புதன், 9 நவம்பர், 2011

12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-6 | திருத்தொண்டர் புராணம் (Part - II )


ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    

12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-6 | திருத்தொண்டர் புராணம் (Part - II )

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 
http://temple.dinamalar.com/


12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-6 | திருத்தொண்டர் புராணம் (Part - II )


2901. திருமாற்பே றுடையவர்தம் திருவருள்பெற் றெழுந்தருளிக்
கருமாலுங் கருமாவாய்க் காண்பரிய கழல்தாங்கி
வரும்ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப் பெரும்பிணையல் அணிவித்தார்.
தெளிவுரை : திருமால் பேற்றில் வீற்றிருக்கும் இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து எழுந்தருளிப் போய்க் கரிய நிறம் கொண்ட திருமாலும் தாம் பன்றி எடுத்தும் காண இயலாத திருவடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளைய காளையையுடைய இறைவரின் திருவல்லம் என்னும் பதியினை வணங்கித் தம் இறைவர்க்குத் திருப்பதிகமான மாலையைச் சூடியருளினார்.
2902. அங்குள்ள பிறபதியில் அரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பாலியாற்றின் புடையில்வட பாலிறைவர்
எங்கும்உறை பதிபணிவார் இலம்பையங்கோட் டூரிறைஞ்சிச்
செங்கண்விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.
தெளிவுரை : அங்குள்ள தலங்களில் திருமாலுக்கு அரியவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகும் நீரைக் கொண்ட பாலியாற்றின் பக்கத்தே வடக்கில் இறைவர் எங்கும் எழுந்தருளிய தலங்களை எல்லாம் வணங்குவாராகித் திரு இலம் பையங் கோட்டூரினைத் தொழுது, சிவந்த கண்களையுடைய காளை ஊர்தியை உடையவரைத் திருப்பதிகம் பாடியருளினார்.
2903. திருத்தொண்டர் பலர்சூழத் திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை புரமெரித்த படிபாடி
அருட்புகலி யாண்டகையார் தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடுந் திருவூறல் மேவினார் தமைப்பணிந்தார்.
தெளிவுரை : திருத் தொண்டர் பலரும் தம்மைச் சூழ்ந்து வரப் போய்த் திருவிற் கோலம் என்ற தலத்தைத் தொழுது, மெய்ப் பொருளைப் புலப்படுத்தும் திருப்பதிகமான மாலையினைச் சிவபெருமான் திரிபுரம் எரித்த நிலை பற்றித் துதித்துப் பாடியருளி, அருள் உடைய சீகாழிப் பிள்ளையார் தக்கோலம் என்ற பதியைச் சேர்ந்து விருப்பத்துடன் அங்குத் திருவூறல் என்ற கோயிலில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கினார்.
2904. தொழுதுபல முறைபோற்றிச் சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப் பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்போந்தனர்முத் தமிழ்விரகர்.
தெளிவுரை : அங்குத் தொழுது பலமுறையும் வணங்கித் தேவ குருவான வியாழனின் தம்பி சம்வர்த்த முனிவர் குற்றம் இல்லாது தவத்தைச் செய்து போற்ற எழுந்தருளிய இறைவரை அன்பால் மலர்ந்த குற்றம் இல்லாத செழுந்தமிழ் மாலையான பதிக இசையைப் பாடி, எல்லாவற்றையும் படைத்தளித்த இறைவரிடம் விடைபெற்று முத்தமிழ் வல்லுநர் சென்றார்.
2905. குன்றநெடுஞ் சிலையாளர் குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடனிறைஞ்சி நீடுதிருத் தொண்டருடன்
பொன்தயங்கு மணிமாடப் பூந்தராய்ப் புரவலனார்
சென்றணைந்தார் பழையனூர்த் திருவாலங் காட்டருகு.
தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் விளங்க எழுந்தருளிய பிற பல பதிகளையும் நிலையான விருப்பத்துடன் வணங்கிப் பொன்னால் இயன்ற அழகிய மாடங்களையுடைய சீகாழியின் தலைவரான ஞானசம்பந்தர், அன்பு பெருகிய தொண்டருடன் பழையனூர்த் திருவாலங்காட்டின் அருகில் சென்று சேர்ந்தார்.
2906. இம்மையிலே புவியுள்ளோர் யாருங் காண
ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும்
அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மையுடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று
செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர்
செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார்.
தெளிவுரை : இப்பிறவியில் இம்மண்ணூலகத்தில் எவரும் நேரில் காணும்படி ஏழ் உலகத்தில் உள்ளவரும் துதிக்கும்படி எம்மை ஆள்கின்ற அம்மையாரான காரைக்கால் அம்மையார் தம் திருத்தலையினால் நடந்து போய் அடைந்து போற்றிய அம்மையப்பர் வீற்றிருக்கின்ற பதி இத்திருவாலங் காடாகும் என்று உள்ளத்தில் எண்ணித் தம்மை ஆளுடைய இறைவரின் பழமை பொருந்திய அந்தவூரைக் காலால் மிதித்து உள்ளே செல்ல அச்சம் கொண்டு, சீகாழியில் தோன்றியருளிய பிள்ளையார் அந்தப் பதியின் அருகில் சாரச் செம்மை நெறியினின்று சற்றும் வழுவாத தூய ஒழுக்கமுடையவர்கள் வாழ்கின்ற அந்தப் பதியின் பக்கத்தில் ஒரு செழுமையான நகரில் அன்று இரவிலே தங்கி உறங்கலானார்.
2907. மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
மறையவனார் தம்முன்பு கனவி லேவந்
தாலவனத் தமர்ந்தருளும் அப்பர் நம்மை
அயர்த்தனையோ பாடுதற்கென் றருளிச் செய்ய
ஞாலமிருள் நீங்கவரும் புகலி வேந்தர்
நடுஇடையா மத்தினிடைத் தொழுது ணர்ந்து
வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி
மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்.
தெளிவுரை : மாலை முற்றிய நடு யாமத்தில் பள்ளி கொண்டருளும் வேதியரான பிள்ளையாரின் கனவில் வெளிப்பட்டுத் திருவாலங்காட்டில் வீற்றிருக்கும் இறைவர் நம்மைப் பாடுவதற்கு மறந்தாயோ ? என்று வினவினார். உலகம் இருள் நீங்கி உய்யும் பொருட்டுத் தோன்றியருளிய சீகாழித் தலைவர் நள்ளிருள் யாமத்தில் வணங்கிய படியே உறக்கத்தினின்று உணர்ந்து எழுந்து கடலில் உண்டான நஞ்சை உண்டருளிய சிவபெருமானின் திருவருளைப் போற்றி மெய் உருகித் திருப்பதிகத்தைப் பாடலானார்.
2908. துஞ்சவரு வார்என்றே எடுத்த வோசைச்
சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரார்
இயம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி
அஞ்சனமா கரியுரித்தார் அருளா மென்றே
அருளும்வகை திருக்கடைக்காப் பமையச் சாற்றி
பஞ்சுரமாம் பழைய திறங் கிழமை கொள்ளப்
பாடினார் பாரெலாம் உய்ய வந்தார்.
தெளிவுரை : உலகம் உய்யத் தோன்றிய ஞானசம்பந்தர் துஞ்ச வருவாரும் என்று தொடங்கிய ஓசையுடைய வேதத்தின் முறை தவறாதபடி பாடிய பாடலில் குறைவற்ற வகையினால் நீதிமுறையின் வழி பழையனூர் வேளாளர் தாங்கள் கூறிய சொல்லைத் தவறாது காத்து அருள் பெற்ற வரலாற்றைச் சிறப்பாய்ப் பாராட்டிக் கரிய யானையை உரித்த இறைவரின் திருவருளேயாகும் இது என்று அருள் செய்யும் தன்மையைத் திருக்கடைக் காப்பில் வைத்துக் குறிஞ்சி யாழ்ப்பண் அமைதித் திறமும் கிழமையும் பொருந்தப் பாடினார்.
2909. நீடுமிசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி
நெடுங்கங்கு லிருணீங்கி நிகழ்ந்த காலை
மாடுதிருத் தொண்டர்குழா மணைந்தபோது
மாலையினில் திருவால வனத்து மன்னி
ஆடுமவ ரருள்செய்த படியை யெல்லாம்
அருளிச்செய் தகமலரப் பாடி யேத்திச்
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன்மருங்கு செல்ல லுற்றார்.
தெளிவுரை : எக்காலத்தும் நிலைபெறும் இறையுடைய திருப்பதிகத்தைப் பாடித் துதித்தபின் நீண்ட இரவின் இருள் புலர்ந்து நீங்கிய போது பக்கத்தில் திருத்தொண்டர் கூட்டம் வந்து சேர்ந்த போது, இரவில் திருவாலங் காட்டுப்பதியில் ஆடுகின்ற இறைவர் தமக்கு அருள் செய்த விதத்தை யெல்லாம் அவர்களுக்குச் சொல்லி, அத்திருப்பதிகத்தைத் திரும்பவும் உள்ளம் மகிழப்பாடித் துதித்தபின் பெரியவர் வாழ்கின்ற அந்தப் பதியை வணங்கி அகன்று போய் திருப்பாசூர் அருகில் செல்லலானார்.
2910. திருப்பாசூர் அணைந்தருளி யங்கு மற்றச்
செழும்பதியோ ரெதிர்கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா கத்துப்
புராதனர்வே யிடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்தெழுந்து மேனியெலா முகிழ்ப்ப நின்றே
அருட்கருணைத் திருவாளன் நாமஞ் சிந்தை
யிடையாரென் றிசைப்பதிகம் அருளிச் செய்தார்.
தெளிவுரை : திருப்பாசூரை அணைந்து அங்கு அந்தச் செழும்பதியினர் வந்து எதிர்கொள்ளப் பதியுள் போய்ப் புகுந்து, மலையரசனின் மகளான பார்வதியம்மையாரை இடப்பாகத்தில் கொண்ட பழமையுடையவரும் மூங்கிலை இடமாகக் கொண்ட வருமான இறைவரின் திருக்கோயிலுள் விருப்பத்துடன் வலமாக வந்து உள்ளே புகுந்து இறைவரின் திருமுன்பு நிலம் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து, திருமேனி முழுதும் மயிர்க்கூச் செறிப்பு உண்டாக நின்று, அருட்கருணை என்ற செல்வத்தையுடைய இறைவரின் திருநாமத்தைச் சிந்தையிடையார் எனத் தொடங்கி இசையுடன் கூடிய திருப்பதிகத்தைப் பாடியருளினார்.
2911. மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி
வணங்கிப்போந் தப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலா யுள்ள
பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால்
முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டு
முதல்வேடர் கண்ணப்ப நாய னாரை
உன்னியொளிர் காளத்தி மலை வணங்க
வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர் நிலைபெறும் இசையுடைய திருப்பதிகத்தைப் பாடித் துதித்துச் சென்று அப்பதியில் தங்கியிருந்தார். அத்தலத்தின் பக்கத்தில் இறைவர் எழுந்தருளிய திருவெண்பாக்கம் முதலான மற்றப் பதிகளையும் வணங்கிய வண்ணம் செல்பவராய்ப் பெருகும் அன்பால் முன் திருவாய் நிறைந்த நீரால் இறைவரைத் திருமஞ்சன நீராட்டும் முதல்வரான கண்ணப்ப நாயனாரை எண்ணி, விளங்கும் திருக்காளத்தி மலையைத் தொழுவதற்குப் பொருந்திய பெருவிருப்புடன் மகிழ்ந்து போய் அருளினார்.
2912. மிக்கபெருங் காதலுடன் தொண்டர் சூழ
மென்புனல்நாட் டினையகன்று வெற்பும் கானும்
தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச்
சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி
முக்கண்முதல் தலைவனிட மாகி யுள்ள
முகில்நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று
புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப்
பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர்.
தெளிவுரை : மிக்க பெருவிருப்புடனே தொண்டர் சூழ்ந்து வரப்போய் மெல்லிய தாய்ப் பாய்கின்ற நீர்வளம் கொண்ட பாலியாற்றின் வடகரையில் உள்ள நாட்டின் பகுதியை நீங்கி, மலையும் காடும் போலச் சேர்ந்து நெருங்கிய வலிய நிலம் பரந்த காட்டிடங்களை அடைந்து, சூலமும் கபாலமும் கையில் கொண்டு ஒளிவிளங்கும் திருமேனியையும் மூன்று கண்களையுமுடைய இறைவரின் இடமாகி மேகம் சூழ்ந்த திருக்காரி கரையினை முன்னர் சென்று, கோயிலுள் புகுந்து இறைவரை வணங்கி அந்தப் பதியில் தங்கித் தொண்டருடன் ஞான சம்பந்தர் மகிழ்ந்திருந்தார்.
2913. இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர் சிவபெருமானின் திருக்காரிகரையைத் தொழுது மேல் போய், அளவில்லாத பெரிய மலைகளில் இரு பக்கங்களிலும் எங்கும் நீர் நிறைந்த அருவிகள் பல வரிசையான மணிகளையும் பொன்னையும் நிறைந்த நீர்த்துளிகளைப் பக்கங்களில் நிரம்பச் சிதறி நிகழ்வனவாகி ஒலிக்கின்ற கழலை அணிந்த தேவ அரசனான இந்திரனின் வச்சிரப்படை தாக்குதலால் அறுபட்ட இறகுகளைப் பெற்று அவன் மீது போருக்கு எழுவதற்காகச் சிறகுகளை விரித்துப் பறக்க முயன்று உயர்ந்தன போன்ற காட்சி தரும் மலை சூழ்ந்த நாட்டின் பகுதியில் எழுந்தருளிச் செல்பவராய்,
2914. மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண.
தெளிவுரை : சிவனடியார் கூட்டம் பரந்து செல்ல, அழகிய முத்துச்சின்னங்கள் உண்டாக்கும் ஓசை அளவில்லாது எழ, திருநீறு நிறைந்த கடல் அணைவதைப் போல் சீகாழித் தலைவரான ஞான சம்பந்தர் வரும்போது, திருச்சின்னங்களின் ஒப்பில்லாத ஒலி பலமுறையாலும் மேன்மேல் அதிகரித்து எங்கும் திருஞான சம்பந்தர் வந்தார் என்று உண்டாகும் ஒலி நிறைந்த காதுகளை உடையன ஆதலால், ஐந்து அறிவுடைய விலங்கச் சாதிகள் எல்லாம் தம் இயல்பான தீமையின்றி நன்மை பொருந்தும் நினைவு ஒன்றையே மேற்கொண்டு பக்கங்களில் வந்து பொருந்த,
2915. கானவர்தங் குலம்உலகு போற்ற வந்த
கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய
மானவரிச் சிலைவேட்டை ஆடும் கானும்
வானமறை நிலைபெரிய மரமும் தூறும்
ஏனையிமை யோர்தாமும் இறைஞ்சி யேத்தி
எய்தவரும் பெருமையவாம் எண்ணி லாத
தானமும்மற் றவைகடந்து திருக்கா ளத்தி
சாரஎழுந் தருளினார் சண்பை வேந்தர்.
தெளிவுரை : வேடுவர் குலத்தை உலகமானது போற்றுமாறு அதில் வந்து அவதரித்த கண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் அணிந்த செருப்புத் தேயுமாற பெரிய கட்டமைந்தவில் வேட்டையாடும் காடுகளும், வானத்தை மறைக்குமாறு நீண்ட பெரிய மரச் சோலைகளும் தூறுகளும் தேவர்களும் துதிக்க வரும் பெருமையுடைய அளவில்லாத மற்ற இடங்களும் ஆகியவற்றையெல்லாம் கடந்து சென்று திருக்காளத்தி மலையைச் சேரச் சீகாழித் தலைவர் சென்றார்.
2916. அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.
தெளிவுரை : அழகிய பொன் மலை மன்னனின் மகளான கொடி போன்ற உமையம்மையாரின் முலைப் பாலில் குழைந்த ஞான அமுதத்தை உண்ட ஆளுடைய பிள்ளையார் வருகின்றார் என்று எண்ணி, மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவரின் திருக்காளத்தியில் சேர்ந்த திருத் தொண்டர் கூட்டம் நெருங்க வந்து, நெருங்கிய சடையுடைய முனிவர்களும் மண்டை ஓட்டை ஏந்தும் கபாலியர்களும், மற்றும் இங்ஙனம் மாவிரதம் முதலான பலபல வேடங்களையுடைய சைவர்களும், மற்றும் மேன்மையான தவம் செய்தவரும், அந்தப் பதியில் உள்ளவருடன் கூடி மகிழ்ந்து, எதிர்கொள்ளப் பக்கத்தில் போய்ச் சேர்ந்தனர்.
2917. திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற்
சிவலோகம் அணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்.
தெளிவுரை : எல்லாத் திசைகளிலும் திருநீற்றின் ஒளி பரவ, இந்தவுலகத்தில் சிவலோகம் வந்து சேர்ந்தது எனக் கூறுமாறு சென்ற போது, மேலே விளங்கும் அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி வேதத்தில் வல்ல ஞானசம்பந்தர் வணங்கி எதிர்கொண்ட மிக்க அசைவற்ற பெரிய திருத்தொண்டர் கூட்டம் தொழுது வணங்கி அர ! அர ! என்ற பேரொலியால் அண்டம் முழுதும் நிறையுமாறு செய்யப், புகழினால் எங்கும் விளங்கும் தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, திருக்காளத்தி மலை இங்குத் தோன்றும் மலைகளுள் எது? என்று வினவினார்.
2918. வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்.
தெளிவுரை : எதிர் கொண்டு வரவேற்ற தொண்டர்கள் ஞானசம்பந்தரை வணங்கி மறையவர்களின் வாழ்வே ! சைவத் தலைவர்களுள் சிறந்தவரே ! நம் எதிரே தோன்றும் இம்மலைதான் முன்நாளில் காளன் என்னும் பாம்பும் யானையும் தமக்குள் மாறுபட்டுத் தம்மைப் பூசை செய்யுமாறு இறைவர் எழுந்தருளியுள்ள கேடில் சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும் எனவுரைத்தனர். அப்போது ஞானசம்பந்தர் விழுந்து வணங்கி எழுந்து கைகளைத் தலைமீது குவித்து மனத்துள் மிக்க மகிழ்ச்சி எழுதலால் வானவர்கள் தானவர்கள் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவிராக அமைப்பில் பாடிய வண்ணம் மேற்செல்லலானார்.
2919. திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.
தெளிவுரை : திருந்திய இனிய பண்ணமைதி வகுப்பினால் திருக்கண்ணப்பரின் திருத்தொண்டைச் சிறப்பித்துப் பாடியருளிப் பொருந்திய பெரிய திருத் தொண்டர் கூட்டம் சூழ்ந்து துதிக்க எழுந்தருளி வந்து, பொன் முகலியாற்றின் கரையை அடைந்து வணங்கிச் சென்று அரிய தவத்தவர்களான திருத்தொண்டர்கள் எப்பக்கமும் நெருங்கிச் செல்ல, ஆளுடைய பிள்ளையார், நான்முகனும் திருமாலும் தேடிக் காண இயலாத மருந்தான இறைவர் வெளிப்பட எழுந்தருளியிருந்த திருக்காளத்தி மலையின் அடிவாரத்தினை அணுக வந்து நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கினார்.
2920. தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உட்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர் தாழ்ந்து எழுந்து அம்மலையை வணங்கிய வண்ணமே பெரிய மலைப்படிகளின் வழியே ஏறிச் சென்று வாழ்வடைந்து தேவர்கூட்டம் நெருங்கியுள்ள மணிகளையுடைய நீண்ட திருவாயிலின் முன் வணங்கிக் கோயிலுள் புகுந்து, அக்கோயிலை வலமாகச் சுற்றி வந்து, இறைவரின் திருமுன்பு சார்ந்து தொழுது தலையின் மேலே கூப்பிய சிவந்த திருக்கைகளுடன் துதித்து நிலம் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து செல்பவராய், அவ்வாறு கும்பிட்ட தன் பயனைக் காண்பவரைப் போல், மெய்மையான வேடர் பெருமானாம் திருக்கண்ணப்ப நாயனாரைக் கண்டு அவருடைய அடிகளில் வீழ்ந்தார்.
2921. உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
யுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப்
பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானஆ ரமுத முண்டார்
மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்.
தெளிவுரை : மனத்தில் தெளிவாய்க் கொள்கின்ற அன்பின் மெய்ம்மையான வடிவத்தையும், அந்த அன்பினுள் நிலையாய் வீற்றிருக்கின்ற சிவந்த சடையையும் நெற்றியில் சிவந்த விழியையும் உடைய குற்றமற்ற இறைவரையும் ஒருசேர ஓரிடத்தில் ஒன்றாகக் கண்டதால் ஆன விருப்பமும் மேன் மேல் அதிகரித்து, மேலிடத்தினின்றும் பள்ளத்தில் இழிந்து ஓடும் நீர் போல் விரைவாகச் செல்ல, பசும் பொன் மலை மன்னன் மகளான கொடி போன்ற உமையம்மையார் அருளுடன் அளித்த செம்பொன் கிண்ணத்தில் ஞானமுதை உண்டருளிய ஞானசம்பந்தர் மகிழ்ந்து மேலே பலமுறையும் வணங்குபவராய்.
2922. பங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று
பரவும்இசைத் திருப்பதிகம் பாடி யாடித்
தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்
தம்பெருமான் கழல்போற்றுந் தன்மைநீட
அங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற
அரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்
பொங்குதிருத் தொண்டர்மடங் காட்ட அங்குப்
புக்கருளி இனிதமர்ந்தார் புகலி வேந்தர்.
தெளிவுரை : தாமரை போன்ற கண்களினின்றும் கண்ணீர் வழிந்தோட நின்று துதிக்கும் பண் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி ஆனந்தக் கூத்தாடி, தம் உள்ளத்துள் தங்கிக் கிடக்கும் பெருங்களிப்பும் காதலும் வலிந்து தம்மை அங்கே தடைப்படுத்தி நிறுத்த, அதனால் தம் பெருமானின் திருவடிகளைப் போற்றி நிற்கும் இயல்பு நீடித்தலால், அங்கிருந்து அரிதாக வெளியே வந்து நான்முகனும் திருமாலும் போற்றுதற்கு அரிய இறைவரின் திருக்காளத்தி மலையின் அடியில் வந்து அணைந்து வணங்கிப் போய்ப் பெருகிய தொண்டர்கள் திருமடத்தைக் காட்டச் சென்று புகுந்த ஞானசம்பந்தர் அங்குத் தங்கியிருந்தார்.
2923. யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்.
தெளிவுரை : யாவரும் அறிவதற்கு அரிய இறைவரை, ஏழ் உலகங்களையும் உடையவரை, எண் இல்லாத தேவர்களின் தலைவரை, திருக்காளத்தி மலையின் மீது வீற்றிருக்கும் சிவந்த தேனை, மலர்கள் மலரும் சோலை சூழ்ந்த சீகாழியை ஆளும் வேந்தரான திருஞான சம்பந்தர், உரிய காலங்கள் தோறும் போய்க் கோயிலுள் புகுந்து பதிகம் என்ற மலர் கொண்டு அருச்சனை செய்து துதித்துப் பருகி நிறைவாக அனுபவித்துச் செம்மையான பண்புகளால் இனிய அத் திருப்பதியைப் பொருந்தித் தங்கியிருந்தார் அந்நாளில்,
2924. அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.
தெளிவுரை : அங்கு, வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில் அரிய தமிழின் வழக்கு நிகழாததால், ஞான சம்பந்தர் பிறைச் சந்திரனைச் சூடிய முடியுடைய இறைவரின் மற்றப் பதிகள் தோறும் போய்ப் போய்த் திருப்பதிக தமிழ் இசைபாடும் செயல் போல், தேவர்கள் தொழுது துதிக்கும்படி எழுந்தருளும் சிவபெருமானின் வடகயிலை மலையை இங்கு இருந்தபடியே வணங்கித் திருப்பதிகம் பாடிச், செந்தாமரை மலர்கள் மலர்வதற்கு இடமான நீர்நிலைகளைக் கொண்ட திருக்கோதாரத்தையும் வணங்கித் திருப்பதிகம் இசையுடன் பாடினார்.
2925. கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்.
தெளிவுரை : இயமனைக் கல்லால் உதைத்த இறைவர் மகிழ்ந்த கோகரணத்தைப் பாடி, காளையின் மீது எழுந்தருளிவரும் இறைவரின் இந்திர நீலப் பருப்பதத்தையும் பாடி, மற்றும் போற்றிய திருப்பதிகள் பிறவற்றையும் பாடிச், சீகாழிப் பதியினரின் தலைவரான ஞானசம்பந்தர், தூய திருநீற்றின் விளக்கம் மிகு கோலமுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர, மிகவும் மகிழ்ந்து அந்தப் பதியில் தங்கியிருப்பவராய்,
2926. தென்திசையில் கயிலையெனும்திருக்காளத்தி
போற்றிஇனி தமர்கின்றார் திரைசூழ் வேலை
ஒன்றுதிரு வொற்றியூர் உறைவார் தம்மை
இறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி அங்கண்
இன்தமிழின் விரகரருள் பெற்று மீள்வார்
எந்தையா ரிணையடியென் மனத்த வென்று
பொன்தரளங் கொழித்திழி பொன் முகலிகூடப்
புனைந்ததிருப் பதிகஇசை போற்றிப் போந்தார்.
தெளிவுரை : தெற்குத் திக்கில் உள்ள திருக்கையிலை எனக் கூறப்படுகின்ற திருக்காளத்தியைப் போற்றித் துதித்து இனிதாக அங்குத் தங்கியிருப்பவராய், அலை சூழ்ந்த கடலின் கரை சார்ந்த திருவொற்றியூரிலே வீற்றிருக்கும் இறைவரை சென்று வணங்கும் இயல்பை மனத்தில் கொண்டு அங்கிருந்து இனிய தமிழ் விரகரான ஞானசம்பந்தர் இறைவரின் திருவருள் விடைபெற்று மீண்டு செல்பவராய் எந்தையார் இணையடி என் மனத்துள்ளவே என்ற கருத்துடன் பொன்னும் முத்தும் கொழித்து ஆடிவரும் பொன்முகலியாற்றையும் திருப்பதிக இசையால் போற்றிச் செல்லலானார்.
2927. மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு
சென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.
தெளிவுரை : நிலை பெற்ற புகழையுடைய தொண்டர் கூட்டத்துடன் வேதங்கள் வாழும் படியாய்த் தோன்றிய ஞானசம்பந்தர் மலையும் காடும் முன்னால் சேர்ந்த பதிகள் பலவற்றையும் கடந்து வந்து, முழுமுதல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் தலங்கள் பலவற்றையும் துதித்துச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக் கொண்டு, அகில் சந்தனம் முதலான மரங்களை மோதி அலைத்துக் கொண்டு ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலை பெற்ற, தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான பிள்ளையார் போயடைந்தார்.
2928. திருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
சென்றணைந்து பணிந்துதிருப் பதிகம்பாடி
வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்தெய் திவணங்கிப் போற்றி
உருவேற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை
ஒற்றியூர் கைதொழச்சென் றுற்றபோது
பொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர் திருவேற்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் செழுஞ்சுடரான இறைவரின் அழகான கோயிலில் போய்ச் சேர்ந்து வணங்கித் திருப்பதிகம் பாடினார். எதிர்த்து வரும் வேறுபட்ட உள்ளமுடைய பகைவரான அவுணரின் திரிபுரங்களை எரித்த இறைவரின் திருவலிதாயத்தில் வந்து துதித்து, வடிவுடைய காளையை யுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரை வணங்குவதற்குச் சென்ற போது, மிக்கபெரிய விருப்பம் தரும் வாழ்வு பெற்ற தொண்டர்களும் அந்தப் பதியில் உள்ளவர்களும் அவரை எதிர்கொண்டு வரவேற்க அன்புடன் வந்தனர்.
2929. மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
தொழுதிழிந்து விடையவனென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.
தெளிவுரை : மிகுந்த திருத்தொண்டர் தொழுத வண்ணம் வந்து சேரப் பிள்ளையார் தாமும் அவர்களை வணங்கிய வண்ணம் முத்துச் சிவிகையினின்று இழிந்து விடையவன் என்ற தொடக்கத்துடன் கூடிய பதிகத்தை எடுத்துப்பாடி, கருமை பொருந்திய திருக்கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் கோயில் நிலை பெற்றுள்ள கோபுரத்தில் வந்து நிலத்தில் விழுந்து வணங்கித் தகுந்த திருக்கடைக் காப்பினையும்பாடி, இறைவரின் கோயில் வாயிலின் வழியே போய் உள்ளே புகுந்து வலமாகச் சுற்றி வந்து தூயவரான இறைவர் திருமுன்பு துதித்து நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கினார்.
2930. பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பால்
பொங்கியெழுங் காதல்மிகப் பொழிந்து விம்மிப்
பற்றியெழும் மயிர்ப்புளகம் எங்கு மாகிப்
பரந்திழியுங் கண்ணருவி பாய நின்று
சொல்திகழுந் திருப்பதிகம் பாடி ஏத்தித்
தொழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரொடும்
ஒற்றிநகர் காதலித்தங் கினிது றைந்தார்
உலகுய்ய வுலவாத ஞானம் உண்டார்.
தெளிவுரை : பொன்னின் திரட்சிகள் போன்ற முறுக்கிய சடையையுடைய இறைவர்பால் பெருகி எழுகின்ற பெரு விருப்பம் மிகவும் மேலோங்கி விம்மி, திருமேனியைப் பற்றி மேல் எழுகின்ற மயிர்ப் புளகம் மேனி எங்கும் நிரம்பப், பரவி வழியும் கண்ணீர்ப் பெருக்குப் பாய்ந் தொழுக நின்று, சொற் பொருள் மிகவும் விளங்கும் திருப்பதிகத்தைப் பாடி, உலகம் உய்யும் பொருட்டுக் கெடுதல் இல்லாத சிவஞான அமுதுண்ட சம்பந்தர் திருவொற்றியூரை விரும்பி அங்குத் தங்கியிருந்தார்.
2931. இன்ன தன்மையிற் பிள்ளையார் இருந்தனர் இப்பால்
பன்னு தொல்புகழ்த் திருமயி லாபுரிப் பதியில்
மன்னு சீர்ப்பெரு வணிகர்தந் தோன்றலார் திறத்து
முன்னம் எய்திய தொன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.
தெளிவுரை : இங்ஙனம் ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தார். இங்குப் புகழ்ந்து பேசப்படுகின்ற திருமயிலாப்பூர்ப் பதியில் நிலை பெற்ற புகழையுடைய பெரு வணிகர் குடியில் வந்த பெருமையுடையவரின் முன்னே பொருந்திய வரலாற்றை இனிப் புகல்வோம்.
2932. அருநி தித்திறம் பெருக்குதற் கருங்கலம் பலவும்
பொருக டற்செலப் போக்கியப் பொருட்குவை நிரம்ப
வரும ரக்கல மனைப்படப் பணைக்கரை நிரைக்கும்
இருநி திப்பெருஞ் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.
தெளிவுரை : அரிய செல்வ வகைகளைப் பெருக்கச் செய்வதற்காக அரிய மரக்கலங்கள் பலவற்றையும் அலை மோதும் கடல் மீது சென்று நிகழுமாறு வாணிகத் துறையில் செலுத்தி அவ்வாணிகத்தால் திரட்டிய செல்வக் குவியல்கள் நிரம்பத் தம் இல்லத்தில் சேரும்படி கொணர்ந்து, மரக்கலங்களில் குவியல் வரிசை பெறக் குவிக்கும் பெருநிதி முதலான பெருஞ் செல்வங்களின் எல்லையில்லாத வளங்களையுடையவராய்,
2933. தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன் மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார் சிவநேசர் என்பார்.
தெளிவுரை : தம்மை உள்ளவாறு அறிந்து கொண்டமையால், அதன்பின் சங்கரரான இறைவரிடத்தில் அடிமைத் திறத்தை மெய்ந் நெறி பிறழாது செய்யும் விருப்பத்துடன் கூடிய அன்பினால், பொய்யைக் கடிந்து மெய்ப் பொருள் இதுவே எனத் தெளிந்து கொண்ட உள்ளத்தில் செம்மை நெறியையே இடைவிடாது எண்ணி ஒழுகும் உள்ளம் உடையவர் சிவநேசர் என்று அழைக்கப்படுவர்.
2934. கற்றை வார்சடை முடியினார் அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவின்றி உருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமும் உடையராய்த் திகழ்வார்.
தெளிவுரை : கற்றையான நீண்ட சடையையுடைய முடியையுடைய இறைவரின் அடியார்களுடன் கூடிய கூட்டத்துடன் பொருந்திய செய்கையில் இடைவிடாது உருகிய உள்ளத்தையும், இறைவனிடத்தில் அன்பு இல்லாத நெறிகளையுடைய பரசமயங்களை நீக்கும் சினம் பொருந்திய நல்லொழுக்கத்தையும் உடையவராய் விளங்குவார்.
2935. ஆன நாள்செல அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கியம் இழித்தழித் ததுவும்
ஊன மில்புகழ் அடியர்பால் கேட்டுவந் துளராய்.
தெளிவுரை : அவ்வாறான நாட்கள் பல செல்ல, அரிய வேதியரான கவுணியர் குலத்தில் தோன்றிய தலைவர் ஞான சம்பந்தப் பெருமான் சிவஞானம் உண்டதையும், உலகம் உய்யும் பொருட்டாகப் பிற சமயங்களான கொடிய சமணம் பௌத்தம் என்ற சமயங்களின் கீழ் நிலையை விளக்கி இழித்து எடுத்துக் காட்டும் வகையில் அவை அடைந்திருந்த தலைமை ஒழித்ததையும், குற்றம் இல்லாத அடியார்கள் வந்து சொல்லக் கேட்டு மகிழ்ந்தவராய்.
2936. செல்வ மல்கிய சிரபுரத் தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலின் இடையறா வுணர்வால்
அல்லும் நண்பக லும்புரிந் தவர்அருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவும் தொழிலின ரானார்.
தெளிவுரை : அருட்செல்வம் நிறைந்த சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளில் விழுந்து அளவில்லாத ஒப்பற்ற பெருவிருப்புடன் இடையறாத அன்பு பூண்ட உணர்ச்சியால் இரவும் பகலும் இடைவிடாமல் எண்ணிக் கொண்டு அவரது அருளின் தன்மையையே தாம் வாக்கினால் புகழ்ந்து பாராட்டுதலும் அருட் செயல்களை அன்பர்களிடமே கேட்டலுமாகிய இவையே தம் வாழ்க்கைக்குரிய செயல்களாக மேற் கொண்டவர் ஆனார்.
2937. நிகழும் மாங்கவர் நிதிப்பெருங் கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினிற் சிறந்துள ராகிப்
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்துளா ரெனினும்
மகவி லாமையின்ம கிழ்மனை வாழ்க்கையின் மருண்டு.
தெளிவுரை : அவ்வாறு வாழ்கின்ற அந்தச் சிவநேசர் பெரிய நிதிக்குத் தலைவனான குபேரனைவிட மேம்பட்டு விளங்கும் நீடிய செல்வத்தால் சிறந்தவராகி, புகழ் பொருந்திய மேன்மையோடும் உலகத்தில் விளங்கியிருந்தார் என்றாலும், மகிழ்வுடைய இவ்வாழ்க்கைத் திறத்தால் மக்கட்பேறு பெறாமையால் மருண்டு மயங்கி,
2938. அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்தரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை யுலப்பில செய்தஅந் நலத்தால்
கரிய வாங்குழன் மனைவியார் வயிறெனுங் கமலத்
துரிய பூமக ளெனவொரு பெண்கொடி யுதித்தாள்.
தெளிவுரை : அரிய தன்மையுடன் அருந்தவம் செய்த சிவனடியார்களுக்குரிய அளவற்ற அருச்சனைகளைச் செய்து வந்த அந்த நன்மை காரணத்தால், அவரது கரிய சிறந்த கூந்தலையுடைய மனைவியாரின் வயிறு என்னும் தாமரையிடத்தில் உரிமை பொருந்திய பூமகள் போன்ற பெண் ஒருத்தி பிறந்தாள்.
2939. நல்ல நாள்பெற ஓரையில் நலம்மிக வுதிப்பப்
பல்பெ ருங்கிளை யுடன்பெரு வணிகர்பார் முழுதும்
எல்லை யில்தன முகந்துகொண் டியாவரும் உவப்ப
மல்ல லாவண மறுகிடைப் பொழிந்துளம் மகிழ்ந்தார்.
தெளிவுரை : நல்ல நாள் பெறவும் அந்த நாளில் நல்ல ஓரை பெறவும் அவ்வாறு அக்குழந்தை பிறக்க, பல பெரிய சுற்றத்துடன் பெரு வணிகரான சிவநேசர் அளவற்ற செல்வங்களை முகந்து எடுத்து, எல்லாரும் மகிழச் செழிப்புடைய கடை வீதியில் பொழிந்து உள்ளம் மகிழ்ந்தார்.
2940. ஆறு சூடிய முடியினார் அடியவர்க் கன்பால்
ஈறி லாதபூ சனைகள்யா வையுமிகச் செய்து
மாறி லாமறை யவர்க்குவேண் டினவெலாம் அளித்துப்
பேறு மற்றிதுவே எனும்படி பெருங்களி சிறந்தார்.
தெளிவுரை : கங்கையைச் சூடிய சடையுடைய சிவபெருமானது அடியார்களுக்கு அன்பு மிகுதியினால் எல்லையற்ற பூசைகள் எல்லாவற்றையும் மிகவும் செய்தும், ஒப்பில்லாத வேதியர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை எல்லாம் தந்தும், இதுவே பெரும்பேறாகும் என்று சொல்லும்படி உள்ளம் மகிழ்ந்தார்.
2941. சூத நல்வினை மங்கலத் தொழில்முறை தொடங்கி
வேத நீதியின் விதியுளி வழாவகை விரித்த
சாத கத்தொடு சடங்குகள் தசதினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில் கடிவிழா அயர்ந்தார்.
தெளிவுரை : குழந்தை பெற்றவுடன் செய்யப்படுகின்ற நல்ல சடங்குகளை முறைப்படி செய்யத் தொடங்கி, வைதீக நியமப்படி தவறாது விரித்துக் கூறிய சாதகன்மம் முதலாக வரும் சடங்குகள், குழந்தை பிறந்தபின் பத்து நாட்களிலும் செய்ய, பெருவிருப்பம் பொருந்திய சிறப்பால் மங்கல விழாவைச் செய்தனர்.
2942. யாவ ரும்பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலாம் நோக்கிப்
பூவி னாள்என வருதலின் பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க.
தெளிவுரை : எல்லாரும் பெருமகிழ்ச்சியால் இன்பத்தை அடையப் பெற்றெடுத்த பாவை போன்ற பெண்ணின் அழகு விளங்கும் பண்புகளை எல்லாம் பார்த்து, அவை பூமகளின் பண்புபோல் வருதலால் அப்பெண்ணுக்குப் பூம்பாவை என்றே பொருந்தும் பெயரை உலகத்தில் மேலாய் விளங்குமாறு கூறி இட்டனர்.
2943. திங்கள் தோறுமுன் செய்யும்அத் திருவளர் சிறப்பின்
மங்க லம்புரி நல்வினை மாட்சியிற் பெருக
அங்கண் மாநகர் அமைத்திட ஆண்டெதி ரணைந்து
தங்கு பேரொளிச் சீறடி தளர்நடை பயில.
தெளிவுரை : மாதந்தோறும் முன் செய்யப்படும் அந்தச் செல்வம் வளரும் மங்கலங்களான சடங்குகளும் மற்ற நல்வினைகளும் மாண்பு பொருந்தப் பெருகுமாறு அங்குப் பெரிய நகரத்தினர் அமைத்திட, ஓராண்டு நிறைந்து தங்கும் பேரொளியுடைய சிற்றடிகள் தளர்நடை பழக.
2944. தளரும் மின்னின்அங் குரமெனத் தமனியக் கொடியின்
வளரி ளந்தளிர்க் கிளையென மணிகிள ரொளியின்
அளவி லஞ்சுடர்க் கொழுந்தென அணைவுறும் பருவத்
திளவ னப்பிணை யனையவர்க் ஏழுயாண் டெய்த.
தெளிவுரை : துவளும் மின்னல் முளை போன்றும், பொன்னால் ஆனதோர் கொடியினது வளர்கின்ற இளந் தளிர் இலை போன்றும், இரத்தின மணிகளினின்றும் கிளர்கின்ற ஒளியின் அளவுப்படாத அழகிய சுடர்க் கொழுந்து போன்றும் சார்கின்ற பருவங்களில், இளஅன்னம் போன்ற அவருக்கு ஏழு ஆண்டுகளின் பருவம் எய்த,
2945. அழகின் முன்னிளம் பதமென அணிவிளக் கென்ன
விழவு கொண்டெழும் பேதைய ருடன்விளை யாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம் என்றுமற் றினைய
மழலை மென்கிளிக் குலமென மனையிடை ஆடி.
தெளிவுரை : அழகு என்று சொல்லப்படுகின்ற பொருளின் முதலில் பெறப்படும் இளம்பதம் எனவும் அழகு விளக்கு எனவும் சொல்லுமாறு வளர்ந்து, விழாக்கொண்டு கூடி, எழும் சிறுமியருடன் சேர்ந்து விளையாடல்பழகுவதில் கழல், அம்மானை பந்து என இத்தகையவற்றை, மழலை ததும்பும் மென்மையான கிளிக் கூட்டங்கள் போல் பாடி ஓடி இல்லத்தினுள் ஆடி,
2946. பொற்றொ டிச்சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்துட னடுந்தொழிற் சிறுசோ
றுற்ற உண்டிகள் பயின்றொளி மணியூசல் ஆடி
மற்றும்இன்புறு வண்டலாட் டயர்வுடன் வளர.
தெளிவுரை : பொன்னால் ஆன வளையலை அணிந்த சிறு பெண்களின் கூட்டத்துடன் கூடிச் சிற்றில்களை முற்றக் கட்டியும் அதனுடன் சமைக்கும் தொழிலில் சிறு சோற்றுடன் பொருந்திய உணவுகள் அமைத்தும் உண்ணுதலுமான செயல்களைச் செய்தும் ஒளியுடைய மணிகள் கட்டிய ஊசல் ஆடியும், இன்னும் இங்ஙனம் இன்பம் பொருந்தும் வண்டல் பயிலும் ஆடல்களை ஆடியும் வளர,
2947. தந்தை யாரும்அத் தளிரிளம் கொம்பனாள் தகைமை
இந்த வையகத் தின்மையால் இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்துமற் றிவள்மணம் பெறுவான்
அந்த மில்லென தருநிதிக் குரியனென்று அறைந்தார்.
தெளிவுரை : தந்தையான சிவநேசர் அந்தத் தளிர்த்த இளங்கொம்பைப் போன்ற பெண்ணுக்கு ஒத்த பண்பு இந்தவுலகத்தில் வேறு எவருக்கும் இல்லாததால், இன்பத்துடன் கூடிய களிப்புப் பொங்கிய உள்ளத்தில் மகிழ்ச்சியடைந்து, பேறாகிய இவளை மணம் செய்துகொள்ளும் மணமகனே எனது முடிவற்ற அரிய செல்வங்களுக்கெல்லாம் உரிமை உடையவன் ஆவான் என்று சொன்னார்.
2948. ஆய நாள்களில் அமண்பயில் பாண்டிநா டதனைத்
தூய ஞானமுண் டருளிய தோன்றலார் அணைந்து
மாய வல்லமண் கையரை வாதில்வென் றதுவும்
மேய வெப்பிடர் மீனவன் மேலொழித் ததுவும்.
தெளிவுரை : அத்தகைய நாளில் சமணர்கள் மிக்கிருந்த பாண்டிய நாட்டைத் தூய ஞான அமுது உண்ட ஞானசம்பந்தர் சென்று வஞ்சனையில் வல்ல சமணர்களான கீழ்மக்களை வாதில் வென்றதும் பாண்டியனுக்கு வந்த வெப்பு நோயின் துன்பத்தை நீக்கியதும்,
2949. நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டியபின்
மருப்பு நீள்கழுக் கோலின்மற் றவர்கள் ஏறியதும்
விருப்பி னால்திரு நீறுமீ னவற்களித் தருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம் போற்றுவித் ததுவும்.
தெளிவுரை : அனல் வாதத்தில் தோற்று அஞ்சிய சமணர்களைப் புனல் வாதத்தால் வென்ற பின்பு கூர்மையான கொம்பைப் போன்ற நீண்ட கழுமரங்களில் அந்தச் சமணர்கள் ஏறியதும் விருப்பத்துடன் பாடிய மன்னனுக்குத் திருநீற்றை அளித்து அதன் மூலம் மலையாகிய வில்லையுடைய சிவபெருமானின் திருநீற்றுச் சாதனத்தைப் பேணியதும்,
2950. இன்ன வாறெலாம் அறிந்துளார் எய்தியங் கிசைப்பச்
சொன்ன வர்க்கெலாம் இருநிதி தூசுடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத்திசை நோக்கிச்
சென்னி மேற்கரங் குவித்துவீழ்ந் தெழுந்துசெந் நின்று.
தெளிவுரை : (ஆகிய) இத்தகையவற்றை எல்லாம் அறிந்தவர் அங்குச் சேர்ந்து சொல்ல, வந்து சொன்னவர்க்கெல்லாம் பெருநிதியங்களை ஆடைகளுடன் அளித்து நிலை பெற்ற சீகாழிப் பதி வள்ளலாரான ஞானசம்பந்தரை, அவர் இருந்த திசையை நோக்கித் தலைமீது கை குவித்துக் கூப்பிக்கொண்டு நிலமுற விழுந்து வணங்கி எழுந்து நேர் நின்று.
2951. சுற்றம் நீடிய கிளையெலாம் சூழ்ந்துடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன்
பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யானென்று மொழிந்தார்.
தெளிவுரை : சுற்றத்தவரும் நீண்ட கிளைஞர்களும் கேட்குமாறு, உரத்த குரலில் கற்றவர்களாகிய மக்கள் வாழ்கின்ற சீகாழிப் பிள்ளையாருக்கு அடியேன் பெற்ற பூம்பாவையாரையும் விளக்கமான என் பெருஞ்செல்வத்தையும், முற்றவும் அடிமையாக என்னையும் யான் தந்தேன் ! என வுரைத்தார்.
2952. எல்லை யில்பெருங் களிப்பினால் இப்பரி சியம்பி
முல்லை வெண்ணகை முகிழ்முலை யாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையும் மறைவளர் புகலிச்
செல்வ ரேயுடை யாரெனும் சிந்தையால் மகிழ்ந்தார்.
தெளிவுரை : அளவு இல்லாத பெருங்களிப்பினால் இவ்வாறு சிவநேசர் சொல்லி, முல்லையரும்பைப் போன்ற கூர்மையான வெண்மையான பல் வரிசையையும் முகிழ்க்கும் கொங்கையையும் உடைய மகளுடன் எல்லையில்லாமல் நிரம்பிய செல்வ வளங்களையும் மறையவரின் சீகாழிப் பதியில் அவதரித்த செல்வரான ஞானசம்பந்தரே உடையவர் என்று துணிவு கொண்ட உள்ளத்தில் மகிழ்வும் அடைந்தார்.
2953. ஆற்று நாள்களில் அணங்கனார் கன்னிமா டத்தின்
பால்த டம்பொழில் மருங்கினிற் பனிமலர் கொய்வான்
போற்று வார்குழற் சேடிய ருடன்புறம் போந்து
கோற்றொடித் தளிர்க் கையினால் முகைமலர் கொய்ய.
தெளிவுரை : இங்ஙனம் சிவநேசர் செயல் ஆற்றி வரும் நாளில் தெய்வப்பெண் போன்ற பூம்பாவையார் கன்னி மாடத்தில் பால் போன்ற தூயநீர் நிறைந்த பொய்கை அருகில் குளிர்ந்த பூவைக் கொய்வதற்காகத் தம்மைப் போற்றும் நீண்ட கூந்தலையுடைய தோழியருடனே வெளியே போய்த் திரண்ட வளையலை அந்த தளிர் போன்ற கைகளால் முகைக்கும் பருவத்து மலர்களைக் கொய்ய,
2954. அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்தபாங் கல்லால்
பொன்பி றங்குநீர்ப் புகலிகா வலர்க்கிது புணரா
தென்ப துட்கொண்ட பான்மைஓர் எயிற்றிளம் பணியாய்
முன்ப ணைந்தது போலவோர் முள்ளெயிற்று அரவம்.
தெளிவுரை : அன்பரான சிவநேசர் இன்பம் பொருந்துகின்ற விருப்பத்தால் அளித்த அளவு மட்டுமேயன்றி, பொன் கொழிக்கும் நீரையுடைய சீகாழி ஞானசம்பந்தருக்கு இது சேர்வுறாது என்பதை மனத்துள் கொண்டுள்ள ஊழானது, நச்சுப் பற்களையுடைய ஒரு பாம்பாகி முன் வந்ததைப் போல முள் போன்ற பற்களையுடைய ஓர் பாம்பு,
2955. மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்துவந் தெய்திச்
செவ்வி நாண்முகை கவர்பொழு தினில்மலர்ச் செங்கை
நவ்வி வாள்விழி நறுநுதற் செறிநெறி கூந்தல்
கொவ்வை வாயவள் முகிழ்விரல் கவர்ந்தது குறித்து.
தெளிவுரை : மல்லிகை முல்லைக் கொடிகள் படர்ந்த பந்தலில் மறைந்து வந்து சேர்ந்து, பூம்பாவையார், பருவத்துப் புதிய அரும்புகளைப் பறிக்கின்றபோது, மான் போன்ற கூர்மையான கண்களையும் நல்ல நெற்றியையும் செறிவும் நெறிவும் உடைய கூந்தலையும், கோவைக் கனி போன்ற வாயையும் உடைய பூம்பாவையரின் மலர் போன்ற கையில் பூக் கொய்யக் கூப்பிய விரலைக் குறித்துக் கடித்தது,
2956. நாலு தந்தமும் என்புறக் கவர்ந்துநஞ் சுகுத்து
மேலெ ழும்பணம் விரித்துநின் றாடிவே றடங்க
நீல வல்விடந் தொடர்ந்தெழ நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது போன்றுள மயங்கி.
தெளிவுரை : நச்சுப் பற்கள் நான்கும் எலும்பளவும் அழுந்தக் கடித்து நஞ்சைச் செலுத்திப்படத்தை விரித்து நின்று ஆடிய அப்பாம்பு வேறு இடத்தில் மறைந்துவிட்டது. அவ்வாறாகவே கரிய கொடிய நஞ்சு அதனைத் தொடர்ந்து மேலே எழுந்ததால், மென்மையான பூமாலையில் தீப்பட்டதைப் போல் நல்ல அணிகளை அணிந்த பூம்பாவையார் உள்ளம் மயங்கி,
2957. தரையில் வீழ்தரச் சேடியர் வெருக்கொண்டு தாங்கி
வரைசெய் மாடத்தின் உட்கொடு புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலையழிந் துறுதுயர் பெருகக்
கரையில் சுற்றமுந் தாமும்முன் கலங்கினார் கலுழ்ந்தார்.
தெளிவுரை : நிலத்தில் விழ, தோழியர் திடுக்கிட்டு அஞ்சித் தாங்கிச் சென்று அவருக்கென்று அமைக்கப்பட்ட கன்னி மாடத்தில் கொண்டு புகுந்தனர். அதனால் சிவநேசர் சொல்லும் மனமும் நிலையழிந்து துன்பம் மேலிட, அளவற்ற சுற்றத்தாரும் தாமும் முன் கலங்கி அழுதனர்.
2958. விடந்தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீவிடம் அகற்றுதற் அணைந்துளார் அனேகர்
திடங்கொள் மந்திரந் தியானபா வகநிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தொழிலராய்த் தனித்தனிச் சூழ்வார்.
தெளிவுரை : நஞ்சைத் தீர்த்திடும் கலையில் கைவந்த பெரியோரான மேலோர் பலர் கொடிய நஞ்சைப் போக்குதற்குச் சேர்ந்தவர்களாய், வன்மையுடைய மந்திரமும் தியானமும் பாவனையும் முட்டி நிலையுமாய்த் தொடர்ந்த தீர்வுச் செயல்களைத் தனிதனிச் செய்யச் சூழ்ந்து.
2959. மருந்தும் எண்ணில மாறில செய்யவும் வலிந்து
பொருந்து வல்விடம் ஏழுவே கமும்முறை பொங்கிப்
பெருந்த டங்கண் மென் கொடியனாள் தலைமிசைப் பிறங்கித்
திருந்து செய்வினை யாவையுங் கடந்துதீர்ந் திலதால்.
தெளிவுரை : மேற் கூறப்பட்ட நான்குடன் அளவில்லாத இணையற்ற மருந்துகளைச் செய்யவும், வன்மையாய்ப் பற்றிக் கொண்டு கொடிய நஞ்சு ஏழு வேகமும் முறையாய் மேல் ஏறி, அகன்ற கண்களையுடைய மென்மையான கொடி போன்ற பூம்பாவையரின் தலையை மேற்கொண்டு விளங்கத் திருந்துமாறு செய்த தீர்வினைகள் எல்லாவற்றையும் கடந்து தீராமல் போகவே,
2960. ஆவி தங்குபல் குறிகளும் அடைவில வாக
மேவு காருட விஞ்சைவித் தகர்இது விதியென்
றோவும் வேளையில் உறுபெரும் சுற்றமும் அலறிப்
பாவை மேல்விழுந் தழுதனர் படரொலிக் கடல்போல்.
தெளிவுரை : உயிர் உடம்பில் தங்குவதற்குரிய பல குறிகளும் பொருந்தாது போக, வந்து சேர்ந்த காருடக் கலையில் வல்லவரும் இது விதி என்று கைவிடும் வேளையில் பொருந்திய பல சுற்றத்தார்களும், கடலைப் போல் அலறிப் பாவைமீது விழுந்து அழுதனர்.
2961. சிந்தை வெந்துயர் உறுசிவ நேசருந் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில் வையகத் துள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு ஈகுவன்என் னுடைய
அந்த மில்நிதிக் குவையெனப் பறையறை வித்தார்.
தெளிவுரை : உள்ளத்தில் கொடிய துன்பம் அடைந்த சிவநேசரும், பின்பு தெளிந்து, செய்யக்கூடிய தீர்செயல்கள் ஏதும் இல்லாததால், உலகத்தில் உள்ளவர்களில் யாவராயினும் இந்தக் கொடிய நஞ்சை ஒழித்தால் அவருக்கு இங்குள்ள எல்லை இல்லாத செல்வத் திரள் எல்லாவற்றையும் அளிப்பேன் என்று எங்கும் யாரும் அறியுமாறு பறை சாற்றினார்.
2962. முரசி யம்பிய மூன்றுநாள் அகவயின் முற்ற
அரசர் பாங்குளோர் உட்பட அவனிமே லுள்ள
கரையில் கல்வியோர் யாவரும் அணைந்துதங் காட்சிப்
புரையில் செய்கையில் தீர்ந்திடா தொழிந்திடப் போனார்.
தெளிவுரை : இங்ஙனம் பறை சாற்றிய பின்னர் மூன்று நாள் எல்லையில், அரச அவையில் உள்ளவர் உட்பட உலகத்தில் உள்ள எல்லை இல்லாத கல்வியுடையவர் யாவரும் வந்து சேர்ந்து தாம் தாம் உறுதியாய்க் கண்ட குற்றமற்ற தீர் தொழில்கள் எவற்றாலும் தீராது ஒழியாமற் போக நீங்கிச் சென்றனர்.
2963. சீரின் மன்னிய சிவநேசர் கண்டுளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர்
சாரும் அவ்வள வும்முடல் தழலிடை யடக்கிச்
சேர என்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார்.
தெளிவுரை : அந்த நிலைமையைக் கண்ட சிறப்புப் பொருந்திய சிவநேசர் உள்ளம் மயங்கி மேகம் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட சீகாழித் தலைவர் வந்து சேரும் நாள் வரையிலும் பூம்பாவையாரின் உடலைத் தீயில் இட்டு அடங்கச் செய்து அதில் சேரும் எலும்புடன் சாம்பலையும் சேமித்து வைப்பது எனத் தெளிவுடையவராய்,
2964. உடைய பிள்ளையார்க் கெனஇவள் தனைஉரைத் ததனால்
அடைவு துன்புறு வதற்கிலை யாம்நமக் கென்றே
இடரொ ழிந்தபின் அடக்கிய என்பொடு சாம்பல்
புடைபெ ருத்தகும் பத்தினிற் புகப்பெய்து வைப்பார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர் பெருமானுக்கு இவளை அளித்தேன் என்று கூறிவிட்டதால் இதனால் நமக்குத் துன்பம் அடைவதற்கு இல்லையாம் என்று துணிந்து துன்பம் நீங்கினார். பின் தீயில் எரித்த எலும்பையும் சாம்பலையும் பக்க இடம் அகன்ற குடத்தில் புக இட்டு வைப்பார் ஆனார்.
2965. கன்னி மாடத்தின் முன்புபோல் காப்புற அமைத்துப்
பொன்னு முத்துமே லணிகலன் பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப்பள்ளி அதன்மேல்
மன்னு பொன்னரி மாலைகள் அணிந்துவைத் தனரால்.
தெளிவுரை : கன்னி மாடத்தில் முன்போலவே காவல் பொருந்த அக்குடத்தை வைத்துப் பொன்னும் முத்தும் மேல் அணிகலன்களும் அழகான மென்மையான துகில்களும் சுற்றிப் புனைந்து, புகழ்ந்து பேசப்படும் அன்னத்தூவியிட்ட பஞ்சணையான மணம்கமழும் பள்ளியில் வைத்து, அதன் மேல் நிலைபெற்ற பொன்னரியான கழுத்தணி வகைகளையும் அழகு பெறக் கோலம் செய்து வைத்தார்.
2966. மாலை சாந்தொடு மஞ்சனம் நாடொறும் வழாமைப்
பாலி னேர்தரும் போனகம் பகல்விளக்கு இனைய
சாலு நன்மையில் தகுவன நாள்தொறுஞ் சமைத்தே
ஏலு மாசெய யாவரும் வியப்பெய்து நாளில்.
தெளிவுரை : மாலையும் சந்தனத்துடன் திருமஞ்சனமும் நாள்தோறும் விடாமல் பால் சோறும் பகல் விளக்கும் என்ற இவையும் இவை போன்றவற்றையும் பொருந்திய நன்மையினால் தக்கவையாக நாள்தோறும் அமைத்துப் பொருந்தும்படி செய்ய யாவரும் அதைக் கண்டு வியப்பை அடைந்த நாள்களில்,
2967. சண்பை மன்னவர் திருவொற்றி யூர்நகர் சார்ந்து
பண்பு பெற்றநற் றொண்டர்க ளுடன்பணிந் திருந்த
நண்பு மிக்கநல் வார்த்தைஅந் நற்பதி யுள்ளோர்
வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு வந்துரை செய்தார்.
தெளிவுரை : சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் திருவொற்றியூர் நகரத்தில் வந்து சார்ந்து பண்பையுடைய நல்ல தொண்டருடனும் இறைவரைப் பணிந்து அங்கே எழுந்தருளியிருந்தார் என்ற நட்புடைய நல்ல சொல்லை, அந்த நல்ல பதியில் உள்ள அடியார்கள் வண்மையும் புகழும் உடைய பெருவணிகர் தோன்றலாரான சிவநேசரிடம் வந்து கூறினர்.
2968. சொன்ன வர்க்கெலாந் தூசொடு காசுபொன் னளித்தே
இன்ன தன்மையர் எனவொணா மகிழ்சிறந் தெய்தச்
சென்னி வாழ்மதி யார்திரு வொற்றியூ ரளவும்
துன்னு நீள்நடைக் காவணந் துகில்விதா னித்து.
தெளிவுரை : அங்ஙனம் ஞானசம்பந்தரைப் பற்றித் தம்மிடம் வந்து கூறியவர்க்கெல்லாம் சிவநேசர், ஆடையும், காசும், பொன்னும், அன்புடனே இன்ன தன்மைதான் பெற்றார் என்று சொல்ல முடியாத மகிழ்ச்சி மேல் ஓங்க, தலையில் வாழ்வு பெறும் மதியைத் தாங்கிய இறைவர் எழுந்தருளிய திருவொற்றியூர் அளவும் நெருங்கிய நடைக்காவணம் இட்டுத் துணியால் விதானமும் கட்டி,
2969. மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும் நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம் எனப்பொலி வித்தார்.
தெளிவுரை : மகர தோரணங்களும் வளம் மிக்க குலைக் கமுகுகளும் வாழைகளும், ஒப்பில்லாத பல கொடிகளும் மாலைகளும் ஆகிய இவற்றை அழகு பொருந்த வரிசையாய் அமைத்து நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்தச் செய்த அலங்கராங்களினால் குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கியதாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.
2970. இன்ன வாறணி செய்துபல் குறைவறுப் பேவி
முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர்
பொன்ன டித்தலம் தலைமிசைப் புனைவனென் றெழுவார்
அந்ந கர்ப்பெருந் தொண்டரும் உடன்செல வணைந்தார்.
தெளிவுரை : இவ்வாறு அலங்காரத்தைச் செய்து பலவகையாலும் குறைகள் இல்லாமல் செய்யும் பணியாட்களை ஏவி, முன் சென்று திருவொற்றியூர் நகரில் முத்தமிழ் விரகரான பிள்ளையாரின் பொற் பாதங்களை வணங்கித் தலைமீது சூட்டிக் கொள்வேன் என்று எழுவாராகி அந்த மயிலையில் வாழும் பெருந்தொண்டர்களும் தம்முடன் வரத் திருவொற்றியூரை நோக்கிச் சென்றார்.
2971. ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர் வியனகர் அகன்று
காயல் சூழ்கரைக் கடல்மயி லாபுரி நோக்கித்
தூய தொண்டர்தம் குழாத்தொடும் எதிர்வந்து தோன்ற.
தெளிவுரை : அந்தச் சமயத்தில் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தப் பெருமானும் தாம் தங்கியிருந்த திருவொற்றியூரைப் பணிந்து, அந்தப் பெருநகரை விட்டு அகன்று, உப்பளங்கள் சூழ்ந்த கடற்கரையின் துறையையுடைய திருமயிலையை நோக்கித் தூய்மையான தொண்டர்கள் திருக்கூட்டத்தோடும் எதிரில் வந்து தோன்ற,
2972. மாறில் வண்பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த
நீறு சேர்தவக் குழாத்தினை நீளிடைக் கண்டே
ஆறு சூடினார் திருமக னார்அணைந் தாரென்
ஈறி லாததோர் மகிழ்ச்சியி னால்விழுந் திறைஞ்ச.
தெளிவுரை : அச்சமயத்தில் ஒப்பற்ற வண்மையுடைய பெரு வாணிகரான சிவநேசரும் அவருடன் வந்த பெருந்தொண்டர்களும் ஒளி விளங்கும் வெண்ணீறு புனைந்த தவத்தையுடைய அடியார் கூட்டத்தினை நெடுந் தொலைவில் பார்த்துக் கங்கையாற்றைச் சூடிய இறைவரின் மகனார் வந்தனர் என்று இறுதியில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சியால் நிலத்தில் விழுந்து துதிக்க,
2973. காழி நாடரும் கதிர்மணிச் சிவிகைநின் றிழிந்து
சூழி ரும்பெருந் தொண்டர்முன் தொழுதெழுந் தருளி
வாழி மாதவர் வணிகர்செய் திறஞ்சொலக் கேட்டே
ஆழி சூழ்மயி லாபுரித் திருநகர் அணைந்தார்.
தெளிவுரை : சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் ஒளி வீசும் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து சூழ்ந்த பெரிய தொண்டர் முன்னே தொழுது எழுந்தருளி, வாழ்வுடைய மாதவர்களாகிய அடியார்கள் சிவநேசரின் அடிமைப் பண்பை எடுத்துச் சொல்லக் கேட்டு, கடற்கரை சூழ்ந்த திருமயிலைத் திருநகரைச் சேர்ந்தார்.
2974. அத்தி றத்துமுன் நிகழ்ந்தது திருவுள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறு சிவநேசர் தம்செயல் வாய்ப்பப்
பொய்த்த வச்சமண் சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த வப்பெருங் கருணைநோக் கால்மகிழ்ந் தருளி.
தெளிவுரை : வாணிகரின் அத்திறத்தின் முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சியைத் தம் உள்ளத்தில் ஞானசம்பந்தப் பெருமான் அமைத்துக் கொண்டு, உள்ளத்தில் இன்பமடையும் தொண்டரான சிவநேசரின் செயல் வாய்த்திடப், பொய்யான தவத்தை மேற்கொண்டு வருந்தும் சமணர் சாக்கியரின் புறத்துறைகள் அழியத் திருவுளங்கொண்ட அந்தப் பெரிய அருள் நோக்கத்தினால் மகிழ்ந்தருளி,
2975. கங்கை வார்சடை யார்கபா லீச்சரத் தணைந்து
துங்க நீள்சுடர்க் கோபுரம் தொழுதுபுக் கருளி
மங்கை பாகர்தம் கோயிலை வலங்கொண்டு வணங்கிச்
செங்கை சென்னிமேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.
தெளிவுரை : கங்கையைச் சூடிய நீண்ட சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளிய, திருக்கபாலீச்சரம் என்னும் திருக்கோயிலைச் சேர்ந்து, உயர்ந்த நீண்ட ஒளியுடைய கோபுரத்தைத் தொழுது புகுந்தருளி, உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர் கோயிலை வலமாகச் சுற்றி வந்து வணங்கிச் சிவந்த கை தலைமீது குவித்திடத் திருமுன்பு வந்து சேர்ந்தார்.
2976. தேவ தேவனைத் திருக்கபா லீச்சரத் தமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையால் போற்றினார் ஞானசம் பந்தர்.
தெளிவுரை : தேவரின் தலைவராயுள்ள இறைவரை, திருக்கபாலீச்சரத்தில் அமர்ந்த அமுதம் போன்றவரை, தையல் பாகரை, அன்பு பொருந்திய பண்பினால் துதித்துப் பொருந்திய காதலால் விரும்பிய விரைவினால் நிலத்தில் பொருந்த விழுந்து, திருநாவில் பொருந்திய உண்மைத் திருவாக்கினால், ஞானசம்பந்தர் போற்றியருளினார்.
2977. போற்றி மெய்யருள் திறம்பெறு பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறைமயிர்ப் புளகங்கள் நெருங்கக்
கூற்ற டர்த்தவர் கோயிலின் புறம்புபோந் தருளி
ஆற்றும் இன்னருள் வணிகர்மேற் செலவருள் செய்வார்.
தெளிவுரை : அங்ஙனம் போற்றி மெய்யருள் திறத்தைப் பெறும் இடைவிடாத எண்ணத்துடன் வணங்கித் திருநீறு பூசிய மேனியில் நிறைவாக மயிர்ப் புளகம் தோன்ற இயமனைக் காலினால் உதைத்து உருட்டிய இறைவரின் வெளிப் புறத்தில் சென்று, செய்கின்ற இனிய அருள், வாணிகரின் மீது செல்வதாய் அருளிச் செய்பவராய்.
2978. ஒருமை உய்த்தநல் லுணர்வினீர் உலகவர் அறிய
அருமை யால்பெறும் மகள்என்பு நிறைத்தஅக் குடத்தைப்
பெரும யானத்து நடம்புரி வார்பெருங் கோயில்
திரும திற்புற வாய்தலில் கொணர்கென்று செப்ப.
தெளிவுரை : சிவனடிமைத் திறத்தில் ஒன்றித்து வைத்த உணர்வுடையீர் ! உலகத்தவர் எல்லாம் அறியுமாறு, அரிய தவத்தின் பயனாய்ப் பெற்ற மகளுடைய எலும்பு நிறைந்த அக்குடத்தைப் பெரிய மயானத்தில் கூத்தாடுகின்ற இறைவரின் இப்பெரு கோயிலின் திருமதில்புறத்துத் திருவாயில் முன்னர் கொண்டு வருக எனக்கூறியருள,
2979. அந்த மில்பெரு மகிழ்ச்சியால் அவனிமேல் பணிந்து
வந்து தந்திரு மனையினில் மேவிஅம் மருங்கு
கந்த வார்பொழில் கன்னிமா டத்தினில் புக்கு
வெந்த சாம்பலோ டென்புசேர் குடத்தைவே றெடுத்து.
தெளிவுரை : எல்லை இல்லாத பெருமகிழ்ச்சியால் நிலத்தின் மீது விழுந்து வணங்கிக் கோயிலின்றும் வந்து, தம் திரு இல்லத்துள் சேர்ந்து, அங்கு மணம் பொருந்திய நீண்ட சோலையிடையில் உள்ள கன்னி மாடத்தில் புகுந்து, மகள் உடல் வெந்த சாம்பலுடன் எலும்பை இட்டு வைத்த குடத்தைப் பஞ்சணை முதலியவற்றினின்று வேறாய் எடுத்து வந்து,
2980. மூடு பன்மணிச் சிவிகையுள் பெய்துமுன் போத
மாடு சேடியர் இனம்புடை சூழ்ந்துவந் தணைய
ஆடல் மேவினார் திருக்கபா லீச்சரம் அணைந்து
நீடு கோபுரத் தெதிர்மணிச் சிவிகையை நீக்கி.
தெளிவுரை : பல மணிகள் இழைத்த மூடு சிவிகையுள் அந்தக் குடத்தை இனிதாக அமைத்து வைத்து, அதனை முன்போக விட்டு, பக்கத்தில் தோழியர் கூட்டம் சூழ்ந்து வர, ஆடலைச் செய்யும் இறைவரின் திருக்கபாலீச்சரத்தைச் சேர்ந்து, நீண்ட கோபுரத்தின் வெளியே எதிரில் மணிச் சிவிகையின் திரையை விலக்கி,
2981. அங்க ணாளர்தம் அபிமுகத் தினில்அடி யுறைப்பால்
மங்கை என்புசேர் குடத்தினை வைத்துமுன் வணங்கப்
பொங்கு நீள்புனற் புகலிகா வலர்புவ னத்துத்
தங்கி வாழ்பவர்க் குறுதியாம் நிலைமைசா திப்பார்.
தெளிவுரை : இறைவரின் சன்னதியின் முன்பாக அவரது திருவடியில் பதிந்த அன்பின் உறைப்பால், பெண்ணின் எலும்புடைய அருட்குடத்தை எடுத்து வைத்துத், திருமுன்பு சிவநேசர் வணங்கினார். வணங்க, பொங்கி வரும் பெருநீர்ச் சிறப்புடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் இவ்வுலகத்தில் தங்கி வரும் மக்களுக்கு உறுதிப் பொருள் நிலைமை இதுவாம் என நேரே காட்டியருள,
2982. மாடம் ஓங்கிய மயிலைமா நகருளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில் சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந் தெய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க.
தெளிவுரை : மாடங்கள் ஓங்கிய மயிலைப் பெரு நகரத்தில் உள்ளவர்களும் மற்றும் அந்நாட்டில் உள்ளவர்களும், நன்றி இல்லாத மற்றச் சமயத்தில் உள்ளவர்களும் எப்பக்கங்களினின்றும் சூழ்ந்து, இதன் விளைவைக் காண்பதற்கு வந்து பெருகவும், நீடிய தேவர்களும் மற்றவர்களும் வானத்தில் நெருங்கவும்,
2983. தொண்டர் தம்பெரும் குழாம்புடை சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர வாயில்நேர் அணைந்து
வண்டு வார்குழ லாள்என்பு நிறைந்தமண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.
தெளிவுரை : திருத்தொண்டர் கூட்டம் தம் பக்கத்தில் சூழ்ந்து வரவும், பழைமையான தேவரது கோபுர வாயிலின் நேரில் வந்து சேர்ந்து, வண்டுகள் தங்கும் நீண்ட கூந்தலையுடைய பூம்பாவையாரின் எலும்பு நிறைந்த அந்த மண் குடத்தை அருட்பார்வை பார்த்தருளி, இறைவரின் கருணையின் பெருமையை உள்ளத்துள் பாவனை செய்து,
2984. இந்த மாநிலத் திறந்துளோர் என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாந் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம் எனவருள் நோக்கால்
சிந்தும் அங்கம்அங் குடையபூம் பாவைபேர் செப்பி.
தெளிவுரை : இந்த வுலகத்தில் இறந்தவரின் எலும்பை மேலும் பெரிய நன்னெறியில் பொருந்தியிட நன்மையாகின்ற தன்மையானது அந்த எலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும் என்று எண்ணிய அருள் நோக்கத்தினால், சிந்திய அங்கங்களான அந்த எலும்பை முன்னுடைய உடம்பில் வாழ்ந்த பூம்பாவை என்ற பெயரால் விளித்துச் சொல்லியருளி,
2985. மண்ணி னில்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன் வருகஎன வுரைப்பார்.
தெளிவுரை : இந்த மண்ணுலகத்தில் வினைக்கு ஈடாக வந்து பிறந்து உயிர்கள் பெறும் பிறவிப் பயனாகிய உறுதிப் பொருளாவன பிறையை அணியும் பெருமானின் அடியவர் தம்மைத் திருவமுது செய்வித்தலும், கண்களால் அந்த இறைவரின் திருவிழாக்களில் பெரும் பொலிவைக் கண்டு மகிழ்தலும் என்ற இவை இரண்டுமே உறுதிப் பொருளாவன என்பது உண்மையானால், ஏ பூம்பாவையே ! உலகத்தார் முன் உடலும் உயிரும் பொருந்த வருவாயாக ! எனச் சூள் செய்து எடுத்துச் சொல்பவராய்.
2986. மன்னு வார்சடை யாரைமுன் தொழுதுமட் டிட்ட
என்னும் நற்பதி கத்தினில் போதியோ என்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனும் அமுதமவ் வங்கம்
துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள்.
தெளிவுரை : நிலை பெற்ற நீண்ட சடையையுடைய இறைவரைத் தொழுது மட்டிட்ட எனத் தொடங்கும் அந்தத் திருப்பதிகத்தில் போதியோ என்று கூறும் அந்த மெய்த் திருவாக்கு என்னும் அமுதனானது, அக்குடத்தினுள் அந்த எலும்பின் உடம்பினுள்ளே பொருந்த வந்து உருவமாகக் கூடியது.
2987. ஆன தன்மையில் அத்திருப் பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத் தடங்கிமுன் னிருந்தெழு வதன்முன்
ஞான போனகர் பின்சமண் பாட்டினை நவில்வார்.
தெளிவுரை : முன் நான்கு பாட்டுக்களில் கூறிய அத்தகைய தன்மையால் மட்டிட்ட எனத் தொடங்கிய அத்திருப் பாட்டைத் தொடர்ந்து முறையே பாடுந் தோறும் போன உயிரும் உருவம் பெறும் உறுப்புப் பகுதிகளும் அழகும் முறையாய் நிரம்பி, வேறாகிய அந்தக் குடத்தில் முன்பு தொக்குக் கூடியிருந்து உரியபடி வெளிப்பட்டு எழுவதன் முன்பு ஞான அமுது உண்ட சம்பந்தப் பெருமான் பின் முறையாய் அருளும் சமண் பாட்டான பத்தாம் திருப்பாட்டை அருளிச் செய்பவராகி,
2988. தேற்ற மில்சமண் சாக்கியத் திண்ணர்இச் செய்கை
ஏற்ற தன்றென எடுத்துரைப் பார்என்ற போது
கோற்றொ டிச்செங்கை தோற்றிடக் குடமுடைந் தெழுவாள்
போற்று தாமரைப் போதவிழ்ந் தெழுந்தனள் போன்றாள்.
தெளிவுரை : தெளிவு இல்லாத சமண சாக்கியர்களாகிய தீயர்கள் இந்தச் செய்கை ஏற்றதன்று என்று எடுத்துச் சொல்வார்கள் என அப்பாட்டினைப் பாடி அருள் செய்த போது, முன்னம் வளையல் அணிந்த கை வெளிப்பட்டுத் தோன்றிட, அந்தக் குடம் உடைந்து மேல் எழுபவரான பூம்பாவையார், போற்றும் தாமரை அரும்பு இதழ் அவிழ்ந்து அதிலிருந்து எழும் திருமகளைப் போன்று தோன்றினார்.
2989. எடுத்த பாட்டினில்வடிவுபெற் றிருநான்கு திருப்பாட்
டடுத்த அம்முறைப் பன்னிரண் டாண்டள வணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக் காப்புமேல் விரித்தார்.
தெளிவுரை : மட்டிட்ட எனத் தொடங்கிய பாட்டில் பாவையார் வடிவத்தைப் பெற்று, அதன்மேல் அருளிய எட்டுத் திருப்பாட்டுகளில் வடிவு எடுத்த நிலையை அடுத்த அம்முறையே, பன்னிரண்டு ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியைப் பெற்றுத் தொடுத்த கொடிய சமணர் பாட்டை அருளிய அளவில், குடமானது உடைந்து வெளிப்பட்டுத் தோன்றப் பார்த்து, எவ்வித விருப்பும் வெறுப்பும் இல்லாத பிள்ளையார் அதன்பின் திருக்கடைக்காப்பை விரித்துக் கூறியருளினார்.
2990. ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்கு வார்கள்
ஈங்கிது காணீர் என்னா அற்புத மெய்தும் வேலைப்
பாங்குசூழ் தொண்ட ரானோர் அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய வோசை யும்பர் நாட்டினை உற்ற தன்றே.
தெளிவுரை : அவ்வாறு தோன்றிய தெய்வநலம் வாய்ந்த பூம்பாவையாரைப் பார்ப்பவர் எல்லாம் இங்கு இதனைப் பாரீர், இங்கு இதனை நன்கு பாரீர் என்று எடுத்துச் சொல்லி, அற்புதத்தை அடைந்தபோது பக்கத்தில் சுற்றும் சூழ்ந்திருந்த திருத்தொண்டர்கள் அரகர என்று இவ்வுலகத்தில் முழங்கிய பேரொலி, அப்போதே சென்று வான் உலகத்தையும் அடைந்தது!
2991. தேவரும் முனிவர் தாமும் திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.
தெளிவுரை : வானத்தில் நெருங்கிய தேவர்களும் முனிவர்களும் முதலானவர் சிவபெருமானின் திருவருள் சிறப்பை நோக்கித் தெய்வ மரங்களின் மலர்களால் ஆன மணமுடைய பூமழையைப் பெய்தனர். முன் கூறப்பட்டவர்கள் ஒழிய மற்றவர் எல்லாரும் இங்ஙனம் விளைவு பொருந்தியிருந்த வண்ணமானது எம் தலைவரான சிவபெருமானின் திருவருளின் விளைவே யாகும்! எனச் சொல்லிப் பொருந்திய கைகளை உச்சி மீது குவித்து வணங்கி நிலத்தில் விழுந்து தொழுதனர்.
2992. அங்கவள் உருவங் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்
பங்கமுற் றாரே போன்றார் பரசம யத்தி னுள்ளோர்
எங்குள செய்கை தான்மற் றென்செய்த வாறி தென்று
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்.
தெளிவுரை : அங்கு அப்பூம்பாவையின் முன் சொல்லப்பட்டவாறுள்ள வடிவத்தைக் காண்பவரான மற்றச் சமயத்தில் உள்ளவர் மிக்க அதிசயம் அடைந்து, இச்செய்தியால் தம் தம் சமயங்களை நிராகரிக்கப் பெற்று அவ்வவரும் தோல்வியடைந்தவர் போல் ஆயினர். இச்செய்கை எங்குத்தான் உள்ளது? எவ்வாறு செய்யப்பட்டது? எனத் துணிய மாட்டாமல் ஐயம் கொண்ட சமணர் தள்ளாடி நிலத்தில் தடுமாறி விழுந்தனர்.
2993. கன்னிதன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க் கெல்லாம் மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா மரையின்மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல்போ லிருண்டு தோன்ற.
தெளிவுரை : குடம் உடைந்து எழுந்த கன்னியான பூம்பாவையாரின் அழகு முழுமையும் கண்களால் முற்றக் காணாதவராகித் தம் கண்கொண்ட அளவே கண்டு, அம்மட்டில் அடங்கிக் கண்டு கொண்டவர்க்கு எல்லாம் தோன்றிய நிலையாவது, மொய்த்து வளர்ந்த கருமையான கூந்தலான சுமை பொருந்திய முகமான செந்தாமரையில் கரிய வண்டுக் கூட்டம் நெருங்கி மொய்த்து வரிசையாகச் சூழ்ந்திருந்தாற் போன்று கரிய நிறம் அடைந்து காணப்படவும், (இது கூந்தல் அழகை விரித்தது.)
2994. பாங்கணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக் கழகின் மாரி பொழிந்திடப் புயற்கீ ழிட்ட
வாங்கிய வான வில்லின் வளரொளி வனப்பு வாய்ப்ப.
தெளிவுரை : பக்கத்தில் அழகிய வண்டுகள் மொய்த்த குளிர்ந்த பூக்களை அணிந்த கூந்தல் பந்தியுடன், மணம் வீசும் திலகம் அணிந்த நெற்றிப் பொலிவைப் பார்க்கில், பூம்பாவையரான பூங்கொடிக்கு அழகின் மழை பொழியும் பொருட்டாக மேகத்தின் கீழே இட்ட வளைந்த வானவில்லின் மிக்க ஒளி பொருந்திய அழகு பொருந்த, (இது நெற்றியழகை விவரிக்கின்றது.)
2995. புருவமென் கொடிகள் பண்டு புரமெரித் தவர்தம் நெற்றி
ஒருவிழி எரியில் நீறா யருள்பெற உளனாம் காமன்
செருவெழும் தனுவ தொன்றும் சேமவில் லொன்றும் ஆக
இருபெருஞ் சிலைகள் முன்கொண் டெழுந்தன போல ஏற்ப.
தெளிவுரை : புருவம் என்ற இரண்டு கொடிகள், முன் காலத்தில் முப்புரம் எரித்த சிவபெருமானின் நெற்றித் தனிக் கண்ணில் வந்த தீயினால் சாம்பலாகிப் பின் அருளும் பெற உள்ளவன் ஆன, காமனின் போரில் ஏந்திய வில் ஒன்றும் சேமமாய் வைக்கப்படும் வில் ஒன்றுமாக, இருபெரு விற்களின் தன்மைகளை முன்னே கொண்டு தோன்றி எழுந்தாற் போல் அழகு செய்ய, (இது புருவ அழகை விரித்தது.)
2996. மண்ணிய மணியின் செய்ய வளரொளி மேனி யாள்தன்
கண்ணிணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய கயலிரண் டொத்து லாவ.
தெளிவுரை : கடைந்தெடுத்த மாணிக்கத்தை விடச் செம்மையாய் வரும் ஒளியுடைய மேனி கொண்ட பாவையாரின் இரண்டு கண்களின் அழகைக் காணுமிடத்து அழகுமிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்ற உலவ, (இது கண்களின் அழகை விரித்தது.)
2997. பணிவளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியில் தோன்றும் நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி அனையதாம் அழகு காட்ட.
தெளிவுரை : பாம்பின் படத்தைப் போன்று வளரும் அல்குலையுடைய பாவையாரின் நாசியும் பவளம் போன்ற வாயும் நெருங்க நின்று பெரிய ஒளியுடன் தோன்றும் அழகை நாடி அறிய முயல்வார்க்கு, மாணிக்கம் போன்ற சிவந்த நிறம் கொண்ட இந்திரகோபம் என்ற பூச்சியைப் பார்த்து அதைக் கவரும் பொருட்டுத் தாழ்ந்து வரும் அழகான பல நிறங்களை கொள்ளும் காமரூபி-பச்சோந்தி-சேர்வதான அழகைப் புலப்படுத்த. (இது நாசி, வாய் என்பனவற்றின் அழகை விரித்தது.)
2998. இளமயில் அனைய சாயல் ஏந்திழை குழைகொள் காது
வளமிகு வனப்பி னாலும் வடிந்ததா ளுடைமை யாலும்
கிளரொளி மகர ஏறு கெழுமிய தன்மை யாலும்
அளவில்சீர் அனங்கன் வென்றிக் கொடியிரண் டனைய வாக.
தெளிவுரை : இளம் மயிலைப் போன்ற சாயலையுடைய ஏந்திய இழை அணிந்த பாவையாரின் காதணி அணிந்த காதுகள், வளமான அழகாலும் வடிந்த காதுத் தண்டை உடைமையாலும் மிக்க ஒளியுடைய ஆண் சுறா மீனானது பொருந்திய தன்மையினாலும் அளவில்லாத சிறப்புடைய வெற்றிக்கொடி இரண்டைப் போன்று விளங்க, (இது காது அழகை விரித்தது.)
2999. விற்பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதன மாகும்  பதுமநன் னிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி
அற்பொலி கண்டர் தந்த அருட்கடை யாளங் காட்ட.
தெளிவுரை : ஒளி திகழும் முத்துக் கோவைகள் விளங்கும் கழுத்து அதன்மீது அழகமைந்த முகமாகும் பதும நிதியைத் தோற்றுவித்த நல்ல பெரிய சங்கம் என்னும் நல்ல நிதியைப் போல் தோன்றி, இருள்போலும் கரிய நஞ்சு விளங்கிய கழுத்தையுடைய திருநீலகண்டரான இறைவர் தந்த பெருங்கருணைக்கு அடையாளத்தைக் காட்ட, (இது கழுத்து, முகம் என்பனவற்றின் அழகை விரித்தது.)
3000. எரியவிழ் காந்தள் மென்பூத் தலைதொடுத் திசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்குஞ் செச்சை மாலையோ தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்
அருகிழிந் தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற.
தெளிவுரை : கரிய நீண்ட கயல்மீன் போன்ற கண்களையுடைய பாவையாரின் கைகள் காரணமாகக் காணும் போது தீயைப் போல் மலர்ந்த மெல்லிய செங்காந்தள் பூக்களைத் தலைத்தலை பொருந்தத் தொடுத்துப் பொருந்துமாறு வைத்து அதன் திரட்சி மேலால் சுருங்கி வருமாறு அமைத்த வெட்சிப் பூமாலையோ அதுவன்றி, வேறொரு வகையால் ஆராயுமிடத்து உடலில் உள்ள மேனியின் ஒளியினது மிகுதி இரு பக்கங்களிலும் மிகுந்து வழிந்தனவோ என்னும் அதிசயம் தோன்ற, ( இது கைகள் அழகை விரித்தது.)
3001. ஏர்கெழு மார்பிற் பொங்கும் ஏந்திளங் கொங்கை நாகக்
கார்கெழு விடத்தை நீக்குங் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர்திரு வருளிற் பூரித் தடங்கிய அமுத கும்பச்
சீர்கெழு முகிழைக் காட்டுஞ் செவ்வியில் திகழ்ந்து தோன்ற.
தெளிவுரை : அழகு பொருந்திய மார்பில் பெருகி எழுகின்ற தனங்கள், பாம்பின் கரிய நஞ்சைப் போக்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தப் பெருமானின் நோக்கத்தால் பொருந்திய திருவருள் என்ற அமுதத்தால் நிறையப் பெற்று அமைந்த கும்பத்தினை மேல் மூடிய முகிழ்போன்ற தன்மையில் விளங்கித் தோன்ற, (இது கொங்கை அழகை விளக்கியது.)
3002. காமவேள் என்னும் வேடன் உந்தியிற் கரந்து கொங்கை
நேமியம் புட்கள் தம்மை யகப்பட நேரி தாய
தாமநீள் கண்ணி சேர்த்த சலாகைதூக் கியதே போலும்
வாமமே கலைசூழ் வல்லி மருங்கின்மேல் உரோம வல்லி.
தெளிவுரை : அழகிய மேகலை என்ற அணியை அணிந்த கொடியைப் போன்ற பூம்பாவையரின் இடையை அடுத்த கொப்பூழினின்று தொடங்கி மேலே போகும் உரோமத்தின் ஒழுங்கு காமன் என்ற வேடன் கொப்பூழுக்குள் மறைந்திருந்து மேலே உள்ள கொங்கைகள் என்ற அழகிய சக்கரவாகப் பறவைகளைப் பிடிப்பதற்கு நேரான கயிற்றில் நீண்ட கண்ணிகளைக் கோத்த ஒரு சலாகையை உயர்த்தியது போல விளங்கிட, (இது கொப்பூழ், மயிர் ஒழுங்கு ஆகியவற்றைப் புனைந்துரைத்தது.)
3003. பிணியவிழ் மலர்மென் கூந்தல் பெண்ணமு தனையாள் செம்பொன்
அணிவளர் அல்குல் தங்கள் அரவுசெய் பிழையால் அஞ்சி
மணிகிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்கு லாகிப்
பணியுல காளும் சேடன் பணம்விரித் தடைதல் காட்ட.
தெளிவுரை : கட்டவிழ்ந்த மலர்களைச் சூடிய மென்மையான கூந்தலையுடைய பெண்களுள் அமுதத்தை ஒத்த செம்பொன் அணிகளை அணிந்த அல்குலானது நாக உலகத்தை ஆளும் ஆதிசேடன் தன் உறவான ஒரு பாம்பு பூம்பாவையைத் தீண்டிய பிழையின் பொருட்டு அச்சம் கொண்டு செம்மணிகள் விளங்கும் காஞ்சி என்னும் எட்டுக் கோவை வடத்தால் சூழப்பெற்று அழகுடைய அல்குலாகிப் படத்தை விரித்துச் சேர்கின்ற தோற்றத்தைக் காட்ட, (இஃது அல்குல் அழகை விளக்கியது)
3004. வரிமயில் அனைய சாயல் மங்கைபொற் குறங்கின் மாமை
கரியிளம் பிடிக்கை வென்று கதலிமென் தண்டு காட்டத்
தெரிவுறு மவர்க்கு மென்மைச் செழுமுழந் தாளின் செவ்வி
புரிவுறு பொற்பந் தென்னப் பொலிந்தொளி விளங்கிப் பொங்க.
தெளிவுரை : வரி பொருந்திய மயில் போன்ற சாயலைக் கொண்ட பாவையரின் பொன் போன்ற தொடைகளின் அழகானது இளம் பெண் யானையின் துதிக்கையின் அழகை வெற்றி கொண்டு வாழையின் மெல்லிய தண்டின் அழகையும் புலப்படுத்திக் காட்டக் காண்பவர்க்கு மென்மையுடைய செழுமையான முழந்தாளின் அழகானது கைத்திறம் அமைந்த பொன்னால் ஆன பந்தைப் போல விளங்கி ஒளி பொருந்திப் பெருக. (இது தொடை, முழந்தாள் அழகை விரித்தது.)
3005. பூவலர் நறுமென் கூந்தல் பொற்கொடி கணைக்கால் காமன்
ஆவநா ழிகையே போலும் அழகினின் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட் டென்றும்
ஓவியர்க் கெழுத ஒண்ணாப் பரட்டொளி ஒளிர்வுற் றோங்க.
தெளிவுரை : மலர்கள் மலர்வதற்கு இடமான மென்மையான கூந்தலையுடைய பொற்கொடி போன்ற பாவையாரின் கணைக்கால் காமனின் அம்பறாத்துணியே போன்ற அழகால் மேன்மை பொருந்த, பொருந்திய செம்பொன்னால் ஆன துலாத்தட்டின் அழகை வெற்றி கொண்டு எக்காலத்தும் சித்திரம் தீட்டுவோர்க்கும் எழுத இயலாத குதிக்காலின் ஒளி விளங்கித் தோன்ற. (இது கணைக்கால், குதிக்கால் என்பனவற்றின் அழகை விளக்கியது.)
3006. கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்
பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக் கணியாய் நின்றாள்.
தெளிவுரை : கற்பக மரம் ஈன்ற சிவந்த அழகிய பவளத்தின் ஒளி வீசும் பொன் திரளுடன் வயிர வரிசைகளையுடைய மலர்க்கொத்துகள் மலர்ந்தவை போல் அழகை நல்ல பாதம் புலப்படுத்த, இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் மற்ற எல்லா உலகங்களும் அற்புதம் பொருந்தத் தோன்றி அழகுக்கு அழகு செய்யும் பொருளாக நின்றாள். (இது பாதத்தின் அழகை விளக்கியது.)
3007. எண்ணில்ஆண் டெய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிர முகத்தாற் கண்டார்.
தெளிவுரை : அளவற்ற ஆண்டுகளைத் தனக்கு ஆயுளாகக் கொண்ட நான்முகன் தான் படைத்த திலோத்தமை என்ற மங்கையின் அழகின் வண்ணங்களைத் தனக்குள்ள நான்கு முகங்களால் கண்டு மகிழ்ந்தான். அவளை விட மேலான நல்ல தன்மைகள் பூம்பாவையாரிடம் விளங்க, சிவ புண்ணிய விளைவாகிய பதினாறு ஆண்டுச் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், நெற்றிக் கண்ணையுடைய  சிவபெருமானின் அருட்பெருக்கையே ஆயிர முகங்களால் காண்பார் ஆனார்.
3008. இன்னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள்
தன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார்
பொன்னணி மாளிகைப் புகலி வேந்தர்தாள்
சென்னியிற் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர்.
தெளிவுரை : இங்ஙனம் விளங்கிய அழகுடைய மென்மையான சாயலையுடைய பூம்பாவையைக் கண்முன் பார்த்த தந்தையார் சிவநேசர், பொன்னால் அணியப்பட்ட மாளிகைகளையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளைத் தம் தலையில் பொருந்தும்படி முன் சென்று வீழ்ந்து வணங்கினார்.
3009. அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந்
திணங்கிய முகில்மதில் சண்பை யேந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ.
தெளிவுரை : திருமகளை விட மேன்மையுடையவராய் அன்னம் போன்றவரான பூம்பாவையார் படம் பொருந்திய ஐந்து தலைப் பாம்பை அரையில் அணிந்த கபாலீசரின் முன் வணங்கி, அதைக் கண்ட உலகத்தவர் தொழுமாறு, மேகம் பொருந்திய மதிலையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரை வணங்கி நின்றனர்.
3010. சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்
ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்
பார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.
தெளிவுரை : சிறப்புப் பொருந்திய சிவநேசரை முன்னம் மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த சீகாழித் தலைவர் இனி அழகால் மிக்க சிறப்புடைய உம் மகளை உலகில் ஓங்கி விளங்கும் இல்லத்துக்கு அழைத்துச் செல்வீர்! என்று அருள் செய்தார்.
3011. பெருகிய அருள்பெறும் வணிகர் பிள்ளையார்
மருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின்
றருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்தருள் செய்யும் என்றலும்.
தெளிவுரை : பெருகி திருவருளைப் பெற்ற வணிகரான சிவநேசர் ஞானசம்பந்தரின் பொருந்திய தாமரை போன்ற திருவடிகளை வணங்கிப் போற்றி நின்று, அடியேன் அருமையாய்ப் பெற்றெடுத்த இந்தப் பூம்பாவைப் பெண்ணை மணம் கொண்டருளும்! என வேண்டிக் கொள்ளவும்.
3012. மற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்
பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரைத காதென.
தெளிவுரை : அவ்வாறு வேண்டிக் கொண்ட வணிகரான சிவநேசரைப் பார்த்து வளம் பொருந்திய சீகாழி வாழ்வுடைய ஞானசம்பந்தர், நீவிர் பெற்ற பெண் நஞ்சினால் இறந்த பின்பு, கற்øயான நீண்ட சடையுடைய கபாலீசரின் அருள் விளங்க மீளவும் நான் உயிர் பெறச் செய்தலால், நீவிர் செல்லும் இந்தச் சொல் பொருந்தாது! என்று கூறியருள,
3013. வணிகருஞ் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமல ரடியில்வீழ்ந் தரற்ற ஆங்கவர்
தணிவில்நீள் பெருந்துயர் தணிய வேதநூல்
துணிவினை யருள்செய்தார் தூய வாய்மையார்.
தெளிவுரை : வணிகரான சிவநேசரும் அவருடைய சுற்றத்தவரும் அதைக் கேட்டு மயங்கி ஞானசம்பந்தரின் அழகிய மலரடிகளில் விழுந்து பலவும் கூறிக் குறையிரந்து அழுது புலம்பக் கண்டு, அப்போது அவர்களின் ஆற்ற இயலாத நீண்ட பெருந்துன்பம் தணியுமாறு தூய்மையான வாய்மையுடைய ஞானசம்பந்தர் வேதநூல்களின் விதியான முடிவுகளை எடுத்துக் கூறித் தேற்றியருளினார்.
3014. தெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ளநீர்ச் செலவெனப் பரமர் கோயிலின்
உள்ளெழுந் தருளினார் உடைய பிள்ளையார்.
தெளிவுரை : தெளிந்த நீதி நூலின் ஒழுக்க முறைகளைக் கேட்ட சிறப்புடைய சுற்றத்தாரான பெருங்கூட்டமும் சிவநேசரும் தாம் கொண்ட விருப்பம் நீங்கிட, மேடான இடத்தினின்று பாயும் நீரின் வேகம் போன்ற விரைவுடன் கோபுர வாயிலினின்றும் இறைவரின் திருக்கோயிலுள் ஞானசம்பந்தர் எழுந்தருளினார்.
3015. பான்மையால் வணிகரும் பாவை தன்மணம்
ஏனையோர்க் கிசைகிலேன் என்று கொண்டுபோய்
வானுயர் கன்னிமா டத்து வைத்தனர்
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்.
தெளிவுரை : முன்னை ஊழ்வினையின் நியதியால் சிவநேசரும் பூம்பாவையாரை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க நான் சம்மதியேன் என எண்ணித் துணிந்து, வான் அளாவ உயர்ந்த அவரது கன்னி மாடத்தின் வைத்து அங்கு வாழும்படி செய்தார். வண்டுகள் மொய்த்தற்கு இடமான மாலையை அணிந்த பூம்பாவையாரும் சிவபெருமானை அடைந்தார்.
3016. தேவர்பிரான் அமர்ந்தருளும் திருக்கபா லீச்சரத்து
மேவியஞா னத்தலைவர் விரிஞ்சன்முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை கைதந்த படிபோற்றிப்
பாவலர்செந் தமிழ்பாடிப் பன்முறையும் பணிந்தெழுவார்.
தெளிவுரை : தேவர்களின் தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருக் கபாலீச்சரத்தினுள் எழுந்தருளிய ஞானசம்பந்தர் நான்முகன் முதலான எல்லா உயிர்களுக்கும் காவலரான இறைவரின் பெருங்கருணை கைகொடுத்தருளியதைத் துதித்துப் பாக்களான மலர்ந்த செந்தமிழைப் பாடிப் பலமுறையும் பணிந்து எழலானார்.
3017. தொழுதுபுறம் போந்தருளித் தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப் பதியில்அமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர் முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்ககல்வார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர், தொழுது வெளியே வந்து திருத்தொண்டர் கூட்டம் பக்கத்தில் சூழ்ந்துவரக் குற்றம் இல்லாத புகழுடைய அந்த மயிலைத் தலத்தில் விரும்பித் தங்கியிருந்தளினார். அந்நாளில், எல்லா உலகங்களையும் தந்து காத்தருளும் இறைவர் எழுந்தருளும் முதன்மையுடைய பதிகள் பலவற்றையும் போய் வணங்குவதற்காக, அழுததால் உலகை வாழ்வித்தவரான ஞானசம்பந்தர் அந்தப் பதியினின்று நீங்கிப் போவார் ஆனார்.
3018. திருத்தொண்டர் அங்குள்ளார் விடைகொள்ளச் சிவநேசர்
வருத்தம்அகன் றிடமதுர மொழியருளி விடைகொடுத்து
நிருத்தர்உறை பிறபதிகள் வணங்கிப்போய் நிறைகாதல்
அருத்தியொடும் திருவான்மி யூர்பணிய அணைவுற்றார்.
தெளிவுரை : அங்கு இருக்கும் தொண்டர்கள் விடைபெற்றுக் கொள்ளச் சிவநேசரின் வருத்தம் நீங்கும்படி அவருக்கு இனிய சொற்களைச் சொல்லி விடை தந்து, சிவபெருமான் வீற்றிருக்கும் மற்றத் தலங்களையும் வணங்கிச் சென்று, நிறைந்த காதலால் விளைந்த அன்புடனே திருவான்மியூரை வணங்கச் செல்லலானார்.
3019. திருவான்மி யூர்மன்னும் திருத்தொண்டர் சிறப்பெதிர
வருவார்மங் கலஅணிகள் மறுகுநிரைத் தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித் தடநெடுங்கோ புரம்சார்ந்தார்.
தெளிவுரை : திருவான்மியூரில் நிலைபெற்று வாழ்கின்ற தொண்டர்கள் சிறப்பாக வரவேற்க வருபவர்களாய் மங்கலம் பொருந்திய மங்கல அணிகளைத் தெருவில் அலங்கரித்து, எதிர்கொண்டு அருகே வந்தபோது முத்துப் பல்லக்கினின்றும் இறங்கியருளி, அத்தொண்டர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, அன்பை அளித்து ஆட்கொள்கின்ற இறைவரின் திருக்கோயிலின் அழகிய பெரிய நீண்ட கோபுரத்தைச் சேர்ந்தார்.
3020. மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கிவியன் திருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப் புடைவலங்கொண் டுள்ளணைந்து
கொக்கிறகு மதிக்கொழுந்தும் குளிர்புனலும் ஒளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார் சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.
தெளிவுரை : மிகவும் உயர்ந்த கோபுரத்தை வணங்கிப் பெரிய முற்றத்தினுள் புகுந்து, கோயிலின் உள்பாகத்தை வலமாய்ச் சுற்றி வந்து, உள்ளே போய்ச் சேர்ந்து, கொக்கு இறகும் பிறைச்சந்திரனும் கங்கையும் விளங்கும் அந்தி மாலையின் சிவப்புப் போன்ற சடையையுடைய இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
3021. தாழ்ந்துபல முறைபணிந்து தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச் சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன் சாத்திமிக இன்புற்றார்.
தெளிவுரை : நிலத்தில் விழுந்து பலமுறையும் வணங்கி முன் நின்று வாழ்வு பெற்று மகிழ்ச்சி பொருந்தப் பிறவி நோய்க்கு மருந்தான பெருந்தகைமையுடைய இறைவரை, உட்கொண்ட பண் பொருந்திய திருப்பதிகமான சொல் மாலையால், வினாவும் உரையுமாய் வரும் அமைப்பில் மிக்க விருப்புடனே பாடி இன்பம் அடைந்தார். (வினாவும் உரையும் என்பது ஒருவகை யாப்பு)
3022. பரவிவரும் ஆனந்தம் நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கள் மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார் சிலநாள்அங் கினிதமர்ந்தார்.
தெளிவுரை : சீகாழித் தலைவர், பரவி வருகின்ற ஆனந்தக் கண்ணீர் விழியினின்று துளித்துப் பெருகவும், பொருந்தும் மயிர்ப்புளகம் மேனி எங்கும் உண்டாகி விளங்கவும் பெற்றுக் கோயிலின் வெளியே சேர்ந்து, ஒலியையுடைய நீண்ட அலைகளையுடைய கடற்கரையில் அமைந்த அழகிய திருவான்மியூரில் சில நாட்கள் இனிதாய்த் தங்கியிருந்தார்.
3023. அங்கண்அமர் வார்உலகா ளுடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள் பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார் பதிபலவும் கலந்திறைஞ்சிச்
செங்கண்விடைக் கொடியார்தம் இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.
தெளிவுரை : திருவான்மியூரில் தங்கியிருப்பவரான ஞானசம்பந்தர் உலகங்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரை அரிய தமிழின் மேன் மேல் வளரும் இசையுடைய பதிகங்கள் பலவற்றால் துதித்து, அங்கிருந்து நீங்கிக் கங்கையை அணிந்த அழகிய சடையையுடைய இறைவரின் தலங்கள் பலவற்றையும் அங்கங்குப் போய்ச் சேர்ந்து வணங்கிச் சிவந்த கண்ணையுடைய காளையைக் கொடியாய்க் கொண்ட சிவபெருமானின் திருவிடைச் சுரத்தை அடைந்தார்.
3024. சென்னியிள மதியணிந்தார் மருவுதிரு இடைச்சுரத்து
மன்னுதிருத் தொண்டர்குழாம் எதிர்கொள்ள வந்தருளி
நன்நெடுங்கோ புரம்இறைஞ்சி உட்புகுந்து நற்கோயில்
தன்னைவலங் கொண்டணைந்தார் தம்பிரான் திருமுன்பு.
தெளிவுரை : ஞானசம்பந்தர், தலையில் பிறையை அணிந்த இறைவர் வீற்றிருக்கின்ற திருவிடைச்சுரத்தில் நிலைபெற வாழ்கின்ற தொண்டர் கூட்டம் எதிர்கொள்ளச் சென்றருளி நன்மை தரும் நீண்ட கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, கோயிலை வலமாகச் சுற்றி வந்து, தம் இறைவர் திருமுன்பு வந்தணைந்தார்.
3025. கண்டபொழு தேகலந்த காதலால் கைதலைமேல்
கொண்டுதலம் உறவிழுந்து குலவுபெரு மகிழ்ச்சியுடன்
மண்டியபே ரன்புருகி மயிர்முகிழ்ப்ப வணங்கிஎழுந்
தண்டர்பிரான் திருமேனி வண்ணங்கண்டு அதிசயித்தார்.
தெளிவுரை : தம் இறைவரைக் கண்டபோதே மனம் புகுந்து கலந்து எழுந்த பெரு விருப்பத்தால் கைகளைத் தலைமீது கொண்டு நிலத்தில் விழுந்து பொருந்திய பெருமகிழ்ச்சியுடன் பெருகிய பேரன்பினால் உள்ளம் உருகி உரோமம் புளகம் கொள்ள வணங்கி எழுந்து, தேவதேவரான சிவபெருமானின் திருமேனியின் வண்ணத்தைப் பார்த்து வியப்படைந்தார்.
3026. இருந்தஇடைச் சுரம்மேவும் இவர்வண்ணம் என்னேயென்
றருந்தமிழின் திருப்பதிகத் தலர்மாலை கொடுபரவித்
திருந்துமனங் கரைந்துருகத் திருக்கடைக்காப் புச்சாத்திப்
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார் பேருலகின் பேறானார்.
தெளிவுரை : உலகத்தவரின் பெரும்பேறாக அவதரித்த ஞானசம்பந்தர், சாரல் விளங்க இருந்த அந்தத் திருவிடைச் சுரத்தில் வீற்றிருக்கும் இப்பெருமானின் வண்ணம்தான் என்ன அதிசயம்! என்று அரிய தமிழால் ஆன இனிய திருப்பதிகத் தமிழ் மாலையால் துதித்துத் திருந்தும் உள்ளம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புப் பாடியருளிப் பெரிய ஒப்பில்லாத சிவானந்தப் பெருவாழ்வினில் திளைத்து நின்றார்.
3027. நிறைந்தாரா வேட்கையினால் நின்றிறைஞ்சிப் புறம்போந்தங்
குறைந்தருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன் எழுந்தருளிச் செந்துருத்தி
அறந்தளிகள் பயில்சாரல் திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.
தெளிவுரை : சிவானந்தப் பெருவாழ்வில் நிறைவுற்று ஆராத வேட்கையினால் நீண்ட நேரம் நின்று வணங்கி வெளியேவந்து, அந்தப் பதியில் ஞானசம்பந்தர் தங்கியிருந்து பணிகின்றவராகி, அவ்விறைவரின் அருள்விடை பெற்றுக் கொண்டு, சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளிப் போய்ச் செந்துருத்தி என்ற பண்ணைப் பாடி, வண்டுகள் மொய்க்கின்ற சாரலையுடைய திருக்கழுக்குன்றத்தை அடைந்தருளினார்.
3028. சென்றணையும் பொழுதின்கண் திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்திகழும் மணிச்சிவிகை இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத் திருமலையை வலங்கொண்டு
மின்தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்.
தெளிவுரை : அங்ஙனம் திருக்கழுக்குன்றத்தில் போய் அடையும் போதில், அந்தப் பதியில் வாழ்கின்ற தொண்டர்கள் வந்து வரவேற்கவே, பொன் விளங்கும் முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி, அவர்களுடன் சேர்ந்து, மணம் விரிந்து கமழும் நல்ல மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அம்மலையைச் சுற்றி வலமாக வந்து, மின்போல விளங்கும் சடையுடைய இறைவரை விருப்பத்தோடு பணிபவராய்,
3029. திருக்கழுக்குன் றத்தமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைப்
பெருக்கவளர் காதலினால் பணிந்தெழுந்து பேராத
கருத்தினுடன் காதல்செயுங் கோயில்கழுக் குன்றென்று
திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தைநிறை மகிழ்வுற்றார்.
தெளிவுரை : அந்தத் திருக்கழுக்குன்றத்தின் மீது விரும்பி விளங்க வீற்றிருக்கும் ஒப்பில்லாத செம்பொன் குன்றம் போன்ற வேதநாயகரான சிவபெருமானை, வளரும் மிக்க விருப்பத்தினால், வணங்கி எழுந்து, பொறாது ஊன்றி வைத்த கருத்துடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்ற கருத்தும் மகுடமும் கொண்ட திருப்பதிகத்தைப் பாடி உள்ளம் நிறைந்த மகிழ்வை அடைந்தார்.
3030. இன்புற்றங் கமர்ந்தருளி ஈறில்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினார் அருள்பெற்றுப் போந்தருளி
என்புற்ற மணிமார்பர் எல்லையிலா ஆட்சிபுரிந்
தன்புற்று மகிழ்ந்ததிரு அச்சிறுபாக் கத்தணைந்தார்.
தெளிவுரை : இன்பம் அடைந்து அந்தத் தலத்தில் விரும்பி எழுந்தருளியிருந்து எல்லை இல்லாத பெருந்தொண்டர்களுடனே மின் போன்ற சடையுடைய சிவபெருமானின் திருவருள் விடைபெற்று, அங்கிருந்து நீங்கி, எலும்பு மாலைகளை அணிந்த அழகான மார்பையுடைய இறைவர் எல்லையில்லாத வண்ணம் ஆட்சி செய்து அன்பு பொருந்தி மகிழ்ந்து எழுந்தருளியுள்ள அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்தார்.
3031. ஆதிமுதல் வரைவணங்கி ஆட்சிகொண்டார் எனமொழியும்
கோதில்திருப் பதிகஇசை குலவியபா டலில்போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்கையினார் சின்னாள்அங் கமர்ந்தருளி.
தெளிவுரை : பழைமையுடைய சிவபெருமானை வணங்கி ஆட்சி கொண்டார் எனக்கூறும் மகுடத்தையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் பண் பொருந்தி விளங்கும் திருப்பாடல்களால் துதித்து, மாதவமுடைய முனிவர்களுடன் வணங்கி மகிழ்ந்து இன்பம் அடைந்து, தீமையை நீக்குவதே தம் செய்கையாகக் கொண்டருளிய ஞானசம்பந்தர் சில நாட்கள் அங்கே தங்கியிருந்து,
3032. ஏறணிந்த வெல்கொடியார் நீறணிந்த திருத்தொண்டர்
எதிர்கொள்ள நேர்ந்திறைஞ் கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு அரசிலியை வந்தடைந்தார்.
தெளிவுரை : காளையைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியுடைய சிவபெருமான் எழுந்தருளிய பிறபதிகள் பலவற்றையும் திருநீறு அணிந்த தொண்டர்கள் அங்கங்கும் வந்து வரவேற்கச் சென்று, விரிந்த சடையில் கங்கையாற்றை அணிந்த இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற திருவரசிலிப் பதியினை வந்து அடைந்தார்.
3033. அரசிலியில் அமர்ந்தருளும் அங்கண்அர சைப்பணிந்து
பரசியெழு திருப்புறவார் பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார் மேவுபதி பலவணங்கித்
திரைசெய்நெடுங் கடலுடுத்த திருத்தில்லை நகரணைந்தார்.
தெளிவுரை : திரு அரசிலியில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரைப் பணிந்து துதித்துத் திருப்புறவார் பனங்காட்டூர் முதலான மணம் கமழ்கின்ற கொன்றைமலரைச் சூடிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற பல பதிகளையும் வணங்கிச் சென்று, அலைகளையுடைய நீண்ட கடல், அணிமையாயச் சூழ்ந்த திருத்தில்லை நகரை அடைந்தனர்.
3034. எல்லையில்ஞா னத்தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார்
தில்லையில்வா ழந்தணர்மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கியெதிர் பணிந்திறைஞ்ச மணிமுத்தின் சிவிகையிழிந்
தல்கு பெருங் காதலுடன் அஞ்சலிகொண் டணைகின்றார்.
தெளிவுரை : அளவில்லாத சிவஞானம் உடையவரான ஞானசம்பந்தர் வந்தருள, அதை அறிந்து அவரை எதிர்கொள்பவராய்த் தில்லைவாழ் அந்தணர்களும் சைவத் தொண்டர்களும் சிறப்புக்களுடனே கூடிச்சென்று அவரை எதிரே வணங்கிட அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிப் பெருங்காதலுடன் அஞ்சலி செய்து ஞானசம்பந்தர் அணைபவராய்,
3035. திருவெல்லை யினைப்பணிந்து சென்றணைவார் சேண்விசும்பை
மருவிவிளங் கொளிதழைக்கும் வடதிசைவா யிலைவணங்கி
உருகுபெருங் காதலுடன் உட்புகுந்து மறையினொலி
பெருகிவளர் மணிமாடப் பெருந்திருவீ தியைஅணைந்தார்.
தெளிவுரை : தில்லையின் எல்லையைப் பணிந்து மேற்செல்பவராகி நீண்ட வானத்தைப் பொருந்தி விளங்கும் ஒளி பெருகும் வடக்குத்திக்கு வாயிலை வணங்கி, உள்ளம் உருகும் பெருங்காதலுடன் நகரத்தின் உள்ளே புகுந்து, வேதங்களின் ஒலி பெருகி வளர்வதற்கு இடமான அழகிய மாடங்கள் நிறைந்த பெரிய வீதியை அடைந்தார்.
3036. நலம்மலியும் திருவீதி பணிந்தெழுந்து நற்றவர்தம்
குலம்நிறைந்த திருவாயில் குவித்தமலர்ச் செங்கையொடு
தலம்உறமுன் தாழ்ந்தெய்தித் தமனியமா ளிகைமருங்கு
வலம் உறவந் தோங்கியபே ரம்பலத்தை வணங்கினார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர், நன்மை மிகவும் செய்யும் நிலத்தில் பொருந்த வணங்கி நல்ல தவத்தவர் குழு நிறைந்த திருவாயிலைச் செங்கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு நிலத்தில் விழுந்து தாழ்ந்து வணங்கிப் போய்ப் பொன் மாளிகையான அம்பலத்தின் பக்கத்தே வலமாக வந்து உயர்ந்த பேரம்பலத்தை வணங்கினார்.
3037. வணங்கிமிக மனம்மகிழ்ந்து மாலயனும் தொழும்பூத
கணங்கள்மிடை திருவாயில் பணிந்தெழுந்து கண்களிப்ப
அணங்குதனிக் கண்டருள அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கடந்த தனிக்கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவார்.
தெளிவுரை : சீகாழிப் பிள்ளையார் பேரம்பலத்தை வணங்கி உள்ளம் மகிழ்ந்து திருமாலும் நான்முகனும் தொழும் பூதகணங்கள் நெருங்கிய திருவணுக்கன் திருவாயிலை வணங்கி எழுந்து, கண்கள் களிப்பச் சிவகாமியம்மையார் தனியாய்க் கண்டருளுமாறு அம்பலத்தில் ஆடல் செய்த குணங்களைக் கடந்த மெய்ஞ்ஞான வெளியில் தனிக்கூத்தரின் பெருங்கூத்தை வணங்குபவராய்,
3038. தொண்டர்மனம் பிரியாத திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினால் நோக்கிமுகம் மலர்ந்தெழுவார்
அண்டமெலாம் நிறைந்தெழுந்த ஆனந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின் கரையில்லா நிலையணைந்தார்.
தெளிவுரை : தொண்டர்களின் மனத்தினின்றும் பிரியாது விளங்கும் திருக்களிற்றுப்படியை வணங்கிச் செறிந்த பெருங்காதலால் நோக்கி, முகமலர்ச்சி பெற்று எழுபவரான ஞானசம்பந்தர், அண்டங்கள் எங்கும் நிறைந்து எழுகின்ற சிவானந்தப் பெருக்கினுள் அலைந்து, அனுபவத்துள் கண்ட பேரின்பத்தில் கரையில்லாத நிலையைச் சேர்ந்தருளினார்.
3039. அந்நிலைமை யடைந்துதிளைத் தாங்கெய்தாக் காலத்தின்
மன்னுதிரு அம்பலத்தை வலங்கொண்டு போந்தருளிப்
பொன்னணிமா ளிகைவீதிப் புறத்தணைந்து போதுதொறும்
இன்னிசைவண் தமிழ்பாடிக் கும்பிட்டங் கினிதமர்ந்தார்.
தெளிவுரை : அத்தகைய நிலையை அடைந்து, அந்த அனுபவத்தில் மூழ்கியிருந்து, அங்குத் தங்காத காலத்தில் நிலையான திருச்சிற்றம்பலத்தை வலமாக வந்து வெளியே சென்று, பொன்னால் அழகுபெற்ற மாளிகையுடைய வீதியின் பக்கத்தை அடைந்து, காலந்தோறும் இனிய இசையுடன் கூடிய பாக்களைப் பாடியருளிக் கும்பிட்டுக் கொண்டு அங்கு இனிதாய்த் தங்கியிருந்தனர்.
3040. திருந்தியசீர்த் தாதையார் சிவபாத இருதயரும்
பொருந்துதிரு வளர்புகலிப் பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன்போற்றும் பெரும்பற்றப் புலியூரில்
இருந்தமிழா கரர்அணைந்தார் எனக்கேட்டு வந்தணைந்தார்.
தெளிவுரை : உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப்புடைய தந்தை சிவபாத இருதயரும், பொருந்திய சைவத் திருவளர்வதற்கு இடமான சீகாழியில் வாழும் அந்தணர்களும், சிவனடியார்களும், பெருந்திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றுகின்ற பெரும்பற்றப்புலியூரில் பெருந்தமிழாகரரான ஞானசம்பந்தர் வந்திருக்கின்றார் எனக் கேட்டுத் தாங்கள் அங்கு வந்தடைந்தனர்.
3041. ஆங்கவரைக் கண்டுசிறப் பளித்தருளி அவரோடும்
தாங்கரிய காதலினால் தம்பெருமான் கழல்வணங்க
ஓங்குதிருத் தில்லைவாழ் அந்தணரும் உடனாகத்
தேங்கமழ்கொன் றைச்சடையார் திருச்சிற்றம் பலம்பணிந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் அங்கு வந்த சிவபாத இருதயர் முதலியவரைக் கண்டு ஞானசம்பந்தர் அவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் இனிய சொற்கள் கூறி, அவர்களுடன் கூட ஆராத பெருவிருப்பத்துடன் தம் இறைவரின் திருவடிகளை வணங்குவதற்குத் திருமிக்க தில்லைவாழ் அந்தணர்களும் உடன் வரப் போய்த் தேன் மணம் வீசும் கொன்றைமலர் மாலையைச் சூடிய சடையுடைய இறைவரின் திருச்சிற்றம்பலத்தை வணங்கினார்.
3042. தென்புகலி அந்தணரும் தில்லைவா ழந்தணரும்
அன்புநெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடிபோற்றிப்
பொன்புரிசெஞ் சடைக்கூத்தர் அருள்பெற்றுப் போந்தருளி
இன்புறுதோ ணியில்அமர்ந்தார் தமைவணங்க எழுந்தருள.
தெளிவுரை : தெற்குத் திசையில் உள்ளதான சீகாழி அந்தணர்களும் தில்லையில் வாழும் அந்தணர்களும், அன்பு நெறியைப் பெருகச் செய்த இறைவரின் திருவடிகளைப் போற்றிய பொன் போன்ற புரிந்த சடையையுடைய கூத்தரின் திருவருள் விடைபெற்று வெளி வந்து, இன்பம் பெய்யும் திருத்தோணியில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்குவதற்காகச் செல்வதன் பொருட்டு,
3043. நற்றவர்தங் குழாத்தோடும் நம்பர்திரு நடம்செய்யும்
பொற்பதியின் திருவெல்லை பணிந்தருளிப் புறம்போந்து
பெற்றம்உயர்த் தவர்அமர்ந்த பிறபதியும் புக்கிறைஞ்சிக்
கற்றவர்கள் பரவுதிருக் கழுமலமே சென்றடைவார்.
தெளிவுரை : நல்ல தவத்தவரின் கூட்டத்துடன் கூடி, இறைவர் திருநடனம் செய்கின்ற அழகிய அந்தப் பதியின் திருஎல்லையை வணங்கிப் புறத்தில் சென்று, காளைக் கொடியையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கின்ற மற்றப் பதிகளையும் போய்த் தொழுது, கற்றவர் துதிக்கின்ற சீகாழி தலத்தைப் போய் அடைபவராய்,
3044. பல்பதிகள் கடந்தருளிப் பன்னிரண்டு பெயர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்
மல்குதிரு மணிமுத்தின் சிவிகையிழிந் தெதிர்வணங்கிச்
செல்வமிகு பதியதன்மேல் திருப்பதிகம் அருள் செய்வார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர், பல தலங்களையும் கடந்து போய்ப் பன்னிரண்டு பெயர்களையுடைய பழைமையான வளம் வாய்ந்த சீகாழிப் பதியானது தொலைவில் காணப்படவும் திருந்திய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி வணங்கி திருவருட் செல்வம் நிறைந்த அந்தச் சீகாழிப் பதியின் மீது திருப்பதிகத்தை அருள்பவராய்,
3045. மன்னுமிசை மொழிவண்டார் குழலரிவை என்றெடுத்து
மின்னுசுடர் மாளிகைவிண் தாங்குவபோல் வேணுபுரம்
என்னும்இசைச் சொன்மாலை எடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப் புறம்பணையில் வந்தணைந்தார்.
தெளிவுரை : நிலைபெற்ற இசையுடைய வண்டார் குழல் என்ற தொடக்கம் உடைய திருப்பதிகத்தைத் தொடங்கி, ஒளிவீசும் சுடர்களைக் கொண்ட மாளிகைகள் விண் தாங்குவன போல் உள்ளன என்னும் கருத்துக் கொண்ட இசையுடன் கூடிய திருப்பதிகத்தை எடுத்துத் துதித்து மேலே சென்று புன்னை மரங்களின் மணம் வீசுதற்கு இடமான சீகாழியின் புறம்பணையில் வந்து சேர்ந்தார்.
3046. வாழிவளர் புறம்பணையின் மருங்கணைந்து வரிவண்டு
சூழுமலர் நறுந்தீப தூபங்க ளுடன்தொழுது
காழிநகர் சேர்மின் எனக் கடைமுடிந்த திருப்பதிகம்
ஏழிசையி னுடன்பாடி எயில்மூதூர் உட்புகுந்தார்.
தெளிவுரை : உலக வாழ்வாக ஊழியிலும் அழியாது வளர்கின்ற புறம்பணையின் அருகில் சேர்ந்து வரி வண்டுகள் மொய்க்கின்ற மலர்களாலும் நல்ல மணமுடைய தூப தீபங்களாலும் வழிபட்டுத் தொழுது, சீகாழி நகரினுள் சேர்மின்கள் மக்களே! என்ற இறுதிச் சீர்களால் அமைந்த மகுடம் உள்ள திருப்பதிகத்தை ஏழிசைகளுடனே பாடியருளியவாறே, மதிலையுடைய அந்தப் பழைய நகரத்தினுள் புகுந்தார்.
3047. சேணுயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான்
தாள்நினைந்த ஆதரவின் தலைப்பாடு தனையுன்னி
நீள்நிலைக்கோ புரம்அணைந்து நேரிறைஞ்சிப் புக்கருளி
வாள்நிலவு பெருங்கோயில் வலங்கொண்டு முன்பணிந்தார்.
தெளிவுரை : ஞானப்பிள்ளையார், வானத்தில் உயர்ந்த திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை நினைந்த அன்பின் மேன்மையை எண்ணியவராய், நீண்ட நிலைகளையுடைய கோபுரத்தை அடைந்து எதிரில் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து உள்ளே புகுந்து, ஒளி விளங்கும் பெருந்திருக்கோயிலை வலமாகச் சுற்றி வந்து வணங்கி, அங்கு அதன்முன் தொழுதார்.
3048. முன்னிறைஞ்சித் திருவருளின் முழுநோக்கம் பெற்றேறிப்
பொன்னிமயப் பாவையுடன் புணர்ந்திருந்த புராதனரைச்
சென்னிமிசைக் குவித்தகரம் கொடுவிழுந்து திளைத்தெழுந்து
மன்னுபெரு வாழ்வெய்தி மனங்களிப்ப வணங்குவார்.
தெளிவுரை : கோயிலுள் ஞானசம்பந்தர், பிரமபுரீசர் திருமுன்பு வணங்கி, அவரது திருவருளின் முழு நோக்கமும் பெற்றுத் திருத்தோணியான மலையின்மீது ஏறிச்சென்று, பொன்மலை என்னும் இமயமலை அரசனின் மகளான பெரயிநாயகியம்மையாருடன் வீற்றிருக்கின்ற தோணியப்பரைத் தலைமீது கூப்பிய கைகளுடன் நிலம் பொருந்த விழுந்து திளைத்து எழுந்து, நிலைபெற்ற வாழ்வையடைந்து மனம் மகிழ வணங்குபவராய்,
3049. பரவுதிருப் பதிகங்கள் பலவும்இசை யினிற்பாடி
விரவியகண் ணருவிநீர் வெள்ளத்திற் குளித்தருளி
அரவணிந்தார் அருள்பெருகப் புறம்பெய்தி அன்பருடன்
சிரபுரத்துப் பெருந்தகையார் தந்திருமா ளிகைசேர்ந்தார்.
தெளிவுரை : போற்றுகின்ற திருப்பதிகங்கள் பலவற்றையும் பண்ணுடன் பொருந்தப் பாடிப் பொருந்திய கண்ணீர் வெள்ளத்தில் முழுதும் தோய்ந்தருளிப் பாம்பை அணியாய் அணிந்த இறைவரின் திருவருள் பெருகப் பெற்று வெளியே வந்து, அன்பர்களுடன் சீகாழிப் பதியினரான ஞானசம்பந்தர் தம் திருமாளிகையுள் சேர்ந்தார்.
3050. மாளிகையின் உள்ளணைந்து மறையவர்கட் கருள்புரிந்து
தாள்பணியும் பெருங்கிளைக்குத் தகுதியினால் தலையளிசெய்
தாளுடைய தம்பெருமான் அடியவர்க ளுடன்அமர்ந்து
நீளவரும் பேரின்பம் மிகப்பெருக நிகழுநாள்.
தெளிவுரை : சம்பந்தப் பெருமான் தம் மாளிகையுள் புகுந்து, தம்மைப் பார்க்க வந்த அந்தணர்க்கெல்லாம் அருள் விடை தந்து, தம் திருவடிகளை வணங்கி நின்ற பெரிய சுற்றத்தவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றவண்ணம் தலையி செய்து விடை தந்து, தம்மை ஆள்கின்ற இறைவரின் அடியாருடனே விரும்பி எழுந்தருளியிருந்து, நீண்டு பெருக வரும் பேரின்பமானது மேலும் மேலும் பெருகும்படி நிகழ்ந்து வரும் நாள்களில்,
3051. காழிநா டுடையபிரான் கழல்வணங்கி மகிழ்வெய்த
ஆழியினும் மிகப்பெருகும் ஆசையுடன் திருமுருகர்
வாழிதிரு நீலநக்கர்முதல் தொண்டர் மற்றெனையோர்
சூழுநெடுஞ் சுற்றமுடன் றோணிபுரந் தொழுதணைந்தார்.
தெளிவுரை : சீகாழி நாட்டின் தலைநகரான ஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கி மகிழ்ச்சி எய்த எண்ணி, கடலை விடப் பெரிதாகப் பெருகும் ஆசையுடன், திருமுருக நாயனார் வாழ்வுதரும் திருநீலநக்க நாயனார் முதலிய தொண்டர்களும் மற்றவர்களும் தம்மைச் சூழ்ந்த பெரிய சுற்றத்துடனே வந்து, திருத்தோணிபுரத்தை வணங்கிப் பிள்ளையார்பால் வந்தனர்.
3052. வந்தவரை எதிர்கொண்டு மனமகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில்சீர் அடியார்க ளவரோடு மினிதமர்ந்து
சுந்தரவா ரணங்கினுடன் றோணியில்வீற் றிருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பலபாடி.
தெளிவுரை : அங்ஙனம் வந்தவர்களை எதிர் வரவேற்றுத் திருவுள்ளம் மகிழ்ந்து, சீகாழிப் பெருமான், அளவில்லாத சிறப்புடைய அந்த அடியார்களுடனே இனிதாக விரும்பியிருந்து, அழகின் நிலைக்களமான பெரியநாயகியம்மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்த தோணியப்பரைச் செந்தமிழ் யாப்பால் பல பதிகங்களையும் பாடி,
3053. பெருமகிழ்ச்சி யுடன்செல்லப் பெருந்தவத்தால் பெற்றவரும்
மருவுபெருங் கிளையான மறையவரும் உடன்கூடித்
திருவளர்ஞா னத்தலைவர் திருமணம்செய் தருளுதற்குப்
பருவம்இது என்றெண்ணி அறிவிக்கப் பாங்கணைந்தார்.
தெளிவுரை : பெருமகிழ்வுடன் இங்ஙனம் இருக்க, பெரிய தவம் செய்ததன் பயனாக ஞானசம்பந்தரைப் பெற்றெடுத்த தந்தையான சிவபாத இருதயரும், பொருந்திய சுற்றத்தவரான அந்தணர்களும் கூடி முத்திச் செல்வம் வளர்வதற்கு ஏதுவான ஞானத்தின் தலைவராம் பிள்ளையார் திருமணம் செய்தருளுதற்கு ஏற்ற பருவம் இதுவாகும் என நினைத்து, தம் எண்ணத்தைப் பிள்ளையாருக்கு அறிவிக்கும் பொருட்டு அவரை அடைந்தார்.
3054. நாட்டுமறை முறையொழுக்கம் ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார் கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென விண்ணப்பம் செய்தார்கள்.
தெளிவுரை : உலகியல் நிலையில் வைதிக ஒழுக்கத்தை ஞானசம்பந்தருக்கும் இசைவித்தலை உள்ளத்தில் கொண்டு குற்றமில்லாத வேத நெறியில் சொல்லப்படும் சடங்குகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வதற்கு உரிமையைப் பெறும் பொருட்டுத் தாங்கள் ஒரு கன்னியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
3055. மற்றவர்தம் மொழிகேட்டு மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத் தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன் பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா தென்றவர்முன் மொழிந்தருள.
தெளிவுரை : இங்ஙனம் கூறிய அவர்களின் சொல்லைக் கேட்டு மாதவத்தின் கொழுந்தைப் போன்ற ஞானசம்பந்தர் சுற்றங்கள் பொருந்திய பெரிய பாசத் தொடக்கினை விட்டு நீங்குவதற்கான நிலைமை உடையவராகிக் காளைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருவடி ஞானமான உயர்ந்த சிவஞானத்தை முன்னே பெற்றவர் ஆதலால், அவர்களின் மொழிக்கு இசையாமல் நீங்கள் கூறுவது பொருந்திய மொழியாயினும், அது என்னிடம் கூடாத ஒன்றாகும் எனக் கூறியருள,
3056. அருமறையோர் அவர்பின்னும் கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம் எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின் வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத் திருவுள்ளம் செய்யுமென.
தெளிவுரை : அந்த மறையவர்கள் மேலும் கைகூப்பித் தொழுது அங்கு ஞானசம்பந்தரிடம் அறிவிப்பவராய்ப் பெரிய மண்ணுலகில் வைதிக வழக்கினை நீர் உயர்த்தியருளினீரானால் அவ்வழி வரும் முறையினால் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய வைதிகமான பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருளுதற்குத் திருவுள்ளம் கொள்ளல் வேண்டும், என்று கூறிட
3057. மறைவாழ அந்தணர்தம் வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில் பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார் தமைத்தொழுது மனங்களித்தார்.
தெளிவுரை : வேதங்கள் வாழ்வு அடையவும், அந்தணர்களின் வைதிக வாய்மையால் வரும் ஒழுக்கம் பெருகும் துறை வாழ்வடையவும், அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள் செய்து, அவர்களின் வேண்டுகோளுக்கு ஞானசம்பந்தர் சம்மதம் தெரிவிக்கவும், பிறைச்சந்திரன் வாழ்கின்ற திருமுடியில் பெருநீர்க் கங்கையுடன் பாம்பையும் அணிந்த நீலகண்டரான இறைவரை வணங்கி அந்தச் சுற்றத்தார் மகிழ்ந்தனர்.
3058. திருஞான சம்பந்தர் திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும் உளமகிழ்ச்சி எய்துவார்.
தெளிவுரை : திருஞானசம்பந்தர் இவ்வாறு திருவுள்ளம் செய்ததற்காக (மணம் செய்து கொள்வதற்கு உடன்பட்டதற்காக) வாய்மையுடை மறையவர்களும் தந்தையாரான சிவபாத இருதயரும் அளவின்றித் தாங்குவதற்குரிய பெருவாழ்வைப் பெற்றவர் ஆகி, இஃது இறைவரின் திருவருளேயாகும் எனத் துணிந்து உள்ளம் உருகி இன்பம் பொருந்திய மனமகிழ்ச்சியுடையவராகி,
3059. ஏதமில்சீர் மறையவரில் ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை எனப்பொருந்த எண்ணினார்.
தெளிவுரை : குற்றம் இல்லாத மறையவர் மரபிலே பொருந்திய குலம் முதலியவற்றுடன் இசைந்ததாகியதால் இறைவரின் திருப்பெரு மணநல்லூரில் வாழும் நம்பாண்டார் நம்பி பெற்ற திருமகளாரைச் சீர்காழித் தலைவரான பிள்ளையார் மணம் செய்தருளுதற்கு அவரது பெருந்தன்மை தகுதியுடையதாகும் என்று பொருத்தமுற எண்ணினர்.
3060. திருஞான சம்பந்தர் சீர்பெருக மணம்புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேண
வருவாரும் பெருஞ்சுற்றம் மகிழ்சிறப்ப மகள்பேசத்
தருவார்தண் பணைநல்லூர் சார்கின்றார் தாதையார்.
தெளிவுரை : திருஞானசம்பந்தர் சிறப்புப் பெருகும் திருமணம் செய்து கொள்ளும் பெருவாழ்வைப் பற்றித் தொண்டர்களும் அந்தணர்களும் மிகப் பேணவும், வருவார்களாகிய பெருஞ்சுற்றம் மகிழ்ச்சி மிகப் பெறவும் மகட்கொடை பற்றிப் பேசும் பொருட்டு, மரங்கள் நிறைந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருமணநல்லூரைச் சேர்கின்ற தந்தையார்,
3061. மிக்கதிருத் தொண்டர்களும் வேதியரும் உடன்ஏகத்
திக்குநிகழ் திருநல்லூர்ப் பெருமணத்தைச் சென்றெய்தத்
தக்கபுகழ் நம்பாண்டார் நம்பிதாம் அதுகேட்டுச்
செக்கர்முடிச் சடையார்தம் திருப்பாதம் தொழுதெழுவார்.
தெளிவுரை : தொண்டர்களும் அந்தணர்களும் உடன் செல்ல எல்லாத் திக்குகளிலும் புகழ்கின்ற திருநல்லூர்ப் பெருமணத்தைச் சேரத் தகுந்த புகழையுடைய நம்பாண்டார் நம்பிகளும், அவரின் வருகையைக் கேட்டு அறிந்து சிவந்த வானத்தைப் போன்ற சடையை உடைய சிவபெருமானின் திருவடியை வணங்கி எழுபவராய்,
3062. ஒப்பரிய பேருவகை ஓங்கியெழும் உள்ளத்தால்
அப்புநிறை குடம்விளக்கு மறுகெல்லாம் அணிபெருக்கிச்
செப்பரிய ஆர்வமிகு பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே
எப்பொருளும் எய்தினேன் எனத்தொழுதங் கெதிர்கொண்டார்.
தெளிவுரை : ஒப்பில்லாத பெருமகிழ்ச்சி ஓங்கி மேல் எழும் மனத்துடன் நன்னீர் நிறைந்த குடமும் விளக்கும் வைத்து, வீதியை எங்கும் அலங்காரம் செய்து, சொல்வதற்குரிய ஆசைமிகும் சுற்றத்தாருடன் போய், உறுதிப்பொருள்கள் எல்லாவற்றையும் நான் அடைந்தவன் ஆனேன் எனச் சொல்லித் தொழுது அவர்களை வரவேற்றார்.
3063. எதிர்கொண்டு மணிமாடத் தினில்எய்தி இன்பமுறு
மதுரமொழி பலமொழிந்து வரன்முறையால் சிறப்பளிப்பச்
சதுர்முகனின் மேலாய சண்பைவரு மறையவரும்
முதிருணர்வின் மாதவரும் அணைந்ததிறம் மொழிகின்றார்.
தெளிவுரை : நம்பியாண்டார் நம்பி எதிரே போய் வரவேற்று அழைத்துக் கொண்டு சென்று மணிமாடத்தை அடைந்து இன்பமுடைய மதுர மொழிகள் பலவற்றையும் கூறி முறையாய் உபசாரம் செய்து விருந்து முதலான சிறப்புகளைச் செய்ய, நான்முகனை விட மேன்மையுடைய சிவபாத இருதயரும் முதிர்ந்த உணர்வுடைய திருத்தொண்டர்களும் மற்ற அந்தணர்களும் தாங்கள் வந்த திறத்தைக் கூறுபவர்களாகி,
3064. ஞானபோ னகருக்கு  நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால் மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால் அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.
தெளிவுரை : ஞான அமுது உண்ட ஞானசம்பந்தருக்கு நல்ல தவம் பொருந்திய இனிமையான ஒழுக்கத்தால் குற்றமற்ற சிறப்புடைய உம் மகளை மணம் பேசுவதற்கு நாங்கள் வந்துள்ளோம் என்று எடுத்துச் சொல்லவும், இவ்வாறு வரப்பெறுகின்ற பேறு அந்தணரான நீங்கள் என்மீது வைத்த கருணையாலாகும். அன்றி, என் தகுதி பற்றி அன்று! என்று வான் நிறைந்த பெரு மனமகிழ்ச்சியுடன் இருதயரை நோக்கி நம்பாண்டார் நம்பி கூறுவாராகி,
3065. உம்முடைய பெருந்தவத்தால் உலகனைத்தும் ஈன்றளித்த
அம்மைதிரு முலைப்பாலில் குழைத்தஆ ரமுதுண்டார்க்
கெம்முடைய குலக்கொழுந்தை யாமுய்யத் தருகின்றோம்
வம்மின்என உரைசெய்து மனமகிழ்ந்து செலவிடுத்தார்.
தெளிவுரை : உம்பெருந்தவத்தினால், உலகங்கள் எல்லாம் பெற்றெடுத்த உமையம்மையாரின் திருமுலைப்பாலில் குழைத்த சிவஞான நிறைவான அமுதத்தை உண்டருளிய பிள்ளையாருக்கு எம்குலக் கொழுந்தான மகளை யாங்கள் உய்யும் பொருட்டு மணத்தால் தருகின்றோம் வாருங்கள் என்று சொல்லால் சொல்லி, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி, அவர்களைச் சீர்காழிக்குச் செல்லுமாறு அனுப்பினார்.
3066. பேருவகை யால்இசைவு பெற்றவர்தாம் மீண்டணைந்து
காருலவு மலர்ச்சோலைக் கழுமலத்தை வந்தெய்திச்
சீருடைய பிள்ளையார்க்கு அவர்நேர்ந்த படிசெப்பிப்
பார்குலவும் திருமணத்தின் பான்மைவினை தொடங்குவார்.
தெளிவுரை : மிக்க மகிழ்ச்சியால் நம்பாண்டவரின் சம்மதத்தைப் பெற்ற சிவபாத இருதயர் முதலியவர் மீண்டு போய் மேகங்கள் தவழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பதியை வந்து அடைந்து, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தரிடம் நம்பாண்டரின் சம்மதம் பற்றி விரிவாகச் சொல்லி, உலகம் விளங்கும் திருமணத்தின் பகுதிகளைத் தொடங்குவார்களாய்,
3067. திருமணஞ்செய் கலியாணத் திருநாளும் திகழ்சிறப்பின்
மருவிய ஓரையுங்கணித மங்கலநூ லவர்வகுப்பப்
பெருகுமண நாள்ஓலை பெருஞ்சிறப்பி னுடன் போக்கி
அருள்புரிந்து நன்னாளில் அணிமுளைப்பா லிகைவிதைத்தார்.
தெளிவுரை : திருமணம் செய்ய நின்ற திருமண நாளையும் விளங்கும் சிறப்புடன் கூடிய ஓரையையும் கணித மங்கல நூல் உணர்ந்த சான்றோர் வகுத்துச் சொல்ல, பெருகும் மணஓலையைப் பெருஞ்சிறப்புடன் மணமகள் வீட்டாருக்கும் மற்றச் சுற்றத்தவர் முதலானவர்க்கும் அனுப்பித் திருவருள் புரிந்து கொடுத்த நல்ல நாளில் அழகிய பாலிகைகளில் அழகான முளையை விதைத்தார்கள்.
3068. செல்வம்மலி திருப்புகலிச் செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு மகரதோ ரணம் நிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து மாலைகளெங் கணும் நாற்றி
அல்கு பெருந் திருவோங்க அணிசிறக்க அலங்கரித்தார்.
தெளிவுரை : செல்வம் நிறைந்த சீகாழிப் பதியின் செழித்த வீதிகளில் நிறை குடங்களையும் விளக்குகளையும் மகர தோரணங்களையும் வரிசையாய் அமைத்து அளவுபடாத ஒளியுடைய முத்து மாலைகளை எங்கும் தொங்க விட்டு மிக்க பெருந்திரு ஓங்கும்படி அழகு விளங்க அலங்காரம் செய்தனர்.
3069. அருந்தவத்தோர் அந்தணர்கள் அயலுள்ளோர் தாம்உய்யப்
பொருந்துதிரு நாள்ஓலை பொருவிறந்தார் கொண்டணையத்
திருந்துபுகழ் நம்பாண்டார் நம்பிசிறப் பெதிர்கொண்டு
வருந்தவத்தால் மகட்கொடுப்பார் வதுவைவினை தொடங்குவார்.
தெளிவுரை : அரிய தவத்தவர்களான தொண்டர்களும் மறையவர்களும் மற்றும் அயலில் உள்ளவர்களாகிக் கூடிய ஒப்பில்லாத சான்றோர் தாம் உய்யுமாறு பொருந்தும் திருமண நாள் ஓலையை எடுத்துக்கொண்டு வந்து சேர, திருந்தும் புகழையுடைய நம்பாண்டார் நம்பி அச்சிறப்பை முறைமையாக ஏற்றுக் கொண்டு, முன் தொடர்பினால் வரும் தவத்தின் பயனால் தம் மகளாரைப் பிள்ளையாருக்கு மணமகளாகத் தருபவராகித் திருமணத்திற்கான செயல்களைச் செய்யலானார்.
3070. மன்னுபெருஞ் சுற்றத்தார் எல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக் கெழுநாளாம் நன்னாளில்
பன்மணிமங் கலமுரசம் பல்லியங்கள் நிறைந்தார்ப்ப
பொன்மணிப்பா லிகைமீது புனிதமுளை பூரித்தார்.
தெளிவுரை : நிலைத்த புகழையுடைய சுற்றத்தவர் அனைவரும் சீகாழியில் வந்து கூடி, திருமணமான நன்னிலை பெறும் நாளுக்கு ஏழுநாட்களுக்கு முன், நல்ல நாளிலே, பல அழகிய மங்கல முரசும் பலவகை வாத்தியங்களும் நிறைந்து ஒலிக்க, பொன் இட்ட அழகிய பாலிகைகளின் மீது தூய முளையை நிறைத்துத் தெளித்தார்கள்.
3071. சேணுயரும் மாடங்கள் திருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள் நிகரில்அணி பெறவிளக்கிக்
காணவரு கைவண்ணம் கவின்ஓங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண் மங்கலக்கோ லம்புனைந்து.
தெளிவுரை : வானத்தில் உயர்ந்த மாடங்களையும் செல்வம் மிகும் மண்டபங்களையும் பெரிய நிலைகளையுடைய மாளிகைகளையும் ஒப்பில்லாத அழகு பெறுமாறு அலங்காரம் செய்து காட்சி பொருந்த வரும் ஓவியத்திலும் அழகு மிகுமாறு சித்தரித்து வடிவங்களை அங்கங்கும் எழுதி, ஒளியுடைய அழகிய மணிகள் பதித்த முதல்கடை வாயிலில் மங்கலக் கோலங்களைச் செய்து,
3072. நீடுநிலைத் தோரணங்கள் நீள்மறுகு தொறும்நிரைத்து
மாடுயரும் கொடிமாலை மணிமாலை இடைப்போக்கிச்
சேடுயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து கொடுநீவிப்
பீடுகெழு மணிமுத்தின் பெரும்பந்தர் பலபுனைந்தார்.
தெளிவுரை : உயர்ந்த நிலையுடைய தோரணங்களை நீண்ட வீதிகள் தோறும் வரிசையாய் அமைத்துப் பக்கங்களில் உயர்ந்த பசிய கொடி மாலைகளையும் மணி மாலைகளையும் இடையிடையே புக அமைத்து, ஒளியுடைய திண்ணைகளைச் செழுமையுடைய சுண்ணச் சாந்தினால் மெழுகிப் பெருமை விளங்கும் மணி முத்துக்கள் நிறைந்த பெரும் பந்தல்கள் பலவற்றையும் அமைத்தனர்.
3073. மன்றல்வினைத் திருமுளைநாள் தொடங்கிவரு நாளெல்லாம்
முன்றில்தொறும் வீதிதொறும் முகநெடுவா யில்கள்தொறும்
நின்றொளிரும் மணிவிளக்கு நிறைவாசப் பொற்குடங்கள்
துன்றுசுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்.
தெளிவுரை : திருமணச் செயல்களுள் முளை பூரித்த நாள் தொடங்கி வரும் நாட்களில் எல்லாம் வீதிகள் தோறும், மாடங்களின் முற்றங்கள் தோறும், நீண்ட முன் வாயில் தோறும் விளக்கம் செய்யும் மணி விளக்குகளும், மணமுடைய தூயநீர் நிறைந்த பொன் குடங்களும், நெருங்கிய ஒளியுடைய மாலைகளும், தூபங்களுமாகிய இவற்றை நெருக்கமாக அமைத்தனர்.
3074. எங்கணும்மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்
மங்கலநீள் மணவினைநாள் கேட்டுமிக மகிழ்வெய்திப்
பொங்குதிருப் புகலிதனில் நாள்தோறும் புகுந்துஈண்ட
அங்கண்அணைந் தவர்க்கெல்லாம் பெருஞ்சிறப்பு மிகவளித்தார்.
தெளிவுரை : எல்லா இடங்களிலும் உண்மைத் தொண்டர்களும் அந்தணர்களும் மற்றவர்களும் மங்கலம் பெருகும் மணச்செயல்கள் நிகழும் நாளைக் கேட்டு, மிக்க மகிழ்ச்சி அடைந்து, திருப்பெருகும் சீகாழிப் பதியில் நாள்தோறும் வந்து நெருங்க, அங்ஙனம் அங்கு வந்து சேர்ந்தவர்க்கெல்லாம் பெரிய சிறப்பை மிகவும் அளித்தனர்.
3075. மங்கலதூ ரியநாதம் மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின் தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும் தெய்வவிரை மணம்பெருக.
தெளிவுரை : மங்கலம் பொருந்திய வாத்தியங்களின் ஒலி வீதிதோறும் நின்று ஒலிக்க, மேன்மேல் ஓங்கி எழுந்த நான்மறைகளின் ஒலியானது கடல் ஒலியை விட அதிகமாய் விளங்க, தங்கும் நறுமணம் உள்ள அகில் துண்டங்களின் மிக்க செழும்பகையுடன், செந்தீயுடன் கூடிய வேள்விப் புகையும் சேர்ந்து தெய்வீக மணமாய் மணம் பெருகவும்,
3076. மங்கலதூ ரியநாதம் மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின் தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும் தெய்வவிரை மணம்பெருக.
தெளிவுரை : எண் திசையில் உள்ள மக்களும் அங்கங்கு உள்ள வளப்பொருள்களுடன் நெருங்க, பண்டங்கள் நிறையச் சேமிக்கும் சாலைகளும் பல்வேறு விதமாக விளங்க, மிக்க பெருநிதியின் குவியல்கள் மலை விளங்குதல் போல் மலிய, உணவுத் தொழில்களினின்று எழும் ஓசைகள் இடையறாத ஒலியாய்ப் பெருக,
3077. மாமறைநூல் விதிச்சடங்கின் வகுத்தமுறை நெறிமரபின்
தூமணநல் லுபகரணம் சமைப்பவர்தந் தொழில்துவன்றத்
தாமரையோன் அனையபெருந் தவமறையோர் தாம்எடுத்த
பூமருவு பொற்கலசப் புண்ணியநீர் பொலிவெய்த.
தெளிவுரை : சிறந்த மறைநூல்களில் விதித்த சடங்குகளின் பொருட்டு வகுத்த முறை வழி மரபினால் தூய மணத்துக்குரிய நல்ல வேள்விப் பொருள்களை அமைத்து ஒழுங்குபடுத்தபவர்களின் தொழில் நெருங்க, நான்முகனைப் போன்ற பெருந்தவ மறையவர் எடுத்த பூக்கள் பொருந்திய பொற்குடங்களில் நிறைந்த புண்ணிய நீர் திகழ,
3078. குங்குமத்தின் செழுஞ்சேற்றின் கூட்டமைப்போர் இனங்குழுமப்
பொங்குவிரைப் புதுக்கலவைப் புகையெடுப்போர் தொகைவிரவத்
துங்கநறுங் கர்ப்பூரச் சுண்ணம்இடிப் போர்நெருங்க
எங்குமலர்ப் பிணைபுனைவோர் ஈட்டங்கள் மிகப்பெருக.
தெளிவுரை : குங்குமப் பூவின் கொழுமையான சேறான சந்தனக்குழம்பை அமைப்பவரின் இனங்கள் கூட, மிக்க மணமுடைய மணப்பொருள்கள் கூட்டிய கலவையின் தூபப் புகை எடுப்பவர் கூட்டம் பெருக, உயர்வுடைய நறுமணம் உள்ள கற்பூரச் சுண்ணத்தை இடிப்போர் நெருங்க, எங்கும் மலர்களால் ஆன பிணையல் முதலான பலவகைப்பட்ட மாலைகளைத் தொடுப்பவர் கூட்டம் பெருக.
3079. இனையபல வேறுதொழில் எம்மருங்கும் நிரைத்தியற்று
மனைவளரு மறுகெல்லாம் மணவணிசெய் மறைமூதூர்
நினைவரிய பெருவளங்கள் நெருங்குதலால் நிதிக்கோமான்
தனையிறைவர் தாம்ஏவச் சமைத்ததுபோல் அமைந்துளதால்.
தெளிவுரை : இப்படிப் பலவகைப்பட்ட வெவ்வேறு தொழில்களை எல்லாப் பக்கங்களிலும் ஒழுங்குபடச் செய்யும் மனைகள் உள்ள வீதிகளில் எல்லாம் மணவிழாவை விளக்கமாகக் காட்டும் மறையவர்கள் வாழ்கின்ற அவ்வூர், நினைப்பதற்கும் அரிய பெரிய வளங்கள் நெருங்கிய அதனால், குபேரனைச் சிவபெருமான் ஏவியதால் அவனே வகுத்ததைப் போலவே விளங்கியது.
3080. மாறி லாநிறை வளந்தரு புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரும் நிகரிலா தவருக்
காறு சூடினார் அருன்திருக் காப்புநா ணணிவார்.
தெளிவுரை : மாறுபாடில்லாத நிறைந்த வளத்தை அளிக்கும் சீகாழிப் பதியில் திருமணத்தை மேற்கொள்ளும் திருநாளின் முன்நாளில், அந்தணர் கூட்டமும், திருநீறு அணிந்த தொண்டர்களும் கூடி, ஒப்பில்லாத பிள்ளையாருக்குக் கங்கையைத் தலையில் சூடிய இறைவரின் அருள் பொருந்திய திருக்காப்பு நாணை அணிபவராகி,
3081. வேத வாய்மையின் விதியுளி வினையினால் விளங்க
ஓத நீர்உல கியல்முறை ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள்திருத் தொண்டர்கள் மறையவர் கவினார்
மாதர் மைந்தர்பொற் காப்புநாண் நகர்வலம் செய்தார்.
தெளிவுரை : வேத வாய்மையில் கூறும் விதிகள் இதனால் விளங்கவும் கடல் சூழ்ந்த உலக நடைமுறை ஒழுக்கங்கள் மிகவும், அன்புமிக்க திருத்தொண்டர்களும் வேதியர்களும் அழகான மங்கையர்களும் ஆடவரும் கூடிப் பொன்னால் ஆன காப்புநாணை நகர்வலம் வருமாறு செய்தனர்.
3082. நகர்வ லஞ்செய்து புகுந்தபின் நவமணி யணிந்த
புகரில் சித்திர விதானமண் டபத்தினிற் பொலியப்
பகரும் வைதிக விதிச்சமா வர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார் திருமுன்பு சேர்ந்தார்.
தெளிவுரை : காப்புநணை நகர்வலம் வரச்செய்து புகுந்த பின்பு, நவமணிகளால் ஆன குற்றம் இல்லாத ஓவியங்களால் மேற்கட்டி அமைக்கப்பட்ட மண்டபத்தில் விளங்குமாறு, நூல்களால் எடுத்துக் கூறப்படும் வைதிக விதிகளின்படி சமாவர்த்தனமாகிய தன்மை விளங்கும்படி சிறந்த ஞானசம்பந்தரின் திருமுன்பு வந்து சேர்ந்தனர்.
3083. செம்பொ னின்பரி கலத்தினில் செந்நெல்வெண் பரப்பின்
வம்ப ணிந்தநீள் மாலைசூழ் மருங்குற வமைத்த
அம்பொன் வாசநீர்ப் பொற்குடம் அரசிலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணிவிளக் கொளிர்தரும் பரப்பில்.
தெளிவுரை : செம்பொன்னால் ஆன தட்டில் செந்நெல்லால் ஆன வெண்பரப்பின் மீது மணம் பொருந்திய நீண்ட மாலைகள் இரண்டு பக்கங்களிலும் சூழ அமைக்கப்பட்ட மணமுடைய நீர் நிறைந்த பொன்குடமும் அரசிலையும் தருப்பையும் பரவிய நீண்ட ஒளியுடைய அழகான விளக்கும் பொருந்திய பரப்பில்,
3084. நாத மங்கல முழக்கொடு நற்றவ முனிவர்
வேத கீதமும் விம்மிட விரைகமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில் புனைந்தபுண் ணியம்போல்
மீது பூஞ்சய னத்திருந் தவர்முன்பு மேவி.
தெளிவுரை : வாத்தியங்களின் ஒலியால் ஆன மங்கல முழக்கத்துடனே நல்ல தவமுனிவர்களின் வேதகீத ஒலியும் நிறைய, நறுமணம் வீசும் மலர்களும் சாந்தும் அணிகளும், அழகான ஆடையும் புனைந்த புண்ணியம் போல் அழகிய மலர் அமளி மீது வீற்றிருந்த பிள்ளையாரின் திருமுன்பு அடைந்து,
3085. ஆர்வ மிக்கெழும் அன்பினால் மலர்அயன் அனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய் திருந்துநூல் முனிவர்
பார்வ ழிப்பட வரும்இரு வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையில் காப்புநாண் சாத்த.
தெளிவுரை : ஆர்வம் மிகுந்து எழுவதால் ஆன அன்பால், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனைப் போன்ற சிறந்தி மறைவிதித் தொழில் செய்யும் சடங்குகளைச் செய்யும் நூல்வல்ல வேதியர்கள், உலகில் பிறவி எடுக்க வரும் இருவினைகளின் சார்பை நீக்குபவரான ஞானசம்பந்தரின் திருக்கையில் காப்புநாணைக் கட்ட,
3086. கண்ட மாந்தர்கள் கடிமணம் காணவந் தணைவார்
கொண்ட வல்வினை யாப்பவிழ் கொள்கைய வான
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம்எழுந் தார்த்தன மகிழ்ந்தே.
தெளிவுரை : காப்பு நாணைக் கட்டியதைப் பார்த்தவர்களும் மணத்தைக் காண்பதற்காக வந்தவர்களும் பற்றிய வலிய கட்டை அவிழ்த்து நீக்கும் கொள்கையுடைய தொண்டர்களும் என்னும் இவர்களின் உள்ளமும் முகங்களும் மலர்ச்சி பெற்றன. சுருதிகள் நிறைந்த மறைக்குலங்கள் மகிழ்ச்சி பெற்று மேல் ஓங்கி ஒலித்தன.
3087. நிரந்த கங்குலின் நிதிமழை விதிமுறை யெவர்க்கும்
புரந்த ஞானசம் பந்தர்தாம் புன்னெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகலமுன் னவதரித் தாற்போல்
பரந்த பேரிருள் துரந்துவந் தெழுந்தனன் பகலோன்.
தெளிவுரை : பரவிய இரவில் வேத விதி முறைப்படி நிதி மழையாகப் பொழிந்து அருளிய ஞானசம்பந்தர் முன் புன்மையான நெறிகளான புறச்சமயங்களின் துன்பம் தரும் வலிய இருள் நீங்க வந்து தோன்றினாற்போல் பரந்த பேரிருளை நீக்கிக் கதிரவன் தோன்றினான்.
3088. அஞ்சி றைச்சுரும் பறைபொழில் சண்பையாண் டகையார்
தம்சி வத்திரு மணஞ்செயத் தவஞ்செய்நாள் என்று
மஞ்ச னத்தொழில் புரிந்தென மாசிருள் கழுவிச்
செஞ்சு டர்கதிர்ப் பேரணி யணிந்தன திசைகள்.
தெளிவுரை : அழகான வண்டுகள் இசைபாடும் பொழில்கள் சூழ்ந்த சீகாழியின் ஆண் தகையரான ஞானசம்பந்தர், சிவத்திருமணம் செய்தற்கிடமாகத் தவம் செய்யப்பெறும் நாள் இது என்று எண்ணித் திருமஞ்சனத் தொழிலைச் செய்தல்போல் மாசுடைய இருளைக் கழுவி நீக்கிப் பகலோனது செஞ்சுடரான கதிர்களின் பேரணியைத் திசைகள் பூண்டு கொண்டன.
3089. பரம்பு தம்வயின் எங்கணும் உள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்திசை யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக் கல்லியா ணத்தின்
வரம்பில் தன்பயன் காட்டுவ தொத்தது வையம்.
தெளிவுரை : பெருகிய தங்களிடத்தில் எவ்வெவ்விடங்களிலும் உள்ள பல வளங்களையும் மிகுதிப்பட முன்னே கொணர்ந்து எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் நெருங்கி வந்து கூடியதால், ஒப்பில்லாதவரான ஞானசம்பந்தரின் திருமணத்தில், அளவற்ற தன் பயனை நிலம் எடுத்துக் காட்டுவதுபோல் விளங்கியது.
3090. நங்கள் வாழ்வென வருந்திரு ஞானசம் பந்தர்
மங்க லத்திரு மணவெழுச் சியின்முழக் கென்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேரொலி முழக்குடன் எழுந்தது புணரி.
தெளிவுரை : அடியவரான எங்களின் வாழ்வே உருக்கொண்டு வந்தது போல் வரும் திருஞானசம்பந்தரின் மங்கலமான திருமண எழுச்சியில் மங்கல வாத்தியங்களின் ஒலிபோல், பெரிய வெண்மையான அலைகளுடன் சங்குகளின் சத்தத்துடன் சூழ்ந்து மேன்மேல் எழும் பெரிய ஒலியான முழக்கத்துடனே கடல் எழுந்தது.
3091. அளக்கர் ஏழும்ஒன் றாமெனும் பெருமையெவ் வுலகும்
விளக்கு மாமண விழாவுடன் விரைந்துசெல் வனபோல்
துளக்கில் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலஞ்சுழித் தெழுந்தது வன்னி.
தெளிவுரை : கடல்கள் ஏழும் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன என்ற பெருமை கொண்டு எல்லா உலகங்களையும் விளங்கிடச் செய்கின்ற திருமண நிகழ்ச்சியான விழாவுடனே, தாமும் கூடிப்பயன் பெறும் பொருட்டு விரைவாகச் செல்ல ஒருப்பட்டு எழுபவை போன்று, அசைவில்லாத ஒழுக்கத்தையுடைய வேதியர்கள் ஆகுதியைத் தொடங்குவதற்கு முன்னம், மூன்று தீவளர்வதற்கு இடமான வேதிகைகளில் தீயானது வலம் சுழித்து எழுந்தது.
3092. சந்த மென்மலர்த் தாதணி நீறுமெய் தரித்துக்
கந்தம் மேவுவண்டு ஒழுங்கெனுங் கண்டிகை பூண்டு
சிந்தை தூயஅன் பர்களுடன் திருமணம் போத
மந்த சாரியின் மணங்கொணர்ந் தெழுந்தது மருத்து.
தெளிவுரை : அழகான மெல்லிய பூந்தாதுக்களான திருநீற்றை மெய்யில் தாங்கிக் கொண்டு, கூட்டமாகப் பொருந்தும் வண்டுகளின் வரிசையான உருத்திராட்ச மாலைகளைப் பூண்டு, உள்ளம் தூய்மையான அன்பர்களுடன் கூடித் திருமண எழுச்சியில் கலந்து செல்ல மென்மையான வேகத்தினால் பூமணங்களைச் சுமந்த வண்ணம் காற்று வந்தது.
3093. எண்தி சைத்தலத் தியாவரும் புகலிவந் தெய்தி
மண்டும் அத்திரு மணஎழுச் சியின்அணி வாய்ப்பக்
கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க் கொண்டல்கள் என்னும்
வெண்து கிற்கொடி நிரைத்தது போன்றது விசும்பு.
தெளிவுரை : எட்டுத் திசைகளின் பகுதிகளில் வாழ்கின்ற எல்லாத் திறத்தவரும் சீகாழியில் வந்து கூடி நெருங்கி எழுந்த அத்திருமண நிகழ்ச்சியில் அழகு பொருந்தும்படி, மேற்கொண்டு தூக்கி எடுத்த வெண்ணிறம் பொருந்திய ஒளியுடைய பெருவெண் மேகங்களாகிய வெண்மையான துணியால் ஆன கொடிகளை வரிசையாய் அமைத்தாற் போன்று வானம் விளங்கியது.
3094. ஏல இந்நலம் யாவையும் எழுச்சிமுன் காட்டும்
காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்
மூல மாகிய தோணிமேல் முதல்வரை வணங்கிச்
சீல மார்திரு வருளினால் மணத்தின்மேற் செல்வார்.
தெளிவுரை : பொருந்துமாறு இந்நன்மைகள் யாவும் திருமண எழுச்சியின் முன் காட்டுகின்ற காலையில், செய்யும் கடப்பாட்டை முடித்தருளிய கவுணியார் தலைவரான ஞானசம்பந்தர், மூலமான திருத்தோணியின்மேல் உள்ள இறைவரை வணங்கி ஒளிமிக்க வெண்மையான சுடரையுடைய முத்துச்சிவிகையின் மேல் எழுந்தருளி அமர்ந்தார்.
3095. காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்துமுன் செல்ல
வாழி மாமறை முழங்கிட வளம்பதி வணங்கி
நீழல் வெண்சுடர் நித்திலச் சிவிகைமேற் கொண்டார்.
தெளிவுரை : சீகாழிப் பதியின் அந்தணர் கூட்டத்துடன் கலந்து சுற்றிச் சூழ்ந்த அன்பர்களும் மற்றவர்களும் நெருங்கி முன்னே செல்லச் சென்று வாழ்வு தரும் பெருமுறைகள் முழங்க வளம் வாய்ந்த சீகாழிப் பதியினை வணங்கி ஒளிமிக்க வெண்மையான சுடரையுடைய முத்துச்சிவிகையின் மேல் எழுந்தருளி அமர்ந்தார்.
3096. ஆன வாகனம் ஏறுவார் யாரும்மேற் கொள்ளக்
கான மாகிய தொங்கல்பிச் சங்குடை கவரி
மேனெ ருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன் மங்கல வியங்கள்.
தெளிவுரை : அவரவர்க்குரிய வாகனங்களில் அமர்ந்து செல்பவர்கள் அவ்வவற்றில் ஏறி அமர, காட்டைப் போன்ற தொங்கல்களும், நீலிக் குஞ்சங்களும், குடைகளும், கவரிகளும், மேலே நெருங்கவும், வானத்திலும் நிலத்திலுமாக முறையே தேவதுந்துபி ஒலியுடன் மங்கல இன்னியங்களின் ஒலியும் ஒருங்கே எழுந்தன.
3097. சங்கொடு தாரை சின்னம் தனிப்பெருங் காளந் தாளம்
வங்கியம் ஏனை மற்று மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்த தன்றே.
தெளிவுரை : சங்கினோடு தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் என்ற இவை போன்ற நாதம் உண்டாகின்ற கருவிகள் எல்லாமும் மேல் எழுந்த ஒலியினால் ஓங்கி அந்தணர்களின் வேத கீதங்களின் ஒலியுடன் பொருந்தி எங்கும் பெருக, திருமணமானது அன்றே எழுச்சி பெற்றுச் சென்றது.
3098. கோதையர் குழல்சூழ் வண்டின் குழாத்தொலி யொருபால் கோல
வேதியர் வேத வாய்மை மிகும்ஒலி யொருபால் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை யாழொலி யொருபால் ஏத்தும்
நாதமங் கலங்கள் கீத நயப்பொலி ஒருபா லாக.
தெளிவுரை : மங்கையரின் கூந்தலைச் சூழ்ந்த வண்டுக்கூட்டங்களின் ஒலி ஒரு பக்கத்திலும், அழகிய மறையவர் ஓதும் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பக்கத்திலும்,  குற்றம் இல்லாத மிக்க வீணையும் யாழுமான இவற்றின் ஒலி ஒரு பக்கத்திலும், துதிக்கும் நாதத்துடன் கூடிய மங்கலங்களைக் கீதமாய்ப்பாடும் இனிமையான ஒலி ஒரு பக்கத்திலும்,
3099. விண்ணினை விழுங்க மிக்க வெண்துகில் பதாகை வெள்ளம்
கண்வெறி படைப்ப மிக்க கதிர்விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின் பொதிப்பரப் பெங்கும் நண்ண.
தெளிவுரை : மிக்க வெண் துகில் கொடிகளின் கூட்டம் வானவெளியை மறைக்கவும், மிக்க ஒளி வீசும் சாமரைகளின் கூட்டம் கண்கள் கூசவும் விளங்கும் மணிகளையுடைய அணிகளும், நீடும் மஞ்சள் நிறம் மிக்க அழகிய அளவற்ற துணிப் பொதிகளின் கூட்டமும் எங்கும் பொருந்த,
3100. சிகையொடு மான்தோல் தாங்கும் கிடையும் ஆசானும் செல்வார்
புகைவிடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்
தகைவிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையுஞ் செற்ற மாதவ ரியல்பின் மல்க.
தெளிவுரை : பஞ்ச சிகை கொண்ட தோற்றத்துடன் கரிய மான்தோலைப் பூணூலில் கொண்ட வேதம் ஓதும் சிறுவர்களும் உபாத்தியாயருமாகக் கூடிச் செல்லவும், ஓமப் புகைவிடும் வேள்விச் செந்தீயினைத் தம் தம் மனைவியருடனே கொண்டு அந்தணர் செல்லவும், தடுக்க இயலாத விருப்பத்துடன் பெருமையால் சிறந்த திருப்பதிகங்களை ஓதிக்கொண்டு ஓதுவார் போகவும், ஆறுவகையான பகைகளையும் அறுத்தவர்கள் தம்தம் இயல்புடனே நெருங்கவும்,
3101. அறுவகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ் சாரும்
நெறிவழி நின்ற வேடம் நீடிய தவத்தி னுள்ளோர்
மறுவறு மனத்தி லன்பின் வழியினால் வந்த யோகக்
குறிநிலை பெற்ற தொண்டர் குழாங்குழாம் ஆகி ஏக.
தெளிவுரை : ஆறு வகையாக உள்ள சைவ உட்சமயங்களில் எண்ணில்லாத விரதங்களைச் சேர்ந்த ஒழுக்க வழிகளிலே உரிய வேடங்களால் நீடிய தவத்தில் நின்றவர்களும் குற்றமற்ற மனத்துடன் அன்பின் வழியினால் சிவயோகக் குறியில் நிலை பெற்றவர்களும் கூட்டம் கூட்டமாகப் போகவும்,
3102. விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத் தரம்பைய ருடனா யுள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவி னோடும்
மஞ்சுறை விசும்பின் மீது மணவணி காணச் சென்றார்.
தெளிவுரை : வித்தியாதரர்களும் இயக்கர்களும் சித்தர்களும் கின்னரர்களும் நெருங்கிய தேவர்களும் மை பூசப்பெற்ற கூட்டமான அரம்பையர்களுடன் உள்ளவர்களும் தங்கள் தங்களுடைய ஒளி பொருந்திய வான விமானங்களில் ஏறிக்கொண்டு மேன்மேல் மிக்க ஆசையுடன் மேகங்கள் தவழும் வான் வழியாகத் திருமண நிகழ்ச்சியைக் காண்பதற்காகச் சென்றனர்.
3103. மற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி
முற்றஇத் தலத்தி னுள்ளோர் மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணமேற் செல்லும்
பொற்பமை மணத்தின் சாயை போன்றுமுன் பொலியச் செல்ல.
தெளிவுரை : இவ்வாறு தேவர்கள் நெருங்கிச் செல்கின்ற மங்கலமான அழகிய காட்சி, இம்மண்ணுலகத்தவர் யாவரும் நெருங்கிக் கூடித் திருமண எழுச்சியில் செல்லும்போது அற்புதமான தன்மை பொருந்த மேலே உடன் செல்வதால், மண எழுச்சியின் மீது செல்கின்ற அழகு மிக்க ஒரு மணஎழுச்சியின் நிழலைப் போல விளங்குமாறு செல்ல,
3104. தவஅர சாள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும்
பவமறுத் தாள வல்லார் பாதம்உள் ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து
சிவனமர்ந் துறையு நல்லூர்த் திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார்.
தெளிவுரை : தவ அரசை ஆட்சி செய்வதற்குப் பிடித்தலைப் போன்று ஒப்பில்லாத முத்துக் குடைகள் மேலே நிழல் செய்யச் சாரும் பிறவியை அறுத்து ஆட்கொள்ள வல்ல இறைவரின் திருவடிகளைத் தம் திருவுள்ளத்தில் வைத்துக் கொண்டவராய், உலகங்கள் எல்லாம் வாழ்வடையும் பொருட்டு வந்து தோன்றிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் சென்றருளிச் சிவபெருமான் விரும்பி எழுந்தருளிய திருநல்லூர்ப் பெருமணத்தை அடைந்தார்.
3105. பெருமணக் கோயி லுள்ளார் மங்கலம் பெருகு மாற்றால்
வருமணத் திறத்தின் முன்னர் வழியெதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்ம லார்தாம்
இருள்மறைத்து இலங்கு கண்டத் திறைவர்தங் கோயில் புக்கார்.
தெளிவுரை : திருநல்லூர் பெருமணத்தில் உள்ள கோயிலில் உள்ள தொண்டர்கள் மங்கலம் மிக்குப் பெருகுமாறு, இனி நிகழ உள்ள திருமணத்தின் முன் வழியிலே வந்து எதிர்கொள்ளத் திருமணம் செய்து கொள்ள வருகின்ற ஞானசம்பந்தர் சென்று, கரிய நஞ்சு தன்னுள் விளங்கும் கழுத்தையுடைய இறைவரின் கோயிலுள் புகுந்தார்.
3106. நாதரைப் பணிந்து போற்றி நற்பொருட் பதிகம் பாடிக்
காதல்மெய் யருள்முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம் புனைந்திட வேண்டும் என்னப்
பூதநா யகர்தங் கோயில் புறத்தொரு மடத்திற் புக்கார்.
தெளிவுரை : அக்கோயிலில் உள்ள இறைவரைப் பணிந்து போற்றி, நல்ல பொருள் பொதிந்த பதிகத்தைப் பாடிப் பெரு விருப்பத்தை விளைக்கின்ற இறைவரின் மெய்யருளை முன் பெற்றவராய்க் கவுணியர் தலைவரான பிள்ளையார் வெளியே வந்தார். அப்போது மறையவர்கள் திருமணக் கோலத்தைக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்ள அதை அவர் செவியேற்றுப் பூதகணங்களின் தலைவரான இறைவரின் கோயில் பக்கத்தே உள்ள ஒரு மடத்தினுள் புகுந்தார்.
3107. பொற்குடம் நிறைந்த வாசப் புனிதமஞ் சனநீ ராட்டி
விற்பொலி வெண்பட் டாடை மேதக விளங்கச் சாத்தி
நற்றிரு வுத்த ரீய நறுந்துகில் சாத்தி நானப்
பற்பல கலவைச் சாந்தம் பான்மையில் அணிந்த பின்னர்.
தெளிவுரை : பொன் குடத்தில் நிறைந்த மணமுடைய புனிதமான மஞ்சனநீரால் ஞானசம்பந்தரை நீராட்டி, ஒளி விளங்கும் வெண்மையான பட்டாடையை அழகு பெற உடுத்தி, நல்ல உத்தரீயமான நறுமணத் துகிலையும் உடுத்தி, மணம் கமழும் கத்தூரியுடன் பல பொருட்களைக் கூட்டி அமைந்த சாந்தத்தைப் பண்பு அமையச் சாத்திய பின்னர்,
3108. திருவடி மலர்மேற் பூத்த செழுந்தகைச் சோதி யென்ன
மருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்குபொற் சரட்டில் கோத்த
பெருகொளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி.
தெளிவுரை : திருவடி மலர்களின் மீது பூத்த செவ்விய விளக்கின் சோதி போன்று பொருந்திய முத்துக் கோவைகளையுடைய மணி வளையை அங்குப் பொருந்தச் சாத்தி, விரிகின்ற ஒளியுடைய பரடுகளின் மேல் விளங்கிய பொன் கம்பியில் கோத்த பெருகும் ஒளியுடைய முத்து மாலையில் விளங்கும் குஞ்சத்தைச் சாத்தி,
3109. தண்சுடர்ப் பரிய முத்துத் தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக் கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்திரு அரையில் நீடு வனப்பொளி வளரச் சாத்தி.
தெளிவுரை : குளிர்ந்த ஒளி வீசுகின்ற பெரிய முத்துக்களைப் பொன் கயிற்றில் கோத்த, பார்ப்பவரின் கண்களைக் கவரத் தக்க கோவை வரிசையையுடைய ஒளி கொண்ட அரைஞாணை, வெண்ணிற ஒளிவீசும்முத்து மாலை விரிந்த சுடர்விடும் கச்சத்தின் மீது வளமை வாய்ந்த அரையில் மிக்க அழகுடனே ஒளிவிளங்க அணிந்து,
3110. ஒளிகதிர்த் தரளக் கோவை யுதரபந் தனத்தின் மீது
தளிர்ஒளி துளும்பு முத்தின் சன்னவீ ரத்தைச் சாத்திக்
குளிர்நில வெறிக்கு முத்தின் பூணநூல் கோவை சாத்தி
நளிர்கதிர் முத்துமாலை நகுசுடர் ஆரஞ் சாத்தி.
தெளிவுரை : ஒளியையுடைய முத்துக் கோவைகளாலான அரைப்பட்டிகையின் மீது தளிர்க்கும் ஒளி மிகும் சன்ன வீரத்தைச் சாத்தி, குளிர்ந்த முத்து ஒளி வீசும் முத்துக்கோவையால் ஆன பூண் நூலை அணிந்து குளிர்ந்த கதிர்களையுடைய முத்து மாலையான ஆரத்தைச் சாத்தி,
3111. வாள்விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு நிறைசுடர் வடமும் சாத்தித்
தோள்வளைத் தரளப் பைம்பூண் சுந்தரத் தோள்மேற் சாத்தி.
தெளிவுரை : ஒளிவீசும் வயிரக்கட்டுக் கொண்ட விரல் மோதிரத்தை அணிந்து முழந்தாள் வரையும் நீண்ட வன்மையான கையில் முத்தால் ஆன தண்டையையும் கைச்சரியையும் அணிந்து நீண்ட ஒளி கொண்ட முழங்கைப் பொட்டுடன் வரிசையாய் ஒளி வீசும் மணிவடங்களையும் சாத்தி, தோள் வளையான முத்தால் ஆன அழகிய அணியைத் தோள்மீது சாத்தி,
3112. திருக்கழுத் தாரந் தெய்வக் கண்டிகை மாலை சேரப்
பருத்தமுத் தொழுங்கு கோத்த படரொளி வடமும் சாத்திப்
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திருவார் காதில்
வருக்கவெண் தரளக் கொத்தின் வடிக்குழை விளங்கச் சாத்தி.
தெளிவுரை : தெய்வத் தன்மை கொண்ட உருத்திராக்க மாலையுடன் சேருமாறு கழுத்தில் அணியும் ஆரமாய்ப் பெரிய முத்துக்களை ஒழுங்காய்க் கோத்த படரும் ஒளியுடைய வடத்தையும் சாத்தி மிக்க அழகோடும் உரிய இலக்கணம் அமைந்த திருப் பொருந்திய காதில், நற்சாதி முத்துக்களால் ஆன மகர குண்டலத்தை விளங்கச் சாத்தி,
3113. நீற்றொளி தழைத்துப் பொங்கி நிறைதிரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி வெண்சுட ரெழுந்த தென்னப்
பாற்படு முத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத் தணிந்த முத்தின் எழில்வளர் மகுடஞ் சேர்த்தார்.
தெளிவுரை : திருநீற்றின் ஒளி தழைத்துப் பெருகும் நெற்றியின் மீது, விரிந்த சோதியின் வெண்மையான சுடரானது மேல் எழுந்ததைப் போன்று நல்ல தன்மையுடைய முத்தால் ஆன குளிர்ந்த ஒளி விடும் திரணையை அணிந்து, பொருந்துமாறு வைத்து அழகுபடுத்திய முத்தால் ஆன அழகு மிக்க மகுடத்தைச் சாத்தினர்.
3114. இவ்வகை நம்மை யாளும் ஏர்வளர் தெய்வக் கோலம்
கவ்வினை மறையோர் செய்யக் கடிகொள்செங் கமலத் தாதின்
செவ்விநீள் தாம மார்பர் திருவடை யாள மாலை
எவ்வுல கோரும் ஏத்தத் தொழுதுதாம் எடுத்துப் பூண்டார்.
தெளிவுரை : இவ்வாறு நம்மை ஆட்கொள்கின்ற அழகுமிக்க தெய்வத்தன்மை கொண்ட மணக்கோலத்தை அத்தொழிலில் வல்ல அந்தணர் செய்தனர். மணம் பொருந்திய செந்தாமரைத் தாதுக்களையுடைய புதியதாய் மலர்ந்த நீண்ட மாலையை அணிந்த மார்பரான ஞானசம்பந்தர், திருஅடையாள மாலையான உருத்திராக்க மாலையை எல்லா உலகத்தவரும் துதிக்குமாறு வணங்கித் தாமே எடுத்து அணிந்து கொண்டார்.
3115. அழகினுக் கணியாம் வெண்ணீ றஞ்செழுத் தோதிச் சாத்திப்
பழகிய அன்பர் சூழப் படரொளி மறுகி லெய்தி
மழவிடை மேலோர் தம்மை மனங்கொள வணங்கி வந்து
முழுவொலி யெடுப்ப முத்தின் சிவிகைமேல் கொண்ட போது.
தெளிவுரை : அழகுக்கு அழகு செய்கின்ற திருவெண்ணீற்றைப் பஞ்சாட்சரத்தை ஓதி அணிந்து கொண்டு பழகிய அன்பர்கள் சூழ்ந்து வர ஒளியுடைய தெருவில் வந்து இளமையான காளையையுடைய சிவபெருமானை மனமார வணங்கி முழவுகள் ஒலிக்க முத்துச் சிவிகை மீது அமர்ந்து வந்தபோது,
3116. எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணோர் கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்.
தெளிவுரை : எழுந்தன சங்குகள் ஒலி! ஒலித்தன இனிய வாத்தியங்களின் ஒலி! வானத்திலிருந்து தேவர்கள் கற்பகப் பூமழையைப் பொழிந்தனர். தொழுந்தகுதியுடைய முனிவர்களும் தொண்டர்களும் எடுத்தோதும் வேத வாழ்த்தொலிகள் மேல்மேல் எழுந்து எல்லாத் திக்குகளிலும் பரவின. உலகம் மகிழ்ந்தது.
3117. படர்பெருந் தொங்கல் பிச்சம் பைங்கதிர்ப் பீலிப் பந்தர்
அடர்புனை செம்பொற் பாண்டில் அணிதுகிற் சதுக்கம் மல்கக்
கடலின்மீ தெழுந்து நிற்கும் கதிர்நிறை மதியம் போல
வடநிரை யணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார்.
தெளிவுரை : பரந்த பெரிய குஞ்சங்களும் பிச்சங்களும் பச்சை நிறமுடைய பீலியால் அமைந்த கூட்டங்களும், நெருக்கமாய் அலங்காரம் செய்யப்பட்ட பொன் தகட்டால் ஆன வட்ட அமைப்புடைய அழகிய துணிகளால் அமைந்த மேற்கட்டிகளும் நெருங்கக் கடல்மீது வந்து தோன்றும் கலைகள் நிறைந்த சந்திரன் போல் முத்து வடங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துக்குடை மேலே நிழல் செய்ய ஞானசம்பந்தர் வந்தருளினார்.
3118. சீரணி தெருவி னூடு திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம் இலங்கொளித் தாரை யெல்லாம்
பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைக ளோடு
தாரணி உய்ய ஞான சம்பந்தர் வந்தா ரென்று.
தெளிவுரை : அழகிய தெருவில் திருமண எழுச்சி இவ்வாறு எழுந்து செல்ல முத்தால் ஆன அழகுடைய எக்காளமும் திருச்சின்னமும் ஒளியுடைய தாரையும் என்னும் இவையெல்லாம் வேதங்களுடன் வந்து உய்யும் பொருட்டுத் திருஞானசம்பந்தர் வந்தார் என எடுத்துச் சொல்லிப் பேரொலி முன்னே பெருகுமாறு ஊதின.
3119. மண்ணினுக் கிடுக்கண் தீர வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்க ளெழுந்த போதவ்
வண்ணலார் வதுவை செய்ய அலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க.
தெளிவுரை : இவ்வுலகத்தில் வாழ்பவரின் துன்பம் நீங்க வந்து தோன்றியருளிய ஞானசம்பந்தரின் திருநாமங்கள் அளவில்லாத பலவற்றையும் எடுத்து ஏத்தித் துதித்துத் திருச்சின்னங்கள் கூறி எழுந்த அச்சமயத்தில், ஞானசம்பந்தர் திருமணம் செய்தற்காக அலங்காரம் செய்து வந்து சேரும் பேறு பெற்ற புண்ணிய அந்தணர் நம்பாண்டாரது திருமாளிகையில் மங்கலங்கள் மிகுந்து மேல் ஓங்கின.
3120. முற்றுமெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெருந் தவத்தின் நீர்மை நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப் பரிவுடன் செய்த வேலை.
தெளிவுரை : முற்றிய மெய்ஞ்ஞானத்தையுடைய ஞானசம்பந்தரின் சிவந்த திருக்கையைப் பிடிக்க நல்ல பெரிய தவத்தன்மையால் ஆன நலங்களை எல்லாம் கொண்டு எழுந்த தெய்வக் கற்பகப் பூங்கொம்பு போன்ற அம்மையாரையும் காப்பு அணிந்து அழகிய சங்கற்பம் முதலான சடங்குகளை முன்னர் விருப்பத்துடன் செய்தபோது,
3121. செம்பொன்செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனைபூண் செல்வப்
பைம்பொனின் மாலை வேய்ந்த பவளமென் கொடியொப் பாரை
நம்பன்தன் அருளே வாழ்த்தி நல்லெழில் விளங்கச் சூட்டி
அம்பொன்செய் தீப மென்ன அழகலங் கரித்து வைத்தார்.
தெளிவுரை : செம்பொன்னால் ஆன நெற்றி மாலையையும், அழகிய மணிகள் பதித்த தொழிற்பாட்டையுடைய அணிகளையும், செல்வம் பொருந்திய பொன்னரிமாலைகளையும் வரிசை பெறச் சூட்டிய மெல்லிய பவளக் கொடியைப் போன்ற அம்மையாரை, இறைவரின் அருளையே வாழ்த்தி நல்ல அழகு விளங்க அலங்காரம் செய்து, அழகிய பொன்னால் ஆன விளக்கைப் போல் அழகையே அலங்கரித்தாற் போன்று அலங்கரித்தனர்.
3122. மாமறை மைந்தர் எல்லாம் மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணம் தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச.
தெளிவுரை : சிறந்த அந்தண மைந்தர்கள் அனைவரும் திருமண எழுச்சியின் முன் வந்து பொருந்திய தூய்மையான மலர்களுடன் பொன் சுண்ணத்தையும் தொகுதியான நவமணிகளையும் வீசத் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் அரசிலையும் தருப்பையும் தோய்ந்த அழகிய பொற்குட நல்ல நீரை மந்திரங்களைக் கூறித் தெளித்தனர்.
3123. மாமறை மைந்தர் எல்லாம் மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணம் தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச.
தெளிவுரை : தேவர்கள் மலர்மாலை வானத்தே ஒளிமிகுமாறு வீச, மண்ணுலகம் நிறைந்த மணத்தையுடைய தென்றல் காற்றையும் வீச, நெருங்கிய ஒளி மிக்க அழகிய தோரணங்களிடையே போய்ப் புண்ணியத்தின் பயனைப் போன்ற சம்பந்தர் பூம்பந்தலின் முன் சேர்ந்தார்.
3124. பொன்னணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி வளர்மணிச் சிவிகை நின்றும்
பன்மலர் நறும்பொற் சுண்ணம் பரந்தபா வாடைமீது
முன்னிழிந் தருளி வந்தார் மூவுல குய்ய வந்தார்.
தெளிவுரை : பொன்னை அணிந்த சங்குகளின் கூட்டம் அழகுடன் முழங்கி ஒலிக்க, பொருந்திய முத்து வரிசைகள் பெருகி ஒளி செய்து விளங்கிய சிவிகையினின்றும், பல மலர்களும் மணம் கமழும் பொன் சுண்ணமும் பரவியிருந்த பாவாடையின் மேல், முன்னே இறங்கி, மூவுலகமும் உய்யும் பொருட்டுத் தோன்றிய ஞானசம்பந்தர் வந்தருளினார்.
3125. மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்கள் நிறைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை நகுசுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி உடன்எதி ரேற்று நின்றார்.
தெளிவுரை : அந்தணர் குலத்தவராய் இல்வாழ்வில் வாழும் மங்கலம் உடைய அந்தண மங்கையர் எல்லாம், நிறைந்த நீரையுடைய பொன்குடங்களையும், வரிசையான அழகிய விளக்குகளையும் தேனையுடைய நல்ல மலர்மாலைகளையும் நல்ல ஒளியுடைய முளைப்பாலிகைகளை இட்டு வைத்த பொன் தட்டுகளையும், உறைத்ததால் விளங்கும் கலவைச் சாந்தையும் ஏந்திக்கொண்டு ஒன்றுகூடி மணமகனாரான ஞானசம்பந்தரை வரவேற்று நின்றார்கள்.
3126. ஆங்குமுன் னிட்ட செம்பொன் அணிமணிப் பீடந் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம் உண்ணிறைந் தெழுவ தென்னத்
தாங்கிய முத்தின் பைம்பூண் தண்ணிலவு எறிப்ப ஏறிப்
பாங்கொளி பரப்பி நின்றார் பரசம யங்கள் வீழ்த்தார்.
தெளிவுரை : அங்கு முன்னமே இட்டு வைத்த செம்பொன்னால் ஆன அழகிய மணிபதித்த பீடத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக ஓங்கிய சிவஞானப் பெருக்கானது உள்ளே நிறைந்து மேல் எழுந்து பொழிவதைப் போல் அணியாய்ப் பூண்ட முத்தால் ஆன நல்ல அணிகள் குளிர்ந்த ஒளியை வீசுமாறு ஏறிப் பக்கங்களில் ஒளி பரப்பி நின்றார், பர சமயங்களை வென்ற ஞானசம்பந்தர்.
3127. எதிர்வர வேற்ற சாயல் இளமயி லனைய மாதர்
மதுரமங் கலமுன் னான வாழ்த்தொலி யெடுப்ப வந்து
கதிர்மணிக் கரக வாசக் கமழ்புன லொழுக்கிக் காதல்
விதிமுறை வலங்கொண் டெய்தி மேவுநல் வினைகள் செய்தார்.
தெளிவுரை : எதிர்கொண்டு வரவேற்ற சாயலால் இளைய மயில் போன்ற மங்கையர் இனிய மங்கலச் சொற்களை முன் கொண்டு பாடிய வாழ்த்தொலி எங்கும் நிறையுமாறு வந்து, ஒளி பொருந்திய அழகான கரகத்தில் உள்ள மணமுடைய நீரைத் திருமுன் வார்த்து, மிக்க விருப்பத்துடன் விதிமுறைப்படி வலமாகச் சுற்றிப் பொருந்திய நல்ல சடங்குகளைச் செய்தனர்.
3128. மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம்பொன் இமவரை கலந்த தென்ன
அங்கவர் செம்பொன் மாடத் தாதிபூ மியினுட் புக்கார்
எங்களை வாழ முன்னாள் ஏடுவை கையினுள் இட்டார்.
தெளிவுரை : எங்களை வாழ்விப்பதற்காக வந்து முன்னாளில் வைகையில் ஏட்டை இட்ட பிள்ளையார், மங்கலப் பொருள்களை எடுத்துக் கொண்டு அந்தண மங்கையர் முன்னால் செல்ல, கங்கையின் கொழுந்து போன்ற வெள்ள ஒழுங்கு சிவந்த பொன் மலையான இமயத்தில் சேர்ந்தாற் போல், அங்கு நம்பாண்டார் நம்பிகளின் அழகான பொன்மாடத்தில் ஆதி பூமி என்ற மணவறையுள் புகுந்தார்.
3129. அகில்நறுந் தூபம் விம்மி அணிகிளர் மணியால் வேய்ந்த
துகில்புனை விதான நீழல் தூமலர்த் தவிசின் மீது
நகிலணி முத்து மாலை நகைமுக மடவார் வாழ்த்த
இகலின்சீர் மறையோர் சூழ இனிதின்அங் கிருந்த வேலை.
தெளிவுரை : மணம் மிகுந்த அகிலின் புகை மிகவும் மணம் வீச, அழகு விளங்கும் மணிகளால் இயன்ற நல்ல பட்டினால் ஆன மேற்கட்டியின் கீழ்த் தூய்மையான மலர்கள் தூவப்பட்ட ஆசனத்தின் மீது, கொங்கைகளின் மேல் முத்து மாலைகளை அணிந்த மலர்ந்த முகத்தையுடைய மங்கையர் வாழ்த்தச் சினம் முதலான பகை இல்லாத சிறப்புக் கொண்ட அந்தணர் சூழ, இனிதாய் அங்கு ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த போது,
3130. திருமகட் கொடுக்கப் பெற்ற செழுமறை முனிவர் தாமும்
அருமையால் முன்செய் மெய்ம்மை அருந்தவ மனைவி யாரும்
பெருமகிழ்ச் சியினாற் பாதம் விளக்குவார் பிள்ளை யார்முன்
உரிமையால் வெண்பால் தூநீர் உடனெடுத் தேந்தி வந்தார்.
தெளிவுரை : தம் மகளை மணமகளாகக் கொண்டு கொடுக்கும் பேற்றைப் பெற்ற செழுமையான மறை முனிவரான நம்பாண்டார் நம்பிகளும், அரிய தன்மையால் முன் செய்த மெய்யான அரிய தவப்பேறுடைய மனைவியாரும் மிக்க மகிழ்வுடன் பிள்ளையாரின் பாதங்களை விளக்குபவராய் ஞானசம்பந்தரின் திருமுன்பு அந்தவுரிமையால் வெண்மையான பசும்பாலையும் தூய்மையான நீரையும் ஒருசேரக் கொண்டு வந்தனர்.
3131. வந்துமுன் னெய்தித் தாம்முன் செய்தமா தவத்தின் நன்மை
நந்துநம் பாண்டார் நம்பி ஞானபோ னகர்பொற் பாதம்
கந்தவார் குழலி னார்பொற் கரகநீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினைதி யானம் புரிசடை யான்என் றுன்னி.
தெளிவுரை : ஞானசம்பந்தரின் முன் வந்து, தாம் முன்பு செய்த பெருந்தவத்தால் பெற்ற நன்மை பெருகும் நம்பாண்டார் நம்பிகள், மணம் வீசும் நீண்ட கூந்தலையுடைய மனைவியார் பொன் கரகத்தில் எடுத்து வார்க்க, உள்ளத்தால் நினைக்கும் தியானத்தில், நடையையுடைய சிவபெருமானே இவர் என்ற எண்ணத்துடன் ஞானப்பால் உண்ட அவரது அடிகளை,
3132. விருப்பினால் விளக்கி மிக்க புனிதநீர் தலைமேற் கொண்டு
பொருப்புறு மாடத் துள்ளும் புறத்துளுந் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத் தோடும்.
தெளிவுரை : விருப்புடன் விளக்கித் தூய நீரைத் தலையின் மேலே தெளித்துக் கொண்டு மலை போன்ற திருமாளிகையினுள்ளும் வெளியேயும் தெளித்த பின்னர், அழகுமிக்க வயிற்றில் கொள்ளுமாறு மிக்க ஆசையுடன் உட்கொண்டனர். மயிர்ப்புளகாங்கிதம் அடையும் உறவினர் மேலும் பெருகும் ஆசையோடு தெளித்தனர்.
3133. பெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவுமங் கலநீர் வாசக் கரகம்முன் னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்தி ரத்தின் தங்குலம் செப்பி என்தன்
அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க் களித்தேன் என்றார்.
தெளிவுரை : பெருகும் ஞானஅமுது உண்ட சம்பந்தரின் தாமரை மலர் போன்ற கையில் பொருந்திய மணமுடைய நீர் நிறைந்த கமண்டலத்தை முன் ஏந்தி, அதன் மங்கல நீரை வார்ப்பவராய்த் தரும் முறையில் தம் கோத்திரத்துக்குரிய பிரவர முதலிய குலப்பெயரையும் எடுத்துக்கூறி என் அருமையான செல்வமான பாவை போன்ற மகளாரைப் பிள்ளையாருக்குத் தந்தேன் என்று விதிப்படி மும்முறை கூறினார்.
3134. நற்றவக் கன்னி யார்கை ஞானசம் பந்தர் செங்கை
பற்றுதற் குரிய பண்பில் பழுதில்நற் பொழுது நண்ணப்
பெற்றவ ருடன்பி றந்தார் பெருமணப் பிணையன் னாரைச்
சுற்றமுன் சூழ்ந்து போற்றக் கொண்டுமுன் துன்னி னார்கள்.
தெளிவுரை : திருஞானசம்பந்தர், நல்ல தவத்தையுடைய கன்னியாரின் கையைத் தம் செங்கையால் பிடிப்பதற்கு உரிய பண்புடைய குற்றம் இல்லாத நல்ல வேளை வந்து சேர, கன்னியைப் பெற்ற தாய் தந்தையாரும் உடன் பிறந்த சகோதரரும், பெருமையுடைய மணப்பெண்ணான மான் போன்ற கன்னியை உறவினர் முன் சூழ்ந்து போற்ற, அழைத்துக் கொண்டு மணமகனாரான ஞானசம்பந்தர் முன் கொணர்ந்தனர்.
3135. ஏகமாம் சிவமெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பா லெய்தி
நாகமார் பணபே ரல்குல் நற்றவக் கொழுந்தன் னாரை
மாகமார் சோதி மல்க மன்னிவீற் றிருந்த வெள்ளை
மேகமோ டிசையும் மின்னுக் கொடியென விளங்க வைத்தார்.
தெளிவுரை : ஒன்றாகும் மெய்யான சிவஞானத்தை அடைந்த ஞானசம்பந்தரின் வலப்பக்கத்தில் வந்து, பாம்பின் படத்தைப் போன்ற அல்குல் பொருந்திய நல்ல தவத்தின் கொழுந்தைப் போன்ற கன்னியாரை, வானத்தில் நிறைந்த ஒளி பொருந்த நிலைபெற்று வீற்றிருந்த வெள்ளை மேகத்துடன் பொருந்தும் மின்னல் கொடி போன்று விளங்குமாறு அமரும்படி செய்தனர்.
3136. புனிதமெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக்
குனிசிலைப் புருவ மென்பூங் கொம்பனா ருடனே கூட
நனிமிகக் கண்ட போதில் நல்லமங் கலங்கள் கூறி
மனிதரும் தேவ ரானார் கண்ணிமை யாது வாழ்த்தி.
தெளிவுரை : தூய்மையான மெய்க் கோலத்துடன் நீடிய சீகாழித் தலைவரான பிள்ளையாரை வளைந்த வில் போன்ற புருவங்களையுடைய மென்மையான பூங்கொம்பைப் போன்ற தேவியாருடன் கூட மிக்க ஆர்வத்துடன் பார்த்த போது, நல்ல மங்கலங்களைக் கூறிக் கண் இமைக்காமல் பார்த்து வாழ்த்தும் வகையால், மக்களும் தேவர்கள் ஆயினர்.
3137. பத்தியிற் குயிற்றும் பைம்பொன் பவளக்கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத் தின்கீழ்ச் செழுந்திரு நீல நக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாதம் மேவுமுள் ளத்தாற் செய்ய.
தெளிவுரை : வரிசை பெற அழகுபடுத்தப்பட்ட பசும்பொன்னால் ஆன பவளக் கால்களையுடைய பந்தலின் நடுவில் ஓவியம் அமைந்த மேற்கட்டியின் கீழே செழுமையுடைய நீலநக்கநாயனார் ஆசிரியராய் இருந்து முத்தமிழ் வல்லுநரான பிள்ளையாரின் முன், முதன்மையான மறைநூல் விதிச் சடங்குகளை அம்முறைப்படியே மெய்ப்பொருளான நம் பெருமானின் திருவடிகளைப் பொருந்தும் உள்ளத்துடன் செய்ய,
3138. மறையொலி பொங்கி யோங்க மங்கல வாழ்த்து மல்க
நிறைவளைச் செங்கை பற்ற நேரிழை யவர்முன் அந்தப்
பொறையணி முந்நூல் மார்பர் புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை எரிவலங் கொள்ள வேண்டி.
தெளிவுரை : மறை ஒலிகள் மேலும் மேலும் பெருகி ஓங்கவும், மங்கல வாழ்த்தொலிகள் மிகவும், நிறைந்த வளையல்களை அணிந்த மணப்பெண்ணின் சிவந்த கையைப் பிள்ளையார் பற்றும் பொருட்டு, நேரிய அணிகளை அணிந்த அந்தக் கன்னியாரின் முன், பொறுமையை அணியாகக் கொண்ட முந்நூல் அணிந்த மார்பினரான திருநீலநக்க நாயனார், குற்றம் அற்ற நெல் பொரியைக் கையிலே எடுத்து, வேள்வித்தீயில் ஆகுதியாகப் பெய்து, சிவபெருமானை வணங்கும்போது எரியை வலமாக வருவதற்கு எண்ணி,
3139. அருப்புமென் முலையி னார்தம் அணிமலர்க் கைப்பி டித்தங்
கொருப்படும் உடைய பிள்ளை யார்திரு உள்ளந் தன்னில்
விருப்புறும் அங்கி யாவார் விடை உயர்த் தவரே என்று
திருப்பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்.
தெளிவுரை : அரும்பைப் போன்ற மென்மையான கொங்கைகளையுடைய அம்மங்கையின் அழகான மலர் போன்ற கையைப் பிடித்துக் கொண்டு அங்கு ஒருப்பட்ட சம்பந்தர், மனத்தில் விருப்பம் பொருந்தும் அக்கினியானவர் இடபக் கொடியை உயர்த்திய சிவபெருமானே ஆவார் எனத் திருநல்லூர்ப் பெருமணத்தைப் பொருந்திய உள்ளத்திலே தெளிந்ததால் செல்பவராய்,
3140. மந்திர முறையால் உய்த்த எரிவல மாக மாதர்
தந்திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கை யாளர்
இந்தஇல் லொழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்தன் னோடும்
அந்தமில் சிவன்தாள் சேர்வன் என்னும்ஆ தரவு பொங்க.
தெளிவுரை : மந்திர முறையால் உண்டாக்கி வளர்க்கப்பட்ட எரியை வலம் வரும் பொருட்டு அம்மையாரின் கையைப் பிடிக்கும் தாமரை மலர் போன்ற சிவந்த கைகளையுடைய பிள்ளையார், இந்த இல்வாழ்வான ஒழுக்கநிலை வந்து வாய்த்ததே! இவளுடன் அழிவில்லாத சிவபெருமானின் திருவடிகளை அடைவேன் என்ற ஆசை உள்ளத்தில் பெருக,
3141. மலர்பெருங் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை அடைவுறுங் குறிப்பால் அங்கண்
உலகில்எம் மருங்கும் நீங்க உடன்அணைந் தருள வேண்டிக்
குலமணம் புரிவித் தார்தம் கோயிலை நோக்கி வந்தார்.
தெளிவுரை : மலர்ச்சியையுடைய பெரிய உறவினரும் திருத்தொண்டர் கூட்டமும் ஆகிய இவர்களுடனே கூட, அளவில்லாத மெய்ஞ்ஞானத்தினது எல்லையை அடைய வேண்டும் என்ற உள்ளக் குறிப்பினால், அங்கு உலகப்பற்று தம்மைச் சாராது நீங்க, இறைவருடன் சேர விரும்பி அந்தணர் குலத்துக்குரிய மணத்தைச் செய்வித்த இறைவரின் திருப்பெருமணம் என்னும் திருக்கோயிலை நோக்கி எழுந்தருளி வந்தார்.
3142. சிவனமர்ந் தருளுஞ் செல்வத் திருப்பெரு மணத்துள் எய்தித்
தவநெறி வளர்க்க வந்தார் தலைப்படுஞ் சார்பு நோக்கிப்
பவமற என்னை முன்னாள் ஆண்டஅப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டும் என்னும்நல் லுணர்வு நல்க.
தெளிவுரை : சிவபெருமான் வீற்றிருக்கும் உயிர்களுக்கு அருள் செய்யும் செல்வம் நிறைந்த திருப்பெருமணக் கோயிலுக்குள் போய்த் தவநெறியை வளர்ப்பதற்கென்றே அவதாரம் செய்தவரான ஞானசம்பந்தர் உலகக் காட்சி நீங்கிய வீடுபேற்று நிலையில் சார்வதற்குக் காரணமான அருட்குறிப்பைக் கண்டு,  பிறவியில் வாராமல் என்னை முன்பிறவியில் நம் திருவடியில் ஆளாகக் கொண்ட அத்தன்மைக்கு ஏற்பப் புதிதாக மலர்ந்த தாமரைமலர் போன்ற திருவடிகளை அடைவிக்கும் என்ற மெய் உணர்வானது உள்ளத்தில் பொருந்த,
3143. காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுற பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன்
பாதமெய்ந் நீழல் சேரும் பருவம் ஈதென்று பாட.
தெளிவுரை : பக்தியைப் புலப்படுத்தும் உண்மையுடைய திருப்பதிகத்தைக் கல்லூர்ப் பெருமணம் எனத் தொடங்கி, அங்கு அத்திருமணத்தைக் கண்டவரின் தீய பிறவிக்குக் காரணமான கன்மங்களைத் தீர்ப்பதனைச் செம்மைப் பொருளாய்த் திருவுளம் கொண்டு, இறைவரே! திருநல்லூரில் பொருந்திய திருப்பெரு மணக்கோயிலில் எழுந்தருளிய நம்பரே! உம் திருவடிகளாகிய மெய்ம்மை பொருந்திய நிழலை அடையும் பருவம் இதுவேயாகும் என்று பாடினார்.
3144. தேவர்கள் தேவர் தாமும் திருவருள் புரிந்து நீயும்
பூவையன் னாளும் இங்குன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி இதனுள்வந் தெய்தும் என்று
மூவுல கொளியால் விம்ம முழுச்சுடர்த் தாணு வாகி.
தெளிவுரை : தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமானும் திருவருள் செய்து நீயும் பூவைப் பறவையைப் போன்ற நின் மனைவியும், இங்கு உன் புண்ணியத் திருமணத்தில் வந்தவர் எல்லாரும் எம்மிடத்தில் இந்தச் சோதியுள் வந்து அடையுங்கள் என்று மூன்று உலகங்களும் தம் ஒளியினால் மேலிட்டு விளங்கும்படி முழுமையான சுடர் விட்டெழும் சோதிலிங்கமாய் நிமிர்ந்து எழுந்து,
3145. கோயிலுட் படமேல் ஓங்குங் கொள்கையாற் பெருகுஞ் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு பரஞ்சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்.
தெளிவுரை : திருக்கோயில் தன்னகத்துட்பட மேலே பரந்து பெருகி எழுகின்ற அந்தச் சோதியுள் ஒரு வாயிலையும் அமைத்துக் காட்ட, நிலைபெற்ற புகழையுடைய சீகாழித் தலைவர் ஞானசம்பந்தர், பரந்த பேரொளியால் நீண்டு விளங்கும் பரஞ்சுடரான இறைவரை வணங்கித் துதித்து, மிகப்பெரிய உலகத்தில் உள்ள ஆன்மாக்கள் உய்யும் வழியை அருள் செய்வாராய்,
3146. ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத் திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன.
தெளிவுரை : மெய்ம்மையுடைய ஞானநெறிதான் எல்லாருக்கும் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தான சொல்லே ஆகும் என்று ஆக்கம் பொருந்திய சிறப்புக்கொண்ட நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கு விண்ணோரும் மண்ணோரும் கேட்கும்படி அருள்செய்து, இந்த மணத்தில் வந்தவர் எல்லாரும் இழிவான பிறவி நீங்க யாரும் இவ்வொளியில் புகுக என்று ஆணையிட்டருளினார்.
3147. வருமுறைப் பிறவி வெள்ளம் வரம்புகா ணாத ழுந்தி
உருவெனுந் துயரக் கூட்டில் உணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க மன்னுசோ தியினுள் புக்கார்.
தெளிவுரை : முறையாய் இடையறாது வரும் பிறவி என்ற பெருவெள்ளத்தின் எல்லை காணாது அழுந்தி உடல் என்ற துன்பம் நிறைந்த கூட்டினுள் இருந்து உணர்வில்லாது மயங்குபவர்களாகிய அம்மக்கள், பிள்ளையாரின் திருமணத்தை வணங்கி முன்னால் செல்லப் பெற்ற சிறப்பால், பொருந்திய பிறவி நீங்குமாறு நிலையான அந்தப் பேரொளியுள் புகுந்தார்கள்.
3148. சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர் மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப் பன்னிகளோ டுடன்புக்கார்.
தெளிவுரை : சிறப்புமிகும் திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார் முதலிய தொண்டர்களும், தவஒழுக்கத்தின் பொலிவுமிக்க சிவபாத இருதயரும், நம்பாண்டார் நம்பியும், சிறப்பு நிறைந்த உண்மை ஒழுக்கத்தையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மற்றும் அங்கு வந்தவர்களும், உலகில் நிலவிய சுற்றத்தார்கள் சூழ்ந்து வரத் தம்தம் மனைவியாருடன் புகுந்தனர்.
3149. அணிமுத்தின் சிவிகைமுதல் அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த உணர்வினராய்த் தொழுதுடன்புக் கொடுங்கினார்.
தெளிவுரை : அழகிய முத்துச் சிவிகையைத் தாங்கிச் சென்றவரும் மணிமுத்து மாலைகளைத் தக்கவாறு அலங்காரம் செய்யும் மங்கையரும், மங்கலம் பெருக வரும் மணிகளை எல்லாம் எடுத்து வந்தவர்களும், மற்றும் பணி செய்தவர்களும், வினையால் வரும் பிறவிக்குக் காரணமான பாசங்களையெல்லாம் அறுத்த உணர்வு உடையவராய் வணங்கியபடியே உடன்புகுந்து சோதியுள் ஒடுங்கினர்.
3150. ஆறுவகைச் சமயத்தின் அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும் கும்பிடவந் தணைந்தாரும்
வேறுதிரு வருளினால் வீடுபெற வந்தாரும்
ஈறில்பெருஞ் சோதியினுள் எல்லாரும் புக்கதற்பின்.
தெளிவுரை : சைவ சமயத்தின் உட்பிரிவான அறுவகைச் சமய நெறியினும் நின்ற தவத்தவர்களும், சைவத் தொண்டர்களும், வேதவிதி ஒழுகும் முனிவர்களும், கும்பிடும் கருத்துடன் வந்து சேர்ந்தவர்களும், முன்சொன்னவாறு இன்றி எக்காரணமும் அறிய இயலாது திருவருள் வயத்தால் வந்தவர்களும் எல்லை இல்லாத பெரிய சிவச் சோதியுள் எல்லாரும் புகுந்தபின்,
3151. காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.
தெளிவுரை : தேவியாரைக் கைப்பிடித்தவாறே அந்தச் சோதியை வலமாக வந்து, உலகில் தீமையைப் போக்கிச் சைவம் விளங்க என்றே அவதரித்த திருஞானசம்பந்தர், சிவபெருமானின் அழகியதாய் வளர்ந்து எழுகின்ற சோதியை அடைந்து, அதனுள் புகுபவராய்ப் போதம் தழுவும் நிலை முடிந்ததால் உள்ளே புகுந்து ஒன்றாய்ச் சேர்ந்து சிவானந்த நிறைவாம் தன்மையின் வீடுபேற்றை எய்தினார்.
3152. பிள்ளையார் எழுந்தருளிப் புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக் குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய மணக்கோயில் தோன்றுதலும்
தெள்ளுநீ ருலகத்துப் பேறில்லார் தெருமந்தார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர் போய் உட்புகுந்து, உடனாகிய பின்னர்ப் பேரானந்தக் கூத்தரான இறைவர், இவ்வாறு மணத்தில் வந்தோரையும் பிள்ளையாரையும் வீடுபேற்றில் உடனாகக் கொள்ளும் அளவும் நீடியிருந்த சோதிக் குறிநிலையும் அதன் உட்புகக் காட்டிய அந்த வாயிலையும் மறையுமாறு செய்யச் சிவலோகத் தியாகரின் பழைய பெருமணக் கோயில் தோன்றவும், தெளிந்த நீருடைய உலகத்தில் இந்தப் பேற்றைப் பெறாதவர் மயங்கி வருந்தினர்.
3153. கண்ணுதலார் திருமேனி உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு தீரஎடுத் தேத்தினார்.
தெளிவுரை : நெற்றியில் விழியுடைய சிவபெருமான் மேனியுடன் கூடத் திருஞானசம்பந்தர் போய்ச் சேர்ந்ததைத் தாம் தாம் நின்ற தொலைவான இடத்தில் இருந்தவாறே கண்டும், வந்து அடைகின்ற பேறு பெறாத தேவர்களும் முனிவர்களும் நான்முகன் முதலான பெருந்தேவர்களும் என்ற எண்ணில்லாதவர்கள் தம் துக்கம் தீரும்படி எடுத்துத் துதித்தனர்.
3154. அருந்தமிழா கரர்சரிதை அடியேனுக் கவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி துதிசெய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால்
வருந்தகைமைக் கலிக்காம னார்செய்கை வழுத்துவேன்.
தெளிவுரை : அரிய தமிழுக்கு இருப்பிடமான ஆளுடைய பிள்ளையாரின் சரிதத்தை அடியேனுக்கு அவருடைய திருவடிகள் அறிவித்துத் தந்தருளிய பண்பின் அளவு அறிந்தவாறே வணங்கிக் கூறினேன். இனிப் பெரிய கொடையும் உறுதிப்பாடான வன்மையும் பேருணர்வும் திருத்தொண்டு செய்த காரணத்தால் பெற்ற பண்பும் உடைய ஏயர்கோன் கலிக்காம நாயனார் செய்த திருத்தொண்டின் திறங்களைத் துதித்துச் சொல்வேன்.
திருஞானசம்பந்தர் புராணம் முற்றிற்று.


































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக