புதன், 9 நவம்பர், 2011

11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-2 | திருமுறுகாற்றுப்படை (பார்ட் - II )


ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    

11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-2 | திருமுறுகாற்றுப்படை (பார்ட் - II )

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 
http://temple.dinamalar.com/


11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-2 | திருமுறுகாற்றுப்படை (பார்ட் - II )



தில்லைவாழந்தணர்
1109. செப்பத் தகுபுகழ்த் தில்லைப்
பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும்
உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க்(கு) அமுதத் திருநடர்க்(கு)
அந்திப் பிறையணிந்த
துப்பர்க்(கு) உரிமைத் தொழில்புரி
வோர்தமைச் சொல்லுதுமே.
தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களைப் போன்ற உலகங்கள் மூன்றினும் ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை எரித்த தந்தையாக விளங்குபவரும், திருநடனம் செய்பவரும், பிறையணிந்தவரும், பவழம் போன்ற நிறமுடையவருமான சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டு செய்து வருகின்ற தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரைத் துதிப்போமாக.
திருநீலகண்ட நாயனார்
1110. சொல்லச் சிவன்திரு வாணைதன்
தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற்
பின்உமை கோன்அருளால்
வில்லைப் புரைநுத லாளோ(டு)
இளமைபெற்(று) இன்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே.
தெளிவுரை : சிதம்பரத்தில் வாழ்ந்திருந்த திருநீலகண்டர் என்ற சிவனடியார், பரத்தையர்பால் இன்பத்துறையில் எளியர் ஆனார் என்பதை அறிந்த அவரது மனைவியார், எம்மைத் தீண்டாதீர், திருநீலகண்டத்து மீது ஆணை என்றார். அன்று முதல் அவர் பெண்ணாசை துறந்தார். ஆண்டுகள் பல சென்றன. இளமை நீங்கி மூப்பு வந்தது. பின்னர் இறைவன் திருவருளால் தானும் தன் மனைவியும் இளமை நலம் பெற்றனர். இவர் குயவர் மரபைச் சேர்ந்தவர்.
இயற்பகை நாயனார்
1111. செய்தவர் வேண்டிய(து) யாதும்
கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
எய்திய காவிரிப் பூம்பட்
டினத்துள் இயற்பகையே.
தெளிவுரை : காவிரிப் பூம்பட்டினத்தில் பெருவணிகராய் வாழ்ந்தவர் இயற்பகையார். அடியார்கள் கேட்பதை இல்லை என்னாது கொடுத்து வந்தார். ஒருநாள் சிவபெருமான் தூர்த்த வேதியர் உருவில் வந்து உன்னுடைய மனைவியை வேண்டி வந்தேன் என்றார். அவ்வாறே தம் மனைவியை ஈந்தார். இறைவர் மறைந்து, உமையொருபாகராய் விடைமேல் காட்சி கொடுத்து இருவர்க்கும் முக்தியளித்தார்.
இளையான்குடிமாற நாயனார்
1112. இயலா விடைச்சென்ற மாதவற்(கு)
இன்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி
மனைஅலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி
ஆக்கும் அவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை
மாறன்எங் கற்பகமே.
தெளிவுரை : மாறன் என்பவர் இளையான்குடியில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். அவர் அடியவர்களுக்கு அமுதளித்து வறுமையுற்றார். அவரைச் சோதிக்க ஒருநாள் இரவு இறைவன் அடியவர் உருவில் வந்தார். வீட்டில் ஒன்றும் இல்லாத நிலை. வயலில் விதைத்த நெல் முளைகளை எடுத்து வந்து வீட்டுக் கூரையை எடுத்து, அதை வறுத்து, சோறு சமைத்து, கீரையைத் தீங்கறியாகச் செய்து உணவளிக்க முயன்றபோது இறைவன் தோன்றி அந்தத் தம்பதியரை ஆட்கொண்டார்.
மெய்ப்பொருள் நாயனார்
1113. கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச்
செறப்புக லும்திருவாய்
மற்றவன் தத்தா நமரே
எனச்சொல்லி வான்உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு
ளாம்என்று பேசுவரே.
தெளிவுரை : மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டு மன்னர். சிறந்த சிவபக்தர். அவரை நயவஞ்சகமாகக் கொல்ல நினைத்த முத்தநாதனைத் தடுத்து நிறுத்திய தன் ஏவலாளை, தத்தா நமர் எனக் கூறி வீழ்ந்தார். இறைவன் நாயனாரின் எதிரே தோன்றி காட்சி அளித்தார். சிவனடியாரைக் கொன்றான் என்று கூறாமல், தன் முன் நினைத்த அப்பரிசே செய்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார்.
விறன்மிண்ட நாயனார்
1114. பேசும் பெருமையவ் ஆரூ
ரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டேனே.
தெளிவுரை : சேர நாட்டைச் சேர்ந்த செங்குன்றூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் விறன்மிண்டர். சிறந்த சிவனடியார். திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் இவர் தங்கியிருந்தபோது, சுந்தரர் அடியார்களை வெளிப்படையாக வணங்காமல் மனத்திலேயே எண்ணிக் கொண்டு சென்றார். அதுகண்டு விறன்மிண்டர் சினந்து, வன்தொண்டர் புறகு இறைவனும் புறகு என்றார். பின்னர் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடி அடியார்களைத் தொழுதணைந்தார்.
அமர்நீதி நாயனார்
1115. மிண்டும் பொழில்பழை யாறை
அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல்
லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங்(கு) அருளென்று தன்பெருஞ்
செல்வமும் தன்னையும்தன்
துண்ட மதிநுத லாளையும்
ஈந்த தொழிலினனே.
தெளிவுரை :  சோழநாட்டைச் சேர்ந்த பழையாறையில் வணிகர் குலத்தில் அமர்நீதியார் தோன்றினார். அவர் சிவனடியார்களுக்கு அமுதும் கோவணமும் அளித்து வந்தார். இறைவன் இவரைச் சோதிக்க வேண்டி இவரிடம் கொடுத்த கோவணம் காணாமற் போகவே, அதற்கு ஈடாக அவரும் அவரது மனைவியும் மைந்தரும் தராசுத் தட்டில் ஏறி ஈடு செய்தனர். அத் துலையோடு சிவலோகத்திற்கு வருமாறு சிவபெருமான் அருள்பாலித்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1116. தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடரும் சோதிசென்றாங்(கு)
எழுதும் தமிழ்ப்பழ ஆவணம்
காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந்(து) ஆட்செய்
எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரினற் றார்எம்பி
ரான்நம்பி யாரூரனே.
தெளிவுரை : திருத்தொண்டாத் தொகை பாடிய நம்பி ஆரூரனாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பதினொரு பாடல்களில் கூறப்படுகிறது. அவற்றுள் முதல் பாடல் இது.
திருமாலும் பிரமனும் வழிபாடு செய்தும் காண்பதற்கரிய சிவபெருமான், சுந்தரரைத் தடுத்தாட் கொள்ள எண்ணினார். திருமணக் கோலத்தோடு நம்பி யாரூரர் புத்தூருக்குச் சென்றிருந்தார். அங்கு சிவபெருமான் கிழவேதியர் உருவில் சென்று மணப்பந்தரில் இந்த நம்பியாரூரன் குடி முழுதும் என் அடிமை என்று கூறி ஓர் ஓலையைக் காட்டினார். ஆரூரர் அவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித் தெறிந்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்தவர் நம் நம்பியாரூரர்.
எறிபத்த நாயனார்
1117. ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற்கு
என்றோர் உயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாகர்
உடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே.
தெளிவுரை : சோழ நாட்டில் கரூர் என்னும் பதியில் ஆனிலை என்னும் கோயிலில் எறிபத்தர் தொண்டு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் சிவகாமியாண்டார் என்னும் முனிவர் பூக்கொண்டு வந்தார். புகழ்ச் சோழனது மதங்கொண்ட பட்டத்து யானை பூக்கூடையைப் பறித்து சிந்திச் சென்றது. உடனே எறிபத்தர் ஓடி வந்து யானையையும் பாகனையும் வெட்டி வீழ்த்தினார். இறைவன் எழுந்தருளி யானையையும் பாகனையும் உயிர்பெறச் செய்தார். எறிபத்தர் சிவகணங்களுக்குத் தலைவராகும் நிலைமை பெற்றார்.
ஏனாதிநாத நாயனார்
1118. பத்தனை ஏனாதி நாதனைப்
பார்நீ(டு) எயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ(டு) அமர்மலைந்
தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ(டு) ஒழிந்தவன்
கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன்
என்பர்இந் நீணிலத்தே.
தெளிவுரை : சோழநாட்டில் எயினனூரில் ஈழர் குலச் சான்றோர் மரபில் ஏனாதிநாத நாயனார் இருந்தார். அவர் சிவ வழிபாட்டிலும் திருநீற்று அன்பிலும் சிறந்து விளங்கினார். அவர்மீது பொறாமை கொண்டு அவரிடம் போரிட வந்த அதிசூரன் என்பவன் நெற்றியில் திருநீறு இருப்பதைக் கண்டு வாளைக் கீழே எறிந்தார். வந்தவன் தன் பகையைத் தீர்த்துக் கொண்டான். சிவபெருமான் உமாதேவியாரோடு காட்சி கொடுத்து நாயனார்க்கு அருள் செய்தார்.
கண்ணப்ப நாயனார்
1119. நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்தில் கிராதன்நம் கண்ணப்ப
னாம்என்று கூறுவரே.
தெளிவுரை : பூமியில் சிறந்து விளங்கும் திருக்காளத்தி நாதரின் வலக் கண்ணில் குருதி பெருகுவதைக் கண்ட கண்ணப்பர் நடுநடுங்கி தன் வலக்கண்ணை அம்பால் தோண்டி எடுத்து இறைவனின் கண்ணில் அப்பினார். அவர் வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவ்வாறே இடது கண்ணையும் தோண்டி எடுக்க முற்பட்டபோது திருக்காளத்தியப்பர் திண்ணனாரின் கையைத் தம் கையால் பிடித்துக் கொண்டு, நில்லு கண்ணப்ப, என் வலத்தில் மாறிலாய் நிற்க என்று அருள் புரிந்தார்.
குங்குலியக்கலய நாயனார்
1120. ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர்
காதலி தாலிகொடுத்(து)
ஆய்ந்தநற் குங்குலி யங்கொண்(டு)
அனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்(கு)இட்ட தென்கட
வூரில் கலயனையே.
தெளிவுரை : சோழ நாட்டில் திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் கலயனார் தோன்றினார். சிவபெருமானுக்கு குங்குலியதூபம் போடும் பணியில் ஈடுபட்டார். திருப்பனந்தாளில் பெருமான் சாய்ந்திருக்க, இவர் தன் கழுத்தில் கயிறு கட்டி சிவலிங்கத்தை இழுத்து நிமிர்த்தினார். வீட்டுக்கு வேண்டிய சாமான் வாங்கிவரத் தன் மனைவியார் கொடுத்த தாலியைக் கொடுத்து குங்குலியம் வாங்கிக் கொண்டார். நீண்ட நாள் வாழ்ந்து இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.
மானக் கஞ்சாற நாயனார்
1121. கலச முலைக்கன்னி காதற்
புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச
வடிக்கிவை நல்கெனலும்
அலசும் எனக்கரு தாதவன்
கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ்
சாறன் எனும்வள்ளலே.
தெளிவுரை : கஞ்சாறூரில் வேளாளர் குலத்தில் தோன்றிய மானக்கஞ்சாறனார் சேனாதிபதியாக இருந்தார். தன் மகளின் திருமணத்தின்போது அகச்சமய சிவனடியார் உருவில் ஒருவர் வந்து மகளின் கூந்தலைப் பூணூலாக (பஞ்சவடியாக)ச் செய்து கொள்ளக் கேட்டார். சிறிதும் தாமதியாமல் நாயனார் தன் மகள் கூந்தலை அரித்து கொடுத்தார். அடியார் மறைந்தார். இறைவன் காட்சியளித்தார். மகளின் கூந்தல் முன்போல் வளர்ந்தது.
அரிவாட்டாய நாயனார்
1122. வள்ளற் பிராற்(கு)அமு தேந்தி
வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய்
யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட்
டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங்
கலத்(து)அரி வாட்டாயனே.
தெளிவுரை : சோழ நாட்டிலுள்ள கணமங்கலம் என்னும் திருப்பதியில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் தாய நாயனார். அவர் நாள்தோறும் இறைவனுக்கு அமுது படைத்து வந்தார். வழியில் மாதவர் விழுந்துவிட்டார். அவரை அணைக்கையில் எல்லாம் நிலவெடிப்பில் சிந்தி வீழ்ந்துவிட்டன. இறைவனுக்கு அமுதூட்ட இயலாமையை எண்ணித் தம்முடைய கழுத்தில் அரிவாளை வைத்து அரியலுற்றார். வெடிப்பிலிருந்து பெருமான் கை வெளி வந்து நாயனாரின் கையைப் பிடித்துக் கொண்டது.
ஆனாய நாயனார்
1123. தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல்
சீர்துளை யால்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை
உவந்தாண்(டு) அருளினனே.
தெளிவுரை : மழநாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் ஆனாய நாயனார் தோன்றினார். திருநீற்று அன்புடன் சிவபெருமானை வணங்கியதோடு ஆனிரை மேய்த்தலைச் செய்து வந்தார். ஒருநாள் சிவ பெருமானை வேய்ங்குழலில் இசைத்தார். இறைவன் காட்சி கொடுத்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1124. அருள்துறை அத்தற்(கு) அடிமைப்பட்
டேன்இனி அல்லன்என்னும்
பொருள்துறை யாவதென் னேஎன்ன
வல்லவன் பூங்குவளை
இருள்துறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரான்அடைந்தோர்
மருள்துறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே.
தெளிவுரை : மூல ஓலையின்படி சுந்தரர் அம் முதியவர்க்கு அடிமையாக ஏவல் செய்ய வேண்டுமென்று திருவெண்ணெய்நல்லூர் சபையினர் முடிவு செய்தனர். நீர் எவ்வூரினர்? என்று கேட்க, வேதியர் நம்பியாரூரரையும் பிறரையும் அழைத்துச் சென்று கோயிலுக்குள்ளே சென்று மறைந்தனர். சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் எழுந்தருளி ஆரூரருக்குக் காட்சி தந்து, நாமே உம்மைத் தடுத்தாட் கொண்டோம். நீ வன்தொண்டன் என்ற பெயருக்கு உரியாய் என்று அருளினார்.
மூர்த்தி நாயனார்
1125. அவந்திரி குண்(டு)அமண் ஆவதின்
மாள்வனென்(று) அன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல(கு)
ஆண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா
புரியென்னும் நீள்பதியே.
தெளிவுரை : மதுரையில் வணிகர் குலத்தில் மூர்த்தி நாயனார் தோன்றினார். சிவபெருமானுக்குச் சந்தனக் காப்பிடும் பணியைச் செய்து வந்தார். படையெடுத்து வந்த சமண மன்னன் சூழ்ச்சியால் சந்தனக் கட்டை கிடைக்கவில்லை. இவர் தன் கையையே கல்லில் தேய்த்தார். சிவனருளால் சமண மன்னன் மாண்டான். மூர்த்தியார் அரசு செலுத்தி பின்னர் இறைவன் திருவடி சேர்ந்தார்.
முருக நாயனார்
1126. பதிகம் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியம் சடையால் கலர்தொட்(டு)
அணிபவன் யான்மகிழ்ந்து
துதியம் கழற்சண்பை நாதற்குத்
தோழன்வன் தொண்டன்அம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்எனும் அந்தணனே.
தெளிவுரை : திருப்புகலூரில் முருக நாயனார் அந்தணர் குலத்தில் தோன்றினார். இறைவனுக்கு மலர் மாலைகள் கட்டித் தரும் பணியைச் செய்து வந்தார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் அவருடன் தங்கியிருந்தனர். சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டு சோதியில் கலந்துவிட்டார். வன்தொண்டன் பொன் அதிகம் பெறும் என்றது புகலூருக்கு விசேடம்.
உருத்திர பசுபதி நாயனார்
1127. அந்தாழ் புனல்தன்னில் அல்லும்
பகலும்நின்(று) ஆதரத்தால்
உந்தாத அன்பொ(டு) உருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்திர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என்(று)
உரைப்பர்இந் நானிலத்தே.
தெளிவுரை : திருத்தலையூரில் பசுபதி என்னும் அந்தணர் ஒருவர் இருந்தார். சிவபெருமானுக்குப் பரம பிரீதியான ருத்திர மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தார். நாள்தோறும் காலையிலிருந்து மாலை வரை குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஜபம் செய்வார். இறைவன் அவருக்குக் காட்சியளித்துத் தம்மிடத்துக்கு அழைத்துக் கொண்டார்.
திருநாளைப்போவார் நாயனார்
1128. நாவார் புகழ்த்தில்லை அம்பலத்
தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா அவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர்
என்பர்இம் மண்டலத்தே.
தெளிவுரை : ஆதனூர் புலைச்சேரியில் நந்தனார் வாழ்ந்து வந்தார். சிவத்தொண்டு செய்து வந்தார். தில்லைக்குச் சென்று பொன்னம்பலவாணனைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார். நாளைக்குப் போவேன் என்று அடிக்கடி அவர் சொல்லி வந்ததால், அனைவரும் அவரைத் திருநாளைப் போவார் என்றே அழைத்தனர். தில்லை சென்று தீக்குழியில் இறங்கிக் கரை ஏறினார். தில்லை மூவாயிரவர் அவரைக் கைகூப்பி வணங்கினர். ஐயனின் ஆனந்தக் கூத்தில் நந்தனார் ஐக்கியமாகிவிட்டார்.
திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
1129. மண்டும் புனற்சடை யான்தமர்
தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவன்என்னா
முண்டம் படர்பாறை முட்டும்
எழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி ஏகா
லியர்தங்கள் தொல்குலமே.
தெளிவுரை : சிறப்பு வாய்ந்த காஞ்சி மாநகரில் ஏகாலியர் குலத்தில் சிவபக்தர் ஒருவர் இருந்தார். அடியார்களின் ஆடைகளை நன்றாகக் துவைத்து உலர்த்திக் கொடுத்து வந்தார். அதனால் அவரைத் திருக்குறிப்புத் தொண்டர் என்றே எல்லாரும் அழைக்கலாயினர். இறைவன் அவரைச் சோதிக்க விரும்பி, ஒரு மழைநாளில் தன் ஆடையை அவரிடம் துவைக்கக் கொடுத்தார். குறித்த நேரத்தில் ஆடையைக் கொடுக்க முடியாமையால் துணி தோய்க்கும் பாறையில் தலையை மோதிக் கொண்டு உயிரை விட முயன்றார். இறைவன் காட்சி அளித்து அவருக்குக் கைலாய வாழ்வு அளித்தார்.
சண்டேசுர நாயனார்
1130. குலமே றியசேய்ஞ லூரில்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறல் சண்டிகண்
டீர்தந்தை தாள்இரண்டும்
வலமே றியமழு வால்எறிந்(து)
ஈசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே.
தெளிவுரை : சேய்ஞலூரில் (சேந்தனூரில்) வேதியர் குலத்தில் விசாரசர்மர் பிறந்தார். அவர் மாடு கன்றுகளை மேய்த்து வந்தார். அங்கிருந்த சிவலிங்கத்திற்குப் பாலை அபிஷேகம் செய்து வந்தார். இதைக் கண்டித்த தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டிவிட்டார். எம்பெருமான் தோன்றி விசாரசர்மரை ஆட்கொண்டார். தந்தையின் வெட்டுண்ட கால்கள் முன்போல் வளர்ந்தன. இவ்வாறு விசார சர்மர் சண்டேசுவர நாயனாராகப் போற்றப் படுகிறார். சிவன் கோயில்களில் சுவாமிக்கு இடப் புறத்தில் இவருடைய சன்னதி இருக்கும்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1131. நிதியார் துருத்திதென் வேள்விக்
குடியாய் நினைமறந்த
மதியேற்(கு) அறிகுறி வைத்த
புகர்பின்னை மாற்றிடென்று
துதியா அருள்சொன்ன வாறறி
வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர்
கோன்என்னும் நற்றவனே.
தெளிவுரை : சங்கிலியாரிடம் சொல்லாமல் திருவொற்றியூரிலிருந்து சுந்தரர்
புறப்பட்டு, திருவாரூரை நோக்கி நடந்தார். கண் பார்வையை இழந்து பல தொல்லைகளுக்கு ஆளானார். வழியில் திருத் துருத்தியை (குத்தாலத்தை) அடைந்தார். தம்மை வருத்தி வரும் பிணியைப் போக்கி அருள வேண்டும் எனக் கெஞ்சினார். ஆலயத்தின் வடபாலுள்ள தீர்த்தத்தில் நீராடுமாறு இறைவன் தம் சோழனுக்கு அனுக்கிரகித்தார். சுந்தரரும் அவ்வாறே திருக்குளத்தில் நீராடி எழுந்து இறைவனை வணங்கியபோது, அவர் உடலில் ஏற்பட்டிருந்த தளர்ச்சி நீங்கப் பெற்று புதிய பொலிவுடன் விளங்கலானார்.
திருநாவுக்கரசு நாயனார்
1132. நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப்
பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற
வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவ னுற்ற விடம்அடை
யாரிட வொள்ளமுதாத்
துற்றவன் ஆமூரில் நாவுக்
கரசெனுந் தூமணியே.
தெளிவுரை : திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாரூரில் பிறந்தவர். இடையில் சமண சமயத்தில் சேர்ந்தார். பிறகு தமக்கையார் வேண்டிக் கொண்டபடி திருவதிகை வீரட்டனத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் சைவரானார். சமணர்கள் கொடுத்த விஷத்தை அமுதென உண்டார். சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருநல்லூர் போய்ச் சேர்ந்தார். பகவான் தமது திருவடியை அப்பரின் தலை மேலே வைத்து அருளினார்.
1133. மணியினை மாமறைக் காட்டு
மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப்
பித்தன தெண்கடலிற்
பிணியன கன்மிதப் பித்தன
சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே.
தெளிவுரை : திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் திருமறைக் காட்டிற்குச் (வேதாரண்யம்) சென்றனர். வேதங்கள் பூசித்த காலத்திலிருந்து அடைபட்டிருக்கும் கதவை வாகீசர் பதிகம் பாடிப் திறந்தார். இருவரும் அவ்வாயில் வழியாகச் சென்று இறைவனை வணங்கிக் களிகூர்ந்தனர். மன்னன் ஆணைப்படி சமணர்கள் நாவுக்கரசரைப் பாறையுடன் பிணித்துக் கடலில் எறிந்தனர். சொற்றுணை வேதியன் என்னும் பதிகத்தைப் பாடினார். பாறை மிதக்கத் தொடங்கியது. அப்பர் கரை ஏறினார். அவருடைய தேவாரப் பாடல்கள் சைவ சமயத்திற்கு அணி எனத் திகழ்கின்றன.
குலச்சிறை நாயனார்
1134. அருந்தமிழ் ஆகரன் வாதில்
அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித்
தோன்எழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசம்மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே.
தெளிவுரை : மணமேற் குடியில் தோன்றியவர் குலச்சிறை நாயனார். பாண்டிய மன்னன் நெடுமாறனுக்கு அமைச்சர். பாண்டிய நாட்டில் சமண மதம் தலை தூக்கி நின்றது. திருஞானசம்பந்தரை இவர் அழைத்து வந்து, அவர்களை வாதில் வென்று கழுவேறச் செய்தார். பின்னர் சைவ சமயம் அங்கு தழைத்து வளர்ந்தது.
பெருமிழலைக் குறும்ப நாயனார்
1135. சிறைநன் புனல்திரு நாவலூர்
ஆளி செழுங்கயிலைக்(கு)
இறைநன் கழல்நாளை எய்தும்
இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடிய அடியடை
வேன்என்(று) உடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்பன் எனும்நம்பியே.
தெளிவுரை : பெருமிழலை என்ற ஊரில் குறும்பர் என்னும் சிவபக்தர் வாழ்ந்துவந்தார். சுந்தரரை என்றும் பணிந்து போற்றி வந்தார். அதனால் சித்திகள் பலவும் கைவரப் பெற்றார். சுந்தரர் திருவஞ்சைக் களத்திலிருந்து கைலாயம் செல்ல இருப்பதைத் தமது யோக பலத்தால் அறிந்து, சமாதியில் அமர்ந்தார். சுந்தரருக்கு முன்பே இவர் கயிலை போய்ச் சேர்ந்தார்.
காரைக்கால் அம்மையார்
1136. நம்பன் திருமலை நான்மிதி
யேன்என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்(து)
ஏற உமைநகலும்
செம்பொன் உருவன்என் அம்மை
எனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பின் உருகாரைக் காலினின்
மேய குலதனமே.
தெளிவுரை : காரைக்கால் அம்மையார் கருவிலே திருவுடையார். கனிந்த திருவருள் உடையார். நாவிலே தமிழுடையார். நற்றவத்தின் திறமுடையார். கயிலை மலையைக் காலால் மிதிக்கலாகாது என்று தலையால் நடந்து சென்றார். இதைக் கண்டு உமாதேவியார் நகைத்தார். அம்மையே என்றழைக்கும் பேறு பெறாத இறைவன் புனிதவதியாரை நோக்கி, அம்மையே வருக என்றனன். அவர் வேண்டிய வரங்களை உவந்து அளித்தனன்.
அப்பூதி அடிகள் நாயனார்
1137. தனமா வதுதிரு நாவுக்(கு)
அரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்(து)
ஆங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப்
பெற்றவன் எங்கள்பிரான்
அன்னமார் வயல்திங்கள் ஊரினில்
வேதியன் அப்பூதியே.
தெளிவுரை : திங்களூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியடிகள். திருநாவுக்கரசரையே தன் வழிபடு தெய்வமாகக் கொண்டு அவர் பேரிலேயே தண்ணீர்ப் பந்தல் முதலியவற்றை வைத்து நடத்தினார். தனது பிள்ளைகளுக்கும் அவர் பெயரையே வைத்திருந்தார். அவரை வணங்கியே அப்பூதியபடிகள் நற்கதி பெற்றார்.
திருநீலநக்க நாயனார்
1138. பூதிப் புயத்தர் புயத்திற்
சிலந்தி புகலும் அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பஉப் பாலவெல்லாம்
பேதித்து எழுந்தன காணென்று
பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்எனும் வேதியனே.
தெளிவுரை : சோழ நாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் திருநீல நக்கர் என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். கோயிலுக்கு இவரும் இவரது மனைவியாரும் சென்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும்போது, சிவ லிங்கத்தின்மீது விழுந்த சிலந்தியை மனைவியார் ஊதி அப்புறப்படுத்தினார். அது பெரும் அபசாரம் என்று மனைவியைக் கோயிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பினார். பிறகு இவர் கனவில் இறைவன் தோன்றி சமாதானப் படுத்தினார்.
நமிநந்தியடிகள் நாயனார்
1139. வேத மறிக்கரத் தாரூர்
அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட்
டாவிடத்(து) எண்புனலால்
ஏத முறுக அருகரென்(று)
அன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர்
அதிபன் நமிநந்தியே.
தெளிவுரை : சோழ நாட்டில் ஏமப்பேறு என்ற ஊரில் நமிநந்தி அடிகள் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் நாள்தோறும் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் விளக்கிற்கு எண்ணெய் தர சமணர் மறுத்துவிட நாயனார் குளத்து நீரை விட்டு விளக்கு எரித்தார். அத்தகைய சிறந்த சிவனடியாரை அப்பர் பெருமான் தம் பாடல் ஒன்றில் சிறப்பித்துள்ளார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1140. நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
ஆரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்தொண்டன்
என்பர்இவ் வையகத்தே.
தெளிவுரை : சிவபெருமானைக் குறித்து செய்யுட் குற்றம் இல்லாத தேவாரப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்ட மெய் அன்பரை வன்தொண்டர் என்று வையத்தோர் கூறுகின்றனர். திருமுதுகுன்றத்தில் இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு, திருவாரூர் சென்று கமலாலயத்தில் மூழ்கி அப்பொன்னை எடுத்த மெய்த் தொண்டர் அல்லவா அவர்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
1141. வையம் மகிழயாம் வாழ
அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற்(கு)
அம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர்
ஞானசம் பந்தனையே.
தெளிவுரை : திருஞானசம்பந்தர் சிறு வயதிலேயே ஞானத்தின் திருவுருவாக வாழ்ந்தவர். தேவாரத்தில் முதல் மூன்று திருமுறைகளையும் பாடியவர். இவர் பிறந்த ஊர் சீர்காழி. மூன்று வயதில் உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பெற்றுத் தெய்வப் பாடல்களாகிய தேவாரத்தைப் பாடத் தொடங்கியவர். சமணர்களால் சிவநெறிக்கு ஏற்பட்ட இடரை அகற்றிச் சைவம் தழைக்க உதவியவர்.
1142. பந்தார் விரலியர் வேள்செங்கட்
சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக்
கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில்
இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட்
காழியர் கொற்றவனே.
தெளிவுரை : மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், முருக நாயனார், திருநீல நக்க நாயனார் இவர்கள் சம்பந்தரால் பாடப் பெறும் பேறு பெற்றவர்கள். திருத்தொண்டர் திருஅந்தாதியை ஏற்றுக்கொண்ட பிரான் சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தரே ஆவார்.
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
1143. கொற்றத் திறல்எந்தை தந்தைதன்
தந்தைஎங் கூட்டமெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி
யேம்திகழ் வன்றொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பான்என்(று)
உடைவாள் உருவிஅந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன்
குடிஏயர் சீர்க்குடியே.
தெளிவுரை : சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானைப் பரவையாரிடம் தூது அனுப்பியதைத் தவறாகக் கொண்டு, கலிக்காமர் அவரிடம் சினம் கொண்டிருந்தார். ஆனால், சிவபெருமான் கலிக்காமரின் சூலை நோய் சுந்தரரால்தான் தீரும் என்றார். அதை விரும்பாத கலிக்காமர் உடை வாளால் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். உயிர் போய்விட்டது. சுந்தரர் வந்து உடைவாளைப் பற்றினார். கலிக்காமர் உயிர் பெற்றெழுந்தார். இருவரும் நண்பராயினர். அவர் சோழ அரசனுக்குச் சேனாதிபதியாகப் பணிபுரியும் ஏயர்கோன் குடியைச் சேர்ந்தவர்.
திருமூல நாயனார்
1144. குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன்
ஆகின்ற அங்கணனே.
தெளிவுரை : நந்திகேஸ்வரரின் அருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் தென்னாடு நோக்கி வந்தார். சாத்தனூரைச் சேர்ந்த மூலன் என்னும் இடையன் இறந்து கிடந்தான். அவன் உடலில் இவர் புகுந்து (பரகாயம் செய்து-கூடுவிட்டுக் கூடு பாய்தல்) சிவபெருமானைக் குறித்து 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தைப் பாடினார். இவர் யோகி, எம்பெருமானைப் பஞ்சாட்சரத்தால் துதித்தார்.
தண்டியடிகள் நாயனார்
1145. கண்ணார் மணிஒன்றும் இன்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும்
தன்னை நகும்அமணர்
கண்ணாங்(கு) இழப்ப அமணர்
கலக்கங்கண்(டு) அம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன்
ஆரூர் விறல்தண்டியே.
தெளிவுரை : தண்டியடிகள் திருவாரூரில் பிறந்தவர். அவர் பிறவிக் குருடர். திருக்குளம் தூர்ந்து சிறியதாகியது. குளத்தின் நடுவில் ஒரு தறி நட்டு அதோடு ஒரு கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டே மண்ணைத் தோண்டி எடுத்தார். இதைக் கேலி செய்த சமணர்களின் கண்கள் குருடாயின. இறைவன் அருளால் இவர் கண் பார்வை பெற்றார். பலநாள் வாழ்ந்து பின்னர் தியாகேசர் பாதார விந்தங்களை அடைந்தார்.
மூர்க்க நாயனார்
1146. தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தருகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநன் னீற்றன் அடியவர்க்(கு)
ஈபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே.
தெளிவுரை : தொண்டை நாட்டில் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் மூர்க்க நாயனார் தோன்றினார். அடியார்களுக்கு அமுதளித்து வறுமையுற்றார். சூதின் மூலம் பொருள் தேட கும்பகோணம் சென்றார். சூதாட மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி மூர்க்கர் என்னும் பெயர் பெற்றார். இறுதியில் சிவபெருமான் திருவடியில் சேர்ந்தார்.
சோமாசிமாற நாயனார்
1147. சூதப் பொழில் அம்பர் அந்தணன்
சோமாசி மாறன்என்பான்
வேதப் பொருள்அஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் தொண்டன்
தனக்கு மகிழ்துணையே.
தெளிவுரை : சோழ நாட்டில் திருஅம்பர் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் சோமாசி மாறர் தோன்றினார். எத்தன்மையராயினும் ஈசனுக்கு அன்பர்தாம் தமக்கு உதவி செய்பவர் என்ற கொள்கையுடையவர். அவர் திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் தொண்டராக இருந்து சிவபெருமான் திருவடியை அடைந்தார். அவர் எந்த நேரமும் பஞ்சாட்சரத்தை ஓதுபவர்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1148. துணையும் அளவும்இல் லாதவன்
தன்னரு ளேதுணையாக்
கணையும் கதிர்நெடு வேலும்
கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்த சங்கிலி
பேரமைத் தோள்இரண்டும்
அணையும் அவன்திரு ஆரூரன்
ஆகின்ற அற்புதனே.
தெளிவுரை : திருவொற்றியூரில் அநிந்திதையார், சங்கிலியார் என்னும் பெயருடன் அவதாரம் செய்திருந்தார். அழகும் நற்குணங்களும் பொருந்தியவராய் மணப்பருவம் எய்தியிருந்தார். சங்கிலியார் கன்னி மாடத்திலிருந்துகொண்டு இறைவனுக்கு மலர்த் தொண்டு செய்து வந்தார். சுந்தரர் திருவொற்றியூர் வந்தபோது சங்கிலியாரைக் கண்ணுற்றார். காதல் கொண்டார். இறையருளால் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
சாக்கிய நாயனார்
1149. தகடன ஆடையன் சாக்கியன்
மாக்கற் றடவரையன்
மகடனந் தாக்கக் குழைந்ததிண்
தோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல்
எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க
மங்கை புவனியிலே.
தெளிவுரை : தொண்டை நாட்டைச் சேர்ந்த திருச்சங்க மங்கை என்னும் ஊரில் சாக்கிய நாயனார் வேளாளர் குலத்தில் தோன்றினார். பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்று பிறகு சிவநெறியே சிறந்ததெனக் கண்டார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். தகடு போன்ற பௌத்தர்க்குரிய ஆடையை அணிந்தவர். அதை மாற்றிக் கொள்ளாமல் சிவபெருமானைக் கல்லால் எறிந்து வழிபட்டார். சைவ சமயத்தில் அவருக்கிருந்த பற்றின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
சிறப்புலி நாயனார்
1150. புவனியிற் பூதியும் சாதன
மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய்
தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித்தென் னாக்கூர்
அதிபன் அருமறையோன்
சிவனிய மந்தலை நின்றதொல்
சீர்நஞ் சிறப்புலியே.
தெளிவுரை : சோழ நாட்டில் வேதியர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். அவர் பிறந்த ஊர் ஆக்கூர். அவர் சிவனடியார்களிடம் மிக்க அன்பு கொண்டிருந்தார். அவர்களை வரவேற்று அமுதளிப்பார். பஞ்சாட் சரத்தை நாள்தோறும் ஓதுவார். இவ்வாறு பன்னாள் தொண்டு செய்து, ஈசன் திருவடிகளைச் சேர்ந்தார்.
சிறுத்தொண்ட நாயனார்
1151. புலியின் அதளுடைப் புண்ணியற்(கு)
இன்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத்(து) ஓங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம்
குடியவர் மன்னவனே.
தெளிவுரை : சோழவள நாட்டிலுள்ள திருச் செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் பிறந்தார். இவரது இயற்பெயர் பரஞ்சோதி. சிறுத்தொண்டர் சிவனடியார்களை உண்பிக்கும் தம் கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு, வயிரவர் பணித்தபடி, தன் அருமை மைந்தனையே வாளால் அரிந்து கறி சமைத்தார். வெற்றியும் கண்டார். இறைவன் இதைக் கண்டு அதிசயித்து மைந்தனை உயிர் பெற்றெழச் செய்ததோடு, குடும்பத்தோடு தன் திருவடி நீழலை அடையுமாறும் அருள் பாலித்தார்.
சேரமான்பெருமாள் நாயனார்
1152. மன்னர் பிரானெதிர் வண்ணா
னுடலுவ ரூறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலுந் தான்வணங்க
என்னர் பிரானடி வண்ணா
னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வானெனும் சேரலனே.
தெளிவுரை : இவரது இயற்பெயர் பெருமாக் கோதையார். சேரமன்னர், இறைவன் அருளால் பிறர் கழறும் சொற்களை அறியும் ஆற்றல் பெற்றிருந்தமையால் கழறிற்றறிவார் என்று இவரை அழைக்கலாயினர். சிவபெருமானிடம் பேரன்பு கொண்டவர். வண்ணான் ஒருவன் எதிரே வந்தான். மழையினால் கரைந்த உவர்மண் அவன் உடம்பில் வழிந்து வெளுத்திருந்தது. அதைத் திருநீறு என்று மன்னர் நினைத்து அவனைச் சிவனடியாராகப் பாவித்து வணங்கினார். அவன் நடுநடுங்கி, அரசே அடியேன் வண்ணான் அன்றோ! என்றான்.
1153. சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி யிவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாயின்று தொண்டுபட்டே.
தெளிவுரை : கயிலைக்கு வருமாறு சிவபெருமான் சுந்தரர்க்கு வெள்ளானையை அனுப்பி இருந்தார். அதை அறிந்த சேரமான் குதிரை மீதேறி, ஆகாயமார்க்கமாகச் சென்று. சுந்தரர்க்கு முன்னதாகக் கயிலாயத்தை அடைந்தார். அத்தகைய சிறந்த சிவனடியாராகிய சேரமான்பெருமாள் நாயனாரை என் உள்ளம் பிரார்த்திக்கிறது.
கணநாத நாயனார்
1154. தொண்டரை யாக்கி யவரவர்க்
கேற்ற தொழில்கள்செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள்தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே.
தெளிவுரை : சீர்காழியில் மறையவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். சீர்காழிப் பெருமானுக்குத் தாம் திருத்தொண்டு செய்ததோடு அங்குச் சென்றவர்களுக்கும் அத் தொண்டுகளில் பயிற்சி கொடுத்து வந்தார். ஞானசம்பந்தப் பெருமானின் கழல்களையும் வழிபட்டுக் கயிலையில் கணநாதராகும் பேறு பெற்றார்.
கூற்றுவ நாயனார்
1155. நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யாலது கைகொடுப்ப
ஒதந் தழுவிய ஞாலமெல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள
னாகிய கூற்றுவனே.
தெளிவுரை : களந்தை என்னும் பதியில் குறுநில மன்னராக இருந்தவர் கூற்றுவ நாயனார். தில்லைவாழ் அந்தணர்களைத் தனக்கு முடிசூட்டக் கேட்டார். சோழர் குலத்து மன்னர்களைத் தவிர மற்றையோருக்கு நாங்கள் முடிசூட்ட மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். ஒருநாள் கனவின்கண் அம்பலவாணர் தம் பாத மலரைத் தலையில் சூட்ட அதையே தாங்கினார். பல தலங்களுக்கும் சென்று தொண்டுகள் புரிந்து வந்தார். முடிவில் அவர் எம்பெருமான் திருவடிகளையே அடைந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1156. கூற்றுக் கெவனோ புகல்திரு
வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலு மின்னடைக்
காயு மிடுதருமக்
கோற்றொத்து கூனனுங் கூன்போய்க்
குருடனுங் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
யாமித் தரணியிலே.
தெளிவுரை : சிறந்த தேவாரப் பாடல்களைப் பாடிய சுந்தரர் அடியார்களிடமிருந்து மலர் மாலையும் தாம்பூலமும் பெற்று இன்புற்றிருந்தார். கோல் ஊன்றி நடந்த கூனன் கூன் நிமிர்ந்து சென்றது போலவும், குருடனும் கண் பார்வை பெற்று மகிழ்ந்தது போலவும் சுந்தரர் மகிழ்வோடு இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் இருந்தார்.
பொய்யடிமை இல்லாத புலவர்
1157. தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்கம் அதில்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயுந் திருவால
வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல
பாடும் புலவர்களே.
தெளிவுரை : பூமியில் சிறந்த கடைச் சங்கப் புலவர் பெருமக்களுள் கபிலர், பரணர், நக்கீரர் முதலாகிய நாற்பத்தொன்பதின்மரும் உள்ளிட்ட திரு ஆலவாய் பெருமான் திருவடியையே சரண் எனக் கருதிப் பாடும் புலவர் பெருமக்களுக்கு என் வணக்கம் என்றும் உரியது என்று நம்பியாண்டார் நம்பிகள் பாடுகின்றார்.
புகழ்ச்சோழ நாயனார்
1158. புலமன் னியமன்னைச் சிங்கள
நாடு பொடுபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன
நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன
தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக்
கீந்ததொர் வண்புகழே.
தெளிவுரை : சிங்கள மன்னனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த புகழ் சோழ மன்னர் பொன்னம்பல நாதனின் சிறந்த சிவனடியார். கரூர் என்னும் பதியில் அரசாண்டு வந்தார். இவரது பட்டத்து யானை பூக்கூடையைப் பிடுங்கி எறிந்ததற்காக எறிபத்த நாயனார் யானையையும் பாகரையும் வாளால் வெட்டிவிட்டார். இத் தவறுக்கு யானே பொறுப்பு என்னை வெட்டுங்கள் என்று எறிபத்தருக்கு இவர் தன் வாளைக் கொடுத்தார்.
நரசிங்க முனையரைய நாயனார்
1159. புகழும் படியெம் பரமே
தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட
வார்புனை கோலமெங்கும்
நிகழும் படிகண் டவனுக்
கிரட்டிபொன் இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க
முனையர சன்திறமே.
தெளிவுரை : திருமுனைப்பாடி நாட்டில் நரசிங்க முனையரையர் என்பவர் ஆட்சி புரிந்து வந்தார். சுந்தரரை மகன்மை கொண்டு வளர்த்தவர். திருவாதிரைதோறும் சிவபெருமானுக்கு வழிபாடு செய்பவர்களுக்கு பொன்கொடுத்து அமுதளிப்பார். ஒருநாள் காமக்குறி மலர்ந்த ஓரடியார் வந்தார். அவரே இவரைப் பார்த்து ஒதுங்கினார். நீறு பூசியிருந்த அந்த தூர்த்தரை இவர் வணங்கி, இரட்டிப்புப் பொன் கொடுத்தனுப்பினார். இவ்வாறு தொண்டாற்றிச் சிவபெருமான் திருவடி எய்தினார்.
அதிபத்த நாயனார்
1160. திறமமர் மீன்படுக் கும்பொழு
தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு
வோனொரு நாட்கனக
நிறமமர் மீன்பட நின்மலற்
கென்றுவிட் டோன்கமலம்
புறமமர் நாகை யதிபத்த
னாகிய பொய்யிலியே.
தெளிவுரை : நாகப்பட்டினத்தில் செம்படவர் குடியில் பிறந்தவர் அதிபத்தர். நாள்தோறும் தான் பிடிக்கும் முதல் மீனைப் பெருமானுக்காக என்று கடலில் விட்டுவிடுவார். ஒருநாள் உலகையே விலை மதிக்கத் தக்க நவமணிகளாலான மீனொன்று கிடைத்தது. அதையும் எம்பெருமானுக்கே விட்டார். இறைவன் திருவருளால் அதிபத்தர் உலக பந்தத்திலிருந்து விடுபட்டுச் சிவலோகம் அடைந்தார்.
கலிக்கம்ப நாயனார்
1161. பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தானவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே.
தெளிவுரை : சோழ நாட்டில் திருப்பெண்ணாகடத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் கலிக்கம்பர். இறை வழிபாடு செய்வதோடு அவர் அடியார் பாதங்களை விளக்கி அமுதளித்து வந்தார். ஒருநாள் மாறுவேடத்தில் வந்த இறைவன் பாதங்களில் நீர் வார்க்க மறுத்த மனைவியின் கையை வெட்டிவிட்டார். இவரது அடியார் பக்தியை மெச்சிய இறைவன், மனைவியின் கையை வளரச் செய்தார். முடிவில் அடியார் இறைவன் திருவடிகளை அடைந்தார்.
கலிய நாயனார்
1162. கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும்
நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக்
கேற்றற் குடலிலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக்
குழன்றுங்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலியொற்றி
மாநகர்ச் சக்கிரியே.
தெளிவுரை : திருவொற்றியூரில் வாணியர் குலத்தில் கலியர் அவதரித்தார். ஆலயத்திற்குத் திருவிளக்கு ஏற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வறுமை வந்துற்றது. கூலி வேலை செய்து அப்பணியை விடாது செய்துவந்தார். இறைவன் அவருக்குக் காட்சியளித்து சிவலோக பதவி கொடுத்தருளினார்.
சத்தி நாயனார்
1163. கிரிவில் லவர்தம் மடியரைத்
தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரையந் நாவரி
வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயல் செங்கழு
நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைமக ழுந்தென்
வரிஞ்சைத் திகழ்சத்தியே.
தெளிவுரை : சோழ நாட்டிலுள்ள வரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சத்தியார் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களை யாராவது இகழ்ந்து பேசினால் அவர்களது நாவைத் துண்டித்து விடுவார். முடிவில் எம் பெருமான் மலரடிகளை அடைந்தார்.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
1164. சத்தித் தடக்கைக் குமரன்நற்
றாதைதன் தானமெல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாளரற்
காயயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல் ஐயடிகளா
கின்றநம் பல்லவனே.
தெளிவுரை : காஞ்சிபுரத்தில் பல்லவர் குலத்தில் தோன்றியவர். ஐயடிகள் காடவர்கோன் சிறந்த சிவனடியார். ஆட்சியைத் தம் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு ÷க்ஷத்திராடனம் செய்யக் கிளம்பினார். முதலில் சிதம்பரத்திற்கும் பின்னர் பல தலங்களுக்கும் சென்று வெண்பா பாடினார். முடிவில் பரமன் திருவடிகளை அடைந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1165. பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூரரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூ
ராகின்ற நன்னகரே.
தெளிவுரை : சுந்தரர் சிவபெருமானது புகழைப் பாடுபவர். தென்புகலூர் இறைவனைப் பாடி, பொன் பெற்றவர். நாட்டியத்தான் குடியில் மாணிக்க வண்ணருக்கு நண்பர். திருநாவலூர் புகழனாகிய சுந்தரர் என்று நம்பியாண்டார் நம்பிகள் பாடி மகிழ்ந்தார்.
கணம்புல்ல நாயனார்
1166. நன்னக ராய விருக்குவே
ளூர்தனில் நல்குரவாய்ப்
பொன்னக ராயநல் தில்லை
புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற்
புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோளெந்தை தந்தை
பிரானெம் கணம்புல்லனே.
தெளிவுரை : இருக்குவேளூரில் குறுநில மன்னராய் விளங்கியவர் கணம்புல்லர். தில்லையில் திருப்புலீச்சரத்தில் விளக்கெரித்து வந்தார். பொருள் தீர்ந்த பிறகு கணம் புல்லை அரிந்து வந்து அதை விற்று எண்ணெய் வாங்கினார். அவருடைய ஆழ்ந்த பக்தியை மெச்சி இறைவன் அவருக்குத் தரிசனம் தந்து என்றும் தம் உலகில் இருக்கும் பேற்றை அளித்தார்.
காரி நாயனார்
1167. புல்லன வாகா வகையுல
கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வுந்நய மாக்கிச்
சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும்
கயிலைப்புக் கானென்பரால்
கல்லன மாமதில் சூழ்கட
வூரினில் காரியையே.
தெளிவுரை : திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் காரியார். சிறந்த சிவபக்தர்; தமிழில் நல்ல பாண்டியத்யம் உடையவர். அவர் மூவேந்தர்களையும் பாடிப் பெறும் பரிசில் பொருள்களைக் கொண்டு திருக்கோயில் பணிகள் செய்து வந்தார். இறைவன் காரி யாருக்குத் தம் கீழ் என்றும் இருந்து வரும் பாக்கியம் அளித்தார்.
நெடுமாற நாயனார்
1168. கார்த்தண் முகிற்கைக் கடற்காழி
யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது
கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த
பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி
யில்வென்ற மாறனுக்கே.
தெளிவுரை : நின்றசீர் நெடுமாறன் சமண சமயத்தைச் சார்ந்திருந்தான். அரசமா தேவி மங்கையர்க்கரசியார் சம்பந்தரை அழைத்து வந்தார். சம்பந்தர் சமணர்களை வாதில் வென்றார். அவர்கள் கழுவேறினர். மன்னன் சைவன் ஆனான். அவனை எதிர்த்து வந்த வடபுலத்து மன்னர்களை இறைவன் திருவருளால் திருநெல்வேலியில் வென்று வாகை சூடினான்.
வாயிலார் நாயனார்
1169. மாறா வருளரன் தன்னை
மனவா லயத்திருத்தி
ஆறா வறிவா மொளி விளக்
கேற்றி யகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும்
மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா
னென்று விளம்புவரே.
தெளிவுரை : மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் வாயிலார் பிறந்தார். அவர்தம் உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவனை இருத்தி வழிபட்டார். ஞானமாகிய ஒளி விளக்கால் உள்ளக்கோயிலை விளங்கச் செய்தார். ஆனந்தமாகிய திருமஞ்சனமிட்டு இறைவனை நீராட்டினார். அடியார்களிடம் கொண்டுள்ள அன்பை அமுதமாக நிவேதிப்பார். அவர் முடிவில் இறைவன் திருப்பாதங்களைச் சேர்ந்தார்.
முனையடுவார் நாயனார்
1170. என்று விளம்புவர் நீடூ
ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க்
காக்கூலி யேற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வ மெல்லாங்
கனகநன் மேருவென்னுங்
குன்று வளைத்த சிலையான்
தமர்க்குக் கொடுத்தனனே.
தெளிவுரை : இவர் பொன்னி நாட்டில் திருநீடுரில் வேளாளர் குடியில் பிறந்து வாழ்ந்துவந்தார். யுத்தத்தில் தோற்றவர்களுக்கு உதவி செய்து, அவர்கள் வெற்றி பெறச் செய்வார். அவ்வாறு கிடைக்கும் பொருளை அவர் எம்பெருமான் அடியார்களுக்குக் கொடுத்து உதவினார். இவ்வாறு பன்னாள் வாழ்ந்து இறைவன் திருவடிகளை அடைந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1171. கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிரன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட
னாகின்ற மாதவனே.
தெளிவுரை : சுந்தரர் சேரநாடு செல்லும்போது திருபுக்கொளியூரில் (அவிநாசியில்) முதலையுண்ட பாலகனுக்கு உயிர் கொடுத்தார். சேரமானிடம் பொருள் பெற்றுத் திரும்பும்போது வழியில் வேடுவர் அப்பொருள்களைச் சூறையாடினர். திருமுருகன் பூண்டியில் வந்து சுந்தரர் இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அப்பொருள்களைத் திருப்பித் தந்தார். இது இறைவனுடைய திருவிளையாடல். திருடர்களாக வந்தவர்கள் சிவ கணங்களே.
கழற்சிங்க நாயனார்
1172. மாதவத் தோர்தங்கள் வைப்பினுக்
காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன்
மூக்கை யரியப்பொற்கை
காதிவைத் தன்றோ வரிவதென்
றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங்
கோதைக் கழற்சிங்கனே.
தெளிவுரை : கழற்சிங்கர் என்னும் பல்லவ மன்னர் ஒரு சிவனடியார். தம் மனைவியோடு தலயாத்திரை செய்து கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார். செருத்துணை நாயனார் அங்கு பூமாலை தொடுத்துக் கொண்டிருந்தார். கீழே விழுந்த மலர் ஒன்றை அரசியார் எடுத்து மோந்து பார்த்தார். செருத்துணையார் கோபங் கொண்டு அரசியின் மூக்கை அரிந்துவிட்டார். அது போதாது என்று கழற்சிங்கர் மலர் எடுத்த அரசியின் கையை வெட்டி விட்டார். இறைவன் தோன்றி பக்தியைப் பாராட்டினார். அரசியின் மூக்கும் கையும் முன்போல் ஆயின.
இடங்கழி நாயனார்
1173. சிங்கத் துருவனைச் செற்றவன்
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென்
செல்வ மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே
ளூர்மன் இடங்கழியே.
தெளிவுரை :கோனாட்டில் கொடும்பாளூர் என்ற நகரத்தை இடங்கழியார் என்னும் குறுநில மன்னர் ஆண்டு வந்தார். சிவன் அடியார்களுக்கு உணவளிக்க நெல்லைத் திருடிய ஒருவரை மன்னித்து மேலும் அவன் வேண்டிய அளவு கொடுத்தனுப்பினார். நெடுங்காலம் இறைவன் தொண்டில் ஈடுபட்டு நாட்டில் சைவம் விளங்க ஆட்சி புரிந்தார்.
செருத்துணை நாயனார்
1174. கழிநீள் கடல்நஞ் சயின்றார்க்
கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன்
தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந்
தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர்
தஞ்சைச் செருத்துணையே.
தெளிவுரை : தஞ்சை நகரில் வேளாண் குடியில் பிறந்தவர் செருத்துணையார். எம் பெருமானிடம் இடையறாத பக்தி கொண்டவர். திருவாரூர் கோயிலில் மலர்த் தொண்டு செய்து வந்தார். அப்போது அங்கு தரிசனத்திற்கு வந்த கழற்சிங்க நாயனாரின் மனைவி, மலரை மோந்து பார்த்ததற்காக அவருடைய மூக்கை இவர் அரிந்து விட்டார். இறைவன் காட்சியளித்து அருள் பாலித்தார்.
புகழ்த்துணை நாயனார்
1175. செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை
வையம் சிறுவிலைத்தா
வுருவலி கெட்டுண வின்றி
யுமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து
கலசம் விழத்தரியா
தருவரை வில்லி யருளும்
நிதியது பெற்றனனே.
தெளிவுரை : செருவில்லிபுத்தூரில் சிவமறையோர் குலத்தில் பிறந்தவர் புகழ்த்துணையார். சிவனை ஆறு காலங்களிலும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வார். பஞ்ச காலத்தால் உடல் மெலிந்தார். திருமஞ்சனம் செய்யும்போது குடம் இறைவன் திருமுடிமேல் விழுந்தது. அடியார் மயங்கி விழுந்தார். அன்றுமுதல் இறைவன் அவருக்குப் படிக்காசு அளித்து வந்தார். பிறவாப் பேரின்பம் எய்தினார் அடியார்.
கோட்புலி நாயனார்
1176. பெற்ற முயர்த்தோன் விரையாக்
கலிபிழைத் தோர்தமது
சுற்ற மறுக்குந் தொழில்திரு
நாட்டியத் தான்குடிக்கோன்
குற்ற மறுக்கும்நங் கோட்புலி
நாவற் குரிசிலருள்
பெற்ற வருட்கட் லென்றுல
கேத்தும் பெருந்தகையே.
தெளிவுரை : சோழ நாட்டில் நாட்டியத்தான்குடி என்ற ஊரில் வேளாளர் மரபில் கோட்புலியார் பிறந்தார். சிறந்த சிவனடியார். அவர் யுத்தத்திற்குச் செல்லுமுன் அடியார்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த நெல்லைச் சுற்றத்தார் செலவழித்துவிட்டார்கள். கோபம் கொண்டு அவர்களை இவர் கொன்றுவிட்டார். அனைவரும் நற்கதி பெற்றனர். திருவிரையாக்கலி பிழைத்தோர் திருவிரையாக்கலி என்று கூறிய ஆணையை மீறியவர்கள். நாவற்குரிசில் சுந்தர மூர்த்தி நாயனார். அவருடைய அருள் பெற்றவர் இந்த நாயனார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1177. தகுமகட் பேசினோன் வீயவே
நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னாலொற்றி
யூருறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு
ளாலிவ் வியனுலகம்
நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந்
தான்நாவ லூரரசே.
தெளிவுரை : சங்கிலியாருக்குத் திருமணம் பேசிய மணமகன் இறந்துவிடவே, சங்கிலியார் திருவொற்றியூர் இறைவனுக்கு மலர்க் கைங்கரியம் செய்துகொண்டு கன்னிமாடத்தில் இருந்து வந்தார். ஒற்றியூருக்கு வந்த சுந்தரர் சங்கிலியாரைக் கண்டார். இறையருளால் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது நகுதற்குரிய வழக்கு என்கிறார் இப்பாடல் ஆசிரியர்.
பத்தராய்ப் பணிவார்கள்
1178. அரசினை யாரூ ரமரர்
பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி
யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங்
கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த
ரென்று தொகுத்தவரே.
தெளிவுரை : திருநாவுக்கரசரையும் சுந்தரரையும் வணங்கி உரை தடுமாறி, மயிர்க் கூச்செறிந்து கைகால்கள் யாவும் விதிர்விதிர்த்துக் கண்ணீர் சொரிந்து வழிபடுகிறவர்கள், ஒப்பற்ற பக்தர்கள் என்று சொல்லப்படுவர்.
பரமனையே பாடுவார்
1179. தொகுத்த வடமொழி தென்மொழி
யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை யம்பலத்
தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்
லோரென்ப ருத்தமரே.
தெளிவுரை : பழைமையான வடமொழி (சமஸ்கிருதம்), தென்மொழி (தமிழ்) இவைகளுள் யாதாம் ஒன்றில் சிறந்த இயல், இசைகளில் வல்ல வகையில் ஆகாயம் வரை உயர்ந்துள்ள மதில்களை உடைய சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் நடராஜப் பெருமானின் பாதார விந்தங்கள் மேல் கனிந்த மனத்தோடு பாட வல்லோர் உத்தமர் என்று சொல்லப்படுவார்கள்.
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
1180. உத்தமத் தானத் தறம்பொரு
ளின்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக்
கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத
கமல மலரிணைக்கீழ்ச்
சித்தம்வைத் தாரென்பர் வீடுபே
றெய்திய செல்வர்களே.
தெளிவுரை : உத்தம தானத்தில் இருக்கும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் அறவே துறந்து, மேலான வீடு பேற்றிற்குரிய ஒப்பற்ற வழியை மேற்கொண்டு, ஊமத்த மலரைச் சூடும் சிவபெருமானது திருப்பாதத் தாமரை மலரின் கீழ் மனத்தை வைத்தவர்களை வீடு பேறு எய்திய செல்வர்கள் என்று சொல்லுவார்கள்.
திருவாரூர்ப் பிறந்தார்கள்
1181. செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித்
தாய செழுநெறியே.
தெளிவுரை : செல்வச் செழிப்புடைய திருவாரூர் மதில் வட்டத்துள் பிறந்தவர்கள், சிவபெருமானது திருக்கணத்தைச் சேர்ந்தவர்களே. அதனால் செல்வம் மென்மேலும் பெருகும் தென் ஆரூரில் பிறந்தவர்களின் செம்மையான பாதங்களே செல்வ நெறியில் செல்பவர்கள் கணித்த செழுநெறியாகும்.
முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்
1182. நெறிவார் சடையரைத் தீண்டிமுப்
போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர்
நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் தோளும்
தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை
வாய வுலகினிலே.
தெளிவுரை : அடர்ந்த நீண்ட சடையினை உடைய சிவ பெருமானது உருவத்தைத் தொட்டு மூன்று வேளைகளிலும் பெரிய ஆகமத்தின் பயிற்சியால் வழிபாடு செய்து அர்ச்சிப்பவர், நம்மையும் ஆண்டு, தேவர்களுக்கு அதிபதியாய், மூன்று கண்களும் எட்டுத் தோள்களும் பெற்று, முடிவில் செல்வத்தோடும் சிவ பெருமானுடைய இருப்பிடமாகிய உலகில் வாழ்வார்கள்.
முழுநீறு பூசிய முனிவர்
1183. உலகு கலங்கினும் மூழி
திரியினு முள்ளொருகால்
விலகுத லில்லா விதியது
பெற்றநல வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூ
ரமர்ந்த வரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக்
கணியு மிறைவர்களே.
தெளிவுரை : இந்த உலகு கலங்கினாலும், ஊழி திரிந்தாலும், உள்ளம் ஒருகாலும் விலகாத விதியைப் பெற்ற நல்ல ஞானத்தைப் பெற்றவர், அலகில் எல்லா நலன்களையும் பெற்ற திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகேசப் பெருமானுடைய திருவடியின்கீழ் விளங்குகின்ற வெண்ணீறு தம் மேனிக்கு அணியும் இறைவர்களே.
அப்பாலும் அடிச்சார்ந்தார்
1184. வருக்க மடைத்துநன் னாவலூர்
மன்னவன் வண்டமிழால்
பெருக்கு மதுரத் தொகையிற்
பிறைசூடி பெய்கழற்கே
ஒருக்கு மனத்தொடப் பாலடிச்
சார்ந்தவ ரென்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத்
தோர்நஞ் செழுந்தவரே.
தெளிவுரை : சுந்தரமூர்த்தி சுவாமிகள் வளப்பம் பொருந்திய தமிழ் மொழியால் சிவபெருமானது பாதங்களில் தேவாரப் பாடல்களைப் பாடினார். அத்தகைய பொற்பாதங்களை இடைவிடாது சிந்திப்பவர்கள் உண்மைத் தொண்டர்கள் ஆவர்.
சுந்தரமூர்த்தி நாயனார்
1185. செழுநீர் வயல்முது குன்றினில்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன்
னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர
னென்றுநாம் கேட்பதுவே.
தெளிவுரை : சுந்தரர் திருமுதுகுன்றத்துக்குச் சென்று (விருத்தாசலம்) பழமலைநாதர் அருளால் பன்னீராயிரம் பொன் பெற்றார். அதனை மணி முத்தாற்றிலிட்டு. அப்பால் திருவாரூர் சென்று, அங்குள்ள கமலாலயத்திலிருந்து அப்பொன்னை எடுத்துப் பரவையாருக்கு வழங்கினார்.
பூசலார் நாயனார்
1106. பதுமநற் போதன்ன பாதத்
தரற்கொரு கோயிலையான்
கதுமெனச் செய்குவ தென்றுகொலா
லாமென்று கண்துயிலா
ததுமனத் தேயெல்லி தோறும்
நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற
வூர்தனிற் பூசலையே.
தெளிவுரை : திருநின்றவூரில் (தின்னனூரில்) அந்தணர் குலத்தில் பூசலார் பிறந்தார். வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்தார். சிறந்த சிவபக்தர். அவ்வூரில் சிவ பெருமானுக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணினார். போதிய நிதியில்லாமையால், இரவில் தூங்காது மனத்திலேயே சிந்தித்து அதைக் கட்டி முடித்தார். பலகாலம் வாழ்ந்து இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.
மங்கையர்க்கு அரசியார்
1187. பூச லயில்தென்ன னார்க்கன
லாகப் பொறமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா
தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா
கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந்
தருக்குத்தென் னாட்டகத்தே.
தெளிவுரை : சோழர் குலத்தில் பிறப்த மங்கையர்க்கு அரசியார் பாண்டிய மன்னன் நெடுமாறனை மணந்து, பாண்டிய நாட்டு அரசியானார். மன்னன் சமண மதத்தைச் சார்ந்திருந்தான். இவர் திருஞான சம்பந்தரை அழைத்து வரச் செய்தார். அவர் சமணர்களை வாதில் வென்று நாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். இறுதியில் அரசியார் கணவனோடு இறைவன் திருவடிகளில் சேர்ந்தார்.
நேச நாயனார்
1188. நாட்டமிட்ட டன்ரி வந்திப்ப
வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர்
சைவத் தவரரையில்
கூட்டுமக் கப்படம் கோவணம்
நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய
நேசனை இம்மையிலே.
தெளிவுரை : கர்நாடகத்திலுள்ள காம்பிலி நகரத்தில் சாலியர் குலத்தில் நேசர் என்னும் சிவனடியார் ஒருவர் இருந்தார். சோழ நாட்டுக்கு வந்து கைத்தறி நெசவு செய்து அடியார்களுக்கு உடை, உள்ளாடை, கோவணம் இவைகளைக் கொடுத்து உதவினார். இறுதியில் இறைவனடி சேர்ந்தார். கண்ணை வைத்து அருச்சித்து, சக்ராயுதத்தைப் பெற்றவர் திருமால்.
கோச்செங்கட் சோழ நாயனார்
1189. மைவைத்த கண்டன் நெறியன்றி
மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு
சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து
தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வந்திருக் கோச்செங்க
ணானென்னுஞ் செம்பியனே.

தெளிவுரை : திருவானைக்கா கோயிலில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த யானையும் சிலந்தியும் தம்முள் மாறு கொண்டு இரண்டும் இறந்தன. யானை சிவலோகத்தை அடைந்தது. சிலந்தி சோழ அரசனின் குமாரனாகத் திரும்பவும் இவ்வுலகில் பிறவி எடுத்தது. அவனே கோச்செங்கண் சோழன். யானைகள் ஏறாவண்ணம் கட்டுமலை அமைத்து அவற்றின்மீது எம் பெருமானுக்கு மாடக் கோயில்கள் அமைத்தான். முதலில் கட்டியது திருவானைக்கா.
1190. செம்பொ னணிந்துசிற் றம்பலத்
தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன்
குலமுத லென்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச்
சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க
ணானென்னும் நித்தனையே.
தெளிவுரை :  தந்தையைப் போன்று கோச்செங்கணானும் தில்லை நடராஜனிடம் அளவில்லாத பக்தி கொண்டு சிதம்பரம் சென்று இறைவனைத் தரிசித்தான். அவ்வூரில் இறைவன் தொண்டில் ஈடுபட்டு வரும் அந்தணர்களுக்கு மாளிகைகளை அமைத்துக் கொடுத்தான். இறுதியில் எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்தான். இவன் பாண்டி நாட்டையும் ஆண்டமையால் நிம்ப நறுந்தொங்கலும் அணிந்தான்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
1191. தனையொப் பருமெருக் கத்தம்
பூலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண்
டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழில் சண்பையர்
கோன்செந் தமிழொடிசை
புனையப் பரனருள் பெற்றவ
னென்பரிப் பூதலத்தே.
தெளிவுரை : நடுநாட்டில் திருஎருக்கத்தம் புலியூரில் பாணர் மரபில் அவதரித்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். அவரும் அவர் மனைவியர் மதங்க சூளாமணியாரும் யாழிசையில் வல்லவர்கள். திருஞானசம்பந்தரை அடைந்து இறுதிவரை அவருடன் பேரிசைத் தொண்டு புரிந்து சோதியுள் கலந்தார்கள்.
சடைய நாயனார்
1192. தலம்விளங் குந்திரு நாவலூர்
தன்னில் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை
யுரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங்
கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி யாரூ
ரனைமுன் பயந்தமையே.
தெளிவுரை : தொகை அடியார்களைப் பாடிய சுந்தரர், தன் பெற்றோர்களுக்கும் வணக்கம் தெரிவிக்கிறார். இப் பாடலில் தன் தந்தையாராகிய சடையனாரை வணங்குகிறார். சிறந்த திருநாவலூரிலுள்ள சடையன் என்பவருடைய குலம் விளங்க புகழ் அமைந்தவராக அவதரித்தவர் சுந்தரர். அவ்வாறு சிறப்புடையவரைப் பயந்தவர் சடையனார் ஆகும்.
இசைஞானியார்
1193. பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள்
ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தா னுகைத்தநற் காளையை
யென்றுங் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகுமர னாரூர்ப்
புனிதன் அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்று
முரைப்பது ஞானியையே.
தெளிவுரை : கறுவுதலையுடைய, துளையுடைய துதிக்கையை உடைய, செங்கண்களையுடைய, யானையைச் செலுத்திய காளை போன்ற சுந்தரர் எப்போதும் கபாலத்தைக் கையில் ஏந்திய பிச்சை ஏற்கும் திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானை வணங்குபவர். அவர் எப்போதும் மனத்தில் நினைந்து தியானிப்பது தனது தாயாகிய இசைஞானியையே.
சுந்தரமூர்த்தி நாயனார்
1194. ஞானவா ரூரரைச் சேரரை
யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே.
தெளிவுரை : சிவஞானம் பெற்ற சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் மனித உடலோடு, தேவர்களாலும் அடைய முடியாத கயிலாயத்திற்குச் சென்று இறைவனைத் தரிசித்தனர். பெருந்தவத்தோர் கூடியிருக்கும் அந்த அவையில் இறைவன் அவர்களுக்கு அருள் பாலித்தார். இது ஓர் அருஞ் செயலாகும்.
1195. கூட்டமொன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத்தோரெழு
பத்திரண் டாம்வினையை
வாட்டுந் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ
ராளி பணித்தனனே.
தெளிவுரை : தொகை அடியார்கள் ஒன்பதின்மர், தனி யடியார்கள் அறுபத்துமூவர் என்று பெருந்தவத்தோர் மொத்தம் எழுபத்திரண்டு பேராவர். இவர்களுடைய வரலாறுகளைப் பதினொரு பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகையாகப் பாடியவர், திருநாவலூர் பெருமானாகிய சுந்தரரே என்பதாம்.
திருத்தொண்டத் தொகைப் பதிகங்களின் முதற்குறிப்பு
1196. பணித்தநல் தொண்டத் தொகைமுதல்
தில்லை யிலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற
வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநல் பொய்யடி மைகறைக்
கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய
சீர்மறை நாவனொடே.
தெளிவுரை : சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் உள்ள பதினொரு பாடல்களின் முதற்குறிப்பு வருமாறு:
1. தில்லைவாழ், 2. இலைமலிந்த, 3. மும்மையால், 4. திருநின்ற, 5. வம்பறா, 6. வார்கொண்ட, 7. பொய்யடிமை, 8. கறைக்கண்டன், 9. கடல்சூழ்ந்த, 10. பத்தராய்ப், 11. மன்னியசீர்.
நூற் பயன்
1197. ஓடிடும் பஞ்சேந் திரிய
மொடுக்கியென் னூழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம்
செய்தனன் வானினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையினுள்ள
சேடர்தஞ் செல்வப் பெரும்புக
ழந்தாதி செப்பிடவே.
தெளிவுரை : ஐம்புலன்களால் நுகரப்படும் உலக இன்பங்களைக் குறைத்து என் முன்வினைத் துன்பங்கள் செயல்படாமல் செய்யும். திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பட்ட அடியார்களின் சீர்பாதங்களைச் சூடச் செய்யும். அப்பெரியோர்களின் பெரும் புகழைச் செப்பினால் இவை அனைத்தும் சித்திக்கும் என்கிறார். இத் திருவந்தாதியை ஓதினால் இப் பலன்களைப் பெறலாம் என்பது பொருள்.
திருச்சிற்றம்பலம்
34. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)
சிவபெருமானை அல்லாமல் மற்றெவரையும் போற்றாத மாண்பமைந்த திருஞானசம்பந்தப் பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து போற்றும் அடியார்கள், இறைவனுடைய திருவடிகளை எளிதிற் பெறுவார்கள் எனவும், திருஞானசம்பந்தரிடத்தில் அளவிலாப் பேரன்பு உடையவர் சிறுத்தொண்ட நாயனார் ஆதலின், அவரைப் போற்றுவோர் திருஞான சம்பந்தருடைய திருவடித்துணையை எளிதில் பெறுவர் எனவும்,
திருமாலும் நான்முகனும் தேடிக் காண்டற்கரிய சிவபிரானைத் தம்முடைய கண்களால் கண்டு தம் தந்தையார்க்கும் காட்டியருளிய சிவஞானச் செல்வராகிய ஆளுடைய பிள்ளையாரைச் செந்தமிழ்ப் பாடல்களால் போற்றிப் பரவுவதற்குத் தாம் எவ்வளவோ தவம் செய்திருத்தல் வேண்டுமெனவும்,
திருஞான சம்பந்தரை அன்றிப் பட்டத்து யானை மீது உலா வரும் பேரரசராயினும் பிறர் எவரையும் தாம் பாடுவதில்லை எனவும் இவ் அந்தாதியில் கூறுகின்றார். இவ் அந்தாதியில் திருஞான சம்பந்தர்க்குக் கவுணியர் தீபன், பரசமயக் கோளரி, அருகாணி, தமிழாகரன், தமிழ்விரகன், சைவ சிகாமணி முதலிய சிறப்புப் பெயர்கள் வழங்கப் பெறுகின்றன.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித்துறை
1198. பார்மண் டலத்தினிற் பன்னிரு
பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர
மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந்
தோளான் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன்
மேவிய தண்பதியே.
தெளிவுரை : நிலவுலகில் பன்னிரண்டு பெயர்களோடு நிலை பெற்ற நீர் நிரம்பிய தோட்டமாக விளங்குவது பிரமாபுரம் ஆகிய சீகாழி. திருநீறு அணிந்த, கருமை பொருந்திய இடம் ஆகிய கழுத்தையும் எட்டுப் பெரிய தோள்களையும் உடைய சிவபெருமானது அருளைப் பெற்ற, தார் அணிந்த மணியாகிய திருஞானசம்பந்தப் பெருமான் பொருந்திய குளிர்ந்த தலமாகும்.
சம்பந்தர் பிறந்த தலம் சீகாழி என்கிறார்.
1199. பதிகப் பெருவழி காட்டிப்
பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க
னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர்
மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம
ராவதி காவலரே.
தெளிவுரை : பதிகம் பாடிப் பணியும் அரிய நெறி காட்டிட இமாசல மன்னன் பயந்த பிறைத்திங்களைப் போன்ற அழகிய நெற்றியை உடைய உமையை இடப்பாகத்தில் கொண்டவன் அருள்பெற வைத்த எங்கள் செல்வத்தை, பிரமாபுர மன்னனை, என்னுடைய புகலிடத்தைக் கருத வல்லோர் இந்திரன் நகரத்தைக் காப்பவர் ஆவர்.
1200.காப்பயில் காழிக் கவுணியர்
தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகையிருப்
பேன்என்ன, மாரனென்னே!
பூப்பயில் வாளிக ளஞ்சுமென்
நெஞ்சுரங் கப்புகுந்த;
வேப்பயில் வார்சிலை கால்வளை
யாநிற்கும் மீண்டிரவே.
தெளிவுரை : தலைவி கூற்று: சோலைகள் சூழ்ந்த சீகாழி கவுணியர் தீபற்கு என் பொருட்டு, பெரிய பழிவாரா வகை இருப்பேன் என்ன, மன்மதன் பூங்கணைகளைக் கண்டு அஞ்சும் என் நெஞ்சு குலையப் புகுந்த அம்பு பொருந்திய நீண்ட வில் இரவு முழுதும் வளைந்து நிற்கும்.
1201. இரவும் பகலும்நின் பாதத்
தலரென் வழிமுழுதும்
பரவும் பரிசே யருளுகண்
டாயிந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி
யே!குட வெள்வளைகள்
தரளஞ் சொரியுங் கடல்புடை
சூழ்ந்த தராய்மன்னனே.
தெளிவுரை : இரவும் பகலும் உன் பாதமாகிய மலர் என் வழி முழுதும் பரவும் பரிசே அருளு கண்டாய். இந்த உலகில் விரவும் பிற சமயங்களை அழித்து ஒழிப்பவனே ! வளைந்த வெள்ளிய சங்குகளையும் முத்துக்களையும் சொரியும் கடல் பக்கங்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும் சீகாழி மன்னனே !
1202. மன்னிய மோகச் சுவையொளி
யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந்
தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகம் கிங்கிணிப்
பாத நிழல்புகுவோர்
துன்னிய காஅமர் சண்பையர்
நாதற்குத் தொண்டர்களே.
தெளிவுரை : நிலையற்ற மோகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்பட்ட ஐந்து புலன்களின் பதங்கடந்தோர்க்குத் தொடர்வரிய பொன்னாலாகிய பாடகக் கிங்கிணி திருவடிப்பேற்றை அடைவோர் இருக்கின்ற சோலைகள் சூழ்ந்த சண்பையர் நாதனுக்குத் தொண்டர்கள்.
இவருடைய தொண்டர்கள் முத்திப் பேற்றை அடைவர் என்க.
1203. தொண்டினஞ் சூழச் சுரிகுழ
லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன்
போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம்
போக்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின
ஆக்கிய வித்தகனே.
தெளிவுரை : அடியார்கள் சூழ, மாதர்களின் மனம் தொடர, வண்டுக் கூட்டங்கள் சூழ வருகின்றவன் இவன் போலும். மயிற் பீலியோடு பிரம்பை ஏந்
திய சமணர்கள் குளிக்காத உடம்பை உடையவர்கள் இறந்துபடுமாறு கழுநிரைகளில் ஏறுமாறு செய்த வித்தகனே.
1204. வித்தகம் பேசி,நம் வேணுத்
தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டும் முறுவல்நல்
லார்தம் மனம்அணைய,
உய்த்தகம் போந்திருந் துள்ளவும்
இல்லா தனவுமுறு
பொத்தகம் போலும்! முதுமுலைப்
பாணன் புணர்க்கின்றதே.
தெளிவுரை : இது தலைவி கூற்று. பாணனை இழித்துரைப்பது. ஞானம் பேசி நம் சீகாழித் தலைவராகிய திருஞானசம்பந்தர் வாளைப் போன்று முத்துக்களைத் தம்மிடத்தே காட்டுகின்ற முறுவல் செய்யும் மாதர்கள், தம் மனமார உய்த்து அகம் போந்து இருந்து உள்ளளவும் இல்லாதனவும் உறுபுத்தகம்போலும் வயது முதிர்ந்த இந்தப் புலையர் குலப் பாணன் புனைந்துரைக்கின்றான்.
1205. புணர்ந்தநன் மேகச் சிறுநுண்
துளியின் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல விருந்தனை
யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன்
கொடிமதில் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு,
வாழி! மடக்குருகே.
தெளிவுரை : இப்பாடல் காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் துறை. மடக்குருகே, சொல்வாயாக என முடிக்க, கலந்த நன்மேகச் சிறுநுண் துளியில் சிறகை ஒதுக்கி, அறிந்தவர்கள்போல இருந்தனை. பெரியோர்கள் போற்றும் குணக்குன்றாக விளங்கும் திருஞான சம்பந்தன் வாழும் கொடி மதில் சீகாழியின் வாய் என்னைக் கூடியவர் சென்று விட்டாரா? குருகே ! சொல்வாயாக. தலைவனைப் பிரிந்த தலைவி மிகவும் வருந்துதல்.
1206. குருந்தலர் முல்லையங் கோவல
ரேற்றின் கொலைமருப்பால்
அருந்திற லாகத் துழுதசெஞ்
சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதில் சண்பை
நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம்
. . . . . . . . . முரசே.
தெளிவுரை : குறுந்தின் மலர்கள் மலர்கின்ற முல்லை நிலத்துக் கோவலர் காளையின் கொல்லுகின்ற கொம்புகளை, வீரமிக்க மார்பில் செஞ்சேறு தருகின்ற திருஞான சம்பந்தரின் பெருந்திறலுடைய பெரிய மதில்களை உடைய சீகாழி நகரைப் போல, பெரிய மூங்கில் போன்ற தோள்களையும் திருந்தியஆபரணங்களையும் உடைய மாதர்களின் ஆர்வம் ...... முரசாகும். (ஈற்றில் சில சீர்கள் விடுபட்டுள்ளன.)
1207. முரசம் கரைய,முன் தோரணம்
நீட, முழுநிதியின்
பரிசங் கொணர்வா னமைகின்
றனர்பலர்; பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன்
கருது, அரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த
நகரன்ன தூமொழிக்கே.
தெளிவுரை : தோழி தலைவனுக்கு நொதுமலர் வரவு உணர்த்தல். முரசங்கள் ஒலிக்க, வீட்டின் முன்னால் தோரணங்கள் அசைய, பெருஞ்செல்வமாகிய பரிசம் கொண்டு வருவதை முன்னிட்டுப் பலர் நிற்கின்றனர். பார்த்தும் இனி நீ இங்கு வராதே என்று சொல்வதற்கு முன் திருஞானசம்பந்தரின் வளைவுகளை உடைய சங்குகள் நிறைந்த வயல்களை உடைய சீகாழியைப் போன்ற அழகுடைய தலைவியை விரும்பி வராதே. விரைவில் மணந்து கொள் என்பதாம்.
1208. மொழிவது, சைவ சிகாமணி
மூரித் தடவரைத்தோள்
தொழுவது, மற்றவன் தூமலர்ப்
பாதங்கள்; தாமங்கமழ்ந்
தெழுவது, கூந்தல் பூந்தா
மரையினி யாதுகொலோ!
மொழிவது, சேரி முப்புதை
மாதர் முறுவலித்தே.
தெளிவுரை : சொல்வது யாவும் சைவ சிகாமணியாகிய ஞான சம்பந்தரின் பெருமை பொருந்திய விசாலமான மலைபோன்ற தோள்களைப் பற்றித்தான்; தொழுவது அவனுடைய தூமலர் பாதங்களைத்தான். தாமம் கமழ்ந்து எழுவது ஞானசம்பந்தரது மாலையைத்தான். இனி சொல்ல என்ன இருக்கிறது. இவ்வாறு சொல்வது முறுவலித்து சேரி முரிப்பதை மாதர்கள்தாம்.
1209. வழிகெழு குண்டர்க்கு வைகைக்
கரையன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர்
தீபன், கடலுடுத்த
ஒலிதரு நீர்வை யகத்தை
யுறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்மட
மாதினை வாட்டுவதே.
தெளிவுரை : இது தோழி பருவங்கண்டு இரங்குதல். வலிமை பொருந்திய சமணர்க்கு வைகைக்கரை அன்று விண்ணகம் ஏறச் செய்தது. மகிழ்ச்சி பொருந்திய வலிய தோள்களை உடைய கவுணியர் குலத்துக்கு விளக்குப் போன்ற திருஞானசம்பந்தர் கடலால் சூழப்பட்ட ஒலிமிக்க இந்த உலகத்தை உறையிட்டதைப்போல் உதிரும் மலிதருவார் பனிமடமாதினை வாட்டுகிறது என்பதாம். பனிக்காலத்தில் தலைவி தனித்திருந்து துன்பப்படுவதைக் கூறுகின்றாள் தோளி.
1210. வாட்டுவர் தத்தந் துயரை;வன்
கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத்
தலைவனை மெல்விரலால்,
தோட்டியல் காத னிவனென்று
தாதைக்குச் சூழ்விசும்பில்
காட்டிய கன்றின் கழல்திற
மானவை கற்றவரே.
தெளிவுரை : வலிய பன்றியின் பின்னால் வேட்டுவர் கோலத்தோடு சென்ற வேதத் தலைவனாகிய சிவ பெருமானைத் தனது மெல்லிய விரலால் தோடுடைய செவியன் இவன் என்று தன் தந்தைக்கு ஆகாயத்தில் காட்டிய ஞானசம்பந்தரின் பாதப் பெருமையைக் கற்றவர் தத்தம் துயரை வாட்டுவர் என இயைக்க. அர்ச்சுனன் தவம் செய்தபோது நிகழ்ந்த காட்சியைச் சுட்டுகின்றார்.
1211. அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு
அன்னை யருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ
சிகாமணி சண்பையென்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம்
பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று
தோன்றுங் கடிநகரே.
தெளிவுரை : (துறை) கண்டோர் செவிலிக்கு உணர்த்துதல். சமணர்களை வாதில் வென்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணியாகிய ஞானசம்பந்தரின் சீகாழியைப் போன்ற உயர்ந்த கொடிகள் கட்டப்பட்ட கோபுரங்களின் சூரியனுடைய குதிரையைக் கவர்கின்ற சூலத்தொடு நின்று தோன்றும் கடி நகரைத் தலைவனும் தலைவியும் சென்று சேர்ந்திருப்பர். ஆதலால் அன்னையே! நீ மீள்வாயாக என்றனர். இங்கு நகர் என்றது தலைவனது நகர்.
1212. நகரங் கெடப்பண்டு திண்தேர்
மிசைநின்று, நான்மறைகள்
பகரங் கழலவ னைப்பதி
னாறா யிரம்பதிகம்
மகரங் கிளர்கடல் வையம்
துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப்
பிரானென்பர், நீணிலத்தே.
தெளிவுரை : திரிபுரங்கள் அழிய முன்பு வலிய தேர்மீது நின்று, நான்கு வேதங்களும் துதிக்கும் சிவபெருமானைப் பதினாறாயிரம் பதிகம், மகர மீன்கள் வாழ்கின்ற கடலால் சூழப்பட்ட  இந்த உலகத்தின் துன்பம் நீங்க, திருவாய் மலர்ந்தருளியவர் சீகாழிப் பெருமானாகிய ஞானசம்பந்தர் என்று நீண்ட உலகத்தார் கூறுவர். அழிந்தவை போக எஞ்சியுள்ளவை இப்போது வெளிவந்துள்ளன.
1213. நிலம் ஏறியமருப் பின்திரு
மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகனை
தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண்
டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன்
காட்டிய நாதனையே.
தெளிவுரை : தந்தையாகிய சிவபாத இருதயர் காணுமாறு அன்று பெரும்புகழ் பெற்ற ஞானசம்பந்தர் காட்டிய சிவபெருமானை, வராக அவதாரத்தில் பூமியைத் தனது கொம்புகளால் எடுத்த திருமாலும், இவ்வுலகைப் படைத்த மலர்களில் சிறந்து விளங்குகிற தாமரையில் வாசம் செய்கின்ற பிரமதேவனும் நீர்ப் பெருக்கினையுடைய கங்கையைக் கொண்ட அந்த இறைவனது முடியையும் பாதங்களையும் காண முடியவில்லை. திருமால் சிவனது பாதத்தையும், பிரமன் அவனது முடியையும் காணாமல் திரும்பினர் என்பது புராணம்.
1214. நாதன் நனிபள்ளி சூழ்நகர்
கானக மாக்கிஃதே
போதின் மலிவய லாக்கிய
கோனமர் பொற்புகலி
மேதை நெடுங்கடல் வாருங்
கயலோ? விலைக்குளது
காதி னளவும் மிளிர்கய
லோ?சொல்லு; காரிகையே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று: காதளவோடிய கலக பாதகக் கண்களை உடையவளே ! சிவபெருமான் கோயில் கொண்டுள்ள நனிப்பள்ளி என்னும் தலத்தைச் சுற்றியுள்ள நகரைக் கானகமாக்கிப் பிறகு அதையே மலர்களையுடைய வயலாக்கிய ஞானசம்பந்தப் பெருமானின் சீர்காழிக் கடலில் பிடிக்கும் மீன் விலைக்கு வந்தது என்றான்.
1215. கைம்மையி னால்நின் கழல்பர
வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம்
நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங்
கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி
யோ!சொல்லு சம்பந்தனே.
தெளிவுரை : இழி தகைமையினால் உன்னுடைய திருவடிகளை வணங்காமல், கண்டார்க்கு இவனோர் வன்மையனே என்னும் வண்ணம் நடித்து, மேலான பொருளோடு இப்பிறப்பில் யான் அடையும் இன்பத்தைப் பெரிதெனக் கருதித் திரிகின்ற அத் தன்மையுடைய எனக்கு அருளுவாயா? சம்பந்தனே சொல்வாயாக.
1216. பந்தார் அணிவிரற் பங்கயக்
கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள
வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது
நானெப்பொழுது முன்னுஞ்
சந்தார் அகலத் தருகா
சனிதன் தடவரையே.
தெளிவுரை : தலைவன் பாங்கனுக்குத் தலைவியின் இயல்பும் இடமும் உரைத்தல்: பந்துகளைப் பிடிக்கின்ற அழகிய கைவிரல், தாமரை போன்ற கொங்கை, பவளம் போன்ற செவ்வாய், கொந்தார் நறுங்குழலையுடைய அழகிய வல்லி போன்றவளை, நந்தா விளக்கினை நான் இதற்கு முன்பு கண்டது ஞானசம்பந்தரது தடவரையில்தான் என்றவாறு.
1217. வரைகொண்ட மாமதில் சண்பைத்
தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின்
நஞ்ச நிகழக்கொலாம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ்
சுழலநொந் தோரிரவும்
திரைகொண் டலமரு மிவ்வகல்
ஞாலஞ் செறிகடலே.
தெளிவுரை : தலைவி கூற்று: மலையைப்போல் உயர்ந்து விளங்கும் மதில்களையுடைய சீகாழியின் தலைவனை வாழ்த்தாதவர்போல, வரிசையாக நின்று திருப்பாற் கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது போன்றும், நுரைதள்ளி உடம்பு வியர்த்து உள்ளம் சுழல வருந்தி ஓர் இரவு முழுவதும் அலைகளை வீசும் கடல் போலவும் இவள் வருந்துகின்றாள் என்பதாம்.
1218. கடலன்ன பொய்மைகள் செய்யினும்
வெய்ய கடுநரகத்
திடநம னேவுதற் கெவ்விடத்
தானிருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத்
தலைவன்செந் தாமரையின்
வடமன்னு நீள்முடி யானடிப்
போதவை வாழ்த்தினமே.
தெளிவுரை : கடல் அளவு பொய்யான காரியங்களைச் செய்தாலும், வெய்ய கடு நரகத்தில் நமன் ஏவுதற்கு எவ்விடத்தான் இருஞ் செந்தமிழால் திடமான நிலைபெற்ற மதிலை உடைய சீகாழித் தலைவனாகிய ஞான சம்பந்தன் செந்தாமரையின் வட மன்னு நீள் முடியான் திருவடிகளைத் தினமும் வாழ்த்தினோம்.
1219. வாழ்த்துவ தெம்பர மேயாகும்,
அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்து மாழா
தது,வரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற்
கிடமிசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம், போதக
மீனுங் கழுமலமே.
தெளிவுரை : வாழ்த்துவது எம் பாரமாகும். ஊழிக் காலத்தில் கடல் ஆழ்த்தியபோது மயங்காமல் இருந்தது சிவபெருமானது பாதங்களே. சதமென்று நம்பித் துதித்த ஞானசம்பந்தருக்கு இடம் இசைத்து தும்பிக் கொம்பர் சோலைகளில் தாழைப் போது அகம் ஈனும் சீகாழியே.
ஊழிக் காலத்தில் சீகாழி எஞ்சி நின்றது என்பதாம்.
1220. மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி
நீண்முடி வண்கமலப்
பலர்மயில் கீர்த்திக் கவுணியர்
தீபன் பகைவரென்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு
மே?கணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன
மாகில் அரும்பினையே.
தெளிவுரை : தோழி தலைவிக்கு உரைத்தல்: மலரைப் போலவும் வாளைப் போலவும் விளங்குகின்ற கண்களை உடையவளே ! நான் சொல்வதைக் கேள். கண்ணி நீண்முடி வண்கமலம்; பலர் பயில் கீர்த்தியை உடைய கவுணியர் குல விளக்காகிய ஞான சம்பந்தரின் பகைவர் என்னும்படி நாம் காவல் செய்யும் தினைபுனங் கொய்திடுவோம். வேங்கை மரம் ஊரார் பழிச்சொல் பூப்பதற்குமுன் அரும்பினைப் பறித்துவிட்டது என்றவாறு.
1221. அரும்பின அன்பில்லை; யர்ச்சனை
யில்லை; யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி
செய்கிலன்; பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங
னேவந்து நேர்பட்டதால்,
கரும்பன நீள்வயல் சூழ்காழி
நாதன் கழலடியே.
தெளிவுரை : அரும்பின அன்பு இல்லை. துதி செய்வதும் இல்லை. சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதும் இல்லை. பொய்யோடு கூடிய இரும்பைப் போன்ற உள்ளத்தை உடையவனாகிய எனக்கு எப்படி வந்து வாய்த்தது, கரும்பு விளையும் நீண்ட வயல்கள் சூழ்ந்த சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தரது திருவடி?
அவரது திருவடி எப்படி எனக்கு நேர்பட்டது என வியக்கின்றார்.
1222. அடியால் அலர்மிதித் தாலரத்
தம்பில் கமிர்தமின்(று)இக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்
வா(று)அலர் கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம்
பந்தன் கருதலர்போல்
வெடியா விடுவெம் பரல்சுறு
நாறு வியன்கரத்தே.
தெளிவுரை : செவிலி இரங்குதல்: அடியால் அலர் மிதித்தால் குருதி வெளிப்படுகின்ற அமிர்தத்தை ஒத்த தலைவி இன்று இக் கொடியானொடும் பின் நடந்தது எவ்வாறு? மலர்ந்த தாமரை மலர் மணம் வீசுகின்ற தலைமாலையை உடைய ஞானசம்பந்தப் பெருமானது பகைவர்கள் சேர்கின்ற கொடிய பரற்கற்கள் நிரம்பிய தீய்ந்த நாற்றம் வீசுகின்ற இந்த பாலை வழியே எப்படிச் சென்றாளோ என்று செவிலி வருந்துகிறாள்.
1223. சுரபுரத் தார்தம் துயருக்
கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண்
டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தானடி எய்துவ
னென்ப, அவனடிசேர்
சிரபுரத் தானடி யாரடி
யேனென்றும் திண்ணனவே.
தெளிவுரை : தேவர்களுடைய துயரத்துக்கு இரங்கி, தேவர்களுக்குப் பகைவர்களாகிய திரிபுராதிகள் செய்யும் துன்பங்களைப் போக்கி அருளும் சிவபெருமானது திருவடிகளை அடைவேன் என்பது, அவனடி சேர்ந்த திருஞானசம்பந்தரது அடியார்க்கு அடியேன் என்னும் உறுதி உடையேன் ஆவேன்.
1224. திண்ணென வார்சென்ற நாட்டிடை
யில்லைகொல்! தீந்தமிழோர்
கண்ணென வோங்கும் கவுணியர்
தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும்
பீன,மற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து)
ஓடி எழுமுகிலே.
தெளிவுரை : இது தலைவி கூற்று: மனவுறுதியுடைய நம் தலைவர் சென்ற நாட்டில் தீந்தமிழோர் கண்ணென ஓங்கும் கவுணியர் குல விளக்காகிய திருஞான சம்பந்தர் கைபோல் பொழிந்து, முல்லை மெல்லரும்பு தோன்றவும், யாம் மெலியவும் எண்ணின நாள் தப்பாமல் ஒன்று சேர்ந்து முகிலே ஆகாயத்தில் எழுவாயாக என்று கூட்டுக. கார் காலம் வந்தால் தலைவர் திரும்பி வருவார் என்பதாம்.
1225. எழுவாள் மதியால் வெதுப்புண்(டு)
அலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள், தனக்கின் றருளுங்
கொலாந்,தொழு நீரவைகைக்
குழுவா யெதிர்ந்த உறிகைப்
பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா வுடலம் கழுவின
வாக்கிய கற்பகமே.
தெளிவுரை : தோழி இரங்குதல்: விண்ணகத் திங்களால் வேதனையடைந்து வருந்தி எழுந்து தேம்பியழுது வணங்குவாள். இன்று எனக்கு உன் அருள் கிடைக்குமோ! வைகைக் கரையில் ஒன்றுகூடி எதிர்த்த, கையில் உறியையும், பறித்த தலையையும் உடைய சமணர்களுடைய கழுவாத உடம்புகள் கழுவில் ஏறும்படி செய்த கற்பகம் போன்ற சம்பந்தரே என்று தலைவி ஏங்குகிறாள், என்க.
1226. கற்பா நறவம் மணிகொழித்
துந்தும் அலைச்சிலம்பா!
நற்பா மொழியெழில் ஞானசம்
பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை
யின்னிளம் செவ்விகண்டிட்(டு)
இற்பா விடும்வண்ண மெண்ணுகின்
றாளம்ம! வெம்மனையே.
தெளிவுரை : தலைவியை இற்செறிப்பர் என்று தோழி தலைவனுக்குக் கூறுதல். கற்பா நறவ மணி கொழித்து உந்து மலை நாட்டுத் தலைவனே ! தேவாரப் பாடல்களை அருளிய எழில் ஞானசம்பந்தருடைய புறவம் என்னும் பெயருடைய சீகாழியைப் போன்ற வில் போன்ற நெற்றியை உடைய தலைவியின் இளம் முலைகளைப் பார்த்து, நற்றாய் இற்செறிக்குமாறு எண்ணுகின்றாள்.
1227. எம்மனை யா,எந்தை யாயென்னை
யாண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம்
பந்தன் புறவமன்னீர்!
வெம்முனை வேலென்ன வென்னமிளிர்ந்து
வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ
னுள்ளத் தொளிர்வனவே.
தெளிவுரை : தலைவன் கூற்று: தலைவியின் கண்ணைப் புகழ்ந்தவாறு. எம் தாய் போன்றவனே ! எம் தந்தை போன்றவனே ! என் துயர் தவிர்த்த செம்மலர் நீள்முடியாய் என்று போற்றப்படும் ஞானசம்பந்தரது புறவம் என்னும் சீகாழியைப் போன்றவர்களே ! போரில் வேல் போன்று மிளிர்ந்து, வெளுத்து, செவ்வரி படர்ந்து உம் மனவோ அல்லவோ வந்து என் உள்ளத்து ஒளிர்கின்றன எனத் தலைவியின் கண்களைத் தலைவன் புகழ்கின்றான்.
1228. ஒளிறு மணிப்பணி நாட்டும்,
உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண்
டே?மிண்டி மீனுகளும்
அளறு பயற்சண்பை நாத
னமுதப் பதிகமென்னுங்
களிறு விடப்புகு மேல்தொண்டர்
பாடும் கவிதைகளே.
தெளிவுரை : ஒளி விடுகின்ற மணிகளையுடைய நாகர் உலகிலும் பூவுலகிலும், தேவலோகத்திலும் நாணத்தால் வெளுக்க சில நிற்பதுண்டே, நெருங்கி மீன் உகளும் சேறு நிரம்பிய சண்பை என்னும் சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தர் அமுதம் போன்ற பதிகக் களிறுவிட தொண்டர் பாடும் கவிதைகள்மேல் புகும்.
1229. கவிக்குத் தகுவன, கண்ணுக்
கினியன, கேட்கில்இன்பம்
செவிக்குத் தருவன, சிந்தைக்
குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில்
முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை
நாதன் குரைகழலே.
தெளிவுரை : (கொச்சை நாதன் குரை கழல்கள்) கவிக்குத் தகுவன; கண்ணுக்கு இனியன; கேட்கில் இன்பம் செவிக்குத் தகுவன; சிந்தைக்கு உரியன; பசுமையான முத்துக்களை மான்போன்ற கண்களை உடைய சிறுமியர் முற்றில் முகந்து தம் சிற்றில் தொறும் குவிக்க, அலை வீசுகின்ற சீகாழி நாதன் குரைகழல்கள் உதவும் என்க.
1230. கழல்கின்ற ஐங்கணை, யந்தியும்,
அன்றிலுங் கால்பரப்பிட்(டு)
அழல்கின்ற தென்றலும் வந்திங்
கடர்ப்ப,வன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன்
தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ,
இனிஇன் றுறுகின்றதே.
தெளிவுரை : இது தலைவி கூற்று: காமன் தன் ஐங்கணைகளையும் செலுத்துதற்குரிய மாலை நேரமும், அன்றில் பறவையும், கால் பரப்பி அழல்கின்ற தென்றல் காற்றும், இங்கு வந்து துன்புறுத்த, அன்று மணக்க விரும்பியவனைப் பாம்பு தீண்ட, அருகில் நின்று அழுது கொண்டிருந்த பெண்ணின் துயரை நீக்க விஷத்தை இறங்கச் செய்த ஞானசம்பந்தனைத் தொடர்ந்து போய் உழல்கின்ற நெஞ்சம், இங்கு எதற்காக என்னை வருத்துகின்றது?
1231. உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய
தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல்
முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ
மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம்
போலுந் துடியிடைக்கே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று: பொருந்திய அன்போடு ஒத்திய தாளமும் உள்ளுருகிப் பெறுகின்ற இன்பமும் பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியும் கண்டவரை வருத்துகின்றவாறு என்னே! நான் செய்த தவத்தின் பயனோ வந்து என் சிந்தையுள்ளே பொருந்தி இருக்கின்ற பாதனுடைய (சம்பந்தர்) கழுமலம் (சீகாழி) போன்றும், உடுக்கை போன்றும் உள்ள இடையினை உடைய தலைவிக்கு.
1232. இடையு மெழுதா தொழியலும்
ஆம்;இன வண்டுகளின்
புடையு மெழுதினும் பூங்குழ
லொக்குமப் பொன்னனையாள்
நடையும் நகையுந் தமிழா
கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியு மெழுதிடின்,
சால அதிசயமே.
தெளிவுரை : தோழி எழுதரிதென்ன ஏந்தலை விலக்குதல். நடை, நகை, மொழி என்பவற்றை எழுத இயலாது என்றபடி. இடையும் எழுதாது ஒழியலுமாம். இன வண்டுகளின் புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும். அப் பொன் அனையாள் நடையும் நகையும் தமிழாகரன் ஆகிய ஞானசம்பந்தரின் சீகாழியின் நற்றேன் அடையும் மொழியும் எழுதினால் மிகவும் அதிசயமாகும்.
1233. மேனாட் டமரர் தொழவிருப்
பாரும், வினைப்பயன்கள்
தாநாட் டருநர கிற்றளர்
வாருந் தமிழர்தங்கள்
கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற
கொச்சையர் கோன்கமலப்
பூநாட்டு அடிபணிந் தாருமல்
லாத புலையருமே.
தெளிவுரை : பணிந்தார் அமரர் தொழ இருப்பார். புலையர் தளர்வர் என்றபடி. தமிழர் தங்கள் கோனாகிய பாண்டியனை நாடி இருந்த அருகர் குழாத்தை வென்ற கொச்சையர் (சீகாழி) கோனாகிய ஞானசம்பந்தரின் பாதங்களைப் பணிந்தவர், அமரர் தொழ இருப்பர். அவ்வாறு பணியாதவர் புலையர். அவர்கள் அரு நரகில் வீழ்ந்து தளர்வர்.
1234. புலையடித் தொண்டனைப் பூசுர
னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட
மாடும் மணியையென்தன்
தலையிடைப் பாதனைக் கற்றாங்
குரைத்தசம் பந்தனென்னா,
முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந்
தாளென்தன் மொய்குழலே.
தெளிவுரை : இது செவிலி கூற்று: திருநாளைப் போவார் நாயனார் சரிதம் கூறப்படுகிறது. நந்தனாரை அந்தணனாக்கி, உமாதேவியாருக்காக திருநடனம் செய்கின்ற இறைவனைப் பாடிய ஞானசம்பந்தனை நினைந்து முலையிடை பசலை பூத்து, கைவளைகளை இழந்தாள் என் மொய்குழலாள்.
1235. குழலியல் இன்கவி ஞானசம்
பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தே
னுனையுங் கதிரவனே!
தழலியல் வெம்மை தணித்தருள்
நீ;தணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை
யேன்பெற்ற வாரணங்கே.
தெளிவுரை : இது நற்றாய் சுரம் தணிவித்தல் என்னும் துறை. குழலைப் போன்ற இனிமையை உடைய கவிகளைப் பாடிய ஞானசம்பந்தரது கழலைப் போல், கதிரவனே ! உன் பாதங்களையும் பணிகின்றேன். தீப் போன்ற உன் வெம்மையைத் தணித்தருள்வாயாக. என் மகள் இந்த வெப்பம் நிறைந்த பாலை வழியே நடந்து சென்றாள்.
1236. அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை
பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந்
தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ்
செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத்
தான்தன் இருந்தமிழே.
தெளிவுரை : திருஞானசம்பந்தரது தேவாரப் பாடல்கள் மாதங்கி என்னும் தெய்வம் அமர் யாழ் முரித்து, ஆண் பனையைப் பெண் பனையாக்கி சமணர்களைக் கழுவேற்றி, கொடிய விஷத்தைத் தீர்த்து, திருமறைக் காட்டில் கதவை மூடி, பிணங்கு அலைநீர் எதிர் ஓடம் செலுத்தின பிறையோடு இணங்கிய மாடங்களை உடைய சீகாழி, ஞானசம்பந்தரது பாடல்கள் இந்த அற்புதங்களைச் செய்தன.
1237. இருந்தண் புகலி,கோ லக்கா,
வெழிலா வடுதுறை,சீர்
பொருந்தும் அரத்துறை போனகம்,
தாளம்,நன் பொன், சிவிகை
அருந்திட ஒற்ற,முத் தீச்செய
வேற வரனளித்த
பெருந்தகை சீரினை யெம்பர
மோ!நின்று பேசுவதே.
தெளிவுரை : ஞானசம்பந்தருக்குப் புகலியில் போனகத்தை அருந்திடவும், திருவோலக்காவில் தாளத்தை ஒத்தவும், திருவாவடுதுறையில் பொன்னை வேள்வி செய்யவும், திருநெல்வாயில் அரத்துறையில் சிவிகையை ஏறவும் சிவபெருமான் அளித்தார்.
மூன்று அடுக்கு நிரல் நிறைப் பொருள்களை இவ்வாறு பொருத்த வேண்டும். இத்தகைய பெருஞ் சிறப்பை என்னால் புகழ்ந்துரைக்க முடியுமோ என்கிறார்.
1238. பேசுந் தகையதன் றேயின்று
மன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந்(து)
ஊண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளாலெழில்
வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ்
ஞாலம் கவின்பெறவே.
தெளிவுரை : இப் பாடலில் திருஞானசம்பந்தர் திருவீழி மிழலையில் பொன் காசு பெற்றமை குறிப்பிடப்பட்டது. சொல்ல முடியாத அளவு திருஞானசம்பந்தர் தேசம் முழுவதும் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டு உண்ண உணவில்லாமல் வாடியபோது, தீயைக் கையிலேந்திய சிவபெருமான் திருவருளால் திருவீழி மிழலையில் காசு மழை பொழிந்து இஞ்ஞாலம் கவின் பெறச் செய்தார்.
1239. பெறுவது நிச்சயம் அஞ்சல்;நெஞ்
சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம்
பந்தனை வாழ்த்துதலால்,
வெறியுறு கொன்றை மறியுறு
செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு
மானவர் பொன்னுலகே.
தெளிவுரை : ஞானசம்பந்தனை வாழ்த்துவதால் பொன்னுலகு பெறுவது நிச்சயம் என்று கூட்டுக.
நெஞ்சமே ! அஞ்சாதே ! பிரமாபுரத்து (சீகாழி) மறுவது பொற்கழல் ஞானசம்பந்தரை வாழ்த்துவதால், மணம் பொருந்திய கொன்றை மாலையையும், கையில் மான் கன்றையும், விடைக் கொடியையும் உடைய சிவ பெருமானது பொன்னுலகைப் பெறுவது நிச்சயம் என்க.
1240. பொன்னார் மதில்சூழ் புகலிக்
கரசை, யருகர்தங்கள்
தென்னாட் டரணட்ட சிங்கத்
தினை,யெஞ் சிவனிவனென்(று)
அந்நாள் குதலைத் திருவாய்
மொழிக ளருளிச்செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை,
காண்க யமாலயமே.
தெளிவுரை : அழகிய மதில் சூழ்ந்த புகலிக்கு (சீகாழி) அரசை, சமணர்களது தென்னாட்டு மதிலை அழித்த சிங்கத்தினை, சிவன் இவன் என்று அந்நாள் குதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த என்னானைப் பணிவார்க்கு, இயமன் திருக்கோயில் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்.
1241. மாலையொப் பாகும் பிறைமுன்பு
நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில்
மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன்
வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன்
மலரின்று சூடிடினே.
தெளிவுரை : வடுவுண்டாகும் மாமரக் கூட்டம் சூழ்ந்த சோலைகளை உடைய சீகாழித் தலைவனாகிய ஞானசம்பந்தரது மலரை இன்று சூடிடின், மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரன் முன்பு நின்று மணி குறுக்கி, கடல் ஒலியைக் கேட்டு ஆங்கு எழில் மன்மதன் வளைத்த வில்லில் அம்பை எப்போதும் பிடிப்பன். காதல் வயப்பட்டு வருந்துவாள் என்பதாம்.
1242. சூடுநற் றார்த்தமி ழாகரன்
தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை
நீயுங் கொடும்பகைநின்(று)
ஆடுதற் கேயத்த னைக்குனை
யே,நின்னை யாடரவம்
வாடிடக் காரும் மறுவும்
படுகின்ற வாண்மதியே.
தெளிவுரை : சூடுநல் தார்த்தமிழாகரனாகிய ஞானசம்பந்தர், தன்னுடைய அழகிய மலை போன்ற தோளைக் கூடுதற்கு ஏங்கிப்போன பெண்ணை நீயும் கொடுமைப் படுத்தி நின்று ஆடுகின்றாய். உன்னை ஆடு அரவம் வாடிட மேகமும் மறுவும் படுகின்ற வாண்மதியே ! இது உனக்குத் தகுமோ? இதைச் சந்திரோபாலம்பனம் என்பர்.
1243. மதிக்க தகுநுதல் மாதொடும்
எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன்
சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்தண்
தேனுண்டு, மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை
நாடு குறுகுமினே.
தெளிவுரை : தலைவனைத் தோழி விருந்துண்டு செல்க எனக் கூறுதல். போற்றக்கூடிய நெற்றியை உடைய தலைவியோடும் எங்கள் மலையில் தங்கி துதிக்கத்தகும் ஞானசம்பந்தரது சுருதி கடந்து உழவோர் மிதிக்கக் கமலம் முகிழ்த்த தண் தேன் உண்டு, நெருங்கி வரால் குதிக்க, பறவைக் கூட்டங்கள் அஞ்சியோடும் சீகாழி நாட்டை அடையுங்கள்.
1244. குறுமனம் உள்கல வாத்தமி
ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாயஞ்ச
லெம்மூர் நகுமதிசென்(று)
உறுமனை யொண்சுவ ரோவியக்
கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை
நீட்டுவர்; சேயிழையே.
தெளிவுரை : தலைவன் தன் இடம் அணித்து என்றல்.
சேயிழையே ! குறுமன முள் கலவாத் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரது சீகாழியைப் போன்ற நறுமலர் மென்குழலாய் ! அஞ்சாதே. எம்மூர் அருகில்தான் உள்ளது. எங்கள் வீட்டின் ஒண் சுவர் ஓவியத்தில் எழுதப்பட்ட கிளிக்கு, உங்கள் ஊர்ச் சிறுமிகள் சென்றிருந்து அங்கையை நீட்டுவர்.
1245. இழைவள ராகத்து ஞான
சம்பந்த னிருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலுங்
காண்பீர் கடைசியர்,நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ்
சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில்
சூழ்ந்த வளவளலே.
தெளிவுரை : இது கண்டோர் கூற்று: பூணூல் தங்கிய மார்பை உடைய ஞானசம்பந்தரது பெரிய தமிழ் வேதம் போல் மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள குன்றைக் கடந்ததும் வயலில் வேலை செய்யும் பெண்களைக் கண்டு நீண்ட வளைகளில் வாழும் நண்டுகள் ஓடியதால் ஆடிய நெல்பயிர் முத்துக்களை உதிர்க்கும் மேகம் படிகின்ற சோலைகள் சூழ்ந்த வள வயலைக் காண்பீர்கள்.
1246. வயலார் மருகல் பதிதன்னில்,
வாளர வாற்கடியுண்(டு)
அயலா விழுந்த அவனுக்
கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர்
தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னைனென்னத்
தோன்றிடும் புண்ணியமே.
தெளிவுரை : வயல் சூழ்ந்த திருமருகல் என்னும் ஊரில், பாம்பினால் கடியுண்டு பக்கத்தில் விழுந்தவனுக்கு இரங்கி மூர்ச்சையுற்ற மீனைப் போன்ற கரிய கண்களை உடையவளது துன்பத்தைத் தீர்த்த கருணை வெள்ள புயலார் தரு கையினான் ஆகிய ஞானசம்பந்தர் என்று சொல்லத் தோன்றிடும் புண்ணியமே.
1247. புண்ணிய நாடு புகுவதற்
காகக் புலனடக்கி,
எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல்
லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம்
பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத்
தானைக் கருதுவதே.
தெளிவுரை : புண்ணிய நாடாகிய முத்தியில் புக எல்லாரும் புலன் அடக்குதல் ஆகியன செய்வர். யானோ ஞான சம்பந்தனைக் கருதுவதே செய்வன் என்பது கருத்து. தேவருலகு (வீடு பேற்றிற்குரிய இடம்) புகுவதற்காக ஐம்புலன்களையும் அடக்கி, எண்ணிய செய்தொழில் நிற்பது எல்லாரும் இன்றி யான் எனக்கு நண்ணிய செய்தொழில் ஞானசம்பந்தனைக் கண்ணில் நீர் பெருகுமாறு வழிபடும் உயர்ந்த மாடங்களை உடைய சீகாழிப் பெருமானைக் கருதுவதுதான் என்க.
1248. கருதத் தவவருள் ஈந்தருள்
ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே!
கலங்கல் இவருடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன்;
நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பரு
ளேறி மறைகுவனே.
தெளிவுரை : இடைச் சுரத்துப் படை கண்டு தலைவன் கூறுதல்.
கருதத் தவ அருள் ஈந்தருள் ஞானசம்பந்தரது சீகாழியில், சுவையுள்ள கிளிப்பேச்சு மாதே ! கலங்காதே. இவர்களுடைய உடம்பை அழிப்பேன். உன்னுடைய அண்ணன்மார் படையாக இருந்தால், மருத மரக்கிளைகள் நெருங்கிய சோலையில் ஏறி மறைந்து கொள்வேன். உன் சுற்றத்தார் துன்பப்படக் கூடாதல்லவா?
1249. மறைமுழங் குங்குழ லார்கலி
காட்ட, வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி
ழாகரன் பற்றலர்போல
துறைமுழங் குங்கரி சீறி,
மடங்கள் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற்
சால வரும்பழியே.
தெளிவுரை : தோழி தலைவனை இரவு வரல் விலக்கல்.
தமிழ் வேதம் முழங்கும் குழல் போன்ற கலி காட்ட வயலில் வேலை செய்யும் கடைஞர் பறை முழங்குகின்ற சீகாழித் தமிழாகரனாகிய திருஞான சம்பந்தரின் பகைவர் போல, நீ வரும் வழியில் முழங்குகின்ற ஆண் யானை சீறி சிங்கமானது பளிங்குப் பாறையினுள் முழங்கும் தன்மையது. நீ வருவது மிகவும் பெரும் பழிக்கு உரியது. ஆகவே, நீ இரவில் வரவேண்டா என்பதாம்.
1250. பழிக்கே தகுகின்றது இன்றுஇப்
பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக்
கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக்
கலமரு மோவியர்தம்
கிழிக்கே தருமுரு வத்திவள்
வாடிடக் கீள்கின்றதே.
தெளிவுரை : பிறை கண்டு கலங்கிய தலைவியின் நிலையைத் தோழி கூறுதல்.
பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறையானது பல்கதிர் விழுந்த வழிக்கே திகழ்தரு செவ்வானத்தை சீகாழி வீரராகிய ஞானசம்பந்தர் என்னும் மொழிக்கே விரும்பி, அவருடைய தாமரை மலர் மாலையைப் பெறுதற்கு இவள் மனம் சுழலும். சித்திரக்காரர் துணிப் படத்துக்குத் தரும் உருவத்திவள் வாடிட (பிறை) அறைத் துண்டமாகியது.
1251. கீளரிக் குன்றத் தரவ
முமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டன
ரென்பர் வயற்புகலித்
தாளரிக் கும்அரி யானருள்
பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ்
நாட்டுள்ள குண்டர்களே.
தெளிவுரை : கீள் அரிக்குன்றத்து அரவம் உமிழ்ந்த விளங்குகின்ற ஒளியை உடைய மணியின் ஒளியையும் அரித்துச் செல்லும் வைகைக் கரையில் சமணரகள் மாண்டனர் என்று சொல்லும் வயல்களை உடைய சீகாழியின் அரிய தாளுடைய சிவபெருமானது அருள் பெற்ற பரசமயக் கோளரியாகிய ஞானசம்பந்தருக்குச் சமணர்கள் நிகராவரோ? ஆகார் என்றபடி.
1252. குண்டகழ் சூழ்தரு கொச்சைத்
தலைவன்றன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வல்லியன்
னீர்!வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை
வீழ்செங் கலங்கலொடும்
புண்தகக் கேழல் புகுந்ததுண்
டோ?நுங்கள் பூம்புனத்தே.
தெளிவுரை : இது பன்றி வினாதல் என்னும் துறை.
ஆழமுள்ள அகழி சூழ்ந்துள்ள சீகாழித் தலைவனாகிய ஞானசம்பந்தரது குன்றகம் சேர் வண்டுகள் மொய்க்கின்ற மென்மலர் வல்லியாகிய மன்மதன் வில்லைப் போன்ற மாதர்களே ! வில் போன்ற புருவத்தை உடைய முள்வாளிப் படப்புடை வீழ்கின்ற இரத்தத்தோடும் புண்ணை உடைய பன்றி இங்கு வந்ததுண்டோ ? உங்கள் பூம்புனத்தே வந்ததுண்டோ என்று தலைவன்  வினவினான்.
1253. புனத்தெழு கைம்மதக் குன்றம
தாயங்கொர் புன்கலையாய்,
வனத்தெழு சந்தனப் பைந்தழை
யாய்,வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம்
பந்தன்வண் கொஞ்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாயல்கு
லாய்த்திவர் கட்டுரையே.
தெளிவுரை : பாங்கி தலைவனை நகுதல்: புனத்தெழு யானைக் கூட்டத்துள் ஒரு சிறுமான், வனத்தெழு சந்தனப் பைந்தழையாய் வந்து அடியேன் மனத்தெழு பொற்கழல் ஞானசம்பந்தன் வண் கொச்சை (சீகாழி) யன்னாள் கனத்தெழு. கொங்கைகளாய் அல்குலாயிற்று இவர் கட்டுரை.
1254. கட்டது வேகொண்டு கள்ளுண்டு,
நுங்கைக ளாற்துணங்கை
இட்டது வேயன்றி, யெட்டனைத்
தானிவ ளுள்ளுறுநோய்
விட்டது வே?யன்றி வெங்குரு
நாதன்றன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின்,
பேதை மகிழ்வுறவே.
தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்: (உள்ளத்தைச் சொல்லிவிடுதல்)
கட்டதுவே கண்டு கள்ளுண்டு நுங்கைகளாற் பசலை பூத்துவிட்டது. அதன்றியும் எள்ளளவும் இவள் கொண்டுள்ள காதல் நோய் விட்டதுவேயன்றி சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தரது தாமரையின் தேன் பொருந்திய மலர்மாலையை இவள் மகிழ்வதற்காகச் சூட்டுங்கள். அப்போதுதான் இவள் தெளிவாள் என்றபடி.
1255. உறவும், பொருளுமொண் போகமுங்
கல்வியுங் கல்வியுற்ற
துறவும், துறவிப் பயனு
மெனக்குச் சுழிந்தபுனல்
புறவும், பொழிலும் பொழில்சூழ்
பொதும்புந் ததும்பும்வண்டின்
நறவும், பொழிலெழிற் காழியர்
கோன்திரு நாமங்களே.
தெளிவுரை : உறவும் பொருளும் ஒண்போகமும் கல்வியும் கல்வியுற்ற துறவும் துறவிப்பயனும் எனக்குச் சுழிந்த புனல் முல்லை நிலமும் சோலையும் சூழ்ந்த பொதும்பும் ததும்பும் வண்டும் தேன் பொருந்திய பொழில் சூழ்ந்த சீகாழிக் கோனாகிய ஞானசம்பந்தரின் திருநாமங்களே.
1256. நாமுகந் தேத்திய ஞானசம்
பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல்
இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத்
தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின்
ரார்த்தன காரினமே.
தெளிவுரை : இது கார்ப்பருவங்கண்டு தலைவி இரங்கல் என்னும் துறை.
நாம் மனமுவந்து போற்றிய ஞானசம்பந்தரின் பகைவரைப்போலக் கொடிய கணைகளைச் செலுத்தி வலிய மதில்கள் இடிபடுமாறு காக்கும் நெருப்பைப் போலச் செங்காந்தள் மலர்கள் தோன்ற முல்லை அரும்புகள் மலர, சோலைகளில் மலர்களின் முகத்தைக் காட்டி நின்று மேகக் கூட்டங்கள் ஆரவாரம் செய்தன. கார்ப்பருவத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் இன்னும் வரவில்லையே என்று தலைவி ஏங்குகின்றாள்.
1257. கார்அங்கு அணைபொழிற்
காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்
சீர்அங்கு அணைநற் பெருமணந்
தன்னில் சிவபுரத்து,
வார்அங்கு அணைகொங்கை
மாதொடும் புக்குறும் போது,வந்தார்
ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல்
லால்,அவ் அரும்பதமே.
தெளிவுரை : ஞானசம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் முத்தியடைந்த செய்தி சொல்லப்படுகிறது.
மேகங்கள் மழைபொழியும் வளமிக்க சீகாழிக் கவுணியர் தீபனாகிய ஞானசம்பந்தர் சிறப்புடன் செய்து கொண்ட பெருமணத்தில் சிவபுரத்துள் மனையாளுடன் புகுந்தபோது வீடு பேற்றை அடையாமல் எவர் எஞ்சியிருந்தார்? ஒருவருமில்லை. வந்தவர் அனைவரும் வீடுபேற்றை அடைந்தனர் என்க.
1258. அரும்பத மாக்கு மடயரொ(டு)
அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந்
திறைஞ்சுமின், பேரரவம்
வரும்ப நான்மறைக் காழித்
தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென்
னானைதன் தாளிணையே.
தெளிவுரை : அரிய சொற்களைப் பேசும் அடியார்களோடு வணங்கியவர்களுக்குரிய பெரும்பதம் அடையப் போகிறவர்களே ! வந்து துதி செய்யுங்கள். பேரொலி யோடுவரும் நான் மறைக்காழித் தலைவன் மலர்க் கமலத்து அரும்பத ஞானசம்பந்தர் என்பவரின் பாதங்களைப் பணியுங்கள்.
1259. தாளின் சரணந் தருஞ்சண்பை
நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே
புகுந்திடும், கெண்டைகளும்,
வாளுந் தொலைய மதர்த்திரு
காதி னளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி
யாவைத்த மென்னகையே.
தெளிவுரை : இது முறுவற் குறிப்புணர்தல் என்னும் துறை.
தாளின் சரணம் தரும் சீகாழி நாதராகிய ஞான சம்பந்தரின் பகைவரைப் போலக் கிழிபட்டதனால் வருந்த, குறுக்கே புகுந்திடும் கெண்டை மீன்களும் வாளும் தோற்குமாறு மதர்த்து இரு காதுகள் வரைக்கும் நீண்டு மீளும் கரிய கண்களையுடைய தலைவியின் மின்னலைப்போல் தோன்றி மறையும் மென்னகை.
1260. நகுகின்ற முல்லைநண் ணாரெரி
கண்டத்(து) அவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின
கொன்றை; விரவலரூர்
புகுகின்ற தீயெனப் பூத்தன
தோன்றி; புறவமன்கைத்
தகுகின்ற கோடல்கள்; அன்பரின்
றெய்துவர் கார்மயிலே.
தெளிவுரை : பருவங்கண்டு, தலைவர் வருவாரென்று தோழி கூறியது.
கார்மயில் போன்ற தலைவியே ! அன்பர் இன்று எய்துவர் எனமுடிக்க. முல்லை நகுகின்றன. (மலர்ந்திருக்கின்றன.) கொன்றை மலர்கள் பொன்னைப் போல் விளங்கின. நீலகண்டர் திரிபுரங்களை எரித்தபோது உண்டான தீயைப் போல் செங்காந்தள்கள் பூத்தன. சீகாழி ஞானசம்பந்தரின் கை போன்று காந்தள்கள் மலர்ந்தன. இவை யாவும் கார்காலத்தின் அறிகுறிகள் என்பதாம்.
1261. மயிலேந் தியவள்ளல் தன்னை
யளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாத
னுலகத்(து) எதிர்பவர்யார்?
குயிலேந் தியபொழிற் கொங்கேந்
தியகொம்பி னம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள
னாய்வந்த அண்ணலுக்கே.
தெளிவுரை : பாங்கன் தலைவனை வியத்தல். மயிலேந்திய வள்ளல் தன்னை அளிப்ப, மதிபுணர்ந்த மதில்களை உடைய சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தருக்கு முன்னிற்பவர் யாருளர்? குயில்கள் பொருந்திய சோலையில் தலைவியின் வேலைப் போலும் கூரிய கண்களைக் கண்டு எப்படித் திரும்பினாய்? அவளைக் கண்டு மீண்டு வந்த வலிமையை உடைய தலைவனை ஒப்பவர் யார்?
1262. அண்ணல் மணிவளைத் தோளரு
காசனி சண்பையன்ன
பெண்ணி னமிர்தநல் லாள்குழல்
நாற்றம் பெடையொடுபூஞ்
சுண்ணந் துதைந்தவண் டே!கண்ட
துண்டுகொல்? தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழிலெழிற் காசினி
பூத்தமென் தாதுகளே.
தெளிவுரை : தலைவன் தலைவியைப் புகழ்தல்.
பெருமை பொருந்திய மணிவளைத் தோள்களை உடையவரும் சமணர்களை வென்றவருமான ஞான சம்பந்தரது சீகாழி என்று சொல்லுமாறு பெண்களில் அமிர்தம் போன்ற தலைவியின் கூந்தலில் உள்ள மணத்தை வேறு மலர்த் தாதுகளில் வண்டே நீ கண்டதுண்டோ? வண்டே ! நீ குளிர்ந்த பொழில்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாயே, இது போன்ற மணத்தைக் கண்டாயா என்று வியந்தவாறு.
1263. தாதுகல் தோய்த்தநஞ் சந்தாந்
யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து
வாளா துலுக்குகின்றீர்;
பேதியிற் புத்தர்கள்! வம்மின்;
புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றும் கழுத்திறம்
பாடிக் களித்திடவே.
தெளிவுரை : காவிக் கல் தோய்த்த ஆடை யணிந்து சந்நியாசி வேடம் பூண்டு கமண்டலத்தை உறியில் வைத்து வீணாய் ஆடுகின்றீர். போதி மரத்தடியில் உள்ள புத்தர்களே ! சீகாழி சம்பந்தப் பெருமான் நாட்டியுள்ள கழுத்திறம் பாடிக் களித்திட வாருங்கள்.
1264. களியுறு தேன்தார்க் கவுணியர்
தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகலிழுந்
தால்,விரை யார்கமலத்(து)
அளியுறு மென்மலர்த் தாதளைந்(து)
ஆழி யழைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட
மானைத் துவளவிப்பதே.
தெளிவுரை : தோழி தலைவியின் நிலைகண்டு இரங்குதல்.
தேன் பொருந்திய மாலையணிந்த கவுணியர் குல தீபனாகிய ஞானசம்பந்தரது பகைவர்களைப் போல் வெளியுறு ஞாலம் பகல் இழந்தால் விரையார் கமலத்து அளியுறு மென்மலர் தாது அளைந்து ஆழி அமைப்பவரும் மழைத்துளியுடன் வரும் வாடைக் காற்று மடமான் போன்ற தலைவியை வாடச் செய்கிறது.
1265. தேறும் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துச் சிறந்துவந்துள்
ஊறு மமிர்தைப் பருகிட்
டெழுவதொ ருட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை
வாழ்வித் தவன்கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா
கரனென்னும் நன்னிதியே.
தெளிவுரை : தெளிந்த நீரால் சூழப்பட்ட திருத்தில்லைச் சிற்றம்பலத்துள் ஊறும் அமிர்தைப் பருகிட்டு எழுவதோர் உட்களிப்புக் கூறும் வழி மொழிந்து என்னை வாழ்வித்தவன் கொழுந்தேன் நாறும் மலர்மாலை அணிந்த தமிழாகரன் என்னும் ஞானசம்பந்த நன்னிதியே.
1266. நிதியுறு வாரற னின்பம்வீ
டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர்
கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச
லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம்
பணிந்தனள் மன்னனையே.
தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்:
பொருள் பெற்றவர்கள் அறம், இன்பம், வீடு இவைகளைப் பெறுவர் என்று வேதம் துதியறு நீள் வயல் சீகாழிப் பெருமானைத் தொழாதவர்களைப் போல வருந்திக் கிடக்க, நதியுறு நீர் தெளித்து அஞ்சாதே என்று சொன்னவர் தலைவர் அல்லவா என்று சந்திரன்போன்று ஒளியுள்ள நெற்றியை உடையவளாகிய தலைவி மன்னன் பாதத்தைப் பணிந்தனள்.
1267. மன்னங் கனை!செந் தமிழா
கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர்
வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகையெடுத்
தாற்கிவள் பூணழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும்
பாலுமவ் வேந்தலுக்கே.
தெளிவுரை : களிறு தரு புணர்ச்சி கூறி அறத்தொடு நிற்றல்.
மன்னங்களை செந்தமிழ் ஆகரன் மலையில் ஒருவர் (தலைவர்) வந்து, அன்னம் போன்றவர்களே ! பயப்படாதீர்கள் என்று கூறித் தாக்கவந்த யானையைத் தடுத்து நிறுத்தி, பொன்னைப்போன்ற தலைவி கலங்காதபடி எடுத்தவருக்கு இவள் (தலைவி) மார்பகப் பூண் அழுந்தி இப்போதும் அந்த ஏந்தலுக்குப் பெரும் தழும்புள்ளது.
1268. ஏந்தும் உலகுறு வீரெழில்
நீலநக் கற்குமின்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும்
தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத்
துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானையெப்
போதும் விரும்புமினே.
தெளிவுரை : போகமார்ந்த என்ற திருப்பதிகத்தை எழுதிய ஏட்டைச் சம்பந்தப் பெருமான் எரியிலிட, ஏடு வேகாதிருந்தது.
ஏந்தும் உலகுறுவீர் ! எழில் நீல நக்கற்கும், இன்பப் பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனை, போக மார்ந்த என்று எழுதப்பட்ட ஏட்டைத் தீயில் போட்டபோது அதை எரியாமல் செய்தவனை, மதுரையில் கூன் பாண்டியனது வெப்பு நோயைத் தீர்த்தவனை, எப்போதும் விரும்புங்கள். இவ்விருவரும் ஞானசம்பந்தருடன் சோதியில் கலந்தவர்கள்.
1269. விரும்பும் புதல்வனை மெய்யரிந்
தாக்கிய வின்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண்
டருளென் றடிபணிந்த
இரும்பின் சுடர்களிற் றான்சிறுத்
தொண்டனை யேத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன்
பாதம் தொடர்வெளிதே.
தெளிவுரை : சிறுத்தொண்ட நாயனார் சிவபெருமான் கோரியபடி தன் மகனாகிய சீராள தேவனை அரிந்து கறி சமைத்து அரும்பும் புனற் சடையாய் உண்டருள் வீராக என்று அடிபணிந்தார். அத்தகைய இரும்பின் சுடர்க்களிற்றானாகிய சிறுத்தொண்டனைப் போற்று வீராயின் வண்டு மொய்க்கும் மலர் மாலையணிந்த தமிழாகரனாகிய ஞானசம்பந்தரது திருவடியை அடைதல் எளிதாகும்.
1270. எளிவந்த வா!வெழில் பூவரை
ஞாண்,மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலு
மெங்க ளரன்துணையாங்
கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின்
ஞான வமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற்
சிறுக்கன்ற னாரருளே.
தெளிவுரை : அருள் எளிவந்தவாறு வியப்பு.
எழிற் பூ அரைஞாண், மணித்தார் தழங்கத் துளிவந்த கண் பிசைந்து அழுதலும் எங்கள் சிவ பெருமானது துணைவியாகிய உமாதேவியார் பொற் கிண்ணத்தில் ஞான அமிர்து அளித்த, வண்டுகள் மொய்க்கும் தலைமயிரும் இன்சொல்லும் உடைய சிறு குழந்தைதன் ஆர் அருளே. ஞானசம்பந்தர் ஞானப்பாலுண்ட செய்தி கூறப்படுகிறது.
1271. அருளுந் தமிழா கர!நின்
னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை
யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு
வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய
ரென்கண் வருவிப்பதே.
தெளிவுரை : அருளும் தமிழாகரனே ! நின் மாலையைத் தந்து என்பு அயர, சுருண்ட கூந்தலையுடைய இவளுக்குக் கொடுக்கவில்லையே ! முன்பு தொங்குகிற கையையுடைய உருளும் களிற்றினோடு ஓடியவனை அருளி அன்றே மருளின் மொழி மடவாள் பெயர் என்கண் வருவிப்பதே. முன்பு அருளியதுபோல் இப்போதும் அருள் செய்வாயாக.
1272. வருவார் உருவின் வழிவழி
வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகரச்
செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரகரம்
போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே.
தெளிவுரை : கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் வரஇயலாதவாறு மேகம் மின்னலோடு வருவதைக் கண்டு தலைவி வருந்துகின்ற காட்சி இது. உருவின் வருவார். வழிவழி வைத்த வனம் அருந்தும் திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிகட்கு ஆளாகச் செய்வான் தமிழாகரன் (ஞான சம்பந்தர்) கைகளைப் போல் சலம் வீசக்கண்டு அஞ்சாதவாறு மேகங்கள் நெருங்கி வானத்து மின்னின.
1273. மின்னார் குடுமி நெடுவெற்
பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை
சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தார்மேல்
புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு
காசனி நல்கிடவே.
தெளிவுரை : மின்னலைப் பொருந்திய சிகரங்களை உடைய திருச்செங்கோடு என்னும் மலையினை உடைய கொங்கு நாட்டில் வீழ்பனிநோய் தன்னார் வழிகெட்டு அழிந்தமை பற்றிச் சொல்லுவார்கள், இறைவனே ! மன்னார் பரிவாரத்தார் மேற்புகலும் எவர்க்கும் மிக்க நன்னாவலர் பெருமானாகிய ஞானசம்பந்தர் அருகாசனி நல்கியதால் என்பர்.
1274. நல்கென் றடியி னிணைபணி
யார்;சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில்
லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு)
ஒல்கு முடம்பின ராய்,வழி
தேடிட் டிடறிமுட்டிப்
பில்கு மிடமறி யார்கெடு
வாருறு பேய்த்தனமே.
தெளிவுரை : சீகாழிப் பெருமானாகிய ஞானசம்பந்தப் பெருமானைத் தருவாயாக என்று அவரது இணையடிகளைப் பணியார். அவருடைய மிகுதிப்படும் பெரும் புகழைப் பாடமுடியாதவர் சிலர் பாழ்க்கு இறைத்திட்டுத் தளரும் உடம்பினராய் வழிதேடிக் கொண்டு இடறி, முட்டி வெளிப்படும் இடம் அறியாதவர்கள் உறு பேய்த்தனமே கெடுவர்.
1275. தனமே தருபுகழ்ச் சைவ
சிகாமணி தன்னருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி
யே!மலர் மேலிருந்த
அனமே! யமிர்தக் குமுதச்செவ்
வாயுங்க ளாயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற்
சோலையு ளெய்துகவே.
தெளிவுரை : தலைவன் தலைமகளை ஆயத்து உய்த்தல்.
தனமே தரும் புகழ்ச் சைவ சிகாமணியாகிய ஞானசம்பந்தருடைய அருள் போல் மனமே புகுந்த மடக்கொடியே ! (தலைவியே) மலர்மேல் இருந்த அன்னமே ! அமிர்தக் குமுதச் செவ்வாய் உங்கள் ஆயம் என்னம் இனமே பொலிய வண்டுகள் மொய்க்கின்ற சோலையுள் சென்று சேர்வாயாக.
1276. உகட்டித்து மோட்டு வராலினம்
மேதி முலையுரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை
கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி
ழாகரன் தன்னையல்லால்,
பகட்டில் பொலியினும் வேண்டேன்,
ஒருவரைப் பாடுதலே.
தெளிவுரை : துள்ளி, பெருத்தவரால் மீனின் கூட்டங்கள் எருமையின் முலையை உரிஞ்ச வயிற்றில் சொரிகின்ற பால் குளத்தை நிறைக்கின்ற கொச்சை (சீகாழி) வயத்து அரசாகிய ஞானசம்பந்தரை, பொன்தகடு திகழ்கின்ற மணிப்பூண் தமிழாகரன் தன்னை, அல்லால் யானையின் மேல் விளங்குகின்ற தன்மையைப் பெற்றாலும் வேறு ஒருவரைப் பாடுவதை விரும்ப மாட்டேன். இவர்தான் என் தெய்வம் என்கிறார்.
1277. பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.
தெளிவுரை : பாடிய செந்தமிழால் பழங்காசு பரிசில் பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம்பந்தன் நிறைந்த புகழால் நேடிய பூந்திரு நாவுக்கரசோடு எழில் திருவீழிமிழலை என்னும் தலத்தில் கூடிய கூட்டத்தினால் இக்குவலயம் உய்தி பெற்றது. இல்லையேல் பஞ்சத்தால் துன்புற்றிருக்கும் என்க.
1278. வலையத் திணிதோள் மிசைமழ
வேற்றி, மனைப்புறத்து
நிலையெத் தனைபொழு தோகண்ட(து)
ஊரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட
வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல்! முன்போல்
மலர்க திருக்கண்களே.
தெளிவுரை : தோழி வாயிலாகப் புகுந்து கூறுதல்.
தோள் வளைகளையுடைய வலிய தோள் மிசை குழந்தையைத் தூக்கிக்கொண்டு மனை புறத்து நிலை எத்தனை பொழுதோ கண்டது. அறநெறி மார்க்கங்கெட்டுத் திரிந்த சமணர்கள் குலையக் கழுவேற்றிய ஞானசம்பந்தர் திகழும் சீகாழி போன்ற தலைவி முன் போல் திருக்கண்கள் மலர வழிசெய்வாயாக என்று தோழி தலைவனிடம் தூது சென்று உரைத்தாள்.
1279. கண்ணார் திருநுத லோன்கோலக்
காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர்
கோன்பாணி நொந்திடுமென்(று)
எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன்
தாளங்க ளீயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை
யேத்தார் வருந்துவதே.
தெளிவுரை : நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோலக்கா என்னும் பதியில் கைத்தாளத்தால் பண்ணோடு பாடிய ஞானசம்பந்தர் கை வருந்துமென்று பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்ட பொன் தாளங்கள் கொடுக்கக் கண்டும், இவ்வுலகத்தவருள் சிலர் சண்பை நாதனை ஏத்தாவிடில் வருந்துவார்கள்.
1280. வருந்துங் கொலாங்கழல், மண்மிசை
யேகிடில் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம்
பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன்
காண்;புண ரித்திகழ்நஞ்(சு)
அருந்தும் பிரான்நம் மரத்துறை
மேய வரும்பொருளே.
தெளிவுரை : மண்ணில் நடந்து சென்றால், கழல் அணிந்த பாதங்கள் வருந்தும் என்று மென்தார்த் திருந்தும் புகழ்ச் சண்பை ஞானசம்பந்தர்க்குச் சீர்மணிகள் பொருந்தும் சிவிகை (பல்லக்கு)யை, புணரித் திகழ் நஞ்சருந்தும் பிரானும் (நீலகண்டன்) நம் திரு அரத்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் அரும்பொருளுமாகிய இறைவன் கொடுத்தனன்.
1281. பொருளென வென்னைத்தன் பொற்கழல்
காட்டிப் புகுந்தெனக்கிங்(கு)
அருளிய சீர்த்திரு ஞானசம்
பந்த னருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை
விட்டு விழுநிதியின்
திரளினை யாதரித் தால்நன்று
சாலவென் சிந்தனைக்கே.
தெளிவுரை : பொருள் வயின் பிரிய எண்ணிய நெஞ்சிற்குத் தலைவன் கூறியது.
என்னை, ஒரு பொருளாக மதித்து, தன் பொற்கழலைக் காட்டி, புகுந்தெனக்கு இங்கு அருளிய சீர்த்திரு ஞானசம்பந்தப் பெருமான் பகைவர்போல அஞ்சிய மானின் மென்நோக்கியை (தலைவியை) விட்டுச் சிறந்த நிதியின் திரளினை ஆதரித்துச் செல்ல நினைத்தது சரியல்ல என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறுகின்றான்.
1282. சிந்தையைத் தேனைத் திருவா
வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாட லிசைத்துத்
தொலையா நிதியமெய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய
கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந்
தேகரம் நீட்டுவரே.
தெளிவுரை : சிந்தையைத் தேனைத் திருவாவடுதுறையுள் திகழும் எந்தையைப் பாடல்களால் துதித்து, குறையாத செல்வத்தைப் பெற்று, தந்தையை வேள்வி செய்யுமாறு ஏவிய ஞானசம்பந்தரது பாதங்களில் அன்பு கொள்ளாதவர் நிந்தையைப் பெற்று, எப்போதும் பிச்சை யெடுக்க கையை நீட்டுவர் !
1283. நீட்டுவ ரோதத்தொ டேறிய
சங்கம் நெகுமுளரித்
தோடுவெண் முத்தம் சொரிசண்பை
நாதன் தொழாதவரின்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு)
உண்ணீ ருணக்குழித்த
காட்டுவ ரூறல் பருகும்
கொலாமெம் கனங்குழையே.
தெளிவுரை : செவிலி வருந்துதல்: சங்குகள் நெகு முளரித் தோட்டு வெண்முத்தம் சொரியும் சீகாழி நாதனைத் தொழாதவர்போல வேட்டுவர், விரும்பும் தண்ணீருக்கு உப்பாகிய கடல் நீரோடு பாலைவனத்தில் உவர்ப்புச் சுவையோடு ஊறிய நீரை உண்ணக் கொடுப்பர். எம் கணங் குழை இந்த நீரையா குடிக்க வேண்டும் என்று செவிலி வருந்துகிறாள்.
1284. குழைக்கின்ற கொன்றைபொன் போல
மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்ட லியம்புஒன்
றிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண்
சண்பைப் பிரான்புறவத்(து)
இழைக்கின்ற கூடல் முடயஎண்
ணாத இளங்கொடிக்கே.
தெளிவுரை : தளிர்களை உடைய கொன்றை மரம் பொன் போல மலர, உங்கள் கூட்ட மெல்லாம் அழைக்கின்ற மேகம், உங்களை விட்டுப் பிரிந்துள்ள தலைவர் வருவது தடைபடுகிறது என்று கூறுகிறது என்று அஞ்சி ஒண் சண்பைப் பிரான் சீகாழியில் இழைக்கின்ற கூடல் இளங்கொடிக்கு (தலைவிக்கு) முடியவில்லை போலும். கூடல் இழைத்தல் பண்டைய வழக்கு. வட்டம் கூடினால் காரியம் கைகூடும் என்பதாம்.
1285. கொடித்தே ரவுணர் குழாமன
லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா
சனியை யணியிழையார்
முடித்தேர் கமலர் கவர்வான்,
முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை
கோத்து வளைத்தனரே.
தெளிவுரை : திரிபுராதிகளைத் தீயிட்டுக் கொளுத்திய குன்ற வில்லியாகிய சிவபெருமானது அடியைத் தேருகின்ற கருத்தினை உடைய அருகாசனியாகிய ஞானசம் பந்தரை அணியிழையார் (மாதர்கள்) முடித்தேர் கமலம் கவரும் பொருட்டு, வளைந்த புருவ வில்லை வடித்தேர் கண்களாகிய அம்புகளைக் கோத்து வளைத்தனர்.
1286. வளைபடு தண்கடற் கொச்சை
வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன
லூரன்தன் நீரில்அம்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத்
தம்பலம் நாறுமிந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன்
வாயின் மணிமுத்தமே.
தெளிவுரை : தலைவி காமக் கிழத்தியைப் பழித்தல். தன் மகனைக் காமக்கிழத்தி முத்தமிட்டாள் என்று கூறுகிறாள். சங்குகள் உண்டாகின்ற குளிர்ந்த கடல் சூழ்ந்த சீகாழிப் பெருமான் மலர்க்கழற்கு வணங்குகின்ற உயர்ந்த தலை வார்புனல் ஊரன் (தலைவன்) தன் நீரில் அங்கு வளைபடு கண்ணியர் (பரத்தையர்) தம் பொதுத் தம்பலம் நாறும் வாயினால் இந்தக் கால் சிலம்பு ஒலிக்கின்ற என் மகனை முத்தமிட்டாள்.
1287. முத்தன வெண்ணகை யார்மயல்
மாற்றி, முறைவழுவா(து)
எத்தனை காலம்நின்று ஏத்து
மவரினு மென்பணிந்த
பித்தனை, யெங்கள் பிரானை,
யணைவ தெளிதுகண்டீர்;
அத்தனை, ஞானசம் பந்தனைப்
பாதம் அடைந்தவர்க்கே.
தெளிவுரை : திருஞானசம்பந்தர் திருவடியை அடைந்தவர்கள் சிவ பெருமான் திருவடியைச் சேர்தல் எளிது என்க.
முத்தன்ன வெண்ணகையார் மயல் மாற்றி, முறை வழுவாது எத்தனை காலம் நின்று ஏத்துபவர்களைக் காட்டிலும், எலும்பு அணிந்த பித்தனாகிய எங்கள் சிவபெருமானை அணைவது எளிது. எங்ஙனமெனில் அத்தனாகிய ஞான சம்பந்தனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு இது எளிது எனக்கூட்டுக. ஞானசம்பந்தரை வழிபட்டால் சிவபெருமானை அடையலாம் என்கிறார்.
1288. அடைத்து மாமறைக் காடர்தம்
கோயிற்கதவினை அன்(று)
உடைத்தது பாணன்தன் யாழி
னொலியை; யுரகவிடம்
துடைத்து; தோணி புரத்துக்
கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற்
றரசு பணித்திடவே.
தெளிவுரை : ஞானசம்பந்தர் திருமறைக் காட்டில் (வேதாரண்யத்தில்) திறந்து கிடந்த கோயிற் கதவைப் பதிகம் பாடி மூடினார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழின் ஒலியை யாழ்முரி என்னும் பாடலால் உடைத்தார். வணிகனைத் தீண்டிய பாம்பின் விடத்தை இறக்கினார். சீகாழிக்கு இறைவன் சுடர் ஒளியை அளித்தார். திருநள்ளாற்று இறைவனுக்குத் தண்மையைப் படைத்தார்.
1289. பணிபடு நுண்ணிடை பாதம்
பொறாபல காதமென்று
தணிபடு மின்சொற்க ளால்தவிர்த்
தேற்குத் தழலுமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானடம்
பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென்
னோவந்து தோன்றியதே.
தெளிவுரை : தலைவன் கூற்று: பணிவுள்ள நுண்ணிடை யாளாகிய தலைவியின் பாதம் பொறா பலகாதம் என்று குளிர்ந்த சொற்களைக் கூறித் தவிர்த்த எனக்கு, நெருப்பைக் கக்குகின்ற காட்டில் மணிகள் உண்டாகின்ற பொற்கழல்களை உடைய ஞானசம்பந்தரது பகைவர்களைப்போலத் துணிக்கும் தன்மை உள்ள வேல்போன்ற கண்களையுடைய தலைவி இங்கு எங்ஙனம் வந்து தோன்றினாள்?
1290. தோன்றல்தன் னோடுட னேகிய
சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேயிந்த வேந்திழை
யார் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா
கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல
நாடு பொருந்துவரே.
தெளிவுரை : செவிலிக்குக் கண்டோர் கூறுதல்.
தலைவனோடு உடன்சென்ற அழகிய தலைவியைப் பெற்றவரே ! இந்தத் தம்பதிகள் இந்நேரம் மேலான தவத்தை உடையவர் சூழும் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரின் வடவரையே போன்ற பொன் மாடங்களை உடைய சீகாழி நாடு சேர்ந்திருப்பர்.
1291. பொருந்திய ஞானத் தமிழா
கரன்பதி, பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக்
கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையிற்
காகூ கழுமலமென்(று)
இருந்திட வாமென்று வானவ
ராகி யியங்கியதே.
தெளிவுரை : பொருந்திடு திருஞானசம்பந்தர் பதி பொற் புரிசை திருந்திய சீகாழிக்கு இறைவன் திருவருளால் கருந்தடம் நீர் எழுகாலையில் காகூ கழுமலம் என்று இருந்திடவாம் என்று வானவராகி இயங்கியது.
பெரு ஊழிக்காலத்தில் சீகாழி மட்டும் நிலைத்திருந்தது என்கிறார்.
1292. இயலா தனபல சிந்தைய ராயிய
லுங்கொலென்று
முயலா தனவே முயன்றுவன்
மோகச் சுழியழுந்திச்
செயலார் வரைமதிற் காழியர்
கோன்திரு நாமங்களுக்(கு)
அயலா ரெனப்பல காலங்கள்
போக்குவ ராதர்களே.
தெளிவுரை : இயலாதன பல சிந்தையராய், இயலுங்கொல் என்று முயலாதனவே முயன்று வன்மோகச் சுழியழுந்தி, செயலார் வரை மதில்களை யுடைய சீகாழித் தலைவராகிய ஞானசம்பந்தர் என்னும் பெயரைப் போற்றாதவர்களாகிய அறிவற்றவர்கள் பலகாலம் வீணில் போக்குவர்.
1293. ஆதர வும்,பயப் பும்மிவ
ளெய்தின ளென்றபலார்
மாத ரவஞ்சொல்லி யென்னை
நகுவது! மாமறையின்
ஓதர வம்பொலி காழித்
தமிழா கரனொடன்றே
தீதர வம்பட வன்னையென்
னோபல செப்புவதே.
தெளிவுரை : தலைவி கூற்று: அன்பும் பசலையும் இவள் எய்தினள் என்று அயல்மாதர்கள் வீண் பழி மொழிகளைக் கூறி என்னைப் பார்த்து வேதங்களை ஒதுகின்ற முழக்கம் மிகுகின்ற சீகாழித் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரோடு சேர்த்துச் சிரிப்பதாகும். தீது ஆரவாரம் பட அன்னை பல சொல்வது ஏன்?
1294. செப்பிய வென்ன தவம்முயன்
ரேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா
கரனை, யுணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி யேத்தும்
படிதக றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை
சூழ்தரு மண்மிடையே.
தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லும்படியாக, தவம் செய்ய முயலவில்லை. செந்தமிழால் ஒப்புடை மாலைத் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரை உணர்வுடையோர் கல்வியறிவு உடையவர்களுடைய மொழிகளைக் கொண்டு துதிக்கும்படி கதறிட்டு வரமற்படு தொல்லைக் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் வாழ்வது எங்ஙனம்?
1295. மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே.
தெளிவுரை : இந்த நிலஉலகத்தில் சிறந்து விளங்குகின்ற சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தர் வாதில் வல்ல சமணர்களை வென்று கழுவில் ஏறச் செய்தார். எம் பாசபந்த தொடக்கு அறும்படி செய்தார். எனக்கு அவரே புகலிடம். தமிழாகரனாகிய அந்தக் கற்பகத்தை, மாலையணிந்த கவுணியர் தீபனைச் சேர்ந்தனம்.
1296. சேரும் புகழ்த்திரு ஞானசம்
பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல்
லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமுடற் ராயரு
ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு
மாலும் பிரமனுமே.
தெளிவுரை : சேரும் புகழ்த்திரு ஞானசம்பந்தரை யான் உரைத்த பேரும் தமிழ்ப்பா இவை வல்லவர் பெற்ற இன்புலகம் நஞ்சினால் கருமை யடைந்த கண்டத்தை உடையவனே ! அருள் செய்வாயாக என்று நீரும் மலரும் கொண்டு திருமாலும் பிரமனும் கைதொழுவர்.
1297. பிரமா புரம்வெங் குரு,சண்பை,
தோணி, புகலி,கொச்சை
சிரமார் புரம்,நற் புறவந்,
தராய்,காழி, வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம்
பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலர் பன்னிரு
நாமமிப் பாரகத்தே.
தெளிவுரை : இப்பாடலின்கண் சீகாழிப் பதியின் பன்னிரு திருப்பெயர்களும் உரைக்கப்பெற்றன. 1. பிரமாபுரம், 2. வெங்குரு, 3. சண்பை, 4. தோணிபுரம், 5. புகலி, 6. கொச்சைவயம், 7. சிரபுரம், 8. புறவம், 9. பூந்தராய், 10. சீகாழி, 11. வேணுபுரம், 12. கழுமலம் ஆகிய இவை திருஞானசம்பந்தரின் பதிக்கு இவ்வுலகத்தில் பன்னிரண்டு பெயர்கள் உள்ளன.
வெண்பா
1298. பராகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும்
ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின்
தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள்.
தெளிவுரை : மிகுதியான துன்பங்களைக் கடந்து அமரரால் பணியும் சிறப்பு பெற்றாலும், கார் அகிலின் தூமம் கமழ் மாடங்களையுடைய தோணி புரத் தலைவனாகிய ஞானசம்பந்தரது நாமம் செவிக்கு இசையாநாள் இன்னாது என்று கூட்டுக. ஞானசம்பந்தரது நாமங்களை ஓதினால் நற்கதி பெறலாம் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
35. ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)
சண்பை என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. ஆளுடையபிள்ளையார் தோன்றியருளிய சண்பை என்னும் சிவப்பதியினைக் கட்டளைக் கலித்துறையாகிய திருவிருத்தத்தால் போற்றுவது இந் நூலாதலின் ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்று பெயர் பெறுவதாயிற்று.
திருஞானசம்பந்தர் இளம் பருவத்திலேயே உமாதேவியார் அளித்த ஞானப்பாலை உண்டு சிவஞானம் பெற்றதும், தன் கணவன் பாம்பு தீண்டி இறந்தமை கண்டு துன்புற்றழுத தோகை ஒருத்தியின் துன்பம் நீங்க நஞ்சு தீர்த்த திருப்பதிகத்தைப் பாடியருளியதும், பாலை நிலமாக உருத்திரிந்த திருநனிப்பள்ளியை நெய்தல் நிலமாக வளம் பொருந்தப் பாடியதும்,
உயிர்த் தொகைகள் பிறவித் துன்பம் நீங்கி, இன்புறுமாறு வினையினைப் போக்கும் இறைவன் அடிக்கே தமிழ்மாலைகளைப் புனைந்து போற்றியதும், திருமறைக்காட்டில் திருக்கதவு அடைக்கப் பாடியதும், வைகை ஆற்றில் ஏடு எதிரேறிச் செல்லுமாறு திருப்பதிகம் பாடி சமணர்களை வென்றதும், திருநல்லூர் பெருமணத்தில் வாழ்க்கைத் துணைவியொடு ஒளியில் கலந்து மறைந்ததுமாகிய செய்திகள் இந்நூலில் இயம்பப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித்துறை
1299. பாலித் தெழில்தங்கு பாரகம்
உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித்
தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை யன்னம்
நடப்ப, வணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : அருள் பெற்று அழகு தங்கியுள்ள இந்த நிலவுலகம் உய்யவும் சமணர்கள் திகைத்து அழுந்தவும் அவதரித்தவன் யார் எனின், தெளிந்த நீர் நிறைந்த கமல மலர் களித்து அதன்மீது அன்னம் நடப்ப தெய்வ மகள் என்று சொல்லுமாறு நெற்பயிர் தலை சாய்ந்து பணிகின்ற சீகாழிக் காவலனாகிய சம்பந்தனே.
1300. கொங்குதங் குங்குஞ்சி கூடாப்
பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள்
பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த
புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : பூந்தாது தங்கிய தலை மயிர் நீண்டு வளர்வதற்கு முன்பே சிவபெருமானது இடப்பாகத்திலுள்ள உமா தேவியாரது அருள் பெற்றவன், பசுமையான அலைகள் வீசுகின்ற வங்கக்கடல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ் சங்கு தங்கும் வயல்களையுடைய சீகாழிக் காவலன் சம்பந்தனே.
1301. குவளைக் கருங்கண் கொடியிடை
துன்பந் தவிரவன்று
துவளத் தொடுவிடந் தீர்த்த
தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச்
சென்னியின் வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : குவளைக் கருங்கண்களையும் கொடி இடையையும் உடையவளது துன்பம் நீங்க, அன்று துவளத் தொடுவிடத்தை இறக்கியவனும் தேவாரப் பாடல்களைப் பாடியவனும் ஒளிவிடுகின்ற அந்தக் கொடிகளையுடைய மலைபோன்ற மாளிகைகளின் உச்சிப் பகுதியில் வெண்மையான பிறைத் திங்கள் தங்குகின்ற சீகாழிக் காவலன் சம்பந்தனே.
1302. கள்ளம் பொழில்நனி பள்ளித்
தடங்கட மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய
வித்தகன், வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ
டலாக் கயலுகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : கள்ளையும் அழகையும் உடைய சோலைகளை உடைய நனிப்பள்ளியை பெரிய பாலை நிலம் ஆக்கி, அதையே உளம் பெருகும் நெய்தல் நிலம் ஆக்கிய வித்தகன், வெண் குருகுப் புள் ஒண்தவளப் புரிசங்கொடு ஆரவாரிக்க கயல்மீன்கள் புரள, தள்ளம் தடம் புனல் சீகாழிக் காவலன் சம்பந்தனே.
இந்த 11 பாடல்களிலும் சீகாழியின் நில வளம், நீர் வளம், செல்வவளம் ஆகியவற்றைப் புகழ்ந்து பாடுகின்றார்.
1303. ஆறதே றுஞ்சடை யானருள்
மேவ வவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி
கண்டவன், மென்கிளிமாந்
தேறல்கோ தித்துறு சண்பகந்
தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : கங்கையைச் சடையில் உடையவனாகிய சிவபெருமான் அருள் பெற்ற உலகத்தவர்க்கு வெற்றியுள்ள தேவாரப் பாடல்களால் வழிகண்டவன், மென்கிளி மாம்பூவில் உள்ள தேனைக் கோதித் தூறு சண்பகம் தாவி செழுங் கமுகின் குலையின்மீது தாவும் பொழில்களையுடைய சீகாழியின் காவலன் சம்பந்தனே.
1304. அந்தமுந் தும்பிற வித்துயர்
தீர வரனடிக்கே
பந்தமுந் துந்தமிழ் செய்த
பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங்
கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : பிறவித் துன்பங்கள் நீங்க, சிவபெருமானது திருவடிகளுக்கே தளை முந்தும் தமிழ் வேதம் செய்த பராபரனும் பைந்தடந்தேன் வந்து முந்தும் சங்குகள் முத்துக்களைக் கொழிக்கும் வயல்களுக்கு அருகே சந்தன மரங்களை உடைய சோலைகள் சூழ்ந்த சீகாழியின் காவலனுமாக உள்ளவன் சம்பந்தன்.
1305. புண்டலைக் குஞ்சரப் போர்வையர்
கோயிற் புதவடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா
சனியும்பர் பம்பிமின்னுங்
கொண்டலைக் கண்டுவண்
டாடப் பெடையொடுங்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : புண்தலை யானையுரியாகிய போர்வையை உடைய இறைவன் கோயில் கொண்டிருக்கும் திருமறைக்காட்டுக் கோயில் கதவு மூடுமாறு தேவாரம் பாடியவரும், சமணர்களுக்குப் பேரிடியாய் உள்ளவரும், வானத்தில் மேகங்கள் ஒன்று கூடி மின்னியதைக் கண்டு வண்டாட, பெடையொடு கொக்கு உறங்கும் சோலைகளையும் ஆழமான அகழியையும் உடைய சீகாழியின் காவலருமாக இருப்பவர் திருஞானசம்பந்தரே.
1306. எண்டலைக் குந்தலை வன்கழல்
சூடியெ னுள்ளம்வெள்ளங்
கண்டலைப் பத்தன் கழல்தந்த
வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியி லோடும்
விரவி மிளிர்பவளம்
தண்டலைக் குங்கடற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : எட்டுத் திக்குகளுக்கும் தலைவராய் இருப்பவரும், அவரது பாதங்களைச் சூடி என் உள்ளம் வெள்ளம் கண்டு அலைப்பத் தன் பாதங்களைத் தந்தவரும் ஒளியுடைய சங்குகள் விண்டு அலைகளின் வரிசையில் ஓடும். விரவி மிளிர் பவளம் கொடிகளின் தாள்களை அலைக்கும் கடல்சூழ்ந்த சீகாழிப் பதிக்குக் காவலருமாய் இருப்பவர் திருஞானசம்பந்தரே.
1307. ஆறுமண் டப்பண்டு செஞ்சொல்
நடாத்தி யமண்முழுதும்
பாறுமண் டக்கண்டு சைவ
சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல்
தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : வைகை ஆற்றில் இவர் விட்ட ஏடுகள் எதிரேறிச் செல்லுமாறு செய்து, சமணர்கள் உடல்களைப் பருந்துகள் உண்ணுமாறு செய்த சைவ சிகாமணியாயும், (பசுமையான வயல்களில் சேறு நிறைந்திருந்தன. அவைகளில் சங்குகளும் செங்கயல்களும் இருந்தன. தேமாங்கனிகள் சிதறி அவைகளில் சாறு மண்டியிருந்தன.) அத்தகைய வயல்கள் சூழ்ந்த சீகாழிக்குக் காவலருமாய் இருப்பவர் திருஞான சம்பந்தரே.
1308. விடந்திளைக் கும்அர வல்குல்மென்
கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைத் குங்கொங்கை புல்கிய
மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி
யொல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : நச்சுப் பொருந்திய பாம்பின் படத்தைப்போல விளங்கும் அல்குலையும் மென்கூந்தலையும் பெருமணத்தின் வடந்திளைக்கும் கொங்கைகளைத் தழுவிய மன்மதன்போன்று உள்ளவரும் வளமுள்ள வாழைக் காடு திளைத்து கழுநீர் புல்கி ஒல்கிக் கரும்பு உரிஞ்சி தடம் திளைக்கும் நீர்வளமுள்ள சீர்காழிக்குக் காவலராகவும் இருப்பவர் ஞானசம்பந்தரே.
1309. பாலித்த கொங்கு குவளைகள்
ளம்பொழில் கீழ்ப்பரந்து
ஆலிப்ப ஆறதே றுங்கழ
னிச்சண்பை அந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத்
தெண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக்
கும்அர வல்குலையே.
தெளிவுரை : நில வளம் நீர் வளமிக்க சோலைகள் சூழ்ந்த சண்பை என்னும் சீகாழியானது, ஊழிக்காலத்தில் யானையை அழித்த சிவபெருமான் பணித்தவாறு விடம் பொருந்திய அரவு போன்று அல்குலையுடைய உமாதேவியாரோடு காட்சியளித்த இடமாகும். அப் பதியின் காவலன் ஞானசம்பந்தரே என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
36. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)
திருஞானசம்பந்தர் என்னும் ஆளுடைய பிள்ளையாரின் பெருமையை எடுத்து ஓதுவதாகிய இந்நூல், அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால் அமைந்ததாகலின், மூவகை மணிகளால் ஆகிய அழகிய மணிமாலை போன்று மும்மணிக்கோவை என்னும் பெயருடையதாயிற்று.
இதன்கண் முப்பது பாடல்கள் அமைந்துள்ளன. திருஞானசம்பந்தருடைய வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பாடல்களும் அவர் திருவாய் மலர்ந்து அருளிய தேவாரப் பதிகங்களின் சிறப்பினை விரித்துரைக்கும் பாடல்களும், பிள்ளையாரைக் காதலித்த தலைமகளுடைய துன்பத்தை எடுத்துரைக்கும் அகத்துறைப் பாடல்களும் இம் மும்மணிக்கோவையில் இனிது அமைந்துள்ளன.
திருச்சிற்றம்பலம்
ஆசிரியப்பா
1310. திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் மெம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன்
தெளிவுரை : பிறைச் சந்திரனோடு, சினம் மிக்க பாம்பு தங்கியுள்ள கங்கையாகிய பெரிய நதியின் விரைவாக வரும் வெள்ளத்தில், கொன்றையின் செந்நிற மலர்கள் இருகரைகளிலும் சிதறி, புதராக உள்ள எருக்கு மலர்ந்தும், முறுக்கிய சடையை உடைய சிவபெருமான் திருவருள் பெற்ற இருபிறப்பாளனாகிய ஞானசம்பந்தர்
முத்தீ வேள்வு நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன்
தெளிவுரை : முத்தீ வேள்வியும் நான்கு மறைகளும் வளர ஐவகையான வேள்வியை உயர்த்த அறுதொழிலாளன், ஏழிசை யாழை, எண்டிசை அறிய துண்டாகச் செய்யுமாறு யாழ்முரி என்னும் பதிகத்தைப் பாடிய தண்டமிழ்விரகன், சீகாழிநாடன், கவுணியர் குல தலைவன்.
மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.
தெளிவுரை : மாவடுப்போன்ற கண்களை உடைய உமாதேவியாரின் புதல்வனாகிய ஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களை விரும்பியவர்களுக்கு அல்லாமல் மற்றவர்கள் கடுந்துயர் உட்புகக் கைவிளிக்கும் இந்நெடும் பிறவிக்கடல் நீந்துவது அரிது. ஞானசம்பந்தரை வழிபடுவோர் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்கிறார்.
வெண்பா
1311. அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.
தெளிவுரை : திருமால், பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் உணர முடியாதபடி செந்தீயாய் நின்ற சிவபெருமானது சிறப்புக்களைத் தன் தலையின்மேல் தரித்த ஞான சம்பந்தரின் திருவடிகள் என் தலையின்மேல் இருக்க வேண்டுகிறேன்.
கட்டளைக் கலித்துறை
1312. என்று மடியவ ருள்ளத்
திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித்
துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக்
குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ
சிகாமணி பொன்னடியே.
தெளிவுரை : ஒண் கலியைப் பொன்றச் செய்யும் கவுணியர் குல திலகரும் சைவ சிகாமணியுமாகிய ஞான சம்பந்தரது பொன்னடிகள் என்றும் அடியவர் உள்ளத்து இருப்பன. இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித்துதிப்பன. நல்ல சங்கத்து ஒன்றும் புலவர்கள் பாடலுக்கு உரியன என்பதாம்.
ஆசிரியப்பா
1313. அடுசினக் கடகரி யதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனால் பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது
தெளிவுரை: கோபம் மிக்க மதம் பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலை உரித்த படர்ந்த சடையை உடைய சிவபெருமானது திருவருளினால் பிறந்தது, சீகாழி நகரில் வளர்ந்தது, குளக்கரையில் உமா தேவியார் அளித்த ஞானப்பாலை உணவாகப் பெற்றது.
குழகனைப் பாடிக் கோலக்காப்புக்
கழகுடைச் செம்பொன் தாளம் அவையேதீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே
தெளிவுரை : அந்த ஞானசம்பந்தர் சிவ பெருமானைப் பாடி திருக்கோலக்காவிலே புகுந்து அழகுடைச் செம்பொன் தாளம் அவையே தீர்த்தது, தாதமர் திருமருகல் பெருமானைப் பாடி மிகுந்த கலக்கத்தை அடைந்த பெண்ணின் கணவனை விடமே அடைத்தது,
அடைத்த தரசோ டிசையா அணிமறைக் காட்டுக்
குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே
ஏறிற் றத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே
பாடிற் றருமறை ஒத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாகவே
தெளிவுரை : திருநாவுக்கரசரோடு இசைந்து திருமறைக்காட்டுக் கோயில் கதவை மூடும்படி செய்தது, யானையும் குதிரையும் தவிர திருஅரத் துறையில் முத்தின் சிவிகை பெற்றுப் பாடியது, திருவோத்தூரில் ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது,
கொண்டது பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்ஆ யிரமே கண்டது
உறியோடுவீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பலகழு மிசையே
நீத்த தவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும்
தெளிவுரை : பூவிடு மதுவில் பொறிவண்டு சுற்றும் திருவாவடுதுறையில் ஆயிரம் பொன் கண்டது, உறியோடு மயிற் பீலியை ஒரு கையிற் கொள்ளும் பறித்த தலையை உடைய சமணர்களைக் கழுவேற்றி சோற்றுச் சுவையை மட்டும் அறிந்து அரன் அடி பரவும்,
தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே நினைந்த
தள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தன்இந் நானிலத் திடையே.
தெளிவுரை : தமிழ்ச் சுவை அறியாத தூண்களையே நினைந்தது, சேறு நிறைந்த கழனிகளை உடைய கொள்ளம்பூதூர் இக்கரை ஓடம் அக்கரை செலவே மிக்கவர் உடல் சம்பந்தத்தை அறுத்து உயக்கொள வல்ல திருஞானசம்பந்தர் இஞ்ஞாலத்திடையே இவ்வாறு செய்தார் என்பதாம்.
வெண்பா
1314. நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி.
தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லத்தக்க சுத்தர்கள் போய்ச் சேர்கின்ற சீர்காழித் தேவனாகிய திருஞான சம்பந்தனது பக்தர்கள் போய் வாழும் பதியானது நிலத்துக்கு மேல் ஆறு நீடு உலகத்து உச்சித் தலத்துக்கு மேலேதான் என்று சொல்வார்கள்.
கட்டளைக் கலித்துறை
1315. பதிகம் பலபாடி நீடிய
பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக்
காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக்
காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந்
தோசில வூமர்களே.
தெளிவுரை : பல பதிகங்களைப் பாடி நீடிய பிள்ளை, மழுப்படையைக் கையிலேந்திய சிவபெருமானுக்கு நெருக்கமானவன். சமணர்களுக்கு இயமன் போன்றவன். அவன் அவதரித்த சந்திரன் தவழ் உயர்ந்த மாட மாளிகைகளை உடைய சீகாழி என்றால், சில ஊமர்கள் வணங்கமாட்டார்கள். ஓதிய மரக் கிளைபோல் விழுவர். அந்தோ! அவர்கள் நிலை வருந்தத்தக்கது. (ஓதிய மரம் பருத்திருக்குமே தவிர எளிதில் ஒடிந்து போகக் கூடியது.)
ஆசிரியப்பா
தோழி அறத்தொடு நிற்றல் : அதாவது தலைவியின் காதலை நற்றாய்க்குத் தெரிவித்தல்.
1316. தவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்
தும்பர் பதணத் தம்புதந் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன்
தெளிவுரை : கவள மாளிகைத் திவளும் யானையின் கவுள்தலைக் கும்பத்து உம்பர் மேடைகளில் மேகம் தவழ்கின்ற பெருவளம் திகழும் திருவளர் சீகாழி விளங்கப் பிறந்த வளங்கொள் திருஞானசம்பந்தர்.
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து
தெளிவுரை : கருதிஅஞ் செவ்விச் சுருதி அம் சிலம்பில் (மலையில்) தேமரு தினைவளர் அழகிய தினைப்புனத்தில் மும்மதம் சொரியும் கொடிய முகத்தையுடைய ஆண் யானையின் மூரி மருப்பின் சீரிய முத்துக் கொடுஞ்சிலை வளைத்து கொடும் சரம் துரந்து (செலுத்தி),
முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கல்லது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.
தெளிவுரை : முன்னால் வந்து முயன்று அங்கு உதவி செய்த வெற்பனுக்கு அல்லாமல் வேறு ஒருவருக்குத் தேமல் படர்ந்த தலைவியை மணஞ்செய நினைப்பது நமக்கு வன் பழியாகும். இது களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.
வெண்பா
1317. பழியொன்றும் ஓராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரதந்தரம்போய் நெஞ்சே நினை.
தெளிவுரை : வர இருக்கும் பழியைக் கவனியாமல், பாயை இடுக்கி வைத்துக் கொண்டு வீணாகக் காலங்கழிக்கும் சமணர்களை வருந்தி அழியுமாறு செய்த ஞானசம்பந்தரது வண்டுகள் மொய்க்கின்ற பாதங்களை நெஞ்சே ! எப்போதும் போய் நினைப்பாயாக. அதுதான் உய்யும் வழி என்று உணர்த்துகின்றார்.
கட்டளைக் கலித்துறை
1318. நினையா தரவெய்தி மேகலை
நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுதி
யேதடஞ் சாலிவயல்
கனையா வருமேதி கன்றுக்
கிரங்கித்தன் காழ்வழிபால்
நனையா வருங்காழி மேவிய
சீர்ஞான சம்பந்தனே.
தெளிவுரை : இது தோழி கூற்று: பெரிய நெல் வயல்களில் கனைத்து வருகின்ற பெண் எருமை தன் கன்றுக்கு இரங்கி தன் கால் வழியே பால் நனைந்து வரும் சீகாழி மேவிய சீர் திருஞானசம்பந்தரே ! உன்னை நினைந்து, மிக வருந்தி, மேகலை நெகிழ, வளைகள் கழலுமாறு உள்ள இந்தத் தலைவியை அந்தோ ! ஏற்று அருள் செய்வீராக.
ஆசிரியப்பா
1319. தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத்
தாடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக
தெளிவுரை : தனம் மலிந்த தாமரையில் வாசம் செய்கின்ற திருவெனும் செல்வி விருப்பொடு திளைக்கும் கெடாத இன்பத்தோடு கூடிய பொன் மாடங்கள் நிறைந்த சீகாழி விரும்பத்தக்க அழகு பொருந்திய கவுணியர் குலத் தலைவரே ! அழகிய தோள்களை உடையவரே ! நற்றமிழ் விரகரே !
மலைமகள் புதல்வ கலைபயில் நாவநினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ
றாதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.
தெளிவுரை : உமாதேவியின் புதல்வரே ! கலைபயில் நாவினை உடையவரே ! உமது அழகிய மார்பில் தங்கிய திருநீற்றை விரும்பி வழிபடும் பேதையர் கையில் வெள்வளைகளைப் பெற்றுக் கொண்டு பசலையைக் கொடுத்தலின், பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே.
வெண்பா
1320. பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறிவியெனுந் தொஃறோணி கண்டீர் நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
தெளிவுரை : பிறவி எனும் பொல்லாத பெருங்கடலை நீந்தத் துறவி என்று சொல்லத் தக்கவரும், நிறை உலகில் பொன்மாலை மார்பன் நீர் வளமிக்க சீகாழிச் சம்பந்தரது தேவராப் பாடல்களாகிய தோலால் ஆகிய படகைக் காண்பீராக. பிறவிக் கடலைக் கடக்க தேவாரமாகிய தோணி உள்ளது என்கிறார்.
கட்டளைக் கலித்துறை
1321. ஞானந் திரளையி லேயுண்
டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல்
லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார்
கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி
மேவிய கொற்றவனே.
தெளிவுரை : ஞானப் பாலை உண்டனை என்று, நாடறிய முகிலைப்போல் விளங்குகின்ற கூந்தலையுடையவர்கள் சொல்வதற்கு முன், வண்டுக் கூட்டங்களுக்கு நீருணவைத் தருபவர் தாமரைபோன்ற பாதங்களை உடைய ஞானசம்பந்தர் என்பதாம். படைச்சால் வழியே வளைவையுடைய சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்த சீகாழி மேவிய ஞானசம்பந்தரே தருபவர் எனக் கூட்டுக.
ஆசிரியப்பா
1322. அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச்
சொரிமதக் கறிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே
தெளிவுரை : நிலவுலகம் நெரியும்படி மூங்கில்கள் ஒன்றுக்கொன்று உராய்ந்து, மதம் பொழிகின்ற ஆண் யானையின் மத்தகத்தைப் பிளந்து, இரத்தம் பெருகுமாறு சிங்கங்கள் செல்லும் படத்தையுடைய பாம்புகளின் பெயர் மாணிக்கங்கள் பிதுங்க, பிளந்த வாயையுடைய புலிகள் பிடரிடை பாயும் இடையில்,
இடையிடைச் செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையா லுந்திய கலுழிக்
கரையா றுழல்வன கரடியின் கணனே
தெளிவுரை : நிறைந்த இருள் விலகுமாறு ஆகாயத்தில் மின்னல்கள் மிக்க ஒளியோடு பாயும் மலையிலிருந்து பெருகி வரும் காட்டாற்று வெள்ளம் கரை புரள அங்குக் கரடியின் கூட்டங்கள் அலையும்.
நிரையார் பொருகட லுதைந்த சுரிமுகச் சங்கு
செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
தெளிவுரை : வரிசையாக, பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்குகள் செங்கயல் கிழித்த பங்கய மலரின் செம்மடல் நிறைய வெண்முத்து உதிர்க்கும்.
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையி லமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற்
சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.
தெளிவுரை : அத்தகைய வயல்களையுடைய கழுமலர் என்னும் சீகாழி நாடன் வைகை ஆற்றில் ஏடு எதிரேற விட்டு, சமணர்களை வாதில் வென்று அறுத்த சைவ சிகாமணி சம்பந்தரது மலையில், சிறிய இடையை உடைய தலைவியினது பெரிய முலைகளைப் புணர்வதற்காக இந்த ஆபத்தான வழியில் மலைநாட்டுத் தலைவனே நீ வரவேண்டா.
ஈற்றயலடியில் முரண் தொடை பயின்று வந்துள்ளது.
வெண்பா
1323. மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்தும்
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தந் தீராதார் தாம்.
தெளிவுரை : கலைத் தலைவராகிய சம்பந்தருக்குத் தொண்டராய்ப் பெரிய சீகாழியைக் கைகூப்பி வணங்கி, தம்முடைய பாச பந்தம் தீராதார் மலைத்தலங்கள் மீதேறி, மாதவங்கள் செய்து, முலைத்தடங்கள் மூத்தாலும் வயதில் மூப்படைவர் என்பதாம். ஞான சம்பந்தரை வழிபட்டால் பிறவித் துன்பங்கள் போம் என்கிறார்.
கட்டளைக் கலித்துறை
1324. தாமரை மாதவி சேறிய
நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன்
னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போல்அழ
கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங
னேகுமென் நேரிழையே.
தெளிவுரை : இது செவிலி இரங்கல் துறை.
தாமரையாகிய சிறந்த இருக்கையில் ஏறிய பிரம தேவனது பிரமலோகம்போல், அழகிய சிறப்புடைய காழி நன்னாடன் ஆகிய ஞானசம்பந்தரது தேவாரப் பாடல்களைப் பாடாதவர்போல் அழகீந்து நல் வில்லியின் பின்னே நீரற்ற பாலைவனத்தில் என் நேரிழை எப்படிச் செல்வாள்.
ஆசிரியப்பா
1325. இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே காமர்
கனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும்
தெளிவுரை : அணிகலன்கள் பொருந்திய தலைவி கொன்றையின் மென்மலர் பறிக்க, கிளையைத் தாழ்த்திய பெரிய சோலை இதுவே. அழகிய சுனையில் நீராடி, கரையேறி ஆடையை உடுத்திய என்னையும் கண்டு வெட்கப்பட்ட இடமும் இதுவே.
பாய்கிளி யிரியப் பையவந் தேறி
ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்பு செய் தென்னை யாட்கொளு மிடமே பொன்புரை
தெளிவுரை : நினைக்கும்தோறும் பாய்கிளி அஞ்சியோட தலைவி ஏறி வந்த அழகிய பரண் இதுவே. இன்புறு சிறுசொல் பலபேசி அன்பு செய்து என்னை ஆட்கொண்ட இடமும் இதுவே.
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்
புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த மூத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
தெளிவுரை : பொன்புரை தடமலர்க் கமலக் குடுமியிலிருந்து நற்றொழில் புரியும் பிரமனது நாட்டைத் தருப்பைக் கொண்டு கழுவிப் பொங்கு அகப்பையில் நெய்யை முகந்து வளர்த்த முத்தீப் புகையால் நாள்தொறும் மறைக்கும் பெருமை பொருந்திய சீகாழி.
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்
பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.
தெளிவுரை : எண்டிசை நிறைத்த தண்தமிழ் விரகன் நலங்கலந்து ஓங்கும் மலையின்மீது தினைப்புனம். அதனில் மூங்கில்போன்ற தோல்களை உடைய தலைவி, பஞ்சு தோய்த்த திருந்திய பாதம் நோவப் போய் என்னை வஞ்சித்திருந்த மணியறை இதுவே.
வெண்பா
1326. வேழங்க ளெய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் நீள்வயல்சூழ்
வாயந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.
தெளிவுரை : தோழி தலைவனை நகுதல்: யானைகளை எய்பவருக்கு வில்லாவது இக்காலம். ஆழமான கடலில் முத்துக்கள் வந்தலைக்கும் நீண்ட வயல்கள் சூழ்ந்த மாடங்களும் மதில்களும் பொருந்திய சீகாழிக் கோனாகிய ஞானசம்பந்தரது மலையில் சாய்ந்தது வண்தழையோ?
கட்டளைக் கலித்துறை
1327. தழைக்கின்ற சீர்மிகு ஞானசம்
பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்சைக் கலர்ந்தன
கோடலம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர
சாபம்நின் னெண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து
தோன்றிற்றுப் பெய்வளையே.
தெளிவுரை : தோழி தலைவன் வரவுரைத்தல்: தழைக்கின்ற சிறப்பினை உடைய ஞானசம்பந்தனது பெரிய மலையின்கண் அழைக்கின்ற மயிலுக்குக் காந்தள்கள் மலர்ந்தன. மழை நீர் பெய்யும் பொருட்டு இழைக்கின்ற வானவில் உனது எண்ணம் ஒன்றும் பிழைப்பதில்லை என்று குறிப்பாய்த் தெரிவிக்கின்றது. தலைவியே ! தலைவனின் தேர் வந்து நிற்கிறது. கார்ப் பருவத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் அதன்படி வந்து விட்டார் என்கிறார். மேகத்தைக் கண்டு மயில்கள் கூவி ஆரவாரம் செய்யும்.
ஆசிரியப்பா
1328. வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதே னுண்டு வேணுவின் துணியால்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி யெழுப்பு மந்தண் சிலம்ப அஃதிங்கு
தெளிவுரை : வளைந்த காலையுடைய பெண் குரங்கு மாமரப் பொந்தில் விளைந்த தேனையுண்டு, மூங்கில் கொம்பினால், பாறையில் துயில்கின்ற பனைமரம் போன்ற கையையுடைய யானையை உந்தி எழுப்பும் குளிர்ந்த மலை நாட்டுத் தலைவனே !
என்னைய ரிங்கு வருவர் பலரே
அன்னை காணி லலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்
தெளிவுரை : இங்கு என் தமையன்மார் வருவர். என் அன்னை பார்த்தால் அலர் தூற்றுவாள். பொன்னால் செய்யப்பட்ட பரற் கற்களை உள்ளீடாக வைத்துள்ள ஒலி செய்கின்ற கிங்கிணி அணிந்துள்ள பாதங்களையும், சிறுகுரல் இயற்றி அமுதுண்ணும் செவ்வாய் அருவி அசைய, தாளம் பிறழாத தடக்கையை அசைத்து,
சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.
தெளிவுரை : சிறுகூத்தியற்றிச் சிவனருள் பெற்ற நற்றமிழ் விரகனுடைய பகைவர்களைப்போல, இடுங்கிய மனத்தோடு ஒடுங்கிச் சென்று சூரியனும் மேற்குக் கடலில் மறைந்தனன். இப்புனத்தில் இன்றிரவு நீ தங்கியிருக்க நினைப்பது தவறாகும். எனவே செல்வாயாக என்பது குறிப்பு.
வெண்பா
1329. தேம்புனமே யுன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் தேம்பி
அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால்
தொழுதகன்றா ளென்றுநீ சொல்.
தெளிவுரை : இது தலைவி கூற்று: இனிய தினைப்புனமே ! உன்னை மீளவும் தொழுகின்றேன். மிக்க புகழுடைய ஞானசம்பந்தரது பகைவர்களைப்போலத் தேம்பி அழுதகன்றாள் என்று கருதாமல், மலர்மாலை அணிந்த தலைவர் வந்தால் தலைவி தொழுதகன்றாள் என்று நீ சொல்வாயாக !
கட்டளைக் கலித்துறை
1330. சொற்செறி நீள்கவி செய்தன்று
வைகையில் தொல்லமணர்
பற்செறி யாவண்ணங் காத்தசம்
பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந்
தாடுங் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை
வாழி யிரும்புனமே.
தெளிவுரை : இது தலைவன் வறும்புனம் கண்டு இரங்குதல்.
தெய்வீகச் சொற்கள் செறிந்த தேவாரப் பாடலைச் செய்து அன்று வைகையில் தொல் அமணர் பற்செறியா வண்ணம் காத்த சம்பந்தர் பயில் மலையில் கற்செறிவார் சுனை நீர் குடைந்து ஆடும் கனத்த குண்டலத்தை அணிந்த தலைவியை வீட்டில் அடைக்காதவாறு, இரும்புனமே ! நீ காத்திலை, வாழ்வாயாக.
ஆசிரியப்பா
1331. புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்
தெளிவுரை : செவிலி புறவொடு கூறுதல்.
நீர் காய்ந்த இந்தப் பாலை நிலத்தில் கோபமிக்க வேடர்கள் அம்பு தொடுத்து மான் குளம்பின் முடுகு நாற்றத்து ஆடும் பாம்பின் வயிறு காயுமாறு பாடுதகையின் பஞ்சுரங் கேட்டு,
கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே யுறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்
தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்
தெளிவுரை : கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும் பொறிவரிப்புறவே சுற்றமன்று. இதை நீ அறிவாயாக. மணம் கமழும் தேம்புனல் வாவியை உடைய சீகாழியில் படத்தையுடைய பாம்பைக் கட்டிய சிவபெருமான் தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்.
மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை
ஆதலின் புறவே யுறவறலை நீயே
தெளிவுரை : மனிதத் தொடர்பை உலகில் துறந்த ஞானசம்பந்தரை விரும்பாதவர்களின் சுற்றத்தைப்போல் வினையேனாகிய நான் இருக்கும் வீட்டைப் பிரியாத வஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளை அயலான் பின்செல விலக்காமல் இருந்துவிட்டாய். ஆதலின், புறவே நீ எனக்குச் சுற்றமன்று. தலைவி, தலைவனுடன் சென்றபோது நீ ஏன் விலக்கவில்லை என்று புறவைக் கேட்டு வருந்துகிறாள் செவிலி.
வெண்பா
1332. அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.
தெளிவுரை : அலைகளை உடைய கடலின்மீது சென்று வலையர் வீசும் வலையில் சிக்கும் சங்குகள் மலர்களினிடத்து வெண்முத்துக்களை உடைய வயல்கள் சூழ்ந்த நீர் வளமிக்க சீகாழி, ஒளி பொருந்திய முத்தமிழ்ப் பாடல்களாகிய தேவாரங்களைப் பாடிய திருஞானசம்பந்தரின் ஊராகும்.
கட்டளைக் கலித்துறை
1333. ஊரும் பசும்புர வித்தே
ரொளித்த தொளிவிசும்பில்
கூரு மிருளொடு கோழிகண்
தூஞ்சா கொடுவினையேற்
காரு முணர்ந்திலர் ஞானசம்
பந்தனந் தாமரையின்
தாருந் தருகில னெங்ஙனம்
யான்சங்கு தாங்குவதே.
தெளிவுரை : இரவில் தலைவி இரங்குதல்: கதிரவன் ஏறிச் செல்லும் பசும் குதிரை பூட்டிய தேர் மேற்குக் கடலில் மறைந்தது. பிரகாசமான வானத்தில் செறிந்த இருளோடு கோழி, கண் உறங்காமல் இருக்கும் வினையுடைய எனக்கு யாரும் ஆறுதல் சொல்வாரில்லை. திருஞானசம்பந்தர் தனது அழகிய தாமரை மலர் மாலையும் தரவில்லை. யான் கையில் வளையல்களைத் தாங்கிக் கொண்டிருப்பது எங்ஙனம்?
ஆசிரியப்பா
1334. தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்ட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்
தெளிவுரை : தேன்மிகுந்த பூக்கள் மலிந்த வயலின் வரப்பின்மேல் ஏறி, இளவெயில் காயும் பிளவுபட்ட சிறிய கால்களையுடைய நண்டைத் தின்பதற்காக இயங்கும் கருப்பமுற்றிருக்கிற நரியின் முதுகைத் துள்ளியெழுந்து செந்நெல் மோதுகின்ற,
காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே
தெளிவுரை : சீகாழி நாட்டுக் கவுணியர் குலத்தை வாழச் செய்யத் தோன்றிய வண்தமிழ் விரகன் தெண் திரைக்கடல்வாய் காண்தரு செவ்விக் களிறுகள் உகுத்த முட்டை முன் கவரும் பெட்டையங்குருகே ! (நாரையே!)
வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும்
இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.
தெளிவுரை : வாடைக் காற்று வீச விடியற்காலையில் தனியாக நீ வந்து பனி நீர் ஒழுகக் கூசிக் குளிர்ந்து பேசாமல் இருந்து உடல் முழுதும் வெளுத்த காரணத்தைச் சொல்வாயாக. இங்கு நீ தனித்து வந்து காத்திருப்பது ஏன்? உன்னை விட்டுப் பிரிந்த காதலன் (ஆண் நாரை) இன்னும் வரவில்லையோ ! சொல்வாயாக.
வெண்பா
1335. குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை யருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமுமால் இன்னம்
புன்கலங்கள் வைகைப் புனல்.
தெளிவுரை : நாரையும் முத்தும் வளைந்த சங்கும் மீனும் பெருகும் வயல்சூழ்ந்த சீகாழியின் பிள்ளை சமணர்கள் முன்பு கலங்க நட்டமுடை கெழுமுமால் இன்னம் புன் கலங்கல் வைகைப் புனல். சமணர்கள் கழுவேறிய போது கெழுமிய துர்நாற்றத்தைக் கூறுகின்றார்.
கட்டளைக் கலித்துறை
1336. புனமா மயில் சாயல் கண்டுமுன்
போகா கிளிபிரியா
இனமான் விழியொக்கும் மென்றுவிட்
டேகா விருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம்
பந்தன் கடல்மலைவாய்த்
தினைமா திவள்காக்க வெங்கே
விளையுஞ் செழுங்கதிரே.
தெளிவுரை : தலைவியின் சாயலுக்கு மயிலும், மொழிக்குக் கிளியும், பார்வைக்கு மானும் தமவாகக் கொண்டு பிரியாதிருத்தலின் தினை எவ்வாறு விளையும் என்கிறார்.
கனமான மதில்களை உடைய சீகாழி ஞானசம்பந்தன் கடமலைவாய்த் தினைப் புனத்தைத் தலைவி காத்தாலும், செழுங்கதிர் எங்கே விளையும் எனக் கூட்டுக. கதிர்களை இம்மூன்றும் தின்றுவிடும் என்பது கருத்து.
ஆசிரியப்பா
1337. கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை யணங்கோ மொய்த்தெழு
தாமரை யல்லித் தவிசிடை வளர்ந்த
தெளிவுரை : ஒளியுடைய சந்திரன் நுழையும் படர்சடை மகுடத்தில் கங்கையை ஒளித்து வைத்துள்ள சிவபெருமானைப் பாடி, முத்துச் சிவிகையை முன்பு பெற்ற ஞானசம்பந்தரது சீகாழி நாட்டில் வாழ்கின்ற அணங்கோ மொய்த்தெழு தாமரை அகஇதழ் தவிசு இடைவளர்ந்த
காமரு செல்வக் கனங்குழை யவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்து ளருந்தெய்வ மதுவோ
தெளிவுரை : காமரு செல்வ கனங்குழையாளாகிய திருமகளோ மணந்தங்கிய கற்பகமரமோ ஆகாயத்தில் தவநெறி கலக்கும் உருவளர் கொங்கைகளையுடைய உருப்பசிதானோ, வாருணக் கொம்போ, மன்மதன் கொடியோ வனதேவதையோ,
வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஒவியர் தங்க லொண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்
இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.
தெளிவுரை : வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும் வஞ்சி மருங்கும் முள் முருங்கை போன்ற வாயும், ஏந்தின முலைகளும் காந்தள் போன்ற கைகளும் சித்திரம் எழுதுவோர் தங்கள் ஒண்மதி காட்டும் ஓவியம் எழுதும் பலகையோ சிறந்த எழுதுகோலால் எழுதுவதற்கு அரியதோர் உருவு கண்டு என்னை மயக்க வந்து உதித்ததோர் வடிவு இதுதானோ?
இது ஐயம் என்னும் துறை. தலைவன் தலைவியின் அழகைச் சித்திரிப்பது. எழுத முடியாத சந்தேக நிலையென்று தலைவியின் அழகை வருணிக்கின்றான்.
வெண்பா
1338. வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.
தெளிவுரை : இடைசுரத்துக் கண்டோர் கூறுதல்: கூர்மையான கண்களை உடைய தலைவியை இந்தப் பாலை நிலத்தின் வழியாக மணந்தங்கிய மாலையை உடைய தலைவனுடன் கண்டோம். அவர்கள் இந்நேரம் மாலைபோல வடுக்களை உடைய மாமரச் சோலையைச் சேர்ந்த வைகையில் சமணர்களை வென்றான் ஆகிய ஞானசம்பந்தரது சீர்காழிப் பூஞ் சோலையைப் போய்ச் சேர்ந்திருப்பர்.
கட்டளைக் கலித்துறை
1339. குருந்தும் தரளமும் போல்வண்ண
வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம்
பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை
வாட்டினை வானகத்தே
திருந்துந் திரள்முகில் முந்திவந்
தேறுதிங் கட்கொழுந்தே.
தெளிவுரை : சந்திரோபாலம்பனம். திங்கட் கொழுந்தே ! குருத்தும் முத்தும்போல் நிறமுடைய வெண்ணகை கொய் மலராள் பொருந்தும் திரள்புயத்து அண்ணல் ஆகிய ஞானசம்பந்தரது பொற்றாமரையாகிய திருவடிகளுக்காக வருந்தும் திரண்ட கொங்கைகளை உடைய மங்கையைக் காட்டில் வருத்தினை. திருந்தும் திரள் மேகத்திற்கு முந்தி வந்து உயர்கின்றனை. இது சந்திரனைப் பழிக்கும் துறை. தனித்திருக்கும் தலைவி சந்திரனைக் கண்டால் வருந்துவாள்.
திருச்சிற்றம்பலம்
37. ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)
இந்நூல் திருஞானசம்பந்தப் பிள்ளையார் சீகாழியில் திருவுலா போந்தருளிய இயல்பினை விரித்துரைத்துப் போற்றுவதாகலின் ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையென்று பெயருடையதாயிற்று.
உலா நூல் இயற்றப்பட வேண்டிய மரபுப்படி இவ்வுலாவும் கலிவெண்பாவினால் இயற்றப் பெற்றிருக் கின்றது. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்னும் இந்நூலிற் பாட்டுடைத் தலைவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையாருடைய இயல்பே பெரிதும் விரித்துரைக்கப் பெற்றுள்ளது.
பிள்ளையாரைக் காதலித்த எழுவகைப் பருவத்துப் பெண்களுடைய செய்திகளும் பொதுவகையாற் கூறப்பட்டுள்ளதே அன்றி, தனித்தனியே வகுத்துக் கூறப்படவில்லை. இந்நூல் 143 கண்ணிகளை உடையதாகும்.
திருச்சிற்றம்பலம்
1340. திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர்
இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய
புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்
குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு
முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்
கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த்
தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த
காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப
ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய
தெளிவுரை : திருந்தியசீர்ச் செந்தாமரை குளத்திற்குச் சென்று ஓர் இருந்தண் இளஎரிமை பாய, அங்கிருந்த பறவை பறந்தோட, கயல் மீன்கள் அஞ்ச, பூங்குவளை மலர்களில் இருந்த தேன் ஒழுக, செங்கழுநீர் தண்டு ஒடிய, துள்ளிப் பறவையினம் அங்கிருந்து பறந்துசெல்ல, இறால் மீன்பாய, களிறு என்னும் ஒருவகைப் பெருமீன் மணம் வீசும் குளத்தில் மூழ்க, பயந்த வாளை மீனைக் கண்டு நண்டு நாணிச் சென்று தோட்டத்தில் உள்ள செந்நெல் வயலை அடைய, தூரத்திலிருந்த நீலோற்பல மலர்கள் மலர கார்நீலம் உறங்க குளத்தில் நெய்தல் வருந்த (நீர் வளத்தையும் நில வளத்தையும் வருணிக்கிறார்.)
அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய
வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள
நிலவு மலணையினின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய
மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய
பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்
தெளிவுரை : அன்னம் துயில் எழுப்ப அழகிய சிறகுகளையுடைய வண்டுக் கூட்டங்கள் தமது துணையை இழக்க, அந்த ஆழமான நீர்நிலையில் உள்ள வள்ளைக் கொடி சிரிக்க, வளப்பம் பொருந்திய குமுதம் சிரிக்க, அந்த நீர் நிலையிலுள்ள தாமரை மலர்கள் தேன் சொரிய, மெள்ள மலர்ப்படுக்கையில் இருந்து சங்குகள் முத்துக்களை அளிக்க, வயல்களில் தேன் வழிய வரம்பைக் கடந்து சென்று நெல் படர் ஒளியால் சூரியனும் ஒளி குறையுமாறு செய்யும் வயல்களும், (இதுவும் வருணனைத் தொடர்ச்சி)
நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த
பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்
கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு
தெளிவுரை : முத்தினுடைய ஒளியும் மரகதம் (பச்சைமணி) வீசும் ஒளியும் செம்பொன் நிறம் பெற பவளத்தின் செவ்வியும் கொடியின் மத்தியில் பட்டாடை உடுத்தி, தோடு இலங்கும், இளங் கமுகும் (பாக்கு மரமும்) கலந்த ஒலியுள்ள சோலையின் நீழலில் கொல்லும் எண்ணமுடைய கொம்பு வளைத்து ஏந்தி மலையும் மர வடிவம் கொண்டது போல, (வருணனை தொடர்கிறது)
சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்
றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும்
கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு
மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத
கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும்
வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்
தெளிவுரை : இலை நெருங்கிய மாமரக் கூட்டம், நெருங்கிய கனிகளால் உயர்ந்த தென்னந் தோப்புக்களும், பழங்களோடு கூடிய வாழை மரக்காடும், மிகுதியான மணத்தால் சிறந்த உயர் பலா மரங்களும் மஞ்சள் எழில் வளமும் மாதுளையின் வார் பொழிலும் இஞ்சி விளையும் இளங்காவின் ஈட்டமும் கூந்தற் கமுகும் பாதிரி மரம் சண்பக மரங்களின் காடும், (வருணனை தொடர்கிறது)
மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும்
கேதையும் எங்கும் கெழீஇப் போதின்
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்
அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்
நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் முந்திப்
தெளிவுரை : மாதவி, புன்னை, குருக்கத்தி, தாழை இவை எங்கும் நிறைந்து, போதின் இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் மணம் வீசும் நீண்ட சோலையில் கிளர்ந்தெங்கும் கரும்பாலைகளும், கரும்பை அரிபவர்கள் செய்யும் ஒலியும் சோலைக் கிளிகள் மிழற்றும் சொல் ஒலியும், வண்டுகள் செய்யும் ஒலியும் கடல் அலைகளின் ஓசையும், மணங்கமழும் நந்தவனத்தொலியும் தவசிகள் ஆசிரமங்களின் அழகும் (வருணனை தொடர்கிறது)
புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ
முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர
இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில்
மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்
தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்
வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று
அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்
தெளிவுரை : புகழ்ந்து சொல்லும் தன்மையதாய் உலகில் சிறப்புற்றுத் திகழ்கின்ற அகழியும் சூழ்ந்திருக்கப் பெரிய மேடை, மதிலின் உறுப்பாகிய நாஞ்சியில் உள்ள மேற் பரணில் தோமரம் என்னும் ஆயுதமும், வீசி எறியும் இயந்திரமும் காமரமும் அம்பு விடுவதற்குரிய துளையும் பொருந்திச் சூரிய மண்டலம் வரை உயர்ந்துள்ள மேருமலை போன்ற உயர்ந்த மதிலையுடைய (சீகாழியின் மதிலையும் அகழியையும் புகழ்கிறார்)
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய
நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்
உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய
சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்
தெளிவுரை : மாளிகையும், மண்டபமும், நிலா முற்றமும், திண்ணைகளும், நாடக சாலையும், விட்டங்கள் பொருத்தப்பட்ட மாடங்களும், அம்பலமும், (ஆடு அரங்கம்) நீண்டுயர்ந்த தெருக்களும், செய்குன்றும், உபவனமும், சோலையும், குளங்களும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட நிலைக்கணமும், திருமகள் பொருந்தி உறையும் சிறப்புடையதாய், (நகரமைப்பு வருணனை)
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது
கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்
பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை
மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி
தெளிவுரை : மரகதமும் முத்தும் மாமணியும் விரும்பி யாசிப்பவர்களுக்கு எப்போதும் கொடுத்தும், ஒளிக்காமல் கற்பகமரமும் மேகமும் போன்று கற்றவர்க்கும் நற்றவர்க்கும் தப்பாமல் கொடை வளர்க்கும் கோணாத நன்மையினால், பொய்ம்மை கடிந்து, புகழ் புரிந்து இவ்வுலகில் மெய்ம்மை தலை தூக்கி, உண்மை வேதம் ஓதுபவர் பொருந்தியுள்ளதும் இலக்கண நூல் வேள்வித் துறை பயில்வார், தொன்னூல் பயில்வார், முறையாக ஆகமங்கள் (தரும நூல்கள்) கேட்பார், அருங்கலை நூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள் துய்ப்பார், (நகர மாந்தர் வருணனை)
நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து
காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார்
ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு
தெளிவுரை : நீதி நிலையுணர்வார், இவ்வுலகில் ஐம்புலனும் காதல் விடு தவங்கள் காமுறுவார், ஆதி அருங்கலை நூல் ஓதுவார், தீவினைகள் நீங்க வேள்விக் காரியங்கள் செய்வார், ஒருங்கிருந்து காம நூல் கேட்பார், கலை ஞானம் காதலிப்பார், ஓமநூல் ஓதுவார், உத்தரிப்பார், பிரமனே என்று சொல்லுமாறு நானூற்றுவர் மறையோர் பொருந்தி மாதர்கள் சிறந்த மாடத்தில் இனிதிருந்து, (நகரமாந்தர் இயல்பு)
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்
பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய
வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்
தெளிவுரை : (வீணை வேறு, யாழ் வேறு) வீணை பயில்பவரும், யாழ் பயில்பவரும், நாடகம் பயில்வாரும், பயனுறுவாரும், மைனாவுக்குப் பாட்டு உரைப்பாரும், பொற் கிளிக்குச் சொற் பயில்வாரும், பாவைக்குப் பொன் புனைந்து பண்புறுவாருமாய் எல்லா இடங்களிலும் மங்கையர்கள் கூட்டமும், மன்னு சிறுவர்கள் குழுவும், உலகம் உய்யுமாறு செய்யப்படும் வேத ஒலியும் விழா ஒலியும், மெய்யிலார் கீத ஒலியும் கிளர்ந்தோங்கும், (நகரில் உள்ளார் சிறப்பு).
பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய
கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து
மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்
தெளிவுரை : பம்பை ஒலியும் உடுக்கை ஒலியும், கடல் போன்ற படை ஒலியும், அசைகின்ற யானைகளின் ஒலியும் ஒன்றுகூடி மேகத்தின் முழக்கமும் கடல் முழக்கமும் கலந்த சீர்முழக்கம் எங்கும் செவிடுபட உலகில் சிறந்து விளங்குகின்ற செல்வம் நிறைந்த ஊர், சீரில் சிறந்த ஓர் திருமகள் வாசம் செய்யும் ஊர், உலகில் உயர்ந்த ஊர், நானூற்றுவர் வாழும் ஊர், அழகிய மாதர்கள் வாழும் ஊர், இரண்டு முறை கடல் வெள்ளத்துத் தேவர்களோடு பன்னிரண்டு முறை நீரில் மிதந்த ஊர், (நகரின் மாண்பு)
பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்
பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற
மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்
தெளிவுரை : (சீகாழிக்குரிய பன்னிரண்டு பெயர்களையும் கூறுகிறார்). நிலைபெற்ற 1. பிரமனூர், 2. வேணுபுரம், 3. சண்பை, 4. காழி, 5. சிரபுரம், 6. பூந்தராய், 7. கொச்சைவயம், 8. வெங்குரு, 9. தோணிபுரம், 10. புகலி, 11. கழுமலம், 12. பூம்புறவம். இவ்வாறு சிறந்த பண்புடையதாய்த் திகழ்கின்ற மல்லைச் செழுநகரம் நிலை பெறவும் சமணர்களை விரைவில் கழுவேற்றவும், எல்லையில்லா மாதவத்தோர் வாழவும், உலகோர் உய்யவும் மேதக்க வானோர் வியக்கவும்,
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய
சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன
வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்
தெளிவுரை : வென்றிக் கலிகெடவும் வேதத்து ஒலி மிகவும், ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும், தேவாரப் பாடல்கள் பதினாறாயிரம் உலகோர்க்கு வாய்க்கவும் கவுணியர் குலத்திற்கு ஒப்பற்ற சேய் என்று சொல்லுமாறு, ஞானச் சுடர் விளக்கை, நற்றவத்தோர் கற்பகத்தை, வேதங்களின் வான் பொருளை விரித்துரைத்த தத்துவனை, நித்தனை, சைவர்களின் அரசை, வியக்கத்தக்க மெய்யறிவினால் ஓங்கு விடலையை,
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர்
அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்
திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே
தெளிவுரை : முத்தமிழன் செஞ்சொற் பொருள் பயந்த சிங்கத்தை, தெவ்வர் உயிர் அஞ்சத் திகழ்ந்த அடல் உருமை (இடியை), ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் கோதில் அமிர்தம் நுகர் குஞ்சரத்தை, காலத்தொகுதியும், நான்மறையின் காரணமும் மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத் திருஞானசம்பந்தன் என்று உலகம் சேர்ந்த ஒரு பெயரால் உயர்ந்த கோவை, பொன்னி வளவாடனை, பூம்புகலி நாயகனை, மன்னர் தொழுது இறைஞ்சும் மாமணியை, (ஞானசம்பந்தர் புகழைப் பாடுகிறார்.)
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய
கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் காதலால்
புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை
வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து
தெளிவுரை : முருக நாயனார்க்கும் திருநீல நக்கருக்கும் புகழமைந்த சிறுத்தொண்ட நாயனார்க்கும் குலவிய தோழனாய் அவர்களுடைய பழைய வினையைப் போக்கிய அழகனை, பெண்கள் விரும்பும் மன்மதனை, பாண்டியனுடைய மதுரை நகரில் வாதத்தில் சமணர்களை வென்று கழுவேற்றி இரத்தம் ஆறாக ஓட வைத்த மறையோனை, உலகோர் அறிய நனிப்பள்ளியில் பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆக்கியும், (ஞானசம்பந்தரது அற்புதச் செயல்கள் விவரிக்கப்படுகின்றன.)
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த
யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்
மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய
தெளிவுரை : தேவாரப் பதிகம் பாடி, ஏட்டை வைகையில், விட்டபோது அது நீரில் எதிர்த்து சென்றது. தீயில் இட்டபோது எரியாமல் குளிர்ந்திருந்தது. பல விஷயங்களைத் தீர்த்து வைத்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழை முரிந்து போகச் செய்தது.
(வேதாரண்யத்தில் திருமறைக்காட்டில் மூடாமல் இருந்த கதவை மூட வைத்தது. நீரில் ஓடத் தொழில் புரிந்தது. பனி நோய் தீர்ந்தது; திருவீழி மிழலையில் பொற்காசு பெற்றுப் பஞ்சத்தைப் போக்கியது. நெல்வாயிலில் முத்துச் சிவிகைப் பெற வைத்தது. இவ்வளவு அற்புதங்களையும் செய்தது. திருவாவடுதுறையில் ஆயிரம் செம்பொன் கிடைக்கச் செய்தது, (தந்தையார் வேள்விக்குப் பொன் பெற்றது)
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்
நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய
யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு
தெளிவுரை : திருவோத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கியது. திருவோலக்காவில் கைத்தாளம் போட்டு வந்ததற்குப் பதிலாகப் பொன்னாலாகிய தாளத்தைப் பெறவைத்தது. நீர் பாடிய தேவாரப் பாடல்கள் இவ்வுளவும் செய்தன. தேவாரப் பதிகங்கள் பலவற்றுள்ளும் யாழ்முரி, சக்கரம் மற்றும் ஈரடி, முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம் உய்ய ஊழி உரைப்பமரும் பல் புகழால் ஓங்க சிவ பெருமானைத் தேவாரப் பாடல்களால் பாடவல்ல சேயை,
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்
ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்
புகலி வளநகருட் பூசுரர் புக் காங்
கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்
வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம்
ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்
கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்
தெளிவுரை : வேதியர் நாற்பத் தெண்ணாயிரவர், எண்ணற்ற முனிவர் கூட்டம், சபா மண்டபத்தில் இருக்க, கோயில் வாயிலின்கண் கோலக்கடை குறுகிக் கும்பிட்டதுபோல சீகாழி நகரினுள் அந்தணர்கள் புகுந்தது போன்று புகழ் பரவியேந்திச் சீகாழி வீதியில் எழுந்தருள வேண்டுமென விண்ணப்பிக்க அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, நீதியால் தாழையும் சண்பகமும் நேர்கிடத்தி, கீழ்த்தாழ்ந்த மாதவி (குருக்கத்தி)யின் அரும்பை மருங்கணைத்து,
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய
வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத்
தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்
தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்
தெளிவுரை : இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத்தாங்கு, அருகே கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்பூவை இடையே பெய்து புன்னாகப் பூவைப் புணர, இருவாச்சி, முல்லை, வண் செருந்தி, மல்லிகை, குருந்தம் இவைகளைக் கலந்து தாமரை தலைமாலையாகத் தலைமயிரை அலங்கரித்து,
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த
கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்
தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும்
சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்
தெளிவுரை : கனவயிர குண்டலங்கள் சேர்த்து, கழுத்தில் இன மணியின் ஆரம் இலங்க, பொன் சரிகை கலந்த நகை யணிந்து, மணிக்கண்டிகை பூண்டு முத்துத் தோள் வளையணிந்து பொன் பெறு நூல் வலந்திகழ பொன் தாழ்வடமும் தண் தரளக் கோப்பும் மலைபோன்ற மார்பில் சேர்த்து, திருநீறாகிய ஒண்களபம் மட்டித்து ஒள்ளிய நூலாற் செய்யப்பட்ட ஆடையை உடுத்தி,
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்
பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த
கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத்
திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்
தெளிவுரை : காற்றோ, இடியோ, குன்றோ, கடலோ, அடலுருமோ கூற்றுருமோ என்னும்படி கொதித்தெழுந்து கோபமாகப் பார்த்து நின்றெதிர்ந்து ஆலவட்டம் வீசி, துதிக்கை கொண்டெறிந்து பொங்கி மதங்கொண்ட யானை சங்கிலியை அறுத்துக் கோபித்து ஆரவாரித்து நிலத்தை உழக்கி நின்று ஒப்பில்லாதபடி செல்ல,
கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய
கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்
பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே கூடி
நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த
தெளிவுரை : கோபங்கொண்ட முகத்தோடு துதிக்கையை உயர்த்தித் தந்தங்கள் உருவ பெருமூச்சு விட்டு, கூடத்தின் அரணை அழித்து, கோபுரங்களைக் குத்திப் பெரிய சோலையை அழித்து, பாகரைப் பரிந்து குத்தி பறித்த நிணமாகிய பாகை ஆகாயத்தில் வீசி, அளப்பரிய முக படாத்தை உடைய கருங்களிற்றை (ஆண் யானையை) ஒண்பரிக்காரர்கள் பக்கத்தில் வர, கூடி நயந்து குரல் கொடுத்து, நட்பு உண்டாக்கி, அருகில் சென்று தணித்ததைப்போல,
உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்
கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த
பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்
பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த
தெளிவுரை : உயர்ந்த தூய குதிரையைப் பிடித்து அதன்மேல் ஏறியதைப்போல அடற்கூடற் சந்தியணுகி அடுத்த பயிற்றும் சொற்களைப் பேசி கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து அயர்வு கெடத் தட்டிக் கொடுத்து, தண்டு பேரோசையின்கண் பாதங்களைக் கோத்து சீர்ச் சிறுத்தொண்டர் பின்னால் வரவும், எட்டுத் திசையும் பலமக்களும் குதிரைகளும் படையும் பக்கங்களில் வரப் பேரோசை கடல்போல் ஒலிக்க, ஆரவாரம் பரித்தூரங்கொட்ட, சங்குகள் ஒலி செய்ய, கருத்தோடு இசைக் கவிஞர் பாடவும்,
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு
வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்
ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய
பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்
தெளிவுரை : விரித்த குடைகள் பலவும், சாமரையும், மாலைகளும் பக்கங்களில் நிறைந்து, சிறப்புச்செய்ய கடைபடு வீதி அணுகுதலும், வெள்ளிய வளையல் அணிந்த மகளிர் உள் மகிழ்ந்து, காதல் பெருகி, கலந்து எங்கும், சோதிசேர் ஆடு அரங்கின் மேலும், மணி மாளிகைகளிலும், சேடரங்கும் நீள் மறுகும், தெற்றியிலும் (திண்ணையிலும்) பெருமையுள்ள பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக வார் அணிந்த கொங்கைகளை உடைய பெண்கள் சீர் விளங்க விரும்பும் சிலம்பும், பிறங்கொளிசேர் ஆரமும், ஆபரணங்களும் ஒலி செய்யப் புறப்பட்டு,
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் -வெய்துயிர்த்துப்
பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து
வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன
அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்
காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்
தெளிவுரை : தூரத்தில் உள்ள தெருவில் பார்த்தற்குரிய வெற்றி பொருந்திய கரிய யானையின் மீது, வெண்மையான சந்திரனைப்போல இங்கு குடை நிழலில் பார்த்ததும் கை தொழுவார்கள். நின்று ஆடை சோர, காதல் கொண்டு உடல் தளர்வார்கள். வெள்ளிய வளைகள் கழன்று விழும், பெருமூச்சு விட்டு மார்பில் பசலை உண்டாகும். மூங்கில் போன்ற மென்தோள் கவின் அழியும். தாம் பயந்து, முருகனோ மன்மதனோ என்றும் அல்லவென்றும் சந்தேகப்பட்டு, அருகில் சென்று சீகாழிச் செம்மலாகிய ஞான சம்பந்தரென்று, தம் கை சோர்ந்து, வளைகள் சரிய நின்று தளர்வார்கள்.
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்
தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் நேராக
என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்
ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்
தெளிவுரை : உள்ளம் நிலை தளர்ந்த ஒண்ணுதலார், யானையை மெதுவாக நடக்குமாறு வேண்டுவார்கள். தேன் பொருந்திய மாலையை தாராமையும் பெண் மக்களின் முகத்தைப் பாராமையும் மிகவும் நல்லதுதான் என்பார்கள். நேராக என்னையே நோக்கினான். ஏந்திழையீர் ! இப்போது நன்மை நமக்குண்டு என நயப்பர் (விரும்புவார்கள்). பேரன்பினால் ஆடையும் நாணும் துகிலும் தோற்றவர்கள் தாமரை அம்பைப் புருவ வில்மேல் தொடுத்து அதரமும் தொண்டையும் துடிப்ப,
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்
அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்
இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்
தெளிவுரை : பொடித்த முலைக்காசைக் கருங்குழலார் காதற் கவுணியனாகிய ஞானசம்பந்தர் பால் கோபங்கொள்ள நினைந்து புறப்படுவார்கள். வாசச் செழு மலர்த்தார் இன்று எனக்குத் தராமல், சிறப்பமைந்த சீகாழிக் கோவாகிய ஞானசம்பந்தரே ! என்று அவருடைய பாதங்களைத் தொழுவார்கள். வளைகளை இழக்கப் போவது உன்னுடைய செங்கோன்மையோ என்று சொல்வார்கள். நங்கைமீர் ! இன்று இவன் நல்குமேல் எண் பெருங் குன்றத்தில் அன்று சமணர்களின் பற்றுக் கோட்டைக் கெடுத்து, பொன்ற உரை கெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து,
பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே
பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற
ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்
ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன்
பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்
நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார்
மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்
தெளிவுரை : விரை மலர்த்தார் பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார்கள். மற்று இவளே பெண் இரக்கம் அன்றே, பிறை நுதலீர் ! பெரும் பாம்பின் நண்ணுகடுவிடத்தால் நாட் சென்று விண்ணுற்ற ஆருயிரை மீட்டு அன்று அவளை அணி மருகல் ஊரறிய வைத்ததென உரைப்பார். பேரிடரால் ஏசுவார். தாமுற்ற நாணத்தைத் தோழியர்முன் பேசுவார். நின்றுதம் பெருமை கெடுவார்கள். ஆசையால் வருந்துவார்கள். நலன் அழிவார்கள். நாணத்தையும் ஆபரணத்தையும் இழப்பார்கள். மெய் வாடுவார்கள். கோபிப்பார்கள். பெருமூச்சு விடுவார்கள்,
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த
கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு
பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான்
ஒங்கொலிசேர் வீதி உலா.
தெளிவுரை : தையலார் பூந்துகிலைப் பூமாலை என்று அணிவார். பூவினை முன் சாந்தமென மெய்யில் தடவுவார். வாய்ந்த கிளியென்று பாவைக்கு (பொம்மைக்கு)ச் சொற் பயில்வார். பந்தை ஒளி மேகலை என்று உடுப்பார். வண்டுகள் மொய்க்கின்ற பூங்குழலார் மையலாய்க் கைதொழச் சென்றான் ஓங்கொலி சேர் வீதி உலா. திருஞானசம்பந்தர் வீதி உலா சென்றார்.
திருச்சிற்றம்பலம்
38. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)
திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப் பெற்றமையின் இஃது ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் என்னும் பெயருடையதாயிற்று. இந்நூலின்கண் ஒன்றுமுதல் நாற்பத்தொன்பது வரையுள்ள பாடல்களே இப்போது கிடைத்துள்ளன. இக்கலம்பகத்தில் பிள்ளையாருடைய பெருமை நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள ஆசிரிய விருத்தங்கள் பல திருவெண்காட்டடிகள் பாடியருளிய கோயில் நான்மணி மாலையிலுள்ள சந்தப் பாடல்களை அடியொற்றியனவாக விளங்குகின்றன.
திருச்சிற்றம்பலம்
ஒருபோகு கொச்சகக் கலிப்பா
1341. நான்கடித் தாழிசை
அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனு மொண்பதியு ளுதித்தனையே
தெளிவுரை : (முன்னிலைப் பராவல்) அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தின் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்ற தேவாரப் பதிகங்களை நெறி மனிதர்க்கு இனிது இயற்றி இங்கு அருளி எம் போன்றவர்களுக்கு இருந்த இடரைத் தீர்த்த காரணமாய் ஓங்கு புகழ்ச் சண்பை யெனும் சீகாழிப்பதியில் உதித்தனை.
செஞ்சடைவெண் மதியணிந்த சிவனெந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே
தெளிவுரை : செஞ்சடையில் வெண்மதியணிந்த சிவ பெருமானது திருவருளால் உமாதேவியார் அளவற்ற ஞானத்தை அமிர்தாக்கிப் பொற்கிண்ணத்தில் அருள் புரிந்த ஞானப்பாலாகிய உணவை முன்பு உண்டனை.
தோடணிகா தினனென்றுந் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச் செழுமறையின் அரும்பொருள
அந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காணஅரனுவனாமென் றுரைத்தனையே
தெளிவுரை : தோடுடைய செவியன் என்றும் பழைமையான தேவர்களுக்கு எப்போதும் தேடுதற்கு அருமையான பராபரனை வேதங்களின் உட்பொருளை, செவ்வானம் போன்ற நிறமுடையவனை அடையாளம் காட்டி, உன் தந்தைக்கு ஆகாயத்தில் பார்த்தேன் என்று உரைத்தனை.
அராகம்
வளம்மலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை.
தெளிவுரை : வளம் மலிந்த தமிழிசையிலும் வடகலையிலுள்ள மறைகளிலும் வல்லவனே ! தாமரை மலரை அணிகின்ற திருமுடியினை உடையை.
கடல்படு விடமடை கறைமணி மிடறுடை
மடல்கரி யுரியனை யறிவுடை யளவினை.
தெளிவுரை : திருப்பாற்கடலிலிருந்து எழுந்த ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டத்தைப் பெற்றவன் என்றும் வலிமை பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவன் என்றும் சிவ பெருமானைத் துதிக்கின்றார்.
இரண்டடி தாழிசை
கரும்பினுமிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண் ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.
தெளிவுரை : கரும்பினும் மிக்கு இனிய புகழ் சிவபெருமான் திருவடிகள் மீது இவ்வுலகத்தவர்க்குப் பத்தியை விளைவித்தனை.
பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.
தெளிவுரை : வேதங்களைப் பயின்றோர் செய்தொழிலும் பரமசிவாகம விதியும் வேதங்களின் விதி முழுவதையும் ஓய்வில்லாமல் நவின்றனை.
நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ
தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனுநீ (3)தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ
தெளிவுரை : அணித்தவர்களுக்கு அதிக வித்தகனும் நீ. தணி மனத்தருளுடைத் தவநெறிக்கு அமிர்தமும் நீ. சமணர்களைக் கழுவில் ஏற்றியவனும் நீ. தமிழ் நலத்தொகையினில் தகு சுவைப்பவனும் நீ.
மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்
மறையவர்க் கொருவன் நீ
மருவலர்க் குருமு நீ
நிறைகுணத் தொருவன் நீ
நிகரில்உத் தமனும் நீ
தெளிவுரை : வேதியர்களில் ஒப்பற்றவன் நீ. பகைவர்கட்கு இடி போன்றவன் நீ. நிறைகுணத்து ஒருவன் நீ. நிகரில்லாத உத்தமனும் நீ.
இருசீர் ஓரடி அம்போதரங்கம்
அரியை நீ எளியை நீ
அறவன் நீ துறவன் நீ
பெரியை நீ  உரியை நீ
பிள்ளை நீ வள்ளல் நீ
தெளிவுரை : அருமையாவன் நீ. எளிமையானவன் நீ. அறநெறியாளன் நீ. துறவற நெறியாளன் நீ. பெரியவன் நீ. உரிமையுடையவன் நீ. பிள்ளைப் பருவத்தினன் நீ. பாடல்களை வாரி வழங்கும் வள்ளல் நீ.
என வாங்கு (இது தனிச் சொல்)
சுரிதகம்
கருந்தமிழ் விரக நிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையில் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇ
தெளிவுரை : அருந்தமிழ் விரகனே ! உன்னைப் புகழ்கின்றோம். திருந்திய, வரிசையாக, வளமிக்க, மாளிகை தோறும் நிலைதொறும், உரைக்கப்படுகின்ற நான்கு வேதங்களின் ஓங்கிய ஒலி சேர்ந்ததும்,
சீர்கெழு ஒலிமிகுந்த திருமுகம் பொலிவுடைத் தார்கெழு சோலைகளும் குளிர்ந்த வயல்களும் சூழ்ந்ததும்,
கற்றொகு புரிசைக் காழியர் நாத
நற்றொகு சீர்த்தி ஞானசம் பந்த
நின்பெருங் கருணையை நீதியின்
அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.
தெளிவுரை : கல்லால் இயன்ற மதில்களை உடையதுமான சீகாழி நாத ! நற்றொகு கீர்த்தி ஞானசம்பந்த ! உன்னுடைய பெரிய கருணையை, நீதியின் அன்புடை அடியவர்களுக்கு அருளுவாய் என்று புகழ்கின்றோம்.
வெண்பா
1342. எனவே இடர் அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன் அருளை நாடும் புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்காழிக் கோ.
தெளிவுரை : கோ எனவே இடர் அகலும். இன்பமே எய்தும். நனவே அரன் அருளை நாடும். நீர் வளமிக்க செங்கமலத்தண்தார்த் திருஞானசம்பந்தன் தன்னைப் போற்றுவோர் ஆணவ மலத்தைப் போக்கியருள் செய்வார்.
கட்டளைக் கலித்துறை
1343. கோலப் புலமணிச் சுந்தர
மாளிகைக் குந்தள வார்
ஏலப் பொழிலணி சண்பையர்
கோனை இருங்கடல் சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம்
பந்தன நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு
சேவடி போற்றுவனே.
தெளிவுரை : அழகிய ஒளியுள்ள மணி. சுந்தர மாளிகைக்கு முல்லை மலர் மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த சீகாழிக்கு அரசாகிய திருஞானசம்பந்தரை, பெரிய கடலால் சூழப்பட்ட உலகப் புகழ் பெற்றவரை, நல்ல தமிழேபோலப் பல புன்கவி கொண்டு அவரது பாதங்களைப் போற்றுவன்.
ஆசிரியர் நம்பியாண்டார் நம்பிகள் தம்முடைய கவிகளைப் புன்கவி எனக் குறிப்பிட்டுத் தம்முடைய அடக்கமுடைமையைப் புலப்படுத்திக் கொள்ளுகிறார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1344. போற்று வார்இடர் பாற்றிய புனிதன்
பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார் புகழ் ஞானசம் பந்தன்
எம்பி ரான் இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனம் காவல் பிரிந்தென்
சிந்தை கொள்வ தும் செயச்தொழி லானால்
மாற்றம் நீர்எமக் கின் றுரை செய்தால்
வாசி யோ குற மாதுநல் லீரே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று.
குறமாது நலீரே ! இது தகுதியோ எனத் தலைவன் கேட்டான் என்க. போற்றுகின்றவர்களுடைய துன்பங்களை நீக்கிய புனிதன். சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பெருமான், ஏற்றவார் புகழ் ஞானசம்பந்தன். சிவபெருமானது கயிலாயமலையில் சேற்றுவார் புனம். காவல் புரிந்து என் சிந்தை கொள்வதும் செய்தொழில். ஆனால், நீர் எமக்கு இவ்வாறு பதில் அளித்தல் தகுதியோ என்று தலைவன் கூறினான்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1345. நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பநனி
பனிமதி அணைந்த பொழில்சூழ்
பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
புனிதகுணன் எந்தம் இறைவன்
பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன் மிகு
பரசமய வென்றி அரிதன்
சலமலி தரும்கமல சரண் நினைவன் என்றனது
தகுவினைகள் பொன்றும் வகையே.
தெளிவுரை : நலங்கள் மலிந்த உலகம் நிறைந்த வயல்களை உடைய புகழ் இன்பம் மிகுந்து குளிர்ந்த சந்திரன் அணைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய மதில்களை உடைய பெரிய சீகாழியின் அதிபதி. விதம் பெருகு புனித குணன்; எந்தம் இறைவன்; பலமலிருதம் தமிழன் வடகலை விடங்கன்; மிகு பரசமயக் கோளரி. தன் சலமலிதரும் தாமரை மலர் போன்ற திருவடி நினைவன் என்று சொல்வது வினைகள் அழியும் வகையாகும்.
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1346. வகைதகு முத்தமிழ் ஆகரன்
மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரணம் மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே மணி
நகைஎழி லிற்குற மா துன தருமை நினைக்கிலள் நீ இவள்
நசையின் முழுப்பழி ஆதல்முன் நணுகல் இனிக்கிரி வாணனே.
தெளிவுரை : தோழி தலைவனை இரவு வரல் விலக்கல்.
வகைதகு முத்தமிழ் ஆகரன். வேதங்களைப் பயில்கின்ற மேலான மொழிகளை உடையவன். வன்மை மிகுந்த கலைகளிற் சிறந்தவன். வானவில்லும் சந்திரனும் அணைகின்ற பொற்குவை மாளிகை திக்குகள்தோறும் தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீகாழிக்கு அரசாகிய திருவளர் விப்ர சிகாமணி, செழுமலயத் தமிழ்ச் சங்கம், மிக மத வெற்றி கொள் வாரணம், இடையில் எண்கால் மலையாடு, யாளிகள் விரவி இருளில் தனியாக நீண்ட வழியில் துன்பங்கள் நிறைந்துள்ளன. மணிநகை எழிலிற் குறமாது உனது அருமை நினைக்கிலள். நீ இவள்மீது கொண்ட விருப்பினால் முழுப் பழியாதல்முன் நணுகல். (வராதே) மலைத்தலைவனே இனி நீ இந்த இருளில் வராதே என்றபடி.
1347. வாணில வும் புனலும் பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்
சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
திருவா ளனையெழி லருகா சனிதனை
மருவா தவர்கிளைபோல்
நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்
நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்
கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேனறிகிலேனே.
தெளிவுரை : மகட் போக்கிய செவிலி இரங்குதல்.
பிறைத் திங்களும் கங்கையும் பயிலுகின்ற செஞ்சடையை உடைய சிவபெருமானை உமையாளொடும் இவன்தான் என்று வானில் சுட்டிக் காட்டினான். வெகு தூரம் வரை புகழப்படும் மாளிகைகளை உடைய தென் சீகாழிக்கு அரசை, திருவாளனை, அருகர்க்கு இடியாகிய திருஞான சம்பந்தரை வணங்காதவர் கிளைபோல் நாள் நிலவும் பழியைக் கருதாமல் அயலானாகிய ஒரு காளையுடன் (தலைவனுடன்) நீரில்லாததும் கொலை வேடுவர் பயின்கின்றதுமான பாலைநில வழியில் வெயிலில், கேள் நிலவும் கிளியையும் பாவையொடு ஆயத்தையும் தாயையும் என்னையும் நீங்கி பொய்யால் எனதொரு மகள் போய் உறுதுயர் கெடுவேன் ஆகிய நான் அறிகிலேனே.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1348. அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
திருஞான சம்பந்த னணிநீடு திண்குன்றில்
நெறியால மண்துன்றி முனைநாள்சி னங்கொண்டு
நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க
வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற
வெகுளாத நஞ்சிந்தை விறலா னுளன்பண்டே.
தெளிவுரை : தோழி களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.
அறிவாகி, இன்பம் செய் தமிழ் வாதில் வென்று, அந்தச் சமணர்கள் கழுவேற முன் நின்றவன், செறிந்த மாடங்களையுடைய வளப்பம் பொருந்திய சீகாழி நகராளி; என் தந்தை; திருஞானசம்பந்தன் அணி நீடு திண்குன்றில் நெறியால் அமண்துன்றி முனைநாள் சினங்கொண்டு நிறைவார் புனந்தின்று மகள்மேல் வரும் துங்க வெறியார் மதம் தங்கு சினமுடைய யானையைக் கொன்ற நம்மாட்டு அன்புள்ள தலைவன் முன்பே இவளுக்கு உண்டு. யானையைக் கொன்ற தலைவனே இவளுடைய காதலன் என்பதைத் தோழி கூறுகிறாள்.
பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1349. பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்
பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்
கொண்டதர னும்பர்பர னெங்கள்பெரு மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகி லின்பம்
கண்டதரு கந்தர்குல மொன்றிமுழு துங்ககழுவிலேறக்
கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது அன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்சி காமணி பிரானே.
தெளிவுரை : திருஞானசம்பந்தரது அருஞ்செயல்களைப் பாராட்டுகின்றார்.
இவர் முன்பு உமாதேவியார் அளித்த ஞானப் பாலால் சிவஞானம் பெற்றார். முத்துச் சிவிகையையும் பொன்தாளத்தையும் சிவபெருமானிடமிருந்து பெற்றார். தமிழை உலகத்தவருக்கு அளித்தார். சமணர்களைக் கழுவேற்றினார். உயர்ந்த மதில்களை உடைய சீகாழிப் பதியிலுள்ள வேதியர் சிகாமணியாகிய திருஞானசம்பந்தர் இவைகளைச் செய்தார் என்கிறார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1350. பிரானை மெய்த்திரு ஞானசம்
பந்தனை மறையவர் பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர்
நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினி லவனருள்
நினைவொடு தளர்வுறு தமியேனுக்
கிராவி னைக்கொடு வந்ததிவ்
அந்திமற் றினி விடி வறியேனே.
தெளிவுரை : தலைவி பொழுது கண்டு இரங்குதல்.
பிரானை, மெய்த்திரு ஞானசம்பந்தனை, மறையவர் பெருமானை, குராமலர் சோலைகள் சூழ்ந்த சீகாழி நாதனை, ஒலி செய்கின்ற கழல் அணிந்த திருவடிகளை வாழ்த்தி, நிலவுலகில் அவன் அருள் நினைவோடு தளர்வுறும் தமியேனுக்கு இரவைக் கொண்டு வருகிற இந்த மாலைக் காலம் தருகின்ற துன்பத்திற்கு எப்போது விடிவு காலம் வருமோ அறியேனே.
பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1351. ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை
வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரி சுண்டே
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன்
வண்களி யேனெளி யேனோ
சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்
தும்புரு வாலியை வென்று நிலத்திடை
நின்று துலக்குகிறாரே.
தெளிவுரை : கள்ளை உண்டவன் பொருள் தொடர்பில்லாதவற்றை கூறும் கூற்றாக அமைந்தது இது.
பன்றி முகத்தையுடைய புத்தரை, இந்திரசித்து மணந்து கொண்டான். ஈழ நாட்டவர் சொரிகின்ற தொட்டி இனங்களைப் பட்டர் வெட்டி இசித்தனர். தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு காண்பீர்களாக. சக்கரவர்திகள் சிக்கிரம் அட்டுவர். தத்துவ முப்பரிசு உண்டு, ஆன புகழ்ப்பயில் அந்தணர்களிற் சிறந்தவன் அத்தகு கரிய மேகம் ஆர் பொழில் நீடிய சீகாழிக் காவலன் வண்களியேன் எளியேனோ? கோனகனுக்கும் எனக்கும் எனத் தரை யம்மனது சூலத்தைக் கொண்டவள் தும்புரு வாலியை வென்று, நிலத்திடை நின்று, ஆடுகிறார்களே.
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத செய்திகள் இவை.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1352. ஆர்மலி புகலி நாத
னருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர
மணந்தவர் தணந்து போன
தேரத ரழிய லும்மைச்
செய்பிழை யெம்ம தில்லை
கார்திரை கஞலி மோதிக்
கரைபொருங் கடலி னீரே.
தெளிவுரை : தலைவி கடலோடு கூறுதல்.
சீகாழி நாதனான திருஞானசம்பந்தரது அருள் என்னுமாறு விரைவில் வந்து என் கச்சிட்டு இறுக்கப்பட்ட முலைகளின்மேல் படர்ந்துள்ள பசலை (தேமல்) தீர மணந்தவராகிய தலைவர் நீங்கிச் சென்ற தேரின் அடிச்சுவட்டை அழிக்காதே. உம்மைச் செய்பிழை எம்மது இல்லை. அலைகள் மோதிக் கரையோடு சண்டையிடும் கடல் நீரே.
கலி விருத்தம்
1353. கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை யருளாமல்
திடமாகி லணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி யெழில்வீதி வருகாத லொழியானே.
தெளிவுரை : தலைவன் மடல் ஏறுவேன் என்றல்.
கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகில் சிங்க ஏறு போன்ற கவி வல்லவர் ஞானசம்பந்தர். இவரது சீகாழியில் வாழும் இந்தத் தலைவி அருள் செய்யாமல் திடமாக இருப்பாளாகில் உடல் முழுதும் திருநீறு பூசி, பனை மடற் குதிரையிலேறி எழில் வீதி வழியே வரும் எண்ணமுடையேன் என்றான் தலைவன்.
மடல் ஏறுதல் : தன் குறை தீரப் பெறாத தலைமகன் பனங்கருக்கால் குதிரையும், பனையிலுள்ள மற்றவற்றால் வண்டி முதலியனவும் செய்து, தன் உடம்பு முழுவதும் நீறு பூசிக்கொண்டு பூளைப் பூ, எலும்பு, எருக்கம் பூ ஆகிய இவற்றை மாலையாகக் கட்டித் தரித்துக்கொண்டு தலைவியின் படத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அக் குதிரையிலேறி, அதனைச் சிலர் ஈர்த்துச் செல்ல வீதியிற் செல்லுதல். இது பெருந்திணையின்பாற்படும்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1354. ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்
உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
எழிலா ருங்கவு ணியர் தீ பன்திகழ்
இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
புலமே துன்றின கலைமா னொன்றின
பழிமேல் கொண்டது நுமர்தே ரன்பொடும்
அருகே வந்தது அதுகாண் மங்கையே.
தெளிவுரை : தலைவன் வரவைத் தோழி தலைவிக்கு உரைத்தல்.
எப்போதும் இன்பம் செய்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவனாகிய ஞானசம்பந்தர் உலகம் புகழும் ஞானமுடையவன். கவுணியர் குல தீபன். அவனது இரண்டாகப் பொருந்திய செங்கரங்களைப் போன்று வானத்திலுள்ள மேகங்கள் மழை பொழிகின்றன. கொன்றை மரங்கள் பூத்துள்ளன. கலைமான்கள் ஒன்று சேர்ந்தன. கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் சொன்ன சொல் தவறாமல் நேரில் வந்துள்ளார். தலைவியே ! அதோ பார் என்று தோழி தேர் வருவதைக் காட்டுகிறாள்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1355. மங்கை யிடத்தர னைக்கவி
நீரெதி ரோட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை
நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம் மேவிய
சூல்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி யேரிடை
யாள்குடி கொண்டன ளெம்மனமே.
தெளிவுரை : தலைவன் பாங்கனுக்கு உரைத்தல்.
திருஞானசம்பந்தர், உமாதேவியை இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானைப் பற்றி ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் விட அது எதிர்ஏறிச் சென்றது. அத்தகைய நான்கு வேதங்களையும் உணர்ந்த நாவளர் சைவ சிகாமணி தன் உயர்ந்த மதில்களையுடைய சீகாழியில் பொருந்திய மென்றொளிர் மென் கொங்கைகளையும் கொடி போன்ற இடையினையும் உடைய தலைவியின்மீது என் மனம் குடிகொண்டது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1356. மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
மணிநிறமு மிவள் செங்கை வளையுங் கொண்ட
தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழுங் கீர்த்திச்
சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
நன்னுதலா ளயர்கின்றாள் நடுவே நின்றும்
இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
என்செயநீ ரலர்தூற்றி எழுகின் றீரே.
தெளிவுரை : தோழி கூற்று: இவளுடைய மனத்தையும், கற்பையும், ஆடையையும் கவர்ந்து கொண்டு மணி நிறத்தையும் இவள் கையிலிருந்த வளைகளையும் செல்வமாகக் கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்தியை உடைய சண்பையர் கோனாகிய திருஞான சம்பந்தருக்கு நினைவு கொண்டு உடம்பில் படர்ந்துள்ள பசலையாகிய தேமலைக் கொண்டே நன்னுதலாள் வருந்துகிறாள். அயலார் நடுவே நின்றும் கூட்டமாகக் கொண்டு, சிரித்து பழிச்சொல் கூறுகின்றார்கள். நீர் வாளா செல்வது நியாயமா? அவளுக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறீர் என்று தோழி கேட்கிறாள்.
சம்பிரதம்
1357. எழுகுல வெற்பிவை மிடறி லடக்குவன்
எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
முழுது மொளித்திர வியையிந்நிலத்திடை
முடுகுவ னிப்பொழு திவையல விச்சைகள்
கழுமல நற்பதி யதிப தமிழ்க்கடல்
கவுணிய நற்குல திலக னிணைக்கழல்
தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு
துயர்வரு விப்பனி தரியதொர் விச்சையே.
தெளிவுரை : ஏழு குல மலைகளாகிய இவற்றை மிடற்றில் (கழுத்தில்) அடக்குவன். ஏழு கடல்களின் நீரைக் கலக்கி வயிற்றினில் முழுவதும் ஒளித்து, சூரியனை இந் நிலத்திடை முடுகுவன். இப்பொழுது இவையல வித்தைகள். சீகாழி நற்பதி அதிப ! தமிழ்க்கடல் கவுணிய ! நற்குல திலக ! நின் இணைக்கழல் தொழுது வழுத்தியவர்களுக்கு வரும் துன்பங்களை என் வித்தை தீர்த்துவிடும் என்பதாம்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1358. சயமி குத்தரு கரைமு ருக்கிய
தமிழ்பயிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்
கயலுடைப்புனல் வயல் வளத்தகு
கழுமலப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ
ரிருவி னைத்துயர் போமே.
தெளிவுரை : வெற்றி மிகுத்து அருகரை வென்ற தமிழ் பயிற்றிய நாவன். பரந்த வளமுள்ள திருமருகலில் கொடிய விஷத்தைப் போக்கிய போதன். கயல் மீன்களை உடைய நீர் வளமிக்க சீகாழிப்பதி நாதன் நல் இலக்கணம் பொருந்திய திருவடிகளைத் தொழ நினைப்பவர் வினைத் துயர்கள் போம் என்றவாறு.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1359. மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை யாலைதுன் றியகாழி
நாதனந் தணர்கோனெ னானைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை யோசையுங் கரைசேர
மோதுதெண் திரைசேவல் சேருமன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே.
தெளிவுரை : தலைவி இரங்கல்: சிறந்த பாக்கு, சுரபுன்னை, சண்பகம், மா முதலிய மரங்களில் வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகளும் கரும்பு ஆலைகளும் நிறைந்த சீகாழி நாதன்; அந்தணர் கோன்; வண்புகழ் ஆளி; ஞானசுந்தரன் மேவும் மலர் மாலையை நினைந்து தளர்வேனாகிய என்னைப் பேசத் தகாத மொழிகள் பேசும் அன்னையும், திங்களும், மணமிக்க தென்றற் காற்றும், வீணை ஓசையும், கரை சேர மோதுகின்ற கடல் அலைகளும், சேவலை நினைந்து கூவும் அன்றிலும், புல்லாங்குழல் ஓசையும், வாடைக் காற்றும் கூடி எனக்குப் பகையாக உள்ளன.
1360. வன்பகை யாமக் குண்டரை வென்றோய்
மாமலர் வாளிப் பொருமத வேளைத்
தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்
நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்
டன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம்
அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.
தெளிவுரை : தோழி கூற்று: வன்பகையாம் அந்தச் சமணரை வென்றோய் ! மலர் அம்புகளைக் கொண்டு போர் செய்யும் காமனைத் தன்னுடைய பகையாகச் சிந்தையுள் வருந்தும் தலைவியை நிலை கொள்ளுமாறு செய்வாயாக. உன்னுடைய புகழையே பாடி, கண்களில் நீர் சோர, நின்று எழில் ஞானா என்று அகம் நெக்குறுகி, அன்பு அகலா மெய்ச் சிந்தையரைப் போல, பொழில் சூழ்ந்த மாட சீகாழிக் கோவே என்று அழும் தலைவிக்கு அருள் செய்வாயாக.
மறம்
1361. கோவின்திரு முக மீதொடு வருதூதுவ ஈரக்
குளிர்பைம்பொழில் வள நாடெழில் நிதியம்பரி சம்மீ
மாவீரிய ரிவர் தங்கையென் மகுடன்திறம் அமண
மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்
பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்
தூவேரியை மடுமின் துடி யடிமின்படை யெழுமின்
தொகுசேனையு மவனும்பட மலையும்பரி சினியே.
தெளிவுரை : அரசனுடைய ஓலையோடு வந்த தூதுவனே !
குளிர்ந்த சோலைகளை உடைய வளநாட்டு எழில் நிதியம் கொடுத்து வாங்கிய குதிரை வீரர் தங்கை என் மகுடன் திறம் அமண மறவெங்குலம் அறிகின்றிலன். பழி அச்சுத அரசன் பாவேறிய மதுரத் தமிழ் விரகன். சீகாழி மன்னன் பயில்வண் புகழ் அருகாசனி (அருகர்களுக்கு இடி போன்றவன்) எனின் நமர்காள் கள்ளைக் குடியுங்கள். உடுக்கையை அடியுங்கள். படை எழுமின். தொகு சேனையும் அவனும்பட பரிசினை மலையுங்கள் (போர் செய்யுங்கள்). மறம் என்பது வீரம். வீரர்களுடைய வீட்டுப் பெண்ணை மணந்து கொள்ள ஓலை கொண்டு வந்த தூதுவனைப் பார்த்து, நாங்கள் வீரம் மிக்கவர்கள். உங்கள் தலைவன் எங்களைவிட வீரத்தில் தாழ்ந்தவன் என்று கூறுவதுபோல் அமைந்த பாடல் இது. பாட்டின் ஓசையும் மிடுக்காய் இருப்பதைக் காண்க.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1362. இனியின் றொழிமினிவ் வெறியும் மறியடு
தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர்
நசையுண் டதுநரை முதுபெண்டீர்
புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்
விரகன் புயமுறு மரவிந்தம்
பனிமென் குழலியை யணிமின் துயரொடு
மயலுங் கெடுவது சரதம்மே.
தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்: வெறியாடுதலையும் ஆட்டைப் பலி கொடுக்கும் வேலையையும் குரவை ஆடுதலையும் இன்றோடு விட்டொழியுங்கள். நனி சிந்தையின் இவள் மிக அன்புறுவது ஒரு விருப்பம் உள்ளது. நரை முது பெண்டிரே ! புனிதன், புகலியர் அதிபன், புனை தமிழ் விரகன், தோள்கலை தலைவி விரும்புகின்றாள். இத் தலைவியை அழகுபடுத்துங்கள். துயரமும் மயக்கமும் கெடுவது உண்டு.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1363. சரத மணமலி பரிசம் வருவன
தளர்வில் புகலிய ரதிபன் நதிதரு
வரத ணணி தமிழ் விரகன் மிகுபுகழ்
மருவு சுருதிநன் மலையி னமர்தரு
விரத முடையைநின் னிடையி னவள்மனம்
விரைசெய் குழலியை யணைவ தரிதென
இரதம் அழிதர வருதல் முனமினி
யெளிய தொருவகை கருது மலையனே.
தெளிவுரை : நொது மலர் வரை உணர்த்தித் தோழி வரைவு கடாதல். அயலார் பரிசத்தோடு வருவதற்குமுன் தலைவியை மணந்து கொள்வாயாக என்றபடி. மணத்தை முன்னிட்டு அயலார் பரிசத்தோடு வருவது உண்மை. தளர்வில்லாத புகலியர் அதிபன், நதி தரு வரதன், அணிதிகழ் விரகன், மிகுபுகழ் மருவும் சுருதி நன் மலையின் அமர்தரு விரதம் உடையை, உன்னை அடைந்தால் அவள் மனம், விரைசெய்குழலியை அணைவது அரிதென அவர்கள் வருவதற்குமுன், மலை நாட்டுத் தலைவனே ! விரைந்து ஆவன செய்வாயாக !
1364. அயன்நெடிய மாலுமவ ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி யிடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடம்மதில் புடை தழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.
தெளிவுரை : பிரமன், திருமால் ஆகிய இருவராலும் அறிய முடியாத தாணுவாகிய சிவன் அருளோடு உலகத் துன்பம் முழுவதும் போயகல அயல் அணிதென் திருவீழிமிழலையில் காசு பெற்று, மழை பொழியவும் செய்த குணமதுரன். சந்திரன் தங்குகிற உயர் மாடங்களை உடையதும் சோலைகள் சூழ்ந்ததுமான சீகாழி தேவர்களுக்குத் தலைவன்; ஞானத் தமிழ் விரகன்; மறை ஞானமுணர் பரம குருநாதன் பரசமய கோளரியே ! பஞ்சத்தைப் போக்கியவன் ஞானசம்பந்தன் என்றபடி.
1365. அரியாருங் கிரிநெறியெங் ஙனம் நீர் வந்தீர்
அழகிதினிப் பயமில்லை யந்திக் கப்பால்
தெரியாபுன் சிறுநெறிக ளெந்தம் வாழ்விச்
சிறுகுடியின் றிரவிங்கே சிரமம் தீர்ந்திச்
சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
தொகுபுகழ்சேர் திருன சம்பந் தன்றன்
வரியாரும் பொழிலுமெழில் மதிலுந் தோற்றும்
வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.
தெளிவுரை : இடைச் சுரத்துக் கண்டோர் விலக்கல்.
சிங்கங்கள் நடமாடுகின்ற மலை வழியில் நீங்கள் எப்படி வந்தீர்கள்? உங்கள் செயல் நன்றாயிருக்கிறது. இனிப் பயமில்லை. மாலை நேரத்திற்குப் பிறகு நீங்கள் செல்லும் வழி துன்பமுடையது. நாங்கள் வாழும் இந்தச் சிறுகுடியில் இன்று இரவு தங்கி சிரமம் தீர்ந்து சுருண்ட கூந்தலையுடைய மென்குழலாளோடும் காலையில் சென்று புகழ்மிக்க திருஞானசம்பந்தரின் சோலைகள் சூழ்ந்ததும் பெரிய மதில்களை உடையதுமான சீகாழியை இனிது சென்று சேரலாம்.
ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை
1366. ஆமாண்பொன் கூட்டகத்த
வஞ்சொ லிளம் பைங்கிளியே
பாமாலை யாழ் முரியப்
பாணழியப் பண்டருள்செய்
மாமான கந்தரன்வண்
சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகா
லின்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யா
னின்புறநீ கூறாயே.
தெளிவுரை : பொற் கூண்டிலுள்ள அழகிய சொல்லையுடைய இளம் பைங்கிளியே ! யாழ்முரி என்னும் பாடலைப் பாடி, திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழை முரித்த திருஞானசம்பந்த மாமுனி எம் கோமான்தன் புகழ் ஒரு சமயம் இன்புற நீ கூறமாட்டாயா? சீகாழித் தலைவன் தன் புகழைக் கேட்டு நான் இன்புற நீ கூறமாட்டாயா?
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1367. கூற தாகமெய் யடிமை தானெனை
யுடைய கொச்சையார் அதிபதி
வீற தார்தமிழ் விரகன் மேதகு
புழி னானிவன் மிகுவனச்
சேற தார்தரு திரள்க ளைக்கன
செழுமு லைக்குரி யவர்சினத்
தேறு தானிது தழுவி னாரென
இடிகொள் மாமுர சதிருமே.
தெளிவுரை : ஏறு தழுவுதல்: ஏறு தழுவினார் இவளுக்குரியவர் என்று முரசு அதிரும்.
என்னை அடிமையாகக் கொண்ட சீகாழி அதிபதி பெருமை பொருந்திய தமிழ் விரகன், மேதகு புகழினான் இவன் மிகுவன சேறதார் தரு திரள்களைக் கனசெழு முலைகளுக்கு உரியவர். கோபங்கொண்ட காளையைத் தழுவினார் என இடி போன்ற மாமுரசு அதிரும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1368. சதுரன் புகலிய ரதிபன்கூர்
தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலிய ரதிபன்தாள்
முறைவந் தடையலர் நகரம்போல்
எதிர்வந் தனர்விறல் கெடவெம்போர்
எரிவெங் கணைசொரி புரிமின்கார்
அதிர்கின் றனஇது பருவஞ்சே ரலர்தம்
பதிமதி லிடிமின்னே.
தெளிவுரை : பருவங்கண்டு தோழி கூறுதல் : மேம்பாட்டை உடையவன்; சீகாழி அதிபன்; கூர்தவ சுந்தர கவுணியர் தம் சீர் முதல்வன்; திருஞானசம்பந்தரது திருவடிகளை முறையாக வந்து அடையாதவர் நகரம்போல, எதிர் வந்தனர் வெற்றியழிய வெம்போர் எரி கொடிய அம்புகள் சொரிகின்ற மின்னலொடு பகைவர்களுடைய நகரில் முகில்கள் முழங்குகின்றன. கார்காலம் வந்துவிட்டது. தலைவரும் வருவார் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1369. மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர்
மிகுபொன் மாடப் புகலி நாதன்
துன்னும் ஞானத் தெம்பி ரான்மெய்த்
தொகைசெய் பாடற் பதிக மன்னாள்
பொன்னும் மாநல் தரள முந்தன்
பொருக யற்கண் தனம்நி றைத்தாள்
இன்னு மேகிப் பொருள் படைப்பான்
எங்ங னேநா னெண்ணு மாறே.
தெளிவுரை : பொருள் வயின் பிரிய எண்ணிய நெஞ்சத்துக்குத் தலைவன் கூறியது.
மின்னும் விண்ணில் உள்ள மேகமும் சேர்மிகு பொன்மாட சீகாழி நாதன், துன்னு ஞானத்து எம்பிரான் மெய்த்தொகைசெய் தேவாரப் பதிகம் போன்றவள் மார்பில் பூத்துள்ள பொன்னிறம் போன்ற பசலையும் கண்களிலிருந்து வழியும் முத்துப் போன்ற கண்ணீரும் உடையவள். இவளிடம் பொன்னும் முத்தும் இருக்க இனி நான் எதற்காகப் பொருள் தேடப் போக வேண்டும்? என்று தலைவன் நெஞ்சத்துக்குக் கூறுகின்றான்.
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1370. மாறி லாத பொடிநீ
றேறு கோல வடிவும்
வம்புபம்பு குழலுந்
துங்க கொங்கை யிணையும்
ஊறி யேறு பதிகத்
தோசை நேச நுகர்வும்
ஒத்து கித்து நடையுஞ்
சித்த பத்தி மிகையும்
வீற தேறும் வயல்சூழ்
காழி ஞான பெருமான்
வென்றி துன்று கழலி
னொன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும்
சேல்கள் போலும் விழியும்
சிந்தை கொண்ட பரிசும்
நன்றி மங்கை தவமே.
தெளிவுரை : மாறிலாத திருநீறு அணிந்த மேனியும், நறுமணம் பரவிய கூந்தலும், இரண்டு முலைகளும், தேவாரப் பாடல்களின் ஓசையும், நேச நுகர்வும் ஒத்து கித்து நடையும், சித்த பத்தி மிகையும், வெற்றியமைந்த வயல்கள் சூழ்ந்த சீகாழி ஞானப் பெருமான் வெற்றியுடைய திருவடிகளைப் பணியும் தேன் போன்ற மொழியும் சேல்மீன்கள் போன்ற கண்களும் சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.
மங்கை செய்த தவத்தால் இவ்வளவு நலன்களையும் பெற்றாள் என்கிறார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1371. கைதவத்தா லென்னிடைக்கு
நீவந்த தரியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தா ருயிரனைய
மிகுசைவ சிகாமணியைக் வேணுக் கோனைச்
செய்தவத்தால் விதிவாய்ந்த
செழுமலையா ரவனுடைய செம்பொன் திண்டோள்
எய்தவத்தால் விளிவெனக்கென்
யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே.
தெளிவுரை : தலைவி பாணனை இகழ்தல்.
இழிந்த பாணனே ! கபட நாடகம் ஆடும் நீ இங்கு வந்த காரியத்தை நான் அறியேனோ? மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவ சிகாமணியை, சீகாழி நாதனை செய்தவத்தால் விதி வாய்ந்த செழுமுலையார் (பரத்தையர்) தலைவனுடைய செம்பொன் திண்தோள் எய்தவத்தால் விளிவு எனக்கு யாதுக்கு நீ பல பொய் இசைக்கின்றாயே.
நீ பொய் பேசுபவன். என்னை ஏமாற்ற முடியாது என்கிறாள்.
மதங்கியார்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1372. இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களி னியல்பும் வளம்பொலி
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலும் மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசை,தகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.
தெளிவுரை : இசையை முகந்து எழு கண்டமும், இது இங்கு இவன் இடு கை முதலியவற்றால் செய்யும் அவி நயங்களின் இயல்பும், வளம் பொலிகின்ற திசை திசை துன்றிய சோலைகள் சூழ்ந்த சீகாழி மன், தகுதமிழ் விரகன், பல நசை மிகு வண் புகழ் பயிலும் மதங்கியினுடைய நளிர் முலைகளும் செங்கயல் விழி நகையும் கண்டபின், வசைதரு மென்குலம் அவை முழுதும் கொள மதிவளர் சிந்தனை மயல் வருகின்றதே.
இவளுடைய ஆடல் பாடல்களைக் கண்டு எவர்தாம் மயங்கார் ? என்கிறார்.
1373. வருகின் றனனென் றனதுள் ளமும்நின்
வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்
தருகும் புனல்வெஞ் சுரம்யா னமரும்
மதுநீ யிறையுன் னினையா தெனின்முன்
கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்
பெருகுந் திருவா ரருள்பே ணலர்போற்
பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.
தெளிவுரை : தலைவன் கூற்று : வருகின்றனன் எனது உள்ளமும் நின் வசமே நிறுவி குறைகொண்டு தணித்து, தண்ணீர் வற்றிய பாலை நிலத்தில் நான் அமரும் அது நீ சிறிது நேரமும் நினையாது எனின் முன் கருகும் மேகம் வந்து தங்கும் உயர்ந்த மதில்களை உடைய சீகாழிக் கவிஞன், பயில் செந்தமிழ் ஆகரன் மெய் பெருகும் திருவார் அருள் பேணலர்போல் (பகைவர் போல்) பிழை செய்தனை. இந்தக் கொடிய வழியில் வந்த பெண் கொடியே ! என்று தலைவன் வருந்துகின்றான்.
1374. கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு
குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்
அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநகர் அணையானகனை கடலின்
முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவனுமர்
முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.
தெளிவுரை : தலைவன் கூற்று: விடைக் கொடியை உடைய சிவபெருமானைப் பணியும் குண மேதை, கவுணியர்களின் குலதீப, நல்ல வரலாற்றை உடையவன், அடியேனது இடர் முழுதும் அற வீசும் தமிழ் விரகன், அழகான சீகாழி அணையான கனை கடலின் முடிநீடு பெருவலைகளைக் கொண்டு அலையூடு புகுவன், உறவினர் முறை யேவு பணி புரிபவன், அணி தோணி புனைவன், அவை படியாரும் நிகர் அரிய அழகிய மதர்த்த கண்களையுடையவள் பெருத்த முலையினை உடைய வலையர் மடமாது அருள் பெறினே.
1375. பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை
பெருநெறி யளிப்பனபல பிறவியை யொழிச்சுவன
உறுதுய ரழிப்பனமு னுமைதிரு வருட்பெருக
உடையன நதிப்புனலி னெதிர்பஃறி யுய்த்தனபுன்
நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன
நனிகத வடைத்தனது னருவிட மகற்றியன
துறுபொழில் மதிற்புறவ முதுபதிம னொப்பரிய
தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.
தெளிவுரை : பெறுபயன் மிகப் புவியுள் அருளுவன் மறுமையில், பெரு நெறியளிப்பன; பல் பிறவியை ஒழிப்பன; உறுதுயர் அழிப்பன; முன் உமாதேவியார் திருவருள் பெருக உடையன; நதிப்புனலின் எதிர் படகு உய்த்தன; புன்நறுமுறு (குறைகூறிய) சமணர்களைக் கழுவேற்றின; திருமறைக்காட்டில் கோயில் கதவுகளை மூட வைத்தன; கொடிய விஷம் நீங்கச் செய்தன; சோலைகள் சூழ்ந்த மதில்களையுடைய, சீகாழி பதிமன் ஒப்பரிய தொழில்பல மிகுந்த தமிழ் விரகன் செய்த தேவாரப் பாடல்களே.
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1376. தொகுவார் பொழில்சுற் றியவான்
மதிதோ யுமதிற் கனமார்
தொலையா ததிருப் பொழில்மா
ளிகைமா டநெருக்கியசீர்
மிகுகா ழியன்முத் தமிழா
கரன்மே தகுபொற் புனைதார்
விரையார் கமலக் கழலே
துணையா கநினைப் பவர்தாம்
மகரா கரநித் திலநீர்
நிலையார் புவியுத் தமராய்
வரலா றுபிழைப் பி(லர்,ஊழிதொ)
றூழி இலக்கிதமாய்த்
தகுவாழ்வு நிலைத் தொழில்சே
ரறமா னபயிற் றுவர்மா
சதுரால் வினைசெற் றதன்மே
லணுகார் பிறவிக்கடலே.
தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த உயர்ந்த மதில்களையுடைய, மாட மாளிகைகள் நெருங்கிய சீகாழியின் முத்தமிழாகரன், மேதகு பொற்புனைதார், விரையார் கமலக் கழலே துணையாக நினைப்பவர்தாம் முத்துக்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகமும் சுற்றமாய் ஊழிக் காலத்திலும் நிலைபெற்று நின்ற வாழ்வு நிலைத்து எழில் சேர் அறமான பயிற்றுவர் மாசதுரால் வினை செற்று அதன் மேல் பிறவிக்கடலை அணுகார்.
திருஞானசம்பந்தரது திருவடிகளை வணங்குபவர்களுக்குப் பிறவித் துன்பங்கள் இல்லை என்கிறார்.
பாணாற்றுப்படை
நேரிசை ஆசிரியப்பா
1377. கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
துருமதிப் பாண கருமங் கேண்மதி
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
காந்திய வுதரக் கனல்தழைத் தெழுதலின்
தெளிவுரை : பாணனே ! நான் ஒரு செய்தி சொல்லுகிறேன் கேள். பலவாகிய பாடல்களை, பசித் துன்பத்தோடு பல கஷ்டங்களை அடைந்து வயிற்றுப் பசியாகிய நெருப்பு எழுவதனால்,
தேய்ந்துடல் வற்றிச் சில்நரம் பெழுந்தே
இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
உறுசெறுத் தனைய வுருவுகொண் டுள்வளைஇ
இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்
மன்னிய வளநகர் மனைக்கடை தோறும்
தெளிவுரை : உடல் தேய்ந்து வற்றி, சின்னரம்பு எழுந்து இறுகவும், சிறுசிறு கழிகளைக் கொண்டு கட்டிய சிறுவீடுபோல உருவுகொண்டு உள் வளைந்து, இனிய இசையைக் கொண்ட நல்ல யாழைச் சுமந்து, அன்னங்கள் பொருந்திய வள நகராகிய சீகாழியில் வீடுகள் தோறும்.
சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு வன்துயர் போயொழிந்
தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன
துள்ளத் துள்ள தாயின் மதுமலர்
வண்டறை சோலை வளவயல் அகவ
தெளிவுரை : சென்று சென்று, பிச்சை கிடைக்காமல் நிற்கின்ற வன்துயர் ஒழிந்து இன்புற்றுப் பெருஞ்செல்வம் பெறும் எண்ணம் உனக்கு இருக்குமாயின், தேன் பொருந்திய மலர்ச் சோலைகளும் வயல்களும் ஒலி செய்ய (அகவ - பாண ! எனினுமாம்)
ஒண்திறற் கோள்மீன் உலாவு குண்டகம்
உயர்தரு வரையின் இயல்தரு பதணத்துக்
கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பருமுரண் கணையக் கபாட
விளையக் கோபுர விளங்கெழில் வாயில்
தெளிவுரை : ஒண்திறல் கோண்மீன் உலாவும் ஆழ்ந்த நீர் நிலையும் உயர்ந்த மதிலும், சூலம் நிரம்பிய வேலியும் கனகப் பருமுரண் கணையக் கபாடமும் (குறுக்கு மரமாகிய தாழ்ப்பாளோடு கூடிய) கதவும் கோபுரங்களை உடைய வாயில்,
நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும்
மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைத்த
செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
மாளிகை ஒளிச் சூளிகை வளாகத்து
அணியுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய
தெளிவுரை : நெகிழ்ச்சியில் வகுத்து திகழ்ச்சியில் ஓங்கும் மஞ்சனை இஞ்சி (மேகம் தவழ்கின்ற உயர்ந்த மதில்) வளப்பம் பொருந்திய கொடிகள் கட்டிய ஒளியுள்ள பொன்மலை என்ன மாளிகைகளை உடைய நிலா முற்றத்தோடு கூடிய மணிகள் பதிக்கப் பெற்ற,
நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
கழுமல நாதன் கவுணியர் குலபதி
தெளிவுரை : நல்லொளி பரந்து நயநிதி கழிந்து இரவு இலகொளி பலபல விசும்பிடை காட்ட மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமை திருமகள் நிலைத்திருக்கின்ற சீகாழியின் நாதன், கவுணியர் குலபதி,
தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன் பாசமய கோளரி
என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் உள்ளத்
அன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்
குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி
தெளிவுரை : தண்டமிழ் விரகன், சைவ சிகாமணி, பண்டிதர் இன்பன், பரசமய கோளரி, என்புனை தமிழ் கொண்டிரங்கி, என் உள்ளத்து அன்பினை அருளிய ஆண்டகையாகிய ஞான சம்பந்தரை அடைந்து, தன் புகழ் குறைவறுத்து உள்கி நிறைகடை குறுகி,
நாப்பொலி நல்லிசை பாட
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.
தெளிவுரை : நாப்பொலி நல்லிசை பாட மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.
பாணனே ! நீ நேராகத் திருஞானசம்பந்தரிடம் சென்று அவரை வணங்கி, அவரைத் துதி செய்தால் நீ நிறைந்த செல்வத்தைப் பெறுவாய் என்பதாம்.
வஞ்சித் துறை
1378. நீதியின் நிறைபுகழ்
மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை
ஓதுவ துறுதியே.
தெளிவுரை : நீதியின் நிறைபுகழ்; மேன்மை தங்கிய சீகாழி மன்னன்; மாதமிழ் விரகனை ஓதுவது உறுதியே. நான் நிச்சயமாகத் திருஞானசம்பந்தரை வணங்கித் துதிப்பேன்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1379. உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி
உனதுமனம் ஆர முழுவதும்அ தாக
அறுதிபெறும் மாதர் பெயர்தருதல் தானும்
அழகிதுஇனி யான்உன் அருள்புனைவ தாகப்
பெறுதிஇவை நீஎன் அடிபணிதல் மேவு
பெருமைகெட நீடு படி றொழி பொன் மாடம்
நறைகமழும் வாச வளர்பொழில் சுலாவும்
நனிபுகலி நாத தமிழ்விரக நீயே.
தெளிவுரை : நனி புகலி நாத ! தமிழ் விரக ! நீயே, உறுதி முலைதாழ, எனை இகழும் நீதி உனது மனமார, முழுவதுமதாக, அறுதி பெறு மாதர், பெயல் தருதல் தானும் அழகிது. இனி யான் உன் அருள் புனைவதாகப் பெறுதி; இவை நீ என் அடிபணிதல் மேவு பெருமை கெட நீடு பொய் ஒழி; பொன் மாட மணம் வீச சோலைகள் சூழ்ந்த சீகாழிப்பதி நாத எனக் கூட்டுக. மனம் புண்பட்ட தலைவி கூறுவதுபோல் அமைந்துள்ளது.
ஆசிரியத் துறை
1380. நீமதித் துன்னிநினை யேல்மட நெஞ்சமே
காமதிக் கார்பொழிற் காழி
நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு
பூமதிக் கும்கழல் போற்றே. 
தெளிவுரை : மடநெஞ்சே ! நீ மதித்துச் சிந்தித்து நினைக்கவில்லை. சந்திரன் தவழும் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த சீகாழிப்புகழ் ஞான சம்பந்தனோடு, உலகிலுள்ளார் போற்றும் அவரது திருவடிகளைப் போற்றுவாயாக.
கட்டளைக் கலிப்பா
1381. போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே
புந்தி யான்உந்தம் பொற்கழல் பூண்டதே
மாற்றி யிட்டது வல்விட வாதையே
மன்னு குண்டரை வென்றது வாதையே
ஆற்றெ திர்ப்புனல் உற்றதம் தோணியே
ஆன தன்பதி யாவதம் தோணியே
நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே
நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.
தெளிவுரை : போற்றி செய்து, அரனது பொற்கழல்களைப் பூண்டதே அறிவு. யானும் உன் பொற்கழல் பூண்டதே மாற்றியிட்டது. நஞ்சால் உண்டாகிய துன்பத்தையும், சமணர்களது வாதத்தை வென்றது. ஆற்று வெள்ளத்தில் எதிர்த்துச் சென்றது. அந்தப் படகே தன்பதியானது. எல்லாமும் படகே. தோணிபுரமாகிய சீகாழியே. நாற்றிசைக் கவி ஞான சம்பந்தனே ! நல்ல நாமமும் ஞானசம்பந்தனே. ஞானசம்பந்தரே கதியாவார் என்க.
கைக்கிளை மருட்பா
1382. அம்புந்து கண்இமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் சம்பந்தன்
காமரு கழுமலம் அனையா
ளாம்இவள் அணங்கலள் அடிநிலத் தனவே.
தெளிவுரை : கைக்கிளை - ஒருதலைக் காமம். தலைவன் தலைவி என்னும் இருபாலரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக் காதலிப்பது (கை - சிறுமையாகிய, கிளை- உறவு). அம்பு போன்ற கண் இமைக்கும். நெற்றி வியர்க்கும். மணம் வீசும் மலர்மாலை வாடும். திருஞானசம்பந்தரது, அழகிய சீகாழி போன்றவள் இவளேதான். தெய்வ மகள் அல்லள். அவளது பாதம் பூமியில் பதிந்துள்ளது.
இது தலை மகன் கூற்று. தேவர்களின் கண் இமைக்காது. அவர்கள் உடம்பு வியர்க்காது. அவர்கள் அணிந்துள்ள மலர்மாலை வாடாது. அவர்கள் பாதங்கள் பூமியில் படியா.
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1383. தனமும் துகிலும் சாலிக்
குலையும் கோலக் கனமாடச்
சண்பைத் திகழ்மா மறையோர்
அதிபன் தவமெய்க் குலதீபன்
தெளிவுரை : செல்வமும் துகிற் கொடியும் நெற் குவியலும் அழகு கொலுவீற்றிருக்க சீகாழித் திகழ் மாமறையோன்; அதிபன் தவமெய்க் குலதீபன்.
கனவண் கொடைநீ டருகா
சனிதன் கமலக் கழல்பாடிக்
கண்டார் நிறையக் கொள்ளப்
பசியைக் கருதா தெம்பாண
தெளிவுரை : கனவன், கொடை நீடு அருகாசனி, தன் கமலக் கழல்பாடி, கண்டார் நிறையக் கொள்ள பசியைக் கருதாது எம் பாணனே !
புனைதண் தமிழின் இசைஆர்
புகலிக் கரசைப் புகழ்பாடிப்
புலையச் சேரிக் காளை
புகுந்தால் என்சொல் புதிதாக்கிச்
தெளிவுரை : புனைதண் தமிழின் இசையார் புகலியாகிய சீகாழிக் கரசைப் புகழ்பாடி, புலையச் சேரிக் காளை (தலைவன்) புகுந்தால் என் சொற் புதிதாக்கி,
சினவெங் கதமாக் கலிறொன்
றிந்தச் சேரிக் கொடுவந்தார்
சேரிக் குடிலும் இழந்தார்
இதனைச் செய்குவ தறியாரே.
தெளிவுரை : பாணனை நோக்கித் தலைவி கூறியது.
சினவெங் கதமாக் களிறு (பெரிய யானை) ஒன்று இந்தச் சேரி கொடுவந்தார் இதனை என்ன செய்வது என்று அறியார்.
திருஞானசம்பந்தரது புகழைப் பாடி வந்தால் நற்கதி பெறுவாய். பரத்தையரிடம் காலங்கழிக்கும் தலைவனைப் பற்றிய பொய்யான புகழ் உரைகளை இங்குச் சொல்லாதே என்கிறாள்.
இன்னிசை வெண்பா
1384. யாரேஎன் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயும் சென்னித் தமிழ்விரகன் சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.
தெளிவுரை : எம்போல் யார் அருளுடையார். தாமரை மலர்மாலை அணியும் சென்னித் தமிழ் விரகன். சிறப்புப் பொருந்திய சீகாழி நாதன்தன் குரைகுழற்கே (திருவடிகளுக்கே) மெச்சி அடிமை செய்ய அறிந்து பெற்றேன். ஆகையால் நானே அருளுடையவன்.
பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1385. அறிதரு நுண்பொருள் சேர்பதி கம் அரன் கழல்மேல்
அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்
செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் திகழ்சீர்த்
திருவளர் சண்பையின் மாடலை கடல்ஒண் கழிசேர்
எறிதிரை வந்தெழு மீன்இரை நுகர்கின் றிலைபோய்
இனமும் அடைந்திலை கூர்இடரோடிருந் தனையால்
உறுதியர் சிந்தையி னூடுத வினர்எம் தமர்போல்
உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே.
தெளிவுரை : காமமிக்க கழிபடர் கிளவி : வண் குருகே ! அறிதரு நுண் பொருள் சேர் தேவாரப் பதிகங்களைப் பாடிச் சிவபெருமான் திருவடிகளுக்கு அணியாகத் தந்துள்ள சுந்தரமார் தமிழ் விரகன். சந்திரன் படிகின்ற உயர்ந்த சோலைகள் சூழ்ந்த மாளிகைகள் நிறைந்த திகழ்சீர் திருவளர் சீகாழியில், அலைகளை உடைய கடற்கரையில் அலைகள் கொண்டு வரும் மீன்களை உண்ணுவதில்லை. உன் இனத்தாரிடமும் போய்ச் சேரவில்லை. நீயும் என்னைப்போல் காம நோயால் வருந்துகிறாயா? உன்னை விட்டு உன் காதலன் பிரிந்து சென்றுள்ளானோ? இதைச் சொல்வாயாக !
கலி விருத்தம்
1386. குருகணி மணிமுன் கைக்கொடி யும்நல் விறலவனும்
அருகணை குவர்அப் பால்அரி தினிவழி மீள்மின்
தருகெழு முகில்வண் கைத்தகு தமிழ்விர கன்றன்
கருகெழு பொழில்மா டக்கழு மலவள நாடே.
தெளிவுரை : இடைச் சுரத்துக் கண்டோர் கூறுதல்:
உடன் போக்கில் சென்ற தலைவனையும் தலைவியையும் தேடி வந்த செவிலித்தாய்க்கு இடைச் சுரத்தில் கண்டோர் கூறும் துறையாகும் இது.
வளையல்களை முன்கையில் அணிந்த கொடி போன்ற தலைவியும் வெற்றி வீரனாகிய தலைவனும் கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். அதன் பிறகு நீ செல்வது அரிது. வந்த வழியே திரும்பிச் செல்வாயாக. மேகம் போல் கொடையளிக்கும் கைகளை உடைய தமிழ் விரகன்தன் சோலை சூழ்ந்த மாடங்களையுடைய சீகாழி வளநாட்டுக்குச் செல்வார்கள். நீ வருந்தாதே என்பதாம்.
1387. நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்
சேடே றும்கொச்சை நேர்வளம் செய்துனை
மாடே றும்தையல் வாட மலர்ந்தனை
கேடே றும்கொடி யாய்கொல்லை முல்லையே.
தெளிவுரை : தோழி கூற்று: நாட்டில் மிகுதிப்படும் புகழ் ஞான சம்பந்தனது பெருமையே. சீகாழியின் நேர்வளம் செய்துணை மாடேறும் தையல் வாட மலர்ந்தனை. கொழு கொம்பு ஏறும் கொடியாய் ! கொல்லை முல்லையே ! தலைவி வாடியிருக்கும் போது, முல்லையே, நீ மலர்ந்திருப்பது நல்லதோ என்கிறார். கார் காலம் வந்துவிட்டது. தலைவரும் வருவார் என்பது குறிப்பு.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1388. முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை
முந்தி உறுபெரிய செந்தண் முனிவன் மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை அணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை யிலர் கணையும் இல்லை பகழிஉறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை இலர்விரக ரல்லர் தழை கொணர்வர்
தோழி இவர்ஒருவர் ஆவ அழிதர்வரே.
தெளிவுரை : தோழி கூற்று: முல்லை மலர் போன்ற பற்களை உடைய உமாதேவியாரின் திருவருளை முன்பு பெற்ற பெரிய செந்தண் முனிவன். மிகுநல்ல சோலைகள் சூழ்ந்த பழைமையான அழகுடைய சீகாழிநாதன். மறை முதல்வன் வேத மலையில் (கைலாய மலையில்) வில்லை வைத்திருக்கவில்லை. அம்பும் இல்லை. பகழியொடு யானை, மான், பன்றி இவைகளைப் பார்த்தீர்களா என்று பொருள் பொதிந்த மொழிகளைப் பேசுகின்றார் இல்லை. காம நோக்கம் உடையவர் அல்லர். தழையைக் கையுறையாகக் கொண்டு வருவார். இவர்தான் தலைவராவார்.
வஞ்சித் துறை
1389. வழிதரு பிறவியின்உறு
தொழில் அமர்துயர் கெடும்மிகு
பொழிலணி தருபுகலிமன்
எழிலிணையடி இறைமினே.
தெளிவுரை : வழிதரு பிறவியின் உறு தொழில் அமர் துயர் கெடுமிகு. அதாவது தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பத்தைப் போக்குகின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழி மன்னனது அழகிய இரண்டு திருவடிகளைத் துதிப்போமாக. ஞானசம்பந்தரது திருவடிகளைப் புகழ்ந்து போற்றுங்கள் என்று கூறி முடிக்கின்றார்.
திருச்சிற்றம்பலம்
39. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)
இந்நூல் திருஞானசம்பந்தப் பிள்ளையாருடைய வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதாகலின், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை என்னும் பெயருடையதாயிற்று. திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிவபிரானுடைய திருவருளால் உமா தேவியார் அளித்தருளிய திருமுலைப் பாலைப் பருகித் தேவாரப் பாக்களைப் பாடத் தொடங்கியது முதல், திருநல்லூர்ப் பெருமணத்தில் திருவருட் பேரொளியில் கலந்தது வரை நிகழ்ந்த செய்திகளை எல்லாம் இச் சிறுநூல் தொகுத்து உரைக்கின்றது.
திருச்சிற்றம்பலம்
1390. தி பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்பரற்ற ஒவா
தழுவான் பசித்தான் என் றாங் கிறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை வழுவாமே
முப்பதத் திரண்டறமும் செய்தாள் முதிராத
தெளிவுரை : அழகிய நெற்றியில் பொற்சுட்டி பிரகாசிக்க, குதலை மொழியையுடைய குழந்தையின் கால்களில் சிலம்பு ஒலி செய்ய, இடைவிடாது அழுவதனால் பசித்திருக்கிறான் என்று இறைவன் காட்டவும், வழிபடுவோரின் துயரங்களை நீக்கும். மயில் போலும் சாயலை உடையவளும் குறை வில்லாமல் முப்பத்து இரண்டு அறங்களையும் செய்தவளுமாகிய உமா தேவியார்,
செப்பொத்த கொங்கைத் திருநுதலி அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல் இருள் தீர்ந்த
காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று காட்ட வலான்
தெளிவுரை : முதிராத, செப்புப் போன்ற கொங்கைகளையும் திருநுதலையும் உடைய உமா தேவியார் இறைவனது கருணையினால் தன் முலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்டவும் அப்பொழுதே ஞானத்திரளாகி முன்னின்ற திருஞான சம்பந்தர், மயக்கம் நீங்கிய சீகாழித் தலத்தின் முதல்வனும், ஊழி முதல்வனுமாகிய இறைவன் ஆகாயத்தில் உள்ளான் என்று காட்டவல்லான்,
வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக் கழுவேற்றினான் பாணர்
யாழை முறித்தான் எரிவாய் இடும் பதிகம்
ஆழி உலகத் தழியாமற் காட்டினான்.
ஏழிசை வித்தகன் (வந்து) ஏனோரும் வானோரும்
தெளிவுரை : திருவீழிமிலையில் படிக்காசுப் பெற்ற பிரான்; பெருத்த அமணர் கூட்டத்தைக் கழுவேற்றினான். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழை, யாழ்முரி என்னும் பாடலைப் பாடி முரித்தான். எரிவாயிடும் பதிக மூலம் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை அழியாமல் காப்பாற்றினான்; ஏழிசைகளிலும் வித்தகன்; மற்றவர்களும் தேவர்களும் வந்து வணங்கும்.
தாழும் சரணச் சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத்
திருவா வடுது றையில் செம்பொற் கிழிஒன்
றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத
தென்னவன் நாடெல்லாம் திருநீறு பாலித்த
தெளிவுரை : காலில் சதங்கை அணியும் சிறு பருவத்திலேயே பாலை நிலத்தைப் பற்றியும் நெய்தல் நிலத்தைப் பற்றியும் பாடும் திறம் பெற்றிருந்தார். சோலைகள் சூழ்ந்த திருவாவடுதுறையில் செம்பொற் கிழியொன்று பெறும் அளவுக்கு அருள் பெற்றிருந்த ஐயன்; தெளியாத பாண்டிய நாட்டில் திருநீறு அளித்த மன்னன்.
மன்னன் மருகல் விடம் தீர்த்த பிரான்பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம் பெற்றுஇக் குவலயத்தில்
மாலக்கா லத்தே மாற்றினான் ஞாலத்து
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான் நித்திலங்கள்
தெளிவுரை : திருமருகலில் பாம்பு கடித்து இறந்த கணவனை உயிர் பெற்றெழச் செய்தவன்; திருவோலக்காவில் பொற்றாளம் பெற்று இக் குவலயத்தின் மயக்கத்தை மாற்றியவன்; சிவ பெருமான் முத்துச்சிவிகையைக் கொடுப்ப முன்னின்று தித்தித்த தேவாரப் பாடல்களைச் செவிக்கு விருந்தாக அளித்தவன்.
மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான் நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும்
பெருவார்த்தை தான் உடைய பிள்ளை மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப
தெளிவுரை : முத்துக்கள் மாடங்களில் பிரகாசிக்கும் திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) முடியாமல் இருந்த கோயில் கதவை, திருப்பதிகம் பாடி மூடும்படி செய்தான். நீண்ட புகழை உடைய திருவோத்தூரில் (இப்போது செய்யாறு என வழங்கப்படுகிறது) ஆண் பனையைப் பெண் பனை ஆகுமாறு செய்த அருளாளன்; மணமிகுந்த கொள்ளம்பூதூர் இறைவன் ஓடம் தர,
உள்ளமே கோலாக ஊன்றினான் வள்ளல்
மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர் கோமான் நிலவிய
வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும்
செய்கையான் மிக்க செயலுடையான் வெய்யவிடம்
தெளிவுரை : உள்ளத்தையே துடுப்பாகக் கொண்டு படகைச் செலுத்தினான்; வள்ளல் மழவனுடைய குழந்தையினது பெருநோயினைத் தீர்த்த அழகன். கவுணியர் குலக் கோமான்; வைகை ஆற்றின் வெள்ளத்தில் ஏட்டை எதிர் ஓட்டும் செய்கையால் மிக்க செயலுடையான்,
மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித் திம் மண்ணுலகில் வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் மொய்த்தொளிசேர்
தெளிவுரை : மயிலாப்பூரில் கொடிய விஷத்தால் இறந்த வேல் போன்ற கண்களை உடைய பூங்கோதையை, வா என்று அழைத்து இம் மண்ணுலகில் வாழ்வித்த சீர்நின்ற செம்மைச் செயலுடையான்; எதிரிட்டு வந்த புத்த மதத்தைச் சேர்ந்தவனது தலையைப் புவிமேல் புரள்வித்த வித்தகப் பாடலைப் பாடியவன்,
கொச்சைச் சதுரன் தன் கோமானைத் தான் செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளைக்க வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர்எதிர்ஆணைநம தென்னவலான்
தெளிவுரை : ஒளி மிகுந்த கொச்சை எனப்படும் சீகாழிச் சதுரனாகிய இறைவன் மீது பாடிய பதிகத்துடன் பதினாறாயிரம் தேவாரப் பாடல்களைப் பாடவல்ல, முத்தி தரும் இறைவன் திருவடியை அடைய பக்தி மார்க்கத்தை நமதென்று சொல்ல வல்லவன்,
கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்
பத்திச் சிவம் என்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப்
தெளிவுரை : ஓலமிட்டுத் திரிகிற பிறவியாகிய கடலில் ஆழ்ந்து போகாமல், பக்தியாகிய ஒப்பற்ற தெப்பத்தை உலகம் வாழத் தந்த பிரான்; பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும் கொற்றக் கதிர் வேலையுடைய அமைச்சராகிய குலச்சிறையாரும் கொண்டாடும் அன்று சமணர்கள் இட்ட வெந்தீயை,
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான்
வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ் முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி
தெளிவுரை : பற்றிச் சுடுக போய்ப் பாண்டியனை என்ன வல்லான்; திருப்புகலூரில் வர்த்தமானீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் பாதங்களைப் பணிந்து, வாழ் முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான். அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான். துத்தம் என்னும் இசை நரம்பை ஒழிக்கும் குழந்தை தூயவாய்,
நித்தில்லப்பூண் முலைக்கும் நீண்டதடங் கண்ணினுக்கும்
கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் கைம்மலர்க்கும்
அத்தா மரை அடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே ரல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு
தெளிவுரை : (மனைவியின் சிறப்பைக் கூறுகின்றார்) நல்ல நெற்றியையுடைய முத்து அணிந்த முலைகளுக்கும், நீண்ட பெரிய கண்களுக்கும், கொத்தார் கரிய கூந்தலுக்கும், கோலச் செங்கைம் மலர்க்கும், அந்தாமரையடிக்கும் அழகிய மென்மையான தொடைகளுக்கும் சித்திரப் பொற் காஞ்சி செறிந்த பேர் அல்குலை உடையாளுக்கும் முத்தமிழ் நூல் எல்லாம் உணர்ந்த நம் திருஞான சம்பந்தர்க்கும்,
ஒத்த மணம் இது என் றோதித் தமர்களெல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம் செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண் டுட னேநிற்க
பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப் புக்குத்தன்
அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.
தெளிவுரை : ஒத்த மணம் இது என்று ஓதி, சுற்றத்தார் எல்லாம் மனம் களிக்க திருமணம் செய்த பந்தலில், அன்றைய தினமே எல்லாரும் கண்டு மகிழ, பெற்றவர்களோடும் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் திருக்கோயிலுக்குச் சென்று, கோயிலினுள் புகுந்து தன் அத்தன் அடியே மகிழ்ந்து அடைந்தான். அப்போது எழுந்த பெருஞ்சோதியில் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மூழ்கி முத்தி பெற்றனர்.
திருச்சிற்றம்பலம்
40. திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாதசமாலை (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)
திருநாவுக்கரசருடைய பெருமையினை விரித்துரைப்பதாகிய இந்நூல், பதினொரு பாடல்களைக் கொண்டது. ஏகாதச என்பது பதினொன்றைக் குறிக்குமாதலின் இப்பெயர் எண்ணால் பெற்ற பெயராகும். இதன்கண் அமைந்த பாடல்கள் பதினொன்றே ஆயினும், திருநாவுக்கரசருடைய வரலாற்றில் அமைந்த சிறந்த உண்மைகளும் அப் பெரியாரை வழிபடுவதனால் உளவாம் பெரு நலங்களும், அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களின் சிறப்பும் இப் பாடல்களில் தெளிவாக அமைக்கப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
1391. புலனோ டாடித் திரிமனத்தவர்
பொறிசெய் காமத் துரிசடக்கிய
புனித நேசத் தொடுதமக்கையர்
புணர்வி னால்உற் றுரைசெயக்குடர்
தெளிவுரை : ஐம்புல நுகர்ச்சியினால் திரிகின்ற மனத்தை உடையவர், பொறிகள் செய்கின்ற காமமாகிய குற்றத்தை அடக்கிய தூய்மையான அன்போடு தமக்கையாகிய புனிதவதியாரிடம் வந்து சேர்ந்து அவர் சொன்ன நல்லுரைகளைக் கேட்டு வயிற்றுவலி (சூலை நோய்),

சுலவு சூலை பிணிகெ டுத் தொளிர்
சுடுவெ ணீறிட் டமண கற்றிய
துணிவி னான்முப் புரமெ ரித்தவர்
சுழலி லேபட் டிடுத வத்தினர்
தெளிவுரை : சூலை நோய் நீங்கப்பெற்று, பிரகாசமான திருவெண்ணீறிட்டு, சமணர்களை அகற்றிய துணிவை உடையவர். முப்புரங்களை எரித்த சிவபெருமானது ஆளுகைக்கு உட்பட்டு, (சைவராகி) தவத்தை உடையவர்.

உலகின் மாயப் பிறவி யைத்தரும்
உணர்வி லாவப் பெரும யக்கினை
ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
உபரி யாகப் பொருள்ப ரப்பிய
தெளிவுரை : உலகில் மாயப் பிறவியைத் தரும் உணர்வில் ஈடுபடும் மயக்கினை ஒழிக்க, பல தேவாரப் பாடல்களையும் பாடி, சைவ நெறியைப் பரப்பிய,
அலகில் ஞானக் கடலி டைப்படும்
அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
அடி ரேமுக் கருளி னைச்செயும்
அரைய தேவத் திருவ டிக்களே.
தெளிவுரை : உலகில் ஞானக் கடல் இடைப்படும் அமிர்த யோகச் சைவ நெறியில் புக அடியார்களாகிய எங்களுக்கு அருளினைச் செய்யும் அரையத்தேவ சுவாமிகளே ! வணக்கம்.
1392. திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.
தெளிவுரை : திருநாவுக்கரசர், அடியவர்கள் நெருங்கிப் பழகுவதற்குப் பெருநிதி போன்றவர் (புகலிடம் எனினுமாம்). தெளிந்த தேனைப் போன்று இனிய சொல்லையுடையவர் (நாவுக்கு அரசர் எனினுமாம்). மாதர்களில் உருப்பசி முதலாக தெய்வப் பெண்கள் ஈறாக உள்ளவர் பலரும் வசியமாகச் சொல்லும் அவையனைத்தையும் தூசியாகக் கருதி, மெய் உரு ஞானத்திரள் மனமுருகி, நெகிழ்ந்து, அழுது, கண்ணீர் மல்கி, உழவாரப் படையைக் கையில் உடையான். அவர் பாடிய தேவாரப் பாடல்களைக் குருவாகக் கொண்டு, சிவனடி சூடத் திரிபவர், துன்பம் தருகின்ற பிறவிக் குழியைக் குறுகார் என்றவாறு.
திருநாவுக்கரசர் உழவாரப் படையைக் கொண்டு சிவத்தலங்களின் பிரகாரத்தைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார்.
1393. குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார்
அழிந்தபொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே
கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே
கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.
தெளிவுரை : மனமே ! நீ குழிந்து சுழிபெறு நாபியின்கண் மயிர் நிரையார், குரும்பை முலையிடை செல்லும் நன்மடவார் அழிந்த பொசியதிலே கிடந்து இரவு பகல் நீ அளைந்து அயரும் தன்மையை நீ அறியவில்லை. போனது போகட்டும். நாள் இணங்கி, இதயம் நெகிழுமாறு கசிந்து இதயம் கனியுமாறு தேவாரப் பாடல்களைப் பாடுகின்ற செல்வமே ! திரு நாவினை உடைய எங்கள் அரசின் அருமையைப் புரிந்து நினைப்பாயாக. இது தவிர வேறு வழியில்லை. இதுவே நன்மருந்து என அறிக. பெண் இன்பத்தில் காலம் கழிக்காதே என மனத்திற்கு அறிவுரை கூறுகின்றார்.
1394. இலைமா டென்றிடர் பரியா ரிந்திர
னேயொத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வம் எனவே கருதுவர்
நீள்சன் மக்கட லிடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே.
தெளிவுரை : செல்வம் இல்லையென்று துன்பம் அடையமாட்டார்கள். இந்திரனுக்குச் சமமாகச் செல்வம் படைத்திருந்தாலும் இச் செல்வம் நிலைத்திருக்காது. என்றே கருதுவர். நீண்ட பிறவிக் கடலில் மூழ்கி அலைய மாட்டார்கள். சென்று சிவபெருமானது சைவ நெறியாகிய கரையை அடையப் பெறுவார்கள். அவர்கள் யார் என்னில், அழகிய திண்ணிய கல் மாடங்கள் திகழ்கின்ற புகழ் பெற்ற திருவாய்மூரில் அவதரித்த திருநாவுக்கரசின் நாமத்தைப் போற்றுபவர்கள் என்பதாம். அவர் பாதங்களைப் பணிபவர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார்.
1395. என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை
இங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்
முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்(கு)எத் திக்கென
மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
வஞ்சிக் கத்திவி ழுந்(து)எச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்றிலர் சென்(று)அர்ச்சிக் கிற்றிலர்
அந்தக்குக் கிக்கிரை சிந்தித்த பித்தரே.
தெளிவுரை : எலும்பால் செய்யப்பட்ட இந்தச் சிறுகுடில் போன்ற உடலை இங்கு எரித்த பிறகு எவ்விடத்திற்குச் செல்லும். முன்பிட்டுச் சுட்டி வருந்தி எங்குச் செல்வதென்று அறியாமல் வலிமையுற்று, படிப்பில்லாமல் கெட்டு, மதத்திற்குப் புறம்பானவர்கள் சிலர் துன்புற்று, புத்தியை வஞ்சித்துத் துன்புறுவர். அன்பர்க்குப் பற்றிலர். சென்று அர்ச்சிக்க மாட்டார்கள். வயிற்றுக்கு உணவு தேடும் பித்தர்கள் என்றவாறு. சிவநெறியைக் கடைப்பிடியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றார்.
1396. பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
பெட்டியுரை செய்துசோறு கட்டியுழல் சமண்வாயர்
கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம்
முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
கற்றுணையில் வரும்ஆதி
பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.
தெளிவுரை : பித்தரசு பதையாத கொத்தை நிலை (அறிவில்லாத நிலை) உளதேவு பெட்டியுரை செய்து (வேறு தெய்வங்களைப் புகழ்ந்து பேசி) உணவே முக்கியமென்று கருதி உழலுகின்ற சமணர்கள் கையிலிருந்து விடுபட்டு, சிவபூசை செய்து ஞாலத்தார் புகழ்கின்ற முத்தி பெறு திருவாளனாகிய திருநாவுக்கரசர், வேறு எந்தத் துணையும் இல்லாமல் கல்லையே தெப்பமாகக் கொண்டு எல்லாராலும் போற்றப்படுகின்ற தேவாரப் பாடல்களே பெரும் செல்வமாகும். திருநாவுக்கரசை வணங்குவோம். அவர் பாடிய தேவாரப் பாடல்களைப் பாடி நற்கதி பெறுவோம் என்கிறார்.
1397. பதிகம் ஏழேழுநூறு பகருமா கவியோகி
பரசுநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர்
அவர்செய்வா தைகள் தீருமனகன் வார்குழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை
நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவரீச னடியரா குவர்வானம்
உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.
தெளிவுரை : 10 அல்லது 11 பாடல்களைக் கொண்டது ஒரு பதிகம் என்று பெயர். இவர் பாடியதாகக் கூறுவது ஏழ் எழுநூறு. அதாவது 4900 பதிகங்கள் என்று ஆகின்றன. (இவ்வளவு பாடல்களும் இப்போது கிடைக்கவில்லை). இவ்வளவும் சிவபெருமானைப் பற்றிய தேவாரப் பாடல்கள். திருவதிகை வீரட்டானத்திலிருந்து பாடினார். சமணர்கள் செய்த துன்பங்களைப் போக்கும் அவர் தீவினையற்றவர். அவர் பாதங்களைப் போற்றினால் தீவினை இல்லாதவர்கள் ஆவர். நீதி, சீர்மை, வாய்மை இவைகள் வந்து சேரும். பாவங்கள் விலகும். பேரறிவாளர்கள் ஆவர். ஈசனுக்கு அடியார் ஆவர். முத்தி கிடைக்கும். இவ்வுலகில் இருக்கும் வரை போற்றப்படுவார்கள்.
1398. தாமரைநகு மகவிதழ் தகுவன
சாய்பெறுசிறு தளிரினை யனையன
சார்தருமடி யவரிடர் தடிவன
தாயினும் நலம் கருணையை யுடையன
தெளிவுரை : தாமரை சிரிக்கும் உள்ளிதழ் ஒப்பாவன. சாய்கின்ற சிறு தளிரினை ஒத்தன. சார்தரும் அடியவர் துன்பத்தை அழிப்பன. தாயைக் காட்டிலும் நல்ல கருணையை உடையன.
தூமதியினை யொருபது கொடுசெய்த
சோதியின்மிகு கதிரினை யுடையன
தூயனதவ முனிவர்கள் தொழுவன
தோமறுகுண நிலையின தலையின
தெளிவுரை : பரிசுத்தமான பத்துச் சந்திரன்களைக் கொண்டு செய்த பிரகாசத்தை உடையன. பரிசுத்தமானவை என்று தவ முனிவர்கள் தொழுவன. குற்றமற்ற குணங்கள் பொருந்தியன. தலைமைப் பதவியை வகிப்பன.
ஓமரசினை மறைகளின் முடிவுகள்
ஒலிடுபரி சொடுதொடர் வரியன
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன
ஊறியகசி வொடுகவி செய்த புகழ்
தெளிவுரை : ஓம் வடிவாகவுள்ள சிவ பெருமானைத் துதிக்கும் வேதங்களின் முடிவுகள் ஓலமிடும் தன்மையோடு அறிதற்கு அரியன. அன்போடு தோய்ந்து பாடிய தேவாரப் பாடல்களின் புகழ்,
ஆமரசுய ரகம்நெகு மவருளன்
ஆரரசதி கையினர னருளவன்
ஆமரசுகொ ளரசெனை வழிமுழு
தாளரசுத னடியிணை மலர்களே.
தெளிவுரை : திருவதிகை வீரட்டான ஈஸ்வரரின் அருள் பெற்றவர். அத்தகைய சிறப்புடைய திருநாவுக்கரசின் அடியிணை மலர்களை வழிபட்டு நற்கதி பெறுவோமாக என்கிறார்.
1399. அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப்
பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.
தெளிவுரை : அடிநாயைப் பல்லக்கிலேற்றி, வீதி வலம் வந்து, அறிவற்ற விலங்குத் தன்மையுடைய சிறியோரில் பொருந்தும் கொடியவனாகிய எனக்கு அருள் செய்யும் திருநாவுக்கரசை, குணமேரு போன்றவரை விட்டு, மற்றவர்கள் சொல்லும் அப் பிண நூலைப் பெரிய பொருளாகக் கருதும் துர்நாற்றம் வீசுகின்ற உடலை உடைய, உறியைக் கையிலேந்திய சமணர்க்காக, தேவர்க்கு அரிதாகிய சிவலோகக் கதியை மறந்தது பெரும் தவறாகும் என்கிறார்.
1400. சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
திரியும் பத்தியிற் சிறந்தவர்
திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
திகழும் பைம்பொடித் தவண்டணி
தெளிவுரை : சிவசம்பத்தின் (சைவ நெறி) மத்தியில் தவம் செய்து திரியும் பத்தியில் சிறந்தவர், திலகன், கல்வியிற் சிறந்தவன். திருநீற்றைக் கவசமாக அணிந்தவர்.
கவசம் புக்குவைத் தரன்கழல்
கருதுஞ் சித்தனிற் கவன்றியல்
கரணங் கட்டுதற் கடுத்துள
களகம் புக்கநற் கவந்தியன்
தெளிவுரை : சிவபெருமானது திருவடிகளைக் கருதும் சித்தணிற் கவன்றிய கரணங் கட்டுதற்கு அடுத்துள களகம் புக்க நற்கவந்தியன். திருநீறு ஆகிய போர்வையை உடையவன்.
அவசம் புத்தியிற் கசிந்து கொ
டழுகண் டசத்துவைத் தளித்தனன்
அனகன் குற்றமற் றபண்டிதன்
அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
தெளிவுரை : பரவச புத்தியில் கசிந்து கொடு அழுகண்டத்து வைத்து அளித்தவன். பாவமற்றவன். குற்றமற்ற பண்டிதன். திருநாவுக்கரசு; எங்கட்கு ஒரு பற்றக்கோடு.
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
பசுபந் தத்தினைப் பரிந்தடு
பரிசொன் றப்பணிக்கும் நன்றுமே.
தெளிவுரை : பிறவிப் பிணியைத் தீர்த்து வைக்கும் பரஞ்சுடர். குற்றமின்றி இத்தனைத் தொடர்ந்தவர். உயிர் பந்தத்தைப் பரிந்தடு பரிசு ஒன்று அப்பணிக்கு நன்றாகியது.
இவ்வளவையும் செய்யக்கூடியது திருநாவுக்கரசர் போற்றும் சைவ நெறி என்பதாம்.
1401. நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி
நளினம்வைத் துயினல்லால்
ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற்
ருள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில்
பொறியில்ஐம் புலனோடே.
தெளிவுரை : திருநாவுக்கரசரின் திருவடித் தாமரையை வைத்து உய்ந்தால் அல்லாமல் ஒன்றும் ஆவது கண்டிலம். வேறு உபாயங்கள் எதுவும் எமக்கு வேண்டா. ஆதியும் அந்தமும் இல்லதோர் இகபரத்து இடைப்பட்டு அழிவார் புகும் சூழலில் புகமாட்டோம். அப்படிப் புகின், பொறியில் ஐம்புலனோடே திருநாவுக்கரசரின் பாதம் பணிவோம். ஆதரவு தருவன திருவடிகளே.
பதினோராம் திருமுறை முற்றிற்று.










































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக