செவ்வாய், 8 நவம்பர், 2011

திருமந்திரம் | ஆறாம் தந்திரம் | ஏழாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்


ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011 

12 திருமுறைகள்

 பத்தாம் திருமறை
திருமந்திரம் | ஆறாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்
    




விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க
http://temple.dinamalar.com/



 பத்தாம் திருமறை
திருமந்திரம் | ஆறாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்

ஆறாம் தந்திரம்
1. சிவகுரு தரிசினம்
(தம்முதல் குருவுமாய்த் தோன்றல்)
(சிவகுரு தரிசனமாவது உள்ளத்தில் உறையும் சிவனைக் காண்டல். அக்குருநாதன் பிரணவ உபதேசத்தால் குற்றங்களை நீங்கச் செய்து உண்மை இயல்புகளை உணர்த்துவார். இது சத்தியோ நிர்வாண தீட்சை எனப்பெறும்.)
1573. பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.
பொருள் : பத்தியை உண்டாக்கி, திருவடியை வணங்கச் செய்து பிரணவ உபதேசத்தால் குற்றங்களை நீங்கச் செய்து சத்தும் அசத்தும் சதசத்துமான பொருள்களின் உண்மை இயல்புகளை உள் நின்று உணர்த்தியமையால், சித்தத்தில் உள்ள இறைவனே குரவானவன்.
மந்திரம் கிரியை பாவனையற்றது, பிரணவ உபாசகருக்கு அசத்தாகிய பாசமும், சதசத்தாகிய பசுவும், சத்தாகிய சிவமும் விளங்கும்.
சிவகுருவாக எழுந்தருளி வருபவன் உறுதியாக விழுமிய  முழுமுதற் சிவனேயாவன்.
1574. பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடுவித்த நேர்நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டத்தது
ஆசற்ற சற்குரு அம்பல மாமே.
பொருள் : ஆணவத்தால் மறைப்புண்டு கிடந்து சீவனை மாயா மலத்தைக் கூட்டி ஆணவத்தை அகற்றி, உடலே தான் என்றிருந்த ஆசையை அறுத்து, நேருக்கு நேரே நிலைகுலையாத முத்தியால் கூட்டுவதற்கு உபகாரப்படுவது, உபாசகனின் ஒளி மண்டலத்தில் விளங்கும் உருவமற்ற சத்குருவாம். சற்குருவின் அருளால் பாசநீக்கம் பெற்று முதல் நிலைக்குச் செல்லலாம்.
1575. சித்திகள் எட்டோடும் தண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சித்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.
பொருள் : அணிமாதி சித்திகள் எட்டுடனும், சாதகனைச் சிவமாகச் செய்த பக்குவ நிலையும், வாமாதி எண் சத்திகளால் பந்திக்காத தூய்மையும் யோகத்தால் உண்டாகும் ஆற்றலும் மந்திரங்களைத் தியானிப்பதால் விளையும் ஞானமும் இறைவன்பால் உண்டாகும் அன்பும் ஆகிய எல்லாம், சிவகுருவின் அருளால் நடைபெறும்.
1576. எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலால்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களுக்கு உட்பட்ட உலகங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட சிவன், இவ்வுலகத்தில் தென்நாடுடைய சிவனேயாய்த் திகழ்கின்றனன். அவன் நல்லாராகிய சிவஞானிகள் உள்ளத்து மிக்க அருள் செய்தல் போல் ஏனையார்க்கும் செய்தற் பொருட்டுப் புறத்தே, தம் முதல் குருவுமாய்த் தோன்றி அருள்வன். அதனால் எல்லாரையும் இப்பிறப்பு ஒன்றிலேயே உய்யக் கொண்டருள்வன். அதனால் புகழமைந்த நற்குரு இறய்கைச் சிவனே.
1577. தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்குண்டு உரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.
பொருள் : தேவனும் சுத்த குருவாகவும் உள்ள சிவன் ஆகமத்துள் எல்லாம் பதி பசு பாசம் என்று மூன்றாகக் கருதுவது அறிந்து உபதேசத்தாலே அழிவற்ற சீவனது பாசத்தை நீக்கியே குருபரன் அன்புகொண்டு முத்தியின்கண் யாவையும் அருளும். சிவன் அன்புகொண்டு சீவரது தகுதிக்கேற்பக் குருவாக வந்து முத்தி அருளும்.
1578. சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென்று அடிபணி வாரே.
பொருள் : சுத்த சிவனே சீவர்களிடம் கருணை கொண்டு குருவாக வந்து மலக்குற்றத்தினை நீக்கி, அத்துணை புரியும் அருளினைக் காணாது அறிவிலிகள், பொய் மிகுந்த புவன போகங்களையே பொருளெனக் கண்டறியும் பாசம் பற்றியவர். குருவை நம்மவர் என்று தம்மோடு ஒப்பவைத்து எண்ணுவர். சிவபுண்ணியமுடைய ஞானியர் சிவனே இவன் என்று அடிபணிந்து வணங்குவர்.
1579. உண்மையிற் பொய்யை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்அரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே.
பொருள் : ஞானத்தால் பொய்மை நீக்குதலும், பிருதிவி தத்துவத்தின் வலிமையும், சிவமாகிய அவ் அரனது உபகாரமும், அறுபத்து நான்கு கலைகளால் வரும் மயக்க அறிவும் அண்ணலின் சத்தி பதியாவது யார் அறியமுடியும் ? குருவருளால் அஞ்ஞானம் நீங்கி இறைவனது உபகாரம் விளங்கும்.
1580. சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நவமான  தத்துவ நம்முத்தி நண்ணும்
பவமானது இன்றிப் பரலோகம் ஆமே.
பொருள் : சிவனே சிவஞானியாக அமைவதால், தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனென்று எண்ணித் திருவடியை அடைவார்க்கு, சிவத்தினது தோழமையும் நல்ல முத்தியும் பொருந்தும். அவர் பிறப்பின்றி மேலான சிவலோகத்தைச் சென்றடைவர். சிவகுருவை வழிபட்டார்க்குப் பிறப்பு இல்லை.
1581. குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித்து ஓரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் அற்றதோர் கோவே.
பொருள் : எனது குரு மண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் என உபதேசித்தான். குரு மண்டலமே சிவனுமாய் உயிருக்குத் தலைவனுமாய் உள்ளது. குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கம் அரசனாகும். இத்தகைய பெருமையுடைய குருமண்டலத்தில் சிவம் உள்ளிருந்து விளங்குவதைச் சாமானியர் அறியாதவராக உள்ளார்.
1582. சித்த யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையும் திண்சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.
பொருள் : அத்தனாகிய சிவபெருமான் தன் திருவருளால் சீவர்களுக்கு உள்நின்று உணர்த்தி யருள்வன். அதனால் எண்ணமாகிய சித்தம் யாவற்றையும் உள்ளவாறு உணர்ந்து இருந்திடும். அம்முறையில் எண்ணமானது இடையறாது. சிவத்தையே நாடுதலால் எண்ணம் முதலிய கருவிகள் அனைத்தும் சிவக் கருவியாகச் சிறக்கும். அத்தனாகிய சிவபெருமானும் அச்சீவன் தானாகவே அமர்ந்திடுவன்.
1583. தான்நந்தி சீர்மையுள் சந்தித்த சீர்வைத்த
கோன்நந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வான்நந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தான் நந்தி அங்கித் தனிச்சுடர் ஆமே.
பொருள் : சிவமாகிய தானே விளங்கும் சிறப்பான குரு மண்டலத்துள் பொருந்துவதால் அமையும் பெருமையை வைத்த தலைவனாகிய நந்தி பெருமானது குறிப்பை உணர்வார் இல்லை. ஆகாயத்தில் குருமண்டலத்தில் விளங்குபவன் என்று மகிழ்ந்திருப்பார்க்கு, முன்னர் அக்கினி மண்டலத்தில் விளங்கிய அரசனே ஒப்பற்ற சிவ சூரியனாம்.
1584. திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர்ஒண் ணாதே.
பொருள் : வாராத செல்வமாகிய திருவடிப்பேறும் வீடும் அவ் அவற்றின் சிறப்புக்களும் மயக்கம் உறாவண்ணம் அருளுதலும் மெய்ப்பொருள் உணர்த்திப் பொய்ப் பொருளின் மயக்கறுத்தலும் அம் மெய்ப் பொருளை உள்ளவாறு உணர்த்தும் திருநான்மறையின் முடிவும் அம்முடிபால் பெறப்படும் சித்தாந்த நுண்ணுணர்வும் சிவகுரு வடிவெடுத்துச் சிவபெருமான் அருளாவிடின் ஒருவராலும் உணர ஒண்ணாது என்க.
1585. பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கும் வித்தாம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சித்தி யருள்தரில் தான்எளி தாமே.
பொருள் : சிவத்தினிடம் பத்தியும் அதனால் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற வைராக்கியமும் வீடுபேறடைய சாதனங்களாம். அவற்றால் சிவமேதான் என்ற பாவனை முதிர்ந்து வீடு பேற்றிற்கு ஏதுவான ஞானம் தோன்றி, அந்த ஞானப்பயிர் சத்தியின் அருளால் எளிதாக வளர்ந்து முத்தி கிட்டு. (வைராக்கியம் - விஷயங்களில் பற்றின்மை)
1586. பின்எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்இறை
தன்எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்எய்த வைத்த மனமது தானே.
பொருள் : இவ்வுலகில் நான் வீடுபேறு அடைவதற்காக அமைத்த இன்பப் பிறப்பை, முன்னமே எனக்கு உதவிய முதல்வனாகிய இறைவனை ஞானத்தில் அடையுங்காலத்தில் அவன் என்னிடமாகத்தானே வெளிப்படுவான். அங்ஙனம் எனது தலைவனை அடையத்துணை செய்தது என்னுடைய மனமேயாம்.
1587. சிவமான ஞானம் தெளியஒண்சித்தி
சிவமான ஞானம் தெளியஒண் முததி
சிவமான ஞானம் சிவபரத்தே ஏகச்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.
பொருள் : சிவமாக்கும் திருவடியுணர்வு சிவஞானம் எனப்படும். சிவஞானம் எனினும் திருவருள் எனினும் ஒன்றே, அத்திருவருளால் ஆருயிர்களின் அறிவு தெளிவுபெறும். அறிவு தெளியச் சிறந்த சித்திகள் கைகூடும். பற்று அறுதியாகிய வீடும் எய்தும். இவற்றால் சிவம் தானாதல் என்னும் சீரும் பொருந்தும். அத்திருவருளே தவலில் சிவ இன்பமாகும். (தவலில் - குற்றமற்ற)
1588. அறிந்துணர்ந்த தேன்இவ் அகலிடம் முற்றும்
செறிந்துணர்ந்து ஓதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.
பொருள் : திருவருள் துணையால் உலகியல் உண்மை முற்றும் அறிந்துணர்ந்தேன். சிவன் திருவடிக்குப் பேரன்பு வைத்துத் திருமுறையும் சித்தாந்த நூல்களும் ஓதியுணர்ந்து திருவருள் பெற்றேன் சிவனடி நினைக்கும் சிறந்த அறிவில்லாரின் பெரு வாழ்வையும் மறந்து ஒழிந்தேன். அதனால் சிறப்பில்லார் தம் திறத்துச் சேர்வை நீங்கிற்று. நீங்கவே பிறவியினின்று விடுபட்டேன். (மதி மாண்டவர் - அறிவு அறை போகியவர்.)
1589. தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.
பொருள் : வினைக்கு ஈடாகப்பெற்ற உடல் முதலியவற்றைச் சுமக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவனாகிய இறைவன் எவ்வாறு சீவர்களோடு பொருந்தி இருக்கின்றான் என்பதை எவ்வகையிலும் அறியார். சீவர்கள் அறியா வகை பிரிக்கின்ற தடைகளை நீக்கி எல்லா உயிர்களையும் தன் கருவில் கொண்ட இறைவனை நான் கண்டு கொண்டேன்.
2. திருவடிப்பேறு
(திருவடி - திருவருள், கால் என்பது குண்டலினி, சத்தி, அது சிரசை நோக்கிப் பாய்வதே அருள். அவ்வாறு சிரசின் மேல் பொருந்தி யிருப்பதே திருவடிப்பேறு.)
1590. இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்திடும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து உவந்ததே.
பொருள் : திருவருள் வலத்தால் ஒத்து எழும் அன்பின்கண் அந்த அன்புருவாக விழைந்து எழும் சிவபெருமானை மேலும் மேலும் முறுகி வளரும் அன்பின்வழிச் சென்று தொழுவர். தொழவே, சிவபெருமான் சிவகுருவாக வந்து மும்மலங்களை அகற்றுவர். அகற்றி உச்சியின்கண் திருக்கையினைப் பொருந்துமாறு வைத்து அருளுவர். அருளவே அவர்தம் திருவடி சீவர்களின் உள்ளத்து இடனமைத்து வெளிப்பட்டு அமரும்.
1591. தாள்தந்த போதே தலைதந்த எம்இறை
வாள்தந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடு அந்தம் இன்றியே ஆள்கென விட்டு அருள்
பாடுஇன் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.
பொருள் : எம் தலைவனாகிய சிவபெருமான் தன் திருவடிகளை எம் உள்ளத்தே பதித்த பொழுது இது காறும் பொறி புலன்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த எமக்கு அவைகள் அடிமைப் படும்படியான தலைமையையும் தந்தருளினன். அறியாமையை ஈரும் வாளாகிய திருவடி உணர்வையும் தந்தருளினன். திருவருளால்  தன் திருவடிகளை வெளிப்படுத்திச் சிவகுருவாய் எழுந்தருளிவந்து எம்முடி மேல் வைத்தருளினன்.
1592. தான்அவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி
தான்அடி முற்சூட்டித் தாபித்தது உண்மையே.
பொருள் : என்னைச் சிவம்வந்து ஆட்கொண்டு அவனாகச் செய்தபோது சிவசொரூபமாக நான் ஆனபோது முன்னர்ச் சிவமாக விளங்கிய அயன், அரி, அரன், மகேசுவரன் ஆகிய நான்கு சொரூபங்களும் என்னை விட்டு அகற்றப்பட்டன. இதர அடையாளங்களான அருவச் சதாசிவம் விந்து நாதம் சத்தி ஆகியவைகளை என்னிடம் சிறப்பாக விளங்கும்படி செய்து தனது திருவருளை முன்னமேயே பெற்றவன் என்ற உண்மையைத் தாபித்து அருளினன் நந்தி.
1593. உரையற்று உணர்வற்று உயிர்பரம் அற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபத்த இருத்தினன் சொல்இறந் தோமே.
பொருள் : அனுபவ நிலையில் பேச்சற்று, உணர்வு கெட்டு, தான் என்ற நிலை அறியாமல் தெளிந்த நீர் போல அசைவில்லாமல் இருக்கும் சிவமாம் தன்மையும் கெட்டு நான்கு வாக்கினால் உதிக்கும் நாதத்தைக் கடந்த எல்லையற்ற தனது சொரூபத்துடன் ஒன்றாக்கினன். அதனால் பிறப்பு இறப்புக்கு எல்லையான பிரணவத்தைக் கடந்து விட்டோம்.
1594. குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்டு
அரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
உருகிட என்னைஅங்கு உய்யக்கொண் டானே.
பொருள் : தீட்சை செய்ய அமைந்தகுரு சீடனின் தூல சூக்கும காரண உடல்களில் உள்ள காரணமான தடைகளை நீக்கி, அரிய உயிரைக் குருவினிடம் பொருந்தும்படி செய்து யாவருக்கும் தலைவனான சிவத்துடன் மௌன யோகத்தில் விளங்கிடப் பொருந்தி என்னை ஆண்டு கொண்டருளினன். குரு பிரணவ சமாதியில் பொருந்தும் படி அருளினான்.
1595. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.
பொருள் : முன்னிலையில் அமைந்த குரு மௌன ஆனந்தமாகிய பேரின்பத்தில் எனது பசுகரங்களை அழித்து என்னிடம் அகண்ட அறிவாகிய சிவத்தைப் பதிப்பித்து என்னை நான் அறியாமல் செய்து, வெப்பமற்ற சந்திர மண்டல ஒளியில் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றையும் கைக்கொண்டு அவற்றால் அடைந்த பெருமைகளைஅழித்துத் திருவடிகளைச் சூட்டி என்னிடத்தில் நிலை பெற்றனன்.
1596. இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.
பொருள் : எனது ஆத்மாவிலும் பார்வையிலும் எனது சிரத்தின் மீதும் திருவருளைப் பதிவித்த பராபரனாகிய குருவானவர், கீழ் முகமாகச் சுருண்டு கிடந்த குண்டலினியை ஊர்த்துவ கதியாக அமைத்தருளியதும், விந்து நாதங்களை உணர்த்தியருளியதும், எம்முறையில் விந்து நாதங்கள் தொழிற்படுமோ அம்முறையில் உணர்த்தி யருளியதும் பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாததாகும்.
1597. திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி ஆற்றிடக் கண்டுகொண் டேனே.
பொருள் : என்னுடைய சிரசின் மீது திருவடியைச் சூட்டி, அருளால் பார்த்து, எங்குமாயிருக்கும் பெரிய வடி வினைத்தந்த பெரிய பெருமானை, குருவடிவில்வந்த தலை வனை, எம்முடைய அரசனை பிறவி உண்டாகும்வழி உலர்ந்து போகக் கண்டு கொண்டேன். பரிசமும் நோக்கமும் ஞான தீட்சையாகும்.
1598. திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலர மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
பொருள் : திருவடியுணர்வு ஆருயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் செம்மையுற விடுவிக்கும். அவ்வுணர்வே கிடைத்தற்கரிய திருவருட் சித்திகளை எய்துவிக்கும் அதுவே சிவவுலக வாழ்வினைச் சேர்ப்பிக்கும் அவ்வுணர்வே சிவமாம் பெருவாழ்வையும் கூட்டுவிக்கும்.
1599. மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயமது ஆக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தான்வைத்த வாறு தப்பித்த வாறே.
பொருள் : மேல்ஓதிய திருவருள் ஆணையின்வழி ஆருயிர்கள் செம்மையுற ஒழுகாவிட்டால், பண்டைப் பழவினைகளாகிய எஞ்சுவினைகள் உள்ளத்தை மயக்கி ஆசைக்குழியுள் வீழ்த்திப் பிறப்பு இறப்பிற் படுத்தி மாயமதாக்கும். பால்போலும் பிறையினைச்சூடியருளிய திருமுடியையுடைய அறிவுப் பேரொளிப் பெருமானாகிய சிவபெருமான் திருவடி சூட்டியவாறும், செந்நெறிக்கண் நிற்பித்தவாறும் திருவருளே.
1600. கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.
பொருள் : ஒலிக்கின்ற கழல் பொருந்திய கமலத்தில் விளங்கும் திருவடிநிழலை அடையப்பெற்றேன். திருமாலும் காணமுடியாத வெம்மை பொருந்திய அக்கினி மண்டலத்தில் உள்ள ருத்திரமூர்த்தியும் என்னுடைய உடல்பற்றை அழித்துச் சுழுமுனை உச்சியில் ஒளி பொருந்திய சிவமாக அமைந்தது.
1601. முடிமன்ன ராகின்மூ வுலகமது ஆள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.
பொருள் : முடிசூடிய மன்னராயின் மூன்று உலகங்களையும் ஒரு சேர ஆளுவர். ஆராயின் சிவனடியாராகிய மன்னர்கள் பெறும் இன்பத்துக்கு அளவே இல்லை. முடிமன்னராக உள்ள தேவர்களும் இறைவனுக்கு வழிவழி ஆட்செய்யும் குடி மன்னராயின் குற்றம் நீங்கி நின்றோர் õவர். இறைவன் முடிமன்ன ராயின் என்பதும் பாடம். அப்போது குற்றியலுகரமும் ஒற்றும் நீக்கி 12 எழுத்துக்கள் சரியாக உள்ளன.
1602. வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அவ்வேதத்தின் அந்தமே.
பொருள் : நான் என் மன மண்டலத்துள் இறைவனது திருவடிளான விந்து நாதங்களைப் பதித்துக் கொண்டேன். அதனால் பொய்யை மெய்போன்று காட்டி அக் கினியைத் தூண்டி நடத்தும் புலன்வழிச் செல்லாமல் மனத்தை மீட்டு, இளைத்தவனாகிய நான் படும் இருவினைத் துயரினை மாற்றி, அவ் வேதத்தின் முடிவாகிய ஞானானந் தத்தை அடைந்தேன. (வேதத்தின் அந்தம் - தத்துவமசி, அஃதாவது நீ எதை நினைக்கிறாயே அது ஆகிறாய் என்பது).
1603. அடிசார லாம்அண்ணல் பாதம் இரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளைக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.
பொருள் : நன்னெறிச் செல்வார் திருவருள் துணையால் திருவடி சேர்வர். பண்டைப் பழஅடியாராகிய முழு நீறு பூசிய முனிவர்கள் சிவபெருமான் திருவடியிரண்டினையும் தம் முடிவுக்கு அணியாக அணிந்தனர். படி முறையான் ஏற்றமாக எய்தும் இன்ப நிலையினராகிய அடியாருள் இணங்கி வாழும் இன்பவெள்ளத்துள் மூழ்குதலே நன்னெறிச் செல்வார் கொள்கையாகும் (நன்னெறி - சன்மார்க்கம்)
1604. மந்திரமாவதும் மாமருந்து ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.
பொருள் : நினைப்பவனைக் காக்கும் மந்திரமாவதும், பிறவி நோய்க்கு மருந்தாவதும், திருவருளைப் பெறக்கூடிய கிரியையாவதும் அடைந்தார் பெறும் பயன் எய்தும் புண்ணியத்தலங்கள் ஆவனவும் வீடு பேற்றை அளிக்கும் மேன்மையான நெறியாவதும் எந்தையாகிய சிவபெருமானது இரு திருவடிகளேயாம்.
3. ஞாதுரு ஞானஞேயம் (காண்பான் காட்சி காட்சிப்பொருள்)
(ஞாதுரு - காண்போன். ஞானம் - காணும் அறிவு; ஞேயம் காணப்படும் பொருள். இங்குக் காண்பவன் ஆன்மா; காண்பது சிவஞானம்; காணப்படும் பொருள் சிவம்.)
1605. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன்நிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே.
பொருள் : ஆன்மா என்றும் நீங்காத சிவானந்தமாகிய சிவத்திடம் பொருந்தி நிற்க, அநாதியே பற்றியுள்ள ஆணவமலம் அறிவை மறைக்காது அங்ஙனம் மறைப்பினும் தன் முனைப்பு நீங்கி அச்சிவானந்த நிலையில் நிற்கவே, என்றும் தன்னை விட்டு நீங்காத பேரின்பமாகிய அமதத்தில் நிலை பெறலாம்.
1606. ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவுஅறி வாரே.
பொருள் : அறியப்படும் பொருள் சிவம் என்று துணிந்து அவ்வழி நிற்போர்க்கு ஞானத்துக்குரிய மற்றவைகளும் பொருந்தி நிற்கும். அங்ஙனம் அறியப்படும் பொருளான சிவத்தை ஆன்மா அறிந்து அதுவாகவே அமைவது வீடாகும். ஞேயப் பொருளாகிய சிவத்தைப் பிரியாத சத்தியை உணர்ந்தவர் இக்கூட்டத்தால் விளைந்த மெய்ஞ்ஞான அறிவை அறிவார்.
1607. தானென்று அவனென்று இரண்டாகும் தத்துவம்
தானென்று அவனென்று இரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடி சாத்தினால்
நானென்று அவன்என்கை நல்ல்தொன்று அன்றே.
பொருள் : உண்மைப்பொருள் தான் என்ற ஆன்மாவும் அவன் என்ற சிவமும் ஆக இரண்டு உள்ளன. தன்னையும் அவனையும் தன்ஒளியில் கண்டு தானாக விளங்கும் சகஸ்ரதள உணர்வை, அவன்விளங்கும் நிமிர்ந்த சகஸ்ர தளத்துக்கு மாற்றினால், நான் என்றும் அவன் என்றும் வேறுபடுத்திக்காணும் உணர்வு மாறி நானே அவன் என்று கூறுவது நல்லது ஒன்றல்லவா ?
1608. வைச்சன ஆறாறும் மாற்றி என வைத்து
மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.
பொருள் : சிவனுக்கு உபகாரமாக வைத்து முப்பத்தாறு தத்துவங்களின் தொழிலையும் மாற்றி என்னை நிலைபெறச் செய்து உலகவர் பாராட்டும் வண்ணம் பரனது வியாபகத்துள் இருத்தி, அவ் அனுபவத்தில் நிலைபெறச் செய்து சிவமாக்கி, என்னை ஆட்கொண்டருளினான் என் குருநாதனாகிய சிவன்.
1609. முன்னை அறிவுஅறி யாதஅம் மூடர்போல்
பின்னை அறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரனாக்கித் தற்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.
பொருள் : சிவதீக்கை பெறுமுன் அறியவேண்டிய உண்மைகளை அறியாதிருந்த அறிவிலார்க்குச் சிவதீக்கைக்குப் பின் அறிவு அறியாமையென்னும் இரண்டினையும் சிவன் அழித்தனன். தன்னையாகிய சீவனை அறிய அச்சீவனைச் சிவமாக்கினன். ஆக்குதலும் சிவத்துடன் கூடி சீவன் தன்னையும் சிவத்தையும் காணும். அவ்வாறு காணும்படி அருளினன் சிவபெருமான்.
1610. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா எனவந்து காட்டினன் நந்தியே.
பொருள் : கட்பொறியால் காணாத காட்சியுடன், செவிப்பொறியால் கேளாத கேள்வியும் மாறுபடாத சிவனந்தமும் கூடிப் பிரியாத சேர்க்கையும் நாணமில்லாத பற்றும் நாதாந்தத்தில் விளங்கும் அறிவும் நந்தியெம் பெருமான் காண்பாயாக எனக் காட்டியருளினான்.
1611. மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மேனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனம்கை வந்துஊமை யாமொழி முற்றுங்காண்
மோனம்கை வந்துஐங் கருமமும் முன்னுமே.
பொருள் : வாய் வாளாமை யாகிய மோனம் கைவந்தோர்க்கு, திருவடிப்பேறும் கிட்டும். அவர்க்குச் சித்தியாகிய திருவருள் நிலையும் கைகூடும். அவர்க்குச் சொல்சிறந்து மறையாகிய சிகரம் கைகூடும். இதனை அசபாமறை என்பர். இத்திறத்தார்க்கு ஐந்தொழிலும் ஆண்டவன் அருளால் செய்தல் கூடும். (ஊமையா மொழி - பேசாத மந்திரம், இதனை அசபமந்திரம் என்றும் கூறும். ஊமை எழுத்து - பிரணவம்; ஐங்கருமம் - ஐந்தொழில்கள்.)
1612. முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தான் அந்தத்து ஒண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்துஇற வாரே.
பொருள் : சிவதீக்கையுற்ற நன்னெறிச் செல்வம் பொறியாகிய முத்திரை மூன்றினாலும் இடப்பால், வலப்பால், நடுநாடியாகிய மூன்றிலும் செல்லும் உயிர்ப்பினால் வீணாக வெளியாகும் நால்விரல் அளவினை உள்நிறுத்தல் செய்வார். அங்ஙனம் செய்யும்படி பழக்கிய பேரின்பச் சிவகுரு பாதத்தே நிலைபெறுவர். அதனால் அவர் மலப்பிணிப்பு அறும். அவர்கள் பிறந்திறக்கும் பொருந்துன்பப் பெற்றியினின்று நீங்குவர்.
1613. மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.
பொருள் : முன் ஓதிய காண்பான் காட்சி காட்சிப்பொருள் என்னும் மூன்றும் திருவருட் பொறிச் சிறப்பால் உள்ளங் கொள்கின்ற சிறந்த மெய் யுணர்வுடையோன் சிவ பெருமான் புரிந்தருளும் திருக்கூத்தினைத் திருவருட் கண்ணாற் கண்டு அம்மெய்ப் பொருளின் திருவடியிற்புகுவன். புகுந்த காரணத்தால் பருவுடம்பாகிய மூலப்பகுதியின் காரியங்கள் புடம் போட்ட பொன் போலவும் வேதித்த செம்பு போலவும் ஞானத்தின் திருவுருவாகும். அவனே சிவஞானி (பொறி - முத்திரை.)
4. துறவு
(துறவு - அன்பினால் இறைவனைப்பற்றி இயல்பான முறையில் பாசங்களின் நீங்குதல் அறிவினால் ஆராய்ச்சி செய்து பற்றின் நீங்குதல் அவா அறுத்தலின் பின்னர் கூறப்பெறும்.)
1614. இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில
ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கு அறப்பதி
காட்டும் அமரர் பிரானே.
பொருள் : ஒருவருக்கு இறப்பும் பிறப்புமாகிய ஆற்றொணாத் துன்பத்து இரு தன்மையும் நீங்கி இறைவனுக்கு அடிமையாகிய மெய்யுணர்வு பெறுதலே தமிழகத்துக்குத் துறவும் தவமும் ஆகும். அந்நெறியினை உடங்கியைந்து உணர்த்தியருளியவன் சிவபெருமான். அவன் திருவடி யிணையை மறவாதவராய் அவன்பால் பத்தராய் அவனையே பன்னிய நூல்தமிழ் மாலையால் பாடுவார்கட்கு அறப் பதியாம் சிவவுலகினைத் தந்தருள்வன் அமரர் பிரானாகிய சிவபெருமான். (வாய் மொழிவார் - துதிப்பவர்; அறப்பதி - முத்தியுலகம்.)
1615. பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.
பொருள் : பல்வேறு ஆற்றல்களையுடைய ஆணவ மலமாகிய பேதைமையினால் பிறந்தும் இறந்தும் சிவத்தை மறந்தும் அல்லலுறும் ஆருயிர்களின் மலஇருள் நீங்கும்படி உயிர்க்கு உயிராய் மறைந்து நின்று செவ்வி வருவித்து வெளிப்படுவன் சிவன். அவ்வாறு வெளிப்படுங்காலத்துச் சிவகுரு எனப்படுவான். சிவகுருவாய் வந்து திருமுறை வழித்தீக்கை செய்து ஆருயிர்களை ஆட்கொள்வான். ஆட்கொண்ட காலத்து அவ்வுயிர் சிவத்தைப் பேணும். அகத்துணைவெய்தும். அவ்வுயிர் அதனால் அருட்சுடர் பொலிவோடு திகழும்.
1616. அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.
பொருள் : நியதியை உடையவன்; அனாதியே உள்ளவன்; அதனால் தனியன். அவன் தங்கும் இடம் எல்லாத் தத்துவங்களும் சுட்டெரிக்கப்பட்ட இடம். அவன் ஏற்பது சீவபோகம், ஆதலால் அவன் துறவி என்பதை அறியுங்கள். பற்றுக்களை நீத்தவரைப் பிறவியைப் போக்கும் பித்தனாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
1617. நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முள் பாயகி லாவே.
பொருள் : அனாதியான இறைவன் சீவர்கள் அடைய வேண்டிய நெறியையும் நெருஞ்சில் முள்போல ஒதுக்கித் தள்ள வேண்டிய செயலையும் படைத்துள்ளான். அறவழியில் நில்லாமல் தவறினால் நெருஞ்சில் முள் குத்துவது போன்ற துன்பத்தை அடைவர். ஆனால் அறிவழி தவறாமல் ஒழுக வல்லார்க்கு வழியில் நெருஞ்சில்முள் குத்துவது  போன்ற துன்பங்கள் அடைய மாட்டா.
1618. கேடும் கடமையும் கேட்டுவந்து ஐவரும்
நாடி வளைந்தது நான்கட வேன்அலேன்
ஆடல் விடையுடையஅண்ணல் திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையன் தானே.
பொருள் : சிவ குருவால் ஆட்கொள்ளப்பட்ட உயிர் பிறப்பு இறப்புத் துன்பங்களையும் அத்துன்பங்களினின்றும் விடுபடுதற்குரிய சிவவழிபாடும் அக்குருவால் கேட்டு மகிழ்ந்தது. மகிழவே ஐம்புல ஆசைகள் அகன்றன. அதனால் ஐம்புலக் கள்வர் பற்றிப் பிடித்துச் செய்யும் துன்பங்கட்கு அவ்வுயிர் கடமைப்படாமல் நீங்கிற்று. அதனால் அத்தகைய உயிர் வெற்றிப்பாடு அமைந்த ஆனேற்றை யுடைய அண்ணலாகிய சிவபெருமான் திருவடியைக் கூடும். தாவில் தவஞ் செய்யும் தலைமையினையும் ஆயும்; எய்தும்.
1619. உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழஒழிந் தானே.
பொருள் : ஞான சாதனை செய்பவன், மேலும் மேலும் சாதனையை விரும்பிச் செய்ய, ஆகாய மண்டலம் விளங்க ஞான சாதனையில் அமைந்த நீலோற்பல ஒளி ஞான சாதனை செய்தவன் இது அருள் சத்தியின் ஒளி என்று கண்டு ஞான சாதகன் மேலும் சாதனையற்று அருளில் நாட்டம் கொண்டு விளங்கினான்.
1620. சேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்குஅவன் நண்பன் அவாவிலி
கார்துறந் தார்க்குஅவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.
பொருள் : இயல்பாகவே பற்றும் வெறுப்பும் இல்லாதவன். கூற்றுவன் நாள் என்ற காலத்தைக் கடந்தவருக்கு அவன் நண்பன். எல்லாவற்றையும் உடைமையால் அவன் ஆசையற்றவன். அஞ்ஞானமாகிய இருளைவிட்டு ஒளி பெறுவோர்க்குத் தனது நெற்றிக் கண்ணால் அனுக்கிரகம் செய்வான். பூமி தத்துவம் என்ற பாலுணர்ச்சியைத் துறந்தவர்க்கே தனது திருவடியைத் தந்து அருளுவான்.
1621. நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகம்உள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித்து ஆட்டொழிந்து
ஏகப் படம்செய்து உம்பிட மாமே.
பொருள் : ஆருயிர்கட்கு நாகம் போலும் உடம்பு ஒன்று அதன் ஐந்து படம்போலும் ஐம்பொறிகள். அப்பொறிகள் வழியாக அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நாற்பயன்களையும் உயிர் நுகரும், உளப் புற்றாகிய உடம்பினது அகத்துப் பொருந்தி நிறைந்து நிற்பன் சிவன். நுண்மை முன்மையாகிய உடம்பு இரண்டினுள்ளும் படமாகிய பொறி வழிச்சென்று ஆடும் செயலறப்பாடஞ் செய்தலாகிய தகுதி உண்டாக்கி அச்சிவபெருமான் அவ்உடம்பினை இடமாகக் கொண்டருள்வன். (நுண்மை - சூக்குமம், முன்னை - காரணம்)
1622. அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்தான் எனநின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனும் ஆகும்
நயன்தான் வரும்வழி நாமறி யோமே.
பொருள் : அம்மையுடன் கூடிய அப்பனாகிய சிவனும் பற்றற்றார் வழிக்கு முதல்வன் ஆவன். அவன் இன்ன தன்மையன் என்றிசைக்கும் எளியனும் அல்லன். சிவன் தாளாகிய திருவருள் ஆருயிர்கட்கு ஏற்றவாறு பலவாக அமைந்து செவ்வி வருவிக்கும். நயமாகிய திருவடியுணர்வு திருவருள் உணர்வான் உணரத்தக்கது. நாம் என்னும் அகச் செருக்கு உள்ளவரையும் அவ்வுயிர் ஆணவமுனைப்பு உடையது அம்முனைப்பால் சிவனை உணரமுடியாது என்பதாம், நாம்அறியோம் என்பது.
1623. தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.
பொருள் : உடலைக் கடந்தபோது கண்முதலிய ஒன்பது வாயில்களால் வரும் அறிவு விடுபட்டது. சந்திரமண்டலத்தில் அமைந்த தொனியில் சம்மியம் செய்தபோது தேகமாகிய சட்டையின் அனுபவன் முடிவுள்ளது. பிரபஞ்சம் இனித்த நிலை மாறிக் கசப்பாயிற்று. உடøச் செலுத்திய ஆன்மாசிரசின் உச்சியில் தலைவன் வாழும் ஊர்த்துவ சகஸ்ர தளத்தில் விளங்கியதே.
5. தவம்
(தவமாவது தன்னுள் மறைந்துள்ள பொருளைக் காணச் செய்யும் முயற்சி, அஃது இடையறாது இறைவனை எண்ணியிருத்தலால் கைகூடும்.)
1624. ஒடுங்கி நிலைபெற்ற உத்தம் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும்அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இரப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
பொருள் : சிவத்தினிடம் மனத்தை வைத்து நிலைபெற்ற உத்தமர்களின் உள்ளமானது, உலகிலுள்ள எத்தகைய துன்பத்தையும் கண்டு அஞ்சுவதில்லை. அத்தகையாவர் எமனுக்கும் பயப்படுவதில்லை. அவர்களுக்குத் துன்பமும் இல்லை. இரவு பகல் என்ற வேறுபாடும் இல்லை. பிற பொருளின் மேல் பற்று நீத்தவர்க்கு விளைகின்ற பயன் வேறொன்றும் இல்லை.
1625. எம்ஆ ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க்கு அல்லாது
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.
பொருள் : எமது அரிய உயிர் உடலோடு புணர்ப்பதாகிய பிறப்பும், அது உடம்போடு கூடி அனுபவிப்பதற்கு இடமாகிய உலகப்படையும், சிறப்பான தவத்தின் மேன்மையும் சிவனது அருள் பெற்றவர்க்கு அல்லால் இப்பெரிய தவத்தின் தன்மையை அறியமாட்டார். தவமுடையோர் வினைவழியே பிறப்பும் சூழ்நிலையும் ஆகும் என்று அமைதி பெறுவர்.
1626. பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.
பொருள் : உயிர் உய்யுமாறு உயிர்க்கு உயிராகிய உடையவனால் தரப்பட்ட உடலுக்கும் உழையாமல், பிச்சை எடுத்துண்ணும் பலர் பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெரும் துன்பத்தை அறியார். சிவபெருமான் திருவடியை மறவாமையே பெருந்தவம். அப் பெருந்தவம் செய்தார் சிறப்பாகிய வீடு பேற்றுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களும் பெறுவர். அவர்களே பிறப்பினை யறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவராவர். (பிச்சை - தவஉணவு. பிச்சை செய்மாந்தர் - தவசிகள்.)
1627. இருந்து வருந்தி எழில்தவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க என்றே
இருந்துஇந் திரனே எவரே வரினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.
பொருள் : தனித்திருந்து சிவப்பேற்றை அடைய அரிதின் முயன்று அழகிய தவத்தினை இயற்றும் மனவுறுதி பூண்டோரை மனத்தை மாற்ற வேண்டும் என்றே சூழ்ந்திருந்து இந்திரனோ பிறதேவரோ யார் வந்தாலும், மயங்காமல் தம்முடைய மனத்தைச் சிவத்தின்பால் உறுதியாக வைத்துத் திருந்தியிருப்பார். (பெருந்தன்மை - வைராக்கியம்)
1628. கரந்தும் கரந்திலன் கண்ணுக்கும் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க்கு அவ்வால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.
பொருள் : பக்குவன் அடைந்த ஆன்மாக்களால் விரைந்து தொழப்படும் வெண்மதியில் விளங்குபவன் தவம் இல்லார்க்கு மறைந்தும் தவம் உடையோர்க்கு வெளிப்பட்டும் உள்ளான். அகக் கண்ணுக்கே யன்றிப் புறக் கண்ணுக்குத் தோன்றாதவன். பரந்த ஒளிக் கிரணத்தையுடையவன். பசும்பொன் போன்ற நிறமுடையவன். அரிய தவத்தை உடையவர்க்கு அல்லாமல் மற்றவரால் அனுகுவதற்கும் முடியாதவன்.
1629. பின்எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்இறை
தன்எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்எய்த வைத்த மனமது தானே.
பொருள் : ஆன்மாக்கள் பின்னால் அடைய வேண்டிய இன்பப் பிறப்பை முன்னால் நியதியாகவைத்த முதற்பொருளாகிய எமது இறைவனை ஆன்மா தன்னை அறியப் புகும்போது தானே வந்து அடையும். அவ்வாறு உயிருக்குத் தலைவனை அடையச் செய்தது மனத் திட்பமேயாம்.
1630. அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுள் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்துஅழி யாதிருந் தார்தவத் தாரே.
பொருள் : சூழ்ச்சி மிக்க அமைச்சரும், பெருமைமிக்க யானைக் கூட்டங்களும் ஆற்றல்மிக்க அரசரும் பகைத்தெழுந்து செய்தபெரும் போரில் இருதிறத்தாரும் எண்ணிறந்தாராய் மாண்டனர். அப்போர் நடுவில் நின்று காண்போர்க்கு நிலையாமை உணர்ச்சியும், திருவடி உணர்வும் சிவப்பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக சிவப் பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக உண்டாகும். அந்நோக்கல் நோக்காகிய கருத்தினை மறந்து அழியாதிருந்தார் இறவாத நற்றவன் செய்தோராவர். (அத்தம் என்பது ஆத்தம் என்றாயிற்று. அத்தம் - சமயம்.)
1631. சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத்து ஆணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டு ஓடுமே.
பொருள் : உண்மை நாட்டமின்றிப் பொருள் கருதி நூல்களைப் படித்துப் பிதற்றித் திரியும் பொய்ப் பெருமைகளை விட்டு அகன்று நீங்கள் மாத்திரையாகிய ஒரு நொடிப் பொழுதேனும் உயிர் உணர்வு வெளிமுகப்படாது அகமுகப்பட்டுச் சிவனை அவனருளால் நோக்குங்கள். அங்ஙனம் நோக்கினால் அப் பார்வை யுணர்வு பசுமரத்து ஆணி போல் உயிரின்கண் பதிந்து விளங்கும். அவ்விளக்கத்தால் தொன்று தொட்டுப் பிணித்துவரும் பிறவி நீங்கி ஓடும்.
1632. தவம்வேண்டு ஞானம் தலைப்பட வேண்டில்
தவம் வேண்டா ஞானம் சமாதிகை கூடில்
தவம் வேண்டாம் அச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம் வேண்டா மாற்றம் தனையறி யாரே.
பொருள் : ஞானம் பெறவேண்டுமாயின் தவம் வேண்டும். ஞானசமாதி கூடிய பின்னர் அதற்குரிய சாதனை வேண்டியதில்லை. இல்லறத்திலிருந்து யோகம் பயில்வோர்க்கு, சமாதி பெறுதற்குரிய தவம் வேண்டியதில்லை. நான் தவம் வேண்டாஎனக் கூறும் உண்மையினை உலகினர் அறியார்.
6. தவதூஷணம்
(தவதூஷணம்  - தவநிந்தை, அஃதாவது புறநோக்கை விட்டு அகநோக்குக் கொண்டவர்க்குப் புறத்தே செய்யும் கிரியை ஒன்றும் வேண்டா என்று கூறுவது.)
1633. ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்உற்றால்
காதலும் வேண்டாம் மெய்க்காயம் இடம்கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதிகை கூடினால்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.
பொருள் : உயிர்க்குயிராகிய பொருளை உள்ளே பெற்றபின் கற்று அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. உண்மைப் பொருளான சிவத்தை எடுத்த உடலில் கண்டால் அன்பு செய்தலும் வேண்டா. தன்மை மறந்த சமாதி நிலைகிட்டிய பின் இறத்தலும் வேண்டியதில்லை. மனத்தைப் புலன் வழியாகப் போகாமல் தடுத்து நிலை நிறுத்தும் ஆற்றல் பெற்றவர்க்குப் பிற இடங்களுக்குச் சென்று தவம் செய்ய வேண்டியது இல்லை.
1634. கத்தவும் வேண்டாம் கருத்தறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதியை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயலற்று இருக்கிலே.
பொருள் : மெய்ந்நூற் பொருள்களின் உண்மைக் கருத்தறிந்து அடங்கினால் வெளிப்படையாக அச்சொற்றொடர்களை எடுத்தும் படுத்தும் கத்துதலாகிய முயற்சிகள் வேண்டா. சமாதி கைகூடினால் வேதம் ஓதுதலாகிய சத்தமும் வேண்டா. ஆணவத் தொடக்கு அற்றவர்க்கு வேறுதுப்புறவுகள் வேண்டா. உயிர்ச் செயலற்று உடையான் செயலாக இருப்பின் ஒன்றைத் தூக்கி நாடுதலாகிய சித்தமும் வேண்டா.
1635. விளைவுஅறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவுஅறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவுஅறி வார்பண்டை மெய்யுறம் செய்வார்
விளைவு அறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.
பொருள் : உடம்பு எடுத்த பயன் உடம்பினுள் உடையானைக் கண்டு வழிபடுதல். இவ்வுண்மையினை யுணர்ந்தார் நன்னெறி நான்மைத் தவம்புரிபவர் ஆவர். அதுபோல் மெய்யுரையாகிய குரு மொழி கொள்வார் உடம்பின் பயன் உணர்ந்தோர் ஆவர். மெய்யறமாகிய சிவ புண்ணியம் செய்வாரும் உண்மை உணர்ந்தோரே. இவ்வுண்மை உணர்ந்தோர் விண்ணிலும் மண்ணிலும் வாழ்வார்; அனைவரினும் மிக்கோராவர்.
1636. கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்து
ஊடில் பலவுல கோõர்எத் தவரே.
பொருள் : திருவருளோடு கூடிச் சிவத்தைப் பேணுவதாகிய தவத்தைச் செய்து அவன் திருவடியைக் கண்டு கொண்டேன். அந்தத் தவவழியே சென்று சிவ நிலையையும் கண்டேன். முன்னாக இவ்உண்மை உணர்ந்தவர் உடல் வருந்தும்படியாகத் தவம் செய்வார். ஐம்புலன்களையும் வென்றவர் பலவுலகப் பண்பினராவர். வெல்லாது ஊடி நிற்பவர் ஒரு தவமும் உடையவர் ஆகார்.
1637. மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாகார் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே.
பொருள் : மனத்தில் சங்கற்பத்தாலாகிய பெரிய கடலாகவுள்ள ஏழினையும் கடந்து தவமுடையோர் வழி சார்ந்து அவரோடு இணங்கியிருப்பார் பிறப்புக்கு வரமாட்டார். பன் அத்தவமுடையோர் ஏவலைக் கேட்டு நடந்தால் சிவத்தைத் தம்முகத்தின் முன்னர்க்கண்டு சிவப்பேறு அடைதலும் கூடும். (
ஏழ்கடல் - எழுவகைப்பிறப்பு)
1638. மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற ஈர்த்துஐப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறுஒளி தன்ஒளி யாமே.
பொருள் : மனமாகிய உறையுளில் செறிக்கப்பட்ட ஞானவாளை உருவி பிரபஞ்ச வாசனையை விட்டு, சிவத்துடன் அநந்யமாகப் பொருந்தி ஞானேந்திரயங்கள் ஐந்தும் விஷயங்களைப்பற்றி வெளிச் செல்வதைத் தடுத்தால் தவத்திடை காணும் சிவஒளியே தன்னொளியாகும்.
1639. ஒத்து மிவும் நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.
பொருள் : சீவர்களது அறிவினில் பொருந்தி நின்றானை உணர்வது, சிவக்காதலை உண்டாக்கும். மேலும் அடியார் பணிந்து நாள் தோறும் தொழுகின்றமையால் முத்தியும் கிட்டும். அவ்வாறு பிரபஞ்ச நோக்கை முனிகின்றவன் என்ற சொல்லை உண்மைப் படுத்துவதே தவமாம்.
1640. இலைதொட்டுப் பூப்பறித்து எந்தைக்குஎன் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலை தொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.
பொருள் : பத்திரங்களை எடுத்தும் பூவினைக் கொய்தும் எம் இறைக்கு ஆகும் என்று நினைத்து, மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு பூமாலையைச் சாத்தி வழிபட்டுக் கொண்டிருந்தாலும் கண்களில் இன்பநீர் பெருகக் காண்கிலம். செந்தமிழ்வேத ஆகமங்களைத் தலைசிறந்த மெய்ந்நூலாகக் கொண்டு திரு ஐந்தெழுத்தை ஓதினேன். வழிபாட்டுப் பாடல்களைப் பாடினேன். இதுவே நற்றவன் எனக் கண்டேன்.
1641. படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடம் அடை செய்வது ஒருமனத் தாமே.
பொருள் : படர்ந்த ஒளிக்கிரணத்தை உடைய தவத்தைச் செய்த அன்பர்க்கு, துன்பம் வாரா வண்ணம் இறைவன் காத்தருள்வான், துன்பத்தை வாரா வண்ணம் செய்தவரது உண்மைத்தவத்தை ஆராயின் உடம்பை மீண்டும் பெருமை செய்வது அவரது மன ஒருமைப்பாட்டினால் ஆகும்.
1642. ஆற்றிற் கிடந்த முதலைக்கண்டு அஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட  தன்ஒக்கும்
நோற்றுத் தவம்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
பொருள் : நூலை அறியாதவராய்ப் பொறுமையோடு தவஞ் செய்யாதவர் வயிற்றுக்கு இரைதேடி வருந்தி அலைவது ஆற்றிலேயுள்ள முதலைக்கு அஞ்சி ஓடி அண்மையில் ஈன்ற கரடிக்கு முன்னே அடைந்து வருந்துதலை ஒக்கும். நூலைக் கற்றறிந்து தவம் செய்தலே துன்பம் நீங்கும் வழி.
1643. பழுக்கின்ற வாறும் பழம்உண்ணும் ஆறும்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலில் கட்டவல் லார்க்குள்
இழக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.
பொருள் : நற்றவம் முதிர்ச்சியடையுமாறும், அத் தவத்தின் பயனை நுகருமாறும் இளங்கன்று ஒத்துத் துள்ளித் திரிகின்ற நெஞ்சினைப் பலமுறை அடக்கும் வன்மையுடையார் இனிமேல் கோணியாகிய உடம்பினுள் புகும் தன்மையையும் உணரவல்லார் ஆவர். அவர்க்கு மெய்ம்மை தோன்றும். இளங்கன்றாகிய பசுவின் மனத்தை அடக்கவல்லார்கட்கு நெஞ்சத் திடம் உண்டாகும்; பிறப்பும் நேராது.
1644. சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டாய்
சித்தம் சிவகாம வேசித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.
பொருள் : சித்தம் இடையறாது சிவத்தை நினைந்து சிவமாகவே அவருக்குச் செய்ய வேண்டிய தவம் ஒன்றும் வேண்டா. அவ்வாறு சித்தம் சிவமாகிப் பேரானந்தம் பொருந்திய அடியார் உறவும் உண்டானால் அவர்களது சித்தம் சிவமாய்ச் சித்தியும் முத்தியும் உண்டாம். ஆகையால் சித்தமானது சிவமாவதே பூர்வம் செய்ததவத்தின் பயனாம். சித்தம் இடையறாது சிவனை எண்ணிச் சிவமாதலே தவம் என்பதாம்.
7. அருளுடைமையின் ஞானம் வருதல்
(அருள் - நாத விந்துவாகிய திருவடி. அருள் உடைமையின் ஞானம் வருதலாவது, நாதவிந்துவாகிய திருவடி பொருந்தியபோது ஞானம் விளங்குதல்).
1645. பிரான் அருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரான் அருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரான்அரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரான்அரு ளிற்பெருந் தெய்வமும் ஆமே.
பொருள் : சிவபெருமானின் திருவருள் உண்டானால் செல்வன் கழல் ஏத்தும் செல்வம் உண்டாகும். அதுபோல் திருவடியுணர்வும் உண்டாகும். அத்திருவருளால் அறிவினுள் அறிவாம் பேராப் பெருநிலையும் உண்டாகும். அதுபோல் சிவமாம் பெருவாழ்வும் எய்தும்.
1646. தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவர்
அவிழு மனமும்எம் ஆதி அறிவும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவம் ஆமே.
பொருள் : சரியை வழிநற்போர் தமிழ்மண்டலமும் அதனைச் சார்ந்த கன்னடம், மலையாளம், துளுவம், தெலுங்கு ஆகிய மண்டலங்களிலுமுள்ள தலங்களை அடைந்து வழிபடுவதில் அவர்களிடம் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என்று சுற்றித்திரிவர். ஞானிகள் இவ்வுண்மையைத் தமது தேகத்தில் உணர்ந்து ஒன்றான சிவமே பலவான சத்திகளாக விளங்குகிறது என்று அறிந்து எவரும் செல்லாமல் இருந்த இடத்திலேயே அகண்ட வழிபாட்டைச் செய்து பெரும் பயனை அடைகின்றனர்.
1647. புண்ணிய பாவம் இரண்டுள் பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.
பொருள் : புண்ணியம் என்றும் பாவம் என்றும் இவ்வுலகில் இரண்டு உள்ளன. இவை வினை காரணமாக இன்ப துன்பமாகப் பொருந்துகின்றன என்ற உணர்வார் சில ஞானிகள். இவ்வாறு உணர்ந்து இவற்றுக்குக் காரணமான வினையாகிய வேரினை அறுத்தால் அதன் பின்னர் நீங்களும் வினை நீங்கி வெளிப்படும் அண்ணலை ஆராய்ந்து அறிவீர்கள்.
1648. முன்னின்று அருளும் முடிகின்ற கலத்து
நன்னின்று உலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின்று எனக்கொரு முத்திதந் தானே.
பொருள் : வினைகள் முடிகின்ற காலத்தில் சிவம் தனது சத்தியைப் பதிப்பித்து ஆண்டருளும். அந்நிலை வாராத இடைக்காலத்தில் உயிருக்குயிராய் நின்று வினைகளை ஊட்டி நிற்கும். சிவனுக்குப் பின்னே நின்றருளிப் பிறவியை நீக்கிவிடும். அவனே முன்தோன்றி வீடு பேற்றை அளிப்பவன் ஆவான்.
1649. சிவனரு ளாற்சிலர் தேவரும் ஆவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூறில்அச் சிவலோகம் ஆமே.
பொருள் : சிவத்தின் அருளால் சிலர் தேவ வடிவம் பெறுவர். சிவத்தின் அருளால் சிலர் தெய்வத்தன்மை பெறுவர். சிவத்தின் அருளால் சிலருக்கு வினை சேராமை பொருந்தும். சிவத்தின் அருளைச் சொல்லப்போனால் மேலே கண்ட மூவரும் சிவலோக வாசிகளே யாவர்.
1650. புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.
பொருள் : அம்மையும் அப்பனுமாக ஓர் உடம்பில் விளங்கும் சிவபெருமான் புண்ணியன் என்று அழைக்கப்படுவான். யாவர்க்கும் தந்தையாய் உள்ளவன் ஆதலால் அவன் எந்தை எனப்படுவான். அவனே யாவரையும் தூய்மைப்படுதலால் அவன் புனிதமாயுள்ளான். நல்லார் அத்தகையோன் திருவடியைத் திரு ஐந்தெழுத்து ஓதியும் போற்றி மந்திரம் புகன்று மலர்தூவித் தொழுதும் சேர்வர். அப்படிச் சேர்தலால் அவர்பால் திருவிளக்குச் சுடராகிய சிவஞானம் விளைந்தது. தலைமைப்பாடு அமைந்த சிவபெருமான் திருவருள் பெற்றபோதே மண்ணவர் பிறப்பற்றுச் சிறப்புறுவதும் சிவ உலகத்தாராகிய வானவர் ஆவதும் நிகழும்.
1651. காயத்தோர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவையுணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆமே.
பொருள் : உடம்பாகிய தேரினுள் புகுந்து மனமாகிய தேரோட்டி சேர்ந்து வைக்க, மாயத் தேராகிய இவ்வுலகத்தில் மயங்கும் உயிரினங்கள் திருவடியன்பாகிய தேரேறிச் சிவபெருமான் திருவருளைப் பெற்றால் ஆயமாகிய சிவனடியார் திருக்கூட்டத்துடன் விரவி உயர்வற உயர்ந்த சிவமாம் பெருவாழ்வை எய்தும்.
1652. அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.
பொருள் : மெய்யடியார்கள் சிவவுலகத்தே தோன்றுவர். அச்சிவ உலகத்துக்குரிய தூய உடலுடன் இருப்பர். அவ் வுலகத்தின் கண் சிவனை வழிபடும் அருந்தவம் ஆற்றுவர். அச்சிவ உலகத்தே நின்று இறையருள் நேர்படின் சிவன் திருவடியினைக் கூடுவர். அச்சிவ உலகத்திலேயே திருவருள் இன்பத்தினை எய்துவர்.
1653. கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிகொண்ட சாக்கி எரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்படி வாமே.
பொருள் : சூரியனைக் கண்ட சூரிய காந்தக்கல் நெருப்பின் வடிவமாகும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக் கல் முத்துப் போன்ற நீரில் வடிவாகும். சக்கியோடு மோதும் முக்கியைக் கொண்ட சக்கிமுக்கி தீயினை உண்டாக்கும் அக்கினி வடிவம். ஆனால் அக்கினி மண்டலத்தைத் தன்னுள் இழுத்துக்கொண்ட சிவன் அக்கினியின் தன்மையை விட்டு அழகான சந்திரன் ஒளிமயமாக விளங்குவான். சக்கிமுக்கிக் கல்லை நெருப்புக்கல் என்பர்.
1654. நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான் என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலேனே.
பொருள் : நாடுதலாகிய சிந்தித்தலும் உறவாகிய முழுநேயமும் கொண்டு எங்கள் நந்தியாகிய சிவபெருமானை அவன் அருள் விளக்கத் துணையால் தேடுவேன் தேடிச் சிவபெருமான் என்று கூடுவேன். கூடி இடையறாது நினைக்கும் நினைவாகிய ஒலிக்கும் ஆண்மைக்கழல் அணிந்துள்ள திருவடிக்கே செல உடம்பை விட்டு உயிர் நீங்கும் வரை திருவடியைப் பற்றுதலாகிய திரு ஐந்து எழுத்த ஓதுதலை நீங்கேன்.
8. அவவேடம் (போலிக் கோலம்)
(அவ வேடம் - பயனற்ற சின்னம் அகம்புறம் ஒத்தில்லாமல் வேடம் புனைவது பயனின்றாகும்.)
1655. ஆடம் பரங்கொண்டு அடிசில்உண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.
பொருள் : கூடா ஒழுக்கத்தினராய்த் தவவேடங் கொண்டு பிறரை அஞ்சுவித்துத் திரிவார்க்குப் பயன் ஆடம்பரமான சோறு கறி உண்பதேயாம். பேதைகளே ! பிறப்பின் பயன் இதுவோ ? சிவனார் திருவுருவினைக் கண்டவுடன் மெய்ம் மறந்து ஆடியும், பொய்யில்லாத திருமுறை பாடியும் இன்பக் கண்ணீர் பெருக்கி அழுதும், மகிழ்ச்சி மேலீட்டால் அரற்றியும் இம்முறையாகத் தேடியும் காணுங்கள். இதுவே பிறவிப்பயன்.
1656. ஞானம்இல் லார்வேடம் பூண்டுஇந்த நாட்டிடை
ஈனம தேசெய்து இரந்துண்டு இருப்பினும்
மான நலங்கெடும் அப்புவி யாதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
பொருள் : திருவடி உணர்வில்லாக் கீயோர் சிவக்கோலம் பூண்டு சிறந்த தென்னாட்டகத்துக் கூடாஒழுக்கம் புரிந்து பிறரை வஞ்சித்து ஏதும் உøழாது இரந்துண்டிருப்பர். அவர் அவ்வாறு இருப்பதால் நாட்டின் பெருமையும் நன்மையும் கெட்டழியும். ஆகையால் அப்பொருந்தா வேடத்தாரை அவ்வேடத்தை நீக்கச் செய்து நாட்டுக்கு நன்மையும் இன்பமும் வாய்க்கும்படி செய்வது நல்லோர் கடனாகும்.
1657. இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள்ள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடொறும் நாட்டினன்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.
பொருள் : இன்பமும் துன்பமும் நாட்டுமக்கள் செய்த நல்வினை தீவினையால் நாட்டிற்கு ஆகும் என்று கூறுவர். ஆதலால் அரசன் இதனை நன்கு ஆராய்ந்து நாள்தோறும் நாட்டில் அவ்வேடத்தாரை நல்வழிப் படுத்துமாயின் உலகம் வாழும்.
1658. இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.
பொருள் : தாழ்ந்த குலத்தில் தோன்றியவர்கள் மேல்நிலை அடைய வேடம் கொள்வர். வழிவழி அடிமை செய்யும் குலத்தில் வந்தவர் தெய்வநிலை அடைவதற்காக வேடம் கொள்வர். பழிக்கத் தக்க செயலைச் செய்யும் குலத்தில் வந்த பாழான சண்டாளர்கள் வேடம் பூணில் கழிக்கத்தக்க குலத்தவர்கள் ஆவர். ஆதலால் நீக்கத் தக்கவராம்.
1659. பொய்த்தவம் செய்வார் புகுவார் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகார்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.
பொருள் : தவத்தைப் பொய்ம்மையாகச் செய்பவர் இருளுலகம் புகுந்து இன்னல் உறுவர். பொய்த்துவம் செய்வார் புண்ணியர் ஆகார். பின் அதற்குப் பயன் மெய்த்தவம் போன்று நடிப்பதால் நிலையிலா உலக இன்பம் பொருந்தாவழியில் சிறிதுண்டாம். அவ்வளவே அத்தவப் பயன் உண்மையும் திருவடி உணர்வும் மேற்கொள்வதால் மெய்த்தவப் பயன்கள் நிலைக்கும்.
1660. பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.
பொருள் : வயிறார உண்பது ஒன்றே பயன் என்று கருதிப் பொய்யாகத் தவ வேடம் புனைவர். உண்மையாகத் தவவேடம் பூண்டோர் உயிர் பிரியாதிருக்கக் கைப்பிச்சை ஏற்பர். பொய்யான வேடத்தை மெய்யான வேடம் போலப் பூண்டாலும் வேடத்தின் உண்மையும் மேன்மையும் உணரின் அதுவே அவர் உய்தி பெறுதற்குரிய வேடமாகும்.
9. தவ வேடம்
(தவவேடம் - தவத்துக்குரிய சின்னம், விபூதி, உருத்திராக்கம், குண்டலம் முதலியன தவத்துக்குரிய சின்னங்களாம்.)
1661. தவமிக் கவரே தலையான வேடம்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகார்அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண் ணாதே.
பொருள் : திருவடி யுணர்வுக்கு வாயிலாகிய நற்றவமிக்கவரே தலையான சிவக்கோலம் உடையவராவர். தவமில்லாத அவமாகிய பாவச் செயல் மிக்கவரே கொடுங் கொலைக்குச் சிறிதும் நடுங்காத வனவேடராவர். சிவக்கோலமாகிய தவக்கோலம் மிக்கவரே அக்கோலத்தைத் தாங்கும் தகுதியினராவர். மற்றவர்கள் அக்கோலத்தைத் தாங்கும் தகுதியுடையவர் அல்லர்.
1662. பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.
பொருள் : சிவ அடையாளங்களுள் முதன்மை வாய்ந்தது திரு வெண்ணீறு இத்திருவெண்ணீறு உடம்பில் பல்வேறு இடங்களில் அணியப்படுவது. செம்பொன்னால் ஆக்கிய குண்டலங்கள் இரண்டு காதுகளில் காணப்படும். வண்டனைய வடிவச் சிவமணிகள் முப்பத்திரண்டு கொண்டு கண்டிகை மார்பிடத்துக் காணப்படும். இவையே சிவ அடையாளங்களாகும். குற்றமற்ற செறிவு நிலையாகிய சிவயோகிக்கும் இவையே அடையாளங்களாம் சொம்பொன் தாமிரம்.
1663. யோகிக்கு இடுவது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றும் சடையதொன்று
ஆகத்து நீறனி ஆங்குஅக் கபாலம்
சீகத்து மாத்திரை தின்பிரம் பாகுமே.
பொருள் : உட்கட்டாகிய கோவணமும் கஞ்சுளியாகிய போர்வையும் திருச்சடையின்கண் மயில் இறகாலாகிய குல்லாவும் முழுவுடம்பும் அணியும் திருவெண்ணீறும் கையில் மண்டையோடும் அழகிய வலந்திருக்கையில் பிரப்பங்கோலும் சிவயோகியின் அடையாளங்களாகும்.
1664. காதணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.
பொருள் : காதணியாகிய குண்டலமும் சிவமணியாலாகிய கண்டிகையும், ஓசை எழுப்பும் திருஐந்தெழுத்தும், வெண்சங்கும், மண்டையாகிய சட்டியும், திருநீற்று மடலும், பாதக்குறகும் சிவயோகிக்குரிய அழகிய இருக்கையும், யோகபட்டமும், யோத்தண்டும் என்னும் பத்தும் அடையாளங்களும் சிவயோகியர்க்கும் உரியனவாம்.
10. திருநீறு (திருநீறு - விபூதி, விபூதி என்பது ஒளியை நினைவு படுத்தும் சாதனம்)
1665. நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன்று இரண்டெனில் ஓங்காரம் ஓதலே.
பொருள் : பூணூலையும் சிகையையும் அணிந்திருந்தும் அவற்றின் உண்மையை மூடர்கள் அறிவதில்லை. பூணூல் என்பது வேதாந்தத்தைக் குறிப்பது. நுட்பமான குடுமி என்பது வேதாந்த ஞானத்தை உணர்த்துவது. பிரமத்தின் பால் இரண்டற்று ஒன்றினை அத்தண்மையுடையோர் பரமும் உயிரும் ஒன்றென்று பார்ப்பார். அவ்விதம் ஒன்றாகாது நின்றவர் ஓங்காரம் ஓதில் ஒன்றாவர்.
1666. கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சார்வரே.
பொருள் : சிவபெருமான் பூசும் கவசத் திருநீற்றை ஒளிகெடாமல் பூசி மகிழ்வராயின்  பண்டைய வினைகளும் உங்களிடம் தங்கா. சிவகதியும் உங்களிடம் வந்து பொருந்தும், ஆனந்த மயமான திருவடியை அடையலாம். (கங்காளன் - எலும்பு மாலை அணிந்தவன்; சிவன் எலும்பில் சோதியை வெளிப்படுத்தும் சக்தியுள்ளது.)
1667. அரசுடன் ஆல்அத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.
பொருள் : அரசு, ஆல், அத்தியின் சமித்துக்கள், வேள்வித் தீயில் பொருந்தி உருவம் மாறி விபூதியாகும். உருவம் இல்லாதவனும் மலம் இல்லாதவனும் ஆகி சிவத்தின் திருவடியை உணர்ந்து அனுபவிக்கும் நியதி உடையவர் உருவ மற்றம் பெற்ற பிரமத்தியானத்தினால் உயர் குலத்தோராவர், காரம் - காரியம் - திருநீறு, நீதர் நீதியை உடையவர்.
ஞான வேடம்
(ஞான வேடமாவது, ஞானப் பேற்றினை விரும்பி மேற்கொள்ளும் வேடம். அருள் ஞான சாதனம் என்று உணர்ந்து பூணுதலாம்.)
1668. ஞானம்இ லார் டவடம் பூண்டும் நரகத்தர்
ஞானம்உ ளார்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞானம்உள தாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானம்உள வேடம் நண்ணிநிற் போரே.
பொருள் : உண்மைச் சிவஞானம் இல்லாதவர் உண்மைச்சிவ ஞானியர் போல் வேடந் தாங்கினால் நரகத்தை அடைவர். உண்மைச் சிவஞானம் உடையோர் சிவஞானியர்க்குரிய வேடத்தைத் தாங்கா விடினும் நல்லமுத்தர்களே யாவார்கள். சிவஞானப் பேறு உண்டாக வேண்டு மென்ற விருப்பமுடையோர் சிவத்தினிடம் என்று நீங்காத பேரொளியைப் பொருந்தி நிற்பர்.
1669. புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின் ஞானத் தோர்ஒன்றும் பேசகில் லாரே.
பொருள் : இழிந்த ஞானமுடையோர் ஞானிகள் வேடத்தைத் தாங்கினாலும் அதனால் ஆவதொரு பயனும் இல்லை. நல்ல ஞான முடையோர் திருவருளில் தோய்ந்து வேடம் பூண்பதில் விருப்பமற்று இருப்பர். திரிபு உணர்ச்சியுடையோர் சமயக் காழ்ப்பு உடையோர் ஆவர். பின்பு அனுபவமுள்ள ஞானிகள் சமயக்காழ்ப்பு உடையோரிடம் வாது செய்ய விரும்பார். சிவஞானிகள் வேடத்தில் விருப்பமின்றி மவுனமாய் இருப்பர்.
1670. சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமாம் அவர்க்கது சாதன நான்கும்
உவமானம் இப்பொருள் உள்ளுற லாமே.
பொருள் : சிவஞானிகளுக்கும் சிவயோகிகளுக்கும் ஆராயின் பயனற்றதான புறச்சாதனங்கள் ஆகா. அவர்களுக்குத் திருநீறு, உத்திராக்கம், சடைமுடி, அஞ்செழுத்து ஆகிய நான்கு புறச்சாதனங்களும் வீணேயாகும். அவர்கள் உவமிக்க ஒண்ணாத பொருளை உள்ளே பொருந்தி வாழலாம்.
1671. கத்தித் திரிவர் கழுவடி நாய்போல்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.
பொருள் : செப்பிடு வித்தைக்காரர்கள் கழுமரத்தின் அடியில் இருக்கும் நாய் போலக் கத்தித் திரிவார்கள். மேலும் கழுகுபோல ஏமாளிகளைப் பிடுங்கித் திரிவார்கள். ஆனால் சிவஞானிகளோ ஐம்பொறிகளும் உடலும் நுகர்ச்சிக்குத் தக்கனவாக ஒத்திருந்தும் போகங்களை விரும்பாமல் செத்தாரைப் போலத் திரிவார்.
1672. அடியார் அவரே அடியார் அலாதார்
அடியாரும் ஆகார்அல் வேடமும் ஆகார்
அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே.
பொருள் : அருள் இயக்கத் தன்முனைப்பற்று அதன்வழி இயங்கும் சிவமெய்உணர்வினர் மெய்யடியார் ஆவர். அத்தகுதியில்லார் அடியாரும் ஆகார். அவர் கொள்ளும் கோலம் சிவக் கோலமும் ஆகாது. திருவடியுணர்வு பெற்றோர் மெய்யடியார் ஆவார். அடியார் தன்மை யில்லாதவர் ஒருகாலமும் மெய்யடியார்கள் ஆகார்.
1673. ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆன அவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனதும் ஆம்ஒன்றும் ஆகா தவனுக்கே.
பொருள் : சிவஞானிக்கு நம்பியாரூரர் போன்று திருமணக் கோலம் ஒத்த அழகிய கோலமும் தோற்றத்தாலும் பயனாலும் நன்மையேயாம். கொண்ட அத்திருவேடமும் சிவயோக வேடமேயாம். மேலும் அத்திருக்கோலம் அருள் ஞானத் துணையுமாகும். சிவஞானம் கைவரப் பெறாதார் கொள்ளும் கோலம் ஒருவகையானும் பொருந்தாதென்க.
1674. ஞானத்தின் நாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆல யத்தனாம்
மோனத்தன் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனெனல் ஆகுமே.
பொருள் : சிவஞானி ஞானத்தில் ஞானமாகிய நான்காம் மார்க்கம் பொருந்தும். அகண்டமான சிவம் இவனுடலை ஆலயமாகக் கொண்டு விளங்குவதால் ஞானியின் தேகமே ஒப்பற்ற சிவாலயமாகும். சிவஞானி பிரணவ உபாசனை உடையவன் ஆதலின் முத்தனாகவும் சித்தனாகவும் விளங்குவான். ஏனைய தவத்தர்களின் நிலை எல்லாம் இவனிடம் உள்ளமையால் அவரெல்லாம் இவனைப் போன்றவர் ஆவரோ ? ஆகமாட்டார் என்றபடி.
1675. தானன்றித் தன்மையும் தான்அவ னாதலும்
ஏனை அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றதே.
பொருள் : தற்போதம் நீங்கிய தன்மையும், மற்றும் தான் சிவமேயாகி விளங்குதலும் உலகிலுள்ள எப்பொருளுக்கும் உரிய முக்காலத்தையும் அறியும் ஆற்றலும், பக்குவ சீவர்களுக்குப் பார்வையாலோ பரிசத்தாலோ ஞானத்தை வழங்குதலும் பிரணவசித்தியும் சிவபதவி அடைந்தோர்க்கு உரியனவாம்.
12. சிவ வேடம்
(சிவ வேடமாவது சிவனுக்கு அடிமை என்று உணர்ந்திருப்போர் கொள்ளும் வேடம். இவ்வேடத்தார் தமக்கென ஒரு செயலற்றார் என்க.)
1676. அருளால் அரனுக்கு அடிமைய தாகிப்
பொருளாம் தனதுடல் பொற்பதி நாடி
இருளானது இன்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.
பொருள் : திருவருளால் சிவனுக்கு உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்து அடிமையாகி, பொருளாகிய தனது உடலுக்கு மேல் விளங்கும் பொன்னொளி மயமான அண்ட கோசத்தை உணர்ந்து, இருள் நீங்கித் தம்செயல் அற்றவரே தெளிந்த அடிமை பூண்ட சிவ வேடத்தார் ஆவர்.
1677. உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடல்உயிர் உண்மையென்று ஓர்ந்துகொள் ளாதார்
கடலில் அகல்பட்ட கட்டைஒத் தாரே.
பொருள் : உடலிற் காணப்படும் வேடமாகிய திருக்கோலம் உயிரினைப் பொருந்தி உயிரினுக்குத் துணையாகாது. உடல் உயிரை விட்டு  நீங்கினால் அவ்வேடமும் உடனே நீங்கும். உடலின்கண் தங்கும் உயிர் அழிவில்லாத உண்மையான மன்னுயிராகும். இத்தகைய உண்மையினை உணர்ந்து கொள்ளாதார் உடலிற்பட்ட மரக்கட்டை இடையறாது அங்கும் இங்கும் அலைவது போன்று பிறவிப்பெருங்கடலினை நீந்தமாட்டாது பிறந்து இறந்து உழன்று அதனுள் அழுந்துவர்.
1678. மயலற்று இருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற்று அவரோடும் தாமே தாமாகிச்
செயலற்று இருப்பார் சிவவேடத் தாரே.
பொருள் : ஆணவமல காரியமான மயக்கத்தை விட்டு, அதன் விளைவான இருளையும் அகற்றி, வலிமையுள்ள மனம் எண்ணுதலை விட்டு, கயல்மீனைப் போன்ற கண்களையுடைய பெண்களால் கையால் தழுவப் பெறுதலையும் நீங்கி, மயக்க மற்றவரோடு இணங்கி, தமக்கெனச் செயலின்றி இருப்பார் சிவ வேடத்தர் ஆவர்.
1679. ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடம்கொண்டு என்செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடும்இன் பப்பொருள் சென்றுஎய்த லாமே.
பொருள் : மனிதர்களே ! பிராண ரூபமாக உங்களிடம்  ஓடிக் கொண்டிருக்கும் குதிரையைக் கடிவாளங் கொண்டு உறுதியாகப் பற்றி நிறுத்துங்கள். வேடத்தை மட்டும் தாங்கி என்ன செய்வீர்கள் ? வீணான வேடத்தை விடுங்கள். நம் தலைவன் நந்தி தங்கியுள்ள குரு மண்டலத்தில் மனத்தைச் செலுத்துங்கள். நீங்கள் தேடுகின்ற இன்பப் பொருளான சிவத்தைச் சென்றடையலாம். (குதிரை - பிராணன். குசை கடிவாளம்.)
13. அபக்குவன் (கொய்க்குரு)
அபக்குவன் - தகுதியில்லாதவன்
1680. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
பொருள் : அறியாமையை அறிவனால் போக்கும் குருவினைக் கொள்ள மாட்டார். அறியாமையை நீக்காத குருவினைக் கொள்வர். அது குருடனும் குருடனும் சேர்ந்து குருட்டுத் தனமாக ஆடி இரு குருடர்களும் அறியாமையால் குழியில் விழுவது போலாம். ஞானமில்லாத குரு ஞானத்தை உபதேசிப்பது ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டுவது போலாம். இருவரும் கெடுவர்.
1681. மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.
பொருள் : மனிதன் எண்ணுவது எல்லாம் பிரதிபலித்துக் கொண்டிருப்பது காரண சரீரம். எண்ணங்கள் நிறைந்த மனம் உடையவர் காரண சரீரத்தின் நிழலைக்கூட அணுகி அனுபவிக்கமாட்டார். எண்ணங்களால் உண்டாகிய வினைப் பயன்களை மாற்றிக் கொள்ளவும் அறியார். அறியாமையால் மீண்டும் காலவழியை இச்சித்துப் போய் எண்ணங்களைப் பெருக்கிப் கொள்கின்றனர்.
1682. ஏய்எனில் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின்று ஊறிடும்
தாய்முலை யாவது அறியார் தமருளோர்
ஊன்நிலை செய்யும் உருவிலி தானே.
பொருள் : மக்கள் ஏய் என்று கூப்பிட்டால் என்ன என்று கூட பதில் கூற மாட்டார்கள். இது உலக இயல்பு. சிசுவின் வாயில் தாயின் முலையை வைக்க அமுதம் ஊறும். ஆனால் எவ்வாறு தாயின் முலையில் அமுதம் ஊறுகிறது என்பதை நம்மவர் அறிவதில்லை. அவ்வாறு அமுதம் பெய்து ஊனில் உயிரை நிலைக்கச் செய்பவன் உருவில்லாத சிவனேயாம்.
1683. வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங்கு என்னைப் பிறர்தெளி யாரே.
பொருள் : உறுதி கொண்ட பெருந் தன்மையுடையோனே ! வாய் ஏதோ ஒன்றைச் சொல்லவும், மனம் வேறொன்றைச் சிந்திக்கவும் நீ மற்றொன்றைச் செய்யாதே முக்கரண சுத்தியோடு இருப்பின் நீசிவாக்கினையைப் பெற்றவன் என்று நான் கூறுவேன். அவ்வாறு தெளிந்த பின்னர் என் கூற்று பித்தன் கூற்று என்று பிறர் கூறமாட்டார். பக்குவம் இல்லாதவர் முக்கரண சுத்தியோடு இருக்கமாட்டார்.
1684. பஞ்சத் துரோகத்துஇப் பாதகர் தம்மை
அஞ்சச் சமயத்துஓர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய்து இப்புலி வேறே விடாவிடில்
பஞ்சத்துள் ஆய்புவி முற்றும்பா ழாகுமே.
பொருள் : பொய், கொலை, களவு, கள், காமம் என்னும் ஐம்பொரும் பாவங்களும் அஞ்சாது நெஞ்சார இயற்றுவோர். நம்பகக் கேடுசூழ் பெரும் பாதகராவர். அவர்களையும் ஏனையோடும் அவ்வாறு செய்து பாதகர் ஆகாவண்ணம் அஞ்சி ஒழுகும்படி தண்டித்தல் வேந்தன் கடனாகும். அத்தண்டமாவது அக்கொடியோரை நாடு கடத்தலேயாம். அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டினில் மழைபெய்யாமல் விளைவு குன்றிப் பஞ்சமுண்டாகும். (துரோகம் - நம்பகக் கேடு.)
1685. தவத்திடை நின்றவர் தாம்உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றுஅறி யாவதர் எல்லாம்
பவத்திடை நின்றேதார் பாடது வாமே.
பொருள் : சிவனை மறவாமல் செந்தமிழ் திருஐந்தெழுத்தை ஓதி ஒழுகும் பெருந்தவத்திடை நின்றவர் உடம்புள்ள துணையும் ஊழ்வினை நுகர்வு நீங்கா. ஆதலால் அத்தவத்தோர்க்கு அந்நுகர்வு உடலோடு நின்றுவிடும். அவர் உள்ளத்தின்கண் நின்று நிலைபெறும் மாறில் நுகர்வு சிவநுகர்வேயாம். இவ்வுண்மையினைச் செருக்கறாத் தேவரும் அறியார். நற்றவமாகிய சிவவழிபாட்டில் நின்று அறியமாட்டாதவர் எல்லாரும் பிறப்பிடை நின்று துன்புறுவர்.
1686. கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிலை இறைபால் இயற்கை அல்லவே.
பொருள் : நற்றவத்தால் சிவத்தை யுற்றவர்பால் செருக்குக் கொண்டு சினத்தாலும், நட்பு உறவு கருதுதலும், பயன்கருதிச் செயல் செய்தலும், முனைத்துத் தின்றலும், சுவைத்தலும், தீமை செய்தலும், முறையின்றித் தாழ்த்தலும், உயர்த்தலும், தற்பெருமை கூறுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் மறந்தும் உண்டாகா. காரணம் யாதெனில் இவையாவும் சிவன்பால் இன்மையால் என்க.
1687. விடிவது அறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் உண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.
பொருள் : அனுகூலமானதை அறிய மாட்டார். பரவெளியைக் காணமாட்டார். அனுகூலமான பரவெளியில் பார்வையைச் செலுத்த மாட்டார் காவலுடன் கூடிய கண்ணிமைகளைப் புறநோக்கிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். அகநோக்கை அறியுங்கள் தொடர்ந்துவரும் துர்ப்பாக்கியத்தைத் தவிர்க்கும் ஒளியாகச்சிவம் விளங்கும்.
1688. வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்
பெத்தம் அறுமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படாது அவ்வாறு
பித்தான சீடனுக்கு ஈயப் பெறாதானே.
பொருள் : அனாதியே ஆன்மாவோடு பிணிக்கப் பெற்ற ஆணவமலத்தை மாற்றுகின்ற வழியினைப் பொருந்தி, மலக்குற்றம் நீங்க முத்தியில் விருப்பனாகி உலகஇயலில் மாறுபட்டு, உண்மைப் பொருளை நாடி மேன்மையடையாவண்ணம் உறுதியில்லாத சீடனுக்கு ஞானத்தைக் கொடுக்கலாகாது.
1689. மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்புஇறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவான் அசற்சீடன் ஆமே.
பொருள் : நிலையான ஆணவம் ஆதி ஐம் மலங்களையும் நீங்கும் வகையை ஆராயன். பொருந்திய காமம் முதலானவற்றில் மூழ்கும் தொழிலினின்றும் பிரியான். பொய் கலந்து பேசுபவன் பிறப்பு இறப்புகளுக்கு அஞ்சாதவன். இவன் தீட்சைக்குரிய சீடன் அல்லன் என்று தள்ளத்தக்கவன் ஆவான். (மலம் ஐந்து - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி, காமாதியாவன: காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆம்.
14. பக்குவன் (மெய்க்குரு)
(பக்குவன் - தகுதியுடையவன். குரு உபதேசப்படி ஒழுகுபவன். பக்குவம் உடையவன் ஆவான்.)
1690. தொழுதறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே.
பொருள் : வழிபாடு செய்யும் பக்குவமுள்ள சீடர் வேதாகம முறை உணர்ந்து, குற்றமே அறியாத மேலான குருவை நாடி அறிவார். இவர் நல்முத்தியை விரும்பும் அறிவுடையவர். மற்றைய முத்தியை விரும்பாத உலக நிலையில் உள்ளவர் அழிந்து போகும் வழியைத்தான் அறிவர். முத்தியை விரும்பும் பக்குவமுடையவர் நல்ல குருவை நாடி உபதேசம் பெறுவர்.
1691. பதைத்தொழிந் தேன்பர மாவுனை நாடி
அதைத்தொழிந் தேன்இனி யாரொடும் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாய்உகந்து ஆண்டரு ளாயே.
பொருள் : சிவபெருமானே ! பிறப்புத் துன்பங் கண்டு அஞ்சிப் பதறினேன். உன் திருவடியை நாடி இடைவிடாமல் அலைந்தேன். அறியாதார் உடம்பினை இனியாரென்று கூறுகின்றனர். அவ்வுடம்புடன் கூடேன். அறியேனின் இருவினைகளையும் சிதைத்து மனக்கவலை தீரப் பிறப்பினை உதைத்து அடியேனை உவந்து ஆண்டருள்வாயாக.
1692. பதைக்கின்ற போதே பரம்என்றும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலு மாமே.
பொருள் : பிறப்பு இறப்புகளில் படும் துன்பத்தை நினைக்கின்ற போதே உள்ளம் பதைக்கின்றது. மேலாகிய சிவனைச் சேரும் திருவடியுணர்வைப் புருவ நடுவினின்றும் நோக்கி அந்நோக்கத்திற்கு இடையூறாக உலகியலிற் செல்லும் மனத்தைத் தடுத்து நிறுத்திச் சிவன் திருவடியில் இடையறாது சேர்க்கின்ற மெய்யன்பர் அருமறை பெறுதற்கு உயிராவர். (அருமறை - உபதேசம், குருமொழி திரு ஐந்தெழுத்து.)
1693. கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே.
பொருள் : கொண்டால் நல்ல குருநாதனைக் கொள்க. உன்னிடம் உடமையாகக் கருதப்பட்ட பொருளையும் உனது உடலையும் உனது உயிரையும் காணிக்கையாகக் கொடுக்க என்னளவு காலமும் இடைவிடாமல்  அவர் காட்டிய வழியிலே நின்று தெளிந்து உணரச் சிவபதம் தானே விளையும்.
1694. சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே.
பொருள் : உலகோர் கொள்ளும் முறைமையுள் அருமறை கொள்ள சோதி, விசாகமும் முதலிய நட்சத்திரங்களும் தேள் நண்டு முதலிய ராசிகளும், திங்கள் முதலிய கிழமைகளும் சிறந்தனவாக நினைப்பவர்க்கல்லது அதன் முதலும் காரணமும் அறியவொண்ணா என்க. (சோதி - சுவாதி நட்சத்திரம் தேள் - விருச்சிகராசி, நண்டு - கடகராசி, ஓதியநாள் - சொல்லப்பட்ட சுப வாரங்கள். ஆதியும் ஏதும் - முதலும் காரணமும்.)
1695. தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் விளையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.
பொருள் : குரு உபதேசம் பெற்ற பெரிய மணியைப் போன்ற தூய்மையான சிந்தையில் ஒளி பொருந்திய இறைவன் எழுந்தருளிய போதே, விருப்பமுடையாரது வலிமை மிக்க வினைநீங்க இறைவனது திருவடிஎன்னும் நாதவுணர்வு பெற்று அருளைப் பெறலாம். தொழில் என்பது - குரு சீடனுக்குக் காட்டில் கொடுத்த உபாயம்.
1696. சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்தவல் லான்அவன் சற்சீட னாமே.
பொருள் : அறிவும் அமைதியுமாகிய தலைமைக்குணம் உடையவனாய் உண்மைப் பொருளாகிய சிவனடியை மறவாமல் நினைந்து கடவுள் உண்டெனும் கொள்கை வேறுபாடு உடைய நெறிகளின் அடிப்படைத் தோற்றத்தை மேற்கொண்டு எல்லையின்றிப் பிணித்துவரும் பிறவியினுக்கு அஞ்சிச் செந்நெறியாகிய அற நெறியின் கண் உறைந்து நிற்க வல்லான் நன்மாணவன் ஆவான். (சாத்திகனாய் சத்துவ குணம் உடையவனாய். ஆத்திக் பேத நெறி - கடவுள் உண்டென்னும் பல சமயங்கள்)
1697. சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தை உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந்து ஆனந்தச்
சந்தியில் இச்சை தருவோன்சற் சீடனே.
பொருள் : உலகில் நித்தியமாய் அழியாத பொருள் எவை அநித்தியமாய் அழியும்பொருள் எவை என்று தான் சிந்தித்து உணர்ந்து, சிவத்தையே சிந்தித்துச் சிவத்தின் சத்தி பதியப்பெற்றுச் சிவத்தை உணர்த்த உணர்த்த நித்தியப் பொருளான சிவத்தினிடம் சிவஞானத்தைப் பெறப்பணிந்து ஆனந்தமே வடிவான சிவசத்தியின் இச்சைக்குத் தக்கவாறு தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்பனே நல்ல சீடனாவான்.
1698. அடிவைத்து அருளுதி ஆசானஇன்று உன்னா
வடிவைத்தம் மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற்று ளோனே.
பொருள் : குருநாதனே ! இன்று தங்களது திருவடியைச் சூட்டி அருளும் என்று குருவினது வடிவத்தைத் தம்முடைய சிரசின் மேல் தியானிக்க வஞ்சனையுடைய பிறவியைக் கோபிக்கின்ற அருட்சத்தியால் அருள்பெற்ற ஞானமுடையோனே குற்றம் நீங்கிய சீடன் ஆவான்.
1699. சீராடு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.
பொருள் : சீடன் சிறப்புப் பொருந்திய அனுபவ ஞானத்தில் விருப்பம் மிக்கு, இதுவரை கண்டறியாத காதல் குருபரனான சிவத்தின்பால் உண்டாக, இதுகாறும் அமையப்பெறாத சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நான்கும் தன்னிடம் அமையப்பெற்றோன் திருவடி தீட்சைக்குப் பிறகு ஞானத்தின் அனுபவத்தை ஆராய்பவன் ஆவான்.
1700. உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்கு உத் தரபச்சி மங்கொண்டு
உணர்த்துமின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.
பொருள் : உணர்த்துவதும் சத்திநிபாதம் மிக்குஉடைய வர்க்கேயாகும், பசுக்களுக்கே உதவும் பராசத்தியை நினைந்து, ஒன்றோடும் பற்றில்லாத பராபரமாகிய சிவத்தின் எல்லைக்குச் சீடனைக் கொண்டு சென்று கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய இடங்களை அறிவியுங்கள்.
1701. இறையடி தாழ்ந்துஐ வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
பொருள் : உபதேச குருவின் திருவடிகளை வணங்கி, ஐந்துவகையான வணக்கங்களைச் செய்து, ஆன்மாவின் குறையைக் கூறி, அழியாத குணத்தை அளிக்கும்படி சீடன் வேண்டிப் போற்ற குருவானவர், சிறைப்பட்டு உடலையே உண்மையென்று நம்பியுள்ள மாணவ ! நீ அகண்ட சிவமாவாய் என உணர்த்தி, சிவ அறிவுடன் ஆன்ம அறிவையும் ஒன்றுபடுத்தும் நெறியை அறிவிப்பவனே சன்மார்க்க பஞ்சாங்கம், ஷாடங்கம், அஷ்டாங்கம் அங்கம் உறுப்பு, கைகள் 2, கால்கள் 2, தலை 1, காது 2, நெஞ்சு 1, ஆக எட்டு உறுப்புக்களும் நீலந்தோய வணங்கல் அஷ்டாங்க வணக்கம்.
1702. வேட்கை விடுநெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினான் சற்சீட னாமே.
பொருள் : ஆசையை விடுகின்ற நெறியே வேதாந்த மாதலால், உலக வாழ்வுக்குத் துணை புரிகின்ற புலன்வழிச் செல்லுகின்ற பெறிகளை மாற்றி, சித்தாந்தச் செந்நெறியிலே சென்று விருப்பத்தை விடுகின்ற சிறந்த வேதாந்தியான குருவின் திருவடிகளில் வணங்குகின்ற தலையினை உடையவனே சிறந்த பக்குவமுள்ள சீடனாவான்.
1703. சற்குணம் வாய்மை தயாவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவுஓர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.
பொருள் : நன்னெறி நன்மாணாக்கனுக்குரிய பத்துத் தன்மைகளும் முறையே வருமாறு; நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை, குருவின் அடி நீங்காமை, உண்மை அறிவின்பப் பெரும் பொருள் உணர்வு, தெளிவு, ஓர்வு, அருள் நிகழ்ச்சி என்பன. இவை முற்றவும் உடைய மெய் உணர்வினனே நன்மாணவன் ஆவான்.
ஆறாம் தந்திரம் முற்றிற்று.

பத்தாம் திருமறை
திருமந்திரம் | ஏழாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்

(காலோத்திர ஆகமம்)
1. ஆறு ஆதாரம்
1704. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம்கண்டு ஆங்கே முடிந்து முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.
பொருள் : அக நிலைகள் ஆறும் வருமாறு: நான்கு இதழ்கள் உள்ள மூலமும் (மூலாதாரம்), ஆறு இதழ்கள் உள்ள கொப்பூழும் (சுவாதிட்டானம்), பத்து இதழ்கள் உள்ள மேல்வயிறும் (மணிபூரகம்), பன்னிரண்டு இதழ்கள் உள்ள நெஞ்சமும் (அனாகதம்), பதினாறு இதழ்கள் உள்ள மிடறும் (விசுத்தி), இரண்டு இதழ்கள் உள்ள புருவநடுவும் (ஆஞ்ஞை), ஆகிய ஆறு இடங்களும் ஆறு ஆதாரங்கள் எனப்படும். இந்நிலைக் களங்களின் நினைந்து வழிபடக் காலத்தைத் தோற்றுவித்துத் தொழிற்படுத்தும் சிவபெருமானின் திருவடி காணலாகும்.
1705. ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி
போதா லயத்துஅ விகாரந் தனிற்போத
மேதாதி ஆதார மீதான உண்மையே
பொருள் : ஓசைமெய்யாகிய நாத தத்துவத்தின்கண் பன்னிரு கலைகளோடு கூடியது சூரிய மண்டலம்; பதினாறு கலைகளோடு கூடியது திங்கள் மண்டலம் நிலமுதல் நாதம் ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்தாறு மெய்களும் மேலாகப் பேராற்றலாகிய திருவருள் அம்மை வீற்றிருந்தருள்வன். இயற்கை உணர்வின் இருப்பிடமாகிய தனிமுதற் சிவன் அதற்குமேல் காணப்படுவன். இவற்றிற்கு எல்லாம் சார்பு நிலைக்களமாக வுள்ளதும் அச்சிவனேயாவன்.
1706. மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகிநின் றானே.
பொருள் : மேல் கீழ் என்னும் பாகுபாடுகள் நீங்கி ஆராயுமிடத்துத் தான், யான், நீ என்னும் மூவிடப் பெயர்களும் அவன், அவள், அது என்னும் திணைபாற் பெயர்களும் கூடிப் பெயர்த்தன்மை ஆறாகும். நிலவுலகம் எங்கணும் பரந்து நிறைந்த முழுமுதற் தனிப்பொருளாம் சிவன் வேண்டாமை கொடுத்தலின் காரும், வேண்டக் கொடுத்தலின் கற்பகமும் ஆகி நின்றருள்கின்றனன். மேகத்தையும் கற்பகமரத்தையும் ஒப்பாகக் கொடுப்பவன் என்க: (கேட்காமல் கொடுப்பது - மேகம் கேட்டுக் கொடுப்பது - கற்பகம்)
1707. ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே.
பொருள் : ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடிசுத்திகளாகும். சுத்தி - உண்மை ஓர்தல். மேதை முதல் ஏழ்முதற்பொருள்களும் பதினாறு கலைகளும் கலந்த கலப்பும், பரவெளிப்பரப்பும் அறிவு நிலையத்துள் காணப்படும் ஐம்புலன் அந்தக் காரணம் நான்கு ஆகியவைகளுள் ஆய்தல் சீலநிலையைத் தூண்டுதல். இவை தோழமை நெறியாகும், ஏழ்முதற் பொருள்கள்; சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்பன. (செந்நீர் - இரத்தம்; வெண்ணீர் - சுக்கிலம்) சாதாரணம் - ஜீவ இயல்வு.
1708. மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதுஆர மாகவே தானெழச் சாதித்தால்
ஆதாரஞ் செய்போக மாவது காயமே.
பொருள் : பதினாறு கலைப் பிராசாதத்தால் இடையறாது ஓமெனத் தூண்டி ஆறு நிலைக்களங்களையும் ஆறு வழிகளையும் சிவகுருவின் திருவருள் துணையால் செவ்வையுறத் திருத்தினால் உடம்பின்கண் வழிபடுதற்கு இயைபு உண்டாகும். மூலாதாரம் முதல் வழிபாடு இயற்றினால் அங்ஙனம் வழிபடுவார்க்கு வரும் நுகர்வு சிவநுகர்வேயாகும். (பிராசாதம் - ஒருவகை மந்திரம், ஆறுதத்துவாக்கள் சோதனை (மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை) தாது ஆரமாக - மூலாதாரம் முதலாகக் கொண்டு.)
1709. ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்
கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே.
பொருள் : சொல்லும் பொருளும் ஆகிய வழிகள் ஓராறு. அவை முறையே எழுத்து மொழி மறை எனவும், உலகு கலன் (தத்துவம்) கலை எனவும் கூறுவர். இவற்றான் இயங்குவது உடம்பு. இதன்கண் மூலமுதல் ஆறு நிலைகலங்களிலும் வழிபடும் முறைமைகளைக் குறிக்கொண்டு போற்றுமின், அமைந்துள்ள எழுத்துக்கள் ஐம்பதன் மேல் அமுதூறும் மூலாதாரத்து எழுத்து ஒன்று உண்டு. அது பிரணவம். திருமூலர் காலத்தில் உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும் ஐம்பதாகும்.
1710. ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.
பொருள் : தோற்றும் பருவுடம்பு அழிகின்ற உடலாகும். தோன்றா நுண்ணுடல் இதன் கண்ணின்று உயிருடன் ஏகும் உடம்பாகும். இவற்றுக்குரிய எழுத்துக்கள் ஐம்பதாகும். தத்துவமாகிய உடம்புக்கு வழிகள் ஆறும் உறுப்புக்களாகும்.
1711. ஆயு மலரின் அணிமலர் மேலது
ஆய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் வினைந்தது தானே.
பொருள் : மூலாதாரங்களின் வைத்து ஆராயுமலர்களின் மேலானது அழகிய பதினாறு இதழ்களையுடைய மிடற்றின் கண்மலராகும். அங்கு வழிபடும் தூய அறிவு சிவப்பேரின்பமாய்த் திகழும். அவ்வறிவு சிவ அறிவினுள் அடங்கிச் சிவ அறிவாய் விளங்கும். இதழ்பதினாறு விசுத்தி.
2. அண்டலிங்கம் (உலக சிவம்)
(அண்டம் - உலகம், இலிங்கம் - குறி, அண்டலிங்கம் - உலகமே சிவனது அடையாளம்.)
1712. இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே.
பொருள் : அம்மையப்பரின் அடையாளமாகிய சிவலிங்கமே எல்லாத் திசைகளிலும், எல்லாக் கலைகளும் எல்லா உலகுமாகும். இவ்வுண்மையினை நுண்ணுணர்வினரே அறிவர். ஏனையோர் அறியார். அம்மை ஆற்றலாகவும் அப்பன் பொருளாகவும் திகழ்வர். ஆதலால் எப்பொருளை எடுத்துக் கொண்டாலும் ஆற்றலும் ஆற்றலின் நிலைக்களமுமாக ஒவ்வொன்றும் இரு திறப்படும். இது கதிரும் கதிரவனும் போன்ற நிலையாகும். எங்கும் நிறைந்து நீக்கமற நிற்கின்ற சிவனும் சத்தியும் எல்லாப்பொருளையும் இயைந்து இயக்குகின்றமையின் எல்லாம் சிவன் எனப்படும்.
1713. உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவமாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே.
பொருள் : சதாசிவனாகிய முழுமுதல் தனைவிட்டு நீங்கா ஆணையாகிய சத்தியே வினைமுதற் காரணமாகக் கொண்டு உலகினைக் கருத்தளவானே படைத்தருள்கின்றனன். அதனால் சத்தியே உலகின் காரணம், உலகின் வடிவம், உலகின் குணம் என ஏற்றிக் கூறுவர்.
1714. போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
ஏகமும் நலகி இருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.
பொருள் : அன்பியல் வாழ்கையாகிய போகமும், அருளியல் வாழ்க்கையாகிய முத்தியும், முறையே அவற்றின் பயனாகிய சிற்றின்பமாகிய புத்தியும், பேரின்பமாகிய சித்தியும், சித்திக்குரிய வழிவகை கூறும் திருமூலர் போன்ற செந்தமிழ் ஆகமும், அவற்றின் கண் காணப்படும் அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறும், அதற்கு அப்பாலாகத் திகழும் ஒப்பில் ஒரு முதலாம் சதாசிவமும் ஆகம நூலிற் காணப்படும் அத்துவா ஆகிய வழிகள் ஆறும் சிவபெருமானேயாம். (அத்துவா - கதியடைக்கும்வழி, சதாசிவம் சிவத்தின் தடத்த நிலை. இஃது அருவத்துக்கும் உருவத்துக்கும் உள்ள இடைநிலை.)
1715. ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தனர் அண்டங் கடந்து அப் புறநின்று
காத்தனன் என்னும் கருத்தறி யாரே.
பொருள் : எண்ணற்ற தேவர்கள் எம் சிவபெருமானை வழிபட்டனர். மணத்தினை ஏந்திவரும் தென்றலைப் போன்ற வள்ளல் என்று வாழ்த்தினர். மகிழ்ச்சி பொங்க ஆரவாரித்தனர். ஆனால் அப்பெருமான் அண்டங்களைக் கடந்து நின்று காக்கின்றான் என்ற உண்மையினை அறியார். இரண்டாம் அடிக்கும் பஞ்ச பூதங்களையே தன்னுருவாகக் கொண்ட சகுண பரசிவம் என்று பொருள் கொள்வாரும் உளர். நிர்க்குண சிவத்தைத் தேவர்கள் அறியார்.
1716. ஒண்சுட ரோன்அயன் மால்பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோடு இந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.
பொருள் : ஒளிமிக்க சுடர் வடிவாகிய அக்கினியும் பிரமனும் திருமாலும் தேவகுருவும், ஒளி வடிவான சூரியனோடு இந்திரனும் ஆகியவர்களிடம் கண்ணீர் ஒளி போலக் கலந்து நின்றும், ஏனைய தேவர்களிடம் உணர்வைப் பெருக்கும் சந்திர ஒளி போன்றும் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து சிவம் விளங்கும். சிவம் சிறந்த தேவர்களிடம் கண்ணொளி போன்றும் ஏனைய தேவரிடம் உணர்வு போன்றும் உள்ளான் என்பதாம்.
1717. தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற  பொற்கொடி யாகுமே.
பொருள் : அறிவில் பொருளாகிய மண் முதலியவற்றினின்றும் சிவபெருமான் தன்னை வழிபடுவோர்க்கு அருள்புரிபவன். அவன் முழுமுதற் கடவுளானவன். அத்தகையே மெய்ப் பொருளை வழிபடுவாரில்லை. அவ்வுண்மை யோர்ந்து வழிபடுவார்க்கு உச்சியின் மேற் காணப்படும் ஆயிரஇதழ்த் தாமரை யின்கண் வீற்றிருந்தருளும் திருவருள் அம்மையின் பேரருள் உண்டாம். தாபரம் - அசையாப் பொருள் (ஸ்தாவரம்), (மாபரம் - பெருமையுள்ள சிவம், பூவகம் - சகசிலமர்; பொற்கொடி - சிவசத்தி.)
1718. தூவிய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்
ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
பொருள் :  மிக உயர்ந்துதாகய சிவலாயத்தைப் பற்றி அறிந்து கொள்பவருக்கு, கருவறையின் மேலுள்ள விமானமே தூயலங்கமாகும். கருவறையின் உள்ளிருக்கும் சிவலிங்கம் நல்ல சூக்கும லிங்கமாகும். இலிங்கத்து முன்னுள்ள பலிபீடமும் நந்தியும் சிவலிங்கமென அழைக்கப்பெறும். (அரன் நிலை - ஆலயம், பத்திரம் - ஆனேறு; நந்தி; ரிஷபம்.)
1719. முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொடி சிலைநீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.
பொருள் : முத்து, மாணிக்கம், பவழம், திருவுருச் செதுக்கிய மரக்கொம்பு, பளிங்கு முதலிய வெண்கற்கள், திருவெண்ணீறு, மரகதம் சிவபெருமானை முடி முதலாகக் கொண்டு செந்தமிழின்கண் வரையப்பெற்ற திருமந்திரம் போன்ற ஆகம அருள் நூற்கள், திருவமுது அமுது முதலாகிய அரிசி ஆகிய பத்தும் அழகிய தூய்மையாக்கும் மணமுள்ள சிவலிங்க வழிபாட்டிற்கு உரிய இலிங்கம் அமைக்கும் கருவித்துணைப் பொருள்களாகும். சாதனம் துணைப் பொருள்.
1720. துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே.
பொருள் : கட்டித், தயிர், நெய், பால் தூய்மையான பசும் சாணத்துடன், விளக்கிய செம்பு, அக்கினி, பாதரசம், சங்கு, நன்றாக வெந்த செங்கல், அழகான வில்வம், பொன் ஆகியவற்றுள் அழகு விளங்கும் ஒன்றைச் சிவலிங்கமாகக் கொள்க. பால், சலம் ஆகியவற்றைக் கலசத்துள் பெய்து வழிபடலாகும். (சலம் - நீர், சலஞ்சலம் என்னும் சங்கு; இரதம் - இரசலிங்கம், வில்வம் - வில்வப்பழம் அல்லது வில்வமரத்தால் செய்யப்பட்ட இலிங்கம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பயனுண்டு.)
1721. மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே.
பொருள் : வளமான படிகலிங்கம் அந்தணர் பூசிக்கத்தக்கது. பொன்னாலாகிய இலிங்கம் மன்னர் அருச்சிக்கத் தக்கது. குறைவில்லாத வருவாயுடைய வைசியர்க்கு வழிபடத்தக்கது மரகதலிங்கமாகும். தொண்டு நெறியிலுள்ள வேளாண் தொழிலுடையோர்க்கு வாண லிங்கமாகும்.
1722. அதுவுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புலனங்கள் எட்டும்
இது உணர்ந்து என்னுடல் கோயில் கொண்டானே.
பொருள் : முன்னே சொன்ன முறையில் சிவனை இலிங்கத் திருமேனியில் உணர்ந்தோன் அவனது வியாபகத் தன்மையை அதனுள் நாடி, எவ்வகையாலும் உணரமுடியாது நின்ற ஈசன், உண்மை உறவால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் வியாபகமாகக் கலந்திருத்தலை உணர்ந்தபோது என் உடம்பைக் கோயிலாகக் கொண்டு அருளினான். (புது உணர்வு - தற்போதம் கெட்டு உண்மை அறிவு மிகுதல்.)
1723. அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே
பகலிட மாம்முனம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே.
பொருள் : முன்னம் ஈட்டிய பாவங்களைப் போக்குபவனும் அனைத்தும் ஒடுங்குவதற்கு இடமாய் நின்ற புண்ணியனுமாகிய சிவமே அகன்ற பிரபஞ்சமாய் அவற்றுள் பிறர் அறியாமல் கலந்திருக்கும். அது நாடியவர்க்கு அழிகின்ற உடம்பினுள்ளே ஒளி செய்யும் பொருட்டு இடமாகக் கொண்டது. உகலிடம் - அழிதற்கு இடம்.
1724. போது புனைசூழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
ஆதியுற நின்றது அப்பரி சாமே.
பொருள் : ஆதார மாலையை அணிந்திருக்கும் திருவடி பூமியாகும். ஒளிபொருந்திய கங்கையைச் சூடிய திருமுடி ஆகாயமாகும். இறைவன் யாவற்றுள்ளும் கலந்திருக்கும் முறையில் அவனது உடல் ஆகாயமானது. இதுவே ஆதிபகவானாகிய சிவம் அண்டத்தைத் திரு மேனியாகத் தரித்து நின்ற தன்மையாகும்.
1725. தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையும்திக் காமே.
பொருள் : நிலமாகவுள்ள சத்தி பீடத்தின்போல் விளங்கும் இலிங்கம் (பாணம்) ஆகாயத்தை அளாவி நிற்பதாம். அலைமோதுகின்ற கடலே திருமஞ்சனசாலையாகும். மலையின்மேல் விளங்கும் மேகமே திருமஞ்சன தீர்த்தம். வானத்தின் சிறு ஒளியாகப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களே அண்டலிங்கத்துக்குரிய மாலையாகும். அளவிடுவதற்கு அரிய சிவத்துக்கு ஆடை எட்டு திக்குகளும் ஆகும்.
3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)
(பிண்டம் - உடம்பு; பிண்டலிங்கம் என்பது உடம்பே லிங்கம் என்றபடி.)
1726. மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கைவடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.
பொருள் : மானிடர் உடம்பின் வடிவமே சிவலிங்கம். மானிடர் உடலும் உடலைச் சூழவுள்ள பகுதியும் அறிவு ஆகாயம், மானிடர் உடல் சதாசிவரின் உருவத்திருமேனி. மானிடர் உடம்பிலுள்ள அசை வெல்லாம் கூத்தப் பெருமானின் நடனமேயாம். சிவ லிங்கமாவது உடம்பில் கால் முதல் அரை வரையில் பிரம பீடம் உடல் பகுதி கத்தி பீடம். தலை பாணம் என்ற வகையில் உடம்பு சிவலிங்கம். தலைபாகம் சிதம்பரம். உடல்பாகம் சதாசிவம். கால்பாகம் திருக்கூத்து.
1727. உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலந்தரு
தேவரை வந்திசெய் யீரே.
பொருள் : இறந்தவர் இறந்தே போனார் என்பதற்கு இடனின்றி  வினைக்கு ஈடாக மீண்டும் பிறக்கின்றனர். அவர்கள் உடம்பு தோற்ற முறையில் நீரின்று நிலம் தோன்றும் என்பதாகக் குறிக்கவே ஐம்பூதச் சேர்க்கையால் ஆகியது என்பது விளங்கும். இப்பிறப்பினை வெல்வது சிவபெருமான் திருவடி வணக்கத்தால் ஆகும். நிலம்தரு நீர் நிலம் உற்பத்திக்குக் காரணமான நீர்.
1728. கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொள் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில் கொண்(டு) ஈசனும் ஆளவந் தானே.
பொருள் : உடல் வந்த போதே உடம்பினுள் குடிபுகுந்த ஐந்து பூத நாயகர்களும். அவரவர் தொழிற் படும் நுழைவாயிலில் நின்று உயிருக்கு வேண்டிய அறிவை வழங்கியருளுவர். தாய் மனையிற் புகுமாறு போல விருப்புடன் தலைவன் என் உள்ளத்தில் புகுதலும் அவ்வாயில்களைத் தனதாக்கிக் கொண்டு சிவம் ஆண்டருளினான்.
 தெய்வம்-பூதம்-பொறி-புலன்
1. பிரமன்-மண்-மூக்கு-மணம்
2. விஷ்ணு-நீர்-நாக்கு-சுவை
3. உருத்திரன்-தீ-கண்-ஒளி
4. மகேசுரன்-காற்று-தோல்-ஊறு
5. சதாசிவன் ஆகாயம் செவி ஓசை
(கன்னற நினைந்து ஆ மனை புகுவது போன்று என்றும் மூன்றாம் அடிக்குப் பொருள் கொள்ளலாம்.)
1729. கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான் அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான்எங்கள் மாநந்தி தானே.
பொருள் : மக்கள் யாக்கையினைத் திருக்கோவிலாகக் கொண்டு எழுந்தருளினன் சிவன். மிகுதியான மறை நூல்களைத் தன்னை யடையும் வழி காட்டியாகக் கொண்டான். திருவடி சேர்வார் நாடிகள் பத்தினையும் தூய்மை செய்தல் வேண்டும். புலன் ஐந்தும் தம்பின் வரச் சிவனை வழிபடுதல் வேண்டும். அவ்வாறு வழிபடும்போது சிவன் நாடிகளையும் இடமாகக் கொண்டு அருள்புரிவான்.
4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)
1730. கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும்
தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து
நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே
பொருள் : திருவருளோடு கூடிய திருவடி இரண்டும் பூமியின் மேலாக; புகழ்ந்து பாடப் பெற்ற பத்துக் கைகள் திக்குகள் எல்லாம் பரந்து எழுவதாக எங்கும் பார்க்கின்ற முகங்கள் ஐந்தாக, சிவந்த கண்கள் பதினைந்தாக. நல்ல ஒளி பொருந்திய முகத்தின் நிறத்துடன் கூடிய சதா சிவத்தைத் தியானியுங்கள். ஐந்து முகங்களாவன: சத்தியோ சாதம். வாம தேவம் அகோரம். தத்புருடம். ஈசானம் என்பன.
1731. வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.
பொருள் : அயன், அரி, அரன், ஆண்டான், மேம்பட்ட ஐம்முகன் விந்து நாதம் இவற்றை இயைந்து இயக்கும் திருவருள் ஆற்றல். அத்திருவருள் ஆற்றலை மரமும் காழ்ப்பும் போல் விட்டு நீங்காதிருக்கும் சிவன் ஆகிய அத்தனையும் பொதுவாகச் சதாசிவன் எனப்படும். (மீதான ஐம்முகன் மகேசனுக்கு மேற்பட்ட சதாசிவன்.)
1732. ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.
பொருள் : சதாசிவமாகிய சத்தியினிடம் நிவிருத்தி. பிரதிட்டை வித்தை. சாந்தி. அதீதை ஆகிய கலைகள் இடம்பெறும். இவ்வைந்து கலைகள் இடமாகச் சிவ சூரியன் எழ, அதன் கிரணம் உள்ளும் வெளியும் சூழ அண்ட கோசம் நிறைந்து விளங்கும் ஒளியில் எட்டுத் திசைகளும் மேல் கீழ் என்ற இரண்டு திசைகளும் பொருந்தி ஒரே ஒளி மயமாக விளங்கும்.
1733. அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.
பொருள் : பத்துத் திசைகளோடு கூடிய அண்ட கோசத்தில் சிட்சை கற்பம். வியாகரணம். சந்தோபிசிதம். நிருத்தம். சோதிடம் ஆகிய ஆறு சாத்திர அறிவும், அமைந்துள்ளது. அங்கு இருக்கு யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் அறிவும் உண்டு. அங்குப் பொருந்திய சரியை. கிரியை. யோகம். ஞானம் என்ற மார்க்கங்களோடு சமய அறிவும் அடங்கும்.
1734. சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
சமயத்து எழுந்த இராசி ஈராறுள
சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத்து எழுந்த சதாசிவத் தானே.
பொருள் : சித்தாந்த சைவத்தில் கூறப்படும் நிலைகள் பத்து. இவற்றுள் ஐந்து. அவத்தைகள் மேல் நோக்கியும் ஐந்து அவத்தைகள் கீழ்நோக்கியும் உயிர் சென்று வருங்கால் நிகழ்வன. மேலும் உயிர்ப்புக் கலைகள் பன்னிரண்டுள்ளன. அயன், அரி, அரன், ஆண்டான் அருளோன், அன்னை என்னும் திருமேனிகள் ஆறு. பூதம். ஐந்து, ஞாயிறு, திங்கள், ஆரூயிர் மூன்று ஆகிய வடிவங்கள் எட்டு. இவை யனைத்தும் பூண்டருள்வோன் சதாசிவனேயாவன்.
1735. நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே.
பொருள் : சதாசிவக் கடவுளுக்கு ஓதப்பெறும் திருமுகங்கள் ஐந்து. அந்த ஐந்து முகங்களும் முறையே உச்சி கிழக்கு தெற்கு, வடக்கு, மேற்கு என்னும்புலன்கள் ஐந்தும் நோக்கி விளங்குகின்றன. புலன்கள் - திசைகள். இந்த ஐந்து திருமுகங்களின் வண்ணங்கள் முறையே வருமாறு. உச்சிமுகம் பளிங்குநிறம். கிழக்கு முகம் குங்கும நிறம். தெற்கு முகம் நீலவருணம். வடக்குமுகம் செவ்வரத்த நிறமாகும். மேற்கு முகம் பால் நிறமாகும். இத்திருமுகங்கள் ஐந்தும் அடியேற்கு அருளுதற்பொருட்டுக் கொண்டனவாகும்.
1736. அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.
பொருள் : ஐந்து திருமுகங்களும் பதினைந்து திருக்கண்களும் பத்துத் திருக்கைகளும். பத்துத் திருப்படைகளும் கொண்டு திகழ்கின்ற நம்பியாகிய சதாசிவக் கடவுள் அடியேன் நெஞ்சுள் புகுந்து நிறைந்து நின்றருளினன்.
1737. சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவ முப்பத் தாறே.
பொருள் : அருளோன் நிலமண்டிலம் சத்தியாகவும் வான் மண்டிலம் சதாசிவமாகவும் விளங்கி வீற்றிருந்து அருள்வான் சத்தி சிவமாம். இருவரும் நிலத் திணை இயங்குதிணை ஆகிய இரண்டன் கண்ணும் இயைந்து இயக்குவர். சத்தி உருவம். சதாசிவம் அருவுருவம். நிலமுதல் சத்தி சிவம் ஈறாகத் தத்துவம் முப்பத்தாறாகும். இந்த முப்பத்தாறு மெய்களும் அருஞ் சைவர்களுக்கு உரிய பொருண்மையாகும். மெய்-தத்துவம். தத்துவம் முப்பத்தாறு.
1738. தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.
பொருள் : சத்தி சிவ மெய்கள் உருவமும் உள்ளுறை அருவமும் ஆகத் திகழும். இயங்குதினை நிலைத்திணை உலகங்கள் முற்றும் விரிந்து விளங்கும். இன்பம் தோற்ற வூற்றாய் எழுவதும் சத்தி சிவமாகும். எல்லா மெய்களும் சத்தி சிவம் இரண்டின் கலப்பு இயக்கத்தால் இயங்குவன. தத்துவம் எல்லாம் சதாசிவன் என்று அழைக்கப்படும்.
1739. கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய் நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு
மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே.
பொருள் : உள்ளத்தே ஊறுகின்ற சதாசிவனாகிய எம்இறையை ஏத்துங்கள். வேறு வகையாகக் கூறும் நூல்களால் அறியப்படாது கடந்து விளங்குவான். தாம் மேலேறு வதற்காகப் புகழ்தலைச் செய்யும் தேவரோடு மாறுபட்டு நிற்பான். அத்தகையவன் எளியேனாகிய என்மனத்தில் புகுந்து விளங்கினான். கூறுமின் நூறு எனக் கொண்டு 108 நாமங்களால் துதியுங்கள் எனவும் கூறலாம். (108க்கு நூறு என்றும். 1008க்கு ஆயிரம் என்றும் கூறுவது மரபு.)
1740. இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனனே.
பொருள் : இருள் பொருந்திய கழுத்தும் வலக்கையில் ஏந்திய மழுவும் சுருண்ட செஞ்சடைக் கண் ஒளி விடுகின்ற பிறைச் சந்திரனும் அருள் பொழிகின்ற சிந்தையை யுடைய எம் ஆதியாகிய சதாசிவமூர்த்தியைத் தெளிந்த என் உள்ளத்தில் தெளிந்திருந்தேன்.
1741. சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்துஈ சானனே.
பொருள் : சீவர்களுக்கு அருள் பொழிவதற்காகச் சத்தி விளங்கி நிற்கும் ஐம்முகங்களைப் பற்றிச் சொல்லின் வடக்கு நோக்கிய வாம தேவ முகம் உத்தம மானது. இஃது உரையின்றி மௌனமாக இருந்திடும். கிழக்கு நோக்கிய தற்புருட முகம் உடலிலுள்ள தத்துவங்களை இயக்குவது சிரத்தைப் போன்றது தெற்கு நோக்கிய முகமாகிய அகோரம். சிரசின் முடியில் வட கீழ்த்திசை நோக்கி விளங்குவது ஈசானமுகமாம். (தெற்கில் அகோரம் தென்கிழக்கு ஈசனே எனவும் பாடம். வாதேவம் - விளக்கம். சத்தியோசாதம்-தோன்றுவித்தல். தற்புருடம்-ஆட்சி. அகோரம் - நடுக்கம். ஈசானன்-இயக்கம்.)
1742. நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே.
பொருள் : நாண்போன்ற ஈசானத்தைச் சிரசின் நடுவில் நியசிக்க வேண்டும். தாணுவினது தற்புருடத்தை முகத்தில் நியசிக்க வேண்டும். காணுகின்ற அகோரத்தை இதயத்தில் நியசிக்க வேண்டும். மாட்சிமையுடைய வாமத்தைக் குறியில் நியசிக்க வேண்டும். சத்தியோ சாதத்தை நல்ல பாதங்களில் நியசிக்க வேண்டும். (நியசித்தல் - தொடுதல். சுட்டுதல்)
1743. நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்
வஞ்சமில்விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே.
பொருள் : இருதயம் சிரசு. சிகை. கவசம். நேத்திரம் ஆகியவை அங்கங்களாம். இவற்றைக் குறிக்கின்ற மந்திரங்கள் வஞ்சனை யில்லாமல் சீவர்களுக்கு அறிவு விளக்கம் தரும் சுத்த மாயையாகும். இவற்றின் நிறம் பச்சையாகும். உடம்பெல்லாம் ஒளிமயமானபோது செவ்வொளியில் சத்தி மின்னோளி போன்று விளங்குவாள். சதாசிவரிடமுள்ள பத்து ஆயுதங்களும் உதய கால சூரியனை ஒத்துப் பிரகாசிக்கும்.
1744. எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேத் திரத்திலே.
பொருள் : ஆராயின் இதயமந்திரம் இறைவனுக்கு ஞான சத்தியாகும். சிரமந்திரம் ஆகாயத்தில் விளங்கும் பராசத்தியாகும். சிகாமந்திரம் ஆதி சத்தி. அழகுடைய கவசமந்திரம் பல நிறங்களையுடைய இச்சாசத்தியாம். நேத்திரம் கிரியாசத்தியாம்.
1745. சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே.
பொருள் : திருவருள் ஆற்றல் நாற்கோணமாகிய மூலத்தினிடத்து நீர்போல் இடையறாது இயக்கிக் கொண்டிருக்கும். அத்திருவருளே கொப்பூழின்கண் மால்போல் கிடந்து உற்றுழி இயக்கும். இந்நிலை அறு கோணமாகும். அத்திருவருளே நெற்றிப் புருவநடுவில் வட்ட நிலையத்தில் நின்று ஆணை செலுத்திக்கொண்டிருக்கும். இக்குறிப்புத்தோன்றவே செந்தமிழ் ஆன்றோர் தொன்று தொட்டு நெற்றிப் புருவ நடுவில் வட்டமாகப் பொட்டு இடுவதை மரபாகக் கொண்டுள்ளனர். திருவருள் ஆற்றலின் நடுவே சிவன் வடிவமாகும். சந்தனம். குங்குமம் சாந்து ஆகிய மூன்றா லிடும் பொட்டு முப்பண்பின் அடையாளமாகும். திரு நீற்றுப் பொட்டுச் சிவனார் எண்குண அடையாளமாகும்.
1746. மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்கின் தனிச்சுட ராய்நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்
மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே.
பொருள் : மகத்துவம் மிக்க சதாசிவரை எவ்வளவு காலம் தொழுதாலும் அவர் பஞ்சப் பிரமமாகவே விளங்குவர். அவர் மூல வாயுவாக எழும்பி ஆதாரங்களைக் கடந்து ஊர்த்துவ சகஸ்ர தளத்தின் மேல் சென்றபோது ஒன்பது நிலைகளிலும் பொருந்தி விளங்குவார்.
1747. ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தொன்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன்என் நெஞ்சத்தின் உள்ளே.
பொருள் : சிவபெருமான் மேல் ஓதிய முறையான் உலகத்துடன் பொருந்தி அவ்வுலகினை இயக்குகின்றனன். அதுபோல் உடலுடனும் உயிருடனும் பொருந்தி அவ்வுடல் உயிர்களை இயைந்து இயக்குகின்றனன். இவை அவனது பேரருள் பெருமாண்பாகும். அத்தகைய சிவனடி நம்முடிமேல் சூட்டப்பெறுதலால் அழகிய தலை எனப்படும் தென் தலையாகும்.
1748. உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.
பொருள் : உலகனைத்தும் ஒளிப் பொருளாய் விளங்கும் பரசிவத்தை உணர்ந்தேன். அவனைச் சீவர்களாகிய நாம் உய்யும் வண்ணம் பூமி தத்துவத்துக் கொண்டு வந்தேன். என் மனமாகிய கோயிலில் புனிதனாகிய இறைவனைக் கூடினேன். அத் தூய்மையே உருவானவன் என்றும் நாதரூபமாய்க் காட்சி அளித்துக் கொண்டிருந்தான். சிவ சூரியனைப் பாட்டினால் நான் பணிய அவன் ஒளியினால் என்னுடன் ஒன்றியிருந்தான்.
1749. ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.
பொருள் : மூவகை உலகினும் சிவச்சுடர் வீசுகின்றது. அதன்மேல் ஈரேழ் உலகினும் அச்சிவன் நடுவணதாகிய அறிவுப் பெருவெளியாக நின்றருள்பவன். அவனே உலகினைப் படைத்தலால் ஆதியாகவும் மீண்டும் தன்பால் ஒடுக்குதலால் அந்தமாகவும் விளங்குகின்றனன். மேலும் ஆருயிரின் உடம்பகத்துத் திருவருள் நிலையாம் திங்களுமாகும்.
1750. தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்
தன்மேனி தானாகும் தற்பரம் தானே.
பொருள் : ஆருயிர்களின் உடம்புகள் சிவலிங்கமாகவே நின்றிடும் அதுபோல் அச்சிவலிங்கத்து உள்ளும் புறமுமாய் நிறைந்து நிற்கும் சதாசிவமாகும். உடம்பே தனி முதல்சிவன் உடம்பே சிவன் திருவடிப் பேரின்பம். உடம்பே சிவமெய்யாகும். உடம்பே ஒப்பில் முழுமுதல். இத்திருமந்திரம் ஆருயிரின் இடையறாச் சிவன் நினைப்பால் அவ்வுடம்பு உள்ளம் உணர்வு. உணர்வில் உளதாம் இன்பம் எல்லாம் சிவனேயாகும் என்பதை வலியுறுத்துகின்றது.
1751. ஆரும் அறியார் அகாரம் அவனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசைய தாமே.
பொருள் : மேதா கலையாகிய அகரத்தைச் சிவம் என்று யாரும் அறியமாட்டார். அர்க்கிச கலையாகிய உகரத்தால் குறிக்கப்படும் சக்தி எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்பதாம். இவ்விதமான சிவமும் சத்தியும் பொருந்தி உலகமாய் மாறி இச் சிவசத்தி சிரசைத் தாண்டினபோது நாதஒலி உண்டாகும் படி செய்தது.
1752. இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்துஉள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.
பொருள் : சதாசிவ லிங்கத்துக்குரிய பீடம் அல்லது அடிப்பாகம் ஓங்காரம். இலிங்கத்தின் நல்ல கண்டம் மகாரம். இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம். இலிங்கத்தின் பாணம் அகாரமும் நிறைந்த விந்து நாதமும் ஆகும். சிவலிங்கத் திருமேனி அகர உகர மகர விந்து நாதமாகிய பிரணவமாம்.
5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம்)
(ஆத்ம, லிங்கமாவது ஆன்மாவே இலிங்கமாதல்)
1753. அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் தாமே.
பொருள் : அகரமாகிய சிவம் எல்லாவற்றிற்கும் முதலாய் எல்லாவற்றோடும் கலந்தும் இருக்கும். உகாரமாகிய சத்தி எல்லாவற்றிற்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இவ்வாறு அகாரம் சிவம் என்றும் உகாரம் சத்தி என்றும் அறியின் அகார உகாரங்களே இலிங்க வடிவமாம் என்பது விளங்கும்.
1754. ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து ஆதிபீட நாமே
போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே.
பொருள் : அண்ட கோசத்தில் உருவமான சிருட்டிக்குக் காரணமாயும், அதனுள் நிலைத்தாயும் உள்ள விந்துவும் மேதை முதலான சோடச கலைகளாகிய நாதமும் அடுக்கு அடுக்காய் விரிந்தன. ஆதாரமான விந்து உயர்ந்ததான நாதத்தை இடமாகக் கொண்டு நிலை பெற்றுள்ளது. இவ்வகையான உயர்ந்து செல்லுவதில் விந்து நாதங்களின் புணர்ச்சியுள்ளது.
1755. சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே.
பொருள் : திருக்கோவில்களில் நிலைபெற்ற இலிங்கம் தாபர இலிங்கம், (தாபரம் - ஸ்தாவரம் - அசையாப்பொருள்) அந்த இலிங்கம் சத்தியும் சிவமும் ஆகும். அடியார் கூட்டம் சங்கமம் ஆகும்.
(சங்கமம் - அசையும் பொருள்) மெய்யடியார் திருக்கோலங்களும் சத்தி சிவமாகும். சத்தி சிவம் இரண்டையும் இணைத்து ஓதுங்கால் சதாசிவம் எனப்பெறும். தானே தனிமுதல் சத்திசிவம் இரண்டும் இணைந்த சதாசிவம் என்ப.
1756. தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே.
பொருள் : மூலத்திடத்து என்றும் அழகோடு தானாக எழுந்து ஒளி வீசுகின்ற சிவச்சுடரைக் காணலாம். தூய மாயையின் கூறாக அம்மூலத்திடத்து எழுகின்ற ஐம்பது எழுத்துக்களின் தொகையாகிய ஓங்காரமும் அம் மூலத்தேயாம். ஆயிரம் இதழ்த் தாமரையின் நிலைக்களமாகிய உச்சித் துளைமேல் சிவசத்தியிடன் சேர்ந்து விளங்குவது. அகார முதல்வனாகிய சிவபெருமானாகும்.
1757. விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்தும் செய்யும் அவைஐந்தே.
பொருள் : ஒளியும் ஒலியும் ஆகிய விந்து நாதங்கள் பொருந்தும் சிவலிங்கம், விந்து பீடமாகும்; நாதம் இலிங்கமாகும். இவ் விரண்டையும் சார்புக் கடவுளாகக் கொண்டு அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐம்பெரும் தெய்வ நிலைகள் தோன்றின. இவ் ஐந்தினையும் ஐந் தொழிற்கு வேண்டிய கருவென்ப, கரு காரணம், இவ் ஐவரின் வாயிலாக ஐந்து தொழில்கள் நிகழ்கின்றன. அத்தொழில் முறையே அருளல், மறைத்தல், துடைத்தல், காத்தல், படைத்தல் என்ப.
1758. சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்தநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே.
பொருள் : சத்தி வடிவாகக் கொள்ளப்படும் சிவ லிங்கத்தினிடத்துப் பீடம் ஆவி நிலையாகும். கழுத்தினை ஒத்த பீடத்தின் குழி திருவடி உணர்வாகிய சிவ ஞானமாகும். மேல் தோன்றும் இலிங்கம் சிவ மெய்யாகும். எவற்றினுக்கும் உயிர்க்குயிராம் பேராவி பரமாத்மா, சதாசிவமாகும்.
1759. மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே.
பொருள் : ஆருயிர்களின் உள்ளத்தின்கண் சிவபெருமான் திருவருளால் புகுந்து நிலைபெற்ற திருவடி வாழ்க்கையை அருளினான். அதனால் பேரின்பப் பெருவாழ்வு பொழிவதாயிற்று. அந்த இன்ப நன்மையின் நாட்டத்துடன் ஆருயிரையும் சிவனையும் அருளால் நாடுவர். அந்த நாட்டத்தின் பயனாக உடம்பாகிய வீட்டினுள் ஆதியாகிய சிவன் புகுந்து ஆண்டு கொண்டனன்.
1760. பராபரன் எந்தை பனிதமதி சூடி
தராபரன் தன்னடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
அராபரன் மன்னி மனத்துஉறைத் தானே.
பொருள் : மேலானவற்றுக்கும் மேலானவனும் எம்தந்தை போல்வானும் குளிர்ந்த பிறையைச் சூடினவனும் உலகனைத்தையும் தாங்குபவனும் தம் அடியார் மனக்கோயிலின் உச்சியில் விளங்குபவனும் தேவர்கள் சித்தினுள் ஒளிமயமாக விளங்கும் குண்டலினியின் தலைவனுமாகிய அரன் என் மனத்துள் நீங்காது எழுந்தருளினான்.
1761. பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்
குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.
பொருள் : பசுவின் தன்மையுடைய என்மனத்தைக் கோயிலாகக் கொண்ட ஈசனும் பாம்பு தங்கிய சடையும் அக்கினியும் நீரும் பொருந்தியவனும் செய்கின்ற புண்ணியம் அனைத்தும் ஆகியவனுமாகிய அவன் தலைவன் அல்ல நாமே தலைவன் என்று கூறுவது அறியாமையுடையோர் கூற்றாகும். (குரால் - பசு)
1762. அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்று
சென்றுநின்று எண்டிசை ஏத்துவம் தேவர்கள்
என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை
ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே.
பொருள் : சிவன் அன்று அங்கு நின்றான், இங்குக் கிடந்தான் என்று எட்டுத் திசைகளிலும் திரிந்து போய்த் தேவர்கள் வணங்கு வார்கள். அவன் என் உயிர்க்கு உயிராய் என் உள்ளத்தில் பொருந்தி நின்றான். அத்தகைய எம்பெருமானை என்றைக்கும் வணங்கிக் கொண்டிருப்பேன்.
6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம்)
1763. உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்
குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.
பொருள் : உருவும் அருவும் அருவுருவம் என்று மூன்று வகையான திருமேனி கொள்ளும் பரசிவன் நிலைபெற்ற பல உயிர்களுக்கும் குருவாக நிற்கும் தன்மையுடையவன் ஆகும். அவனே சதாசிவமாய்க் கற்பகமரம் போல வேண்டுவார்க்கு வேண்டியதை வழங்கி யருளுவான்.
1764. நாலான கீழது உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்
நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே.
பொருள் : சதாசிவக் கடவுள் ஒன்பது திருமேனிகளை உடையவன். உருவம் நான்கு; இவைகீழ்ப்படி என்ப, அருவம் நாலும் மேற்படி என்ப; நடுப்படி அருவுருவம் ஒன்று என்ப; இவையனைத்தும் பரமசிவன் அருளிற் கொள்ளும் நினைப்பு உருவமாகும்; இவைமுறையே அயன், அரி, அரன், ஆண்டான் எனவும் அருளோன் எனவும், ஒளி, ஓசை அன்னை அத்தன் எனவும் கூறுப (அருளோன் - சதாசிவன்.)
1765. தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான்என்று இறைஞ்சுவார் அவ்வழி
யாவர் பிரானடி அண்ணலும் ஆமே.
பொருள் : தேவர் அனைவர்க்கும் நாதனும் நான்கு திசைகளிலும் முகமுடைய தலைவனும் உருவமூர்த்திகள் நால்வரையும் செலுத்துபவனும், உருவுக்கும் அருவுக்கும் இடையேயுள்ள அருவுரு மூர்த்தியும் ஆகிய சதாசிவரை யார் பெருமான் என்று வணங்குகின்றாரோ அவ்விடத்திலே பிரானாகிய சதாசிவர் தோன்றுவார். அவ்வாறு அவரது திருவடியை அணுகுதலும் கூடும்.
1766. வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.
பொருள் : ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றைச் செய்கின்ற, சிவ சூரியனாகிய சதாசிவரோடு சத்தியை வழிபடினும் இருவரையும் வேறு வேறு உருவாக ஓருருவாகத் தியானிக்கினும் பயன் ஒன்றேதான். ஆதலின் வினை நீங்கும்படி இவ்வாறு தொழுதேன்.
1767. ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.
பொருள் : ஆதியான மேலான தெய்வமாகிய சதாசிவரே, அவரவர் ஆகாய மண்டலத்தில் விளங்குபவர். அவர் சோதியாக அடியார்கள் வணங்கும் பெருந் தெய்வமாகும். ஒவ்வொருவரின் அண்ட ஆகாயத்தில் நீதிவடிவாக விளங்கும் பெருமையுடைய தெய்வமாகும். அவர் யாவருடைய உடலையும் இடமாகக் கொள்ளினும் நின்மலர். இத்தகைய எமது இறையின் ஒரு பாதியில் பராசத்தி உள்ளாள்.
1768. சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.
பொருள் : சத்திக்கு மேல் பராசத்தி விளங்கும் அண்ட கோசத்திலுள்ள வெளியில் தூய்மையான சிவபதம் உண்டு இங்கு ஏனைய தத்துவங்களில் தோய்வின்றி நிற்கின்ற வெளி உள்ளது. அத்தன் திருவடி விளங்கும் இவ்வெளிக்கும் அப்பாலுக்கு அப்பாலாயும் ஒத்ததாயும் இருக்கும் சிவத்தின் உண்மையான நிலை.
1769. கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே.
பொருள் : ஞானலிங்கமாகிய ஒளிமயமான சதாசிவரை அறியில் உலகமெல்லாம் அங்குச் சூக்குமமாய் விளங்குவது தெரியும். எழக்கூடிய வல்லமை இருக்குமாயின் என்றும் அழியாது இவ்வுலகில் இருத்தலும் கைகூடும். தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாகம் பற்றினால் சத்தி உருவில் அமைந்த சிவம் சிந்தையுள் விளங்கும்.
1770. எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை
உந்தியின் மேல்வைத்து உகந்துஇருந்தானே.
பொருள் : எந்தையாகிய சிவபெருமானும் என் அம்மையாகிய பெருமாட்டியும் மணியொளிபோலப் பிரிப்பின்றிக் கலந்து கூடிய கூட்டமும் முற்படக் கூறி முறை இயம்பின் திருவடி உணர்வாகிய சிவஞானமாகும். இருவரும் கூடியிருந்த நிலைக்களம் கொப்பூழாகிய சுவாதிட்டான மாகும். அதற்கு மேலெனப்படும் நெஞ்சமாகிய அநாகதத்தின்கண் பெருங்கண்ணியை உடன் வைத்து மாறிலாத உவப்புடையவன் ஆனான். கூட்டம் - ஒரு பாகத்தமர்ந்த சேர்க்கை.
1771. சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.
பொருள் : சத்தி சிவத்துடன் விளங்கும் தகுதிக்கேற்ப உயிரின் நிலை விளங்கச் செய்து அதற்கேற்ப சுத்த மாயை அசுத்தமாயை என்ற கூட்டத்தில் சேர்த்து உயிர் பக்குவமானபோது சுத்த மாயையில் விளங்கும் (துரியம்) ஒளி மண்டலத்தை உணர்த்தி அதனைக் கடக்கும்படி செய்து சிவனின் சித்தத்தில் சிவம் தங்கிச் சிவனைச் சிவனுறையும் கோயிலாக்கும்.
1772. சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமுõகும்
சத்தி சிவமின்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.
பொருள் : இப்பூமி சிவ சத்திகளின் விளையாட்டாகும். உருவமுடைய சத்தி அறிவான சிவமாம். அறிவான சிவன் உருவான சத்தியுமாம். சத்தி சிவமின்றி உடலுடைய உயிர்கள் ஒன்றும் இல்லை. சத்தியே தேவைப்பட்ட விதம் சமைந்து எக்காலத்தும் உருவத்தைப் பெறும். சிவத்துக்கு உருவம் சத்தி என்பதாம்.
7. சிவலிங்கம் (சிவகுரு)
1773. குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.
பொருள் : ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட இவ்வுலகமும் நீரும், தீயும், காற்றும் (வெளியும்) வரிசையாக விளங்கும் விளக்கம் சிவனாவேயாம். இவை எல்லாமாய்ச் செறிந்த சிவனை நாம் ஒரு குறியில் வைத்து வழிபடுதல் வேண்டும். அங்ஙனம் வழிபடுவதும் அவன்தன் திருவருள் துணையாலேயாம். இவ்வுண்மை அறியகில்லேனே.
1774. வரைந்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்துஅவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.
பொருள் : அச்சிவபெருமானை ஒரு குறியில் கண் வைத்து வழிபடும் வகை ஒன்று உண்டு. அது திரு ஐந்து எழுத்தால் ஆகும். செம்பொற்குடத்து நிரைத்துவைத்த தெண்ணீரும் மருமலரும் அங்கையில் ஏந்திப் புகழ்ந்து மொழியப்படும் நந்திநாமம் நமச்சிவாய என்னும் செந்தமிழ்த் திருமறை ஓதித் திருவடியிலிட்டு வழிபடுதல் என்பதேயாம். இங்ஙனம் வழிபடு உணர்வின்கண் உணர வல்லார்க்குப் புரிசடையோனாகிய சிவபெருமான் அவரைவிட்டு நீங்கி எங்கும் போகான்.
1775. ஒன்றெனக் கண்டோம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவ னைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.
பொருள் : எம்முதல்வனாகிய சிவபெருமான் ஒருவனே உலகுக்கு முழுமுதல் என அருளால் உணர்ந்தோம். அவனை நன்னெறி நான்மையும் எய்தத் தொழுதலே நன்றென்று அவன் திருவடியிணையைப் புனலும் பூவும் கொண்டு போற்றி மறை புகன்று நனவிலும் கனவிலும் மனமுறத் தொழுதனம். அங்ஙனம் தொழுதமையால் ஐம்புலனும் மிகக் கிடந்து இன்புறும்படி அப்பொழுதே ஆதிப்பிரான் அருள் செய்தனன். புலன்கள் ஆண்டவன் திருஆணை வழியே நிகழ்வன.
1776. மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.
பொருள் : மாலின் கொப்பூழில் தோன்றிய அயனும். அம் மாலாகிய அரியும், அரனும், ஆண்டானும் பயனருளும் அருளோனாகிய ஐம்முகனும் மேலாம் விந்து நாதங்களும் நன்மையருளும். சத்திசிவன் வடிவங்களும். நிறைந்த குறை விலாஇன்பப் பயனுக்கு வாயிலாகிய பாடிப் பிரவிப் பணியும் பணியாம். நல்தவத்தைத் தந்த தருளும் நந்தி யெம்பெருமானே. சிவலிங்கமும் ஆவன்.
1777. மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.
பொருள் : மூலா தாரத்திலிருந்து நடுநாடி வழியாகச் செல்லுகின்ற செவ்வொளியோடு கூடி ஆவி எழுகின்ற அளவுவரை உடம்பிலுள்ள ஆதார கலைகளிலும் உடம்பை நீங்கிய நிராதார கலைகளிலும் பொருந்துவதும். நீங்குவதுமாக மனத்தை நிறுத்திப் பழகுவதில் மேலான சிவகதி விளையும்.
8. சம்பிரதாயம் (பண்டைய முறை)
1778. உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.
பொருள் : முன்னிலையில் அமைந்த குரு உடல் பொருள் ஆவி மூன்றையும் சீடன் நீரோடு தத்தம் செய்ய ஏற்றுக் கொண்டு, படர்ந்த வினையால் வரும் பற்றினை அறும்படி கண்ணினால் நோக்கி, சீடனது சிரசில் கைவைத்து, திருவடி ஞானத்தை விளக்கியருளி நுட்பமான உணர்வை எழுப்பி விரைவில் கட்டினையுடைய பிறவியை அறுத்தருளினன்.
1779. உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.
பொருள் : உயிரும் உடம்பும் ஒளி பொருளான வியப்புப் பொருந்திய பரமும். பின்பொருந்தியுள்ள பிராணனும் இவற்றை இயக்குகின்ற சிவமும் சத்தி ஆகியவற்றை அறிந்து, உய்யும் வண்ணம் குருநாதன் ஆட்கொண்டருளினான். (சிவன் - காரண குரு. குருபரன் - காரிய குரு.)
1780. பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.
பொருள் : சிவகுருவானவர் வடக்கு நோக்கி அமர்வார். சிவ தீட்சை பெறுவோராகிய மாணவர் மெய்கண்டார் எனப்படுவார். அவர் சிவகுருவின் இடப்பாலாகிய மேற்குபக்கம் அமர்வார். மேற்குத் திக்குப் பச்சிமம் எனப்படும். அந்நிலையில் சிவகுருவானவர் நாடோறும் மாணவரை நினையும்படி ஆணை ஈந்தது சிவசிவ என்னும் செந்தமிழ் மறையே. அச்சிவன் உறையுமிடம் உச்சிக்குக் கீழும் உள் நாக்குக்கு மேலும் ஆகும். அந்தச் சிவனை விட்டு நீங்காத சீவனுக்கும் கனவில் உயிர்ப்பு அடங்கலாகிய சாக்கிரத்தே அதீதத்øத் புரியும் தவநிலையும் அதுவேயாம். அந்நிலையில் பிறப்பு வழி உண்டாகிறது.
1781. பெட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே.
பொருள் : விரும்பியவாறு அனுபவம் இன்றி வாய் ஞானம் பேசிக் கொண்டிருந்த என்னை, என்னிடத்திலுள்ள குற்றங்களையெல்லாம் அகற்றி, பின்னர்க் குருநாதனாகிய தன்னையும் சீடனாகிய என்னையும் துலாத்தட்டு நேராதல் போலச் சமன் செய்தான். நாணய மாற்று நடந்து வியாபாரம் சித்தித்தது.
1782. தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே.
பொருள் : உலகில் வாழ்கின்ற பல உயிர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவம். உடனாய் இருக்கின்ற இயல்பினை உலகவர் சிறிதும் அறியார். சுத்த மாயையின் மாறுபாட்டைப் போக்கி, எல்லாவற்றையும் கருவாகக் கொண்ட சிவத்தை நான் கண்டு கொண்டேன்.
1783. கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம்குளிக் கொண்டே.
பொருள் : வினைக்கு ஈடாக உடல் பொருளோடு கூடிய உயிரை உய்விக்க வேண்டும் என்று எண்ணங் கொண்டு, தனது ஞான சத்தியால் விந்து நாதங்களாகிய திருவடியை விரும்பிப் பதிப்பித்துப் பெருமையில்லாத உடம்பின் பற்றினை அறுத்து, சிவம் சீவனில் கலந்து மறைந்து அவனே தானாய் நிற்கும்.
1784. கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே.
பொருள் : அடியேனைப் பக்குவம் வந்த போது அடிமையாக ஏற்றுக் கொள்ள எண்ணங் கொண்டான். எனது உயிர் பொருள் உடம்பின் கருவிக்கூட்டம் ஆகியவற்றை அவன தாக ஆக்கிக் கொண்டான். எல்லா வல்லமையையும் தந்தவனே எடுத்துக் கொண்டான். அவ்வாறு கொடுத்தவன் கொள்ளுதலால் என்னிடம் உள்ளவற்றை எடுத்துக் கொண்டான் என்று. கூறுவதற்கில்லை (காயக்குழாம் - தூல சூக்கும காரண சரீரங்கள்)
1785. குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.
பொருள் : குறியாகக் கொள்கின்ற உடம்பும் உடம்பை யுடைய சீவனும் கூடி, நெறிப்பட இயங்கும் பிராணன் நிலை பெற்ற சீவன். இயமன் நீக்குகின்ற உடம்பை எடுத்துக்கொண்ட தன்மையை, உடம்போடு கூடியிருக்கும்போதே அறிந்து பிறிக்காதார் பேய்போல் அலைபவர் ஆவர்.
1786. உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே.
பொருள் : முன் மந்திரத்தில் கூறியவாறு தமது சீவனான ஒளியை உணரும் தன்மை உடையார்க்கு எல்லா சூக்கும உலகங்களும் விளங்கும். அத்தகைய உணர்வுடையார் இவ்வுலகை அனுபவப் பொருளாகக் காணாமல் சாட்சியாகக் காண்பதால் எவ்வகையான துன்பமும் அவர்க்கு இல்லை. இங்ஙனம் உணர்வுடைய ஞானிகள் உலகை அறிந்தபோது அவர்கள் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவராவர்.
1787. காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே.
பொருள் : உடல் பரப்பில் அலைந்து, துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிகவிரிந்து சிவத்துடன் பொருந்திக் குவிந்து சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் பொருந்தியிருந்த சீவருக்குதூய்மையான தனது அருள் சத்தியைப் பதிப்பித்த நந்தியெம்பெருமானை என்ன சொல்லி வாழ்த்த முடியும்.
1788.  நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.
பொருள் : நான் என்றும், நீ என்றும், நீ வந்து அடைதல் என்றும் வேறு பிரித்து உணரக்கூடிய நிலை இல்லை. உடம்பும் உடம்பிலுள்ள உயிரும் போல நாம் உடனாயிருக்க ஆகாயத்தில் இறைவன் வேறாக இருப்பதாக எண்ணின் ஆகாய மண்டலவாசிகள் வந்து பொருந்தி நின்று மனிதர்கள் நுகர்கின்ற இன்பங்களைத் தேன்போலச் சுவைத்து அழுந்தியிருப்பார்கள்.
1789. அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே.
பொருள் : இறைவனைத் துவைத பாவனையில் வணங்கும் சரியை கிரியை வழி நிற்போர் அவனை அறிய மாட்டார். காணப்படுபவனைக் காண்பவன் அறிந்தால் அது இரு பொருளாக இல்லாமல் ஒரே பொருளாகக் காண்பவனும் காட்சியும் ஒன்றிவிடும். இவ்விதமாகச் சரியை வழி நிற்போரும் அநந்நியமாக உணரில் காணப்படு பொருளான சிவமும் காண்பானும் ஒன்றாகச், சீவனார் சிவனாய் விடுவார்.
1790. நானிது தானென நின்றவன் நாடோறும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்
நானிது அம்பர நாதனும் ஆமே.
பொருள் : நான் இந்தச் சீவனே என்று உள்ளங் கொள்பவனாகிய சிவன், உடலாகிய இதனைத் தான் எனவே எப்போதும் கருதும் உயிர்போல உளன். அவன் வானத்தில் பரவும் பெரிய மேகம் போலக் கருணையைப் பொழிபவனாக உள்ளான். அதனால் நான் ஆகாய நாயகனாக ஆயினேன்.
1791. பெருந்தன்மை தானென யானென வேறாய்
இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.
பொருள் : பெருந்தன்மையுடைய தான் என்னும் சிவனும் யான் என்னும் சீவனும் வேறாக ஒருபோதும் இருக்கவில்லை. அத்தன்மையை இறைவன் இயல்பாகவே அறிவான். உண்மையாகவே உயிர்களைத் திருத்த மடையச் செய்கின்ற சிவபெருமான் உம்மை உடல் உயிர்போலப் பிரிப்பின்றிப் பொருந்தி யிருப்பான்.
9. திருவருள் வைப்பு (திருவருள் வைப்பு - திருவடி பதிதல். திருவடியாவன: சூரிய சந்திர கலைகள்.)
1792. இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவது உயிரும் உடலும்
அருளது ஆவது அறமும் தவமும்
பொருவது உள்நின்ற போகமது ஆமே.
பொருள் : சீவர்கள் அறிய வேண்டிய நெறி சூரிய நெறி, சந்திரநெறி என இரண்டாம். இத்தகைய சூரிய கலை, சந்திர கலை விளங்கவே உயிருக்கு உருவமான உடல் அமைந்தது. அருள் என்ற தெய்வ சத்தியை பெற சந்திர நெறி பற்றியவர்க்கு அறமும், சூரிய நெறி பற்றியவர்க்குத் தவமும் அமைந்துள்ளன. இவ்விரு நெறியினும் மனத்தின் பண்பிற்கேற்பப் போகப் பொருள்கள் உடலுக்கு அமையும்.
1793. காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.
பொருள் : ஊனக் கண்ணால் காண்பதற்கு அருமையானவன். மனத்தால் பாவித்து அறியவும் அருமையானவன். குரு மண்டலத்தில் விளங்கும் நந்தியும் பரிசிப்பதற்கும் அணுகுவதற்கும் தூரத்தில் உள்ளவனாகத் தோன்றுவான். அவனையே வேண்டிக் கிடப்பார்க்கு அகநோக்கில் விளக்கொளி போலத் தோன்றுவான். அப்போது அவனையே செறிந்திருத்தலால் உள்ளத்திலிருந்த அஞ்ஞானம் நீங்குமாம்.
1794. குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.
பொருள் : விளக்கொளி கண்டு நின்றபோது அகக்காட்சியில் உலகிலுள்ள உயிர்ப்பொருள் எல்லாம் கருவாய்த் தோன்றும். வெறுக்கத்தக்க ஆணவ இருள் நீங்கினால் உயிர்க்குயிராய்க் கலந்திருக்கும் பரசிவன் உண்மையைக் காணலாம். அவ்வாறு அவனிடம் செறிந்த சிந்தையை ஆராயின், ஞானமே உருவான காட்சி உண்டாகித் தேவ உருவம் சித்திக்கும்.
1795. தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.
பொருள் : ஞானத்தின் திருவுருவைத் தெளிந்து அறியாமையால் காலங்கள் வீணே கழிந்தன. எங்கள் சிவனாகிய தலைவன் தன் சொரூப நிலையினின்றும் பெயர்ந்து குருவாக வந்து காட்டிக் காண்பான். அவ்வாறு உண்மை அறிவே துணையாகப் பொருந்தி உணர்வாரிடம் சார்ந்து விளங்கும் பெருமை யுடையவன் சிவன்.
1796. தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே யனையன்நம் தேவர் பிரானே.
பொருள் : ஆருயிரின் இருள்சேர் இருவினையும் அருளால் அழிந்த பின் அவ்வுயிர் தன்னைத் தானே திருவருள் துணையால் அறியும். மல கன்ம மாயைகளை அவ்வுயிர் அறியாது. அவ்வாறு இருப்ப, நந்தியாகிய சிவபெருமான் அவற்றை அறிவது எங்ஙனம் ? அவன் அறியான். அறியான் ஈண்டு அனுபவியான். உள்ளம் உருகித் தொழுது உணரப்படும் உணர்வாகிய சிவனை உணர்ந்தபின் தேனே அனைய சிவபெருமானின் திருவடி யின்பத்தை உயிர் துய்க்கும்.
1797. நான்அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே ?
பொருள் : உடல் தோன்றிய போதே ஒளியாய் உயிர்ப்பாய் உள்ள ஈசனை நான் அறிந்தே யிருந்தேன். ஆகாய மண்டல வாசிகள் இவ் வுண்மையை அறியாமல் மயங்கி இருந்தனர். தேகத்தின் உள்ளே உயிர்ப்பின் இயக்கத்தை நடத்துகின்ற ஒளிமிக்க சுடராக்கிய இறைவன் தான் அறியவில்லையெனில் பின்னை யாரே அறிந்து உபகாரம் செய்ய முடியும் ?
1798. அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகர்அமு தானதும் தேரார்
அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்
அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே.
பொருள் : அருளே எங்குமாய் உள்ளது என்ற தன்மையை உலகவர் அறியார். அருளை அறிவோர்க்கு அது அமுதம் போல இனிமையைத் தரும் என்பதனையும் சிந்தித்துத் தெளியார். சத்தியே மிக சூக்குமமாய்ச் சிருட்டியாதி ஐந்தொழிலுக்கும் ஏதுவானது என்பதனை எண்ணிப் பார்ப்பதில்லை. அருள்சத்தி கண்ணாயிருந்து அனைத்தையும் ஒரு சேரக் காண்டலையும் உணரார்.
1799. அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே.
பொருள் : திருவடி உணர்வாகிய அறிவில் ஆருயிர்கள் பொருந்த அச்சிவன் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவினை அருளினன். அந்நிலை எய்துதற்குரிய பயில்வு கைக்கொள்ளும் பொருட்டுப் பொறிவழி விருப்பினை உயிர்க்குப் புகுத்தினன். தானும் அவ்வுயிரினோடு புணர்ந்து நின்றனன். அவ்அருளின் வழித் திருவடி உணர்வு பெற்றுத் திருவருள் நிறைவில் நிலைத்து நின்றார் அச்சிவமாகவே இருப்பர்.
1800. அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.
பொருள் : அருட்சத்தியால் பிறந்து வளர்ந்து, அருளால் அழிந்து இளைப்பினை நீங்கி மறைந்துள்ள சீவனை ஒளிமயமான ஆனந்தம் பெறச் செய்து, பின்னர் தானே எழுந்தருளி எனது குரு மண்டலத்தை விளங்கச் செய்தான்.
1801. அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளான் ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அதும்புகுந் தானே.
பொருள் : திருவடி மறவாச் சீரிய நினைவே அழியா அமிழ்தப் பெருங்கடலாகும். அக்கடலின்கண் திரு அருளால் ஆட்டுவித்து அத்திரு அருளாலேயே திருவடியினைச் சூட்டி, மறவாப் பேரன்பும் வழங்கி, அத்திருவருள் பேரன்பினையும் உண்பித்து, அத் திருவருளாலேயே அச் சிவன் ஆருயிரின் அகம் புகுந்தான்.
1802. பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்த நேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே.
பொருள் : என்னைப் பாசத்தில் பொருத்தி அனுபவிக்கச் செய்தது அருள். அந்தப் பாசத்தைப் பற்றாகக் கொண்ட என்னை அதிலிருந்து வேறுபடுத்தியது அருள். அந்தப் பாசத்தில் பற்று விட்டவுடன் நேயப்பொருளாகிய சிவத்துடன் பொருந்தும்படி செய்தது அருள். காண்பானும் காட்சிப் பொருளும் கூடிய கூட்டத்தில் காட்சிப் பொருளோடு பிரிப்பின்றி நிலைபெறச் செய்ததும் அருளாகும்.
1803. பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே.
பொருள் : பிறவிக்குக் காரணமாகிய இருளைப் போக்கி, ஒளியினைத் தந்த பெருங் கருணையாளனும், சிவனை இன்பத்தில் ஆழ்த்தி மறக்காத வண்ணம் சத்தியைப் பதிப்பதித்து அருளிய பெரிய பிரானாகிய சிவனும், உதவுவதால் குறையாத தன்மையுடைய கடல் போன்ற - தண்ணளியாளனும் மேலான பொருள்களுக்கு எல்லாம் மேலானவனும் ஆகிய இறைவன், அவனை விரும்பியதால் உறவாக வந்து என்து உள்ளம் புகுந்தான்.
1804. அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே.
பொருள் : சிவபெருமான் திருவருளால் அடியேன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அங்குப் புகுந்தனன். திருவருள் கைவரப் பெறாதார்க்கு அகம் புகுந்தும் அவரால் உணர்வதற்கு அரியன். உள்ளம் புகுந்து கண், எண்ணம், அறிவமைதி எல்லாம் சிவத் தொடர்பாக ஆக்குதலால் எல்லாம் சிவ இன்பமாகவே திகழும் . சிவமாக்கி ஆருயிர்களை ஆளும் முறையால் ஆனந்தி என்னும் பெயர் சிவனுக்கு ஆயிற்று.
1805. ஆயும் அறிவோடு அறியாத மாமாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
ஆய பலஇந் திரியம் அவற்றுடன்
ஆய அருள்ஐந்து மாம்அருட் செய்கையே.
பொருள் : ஆராய்கின்ற அறிவு மயமான ஆன்மாவோடு அறியப்படாத மகா மாயையையும், மாயா காரியமாகிய அந்தக் கரணங்களையும் தோன்றும் ஐம்பூதங்களையும் ஆகின்ற இந்திரியக் கூட்டங்களையும், அவற்றோடு பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி ஆகிய ஐந்து சத்திகளையும் பொருந்தியது இறைவனது திருவருட் செயலாம்.
1806. அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலமே
இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.
பொருள் : அனைத்திற்கும் தாங்கும் நிலைக்களமாய்த் திருவருள் நிற்றலின் பூத காரிய முதல் அனைத்தும் அருளேயாம். இயங்குதிணை நிலைத்திணை ஆகிய எல்லாவற்றின் வாழ்க்கைகளும் அருளாலேயே நிகழ்வனவாகும். இருளும் வெளியுமாகிய அறியாமையும் அறிவும் தொழிற்படத் துணை நிற்பதும் அருளே. அவ் அருளே சிவபெருமானுக்குத் துணைவியாய்த் திருமேனியுமாய் நிற்கும். அதனால் அருள் உருவானவன் சிவன். அருள் அன்றிச் சிவன் இல்லை. (பவுதிகம் பூதகாரியம். சகளத்தன் - மாயையாற் திருமேனி கொண்ட சிவபிரான்.)
1807. சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே.
பொருள் : சிவமாகிய அறிவும், சத்தியாகிய ஆற்றலும், ஒலியும், ஒளியும், அருளோனும், ஆண்டானும், அரன், அரி, அயன் என்னும் மூவரும் ஆகிய ஒன்பதின்மரும் உலகுயிர் நிகழ்ச்சியின்பொருட்டு வேண்டப்படுவர். அவ் ஒன்பது திருக்கோலங்களும் முழுமுதற்சிவன் ஒருவனே திருவருளாற் கொண்டு நடிப்பன்.
1808. அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே.
பொருள் : திருவருட்கண் வாய்க்கப்பெறாதார்க்கு உண்மை அறிவு இன்ப உருவினனாகிய சிவபெருமான் தோன்றான். அரும்பொருள்-சிவன். அருட்கண் உள்ளோர்க்கு ரன் எதிர் தோன்றுவான். கண்குருடாகிய இருட்கண்ணினோர்க்கு யாவர்க்கும் வெளிச்சமாகிய ஞாயிறும் தோன்றாது அஞ்ஞாயிறு குருடு நீங்கித் தெளிந்த கண்ணுடையார்க்குச் செவ்வகையாகத் தோன்றும். அதுபோல் சிவனும் அருட்கண்ணினர்க்குத் தோன்றுவன்.
1809. தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனும் ஆமே.
பொருள் : சிவத்தின் சத்தியே தனுகரண புவன போகங்களைப் படைக்கும். சத்தியே படைத்தவற்றைக் காக்கும். அதுவே காத்தவற்றை அழிக்கும். அழித்தவற்றை ஓய்வு கொடுத்துக் கரந்திடும். அதுவே இவைகளுடன் முத்தியையும் அளிக்கும். அத்தகைய அருளோடு கூடினவனே வியாபகப் பொருளுக்கு எல்லாம் மேலான தலைவனாக உள்ளான். சத்தியோடு கூடிய சிவனே ஐந்தொழிலைச் செய்து தலைவனாக உள்ளான்.
1810. தலையான நான்கும் தனதுஅரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்
துலையா இறைமுற்று மாய்அல்லது ஒன்றே.
பொருள் : மேன்மையான சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய நான்கும் சிவத்துக்குரிய அருவ நிலையாகும். நீங்குதல் இல்லாத அருவுருவம் சதாசிவமாகும். நிலைபெறுவதற்கு உரியவான மகேசுவரம், அரன், அரி, பிரமன் ஆகிய நான்கும் நீடிய உருவ நிலைகளாம். அழியாத இவ் ஒன்பதுமாம் இவற்றைக் கடந்து நின்று இவற்றை இயக்குவதாயும் உள்ள பரசிவம் ஒன்றேயாம்.
1811. ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன
நின்றது தான்விலை யாட்டென்னுள் நேயமே.
பொருள் : ஒப்பற்ற தன்மையால் கேடில்லாத சிவம் தானேயாய் நின்றதுபோல, உயிர்க்கு உயிர்களோடு பொருந்தி அவற்றின் தன்மை யின்றாய் நிற்கும். ஆனால் என்னுள்ளத்தே நேயப் பொருளாய சிவம் துணையென்று கூறும் வண்ணம் உடன்நின்று செலுத்தியதுதான் விளையாட்டாகும்.
1812. நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆயக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.
பொருள் : அன்பினால் நிலைபெற்றுள்ள நின்மல சிவன் சித்தியோடு கூடி அதனைத் தொழிற்படுத்தவே சுத்தமாயையினின்றும் நாதம் தோன்றி, விரிந்து நிவிருத்தியாதி பஞ்சகலைகளாகக் கூடி அழிவில்லாத விந்துவாக விளையும்.
1813. விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.
பொருள் : அனைத்துமாய்ப் பரவிந்து வடிவில் நிலைத்திருக்கும் சத்தியே எல்லாத் தத்துவங்களிலும் நிறைந்துள்ளான். அவனிடமிருந்தே அசுத்த மாயையும் மேலான சுத்த மாயையும் விளையும் இவ்விரு வகையான மாயையில் தேவக்கூட்டமும், விதந்து சொல்லப்பட்ட பிரணவமும் அதன் பேதமான மந்திரங்களும் நான்கு வேதங்களும் அளவற்ற அண்ட கோடிகளும் தோன்றும். பரவிந்துவிலிருந்து சொற்பிரபஞ்சம் பொருட் பிரபஞ்சம் முதலியவை ஆகின்றன.
10. அருள் ஒளி
1814. அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே.
பொருள் : திருவருளே துணையென்றும் உணர்ந்து அதன் வழிநின்று தன் செயல் அறாதவர் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார். அவர் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரேதாயி ஆகிய ஐம்மலங்களையும் நீங்க மாட்டார். அருளின் பெருமையை அறியாதவர் அதனுள் அழுந்தமாட்டார். திருவருளால் தோன்றி அருளே கண்ணாக அறிபவரே அறிந்தவராவர்.
1815. வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.
பொருள் : மீண்டும் பிறவிக்கு வாராத நெறியினை அருளிய குருநாதன் சிவனாவான். அந்நந்தியாகிய சிவபெருமான் இன்பம் தெவிட்டாத அமுதத்தை நல்கினான். ஆயிரம் திருநாமங்களையுடைய பெருமானது பெயர் ஒன்றாகிய சிவ என்பதால் இன்பம் தெவிட்டாத திருவருட்கடலில் தோய்ந்து ஆடுக என்றனன். (ஆராஅமுது - சிவானந்தம் பேரொன்று - சிவ என்பது.)
1816. ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே.
பொருள் : ஆனந்தத்தினால் ஆடியும் பாடியும் கண்ணீர் மல்கியும் அலறியும், சிவனது பேரியல்பினைத் தேடிக் கண்டு கொண்டேன். கண்டு பொருந்திய போதே உருவமற்ற ஒளியை நல்கி அவன்தன் அருளால் என்னூடு மேல் கீழ் உள் என்ற பாகுபாடு அற்று விளங்கினான்.
1817. உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
பற்றிய மாயாப் படலம் எனப்பண்ணி
அத்தனை நீயென்று அடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.
பொருள் : ஆணவ மலத்தால் உண்டான பிறப்பும், பிறப்பால் உற்ற மாயா காரியங்களும், இடையே வந்து பற்றிய பொய்க் கூட்டம் என்று உணர்த்தி, நீ இவற்றை நீங்கினாய் என்று திருவடி ஞானம் தந்தருளினான் குருநாதன். அதனால் இதுகாறும் கற்றவை விட்டேன். அவனருளால் கிட்டிய நாதத்தை நான் பணிந்து அதன் வழி நின்றேன். குருநாதன் அருளால் பாசஞானம் நீங்கிப் பதிஞானம் அமையும்.
1818. விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குமடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
பொருள் : ஞானவிளக்கை ஏற்றி, எல்லையில்லாப் பரம்பொருளை அறியுங்கள். பரம்பொருளின் திருமுன் மல மாயா கன்மங்களாலாகிய உடம்பின் துன்பம் நீங்கும். பேரொளியை வெளிப்படுத்தும் ஒளி உடையார்கள் சிவ ஒளியும் தன் ஒளியும் கலந்து விளங்குவார்கள்.
1819. ஒளியும் இருளும் ஒருகாலும் தீர
ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியிருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்கும் உயிர்சிவம் ஆமே.
பொருள் : ஒளியும் இருளும் எந்தக் காலத்திலும் கெடஒளியில் கலந்திருப்பவர்க்கு அல்லவா அருள் ஒளியும் நீங்காது ! புறக்கண் எதையும் இருளில் அறியாது ஒளியில் அறிவதுபோல, புறக்கண்ணுக்கு வேறான அகக்கண் விளங்கும் அண்டகோச அறிவில் இருள் அகன்று உயிர் ஒளி பெறில் சிவமாம்.
1820. புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த
திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே.
பொருள் : ஆணவத்தால் புறஉலகில் திரிந்து கொண்டிருந்த எனக்கு உன்னுடைய பொன் ஒளியில் விளங்கும் நாதத்தை அளித்து, எனது அண்டகோச ஒளியில் புகுந்து என்னை மலம் அற்றவனாகச் செய்து, என்னுடைய அறவாழ்வில் புகுந்து எனக்குக் கிட்டுதற்கு அரிய அமுதைக் கொடுத்த திறம் என்ன என்று எண்ணி மயங்கியிருந்தேன். (பொற்கழல் - புத்தி தத்துவத்தில் விளங்கும் நாதம்)
1821. அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே.
பொருள் : அருள் என்ற பரவெளி ஒன்றும், மெய்ப்பொருள் என்ற புகுமிடம் ஒன்றும் வேறு என்ற மயக்கம் நீங்க, மனத்துள் புகுந்த பேரொளியைச் சிவமெனத் தெளியுங்கள். பின்னர்ச் சிவகதி உண்டாகும். சிவசத்தி உண்மை உணர்ந்தபோது சிவகதி உண்டாம்.
1822. கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்
தேறுஅணி வோம்இது செப்பவல் லீரே.
பொருள் : சிவம் இவ்வுலகில் பிறந்து இறந்த கதை இருந்தால் சொல்லுங்கள். செத்துப் பிறக்கின்ற பிற தெய்வங்களை மெய்ப்பொருள் என்று கருதுவதை விட்டுவிடுங்கள். பருந்து வட்டமிடும் உடலை வீழச்செய்து அருமையான உயிர் தெளிவடையச் செய்வோம். இவ்வுண்மையைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுங்கள்.
11. சிவபூசை
1823. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.
பொருள் : உள்ளமாகிய மனமண்டலம் சிவன் உறையும் கருவறையாகும். ஊனாலாகிய உடம்பு ஆன்மாவின் ஆற்றலைக் குறைத்து வைத்துள்ள இடமாகும். வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். நன்றாக அறிந்து தெளிவு பெற்றவர்க்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவார்க்கு வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் பெரிய ஒளிபொருந்திய விளக்காகும்.
1824. வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.
பொருள் : வேள்வியில் இடப்பட்ட நிவேதனத்தை ஏற்கின்ற விரிந்த கிரணத்தையுடைய சிவபெருமானுக்கு, நிவேதிக்கத் தக்க பொருள் நம்மிடம் இல்லை. காலையிலும் மாலையிலும் நிவேதிக்கும் பொருளாவன, மனத்தை மகிழச் செய்யும் பாடலாகிய உணவாம். அதனை நிவேதிப்போம். அதுவே அவர்க்குப் பால் நிவேதனமாம்.
1825. பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே.
பொருள் : பால்போன்ற இனிய மொழியையுடைய பராசத்தியின் பாகனாகிய பராபரனாகும் ஐம்முகமான சதாசிவ மூர்த்தியைச் சிரசில் நிலைபெறுத்தி, உச்சிமுகத்தை ஈசான முகமாகச் சுழுமுனையில் தியானித்து, சீலமான  முகத்தைச் செய்ய சிவமாவர்.
1826. நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.
பொருள் : சிவத்தை நினைத்துக் கொண்டிருப்பதும் சிவத்தைப் பற்றிப் பிறர்க்கு எடுத்துரைப்பதுமாகிய இருவழிகள் அல்லாமல் நாத சொரூபமான சிவத்தைக் கண்டு களிக்க வல்லவர் நீரினை முகமாகவுடைய சுவாதிட்டானத்தில் விளங்கும் மூலவாயுவை எழுப்பிச் சிவத்தைப் பரிச யோகத்தால் அடையத் தக்கவராவர்.
1827. மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே.
பொருள் : அபிஷேகத்திலும் அலங்காரத்திலும் விளங்கிய தேவர்களது நெஞ்சத்தில் இறைவன் இடைவிடாது வீற்றிருப்பதற்குக் காரணம், பஞ்ச கவ்வியமும் சோடச உபசாரத்துடன் நமஸ்கார முத்திரையுடன் பக்தர்களோடு கலந்து வழிபட்டமையாலாம்.
1828. புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.
பொருள் : சிவபூசையாகிய புண்ணியம் செய்வார்க்குப் பொருந்தும் நீரும் பூவும் உண்டு. அண்ணலாகிய சிவம் அவ்வித பூசனை செய்வார்க்கு அருள் வழங்கி நிற்கும். கணக்கற்ற பாவிகள் எமது தலைவனாகிய சிவத்தைப் பொருந்த அறியாமல் வீணே கழிகின்றனர்.
1829. அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே.
பொருள் : சிவனது ஒன்பது தீர்த்தத்திலும் ஆடித் திளைக்கும் பரிசினைக் கேட்பாயாக. அவ்வாறு பொருந்தி உண்மை ஞானம் பெற்று உயர்ந்தோர் திருவடியைத் தூய்மையாகக் கழுவித் தெளித்துக் கொள்ள வீடு பேறு கிட்டும் என்று நம் மூலன் மொழிந்ததாம்.
1830. மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.
பொருள் : தேவர் பெருமானே ! அபுத்தி பூர்வமாக ஞானிகளின் உறவு கிட்டினாலும், சிறப்பான பூவையும் நீரையும் நான் திருந்தும்படி வெளிப்படுத்தி, மறவாமல் உன்னை வழிபடுகின்ற தன்மையை, மிகுதியாகப் பெறுவதற்கு அருள்புரிவாயாக, சிவனை மறவாது வழிபட வேண்டும்.
1831. ஆரா தனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே.
பொருள் : ஆயிரம் திருநாமங்களையும் சிவனது சிறப்புத் திருநாமமாகிய சிவசிவ என்பவற்றையும் தியானிக்கும் வகையால் எம் ஆதிப்பிரான் விளங்குவான். அப்போது வழிபாடுகளும் தேவர் கூட்டமும், அலை ஓயாத கடலும் நீங்கள் வாழ்கின்ற நிலத்தில் உங்கள் ஏவல்வழி நிற்கும்.
1832. ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பார்ஐங் குணமும் படைத்துநின் றானே.
பொருள் : அமரர் கூட்டங்கள் பால், தயிர், வெண்ணெய், நெய்மோர் என வரும் ஆன் ஐந்தும் சிவபெருமான் திருமுடிக்கு ஆட்டித் தொழுவர். அங்ஙனம் ஆட்டுவதும் என்றும் அழிவில்லாது நின்று நிலவும் சிவபெருமான் திருவருளேயாம். தேன் ஒழுகும் மலரினுள் மணநிறைவு தெளிந்ததொரு பொருளாவதுபோல, சிவபெருமானும் ஐம்பூதப் பண்பாகவும் கலப்பால் விளங்குவன். பூதப்பண்புவருமாறு நாற்றம், சுவை, ஒளி, ஓசை என்பன. (தேநீர், கோமம் ஏற்புடையனவாகா.)
1833. உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.
பொருள் : நன்னிலத்தில் காணப்படும் பூவும் புனலும் கைக் கொண்டு மழை மேகத்தின் மேற்கொண்டு பெருகிய அன்புடன் கைதொழுது வணங்க, தவறுதல் இன்றிச் சிவபெருமான் திருவருள் கைகூடும் என்க. (உழை - பூமி. தழைக்கொண்ட - சுற்றியுள்ள - பிழைப்பின்றி - தவறாமல்.)
1834. வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே.
பொருள் : திருச்சடையின்கண் கடல்போலும் வெள்ள நீரைத் தாங்கும் நந்தியாகிய சிவபெருமான் திருவடிக்கு நிறைந்த கடல்போலும் அன்புள்ள நெஞ்சத்துடன் பூ முதலியன சுமந்துகொண்டு வந்து கடல் போலும் கள்ளங் கவடுகளை அகற்றி வழிபடும் சிவப்புண்ணியப் பேறிலாதார் துன்பக் கடலுள் அழுந்துவர்.
1835. கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்வழி வீழ
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே.
பொருள் : உப்பங்கழியைச் சாரும் கடல் ஒலியினையும் அடக்கி மீதெழும் திருமுறைத் திருப்பாட்டு முழக்கங்களோடு மெய்யடியார்கள் மலர் கொண்டு வழிபடுவர். வழிபாட்டிற்குத் தகுதியில்லாத மொட்டனைய பொருள்களை விலக்கி விடுவர். அறியாமையினால் சிவனை மறந்து தீநெறிக்கண் செல்லும் தீராப்பழி தீரும் வண்ணம் நல்லார் இணக்கத்தால் வழிபடுவோரின் உச்சியின்மேல் பொருந்தி வெளிப்பட்டு அருள்புரிவன்.
1836. பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.
பொருள் : பயன் தரக்கூடிய அறிவு ஒன்றும் உள்ளது. பயனை அறிந்தும் பலகாலும் மலரைத் தூவி வழிபட்டவர்க்கு, சிவன் தானே வரவினைச் சொல்லும். கண்கள் மூன்றுடைய சிவனது திருவடியைச்  சார்தலும், அதுவே வழியாக  எப்போதும் வெளிப்பட்டு  நின்றான்.
1837. ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே.
பொருள் : இறைவனாகிய சிவபெருமான் திருவடியைப் பன்மலர் தூவித் திருமுறை ஓதிப் பேரன்பின் பெரு முழக்குடன் வழிபடுவர். அத்தகைய இன்பத் திருவுருவினை, அழிதல் இல்லாத வினைமுதற்காரணனை, ஆருயிர்களின் மலப் பிணிப்பினின்று தீர்த்தருளி அவ்வுயிர்களை ஆட் கொள்ளும் தூயோனை நன்னெறிப் புகாதார் யாரும் வழி பட்டுனரார்.
1838. தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.
பொருள் : தேவர்களோடு கலந்து, பிருதிவி தத்துவத்தில் பொருந்திய சுவாதிட்டான மலரிலிருந்து ஆகாய கங்கையாக மேல் எழும் உணர்வில் வெளிப்படும் பரிசுத்த மூர்த்தியை பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்ற மூவரோடு கலந்தும் வேறாயும் விளங்கும் முதல்வனும் ஆகிய சிவன் அருளும் முறையினை யார் அறிந்து எண்ண வல்லவர்கள் ?
1839. உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.
பொருள் : முதல்வனø நினைக்க வல்லோர் சுவாதிட்டான மலரிலிருந்து சுழுமுனை வழியாக மேல்நோக்கிப் பாயும் உணர்வாகிய நீரை ஏந்தி, தவறின்றி இறைவனது பெரிய தவத்தை விரும்பி, இரு கண் மலர்களைச் சேர்த்தலால் தோன்றும் திருவடியைப்பற்றி மழையைப் பொழியும் மேகம் போன்ற ஒளியில் பொருந்தி நில்லுங்கள்.
1840. வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறிய அன்றே.
பொருள் : ஐம்புலன்களையும் வென்று, நறும்புகையும் நெய்யொளியும் காட்டும் சிவப்பணியினைச் செய்யும் தொண்டர்கள் நேர் நின்று அன்பார் மனம் பொருந்த இறைபணி கைகூட நிறைந்த பூவும் புனலும் தூவித் திருமுறை வழிப்போற்றித் தொடர் புகன்று தொடுமின். இவ்வாறே நாள்தோறும் வழிபாடு செய்வீராக.
1841. சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றகால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.
பொருள் : ஆடை, அணிகலன், வெண்ணீறு, சாந்து, பூ, முதலியன சாத்தியும் திருவுறு முதலியன அமைத்து நிலை நாட்டியும், இயற்கைத் தனிப் பெருங்கடவுள் என்று ஏத்தியும், அங்ஙனமே நாளும் தொடர்ந்து தொழுதும் சிவனை அவனருளால் உணர்கிலார் பலர். ஆத்தியாகிய ஆசைகளை ஒழித்து அதன்வழியாக மல அழுக்கு அற்ற இடத்துப் பெரிய வீடுபேற்றிற்குச் செல்லும் வழியுண்டாகும். அதுவே சிவ வழிபாட்டுப் புண்ணியப் பேறென்க. (மாதிக்கு - பெரிய விடுபேறு. ஆத்தி - ஆர்த்தி என்பதன் திரிபு).
1842. ஆவிக்  கமலத்தில் அப்புறத்து இன்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே.
பொருள் : ஆன்மாவின் கமலமாகிய சகஸ்ர தளத்தின் மேலாக இன்பம் உண்டாகுமாறு பொருந்திய, எங்கும் விளங்கும் விரிந்த ஒளிக்கிரணத்தையுடைய நந்தியை மந்திர சாதனை செய்து கொண்டு சிவம் விளங்கும் நாதாந்தத்தில் பொருந்தும் மந்திரம் உலகினர் அறியார்.
1843. காண்ஆகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.
பொருள் : சாண் அளவு உடம்பினுள்ளே மறைந்து கிடந்த மாணிக்கத்தைக் காணும் அளவு அதன் உண்மை யியல்பை அறிவார் இல்லை. அதனைப் போற்றி வளர்த்து நினைய வல்லார்க்கு மாணிக்கச் சோதியாக மனத்தே புகுந்து விளங்குவான். எண்சாண் அளவு உடம்பு என்க.
1844. பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.
பொருள் : பெருந்தன்மை யுடைய நந்தியும் மாறுபாட்டைச் செய்யும் இருளைப் போக்கும் சக்கரப் படையை உடையவனும் பேரருளால் என் மனத்தை இடமாகக் கொண்டு எழுந்த தருளியவனும் வேண்டுவார்க்கு வேண்டியதை அருளும் தன்மை உடையவனும் ஆகிய சிவனை, ஆகாய மண்டல வாசிகளாகிய தேவர்கள் தாங்கி நின்றார்கள்.
1845. சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே.
பொருள் : சமைய தீட்சையால் மாயா மலத்தானாகிய சரீரசுத்தி எய்தத் தன் செயல் அற்றிடும். விசேஷ தீட்சையால் மந்திர சுத்தி உண்டாகும். சமையத்தில் சிறந்த நிர்வாண தீட்சையால் கலா சுத்தியாகும். அமைதி பொருந்திய சிவஞானம் உடையார்க்குச் செய்வது ஆச்சர்ய ஆபிஷேகமாம்.
1846. ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே.
பொருள் : ஊழிதோ றூழி பலவரினும் என்றும் ஒருபடித்தாய் நின்று நிலவும் முழுமுதற் சிவனை, அவன் அருட்கண்ணால் உணர்ந்தவர்க்கு அல்லாமல் பல ஊழி கண்டாலும் தம் அறிவால் அச் சிவனைக் காண முடியாது. சக்கரப் படையைத் தாங்கும் அரியும் அயனும் பல ஊழி முயன்றும் காண ஒண்ணாது நீங்கி மறைந்து நின்றனன். (ஒருவி - நீங்கி)
12. குரு பூசை
(குரு மண்டல பூசை குரு பூசை எனக் கூறப்பட்டது. சதாசிவ லிங்க வழிபாட்டில்  சதாசிவரை லிங்க வடிவில் கிரியை வழி பூசையை விளக்கினார். சிவ பூசை தலைப்பில் சதாசிவரை அருவமாக ஈசான முகத்தில் வழிபடுவதை விளக்கினார். இத்தலைப்பு ஒளி வடிவில் எங்கும் உள்ள சிவத்தை வழிபடும் முறை கூறுகின்றது.  ஒன்பதாம் தந்திரம் அற்புதக் கூத்து இதன் தொடர்பாகும்.)
1847. ஆகின்ற நந்தி அடித்தா மரைப்பற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.
பொருள் : கலப்பால் எல்லாமாய் நிற்கும் திருவாணை நந்தியின் திருவடிக் தாமரையினைப் பற்றுக் கோடாகக் கொண்டு, ஆருயிர் திருவடிப் பேற்றினை எய்துதற்கு உரிய அருமறையாகிய உபதேசம் திருஐந்து எழுத்தாகும். அதனை அருளால் அருளிச் செய்பவன் சிவகுரு ஆவான். அவனைப் பூசிக்கும் பூசை குரு பூசையாகும். அப்பூசையினையும் அகத்தே ஆறுநிலைக் களங்களில் செய்யும் வழிபாட்டினையும் அருஞ்சைவர் மெய்யாகப் பெறப்படும் முப்பத்தாறு தத்துவங்களுக்குமேல் செல்லுகின்ற மாறா அழகினையுடைய விழுமிய முழுமுதற் சிவனையும் இடையறாது அடியேன் வழிபடுவேன்.
1848. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.
பொருள் : மண்ணும் விண்ணும் ஆகிய எங்கணும் நறுமணம் கமழும் சந்தனமும், அத்தகைய சிறந்த மணம் கமழும் நறுமலரும் கைக்கொண்டு நாளும் வழிபட்டாலும், தம்மை அடிமை என்று கொண்டு கொல்லாமலும் கொன்றதைத் தின்னாமலும் இருப்பதாகிய செந்நெறி யொழுகிச் சிவனை நினைப்பதாகிய சத்திநிபாதம் கிட்டாது. சத்தி - திருவருள்; நிபாதம் - நன்றாய்ப் பதிதல்; வீழ்ச்சி.
1849. மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.
பொருள் : பொருந்திய ஞானத்தில் சிறந்திருந்தால் மெய்ப்பொருள் காட்சியாம். அவ்வழி ஞானத்தில் பொருந்தி நிற்றலே அர்ச்சனை. இடையறாது அகத்தே வழிபாடு செய்யின் அதுவே சிறந்த வழிபாடு ஆகும். அவ்வாறு திருவடி அடைதலே தன் செயலற்று இருத்தலாகும்.
1850. உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.
பொருள் : காலை, நண்பகல், மாலையாகிய மூன்று வேளைகளிலும் இறைவனை விரும்புங்கள். விரும்பி நமசிவாய என்ற அவனது திரு நாமமாகிய விதையினைத் தெளியுங்கள். அந்த விதை அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மும்மண்டலத்திலும் விளைந்து பயிராவதை விரும்பி நில்லுங்கள். இவ்வாறு வளர்ந்ததே நந்தி என்ற பெயரையுடைய தலைவனாகும்.
1851. புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்
பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே.
பொருள் : சிவத்தலங்களில் சிவபூசை செய்தல் நூறு மடங்கு உயர்ந்த தாகும். தவம் பண்ணுவார் சந்நிதியில் சிவபூசை செய்தல் ஆயிர மடங்கு உயர்ந்ததாம். இனி எவற்றிலும் எண்ணமில்லாத சிவயோகிக்குப் பிச்சையிடில் கோடி மடங்கு உயர்ந்ததாகும். ஆனால் சிவஞானிக்கு உணவளித்து உண்ணுவதைப் பார்த்தால் அது மிகவும் விசேடமாகும்.
1852. இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.
பொருள் : இடமூக்கு வலமூக்குகளில் உயிர்ப்பு நடக்குங்கால் சிவவழிபாடு செய்யின் அதன் பயன் அசுரர்க்கு வாரியமாகிய பயனாகும். இவை இரண்டின் வழியின்றி நடுநாடிக்கண் உயிர்ப்பு அடங்கியுள்ள ஒருமையுடன் சிவ வழிபாடு செய்யின், அதன் பெரும் பயன் பூசை செய்யும் சிவபுண்ணியர்க்கேயாம். இப்பூசையே செப்பரும் பூசையாகும். (இந்து - இடகலை. பானு - பிங்கலை.)
1853. இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.
பொருள் : திங்களும் ஞாயிறும் அதன்வழித்தாம் விந்துவும் நாதமும் திகழ்கின்ற ஆறு நிலைக் களங்களுக்கும் அப்பாற்பட்ட மேலிடத்தே நாட்டத்தினை நிறுத்தி, நனவில் உயிர்ப்பு அடங்கினார் ஒத்து சிவனிறைவில் ஒடுங்கிச் சிவபெருமானை வழிபடும் சிவபூசையே திருவடி சேர்க்கும் நற்பூசையாகும். (சாக்கிராதீபம் - அறிதுயில். சாக்கிரமும் சொப்பனமும் அல்லாத நடுநிலைமை.)
1854. மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல்பூத மாக்கி அகற்றிப்
புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே.
பொருள் : மனம் பிராணன் ஆகியவற்றை மூலவாயு மேல் செல்வதால் மாற்றி, அநித்தியமான உடலை அவற்றின் காரணமான பூதங்களிலும், பூதங்களை அவற்றின் காரணமான தன் மாத்திரையிலும் ஒடுக்கி, சிவனருளில் தோய்ந்திருந்து, இன்ப நுகர்ச்சியோடு செய்யப் பெறும் தனிப்பூசையே சதாசிவமூர்த்திக்கு உரியதாம்.
1855. பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.
பொருள் : சூரியகலை சந்திரகலை இயங்கும்போது செய்கின்ற பூசையானது, இயல்பாகவுள்ள ஈசனுக்கு இணைந்த மலராக மட்டும் அமைய, சூரிய சந்திர கலைகள் இயங்காமல் அக்கினிகலையில் (சுழுமுனையில்) இயங்கும்போது செய்யும் பூசையைத் தாழ்ந்த ஒளிக் கிரணங்களையுடைய ஈசன் முழுவதும் விரும்பி ஏற்றுக் கொள்வான்.
1856. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே.
பொருள் : முன்னே கூறியவாறு இரவுபகல் என்ற பேதமற்று சாக்கிராதீத்தே நின்று, வேறு எண்ணமற்றுச் சிவானந்தத் தேனைப் பருகி, இரவும் பகலும் இல்லாத திருவடியின்பத்தில் திளைத்து இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை சுத்தமாயை இரண்டையும் அகற்றி நின்றேன்.
13. மகேசுவர பூசை
1857. படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே.
பொருள் : சித்திரம் போன்று அமைந்த மாடங்களையுடைய கோயிலில் உள்ள இறைவனுக்கு ஏதேனும் நைவேத்தியம் செய்தால் நடக்கின்ற மாடக்கோயிலாக விளங்கும் சிவனடியார்க்கு வந்து அமையா. ஆனால் நடமாடும் கோயிலாகவுள்ள சிவனடியார்க்கு ஏதேனும் கொடுத்தால் அது மாடக் கோயிலில் உள்ள இறைவனுக்குத் திருப்தி அளிப்பதாகும். அதாவது அடியார்க்குச் செய்யும் பூசை இறைவனுக்குச் செய்யும் பூசையாகும்.
1858. தண்டுஅறு சிந்தை தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று
எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.
பொருள் : தீமையில்லாத சிந்தையுடைய தவத்தினையுடைய செல்வர்கள் தாம் மகிழ்ச்சியோடு உண்டது மூன்று புவனங்களும் முழுமையும் உண்டதாகும். அவர்கள் ஏற்றுக் கொண்டது மூன்று புவனங்களும் ஏற்றுக் கொண்டதாம் என்று எட்டுத் திசைகளுக்கும் தலைவனாகிய நந்தி எடுத்துக் கூறினான். உண்டது உணவு, கொண்டது ஆடை என்றுள்ள வேறுபாட்டை அறிக.
1859. மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.
பொருள் : ஒரு மாத்திரையாகிய அகரத்தில் பொருந்தி உறைகின்ற யோகிக்குக் கொடுத்த அருமையான பொருள் மும்மூர்த்திகளுக்கும் மூவேழு தலைமுறையினர்க்கும் அர்ப்பணித்ததாகும். அதனைத் தெளிந்து கொள்வீராக.
1860. அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில்தன்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே.
பொருள் : ஆயிரம் நகரம் அந்தணர்க்கு அளித்தால் ஆகும் பயன் என்ன ? ஆயிரம் கோயில்கள் கட்டி முடித்தலால் என்ன பயன் ? சொல்லப் பெறுகின்ற ஞானி ஒரு பகல் உண்ணும் உணவால் விளையும் பயனுக்கு ஒப்பாகாது என்பது உண்மை. (அகரம்-ஊர்; பார்ப்பனச் சேரி.)
1861. ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.
பொருள் : ஆற்றுப் படுத்தும் வேள்வியினைச் செய்யும் அருமறை நூல்வல்லார் என்று கூறப்பெறும் அந்தணர் கோடிபேர் உண்பதில் திருநீற்றினை நிறையப் பூசும் தொண்டர் ஒருவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்று நினைவதில் உள்ள பயன் இல்லை. அவ்வாறு அந்தணர்க்கு அளிப்பது பேறு என்றால் அது ஒரு சிறு அளவு பேறாகும். வேள்வியினைப் புரியும் அந்தணர்க்கு அளிப்பதைவிட நீற்றினைப் பூசும் தொண்டர்க்கு அளிப்பது மேலானது.
1862. ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.
பொருள் : திருஐந்தெழுத்து ஓதித் திருநீறு அணியுங்கள் ஏறுடையாய் எனவும், இறைவா எனவும், எம்பிரான் எனவும் உள்ளன்பால் ஓதுவர். அவ்வாறு ஓதித் திருவெண்ணீறு அணியும் மெய்யடியார்கள் இயங்கும் தேவர்கள் ஆவர். அம்மெய்யடியார்களை ஒருவர் ஆறணி செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமான் இவர்களே என்று நினைதல் வேண்டும். அங்ஙனம் நினைந்து அம் மெய்யடியார்களைச் சிறப்பாக வழிபடுபவர்கட்கு முத்திற வினைகளும் மூளா என்க. முத்திரை வினைகளாவன: சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்பனவாம்.
1863. சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்
பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே.
பொருள் : சிறந்த ஒளிமண்டல நினைவைக் கொண்டு தன் சந்நிதியில் இட்டுச் சென்ற பெரிய நந்தி என்று பேசப் பெயறும் ஒளிக்கிரணங்கள் விளங்கும் சடாதாரியை நான் மிகவும் நைந்துருகித் தோன்றும் அளவு கூறுவதற்காக நந்தியாகிய சிவனது நாமத்தைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருப்பேன்.
1864. அழிகதவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தாங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழு வையகத்து ஓர்இன்பம் ஆமே.
பொருள் : அழியும் தன்மையில்லாத அருட்பண்புகளை மேற்கொண்டொழுகும் சிவனடியாரை இவ்வையத்துள்ள மெய்யடியார் கண்ணிற் காணும் சிவன் எனக் காதலால் தொழுவர். அதனால் அவர்கள்பால் பண்டே புல்லிய மலஇருள் நீங்கும். தொழாத நாள் இல்லையென்று சொல்லும்படி அம்மெய்யடியார்களைச் சிவன் எனவே நாடித் தொழுது எழ ஒப்பில்லாத சிவப் பேரின்பம் பின்னை என்னாமல் அப்பொழுதே உண்டாம்.
1865. பகவற்குஏ தாகிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தாரே.
பொருள் : அம்மைக்கு ஒரு கூறு பகுத்து அளித்ததனால் அப்பனாகிய சிவபெருமான் பகவன் என்று அழைக்கப்பட்டான். அவனை உணர்தற்கு வேண்டும் உலகியல் பண்புகள் ஏதும் இலராகிலும் மெய்யடியார்கள் மாட்டுப் பூண்டுள்ள அளவிறந்த அன்பாகிய மத்தராய் நின்று பூசனைக்கு வேண்டிய முகமனாகிய சிறப்புடன் வழிபாடு செய்வர். அவ்வழிபாட்டின் பயனாய் ஊழி ஊழியாக நின்று உள்ளத்தை அதற்கே ஈந்தவராய் வேறு ஆராய்வு எதுவுமின்றி அடங்கி நிற்பர்.
1866. வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடில்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
பொருள் : திருத்தமாகிய வேடத்தையுடைய மகேசுவரர் அருந்திய உணவு, உருத்திரன் பிரமன் திருமால் ஆகிய மூவரும் அருந்திய பெருமையுடையதாம். சித்தம் தெளிந்தவர் மிச்சத்தை உண்டால் முத்தி உண்டாகும் என்று நம்மூலன் மொழிந்த உண்மையாகும். இது திருமூலர் ஆணை மொழியாகும்.
1867. தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுலகு ஆமே.
பொருள் : சிவனடியார் வழிபாட்டின் அன்பில் ஒருசிறிதும் குறைபாடு இலராய், மேலும் மேலும் சிவத்தைப் பேணும் இறப்பில் தவத்தால் ஆழச்செய்யும் ஏறுவினை அகன்று ஒழிய மெய்யடியார் திருவடியினை வழிபட்டு மண்ணில் பிறந்தார் எய்த வேண்டிய பெரும்பயனை எய்துவர். மேலும் அந்த ஏறுவினை நீங்கினமை போன்று அருவினையாகிய எஞ்சுவினையுடன் போழ்வினையாகிய ஏன்றவினையும் அருளால் தாக்காது நீக்குவர். அவர்கள் வாழும் இடமே சிவவுலகு ஆகும். (ஆழ்வினை - ஆகாமியம்; அருவினை சஞ்சிதம்; போழ்வினை - பிராப்தம்)
14. அடியார் பெருமை
1868. திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.
பொருள் : திசைகளை உரிமையாகக் கொண்ட ஒரு பரம்பொருளை நாடுகின்ற தன்மையுடைய அடியார் நீங்காது இருப்பின் அந் நாட்டில் பகை செய்வதற்கு ஒருவரும் இல்லையாகும். அந் நாட்டில் பருவ மழை முøறாகப் பெய்யும். அந்நாட்டில் விளையும் பொருளின் விலை தரமாய் இருக்குமாம். அடியார் வாழும் நாடு வளமாக இருக்கும்.
1869. அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுலக கத்தே அரனடி கூடுவர்
அவ்வுலக கத்தே அருள்பெறு வாரே.
பொருள் : மெய்யடியார்கள் சிவவுலகத்தே தோன்றுவர். அச்சிவ உலகத்துக்குரிய தூயவுடலுடன் இருப்பர். அவ்வுலகத் தின்கண் சிவனை வழிபடும் அருந்தவம் ஆற்றுவர். அச்சிவவுலகத்தே நின்று இறையருள் நேர்படின் சிவன்திருவடியைக் கூடுவர். அச் சிவவுலகத்திலேயே திருவருள் இன்பத்தினை எய்துவர். (அவ்வுலகம் - சிவவுலகம்)
1870. கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்
உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே.
பொருள் : நாம் மேற்கொண்ட ஒளிமண்டலத்தில் எட்டுக் குலமலைகளின் உச்சியும், கீழ் உலகிலுள்ள நாகர்களும் அண்டங்களில் வாழும் தேவர்களும் ஆதிப்பரம் பொருளும் எட்டுத் திசைகளிலுள்ள அனைவரும் வந்து என் கையகத்தில் உள்ளார்கள் என்றால் நாம் இனி உய்தி பெற்றோம்.
1871. அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரமும் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே.
பொருள் : ஏழு உலகங்களும் எல்லையற்ற ஆகாயமும் உயிர்களும் உலகிலுள்ள நிற்பன அசைவனாகிய யாவும் அவற்றின் குண விசேடங்களும் பழமையான வேதங்களும், படைத்தல், காத்தல் முதலான தொழில்களும் அவை முறையாக நடக்கும்படி காணுகின்ற சிவனும் என்னிடம் அன்றி இல்லையாம்.
1872. பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
பொருள் : பெண், ஆண், பேடு என்ற பாகுபாடு உடையது அல்ல. அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உள்நின்ற சோதியை ஒருவராலும் அறிய இயலாது. அது கண் ஆகிய கருவியின்றிப் பார்க்கும். காதாகிய கருவியின்றிக் கேட்கும். சோதிக்குள் சோதியாய் விளங்கும் இறைவன் பெருமையை ஆராய்ந்து அறிந்ததே மூத்த ஞானமாம். (அன்பர்கள் - அகண்ட அறிவுடையவர்.)
1873. இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே.
பொருள் : ஓவாது சுழலும் இவ்வுலகினில் சிவபெருமானின் திருவடியுணர்வு கைவரப் பெற்ற சிவனடியார்கள் செந்நெறியிற் செல்வர்; சிவ உலகை ஆள்வர். அச் சிவபெருமான் திருத்தோள்கள் புலம் எட்டிலும் நலம்புரிய எட்டாயின. போதாகிய அவன் திருவடித் தாமரை பாதாளம் ஏழினுக்கும் அப்பால் - திருமுடிவெளியில் நிகழும் புற அண்டங்களுக்கும் அப்பாலாம்.
1874. அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே
பொருள் : உள்ளத்தில் விளங்கும் சிவனை எண்ணி மனம் அடங்கப் பெற்றவர் துன்பத்தில் தோயார். ஆதலின் அகங்காரம் அடங்கப் பெற்று உள்புகுந்து இறைவனை அறிகின்ற உள்ளம், தன் முனைப்பு அடங்கப் பெற்று புரி அடக்கமாகிய சூக்கும உடலை அழித்தலும் கூடும்.
1875. கழிவும் முதலும் காதல் துணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே.
பொருள் : சொல்லுக்கு அடங்காத பெருமையும் எல்லையில்லாத முதன்மையும், தன்னின் நீங்காத திருவருள் அம்மையாம் காதல் துணையும் பேரொடுக்கப் பெருமானுமாய் நின்ற காரணக் கடவுளை வழிபடுதலும் பெருள்சேர் புகழ் கூறுதலும் அவன் அருள் தொழில் ஐந்தின் பொருண்மை மொழிதலும் பணியாகக் கொண்ட அடியேன் உயிரை உழவு நிலமாகக் கொண்டு ஆண்டவன் இயக்குகின்றனன்.
1876. என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே.
பொருள் : என் தாயோடு என் அப்பன் ஏழேழ் பிறப்பும் அநாதியே சிவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்த அடிமை ஓலையை ஒன்றாக நின்று உலகம் அனைத்தையும் படைத்த முதல்வன் எழுதினான். மேகவண்ணனாகிய திருமால் சாட்சிக் கையெழுத்திட்டான். (நேரெழுத்து - சான்றெழுத்து. சுந்தரர் வரலாற்றை ஒப்பிட்டுக்கொள்க.)
1877. துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்ட ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.
பொருள் : இறைவன் ஐயமின்றித் தன்னையே நம்முதல் என்று துணிந்து வழிபட்டவர் நெஞ்சில் பொருந்தி உறைவன். தன்னை வணங்குவோர் உள்ளத்தில் பொருந்திய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பான். தன்னையே அணியாகக் கொண்டவர் உள்ளத்தில் உறையும் அம் முதல்வனை எண்ணிக் கொண்டே இருப்பவர் இடையில் கைவிட முடியுமோ ? முடியாது. (கணித்தல் - எண்ணுதல்)
1878. தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.
பொருள் : தாழ்ந்த திருச்சடையை யுடைய நந்திஎம் பெருமான் தலையால் வணங்கும் சிவவுலகத்தினர்க்குத் தன் திருவடியை அவர்தம் முடிமேல் சூட்டியருளினன். திருவடி யொன்றே அகந்தழுவி மெய்ப்பணி செய்வார்க்கு மல கன்மம் நீங்கிய தூமாயை உலகத்தும் இன்பப் பயன் அருள்வன். அவனே படர்சடைச் சிவபெருமான் ஆவன். (மிலைமிசை மிசை மிலை - தலையில் அணியும்படி.)
1879. அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்
குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே.
பொருள் : அறியாத காலத்தில் சிவனடியாரை வேடத்தால் அறிந்து, தொண்டு செய்து இன்பத்தைப் பெற்றது அடிமையின் தன்மையாம். வேடத்தையுடைய அடியார் ஒளிக்கிரணங்களையுடைய சடை ஒளி நீங்காவண்ணம் கட்டிக் கொண்டிருப்பர். அவ்வாறு தடுத்துக் கொண்டுள்ள அடியார் திருவடி உணர்வில் பொருந்துவது பெரிய தவமாகும்.
1880. அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே.
பொருள் : மேல் ஓதிய சிவனடியாரை அடைந்து அவர்க்கு அன்பும் பணியும் இன்புறச் செய்வார் சிவபெருமான் திருவடியை நெருங்கவும் வல்லராவர். மேலும் அம் மெய்யடியாரைத் தொடர்ந்து நாடுபவர் சிறந்தோராவர். அவர்பால் முழுப் பெருமையும் தங்கும் சிவனடியார் வாயிலாகவே தாயிலாச் சிவனை எய்தலாம். (அவன் - சிவனடியார். இலயதாமே - அடங்குமே.)
1881. முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்இரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.
பொருள் : முன்னேயுள்ள பதினெண்கணத் தேவர்கள் முற்றும் எல்லையற்ற அன்பினால் இப்பெரிய பூமிக்கண் வருவார்கள். அவரது வரவால் பூமியினது எட்டுத்திசையும் ஆகாயம் போன்று மிளிர, பன்னிரண்டு காத எல்லை வரை உள்ளவர்க்கு நன்மை உண்டாகும்.
1882. சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோகம் இன்றி அறிவோர்உண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவ யோகம் இன்றிப் பரலோகம் ஆமே.
பொருள் : சிவன் திருவடியை மறவா நினைவுடையோன் சிவயோகியாவன். சிவன் நிறைவில் அழுந்தித் தற்செயல் அற்றுச் செய்வனவெல்லாம் சிவன் செயலாய்ப் புரிபவன் சிவஞானி யாவான். அத்தகையோர் வாழும் நாடு சிவநாடு ஆகும். அந் நாட்டில் மெய்யுணர்வு  உடையோர் வாழ்வர். அங்குக் கேட்டைத் தரும் தீவினைகள் ஏதும் நிகழா. ஆண்டு அருளால் எய்தும் புதுமை உண்டாகும். மேலும் எவ்வகையான நன்மையும் பெருகும். ஆண்டு வாழ்வோர் மீண்டும் பிறவார். சிவவுலகம் உறுவர்.
1883. மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணர் வார்சிவன் மெய்யடி யார்களே.
பொருள் : சிவபெருமான் திருவாணையால் உயிர்கட்கு உலகு உடல்களைப் படைத்துக் கொடுத்தனன் அயன். அதுபோல் காத்தனன் அரியும். எனினும் அவர்கள் உணர்வெல்லாம் படைத்தல் காத்தலாகிய தொழில் மேல் என்று உணர்ந்து உவகையுற்று நிற்கும். அதனால் சிவனை உணரார். இந்நிலவுலகத்து வாழும் மெய்யடியார் விரும்பியுணர்வது சிவனையே. அதனால் அவர்கள் சிவனடியார்கள் என்று எவராலும் என்றும் வழுத்தப் பெறுவர்.
15. போசன விதி (ஊண் முறை)
1884. எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.
பொருள் : உலகில் எட்டுத் திசையிலும் இறைவன் அடியார்க்கு அளித்த உணவை அவர்கள் அமுதம் என்று விரும்பி ஏற்றுக் கொள்வர். ஏனெனில், உடம்பாகிய ஒரு நிலத்தைப் பொருந்தி அதனைப் போற்றுபவர். அவ்வாறு அதனைப் போற்றாமல் பாழாய்க் கிடக்க விரும்ப மாட்டார். (விட்டுக் கிடக்கில் - நீங்கி இருந்தால்)
1885. அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.
பொருள் : அச்சிவன் உடம்பினுள் உயிர்க்கு உயிராக விளங்கும் அருளை உணர்ந்தவர் உச்சிப்போதில் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் தலைவனுக்கு, பிச்சை ஏற்று உண்டு பேதமில்லா ஞானம் வரப்பெற்று, ஆசையை விட்டு, தனிமையாகச் சகஸ்ரதளத்தில் பொருந்தி இருப்பர். அடியார் ஒருபோது பிச்சை ஏற்று உண்டு ஏகாந்தத்து இருப்பர்.
16. பிட்சா விதி
1886. விச்சுக் கலம்உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
பொருள் : விந்துவாகிய விதையைச் சேமிக்க உடம்பாகிய பாத்திரம் உண்டு. விதையினை விதைப்பதற்குரிய பாதுகாவலான சகஸ்ரதளமாகிய நிலம் ஒன்று உள்ளது. ஆஞ்ஞைச் சக்கரமாகிய உச்சிக்கு முன்பு தியானமாகிய உழவு அமைந்தது. அச்சமின்றி ஊர்த்துவ சகஸ்ரதளமாகிய அந்நிலத்தில் பொருந்தி சமாதியாகிய பயனைப் பெற மாட்டாதார் விருப்பத்துக்காக வெளியே சென்று பிச்சை யேற்றுத் திரிகிறார்களே, என்ன பாவம் !
1887. பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.
பொருள் : சிவபெருமான் படைப்போனாகிய அயன் மண்டையோட்டை ஆருயிர்கட்குக் காட்டிப் பிச்சை ஏற்பான் ஆயினான். சிவன் தன்னைவிட்டு நீங்காச் சிவையின் வழி முப்பத்திரண்டு அறமும் இடைவிடாது செய்வித்துக் கொண்டிருக்கின்றான். அங்ஙனம் இருப்பவும் இரப்பதற்குக் காரணம் ஈவோரெல்லாம் அருளாளர் நிலையாகவும் இரப்போரெல்லாம் ஆண்டான் நிலையாகவும் கருதுதல் வேண்டும் என்னும் குறிப்பு. பிரமன் சிரங்காட்டி இரப்பது பிரமனிலும் தான் உயர்ந்தோன் எனவும் உலப்பிலோன் எனவும் உலகத்துக்கு உணர்த்த என்க.
1888. பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றக்கு இரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.
பொருள் : நீக்கமற நிறைந்து உலகு ஏழையும் படைத்த இறைவனை உலகவர் இரந்து உண்பவன் என்று எள்ளி நகையாடுவர். அவன் எதற்காக இரக்கின்றான் ? இடைவிடாது தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் அடியார்கள், அவர்கள் உண்ணும் ஊண் தன் திருவருளால் வழங்கப்படுவதென்னும் மெய்மை உணர்த்த உணர்கின்றனர்.
1889. வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே.
பொருள் : இறைவன் தன்னை வந்து அடைவார் செய்யும் முயற்சியில் உடன்நின்று உதவுவான். நல்ல மெய்யடியார்க்குத் தன்னை இன்பவடிவில் தர இருந்தான். அடியார்களுக்கு அடைக்கலமாகப் பொருந்த இருந்தான். இவ்வாறெல்லாம் வரவை எதிர்நோக்கியிருந்தால் அறியாதவன் என்று கூறலாமோ ?
1890. அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.
பொருள் : சிறு தீயினை யொத்த பசி, அவா, வெகுளி முதலான குற்றப் பாடுகளில் சிவனடியார்கள் ஒரு சிறிதும் மனம் பொருந்தார். உடம்பு உடைமை முதலியவற்றில் பற்றுக் கொண்டு அவற்றை இறைவன் உடைமையெனவும் தமக்கு அவனால் கொடுக்கப் பெற்ற இரவல் எனவும் கொள்ளவேண்டிய உண்மையை மறந்து தம்மை மதித்து மனம் பொங்கிச் செருக்குறார். துறக்க உலகம் சிவவுலகம் முதலிய எவ்வுலகத்தும் உள்ள நிலையிலா இன்பத்தையும் கொள்ளார்; உள்ளார்; சிவன் திருத்தாளே  தலைப்படுவர்.
1891. மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையதும் நீண்டார் கண்டத்தலைக் கேசெல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வரஇருந் தாரே.
பொருள் : உள்ளுணர்வாய் உண்மையாய்த் திகழும் திருவடியுணர்வு கைவரப் பெற்ற தெளிவுடையார்கள் சிவஞானி எனப்படுவர். அவர்கள் திருவடி இயக்கத்தால் மனையறம் புரியும் மாண்புசேர் நல்லார் வாழ் மனைத்தலைச் சேர்வர். அங்ஙனம் சேர்தல் அவர் நல்வழியான் ஈட்டிய பொருளை நல் உளத்தோடு நல்லுரை நவின்று நன்றாற்றி நல்கும் தானத்தைப் பெற்றுப் பயனீதற் பொருட்டு ஆகும். இதுவே அவர் மனைத்தலை சென்று பிச்சை உண்பதாம். வேறுசில சிவஞானிகள் தாம் தங்குமிடத்தே தங்கியிருப்பர். முன் தங்குமிடத்தே கொண்டுவந்து பணிந்து படைப்பர். அதனையும் ஏற்று அருள்புரிவர்.
17. முத்திரை பேதம்
(முத்திரை - கருவி கரண அறிவை மாற்றி முதல் நிலைக்குச் செல்வதற்குரிய உபாயம். பேதம் - வகை, சாம்பவி, கேசரி என்பன முத்திரை பேதமாம்.)
1892. நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்யக்
கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.
பொருள் : பதினொரு கருவிகளும் சீவபோத வழியினின்று சிவபோத வழியில் மாறவே வந்த முத்திரை அமுதூறும் பிரணவத்தில் அழுந்துவித்து எல்லாவற்றிற்கும் மேலான சிவனது திருவடியை அடைவிக்க ஆரவாரம் அடங்கி மேலான முத்திப்பேறு உண்டாகும்.
(நாலேழு - உம்மைத் தொகை பதினொன்று: ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, மனம் 1, ஆகப்பதினொன்று)
1893. துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.
பொருள் : மூன்று வகையான துரியங்களும் அடங்கும் இடமாகி, அருமையாகப் பேசுகின்ற நாவின் செயலை அடக்கி, பொருந்திய சாம்பவியும் கேசரியும், உண்மையைப் பெருக்கி ஞானம் விளங்கும் முத்திரைகளாம். (துரியம் - உறக்கநிலை.)
சாம்பவியாவது, கண்பார்வையை நாசித் துவாரங்களின் பக்கமாய் மார்பகம் வரை பார்த்துப் பழகுதல். கேசரியாவது, புருவ மத்தியில் தொடங்கி அகநோக்கில் சிரசின் உச்சியை நோக்கிப் போதல்.
1894. சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
ஓம்பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.
பொருள் : சாம்பவி யாவது குருநாதனது அருட்பார்வையை விளைவிப்பதாம். அது தொடர்ந்து வருகின்ற பிறப்பினை நீக்கி அருளமுதம் வழங்கும் முத்திரையாகும். பிரணவத் தியானத்தோடு பொருந்தியிருக்கின்ற கேசரியாவது சிவயோகியாகிய நாம் பயிலக் கூடிய உண்மையான ஞான முத்திரையாகும். சாம்பவி, அருளை அளிப்பது, கேசரி, ஞானத்தை நல்குவது, அருள் பெற்ற பின் ஞானம் உண்டாகும்.
1895. தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
ஏனைச் சிவமாம் சொரூபம் மறைத்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
பொருள் : கண்டத்திடத்து அருளோனாகிய சதாசிவன் வீற்றிருந்தருள்வன். திருவடியுணர்வாகிய சிவஞானத்தினால் அகத்தினுள் உணர்வுக்கு உணர்வாய் நற்சிவன் தோன்றுவான். வாய்வாளாமையாகிய மோனத்தினுள் சிவமாம் உருவம் மறைந்திடும். இதுவே மோன முத்திரை. முடிந்த முடிபாகிய வீடுபேறும் இதுவே. (மோனத்து முத்திரை மவுனம்.)
1896. வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே.
பொருள் : செயலும் தன்மையாகிய மௌனம் இருவகைப்படும். ஒன்று வாய், மற்றொன்று மனம். இவ்விரண்டும் ஒருங்கு செயலாற்றினால் பயன் உண்டு. வாய்மட்டும் பேசாதிருந்தால் ஊமையே. இரண்டும் ஒன்றுபட்டால் அருளில் அழுந்திய தூய உயிராகும். திருவருள்  உடன் நின்று ஆக்கும் அத்தூய்மையின் உண்மையினை அறிவார் யார் ? ஒருவரும் இவர் என்பதாம்.
1897. யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே.
பொருள் : எண்பெரும் இருத்திகளாகிய சித்திகள் யோக முத்திரை என்ப. ஒப்பில்லாத உண்மை உணர்வு அடையாளத்தை ஆராயுமிடத்துத் திருநான் மறையின்கண் வகுக்கப் பெற்ற முறையான் ஒழுகிக் கடவுளருளால் கைவரும் கேசரி, சாம்பவி யோகத்துக் கேசரி முதலிய முத்திரைகள் அடங்கிய யோக முத்திரையாகும்.
(இருத்தி - சித்தி. ஏகத்த - ஒப்பற்ற.)
1898. யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே.
பொருள் : அகத்தவமாகிய யோகத்தால் பெறும் எண்சித்தியுள்ளவன் திருவருள் உயிர்ப்பாகிய அருள் மூச்சுடைய வாதனாவன். யோக நிலையிலுள்ளார் புத்திக்குமேல் உணரும் நன்னெறியின்கண் உளராகுவர். இவையே உண்மையாகும். இதுவே மூலமுதல் ஆறுநிலைக் களங்களிலும் நின்றருள்பவன் சிவன் என்று துணியும் செம்மை கண்டு உடனாகக் கூடி எதிர்நிற்கும் பண்பாகும். எதிர் நிற்றல் ஏற்றுக்கொள்ளுதல். (வாதனை - செம்பைப் பொன்னாக்கும் செய்கை.)
1899. துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம்
அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே.
பொருள் : யோகநெறியில் கூறப்பெறும் பன்னிரு கலைப்பிராசாத நெறியே பதினாறு கலைப் பிராசாத நெறியாகும். இதனால் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் ஆகியவை காமாதி அறுபகை வழிச் செல்லாமல் அவற்றின் விருப்பத்தைவிட்டு நிற்கும். இதுவே கேடற்ற வேதாந்த சித்தாந்தத் தன்மையாம். இறைவனைத் துணையாக மனத்துடன் சிந்தித்தல் நல்ல சுத்த சைவமாகும்.
1900. மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே.
பொருள் : மேல் ஓதிய மோனமுத்திரை நல்லுயிராகிய முத்தர்க்கு உரியது. நாதராகிய சிவ குருவினர்க்கு உரியது ஞான முத்திரை. செம்பொருள் துணிவாம் சித்தாந்தச் செந்நெறியாளர் முத்திரை ஆன்சுரை முத்திரையாகும். (ஆன் சுரை முத்திரை - தேனுமுத்திரை பசுமமுத்திரை.)
1901. தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே.
பொருள் : தூய நெறியாகக் காணப்பெறும் உச்சித் துளைவழி மேல் திகழும் ஆயிரம் இதழ்த் தாமரை அருள் வழியாகும். அருளால் அந்நெறி அழுந்திக் காண்பவரின் உள்ளமும் உடலும் பொன் வண்ணமாய்த் திகழும். மேல் நெறியாகக் காணப்படுவது திங்கள் மண்டிலமாகும். மேற்செல்லும் உயிர்ப்பு வழி கண்டவர் உள்ளம் மலர் அகன்று நலம் உற்று நிலைநின்ற தூய்மையாகும். (சுவடு பிரமரந்திரம். பூநெறி - உச்சித் தாமரை. நீநெறி. பிராணவாயு மேற்செல்லும் நெறி.)
18. பூரணக் குகை நெறிச் சமாதி.
(பூரணம் - முடிவு - குகை - இடம். முடிவின் பின் எய்தும் பயன்.)
1902. வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகிய உடல்விட்டால் தானே.
பொருள் : யோகி வளர்பிறையில் உடலை விட்டு நீங்கினால் திங்கள் மண்டிலத்தே சென்று தங்குவன். செல்லும் வழியில் துறக்க உலகத்தும் ஞாயிற்று உலகத்தும் பதிர் உலகத்தும் தங்கித் தங்கிச் செல்லன். (பிதிர்பதம் - உடலை விட்டு உயிர் பதிர்ந்து நிற்கும் பதம்.)
1903. தான்இவை ஒக்கும் சமாதிகை கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே.
பொருள் : மேல் ஓதியவாறு சமாதி கை கூடாமல் உடலை விட்டுப்போன யோகி நிலையான சிவனடிப் புகலிடம் புகாமல் மீண்டும் பிறக்க நேரின் நற்சார்பில் வந்து பிறந்து வினை நீங்கி, அருளின் சார்வாகி நிலையான புகலிடம் புகும் மாயோகி ஆவன். (புகலிடம் போந்து கன்மத்துக்கு ஈடாகப் பதவி யடைந்து.)
1904. தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.
பொருள் : அங்ஙனம் புவியில் பிறந்த யோகி ஏனை உலகோர் போன்று உண்டு உடுத்து உழைத்து சிவயோகி செல்லும் தூமாயையின்கண் முன்போல் சிவயோகி ஆவதன்முன் இவ்வுடலின்கண் சித்தி கைவரப் பெற்றுத் திகழ்வன். அதற்கு நிலைக் களமாகிய இவ்வுடலே தாய் உடலாகும். புவியோர் நெறி - கன்ம மார்க்கம்.
1905. சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே.
பொருள் : சிவயோகியாகிய ஞானியர் உடல் சிதைந்து நீங்கினால் சிவவுலகம் சென்று பின் நிலவுலகம் வந்து, பிறந்து நிறைந்த சிவயோக ஞானத்தால் திருவடி சேர்ந்து நிலை யின்பம் பெற்று நீடுவாழ்வர். புவ உலகம் முதலிய அனைத்துலகும் சிவயோக ஞானியரைப் போற்றும். அதனால் போற்றுநர்க்குப் புண்ணியப் பேறும் உண்டாகும். (புவலோகம் - ஒளிமண்டலம். சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட உலகம்.)
1906. ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே.
பொருள் : குற்றமற்ற திருவடி உணர்வ பெற்ற ஞானியாதற் பொருட்டுச் சிவயோகியராகிச் செறிவுநெறி நின்றவர் உடல் விட்டால் தான்என்னும் உயிர்த்தன்மை நீங்க உரையற்ற, உலக உணர்வு அற்ற உணர்த்தும் உணர்வுடன் நிறைவுற்ற (மோன சமாதி) அருளில் தங்கித் தானவன் ஆகுவர்; வேறோர் உடற்கண் புகுதார்; பழுதற்ற நல்லு யிராவர். இயற்கையும் முற்றுமாம் இன்ப உணர்வு எய்தி என்றும் மீளாது இன்புறுவர். (முத்தர் - நல்லுயிர்; ஞானியர்)
1907. செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக்கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.
பொருள் : உலகியலை மறந்தவர் செத்தார் எனப்படுவர். அவர்பெறும் பயன் யாதென்று கேட்டால் ஆணவமலம் கெட்டுப் பேணுபணி தொட்டு அருள் தன்மை வாய்ந்து சிவனடியைச் சேர்வது. அச்சிவனடி கூடிய பின்னும் அன்னார் நிலவுலகத்தில் இருத்தலும் கூடும். அங்ஙனம் இருந்தார் மும்மலமற்ற செம்மலாயிருப்பர். அவர்கள் செம்பொருளாகிய சிவமாகவே விளங்குவர். அவர்களே சித்தர் என்று அழைக்கப்படுவோர் ஆவர்.
1908. உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்
பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே.
பொருள் : பிரணவ யோகத்திலிருந்து பிரணவத்துக்குரிய சர்வ வல்லமையுள்ள சித்தின் அருளைப் பலகாலும் சிந்திக்க. பரசிவமே அச்சிவ ஞானிக்குச் சத்தியின் கூட்டத்தை அருளுவான். அங்ஙனம் பெற்ற அருளை எத்தகைய பக்குவமுள்ள சீடர்க்கும் வேண்டி அளிக்கும் ஞானி, தன் விருப்பத்துக்கு ஏற்பச் சீடனை ஈசன் உருவாக அமைத்தருளுவான்.
1909. எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே.
பொருள் : நீக்கமற நிறைந்து எங்குமாய் விளங்கும் சிவத்தின் அருள் நடுவுள் பொருந்தியிருக்கும் சிவஞானிக்கு எங்கும் சிவம் தோன்றும். அங்கு அங்கேயுள்ள நிலம் முதலிய பூதங்களை விழுங்கி அவற்றுள் கலந்திருக்கும் ஆகாயம் போல ஈசன் உருப்பெற்ற ஞானி உடல் பிரக்ஞைவிட்டு எல்லாவற்றிலும் கலந்திருப்பார். ஈசன் உருப்பெற்ற ஞானி எங்குமாய் எல்லாவற்றையும் அறிவார்.
19. சமாதிக் கிரியை.
(சமாதிக்கிரியை - ஞானி உடலை விட்டபின் செய்ய வேண்டிய சடங்கு.)
1910. அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குஉண வாகும் வையகமே.
பொருள் : அழிவில்லாத சிவஞானியின் உடல் தீயில் வெந்து கெடுமானால் நாட்டு மக்கள் எல்லாம் சுர நோயினால் பீடிக்கப் பட்டு வருந்துவர். கவனிப்பாரின்றி அழுகி நாய் நரி உண்ணுமாயின் நுட்பமான உட்பகை மூண்டு நாட்டு மக்கள் அழிந்து நாய் நரிக்கு உணவு ஆவர். (ஞானியின் உடல் சமாதி செய்யப்பட வேண்டும் என்பதாம்.)
1911. எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.
பொருள் : அளவிடுதற்கரிய திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவஞானியரின் திருவுடல் எரியில் இடப்படின் அது சிவபெருமான் திருக்கோயிலின் கண் தீயிட்டதை ஒக்கும். அப்பெரும் பாவத்தால் மண்ணினில் மழை விழாது. அதனால் நீங்கா வற்கடமாம் பெரும் பஞ்சமும் உண்டாகும். அளவிலா மன்னரும் தத்தம் அரசினையும் இழப்பர்.
1912. புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே.
பொருள் : சிவஞானியின் திருமேனியைப் புதைத்துத் திருக்கோவில் அமைப்பது பெரும் சிவபுண்ணியமாகும். அப்படிச் செய்யாமல் தீயின்கண் இட்டால் நாட்டுக்குப் பெரும் அழிவு உண்டாகும். மேலும் அத்திருமேனி ஓம்புவாரற்று மண்ணில் கிடந்து அழியின், நாட்டின் அழகு எல்லாம் பாழ் பட்டு நாடும் வீழ்ச்சியும். தணியா வெப்பும் தீயும் பிணியும் பிறவும் மண்ணுலகம் எங்குமாகிப் பெருந்துன்பம் உண்டாகும்.
1913. அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
பொருள் : அளவிடப் படாத சிவஞானி திருவடிப்பேறாம் அருளை அடைந்தக்கால் அவர்தம் திருவுடலை நிலவறையாகிய குகை செய்து அவற்றின் கண் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்தக்கால் அறிவாற்றல்களால் மிக்க அழகு பெற்ற வேந்தரும் நிலவுலகத்தில் வலமும் நலமும் குலமும் சேர்மாந்தரும் முடிவிலாப் படியிலா வடிவுடை ஆரருள் இன்பம் பெற்று வாழ்வர். (நிலவறை - சமாதி குகை.)
1914. நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.
பொருள் : நிலவறைப் படுக்கும் குகையின் அளவு வருமாறு ஆழம் ஒன்பது சாண். அகலமாகிய சுற்றளவு ஐந்து சாண். மூன்று சாண் அகலத்தில் முக்கோணம். இத்தகைய முறைப்படி அமைக்கும் குகை. தாமரை இருக்கையாகிய பதுமாசன மாகும். சிவஞானியின் உடலைப் பதுமாசனமாக இருத்துக என்பதாம்.
1915. தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்ளே.
பொருள் : சமாதி செய்விப்போன் வீட்டின் பக்கம், நடைச் சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றின் நடுப்பகை, பூந்தோட்டம், நகரில் நல்ல பூமி, நினைத்தற்கு அருமையான காடு, உயர்ந்த மலைச்சாரல் ஆகிய இந்நிலம்தான் குகைக்கு உரிய இடங்களாகும்.
1916. நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மையை தாமே.
பொருள் : நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்தடி அகலமும், நிற்கின்ற உயரம் ஒன்பது அடி நேராக அமைய, அழகமைந்த குகையின் குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக, அணுக்கமாக உள்ளோர் செய்யும் முறையாகும். (ஓசம் - கோயில் அல்லது குகை. பஞ்சாங்க பாதமாய் - ஐந்து அங்கங்கள் நிலத்தில் பதியும்படி வணங்குவதற்கு இடமுள்ளதாய்.)
1917. பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
முஞ்சிப் படுத்துவெண் ணீறுஇட்ட தன்மேலே
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே.
பொருள் : ஐவகை உலோகங்களையும் ஒன்பது வகை மணிகளையும் குகையில் பரப்பி மிகுதியாகப் போட்டு அதன்மேல் ஆசனத்தை அமைத்து, தருப்பையைப் பரப்பி திரு வெண்ணீற்றை நிறையப் போட்டு அதன்மேல் பொற்சுண்ணப்பொடியைப் போதலுமாம். (முஞ்சி - தருப்பை பொற்சுண்ணம் - மஞ்சள் முதலிய பொருளைச் சேர்த்து இடித்த பொடி.)
1918. நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
கள்ளவிழ தாமம் களம்பம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபவன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.
பொருள் : குகைநடுவில் நால்வட்டம் அமைத்து, அதன்மேல் தேன் நிறைந்த மலர்மாலைகள், சந்தனக் கலவை, கத்தூரி முதலிய மணக்கூட்டுக்கள், சாந்து, புனுகு, பன்னீர் சேர்த்துத் தக்கவாறு பொதிதல் வேண்டும். பின் சிறந்த நறும்புகையும் விரும்பி மகிழ்ந்து இடுவீர்களாக. (நள்குகை - குகை நடுவில்.)
1919. ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமும் நறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே.
பொருள் : சொல்லப் பெறுகின்ற திருவெண்ணீற்றுப் பூச்சாகிய சட்டையை மேலே இட்டு, ஞானியின் உடலை ஆசனத்தின் மேல் அமர்த்தி மலர், அறுகம்புல், வாசனைப்பொடி, திருவெண்ணீறு ஆகியவை அணிவித்து குகையின் மீது வைத்து நாற்புறமும் மண்ணை விரிந்து சமன் செய்வீராக. (குப்பாயம் - சட்டை உத்தூளம் - பூச்சு)
1920. விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.
பொருள் : மேல் ஓதியபடி அமைத்தபின் சாருமணை பொருந்த வைத்து, அதன்மேல் பாவாடை விரித்து, இலை அமைத்துப் பொன்போல் பொரித்த கறிவகைகளும் போனகமாகிய திருவமுதும் இளநீரும் சிவகுருவின் முன்னிலையில் படையுங்கள். அத்திருவுருமுன் குழைமுகப் பார்வை தரித்தலாகிய நைவேத்தியம் கண்டபின் மேற்கட்டியமைத்து வேண்டுவ செய்வீராக. (போனகம் - சோறு. மேல்வட்டம் - மேல்நிலை)
1921. மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே.
பொருள் : திருவெண்ணீற்றையும் வாசனைப் பொடியையும் மேலே சொரியும் தருப்பைப் புல் வில்வம் மலர் கொண்டு பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் கொடுத்து நிலத்தின்மேல் மூன்றுக்கு மூன்று அடி மேடை செய்யுங்கள். அலங்காரம் செய்தபின் உபசாரம் செய்ய வேண்டும்.
1922.ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைக் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே.
பொருள் : மேடை மீதினில் அரசங்கன்று அல்லது சிவலிங்கம் ஆகிய இவற்றுள் ஒன்றைத் தருவித்து சமாதியின் மேன்மையான சந்நிதி வடக்கு நோக்கி யேனும் கிழக்கு நோக்கி யேனும் அமைய, அன்போடு பதினாறு வகை உபசாரம் செய்க.
சிறப்பு பதினாறாவன; 1. திருமஞ்சனம் 2. நறுமலர். 3. மணக்கூட்டு. 4. நறும்புகை 5. உறுஞ்சுடர் 6. குளிர்நீர் 7. திருவமுது 8. தூசு. 9. அடைக்காய். 10. கண்ணாடி. 11. குடை 12. கவரி. 13. ஆலவட்டம் 14. விசிறி. 15. ஆடல். 16. வாத்தியம் என்பன.
(ஆதனம் - சமாதிக் குகையின் மேல் உள்ள வேதிகை.)
20. விந்துற்பனம்
(விந்து உற்பனம் - விந்துவின் தோற்றம். இப்பகுதியில் அண்டத்துக்குக் காரணமான விந்துவும், பிண்டத்துக்குக் காரணமான விந்துவும் கூறப்பெறும்.)
1923. உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே.
பொருள் : விந்து என்று சொல்லப்படும் தூமாயை தோற்றத்தில் சிறந்த குண்டலியும், பெருவெளியில் மாயாகாரியமான வைந்தவம் ஒன்பதும், அவற்றின் முறையால் அயன் முதலிய ஒன்பதின்மரும் திருவருள் முறையாகக் கரணங்கள், கலைகள், வைகரி முதலிய ஓசைகள் ஆகிய எல்லா ஆக்கப்பாடுகளும் தோன்றும். (ஆக்கப்பாடு - காரியம். குடிலில் பரமாகாயத்தில் வயிந்தவம் ஒன்பான் - விந்து மாயாகாரியம் ஒன்பது. கதியில் - முறையாக)
1924. செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாதபேதத்திற னால்ஆறும்
செய்திடும் மற்றவை ஈர்இரண் டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே.
பொருள் : விந்துவின் காரியத்தால் பிரமன். விஷ்ணு - உருத்திரர். மகேஸ்வரர். சதாசிவராகிய ஐவரும் ஐந்து கொத்தாக உடலிற் பொருந்தித் தொழிற்படுவர். நாதபேத காரணத்தால் அது ஆறு வகையாகப் பிரியும். இவ்விதம் அமைவதால் உருவமூர்த்திகளான பிரமன் விஷ்ணு உருத்திரர் மகேஸ்வரர் ஆகிய நால்வர்பால் மற்ற தத்துவங்கள் பொருந்தும். இவற்றின் விரிவே உடலைப் பற்றியும் உயிரைப் பற்றியுமுள்ள முப்பத்தாறு தத்துவங்களாம்.
1925. வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.
பொருள் : பரவிந்துவில் தோன்றும் மாமாயை மேலோதிய இருபத்தைந்து சிவவடிவங்களையும் தந்திடும். மேலும் வாகேசி தற்பரை. செலுத்தும் குடிலை இன்புறுத்தும்; குண்டலி என்னும் விந்துவில் பொருந்தித் தோன்றும். (ஏமுறு - இன்பம் பொருந்திய. மேவா - மேவி)
1926. விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.
பொருள் : விளங்குகின்ற நிவிருத்தியாதி கனல் அகாராதி கலையில் பொருந்தும். வளமை மிக்க உகாரம் மகாரத்துள் அடங்கும். விந்து குற்றமில்லாத நாத முடிவை எய்தி அந்தக் கரணமாகிய மனமாதி யவற்றுள் அந்தம் அடையும்.
1927. அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
வந்த வியாபி எனலாய அந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே.
பொருள் : காரண காரியமாகிய முதல் விளைவுகளுக்கு எண்ணத் துணையாய் நிற்கும் முழுமுதற் சிவன் பராபரன் எனப்படுவன். அவன் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் வியாபியாவன். அந்நிலையில் மணஞ்சேர் காரண காரிய முதல்வராய்த் திருத்தொழில் ஐந்தினையும் இடையாறாது புரிவன். இவையே அவன்தன் அளவில் பெருமையாம். (வீயம் - வியம் - பெருமை)
1928. வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும்  பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறக் ஆகுமே.
பொருள் : பெருமை உடைத்தாகிய விந்துவின் ஆற்றலால் அகண்டமும் அண்டமும் ஆகிய அனைத்து ஆக்கப்பாடுகளும் உண்டாவன. ஆகாயம் முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயை யாகிய  விந்துவின் காரியம் போன்ற படங்குடில் ஆனாற்போலும் வளர்ச்சியன்று பால் தயிரானாற் போன்ற திரிபு. இதனைத் தூவாமாயை என்பர். இவை தூமாயையின் கீழ்ப் பகுதியாகும். இவ்விந்து முப்பத்தாறு மெய்களுக்கும் அகம்புறம் என்ப விந்து எனினும் காரண மாயை எனினும் ஒன்றே. (விந்து - வித்து - காரணம். அகண்டம் - எல்லையற்றது. அண்டம் எல்லையுடையது. இவ்விரு நிலைகளிலும் விந்து மண்டலம் உள்ளது.)
1929. புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே.
பொருள் : மேல் ஓதியவாறு விந்து புறம் அகம் எங்கும் விரவி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. விந்துவின் நிறம் வெண்மை நாதத்தின் நிறம் செம்மை. அறிவு ஆற்றல்களால் ஆருயிர்களை மகிழ்விக்க மகிழும் சத்தி சிவம் இரண்டிற்கும் முறையே விந்து நாதம் பதிந்த நிலைக்களமாகும். (பதிவு - நிலைப்பு. பதிவு பாதம் என்றாயிற்று உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் உள்நின்று பேறு அருளும் அருளிப்பாடு கொண்டே இவை யனைத்தும் நிகழ்கின்றன.)
1930. கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே.
பொருள் : உடலுக்கு வெளியே யுள்ள ஒளி நிலையே குற்றமில்லா ஆடையும் குடமும் உருக்கொண்டு நிற்றல் போல் நிலைöற்ற பஞ்ச கலைகள் ஆதிய காரணத்தினின்று காரியமாகிய பிரபஞ்சம் அனைத்துமாய் விரிந்து மாமாயையாகும். நூல் காரணம்; ஆடை காரியம்; மண் காரணம்; குடம் காரியம். அதுபோல கலைகள் முதலியவை காரணம். (பிரபஞ்சம் - காரியம்)
1931. அதுவித்தி லேநின்றுஅங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே.
பொருள் : அகண்டத்தில் வித்தாக விளங்கித் தோன்றும் சிவமே பிண்டத்தில் விந்துவாக உள்ள முறைமையை மக்கள் உணரார். இன்பம் பொருந்திய சுவாதிட்டான மலரில் அன்ன ரூபமாக உள்ளவனே பரமாகாயத்தில் விளங்கும் புண்ணியனாகிய சிவனாகும். தாமரைமீது  மகிழ்ந்து அமரும் அன்னத்தைப் போன்று போகம் ஈன்ற புண்ணியனாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றனன். அது போன்று பொன்னம் பலத்தின் கண்ணும் நின்று அருள்கின்றனன்.
1932. வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே.
பொருள் : வித்தில் அன்றி வேறிடத்தில் முளையில்லை. அதனால் அம்முளை விதத்தில் இருந்தல்லாமல் வேறிடத்திலிருந்து தோன்றுதல் இல்லை. வித்தும் முளையும் ஒன்றைவிட்டு ஒன்று இல்லாமையால் இரண்டையும் ஒரு பொருளாகக் கருத வேண்டும். அது போன்றே விந்துவும் சிவமும் ஆகும்.
1933. அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடல்மன மாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே.
பொருள் : உண்ட உணவுகள் உயிர் பொருந்துவதற்குரிய உடல், மனம், கழியும் மலம் என்று மூன்று பகுதியாகும். திருந்தும் உடலும் மனமும் ஆகிய இருபகுதிகளும் சேர்ந்து முன்னால் உண்ட உணவின் சாரத்தால் அமைந்து இருந்தன. உணவின் தன்மைக்கேற்ப உடலோடு உள்ளமும் அமைகிறது. சாத்துவிக உணவு நல்ல உடலுறுதியும், மன அமைதியும் தந்து யோகம் பயில உதவும்.
1934. இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும்கா யத்திலே.
பொருள் : இரதமாகிய சாரம் முதலாகச் சொல்லப்படும் ஏழ் முதற் பொருள்களால் ஆக்கப்பட்டது. இவ்வுடல். தாது-முதற் பொருள். அவ்ஏழும் வருமாறு: சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை, வெண்ணீர் என்பன. இவற்றுள் சாரம், செந்நீர், வெண்ணீர் ஆகிய மூன்றும் ஒரு நாள் ஒருபுற் பனிபோல் திரளும். இத்திரட்சியே விந்து எனப்படும். இவ்விந்து ஏழு மூன்றாகிய இருபத்தொரு நாள்வரை உடம்பில் வளரும்.
1935. காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.
பொருள் : அதன்பின் மூன்று நாள் காறும் பரந்து கலந்து முன் உடல் விந்துவாக இருந்த அது மனவிந்துவாக மாறும். அதனைக் கலையாகிய அறிவு விந்துவாக அமைத்துச் சிவன் திருவடியுணர்வாய் நீங்காது. நின்றோர்க்கு அவ்விந்துவும் நீங்கா. பற்று அறாமையின் உலக மயக்கில் ஈடு படுவோர்க்கு அவ்விந்து மனத்துடன் அழியும். இதனையே கனவிற் கழிதல் என்ப. (நேயத்தை நாடிச் செல்வார்க்கு விந்து செயமும் மாயத்தை நாடிச் செல்வார்க்கு விந்து நீக்கமும் உண்டாகும்.)
1936. அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே.
பொருள் : அழிகின்ற விந்துவின் அளவை அறியமாட்டார். இறந்து அழிகின்ற தன்னை உள்ளே காத்துக் கொள்ளுதலையும் தெளியமாட்டார். அழிகின்ற உடலில் அழிந்து சோர்விற்றோர் அழிகின்ற தன்மையை அறிந்தும் விந்து நீக்கத்தினின்றும் ஒழியார். விந்து கழிவதால் வாழ்நாளும் உடலும் பாழாகும். ஏனெனில் பன்மடங்கு இரத்தமே மாறி ஒரு துளி வீரியம் ஆகிறது.
21. விந்து ஜயம் - போக சரவோட்டம்
(விந்துஜயம் - விந்துவைக் காத்தலால் உண்டாகும் செயம். போக சரவோட்டம் - போக காலத்தில் அமையும் பிராண இயக்கம்.)
1937. பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
பொருள் : நம்மை விரும்பிப் பார்க்கும் பெண்களை நாம் பாராமல் அகன்று சென்று, ஆராய்கின்ற மனம் உருக மூலக் கனலை எழுப்பி, கண்ணின் வழியாகச் சென்று பார்க்கும் விருப்பம் பாழாக, மூலமாகிய புருவ நடுவில் கண்ணைச் சேர்க்கின்ற யோகியே சிவயோகியாம். பார்க்கின்ற மாதரைப் பாராதிருத்தல், மனம் உருக மூலக்கனலை எழுப்புதல். ஊர்த்துவ சிருஷ்டியால் புருவ நடுவை நோக்கியிருத்தல் ஆகிய மூன்றும் காமத்தை வெல்வதற்குரிய சாதனங்களாம்.
1938. தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்
ஊனே அவற்றுள் உயிர்ஓம்பா மாயுமே.
பொருள் : காம மிகுதியில் பொருந்தினால் திருவருளால் வரத்தக்க சிவ யோகம் பொருந்தாது. அக்காமம் முதலியவற்றுள் பொருந்துவோனும் மனவலி இழந்து அஞ்சுவான். இனி உடம்பும் தன் இயல்பு கெடும். உடம்பில் உள்ள தாதுக்கள் உயிரைப் பாதுகாக்காமல் அழியும்.
1939. மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
ஏயாஎன் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே.
பொருள் : மாதர் வசப்பட்டுச் சென்று இவர் கூட விரும்பினால் தொடர்ந்து மாறி மாறி வருகின்ற பூர்வம் அபரம் என்ற இருபக்கத்தில் பூர்வம் என்ற வளர்பக்கத்தில் பொருந்தாத முதல் எட்டு நாட்கள் கூடிய இன்பமானது துன்பமாம். பூர்வ பக்கத்தில் பின் ஆறு நாள்களும் கூடுவதற்கு ஆகுமாம் (பூர்வபக்கம் - வளர்பிறை அபரபக்கம் தேய்பிறை.)
1940. ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே.
பொருள் : யோகநெறி நிற்போர் வளர்பிறைப் பக்கத்தில் முன் ஆறு நாட்களும் தேய்பிறைப் பக்கத்தில் பின் ஐந்து நாட்களும் ஆக பதினொரு நாட்களையும் நீக்கி ஏனைய நாட்களில் கூடலாம். இவரின் வேறாய சரியை கிரியை நெறி நிற்போர் மாதர் பூப்பு எய்திய பின்னை, கருப்பாசயத்தில் உள்ள இதழ் வளர்ந்து கொண்டேவரும் இடைப்பட்ட இருபத்தொரு நாட்களில், பூப்புத் தொடங்கிய ஆறு நாட்களுக்குப் பின்னுள்ள அக்காலத்தில் கூடலாம்.
1941. செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நான்கா நூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.
பொருள் : மங்கை நல்லாரை மவுதற்குப் பொருந்திய நற்பொழுது இரவுப் பொழுதேயாகும். அவ் இரவுப்பொழுதிலும் எட்டு முழுத்தம் வாய்ப்புடைத்தென்ப. விந்துவைக் கருப்பையில் தங்கவிடும் காலம் ஞாயிறு திங்களைத் தன்னுள் அடக்குவதான வலப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லுங்காலம். நல்ல காம நூலின் முறைப்படி மருவுதல் செய்க. ஒருகால் இடப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லின் அதனை மாற்றி வலப்பால் விடுக்க. (இருநாள் முகூர்த்தம் - இரவு காலம்.)
1942. விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப்போல்
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே.
பொருள் : பேரன்பாகிய காதல் மங்கையினிடத்து மகப்பேறு ஒன்றே கருதிச் சிற்றின்பம் பற்றுக்களை அறவே விட்டு விரைந்து ஓடும் உயிர்ப்பினை அமைதிப் படுத்திக் கரணங்களைத் திருத்திய கருத்துட் கொண்டு மன எழுச்சியுடன் நடுக்கமின்றிப் பொறி புலன் பத்தும் ஒத்துப் பொருந்தக் கருப்பையில் விந்துவிடும் முறைமையே விழுமிது என்க.
1943. கொண்ட குணனே நலமேநற் கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட காரணம் உட் செல்லக்கண் டேவிடே.
பொருள் : சிறப்பெனக் கொண்ட நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு, என்னும் பெண்மைக் குணம் நான்கும் இயற்கை அன்பு செயற்கை அன்புகளால் ஏற்படும். நன்மையும் மருவும் பருவமாகிய இளமையும் (பேரிளம் பெண்) மணந்த ஞான்றுள்ள கட்டுக் குலையா வடிவமும் மும்மையும் பயக்கும் செம்மை வாயாகிய பவழமும் மலை நேர் பொலியும் முலையும் வாய்ந்து திகழாநின்ற மங்கை நல்லாரை மருவிப் புணர அன்புள்ளத்தை இன்புறச் செலுத்தும்போது கல்வி முறைகளை நன்கு கருதிச் செலுத்துவாயாக.
1944. விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே.
பொருள் : மேல் ஓதியவாறு கூடிக் கருப் பதித்தபின் கருப்பத்தோற்ற முறையானே பின் அம் மகவுக்கு வரக்கூடிய காலக் கணக்குகளை நன்கு உன்னி வாழ் நாள் நிலைமையும் சாநாள் நிலைமையும் சிறந்து குணனும், சிறவாக் குணனும் கீழ்மைக் குணனும் முதலிய எல்லாவற்றையும் தாங்கள் கூடிய கூட்டத்தாலும் ஓடிய உயிர்ப்பினாலும் உய்த்துணர்ந்து நோக்குதல் வேண்டும்.
1945. பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே.
பொருள் : முற்கூறியவண்ணம் பார்த்து, உலகத் தொடர்பின்றிக் கருப்பையில் பெற்று, கச்சினை வருத்தும் தனங்களையுடைய பெண்ணின்றும் நீக்கியே, உலகில் சேர்க்கப்பெற்று அச்சிசு இரண்டு மாதங்கள்கூட வாழாமல் நீங்கினும், மூப்படைந்து பின்னாளில் நீங்கினும் எல்லாம் எண்ணுதற்கு ஆகும்.
1946. வித்திடு வோர்க்குஅன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்குஅன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே.
பொருள் : வித்தினை விதைப்பவர்க்கு அல்லாது விதையாதவர்க்குப் பயன்இல்லை. வித்தின் (விந்துவின்) பயனை அறிந்து ஒளி செய்வார்க்கு அல்லாது அறிவும் இல்லை. விந்துவே ஒளியாக மாறுகிறது என்று சலனமின்றி உணர்வாராயின் தயிரில் இருந்த வெண்ணெய் போல உயிரில் இருந்த சிவக்கனியாகும். (மத்து - தயிர்.)
1947. கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்துறு மாறுஇவை கற்பனை தானே.
பொருள் : கருத்தினில் பிரமலிபி. ஆயுள் முதலிய யாவும் ஈசன் கருவில் பதியும் உயிரோடு கருத்தில் அமைத்துத் தானும் உள்ளான். அவ்வாறு கருத்தில் உள்ளதே வித்தாகப் புறத்திலே உள்ளதைக் காரண காரியமாகக் கருத்தில் கொள்வது கற்பனையாகும். கரு பதியுங் காலத்தில் மேல்விளைவு எல்லாம் அமைந்துள்ளன.
1948. ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே.
பொருள் : என்றும் நீங்காத உள்ளத்தின் ஒளிமண்டலம் உடலுடன் சார்ந்து நிற்க, நிற்கின்ற அழியாப் பிராணனும் அளவில் ஆற்றலும் குறைவற்ற புத்தி விலாசமும் தவமும் செபமும் பிரணவ சித்தியும் அழியாத எண்வகைச் சித்திகளும் தூலவிந்து வற்றில் அடைத்தக்கனவாம்.
1949. வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிச் சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே.
பொருள் : தூலவிந்து வற்றிப் போகும்படி மூலாதாரத்திலுள்ள குண்டலினியாகிய நெருப்பைப் பெருக்கி, விந்து கீழ் நோக்காதவாறு தடுத்து மேலே ஏற்றுவதால் அமையும் (பிரமரந்திர) ஞானக்கினியில் பொருந்தி அங்குள்ள ஒளியை அடைந்து பூரண சந்திர மண்டல அமுதைப் பல தடவை பெருக்கி உண்பவரே சிவயோகியாவர். (சுற்றிசுழி - ஆஞ்ஞை)
1950. யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.
பொருள் : பண்டைப் பயிற்சி கொண்ட வுளத்தால் வேட்கை உற்றாலும் விந்துவினை வெளிவிடாது. உள்ளடக்கி நுகர்ந்து இன்புறும் நன்மையரும் உளர். அவர்கள் வருமாறு: யோகியும் ஞானியும் தலையாய சித்தனும் தலையாய யோகியும் தலையாய ஞான முதல்வனும் ஆவர்.  இவ் ஐவர்களும் எஞ்ஞான்றும் விந்துவினை மைந்துடன் காக்கும் தலைமையர் ஆவர்.
1951. அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.
பொருள் : அகத்தவ யோகியர்க்கு ஏனையோர்க்கு உயிர்க்குயிராய்த் திகழும் அண்ணலாகிய சிவபெருமான் உடலாயத் திகழ்வன். அங்ஙனம் திகழ்வதால் விந்து மாயையாகிய அனற் பிழம்பும் மண்ணிடை வீணாக் கழிப்பின் மாயச் செய்யும் உயிர் விந்துவாகிய அனற்பிழம்பும் கருதப்படும் மூலக் கனலுடன் கூடிக் கலந்து, ஒப்பில் பேரொளிப் பிழம்பாய்ச் சுடர்விட்டு, அகத்து அமிர்தாகி யோகிக்குத் தாவில் அறிவாகும் என்ப. கண்ணுங்கனல் மூலாக்கினி.
1952. அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே வாயுமே.
பொருள் : மக்கள் விந்துவின் அருமையும் பெருமையும் அறியாது கெடுகின்றமையின் என்றும் இந்திரியங்கள் வசப்பட்டு மனம் அழிந்து உடலழிந்து வருந்துகின்றார்கள். ஞானமே சொரூபமாய் நனவில் துரியாதீதத்தில் சிவத்தோடு செறிந்து பொருந்த கீழுள்ள வீரியம் ஊர்த்துவ முகம் கொண்டு ஒளியாகித் தூலவிந்து அழிந்துவிடும்.
1953. மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்
காதலது ஆகிய காமம் கழிந்திடும்
காதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசறும் காலமே.
பொருள் : பெண்களைக் கொல்லும் எமன் என்று நினைக்க, காதலால் விளைவதாகிய காமம் நீங்கும் காமக் கழிவு இல்லாமையால் இறப்பும் இல்லை. நூறு கோடி ஆண்டுகள் சிவச் சோதியில் கலந்து ஆணவக் குற்றம் நீங்கும் காலமாகும். காமக் கழிவின்றேல் நூறு கோடி ஆண்டுகள் வாழலாம்.
1954. காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.
பொருள் : விந்துவை (வீரியத்தை) வென்றவன் காலத்தை வென்றவன். விந்துவை அழித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிந்தவனாவான். விந்துவை வென்று விளங்கும் காலங்களில் குண்டலினியாகிய சத்தி மூலவாயுவில் பொருந்தி மேலெழும் இன்பத்தை அறியமாட்டார்.
1955. கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக்காதல்
நலத்தக வேண்டில்அந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே.
பொருள் : காலத்தால் கருத்தொத்த இருவரும் மருவி வாழ விரும்பினால் கூடுவதற்குத் தகுதியெனக் கருதும் நாளின் முதல் நாளில் காதற் பெரும் பயனும் நன்றாதற் பொருட்டுக் காதலியின் மலக்குடலில் தங்கும் மலத்தை அகற்றி, வாத பித்தம் ஐ என்னும் மூன்றினையும் இருக்க வேண்டிய முறையில் இருக்கச் செய்து நன் முறையாகக் கூடி இன்புறுவீராக.
1956. மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளும் அவ்விந்துவே.
பொருள் : மூலம் முதலாகச் சொல்லப்படும் ஆறு நிலைகளுக்கும் அப்பாலுள்ள தூவெளி மேனிலம் எனப்படும். அங்கு விந்துவும் நாதமும் தோன்றும். அவற்றை நாடுநாடி வழியாக நடத்தி அகத்தவ ஆசான் கூறி அருளியபடி செய்து அவ்விந்துப் பாலாகிய அமிழ்தத்தினைப் பருகுவராயின் அவர் பற்றறப் பற்றினாராவர். அவர்க்குப் பிறப்பிற்கு ஏதுவாம் மருள் முற்றும் மாயும். அவ்விந்துவும் அடங்கும். (மாலானது - போகமானது. மாளும் - கட்டுப்படும்.)
1957. விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.
பொருள் : தூலவீரியம் விளையும் முறையும், அவ்வீரியம் முதிர்ந்து நிற்பதனால் எய்தும் பயன் முழுதும் அறியாதார் அடையும் அழிவும், அறிந்தவர் விந்துவை அடக்கி ஆள்வதால் அடையும் சிறப்பும், அதனால் பெருகிய நாதமும் அதன் வகையும் ஆகியவற்றை ஆராய்ந்து அறிவோர்க்கு விந்து செயம் ஆகும்.
1958. விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.
பொருள் : விந்து என்று சொல்லப் படுகின்ற உயிர்வாழ் வித்தினைப் பொருந்திய மூலத்திடத்து விளங்கும் மூல அனலால் செம்மையுறச் செய்து, கொப்பூழ் முதல் நெஞ்சம் வரையுள்ள ஞாயிற்று மண்டிலத்துக்கு வலப்பால் நாடிவழியாக ஏற்றி, அதன்மேல் நெஞ்சமுதல் நெற்றி வரையுள்ள திங்கள் மண்டிலத்துக்கு இடப்பால் நாடி வழியாக ஏற்றி, அத்திங்கள் மண்டிலச் சார்புறத் தண்மையும் வெண்மையுமிக்க வண்மை அமுதமாகும். (வீசம் - வித்து)
1959. அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி
அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.
பொருள் : அமுதமாகிய சந்திர மண்டலத்துள்ள விந்துவில் (ஒளியில்) உடற்கண் தோன்றிய விந்து (வீரியம்) கலந்து கெட உடம்பு முழுதும் அமுதப் புனல் பரவி சிவாக்கினியில் இலயிக்க அமுத மயமான சிவபோகம் விளையும் ஆதலால், சிவயோகிக்கு அமுதப் பெருக்கமாகிய சித்தி பொருந்தும். (பிலாவனம் - முழுக்காட்டுதல். திளைத்தல்)
1960. யோகம்அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.
பொருள் : யோக நெறியால் விந்து அழியாதவாறு புணர்ந்து, ஆணும் பெண்ணுமாகிய இரு உடலும் கலந்தாலும் விந்து நழுவிப் பெண்ணிடத்துப் போகாமல் அமையும் போகமே சிவபோகமாம். இவ்வாறு நல்ல முறையில் போகத்தில் மாதர் ஆசையைத் தீர்க்க மாட்டார்கள் மூடர்கள். என்னே அறியாமை.
1961. மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.
பொருள் : யோக நெறியில் நிற்பவர் மாதரோடு புணர்ந்தாலும் அவ்விந்துவைக் காதலினால் விடமாட்டார். மாதர்களோ யோகியர்களை உயிர்போலக் கருதி ஆசை கொண்டு வருந்துவார்கள். சொல்லப்புகின் நெடுநாள் பழகிய காதலரைப்போல அப்பொழுதே உயிர்க் காதல் கொள்வர்.
1962. சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழுமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்தவிந் தாமே.
பொருள் : முன்னே கூறிய சத்தியால் விந்து செயம் உண்டாகும். தூண்டிய மூலாதாரத்திலுள்ள கனலை மேலேறச் செய்து, நாற்புறமும் சிதறிப் போகாவண்ணம் வீணாத்தண்டூடே சப்த உணர்ச்சியில் ஒன்றச் செய்து அமுதம் உண்ண ஒளி மண்டலம் ஆகும்.
1963. விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல
வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவம்அக மாகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.
பொருள் : சிரசின் மேலே விந்துவும் நாதமும் (ஒளியும் ஒலியும்) உயர்ந்து பொருந்த, வந்த மூலக் கனலின் வெப்பம் மயிர்க்கால் தோறும் நிறைய நம் சிந்தனை ஆன்ம போகத்தை விட்டுச் சிவோகம் பாவனையில் நிலைப் பெற, உண்மையான உடம்பில் விந்து (வீரியம்) வற்றிவிடும். (சிவ+அகம் - சிவோகம் - சிவன் நான்)
1964. வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே.
பொருள் : விதையைக் குத்தி அரிசியாக்கி உண்பவன் விதையாலாகிய பயனை அறியமாட்டான். விதையைக் குத்தி உண்ணாமல் விதையை வறுத்து உண்பவன் விதையைக் குத்தி உண்பானைப் போலவே தவிர வேறல்லாதவன். இவ்விரண்டு அல்லாத மூன்றாமவன் விதையைக் குத்தி உண்ணாமல் விதையை விதைத்து விதையின் பயனைப் பெருக்கிக் கொண்டவன் ஆவன்.
1965. அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.
பொருள் : உண்ணும் நல்லுணவால் ஏற்படும் விந்து தன் உடம்பு அகத்தே யோகப் பயிற்சியால் அடங்கும் வகையினைக் கண்டு, உயிர் நெடுநாள் நிலைபெறுமாறு அவ் விந்துவினைக் கீழ் நோக்கவொட்டாது மேலேற்றி மின்னல் போலத் தோன்றி மாயும் இவ்வுடம்பு அகத்து விந்து நாதம் இரண்டினையும் ஒன்று கலந்து உடம்பகத்து ஆக்க. அழகினையுடைய காரண காரியமாகிய இருவகை விந்துவும் உடம்பின்கண் கட்டுப்படும்.
1966. அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.
பொருள் : உண்ணும் நல்லுணவால் ஏற்படும் விந்து தன் உடம்பகத்தே யோகப் பயிற்சியால் அடங்கும் வகையினைக் கண்டு உயிர் நெடுநாள் நிலைபெறுமாறு அவ்விந்துவினைக் கீழ்நோக்க ஒட்டாமல் மேலேற்றி மின்னல் போலத் தோன்றி மாயும் இவ்வுடம்பு அகத்து விந்து நாதம் இரண்டினையும் ஒன்று கலந்து உடம்பகத்து ஆக்க, அழகினையுடைய காரண காரியமாகிய இருவகை விந்துவும் உடம்பின்கண் கட்டுப்படும்.
1967. நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை
சென்று பராசத்தி விந்து சந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே.
பொருள் : பஞ்சாக்கரத்தில் முதன்மையாக உள்ள சிகாரம் இரு கண்களில் அக்கினித் தன்மையோடு பிரகாசிக்கும் கலையாக, பிரணவத்திலுள்ள மகாரம் தொண்டையைக் கடந்து வெளியான போது அ உ ம மூன்றும் ஒன்றாக, அவை பராசத்தி நிலையமாகிய புருவ நடுவில் சென்று பொருந்துவதால் அமையும் விந்து செயத்தினைப் பொருந்துமாறு உரைப்பதே உபதேசமாகும்.
1968. தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.
பொருள் : சிவகுரு அருளிச் செய்யும் சிவய நம என்னும் தமிழ்மறை தானே உபதேசமாகும். சிவபெருமான் தன் கலப்பில்லாத ஒரு பொருளும் இல்லை. தூமாயை யினின்றும் வெளிவந்த கலைகள் பதினான்கு என்ப. மானாகிய மனம் சிவசிவ என வழுத்தும் நினைவால் செவ்வை  யுற்றடங்க அதன்பின் இறுப்பாகிய புத்தியும் அடங்க ஆருயிர் சிவத்து அடங்க அதுவே சிவகதியாகும்.
1969. விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.
பொருள் : விந்து நாதம் என்னும் இரண்டும் கட்டற்று விளைய விளைந்தது உயர்திணை. வினைக்கீடாக ஆணையால் தோன்றிய இயங்குதிணையாகிய பல உயிர்கட்கு உள்ளும் ஆறறிவு நிரம்பப் பெற்றது உயர்திணை. மன்னுயிர்கள் எல்லாவற்றிற்கும் அந்தமும் ஆதியுமாகிய அருந்தமிழ் மந்திரம் இரண்டு. அவை முறையே சிவசிவ நமசிவய என்ப. இம்மந்திரவலியால் விந்துவைக் கட்டுப்படுத்தியவருக்குச் சிவோகமே விளையும். (சிவோகம் - சிவன் திருவடிக்கீழ் உறைந்து பேரின்பம் நுகர்தல்.)
1970. வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.
பொருள் : விந்துவை மீண்டும் முளையாதவாறு வறுக்கும் முறைமையும் எங்கும் உலாவும் மனத்தைத் தடுத்து நிறுத்தலால் அமையும் வெற்றியைத் தரும் முறையும் அதனை உயர்ந்து செல்லுகின்ற சகஸ்ரதளத்தில் கொண்டு செலுத்திப் பக்குவம் செய்கின்ற முறைமையும் அக்கொடிய வினைகளைப் போக்கும் நாளில் வரும். (அத்திப்பழம் - உடல்.)
1971. விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே.
பொருள் : விந்துவும் நாதமும் அருளால் பொருந்தி யுடன் கூடித் திங்களுடன் தலைப்படுமாயின் ஆயிரஇதழ்த் தாமரைப் பரவெளியினின்று ஊற்றெழும் அமிழ்தம் வந்து வெள்ளம் போன்று இடையறாது பெருகும். அவ்விடத்துத் திருஐந்தெழுத்து மந்திரமே ஆகுதியாகும். (அங்குதி மந்திரம் - அப்போது உண்டாகும் உறுதிப்பாடு.)
1972. மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே.
பொருள் : இணைவிழைச்சாகிய காமத்தை விரும்பினால் மனத்தொடு பொருந்திய நிலையான எண்ணமும் மனம் கூடி உணரும் ஓசையும் என்று சொல்லப்படுகின்ற இக்கூட்டத்தால் எழுந்து சொல்லுகின்ற சொல் கனத்த இரதமாகிய பயன் இல்லதாகும். இணைவிழைச்சு (ஆண் பெண் போக விருப்பம்)
1973. சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்துஅறி கின்ற இடம் அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே.
பொருள் : கண் நாக்கு மூக்குச் செவி மெய் என்னும் அறிதற் கருவி ஐந்தும் ஈண்டுச் சத்தமென்னும் சொல்லாற் பெறப்படும். அவ் ஓசையை வெளிப்படுத்தத் துணைபுரியும் மனமும் அம்மனக்கருத்து ஒத்து அறிகின்ற புலன்களும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்ந்து யார் இயக்க இயங்குகின்றன என்னும் இயற்கை மெய்ம்மையினை அறியார். உண்மைச் சிவன் அருளால்  இவை இயங்குகின்றன என்று அறிய வல்லார்க்கு அவ்வறிவாகவே அத்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருள்வன். அதுவே அவனது தூய இருக்கையாகும்.
1974. உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய கந்தரம்  மேல்வெளி யாமே.
பொருள் : உடலைத் தாங்கும் உறுதியான பாதம் நிலம் ஆகும். பாத்திலிருந்து கொப்பூழ் வரை நீராகும். கொப்பூழில் இருந்து மார்புவரை தீயாகும் மார்பிலிருந்து தோள்வரை காற்றாகும். கழுத்துக்கு மேல் வான வெளியாகும். இம் முறையாக உடம்பின்கண் ஐம்பெரும் பூதநிலை நிற்பன காண்க.
22. ஆதித்தநிலை - அண்டாதித்தன்
(ஆதித்தன் - சூரியன். அண்டாதித்தன் - அண்டத்தில் விளங்கும் சூரியன். சூரியன் அண்டத்தில் விளங்கும் நிலையைக் கூறுவது.)
1975. செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கும் தவமே.
பொருள் : சூரியன் முதலான ஒளி உருவுடைய தேவர்கள் வெண்மேகம் சூழ்ந்த மேரு மலையை வலம் வருவதற்குரிய காரணம், ஒளி வடிவான எமது ஈசனாகிய  இறைவனது இரு திருவடிகளின் ஒளி தம் ஒளியாக வேண்டும் என்பதே. கிரி வலம் வந்து வணங்குவதே அவர் செய்யும் தவமாம்.
1976. பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.
பொருள் : சூரியனே திருமால் ஆவன். உயிர்கள் அனைத்துக்கும் நிலைக்களனாக விளங்கும் புண்ணிய நாதனாகிய சிவனும் ஆவன். பகைமை நீங்கி ஏழுலகங்களும் தழைத்து ஓங்கச் செய்யும் சூரியனே எல்லா உயிர்களுக்கும் முதற் பொருளும் ஆவன்.
1977. ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
பொருள் : ஆதித்தனாகிய சிவஞாயிறைச் சோதியாகிய உலக ஞாயிறு ஆயிரம் திருப்பெயர்களை வாயாரப் புகன்று வழிபட, அஞ்ஞாயிற்றினுள் அளவில் சுடரொளியாய் அவன் விளங்குவன். அச்சிவன் திருப்பெயரை மறையவராயினும் வானவராயினும் காதலால் ஓதுவராயின் சிவனருள் அன்பு செழித்துப் பழுக்கின்றவாறாகும் சிவன் திருப்பெயர் நமசிவய என்ப.
(ஆதித்தன் - சிவசூரியன்; சோதி - அண்டச் சூரியன். ஆதியில் சிவபிரானிடத்தில்)
1978. தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.
பொருள் : மேலோதிய சிவபெருமா÷ உலகினுக்கு என்றும் ஒரு படித்தாய் நிற்கும் மெய்ப்பொருளாவன். அவனே உலகியல் நடத்தற் பொருட்டுத் தையலாகிய திருவருளாயும், அவனே ஆருயிர்கட்கு இடையறா இன்பருளச் சம்புவாய் நிற்பன். அவனே தண் சுடராகிய திருவருட் பேரொளியாய் நிற்பன். (தத்துவமாய் - மெய்ப்பொருளாய். தையல், சம்பு - சத்தி, சிவம், நேர்மின் ஆற்றல் எதிர்மின் ஆற்றல். தண்சுடர் - அருள் ஒளி)
1979. வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்
துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்
மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.
பொருள் : வலையம், முக்கோணம், வட்டம், அறுகோணம், துலை, இருவட்டம் ஆகிய அறுவகை அடையாளங்களால் மூலமுதல் ஆறிடங்களுள் அவற்றின் துய்ய தன்மையை ஆராயின், சுழன்று கொண்டிருக்கும் வட்டத்தில் பதினாறு இதழ்த் தாமரை காணப்பெறும் அதன்கண் நெஞ்சத்திடத்து செவ்விதாக ஞாயிறு தோன்றும். இது விசுத்தியில் சூரியன் உதிக்கும் முறை கூறிற்று.
1980. ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்
சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்
கேத முறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் நீட்டில் சோடசம் தானே.
பொருள் : மேல்ஓதியவாறு ஞாயிற்றுக்குரிய நிலைக்களனாகிய முக்கோணத்தில் யாவற்றையும் விளக்கித் திகழ்கின்றவன் பகலவன். பகலவன் என்றாலும் சூரியன் என்றாலும் ஒன்றே. அவனது நாலாங்கால் குற்றந்தரும் கேணி போன்றாகும். பகலவனுக்கு உரியன எட்டிதழ்த் தாமரை, பதினாறு இதழ்த் தாமரை என்ப. குற்றந்தரும் கேணி என்பது திங்களின் நாலாங்கால் இறக்கும் தன்மையான் நேருவது (சோடசம் - பதினாறு).
1981. ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீரே.
பொருள் : சூரியனோடு உலக அறிவு கெட்டது. உலக அறிவைப் பற்றிய சூக்குமை பைசந்தி மத்திமை வைகரியாகிய வாக்குகள் பிதற்றி ஓய்ந்தன. இவ்வண்ணம் அண்ட கோசத்தில்பராசக்தி நிலை பெற்று உணர்த்து கின்ற வேதம் கூறும் அனுபவப் பொருளை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள்.
1982. பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
பொருள் : சுவாதிட்டானத்துக்குக் கீழுள்ள மூலாதாரத்தினின்றும் மேல் வருவது சூரியன் வரும் வழியாகும். அது யோகியர் அல்லாத பிறரால் காணமுடியாத அருமையான பொருளாகும். அவ்வாறு யாராலும் காணமுடியாத சூரியன் நீருக்குரிய மணி பூரகத்துக்கும் தீயினுக்குரிய அநாகதத்துக்கும் இடையில் உதிப்பவன் ஆவான்.
1983. மண்ணை இடந்துஅதின் கீழொடும்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.
பொருள் : முன்னர்க் கூறியவாறு அச்சூரியன் மண்ணீரலில் இருந்து சுவாதிட்டானம் வந்து அங்கு அதைப் பிளந்து மூலாதாரம் சென்று அங்கிருந்து ஆகாயக் கூறான ஆஞ்ஞையில் பிளந்து உடலுக்கு வெளியே சோதியாய் நின்றிடும். இருகண்பார்வையும் கொண்ட ஆஞ்ஞையில் களிப்பூட்டுகின்ற ஆனந்தத்தால் நாம் தியானிக்கும் உரிமைக்கு உடனாய் நின்றனன். பூகோள அறிவின்படி பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு பகல் தோன்றுவதும் சூரியனைப்பூமி சுற்றி வருவதால் ஓர் ஆண்டு ஆவதும் நாம் படிக்கிறோம். (அவ்வாறு பொருள் கொள்ளினும் அமையும்.)
1984. பாரை இடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.
பொருள் : உலகம் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றது. ஆனால் ஞாயிறு உலகைச் சுற்றி வருவதாகச் கூறுவோர் உண்மை உணராத வராவர். அவ்வுண்மையினை நுண்ணுணர்வினரே உணர்வர். தாழ்ந்த நிலையினர் பொருட்டுச் செய்யப்பட்ட நூலையே உயர்ந்த நூலாகக் கருதிச் சிலர் ஞாயிறு திருமலையினைச் சுற்றி வருகிற தென்பர். உயர்ந்தோர் உச்சித் துளைவாயிலாக ஞாயிற்றைக் காணும் முறையிற் காண்பர். ஞாயிற்றைப் பகலவன் எனவும் பகலோன் எனவும் கூறுவர். (திரன் - சிவபெருமான். ஊரை - ஈசன் இருக்கும் புருவமத்தி ; உச்சித் தாமரை)
23. பிண்டாதித்தன்
(பிண்டாதித்தன் - உடம்பில் விளங்கும் ஆதித்தன்.)
1985. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.
பொருள் : நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் போது இளம் யானை வடிவினனாகிய பிரணவக் கடவுள் என்னுடைய கருத்தில் எப்போதும் இருந்தனன். இதனால் மலங்களைச் செற்று வீணாத்தண்டில் உணர்வு கீழ் நோக்காமல் மேல் நோக்கி எழ, வெல்லுதலைச் செய்கின்ற விரிந்த கிரணங்களையுடைய சூரியன் வெளிப்படுவன்.
1986. ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த
னோடே அடங்குகின் றாரே.
பொருள் : சூரியன் மேலெழுந்து சென்று அடங்கும் இடமாகிய ஈசான திக்கைக் கண்டு, அங்கிருந்து மேற்சென்று ஊர்த்துவ சகஸ்ரதளத்தை அடைந்து அங்குள்ள ஒளியில் நிற்க வல்லவரே தம்மை உணர்ந்தவராவர். இவ்வுண்மையை உணராது பிதற்றும் உலகவர் எல்லாம், கீழுள்ள சூரியனை மேலெழச் செய்ய வகை அறியாது மாய்ந்து ஒழிபவரே யாவர்.
1987. உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.
பொருள் : சூரியன் மூலாதாரத்திலிருந்து உருவிக்கொண்டு புறப்பட்டு உலகமாகிய உடலை வலம் வந்து, சொருகிக் கிடக்கும் இடமாகிய ஈசான திக்கை அறிவார் யாரும் இல்லை. அங்ஙனம் அறிகின்ற அறிவுடையோர்க்கு என் உள்ளத்திலுள்ள அன்பு அவர்பால் உருகி எழும்.
24. மன ஆதித்தன் (மண ஆதித்தன் - மன மண்டலத்தில் விளங்கும் சூரியன்.)
1988. எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும்என ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.
பொருள் : வெப்பக் கதிரை வீசும் ஞாயிறும் தட்பக்கதிரை வீசும் திங்களும் மேல் கீழாய் நேரொக்கத் தோன்றும் காலம் உவா எனப்படும் உவா- முழுநிலா, அங்ஙனம் விரிந்து எறிக்கும் கதிரினுள் ஆருயிர் இயங்கும். (அமாவாசைக்கும் உவா என்று பெயர்.)
1989. சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டு உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.
பொருள் : சந்திரகலை என்று சொல்லப்பெறும் இடகலையும் சூரிய கலையென்று சொல்லப்பெறும் வலப்பால் கலையும் முறையாக இயங்கிக் கொண்டிருப்பின்  நற்றவமாம். சிவ பூசைக்கு உற்ற அமைவாம் என்க. சூரிய கலையின்கண் சந்திரகலை பொருந்தி நிகழுங்காலம். பூசனைப் பொழுதாம் என்க. அக்கனல் நடு நாடி வழியாகச் செல்லுங்கால் சிந்தை தெளிவுண்டாகும். இவரே சித்தம் சிவமாக்கப் பெற்ற திருவினர். இவரே சிவமாய் அமர்ந்திருப்பார்.
1990. ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதியோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.
பொருள் : பிங்கலை யாகிய வலப்பால் உயிர்ப்பு எனப்படும் ஞாயிறும் அனலாகிய தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும் கலையெனப்படும் நடுநாடியும் ஆகிய நான்கும் கலை என்று அழைக்கப்படும். அருக்கனாகிய வலப்பால் உயிர்ப்பும், மூலத்தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும் நடு நாடிக்கண் கூடிப் பொருந்த மேலோதிய நிறைநிலா ஆகும் என்று அறிக. அகத்தே காணும் நிறைநிலா என்பது திங்கள் அமிழ்தத் தீஞ்சுவை வெண்ணிலா என்க. இதற்கு இடம் நெற்றிப் புருவம் என்க.
1991. ஈர்அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத்  தார்க்கும் உணரா உணர்வது
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றது
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.
பொருள் : அனல் மண்டலத்தையும் சூரிய மண்டலத்தையும் கடந்து விளங்கிய சந்திர மண்டல ஒளி ஓர் அண்டம் என்ற அனல் மண்டலத்தில்  காம உணர்வோடு வாழும் மக்கள் ஒருவருக்கும் புலப்படாததாகும். சிரசுக்கும் மேல் விளங்கும் பிரமாண்டத்தில் உயர்ந்து செல்லும் ஒளியாய் நின்றவர் யாவர் ? அந்நிலையை அடைந்த அவரே அவ்வொளியை அறியத்தக்கவர் ஆவர்.
1992. ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே.
பொருள் : மனமண்டலத்துள் சூரியன் பிருதிவியாதி ஒன்பது நிலைகளிலும் பொருந்தி உடம்பாகிய உலகத்தை வலம் வரும். இவ்வகையான ஒன்பது தத்துவங்களும் ஈசனது சத்தி நிலையாகும் என்பதை அறிபவர் இல்லை. முன்னர் இவ்வகையான ஒன்பதிலும் ஆன்மா பொருந்தி உள்ளதாயினும் சிவத்தின் அருள் இல்லாதவர் இன்பம் இல்லாதவராய் இருள் சூழ்ந்த அண்ட ஆகாயத்தைப் பெற்றுள்ளனர். (ஒன்பது - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், அக்கினி, தாரகை.)
25. ஞானாதித்தன் (ஞானித்தன் - ஞானசூரியன்)
1993. விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து
அந்த அபரம் பரநாத மாகியே
வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து
உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.
பொருள் : விந்து ஒன்றே தூலமாகிய அபரம் என்றும் சூக்குமமாகிய பரம் என்றும் இரண்டாக விரிந்து, அந்தத் தூலவிந்துவே மேல் நோக்கியபோது பரநாதமாகி மேலான நிவிருத்தியாதி பஞ்ச கலைகளில் வந்து ஞான சூரியனின் அருணோதயம் என்று சொல்லுமாறு உள்ளத்தில் மேலெழுந்து தோன்றும். விந்துவே தூலமாகிய அபரநிலையில் வீரியம் என்றும் சூக்கும மாகிய பரநிலையில் ஒளி என்றும் ஆகிறது. (அருணோதயம் - சூரியனது தோற்றம்.)
1994. உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.
பொருள் : உள்ளமாகிய மன மண்டலத்தில் அருணோதயம் போன்று எழுகின்ற ஓசையே தெளிந்த பரநாதத்தின் செயலாதலின் வள்ளலாகிய சிவனருளால் வைகரியாதி வாக்குகள் பரவிந்துவோடு கூடிப் பஞ்ச கலைகளிலிருந்து தோன்றும் உள்ளத்து எழுகின்ற நாதமே அருணோதயமாகும்.
1995. தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்
மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.
பொருள் : தேவ தேவனாகிய சிவன் சுற்றியுள்ள எண்திசைகளிலும் மேல் கீழ் என்ற இரண்டு பக்கங்களிலுமாகப் பத்துத் திசைகளிலும் வெளிப்படுவான். பழமையான காலத்தில் இவனை மூவர் பிரான் என்றும் பிற்காலத்தில் வந்தவர் பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன் என்ற நால்வர்க்கும் நடு நாயகமாய் உள்ளவன் என்றும் உரைத்தனர். ஆனால் வானோர்கள் இவனையே தங்கள் தலைவன் என்று கூறுவர். (மூவர் பிரான் என்றது வேதகாலத்திலும், நால்வர் பிரான் என்றது ஆகம காலத்திலும் ஆம்.)
1996. பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.
பொருள் : புவனங்கள் அனைத்துக்கும் தலைவனும் எந்தையுமாகிய சிவம் கற்பனைப்பொருள் அல்ல உண்மையில் உள்ளவனேதான். மைபோன்ற இருளை நீக்குகின்ற சந்திரன் அக்கினி சூரியன் ஆகியவை அண்டகோசத்தில் கீழ் முகமாகச் செயல்பட்டபோது  உண்டான இருளை நீக்குகின்ற ஞானச் செல்வனாகிய சதாசிவன் என்னுடைய வீணாத் தண்டின் இருளை அகற்றக் கீழிருந்து மேல்வரை கலந்திருந்தான்.
1997. தனிச்சுடர் எற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.
பொருள் : ஒப்பற்ற சிவ ஒளியானது நிறைந்த அண்டகோசஇருளை நீங்கச் செய்து, பெறுதற்குரிய கனியினின்றும் ஊறுவதாகிய தேன்போலும் இனிய அமுதம் சுரக்கச் செய்யும். கனிந்த சுடர் போன்று நின்று கயிலாயபதி நிறைந்த சுடர்போல் என சிரசின் மேல் விளங்கும் தன்மையுமாவான். (அளித்திடும் என்பது எதுகை நோக்கி அனித்திடும் என்றாயிற்று.)
1998. நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசையொளி யாயிடும்
ஆரறி வாரிது நாயக மாமே.
பொருள் : அனுபவ ஞான வடிவாக ஆன்மாவினிடம் நிரம்பியுள்ள பேரொளியாகிய பிழம்பு (சிவம்) தங்கு தடையின்றி எல்லாப்  புவனங்களிலும் வியாபித்து நிற்கும். சூரிய ஒளி படராத இடத்திலும் இவ்வொளி படர்ந்து நிற்கும். இதுவே அனைத்துக்கும் தலையானது என்பதை யார் அறிவார்.
1999. மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி ஆயிடும்
சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.
பொருள் : மண்தலமாகிய நிலவுலகத்துள்ளே விளங்கித் தோன்றும் ஒளியுடையது ஞாயிறு. இதுவே மூலத்திடத்து விளங்கும் ஞாயிறு வாகும். அதுவே மிடற்றினிடம் என்று சொல்லப்படும் விசுத்தியின் கண் கதிர்காலும் ஒளியாய்த் திகழும். அவ்வொளி எல்லாத் திசைகளிலும் உலாவி விளங்கும். திருவருளால் நின்ற இடத்திலே நின்று திருவடி உணர்வால் எல்லாம் காண்பார்க்கு இவ் உண்மை எளிதிற் புலனாம்.
2000. நாபிக்கண் நாசிநயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே.
பொருள் : ஆருயிர் உறையும் சீரிய உலகத்துக் கொப்பூழ், கண், நாசி, புருவ, நடு, உச்சித்துளை என்று சொல்லப்படும் ஐந்திடத்தும் உயிருக்கும் உயிராய் அறிவுக்கு அறிவாய் ஒளி கொடுத்தருளும் சிவ பெருமானைத் தூமாயையின்கண் வீற்றிருக்கும் அரன், அரி, அயன் என்று சொல்லப்படும் மூவருமாக மெய்யுணர்ந்தோர் உணர்ந்திருந்தார் என்க. (தூபி - உச்சித்துளை.)
26. சிவாதித்தன் (சிவாதித்தன் - சிவசூரியன்)
2001. அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
பொருள் : சிவ ஒளிக்கு மாறுபட்ட பாச இருளும் அதனால் விளையும் அஞ்ஞானமும், சிவம் பிரகாசித்தபோது நீங்கி அதனுள் ஒடுங்கும். பெரிய சூரியன் எழுச்சிக்கு முன்னுள்ள அருணோதயத்தால் நெருங்கிய இருள் விலகுதல் போலத் தொலைந்தது; சிவசூரியன்முன் அஞ்ஞானத்தின் ஆற்றல் குன்றியது.
2002. கடம்கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.
பொருள் : நீருள்ள குடங்கள் தோறும் சூரியன் தோன்றினாலும் அவன் அக்குடத்துள் அடங்குமாறு மூடி வைத்தாலும் அவற்றில் அடங்கமாட்டான். அத்தன்மைபோல, நீலகண்டப் பெருமான் விரும்பி எழுந்தருளிய உயிரில் அடங்கியிருந்தும் அத்தன்மையதாகும். சிவசூரியன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
2003. தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளியொளி தானிருட் டாமே.
பொருள் : சிவமாகிய தானே விரிந்த கிரணங்களையுடைய சூரியன், சந்திரன், அக்கினியாகிய மூன்றும் இயைந்த ஓர் ஒளியாக விளங்கும், தன்மையை நிரூபிக்கும். தானே அறிவற்ற உடலில் அறிவுடைய உயிரிலும் பிறப்பின்றிக் கலந்துள்ளான். தானே ஆகாயமாயும் அதன் ஒளியாயும் இருப்பதோடு இருளாயும் உள்ளான்.
2004. தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.
பொருள் : தெய்வத் தன்மை பொருந்திய ஒளியுடன் கூடிய சிவாக்கினியும், சூரியனும், சந்திரனும், பூமியும், நீரும், நெருப்பும், காற்றும், விண்ணும் ஆகிய எட்டும், சிவன் உறையும் திருமேனிகளாம். இத்திருமேனிகளைத் தாங்கியிருக்கின்ற பல உயிர்களும் சத்தியே சாதர் முதலிய ஐவர்க்கும் செறிவுடைய இருதயம் முதலிய ஆறு அங்கங்களுக்கும் இடமாகும்.
(ஐவர் (பஞ்சப்பிரமம்) - சத்தியோ சாதர், வாமதேவர், அகோரர், தற்புருடர், ஈசானர் ஆகிய ஐவர்; ஆறு அங்கங்களாவன; இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அஸ்திரம்.)
27. பசு இலக்கணம் (பிராணன்)
(பசு என்றால் கட்டப்பட்டது என்பது பொருள்)
2005. உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.
பொருள் : (தியானித்த அளவில் உணரப்படுகின்ற ஏக நாயகனை, பன்னிப் பன்னிப் பேசும் வேதங்கள் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் பரம் பொருளை, என் உள்ளத்து விளங்கும் தூண்டா விளக்கானவனை அம்ச ரூபன் என்று அறிந்து கொண்டேன்.)
2006. அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்
தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே.
பொருள் : சீவ வாழ்வில் இரண்டு அன்னங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாதனவாம். அவற்றுள் தன்னிலையில் நிற்கும் சிவமாகிய அன்னம் தனக்கு வேறாயது என்று எண்ணினால் வேறுபட்ட அறியாமையோடு கூடிய சீவனாகிய அன்னத்துக்கு என்றும் சிவப்பேறு கிட்டாதாகும். (ஆற்றங்கரை - உலகவாழ்வு, அன்னம் இரண்டு. சிவன், சீவன் பேறணுகாது - தான்வேறு என்று எண்ணிக் கொண்டு இருக்கும் அளவும் முத்தி அடையாது.)
28. புருடன்
2007. வைகரி யாதியும் மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.
பொருள் : வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை ஆகிய வாக்குகளும், மாயை, முதலான மலங்களும், பொய்யான போகங்களை நுகர்விக்கு புருடன் முதலான வித்தியா தத்துவமும், பிறப்பை ஒழிக்கும் ஞானமும் ஆகிய இவற்றைச் சாட்சியாயுள்ள ஈசன் ஆன்மாக்கள் செயற்பட்டு, உய்தி பெறும் பொருட்டு அனாதியே அமைத்தருளியதாம்.
2008. அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
பொருள் : அணுவுக்கும் அணுவாயுள்ளதை ஆயிரம் கூறு செய்து அவ் ஆயிரத்தில் ஒரு கூற்றினை நெருங்க வல்லார்க்கு அணுவுக்கு அணுவானவனும் ஆதிப் பிரானும், மிகச் சூக்குமம் ஆனவனும், ஆகிய பரம்பொருளை அடையலும் ஆகும். (அணு - ஆன்மா; நுண்மை, ஆயிரம் கூறிடலாவது நுணுகி ஆராய்தல். ஆன்மாவில் விளங்கும் சிவத்தை நுணுகி ஆராய்வார்க்கு நெருங்குதலும் கூடும்.)
2009. படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே.
பொருள் : விழுது ஊன்றி விரிவாய்ப் படர்ந்திருக்கும் ஆலமரத்தின் தன்மை முற்றும் அதன் வித்தின்கண் அடங்கியிருப்பது போல், திருவருள் ஒளியினைக் கொண்டு அணுவாகிய ஆருயிர் உய்யச் செந்நெறியைத் தன் திருவுள்ளத்தில் அமைத்தனன் சிவன் அத்திருவருளின் துணையால் அந் நன்னெறியிற் சென்று எந்நாளும்  துன்பத்தை மிகுவிக்கும் பாச இருளை முற்றாக ஓட்டுதல் வேண்டும். ஓட்டி அகத்தும் புறத்தும் ஐந்தொழிற்கூத்து இயற்றியருளும் திருவடிசேர் திருநெறியை நாடுவது நாடற்கரிய பெரு நன்மையாகும். (நடர் - அம்பலக் கூத்தர்.)
2010. அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்று கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.
பொருள் : மிகவும் நுண்மையாகிய அணுவாம் உயிரினுள் சிவபெருமானும், அச்சிவபெருமான் இடமாக ஆருயிரும் வேறு அறக் கலந்து நிற்கும் கலப்புச் சொல்லொணாது என்க. ஆயினும் திருவருட் கண்ணால் அஃது உணர்தல் வேண்டும். அங்ஙனம் உணராதார். செந்நெறிக்குச் சேயராவர். சிவபெருமான் ஒப்பில்லாதவன். அவன் எங்கும் எல்லையின்றிக் கலந்து நிற்கின்றான். அம்முறையால் அவனே இயங்கு திணையும் நிலைத்திணையும் ஆகிய எல்லாப் பொருள்களும் என்று நல்லாரால் சொல்லப் படுகின்றனன். (கணு - பேதம், தணிவு எல்லை.)
29. சீவன்
2011. மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே.
பொருள் : உடலின்கண் பொருந்திய சீவனது வடிவத்தை அளவிட்டுச் சொன்னால் பசுவின் மயிர் ஒன்றை நூறாகப் பிளந்து அதிலுள்ள ஒன்றை ஆயிரம் கூறாக்கினால் உயிரின் வடிவம் பசுவினது உரோமத்தை ஓர் இலட்சம் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும்.
2012. ஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.
பொருள் : எம் இறைவன் ஏனைய தேவர்களைவிடப் பெருமை உடையவன் ஆயினும் தனது எளிவந்த கருணையால் உடம்பினுள் உயிராகக் கலந்தும் விளங்குவான். தேவர்களால் அளவிட்டு அறியமுடியாத தேவதேவன் ஆயினும் ஆன்மா தான் செய்யும் தவத்தின் அளவாகத் தானே அறியும்.
2013. உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.
பொருள் : யோகத்தைப் பயின்று தெளிந்த குரு உபதேசம் செய்ய யோகத்தில் பொருந்திப் பயில்வதற்குள்ள நற்பண்புகள் இல்லாதவராயினும், பழைய வாசனையால் பயின்ற சிவன் பின்னை அனுபவத்தைத் தம்முள்ளே பெற்றுச் சிவரூபம் பெறுவர். குரு உபதேசத்தால் பழைய வாசனை தூண்டப் பெற்று இப்பிறவியில் யோகசித்தி உண்டாகும்.
2014. மாயா உபாதி வசத்தாகும் சேதனத்து
ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றின்ஒன் றாதுஉயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.
பொருள் : உயிர் மாயையின் காரியமாகிய துன்பங்களில் தோய்ந்தும் தானும் அதன் வசமாகும். ஞானமே வடிவாக விளங்கும் குருவின் அருளால் சேதனத்தில் தூண்ட மாயா உபாதிகள் ஒன்றினும் பொருந்தாது உயிரின் செயல் ஒடுங்கும். பயிற்சி வசத்தால் துரிய நிலையில் புகுந்த ஞானமே வடிவாக விளங்கும். மாயா உபாதி - மாயா காரியமான தனு கரண புவன போகங்களால் உண்டாகும் துன்பம். குருவருள் - சிவோகம் பாவனை செய்து சிவப்பேறு எய்திய ஞானாசாரியன் திருவருள்; குரு அருளால் மாயா உபாதிகள் நீங்கி ஞானம் உண்டாகும்.
30. பசு (பசு - கட்டப்பட்ட உயிர்)
2015. கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்
மற்றைப் பசுக்கள் வறன்பசு தானே.
பொருள் : வேத ஆகமங்களை நிரம்பக் கற்ற உயிர்கள் பொருள் அனுபவர் இன்றிப் புலம்பிக் கொண்டு திரிந்தாலும், அரச செல்வாக்கைப் பெற்றுள்ள உயிர்கள் தமக்குரிய விருது கட்டிக்கொண்டு தெரிந்தவர் போலத் திரிந்தாலும், முதிர்ந்த அனுபவம் உடையவரது ஒரு சிறிது ஞானமே உலகத்துக்குப் பயன் தரும். மற்றையோரது வாய்வேதாந்தம் வறட்டுப் பசுபோல் உலகுக்குப் பயன்படாது. (பசுக்கள் - வினையினால் கட்டுண்ட உயிர்கள். கொற்றம் - அரசு. குறி - அரசு மரியாதைக்கு உரிய அடையாளம். பால் - ஞானம் வாய் வேதாந்தம் பேசுவோர் உலகுக்குப் பயன்படார். )
2016. கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே.
பொருள் : ஐம்புலக் காட்டினுள் தம்புலம் அறியாது மேயும் பசுக்களாகிய ஆருயிர்களை வருமாறு செய்வதன்றி வேறென் செய்வது ? திருவருள் உடனாய் நின்று உடல், கலன் உலகு ஊண் முதலியவற்றின்கண் வைத்துள்ள பற்றின் எல்லையினைக் கடப்பித்துத் திவடியிற்கூட்டி இன்புறுவிக்கும் அச்செயலே நல்லதாகிய வல்ல அருஞ்செயல் செய்வதாகும். அத்திருவருள் அவ்வாறு செய்தருளத் திருவுள்ளங் கொண்ட பின்புதான் பண்படா விளை நிலமாகிய ஐம்புலக் கொல்லையினை இவ்வாறு செய்யும் திருக்குறிப்பினை ஆருயிர்கள் உணர்தல்கூடும். அதற்குமுன் ஏதும் அறியா இயல்பினவாகும்.
31. போதன் (போதன் - அறிஞன், சிவஞானத்தை அனுபவத்தில் கண்டவன்.)
2017. சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.
பொருள் : சீவன் எனவும் சிவனெனவும் இரு பொருளாக இருக்கவில்லை. சீவனார் சீவத் தன்மையில் உள்ளவரையில் சிவனை அறிய முடியாது. சீவனார் சிவத்தன்மை மாறி அகண்ட ஞானம் பெற்ற பிறகு சீவன் என்ற பெயரைப் பெறாது சிவம் என்ற பேரைப் பெற்று விளங்கும்.
2018. குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பல்தலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாகுமே.
பொருள் : அறிவொளியாய் விளங்கும் நடராசப் பெருமானும் மனத்தை விளக்காகக் கொண்டு வாழ்கின்ற உயிர்களுக்கு எல்லாம் பல்தலை நாகத்தின் படத்தில் உள்ள நாகரத்தினம் போல் உயிர்க்கூட்டங்களுக்கு விளக்கம் தரும் மேற்பார்வையாளர் ஆகும். பணம் - படம். படத்திலுள்ள நாகரத்தினம் பாம்புக்கு பக்குவம் வந்தபோது ஒளியைத் தரும். அது போன்று கூத்தப் பெருமான் பக்குவம் வந்தபோது ஒளியை நல்குவான்.
2019. அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.
பொருள் : சிவத்தை (அகண்ட அறிவை) விடயமாகக் கொண்டு தம் அறியாமை நீங்கினவனே பஞ்சேந்திரியங்களால் கூட்டியறியும் அறிவை விடுத்து எங்கெங்கும் உள்ளவற்றை அங்கு அங்கு இருந்து காணும் அறிவைப் பெற்றவன் ஆவான். அவனே அறிவுருவாய் எல்லா உயிர்களிடத்தும் அறிவாய் நின்று அறிவன்; அறிவில் பொருந்தி நின்ற அச்சீவனும் ஆவான்.
2020. ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகிநின் றானே.
பொருள் : அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறும் இன்னின்ன என்னும் மெய்ம்மை அறியாதிருந்த அடியேனுக்கு மிகவும் சிறந்த நந்தி யெம்பெருமான் திருவருளால் அறிவிற்கு அறிவாய் நின்று அறிவித்தருளினன். அம்முப்பத்தாறின் தன்மைகளைத் திருவருளால் அறிந்தபின் அம்முப்பத்தாறு மெய்களுக்கும் அப்பால் நின்றருள்பவன் சிவபெருமான் ஆவன் என்னும் மெய்ம்மை புலப்பட்டது என்க.
2021. சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடகி லாரே.
பொருள் : சிவத்தோடு பிரிப்பின்றி விளங்கும் திருவருளில் நின்றறிந்து தெளியமாட்டார் கேட்டினைச் செய்யும் ஐம் மலங்களும் எவ்விதம் தம்மிடம் பொருந்துகின்றன என்பதையும் அறியமாட்டார். உடம்பை வருத்தித் தவங்கள் பல செய்தங்கள் அறிவைப் பாழாக்குகின்றனர். தோழமை நெறியில் விளங்கும் சிவத்தை ஆராயமாட்டார். என்னே அறியாமை ! சிவத்தின் அருளைத் தோழமை நெறி நின்று நாட வேண்டும்.
2022. நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்
நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே.
பொருள் : நாளும் வினை செய்வோர் நாள்தோறும் இறைவன் உயிர்களாகிய நமக்குச் செய்யும் அருட்செயல்களை எண்ணார் நம் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை நளினமாக அவன் ஊட்டுவதையும் அறியார். இறைவன் நல்லவர்களுக்கே நாள்தோறும் அருள் வழங்குதலால் வினை செய்பவர்கள் நாள்தோறும் இதை எண்ண மாட்டார்கள். இறைவன் செய்யும் உபகாரத்தை நல்லறிஞர் உணர்வர்.
32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
2023. ஆக மதத்தன ஐந்து களிறுன
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றுஅறி யோமே.
பொருள் : மிக்க மதம் பொருந்திய ஐந்து இந்திரியங்களாகிய யானைகள் உள்ளன. அவை உடலில் களிப்பினை நல்கும் சந்திர மண்டலமாகிய கட்டுத்தறியில் அணைந்து பொருந்துவதில்லை. இவற்றை அடக்க முயலும் ஆன்மாவாகிய பாகனும் இளைத்து ஐம்பொறிகளின் வல்லமையும் குறைந்தபிறகு யோக நெறியால் திருந்துதல் என்பதை நான் அறியவில்லை. (களிறு - இந்திரியங்கள். இந்திரியங்கள் செம்மையாய் இருக்கும்போதே யோகம் செய்தல் வேண்டும். இளைத்தபின் யோகம் சித்தியாது.)
2024. கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.
பொருள் : கருத்துடைய நல்ல நூல்களைப் பலகாலும் கற்றுணர்ந்து பிராணனது இயக்கத்தை ஆன்மாவாகிய பாகன் மாற்றித் திருத்தலும், வேகமாகப் பாய்கின்ற இந்திரியங்களாகிய குதிரைகள் திகைத்து நிற்குமே தவிர ஏவியவுடன் பாய்ந்து செல்ல மாட்டா. பிடரியின்கண் நன்கு ஏறியிருந்து மிகவும் தூண்டி நடத்தினாலும் அக் குதிரைகள் முன்னே சென்று வழிச் செல்லமாட்டா. யோகப் பயிற்சியின்றி ஐம் புலன்களை அடக்குவது முடியாததொன்று யானையும் வருத்தம் உறாமல் வழிக்கு வருவதில்லை.
2025. புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.
பொருள் : ஐம்பூதங்களாகிய இடங்கள் ஐந்து ஞானேந்திரியங்களாகிய பறவைகள் ஐந்து. அவை சென்று பற்றும் தன் மாத்திரைகளாகிய புலன்கள் ஐந்து கன்மேந்திரியங்கள் ஐந்து. அவற்றின் செயல்களாகிய வசனாதிகளும் ஐந்து மாயையாகிய குலம் ஒன்று, அறிவாகிய கோலைக் கொண்டு அவற்றைச் செலுத்துகின்ற ஆன்மாவாகிய மேய்ப்பான் ஒருவன் உண்டு. அவன் வருந்திப் போகும்வழி உடம்பினுள் ஒன்பதாகும்.
2026. அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.
பொருள் : உடம்பாகிய காட்டில் இந்திரியங்களாகிய சிங்கங்கள் ஐந்துள்ளன. அவ் ஐந்தும் புறம் சென்று புறப்பொருளைப்பற்றி அகம் வந்து சேரும் விஷயங்களைப் பற்றி நிற்கும் மனத்தையும் விஷயங்களில் ஈடுபடும் கருவிகளையும் செல்லவொட்டாது அடக்கி நிறுத்தி விட்டால் தவறாது இறைவனை அடைதலும் ஆகும். மனம் பொறிவழி செல்லாது தடுத்துவிட்டால் இறைவனை அடையலாம். சிங்கம் இந்திரியம், உகிர் - நகம் (செல்லுதல்) எயிறு - பல் (பற்றுதல்)
2027. ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே.
பொருள் : ஐந்து இந்திரியங்களாகிய அமைச்சரும் அவர்கட்கு அடங்கித் தொண்ணூற்றாறு தத்துவங்களாகிய ஏவலாளரும் உள்ளனர். அந்த அமைச்சர் ஐவரும் அவர்வழி வந்த தத்துவக் கூட்டமாகிய பிள்ளைகளும் நம்மை ஆளக் கருதுவார்கள். அந்த ஐவரும் ஐவகையான தாபத்தோடே செயல்படின் நம்மால் அந்த ஐவருக்கும் கையுறை கொடுத்துச் சமாளிக்க முடியாது.
2028. சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே.
பொருள் : தினந்தோறும் சுயம் சோதியாகப் பிரகாசிக்கும் சிவத்தைத் தோத்திரிக்கும் வன்மையுடையேன் அல்லேன். திருவருள் அம்மையும் அங்கிருப்பதைச் சொல்ல வல்லேன் அல்லேன். இந்திரியங்களையும் அவற்றின் வயப்பட்டு அலையும் மனத்தையும் வெல்லும் ஆற்றல் உடையேன் அல்லேன். கொல்லுவதற்குக் கொண்டு செல்லும் குதிரைமேல் ஏறியவனை ஒத்தேன்.
2029. எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லதோர் இன்பமது ஆமே.
பொருள் : இவ்வுடல் அளவிட முடியாத தொளைகளை உடையதாகும். மனமானது கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தைத் தேடி ஓடுமாயின் குற்றம் விளையும். உயிரானது மனவழிச் சென்று கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தை நாடாமல் இருக்குமாயின் எண்ணமற்ற உள்ளத்தில் ஓர் இன்பம் உண்டாகி நிற்கும். (மனம் பொறிவழி நாடாமல் இருக்குமாயின் எண்ணமிலா இன்பம் எய்தலாம்.)
2030. விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவழி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.
பொருள் : கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ள மக்களுக்கு அவரவர் புண்ணிய பாவத்துக்கு ஏற்ப வாழ்க்கை அமையும். சிவத்தைத் துதித்துப் பெருமையான வல்லமை பெற்றவர்க்குப் பழமையான வானுலகம் அமையும். சந்திர மண்டல வல்லமைக்கு ஏற்ப மானிடர் வாழ்க்கை உள்ளது. அட்டமா சித்திகளை அடைவதே அழகான நிதியின் பெருவலியாகும்.
33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை.
2031. சூட்டம் ஒருமுழம் உள்ளம் அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே.
பொருள் : சந்திரமண்டலமாகிய குளம் ஒரு முழம் அகலமும் அரைமுழம் (ஒரு சாண்) ஆழமும் உள்ளது. வட்ட வடிவமாக அமைந்த அக்களத்தில் விஷய வாசனைகளாகிய மீன்கள் வாழ்கின்றன. சிவபெருமானாகிய வலைஞன் வலையைக் கொண்டு வீசினான். அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுக் கொண்டன. யாம் இனிப் பிறவித்துன்பம் நீங்கினோம். (பரதவன் - பரவன் என இடைக் குறைந்தது. இங்குக் குளம் என்றது சிரசின் பகுதியாகும்.)
2032. கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறும்அவன் தானே அமரன்
விடக்கிரண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.
பொருள் : அறிவற்றுக் கிடக்கும் உடலில் கிளர்ந்து எழுகின்ற இந்திரியங்களை அடக்க வல்லவனே அமரன் ஆவான். உடம்பின்கண் அருந்துதல் பொருந்துதல் ஆகிய இரண்டு இன்பங்களிலும் மனம் பொருந்தி நிற்கும் அளவும் உடம்பில் சுவாச இயக்கம் இருந்துகொண்டே இருக்கும். இரண்டு இன்பமாவன: உணவை அருந்துவதிலும், பெண்ணைப் பொருந்துவதிலும் உண்டாகும் இன்பம். இவ்விரண்டும் விருப்பம் உள்ளவரை பிராண செயம் உண்டாகாது. விடக்கு - உடல். நடக்கும் அளவு - பிராணவாயு இயங்கும்வரை.
2033. அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவுஅறிந் தேனே.
பொருள் : இந்திரியங்கள் ஐந்தையும் அடக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்வார்கள் அறிவில்லாதவர்கள். அவ்வாறு ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை. ஐந்தையும் அடக்கிவிட்டால் அறிவற்ற சடப்பொருளாகும் என்று கருதி ஐந்தையும் அடக்காமல் இயங்கச் செய்கிற உபாயத்தை உணர்ந்து கொண்டேன். (புலனடக்கம் என்பது அவற்றைத் தீய வழியிற் செலுத்தாமல் தூய வழியில் செலுத்துதல் ஆகும்.)
2034. முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
பொருள் : இந்திரியங்களாகிய மும்மத யானைகள் பிளிறிக் கொண்டு எழுகின்றன. அவற்றை அடக்க அறிவாகிய கோட்டையை வைத்தேன். ஆனால் அவை அக் கோட்டையினின்றும் தப்பியோடி வெளியே கேடு தரும் புலன்களில் மண்டி உடம்பாகிய கரும்பை அழித்துத் திமிர்கொண்டு அலைகின்றன.
2035. ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.
பொருள் : பிரணவமாகிய ஐந்தில் ஒடுங்கினால் நாதாந்தரமாகிய அகலிடம் அமையும். இதுவே மேலான தவமாகும். இதுவே சிவபதமுமாகும். இதில் ஒடுங்கி நின்றவாரே அருளுடையார் திரு ஐந்தெழுத்தை ஓதினால் இவை யாவும் சித்தியாகும் என்பதாம்.
2036. பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே.
பொருள் : நிரம்பப் பேசி என்ன பயன் ? கானல் நீரைப் போன்று தோன்றி மறையும் உலகை நினைந்து என்ன பயன் ? பரவலாக விரிந்துள்ள பொருளுக்கெல்லாம் வித்தாக உள்ளம் இருக்கிறது. உலகப் பொருளை மிருதியும் நினைக்கில் உலகைப் பற்றி சிந்தனை மிகுதியும் பெருகிவிடும். அவற்றை நினையாது சிவத்தை நினையில் உலகப் பொருள் அங்குச் சுருங்கிவிடும். இதனை ஆராய்ந்து தெளிவார்க்கு இவ்வளவுதான் உண்மைப் பொருளாகும்.
2037. இளைக்கின்ற வாறு அறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.
பொருள் : பாசவழி நீங்கிப் பெருமை பெற்ற சீவன் பொறிவழிச் சென்று கெடுகின்றமையை அறிந்து, இனிய உயிர்கட்காக அடியார் கூட்டத்தை வைத்து அவரோடு பொருந்தியிருக்கும் ஈசனிடம் பாசத்தினின்றும் விடுபட்ட மனத்தினது ஐவகைச் சேட்டைகளையும் ஒடுக்கி நிற்க, ஐம்பொறியாகிய தொளை வழிச் சென்றது பிரமரந்திரமாகிய தொளையில் இன்பத்தைப் பெற்று ஓய்ந்திருக்கும்.
2038. பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.
பொருள் : ஐம்பூதங்களில் தூலத் தன்மை மாறிச் சூக்குமமான ஐவகை ஒளிகளாய், சார்ந்து விளங்கும் ஊர்த்துவ சகஸ்ர தளமாகிய தறியினில் கட்டப்பெறும் பேற்றை அடைவாயாக. ஆனந்த சக்தி உன்னிடம் பதியில் இதுவே முடிவானது என்று சிரசின்மேல் சூடிக் கொள்வாயாக. இதுவே மிகப் பழமையான நெறியாகும்.
2039. நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.
பொருள் : எல்லா உயிர் வகையிலும் பொருந்தி இயக்குகின்ற சிவத்தை நாள்தோறும் தியானிப்பதால், எல்லாப் பொருளிடத்தும் சென்று பற்றும் மனத்தை மிகவும் மெதுவாக ஒடுக்கி, ஊர்த்துவ சகஸ்ர தளத்தைக் குறியாகக் கொண்டு அதன் வழியே மனம் பதிவுண்டால் சிரசிலுள்ள இடப்பாக மாகிய வடக்கும் வலப்பாகமாகிய தெற்கும் வளர்ந்து மனக் கோயிலாக அமையும். வடபெருங்கடலும் தென் பெருங்கடலும் நடங்கொள் இடமாகக் கொண்டருளும் சிவபெருமான் திரு ஐந்தெழுத்து எண்ணுபவர் சிந்தையே திருக்கோவிலாகக் கொண்டருள்வன் எனவும் பொருள் கொள்ளலாம்.
2040. சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலும் ஆமே.
பொருள் : முன்னே கூறிய சாதனையில் சில நாழிகைகள் சில நாட்கள், பின் பல நாட்கள் சென்றன. அதனால் உலகப் பொருள் எல்லாம் நீர் மேல் எழுத்துப்போல் அழிவனவாகத் தோன்றின. இவ்வகையே புலன்களின்மேல் செல்லும் விருப்பத்தினை விரைந்து விடுங்கள். பின் மலை போன்ற துன்பம் வந்தாலும் தாங்க முடியும்.
2041. போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே.
பொருள் : தூயோனாகிய சிவபெருமான் திருமேனியைப் போற்றி இசைத்துத் தொழுங்கள். சிவன் நினைவாகிய சிறந்த அறிவினால் புலன்களைப் புன்னெறியதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்யும் பெரு நிலம் வாய்க்கும். அந்நலத்தால் நாற்றிசைக்கும் முன்னையும் பின்னையுமாக விளங்கும் அனைத்து உயிர்க்கும் முழுமுதல்வன் சிவன். அவனே நாதனாகவும் விளங்குவன். அச் சிவபெருமானைக் கண்டு தொழுக. அதனால் அவன் திருவடிக்கண் ஒடுங்குதலும் நிலைபெறும் என்க.
2042. தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கொண்ட மைசூழ் வரையது வாமே.
பொருள் : உடம்பினுள் தாங்கிக் கொண்டிருக்கும் உள்ளத்தினால் உடம்பை அரித்துத் தின்னுகின்ற ஐம்பொறிகளாகிய கள்வரை யாரும் உணரவில்லை. நகைக்கின்றவாறு உலக விஷயங்களில் சில பலவற்றைப் பேசிக் கொண்டிருப்பின், உயர்ந்துள்ள அண்டகோசம் கரிய இருளால் சூழப்பட்ட எல்லையாகவேதான் இருக்கும். (சிவபெருமான் கொண்டருளும் அருள் திருமேனியைச் சகளம் என்பர். சகளம் - நிலைக்களம்)
2043. கைவிட லாவதுஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடுஐய புலன்களும் ஐந்தே.
பொருள் : ஐம்பொறிகளை அடக்கி விட்டால் விடவேண்டியது ஒன்றும் இல்லை. அகத்தினுள் பொருந்தி யிருக்கும் பரம்பொருளை இயல்பான முறையில் தொழுங்கள். இல்லை மேல் ஐம்பொறிகளின் விருப்பத்தில் விளைந்த பொய்யினையே பொருந்தும் புலன்கள் ஐந்து புறத்தே கவர உள்ளன. (இறைவனை அகத்தே எண்ணியிருந்தால் புறத்தேயுள்ள ஐம்புல ஆசைகள் தோன்றா.)
34. அசற்குரு நெறி (அசற்குரு - சன்மார்க்கம் அறியா குரு)
2044. உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
பொருள் : சிவ உணர்வு இல்லாத மூடனும், உண்மைப் பொருளை ஆராயாதவனும், சிக்கலின்றி வேத ஆகமங்கள் உணர்த்தும் நெறியினைக் காணாதவனும், அடக்கமில்லாதவனும், பிறரை நிந்திப்போனும், ஆன்மபோதம் உடையவனும் ஆகிய இவர் அசற்குரு ஆவர். (கணு - முடிச்சு; வேதாகமங்களின் மறைபொருள். அணுவின் குணம் - சீவபோதம், இவ் அறுவகையினரும் சன்மார்க்கம் உபதேசிக்கும் நெறியில்லாதவர் ஆவர்.)
2045. மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.
பொருள் : மந்திர தந்திரம் மாட்சிமையுடைய யோகம் ஞானமுடன் பாசம் முத்தி ஆகியவற்றைக் கண்டு உணர்ந்திருப்பாரை மனத்தினால் நினைத்தும் உண்மை ஞானம் பெறச் செய்யாமல் வயிற்றுப்பாட்டுக்குக் குருடராய்த் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.
2046. ஆமாறு அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே.
பொருள் : பேரின்பத்தை அடைதற்குரிய உபாயத்தை அறியாதவனும், அறிவில்லாதவனும் அறிவில்லாத செயலைச் செய்பவனும் காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ் மகனும், பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபவனும் ஆகிய அறிவற்றவன் சிறந்த குரு ஆக மாட்டான். அவன் அசற்குருவேயாகும். (மூடன் - நன்மை தீமைகளை அறியாதவன். அதிமூடன் - நன்மை தீமைகளை அறிந்தும் தீமை செய்பவன்.)
2047. கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.
பொருள் : உலக வாழ்வு பற்றிய எண்ணங்களை நீக்காமல் மந்திர உபதேசம் செய்தால் சிவபாகம் சிறந்து வெளிப்படாமல் சுருங்கி நிற்கும். சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கொன்று முரணானது பற்றித் தீமையும் விளையும். இத்தகைய குருமார்கள் வாழும் நாட்டுக்கும் அரசனுக்கும் தீங்குவரும் என்று முன்னமே சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளினான். உலக யோகத்தில் திளைப்பவர் நல்ல குரு ஆகார்.
2048. குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.
பொருள் : கண்ணில்லாதவர்க்குக் கோலைக் கொடுத்து வழிகாட்டிச் செல்லும் கண்ணில்லாதவர், வழிக்கு மாறுபட்ட பழைய குழியிலே முன்னே விழுவார்கள். அதற்குப் பின்பு அவரைப் பின்பற்றி வந்த குருடரும் அந்தக் குழியிலே விழுவார்கள். அதுபோல ஞானத்தை உணராத சீடரும் அசற்குருவோடு சேர்ந்து முன்பின் இல்லாமல் ஒருசேர அஞ்ஞானத்தில் விழுவார்கள். (சிவஞானம் போதிக்கும் குரு அகக் கண் உடையவராய்க் காமத்தை வென்றவராய் இருக்க வேண்டும்.)
35. சற்குரு நெறி (சற்குரு - சத்தை உணர்த்தும் குரு)
2049. தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே.
பொருள் : சிவகுருவாக எழுந்தருளிவந்து தலையளிபுரியும் சிவனும் அதற்கு வழித்துணையாக நிற்கும் குலகுருவும் கருத்தில் ஒருவரே யாவர். சிவபெருமானின் திருவடிகளைத் தந்தருள்பவனே மெய்க் குரவன். மெய்க் குரவன் எனினும் சற்குரு எனினும் ஒன்றே. திருவடிகளைத் தந்தருளித் தன்னையும் உண்மையாக அறிவிப்பவன் மெய்க்குரு. தாளை அருளித் துவாதீதமாகிய அப்பால் நிலைக்கண் ஆருயிரைச் சாரச் செய்பவன் குரு. திருவடிகளைத் தந்தபின் பாசம் துடைத் தருள்வன். அவன் என்றுமுள்ள மெய்ப் பொருளாவன். (சத்து - மெய்ப்பொருள்)
2050. தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.
பொருள் : சிவகுருவாக எழுந்தருளிய சிவன் ஆருயிர்கட்கு அளித்தருளும் அருளிப்பாடுகள் பலவாம். அவை வருமாறு: தன்னடியார்களின் வினைகளை நீங்க அருளினன். தன்னடியார் கட்குக் கோள்கள் துன்புறுத்தாமல் அவர் ஏவும் தொழிலை இயற்ற அருளினான். நமனின் தூதுவர் கூட்டம் நணுகாது விலக வைத்தனன். பிறவிப் பெருந்துயர் நீங்க வைத்தனன்.
2051. கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான்.
2052. பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.
பொருள் : திருவருளால் சிவ பெருமானுடன் தன்னையும், அன்பினால் ஆராய்ந்து அருளால் பாசத்தை நீங்கியவரும், ஏனை யார்க்கும் அவ் அருளாலேயே மலமற நீக்குபவரும் மெய்க்குரவராவர். அங்ஙனமின்றி நல்லறிவு சிறிதும் இல்லாது மாயப் போர்க்கு மனம் இரங்குவோர் கோழையாகும் புல்லியராவர். அவர் ஒரு ஞான்றும் மெய்யுணர்வுக் குரவராகார். (பூசற்கு - கலகத்திற்கு)
2053. நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே
ஆயத்த வர்தத் துவம்உணர்ந் தாங்குஅற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.
பொருள் : இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய முழுமுதற் சிவன் அன்பரது அன்பு அகத் தாமரையில் அருளால் பிணைந்து நிற்பன். குற்றமற்ற தன்னை மெய் அன்பர்கட்குச் சுற்றமாகக் கொடுத்தருளும் துணைவன் என்றும் அழியா நிலைமையன்; இயற்கைத் தூய்மையன்; சிவமெய்யடியார் கூட்டத்துத் திரு அருளால் கூடி மெய்யுணர்வு கைவரப் பெற்றவர் தத்துவம் உணர்ந்தோராவர். அவரே மலப் பசை அற்றவரும் ஆவர். அத்தகையோர் பேரன்பினர். அவர்க்குத் திருவடிப்பேறு அளிப்பவனே நிலைபெற்ற மெய்க் குரவன் ஆவான்.
2054. பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே.
பொருள் : பொன்னாக்கும் மருந்து பரிசனவேதி எனப்படும். இதனைப் பொன்னாக்குவது எனப் புகலினும் பொருந்தும் உலகியற் பொருள்களில் இயைபுடைய பொருள்கள் எல்லாவற்றினும் பட்ட அளவானே அவை முற்றும் பொன்னாகிவிடும். அதுபோல் மெய்க் குரவனாகிய சிவகுருதொட்ட இடமெல்லாம் மும்மலம் அகன்று, ஆருயிர்க் கிழவர் செம்மலர் நோன்றாள் சேர்ந்து சிவகதி எய்திச் சிவனாகிச் சிவனடிக் கீழ் இருப்பர்.
2055. தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்பாடில்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே.
பொருள் : சிவமே தானாக எழுந்தருளிய சற்குருவின் திருமுன்பு ஆன்மாவின் தன் உண்மை தோன்றுமாயின், ஆன்மாவே சிவத்தைப் பெருமைபெற அறிவதாகும். அவ் அறிவே உன் உடம்பினுள் இருக்கும் சிவம் என்று தேர்ந்து கொள்வாயாக.
2056. வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே.
பொருள் : வினைக்கீடாக வரும் வழியாம் பிறப்பும், போம் வழியாம் இறப்பும் எஞ்ஞான்றும் மாறா, மறையா, அழியா வழியாக நிற்கும். இவ்வழியினைப் பிறக்கும் கருவழி கண்டவர் காண்பர். இவ்வழியினைக் காணாதவர் அருளால் காணும் வழி பெரு வழி. அவ்வழி நந்தி முதல்வராய் நவின்று நாட்டியருளப் பட்ட நல்வழியாகும். அதுவே நன்னெறி; திருநெறி. அதனைச் சிவகுருவின் திருவருள் வழியே சென்று பொருள் பெறப் பெறுவதாகும்.
2057. குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே.
பொருள் : சிவகுரு என்று அழைக்கப்படுபவன் செந்தமிழ் மறைமுறையாம் வேதாகமம் சிறந்து எடுத்து ஓதும் பேரின்ப வடிவினன். அவ்வடிவு உடையவனாகிச் செவ்வி உயிரினுக்குச் சிவயோகம் சேர்ப்பித்து அருள்வன். அவ்வுயிர் திருவடியுணர்வு கைவந்தமையால் வேறோர் எண்ணமும் எண்ணுவதில்லை; அவ்வுயிரை அந் நிலையான் உயரச் செய்து பாசப் பசை அகற்றித் திருவடி நிழற்கீழ் வருவித்துப் பேற்றின்கண் நிலைப்பிப்பவன் சிவகுரு ஆவான்.
2058. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே.
பொருள் : சத்தாகிய சிவமும் அசத்தாகிய மாயையும், சத்தோடு கூடிச் சத்தாகவும், அசத்தோடுகூடி அசத்தாகவும் உள்ள ஆன்மாவும் ஆகிய முப்பொருள்களின் இயல்புகளை உணர்த்திச் சித்தாகிய ஆன்மாவையும் அசித்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்தோடு சேர்த்து சுத்த மாயையும் அசுத்த மாயையும் நீங்க இன்ப வடிவான பிரணவ உபதேசம் செய்யும் தலைவனே அருட்குரு என்று சொல்லப் பெறுவான். (சத்து - அழியாதது; அசத்து - அழிவுடையது. சதசத்து - ஆன்மா அழியாததாயினும் சார்ந்ததன் வண்ணமாய் இருப்பது. சித்து அறிவு. அசித்து - அறியாமை.)
2059. உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே.
பொருள் : உயிர்களுடைய பாச உணர்வினால் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் பொருந்தும், சிவபெருமானது திருவடியைப் பணிவதால் அவா நீங்கும். சிவப்பறை ஆதாரமாகக் கொண்டு ஆன்மாவைச் சுற்றியுள்ள பேத ஞானத்தைச் சீவதுரியம், சிவதுரியம், பரதுரியம் ஆகிய மூன்றினாலும் கெடுத்து, தத்பரம் என்ற மேலான சிவத்தைச் சார்வோர் சாதகராவர்.
2060. எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலம்ஐந்து அடங்கியிட்டு ஓங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே.
பொருள் : எல்லா உயிர்களும் இன்பம் நுகர்தற்குரிய வலிமை மிக்க புலன் உணர்வோடு பொருந்த, வருங்காலத்து இறைவன் இறைவியோடு உள்ளத்தில் தோன்றவே சொல்லாமலே ஐம்மலச் சேட்டைகளும் அடங்கி உயிர் சிறந்து மீண்டுவாராநெறி அடைவித்தல் இறைவனுக்கு விளையாட்டாகும். முதல் இரண்டு அடிகளைப் பொருள் இயைபுக்கேற்பக் கொண்டு கூட்டுக.
2061. ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே.
பொருள் : இழிந்த பிறவியில் செலுத்தி, பின்பு அதனின்றும் மீட்டு வினைப் போகங்களை அருத்தி, பத முத்தியை அடையப் பண்ணி, பதவிகளின் போகங்களை அருந்தச் செய்து உயிர்களைப் பிறவிக்கடலில் ஆழ்த்துதலும், பின் சிவஞானத்தில் மீளச் செய்தலும் அதிலேயே நிலைபெறுத்தலும், வீட்டினைப் பொருந்தி மௌனம் என்ற பேசாப் பெருவாழ்வு அளித்தலும் ஆகியவை முத்தியை அளிக்கும் சிவனது செயலாம்.
2062. அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே.
பொருள் : சிவபெருமான் செய்தருளும் திருஐந்தொழிலின் திரு விளையாட்டிடம் ஆருயிர்களின் உடம்பாகும். அறிவுடையன இவை அறிவில்லன இவை, என ஆருயிர்கட்கு அறிவித்து அவ் அறிவினால் தெளிவிக்கப்பட்ட செவ்வி உயிரை மலம் நீக்கி அருளுகின்றனன். உண்மைப் பொருளாகிய தன் வண்ணம் ஆக்குகின்றனன். இவையே திரு ஐந்தெழுத்தின் சிறப்பால் பெறப்படும் பேரின்பப் பேற்றினுக்கு வாயிலாகிய திரு ஐந்தொழிலாகும்.
2063. ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே.
பொருள் : ஈசுவரத் தன்மையைப் பெறுவதற்குமேல் பேறு இல்லையென்று, அப்புறமாகி நின்ற சதாசிவ மூர்த்தியைப் பாசத்தில் உள்ளபோதே பற்றி நில்லுங்கள். பாசத்தின்கண் அவன் அன்போடு பொருந்தி யிருப்பினும் அதில் ஒட்டாத நின்மலன் ஆவன் அவன் தங்கியிருந்த பாச மயமான புவனங்களை ஒளிமயமாகச் செய்தான் (ஈசத்துவம் - தலைமைத் தன்மை)
2064. மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது
பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்தார்
ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே.
பொருள் : சிவந்த மாணிக்க மாலையைப் போல ஒளிவிட்டு எழுகின்ற புருவ நடுவாகிய மண்டலத்தில், மாற்றுயர்ந்த பொன் போன்ற சிவம் பொருந்தி நின்று பேரின்பமாகிய அமுதினை விளையச் செய்தது. இதனைத் தெரிந்து விந்து செயத்தால் அமுதத்தைப் பெருகச் செய்து கொள்வரே பிறப்பற்றகனைய ஏனையோர் சோற்றுக்குக் கேடாய் வாழ்பவர் ஆவர்.
2065. அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே.
அசைத்துஇரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே.
பொருள் : மலத்தொடு கூடிய ஆன்மா சீவத்தன்மை நீங்கவும், கூடப்பட்ட பாசபற்றுகள் அற்ற ஒழியவும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரு மாயைகளையும் நெகிழ்வித்து அணுவாகிய ஆன்மாவை அங்கே கூட்டியவனும், பிரணவ உபதேசம் செய்பவனும் இறைவன் ஆவான்.
2066. ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே.
பொருள் : மூலாதாரத்திலிருந்து சிரசை நோக்கி ஏறும் பாதையில் உயிரைப் பிணிக்கும் மலத்தன்மையைச் சுட்டு எரித்து மேலே செலுத்தலாலும் முடிவற்ற நாத முழுக்கத்தால் இருளை அறுத்தலாலும், பசுவின் இயல்பான பாசத்தன்மை கெடும்படி வாட்டுதலாலும், வீட்டுலகை அடையுமாறு உபதேசிக்கும் பரசிவமே குருவாம். மலம் - பாசம், இருள் - பாசத்தால் உண்டான இருள் (அறியாமை) வீடு புக இரண்டும் தடையாம். பரமசிவமாகிய குரு பாசத்தையும் இருளையும் போக்கி ஒளியாகிய வீட்டினை நல்குவான்.
36. கூடா ஒழுக்கம் (கூடா ஒழுக்கம் - வஞ்சகச் செயல்.)
2067. கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே.
பொருள் : உலகவர் தாங்கள் செய்யும் நன்மை தீமைகளை மேற்பார்க்கும் அதிகாரி இல்லையென்று பலவிதமான வஞ்சகச் செயல்களைச் செய்வர். எல்லாரையும் மேற்பார்வை செய்யும் இறைவனாகிய கண்காணி இல்லாத இடமே இல்லை. உலகவர் இயற்றும் காரியங்களை மேற்பார்வை செய்து எங்கும் நிறைந்து விளங்குகின்ற இறைவனைக் கண்ணை இடமாகக் கொண்டு கண்டவர்கள் தாம் செய்யும் வஞ்சகத் தொழிலினின்றும் நீங்குவர்.
2068. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.
பொருள் : கருமை நிறம் பொருந்தி விளங்கும் நீலகண்டப் பெருமான் செழுமையாக கடல் சூழ்ந்த உலகில் பொய்யான வற்றையே பேசித்திரியும் மனிதர்கள் உண்மையானவற்றைப் பேசுவார்களாயின் தேவரும் தொழும் தகுதி வழங்குவான், இவ்வுலகினை படைத்த அவன் பொய்யையும் மெய்யையும் அறிவான்.
2069. பத்திவிற்  றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.
பொருள் : திருவேடம் பூண்டு பக்தியுடையோர் போன்று ஏனையோர்க்கு அந்நெறிமுறைகளைப் போதித்து விலைபெற்று வாழும் வஞ்சகர் வீணாள் கழிப்பவர் ஆவார். அவரே பெரு மயக்கம் கொண்ட மத்தரும் ஆவார். அவருக்கே மறு பிறப்பும் உண்டு. பிறப்புக்கு அடிப்படையான எஞ்சுவினையை நெற்குத்தி உண்பது போல் சிவ குருவின் திருக்கடைக்கண் நோக்கால் எரிசேர் வித்தெனச் செய்தவர் பிறப்புகளைப் புலமாம் கருப்பையைப் பாழ் செய்தவராவர். அவரே சிவப் பித்தராவர். சிவ பித்தராவார் திருவடியுணர்வு கைவந்தோர், அப் பித்தர்கட்கே எஞ்ஞான்றும் பிறப்பில்லை என்க.
2070. வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.
பொருள் : முன்னர்க் கூறிய பௌராணிகர் வடக்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை பெருமை யுடையன என்பர். வடக்கே உள்ளது ஒன்றும் இல்லை. எனினும் அறிவில்லாதோர் பிறரை யெல்லாம் அங்குச் செல்லும்படி தூண்டுவர். வடக்கில் அடங்கிய தலம் எல்லாம் ஞானியின் உள்ளத்திலேயே அடங்கியுள்ளன. திருநாவுக்கரசரும் காரைக் காலம்மையாரும் வடக்கு நோக்கிச் சென்று பின்பு தெற்கில் வந்துதான் முத்தி பெற்றனர்.
2071. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.
பொருள் : உயிரை உடலோடு சேர்த்து வைப்பவனும் உடலையே தான் வாழும் நாடாகக் கொண்டவனும் உடலுக்குள் இருந்து வெளிப்படும் குரு மண்டலத் தலைவனும் ஆகிய இறைவனைத் தேசம் எங்கும் தேடிப் புறத்தே அலைவார்கள். அவன் அவரவர் உடலில் பொருந்தி நிற்கும் உண்மையை உணரவில்லையே! (என்னே அறியாமை.)
2072. கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.
பொருள் : ஆருயிர்களின் உணர்வுக் கருத்தாம் கண்ணைச் சிறந்த இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் மெய்க் காதலனாம் சிவபெருமான் நேரே காணும்படியாக நானெறி ஒழுக்கத்தில் கையகத்தே வந்து தோன்றியருள்வன். அது போன்றே கருத்தினுள்ளும் இருந்திடுவன். அது போன்றே உடன்கலந்து செந்நெறிச் செழுத்தித் திருவடிப் பெரும் பேற்றினுக்கு நீங்காது வழிகாட்டி யருள்வன்.
2073. கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னித ஈசன் இயல்புஅறி யாரே.
பொருள் : காமத்துக்குக் காரணமான கன்னியர் வலையில் வீழ்வோர் ஒரு வகையில் சிறைப்பட்டவர். வேதங்களை ஓதுபவர் ஒருவகையில் சிறைப்பட்டவர்; உடலை வருத்தித் தவம் செய்பவர் ஒரு வகையில் சிறைப்பட்டவர்; தத்துவ விசாரணையால் அனுபவமின்றித் தன்னையும் தலைவனையும் உணர முற்படுவோர் ஒரு வகையில் சிறைப்பட்டவர் ஆவர். இவ்வகையாக உள்ள நால்வரும் ஈசன் இயல்பு அறியதவராயினர்.
2074. காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.
பொருள் : ஒன்றையும் காணமாட்டாத படலத்தால் மறைப்புண்ட கண்ணுக்கு இருட்டே அதன் ஒளி. சிவ ஒளி எங்கும் வியாபித்திருந்தாலும் அவ்வொளி சாதாரண மக்களால் காணப்படாததாகவே உள்ளது. காணாதவர்கட்கு அகக் கண்ணாய் இருந்து காட்டும் பெரிய கண்ணொளியாகும் கடவுளை ஊனக் கண்ணால் காணாமல் ஞானக் கண்ணால் கண்டவர் தாம் புரியும் களவு ஒழுக்கத்தினின்றும் உய்ந்து ஒழிந்தார்.
2075. பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும்தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே.
பொருள் : பித்தனுக்கு அந்நோயால் ஏற்பட்ட பிரகிருதியாகிய கிறுக்குத் தன்மை, தீர்ப்பான் தரும் தக்க மருந்தால் நீங்கப் பெறும். நீங்கவே நல்ல நிலைமையைப் போய் பொருந்துவன். அதுபோல் கண்ஒளியும் படலம் நீங்கக் காணும் இயற்கைத் தன்மை எய்தும். அந்நிலைபோல் நந்திக் கடவுள் ஆருயிர் கட்கு இருட் சார்பாம் மருள் நீங்கத் திருவருள் தந்தருள்வன். தரச் செவ்வி உயிர்களின் சித்தத் தெளிவினை எய்தும். அம்முறையில் அவனருளால் தெளிவெய்தினேன். தெளிவு எய்தவே செயல் ஒழிந்தேன் என்க. (பிரகிருதி - பித்த சுபாவம்)
2076. பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப்பொழிந் தாரே.
பொருள் : நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டும் சிவத்தினது உறுப்புகளாகும். இவை அவனது சக்திகள் ஆகும் என்பதை எண்ணி அஞ்ஞானமாகிய தூக்கத்தினின்றும் விழித்தலைச் செய்யார். கள் முதலியவற்றின் மயமாக ஆக எண்ணிய தீவினையாளர் இன்ப மயமான இறைவனது நினைப்பை ஒழிந்தாரானார்.
2077. ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெல்லாம்
ஒன்றுஇரண் டாய்நிற்கும் ஒன்றோடுஒன் றானதே.
பொருள் : கலப்பினால் ஒன்றாய் பொருள் இயல்பால் சீவனும் சிவனும் என்று இரண்டாயும் நின்று சீவத்தன்மை கெட்டுச் சிவமாயினோர்க்கு, ஒன்று இரண்டு என்னும் பேத ஞானம் ஒருபோதும் வராது. அவ்வாறின்றி ஒன்று இரண்டு என்னும் பேத ஞானம் உடையவர் எல்லோருக்கும் அந்நியமாயுள்ளது (பிரிப்பின்றி உள்ளது) ஒன்று என்றும் இரண்டு என்றும் வேறு பிரித்து எண்ணும் நிலையில் வேறாகவே நிற்கும்.
2078. உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்குஅறி யாரே.
பொருள் : உயிர்ப்பும் உயிர் ஆகாவாம். உயிர்ப்பு ஆகிய உயிர் நின்றால் அவ்வுடற்கண் உணர்வு எல்லா இடத்திலும் நிகழ்தல் வேண்டும். நினைப்பும் மறப்பும் உண்டாகா. உடலும் கீழ்விழாது. ஆகையால் உயிர்ப்பும் உடலும் ஒற்றுமையுற்று வாழும் வாழ்வு சிவபெருமானின் திருவுள்ளப் பாங்காகும். அவ்வுண்மையினைப் பலர் அறியார்.
2079. உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.
பொருள் : திருவருளால் உயிர் உடலின் வேறு என்னும் உண்மை ஏற்படின் உணர்வு சுட்டும் சிற்றும் கடந்து முற்றாய் எங்கும் ஆகும். அதுபோல் உயிரின் உண்மையை அவ்வருளால் அறியில் அவ் உணர்வே மெய்யுணர்வு ஆகும். உடலை நீங்கச் செய்வது உயிரன்று. அவ் உண்மையை அறிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதும். பெரும் பொருளே. இவ் உண்மைகள் அவன் அருளால் அன்றி உணரவாரா. (சுட்டும் - சுட்டுணர்வும். சிற்றும் - சிற்றுணர்வும் முற்றாய் முற்றுணர்வாய். அயரும் - மறைக்கச் செய்யும்.)
2080. உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் நேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.
பொருள் : உலகம் நிலைபெறுவதற்குரிய அச்சாணி போன்றவனும் ஒளி பொருந்திய மேலான அறிவு சொரூபமானவனும் ஆகிய இறைவன் நிலம் முதலாகிய ஐம்பூதங்களின் தன்மையாய் அவற்றுள் உள்ளும் புறம்புமாகக் காணப்படுவன். சிலவாக்கு ரூபமான சக்தியுடன் பொருந்திய தேவர்களுக்குத் தலை வனை, தலையில்  வாக்கு ரூபமாக அறிவதே தன்னை அறியும் செயலாகும்.
2081. தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.
பொருள் : உலகப் பொருள் எல்லாவற்றுக்கும் ஒடுங்கும் இடமாகவுள்ள ஒப்பில்லா சுயம்சோதியும், உடல் உலக எல்லாமாய் நின்ற ஒளி பொருந்திய சுடரும் ஆகிய தலைவனது எல்லையற்ற கருணையால் விளையும் பேறு உனக்கு உண்டாகும். விருப்பத்தையும் பின் முடிவில் சோர்வினையும் நல்கும் சிற்றின்பத்தையும் நீ விடுவாயாக.
2082. உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.
பொருள் : உனக்கு முதல்வனாய் உடம்பில் உயிர் நிலைபெறச் செய்த ஒளி மண்டலத்தில் விளங்கும் இறைவனது கருத்தை அறிவார் இல்லை. நல்ல முதல்வனாகிய சிவம் மிக்குத் தோன்றத் தனக்கெனப் பெயரின்றி அவனோடு ஒன்றி நின்றால் தன் முதலாகிய சிவத்தினது இயல்பு ஆகும். (கல்முதல் - கயிலை எனினும் ஆம்.)
2083. இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே.
பொருள் : இந்திரியங்களும் அந்தக்கரணங்களும் வந்தவனாகிய சூக்கும உடலும் உயிர் ஆகா. இவை மகத் தத்துவத்தினின்றும் தோன்றியவை. புருடனும், கலைகாலம், நியதி வித்தை, அராகம் ஆகிய ஐந்தின் கூட்டத்தால் பொருந்தும். அனாதியாக உள்ள ஆன்மாவானது முப்பத்தாறு தத்துவத்தின் முடிவில் நிலை பெற்றிருக்கும். (இந்தியம் - இந்திரியம், ஐவிதம் - கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை, சமாதி என்பாரும் உளர்.)
37. கேடு கண்டு இரங்கல் (கேடு கண்டு இரங்கல் - அழிவு கண்டு வருந்துதல்)
2084. வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.
பொருள் : ஒவ்வொரு கணமும் தம் வாழ்நாள் கழிகின்றதை அறியாத பாவிகள் வினையாகிய வித்தைச் சேமிப்பார். வினைப் போகத்தை அறுவடை செய்ய உடம்பாகிய நாற்றங்காலில் அவ்விதையை முளைக்கச் செய்வார். தமக்குற்ற வினைப் போகத்தால் வரும் துன்பத்தைச் சிறிதும் உணரமாட்டார். அவர் கொழுந்து விட்டு எரிகின்ற தீயில் கெடுகின்றது போலாகும்.
2085. போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.
பொருள் : வாழ்நாள் திடீரென்று முடிவதைப் பார்த்தும், மக்கள் சாதனையின்றி வாயினால் பேசி வாதிட்டு என்ன பயனைப் பெறுவது ? நேர்மையுள் இருந்து அகண்டமாகிய மலமற்ற சிவத்தினது திருவடியை வணங்கி, அனைத்துக்கும் முதலாகிய அவன்பால் அன்பாய்ப் பொருந்தும் நெறியை அறியும் ஆற்றல் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.
2086. கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.
பொருள் : அறியா மக்கள் கடன் வாங்கியேனும் நெல்லைப் பெற்றுக் குத்தி உண்டு, கயவராகிய பொறிகளைத் திருப்தி செய்து உடம்பை வளர்த்து, அவ்வுடம்பே உயிரென மதித்துத் திரிவர். விசாலமான மலைச்சரிவில் நெருப்புப் பொருந்திய முருட்டுக் கட்டையில் ஏறி இவ்வுடல் கிடக்கும் என்பதை அறியார். அறிவில்லாதவர் இறைவனை நினைந்து போற்றாமல் உடலை நினைந்து போற்றிக் கெடுகிறார்கள்.
2087. விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.
பொருள் : அக்காலத்தில் சனகாதி நால்வர்க்குக் கயிலாயப் பதியில் இருந்து, பாதுகாத்த கல்லாலின் புடை அமர்ந்த அறக்கடவுளான குருநாதன் விரைந்து உபதேசித்து அருளிய சிவத்தை உணராமல், பழி மொழிகளைப் பேசும் மக்கள் தமது சீவபோதமே இயல்பாகக் கொண்டு ஒருப்பட்டு நின்றனர். சிவகுரு உபதேசித்த வழி நில்லாமல் தம் அறிவுவழி நின்று உலகவர் கெடுகின்றனர்.
2088. நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.
பொருள் : நிலையான புகழையும் நிறைந்த தவத்தின் பயனையும் எப்போதும் எமது இறைவன் அடியவர்க்கு அருளுவான். அஃதறிந்தும் உலகவர் முதற்கடவுள் அது என்றும் இது என்றும் பேசி நிலைகெடுதலால் குறைபட்டனர். தேவு - சிறுதெய்வம். சிறு தெய்வம் பெரும் பயனை அளிக்காது என்க. சிவம் விரும்பிய தெல்லாம் அளிக்கும் என்பதை உலகவர் அறியவில்லை.
2089. இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.
பொருள் : பிறவாப் பெருநெறி எய்துதற்குச் சிவபெருமான் மக்கட்பிறப்பை வகுத்தருளினன். அவ்வுயர்ந்த பிறப்பை எய்த ஆருயிர்கள் மீட்டும் அப்பிறப்பு இறப்பில் புகாமல் அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனாராதல் வேண்டும். அதுவே இறவாத இன்பம் பிறப்பாகும். இன்பப் பிறப்பென்பது சிவனடி மறவா அன்புத் திருவுள்ளத்துடன் இருப்பது. அத்தகையாரே தொண்டராம் குணமிக்கராவர்.
2090. பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே
பொருள் : பெறுவதற்கு அருமையான மானுடப் பிறவியை இறையருளால் பெற்றிருந்தும், பெறுவதற்கு அருøமான சிவத்தினது திருவடியைப் போற்றாதவராயினார். பெறுவதற்கு அருமையான பிறவியைப் பெற்ற மாக்கள் எல்லாம் பெறுவதற்கு அருமையான இன்பப் பேற்றினை இழந்தனர்.
2091. ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
தீரு வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.
பொருள் : வேட்கையுடைய மனமும் அளவில்லாத இளமையும் அன்பும் ஆகிய இவை நல்லனவாகவுள்ள இன்பமான காலத்தில் மாற்றம் தருவதொரு உடலுறவு (பரியங்யோகம்) கொண்டு நிலைபெற்று மாதவனாகிய சிவத்தை  நினைந்து இன்பம் பெறாமல் பெறாமல் உலகவர் கெடுகின்றனர்.
2092. இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே.
பொருள் : முன் மந்திரத்தில் கூறிய முறையில் இளஞ்சூரியன் போன்ற உருவம் அமையும். அவ்விதம் அக்கினி மண்டலத்துள் அமர்ந்த தலைவனும் இம் முறையில்  சுவாதிட்டான மூலாதாரங்களில் பொருந்தியிருக்கும் ஈசனும் ஆகிய இறைவனது உண்மைத் தன்மையை இதுவரை விசாரியாமல் இருந்தோம். என்னே அறியாமை.
2093. கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறெது வாமே.
பொருள் : குரு காட்டிய இலட்சியத்தில் நிலைபெற்றுச் சிவனைக் கூடமாட்டார். சிவத்தை நாடி அடைய மாட்டாதவர். புத்தகங்களில் கண்ட நயத்தைப் பேசித்திரிவர். இறைவன் செய்த உபகாரங்களை எண்ணி அவன் புகழைப் பாட மாட்டார்கள். வீணாகக் களியாட்டம் ஆடவல்லவராகிய இவர்கள் அடையும் பயன் எதுவாகும் ?
2094. நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே.
பொருள் : மனத்தில் நிறைந்து உயர்ந்து எழுகின்ற சோதியை நம்முடைய செம்பொருளாகிய சிவன் என்று நம் நாதனை நாள்தோறும் உறங்கும் வரைக்கும் துதியுங்கள். அங்ஙனம் துதிக்காவிடில் நமது ஐந்து இந்திரியங்களும் கட்டினை அறுத்துக் கொண்டு திரியும் யானை போலாகும்.
2095. மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே.
பொருள் : விலங்கு, மனிதர், தேவர், பறவை ஒப்பற்ற இறைவன்பால் அன்பு பூண்டு நினையாதது இல்லை. ஞானத்தோடு பொருந்திய மாதவம் செய்த ஞானியர் எண்ணுதலோடு அமையாமல் சிவ அமுதத்தை உண்டு திளைப்பர்; மகிழ்ச்சியால் ஓடுவர். பூமியில் பிறந்ததனால் ஆகிய பயனைப் பெறுவர், மானுடர் அஃறிணையிற் பிறப்பினும் முற் பயிற்சியால் பிறப்புக்கு ஏற்றவாறு வழிபடுவர்.
2096. நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதயி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே.
பொருள் : நேர்மை யில்லாதவர் தமக்குக் கிடைத்த பொன்னைப் போற்றாமை போன்று சம்பிரதாய முறையில் இறைவனைச் சோதியாக அறிந்து போற்றுவாரில்லை. ஆனால் நான் அவனை நாம் பெறும் முதற் பயன் என்றும் தேவர்களுக்கும் மேலான தேவன் என்றும் அநாதி காலந்தொடங்கி மனத்துள் வைத்து அவனையே விரும்புகின்றேன். (நாதி - அநாதி என்பதின் முதற்குறை.)
2097. இரும்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேவை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.
பொருள் : மிக்க தேன் பொருந்திய மலரினைப் பொருந்தி மகிழ்வதற்காக, வண்டுகள் மிகுதியாகத் தேனைச் சேகரிக்கும் தன்மையை மக்கள் உணரார். சுற்றி வரும் வண்டு நுகராமல் வாயில் வலிய வந்து சொட்டும் தேனும் யாவராலும் பெறுவதற்கு அருமையான தேனும் போல்பவராகிய இறைவனை ஒருவரும் உணர மாட்டார். (தேன் - வண்டு. அருந்தேனை அருந்துகின்ற என்னை - இது நம் நாயனார் தம் நிலைமொழிந் தருளும் இடங்களுள் ஒன்று என்றும் பொருள் கொள்ளலாம்.)
2098. கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான்உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.
பொருள் : இறைவனை அறியும் கருத்து இல்லாமல் இத்தனை காலமும் வீணே கழிந்தன. தேவர்க்குத் தலைவனாகிய அவன் அன்பினுள் உள்ளான். அவன் ஒருவனே உலகத்து உயிர்கள் அத்தனைக்கும் உயிர்க்குயிராய் உள்ளவன். அங்ஙனமிருந்தும் அறிவில்லாதவர் அவனைத் தங்கள் அனுபவத்தில் வருவித்துக் கொள்ளாமல் தவறி விடுகின்றார்கள்.
2099. குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்த்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.
பொருள் : வினைக்கு ஈடாக வரையறுக்கப்பட்ட நாள்களும் கழிந்தன. ஆகுல நீரராய்ப் பயனில மொழிந்தும் நயநில புரிந்தும் பொழுது போக்கி என் செய்தீர். கூற்றம் குதித்தோடிப் போய் ஆற்றல் வாய்ந்த சிவத்தப் பேணுதலாகிய நற்றவம் புரிகின்றிலீர். என் செய்வீர். ஆறுதலாகிய சுகனமர்ந்த அன்பினராய் ஆறுவகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானப்புகலினை எய்துவோர் ஆருயிர் கொகிக்கின்ற கூழ்ஒத்துக் காணப்படும் சிவபெருமான் திருவடியன்பில் துடுப்பு இடுதல் ஒத்து அணைந்து இன்புறும். (கொதிக்கின்ற கூழ் - சிவச்சோதி, துடுபிபிடல் - ஆன்மா ஒருமை அடைதல்)
2100. கரைஅருகு ஆறாக் கழனி விளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே.
பொருள் : தில்லைச் சிற்றம்பல நாதனை அணைய முயல்வார் மனம் அடங்கிய எல்லையாகிய கரையின்கண் திருவடிப் பேரின்பக் கழனியாகிய சிவப்பேறு ஆற்றுப் பெருவெள்ளம் போன்று விளைந்து திகழ்கின்றது. நல்லோர் திரைப் பருவமாகிய முதுமை எய்துவதன் முன் திருவருளால் இரண்டறக் கூடிக் கலந்து இன்புறுதற்கும் பொருந்தும் பெருந்தவம் புரிவாராயினர். அதனால்உணர் வுள்ளத்து எல்லையில்லாப் பேரின்பம் ஊறிப் பெருகுவதாயிற்று. இந் நன்னெறிக்கண் வாராத சில்லோர் நரைமுதிர் யாக்கையினராய்ச் சாநாள் எய்தி வருந்துகின்றனர். அத்தகைய நாள் நற்றவத்தோர்க்கு இல் லென்ப (திரை - தோல் சுருக்கம்.)
2101. வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே.
பொருள் : உயிர் அனைத்தும் உடலோடு கூடித் தோன்றும் ஆதி சிருட்டியை அறிபவனும் அறியாமையை யுடைய அவ்வுலகத்தில் அதன் தன்மையை அறிபவனும் தானே எழுந்து விளங்கும் சோதியும் ஆகிய இறைவனைக் குண்டலினி யோகம் பயில்வோர் முன் விளங்கும் ஒரு தெய்வம் என்று அதனை அடைய வகை அறியாமலே அந்த இருளாகிய பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து மக்கள் கெடுகின்றனர்.
38. இதோபதேசம் (இதோபதேசம் - உயிருக்கு உறுதி பயக்கும் நன்மொழி.)
2102. மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.
பொருள் : இறைவனை மறந் தொழிகின்ற இவ்வுலகில் நிலையற்ற உடம்பு இறக்கும் காலத்தும் இறைவனை எண்ணுங்கள். வாழும்போது அலைந்து நிலை கலங்கிப்படும் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக மேன்மையான சிவ நெறியை எண்ணத்தில் கொண்டு நாடுவீராக. முதல் அடிக்கு மன்னா உலகமாகிய இம் மண்ணின் மீதுள்ள நிலையுறல் இல்லாத பிறவியை மறந் தொழியுங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
2103. செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே.
பொருள் : முடிந்த அளவு சித்தத்தைச் சிவன்பால் வையுங்கள் முடிந்த தன்மையால் உண்மைப் பொருளான சிவத்தையும் ஆத்மனையும் எடுத்துக் கூறுங்கள். இறைவன் ஒருவன் இல்லை என்று சிலம் சொல்லிக் கொண்டிருந்தாலும் எம்இறைவன் என்றும் உள்ளான். ஆதலால் சிவநெறியே தேடிப் பெறுங்கள். (வாய்மை - நித்திய பொருள். அவை ஆத்மனும் சிவனும் ஆம். பெரிதுளன் - நீக்கமற நிறைந்துள்ளவன்.)
2104. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
பொருள் : குலமும் ஒன்றே; தெய்வமும் ஒன்றுதான். நல்லனவற்றையே எண்ணுங்கள். உமக்கு நமன் இல்லை, நீங்கள் வெட்கப்படாமல் சென்று அடையும் நெறியும் பிறிதில்லை. உங்கள் மனத்து இறை எண்ணம் நின்று நிலை பெற நீங்கள் நினைந்து உய்யுங்கள். திருமூலர் காலத்தில் தமிழ் நாட்டில் சைவ சமயமும் சிவ வழிபாடும் நிலை பெற்றிருந்தன என யூகிக்க முடிகிறது.
2105. போற்றிசெய் அந்தண் கயிலைப பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் கும்கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்தன்னைக் கூறிநின்று உய்ம்மினே.
பொருள் : அழகிய செந்தண்மை வாய்ந்த திரு வெள்ளி மலைக்கண் வாழும் சிவபெருமானை, நெஞ்சமே போற்றி செய்வாயாக. நான்கு திசைகளுக்கும் நடுவிடமாகக் காணப்படும் தில்லைக் கண் மன்னிய பொன்னம்பலனாம் நம்பனை உயிர்ப்பினால் நடத்தப்படும் ஒன்பது தொளை சேர் இவ்வுடம்பினைக் கைக்கொண்டு கூற்றை உதைத்துத் தன் திருவடியைக் கொடுத்தருளும் ஏற்றூர்தி நீற்றுமேனியும் கொண்டு பெண்பாகமும் உடைய எம்மானை இடையறாது ஏத்தி ஐந்தெழுத்து ஓதி உய்யுங்கள்.
2106. இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.
பொருள் : இவ்வுடலை நீத்து, இனி ஓர்உடலில் புகுந்து பிறவாத வண்ணம் உய்ந்து போகும் நெறியை விரும்புங்கள். எப்போது இவ்வுடல் நமக்கு வந்தது என்று அக்காலத்தை எண்ணி ஆராய்ந்தால் இறைவனது அருளைப் பெறலாம். சிவனை நாடினால் மலநீக்கம் பெற்றுப் பிறவி அறுதல் உண்டாகும்.
2107. போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வான்உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.
பொருள் : சீவர்களின் விருப்பம் செல்லுகின்ற முறையில் உடனாகின்ற பொருளாகிய சிவன் பக்குவமாகின்ற காலத்தும் அறிந்து இன்பம் செய்பவனாகவும் உள்ளான். ஆதலால் இறக்கின்ற காலத்தும் அத் தலைவனையே நினையுங்கள். அப்பொழுது அப் பரம்பொருள் பிறவிக் கடலை நீந்தி அக்கரை சேர உதவும்.
2108. பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே.
பொருள் : உடம்பை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற இச்சீவன், இதனுள் வாழ்ந்த பயனைப் பெற வேண்டின் இறக்கும் போதாவது ஈசனை எண்ணுங்கள். அதனால் சிறப்போடு சிவநெறியும் தானே வந்து அடையும் பிறகு பிறப்பில்லாப் பேருலகம் கூடலாம். இறக்கின்ற காலத்திலாவது ஈசனை நினைக்க வேண்டும் என்று இப்பகுதியில் மூன்று தடவை வந்துள்ளது கண்டு, இதன் இன்றியமையாமை உணர்க.
2109. கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே.
பொருள் : அடியார் கூட்டத்தோடு நின்றும் தனித்து நின்றும் தொழுது, எமது இறைவனை உடலாகிய பாசறையுள் நின்று அவனது திருவடியைப் பணியுங்கள். கண்ணாடி போன்ற முகத்தின் முன்னுள்ள ஒளியில் நிலைபெற்று அறிவினால் தொழுபவர்க்கு, கன்றையுடைய பசு பாலைச் சொரிவது போலச் சிவ ஒளி சீவன்பால் பெருகி நிற்கும்.
2110. விடுகின்ற சீவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.
பொருள் : ஆவி நீங்கி ஆருயிர் மேலோங்கிப் போகும்போது சிவயநம என்று நாடுங்கள். அதுவே சிவபெருமானின் திருவடிகளை நாடுவதாகும். நாடுவது - சிந்திப்பது அப்படி நாடுவதால் அத்திருவடிச் சிறப்பால் நும் வினைகள் கெடுகின்றன. அழிவில்லாத புகழையுடைய அழகனாகிய சிவ பெருமான் உம்மை இமையவர் நடுவுள்இருக்குமாறு அருள்புரிகின்றான். (இமையவர் - மெய்யடியார்.)
2111. ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் திருவடி
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.
பொருள் : திரு ஐந்தெழுத்து ஓதித் திருநீறு அணியுங்கால் ஏறுடையாய் எனவும், இறைவா எனவும், எம்பிரான் எனவும் உள்ளன்பால் ஓதுவர். அவ்வாறு ஓதித் திருவெண்ணீறணியும் மெய்யடியார்களை ஒருவர் ஆறணி செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமான் இவர்களே என்று நினைதல் வேண்டும். அங்ஙனம் நினைந்து அம் மெய்யடியார்களைச் சிறப்பாக வழிபடும் அவர்க்கு முத்திற வினைகளும் மூளா என்க. முத்திற வினைகளாவன: சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்பன.
2112. இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புறு வீர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்துப்
பண்புறு வீர்பிற வித்தொழி  லேநின்று
துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே.
பொருள் : பிறவித் தொழிலேயே நின்று பிறப்புத் துன்பத்தை மிகுவிக்கும் பாசப் பற்றாகிய ஆக்கைக்கே இத்தனை காலமும் உழைத்து இளைத்துக் களைத் மொழிந்தவர்களே அவனருளால் அறிந்தே இன்புறுங்கள். அவன் திருவடிக் கண்ணே இறவாத இன்ப அன்பு வேண்டிக் காதல் செய்யுங்கள். சிவத்தைப் பேணுதலாகிய தவத்தைப் புரியுங்கள். அதற்குரிய திருவடி யுணர்வுப் பண்புகளைப் பெறுவீராவீர்.
2113. மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.
பொருள் : அனைத்துயிரும் படிப்படியாகச் செவ்வி பெற்று மேற்கொள்ளத் தக்க அழிவில் மெய்த்தவம் ஒன்றுண்டு. அத்தவமே சிவத்தைப் பேணும் தவமாகும். இத்தவமே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையாக நவிலப்படும். இப்பெருந்தவ வாயிலாக எய்தற்கரிய திருத்தாளும் ஒன்றுண்டு. அத் திருவடியைத் தலைப்படும். அறிவினுள் அறிவாம் மெய்ந்நெறியும் ஒன்று உண்டு. இவற்றை மேற்கொள்ளும் வண்ணம் விழைந்து நிற்பார் சிவக்கிழமையர் ஆவர். அந்நல்லார்க்கு எல்லாம் எளிதாகவும் இனிதாகவும் கைகூடும்.
2114. சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.
பொருள் : திருவருள் துணையால் திருவடி யுணர்வால் சேர்ந்தவர்க்கு ஆர்ந்த இன்பம் கொடுத்தருளும் செம் மேனி எம்மான் சிவபெருமான். நன்னெறி சென்று நாடாமல் நீங்கியவர் பேர்ந்தவராவர். அவர்க்குத் துன்பப் பிறவியைக் கொடுத்தருள்வன். நன்னெறி நான்மையில் அறிவில் அறிவு என்று சொல்லப்படும் மேல்நெறி சென்றவர் கூர்ந்தவர் ஆவர். அத்தகையோர்க்கே திருவடிகளைக் காட்டி அருள்வன். அவ் அருள்வழிச் சென்று சார்ந்தவர் தேவராகிய சிவபெருமானை உணர்ந்தவர் ஆவர்.
2115. முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே.
பொருள் : வீடு பேறாகவும், அதன் வாயிலாகிய ஞானமாகவும் ஞானத்துக்குத் துணை செய்யும் முத்தமிழ் ஓசையாகவும் உள்ள ஈசனை, எத்துணைக் காலமும் பலர் புறத்தில் பணிவர். ஆனால் பாலில் கலந்திருக்கும் நெய் போல் நின்மல சிவனும் அவருடன் மறைந்திருப்பான். அத் தன்மையான சோதிப் பிழம்பாகிய அவனை அகத்தே கண்டு வழிபட அறியார்.
2116. நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.
பொருள் : தனுகரண புவன போகங்களை உயிர்களுக்கு நியமிக்கின்றவனாகிய நின்மல சிவன் அமைத்தருளிய காலம் எவ்வளவு என்று ஒருவரும் உணரமாட்டார். பிறப்பிலே வந்து படுவதைத் தவிர, சிவமாகிய பரம்பொருளின் பெருமையை உணராது கெடுகின்றார்.
2117. இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே.
பொருள் : இங்குள்ள வாழ்வும் எவ்வளவு துன்பமும் ஆயினும், மரணம் வந்த காலத்தில் தூய செம்மணி போலும் பெருமானை விஞ்ஞானத்து உறையும் விகிர்தனே என்று நைந்து உருகிப் பற்றற்ற வர்க்கன்றி நின்னை அடைய முடியாது (அகிதம் - துன்பம்.)
2118. பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.
பொருள் : சன்மார்க்க குருவை நாடி வஞ்சகமுடையோர் அடைவராயின் உலகில் பஞ்சம் உண்டாகும். அவர்களைக் கண்டு இறைவனே அஞ்சுவான். கொடுமையான நரகத்தில் அவர்களை வைப்பன். வஞ்சகமின்றிச் செம்மையான ஒழுக்கத்து நிற்போரைக் காண்பதே எல்லாச் சித்திகளையும் அளிக்கும்.
2119. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.
பொருள் : அளவற்ற தேவர்கள் சிவனைக் கிரியை நெறிநின்று வழி பட்டனர். அவ்வாறு அவனை வழிபட்டு ஆகும் பயன் ஒன்றும் இல்லை. அவனை வழிபடும் நெறியான ஞான நெறியினை உபதேசிக்கும் சற்குருவை வழிபட்டால் சிவனைப் பெறலாம். சற்குரு வழிபாடு சிவகதி அடைவிக்கும்.
2120. நரரும் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே.
பொருள் : மக்களும் தேவரும் ஆகிய பசு வர்க்கம் பாசத்தைப் பொருந்தி வினைகளைச் செய்து அழிவதைப் பார்த்து குருவாகிய ஞானி பாசம் நீங்கினவனாய் இருப்பான் ஆகில், நீ பரத்தோடு கூடிப் பரமாவாய் என்று உபதேசிப்பதன்றிச் சீடனுக்குச் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை. தத்துவமசி மகாவாக்கியமே பாச நீக்கத்துக்குரிய உபதேச மொழியாகும்.
2121. ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறுஅலை வீவித்து ளானே.
பொருள் : குருவாக எழுந்தருளி வந்து ஆட்கொண்டவர் ஒப்பற்ற சிவன். அவன்பால் அன்பு கொண்ட சீடரது வினைகள் நாள்தோறும் தேய்ந்து ஒழிய, நீரையுடைய நீண்ட செஞ்சடையை யுடைய  இறைவன், உருவம் கொண்டு எழுந்தருளிவந்து ஆட்கொண்ட முறையே வருத்தி வினையைக் கெடுமாறு செய்தான். சிவமே குருவாக எழுந்தருளிவந்து வினை கெடுமாறு அருளுவான்.
ஏழாம் தந்திரம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக