செவ்வாய், 8 நவம்பர், 2011

11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-2 | திருமுறுகாற்றுப்படை (பார்ட் - I )


ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    


பதினொன்றாம் திருமறை
11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-2 | திருமுறுகாற்றுப்படை (பார்ட் - I )

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 
http://temple.dinamalar.com/


 பதினொன்றாம் திருமறை
11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-2 | திருமுறுகாற்றுப்படை (பார்ட் - I )

26. கோயில் நான்மணிமாலை(பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)
கோயில் நான்மணி மாலை முதலிய நூல்களைப் பாடிய திருவெண்காட்டு அடிகள், கடல்துறைப் பட்டினமாகிய காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தமையால் பட்டினத்துப் பிள்ளையார் எனவும் கூறப் பெறுவர். இவருக்கு இளமையில் இடப் பெற்ற பிள்ளைப் பெயர் திருவெண்காடர் என்பது. துறவியாகிய பிறகு அடிகள் என்னும் சொல்லும் சேர்ந்து திருவெண்காட்டு அடிகள் என மாறியது. இவருடைய வரலாறு இவர் பாடிய நூல்களின் முகப்பில் விரிவாக அச்சிடப் பட்டிருப்பதன்றிப் புராணமாகவும் பாடப்பட்டுள்ளது. இப் பெயர் உடையவர்கள் இருவேறு காலங்களில் இருவர் இருந்திருத்தல் கூடுமென ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இதற்குக் காரணம், பாடல்கள் இருவகையான போக்குகளில் அமைந்திருத்தலேயாம்.
இறைவன் எழுந்தருளியிருக்குமிடம் கோயில் எனப் பெறும். சிவநேசச் செல்வர்களால் கோயில் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுவது திருத்தில்லையின்கண் கூத்தப்பிரான் திருக்கூததியற்றும் சிதம்பரக் கோயிலேயாம். திருவெண்காட்டு அடிகள் தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் பாடிப் பரவ வேண்டும் என்னும் நோக்கத்துடன் இக் கோயில் நான்மணி மாலையை இயற்றி யருளினார். பாடல்கள் பிரானின் சிறப்பை இனிது விளக்குகின்றன. ஆழ்ந்து பயில்வார்க்கு இம் மாலை பேரின்பத்தை அளிக்கும் என்பது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
826. பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் - பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.
தெளிவுரை : தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் அறியாத திருமுடியான் மேலது அவனது கொற்றக்குடை. அதை நாம் புகழ்ந்து ஏத்துவோம். புகழை விரும்பியவனும் பாட்டுக்களை ஏற்றுக் கொள்பவனும் சிதம்பரத்தில் எழுந்தருளியிருப்பவனும் பொன்னம்பலத்தில் நடனமாடுகின்றவனுமாகிய நடராஜப் பெருமானுடைய வெற்றிக் குடையை நாம் புகழ்ந்து பேசுவோம்.
கட்டளைக் கலித்துறை
827. குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர்
வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர்
ஆவதிற் பைம்பொற்கொன்றைத்
தொடைகொண்ட வார்சடை அம்பலத்
தான்தொண்டர்க்(கு) ஏவல்செய்து
கடைகொண்ட பிச்சைகொண்(டு) உண்டிங்கு
வாழ்தல் களிப்புடைத்தே.
தெளிவுரை : வெற்றிக் குடையைக் கொண்டு இவ்வுலகை எல்லாம் குளிர்வித்து, தீ வளர்த்து, சக்கராயுதத்தைக் கொண்டு ஆட்சி செய்து பகைவர்களை வெல்லும் அரசர் ஆவதைவிட, பொன்னிறம் போன்ற கொன்றை மாலை அணிந்த நீண்ட சடையை உடைய தில்லை நடராஜப் பெருமானது தொண்டர்களுக்குப் பணி செய்து கீழ்மையுடைய பிச்சை ஏற்று இங்கு வாழ்வது இன்பமானதாகும்.
ஆசிரிய விருத்தம்
828. களிவந்(து) அமுதூறிக் கல்மனத்தை எல்லாம்
கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந்(து) அடியேன் மனம்புகுந்த(து) என்றால்
விரிசடையும் வெண்ணீறும் செவ்வானம் என்ன
ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்
உடையான் உயர்தில்லை அமபலம்ஒன் றல்லால்
எளிவந்(து) இனிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண்(டு)
இடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.
தெளிவுரை : களிப்பைச் செய்கின்ற அமுதம் ஊறி, கல்மனத்தை உடையோரையெல்லாம் கசியும்படி செய்து, அறிந்துணர்வார் இல்லாத வெளியில் வந்து அடியேனுடைய மனம் புகுந்தது என்றால், விரிந்த சடையும் திருநீறும் செவ்வானத்தைப் போன்ற பிரகாசமான பொன்னிறமும் பழைமையான திருக்கூத்தையும் காட்டும் பெருமானது தில்லையம்பதியில் அல்லாமல் தாழ்வாகிப் பிறர்பால் சென்றவர்க்குப் பொய்மையான புகழ்ச்சிச் சொற்கள் அமைந்த மொழிகளால் புகழ்ந்து பாட மாட்டோம்.
நேரிசை ஆசிரியப்பா
829. உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்
ஆடும் அம்பல வாண நீடு
தெளிவுரை : சொல்லின் எல்லையும், பொருளும் அளவும் இருவகைப்பட்ட எல்லையும் கடந்து, தம்மை மறந்து, உம்மை நினைப்பவரது செம்மையான மனத்திலும், தில்லைச் சிற்றம் பலத்திலும் நடனமாடும் அம்பலவாண!
குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்
தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்
வீர வெள்விடைக் கொடியும் போரில்
தெளிவுரை : உயர்ந்த மலையரசன் மகளாகிய உமாதேவியை - திருமாலின் தங்கையைத் திருமணம் கொண்டபோது ஐயனே ! உன்னுடைய கொன்றை மாலையும் இடபக் கொடியும் ஒலி செய்யும் உடுக்கையும், ஓசை மிகுந்த கங்கை ஆறும்
தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல்
தெளிவுரை : பொய்யில்லாத நீக்க முடியாத மறையென்னும் ஆணையும் வரிசையாக ஆயிரம் கொண்ட, பெரிய தந்தங்களையுடைய வெள்ளானையும், பண்ணோடு ஓதப்பெறும் நான்மறை என்னும் குதிரையும்
வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேருமால் வரையும்
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று
ஒருபதி னாயிரம் திருநெடு நாமமும்
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள்
தெளிவுரை : விண்ணுலகமும் களங்கமற்ற மேரு மலையும் விளை நிலங்களை உடைய திருத்தில்லையாகிய பழைமையான தலமும் என்று ஒரு பதினாயிரம் திருப்பெயர்களும் உரிமையாகப்பாடி, திருமணப்பந்தருள்
அமரர்  முன்புகுந்(து) அறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்
கானில்வால் நுளம்பும் கருடன்ஆ தலினே.
தெளிவுரை : தேவர்கள் முதலில் வந்து அறுகம்புல்லைச் சாத்தி உன்னுடைய அடியார்களுடைய பெயர்கள் எழுதப்பட்ட பெரிய புத்தகத்தில் என் பெயரையும் எழுதும்படி வேண்டுவேன். உன்னுடைய அருள் உலகத்தில் கண்ணுக்குத் தெரியாத அணுவும் ஆகாயம் வரை உயர்ந்து காட்டும். அது எங்ஙனமெனின், சிறிய கொசுவும் கருடனாகி விடும் என்ற விதியின்படி என்க.
வெண்பா
830. ஆதரித்த மாலும் அறிந்திலன்என்(று) அஃதறிந்தே
காதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத்தோல்
கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.
தெளிவுரை : உன்னை விரும்பிய திருமாலும் அறிய முடியவில்லையென்று அறிந்து, உன்மீது அன்பு கொண்ட எனக்காவது காட்டுவாயாக. யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவன், நீண்ட பாம்பைக் கங்கணமாகக் கட்டியவன், சிதம்பரத்தில் கோயில் கொண்டிருப்பவனுமாகிய உன் செம்பொற் பாதங்களைக் காட்டுவாயாக என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
831. அடியொன்று பாதலம் ஏழிற்கும்
அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம்
கடந்தது முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோள்எட்டுத் திக்கின்
புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத்
தான்தன் திருநடமே.
தெளிவுரை : திருவடி ஒன்றுமே பாதாளம் ஏழிற்கும் கீழ் உள்ளது. தேவரீருடைய திருமுடி ஒன்று அண்டங்கள் எல்லாம் கடந்தது. திருநீறு நிறைந்த எட்டுத் தோள்களும் எட்டுக் திக்குகளையும் கடந்துள்ளன. பூங்கரும்பின் செடி பொருந்தப்பெற்ற தில்லைச் சிற்றம்பலத்தான் திருநடமே நடனக் காட்சியின் திறம் பேசுகிறது.
திருநடம், பட்டது; கடந்தது; புறத்தன என இயைக்க.
ஆசிரிய விருத்தம்
832. நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட
நாயகரே ! நான்மறையோர் தங்க ளோடும்
திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட
செல்வரே ! உமதருமை தேரா விட்டீர்
இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்
என்போல்வார்க்(கு) உடன்நிற்க இயல்வ தன்று
தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்
தஞ்சுண்டா யங்கருதி நஞ்சுண் டீரே.
தெளிவுரை : திருக்கூத்து இயற்றி ஏழு உலகங்களையும் காப்பாற்றுகின்ற நாயகரே ! நான்கு வேதங்களைப் பயின்றவர்களோடும் திண்ணிய திருமாளிகைகளையும் மதிலையும் உடைய தில்லையில் கோயில் கொண்ட செல்வரே ! தேராவிட்டீர். இடப் பாகத்திலிருந்த உமா தேவியாரும் தடுத்திராவிட்டால் என்னைப் போன்றவர்க்கு உடன் நிற்க இயலாமல் போயிருக்கும். பெரிய மாலை அணிந்த முடியைச் சாய்த்துப் பணிந்த வானோர்க்குத் தஞ்சம் அளிப்பவராய்த் தீய நஞ்சை உண்டீர் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
833. நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க தென்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கு யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி
மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு
அருள்நனி இன்றி ஒருவயி(று) ஓம்பற்குப்
தெளிவுரை : நஞ்சை உமிழ்கின்ற கொடிய பெரிய பாம்பு தன் அடிப்பாகத்தைப் பறித்துத் துன்புறுத்த, தென்முதல் சூழ்ந்த நீர்ச் சிறுபாம்பு தன் வாய்க்கு எதிர் வந்த தேரையைக் கௌவியதைப் போல, யான் முன்பு கருவிடை வந்த நாள் முதலாக, மறதியில்லாத நமன் முறை பிறழ் பெரிய வாய் வேலின் நுனி போல எயிற்றிடைக் கிடந்தது போன்று, அருள் சிறிதும் இல்லாமல் இந்த வயிற்றைப் பாதுகாப்பதற்கு,
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்ந்துநின்று
எண்தோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.
தெளிவுரை : பல உயிர்களைக் கொன்று, வலிமையாக அருந்திச் சோர்வடைந்தனன். அப்படி இருந்தும் மறுபடியும் எட்டுத் தோள்களையும் வீசி, கண்டோர் உருகுமாறு பழைமையான மதில் சூழ்ந்த தில்லையம்பலத்தில் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல், பரவுதல், பணிதல் ஆகிய எதையும் செய்யவில்லையே !
வெண்பா
834. இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்
கலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி
ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்
நாடகங்கண்(டு) இன்பான நான்.
தெளிவுரை : இலவ மலர் போன்ற இதழ்களை உடைய மங்கையரை விரும்பிச் செல்பவர்கள் என்னை இகழ்வார்கள். அம் மாதரை நான் விரும்பிச் செல்லமாட்டேன். ஒளி வீசுகின்ற பொன்னம்பலத்தில், என்னை அடிமையாகக் கொண்டவர் சூடுகின்ற திருக்கூத்தைக் கண்டு இன்புறுவேன்.
கட்டளைக் கலித்துறை
835. நானே பிறந்த பயன்படைத்
தேன்அயன் நாரணன்எம்
கோனே எனத்தில்லை அம்பலத்
தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென்
தீமையெல் லாம்மறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத்
தேவந்து சந்திக்கவே.
தெளிவுரை : பிரமதேவனும் திருமாலும் எம் தலைவனே என்று தில்லை அம்பலத்தே நின்று, கூத்துகந்த தேனே என்று அவர்கள் வேண்டி நிற்கிறார்கள். அதையும் பொருட்படுத்தாமல், என்மீது நீயே திருவுளங் கொண்டு, என் தீமையெல்லாம் அறுத்து என் மனத்தே வந்து எதிர்ப்பட்டுத் தோன்றுகின்றாய். இப்போதுதான் நான் பிறந்த பயனை அடைந்தேன்.
ஆசிரியச் சந்த விருத்தம்
836. சந்து புனைய வெதும்பி மலரணை
தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர்
தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை
பண்டை நிறமும் இழந்து நிறையொடு
பண்பு தவிர அனங்கன் அவனொடு
நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு
நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன்
நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ(டு) அணிந்து திலைநகர்
அம்பொன் அணியும் அரங்கின் நடநவில்
அங்கண் அரசை அடைந்து தொழுதிவள்
அன்று முதலெ திரின்று வரையுமே.
தெளிவுரை : தலைவியின் நிலையைத் தோழி உரைத்தல்: காம நோயின் தன்மை கூறியவாறு: சந்தனம் பூசியதால் உடல் வெப்பமடைந்து, மலரணையில் படுக்க அஞ்சி ஆடையோடு சங்கு வளையல்களும் கழல, ஊரார் தூற்றும் பழிச் சொல் அதிகரிக்க மெலிவடைந்து கிளியோடு பந்தையும் கழற்றிக் காயையும் மறந்து தளிர் போன்ற முன்னிருந்த நிறத்தையும் இழந்து, நிறையொடு பண்பு தவிர, மன்மதன் தன்னோடு அன்பு கொண்டதன் விளைவாக, நந்தி மத்தளம் வாசிக்க உமாதேவியார் மகிழ இறைவன் உடலில் அணிந்திருந்த பாம்புகள், விடத்தைக் கக்கச் சீறி, இறைவன் பாதத்தின் அடியிலுள்ள முயலகன் வருந்தியலற அலையுண்ட கங்கையை
மாலை நேர சந்திரனோடு அணிந்து சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் நடனம் செய்கின்ற அழகிய பெருமானை அடைந்து, தொழுது, இவள் அன்று முதல் எதிரில் நின்றாள். அதனால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இவை.
நிலைமண்டில ஆசிரியப்பா
837. வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து
கடல்தட வாக மிடலொடும் வாங்கித்
திண்தோள் ஆண்ட தண்டா அமரர்க்(கு)
அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்
தெளிவுரை : மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்து, வலிமையான தோள்களையுடைய மன அமைதியில்லாத தேவர்களுக்கு அமுதை உண்ணும்படியாகக் கொடுத்த முதுபெருங்கடவுள்,
கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம்
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது
அஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ(டு)
உலகு குழைத்தொரு நாள் உண்டதும்
தெளிவுரை : கடையுகம் சென்ற காலத்து (ஊழிக்காலம்) இந்தப் பெரிய நிலம் கடலில் மூழ்கிப் போகாவண்ணம் பாதுகாத்து, அஞ்சாதீர்கள் என்று செம்மை நிறமுடைய சேல்மீன் ஆகி, தன் தெய்வ வயிற்றின் செதிள் ஒன்றில் ஏழு கடல்களையும் உள்ளடக்கி உலகங்களையும் சேர்த்து ஒருநாள் உண்டதும்,
உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க்(கு) அல்ல(து) அவன்குறை வின்றே
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்து
தெளிவுரை : மூன்று உலகங்களையும் திருமால் அளந்தபோது அவனுடைய இரண்டு பாதங்களும் நிரம்பவில்லை. நேரில் உரைப்போர்க்கு அல்லது அவன் குறை அன்று. இத்தகைய சிறந்த தேவனாகிய திருமால் பன்றி உருவம் தாங்கி,
அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற்(கு) அரியநின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய
பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி
ஏவருங் காண ஆடுதி அதுவெனக்(கு)
தெளிவுரை : ஏழு உலகங்களையும் தோண்டிப் பார்த்தார். அவ்வாறு பல ஊழிகள் தோண்டியும், காண்பதற்கு அரிய உன் கழலும் வேண்டி எல்லா உலகங்களையும் வேதங்களையும் அகில சராசரங்களையும் படைத்த பிரமதேவன் அன்ன உருவம்கொண்டு பார்க்க முடியாத உன் பிரகாசமான நெடுமுடியும் ஈங்கு கொண்டு நீங்காது விரும்பி, தில்லைச்சிற்றம்பலத்தில் மறுவின்றி விளங்கி அனைவரும் காணுமாறு நடனம் ஆடுகின்றாய்.
அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாது மொழிந்த(து) எந்தை வளையாது
கல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது
தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப
வான்பொய் அச்சம் மாயா ஆசை
மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்
தெளிவுரை : அது எனக்கு அதிசயமாக உள்ளது. அதிசயம் விளையாமல் எந்தையாகிய நீ மொழிந்து வளையாது, கல்லைக் காட்டிலும் வலிமையானது. நல்லிதற் செல்லாது, அது சிறிதாக இருந்த போதிலும் உள்ளிடம் நிரம்புமாறு பொய், அச்சம், மாயா ஆசை இவை ஒன்று சேர்ந்து, இடம் பெற முடியாமல்,
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற
ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும்
தெளிவுரை : ஐம்புல ஆசை மிகுந்து, உள்ளே நுழைந்து குயவனது சக்கரத்தை போல், எட்டு மடங்கு சுழற்ற ஆடிக் கொண்டிருக்கும் என் பாழ் நெஞ்சத்தில் நீயாக வந்து நுழைந்தனை.
செய்ய வாயும் மையமர் கண்டமும்
நெற்றியில் நிகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிநின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும்
தெளிவுரை : உன்னுடைய நீண்ட சடையும் சிவந்த வாயும், கருமை நிறமுடைய கழுத்தும், நெற்றிக் கண்ணும், தூக்கிய பாதமும், அபயம் காட்டும் கையும் (அஞ்சற்க எனத் தடுத்த கை) புலித்தோல் ஆடையும் பிரகாசமாக விளங்க நடனம் ஆடுகின்றாய்.
வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்
ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது
பெரியதிற் பெரியை என்றும் அன்றே
சிறியதிற் சிறியை என்றும் அன்றே
நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல்
இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே !
தெளிவுரை : சிவபெருமானே ! நான்கு வேதங்களும் முனிவர்களும் போற்றும் ஆதி தெய்வமே ! இது நின் திறம் ஆதலின், இதை எடுத்துரைப்பது மிகவும் சிரமம். நீ பெரியதில் பெரியை, சிறியதில் சிறியை, மறையையும் கழலையும் அறிவிலே கட்டி வைத்தவனும் எல்லாவற்றிற்கும் முதற் காரணனுமாகிய நீ மறையவர் வாழும் தில்லை மன்றிற்கு உரியவனாவாய்.
வெண்பா
838. கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்(து)
உழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய
வாயினால் இப்போதே மன்றில் நடமாடும்
நாயனார் என்றுரைப்போம் நாம்.
தெளிவுரை : நோய் மூப்பு இவைகளுக்கு ஆளாகித் துன்புற்று, அதிகமாகச் சிற்றின்ப நெறியில் ஈடுபட்டவர் ஓய்ந்து போவதைக் கண்டோம். ஓதும் மொழி நன்றாக விளங்க வாயினால் இப்போது மன்றில் நடமாடும் இறைவனே என்று நாம் வாழ்த்துவோமாக.
கட்டளைக் கலித்துறை
839. நாமத்தி னால்என்தன் நாத்திருத்
தேன்நறை மாமலர்சேர்
தாமத்தி னால்உன் சரண்பணி
யேன்சார்வ தென்கொடுநான்
வாமத்தி லேயொரு மானை
தரித்தொரு மானைவைத்தாய்
சேமத்தி னாலுன் திருத்தில்லை
சேர்வதோர் செந்நெறியே.
தெளிவுரை : திருஐந்தெழுத்தினால் என் நாக்கு திருந்தவில்லை, மணமுள்ள மலர் மாலைகளைச் சாத்தி உன் பாதங்களைப் பணிந்தறியேன். நான் எந்த உரிமையைக் கொண்டு உன்னை அடைவது? (மான் என்றது மான் மறியையும் உமாதேவியையும் குறிக்கும்) இடப் பாகத்தில் உமா தேவியையும் கையில் மான் மரியையும் வைத்துள்ளாய். என் வைப்பிடமாக உன் திருத்தில்லையை அடைவதுதான் நல்ல நெறியெனக் கொண்டேன் என்பதாம்.
ஆசிரியச் சந்த விருத்தம்
840. நெறிதரு குழலை அறலென்பர்கள்
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ தரிதிவ் விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர்
மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர்
மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு நிலையென்கிலர்
திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர்
சிலர்நர குறுவர் அறிவின்றியே.
தெளிவுரை : ஒழுங்காக வகிர் எடுத்து முடிக்கப்பட்ட கூந்தலைக் கருமணல் ஒழுங்கு என்பார்கள். ஒளியோடு கூடிய சந்திரனை நெற்றி என்பார்கள். நிலவைக் காட்டிலும் வெண்மையானது பல் என்பார்கள். நிறமிக்க கலசத்தை முலை என்பார்கள்.
அறிகுவது அரிது இடுப்பு என்பார்கள். இரண்டு பாதங்களையும் தாமரை மலர்கள் என்பார்கள். இத்தகைய உடல் உறுப்புக்களையுடைய இள மங்கையர் அழகியர் போதும் என்று திருப்தி கொண்டவர்கள் இறைவனை வணங்குவார்களோ ?
சிவபெருமான் மானையும் மழுவையும் ஏந்திய கைகளை உடையவன் என்றும், காலனைக் கோபிக்கும் அரன் என்றும், சந்திரனைச் சடையில் சூடியவன் என்றும், உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவன் என்றும், நிலவு பொழிகின்ற தில்லை நகர் என்றும், அங்கு இறைவன் திருநடனம் செய்கின்றான் என்றும், அவன் மக்களுக்குச் சிவகதியை அருளுகின்றவன் என்றும் துதித்து வழிபடாதவர்கள் அறிவில்லாதவர் ஆவர். எனவே சிவகதி பெற வேண்டுவோர் அவனை வணங்குங்கள் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
 841. அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி, வினையெனும்
தொல்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்
தெளிவுரை : உடம்பைக் கப்பலாக உருவகம் செய்கிறார். அறிவில்லாத ஒழுக்கமும், வேறுபடுத்தும் பொய்யும் கடுமையான நோய்களின் தொகையும் துன்பத் தொகுதியும் இத்தகைய பல சரக்குகளை ஏற்றி, ஊழ் என்ற பழமையான கப்பலோட்டி செலுத்த,
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந்(து) அலைக்கும்
துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா
தெளிவுரை : அந்த நிலை கருவெனும் நெடுநகர் (கருப்பம் தரித்தல் - பிறவி எடுத்தல்) ஒரு துறையில் வெள்ளம் புலன் என்னும் கிரகம் வருந்தித் தொடர, பிறப்பெனும் பெருங்கடலில் பொருந்தப் புகுந்து அலையச் செய்யும். துயர்த் திரையாகிய நீர்ப் பெருக்கில் பெயர்ப்பிடம் மறந்து குடும்பம் என்னும் மலை தடுத்து, மனத்தை அடக்கி ஆளும் பாய் மரம் முரிந்து குறையாத,
உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்
பையர(வு) அணிந்த தெய்வ நாயக
தொல்லெயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பல வாணநின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.
தெளிவுரை : உணர்வெனும் நெடும்பாய் கிழிந்து, தேகமாகிய சிறைக் கப்பல் கலங்கித் கவிழ்ந்து விடுவதற்குமுன், தலை மாலையையும் பிறைச் சந்திரனையும் அணிந்த சடையில் பாம்பை அணிந்துள்ள தெய்வ நாயகனே ! மதில் சூழ்ந்த சிதம்பரத்தின் காவலனே ! தும்பை அணிந்த அம்பல வாணனே ! உன்னுடைய அருள் என்னும் வடம் பூட்டி திருவடியாகிய நெடுங்கரையில் கொண்டு வந்து சேர்ப்பாயாக !
வெண்பா
842. செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.
இது செவிலிக் கூற்று.
தெளிவுரை : சிவந்த திருமேனியை உடைய சிற்றம்பல நாதருக்கு என் மகள் கை வளைகளைக் கொடுக்க அமையும் (நேரும்). ஐயனுடைய தேர் தூரத்தில் வரும்போதே நமது கையில் உள்ள சங்கு வளைகள் கழன்று விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
843. சங்கிடத் தானிடத் தான்தன
தாகச் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள்தில்லை அம்பலக்
கூத்தற்(கு) அவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென்
றாயெங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை
யேல்உன் பசப்பொழியே.
தெளிவுரை : சங்கை இடப்பக்கத்திலுடைய திருமாலின் இடமாகிய இடப்பாகத்தில் உமையாளைக் கொண்ட தில்லை அம்பலக் கூத்தன், பிரகாசமான சடையின் மேல் கொன்ற மலர் உள்ளது என்றாய். அங்கு கங்கையையும் வைத்துள்ளாய் அல்லவா? உன் பசப்பு மொழிகளை விட்டுவிடு.
எழுசீர் ஆசிரிய விருத்தம்
844. ஒழிந்த(து) எங்களுற(வு) என்கொ லோஎரியில்
ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள்
விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த
வில்லி தில்லைநகர் போலியார்
சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை
தொடக்க நின்றவர் நடக்கநொந்(து)
அழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்
சிந்தை யாயொழிவ(து) அல்லவே.
தெளிவுரை : எங்கள் உறவு இன்றோடு ஒழிந்தது என்று சொல்லலாமோ? நெருப்பில் பகைவர்களது திரிபுரங்கள் எரிந்து சாம்பலாயின. அத்தகைய வெற்றியைப் பெற்ற வில்லியினது தில்லை நகர் போன்றவர்கள் சுழித்த உந்தியில் (தொப்புளில்) அழுந்தி மேகலையை விரும்பிச் சென்றவர் நடக்க முடியாத நிலையிலும் வந்தால் உன்னுடைய அருள் பார்வை அவர்களுக்குக் கிடைக்குமல்லவா ?
நேரிசை ஆசிரியப்பா
845. அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்
கைத்தேர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும் விண்பார்த்(து) இருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும்
தெளிவுரை : துன்பம் தரும் வாழ்க்கையை முயன்று நடத்துதற்கு ஏரைச் செலுத்தித் தொழில் செய்து, மழை பெய்யுமென்று விதையை விதைத்து வானத்தைப் பார்த்திருந்தும் கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு, முளைக்கும் காலத்தில் பதியென வழங்கியும்,
அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத்(து) எந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த்(து) இயங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாளுழந்(து) ஓடியும் வாளுழந்(து) உண்டும்
தெளிவுரை : இரக்கமற்ற போர் வீரர் போர் மேல் சென்றும், இருள் நிறைந்த கடலின்கண் கப்பலாகிய இயந்திரத்தைச் செலுத்தி திரைப் பரப்பில் குன்று பார்த்து இயங்கியும், வல்லமை பொருந்திய பெரிய அரசர்க்கு பெற்று உண்ட உணவுக்குக் கைம்மாறாகச் செய்வதற்குரிய கடமையைச் செய்ய முயற்சி செய்து போர் செய்தும்,
அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத்(து) ஈர்ப்ப நொய்தில்
பிறந்தாங்(கு) இறந்தும் இறந்தாங்கு பிறந்தும்
தெளிவுரை : முன்பின் தெரியாதவனைத் தெளிவித்தும் சொற்களைப் புனைந்துரைத்தும், படித்தவற்றைக் கூறியும், குடும்பப் பாசமாகிய நீண்ட சங்கிலியைப் பூட்டி, ஐம்பொறிகள் இழுத்த வழியில் சென்று எளிதில் பிறந்தது போலவே இறந்தும் இறந்தது போலவே மறுபடியும் பிறந்தும்,
கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர்
தெளிவுரை : கண்ணிமைப் பொழுதுக்குள் தோன்றியும் அதே போல் விரைந்து மறைந்தும் நீர்க்குமிழி போன்றும் மின்னல் போன்றும் அளவில்லாத பிறப்புக்களை எடுத்து அந்தக் கலக்கத்தில் மயங்கியும் வேள்வித்தழல் வளர்த்து அதனால் மழையை உண்டாக்கும் அந்தணர் வாழும் தில்லைமூதூர்.
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த
பாதப் போதும் பாய்புலிப் பட்டும்
மீதியாத்(து) அசைத்த வெள்ளெயிற்(று) அரவும்
சேயுயர் அகலத்து ஆயிரம் குடுமி
மணிகிடந்(து) இமைக்கும் ஒருபேர் ஆரமும்
தெளிவுரை : பொன்னம்பலத்தில் நடன மாடுகின்ற பெருமானின் தூக்கிய பாதமும், புலித்தோல் ஆடையும் மேலே அணிந்துள்ள வெள்ளிய பற்களையுடைய பாம்பும் உயர்ந்த ஆயிரம் தலைகளில் மாணிக்கம் விளங்குகின்ற ஆதிசேடனாகிய மாலையும்,
அருள்பொதிந்(து) அலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு
உள்மகிழ்ந்(து) உரைக்க உறுதவம் செய்தனள்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்
உறுதற்(கு) அரியதும் உண்டோ
பெறுதற்(கு) அரியதோர் பேறுபெற் றேற்கே.
தெளிவுரை : அருள் வழங்கும் உன் திருவாய் மலரும், நெற்றிக் கண்ணும் கங்கையும் பிறைச் சந்திரனும் சடை முடியும் கருதுதல் பொறித்து மனத்திடைப் பொருத்தியாங்கு மனம் களித்து உரைக்க நான் மிகுந்த தவத்தைச் செய்துள்ளேன். பிரம பதத்தைவிட மேலான பதம் இதுவல்லவா. பெறுதற்கரிய பேறு பெற்றேன் என்பதாம்.
வெண்பா
846. பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம்
மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்
கோமறுகிற் பேதை குழாம்.
தெளிவுரை : பேதைக் குழாம் (அறியாமை நிறைந்த பெண் பிள்ளைகளின் கூட்டம்) தமது பெற்றோர்கள் தடுத்து நிறுத்தியதையும் விலக்கி, செவிலித்தாயர்கள் அவர்களைச் சூழ்ந்து ஓடி வரச் சென்று தொழுகின்றார்கள். யானை மயங்கி வருந்தச் சீறிய சிற்றம்பலத்தான் குதிரை கட்டிய தேரில் போகின்ற அரச வீதியில் சென்று தொழுதார்கள் என முடிக்க.
கட்டளைக் கலித்துறை
847. பேதையெங் கேயினித் தேறியுய்
வாள்பிர மன்தனக்குத்
தாதைதன் தாதையென் றேத்தும்
பிரான்தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை
கொடான்இன்று கொல்லஎண்ணி
ஊதையும் காரும் துளியொடும்
கூடி உலாவியே.
தெளிவுரை : கார்ப் பருவம் வந்தது கண்டு தோழி கவன்று உரைத்தல். பேதைப் பெண்ணாகிய இவள் எங்கே இனித் தேறி உய்வாள்? பிரமன் தந்தையாகிய திருமால், என் தந்தையே என்று ஏத்தும் பிரான். பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் கோயில் கொண்டிருப்பவன் கொன்றை மாலையைத் தரமாட்டான். இன்று அவளைக் கொல்ல எண்ணி வாடைக் காற்றும் மேகமும் மழையோடு கூடி வருகின்றன. ஆகையால் இவள் எப்படி மனந்தேறி இருப்பாள் என்க.
ஆசிரியச் சந்த விருத்தம்
848. உலதி சலதி வாழ்விடம்
அமரர் தொழவு ணாவென
நுகரும் ஒருவர் ஊழியின்
இறுதி ஒருவர் ஆழிய
புலவு கமழ்க ரோடிகை
உடைய புனிதர் பூசுரர்
புலிசை யலர்செய் போதணி
பொழிலின் நிழலின் வாழ்வதோர்
கலவ மயில னார்சுருள்
கரிய குழலி னார்குயில்
கருது மொழியி னார்கடை
நெடிய விழியி னார்இதழ்
இலவில் அழகி யாரிடை
கொடியின் வடிவி னார்வடி
எழுதும் அருமை யாரென(து)
இதய முழுதும் ஆள்வரே.
தெளிவுரை : தலைவன் தலைவியின் இயல்பைப் பாங்கனுக்கு உரைத்தல்.
அலைகளையுடைய கடல் வாழ்விடம், தேவர்கள் தொழ உணவென்று நுகரும் ஒப்பற்றவர். ஊழிக் காலத்தின் முடிவாகிய ஒருவர், ஆழமான புலால் நாற்றம் வீசுகின்ற தலை மாலையை உடைய புனிதர், அந்தணர்கள் புலிசையில் மலர்தலைச் செய்கின்ற போதணி நிழலின் வாழ்வதோர் தோகையை உடைய மயில் போன்றவர்கள். சுருண்ட கரிய கூந்தலை உடையவர்கள். குயில் போன்ற சொல்லை உடையவர்கள். நீண்ட கண்களை உடையவர்கள். இலவம் பூப் போன்ற இடையினை உடையவர்களைப் படமாக எழுதும் அருமையானவர் எவரோ, அவரே என் இதயம் முழுதும் ஆள்பவர் ஆவர். அவர்தாம் என் காதலின் உருவை எழுத வல்லவர் என்றபடி.
இணைக்குறள் ஆசிரியப்பா
849. ஆளெனப் புதிதின்வந்(து) அடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத்(து) அவைஎம் சிந்தையிற் கிடத்தி
நனவே போல நாடொறும் பழகிக்
தெளிவுரை : புதிதாக அடிமையென்று வந்தேம் இலம். முதல்வ; தந்தையே! உன் பாதங்களின் ஏவல் வழி நின்று கால் வழியாக வந்தவர்கள். உச்சரிப்பதோ உன் ஐந்தெழுத்து. அவை எம் சிந்தையில் கிடத்தி விழிப்பே போல நாள்தோறும் பழகி,
கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
அருத்திசெய் திடுவது உருத்திர சாதனம்
தெளிவுரை : கனவு நிலையிலும் சொல்லுகின்ற பிரியம் உடையோம். இருவினை கெடக் கேட்பது உன்னுடைய பெருங் கீர்த்தியாகும். மீட்பது யாதோ எனில், உன்னுடைய சைவ நெறி அல்லாத புன்னெறி படர்ந்த என் மதியில்லாத நெஞ்சத்தை வரைந்து நிதியென வேட்கை உண்டாக்குவது உருத்திர சாதனமாகிய உருத்திராட்சத்தை.
காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ(து) ஐய நின்னது
கோயில் பல்பிணி குறித்தே ஓயாது
தெளிவுரை : காலையும் மாலையும் நான் நடந்து செல்வது உன் ஆலயத்தை வலம் வருவதற்கே. நிறைவோடு நான் கைகளைக் கொண்டு செய்வது, ஐய, உன் கோயில் திருப்பணிகள் குறித்தேயாகும்.
உருகி நின்னினைந்(து) அருவி சோரக்
கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனவெல்லாம்
நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு
தெளிவுரை : ஓயாமல் உருகி உன்னை நினைந்து அருவிசோரக் கண்ணிற் காண்பது எல்லா இடங்களிலும் காண்பன எல்லாம் நீயேயாகி நின்றதோர் நிலையே. நாய் போன்றவனாகிய நான் தலையைக் கொண்டு சார்வது உன் பாதங்களை அல்லாமல் அலைகடல் பிறழ்ந்தாலும் வேறு எதன் மீதும் பொருந்தாது. அதனால் பொய்த்தவ வேடர் கைத்து அகப்படுத்தற்கு
வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங்(கு) அமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத்(து) அகப்படுத்(து) ஆழ்ந்து
வளைவுணர்(வு) எனக்கு வருமோ உளர்தரு
நுரையும் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகுடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
தெளிவுரை : வஞ்சகம் பேசிய சமய வாதிகளின் போக்கில் அகப்பட்டேன் என்கிறார். இவர்கள் சூழ்ச்சியினால் வெளியேற முடியாமல் தவித்தேன். நுரை, திரை, தடைச் சுழற்சி, துளிகளின் வரவு, ஒலியுடைய குடல் பெருத்தும், விளங்கித் தோன்றி, இவ்வாறு இயங்கும் தன்மைபோல சராசரம் அனைத்தும் உன்னிடத்தில் தோன்றி உன்னிடத்திலேயே அடங்கும்.
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க்(கு) அரியாய் மறைகளுக்(கு) எட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக்(கு) அடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர்
அம்பலத்(து) ஆடும் உம்பர் நாயகனே.
தெளிவுரை : என்றாலும் நீ ஒன்றிலும் தோன்றாய், ஒன்றிலும் அடங்காய். வானவர்களாலும் அறியப் படாதவன் நீ, மறைகளும் தேடிக் கண்டில. வேதியர்களின் நடுவில் புகுந்து, செம்பொன் தில்லை மூதூர் அம்பலத்துள் ஆடுகின்றவன் நீயே. நீ தேவர் நாயகன் !
வெண்பா
850. நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாய்அருளும் தம்பிரான் - தூயவரை
மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.
தெளிவுரை : நாய் போல் கீழ்ப்பட்ட என்னை ஒரு பொருளாகக் கருதி நன்கு ஆதரித்து, தாய்போல் காப்பாற்றும் கடவுள், பரிசுத்தமான மணமுள்ள துழாய் மாலை அணிந்த திருமாலும் பிரமனும் தேட, பெருமை பொருந்திய தில்லை மன்றுள் மணி போன்றவன் நடனமாடுகின்றான்.
கட்டளைக் கலித்துறை
851. மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம்
வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்
அணியாய் அருள்நடம் ஆடும்
பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச
மேயினிப் பையப்பையப்
பிணியாய்க் கடைவழி சாதியெல்
லோரும் பிணம்என்னவே.
தெளிவுரை : அழகிய வாய் குவிய, திருமுகம் வேர்ப்ப அந்த அம்பலத்துக்கு எல்லாம் ஆபரணமாய் அருள் நடம் புரிகின்ற எம் பெருமானைப் போய்ச் சேர்ந்து உருகிப் பணியாமல் புலன்கள் வழியாகச் செல்கின்ற நெஞ்சமே ! இனி மெல்ல மெல்ல நோய் வாய்ப்பட்டு கடைசியில் சாவாய். பின்னர் ஊரார் உனக்குப் பிணம் என்னும் பெயர் வைப்பார்கள்.
ஆகவே உயிர் உள்ள போதே இறைவனை வழிபட்டு நற்கதி பெறுவாயாக என்பதாம்.
ஆசிரிய விருத்தம்
852. என்னாம் இனிமட வரலாய் செய்குவ(து)
இனமாய் வண்டுகள் மலர்கிண்டித்
தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்
அரனார் திருமுடி அணிதாமம்
தன்னால் அல்லது தீரா(து) என்னிடர்
தகையா(து) உயிர்கரு முகிலேறி
மின்னா நின்றது துளிவா டையும்வர
வீசா நின்றது பேசாயே.
தெளிவுரை : கார்ப் பருவம் கண்டு கலங்கிய தலைவிக்குச் சொல்லியது.
இளம்பெண்ணே ! இனி எப்படி முடியும்? என்ன செய்வது? கூட்டமாக வண்டுகள் மலர்களைத் திறந்து தென்னாட்டவனே ! என ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த சிதம்பரத்தில் சிவபெருமானுடைய திருமுடியிலுள்ள அழகிய மாலையால் அல்லது என் இடர் தீராது என்னுயிர் நிலைத்திராது கரிய மேகங்கள் மேலேறி மின்னுகின்றன. மழையும் வரப் போகிறது. பேசாமல் இருக்கிறாயே !
இணைக்குறள் ஆசிரியப்பா
853. பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்
தெளிவுரை : பேசுவாயாக ! பேசுவாயாக ! ஆசையோடு மயங்கி மாசுபடும் மனமே ! பேசுவாயாக. கண்டன மறையும். உண்ட உணவு பின்னர் மலமாகிவிடும. பூசிய மணப் பொருள்கள் மாசுபட்டுப் போகும். ஒன்று சேர்ந்திருந்தவை பிரிந்து போகும்.
நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன்(று) ஒருவழி நில்லா அன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர்
தெளிவுரை : நிறைந்திருந்தவை குறைந்து போகும். உயர்ந்திருந்தவை தாழ்ந்து போகும். பிறந்தவை அனைத்தும் இறந்து போகும். பெரியவை சிறியவையாகும். எதுவும் நிலைத்திரா. அதன்றியும் செல்வத்தில் பிறந்தவரும் பெருமையோடு வாழ்ந்தவரும் கல்வியிற் சிறந்தவர்களும் திறமை மிக்கவர்களும்
கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர்எங் குலத்தினர் இறந்தோர் ஏனையவர்
பேரும் நின்றில போலும் தேரின்
நீயும்அஃ(து) அறிதி யன்றே மாயப்
தெளிவுரை : கொடையாளிகளும், போர் வீரர்களும், உயர் குடியில் பிறந்தோரும் நலமிக்கவர்களும் எத்தன்மையராய் இருந்தாலும் எந்தக் குலத்தில் பிறந்தோராயினும் இறந்தோரே. ஏனையவர் பேரும் நின்றில போலும். ஆராயுமிடத்து நீயும் அதை அறிவாயாக. இதுதான் உண்மை நிலை.
பேய்த்தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும்
தெளிவுரை : மாயக் கானல் நீர் போலவும், தூக்கத்தின்கண் தோன்றும் கனவு போலவும் நனவு என்று சொல்லப்படும் மாய வாழ்க்கையைப் பெரிதாக நம்பி, இந்த உடம்பைக் கல்லைக் காட்டிலும் வலிமை உடையதென்று கருதும் பொல்லாத் தன்மையர் இழிவை நீயும் சார்ந்தாய்.
நன்மையில் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்
தெளிவுரை : நன்மையில் திரிந்த புன்மையை ஆதலின் அழுக்குடை புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி, வளைந்த வாயினையுடைய தூண்டிலில் கோக்கப்பட்ட இரையை விழுங்கும் சுவையால் கெடும் பல மீன்களைப் போலவும், மின்னுகின்ற வெளிச்சத்தைக் கண்டு காட்சியால் கெடும் விட்டிலைப் போலவும்
ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ(து) உணராச் செறுவுழிச் சேர்ந்தனை
தெளிவுரை : பரிசத்தாற் கெடும் யானையைப் போலவும், ஓசையாகிய கேள்வியாற் கெடும் அசுணத்தைப் போலவும், மோத்தலால் கெடும் (வீசிய மணம்) வண்டைப் போலவும் ஐம்பொறிகளின் வசப்பட்டுத் துன்புற்றாய்.
நுண்ணூல் நூற்றுத் தன்னகப் படுக்கும்
அறிவில் கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ(டு) இயற்றுவ(து) அறியாது
குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி
தெளிவுரை : மெல்லிய நூலை நூற்று அதனுள் அகப்பட்டுக் கொள்ளும் அறிவில்லாத சிலந்தி வருந்துவது போல ஆசைச் சங்கிலிப் பாசத்தில் சிக்கி, இடர் நிறைந்த மனத்தோடு செய்வது அறியாது குடலோடு பொருந்திய சிறையின் அறைபோன்ற உடம்பினுள் வளைந்து கிடக்கிறாய்.
கறவை நினைத்த கன்றென இரங்கி
மறவா மனத்து மாசறும் அடியார்க்(கு)
அருள்சுரந்(து) அளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்றுள் ஆடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.
தெளிவுரை : பசு நினைந்த கன்றென இரங்கி, மறவா மனத்து மாசறு அடியார்க்கு, அருள் சுரந்து அளிக்கும் நடராஜப் பெருமானை, வேதியர் தில்லை மன்றுள் ஆடும் இறைவனைத் துதிக்கவில்லையே. மனமே, என்ன நினைத்தாய்.
வெண்பா
854. நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யான்அருளென்
பிச்சியே நாளைப் பெறும்.
தெளிவுரை : இறைவனை நினையாதவர்களும், அவனை நினைந்து மெலியாதவர்களுக்கும், நிறையழியாத வருக்கும், வீணாக அணிந்து கொள்ள விரும்புவார்களுக்கும் கொன்றை மாலை கிடைக்குமோ? எல்லாரும் புகழ்ந்து காண, பெருமையுடைய தில்லையான் அருளை நாளைய தினம் பிச்சியே பெறுவாள்.
கட்டளைக் கலித்துறை
855. பெறுகின்ற எண்ணிலி தாயரும்
பேறுறும் யானுமென்னை
உறுகின்ற துன்பங்கள் ஆயிர
கோடியும் ஓய்வொடுஞ்சென்(று)
இறுகின்ற நாள்களும் ஆகிக்
கிடந்த இடுக்கணெல்லாம்
அறுகின் றனதில்லை யாளுடை
யான்செம்பொன் அம்பலத்தே.
தெளிவுரை : பெறுகின்ற எண்ணற்ற தாய்மாரும், பிறவி தோறும் அத் தாய்மார்களால் பெறுதலையுடைய அடியேனும் அடைகின்ற துன்பங்கள் ஆயிரம் கோடியும் ஓய்வொடும் சென்று முடிகின்ற நாள்களும் ஆகி, எஞ்சியிருந்த இடையூறுகளும் ஒழிகின்றன. எங்கு எனில், தில்லையாளுடையான் செம்பொன் அம்பலத்தில் என்றபடி.
எண்சீர் ஆசிரிய விருத்தம்
856. அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்துக்
கம்பலமு வந்தருளு வீர்மதனன் வேவக்
கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசவொரு மாடே
வாடையுயிர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்
கொன்றையரு ளீர்கொடியீர் என்றருளு வீரே.
இது செவிலி கூற்று.
தெளிவுரை : பொன்னம்பலத்தில் கோயில் கொண்டிருப்பவர்; அழகிய கண்களையுடையவர்; தம்மை அடைக்கலமாக வந்து சேர்ந்தவர்களுக்கே அன்புடையவர்; தன்னைக் கொல்ல வந்த யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டவர். அதை உவந்து அளித்திடுவீர். மன்மதன் அழியக் கண்டருளுவீர். பெரிய காதலை அறியாமல் ஊரார் பழி தூற்ற வசை பேச ஒரு பக்கம் வாடைக் காற்று உயிரை அறுக்க, அழகிய நிறத்தை இழந்து என் மகள் கலங்குகின்ற தன்மையைக் கண்டு தகவின்றி கொன்றை அருளீர் ! கொடியீர் என்று அருளுவீரே.
இணைக்குறள் ஆசிரியப்பா
857. அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்
புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்
தெளிவுரை : அருளுவாயாக ! அருளுவாயாக ! முறுக்கிய சடையையுடைய கடவுளே ! அருளுவாயாக. தோன்றி அழியும் நீர்க்குமிழியின் இயல்பைப்போல மக்கள் யாக்கைக்கு இளமை நீக்கம் நினைப்பதைவிட வேகமாகச் செல்வது.
அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றம்
இனைய தன்மைய(து) இதுவே இதனை
தெளிவுரை : மூப்பின் தொடர்ச்சி அதைவிட வேகமாகச் செல்லக்கூடியது. மரணம் அதைவிட வேகமாகச் செல்வது. வாழ்நாளைக் குடித்து, உடம்பைப் பயனின்மையாக்கி பல நாள் பயின்ற அருள் செய்யாத யமனின் தன்மை இதுவாகும்.
எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே அவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் படாதன சிலவே யென்றிவை
தெளிவுரை : இவ்வுடலை எனதெனக் கருதி, இதற்கென்று தொடங்கிச் செய்தன சிலவே. செய்வன சிலவே. செய்கின்றனவும் சிலவே. அவற்றுள் நல்லன சில; தீயன சில; இவை இரண்டிலும் சேராதன சில.
கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன்(று) உணர்வுழி வருமோ அனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ அனைத்தும்
தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய
தெளிவுரை : என்று இவை ஒரு கணம் நினைந்து மகிழ்தலும் அழுதலும் எல்லையற்றன. அவைதாம் ஒவ்வொன்று உணர்வுழி வருமோ, அனைத்தும் சேர்த்துப் பார்க்கும்போது வருமோ என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை.
மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அரியை சாலவெம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்
நின்வயின் மறைத்தோ யல்லை யுன்னை
தெளிவுரை : மனத்தின் செய்கை இவ்வளவு தான், நீயே மிகவும் அருமையுடையவன். எம் பெருமானே ! ஆராயுமிடத்து உலகில் தோன்றியவை அனைத்தும் நீயே. அவற்றை நீ கண்டனை. ஆனால் அனை உன்னைக் காணவில்லை. அவை உன்னிடத்தில் மறைந்தனவோ.
மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியும் சேணிடை நின்றோய் அல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே
தெளிவுரை : நீ மாயமாய் நிலைத்திருக்கின்றாய். நீ வாழ்வாயாக. நிலை பெற்றிருந்தாலும் சிறுமையில் மறையவில்லை. பெருமையில் பெரியோய் மறுபடியும் நீயேதான். பெருகினாலும் நீ தூரத்தில் இல்லை. என்றாலும் தெளிந்தவர்களுக்கு நீ அருகில் உள்ளாய்.
நண்ணியும் இடையொன்றின் மறைந்தோ யல்லை
இடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே அஃதான்று
நினைப்புருங் காட்சி எம்நிலை யிதுவே
தெளிவுரை : நெருங்கியிருந்தும் இடையில் மறைந்திருக்கவில்லை. இடையில் உன்னை மறைத்துக் கொள்வதும் இல்லை. அப்படி மறைந்தாலும் உனக்கென்று ஒரு நிலையுள்ளது. அதுவல்லாமல் உன்னை நினைப்பதற்கு உனக்கென்று தனி நிலை உள்ளது.
நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே
இனிநனி இரப்பதொன்(று) உடையம் மனமருண்டு
புன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்
நின்வயின் நினைந்தேம் ஆகுதல் நின்வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும்
நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
தெளிவுரை : ஆராயுங்கால், எம் நிலை இதுவே. இனி உன்னிடத்தில் யாசிப்பது ஒன்று உளது. அது யாதெனின், மனம் மருட்சியடைந்து அற்பமானதை நினைத்துப் புலன்கள் வழி மனம் சென்றால் அதைத் தடுத்து நிறுத்தி நின்வழி நினைக்குமாறு அருளல் வேண்டும்.
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்பர் உய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.
தெளிவுரை : மூங்கில் முற்றிய கயிலை புல்லென, எறிவிசும்பு வறிதாக இவ்வுலக மக்கள் நற்கதி பெறுமாறு பொன்னம்பலம் விளக்கம் உற, திருவளர் தில்லை மூதூரில் அருமையான திருநடனம் செய்கின்ற ஆதிவானவனே.
வெண்பா
858. வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத்(து) அரசன்றே - மால்நாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு.
தெளிவுரை : இந்திர பதவியையும் சிவனடியார் வேண்டார் என்றபடி.
தேவர்கள் பணிய, உயர்ந்த ஆசனத்திலிருக்கும் குறைபாடு இல்லாத செல்வத்து அரசை, பெரிய நாகப் பாம்பை ஆபரணமாகக் கட்டிக் கொண்டவர் நின்று ஆடுகின்ற பொன்னம்பலத்தை வழிபடுகின்றவர் (மேற் சொன்ன இந்திர பதவியை) விரும்ப மாட்டார்கள் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
859. வாழ்வாக வும்தங்கள் வைப்பாக
வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்
தாய்உன்னை அன்றியொன்றைத்
தாழ்வார் அறியாச் சடுலநஞ்
சுண்டிலை யாகிலன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ
மாக வணங்குவதே.
தெளிவுரை : வாழ்வாகவும் தங்கள் சேம நிதியாகவும் தில்லைவாழ் அந்தணர்கள் வணங்க, ஆட்சி செய்யும் திருத்தில்லை அம்பலத்தாய் ! உன்னை அல்லாமல் வேறொருவரை வணங்குபவர்கள், நடுக்கத்தைத் தரும் ஆலகால விடத்தை இவர் உண்ணாதிருந்தால் அன்றே மாண்டிருப்பர். அத்தகைய சிறு தெய்வங்களையா வணங்கப் போகிறீர்கள்?
ஆசிரிய விருத்தம்
860. வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்
மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ(டு)
உணங்கியிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே
ஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே
பிணங்கியர வோடுசடை ஆடநட மாடும்
பித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர்
அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும்
மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.
தெளிவுரை : துவளும் இடையினை உடையீர் ! வீணாகக் கொடியைப் போன்ற தலைவியின்மேல் காமன் அம்பு மாரி பொழியவும் மனத்தோடு வருந்தி இவள் மெலிகின்றாள். அதுவும் அன்றிக் குளிர் காற்று தீயைப் போல் துன்புறுத்துகிறது. இது சடை முடியோடு ஆட நடமாடும் பித்தர் பொருட்டு என்பதை நீங்கள் அறியாமல் தெய்வத்தை நினைத்து வெறியாடுவதையும் ஆட்டை வெட்டுவதையும் செய்கின்றீர்கள். உண்மை நிலையை நீங்கள் அறியவில்லையே என்பதாம். இடையீர் என்பது நற்றாய் முதலியோரை.
நேரிசை ஆசிரியப்பா
861. ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ(து) அசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற் பட்ட மேனி எந்தை
தெளிவுரை : தேன் நிறைந்த மாலை சூடிய சடைமுடியுள் குடிக் கொண்டிருக்கும் கங்கை சந்திரன் மீது அசைய, வண்டு மொய்க்கின்ற எல்லையின் எட்டுத் தோள்களை உடைய செல்வனே ! ஒரு காதில் தோடும் மற்றொரு காதில் குழையும் என்று இருபாற்பட்ட திருமேனி கொண்ட எந்தை.
ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத்(து) ஒருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்
தெளிவுரை : ஒலியுள்ள வயல்களை உடைய சிதம்பரம் என்ற பழைமையான ஊரில் உள்ள பொன்னம்பலத்தில் நடனமாடும் இமைக்காத கண்ணை உடைய ஒப்பற்ற கடவுள், தேவர்கள் வணங்கும் தந்தை போன்றவனே. தேன் மழை பொழியும் மந்தார மரத்து,
தேனியங்(கு) ஒருசிறைக் கானகத்(து) இயற்றிய
தெய்வ மண்டபத்(து) ஐவகை அமளிச்
சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத்(து) அமையா நோக்கத்
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும்
தெளிவுரை : வண்டுகள் மொய்க்கின்ற கானகத்தில் அமைந்த தெய்வ மண்டபத்தில் ஐவகை ஆசனத்தைச் சிங்கம் தாங்க ஏறி, மங்கையரது மார்பைத் தேவர்கள் கண்டு களிக்க அமர்ந்திருக்கும்.
ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும்
தெளிவுரை : குறையாத செல்வம் படைத்த தேவர்கள் அனுபவிக்கும் இன்பம் அவ்வளவே. என்றாலும் அவர்கள் அனுபவிக்க இருக்கும் துன்பங்கள் அளவில. துன்பந்தருபவர் கோபங் கொண்டு தாக்கியும், இழுத்தும், குற்றங்களைக் கூறிப் போர் தொடுத்தும்,
வார்ந்தும் குறைந்தும் மதநாய்க்(கு) ஈந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத்து அழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்
தெளிவுரை : இவ்வாறு பல துன்பங்களைச் செய்தும் அதாவது (மத நாய்க்கு ஈந்தும், செக்கில் இட்டு ஆட்டியும், வெந்நீரில் போட்டும், நரகத்தில் சேர்த்தும், சேற்றில் அழுத்தியும் என்று பல திறத்தன) தண்டித்து, மாறாக் கடுந்துயர் விளைவிப்பர்.
நிரயஞ் சேரினும் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது
தெளிவுரை : இவ்வாறு பல துன்பங்களை அடைந்தாலும் அடைக. சொல்லளவில் என்னை மிகவும் விரும்பி நல்லவன் என்று சொன்னாலும் சொல்லட்டும்; அவரே என்னை நல்லவன் அல்லன் என்று சொன்னாலும் சொல்லட்டும். நான் என் கொள்கையிலிருந்து மாறாமல் இருப்பேன்.
இன்பத்(து) அழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பில்
இளைமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்க அன்றி
இன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும்
வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
தெளிவுரை : அதனால் நான் இன்பத்தைப் பெற்றாலும் துன்பத்தில் அழுந்தினாலும் ஒன்றே. முன்பு போல இளமை, மூப்பு அடையாமல் இருப்பினும் இருக்கட்டும் அல்லது இன்றே உயிர் போனாலும் போகட்டும்.
ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித்
தெய்வக் கூத்துநின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே.
தெளிவுரை : இனிமேல் நான் எதையும் உன்னிடம் விரும்பிக் கேட்கப் போவதில்லை; வெறுக்கப் போவதும் இல்லை. உன்னுடைய அடியாரொடும் குழுமி, தெய்வக் கூத்தாடும் உன்னுடைய செம்மையான பாதங்களை அடையவும் அணுகவும் பெற்ற இணையற்ற செல்வம் எனக்குக் கிடைத்துவிட்டது.
வெண்பா
862. ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு
வாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.
தெளிவுரை : கோமானை இந்தத் தெரு வழியே கொண்டு வந்தால் ஏதாவது கஷ்டம் உண்டோ?
வானளவு புகழ் படைத்த பொன்னம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் கோமானை இத் தெரு வழியே கொண்டு வந்தால் காளையே! உனக்கு ஏதாவது கஷ்டம் உண்டோ? அன்புடைய நான் அவனைக் கண்டு நல்வாழ்வு பெற்றால் உனக்கும் நல்லதுதானே !
கட்டளைக் கலித்துறை
863. கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்
இந்திரன் கோமகுடத்
தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்
கூத்தனுக்(கு) அன்புசெய்யா
மிண்டர்மிண் டித்திரி வாரெனக்(கு)
என்னினி நானவன்தன்
தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த்
திரியத் தொடங்கினனே.
தெளிவுரை : இறைவனுக்கு அன்பு செய்யாதவர்கள் துன்புறுவார்கள். அவனுடைய தொண்டருக்குத் தொண்டனாக உள்ள எனக்கு என்ன பயம்?
நீலமேக சாமள வண்ணனாகிய திருமாலும் நான்முகனும், மிகுந்த செல்வமுள்ள இந்திரனும், முடி சூடிய தேவர்களும் நெருங்கி வந்து தொழுகின்ற அம்பலக் கூத்தனுக்கு அன்பு செய்யாத செருக்குக் கொண்டவர்கள் செருக்கோடு திரிவார்கள். ஆனால் நான் இனி செய்யப் போவது யாதெனில், அடியாரின் அடியார்களுக்கு அடிமைத் தொண்டு புரிபவனாகத் திரியத் தொடங்கிவிட்டேன்.
ஆசிரியச் சந்த விருத்தம்
864. தொடர நரைத்தங்க முன்புள வாயின
தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு
சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்
துளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடு
நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு
நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலியிரு மற்(கு)அஞ்சி உண்டி வேறாவிழு
நரக உடற்கன்பு கொண்டலை வேன்இனி
மிடலொடி யப்பண்டி லங்கையர் கோனொரு
விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய
வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை
திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய
தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய
சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.
தெளிவுரை : அங்கங்கள் எல்லாம் முன்பு உள்ளபடி இயங்காமல் இருக்கும் நிலையை விவரிக்கிறார். தொடர்ந்து நரை தோன்றலாயிற்று. முன்பு போல அங்கங்கள் வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விட்டன. ஐம்புலன்களின் வழியாக அழுக்குத் தாரைகள் இழிந்தன. சிந்தனை சரியாக இல்லை. நடை தளர்ந்தமையால் மனைவியரும் மனதுக்க வந்தவாறு ஏளனமாகப் பேசுகின்றனர். துன்புறுத்துகின்ற இருமல் வந்து, கஞ்சி உணவை உண்டு, நரகமாகிய இவ்வுடலுக்கு அன்பு கொண்டு அலைந்தேன். இனிமேல் செய்யப்போவது யாதெனில், வலிகெடுமாறு முன்பு இராவணன் இறைவனது கால் விரலினால் அழுத்தப் பெற்று, சாமவேதம் பாடினான். இறைவன் மனம் இளகி, முன்பு இருந்த கோபத்தைத் தவிர்த்து, அவனுக்கு அருள் செய்தார். அத்தகைய பெருமானின் அமுத மயமாகிய தில்லை நகரில் செம்பொன் அம்பலத்தில் மேவிய சிவனை நினைக்கும் தவமே மேம்பாட்டைக் கொடுப்பது என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
865. சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்(து)
அளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய
செல்வங் கொடுத்த செல்வம் போற்றி
தெளிவுரை : பிரமனுடைய தந்தையாகிய திருமாலுக்கு ஒளிவிடுகின்ற தெய்வத்தன்மை பொருந்திய சக்கரத்தை அருளிய உன் திருவருளுக்கு வணக்கம். முயற்சியோடு பணிந்த இயக்கர் கோனாகிய குபேரனுக்குச் சங்கநிதி, பதுமநிதி ஆகிய இரண்டு நிதிகளையும் குறையாத பெருவனத்தை உடைய அளகாபுரியையும் எல்லையற்ற செல்வத்தையும் அளித்த செல்வனே உனக்கு வணக்கம்.
தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி
தெளிவுரை : உன்னுடைய பாதாரவிந்தகளைச் சரணமாக அடைந்த பிரமசாரியாகிய மார்க்கண்டேயனுக்காக நாள் தவறாமல் தன் பணியைச் செய்துவரும் இயமன் வந்தபோது அவனை உதைத்து, மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை அளித்த உன் உதவிக்கு வணக்கம்.
குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்
கடல்விடம் அருந்தின கருணை போற்றி
தவிராச் சீற்றத்(து) அவுணர் மூவெயில்
ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட
வில்லொன்று வளைத்த வீரம் போற்றி
தெளிவுரை : மிகுந்த நடுக்கத்தினை அடைந்த தேவர்களின் துன்பத்தைத் தாளாமல் விலக்கி கடலிலிருந்து எழுந்த ஆலகால விடத்தைப் பருகின உன் கருணைக்கு வணக்கம். திரிபுராதிகளின் மூன்று கோட்டைகளைத் தீயிட்டுக் கொளுத்தி ஒரு நொடியில் சாம்பலாகுமாறு மேருமலையை வில்லாக வளைத்த உன் வீரத்திற்கு வணக்கம்.
பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்
கரியொன்று உரித்த பெருவிறல் போற்றி
தெளிவுரை : கரும்பு வில்லோடு சாம்பலாகுமாறு மன்மதனை எரித்த உன் நெற்றிக் கண்ணுக்கு வணக்கம். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையைக் கிழித்து அதன் தோலைப் போர்த்திய உன் பெரு வெற்றிக்கு வணக்கம்.
பண்டு பெரும்போர்ப் பார்த்தவனுக்(கு) ஆகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி
தெளிவுரை : முன்பு பெருவீரனாகிய அருச்சுனனுக்காக நீ எடுத்த வேட்டுவக் கோலத்திற்கு வணக்கம். வெள்ளி மலையை எடுத்த இராவணனை, கால் விரல் ஒன்றினால் நெரித்த உன் ஆண்மைக்கு வணக்கம்.
விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள்
சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி
தெளிவுரை : மலை பிளவுபட்டு விழுந்தது போன்று சலந்தரனை அழித்த உன் ஆற்றலுக்கு வணக்கம். தன் தந்தையின் கால்களை வெட்டி சண்டீசருக்கு உண்கலம் கொடுத்த உன் திரு உள்ளத்துக்கு வணக்கம் (உண்கலம் - தாம் ஏற்ற நிவேதனம்). உன்னை உபசரிக்க தன் மகனாகிய சீராள தேவனை அரிந்த சிறுத்தொண்ட நாயனாருடைய வீட்டில் நீ உண்டமைக்கு வணக்கம்.
வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபுல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி
தெளிவுரை : வெண்ணெய் உண்பதற்காக எண்ணி வந்து நந்தா விளக்கைத் தூண்டிய எலிக்கு மூவுலகு ஆள விரைந்து அருள் செய்த உன் கை வண்ணத்திற்கு வணக்கம். (இதில் குறிக்கப்பட்டது கோச்செங்கட் சோழர் வரலாறு ஆகும்.)
பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச்
சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற்(று) எறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி
தெளிவுரை : பொங்கும் பிடரியையும் அழல் போன்ற வாயையும் உடைய புகை விழியையும் உடைய சிங்கத்தைக் கொன்ற உன் ஒப்பனைக்கு வணக்கம். கொடிய பாம்பை அணிந்துள்ள உன் ஒப்பனைக்கு வணக்கம். கங்கையும் கொன்றையும் கலந்து ஒரு பக்கத்திலும் திங்களை மறு பக்கத்திலும் சூடிய உன் செஞ்சடைக்கு வணக்கம்.
கடவுள் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம்பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம் போற்றி
கூறுதற்(கு) அரியநின் ஏறு போற்றி
தெளிவுரை : திருமாலும் பிரமனும் முறையே உன் அடியையும் முடியையும் காண்பதற்காக முயன்ற போது நீ கனற் பிழம்பாகி நீண்டு நின்ற உன் நீளத்திற்கு வணக்கம். விஷம் கக்கும் உன் சூலத்திற்கு வணக்கம். சொல்வதற்கு அரிய நின் வாகனத்திற்கு வணக்கம்.
ஏகல் வெற்பன் மகிழும் மகட்(கு) இடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்(து)
ஆடும் நாடகம் போற்றி என்றாங்(கு)
தெளிவுரை : ஒப்பற்ற மலையரசன் மகிழும் மகளாகிய உமாதேவியாருக்கு இடப்பாகம் கொடுத்த உண் பண்பிற்கு வணக்கம். தில்லை மாநகர்க்கு வணக்கம். தில்லையுள் செம்பொன் அம்பலத்திற்கு வணக்கம். அம்பலத்தாடும் உன் நாடகத்திற்கு வணக்கம்.
என்றும் போற்றினும் என்தனக்(கு) இறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.
தெளிவுரை : எனக்கு இறைவனே ! உன் திருவடிகளை எப்போதும் போற்றும் ஆற்றல் எனக்கு இல்லை. என்றாலும் எனக்கு அருள் செய்வாயாக என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
27. திருக்கழுமல மும்மணிக்கோவை (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)
கழுமலம் என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு திருப்பெயர்களுள் ஒன்று. அப் பதியில் எழுந்தருளிய சிவபெருமானை அகவல், வெண்பா, கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால் புகழ்ந்து பாடப் பெற்றமையின் இந்நூல் திருக்கழுமல மும்மணிக் கோவை என்று பெயர் பெற்றது. இந் நூலில் சீகாழிச் சிவபெருமான் திருஞானசம்பந்தர்க்கு அருள் செய்த திறம், சிவபெருமானுடைய தன்மைகள், பிறவி இயல்பைக் கூறிப் பெருமானை வேண்டுதல் முதலிய செய்திகள் கூறப்பெறுகின்றன. இந் நூலில் பன்னிரண்டு பாடல்களே பட்டினத்துப் பிள்ளையார் வாக்கெனவும் 13 முதல் 30 வரையுள்ள பாடல்கள் மறைந்து போக வேறு எவராலோ பாடிச் சேர்க்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்.
திருச்சிற்றம்பலம்
இணைக்குறள் ஆசிரியப்பா
866. திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ(று)
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த
வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
தெளிவுரை : பெருமைமிக்க பவளப்பெரு மலை மீது மரகதக் கொடி படர்ந்தது போன்று, இடது பாகத்தில் உமாதேவியார் பிரியாமல் விளங்க, அலைகளையுடைய கடல்மீது உதித்த கதிர்களையுடைய சூரியன் ஆயிரம் ஒன்றுகூடி, திரியாமல் மலர்மிசை இருந்ததைப் போல,
கதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும்
முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை
இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின்
பொலிவினொடு மலர மறையோர்
தெளிவுரை : பிரகாசிக்கின்ற உன் முகத்தைக் காணும்தோறும், காணும்தோறும் முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின் (அம்மையின்) திருமுகமாகிய தாமரை மலரின் அழகு மலர உன் உமாதேவியின் ஒளி பொருந்திய நெற்றி தெய்வச் சிறு பிறையாகிய இளநிலவைக் காணும்தோறும், ஒளியோடு புணர்ந்த நின் சிவந்த வாயும் உன் செம்மையான கையாகிய கமலம், அம்மையின் வன முலையாகிய அமிர்த கலசத்தைப் பொருத்தமாக ஏந்த, உமாதேவியின் நயனமாகிய குவளைமலர் நின் அழகோடு மலர,
கழுமல நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்(கு)
ஒன்றா வந்த குன்றா வெள்ளத்(து)
உலகம்மூன் றுக்கும் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தெளிவுரை : வேதியர்கள் சீகாழியின் நெறி நின்று விளங்க, நாகர்களுடைய உலகமாகிய பாதலம் மேலே எழுந்து, தேவலோகம் கீழே இறங்கி வந்தது போல, இங்குக் குறையாத மூன்று உலகங்களுக்கும் பற்றுக் கோடாகி ஆதிக் காலத்திலிருந்து இனிது வீற்றிருந்தபோது, தந்தையாகிய சிவபாத இருதய ரோடு வந்த திருஞான சம்பந்தர்,
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னா யோஎன்(று) அழைப்பமுன் னின்று
ஞான போனகத்(து) அருள்அட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யாரென
தெளிவுரை : தளர்நடைப் பருவத்தில் மிகுந்த பசி வருத்த அம்மா ! என்று அழைக்க முன் தோன்றி ஞானப்பாலை அருள் சேர்த்துக் குழைத்து அவன் வயின் கொடுக்க, தந்தையாகிய சிவபாத இருதயர் கோபித்து, இதைக் கொடுத்தவர் யார் எனக் கேட்க,
அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுடைய செவியன் என்றும்
பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட்(டு) அருளினை ஆங்கே.
தெளிவுரை : அவனைக் காட்டுகிறேன் என்று சொல்லும்போது வானத்தில் தோடுடைய செவியன் என்றும் பீடுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக் காட்ட, ஐயனே ! நீ அங்கே வெளிப்பட்டு அருளினை,
வெண்பா
867. அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
அண்டத்தார் நாமார் அதற்கு.
தெளிவுரை : சீகாழியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் அருளாகிய கடல் போன்றவன்; அன்பாகிய ஆறு போன்றவன். அவனுக்கு நான் அடியேன். அவன் நீலகண்டன் என்று வணங்கும் அடியார்களை விரும்பி கை தொழுபவர்கள் இவ்வுலகத்தினரும் தேவ லோகத்தினரும் என்றால் அந்தச் சிறப்பை அளவிட நாம் தகுதியுடையவரா ? என்றபடி.
கட்டளைக் கலித்துறை
868. ஆரணம் நான்கிற்கும் அப்பால்
அவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்(கு)அரி
யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப்
பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங்
கடந்த கருப்பொருளே.
தெளிவுரை : சிவபெருமான் வேதங்கள் நான்கிற்கும் அப்பால் இருப்பவன். அவனை அறியும் பொருட்டுத் துணிந்த திருமாலும் பிரமனும் முயன்றும் அறிய முடியாதவன். எல்லா உலகங்களுக்கும் நடுவாய் நிறைந்த பூரணன். எந்தை (என் தந்தை) சீகாழியில் எழுந்தருளியிருப்பவன். உலகம் அத்தனைக்கும் ஆதியாக உள்ள காரணன். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கையும் கடந்த கருப்பொருள் அவன்.
இணைக்குறள் ஆசிரியப்பா
869. கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
மையிருள் திறத்து மதனுடை அடுசினத்(து)
ஐவகைக் கடாவும் யாப்பவிழ்த்(து) அகற்றி
தெளிவுரை : கருவுற்ற நாள் முதலாக, வாழ்நாள் முழுவதும் காமம், வெகுளி, கழிபெரும் பொய்யெனும் தூய்மையில்லாத குப்பை இடைவிடாமல் கிடந்ததை அரிதின் இகழ்ந்து போக்கி, பொரு திறனுடைய மிகுந்த இருளும் வலிமையும் உடைய மிகுந்த கோபமுடைய ஐம்பொறிகளாகிய கடாக்களையும் கட்டு அவிழ்த்து அகற்றி,
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்
பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
தெளிவுரை : அன்பு கொண்டு மெழுகி, அருள் என்னும் விளக்கை ஏற்றி, துன்ப இருளை விட்டு நீங்கி, முன் பக்கத்தில் மெய் என்னும் மேற்கட்டியை விரித்து, மென்மையான கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என்னுடைய சிந்தையாகிய பாழறையை உனக்குப் பள்ளியறையாக்கி,
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி(சு)
எந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து
நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
தெளிவுரை : என் சிந்தையாகிய தாமரைச் செழுமலர் பூந்தவிசில் என் தந்தையாகிய நீ இருக்க வைத்தேன். இந்த நிலவுலகப் பரப்பும் பிரகாசமான வானமும் அடையப் பரந்த ஆதியாகிய பெரு வெள்ளத்து நுரை என்று சொல்லுமாறு சிதறிச் சூரிய சந்திரர்களாகிய இருசுடர்களும் மிதக்க,
வரைபறித்(து) இயங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய்
தெளிவுரை : மலைகளைப் பிடுங்கி, வீசுகின்ற சண்டமாருதம் என்னும்படி திருமால், பிரமன் முதலிய தேவர்கள் இது ஊழிக் காலமோ என்று கலங்கி இருந்த போது, அவர்கள் பிழைத்து இருக்கப் பற்றிய தோணியாக,
மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும் உடனே கொண்டிங்கு
எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.
தெளிவுரை : மிகவும் சிறப்பாக மிதந்த சீகாழி நாயகனே  ! அருள் மிகுதியாகச் சுரக்கும் பிரளய விடங்கனே ! நின் செல்வச் சிலம்பு மென்மையால் ஒலிக்க கண்கொள்ளாக் காட்சி, உமா தேவியாரையும் உடனே கொண்டு இங்கு எழுந்தருளத் தகும் எம் பெருமானே !
வெண்பா
870. மானும் மழுவும் திருமிடற்றில் வாழுமிருள்
தானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.
தெளிவுரை : தேவர்களுக்கு வெள்ளத்தில் காட்சி கொடுத்து, சீகாழியில் வீற்றிருந்து என் உள்ளத்தில் நின்ற ஒளியானது மான், மழு, கழுத்தில் கருநிறம், பிறைச் சந்திரன் ஆகியவற்றைக் தரித்திருக்கும் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
871. ஒளிவந்த வாபொய் மனத்திருள்
நீங்கஎன் உள்ளவெள்ளத்(து)
எளிவந்த வாவந்து தித்தித்த
வாசித்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த
வாகடை சாரமையத்(து)
எளிவந்த வாநங் கழுமல
வாணர்தம் இன்னருளே.
தெளிவுரை : நம் சீகாழிப் பதியில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானின் இன்னருள், ஒளி வந்தவாறு என்ன வியப்பு? பொய் மனத்து இருள் நீங்க, என் உள்ள வெள்ளம் எளிவந்தவாறு என்ன வியப்பு ! வந்து தித்தித்தவாறும், சிந்தியாது ஒரு களி வந்தவாறும், அன்பு கை வந்தவாறும், இறுதிவரை மையத்து எளி வந்தவாறும் என்ன வியப்பு !
இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து போற்றுகின்றார் என்பதாம்.
இணைக்குறள் ஆசிரியப்பா
872. அருள்பழுத் தளித்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்(கு) அமிர்த வாரி நெடுநிலை
மாட கோபுரத்(து) ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்
தெளிவுரை : அருள் பழுத்தளித்த கருணை வான்கனி, தெவிட்டாத இன்பம். தீராத காதல், அடியவர்க்கு அமுதக்கடல் உயர்ந்த மாடங்களை உடைய கோபுரத்துப் பொன் சிகரங்கள் முகிலின் வயிற்றைக் கிழிக்கும் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனே ! உன்னுடைய,
வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன்(று) உணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி
தெளிவுரை : தவறாத காட்சி முதிர்ச்சியடையாத இளமுலைப் பாவையாகிய உமாதேவியுடன் இருந்த பரமயோகி யென்று உணர்த்துவேன். எந்தையே! முன்னாட்களில் எல்லா உலகங்களும் எல்லாப் பிறவிகளும் மற்றெல்லாப் பொருட்களும் தோன்ற நீ நினைந்த நாள் தொடங்கி,
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்(து)
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியும் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யானவர்
தெளிவுரை : பல பிறவிகளும் நினைப்பதற்கு அருமையான பேதங்களுடன் யாரும் யாவையும் எனக்கு தனித்தனி தாயார் ஆகியும், தந்தையர் ஆகியும் வந்தவர்களே யாவர்.
தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும்
வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை யான்அவை
தம்மைத் தின்னா(து) ஒழிந்ததும் இல்லை அனைத்தே
தெளிவுரை : யான் அவர்களுக்குத் தந்தையராகியும் தாயராகியும் வந்துள்ளேன். முன்பு பிறவா நிலனும் இல்லை. அதேபோல் இறவா நிலனும் இல்லை. பிறவற்றில் என்னை எல்லா உயிர்களும் தின்றன. அதுபோல் யானும் அவற்றைத் தின்றுள்ளேன்.
காலமும் சென்றது யான்இதன் மேலினி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
தெளிவுரை : இவ்வாறே காலமும் சென்றது. இனிமேல் நான் இவ்வாறு பிறந்து இறந்து இளைக்கும் சக்தியையும் பெற்றிருக்கவில்லை. நான் நாய்போன்ற இழிகுணம் உள்ளவன். அணையாத சோதியே ! உன் ஐந்தெழுத்தைச் சொல்லும் தந்திரமும் பயிலவில்லை. அந்தத் தந்திரம் பயின்ற குருமார்களையும் போய்க் கேட்கவில்லை.
இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னனது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப்(பு) இறப்பெனும் இரண்டின்
கடற்ப டாவகை காத்தல் நின்கடனே.
தெளிவுரை : ஆயினும் இயன்றதோர் பொழுதில் இட்டது மலராச் சொன்னது மந்திரமாகக் கொண்டு என்னையும் துன்பமாகிய பிறப்பு இறப்பு என்னும் இரண்டு கடல்களையும் அடையா வகை காத்தல் உன் கடனாகும்.
வெண்பா
873. கடலான காமத்தே கால்தாழ்வர் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் - உடலாம்
முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.
தெளிவுரை : மூன்று கண்களையுடைய பெருமான் கோயில் கொண்டிருக்கும் கழுமலமாகிய சீகாழியைக் கை தொழாதவர்கள் கடல்போன்ற காமத்தில் மிகுதியாக மூழ்குவார்கள். துன்பத்தை வெல்லக்கூடிய உபாயத்தை அறியமாட்டார்கள். உடலாகிய முழு மலத்தை ஆராய்ந்தறியமாட்டார்கள். எனவே சீகாழிப் பெருமானைக் கைதொழுது நற்கதி பெறுமாறு அறிவுறுத்துகின்றது.
கட்டளைக் கலித்துறை
874. தொழுவாள் இவள்வளை தோற்பாள்
இவளிடர்க் கேயலர்கொண்(டு)
எழுவாள் எழுகின்ற தென்செய
வோஎன் மனத்திருந்தும்
கழுவா மணியைக் கழுமல
வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக்கண்டு வந்ததென்
றால்ஓர் வசையில்லையே.
தெளிவுரை : இவள் காமநோயால் துன்புற்று அவனை நோக்கித் தொழுவாள். கையிலுள்ள வளைகள் தாமாகவே கழன்று போகும். இவள் துன்புறுவதைக் கொண்டு ஊரார் பழி தூற்றுவார்கள். எழுவாள், எழுந்து என்ன செய்யப் போகிறாள். என் மனத்திலிருந்து சாணைப் பிடிக்காத மணியாகிய கழுமல நாதனை, கையிற் கொண்ட மழுவாளனைக் கொண்டு வந்தால்தான் இவள் துன்பம் நீங்கும் என்க.
நேரிசை ஆசிரியப்பா
875. வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகந்து
வேறுவேறு பெயரின் ஊறின்(று) இயன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலி நாயக இகல்விடைப் பாக
தெளிவுரை : குற்றமற்ற காட்சி, புகழ் மிகவும் விளங்க முன்பு நடந்த பன்னிரண்டு யுகங்களில் வேறு வேறு பெயர்களில் இயன்ற சீகாழிப் பதியின் குற்றமற்ற சிறப்பினை யுடைய புகலி நாயக ! வலிமையுள்ள காளையை வாகனமாக உடையவனே !
அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்
தெளிவுரை : மூங்கிலும் நாணும்படியான மென்மையான தோள்களையுடைய உமையாளுடைய கொழுநனே ! மேரு மலையை வளைத்து, வலிய தோள்களையுடைய அவுணர்களின் திரிபுரங்களை எரித்த வீரத் தன்மையுள்ள தேவனே ! பிறைச் சந்திரன் தங்கிய சடையை உடைய கடவுளே ! உன்னுடைய,
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக்
காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை
ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
தெளிவுரை : நெற்றியில் உள்ள சிறந்த ஒப்பற்ற கண்ணால் மன்மதனை எரித்த பெரிய பழைமையான தலைவனே ! தேவர்கள் அறியாத ஆதியானே ! படிக்காத மனத்து அற்ப அறிவு தொடர மறந்து பார்க்கும் வெறுமையான கண்களால் பார்க்கின்ற ஒவ்வொரு சமயத்திலும் ஆவதும் அழிவதுமான எல்லாப் பொருள்களும்,
போனதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்ணில் கோடி எனைப்பல வாகி
இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயின் பட்டேன் அன்னதும்
தெளிவுரை : போவதும் வருவதும் நிகழ்வதுமாகிக் கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் திரண்ட மணலைக் காட்டிலும் எண்ணில்லாத கோடி எனப் பலவாகி, இல்லாதன இருப்பனவாகவும், இருப்பவை காணாதவையாகவும் பன்னாள் இருளில் இருந்து வருந்தினேன்.
அன்ன(து) ஆதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழிவழி யாகி வழிகுழி யாகி
ஒழிவின்(று) ஒன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த(து) எந்தைநின்
தெளிவுரை : அத்தகையதும் மேற்சொன்னவாறு துன்புறும். அஃது எங்ஙனமெனின் கண் பார்வை தெரியாமல் அலையும் ஒருவற்குக் குழியானது வழியாகியும், வழியானது குழியாகியும் ஒன்று மற்றொன்றாகத் தடுமாற, வந்தாற்போல வந்த என் தந்தையே ! உன்னுடைய
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை
தெளிவுரை : திருவருள் பார்வை கருணையின் பெறலும் யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றியது. பொருந்திய நீ மட்டும் மெய்யாகத் தோன்றினை.
ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றுங் துணிவுபோன் றெனவே.
தெளிவுரை : ஓவியப் புலவன் (சித்திரம் எழுதுபவன்) உன்னைப் போலவே எழுதிய சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றி, எஞ்சாமல், தடவினர் தமக்குச் சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே. நீதான் உண்மைப் பொருள் என்பதாம்.
வெண்பா
876. எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.
தெளிவுரை : கூட்டமான பாம்புகள் ஒலித்து நிமிர்தற்கு இடமான சடை முடியை யுடைய சீகாழிப் பெருமான் கொன்றை மாலை என்று சொன்ன மாத்திரத்தில் மயக்கம் தீர்ந்து எழுந்திருந்தாள். இன்னும் சிவனின் வாகனமாகிய இடபத்தைக் காட்டுதிரேல் அவள் நோய் முழுதும் தீரும் என்க.
கட்டளைக் கலித்துறை
877. போதும் பெறாவிடில் பச்சிலை
உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்
றேயிணை யாகச்செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா
மரைசென்று சார்வதற்கே.
தெளிவுரை : மலரைப் பெறாமற் போயினும் பச்சிலை உண்டு, நீர் எங்கும் உண்டு. இவை ஏதும் பெறாவிடில், மனம் இருக்கிறதல்லவா? கிண்ணமும், சொக்கட்டான் காயும்போல இருக்கும் முலைகளையுடைய உமையை இடப்பாகத்தில் கொண்டதென் தோணி புரேசர் வண்டின் தாதும் பெறாத அடித்தாமரை சேர்வதற்கு மனம் போதும் என்க.
திருச்சிற்றம்பலம்
28. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)
திருவிடைமருதூர் என்னும் சிவப்பதியில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபெருமான் மீது அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று வகைப் பாடல்களால் இயற்றப்பட்ட நூலாதலின் இது திருவிடை மருதூர் மும்மணிக் கோவை என்று பெயர் பெற்றது. உயிர்த்தொகைகளின் நிலையைக் கருதி இறைவன் தன்னுடைய அருள் இன்ப வாழ்வை எல்லா உயிர்களுக்கும் உரியதாக அமைத்து வைத்துள்ளான். ஆகவே அவன்பால் ஒரு சிறிதும் குற்றம் இல்லை. அவ் இறைவனை எண்ணிப் போற்றி அவன் அருளால் துன்பங்களை நீக்கிக் கூற்றுவனுடைய ஆற்றலைத் தொலைத்துப் பிறப்பையும் இறப்பையும் போக்கிக் கொள்ளாத குற்றம் உயிர்த் தொகைகள் உடையதேயாகும் என்பன போன்ற நல்லறிவுரைகள் இக் கோவையில் இன்பம் பயக்கும் வகையில் அமைந்துள்ளன.
திருச்சிற்றம்பலம்
இணைக்குறள் ஆசிரியப்பா
878. தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்(கு)
ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின்(று) அருளித்
நிகழ்ந்துள(து) ஒருபால் திருவடி அகஞ்சேந்து
தெளிவுரை : அர்த்த நாரீசுவரத் திருக்கோலத்தில் இறைவன் பாகமாகிய வலப்பால் திருவடியைப் பற்றிக் கூறுகிறார்.
தெய்வத் தாமரையின் அழகை யொத்து மலர்ந்து, வாடாத புதுமலர்த் தொகுதி போன்று சிவந்து, சிலம்பும் வீரக் கழலும் ஒலி செய்ய அணிந்து, காலனின் வல்லமையை அழித்த அந்தத் திருவடிகளைப் போற்றாமல் வலம்புரிச் சங்கை ஏந்திய திருமால் பன்றி உருவெடுத்துப் பூமியைத் தோண்டியும் காணாமல் போனார். அடியவர்கள் பச்சிலையை இட்டு வழிபட்டாலும் அவர்களுக்கு முத்தி கொடுத்து முன்னின்று அருளித் திகழ்கின்றது ஒரு பக்கம் (வலப்பக்கம்) ஐயனின் திருவடி.
மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
தெளிவுரை : அம்பிகையின் பாகமாகிய இடப்பால் திருவடியின் இயல்பு கூறுகின்றார்.
உட்புறம் சிவந்து, குற்றமற்ற கற்பகத் தருவின் உறுதளிர் வாங்கி, நெய்யில் தோய்த்த அழகுடையதாகி, சிலம்பு இருந்த போதிலும் வருந்தித் தேவர் மகளிர் வணங்கும்போது வீழ்ந்த சின்னப் பன்மலர் தொடும்போது சிவந்து, பஞ்சியும் அனிச்ச மலரும் தோற்குமாறு அழகோடு விளங்குவது இடப்பக்கத் திருவடி (அம்மையின் திருவடி).
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித்(து) அசைத்து
நச்செயிற்(று) அரவக் கச்சையாப் புறுத்துப்
பொலிந்துள(து) ஒருபால் திருவிடை இலங்கொளி
அரத்த ஆடை விரித்து மீதுறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை
தெளிவுரை : நீலப் புள்ளிகளையும் கூரிய நகங்களையும் உடைய வேங்கையின் தோலை ஆடையாகக் கட்டி, விஷப்பற்களை உடைய பாம்பைக் கச்சையாகக் கட்டி விளங்குகின்றது வலப்பக்கம். அழகிய இடையில் விளங்குவது சிவந்த ஆடையை விரித்து மேலே போர்த்து ஒலி செய்கின்ற மேகலை, ஒருங்குடன் சாத்திய மருங்கில் இடப்பக்கம் உள்ளது.
செங்கண் அரவும் பைங்கண் ஆமையும்
கேழற் கோடும் வீழ்திரள் அக்கும்
நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவளநீ(று) அணிந்ததோர் பவளவெற் பென்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
தெளிவுரை : சிவந்த கண்களையுடைய அரவும், பசிய கண்களை உடைய ஆமை ஓடும். பன்றியின் கொம்பும், தொங்குகின்ற நீண்ட எலும்பு மாலையும், அசைகின்ற முப்புர நூலும் அணிந்து வெண்மையான திருநீறும் கொண்ட பவள மலை என்று சொல்லுமாறு ஒலியுடன் திகழ்வது வலப்புறம்.
வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
செஞ்சாந்(து) அணிந்து குங்குமம் எழுதிப்
பொற்றா மரையின் முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
தெளிவுரை : உடல் வாரும் வடமும் அழகுற அணிந்து, செஞ்சாந்து அணிந்து, குங்குமம் எழுதி, பொற்றாமரையின் முற்றா முகிழென, ஏழு உலகங்களையும் பெற்ற பிறகும் சாயாத முலைகளுடன் பொலிவது இடப்பாகம்.
அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
மூவிலை வேலும் பூவாய் மழுவும்
தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்துள(து) ஒருபால் திருக்கரம் செறிந்த
தெளிவுரை : கூரிய வாயினையுடைய பாம்புகளை ஆங்காங்கே அணிந்து, முத்தலைச் சூலமும் பூவாய் மழுவும், உடுக்கையும், தேவர்கள் தரத் தாங்கிச் சிறந்துள்ளது வலப்பாகம்.
சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்
தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம்
தெளிவுரை : திருக்கரம் செறிந்த கைவளையும் பொன்னாலாகிய கழற்சிக் காய்களும், பந்தும், கிளியும், கொண்டு விளங்குவது இடப்பக்கம்.
இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
பாலிற் கிடந்த நீலம் போன்று
குண்டுநீர்க் குவளையிற் குளிர்ந்து நிறம்பயின்(று)
எம்மனோர்க்(கு) அடுத்த வெம்மைநோய்க்(கு) இரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
தெளிவுரை : திருக்கரத்தில் சூரியனும் தீயும் கலந்த கொடுமை வலப்பக்கத்தில் விளங்கும். அழகிய நீண்ட கண்ணும் மான்கன்றும் அழகுடையதாய் பாலிற் கிடந்த நீலம்போல குண்டுநீர்க் குவளை போன்று குளிர்ந்து நிறம் விளங்கி எம்மனோர்க்கு அடுத்த வெம்மை நோய்க்கு இரங்கி உலகம் ஏழையும் காப்பாற்றுவது இடப்பாகம்.
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென்றுணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும்
அரவும் மதியமும் விரவித் தொடுத்துச்
சூடா மாலை சூடிப் பீடுகெழு
நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
நான்முகம் கரந்த பால்நிற அன்னம்
காணா வண்ணம் கருத்தையும் கடந்து
சேண்இகந்(து) உளதே ஒருபால் திருமுடி பேணிய
தெளிவுரை : நொச்சிப்பூவும் பச்சை ஊமத்தமும், கொன்றை மலரும் தும்பை மலர்க் கொத்தும், கங்கையாறும் பைங்கண் தலையும் பாம்பும், பிறைச் சந்திரனும் கலந்து தொடுத்த (எவரும் அணியாத) எலும்பு மாலையைச் சூடி பெருமையுள்ள நெருப்பில் திரித்தது போன்ற ஒளியுள்ள சடையோடு நான்கு முகங்களை மறைத்த, பால்நிற அன்னமாகிய பிரமனும் காணாவண்ணம் கருத்தையும் கடந்து அருகில் உள்ளது வலப்பக்கம்.
கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து
வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி
தெளிவுரை : பேணிய கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பகவனத்திலுள்ள அழகிய மலர்களைக் கொண்டு வந்து மாலையாகத் தொடுத்து அணிந்த தெய்வ மாலையுடன், கருநிறக் கூந்தல்மீது உயர்ந்து வண்டும் தேனும் கிண்டித் திளைப்ப, திருவோடு பொலிவது இடப்பக்கம்.
இனையவண் ணத்து நினைவருங் காட்சி
இருவயின் உருவும் ஒருவயிற் றாகி
வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க
வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்(கு)
தெளிவுரை : இந்த அழகிய கோலத்தோடு, இரண்டு பக்கத்து உருவும் ஒன்றாகி வலக்கண் இடக்கண்ணைப் பார்க்கப் பெண் பாகம் நாணமுற்று, வலப்பக்கத்துக் கை இடப்பக்கத்து முலையைத் தடவிக் கொடுக்க, மயிர்க் கூச்செறிந்து
உலகம் ஏழும் பன்முறை ஈன்று
மருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின்
திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
தெளிவுரை : ஏழு உலகங்களையும் பலமுறை ஈன்று மருது இடம் கொண்ட ஒப்பற்ற கடவுளே ! உன்னுடைய திருவடிகளை வணங்குகின்றோம். யாங்கள் நெடுநாட்களாக இறந்தும் பிறந்தும் இளைத்தோம். மறந்துங்கூட சிறைபோன்ற கருப்பப் பையில் மீண்டும் புகா வாழ்வு பெறுதற் பொருட்டே வணங்குகின்றோம் என்க.
வெண்பா
879. பொருளும் குலனும் புகழும் திறனும்
அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர்
கருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை
மருதாஎன் பார்க்கு வரும்.
தெளிவுரை : வேறு ஒருவரும் அணிதற்கு உரியது என்று கருதாத என்பை மாலையாகக் கட்டி அணிந்த நீல கண்டனே ! பழங்காலத்து இடைமருதா என்று துதிப்பார்க்கு, பொருளும் நற்சார்பும் புகழும், திறனும் அருளும் அனைத்தும் வரும் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
880. வருந்தேன் இறந்தும் பிறந்தும்
மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி
லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு
பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென்(று) இரவேன்
ஒருவரை யாதொன்றுமே.
தெளிவுரை : இனிமேல் பிறந்தும் இறந்தும் வருந்தமாட்டேன். என்னை மயக்கும் பொறிகளின் வழிச்சென்று பொருந்த மாட்டேன். நரகத்தில் விழ மாட்டேன். புகழ் பெற்ற திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகிய தேனை முகந்து உண்டு பிறிதொன்றில் ஆசையில்லாமல் இருந்தேன். இனி யாரிடமும் சென்று யாசிக்க மாட்டேன். இனி எனக்கு எதுவும் தேவையில்லை என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
881. ஒன்றினோ(டு) ஒன்று சென்றுமுகில் தடவி
ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக்
குயிலென மொழியும் மயிலியல் ஆயத்து
மான்மாற விழிக்கும் ஆனாச் செல்வத்(து)
இடைமரு(து) இடங்கொண்(டு) இருந்த எந்தை
தெளிவுரை : திருவிடைமருதூரில் உள்ள உயர்ந்த மாளிகைகளை விவரிக்கிறார். ஒன்றோடொன்று உயர்வில் போட்டியிட்டுச் சென்று மேகத்தைத் தடவும் கொடிகள் ஆடுகின்ற பெருமை மிக்க மாளிகைகள் நிறைந்த தெய்வப் பொற் கொல்லர்களால் கைமுயன்று வகுத்த, ஓவநூல் செம்மைப் பூவியல் வீதியில் குயிலென மொழியும் மயிலியல் சாயலும் மான்போன்ற விழிகளும் கொண்ட மாதர்கள் செல்வத்தோடு வாழ்கின்ற திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் எந்தையே !
சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
ஆரணந் தொடராப் பூரண புராண
நாரணன் அறியாக் காரணக் கடவுள்
சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
ஏக நாயக யோக நாயக
தெளிவுரை : சுடர்மழு வலங்கொண்டிருந்த தோன்றலே ! வேதங்கள் தொடர்கின்ற பூரணனே ! புராணங்களில் சிறப்பிக்கப் படுகின்றவனே! திருமால் முயன்றும் காணாத காரணக் கடவுளே ! சோதிச் சுடரொளியே ! ஆதித் தனிப்பொருளே ! ஏக நாயகனே ! (இது திருவிடைமருதூரில் எழுந்தருளிய இறைவர் பெயர்களுள் ஒன்று) யோக நாயகனே !
யானொன்(று) உணர்த்துவ(து) உளதே யான்முன்
நனந்தலை உலகத்(து) அனந்த யோனியில்
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித்
தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்(து)
யாயுறு துயரமும் யானுறு துயரமும்
இறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும்
நீயல(து) அறிகுநர் யாரே அதனால்
தெளிவுரை : யான் ஒன்று சொல்ல வேண்டி இருக்கிறது. விரிந்த இடத்தையுடைய இவ்வுலகில் யான் முன் பல பிறவிகள் எடுத்து காற்றாடி போலச் சுழன்று அதனால் நான் பெற்ற துன்பங்கள் பல. இதை நீதான் அறிவாய். அதனால்,
யான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்(று)
உறப்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லைஅந் நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலுமாண் டொன்றிற் படரா
உள்ளமொன்(று) உடைமை வேண்டும்அஃ தன்றி
தெளிவுரை : இனி நான் பிறவி எடுக்க மாட்டேன். அதுதான் பிறவியை அறுத்தல். உன்னைப் பற்றுக்கோடாக அடைந்தால்தான் இது முடியும். வேறு வழியில்லை. இது ஓர் ஆண்டில் முடியாது. இதற்கு உள்ள உறுதியும் வேண்டும்.
ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று
தானல(து) ஒன்றைத் தானென நினையும்
இதுஎன(து) உள்ளம் ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்ப(து) எங்ஙனம் முன்னம்
தெளிவுரை : அஃது அல்லாமல் ஐம்புல ஏவலின் வழிநின்று, தான் அல்லாத ஒன்றைத் தான் என்று நினையும் குணமுடையது என் உள்ளம். ஆதலால் இவைகளை வைத்துக்கொண்டு உன்னை வழிபடுவது இயலாது.
கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ இறைவ கற்பம்
கடத்தல்யான் பிறவும் வேண்டும் கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி
உரைஎயிற்(று) உரகம் பூண்ட
கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே.
தெளிவுரை : முன்பு கல்லையே தெப்பமாகக் கொண்டு கடல் நீரை நீந்தினர். (நீந்தியவர் திருநாவுக்கரசர்.) இறைவா ! நான் எப்படி இந்தக் கரையை ஏறுவேன்? கடந்துதான் ஆக வேண்டும். நான் நினைத்ததைப் பெறவும் வேண்டும். நினைத்தற்கு நெஞ்சின் வழி நிற்கவும் வேண்டும். விஷப் பாம்பை அணிந்துள்ள நீலகண்டனே ! இதற்கு அருள் செய்வாயாக என்பதாம்.
வெண்பா
882. கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - மொண்ணை
மருதவப்பா என்றும்உனை வாழ்த்திலரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.
தெளிவுரை : கண் எப்போதும் நமக்குப் பாதுகாவல் என்றும், நாம் கற்றிருக்கும் அளவை மூல எழுத்து என்றும் நினைந்து, ஒற்றை திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் உன்னை எப்போதும் வாழ்த்தாரேல் மறுபடியும் பிறவியில் வீழாதிருக்க முடியுமோ? நீதான் கதி என்று வழிபடுவாராக.
கட்டளைக் கலித்துறை
883. கதியா வதுபிறி(து) யாதொன்றும்
இல்லை களேவரத்தின்
பொதியா வதுசுமந் தால்விழப்
போமிது போனபின்னர்
விதியாம் எனச்சிலர் நோவதல்
லால்இதை வேண்டுநர்யார்
மதியா வதுமரு தன்கழ
லேசென்று வாழ்த்துவதே.
தெளிவுரை : மாறாத புகலிடம் என்பது வேறு யாதொன்றும் இல்லை. உடல் ஒரு சுமையாகும். சுமந்தால் இறப்போடு முடியும் என்று சொல்வதற்கில்லை. அதன் பின்னர் மற்றொரு பிறவி வரும். இதை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும் என்று நோவதைத் தவிர உன்னை வேண்டுபவர் யார்? ஆகவே அறிவு என்ன சொல்கிறது என்றால், இடைமருதனாகிய உன் கழலைச் சென்று வாழ்த்துவதுதான். இது தவிர வேறு வழியில்லை என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
884. வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க்(கு) உதவாது
தன்னுயிர்க்(கு) இரங்கி மன்னுயிர்க்(கு) இரங்கா(து)
உண்டிப் பொருட்டால் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபகர்ந்(து) ஏவி
ஆரா உண்டி அயின்றன ராகித்
தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
தெளிவுரை : வணங்குவோருக்கு உதவாமல் வாழ்ந்தோம் என்று, மன்னுயிர்க்கு இரங்காமல் தன்னுயிர்க்கு மட்டும் இரங்கி, உணவின் பொருட்டு கண்டவற்றை எல்லாம் விரும்பி, சமையல் செய்பவருக்கு ஒன்று தராமல் சுவையாக இருந்தது என்று சொல்லி அனுப்பிவிட்டு, தெவிட்டாத உண்டியைத் தான்மட்டும் உண்டு. தூர்க்க முடியாத குழியைத் தூர்த்து,
விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
கூஉய்முன் னின்றுதன் ஏவல் கேட்கும்
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும்
பொய்யோடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்
தெளிவுரை : விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும் பாராமல் தன்னைக் காட்டிலும் சிறந்த வயதில் மூத்த பெரியோர்களை அழைத்து முன்னின்று தன் ஏவல் கேட்கும் சிறுவர் கூட்டத்தைப் போல பொருந்தாதவற்றைக் கூறியும், பொய், புன்மை ஆகியவற்றைத் தகாதவர்களுக்குக் கூறியும்,
மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
தன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்
சாவுழிச் சாஅந் தகைமையன் ஆயினும்
மேவுழி மேவல் செல்லாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
எள்ளுக்(கு) எண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்
அருளில் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்
தெளிவுரை : மெய்யும் மானமும் மேன்மையும் நீங்கி, தன்னை அறிந்து பெரியோர்கள் கொடுத்த நல்ல மனைவியைப் பற்றிக் கவனியாமல், வேறொருத்தி உண்டி வேட்டிருப்ப எள்ளுக்கு எண்ணெய் போலத் தள்ளாமல், ஆடவர் தரும் பொருளுக்கு ஏற்றவாறு இன்பம் தருகின்ற விலைமகளிரிடம் இன்பம் அனுபவித்தும்,
ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
கற்புடை மடந்தையர் பொற்புநனி கேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின்
தெளிவுரை : ஆற்றல் செல்லாமல் வேற்றோர் வீட்டில் சென்று கற்புடை மனைவியரது இன்பத்தை விரும்பியும் நன்னெறியைக் கைவிட்டு, தீ நெறியில் சென்றும், விரும்பி வந்த வறுமை மாந்தரிடம் உள்ள கல்வித் திறனைக் கண்டு களித்து,
அகமலர்ந்(து) ஈவார் போல முகமலர்ந்(து)
இனிது மொழிந்தாங்(கு) உதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள்பல குறித்தவர்
தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள்இகழ்ந்(து)
இகமும் பரமும் இல்லை என்று
பயமின்(று) ஒழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்
தெளிவுரை : அவர்களது திறமைக்கு ஏற்றவாறு மனமலர்ந்து கொடுப்பார் போல முகமலர்ந்து இனிது மொழிந்தாங்கு உதவாமல் நாளைக் கடத்தியவர், முயற்சியும் இல்லாமல் சுற்றத்தாரால் இகழப்பட்டு இம்மையும் மறுமையும் இல்லாமல் பயமில்லாமல் காலம் கடத்திப் பொய்யை வளர்த்து, மின்னலைப் போலத் தோன்றி மறையும் செல்வத்தை விரும்பி,
தன்னையும் ஒருவ ராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்(து)
யோசனை கமழும் உற்பல வாவியிற்
பாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்
தெளிவுரை : தன்னையும் ஒரு மேலோனாக எண்ணும் மற்றவர்கள் வாழும் வாழ்க்கையும், அரும்பு மலர்ந்து வெகு தூரம் வரை வாசனை வீசும் நீலோற்பலம் (குவளை) உள்ள குளத்தில் பச்சை இலைகளுக்கு மத்தியில் பால்போன்ற வெண்மை நிறமுள்ள அன்னம் தன் குஞ்சுகளுடன் பயப்பட, பிளந்த வாயை உடைய வாளை மீன்கள் போர்த்தொழில் புரியும் வண்ணம் விரைந்து வரும் காவிரியும்,
மருதமும் சூழ்ந்த மருத வாண
சுருதியும் தொடராச் சுருதி நாயக
பத்தருக்(கு) எய்ப்பினில் வைப்பென உதவும்
முத்தித் தாள மூவா முதல்வநின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருளென நினையா(து) உன்அரு ளினைநினைந்(து)
தெளிவுரை : விளை நிலங்களும் சூழ்ந்த மருதவாண ! சுருதி தொடராத சுருதி நாயக ! பக்தர்களுக்கு உதவும் சேமிப்பு நிதி போல முத்தியைத் தரும் திருவடிகளை உடையவனே ! அழிவில்லாத முதல்வனே ! உன்னுடைய திருவடியைப் பிடித்துப் பயப்படாமல் மனைவி மக்களும், உறவினரும், இலக்குமியும் செல்வமாகக் கருதாமல், உன் அருளையே நினைந்து,
இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவ லோடுஒன்று உதவுழி எடுத்தாங்(கு)
இடுவோர் உளரெனின் நிலையினின்(று) அயின்று
படுதிரைப் பாயலிற் பள்ளி மேவி
தெளிவுரை : இந்திரச் செல்வமும் அஷ்டமா சித்திகளும் வந்தபோது வேண்டாமென்று மறுத்தவர் ஒதுங்கி சின்னச் சீரையாகிய தைத்த கோவணத்தையும் கிழிந்த அரைத் துண்டையும் பெறுவது புனைந்து, கந்தைத் துணியையும் உதவும்போது எடுத்தாங்கு இடுவோர் இருந்தால், நின்றபடியே உணவை உட்கொண்டு, தரையாகிய படுக்கையிலே படுத்து,
ஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ
மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப்
பார்க்கும்நின்
செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்
பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற்(று) ஆதலின்
தெளிவுரை : ஒழியாத பெருமை என்னும் அரிவையைத் (25 வயதுடைய பெண்) தழுவி, பிள்ளையாகப் பல உயிர்களையும் சமமாகக் கருதும் நின் அடியார் வாழ்வும் பற்றிப் பார்க்கின் பொருந்திய நாய் போன்ற எனக்கு, குளம் மறையும் அளவுள்ள நீரும் அளவிடுதற்கு அரிய சலதியும் இருவகைப் பொருளும் தொண்டர் வாழ்வுக்கு ஒப்பாகும்.
நின்சீர் அடியார் தஞ்சீர் அடியார்க்(கு)
அடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட்(டு) ஒழுகியவர்
காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன்(று)
உண்டோ மற்றெனக்(கு) உள்ளது பிறிதே.
தெளிவுரை : என்றாலும் மன உறுதியுள்ள அடியார்க்கு அடிமை பூண்டு, நெடுநாள் பழகி, துர்நாற்றம் வீசும் இந்த உடம்போடு சேர்ந்து வாழ்ந்தவர் காலால் இடும் வேலையைத் தலையால் செய்யும் பணியை ஏற்று கண்டது காணின் அல்லது வேறு ஒன்று உண்டோ? இதுதான் என் பணி. மற்றவை எல்லாம் எனக்கு வேறானதே என்பதாம்.
வெண்பா
885. பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த
பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
மருதவட்டந் தன்னுளே வந்து.
தெளிவுரை : பழைமையானவனும் இடைமருது வட்டம் என்னும் இவனுடைய எல்லையில் வந்து நான் பெற்ற பேறுகள் யாவையெனின், தீவினையின் பயனை நுகரும் இடமாகிய நரகத்தைவிட்டுப் பிரிந்தேன். உருவில்லாதவனாகிய காமனுடைய அம்பில் பொருத, வட்டமாகிய வில்லுக்குப் பிழைத்து விட்டேன் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
886. வந்திகண் டாய்அடி யாரைக்கண்
டால்மற வாதுநெஞ்சே
சிந்திகண் டாய்அரன் செம்பொற்
கழல்திரு மாமருதைச்
சந்திகண் டாயில்லை யாயின்
நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திகண் டாய்நிர யத்துன்னை
வீழ்த்தி உழக்குவரே.
தெளிவுரை : நெஞ்சமே ! அடியாரைக் கண்டால் வணங்குவாயாக. அரன் செம்பொற்கழல் கண்டால் எண்ணுவாயாக. திருமாமருதைச் சேர முயற்சிப்பாயாக. இல்லையேல் எமதூதர்கள் வந்து உன்னைக் கொண்டுபோய் நரகத்தில் தள்ளிவிடுவர். துன்பப்படுத்துவர் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
887. உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்(து)
அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனும் எருவை விரித்தாங்(கு) ஐயமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
தடுக்குநர்க்(கு) அடங்கா(து) இடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக்(கு) அஞ்சியுட் சென்று
தெளிவுரை : முயற்சியினால் வராத உறுதிப் பொருட்கள் உண்டோ? சோம்பலினால் வராத துன்பங்கள் உண்டோ? நெஞ்சமாகிய புனத்திலுள்ள வஞ்சக் கட்டையை வேரொடு தோண்டி எடுத்து, செம்மைப்படுத்தி, அன்பு என்னும் பாத்தியை அமைத்து, முன்னதாக மெய்யென்னும் எருவைப் போட்டு, ஐயமில்லாமல் பக்தியாகிய ஒப்பற்ற விதையை விதைத்து, நாள்தோறும் ஆர்வமாகிய தெளிந்த நீரைப் பாய்ச்சி, நேர்நின்று, தடுப்பவர்களுக்கு அஞ்சாமல் துன்பம் செய்யும் முரட்டு மாடுகளைப் போன்ற ஐந்து பொறிகளுக்கு,
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி
தெளிவுரை : அஞ்சி உள்ளே சென்று, காந்தமாகிய வேலி அமைத்து, எல்லாம் சரியான பிறகு, ஞானமாகிய பெருமுளை கெடாமல் முளைத்து, கருணையாகிய இளந்தளிர் காட்ட, குறையாத காமம் குரோதம் என்னும் களைகளைக் களைந்து, பாதுகாக்கும் செழுமையாக வளர்ந்து,
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்(டு) அம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
அஞ்செழுத்(து) அருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்
தெளிவுரை : மயிர் சிலிர்த்து , கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்த்து, புண்ணிய ஐந்தெழுத்து என்னும் அருமையான காய் தோன்றி, கறுத்த கழுத்தும், நெற்றிக் கண்ணும் நான்கு தோள்களும், பிரகாசமான ஐந்து முகங்களும், பவள நிறம் பெற்று, வெண்ணீறு பூசி, அறுசுவையைக் காட்டிலும் மிகுந்த சுவையுடையதாய்,
காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர
எம்ம னோர்கள் இனிதின் அருந்திச்
செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது
தெளிவுரை : பார்த்தாலும், கேட்டாலும், கருதினாலும் இன்பம் தரும் உயரத்திலுள்ள மருத மாணிக்கமாகிய தீங்கனி மெல்ல மெல்லப் பழுத்து, கையில் வந்து சேர, எம்மனோர்கள் இனிதிருந்து அருந்தி, யாதொரு கவலையும் இன்றி இருப்ப,
மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்
காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத்(து) ஒழுக
இன்பப் பேய்த்தேர் எட்டா(து) ஓடக்
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர
இச்சைவித்(து) உகுத்துழி யானெனப் பெயரிய
நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்
தெளிவுரை : சிலர் இதில் சேராமல், மனமெனும் புனத்தைத் திருத்தம் செய்யாமல், காமமாகிய காடு மூடி, தீமை செய்கின்ற ஐம்புலன்களாகிய வேடுவர் வழிபறித்து ஒழுக. சிற்றின்பமாகிய கானல் எனக்கு எட்டாமல் ஓட, படிக்காத உணர்வு என்னும் மான் தடுமாற, இச்சையாகிய வித்து உகுத்துழி யான் எனது என்னும் நச்சுமாமரம் நன்றாக முளைத்து,
பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும்
பாவப் பஃறழை பரப்பிப் பூவெனக்
கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவா(து)
இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.
தெளிவுரை : பொய்யென்னும் கவடுகள் விட்டு, செய்கின்ற பாவமாகிய பல தழைகளைப் பரப்பி, பூ என்ற கொடுமை அரும்பி கடுமை மலர்ந்து, துன்பமாகிய பல காய்களைக் காய்த்து, பின்பு மரணம் பழுத்து, நரகில் விழுந்து, தமக்கும் பிறர்க்கும் பயன்படாமல் இமைப் பொழுதில் கழியும் இயற்கையும் உடைத்து.
வெண்பா
888. உடைமணியின் ஓசைக்(கு) ஒதுங்கி அரவம்
படம்ஒடுங்கப் பையவே சென்றங்(கு) - உடைமருதர்
ஐயம் புகுவ(து) அணியிழையார் மேல் அநங்கன்
கையம் புகவேண்டிக் காண்.
தெளிவுரை : உடையிலுள்ள சதங்கையின் ஓசைக்கு அஞ்சி பாம்பு படத்தைச் சுருக்கிக் கொள்ள, மெதுவாகச் சென்று இடைமருதர் பிச்சை ஏற்பது, அழகிய ஆபரணங்களை அணிந்த மாதர்கள்மேல் மன்மதன் கையிலுள்ள அம்பு தைப்பதற்காகத்தான் என்றபடி.
கட்டளைக் கலித்துறை
889. காணீர் கதியொன்றும் கல்லீர்
எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர்
அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம்
நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப்
பிரான்கழல் மேவுதற்கே.
தெளிவுரை : நீங்கள் மருதவாணரது கழல்களை அடைவதற்குரிய வழியைக் காணமாட்டீர்கள். ஐந்தெழுத்தைக் கற்க மாட்டீர்கள். கோயில் திருப்பணிகளை நல்ல வழியில் செய்ய மாட்டீர்கள். அவன் புகழை விரும்பிப் பேசமாட்டீர்கள். உருத்திராட்சத்தை அணிய மாட்டீர்கள். திருநீற்றைப் பூச மாட்டீர்கள். வீணாகக் காலத்தைக் கழிக்கிறீர்களே ! அவனை அடைய முயலுங்கள் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
890. மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்(து)
இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை
தெளிவுரை : பொருந்திய தாழ்ந்த மயிர்த் தொகையோ, அம்மயிர் பரவிய தோலின் பரப்போ, தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ, புண்ணிடை ஊறும் இரத்தப் பெருக்கோ, பகுத்துப் பிரித்து இடையிடை நிற்கும் எலும்போ,
முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்(து)
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்(று)
ஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள்
தெளிவுரை : எலும்பின் இடையில் துர்நாற்றம் வீசுகின்ற மூளையின் நிணமோ, வழுவழுப்போடு கூடிய உள்ளே ஒழுகுகின்ற மச்சையோ, மெள்ள நின்று ஊறுகின்ற புழுவின் வரிசையோ, நீரிடை வைத்த மலத்தின் குவியலோ, வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ, உடம்பிற்குள்,
பிரியா(து) ஒறுக்கும் பிணியோ தெரியாது
இன்னது யானென்(று) அறியேன் என்னை
எங்கும் தேடினன் யாதிலும் காணேன் முன்னம்
வரைத்தனி வில்லாற் புரத்தைஅழல் ஊட்டிக்
கண்படை யாகக் காமனை ஒருநாள்
தெளிவுரை : பிரியாமல் துன்புறுத்தும் நோயோ, அது இன்னது என்று எனக்குத் தெரியவில்லை. என் உடல் முழுதும் தேடினேன். அதைக் காணவில்லை. முன்பு மேருமலையை வில்லாகக் கொண்டு திரிபுரங்களைத் தீ வைத்துக் கொளுத்தி, நெற்றிக் கண்ணை ஆயுதமாகக் கொண்டு மன்மதனை அன்றொரு நாள்,
நுண்பொடி யாக நோக்கி அண்டத்து
வீயா அமரர் வீயவந்(து) எழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
தெளிவுரை : சாம்பலாகும்படி நோக்கி, வானத்திலுள்ள சாகா வரம் பெற்ற தேவர்கள் அழியுமாறு வந்தெழுந்த தீப் போன்ற வாயினையுடைய ஆலகால விடத்தை, திருஅமுதாக்கி திருமாலும் பிரமனும் தேடி, அவர்கள் அஞ்சுமாறு நிமிர்ந்து, மார்க்கண்டேயனுக்காகக் காலனை உதைத்து,
சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
தெளிவுரை : சந்தனம், சரளம், சண்பகம், மகிழ் ஆகிய மரங்கள் நிறைந்த நந்தன வனத்திடை சூரிய ஒளி உள்ளே புக முடியாதபடி அடர்ந்து, நவமணிகள் ஒளி வீச, எண்ணற்ற முனிவர்களுக்குப் புண்ணியம் அளிக்கும் காவிரி ஆறு சூழ்ந்த,
திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கை நாயகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
தெளிவுரை : திருவிடைமருதூர் என்னும் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே ! கொல்லேற்றுப் பாகனே ! உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனே ! கங்கையின் நாயகனே ! உன் தெய்வத்திருவருள் கைகூடி இருப்பதால் மாய வாழ்க்கையைக் கிழித்து, தூய ஞானக்கண் பெற்றபின்,
நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்
என்னையும் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர்
தன்னையும் காணாத் தன்மை யோரே.
தெளிவுரை : யானும் நின் பெருந்தன்மையைக் கண்டேன். காணவும் என்னையும் கண்டேன். பிறரையும் கண்டேன். நின்னிலை அனைத்தையும் கண்டேன். உன்னைக் காணாத மாந்தர் தன்னை அறியாதவர் ஆவர்.
வெண்பா
891. ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ
எண்ணுவார் உள்ளத்(து) இடைமருதர் பொற்பாதம்
நண்ணுவாம் என்னுமது நாம்.
தெளிவுரை : ஐந்தெழுத்தைத் தியானிக்காமலும், பச்சிலையை நினைக்காமலும், மஞ்சன நீரைக் கொண்டுவந்து நிரப்பாமலும் இருந்துவிட்டால் இறைவன் அருள் கிடைக்குமோ? யார் ஒருவர் திருவிடைமருதர் பொற்பாதத்தை நண்ணுவார்களோ அவர்களே பதம் பெறுவர் என்பதாம். வேறு தெய்வங்களை எண்ணிப் பயனில்லை.
கட்டளைக் கலித்துறை
892. நாமே இடையுள்ள வாறறி
வாம்இனி நாங்கள்சொல்ல
லாமே மருதன் மருத
வனத்தன்னம் அன்னவரைப்
பூமேல் அணிந்து பிழைக்கச்செய்
தார்ஒரு பொட்டுமிட்டார்
தாமே தளர்பவ ரைப்பாரம்
ஏற்றுதல் தக்கதன்றே.
தெளிவுரை : திருவிடை மருத வனத்தில் உள்ள அன்னம் போன்ற தலைவியைப் பூ மேல் அணிந்து, பிழைக்கச் செய்தவர். ஒரு பொட்டும் இட்டார். தாமே தளர்பவரைப் பாரம் ஏற்றுதல் தக்கதன்று. நாமே இடையுள்ளவாறு அறிவோம். இனி நாங்கள் சொல்ல வேண்டா.
நேரிசை ஆசிரியப்பா
893. அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
குன்றுவளைத்(து) எய்த குன்றாக் கொற்றத்து
நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ
கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்
பிறைசெறிந் தன்ன இருகோட்(டு) ஒருதிமில்
தெளிவுரை : பகைவர்களது திரிபுரங்கள் தீயில் அழிய, மேரு மலையை வளைத்து எய்த, குன்றாத வெற்றியையும் திருநீறு அணிந்த எண் தோள்களையும் உடைய செல்வ ! கயிலை மலை நடந்தது போல உயர்நிலை வலிமையையும் பிறை பதித்தது போன்ற இரு கொம்புகளும் ஒரு திமிலும்,
பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக
சிமையச் செங்கோட்(டு) இமையச் செல்வன்
மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை
தெளிவுரை : பால் நிறமும் செங்கண்ணும் உள்ள காளையை ஊர்தியாக உடையவனே ! உயர்ந்த சிகரங்களையுடைய இமயச் செல்வன் (பர்வத ராஜன்) பெற்ற பார்வதி தேவி. அவள் வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை. குயில் எனப் பேசும் மயிலிளம் பேடை.
கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன
மதரரி நெடுங்கண் மானின் கன்று
வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
ஐய திருவயிற்(று) அம்மைப் பிராட்டி
தெளிவுரை : கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன மதரரி நெடுங்கண்கள். மான் கன்று போன்றவள். வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி. (வல்லி-கொடி போன்றவள்.) ஏழு உலகங்களையும் பலமுறை பெற்ற திருவயிற்றை உடைய பிராட்டி.
மறப்பரும் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையா ளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந
பவள மால்வரைப் பணைக்கைபோந் தனைய
தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை
தெளிவுரை : மறப்பதற்கரிய செய்கைகளைச் செய்த அறப்பெருஞ் செல்வி. எம்மை ஆளுடைய உமையாள் என்னும் நங்கை. அத்தகைய கடவுள் கற்பின் மடவரலின் கொழுநனே ! பவளம் போன்ற மால்வரை; பனைக்கை போன்ற துதிக்கையையும் தழைந்த செவிகளையும் எண் தோள்களையும் உடைய விநாயகக் கடவுளது தந்தையே !
பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்
அமரர்த் தாங்கும் குமரன் தாதை
பொருதிடங் கொண்ட பொன்னி புரக்கும்
மருதிடங் கொண்ட மருத வாண
தெளிவுரை : பூப்போன்ற உச்சிக் கொண்டையை உடைய சேவற் கொடியையும் கொலை வேலையும் உடைய அமரர் தாங்கும் முருகப் பெருமானின் தந்தையே ! காவிரி சூழ்ந்த மருது இடம் கொண்ட மருதவாண !
நின்னது குற்றம் உளதோ நின்னினைந்(து)
எண்ணரும் கோடி இடர்ப்பகை கடந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்
தெளிவுரை : குற்றம் உன்னுடையதோ? உன்னை நினைந்து பல கோடி துன்பங்களைக் களைந்து, மிகுந்த கோபம்கொண்ட காலனை வதைத்து, இறப்பையும் பிறப்பையும் நீக்கி, சிறப்போடு காமதேனுவின் கன்றெனத் திரிந்து,
பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
அறுசுவை அடிசில் அட்டினி(து) இருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்(து)
தெளிவுரை : பாவிகள் உடையதே பாவம். எப்படியென்றால் உடையாத சோறும் மா, பலா, வாழை என்ற மூன்று பழங்களும் கலந்த அறுசுவை சமையல் சமைத்து இனிது இருப்ப, அவைகளைப் புசியாமல் ஒருவன் பசியால் வருந்துதல் உணவின் குற்றம் அல்ல. அதேபோல வெயிலில் வைத்து,
ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்றம் அன்று கண்ணகன்று
சேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
அடிபெயர்த்(து) இடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல்தீங்(கு) அன்றே.
தெளிவுரை : ஆற்றிய தெண்ணீர் நறுமணம் ஊட்டப்பட்டிருக்க, அதைக் குடிக்காமல் ஒருவன் நீர் வேட்கையோடு இருந்தால் அது தெண்ணீர்க் குற்றம் அல்ல. கண் அகன்று தேன் துளி சிதறிப் பூந்துணர் சேர்ந்து மணற்குவியலோடு சோலை இருப்ப, வெளியே வெய்யிலில் வியர்த்துப் போகுமாறு அடிபெயர்ந்து ஒருவன் நீண்ட நேரம் வருந்துதல் நிழலின் தீங்கன்று. அதாவது இறைவனது அருள் தேங்கி இருக்கும்போது அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்று ஆசிரியர் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்.
வெண்பா
894. அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றோ(டு) ஒவ்வா(து) உரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.
தெளிவுரை : (ஆறு சமயங்களாவன: சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்பன. ஆறு சமயங்களும் முடிவில் மருதனையே நோக்கி வந்து முடியும் என்கிறார்.) அன்று என்றும், ஆம் என்றும் ஆறு சமயங்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு உரைத்தாலும் ஒருமைப்பாட்டை நோக்குகின்றவர்கள் உள்ளத்தில் இருக்கும் மருதனையே நோக்கி வரும். அதாவது ஆறு சமயங்களும் சைவத்தில் அடங்கும் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
895. நோக்கிற்றுக் காமன் உடல்பொடி
யாக நுதிவிரலால்
தாக்கிற்(று) அரக்கன் தலைகீழ்ப்
படத்தன் சுடர்வடிவாள்
ஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண்
டோடச் சலந்தரனைப்
போக்கிற்(று) உயர்பொன்னி சூழ்மரு
தாளுடைப் புண்ணியமே.
தெளிவுரை : புண்ணிய உருவானவனாகிய இறைவனுடைய நெற்றிக்கண் மன்மதனுடைய உடல் சாம்பலாகுமாறு செய்தது. கால் விரல் நுனி இராவணனது தலை கீழ்ப்படத் தாக்கிற்று. சுடர் வடிவாள் தக்கன் தலை உருண்டோடச் செய்தது. உயர் பொன்னி சூழ் மருது ஆளுடைப் புண்ணியம் சலந்தரனை அழித்தது என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
896. புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த கைலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக
தெளிவுரை : புண்ணியம் நிறைந்த பழைமையானவனே. கொன்றையைத் தலை மாலையாகக் கொண்டவனே ! கயிலைக்கு நாயகனே ! விடத்தைக் கழுத்தில் வைத்துள்ளவனே ! கந்தனைப் பயந்த வாளரி நெடுங்கண் உமாதேவியின் கொழுநனே ! பூத கணங்களுக்கு நாதனே ! கொல்லேற்று வாகனனே !
வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினும் கரந்தை யாயினும்
பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்
தெளிவுரை : வேத கீதனே ! தேவர்களுக்குத் தலைவனே ! முத்திக்கு நாயகனே ! மூவா முதல்வ ! பக்தி கொண்டு பணைத்த மெய்யன்பொடு நொச்சி, கரந்தை ஆகிய பச்சிலை கொண்டு அருச்சிக்கும் தொண்டர்கள்,
கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஓரீஇ
மனையும் பிறவுந் துறந்து நினைவரும்
தெளிவுரை : மறுபடியும் பிறவி எடுக்காமல் காத்து அருள் புரியும் திருவிடை மருத ! திரிபுராந்தக ! பரந்த இவ்வுலகில் பலபல மாக்கள் மக்களையும் மனைவியையும் சுற்றத்தாரையும் விட்டு நீங்கி, வீடு வாசல்களைத் துறந்து,
காடும் மலையும் புக்குக் கோடையிற்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்
தெளிவுரை : காடும் மலையும் புகுந்து, கோடையில் கையைத் தலைக்கு மேலே உயர்த்தி, ஒரு காலை முடக்கி, ஐந்து வகையான நெருப்பின் மத்தியில் நின்று, மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் நீரில் மூழ்கி அதிக நேரம் கிடந்தும்,
சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா(து) உழன்றும்
காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருத்தியும்
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும்
தெளிவுரை : சடையைப் புனைந்தும், தலையை மொட்டை அடித்தும், ஆடையைத் துறந்தும் பட்டினி கிடந்தும், காயும் கிழங்கும் காற்றில் உதிர்ந்த சருகும் காற்றையும் நீரையும் எது கிடைக்கிறதோ அதை அருந்தியும், களரிலும் கல்லிலும் தூங்கி,
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து ஆங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்
பழுதின்(று) உயர்ந்த எழுநிலை மாடத்தும்
தெளிவுரை : தளர்ச்சியடையும் உடம்பைத் தளர்வித்து ஆங்கு அவர் வீடுபேறு ஆகிய முத்தியை அடைவதற்காகத் தம்மைத் தாமே மிகவும் தண்டிப்பர். இங்கு இவ்வாறு செய்யாமல், யாங்கள் எல்லாம் குறைவில்லாமல் உயர்ந்த எழுநிலை மாடத்தில்,
செழுந்தா(து) உதிர்ந்த நந்தன வனத்தும்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்
மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்
தெளிவுரை : செழுமையாக மகரந்தம் உதிர்ந்த நந்தவனத்தில், தென்றல் வீசுகின்ற முன்றிலின் இடத்தில் குறைதல் இல்லாத சித்திர மண்டப மருங்கிலும் அலை வீசுகின்ற குளக்கரையிலும் பெண் மயில் ஆடச் செய்த குன்றிலும்,
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண்(டு) இட்ட
மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
தெளிவுரை : தேவைப்பட்ட பொழுதெல்லாம் ஆங்காங்கு தந்தத்தால் செய்யப்பட்ட சிங்காதனத்தின் மீது படுத்த ஐந்து வகையான படுக்கை அணைமேல் பொங்க, குளிர்ந்த மலர்கள் கமழும் வெண்மையான ஆடையை விரித்து,
பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீது பரிபுரம் மிழற்றச்
சாயல்அன் னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொன்தோ ரணத்தைச் சுற்றிய துகிலென
தெளிவுரை : பட்டினுள் திணித்த பத நுண் பஞ்சின் நெட்டணை அருகா தலையணைகளைப் பரப்பி, பாயலின் மீது சிலம்பு ஒலி செய்ய, சாயல் அன்னத்தின் தளர் நடை பயிற்றிப் பொன்னாலாகிய தோரணத்தின் மீது சுற்றிய ஆடை போல,
அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப
ஆடர(வு) அல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப
தெளிவுரை : அழகிய தொடையின் மீதுள்ள மிகவும் மெல்லிய ஆடை கண்ணும் மனமும் கவரும்படி பண்வர இரங்கும் மணிமேகலை இடுப்பில் கட்டியிருக்க, பாம்புப் படத்தைப் போன்ற அல்குலும் அரும்பெறல் இடையும் வாட, பூரித்த வன முலைகள் இறுமாந்திருக்க,
அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித்(து) ஒளிர்தர
மணிவளை தாங்கிய அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின்மிசை விரித்துமீ(து) இட்ட
உத்தரீ யப்பட்(டு) ஒருபால் ஒளிர்தர
தெளிவுரை : அணியாக அமைந்த பாக்கு மரத்தை அலங்கரித்ததுபோல மணியோடு கூடிய மாலை ஒளி வீச, மணிவளைகளைத் தாங்குகின்ற அலங்கரிக்கப்பட்ட மென்தோள் சாந்தின்மீது விரித்து இடப்பட்ட மேலாடை ஒரு பக்கம் பிரகாசிக்க,
வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்(கு)
ஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்
ஆல காலமும் அனைத்தும்இட்(டு) அமைத்த
தெளிவுரை : சங்குகள் பூட்டிய இரு காதுகளோடு பவளத்திற்கு அருகில் முத்துக்களை நிரைத்ததைப் போன்று தாழ்ந்து நீண்ட நாசியொன்று பதித்து, காலனுடைய சூலமும் மன்மதனது மலர் அம்புகளும் ஆலகால விடமும் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பொருந்திய,
இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
தெளிவுரை : இரண்டு கண்களும் புரண்டு கடைமிளிர்தர சந்திரன் போன்ற குற்றமற்ற முகம் விளங்க, புதிய மணமுள்ள மாலை கூந்தல்மீது விளங்கும் அழகிய சொல்லையுடைய பெண்களை அனுபவித்தும், சித்திர அன்னங்கள் பரிமாறப்பட்ட பொன் தட்டில் இருந்த,
அறுசுவை அடிசில் வறிதினி(து) அருந்தா(து)
ஆடினர்க்(கு) என்றும் பாடினர்க்(கு) என்றும்
வாடினர்க்(கு) என்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
தூசு நல்லன தொடையிற் சேர்த்தியும்
தெளிவுரை : அறுசுவை உணவை உண்ணாமல் ஆடியவர்களுக்கும் பாடியவர்களுக்கும் வாடினவர்களுக்கும் மிகுதியாகக் கொடுத்தும், பூசுவனவற்றைப் பூசியும், அலங்காரம் செய்தும், உயர்ந்த பட்டாடைகளைத் தொடையில் கட்டியும்,
ஐந்து புலன்களும் ஆர ஆர்த்தும்
மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்(து)
இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த
தெளிவுரை : ஐம்புலன்களும் திருப்தியடையும் படி அனுபவித்தும், இளையோரும் சுற்றத்தாரும் மனமகிழ்ந்து ஓங்கி இவ்வாறு இருந்தோம் என்றாலும், அவ்வகை மந்திரமாகிய ஐந்தெழுத்தும் வாயில் மறவாமல் மனத்தை உன் போக்கில் செலுத்துவதால், அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை அன்றோ என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்(று) எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்
நிலத்தின் வழாஅக் கல்லேபோல்
நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.
தெளிவுரை : வீடு பேற்றையும் இழக்கவில்லை. முதல்வனே ! அந்த வல்லமை உன்னுடைய பெருமையினால் அல்லவா வந்தது? எப்படியென்றால் வல்லான் ஒருவன் முயற்சி செய்து எறிந்தாலும் வல்லமை இல்லாத ஒருவன் சாதாரணமாக எறிந்தாலும் நிலத்திலே வந்து விழுவதினின்றும் தப்பாத கல்லைப்போல, நின் நாமம் நவில்வார் நலத்தினின்றும் வழுவ மாட்டார்கள் என்பதாம்.
வெண்பா
897. நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
காமம் நவிற்றிக் கழிந்தொழியல் - ஆமோ
பொருதவனத் தானைஉரி போர்த்தருளும் எங்கள்
மருதவனத் தானை வளைந்து.
தெளிவுரை : எதிர்த்த காட்டு யானையின் தோலைப் போர்த்தருளும், எங்கள் திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் பணிந்து, மனமே ! அவனது பெயரைச் சொல்லாமல் பெண்களின் தோளில் அழுந்திக் காமத்தைச் சொல்லியே காலங் கடத்துகின்றாயே, இது தகுமோ? அவன் நாமத்தை நவிற்று என்றும் வீண் காலம் கழிக்காதே என்றும் அறிவுறுத்துகின்றார்.
கட்டளைக் கலித்துறை
898. வளையார் பசியின் வருந்தார்
பிணியின் மதனன்அம்புக்
கிளையார் தனங்கண் டிரங்கிநில்
லார்இப் பிறப்பினில்வந்(து)
அளையார் நரகினுக்(கு) என்கட
வார்பொன் அலர்ந்தகொன்றைத்
தளையார் இடைமரு தன்னடி
யார்அடி சார்ந்தவரே.
தெளிவுரை : பொன்போல் மலர்ந்த கொன்றை மாலையை அணிந்த இடை மருதனின்  அடியார்களின் அடி சார்ந்தவர், பசியினால் வணங்குதல் செய்யார். பிணியினால் வருந்த மாட்டார்கள். மன்மதனுடைய அம்புக்கு இளைக்க மாட்டார்கள். செல்வத்தைக் கண்டு இரங்கி நில்லார். மறுபடியும் பிறவி எடுக்க மாட்டார்கள். நரகினுக்குப் போக மாட்டார்கள் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
899. அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வ
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையும் கடந்த கடவுள்
உளக்கணுக்(கு) அல்லா(து) ஊன்கணுக்(கு) ஒளித்துத்
தெளிவுரை : உன் அடியார்களுக்கு முடிவில்லாத இன்பமாகிய வீடு பேற்றை நிறைய கொடுத்த போதிலும் குறைவில்லாத செல்வனே ! ஆதியும், நடுவும், முடிவும் கடந்து மூன்று காலங்களையும் கடந்த கடவுளே ! உளக்கண்ணுக்கு அல்லாது ஊன் கண்ணுக்கு ஒளித்து,
துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின் இருசெவிக்(கு) எட்டா(து)
உறுப்பினின்(று) எழுதரும் உள்ளத்(து) ஓசை
வைத்த நாவின் வழிமறுத்(து) அகத்தே
தித்தித்(து) ஊறும் தெய்வத் தேறல்
தெளிவுரை : நடுக்கமின்றி நிமிர்ந்த சோதித் தனிச்சுடரே ! எறும்பு வளைபோன்று அமைந்த இரண்டு காதுகளுக்கும் எட்டாமல் உறுப்பில் நின்று எழும் உள்ளத்து ஓசை வைத்த நாவின் வழி மறுத்து, அகத்தில் தித்திக்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய தேனே !
துண்டத் துளையிற் பண்டை வழியன்றி
அறிவில் நாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தா(து) எவற்றையும்
தானே யாகி நின்ற தற்பர
தோற்றுவ(து) எல்லாம் தன்னிடைத் தோற்றித்
தெளிவுரை : மூக்குத் துவாரத்தில் முன்பு இருந்த வழி இல்லாமல் அறிவின் மூலம் மணம் வீசுகின்ற நறுமணமே ! மற்ற தன்மைகளையும் அடையாமல் எல்லாவற்றிலும் தானே ஆகிநின்ற தத்துவ ! (உண்மைப் பொருளே!) தோன்றுகின்ற யாவும் உன்னிடமிருந்தே தோன்றி,
தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்
இருள்புரை கண்டத்(து) ஏக நாயக
சுருதியும் இருவரும் தொடர்ந்துநின்(று) அலமர
மருதிடம் கொண்ட மருதமா ணிக்க
தெளிவுரை : தோற்றம் வேறு ஒன்றிலும் தோற்றாத சுடர் முளையே ! விரிந்த சடையின்மேல் வெண்மையான பிறைச் சந்திரன் இருந்த போதிலும் இருண்ட கழுத்தை உடைய ஏக நாயகனே ! வேதமும் திருமால் பிரமன் ஆகிய இருவரும் தொடர்ந்து நின்று தடுமாற மருதிடம் கொண்ட மருத மாணிக்கமே!
உமையாள் கொழுந ஒருமூன் றாகிய
இமையா நாட்டத்(து) என்தனி நாயக
அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி
நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு
நெடுநாள் பழகிய கொடுவினை ஈர்ப்பக்
தெளிவுரை : உமாதேவியின் கொழுநனே ! இமைக்காத மூன்று கண்களையுடைய என் தனி நாயகனே ! அடியேனுடைய குறையைக் கோபப்படாமல் கேட்பாயாக. உன்னுடைய பாதங்களைப் பணியாத கல்மனக் கயவரொடு நெடுநாள் பழகிய கொடுவினை ஈர்க்க,
கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்
குடரென் சங்கிலி பூண்டு தொடர்ப்பட்டுக்
கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத்(து) அழுந்தி
உடனே வருந்தி நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயர்பெற்(று) அல்லற் படுத்தும்
தெளிவுரை : கருப்பப் பை என்னும் இருட் சிறையாகிய அறையில் குடல் என்ற சங்கிலியால், கட்டுப்பட்டு கூட்டுச் சிறைப் புழுவைப் போல, முன்பு சேர்ந்துள்ள வினையாகிய மலத்து அழுந்தி, அங்கேயே வருந்தி, நெடுநாள் கிடந்து பல பிணிகளில் துன்பப் படுத்தும்,
தண்ட லாளர் மிண்டிவந்(து) அலைப்ப
உதர நெருப்பிற் பதைபதை பதைத்தும்
வாதமத் திகையின் மோதமொத் துண்டும்
கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா(து)
இடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப்
தெளிவுரை : தண்டனை செய்யும் ஏவலாளர் நெருங்கி வந்து வருத்த வயிறாகிய நெருப்பில் துடித்தும், வாயுவாகிய சவுக்கினால் அடிபட்டும், கிடந்தும், நின்றும், நடந்தும், செல்லாமல் குறுகிய வாயிலில் இருந்த சமயத்தில்,
பாவப் பகுதியில் இட்டுக் காவற்
கொடியோர் ஐவரை ஏவி நெடிய
ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
பாசப் படுத்திப் பையென விட்டபின்
யானும் போந்து தீதினுக்(கு) உழன்றும்
தெளிவுரை : பாவப் பகுதியில் கிடத்தி காவல் கொடியோராகிய ஐம் பொறிகளைத் தூண்டி, நீண்ட ஆசைத் தளையில் என்னையும் உடலையும் பிணித்து மெதுவாக விட்ட பிறகு யானும் வெளிப்பட்டு தீதினுக்கு உழன்றும்,
பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வெளவியும்
பரியா(து) ஒழிந்தும் பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்
ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி
தெளிவுரை : பெரியோர்களிடம் பிழை செய்தும் பிறர் பொருளைக் கவர்ந்தும் பிறர் துன்பம் கண்டு இரங்காமல் நீங்கியும் பல்லுயிர்களைக் கொன்றும் அயலார் மனைவியின் அழகைப் புகழ்ந்தும், பல பொய்களைச் சொல்லியும், அற்பர்களோடு சேர்ந்து பழகியும், ஐம்பொறிகளும் விரைய ஆசையைப் பெருக்கி,
ஈண்டின கொண்டும் மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்
நின்னை அடைந்த அடியார் அடியார்க்(கு)
தெளிவுரை : அதுவரை சம்பாதித்ததைக் கொண்டு மறுபடி வந்தபோது, இட்ட இடத்தில் இடாமலும் பட்ட இடத்தில் படாமலும் இப்போது துன்பமடைந்து பலநாள் வாடிக் கிடப்பேன். முத்தி அடையும் வழியைக் காணேன். உன்னை வந்து அடைந்த அடியார்களின் அடியார்களுக்கு,
என்னையும் அடிமை யாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண்(டு) ஒட்டி அறிவித்(து)
இச்சிறை பிழைப்பித்(து) இனிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்
தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.
தெளிவுரை : என்னையும் அடிமையாகக் கொண்டு இட்ட பச்சிலை கொண்டு ஒட்டி அறிவித்து இந்தச் சிறையிலிருந்து விடுவித்து, இனியும் இச்சிறையில் புகாமல் காத்தருள் செய்ய வேண்டும். தீப் பிழம்பு போன்ற செஞ்சடையை உடைய பெருமானே ! இதுவே என் வேண்டுகோள்.
வெண்பா
900. சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச்
சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப(து)
எங்கே இருக்க இவள்.
தெளிவுரை : எங்கே இருக்கலாம் என்ற எண்ணத்தால், இவள், இடைமருது ஈசர்மேல் காதல் கொண்டாள் !
சடைமேல் கங்காதேவி குடிகொண்டிருக்க இடப்பாகத்தில் உமாதேவி திகழ்ந்து கொண்டிருக்க இவள் இடைமருது ஈசன்மேல் காதல்கொண்டு சங்கு வளையல்களையும் ஆடையையும் இவள் எப்படிக் கொடுப்பாள். இவள் எங்கே இருப்பாள் ?
கட்டளைக் கலித்துறை
901. இருக்கும் மருதினுக்(கு) உள்ளிமை
யோர்களும் நான்மறையும்
நெருக்கு நெருக்கத்து நீளகத்
துச்சென்று மீளவொட்டாத்
திருக்கு மறுத்தைவர் தீமையும்
தீர்த்துச்செவ் வேமனத்தை
ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே
முளைக்கின்ற ஒண்சுடரே.
தெளிவுரை : திருவிடை மருதினுக்குள் இமையோர்களும் நான்கு வேதங்களும் நெருங்கி இருக்கும் நீண்ட இடத்தில் சென்று, மீள முடியாத என் கோணலையும் அறுத்து, ஐம்பொறிகளின் தீமையையும் தீர்த்து நல்ல நிலையில் என் மனத்தை ஒருமைப்படுத்தித் தியானிக்கும் நிலையில் வைப்பாயாக. மருதினுக்குள் இருக்கும் ஒண்சுடரே ! உன்னை வேண்டிக் கொள்கிறேன் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
902. சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடைஉகந்(து) ஏறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும்
தெளிவுரை : பிரகாசிக்கின்ற சூலாயுதத்தை உடையவன் என்றும், விடையை விரும்பி ஏறிய விமலன் என்றும், பிறரால் உண்ண முடியாத ஆலகால விஷத்தை உண்டாய் என்றும், நெற்றிக் கண்ணை விழித்துக் காமனை எரித்தாய் என்றும், திரிபுரங்களை எரித்த வீரன் என்றும்,
கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகஞ் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும்
தெளிவுரை : யானைத் தோலைப் போர்த்த கடவுள் என்றும், பாம்பை அணிந்த வல்லவன் என்றும், கபாலத்தையும் செந்தழலையும் ஏந்தினை என்றும், வல்லமை படைத்த காலனை உதைத்தாய் என்றும், சலந்தரன் உடலை அழித்தாய் என்றும்,
அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா(து) இளைப்ப
தெளிவுரை : ஓர் ஊழிக் காலத்தில் பிரமன் தலையை அரிந்தனை என்றும், வாளேந்திய இராவணனைக் கால் கட்டை விரலால் மிதித்தனை என்றும், தக்கனது யாகத்தை அழித்தாய் என்றும், தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய கொடிய புலியைக் கிழித்து அதன் தோலை உடுத்திக் கொண்டாய் என்றும், பன்றியும் அன்னமும் (திருமாலும் பிரமனும்) பார்க்க முடியாமல் தடுமாற,
வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணில் கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல்
தெளிவுரை : தீப்பிழம்பாய் உயர்ந்தனை என்றும், செழுநீர் ஞாலம் செகுத்து உயிர் உண்ணும் தீப்போன்ற கண்ணையுடைய முயலகனைக் காலடியில் அழுத்தினாய் என்றும், இது போன்ற உன்னுடைய சிறப்பினை உன்னிடம் புகழ்தல்,
துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவில(து) ஆயினும்
என்றன் வாயிற் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லற் படுத்தா
தெளிவுரை : என்னால் இயலாத ஒன்றாகும். உன்னுடைய பெருமை எல்லையற்றதாயினும் என் வாயினால் சொல்லப்படும் இந்த எளிய மொழியைக் கொண்டு உன்னை நோக்குவேன் ஆதலின், என் துன்பங்களைக் களைந்து, இனி துன்புறுத்தாமல்,
எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்புவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண்(டு) உகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு(து) அமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர்
தெளிவுரை : எழுநிலை மாடத்து செழுமுகில் உறங்க அடித்துத் தட்டி எழுப்புவதுபோல உன்னுடைய பெருங் கொடியைக் கொண்டு துகைப்ப, தூக்கத்திலிருந்து எழுந்து பயிலுகின்ற வீதியை உடைய திருமருதத்து அமர்ந்த தெய்வச் செழுஞ்சுடரே !
அருள்சுரந்(து) அளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்னினைந்(து) எறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.
தெளிவுரை : அருள் சுரந்து காப்பாற்றும் அற்புதக் கூத்தனே! மலர்களுக்குப் பதிலாக கல்லைக் கொண்டு அருச்சித்த சாக்கிய நாயனார் உன்னை நினைந்து எறிந்ததனால் அவருக்கும் அருள் தவறாமல் கிடைத்தது. அதுபோல் எனக்கும் கிடைக்க வேண்டுகிறேன் என்பதாம்.
வெண்பா
903. இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய
புன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
ஆளுடையான் செம்பொன் அடி.
தெளிவுரை : வெற்றி மழுவையும் வாளையும் உடையவனும் தெய்வத்தன்மை பொருந்திய மருதை உடையவனும் நாயேனாகிய என்னை ஆளுடையவனுமாகிய அப் பெருமானது செம்பொன் அடிகளை இன்றிருந்து நாளை மடியும் தொழிலுடைய சிற்றறிவினையுடைய மக்களாகப் பிறந்தும் மக்கட் பண்பில்லாதவர்கள் புகழ்வார்களோ? புகழ மாட்டார்கள் என்றபடி.
கட்டளைக் கலித்துறை
904. அடியா யிரம்தொழில் ஆயின
ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரம்கண்கள் மூவா
யிரம்முற்றும் நீறணிந்த
தொடியா யிரங்கொண்ட தோள்இரண்
டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு
தாளியைப் பற்றிக்கொண்டே.
தெளிவுரை : நெஞ்சமே ! இரவும் பகலும் தென் மருதாளியைப் (திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனை) பற்றிக் கொண்டு, அடி (உன் திருவடி) ஆயிரந்தொழில் ஆயின என்றும் ஆயிரக் கணக்கானோரின் முடியும் கண்களும் நீறணிந்த தோள்களும் பற்றி ஓதுவாயாக. அதாவது, அவனது திருவுருவச் சிறப்பை இரவும் பகலும் துதி செய்வாயாக என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
905. கொண்டலின் இருண்ட கண்டத்(து) எண்தோள்
செவ்வான் உருவிற் பையர(வு) ஆர்த்த
சிறுபறை கிடந்த நெறிதரு புன்சடை
மூவா முதல்வ முக்கட் செல்வ
தேவ தேவ திருவிடை மருத
தெளிவுரை :  மேகத்தைப் போன்ற இருண்ட கண்டத்தையும் எட்டுத் தோள்களையும், செவ்வானத்தைப் போன்ற உருவத்தோடு, பாம்பை ஆபரணமாகக் கொண்டு, சிறு பிறை தவழும் நெறிந்த சடையினையும் உடைய அழிவில்லாத முதல்வனே ! மூன்று கண்களையுடைய செல்வனே ! தேவ தேவனே ! திருவிடை மருதனே !
மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிரா வணத்துறை ஆடும் அப்ப
கயிலாய வாண கௌரி நாயக
நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து
தெளிவுரை :  மாசறு சிறப்பின் தேவர்கள் நீராடுகின்ற பூசத் தீர்த்தம் புரக்கும் காவிரியல் அயிராவணத் துறையில் நீராடும் அப்பனே ! கைலாய வாண ! கௌரி நாயக ! நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து,
பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்
இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்
மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
அமரர் தாங்கும் குமர வேளும்
சுரிசங்(கு) ஏந்திய திருநெடு மாலும்
தெளிவுரை : பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர் இமைக்காத கண்களை உடைய உமா தேவியாரும் மழைபோன்று மதம் பொழியும் துதிக்கையை உடைய விநாயகரும், தேவர்களுக்கு ஆதரவாக இருக்கும் குமரக் கடவுளும், சுழிவோடு கூடிய சங்கை ஏந்திய திருமாலும்,
வான்முறை படைத்த நான்முகத்(து) ஒருவனும்
தாருகற் செற்ற வீரக் கன்னியும்
பூவின் கிழத்தியும் நாவின் மடந்தையும்
பீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்
ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும்
தெளிவுரை : இந்த உலகைப் படைத்த பிரம தேவனும், தாருகனை அழித்த வீரம் பொருந்திய துர்க்கையும் சரஸ்வதி தேவியும், திருமகளும், பெருமை பொருந்திய கோடி உருத்திரரும், குறையாத பெருந் திறலுடைய இந்திரனும்,
செயிர்தீர் நாற்கோட்(டு) அயிரா வதமும்
வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்
சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்
நிருதியும் எமனும் சுருதிகள் நான்கும்
வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும்
தெளிவுரை : குற்றமற்ற நான்கு தந்தங்களை உடைய ஐராவதமும், தாவும் பரிசுடைய அருக்கர் பன்னிருவரும், சந்திரனும் அக்கினி தேவனும், நிருதியும், இயமனும், வேதங்கள் நான்கும், வருணனும் வாயுவும், குபேரனுமாகிய அஷ்டத்திக்குப் பாலகர்களும்,
எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
மூன்று கோடி ஆன்ற முனிவரும்
வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்
வித்தகப் பாடல் முத்திறத்(து) அடியரும்
தெளிவுரை : எட்டுக் கிரிகளும், அஷ்ட வசுக்களும், முக்கோடி முனிவர்களும், வசிட்டனும், கபிலனும், அகத்தியரும், தும்புரு நாரதர் ஆகிய இருவரும், தேவாரப் பாடல்களைப் பாடிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும்,
திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்
அத்தகு செல்வத்(து) அவமதித் தருளிய
சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்
தெளிவுரை : பேரன்பு கொண்ட பெருந்துறைப் பிள்ளையாகிய மாணிக்கவாசகரும், பெருஞ் செல்வத்தைத் துறந்த சித்தமார் சிவவாக்கிய தேவரும், உடம்பில் திருநீறு பூசியிருந்ததைக் கண்டு கள்ளன் கையில் பிணித்திருந்த கட்டை அவிழ்த்தும், (வரகுண பாண்டியனது பெருமையைக் கூறுகின்றார்.)
ஓடும் பன்னரி ஊளைகேட்(டு) அரனைப்
பாடின என்று படாம்பல அளித்தும்
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும்
தெளிவுரை : ஓடுகின்ற நரிகளின் ஊளையைக் கேட்டு சிவபெருமானைப் பாடின என்று அவைகளுக்குப் போர்வையளித்தும், குவளை பூத்திருந்த குளத்தில் தவளைகள் கத்த அவை ஈசனைத் துதிக்கின்றன என்று காசும் பொன்னும் கலந்து தூவியும் (இதைக் கொடை மடம் என்பர்)
வழிபடும் ஒருவன் மஞ்சனத்(து) இயற்றிய
செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலும் அவனிப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
மருத வட்டத்(து) ஒருதனிக் கிடந்த.
தெளிவுரை : அபிடேகத்திற்குரிய எண்ணெய்க்காக வைத்திருந்த எள்ளு விதையைத் தின்னக் கண்டு பிடித்தலும், அவனிப் பிறப்புக்கு என்று இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும், மருத வட்டத்தின் ஒரு பக்கத்தில் இருந்த,
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்இத் தலையும்
கிடக்கல் வேண்டுமென்(று) அடுத்தடுத்(து) இரந்தும்
கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த(து) என்றுநாய்க் கட்டம் எடுத்தும்
தெளிவுரை : தலையைக் கண்டு தலையுற வணங்கி, உம்மைப் போல எம் இத்தலையும் கிடக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப யாசித்தும், கோயில் முற்றத்தின் மேலே கிடந்த நாய் மலத்தை அப்புறப் படுத்தியும்,
காம்பவிழ்த்(து) உதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட்(கு) எல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்(கு) என்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்
தெளிவுரை : காம்பு அவிழ்ந்து உதிர்ந்த கனியுருக் கண்டு வேப்ப மரங்களுக்கு எல்லாம் விதானம் (மேற்கட்டி) அமைத்தும், விரும்பியவற்றைக் கொடுக்கும் சிவபெருமானுக்குப் புரிகுழல் தேவியை (மனைவியை) விரும்பிக் கொடுத்த பெரிய அன்பினை உடைய வரகுண தேவரும், (வரகுண பாண்டியன்)
இனைய தன்மையர் எண்ணிறந் தோரே
அனையவர் நிற்க யானும் ஒருவன்
பத்தி என்பதோர் பாடும் இன்றிச்
சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை
இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும்
தெளிவுரை : இத்தகைய தியாகசீலர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் ஒரு புறம் இருக்க, யானும் ஒருவன் பக்தி என்று எதையும் செய்யாமல் போனாலும் பரிசுத்தன் ஆயினும், கடையேனாகிய யான் உன்னைத் துதிக்கவில்லையாகினும் வணங்க வில்லையாயினும்,
வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
கருதி யிருப்பன் கண்டாய் பெரும
நின்னுல(கு) அனைத்தும் நன்மை தீமை
ஆனவை நின்செயல் ஆதலின்
நானே அமையும் நலமில் வழிக்கே.
தெளிவுரை : வருந்தவில்லை என்றாலும் வாழ்த்தவில்லை என்றாலும் உன்னையே நினைத்துக் கொண்டிருப்பேன். இதை நீ காண்பாயாக. பெருமானே ! உன்னுடைய உலகத்தில் நன்மை தீமை முதலானவை நின் செயலாதலின் நலமில் வழிக்கு யானே அமையும்.
எனவே என்னை ஏற்றுக் கொள்வாய் என்பதாம்.
வெண்பா
906. வழபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.
தெளிவுரை : நடக்க வேண்டிய நெறிமுறைகளைத் தவறி, நாம் எல்லாம் நினைத்தபடியே தொழில் செய்து பழிபிழைத்த பாவங்கள் எல்லாம், சோலைகள் சூழ்ந்த திருவிடைமருதூரில் கோயில் கொண்டவன் என்று வாயினால் சொல்லக்கூட வேண்டா. நினைத்தாலே போதுமானது. அவனைத் தொழுதால் நற்கதி பெறலாம் என்றபடி.
கட்டளைக் கலித்துறை
907. கரத்தினில் மாலவன் கண்கொண்டு
நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
பாமதி ஒன்றும்இல்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தைபு
ளாகிவெண் காடனென்னும்
தரத்தினும் ஆயது நின்னடி
யாம்தெய்வத் தாமரையே.
தெளிவுரை :  (திருமால் சிவனை வழிபடும்போது ஆயிரம் மலர்களுள் ஒன்று குறைய அதை ஈடு செய்வான் வேண்டி,) தன் கண்களில் ஒன்றைப் பறித்து கையில் ஏந்திப் போற்ற நல்ல வரத்தினைத் தந்த திருவிடை மருதப்பனே. நான் அறிவற்றவன்; என்னை நீ ஆட்கொண்டு திருவெண்காடர் என்ற பெயருக்கேற்ப என் நிலையையும் உயர்த்தியுள்ளாய். ஆகவே, உன் திருவடியாகிய தெய்வத் தாமரையுள் நான் சரண் அடைந்தேன். நான் நற்கதி பெற அருள் செய்வாயாக.
திருச்சிற்றம்பலம்
29. திருஏகம்பமுடையார் திருவந்தாதி (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)
அந்தாதித் தொடை பொருந்த நூறு பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் இந்நூல் காஞ்சி மாநகரில் உள்ள திருவேகம்பம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடியது ஆதலின் திருவேகம்பமுடையார் திருவந்தாதி எனப் பெயர் பெற்றது.
திருவேகம்பத்தில் எழுந்தருளிய பெருமானே ! மெய்யறிவினால் நின்னை வழிபட்டொழுகும் மெய்யன்பர்கள் செல்லும் ஞானநெறி இதுவென உணர்ந்திலேன். சரியை கிரியை ஆகிய கைத் தொண்டு செய்து நின்னடி வணங்கும் அடியார்கள் தொண்டினை மகிழ்ந்து மேற்கொண்டேன் அல்லேன். உடல் வளர்க்கும் உணவினையே விரும்பிப் பொய்யாக உன்னைப் போற்றிப் புறமே திரியும் அடியவனாகிய எளியேனுடைய பணியையும் ஏற்றுக் கொள்வாயோ?
சிவபெருமானுக்குத் தொண்டு பூண்டதன் பயன் அவனடியார்களுக்குப் பணி செய்து ஒழுகுதலேயாகும். அடியார்களுடைய திருவடித் துகளைத் தலைமேற் கொள்வாருள்ளம் தெளிவு பெறும். ஆகையால் அவர்கள் சிவபிரான் அருள் பெறுதல் ஒருதலை. சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குவதற்கே தம் தலையினைப் பயன்படுத்தும் பெருவிருப்புடைய மெய்யடியார்களோடு இணங்கிப் பழகுவது அல்லாமல் பிறரோடு தாம் நெருங்கிப் பழகுவதில்லை.
பிற தெய்வங்களைக் கடவுளாக எண்ணிப் புலமை மிக்கோர் பாடும் செய்யுட் பொருட்கள் முடிவில் ஏகம்ப நாதராகிய முழுமுதற் பொருளைச் சென்று சாரும். போர் செய்து பகை வேந்தரை வெல்லும் பேரரசர்களாயினும் எவ்வுயிர்க்கும் இறைவராகிய ஏகம்பவாணருடைய திருவருள் வடிவாகத் திகழும் திருநீற்றினைத் தம்முடைய நெற்றியில் அணிந்து அப்பெருமானைப் போற்றாராயின் அவ் அரசருடைய அரசாட்சி முதலியன நிலை பெறல் இல்லை. பூதேவர் என்று போற்றப் பெறும் தலைமையைப் பிறப்பினால் அடைந்து மறைகளை மறவாது ஓதி, வேள்விகளை முறைப்படி செய்து வந்தாலும், திருவேகம்பரைத் தொண்டர்களோடும் கூடித் தொழும் திருவருள் நலம் அமையப் பெறாதவர்கள் காடுகளில் வேட்டையாடித் திரியும் வேடர்களோடு சேர்த்து எண்ணப் பெறும் தாழ்வுடையவராவர். சீலமின்றி அறிவின்றிக் கொலை களவு முதலிய தீமை புரிந்தொழுகும் கீழ்க்குல மக்களாயினும் ஏகம்பத்து இறைவனுடைய திருவடிக்கு அன்புடைய தொண்டராயின் அவர்களே சிறந்தவர்களாகப் போற்றத் தக்கவராவர் என்பன போன்ற பல செய்திகள் இவ் அந்தாதியில் அமைந்துள்ளன.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித்துறை
908. மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி
யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்(டு)
உவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்பற
மேஉன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி
யோகச்சி ஏகம்பனே.
தெளிவுரை : கச்சித் திருவேகம்பத்தில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே ! உண்மையான அடியவர்கள் செல்லுகின்ற சிவநெறியை நான் அறிந்திலேன். நற்பணி செய்யும் ஒழுக்கமுள்ள தொண்டர்களைக் காட்டிலும் நற்றொண்டை விரும்பவில்லை. உண்டு உயிர் வாழ்வதற்காகப் பொய்த் தொண்டு பேசி, புறத்தில் மட்டுமே உன்னை வழிபடுகின்ற அடியேனுடைய தொண்டினைக் கொள்வாயாக.
909. ஏகம்ப னேஎன்னை ஆள்பவ
னேஇமை யோர்க்கிரங்கிப்
போகம்பன் னாளும் கொடுக்கின்ற
நாயக பொங்கும்ஐவாய்
நாகம்பொன் ஆரம் எனப்பொலி
வுற்றுநல் நீறணியும்
ஆகம்பொன் மாமலை ஒப்பவ
னேயென்பன் ஆதரித்தே.
தெளிவுரை :  கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவனே ! என்னை ஆட்கொண்டவனே. தேவர்களுக்கு இரங்கி நுகர் பொருள்களை எப்போதும் கொடுக்கின்ற நாயகனே ! சீறி வருகின்ற ஐந்து தலைகளையுடைய பாம்பு பொன் ஆபரணத்தைப் போல் பொலிவுற, நல்ல திருநீறு அணியும் உடல் பொன்மா மலைபோல உள்ளவனே, என்னை ஆதரிக்குமாறு வேண்டுகிறேன்.
910. தரித்தேன் மனத்துன் திகழ்தரு
நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப
னேயென்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர்
ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி
பூணத் தெளிந்தனனே.
தெளிவுரை : உன்னுடைய சிறந்த திருப்பெயரை என் மனத்துள் பொருத்திக் கொண்டேன். பெரிய சோலையிடத்தில் கீற்றுக்களையுடைய வண்டுகள் ஒலி செய்கின்ற கச்சியம்பதியில் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பனே ! என் வல்வினைகளைப் போக்கினேன். உன்னை வணங்காதவர் ஏழைமை கண்டவர்கள் என எள்ளி நகையாடினேன். உன்னுடைய மெய்த் தொண்டர்களின் பாதங்களை அணியத் தெரிந்து கொண்டேன்.
911. தெளிதரு கின்றது சென்றென்
மனம்நின் திருவடிவம்
அளிதரு நின்னருட்(கு) ஐயம்
இனியில்லை அந்திச்செக்கர்
ஒளிதரு மேனிஎம் ஏகம்ப
னேஎன்(று) உகந்தவர்தாள்
தளிதரு தூளிஎன் றன்தலை
மேல்வைத்த தன்மைபெற்றே.
தெளிவுரை :  என் மனம் உன் திருவடிவத்தில் சென்று பதிந்தமையால் தெளிவடைகின்றது. அருள் பாலிக்கின்ற நின் கருணைக்கு இனி சந்தேகம் இல்லை. மாலையில் தோன்றும் செவ்வானம் போல் ஒளிதரும் மேனி ஏகம்பனே என்று மகிழ்ந்தவர்களின் பாதமாகிய திருக்கோயிலில் உள்ள புழுதி என் தலைமேல் வைத்த தன்மை பெற்று உய்ந்தேன்.
912. பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை
செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேன்என் கருத்தினி
தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும் உகந்தவ
னேபட நாகக்கச்சின்
சுற்றுகந் தேர்விடை மேல்வரு
வாய்நின் துணையடியே.
தெளிவுரை : அர்ச்சனை செய்யப் பெருகும் நின்னுடைய சிறப்புக்களைக் கற்று மகிழ்ந்தேன். கச்சி ஏகம்பத்தின் விருப்பத்தை இனிதாகக் கொண்டு மகிழ்ந்து, காளையை ஊர்தியாக உடையவனே. படத்தையுடைய பாம்பைக் கச்சையாக விரும்புகின்றவனே. உன்னுடைய இரண்டு பாதங்களையே பற்றுக் கோடாக விரும்பி ஏற்றுக் கொண்டேன்.
913. அடிநின்ற சூழல் அகோசரம்
மாலுக்(கு) அயற்(கு) அலரின்
முடிநின்ற சூழ்முடி காண்பரி
தாயிற்றுக் கார்முகிலின்
இடிநின்ற சூழ்குரல் ஏறுடை
ஏகம்ப யாம்எங்ஙனே
வடிநின்ற சூலப் படையுடை
யாயை வணங்குவதே.
தெளிவுரை : உன்னுடைய திருவடி யிருந்த இடம் திருமாலுக்கு அறிய முடியாதது. நான்முகனுக்கு, கொன்றையலர் தாங்கிய உன் திருமுடி காண முடியாதாயிற்று. கருமேகத்தின் இடியைப் போல் ஒலிக்கும் குரலை யுடைய காளையை ஊர்தியாக உடைய ஏகம்பனே ! யாம் எவ்வாறு கூர்மை பொருந்திய சூலப் படையை உடைய உன்னை வணங்குவது?
914. வணக்கம் தலைநின் திருவடிக்
கேசெய்யும் மையல்கொண்டோர்
இணக்கன்றி மற்றோர் இணக்கறி
வோம்அல்லம் வல்லரவின்
குணக்குன்ற வில்லி குளிர்கச்சி
ஏகம்பம் பாடின்அல்லால்
கணக்கன்று மற்றொரு தேவரைப்
பாடும் கவிநலமே.
தெளிவுரை : வணக்கம் தலைநின் திருவடிக்கே செய்யும் பேரன்பு கொண்டவர், நட்பு இல்லாமல் வேறு வழியை அறிவோம் அல்லோம். வல்லரவை நாணாகவும் மேரு மலையை வில்லாகவும் கொண்ட குளிர் கச்சி ஏகம்பனைப் பாடுவதன்றி வேறு ஒரு தேவரைப் பாடும் கவி நலம் பொருட் படுத்தக் கூடியதன்று.
915. நலந்தர நான்ஒன்று சொல்லுவன்
கேண்மின்நல் லீர்கள்அன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம்
கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்
தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று
பூசித்து நின்மின்களே.
தெளிவுரை : நல்லவர்களே ! நன்மை பெற நான் ஒன்று சொல்கின்றேன் கேளுங்கள். அன்பு கலந்து அரனார் கச்சி ஏகம்பம் கண்டு, தீப்பிழம்பைக் கக்கும் உருளைப் படையைக் கொண்டு சலந்தரன் உடம்பை ஒழியும்படி செய்தாய், தட்சனது யாகத்தை அழியும்படி செய்தாய், என்று வழிபாடு செய்யுங்கள் என்றபடி.
916. மின்கள்என் றார்சடை கொண்டல்என்
றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்கள்என் றார்வெளிப் பாடுதம்
பொன்அடி பூண்டுகொண்ட
என்கள்என் றாலும் பிரிந்தறி
யார்கச்சி ஏகம்பத்தான்
தன்கள்என் றார்உல கெல்லாம்
நிலைபெற்ற தன்மைகளே.
தெளிவுரை : சடையை மின்னல்கள் என்றார்கள். கண்டத்தைக் கொண்டல்கள் என்றார்கள். மேனி வண்ணத்தைப் பொன்கள் என்றார்கள். அவருடைய பொன்னடியைச் சிரமேற்கொண்ட அடியார்கள். என்றாலும் பிரிந்தறியார். கச்சி ஏகம்பத்தான் தன்மைகளே உலகெல்லாம் நிலை பெற்றன என்பதாம்.
917. தன்மையிற் குன்றாத் தவத்தோர்
இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி
ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலும் சேயரிக்
கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும்
காதல் விளைத்தனவே.
தெளிவுரை : தலைவியைப் பற்றித் தலைவன் பாங்கனிடம் கூறுதல்.
தன்மையில் குன்றாத தவத்தை உடையவராகிய தேவர்கள் வணங்குகின்ற, வலிமை பொருந்திய மதில்களை உடைய கச்சி ஏகம்பரது வளப்பம் பொருந்திய கயிலை மலையில் தலைவியினது பொன்மயில் போன்ற சாயலும், சேயரிக்கண்ணும் புரிகுழலும் மென்மையில் சாயும் இடையும் எனக்குக் காதலை விளைத்தன.
918. தனமிட் டுமைதழு வத்தழும்
புற்றவர் தம்அடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி
ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு
வினாவியோர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம்
பொழுதும்நம் பூங்கொடியே.
இது தலைவிக்குத் தோழி கூறியது.
தெளிவுரை : உமாதேவியார் நடுங்கி இறைவனைச் சேர்த்துத் தழுவிக் கொள்ள முலைத்தழும்பைப் பெற்ற ஏகம்பரது அடியார்களது மனத்தை விட்டு அகலாத மதில்களை உடைய கச்சி ஏகம்பரது வான் கயிலையில் சினம் விட்டு அகலாத ஆண் யானை இங்கு வந்ததா என்று கேட்டுக்கொண்டு முருக வேளைப் போன்றவர் பகல் முழுவதும் நம் புனத்தைவிட்டு அகலாமல் இருக்கிறார் என்று தலைவிக்குத் தோழி கூறினாள் என்க.
919. பூங்கொத் திருந்தழை யார்பொழில்
கச்சிஏ கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக்
கயிலைஎம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங்
கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந்
தாற்கண்(டு) அடிவருத்தே.
தெளிவுரை : திருமகளே ! பூங்கொத்துக்களையுடைய சோலைகள் சூழ்ந்திருக்கும் கச்சி ஏகம்பரது அழகமைந்த சிகரத்தை உடைய கயிலையில் எம் பொன்போன்ற தலைவியின் இயல்பை ஒத்திருந்தாய். படர்ந்த மலை யருவியில் அவள் ஆடி வந்தால் அவளைக் கண்டு பிறகு செல்வாயாக. இது நாண நாட்டம்.
920. வருத்தம் தருமெய்யும் கையில்
தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கு நடக்கவின்(று)
ஐய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனங்
காக்கும் தொழில்எமக்கே.
பாங்கி எதிர்மொழி கொடுத்தல்.
தெளிவுரை : வருத்தத்தையுடைய உடம்பும், கையில் தழையும் கொண்டு வலிய யானை இங்கு வந்ததா என்று கேட்கும் வண்ணம் மாறுபாடு உடையதாகும். கழல் நினையத் திருத் தந்தருளும்படி திகழ்கின்ற கச்சி ஏகம்பரது சிறப்புடைய கயிலை ஆராய்வு தந்திருப்பதன்றி எங்களுடைய வேலை தினைப் புனத்தைக் காப்பதுதான்.
921. எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்
கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத்
தேவிற்று வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையை
நோக்கங் கவர்வஎன்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும்
பெரியீர் அருளுமினே.
இது கலைமான் வினாதல் என்னும் துறை.
தெளிவுரை : எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் திருவேகம் பத்து இறைவர் எழிற் கயிலையில் உங்களையும் மான் போன்ற பெண்ணையும் இப்புனத்தில் இருத்தி, இங்கு வரும் மைந்தரையும் மானையும் சிந்தையையும் கவர்வதற் கென்றே கண்ணிற்கு இடும் மையையும் மலரைப் போல விரிந்து பரந்த கண்களையும் பெரியீர் அருளுமின்.
922. அருளைத் தருகம்பர் அம்பொற்
கயிலையுள் எம்மையரம்
பிருளைக் கரிமறிக் கும்மிவர்
ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்
போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ
விளையுண்(டு)இவ் வையகத்தே.
தெளிவுரை : அருளைத் தருகின்ற திருவேகம்பத்து இறைவர் அழகிய பொன்போன்ற கயிலையுள் எம்மையர் யானையை நோக்கி வலிகொண்டு அம்புவிட, வெகுண்ட கலைமான் அந்த அம்போடு போயிற்று. வில்லின் வன்மை போன்ற மயக்கத்தைத் தரும் சொல்லிக்கு இவ் வையகத்துள் விலை எங்குள்ளது?
923. வையார் மழுப்படை ஏகம்பர்
ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனம்
கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்தவெம்
பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று
வந்து பரிணமித்தே.
தெளிவுரை : இது தோழி கூற்று. கூர்மை பொருந்திய மழுப்படையை உடைய ஏகம்பர் கோயில் கொண்டிருக்கும் ஈங்கோய் மலைப் புனத்தில் அழகு பொருந்தி வருகின்ற மான், பன்றி, யானை இவைகளைத் தொடர்ந்து வேட்டையாடும் பொய்யான தலைவர் மனத்தின்கண் உள்ளது யாதெனில் பூங்கொடி போன்றவளது கொங்கையானது தோன்றி பாரத்தைத் தாங்காமல் இடை இல்லையாயிற்று என்பதாம்.
924. பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த
யானை நுதல்பகுந்திட்(டு)
உருமொத்த திண்குரல் சீயம்
திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேல் படைக்கம்பர்
பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை
யால்வெற்ப சார்வரிதே.
தெளிவுரை : தோழி இரவு வரல் விலக்கல் : குறிஞ்சி நிலத் தலைவனே !
பெரிய முத்துக்கள் உதிர்த்திடும் சீர்மதம் மிக்க யானையின் நெற்றியைப் பிளந்து இடிபோன்ற குரலையுடைய சிங்கம் திரிகின்ற மாறுபாடான பாலை வழியில் ஓங்கிய கூரிய முத்தலை வேல் ஏந்திய ஏகம்பர் பூங்கயிலைப் புனத்துள், பல்வரிசை சிறந்த தலைவியின் விருப்பத்தால் இச்சுரத்திடை வரவேண்டாம். அது அடைதற்கு அரியது.
925. அரிதின் திருக்கண் இடநிரம்
பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக்(கு) அற்சித்த
கண்ணுக்(கு) அருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால்
அழிந்த கயிலையல்லிங்(கு)
அரிதென்(று) இருப்ப(து)எம் பால்வெற்ப
எம்ஐயர்க்(கு) அஞ்சுதுமே.
தெளிவுரை : இது தோழி கூற்று. மலை நாட்டுத் தலைவ ! ஆயிரம் மலர்களில் ஒன்று குறைய, திருமால் தன் கண்ணை இடந்து அர்ச்சிக்க அருள் பாலித்த கம்பர், பகைவனாக வந்த இராவணனது மயக்கம் தீர கால் விரலால் அழித்த கயிலையில் இரவு நேரத்தில் இங்கு இருப்பது ஆபத்தானது. உங்களுக்கா நாங்கள் அஞ்சுகிறோம் என்பதாம்.
926. அஞ்சரத் தான்பொடி யாய்விழத்
தீவிழித்(து) அன்புசெய்வோர்
நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி
ஏகம்பர் நீள்கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழநுங்
கொம்புய்யக் கும்பமூழ்கும்
வெஞ்சரத் தாரன வோவல்ல
வோஇவ் வியன்முரசே.
மணமுரசின் சிறப்புக் கூறயவாறு.
தெளிவுரை : மன்மதன் எரிந்து சாம்பலாக நெற்றிக்கண்ணை விழித்து அன்பு செய்தவர். மெய்யடியார்கள் செய்யும் குற்றம் குறைகளை உயர்வாகவே கருதும் கச்சி ஏகம்பரது கயிலையின்கண் யானைகள் சஞ்சரிக்கும் தாழ்வரை வீழ, உங்களுடைய கொம்புய்யக் கும்ப மூழ்கும் வெஞ்சரத்தாரனவோ இந்தப் பெரிய மணமுரசு.
927. சேய்தந் தகைமை உமைகண
வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன்
கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச
லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட(து)
ஓசைப் பகடுவந்தே.
தெளிவுரை : உயர்ந்த தகைமையுடைய உமாதேவியின் கணவன் திரு ஏகம்பத்தான், தாய் தந்தையாய் உயிர் காப்போன். அவனுடைய கயிலை மலையில் இருள் நிறைந்த நேரத்தில் மூங்கில் போன்ற தோள்களை யுடைய தலைவியின் ஊசலொடு யானை வேங்கை மரத்தைக் குத்தியதால் ஓசை உண்டாயிற்று.
928. வந்தும் மணம்பெறின் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர்மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.
இது தலைவன் கூற்று.
தெளிவுரை : திருமகளைப் போன்றவர்களே ! உம்மை மணம் பெறின், நிலைபெற்ற ஏகம்பருடைய முந்தும் அருவிக் கயிலை மலையில் தேன் எடுத்தும், மலர் கொய்தும் தினைப் புனத்தில் மேயும் கிளிகளை விரட்டியும், புள்ளிகளை உடைய யானையை ஓட்டியும் இச்சாரலில் இந்த ஏவல்களை யெல்லாம் செய்வேன்.
929. திரியப் புரமெய்த ஏகம்ப
னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத்
திடுதர ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும்
அடைந்தோம் விரைவிரைந்து
பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற
தென்னங்குப் பேசுமினே.
தெளிவுரை : திரிபுரங்களை எரித்த ஏகம்பனார் திகழும் கயிலை மலைக் குறவர் பருவத்தில் முத்துக்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இறைவனது அருளையும் பெற்றோம். விரைந்து செய்யும் இப்பணியில் நீர் பெற்றது என்ன சொல்லுங்கள்?
930. பேசுக யாவரு மைக்கணி
யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில்
ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பர்
பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதும்இல் லாக்குலை
வேங்கைப் பெயர்நும்மையே.
தெளிவுரை : பேசுக, யாவரும். வேங்கை மரம் என்று பித்தர் எங்கும் கூறுவர். திருநீறு பூசிய ஏகம்பரது பொற் கயிலையில் நும்மைப் பிரியும் பரிசிலர் பொன் பெற்றுச் செல்வர். யாதுமில்லாக் குலை வேங்கைப் பெயர் எதற்கு?
931. பெயரா நலத்தொழில் ஏகம்ப
னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி
காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமும்இங்(கு)
ஓடித் தொழுதுசென்ற(து)
அயரா துரையும்வெற் பற்(கு)அடி
யேற்கும் விடைதமினே.
இது தலைவி கூற்று. இது கிளிகளைப் பார்த்துக் கூறியது.
தெளிவுரை : பெயரா நலத்தொழில் ஏகம்பனார் பிறைதோய்கின்ற கயிலையை விட்டு நீங்காமல் இருக்கின்ற கிளிகளே ! நாங்கள் பிரிந்து செல்வதால் இந்தத் தினைப்புனம் துயரால் வருந்தியது. நீங்கள் மறவாமல் வெற்பற்கு (மலைநாட்டுத் தலைவருக்கு) சொல்லுங்கள். எங்களுக்கும் விடை தாருங்கள்.
932. தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொ(டு)இன்
பம்தரும் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.
தலைவன் வறும் புனம் கண்டு வருந்துதல்.
தெளிவுரை : நம்மைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுபவர். நாம் வணங்கும் அழகு செய்யும் மூன்று கண்களை உடைய ஏகம்பர் நெருக்கமான கயிலை மலையில் அம்மைக் கருங் கண்ணியோடு இன்பம் தரும் குளிர்ந்த தினைப் புனமே என்னைக் கவலையில் ஆழ்த்திவிட்டு வல்லிக்கொடி போன்றவள் சென்றுவிட்டாள்.
933. இயங்கும் திரிபுரம் எய்தஏ
கம்பர் எழிற்கயிலைத்
தயங்கு மலர்ப்பொழில் காள்தையல்
ஆடரு வித்தடங்காள்
முயங்கு மணியறை காள்மொழி
யீர்ஒழி யாதுநெஞ்சம்
மயங்கும் பரிசுபொன் னார்சென்ற
சூழல் வகுத்தெமக்கே.
தெளிவுரை : பறந்து செல்லும் மூன்று கோட்டைகளை அழித்த ஏகம்பரது எழிற் கயிலையில் விளங்கும் மலர்ச் சோலைகளே ! தலைவி நீராடும் அருவிகளே ! நெருங்குகின்ற பளிங்குப் பாறைகளே ! இடைவிடாமல் நெஞ்சம் மயங்கும் பரிசு பொன்னார் சென்ற சூழலை வகுத்தெமக்கு மொழியுங்கள்.
இது தலைவன் கூற்று.
934. வகுப்பார் இவர்போல் மணத்துக்கு
நாள்மணந் தன்னொடின்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம்
இருவரை விள்ளக்கள்வாய்
நெகுப்பால் மலர்கொண்டு நின்றார்
கிடக்க நிலாவுகம்பர்
தொகுப்பால் மணிசிந் தருவிக்
கயிலைஇச் சூழ்புனத்தே.
தெளிவுரை : தோழி வரையும் நாள் உணர்த்தல். இந்த வேங்கை மரம் பூத்தது. இது மணம் செய்யத்தக்க நாள் என்பது குறிப்பு. இவர் என்றது வேங்கையை. திருவேகம்பர் தொகுப்பால் மணியைச் சிந்துகின்ற அருவிகளை உடைய கயிலைச் சூழ்ந்த இத் தினைப் புனத்தில் வகுத்துக் கூறுபவர்போல இந்த வேங்கை மரம் மணத்துக்கு நாள் குறிப்பதைப் போல, தீப்போன்ற தன் மலர் கொண்டு பூத்திருக்கிறது. இனி தலைவி தலைவன் இவர்கள் மனம் ஒன்றுபட்டு இன்பம் நுகருவார்கள் என்பதாம்.
935. புனங்குழை யாதென்று மென்தினை
கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய
நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்களி
பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர்
இக்கயி லாயத்துள்ளே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. தினை கொய்தவுடன் தலைவியை இற் செறித்துவிட்டார்கள். தொண்டர்கள் அன்பின் மிகுதியால் தோத்திரப் பாடல்களைப் பாடும் ஏகம்பரது இக்கயிலாயத்துள்ளே புனங் குழையாதென்று மென் தினையைக் கொய்தவுடன் சென்றுவிட்ட தலைவியை இல்லிலேயே இருக்குமாறு செய்து விட்டார்கள். இதனால் யானுற்ற துன்பம் கொஞ்சமோ என்று தலைவன் வருந்தினான் என்க.
936. உள்ளம் பெரியரல் லாச்சிறு
மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்
தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு
ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம்(பு) எரிகொண் டமைத்தார்
அடியவர் சார்வதன்றே.
தெளிவுரை : கங்கை என்னும் பெரிய நீர்ப்பெருக்கினைச் சடையில் தாங்கிய ஏகம்பர் வானத்தில் அமைந்திருந்த மூன்று கோட்டைகளை ஓர் அம்பினால் எரித்துத் தன் அடியவர்களுக்கு வாழ்வளித்தார். விசாலமான மனம் படைத்திராத சிறு மானிடர்களிடம் உள்ள பெருஞ்செல்வம் கள்ளமுடைய சிறு மனத்தார்க்கே பயன்படும் என்பதாம்.
937. அன்றும் பகையடர்க் கும்பரி
மாவும் மதமருவிக்
குன்றும் பதாதியும் தேரும்
குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினும் கம்பர்நன்
னீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும்
பொலியா இருநிலத்தே.
தெளிவுரை : இந்தப் பெரிய உலகத்தில் யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படையோடுகூடிக் குடை நிழற் கீழ் இருந்து ஆட்சி செய்த பெருமன்னரும் திருஏகம்பரது திருநீறு அவர்கள் நெற்றியில் இல்லையேல் அவர்களுடைய அரசும் பேரிகையும் பொலிந்து இரா, பகைவர்களும் வந்து வருத்துவார்கள்.
938. நிலத்திமை யோரில் தலையாய்ப்
பிறந்து மறையொ(டு)அங்கம்
வலத்திமை போதும் பிரியா
எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள்
ஏகம்பம் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர்
தம்மின் நடுப்படையே.
தெளிவுரை : அந்தணர்கள் மேற்சாதியில் பிறந்து வேதங்களை முறையாக ஓதி, தீயை இடைவிடாது வளர்த்தாலும் உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்ட காஞ்சி புரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஏகாம்பர நாதரைக் கூடித் தொழாதவர்கள் வேடுவர்களாகவே கருதப் படுவார்கள்.
939. படையால் உயிர்கொன்று நின்று
பசுக்களைப் போலச்செல்லும்
நடையால் அறிவின்றி நட்பிடைப்
பொய்த்துக் குலங்களினும்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள்
ஏகம்பத்(து) எங்களையாள்
உடையான் கழற்(கு)அன்ப ரேல்அவர்
யாவர்க்கும் உத்தமரே.
தெளிவுரை : ஆயுதங்களால் பிற உயிர்களைக் கொன்று, பசுக்களைப் போலச் சாதுவாக நடித்து, அறிவில்லாமல் நண்பர்கள் இடையே பொய்பேசி, கீழான சாதியில் கடைப்பட்டுப் பிறந்தாலும் காஞ்சி புரத்தில் ஏகம்பத்தில் எங்களை ஆட்கொண்ட பெருமானது திருவடிகளுக்கு அன்பராகில் அவர்கள் எல்லாரையும்விட உத்தமர்களே. (இதுபோல் திருநாவுக்கரசரும் பாடியுள்ளார்.)
940. உத்துங்க யானை உரியார்
விரலால் அரக்கன்சென்னி
பத்தும்கை யான இருபதும்
சோர்தர வைத்திலயம்
ஒத்துங்கை யாலவன் பாடக்
கயிலையின் ஊடுகைவாள்
எத்துங்கை யான்என்(று) உகந்தளித்
தார்கச்சி ஏகம்பரே.
தெளிவுரை : பெரிய யானையின் தோலைப் போர்த்தியுள்ள கயிலைநாதர் தன் கால்விரலால் இராவணனது தலைகள் பத்தும், கைகள் இருபதும் சோர்தர, வைத்து கைத் தாளத்தோடு ஒத்துப் பாட அவனுக்குக் கைவாளை உகந்தளித்தவர் கச்சி ஏகம்பரே.
941. அம்பரம் காலனல் நீர்நிலம்
திங்கள் அருக்கன்அணு
அம்பரம் கொள்வதோர் வேழத்
துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத்
தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யார்அறி
வார்கட்கு நற்றுணையே.
தெளிவுரை : ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண், சந்திரன், சூரியன், ஆத்மா என்னும் அஷ்டமூர்த்தியாய் உள்ளவனும் யானைத் தோலைப் போர்த்தவனுமாகிய எம் தலைவன் கச்சியுள் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பரநாதரைச் சரணாக அடைபவர்களுக்கு அவன் நல்ல துணையாவான்.
942. துணைத்தா மரையடி யும்பவ
ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமும் கண்டத்து
நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யும்திரு
முக்கணும் பெண்ணொர்பக்கத்(து)
அணைத்தார் எழிற்கம்பர் எங்கள்
பிரானார்க்(கு) அழகியவே.
தெளிவுரை : இரண்டு பாதங்களும் தாமரை மலர்கள், பவளம் திரண்டது போன்ற தொடைகள். பணைத்த தோள்களும் மார்பும். கழுத்தில் நீலமும். வானத்தில் மின்னலை இணைத்தது போன்ற சடையும், மூன்று அழகிய கண்களும், இடப்பாகத்தில் உமையும் பொருந்திய அழகிய உருவம் உடையவர் ஏகம்பர். எங்கள் பிரானுக்கு இவை அழகு செய்கின்றன.
943. அழகறி விற்பெரி தாகிய
ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோர்தமைப்
பற்றலர் பற்றும்அன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி
யார்அறி யாமைதெய்வம்
கிழகெறி யப்பட்(டு) உலந்தார்
உலகிற் கிடந்தனரே.
தெளிவுரை : அழகிலும் அறிவிலும் பெரிய ஏகாம்பரநாதர், தலைவர். கொற்றம் பழகு அறிவிற் பெரியோர் தமைப் பற்றாதவர் பற்றும் அன்பின் குழகறி வேற்பினுள் ஒன்றறியாதவர் அறியாமை தெய்வம் கீழே எறியப்பட்டு அழிந்தனர். உலகில் கேட்பாரற்றுக் கிடந்தனர். ஏகாம்பர நாதரை வணங்காதவர் சீரழிவர் என்றபடி.
944. கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற
பாம்பொரு பால்மதியம்
தொடக்குண்(டு) இலங்கும் மலங்கும்
திரைக்கங்கை சூடுங்கொன்றை
வடக்குண்டு கட்டத் தலைமாலை
வாளால் மலைந்தவெம்போர்
கடக்கும் விடைத்திரு ஏகம்பர்
கற்றைச் சடைமுடியே.
தெளிவுரை : சீறுகின்ற பாம்பு ஒருபால் கிடக்கும். வெள்ளைச் சந்திரன் மங்கலமாக விளங்கும். திரைகளையுடைய கங்கை ததும்பும். கொன்றை மாலை துவண்டு தலை மாலையுடைய வாளால் மலைந்த வெம்போரில் வெற்றி பெற்ற, விடையூறும் ஏகம்பர் கற்றைச் சடை முடி இந்த நிலையை அடைந்தென்க.
945. கற்றைப் பவளச் சடைவலம்
பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின்கொழுந்
தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற்
கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ
காகித் திகழ்தருமே.
தெளிவுரை : கற்றையாக, பவள நிறம் பொருந்திய சடையின் வலப்பக்கத்தில் உள்ளது பூக் கமழ்கின்ற கொன்றை மாலை. (முற்றாத) பிறைச் சந்திரனாகிய கொழுந்தே ! ஏகம்பரின் இடப்பாகத்திலுள்ள உமாதேவியின் மொய் குழலில் செங்கழுநீர் மலர் பொலிந்து விளங்குகிறது.
946. தரும்அருள் தன்மை வலப்பால்
கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக
ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்இடப் பாலது
நீலம் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந்(து)
ஓங்கும் மலர்க்குழலே.
தெளிவுரை : தருகின்ற அருள் தன்மை யுடையது வலப் பக்கத்தில் உள்ள தாமரை மலர் போன்ற கண், நெற்றியின்மேல் உள்ளது திருமலர்க்கண். பிளவின் திகழும் தீயினையுடைய செல்வக் கம்பரின் இடப்பாலுள்ளது கருமலர்க்கண். நீலம் கனிமதத்து வருநுதல் பொட்டுடன் மலர்க்குழல் உயர்ந்து ஓங்கும். இடப்பாகம் உமையினுடையது. ஆதலின் பெண் தன்மையோடு உள்ளது.
947. மலர்ந்த படத்துச்சி ஐந்தினும்
செஞ்சுடர் மாமணிவிட்(டு)
அலர்ந்த மணிக்குண் டலம்வலக்
காதினில் ஆடிவரும்
நலந்திரு நீள்வயி ரம்வெயிற்
பாய நகுமணிகள்
கலந்தசெம் பொன்மக ரக்குழை
ஏகம்பர் காதிடமே.
தெளிவுரை : வலப்பாகம் ஆணாகவும் இடப்பாகம் பெண்ணாகவும் உள்ள கோலம் இதுவாகும். மலர்ந்த பாம்புப் படத்தின் உச்சி ஐந்திலும் செஞ்சுடர் மாமணி விட்டு அலர்ந்த மணிக் குண்டலம் வலக்காதில் உள்ளது. ஆடி வரும் நலந்திரு நீள்வயிரம் ஒளிவீச நகுமணிகள் கலந்த செம்பொன் மகரக் குழை ஏகம்பரின் இடப்பாகத்தில் உள்ளது.
948. காதலைக் கும்வலத் தோள்பவ
ளக்குன்றம் அங்குயர்ந்து
போதலைக் கும்பனிப் பொன்மலை
நீற்றின் பொலியகலம்
தாதலைக் கும்குழல் சேர்பணைத்
தோள்நறுஞ் சாந்தணிந்து
சூதலைக் கும்முலை மார்பிடம்
ஏகம்பர் சுந்தரமே.
தெளிவுரை : காது அலைக்கும் வலத்தோள் பவளக் குன்று. அங்கு உயர்ந்து போது அலைக்கும் பனி படர்ந்த பொன்மலை (மேருமலை). திருநீறு மார்பில் விளங்கித் தோன்றும். இடப்பக்கத்தில் தாது அலைக்கும் கூந்தல் சேர்ந்த பணைத்தோள். நறும் சாந்தணிந்து சூதாடும் கருவி போன்ற முலை மார்பிடம் ஏகம்பரது அழகிய திருமேனி என்பதாம்.
949. தரம்பொற் பழியும் உலகட்டி
எய்த்துத் தரந்தளரா
உரம்பொற் புடைய திருவயி
றாம்வலம் உம்பர்மும்மைப்
புரம்பொற் பழித்தகம் பர்க்குத்
தரத்திடு பூண்முலையும்
நிரம்பப் பொறாது தளரிள
வஞ்சியும் நேர்வுடைத்தே.
அர்த்தநாரீஸ்வர வருணனை தொடர்கிறது.
தெளிவுரை : வலப்பக்கம்: தரம் பொற்ப அழியும் உலகு அட்டி எய்த்து தரம் தளரா உரம் பொற்புடைய திருவயிறு. இது திரிபுரம் எரித்த கம்பர்க்கு உரியதாகும். இடப்பக்கம்: தரத்திடும் பூண்முலையும் நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்து.
950. உடைப்புலி ஆடையின் மேலுர
கக்கச்சு வீக்குமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும்
அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த
அரசிலை தூநுண்துகில்
அடம்பொலி ஏறுடை ஏகம்பம்
மேய அடிகளுக்கே.
தெளிவுரை : புலித்தோல் இடை ஆடை. மேலேயுள்ளது பாம்புக் கச்சு. தருப்பையால் அமைந்த அரை ஞாண். அதில் கோவணம் தோன்றும். இது வலப்பக்கம். இடப்பக்கத்தில் அல்குல், தொடக்குறுகாஞ்சி தொடுத்த அரசிலை தூநுண் துகில்.  கொல்லேற்றுப் பாகராகிய ஏகம்பம் மேய அடிகளின் திருவுருவமாகும்.
951. அடிவலப் பாலது செந்தா
மரையொத்(து) அதிர்கழல்சூழ்ந்(து)
இடிகுரல் கூற்றின் எருத்திற
வைத்த(து) இளந்தளிரின்
அடியிடப் பாலது பஞ்சுற
அஞ்சும் சிலம்பணிந்த
வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம்
மேய வரதருக்கே.
தெளிவுரை : வலப்பாகத்தது: பாதம் செந்தாமரை போன்றது. அதிர் கழல் சூழ்ந்து இடிகுரல் கூற்றின் எருத்து இறவைத்தது. இடப்பாகத்தது: இளந்தளிரின் அடி பஞ்சுற அஞ்சும் சிலம்பு அணிந்தது. வடிவுடைத்தார் கச்சி ஏகம்பத்தில் மேவிய வரதருக்கு என்பதாம்.
952. தருக்கவற் றான்மிக்க முப்புரம்
எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள்
விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர்
அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றால்இட்(டு) அருளும்
கடகத் திருக்கரமே.
தெளிவுரை : கர்வம் கொண்ட திரிபுராதிகளின் கோட்டையை எரித்து அழித்தவன். பிரமன் தலையை அரிந்தவள். நெற்கள் என்றும் பருக்கவற்றாம் கச்சி ஏகம்பர்; தலைவர்; தம் பாம்புகளின் திருக்கவற்றால் இட்டு அருளும் கடகத் திருக்கரமே.
இறைவனின் திருக்கரதத்தின் பெருமை கூறியவாறு.
953. கரத்தத் தமருகத்(து) ஓசை
கடுத்தண்ட மீபிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட்(டு)
அவனி தலம்நெரியத்
தரத்தத் திசைகளுக்(கு) அப்புறம்
போர்ப்பச் சடைவிரித்து
வரத்தைத் தருகம்பர் ஆடுவர்
எல்லியும் மாநடமே.
ஊழிக் காலத்துப் பெருங் கூத்தை வியந்தவாறு:
தெளிவுரை : கையிலுள்ள உடுக்கையின் ஓசையைக் கேட்டு அண்டங்கள் எல்லாம் பிளவு படவும். அரத்தத்த பாதம் நெரித்ததனால் உலகம் நெரியவும், தரத்தத்த திசைகளுக்கு அப்புறம் மூடிக் கொள்ளவும் சடைவிரித்து வரத்தைத்தரும் ஏகாம்பர நாதர் இரவிலும் பெருங்கூத்தை ஆடுவார்.
954. நடனம் பிரான்உகந்(து) உய்யக்கொண்
டானென்று நான்மறையோர்
உடன்வந்து மூவா யிரவர்
இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
கடனன்றி மற்றறி யாத்தில்லை
அம்பலம் காளத்தியாம்
இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம்
மேயாற்(கு) இனியனவே.
தெளிவுரை : இறைவன் இந்த நடனத்தை விரும்பிச் செய்தான் என்று நான்மறையோர் உடன் வந்து தில்லை மூவாயிரவர் வணங்கி, நிறைந்த உண்மைக் கடன் அன்றி மற்று அறியாத தில்லை அம்பலம், காளத்தி முதலியனவும் கச்சி ஏகம்பம் விரும்பும் இடமாகும் என்று அறிந்தனர்.
955. இனியவர் இன்னார் அவரையொப்
பார்பிறர் என்னஒண்ணாத்
தனியவர் தையல் உடனாம்
உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக்
கண்ணவர் சண்டியன்புக்(கு)
இனியவர் காய்மழு வாட்படை
யார்கச்சி ஏகம்பரே.
தெளிவுரை : வேண்டியவர் என்றும், வேண்டாதவர் என்றும் அவருக்குச் சமமானவர் என்றும், பிறர் என்றும் என்ன ஒண்ணாத் தனியவர் அவர். உமாதேவியாரோடு இருப்பவர். காமம் வெகுளி மயக்கங்களை முனிந்தவர். திருநெறி ஒழுக்கத்தால் முன்னிற்பவர் எனினுமாம், காளை வாகனர். மூன்று கண்களை உடையவர்; சண்டிகேசுவரர் அன்புக்கு இனியவர்; கொல்லும் மழுவாட் படையினர். அவர் கச்சி ஏகம்பர்.
956. பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனையுள்ள(து) எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாஇரவில்
அரவித் தனையும்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.
தெளிவுரை : துதித்து, தன்னை நினைக்குமாறு கச்சி ஏகம்பர் செய்கின்ற மையல் வரவித்தனை உள்ளது எங்கு அறிந்தேன். முன் அவர் மகனார் புரவித் தனையடிக்கக் கொடிதாய் விடியா இரவில் அரவு இத்தனையும் கொண்டார். மடவார் முன்றில் ஆட்டிடவே. தாருகா வனத்து முனிவர்கள் இறைவனை மதியாமல் வேத நெறியைக் கடைப்பிடித்தமையால் சிவபெருமான் பிட்சாடனராய் அங்குச் சென்ற செய்தி சொல்லப்படுகிறது.
957. இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ்
சென்னி நகுதலைகண்(டு)
இடஅஞ் சுவர்மட வார்இரி
கின்றனர் ஏகம்பத்தீர்
படம்அஞ்சு வாயது நாகம்
இரைக்கும் அதனுக்குமுற்
படஅஞ் சுவர்எங்ங னேபலி
வந்திடும் பாங்குகளே.
தெளிவுரை : தாருகாவனத்துக்கு இவர் பிச்சை ஏற்கச் சென்றதைப் பற்றிக் கூறுகின்றார். நீ ஏறிச் சென்ற காளை மாடு விரைந்து பாயும்; உன் கையிலுள்ள பிச்சைப் பாத்திரமாகிய மண்டையோடு சிரிப்பதைப் பார்த்து முனி பத்தினிகள் பிச்சையிட அஞ்சுவர். விரைந்து ஓடி விடுவர். ஏகம்பரே ! நீர் அணிந்துள்ள பாம்பின் படம் பயத்தை உண்டாக்கும். பாம்பு சீரும். அதன் அருகில் வர அஞ்சுவர். இப்படியிருக்க உனக்குப் பிச்சை எப்படிக் கிடைக்கும்?
958. பாங்குடை கோள்புலி யின்அதள்
கொண்டீர்நும் பாரிடங்கள்
தாங்குடை கொள்ளப் பலிகொள்ள
வந்தீர் தடங்கமலம்
பூங்குடை கொள்ளப் புனற்கச்சி
ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள
வந்தீர் இடைக்குமின்றே.
தெளிவுரை : பாங்காக, கொல்லும் புலியின் தோலை ஆடையாகக் கொண்டீர். உம்முடைய பூதங்கள் குடை பிடிக்கப் பிச்சை ஏற்க வந்தீர். தடம் கமலம் பூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பர் கோயில் கொண்டீர். இவ்விடம் முனி பத்தினிகளின் ஆடைகளைக் கவர வந்தீர். இது கைகூடுமோ?
959. இடைக்குமின் தோற்கும் இணைமுலை
யாய்முதி யார்கள்தஞ்சொல்
கடைக்கண்நன் றாம்கச்சி ஏகம்பர்
ஐயங் கொளக்கடவும்
விடைக்குமுன் தோற்றநில் லேநின்
றினியிந்த மொய்குழலார்
கிடைக்குமுன் தோற்றநஞ்(சு) அங்கிது
வோதங் கிறித்துவமே.
தெளிவுரை : இடைக்கு மின் தோற்கும். (தோன்றி மறையும் தன்மையது, மிகச் சிறுத்தது என்றபடி). இணையாகவுள்ள முலைகளை யுடையாய். முதியோர்களுடைய சொல் அருள் நிறைந்தது. கச்சி ஏகம்பர் பிச்சை யேற்க ஏறிச் செல்லும் காளைக்குத் தோன்றும்படி முன்னால் நிற்பாயாக. நின்று இனி இந்த மொய்குழலார் கிடைக்குமுன் தோற்ற நஞ்சு அங்கு இதுவோ உம் தந்திரமோ அறியேன் என்றபடி.
960. கிறிபல பேசிச் சதிரால்
நடந்து விடங்குபடக்
குறிபல பாடிக் குளிர்கச்சி
ஏகம்பர் ஐயங்கொள்ள
நெறிபல வார்குழ லார்மெலி
வுற்ற நெடுந்தெருவில்
செறிபல வெள்வளை போயின
தாயர்கள் தேடுவரே.
தெளிவுரை : பல பொய்களைப் பேசி, நடனமாடியபடி நடந்து, காமக் குறிப்போடு பல பாடல்களைப் பாடி குளிர்வித்த கச்சி ஏகம்பர் பிச்சை யேற்க வழிகள் பல உள்ளன. வார்குழலார் மெலிவுற்ற பெரிய தெருவில் செறிந்த பலவாகிய வெள் வளைகள் கீழே விழுந்து விட்டன. தாய்மார்கள் தேடுவார்கள். (இது தாருகா வனத்தில் நடந்த நிகழ்ச்சி).
961. தேடுற் றிலகள்ள நோக்கம்
தெரிந்தில சொற்கள்முடி
கூடுற் றிலகுழல் கொங்கை
பொடித்தில கூறுமிவள்
மாடுற் றிலமணி யின்மட
அல்குலும் மற்றிவள்பால்
நாடுற் றிலஎழில் ஏகம்ப
னார்க்(கு)உள்ளம் நல்கிடத்தே.
தெளிவுரை : தோழி தலைவியின் இளமைத் தன்மையைக் கூறுதல். கள்ளப் பார்வை பார்ப்பதற்குப் பழகிக் கொள்ளவில்லை. சொற்கள் தெரிந்தில. கூந்தல் முடி இன்னும் கூடிற்றிலை. கொங்கைகள் இன்னும் தோன்றவில்லை. மணியின் மட அல்குலும் மாடுற்றில. எழில் இவள்பால் இன்னும் நாடுற்றில. ஏகம்பர்க்கு உள்ளம் நல்கிட இது சமயம் அன்று என்றபடி.
962. நல்கும் புகழ்க்கட வூர்தன்
மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங்
கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர்(து)
என்றும் மலைமகள்தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம்
மேவிய பொன்மலையே.
தெளிவுரை : புகழ் நல்கும் திருக்கடவூரில் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்த கூற்றுவனை அழித்த அமிர்த கடேசர் குளிர்ந்த திரைகளை வீசும் திருமறைக் காட்டில் (வேதாரண்யத்தில்) எழுந்தருளியிருக்கும் இறைவன் பார்வதி தேவியாரைத் தழுவும் பொழில்கள் சூழ்ந்த கச்சியில் ஏகம்பமாக மேவியுள்ளார். அவர் ஒப்பற்ற பொன் மலை.
கச்சியைப் புகழும்போது மற்ற தலங்களையும் சேர்த்துக் கொள்கின்றார். இது கவி மரபு.
963. மலையத்(து) அகத்தியன் அர்ச்சிக்க
மன்னி வடகயிலை
நிலையத்(து) அமரர் தொழஇருந்
தான்நெடு மேருஎன்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு
ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு
ஐயாற்(று) அருமணியே.
தெளிவுரை : பார்வதி திருக்கல்யாண நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. பார்வதி தேவியின் கல்யாணத்தின்போது வடபால் தாழ்ந்தமையால் அகத்தியர் தெற்கே அனுப்பப்பட்டார். திருக்கல்யாணக் காட்சிகளை அவரும் கண்டு களிக்கின்றார் என்க. பொதிய மலையில் அகத்தியர் அருச்சனை செய்ய, பொருந்தி வடகயிலையில் அமரர் தொழ இருந்த பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டவன் பொன் மதில்சூழ் திருஏகம்பத்தான் திகழ்வதை, காவிரி சூழ்ந்த திருவையாற்றில் கோயில் கொண்டிருந்ததைக் கண்டார் என்க.
964. மணியார் அருவித் தடம்இம
யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த
சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி
ஓப்புமின் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்குமே
கம்பர் பருப்பதமே.
தெளிவுரை : இமயம், கைலாசத்தைத் தன்பால் உடையது. கொல்லி மலை அறைப்பள்ளி என்னும் தலத்தை உடையது. அழகிய அருவிகளை உடையது இமயம். மேற்குத் திக்கில் உள்ள கொல்லி மலை திணியார் அருவிகளையுடையது. சிராமலை மலைநெல் உடையது. அருவிகளையுடைய அப்புனங்களில் கிளிகளை ஓட்டும் மின் சாரல் விந்திய மலை ஆகியவற்றைப் பணிபவர்களின் தீராத வினைகளைத் தீர்ப்பது ஏகம்பரின் மலையே. இறைவன் கோயில் கொண்டிருக்கும் மலைத் தலங்களைக் கூறியவாறு.
965. பருப்பதம் கார்தவழ் மந்தரம்
இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங்
கும்பரங் குன்றம்வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும்
மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காஉகந் தான்கச்சி
ஏகம்பத்(து) எம்இறையே.
தெளிவுரை : இறைவன் கோயில் கொண்டிருக்கும் மலைகளைக் கூறுகின்றார். பருப்பதம் என்பது ஸ்ரீசைலம் (மல்லிகார்ச்சுனம்) அர்ச்சுனம்-மருதமரம். மேகங்கள் வந்து படிகின்ற மந்தர மலை, இந்திர நீல மலை. வெள்ளைத் தந்தங்களையுடைய கரிய யானைகள் இயங்குகின்ற திருப்பரங்குன்றம். நெருப்பது அங்கு ஆகுதி நாறும் மகேந்திரமலை, இந்த மலைகளில் விரும்பிக் கோயில் கொண்டிருப்பவர் கச்சி ஏகம்பத்து எம் இறையாகும். வடமருது, இடமருது, தென்மருது என்ற மூன்றும் சிவத்தலங்கள்.
966. இறைத்தார் புரம்எய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்ற மன்னற்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றம்என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே.
தெளிவுரை : முதன்மை கொண்ட கொடிப் படையை யுடைய முப்புரங்களை எரித்த வில்லியாகிய எம்பெருமான் இமவான் மகளாகிய பார்வதி தேவியாரோடு கருங்குன்றம் என்னும் அறையணி நல்லூர் வெண்குன்றம் செங்குன்றம் மன்னற்குன்றம் நிறைத்தார் நெடுங்குன்றம் நீள் திருக்கழுக்குன்றம் என் தீவினைகளைக் குறைத்த மதுகுன்றம் (விருத்தாசலம்) ஆகிய மலைகள் ஏகம்பர் கோயில் கொண்டிருக்கும் மலைகள் என்று கூறுங்கள்.
967. கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த்
தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத்
தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன்
ஆரூர் இடைமருதென்(று)
ஏறுமின் நீரெம் பிரான்கச்சி
ஏகம்பம் முன்நினைந்தே.
தெளிவுரை : எம்பிரானாகிய கச்சி ஏகம்பனை முன் நினைந்து தொண்டர்களே அடியில்கண்ட தலங்களைத் துதிப்பீர்களாக. அவையாவன: குற்றாலம், நெய்த்தானம், திருத்துருத்தி. இத்தலங்களைத் தெளிந்து வழிபடுங்கள். வேள்விக்குடி திருத்தோணிபுரம் (சீகாழி) திருப்பழனம், திருவாரூர், திருவிடைமருதூர் என்று ஓதுங்கள் என்பதாம்.
968. நினைவார்க்(கு) அருளும் பிரான்திருச்
சோற்றுத் துறைநியமம்
புனைவார் சடையோன் புகலூர்
புறம்பயம் பூவணம்நீர்ப்
பனைவார் பொழில்திரு வெண்காடு
பாச்சில் அதிகையென்று
நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி
ஏகம்பம் நண்ணுமினே.
தெளிவுரை : இறைவன் கோயில் கொண்டிருக்கும் தலங்களை நினைவு கூர்கிறார். நினைவார்க்கு அருளும் சிவ பெருமான் திருச்சோற்றுத்துறை, நியமம், நீண்ட சடையை யுடையோன் மேவியுள்ள திருப்புகலூர், திருப்புறம்பயம், திருப்பூவணம், நீர்ப்புனை வார் பொழில் திருவெண்காடு, திருப்பாச்சிலார் சிராமம், திருவதிகை என்று நினைவார் தருநெஞ்சில் நீர் கச்சி ஏகம்பர் போய்ச் சேருங்கள் என்றபடி.
969. நண்ணிப் பரவும் திருவா
வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம்
பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை
ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி
ஏகம்பம் காண்மின் சென்றே.
தெளிவுரை : போய்த் துதிக்கின்ற திருவாவடுதுறை, நல்லம், நல்லூர் நிலவுலகில் விளங்குகின்ற கடம்பூர், கடம்பந்துறை, நிலைபெற்ற திருப்புன்கூர், எண்ணற்கரிய திருப்பராய்த் துறை, அழகிய எதிர்கொள்பாடி, மாலையணிந்த பிறைச் சடையோன் கச்சி ஏகம்பன் எழுந்தருளியிருக்கின்ற தலங்களைச் சென்று தரிசியுங்கள்.
970. சென்றேறி விண்ணுறும் அண்ணா
மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு
பாசூர் எழில்அழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும்
பேறு மதில்ஒற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம்
மேயார் நிலாவியவே.
தெளிவுரை : இறைவன் எழுந்தருளியிருக்கும் தொண்டை நாட்டுத் திருத்தலங்களைக் கூறுகின்றார். மேல் ஏறிச் சென்று ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் திரு அண்ணாமலை. திகழ் வல்லம், மென்பூவின் தேறல் பாய்கின்ற திருமால்பேறு, பாசூர், எழில்மிகு அழுந்தூர் வன்தேரவன் திருவிற்பெரும்பேறு, மதில்சூழ்ந்த திருஒற்றியூர், நின்று ஏர்தரு கச்சி ஏகம்பம் கோயில் கொண்டிருக்கும் தலங்களாகும்.
971. நிலாவு புகழ்த்திரு வோத்தூர்
திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம்
வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன்
மாகறல் கூற்றம்வந்தால்
அலாயென்(று) அடியார்க்(கு) அருள்புரி
ஏகம்பர் ஆலயமே.
தெளிவுரை : புகழ் மிக்க திருவோத்தூர், திரு ஆமாத்தூர், நிறைநீர் சூழ்ந்த சடையோன் எழுந்தருளியிருக்கும் புலிவலம், வில்வலம், கொச்சை வயமென்னும் சீகாழி, தொண்டர் குலாவும் திருப்பனங்காடு, நன்மாகறல். கூற்றம் வந்தால் இங்கே வரத்தகாதவன் நீ என்று அடியார்க்கு அருள் புரிகின்ற ஏகம்பரின் ஆலயங்களே.
972. ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு ஆலங்கா(டு)
ஏகம்பம் வாழ்த்துமினே.
தெளிவுரை : கரும்பாலைகள் நிறைந்த திருக்கருகாவூர், கச்சூர் திருக்காரிக்கரை, கடல் அலைகள் வீசும் திருவான்மியூர் திருவூறல் மிக்க சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள், முக்கோணம் தொடர் கொன்றை மாலை யணிந்த பெருமான் எழுந்தருளியிருக்கும் திரு ஆலங்காடு ஆகிய இடங்களில் உள்ள ஏகாம்பர நாதரை வாழ்த்துங்கள். எல்லாத் தலங்களிலும் ஏகம்பனாகிய இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்கிறார்.
973. வாழப் பெரிதெமக்(கு) இன்னருள்
செய்யும் மலர்க்கழலோர்
தாழச் சடைத்திரு ஏகம்பர்
தம்மைத் தொழாதவர்போய்
வாழப் பரற்சுரம் ஆற்றா
தளிரடி பூங்குழல்எம்
ஏழைக்(கு) இடையிறுக் குங்குய
பாரம் இயக்குறினே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. தொழாதவர் போய் வாழுகின்ற அப்பரலை யுடைய சுரம். சுரம்-பாலை நிலம். வாழப் பெரிது எமக்கு இன்னருள் செய்யும் மலர்க் கழலோர் தாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழாதவர் போய் வாழ்கின்ற, பரற்கற்களையுடைய பாலை நிலத்தில் செல்ல ஆற்றாது தளிர் போன்ற பாதங்களையும் பூங்குழலையும் உடைய எம் தலைவிக்கு, கொங்கையின் கனம் தாங்காது இடை முரியும் என்பதாம்.
974. உறுகின்ற வெவ்அழல் அக்கடம்
இக்கொடிக்(கு) உன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னால்ஐய
பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழில்
கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந்
தண்பணை என்றுகொளே.
தெளிவுரை : தோழி உடன்படச் செய்தல். அந்தப் பாலைவனம் உன் பின்னே வருவதனால் குளிர்ந்த வயல் போலிருக்கும். தீயைப்போல் வெப்பம் மிகுந்த அப் பாலை நிலம் இந்தத் தலைவிக்கு உன் பின்னால் வரப் போகின்ற ஆறுதலினால், ஐய ! பேரருள் செய்யும் ஏகம்பனார் நெருங்கிய மலர்ச் சோலைகளையுடைய கச்சியைச் சூழந்து இளம் பெண்கள் கொய்து தருகின்ற பூங்குவளைக் குறுந்தண் பணை என்று கொள்வாயாக.
975. கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி
தீச்சில வேயுலறி
விள்ளும் வெடிபடும் பாலையென்
பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுள்திரு
ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப்
போவ(து) உரைப்பரிதே.
தெளிவுரை : இது செவிலி கூற்று. சூரியனது கடும் வெப்பத்தினால் கள்ளியைத் தீயச் செய்து, ஈரம் காய்ந்து, மூங்கில் காய்ந்து பிளக்கும் பாலை நிலத்தின் வழியாக என் பாவை போன்றவள் இந்தத் தலைவன் பின்னே தெளிந்த நீர் வளமிக்க கச்சியுள் மேவும் திரு ஏகம்பர் சேவடியை மறந்தவர்போல போக எத்தனிப்பது சொல்லும் தரமரிதே.
976. பரிப்பருந் திண்மைப் படையது
கானர் எனிற்சிறகு
விரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய்
யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
தரிப்பருந் திண்கங்கை யார்திரு
வேகம்பம் அன்னபொன்னே
வரிப்பருந் திண்சிலை யேயும
ராயின் மறைகுவனே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. தாங்குதற்கரிய திண்மைக்குரியது பாலை நிலத்து வாழ்வார் வாழ்க்கை. சிறகை விரித்தலை யுடைய பருந்துக்கு இரையாக்கும் கொடுமையை உடையேன். நீ அஞ்சாதே. செஞ்சடை மேல் கங்கையை வைத்திருக்கும் திருவேகம்பம் போன்ற பொன் போன்றவளே ! வில்லேந்திய உன் சுற்றத்தார் தடுத்தாராயின் நான் மறைகுவன்.
977. வனவரித் திண்புலி யின்னதள்
ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங்
கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்தும் கொடுத்தெனைப்
புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக் கல்லதர் செல்வதெங்
கேஒல்கும் ஏழைநெஞ்சே.
தெளிவுரை : இது செவிலி கூற்று. (திருமகளை அழகினால் வருத்தும் என் மகளுக்கு) வனத்தில் வாழும் வரிகளையுடைய வலிய புலியின் தோலை இடையில் கட்டிய ஏகம்ப மன்னனே ! திருமகள் போன்ற என் மகளுக்கு என் அழகிய கழற்சிக் காயையும் கோடுகளோடு கூடிய கைப்பந்தையும் கொடுத்து என்னைத் தழுவியும் வீட்டை விட்டுப் பிரிந்து, பரற்கற்களை உடைய பாலை நிலத்தில் செல்வது எப்படிப் பொருந்தும், என் ஏழை நெஞ்சே ! என்று செவிலி வருந்துகிறாள்.
978. நெஞ்சார் தரஇன்பம் செய்கழல்
ஏகம்பர் கச்சியன்னாள்
பஞ்சார் அடிவைத்த பாங்கிவை
ஆங்கவள் பெற்றெடுத்த
வெஞ்சார் வொழியத்தன் பின்செல
முன்செல் வெடுவெடென்ற
அஞ்சா அடுதிறல் காளைதன்
போக்கிவை அந்தத்திலே.
தெளிவுரை : செவிலி சுவடு கண்டு இரங்கல்: நெஞ்சு ஆறுதல் பெற இன்பம் செய்கின்ற கழல்களை உடைய ஏகம்பரின் கச்சியைப் போன்றவள். செம்பஞ்சு குழம்பு தோய்ந்த பாதத்தை உடையவள். அவள் நடந்து சென்ற தன்மை இதுவாகும். அவள் இவ் வழியில் துன்பப்பட்டுச் சென்றாள். அவளுக்கு முன்னால் சென்ற காளையின் சுவடுகள் இவை. அவன் எதற்கும் அஞ்சாத வீரன். ஆகவே இந்த வழி அவளுக்குத் துன்பமாகத் தெரியவில்லை.
979. இலவவெங் கானுனை யல்லால்
தொழுஞ்சரண் ஏகம்பனார்
நிலவும் சுடரொளி வெய்யவ
னேதண் மலர்மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத்
தளிரடி செல்சுரத்துன்
உலவும் கதிர்தணி வித்தருள்
செய்யுன் உறுதுணைக்கே.
தெளிவுரை : நற்றாய் சுரம் தணிவித்தல். அவர்கள் சென்றவழி இலவ மரங்கள் உள்ள வெப்பமான பாலை நிலமாகும். கதிரவனே உன்னை யல்லாமல் வேறு சரண் இல்லை. ஏகம்பனார் துணை செய்வாராக. இவளுடைய மென்மையான பாதங்கள் செல்லும் வழி பருக்கைக் கற்கள் நிறைந்தது. உன்னுடைய வெப்பமான கதிர்களைத் தணிவிப்பாயாக. சூரியனே இது உன் உதவியாக இருக்கட்டும்.
980. துணையொத்த கோவையும் போலெழில்
பேதையும் தோன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ(டு) ஏயொத்த
காதலொடு ஏகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக்
கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள்
தன்னொடும் பேசுமினே.
தெளிவுரை : (கலந்துடன் வருவோர் செவிலியிடம் கூறுதல். மற்றவர் என்றது தலைவியை. இவள் என்றது தன் காதலியை.) உங்களைப் போன்று என் மகளும் அவள் காதலனும் முன்னே சென்றார்களே, அவர்களைப் பார்த்தீர்களா என்று செவிலி கேட்க, எதிரேவந்த காளை போன்றவன் செவிலியைப் பார்த்துக் கூறுகின்றான். அன்னையே ! ஏகம்பர் ஏறிச் செல்லும் காளையைப் போன்ற தலைவனைக் கண்டேன். தலைவியைப் பற்றிய விவரங்களை மான் போன்ற பார்வையினை உடைய இவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றான்.
981. மின்னலிக் கும்வணக் கத்திடை
யாளையும் மீளியையும்
நென்னலிப் பாக்கைவந் தெய்தின
ரேல்எம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று
கடந்தவர் இன்றுகம்பர்
மன்னரி தேர்ந்து தொழுங்கச்சி
நாட்டிடை வைகுவரே.
தெளிவுரை : இது கண்டோர் கூற்று: மின்னலைத் தோற்கச் செய்யும் சிறிய இடையினை உடையவளையும் அவள் காதலனையும் நேற்று இச்சிறிய ஊரில் வந்து தங்கியதைக் கண்டீர். பிறகு அவர்கள் செல்வதற்கு அரிய இந்தக் குன்றைக் கடந்து, இன்று ஏகம்பரது திருமால் வந்து தொழும் கச்சி நாட்டிடை வைகுவர். என்று கூறினர்.
982. உவரச்சொல் வேடுடைக் காடுகந்
தாடிய ஏகம்பனார்
அவரக்கன் போன விமானத்தை
ஆயிரம் உண்மைசுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம்
சூலம் துலங்குவிண்மேல்
கவரக் கொடிதிளைக் கும்கச்சி
காணினும் கார்மயிலே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. வேடுவர் வாழ்கின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற ஏகம்பனார். இராவணன் சென்ற விமானத்தை அழித்த உயர்ந்த மதில்களை உடைய சிவாலயம் சூலம் துலங்கு விண் வரை உயர்ந்த கொடிகள் ஆடுகின்ற கச்சியைக் காண்பாயாக என்று தலைவன் தன் காதலியிடம் கூறுகின்றான்.
983. கார்மிக்க கண்டத்(து) எழில்திரு
ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு
வோர்ஒலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர்
ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்ஒலி
யேஒக்கும் நேரிழையே.
தெளிவுரை : கச்சிப் பதியின் நில வளத்தையும் நீர் வளத்தையும் புகழ்ந்து கூறுகின்றார். கருநிற கண்டத்தை உடைய அழகிய ஏகம்பர நாதரது காஞ்சிபுரத்தில் சேறு நிரம்பிய கழனிகளில் நெல் நாற்றுக்களை நடுவோர் பேசும் ஒலியும், பொன்மலை போல் நெற்கட்டுக் களைக் களத்து மேட்டில் கொண்டுவந்து போடுவோர் ஒலியும் கரும்பாலைகளின் ஒலியும், நீர்மிக்க மாக்கடலின் ஒலியைப் போல் இருக்கும் என்று தலைவன் தலைவிக்குக் கூறுகின்றான்.
984. நேர்த்தமை யாமை விறற்கொடு
வேடர் நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமை யால்இமை தீந்தகண்
பொன்னே பகட்டுரிவை
போர்த்தமை யாலுமை நோக்கரும்
கம்பர்கச் சிப்பொழிலுள்
சேர்த்தமை யால்இமைப் போதணி
சீதம் சிறந்தனவே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. இமை தீந்த கண், சீதம் சிறந்தன என முடிக்க. பொன் போன்றவளே ! வேடர் வாழ்கின்ற பாலை நிலத்தைப் பார்த்து வெப்பமடைந்த உன் கண்கள், யானையின் தோலைப் போர்த்தமையால் உமை நோக்கரும் ஏகம்பரது கச்சிப் பொழிலுள் சேர்ந்தமையால் இமைப்போதணி சீதம் சிறந்தன என்று தலைவன் தலைவிக்கு ஆறுதல் கூறுகின்றான்.
முன்பு வெப்பத்தால் துன்புற்ற கண்கள் இப்போது குளிர்ந்து காணப்படும் என்பதாம்.
985. சிறைவண்டு பாடும் கமலம்
கிடங்கிவை செம்பழுக்காய்
நிறைகொண்ட பாளைக் கமுகின்
பொழிலிவை தீங்கனியின்
பொறைகொண்ட வாழைப் பொதும்புவை
புன்சடை ஏகம்பனார்
நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும்
இவ்வண்ணம் நன்னுதலே.
தெளிவுரை : காஞ்சியின் வளத்தைத் தலைவன் புகழ்கின்றான். நன்னுதலே ! இறகுகளையுடைய வண்டுகள் பாடும் தாமரை மலர்கள் நிறைந்த அகழிகள் இவை. சிவந்த பழுக்காய்கள் நிறைந்த பாளைக் கமுகின் சோலைகள் இவை. தீங்கனியின் சுமை கொண்ட வாழைத் தோட்டங்கள் இவை. புல்லிய சடையினையுடைய ஏகம்பனாரின் மணமிக்க பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணத்தைக் கொண்டது.
986. நன்னுத லார்கருங் கண்ணும்செவ்
வாயும்இவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும்
ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாம்ஒப்புக் காதென்று
வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி
நாட்டுளிப் பொய்கையுளே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று: நல்ல நெற்றியை உடைய மாதர்களின் கருங்கண்ணும் செவ்வாயும் இவ்வாறெனப் போய் நிலை பெற்ற இதழ்களையுடைய குவளை மலரும் அல்லி மலரும் பூக்க வள்ளை என்னவெலாம் ஒப்புக்காதென்று பெருமை கொள்ளும் ஏகம்பனார் பொன்னுதலார் விழியார். கச்சி நாட்டுள் இப் பொய்கையுள்ளே.
987. உள்வார் குளிர நெருங்கிக்
கருங்கிடங் கிட்டநன்னீர்
வள்வா ளைகளொடு செங்கயல்
மேய்கின்ற எங்களையாட்
கொள்வார் பிறவி கொடாதஏ
கம்பர் குளிர்குவளை
கள்வார் தருகச்சி நாட்டெழில்
ஏரிக் களப்பரப்பே.
தெளிவுரை : எண்ணுபவர் குளிர நெருங்கி இருண்ட அகழியில் உள்ள நன்னீர். வள்வாளைகளோடு செங்கயல் மீன்களும் மேய்கின்ற இடம் எதுவென்றால் எங்களை ஆட்கொள்கிறவர் இனிமேல் பிறவி கொடாத ஏகம்பர் குளிர் குவளை தேன் நிறைந்த கச்சி நாட்டெழில் ஏரிக் களப் பரப்பே.
கச்சி நாட்டின் நீர்வளம் கூறியவாறு.
988. பரப்பார் விசும்பிற் படிந்த
கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு
சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத்
துன்னுக ராஒருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக்
கம்பர்தம் பூங்கச்சியே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. விசாலமான ஆகாயத்தில் படிந்த கருமேகம் போன்ற நன்னீர்தரப் பாசிகள் மிகுந்த பண்பொடு சேம்பு படர்ந்திருக்கும் வயலில் பால்சுரக்கும் எருமை மலரைத் தின்ன, அங்குள்ள ஆண்முதலை எதிர்ப் பதைப்பார் அழகிய நெற்றியை உடையவளே ! செல்வக் கம்பர்தம் பூங்கச்சி இவ்வளவு வளமுடையது.
989. கச்சார் முலைமலை மங்கைகண்
ணாரஎண் ணான்(கு)அறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர்
தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற
விமானமும் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி
மாடங்கள் ஓங்கினவே.
தெளிவுரை : கச்சணிந்த பருத்த முலைகளையுடைய உமா தேவியார் விரும்பி முப்பத்திரண்டு அறங்களையும் வளர்ப்பதைக் கண்டு மகிழும் ஏகம்பர், தேவி மகிழ தேவர்களும் வித்தியாதரர்களும் தொழுகின்ற விமானமும் தர்மம் குறையாத அறச் சாலையும் பரப்பும் அழகிய மாடங்கள் உயர்ந்து நிற்கின்றன.
990. ஓங்கின ஊரகம் உள்ளகம்
உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற(து) அரியுறை
பாடகம் தெவ்வரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர்
மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாளது
தன்மனை ஆயிழையே.
தெளிவுரை : கச்சி, உயர்ந்த ஊரகத்தை உள்ளிடமாகக் கொண்டது. தேவர்கள் தங்குவதற்கு இடமாக உள்ளது. பாங்காக நின்றது. திருமால் உறைகின்ற பாடகம். பகைவர் ஓட வாங்கின வாள் போன்ற கண்களை உடையவள். மற்று அவர் மைத்துனி வான் கவிகள் தாங்கின நாட்டு இருந்தாள். அது தன்மனை. ஆயிழையே !
991. இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய(து)
இன்ன பிறங்கலுன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழிலிது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. அணிகலனாகப் பாம்பை யணிந்த ஏகம்பர் நெற்றிக்கண்ணின் வழியாக வந்த பிழையாத அருள் நம் உமாதேவியது மலை, திரிசூலம் பொன்போன்ற கொன்றை நிறைந்த சோலை. இதுதான் பொன் போன்றவளே ! இனி தளர்வில்லை. இது குளிர்ந்த இடமாகும்.
992. தளரா மிகுவெள்ளம் கண்டுமை
ஓடித் தமைத்தழுவக்
கிளையார் வளைக்கை வடுப்படும்
ஈங்கோர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில்திரு ஏகம்பம்
மற்றிது வந்திறைஞ்சி
உளரா வதுபடைத் தோம்மட
வாய்இவ் வுலகத்துள்ளே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. காஞ்சிபுரத்தில் பார்வதி தேவியார் லிங்கம் அமைத்து வழிபாடு செய்துவரும் போது கம்பா நதி பெருக்கெடுத்து வந்தது. அதைக் கண்டு தேவி பயந்து லிங்கத்தைச் சேர்த்துத் தழுவிக் கொண்டார். அம்மையாரது முலைத்தழும்பும் வளைத் தழும்பும் லிங்கத்தில் பதிந்தன. அத்தகைய சோலைகள் சூழ்ந்த திருஏகம்பம் இது. வந்து வழிபட்டு இவ்வுலகில் இனி ஆகவேண்டியதைப் படைத்தோம், மடவாய் !
993. உலவிய மின்வடம் வீசி
உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில்
யானைகள் வானில்வந்தால்
சுலவிய வார்குழல் பின்னரென்
பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற்
கொடியன்ன நீர்மையனே.
தெளிவுரை : உலவிய மின்னலாகிய வடத்தை வீசி, இடியாகிய (அதிர்வு) பேரொலி செய்து வல்லிய மாமதமாகிய மிகுந்த மதம் பாய்கின்ற கரிய யானைகள் வானில் வந்தால் நீண்ட கூந்தல் பின்னல் என்பார் என நினைந்து நிலவிய ஏகம்பர் கோயில் கொடியன்ன நீர்மையனே.
994. நீரென்னி லும்அலுங் கண்முகில்
காள்நெஞ்சம் அஞ்சலையென்(று)
ஆரென்னி லும்தம ராயுரைப்
பார்அம ராவதிக்கு
நேரென்னி லும்தகும் கச்சியுள்
ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி
தான்அன்பர் தேர்வரவே.
தெளிவுரை : கார்காலம் கண்டு தலைவன் தேர்வரும் என்று கலங்கிய தலைவியின் நிலை கூறப்படுகிறது. தலைவியின் கண்கள் நீர் என்று சொன்னவுடன் அழ ஆரம்பிக்கும். முகில்களே ! நெஞ்சம் அஞ்சாதே என்று ஆர் என்னிலும் சுற்றத்தாரைப்போல் உரைப்பார். துறக்க வுலகத்திற்கே போய்விடுவாள் போலும். கச்சியுள் ஏகம்பரின் நீண்ட மதில்வாய் போய்ச்சேர் என்றாலும் தங்கும். அன்பர் தேர் வரவு நோக்கிய வாட் கண்ணியின் நிலை இது.
995. வரங்கொண்(டு) இமையோர் நலங்கொள்ளும்
ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம்
அன்பர்தம் தேரின்முன்னே
தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன்
னாகத்தண் காந்தட்கொத்தின்
கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும்
போந்தன கார்முகிலே.
தெளிவுரை : வரங்கொண்டு தேவர்களின் நலத்தைக் கொள்ளுகின்ற ஏகம்பரது கச்சி நகரைப் போன்றவளே ! பாரமான கொங்கைகளைத் தூவன்மின், நீர் முத்தம் அன்பர் தந்து தேரின் முன் நிறுத்தி பூக்கொண்டு, பொன்போன்ற கொன்றை மலரைத் தூவி காந்தட் கொத்தைக் கையிற்கொண்டு பொற்சுண்ணம் ஏந்த கார்முகில் போந்தன. கார்முகில் வந்தன எனில் கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவரின் தேர்வரும் என்க.
996. கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே.
தெளிவுரை : பினாகி என்னும் வில்லைக் கைக்கொண்ட ஏகம்பரது பாதங்களைத் தொழுவாயாக. போர் முகமாகப் பகைவெல்லச் சென்ற நம் தலைவர் நினையார். மேகம் கடல் நீரை முகந்து, கறுத்து, சுரந்தது. நேரிழையே ! நாம் ஆர்வமாக பிறவிக் கடலை நீந்தும் பெருமூச்சாகும் இது.
997. உயிரா யினஅன்பர் தேர்வரக்
கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம்
பல்வளை ! பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய
ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச்(சு)
இறுத்தன கார்மயிலே.
தெளிவுரை : உயிர் போன்ற நம் தலைவர் தேர்வரும் மணியோசையைக் கேட்டு முன்வாட்ட முற்று வாடிய பயிர் மழையைப் பெற்றதுபோல் நம் தலைவியின் பான்மைகள் வருமாறு. தயிர், பால், நெய்யொடும் அபிடேகங் கொண்ட ஏகம்பர் தம் அருள்போல் வளைகள் கையில் இல்லாமல் கழன்றன. கச்சு இறுகின. கார் மயிலே என்பது தலைவியை விளித்தது.
998. கார்விடை வண்ணத்தன் அன்றேழ்
தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார்
எனஅண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப்
புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார்
தழுவ மழவிடையே.
தெளிவுரை : திருமால் கண்ணனாக அவதரித்தபோது ஏழு காளைகளைத் தழுவி நப்பின்னை பிராட்டியாரை மணந்தார். இன்று தனிப்போர் விடை பெற்று, எதிர் மாண்டார் என இடையர் போதவிட்டார். தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத்து அம்பொன் நன்பூண்மார் விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே.
இது ஏறு தழுவுதல் பற்றிக் கூறப்படுகிறது.
999. விடைபாய் கொடுமையெண் ணாதுமே
லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர்
புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலிள முல்லையின்
மான்கன்றொ(டு) ஆன்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில்
கடல்போல் கலந்தெழுமே.
தெளிவுரை : விடை தழுவுதலால் உண்டாகும் கொடுமைகளை எண்ணாமல், கன்னியைப் பெறுதல் மேல் என்று வேல் போன்ற கருங் கண்களையுடைய மாதர்களின் மேல் கொண்ட ஆர்வத்தால் காளையர் ஏறு தழுவுதலாகிய வீரத்தை மேற்கொண்ட ஏகம்பர் கச்சி மடைபாய் வயலில் உள்ள இளமுல்லையின் மான் கன்றொடு பசுங் கன்றினம் கடைபாய்தொறும் பதிமன்றில் கடல் ஓசைபோல் எழும் என்றவாறு. இதுவும் ஏறு தழுவும் வழக்கத்தைப் பற்றிக் கூறுகிறது.
1000. எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர்
கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற்
குன்றில் பரதர்கொம்பே
செழுமலர்ச் சேலல்ல வாளல்ல
வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூர்அம்பின் ஓரிரண்
டாலும் முகத்தனவே.
தெளிவுரை : மலர்களோடு கூடிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பரது கச்சி பெரிய கடற்கரையிலுள்ள கொழு மணப்புன்னைத் துணர் மணற்குன்றில் நெய்தல் நில மக்களின் கொம்பே செழுமலர் சேல்மீன் அல்ல, வாளல்ல, வேலல்ல, நீலமல்ல முழுமலர் கூர் அம்பின் ஓர் இரண்டாலும் முகத்தனவே. நெய்தல் நில பெண்ணின் கண்களை இவ்வாறு வர்ணிக்கின்றார்.
சேல்மீன் போல் பிரளும். வாள் போல் வெட்டும். வேல் போல் குத்தும். நீலமலர் போல் கருநிறமுடையது. கூர் அம்பு போன்றது.
1001. முகம்பாகம் பண்டமும் பாகமென்(று)
ஓதிய மூதுரையை
உகம்பார்த் திரேல்என் நலமுயர்
ஏகம்பர் கச்சிமுன்நீர்
அகம்பாக ஆர்வின் அளவில்லை
என்னின் பவளச்செவ்வாய்
நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற
வர்கொள்க நன்மயலே.
தெளிவுரை : அருளும் செல்வமும் பாகம் என்று சொன்ன மூதுரையை ஊகித்துப் பார்த்தால் என்ன? நலம் உயர் ஏகம்பர் கச்சிமுன் நீர் இடம் பாக ஆர்வின் அளவில்லை. என்னின், பவளம் போன்ற சிவந்த வாயையும் மலையின்பால் சோலை பெற்ற நாமுற்றவர் கொள்க. நன்மயலே ! (நன்மயிலே எனவும் பாடம்.)
1002. மயக்கத்த நல்லிருள் கொல்லும்
சுறவோ(டு) எறிமகரம்
இயக்கத்(து) இடுசுழி ஓதம்
கழிகிளர் அக்கழித்தார்
துயக்கத் தவர்க்(கு)அரு ளாக்கம்பர்
கச்சிக் கடலர்பொன்னூல்
முயக்கத் தகல்வு பொறாள்கொண்க
நீர்வரும் ஊர்க்(கு)அஞ்சுமே.
தெளிவுரை : நல்லிருள் கொல்லும் மயக்கத்த, சுறா மீனோடு, எறி முதலைகளின் இயக்கத்தில் இடுகின்ற சுழியை உடைய கடற்கழி கிளர் அக்கழித்தார் பாசப் பிணிப்பு உடையவர்களுக்கு அருள் செய்யாத கம்பர் கச்சிக் கடலர் பொன்னூல் முயக்கத்து அகல்வு பொறாள் கொண்கனே ! நீர்வரும் ஊர்க்கு என்மகள் அஞ்சுவாள். உன்பால் அன்புடையவள் என்றாலும் உன் ஊரைக் கண்டு அஞ்சுகிறாள் என்பதாம்.
1003. மேயிரை வைகக் குருகுண
ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக்
கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகம்கொண் டோன்தொழும்
கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற்(று) ஆரறி
வார்நந் துறைவர்பொய்யே.
தெளிவுரை : மேயிரை வைகக் கொக்கு உணராமல் மதுவுண்டு புன்னை மீயிரை வண்டு தமர்புக்கடிய விரிகடல் வாய், இரைகின்ற நாகத்தைப் பாயாகக் கொண்ட திருமால் தொழுகின்ற கம்பர் கச்சிக்கடல்நீர் தூயிரை கானல் மற்று ஆரறிவார். நம் துறைவர் (நெய்தல் நிலத் தலைவர்) சொல்லும் பொய்யை யார் அறிவார் என்றபடி.
1004. பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை
யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர்
கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம்
ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் கள்இனம்வந்(து)
ஆர்ப்ப அணைகின்றதே.
தெளிவுரை : பொய் வரும் நெஞ்சினரது வஞ்சனை யாரையும் போகவிடாது. மெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையனவாய்க் கைவரும் பறவையோடு சங்கினம் ஆர்ப்ப நம் நெய்தல் நிலத்தலைவரது தேர் யானைகள் இனம் வந்து ஆரவாரிக்க நெருங்கி வருகின்றது. தலைவர் கார் காலத்தில் திரும்பி வருவதாகச் சொன்னபடி வந்துவிட்டார் என்க.
1005. இன்றுசெய் வோம்இத னில்திரு
ஏகம்பர்க்(கு) எத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென்(று)
உள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை
நாளும் விடா(து)அடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின்
நீள்நெறி காட்டுவரே.
தெளிவுரை : இன்று செய்வோம் இதனில் திருஏகம்பர்க்கு, அனைத்தையும் நன்றாகவே செய்வோம். நெஞ்சமே ! பணி நாளையென்று நினைத்து உடலில் சென்று செய்யாரை விடும் துணை நாளும் விடாமல் நின்று அடிமை செய்வார். அவர் தங்களின் நீள் நெறி காட்டுவர் என்றபடி. ஒழுக்க நெறிகளைப் போதிக்கிறார்.
1006. காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப்
பூப்பெய்யக் காதல்வெள்ளம்
ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர்
ஏதும் இலாதஎம்மைப்
பூட்டிவைத் தார்தமக் கன்பது
பெற்றுப் பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத் தார்பர வித்தொழு
வாம்அவர் பாதங்களே.
தெளிவுரை : காட்டி வைத்தார் தம்மை யாம் மணமுள்ள பூப் பெய்யக் காதல் வெள்ளம் ஈட்டி வைத்தார் தொழும் ஏகம்பர் ஏதும் இல்லாத எம்மைப் பூட்டி வைத்தார் தமக்கென்பது பெற்றுப் பத்தாகிய பத்து அதாவது இந்த நூறு அந்தாதிப் பாடல்களைச் பாடச் செய்தார். அவர் பாதங்களைத் தொழுவோம். என்று தன்னை ஆட்கொண்ட கருணை வெள்ளத்தைப் பாடிப் பரவுகின்றார்.
1007. பாதம் பரவியோர் பித்துப்
பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள்
ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொலியாத
புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம்
எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.
தெளிவுரை : இறைவனது பாதங்களைத் துதித்து, ஒப்பற்ற பேரன்போடு பிதற்றினாலும் பல்பணியும் குற்றம் புகா வகையில் அருளும் ஏகம்பரை ஏத்துவாயாக என்று அறிவுப் பொருள் நிரம்பாத அற்பச் சொற்களால் ஆகிய பாடல்களும், வேதம் நிறைந்த பொருளாக மெய்த் தொண்டர்கள் கொள்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
30. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)
திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமானது பொருள்சேர் புகழை விரித்துரைக்கும் ஆசிரியப்பாவாலாகிய பத்துப் பாடல்களால் அந்தாதித் தொடை அமையப் பாடப்பட்ட நூலாதலின், இது திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது என்னும் பெயருடையதாயிற்று.
இதன்கண் அமைந்துள்ள பாடல்கள் பத்தும் ஒற்றியூர் பரமனை முன்னிலைப் படுத்திப் போற்றும் இயல்பினவாய்ச் சைவசித்தாந்த உண்மைகளை நன்கு விளக்குவனவாக அமைந்துள்ளன. எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து விளங்கும் இறைவனுக்கு உலகமே வடிவமாகலின் அப்பேருருவினை விட்டுவிலகி நிற்கும் பொருள்கள் உலகத்தில் இல்லை. உலகப் பொருள்கள் யாவும் இறைவன் திருவுருவத்தில் உறுப்புக்களாகவே கொள்ளத்தக்கன.
முப்புரம் எரியச் செய்தது; தக்கன் தலை அரிந்தது; இந்திரனைத் தோள் நெரித்தது; நான்முகன் தலைகளில் ஒன்றைக் கிள்ளியது; காமனை எரித்தது; இராவணனை விரலால் நெருக்கியது. நமனை உதைத்து முதலிய இறைவனுடைய வீரச் செயல்களெல்லாம் இறைவன் உலகத்தை இயக்குங்கால் அவன் அருளினை எதிரேற்றுக் கொள்ளாதார் செய்த வினை வயத்தால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளெனக் கொள்வதல்லாது இறைவன் தனக்குப் புகழ் உண்டாகுமாறு விரும்பிச் செய்த வீரச் செயல்களென மெய்யறிவாளர்கள் கொள்ள மாட்டார்கள் என்பன போன்ற செய்திகள் இதன்கண் காண்க.
திருச்சிற்றம்பலம்
அகவல்
1008. இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றிஒன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே.
தெளிவுரை : பூமாதேவி இயல்பாக உடுத்த அலைளை உடைய கடல் மேகலையாகும். முகமாகப் பொலியும் ஒற்றிமாநகரை உடையோய். உருவின் தன்மையை முழுமையாகப் பெற்றோர் யாரே ! மின்னலின் ஒளியைப் போன்று விளங்குவது உன்னுடைய சடையாகும்.
மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே
பாவகன் பரிதி பனிமதி தன்னொடு
மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்
தண்ணொளி ஆரந் தாரா கணமே
விண்ணவர் முதலா வேறோர் இடமாக்
கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்
தெளிவுரை : நிலைபெற்ற இந்தப் பிரபஞ்சம் உன் தலையின் வடிவாகும். அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் உன் கண்களாகும். குளிர்ந்த முத்து மாலையாக விளங்குவது நட்சத்திரக் கூட்டம். தேவர் முதலானோர் வேறோர் இடமாகக் கொண்டு வாழும் விசும்பு உன் உடம்பாகும்.
எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே.
அணியுடை அல்குல் அவனிமண் டலமே.
மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே
ஒழியா(து) ஓடிய மாருதம் உயிர்ப்பே.
தெளிவுரை : எட்டுத் திசைகளும் உன்னுடைய திண்ணிய தோள்களாகும். பெரிய கடல் உடையாகும். அணியுடை வயிறு இந்த அவனி மண்டலமே. மணிமுடி பாந்தள்; நின் இரண்டு பாதங்கள் இயக்கம். இடைவிடாது ஓடும் காற்று உன்மூச்சு.
வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி
வானவர் முதலா மன்னுயிர் பரந்த
ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே.
நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்
சுருங்கலும் விரிதலும் தோற்றநின் தொழிலே.
தெளிவுரை : வழுவாத ஓசை முழுதும் நின் வாய்மொழி. தேவர்கள் முதலாக நிலைபெற்ற உயிர்கள் பரந்த ஊனமில் ஞானத்தொகுதி நின் உணர்வே. நெருங்கிய உலகில் நீர்மையும் நிற்றலும் சுருங்கலும் விரிதலும் தோற்றும் நின் தொழிலே ஆகும்.
அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் பெயர்ச்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே.
என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ(டு)
ஒன்றிய துப்புரு இருவகை ஆகி
முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி
தெளிவுரை : அமைத்தலும் அழித்தலும் ஆங்கு அதன் பெயர்ச்சியும் கண் இமைத்தலும் விழித்தலும் நின் இயல்பாகும் என்று இவை முதலாக இயல்புடை வடிவினோடு ஒன்றிய பவழத்தின் உரு இருவகையாகி, சாத்துவிகம், இராசசம், தாமதம் என்னும் மூன்று குணங்களாகிய நால்வகைப் பிறவி.
அத்திறத்(து) ஐம்பொறி அறுவகைச் சமயமோ(டு)
ஏழுல காகி எண்வகை மூர்த்தியோ(டு)
ஊழியோ(டு) ஊழி எண்ணிறந் தோங்கி
எவ்வகை அளவினிற் கூடிநின்(று)
அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.
தெளிவுரை : அத்திறத்து ஐம்பொறி, அறுவகைச் சமயமோடு, ஏழ்உலகு ஆகி, எண்வகை மூர்த்தியோடு உலக முடிவு அளவிறந்து எவ்வகை அளவிற் கூடி நின்று அவ்வகைப் பொருளும் நீ ஆகிய இடத்து எல்லாம் நீயே என்று முடிக்கின்றார்.
1009. இடத்துறை மாதரோ(டு) ஈருடம்(பு) என்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்
புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்
பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்
அருவமும் உருவரும் ஆனாய் என்றும்
தெளிவுரை : இடப்பாகத்திலுள்ள உமாதேவி யாரோடு சேர்ந்து இரண்டு உடம்பென்றும், நள்ளிரவில் நடனத்தைப் புரிகின்றாய் என்றும், புலித் தோலையும் எலும்பு மாலையையும் அணிந்துள்ளாய் என்றும், பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்துகிறாய் என்றும் அருவமாகவும் உருவமாகவும் ஆனாய் என்றும்,
திருவமர் மாலொடு திசைமுகன் என்றும்
உளனே என்றும் இலனே என்றும்
தளரான் என்றும் தளர்வோன் என்றும்
ஆதி என்றும் அசோகினன் என்றும்
போதியிற் பொலிந்த புராணன் என்றும்
தெளிவுரை : திருமகளோடு கூடிய திருமால் என்றும், நான்முகன் என்றும், உள்ளவன் என்றும், இல்லவன் என்றும், தளரான் என்றும், தளர்வோன் என்றும், ஆதியாகிய முதல்வன் என்றும், அசோக மரத்தடியில் உள்ள அருகதேவன் என்றும், அரச மரத்தின் கீழ் உள்ள புத்த பெருமான் என்றும்,
இன்னவை முதலாத் தாமறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்அவர்க்(கு) அவ்வவை ஆகி அடையப்
பற்றிய பளிங்கு போலும்
ஒற்றி மாநகர் உடையோய் உருவே.
தெளிவுரை : இவ்வாறு கூறப்பட்டவை முதலாக எமக்குத் தெரிந்த அளவு பொருந்திய பல நூல்களில் மயங்கி, மாறுபாடு உடைய மாந்தர்களின் பெருமைகளை நோக்கித் துன்பம் செய்தவர்களுக்கு ஏற்றவாறு ஆகிக் கையிலுள்ள கண்ணாடிபோல உருவம் கொள்ளும் திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே ! வணக்கம்.
1010. உருவாம் உலகுக்(கு) ஒருவன் ஆகிய
பெரியோய் வடிவிற் பிறிதிங்(கு) இன்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித்
தெளிவுரை : உருவாம் உலகுக்கு ஒருவன் ஆகிய பெரியோய் ! வடிவில் வேறு பொருள் ஒன்றும் இன்மையின், எந்தப் பொருளாய் இருந்தாலும் இங்கு இருக்கிறதென்றால் அப்பொருள் உனக்கு அவயவம் ஆகும். ஆதலால் முன்பு திரிபுரங்களுக்கு எரி ஊட்டினாய் !
தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோற்(கு) ஒருமுகம் ஒழித்ததும்
பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்
தெளிவுரை : தொன்னீர் (கடல்) உலகம் துன்பமடையச் சூழ்ந்ததும், வேள்வி மூர்த்தியாகிய தட்சனது தலையை வெட்டியதும் இந்திரனது தோள்களை நெரித்ததும், பிரமனது ஒரு தலையைக் கிள்ளி எரிந்ததும், மன்மதனைச் சாம்பலாக்கியதும்,
திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்த நின்செய லாதலின்
உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர
தெளிவுரை : வலிமை கெட இராவணனைத் தன் கால் கட்டை விரலால் அழுத்தியதும், மார்க் கண்டேயனது உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்ததும், என்று இவை முதலாகச் செய்த முயற்சிகள் எல்லாம், நின்றுழிச் செறிந்த உன்னுடைய வீரச் செயல்கள் ஆதலின் கெடாத பழைமையான புகழ்பெற்ற திருவொற்றியூரில் கோயில் கொண்ட இறைவனே !
பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.
தெளிவுரை : சொல்லுகின்றவர் உனக்கு வேறுபட்டவர் அல்லர். கண்டவர் இவையாவும் இயல்பாக நீ செய்த செயல்களே யன்றிப் புகழுக்காகச் செய்தவையல்ல என்பதை அறிவர். இதுதான் பொருள் உணர்ந்தோரின் கருத்து என்பதாம்.
1011. பொருள்உணர்ந்(து) ஓங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியா(து)
தெளிவுரை : பொருள் உணர்ந்து ஓங்கிய பிரமன் முதலாக இருளை யொத்த உடலில் இயங்குகின்ற நிலை பெற்ற உயிர் உருவிலும், உணர்விலும், உயர்விலும், பணிவிலும், திருவிலும், திறலிலும், செய்தொழில் வகையிலும் வெவ்வேறாகி வினையிலிருந்து பிரியாமல்,
ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கம்
தெளிவுரை : பொருந்தாத பன்மையுள் மற்றவர்களுடைய ஒழுக்கம் நிலைபெற்ற கடலுள் அலை போல உன்னிடமிருந்து எழுந்து உன்னிடமே ஒடுங்கியும், அதிகமாகியும், குறைந்தும், அங்கிருந்து அகன்றும் பிறகு அங்கு வந்து தோன்றியும், கலந்தும், வேறாகியும், நின்றனை.
ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.
தெளிவுரை : இடைவிடாத பழைமையான புகழையுடைய ஒற்றியூர ! மூத்தல் இல்லாத மேனியை யுடைய முதல்வனே ! உன்னுடைய அருள் பெற்றவர்கள் அறிவார்களோ அல்லது மற்றவர் அறிவார்களோ? அறிய மாட்டார்கள் ! (அவர்கள் உன்னைப் பற்றி, சரியாய் அறியவில்லை என்பதாம்.)
1012. மயக்கமில் சொல்நீ யாயினும் மற்றவை
துயக்க நின்திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
செய்வினை உலகினில் செய்வோய் எனினும்
தெளிவுரை : மயக்கம் இல்லாத சொல் நீ. ஆயினும் மற்றவை தளர்ச்சியுடையவை. நின்னுடைய ஆற்றல் அறியாத சூழலும், உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது குற்றம் உண்டாக ஆங்கே மறைந்த கள்ளமும் செய்வினை உலகில் செய்வோய். எனினும்,
அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநிற் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க்(கு) அணிமையும் நாடொறும்
என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
தெளிவுரை : அவ்வினையின் பயன் நீ. நெருங்க முடியாத நெருக்கமும், இனத்திடை இன்பம் வேண்டி உன்னைப் பணிகின்றவர் மனத்தின்கண் கடல் ஆகிய அழகும், அன்போடு அடைந்தவர்களுக்கு அருகிலும், நாள்தோறும் எலும்பை உருக்கும் இயல்பினை உடையை ஆதலின்,
கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவத்
துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே.
தெளிவுரை : கண்டவர் தமக்கே இந்த உடம்பு அழிதல் உண்டென அறிந்தோம். திருவொற்றி யூரனே ! நிலைபெற்ற பெரும்புகழ் மாதவத் துன்னிய செஞ்சடையில் பரிசுத்தமான சந்திரனை அணிந்தவனே !
1013. தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யான்என அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே(று) ஏறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதவள் அவனென நின்றமை யார்க்கும்
பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
தெளிவுரை : இறைவனுடைய திருக்கோலத்தில் உள்ள பொருள்களுக்குக் கருத்து உரைக்கிறார்.
தூய்மையான சந்திரனைச் சடையின் மேல் சூடியிருப்பது தூய வழியை உடையவன் என அமைந்துள்ளது. தரும தேவதையின் உருவமாகிய ரிஷபத்தின் (காளை) மேல் ஏறுதல் இறைவன் யான் என்று காட்டுவதற்கே யாம். அது, அவன், அவள் என நின்றமை எல்லார்க்கும் பொது நிலையான் என்று உணர்த்திய பொருளே.
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க(து) என்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்
நாதன் நான்என நவிற்று மாறே
தெளிவுரை : மூன்று கண்களை உடையவன் என்பது முத்தீ வேள்வியில் தொக்கது என்னிடை என்பதோர் சுருக்கே, மறைவடிவாகிய மான் கன்று ஏந்துதல், அதன் நாதன் நான் என்று சொல்லுவதற்கே.
மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யான்என மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யான்என உணர்த்திய வாறே
தெளிவுரை : மூன்று கிளைகளாகப் பிரிந்துள்ள ஒரு தாள் சூலம் ஏந்துதல் பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் யான்எனத் தெரிவிப்பதற்காகவே. எண்வகை மூர்த்தி என்பது இவ்வுலகில் உண்மை யான் என உணர்த்துவதற்கேயாம்.
நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்
உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருளும் நற்பூதப் படையோய் என்றும்
தெருளநின்(று) உலகினில் தெருட்டு மாறே
தெளிவுரை : நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எக்காலத்திலும் கெடாத பழைமையான புகழினை உடையோய் என்றும் பொருளும் நல்ல பூதப் படையோய் என்றும் தெளிவாக நின்று உலகில் தெளிவிப்பதற்கேயாம்.
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத
தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையிற் சுழலும் மாந்தர்க்(கு)
ஆதி யாகிய அறுதொழி லாளர்
ஓதல் ஓவா ஒற்றி யூர
சிறுவர்தம் செய்கையிற் படுத்து
முறுவலித்(து) இருத்திநீ முகப்படும் அளவே.
தெளிவுரை : இங்கு இவை முதலாக வண்ணமும் வடிவும் (நிறமும் உருவமும்) ஓங்குகின்ற உன் பெருமை உணர்த்தவும் உணராத தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்களிடமிருந்து பிறந்த சொற்பொருள் வன்மையில் சுழலும் மனிதர்க்கு ஆதியாகிய (அறு தொழிலாளர்) அந்தணர்கள் வேதம் ஓதுதல் நீங்காத ஒற்றியூர ! சிறுவர்களது செய்கையில் படிந்து புன்முறுவல் செய்து நீ அருள் செய்வாயாக.
1014. அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா(து) ஒடுங்கிநின்(று) உளையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
கைவலத்(து) இலைநீ எனினும் காத்தல்
செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே
தெளிவுரை : அளவற்ற பெருமையை உடையை ஆயினும் என் உள்ளத்திலிருந்து நீங்காமல் ஒடுங்கி நின்று இருக்கின்றாய். பூத உடம்புகளைக் கடந்த சூட்சும உடம்பை உடையாய் ஆயினும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உன் உருவம்தான் என்று பொருள் படும். நீ உதவவில்லை என்றாலும் காப்பாற்ற வேண்டும் என்னும் பெருங்குணம் படைத்துள்ளாய்.
சொல்லிய வகையால் துணையலை யாயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
தங்கிய அவரைச் சாராய் நீயே அஃதான்று
தெளிவுரை : சொல்லிய வகையால் நீ துணையாக இல்லை யென்றாலும் உயிர்த் தொகுதிகளுக்கு நாயகன் நீயே. எல்லா இடங்களிலும் நீ நிறைந்துள்ளாய் எனினும் வஞ்சனை உடையவர்களை நீ சார்ந்திருக்க மாட்டாய். அதுவும் அல்லாமல்,
பிறவாப் பிறவியைப் பெருகாப் பெருமையைத்
துறவாத் துறவியைத் தொடராத் தொடர்ச்சியைத்
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
அகலா அகற்சியை அணுகா அணிமையை
செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை
தெளிவுரை : பிறவாப் பிறவியை, பெருகாப் பெருமையை, துறவாத் துறவியை, தொடராத் தொடர்ச்சியை, நுகரா நுகர்ச்சியை, நுணுகா நுணுக்கினை, அகலா அகற்சியை அணுகா அணிமையை, செய்யாச் செய்கையை, சிறவாச் சிறப்பினை,
வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்
நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய வாகிய எண்ணில் பல்குணம்
தெளிவுரை : வெய்யை, தணியை, விழுமியை, நொய்யை, செய்யை, பசியை, வெளியை, கரியை, ஆக்குதி, அழித்தீ, ஆனபல் பொருள் நீக்குதி, தொகுத்தி, நீங்குதி, அடைதி ஏனையவாகிய எண்ணற்ற பல குணங்களை உடையாய்.
நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்
சொன்னிலை சுருங்கின் அல்லது
நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.
தெளிவுரை : இதை எண்ணிப் பார்க்கும் ஒவ்வொரு சமயத்திலும் மயக்கம் தருவதாய் உள்ளது. ஆதலின் கொந்தளிக்கும் கடலை ஆடையாக உடுத்த ஒற்றி யூரனே ! இதற்கு யார் பதில் சொல்ல முடியும்? சுருங்கச் சொல்வது அல்லது உன்னுடைய தன்மையை அறிவோர் இவ்வுலகில் யாரும் இல்லை என்பதாம்.
1015. நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொல்லத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய்வளி ஐயொடு பித்தொன் றாக
ஐவகை நெடுங்காற்(று) ஆங்குடன் அடிப்ப
நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்ப
தெளிவுரை : பூமியின்கண் பாரமாய் ஆசையில் அதிகரித்துச் சொல்லும் பெருமையுடைய உணவால் தூர்க்கப்படாத உலை மெய்யென்று நம்பி வாதம், கபம், பித்தம், ஒன்றாக, ஐந்து வகையான நெடுங்காற்று ஆங்குடன் அடிப்ப, நரை யென்னும் நுரை நாள் தோறும் வெளுப்ப,
திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்
குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப
தெளிவுரை : சுருக்கத்தை உடைய தோல் கடலில் உள்ள பெரும் அலைகளாகக் கூடிய இரத்தமாகிய நீரினுள் நுழைந்து, மூடிய இருமல் ஓசையுடன் முழங்கி, வருத்தும் பசி என்னும் வெகுளிச் சுறாமீன் வீசி எறிய, குடர் என்னும் பாம்பின் கூட்டம் வந்து ஆரவாரம் செய்ய,
ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து
தோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழலக்
கால்கையின் நரம்பே கண்ட மாக
மேதகு நிணமே மெய்ச்சா லாக
முழக்குடைத் துளையே முகங்க ளாக
தெளிவுரை : மாமிச பிண்டம் எலும்பின் உள் அடைந்து, தோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழல, கால் கை இவைகளின் நரம்பு திரையாக, மேன்மை பொருந்திய நிணம் மெய்ச்சாலாக முழக் குடைத் துளையே முகங்களாக,
வழுக்குடை மூக்கா(று) ஓதம்வந்(து) ஒலிப்ப
இப்பரி(சு) இயற்றிய உடலிருங் கடலுள்
துப்புர(வு) என்னும் சுழித்தலைப் பட்டுழி
ஆவா என்றுநின் அருளினைப் பெற்றவர்
நாவா யாகிய நாதநின் பாதம்
முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி
தெளிவுரை : வழுக்குடை மூக்காறு ஓதம் வந்து ஒலிப்ப, இப்பரிசு இயற்றிய உடல் இரும் கடலுள் துப்புரவு என்னும் சுழித்தலைப் பட்டுழி ஐயோ என்று உன் அருளைப் பெற்றவர் படகு ஆகிய நாதனே ! உன் பாதம் முன்னதாகச் சென்று முறைப்படி வணங்கி, சிந்தைக் கூம்பினைச் (பாய்மரம்) செம்மையாக நிறுத்தி,
உருகிய ஆர்வப் பாய்விரித்(து) ஆர்த்துப்
பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க்கயி(று) அறுத்து
மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பாரெனும் கடுவெளி அற்ற
தூமச் சோதிச் சுடர்குறி நிறுத்திச்
தெளிவுரை : உருகிய ஆர்வமாகிய பாய்விரித்து ஆரவாரம் செய்து, பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்து, நெருங்கிய சுற்றமாகிய தொடர்க் கயிறு அறுத்து, நிலைபெற்ற ஒருமைப் பொறியினை முறுக்கி, காமப் பார் எனும் பெருங்காற்று அற்ற தூமச் சோதிச் சுடர்குறி நிறுத்தி,
சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவின் நீள்கரை ஏற்ற
வாங்க யாத்திரை போக்குதி போலும்
ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.
தெளிவுரை : சுருங்காத உணர்ச்சி யென்னும் துடுப்பினைத் துழாவி நெருங்கியபோது நீண்ட கரை ஏற்ற வாங்க யாத்திரை போக்குதி போலும். ஓங்கிய கடலை ஆடையாக உடுத்த ஒற்றியூரில் கோயில் கொண்டுள்ள பெருமானே ! (கரையேறும் வழி கூறியவாறு)
1016. ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித்(து) அழுதலின் அகன்ற அம்மனை
கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும்
தெளிவுரை : திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானே ! அழியாத உன் குணம் பற்றி நிரம்பப் போற்றுதல் பொருட்டு என்னிடம் பிறந்த துன்பந்தரும் அற்ப மொழி உன்னிடம் அணுகாத தன்மைய ஆதலின் பாய்விட்டு அழுதலின் அந்த விசாலமான இடத்திலிருந்து தாய் தூரத்திலிருந்து கேட்கமாட்டாள் என்றாலும்,
பிரித்தற்(கு) அரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவிய(து) இயல்பினை
அறியா(து) எண்ணில் ஊழி பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே
தெளிவுரை : பிரித்தற்கு இயலாத தன்மை உடையதாகி குறைவாக அரற்றியும் குழந்தையினது இயல்பை அறியாது எண்ணில் ஊழிக் காலத்து பிறப்பைக் கண்டு மயங்கி, கண்ணில்லாதவர் கண்ணைப் பெற்றதைப்போல,
தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்ல(து)
எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்
தெளிவுரை : தாய் முன்வர நின் பாதங்களை வணங்கும் வழிமுறை அறியாத மயக்கத்தை அடையும் வினையை உடையேன். நிறைந்த இன்பத்தோடு உடன் கூடிய எல்லையில்லாத ஆசையினால் ஏற்பட்ட கட்டினை நீயே அவிழ்த்தால் அல்லது எள் அளவுகூட யான் அவிழ்க்க அறியேன்.
துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம்
சிந்தையும் திருவும் செல்கதித் திறனும்
தெளிவுரை : இடையில் உள்ள இருண்ட சிறு செடிகளில் ஒதுங்கி வெளியிடம் காண விரும்புகின்ற வினையேன் தந்தையும் தாயும் சாதியும் அறிவும் நம் சிந்தையும் திருவும் புகலிடத்தின் திறனும்,
துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவையொளி ஊ(று)ஓசை நாற்றம் தோற்றம்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து
நின்றனன் தமியேன் நின்னடி யல்லது
தெளிவுரை : துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும், இன்பமும் புகழும் இவை போன்ற வேறு பிறவும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் (புலன் ஐந்தும்) தோற்றம் என்று இவை முதலாக விளங்குகின்ற பொருள்கள் யாவும் ஒன்ற நின் அடிக்கே ஒருங்குடன் வைத்து, தமியேன் நின்றேன். நின்னடி அல்லது,
சார்வுமற்(று) இன்மையின் தளர்ந்தோர் காட்சிச்
சேர்விடம் அதனைத் திறப்பட நாடி
எய்துதற்(கு) அரியோய் யான்இனிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே.
தெளிவுரை : வேறு சார்வு இல்லாமையின் தளர்ந்தோர் காட்சி சேர்விடம் அதனைத் திறப்பட நாடி எய்துதற்கு அரியோய் ! யான் இனிச் செய்வதும் அறியேன். யோசித்துப் பார்த்தும் வேறு வழி தெரிய வில்லையே !
1017. காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வா போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி
தெளிவுரை : காலனைக் கோபித்த பாதத்தோய் வணக்கம் ! ஆதியாகிய தொகுதி முதல்வா வணக்கம் ! திருவொற்றியூரில் மேவி யிருக்கும் பெரியோய் வணக்கம் ! எல்லாவற்றிற்கும் தலைமையாய் உள்ளவனே வணக்கம். உன்னை நெருங்கும் தோறும் சிறக்கும் அமிர்தமே வணக்கம் !
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வம் செய்பவர்க்(கு) அணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி
தெளிவுரை : பிரிதில் இல்லாத ஈசனே வணக்கம். ஆவலாய்த் துதிப்போர்க்கு நெருங்கி யிருப்பவனே வணக்கம். முடிவில்லாத இன் சுவைத் தேனே வணக்கம். வஞ்ச மனம் கொண்டவரை மறந்தாய் வணக்கம் ! ஆலகால விடத்தை அமிர்தமாய் விரும்பினாய் வணக்கம்.
விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென்(று) இவைகுணம் உடைமையின்
பெண்ணோ(டு) ஆணெனும் பெயரோய் போற்றி
தெளிவுரை : விரிந்த கடலுக்கும் இவ்வுலகத்திற்கும் வித்து போன்றவனே வணக்கம் ! கட்டுதலை யுடைய வனமாகப் புணர்ந்தாய் வணக்கம் ! காண முன்பொருள் கருத்துறை செம்மைக்கு ஆணியாகிய அரனே ! வணக்கம். வெப்பமும் குளிர்ச்சியும் என்று இவைகளின் குணமாதலின் பெண்ணோடு ஆண் என்னும் பெயரோய் வணக்கம்.
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி
சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
தெளிவுரை : பொருந்தியவர்களுக்கு வீடு பேறு அளிக்கும் விளக்காகிய சிவனே வணக்கம். திருமால் என்றும் பிரமன் என்றும் மேலோன் என்றும் வேதியன் என்றும் சந்திரன் என்றும் சூரியன் என்றும் இந்திரன் என்றும் தோற்ற மளிக்கும் இறைவ, வணக்கம்.
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்றுனை
நாத்தழும்(பு) இருக்க நவிற்றின் அல்ல(து)
ஏத்துதற்(கு) உரியோர் யார்இரு நிலத்தே.
தெளிவுரை : தேவனே வணக்கம். அழகானவனே வணக்கம். குமரனே வணக்கம். கூத்தனே வணக்கம் ! பொருளே வணக்கம், வணக்கம் என்று உன்னை நாத்தழும்பேறும் வரை போற்றினால் அல்லாமல் வணங்குதற்கு உரியவர் இந்நிலத்தில் வேறு யார் உளர்? வேறு எவரும் இலர் என்க.
திருச்சிற்றம்பலம்
31. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்தது)
பதினோராம் திருமுறை ஆசிரியர்களுள் நம்பியாண்டார் நம்பியும் ஒருவர். இவர் சோழ வள நாட்டில் திருநாரையூரில் ஆதி சைவர் மரபில் தோன்றியவர். இளமைப் பருவத்திலேயே திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரால் ஆட் கொள்ளப் பெற்றவர். அப் பிள்ளையாரின் திருவருட் பெருக்கினால் செந்தமிழ்ப் புலமையும் செம்பொருள் துணிவும் நன்கு அமையப் பெற்றவர்.
தேவாரத் திருமுறைகள் மறைவிடத்தில் இருந்து வெளிவந்து உலாவுவதற்கு இவரே துணைக் காரணராவார். அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வரலாற்றையும் திருத்தொண்டர் தொகையைக் கொண்டு வழிநூலாக விரித்து ஓதியவரும் இவரே. திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் பதினொரு திருமுறைகளையும் இவர் வகுத்தருளினார். சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் பிறகு பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.
விநாயகர் திருஇரட்டை மணிமாலையாகிய இந்நூல் திருநாரையூரில் கோயில் கொண்டு அருளிய பொல்லாப் பிள்ளையாராகிய ஆனைமுகக் கடவுள் மீது வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் இருவகைப் பாக்களால் அந்தாதித் தொடை அமையப் பாடப்பெற்றதாதலின் திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. நம்பியாண்டார் நம்பி முதன் முதலாகப் பாடிய நூல் இதுவே என்று கூறுவர். மாங்கனியின் பொருட்டு இளைய பிள்ளையார் உலகை வலம்வர இவர் சிவபெருமானையே வலம் வந்து கனிபெற்ற செய்தி முதலியன இந்நூலில் கூறப்பெறும்.
திருச்சிற்றம்பலம்
வெண்பா

1018. என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.
தெளிவுரை : புன்னை மரங்கள் கலந்த, மகிழ்ச்சியைத் தருகின்ற, சோலைகள் சூழ்ந்த வியக்கத்தக்க திருநாரையூரில் கோயில் கொண்டுள்ள முக்கண்களை யுடைய சிவபெருமான் கண்டு மகிழ்கின்ற யானை முகத்தான் என்னை நினைந்து என்னை அடிமையாகக் கொண்டு, என் துயர்களைக் களைந்து, அவனை நினைக்க அருள் செய்கின்றான் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
1019. முகத்தாற் கரியன்என் றாலும்
தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை
உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்திரு நாரையூர்
அம்மான் பயந்தஎம்மான்
உகத்தா னவன்தன் உடலம்
பிளந்த ஒருகொம்பனே.
தெளிவுரை : யானை முகத்தான் என்றாலும் அவனை அடைய முயல்கின்றவர்களுக்கு மிகவும் எளிமையானவன் என்று உண்மையை நினையும் விருப்பமுள்ளவர்கள் மனத்தில் இருப்பவன். திகழ்கின்ற திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான் பெற்ற எம்மான், கயமுகாசுரன் இறந்து விழ அவனுடைய உடம்பைப் பிளந்த ஒப்பற்றவனாகிய விநாயகப் பெருமான்.
வெண்பா
1020. கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.
தெளிவுரை : பூங்கொம்பைப் போன்ற வள்ளியின் நாயகனாகிய முருகன் அடையாதபடி பிரச்சினைக்குரிய மாம்பழத்தை, திருநாரையூரில் மேவிய நம்புவர்க்கருளும் சிவபெருமானை வலம் வந்து பெற்றுக் கொண்ட துதிக்கையை உடையாய் எனக்குத் துன்பம் செய்வது ஏன் என்பதைச் சொல்வாயாக.
கட்டளைக் கலித்துறை
1021. பேசத் தகாதெனப் பேயெரு
தும்பெருச் சாளியும்என்(று)
ஏசத் தரும்படி ஏறுவ
தேயிமை யாதமுக்கண்
கூசத் தகுந்தொழில் நுங்கையும்
நுந்தையும் நீயும்இந்தத்
தேசத் தவர்தொழு தாரைப்
பதியுள் சிவக்களிறே.
தெளிவுரை : பேசத் தகாதது என்னும்படி மூர்க்கமான எருதும் பெருச்சாளியும் என்று இகழுமாறு ஏறுவது ஏன்? உன் தந்தையும் தாயும் எருதை வாகனமாகக் கொண்டுள்ளனர். நீ பெருச்சாளி மீது ஏறிச் செல்கின்றாய். தேசத்தவர் தொழுகின்ற திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானால் பெறப்பட்ட யானையே ! இது கேலிக் கூத்தாக உள்ளது என்றபடி.
வெண்பா
1022. களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.
தெளிவுரை : சேறு நிரம்பிய இடங்களில் எல்லாம் நாரை என்ற பறவை ஆரல்மீனைத் தின்னும் பெரிய குளங்களை உடைய திருநாரையூரில் எழுந்தருளிய சிவ பெருமானது மகன் யானை முகத்துடனும் உடம்பு செந்தீயாகவும் விளங்குகின்ற காரணம் என்ன?
கட்டளைக் கலித்துறை
1023. மகத்தினில் வானவர் பல்கண்
சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப்
பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது
மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது
போலும் அடுமருப்பே.
தெளிவுரை : தக்கனது யாகத்தில் சூரியனது பல்லையும் பகனது கண்ணையும், தக்கனது தலையையும் இந்திரனது தோளையும் இறைவன் போக்கியருளினான். அந்த சுகத்தில் பெரிய சோலைகளை உடைய திருநாரையூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனது மகனாகிய விநாயகருக்கு முகத்தில் கையும், அந்தத் துதிககையுள் மூக்கும் அந்த மூக்கினுள் வாயும், அந்த வாயினுள் கொலை செய்யக் கூடிய தந்தமும் உள்ளன. இது என்ன விந்தை !
வெண்பா
1024. மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை
வருந்தஎண்ணு கின்ற மலம்.
தெளிவுரை : நெருப்பினிடம் எறும்பு செல்லாததுபோல அடியாரிடம் ஆணவ மலர் சேராது என்பதாம்.
தந்தத்தைக் கையில் கொண்டு திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் மலை போன்ற வடிவமுடைய விநாயகனை வணங்கும் அடியார்களிடம் ஆணவ மலம் நெருப்பினிடம் எறும்பு அணுகமுடியாதது போல தூர விலகிவிடும்.
கட்டளைக் கலித்துறை
1025. மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வரும்அப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேல்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேயுன்னை வாழ்த்துவனே.
தெளிவுரை : உலகை வலம் வந்த முருகப் பெருமானுக்கு முன்னே, புரியாகச் செய்யப்பட்ட சடையில் கங்கையை வைத்துள்ள திருநாரையூர் பெருமானாகிய சிவபெருமான் தன்னை வலம் வந்து கனியைப் பெற்றுக் கொண்ட மதக்களிறே முன் வினைகள் என்னை அணுகா வண்ணம் உன்னை வாழ்த்துவேன்.
வெண்பா
1026. வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.
தெளிவுரை : சூரியன் மகனாகிய எமன் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்தபோது அவனது திண்தோள்களை நெரித்தவனாகிய சிவபெருமானது மகனாகிய விநாயகப் பெருமான் தனது சோலையை நெருங்க வல்வினை நோயை நீக்கி, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளது அருளை நாம் பெறுமாறு செய்வான்.
கட்டளைக் கலித்துறை
1027. நாரணன் முன்பணிந்(து) ஏத்தநின்(று)
எல்லை நடாவியஅத்
தேரண வும்திரு நாரையூர்
மன்னு சிவன்மகனே
காரண னேஎம் கணபதி
யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென்
பவர்க்கில்லை அல்லல்களே.
தெளிவுரை : திருமால் முதலில் வந்து வணங்கவும் அதன் பின்னர் வந்த சூரியனது தேர் பொருந்தவும் உள்ள திரு நாரையூர் மேவிய சிவபெருமானது மகனே !காரணனே, எம் கணபதியே நல்ல யானை முகத்தை உடையவனே ! வேதத்தின் நுட்பப் பொருளே ! என்று துதிப்பவர்களுக்கு அல்லல்கள் இல்லை.
வெண்பா
1028. அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.
தெளிவுரை : துன்பங்களை நீக்கியவனது முக்தி உலகத்தின் எல்லையை அடையும் பொருட்டு இங்கு உழவர்கள் நெல் வயலில் உள்ள களைகளை எடுக்கும் செங்கழுநீர் நிரம்பிய திருநாரையூர் சிவபெருமானது மகனும், மலர் மாலை அணிந்த ஐந்து கரங்களை உடையவனுமாகிய விநாயகன் நம் துன்பங்களைக் களைவான் என்க.
கட்டளைக் கலித்துறை
1029. கோவிற் கொடிய நமன்தமர்
கூடா வகைவிடுவன்
காவில் திகழ்திரு நாரைப்
பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத்(து)
ஒற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத்(து) இமையவள்
தான்பெற்ற யானையையே.
தெளிவுரை : சோலைகள் நிறைந்த திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் கரிய துதிக்கையை உடையவனும் இரண்டு மதங்களையும் ஒற்றை தந்தத்தையும் மூன்று கண்களையும் உடையவனும் உமாதேவியார் பெற்றெடுத்த மகனுமாகிய விநாயகக் கடவுள் எம தூதர்கள் நம்மை நெருங்கா வகை செய்வான் என்பதாம்.
வெண்பா
1030. யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.
தெளிவுரை : தேன் நிரம்பிய சோலைகளை உடைய திரு நாரையூரில் சூலத்தை வலமாக ஏந்திய சிவபெருமான் பெற்றெடுத்த விநாயகக் கடவுள் யான் அவர் பேரில் எழுதிய இந்த வெண்பாவை என்னை நினைந்து என்னை அடிமையாகத் திருமாலுக்குக் கொடுத்தான்.
கட்டளைக் கலித்துறை
1031. ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்(கு)இளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப்
பதியுள் விநாயகனே.
தெளிவுரை : தேவர்கள் மணம் பொருந்திய மலர்களை இட்டுத் தொழுகின்ற திருநாரைப் பதியுள் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமான் வேடுவர் குடியில் பிறந்த வள்ளி நாயகிக்கும் மலர்மாலை யணிந்த முருகப் பெருமானுக்கும் முன்னால் தோன்றியவன். எதிர்த்து வந்த பகைவர்களைச் சாடிய வெம்பணைச் சிங்கத்தினுக்கு இளையானை உடையவன் எனக் கூட்டுக.
வெண்பா
1032. கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன்(று) என்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.
தெளிவுரை : பெரிய மதில் சூழ்ந்த திருநாரையூரை மேவி அன்பால் உருகியவர்களின் மனத்தில் பொருந்திய சிவ பெருமானது மகனாகிய விநாயகப் பெருமான் கோபமிக்க கூசாரம் பூண்ட முக யானைக் கன்று என்றார்க்கு மாசாரமோ சொல்லுவான். கைவிட மாட்டான் என்றபடி.
கட்டளைக் கலித்துறை
1033. வானிற் பிறந்த மதிதவ
ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு
நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி
தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென்(று)
உரைப்பர்இவ் வையகத்தே.
தெளிவுரை : ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற மதியை எட்டும்படி உள்ள உயர்ந்த சோலையில் தேன் ஒழுகும் மலர்களை உடைய திருநாரையூரில் திகழும் சிவபெருமானின் மூத்த பிள்ளையாகிய கணபதியை, பார்வதி தேவியாரின் மகனாகிய யானையை இவ்வுலகத்தார் சிறந்த தெய்வமாகப் போற்றுவார்கள் என்றபடி.
வெண்பா
1034. வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனகநஞ் சிந்தைஅமர் வான்.
தெளிவுரை : உலகில் உள்ளோர் துதிக்க, உயர்ந்த மதில்களை உடைய திருநாரையூரில் மகிழ்ந்து எழுந்தருளி பொய்ம்மை யுள்ளம் படைத்தவர்களின் மனத்தில் புகாமல், கையில் மாங்கனியை யேந்தி, பாசம் மழு இலைகளைக் கொண்டுள்ள விநாயகப் பெருமான் நம் சிந்தையில் வந்து அமர்வானாக.
கட்டளைக் கலித்துறை
1035. அமரா அமரர் தொழுஞ்சரண்
நாரைப் பதிஅமர்ந்த
குமரா குமரர்க்கு முன்னவ
னேகொடித் தேர்அவுணர்
தமரா(சு) அறுத்தவன் தன்னுழைத்
தோன்றின னேஎனநின்(று)
அமரா மனத்தவர் ஆழ்நர
கத்தில் அழுந்துவரே.
தெளிவுரை : அமரா ! என்று அமரர் தொழுது சரண் அடையும் திருநாரையூரில் அமர்ந்துள்ள குமரனே ! முருக வேளுக்குத் தமயனே ! கொடி கட்டிய தேர்களையுடைய அரக்கர்களது பற்றுக் கோடுகளை அறுத்தவனே ! தன்னுழைத் தோன்றினனே என விரும்பாத உள்ளத்தை உடையவர் ஆழ்நரகத்தில் அழுந்துவர்.
வெண்பா
1036. அவமதியா(து) உள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.
தெளிவுரை : அவமதியாமல் உள்ளமே ! துன்பங்கள் நீங்க நல்ல தவத்தினால் பெற்ற நல்லறிவால் வழிபட்டுச் சதுரப் பாட்டினை அடைந்தோம். பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடைய விநாயகன் மகரந்தங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது சிறுவனை நாம் வணங்கி நற்கதி பெறுவோமாக.
கட்டளைக் கலித்துறை
1037. நாந்தன மாமனம் ஏத்துகண்
டாய்என்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன்
நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய
னேநின் திரண்மருப்பை
ஏந்தின னேஎன்னை ஆண்டவ
னேஎனக்(கு) என்ஐயனே.
தெளிவுரை : மனமே ! நாம் பெற்ற செல்வமாக அவனை எப்போதும் வணங்குவாயாக. அன்றலர்ந்த மலர்களாக இருந்தனன். திருநாரையூர் என்னும் தலத்தில் வந்து அடைந்தேன். ஐந்து கைகளை உடையவனே ! வலிமையான தந்தத்தை ஏந்தியவனே ! என்னை ஆட்கொண்டவனே ! எனக்குத் தலைவனாக உள்ளவனே ! அருள்பாலிப்பாயாக.
திருச்சிற்றம்பலம்
32. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் (நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்தது)
சிவநேசச் செல்வர்களால் கோயில் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறும் பெரும்பற்றப் புலியூராகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய கூத்தப் பெருமானைப் போற்றுங் கட்டளைக் கலித்துறையாகிய திருவிருத்தங்களால் செய்யப்பட்ட நூலாதலின் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்று பெயர் பெற்றது. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் உணர்த்தி யருளியபடி தில்லைச் திருக்கோயிலை அடைந்து, தேவாரத் திருமுறைகளைக் காண விரும்பிய நம்பியாண்டார் நம்பிகள் இந்நூலால் கூத்தப் பெருமானைப் பரவிப் போற்றினார் என்பது வரலாறு.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித்துறை
1038. நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து
நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி
லேன்அன்று வானர்உய்ய
நஞ்சம் கருந்து பெருந்தகை
யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்(கு)
யானினி யார்என்பரே.
தெளிவுரை : நெஞ்சத்தை உன் திருவடிக்கீழ் வைத்து நீண்ட மலர்போன்ற கண்களில் நீர் அரும்ப, வஞ்சத்தை வெறுத்து ஒதுக்கி உன்னை வழிபடவில்லை. முன்பு தேவர்கள் பிழைப்பதற்காக ஆலகால விடத்தைக் குடித்து அருளிய பெருந்தகையே ! நல்ல தில்லையில் நடனமாடுகின்ற அழகிய செம்பவள வண்ணா, உன் அருளை விட்டு இனி வேறு யார் அருளை எதிர் பார்ப்பேன் என்பதாம்.
1039. என்பும் தழுவிய ஊனும்
நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர்
தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ
லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின்
றாடிய விண்ணவனே.
தெளிவுரை : எலும்பும் தழுவிய ஊனும் நெகிழ்ந்துருக அகத்திலிருந்து எழுந்த அன்பின் வழிவந்த நிறைந்த அமிர்தம் போன்றவனே ! அடியேன் உரைத்த வலிமை தங்கிய இழிந்த சொற்களைப் பொறுத்து அருள்வாயாக. மென்மேல் உயர்கின்ற தில்லைச் சிற்றம்பலத்துள் மின்சடை, புன்சடை, மிளிர்சடையை வீசி நின்று ஆடிய தேவதேவனே !
1040. அவநெறிக் கேவிழப் புக்கஇந்
நான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேஇட்ட தத்துவ
னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ
னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை
நட்டம் பயில்கின்றதே.
தெளிவுரை : வீணான நெறியில் விழ இருந்த என்னை அவ்வாறு விழுந்து விடாமல் காப்பாற்றித் தவநெறியில் செலுத்திய உண்மைப் பொருளே ! அந்தத் தவப் பயனாகிய சைவ நெறிக்கே என்னை நடத்திச் செல்பவனே ! பிறவிகள் தோறும் செய்கின்ற பாவங்களைப் போக்கியருள்வதற்கோ தில்லையில் நடனம் ஆடுகின்றாய்?
1041. பயில்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
கேஅப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துள்எந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நான்எங்ங னேபெறு
மாறுநின் ஆரருளே.
தெளிவுரை : உன்னுடைய திருநாமத்தைத் துதிக்க பயிற்சி செய்யவில்லை. குளிர்ந்த மலர்களை உன்னுடைய பாதங்களில் அருச்சிக்க முயற்சி செய்யவில்லை. கருதுகின்ற தில்லையில் நடனம் ஆடுகின்ற என் தந்தையே ! இவ்வாறு வீணில் காலங்கழிக்கின்ற நான் உன்னுடைய நிறைந்த அருளைப் பெறுவது எங்ஙனம் ? இதை நீ எனக்குத் தெரிவிப்பாயாக.
1042. அருதிக்கு விம்மி நிவந்ததோ
வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்ற
தேஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும்
கைத்தலம் நான்கும்மெய்த்த
சுருதிப் பதம்முழங் குந்தில்லை
மேய சுடரினுக்கே.
தெளிவுரை : திக்குகள் அழுது உயர்ந்தனவோ, வெள்ளி மலையாகிய கயிலாயத்திற்கு அஞ்சுகின்ற இளங் கதிரவன் உமிழ்கின்றதை ஒக்கும். பற்றுவிட்டவர்கள் கருதித் தொழுகின்ற கழலணிந்த திருவடிகளும், கைகள் நான்கும் உண்மையான மறை மொழிகளும் முழுங்குகின்ற தில்லையில் கோயில் கொண்டுள்ள பேரொளிக்கே. பேரொளியினால் இவ்வாறு நிகழ்கின்றனவோ என்கிறார்.
1043. சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தஎன்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக்(கு) அழகிது
வேத வினோதத்தையே.
தெளிவுரை : மயானச் சாம்பலும், இறந்தவர்களின் தலை மாலையும், அவர்களுடைய எலும்பும், மடலைப் பொலி மலர்மாலை மென்தோள் மேல் பஞ்சவடியும், வெற்றி பொருந்திய மூவிலைச் சூலமும் அழகு நிறைந்த தில்லை வீரனுக்கு இது என்ன அழகு? வேத வினோதமோ என்று வியக்கின்றார்.
1044. வேத முதல்வன் தலையும்
தலையாய வேள்விதன்னுள்
நாதன் அவன்எச்சன் நற்றலை
யும்தக்க னார்தலையும்
காதிய தில்லைச்சிற் றம்பலத்
தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவர் என்னோ மறைமொழி
யாலே வழுத்துவதே.
தெளிவுரை : நான்முகனது தலையும், சிறந்த வேள்வியுள் யாகத் தலைவனாகிய தக்கனது தலையும் விழுமாறு கொன்ற தில்லைச் சிற்றம்பலத்தான் கழல் சூழ்ந்து நின்று வேதம் பயின்றவர்கள் என்ன மந்திரங்களைச் சொல்லி போற்றுவது என்கிறார்.
1045. வழுத்திய சீர்த்திரு மால்உல(கு)
உண்டவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றானுக்(கு)அப்
பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம்
பலத்தான் திருக்கையிட
அழுத்திய கல்லொத் தனன்ஆயன்
ஆகிய மாயவனே.
தெளிவுரை : உன்னை வணங்கிய திருமால் இந்த உலகத்தை விழுங்கி உண்டவன்; பாம்பு மீது துயின்றவன்; அந்தப் பாம்பை நீ கங்கணமாக அணிந்தாய். நீர் வளமிக்க திருச்சிற்றம்பலத்தான், அப்பாம்பைத் தன் திருக்கையில் அணிய, ஆயனாகிய மாயவன் அழுத்திய கல் ஒத்தனன். ஆதிசேடனை இறைவன் கையில் கங்கணமாக அணியத் திருமால் நீலமணியைப் போல அதில் தோன்றினான் என்கிறார்.
1046. மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என்
தலைமறை நன்னிழலே.
தெளிவுரை : திருமால் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன். கண்ணனாக அவதரித்தபோது இரண்டு மருத மரங்களுக்கு இடையில் சென்றவன். அவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர் நெஞ்சில் அவன் சிற்றம்பலத்துள் நின்றாடும் கழல். அவன் எவர்க்கும் தாய் போன்றவன். அவனுடைய பொற்கழல் என் தலைமறை நன்னிழலே.
1047. நிழல்படு பூண்நெடு மால்அயன்
காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னகல் ஏந்தித்
தமருகந் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி
நீர்த்தில்லை அம்பலத்தே
குழல்படு சொல்வழி ஆடுவர்
யாவர்க்கும் கூத்தினையே.
தெளிவுரை : ஒளிமிக்க ஆபரணங்களையுடைய திருமாலும் பிரமனும் காண முடியாதபடி நீண்டவரே ? நெருப்பை உடைய பொன்னகல் ஏந்தி, உடுக்கை அடித்து, எழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தே குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே. அடியார்கள் கண்டு மகிழுமாறு நடனம் ஆடுபவர் என்கிறார்.
1048. கூத்தனென் றுந்தில்லை வாணன்என்
றும்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை
யாதே இடுசுணங்கை
மூத்தவன் பெண்டீர் குணலையிட்
டாலும் முகில்நிறத்த
சாத்தன்என் றாலும் வருமோ
இவளுக்குத் தண்எனவே.
தெளிவுரை : கூத்தன் என்றும் தில்லைவாணன் என்றும் கூட்டமாகத் தேவர்கள் வந்து தலைவன் என்றும் துதித்தாலும் செவிசாய்க்காமல் தேமலை இட்டுப் பயின்றவன் அவன். பெண்களே ! நீங்கள் சுற்றி வந்து ஆடினாலும் முகில் போன்ற நிறத்தினையுடைய வயிரவன் என்றாலும் வெப்பமடைந்துள்ள இவள் உடல் குளிர்ச்சி அடையுமோ?
1049. தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்
பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப்
பாயென் உடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங்
கிலோதிரு நாமங்கள்கற்(று)
எண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி
லோஎனக்(கு) இப்பிறப்பே.
தெளிவுரை : நீர் வளமிக்க தில்லைச் சிற்றம்பலத்தில் நிலை பெற்றிருக்கின்ற அம்பலக் கூத்தனைப் பார்த்தது முதல் அவன்மேல் காதலாய் அவனைக் காண என் உடன் முழுவதும் கண் இல்லை. தொழுவதற்குக் கைகள் இல்லை. திருநாமங்கள் கற்று எண்ணும் பரிசு எங்கும் வாய் இல்லை. இப்பிறப்பில் இல்லை என்று ஏங்குகின்றாள்.
1050. பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடகம் ஆடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்(டு)
இன்பத்தை உண்டிடவே.
தெளிவுரை : இப் பிறப்பில் கண்ட பயன் ஒன்றும் இல்லை. ஒலி செய்கின்ற நீர் வளமிக்கதும் மணமுள்ளதுமான சோலைகள் சூழ்ந்த தில்லையுள் திருநடனம் செய்கின்ற பற்றற்ற சோதியை, அழகுமிக்க கூத்தனை, தொண்டர்களுக்குத் தொண்டரானவர்களின் உறவானவனை நீண்ட கண்கள் கண்டுகண்டு இன்புற வேண்டும்.
1051. உண்டேன் அவரருள் ஆரமிர்
தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும்
கனலும் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய
நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்(து)
ஆடும் மணியினையே.
தெளிவுரை : வண்டுகள் தேன் உண்ணுகின்ற மலர் சோலைகளை உடைய தில்லை அம்பலத்து ஆடும் மணியினது அருள் உண்டேன். அருளாகிய அமுதத்தை உண்டவுடன் எடுத்த பொற்பாதத்தையும் அனலையும் கண்டேன். கவித்தகையும் ஒண் தேன் மொழியாகிய உமையவளைப் பார்த்த பார்வையையும், ஒளி நகையையும் கண்டேன்.
1052. மணியொப் பனதிரு மால்மகு
டத்து மலர்க்கமலத்(து)
அணியொப் பனஅவன் தன்முடி
மேல்அடி யேன்இடர்க்குத்
துணியச் சமைத்தநல் லீர்வாள்
அனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை அம்பலத்
தான்தன் திருந்தடியே.
தெளிவுரை : சோலைகள் நிறைந்த தில்லை யம்பலத்தான் தன் திருந்தடிகள் திருமால் மகுடத்துக்கு மணியொப்பன. மலர்க் கமலத்து அணி யொப்பன, அவன்தன் முடி, அடியேன் துன்பங்களை அரியச் சமைந்த வாள்போல் ஆகும், அவன் தன் திருவடி. என் துன்பங்களைப் போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்.
1053. அடியிட்ட கண்ணினுக் கோஅவன்
அன்பினுக் கோஅவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற்
கோதில்லை அம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட்
பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக்(கு) ஈந்தது
வாய்ந்த அரும்படையே.
தெளிவுரை : மூன்று உலகங்களையும் அடியினால் அளந்த கண்ணனுக்கு வாய்ந்த அரும்படையாகிய சக்கரத்தைக் கொடுத்தது திருவடிகளில் அருச்சித்த திருக்கண்ணின் பொருட்டோ, அவர்மீது கொண்ட அன்பினுக்கோ, அரக்கர்கள் செய்த துன்பங்களைப் போக்குவதற்கோ, தில்லை அம்பலத்து முடியிட்ட கொன்றையையும் மூன்று கண்களையும் உடைய சிவபெருமான் சக்கரத்தைக் கொடுத்தது எதன் பொருட்டு என்று கேட்கின்றார்.
1054. படைபடு கண்ணிதன் பங்கதென்
தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பம்
கேள்என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும்
நீவைத்(து) அருளுகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய
பாதம்என் னுள்புகவே.
தெளிவுரை : வில், அம்பு முதலிய படைக்கலங்களைப் போன்ற கண்களையுடைய உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனே ! தென் தில்லை இறைவனைத் துதித்தல் வருமாறு: இடபக் கொடியை உடையவனே ! என் விண்ணப்பத்தைக் கேட்பாயாக. விதி வசத்தால் கடைசி சாதியில் பிறக்கினும் நீ எனக்கு அருள் செய்யவேண்டும். புடைபடு கிங்கிணித்தாள் செய்ய பாதம் என்னுள் புகுமாறு செய்வாயாக என்பதாம்.
1055. புகவுகிர் வாளெயிற் றால்நிலம்
கீண்டு பொறிகலங்கி
மிகவுகு மாற்(கு)அரும் பாதத்த
னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற்
கங்கணன் என்றல்நன்றும்
தகவு கொலாம்தக வன்று
கொலாம்என்று சங்கிப்பனே.
தெளிவுரை : நகங்களாலும் பற்களாலும் நிலத்தைத் தோண்டி பொறி கலங்கி மிகவும் வருந்திய திருமாலுக்குக் காண்டற்கு அரிய திருவடிகளை உடையவனே, வியன் தில்லை தன்னுள், சந்திரனைத் தலை மாலையாகக் கொண்டவன் என்று கூறுதல் தகுதியாகும் என்றும் தகுதி ஆகாது என்றும் ஐயுறுவேன்.
1056. சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள்தலை
ஊர்வேள்வி சீர்உடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்(டு)
அழிந்தெரிந்(து) அற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே.
தெளிவுரை : எனது தலைவனும் அழகிய தில்லைக் கூத்தனுமாகிய சிவபெருமான் கடைக்கண் சிவந்ததனால் காமன் உடல் அழலாகி, தக்கன் வேள்வி அழிந்து, தானவர் ஊர் எரிந்து, நான்முகத்தோன் தலையும் இந்திரன் தோளும் அற்றன. இப்பாடலில் முதலில் எதிர் நிரல் நிறையும் பின்பு நேர் நிரல் நிறையும் வந்தன.
1057. ஏவுசெய் மேருத் தடக்கை
எழில்தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான்அன்றி
அங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல்
வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட்
டியதிறல் வேடுவனே.
தெளிவுரை : வில்லாகச் செய்த மேருவை உடைய விசாலமான கைகளை உடையவனும், எழில் தில்லை அம்பலத்து மேவி யிருக்கின்றவனுமாகிய பிரானை அன்றி மிக்கவர் யாருளர்? காவு செய் காளத்திக் கண்ணுதல், வாய்நீரால் திருமுழுக்குச் செய்த கண்ணப்ப நாயனாருக்கு வேண்டும் வரம்கொடுத்து, தெய்வமாக்கினார்.
1058. வேடன்என் றாள்வில் விசயற்கு
வெங்கணை அன்றளித்த
கோடன்என் றாள்குழைக் காதன்என்
றாள்இடக் காதில்இட்ட
தோடன்என் றாள்தொகு சீர்த்தில்லை
அம்பலத்(து) ஆடுகின்ற
சேடன்என் றாள்மங்கை அங்கைச்
சரிவளை சிந்தினவே.
தெளிவுரை : இது தோழி கூற்று: வேடன் என்று கூறிவந்து, ஆட்கொண்டருளி, அருச்சுனனுக்கு பாசுபத அத்திரத்தை அன்று அளித்த குறி சொல்பவன் என்றாள். காதில் குழையணிந்தவன் என்றாள். இடக்காதில் தோடு அணிந்தவன் என்றாள். தொகுசீர் தில்லை அம்பலத்து ஆடுகின்ற பெரியோன் என்றாள் என் மங்கை. அவளுடைய கைகளில் இருந்த வளைகள் சரிந்து விழுந்தன. காதல் வழிப்பட்டாள் என்பதாம்.
1059. சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம்
என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம்
மான்தன் அருள்பெறவே.
தெளிவுரை : சிந்திக்க மனமும், உரையாட வாயும், வந்திக்கக் கரமும் பெற்றிருந்தும் அன்பில்லாதவர் அவனைச் சந்திக்கிலர். நீர்வளமிக்க தில்லை அம்பலத்துள் அந்திவானம் போன்ற திருமேனியை உடைய எம்மான் தன் அருள் பெறவில்லையே என்று வருந்துகின்றார்.
1060. அருள்தரு சீர்த்தில்லை அம்பலத்
தான்தன் அருளின்அன்றிப்
பொருள்தரு வானத்(து) அரசாத
லின்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோன்அரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே.
தெளிவுரை : அருளைத் தருகின்ற சீர்தில்லை அம்பலத்தான் தன் அருள் அல்லாமல் பொருளைத் தருகின்ற தெய்வ லோக அரசைவிட புழுவாகப் பிறத்தல் நன்று. சுருளாகப் பொருந்திய சிவந்த சடையோன் அருளா விட்டால் துறவிக்கு நன்று ! இருளாகப் பொருந்தியுள்ள கீழ்ஏழ் நரகத்து வீழும் பெருஞ் சிறை !
இறைவன் அருளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பேன் என்கிறார்.
1061. சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்(து)
ஓடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோஅயன் மாலினொ(டு)
உம்பர்தம் நாயகற்கே.
தெளிவுரை : கரைகளையுடைய நீர்வளமுள்ள வயல் சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலத்து, பிளவு பட்டாற் போன்ற பிறைத் திங்களை அணிந்த சடையோனது திருநாமங்களைத் துதிக்க வருத்தம் கொண்டு திருநீறு அணிந்து கையில் ஓடு ஏந்திய ஞானிகளது மனத்தின்மை உள்ளதோ? பிரமன் திருமாலொடு தேவர்களின் நாயகற்கே. இறைவனை அடைய மனத்தின்மை வேண்டும் என்கிறார்.
1062. அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக்
கூத்த அடியம்இட்ட
முகிழ்சூழ் இலையும் முகைகளும்
ஏயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மாலை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூழ் இமையவர் போற்றித்
தொழும்நின் பூங்கழற்கே.
தெளிவுரை : அகழியால் சூழப்பட்ட மதில்களையுடைய தில்லை அம்பலக் கூத்தனே ! அடியார்களாகிய நாங்கள் இட்ட முகில்சூழ் இலையும் அரும்புகளும் பொருந்துமோ? கற்பகத்தின் திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் மனமுடையவராய்ப் புகழ்சூழ் தேவர்கள் வணங்கித் தொழும் நின் திருவடிகளுக்கு, இவ்விரண்டில் எது விருப்பமாகும் என்று வினவுகிறார்.
1063. பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப்
பொலிசெம்பொன் அம்பலத்து
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ
தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன்
பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும்
திருஅமிர்(து) ஆகியதே.
தெளிவுரை : பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகளையுடைய தில்லைச் சிற்றம்பலத்தில் மேவிய இறைவனையன்றி வேறு யாருக்கும் ஆட்செய்யமாட்டேன். விரித்த துணியின்மேல் குளிர்ந்த பழைய சோற்றை அன்பாகிய பண்டைப் பறைச்சேந்தன் கொடுக்க, அதுவும் உனக்கு அமிர்தமாகியது என்க.
1064. ஆகங் கனகனைக் கீறிய
கோளரிக்(கு) அஞ்சிவிண்ணோர்
பாகங் கனகுழை யாய்அரு
ளாயெனத் தில்லைப்பிரான்
வேகந் தருஞ்சிம்புள் விட்டரி
வெங்கதஞ் செற்றிலனேல்
மோங் கலந்தன்(று) உலந்ததன்
றோஇந்த மூவுலகே.
தெளிவுரை : இரணியனைச் சங்காரம் செய்த நரசிங்க மூர்த்திக்குப் பயந்து தேவர்கள், உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டவனே ! அருள் செய்வாயாக என வேண்ட, தில்லைப் பிரான் வேகந்தரும் சரப்பறவையாகச் சென்று அரியின் கோபத்தை அழித்திராவிட்டால், இந்த மூவுலகும் மோகம் கலந்து அழிந்து போயிருக்கும்.
1065. மூவுல கத்தவர் ஏத்தித்
தொழுதில்லை முக்கட்பிராற்(கு)
ஏவு தொழில்செய்யப் பெற்றவர்
யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட்(டு) எடுத்தனன்
மால்அயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன்
மாமிக்க வேதங்களே.
தெளிவுரை : மூன்று உலகத்தவர்களும் ஏத்தித் தொழுகின்ற தில்லை முக்கட் பிராற்கு, தொண்டு செய்யப் பெற்றவர்கள் யார் என்றால் அழகிய காளையை உடையாய் ! வேதங்கள் குதிரைகளாகவும் பிரமன் சாரதியாகவும் திருமால் தொண்டு செய்யவும் திரிபுரங்களை அழிக்கச் சென்றபோது பங்கு கொண்டவர்கள் என்கிறார்.
1066. வேதகச் சிந்தை விரும்பிய
வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்செய
வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள்
அரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்னயன்
தந்த தலைமகனே.
தெளிவுரை : வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்துள் சிறப்புடன் கோயில் கொண்டிருக்கும் இறைவன், சேயவன் வீரணக்குடியில் யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக் கொண்டவன்; புள்ளிகளையுடைய ஒளி தங்கிய பாம்பை அணிந்தவன்; பொங்கு சினச் சாதகர் பெண் பிளைதன் ஐயன் தந்த தலைமகனே.
1067. தலையவன் பின்னவன் தாய்தந்தை
இந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந்
தோன்நடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்
ஆலத்தெழு கொழுந்தின்
இலையவன் காண்டற்(கு) அருந்தில்லை
அம்பலத் துள்இறையே.
தெளிவுரை : தலையவன், பின்னவன், இந்தப் பூமிக்குத் தாய் தந்தையாக உள்ளவன். நிலையான துன்பங்களை நீக்கும் தொழிலைப் புரிந்தவன்; நடுவாகி நின்ற கொலைத் தொழிலையுடைய வலிய சூலப்படையை உடையவன். ஆலமரத்தின் கொழுந்து இலையில் பள்ளி கொண்ட திருமால் தேடியும் காண முடியாதவன்; தில்லையம்பலத்துள் கோயில் கொண்டிருக்கும் இறைவன்.
1068. இறையும் தெளிகிலர் கண்டும்
எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு
ளால்அன்(று) அடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ
ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ
னும்புக்க நல்வழியே.
தெளிவுரை : சிறிதும் அறிகின்றிலர்; பார்த்திருந்தும் அழகிய தில்லை அம்பலத்துள் கங்கையை முடியில் சூடிய இறைவனது அருளால் அன்று வெள்ளானைமேல் நிறையும் புகழ் சுந்தரமூர்த்தி நாயனாரும், நிறைதார் குதிரையின்மேல் மணமுள்ள மலர் மாலையணிந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சென்ற நல்வழியே. (நல்வழியைச் சிறிதும் சிந்திக்கின்றிலர் என முடிக்க.)
1069. நல்வழி நின்றார் பகைநன்று
நொய்யர் உறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு
சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர்எரித்
தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின்(று) அளித்தனன்
காண்க சிவகதியே.
தெளிவுரை : நல்வழியில் நிற்பவரின் பகை நன்மையை உண்டாக்கும். இழிந்தோர் உறவில் துன்பமே தோன்றும் என்பதை யாம் சொல்வழி கண்டனம். தொகுசீர்த் தில்லை அம்பலத்து வில்வழி திரிபுரங்களை எரித்தோன் வியன் சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்ட வழி நன்மையாயிற்று என்பதைக் காண்க. சிவகதிக்கு உண்மை அன்பே தேவை என்க.
1070. கதியே அடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர்
தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே.
தெளிவுரை : அடியவர்களின் புகலிடமே ! வறுமைக் காலத்துக்கு ஏற்ற செல்வமே ! நிமிர்ந்த புன் சடை அமிர்தே ! உன்னை என்னுள் வைத்த மதியே ! வளர்தில்லை அம்பலத்தாய் ! மகிழ்கின்ற உமா தேவியின் கணவனே ! கொடியவனாகிய நான் இதுவரை செய்த பல பிழைகளைப் பொறுத்தருளாய்.
1071. பிழையா யினவே பெருக்கிநின்
பெய்கழற்(கு) அன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய்தில்லை
நாத பொறுத்தருளே.
தெளிவுரை : தவறான காரியங்களையே மிகுதியாகச் செய்து உன்னுடைய திருவடிகளுக்கு அன்பு செய்யாத என்னையும் கங்கையின் நீர்த்திவலையையும் முழையார் தரு தலை மாலையையும் முடித்த முழுமுதலே ! துளை பொருந்திய துதிக்கையை உடைய யானையை உரித்தவனே ! தில்லை நாயகனே ! பொறுத்தருள்வாயாக !
1072. பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப்
பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப்
பிரான்அத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத்
தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக்(கு)
என்கொல் அடுப்பனவே.
தெளிவுரை : இவற்றை யெல்லாம் செய்யாவிட்டால் தேவர்களுக்கு என்ன அபாயங்கள் வந்திருக்குமோ என்று கேட்கின்றார்? நம் தில்லை பிரான் பொறுத்திரா விட்டாலும், ஆலகால விடத்தை பொங்கி தீப்போல் வெங்கதத்தைக் குடித்திராவிட்டாலும், திரிபுரங்களைச் சினந்து எரிக்காமல் இருந்தாலும், தாமரை மலரோனாகிய பிரமனது முடியை அறுத்திரா விட்டாலும் தேவர்களுக்கு என்ன தீங்கு நேர்திருக்கும்?
1073. அடுக்கிய சீலைய ராய்அகல்
ஏந்தித் தசைஎலும்பில்
ஒடுக்கிய மேனியோ(டு) ஊண்இரப்
பார்ஒள் இரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்தன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே.
தெளிவுரை : ஒளி பொருந்திய இரணியனை நடுங்கச் செய்த பெரிய நரசிங்கனை சரபப் பறவையாக வந்து கதறுமாறு நெருக்கிப் பிடித்தவனது தில்லையம் பதியைத் தொழாத அறிவில்லாதவர் அடுக்கிய சீலையராய், பிச்சை பாத்திரத்தை ஏந்தி, தசை எலும்பில் ஒடுக்கிய மேனியோடு பிச்சை யெடுத்துக் காலங்கழிப்பர் என்றபடி. (இறைவனை வழிபடாதவர் நிலை இது என்க)
1074. ஏழையென் புன்மை கருதா(து)
இடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே
மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க
வளர்தில்லை அம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி
மேல்வைத்த புண்ணியனே.
தெளிவுரை : மாவடு போன்ற கண்களையுடைய உமாதேவியை இடப்பக்கத்தில் கொண்டவனே ! வளர் தில்லை அம்பலத்துள் பிறைச் சந்திரனைச் சடைமுடியில் வைத்த புண்ணியனே ! ஏழையேனது துன்பத்தைக் கருதாமல், இடையறாத அன்பு கொண்டு உன் பாத மலர்களை அடைய அருள் செய்வாயாக.
1075. புண்ணிய னேஎன்று போற்றி
செயாது புலன்வழியே
நண்ணிய னேற்(கு)இனி யாதுகொ
லாம்புகல் என்னுள்வந்திட்(டு)
அண்ணிய னேதில்லை அம்பல
வாஅலர் திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன்
வெளுப்பக் கறுத்தவனே.
தெளிவுரை : புண்ணியனே என்று உன்னைப் போற்றாமல் புலன் வழியே பொருந்தியவனாகிய எனக்குப் புகலிடம் யாது? என்னுள் வந்து நெருங்கியவனே ! தில்லை அம்பலவா ! அலர் திங்களைத் தலை மாலையில் வைத்துள்ளவனே ! மன்மதன் வெந்து நீறாகச் சினந்தவனே.
என்னை நல்வழிப் படுத்துவது உன் பாரமாகும்.
1076. கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ
பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ
வருஞ்சொல் அரும்பழியே.
தெளிவுரை : நீல கண்டனே ! தேவர்களுக்குத் தலைவனே ! வருபுனல் கங்கையச் சடையில் செறிய வைத்த சிந்தா மணியே? தில்லையில் எழுந்தருளியிருப்பவனே ! என்னைத் தீவினைகள் துன்புறுத்துவதைக் கண்டால் வெளியார் சிரிக்க மாட்டார்களா ? என்னை வருத்தும் துயரைப் போக்கி யொழித்தல் செய்யாவிடின் அரும்பழி உனக்கல்லவா? ஆகவே விரைந்து ஆவன செய்வாயாக.
1077. பழித்தக் கவும்இக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
பழித்திட்(டு) இறைச்சி கலையன்
அளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீர்அதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க என்னா(து) அமிர்துசெய்
தான்என்(று) இயம்புவரே.
தெளிவுரை : தில்லையான் கேவலமானவற்றையும் குறைவாகக் கருதமாட்டான். முன்பு (வேடுவர்) கண்ணப்ப நாயனார் இறைச்சியை இலையில் கொண்டு வந்து படைத்தபோதும், அதி பத்த நாயனார் (செம்படவர்) தான் பிடித்த மீன் முழுவதையும், அவை இழிவானவை என்று கருதாமல் கொடுத்ததையும் மகிழ்ந்து உண்டாய் என்று சொல்கிறார்களே !
இறைவன் அன்பிற்குக் கட்டுப்பட்டவன் என்கிறார்.
1078. வரந்தரு மா(று)இதன் மேலும்உண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற என்னையும்
மெய்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மைஇதே.
தெளிவுரை : வரந்தருமாறு இதன் மேலும் உண்டோ? வயல்கள் சூழ்ந்த தில்லை தன்னுள் இந்திரன், திருமால் ஆகியோர் தொழ நின்ற பிரான் புலைப் பொய்ம்மையில் நிரந்தரமாய் நின்ற என்னையும் உண்மையாகவே தன்னுடைய அடியார்களின் மேன்மை உயருமாறு செல்வத்துள் ஆழ்த்தினான். இது சொல்லும் தரமுடியதோ.
இறைவன் சோதனையை வியக்கின்றார்.
1079. தன்தாள் தரித்தார் இயாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடைஉடையோன்
மன்றாட வும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கிஅங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர்அந்
தோசில ஊமர்களே.
தெளிவுரை : தன் பாதங்களைப் புகலிடமாகக் கொண்ட எல்லார்க்கும் இனி மீளாத வழி தரும் பொருட்டு, உயர்ந்த மதில்களை உடைய தில்லை மூதூர் கொடிமேல் காளையை எழுதியுள்ளவன் நடனமாட, அவன் பாதங்களை வணங்கி அங்கே நிலைத்திராதவர் பிறப்பு இறப்பு என்னும் இரண்டில் விழுவர். ஐயோ இது இந்த ஊர்மக்களுக்குத் தெரியவில்லையே என்று இரங்குகின்றார்.
1080. களைகண் இலாமையும் தன்பொற்
கழல்துணை யாம்தன்மையும்
துளைகள் நிலாம்முகக் கைக்கரிப்
போர்வைச் சுரம்நினையான்
தளைகள் நிலாமலர்க் கொன்றையன்
தண்புலி யூர(து)என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும்
அநங்கன் வரிசிலையே.
தெளிவுரை : இது தலைவி கூற்று: பற்றுக்கோடு இல்லாமையும், உன் பொற்கழல் துணையாம் தன்மையும் யானைப் போர்வையை உடையான் என்னைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கின்றான். தளைகள் நிலா மலர்க் கொன்றையன் குளிர்ந்த தில்லையில் உள்ளது என்றேன். கைவளைகள் கையில் நிற்காதவாறு மன்மதன் தனது வில்லை வளைத்து அம்பு எய்கின்றான். இவளது காதல் நோயை இறைவன் கவனிக்கவில்லையே என்று வருந்துகின்றாள்.
1081. வரித்தடந் திண்சிலை மன்மதன்
ஆதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மகன் என்பதோர்
பொற்பும் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே.
தெளிவுரை : வரிந்து கட்டப்பட்ட திண் சிலையை யுடைய மன்மதன் ஆதலும் சக்கரத்தை ஏந்திய திருமாலின் மகன் என்பதோர் அழகும் தவநெறிகள் தெரிந் தெடுத்தவன் தில்லையுள் சிற்றம்பலவன் திருப்புருவம் வளைதலும் கண்டது திருநீறேயன்றி நிலை பெற்றிருக்கவில்லை.
இவைகளினால் அழிவே நேரும் என்பதாம்.
1082. நின்றில வேவிச யன்னொடும்
சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநடம் ஆடும்
பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச்
சரங்கொண்(டு) இழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந்(து)
ஆர்த்த கரியவனே.
தெளிவுரை : கிருஷ்ணாவதாரத்தில் தன்னைக் கொல்லவந்த கன்றினை விளாமரத்தின் மீது எறிந்து கொன்றான். அத்தகைய கண்ணன் அருச்சுனன் உடன் கைலைக்குச் சென்று பாசுபதக் கணையைப் பெற்றுக் கொண்டு வந்தான். அத்தகைய சிறப்பு கொண்ட சிவபெருமான் தென் தில்லையில் நடனமாடுகின்றான் என்கிறார்.
தலையால் நடந்தேறியதால் மழை தாழ்ந்தது என்பது புராணக்கதை.
1083. கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ(டு) உள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை என்னைவந்(து)
ஆண்டதும் எவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
ஆடல் புரிந்தவனே.
தெளிவுரை : மலை வடிவத்தைக் கொண்ட மதில்களை உடைய தில்லையில் நடனம் புரிந்தவன் கரும்பின் இனிமையை உடைய அழகிய சொற்களைக் கேட்டதும் கண்களில் நீர் வடியவில்லை. விருப்பத்தோடு உள்ளம் உருகேன். உடம்பு நடுங்கவில்லை. இரும்பின் வடிவம் கொண்ட சிந்தை என்னை வந்து ஆண்டதும் எப்படியோ, நான் அறியேன்.
1084. புரிந்தஅன் பின்றியும் பொய்ம்மையி
லேயும் திசைவழியே
விரிந்தகங் கைமலர் சென்னியில்
கூப்பில் வியநமனார்
பரிந்தவன் ஊர்புகல் இல்லை
பதிமூன்(று) எரியஅம்பு
தெரிந்தஎங் கோன்தன் திரையார்
புனல்வயல் சேண்தில்லையே.
தெளிவுரை : விரும்பிய அன்பு இல்லாமலும், பொய்மையோடும், திசை வழியே, கங்கை மலர் தலையில் முறையீடு இல்லாத யமனை, அழித்தவன் ஊர் எது வென்றால் திரிபுரங்கள் எரிய அம்பு எய்த எங்கள் தலைவன் இருக்கும் தண்ணீர் பொருந்திய வயல்களை உடைய தில்லையே என்பதாம்.
1085. சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டும்அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
ஆங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை இன்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னைஎன் செய்திட
வோசிந்தை நீவிளம்பே.
தெளிவுரை : மனமே ! நீண்ட தில்லை மாநகர் தெய்வத் தன்மை பொருந்திய திருக்கூத்து ஆடுபவனைப் பார்த்த பிறகும் அன்பு கொள்ளவில்லை. உன்னை மறந்திலை. அங்கு அவனுடைய அழகிய திருவடிகளுக்கு ஐக்கியமாகவில்லை. இன்னமும் புலன் வழியே சென்று வாழ வேண்டுமென்று திரும்பிவிட்டாய். என்னை என்ன செய்யச் சொல்கிறாய்; சொல்வாயாக.
1086. விளவைத் தளர்வித்த விண்டுவும்
தாமரை மேல்அயனும்
அளவிற்(கு) அறியா வகைநின்ற
அன்றும் அடுக்கல்பெற்ற
தளர்விற் றிருநகை யாளும்நின்
பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட
வார்சடைக் கங்கையனே.
தெளிவுரை : கண்ணனாக அவதரித்தபோது கன்றை விளாமரத்தின் மீது வீசிய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அறிய முடியாத வகையில் நின்ற அப்போதும் உமா தேவியார் உன் இடப் பாகத்தில் இருந்தார் போலும். குளிர்ந்த தில்லையம் பதியில் களாப்பழம் போன்ற நிறமுடைய நீல கண்டனே ! நீண்ட சடையில் கங்கையை வைத்திருப்பவனே !
1087. கங்கை வலம்இடம் பூவலம்
குண்டலம் தோடிடப்பால்
தங்கும் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்கம் இடம்வலம் தோலிடம்
ஆடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன்
வலங்காண் இடம்அணங்கே.
தெளிவுரை :  அர்த்த நாரீஸ்வர வடிவத்தைப் புகழ்கிறார். வலப்பக்கத்தில் கங்கை; இடப்பக்கத்தில் பூ; வலப்பக்கத்தில் குண்டலம்; இடப்பக்கம் தோடு; தங்கும் கரம் வலம்; வெம்மழு இடம்; பாந்தள்வலம்; சங்கம் இடம்; வலப்பக்கம் தோல்; இடம் ஆடை; வலம் எலும்புமாலை; இடம் அங்கம் அம்பலவன் வலம்; அணங்கு இடம்.
இறைவன் வலப்பாகம் ஆணாகவும் இடப்பாகம் பெண்ணாகவும் உள்ளான் என்கிறார்.
1088. அணங்கா டகக்குன்ற மாதற
வாட்டிய வாலமர்ந்தாட்(கு)
இணங்கா யவன்தில்லை எல்லை
மிதித்தலும் என்புருகா
வணங்கா வழுத்தா விழாவெழும்
பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவள்என்ன என்றுகொ
லாம்வந்து கூடுவதே.
தெளிவுரை : வெறியாடுதல் போன்ற ஆதரவு காட்டியவளுக்கு இணங்கமாட்டாய். அவன் தில்லையை மிதித்தலும், என்புருகி, வணங்கி, வழுத்தி, விழுந்தெழும் பாவையின் காதற் குணங்களைக் காண். எப்பொழுது வந்து அவளைச் சேர்வது. அவள் உன் நினைவாகவே உள்ளாள் என்பதாம்.
அணங்கு ஆடு அகக்குன்றம் ஆதரவு ஆட்டிய ஆல் அமர்ந்தாட்கு இணங்காய் அவன் எனப் பிரிக்க.
1089. கூடுவ(து) அம்பலக் கூத்தன்
அடியார் குழுவுதொறும்
தேடுவ(து) ஆங்கவன் ஆக்கம்அச்
செவ்வழி அவ்வழியே
ஓடுவ(து) உள்ளத்(து) இருத்துவ(து)
ஒண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல்
லோர்செய்யும் வித்தகமே.
தெளிவுரை : தில்லை அம்பலக் கூத்தனது அடியார்கள் குழுவு தொறும் கூடுவது. தேடுவது அவனது செல்வமாகிய வாழ்த்து. அவ்வாறு செல்வதே நல்வழி என்று ஓடுவது. உள்ளத்து இருத்துவது ஒண் சுடரை. பிறவித் துன்பத்தை ஒழிப்பதற்கு உன்னை யல்லாமல் வேறு யாரால் இந்த வித்தகத்தைச் செய்ய முடியும்?
1090. வித்தகச் செஞ்சடை வெண்மதிக்
கார்நிறக் கண்டத்தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை
மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும்
திறத்தா கமிகர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக்(கு) எங்கித்த
தோஅரன் பொன்னடியே.
தெளிவுரை : புதுமையான செஞ்சடை, வெண்மதி, கறுத்த கழுத்து, எட்டுத் தோள்கள், மதங்கொண்ட யானையின் தோல் இவரது போர்வை. உயர்ந்த மதில்களை உடைய தில்லை வாணனது சித்தகக் கோயிலில் இருத்தும் திறம் உடையவர்கள் ஆகம நூல் உணர்வு உடையவர்கள். அரனுடைய பொன்னடி எங்கே உள்ளது என்பது புத்தகப் பேய்களுக்கு தெரியுமோ?
1091. பொன்னம் பலத்துறை புண்ணியன்
என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற்(கு) அன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந்(து) ஈரறு
வேலிகொண்(டு) ஆங்கவற்கே
பின்னும் மழைதவிர்த்(து) ஈரறு
வேலிகொள் பிஞ்ஞகனே.
தெளிவுரை : ஏயர்கோன் கலிக்காம நாயனார் வரலாறு இதில் கூறப்படுகிறது. பொன்னம்பலத்துறை புண்ணியன் மழை பெய்யாமல் பஞ்சம் நேர்ந்த சமயத்தில் நல்ல மழை பெய்வித்து, பன்னிரண்டு வேலி கொண்டு ஆங்கு அவற்கு உதவி, பின்னும் மழை பெய்யாமல் தவிர்ந்து அந்த நிலங்களைக் கொண்டு அந்த அடியாரைச் சோதித்தார் நம் சிவபெருமான்.
1092. நேசன்அல் லேன்நினை யேன்வினை
தீர்க்கும் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்(டு)இறைஞ்
சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானைபொன் னார்திருச்
சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப்(பு) என்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே.
தெளிவுரை : உனக்கு நான் அன்பு உடையவனாக இருக்க வில்லையே ! ?உன்னை நினைக்கவில்லையே ! பிறவித் துன்பங்களைப் போக்கும் உன் திருவடிகளின்கீழ் மணமுள்ள மலர்களை அருச்சித்து வணங்க வில்லையே ! என் வாயினால் ஒளி மயமானவன் என்றும் பொன்னார் திருச்சிற்றம்பலத்தில் உள்ள ஈசன் என்றும் துதிக்கவில்லையே ! இந்தப் பிறவி எப்படிக் கழியுமோ தெரியவில்லையே என்று வருந்துகிறார்.
1093. தனந்தலை சக்கரம் வானத்
தலைமை குபேரன்தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா
சவன்உயிர் பல்லுடல்ஊர்
சினந்தலை காலன் பகல்காமன்
தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்அரு ளால்முனி
வால்பெற்(று) இகந்தவரே.
தெளிவுரை : தனத்தைக் குபேரனும், தலையைத் தக்கனும், சக்கரத்தைத் திருமாலும், வானத் தலைமையை இந்திரனும் தில்லையான் அருளால் பெற்றார்கள். உயிரைக் காலனும், பல்லைக் கதிரவனும், உடலைக் காமனும், ஊரைத் தானவரும் தில்லையான் முனிவால் இழந்தனர்.
1094. அவமதித்(து) ஆழ்நர கத்தில்
இடப்படும் ஆதர்களும்
தவமதித்(து) ஒப்பிலா என்னவிண்
ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம்
பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும்
நினைந்திட்ட செல்வருமே.
தெளிவுரை : நவநிதித் தில்லையுள் சிற்றம்பலத்து நடம் பயிலும் சிவநிதிக்கே நினைக்காதவர் அவமதித்து ஆழ்நரகத்தில் இடப்படும் ஆதர்கள். தவமதித்து ஒப்பிலர் என்ன விண் ஆளும் தகைமையோர் அந்த இறைவனை நினைந்திட்ட செல்வர் எனக் கொள்க.
1095. வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே.
தெளிவுரை : வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை, வண் தில்லை மன்னை, திருவாதவூர் அடிகளாகிய மாணிக்க வாசகர் செய்ய திருச்சிற்றம்பலக் கோவை என்னும் நூலைக் கண்ட பிறகும் அதன் பொருளைத் தெளிந்து கொள்ளாத மனமுடையவர்கள் கவிபாடி சிரிப்புக்கு ஆளாவார்கள். இகழப் படுவார்கள் என்பதாம்.
1096. சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச்
சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரிந்திட்ட வாதில்லைச் சிற்றம்
பலத்துத் திருநடனே.
தெளிவுரை : ஒளி வீசுகின்ற செம்பவளத்தின் திரளும், செஞ்சடை மேல் விரித்திட்ட பசிய கதிர்களை உடைய திங்களும் சினத்தை உடைய பாம்பும் தீயை ஏந்தியுள்ள கையும் சங்கச் சுருளும் என் நெஞ்சில் தெளிய வைத்தவனே ! தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடனம் செய்யும் இறைவனே !
1097. நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி(வு)
என்செயும் காமன்அன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக்
குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர்
வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலன்அந் நாள்நின்(று)
உதையுணா வீட்டனனே.
தெளிவுரை : எதிர்மறையாகச் சொல்லினும் குறிப்பினால் காமன் எரிந்தனன் என்பது முதலாகக் கொள்க. உதையுணா-உதையுண்ணுதல். நடஞ்செய்கின்ற சிற்றம்பலத்தானது கோபம் என்செய்யும் என்றால் காமன், அன்று மிகுந்த கோபத்தினால், இறைவனது நெற்றிக் கண்ணால் எரிந்து சாம்பலாயினன். திரிபுராதிகளின் முப்புரங்கள் எரிந்தன. மிகுந்த கோபத்தையுடைய இயமன் உதையுண்டு அழிந்தான்.
1098. விட்டங்(கு) ஒளிமணிப் பூண்திகழ்
வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியநல் லான்அல்லன்
அம்பலத்(து) எம்பரன்மேல்
கட்டங் கியகணை எய்தலும்
தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று
பார்க்கப் பொடிந்தனனே.
தெளிவுரை : ஒளிமயமான ஆபரணங்களை அணிந்த மன்மதன், உண்மையைச் சொல்வதென்றால், அவன் நல்லவன் அல்லன். அம்பலத்து எம் பெருமான் மீது கள் தங்கிய கணையாகிய மலரம்புகளை எய்தான். தன்னைக் கருடப் பறவைமேல் தங்கிய திருமாலின் மகன் என்றும் சொல்லிக் கொண்ட அவன் எரிந்து சாம்பலாயினான்.
1099. பொடியேர் தருமே னியனாகிப்
பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு
கோயிற் கருவியில்லா
வடியே படஅமை யுங்கணை
என்ற வரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத்(து)
ஆடிதன் மொய்கழலே.
தெளிவுரை : திருநீறு பூசிய அழகைக் கொடுக்கின்ற உடலை உடையவன், போர் ஒடுங்குகின்ற பாதங்களுக்கு மிகுதியாகக் குவிந்துள்ள அம்புகளைக் கண்டு கோயிற் கருவியில்லா வடியே பட அமையும் கணை என்ற வரகுண பாண்டியன்தன் முடியேதரு கழல் அம்பலத்து ஆடிதன் மொய்கழலே. வரகுண பாண்டியனின் உண்மை அன்பு விளக்கப் படுகிறது. அவன் சிறந்த சிவபக்தன்.
1100. கழலும் பசுபாச ராம்இமை
யோர்தங் கழல்பணிந்திட்(டு)
அழலும் இருக்கும் தருக்குடை
யோரிடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித்(து)
ஆடிசிற் றம்பலத்தைச்
சுழலும் ஒருகால் இருகால்
வரவல்ல தோன்றல்களே.
தெளிவுரை : இறைவனின் திருப்பாதங்களைப் பணியும் தேவர்களின் பாதங்களைப் பணிந்து அழுதலும் அதைக் கவனியாது செம்மாந்து இருக்கும் தருக்குடையார் இடப்பால், வலப்பாலில் தீயும், உடுக்கையும் பிடித்து ஆடிச் சிற்றம்பலத்தைச் சுழலும் ஒருகால். இருமுறை வரவல்ல தருக்குடையோர்கள் என்பதாம். இறைவனை வழிபடாமல் பிற தெய்வங்களை வணங்குவோர் துன்புறுவர் என்றபடி.
1101. தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சாரெரி
யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்தலை யான்பால் அதுகலந்
தால்அன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே.
தெளிவுரை : தலைவனை, வெண்மதி தாங்கியை, துள்ளிய திருமாலுக்கும் அயனுக்கும் அரிய மாட்டாதவனை (அதாவது திருமால் பாதத்தையும், பிரமன் முடியையும் காண்பதற் கியலாதவாறு பெரும் தீப்பிழம்பாய் ஆயினான்) தன்னைத் தலைவனாய் ஏற்றுக் கொண்டவர்களுக்குத் தேனும் பாலும் கலந்தது போன்ற சிறப்புடையவனை, கங்கையைத் தலையில் வைத்துள்ள நாதனைக் காண்பது எப்போது? அதாவது தில்லையில் தரிசிப்பது எப்போது என்கிறார்.
1102. மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைந்குந்தி நாடக
மாடக்கொல் வெண்டரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேலடை
யாவிட்ட கைதவமே.
தெளிவுரை : திருஆலங்காடு (இரத்தின சபை) நடனத்தைக் குறிக்கின்றார். தில்லையம்பலத்தில் நடனமாடும் பெருமானே ? திருஆலங்காட்டில் மின்னலைப் போன்ற இடையினை யுடைய துர்க்கை (காளிகா தேவி) யோடு நடனமாடியபோது கங்கையாளையும் பாம்பையும் வெளியேறவிட்டது கபடமாகும்.
1103. தவனைத் தவத்தவர்க்(கு) அன்பனைத்
தன்னடி யெற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்
தைச்சிவந் தானைச்செய்ய
அவனைத் தவளத் திருநீ
றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை
வல்வினை பற்றறவே.
தெளிவுரை : தவத்தை உடையவனை, தவசிகளுக்கு அன்பனை, தன் அடியவர்க்கு உதவும் சிவனை, முப்புரங்களை எரித்தவனை, செந்நிறமுடையவனை, வெள்ளிய திருநீறு அணிந்தவனை, கங்கையைச் சடையில் மறைத்து வைத்திருக்கும் சிவனைப் பணியுங்கள். உங்களுடைய முன் வினைகள் எல்லாம் நீங்குமாறு பணியுங்கள் என்று அறவுரை கூறுகின்றார்.
1104. பற்றற முப்புரம் வெந்தது
பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலின்
நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புகழ் ஏத்தித்
திரிவது சூழ்சடையோய்
புற்றர(வு) ஆட்டித் திரியும்
அதுவொரு புல்லனவே.
தெளிவுரை : முப்புரங்கள் முழுவதும் வெந்து போனது, பசிய சோலைகள் சூழ்ந்த தில்லையில் பகையில்லாத பொன்னம்பலம் தன்னுள் நின்றது, தேவர் கூட்டம் சுற்றியிருந்து உன்னுடைய புகழை ஏந்தித் திரிவது சூழ்ந்த சடையை உடையோய் புற்றில் வாழும் தன்மையுள்ள பாம்பை ஆட்டித் திரிவது ஆகிய இவை யாவும் அற்பமானவை என்பதாம்.
1105. புல்லறி வின்மற்றைத் தேவரும்
பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணிய
னைப்போல் அருளுவரே
கல்லெறிந் தானும்தன் வாய்நீர்
கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா
வழிசென்று நண்ணினரே.
தெளிவுரை : சிற்றறிவினால் மற்றைத் தேவரும் அழகிய சிதம்பரத்தில் நின்ற இருளைப் போக்கும் திங்களாகிய மாலையை அணிந்தவனைப்போல் அருளுவர். கல்லெறிந்த சாக்கிய நாயனாரும், தன்வாய் நீரை உன் தலைமீது உகுத்த நல்லறிவாளனாகிய கண்ணப்ப நாயனாரும் முத்தியை அடைந்து உயர்ந்தனர்.
1106. நண்ணிய தீவினை நாசஞ்
செலுத்தி நமனுலகத்(து)
எண்ணினை நீக்கி இமையோர்
உலகத்(து) இருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம்
பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை
யாரத் தொழுமின்களே.
தெளிவுரை : வந்து சேர்ந்துள்ள தீவினைகளை நாசம் செய்து, நமன் உலகத்திற்குச் செல்வதைத் தடுத்து, தேவர்கள் உலகத்தில் இருப்பதற்கு எண்ணுகிறவர்களே ! உமா தேவியாரை இடப் பாகத்தில் வைத்திருப்பவன் சிற்றம் பலத்தில் பெரு நடனத்தைக் கண்கள் இரண்டும் நன்றாகப் பொருந்தத் தொழுவீர்களாக !
1107. கைச்செல்வம் எய்திட லாமென்று
பின்சென்று கண்குழித்தல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்
கேஎன்றும் பொன்றில்இல்லா
அச்செல்வம் எய்திட வேண்டுதி
யேல்தில்லை அம்பலத்துள்
இச்செல்வன் பாதம் கருதிரந்
தேன்உன்னை என்நெஞ்சமே.
தெளிவுரை : என் நெஞ்சமே ! உடனடியாகக் கையிலே கிடைக்கிற செல்வத்தை எய்திடலாமென்று, பொய்ச் செல்வர் செய்திடும் புன்மை கட்கு மாறாக, என்றும் அழிதல் இல்லாத அச்செல்வத்தை அடைவதற்கு விரும்பினால் தில்லையம்பலவாணன் பாதம் கருதி உன்னை யாசிக்கின்றேன்.
திருச்சிற்றம்பலம்
33. திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்தது)
திருவாரூரில் திருக்கோயில் கொண்டருளிய சிவபெருமான், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாடி அடியார்களைப் போற்றினார். திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் திருவருளைப் பெற்ற நம்பியாண்டார் நம்பி, மேற்படி பிள்ளையாரின் திருவருளால் திருத்தொண்டத் தொகையை விரித்து அத் தொகையை முதனூலாகக் கொண்டு இவ் அந்தாதியை வழிநூலாகப் பாடினார். சேக்கிழார் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குவது இவ் அந்தாதியே.
இத் திருவந்தாதியின்கண் தேவாரம் பாடிய மூவரும், தனியடியார் அறுபதின்மரும் ஒன்பது, திருக் கூட்டத்தாரும் ஆகிய திருத்தொண்டர்களுக்குரிய ஊர், நாடு, மரபு முதலியவைகளும் அவர்கள் மேற்கொண்டொழுகிய திருத்தொண்டின் நெறியும் அதனால் அவர்கள் பெற்ற பேறும் கூறப்பட்டுள்ளன. இவ் அந்தாதி எண்பத்தொன்பது கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டதாக விளங்குகிறது.
திருத் தொண்டத் தொகை திருப்பதிகத்திலுள்ள பதினொரு பாடல்களிலும் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே என, நம்பியாரூரர் தம்மைத் தொண்டருக்குத் தொண்டராகக் குறிப்பிடுகின்றார். இப்பதினோரிடங்களிலும் சுந்தரர் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பதினோரு பாடல்கள் இத் திருவந்தாதியில் முறையே அமைந்துள்ளன.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சேரமான் பெருமாள், கோச்செங்கட் சோழர் ஆகிய பெருமக்களின் வரலாறுகள் இரண்டிரண்டு பாடல்களிலும், ஏனையப் பெருமக்களின் வரலாறுகள் ஒவ்வொரு பாடலிலும் குறித்துப் போற்றப் பெற்றன. திருத்தொண்டத் தொகையில் போற்றப் பெறும் தனியடியார் தொகையடியார் இத்துணையர் என்பதை ஒரு பாடலிலும், அத் திருப்பதிகத்திலுள்ள பாடல்களின் முதற் குறிப்பினை ஒரு பாடலிலும், இத் திருவந்தாதியை ஓதுதலால் வரும் பயனை ஒரு பாடலிலும் கூறி நம்பியாண்டார் நம்பிகள் இத் திரு அந்தாதியினை நிறைவு செய்துள்ளார்.
திருச்சிற்றம்பலம்
1108. பொன்னி வடகரை சேர்நாரை
யூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்கும்அந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத்துணை துணையே.
தெளிவுரை : காவேரியின் வடகரையிலுள்ள திருநாரையூரில் கோயில் கொண்டிருக்கும் துளையுள்ள தும்பிக்கையையுள்ள பொல்லாப் பிள்ளையார் அறுபத்து மூன்று நாயன்மார்களது ஊரும், தேசமும், குலமும், செயல்களும் சொல்ல, அந்தத் திருத்தொண்டத் தொகையின் வகையாகப் பெருகும் இந்தத் திருத்தொண்டர் திரு அந்தாதியினைச் சொன்ன வேதியர் குல நம்பியாண்டார் நம்பிகளின் பொற்பாதங்கள் நமக்குத் துணையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக