செவ்வாய், 8 நவம்பர், 2011

திருமந்திரம் | எட்டாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்


ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011 

12 திருமுறைகள்

 பத்தாம் திருமறை
திருமந்திரம் | எட்டாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்
  



விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க  

 பத்தாம் திருமறை
திருமந்திரம் | எட்டாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்

(சுப்பிராமேம்)
1. உடலிற் பஞ்ச பேதம்
(உடலில் ஐவகை பேதமாவன: அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.)
2122. காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
பொருள் : உடலாகிய அன்னமய கோசம் ஒன்று உண்டு. பல வினைகளாகிய சரக்கை யுடைய பிராணமய கோசம் என்று ஒன்று உண்டு. இவை அல்லாத வேறொரு மனோமய கோசம் ஒன்று உண்டு அறிவு விளங்கும் மனோமய கோசம் உடலைவிட்டு நீங்கினால் மாயப் பை ஆகிய இரு உடலும் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிடும்.
2123. அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியப்பட்ட காயமே.
பொருள் : சிவபெருமான் அமைந்தருளிய தூலம் சூக்குமம் என இரு கூறாகிய உடலில் சுத்தமாகிய சூக்கும உடலைப்பற்றிச் சொல்லும்போது ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம், புத்தி மனம் அலங்காரம் என்னும் எட்டும் புரியட்ட சரீரமாகும்.
2124. எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
கட்டி அவிழ்ந்துவிடும் கண்ணுதல் காணுமே.
பொருள் : முன்மந்திரத்தில் கூறிய எட்டினில் சப்தம் முதலிய தன் மாத்திரைகளிலிருந்து ஐந்து இந்திரியங்களும் ஆகும். அவற்றோடு பொருந்திய புத்திய முதலிய மூன்றும் உட்கருவிகளாம். இவற்றோடு சேர்த்த பாசத்தை உணர்வு மயமாக இருந்து சிவபெருமான் தூல உடலில் கூட்டியும் பிரித்தும் அருளுவான்.
2125. இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே.
பொருள் : உண்ட உணவின் சாரம் இரத்தம் மாமிசம், தோல், நரம்பு, பொருந்திய எலும்பு கொழுப்பொடு மூளை, பரந்துள்ள இந்திரியம் ஆகியவற்றாலாகிய பாழாம் காரியமான உருவமாகிய மயக்கம் தரும் உடலை ஒரு பொருள் என்று கூற முடியுமோ ? முடியாது. (அத்தி - அஸ்தி எலும்பு. உபாதி - காரியம்.)
2126. ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.
பொருள் : சிவபெருமானுடைய திருவடிப் பெருமையை யார் அறிவார் ? உடலை இடமாகக் கொண்டு அவர் எழுந்தருளியிருப்பதை யார் அறிவார் ? அறுபது  பொதுத் தத்துவங்களோடும் எட்டுச் சிறப்புத் தத்துவங்களும் விளங்கும் இருவகை உடலையும் யார் அறிவார் ? அவர் மூலாதாரச் சக்கரத்திலிருந்து காப்பதை யார் அறியவல்லார் ?
2127. எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்புதன் னால்உடம் பாமே.
பொருள் : எட்டுச் சாண் அளவாக எடுத்த உடம்பினுள் அமைந்த கண் கால் முதலிய உறுப்புக்களை அவ் வுடம்பில் மறைக்கின்ற ஒழுங்கில் நினைவழியாக அறுபத்தெட்டு உருவான ஆகாயக் கூற்றை ஒன்று சேர்க்கின்ற நட்பினால்  தூல உடம்பும் அதைத்  தாங்கிய சூக்கும உடம்பும் ஆம்.
2128. உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே.
பொருள் : தூல உடம்புக்கும் தூலமல்லாத பிராணமய மனோமய விஞ்ஞானமய ஆனந்தமய மாகிய நாலு உடம்புக்கும் உயிராக விளங்குவது சீவனாகும். அச் சீவன் பரத்தோடு நீங்கு தலற்ற பிரமத்தில் (சிவத்தில்) ஒடுங்கும். அப்பிரமம் உடல் உயிரில் கலந்து வியாபித்திருப்பதைப் போன்று சீவன் ஐங்கோசங்களிலும் அடங்கியிருந்து தொழிற்படுவதையும் இவற்றை விட்டு நீங்கும் முறைமையையும் யார் அறிவார் ?
2129. ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று  இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.
பொருள் : வழிகள் ஆறுமுடியினை உடையன. அவை எழுத்து, சொல், மறை, தத்துவமாகிய மெய்கள் (உடல்) உலகம், கலைகள் என்று சொல்லப்படும். முற்கூறிய மூன்றும் சொல்லுலகு என்றும், பிற்கூறிய மூன்றும் பொருள் உலக என்றும் கூறப்படும். இவ்வழிகளின் நடுவாய்த் திகழும் மெய்ப்பொருள் சிவபெருமான். அச்சிவத்துடன் கூடினால் பதினெட்டும் கூடினார் வழி யொழுகும். (கூடுதல் - இடையறா திரு ஐந்தெழுத்தை எண்ணுதல்.)
2130. மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்குமம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
பொருள் : புறம் தோன்றும்படி பொருந்தியுள்ள பருமை மிக்க பருவுடலையும், அகத்தே ஊன்றி உன்னும்படி அமைந்த நுண்ணுடலையும் உழைப்புக்கு விளக்கும் தரும் முதல் உடலையும் தருதற்குக் காரணமாயுள்ள மா மாயையைச் சிவபிரான் ஒடுக்குவன். அம் மாமாயை உடம்பு சிவபெருமான் திருவடிக்கீழ்  ஒடுங்கும். (முதலுடம்பு - காரண உடம்பு; உடம்பு - மாமாயை; முகத்தையும் - பொருத்தத்தையும்; மெய் - தூலசரீரம்; பொய் - சூக்கும சரீரம்.)
2131. காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல போல்
சேய இடம்அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிர்போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே.
பொருள் : பகைவரைக் காயும் தன்மை வாய்ந்த பாய்மாவாகிய குதிரை அண்மை இடத்தில் மட்டும் அல்லாமல் மிகவும் தொலைவான இடத்துக்கும் மிகுந்த விரைவில் செல்லும் வன்மையுடையதாகும். அது போல் ஆருயிரும் தன்னை மூடியிருக்கும் துகிலால் ஆகிய போர்வையைப் போன்றுள்ள உடம்பை வினைக்கீடாக ஒன்று விட்டு ஒன்றைப் பற்றிப் பிறக்கும். துகிற் போர்வை பழுதூற்றல் அதனை நீக்கி விட்டு மற்றொரு போர்வையினை எடுத்துக் கொள்ளுதல் ஈண்டு ஒப்பாகும். இது உயிர் பல அண்டங்களில் பல பிறவிகளை வெகுவிரைவாக எடுக்கும் என்றது.
2132. நாகம் உடல்விரி போலும்நல் அண்டச
மாக நானாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே கென்று
ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே.
பொருள் : நாகப்பாம்பு தோலை உரித்துவிட்டுச் செல்லுதல் போலவும், முட்டையிலுள்ள குஞ்சு முட்டையைவிட்டு வெளிவருவது போலவும் கனவில் கண்டவற்றை நனவில் விளங்காது மறந்து விடுதல் போலவும் உடலைவிட்டு உயிர் போகும். சிவனது ஆணையால் உடலை விட்டுப் பிரிந்துபோய் அதன் தகுதிக்கேற்ப நல்வினை தீவினைகளைச் சொர்க்க நரகங்களைப் பொருந்தி உண்ணும். (அண்டசம் - முட்டையில் தோன்றுவன அல்லது உடம்பு
அல்லாதது.)
2133. உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும்சுக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்புஇறப்பு எய்தியே.
பொருள் : இத்தேகப் பயனை அனுபவித்து உடலை விட்டவர் சூக்கும சரீரத்தில் பொருந்தி நரக சொர்க்கப் பலனை அனுபவிப்பர். பழமையான வினை தொடர சூக்கும  சரீரத்தைப் பற்றி வந்து பர ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திறமை பொருந்திய யோகி மீண்டும் தன் உடலில் வந்து புகுவது போல் உடம்பை எடுத்துப் பிறந்தும் இறந்தும் பிறவிச் சக்கரத்தில் அலைக்கப் படுவர்.
2134. தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
பொருள் : அவனே தானாகிய அந்நெறி நின்று தத்பதப் பொருளைத் தன்னில் கண்டவன் பிறவிக்கு வரும் இயல்பான குண தர்மணத்தை மாற்றிப் பரமம் என்ற மேலான நிலை அடைவன். இவ்விதம் செய்யாத மற்றைய உயிர்கள் அவரவர் வினைப் போகங்களுக்குரிய பத நிலைகளைப் பெற்றுச் சொர்க்கம். நரகம் அடைந்தும் மீண்டும் நிலவுலகில் வந்தும் வருந்தும்.
2135. ஞானிக்கும் காயம் சிவமே தனுவாகும்
ஞானிக்கும் காயம் உடம்பே அதுவாகும்
மேல்நிற்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.
பொருள் : சிவத்தையே நினைந்திருப்பதால் ஞானியின் உடம்பு சிவதனுவாகும். தேவ தர்மத்தை மறந்திருத்தலால் ஞானிக்குரிய உடம்பு சிவத்தினுடையதாகும். சிரசின் மேல் சிந்தித்திருக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும் உடம்பாகும். மோனம் என்ற பிரணவ யோகத்தை முடித்தவர் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றுமான உடம்பு கெட்டு சிவசாயுச்சியம் பெறுவர்.
இந்நான்கும் முறையே அகவிடத்தார் ஆசாரத்தை அகலுதலும், தன்னை மறத்தலும், தன்நாமம் கெடுதலும், தலைவன் தாள் தலைப்படுதலும் ஆகிய திருநெறி நான்மைத் திருவாகும். இக்குறிப்பு முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள் என்னும் அப்பர் தேவாரத்துள் காண்க.
2136. விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு
எஞ்ஞானத்  தோர்க்குத் தனுமாயை தான்என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.
பொருள் : தெளிந்த அறிவினையுடைய விஞ்ஞானகலர்க்கு ஆணவம் ஒன்றே உடம்பாகும். அறிவினைப் பெறும் தகுதியுடைய பிரளயகலர்க்கு மாயையே உடம்பாகும். அஞ்ஞானத்தோடு பொருந்திய சகலர்க்குக் கன்மத்தால் விளைந்த போக போக்கியப் பொருளே உடலாகும். உண்மையான சிவஞானிக்கு அகண்ட சிவமே உடம்பாக அமையும். ஞானிகளே ஆணவமாதி மலங்கள் நீங்கப் பெற்றுச் சிவதனுவைப் பெறுவர்.
2137. மலமென்று உடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே.
பொருள் : இவ்வுடம்பு மலத்தால் ஆயது என்று உணர்ந்து இதனை ஒதுக்காத  அறிவிலிகள் இதுவே சிறந்த இடம் என்று எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றீர்கள். இவ்வுடம்பே நன்மை பயப்பது என்று கருதியிருப்பீர்களாயின் உங்களுக்கு மேலும் மேலும் இப்பூவுலகில் பிறவி வந்து கொண்டிருக்கும். பூத உடலை விட்டு நிற்பதே ஞான நெறியாகும்.
2138. நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி  மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே.
பொருள் : நல்ல வசனத்தைப் பேசும் வாக்கும் நல்லதையே நினைத்துச் சிந்தித்துத் தெளியும் மனம் முதலியனவும் உடையவரது  உள்ளத்தில் மலமில்லாத சிவன் மெல்ல விளங்கி அருளுவான். அவ்வாறு அல்லாதவற்றைக் கேட்கும் செவியும் பேசும் வாக்கு முதலியனவும் நினைக்கும் மனமும் மெல்லப் பெறுபவர் சிவம்பிரகாசியாது வாட்டமுறும் முகத்தை உடையோராவர். சிவத்தை நினைந்து பேசியிருப்பவர் இன்பமும், உலகத்தை நினைந்து பேசியிருப்பவர் துன்பமும் பெறுவர்.
2. உடல் விடல் (உடல் விடலாவது உடல் நினைவு விடல்)
2139. பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்தும்  மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
பொருள் : இன்பம் தரும் காமத்தை உண்டாக்குகின்ற பேச்சும், ஆகாயக் கூற்றில் செல்லும் பிராணனும், அங்கே உண்டாகும் ஓசையும், ஊன் பொதிந்த உடம்பில் பொருந்துகின்ற மனத்தையும், சிரசின் மேல் நிலை பெறச் செய்ய, உடம்பின் பிரக்ஞையும் மறந்துவிடும்.
2140. அழிகின்ற ஓர்உடம்பு ஆகும் செவிகண்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனக்கு உறுதுணை இல்லையே.
பொருள் : உடம்பை விட்டு ஆருயிர் நீங்கும் காலத்தில் செவி கண் முதலிய உறுப்புகள் செயலற்று அழியும். அக்காலத்துப் புரியும் நோன்பினாலும் தானங்களினாலும் எவ்வகையான துணையும் அவ்வுடலுக்கோ உயிருக்கோ வருவதில்லை. எனவே சிவபெருமானே உறுதுணையாவான்.
2141. இலையாம் இடையில் எழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.
பொருள் : இல்லையென்று சொல்லும்படியான மிகவும் நுணுகிய இடையையுடைய அழகமைந்த பெண்பால் கொண்ட அளப்பரும் காமத்தால் நெஞ்சம் உலைவுற்று மூழ்கித் துன்புறும். இவ்வுண்மை உணர்ந்து ஒழுகுவார் நெஞ்சத் திண்மையர் ஆவர். அவர்கள் உள்ளத்தில் தம் உடம்பு மின்னல் போன்று நிலையாது அகலும் என உணர்ந்து தம்முடலைச் சுமை யெனத் தாங்கித்திரிவர். அவர்களுடையகல் ஒத்த உறுதி யான சித்தம் சிவபிரானிடத்தே அழுந்தி நிற்கும் அதனால் அவர்கள் பேரின்பம் உறுவர்.
3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை
(அவத்தை பேதம் - சீவன் உடம்பில் வாழும்போது அடைகின்ற நிலை வேறுபாடு. இவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என ஐந்தாகும். சாக்கிரத்திலிருந்து கீழ்நோக்கித் துரியாதீதத்துக்குச் செல்லுதல் கீழால் அவத்தை (நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு, அடங்கல்))
2142. ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம்சுழுனை
மெய்கண் டவன்உந்தி ஆகும் துரியமே.
பொருள் : இருபத்தைந்து கருவிகளுடன் சீவன் புருவ நடுவில் உள்ள போது விழிப்பு நிலையாகும். பழகிய பதிநான்கு கருவிகளுடன் சீவன் கழுத்தில் தங்கும்போது கனாநிலையை அடையும் என்பர். அழிவில்லாத புருடன். இதயத்தைப் பற்றியுள்ளபோது உறக்கமாகும். அழியாவனாகிய ஆன்மா உந்தியில் பொருந்தும்போது துரியமாகும்.
2143. முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்
செப்புஅதில் நான்காய்த்  திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே.
பொருள் : சாக்கிரத்தில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவ தத்துவம் ஐந்துமாக அடுத்துச்சொல்லப் பெறுகின்ற கனவு நிலையில் மகேசுவரம் சாதாக்கியம் சத்தி சிவம் ஆகிய நான்கும், விளங்குகின்ற துரியத்தில் சத்தி சிவம் ஆகிய இரண்டும், துரியாதீதத்தில் சிவம் ஒன்றுமாக அச்சிவம் முதலாகத் தொழிற்படும். இவ்வாறு சுத்தவித்தை முதலாகச் சிவம் ஈறாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
2144. இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்
கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே.
பொருள் : ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் பத்தும் அவற்றின் விஷயங்களான சத்தாதி வசனாதி பத்தும் மறை பொருளாக உள்ள வாயுக்கள் பத்தும் மனம் முதலிய உட்கரணங்கள் நான்கும் இவற்றோடு கூடிய ஆன்மாவும் ஆக 35 ம் பந்தத்தைச் செய்கின்ற சாக்கிர அவத்தையின் கண்ணவாகும். பாடபேதம் : (அச்சக்கரம் - சரீரம்.)
2145. பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே.
பொருள் : மண்ணின் நிறம் பசும்பொன் நிறமாகும். நீர் வெண்ணிறமானது. நெருப்பு செந்நிறமானது, மேகம் போன்ற காற்று கருமை நிறமானது. ஆகாயம் புகை நிறமானது. இவ்வகையான நிறங்களில் ஐம்பூதங்களும் மறைந்து நிற்கும். முதல் மூன்று வெளிப்படத் தோன்றுவன. காற்று தொழிலால் புலனாவது. வானம் உயத்துணர்வல் புலனாவது அதனால் வானத்தை மறைந்து நின்றார் என ஓதினார்.
2146. பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமோடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.
பொருள் : பூதம் ஐந்தும், பொறிஐந்தும் குற்றம் எய்துமாறு இருந்த புறநிலைக் கருவிகள் என்ப. இவற்றால் நிகழும் குணம் செயல்கள் மலம் காரணமாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிந்த கருவிகள் அறுபது. ஆகக்கருவிகள் தொண்ணூற்றாறு என்ப, இவை ஜாக்கிர அவத்தைக்குரிய கருவிகள் 96 ஆகம். (தத்துவம் 36 தாத்துவிகம் 60 ஆக 96)
2147. இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
பொருள் : ஆருயிர்கள் ஐம்பாடு எய்தும் இட வகைகள் ஐந்தென்ப அவை: நனவு, கனவு, உறக்கம் பேருறக்கம், உயிர்ப்பு, அடங்கல் என்ப. இவற்றுள் உயிர்ப்படங்கல் ஒழித்து, ஒழிந்து நான்கினும் உள்ள கருவிகளை உருவகமாக ஓதியருளுகின்றார். இருபத்தைந்து கருவிகள் யானையை ஒக்கும். பேசல், நடத்தல், கொடுத்தல், கழித்தல், இன்புறலின் கருவிகள் விரைந்து செல்லும் காலாட்களாகும். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பவற்றை மேற்கொள்ளும் கருவிகள் ஐந்தும் மிக விரைந்து செல்லும் குதிரைகளாகும். மிடற்றோசை உள்ளிட்ட ஓசைகள் நான்கும் அமைச்சரை ஒக்கும். இந் நான்கும் மடங்குதலே அப்பால் நிலையாகும். (ஓசைநான்கு நுண்மை, நினைவு, மிடறு, செவி என்ப.)
2148. உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குளின் றாரே.
பொருள் : பிராணமய கோசமும் மனோமய கோசமும் அன்னமய கோசத்தைத் தழுவி நின்ற உடம்பில் உள்ள உயிரின் இயல்பை அறியார். உடம்புக்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பை அறியாதவர் மடத்தில் புகுந்த நாய் அலைவது போல மயங்குகின்றார்கள். (சைவர் மடத்தில தனக்கு வேண்டிய இறைச்சி எலும்பு முதலியன இல்லாமையால் நாய் மயங்குவது இங்கு உவமையாக வந்துள்ளது.)
2149. இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
மருக்கும்  அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே.
பொருள் : உண்மை யறிவில்லாத கோழையர் உடம்பகத்துத் தங்கியிருக்கும் தம் தன்மையை உணரமாட்டார். இவ்வுடம்பையே சிவநினைவால் திரு வெண்ணீறு, சிவமணி பூணலால் சிவனடியாராகிய நடமாடும் திருக்கோயில்களைச் சிவன் எனவே தேறி வழிபடலால் மாற்றிச் சிவ உடலாக அமைத்துக் கொள்ளலாம். அங்ஙனம் அமைத்துக் கொண்டால் பிறப்பு இறப்புகளை அறுக்கும் பெருமறை சிகரமாகும். இதனைப் பேசாமறை என்பர். இப்பேசாமறையே அசபை என ஓதப் பெற்றது. இதனால் இறப்பு - பிறப்புகளை ஒழிக்கலாம்.
2150. ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.
பொருள் : ஆருயிர் தோறும் ஒளிந்திருக்கும் ஒருபதி என்று ஓதப்பெற்றனன். அவன் ஆருளிய பொருளும் நெறியும் நந்நான்கு என்ப அவை முறையே அறம் பொருள் இன்பம் வீடு எனவும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனவும் கூறப்படும். இவற்றை அளித்தருளினன் என் உள்ளத்தின் உள்ளே ஆரியன் என்னும் ஆசானாய் எழுந்தருளினன். அத்தகைய சிவ குருவானவர் உள்ளிருந்து உணர்த்தும் கலைகள் அறுபத்து நான்கு அக்கலைகளின் வாயிலாக எண்ணத்தின் கருவியாகிய சித்தம் சிவம் திருவடியையன்றி வேறொன்றும் எண்ணாமல் ஒடுங்குமாறு செய்தருளினன். திருவடிப் புகலில் அடங்கி யிருக்குமாறும் அருள் புரிந்தனன். பதினாலு என்பதைப் பிராசாத கலைகள் என்றும் கொள்ளலாம்.
2151. மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே.
பொருள் : மண்ணும், அதனில் பொருந்தி விரிந்து இருக்கும் நீரும் பொன்போற் காணப்படும் தீயும், புகழ் மிக்கதாகிய வளியும், புகழ்மிக்கதாகிய வானமும், நிலைபெற்றுள்ள மனம், இறுப்பு, எழுச்சி ஆகிய எட்டும் அவ் அவற்றின் தன்மையுடன் ஓர் ஒன்றாய் நினைத்து உண்மை ஓர்ந்தால் பூதவெற்றி நிறைவுற்ற தென்க.
2152. முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்மு னாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.
பொருள் : முதல்பூதமான ஆகாயத்துக்கு ஓசை என்ற ஒரு மகன். அதனின்றும் உருக்கொண்ட காற்றுக்கு ஓசையும் ஊறுமான இருமக்கள். காற்றினின்றும் வந்த தீயினுக்கு ஓசை, பரிசம், உருவம் என்ற மூன்று பிள்ளைகள். பிறகான நீருக்கு ஓசை, பரிசம், உருவம், சுவை என்ற நான்கு பிள்ளைகள், கன்னியாகிய பூமாதேவிக்கு ஓசை பரிசம் உருவம், சுவை, நாற்றம் என்ற ஐவர் மக்களாகும். இவ்விதமான பிள்ளைகள் சிவத்துடன் சமவாயமான சிற் சித்தியிடம் முதலில் இல்லை. அவளே சிருஷ்டியைக் கருதியபோது ஐந்து பிரிவாகப் பிரிந்து அவைகளின் வேறாயும் அவைகளின் ஊடேயும் நின்றனள்.
2153. கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின் றானே
கண்டகனவு ஐந்தும் எனவும் பாடம்
பொருள் : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்களால் பெற்ற காட்சி ஐந்தும், வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் ஆகிய கன்மேந்திரியங்களால் பெற்ற அனுபவம் ஐந்தும், மனம்  முதலிய அந்தக் காரணங்களால் நுகர்ந்தவை நான்கும் ஒருசேரக் கண்டபின் பழமையானதாகிய மேலான சாக்கிரநிலையில் பிரபஞ்சமும் தானாய் விளங்கும்படி நின்றான்.
2154. நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.
பொருள் : மேலோதியவாறு நின்றார் நிற்க. அங்ஙனம் நில்லாதார் அனைவரும் இருவகைப் பொறிபத்தும் கலன் நான்குமாகிய  பதினான்கில் பொறி பத்தையும் விட்டுப் பொருந்திய எண்ணம், மனம், எழுச்சி இறுப்பு என்னும் அகப்புறக் கலன் நான்குடன் புறத்து மனை வாழ்க்கையின்கண் பயின்று வந்துள்ள பசைத் தொடர்பால் கழுத்தில் கனவு கண்டனர்.
2155. தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.
பொருள் : கனவின் நிலைக்களமாகிய கழுத்தை விட்டுக் கீழிறங்கி நெஞ்சத்தில் தனியே புகுந்து உலகியல் பெருமையும் அறிவும் அழிந்து உயிர் நிற்கும். அங்கு அவ்வுயிர்க்கு மயக்கம் ஒன்றுமே உடன் நிற்கும். அங்கு அமைதி, ஆட்சி, அழுந்தல் என்னும் மூன்று குணங்களும் (சத்துவம், இராஜசம், தாமதம்) வெளிப்படாமல் அடங்குநிலை அவ்வியத்தம். இதுவே உறக்க நிலையாகும். (உறக்கம் - சுழுத்தி, அவ்வியத்தம் - மூலப்பகுதி.)
2156. சுழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.
பொருள் : உறக்க நிலைக் களமாகிய நெஞ்சத்தின் கண் எண்ணமும் உயிர்ப்பும் ஆளும் ஆகிய மூன்று கருவிகளும் தொழிற் படும். பேருறக்க நிலைக் களமாகிய கொப்பூழின்கண் உயிர்ப் பும் ஆளும் ஆகிய இரண்டு கருவிகள் தொழிற்படும். உயிர்ப்பு அடங்குதலாகிய குலத்திடத்து ஆள் மட்டும் தொழிற்படும் இங்கு ஆருயிர் ஆள் என்னும் கருவியுடன் கூடி மூலப்பகுதி என்னும் திரிபு உணர்ச்சிப் பண்பை நுகர்ந்து கொண்டிருக்கும் இவ்வுண்மை அவ்வுயிர் விழித்தெழுந்தபின் இன்புறத் துயின்றேன் என மொழிவதால் உணரலாம். அவ்வியத்தமாகிய மூலப்பகுதி மாறு பாட்டுணர்வைச் செய்யும்.
2157. தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே.
பொருள் : பேருறக்கமாகிய துரியத்தின்கண் ஆருயிர் எழுந்து தருக்குறும். உள்ளமானது எழுந்து உலகம் பின்னிடும் படியாக வேகமாகச் செல்லும் சென்று ஓசையுடன் மூலத்திடத்து ஊனமாகிய ஆருயிர் குறைவுடைத்தாகிய அறியாமைப் பண்பைச் செய்யும் மூலப்பகுதியின் செயலையும் விட்டு அம்மூலப்பகுதியுடன் மட்டும் தனித்து நிற்கும். (ஆருயிர் - உயிர்ப்பு. பிராணவாயு. ஊமன் - ஆன்மா.)
2158. ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.
பொருள் : பேச இயலாத எழுத்தாகிய மகாரத்தோடு பேசும் எழுத்துக்களாகிய அகார உகாரங்கள் பொருந்தில் ஆமைக்குள் அதன் உறுப்புக்கள் அடங்குவன போல் ஐந்து, இந்திரியங்களும் செயல்படாமல் அடங்கிவிடும். அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளிபெற்று விளங்கும். அப்போது அகங்காரம் கெட்டதை நாம் அறியமாட்டோம்.
(ஓம் - அ+உ+ம் தூலப்பிரணவம்
ம் - மெய்யெழுத்து (ஊமை எழுத்து) உயிரைச் சார்ந்து அன்றி ஒலியாது. அகர உகரங்கள் பேசும் எழுத்துக்கள்.
அ - ஆற்றல் - சக்தி உ - அறிவு - சிவம். ஊமை எழுத்து - (ம்) மலம்.)
2159. துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
தரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.
பொருள் : பேருறக்கமாகிய துரியம் இருப்பது நனவாகிய சாக்கிரத் துள்ளேயாம். நரிகள் என்று சொல்லப்படும் அறிதற் கருவி ஐந்தும், செய்தற்கருவி ஐந்தும் அகக் கலன்கள் நான்கும் கூடிப் பதினான்கு என்ப. இக்கருவிகள் பதினான்கும் ஆருயிர் புறத்துப் பரவாமையான நுகர்ச்சியின்றி நஞ்சுண்டது  ஒத்து அடங்கின. அப்பொறிகள் புலன் கெள்ளும் புலன்கள் பத்தும் குதிரையை ஒத்துத் தொடர்பின்றிப் பறந்தது. உயிர்ப்பு அடங்கலாகிய துரியாதீதத்து நிகழும் நிலையில் இனிய நிலையினை இன்ன தன்மைத்தென்று சொல்ல ஒண்ணாதென்க.
2160. மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தங்கர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.
பொருள் : திருவடிப் பேறு எய்தும் அளவும் விட்டு நீங்காமல் ஒட்டி நிற்கும் மலம் ஐந்தும் மாறாமலம் எனப்பட்டன. இவை ஆருயிர்களின் ஐம்பாட்டினும் உடன் நிற்கும். இவை நீங்காமையால் மாயா காரியமாகிய உடல் கலன் முதலியவற்றை இன்னும் வேறாகப் பெறுதல் வேண்டும். ஆகையால் உடம்பின் ஈறு எய்துவதற் கில்லை. அதனால் எத்தகைய உயிரும் பிறந்து இறந்து ஆறாத வல் வினையால் அடியுண்டு துன்புறும்.
2161. உண்ணும்தன் ஊடாடாது ஊட்டிடு மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே.
பொருள் : நுகர்விக்கப் படவேண்டிய மாயாகாரியங்கள் திருவருள் எய்தும் வரையில் ஊட்டாமல் கழியா. சிவபெருமான் திருவருள் பெறுவது வீடு பேறாகும். மாயையை நண்ணுதல் இல்லாத உயிர்கள் பிறப்பு எய்தினும் அப்பிறப்பு திருவடி யுணர்வாகிய சிவஞானப் பிறப்பாகும். அப்பிறப்பின்கண் எண்ணத்தக்க திருவடி யுணர்வால் நேர்முத்தியாகிய மீளா ஆளாம் திருவடிப் பேறு எய்தும்.
2162. அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
திதமான கேவலம் இத்திறம் சென்று
பிரமாகா ஐஅவத் தைப்படு வானே.
பொருள் : ஆருயிர்க்கு ஆணவம் மிகுதலால் அதி மூடமாகிய உறக்கம் உண்டாகும். அதனால் அவ்வுயிர் இரு வினைக்கு ஈடான கன்மங்களையே நினைக்கும். நினைத்து நிலையான கீழ் ஐம்பாடு என்று சொல்லப்படும் கீழால் அவத்தையை எய்தும். இம்முறையாகச் சென்று சிறப்புநிலை இல்லாத ஐம்பாட்டினையும் எய்தும்.
2163. ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.
பொருள் : ஆசிரியர் முன்னே பாடம் கற்பிக்கும் போது உறங்கும் மாணவரை ஒளியுடைய பிரம்பால் ஆசிரியர் தட்டி எழுப்புவது போல, நேயப் பொருளான சிவபெருமானும் அநாதியாகவே ஆணவ மலத் தொடக்கு உடையோரைச் சுத்த மாயையால் ஒளியை உண்டாக்கி எழுப்பி அருளுவன்.
2164. மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சுணும் மன்னன்அன் றேபோம் அளவே.
பொருள் : மேகத்தொடு பொருந்திய ஆகாய கங்கை குடத்திலுள்ள நீரேயாம் என்பது அறிவில்லாதவன் மிக்க அறிவுடையோன் போலக் கூறும் கூற்று. அவ்வாறு குறை வில்லாத பிரமமும் ஆன்மாவும் ஒன்று என்பதற்கு மாறாக இவ்வுடலுக்கு நாயகனாகிய ஆன்மா பக்குவப்பட்டு நீங்கும் வரை ஐந்து அவத்தைக்கு உட்பட்டுக் கொண்டே யிருக்கும்.
2165. படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாமநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.
பொருள் : உடம்பைத் தனதாகக் கொண்டு ஆளும் ஆருயிர் இடையறாது ஓடிக் கொண்டே யிருக்கும். இயல்பு வாய்ந்த மனமாகிய குதிரை மீது ஏறி அழகு மிக்கதாகிய அகநகரின்கண் வலம் வருகின்றது. அப்பொழுது அறிதற் கருவியாகிய செவி முதலிய ஐந்தும் செய்தற்கருவி முதலிய பிறகருவிகளும் புடைபெயராது உறங்கிக்கிடக்கும். அவைகளின் பற்றுக் கோட்டுக்கு இடனாகத் துடித்துக் கொண்டிருக்கும் இயல்பு வாய்ந்த நெஞ்சம் துடியில்லம். அந்நெஞ்சத்தைப் பற்றி உறங்குகின்றனர். (துடியில்லம் - இதயத்தானம்)
2166. நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
தேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.
பொருள் : புறக்கண்ணுக்குப் புலப்படாத மலத்தை சுத்த அவத்தையில் புலப்படும் வண்ணம் மலக் குற்றத்துக்குரிய காரணத்தை நினைந்து நின்மல சாக்கிரத்தில் கண்ணுக்குப் புலப்படாதிருந்த ஐம் மலங்களையும் அகக்காட்சியில் கண்டு, தம் முகத்துக்கு முன்னாக விளங்கும் சிவத்துடன் பிரியாது நிற்பதே அழியாத நிலையாகும்.
4. மத்திய சாக்கிர அவத்தை
(அஃதாவது மத்தியமாகிய புருவ நடுவில் சீவன் சாக்கிரம் ஆதிய ஐந்து அவத்தைப் படும். அவை சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் சுழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியாதிதம் என்பன. இவை விழிப்பிலுள் நிலைவேறு பாடேயாம்.)
2167. சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே
பொருள் : நனவின் நனவு என்று சொல்லப்படும் நிலையில் திரோதாயி தொழிற்படுத்தும். திரோதாயி நடப்பாற்றல். இதுவே மறைப்பாற்றல். நனவினிடத்து நிகழும் கனவில்  தூமாயைத் தொடர்பினராவர். நனவின் உறக்கத்துக்குக் கன்மத் தொடர்பினராவர். நனவின் பேருறக்கத்துக்குத் தூவாமாயைத் தொழிலினராவர்.
2168. மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுமுனை கனாநனா வும்துன்னி
ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே.
பொருள் : தூவா மாயையானது உயிர்ப்பு அடங்கலாகிய துரியாதித நிலையில் உழைப்புக் கருவியாகிய கலாதியுடன் அடங்கிநிற்கும் பேருறக்கத்தின்கண் விழைவுக் கருவியாகிய அராதும் முனைக்கும். உறக்கமாகிய சுழுமுனையின்கண் உணர்வுக் கருவியாகிய வித்தை முனைத்துக்கூடும். கனவு நிலையில் உழைப்பு முனைத்துக்கூடி உடல் மெய்யாகிய மூலப்பகுதிக் கருவிகள் இருபத்தைந்துடன் தொழிற்படும். நனவு நிலையுடன் எல்லாக் கருவிகளுமாகிய முப்பத்தைந்து கருவிகளுடன் தொழிற்படும்.
2169. மேவிய அந்தகண் விழிகண் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு
மேவும் தடிகொண்டு செல்லும் வழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே.
பொருள் : பிறவியிலேயே குருடனும் இடையில் குருடானவனும் ஆகிய இருவரும் நடந்து செல்லும் போது முன்னே சென்ற நடைபாதையை அறிந்து பொருந்திய தடியைக் கொண்டு பாதையை அறிந்து நடப்பர். அவ்வாறே மூன்று வகையான உயிர் வருக்கங்களும் செயலில் பொருந்தும்.
2170. மத்திமம் ஒத்தி சிலந்தி வலயத்துள்
ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று
சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.
பொருள் : சிலந்தியானது அதுகட்டிய வலையின் நடுவுள் பொருந்தியிருந்து அங்கு அணுகி வரும் உயிரினங்களைப் பிடித்துத் தின்னுவது போல் சிவபெருமானும் ஐம்பொறி அறிவுகளும் வந்துபொருந்தும் மூளைப் பகுதியில் உடனிருந்து சத்த முதலாகிய புலன்கள் ஐந்தையும் நுகர்கின்றான். சிவன் மூளையில் ஆன்மாவுடன் இருந்து சத்த முதலிய புலன்களை நுகர்கின்றான்.
2171. வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்
உச்சும் உடன்அணை வான்ஒரு வன்உளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.
பொருள் : வைக்கவேண்டியவாறு இருபத்தைந்து தத்துவங்களைச் சாக்கிர நிலையில் வைத்து அவற்றையே உபாயமாகக் கொண்டு பொருந்தி எங்குமுள்ள சிவன் வியாபித்துள்ளான். பித்தன் என்றும் பெரியன் என்றும் பிறப்பில்லாதவன் என்றும் எப்போதும் விரும்பிப் போற்றி அவனருள் பெற்று நான் உய்து பெற்றேன்.
2172. நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்
கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.
பொருள் : ஆன்ம தத்துவம் இருபத்து நான்குடன் புருடன் என்ற தத்துவத்துக்கு வேறாகவுள்ள இருபத்து ஐந்துடன் ஆன்மா பிரமம் சொல்லமுடியாத ஆகாயம் ஆகியவற்றை மேலான தத்துவங்களாகப் பிரமவாதிகள் கொண்டனர். இவ்வாறு வேறான இருபத்தெட்டும் வேதாந்தத்துக்குரிய தத்துவங்களாம். (வேறான ஐந்து பூதங்கள் 5, இந்திரியங்கள் 10, தொழில்கள் 10, ஆன்மா - 1, பிரமம் - 1, பரமாகாயம் - 1 ஆக 28. சைவ தத்துவம் 36.)
2173. ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே.
பொருள் : ஆன்மா பொருத்தமாக உடம்பினுள் இடை பிங்கலை நாடிகளில் முறையாகப் பொருந்தி அங்குச் சத்துவ குணத்துடன் புகுந்து மூலாதாரம் முதலாக அங்கு மும்முடிச்சுகளையும் கடந்து காலாதீதப் பொருளான சிவனது திருவடியைக் காணலாகும்.
2174. நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.
பொருள் : பத்து நாடிகளும் நன்மையைத் தருகின்ற பிராணன் முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக மேலாகச் செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி இருந்திடும். காமக் கல்வியில் பெறும் ஆனந்த இரசமும் நன்மையை நாடிய மனமும் இவ்வுடலில் ஆம்.
2175. ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே.
பொருள் : ஆவன ஆகும். அழிவன அழியும், கழிவன கழியும், வருவன வரும். ஆகையால் காக்கின்ற இறைவன் ஆன்மாக்களுக்கு அனுபவத்தைக் கொடுத்துச் சாட்சியாகக் கண்டிருப்பவன். ஆதலால் தக்கவாறு செய்யும் கருணையாளன் ஆவான்.
2176. பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேனலத் துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே.
பொருள் : பத்து இந்திரியங்களோடு அவற்றின் தொழில்கள் பத்தும் நான்கு அந்தக் காரணங்களும், இவை பொருந்திய சிவனும் சிரசில் மோதும், பிராணனும் உண்மையான ஆகாயமும் மேல்முகத்தில் விளங்கும் பிரமமும் வேதாந்த தத்துவங்கள் இருபத்தெட்டு என்று எண்ணத்தக்கன வாகும்.
2177. விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.
பொருள் : விளக்கம் மிக்க முன்னூறுடன் முப்பதோடு பத்தாகிய முன்னூற்றைச் சேர்த்து அறு நூற்றை வலிமையுடைய ஆறை இரட்டிய முப்பத்தாறுடன் பெருக்க வரும் 21,600 சுவாசம் நடந்தால் ஆணவமாதி ஐம்மலங்களும் வணங்கி நீங்கும், மூலவாயு மேல் எழுந்து விளங்கும் போது தத்துவங்களும் அங்கங்கே நின்றுவிடும்.
2178. நாலொரு கோடியே நாற்பத்தெண் ணாயிரம்
மேலுமேர் ஐந்நூறு வேறாய் அடங்கிவிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய  ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.
பொருள் : தத்துவங்களை வெவ்வேறாகப் பிரித்துக் கணக்கிட்டால், அவை நான்கு கோடியே நாற்பத்தொண்ணாயிரத்து ஐந்நூறு என்று சிறப்பாக அடங்கும். அவற்றைப் பகுத்துத் தொகுக்கின் தொண்ணூற்றாறுள் படும். அவைகளை மேலும் சுருக்கில் இருபத்தைந்துள் அடங்கும்.
2179. ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கோ.
பொருள் : மாயையின் காரியமாகிற தத்துவங்கள் பொதுவகையால் தொண்ணூற்றாறு ஆகும். அருமையான சைவர் கொண்டுள்ளது முப்பத்தாறு தத்துவங்களாகும். இருபத்தெட்டு தத்துவங்கள் வேதாந்த சமயத்துக்கு உள்ளன. வைணவர்களுக்கு உள்ள தத்துவம் இருபத்து நான்காகும். மாயாவாதிக்குரிய தத்துவம் இருபத்தைந்தாம்.
2180. தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மாம்அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே.
பொருள் : தத்துவங்களைத் தம்வழி அடங்கி நிற்கும்படி செய்யின்; மிகவும் சமர்த்தனாக விளக்கம் பெற்றிருக்கலாம். பிராண செயமடையாது ஏனைய பொய்யான நெறி அகன்றுவிடும். அதை உணர்த்தும் நெறி அகார எழுத்தறிவாகும்.
2181. அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மா பொருந்தாத போது அறிவில்லாதவை ஆகும். அவ்வாறு இருந்தும் அவற்றை அறிகின்ற என்னை நான் அறியாமல் இருந்தேன். என் குருநாதன் நீ அறியும் ஆற்றலுடையாய் என்று  அருள்செய்தான். அதனால் நான் அறிகின்றவன் என்பதை அறிந்து கொண்டேன்.
2182. சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே.
பொருள் : சாக்கிரத்தில், சாக்கிரம் முதலான அவத்தையில் சிவதத்துவம் ஐந்தும் பொருந்தும் அவைகளை மலத்தைக் காரணமாகவுடைய இந்த நனவு முதலிய ஐந்து அவத்தைகளினால் போக்கி, இவற்றோடும் பொய்யான முப்பத்தாறு தத்துவங்களையும் அகற்றி ஆன்மா பிரணவ நெறி நின்று சிவத்தோடு பொருந்தி நிற்கும்.
2183. ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவத்திற்கு ஆவதே.
பொருள் : பிரமனுக்கு ஆணவம், கன்மம், மாயை மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் உள்ளன. திருமாலுக்கு ஆணவம் கன்மம் மாயை திரோதாயி ஆகிய நான்கு மலங்கள் உள்ளன. உருத்திரனுக்கு ஆணவம் கன்மம் திரோதாயி ஆகிய மூன்று மலங்கள் உள்ளன. மகேசுவரர்க்கு ஆணவமும் திரோதாயியும் உள்ளன. சதாசிவனுக்கு ஆணவம் மட்டும் உரியது.
5. அத்துவாக்கள்
(அத்துவா - வழி, அத்துவாக்கள் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என ஆறாம். இவற்றுள் மந்திரம் பதம், வன்னம் சொற்பிரபஞ்சம் எனவும், புவனம் தத்துவம் கலை பொருட் பிரபஞ்சம் எனவும் பெயர் பெறும். இவை வினையை ஈட்டுவதற்கும் வினையை நுகர்வதற்கும் உரிய வழிகளாம்.)
2184. தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே.
பொருள் : தத்துவங்கள் முப்பத்தாறு, மந்திரங்கள் ஏழ்வகையான முடிவுகளை உடையன. உண்மையில் வழங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும். புவனங்கள் இருநூற்று இருபத்து நான்கு பதங்கள் எனப்படுபவை. எண்பத்தொன்று கலைகள் ஐந்து, இவை சிருஷ்டியில் வந்தவை. ஆறு அத்துவாக்களின் வகையும் தொகையும் கூறியவாறு.
2185. நாடிய மண்டிலம் மூன்றும் நலந்தெரிந்து
ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.
பொருள் : உடலகத்தே நாடப்படும் மண்டிலங்கள் மூன்று சிவகுருவின் அருளால் அவற்றின் நன்மைகளை அறிந்து நிற்பாருடன் கலந்து நடப்பது இருபத்தைந்து மெய்களாகும். அவற்றுடனும் சிவகுருவின் அருமறையாம் உபதேச மொழியுடனும் சென்று காண்õபர்க்குக் கருவிகள் ஒன்றும் தோன்றா. அதனால் திகைப்புற்றிருந்தாரை யொப்பர்.
2186. சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே.
பொருள் : நனவின் நனவினை முதற்கொண்டு பருவுடற்கண் உள்ள உச்சித் தொளையாகிய வெளிவரை நின்று அப்பால் அருள் வெளியின்கண் அருளப் பெறும் திருக்கூத்தினைக் கண்டு வழிபட்டு அதன்மேல் தூவா மெய்க்கண் காணப் பெறும் சிவமெய் ஐந்தும் உணர்வுறுவர். அத்தகையார்க்கு எல்லாம் சிவ வண்ணமாய்க்  காணப்பெறும்.
6. சுத்த நனவாதி பருவம் (அஃதாவது சகலநிலையில் சுத்தசாக்கிர முதலிய ஐந்து நிலைகள்.)
2187. நானவாதி தூலமே சூக்கப் பகுதி
அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே.
பொருள் : நனவு முதலாகச் சொல்லப்படும் பருமைப் பகுதியே நுண்மையாம். பகுதியும். அத்தன்மையவாகிய இருபத்தைந்து மெய்களும் தூமாயை என்று சொல்லப்பெறும் மாமாøயினின்றும் போந்தன வாகும். அவற்றுடன் கலந்து தொழிற்படும். ஆருயிரின்நிலை தூநிலை யாகும். அந்நிலை நனவிற் கனவு போன்று காணப் பெறும். (விந்துவின் - மகாமாயையின்.)
2188. நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவுஓட நன்செய்தி யானதே.
பொருள் : சாக்கிரத்தில் (விழிப்பு நிலையில் துரியாதீதம் அடைந்தவர் குழந்தையைப் போலக் கிடப்பர். சாக்கிரத்தில் துரியநிலை அடைந்தவர் தவழும் குழந்தையைப் போல் சிறிது அறிவுள்ளவராவர். சாக்கிரத்தில் உடலை உறங்கச் செய்பவர் வளர்ந்த பிராயம் பெற்றவராவர். சாக்கிரத்தில் சொப்பன நிலையில் உள்ளவர் ஓடுதல் போன்ற செயலைச் செய்பவராவர்.)
2189. செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.
பொருள் : சாக்கிரத்தில் துரியாதீதம் சென்றவரிடத்துக் கிரியை சிறந்து விளங்குவதால் சிவ தத்துவம் உணரப்படுவதாக உள்ளது. அப்படிப் பட்டவர்களிடம் பிரிப்பின்றிச் செறிந்திருக்கும் சுகரூபமான யோகம் சிவத்தின் பேரருளாலேயாம். அவரிடம் சிறந்த கல்வியும் நல்ல திருமேனியும் நற்குணங்களும் காணப்பெறும். அவர்களுடைய அறிவில் அண்டகோசத்தில் அசைவனவும் அசையாதனவும் விளங்கும்.
2190. ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்
போதம் கலைகாலம் நியதிமா மாயை
நீதிஈ றாக நிறுத்தினன் என்னே.
பொருள் : ஆதியாகிய பரசிவம் சிவம்சத்தி சதாசிவம் குற்றமில்லாத மகேசன் சுத்தவித்தை ஆகிய தத்துவமும், வித்தை கலை காலம் நியதி மாயை ஆகிய தத்துவமும் முறையையும் முடிவும் உடையனவாக அமைந்துள்ளான் என்று அறியாவாயாக. சுத்தவித்தை சிவதத்துவத்திலும் வித்தை வித்தியா தத்துவத்திலும் உள்ளன எனக்கொள்க.
2191. தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே.
பொருள் : ஒளிமிக்கசிவம் சத்தி சதாசிவம் மகேசன் சுத்தவித்தை இராகம் கலை காலம் குற்றமற்ற வித்தை நியதிமாயை குற்றமில்லாத புருடன் முதலாக ஆன்மதத்துவங்கள் ஈறாகத் தத்துவம் 36 ஆகும். (சிவத்துவங்கள் ஐந்தும், வித்தியா தத்துவங்கள் ஏழும் கூறப்பட்டுள்ளன எனவும் கொள்ளலாம்.)
2192. ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.
பொருள் : ஆணவம் உமியை ஒக்கும் மாயை தவிட்டை ஒக்கும். கன்மம் முளையை ஒக்கும். ஆருயிர் அரிசியை ஒக்கும். உயிர் கலப்புத்தன்மையால் சிவனுடன் புணர்ப்பாய்ப் பிரிவின்றி நிற்பினும் அரிசியை ஒக்குமே யன்றிச் சிவனை ஒவ்வாது. திருவருளால் உன்னுடைய பாசங்களை விட்டுவிலகிச் சிறப்பருளும் சிவபெருமான் திருவடிப் பெருமையினைப் போற்றுவாயாக. (தண்டுலம் - அரிசி.)
2193. பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
பொருள் : பசுக்கள் பல நிறமுடையவையாயினும் அவைகளின் பால் ஒரே வெண்மை நிறமுடையதுதான். அப்பசுக்கள் பல வாயினும் மேய்ப்பான் ஒருவன்தான். அப்பசுக்களை மேய்ப்பவன் மேய்ப்பதை நிறுத்தினால் பசுக்கள் மேய்ப்பானைச் சூழ்ந்து கொண்டு அகலாது நின்றுவிடும். (பசுக்கள் - ஆன்மாக்கள். பால், தன்மை, ஆயன் - பசுபதி; சிவம்.)
2194. உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.
பொருள் : உடலில் உள்ள கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் மனம் ஒளிமிக்க புத்தி சித்தம் வலிமை மிக்க அகங்காரம் ஆகிய அந்தக் காரணங்கள் அறியாமையைப் பொருந்திக் கெடும். அத்தகைய உயிரினது. மயக்கம் மேலும் பெருகினால் அவ்வுயிர் ஏழு நரகத்திலும் சென்று துயர் உறும். ஆன்மா அறியாமையோடு பொருந்தினால் உய்தி இல்லை.
2195. தன்தெரி யாத அதீதம்தற்கு ஆணவம்
சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்
மற்றது உண்டிக் கனவுநன வாதலே.
பொருள் : மூலாதாரத்தைப் புருடன் பொருந்திக் கிடப்பது தன்னை அறியாத துரியாதீத நிலையாகும். உந்தியைப் புருடன் அடையும் போதும் பிரணவம் விளங்கும் அகரக் கலையை விரும்பிப் பொருந்தி நிற்பான். இதயத்தில் புருடன் சுழுத்தியை அடையும்போது சொல்லப்பெற்ற காமிய வாசனையுடன் உள்ளான். மற்று அவ்வாசனையே அனுபவமாகக் கனவு நனவு நிலைகளில் ஆகும்.
2196. நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.
பொருள் : நனவிற் கனவில்லை யாதலின் அந்நனவின்கண் ஐம்பொறியும் செம்மையாகத் தொழிற்படும். நனவின் கண் கனவு நிகழாத உறக்கம் சுழுத்தி எனப்படும். அதில் மனம் முதலிய நுண்பொறிகள் தொழிற்படும். தன்னைச் சார்ந்துள்ள மாயை என்னும் மூலப் பகுதியின் நுகர்வே பேருறக்க நிலையாகும். நனவில் அப்பால் நிலை தன்னை வேறென உணரும்நிலை பொருந்தியதாகும். (அதீதம் - அப்பால்)
2197. ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களில் உடலின் சார்பான ஆன்ம தத்துவமும் புருடனும் ஆகிய இருபத்தைந்து தத்துவங்களும் நீங்கினால் சத்த சாக்கிரம் பொருந்தும் மேலுள்ள வித்தியா தத்துவத்தில் உள்ள ஆறும் முன்னுள்ள இருபத் தைந்தும் ஆகமுப்பத் தொன்றும் நீங்கினால் நனவில் கனவு பொருந்தும், இவைகளின் மேலுள்ள வேறான சிவ தத்துவம் ஐந்தும் கழன்ற போது சுழுத்தி அமையும். இந்நிலையில் எஞ்சியுள்ளது சுத்தமாயை ஒன்றேயாகும்.
2198. மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்
சேயதே வலவிந் துடன் செல்லச் சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாமே.
பொருள் : பேருறக்க நிலையாகிய துரியத்தில் ஆளுடன மட்டும் ஆருயிர் நிற்கும், அதற்கும் அப்பால் அந் நிலையையும் கடந்து அப்பால் நிலையாகிய புலம்பின்கண் மாயையுடன் செல்லும. அவ்வாறு நிற்கும் நிலையில் மாயாகாரிய உடம்பு இருந்தும் வினை நிகழ்ச்சி இன்மையால் ஏதும் பயன் இல்லை. ஈண்டு கூறப்படும் ஆள் பொதுமை - நிலையென்க. (புருடன் - ஆன்மா. கேவலவிந்து - கேவல அவத்தையில் மாயையோடு.)
2199. அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
பொருள் : அப்பால் நிலைப் பேருறக்கத்தின்கண் ஆருயிர் கருவிகளுடன் கூடாமல் தன்னளவாய் அறிவாய் நிற்கும். அந்நிலையிலேயே திருவருள் துணையால் உறுதியாக நின்றால் அப்பால் நிலையில் கிளர்ந்தெழுந்த அறிவாகிய ஆருயிர் முதிய அனல் என்று சொல்லப்படும் சிவ பெருமானாகிய பேரறிவுச் சுடரில் புணர்ந்து நிலையுறும். (அதீதத் துரியம் - அப்பால் நிலைபேருறக்கம். இயமானன் - ஆன்மா. முதிய அனல் - பழமையான சிவாக்கினி.)
2200. ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
மெய்கண் டவன்உந்தி மேவல் இருவரே.
பொருள் : சாக்கிரத்தில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து கண்டத்தில் இருபத்தைந்து தத்துவங்களோடு தொழிற்படும் நிலையைக் கனா என்பர். பொய்யான உடலை இடமாகக் கொண்ட புருடனோடு பிராணன் சித்தம் ஆகிய மூன்றும் சுழுத்தியிலாகும். உடலை அறிந்த புருடனோடு பிராணன் ஆக இரண்டு உந்தியிலாதல் துரியம்.
2201. புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.
பொருள் : சாக்கிரத்தில் புருடனுடன் பொருந்துவன பஞ்ச தன் மாத்திரைகளும் மனம் புத்தி அகங்காரங்களும் சேர்ந்து எட்டாகும். சொப்பனத்தில் புருடனுடன் பொருந்துவன மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றாகும். சுழுத்தியில் புருடனுடன் புத்தியும் அகங்காரமும் கூடித் தொழிற்படும். துரியத்தில் புருடனுடன் அகங்காரம் ஒன்று மட்டும் பொருந்தித் தொழிற்படும். முன் மந்திரத்தில் தூல தேகத்தில் கீழாலவத்தையை விளக்கியவர் இங்குச் சூக்கும தேகத்தில் அமையும் கீழால் அவத்தையை விளக்குகின்றார். (புரியட்டகம் - சூக்குக தேகம்.)
2202. நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவிற் சுழுத்திஉன் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே.
பொருள் : சாக்கிரத்தில் நனவு நிலையில் புலன் அறிவு சிறப்பாக விளங்கும். புலன்களோடு தொடர்பு இன்றி அவற்றின் வாதனைகளுடன் கூடியிருப்பது சாக்கிரத்தில் கனவு நிலையாகும். அவ் வாசனைகளையும் மறந்து நிற்கும் போது சாக்கி சுழுத்தி அமையும். ஒன்றையும் பற்றிய நாட்டம் இல்லாமை சாக்கிரத்தில் துரியம். சாக்கிரத்தில் அதீதத்து சிவானுபவம் ஒன்றேயாம். (நினைத்தல் - கனவு, மறத்தல் - உறக்கம், நாடல் - பேருறக்கம், நாடல் இலாமை - உயிர்ப்பு அடங்கல், புலனில் வழக்கம் - ஐம்புலன் ஒடுக்கம்.)
2203. கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அனுமாதி செய்தலில்ஆன துரியமே.
பொருள் : கனவின்கண் நனவுபோல் காண்பது கனவின் நனவு கனவிற் கனவு கண்டு மறத்தலாகும். கனவின் உறக்கம் காணாமையாகும். கனவின் பேருறக்கம் அனுமாதியாகக் காண்டல். அனுமாதி உத்தேசம், உத்தேசம் என்பது பொருள் உண்மை மட்டும் கோடல், அஃதாவது எழுவாய்க் காட்சியினை ஒத்தல், உயிர்ப்பு அடங்கலின்கண் அவ்உத்தேசக் செயலும் இன்றி நிற்றல்.
2204. சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவுஅதன் உண்மை கழுத்தியில்
சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.
பொருள் : சுழுத்தி என்று சொல்லப்படுவது உறக்கத்தில் கண் நனவு ஒன்றும் தோன்றாமை. உறக்கத்தில் கனவு ஆருயிரின்கண் தன் உண்மை மட்டும் தோன்றுதல் உறுக்கத்தில் உறக்கம் - சுட்டுணர்வும் சிற்றுணர்வும் அழிவெய்தல். அந்நிலை முற்றுணர்வால் ஏற்படுவதாகும். முற்றுணர்வு - சிவஞானம் உறுக்கத்தில் பேருறக்கம் சொற் கழிவாகிய பாழ் நிலையாகும் சொற்கழிவு - சொல்லுக்கு அடங்காதது.
2205. துரிய நனவாம் இதமுணர் போதம்
துரியக் கனவாம் அகமுணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் கோன்றிடும் தானே.
பொருள் : (துரியத்தில் நனவு என்பது இதத்தைத் தரும் சிவ உணர்வில் நிற்பது.)
துரியத்தில் கனவு என்பது சிரசுக்கு மேல் சிவனை அண்ட ஆகாயத்தில் அறிவதாகும். துரியத்தில் சுழுத்தி என்பது சிரசுக்கு மேலுள்ள நிராதார ஆகாயத்தில் பொருந்துவதாகும். துரியத்தில் துரியம் என்பது எல்லாத் தத்துவங்களையும் கடந்த போது தன்னைப் பரமாக அறிவதாகும்.
2206. அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்
அறிவுஅறி யாமை அடையக் கனவாம்
அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி
அறிவுஅறி வாகும் ஆன துரியமே.
பொருள் : சிற்றறிவு திருவருளால் முற்றறிவின்கண் ஒடுங்கி நின்று அவ் அறிவினை அறிதல் அறிவின்கண் நனவாகும். அறிவிற் கனவு அவ் அறிவை அறிகின்றோம் என்னும் எண்ணமும் தோன்றாமல் அவ் அறிவின்கண் ஒடுங்குதல். அறிவுறக்கம் தன்னறிவு அவ் அறிவின்பின் செல்லுதலால் அவ் அறிவேயாய்த் தன்னை மறத்தலாகும். அறிவுப் பேருறக்கம் பரமாகிய சிவன் தோன்றுதலாகும்.
2207. தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்தபின்
தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே.
பொருள் : பர ஆகாயம் போல் தான் எங்கும் பொருந்தும் நிலையை அடைந்தவன் ஐம் மலங்களினின்றும் விடுபட்டு ஞானமே தனது உருவாகச் சிவத்தை விரும்பி அடைந்தவன் தான் எங்குமாய் நிற்கும் தன்மையும் விட்டு மேலாக விளங்கும் சூக்கும நிலையான பிரணவ தேகத்தை அடைவான். (வன்னம் - எழுத்து.)
2208. ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களுள் இருபத்தைந்து நீங்கிய போது சாக்கிரமும், ஆறு நீங்கிய போது சொப்பனமும், ஐந்து நீங்கிய போது சுழுத்தியும் முடிவுறும். இவையே நனவில் நனவு கனவு சுழுத்தியாகும் பின்னர்த் தூலமும் சூக்குமமும் சுத்த மாயையில் ஆம். அத்துரிய நிலையில் தத்துவங்கட்குத் தலைமை தாங்குபவனாய்த் தான் அவனாய் நிற்பன். (எய்த்தல் - இளைத்தல். இதுவரை கூறியதை இங்குத் தொதுத்துக்கூறியவாறு.)
2209. ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடை யோனே.
பொருள் : இவ் வுண்மையை நான் இவ்வளவு காலமும் அறியவில்லை. இவ்வுண்மையை அறிந்தபின் வேறு அறியத்தக்க பொருள் ஒன்றும் இல்லை. அகண்ட வடிவான சிவமே முதல் என்றும் அஃது அறிவுக்கும் அறிவுரு என்றும் அறிந்தபின் அது தான் நாம் அடையும் பேறு என்று உணர்ந்த தன்மையன் ஆயினேன். சுத்த அவத்தையைத் தவிர அடைய வேண்டிய பேறு வேறொன்றும் இல்லை.
2210. உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்
அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே.
பொருள் : சிவம் எல்லா உயிரினங்களுக்கும் உயிராகவும் உருவமாகவும், அருவமாகவும், அயலாகவும் அயலில் இருந்து புணரும் பொருளாகவும், அறிவாகவும் எங்கும் நிறைந்த பொருளாகவும், விரும்பப்படுகின்ற சத்தியாகவும், நாதனாகவும், உலகம், உடல், கருவி ஆகியவற்றை இயக்காது ஒழியின் அவை அனைத்தும் அஞ்ஞானத்தால் அறிவு பெறாது போகும்.
2211. சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.
பொருள் : ஈசன் அநாதியே ஆன்மாக்களைப் பற்றிய மலம் நீங்கும் வண்ணம் ஆன்மாக்களின் மேல் வைத்த கருணையால் சத்தியோடு பொருந்தி அவளுக்கு உயிராகி நின்று, அநாதியே பொருந்திப் பாசத்தை வினைவிக்கும் ஐம்மலக் கூட்டத்தையும் முப்பத்தாறு தத்துவ பேதங்களையும் படைத்து அவற்றை நுகர்தற்குரிய உட்கருவியும் உயிரோடு கூட வைத்தனன்.
2212. சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.
பொருள் : சாக்கிரா தீத நிலையில் ஆணவ மலமும் தன்னுண்மை என்ற ஆன்மாவும் உள்ளன. சாக்கிரா தீதத்துப் பொருந்திய ஒளியில் ஆன்மா பொருந்த சாக்கிரா தீதத்தில் பொருந்திய ஆணவம் நீங்கல் பெற்றுத் திருவருளைப் பொருந்தி நின்றால் பரத்தின் உண்மை இவர்களிடம் தங்கி நிலை பெறும். (சாக்கிரா தீதம் - அப்பால் நனவு.)
2213. மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே.
பொருள் : அநாதியே ஆன்மாவோடு மலம் கலந்திருப்பதால் சிவ தத்துவம் விளங்கும் மகாமாயை (சுத்தவித்தை) மறைந்து உள்ளனள். மலக்கலப்பால் தெளிவான ஞானம் விளங்கவில்லை. மலக்கலப்பால் சிவனும் மறைந்திருந்தான். ஆன்மாவினிடம் பொருந்திய மலக் குற்றம் அகன்றால் சுத்தவித்தை விளங்கும் மதிமண்டலம் ஒளிபெற்று விளங்கும். (ஆருயிர் - ஆன்மா, பேருயிர் - பரமான்மா.)
2214. திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.
பொருள் : நன்மை தீமைகளைப் பிரித்தறியாத சிந்தையில் காமம் வெகுளி மயக்கம் ஆகிய சிங்கங்கள் மூன்று உள்ளன. விஷயங்களை மகிழ்ச்சியுடன் சென்று பற்றி வஞ்சகமாய் அவைகளை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும் அந்தக் கரணங்களாகிய நரிக்குட்டிகள் நான்கு உள்ளன. வெளிப் பொருட்களை நுகரும் விஷயத்தில் வகை செய்த அனுபவிக்க முயலும் இந்திரியங்களாகிய ஆனைக் கன்றுகள் ஐந்து உள்ளன. புறத்தேயும் அகத்தேயும் செலுத்துகின்ற இரு தன்மைகள் நெஞ்சுக்கு உள்ளன.
2215. கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுத்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே
பொருள் : தச வாயுக்களும் புரியட்டகமும் பொருந்திய உடல் புற உலகில் அவாவிச் செல்ல, சிதறுண்டு எழுகின்ற மனத்தை நீங்கள் அவ்வாறு கேடுற்று உடல் அழியும் முன்னம் இறைவனை அடையும் உண்மை நெறியைப் பற்றி நின்றால் மேலே கண்ட பதினெட்டும் அதிர்ச்சியடைய, ஒப்பற்ற ஆன்மாவின் தலைவனாகிய சிவன் வெளிப்பட்டருளுவான். (ஆனை - ஆன்+ஐ = ஆன்மாவின் தலைவன்; சிவன்)
2216. நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
கனவகத் தேஉள் கரணங்க ளோடு
முனவகத் தேநின்று உதறியுட் புக்கு
நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே.
பொருள் : நனவில் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களாகிய பத்தும் அவற்றின் விடயங்களாகிய பத்தும் நீங்க, கனவில் புகுந்து அந்தக் கரணங்களோடு முன் மூளையிலிருந்து சிந்திப் பதையும் மறந்து உள்ளமாகிய மன மண்டலத்தில் நிலை பெற்றால் நினைவும் இல்லாமல் ஆன்மா நின்மல சுழுத்தியில் பொருந்தும்.
2217. நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்
சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
நின்று பரனாய் நின்மல னாமே.
பொருள் : இவ்வாறு நிற்கும் உயிர் ஆசான் திருவருளால் நனவில் பேருறக்கத்தனாய் உலகத்துடன் பொருந்திச் செய்ய வேண்டும். கடமைகளைச் செவ்வையாகச் செய்து நின்றால் அப்பால் நனவிற் செல்வது வாய்க்கும் அதன்கண் சில நாள் உறைத்து நிற்றல் வேண்டும். இயல்பாகிய பாசங்களின் நீங்கிய சிவபெருமானின் திருவடிப் பேற்றால் மலம் நீங்கித் தூய்மை எய்தும். இதுவே ஆருயிர் பரனாய் நின் மலனாம் நிலைமை எய்துவது என்க.
2218. ஆன்அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான் உலகு உண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோனம் அடைந்தொளி மூலத் னாமே.
பொருள் : தூயோனாக விளங்கிய அவ் ஆருயிர்க் கிழவன் ஈசன் என்று அழைக்கப் பெறுவன். அவ் உயிர் அப்பால் நிலையில் திருவடி யுணர்வாய்த் திகழும். சிவ உலக நுகர்வுகளை நுகரும், அருளோன் முதலாக அயன் ஈறாகச் சொல்லப்படும் தூமாயை அருள்விக்க வடிவங்களை எய்தும். திருவருளால் அவ் வடிவங்களை அகன்று தூய சிவனாகி ஞான வரம்பாம் மோனம் எய்திப் பேரறிவுப் பேரொளிப் பெரு முதல்வனாக விளங்குவான்.
2219. மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்
கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக
அண்டமும்ல தானாய் அகத்தினுள் ஆமே.
பொருள் : உடம்பினுள் மும் மண்டலங்களில் மாயத்தைப் புரியும் பெருமானைத் தரிசித்துக் கொண்டு உள்ளே நினைந்து நீங்கி, மலர்ந்து விளங்குகின் ற சகஸ்ர தளத்தைக் கடந்து மேற் சென்ற போது அண்டம் யாவும் தானாகவே அகத்தினுள் விளங்கும்.
2220. போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதுஅறி யாவகை நின்று மயங்கின
வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை
சூதறி வாருச்சி சூடிநின் றாரே.
பொருள் : புள்ளினங்கள் என்று சொல்லப்படும் ஆருயிர்கள் செவ்வியாகிய போது அறியாமல் புலம்பின. திருவருள் ஆற்றலாம் மாதினை யறியாமல் நின்று மயங்கின. வேறு பிரித்துக் காண முடியாத நிலைமையாய் வேறறப் புணர்ந்து நின்றனன் சிவன். அவன் திருவடி யுணர்வால் இச்சூழ்ச்சி உண்மையை உணர்வோர் அப்பெருமானின் திருவடியைச் சூடிப் பேரின்பம் உற்றுத் திகழ்வாராயினர்.
2221. கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே.
பொருள் : முன்மந்திரத்தில் கண்ட சிவம் விளங்கும் நுட்பத்தை அறிந்து ஆறு ஆதாரங்களையும் சோம சூரிய அக்கினியாகிய மும் மண்டலங்களையும் சேர்த்து ஒன்பது பிரிவுகளையும் உடலுள் பொருத்துதலை அறிந்தேன். புவனங்கள் அனைத்துக்கும் தலைவனான பரம்பொருளை நாடி ஒன்பது மண்டலங்களையும் திருத்தி அமைத்தேன். தேவாதி தேவனாகிய சிவனை அகத்தில் வருவிக்க அறிந்தேன். அவன் என் மனத்தையே பொருந்தி நிலையாக நின்றுவிட்டான்.
2222. ஆன் விளக்கொளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
ஆன் விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு
ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே.
பொருள் : உலகத்திலான விளக்கை எண்ணெய்த் திரியிட்டுத் தூண்டுகின்றவனது செயல்போல மூலாதாரத்திலுள்ள அக்கினி மண்டல ஒளி மூல சாதனையினால் ஆகும். அவ்வாறு தூண்டப்பட்ட மூலாதாரத்திலுள்ள அவ்வொளி, ஏனைய சூரிய சந்திர மண்டலங்கள் ஆகியவற்றைக் கொண்டு பிரகாசமாய் விளங்கும்.
2223. உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஒதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே.
பொருள் : உள் நாட்டமுடைய ஐம்பொறிகளை உடையார்க்கு மண்டைக்கு மேலாக விளங்கும் ஊர்த்துவ சகஸ்ர தளத்தில் ஆகாய மண்டலத்தை ஆராயப்புகின் மேல் நோக்கிய அகத்தில் ஐம்பொறிகளும் கூடிய சந்தியில் அது கண்ணால் சிந்தையில் நாடிக் காணும் தன்மையது என்றான்.
2224. அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார் அறி வாரே.
பொருள் : தன்னறிவால் சுட்டி உணரப்படாததாய தூமாயை முதலியவற்றைத் திருவருட் கண்ணால் காண்பவனே தெளிந்த அறிவுடையவன் ஆவன். அவற்றைத் தன் அறிவால் அறியுலுறுவான் அறியாவன் ஆவன். அறிவான்ஆகான் என ஓதினார். அறிவு விளங்காமல் புலம்புற்றிருந்த ஆருயிரை மாயா காரியங்களைக் கூட்டி ஐம்பாடுகளில் செலுத்தி மறைந்து நின்று அறிவித்து வரும் அவ் அருளுடையானை அவன் திருவருள் துணையின்றி எவர்தாம் அறிவர் இப்பாடு கீழ்ப்பாடு என்பர். (பாடு - அவத்தை, தன்னறிவு - ஆன்ம ஞானம்.)
2225. துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந்நன வாதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே.
பொருள் : துரியம் எனப்படும் புரிவுக்காட்சி பேரறிவுப் பெருவெளியைக் காண்பதெனக் கூறினோம். வியோமம் - அறிவு வெளி, சொல்லப்படும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு , அடங்கல் முதலியன, தடையெனக் கழித்து நன்னடைக்குக் கொண்டுவர வேண்டிய தொன்று புரிவு - சுத்தம் காலங்கடந்த எங்கும் பரம்பிய பெரியனவாகிய புரிவு அருமை சேர் அப்பாலதாகும். (அதீதம் - அப்பால்)
2226. மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்,
கேவல மாகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.
பொருள் : அசுத்த மாயையில் அறிவுடைய ஆன்மா அதன் பகுதிகளில் (31 தத்துவ அறிவில்) நிலை கொண்டுபொருந்தும் சுத்த மாயையில் ஆன்மா சிவ தத்துவத்தை அறிவதில் பொருந்தும் இவ்வுண்மையை அறியாத சகலர் கேவல அவத்தையை அடைந்து பல யோனிகளில் புக்கு உழல்வர். சுத்த அவத்தை (சுத்த மாயை)யில் பொருந்தியுள்ளவர் நின்மல துரியத்தைக் கண்ட சிவனாவர். நின்மல சாக்கிர நிலையை அடைந்தவருக்குப் பிறவி இல்லை.
7. கேவல சகல சுத்தம் (புலம்பு புணர்வு புரிவு)
(கேவலமாவது, கருவி கரங்களோடு கூடாமல் நிற்கும் நிலை. சகலமாவது கருவி கரணங்களோடு கூடி நிற்கும் நிலை, சுத்தமாவது கருவி கரணங்களை விட்டுத் தூயனாய் நிற்கும் நிலை)
2227. தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்
பின்னம் உறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழில்கள் வாகவே.
பொருள் : தன் உண்மையை அறிந்த சுத்தனும், தான் ஒன்றையும் அறியாமல் கிடக்கும் கேவலனும், இவர்களுக்கு வேறான பல வகைப்பட்ட பரிபாகமுள்ள சகலவனும், முறையே சத்தையும், அசத்தையும், சதசத்தையும் உடனாக, தத்தம் அறியும் திறனுக்குப் ஏற்பப் பொருந்தி நிற்பர். சத்து - சிவன்; அசத்து - மாயை; சதசத்து - ஆன்மா. ஆன்மா சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்றலின் சத சத்தாம். ஆன்மா பக்குவத்துக்கு ஏற்ப. இம்மூன்று நிலைகளிலும் பொருந்தி நிற்கும்.
2228. தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.
பொருள் : தனக்குப் பகைவனும் நண்பனும் தானே ஆவான். அங்ஙனமே தனக்குரிய மறுமைப்பயனும் இம்மைப் பயனும் தன்னாலே ஆகும். தான் செய்த புண்ணிய பாவச் செயல்களின் பயனை அனுபவிப்பவனும் தானே யாவான். தனக்குத் தலைவனும் தானே ஆவான். ஆன்மாக்கள் செய்யும் வினைக் கேற்ப அனுபவமும் பயனும் உண்டாம்.
2229. ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாமேய மும்கல வாநிற்பத்
தாம்உறு பாசம் சகலத்து ஆமே.
பொருள் : கேவல நிலையில கிடக்கின்ற உயிர் சுத்த மாயையில் பொருந்தி, பிறகு பக்குவமாகின்ற உயிர் மாயையின் தொடர்பால் விளக்கம் பெற, அறிவுற்று பண்டைய வினைப் பயன்களும் அவைகளை அடைவதற்குரிய மாயேயமாகிய தனுகரண புவன போகங்களும் பெற்றும், தாம் அடைந்த பாசத்தால் சகல நிலையை அடையும்.
2230. சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே.
பொருள் : சகல நிலையில் கருவிகளோடு கூடி வந்தவர் சகலர் ஆவார். அவர்கள் ஆகமங்களில் சொல்லப்பெறும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று வகையான மலங்களுடன் பொருந்தியவர்கள் ஒப்பில்லாத பிரமன் திருமால் பலவாக வுள்ள தேவர்கள் இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் புழு ஈறாகச் சகலராவர். பிரமன்முதல் புழு ஈறாகப் பிறப்பு இறப்பில் பட்டவராதலின் சகலராவர்.
2231. தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உரத்திர ராமே.
பொருள் : அசுத்த மாயையில் தங்கியிருக்கும் பிரளயகாலர் பொருந்திய அந்த அசுத்த மாயையே உடம்பாக மற்றைய  மாயேயங்களை விட்ட தன்மையுடைய வராவர். அவர்கள் சிவத்தோடு பொருந்திய சீகண்டரும் நூற்றெட்டு உருத்திரர்களும் ஆவார்கள்.
2232. ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.
பொருள் : பொருந்திய கேவல நிலையில் ஆணவமலம் ஒன்று மட்டும் உடைய விஞ்ஞானகலர். அவ்வாறு ஆகின்ற அனந்தாதியராகிய வித்தியேசுரர் எண்மரும் சப்த கோடி மகா மந்திரர்களும் மந்திரேசர்கள் பலரும் ஆவர்.
2233. ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
ஓம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
தோம் அறும் சுத்த அவத்தைத் தொழிலே.
பொருள் : முற்கூறிய விஞ்ஞானகலரில் மிகப் பக்குவம் பெற்றுச் சிவத்தினது அருளுக்குப் பாத்திரமானவர் வலி யொடுங்கிப் போகும் ஆணவ காரியமாகிய விந்து நாதங்களைக் கடந்து பிரணவ சொரூபமாகிச் சிவத்தின் ஒடுங்குதலால் மலக் குற்றமில்லாச் சுத்த நிலையை அடைவர்.
2234. ஓரினும் மூவகை நால்வகை யும்உள
தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார்இய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத்து ஈசன் மலர்அறுத் தானே.
பொருள் : ஆராயின் ஞான சொரூப நிலையில் ஆன்மாக்கள் மூன்று வகையாவும் நான்கு வகையாகவும் உள்ளன. ஆராயும் போது இவை மாயையோடு பொருந்தி இச்சையைச் சாருகின்ற தன்மையால் ஆனவை. எனினும் பக்குவம் அடைந்த போது இச்சை முதலியவை எல்லாம் தாமே நீங்குவனவாம் அந்நிலையில் இறைவன் அருளைக் கூட்டி மலத்தைப் போக்கி அருளினான். விஞ்ஞானகலர்க்கு ஞானநிலையில் அருளைக் கூட்டி இறைவன் அருளுவான்.
2235. பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே.
பொருள் : நிலையற்ற மண்முதல் நாதம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின் அறிவையும் விட்டுநீங்கி, அவற்றுள் பற்றுச் சிறிதுமின்றி நீங்கவே எய்தப் பெறுகின்ற பொருளாகிய சிவமே தானாகி நித்தியமாய் சரம் அசரமான எங்குமாய்ப் பரவெளியுற்றும் கலந்து சென்று அடையாமலே தானே வந்து எய்தும் நிலையே சுத்தவத்தை எனப் பெறுவது தத்துவங்களை விட்டுப் பரவெளியில் கலந்திருக்கும் நிலை சுத்தமாகும்.
2236. அனாதி பசுவியாத்தி யாகும் இவனை
அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு
அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆகுமே.
பொருள் : அனாதியாகவே பசுத்துவத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஆன்மாவை அனாதியிலேயுள்ள ஐம்மலங்களில் உழலச் செய்து, அனாதியில் இருந்த கேவல நிலையினின்றும் நீங்கிச் சகலநிலையில் பொருந்துவித்து, அனாதியாகப் பற்றி வருகின்ற பிறவி நீங்க அவ்வான்மா சுத்தாவத்தையைப் பொருந் தினவன் ஆவான். அனாதி மிகப் பழமை. வியாத்தி அகண்டமான பொருளில் அடங்கி யிருத்தல்.
2237. அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு
தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.
பொருள் : பரவெளியை ஞானம் பற்றிச் சென்று அடைந்தவர் தமது சுத்த கேவல நிலையில் கடந்த தற்பல சிவத்தினிடம் சுத்த துரியத்தே தமது அறிவு பொருந்த ஆன்மாவாகிய தன்னிடம் சிவமாகிய பொருளை உணரும் உண்மையன் ஆவான்.
2238. ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி
ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே.
பொருள் : பிருதிவி முதல் புருடன் ஈறாக இருபத்தைந்து தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கும். ஆன்மாவும் சுத்தநிலை எய்தித் தன் உண்மையை உணர்ந்து வீட்டினை அடையும். சிவ தத்துவத்திலுள்ள சுத்தவித்தை மகேசுரம் சாதாக்கியம் ஆகிய மூன்றும் பழமையான சத்தியிலும் ஐயனாகிய சிவத்திலும் ஒடுங்கும். சிருஷ்டிக் கிரமத்தில் சிவனிடமிருந்து சத்தியும் ஏனையவும் அவ்வாறே தோன்றும்.
2239. ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே.
பொருள் : சுத்தவத்தையில் ஆன்மதத்துவம் 24, புருடன் 1, வித்தியதத்துவம் 6, ஆக 31 தத்துவங்களும் ஆன்மாவிடம் அடங்கி நிற்கும். உண்மையில் கண்டத்தில் விளங்கும் சுத்த வித்தையும் புருவநடுவில் விளங்கும் மகேசுரமும் சிரசுவரை விளங்கும் சதாசிவரும் ஆகிய மூன்றும் உண்மையான யோகத்தில் சுழுமுனைக்கு மேல் விளங்கும் சத்திசிவ பாகமாய்க் காணும்படி இருபத்தெட்டுத் தத்துவங்களும் அடங்கும் முறையில் அடங்கும்.
2240. அணவத் தார்ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயா கலராகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே.
பொருள் : ஆணவ மலம் ஒன்றுமே உடையோராய் மாயை இன்மங்களை அறியாதவர் விஞ்ஞான கேவலர் ஆவார். ஆணவத்துடன் மாயையைப் பொருந்தினவர் பிரளயாகலர் ஆவர். காணுகின்ற உருவமுடையவராய் அக நோக்கம் பெறாமல் புற நோக்கம் உடையோராய் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்றும் பொருந்தியவர் சகலர் ஆவார்.
2241. ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.
பொருள் : விஞ்ஞானகலரிடை உள்ள குற்றம் ஆணவ மலமாகும். மாயையைப் பற்றிக்கொண்டு நிற்பது பிரளயாகலரின் குற்றமாகும். ஆணவம் மாயை கன்மம் ஆகிய மூன்றையும் பற்றிக்கொண்டு நிற்பது சகலரின் மலக்குற்றமாகும்.
2242. கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்
பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே
பொருள் : ஒருமலக் கட்டுடையார் தனி நிலையில் விளங்கிய விஞ்ஞான கலராவர்.. அந் நிலையில் தூண்டித் தொழிற்படுத்துவது அன்னை என்று சொல்லப்படும். விந்து சத்தியாகும். அந்நிலையில் அவ்வுயிர் உடல் முதலியவற்றையும் எய்தும். அவ்வுடல் மாமாயையில் தோன்றும் மந்திர உடலாகும். மெய்ம்மை - உடலின் தன்மை, கேவலம் - ஞானசொரூபம், ஞான நிலையில் விஞ்ஞானகலர் பராசத்தியைப் பொருந்தி நிற்பர்.
2243. மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே.
பொருள் : இருமலக் கட்டினராகிய பிரளயகாலர் மாட்டு ஆணவமே மேலிட்டு நிற்பதால் ஏனைக் கன்மம் மாயைகள் உள்ளடங்கி நிற்கும். அதனால் அவை தோன்றாவகை நிற்க என ஓதினர். அவர் தமக்கு உடம்பும் தூமாயையினால் அமைந்ததாகும். எனவே அவர் இயற்றுங் கன்மங்களும் இருள்சேர் இருவினையும் கடந்த இறைபணியாகும். ஈண்டு உறைவோரும் இம் மெய்யினரும் நூற்றெட்டு உருத்திரர் என்ப.
2244. மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே.
பொருள் : மூன்று மலங்களோடு கூடி அவற்றில் மயங்கி நிற்பவர் அவ் வுண்மையான சகல ஆன்மாக்கள் ஆவர். அவர்கள் தேவர் வானவர் மானுடர் மெய்மையில்லாத பிரமன் விரிந்து மிகுந்து கிடக்கும் புழு ஈறாக அம் முறையில் பிறிவிக் குழியில் பட்டுக் கட்டுப்படும் சகலராவர். (மெய்ம்மையில் வேதா - பரம்பொருளின் முடியைக் காணாமல் கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன். தேவர் முதல் புழு ஈறாக மும்மலமுடைய சகலர் பிறவிக்குழியில் பட்டுழல்வர்.)
2245. சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்
மத்த இருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே.
பொருள் : சுத்தாவத்தையில் பொருந்திய சகலவர்க்க ஆன்மாக்கள், மும்மலங்களில் நித்தமாகிய ஆணவமும், அநித்தமாகிய மாயை கன்மங்களும் நீங்க இவைகளில் தனித்தனியாக நிலை பெற்ற ஆசையும், மயக்கம் பொருந்திய இருளும் சிவசூரியனின் ஒளியால் தொடர்பற நீங்கிடச் சுத்தர் ஆவார்கள். சுத்த நிலையை அடைந்த ஆன்மாக்கள் சிவசூரியன் ஒளியால் மும்மல இருளை நீக்குவர்.
2246. தற்றே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே.
பொருள் : தூய நிலையில் தான் தனித்து நிற்கும் வீடாகிய பற்றறுதி ஆருயிர் தனித்து நிற்பதாகும். இந்நிலையைத் தூய புலம்பு என்னலாம். தூயபுலம்பு - சுத்த கேவலம். தூய புணர்ப்பு உழைப்பு முதலாகச் சொல்லப்படும். தூவா மாயை யினின்று விலகுவதாம். தூயபுரிவாவது சொல்லப்படும் தூயபுலம்பும் புணர்ப்பும் தன்னுணர்வுக்கும் தோன்றாது ஒழிவது. இதுவே தன் தூய்மையாகும். உழைப்பு தலைமெய் சுத்தவத்தையில் மூன்று நிலையும் அவற்றின் பயனும் கூறியவாறு.
2247. அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்
குறியொன்றி லாநித்தன் கூடான் கலாதி
செறியும் செயலிலாண் தினங்கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே.
பொருள் : கேவல நிலையிலுள் ஆன்மா அறிவின்றியும், உடல் இல்லாதவனாகவும் அராகாதி குணங்களோடு பொருந்தாதவனாகவும், கொள்கை ஒன்றும் இல்லாதவனாகவும் என்றும் உள்ளவனாகவும் கலை முதலிய அசுத்த மாயையைக் கூடாதவனாகவும் தத்துவங்களோடு பொருந்திச் செயல் செய்யாதவனாகவும் போகம் நுகர அறியாதவனாகவும் இருந்தும் இல்லாதவன்; ஆண்வ மலத்தால் வியாபிக்கப் பட்டவனாகவும் உள்ளான். (நித்தன் - தோற்றக் கேடுகள் இல்லாதவன்.)
2248. விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.
பொருள் : ஒளிமண்டலமும் அதனை மறைக்கும் மாயையும் அதனை வெளிப்படுத்தும் கிரியையும் அதனால் விளையும் ஞானமும்  உடம்பின் சக்திக் கேற்ப அமையும். விந்துமண்டல ஒளியில் உண்மை ஞானத்தைப்  பொருந்தும் பிரளயாகலர் உலகில் பிறவிக்கு வந்த சுத்தான்மாக்கள் ஆவர். பிரளயாகலராக இருந்தவர் பிறவிக்கு வந்து அடையும் பேற்றினைக் கூறியவாறு.
2249. கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே.
பொருள் : கேவலம் முதலிய நிலைகளின் வேறுபாட்டைச் சொல்லுமிடத்து, கேவல கேவலம், கேவல சகலம், கேவல சுத்தம் என மூன்றும் கிளர்ச்சியுடைய சகலத்தில் சகல கேவலம், சகல சகலம், சகல சுத்தம் என அவ்விடத்து மூன்றும், மேலான சுத்தத்தில் சுத்த கேவலம், சுத்த சகலம், சுத்த சுத்தம் என மூன்றுடன் நிலைகளைப் பொருந்தி ஆராய்பவர்க்கு நீங்காத ஒன்பது வகையாகும்.
2250. கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத் தில்சக லங்கள் வயிந்தவம்
கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே.
பொருள் : கேவலத்தில் கேவலம் எனப்படும் தூயபுலம்பு அப்பாலைக்கு அப்பாலாம். அப்புலம்பிற் புணர்வு தூமாயை நிலைக்களம். அப்புலம்பிற் பிரிவு குற்றமற்ற பேருணர்வாகிய விஞ்ஞானம். இந்நிலை ஒரு மலத்தராகிய விஞ்ஞானகலர் நிலை என்ப. அவ்விடத்து அவ்வுயிர் நாதனாகிய சிவபெருமான் விளங்கும் சீர்த்தவ உடம்பாகும். வயிந்தவம் - சுத்தமாயை தூயபுலம்பு சுத்த கேவலம்.
2251. சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.
பொருள் : புணர்விற் புலம்பு கனவில் அப்பாலாகும். புணர்விற் புணர்வு நனவிற் கனவாகும் புணர்விற்புரிவு ஆருயிர் அருளுடன் கூடிநிற்கும் நிலை. தூய புணர்வின்கண் இம்மூன்று நிலையும் காண்க. பராவத்தை - அருள்நிலை.
2252. சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.
பொருள் : தூய புரிவில் புரிவு ஆருயிர் தொன்மையும் முன்மையும், நன்மையும், உண்மையும், அறிவும் இன்பமும் ஒருங்கமைந்த தொன்னாடுடைய சிவன் திருவுரு எய்தல். புரிவிற் புலம்புதற்பணியறுதலாகிய தவ ஒடுக்கம். புரிவிற் புணர்வு இன்பினில்மூழ்கும் இனிய உறைவிடமாம் துரிய விலாசம். (தூயதுரியம் - இன்பநிலையம்.)
2253. சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே.
பொருள் : நனவில் நனவு, நனவில் கனவு, நனவில் உறக்கம், நனவில் பேருறக்கம், நனவில் உயிர்ப்பு அடங்கல், ஆகிய ஐந்தும் துன்பில் இன்பாய் மன்னும் ஆணவம் கன்மம், மாயை, மாயை ஆக்கம், நடப்பாற்றல் ஆகிய ஐம்மலப் பிணிப்பும் மறையாது அகலும்.
2254. சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது
ஆக்கு பரோபாதி யாஉப சாந்தத்தை
நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே.
பொருள் : முற்கூறியவாறு சாக்கிரா தீதத்தில் சிவத்தோடு பொருந்துதலால் ஆன்மாவின் ஆணவ மலக்குற்றம் அகலும். சாக்கிராதீதம் நாதாந்த மாகையால் நாததத்துவம் தங்காது போகும். பரோபாதியினால் உபசாந்தமாகிய நிறைந்த அமைதி கிட்டும் நாததத்துவத்தைப் பற்றி நிற்கும் ஆன்மா மலங்களையும் அவற்றால் விளையும் குணங்களையும் நோக்குமோ ? நோக்காது.
2255. பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்
அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல்இல்லை தானே.
பொருள் : கட்டும் வீடும் நல்லோரால் பேணப்படும் துரியமாகிய ஒடுக்கமும், தூய்மையாகிய அப்பால் நிலையும் திருவருளால் ஒருசிறிதும் தோன்றாவாகும். தான் நுகர்ந்து கொண்டிருப்பது அத்தன் - சிவபெருமானின் திருவடியின்பம் என்று அருளால் அறிவன். அறிந்தபின் எண்ணமாகிய சித்தத்தின் இயக்கம் இல்லை. அஃது இல்லையாகவே வேறு எச்செயலும் இல்லை.
2256. எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன்அரு ளேவினை யாட்டோடு
எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே
எய்தும் உயிர்இறை பால்அறி வாமே.
பொருள் : உயிர்கள் அடையும் பெத்தமும் முத்தியும் சிவனது அருளால் அமையும். அச்சிவனது அருள் விளையாட்டோடு பொருந்தும் உயிர் இது சுத்தநிலைக்குச் செலுத்தும் நெறியாகும் என்று அடையும். அவ்வாறு அடையும் உயிர் இறைவனிடம் அறிவாய்த்திகழும்.
2257. ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யாள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே.
பொருள் : ஐம்மலமுடைய சீவர்கள் தம்மைத் தாமே மதித்த சகலத்தர் ஆவர். அவர்கள் ஐம்மலப் பாசத்தால் கட்டுண்டவராகிக் கொடிய வினைகளைத் துய்க்க வேண்டியவராக உள்ளார். இவர்கள் வீட்டுலகை விரும்பாமல் சொர்க்க நெறியை விரும்பிப் பெறுவர். இவர்கள் அரனாரை அறியாதிருப்பினும் அரனார் இவர்களை அறிந்தே யுள்ளார்.
2258. கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய சுழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்தூலம் அந்நன வாமே.
பொருள் : கேவலத்து அதீதத்தில் ஆன்மாக்களைப் பிறவிக்குச் செலுத்தச் சிவசத்தி மாயையைக் கலக்கச் செய்யும். பின்னர் துரிய நிலையில் அவ்ஆன்மாவுக்கு விருப்பவாசனைகளை உண்ணும் ஆசை உண்டாம். அவ் ஆன்மாவின் விருப்புக்கேற்ப பிரமரந்திரமும் அதைச் சூழவுள்ள எட்டு நிலைகளும் சூக்குமாக அமையும். பின்னர் குணம் என்ற மனோமய கோசம் இணைக்கப்பட்ட போது நனவு நிலையாகும்.
2259. ஆணவம் ஆகும் ஆதீதம்மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணும் கனவும் மாமாயை திரோதாயி
காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே.
பொருள் : உயிர்ப்பு அடங்குதல் அல்லது அதீதம் என்று சொல்லப்படும் அப்பால் நிலைக்கண் ஆணவமட்டும் ஆருயிர்களைப் பிணித்து நிற்கும். பேருறக்கத்தின் கண் தூவாமாயை புணர்ந்து நிற்கும். உறக்கத்தின் கண் காமியம் என்னும் இருவினைகள் கூடி நிற்கும். கனவின்கண் தூமாயை கூடிநிற்கும். நனவின்கண் நடப்பாற்றலாகிய திருரோதாயியுடன் ஐம்மலமும் பிணிப்புற்றிருக்கும்.
2260. அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை
கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோர்
அருளும் அறைவார் சகலத்துற் றாரே.
பொருள் : அரன் முதலாக அறிவோனாகிய ஆருயர் அப்பால் நிலைக்கண் தங்கும். அரன் முதலாகக் கொள்ளும் மாயை பேருறக்கமாகும். உறக்கத்தில் கருமமாகும். கனவில் மாமாயையாகும் நனவில் மறைப்பொருளாகிய நடப்பாற்றல் மேலோங்கும். இந்நிலையே புணர்ப்பு நிலையாகும். (புணர்ப்பு - சகலம்)
2261. உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று
மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி
வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.
பொருள் : மாயாகாரியமான தேகத்தைப் பொருந்தி, எடுத்த தேகத்துக்கு ஏற்றவாறு போக போக்கியங்களை நுகர்ந்து பூதங்களைச் சார்ந்து மனம் முதலிய அந்தக்கரணங்களைப் பொருந்தி வருகின்ற கன்மங்களை அடைந்து சத்தம் முதலாகிய தன்மாத்திரைகளில் தங்கி, கருவை அடைந்த சீவன் சகலாவத்தையில் தோன்றும்.
2262. இருவினை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக் கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
பொருள் : ஞானமும் கிரியையும் ஒத்த விளங்கும் போது இன்பம் விளைக்கும் சிற்சித்தி பொருந்தி ஞான சொரூபமான சுத்தாவத்தை பொருந்தவே அதுசமயம் தக்க குருவினால் உணர்த்தும்படி செய்து திருவருட்சத்தி பொருந்தி மூலமலம் நீங்கி மீட்டும் பிறவியை அடையாமல் இருப்பதே சுத்தநிலையாகும்.
2263. ஆறாறும் ஆறதில் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறாம் அதீதத்  துரியத்து இவன்எய்தப்
பேறான ஐவரும் போம்பிர காசத்து
நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக இருபத்தைந்து நிலைகளையும் அவற்றின் ஈறாகிய நின்மல துரியாதீதத்தை இச்சீவன் அடைய, சுத்த தத்துவத்துக்குரிய சுத்தவித்தை மகேசுரம், சதாசிவம் விந்துநாதம் ஆகியஐந்தும் நீங்கும் பிரகாசத்தையுடைய சீவன் பரமாகிச் சிவத்தினிடம் உள்ளதாகும்.
2264. தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்
தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.
பொருள் : உடம்பின் வேறாக ஆன்மாவாகிய தான்ஒருவன் உளன் என்பதை அறியாமல் தன் உடலையே தான் என்று மயங்கியிருந்தான். நிராதாரத்தில் உணர்வு சென்ற போதுதான் ஓர் ஒளிவடிவினன் என்பதை அறிந்தான். இவ்வுடலைத் தாங்கி நிற்பது ஒளிஎன்று கண்டான். அவ்வாறுள்ள ஒளி உடல் சித்துடன் ஒன்றாகவிடில் மீளவும் வந்து வினைக் கீடாக அவ் ஆன்மா பிறப்பான்.
2265. சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.
பொருள் : நின்மல சாக்கிராதீதம் கூடுமானால் அதைத்தோற்று வித்த சுத்த தத்துவம் ஆனந்தத்தை விளைக்கும். எதிர்நோக்கியுள்ள பிறப்பு ஆறும், பெருமை பொருந்திய முத்தி கிட்டும் அந்த அதீத நிலையில் சூக்குமமான வாக்கும் மனமும் பொருந்தா.சாக்கிரத்தில் அதீதம் தலைப்பட்டவரிடத்து வாக்கும் மனமும் இல்லை.
2266. அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்
அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே.
பொருள் : நீரின் குணமாகிய தண்மையும் நெருப்பின் குணமாகிய ஒளியும் அகண்ட ஆகாயத்துள்ளே விளங்கும். ஆனால் அவற்றின் நெகிழ்ச்சியும் சுடுதல் தன்மையும் அங்கு இரா. விரிந்த ஆகாயத்தில் நீரும் நெருப்பும் ஏது என்று வினவினால் அப்புத் தன்மையும் அனலின் தன்மையும் கலந்து அவ்வாறாகும்.
2267. அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்
உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும் அசுத்தம். மிசிர மாயையோடு கூடிய வித்தியாதத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்தம். உடனாகிய சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமாகும். இம்மூன்றையும் ஆன்மா அடையும் வண்ணம் மூன்று கண்டங்களாகப் பிரிந்து பிரகிருதிமாயை அசுத்தமாயை சுத்தமாயை ஆன்மாவினிடம் பொருந்தும்.
2268. மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே.
பொருள் : அசுத்த மாயை செவிலித் தாயாகவும், சுத்தமாயை தாயாகவும் ஆக, இவைபொருந்தும் வகையில் பரசிவன் தந்தையாக அமைய ஆன்மா கேவல சகல நிலைகளை அடைந்து, ஆராய்ந்து தெளிவு பெற்ற போது சுத்த மாயையைப் பொருந்திச் சுத்தாவத்தையை அடையும் மாயை தாயாகவும் சிவன் தந்தையாகவும் அமைந்து ஆன்மாக்களைத் கேவல சகலங்களில் பொருந்திச் சுத்தநிலையை அடைவிக்கும்.
8. பராவத்தை
(பர + அவத்தை = பராவத்தை. இது பரை அல்லது சத்தியோடு கூடியுள்ள நிலை, இங்குப் பரைநிலையில் ஆன்ம அனுபவம் கூறப் பெறும்.)
2269. அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.
பொருள் : சிவ தத்துவமாகிய ஐந்தையும் கடந்த நிலையிலுள்ள அனாதியான பரனே தெய்வமாகும். இதுவே எல்லோரது மன மண்டலத்தில் பொருந்தியதாய் மலமற்றதாய் பிறப்பில்லாததாய் உள்ளது. இஃது அகண்ட பொருளான படியால் உடலினுள் இருந்த உயிரை வேறுபடுத்துவதற்காக மறைந்திருந்த உண்மையை நான் அறிந்தேன்.
2270. சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சந்தி ஐந்துடன்
சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.
பொருள் : பராசத்தியே சுத்தமாயை, அசுத்தமாயையில் விரவித் தன்னிலை கெடாத சாந்தி கலையில் உள்ளது மேலான ஆனந்த நிலையில் அச்சத்தி ஒளிமயமாய் உள்ளது. அச்சத்தியே அசுத்தமாயையில் பொருந்தி உடம்பின் சத்திகளாகிய ஐந்துடன் சீவன் உடம்பால் பெறும் பயனுக்குக் காரணமாயும் உள்ளது. பராசத்தி சீவனுக்குச் செய்யும் உபகாரம் கூறியவாறு.
2271. ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கும் அப்பால் அரன்இனி தாமே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவோரே அறிபவர் ஆவார். அக்கடந்த நிலையில் அவர் சத்தியின் அருளைப் பெறுபவர் ஆவார். அதனால் அவர்களுக்கு அங்கே எல்லா அறிவும் உண்டாகும். அப்போது அவர் சிவனோடு இனிதாய்ப் பொருந்தி யிருப்பார். தத்துவங்களைக் கடந்து சிவ சத்தியோடு பொருந்தியிருப்பவர் எல்லா அறிவும் உடையவர் ஆவார்.
2272. அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே.
பொருள் : ஐந்த ஞானேந்திரியங்களும் நான்கு அந்தக்கரணங்களும் தத்தம் செயல் மடங்கி உள்ளத்தில் (மன மண்டலத்தில்) அடங்க ஐந்து இந்திரியங்களையும் அணிகலமாகக் கொண்டு உறக்கத்தை அடைகின்ற அறிவுமயமான ஆன்மா சிற்சத்தியோடு நீல ஒளியில் மனம் தொழிற்படாமல் நிற்பதில் இன்பத்தைத் துய்க்கும். (விஞ்சையர் வேந்தன் அறிவுடைய ஆன்மா. சத்தியின் நிறம் நீலம்.)
2273. உரிய நனாத்துரி யத்தில் இவளாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரனாம்
திரய வரும்துரி யத்தில் சிவமே.
பொருள் : துரியம் என்று சொல்லப்படும் அப்பால் நனவில் ஆருயிர் தனித்து நிற்கும். அதனால் இவனாம் என்றருளினார். அப்பால் நனவு - துரிய சாக்கிரம். அத்தகைய அருமைவாய்ந்த அப்பால் நனவு, அப்பால் கனவு, அப்பால் உறக்கம் என்ற மூன்றினுள் பெருமை மிக்க அப்பாலுக்கு அப்பாலாம் பரதுரியத்தில் பரன் என்று சொல்லப்படும் திருவருளுடன் கூடி உறைபவனாம். இவற்றிற் கெல்லாம் மேம்பட்ட மாறுபாடு இல்லாத அப்பால் நிலைக்கண் தூய சிவனேயாவன். (இவனாம் - இந்த ஆன்மாவாம்.)
2274. பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
பரமாம் அதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே.
பொருள் : நின்மல சாக்கிரா தீத்தில் சிவன் தத்துவங்களை விட்டுப் பரமாகும். இவ்வகையான அதீதத்தில் பலகால் பழகப் பழகப் பரம் பொருந்தும். இவ்விதம் நிஷ்டை பொருந்தி அதீதத்தை அடையாதவர் பரமாக மாட்டார். அவரை விட்டுப் பாசமும் அதனாலாய பற்றும் நீங்கா.
2275. ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.
பொருள் : ஆராச்சியால் அறியப்பட்டபோது மாயை உடலின் உள்ளும் உடலின் புறம்புமாய்ப் பொருந்தி யிருக்கும். நின்மல துரியாதீதத்தில் வாயுவும் மனமும் கடந்த நிலையில் மயக்கம் நீங்கினபோது தூய்மையான அறிவு சிவானந்தமாய் மேல்நிறைந்து மாயையை மூடும் பொருளாக அமைந்தது தானே.
2276. துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள்நின்று ஓலமிட் டன்றே.
பொருள் : துரிய மாகிய குதிரைமேல் இருந்த சீவனை மென்மையான பராவத்தையில் புகச் செய்து, இந்திரியங்களாகிய நரிகளை விரட்டிய நாதத்தைத் தரிசனம் செய்த அனுபூதிமான்களுக்கு உரியனவாகிய வினைகள் பந்திக்க மாட்டாமையால் நின்று ஓலமிட்டன.
2277. நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.
பொருள் : முற்கூறியவாறு நின்ற சாக்கிரத்தில் அதீதம் புரியும் போத பரந்த ஆகாய பூத நாயகனான சபேசனும் சீவனுடன் கலந்து நிற்பான். சபேசன் சீவனுடன் பொருந்தி விளங்கும்போது மாயையாகிய இருள் விலகிவிடும். அப்போதே சீவனும் சிவன் போல் அகண்ட வடிவை அடைவான்.
2278. விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.
பொருள் : பொறிபுலன் கலன்முதலிய உறுப்புக்கள் விரிந்த இடத்து நனவினைப் பொருந்தும். மாயை விளக்குப் போன்று இருந்த இடத்தில் வலிமையோடு நிற்கும். நனவில் அப்பால் நிலைக்கு முன் நிலை வாய்க்குமிடத்து அருளால் ஆருயிர் தாமரையிலை நீர்போல் ஒட்டாது நிற்கும். இக்கருவிகள் எல்லாம் நனவின்கண் ஏற்படும் பேருறக்க நிலையில் விட்டு அகலாமல் ஒட்டிச் செயலற்று இருக்கும்.
2279. உன்னை அறியாது உடலைமுன் நான்என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.
பொருள் : ஆன்ம ஒளியை அறியாமல் நீ தேகாத்ம புத்தியோடு முன் இருந்தாய். பின் ஆத்ம ஒளியை அறிந்து துரியத்தில் நின்றாய். தன்னுடைய இயல்பை அறிந்தும் சிவ வியாபகத்தில் பொருந்தவில்லை யென்றால் பிறவி நீங்காது. அவ்வாறு சிவத்தின் வியாபக்தில் அடங்கி விடுதலே மலமற்ற நிலையாகும்.
2280. கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.
பொருள் : கருவின் எல்லைக்கு உட்பட்டது துரியத்திலுள்ள சூக்கும வித்தியா தேகம். பிறப்புக்குரிய காரணம் அகற்றப் படாதவரைச் சூக்குமமும் தூலமும் பொருந்திச் சீவர்கள் பிறவியில் பட்டுழல்வர். குருவின் சகாயத்தால் சிவத்துடன் பொருந்தும் அருளைக் கூடினவர் சூக்கும வித்தியா தேகத்தையும் தூல தேகத்தையும் விட்டுச் சிவ தத்துவத்தில் சிவத்தோடு ஒன்றாவர். இருவர் - தூல உடல், சூக்கும உடல்.
2281. அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை வில்பரா தீதம் சுழுத்தி
பணியில் பரதுரி யம்பர மாமே.
பொருள் : ஆருயிராகிய அணுவின் பேருறக்க நிலையாம்துரியத்தில் உண்டாகும். நனவும் ஆருயிரின் புடை பெயர்ச்சியில் உண்டாகும் கனவும், அப்புடை பெயர்ச்சியில் உண்டாகும் கனவும், அப்புடை பெயர்ச்சியின்கண் தன்னை இழப்பதாகிய உறக்கமும் பொருந்திய இடத்து அப்பால் நிலை எய்தும், எய்தவே சிவனுடன் ஒன்றாம் சிறப்பு எய்தும். இதுவே பரம் என ஓதப்பெற்றது. (அணு - ஆன்மா. பணியில் - பொருந்தினால்)
2282. பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி  யத்தனு மாமே.
பொருள் : மேற் பேருறக்கமாகிய பரதுரிய நனவு எங்கும் பரந்து விரிந்த உலக நுகர்வுகளை உண்டல். அது போல் கனவுப் பயனும் நண்ணுகர்வு உண்மையாதலின் பர துரியக் கனவு மெய்ம்மை அமைதியாகும். கருவி கரண முதலிய உருவு மட்டும் அசைவின்றி இருக்கும் உறக்க நிலையும் நீங்க, ஆண்டு அருளாற் புலனாகும் ஒன்று. அதுவே சிவதுரிய நிலையாகும், அந்நிலை எய்தியவன் சிவ துரியத்தன் ஆவன்.
2283. பரமா நனவின்பின் பால்சக முண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.
பொருள் : மேல் நனவு என்று சொல்லப்படும் பரமா நனவின் அடுத்த நிலை மெய்ம்மையும் உறுதியும் உடைய மேற்கனவின் உலக நுகர்வுகளை உண்ணும். சிறந்த உறக்க நிலை நல்லுறுதி யாகும். பேருறக்க மேல் நிலை அமைதி நிறைதல். அதன் மேல்நிலை துறவாகும். இந்நிலை சிவ துரிய நிலையாகும். இந்நிலை எய்தினான் சிவதுரியத்தன் ஆவன். (தரனாம் - கைகூடப் பெற்றவன்)
2284. சீவன் துரியம் முதலாகச் சீரான
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்
ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுவித்தநின் றானே.
பொருள் : சீவன் துரியம் முதலாக பெருமை பெற்ற சிவதுரியம் ஈறாகப் பத்து நிலைகளும் நீங்கும். மேலான சிவத்தின் நிறைவில் அடங்கியிருப்பது அந்தக்கரணம் நான்கையும் பொருந்திய வித்தியா தத்துவம் ஏழையும் விட்டு நின்றான்.
2285. பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாவிட்டுமேவும் சுழுமுனை
உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே.
பொருள் : பரம் சிவன் இரண்டற்கு மேல் பரமம். அப்பரத்திற்கு மேல் பரம்பரன். பரநனவு விரிந்த பரக்கனவு இவ்விரண்டும் ஆருயிர்களின் பிறப்புத் துன்பத்தை அகற்றும். அதற் மேல் பேரறிவுப் பெருமானாகிய பர நந்தியின் உண்மை நிலையினை எய்துவன்.
2286. சார்வாம் பரம்சிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.
பொருள் : ஆராயின், உயிர்கட்குப் பற்றுக் கேடாக அருவநிலைகளான பரம், சிவம், சத்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவமும், இப்பால் உருவமூர்த்திகளான பிரமன், விஷ்ணு, தேவர் தலைவனான உருத்திரன் மகேசனும் ஆக பதின்மர் உளர். பரம் - சத்தி சிவன் பிரிப்பின்றி உள்ள நிலை, முன் மந்திரத்தின் விரிவு இங்குக் கூறியவாறு.
2287. கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உடலோடுஉயிர் தன்னை
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது ஆமே.
பொருள் : முன் மந்திரத்தில் கண்ட திருமேனிகள் உயிர்களோடு ஒன்றியிருந்து இயக்குவதை உலகினர் அறியமாட்டார். கடலால் சூழப்பட்ட ஏழ் உலகங்களும் அழிந்து போவதையும் இவர்கள் அறியமாட்டார்கள். உடலோடு உயிர் பொருந்தியிருக்கும் தன்மையை அறிந்து இங்கு மேன்மை அடையமாட்டார். மேலே கண்ட திருமேனிகளைத் தியானிப்பது வலியுடைமை ஆகுமோ ? ஆகாது. (ஆமே - ஏகாரம் எதிர்மறை)
2288. பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.
பொருள் : குரு உபதேசத்தின் பின் விளங்கும் பெரிய தவத்தின் பயனாகிய வரவிந்து மண்டலத்தை உணரில் கருணாமூர்த்தியான எமது தலைவன் பழமையான சுட்டறிவு நீங்குகின்ற காலத்தில் என்னுடைய அகண்ட  வியாபகத்தை உணரும்படி செய்து, அதனால் நான் இன்பம் பெற்று உய்ந்தவாறு என்னே !
2289. பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.
பொருள் : பொன்னால் செய்யப்பெற்ற நகையைக் காணும்போது பொன்னைப் பற்றிய காட்சியில்லை. பொன்னின் இயல்பைப் பார்க்கும் போது பொன்னால் செய்யப்பெற்ற நகையின் காட்சி பொன்னில் மறைந்தது. அதுபோல அந்தக் கரணங்கள் பகிர்முகமாக வியாபகம் பெற்றிருந்த போது ஆன்மாவின் காட்சியில்லை ஆன்மாவின் இயல்பை உணர்ந்தபோது அந்தக்கரணங்களின் வியாபகம் ஆன் மாவில் ஒடுங்கியது.
2290. மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.
பொருள் : மரத்தால் செய்யப் பெற்ற யானைப் பதுமையைப் பார்க்கும்போது மரத்தைப் பற்றிய காட்சி இல்லை. வர்ணங்களை அகற்றிப் புறநிலையை மாற்றிப் பார்க்கும்போது யானையின் காட்சி மரத்தில் மறைந்தது. அது போலப் பார்த்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும்போது பரமானது காட்சிக்கு ஆவதில்லை. குருவருளால் பார்க்கும்போது பரமே காட்சியளித்துப் பார்முதல் பூதங்கள் பரத்தில் மறைந்தன.
2291. ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும்பின் முத்தியே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்து, பஞ்சாட்சரத்தில் நம என்ற எழுத்துக்களைவிட்டு, பேரறிவாகி, தத்துவங்களுக்கு வேறாய் ஆன்மா யகாரமாய் விளங்கியபோது பரையின் இறுதியிலுள்ள ஒளியான தற்பரனாகிய சிவத்தில் பேறு நிறைந்த சிவாய என சிவசத்தியோடு அடங்கி நிற்றலே முத்தியாகும்.
2292.  துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே.
பொருள் : பராவத்தையில் சாக்கிரம் முதலான ஐந்தும் கீழ்க்காணுமாறு ஆகும். பரையில் சொற் பிரபஞ்சத்துக்குக் காரணமான நாதம் தோன்றும்; சொப்பனத்தில் நாதம் ஒடுங்க பரையில் நின்மல சுழுத்தியாகிய உறக்கம் அமையும்; நின்மல சுழுத்தியில் அழுந்தாமல் மேல் விளங்கவே மேலான சிவதுரியம் பொருந்தும்.
2293. ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.
பொருள் : பராவத்தை ஐந்தும் சகல நிலையில் சீவர்களுக்கு அருளால் பந்தம் நீங்கச் செய்து, சுத்தாவத்தையில் பொருந்தும்படி செய்யும் இந்நிலையில் பொருந்தும் பிரமந்திரத் துடிப்பினால் மனம் பதியச் சிவத்தை அடைவதற்குரிய பராவத்தையில் விருப்பம் உண்டாக, மாலைக் காலத்தில் நீல ஒளியின்முன் இருள் நீங்குவது போலச் சிரசின் முன்னுள்ள ஒளியில் ஐம்மலங்களும் நீங்கும். நந்தி - கதிர். பரை ஒளியில் மனம் பதிவுண்டபோது சிவதரிசனம் உண்டாகி மலம் நீங்கும்.
2294. ஐ ஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.
பொருள் : அசுத்த மாயையில் உள்ள புருடனுடன் கூடிய ஆன்ம தத்துவங்கள் இருபத்தைந்தும் பொய்யாகுமாறு சுத்த மாயையில் தேகத்துக்குரிய ஆத்மன் கண்டு எல்லாப் பொருளும் அடையும்படியாய் அவைகளேயாய் அவற்றினின்றும் விலகியிருக்கவும் உய்தியைத் தருகின்ற பராவத்தையையே எண்ணிக் கொண்டிருத்தல் சுத்த நிலையாகும்.
2295. நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத்து ஆங்குச்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.
பொருள் : பண்டைய நற்றவத்தால் ஞானத்தில் விளங்கும் நாதனான சிவபெருமான் தான் ஆன்மாக்கள்மாட்டுச் செய்யும் அருளும் பரமும் அவர்கள் தன்மீது செலுத்தும் அன்புமாக நின்றான். ஆன்மாக்களோடு பிரிப்பின்றிக் கலந்து உருவத்தில் பொருந்தியிருந்தும் ஆன்மாக்களின் சாக்கிரம் முதலிய உபாதிகளில் பொருந்தாமல் இருந்தான். என்னைத் தூல சூக்கும உடல்களின் பிடிப்பிலிருந்து விடுவித்தும் என்னை விட்டு அகலாதவனாகவும் உள்ளான்.
9. முக்குண நிர்க்குணம் (முக்கணம் : - சாத்துவிகம், இராசதம், தாமதம். நிர்க்குணம் குணமற்ற தன்மை.)
2296. சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாயந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.
பொருள் : அவத்தைகளில் பொருந்திய உயிர்க்கு நனவினில் சாத்துவ குணம் அமையும்; கனவு என்பது அதற்குரிய இராசதகுணம் பொருந்துதலாம். கருவிகரணங்களையும் செயற் படாது ஓய வைத்திடுதல் தாமத குணம் பொருந்திய சுழுத்தியாகும். இந்திரியங்களையும் அந்தக்கரணங்களையும் செயற்படாமல் அழித்திடும் நிலையே குற்றமற்ற துரிய மாகும். (உயிர் அவத்தைகளில் பொருந்தியிருக்கும்போதுள்ள குணங்களைக் கூறியவாறு.)
10. அண்டாதி பேதம் (அண்டாதி பேதம் - அண்டத்தின் வகை)
(மனிதனுடைய உடல் தொம்பைக்கூடு போன்ற ஒளி மண்டலத்தில் சூழப் பெற்றுள்ளது. பக்குவம் பெற்றபோது குஞ்சு முட்டையை உடைத்து வெளிச் செல்வதுபோல அண்டகோசம் என்ற பிரணவத்துள்ளாக வளர்ந்து பக்குவம் பெற்றபோது, மனிதன் பிரணவத்தைக் கடந்து வெளிச் செல்கிறான். அத்தகைய அண்டம் இங்கும் விளக்கப் பெறுகிறது. இவ் அண்டகோசத்துக்கு வெளியே உள்ளது பகிரண்டம்.)
2297. பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.
பொருள் : அண்டத்தை ஆசனமாகக் கொண்டு அதன்மேல் வீற்றிருக்கும் தேவாதி தேவனான சிவன், விரும்பிப் பெறும் பேரண்டத்தில் வெவ்வேறாகவுள்ள அண்ட கோசங்களில் திரை எறிகின்ற கடல் ஏழினும் உள்ள மணலின் அத்துணை அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து பிரகாசிப்பது போல் பிரகாசிப்பான். (பொன் - சிவன்.)
2298. ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
மேனிஐந் தாக வியத்தம்முப் பத்தாறாய்த்
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லாஅண்டத்து எண்மடங்கு ஆமே.
பொருள் : அண்ட கோசத்துக்குரிய ஆத்மன் அண்டத்தை ஆசனமாகக் கொண்டு ஆனந்தமாகத் தத்துவங் கடந்துள்ளான். ஆத்மனுக்கு உபகரிக்கும் நிமித்தம் சத்தியானவள் ஐந்தாக அண்டத்தினுள்ளே முப்பத்தாறு தத்துவங்களாய் அண்டத்தின் புறத்தில் சத்தி முடிவற்ற தத்துவங்களாகவும் அனந்த சத்தியாகவும் அண்டத்தின் எண்மடங்கு அளவுடையதாகவும் விளங்குகின்றது. மேனி ஐந்தாவன : சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்பன.
11. பதினோராம் தானமும் அவத்தை யெனக் காணல்
(பதினோராம் தானமாவது துவாதச கலையில் பதினோராவது கலையாகிய சமனை கலையாவன அகர முதல் உன்மனை ஈறாகப் பன்னிரண்டாகும். ஒவ்வொரு கலைக்கும் ஓர் இடம் உண்டு. சமனைக்குரிய இடம் சிரசின் மேலாகும். இங்கு அவத்தை ஆன்மா பொருந்தி யிருத்தல் அல்லது நிலை என்க.)
2299. அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.
பொருள் : ஐந்தாவது கலையாகிய அர்த்த சந்திரனுக்குரிய இடமாகிய புருவநடு விழிப்படையின் அமுதமயமான சந்திர ஒளி பெருகும். சிரசினுள் ஏழாவது கலையாகிய நிரோதினி கலையை உணர்ந்தபோது ஆனந்தம் உண்டாகும். விந்து செயம் பெறுதலே பிரணவமாகும். ஒன்பதாவது கலையான சத்தியானது வஞ்சகத்தைச் செய்யின் பதினோராவது கலையாகிய உன் மனையை விளங்க ஒட்டாமல் ஆன்மாவைத் தேகேந்திரியங்களின் வழிச் செலுத்தும். மூலாதாரச் சக்கரத்திலுள்ள குண்டலினி சத்தியே கேட்டு அருள் புரிவாயாக. முஞ்சில் - தருப்பை. அழிவில்லாத எனினுமாம். முன்முருங்கின் பூவிதழ் போன்ற செவ்விய இதழையுடைய பெண் பிள்ளையே கேட்பாயாக எனினுமாம். (மகடூஉ முன்னிலை)
2300. புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.
பொருள் : மன மண்டலத்தில் புருடத்துவத்துடன் அருவமான சிவ தத்துவம் ஐந்துமாக ஆறும் விளங்கும் நிலையே ஆன்மாவுக்குத் துரியாதீதமாகும். சுழுத்தி நிலையில் புரியட்டக சரீரம் விரிந்து விளங்கும். சாக்கிர சொப்பன நிலைகளில் அருமையான வித்தியா தத்துவம் எழும் அந்தக்கரணம் நான்கும் தொழிற்படும். சித்தம் - மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் அடங்கிய மன மண்டலம்.
2301. காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல் லால்இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.
பொருள் : முற்கூறிய பதினொரு தத்துவங்களும் உறவாகில் உடல் அமையும். இவைகளைச் செயல்படாமல் அழுத்திடில் விளங்குவது சிவமேயாகும். வீணாக அந்தக்கரணங்களின் வழிச் சென்று அலையாமல் நிற்பதே முறை என்று நீ உணர்வாயாக. (பின் சிவத்தின் வழி நிற்றலே உறுதி பயக்கும் என்று எண்ணுதல் நன்மையாகும்.)
12. கலவு செலவு
(கலவு - கலத்தல். செலவு - பிரிதல். கருவிகளோடு கலத்தலும் அவற்றோடு பிரிதலும் இங்குக் கூறப்படும்.)
2302. கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.
பொருள் : கேவல அவத்தையில் விளங்கிய ஆன்மா கருவி கரணங்களோடு கலக்க அது சகல அவத்தையைப் பொருந்தும் கருவி கரணங்களை விட்டபோது அச்சகலம் பிரிதலை அடையும். இவ்விரண்டையும் விட்டு ஆன்மா தனது அகண்ட சொரூபத்தைப் பெறுதல் ஆகிய மூன்றாவதும் படருதல் இல்லாத தீமை நீங்கும். சாக்கிர அதீதத்தில் ஆன்மா பொருந்தி இருத்தலே சுத்தநிலையாம். ஆன்மா கருவி கரணங்களை விட்டு நீங்கி, அதீதத்தில் பொருந்தியிருத்தலே சுத்தநிலையாகும். (கேவல் + அவத்தை = கேவலாவத்தை - வடமொழி தீர்க்க சந்தி.)
2303. வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.
பொருள் : முக்குற்றங்களில் ஒன்றாகிய சினத்தை முடிந்த அளவு அடக்கியிருங்கள். மனத்தை இயன்ற மட்டும் இறை நினைவில் நிறுத்துங்கள். இரவும் பகலும் சிவ நினைவில் சிவ ஒளி பெற்றுத் துரிய சமாதி பொருந்தில் கல்போன்ற உறுதியான பாச இருள் அகன்று பரமாகாய மண்டல ஒளியில் அமர்வீர். (பரமாகாயம் - பரம + ஆகாயம்.)
13. நின்மல அவத்தை
(நின்மல அவத்தை - மலம் தன் வலி ஒடுங்கிய நிலை. ஆன்மா சிவத்தைச் சார்ந்து, தன்னையும் மறந்து, வியாபகமாக இருக்கும் நிலை நின்மல அவத்தையாம்.)
2304. ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.
பொருள் : ஆகாயமாகிய வாயில்லாக் கிணற்றுள்ளே உறையும் பிரணவ உபாசகரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய நிலைகள் ஐந்து உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியினுள்ளே நழுவாமல் அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ தேகத்துடன் மேலும் ஓர் ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வார்.
2305. காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.
பொருள் : காற்றும் தீயும் நீரும் பூமியும் எல்லாவற்றிலும் கலந்து விளங்கும் ஆகாயமும் என்ற ஐந்தையும் மகேசனும் உருத்திரனும் திருமாலும் பிரமனும் உருவச் சதாசிவரும் முறையே இயக்கும் அதிபராவர் இவர்களை விட்டு இவர்களுக்கு மேல் உள்ள அருவச் சதாசிவம், விந்து, நாதம், சத்தி, சிவம் ஆகிய ஐந்தையும் பொருந்தும் ஆற்றல் உடையார்க்கு எமனும் இல்லை. உலகம் பற்றிய சங்கற்பமின்றித் திருவடிச் சார்பில் பொருந்தி நிற்பர். பூதங்களை இயக்கும் அதிபர்களின் பெயர் (வரிசைக் கிரமம்) மாறியுள்ளது.
2306. ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.
பொருள் : ஆன்மாவே சிவகுமாரன் ஆயினான் என்று பெயரிய வேதமானது கூறும் உண்மையினை உலகினர் அறியவில்லை. ஆனால் ஆன்மாவே சிவகுமாரன் நின்மல அவத்தையில் ஆன்மா என ஒன்று இல்லாமையால் சிவனுக்கு இவன் மைந்தன் என்று கூறுதலாம். அந்நிலையில் இருபத்தைந்து தத்தவங்களும் இல்லையாம். சிவகுமாரன் என்று கூறுவது தந்தைக்குள்ள தன்மையை மகன் பெறுவதால் ஆம்.
2307. உதயம் அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப னாய்அனந் தான்அந்தி யாகும்.
பொருள் : ஒளி உதயமாதல், உலக சிந்தனையற்று அதனுள் அழுந்ததல், இந்திரியங்கள் ஓய்ந்து அடங்குதல் ஆகிய இம்மூன்றும் முறையே நின்மல சாக்கிரம் நின்மல சொப்பனம் நின்மல சுழுத்தியில் ஆகும். இவை பதிந்த  சித்துப் பொருளாகிய ஆன்மா தனக்குப் பற்றுக்கோடாக விளங்கும் துரிய நிலையில் மிகுந்த மங்கல வடிவினனாய் அழியாத பேறு எய்துவான். (நந்தான் - கெடான் எனினுமாம். சேதனன் - ஆன்மா. அனந்த ஆனந்தம் - முடிவிலா ஆனந்தம்.)
2308. எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.
பொருள் : மாயேயமாகிய எல்லாத் தத்துவங்களும் சீவ ஒளியில் அடங்க, தத்துவங்களில் உள்ளும் புறம்பாகிய சீவஒளி தானாய் அது நன்மையைத் தரும் துரிய நிலை புரிந்தால் சுத்தான்மாவாகும். அப்போது அதுதீமையைத் தரும் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடாது தனித்துவிடும். ஆன்மா ஞானமே வடிவாய்ச் சென்று அடைவதற்கு அருமையான சிவகதியைச் சென்றடையும்.
2309. காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.
பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.
2310. ஆன் மறையாதி யாம்உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
ஆன வகையை விடும்அடைத் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.
பொருள் : ஞானத்தைக் கொடுப்பதான மறையாதியான நாதம் வெளிப்பட்டு வந்து ஏனையவற்றைப் புலப்படுத்துகின்ற நனவு நிலையில் இவ் வகையான நாதத்தைக் கடந்து மேற் சொல்லுங்கள். அவ்வாறு நாதத்தைக் கடந்து நாதாந்த நிலையில் பொருந்தியபோது உண்டான மலமற்ற தன்மையே ஆன்மாபரமாகும் என்பதாம். ஆன்மா நாதாந்தம் பொருந்தியபோது பரமாந் தன்மை எய்தும்.
2311. சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.
பொருள் : முற்கூறியவாறு நாதவெளிப்பாடு பெற்றுச் சகலநிலையில் நின்மல துரியாதீதத்தில் பொருந்தினால் அவரை விட்டு, சித்தினது அருட்சத்தி நீங்காது. அந்த நாதத்தையே தியானப் பொருளாகக் கொண்டு, மனம் விரும்பும் உலக போகத்தின் வழிச் செல்லாமல் நாதாந்தம் சென்று சமாதி உற்று, சிவத்தோடு பொருந்துவதற்குத் திருவருட் சத்தியே அவர்கட்கு முதற் காரணமாகும். (ஆங்கணில் - அவ்விடத்தில்)
2312. வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.
பொருள் : மாதொரு பாகனாய் இருக்கும் தன்மையால் உலக உயிர்களை ஆணும் பெண்ணுமாக இரு கூறு செய்தான். அர்த்தநாரியாய் ஒன்றாய் இருக்கும்போது அவனே என்னை உலகக் கவர்ச்சியினின்றும் மீட்டு அகண்ட சொரூபமாக்கி எங்கும் செல்லும் ஆற்றலை அளித்தான். மேலும் அவன் என்னைவிட்டு நீங்காத அருட் கேவலத்தில் பொருந்தி என்னைவிட்டு நீங்காத தந்தையாய் உடனிருந்தான்.
2313. கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தின் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புலிசேர்ந்து
கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.
பொருள் : காற்றாடியின் ஓலையும் கொள்ளிக்கட்டையின் வட்டமும் கடலின் அலையும் அழகு நிறைந்த தயிரின் மத்தும் போல உயிர்மலத்தினால் சுழன்று, அவ்விடத்துத் தத்தம் புண்ணிய பாவத்துக்கு ஏற்பப் பொருந்தும் சொர்க்கம் நரகம் சேர்ந்து பூமியைக் கடந்து வருந்தி, உயிர் இறைவன் அருளை அடைந்தால் பிறப்பு இறப்பு நீங்கும். இறைவனது அருளைப் பெற்றால் உயிர்க்கூட்டம் பிறவிக்கு வாரா.
2314. தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.
பொருள் : திருவருட் பேற்றால் ஆருயிர் தானே சிவமாந்தன்மை எய்தும். எய்தத் தொன்மையான மலமும் அம்மலத்தைப் போக்க அருளால் சேர்க்கப்பட்ட பாச வேறுபாடுகளுமாகிய ஐம் மலங்களும் நீங்கும். அதனால் ஏற்படும் குணங்களாகிய தீமைகளும் அகலும். உயிர்த்தன்மைத் தடையாகிய பரமான்மா உபாதியும் நீங்கும். இவை முற்றும் உடன் ஒருங்கு அகல்வதற்கு ஒப்பு ஞாயிற்றின்முன் திங்கள் நீங்குவதாகும். நீங்குதல் என்பது அடங்குதல்.
2315. நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.
பொருள் : உலகமும் உடலும் ஒப்பெனக் கூறும் உண்மையான உடலகத்தும் நிலமுண்டு; நீருண்டு; நெருப்புண்டு; காற்றுண்டு; வெளியுண்டு; ஞாயிறுண்டு. அவற்றை இயக்கும் தெய்வங்களாகிய அயன், அரி அரன், ஆண்டான், அருளோன் என்பாரும் உளர். ஐம்பூத நிலையை முறையே மூலம், மேல் வயிறு, நெஞ்சம், கழுத்து, உச்சித்துளை என்ப. ஞாயிற்று மண்டிலத்தை அடிப்பகுதியிலும் திங்கள் மண்டிலத்தைப் புருவ நடுவிலும் கூறுப.
2316. ஆனைகள் ஐந்தும் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.
பொருள் : ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி, அறிவாகிய ஞானத்திரியைத் தூண்டி, காணும் சீவ ஒளியில் புகுந்து, ஊனாலாகிய உம்பைச் சோதி வடிவாகக் காண்பவர்க்கு சிவலோகம் ஏற வழி மிக எளிதாகும். சீவ ஒளியில் நிலைபெற்று உடலைச் சோதி மயமாகக் காண்பவர் முத்திநிலை எய்துவர்.
2317. ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.
பொருள் : சந்திர கலையில் இயக்கம் பெறுகின்ற பிராணனும் அது மேல் செல்லுவதால் உண்டாகின்ற சிறுபறை முழக்கமும் ஒலிக்கின்ற வேதாகமங்களின் மூலமான இனிய நாதமும் எனது இடை நாடியில் சகஸ்ர தளத்தில் நான் கண்டு கொண்டேன். (ஆடையகால் - தூக்கிய இடத் திருவடி. சந்திரகலை சந்திரன் மனத்துக்கு அதிபர். தமருகம் - உடுக்கை. அசைக்கின்ற வாயு - சிலம்பொலி. தாடித்து - மிகுத்து (தடித்து).)
2318. முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம்அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.
பொருள் : முந்திய பிறவிகளில் ஞானத்தினால் சாதகம் செய்த நற்றவம் காரணமாக, இப்போது எடுத்த பிறவியில் அவ்வறிவு பிரகாச முற்று விளங்கில், தனது இயல்பான அகண்ட வடிவத்தை அறியலாகும். இவ்வாறு தன்னை அறிதலே அறிவாகும். அஃது அல்லாமல் பிற அறிவினைப் பெற்றால் பேய் போலச் சொர்க்க நரகங்களில் அலைந்து பிறப்பு எடுக்க வேண்டியதாகும்.
2319. செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.
பொருள் : திருவருளால் செயலற்றிருப்பதைச் சமாதி அல்லது நிட்டை என்பர். செயலற்றிருக்கச் சிவ இன்பம் ஆகும். செயலற்றிருப்போர் சிவயோகம் தேடார். அவர்கள் உலக நிலையிலா வாழ்வுடனும் கூடார். செயலற்றிருக்கும் திருவினர்க்கே சிவபெருமானின் பேரின்பச் செய்தி உண்டாகும். செயலறல் அகப்புறச் செயலறலாகும். ஆனால் ஆண்டான் அடியின்ப நுகர்வுச் செயலுண்டு. அது நிற்கும் நிட்டை.
2320. தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.
பொருள் : திருவருளால் ஆருயிர்கட்குத தான் அவனாம் சமாதி கைகூடினால் ஐவகையான மலம் அறும் சிற்றுணர்வு என்னும் பசுத்தன்மை அகலும், புலால் புகர்தல், கொலை,களவு, கள், காமம், பொய் கூறல், சிவனை மறத்தல், சிவனடியாரை மறத்தல் என்னும் எண் பெருங்குற்றமும் ஒழிந்து சிவபெருமான் திருவடியை ஒன்று வோர்க்குக் குற்றமற்ற அவர்தம் நல்லுடல் சிவ வுலகத்தில் இருக்கும்.
2321. தொலையா அரனடி தோன்றும்அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.
பொருள் : ஆருயிர்கட்குச் செவ்வி வாய்த்ததும் திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் எய்தம் எய்தவே, என்றும் பொன்றாச் சிவபெருமானின் திருவடி தோன்றும். ஒடுங்குதலாவது கெடுதல் எய்தாத மலமாகிய இருளும், சிற்றுணர்வாகிய உயிர்த்தன்மையும் தோன்றுதலாம் அணுவாகிய ஆரு யிர்க்குக் கேடில்லாத தொன்மையிலேயே உள்ள நன்னெறி நான்மையின் தொழிலும் அறிவும் உண்டு அதனால் கட்டு வீடென்று சொல்லப்படும் இருநிலையும் தோன்றும். அதற்கிடையில் ஆருயிர் அருளில் தோயும் (பெத்தம் - பந்த பாசங்களில் நிற்கும் நிலை. சத்திநிபாதம் - பக்குவம் பெற்ற ஆன்மாக்களிடம் திருவருள் பற்றுதல்)
2322. தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம்தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்குஒளி யாமே.
பொருள் : திருவருட் ஆருயிர்க்குத் தோற்றுவிக்கப்பட்ட கட்டும் வீடும் தோன்றும். அவற்றை அவ்வுயிர் மருண்டும் தெருண்டும் உணரும். பின் சிவபெருமான் அருள்கின்ற திருவடியுணர்வால் அவ்வுயிர் சத்திக்குச் சாதனன் ஆகும். அஃதாவது, அவ்வுயிர் அருள்வழி ஒழுகுவது ஊன்றி நின்று நிலைப்பதல்லாத உள்ளொளிக்குள் ஒளியாய சிவ ஒளிதோன்றும். (மான்று - மயங்கி. தெருண்டு - தெளிந்து)
2323. அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.
பொருள் : தாமே அறியும் தன்மையில்லாத முப்பத்தாறு மெய்களும் ஆருயிரால் அறிகின்றன. அவ் வுண்மையினையும் அறிகின்ற என்னையும் அறியாதிருந்தேன். சிவபெருமான் அறியும் தன்மை உனக்குள்ள தென்று அருளால் அறிவித்தான். அதனால் நான் அறிகின்றேன் என்று அறிந்து கொண்டேன். இதன்கண் நம் மூலர் தம் முன்னிலையினை ஓதியருள் கின்றார்.
2324. தான்அவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
ஊனமி லாள்தன்னை ஊனிடைக் கண்டதே.
பொருள் : மேல் ஓதியவாறு விளக்க விளங்கும் அறிவுள்ளது உயிரென உணர்ந்தோன் இரும்பைப் பொன்னாக்கும் இயைபுபோல், தன்னை அவனாக்கும் ஞானத்தலைவன் சிவன் என்பன். சிவ வுலக வாழ்வினர்க்கு முதல்வனும் அவனே. அளவிடப்படாத மாமணியாகிய செம்மணிச் சோதியை மாசிலா மெய்யுணர்வை நல்கும் இனிய வனப்பு மிகும் நல்லருள் ஆற்றலும் அவனே. ஒரு ஞான்றும் முழு முதல் தன்மையில் ஏதும் குறை பாடில்லாத சிவபெருமானை இவ் வுடம்பகத்தே அவன் காட்டக் கண்டு கொண்டேன் என்க.
2325. ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே.
பொருள் : சிற்றறிவாகிய ஒளியும் ஆணவமாகிய இருளும் இவற்றை விளக்கும் நடப்பாற்றலாகிய பரையும் அத்திருவருளால் தலையளிக்கத் தக்க ஆருயிரும் அருளால் உணரலாகும். அதன் மேலும் தலையளிப்பையும் அதனைப் புரியும் அருளையும், அவ்வருளால் எய்தும் தெருளையும் கடந்து திருவடியைத் தெளியத் துணை புரியும் வனப் பாற்றலாகிய திருவருளே சிவப் பேரின்பமாகும்.
2326. ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
ஊன்அந்த மாய்உணர் வாய்உள் உணர்வுறில்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே.
பொருள் : சிவத்தினது அருட் சத்தில் ஆன்மா தன் வயமற்று அழுந்தில் ஆனந்தத்தையும் அடையும். உடலைக் கடந்து சமாதி செய்து உணர்வு மயமாய் உள் உணர்வில் கலந்து அகண்டமாய் நிற்கும் அறிவைப் பெற்றால் உடலின் தலைவனான் ஆன்மாவின் சுட்டறிவு முடிவுறும். இது மகாவாக்கியப் பொருளாகும்.
2327. அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.
பொருள் : ஆன்ம ஞானமற்றுத் தாமதகுணம் பொருந்தியவர்களுக்கு ஞானோபதேசம் செய்ய வேண்டாம். பூர்வ சென்மம் காரணமாக இயல்பாகவே ஞானம் பெற்றவர்க்கும் அறிவிக்க வேண்டாம். ஆன்ம ஞானத்தைக் கல்வியினால் அறிந்தும் அனுபவம் கூடாமல் அறியாமையில் உள்ளவர்க்கே அவர்கள் அனுபவம் பெற்றுத் தம்முடைய எதார்த்த சொரூபத்தை அறிவார்.
2328. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.
பொருள் : சத்து அசத்து சதசத்து என்னும் பொருட்களில் தான் எனப்படுகிற ஆன்மா மற்றைய பொருட்களோடு கூடி, அறிவுப் பொருளாகவும் அறிவற்ற பொருளாகவும் பேரறிவுப் பொருளாகவும் நிற்கும். சுத்த மாயையும் அசுத்த மாயையும் தொடராத துரிய நிலையில், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி ஆகிய மூன்று நிலைகளையும் பிரணவத்தையும் கடந்து மலங்களின் நீங்கிய சுத்தமுடையதாகும்.
2329. தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.
பொருள் : ஆன்மா தானாகவே தனது உண்மைச் சொரூபத்தை அறியமாட்டான். ஆனால் அறிவில்லாதவனும் அல்லன். தன்னுடைய அறிவு அறிவும் அறியாமையும் உடையது என்று சொரூபத்தை அறிந்தபின் அறிவான். ஆனால் இவ்விரு தன்மைகளும் அருட் சத்திப் பதிவால் உண்டாக, ஆன்மா தன்னையும் அறிந்து தலைவனான சிவத்துடன் பொருந்திப் பேரின்பம் அடையும்.
2330. தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.
பொருள் : முப்பத்தாறு மெய்களின் உண்மை உணரும் உணர்வு தலைப்பட்டவர்கட்கே திருவடியுணர்வாகிய அழியாத் தத்துவ ஞானம் கைகூடும் அத் திருவடியுணர்வு கைவந்தால் சிவனருளால் சிவனாவன். சிவனாகவே திருவடிக்கீழ் அமர்ந்து திருவடியின்பம் துய்ப்பன். தத்துவ ஞான ஆனந்தம் தான் தொடங்குமே - எனப் பிரித்துக்கொள்க.
2331. தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அத சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து  முத்திரை நண்ணுமே.
பொருள் : திருவருளால் ஒருவன் தன் உண்மை நிலையினை அறிந்து, அச் சிவபெருமான் திருவடிக்கீழ் தங்கி நிலைப்பன். தங்கவே மலம் முதலியவற்றின் பிணிப்பு மறைப்பு துய்ப்பு முதலிய பண்புகள் அறும். அறவே பிறப்பும் அறும். அற்ற பின் கைகூடுவது உண்மைத் திருவடிப் பேறாகும். அப் பேற்றால் நன்னெறிப் பேரொளி நண்ணும். நண்ணவே என்றும் நன்மை பயப்பதாகிய திருவடி. உணர்வுப் பொறி பெற்ற திருவினராவர். (பொறி - முத்திரை).
2332. ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.
பொருள் : சிவத்தின் திருமேனி ஞானமாகும். கிரியையில் அவன் நடு அங்கமாகவுள்ள இதயத்தில் உறைபவனாக வுள்ளான். உயிரின் இச்சையில் தனது இச்சையைப் பொருத்தி அந்த மேலான சிவம் உயிர்களிடம் ஒளியில் பொருந்தி, சிருஷ்டி யாதி ஐந்தொழில்களுக்கும் காரணமாக உள்ளதால் பிரணவ யோகிகள் அவன் அறிவுடன் பொருந்தித் தங்களது இச்சை கிரியைகளை விட்டு ஞான முத்திரையைப் பெற்றார்கள்.
2333. உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்செயல் அன்றிஅவ் வுள்ளத்து ளானே.
பொருள் : உயிர்க்குரிய அறிவு சத்தியப் பொருளது உயிர்க்குரிய அபிமானம் அதன் இச்சையாகும். உயிரின் செயல் உயிரோடு பிணிக்கப்பட்ட மாயையின் அளவாகும். இவை அனைத்தும் பரவிந்துவில் சூக்கும மாய் உள்ளன. இவைகளை உயிரோடு புணர்த்தியவன் எல்லாவற்றையும் புணர்த்தும் சிவமேயாகும். ஆதலால் உயிர்கள் செயல் அவற்றின் செயலாகாது; உள்ளத்திலுள்ள சிவத்தின் செயலாகும்.
2334. தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.
பொருள் : பழமையாகச் சிவமாந் தன்மை எய்திய சீவரது இச்சா ஞானக் கிரியைகள் நீங்காத சுசுத்தாசுத்த மாயா காரியங்களினால் நிகழ்வனவாகும். அச் சீவன் பழியில்லாத காரண காரிய தத்துவங்கள் பாழ்பட நிலைபேறான சாந்திய தீதகலையில் விளங்குபனான சிவனாவன். சாந்தியாதீத கலை வியாபகம் மற்ற கலைகள் அதனுள் வியாப்பியம்.
2335. இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.
பொருள் : நிலையில்லாக் காரியப் பொருளான மாயா வடிவங்களிலும் நிலையான காரணமான பரவிந்துவிலும் எல்லாவற்றிலும் கலந்து சிவன் தானாகி, பொருள் தன்மையால் இல்லதும் உள்ளதுமாய அப்பொருள்களின் வேறாயும் உள்ள சிவனை, வாக்குக்கு அப்பாலுக்கு அப்பாலாய் உள்ளவன் என்று விரைவில் சிவஞானத்தால் உணரின் அவன் உயிர்க்குயிராய் விளங்குவான்.
2336. உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.
பொருள் : உயிர்களிடம் விருப்பத்தை உண்டாக்கி மாயையை இடமாகப் பொருந்தும்படி செய்யும் சத்தி, ஞானமான போது உயிரின் இச்சைகளை அழித்து நிற்கும். உயிர்களுக்கு இறைவன்பால் அன்பு உண்டாகச் செய்து உடனாய் இருத்தலால் உயிரானது உலக இச்சைகளை அழித்து மேலான சிவபதம் சேரும்.
2337. சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றே.
பொருள் : உயிரின் இச்சையை வாட்டிச் சிவமாம் பேறு பெற்றவர் உயிர்க்குற்றமாகிய ஐம்மலங்களையும் அகற்றினவராவர். அவ்விதம் சிவத்துடன் ஒன்றுதல் இல்லாதவர் உயிர்க் குற்றமாகிய ஐம்மலக் குற்றங்களையும் பொருந்தி இருளுடையவராக இருப்பர். இத்தகையோர் பூமியிலும் சொர்க்கத்திலும் நரகத்திலும் உழல்பவராக இருப்பர். இங்ஙனம் பிறந்து உழல்வது சிவ சக்தியினால் என்பதை பாரும் உணர்வதில்லை. சிவமாந்தன்மை எய்தியவர் சிவசத்தியினால் தன் உண்மை உணர்வர்.
2338. எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.
பொருள் : ஆருயிர்கள் தூமாயை தூவாமாயை என்னும் இரு மாயைகளிலும் அருளால் பொருந்திச் செய்பவன செய்யும். அது போல் பெரிய ஞான சத்தியைப் பொருந்தி அறிவு விளங்கப்பெறும் பெரிய நிலவுலக முதலாம் மூலப்பகுதியினைப் பொருந்தித் துய்ப்பன துய்க்கும். இவை யனைத்தும் திருவருளால் நிகழ்வனவாகும். (இரு மாயா சக்தி - சுத்தமாயை, அசுத்த மாயை, ஞாலசக்தி - பிரகிருதி மாயை. தூமாயை - சுத்தமாயை. தூவாமாயை - அசுத்தமாயை.)
2339. திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.
பொருள் : திருவடி யுணர்வால் திருத்த முற்றவர் இன்பமில்லாத துன்பம் நிறைந்த இருளுலகம் புகார். திருவடியுணர்வு - மெய்யுணர்வு, சிவஞானம். அத்தகைய உணர்வுடையார் நிலையிலா இன்பம் எய்தும் துறக்க உலகத்தையும் கான்ற சோறென ஒதுக்கித் தள்ளினர். அவர்கள் ஐம்மலக் கூட்டத்தையும் அறவே விட்டனர். மேலும் சிவமாய்த் திகழ்ந்தனர். அதனால் அவமாய பிறப்பினை விட்டனர். இவர்களே தங்கருமம் செய்யும் தவத் தோராவர். ஏனையோர் சிறப்பில்லாத பிறப்பு வினை செய்யும் அவத்தராவர்.
2340. அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே.
பொருள் : நல்லறிவு இல்லாதவர் எது பயனற்றது எது பயன் உள்ளது என்பதை அறியமாட்டார். நல்லறிவு உள்ளவர் பயனற்றதையும் பயனுள்ளதையும் பிரித்து உணர்வர். அவ்வாறு பிரித்து, அறிவினால் தெளிந்தால் சீவர்களுக்கு அமைத்த கேடும் நன்மையும் அவன் அருளால் ஆம் என்று உணர்வர். சீவர்களுக்கு நன்மையும் தீமையும் அமைப்பது அருளேயாகும்.
2341. அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்மீண்டு மும்மல மாகும்
திருவருள் ஆனந்தி செம்பொருள் ஆமே.
பொருள் : அருள் என்ற சிவசத்தி நெருப்பும் அதனை விட்டு நீங்காத வெப்பமும் போல அவன் பொருளாகத்தான் ஞானமாய்ப் பொருந்தும் ஆன்மாவினிடம் சிவசத்தி இருளாகவும் ஒளியாகவும் பிரிந்து பின் மும் மலங்களாக விரியும். சிவானந்தத்தை விளைக்கும் சத்தியே சிவமாகும்.
2342. ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வாறுஅருட் பேதமே.
பொருள் : சூரியன் உதிக்க வளரும் தாமரை முதலிய மலர்கள் பக்குவ மாறுபாட்டுக்கு ஏற்ப அவ்வவற்றின் தன்மை மாறுபட்டு, சூரியனது ஒளிக் கிரணங்களால் அம் மலர்கள் தொழிற்பட மலர்ந்தும் மலர்ச்சி புலப்படாதவாறுபோல, சத்தியில் அருட்பதிவால் உண்டாகும் மாறுபாடும் ஆகும். சூரியனது கிரணத்தால் மலர் விரிவது போலச் சத்தியின் பதிவால் சீவர்கள் மெத்தென ஒளிபெறுவர்.
2343. பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதும் போதமும் நாதமும்
நாத முடன்நாத நாதாதி நாதமும்
அதன் அருளின் அருள்இச்சை யாமே.
பொருள் : காணப்படும் உலகை வேற்றுமையாகவும் ஒற்றுமையாகவும் வேற்றுமையும் ஒற்றுமையாகக் காண்கின்ற தன்மையும் இயற்கை அறிவும் கல்வி கேள்விகளினால் ஆய அறிவும் ஞானமும் நாதமும் நாதத்தைத் தொடர்ந்து அதிநாதம் என்ற நாதாந்த நிலைபெறுதலும் ஆன்மாவுக்கு அருளில் அமைந்த இச்சா சத்தியின் கருணையாகும். (ஆதன் - ஆன்மா,) அதிநாதம், மகாநாதம், நாதாந்தம் என்பன ஒரு பொருளனவே.
2344. மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.
பொருள் : பொய்யான யானைப் பதுமையை மனிதன் பொருந்தி ஆட்டும் செயல்போல், பரந்த பூதங்களைக் கொண்டு ஆடச் செய்து படைத்தல் முதலான தொழில்களால் பூமி சொர்க்கம் நரகம் முதலியவைகளுடன் கூடச் செய்து ஞானம் வரப்பண்ணுதல் உயிரை நிலைபெறச் செய்யும் சிவனருட் சத்தியின் செயலாகும்.
2345. ஆறாறு அகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுத் தன் உண்மையை அறிந்த ஆன்மாவானவன், எல்லா உயிர்களிடமும் செல்ல வல்லவனாயும் எல்லா உயிர்களையும் தன்னிடம் காண்பவனாயும் அவைகளின் வேறாயும் பரவெளியில் புகுந்து வீட்டை அடைவான். முன்னர் இருந்த மயக்கம் தேறித் தெளிவுற்று அருள்சத்தி பதியச் சிவமாவான்.
2346. தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.
பொருள் : தற்போதத்தினால் அடைவதற்கு அருமையான திருவடிப் பேற்றை முற்பிறவியின் தொடர்பாக இப்பிறவியில் அருள்கூட்ட அறிந்து, அந்நெறியில் சென்று மூலாதாரத்திலிருந்து மேலேறும் வாசியாகிய குதிரையில் ஏறி, ஆதாரங்களைக் கடந்து நிராதாரம் சென்று சிவனுடன் சார்தல் அமையும்.
2347. சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.
பொருள் : சிவத்தைச் சார்ந்தவர் சாரணர்களும் சித்தர்களும் சமாதி பொருந்தினவர்களும் ஆவார்கள். உண்மைச் சிவஞானத்தை உணர்ந்தவரும் சார்ந்தவர் ஆவார். சிவத்தின்பால் அன்பு கொண்டு சிவானந்தத்தை அனுபவிப்பவரும் சார்ந்தவராம். நாதமாகிய அருளில் விளங்குபவரும் சார்ந்தவராக இருப்பர். (சாரணர் - எங்கும் செல்லும் ஆற்றலுடன் உயிருக்கு உதவுபவர்.)
2348. தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான் என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்
தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.
பொருள் : ஆன்மாவாகிய தான்என்றும் சிவமாகிய அவன் என்றும் ஆக உண்மையைப் பொருள் இரண்டு என்று கூறுவர் சகலர். தான்என்று அவன் என்று இல்லாமல் ஒன்றான தன்மையை, அருட் கேவலத்தில் இருப்போர். தன்னைச் சிவத்துக்கு வேறான பொருள் என்று எண்ணமாட்டார். அவ்வாறு  ஆன்மா தற்போதம் கெட்டுச் சிவமே யாகத் தத்துவ சுத்தமாகும்.
2349. தன்னினில் தன்னை அறியம் தலைமகன்
தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே.
பொருள் : தன்னிடத்தே தன் உண்மையை அறியும் தத்துவசுத்தி பெற்ற ஆன்மா தன் உண்மையில் தனது தலைவனாகிய சிவத்தை அறிய அது வளர்ந்து தோன்றும். அவ்வாறு  தன்னிடத்தே  தன் உண்மையை அறிந்து பொருந்தானாகில் தன்னிடத்தே தனது தலைவனையும் அடைவதற்கு அருமையாகும். தலைப்படுதல் - வளர்தல்.
2350. அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.
பொருள் : மேல் ஓதியவாறு திருவருளால் யான் அறியகில்லேன் என்று நீயும் கவன்று அரற்றுதல் செய்ய வேண்டா. நன்னெறி நான்மை வழியே சென்றால் திருவருளால் சிவன் உனக்கும் நேர்படுவன். அவன் பின்பு அடியேனுக்கும் ஆருயிர் பேருயிர் என்ற இருசுடராய் இயைந்து இயக்கும் உண்மையினையும் புலப்படுத்துவன். அத்தகைய வல்லானாகிய சிவன் அடியேனை அவன் திருவடிக்கீழ் அடக்கி அடியேன் உள்ளத்து உள்ளாவான். (ஆருயிர் - ஆன்மா. பேருயிர் பரமான்மா. சிவன். இருசுடர் - சிவன், சீவன். ஒரு சுடர் - சிவன்.)
2351. மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உள்நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின் றானே.
பொருள் : மண் என்ற ஒரு பொருள் பானை சட்டி முதலிய பல பாண்டங்களாக ஆகிறது. அது போல இறைவன் ஒருவனே சகல சீவ வர்க்கங்களிலும் ஆகியுள்ளான். கண் ஒரு பொருளாக இருந்து உலகிடைப் பல பொருள்களைக் கண்டும் அதனை அவை காணா. அதுபோல உயிர்களின் தலைவனான இறைவனும் தான் எல்லாவற்றையும் அறிந்தும் தான் அவற்றால் அறியப்படாதவனாய் உள்ளான்.
2352. ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின் றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.
பொருள் : சிவபெருமான் உயிர்க்கு உயிராய், உலகுக்கும் உயிராய் உள்நின்று, உலகு ஏழினையும் ஓம்பியருள்கின்றனன். அச்சிவ பெருமான் திருவடிக்கண் ஒருங்கிய மனத்தார் கூம்புகின்றா ராவர். அத்தகையாரை மெய்யடியார் எட்டுவான் குணத்து எம்மான் எனக் கூறுவர். சிவபெருமானின் திருவடிகளை நினையாதவர் தேம்புகின்றார் ஆவர். உள்ளத் தளர்ச்சி யில்லாதவர் இடையறாது நினைந்து சிவன் திருவடியைக் கொள்ளத் தளரார்.
2353. குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே.
பொருள் : உயிர்க்கும் உயிராய் இருக்கும் சிவத்தைத் தன் உண்மை என்ற பரவிந்து மண்டலம் வெளிப்படாதபோது அறிய மாட்டார். இவ்விதம் தன் உண்மை அறியாதவர் உடம்போடு கூடிப் பல பிறப்பு எடுப்பர். சிவம் வேறு தாம் வேறு என்று எண்ணாமல் சிவத்தடன் அத்துவிதமாய் (பிரிப்பின்றி) நில்லுங்கள். அங்ஙனம் கூடிச் சுட்டியறிதல் இன்றி அதுவேயாக இருந்து ஹம்சம் ஆகலாம். ஹம்சம் - நான் அவன். சிவனோடு அத்துவித பாவனையில் இருந்தாம் ஹம்சம் ஆகலாம்.
2354. ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
தானோ பெரிதுஅறி வோம்என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே.
பொருள் : சிவானந்தத்தைப் பெறுவது உடலா உயிரா இவற்றுள் எது? ஆகாய ரூபிணியாகிய சத்தியோடு பொருந்தி இவை ஒன்றும் அறியாது இருப்ப, தாம் மிகவும் அறிகின்றோம் என்று கூறும் மக்கள் மேலும் மேலும் வரும் பிறப்பு இறப்பில் பொருந்தி அவை நீக்க அறியமாட்டார்.
14. அறிவுதயம் (அஃதாவது ஆன்மாவுக்குச் சுட்டறிவு இன்றி எல்லாவற்றையும் அறியும் அறிவு உள்ளது என்று அறிவது.)
2355. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
பொருள் : ஆன்மாவாகிய தன்னை அறிவுரு என்று அறிந்தால் கருவி கரணங்களோடு பொருந்தி மயங்க வேண்டிய கேடு வராது, தான் அறிவுரு என்பதை அறியாமல் ஆன்மா தனது அஞ்ஞானத்தால் கருவி கரணங்களோடு பொருந்திய பிறவியில் பட்டு உழல்கிறது. கருவி கரணமின்றித் தானே எல்லாவற்றையும் அறியவல்ல ஒளிவடிவு என்ற அறிவை ஞான சாதனத்தால் அறிந்தபின் தன்னை உலகோர் வணங்கும்படியான சிவ சொரூபமாகத்தான் இருந்தான்.
2356. அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியம் போற்றிஎன் றானே.
பொருள் : முன் மந்திரத்துக் கூறியவாறு அறிவுபெற்ற ஆன்மா அவ்விடத்து வலிமையும் பெருமையும் மிக்க பிரமன் அரி முதலான தேவர்கள் எல்லாம் வணங்க அரியாசனத்தில் சிவ பெருமானே வீற்றிருக்கிறான் என்று மதித்து சங்கினாலாகிய வளையலும் கால் சிலம்பும் ஓசையை எழுப்ப மிகுந்த கூந்தலையுடைய பராசத்தியும் போற்றி என்று கூறினாள்.
2357. அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவ வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.
பொருள் : எவற்றையும் கருவி யில்லாது அறியும் ஆற்றல் உண்டு என்பதை அறியாதிருந்த என்னை, என்னுடைய இயல்பான சொரூபம் அறிவு தவிர வேறில்லை என்ற அவன் கருணையால் உணர்த்தினான். நான் அறிவு சொரூபன் என்று அவனது சத்தியால் உணர்த்தப்பட்டு உணர்ந்தபோது நான் அறிவு வடிவென்று அறிந்து கருவி கரணங்களை விட்டு அறிவாகவே இருந்தேன்.
2358. அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே.
பொருள் : ஆகாய மண்டலத்தில் மிகச் சூக்குமமாக உள்ளமையின் அறிவு எவ்விதமான தூல மாறுதலாலும் பாதிக்கப்படுவது இல்லை. அதனால் அதற்கு விருத்தியும் இல்லை.
ஆன்மாவாகிய அறிவுப் பொருளுக்குப் பேரறிவான சிவத்தையன்றி வேறு ஆதாரம் இல்லை. ஆதலால் அறிவுருவான ஆன்மா பேரறிவான சிவத்தை அறிய முற்படுகிறது என்று வேத முடிவான உபநிடதங்கள் கூறுகின்றன. ஆன்மா நித்தியப் பொருளாதலின் அதற்கு அழிவும் ஆக்கமும் இல்லை. பரனும் பரையும் அதற்கு ஆதாரம்.
2359. ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.
பொருள் : ஆராயப் பெற்ற ஆதார கமலங்களில் சிறந்த அனாகத சக்கரத்தின் மேல், பரவிய விசுத்திச் சக்கரத்தில் பதினாறு இதழ்கள் கண்டத்தில் உள்ளன. தூய்மையான ஆன்ம அறிவு சிவானந்தம் பொருந்தி, விசுத்திச் சக்கரத்தைக் கடந்து பேரறிவாய் அதனோடு கலந்து விளங்கும் ஆன்மா சிவத்தை அறியும் முறை கூறியவாறு.
2360. மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.
பொருள் : சிவ சிந்தனையில் இடைவிடாது நிற்பவரிடத்து வந்து சுத்தமாயா காரியமான நாத தத்துவத்தில் வெளிப்படுபவனை நினைந்தேன். அம்முதல்வனும் பொன்ஒளியில் திகழ்ந்து விளங்கினான். ஒப்பற்ற புகழினையுடைய பொன்னார் மேனியனைப் பிணைந்து நின்றேன். அவனும், நீ பெரியவன் என்று அருள் கூர்ந்தான்.
2361. அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே.
பொருள் : ஆன்ம அறிவு பேரறிவின் வழியாயது என்று உணர்ந்து அதனிடம் அன்பு செலுத்துங்கள். அப்போது அகண்டாகாரம் வேரறிவுப் பொருளாய சிவமும் உங்கள் அறிவில் பொருந்துவான். உங்கள் அறிவு அவன் அறிவாக அமையின் அணிமாதி சித்திகள் தாமே பொருந்தும். அப்போது சிவன் உங்களது அறிவைத் தன்னறிவாகத் திருவுள்ளத்தில் கொண்டனன் என்பது விளங்கும்.
2362. அறிவுஅறி வென்றுஅங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவஅறி யாமை அழகிய வாறே.
பொருள் : உலகோர் திருவருள் நாட்டமின்றி அறிவு அறிவென்று அரற்றுவர். எது அறிவு எது அறியாமை என மெய்ம்மையைப் பகுத்து உணரார். திருவருளால் உணரும் உயிர் அறிவு அறியாமை என்னும் இரண்டினையும் அருளால் கடந்து முற்றறிவு பெற்றுச் சிவமாம் பெருவாழ்வு எய்தும். அங்ஙனம் எய்தினால் அவ் அறிவு அறியாமை கடந்து சிவமாம் பெருவாழ்வு எய்திய அமைதற்கரிய திருவாம் பேரழகு புலனாம் என்க.
2363. அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே.
பொருள் : அறிவையும் அறியாமையையும் நீங்கியவனே ஞானேந்திரியங்களைக் கடந்து அகண்டத்தில் ஒன்றானேபோது அவ்வறிவாய் அவ் அறிவினுள் அடங்கியவனாய் சிவஅறிவில் தான் நீக்கமற நிறைந்துள்ளவன் சிவனேயாவன். அறிவு அறியாமை நீங்கியவனே பேரறிவில் நீக்கமற நிறைந்து நிற்பன்.
2364. அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சு அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.
பொருள் : திருவருளால் நல்லறிவுடையார் நெஞ்சம் அருள் வெளியாகும். அந்த நெஞ்சமே சிவ புண்ணிய அருந்தவ நிலைக் களமாகும். அவ் அறிவுடையார் நெஞ்சத்து மும்மையுலகத்துக்கும் அம்மையாகிய திருவருள் எனப்படும் ஆதி எழுந்தருள்வாள். பகவனாகிய சிவபெருமானும் அந்நல்லார் நெஞ்சத்தின்கண் தங்கியருள் கின்றனன். மும்மை உலகம் - அவன், அவள், அது என்னும் உலகம்.
2365. மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.
பொருள் : திருமால், பிரமன், உருத்திரன் என மூன்று உருவாய் உடல் உற்பத்திக்குக் காரணமான சிவபெருமான், தூரத்தில் உள்ளவனாகவும் சமீபத்தில் உள்ளவனாகவும் சுவையுள்ள கரும்பானவனாகவும் அமுதமாகவும் ஆகி நின்று இனத்துக் கொண்டிருக்கின்றான். மும்மூர்த்திகளாக உள்ள இறைவன் ஞானிகளுக்குக் கரும்பாய் அமுதமாய் இருந்து இன்பம் நல்குகின்றான்.
2366. என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின் றானே.
பொருள் : நான் பாச நிலையில் பந்தித்து இருந்தபோது என்னுடைய உண்மைச் சொரூபம் ஒளி (அறிவு) என்பதை அறியாதிருந்தேன். நான் ஒளி (அறிவு) வடிவினன் என்று அறிந்தபின் என்னை முன் பந்தித்திருந்த தத்தவங்களை (இருளை) நான் அறியவில்லை. அவ்விதம் நான் எனது உண்மைச் சொரூபத்தை அறிந்திருத்தலும் என்னுடைய முதல்வன் என்னுடன் இருந்தே எனது நிலையைக் கேட்டுக் கொண்டு இருக்கிறான்.
2367. மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனை.
பொருள் : பெத்த நிலையில் உள்ளோர்க்கு ஆத்ம சொரூபம் தேகத்தோடு பொருந்தி யிருந்தும் விளங்காதவாறு மறைந்திருக்கும். ஞான நிலையில் உள்ளோர்க்கு ஆத்ம சொரூபம் விளங்கி ஒளிபெற்று நிற்கும். அது தேகத்தில் இருந்து சூட்டினை நல்கிக் கொண்டிருக்கும். அத்தகைய செம்மையான சோதி யாகிய விளக்கினைத் தேடுகின்றேன்.
2368. தேடுகின் றேன்திசை எட்டோடு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.
பொருள் : பத்துத் திசையின்கண்ணும் பரம்பொருளைப் பரிந்து தேடுகின்றேன். பொலம் ஒரு சிறிதும் இல்லா நலமே நிறைந்த சிவபெருமானைக் குறித்து அவன் திருவடியை நாடுகின்றேன். சிவபெருமானே நமக்கு வழித்துணையும விழத்துணையும் என்று பழுதில் செந்தமிழால் பாடிப் பரவுகின்றேன். அச் சிவபெருமானே பரம்பொருள்; அவனே ஆருயிர்த் துணை என்னும் உண்மை கண்டு அவன் திருவடியிற் கூடுகின்றேன். அதுவே நிறைமன வழிபடாகும். அத் திருக்குறிப்புக் குறையா மனம் என்பதனால் பெறப்படும். (திசை - புலம். பொலம் - தீமை.)
2369. முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்
மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.
பொருள் : முன்னை என்று ஓதப்படும் அனாதியின்கண் முதல் விளையாட்டாகிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் நுண்ணுடம்புக் பிறப்பில் பிறந்தோர், பின்பு ஐம்மலமும் அகலும் நிலையில் செவ்வி வாய்ந்தோர் ஆவர். அவர் திருவருளால் தம்மைத் தெரிவர். தெரிந்து தமக்குரிய பண்டைத் தலைவனாம் சிவபெருமானின் தாளிணையைச் சார்ந்த ஆளினராவர். இவர்கள் என்றும் பொன்றாது நின்று சிவமாக மன்னி வாழ்வர். அதனால் மீண்டும் பிறப்பினுக்கு வாராவர். (விளையாட்டத்து - பிறப்பினுள். மலம் வந்தவர் - மலபரி பாகம் வந்தவர்.)
15. ஆறு அந்தம்
(ஆறு அந்தம் - ஆறு முடிவுகள். அவை கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்பன.)
2370. வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத்தகும்எட்டு யோகாந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.
பொருள் : வேதத்தின் அந்தமாகிய உபநிடதங்களின் கூற்றும், மேன்மையான சித்தாந்தமாகிய சிவாகம முடிவும், நாத தத்துவத்தின் முடிவும், சத்விசாரணையால் அமைந்த முடிவும், சொல்லத் தக்க அட்டாங்க யோக நெறியின் முடிவும், முதலாவதான பஞ்ச கலைகளின் முடிவும் ஆகிய இவையே ஆறு முடிவுகளாகும். நெறிகள் வேறு ஆயினும் அடையும் பொருள் ஒன்றேயாம்.
2371. அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.
பொருள் : மேல் ஓதிய ஆறு அங்கங்களும் திருவருளால் அறிபவர் எல்லையில்லாத தூயராவர். அதுபோல் ஆறு அந்தமும் அறிவார் மல மற்றவர் ஆவர். இவற்றின் உண்மைகளைச்  சிவகுரு வாயிலாக  அறியாதவர் இறப்புப் பிறப்பினையும் உலக ஒடுக்கத் தோற்றங்களையும் ஒரு சிறிதும் உணராதவர் ஆவார்.
2372. தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.
பொருள் : நான் பிரமம் என்னும் வேதாந்தமும் சிவன் நான் என்னும் சித்தாந்தமும், நீங்காத துரிய நிலையில் ஆன்மா தனது எதார்த்த சொரூபமான ஒளியைக் கண்டு இனிய மேலான பரம அபரமாக விளங்கும் சிவத்தோடு கூடுவதாய், ஆன்மா தன்னுடைய மலங்களை அகற்றி அட்டமாசித்தி அடைதலே பயனாகும். ஆன்மா துரியத்தில் பராபரத்தோடு பொருந்தி மல நீக்கம் பெற்றிருக்கும் என்பது வேதாந்த சித்தாந்த முடிவாம்.
2373. நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.
பொருள் : உயிர் இடைவிடாது சிவனோடு பொருந்தி நின்று நீண்டு செல்லும் மனமும் சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் ஆகிய புலன்களின் உண்மையை அறிந்துவிட்டு, சுத்தமாயை அசுத்தமாயைகள் பற்றாவகை எண்ணி, தலைவனாகிய முழுமுதற் பொருளை அடைதல் சித்தாந்த நெறியாகும்.
2374. மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்குஅப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாயே.
பொருள் : பொருந்திய அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அதற்கப்பால் பொருந்திய பரவிந்து, பரநாதமும் விட்டு, முப்பத்தாறு மெய்களும், கருத்தின்கண் நீங்கியபொழுது நிலைத்த ஆருயிரின் உண்மை நன்கு புலனாகும். விடா - விட்டு . ஓவும் - நீங்கும். நாதாந்தம் சென்றவர்க்குப் பிறவி இல்லை.
2375. உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி
அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே.
பொருள் : மெய்களின் ஆய்வு முறைமையினால் உண்மை கண்டுள்ள ஆருயிர் முப்பத்தாறு மெய்களின் பிணிப்பினின்றும் விடுபடும். பிணிப்பு உபாதி. விடுபட்ட தெளிவினால் நாதாந்தத்தைக் கடக்கும். அக இருள் அகல அருள் உணர்வு தோன்றும். தோன்றவே குறைபாடில்லாத நாத முடிவில் எய்தும் நல்லறிவு கைவந்து பொருந்தும். (மெய்கள் - தத்துவங்கள். செற்று - கடந்து.)
2376. தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.
பொருள் : ஞானியரால் உணர்த்தப்பெற்ற இயமம் நியமம் முதலிய எட்டு உறுப்புகளையும் கொண்ட அட்டாங்க யோக நெறி சென்று நீங்கி, சமாதியில் பொருந்தி, அங்கு விரிந்து விளங்கும் சிவத்துடன் பொருந்த, சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகப் பற்றுக்களை நீங்கினபோது உபசாந்த நிலை பொருந்தும் என்பதே யோகத்தின் முடிவாகும். (பாடுற - அருகிற் சேர.)
2377. கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.
பொருள் : குறிக்கொள்ளத் தக்கதான கலாந்தத்தைச் சொல்லுமிடத்து நீக்கல் முதலிய ஐந்து கலைகளும், கொழுப்பு முதலிய ஏழுவகைப் பொருட்களும் மாயையின்கண் ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கும் முறைமையை ஆய்தலும், ஆய்ந்து தெளிதலும் கலாந்தமாகும். கலைகள் ஐந்து நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பால் ஆக்கல் என்ப. பொருள்கள் ஏழு, சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ப. (சப்த தாதுக்கள்.)
2378. தெளியும இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே.
பொருள் : மேல் ஓதியவாறு கலாந்தம் தெளிவது அல்லாமல் வேறும் ஒருவகையால் குறிப்பதும் உண்டு. அந்தம் நீக்கல் முதலிய கலைகள் ஐந்தினையும் சிறப்பாகிய திருவருள் ஒளியுள் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்து ஓரவல்லார கட்குச் சிவபெருமான் அளவில் பேரருள் புரிகின்றனன். அவை: மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என ஐந்தாகும். இந்த ஐந்தினையும் அருளே, மறைமுறை, ஆசான் சொல், மெய்ம்மை, தரும உணர்வு இவ் ஐங்கலை அந்தம் என்ப.
2379. ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.
பொருள் : கலை என்னும் திருவருள் ஆற்றல் தொன்மையதாகும். இக்கலையே முறையும் மறையும் எனப்படும் ஆகம வேதங்களாகும். அம்முறை மறைவழியின் நிறையின் நீங்காது ஒழுகுதல் தந்திரமாகும். மனம் முதலிய கருவிகள் நீங்கி உணர்விற் கணிக்கும் ஒண்மையவாம் சிவசிவ மந்திரமாகும். சிவபெருமானைத் தெளிவிக்கும் சிவ குருவின் திருவார்த்தை உபதேசமாகும். (உபதேசம் - குருமொழி. மனாதி உடல் அல்லா மந்திரம் - காரண பஞ்சாட்சரம்)
2380. தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.
பொருள் : ஞானக்கலை என்பது அளவில் பேரொளிப் பகவனாகிய சிவபெருமானாகும். ஆன்றோரைப் பின்தொடர்ந்து ஒழுகுவது ஆசாரம் என்ப. அவ் ஒழுக்கத்தில் தலை நிற்கும் பேரன்பு நேயம் என்ப. இவ்விரண்டும் சொல்லப்படும் கலாந்தமாகும். இவ்வழி ஒழுகி, வாய் வாளாமையாகிய உரை உணர்வற்ற பெருநிலை யுற்றோன் பெருந்தகையாவன். மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமான் ஆவன்.
2381. தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே.
பொருள் : ஆருயிர் பேருயிர்க்கண் ஒடுங்குதலே தான் அவனாகும் சமாதி நிலை என்ப. இந்நிலையினைத் தலைப்படுதலே கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், சித்தாந்தம் என்ப. சிறந்த சித்தாந்தம் எனப்படுவது காட்சி, காணப்படும் பொருள் காண்போன் என்னும் முத்திற முடிவும் எத்திறமும் நீங்காது கொள்ளும் நிலைமைத்தாகும். ஞானம் - காட்சி. ஞேயம் காணப்படும் பொருள். ஞாதுரு - காண்போன்.
2382. ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.
பொருள் : மேலே கூறப்பெற்ற ஆறு அந்தங்களும் அந்நேயப் பொருளில் சென்று அடங்கும். ஆறு அந்தங்களால் அடையப் பெறும் நேயப் பொருளாகிய சிவத்தில் ஞாதுருவாகிய சீவன் அடங்கும். குருகாட்டிய நெறியில் நின்று சிவமல்லாத  ஏனைய தத்துவங்களை விட்டு நிற்க, தெளிந்த பிரணவ யோகத்தால் உண்மையான சிவானந்தம் உண்டாகும்.
2383. உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே.
பொருள் : மெய்ம்மைக்கலை பதினொன்று ஆகும். கலாந்தம் பதினேழாகும். உண்மையான கலையின்கண் முற்றுற நிற்பது நாதாந்தமாகும். இத்திருவருட் கலைகளைச் சிவகுரு அருளிச் செய்ய ஒப்பில் ஒரு முடிபாகும்.
2384. ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி யருளிய கோனைச் கருதுமே.
பொருள் : ஆன்மாக்களை இயக்கும் சத்தியாகிய குண்டலினியை நாதத்தின் தலைவனான சிவன் ஏற்றுக் கொண்டபின், அநேக தேவர்களை நடத்தும் எங்கள் பெருமையுடைய சிவன் திருவடிகளை முடிமேல் சூட்டி, அழிதல் இல்லாத வேதாந்த சித்தாந்தங்களின் சிறப்பை நாதத்தால் உணர்த்தி யருளிய சிவகுரு நாதனைக் கருதியிருங்கள்.
2385. கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.
பொருள் : வழிபடுகின்றவர்களின் வழிபாட்டுக்கு ஏற்ப சிவபெருமான் அருளிச் செய்த ஆகமங்களில் உணர்த்தப் பெறுகின்ற உண்மைச் சமயத்துக்குப் புறம்பாயுள்ள மாயை மகாமாயை ஆகியவற்றைக் கடந்ததே வேதாந்த  சித்தாந்தத்தால் உணர்த்தப் பெறும் உண்மையாகும். ஆன்மாக்களின் பக்குவத்துக்கு ஏற்பச் சமய முடிவுகள் அமையும்.
2386. வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.
பொருள் : வேதாந்தம் சித்தாந்தம் ஆகிய இருநெறிகளும் வேற்றுமையில்லாத ஒரு தன்மையான குறிப்பினை யுடையனவாம். ஆன்ம அறிவின் முடிவே ஞானமாகும். யோகாந்தம் பொதுவாக ஞேயப்பொருளைக் காட்டும். நாதாந்த ஆனந்தமாய் இன்பத்தோற்றம் அளிக்கும் ஒலி உண்டாகும். பழமையான முத்திரையாவது பிரணவ சமாதியில் பொருந்தி யிருக்கத் தருவதாகும்.
2387. வேதாந்தம் தன்னில் உபாதிமே லேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.
பொருள் : வேதாந்த நெறியில் சீவனுக்குரிய காரிய உபாதிகள் ஏழின் பிணிப்பு நீங்கவே, நாதாந்தத்தில் பசுத்தன்மை கெடுகின்ற (தொம்பதம் அமையும். மேலுள்ள காரண உபாதிகளாகிய ஏழையும் உடைய உண்மையான பரன் அறிவின் முடிவாகிய தற்பதம் ஆகும். பின்னர் இவ்விரண்டாகிய தன்மை நீங்கி ஒன்றாம் தன்மையான அசி பதம் பொருந்தும் தொம்பதம் - சீவன். தத்பதம் - சிவன். அசிபதம் - ஒன்றாக ஆகின்ற பதம். போமசி - போம் + அசி.)
2388. அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி
பண்டுறு நின்ற பராசத்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே.
பொருள் : ஏழு அண்டங்களையும் கடந்து நீங்கி, அப்பால் விளங்கும் பேரொளிக்குள் உள்ள ஒளியினைப் பழமையாகவே பொருந்தி நின்ற பராசத்தி என்றே கொண்டவன் தனது சொரூப நிலையில் தனித்து நின்ற எங்கள் தலைவனாவான்.
2389. கோஉணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே.
பொருள் : சிவத்தை உணர்த்தும் நாதசத்தியை இலட்சியமாகக் கொண்டு, தெய்வத்தால் அனுக்கிரகிக்கப்பட்ட கருமத்தையே தம் செயலாகச் செய்து, தோத்திரப் பாடல்களைக் கொண்டு அருச்சனை புரிய பிரணவத்தின் உறுப்புக்களாகிய அகார உகார மகார விந்து நாதங்களைக் கடந்து இவைகளை அடக்கிய சிவம் பொருந்தும்.
2390. ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயள் உணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே.
பொருள் : ஒருவனாக இருந்து உலகை நடத்தும் சிவனை அறிய மாட்டாதவர், உயிரைப்பற்றிய உண்மையை அறிய மாட்டார். அவரவர் அனுபவிக்கும் போக போக்கியங்களுக்கு அவரவர் முன்னர்ச் செய்த நல்வினை தீவினையே காரணம் என்பதை உணரமாட்டார். அசுத்த மாயை சுத்த மாயையாகிய இவற்றால் கட்டுண்டிருப்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. ஏகனாய் விளங்கும் சிவபெரு மானே இவை எல்லாவற்றையும் ஆன்மாவின் உள்ளே நின்று உணர்த்தி அவ்வினை கழியுமாறு அருத்தி அருவப் பொருளாய் நின்று எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளான்.
2391. அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.
பொருள் : சிவன் அன்பர்களை இடமாகக் கொண்டு எழுந்தருளி, அவர்கள் பக்குவம் அடைய பல சத்திகளை அவர்களது ஆன்மாவினிடம் பொருத்தி வலிமையுள்ள சிவசங்கற்பத்துக்கு ஏற்ப அவை தொழிற்பட ஆன்ம சங்கற்பம் உருவத்தைப் பற்றாதபோது அச்சத்திகளின் செயல் நீங்கச் சிவானந்தம் விளைப்பன்.
2392. வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.
பொருள் : வேதாந்தத்தில் சொல்லப் பெறும் தொம்பரமானது. பசு என்னும் ஆன்மாவைக் குறிப்பதாகும் என்பர். நாதாந்தத்தில் பசுத் தன்மை இயல்பாகவே நீங்கி நின்ற நல்ல பதியே அறிவின் முடிவாகிய தத் என்னும் பதமாம். சீவனும் சிவமும் ஆகிய இரண்டும் இரண்டறக் கலத்தல் இயல்பாகச் சிவகாயுச்சியம் என்னும் அசிபதமாகும். வேதாந்தத்தில் சீவனும் சிவனும் ஒன்றாதலே சிவ சாயுச்சியமாகும்.
2393. சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.
பொருள் : வேதாந்தம் சித்தாந்தமாகிய இரண்டு நெறிகளும் சீவன் சிவமாதலைப் பற்றிக் கூறுவனவேயாகும். நன்மையில்லாத பிரமன், திருமால், உருத்திரன், மகேசன் ஆகிய நால்வரும் சிவமாகும் தன்மையுடைய சதாசிவமூர்த்தியின் ஆணைவழி செய்த படைத்தலாதி தொழில்கள் முடிவுற்ற ஒன்றாகுமானால் வியக்கத்தக்க வேதாந்தம் ஞானம் தரும் சித்தாந்தமாகும்.
(அவ்வவ் இரண்டும் - வேதாந்தம் சித்தாந்தம் ஒழிந்த ஏனைய அந்தங்களும் எனப்பொருள் கொள்ளுதலும் உண்டு. அந்த நான்காவன: நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம் கலாந்தம் என்பன.)
2394. சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.
பொருள் : சித்தாந்த சைவத்தில் சீவன் முத்திநிலை கைகூடுதலால் சித்தாந்த சைவநெறியில் நிலைத்து நிற்பவர்கள் முத்தி நிலையாகிய சிவப்பேற்றைப் பெற்றவராவர். சித்தாந்தம் வேதாந்தம் ஆகிய இரண்டு நெறிகளும் செம்பொருளான சிவத்தைக் குறித்தனவேயாதலின் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவத்தையே காட்டும். இவையிரண்டும் செம்பொருளைக் காணத் துணை புரியும்.
2395. சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே.
பொருள் : சிவத்தைப் பரமாகவுள்ள சீவனில் உள்ளாகவும் வெளியாகவும் விளக்கும். குற்றமற்ற வேதாந்த நெறியும் - சிந்தாந்த நெறியும் ஒன்றானால் தோழமை கொண்ட துரியாதீதத்தில் விளங்கும் ஞானம் சிவமாகும். இத்தகைய சிவஞானத்தை உணர்ந்து கடைப்பிடிப்பவர். சிறந்த தத்துவ தரிசினிகளாவர்.
2396. தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.
பொருள் : ஆன்மா வியாபித்துள்ள முப்பத்தாறு தத்துவங்களும் உருவமுடையனவாயும் உருவம் இல்லாதனவாயும் உள்ளன. இவைகளில் விந்து நாதமாகிய தத்துவங்களில் விளங்குபவர் சதாசிவராவார். சீவனின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்ற மெய்ப் பொருளாகும். இந்நிலையை அடைதலே சிவ சாயுச்சியமாகும். சகளம் உருவம்; அகளம் - அருவம். உருவமும் அருவமுமாய் உள்ளவர் சதாசிவம். இவரே நாதவிந்துவில் விளங்குபவர். (தற்பரம் - சிவம்)
2397. வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே.
பொருள் : வேதங்களும் ஆகமங்களும் இறைவனாய் அருளிச் செய்யப் பெற்றவை. அவை உண்மையை உரைக்கும் நூல்கள் வேதம் பொதுவாகவும், ஆகமம் சிறப்பாகவும் உள்ளன. சிவபெருமானால் உணர்த்தப் பெற்ற அவைகளின் முடிவுகள் வேறுவேறானவை என்று சிலர் கூறுவர். தத்துவ தரிசனம் கண்ட பெரியோர்க்கு இவைகளின் வேறுபாடின்மை விளங்கும்.
2398. பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.
பொருள் : பரமாகிய சீவன் பெறும் சிவஆனந்தம் முழுவதும் பரானந்தமாகும். மேல் மூன்றாகவுள்ள பாழாகிய மாயையில் பொருந்தாத ஆனந்தமும் சாம்பவி கேசரிமுதலிய முத்திரைகளால் அடைகின்ற ஆனந்தமும் சிவ நடனத்தை இடைநாடியில் கண்டு களிப்பதால் வரும் ஆனந்தம் ஆகியவற்றை அடைந்த உள்ளம் பொலிவினையுடைய தாகும்.
2399. ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே.
பொருள் : கலாந்தம் இரண்டாகும் அவ்விரண்டும் நாதாந்தம் கலையந்தம் என்ப கலையந்தம் நீக்கலாகிய நிவர்த்தி முதல் ஐந்தாகும். இவ் ஐந்திற்கும் அரனே முழுமுதலாவான். அதனால் அரனே பஞ்சாந்தகனாம் என்ன அருளினர். இங்ஙனம் மறை யாகமம் முறையுற மொழிந்தனன் என்க. (பஞ்சாந்தகன் - தனித்தனியே ஐந்து கலைகளின் முடிவிடத்து இருப்பவன்.)
2400. அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.
பொருள் : ஐவகையான முடியாம் அந்தங்களும் மாறுபட்டதன்று. இவ்வுண்மையை வேதாந்த சித்தாந்தம் ஒன்றென விளங்கக் கூறும். அத்தகைய வேதாந்த சித்தாந்தத்தை முன்னிட்டு ஒழுகினால் யோகாந்தம் நேர்படும். அச்செறிவு நிலை ஏற்பட்டால் மன்றாடிபாதம் மருவலுமாம். மன்றம் ஐவகை யாகும். (ஆலங்காடு இரத்தினசபை, சிதம்பரம் - பொற்சபை; மதுரை - வெள்ளிசபை; திருநெல்வேலி - செம்புசபை; குற்றாலம் - சித்திரசபை என்பனவாம்.)
2401. அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே.
பொருள் : மன்றாடி பாதம் பொருந்தும் பழமையான சீவன் ஐம்மலங்களும் கெட்டு அனாதியாகவுள்ள ஆன்மாவின் சுட்டறிவை அழித்துத் தன் உண்மையான பரநிலையைக் கண்டு சிவசொரூபமாய் தன் ஆதிமலமாகிய ஆணவம் நீங்கச் சகல தத்துவங்களையும் கடந்த நிலையில் நீர் பாலுடன் சேர்ந்து பாலாகவே இருத்தல் போலச் சீவன் சிவமாதல் வேதாந்தம் உணர்த்தும் உண்மையாகும்.
2402. உயிரைப் பரனை உயர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.
பொருள் : ஆருயிரைப் பரனாகி திருவருளை எவர்க்கும் மேலாம் பரசிவனை மருளற்று தெருளுற்றுத் திருவருளால் செறிந்து காண்பாயாக நீ அதுவாகின்றாய் என்று கூறும் தொந்தத்தசிப் பெருங்கிளவியால் உன் செயலற்று அறிவாகியிருப்பாயாக. அறிவாகியும் திருவடிக்கீழ் அடங்கி நிற்பாயாக. இந்நிலையே மருளற்ற வேதாந் சிந்தாந்த அருள் மாண்பாகும். இவ்வுண்மை செந்தமிழ் மறை முடியாம் திருவாசகச் செழுந்தேனால் உணராலாம். (தொந்தத்தசி - துவம் + தத் + அசி = நீ சிவமாய் இருக்கிறாய்.)
2403. மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.
பொருள் : நிலைபெற்ற அது நான் என்னும் ஆழ்ந்த நினைவினால் அவனே தானாகி நிற்கும் நிலை சோகம் எனக் கூறப்படும் ஆழ்ந்த நினைவு - பாவனை. இக்குறிக்கோள் மாமறை யாளர்க்கு ஏற்படுவதாகும். அம்மறையாளர் முடி மணியாத் திகழும் அருண்மறை சிவோகம் எனப்படும். சிவோகம், சிவனுடன் கூடுதல். சிவோகம் இஃது என்று கூறத்தகும். இத்தகைய அரும் பொருள் சித்தாந்த மாமறையால் ஆராயப்படும் பொருளாகும். இப்பொருளை ஆராயும் எழில் நூல் ஆகமம் எனப்படும் சோகம் = ச+அகம், அது நான், சிவோகம் - சீவத்துடன் கூடுதல்.
2404. முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆமே.
பொருள் : முதல் நூலாகிய வேதமும் முழுமுதல் நூலாகிய ஆகமமும் நல்லடியார் வாயிலாக முதல்வனாம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டனவாகும். இவ்விரண்டனுள் முதன்மையான வேதமும் முறைமுறையால் அமர்ந்த வேதாந்தமாகும். ஆகமம் நனிமிகச் சிறந்த சித்தாந்தமாகும்.
16. பதி பசு பாசம் வேறின்மை (அஃதாவது இறை உயிர் தளை ஆகியவற்றின் தொடர்பு)
2405. அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே.
பொருள் : அறிவு அறிவு என்று சொல்லப்படும் ஆன்மா மிகத் தொன்மையானது ஆன்மாவுக்குத் தலைவனான சிவமும் ஆன்மாவைப் போன்று மிகத் தொன்மையானது ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் தொன்மையானதே. பேரறிவுப் பொருளான சிவம் ஆன்மாவிடம் விளங்குமாயின் பாசம் நீங்கிப் பிறப்பு இல்லையாகும். பதி பசு பாசம் மூன்றும் தொன்மையானவை.
2406. பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தலால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
பொருள் : பிரமன் அரி உருத்திரன் மகேசன் சதாசிவர் முதலிய பெருந் தேவர்களை உள்ளிட்டுப் பசுக்கள் பல கோடியாகும். பசுக்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயை யாகிய மலங்கள் மூன்றாகும். ஆன்மா போதத்தை நீக்கி மலங்களை அகற்றினால் பசுக்கள் பதியினைப் பற்றி விடாது நிற்கும்.
2407. கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
பொருள் : பாசத்தில் கட்டுண்டு கிடக்கின்ற உயிர்கள் காமியத்தோடு செய்த சரியை கிரியை யோகத்தால் அடைகின்ற சாலோக சாமீப சாரூபம் ஆகிய பயன்கள் மூன்றாகும். அவற்றின் முடிவாய் விளையும் ஞானத்தைப் பெற நாள்தோறும் தியானம் செய்து தொடர்பு சிறிதும் பற்றாமல் நிஷ்காமியமாய் வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் குடத்தின் உள்ளே வைத்திருந்த விளக்கை எடுத்து குன்றின்மேல் வைத்ததுபோலப் பிரகாசம் பெறுவீர்கள்.
2408. பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம்செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.
பொருள் : ஆன்மாக்களின் ஆணவ மல வலிமை கெடக் கன்மத்தையும் மாயையையும் பொருத்தினவனும் விரிந்த கிரணங்களையுடைய நந்தியும் ஆகிய சிவபெருமானைப் பற்றுள்ளம் கொண்டு ஞானியர் நினைப்பர். அவ்வாறு நினைக்கும் தியான பலத்தால் மனம் கூசும் பாசத்தை நினைப்பது எவ்வண்ணம் ? பழமையாகவே தொடர்ந்து வந்துள்ள பாசத்தால் மீண்டும் சீவனை விடுவது எங்ஙனம் ?
2409. விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.
பொருள் : மந்திர சக்தியால் நீங்கிய விடம் தீண்டியவனை மீண்டும் பொருந்தாவாறு போல ஞானத்தால் பசுத்தன்மையும் பாசத் தன்மையும் விட்ட மெய்கண்டான் மீண்டும் அவற்றைப் பொருந்தான். தன்னைக் கேவல அவத்தையிலும் சகல அவத்தையிலும் பிணைத்திருந்து பாசத்தைச் சுட்டழித்து நின்மல துரியாததீதத்தை விழிப்பு நிலையில் அவ்வுண்மை ஞானி காண்பர்.
2410. நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.
பொருள் : ஆராயப்படும் பதி, பசு, பாசம் பலவாக விரியும் என்றும் பொன்றாது ஒன்றுபோல் நின்று நிலவும் சிவபெருமானாகிய நித்தன் நிலையினை உள்ளவாறு அறிவார் இல்லை. தொன்று தொட்டுத் தென்பட்டும் படாதும் வருகின்ற முப்பொருள்களும் என்றும் ஒன்றுபோல் நிலைப்பதாகிய பதியின் நிலைமையும்  சார்பாகிய பசுவுக்கு நேர்ந்த பசுபாச நீக்கமும் திருவருளால் ஆராயத் தொடங்கிய சைவ நற்சீலர்க்கு நந்தியாகிய சிவபெருமான் விளங்குமாறு அளித்தருளினன்.
2411. ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
பொருள் : திருக்கோயிலில் மூலத் தானத்திலுள்ள சிவலிங்கம் அருளுடன் கூடிய சிவலிங்கமாம். அங்குள்ள வலிய ரிஷபம் பசுவாம். அங்கு ரிஷபத்துக்குப் பின்னே யுள்ள பலிபீடமே பாசமாகும். இவ்வுண்மை சிவாலயத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்க்க விளங்கும்.
2412. பதி பசு பாசம் பயில்லியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதி பசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.
பொருள் : பதிபசு பாசம் ஆகியவற்றை உணர்த்தும் ஞான நூல்களை நாள்தோறும் ஆராய்ச்சி செய்து, பதி பசு பாச உண்மையை உணர்வோர்க்கு, நெறியினைக் காட்டி பதிப் பொருளானது பசு ஞானத்தையும் பாச ஞானத்தையும் பற்றறக் கெடுக்கும் பதி பசு பாசங்களைக் குறியீடாக் கொண்ட தியானத்தால் பசு ஞானம் பாச ஞானம் நிலைபெறா.
2413. பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.
பொருள் : பேருயிராகிய பதியும், ஆருயிராகிய பசுவும், அப்பசுவைப் பிணித்த பாசமும், அருளால் பாசம் நீங்கிய இடத்துப் பெறும் திருவடிப் பேறாகிய மேலைக் கதியும், சிவகுருவாய்ச் சிவபெருமான் எழுந்தருளி வந்து பசு பாசத்தை நீக்கியருளும் நீக்கமும் மெய்ம்மையாக் காட்டியருள்வது தனிப்பெரும் சைவமாம் சுத்த சைவத்தென்க. இத்தகைய தத்துவ ஞானமாகிய மெய்யுணர்வைத் தந்தருளிய வன்இயற்கை உண்மை அறிவு இன்ப மாநந்தியாகிய சிவபெருமானவன். அவன் திருவடிகளைச் செந்தமிழ்த் திருமுறை வழியாக வழிபட்டு உய்யும்படியாகவும் வைத்தருளினன்.
2414. அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே.
பொருள் : அறிவுடைய ஆன்ம வர்க்கம் விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என மூவகைப்பட்டு எங்கும் உள்ளனர். இவ்வகையான ஆன்மாக்கள் எங்கும் இருக்க, எல்லாம் அறிந்த சிவன் அவைகளில் நிறைந்துள்ளான். ஆன்மாக்களின் தகுதியை அறிந்த சிவம் அவை அவைகளின் தகுதிக்கு ஏற்பப் படைத்தருளுவான்.
2415. படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.
பொருள் : படைப்பில் தொடக்கமாவது பரம் சிவம் சத்தி ஆகியவற்றை இறைவன் உயிர்க் கூட்டங்களின் இடையே பொருத்தி, இவ்வுயிர்களை உறக்கத்தில் வைத்தலாகும். பின்னர்ப் படைப்புக்குரிய காரணத்தைத் தற்பரனாகிய சிவன் சங்கற்பத்தால் செய்ய, படைப்பின் முதல் நிலை சுத்த மாயையில் அப் பரத்தில் ஆகும்.
2416. ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே.
பொருள் : நுண்ணிய ஐந்தொழிலை விந்து, நாதம், சத்தி, சிவம், பரம் என்னும் மேல் ஐந்து நிலைகளாலும் ஆக்குவிப்பன். அந்த நுண்ணிய ஐந்தொழிலை அருளால் ஆக்குவிப்போன் தூய இயக்க முதலாகிய ஈசானன் ஆவான்.
2417. மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே.
பொருள் : இப்படைப்பாதி ஐந் தொழிலையும் சிவபெருமான் அருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, உருவம் நான்கு ஆக ஒன்பான் நிலைகளின் நின்று உன்முகமாகிய கருத்தால் இயற்றி அருளுகின்றனன். அந் நிலைகள் முறையே பரசிவம், பராசத்தி, பரநாதம், பரவிந்து எனவும், ஐம்முகன் எனவும், ஈசன், உருத்திரன், மால், அயன் எனவும் கூறப்படும். மாயா காரியமாகிய உலகினைப் படைத்து அருளுபவன் அரனாகிய சிவபெருமான் ஆவன். ஐம்முகன் - சதாசிவன்.
2418. படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை  விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.
பொருள் : படைப்பும் காப்பும் இளைப்பாற்றும் பொருட்டுச் செய்யும் அழிப்பும் மறைப்பும் வாழும்பாது விளங்க அருளாலும் உடம்பை விட்டபின் நிகழும் அருளலும் என சிவபெருமான் சகலர்க்கு இணைத்த அனாதியான தொழிலை ஐந்து என்னலாகும்.
2419. ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாரு மாயையில் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.
பொருள் : குண்டலியாகிய மாமாயை யினின்று முப்பத்தாறு மெய்கள் சிவபெருமான் திருவுள்ளத்தால் தோன்றி விரியும். இம்முப்பத்தாறையும் படுக்குங்கால் உணர்த்து மெய் ஐந்து, உணர்வுமெய் ஏழு, உடல்மெய் இருபத்து நான்கு என்பனவாகும். இவற்றை முறையே, தூமாயை, தூவா மாயை, பகுதிமாயை எனக் கூறுவர். ஆருயிர்கட்கு முடிந்த முடிபாக வேண்டி கருவிகளையும் இவற்றாலேயே வகுத்தருளினன். பதி பசு பாசம் என்னும் உண்மைகளையும் தொடர்புகளையும் அருளால் உணரும் காலத்துப் பாசத்தினின்றும் பசு வேறாகும். வேறாகவே பதியினைச் சென்றெய்தும். எய்துவதே வீடு பேறாகும்.
2420. வீட்டுகும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால்உணர்ந்து
ஆட்கு நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.
பொருள் : பதியானது பசுவினை மலநீக்கத்தின் பொருட்டு மாயா காரியமாகிய பாசத்தின்கண் விருப்பம் உண்டாகச் செய்யும் அவ்வுயிர் உலகுடல் கலன்களில் விருப்பம் மீதூர இருவினை புரியும்படி ஆழ்த்தும். அதன்வாயிலாக ஆருயிர்கள் இருவினைகளைப் புரியும். அவற்றின் பயன்களாகிய இன்பதுன்பங்களை நுகர்விப்பதன் பொருட்டு அவ்வுயிர்களை முறையே துறக்க நிரயங்களில் இட்டு ஆழச் செய்யும். இவ்வகையாகப் பயன் துய்க்கும் காலங்கழியப் பிறப்பிற்கு ஏதுவாகிய நான் என்னும் முனைப்புத் தங்கும்படி நற்பாசமாகிய மறைப்பாற்றல் வந்து பொருந்தும் என்க மறைப்பாற்றல் - நடப்பாற்றல்; திரோதான சத்தி.
2421. நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணி மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.
பொருள் : மாயா காரிய உடம்புடன் கூடி நான் என்று முனைத்து நிற்றல் ஆணவப் பண்பாகும். அவ் ஆணவம் நீங்குதற் பொருட்டு மாயையின்கண் செலுத்தி இருவினைப் பயன்களையும் நடப்பாற்றல் ஊட்டுவதாகும். ஊட்டுவதனால் ஆணவ மலம் அகலும் அகலவே கருதப்படும்  அறிவிக்க அறியும் தன்மை வாய்ந்த சேதனனாகிய ஆருயிர்கள் மாட்டு வைத்த பேரருளினால்  அவ்வுயிர்க்கு அண்ணலாகிய சிவபெருமானின் திருவடி சேரும் வழிவகைகளையும் அவ்வாற்றல் தோன்றுவித்தருளும் இதையே உபாயமதாகும் என்றார்.
2422. ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோக மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.
பொருள் : நடப்பாற்றல் ஆருயிர்க் கிழவற்கு வினை மாயைகளைக் கூட்டல் வழிவகைக் மட்டு மன்றி, ஆணவ அழுக்கு நீங்கித் தூயனாதற் பொருட்டுக் கடும்பற்றாகிய மருள் நீங்குதற்கும் தூயனாதற்கும் இதுவே மூலமாகும். இதற்கு ஒப்பு அழுக்கேறிய அறுவை என்னும் ஆடையை மேலும் சாணி உவர் முதலிய அழுக்கினை ஏற்றிட அவ் அழுக்கினை அகற்றுவதாகும். இவ் அனைத்தும் அருட்பாசமாகிய நடப்பாற்றலால் நிகழ்வனவாகும்.
2423. பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே.
பொருள் : பாசத்துடன் பயின்றுவரும் ஆருயிர் முதல் பரமாகும். பரம் - சுமை. இயற்கையிலேயே சுமையுடையதாகும் என்ப. அப் பாசப் பிணிப்புச் சுமை யுடைமையால் அவ் வுயிர் பசு வெனப்பட்டது. ஆருயிர் பாசம் பயின்று தூயனாதற் பொருட்டுப் பதியும் அப் பசுவுடன் கலத்தலால் பதியும் பசுவாகும் என்ப. இது நோயாளிக்கு மருந்து கூட்டிக் கொடுப்போன் அம்மருந்துடனும் நோயாளியுடனும் தொடர்பு கொண்டிருப்பதை யொக்கும். ஆருயிர்க்குப் பாசத்தினப் பயிற்று வித்தற் பொருட்டுப் பதியும் பரமாக விளங்கும். பரம் - முதன்மை.
2424. அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும்  அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.
பொருள் : வேதப் பொருளின் உண்மையை தட்சிணாமூர்த்தியிடம் வினாவிய சனகாதி முனிவர்க்கு அருள் மேனி தாங்கிய பெருமான் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்துக் காட்டி ஞானமுத்திரையினால் உணர்த்தினார். சின்முத்திரையின் சூக்குமப் பொருளை உணராமையால் அவரது சிரத்தைத் தீண்டிச் தீட்சை செய்தருளுதலும் அம் மூர்த்தியை உணர்ந்து தமது உண்மையான ஒளி வடிவில் நிலைபெற்று நின்றனர். (அத்தம் - பொருள்.)
17. அடிதலை அறியும் திறங்கூறல் (அஃதாவது திருவடியைச் சிரசில் உணரும் தன்மை கூறல்.)
2425. காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.
பொருள் : காலும் தலையும் எவை என்பதை வீணர்கள் அறியவில்லை. கால் என்பது அக் குண்டலினி சத்தியாகும். மூலாதாரத்தில் குண்டலினி விளங்குவதற்குக் காரணம் அருள் என்று கூறுவர். ஒளி விளங்கும் ஞானமே பண்பு நிறைந்த தலையாகும். சத்தியானது அந்த ஞானமாகிய சிவத்தைக் காட்ட உயிர் வீடு பெறும்.
2426. தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இருந் தாரே.
பொருள் : ஆருயிரின் உடம்பகத்துத் தலை உச்சியில் உள்ளது. அடி என்பது வழியாக உள்ளது. இவ் வுண்மையினை அருளால் அறியார். தலையடி என்பது சிவ என்னும் செந்தமிழ்ப் பெரு மறையாகும். இவ் அறிவை அறிந்தோர் சிவமாகவே இருந்து இன்புறுவர்.
2427. நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே.
பொருள் : சிவபெருமான் நிலமும் அண்டமும் கீழும் மேலும் பொருந்தும் வண்ணம் பேரொளிப் பிழம்பாய் நின்றருளினன். அவ்வாறு அன்று நின்று அருளியது அசுரரும் அமரரும் உய்ந்திடும்படி ஆள்வதற்கேயாம். அவனே பின்பு உலகம் படைத்தருளினன். அவன் திருப்பெயர் நந்தியாகும். அவன் திருவடி அடியேன் தலையின்கண் அமர்ந்தது.
2428. சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே.
பொருள் : எனது உள்ளத்தினுள்ளே எனது தந்தையாகிய சிவத்தினது திருவடி உள்ளது எனது உள்ளமும் செயலற்று அடங்கி அவனது திருவடியில் வணக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. உள்ளத்தின் உள்ளும் புறம்புமாக வியாபித்திருக்கும் சிவன் என்னை அறிந்து உணர்த்தாவிட்டால் எனது தந்தையை நானும் அறிய முடியாதவனே யாவன். சித்தத்தைச் சிவன்பால் வைத்திருப்பார்க்கு அவன் விளங்கித் தோன்றுவான்.
2429. பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.
பொருள் : சொல்லுதற்கு அருமையான ஆறாதார ஒளிக்குமேல் பரமா காயத்தில் எனது தலைவனாகிய சிவன் விரும்பி அங்கு எழுந்தருளியிருக்கும் இடமாம். மனத்தினாலேயே நினைந்து காணமுடியாத ஒளியையும் வாயினால் சொல்லி விளக்க முடியாத பிரணவத் தொனியையும் எனக்கு உணர்த்தினான். பின் நான் அவனது திருவடிகளான விந்து நாதங்களை எனது தலையில் சூடி நின்றேன்.
2430. பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.
பொருள் : பதிப்பொருள் விளங்கும் சிரசின்மேல் மனத்தைப் பொருத்துமின். சந்திரகலை விளங்கும்படி செய்து அங்கு இறைவனது திருவடியை நினைந்து ஏத்துமின். கங்கையைச்  சிரசில் அணிந்த அர்த்த நாரீசுவரன் முத்தி அருளும். அவனை வழிபடுகின்ற காலங்களில் கண்டு வழிபடுங்கள்.
2431. தரித்துநின் றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நனி றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.
பொருள் : சிவபெருமானின் திருவடிகளைப் பதம் வாய்ந்த விரிந்த மன நிலைக்கண் மாறாது நினையுங்கள். அப்படி நினைவார் மனத்து அவன் நீங்காது தங்கி நின்றருள்வன். அவன் இயல்பாகவே எங்கும் தங்கி நின்றருள்பவன். அவன் அனைவர்க்கும் நாதன் அமராபதியாகிய விண்ணவர் கோனுக்கு முதல்வன். கருதாதவரை வெறுத்து நின்றனன். சிந்தை சிவமாகச் செய்தனவே தவமாகத் திருவருளால் செவ்வி வாய்க்கும். பரிபாகம் உற்றாரைச் சிவன் தாங்கி நின்றனன்.
2432. ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய்ய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே.
பொருள் : தாமரையாகிய சுழுமுனை ஒன்றுண்டு. அதன்கண் தாதுமிக்க அழகிய ஒள்ளிய மலரும் மூன்றுண்டு. அதற்குரிய தாள்களும் இரண்டுள. தாளிரண்டு இடப்பால் நரம்பு. வலப்பால் நரம்பு. மலர் மூன்று, மூன்று நரம்பும் கூடியமைந்த முடிச்சு. உடம்பகத்து மூலக் கனலால் நன்றாக வெதுப்பியபோது உள்ளம் செவ்வி வாய்க்கும். செவ்வி வாய்த்த வல்லார்கட்கு வாய்த்த அப்பொழுதே சிவபெருமானைச் சென்று தலைக் கூடுதலும் ஆகும்.
2433. கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கின் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண் ணாதே.
பொருள் : அடியேன் முடியில் சிவபெருமான் திருவடிகளைச் சூட்டியருளினன். சூட்டலும் கட்டற்றது. ஆணவக் கட்டறலும் மாயா காரியப் பொருள்களின் இடமாகவுள்ள நெஞ்சின் மயக்கம் நீங்கிற்று. மயக்கம் நீங்கவும் திருவடியுணர்வாகிய சிவஞானத்தை அடியேற்கு அளித்தருளினன். அவ் வுணர்வு பெற்ற என்னை மேலாம் தன் வண்ணம் ஆக்கத் திருவுளம் கொண்டருளினன். அதனால் ஆராஇன்பத் திருவிடி இணையின் மேல நிலையைப் பெற்றின் புற்றேன். அத்தகைய மேற் கொண்டு துய்க்கும் செம்மை நலம் சொல் இறந்ததொன்று.
2434. பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு கணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றமி லாச்செய்கைக்கு எய்தின செய்யுமே.
பொருள் : தாம் பெற்று வளர்த்த மக்கள்பால் கொண்ட சம்பந்தத்தையும் அவர் செய்யும் குற்றத்தையும் உணர்ந்து அவரது குற்றத்தைப் பாராட்டாது குணத்தைக் கைக்கொள்ளும் பெற்றோர்பால் மற்று இறைவனும் உயிரின் தன்மைக்கேற்ப வெறுப்பில்லாத செயல்களுக்குப் பொருந்துமாற்றால் ஏற்றுக்கொண்டு தக்கவாறு செய்வான். (நாற்றம் - சம்பந்தம், கன்ம வாசனை, பற்றைய - பற்றாக உள்ள.)
18. முக்குற்றம் (காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை முக்குற்றங்களாகும்.)
2435. மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.
பொருள் : காமம் வெகுளி மயக்கம் ஆகிய குற்றங்கள் மூன்று உள்ளன. அவை யாவும் உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவன. அதனால் உயிர்கள் தங்களது உண்மைச் சொரூ பத்தை அறியாமல் மாயா காரியமாகிய இருளில் ஆழ்ந்து மயங்கிக் கிடந்தன. காமம, வெகுளி, மயக்கம் ஆகிய முக் குற்றங்களினின்றும் விடுபட்டவர் பிறப்பு இறப்புக்களை நீக்கினவராவர். அவ்விதம் நீங்காதவர் அம் முக் குற்றங்களின் காரியமாகிய மாயையால் துன்பப்பட்டு அழிபவ ரேயாவர்.
(மான்றல் - மயக்கம். இருள் தூங்கலாவது. அறியாமையில் கிடத்தல்.)
2436. காமம், வெகுளி, மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.
பொருள் : காமம் வெகுளி மயக்கம் ஆகிய முக்குற்றங்களையும் நீக்கி, பாதுகாவலான திருவடி பற்றியிருந்தேனுக்கு, மணியோசை போன்ற பிரணவத் தொனியினுள்ளே பொருந்துவதாகிய ஒளியினைத் தலைப்படுதல் கூடும். (காமம் - ஆசை; வெகுளி - சினம்; மயக்கம் அறியாமை; தாமம் - ஒளி; ஈண்டுச்சிவ ஒளி. ஏமம் சிவானந்தம்.)
19. முப்பதம் (தற்பதம், தொம்பதம், அசிபதம் ஆகியவை முப்பதங்களாகும்.)
(முப்பதம் - தத்+துவம்+அசி, தத்துவமசி)
2437. தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன்
ஆகின்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.
பொருள் : தோன்றி நீ என்ற பதம் அது என்ற பதத்தால் சூழ்ந்திருக்க, ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஆகிறாய் என்ற பதமும் ஆகிய இம் மூன்றோடும் பொருந்தினவன் பிறப்பு நீங்க அகண்டப் பொருளாவன். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப் பெற்றவன் இவ்வுடல் ஒழியச் சிவமாக ஆவான். (பராபரம் = பரம் + அபரம்)
2438. போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.
பொருள் : திருவருளால் பெறும் நாதோபாசனையில் நின்று, பூதம் முதலாகச் சொல்லப் பெறும் தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் நாதாந்த நிலையில் நீங்கி, வேதம் உணர்த்திய நீ என்ற பதமாகுதல் உண்மையான நிலையாகும்.
2439. தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.
பொருள் : தத்பதம் என்பதும் துவம்பதம் என்பதும் திருவருளால் பொருந்தி யிருப்பது அசிபதமாகும் எல்லாவற்றாலும் அறிவினால் அளவிட்டுக் கூறமுடியாத சிவபெருமான் பரையின் விளக்கத்தில் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே அசிபத நிலையில் கலந்து அருளுகின்றான். (நேரிழையாள் - பரை.)
2440. அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்பத்
துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.
பொருள் : சீவனும் பரமும் அசிபதத்தில் பொருந்தி, தங்குதடையற்ற சிவமும் கலந்தால் உவமிக்க இயலாத பாலும் தேனும் போன்று அவ் இன்பப் பொருளாய் வாய் பேசா மௌனத்தில் விளங்குவதாகும். ஆன்மா சிவத்தோடு கலந்திருக்கும் இன்பத்தை வாயினால் கூற முடியாது.
2441. தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
பொருள் : தொம்பதம், திருவருளை நம்பி வாழும் வாழ்க்கையையுடைய ஆருயிராகும். தற்பதம், ஆருயிரைத் சிவத்துடன் கூட்டும் திருவருளாகும். ஆருயிரும் பேருயிரும் ஒன்றாய்க் கலந்து தோன்றும் நிலை சிவனாகும். இந்நிலையைச் சிறப்பு நிலை எனக் கூறுவர். சிறப்பு நிலையெனினும் சொரூப நிலையெனினும் ஒன்றே. அந்நிலையினை யுணர்த்தும் அச்சொல்லும் சிறப்புப் பெயரும் பொருட்கிளவியாகும். பெரும் பொருட் கிளவி மாவாக்கியம். ஆருயிர் செம்பொருளாகிய சிவனை அடைவதற்பொருட்டுச் சீர்த்தி மிக்க நந்திக் கடவுள் ஆண்டருள் கின்றனன்.
2442. ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.
பொருள் : ஆருயிர்கட்கு அகவை ஐம்பது ஆகியும் முப்பொருள் உண்மையினைத் தப்பின்றித் தெரியும் தன்மை வாய்த்து இலது. அதுபோல் சிலர் அறியாதவர் ஆவர். அவரும் அருள்நினைவால் தத்துவமசி என்னும் முப்பதத்தை நாடிப் பெறுவதாகிய சிவனை நாடும் வழியாக முப்பதத்திடைவாசியாகிய  உயிர்ப்பினைச் செலுத்தியிடச் செம்பர நிலைக்கு வழி அமையும். அவ்வழி தமக்குரிய சிவனுடன் கூடுவதாகிய யோகமாகும். இச்செறிவு வழியாக ஆருயிர் சிவத்துடன் கூடிச் சிவனாகும் வாசி செலுத்திட பிராணாயாமப் பயிற்சி செய்ய.
2443. நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம்ஐந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.
பொருள் : நாத ஒலியை அறியும் ஆன்மாவின் நிலை நழுவில் சாக்கிராதீதம் பொருந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் சத்தம் முதலிய விஷயங்களைவிடப் பரமாகும். அப்பஞ்சேந்திரிய அறிவு மூன்றும் இரண்டும் ஒன்றும் நீங்கவே, சிவன் அனாதியாக நின்மல சாக்கிரம முதலியவற்றைக் கூட்டிச் சீவர்களைப் பக்குவம் செய்கிறான். இந்தியம் இந்திரியம்.
2444. பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
துரிய சுழுமுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.
பொருள் : ஆன்மா மேலான நின்மல துரியத்தில் நனவு நிலையில் தங்கி விரியாத காலத்து நின்மல சொப்பனம் அமையும். இதில் அலையிலாச் சாகரம்போல் அசைவின்றி இருக்கும் நிலையே துரிய சுழுத்தியாகும். சிவத்தினிடம் பொருந்தினபோது அதுவும் நீங்கின நின்மல துரியமே அசிபதமாகும்.
20. முப்பரம்
(அஃதாவது, அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம் ஆகிய மும் மண்டலங்களிலும் ஆன்மா நிற்கும் நிலை.)
2445. தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்ணெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே.
பொருள் : என் உடம்பகத்துத் தோன்றி என்னுள்ளே வலம் கழித்து எழும் மண்டிலங்கள் மூன்றுள. அவை முறையே தீ மண்டலம், ஞாயிற்று மண்டிலம், திங்கள் மண்டிலம் எனச் சொல்லப்பெறும். இம்மூன்று மண்டிலத்து முழு முதல்வனாகிய சிவபெருமானைத் திருவருளால் ஏற்றுப் பொருந்தி இன்புற்றிருப்பம்; இளங்கொடியாகிய குண்டலினியை உயிர்ப்புப் பயிற்சியால் எழுப்பி அதனுடன் கலந்த நின்று உணர்ந்த காலத்தென்க. அக்காலத்து முழு நலமும் வந்து எய்தும்.
2446. மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.
பொருள் : குண்டலினி சிரத்தைக் கடந்தபோது ஆகாயம் முற்றிலும் வியாபிப்பதாக உள்ளது. அது மிக மேம்பட்ட பொருளாக விளங்கும். அவளுடன் பொருந்திய சிவமும் அங்கு நின்ற எல்லாப் பொருளிலும் பூரணமாக நிறைந்திருந்தது. கன்று நினைந்து கதறியபோது ஓடி வரும் தாயைப்போன்று சீவன் நினைந்தபோது கருணை சுரக்கும் இறைவன் அருளியபின் அச்சீவன் குன்றின்மேல் இட்ட விளக்குப் போன்று பிரகாசம் பெறும்.
2447. ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.
பொருள் : முப்பத்தாறு தத்தவங்களையும் கடந்து நிலையில் விளங்கும் அப்பரம் கூறாமல் கூறிய உபதேசத்தைச் சொல்லப்புகின் சிவபரம்பொருள் வேறாய் வெளிப்பட்டு குருமேனி தாங்கி அருளிய இன்பத்தைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்க என்பதாம்.
2448. பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே.
பொருள் : தத்துவங்களின் பற்று நீங்க அவை இலயமடையும் பொருளைப் பற்றில் விஞ்ஞான கலர் நிலையடைந்து ஆன் மாக்கள் சதாசிவராவார். அவ்வாறு பற்றி நீங்க நாதத்தைத் தொழுதால் நாத சொரூபமான சிவத்தின் அறிவே ஆன்மாவின் அறிவாகும். சீவபோதம் கெடச் சிவப்பற்று மிக மேம்பட்டவர்க்கே பழைய தத்துவங்களின் பற்று நீங்கி பற்றிக் கொண்டுள்ள சிவ அறிவு மிகுந்து ஆன்மா பரம் பரமாகுதல் கூடும்.
2449. பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே.
பொருள் : திருவருளால் தொன்று தொட்டு வழிவழியாகத் தோன்றாத் துணையாக நின்றருளும் பதியினைப் பற்றினால் பாசம் பற்றாகும். யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீவருடைய சிவபெருமான் திருவடிகளைப் பற்றினார்க்கு அவன் எழுந்தருளி வந்து இன்புறுத்துவன். அதுவே மேலான திருவடியின்பமாகும். இவை அனைத்தினையும் திருவடியு ணர்வால் திருவருள் உந்துவதால் அறிவதே நிலைபெற்ற அறிவாகும்.
2450. நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற்று இடத்தானே தற்பர மாமே.
பொருள் : நனவுக் காலத்தே உழைப்பு, உணர்வு, உவப்பு, ஆள், மருள் என்னும் ஐந்தும் செயல் உறாது அகல ஆருயிர் நிற்கும் நிலை தனி நிலையாகிய புலம்பாகும். தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உள்ளது அப்பால் நிலையாகும். அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருள் சிவபெருமான் ஆவன். அச் சிவபெருமான் திருவடிகளைத் திருவருள் நினைவால் கொள்ள அவ்வுயிர் தற்பர சிவமாய்த் திகழும். உழைப்பு முதலியவற்றை முறையே கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனவும் கூறு) (நாலொன்று - ஐந்து நேயந்தனை - சிவத்தை)
2451. தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅசு ராதியே.
பொருள் : தன்னைத் தூய்மையாகக் காண்டலும், தன்னிடத்து விரிவைக் காண்டலும் பின்னர் கருவிகரணங்களைக் கொண்ட ஆன்மாவின் நிலைமாறி, சிவனும் சீவனும் கலந்து, தத்துவங்களை விட்ட நல்ல பராதீத நிலையில் அகரத்தை ஆதியாகவுடைய பிரணவ சொரூபமான சிவத்தை நாடுவாயாக. (தற்பரன் - சிவன். காலபரம் - ஆன்மா.)
21. பரலட்சணம் (பரலட்சணம் - பரை ஒளியின் இயல்பு.)
2452. அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.
பொருள் : நின்மல துரியாதீத நிலையில் விளங்கும் நந்தி என்னும் சிவம் வியாபகமும் அறிவும் உடையது. ஆன்மா துரியாதீத நிலையில் தன்னறிவை இழந்தவனாக இருப்பான். ஆன்மாவின் சந்திர மண்டலம் விளங்கி ஆணவமாகிய இருளை விட்டுச் சிவத்தோடு ஒன்றாய்ப் பொருந்தினால் சிவம் உயிரில்  பதிந்து தனது வியாபகத்தையும்  அறிவையும் பதிக்கும்.
2453. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்தவர் புண்ணியத் தோரே.
பொருள் : முதலும் முடிவும் இல்லாத அறிதற்கு அரிய பெரும்பதி சிவபெருமான். அவன் பேரொளிப் பிழம்பாய் உள்ளொளியாய் விளங்கும் ஒள்ளியன். நல்லார்க்குத் தோன்றியும் பொல்லார்க்குத் தோன்றாமலும் நிற்க வல்லான். அதனால் அவன் அறமுறை குன்றியவன் அல்லன். அறமுறை - நீதி. யாண்டும் முறைமையோடே நிற்பன் என்றும் பொன்றாது நிலைப்பாடு உடையதாக இருக்கும் சிவஞான போத வடிவினன். அம்மேலான சிவஞான போதத்தை அருள் நினைவால் உணர்வோர் திருவருட் புண்ணியச் செல்வராவர்.
2454. துரியங் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.
பொருள் : நின்மல துரியத்தில் சீவன் பரைபோகத்தில் ஆழ்ந்து ஆணவ மலமற்று விளங்கும் நிலை கடந்து அது சுத்திபெறும் துரியாதீத நிலையில், அச்சீவர்களுக்கு வீடுபேற்றை அளிக்கப் பரவெளியில் நடனம் செய்யும் பெருந்தலைவனான சிவனைப் பிரணவச்சுனையில் துருவிக் காண்பவர்க்கு எவ்வகைப்பட்ட குற்றமும் இல்லையாம். (வியோகம் - வீடுபேறு.)
2455. செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.
பொருள் : செம்மையாகிய நாதத்தின் முன்னே வெண்மையாகிய விந்து தன்மை கெட்டு ஒடுங்குவதுபோல, அவ்வுண்மையான பரசிவத்தோடு சீவன் தன்முனைப்பற்று ஒடுங்க, பொய்யான உலகமுகத்து ஓடாத மனத்துடன் நிற்பதோடு எண்ணுவதையும் விட்ட பாழில் குண்டலினி நாத சத்தியாகிச் சிவமேரு என்ற பிரணவ உச்சியில் விளங்கும் தன் கணவனோடு ஒன்றாவாள்.
2456. வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
பொருள் : சிவமேருவில் நாத சித்தியோடு பொருந்திய சீவர்க்குக் கலைமுதலிய தத்துவங்கள் ஒடுங்க. எஞ்சியுள்ள சுத்த மாயை அசுத்த மாயையின் பிணிப்பு அடியோடு மீண்டும் முளையாவாறு நீங்க, துவாத சாந்தத்தில் உண்மைப் பொருளாகிய சிவசூரியன் விளங்க, அப்பெருமான் அச்சத்தை நீக்கி என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு நிலைபெறச் செய்தனன்.
2457. என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்துஅறி யாத இடத்துய்த்தப்
பின்னை ஒளியிற் சொரூம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பர மாகவே.
பொருள் : என்னுடைய யதார்த்த சொரூபம் இத்தகையது என்று அறியும்படி செய்த நந்தியெம் பெருமான், என்னுடைய யதார்த்த சொரூபத்தை அறிந்ததும் இதுகாறும் செல்லாத பரவெளிக்கண் அறிவுடன் செல்லும்படி செய்து, பிறகு பிரணவ ஒளியில் ஆத்மசொரூபம் வேறாய் விளங்க, தனது சத்தியை அளித்துத் தற்பரமாகச் செய்தனன்.
2458. பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியோடு ஞாயிறு திங்கள்
அரந்த அறநெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.
பொருள் : நுண்பூத நிலையில் விரிந்தும், பருப்பூத நிலையில் சுருங்கியும் நிலம் நீர் வாயு நிறைந்த காற்றுடன், சூரியன் சந்திரனாய்ச் செம்மையுடைய நெறியில் பயனாய், அகண்டமான ஆகாயத்தில் எல்லாவற்றையும் இறைவன் ஒருவனே தாங்கி நின்றனன்.
2459. சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே.
பொருள் : அருவத் திருமேனி கொண்ட சிவத்தின் நிலையில் தானாக விளங்கும் சத்தியும் தற்பரையாய் நிற்கும். அப்பரையே பரனுக்கு உடலாகும். தனு கரணபுவன போகங்களைச் சீவர்களுக்குப் படைத்துக் கொடுக்க வேண்டும் என்ற சங்கற்பத்தால் ஞானசத்தி முதலிய பேதங்களாய், பெருமை மிக்க பரனிடத்து அகலா திருந்து சிருஷ்டியாகி ஐந்தொழில்களைச் செய்து நடித்தருளுவான்.
2460. மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே.
பொருள் : உடலுக்கு மேலும் கீழும் சூழுவுமாக இருந்து, மெய் வாய் கண் நாசி ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற விந்து சத்தியானது பரையுள் பரையாக, அருவமான  சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய நான்கின் ஞானத்தைப் பெறச் செய்து, ஆணவ மலத்தில் கட்டுண்டிருக்கும் சீவர்களை நடத்தும்.
2461. வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.
பொருள் : பரைஒளி வேறு வேறு இயல்புடையதாய் ஆறு ஆதார சக்கரங்களில் பொருந்தி ஆறுவகையான உபாதிகளை அளிப்பதால் வெவ்வேறு தத்துவங்களை மாயையால் சேட்டிக்கிறது. மாயை பிரகாசத்தைத் தூண்டுவதாய்ச் சிவனை அசைவித்து, சுவாசத்தை இயக்கி உணவை உண்பித்து உறக்கத்தையும் அடையச் செய்யும். ஆனால் மாயா காரியமான தத்துவங்களைக் கடந்து பர ஒளியில் பொருந்தியிருத்தலே ஆன்மா அடையத்தக்க பேறாம்.
2462. தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே.
பொருள் : தன்னுடைய பரம் என்ற நிலை ஒப்பற்ற பேரொளியில் நிலைபெற்றுள்ளது. அதுவே மேலான ஒப்பற்ற ஞானமும் தத்துவங்களை அழித்து நிற்கும் அறிவும் ஆகும். ஆன்ம போதம் நீங்கித் தன் ஒளியை மறந்து சிவப் பேரொளியில் புகுந்து சுட்டி அறியும் அறிவை விட்டு நிற்பதைவிட இங்கு ஒப்பாகச சொல்லக் கூடியது ஒன்று இல்லையாகும்.
2463. பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே.
பொருள் : பழமையான வேதங்கள் சிவத்துக்கு மேன்மையான ஆகாயமே உடல் என்று கூறும். சந்திரனைச் சூடிய பெருமான் விளங்கும் ஆகாயத்தில் துரியாதீத நிலையில் தன்னைக் கண்டு, அப்பர நிலையை அடைந்தவனும் சுத்த மாயைக்கே நெருங்கின் அவன் ஆராயின் சுத்தனாக மாட்டான்.
2464. வெளிகால் கனல்அப்பு மேலவுமண் நின்ற
தனியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.
பொருள் : ஆகாயம் காற்று தீ பொருந்தும் மண் ஆகியவை இலயமாகும் கோயிலாகிய தற்பரமே அத்துரிய நிலையில் விளங்கும் சீவனாகும். ஆகாயம் காற்று தீ நீர் பொருந்தும் மண் ஆகியவற்றின் நிறைந்து நிற்கின்ற வெளியாகிய சத்தியமே அவன் வடிவாகும்.
2465. மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.
பொருள் : நிலையில் திரியாது பொன்வண்ணமாக என்றும் ஒன்று போலப் பொன்றாது நின்றருளும் சிவனை மேரு என்பர் செந்தமிழர். அத்தகைய மேருவாகிய  சிவபெருமானை விரிந்த கதிர்களையுடைய பகலவன் மண்டிலமாகிய நெஞ்சத்தினிடத்து வஞ்சனையின்றி எஞ்சாமல் நிலைக்கின்ற அருந்தவ யோகியர்க்கு அந்நினைப்பாகிய சிறந்த தவத்தை அவர் செய்யின் ஆண்டுச் சிவனருள் வெளிப்பட்டுத் தானாக நிற்கும். நீங்க வேண்டிய நீர்மையும் இல்லை. அச் சிவபெருமானின் திருவாணையாகிய திருவருளின் மிக்கது பிறிதொன்றில்லை.
22. முத்துரியம் (முத்துரியம் - சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம்.)
2466. நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.
பொருள் : சீவன் கேவல சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி ஆகியவற்றைக் கடந்து சீவதுரியத்தை அடையும். சீவனுக்கு ஆதியான பரமும் சகல சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி ஆகிய மூன்றையும் கடந்து பரதுரியத்தை எய்தும். சிவனும் பரனைப் போன்று நின்மல சாக்கிரமாதி குன்றைக் கடந்து சிவதுரியத்தை அடையும். இவ்வகையாகத் தொந்தத்தசி என்ற மகாவாக்கியம் விளக்கி நெறி அமையும். (ஈடு - நெறி.)
2467. தானாம் நனவில் துரியம்தம் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றும் துரியம் அணுகுமே.
பொருள் : ஆருயிர் தானாம் நனவில் பேருறக்கமாகிய துரியத்து நீ என்னும் முன்னிலைப் பொருளாய்த் தொம்பதமாக நிற்கும். ஆருயிரின் பேருறக்க நிலையில் பேசப்படும் நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்றினில் நீங்காத அருட்பாடாம் பராவத்தை முடிந்த இடமாகும். அதுவே அந்நிலைக்குரிய அரிய நனவாகும். மிக மேலாகச் சொல்லப்படும் சிவ துரியத்து உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு அடங்கல் வந்து பொருந்தும்.
2468. அணுவின் துரியத்து நான்கும துஆகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சாரமுத் துரியக்
கணுவில்இந் நான்கும் கலந்தஈர் ஐந்தே.
பொருள் : சீவன் விளங்கும் துரியத்தில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என நான்காகி, பணியும் பர துரியத்தில் பொருந்தும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் ஆகிய நான்கும் மேலான பரமாகிப் பொருந்தும் சீவ பரசிவ சேர்க்கையில் சீவ துரியம் பரதுரியம் ஆகிய பொதுமையில் இருண்டும், சீவ பரதுரியத்திலுள்ள விரிவாகிய எட்டு நிலைகளுமாகப் பத்தாகும். (கணு - சேர்க்கை.)
2469. ஈர் ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாக நெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து
ஓர்அந் மாம்இரு பாதியைச் சேர்த்திடே.
பொருள் : முன் மந்திரத்தில் கூறிய பத்து நிலைகள் பொருந்திய சீவபர சிவதுரியத்துள் சிவத்தை அடையும் பொருட்டு உபதேச முறைப்படி  நின்று, நிலம் முதலான தத்துவங்கள் முடிவடைகின்ற பராபரச் சேர்க்கையில் ஒரு முடிவை அடைவிக்கும் நாத விந்துக்களாகிய இரு திருவடிகளையும் சேர்த்து நிற்பாயாக.
2470. தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.
பொருள் : துரிய நிலையாகிய  அருள் நிலத்தினைத் தொட்டே இருங்கள் தொட்டிருத்தல் என்பது ஓவாது உணர்வில் உணர்த்திருத்தல். ஏனை யோர்க்கு எட்டாத நிலையில் உள்ள வனாயினும் உணர்வார்க்கு அவருணர்வில் எட்டும் ஒப் பிலா இறைவனைத் திருவருளால் உள்ளவாறு அறியுங்கள். அறிந்தால் பல்லும் நாவும் உதடும் பிறவும் கூடிப் பிறக்கும் தூய மாயாகாரியமாகிய சொல்லுக்கு எட்டாமல் நிற்குமவன் ஒப்பில்லாத மெய்ப்பொருளாகப் புணர்ந்து மெய்யின்பம் தந்தருள்வன். (பன்னா - பல்+நா. பல்லும் நாவும்.)
2471. அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
பொருள் : ஆன்மா அசத்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுச் சித்துருவான பரமாய் சார்ந்திருந்த சுத்தமாயை அசுத்த மாயைகளை அருள் சத்தியால் (நாதத்தால்) சிதைத்து, அதன் விளைவான பிரிவில்லாத சிவ சத்திøப் பொருந்திடும் தன்மையை சிவநெறியில் ஈடுபட்ட அன்பர் நெறிகாட்டும் முடிவை அறிந்திருந்தனர்.
2472. நனவின் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே.
பொருள் : சாககிரத்தில் நான்காம் நிலையாகிய துரியத்தில் தன்னுடைய உயிர் விளங்கும் தொம்பதம் என்ற ஒளி நிலை ஆவது போல வினைகளினின்றும் நீங்கிய சீவன், நின்மல சாக்கிரத்தை ஆதியாகக் கொண்ட நான்காம் நிலையாகிய நின்மல துரியம் அடைய, தானாகிய பரதுரியம் அமைந்து, அதனையும் கடந்த துரியாதீத்தில் தற்பதம் நின்ற நிலையை அடையும்.
2473. தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நல்தாமம்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
பொருள் : முத்துரியத்தில் தொம்பதம் என்றும் தற்பதம் என்றும் சொல்வதுபோல நம்பத் தகுந்த மூன்றாம் துரியமாகிய சிவ துரியத்து நல்ல பரமபதம் அழகிய உலகை நினையாத அதிசூக்கும நிலையாகும். அங்கு அப்பால் விளங்கும் செம்பொருள் ஆன்மாக்களை ஆட்கொண்டருளும் சிறப்பு மிக்க நந்தியாகும். (தாமம் - பரமபதம். ஒளி, முத்துரியம் கடந்து விளங்குவது ஆன்மாக்களை ஆட்கொள்ளும் சிவமாகும்.)
23. மும்முத்தி  (மும்முத்தி - சீவமுத்தி, பரமுத்தி, சிவமுத்தி.)
2474. சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரததில் உள்ளும்நா தாந்தமே.
பொருள் : சீவன் தன்னுடைய முத்தி நிலையைத் துரியாதீதத்தில் அடையும். ஆன்மா தன் செயலற்று அருளின் வழியே நிற்கும் நிலையே பரமுத்தியாகும். சிவமுத்தி என்பது சிவானந்தமாகும். மேற்கூறிய முறையில் மூன்று இடங்களிலும் சீவமுத்தி, பரமுத்தி, சிவமுத்தி என மூவகைப்பட்டு விளங்குவதாய்ப் பிரணவத் தொனியின் வழியே செயலின்றி நினைந்திருப்பின் நாதாந்தம் அமையும். (ஓவுறுதாரம் பிரணவம்.)
2475. ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்
ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.
பொருள் : பிறவிப்பயனை அறியாதவராது உயிர் பிறவியில் வந்து அடையும் பிறவிப்பயன் இறைவனை வழிபடுதல் என்று அறிந்த உயிர், இறைவன் திருவருளை நாடிப் பயன்பெறும். புறத்தேயுள்ள உலகிலும் அகத்தேயுள்ள கருவி கரணங்களிலும் உயிருக்கே நன்மை அளிப்பது ஒன்றும் இல்லை என்பதை அறிந்து, உலகையும் கருவி கரணங்களையும் விட்டு நீங்கி நிற்கும் சிவத்துடன் பொருந்துதலே முத்தியாகும். (ஓவுதல் - நீங்குதல்.)
2476. சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.
பொருள் : சிவத்தை நினைந்து சிவமாகி ஆணவம் கன்மம் மாயை யாகிய மும்மலங்களையும் தாமத இராசத சாத்விகமாகிய முக்குணங்களையும் அழித்து, தவத்தால் அடையும் மும்முத்தி என்ற அது நீ ஆகின்றாய் என்ற உபதேச நெறி நின்று, சோகம் பாவனை செய்வார்க்கு மலமில்லாச் சிவன் தானே வெளிப்பட்டருளினன். அது நீ ஆகின்றாய் என்பதே சோகம் என்னும் நெறியாகும்.
2477. சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.
பொருள் : பொருளும் அருளும் போக்கில் மெய்ப்பொருளும் முறையே சித்தி, முத்தி, சிவமாம் சுத்தி என்று ஓதப்பெறும். இவைமுறையே தன்னைப்பற்றி வருவன, பிற உயிர்களைப்பற்றி வருவன, தெய்வத்தைப் பற்றி வருவனவாகிய மூவகைத் துன்பங்களையும் ஒழிப்பனவாகும். இம்மூன்றையும் தாபத்திரயம் என்பர். ஈண்டு இவற்றை முத்தீ என்று ஓதினர். இவை தொலையவே பேரின்பப் பேரருள் உருவாம் பேரறிவாற்றல் வெளிப்படும். அதன்மேல் செயல் அறலாகிய சமாதியும் கைகூடும். பின்னர்ப் பிணிப்பாகிய பெத்தத்தினை அறுத்தருளிய பெரும் பெருமான் வெளிப்பட்டுத் திருவடியை நல்கிப் பேரின்புறுத்துவன். அவனே முழுமுதல்.
24. முச்சொரூபம் (முச்சொரூபம் - சீவசொரூபம், பரசொரூபம், சிவ சொரூபம்)
2478. ஏறிய வாறே மலர்ஐந் திடைஅடைந்து
ஆறி ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்றுஅங்கு
ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.
பொருள் : ஆணவத்தில் கட்டுண்டு கிடந்த உயிர்கள் பக்குமாதற் பொருட்டு, இறைவன் கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகியவற்றைக் கூட்டி ஆணவம் வலிகெட இருவினையொப்பு வந்த நிலையில் சிவோகம் பாவனை பண்ணி, மேலும் ஒரு நிலையாகச் சீவ பர, சிவ நிலைகளை அடைந்து நீங்கி, அங்கு இறுதியில் பழமையான பரம் பொருளின் உண்மையில் அவ்வுயிர்களை நிலைபெறச் செய்வான்.
2479. மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.
பொருள் : சகலர், பிரளயகாலம், விஞ்ஞானகலர் ஆகிய மூவர் வாழ்கின்ற இடம் பிரகிருதிமாயை, அசுத்த மாயை, சுத்த மாயை ஆகும். இவ்வகையான மூன்று மாயையிலும் முப்பத்தாறு தத்துவங்களும் தோன்றியுள்ளன. இம்மூன்று மண்டலங்களிலும் ஊடுருவி நிற்கும் ஆத்ம சோதியைக் கண்டபோதே எடுக்கவேண்டிய தேகத்தின் கணக்கு முடிவுறும்.
2480. உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரறி வாரே.
பொருள் : பேரொடுக்க மாகிய பேரூழிக் காலத்து உலகம் ஒடுங்கிற்று. அத்தகைய ஊழியும் பல கழிந்தன. விளங்குகின்ற ஆருயிர், அருள், அருளோன் என்னும் மூன்று அருள் வெளியில் ஒன்றாயின. இம்மூன்றையும் அன்பு, அருள், அருளோன் எனவும் கூறலாம். சீவன், பலம், சிவம் எனவும் கூறுப. பலவும் முறைப்படி சிவபெருமான் திருவடிக் கீழ் அடங்கி, கலப்பால் ஒன்றாயிருப்பினும் சிவபெருமானின் அளத்தற்கரிய அளவினையும் உரைத்தற்கரிய பெருமையையும் எவராலும் அளந்தறிந்து உரைக்க ஒண்ணா என்க. அதனால் ஒருவரும் அறியார் என்பது யாரறிவார் என்னும் குறிப்பால் பெறப்படும்.
2481. பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.
பொருள் : மாயா காரிய உருக்களை மலைமுதல் மண்ஈறாகவும் யானைமுதல் எறும்பு ஈறாகவும் கண்டு கருதப்படும் வேறுபாடுகளையே ஆருயிர்களுக்குக் காட்டியருள்கின்றனன் சிவன். அவன் எல்லாவற்றுடனும் கலந்து அருவாய் உருவாய் அருவுருவாய்த் தோன்றியருள்வன். அருளே திருமேனியாய்க் குருவாய் எழுந்தருளும் தனிப்பெரும் தலைவனும் ஆவன். மன்னும் பல உயிரோடும் கலந்து அவ்வவ் உயிராய் உருவாய் உடன் இருந்தருள்வன். அன்றாம் என்பது இந்நிலைமை சிவபெருமானுக்குத் தொன்மையிலேயே இயற்கையாக அமைந்த நன்மைப் பண்பாம் என்க. (பெருவாய் - பெரியதாய்.)
2482. மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணிஎன லாய்நின்ற வாறுஅது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.
பொருள் : வெண்பளிங்கானது மாணிக்கத்தின் முன் அதன் வண்ணம் பூரிப்புத் தன்மை ஆகியவற்றைப் பெற்று மாணிக்கம் என்னும் படியாக நின்றது போலத் தணிந்த தன்மையுடைய ஆன்மா சீவசொரூபம், பர சொரூபம், சிவ சொரூபம் என்ற சத்திகள் பொருந்திய போது, அவையேயாய் ஆகுமாறு செய்த பெருமையுடைய சிவனது திருவடிகளைப் பற்றி வாழ்வாயாக.
2483. கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே.
பொருள் : பளிங்கு போன்ற ஆன்மா மாணிக்கம் போன்ற சிவஒளியின் பிரகாசம் தோன்ற நன்மையைச் செய்கின்ற கண்மணியில் நாடி, ஒளி பொருந்தி தத்துவமசி என்னும் முப்பத்தினால் போதப்பாழ், சீவப்பாழி சிவப்பாழில் நின்று சொல்லாமல் அடைய முடியாத பிரணவத்தைக் கொண்டு, ஞானமுத்திரையின் முடிவில் பெறும் அனுபூதியால் அறியாமையாகிய இருள் நீங்கிப் பிறவி அறும். (முப்பதச் சொல் - தத்+துவம்+அசி = அது நீ ஆகிறாய்.)
2484. உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
விடம்தரு வாசலை மேல்நிற வீரே.
பொருள் : மாறுபட்ட தன்மையுடைய ஆயிர இதழ்த் தாமரையின் உள்ளே விளங்கும் சோதியை, செல்லுகின்ற மூலாதாரத்தினின்றும் எழும் நாதமானது அருளால் கிட்டுமாயின், அங்கே பொருந்தும் அமுதேஸ்வரி வெளிப்பட முன் அடைந்திருந்த மேல்வாசலைத் திறந்திருப்பீராக.
25. முக்கரணம் (முக்கரணம் - மனம், வாக்கு, காயம்)
2485. இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடல் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே.
பொருள் : திருவருளால் ஆருயிர் உடல், உணர்வு, உணர்த்துமெய் ஆகிய மூன்று இடங்களிலும் பொருந்தும். இம்மூன்றையே பருவுடல், நுண்ணுடல், முதலுடல் என்பனவற்றிற்குக் கூறினும் பொருந்தும். அவ் அருளாலேயே செவ்வி வாய்த்தற் பொருட்டு உரித்தெனக் கருதிய அம்மூன்றினையும் அவ்வுயிர் தனக்கு வேறெனக் காணும். அது போன்றும் அருளோன் அருள் ஆருயிர் போன்று சொல்லப்படும் சிவ பரசீவர்கள் உடனுறை வேறுபாடுகளும் ஒன்றெனல் ஆகும். (கடனுறு - உரியதான.)
2486. ஒளியை ஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே.
பொருள் : ஒளியை உடைய கண்ணின் பார்வையை மேலும் ஒளி பெறுமாறு செய்து, பிரணவத் தியானத்தால் மூலாதாரத்திலிருந்து கனலை எழுப்பிச் சந்திரகலை சூரியகலை ஒன்றாகுமாறு சுழுமுனையில் சேர்த்து சிரசுக்கும் மேல் சகஸ்ரதள வெளியில் பொருத்தி, தியானம் முதிரச் சிவபதம் அமையும்.
2487. முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே.
பொருள் : உள்ளம் உரை உடல் என்னும் மூன்று கருவிகளின் சோர்வினை அகற்றி ஆக வேண்டிய அருள்நிலையைக் கைக்கனி என்னும்படி தந்தருளினன். அவன் சிவபெருமானாகிய நந்தியாகும். ஆணை நிலையாகிய புருவ நடுவின்கண் விளங்கும் மனோன்மணி அங்கு நின்றும் மேலோங்க அதன்மேல் உன்மனையாகிய திருவருள் துணையாகும். அத் துணையால் ஒருமை உணர்ச்சி உண்டாகும். அவ்வுணர்ச்சியால் செயலற்ற திருநிலை எய்தும். இதனையே நிருவிகற்பசமாதி என்ப. இதனை ஒருமை ஒடுக்கம் என்ப.
26. முச்சூனிய தொந்தத்தசி
(சூனியம் - இன்மை, முச்சூனிய தொந்தத்தசி யாவது முப்பதமும் இன்மை. முப்பதம் நீங்கிய நிலையே பெருநிலை என்க.)
2488. தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே
நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.
பொருள் : ஆது என்னும் தற்பதுமும் நீ என்னும் தொம்பதமும் தான் அது ஆகின்ற தென்னும் அசிபதமும் தொன்மையே யுள்ளன. இம் மூன்றும் மேல்நிலையாகிய துரியத்துத் தோற்றமும். இத் தோற்றத்தின்கண் நிற்பன ஆருயிரும் அருளாகிய பரமும் அருளோனாகிய சிவமும் என்னும் மூன்றின் சொற்பொருளாகும். இவையே தொந்தத்தசி என்ப. இதன்கண் தொம்பதமாகிய நீ தத்பதமாகிய அசி ஆகின்றாய் என்னும் பொருள் காணப்படும்.
2489.தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.
பொருள் : தொந்தத்தசி என்ற மூன்றில் பழமையான கன்மமும் மாயையும் ஆணவமும், தொந்தத்தசி மூன்றில் பழமையான தாமதம் இராசதம் சாத்துவிகமும் ஆகிய மலமும் குணமும் கெட சிவன் தோன்றினால் பூரண நிலவின் முன் இருள் கெட்டு ஒளி உண்டாவது போல ஆன்மப் பிரகாசம் அமையும்.
2490. தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே.
பொருள் : தொம்பதத்தோடு காணப்படும் அசிபதப் பொருளை வாசியாகிய உயிர்ப்பின் கண் தோன்றக் கண்டு முன் ஓதியவாறு அவத்தைகள் பத்தினையும் கருதுக. கருதி முடிவில்லாத அவத்தையை அவ்வாக்கியத்தில் செலுத்து முறையில்  வைத்து ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் சிவத்தை முன்வைத்து ஓதுக. சிவத்தை முன்வைத்து ஓதுவது சிவயநம என்று ஓதுவதாகும்.
2491. வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.
பொருள் : மேல்ஓதியவாறு சிவத்தை முன்வைத்து ஓதுதலான் ஆருயிரின் அறிவு அச்சிவத்தின் இயற்கை உண்மையறிவு இன்ப வடிவின்கண் செல்லும். அங்ஙனம் செல்லுமாறு செலுத்தி ஓமொழிச் செவியறிவுறூஉவாம் உபதேசத்தை மெய்யுணர்வால் களங்கமற்ற உள்ளத்தினிடத்துச் செலுத்தி விடும். அதன்பின் திருவருளால் சிவபெருமானின் திருவடியுணர்வினை உணர்ந்து அத்திருவடிக்கு என்றும் நீங்கா அடிமையாக அவ்வுயிர் நின்று இன்புறும்.
2492. தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.
பொருள் : மாயையில் தோன்றும் சீவனாகிய தொம்பதமும் மேலான பரையினிடத்து விளங்கும் பரமாகிய பதமும் விரும்பப்படுகின்ற சாந்தியில் பொருந்தும் ஆகிறாய் என்ற அசிபதமும் ஆகிய அவ்வாக்கியம் மேலான உரையாகும். அவ் வுரையான நீ அதுவாகிறாய் என்பதில் வாசியாகிய உணர்வு பொருந்தும்.
2493. ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.
பொருள் : மேல்ஓதிய முப்பதங்களின் புணர்ப்பினை விளக்க அச்சோயமாகிய இவன் அவனே என்னும் முறைப்படி அவனே இத் தேவதத்தன் என்னும் பொருளின்கண் ஏற்படும் காலமும் இடமும் செய்தியும் நீங்கப் பெற்றால், அப் பெயர்க்குரிய பொருளாகிய உடம்பு காரணம் அளவாக நிற்கும். அக்காரண மாயையும் கடந்த நிலையில் தொந்தத்தசியாகிய முப்பதம் மெய்யுணர்வினைத் தரும். அதனால் ஆருயிர் அருள் அருளோன் என்னும் மூன்றும் பெறப்படும். அவ்வுயிர் அருளுடன் கூடி அருளோன் அடியிற் கலந்து முடிவிலா இன்பம் எய்தும். (சோயம் - இவன் அவனே. சோயந்தேவதத்தன் - அவனே தேவதத்தன். இது வேதாந்த பரிபாஷை. ஆதியில் பிரமசாரியாகவும், பிறகு இல்லறத் தானாகவும் அதன் பின்னர் துறவியாகவும் இருந்தவன் தேவதத்தன் ஒருவனேயாம் என்று விளக்கப்படுகிறது. உபாதானம் - முதற்காரணம்.)
2494. தாமதம் காமியம் ஆசித் தகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும்அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.
பொருள் : அமைதி ஆட்சி அழுந்தலாகிய (சத்துவ, இராசத, தாமதங்கள்) முக்குணமும் ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலமும் நிகழ்வது நீக்குவதுமாகிய செயல்கள் அகர உகர மகரங்களான் ஆகும். அவ் அகர கர மகரங்களே (அ+உ+ம்) பத்தாய் பகுத்த பாடுகளுள் மூன்றில் தாமாம் துரியம் தோன்றும். ஆண்டுத் தொம் தத் அசி என்னும் பதப்பொருள் முற்றுறும்.
27. முப்பாழ்
(முப்பாழ் - மாயைப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்பன. மாயைப்பாழ், சீவப்பாழ், வியோமப்பாழ் எனவும் பெயர் பெறும். ஆன்ம தத்துவங் கடந்து நிற்றல் மாயைப் பாழ்; ஆன்ம போதம் கழல நிற்றல் போதப்பாழ் அல்லது சீவப்பாழ்; உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்றல் உபசாந்தப்பாழ் அல்லது வியோமப் பாழ்.)
2495. காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.
பொருள் : மாயா காரியமாகிய வித்தியா தத்துவம் ஏழையும் ஞான விசாரணையால் அவை பொய் என்று அறிந்துவிட ஆன்ம சொரூபம் விளங்கும் தேகப் பிரக்ஞையும் காரணமாகிய சிவநிலைகள் ஏழையும் கண்டு நீங்க ஆன்ம அறிவும், காரிய காரணங்களாகவுள்ள வாசனைகளைக் கண்டபோது பொருந்திய உபசாந்தமும் நீங்கும். இம்மூன்று பாழினையும் நீங்கப் பிறவி அறும்.
2496. மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில்சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.
பொருள் : மாயப்பாழும் சீவப் பாழும் உபசாந்தப் பாழும் நிலைபெற்ற பரனது அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்னும்படி சிவசத்தியாகிய அருளில் சீவன் அடங்கி நிற்கும் மூன்று பாழ்நிலைகளாம். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே தத்துவமசி வாக்கியத்தின் முடிவாகும். (வியாப்தம் - அடங்கி நிற்றல்.)
2497. எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழைக் கடந்துஅந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.
பொருள் : நாளும் ஆனேற்றினை உவந்து ஊர்ந்து உலகினுக்கு அருளும் ஒப்பில்லாத பதி சிவபெருமான் ஆவன். அவனே நந்தி என்று அழைக்கப்படுவன். அவனுடைய திருவடிகளைக் கூடுதற் பொருட்டு நிலையெனக் கருதிய மாயை, உயிர், அருள் என்னும் முப் பாழையும் கடந்து, அவை யனைத்தும் காரணம் பற்றிய கற்பனை என உதறி நீக்கி எஞ்சிய உருவற்ற பாழில் ஒடுங்குகின்றேன். (பாழ் - உருவில்லது. கற்பனை என்பது கற்பின் எனத் திரிந்து நின்றது. எதிரற - இணையில்லாமல்.)
2498. துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.
பொருள் : செயலறலாகிய துரியம் அடங்கிய நிலையினைச் சொல்லுறும் பாழ் என்பர். சொல்லறல் - சொல்ல முடியாது ஆதல். அப்பாழை அறிவிலாதார் அறிதற்கரிய பெரும் பொருட்குப் பெரும் பொருளாம். பரம்பரம் என்பார்கள். அப்பாழ் அறிதற்கரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருளார் அருநிலமாகும். இவ்வுண்மையை அறிவார் யார் ? ஒருசிலரே என்க. அருநிலம் அப்பால் இடம். துரியாதீதம். (ஆதர் - அறிவில்லாதவர்.)
2499. ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களும் நீங்க, திரோதான மாகிய நகாரமும் மலமாகிய மகாரமும் நீங்கி, திருவருள் சத்தியாகிய பரை, என்றும் யகாரமாகிய ஆன்மாவை உண்மையான பரநிலையின் முடிவில் சிவசத்தியோடு சேர்ப்பிக்கும். ஆராயின் அதுவல்லவா ஆன்மாக்களால் அறியமுடியாத சிவாய நம என்பதன் கருத்தாகும். (ஆ என்று - பசு என்று.)
2500. உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறிந் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.
பொருள் : உருவாகிய உடலையே உள்ளமாகிய உயிர் என்றும் உயிரையே உடலென்றும் தடுமாறிக் கூறுவர். அது கலப்பால் ஒன்றுபட்டுப் புணர்ந்து நிற்கும் நிலைமையால் கூறப்படுவதாகும். இவ்வுண்மையை அருளால் உள்ளவாறு ஓர்ந்து உணர்வார்கட்குப் பள்ளமாகிய கருப்பையினுள் புக்கு உருப்பெற்றுத் தோன்றி உழலுமாறில்லை. திடராகிய உலகினில் உறைந்து நிலவுமாறும் இன்று; பாழாகிய உருவற்ற நிலையில் வீழ்ந்து அழுமாறும் இன்று. ஆகவே உயிர் உடல் என்ற வேறுபாட்டு உரை உண்டாவதில்லை.
28. காரிய காரண உபாதி
(காரிய காரண உபாதி யாவன : சீவ உபாதி, பர உபாதிகள். உபாதி - பந்தம், கட்டு.)
2501. செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.
பொருள் : முன் ஓதிய திருப்பாட்டின்கண் காரிய உபாதியாகிய சிவஉபாதி ஏழும் காரண உபாதியாகிய அருளுபாதி ஏழும் உள்ளவிடத்துத் தோன்றும் உபாதியாகிய வருத்தமும் அதனைச் சுட்டும் பெயர்களும் முற்றும் தோன்றாவறு அற்றொழிதல் வேண்டும். அற்றொழிந்தவிடத்து அவ்அணுவாகிய ஆருயிர் பற்றற்றார்க்கு என்றும் வற்றாப் பற்றாய் நிற்கும் பரசிவத்தின் அடியிணையைச் சாரும். சாரவே அச்சிவமாக நிற்கும். (சீவ உபாதி - காரிய உபாதிகள். பரோபதி - காரண உபாதிகள். அணுவன் - சீவன்.)
2502. ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறாறு அகன்ற சுழுத்தி அதில்எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.
பொருள் : திருவருள் நினைவால் முப்பத்தாறு மெய்களால் ஏற்படும் காரிய வருத்தம் என்னும் உபாதிகள் நீங்கும். நீங்கவே சிறப்பு நனவாய் மிகுந்த கனவின்கண் நிகழும் நனவும் உண்டாம். அதுபோல் ஆறாறு நீங்கிய உறக்கம் வந்துறும். அவ் உறக்கமும் எய்தாத நிலைபெற்ற பேறாகிய திருவடியின் கண் சார்ந்து தொம்பதப் பொருளாகிய ஆருயிர் இன்புறும். பேசுமிடத்து இதுவே திருவடிப் பேறாகிய நிலம் என்ப. (பேறா நிலம் - முத்தி.)
2503. அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.
பொருள் : உயிரெனக் குறிப்பதாய உடல்மெய் இருபத்து நான்கும் அகாரமாகும். பரமெனக் குறிப்பதாகிய உணர்த்து (சிவ) மெய் ஐந்தும் உகாரமாகும். மலமெனக் குறிப்பதாய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும். இம் முப்பத்தாறு மெய்களும் சிவரம் சிவமாகிய உயிர்க்குயிராய் வகரம் சிவபெருமானின் திருமேனியாய் யகரம் திருவருளின் கைப்படும் உயிராய்த் திகழும் என்க.
2504. உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.
பொருள் : உயிர்க்குயிராக நீக்கமற நிறைந்து அழிவல்லாது சோர்வினை நீக்கும் காரண உபாதிகள் உயிரின் பக்குவ நிலையில் உடனாய் நிற்கும் இறைவன் செய்யும் கருணையால் அல்லாமல் உயிர்களுக்கு நடுக்கத்தினைச் செய்யும் ஆணவத்தை நீக்குவது இயலாது. (அயிர்ப்பு - அயர்ப்பு - மயக்கம். உபமிதத்தல் - கருணைபுரிதல்.)
2505. காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே.
பொருள் : காரிய உபாதி ஏழில் ஆணவ மலக் குற்றத்தால் பசுத் தன்மையுடைய சீவன் மயங்கி நிற்கும். காரணோபாதியாகிய ஏழில், சீவன் ஒளியை அறிவதில் மேலான சிவன் கலந்து நிற்கும். காரியமாகவும் காரணமாகவும் உள்ள இவை கற்பனை யாகும். அசிபதப் பொருளை உணர்ந்து அனுபவிக்கும்போது அது நீங்கினபாழில் மேலான பரன் உள்ளது (கடும்பசு - ஆணவத்தால் மோகத்தில் பற்றுள்ள சீவன். சொற்பதம் - அசிபதம்.)
29. உபசாந்தம்
(உபசாந்தம் - விருப்பு வெறுப்பு அற்றிருத்தல்.)
2506. முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்தத் தனதுப சாந்தமே.
பொருள் : சிவஞானமே வீடு பேறாகிய முத்தி அடைவதற்கு வாயிலாகும். சிவனிடத்தில் தன் முனைப்பின்றி அவனது திருவடிகளைப் பொருந்தி யிருத்தலே பத்தி செய்யும் வழியாகும். சிவத்தைப் பொருந்திச் சிவமாதலே எண்சித்தி பெறுவதற்கு வழியாகும். ஆன்மா விருப்பு வெறுப்பின்றி அடங்கி இருத்தலே சத்தியை அடைவதற்குரிய வழியாகும்.
2507. காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்உப சாந்தப் பரிசிதே.
பொருள் : காரிய வருத்தம் ஏழும் தூவா மாயையினுள் ஒடுங்கும். காரண வருத்தம் ஏழும் தூமாயையின்கண் ஒடுங்கும். காரிய காரண வருத்தங்களின் வாதனைப் பற்றாகிய பசையறத் திருவருள் பெருமை வந்து தலைப்படும். அது தலைப்படுதலே ஒடுக்க மென்னும் உபசாந்தமாகும். இவ் விளக்கமே அதன் பரிசாகும். (பாரணவும் - பெருமை பொருந்தும்)
2508. அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.
பொருள் : ஒடுக்கச் செயலறல் ஆகிய துரியமே ஆவித் தூய்மை யாகும். பொருந்திய நனவினில் அப்பால் சிவனருள் இன்பமாகும். நிலை பெற்ற ஆவிக் காட்சியாவது சிவபெருமானின் திருவடியுணர்வில் கூடுவதாகும். அவ் வுணர்வின்கண் ஒடுங்கி நிற்பது உபசாந்தமாகும்.
2509. ஆறாது அமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல்பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.
பொருள் : ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களது சேர்க்கையால் ஆணவமல பந்தத்தை நீக்கிக் கொள்ளுதல், கிடைத்தற்கரிய பேறான தனது இயல்பான சொரூபத்தை அறிதல், தன் உண்மை அறிந்தபின் தத்துவங்களின் நீங்கித் தூய்மை அடைதல், அளவிட்டுக் கூறமுடியாத சுகநிலை பெறல். ஒளிக்கெல்லாம் ஒளியினை நல்கும் சிவனிடம் அடங்கி நிற்றல் ஆகியவை தத்துவங்களின் மாறுபட்ட உபசாந்த மாகும். (குருபரன் - பேரொளிச் சிவன். வியாத்தம் - அடக்கம்.)
2510. வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே.
பொருள் : தனக்குக் கிடைத்த உபசாந்தம் அமையச் சென்று, பொருந்திய சிவமாக ஆதலின் அச் சிவானந்தத்தில் அழுந்தி அந்நினைவு நீங்குதலும் மவுன நிலையாகிய சுக அனுபத்தோடு நின்று அதனையும் தீர்தல் என்பது உபசாந்த நிலை அமைவதற்கு வேண்டிய பத்துப் படிகளாகும். ஆணவம் அழிதல் முதலாக ஆனந்தத்தை ஒழிதல் ஈறாக உற்றவை உபசாந்தப் படி நிலைகளாகும்.
2511. பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.
பொருள் : பரை ஒளியில் வியாபகத்தைப் பெற்று, பரத்துடன் பிரிப்பின்றி திரையற்ற ஆழ்கடல் நீரை ஒத்து நின்று, குருவின் உபதேசத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவிக்கும் ஆன்மா பேச்சற்ற பேரானந்தத்தை அடைந்து பிறிவிக் கடலை நீந்தினவன் ஆவான். உபசாந்த நிலையில் ஆன்மா பெறும் அனுபவம் கூறியவாறு :
30. புரங்கூறாமை
(புறங்கூறாமையாவது புறத்தில் சென்று கூறாமை. அஃதாவது புறத்தில் பெருமையைக் கூறாமல் அகத்தில் அருமையைக் காணவேண்டும் என்பது. உபசாந்தம் பெற்றபின் புறம் செல்லல் கூடாது என்பது.)
2512. பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.
பொருள் : சந்திரனில் காணப்பெறும் முயல்போன்ற கறையை எய்யும் பொருட்டு மணிகட்டிய வாளைக் கொண்டு செல்பவர்போல் திருநீலகண்டனைக் காண மாட்டாதவர் உப சாந்தநிலையை அறிவோம் என்று கூறித் திரிவர். இவர் வீண் ஆரவாரம் செய்பவரே யன்றி அகத்திலே அறியாதவர் ஆவர்.
2513. கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தா அலைகடல் ஆறுசென் றாலே.
பொருள் : வலிய தாளையுடைய கருடன் விசும்பு ஆறாகப் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால் மிகவும் ஆழமுள்ள புற்றில் வாழும் பாம்பு புடைபெயராது மூச்சு மடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றது. அதுபோல் நெஞ்சமே நீயும் அடங்கி நிற்கும் வழியை அருளால் அறிந்து அடங்குதல் வேண்டும். அம் முறையினை ஒரு சிறிதும் உணராமல் உணர்ந்தாரைப் போன்று நெஞ்சமே வீண்பெருமை பேசுகின்றாய். அதனால் ஆம்பயன் ஏதும் இன்று. ஆறு அலைகடலிற் சென்று ஆண்டே பிரித்தறிய வாராமல் அடங்கியிருப்பதுபோல அடங்கியிருப்பாயாக.
2514. கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே.
பொருள் : பகைவர் இறந் தொழிய போர்முனையில் நிலைபெற்ற போரைச் செய்வது அற்ப அறிவுடையோர் செய்யும் ஆண்மைத் திறனாகும். உபசாந்த நிலையில் பொருந்துதலை உடையவர் செய்யும் தவம் கைகூடினால் மக்கள் விரும்பிக் கேட்டவற்றை அளிக்கும் ஒப்பற்ற தேவராவர். (கருவாய் - போர்க்களம். மருவலர் அடங்க வல்லவர். தருவலர் - தர வல்லவர்.)
2515. பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழு நாடிஅங்கு அன்புற லாமே.
பொருள் : சிவத்தை தவிர மற்றைய தேவர்கள்பால் பற்றுக் கொண்டு மாறுபட்ட கருத்தை அடையாதீர். எல்லா உலகங்களுக்கும் அவனே ஒப்புயர்வற்ற தனபி பெருங்கடவுள் என்று நினைத்து வழிபட்டால் பதினெண் கணத்த வரும் உமது அழகிய அடியைக் காண வணங்கி எழுவார்கள். அவ்வாறு இறைவனை நாடி இன்புறலாம்.
2516. என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய எவ்வுயி ராய விகிர்தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாமே.
பொருள் : என்னைக் காட்டிலும் எனக்கு இனிமை பயக்கும் இறைவனை, பொன்னைக் காட்டிலும் பிரகாசமுடைய தூய்மையனை, விளங்குகின்ற எல்லா உயிர்க்கும் உயிராயுள்ள விகிர்தனைப் பொருந்துமாற்றால் மனத்தைத் திருவடியில் பதித்து நினையுங்கள்.
2517. நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவத்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.
பொருள் : நிற்கும்போதும் உட்கார்ந்திருக்கும்போது படுத்துள்ள போதும் மல மில்லாச் சிவத்தைப் பொருந்தும் வகைகளில் வாயால் கூறுவாராகிலும், ஐம்புல ஆசைகளைக் கெடுத்து அவற்றினை ஒவ்வொன்றாய் அறியும் தன்மையைப் போக்கி, சிவத்தோடு உண்மையாகவே பொருந்தி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெறும் தன்மையைப் பெறுவீராக.
2518. நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே.
பொருள் : சீவர்களது உணர்வுக்கு உணர்வாயும் எல்லா உலகமாயும் ஏழ் உலகத்தவரும் எண்ணத்தகுந்த அறிவாகவுள்ள எனது பிரானும் தகுதி யுடையோரை அறிபவனும் ஆகிய இறைவனை, தியானத்தில் பொருந்தி யிருக்கும் ஞானியரை, வானுலகவாசிகள் உய்தி பெறுவதற்காக விரும்புகின்றார்கள்.
2519. விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்
கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்
எண்உற வாகமுப் போதும் இயற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே.
பொருள் : ஆகாய மாண்டல வாசிகளாலும் புறத்தே அறியமுடியாத பெருமானை, காலை வேளையில் கண் மலரால் புறத்தே காணாமல் அகத்தே பார்வையைச் செலுத்திக் கண்டு, எண்ணத் தகுந்த தொடர்பாக மூன்று வேளைகளிலும் இச்சாதனையை நீ செய்துவந்தால் மேலான பரனாந் தன்மை பெறுவாய்.
2520. ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே.
பொருள் : சிவபெருமான் தன்னை ஒப்பாரின்றி ஏழ் உலகங்களிலும் வியாபித்துள்ளவன். அவனுடைய திருவடியைத் தஞ்சமாகக் கொண்ட பின்பு பேரருளை அளித்த பெருமை மிக்க வள்ளலுமாவாள். மாறுபாடில்லாத மனத்தை உடையவரது அறிவினுள் விளங்குபவன். வாடாத சகஸ்ரதள மலரைப் பொருந்தி நிற்கும் புகழை உடையவன் ஆவான். (பொன்றாத போது - வாடாத மலர் உள்ளத்தாமரை எனினுமாம்.)
2521. போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்
காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
ஆற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.
பொருள் : எந்தையாகிய சிவபெருமானின் பொன்னான திருவடியைப் போற்றி என்று வழுத்தினேன். பின்பு திருவடியினை ஏற்றுதலாகிய பரவுதலைச் செய்தேன். செய்யவே அகத்தே ஓர் ஓசை உண்டாயிற்று. அவ்ஓசை உயிர்ப்புப் பயிற்சியால் அகத்துத் தொடர்ந்து எழும் அடிக்கும் மணியோசையாகும். அகவிளக்காய்த் தோன்றும் அவ்ஓசை உடம்பு எங்கணும் கலந்து நிற்கும். அத் தன்மையினையும் அதனால் விளங்கும் அருளாற்றலையும் அந்நாள் கண்டேன். (போற்றி - காத்தருள்வாயாக. இகர ஈற்று வியங்கோள்.)
2522. நேடிக்கொண்டு என்உள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக்கு ஆரும் உணர்ந்தறி வார்இல்லை
கூடுபுக்கு ஏறுலுற் றேன்அவன் கோலம்கண்டு
மூடிக்கண் டேன்உலகு ஏழும்கண் டேனே.
பொருள் : என்னுடைய அகத் தாமரையில் நான் இறைவனைத் தேடி அவன் அங்கு எழுந்தருளி யிருப்பதைக் கண்டு கொண்டேன். அவ்விதம் உடலில் விளங்கும் அவனை உட்புகுந்து காண்பார் இல்லை. எலும்புக் கூட்டைத் தாங்கி நிற்கும் பிரம தண்டத்தின் வழியாக உச்சித் தொளையை அடைந்தேன். அவனது கோலத்தைக் காண்ணை மூடிக் கண்டேன். அப்பொழுது உலகப் பொருள்கள் யாவும் கண்டேன்.
2523. ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும்
தேனும் இருக்கும் சிறுவரை ஒன்றுகண்டு
ஊனம்ஒன்று இன்றி உணர்வுசெய் வார்கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே.
பொருள் : சிவத்தைப் புகழ்வதால் அமைவதான ஞானமும் சிவானந்தம் தேறலும் இருக்கும் புருவ மத்தியை அறிந்து, தேகத்தைக் கடந்து நிராதரத்தில் நினைவைப் பதித்தவர்க்கு ஆகாயத்தைத் தேகமாக்கும் வீரனும் அங்கு விளங்குவான். சிறுவரை - மேரு என்னும் பொன்மலையாகும். அதுவே புருவநாடு என்ப. புருவ நடுவினை மேரு என்றும், முதுகெலும்பினை மேருத் தண்டம் என்றும் கூறுப. (மேருமறவன் - உருத்திரன்.)
2524. மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகும் சுடர்பர மானந்தத்
தாம்மதி யாகச் சகம்உணச் சாந்திபுக்கு
ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.
பொருள் : மண்டையின் ஆணைக்கண் விளங்கும் திங்களின் மதியிடத்துத் தாம் அறிவாய் நிலைநின்றவர் அகப்பெருந்தவத்தோராவர். தூயமதியாகத் தம்மதிக்கும் மதிகொடுப்பவன் பேரின்பமான சிவபெருமான் அவன். அவன்மதியே தம்மதியாக உலகினைத் தம் இடத்து இருப்பதாக நுகர் ஒழிவொடுக்கம் புகுந்த நினைவினர் ஒண்மையராவர். ஒழிவு - உபசாந்தம். அவரே மீண்டும் பிறப்புக்கு ஆம் பெருமலம் அற்றோராவர். திருவடிக்கீழ் அமைவுபெற்ற மெய்யன்பருமாவர். (மாமதியாம் - ஆஞ்ஞையிலுள்ள சந்திரனிடத்து உள்ளதாம்.)
2525. பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதம் அற்று எனதுயான் மாற்றிவிட்டு ஆங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.
பொருள் : சாலோகம் சாமீபம் சாரூபம் என்ற பதிமுத்தி மூன்றையும் குற்றமுடையவை என்று நீக்கி, போகத்தை அளிக்கவல்ல மாயா காரியமான இருளை விட்டு ஆணவமற்று எனது யான் என்னும் புறப்பற்று அகப்பற்று ஆகியவைகளை அறவே நீக்கி, அங்குச் சிவத்துடன் ஒன்றாய் நிலைத்திருப்பவர் சிவசித்த ராவர். (பரமுத்தி - சாயுச்சியம்.)
2526. சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்தும்தோ யாதவர்
முத்தர்அம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.
பொருள் : செந்தமிழ்சேர் முந்திய சித்தராவர் சிவ பெருமானை அருளால் உணர்விற் கண்டுணர்ந்த ஒண்மையர். அவன் திருவடி நினைவை விட்டு அகலாத சீரினர். தூமாயை தூவா மாயைகளுடன் தோய்ந்திருப்பினும் தாமரை இலை நீர்போல் ஒட்டுப் பற்றின்றி ஒருவனையே எண்ணும் மட்டில் அருள்சேர் திருவினர். திருவடிப் பேற்றினர். ஏனையாரைத் திருவடிப் பேற்றிற்கு ஆளாக்கும் நம்மூலரும் நால்வரும் போன்ற வாயிலினர். குண்டலிக் கண்ணும் அகத் தவத்தால் ஐந்தெழுத்தால் ஓமஞ்செய்யும் தூயர். இவர் அருளோ னாகிய சதாசிவத் தன்மையர் ஆவர். (சித்தர் - சிவத்தைக் கண்டவர். மூலத்துச்சத்தி - குண்டலினி.)
31. அஷ்டதள கமல முக்குண அவத்தை
(அஷ்டதள கமலம் - எட்டு இதழ்த் தாமரை, முக்குணம் - தாமதம், இராசதம், சாத்துவிகம். அவத்தை - நிலை.)
சீவன் சிரசைச் சூழவுள்ள எட்டிதழ்த் தாமரையில் முக்குணத்தால் பெறும் நிலை அஷ்டதள கமல முக்குண அவத்தையாகும்.
2527. உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்துஎண் திசையும் நிறைந்துநின் றாரே.
பொருள் : கவிழ்ந்த சகஸ்ரதளமாகிய எட்டிதழ்த் தாமரையில் சூரியன் உதிக்கின்ற கீழ்த்திசையில் இந்திரனும், தென் கிழக்கு மூலையில் அக்கினியும், தென்திசையில் இயமனும், தென்மேற்குத் திசையில் நிருதியும், மேற்குத் திசையில் வருணனும் வடமேற்குத் திசையில் நல்ல வாயுவும், வடக்குத் திசையில் மதிக்கத்தக்க குபேரனும் வடகிழக்குத் திசையில் ஈசானரும் நியதி செய்யப்பட்டுச் சிரசைச் சூழ வீற்றிருந்தனர்.
2528. ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியதன் உள்ளே
சுருங்கிய தண்டின் சுழுமுனையின் ஊடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.
பொருள் : நெஞ்சத் தாமரையானது சேர்ந்து காணப்படும் எட்டிதழ்த் தாமரையன்று இயம்பப்படும். பெருமைமிக்கதாகிய மாயாபுரி என்னும் இவ்வுடம்பகத்து முதுகந்தண்டாகிய சுழுமுனை நாடி மிகவும் நுண்ணியதாய் அமைந்துள்ளது. அத்தண்டினூடே அடங்கிய அறிவுப் பேரொளியினை அகத் தவத்தால், அருளால் ஆய்ந் தெழுங்கள். அதுவே உய்யும் வழியாகும். இனி அப்பேரொளிப் பிழம்பினை நினைந்து உய்ந்து ஆய்ந்து எழுங்கள் என்றலும் ஒன்று. (தண்டு வீணாத் தண்டு. அதாவது முதுகுத்தண்டு எலும்பு. சகஸ்ரதளத்தைச் சிலர் எட்டிதழ் தாமரை என்பர்.)
2529.மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டலர் உள்ளே இரண்டலர் உள்ளுரின்
பட்டலர் கின்றேதார் பண்டம் கனாவே.
பொருள் : நெஞ்சத் தாமரையின் விரிவினைப் பகுக்குங்கால் மூன்றாகப் பகுக்கப்படும். அவை முறையே இதழ், கொட்டை, கொட்டைநடு என்ப. கொட்டை - கர்ணிக்கை. இம்மூன்றினும் விட்டு நீங்காது தொன்மை உருவாக விளங்கும் மன்னும் ஆவி நிறைந்து நிற்கும். உலகமே உருவமாகக் கொண்டு திகழும் இறைவன் சோதி விரிசுடர் எனப்படுவன். அவனை விராட் எனவும் அழைப்பர். எட்டிதழ்த் தாமரையாகிய இதன்கண் கொட்டையும் நடுவும் அகமுள்ளனவாகும். அவ்விரண்டனுள்ளில் விளங்குவது ஆவியாகும்.
2530. ஆறே அருவி அகம்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.
பொருள் : அகத்தின்கண் அமுதப் பெருக்காகிய சிற்றாறு ஒன்று உண்டு. அவ்வாறு அருளால் போய் நிறையும் நெஞ்சம் குளமும் ஒன்றுண்டு. அங்குத் திகழ்வது அளவிடப்படாது சிவநிலையாகும். அதன் இயல்பும் நனிமிகு நுண்மையாகும். அங்குக் குவிந்த முலையினையுடைய அருள் அன்னையை ஒரு கூறாகக் கொண்டு சிறப்பாக வீற்றிருப்பவன் சிவபெருமான். அவனே தவலில் விழுப்பொருள் ஆவான். (தவலில் - கெடுதல் இல்லாத)
2531. திகையெட்டும் தேரெட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்நின்று உதிக்கின்ற வாறே.
பொருள் : எட்டுத் திசைகளும், எட்டுத் திக்குப் பாலகர்களும் அத்தேவதைகளின் வாகனங்களும் அட் மூர்த்தமும் ஆக நின்ற ஆதிப் பிரானை, கன்மேந்திரியம் ஐந்து ஞானேந்திரியம் ஐந்து மனம் புத்தியோடு பன்னிரண்டும் பொருந்தி நிற்கில், கவிழ்ந்துள்ள எட்டிதழ்களை யுடைய தாமரை உள்ளிருந்து வெளிமுகமாய் மலர்ந்து விளங்கும்.
2532. ஏழும் சகளம் இயம்பும் கடந்தெட்டில்
வாழும் பரம்என்று அதுகடந்து ஒன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான தனித்தன்மை தானே.
பொருள் : எட்டிதழ்த் தாமரையில் கிழக்கு முதல் வடக்கு முடியவுள்ள ஏழு திக்குகளும் சீவன் பொருந்தும் உருவ நிலைகளாகும். பரம் என்ற நிலை எட்டாவதான ஈசான திக்கில் உள்ளது. நடுவாகிய ஒன்பதில் தத்துவங்களை முடிவு செய்யும் பரம அபரமான சதாசிவம் உள்ளது. மேல் நோக்கி நிமிர்வதில் பத்தாவதான நிலையில் ஆணவமற்ற ஆன்மா சிவத்துடன் பொருந்தி யிருக்கும் சிறப்பான நிலையாகும்.
2533. பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றஅவ் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றில் பகவனே.
பொருள் : உலகினுக்குப் பல ஊழிகளை அமைத்து வளர்ச்சியுறச் செய்பவன் சிவன். அவனே பகலோன் என்றும், இயைவன் என்றும் அழைக்கப்படுவன். நல்ல ஊழிகள் ஐந்தென்ப. அவை நீக்கல் முதலிய ஐவகைக் கலைகளில் நிகழும் ஐவகை ஒழுக்கமும் என்ப. இவை அண்டத்துச் செல்லும் ஊழிகளாகும். அவ்வூழியுள் ஒன்றுபவனும் சிவனே, ஊழி உச்சியினுள் ஒன்றுபவனும் சிவனே.
2534. புரியும் உலகினில் பூண்டஎட்டு ஆனை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வெளியும்
பரியும் ஆகாசத்தில் பற்றது தானே.
பொருள் : திருவருளால் உண்மை புரியும் உலகத்தினிடத்து எண்பேருருவாய்த் திகழ்பவன் சிவன். சுற்றித் திரியும் களிறுகளும் தேவர் கூட்டமும் தீயும் மழையும் இயங்குதற்கு வழியாகவுள்ள வெளியும் இவையனைத்திற்கும் இடம் தரும் அறிவுப் பெருவெளியும் அருளால் நோக்குவார்க்கு அறிவுப் பெருவெளியைப் பற்றாகக் கொண்டு நிகழ்வது புலனாகும். (எட்டானை - எண்வகை வடிவு உடையவனை.)
2535. ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.
பொருள் : உயர்வரை உச்சியென்பது ஆணையிடமாகும். அதுவே நெற்றிப் புருவமாகும். அங்கு ஆறு முதலிய தோற்றரவு இல்லாமல் இடையறாது நீர் நிரப்பும் குளம் ஒன்றுண்டு. உலகியல் தாமரை சேற்றில் பூப்பது. ஈண்டுப் பேசப்படும் ஆயிர இதழ்த் தாமரை அருள் வெளியிற் பூப்பது. அதனால் அது சேற்றில் பூவாததாகும். மாலையில் தாங்குருவே போன்று காணப்படும் பின்னற் சடையினையுடைய சிவபெருமான் பேருவகை யோடும் இப்பூ அல்லாமல் வேறு பூச்சூடான் என்ப.
2536. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.
பொருள் : ஒன்றும் இரண்டும் ஆகிய மூன்றும் முக்கரணங்களாகும். அவை முறையே உள்ளம் உரை உடலென்ப. இவற்றை மனமொழி மெய்கள் என்ப. இம்மூன்றும் தம் வயப்பட்டு ஒடுங்கிய காலத்து எந்நிலத்து நின்றாலும் இருந்தாலும் புலன் வென்று  இருந்து புகழ்மெய்ப் பொருளை நாடுவர். அவர்கள் சென்றும் இருந்தும் சிவத்திருவுடையாரே யாவர்.
32. நவ அவத்தை நவ அபிமானி
(நவம் - ஒன்பது. அவத்தை - உணர்வு நிலைகள். சீவ சாக்கிரம், சீவ சொப்பணம், சீவ சுழுத்தி. பர சாக்கிரம், பரசொப்பனம், பரசுழுத்தி, சிவ சாக்கிரம், சிவ சொப்பனம், சிவசுழுத்தி ஆகிய ஒன்பதும் சீவனது நவாவத்தைகளாம். நவாவத்தை - நவ+அவத்தை. வடமொழி தீர்க்க சந்தி. நவாபிமானி - நவ+அபிமானி - வடமொழி தீர்க்கசந்தி.)
2537. தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கர்ப்பன்அவ் யாகிர்தன்
பிற்பதம் சொல்இதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதுஅபி மானியே.
பொருள் : துவம்பத நிலையில் விசுவன், தைசதன், பிராஞ்ஞன் என்றும் நல்ல பதமாகிய தத்பத நிலையில் விராட்டன், இரணியகருப்பன், அவ்யாகிர்தன் என்றும், பிற்பதமாகிய அசிபத நிலையில் இதயன், பிரசாபத்தியன், சாந்தன் என்றும் சீவன் அழைக்கப் பெறுவான்.
2538. நவமாம் அவத்தை நனவாதி பற்றில்
பவமாம் மலம்குணம் பற்றற்று பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவில்
துவமார் துரியம் சொரூபமது ஆமே.
பொருள் : சீவ பர சிவத்துக்குரிய சாக்கிரமாதி நிலைகள் ஒன்பது வகைப்படுதலால், பிறவிக்குக் காரணமான மலம் குணம் ஆகியவற்றின் பற்றை அறுத்து, பற்றுவதற்கு அருமையான தவத்தால் எய்தும் மாறுதலற்ற அறிவு மயமான ஆகாயத்தில், சீவ சிவ பேதமற்றுத் துரியம் பொருந்தில் அதுவே சீவனின் உண்மை நிலையாகும்.
2539. சிவமான சிந்தையில் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தில் நல்சிவ போதம்
தவமாம் அவையாகித் தான்அல்ல ஆகுமே.
பொருள் : சீவன் சிவனையே நினைந்து கொண்டுள்ளதால் சீவனது தனித்தன்மை அழிந்து, பிறப்புக்குக் காரணமான ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் போய் ஒழிய ஒன்பதாகக் குறிப்பிட்ட வகையின் இறுதியில் நல்ல சிவஞானம் தவத்தால் அடையும் பயனாகித் தான் என்பது இல்லாமல் சிவமாக விளங்கும். (பாறுதல் - அழிதல்)
2540. முன்சொன்ன ஒன்பானின் முன்னூறு தத்துவம்
தன்சொல்லில் எண்ணத் தகாஒன்பான் வேறுள
பின்சொல்ல லாகும்இவ் ஈரொன்பான் பேர்த்திட்டுத்
தன்செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.
பொருள் : முன்னர் சொன்ன துவம்பத நிலையில் விசுவன், தைசதன், பிராஞ்ஞன் என்றும் நல்ல பதமாகிய தத்பத நிலையில் விராட்டன், இரணியகருப்பன், அவ்யாகிர்தன் என்றும், பிற்பதமாகிய அசிபத நிலையில் இதயன், பிரசாபத்தியன், சாந்தன் ஆகிய ஒன்பது நிலையில் பொருந்திய தத்துவம், தன் சொல்லில் அமையாத வேறு ஒன்பது உள்ளன. இவ்வாறு முன்னே சொன்னதும், பின்னே உள்ள யாவர்க்கும் யாவைக்கும் வினைமுதற் காரணமாம் சிவபெருமான் ஆதி பராபரம் ஆவன். அவன் கலப்பால் பராபரையாய், சோதியாய், பரமாய், உயிராய், கலையாய், மாயை இரண்டாய், வீடாய், திருவடிப்பேறாய் விளங்குவன் ஆகிய பதினெட்டு நிலைகளையும் ஒழித்துவிட்டு, சீவர்களைத் தானாகச் செய்யும் சிவன், தனித்துச் சிறந்து விளங்கும்.
2541. உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான்என்னும் பண்பினை நாடி
அகந்தெம் பிரான்என்பன் அல்லும் பகலும்
இகந்தனை வல்வினை யோடுஅறுத் தானே.
பொருள் : விரும்பப் படுவனவாகிய பதினான்கு வித்தைகளும் உயர்ந்தோர் பொருட்டு உணர்த்தியவன் சிவபிரான் என்றும் அவனது உண்மை நிலையை விரும்பி, இரவும் பகலும் உள்ளத்தில் எம்பிரான் என்று உணர்ந்து நிற்பன். இதனால் வலிய வினைகளோடு மூலத்தையும் அழித்து ஒழித்து அருளினான். அகத்து என்பது அகந்து என மெலிந்து நின்றது. வித்தைகள் பதினான்காவன: (வேதம் நான்கு; அங்கம் ஆறு; உபாங்கம் நான்கு. சிவனே இவற்றைப் பகர்ந்தான் என்பது மரபு.)
2542. நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடும் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல ஆறினன் நீர்மையன் தானே.
பொருள் : நீண்ட காலமாக நன்மை அடையத் தொகுத்துக் கூறியவை பல உள. அவற்றுக்குரிய தெய்வமும் பல வகையாகும். அவ்வாறு கூடுதலால் பெறும் பயனும் பலவாம். சொல்லப் பெறும் பகலிலும் இரவிலும் நினைந்து வழிபடுங்கள். அவ்வாறு நினைந்து அவ்வவ் இடங்களில் வழிபடுவார்க்கு அங்கங்கு நின்று அருள் புரியும் தன்மையன் ஆவான் சிவன்.
2543. ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம்உயிர் சொல்லுநல் தத்துவம்
ஓதும் கலைமாயை ஓர்இரண்டு ஓர்முத்தி
நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.
பொருள் : யாவர்க்கும் யாவைக்கும் வினைமுதற் காரணமாம் சிவபெருமான் ஆதி பராபரம் ஆவன். அவன் கலப்பால் பராபரையாய், சோதியாய், பரமாய், உயிராய், கலையாய், மாயை இரண்டாய், வீடாய், திருவடிப்பேறாய் விளங்குவன். இத்தகைய முறைமையுடன் கூடிய ஒன்பது வேறுபாட்டுடன் விளங்கி யருள்பவன் முழு முதல்வனாகிய சிவபெருமானே (ஆதி - முழுமுதல்வன்.)
2544. தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறா நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்குஅரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினைஉயிர் பெற்றதே.
பொருள் : உயிர்கள் ஆராய்ச்சி அறிவால் அடைய முடியாத உண்மைப் பொருளை அனுபவத்தில் அடையுமாறு செய்து, வேறாக நரகமும் சுவர்க்கமும் பூமியில் பிறப்பும் உயிர்களுக்கு அருள் காரணமாக அமைத்து வைத்தான். இவ்வுண்மையை உணராதார் வினையால் பிறப்பை அடைகின்ற உயிராகவே இருப்பர்.
2545. ஒன்பான் அவத்தையும் ஒன்பான் அபிமானி
நன்பால் பயிலும் நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பால் சிவமாதல் சித்தாந்த சித்தியே.
பொருள் : ஒன்பது விதமான அவத்தைகளில் சீவன் அபிமானித்து நின்று, அவ் ஒன்பது நிலைகளிலும் பொருந்தி நிற்கும். இவ் ஒன்பதைக் கடந்து சீவதுரியம், பரதுரியம் சிவதுரியங்களில் சிவத்தைப் பொருந்த செம்பொருளான சிவமாதல் சித்தாந்தத்தால் அடையும் செந்நெறியாகும். (அபிமானி - அதிதேவதை. முத்துரியம்: சீவ, பர, சிவ துரியங்கள். செம்பாற் சிவம் - செம்மையுடைய சிவம்.)
33. சுத்தா சுத்தம்
(சுத்தம் - தூய்மை; அசுத்தம் - தூய்மையின்மை. சுத்தாசுத்தமாவது அகத் தூய்மையும் அகத் தூய்மையின்மையுமாம். சுத்த+அசுத்தம்=சுத்தாசுத்தம் - வடமொழி தீர்க்கசந்தி.)
2546. நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி இருக்கும் குணம்அது வாமே.
பொருள் : நாசி நுனியினின்றும் புறப்பட்டு வெளிப்போதரும் உயிர்ப்பு பன்னிரண்டு விரல் அளவு வரையில் ஓடும். அங்ஙனம் ஓடும் அவ் உயிர்ப்பின் இறுதிக்கண் விளங்கி அருள்பவன் சிவபெருமான். அஃது அவன் இருப்பிடம் என்னும் உண்மையை யாரும் அறியார். அங்ஙனம் இருப்பதாகப் பெருமறை பேசியிருக்கும் எனினும் அறுதியிட்டுக் கூற நாணியிருக்கின்றது. இதுவே அம்மறையின் குணமாகும்.
2547. கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து
உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்
கருவினை யாவது கண்டகன்று அன்பில்
புரிவன கன்மக் கயத்துள் புகுமே.
பொருள் : உயிர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் செய்பவனின் கருத்தையும் உரிமையையும் செய்வதையும் பொறுத்து அமைவதாய் உள்ளது. இவ்விதம் செய்வதால் பிறவிக்குக் காரணமான வினையாய் அமைவதை அறிந்து உரிமை கொண்டாடாமல் நீங்கி அன்பினால் செய்வன உயிர்களுக்குரிய கன்மத்தைத் தேய்ப்பதாகும்.
2548. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.
பொருள் : மாயையாகிய திரைசீவர்களை மறைக்க மறைந்துள்ள ஈஸ்வரன், அம்மாயை யாகிய திரை அகன்ற போது அப்பொருளான ஈஸ்வரன் வெளிப்படும். மாயை நீங்கும் படி அப்பொருளில் மறையவல்ல உத்தம அதிகாரிகளுக்கு உடலும் இல்லை; மனமும் இல்லை என்பதாம்.
2549. மோழை யடைந்து முழைதிறந்து உள்புக்குக்
கோழை அடைக்கின்ற அண்ணல் குறிப்பினில்
ஆழ அடைத்தங்கு அனலில் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.
பொருள் : தியானத்தினால் புருவமத்தியை யடைந்து, கபால வழியைத் திறந்து அதனுள் புகுந்து, கோழை வந்து அடைக்கின்ற இடத்தில் அண்ணல் ஒளி காட்டும் குறிப்பினில், கீழ்ப் போதலின்றி அடைத்து அங்கு உண்டாகும் அக்கினி கலையைப் பிரகாசப்படுத்தும் முறையில் மனம் தாழ்வான மாயைவழிச் செல்லாமல் நிறுத்துவதே தன்னுடைய சாதனா பலமாகும். (மோழை - புருவநடு.)
2550. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயென்றும் தேடித் திரிபவர்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.
பொருள் : உடலில் இருந்து கொண்டு சூக்கும தேகத்தோடு உறவு செய்து வைப்பவனை உடலின்கண் அக்கினி கலையில் விளங்கும் சிவத்தை, தேசங்களில் சென்று புறத்தே வழிபாடு செய்பவர் உடலில் சிவம் விளங்குவதை அறியாதவராவர்.
2551. ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூச மாம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூச மாம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூச மானிடம் ஆசூச மாமே.
பொருள் : ஆசூசமாகிய தீட்டுத் தீட்டு என்று செப்புவர் அதன் உண்மை உயர்வறியா எண்மையர். அத்தீட்டு உண்டாகும் இடத்தின் ஒண்மையினை உணரார். அது கருப்பையின்கண் உண்டாவதாகும். அதனை அறிந்தபின் அதுவே திருவடிப்பேற்றுக்கு நேர்வாயிலாக வகுத்த மானிடப் பிறவியின் உடம்புக்குக் காரணமுதலாகும் என்னும் உண்மை புலனாகும். (ஆசூசம் - தீண்டல், சூதகம். ஆமிடம் - உண்டாகும் இடம்.)
2552. ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்கு
ஆசூசம் இல்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்கு
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.
பொருள் : தத்துவ ஞானத்தால் தன்னை உணர்ந்தவருக்கு அசுத்தம் என்பது இல்லை. எல்லாத் தத்துவங்களையும் சங்கரிக்கும் அரனை வணங்குவார்க்கு அசுத்தம் இல்லை. மூலாக்கினியைத் தூண்டி ஒளிபெறச் செய்யும் அக்கினிகாரியம் செய்வார்க்கும் அசுத்தம் இல்லை. மேலான வேதத்தை உணர்ந்த ஞானிக்கு அசுத்தம் என்பதே இல்லை.
2553. வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.
பொருள் : அரனை வழிபாடு செய்து வணங்குவார்க்கு, உச்சிக்குழிக்கு மேலுள்ள ஊர்த்துவ சகஸ்ரதளம் சிறப்புற அமைந்து ஒளிபெருகி நிற்பதில் அகத்தூய்மை தொடங்கும். குழியில்பட்டு விந்து நீக்கம் செய்பவர் ஆதார நீராதார யோகங்களால் உணர்த்தும் குறிகளைப் பொருந்தார். வீணாத்தண்டினைப் பொருந்தியுள்ள அதோ முகத்தை ஊர்த்துவ முகமாக்கினவர்க்கின்றிச் சிவம் காணப்படாததாகும். (சுழி - உச்சிக்குழி. கழி - வீணாத்தண்டம்.)
2554. தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவும் ஆமே.
பொருள் : தூய்மணியாகிய செம்மணி சிவபெருமான், தூய அனல் புறத்தனலுக்கு முதலாய் அகத்தனலாய் நிற்கும் ஒளி என்னும் பூத முதலாம் தன் மாத்திரையாகும். புறத்தனல் தீயாகும். இவ்விரண்டின் முதலாகிய பாய அருளையும் தூய மாமாயையும் அருளால் அறிவார் பலரில்லை. முதல் அவ்விரண்டின் மூலமாகிய அருளையும் தூமாயையையும் அருளால் அறிவார்க்கு அவ்விரண்டும் முறையே நன்மையினாலும் தன்மையினாலும் தூயனவேயாகும். (தூரி - மூலம்).
2555. தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளாத் தூயடிச் சொல்லே.
பொருள் : முன்மந்திரத்தில் கூறித் தூய்மையான மணியில் விளங்கும் சிவன் வைத்த தூய்மையான நெறி கரும நிவாரணம் செய்யும் பொருட்டு அமைத்ததாகும். அவ்வாறான மணியைச் செழிப்பிக்க நாதன் திரு நாமமாகிய ஒளி வேண்டும். அம்மணி கருவிகளை ஓயச் செய்து அட்டமா சித்திகளை அளிக்கும். தூய மணி மௌனாட் சரத்தின் பீடமாகும். (வாளா - (1) கருமநிவாரனம். (2) பிரணவஒளி. (3) ஓய்வு (4) மௌனம்.)
2556. பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவர் அன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.
பொருள் : எமது ஐயனாகிய சிவபெருமான் விரும்பப்பெறும் விழுப்பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் உள்ளவன். அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர், சொர்க்கம் நரகம் பூமி எனச் சுழன்று வரும் பிறவித் தளையில் மயங்கின உள்ளம் உடையவராய் அசுத்தமுடையவராவர்.
2557. வினையாம் அசத்து விளைவது உணரார்
வினைஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினைவிட வீடுஎன்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவுஅறி யாரே.
பொருள் : மயக்கத்தில் உள்ள சீவர்கள் வினையால் அசத்தாகிய மாயை வலுவடைந்து அதன் பயனாக விளையும் துன்பச் சூழலை அறிய மாட்டார்கள். ஞானத்தை உணர்ந்து அதன்வழி நிற்பதில் கொடிய வினை நீங்குதலையும் தெளிந்து அறியமாட்டார். வினைகள் சீவர்களைப் பற்றாமல் நிற்பதில் முத்திநிலை உள்ளது என்று வேதம் கூறும் உண்மையை அறியமாட்டார். தீவினையால் பந்திக்கப்பட்ட சீவர்கள் அதன் காரணத்தையும் அதனால் விளையும் பயனையும் அறியமாட்டார்.
34. மோட்ச நிந்தை
(மோட்ச நிந்தை யாவது, வீடு பேறு இல்லை என்று இகழ்ந்து கூறுதல். இது கூடாது என்க.)
2558. பரகதி உண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கண்ட தோறும்
துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.
பொருள் : வீடு பேறு உண்டு என்பதை இல்லை என்று மறுப்போர்கள், நரகத்தை அடைவது உலகவர் அறிவார்கள். மேலும் அவர் வீடுதோறும் சென்று பிச்சை எடுப்பர். அன்றாட உணவுக்காக அவர் குதிரையைப் போலத் தாவிச் சென்று அலையத் தொடங்குவர்.
2559. கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறிது வாமே.
பொருள் : குரு காட்டிய நெறியில் நின்று இறைவனுடன் ஒன்றுபட மாட்டாதார், இறைவனிடம் நாட்டம் கொள்ளாதவராய் நூல்களிலுள்ள நயத்தினை. அலங்காரமாகப் பேசிக் கொண்டிருப்பர். இறைவன் ஆன்மாக்களுக்குச் செய்த உபகாரத்தை எண்ணிப் பாடவும் மாட்டார். அவ்வாறு பாடி ஆடுபவர் எய்தும் பேறு இவ்வாறு ஆகுமோ? அகாது. (இது ஆமே - இது ஆகுமோ? ஏகாரம் எதிர்மறை - ஆடவல்லார். குரு உபதேசப்படி இறைவனைக் கூடுபவர் என்றபடி.)
2560. புறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என்று எண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென்று அழைத்தேன்
இறப்பற்றி னேன்இங்கி தென்என்கின் றேனே.
பொருள் : அகத்தே நின்று புறப்பட்டுப் போவதும் வருவதுமாகிய உயிர்ப்பினையும் நாட்டத்தினையும் திருவருளால் முறைப்படுத்தி ஒருமுகப்பட்ட எண்ணத்தால் முழுமுதற் சிவபெருமானை இறையாகிய பதி என்று எண்ணினேன். பற்றற்ற இடத்துப் பற்றற்று நிற்கும் சிவபெருமானைப் பதி என்று அழைத்தேன். சிற்றுணர்வும் சுட்டுணர்வுமாகிய யான், எனது என்னும் செருக்கு இற்றகலச் சிவபெருமான் திருவடியினைப் பற்றினேன். அவனும் இங்குற்றான். இஃது என் என்று அருளுகின்றனன். (இற - சீவபோதம் நீங்க.)
2561. திடரிடை நில்லாத நீர்போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல்
அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.
பொருள் : மேட்டு நிலத்தில் தங்காத நீரைப்போல, உடம்பினுள் பொருந்தி நில்லாமல் ஓடும் மனத்தில் அருளைக் கூட்டி வைத்து, கடலில் நில்லாமல் கடந்து செல்லும் கப்பல் கரை சேர்வது போல், பிறவிக் கடலில் நில்லாமல் சீவர்களைக் கரை சேர்ப்பதற்குத் தீவண்ணனாகிய சிவன் வெளிப்பட்டு நின்றான். சீவபோதம் கெட்டு நின்ற நிலையில் பிறவிக் கடலைக் கடப்பதற்கு இறைவன் தோணிபோல் உள்ளான்.
2562. தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும்
போம்வழி வேண்டிப் புறமே உழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
தீநெறி செல்வான் திரிகின்ற வாறே.
பொருள் : தாமரைக்கொடி, தடாகத்தைக் கடப்போரைத் தடுப்பது போலப் பரகதி இல்லை என்பார் தடுப்பர். அவர் பரத்தை அடைய வேண்டிய வழி புறத்தே உள்ளது என்று திரிவர். அடைவதற்குரிய வழியைக் காட்டினாலும் அவர்கள் அதனை உணராத மூடர்களாவர். அவர்கள் நன்னெறியை நாடாமல் தீயநெறியை நாடிக் கெடுகின்றனரே! என்னே பேதைமை!
2563. மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையும் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை உன்னகி லாரே.
பொருள் : அஞ்ஞானத்தினால் மூடுதல் இல்லாமல் இருக்கும் ஞானியர் நந்தியெம் பெருமானைத் தம்முள்ளே நாடி இருப்பர். ஆனால் அஞ்ஞானிகள் காட்டிலும் மலையிலும் மருத நிலத்திலும் ஊடுருவி இருக்கும் ஒப்பற்றவனை நினையாமல் கெடுகின்றனர்.
2564. ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறிவழி
நாவினின் மந்திர மென்று நடுஅங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.
பொருள் : இறந்த பிறகு சீவ யாத்திரை தொடங்குவது தெற்கு நோக்கி நரகத்துக்கும் வடக்கு நோக்கிச் சொர்க்கத்துக்கும் ஆகும். ஆனால் அழியாத அமரத்துவம் பெற்றவர் இலட்சியத்தை அடைய கிழக்கு நோக்கி நெற்றிக் கண்ணுக்கும் மேற்கு நோக்கிப் பிடரிக் கண்ணுக்கும் செல்வர். இவ்விரண்டுக்கும் இடையே நாவினுக்கு மேல் மந்திரப் பொருள் உள்ளது என்று நடுவிலுள்ள அக்கினி கலையைப் பிரகாசம் செய்து பொருந்தி விளங்குங்கள்.
2565. மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.
பொருள் : நன்னெறி நான்மை நற்றவமாகிய அழிவில் மாதவம் செய்வார் நன்னெறிக்கண் வந்து கூடுமாறு அருளால் நோக்கினும், தமக்குப் பொருந்துமாறு செவியறிவுறுக்கும் திருஐந்தெழுத்தின் திறத்தினைக் கொள்ளார். அவர் யாரெனின், பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிக்கும் சினமுடன் பேசும் தீவினையாளர். அவர்க்கு நீங்கா உறவாவது வல்வினையாகும். அதனையே எங்கும் தாங்கி நின்றார் ஆவர். (பேசின - உபதேசித்த தாரணை - மந்திரம்.)
35. இலக்கணாத் திரயம்
(லஷணா - இலக்கணை, திரயம் - மூன்று. இலக்கணையாவது ஒரு பொருளின் இலக்கணத்தை மற்றொரு பொருளுக்குத் தந்துரைப்பது. அதுவிட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டும் விடாத இலக்கணை என மூன்று வகைப்படும். கங்கையில் கிராமம் உள்ளது என்றால் கங்கை என்ற பெயர் கங்கையை விட்டு அதன் கரையைக் குறிப்பது விட்ட இலக்கணை. கறுப்பு நிற்கின்றது, சிவப்பு ஓடுகின்றது என்றால் கறுப்பு சிவப்பு என்னும் பெயர்கள் அந்நிறத்தை விடாமல் அவற்றையுடைய குதிரையையும் சேர்த்துக் குறிப்பதால் விடாத இலக்கணை. அந்தத் தேவதத்தனே இவன் என்றால் தேவதத்தன் என்னும் பெயர் முன்கண்ட காலத்தையும் இடத்தையும் விட்டுத் தேவதத்தனை விடாமல் குறிப்பது விட்டும் விடாத இலக்கணையாகும்.)
2566. விட்ட இலக்கணை தான்போம் வியோமத்துத்
தொட்டு விடாதது உபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.
பொருள் : விட்ட இலக்கணை ஆன்மா ஆகாயத்தில் செல்லும் என் பதில் அமைகிறது. விடாத இலக்கணை ஆன்மா உபசாந்தத்தில் பொருந்தும் என்பதில் அமைகிறது. விட்டும் விடாத இலக்கணை ஆன்மா சத்தம் முதலியவற்றைக் கேட்டல் முதலியன செய்யும் என்பதில் அமைகிறது. (இவை மூன்றும் ஆன்மாவில் பொருந்தும் பொது இலக்கணம்). அதன் உண்மை இலக்கணம் இம்மூன்று இலக்கணைக்கும் அப்பாற்பட்ட இலக்கணப் பொருளாய் அமையும்.
(இலக்கணைகளையும் அவை தத்தவ ஆராய்ச்சிக்குப் பயன்படும் முறையையும் கூறியவாறு.)
2567. வில்லின் விசைகாணில் கோத்துஇலக்கு எய்தபின்
கொல்லும் களிறுஐந்தும் கோலொடு சாய்ந்தன
வில்லுள் இருந்து எறிகூறும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிர்எதி ராமே.
பொருள் : ஓங்கார வில்லும் நீங்கா ஒப்பில் திரு ஐந்தெழுத்து நாணும், பாங்கார் ஆருயிர் அம்புமாகக் கனிந்த திரு அருளால் கோத்துச் சிவனாகிய குறி எய்துமாறு எய்தபின், அஃதாவது ஆருயிரின் முனைப்புத் தன்மை அற்றது என்பதாம். அறவே செயலற்ற நிலையாகிய இல் சமாதி என்ப. அதனுள் இருந்து அறிவுப் பெருந்திருவாம் அருள் ஒளிமிகும். அவ்வுயிர்க்குச் செம்மணி ஒளிபோன்று சிவக்கதிர் உணர்விற்கு உணர்வாய்த் தோன்றியருளி இன்பூட்டும் என்க.
36. தத்துவமசி வாக்கியம்
(தத்துவமசி வாக்கியம் - தத்+துவம்+அசி என்ற மூன்று பதங்களைக் கொண்ட வாக்கியம். நான்கு வேதங்களிலும் நான்கு மகா வாக்கியங்கள் உள. அவற்றுள் இது சாம வேத மகாவாக்கியமாகும். அது நீ ஆகிறாய் என்பது இதன் பொருள். இது குரு சீடனுக்கு முன்னிலையாக உபதேசம் செய்வது.)
2568. சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
தாவு பரதுரி யத்தினில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதம்
ஒலி விடும்தத் துவமசி உண்மையே.
பொருள் : சீவன் சீவதுரியத்தில் பொருந்தி, தத்துவங்களை விட்ட நிலை தொம்பதமாகும். அதன் மேலான பரதுரியத்தில் பரத்தோடு பொருந்திய நிலை தற்பதமாகும். இது சிவ துரியத்தில் பொருந்தி யிருப்பது அசி பதமாகிய உண்மை நிலையாம். சீவன் இதில் எல்லாத் தத்துவங்களும் நீங்கித் தத்துவ மசியால் பெறும் உண்மையான பேற்றை அடையும். (சீவன் பரமாய்ச் சிவமாதலே தத்துவமசி உண்மையாம். ஓவி விடும் - விட்டு நீங்கும்.)
2569. ஆறாறு அகன்ற அணுத்தொம் பதம்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துஉப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
ஈறான தொந்தத் தசிதத்வ மசியே.
பொருள் : அருஞ்சைவர் தத்துவம் ஆறாறும் நாமல்ல நம் உரிமையும் அல்லஎன உணர்ந்து பற்றறல் உண்மை காண் சுத்தமாகும். இந்நிலை தொம்பதச் சுத்தம் என்ப. ஒழி ஒடுக்கத்துத் தற்பத உண்மையாகும். திருவடிப் பேற்றினுக்குரிய ஆருயிர் இவற்றினின்றும் அகன்று சிவகுருவின் அருட்கொடையால் சிறப்பான நீ அது ஆகின்றாய் என்பதே தத்துவமசி என்னும் சொல்லுக்குரிய செம்பொருளாகும். (சீவன் நீங்கி - பசுத்துவம் ஒழிந்து. பிரசாதத்து - குருவின் கருணையினால்.)
2570. ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய விட்டு விடாத இலக்கணத்
தார்உப சாந்தமே தொந்தத் தசிஎன்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே.
பொருள் : அவனே இவன் என்னும் தேவதத்தனிடத்து, சொல்லப் பெறுவதாகிய விட்டுவிடாத இலக்கணை, தொந்தத்தசி என்ற முப்பதங்களிலும் உண்மையான சாந்தம் பெற்ற சீவனுக்கும் ஆகும். அவ்வாறாகிய சீவன் பரனாய சிவனாக ஆகும்.
2571. துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேக மான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமாம் அதும்சித் தாந்தவே தாந்தமே.
பொருள் : துவந் தத் அசி என்னும் சொல்லே தொந்தத்தசியாம். அவற்றின் பொருள் உண்மைநிலை பெறுதற் பொருட்டு வந்த தன்மையுடையது, இவ்வுடம்பாகும். பெருமை மிக்க தவக்குறிப்பாம் தத்துவ மசி வேதாந்த விளக்கமாகும். சிவய நம என்பது சித்தாந்த விளக்கமாகும். சித்தாந்தம் வேதாந்தம் இரண்டும் செம்பொருளே.
2572. துரியம் அடங்கிய சொலல்றும் பாழை
அரிய பரம்என்பர் ஆகார்இது அன்றென்னார்
உரிய பரம்பர மாம்ஒன்று உதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.
பொருள் : சீவ துரியத்தில் அடங்கிய சொல்வதற்கு இயலாத சீவப்பாழை, மேலான பரம் என்று கூறுவர் அதன் இயல்பை அறியாதார். இது பரநிலை அன்று என்பதை உணரமாட்டார். பரத்துக்கு மேலான பரமாகிய சிவம் உதிக்கின்றது. பூமி என்பதை யாரே அறியவல்லார்? அறியார் என்றபடி. முத்துரியம் கடந்த நிலையில் விளங்குவது சிவம்.
2573. தொம்பதம் தற்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமேல் நாடவே
உம்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவம்என லாமே.
பொருள் : தொம்பதம், தற்பதம், சொல்லப்படும் அசிபதம் மேல் ஓதியவாறு சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என முத்துரியமாகும். பொருந்தும் முப்பதமும் உயிர் அருள் செம்பொருளான சிவம் எனச் சிறப்புறச் சொல்லலும் ஆகும்.
2574. வைத்த துரிய மதில்சொரு பானந்தத்து
உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய்யுணர்வு
வைத்த படியே அடைந்துநின் றானே.
பொருள் : மூவகையான மேலோதி அமைத்த துரியத்தின்கண் உண்மை அறிவின்பமாகிய சொரூப ஆனந்தத்து உய்ப்பது ஓமொழி மறை என்க. அம்மறையினை ஏனைய நினைவுகளை விட்டிடப் பயின்ற உள்ளத்து நிலைநாட்டத் திருவடியுணர்வு கைகூடும். அது கை கூடவே சிவபெருமான் திருவடியின்பம் எய்தும்.
2575. நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்
பினமாம் மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கெட்ட மன்னனை நாடே
பொருள் : நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் ஐந்தையும் நாதமாகிய ஒலியின் முடியில் தங்க வைத்துவிடுக. அதன்பின் வேறுபாடுற்று நீங்கிய மலத்தையும் வைத்திடுக. அதன்பின்பு உண்மை உணர்தலாகிய சுத்த நிலையதாம் சிவனிலை வாய்க்கும். ஒலியாகிய நாதமுடிவின்கண் செயலற்று ஒடுங்கு நிலை சாந்த நிலையாகும். அந்நிலையின் நின்று மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமான் ஆதலின் அவனை நாத முடிவில் வைத்து நாடுக. (நாடுதல் - சிந்தித்தல், பினமாம் - பின்னமாகிய, மனவாசகம் - மனமும் வாக்கும்.)
2576. பூரணி யாதது புறம்புஒன்று இலாமையின்
பேரணி யாதது பேச்சுஒன்று இலாமையில்
ஓரணை யாதது ஒன்றும் இலாமையில்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.
பொருள் : இறைவனது எல்லையைக் கடந்து வேறு ஒரு பொருள் இல்லையாதலின் நாமம் இல்லாதது அதற்கு ஒரு செயலும் இல்லையாதலின் அது அகண்டமாய் என்றும் ஒரு தன்மைத்தாய் உள்ளது. அது வாக்கு இறந்து குணம் குறி ஒன்றும் இல்லையாதலின் கருத்தாலும் நெருங்க முடியாதது. உலகக் காட்சிக்கு வேண்டப்படும் காரணம் இல்லாமலே தன்னை விளக்கியருளும் பேரருளை உடையது.
2577. நீஅது ஆனாய் எனநின்ற பேருரை
ஆய்அது நான்ஆனேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரருள்
ஆய்அது வாய்அனந் தானந்தி ஆகுமே.
பொருள் : நீ அது ஆனாய் என்று குரு உபதேசித்தபடி அமைந்த மகாவாக்கியம் நாடிய அது நான் ஆனேன் என்று சீடன் பாவிக்கப் பாசம் முதலியவை நீங்கி, சிறப்பினையுடைய நந்தியனது அருளால் சேய்மையாகக் கருதப்பட்ட சிவமாக ஆக்கும். அவ்வாறாகி அதுவாய் அழிவினை அடையாத ஆனந்த சொரூபமாகும்.
2578. உயிர்பர மாக உயர்பர சீவன்
அரிய சிவமாக அச்சிவ வேதத்
திரியிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற ஓம்மய மாமே.
பொருள் : ஆருயிர் திருவருள் நினைவால் பரமாகிய திருவருள் நிலையினை எய்தும். அதன்மேல் சிவபெருமான் நிலையினை எய்தும். திரி போன்று அறிவுக்குப் பற்றுக் கோடாக விளங்கும். வேதத்தின் கண்ணும் சிவபெருமான் நிலையே சிறப்பு நிலையாகும். இந்நிலையினை உரையற்று உரைக்கும் நிலையில் மொழிவண்ணம் என்ப. (வேதத்திரி -அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வேதங்கள். ஓமயம் - பிரணவ வடிவம்; இருக்கு, யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்கள் என்றும் கூறவர்.)
2579. வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி உச்சி முதல்அவை யாய்நிற்கும்
தாய்நாடி ஆதிவாக் காதி சகலாதி
சேய்நாடு ஒளியெனச் சிவகதி ஐந்துமே.
பொருள் : வாய்நாசி புருவநடு நெற்றிநடு உச்சி ஆகியவற்றில் ஆகி, நாசி முதல் உச்சி முடிய பிரணவம் விளங்கும். தாய் நாடியான சுழுமுனையில் விளங்கும் நாதம் முதலாக சகலநிலையில் விளங்கும் தத்துவங்களும் சீவன் நாடுகின்ற ஒளியாக முன்னர்க் கூறிய ஐந்து இடங்களிலும் பிராண கலை பாய்ந்து சிவகதி அமையும்.
2580. அறிவு அறியாமை இரண்டும் அகற்றிச்
செறிவுஅறி வாய்எங்கும் நின்றசிவனைப்
பிறிவுஅறி யாது பிரான்என்று பேணும்
குறிஅறி யாதவர் கொள்அறி யாரே.
பொருள் : சுட்டி அறியும் அறிவு அறியாமை ஆகிய இரண்டையும் நீக்கி, அறிவுருவாய்ச் செறிந்து எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சிவனை, அவனை விட்டு நீங்காமல் எம் தலைவன் என்று விரும்பிப் போற்றும் குறியினை அறியாதவர், சிவத்தைத் தம்மிடம் பொருந்தும்படி செய்து கொள்ள அறியாதவர் ஆவர்.
2581. அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்தங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவுஅறி யாமே.
பொருள் : உலகியல் அறிவுடையோர் காண்பன சுகநிலையைத் தரும் அப்புத் தத்துவத்தையும் அக்கினித் தத்துவத்தையும் ஆகும். ஆனால் தத்துவ ஞானிகள் சுகத்தைத் தரும் அப்புத் தத்துவம் எவ்வாறு இவ்வுடலில் கலந்துள்ளது என்பதை அறிவர். எல்லாவற்றையும் அறியும் சிவன் அங்குக் கலந்திருந்து புலப்படுத்தினால் அல்லாமல் சீவர்களது சிற்றறிவால் பேரறிவுப் பொருளை அறியமுடியாது. (அப்பு - நீர், வீரியம். அனல் - அக்கினி, மூலாக்கினி.)
2582. அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.
பொருள் : சுட்டி அறியும் அறிவைக் கடந்து யாவற்றையும் ஒருசேர அறியும் திறமுடையவன் நந்தியெம்பெருமான். சுட்டி அறியும் கருவிகளை இழந்தபோது ஒன்றையும் அறியமாட்டாத அஞ்ஞான நிலையில் உள்ளவன் ஆன்மாவாகும். நிராதாரத்திலுள்ள சந்திர மண்டலம் விளங்கப் பெற்று அஞ்ஞான இருளை விட்ட பெருமை பெற்ற உயிர் இறைவனுடன் ஒன்றாம் சிவநிலையில் பொருந்தும். அந்நிலையில் அவ்வுயிர் பரம் என்ற பேரினைப் பெற்று விளங்கும்.
2583. அடிதொழ முன்னின்று அமரர்கள் அத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின்று அருளிப்
படிதொழ நீபண்டு பாவித்தது எல்லாம்
கடிதொழக் காண்என்னும் கண்ணுத லானே.
பொருள் : தேவ தேவனாகிய இறைவனது திருவடியைத் தொழ வேண்டி அவன் திருமுன்பு நின்று, முடியால் வணங்க இறைவனும் என்முன்னர் வெளிப்பட்டருளி எனது திருவடியை முறையாகத் தொழவேண்டி நீ பழமையில் நான் அது ஆனேன் எனப் பாவித்தது எல்லாம், சிறப்பாக இப்போது அமைவதை நீ காண்பாயாக என்று அருளியவன், நெற்றிக் கண்ணுடைய பெருமான் ஆவான்.
2584. நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்துஇவன் என்னடி யார்என்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்கவல் லானே.
பொருள் : ஒளியே திருமேனியாக உடையவனும், இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனும், பிறப்பில்லாதவனுமாகிய இறைவன், எனது உள்ளத்தே எழுந்தருளி வந்து என்னை அவனது அடியவனாக ஏற்றுக் கொண்டு, பொன்னொளி வண்ண இடையவனும் சகல தேவர்களாலும் புகழப் பெறுகின்றவனுமாகிய பெருமான், நீ மலமற்று விளங்குவாய் என்று எனது மலங்களை நீக்கியருளினான்.
2585. துறந்துபுக்கு ஒள்ளொளி சோதியைக் கண்டு
பறந்ததுஎன் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாஎன்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.
பொருள் : இறைவன் அருளிய பின்னர் நான் எனது பாசக் கூட்டமாகிய தத்துவங்களை விட்டு ஒண்மையான சோதியைக் கண்டு உள்ளமானது உடலைவிட்டு வேறாக எங்கும் செல்லவல்லதாயிற்று. எனினும் பணிவோடு அவனை மறவாதிருந்த என்னை இறைவன், நிலவுலகிலேயே மரணமின்றி நெடுநாள் வாழவைத்தான்.
2586. மெய்வாய்கண் மூக்குச் செவியென்றும் மெய்த்தோற்றத்து
அவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறையாட்ட ஆடலால்
கைவாய்இ லாநிறை எங்குமெய் கண்டதே.
பொருள் : மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் உடலில் பொருந்திய ஞானேந்திரியங்கள் ஐந்தும், அவைகளின் வழியான அந்தக்கரணம் நான்கும் பிற தத்துவங்களும் எவ்வகைப்பட்ட சீவ வருக்கமும் இறைவனது சங்கற்பத்தால் இயங்குவதால் அவன் இவற்றை இயக்குவதற்குரிய கையும் சொல்வதற்குரிய வாயும் இன்றி எங்கும் உடலாகவும் எங்கும் அறிவாகவும் நிறைந்த பூரணப் பொருள் என்பது காணப் பெறுகிறது. இறைவன் ஆட்ட உயிர்கள் ஆடுவதால் இறைவனே பூரணப் பொருளாம்.
37. விசுவக் கிராசம்
(விசுவம் - அகிலம், பிரபஞ்சம். கிராசம் - கவளம். விசுவக்கிராசம் - அகிலமும் கவளமாதல். இறைவனது பெரு நிலையில் எல்லாம் விழுங்கப் பெறும்.)
2587. அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயில்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.
பொருள் : ஆகாயத்தில் தோன்றும் நிழல் உருவம் ஆகாயத்தில் மறைவது போலவும், ஓடும் நீரில் உண்டாகும் நீர்க்குமிழி சிறிதுநேரம் உண்மை போல் விளங்கி அந்நீரில் மறைந்து விடுவது போலவும், உள்ள தன்மையைக் கண்டால், சுடர்விட்டு எழுகின்ற அக்கினியின் முன்னர்க் கர்ப்பூரத்தைப்போல, தூலமாகக் காணப்பெறும் இவ்வுடம்பு காணப்பெறாதாய்ப் பரத்தில் கரைந்து ஒடுங்குவது புலனாம்.
2588. உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர்எங்கு மாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
பொருள் : தூல உடல் ஒளிமயமான உயிருடன் பிரிப்பின்றி ஒன்றுபடின், அப்போது அது பரநிலையை அடைந்து சிவசத்தியுடன் ஒன்றுபடும். உடலாகிய சிறை நீக்கப்பட்ட பிறகு உடலில் இருந்த உயிர் சிவம் எங்கும் விளங்குவது போல விளங்கிப் பருப் பூதத்திலும் நுண் பூதத்திலும் கலந்து சிவ வியாபகத்தில் நிற்கும்.
2589. செவிமெய்வாய் கண்மூக்குச் சேர்இந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
குவிவுஒன்று இலாமல் விரிந்து குவிந்து
தவிர்வுஒன்று இலாத சராசரம் தானே.
பொருள் : செவி, மெய், வாய், கண், மூக்கு ஆகிய அறிகருவிகளும் பக்குவப்படாத மனம் முதலிய அந்தக்கரணமும் புருடனும் ஆகி ஐந்தும் பொருந்தி நிலைபெறாமல், உலகமுகமாக விரிந்தும் குவிந்தும் உள்ளமையின் பிரபஞ்சமாகிய அசைவனவும் அசையாதனவும் தவிர்க்க முடியாததாகும்.
2590. பரன்எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்
திரன்எங்கும் ஆகிச் செறிவுஎங்கும் எய்தும்
உரன்எங்கு மாய்உலகு உண்டு உமிழ்க்கும்
வரன்இங்ஙன் கண்டுயான் வாழ்ந்துற்ற வாறே.
பொருள் : முழுமுதற் சிவபெருமான் யாண்டும் நீக்கமறச் செறிந்து நின்றருள்கின்றனன். செறிவு - நிறைவு. அவன் எங்கணும் நிலைபேறாய் உயிர்க்கு உயிராகவும் உறைந்தருள்கின்றனன். மேலும் தான் அழிவின்றி நின்று எங்குமாய் நிலவி, காரிய அழிவுபாடாம் உலகினை ஒடுக்கிப் பின் தோற்றுவித்தும் அருள்கின்றனன். திருவருளால் இவ்வுண்மைகளை உணர்ந்து அவன் திருவடிச் சிறப்புற்று அவன் அருளால் வாழ்ந்தனன் என்க. (நிறைவு வியாபகம். திரன் - உறுதி. வரன் - மேன்மையான செயல்.)
2591. அளந்து துரியத்து அறிவினை வாங்கி
உளம்கொள் பரம்சகம் உண்டது ஒழித்துக்
கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.
பொருள் : தத்துவ விசாரணையால் அளந்தறிந்து சிவ வியாபகமாகிய அகண்ட அறிவு பொருந்தும் துரிய நிலையைப் பற்றி, உள்ளம் நிலைபெறுவதானால் பரம் சகமுகமாய்ச் சென்று உண்ட போகங்களை ஒழித்து, தெளிந்த பரம் சிவத்தைப் பொருந்தும் வகையில் அடைந்தால், நிலைபெற்று விளங்கும் சிதாகாய வடிவினன் ஆவான். (துரியத்து அறிவு - சிவஞானம்.)
2592. இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்து ளானே.
பொருள் : கனலிடைக் காய்ந்த இரும்பு தன்மேல் பட்ட நீரை உள் இழுத்துக் கொள்வதைப் போல, என்னை உள்ளே கொண்டு மிக மேன்மையான பரமானது கீழ் நோக்குவதை விட்டு, வலுப்பெற முப்பாழ் ஒளியையும் விழுங்கி, விளங்கிய எனது நந்தி எம்பெருமான் இதயத்தில் இருக்கின்றான். (முப்பாழ் - பரத்தினுடைய சீவப்பாழ், சத்திப்பாழ், சிவப்பாழ்.)
2593. கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும்முன் ஓதும் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெரு மானே.
பொருள் : வேழமாகிய நோய் உண்ட விளாங்கனிபோல் சீவனும் அதன் மேல் நிலையாகிய பரமும் சிவத்தின் முன் ஆகும். சீவன் துரிய நிலையை அடையுமாயின் சீவனது சுபாவத் தன்மை எல்லாம் சிவபெருமான் மாறும்படி செய்து தன்வயப்படுத்திக் கொள்ளும்.
2594. அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தம்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானமே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே.
பொருள் : சகல தத்துவங்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் உள்ள பரனாகிய சிவபெருமான் அவரவர்களுடைய மேலான பரம் என்ற நிலையில் பொருந்தியுள்ளான். அவனிடம் அணுகியவர்க்குப் பரத்தின் கீழான தத்துவங்களை உண்டு, காண்பான், காட்சி, காட்சிப் பொருள் ஆகியவற்றின் முடிவில் நந்தியெம் பெருமான் எழுந்தருளியிருக்கும் உண்மையினை நம்மால் அறியமுடியாது. (நேயம் - சிவம். நேயாந்தம் - சிவதுரியம்)
38. வாய்மை
(வாய்மை - சத்தியம். பொய்ப் பொருளிலிருந்து நீங்கி மெய்ப் பொருளைச் சேர்தல் இங்கு பேசப் பெறும்.)
2595. அற்றது உரைக்கில் அருள்உப தேசங்கள்
குற்றம் அறுத்தபொன் போலும் கனலிடை
அற்றற வைத்துஇறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.
பொருள் : அருள் உபதேசங்களால் மலம் நீங்கிய சீவனது இயல்பைக் கூறின், அனலிடையிட்டுக் குற்றத்தைப் போக்கிய பொன்னைப் போல்வதாகும். மலம் நீங்குமாறு இறைவனை மாறுதலின்றி மனத்தில் வைத்து தியானித்தால் இருளை நீக்கிய செழுமையான சுடராக விளங்கும்.
2596. எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான்என்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.
பொருள் : எல்லாவற்றையும் அறிகின்ற சிவமாகிய பேரறிவுப் பொருளை விட்டு, பிற உலகியல் பொருள் எல்லாவற்றையும் அறிந்தும் பயன் ஒன்றும் இல்லை. அவ்வாறு எல்லாவற்றையும் அறியும் பேரறிவுப் பொருளை நான் என்று பாவனைப் பயனால் உணரில் எல்லாம் அறிந்த சிவமாகச் சீவன் ஆகும் என்று கூறலாம்.
2597. தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதுஅறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனைக் கண்டுகொண் டேனே.
பொருள் : சிரசில் பொருந்தியுள்ள மேருவின்மீது நின்று இடைவிடாது தியானம் செய்து, அருள் சுரக்கின்ற பார்வதி தேவியை ஒரு கூறாக உடைய பரமேஸ்வரனை யானும் ஊன் பொதிந்த தேக தர்மத்தைக் கடந்து, சந்திரகலையில் மறைந்து விளங்கும் பெருமானைக் கண்டு கொண்டேன். (மாதறிமூர்த்தி - அர்த்தநாரி.)
2598. தானே உலகில் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்குஓர் தத்துவ மாய்நிற்கும்
வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாமே.
பொருள் : திருவடியுணர்வு கைவரப்பெற்ற ஒருவர் உலக முதல்வர் எனப்படும் தகுதியினராவர். அவரே உலகினுக்கு மெய்ப்பொருள் உணர்த்தும் மெய்ம்மையரும் ஆவர். செந்தமிழ் மாமறைகள் வானே பொழிவிக்கும் வண்மை வாய்ந்தது. அம்மறையினால் மிகச் செய்யும் திரு ஐந்தெழுத்தைக் கணிப்பதால் ஊனே உருகிய உள்ளத்துள் உறையும் ஒப்பிலாச் சிவபெருமானுடன் ஒன்றாய் ஒடுங்கும்.
2599. அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.
பொருள் :  சிவபெருமான் திருவருள் கைவரப் பெற்றதன் காரணம் என் கொல் என ஆராயின், திருவருள் விளக்கால் சிந்தை இருள்கின்ற பின் அவ்வுள்ளத்தின்கண் இறைவனை நாடி அதுவே விருப்பமாக இருப்பதாகும். அவ் இறைவன் திருவருளால் மருளுற்ற சிந்தையை மாற்றுவர். அருமைப் பொருள் உற்ற திருவடியைப் போற்றுவர். பொருள் : என்றும் பொன்றாமல் நின்று நிலவும் மெய்ம்மை (அமரில் - விருப்பமாக இருந்தால்,)
2600. மெய்கலந் தாரோடு மெய்கலந் தான் என்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்து ஊழித் தலைவனு மாய்நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.
பொருள் : மெய்ப் பொருளோடு கலந்திருப்பவரது ஊனிலும் உயிரிலும் பிரிப்பின்றி நிற்பவனும், பிரபஞ்சப் பற்று உள்ளவரிடம் சென்று அடையாதவனுமாகிய இறைவனை உய்யும் வகை அறிந்து நாடுபவரது பற்றுக்களை அழிப்பவனாய் நின்று அவரது உயிரிலும் உடலிலும் பொருந்தி இன்பத்தை விளைவிப்பவனாகவும் உள்ளான்.
2601. மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருள் புகுதாப் புனிதனை
கைகலந் தாவி எழும்பொழுது அண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.
பொருள் : மெய்யன்பினருடன் மிகவும் மெய்கலந்து விளங்குபவன் சிவன். பொய்க்கலப்பு உடையார்பால் ஒரு சிறிதும் புகுதல் செய்யாத ஒப்பில் ஒருவனாம் தூயோனை இடையறாது நினையுங்கள். அப்பயிற்சி மிகுதியால் ஆவி உடம்பினை விட்டு நீங்கி வெளி மேவுங்காலை அண்ணலாகிய சிவபெருமானைப் பண்ணமை திரு ஐந்தெழுத்தால் பரவி அவன் திருவடியிற் கலத்தல் செய்யுங்கள். அங்ஙனம் கலப்பாரே அவன் திருவடிக் கருத்தினை எய்தினோர் ஆவர். வாய்மைச் சிறப்பினை இதன்கண் காண்க.
2602. எய்திய காலத்து இருபொழு தும்சிவன்
மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்றும் நீத்திடில்
ஐயனும் அவ்வழி யாகிநின் றானே.
பொருள் : முன்மந்திரத்தில் கூறியவாறு சிரசில் பிராணன் மோது தலை அடைந்து பகலிலும் இரவிலும் சிவத்தை உடம்பில் பொருந்தும்படி நினைந்திருப்பின் சிரசின் மேல்உள்ள தலைவனாக விளங்குவான். பொய்யான பிரபஞ்ச நோக்கில் செல்லுதலையும் புலன்வழிச் செல்லுதலையும் விட்டு நிற்கில் தலைவனும் முன்கூறிய கபால வழியில் எதிர்ப்பட்டு விளங்குவான்.
2603. எய்துவது எய்தாது ஒழிவது இதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாள்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.
பொருள் : முன் இரு மந்திரங்களில் கூறியவாறு பிராண செயம் அமைவதும்  அமையாது போவதும் திருவருளைப் பொருத்ததாகும். இந்நெறி உத்தமமான நந்தியெம் பெருமான் சீவர்கள் உய்தி பெறும் பொருட்டு அருளிச் செய்ததாகும். பொய்யானவைகளுக்கு விளை நிலமான ஒன்பது துவாரங்களையும் அடைத்து நின்றால் மெய்யான ஆகாயம் புரவியைக் கொண்டு சீவ யாத்திரை செய்யலாம். (தாள் கொள்ளுதல் - தாழ்ப்பாள் இடுதல். மெய்யென் புரவியை - தேகத்தில் ஓடும் வாசியை.)
2604. கைகலந் தானைக் கருத்தினுள் நந்தியை
மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
பொய்மொழிந் தார்க்கே புகலிட மாமே.
பொருள் : சுழுமுனை நாடியில் கலந்திருப்பவனும் சிந்திப்பார் மனத்துள் விளங்கும் நந்தியும், மனத்தோடு உடம்பிலும் பொருந்தினவனும் வேத முதல்வனும் பிரபஞ்சப் பற்றை விடாதவருக்கு அருள் செய்யாத நிமலனும் ஆகிய இறைவன் உடல் பற்றையும் பிரபஞ்சப் பற்றையும் விட்டவர்களுக்குத் தஞ்சம் அளிப்பவனாக உள்ளான்.
2605. மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டுஆரும் திறந்துஅறி வாரில்லைப்
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்கு
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.
பொருள் : உண்மையான திருவடிகள் உள்ளத்தில் பொருந்தும்படி வைக்கின்ற நந்தியைச் சுழுமுனையாகிய தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு யாரும் அறிபவர் இல்லை. பொய்யினது மூலம் வைக்கப்பட்ட உடல்பற்றை நீ விட்டு, அங்குச் சுழுமுனையைத் திறந்துகொண்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.
2606. உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்
பொய்யொன்றும் இன்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே.
பொருள் : உய்திபெற வேண்டின் சீவர்களாகிய நீங்கள் உணர்வினால் போற்றுங்கள். அப்போது மெய்யான இறைவன் அமைத்துக் கொடுத்த சன்மார்க்க நெறி விளையும். உறுதியுடன் பொய்யான உடலைக் கடந்து விளங்குவாரது சகஸ்ரதள கமலத்தில் எமது தலைவனும் அங்குச் சீவனுடன் பேதமின்றி விளங்குவான்.
2607. வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பால் பறவை புகுந்துஉணத் தான்ஒட்டாது
அம்புகொண்டு எய்திட்டு அகலத் துரத்திடில்
செம்பொன் சிவகதி சென்றுஎய்த லாமே.
பொருள் : மணம் கமழ்கின்ற சகஸ்ரதளமாகிய மலரில் சிவமாகிய கனி ஒன்றுண்டு. அக்கினி விஷய வாசனையாகிய பறவைகள் கொத்தித் தின்னுவதற்கு எட்டாததாகும். அவ்விஷய வாசனைகளாகிய பறவைகளைச் சீவ சத்தியை மேல்நோக்கச் செய்யும் அம்பால் எய்து அகலத் துரத்திடில் செம்பொன் ஒளியுடன் கூடிய சிவ சக்தியைச் சென்று அடையலாகும்.
2608. மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்குஅறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம்செய் யாதே சிவன்எம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.
பொருள் : செந்நெறி ஒழுகும் செம்பொருள் துணிவினரை மயக்கம் செய்தற்பொருட்டு முனைந்தெழும் ஐம்புலப் பாசங்களை அருளால் அறுத்து அருளுபவன் சிவன். அவனே ஆருயிரின் தடுமாற்றப் பிறப்பின் கலக்கத்தையும் தவிர்த்தருளினன். அவன் திருவடியினைத் தொடருங்கள். அங்ஙனம் அளவிறந்த காதலுடன் தொடர்ந்தால் ஒரு சிறிதும் மயக்குவதைச் செய்யாமல் எம்பெருமானாகிய சிவன் ஆருயிர் உய்ந்து போமாறு அவ்வுயிர்களின் மனத்தை ஒருமைப்படுத்தியருள்வன்.
2609. மனமது தானே நினையவல் லாருக்கு
இனமெனக் கூறும் இருங்காயம் மேவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.
பொருள் : சிவபெருமான் திருவடிகளை மனம் மாறாது பயிற்சி மிகுதியால் தானே நினையும் அத்தன்மை வாய்ந்த திருநெறி வல்லார்க்கு அவர்தம் அரும்பெரும் அறிவுத் தொண்டிற்குத் துணையாய் இனமாய் நிற்பது அவர்தம் தூய உடம்பேயாகும். அவ்வுடம்பு மேவும் ஒண்மையுடன் தனித்திருந்து சிவபெருமானைத் திருவருளால் உள்ளக் கிழியின் உருவெழுதி அத்தலைவன்பால் ஒப்புவித்தல் வேண்டும். அதுவே தக்கன் செய்யும் தவமாகும். அத்தவத்தினைச் செய்யில் தூயோனாகிய சிவன் தன் திருவடியுணர்வாம் அறிவு நிலத்தில் உய்ந்து போமாறு அருளிச் செய்வன்.
39. ஞானி செயல்
(ஞானி செயல் - தன் உண்மையை உணர்ந்த ஞானியினது செய்கை. ஞானியினது செயலாவது, வினையைக் கடிதல்.)
2610. முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.
பொருள் : நன்மையைத் தராத ஐம்புலன்களின் தன்மை ஆராய்தலினால், நன்மையைத் தருகின்ற தன்னுண்மையை உணர்ந்த தத்துவ ஞானிகள், முற்பிறப்பில் செய்த பழவினைகள் வந்து உறுமாயின் அவற்றை அனுபவித்துக் கழிப்பர். பின் இறப்பில் செய்யும் வினைகளைக் கருதிச் செய்யாது அவற்றினின்றும் நீங்க முயற்சி செய்பவராவர்.
2611. தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே.
பொருள் : தன் உண்மையை உணர்ந்த தத்துவஞானிகள், பழவினையின் பந்தத்தைச் சிவ சிந்தனையால் விலக்கி விடுவார்கள். சிரசின் மேல் விளங்கும் சிவனது திருவருளால் மேல்வரும் வினையைத் தோற்றம் எடுக்காமலே அழித்துவிடுவர்.
2612. மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.
பொருள் : சீவர்களின் மனம் வாக்கு காயம் ஆகிய முக்காரணங்களால் வன்மையான வினை வந்து பற்றும். சீவர்களின் முக்கரணங்களும் உலகியலைப் பற்றாமல் சிவனைப் பற்றினால் வலிய வினை வந்து பற்றுமாறு இல்லை. சாதனை தன்னால் மனம் வாக்கு செயல் கெட்டு மௌனமாய் இருப்பவர் தன்னை வினை பற்றாமல் மாற்றி அமைத்துக் கொள்ளும் ஞானியர் ஆவார்.
40. அவா அறுத்தல்
(அவா அறுத்தலாவது, பொருளின்மேல் செல்லும் ஆசையைப் போக்குதல். அவாவே பிறப்பு ஈனும் வித்தாதலால் அவாவை வெறுப்பது ஞானியர் கடனாகும்.)
2613. வாசியும் ஊசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாமே.
பொருள் : பிராணனையும் நடு நாடியையும் பற்றிப் பேசியும், பேசுவதோடு அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து பிறர்க்கு எடுத்துரைத்தும் ஒரு பயனையும் அடைய முடியாது. பொருள்மேல் செல்லும் ஆசையையும் மக்கள்மேல் செல்லும் பாசத்தையும் நீக்குங்கள். அவ்வாறு நீக்கின பிறகு ஈசுவரன் இருக்கும் இடம் எளிதாக உணரப்பெறும்.
2614. மாடத்து ளான்அலன் மண்டபத் தான்அலன்
கூடத்து ளான்அலன் கோயில்உள் ளான்அலன்
வேடத்து ளான்அலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.
பொருள் : இறைவன் வீட்டுச்சுவரில் உள்ள மாடங்களில் இருப்பவன் அல்லன். தனியே மண்டபங்களில் இருப்பவன் அல்லன். வீடுகளின் தனி அறையில் இருப்பவனும் அல்லன். ஆலயங்களில் இருக்கிறான் என்பதும் அல்ல. வேடம் பூண்டவர்களிடம் விளங்குவான் என்பதும் அல்ல. ஆனால் அவன் ஆசையை விட்டவரது உள்ளத்தில் உள்ளிருந்து கொண்டே அவரை இயக்கி முத்தியைத் தந்தருளுகிறான்.
2615. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
பொருள் : எவ்வகையான ஆசைகளாயினும் அவைகளை அறவே விட்டுவிடுங்கள். இறைவனோடும்கூட ஆசையைச் செலுத்தாது விடுங்கள். ஆசையைச் செலுத்தச் செலுத்த அவற்றால் உயிருக்குத் துன்பமே வரும் ஆசையை அறவே விட்டால் ஆனந்தம் உண்டாகும்.
2616. அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.
பொருள் : நுண் பூதங்களாகிய சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் ஆகிய ஐந்தும் சீவர்களை உலகமுகமாய்த் தூண்டித் துன்புறுத்துவன. இவை உடனிருந்து தீய வழியில் செலுத்துவதாய் உண்டாகின்ற பற்றுக்களைக் கெடுத்து, ஆசையை விட்டு, உண்மையான ஞானத்தை எட்டுவது சீவர்கள் தமது உண்மை நிலையை அறிய முற்படுவது ஆகும்.
2617. உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவாக்கட லுள்பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுள்பட்டு அழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.
பொருள் : பருவகாலத்துப் பொங்கும் கடல்போன்று அளவின்றிப் பொங்கி உலகினை அழித்த நீருழிகள் பல கழிந்தன. இவற்றைக் கடலூழி என்ப. வானவர் முதலானோரும் இன்ப துன்பக் கடலுட்பட்டுப் பிறப்பதற்கே ஆளாகி அழுந்தினர். என்றும் பொன்றாப் பேரின்ப அருளாழியைச் சிவபெருமான் தாங்கி நின்றனன். பவுர்ணமியின் போது கடல் பொங்கும் என்பர்.
2618. நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்தொழில் அற்றுச் சுத்தமது ஆகலும்
பின்றுஐங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.
பொருள் : நெடுநாள் நீங்காமல் நின்ற இருவினையும் மும்மலப் பாசமும் அவைகளால் அமைந்த செயலும் பொருந்தும் இயக்கம் அற்றுத் தூய்மை பெறுதலும், பின்னர் சிருஷ்டியாதி ஐந்தொழிலையும் நீக்கி அருள் மயமாக்கி, ஆழ்ந்து நிற்கச் செய்தலே ஞானிகளது தூயநிலையாம். ஞானியர் இருவினை மும்மலப் பாசக் கட்டறுத்துத் தூய்மை பெற்று இருப்பர்.
2619. உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயல் கெட்டுஅறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை அருள்தான் அடைந்துஅன்பில் ஆறுமே.
பொருள் : சீவன் தனது உண்மைச் சொரூபம் ஒளி மயம் என்று உணர்ந்து நிற்கில் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் பொருந்தும். பெண் ஆசையை விட்டு நிற்கில் அட்டமா சித்திப் பேறுகள் கிட்டும். உறுதியான சிவப்பற்றுடைய ஞானி தனது தேகத்தை நழுவவிட்டால் சிவத்தின் அருள் நின்று பின் சிவத்தைச் சார்ந்துவிடுவர். (அன்பு-சிவம்.)
2620. அவன்இவன் ஈசன்என்று அன்புற நாடிச்
சிவன்இவன் ஈசன்என்று உண்மையை ஓரார்
பவன்இவன் பல்வகை யாம்இப் பிறவி
புவன்இவன் போவது பொய்கண்ட போதே.
பொருள் : சிவமாக இச்சீவன் ஆகவேண்டும் என்று இறைவனை அன்பினால் நாடி சிவனாகவே இவன் மாறிப் பதிநிலையை அடைகிறான் என்ற உண்மையை உலகவர் உணரமாட்டார். ஆனால் இச்சீவன் சிவனேயாகும். பலவகையான பிறப்புக்களை எடுத்துப் பல புவனங்களுக்குச் செல்வது உண்மையை உணராமல் பொய்ப் பொருளில் பற்றுக்கொண்டதேயாம். (பவன்-சிவன்)
2621. கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறுஇந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்றும் ஆமே.
பொருள் : இப்பிரபஞ்சம் முழுவதும் சீவர்களுக்குத் துன்பந்தருகின்ற தூல உடலில் விடுவதும், அது நீங்குமாறு செய்வதும் மீண்டும் பிறவியில் சேர்ப்பதும் ஆகியவற்றை அமைத்துத் தருகின்ற பிரமனாதி ஐவரை அறிவுடையோர் விரும்பமாட்டார். அவர் வெறுப்பினைச் செய்கின்ற தூல உடலில் சூக்கும தேகத்துச் செல்லும் சுழுமுனையாகிய நாடியைப் பொருந்தி யுள்ளமையின் என்றபடி.
2622. உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.
பொருள் : மேல்வரும் பிறவியை மாற்றி அமைக்கும் ஞானத்தைப் பெற்றுள்ளோம் என்பீர். அத்தகைய ஞானத்துக்கு அடிப்படை எது என்பதை அறியமாட்டீர். மூலாதாரத்தில் வீரிய சத்தியாகக் கலந்திருக்கின்ற உருத்திர மூர்த்தியைச் சிந்தனையால் கீழேயுள்ள அக்கினியை மேல் எழச் செய்து ஒளிமயமாய்க் கண்டால், முன் நோக்கியுள்ள பிறவியைப் போக்க மூல காரணமாக அமையும்.
41. பத்தியுடைமை
(பத்தியுடைமை யாவது அகண்ட சிவத்திடம் பத்தி கொள்வது.)
2623. முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே.
பொருள் : சீவர்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் ஞான சொரூபமாகவும் மந்திர சொரூபமாகவும் உள்ள தலைவனும், அழியாத தேவர்களை நடத்துபவனும், தூய்மை யானவனும் தூய நெறியாகவும் விளங்கும் சோதியும் ஆகிய சிவபெருமான் பத்தர்களால் போற்றப் பெறும் பசுபதியும் ஆவான்.
2624. அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியான் இவன்என்று அடிமைகொண் டானே.
பொருள் : சிவத்தின் சந்தான பரம்பரையில் வந்த அடியார்மாட்டு, அடிமைக்கு அடியனாகி அவரிடம் அடிமைப்பட்டேன். அவ்வாறு அடியார் அருளால் திருவடி ஞானம் பெற என்னையும் அவன் அடியார்களுள் ஒருவனாக ஏற்றுக் கொண்டான்.
2625. நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆர்இக் கடன்நந்தி ஆமாறு அறிபவர்
பாரில் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.
பொருள் : இறைவன் தன்னைச் சார்ந்தார்க்கு நீரைவிடக் குளிர்ச்சியைத் தருபவனும், பிரபஞ்சத்தைச் சார்ந்தார்க்கு நெருப்பைவிட வெம்மையைத் தருபவனும் ஆவான். யார் இம்முறைமையை இவ்வாறு செய்கின்றான் என்பதை அறியவல்லார்? அவன் உலகத்தில் பயன் அளிப்பவரைக் காட்டிலும் நேர்மையானவன். அத்தகையவன் நினைப்பவர் உள்ளத்தில் உமையோடு எழுந்தருளியுள்ளான். (கடன் முறைமை. நேரியர் - முறை தவறாதவர். ஊர் - சித்தம்.)
2626. ஒத்துஉலகு ஏழும் அறியா ஒருவன்என்று
அத்தன் இருந்திடம் ஆரறி வார்சொல்லப்
பத்தர்தம் பத்தியில் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.
பொருள் : ஏழு உலகத்தாரும் ஒருங்கு திரண்டு ஆராய்ந்தாலும் ஆராய முடியாத ஒப்பற்றவனாகிய என் தலைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யாரே அறிய வல்லார்? சொல்வாயாக! சிவத்தின் பால் பத்தி கொண்டு ஊர்த்துவ சகஸ்ரதளம் விழிப்படைந்த குருவை அடைந்து, அவரது சகாயத்தைப் பெற்றவர்க்கு அல்லாமல் முத்துப்போன்ற வெண்ணிற ஒளியில் விளங்குகின்ற அவளைக் காணலாம் என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.
2627. ஆன்கன்று தேடி அழைக்கும் அதுபோல்
நான் கன்றாய் நாடி அழைத்தேன்என் நாதனை
வான்கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றான் நாடிவந்து உள்புகுந் தானே.
பொருள் : பசுவினது கன்று தாயை நாடிக் கதறி அழைப்பது போல, நான் கன்றின் தன்மையில் இருந்து என் தாயாகிய சிவத்தைப் பத்தியினால் கதறி அழைத்தேன். வான் உலக வாசிகளுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மறைப்பொருள் ஊனில் கட்டப்பெற்றிருக்கும் என்னை விரும்பி என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ளான்.
2628. பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப்பட் டோர்க்குப் பணிஒன்றும் இல்லையே.
பொருள் : மல பந்தத்தில் உள்ள சீவர்கள் பிறக்கும் நியதியைக் கடவாதவர் ஆதலால், அவர்களாகச் செய்து கொள்ளும் முயற்சி பயனளிக்காமல் போகும். முத்தி நிலையில் உள்ளவர் இறைவனைத் தவிர வேறு ஒன்றும் நினையாத வராதலால் அவர்களது முயற்சியின்றியே வேண்டுவன பொருந்தும். தலைவனாகிய சிவத்துக்கும் மலபந்த முடையோர்க்குச் செய்யும் பிறவிப் பிணிப்பும் மல மற்றோர்க்குச் செய்யும் அருட் பிணிப்பும் ஆகியவை அருட்செயலாதலால் இறைவனைப் பத்தி பண்ணிக் கொண்டிருப்போர்க்குச் செயல் ஒன்றும் இல்லை.
2629. பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகக்
குறவம் சிலம்பக் குளிர்வரை ஏறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவன் என்று என்மனம் ஏத்தகி லாவே.
பொருள் : காயம் கற்பமாக, குண்டலினி சத்தி உம்பில் விளங்கவும், நாத ஒலி கேட்க, சிரசின் உச்சியில் விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறி, தேன்பிலிற்றும் சகஸ்ரதள மலரைக் கொண்டு நந்தியெம் பெருமானை வழிபடுவது அல்லாமல், பிற தெய்வத்தை இறைவன் என்று கருதி வழிபடுவதற்கு என் மனம் இடம் தராது. (காய கற்பம் - உடம்பை நெடிது வாழச் செய்வது.)
2630. உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறுதுணை செய்து பிறப்பறுத்து உய்மின்
செறிதுணை செய்து சிவனடி சிந்தித்து
உறுதுணை யாய்அங்கி ஆகிநின் றானே.
பொருள் : சீவர்களுக்கு எப்போதும் உற்ற துணையாகவுள்ள நந்தியும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகியவனை துணைவனாகப் பெற்றுக் கொண்டு பிறப்பினை ஒழித்துக் கடைத்தேறுங்கள். அவனை நெருக்கமான துணைவனாகக் கொண்டு அவனது திருவடியைச் சிந்தித்து இருக்க, உற்ற துணைவனாய் ஒளி வடிவினனாக நின்று அருளுகின்றான்.
2631. வானவர் தம்மை வலிசெய்து இருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவனைக்
கானவன் என்றும் கருவரை யானென்றும்
ஊன்அத னுள்நினைந்து ஒன்றுபட் டாரே.
பொருள் : ஒளி மண்டல வாசிகளாகிய தேவர்களை அடக்கி இருக்கின்ற, இருள் மண்டல வாசிகளாகிய அசுரர்களது முப்புரத்தை அழித்த தலைவனை, நாத மயமானவன் என்றும் வீரிய கோசத்தில் விளங்குபவன் என்றும் ஊன்பொதிந்த இவ்வுடம்புள் விளங்குபவன் என்றும் அறிந்து ஞானிகள் வழிபட்டார்கள். (கானவன் - கானத்தில் விளங்குபவன்.)
2632. நிலைபெறு கேடுஎன்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்கும்என் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே.
பொருள் : குண்டலினி சத்தியை மூலாதாரத்தி னின்றும் எழுப்பிச் சகஸ்ரதளத்தில் சேர்க்கும் முறையை அறிந்து நிலைபெறுக அல்லது அறியாது கேடு சூழ்வாயாக என்று கருவி கரணங்களைப் படைத்துக் கொடுத்த தலைவனை நாடி, எனது உள்ளமானது ஒளி பெற்று விளங்கும். அவனைச் சிரமாகிய மலையிலும் நெற்றி நடுமுதல் பிரமப் புழைவரையுள்ள பகுதியிலும் விரிந்த சகஸ்ரதளமாகிய புறத்திலும் மூலாதாரமாகிய உலையிலும் மன மண்டலமாகிய உள்ளத்திலும் தியானித்து ஆழ்ந்திருந்தேன்.
42. முத்தியுடைமை
(முத்தியுடைமை - வீடு பேறு உடைமை. அஃதாவது விடுதலை பெறுதல். பத்தியினால் கிட்டுவது முத்தி. சீவன் முத்தியின் தன்மை இங்கு கூறப் பெறும்.)
2633. முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியில் உற்றோர் பரானந்த போதரே.
பொருள் : முத்தி நிலையில் சிவபிரானது முழு அருளையும் சீவன் பெற்று, முப்பத்தாறு தத்துவங்களும் தனக்கு வேறெனக் கண்டு நீங்கி உண்மை உணர்ந்து, தனது கடமை இறைவனை நினைந்திருத்தலாகிய தவத்தைச் செய்தல் என, வினைகளின் நீங்கிய உண்மையான பத்தியில் ஈடுபட்டோர், மேலான சிவானந்தத்தைப் பெற்ற மெய்யறிவுடைய ஞானிகளாவார்.
2634. வளங்கனி தேடிய வன்தாள் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியில் கைவிளக் கேற்றி
நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.
பொருள் : சிவமாகிய கனியை நாடிய வலிமை மிக்க தாளினையுடைய சீவனாகிய பறவை, மன மண்டலத்தில் விளங்கும் சிவமாகிய கனியை விரும்பிச் சிந்தித்திருக்கும் போது, கண்டத்துக்கு மேல் விளங்கும் அக்கினியில் சுழு முனையாகிய விளக்கை ஏற்றி, நன்மையைப் பெற்ற அந்தக் கரணங்களாகிய நால்வரும் தேகமற்ற இடத்தில் இன்பத்தை நாடுவாராயினர்.
43. சோதனை
(குருவருளால் உண்மை உணர்தல் சோதனையாகும்.)
2635. பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மான் அடிதந்த அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்து எம்மைக் கரந்திட்டுச்
சும்மாது இருந்திடம் சோதனை யாகுமே.
பொருள் : யாவர்க்கும் மேலான பெருமையுடைய நந்தி உரையற்று நிற்கும் பேரின்ப நிலையில், அப்பெரியோனது அடிஞானத்தால் கருணைக் கடலில் படிந்தோம். எல்லாவிதமான மாயா சம்பந்தங்களையும் கடக்கச் செய்து அவற்றினின்றும் வேறுபடுத்திச் செயலற்று இருக்கும்படி செய்ததே சோதனையாகும்.
2636. அறிவுடை யானரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்தும் கடந்த
குறியுடை யானொடும் கூடுவன் நானே.
பொருள் : இயல்பாகவே விளங்கும் உண்மைப் பேரறிவு உடையவன் சிவன். அவனே அருமறையாகிய திரு ஐந்தெழுத்தின் நிறைவாய் உள்ளவன். பெருந் தேவரென்று பேசப்படும் யாவர்க்கும் பெருந்தேவனாக வுள்ளான். புண்ணிய வடிவானவன். பொறிவாயில் ஐந்தவித்த புலவன். அப்பெருமான் திருவடிக்கண் அவன் திரு அருளால் அடியேன் அன்பால் கூடி இன்புறுவன். (குறியுடையான் - புலவன்.)
2637. அறிவுஅறிவு என்றங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமையை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவுஅறி யாமை அழகிய வாறே.
பொருள் : உலகேசர் திருவருள் நாட்டமின்றி அறிவு அறிவென்று அரற்றுவர். எது அறிவு எது அறியாமை என மெய்ம்மையைப் பகுத்து உணரார். திருவருளால் உணரும் உயிர் அறிவு, அறியாமை யென்னும் இரண்டினையும் அருளால் கடந்து முற்றறிவு பெற்றுச் சிவமாம் பெருவாழ்வு எய்தும். அங்ஙனம் எய்தினால் அவ்வறிவு அறியாமை கடந்து சிவமாம் பெருவாழ்வு எய்திய அடைதற்கரிய திருவாம் பேரழகு புலனாம் என்க.
2638. குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவமென லாமே.
பொருள் : சோதனைக்குப் பின் சுட்டறிவின்றி யாவற்றையும் ஒருசேர அறியும் அறிவினில், கீழான மலங்கள் சென்றடையாத சேர்க்கையில் அவனறிவே கண்ணாகக் கொண்டு தம் அறிவு கெட்டு ஏகாக்கிர சித்தத்துடன் நெறியாகவுள்ள மேலான நந்தியினது அருளுடன் ஒன்றுபட்டு, தான் என ஒன்றின்றிக் கலந்திருத்தலே சிவமாந் தன்மை எய்தலாகும்.
2639. காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்இறை
காவலன் எங்கும் கலந்துநின் றானே.
பொருள் : எம் இறைவன் காற்றினில் பிரிக்க முடியாத பரிசமும், கரும்பினுள் பொருந்தியுள்ள இனிப்பும், பாலினுள் மறைந்துள்ள நெய்யும், பழத்தினுள் கலந்துள்ள இரசமும், பூவினுள் விரவிய மணமும் போலச் சீவர்களோடு உடனாய் உள்ளான். அவனே எல்லாவற்றிலும் கலந்தும் விளங்குகின்றான்.
2640. விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பகம் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.
பொருள் : விருப்பத்தோடு விகிர்தனாகிய சிவபெருமானை நாடி இமயத்தைச் சேரும் உமையம்மை போல, விருப்புடன் இருக்கின்றவர் மனத்தில் எங்களது பெருமான் ஒளிவடிவாக விளங்கி நிலைபெறுவான்.
2641. நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
எந்தைவந் தான்என்று எழுந்தேன் எழுதலும்
சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே.
பொருள் : நந்திப்பெருமானாகிய சிவபெருமான் அப்பாலாம் நாப்பண் சேர் உறக்கத்து எழுந்தருளி வந்து அடியேன் அகம் படியினைக் கோவிலாகக் கொண்டருளினன். கொண்டதனால் அடியேனும் திருவிளக்கேற்றியதும் திருமனை புகுவார் போன்று எந்தை வந்தானென்று திருவருளால் எழுந்து நெல்லும் மலரும் தூவித் தொழுதேன். தொழுதலும் அடியேன் உள்ளத்தினுள்ளே அச்சிவபெருமான் திருந்த இருந்தருளினன். (அப்பால் உறக்கம் - துரிய சுழுத்தி; அறிதுயில்.)
2642. தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.
பொருள் : உண்மை அறிவு இன்பப் பண்பாம் தன்மை வல்லானை, நற்றவத்துள் நடுநின்றருளும் நலத்தினை, அனைத்துயிர்க்கும் அகலாது நின்று ஆரருளால் நன்மை புரிந்து வரும் நல்லோனை, நடுநிலை குன்றாமல் நயம் புரிந்தருளும் நந்தியை, இருளும் மருளும் ஒரு சிறிதும் இல்லாத புனிதனை அன்புடன் நாடுங்கள். அங்ஙனம் நாடினால் அளவில்லாத ஆருயிர்களுள் நும்மைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து, நுமக்குத் திருவடிப் பரிசினைச் சேர்த்தருள்வன்.
2643. தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றல்வழி காட்டுகின் றானே.
பொருள் : சிவகுருவாய் எழுந்தருளி வந்து எனக்கு எய்திய அறுவழி ஆய்வு செய்தருளும் போது, அச்சிவபெருமான் உடனாந்தன்மையால் நல்ல நாதனாகி அங்கே தொடர்ந்து நின்றருளினன். ஒன்றாம் தன்மையில் ஆதிப்பெரும் பொருளாம் அவன் நீக்கமற நிறைந்து நின்றருளினன். எந்தையாகிய அவன் பொருள் தன்மையால் கடந்து நின்று திருவடி சேரும் அருட்பெரும் வழியைக் காட்டியருள்கின்றனன்.
2644. அவ்வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள்
இவ்வழி தந்தையாய் கேளியான் ஒக்கும்
செவ்வழி சேர்சிவ லோகத்து இருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே.
பொருள் : அமரர்களுக்கும் அறிய ஒண்ணாத அரும்பொருளாம் சிவபெருமான் திருவடிப் பேற்றினுக்கு ஆம் அவ்வழியைக் காட்டியருள்கின்றனன். இவ்வழியாக இவ்வுலகத்து எனக்குத் தந்தை தாய் கேள் ஒத்துத் தோன்றாத் துணை புரிந்தருள்கின்றனன். அவன் செம்பொருள்; செம்மை நலம் புரியும் விழுப்பொருள்; செவ்வழியாய்ச் சென்று சேர்தற்குரிய சிவலோகமாகிய அம்மைக்கண் திருந்த இருந்திடும் அருள்பொருள். இம்முறைகளே நந்திப்பெருமானின் நல்லியல்புகளாகும். (கேளி - (கேள்). குற்றியலிகரம்).
2645. எறிவது ஞானத்து உறைவாள் உருவி
அறிவத னோடேஅவ் ஆண்டகை யானைச்
செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே.
பொருள் : சோதனைக்குப் பின் ஞானமாகிய வாளை உறையினின்றும் எடுத்து அஞ்ஞானமாகிய இருளைப் போக்குவதாகும். அவ்வாறு அருளிய பெருமையுடையவன் தன்னோடு இருப்பதை அறியவும் கூடும். அறிவதோடு தேவதேவனாகிய அவனை நெருங்கிப் பொருந்தவும் ஆகும். அப்போது அஞ்ஞான இருளில் செலுத்தும் பல கூட்டத்தினை நீங்குதலும் ஆகும்.
2646. ஆதிப் பிரான்தந்த வாள்அங்கை கொண்டபின்
வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவ னாமே.
பொருள் : சிவகுருவால் உணர்த்திய ஞானமாகிய வாளை என்னுடைய மனமாகிய  கையில் எடுத்தவுடன், என்னை மாறுபடுத்தி நன்னெறியினின்றும் நீங்க வல்லார் யாரும் இல்லை. சிவமல்லாதவை அங்கு நிலைபெறா வண்ணம் ஞான விசாரணையால் என் மனத்தைச் சோதனை செய்வேன். அப்போது ஆதிமூர்த்தியாகிய சிவத்தைப் பொருந்திச் சிவமாக இவன் ஆகிறான்.
2647. அந்தக் கருவை அருவை வினைசெய்தல்
பந்தம் பணிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.
பொருள் : சிவகுருவானவர் பிறவிக்கு மூலமான பாசத்தையும் அருவமான மாயையையும், கன்மங்கள் செய்தலாகிய பந்தத்தையும், அவ்வாறு செய்யும்போது உண்டாகும் அச்சத்தையும், அச்சத்தால் வரும் பிறப்பையும் போக்கி, அச்சோதனையால் தீயநெறியில் செல்லும் சிந்தையைத் திருத்தலும் சீடர் நன்னெறியைச் சேர்ந்தார். அவ்வாறு சோதனை செய்யப் பெற்ற திறமை உடையவர்க்கே சிவத்தைச் சார்ந்து சிவமாதல் கூடும்.
2648. உரையற்றது ஒன்றை உரைத்தான் எனக்குக்
கரையற்று எழுந்த கலைவேட் டறுத்துத்
திரையொத்த என்னுடல் நீங்காது இருத்திப்
புரையற்ற என்னுள் புகும்தற் பரனே.
பொருள் : வாயினால் கூற முடியாத பிரணவ உபதேசத்தை எனக்கு அக உணர்வில் குருநாதன் உபதேசித்தருளினான். எல்லை கடந்த நூல் ஆராய்ச்சியில் உள்ள விருப்பத்தை ஒழித்து, அலைபோல் வந்தழியும் தன்மையுள்ள உடலை அழியாமல் இருக்கச் செய்து, குற்றம் நீங்கிய என்னிடத்தில் மேலான பரன் வந்து பொருந்தும். (உரையற்றது - பிரணவம்)
எட்டாம் தந்திரம் முற்றிற்று.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக