லாம் நினைப்பித்து நெஞ்சத்தை வெதுப்பின் என்றவாறு.
மணிமேகலை கண்ணீர் உகுத்தலும் மாதவி செயலும்
(இதன் பொருள்) காரிகை காதல் நெஞ்சம் கலங்கி-அம் மணிமேகலை அவர்பாற் கொண்டுள்ள அன்பு காரணமாகப் பெரிதும் நெஞ்சம் கலங்கி உருகுதலாலே; மாதர் செங்கண்-அவளுடைய காதல் கெழுமிய சிவந்த கண்கள்; புலம்பு நீர்-துன்பக் கண்ணீரைப் பெருக்கி; வரிவனப்பு அழித்து-தம்பாற் படர்ந்த செவ்வரிகளை மறைத்து; உருட்டி அவள் தொடுக்கின்ற கட்டவிழ்ந்து மலராநின்ற நறிய மலரினது விளக்குகின்ற இதழ்களையுடைய மாலையின் மேல் வீழ்த்தி அதனை நினைத்து வாலாமைப் படுத்தி விட்டமையாலே; மாதவி மணிமேகலை முகம் நோக்கி-இது கண்ட மாதவி மணிமேகலையின் முகத்தைப் பரிவுடன் நோக்கி; தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையின் கண்ணீர் மாற்றி-தாமரை மலர் ஒன்று குளிர்ந்த திங்கள் மண்டிலத்தைத் தீண்டியது போன்று தன் அழகிய கையை அவள் முகத்திலே சேர்த்துச் சிவந்த அக்கையினாலே அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கூறுபவள்; தூநீர் மாலை தூத்தகை இழந்தது-அன்புடையோய் தூய நீர்மையையுடைய இம் மலர் மாலை நின் கண்ணீர் பட்டுத் தனது தூய தன்மையை இழந்துவிட்டது; நீயே நிகர் மலர் கொணர்வாய்-இம் மாலை நம்மிறை வழிபாட்டிற்காகாதாகலின் இப்பொழுது நீயே மலர் வனத்திற் சென்று புதிய மலர்களைக் கொய்து கொணர்வாயாக என்று கூறாநிற்ப; என்க.
(விளக்கம்) மணிமேகலைக்கு ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துளதாகலின் உரை வாயிலாய் இடும்பை தோன்றி அவளது செவியகம் வெதுப்ப அதனால் அக் காரிகை நெஞ்சு கலங்க அவள் செங்கண் புலம்பு நீர் பெருக்கி வரிவனப்பு அழித்து உருட்டி மாலையில் இட்டு நீராட்ட அது கண்ட மாதவி மணிமேகலை முகம் நோக்கித் தன் செங்கையின் கண்ணீர் மாற்றிக் கூறுபவள் மாலை இழந்தது நீயே நிகர் மலர் கொணர்வாய் என்று கூறலும் என்று இயைத்திடுக. இப்பகுதி பெரிதும் அவலச் சுவை பயத்தலுணர்க. காரிகை: மணிமேகலை. மாந்தர்-அழகு; காதல் எனினுமாம். வரி-செவ்வரி. அதன் வனப்பை அழித்து என்றது கண்ணீர் பெருகி அவற்றை மறைத்தலை. புலம்பு நீர்-துன்பக்கண்ணீர். வனப்பு-அழகு. இட்டு நீராட்டல் என்பதன் ஒரு சொன்னீர்மைத்தாகக் கோடலுமாம். தாமரை மாதவி கைக்கும் மதி, மணிமேகலை முகத்திற்கும் உவமைகள். தூநீர்-தூயதன்மை. தூத்தகை என்பதுமது, நிகர்மலர், புதுமலர். ஒளிமலர் என்பாருமுளர்.
சுதமதியின் பரிவுரைகள்
16-25: மதுமலர்..........நின்றிடின்
(இதன் பொருள்) மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும் சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும்-தேன் பொருந்திய மலரணிதற்கியன்ற கூந்தலையுடைய மணிமேகலையோடே சிறந்த மலர்மாலை தொடுத்துக் கொண்டிருந்த சுதமதி யென்னும் பெயரையுடைய மற்றொரு பிக்குணி மாதவி கூறிய மொழியைக் கேட்டவளவிலே மணிமேகலை திறத்திலே துன்பமுடைய நெஞ்சத்தோடே மாதவியை நோக்கிக் கூறவாள்; குரவர்க்கும் ஊழ்வினை உருத்து வந்தூட்டுதலானே வந்தெய்திய கொடிய துன்பத்தைச் செவியேற்று அவரை நினைந்து ஆறாக பெருந்துயரம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எய்தா நின்ற; மணிமேகலையின் தன் மதிமுகந் தன்னுள் அணிதிகழ் நீலத்து ஆய் மலர் ஓட்டிய கடை மணி உகுநீர் கண்டனன் ஆயின் - இம் மணிமேகலையின் நிறை மதி போன்ற திருமுகத்தின்கண் ணமைந்த அழகு விளங்குகின்ற நீலத்தின் ஆராய்தற்கியன்ற மலரின் அழகைப் புறமிடச் செய்த கண்ணின் மணியின் கடைப்பகுதியினின்றும் துளித்த துன்பக் கண்ணீரைக் கண்டுளனாயின்; காமன் படை இட்டு நடுங்கும் காமவேள் தன் கருப்பு வில்லும் அருப்புக் கணையுமாகிய படைக் கலன்களை நிலத்திலே எறிந்து விட்டு ஆற்றொணாத் துயரத்தாலே நடுங்குவான் அல்லனோ; பாவையை - அத்தகைய பேரழகு படைத்த பாவை போன்ற இவள் மலர் கொய்யப் போகும் வழியிலே; ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ-ஆண்மக்கள் கண்டக்கால் அக் காட்சியைவிட்டு அப்பாற் போதலும் உளதாகுமோ; பெற்றியின் நின்றிடின் பேடியர் அன்றோ-கண்ட பின் மயங்காமல் தமக்கு இயல்பான அறிவோடு நின்றால் அவர் பேடியர் ஆதல் ஒருதலையன்றோ என்றாள் என்க.
(விளக்கம்) சுதமதி வரலாற்றினை அடுத்த அவளை கூறக்கேட்போம். இவள் மணிமேகலைபால் தாய்மையன்பு கொண்டிருப்பவள் ஆதலின், அவளை மலர்க்கொய்யப் போம்படி மாதவி பணித்தமையால் அங்கனம் போனால் அவட்குத் தீமையுண்டாகும் என்னுங் கருத்தால் துயருற்றுக் கூறுகின்றாள் என்க. அவளுடைய பேரழகே அவட்குத் தீமைபயக்கும் என்பான் அவ்வழகினை இவ்வாறு விதந்தோதுகின்றாள். காமனுக்கு மகளிரே சேனையாகலின் அச்சேனைக்கு இவள் தலைவியாதலின் அவள் துன்பக்கண்ணீரைக்கண்டுகாமன் பொறானாய்ப் படையிட்டு நடுங்குவான் என்றவாறு. இவளைக் கண்ட ஆடவர் எத்தகையோராயினும் மயங்காதிரார் என்பதனை, பெற்றியின் நின்றிடின் அவர் பேடியராகத் தாமிருப்பர் என்றாள். இவ்வாற்றால் இச் சுதமதி மணிமேகலையின் பேரழகை நுண்ணிதல் கூறக்காட்டுதல் பெரிதும் இலக்கிய இன்பம் நல்குதல் உணர்க.
மகளிர் யாண்டும் தனியே செல்லுதல் தகாது என்பதற்குச்
சுதமதி தன்னையே எடுத்துக் காட்டாகக் காட்டல்
26-35: ஆங்ஙனம்.........வருவோன்
(இதன் பொருள்) ஆங்ஙனம் அன்றியும்-அவ்வாற்றானன்றியும் (இவள் தனித்தலர் கொய்யப் போகாமைக்குப் பிறிது காரணமும் உளது அது என் வரலாறு கூறவே நீ அறிந்து கொள்வாய் ஆகலின்) அணியிழை ஈங்கு யான் இந்நகரத்துவரும் காரணம் கேளாய்-அணியிழாய் இங்கிருக்கும் யான் இப் பூம்புகார் நகரத்திற்கு வர நேர்ந்த காரணத்தைக் கூறுவல் கேட்பாயாக பாராவாரம் பல்வளம் பழுகிய காராளர் சண்பையின் கௌசிகன் என்போன்-பல்வேறு கடல்படுபொருள் வளமும் நிரம்பிய காராளர் என்னும் வகுப்பினர் மிக்குவாழ்கின்ற சண்பை என்னும் நகரத்தே குடியிருப்புடைய கௌசிகன் என்னும் பெயரையுடைய; இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்-பார்ப்பனனுக்கு ஒரே மகளாயிருந்த யான்; ஒரே நெஞ்சமொடு ஒருதனி அஞ்சேன் ஆராமத்திடை அலர் கொய்வேன்றனை-யாதொன்றனையும் ஆராய்ந்தறியாத என் பேதை நெஞ்சத்தால் மிகவும் தனிமையுடையேனாய்ச் சிறிதும் அஞ்சாமல் ஒரு மலர்ப்பொழிலும் புகுந்து மலர் செய்கின்ற என்னை; மாருத வேகன் என்பான் ஓர் விஞ்சையன்-மாருத வேகன் என்னும் பெயரையுடையான் ஒரு விச்சாதரன்; திருவிழை மூதூர் தேவர் கோற்கு எடுத்த பெருவிழா காணும் பெற்றயின் வருவோன்-திருமகள் பெரிதும் விரும்புமியல்புடைய இப் பழைய நகரத்தின்கண்  அவ்வாட்டைக்கு நிகழ்த்தும் பெரிய இந்திரவிழாவைக் கண்டு களிக்கும் கருத்தொடு விசும்பின் வழியே வருபவன்; தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணப் பலர் தொழும் படிமையன் உடையனாய் பொற்கலன்கள் பூண்டவனாய் இந்நிலவுலகத்தார் கண்டிராததும் கண்டோர் பலரும் கை தொழில் தகுந்ததுமாகிய உருவச் சிறப்புமுடையான் காண் என் எடுத்தனன் கொண்டு எழுந்தனன் கொண்டு வானத்திலே பறந்து போயினன்; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்-அவ் வானத்தின்கண் யானும் அவன் கருதியாங்கியைந் தொழுகலானேன்காண் ஆங்கு அவன் ஈங்கு எனை கண்மாறி அகன்று- ஆங்கு அவ்வாறு செய்த அவ்விச்சாதரன் இந் நகரத்திலே எனைக் கைவிட்டுச் சிறிதும் கண்ணோட்டமின்றிப் பிரிந்து; தன்பதி நெட்டிடை ஆயினும் நீங்கினன்-தன்னூர் மிகவும் நீண்ட வழியுடையதாக இருப்பினும் என்னைச் சிறிதும் நினையாதவனாய்த் தான் மட்டுமே போயொழிந்தான் நாண் என்றாள் என்க.
(விளக்கம்) ஆங்ஙன மன்றியும்-என்றது அவ்வாறன்றியும் வேறு காரணங்களாலும் அவட்குத் தீமை வரலாம் என்பதுபட நின்றது. இது பாட்டிடைவைத்த குறிப்பாற் போந்த பொருள். இனி ஆங்ஙனமன்றியும் என்பதனுடன் 42 ஆம் அடிக்கட்கிடந்த மணிமேகலைதான் தனித்தலர் கொய்யும் தகைமையள் அல்லள் அதற்கு எடுத்துக்காட்டாக (26) அணியியை கேள் என இயைத்துப் பொருள் கூறினும் அமையும். என்னை அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டு என மொழிப் பாட்டியல் வழக்கின் என்பது ஓத்தாகலின் என்க(தொல்-செய்யு-210). பாரா வாரம்- கடல். காராளர்-ஒரு சாதியினர்: பூவைசியர்; அவராவார் வணிகருள் உழுதுண்போர். இவர் உழுதுண்ணலே அன்றிக் கலத்தினுஞ் சென்று பொருளீட்டுவோராதலின், பாராவாரம் பல்வளம் பழுநிய காராளர் சண்பை என்றார். சண்பை சீகாழிநகர்போலும். அஞ்சுல தஞ்சல் அறிவார் தொழில் என்பதை ஓரா நெஞ்சமொடு என்றவாறு. ஆராமம் மலர்ப்பொழில். பூம்புகார் என்பது தோன்றித் திருவிழைமூதூர் என்றாள். பெருவிழா என்றது-இந்திரவிழாவை. இந்திரவிழாவிற்கு விச்சாதரரும் வருகுவர் என்பதை, சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையானும், (1-34 வெள்ளி காண்போன்) இந்நூலிற் காயசண்டிகை வரலாற்றானும் உணர்க. விஞ்சையன்-விச்சாதரன். படிமையன்-உருவமுடைய மாறி, கண்ணோட்டமின்றி-இதற்கு வேறு கூறுவாருமுளர். அதற்கு எடுத்துக்காட்டும் காட்டுவர். ஆயினும் ஈண்டைக்கு அவ்வுரை பொருந்தாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க நெட்டிடையாயினும் நீங்கினன் என மாறுக.
இதுவுமது
42-43: பணி............அல்லள்
(இதன் பொருள்) மணிப்பூங்கொம்பர் மணிமேகலை தான்-இக் காரணங்களாலே அழகிய மலர்க் கொடி போன்று பருவம் கெழுமிய நம் மணிமேகலை நல்லாள்; தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்-நீ ஏவியாங்குத் தமியளாய்ச் சென்று மலர்வனம் புக்கு கொய்து வருந்தன்மையுடையள் அல்லள் காண் என்றாள் என்க.
(விளக்கம்) இக்காரணங்களாலே தனித்து அலர் கொய்யப் போதல் கூடாது என்பது கருத்து.
மலர்ப் பொழில்களும் அவற்றின் சிறப்பியல்பும்
44-58: பன்மலர்........எய்தார்
(இதன் பொருள்) பன்மலர் அடுக்கிய நல்மரப் பந்தர் இலவந்தி கையின் எயில்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்-பன்னிறமுடைய மலர்க் கொடிகளை நிரல்பட நட்டுப் படரவிட்ட நல்ல மரத்தாலியன்ற பூம்பந்தர்களையுடைய இலவந்திகையினது மதிலின் புறத்தே சென்றக்கால் உலகாள் மன்னனுடைய பணி மாக்கள் ஆங்கிருப்பவர் ஆதலின் அந்நெறிச் செலல் தகாதுகாண்; விண்ணவர் கோமான் விழாக்கொள் நல் நாள் வானவர் அல்லது மன்னவர் விழையார்-இந்திரனுக்கு விழா நிகழ்த்தும் இருபத்தெட்டு நல்ல நாளினும் இந்திரன் சுற்றத் தாராகிய வானுலகத்துத்தேவர் வந்து தங்குதலின்றி நிலவுலகத்து மாந்தர் உட்புக விரும்பார் என்பதும்; பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்-இசை பாடும் வண்டுகள் தாமும் முரன்று மூசுதலில்லாத பல்வேறு வகைப்பட்ட மரங்களிலெல்லாம்; வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்-வானவர் நாட்டுக் கற்பக மரங்களினின்றும் அத் தேவர்கள் கொணர்ந்த வாடாத சிறப்புடைய மலர்களாற் றொடுக்கப்பட்ட மாலைகளைத் தூக்கிவிட்டிருத்தலானே; கைபெய் பாசத்துப் பூதம் காக்குமென்று-அங்கெல்லாம் கையிடத்தே கயிற்றையுடைய பூதம் காவல் செய்யும் என்று; உணர்த்தோர் உய்யானத்திடைச் செல்லார்-அறிந்த மாந்தர் அரசன் உரிமையோடும் ஆடுதற்கியன்ற உய்யானத்தின் வழியே செல்வாரல்லர், இவையிரண்டு பொழிலும் இங்கனமாக; வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த-கதிரவனை அணுகப் பறந்தலானே அவன் வெம்மையாலே விரிந்த சிறகை இழந்து; சம்பாதியிருந்த சம்பாதி வனமும்-சம்பாதி யென்னுங் கழுகரசன் தவமிருந்தமையாலே சம்பாதி வனம் என்று கூறப்படுகின்ற மலர்வனமும்; ஆங்கு-அவ்வாறே; தவா நீர்க் காவிரிப்பாவை தன் தாதை கவேரன் இருந்த கவோ வனமும்-கெடாத நீரையுடைய காவிரியாகிய நீர்த்தெய்வத்தின் தந்தையாகிய கவேரன் என்னும் மன்னன் தவமிருந்தமையாலே கவேர வனம் என்று கூறப்படுகின்ற மலர்வனமும்; மூப்படை முதுமைய-ஏனைய மலர் வனங்களினுங் காட்டில் காலத்தால் மூப்புடைய பழைமையுடையனவாதலால்; தாக்கு அணங்கு உடைய -அவை மக்களைத் தீண்டி வருத்தும் தெய்வங்களைத் தம்பாலுடையன காண்; யாப்புடைத்தாக அறிந்தோர் எய்தார்-இவ்வுலகுரையை உறுதியுடையதாக வுணர்ந்தவர் யாரும் அவ்விரண்டினூடும் புகுதார் காண்; என்றாள் என்க.
(விளக்கம்) பல்வேறு மணமும் நிறமுமுடைய மலர்கொடிகளை நிரல் படவைத்துப் படரவிட்ட மரப்பந்தர் என்க. இவற்றைப் பூம்பந்தர் என்னாது மரநிழல் என்பாருமுளர். நன்மரம் என்றது பந்தரிட்ட மரத்தை. இலவந்திகை-இயந்திரவாவி; அஃதாவது நீரை வேண்டும் பொழுது நிரப்பவும் ஏனையபொழுது வடித்துவிடவும் பொறியமைத்தவாவி. இஃது அரசனும் உரிமை மகளிரும் நாடோறும் நீராடற்குரியதாம். இதனியல்பை இலவந்திகை-நீராவியைச் சூழந்த வயந்தச் சோலை; அஃது அரசனும் உரிமையும் ஆடும் காவற் சோலை எனவரும் அடியாருக்கு நல்லார் உரையானும் (சிலப்-10:30-31) நிறைகுறின் நிறைத்துப் போக்குறின் போக்கும் பொறிப்படை யமைந்த பொங்கில வந்தகை எனவரும் பெருங்கதையானும்(1-40:311-2) உணர்க. உலக மன்னவன் என்றது-சோழமன்னனை. உழையோர்- பணிமாக்கள். உழையோரிருத்தலதன் அங்குப் போதல் கூடாது என்பது குறிப்பு.
விழாக்கோள் ஈரேழ் நாளும் விண்ணகர் வறிதே கிடப்ப அமரர் எல்லாம் ஈங்கு வந்து உய்யானத்திடை இருத்தலின் அங்கு அவர் கொணர்ந்த கற்பகமலர்மாலை மரந்தொறும் தூக்கப்பட்டிருக்கும். மேலும் பூதங்காக்கும் ஆதலால் உணர்ந்தோர் செல்லார் என்றவாறு. இனிச் சம்பாதிவனமும் கவேரவனமும் முதுமைய அணங்குடைய ஆதலின் அவற்றினுள்ளும் போதல் கூடாது. யாப்புடைத்தாக அறிந்தோர் என்றது, (அணங்குடைய என்னும் இவ்வுலகுரையை) உறுதியுடையதாக அறிந்தோர் என்றவாறு.
சம்பாதி-சடாயுவின் உடன்பிறந்தவன். இவன் வானுலகம் புகப் பறந்து போன பொழுது கதிரவன் சினத்திற்கு ஆளாகிச் சிறகு தீயப் பெற்றான் இதனை,
ஆயுயர் உம்பா நாடு காண்டும் என்றறிவு தள்ளி
மீயுயர் விசும்பி னூடு மேற்குறச் செல்லும் வேலை
காய்கதிர்க் கடவுட்டேரைக் கண்ணுற்றும் கண்ணு றாமுன்
தீயையுந் தீக்குந் தெய்வச் செங்கதிர்ச் செல்வன் சீறி
.........................................
வெந்துமெய் யிறகு தீந்து விழுந்தனென் விளகி லாதேன்
                                                              (கம்பரா - சம்பா-54-5)
எனவரும் அச் சம்பாதி கூற்றானே யுணர்க.
உவவனமும் பளிக்கறையும்
59-68: அருளும்.........கழியினும்
(இதன் பொருள்) அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்-இனி இவையிற்றைத்தவிர ஆருயிர்களின் பால் பேரருளும் அன்பும் அவ்வாருயிரைப் பாதுகாக்க வேண்டும் என்னும் ஒப்பற்ற பெரிய கோட்பாடும் ஒரு பொழுதும் தன்னைவிட்டு நீங்காத தவத்தினை யுடைய; பகவானது ஆணையின் பல் மரம் பூக்கும் உவவனம் என்பது ஒன்றுண்டு-புத்த பெருமானுடைய கட்டளையினாலே பருவமல்லாத பொழுதும் மலருகின்ற சிறப்பினையுடைய உவவனம் என்னும் ஒரு மலர்ப் பொழிலும் உளதுகாண்; அதன் உள்ளது-அவ் வுவ வனத்தின் உள்ளிடத்ததாய்; விளிம்பு அறை போகாது மெய்புறத்திரூஉம் பளிக்கு அறை மண்டபம் உண்டு-தன்னுட் புகுந்தவர் எழுப்பும் ஒலி வெளிப்படாது உருவத்தை மட்டும் புறத்தே காட்டும் பளிங்கினாலியன்ற அறையினையுடைய மண்டபம் ஒன்று உளது காண்; அதன் உள்ளது-அம் மண்டபத்தின் உள்ளிடத்ததாய்; தூகிறமாமணிச் சுடர் ஒளி விரிந்த தாமரைப் பீடிகைதான் உண்டு-தூயநிறமுடைய மாணிக்க மணியின் சுடர் போலச் சுடர்விடுகின்ற ஒளியோடு மலர்ந்த தாமரை மலர் வடிவிற்றாகிய மேடையென்றும் உளதுகாண்; ஆங்கு இடின்-அம் மேடையின் மேலிட்டால்; அரும்பு அவிழ் செய்யும்-அரும்புகள் நன்கு மலர்ந்தலைச் செய்யும்; தொல் மாண்டு கழியினும் மலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா-தொன்று தொட்டுத் தோன்றி மறையுமியல்புடைய யாண்டுகள் பல கழித்தாலும் மலர்ந்த அம் மலர்கள் வாட மாட்டா அவையிற்றில் வண்டினமும் மொய்க்கமாட்டா காண் என்றாள் என்க.
(விளக்கம்) அருள்-எல்லாவுயிரிடத்தும் பரந்து பட்டுச் செல்லும் நெஞ்சநெகிழ்ச்சி. அன்பு-தொடர்புடையார்மாட்டுச் செல்லும் நெஞ்ச நெகிழ்ச்சி. பகவனுக்கு அணுக்கமில்லாதனவும் அணுக்கமுடையனவுமாக உயிர்கள் இருவகைப்படுதலின் இரண்டும் கூறினள். பூட்கை கொள்கை. நோன்பு-தவம். பகவன்-புத்தர். ஆனையின் என்றமையால் மலரும் பருவமில்லாத போதும் மலரம் என்றாளாயிற்று. உள்ளது-உள்ளிடத்ததாய்; மண்டபம் ஒன்றுண்டு. அதனகத்ததாய்ப் பீடிகை ஒன்றும் உளது என்க. விளிப்பாகிய அறை: இருபெயரொட்டு. தூநிறம்-தூய நிறம். ஆங்கு-அப் பீடிகையில். அரும்பு மலரும் மலர்ந்தவை வாடா மூசப்படா. தொல்யாண்டு பொருட்கேற்ற அடை. தொன்று தொட்டுத் தோன்றி மறையும் யாண்டு என்க.
இதுவுமது
69-79: மறந்தேன்...........அதுதான்
(இதன் பொருள்) மாதவி அதன் திறம் மறந்தேன்- மாதவி நங்காய் அப் பீடிகையின் தன்மை யொன்றனைக் கூற மறந் தொழிந்தேன்; கேளாய்-அதனையும் கூறுவேன் கேள்; ஓர் தெய்வம் கருத்திடை வைத்துக் கடம் பூண்டோர் ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடிதான் உறும்-யாதானும் ஒரு தெய்வத்தைத் தம் நெஞ்சத்தே திண்ணிதாக நினைந்து அத் தெய்வத்தை வழிபாடு செய்தலையே தங்கடமையாகக் கொண்டவர் அம் மேடையின்மேல் அத் தெய்வத்தின் திருவடிக்கிடுவதாக நினைத்து மலரை இட்டால் அஃது அவ்விடத்தினின்றும் மறைந்து அத் தெய்வத்தின் திருவடியைச் சென்று சேர்வதாம்; நீனைப்பிலராய் இடின்-யாரேனும் யாதொறும் தெய்வத்தையும் நினைத்தலின்றி அதன்மேல் மலரை வறிதே இடுவாராயின்; யாங்கணும் நீங்காது-அம் மலர் யாண்டும் போகாமல் அம் மேடையின் மேலேயே கிடவாநிற்கும்; ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இம் மேடையி லிவ்வாறு நிகழும் அற்புத நிகழ்ச்சிக்குக் காரணந்தான் என்னையோ என்று வினைவுவாயாயின் கூறுவேன் கேள். அதுதான்-அத் தாமரைப் பீடிகை தானும்; பண்டு மயன்-முன்பொரு காலத்தே அமரர் தச்சனாகிய மயன் என்பவன்; சிந்தை இன்றியும் செய்வினை உறும் எனும் வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும்-ஒருவன் இதனைச் செய்யவேண்டும் என்னும் நினைவின்றியே செய்ததொரு வினையின் பயனும் அவனுக்கு வந்துறாமல் வீண்போகாது என்னும் கோட்பாடுடைய வெவ்விய ஆற்றலுடைய தவத்தோர் தம் கொள்கை தவறென்று தமது அறியாமைக்கு வருந்த வேண்டும் என்றும்; சிந்தையின்று எனின் செய்வினை யாவதும் எய்தாது என்போர்க்கு ஏதுவாகவும்-தான் செய்யும் வினையின்கட் செய்யவேண்டும் என்னும் தன்முனைப்பு இல்லை யாயவழி ஒருவன் செய்த வினையின் பயன் அவனுக்குச் சிறிதேனும் வந்துறாது என்னும் கொள்கையுடையவர்க்கு அக்  கொள்கையைச் சாதிக்குமோர் ஏதுவாக வேண்டும் என்றும் கருதி; பயன்கெழு மாமலர் இட்டுக்காட்ட இழைத்த மரபினது- இருவிழியும் இவ்வாறு பயன்தரும் சிறந்த மலரை இட்டு மெய்யறிவு காட்டற் பொருட்டே இயற்றிய முறைமையினை உடைத்தாகலான்; அதுதான்-அப்பிடிகைதானும் இவ்வற்புதம் நிகழ்த்துகின்றது காண் என்றாள் என்க.
(விளக்கம்) அதன்திறம்-அப்பீடிகையின் சிறப்பு. கடம்-கடமை. ஒரு தெய்வத்தைக் கருத்திடைவைத்து என்றது ஒரு தெய்வத்தை வழி படுதெய்வமாக மதித்து என்றவாறு. அவர்- அத்தெய்வம். இதன் காரணம் இங்ஙனம் நிகழ்கின்ற அற்புதச் செயலுக்கான காரணம். வெந்திறல் நோன்பிகள் என்றது இகழ்ச்சி. அவராவார் ஆருகதர். அவர் நினையாது வினைசெய்யினும் அவ்வினையும் செய்தவனுக்குத் தன் பயனை ஊட்டாது கழியாதெனும் கோட்பாடுடையர். அதனை,
ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக்
குத்தி னானுக்கும் கொலைவினை யில்லெனப்
புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலம்
செத்த வாறது சிந்திக்கற் பாலதே
எனவரும் நீலகேசியானும் அதனுரையானும் உணர்க. (நீல-543) மற்றிச்செய்யுளே, செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாதென் போர் பௌத்தர் என்பதற்கும் எடுத்துக்காட்டாதலறிக.
ஆருகதர் உடலை வருத்தும் கடுநோன்புடையராதலின் அவரை வெந்திறல் நோன்பிகள் என்றிகழ்தபடியாம். அது-அப் பீடிகை.
மணிமேகலைக்குத் துணையாகச் சுதமதியும் செல்லுதல்
80-85: அவ்வனம்..........செல்வுழீஇ
(இதன் பொருள்) அணியிழை நின்மகள் அவ்வனம் அல்லது செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்-மகளிர்க்கு அணிகலன் போல்பவளாகிய நின்மகளாகிய மணிமேகலை மலர் கொய்தற்குச் செல்வதாயின் அவ்வுவவனத்திற்கு நேராகச் செல்வதல்லது பிற வனத்திற்குச் செல்லும் தகுதியுடையாள் அல்லள்; மாமலர் கொய்ய-சிறந்த மலரைக் கொய்துவருதற்கு; மணிமேகலையொடு அணியிழை நல்லாய்-உவவனத்திற்கும் அவள் தமியளாய்ப் போகவறியாள் ஆகலின் அவளோடு மாதவி நல்லாய்; யானும் போவல் என்று-யானும் துணையாகச் செல்வேன் காண் என்று தானே முறைபட்டு எழுந்து; அணிப் பூங்கொம்பர் அளளொடும் கூடி மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழி -அழகிய பூங்கொம்பு போன்ற அம் மணிமேகலையோடு கூடி மணி யொலிக்கும் தேர்களியங்கும் பெருந் தெருவின்மேல் சுதமதி அவட்கு வழிகாட்டிச் செல்லுகின்ற பொழுது என்க.
(விளக்கம்) அவ்வனம்-அந்த உவவனம். அணியிழையாகிய நின்மகள் என்க. செவ்வனம்-நேர். செம்மை-தகுதி. கொம்பர் போன்றவளோடு கூடி என்க.
களிமகனும் சமணத்துறவியும்
86-93: சிமிலி.........கேண்மோ
(இதன் பொருள்) சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்-உறியிலிட்டுத் தூக்கிய நீர்க்கரகத்தையுடையவனும் நுண்ணிதாகத் திரண்ட பிரம்மைப் பற்றியவனும்; தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்துளோன்-கேடில்லாத சிறப்பினையுடைய அராந்தாணம் என்னும் அருகன் கோயிலில் உறைபவனும் ஆகிய அமணசமயத்துத் துறவியொருவன்; நாணமும் உடையும் நன்கனம் நீத்து-நாணத்தையும் ஆடையையும் துவரத்துறந்து; காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி-கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க்கும் தன்னியக்கத்தால் இன்னல் உண்டாமோ என்று நிலத்தை மிதிக்கவும் அஞ்சித் செயலறவுடையனாய் ஏக்கமுற்று; உண்ணாநோன்பொடு உயவில் யானையின் மண்ணா மேனியன் வருவோன்றன்னை-உண்ணா நோன்பினாலே பசியால் வருந்தும் யானை போலக் கழுவாத உடம்பையுடையனாய் அவ்வீதியின்கண் வருபவனை;(103) ஓர் களி மகன்-கள்ளுண்டு களித்தானொரு கயவன்; வந்தீர் அடிகள் நும்மடி தொழுதேன்-எதிர்நின்று மறித்துக் கூறுபவன் அடிகேள் வருக வருக நீவிரே எளிவந்தருளினிர் அடியேன் நும்முடைய திருவடிகளைத்  தொட்டுக் கைகுவித்துத் தொழுதேன் ஏற்றருளுக எம்தம் அடிகள்- எங்கள் அடிகளே; எம் உரை-எளியேம் வேண்டுகோளையும் கேண்மோ-செவியேற்றருள்க என்றான் என்க.
(விளக்கம்) சிமிலி-உறி. கரண்டை-கரகம். நுழைகோல் நுண்ணியதிரட்சி. தவல்கேடு. அராந்தாணம்-அருகன்கோயில். காணாவுயிர்- கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரினம். அவற்றினை மிதித்துழிக் கொலைத்தீவினை வருமென்று வருத்தி ஏங்கினன் என்பது கருத்து. அவ்வாறு சமணசமயத்துறவோர் வருத்துதலை-
குறுந ரிட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
அறியா தடியாங் கிடுதலுங் கூடுங்
எறிநீரேடைகரை யியக்கிந் தன்னின்
பொறிமா ணலவனும் நத்தும் போற்றா
தூழடி யொதுக்கத் துறுநோய் காணின்
தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா
                                (சிலப். 10: 84-93)
எனவரும் கவுந்தியடிகளார் கூற்றானுமுணர்க. உயவல் யானை-வருந்துகின்ற யானை மண்ணா மேனி-கழுவாத உடம்பு. வந்தீர்-எளிவந்தீர். இஃது அசதியாடியபடியாம். களிமகன் என்னும் எழுவாய் (103) முன்னே கூட்டப்பட்டது. கேண்மோ-ஓ: முன்னிலையசை.
இதுவுமது
94-103: அழுக்குடை..........பின்னரும்
(இதன் பொருள்) அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது-அழுக்கோடு கூடிய நும்முடைய உடம்பினுள் புகுந்துறைகின்ற நுமதுயிரானது புழுக்கமிக்க அறையாகிய சிறையிலிடப்பட்டவர் போன்றுள்ளம் பெரிதும் வருந்தர்வண்ணஞ் செய்து; இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும் தன்வயின் தரூஉம்-(இதோ இக் கலத்திலுள்ள இக்கள்ளை நோக்குமின் இஃதெத்தகைய தோவெனின்) இஃது இம்மையில் நுகர வேண்டிய இன்பத்தையும் இம்மை மாறித் துறக்கத்தே நுகர்தற்கியன்ற அமரருலகவின்பத்தையும்
இவற்றிற்குத் அப்பாற் பெறக் கிடந்த கடையிலாவின்பம் என்று நுங்கள் இறைவன் கூறும் வீட்டின்பத்தையும் தன்னுள்ளிருந்தே வழங்கும் என்று; என் தலைமகன் உரைத்தது-இதன் பெருமை என் நல்லாசிரியர் செவியரிவுறுத்து எனக்கருளிய தொன்றும்; கொழுமடல் தெங்கின் விளைபூந்தேறலின் கொலையும் உண்டோ-வளமான மடல்களையுடைய தென்னையின் பூவாகிய பாளையிற் பிறந்த இந்தக் கள்ளில் கொலைத்தீவினையும் உண்டோ இல்லையாகலின்; மெய்த் தவத்தீரே-கொல்லாமை மேற்கொண்டொழுகா நின்ற வாய்மையான தவத்தையுடையீரே; உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம் என இக் காலத்திலுள்ள கள்ளை ஒருமுறை பருகி அதனொடு கலந்து ஒன்ணுபட்டு நும் நெஞ்சந் தெளித்து இந்த யோகத்தினது மிக்க பயனை நீயர் கண்டுகொண்டு எம்முரை பொய்யாயின் பின்னர் இக்கள்ளோடு எம்மையும் கையை அசைத்துப் போக்குமின் என்று கையை அசைத்துப் போக்குமின் என்று சொல்லி; உண்ணா நோன்பி தன்னொடும் சூள் உற்று உணம் என இரக்கும் ஓர் களிமகன்-உண்ணா நோன்பையுடைய அத் துறவி முன்னர் நின்று பருகீராயின் நும்மை விடேன் என்று வஞ்சினங்கூறி அடிகேள் சிறிது பருகிக் பாருங்கள் என்று வேண்டுகின்ற அக்களிமகள் பின்பும் என்க.
(விளக்கம்) சமணத்துறவோர் நீராடார் ஆதலின் அதனை விதந்து அழுக்குடையாக்கை என்றான். அழுக்கால் மயிர்த்துளைகளும் அடை பட்டிருத்தலின் அவர் உடம்பைப் புழுக்கறையோ டுவமித்தான். புழுக்கறை-கடிய குற்றமிழந்தோரை இட்டுவைக்கும் புழுக்கமிக்க நிலவறை எனவே அக்காலத்துச் சிறைக் கோட்டத்துள் இஃதொன்றென்றறிக. கடையிலாவின்பம் எனச் சமணர் கூறும் வழக்கிற்கேற்ப இறுதியிலின்பம் என்றான். கள்ளின் பெருமை கூறுவான் மூவகை யின் பத்தையும் இது தன்னுளளிருந்தே வழங்கும் என்றான். நுமக்குத் தலை மகனாகிய அருகன் போன்று எமக்கும் ஒரு முதல்வனுளன் அவனே இதனருமையை அறிவுறுத்தினன் என்பான் என்தலைமகன் உரைத்தது öன்றான். நுங்கன் கோட்பாடாகிய கொல்லா விரதத்திற்கும் கள் பொருந்தும் என்பான் தேறலிற் கொலையும் உண்டோ என்றான்; வினா அதன் எதிர்மறைபொருளை வலியுறுத்து நின்றது. யோகம்-இரண்டறக்கலத்தல். கள்ளின் வெறி உண்டவர்களை விழுங்கி அவர் அறிவை இல்லையாக்கித் தானேயாய் நிற்றலால் இதுவே பயனால் சிறந்ததொரு யோகம் என்பான் இவ்யோகத்தின் உறுபயன் என்றான். கண்டால் ஏற்றுக்கொண்மின் இன்றேல் எம்மையும் கையுதிர்த்துப் போக்குமின் என்றவாறு. சமணத்துறவோர் தந்நெறியொழுகாதாரைக் கண்டக்கால் அவரோடு வாயாற் பேசாமல் கையை அசைத்தே அகற்றுவர் ஆதலின் எம்மையும் கையுதிர்க்கொண்மின் என்றான். கையுதிர்-கையை அசைத்தல். உண்ணாநோன்பி-இரண்டுவாவும் அட்டமியும் முட்டுப் பாடும் பட்டினி விட்டுண்ணும் விரதி. களிமகன் பின்னரும், மையலுற்ற மகன் பின்பும் வருந்தி(115), நிற்குநரும் என இயையும்.
ஒரு பித்தன் செயல்
104-115: கணவிர......நிற்கநரும்
(இதன் பொருள்) கணவிர மாலையிற் கட்டிய திரள் புயன்-அலரிப் பூமாலையாலே கட்டப்பட்ட திரண்ட புயங்களையுடையவனும்; குவிமுகிழ் எருக்கின் கோத்த மாலையன்-கூம்பிய அரும்புகளையுடைய எருக்கம் பூவினால் தொடுக்கப்பட்ட மாலையினை மார்பில் அணிந்தவனும்; சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ்சினை ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்-இடையிலே நைந்து சிதைந்த கந்தையோடு மிகவும் உயர்ந்த நெடிய மரக்கிளைகளினின்று உலர்ந்து தாமே உதிர்த்த சுள்ளிகளை ஒடித்து அக்கந்தல் துணியில் மடிகோலிக் கட்டிய ஆடையை உடையவனும் ஆகி; பலரோடும் பண்பு இல்மொழி உரைத்து-எதிர்வரும் ஏதிலார் பலரோடும் வாய்தந்த பொருளற்ற மொழிகளைப் பேசி; ஆங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழூஉம் அங்கனம் பேசும் பொழுதே அழுவான் தரையிலே விழுவான் அழுது ஏதேனும் பிதற்றுவான் கூவுவான் கை கூப்பித் தொழுது வீழ்ந்து வணங்குவான் பின்னர் எழுவான்; சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும்-நின்றவாறே சுழலுதலும் செய்வான் பொள்ளென அவ்விடத்தினின்று விரைந்து ஓடுதலையுஞ் செய்வான்; ஒரு சிறை ஒதுக்கி நீடலும் நீடும்-ஒரு பக்கத்தே ஒதுக்கி நெடிது நிற்றலும் செய்வான்; நிழலொடு மறலும்-தனது நிழலொடு பகைத்து மறவுரை பல கூறுவான்; மையல் உற்ற மகன் பின் இவ்வாறு பித்தேறி உழலுகின்ற ஒருவன் பின்னே; வருந்திக் கையிறு துன்பம் கண்டு நிற்குநரும்-அவன் நிலைக்குப் பெரிதும் இரங்கி வருந்தி அவன் திறத்திலே தாம் கையற்று நிற்றற்குக் காரணமான அவன் துன்பங்களைக் கண்டு நிற்பவர்களும் என்க.
(விளக்கம்) கணவிரமாலை-அலரிப்பூமாலை. எருக்கிற் கோத்த மாலை-எருக்கம் பூக்கள் கோக்கப் பெற்ற மாலை என்க. சிதவற்றுணி-கந்தற்றுணி. ததர்வீழ்பு-செறிந்து வீழ்ந்தவையாகிய சுள்ளி. சுழலலும் சுழலும் என்றது அதன் மிகுதி தோற்றுவித்து நிற்கும் ஒரு சொன்னீர்மைத்து ஓடலும் ஓடும் என்பதுமது. நிழலொடு மறலுதல்-நிழலைப் பகைவனைப் பார்க்குமாறு சினந்து நோக்கி வீரம் பேசிப் போரிடுவான் போலாதல்.
பேடியாடல்
116-125: சுரியல்..........காண்குநகும்
(இதன் பொருள்) நீள் நீலமளந்தோன் மகன்-நெடிய நிலத்தை ஓரடியாலே அளந்தருளிய திருமாலின் அவதாரமாகிய கண்ணன் மகனாகிய காமன் அவதாரமாகிய பிரத்தியும்நன் என்பவன்; முன்-பண்டு தன் மகனாகிய அகிருத்தினைச் சிறைவீடு செய்தற் பொருட்டு சென்று; வாணன் பேர் ஊர் மறுகிடை-வாணாசுரனுடைய பெரிய நகரமாகிய சோ வினது வீதியிடத்தே; சுரியல் தாடி மருள்படு பூங்குழல் பவளச் செய்வாய்த் தவள வாள் நகை-சுரண்ட தாடியையும் கண்டோர் மயங்குதற்குக் காரணமான அழகிய கூந்தலையும் பவளம் போன்று சிவந்த வாயினையும் வெள்ளிய ஒளி தவழும் எயிறுகளையும்; ஒள் அரி நெடுங்கண் வெள்ளி வெள் தோட்டுக் கருங் கொடி புருவத்து-ஒள்ளிய செவ்வரி படர்ந்த நீண்ட கண்ணையும் மிகவும் வெண்மையான சங்கினாற் செய்த தோடணிந்த செவியினையும் கரிய ஒழுங்குபட்ட புருவத்தையும்; மருங்குவளை பிறைநுதல்-இருபக்கத்தும் வளைந்த பிறைத்திங்கள் போன்ற நெற்றினையும்; காந்தன் அம் செங்கை ஏந்து இள வன முலை அம் நுண் மருங்குல் அகன்ற அல்குல்-காந்தள் மலர் போன்ற அழகிய சிவந்த கையினையும் அணந்துநிற்கும் இளமையும் எழிலுமுடைய முலையினையும் அழகோடு நுணுகிய இடையினையும் அகலிதாகிய அல்குலையும்; இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து-மகளிர்க்கியன்ற ஆடை மரபினைக் கடந்த முழந்தாளளவிற்றாகிய வட்டுடையினையும் தோளினும் முலையினும் எழுதிய பத்திக் கீற்றின் அழகினையுமுடைய; பேடிக்கோலத்து-ஆண்மையழிந்து பெண்மையவாவிய பேடியின் கோலம் பூண்டு; ஆடிய பேடு காண்குநரும்-ஆடியருளிய பேடு என்னும் புறநாடகமாடுவார் ஆடுங்கூத்தினைக் கண்டு களிப்போரும் என்க.
(விளக்கம்) சுரியல்-சுருண்ட. கண்டோர் மருள்படும் கூந்தல் என்க. நகை-எயிறு. அரி-செவ்வரி. தோடு-ஒருவகைக்காதணி. கொடி-புருவம். மகளிர் உடுக்கும் ஆடை மரப்பினை இகந்த வட்டுடை. இகத்தல்-கடத்தல். வட்டுடை-முழந்தாள் அளவிற்றாகிய ஒருவகை உடை. வாணன் பேரூர்-வாணாசுரன் நகரம்; இதற்குத் சோநகரம் என்பது பெயர். நிலமளந்தோன்-திருமால்; ஈண்டுக் கண்ணன் மேற்று. அவன் மகன் பிரத்தியும் நன். இவன் மகன் அநிருத்தன் சிறையிடப்பட்டான். அவனை மீட்கச் சென்றுழி, பிரத்தியும்நன் அந் நகரமறுகில் பேடிக்கோலங்கொண்டு கூத்தாடினான். அக்கூத்திற்குப் பேடு என்று பெயர் இதனைப் புறநாடகம் பதினொன்றனுள் ஒன்று என்ப. வாணன் பேரூரில் ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடியாடலும் (சிலப்-6-54-5 என்பர் இளங்கோ. பிரத்தியும்நன் காமனின் அவதாரம் ஆதலின் காமர் என்றார், இனி இதனோடு
சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்
அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண்
விரிவெண் டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை ஆடமை பணைத்தோள்
வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப்
பாடகச் சீறடி ஆரியப் பேடி
எனவரும் இளங்கோ வாக்கு (27:181-6) ஒப்புக்காணத் தகும்.
கண்கவர் ஓவியம்
126-131: வம்ப.........நிற்குநரும்
(இதன் பொருள்) வம்பமாக்க-இந்திர விழாக் காண்டற் பொருட்டு அந் நகரத்திற்கு வந்துள்ள புதிய மாந்தர்; கம்பலை மூதூர்-ஆரவார மிக்க பழைய அப் பூம்புகார் நகரத்திலே காட்சி பலவும் கண்டு வருபவர் அத்தேர்வீதியின் இருமருங்கும் அமைந்த; சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கல்லாலியன்ற உயர்ந்து நிற்கின்ற நெடிய ஏழடுக்கு மாளிகை ஒவ்வொன்றினும்; மை அறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி-குற்றமற்ற வடிவத்தையுடைய எத்தகைய உயிர்களுக்கும் அவ்வவற்றிற்கு உவமையாமாறு தங்கலைத்திறத்தைக் காட்டி; விளக்கத்து வெள்சுதைதீற்றிய விளக்கமான வெண் சாந்தினையுடைய சுவரின் கண்; வித்தகர் இயற்றிய-ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் வரைந்துள்ள; கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்-காண்போர் கண்களைத் தம் அழகாலே கவருமியல் புடைய ஓவியங்களைக் கண்டு வியந்து நிற்போரும் என்க.
(விளக்கம்) சுடுமண்-செங்கல். நெடுநிலைமனை-எழுநிலை மாட மாளிகை. படிவம்-வடிவம். வானவர் முதலா எவ்வகையுயிரும் என்றது அறுவகைப் பிறப்பினையும் உடைய உயிர்களையும் என்றவாறு. ஓவியங் காண்போர்க்கு இப்படித்தான் இந்திரன் இருப்பான்; இப்படித்தான் திருமகள் இருப்பாள் என அவ்வோவியங்கள் உவமமாகும்படி கலைத்திறத்தால் காட்டி என்க. பன்னிறங்கொண்டு வரையவேண்டுதலின் வெண்சுதை வேண்டிற்று. விளக்கத்து வெண்சுதை என மாறுக. விளக்கத்து இயற்றிய என இயைப்பினும் ஆம். எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதினுணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் என,(மதுரை-556)பிறகும் ஓதுதல் காண்க.
தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வர்
132-145: விழாவாற்று.......நிற்குநரும்
(இதன் பொருள்) விழா ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில்-இந்திரவிழா இனிது நிகழுமாறு அணி செய்து அதன்வழிப் படுத்தப்பட்ட மாபெருந் தெருவிடத்தே; பொன் நாண் கோத்த நல்மணிக் கோவை ஐயவி அப்பிய நெய்மணி முச்சி-பொன்னாலியன்ற நாணிலே கோக்கப்பட்ட அழகிய மணிக் கோவையும் சிறுவெண் கடுகினை அப்பிய நெய்யணிந்த உச்சியில் அமைந்த; மயிர்ப்புறம் சுற்றிய கயில் கடை முக்காழ் பொலம் பிறை-மயிரைக் கொண்டையாகக் கட்டி அதைச் சுற்றிக்கட்டப்பட்ட கோக்கியை நுனியிலுடைய முப்புரியாகிய முத்துமாலையும் அதனோடு கட்டிய பொன்னாற் செய்த பிறையும்; சென்னி நலம் பெறத்தாழ-தலை அழகு பெறுமாறு தாழ்ந்து கிடப்பவும்; செவ்வாய்க்குதலை மெய் பெறு மழலை சிந்துபு சில்நீர் ஐம்படை நனைப்ப-பொருள் விளங்காததும் எழுத்துருவம் பெறாததும் ஆகிய மழலை மொழியோடு சிந்தித் தம் வாயூறல் தம் மார்பிடைக் கிடக்கும் ஐம்படைப்பூந்துகில்-மறைக்க வேண்டிய உறுப்பை மறைத்துக் காக்கும் கருத்தாலன்றி வாளாது அழகின் பொருட்டு இடையிலே சுற்றிவிடப்பட்ட உடையாகிய அழகிய துகிலானது; தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர-தொடுக்கப்பட்ட மணிக்கோவையாலியன்ற உடையினோடு சேர்ந்து அசையா நிற்பவும்; தளர் நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-இயல்பாகவே தளர்ந்து நடக்கும் அவர்தம் நடை தாங்கா வண்ணம் மிகுதியாக அணிந்துவிடப்பட்ட விளங்குகின்ற அணிகலன்களையுடைய தத்தம் மக்களை; பொலம் தேர்மிசைப் புகர்முக வேழத்து-பொன்னாலியன்ற தேரின்மீது அமைத்தமையால் மேலும் உயர்ந்துள்ள புள்ளிகளையுடைய முகத்தையுடைய பொன்னாலியன்ற யானையினது பிடரிடத்தே; இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி ஆலமர் செல்வன் மகன் விழாக் கால் கோள் காண்மினோ என-விளங்குகின்ற பொன் வளையலணிந்த மகளிர் சிலர் தரைமீதும் தேரின்மீதும் நின்று ஏற்றி வைத்து ஆலமர் செல்வனாகிய நம் இறைவன் மகன் முருகன் இதோ வீதிவலஞ் செய்தல் ஆகிய விழாவைத் தொடங்குகின்றான். எல்லீரும் வந்து காணுங்கோள் என்று ஏனைய ஆயமகளிர்க்குக் காட்ட; கண்டு நிற்குநரும்-அங்ஙனமே வந்து அக் காட்சியைக் கண்டு மகிழ்ந்து நிற்போரும் என்க.
(விளக்கம்) விழா வாற்றுப்படுத்த வீதி என்றது விழா நிகழ்த்துதற்குத் தகுந்ததாக அணிமுதலியவற்றான் நெறிப்படுத்தப்பட்ட வீதி என்றவாறு. அது தேர்வீதியாதலின் கழிபெருவீதி என்றார். ஐயவி-வெண்சிறு கடுகு. இது பேய் முதலியவற்றால் துன்பம் வாராமைப் பொருட்டு சிறுவர் தலையில் அப்பிவிட்டபடியாம். புதல்வர்க்குக் காவற் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்குதுயில் வதியவும் எனப் பிறாண்டும் ஓதுவர்(7:57-9)முச்சியில் கொண்டை யாகப் புனைந்த மயிர்ப்புறஞ் சுற்றி என்க. கயில்-கோக்கி;(கொக்கி) கயிற்கடை-கோக்கியில்.கடை: ஏழாவதன் உருபு கயிற் கடைப்பிறை என்க. நலம்-அழகு. குதலை-பொருள் விளக்காச் சொல். மெய்-எழுத்துருவம். சின்னீர் என்றது வாயூறலை. ஐம்படை-திருமாலுடைய சங்கு முதலிய ஐந்து படைகளின் வடிவமாகச் செய்து மகவிற்கு மார்பின்கண் அணியும் ஒருவகை அணிகலன். அற்றம்-சோர்வு; இடக்கரடக்கு. மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்து மானங்காத்தற் பொருட்டன்றி வாளாது அழகின் பொருட்டுச் சுற்றிய பூந்துகில். மணிக் கோவைகளைத் தூங்கவிட்டு ஆடைபோல அற்றங் காத்தற்கு அரையிற் கட்டும் அணியை உடுப்பு என்றார். தம்முடம்பையே தாங்காது தளரும் நடைக்கு மேலும் பொறையாக அணியப்பட்ட பூண் என்பார் நடைதாங்காப்பூண் என்றார். தேர்-பொற் சிறுதேர் அதன் மிசை பொன் யானையை ஏற்றி அதன் பிடரில் புதல்வரை ஏற்றிவைத்து முருகன் விழாத்தொடங்குகின்றார்கள் காண்மினோ என்றவாறு. ஆலமர் செல்வன் மகன்-முருகன்.
மணிமேகலை மலர் கொய்யப் போவாளைக் கண்டு
மாந்தர் பெரிதும் மனம் மறுகுதல்
146-158: விராடன்.......இனைந்துக
(இதன் பொருள்) விராடன் பேரூர் விசயன் ஆம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்-விராடனுடைய தலை நகரத்து வீதியிலே செல்லாநின்ற விசயனாகிய பேடியைக் காணுதற்கு அவாவிச் சூழ்ந்துக்கொண்ட ஆரவாரமுடைய அந்நகரத்து மாந்தரைப் போன்று; மணிமேகலைதனை வந்து புறஞ் சுற்றி சுதமதியோடு மலர் கொய்ய அவ்வீதியிலே செல்லாநின்ற மணிமேகலையைக் கண்ட அந்நகரத்து மக்கள் பலரும் அவள் பக்கலிலே வந்து சூழ்ந்துகொண்டு; அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவு இலள் செய்யாக் கோலத்தோடு இவளைச் செயற்கரிய தவநெறியிலே செலுத்திய மாதவியும் ஒரு தாய்மையுடையள் ஆவாளோ? அவள் தாயல்லள் பெரிதும் கொடியவள், பண்பற்றவள்! ஈங்கு இவள் மலர் வனம்தான் புகின்-இவற்றே இவள் மலர்ப் பொழிலினூடே புகுந்தக்கால்; ஆங்கு உள நல் இள அன்னம் மடந்தை தன் நடை நாணாது வல்லுந கொல்லோ- அப் பொழிலில் வாழ்கின்ற அழகிய அன்னப் பறவைகள் இவள் நடையைக் கண்டு நாணி ஓடுவதல்லது நாணாமல் அங்கு வாழ வல்லமையுடையன ஆகுமோ? ஒருதலையாய் ஓடியேபோம்; ஆங்குள மாமயில் தையல் முன் வந்து நிற்பன தன்னுடன் சாயல் கற்பன கொலோ- அப் பொழிலிடத்தே வாழ்கின்ற அழகிய மயில்களுள் வைத்து நாணாது துணிந்து வந்து நிற்கின்ற மயில்கள் ஒரோவழி இவளிடத்தேயுள்ள சாயலைத் தாமும் கற்க விரும்புவன ஆதல் வேண்டும்; உள பைங்கிளிகள் தாம் பாவை தன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ இசையுந அல்ல-அப் பொழிலிலே மழலை பேசித்திரிகின்ற பச்சைக்கிளிகள் தாமும் இனிமையினாலே இவளுடைய மொழி தரு மினிமையை விஞ்சி விடமாட்டா ஏன்? ஒப்பாவனவும் இல்லை; என்று இவை சொல்லி-என்று இவையும் இவை போல்வனவும் தத்தம் வாய்தந்தனவெல்லாம் பரிந்து சொல்லி யாவரும் இனைந்து உக- எத்தகையோரும் இவள் பொருட்டுப் பெரிதும் நெஞ்சழிந்து ஒழுகுமாறு வருந்த என்க.
(விளக்கம்) பன்னிரண்டாண்டு காட்டிலுறைந்த பின்னர் ஓராண்டு பிறர் அறியாவண்ணம் கரந்துறைதல் வேண்டும் என்று துரியோதனனுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பாண்டவர் விராடநகரத்தில் உள்வரிக்கோலம் பூண்டுறைந்தனர் என்பது மகாபாரதம். அப்பொழுது அருச்சுனன் பேடியுருத்தரித்து அந்நகரத்திற் செல்ல அப்பேடியைக்காண நகரமாந்தர் ஆரவாரத்துடன் வந்து அப் பேடியைச் சூழ்ந்தது ஈண்டுத் துறவோர் பள்ளியினின்றும் மலர்வனம் புகச்செல்லும் மணிமேகலையை மாந்தர் சூழ்ந்தமைக்குவமை.
கம்பலை-ஆரவாரம். அணியமை தோற்றம்- அணிகலன் இல்லாமலும் திகழும் இயற்கை அழகு. இதனைச் செய்யாக்கோலம் என்பர் இளங்கோ. தாயோ என்னும் வினா எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது. வல்லுந-பொறுக்கும் வன்மையுடையன. ஓ:எதிர்மறை கற்பன கொல்லோ என்புழி, கொல்லும் ஓவும் அசைச்சொற்கள். வினாவாக்கி-கற்கவியலா தெனினுமாம். எஞ்சல-விஞ்சா; மிகா. இசையுநவும் அல்ல எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கது. இசையுந ஒப்பாவன. இவை என்றது தாயோ கொடியள் என்பது முதலியவற்றை.
மணிமேகலையும் சுதமதியும் மலர்வனம் புகுதல்
159-171 :செந்தளிர்......மணிமேகலையென்
(இதன் பொருள்) செந்தளிர்ச் சேவடி நிலம் வடுவுறாமல்-சிவந்த தளிர்போன்று சிவந்த அடியினாலே நிலத்தில் சுவடு தோன்றாதபடி நடந்து; குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்-குராமரமும் வெண் கடப்ப மரமும் குருந்தும் கொன்றையும் திலகமரமும் வகுள மரமும் சிவந்த காலையுடைய வெட்சியும் நரந்த மரமும் நரகமரமும் பரந்து மலரும் புன்னையும்; பிடவமம் தளவமும் முடமுள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்-குட்டிப்பிடவங் கொடியும் செம்முல்லையும் வளைத்த முள்ளையுடைய தாழையும் வெட்பாலையும் செருந்தியும் மூங்கிலும் வளவிய காலையுடைய அசோக மரமும்; செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண்பகமும் எரிமலர் இலவமும்-செருந்தி மரமும் வேங்கை மரமும் பெருஞ்சண்பக மரமும் நெருப்புப் போன்ற மலரையுடைய இலன மரமும் ஆகிய இவையெல்லாம்; விரிமலர் பரப்பி-மலர்ந்த மலர்களைப் பரப்பியிருத்தலாலே; வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செங்கைப்படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-ஓவியப் புலவர் வரைந்த விளக்கமான கைத் தொழிலாகிய சித்திரங்கள் அமைந்த செய்கையையுடைய படா அத்தினால் போர்க்கப்பட்டதை ஒத்துக்காணப்பட்ட; உவவனம் தன்னை தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு-உவவன மென்னும் அத் தெய்வப் பூம்பொழிலை அணுகியவுடன் அதனைக் கைகூப்பித் தொழுது இதுதான் அம்மலர் வனமென்று தனக்குக் காட்டிய சுதமதி என்பாளொடு; மணிமேகலை மலர் கொய்யப் புகுந்தனள்-மணிமேகலை மலர் கொய்தற்கு அவ்வனத்தினுள் புகுந்தனள் என்பதாம்.
(விளக்கம்) குரவமுதலாக இலவ மீறாக் கூறப்பட்ட மரங்களும் கொடிகளும் பிறவும் பகவனதாணையால் ஒரு சேர மலர்ந்து பரப்பித் தோன்றுதற்கு ஓவியப்புலவர் திறம்பட வரைந்த சித்திரங்களையுடைய துகில் உவமை.
தொழுதனள்: தொழுது முற்செற்றம். பகவனதாணையிற் பன்மரம் மலர்தலும் மயனிழைத்த பீடிகையை உடையதாதலும் ஆகிய தெய்வத் தன்மைபற்றிச் சுதமதி அதனை அணுகியவுடன் கைகூப்பித் தொழுது காட்டினள் என்க.
இனி இக் காதையை மாதவியுரைத்த வுரைமுன் தோன்றி மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாகலின் வெதுப்பக் கலங்கி அழித்துருட்டி நீர் ஆட்ட மாதவி நோக்கிக் கொணர்வாயென்றலும் சுதமதி கூறும் காமன் நடுங்கும் ஆடவர் அகறலும் உண்டோ நின்றிடிற் பேடியர் அன்றோ அன்றியும் யான் வரும் காரணங் கேளாய் கொய்வேனை எடுத்தனன் எழுந்தனன் படுத்தனன் ஆயினேன் நீங்கினன் ஆதலால் நின்மகள் செவ்வியிலள் போகின் ஆங்குளர் செல்லார் எய்தார் உவவனம் ஒன்றுண்டு யானும் போவல் என்று செல்வுழி நிற்குநரும் காண்குநரும் நிற்குநரும் இனைந்துகக் காட்டிய சுதமதியோடு மணிமேகலை கொய்யப் புகுந்தனள் என இயைத்திடுக
மலர்வனம் புக்க காதை முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


4. பளிக்கறை புக்க காதை

நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு
அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை புகுந்தனளாக, அவள்பால் பெருங்காதல் கொண்டிருந்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அவளைத் தன் தேரிலேற்றிவரத் துணிந்து தேரோடு அவ் வுவவனத்தை அணுகியபொழுது மணிமேகலை அவன் வரவினைத் தேரின் ஒலியாலுணர்ந்து அக்கோமன் தன்பால் கன்றிய காமமுடையவனைதலைப் பண்டே கேள்வியுற்றிருந்தனளாகலின் பெரிதும் அஞ்சி அவ்  வுவவனத்திருந்த பளிக்கறையினுட் புகுந்து தாழக் கோலையிட்டுக் கொண்டதும் பின்னர் ஆங்கு நிகழ்ந்தனவும் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.
இதன்கண்-மணிமேகலைக்குச் சுதமதி அம்மலர்ப்பொழிலின் அழகைக் காட்ட அவள் கண்டு மகிழ்தலும், உதயகுமரன் மதங்கொண்ட யானையை அடக்கி மறவர் சூழத் தேரிலேறி மணிமேகலை சென்ற வீதயில் வருபவன், ஆங்கு எட்டிகுமரன் வாயிலாக மணிமேகலை மலர்வனம் புகப்போன்மை அறிந்து அங்ஙனமாயின் ஆங்குச் சென்று அவளை என் தேரிலேற்றி வருகுவென், என்று சூள்மொழிந்து தன் தேரை உவவனம் நோக்கிச் செலுத்தி அதனை அணுகுதலும் அதன் ஆரவாரத்தால் அங்ஙனம் வருபவன் அரசன் மகனே யாதல் வேண்டும் என்று மணிமேகலை சுதமதிக்குக் கூறுதலும், அவள் அஞ்சி நடுங்கி மணிமேகலையை அங்குள்ள பளிக்கறை மண்டபத்துட் புகுத்திப் பளிக்கறையின் அகத்தே தாழக்கோல் இட்டுக் கொண்டிருக்கச் செய்தபின் அதனாலே ஐந்து விற்கிடைத் தொலைவில் நிற்றலும், கழிபெருங்காம வேட்கையுடன் உதயகுமரன் தேரினின்றிழிந்து உவவனத்துள்ளே மணிமேகலையைத் தேடி வருபவன் அவளைக் காணாமல் சுதமதியை மட்டும் கண்டு அவள்பால் மணிமேகலையின் இயல்பினைத் தனது வேட்கை தோன்ற வினவுதலும், சுதமதி அச்சத்தோடு அவ்வரசிளங்குமரனுக்கு மக்கள் யாக்கையின் இழிதகைமையை எடுத்தோதுதலும், அதனைக் கேட்கும் பொழுதே மணிமேகலையைத் துருவித் திரியும் அவன்  கண்ணில் பளிக்கறை புக்க பாவையின் உருவம் பளிங்கினூடே வந்து புகுந்ததுவும் பிறவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.
பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்!
மாசு அறத் தெளிந்த மணி நீர் இலஞ்சி
பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப  04-010
கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா
கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்!
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்!
மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்  04-020
அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்! எனப்
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து  04-030
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல
காழோர் கையற மேலோர் இன்றி
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்
ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது  04-040
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக்
காலவேகம் களி மயக்குற்றென
விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி
கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி
அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன்
மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்  04-050
நாடக மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்!
யாது நீ உற்ற இடுக்கண்! என்றலும்  04-060
ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல்
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது  04-070
இது யான் உற்ற இடும்பை என்றலும்
மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல
மாட வீதியில் மணித் தேர் கடைஇ
கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்
தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான் என  04-080
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை!
ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு? என
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர் இழை தன்னை   04-090
கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி
பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்
பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும்
தாமரைச் செங் கண் பரப்பினன் வரூஉம்
அரசு இளங் குமரன் ஆரும் இல் ஒரு சிறை
ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன்
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?
விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?  04-100
செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி
வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்?
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப்
பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ?  04-110
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து  04-120
மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின்
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்  04-125
உரை
(1-முதலாக 25-இறுதியாக, உவவனத்தினுள் புக்க மணிமேகலைக்கு அதன் எழிலையும் அங்குறையும் பறவை முதலியவற்றையும் சுதமதி காட்டிக் கூறுவதாய் வரும் ஒரு தொடர்)
மயிலாடரங்கு
1-9: பரிதி.......காண்பன காண்
(இதன் பொருள்) பரிதி அம் செல்வன் விரிகதிர் தானைக்கு இருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்-ஞாயிற்றுக் கடவுளாகிய உலக முழுதாள்கின்ற அழகிய அரசனுடைய திசையெலாம் விரிந்த கதிர்களாகிய படைமறவர்க்கு அஞ்சிப்புகுந்த இருளானது அப் படைமறவர்க்கு அஞ்சிப்புகுந்த இருளானது அப் படைமறவர்களாலே நாற்றிசையும் சூழ்ந்து முற்றுகையிடப்பட்டமையால் உள் புகுந்தோர் இது பகலோ இரவோ என்று மருள்தற்குச் காரணமான
அம் மலர்ப் பொழிலினூடே; தும்பி குழல் இசை கொளுத்திக் காட்ட-தும்பிகள் வேய்ங்குழலின் இசையைக் கூட்டிக் காட்டா நிற்பவும்; வண்டு இனம் மழலைநல் யாழ் செய்ய-வண்டுக் கூட்டங்கள் கேள்விக்கினிய அழகிய யாழிசையை உண்டாக்கவும்; வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்-ஞாயிற்றின் ஒளி ஒரு பொழுதும் நுழைதல் அறிந்திலாததும் குயில்களும் நுழைத்தே செல்லுதற் கியன்ற செறிவுடையதுமாகிய அப் பொழிலிடத்தே; மயில் ஆடு அரங்கின் மந்தி காண்பன காண்-மணிமேகலாய்! அதோ மயிலாகிய நாடகக் கணிகை கூத்தாடா நின்ற கூத்தாட்டரங்கின் கண் மந்தியாகிய அவையோர் இருந்து காண்பனவற்றைக் காண்பாயாக என்றாள் என்க.
(விளக்கம்) பரிதி-ஞாயிறு. செல்வன்-அரசன். அழியாத ஒளிச் செல்வன் என்பார், அஞ்செல்வன் என்றார். அவன் பகையாகிய இருளை நாற்றிசையும் பரந்து சென்று அழித்தலின் விரிகதிர் தானையாயிற்று. பகையாகிய இருள் புக்குக் கரந்திருத்தலான் அத் தானையால் வளைப் புண்டிருக்கும் அரணாகிய பொழில் என்றவாறு.
தும்பி-வண்டு. இசை கொளுத்துதல்-இசையைப் பொருத்துதல். மழலை-இன்பம். வெயிலாகிய பகை நுழையவியலாது. குயில் இருட்கின மாதலின் அவைமட்டும் புகும் பொதும்பர் எனவும் ஒருபொருள் தோன்றிற்று. கணிகையாகிய மயில் எனவும் அவையோராகிய மந்தி எனவும் கூறிக்கொள்க.
அரசவன்னம் கொலுவிருத்தல்
7-13: மாசற.........காணாய்
(இதன் பொருள்) மாசு அறத் தெளித்த மணிநீர் இலஞ்சிப் பாசடைப் பரப்பின்-அழுக்கற்றமையாலே நன்கு தெளிந்துள்ள படிகமணி போன்று தூயதாகிய பொய்கையாகிய தன் அரண்மனையகத்தே பசிய இலையாகிய கம்பளம் விரிக்கப்பட்ட திருவோலக்க மண்டபத்தில்; பல்மலர் இடைநின்று ஒரு தனி ஓங்கிய விரைமலர்த்தாமரை ஆங்கு-பல்வேறு மலர்க் கூட்டங்களாகிய இருக்கைகளுள் வைத்துத் தனக்கே சிறந்துரிமையுடைய தொரு பேரழகோடு உயர்ந்து மலர்ந்துள்ள நறுமணங் கமழுகின்ற தாமரையாகிய அரசு கட்டிலின் மேலே; இனி அரச அன்னம் இருப்ப-காட்சிக்கினிதாக அன்னமாகிய அரசன் கொலுவீற்றிருப்ப; கரை நின்று ஆலும் ஒரு மயிலுக்குக் கம்புட் சேவல் கனைகுரன் முழவு ஆக-அவ்விலஞ்சியின் கரையாகிய ஆடலரங்கினின்று கூத்தாடுகின்ற ஒப்பற்ற மயிலாகிய விறலியினது ஆடலுக்கியையச் சம்பங்கோழிச் சேவலாகிய முழவோனுடைய மிக்கவொலி மத்தள முழக்கம் ஆக; கொம்பர் இருங்குயில் விளைப்பது காணாய் பூங்கொம்பிலுள்ள கரிய குயிலாகிய பாணன் பாடுவதனையும் காண்பாயாக என்றாள் என்க.
(விளக்கம்) மணி-படிகமணி. பாசடை-பசியஇலை. இது பச்சைக் கம்பளமென்க. இருக்கும் இருக்கைக்குப் பல்வேறு இடைநின்று ஒரு தனி ஓங்கிய விரைமலர்த் தாமரை ஆங்கு-பல்வேறு பறவைகள் இருக்கும் நீர்பூக்கள் உவமை; தனிநின்றோங்கிய விரைமலர்த் தாமரையாகிய அரசு கட்டில் என்க. கரை-ஆடலரங்கு எனவும், மயில் விறலி எனவும் கொள்க. கம்புட்சேவல்-சம்பங்கோழியிற்
சேவல்: இதனை முழவோன் எனவும், குயிலை பாணனாகவும் கூறிக் கொள்க. என்னை அன்ன அரசன் கொலுவீற்றிருத்தலால், இங்ஙனம் இனிதின் இயம்பினர். இது குறிப்புவமம் என்னும் அணி. விளிப்பது-பாடுவது. விளித்த இன்னமிர்துறழ்கீதம் (சீவக-1941)என்புழியும் அஃதப்பொருட்டாதலறிக.
வேறு பல காட்சிகள்
14-25: வயங்குதேர்...........காட்ட
(இதன் பொருள்) தேர் இயங்கு வீதி எழுதுகள் சேர்ந்து வணங்கு ஒளி மழுங்கி நின் மாதர் முகம் போல்-யாம் வந்த தேரோடும் வீதியிலே கம்பலை மாக்கள் சூழ்தலாலே எழுந்த புழுதி படிந்தமையாலே விளங்கும் ஒளி மழுங்கியிருக்கின்ற நின்னுடைய அழகிய முகத்தைப் போன்று; கரை நின்று ஓங்கிய கோடு உடைத்தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால் வெள் சுண்ணம் ஆடிய இவ்விலஞ்சியன் கரையிலே நின்றுயர்ந்துள்ள கொம்பின் மலர்ந்துள்ள தாழம்பூவினது கொழுவிய அகமடலில் உதிர்ந்த மிக்க வெள்ளிய துகள் மூடியதனால் தன்னொளி மழுங்கிய; விரை மலர்த்தாமரை இது காண்-மணமுடைய மலராகிய தாமரை மலரிதனையும் காண்பாயாக; மாதர் நின்கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடிசெங்கையின் அலர்ந்த தாமரை-அழகிய நின்னுடைய கண்ணை மலர் என நினைத்து வந்து வீழ்ந்து தாதுண்ண முயலுகின்ற வண்டுகளின் மேலோச்சிக் கடிகின்ற நின் சிவந்த கையைப் போன்று மலர்ந்துள்ள தாமரை மலரின் மேல்; செங்கயல் பாய்ந்து பிறழ்வன-சிவந்த கயல் மீன்கள் பாய்ந்து பிறழ்கின்றவற்றை; அம் சிறைவிரிய ஆங்குக் கண்டு எறிந்து அது பெறா அது-வானத்தே தனது அழகிய சிறகுகள் விரிய அசையாமல் பறந்து அப்பொழுது கண்டு சிறகொடுக்கி விரைந்து எறிந்தும் அம் மீனைப் பற்றமாட்டாமல்; இரை இழந்து-தனக்கியன்ற இரையினை இழந்து; வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண் என-உளம் வருந்தி மீண்டு போகும் அழகிய அச்சிரற் பறவையின் செயலையும் அழகையும் காண்பாயாக என்று; பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட-அப் பூம்பொழிலின் அழகையும் பொய்கையின் அழகையும் மணிமேகலைக்குச் சுதமதி காட்டா நிற்ப; என்க.
(விளக்கம்) இதன்கண்-மணிமேகலைக்குக் கூறுகின்ற சுதமதியின் கூற்றை ஞாபகவேதுவாக வைத்து நம்மனோர்க்கு நினைவூட்டும் செய்தியும் உண்டு. அச் செய்தியை ஈண்டுக் கருப்பொருட் புறத்தே தோற்றுவிக்கும் இப் புலவர் பெருமான் வித்தகம் பெரிதும் வியக்கத்தக்கதாம்.
அது வருமாறு: தாமரை மலரில் பிறழ்ந்த செங்கயல் கண்டு வானத்தேசிறைவிரியக்காத்துநின்ற மணிச்சிரல் தனக்கு எளிதாகக்கிட்டு மோரிரை என்று கருதி விரைந்து அதன் மேல் வீழ்ந்து பற்றியும், அவ் விரை பெறாமல் மறிந்து விண்ணில் மீண்டது என்னுமிதன் புறத்தே,மலர்வனம் புக்கமையால் மணிமேகலை தனக்கு எளிதாகக் கிடைத்து விடுவாள் என்று கருதி அவள்மேற் சென்ற அரசிளங்குமரன் தன்கருத்து நிறைவேறாமல் வாளாது மறிந்து (இறந்து) விண்ணேறினன் என்னும் பின்னிகழ்ச்சியை இப்புலவர் பெருமான் நம்மனோரை நினைக்குமாறு செய்கின்றார். இதுஞாபக வேது எனப்படும். புலவர்நினைந்த தொன்றனைக் கதையோடு தொடர்பு படுத்தாமலே பயில்வோருளத்தே தோற்று விக்கக் கருதி அதற்கு ஏதுமாத்திரையே புறத்தே தோற்றுவித்தலாம். இஞ்ஞாபகம் காரணமாகச் சிரல் இரைபெறாது இழந்து வருந்தி மறிந்து நீங்கியது என்று விதந்தோதியிருத்தலறிக. மறித்து நீங்கும் என்ற சொல் பொய்தது உதயகுமரன் திறத்திலே இறந்தொழிந்தான் என்னும் பொருட்கியைதற் பொருட்டேயாம் என்பது நுண்ணுணர்வற் கண்டு கொள்க.
நகரத்தின்கண் காலவேகம் என்னும் யானை மதமயக்குற்றுச் செய்யும் செயல்கள்
26-34: மணிமே........போல
(இதன் பொருள்) மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி-இவ்வாறு மணிமேகலை அந்த மலர்ப் பொழிலின் இயற்கையழகினைக் கண்டு மகிழாநிற்கும் பொழுது; மதிமருள் வெள்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன்-திங்கள் மண்டிலம் போன்ற வெண் கொற்றக் குடையையுடைய சோழ மன்னனுடைய மகன் உதயகுமரன் என்பான்(செய்தன சொல்வாம்); உருகெழு மூதூர்-பகைவர்க்கு அச்சந்தருகின்ற அப் பூம்புகார் நகரத்திலே; (44) கால வேகம் களிமயங்கு உற்றென-காலவேகம் என்னும் களிற்றியானையானது காமத்தாற் களித்தற்குக் காரணமான மதவெறிப்பட்டபடியாலே; நீயான் நடுங்க நடுவுநின்ற ஓங்கிய கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து-மாலுமியானவன் செயலறவினாலே திகைத்து நடுங்கும்படியும் மரக்கலத்தின் நடுவிடத்தே நின்றுயர்ந்த பாய்மரம் முறிந்து போம்படியும் செறியக் கட்டின கட்டவிழ்ந்து கயிறுகள் புரியற்றுப் போகவும்; இதை வயிறு பாழ் பட்டாங்குச் சிதைந்து ஆர்ப்ப-பாயின் நடுவிடம் கிழிந்து பாழ்வெளியாய் விடவும் பாய் சிதைந் தொழியவும் அகத்துள்ள மாக்கள் எல்லாம் அழுது ஆரவாரம் செய்யவும்; திரை பொரு முந்நீர் இயங்குதிசை அறியாது-அலைகள் மோதா நின்ற கடலிடத்தே தான் செல்ல வேண்டிய திசையையும் அறியமாட்டாமல்; யாங்கணும் ஓடி-தள்ளிய திசைகளிலெல்லாம் ஓடியலைந்து; மயங்கு கால் எடுத்த-சுழற்காற்றாலியக்கப்படுகின்ற; வங்கம் போல-மரக்கலத்தைப் போன்று, என்க.
(விளக்கம்) மதிமருள் என்னும் அடைமொழி வெண்குடைக்குவமை யாதலோடன்றி  மதிமருள்.....சிறுவன் என்பதனோடும் இயைவிக்கலா மாதலின் ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே பிக்குணியாகிய மணிமேகலையின் பால் கன்றிய காமமுடையனாய் அறிவுமயங்கிய அரசிளங்குமரன் எனவும் பொருள் கோடற்கும் இயைந்து நிற்றலால் இஃது இரட்டுறமொழிதல் என்னும் உத்தியின் பாற்படுதலும் உணர்க. எழுவாய் சேய்மையிற் கிடந்தமையின் ஈண்டுக்கொண்டு கூட்டப்பட்டது. காலவேகம் என்பது பட்டத்தியானையின் பெயர். களிமயக்கம்-காமவெறியாலுண்டான அறிவு மயக்கம். நீயான்-மாலுமி. கூம்பு-பாய்மரம். இதை வயிறுபாழ்பட என இயைக்க. இதை-பாய். நடுவிடம் கிழிந்து வெளியாகிவிட என்றவாறு. நீயான்-யானைப்பாகனுக்கும்,மரக்கலம்-யானைக்கும்,மயங்கு கால்-களிமயக்கத்திற்கும் உவமைகளாக உணர்க. மயங்குகால்-சுழற்காற்று மூதூர்க்குக் கடலுவமை.
இதுவுமது
35-44: காழோர்.........படர்ந்தென
(இதன் பொருள்) காழோர் கை அற மேலோர் இன்றி-குத்துக் கோற்காரர் தம்மாலாந்துணையும் குத்தியும் மடங்காமையாலே செயலற்றொழியத் தன் மேலிருந்து செலுத்தும் பாகர் யாருமில்லாமல் செய்து; பாகின் பிளவையின் பணை முகந்துடைத்து-அப் பாகர் தோட்டியாற் குத்திப் பிளந்த புண்ணின்பரிய வாயினின் றொழுகும் குருதியைத் தன் கையாற் றுடைத்துக் கொண்டு; கோ இயல் வீதியும் கொடித் தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்குறுத்து-அரசற்கியன்ற வீதியிடத்தும் கொடி உயர்த்திய தேரோடும் வீதியிடத்தும் அங்காடித் தெருவிடத்தும் புகுந்து மாபெருங் கலக்கத்தை மக்கட்குண்டாக்கி; ஆங்கு இருபால் பெயரிய உருகெழு மூதூர்-அவ்வாறே பட்டினப்பாக்கமும் மருவூர்ப் பாக்கமும் என்னும் இருவகைப் பெயரையுடைய அச்சம் பொருந்திய அம் மூதூரின்கண், யாங்கணும்; ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது-ஒரு பக்கத்திலே படாமலும் ஓரிடத்திலே நில்லாமலும்; பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுலமாக்களும் அலவுற்று விளிப்ப-பாகுத் தொழிலோரும் பறையறை வோரும் பந்தர் போல் நிழலிட்டுத் தன்னைச் சூழ்ந்து பறக்கும் பருந்துக் கூட்டமும் ஆற்றா மாந்தரும் மனஞ்சுழன்று துன்பக் குரல் எழுப்பும்படி; நீலமால்வரை நிலத்தோடு படர்ந்தென நீல நிறமுடைய மலையொன்று நிலத்திலே இயங்குகினாற் போன்று இயங்காநிற்ப, என்க.
(விளக்கம்) காழ்-குத்துக்கோல். மேலோர்-பிடரிலிருந்து செலுத்தும் பாகர். பாகின் பிளவை-பாகர் தோட்டியாற் குத்திப்பிளந்த புண். முகம்-புண்ணின் வாய். காழோரும் பாகரும் தன் முகத்திற் புண்களைக் கையினாற்றுடைத்து எனினுமாம். பீடிகைத்தெரு-அங்காடித்தெரு. இருபாற்பெயரிய என்றது ஈண்டுப் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இருபகுதியாகிய பெயரையுடைய என்பதே கருத்து. என்னை ஒருபாற் படா அது என்பதனால். இனி காவிரிப்பூம்பட்டினம் சம்பாபதி என்னும் இருபாற் பெயரிய மூதூர் என்றல் ஈண்டுச் சிறப்பில்லை.(கால.....படர்ந்தென என்னும் அடி கூட்டிப் பொருள் கூறப்பட்டது.)
உதயகுமரன் மறச்செயல்
45-50:விபேரி...........வருவோன்
(இதன் பொருள்) அரசு இளங்குமரன் விடுபசிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி-யானையால் நிகழுகின்ற இன்னலைப் பணிமாக்கள் அறிவித்தவுடனே இளவரசனாகிய உதயகுமரன் தனக்கெனவே விடப்பட்டிருக்கின்ற விரைந்த செலவினையுடையதொரு குதிரையில் ஏறி விரைந்து அக்களிற்றியானையின் பால் சென்றடைந்து; கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி-சினமிக்க அக் களிற்றியானையின் மதவெறியை அடக்கித் தளையிடுவித்து; அணிந்தேர்த் தானையொடு-அழகிய தேர்ப்படையோடு; தானும் மணித்தேர் கொடுஞ்சி பற்றி-தானும் ஒரு மணிகட்டி அணி செய்யப் பெற்ற தேரில் ஏறி அத் தேரிலுள்ள இருக்கையில் அமராமல் தன்னைக் காண விரும்பும் மக்களுக்கு நன்கு காட்சி நல்குதற் பொருட்டு அவ் விருக்கையைக் கையாற் பற்றி நின்றவாறே, கார் அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியில் சாற்றினன்வருவோன்-தன்னைக் காண்பவர்க் கெல்லாம் தான் கார் காலத்தே மலருங் கடப்பமாலை யணியும் முருகவேள் அல்லன் சோழமன்னன் மகனே என்னும் உண்மையைத் தான் அணிந்திருக்கின்ற ஆத்திமாலையினாலே அறிவித்துத் தேரூர்ந்து வருகின்றவன்; என்க.
(விளக்கம்) விடுகுதிரை பரிக்குதிரை எனத்தனித்தனிகூட்டுக. தனக்காக விடப்பட்ட விரைந்த செலவையுடைய குதிரை என்றவாறு. இனி, குதிரைப்படையொடு கூட்டாமல் ஏறியூர்தற் பொருட்டு விடப்பட்ட குதிரையுமாம். கொடுஞ்சி தாமரைவடிவிற்றாகச் செய்து தேர்த்தட்டில் இடப்பட்ட இருக்கை. காலவேகத்தை அடக்கிய வெற்றிபற்றித் தன்னைக் காண்டற்கு அவாவி இருமருங்கும் கூடிநிற்கும் மாந்தர் நன்கு கண்டு களித்தற் பொருட்டு இருக்கையிலமராமல் அதனைப் பற்றிநின்றவாறே வருபவன் என்பது கருத்து. இக்காலத்தும் ஊர்வலம்வருந் தலைவர் இவ்வாறு ஊர்தியில் இராமல் எழுந்து நின்று வருதலைக் காணலாம். உதயகுமரனைக் காண்போர் இவன் முருகனோ உதய குமரனோ என்று ஐயுறுதல் கூடும். ஆதலின் அங்ஙனம் ஐயுறாமைப் பொருட்டு உதயகுமரன் ஆத்திசூடி வருகின்றான் என்னும் இது தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.
கடம்பன்-முருகன். ஆரங்கண்ணி-ஆத்திமாலை. இது சோழ மன்னர்க்குரிய அடையாளப் பூமாலை.
இனி, கொடுஞ்சி என்பதற்கு உ.வே.சா ஐயரவர்கள், தாமரைப்பூ வடிவமாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் என எடுத்துக்காட்டி, மேலும் இது தாமரைமொட்டு வடிவமுள்ளது என்றும் விளக்கினர். இவ்விளக்கம் விளங்காவிளக்கமாம். என்னை! கொடுஞ்சி என்பது தேரிலிடப்படும் இருக்கையே அன்றிவேறன்று. இவ்வுண்மை அவ்விளக்கங்களால் விளக்கமாகாததோடு அது தாமரை மொட்டு வடிவமுள்ளது என்பது இருக்கைக்குப் பொருந்தாமையும் உணர்க. இனி அஃது இருக்கையே என்பது சிலப்பதிகாரத்தில் காணப்பட்டது. அதனை-
கடும்படை மாக்களைச் கொன்று களங்குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட  (26:12-14)
என்புழி கொடுஞ்சி என்பது களிற்றெருத்தமும் குதிரையின் வெரிநும் (முதுகு) போன்று மறவர் இருக்குமிடம் என்பது நன்கு விளக்கமாதல் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.
உதயகுமரன் எட்டி குமரனை வினாதல்
56-60: நாடக......என்றலும்
(இதன் பொருள்) நாடக மடந்தையர் நலம் கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்-நாடகக் கணிகையர் வாழ்கின்ற அழகு பொருந்திய வீதியில் வரும்பொழுது அவ்வீதியிலுள்ள தொரு பொன்னாலியன்ற கலைத்தொழிற் சிறப்பமைந்த ஒரு மாளிகையின் மேல்மாடத்தின்கண், பெளித்த கால் போகுபெருவழிச் சாளரத்தின் அருகிலே; வீதி மரங்கு இயன்ற பூ அணைப்பள்ளி-தெருப்பக்கமாக இடப்பட்டதொரு மலர்ப்பள்ளிக் கட்டிலின் மேல்; தகரக் குழலாள் தன்னொடு மயங்கி-மயிர்ச் சந்தனம் நீவிய கூந்தலையுடைய தன் காமக்கிழத்தியோடே மனம் மயங்கி; மகரயாழின் வான் கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைத்த பாவையின் இருந்தோன்-மகர யாழினது சிறந்த கோட்டினை ஒரு கையால் பற்றிய வண்ணம் எழுதுகோளால் எழுதபட்டதோர் ஓவியமே போன்று சிறிதும் இயக்கமின்றி அமர்ந்திருந்த; எட்டிகுமரன் தன்னை-எட்டிப்பட்டம் பெற்ற கொழுங்குடிச் செல்வனாகிய வணிக விளைஞனை உதயகுமரன் கண்டு வினவுபவன்; மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்-நங்கையொருத்தியொடு பெரிதும் மயங்கி இருக்கின்றாய்; நீ உற்ற இடுக்கண் யாது என்றலும்-நண்பனே நீ இவ்வாறு மயங்கியிருத்தற்கு இப்பொழுது நீ எய்திய துன்பம் என்னையோ என்று வினவுதலும்,என்க.
(விளக்கம்) ஆடகம்-ஒருவகைப் பொன். பொளித்த-குடைந்த. கால்-காற்று. பெரிய சாளரம் என்பார் பெருவழி என்றார். அஃது அம்மாளிகையின் மேன்மாடத்து வீதிப்பக்கமாக இருந்தது என்பதும், அச் சாளரத்தின் அருகே பள்ளிக்கட்டில் இடப்பட்டிருந்ததும் என்பதும் அதன்மேல் எட்டிகுமரன் தன்னை மறந்திருந்தான் என்பதும் அவன் மருங்கே அவன் காமக்கிழத்தியும் வாளாதிருந்தாள் என்பதும் அச் சாளரத்தின் வழியே உதயகுமரன் ஒவியம் போன்றிருக்கும் அவனைக் கண்டு வினவிளன் என்பதும் அவன்றானும் செல்வக் குடியிற் பிறந்த பெருநிதிக் கிழவன் என்பதும் தண்டமிழ் ஆசான் சாத்தனார் சொற் சுருங்கத் திறம்பட விளக்கியிருத்தல் உணர்க.
எட்டி-வணிகருட் சிறந்தோருக்கு அரசனால் வழங்கப்படும் ஒரு பட்டம். குமரன் என்றது உதயகுமரனுக்கு நண்பனாகும் அவனது இளமை கூறியவாறு.
மகிழ்ந்திருக்க வேண்டிய செவ்வியில் மயங்கியிருக்கின்றனை என்பாள் மாதர் தன்னொடும் மயங்கினை இருந்தோய் என்றான். இங்ஙனம் இவன் மயங்குதற்குக் காரணம் மனத்துன்பமே ஆதல் வேண்டும் என்னும் ஊக்கத்தால் இவ்வாறு வினாவினன். இவ் வூகத்திற்கு இவன் மாதர் அத்துன்பத்திற்குக் கழுவாய் ஏதும் செய்யாமல் வாளாவிருந்தமையே ஏதுவாயிற்று என்க.
எட்டிகுமரன் காரணம் இயம்புதல்
61-71: ஆங்கது.......என்றலும்
(இதன் பொருள்) ஆங்கு அதுகேட்டு-அவ்வாறு வினவிய உதயகுமரன் குரல் கேட்டவுடனே மயக்கத்தினின்று விழிப் படைந்தவனாய் எட்டி குமரன் வீங்கு இளமுலையொடு தான் பாங்கிற் சென்று தொழுது ஏத்தி-துணுக்குற் றெழுந்த அவ் வெட்டி குமரன் பருத்த கொங்கைகளையுடைய தன் காமக் கிழத்தியோடே விரைந்து உதயகுமரன் தேர் மருங்கே எய்திக் கை கூப்பித் தொழுது கொற்றவ நீடுழி வாழ்க! நின் வரவறியாது கெட்டேன் என்று தன் பிழைக்கு வருந்திப் பின்னும் புகழ்ந்தேத்தி; மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன் துளிக்கும் மலர் மாலை அணிந்த அக் கோவிளங்குமரனுக்கு; எய்தியது உரைப்போன்-விடையாக அங்கு நிகழ்ந்ததனைக் கூறுபவன், வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல் தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமேகலையொடு-ஒழுங்காக வரிந்து கட்டப்பட்ட செப்புக் கலத்தினூடே வைக்கப்பட்டிருந்த மலர் போன்று தன் பருவத்திற்குத் தகுதியான தனது பேரழகு வாடி இத் தெருவிலே நடந்து சிறிது முன்பு சென்றவளாகிய மாதவி ஈன்ற மணிமேகலையைக் கண்டதனாலே; கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி-அக் காட்சி வாயிலாய் அவள் தந்தையாகிய கோவலன் எய்திய கொடிய துயரம் என்னெஞ்சிலே தோன்றவே அது கலங்கிற்றாக அது காரணமாக என்நெஞ்சமானது தன்பால் நிலை பெற்றிருந்த பண்ணிற்கியன்ற நரம்பினை இயக்கும் தன் பண்பிற்கு மாறாக; வெம்பகை நரம்பில் என்கைச் செலுத்தியது; அதற்குப் பகை நரம்பிலே என் கையைச் செலுத்திவிட்டது; இது யான் உற்ற இடும்பை என்றலும்-இதுவே யான் பெருமானுடைய வரவும் அறியாதவண்ணம் பெரிதும் மயங்கி இருந்தமைக்கு எய்திய காரணமாம்; பெருமான் நீடு வாழ்க என்றறிவுறுத்தலும் என்க.
(விளக்கம்) ஆங்கது கேட்டு என்றது அங்குநிகழும் ஆரவாரமும் அறியமாட்டாதிருந்த அவன் மயக்கமிகுதி தோன்ற நின்றது. வீங்கிள முலை-காமக்கிழத்தி. எய்தியது-நிகழ்ந்த காரணம். பௌத்தப்பள்ளியின் கட்டுக்காவன் மிகுதிபற்றி அதனுள் அடங்கி இருந்த மணிமேகலையை வகைவரிச் செப்பினுள் வைகிய மலர் என்றான். மணிமேகலை யினால் தோன்றிய கொடுந்துயர் என்றது, கோவலன் கொலைப்பட்டதனை. துயர் தோன்ற நெஞ்சு தான் மேற்கொண்டிருந்த இசைத்தொழின் நீர்மையில் நீங்கித் தன்னை அறியாது பகைநரம்பில் கையைச் செலுத்திப் பண்ணையும் கொடுத்தது இவ்வாற்றால் மயக்கமுற்றேன்: பகைநரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவதும் மூன்றாவதுமாகும். நின்ற நரம்பிற்கு ஆறும் மூன்றும் சென்று பெற நிற்பது கூடமாகும் என்பது அடியார்க்கு நல்லார் மேற்கோள்(சிலப்-8;33-4)
உதயகுமரன் அதுகேட்டு மகிழ்ந்து மணிமேகலையைக் கைப்பற்றத் துணிதல்
72-78: மதுமலர்............இசைத்தலும்
(இதன் பொருள்) மதுமலர்த் தாரோன் மனம் மகிழ்வெய்தி-தேன் பொதுளிய மலர்மாலையணிந்த அவ்வரசிளங் குமரன்றானும் மணிமேகலை மலர்வனத்திற்குச் சென்ற செய்தியை எட்டிகுமரன் வாயிலாய்க் கேட்டுப் பெரிதும் மனம் மகிழ்ச்சி அடைந்து; ஆங்கு அவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி வருவேன் என்று அவற்கு உரைத்து; நண்பனே நன்று சொன்னாய் அம்மலர் வனத்தே யானும் சென்று அம் மணிமேகலையை என் அழகிய தேரில் ஏற்றி கொண்டு மீண்டும் இங்கு வருவேன் காண் என்று அவ் வணிகனுக்கு அறிவித்துப் பின்னர்; ஆங்கு ஓடு மழை கிழியும் மதியம் போல மாடவீதியின் மணித்தேர் கடை இவானத்தே இயங்குகின்ற ஒரு முகிலைக் கிழித்தியங்கும் திங்கள் மண்டிலம் போன்று மாட மாளிகைகளையுடைய வீதியிலே தன் தலையிலே அணிந்து கொள்ளும் உவவனம் என்னும் அப் பூம்பொழிலின் வாயிலை அணுகிய பொழுது; அத் தேர் ஒலி மாதர் செவி முதல் இசைத்தலும்-அத் தேர் செய்யும் ஆரவாரம் அப் பொழிலகத்திருந்த மணிமேகலையின் செவியிடத்தே சென்று ஒலித்தலாலே என்க.
(விளக்கம்) உதய குமரன் மணிமேகலையின்பால் இயற்கையாகவே காதலுடையவனா யிருந்தும் சித்திராபதியால் தூண்டப்பட்டிருந்தும் அவள் தவப்பள்ளியிடத்தாளா யிருத்தல் அறிந்து அவளை நாடி உயிர் குடித்தோன்றலாகிய தான் அங்குப் போதல் பழிதருஞ் செயலாம் என்றுணர்ந்து அதுகாறும் மனமடக்கியிருந்தான் ஆதலின் அவள் இப் பொழுது பூம்பொழிலிலிருக்கின்றமை எட்டிகுமரனால் அறிந்து அங்குச் சென்று அவளைப் பற்றிவருதல் கூடும் என்று மனமகிழ் வெய்தினன் என்றவாறு. எட்டிக்குமரன் உதயகுமரனுக்கு நண்பனாதலானும் அச் செயல் அவனுக்கு உடன்பாடாம் என்பதனானும் அவளைத் தேரேற்றி ஈங்கு வருவேன் என்று அவனுக்குக் கூறினன் என்க.
உதயகுமரன் தன்னைக் காணவந்து குழுமிய நகரமாந்தர் குழுவினூடே தேரூர்ந்து வந்தவன் இச் செய்தி கேட்டவுடன் தன்தேரோடு ஒத்தியங்கும் அக்கூட்டம் விலகுமாறு தன்தேரைக் கடவித் தனியே செல்கின்றன் ஆகலின் அதற்கு ஓடுமழை கிழியும் மதியம் போலத் தேர் கடைஇ உவமை எடுத்தோதினர். மதியம் தேர்க்கும் முகில் மக்கட் கூட்டத்திற்கும் உவமை. இவ்வுவமையின் அழகுணராது இதற்குத் தத்தம் வாய்தந்தன கூறுவாருமுளர்: வானத்தே முகிலாற் சூழப்பட்டதிங்கள் அம் முகில்களியங்குதல் தோன்றாமல் தான் இயங்குதல் போன்று காட்சிதரும். முகில்கள் திங்களைவிட்டு நீங்கிய பொழுதில் திங்கள் முகில்களைக் கிழித்துக்கொண்டு தனித்து விரைந்தியங்குமாறு போலே காட்சி தரும். இது மயக்கக் காட்சியே ஆயினும் ஆதனையே உவமையாக எடுத்தனர் என்று நுண்ணிதின் அறிந்திடுக. மக்கட்குழு மேனின்று நோக்குவர்க்குக்  கூந்தலும் குஞ்சியும் செறித்து முகில் போறலும் உணர்க.
தேரொலிகேட்ட மணிமேகலை நிலையும் சுதமதி அவளைப் பளிக்கறை புகுத்தலும்
79-88: சித்திரா.............இரீஇ
(இதன் பொருள்) ஆயிழை சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான் என-அன்னாய் ஈதொன்று கேள் சித்திராபதியோடு தொடர்புற்று உதயகுமரன் என்னும் வேந்தன் மகன் என்பால் காமுற்ற நெஞ்சையுடையனாக இருக்கின்றான் என்று; வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளிந்த மாற்றம் கேட்டேன்-வயந்தமாலை என் அன்னையாகிய மாதவிக்கு ஒரு நாள் அறிவித்த செய்தியை யான் என் செவியாலே கேட்டிருக்கின்றேன்; ஆதலின் ஈங்கு என் செவிமுதல் இசைத்தது ஆங்கு அவன் தேர் ஒலி போலும்-ஆகையால் இப்பொழுது என் செவியால் கேட்ட ஒலி அம் மன்னன் மகன் என் பொருட்டு ஊர்ந்து வருகின்ற தேரின் ஒலியே போலும்; என் செய்கு-அங்ஙனமாயின்யான் என் செய்வேன் என அமுது உறு தீங்சொல் ஆயிழை உரைத்தலும்-என்று பெரிதும் அஞ்சி அமிழ்தம் போன்ற இனிய சொல்லையுடைய மணிமேகலை சுதமதிக்குக் கூறாநிற்ப; சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல்-சுதமதி அவள் கூறிய அஞ்சுதகு சொற்களைக் கேட்டு நடுங்குகின்ற மயில்போன்று நடுங்கி; பாவையைப் பளிக்கறை மண்டபம்புகுக என்று ஒளித்து-பாவை போலும் மணிமேகலையை விரைத்து அழைத்துக் கொடுபோய்ப் பளிக்கு அறை மண்டபத்தினூடே புகுவாயாக என்று கூறிப் புகுவித்து மறைத்து; அறை உள்ளகத்து தாழ்கோத்து இரீஇ-அப் பளிக்கறையின் உள்ளே அமைந்த தாழக்கோலைக் கோத்துக் கொண்டு இருக்கச் செய்து என்க.
(விளக்கம்) சித்திராபதியோடுற்று என்றது சித்திராபதி அவ்விழி முயலுதலின் அவளோடு தொடர்புற்று என்பதுபடநின்றது. சித்திராபதி அங்ஙனம் முயலுதல் பின்னரும் அறியப்படும். கிளிந்த-கூறிய போலும்: ஒப்பில் போலி. ஈங்கு-இப்போழுது செய்கு-செய்வேன்; என்செய்கு என்றாள் உய்தற்கு வழிகாணாக் கையறவினால். வேடர்வரவு கண்டு துளிக்குறுமயில் என வருவித்துக் கூறலுமாம். கோத்து-கோப்பித்து எனப் பிறவினைப் பொருட்டாய் நின்றது. என்னை? மணிமேகலையை உள்ளகத்தே தாழ்கோத்துக் கொண்டிருப்பித்து என்பதே கருத்தாகலான். தாழக் கோல் உள்ளகத்தேயே அமைந்திருக்குமாகலின் சுதமதி அதனைக் கோத்த லியையாமையும் உணர்க. புறத்திருந்தும் உள்ளகத்தே தாழ் கோத்தலும் கூடுமாம் பிறவெனின் அது பாதுகாவலுக்கு அமையா தென்க. இரீஇ-இருப்பித்து.
உதயகுமரன் சுதமதியைக் காண்டல்
89-96: ஆங்கது............அறிந்தேன்
(இதன் பொருள்) ஆங்கு அது தனக்கு ஓர் ஐவிலின் கிட்ககை நீங்காது நின்ற நேரிலை தன்னை-அப் பளிக்கறையினின்றும் ஏறத்தாழ ஐந்து விற்கிடைத் தொலைவிற்கு அப்பாற் செல்லாமல் அணுக்கமாகவே நின்ற சுதமதி; கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்தி-செய்தி யறியாமையாலே தன் தேரினைக் கலீர் என்னும் ஆரவாரத்தோடு தொடர்ந்து வந்த படைமறரோடே தனியே விரைந்து வந்த தன் தேரினையும் நிறுத்தித் தேரினின்று மிழிந்து தமியனாய் உவவனத்தினுட் புகுந்து; பல்மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்-பல்வேறு மலர்களையுடைய அப்பூம்பொழிலினூடே ஒரு கதிரவன் தோன்றி வருமாறு போலே காணப்பட்டு மணிமேகலை நிற்குமிடத்தை அறிதற் பொருட்டு; பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம்-பூமரங்கள் செறித்த சோலையினூடும் பக்கங்களினும் செய்குன்றுகளின் பாலும் தனது செந்தாமரை மலர் போன்ற கண்ணின் பார்வையைப் பரப்பிப் பார்த்து வருகின்ற; அரசிளங் குமரன் அம் மன்னவன் மகன் ஆங்கு நின்றவளை நோக்கி; ஆரும் இல் ஒரு சிறை நின்றாய்-யாரும் இல்லாத தனியிடத்தே நின்றனை உன் திறம் அறிந்தேன். உன்னைப் பற்றிய செய்தி யான் முன்னமே அறிந்துள்ளேன் என்றான்; என்க.
(விளக்கம்) அது-பளிக்கறைமண்டபம். வில்-ஒரு நீட்டலளவை ஒருவில்-நான்கு முழம். ஐவிலின் கிட்ககை என்றது, ஏறத்தாழ இறுபது முழத்தொலைவு என்பதாயிற்று. மன்னர் முதலியோரைத் தொழுபவர் ஐந்துவிற்கிடைக்கு அப்பால் நின்றுதொழவேண்டும் என்னும் மரபு முளது. இதனை, ஐவிலினகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு எனவரும் சிந்தாமணியானு முணர்க(1704). தானையொடு நிறுத்தி என்றமையால் தானே மறவரும் விறைந்தோடும் வேந்தன் மகன் தேரினை விடாது தொடர்ந்து வந்துற்றமை பெற்றாம். பகல்-கதிரவன். கண்பரப்பினன்-கட்பார்வையை இடையீடின்றிச் செலுத்தி. பரப்பினன்: முற்றெச்சம். மணிமேகலை எங்குளள் என்று ஆராய்வான் அவ்வாறு யாண்டும் நோக்கி வந்தான் என்பது கருத்து. 60-நேரிழை தன்னைக் கண்ட என ஒரு சொல்பெய்து இயைக்க. தனியே நின்றனை நீ யார் எனவினவத் தொடங்கியவன் அணுகிய பொழுது அவள் சுதமதியாதலை அறிந்து கொண்டமையின் உன்திறமறிந்தேன் என்கின்றான் நீ மணிமேகலைக்குத் துணையாக வந்தசெய்தியும் அறிந்துளேன் என்பது குறிப்பு.
மன்னவன் மகன் மணிமேகலையின்றிறம் சுதமதியின்பால் வினாதல்
97-104: வளரிள உரையென
(இதன் பொருள்) வளர் இள வள முலை மடந்தை தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ-நன்று நங்காய் வளருகின்ற இளைய அழகிய முலையினையுடைய மணிமேகலை தன் காதலன் காமத்தாலே தளர்கின்ற செவ்வியைத் தானே தெரிந்து கொள்கின்ற தண்மை யுடையளாயிருப்பாளல்லளோ? மெல்லியல் விளையா மழலை விளைந்து முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன கொல்-அம் மெல்லியலாளுக்கு எழுத்துருவம் பெறாத இள மழலை எழுத்துருவம் பெற்றுச் செவ்வாயில் பாற்பற்கள் விழுந்து எயிறுகள் முளைத்து வளர்ந்து தம்முள் ஒத்து முத்துக்கள் போன்று நிரல்பட்டு விட்டன வன்றோ?; செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்கும் கொல் சிவந்த கயல்மீன் போன்ற அவளுடைய சிவந்த கண் அவளது செவியினருகே அடிக்கடி ஒடிப்போய் வெவ்விய மலரம்புகளையுடைய நெடிய காமவேள் தம்மைக் கொண்டு உலகினைக் மருட்டும் வியத்தகு தானே ஒரீஇ தமியள் இங்கு எய்தியது உரை என-இனி இவை கிடக்க மணிமேகலை பெரிய துறவோர் உறைகின்ற இடத்தினின்றும் தானே நீங்கித் தமியளாய் இவ் வுவவனத்திற்கு வந்த தற்குரிய காரணம் என்னை? இதற்கு மட்டுமேனும் விடை தருக என்று பணிப்ப என்க.
(விளக்கம்) ஈண்டு உதயகுமரன் சுதமதியை நோக்கி மணிமேகலையின் உறுப்புகளின் இயல்பையும் அவளியல்பையும் வினாதல் அவற்றின் இயல்பினை அறிந்துகொள்ளுங் கருத்தால் வினவும் அறியாவினாக்கள் அல்ல, அவையெல்லாம் அவள்பாலெழுந்த காமவேட்டை மிகுதியினாலே; இவ்வாறு அவற்றின் இயல்புகளைத் தன்னுள்ளே நினைந்து நினைந்து தானே இன்புறுதற் பொருட்டாம். ஆதலாற்றான் வினவியதொன்றற்கு விடை வருதலை எதிர்பாராமல் மேலும்மேலும் வினாக்களை அடுக்கிக் கொண்டே போகின்றான். இங்ஙனம் ஆதல் கைக்கிளைத்திணைக்கு இயல்பு. இதனை சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க.(அகத்-53).
தளரிடை-காமத்தால் நெஞ்சந்தளரும் செவ்வி. விளையாமழலை-இளமழலை முத்துக்கள் போன்று நிரல்பட்டனவா? என்றவாறு. சங்கத்தை நீங்கிவந்தமை கருதித் தமியள் இங்கு எய்தியது என்றான். இவ்வினாவிற்கு மட்டும் ஒருதலையாக நீ விடைதருக என்பான் ஈங்கு எய்தியது உரை என்றான்.
சுதமதி உதய குமரனுக்குக் கூறும் நயவுரைகள்
105-112: பொதியறை......கேட்டி
(இதன் பொருள்) மதுமலர்க் கூந்தல் சுதமதி பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி-அதுகேட்ட சுதமதி புழுக்கறையிடத்தே அகப்பட்டுக் கொண்டவர் வீடுபெற விழிகாணாமல் வருந்துதல் போன்று உள்ளத்தினூடே பெரிதும் வருந்தி; உரைக்கும்-உதய குமரனுக்குக் கூறுவாள்; இளமை நாணி முதுமை எய்தி உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு-தான் இளையனாயிருத்தலால் இவன் முறைகூற அறியான் என்று முறை வேண்டினார் கருதுவர் என்று எண்ணி நாணமெய்தி முதியோனாக உள்வரிக் கோலம் பூண்டு அவையமேறி யிருந்து வழக்குரைக்குஞ் சான்றோர் பாராட்டும் வண்ணம் தீர்ப்புரை வழங்கிய திருமாவளத் தான் வழித் தோன்றலாகிய பெருமானுக்கு; அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-அறிவு பற்றி யாதல் சால்புடைமை பற்றியாதல் அரசியல் வழக்குப் பற்றியாதல் கையிற் செறிய வளையலணியும் பேதை மகளிராகிய எம்மனோர் ஏதேனும் அறிவுறுத்துதலும் உண்டேயோ; அனையது ஆயினும் யான் ஒன்றுகிளிப்பல்-என்னிலை அத் தன்மையுடையதே மாயினும் பெருமான் வினவியபடியால் யான் ஒன்று கூறத் துணிக்கிறேன்; வினை விளக்கு தடக்கை விறலோய் கேட்டி-ஆட்சித் தொழில் விளக்குகின்ற பெரிய கையினையுடைய கொற்றவனே கேட்டருள்க; என்றாள் என்க.
(விளக்கம்) வேந்தன் சீரின் ஆந்துணை இம்மையாலே சுதமதி இவனிடமிருந்து மணிமேகலையை மீட்டுக்கொடுபோதற்குச் சிறிதேனும் வழிகாணாமல் தன்னுள்ளே வருந்துகின்றாளாகலின் பொதியறைப் பட்டோர் போன்று என உவமை தேர்ந்துரைத்தார். இனி ஒழுக்கொடு புணர்ந்த அவனுடைய விழுக்குடிப்பிறப்பே ஒரோவழி நமக்கு உய்தி தருதல் கூடும் என்னும் கருத்தால் அதனையே அவனுக்கு எடுத்துக்காட்டுவாள். இளமை........மருகற்கு என அவனைப் பாராட்டுஞ் சுதமதியின் நுண்ணறிவு பாராட்டத்தக்கதொன்றாம். இதனால் அவளறிவுறுத்தும் வரலாறு வருமாறு
கரிகாலன் இளம்பருவத்திலேயே அரசு கட்டிலேறியவன்; அப் பொழுது முறை வேண்டிவந்த வாதியும் பிரதிவாதியும் ஆகிய இருதிறக்தாருமே இத்துணை இளைஞன் நம் வழக்கத்திற்குத் தீர்வுகாணமாட்டுவனோ என்று ஐயுறுவாராயினர். இதனைக் குறிப்பினால் அறிந்துகொண்ட கரிகாலன் நாளை அறனறிந்து மூத்த அறிவுடையார் ஒருவரைக்கொண்டு நுங்கள் வழக்கிற்கு முடிவு கூறுவிப்போம் என்று அவரைப் போக்கி விட்டான். மறுநாள் தானே முதியோள் கோலம்பூண்டு அறங்கூறவையமேறி இருந்து அவ் வழக்கிற்கு முடிவு கூறினன்; அம் முடிவு உலகம் உவப்ப தொன்றாயிருந்தது என்பதாகும். இதனை
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமது மக்கள் உவப்ப-நரைமுடித்துச்
சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்           (21)
எனவரும் பழமொழி வெண்பாவானு முணர்க.
இனி இதன்கண் சுதமதி நினக்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செய்பலும் உண்டோ? என்று அவனைப் பாராட்டுஞ் சொற்றொடர் அரசன் மகனே நீ இப்பொழுது மேற்கொண்டிருக்குஞ் செயல் நின் அறிவுக்கும் பொருந்தாது, சான்றாண்மைக்கும் பொருந்தாது, அரசியலுக்கும் பொருந்தாது. ஆயினும் இவற்றை உனக்குக் கூறுந்தகுதி எனக்கல்லை. என்செய்கோ? என்னும் கருத்தினைக் குறிப்பாக அட்ககியிருத்தலும் உணரற்பாற்று.
கிளப்பல்-சொல்வேன். கேட்டி-கேள்.
மக்கள் யாக்கையின் இயல்பு
113-125: வினையின்......முன்னென்
(இதன் பொருள்) மக்கள் யாக்கை வினையின் வந்தது-மக்கள் பெற்றிருக்கின்ற உடம்பு முன்னே செய்த வினையின் பயனாக வந்து தோன்றிய தொன்றாம்; வினைக்கு விளைவு ஆயிது-மீண்டும் வினைகள் விளைதற் கிடனாயது; புனைவன நீங்கின் புலால் புறத்து இடுவது-அது தானும் தனது இழிதகைமையை மறைத்தற் பொருட்டுப் புனைகின்ற ஆடை முதலியவற்றைப் புனையாது நீங்கி விடிலோ புலால் நாற்றத்தைப் புறமெல்லாம் பரப்புமொரு புன்மையுடையதாம்; மூப்பு விளவு உடையது-கணந்தோறும் முதுமையுறுவதும் ஒருநாள் இறந்து படுவதுமாம்; தீப்பிணி இருக்கை துன்பந் தகும் பிணிகள் பலவும் இருத்தற் கிடமாம்; பற்றின் பற்று இடம்-பற்றுக்கள் பற்றுதற்கியன்றதோ ரிடமாம்; குற்றக் கொள்கலம்-காம முதலிய குற்றங்களை எல்லாம் தன்பாற் கொண்டிருக்கின்ற மட்கலம் போல்வதாம்; அரவு அடங்கு புற்றின் செற்றச் சேக்கை-நச்சுப் பாம்பு அடக்கி யிருக்குமொரு புற்றைப் போன்று சினம் என்னும் தீய பண்பு அடக்கியிருக்குமொரு இருக்கையாம்; அவலம் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலமும் கவலையும் கையாறும் அழுங்கலும் என்று கூறப்படுகின்ற நால்வகைத் துன்பங்களும் நீங்காததொரு நெஞ்சத்தைத் தன்பால் எஞ்ஞான்றும் கொண்டிருப்பதாம்; இது என வுணர்ந்து-இஃதென்று இதனியல் புகளை ஆராய்ந்துணர்ந்து; மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் அறிவு மிக்க அரசன் மகனே இவ்வுடம்பினை அகம் புறமாக மாற்றி அகக் கண்ணால் நோக்கி யருள்வாயாக; என்று அவள் உரைத்த இசைபாடு தீஞ்சொல் -என்று அச் சுதமதி கூறிய பொருத்தமான இனிய சொல்;சென்று அவன் உள்ளம் சேரா முன்னர்-சென்று அவன் நெஞ்சத்திலே பதியு முன்பே; இளங்கோ மன் பளிக்கு புறத்து எறிந்த பவளப் பாவையின் இளவரசனாகிய உதயகுமரன் கண் முன்னர்ப் பளிங்குப் பேழையுள் வைக்கப்பட்டுத் தன் உருவத்தைப் புறத்தே தோற்றுவிக்கும் பவளத்தாலியன்றதொரு பாவையைப் போன்று; இளங்கொடி தோன்றும்-மணிமேகலையின் உருவம் பளிக்கறையூடிருந்து தோன்றா நிற்கும் என்பதாம்.
(விளக்கம்) வினை-மனமொழிமெய் என்னும் மூன்றிடத்தும் தோன்றும் பத்துவகைப்படுந் தீவினையும் அவற்றிற்கு மாறாகிய நல்வினைகளுமாம். முற்பிறப்பிலே செய்த வினையின் பயனாகத் தோன்றியது; பின்னும் பிறத்தற்கேதுவாகிய வினைகள் விளைதற்கிடனாவது என்றவாறு. புனைவன-ஆடையும் நறமணப் பொருள்களுமாம். விளிவு-சாவு. பிணிவாத பித்த சிலேத்துமங்களின் சமமின்மையாலே உடம்பிற்றோன்றும் எண்ணறந்த பிணிகள். பிணியெனப்படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையிற்றிரிந்து உடம்பு இடும்பைபுரிதல் என இந்நூலுள் (30-98-9) கூறப்படுதலறிக. மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர், விளிமுதலா எண்ணிய மூன்று எனவரும் திருக்குறளும்(941) நினைக. பற்று-பசைஇய அறிவு, அவ்வறிவு பற்றியிருக்குமிடம் என்க. குற்றம் காமவெகுளி மயக்கங்கள். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம்-சினம். சேக்கை-தங்குமிடம் அவலம்-துன்பம் தோன்றியநிலை. கவலை அதுதீர்க்க வழிதேடும் நிலை. கையாறு-வழிகாணாது திகைக்கும் நிலை. அழுங்கல் துன்பத்தே அழுந்திவருந்தும் நிலை. தவலா-நீங்காத, ஈறுகெட்டது. இதுவென இத்தன்மைத்தென்று. அறிவுமிக்கோய் என்க. புறமறிப்பார்த்தலாவது யாதானும் ஒரு பையைப் புறம் அகம் ஆகும்படி புரட்டிப்பார்த்தால், மற்றதனைப் பைமறியாய் பார்க்குப் படும் என்பது நாலடி(42). அங்ஙனம் பார்க்குங்கால் என்பும் தடியும் உதிரமும் அன்றி இவ்வாக்கையில் வேறு ஏதும் சிறப்பின்மை அறியப்படும் என்பது குறிப்பு. இங்ஙனம் கூறியது இத்தகைய இழிதகைய யாக்கையே மணிமேகலையின் யாக்கையும், அதனை நீ வளரிளவனமுலை எனவும், முளையெயிறு அரும்பி முத்து நிரைத்தன்ன எனவும், செங்கயல் நெடுங்கண் எனவும் பாராட்டுதல் நின் அறிவுடைமைக்கு அழகாகுமோ. அங்ஙனம் கூறாதே கொள் என்னும் குறிப்பெச்சப்பொருள் தோற்றுவித்தற் பொருட்டாம். இவள்மொழி பொருளியல்புணர்த்தும் மெய்ம்மைத் தன்மைத்தாதல் கருதி இசைபடுதீஞ் சொல் என்றார். அவ்வறையின் பளிங்கு புறத்தே புறப்படவிட்ட இளங்கொடி உருவம் பவளம் பாவையின் இளங்கோமுன் தோன்றும் என இயைப்பினுமாம்.
இனி, இக்காதையினை-காண்பன காண் காண் எனச் சுதமதி காட்ட மணிமேகலை காண்புழி மன்னவன் சிறுவன் வருவோன் இருந்தோன்றன்னை போது என்றலும் உரைப்போன் என்றலும் எய்தி உரைத்துக் கடைஇக் குறுக ஒலிமணிமேகலை செவிமுதல் இசைத்தலும் மணிமேகலை உரைத்தலும் இரீஇ நின்ற நேரிழை தன்னை உதயகுமரன் நின்றோய் அறிந்தேன் தன்மையள் கொல்லோ உரைக்குங்கொல் உரையெனச் சுதமதி உண்டோ கிளிப்பல் கேட்டி என்றுரைத்தசொல் சேராமுன்னர் இளங்கோமுன் இளங்கடி தோன்றுமால் இயைத்திடுக.
பளிக்கறை புக்க காதை முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு
அஃதாவது: பளிக்கறைக் குள்ளிருக்கின்றாள் மணிமேகலை என்றறிந்த உதயகுமரன் அவளைக் கைப்பற்றுதற்கு முயன்றும் மாட்டாமையால் இகழ்ச்சி மொழி சில கூறி இவளை இனி யான் சித்திராபதிவாயிலாய் எய்துவேன் என்று காமத் துன்பத்தோடே அச் சோலையை விட்டுப் போயினன் பின்னர்ப் பளிக்கறையினின்று வெளிவந்த மணிமேகலை தன்னெஞ்சமும் நிறை கடந்து அவன் பின்னே செல்லலுற்றது. காமம் பெருவலியுடைய தொன்று போலும் என்று அதனை வியந்து நிற்கின்ற பொழுது இந்திர விழாக்காண அந் நகரத்திற்கு வந்திருந்த மணிமேகலா தெய்வம் அப் பொழிலில் இருக்கின்ற புத்த பீடிகையைத் தொழுதன் மேலிட்டு (அந் நகரத்தில் வாழுகின்ற மாயவித்தை செய்பவளாய்) மணிமேகலைக்கும் சுதமதிக்கும் அறிமுகமாயிருந்த ஒரு மானிட மகள் வடிவத்தோடு அங்கு புத்த பீடிகையைத் தொழுதமை கூறும் செய்யுள் என்றவாறு.
இதன்கண்-பளிக்கறை உள்ளே தாழ்கோல் தாழ்கோல் கோத்திருந்தமையாலேயும் அது தெய்வத் தன்மையை யுடைய பொழில் என்பது கருதியும், தான் பெருங்குடித் தோன்றலாதலானும் மணிமேகலையை வலிந்து கைப்பற்ற முயலாமலே பக்கலிலே நின்ற சுதமதியை நோக்கி மணிமேகலையினியல்புகளை மன்னன் மகன் வினவுதலும்,அவள் மணிமேகலை காமத்தை வென்றவள் சாபமிடும் ஆற்றல் உடையள் ஆதலின் பெருமான் அவளை மறந்தொழிக என்று அறிவுறுத்துதலும், அதுகேட்டு அவன் நகைத்து அவள் அத்தகையளாயினும் யான் கைப்பற்றியே தீர்வேன் என்று கூறிப் பின்னர்ச் சுதமதியின் வரலாறு வினவுதலும், அவள் தன் வரலாற்றைச் சுவைபடச் சொல்லுதலும், பின்னர் உதயகுமரன் அவ்விடம் விட்டகன்று போதலும், மணிமேகலை பளிக்கறையி னின்றும் புறம் போந்து தன்னெஞ்சம் தன்னை இகழ்ந்த அம் மன்னன் மகன் பின்னே சென்றதொன்று கூறிக் காமம் அத்தகைய பெருவலியுடையது போலுமென்று வியந்து நிற்க; மணிமேகலா தெய்வம் மானுடமகள் வடிவத்தோடு அவ்வுவவனத்தே வந்து புத்தபீடிகையைத் தொழுதலும், அந்திமாலை வரவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.
இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி  05-010
சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!
எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை என
குருகு பெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள் என்றே
தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?  05-020
செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக! என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!
ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை என
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!
ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்  05-030
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய
வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு  05-040
யாங்கனம் வந்தனை என் மகள்? என்றே
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி  05-050
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர்காள்! நும் சரண் என்றோனை
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
அறவோர் உளீரோ? ஆரும் இலோம்! எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்  05-060
பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
என் உற்றனிரோ? என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான் எமக்கு அருளிய  05-070
எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க! என
அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்  05-080
வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று
அப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக்
களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி
கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?  05-090
இதுவே ஆயின் கெடுக தன் திறம்! என
மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்
சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
மணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்  05-100
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்? என்று
எரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்  05-110
புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்  05-120
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா  05-130
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்  05-141
உரை
பளிக்கறையின் புறந்தோன்றிய மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன் ஓவியமென்றே கருதி வியத்தல்
1-7: இளங்கோன்.........வியப்போன்
(இதன் பொருள்) இளங்கோன் கண்ட இளம் பொற்பூங்கொடி விளக்கு ஒளி மேனி- இளவரசனாகிய உதயகுமரன் கண்ட பளிக்கறைப் புறத்தே புறப்படவிட்ட இளமையுடைய பொன்னிறமான காமவல்லி போல்வளாகிய மணிமேகலையின் விளங்குகின்ற ஒளியுடைய திருமேனியை; விண்ணவர் வியப்ப-அமரர்களும் வியங்கும்படி; ஓவியன் பளிங்கின பொருமுக எழினி வீழ்த்து-ஓவியத் துறை கை போகிய ஓவியப் புலவன் ஒருவன் பளிக்குநிறம் உடையதொரு பொருமுக எழினி என்னும் திரைச் சீலையைத் தூங்கவிட்டு அதன்மேல் தான வரையும் ஓவியம்; திருவின் செய்யோள் ஆடிய பாவையின்-செல்வததிற் கியன்ற தெய்வமாகிய திருமகள் மேற்கொண்டு ஆடிய கொல்லிப் பாவையின் உருவம் போன்று; விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப-மணங்கமழும் மலரம்புகளையும் மீனக் கொடியையும் உடைய காமவேளின் குறும்பினாலே தன்னைக் கண்டோருடைய உருவத்தை மாறுபடுத்த வேண்டும் என்று; உள்ளத்து உள்ளியது-தன் உள்ளத்திலே கருதி வரையப்பட்டதோர் ஓவியமே என்று கருதி; வியப்போன்-மருண்டு நோக்குபவன்; என்க.
(விளக்கம்) உதயகுமரன் பளிக்கறையின் உள்ளிருந்து தோன்றும் மணிமேகலையின் விளங்கொளிமேனியை அதனுட்புறத்தே சிறந்த ஓவியனால் வரையப்பட்டதோர் ஓவியமே என்று கருதி அவ்வோவியம் தனது காமத்தைப் பெருக்கி உடம்பை மெலிவித்தலாலே. இதனை எழுதியவன் இவ்வோவியம் தன்னைக் கண்டோரை இவ்வண்ணம் மெலிவித்தல் வேண்டும் என்று கருதியே வரைந்திருத்தல் வேண்டும் என்று துணிந்து பின்னும் அவன் கலைத்திறத்தை வியந்து நிற்கின்றான் என்பதாம்.
பொற்கொடி-கற்பகத்தின் மேற்படரும் ஒரு வானுலகத்துப் பூங்கொடி. ஈண்டு மணிமேகலையின் நெஞ்சமும் உதயகுமரன் என்னும் கற்பகத்தின் மேற்படர்தலின் அப் பொற்கொடியையே உவமை எடுத்தார். இது கருத்துடை அடைகொளி என்னும் அணியின் பாற்படும். பாவை கொல்லிப்பாவை. அஃதாவது-திருமகள். போர்க்கு வந்தெதிர்ந்த அசுரர் போகித்து மெலிந்து வீழும்படிபுனைந்துகொண்டதொரு பெண்மைக்கோலம். இவ்வுருவம் கொல்லிமலையின் மேற்புறத்திலே வரையப்பட்டுளதென்றும் அதனைக் கண்டோர் அப் பொழுதே மோகித்து மயங்குவர் என்றும் கூறுப. இவ்வோவியனும் அப்பாவையுருவத்தைக் கண்டோரை மயக்குறுத்தும் கருத்தோடு இதனை இங்கு வரைந்துள்ளான் என்று இம்மன்னன் மகன் கருதுகின்றான். என்னை? அதுகானும் தன்னைப் பெரிதும் மோகித்து மயங்கும்படி செய்தலான். பாவையைக் கண்டவுடனே காமவேள் குறும்பும் கண்டோர் உளத்தே தோன்றி அவற்றின் மெய்ப்பாட்டையும்  தோற்றவித்து உருவத்தை மாறுபடுத்துதலின் இங்ஙனம் உடனிகழ்ச்சிப் பொருளுடைய ஒடு உருபு பெய்து கூறியவாறு காமவேளின் செயலும் உடன் தோன்றுதல் பற்றி அவனுடைய மலரம்புகளையும் உடனோதினன். பளிங்கின் நிறமமைந்த படாஅஞ் செய்து அதன்மேல் எழுதியிருத்தலின் அது வியத்தகு செயலாயிற்று. தன்னை அது தன்பாலீர்த்தலின் உருவம் பெயர்ப்ப உள்ளியதிது என்று கருதினன்.
உதயகுமரன் செயலும் சொல்லும்
8-12: காவியம்.......உரையென
(இதன் பொருள்) காவியக் கண்ணி ஆகுதல் தெளிந்து-வியந்து கூர்ந்து நோக்கிய உதயகுமரன் அதன் கண்ணழகிலீடுபட்டு நெடிது நோக்கியவழி அவை இமைத்தலைக் கண்டு நீலமலர் போலும் கண்களையுடைய மணிமேகலையே இவள் ஓவியம்
அல்லள் என்று ஐயந்தெளிந்து அவளைக் கைப்பற்றுதற் பொருட்டு; ஒளி தாழ் மண்டபம் தன் கையின் தடைஇச் சூழ்வோன்-ஒளி தங்கியிருக்கின்ற அப் பளிக்கறை மண்டபத்துள்ளே தானும் புகவிரும்பி அதற்கு வாயில் காணுதற்கு முயன்று அஃதிருக்குமிடம் அறிதற்குத் தன் கையாலே தடவிப் பார்த்தவண்ணம் அதனைச் சுற்றி வருபவன்; சுதமதி தன்முகம் நோக்கி-சுதமதியை நோக்கி நங்காய் இம் மண்டபம் சாலவும் அழகியது காண்; சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன-இதனுள் நான்கு பக்கங்களினும் ஓவியங்களாகிய கலைஞர் செய்தொழிறறிறம் செறிந்துள்ளன ஆதலால் என்று கூறிய பின்னரும் அவளை நோக்கி; எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என-இவை கிடக்க; உன் தோழியாகிய மணிமேகலை எத்தன்மையுடையவள் இதற்கு விடைதருதி என்றிரப்ப என்க.
(விளக்கம்) மணிமேகலை ஓவியம் என்று கருதி அதன் உறுப்புநலங்களைக் கூர்ந்து பார்த்து வருங்கால் அவள் தன்னை நோக்கியிருக்கும் அவள் கண்களில் தன்பார்வையை நேருக்கு நேர் செலுத்தியவழி அவள் காணத்தால் இமைகளை இறுக மூடிக்கொண்டனள் ஆதலின் இவ்வுருவம் மணிமேகலையின் உருவமே என்று தெளிந்து கொண்டாள் என்னும் இத்துணையும் குறிப்பாகப் புலப்படுமாறு பிற சொல்லாற் கூறாது காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து என குவன் தெளிவிற்குக் காரணமான கண்மேலிட்டு அறிவுறுத்தும் நுணுக்கம் பேரின்பம் பயப்பதொன்றாம்.
பின்னும் பளிக்கறையுள்புகுந்து அவளைக் கைப்பற்றுவதே தன் கருத்தாகவும், உட்புகுதும் வழிநாடி நாற்புறமும் சூழ்வருபவன் அஃதுட் புறம் தாழ்கோத்த பளிங்குக் கதவமாதலின் உட்புகுகவும் இயலாமல் தானுற்ற ஏமாற்றத்தையும் உள்ளிருப்பவள் மணிமேகலை என்று தான் அறிந்து கொண்டமையையும் சுதமதி அறியாவண்ணம் மறைத்தற் பொருட்டு இவ்வரசிளங்குமரன் சுதமதி தன் முகம் நோக்கிச் சித்திரக் கைவினை திசை தொறும் செறிந்தன என்று கூறிக்கொள்கின்றான். என்னை தான் இம் மண்டபத்தினூடே வரைந்துள்ள ஓவியங்களைக் காண்டற்கு விழைந்தே அதனைச் சுற்றி வந்ததாகவும், பளிக்குமண்டபத்தின் நான்கு பக்கங்களினும் மணிமேகலை உருவம் தோன்றுவதனைத் தான் இதன் நாற்புறத்தும் சித்திரச் செய்வினை செறிந்துள்ளதாக நினைப்பதாகவும் அச் சுதமதி நினைப்பாளாக என்பதே அவன் கருத்தாதலின் என்க. இஃது எத்துணை நுணுக்கமான கருத்து நோக்கி மகிழ்மின்.
நன்று, ஓவியக்காட்சி கண்டாயிற்று. இனி, என்னை சுதமதியை மதியுடம்படுவித்து அவள் வாயிலாகலே மணிமேகலையை எய்தக்கருதி அதற்குத் தோற்றுவாய் செய்பவன் தான் அவள் பின்னிற்கும் தன் எளிமைதோன்ற, நின் இளங்கொடி எத்திறத்தாள் என்று நம்மனோரும் அவன் திறத்திலே பரிவுகொள்ளுமாறு வினவிச் செயலற்று நிற்றல் உணர்க. இதன்கண் மணிமேகலையை நின் இளங்கொடி என்றது நீ நினைத்தவண்ணம் அவள் நடப்பாள் அவளை என் முயற்சியால் எய்தவியலாது எனத் தான் அவள் நடப்பாள் அவளை என் முயற்சியால் எய்த வியலாது எனத் தான் அவள் பின்னிற்றலைத் தெற்றென் வுணர்த்துதல் இயலாமையின் குறிப்பாக அவள் உணரும் பொருட்டே இவ்வாறு வினவுகின்றான். இவ்வாற்றால் இக் காதனிகழ்ச்சி அகப்புறமாகி. காட்சி ஐயம் தெளிதல் மதியுடம்படுத்தல் என்னும் துறைகளை யுடையதாதலும் உணர்க
சுதமதியின் பரிவுரை
13-19: குருகு...........உரைப்ப
(இதன் பொருள்) குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி முகந்து தன கண்ணால் பருகாள் ஆயின் கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயர் கொண்ட மலையைத் தகர்த்தொழித்த முருக வேளையே ஒத்து விளங்குகின்ற நின்னுடைய இவ்விளமைப் பேரழகினை நிரம்ப முகந்து கொண்டு தன் கண்களாகிய வாயால் பருகா தொழிவாளாய்விடின பின்னர்வாய்ச் சொற்கள் என்ன பயனுமில்; பைந்தொடி நங்கை அவளுடைய அத் திட்பம் ஒன்றே அவள்; ஊழ்தரு தவத்திள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மையள்-பற்பல பிறப்பிலே அடிப்பட்டு வருகின்ற ஊழாலே தரப்பட்ட மாபெருந் தவத்தையுடையாளென்பதும் சாபமாகிய கொல்கணைகளையுடையாள் என்பதும் காம வேளின் குறும்புகளை யெல்லாம் கடந்துயர்ந்த மெய்யுணர்வுடையாள் என்பதும் தேற்றமாம் அன்றோ என்று; தூமலர்ச் சுதமதி உரைப்ப-தூய மலர் போன்ற உள்ளமுடைய அச் சுதமதி அவளுடைய திறம் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இஃதென்று அறிவியா நிற்ப என்க.
(விளக்கம்) மன்னவன் மகனே உன்னைக் கண்டும் நிலைகலங்காமல் அம் மணிமேகலை இருப்பாளானால் பின்னர் அவளைப்பற்றி நீ கேட்டறிவதற்கே யாதொன்றுமில்லை. உன்னைக் கண்டுவைத்தும் உன் அழகை வாரிப் பருகாத அவள் திட்பமே அவள் மாபெருந் தவவாற்றல் உடையாள் என்பதையும் அவள் சாபமிடும் ஆற்றல் பெற்றிருப்பாள் என் பதையும் மெய்யுணர்வு பெற்றவள் என்பதையும் அறிவுறுத்தும் சான்றாகுமன்றோ என்கின்றாள். இதனால் உன்னை அவள் நேருக்குநேரே பார்த்தும் நிலைகலங்காதிருத்தலை நீயுந்தான் அறிகின்றனை. யானும் நீ மறைத்தாயேனும் அறிகின்றேன். ஆதலால் இதனை நீயே உணர்ந்து கொள்ளலாமே என்னைக் கேட்பது வீண் என்ற இடித்துரையைக் கேட்டற்கினிய மொழிகளாலே கூறும் இவள் நாநலம் வியத்தற் பாலதாம்.
உதயகுமரன் பின்னும் பின்னிலை முயறல்
19-27: சிறை...........உறையென
(இதன் பொருள்) செழும்புனல் மிக்குழீஇ சிறையும் உண்டோ காமம் காழ கொளின நிறையும் உண்டோ-அது கேட்ட உதயகுமரன் நன்று நங்காய் நீ அறியாது கூறுதி, வளவிய நீர் மிககுப் பெருகினால் அதனைத் தடுத்து நிறுத்தும் அணைதானும் உளதாமோ உளதாகாதன்றே அங்ஙனமே ஆடவராயின் என? பெண்டிர் ஆயினென்? காமப்பண்பு மிக்குப் பெருகியக்கால் அதனைத்தடுத்து நிறுத்தும் நெஞ்சுறுதியும் உளதாமோ? ஆகாது காண்; செவ்வியள ஆயின் என் செவ்வியள் ஆக என-மற்று மணிமேகலை தான் நீ கூறுமாறு காமற் கடந்த வாய்மையளாகும் செம்மையுடையளாயினுலும் அதனால் என்? அவ்வாறே அவள் செம்மையுடைளாகவே இருந்திடுக என்று கூறி; வவ்வி நெஞ்சமொடு அகல்வோன-அவள் திருவுருவத்தைக் கூர்ந்து கொண்டதொரு கள்ளவுள்ளத்தோடே அவ் வுவவனத்தை விட்டுச் செல்லத் தொடங்குபவன்; ஆயிடை-அதற்கிடையிலே மீண்டும் சுதமதியை நோக்கி; அச்செஞ்சாயல்-அழகிய செம்மையுடைய மெல்லியால் நீதானும் அராந்தாணத்துள் ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்று-அருகன் கோயின் மருங்கில் யாரோ ஒரு விச்சாதரனால் பற்றிக் கொணர்ந்து விடப்பட்ட பெண் என்று; கல் என பேரூர் பலலோர் உரையினை-கல்லென்று ஆரவாரிக்கும் இப் பெரிய நகரத்திலே பலராலும் கூறப்படும் கூற்றையுடையை அல்லையோ; ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி-அவ்வருகத்தானத்தே அவ்வாருகதர் உறையுமிடத்தினின்றும் விலகி; ஈங்கு ஆயிழை இவள் தன்னோடு எய்தியது உரை என-இங்குப், பௌத்தர் சங்கத்திற் சேர்த்திருக்கின்ற மணிமேகலையாகிய இவளோடு பகவனதாணையில் பன்மரம் பூக்கும் பௌத்தர் உவவனத்திற்கு வந்ததற்கியன்ற காரணம் என்னையோ? கூறுதி என்று பணிப்ப என்க.
(விளக்கம்) சுதமதி மணிமேகலையைக் காமற் கடந்த வாய்மையள் என்றதனை மறுத்து அவட்குப் பேதைமையூட்டுவான் சிறையும் உண்டோ.........செவ்வியள் ஆக என்கின்றான். இதனால் நீ காமப்பண்பின் இயல்பறிவாயல்லை; ஒரோவழி மணிமேகலைக்குக் காமம் இன்னும் காழ் கொண்டிலது போலும் அது காழ்கொள்ளும் பொழுதுதான் அவள் காமற் கடந்த செவ்வயளா அல்லளா? என்பது தெரியவரும்; அது காழ்கொள்ளும் துணையும் செவ்வியளாகவே இருந்திடுக என்று அசதியாடுகின்றான். இவ்வாறு உதயகுமரன் கூறுவதன் கருத்து மணிமேகலை தன்னைக் கண்ணிமையாது பார்த்து நின்றவள் தான் அவள் கண்ணை நோக்கிய பொழுது இமைத்துக் கண்களை மூடிக்கொண்டமையால் அவள் தன்னை பெரிதும் காதலிக்கின்றாள் என்னும் குறிப்புணர்ந்தமை யாலே; யாம் இங்கனமாகவும் அவளியல்பறியாது பேசும் சுதமதியை எள்ளிப்பேசிய பேச்சை இவை என்றுணர்க. வவ்விய நெஞ்சமொடு என்று கொண்டு அனள் உருவத்தை முழுதும் (தன்னுள்ளக் கிழியில் வரைத்து கவர்ந்து கொண்ட நெஞ்சமோடு என்பதே சிறப்பு. அவ்வியம் என்று பிரித்து அழுக்காறு என்று பொருள் கொண்டு பிறர்க்கு இவள் உரியளாதல் கூடுமோ என்பதால் உளதாகிய பொறாமை என்பாருமுளர். இங்ஙனம் கூறுவோர் அக் கூற்று அவனது ஆண்மையையே இழுக்குப்படுத்துதலை அறியார் போலும்.
இழுக்கோடு புணரா விழுக்குடிப்பிறப்பினனாதலின் கடவுள் மலர் வனத்தில் அப்பாலும் காமவிளையாடல் புரியத்துணியாது அகல்வோன் பின்னும் சுதமதியை அவளது உசாஅத்துணைத் தோழியாகவே கருதி அவளைப் பின்னும் மதியுடம்படுத்த வேண்டி அவள் வரலாற்றை நன்கறியும் பொருட்டே நங்காய் உன்னை யான் அராந்தாணத்துவிஞ்சையன் இட்ட விளங்கிழை என்னுந்துணையே அறிவேன்: அங்ஙனமாயின் இவட்கும் உனக்கும் தொடர்பு எவ்வாறுண்டாயது என்றறிய இங்ஙனம் வினவினன் என்க.
அவர் உறைவிடம் என்றது ஆருகதர் உறையும் அருகத்தானத்தை அராந்தாணம் என்பதும் அது.
சுதமதி உதயகுமரன் வினாவிற்கு விடைகூறுதல்
28-38: வார்கழல்..........பெயர்வோன்
(இதன் பொருள்) வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி நெடிய வீரக்கழலணிந்த வேந்தர் பெருமானே நீடுழி வாழ்க நின் ஆரங்கண்ணி; தீ நெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-நின முன்னோர் போன்று நீதானும் தீய நெறியிலே செல்லாத நன்னர் நெஞ்சம் உடையையாகுக; வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம் கேட்டருள்-கடல் சூழ்ந்த நிலவுலகத்தை ஆளும் தகுதிமிக்கோய் யான் இவ்வுவவனத்திற்கு இம் மணிமேகலையோடு கூடி வருதற்கியன்ற காரணத்தைக் கூறுவல் திருச்செவியேற்றருள்க; யாப்புஉடை உள்ளத்து எம் அனையிழந்தோன்-என்னை இழந்ததோடன்றிக் கற்புடைமையாற் பெரிதும் தனக்குப் பொருந்திய உள்ளத்தையுடையளாயிருந்த எம் அன்னையாகிய தன் மனைவியையும் இழந்துவிட்டவனாகிய என் தந்தையாகிய; பார்ப்பன முதுமகன் படிமவுண்டியன் பார்ப்பன முதியவறான எத்தகையனோவெனின நோற்றுப் பட்டினி விட்டுண்பவனும்; மழை வளம் தரூஉம் அழலோம்பாளன் உலகிற்கு மழை வளத்தைத் தருதற்குரிய வேள்வித்தீயை முறைப்படி ஓம்புபவனும் ஆவான்காண்; பழவினைப்பயத்தால் பிழை மணம் எய்திய என கெடுத்து இரங்கி-பழவினையின் பயனாகத் தவறான மணம் எய்திய என்னை இழந்து அன்பு மிகுதியால் என பொருட்டுப் பெரிதும் இரக்கமுற்று; தன் தகவு உடைமையின்-தனக்குரிய பெருந்தகைமையை உடையவனாயிருந்தமையாலே; குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு: பரந்து செல் மாக்களொடு-பரவிச் செல்லாநின்ற மாந்தரோடு கூடி; தேடினன் பெயர்வோன் என்னைத் தேடிக் காணுங் குறிக்கோளோடு வருபவன்; என்க.
(விளக்கம்) தீநெறிப்படரா நெஞ்சினையாகுமதி என்றது வாழ்த்துவது போன்று அப் பெருந்தகைக்கு இன்றியமையாத அறிவுரை கூறியவாறாம். நீயோ உலகம் ஆளும் வேந்தன்: யாமோ ஆற்றவும் எளியேமாகிய பிக்குணிகள்; எம்திறத்திலே பெருமான் ஏதம் செய்யா தொழுகுதல்  வேண்டும் என்றுநினைவூட்டுகின்றாள். மதி: முன்னிலையசை காரணம் கூறுவல் கேட்டருள் என்றவாறு.
எம்மனை-எம் அன்னை என்னையிழந்ததே யன்றியும் எம் மன்னையையும் இழந்தோன் என்பதுபட நிற்றலின் இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கது. எம்மனை என்றது எம்மூர் என்றாற் போலத் தன்னுடன் பிறந்தாரையும் உளப்படுத்தபடியாம். உயர்ந்த தாய் தந்தையர்க்குத் தோன்றியும் பழவினைப் பயத்தாற் பிழைமணம் எய்தினே னல்லது என் பிழையன்று என்பாள் தந்தையையும் தாயையும் பெரிதும் பாராட்டுகின்றனள். படிமம்-நோன்பு. தன்தகவு என்றது அந்தணனுக்கியன்ற அருளுடைமையை. குரங்கு செய்கடல் என்றது செய்கடல் என்றது தென்கடல் என்னுமாத்திரையை அறிவித்து நின்றது. குரங்கு அணைசெய்த கடல் என்றவாறு. குமரி-கண்ணியாகுமரி. குமரி ஒரு நதி என்பதும் அஃது கடல் கோட்பட்டமையின் அக் கடலும் குமரிக்கடல் எனப் பெயர் பெற்ற தெனவும் கூறுப. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் என்பது சிலப்பதிகாரம்.(8:1. என்னைத் தேடியவனாய் என்க. அங்ஙனம் அவன் தகவுடைமையை ஏதுவாக்கினள்
இதுவுமது
39-46: கடல் மண்டு.......திரிவோன்
(இதன் பொருள்) கடல் மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய வடமொழியாளரொடு வருவோன்-கடலிற் புகுதும் பெரிய துறையையுடைய காவிரியில் நீராடுதற் பொருட்டு ஈண்டு வருகின்ற வடமொழியையுடைய ஆரியரொடு கூடி வருபவன்; கண்டு என்மகள் ஈங்கு யாங்கனம் வந்தனை என்றே-என்னைக் கண்டு அந்தோ என் அருமை மகளே நீ இந்நகரத்திற்கு எவ்வாறு வந்துற்றனை என்று சொல்லி வாய்விட்டுக் கதறியழுது; தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்து-தடைசெய்தற்கியலாத அன்புக் கண்ணீரை என்தலைமேல் உதிர்த்து; ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்-பிழை மணம் பட்டமையாலே ஓதற்றொழிலை முதன்மையாகக் கொண்ட பார்ப்பன வாழ்க்கைக்குப் பொருந்தேன் ஆயதனையும் பொருளாகக் கருதாத; காதலன் ஆதலின் ஆங்குக் கைவிடலீயான்-பேரன்புடையவன் ஆதலாலே அவ்விடத்தையே என்னைக் கைவிட்டுப் பிரிதலாற்றானாகி; இரந்தூணதலைக் கொண்டு-அந்தணரில்லத்தே பிச்சை புக்குண்ணும் வாழ்க்கையை மேற்கொண்டு; இந்நகர் மருங்கின பரந்துபடு மனைதொறும் திரிவோன்-பிச்சையின் பொருட்டு இம்மாநகரத்திலே பரவலாக வமைந்துள்ள பார்ப்பனர் இல்லந்தோறும் சென்று திரிபவன்; என்க.
(விளக்கம்) கடல் மண்டு பெருந்துறை என்றது காவிரி கடலொடு கலக்கும் புகாரை. அதனாலேயே அதற்குப் புகார் நகரம் என்பது பெயராயிற்று. புகார்-சங்கமுகம். அது புண்ணியத் தீர்த்தமாதலின் நீராடு பெருந்துறையும்  ஆயிற்று வடமொழியாளர் என்றது ஆரியப்பார்ப்பனரை. என்று கதறியழுதனன் என்பது கருத்து. தாங்காக் கண்ணீர்-தடுத்தலியலாத அன்புக் கண்ணீர் என்றவாறு; ஈண்டு,
அன்பிற்கு முண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்             (குறள்-71)
எனவரும் பொன்மொழி நினைக்கத்  தகும். தகுதி பற்றி, பார்ப்பனர் மனைதொறும் என்றாம்.
இதுவுமது
46-55: ஒருநாள்.........கோடலின்
(இதன் பொருள்) ஒருநாள் புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன-அங்ஙனம் திரிகின்ற நாள்களுள் வைத்து ஒருநாள் அணித்தாக ஈன்ற ஆவொன்று சினந்து பாய்ந்தமையாலே அதன் கோட்டாற் கிழிக்கப்பட்ட பெரியபுண்ணை வயிற்றிலுடையவனாய்; நிணம்நீடு பெருங்குடர் கணவிரமாலை கைக்கொண்டு என்ன கையகத்து ஏந்தி-அப் புண்வழியே நிணத்தோடு கூடிய நீண்ட தனது பெருங்குடர் சரிந்துகுவது அறுந்தொழியா வண்ணம் செவ்வலரிப்பூமாலையைச் சுருட்டிக் கையிலேந்தி வருமாறுபோலே தோன்றும்படி தன் கையகத்தே தாங்கி ஏந்திக் கொண்டு; என்மகள் இருந்த இடம் என்று எண்ணி-இவ்வாரந் தாணம் என்மகள் நெடுநாள் இருந்து பழகியவிடம் என்று நினைந்து அவ்வுரிமைபற்றி; தன் உறுதுன்பம் தாங்காது புகுந்து தனக்குண்டான பெருந்துன்பம் பொறானாய் அவ்வருகத் தானத்திலே புகுத்து; சமணீர்காள் நும்சரண் என்றோனை-சமணச் சான்றோரே! சமணச் சான்றோரே! அளியோன் நுஙகட்கு அடைக்கலம் கண்டீர் என்று கதறியழுதவனைக் கண்டுழி; மை அறுபடிவத்து மாதவர்-குற்றாதீர்ந்த தவவேடந்தாங்கிய மாபெருந்துறவோர் எல்லாம் ஒருங்குகூடி; என்னொடும் வெகுண்டு. அவன் மகள் என்பதுபற்றி அவனையும் என்னையும் ஒருசேரச் சினந்து உரடபுபவர்; இவண் நீர் அல்ல என்று-இத்தகையோரை ஏற்றுக்கோடலும் பரிவுகாட்டலும் தெய்வத் தன்மையுடைய இவ்வராந்தாணத்திற்குப் பொருந்தும் நீர்மைகள் ஆகா என்னும் கருத்தோடு; புறத்துக் கைஉதிர்க்கோடலின்-வாயாற் கூறாமல் தமது கையை அசைக்குமாற்றால் எமைப் புறத்தே துரத்திவிட்டமையாலே; என்றாள் என்க.
(விளக்கம்) புனிற்று ஆ-அணிமையில் கன்றீன்ற ஆ. அதற்கு அணுகியவரைச் சினந்து பாய்தல் இயல்பு. பாய்ந்த என்றது பாய்ந்து வயிறு கிழியக் குத்திய என்பதுபட நின்றது. பாய்ந்தமையாலே பட்ட புண்ணினன் என்க. கணவிர மாலையின் சுருள் கையிலேந்திய குடாச் சுருளிற் குவமை. கணவிரம்-செவ்வலரிப்பூ; ஆகுபெயர். பெருங்குடர் என்றது-மலக்குடரை. என் மகளிருந்து பழகிய இடம் என்று எண்ணி அவ்வுரிமை பற்றி வந்து சரண்புகுந்தான் என்பது கருத்து. இஃது அத் துறவோரின்பால் கண்ணோட்டம் எட்டுணையும் இல்லை என்று காட்டற்குக் கூறியது. என்னை ? கண்ணோட்டம் என்பது தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமைக்குக் காரணமான ஒரு பண்புடைமையே யாதலின். கண்ணோட்ட மின்மையையும் வெகுளியுண்மையையும் முற்படக் காட்டிப் பின்னர் மையறுபடிவத்து மாதவர் என்றது முற்றிலும் அவற்றிற்கு எதிர்மறைப் பொருள் பயக்கும் இகழ்ச்சி  மொழியாதல் உணர்க. புற வேடத்திற்குக் குறைவில்லை என்பாள் மையறுபடிவத்து மாதவர் என்கின்றாள். இவன் என்றதும் இகழ்ச்சி. என்னை? கடவுள் உறையுமிடமாகிய அவ்விடத்திற்கு அருளுடைமை நீரல்ல என்பதுபட நிற்றலின். மௌன விரதிகளாதலின் கையுதிர்க் கோடல் வேண்டிற்று. இதுவும் இகழ்ச்சி. இச் சுதமதி வாயிலாய்த் தண்டமிழாசான் சாத்தனார் திறம்பட அவர் காலத்துச் சமணத் துறவோரின் இழிதகைமையை எடுத்துக் காட்டினர். இதனைக் காட்டவே இங்ஙனம் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கியுள்ளனர்; அவர் ஆருகதரின் இப்புன்மை பொறாது பௌத்த சமயம் புக்கு அச்சமயத்தைப் பரப்பும் நோக்கமடையோராதல் ஈண்டு நினையற்பாலதாம். இனி, அவர் காலத்துப் பௌத்தத் துறவிகளின் சான்றாண்மையும் இவர் இச் சுதமதியின் வாயிலாகவே உணர்த்துவதனைக் காண்பாம்.
இதுவுமது
55-64: கண்ணிறை.......குளிர்ப்பித்து
(இதன் பொருள்) கண் நிறை நீரேம் புறவோர் வீதியில் ஆரும் இலேம அறவோர் உளிரோ என புலம்பொடு சாற்ற-இவ்வாறு அச் சமண சமயத்து மாதவர் எம்மைத் துரத்திவிட்டமையால் உறுதுயர் பொறாமையாலே கண்களில் வெள்ளமாய்ப் பெருகி வீழும் நீரையுடையேமாய் அவ்வராந்தாணத்தின புறத்தே வாழ்வோருடைய தெருவிலே சென்று மாபெருந்துயரத்திற்கு ஆளாயினேம் களைகணாவார் ஒருவரையேனும் உடையேமல்லேம் ஆதலால் அளியேமாகிய எமமிடுக்கண் தீர்க்கும் அறவோர் யாரேனும் உள்ளீரோ உள்ளராயின் எம்மைப் புறந்தம்மின் என்று அரற்றிக் கூவாநிற்ப; மங்குல் தோய் மாடமனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்டபாத்திரம் உடையோன்-அவ்வீதியிலமைந்த முகில் தவழும் மாடங்களையுடைய இல்லந்தோறும் பிச்சைபுகுதற்கியன்ற கோரகை என்னும் அகங்கையிற் கொண்ட பாத்திரத்தையுடையவனும்; கதிர்சுடும் அமயத்துவம் பனி மதமுகத்தோன்- ஞாயிறு சுடுகின்ற அந்த நண்பகற்பொழுதினும் குளிர்ந்த திங்கள் மண்டிலம் போலே அருள்பொழியும் திருமுகத்தையுடையவனும்; பொன்னில் திகழும் பொலம் பூவாடையன்-பொன்போலத் தூய்தாக விளக்குகின்ற பொன்னிற மருதம் பூந்துவரூட்டிய ஆடையையுடையவனும் ஆகிய பௌத்ததுறவோன் ஒருவன் எம்மையணுகி; என உற்றனிரோ-நீயிர் என்ன இடுக்கண் எய்தினிரோ என்று; எமை நோக்கி-எம்மை பரிந்து நோக்கி எமத்திடுக்கணை அறிந்துக்கொண்டபின்; அன்புடன் அளைஇய அருள் மொழியதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சம் குளிர்ப்பித்து-அஞ்சன்மின் நீயிர் உற்ற துயரத்தை யாமகற்றுவோம் என்பன போன்ற அன்போடளாவிய அருள்மொழி பலகூறி எமது உட்செவியை நிறைத்து எமதுள்ளத்தையும் குளிர்ப்பண்ணி என்க.
(விளக்கம்) அறவோர்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர். அராந்தாணத்து அறவோர் ஒருவரேனும் இலர் என்பது இதனாற் போந்தமையும் உணர்க. அருகரல்லாத புறவோர் வாழும் வீதி என்றவாறு: காணார் கேளார் கான்முடிடப்பட்கடார் முதலிய ஆதுலர்க்கும் அன்னம் இடவேண்டுதலின் மாடந்தோறும் புகுதல் வேண்டிற்று. அங்கை-அகங்கை; உள்ளங்கை. உள்ளம் எப்பொழுதும் குளிர்ந்திருந்தலின் கதிர் சுடும் அமயத்தும் பனிமதி முகமுடையன் ஆயினன் என்பது கருத்து. பொன்னிற்றிகழும் ஆடையன் என்றது. ஆடையின்றியாதல் பாயுடுத்தாதல் அமண் துறவோர் போல்பவ னல்லன் என்பது குறிப்பாகத் தோற்றுவித்தபடியாம். முன்னர் நாணமும் ஆடையும் நன்கனம் நீத்து மண்ணாமேனியன் என(3:88-91) ஆருகதத்துறவோனை அறிவித்தமையும் நினைக. பொலம்பூ வாடையன்-பொன் போன்ற நிறமுடைய அழகிய துவராடை யுடுத்தோன். அது மஞ்சள் நிறத்தது ஆகலின் வண்ணம் பற்றிக் பொன் உவமமாகிறது. அகனமர்ந்து முகத்தான் அமர்ந்து நோக்கி அன்புடன் அளைஇய அருள்மொழி கேட்ட வளவிலே எம் துன்பம் முழுதும் தீர்ந்தாற் போன்று உள்ளம் குளிர்ந்தோம் என்றது. இங்ஙனம் பேசுவதே மொழியாற் செய்யும் நல்வினை என்னும் புத்தருடைய கொள்கையை அவன் முழுதும் மேற்கொண்டொழுகுபவன் என்பதை புலப்படுத்து நின்றது.
இதுவுமது
65-70: தன்கை........அருளிய
(இதன் பொருள்) தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் அங்கையிலேந்திய பிச்சைப் பாத்திரத்தை என்கையிலே கொடுத்துவிட்டு; ஆங்கு எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க-அப்பொழுதே என் தந்தை எய்திய துன்பம் நீங்கும் வண்ணம்; தழீஇ எடுத்தனன் தலை ஏற்றிக் கடுப்ப மாதவர் உறைவிடம் காட்டிய தன்னிருகைகளானும் மகவினை எடுப்பார் போன்று தழுவி எடுத்துத் தன்தலையாலே சுமந்து விரைந்துசென்று தன்னோரனைய சிறந்த துறவோர் உறைவிடத்தை எமக்கு உறையுளாகக் காட்டியவனும்; மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன்-பார்ப்பனனாகிய எந்தைக்குப் பின்னும் மருத்துவஞ்செய்து அவன்சாதற்குரிய பெருந்துயரத்தை நீக்கியவனும் தலைமையடையவனும்; தவமுனி சங்கதருமன் தான் எமக்கு அருளிய-வினையின் நீங்கி விளங்கி ய அறிவுடையவனுமாகிய சங்கதருமன் என்னும் சிறப்புப் பெயருடைய நல்லாசிரியன் தானே முனைவந்து எந்தையும் யானும் ஆகிய எம்மிருவருக்கும் திருவாய் மலர்ந்தருளிய; என்க.
(விளக்கம்) ஆங்கு-அப்பொழுதே. இரண்டு கைகளானும் தழுவி எடுக்க வேண்டித் தன்கைப் பாத்திரத்தை என் கைத்தந்து என்பது கருத்து. குடர் சரிந்து வீழாதபடி எடுக்க வேண்டுதலின் தழீஇ எடுத்தல் வேண்டிற்று. இரண்டு கைகளானும் அவனை மேனோக்கிய வண்ணம் மகவினை எடுக்குமாறு போலவே எடுத்தத் தலைமிசை ஏற்றிக் கொடு விரையச் சென்றுமாதவர் உறைவிடத்தை எமக் குறையுளாகக் காட்டிப் பின்னும் மருத்துவத்தால் சாதுயர் நீக்கியவன் என்றாள் என்க. தலைவன் என்றது சங்கத் தலைமையுடைமையை, சங்கதருமன் என்றது சிறப்புப் பெயர். சங்கத்தார்க்கு அறம் அறிவுறுத்தும் ஆசான் என்பது சிறப்புப் பெயர். சங்கத்தார்க்கு அறம் அறிவுறுத்தும் ஆசான் என்பது கருத்து. அவன்றானே முன்வந்து எமக்கு அறிவுறுத்தருளிய என்க. இவ்வாற்றால் நூலாசிரியர் பௌத்தத் துறவோரின் சான்றாண்மை புலப்படுத்திய நுணுக்க முணர்க.
இதுவுமது
71-76: எங்கோன்................வாழ்கென
(இதன் பொருள்) எம்கோன்-எம்முடைய இறைவனும்; இயல்குணன்-இயல்பாகவே மெய்யுணர்வு தலைப்பட்டவனும்; ஏதும் இலகுணப் பொருள்-குற்றமில்லாத குணங்கட்கெல்லாம் தானே பொருளானவனும்; உலகநோன்பின் பலகதி உணர்ந்து-துறவாமலே நோன்பு நோற்று உயிர்கள் பிறக்கும் பலவேறு பிறப்புக்களினும் பிறந்து பிறர்க்குரியாளன-தனக்கென முயன்று வாழாமல் பிறர் வாழ்தற் பொருட்டே முயல்பவனும் ஆகிய; இன்பச் செவ்வி மனபதை எய்த-தான் கண்ட வீட்டின்பம் எய்துதற்குரிய செவ்வியை மன்னுயிரெல்லாம் எய்துதறகுரிய; அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்-அருளாகிய அறத்தை மேற்கொண்டொழுகுமொரு பெரிய கோட்பாட்டோடு; அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய ஒளியுடைய சக்கரத்தைச் சிறிதும் சோர்வின்றி உருட்டி; காமன கடந்த வாமன்-காமனை வென்றுயர்ந்த அழகனகிய புத்ததேவனுடைய; தகைபாராட்டுதல் அல்லது-தெய்வத்தன்மையை இடையறாது பாராட்டுகின்ற செந்நாவையுடையேனல்லது; மிகைநாவிலலேன் வேந்தே வாழ்க என வேறு தெய்வங்களைப் பாராட்டற்கியன்ற மிகையான செயலையுடைய நாவல்லேன் அரசே நீடுழி வாழ்க! என்றாள் என்க.
(விளக்கம்) எங்கோன்-எமக்கு ஆத்தனானவன். பௌத்தர்கள் ஆத்தனாகிய புத்தனையே கடவுளாகவும் கொள்வர். இதனை,
முற்றுணர்ந்து புவிமீது கொலையாதிய
தீமை முனிந்து சாந்தம்
உற்றிருந்து கருணையினாற் பரதுக்க
துக்கனா யும்ப ரோடு
கற்றுணர்ந்த முனிவரருங் கண்டுதொழப்
பிடகநூல் கனிவான் முன்னம்
சொற்றருந்த வுரைத்தருளூந் தோன்றலே
கடவுள்அருட் டோன்ற லாவான்
எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் (சருக்கம் 32-4) உணர்க. குணமாகிய பொருள் என்க. உலக நோன்பு-துறவாமலே மேற்கொள்ளும் நோன்பு. புத்தர் வினையாலன்றி அருள் காரணமாகக் கை வந்த முத்தியைக் கைவிட்டு வாலறிவுடன் விலங்கு முதலிய பிறப்புக்களினும் புக்கும் பிறர்க் குழன்றார் என்பர். இதனை
வானாடும் பரியாயும் மரிணமாயும்
வனக்கேழற் களிறாயு மெண்காற்புண்மான்
றானாயு மனையெருமை ஒருத்தலாயுந்
தடக்கையிளங் களிறாயுஞ் சடங்கமாயு
மீனாயு முயலாயு மன்னமாயு
மயிலாயும் கொலைகளவு கட்பொய்காமம்
வரைந்தவர்தா முறைந்தபதி மானாவூரே
எனவரும் நீலகேசியில்(206) யாமெருத்துக்காட்டிய பழஞ்செய்யுளானு மூணர்க. ஏதமில் குணப் பொருள் என்றதனை
மீனுருவாகி மெய்ம்மையிற் படிந்தனை
மானுருவாகியே வான்குண மியற்றினை
எனவும்
எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த வென்றுரைக்கப்
பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி
எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின்
அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்
எனவும். வரும் பழம் பாடல்களையும் (வீரசோழியம் யாப்பு எடத்துக் காட்டுக்கள்) ஒப்பு நோக்குக. இன்பச் செவ்வி என்றது-வீடுபெறும் நிலைமையை. இதனை 30 ஆம் காதையில் விளங்கக் காணலாம். மன்மதை-மன்னுயிர். தகை-கடவுட்டன்மை யாகிய பெருந்தகைமை. மிகைநா-இதனைக் கடந்து பிற தெய்வங்களை வாழ்த்தும் நா.
உதயகுமரன் போதலும் மணிமேகலை தன்னிலை சுதமதிக்கு இயம்பலும்
80-90: அஞ்சொல்........நெஞ்சம்
(இதன் பொருள்) அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய சொற்றிறமமைந்த சுதமதி நல்லாய் நன்று யான் நின் வரலாறு அறிந்துகொண்டேன்; வஞ்சி நுண்ணிடை மணிமேகலை தனைச் சித்தராபதியால் சேர்தலும் உண்டு என்று அயர்ந்து வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலை யான் சித்திராபதிவாயிலாய்ச் சேர்தற்கும் இடன் உண்டுகாண் அவள் செவ்வியளாயின் செவ்வியளாகுக என்று தன் செயலறவினாற் கூறியவனாய்; ஆங்கு அப் பொழில் அவன் போய்பின்-அவ்வளவின் அம் மலர்ப் பொழிலினின்றும் அவ்வரசிளங்குமரன் அகன்றுபோய் பின்னர்; பளிக்கறை திறந்து மணிமேகலை அப் பளிக்கறையின் தாழ்நீங்கித் திறந்து வந்தவள்; பனிமதி முகத்துக் களிக்கபல் பிறழாக் காட்சியளாகி-குளிர்ந்த திங்கள் மண்டிலம் போன்ற தன் முகத்தின்கண் களிக்கன்ற கயல்மீன் போன்ற கண்கள் அவனைக் கண்டகாட்சி கலங்காமைப் பொருட்டுப் பிறழாது நிலைத்த காட்சியையுடையளாய்ச் சுதமதியை அணுகிக்கூறுபவள்; (60) அன்னாய்-அன்னையே ஈதொன்றுகேள்; புதுவோன்-நமக்குப் புதியவனாகிய இவ்வரசன் மகன் என்னை; கற்புத்தான் இலள் நல் தவ உணர்வு இலள் வருணக் காப்பு இளல் பொருள் விலையாட்டி என்று இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது-இவள் நிறையில்லாதவள், நன்மை மிக்க தவத்திற்குக் காரணமான மெய்யுணர்வு கைவரப் பெறாதவள், வருணத்தாலே தன்னைத்தான காக்கும் குலமகளும் அல்லள்; பொதுமக்கள், பொருட் பொருட்டுத் தன்னையே விற்கு மியல்புடையள் என்று இன்னோரன்ன கூறி இகழ்ந்தவனாய் என அழகின் பொருட்டே காமுறுபவன் என்று தானும் இகழ்ந்து புறக்கணியாமல்; என் நெஞ்சம்(புதுவோன்) பின் போனது-எனது புல்லிய நெஞ்சம் அவ்வேதிலானையும் விரும்பி அவனைத் தொடர்ந்து அவன் பின்னே போயொழிந்தது! என்றாள் என்க.
(விளக்கம்) கண் களிக் கயல்போல் இடையறாது பிறழ்தல் தமக்கியல் பாகவும் அவனைக் கண்ட காட்சி மறையும் என்று அஞ்சிப் பிறழாதிருக்கின்ற காட்சியளாகி என்றவாறு. கற்புத்தானிலள் என்று இகழ்ந்தான் என்றது அவன் நிறையும் உண்டோ காமம் காழ் கொளின் என்றதன் குறிப்புப் பொருளை உட்கொண்டு கூறியபடியாம். நிறை கைகூடாதாகவே தவவுணர்வும் இலள் என்பதும் குலமகள் அல்லள் என்பதும் வருணக் காப்பின்மையும் பொருள் வலையாட்டியாதலும் ஆகிய வசைச் சொற்கள் அனைத்தும் அதன் குறிப்புப் பொருளாக மணிமேகலை கொண்டு கூறுகின்றாள் போலும். இனி அவன் இங்கனம் இகழ்ந்தமையை வழீ மொழிதல் வாயிலாய் பெறவைத்தவாறுமாம். இகழ்ந்தனனாகி நயந்தோன் என்றது அவன் நம்மழகை மட்டுமே நயக்கின்றான் என்றவாறு. என்னெஞ்சம் என்றது என் புல்லிய நெஞ்சம் என்பதுபட நின்றது.
சொற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று                 (1255)
எனவரும் திருக்குறள் ஈண்டு நினைக்கத்தகும். புதுவோன் என்பதனை எழுவாயாகவும் எடுத்துக் கூட்டுக.
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றுதல்
90-96: இதுவோ.........பைந்தொடியாகி
(இதன் பொருள்) அன்னாய் இதுவோ காமத்தியற்கை-அன்புடையோய்! இவ்வாறு உயர்வும் இழிதகைமையும் உன்னிப் பாராமல் சென்றவிடத்தால் நெஞ்சத்தைச் செலுத்தும் இத் தீய பண்புதான் காமத்தின் இயல்பேயோ யான் இதுகாறும் அறிந்திலேன்காண்; அது திறம் இதுவே ஆயின் அதன் திறம் கெடுக என-அக் காமத்தின் தன்மை இவ்விழிதகைமையே ஆயின் அதன் ஆற்றல் ஒழிவதாக! என்று வியந்துகூறி; மதுமலர்க் குழலாள் மணிமேகலைதான்-தேன் பொதுளிய மலரணியும் பருவமுடைய கூந்தலையுடைய அம் மணிமேகலை நல்லாள்; சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-அன்புடைய சுதமதியோடு சொல்லாடி நின்றபொழுதில்; இந்திரகோடணை விழா அணி விரும்பி தேவேந்திரனுக்கு அந் நகரத்தே நிகழ்கின்ற ஆரவாரமுடைய விழாவின் அழகைக் காண விரும்பி; வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்-வந்து காணுகின்ற மணிமேகலா தெய்வம் என்னும் மணிமேலையின் தந்தைவழிக்குல தெய்வமானது மணிமேகலை நெஞ்சம் காமுற்றுப் புதுவோன் பின்போன செவ்வியறிந்து அவளைத் தடுத்து நன்னெறிப்படுத்துதற் பொருட்டு; பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அந் நகரத்திலே வாழுமொரு பசிய வளையலையுடையா ளொரு மானுடமகள் வடிவந்தாங்கி; என்க.
(விளக்கம்) இதுவோ-இத்தகைய இழிதகவுடையதோ என்புழி ஓகாரம் ஒழியிசை. என்னை? அனையதாயினும் அழிக்குதும் என்பது குறித்து நிற்றலின். கோடணை-ஆரவாரம். அணி-அழகு. காண்குறூஉம்-என்றமையால் அத் தெய்வம் இந்திர விழாக் கால் கொண்ட பொழுதே அங்கு வந்தமை பெற்றாம். ஈண்டு வருதற்குக் காரணம் மணிமேகலைக்கு எதிர்ந்துள ஏது நிகழ்ச்சியை அறிந்து அவ்வழி அவளை ஆற்றுப்படுத்தற்குக் கருதியதாம் என்க. என்னை? அஃது அவட்குக் குல தெய்வமும் ஆகலான். அதனை,
வந்தேன் அஞ்சன் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம்
ஏதுமுதிர்ந் துளது இளங்கொடிக் காதலின்
விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னை
வஞ்சமின் மணிபல் லவத்திடை வைத்தேன்
எனப் பின்னர் அத் தெய்வமே(துயலெழுப்பிய காதையில்) இயம்புதலானும் அறிக. இக் கருத்தை யுட்கொண்டே இக் காதை முகப்பின் (.......உதயகுமரன் பால் உள்ளத்தாள் என மணிமேகலைக்கு மணிமேலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு.) என்று முன்னையோர் வரைந்தனர் என்றுணர்க.
மணிமேகலா தெய்வம் புத்தபீடிகையை வலஞ்செய்து வாழ்த்தி வணங்குதல்
96-108: மணியறை.........நீட்டும்
(இதன் பொருள்) மணி அறைப் பீடிகை வலங்கொண்டு ஓங்கி-உவவனத்தின் கண்ணதாகிய அப் பளிக்கறையின் உள்ளே அமைந்த புத்தபீடிகையை வலமாக வந்து பின்னர் வானத்தின் கண் உயர்ந்துநின்று; புலவன்-எல்லார்க்கும் அறிவாயுள்ளவனே; தீர்த்தன-தூயோனே!; புண்ணியன-அறத்தின் திரு மூர்த்தியே!; புராணன்-பழைமையுடையோனே!; உலகநோன்பின் உயர்ந்தோய் எனகோ-உன்னை, துறவாமலே நோன்பு செய்து உயர்ந்தோன் என்று புகழவேனோ?; குற்றம் கெடுத்தோய்-காம வெகுளிமயக்கமாகிய குற்றங்களை அழித்தவனே என்றும்; செற்றம் செறுத்தோய்-அடிப்பட்ட சினத்தையே சினந்தவனே என்னும்; முற்ற வுணர்ந்த முதல்வா என்கோ-முழுதும் ஓதாமலே உணர்ந்திட்ட முழுமுதல்வனே என்றும் பாராட்டுவேனோ?; காமற் கடந்தோய் ஏம்ம ஆவோய் தீநெறிக்கடும்பகை கடிந்தோய் என்கோ-காமனை வென்றவனே மன்னுயிர்க்கெல்லாம் காவலானவனே  தீமை பயக்கும் வழியிற் செலுத்தும் ஐம்பொறிகளாகிய கடிய பகையை வெனறொழித்தவனே என்று சொல்லிப் புகழவேனோ?;
ஆயிர ஆர்த்து ஆழியம் திருந்து அடி-நின்னுடைய ஆயிரம் ஆரக்கால்களோடு கூடிய சக்கர ரேகையுடைய அழகிய திருவடிகளை; ஆயிரம் நாஇலேன்-ஆயிரம் நாவுகளின்றி ஒரே நாவுடைய யான்; ஏததுவது எவன்-புகழ்ந்து பாராட்டுதல் எங்ஙனமாம்; என்று என்று பலவும் சொல்லிப் புகழ்ந்து; எரிமணிப் பூங்கொடி இருநிலம் மருங்கு வந்து ஒருதனி திரிவது ஒத்து-ஒளிவீசும் அழகிய காமவல்லி என்னும் வான்நாட்டுப் பூங்கொடி ஒன்று தனித்து நிலவுலகத்திலே திரிந்தாற் போன்று; ஓதியின் ஒதுங்கி-ஓதிஞானத்தோடே இயங்கி; நிலவரை இறந்து(ஓர்) முடங்கு நாநீட்டும்-நிலப்பரப்பினைக் கடந்து கானிலந் தோயாமலே நின்று அவன் புகழ் கூறமாட்டாமையால் முடக்கிய தன் நாவினை நிமிர்த்துப் புகழாநிற்கும் என்க.
(விளக்கம்)  மணியறை-பளிக்கறை. வானத்திலோங்கி என்க புண்ணியன்-அறவோன் குற்றம்-காமவெகுளி மயக்கம். என்கோ என்பேனா? புராணம்-பழைமை. ஏமம்-பாதுகாவல்; இன்பமுமாம். தீநெறி-தீயவழியில் ஒழுகும் ஒழுக்கம். தீயநெறியிற் செலுத்தும் கடியபகை. ஆயிரம் ஆரங்களையுடைய சக்கரக் குறி கிடந்த திருந்தடி என்க. நின்னைப் புகழ் நாவாயிரம் வேண்டும் அவையிலேன் எவ்வாறு புகழ்வல்? என்றவாறு. ஓதி-மெய்யறிவு; முக்காலமும் அறியும் முற்றறிவுமாம். ஓர்: அசை. கூற மாட்டாது முடங்கி நாவை மீண்டும் நிமிர்த்து என்க. நிமிர்த்திப் பாராட்ட என்று முடிந்திடுக. நீட்டும் நீட்டிப் பாராட்டிப் பரவுவாள் என்க. நீட்டும்: செய்யும் என்னும் முற்றச் சொல்.
அந்திமாலையின் வரவு
(109 ஆம் அடிமுதலாக,141 ஆம் அடிமுடியப் புகார் நகரத்தே அற்றைநாள் அந்திமாலை வரவின் வண்ணனையாய் ஒரு தொடர்.)
109-122: புலவரை...........பெய்தலும்
(இதன் பொருள்) புலவரை இறந்த புகார் எனும் பூங்கொடி-அறிவினது எல்லையையும் கடந்துதிகழ்கின்ற பேரழகோடு கூடிய பூம்புகார் நகரம் என்னும் மலர்ந்த கொடிபோலும் மடந்தை எத்தகையளோ வெனின் அவள்தான்; பல்மலர் சிறந்த நல்நீர் அகழி அடி-பல்வேறு வண்ணமலர்களாலே நல்ல நீர்மையையுடைய (நீரையுடைய) அகழியாகிய திருவடிகளையும் அவ்வகழியின் கண்ணிருந்து ஆரவாரிக்கின்ற; புள ஒலிசிறந்த தௌஅரிச் சிலம்பு-பறவை இனமாகிய அவ்வடியிற் கிடந்து முரலும் சிறந்த தெளிந்த ஓசையைச் செய்யும் பரல்களையுடைய சிலம்புகளையும்; ஞாயில் இஞ்சி-ஞாயிலென்னும் உறுப்போடு கூடிய மதில்வட்டமாகிய; நகை மணிமேகலை-(அந்நகர் நங்கை இடையிலணிந்த) ஒளிமிக்க மணிகளாலியன்ற மேகலை என்னும் அணிகலனையும் வாயில் மருங்கு இயன்ற வான் டணைத்தோளி-வாயிலின இரு மருங்கும் நடப்பட்டுள்ள உயர்ந்த மூங்கிலாகிய தோள்களையும் உடையாள்; தருநிலை வச்சிரம் என எதிர்எதிர் ஓங்கிய இருகோட்டம்-தருநிலைக் கோட்டம் எனவும் வச்சிரக் கோட்டம் எனவும் கூறப்படுகின்ற ஒன்றற்கொன்று எதிர்எதிராக உயர்ந்து திகழும் இரண்டு கோட்டங்களாகிய; கதிர் இளவனமுலை-ஒளியும் இளைமையும் அழகும் உடைய இரண்டு முலைகளையும்; ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி ஊழிஎண்ணி நீடுநின்று ஓங்கிய ஆத்திமாலை சூடிய சோழமன்னனுக் கென்றே உலகத்து அரண்மனைகளுள் வைத்துப் பெரிய அளவுடையதாக இயற்றப்பட்டு ஊழிபலவும் எண்ணியறிந்து நீடூழிகள் நிலைத்து நின்று புகழாலுயர்ந்திருக்கின்ற; ஒரு பெருங்கோயில்-உலகில் ஒப்பற்ற பெரிய அரண்மனையாகிய; திருமுகவாட்டி -அழகிய முகத்தினையும் உடையவளாவாள்; குணதிசை மருங்கின் நாளமுதிர் மதியமும் குடதிசை மருங்கின் சென்றுவீழ் கதிரும்-அற்றை நாள் கீழ்த்திசையினின்றும் எழாநின்ற வளர்பிறைப் பக்கத்து நாளெல்லாம் முதிர்ந்தமையாலே முழுவுருவமும் பெற்ற நிறைத் திங்கள் மண்டிலமும் மேற்றிசையிலே சென்று வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலமும்; வெள்ளி வெளதோட்டொடு பொன்தோடு ஆக-வெள்ளியாலியன்ற வெள்ளைத் தோடாகவும் பொன்னாலியன்ற செந்தோடாகவும்; எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்-குற்றமற்ற அந் நகர நங்கையின் அழகிய முகமானது மேலும் பொலிவுறும்படி காலம் என்னும் அவளுடைய தோழியானவள் அணிந்து விடாநிற்பவும் என்க.
(விளக்கம்) புலவரை-அறிவின் எல்லை; அழகு அறிவிற்கன்றி உணர்ச்சிக்குப் புலனாதலின் அறிவின் எல்லை இறந்த என்றார். அகழியாகிய அடியையும் அதன்கண் பன்னிற மலரினின்று ஆரவாரிக்கின்ற புள்ளொலியாகிய அவள் தன் சிலம்பையும். இஞ்சியாகிய மேகலையையும், இருமருங்கும் நடப்பட்ட மூலையினையும், அரண்மனையாகிய திருமுகத்தையும் உடைய பூம்புகார் என்னும் நகர் மடந்தைக்கு அற்றைநாள் எழுகின்ற திங்கள் மண்டிலத்தை ஒரு செவியினும், வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலத்தை ஒரு செவியினும் வெள்ளித் தோடாகவும் பொன் தோடாகவும் அரண்மனையாகிய திருமுகம் பொலியும்படி காலமாகிய அந் நகர் நங்கையின் தோழி அணிந்து விடவும் என்க. இது குறிப்புவமை அணி. காலமாகிய தோழி என வருவித்துக் கூறுக.
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் என்றது தருநிலைக் கோட்டமும் வச்சிரக் கோட்டமும் ஆகிய இரு கோட்டங்களும் என்றவாறு. தரு-கற்பகம். கற்பசத்தரு நிற்கும் கோட்டமும் வச்சிரப்படை நிறுத்தப்பட்ட கோட்டமும் என்க. கோட்டம்-கோயில். இவை ஒன்றற் கொன்று அணித்தாக ஒன்றுபோல உயர்ந்த கோட்டங்களாதலின் இங்ஙனம் உருவகஞ் செய்தார்.
இதுவுமது
123-132: அன்னச்சேவல்.........படர
(இதன் பொருள்) அன்னச் சேவல் அயர்ந்து விளையாடின தன் உறுபெடையைத் தாமரை அடக்க-அன்னப்பறவையினுள் வைத்துச் சேவலன்னமானது பெரிதும் தன்னை மறந்து காதல் விளையாடல் நிகழ்த்திய தனக்குரிய பெடையன்னத்தைக் கதிரவன் மேலைக்கடலில் மறைதலாலே ஆட்டத்திற்குக் களமாயிருந்த தாமரை மலரானது இதழ்குவித்துத் தன்னுள்ளே அடக்கி மறைத்துக் கொள்ளுதலாலே; பூம்பொதி சிதையத் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கு இரு தெங்கின் உயர்மடல் ஏற-அத் தாமறையின் இதழ்களாலியன்ற பொதி சிதைந்தழியும்படி கிழித்து அச் சேவலன்னம் தன்பெடையன்னத்தை எடுத்துக்கொண்டு உயர்ந்து நிற்கின்ற தெங்கினது உயர்ந்த மடலினூடே ஏறியிருப்பவும் அன்றில் பெடை அரிக்குரல் அழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்ப-பெடையன்றில் தனது அரித்தெழுகின்ற குரலாற் கூவுமாற்றாலே குடகடலிலே கதிரவன் சென்று வீழ்கின்ற அந்திமாலையாகிய பொழுதின் வரவினைத் தன் சேவலன்றிலுக்கு அறிவிப்பவும்; பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளைமேய்ந்த-பவளம் போன்று சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகள் செறிந்துள்ள கானகத்தினுதடே குவளை மலர்களை மேய்ந்த; சேதா குடம் முலைக்கண் பொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப-செவ்விய பசுக்களின் குடம்போன்ற முலையிற் கண்களிற் சுரந்து பொழியாநின்ற இனிய பாலே அவற்றின் இயக்கத்தாலே எழுகின்ற துகளை அடக்கும்படி; கன்று நினை குரல்-தத்தம் கன்றை நினைத்துக் கூப்பிடுகின்ற குரலையுடைய வாய் விரைந்து; மன்றுவழிப் படர-தத்தம் மன்றங்களிற்குச் செல்கின்ற வழியின்மேற் செல்லா நிற்பவும் என்க.
(விளக்கம்) இதன்கண் தனக்குரிய பெடையை, தாமரை பொதிந்து கொள்ள அதுகண்ட அன்னச் சேவலானது அப்பொதியைச் சிதைத்து அப் பெடையை எடுத்துக் கொண்டு தெங்கின் உயர் மடலில் ஏறிற்றாகக் கூறிய இக் கருப்பொருட் புறத்தே உதயகுமரனுடைய உள்ளத் தடத்தில் மலர்ந்துள்ள ஏது நிகழ்ச்சியாகிய தாமரை மலரானது மணிமேகலையாகிய தூய அன்னத்தைத் தன்னுள் வைத்துக் காமமாகிய தன்னிதழ்களாலே மறைந்துக் கொள்ளா நிற்ப அவ் விதழ்கள் சிதையும்படி மணிமேகலா தெய்வம் மணி பல்லவத்திற்கு எடுத்துப் போய் உயரிய துறவு நெறியில் சேர்ப்பித்தலாகிய பொருள் தோன்றி அற்றை நாளிரவு நிகழ்ச்சியை ஒருவாறாக நினைப்பித்து நிற்றலையும் நினைக. இவ்வாறு ஒன்று கூற அதுவே பிறிதொரு பொருளையும் நினைவூட்டுவதாக அமைக்குந் திறம் சாத்தனார் போன்ற மாபெருங் கலைஞர்க்கே இயல்வது போலும். இங்ஙனம் தோன்றுவதனை,(தொனிப் பொருள் என்னும்) குறிப்புப் பொருள் என்க.
காதற்றுணையைப் பிரிந்துறைய நேரின் அன்றிற் பறவை இறந்து படும் ஆதலால் தனக்கிரை கொணரச் சென்றுள்ள சேவலுக்குத் தனது அரிக்குரலாலே கதிரவன் மறைவதனை அறிவிக்கின்றது என்க. அரிக் குரல்-அரித்தெழும் ஒலி; இஃது இழுமென்னும் இனிய வொலிக்கு முரண் ஆய வொலியாம். அழைஇ-அழைத்து. குடக்கண்-குடம்பால் கறக்கும் முலையின்கண் எனலுமாம் இத்தகைய பசுக்களைக் குடச்சுட்டு என்னும் பெயராலும் குறிப்பதுண்டு. இதனை....
புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம்
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச்-சொல்லால்
கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா னான்கு
குடஞ்சுட் டினத்தாற் கொடு
எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை வரலாற்று வெண்பாவானும் அதன் உரையானும் உணர்க(வெட்சி-18).
சேதா-செவ்விய பசு. சிவந்த நிறமுடைய பசு எனலுமாம். பசுக்களில் சிவப்புப் பசுவே சிறந்தது என்பது இதன் கருத்தென்க.
சேதா...........படர என்னுமிதனோடு மதவுநடை நல்லான் வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் மாலையும் எனவும்(அகநா-14) ஆன்கணங் கன்று பயிர் குரல மன்று நிறை புகுகர (குறிஞ்சி-217) எனவும் வரும் பிறநூற் சொற்றொடர்களையும் ஒப்பு நோக்குக.
இதுவுமது
133-141: அந்தியந்தணர்........மருங்கென்
(இதன் பொருள்) அந்தணர் அந்திச் செந்தீப் பேண-மறையவர் தம்மறை விதித்தாங்கு அந்திப் பொழுதிலே வளர்க்க வேண்டிய வேள்வித் தீயை அவிசொரிந்து வளர்ப்பவும்; பைந்தொடி மகளிர் பலர் விளக்கெடுப்ப-பசிய பொன் வளையலணிந்த மங்கலமகளிர் பலரும் தத்தம் மனைதொறும் திருவிளக் கேற்றித் தொழா நிற்பவும்; யாழோர் மருதத்து இன்னரம்பு உளர-யாழ் வாசிக்கும் இசைவாணராகிய பாணரகள் மருதப்பண் எழீஇ இனிய இசை தரும் யாழ் நரம்புகளை வருடாநிற்பவும்; கோவலர் முல்லைக்குழல் மேற் கொள்ள-கோவலராகிய ஆயர்கள் தமக்குரிய முல்லைப் பண்ணை வேய்ங்குழலிடத்தே ஊதாநிற்பவும்; அமரகம் மருங்கில் கண்வனை இழந்து தமர் அகம் புகூஉம் ஒருமகள் போல-போர்க் களத்திடத்தே தன் கணவன் இறந்து படுதலாலே பெருந்துன்பத்தோடே தன் பெற்றோர் இல்லத்திற்குத் தனியே செல்லும் ஒரு மங்கையைப் போல; கதிர் ஆற்றுப்படுத்த முதிராசத்துன்பமோடு அந்தி என்னும் பசலை மெய்யாட்டி-கதிரவனாகிய தன் கணவனை மறைந்தொழியும்படி போக்கி விட்டமையாலே முடிவில்லாத பிரிவுத்துன்பத்தோடே அந்தி மாலை என்னும் பெயரையுடைய பசலை பாய்ந்த மெய்யினையுடைய நங்கை; மாநகர் மருங்கு வந்து இறுத்தனள்-பெரிய அப் பூம்புகார் நகரிடத்தே வந்து தங்குவாளாயினள்; என்பதாம்.
(விளக்கம்) (23-41) இவ்வந்திமாலை வண்ணனையில் அன்னச் சேவல் தாமரை முதலிய மருதக்கருப் பொருளும் அன்றிற் சேவல் பெடை முதலிய நெய்தற் கருப்பொருளும், ஆவும் கோவலருமாகிய முல்லைக்கருப் பொருளும் வந்து மயங்கின.
கதிரவனைப் போக்கிய என்க. பிரிவாற்றாமையால் பசலைபூத்த மெய்யினை உடையளாய் என்றவாறு. செக்கர் வானத்தை அவளுடைய பசலை மெய்யாக உருவகித்த படியாம்.
மணிமேகலை தமரையும் காதலனாகிய உதயகுமரனையும் பிரிந்து போய் வருந்துதலைக் கருத்துட் கொண்டு புலவர் பெருமான் இக் காதையைத் துன்பியல் முடிவுடைத்தாக இயற்றினர். என்னை? அடுத்து வருவன அவலச் சுவையே நிரம்பிய காதைகளாதலால் அச் சுவைக்கு இவ்வாறு கால்கோள் செய்கின்றனர், காப்பியவுத்தி பலவும் கைவந்த தண்டமிழ் ஆசான் சாத்தனார் என்க.
இனி இக் காதையை-இளங்கோன் கண்ட பூங்கொடி உருவம் பெயர்ப்ப வியப்போன் தெளிந்து சூழ்வோன் உரையென, உரைப்ப ஆகென அகல்வோன்,உரையினை உரையென வேந்தே கேட்டருள், இழந்தோன் வருவோன் கண்டு உதிர்த்துத் திரிவோன் புண்ணினன் புகுந்து என்றோனை. என்னொடும் கையுதிர்க் கோடலின், உடையோன் நோக்கித், தந்து ஏற்றிக் காட்டிய சங்கதருமன். அருளிய தகை பாராட்டுதல் அல்லது இல்லேன் என அறிந்தேன் என்று. போயபின் என் நெஞ்சம் போனது கெடுக என, தெய்வம் ஆகி நீட்டும் நீட்ட; அடக்க இசைப்பப் படர எடுப்ப உளரக் கொள்ள இழந்து மெய்யாட்டி  மாநகர் மருங்கு இறுத்தனள் என்று இயைத்திடுக.
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை






























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக