செவ்வாய், 8 நவம்பர், 2011

மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்


ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011 

12 திருமுறைகள்

மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க     
http://temple.dinamalar.com/


மூன்றாம் திருமறை
மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்



302. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
466. வெந்த குங்கி லியப்புகை விம்மவே
கந்த நின்றுல வும்கழிப் பாலையார்
அந்த மும்அள வும்அறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே.
தெளிவுரை :  குங்கிலியப் புகையின் நறுமணம் பெருகும் கழிப்பாலையில் வீற்றிருக்கும் ஈசன், அந்தம் இல்லாதவர்; அளவிட்டுச் சொல்ல முடியாத பண்பினர்; அப் பெருமானின் சிறப்பு அவர் மேவும் சாந்தமேயாகும்.
467. வான் இலங்க விளங்கும் இளம்பிறை
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும்கழிப் பாலையார்
மான லம்மட நோக்குடை யாளொடே
தெளிவுரை : வானத்தில் விளங்குகின்ற இளம் பிறைச் சந்திரனை மாலையாக விரும்பிய, என்னுடைய தலைவனாகிய சிவபெருமான், கடற்கரைச் சோலை திகழ மேவும் கழிப்பாலையில் வீற்றிருப்பவர். அப்பெருமான், மன்னுயிர்களுக்குச் சிறப்பான நலங்களை ஆற்றும் நோக்குடைய உமாதேவியாரோடு எஞ்ஞான்றும் பொருந்தி இருப்பவர்.
468. கொடிகொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர்
பொடிகொள் மார்பினற் பூண்டதொர் ஆமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
அடிகள் செய்வன ஆர்ககுஅறி வொண்ணுமே.
தெளிவுரை : ஈசன், இடபத்தைப் பொறித்த கொடிய உடையவர்; கூற்றுவனை உதைத்தவர்; திருநீறு அணிந்து மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாகப் பூண்டு விளங்குபவர்; அப்பெருமான், மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப் பாலையில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார். அவர் புரியும் திருவிளையாடலை யார்தான் அறிந்து கொள்ள முடியும்.
469. பண்ணலம்பட வண்டறை கொன்றையின்
தண்ணலங்கல் உகந்த தலைவனார்
கண்ண லங்கவ ருங்கழிப் பாலையுள்
அண்ணல் எம்கடவுள் அவன் அல்லனே.
தெளிவுரை : பண்ணின் நலத்தினோடு வண்டு இசைபாடும் கொன்றை மலரின் குளிர்ச்சி மிக்க மாலையை உகந்து அணிந்த தலைவனாகிய ஈசன், கண்களுக்கு இனிய நலத்தை வழங்கும் எழில் மிகுந்த கழிப்பாலையில் வீற்றிருக்கின்ற அண்ணல் ஆவார். அவர் எமது கடவுள் அல்லவா !
470. ஏரினாருல கத்திமை யேரொடும்
பாரி னாருட னேபர வப்படும்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.
தெளிவுரை : சிறப்போடு திகழும் விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள், இப்பூவுலகத்தில் விளங்கும் மாந்தர்களுடன் சேர்ந்து பரவிப் போற்றப்படுகின்ற, மேகம் தவழும் பொழில் சூழும் கழிப்பாலையில் விளங்கும் ஈசனின் செம்மை மிகும் திருக்கழலைத் தியானம் செய்வீராக.
471. துள்ளு மான்மறி அங்கையில் ஏந்தியூர்
கொள்வ னாரிடு வெண்தலை யிற்பலி
கள்வ னார்உறை யும்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின ஓயுமே.
தெளிவுரை : துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய கையில் ஏந்தி, ஊர்தொறும் திரிந்து, பிரம கபாலத்தில் பிச்சை ஏற்கும் ஈசன், அன்பர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வராய் உறையும் கழிப்பாலையை, நினைத்து ஏத்துக. வினை யாவும் விலகும்.
472. மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
எண்ணி நீர்இனிது ஏத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியொடு உற்றமுக்
கண்ணி னார்உறை யும்கழிப் பாலையே.
தெளிவுரை : இப் பூவுலகத்தின் மேவும் செல்வச் செழிப்பும், வானுலகத்தின்கண் மறுமையில் கொள்ளும் செல்வமும் எண்ணி, உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு, பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய, மூன்று கண்ணுடைய ஈசன், உறையும் கழிப்பாலையை, ஏத்தி நீவிர் வணங்குவீராக.
473. இலங்கை மன்னனை ஈரைந்து இரட்டிதோள்
துலங்க ஊன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துல வும்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
தெளிவுரை : இராவணனுடைய இருபது தோள்களும் நன்கு அழுந்துமாறு ஊன்றிய, தூய்மையான மழுப்படையை ஈசன், கப்பல்கள் வந்து உலவும் கடல் துறையில் மேவும் கழிப்பாலை என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் விளங்கும் இத் தலத்தை வலம் வருபவர்களின் வினை யாவும் விலகிச் செல்லும்.
474. ஆட்சி யால்அல ராணொடு மாலுமாய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
காட்சி யால்அறி யான்கழிப் பாலையை
மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.
தெளிவுரை : படைத்தல் தொழிலும் காத்தல் தொழிலும் கொண்டு விளங்கும் உரிமை பூண்டவர்களாகிய பிரமனும் திருமாலும், தற்பெருமை கொண்ட தாழ்மையால், முறையே ஈசனின் திருமுடியையும். திருவடியையும் காண முடியாது தளர்ந்தனர். அப்பெருமான் வீற்றிருக்கும் கழிப்பாலையை மனம் ஒன்றுமாறு ஏத்தி வழிபடுவீராக. அது வினையை மாயச் செய்யும்.
475. செய்ய நுண்துவர் ஆடையி னாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மை யெனோ கழிப் பாலைஎம்
ஐயன் சேவடி யேஅடைந்து உய்ம்மினே.
தெளிவுரை : சிவந்த துவராடையுடைய சாக்கியரும், மற்றும் சமணரும் சிறப்பினை நல்காத நெறியில் இருக்க நீவிர் கழிப்பாலையில் வீற்றிருக்கின்ற எம் தலைவனாகிய ஈசனின் திருவடியை அடைந்து, உய்தி பெறுவீராக.
476. அந்தண் காழி அருமறை ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுலகு ஆடல் முறைமையே.
தெளிவுரை : குளிர்ச்சி மிக்க அழகிய காழியில் மேவும் சிறப்பின் மிக்க மறை வல்ல ஞானசம்பந்தன், நீர்வளம் சூழ்ந்த கழிப்பாலையைச் சிந்தையால் கொண்டு சொன்ன திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வானுலகில் முதன்மையாய் விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
303. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
திருச்சிற்றம்பலம்
477. அந்த மாய்உலகு ஆதியும் ஆயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூர்எம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
தெளிவுரை : ஈசன், உலகின்கண் தோற்றமும் பிரளய காலத்தின் அந்தமாகவும் படைக்கப் பெறும் காலத்தில் ஆதியாகவும் விளங்குபவர். அப்பெருமான், திருவெண்ணீறு பூசிய வேதநாயகனாய், என் சிந்தையில் புகுந்து விளங்குபவர். அவர், திருவாரூரில் வீற்றிருக்கும் என் தந்தை அவர் என்னை ஏற்றுக் கொள் வாரோ !
478. கருத்தனே கருதார்புர மூன்றுஎய்த
ஒருத்த னேஉமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு வாரூர்எந் தீவண்ண
அருத்த என்எனை அஞ்சல் என்னாததே.
தெளிவுரை : ஈசன், எம் உள்ளத்தின் கருத்தாய் விளங்கும் பெருமான்; நின்னைச் கருதிப் போற்றாத முப்புர அசுரர்கள் எரிந்து சாம்பலாகுமாறு கணைதொடுத்தவர்; உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு திகழ்பவர்; தூயவராக மேவும் பரமன்; திருவாரூரில் வீற்றிருக்கும் தீவண்ணர்; எப்பொருட்கும் விளக்க ரூபமாக மேவும் பெரும் பொருள்; என்னை அஞ்சற்க என்று மொழிவீராக.
479. மறையவன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்எரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்எம்
இறைவன் தான்எனை யேன்று கொளுங்கொலோ.
தெளிவுரை : ஈசன், வேதமாகியவர்; பெரும் தவவேந்தரானவர்; பகை கொண்ட முப்புர அசுரர்கள் நொடிப் பொழுதில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; சிறகுகளை உடை வண்டு ஒலிக்கும் பொழில் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவன். அவர் என்னை அடியவனாக ஏற்றுக் கொள்வாரோ !
480. பல்லில் ஓடுகை யேந்திடப் பலிதிரிந்து
எல்லி வந்திடு காட்டெரி  யாடுவான்
செல்வ மல்கிய தென்திரு வாரூரான்
அல்லல் தீர்த்துஎனை அஞ்சல் எனுங்கொலோ.
தெளிவுரை : பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிந்து, இரவில் சுடுகாட்டில் நடம் புரியும் ஈசன், செல்வச் செழிப்பு ஓங்கும் சிறப்புடைய திருவாரூரான். அப்பெருமான், என் துயர் தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ !
481. குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு வாரூரான்
வருந்தும் போது எனை வாடல்எ னும்கொலோ.
தெளிவுரை : குருந்த மரத்தில் ஏறிப் படர்ந்து, மாதவியும், விரிந்து மலர்ந்து நறுமணம் கமழும் கொன்றை மரங்களும் திகழ, மாட மாளிகை சூழப் பொலியும் திருவாரூரில் மேவும் ஈசன், வருத்தம் கொண்டு நலிவுற்று நான் இருக்கும் போது என்னை வருத்தாதே என்று உரைத்து அருள் புரிவாரோ !
482. வார்கொள் மென்முலை யாளொரு பாகமா
ஊர்களார் இடு பிச்சைகொள் உத்தமன்
சீர்கொள் மாடங்கள் சூழ்திரு வாரூரான்
ஆர்கணா எனை அஞ்சல் எனாததே.
தெளிவுரை : மார்பில் கச்சு அணிந்து விளங்குகின்ற உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு ஊரில் உள்ளவர்கள் இடுகின்ற பிச்சையைக் கொள்ளும் உத்தமன், சீர் மிகுந்து மேவும் மாடங்கள் சூழும் திருவாரூரான் எனப்பெறும் ஈசன். அப்பெருமான் என்னை அஞ்சாதே எனச் சொல்லாதது என்கொல் !
483. வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்கும் தண்புனல் சூழ்திரு வாரூரான்
இளைக்கும் போதுஎனை ஏன்று கொளுங்கொலோ.
தெளிவுரை : வளையல் அணிந்து கைகளை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் ஈசன், தன்னை எதிர்த்து வந்து யானையானது கலங்குமாறு அடர்த்து, அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். அப் பரமன் குளிர்ந்த புனல் சூழ்ந்து மேவும் திருவாரூரான். அவர், இளைத்து வருந்தும் காலத்தில் என்னை ஏற்று அருள் புரிவாரோ !
484. இலங்கை மன்னன் இருபது தோளிறக்
கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு வாரூரான்
அலங்கல் தந்துஎனை அஞ்சல் எனுங்கொலோ.
தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய இருபது தோளும் நலியுமாறு திருப்பாத விரலால் ஊன்றியவர் ஈசன். அப் பெருமான் வலிமை உடைய சிறப்பான மதில் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருக்கும் பரமன். அவர் எனக்குப் பெருமை சேர்க்கும் மாலை கொண்டு அருளிச் செய்தும், வருந்தும் காலத்தில் அஞ்சாதே என்று அபயம் அளித்தும் காப்பாரோ !
485. நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிகள் நீக்கிய தென்திரு வாரூர் எம்
அடிகள் தான்எனை அஞ்சல் எனுங்கொலோ.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண முடியாத தன்மையராய்ச் சந்திரனைச் சடைமுடியின் மீது தரித்த ஈசன், மன்னுயிரின் பாவங்களை நீக்கிப் பெருமை கொள்ளும் திருவாரூரில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார். அவர் என்னை அஞ்சாதே என்று அருள் புரிவாரோ !
486. மாசு மெய்யினர் வண்துவர் ஆடைகொள்
காசை போர்க்கும் கலதிகள் சொற்கொளேல்
தேச மல்கிய தென்திரு வாரூர்எம்
ஈசன் தான்எனை யேன்று கொளுங்கொலோ.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் பயனற்ற சொற்களைக் கொள்ளாது, அருளொளி திகழ மேவும் பெருமை உடைய திருவாரூரில் வீற்றிருக்கும் ஈசன், என்னைத் தாங்கி நின்று அருள் புரிவாரோ !
487. வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னிவைத்த பிரான்திரு வாரூரை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே.
தெளிவுரை : வன்னி, கொன்றை, சந்திரன், வில்வம் ஆகியவற்றைச் சடை முடியில் திகழச் சூடிய பெருமான் விளங்கும் திருவாரூரைப் பொலிவுடன் திகழும், காழிப்பதியில் மேவும் ஞானசம்பந்தன் வாய் மலர்ந்து சொன்ன இத்திருப்பாடல்களை ஓத வல்லவர்களுக்கு, பாவமானது தாமே விலகிச் செல்லும்.
திருச்சிற்றம்பலம்
304. திருக்கருகாவூர் (அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
488. முத்து இலங்குமுறு வல்உமை அஞ்சவே
மத்த யானைமறு கவ்உரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள்கரு காவூர்எம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.
தெளிவுரை : முத்துப் போன்ற முறுவல் கொண்டு மேவும் உமாதேவி காணுமாறு, யானையின் தோலை உரித்துப் போர்த்திய கடவுள் கருகாவூரில் வீற்றிருக்கும் அத்தன். அவர் வண்ணம் நெருப்பின் நிறம் கொண்டதாகும்.
489.விமுத வல்லசடை யான்வினை உள்குவார்க்கு
அமுத நீழல்அக லாததோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
தெளிவுரை : கங்கை தரித்த சடை முடி உடைய சிவ பெருமானுக்குத் திருத்தொண்டு மேவும் அடியவர்களே ! நும்பணியானது. அமுதத்தின மாண்புடையதாகி நீங்காத செல்வமாக விளங்கும் முல்லை கமழ்கின்ற கருகாவூரில் வீற்றிருக்கும் ஈசன், அமுதம் போன்று இனிமை தருபவர். அவருடைய வண்ணம் அழல் போன்ற செம்மை உடையதாகும்.
490. பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழகர் என்றுகுழை யாஅழை யாவரும்
கழல்கொள் பாடல் உடையார் கருகாவூர்எம்
அழகர் வண்ணம் அழலும்அழல் வண்ணமே.
தெளிவுரை : பழகுவதற்குரிய சிறப்புடைய சிறுத் தொண்டரின் இசைக்குக் குழையவும், அதில் உள்ளம் பொருந்தித் திருக்கழலைப் போற்றி வாழ்த்த மகிழவும், உடைய கருகாவூரில் விளங்கும் ஈசன், செவ்வண்ணம் உடையவர்.
491. பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன்
செடியர் அல்லாஉள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள்முல்லை கமழும் கருகாவூர்எம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.
தெளிவுரை : திருவெண்ணீற்றை மெய்யில் பூசி, மலர் கொண்டு தூவிப் போற்றி, அடியவர்கள் வழிபட்டு, உள்ளத்தின் குற்றங்களைப் போக்கிக் கொள்ளுமாறு நல்கிய செல்வத்தராகிய சிவபெருமான், மணம் கொள் முல்லை கமழும் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் அடிகள் ஆவார். அவருடைய வண்ணம் அழல் போன்ற செவ் வண்ணம் ஆகும்.
492. மையல் இன்றிமலர் கொய்து வணங்கிடச்
செய்ய உள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லை கமழும் கருகாவூர்எம்
ஐயம் வண்ணம் அழலும்அழல் வண்ணமே.
தெளிவுரை : மயக்க உணர்வின்றி மலர் கொய்து போற்றி வணங்கச் செய்யும் செம்மை உள்ளத்தை அடியவர்களுக்கு நனி நல்கிய செல்வத்தராகிய சிவபெருமான், தாழையும் முல்லையும் கமழும் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் தலைவர் ஆவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற செம்மை உடையது.
493. மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
காய்சி னத்த விடையார் கருகாவூர்எம்
ஈசன் வண்ணம் எரியும்எரி வண்ணமே.
தெளிவுரை : மாசில்லாத தொண்டர்கள் மலர் தூவி வணங்கிட, அவர்தம் விருப்பம் மலர, அருள் நல்கும் செல்வத்தராகிய சிவபெருமான், இடப வாகனத்தை உடையவராய்க் கருகாவூரில் வீற்றிருக்கும் எம்பரமன் ஆவார். அவரது வண்ணம் எரியும் நெருப்புப் போன்று செந்நிறமானது.
494. வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல் கமழும் கருகாவூர்எம்
எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே.
தெளிவுரை : திருநீறு பூசிய வேதியனாய், அடியவர்தம் சிந்தையில் விளங்கி நின்று அருள் புரியும் செல்வத்தராகிய சிவபெருமான், வாசனை கமழும் முல்லை விளங்கும் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் தந்தை. அவரது வண்ணமானது, எரியும் நெருப்புப் போன்ற செந்நிறம் ஆகும்.
495. பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம் உடை யம்மல ரானொடும்
கண்ணன் நேடஅரி யார்கரு காவூர்எம்
அண்ணல் வண்ணம்அழலும் அழல்வண்ணமே.
தெளிவுரை : பண்ணின் மொழியன்ன உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் ஈசன், பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவராய்க் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் அண்ணல் ஆவார். அவரது வண்ணமானது நெருப்புப் போன்ற செந்நிறம் ஆகும்.
496. போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்தம் என்று தெளிவீர் தெளி யோன்மின்
கார்ததண் முல்லை கமழும் கருகாவூர்எம்
ஆத்தர் வண்ணம் அழலும்அழல் வண்ணமே.
தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கூறும் மொழிகளை உயர்வானதெனக் கொள்ள வேண்டாம். மேகம் சூழ, முல்லை கமழும் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் விருப்பத்துக்குரிய ஈசனின் வண்ணம் நெருப்புப் போன்ற செந்நிறம் ஆகும். அப்பெருமானை ஏத்துமின் !
497. கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர்
நிலவு பாடல் உடையான்றன் நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லார்அவர் தொல்வினை தீருமே.
தெளிவுரை : மயில், தோலை விரித்து ஆடி விளங்குகின்ற கருகாவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன், புகழ்ப் பாக்கள் கொண்டு போற்றி வழிபடப் பெற்றவர். அப் பெருமானுடைய அருளொளி திகழும் திருக்கழலைக் கனிந்த தன்மையால் அன்பு செலுத்திக் குலவும் ஞானசம்பந்தன் ஓதிய இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்களின் தொல்வினை தீரும்.
திருச்சிற்றம்பலம்
305. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
திருச்சிற்றம்பலம்
498. காட்டு மாவது உரித்துஉரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாய்உரை செய்வனான்
வேட்டு வேள்விசெய்யா அமண் கையரை
ஓட்டி வாது செயத்திரு உள்ளமே.
தெளிவுரை : காட்டில் உள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய ஈசனே ! மூன்று கண்ணுடைய பெருமானே ! நல்வேள்வியைப் புரியாதவர்களாகிய அமணர்களுடன் நான் வாதம் செய்வதற்குத் திருவுளக்குறிப்பு யாதுகொல் ! உரை செய்வீராக.
499. மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேஅணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்தவ வேடத்த ராம்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.
தெளிவுரை : மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே ! அழகு மிக்க ஆலவாயில் விளங்கும் நாதனே ! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்வதற்குத் திருவுள்ளம் யாதோ ! உரைப்பீராக.
500. மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ண கத்திரு ஆலவா யாய்அருள்
பெண்ண கத்தொழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.
தெளிவுரை : இப் பூலகத்திலும் விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கி மேவும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற ஈசனே ! சாக்கியரும் சமணரும் வாதம் புரியும் தன்மையின் அவர்தம் கல்வி நிலையைத் தகுதியற்றதாகும் தன்மையில் அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வீராக.
501. ஓதி யோத்தறி யாவமண் ஆதரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே.
ஆதியேதிரு ஆலவாய் அண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே.
தெளிவுரை : வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய அமணர்களை வாதம் செய்து வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாதுகொல் ! ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருக்கும் அண்ணலே ! நடுநிலையில் இருந்து அருள் செய்வீராக.
502. வைய மார்புக ழாய்அடி யார்தொழும்
செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்
கையில் உண்டுஉழ லும் அமண் கையரைப்
பைய வாது செயத்திரு வுள்ளமே.
தெளிவுரை : உலகம் பொருந்த மேவும் புகழுக்கு உரிய நாதனே ! அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருக்கும் ஈசனே ! அமணர்பால் சென்று நான் வாதம் புரிவதற்குத் திருஉள்ளம் யாது ! உரைத்தருள்வீராக.
503. நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டுஅமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு உள்ளமே.
தெளிவுரை : நாற்றுகள் கொண்டு வயல்களில் பயிர் வளம் பெருகவும், தேன் மணம் கமழும் மலர்கள் திகழும் சோலைகள் விளங்கவும் மேவும், திருஆலவாய் என்னும் திருக்கோயிலில் வீற்றிருக்கும் நாதனே ! பெருமை தரும் தவத்தினை நீத்தவராய், வன்மை உடையவராய், உடலை வருத்திக் கொண்டு பொய்த் தன்மையாக வேடம் கொண்டுள்ள அமணர்பால் சென்று நான் வாதம் செய்ய, திருவுள்ளம் யாதுகொல். உரைத்தருள்வீராக.
504. பண்டு அடித்தவத் தார்பயில் வாற்றொழும்
தொண்ட ருக்குஎளி யாய்திரு ஆலவாய்
அண்ட னேஅமண் கையரை வாதினில்
செண்டு அடித்துள றத்திரு வுள்ளமே.
தெளிவுரை : பேரன்பு பூண்டு திருத்தொண்டு மேவும் பழைய அடியவர்களுக்கு எளியவராய் விளங்கும் திருவாலவாய் அண்ணலே ! அண்டப் பொருளாக விளக்கும் பெருமை உடையவரே ! சமணர்களை வாதிட்டு வெற்றி கொண்டு ஆரவாரித்து விளங்குவதற்குத் தேவரீரின் திருவுள்ளம் யாது ? உரைத்தருள் வீராக.
505. அரக்கன் தான்கிரி யேற்றவன் தன்முடிச்
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்
பரக்கு மாண்புடை யாய்அமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு உள்ளமே.
தெளிவுரை : கயிலை மலையைத் தன் முடியில் ஏற்றித் தாங்கிய இராவணனின் செருக்கினை அடக்கிய நாதனே ! திருஆலவாயில் பெருமையுடன் அருள் விளக்கம் விரிந்து மேவ வீற்றிருக்கும் ஈசனே ! சமணர் பால் வாதம் புரிந்து அவர்களை அடக்குவதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வீராக.
506. மாலும் நான்முக னும்அறி யாநெறி
ஆலவா யுறையும் அண்ண லேபணி
மேலை வீடுஉண ராவெற்றரையரைச்
சால வாதுசெயத் திரு உள்ளமே.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் அறியாத நெறியினராய் மேவிய பரமனே ! ஆலவாயில் உறையும் அண்ணலே ! முத்தியின் சிறப்பினை உணராது வெற்றுச் சொல் பேசும் சமணர்பால் சென்று வாதம் செய்வதற்குத் தேவரீரின் திருஉள்ளம் யாதுகொல் ! பணித்து அருள்வீராக.
507. கழிக்க ரைப்படும் மீன்கவர் வார்அமண்
அழிப்ப ரைஅழிக் கத்திடு உள்ளவே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.
தெளிவுரை : கழிகளில் உள்ள மீன்களைக் கவர்ந்து அழிக்கும் தன்மையில், அமணர்களை வாதம் புரிந்து வெற்றி கொள்வதற்குத் திருவுள்ளம் யாதுகொல் ! நீர் வளம் பெருகும் ஆலவாயில், மழுப்படையுடையவராய் வீற்றிருந்து, காத்தருள் புரியும் அழகனே ! உரைத்தருள்வீராக.
508. செந்து எனாமுர லுந்திரு ஆலவாய்
மைந்தனே யென்று வல்அமண் ஆசுஅறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.
தெளிவுரை : செந்து என்னும் இசை எழுப்பும் வண்டுகள். திகழும் சோலைகளை உடைய ஆலவாயின் மைந்தனே ! என மொழிதல் செய்து, சமணரால் பரவிய குற்றங்கள் நீங்குமாறு சந்தம் பெருகும் தமிழ்ப் பாடல்களால் வாதம் புரிய வேண்டிவினவிய மெய்ஞ்ஞானசம்பந்தனின் இத்திருப்பதிகத்தை ஓதுவீராக. அது பழியிலிருந்து விடுவிக்கும்.
திருச்சிற்றம்பலம்
306. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
509. அங்கை யார்அழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கடவுள் இடம் மேவிய
மங்கை யான்உறை யும்மழ பாடியைத்
தங்கை யால்தொழு வார்தக வாளரே.
தெளிவுரை : ஈசன், அழகிய கையில் நெருப்பினைக் கொண்டு விளங்குபவர். அழகிய செஞ்சடையில் கங்கையைத் தரித்தவர். இடப் பாகத்தில் உமா தேவியைப் பாகமாகக் கொண்ட அப் பரமன் உறையும் மழபாடியைக் கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நல்ல தகவுடையவர்கள், ஆவார்கள்.
510. விதியு மாம்விளை வாம்ஒளி யார்ந்ததோர்
கதியு மாம்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாமழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதநற் பாதமே.
தெளிவுரை : மழபாடியில் கங்கை தோய்ந்த சடை முடியுடைய ஈசனின் முத்தி வழங்கும் நற்பாதமானது, மன்னுயிர்களுக்கு வினைவழி மேவும் நல்விதியாக்கும்; அதனை விளைவித்து நுகரச் செய்யும் ஒளிர்ந்து மேவும் நற்கதியாகிய முத்திப் பேறு ஆக்கும்; மனத்தினைக் கசிய வைத்துத் தகுந்தவாறு வயப்படுத்தும்; ஞானம் வழங்கும்; எல்லாவற்றையும் நிகழ்த்துகின்ற பேராற்றல் தரும். அத்தகைய திருக்கழலை ஏத்துவீராக.
511. முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையிலேந்திய
மழுவி னான்உறை யும்மழ பாடியைத்
தொழுமின் உம்துயர் ஆனவை தீரவே.
தெளிவுரை : ஈசன், முழவு என்னும் வாத்தியம் கொண்டுள்ளவர்; சுடுகாட்டில் உறையும் பேய்க் கணத்துடன் குலவி நடம்புரிபவர்; அழகிய கையில் மழுப் படையை உடையவர். அப் பெருமான், வீற்றிருக்கின்ற மழபாடியைத் தொழுது ஏத்துமின். அது எல்லாத் துன்பங்களையும் நீக்கிக் காக்கும்.
512. கலையி  னான்மறை யான்கதி யாகிய
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவம் ஆகுமே.
தெளிவுரை : ஈசன், ஆய கலைகள் அறுபத்து நான்கு ஆகியவர்; நான்கு மறைகள் ஆகியவர்; நற்கதி நல்கும் கயிலை மலையினை உடையவர்; முப்புர அசுரர்களையும் அவர்களுடைய மதில்களையும் எரி செய்யுமாறு ஏவிய மேருவை வில்லாகக் உடையவர். அப் பெருமான், வீற்றிருக்கும் திருமழபாடியை முதன்மையாகக் கருதி வணங்கத் தவப் பயன் கை கூடும்.
513. நல்வி øன்ப்பய னான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தனு ருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே.
தெளிவுரை : ஈசன், நல்வினையின் பயனாகியவர்; மறையின் பொருளாகியவர்; கல்வியாகவும் அதன் கருத்தாகவும் விளங்குபவர்; உருத்திரனாகத் திகழ்பவர். அச் செல்வன் மேவிய திருமழபாடியைச் சார்ந்து ஏத்துமின். அது உமக்குப் புகழை அளிக்கும்.
514. நீடி னார்உல குக்குயிராய் நின்றான்
ஆடி னான்எரி கானிடை மாநடம்
பாடி னார்இசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே.
தெளிவுரை : ஈசன், உலகுக்கு உயிராக விளங்கி இயக்குகின்ற செம்மையானது இவண் கட்டப் பெற்றது. இத்தன்மையின், ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே எனத் திருநாவுக்கரசர் அருளிச் செய்துமையும் காண்க. ஈசனை வணங்கி ஏத்துதல் வறுமைப் பிணியை நீக்கும் என அருளாணை வழங்கப் பெறுதலை நோக்குக. இது இம்மைக்குரிய பெரும் பயனை அளித்தலாயிற்று.
515. மின்னி னார்இடை யாளொரு பாகமாய்
மன்னி னான்உறை மாமழ பாடியைப்
பன்னி னார்இசை யாங்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின ஓயுமே.
தெளிவுரை : மின்னலைப் போன்ற மெல்லிய இடை உடைய உமாதேவியும், பாகம் கொண்டு மேவும் ஈசன் உறையும் சிறப்பும் மிக்க மழபாடியை, இசைப் பாடலால ஏத்தி வழிபடும் அன்பர்களுக்குத் தீவினை யால் நேரும் துன்பம் இல்லை.
516. தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
தன்னில் அங்குஅ டர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னில் அங்க உறுபிணி இல்லையே.
தெளிவுரை : இராவணனைச் செழுமையான கயிலை மலையினால் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான். அவர் சிறப்பாக வீற்றிருக்கின்ற பெருமைமிகு மழபாடியை நெஞ்சில் பதித்து ஏத்த, தேகத்தில் உறுகின்ற பிணி யாவும் விலகிப் போகும்.
517. திருவி னாய னும்செழுந் தாமரை
மருவி னானும் தொழத்தழல் மாண்பமர்
உருவி னான்உறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.
தெளிவுரை : திருமகளின் நாயகனாகிய திருமாலும், செழுமை மேவும் தாமரையில் மருவிய பிரமனும் தொழுது போற்றப் பெருந்தழல் ஆகிய மாண்புடைய வடிவத்தினராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் மழபாடியைப் பரவி ஏத்தும் அன்பர்கள், வினை நீங்கியவர் ஆவர்.
518. நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் நலியும் சொற்களை வலியும் உரைத்தாலும் அவற்றைப் பொருளாக ஏற்காது, மழபாடியுள் கழல் ஒலிக்க நடம் புரியும் சிவபெருமானின் அருளிச் செயலை நினைந்து ஏத்துக. நம்மைப் பற்றிய வினை யாவும் நலிந்து அழியும்.
519. மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
எந்தை சந்தம் இனிதுகந்த ஏத்துவான்
கந்தம் ஆர்கடற் காழியுள் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.
தெளிவுரை : தென்றல் காற்று வீசும் பொழில் சூழ்ந்த மழபாடியுள் மேவும் எம் தந்தையாகிய ஈசனை, சந்தம் பொலியும் இசைப் பாடலால் ஏத்தும் காழியின் ஞான சம்பந்தன் உரைத்த தமிழ் மாலையையை ஓத வல்லவர்களுக்கும் பாவம் அணுகாது. இது துன்பம் அற்ற வாழ்க்கையைத் தரும் என உணர்த்துவதாயிற்று.
திருச்சிற்றம்பலம்
307. பொது நமச்சிவாய்த் திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
520. காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
தெளிவுரை : நான்கு வேதங்களும் மெய்ப் பொருளாகத் திகழ்ந்து விளங்க, அதன்கண், சிறப்புடைய நாமமாகத் திகழ்வது நமசிவாய என்கிற ஈசனின் திருவைந்தெழுத்தாகும். இத்திருடைந்தெழுத்தை அன்பின் மேலிட்டு மனத்தில் பதித்தும், அதன்வழி, கசிந்து உருகிக் கண்ணீர் மல்கி ஓதியும் ஒழுக, நல்ல நெறியை உய்த்து அருளும் இத்தகைய சிறப்புடைய ஈசனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தினை ஓதுக.
521. நம்பு வார்அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது
செம்பொ னார்தில கம்உல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.
தெளிவுரை : உயர்ந்ததாக விளங்கும் செம்பொன்னின் திலகம் போன்று, எல்லா உலகமும் பிரதானமாக விளங்கி மேவுவது, ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய் என்னும் ஐந்தெழுத்தாகும். இத் திருநாமத்தை மிகுந்த விருப்பத்துடன் ஓதுபவர்களுக்கு, அது மணம் தரும் புதுமலரில் துளிர்க்கும் தேனின் சுவைக்கும் ஒப்பாகி இனிமை தரும்.
522. நெக்குள் ஆர்வம் மிகப்பெரு கிந்நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவர்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.
தெளிவுரை : ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது, உள்ளம் நெகிழ்ந்து உருகி ஓதப் பெறுவதாகும்; மற்றும் உருத்திராக்க மாலை கொண்டு மணிகளை உருட்டிச் செபித்து மொழியப் பெறுதலும், கையில் உள்ள விரண் கோடுகைளக் கொண்டு எண்ணி மொழியப் பெறுதலும் உடையது. இத்தகைய மாண்பில் திருவைந்தெழுத்தினை ஓதுபவர்கள், தேவர்களாகும் தகுதியைப் பெற்றுவிளங்குவார்கள்.
523. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந்து ஓதவல் லார்தமை நண்ணினால்
நியமம் தான்நினை வார்க்குஇனி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.
தெளிவுரை : நெற்றியில் கண்ணுடைய ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திவைந்தெழுத்தை நியமத்தோடு நினைத்து ஏத்த வல்லவர்களுக்கு அப்பெருமான் இனிமையானவர். அத்தகைய செம்மை உடைய திருவைந்தெழுத்தினை ஓதும் அன்பர்கள் பால் நெருங்கி மேவும் அடியவர்களிடம், இயமனுடைய தூதுவர்களும் அஞ்சி, விலகிச் செல்வார்கள்.
524. கொல்வா ரேனும் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.
தெளிவுரை : பாவச் செயல்களைப் புரிபவராயினும், நற்குணங்களையும் பெறாதவராகவும், நன்மைகள் ஏதும் செய்யாதவராகவும் இருந்தாலும், நன்மை விளைவிக்கும் ஈசனின் நாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை ஓதுவார்களானால், அவர்கள், எல்லாவிதமான தீமையிலிருந்தும் நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.
525. மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செலவமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.
தெளிவுரை : மலை போன்ற பாவங்கள் செய்தவர்களும், பந்த பாசத்தால் பிணைக்கப் பெற்றவர்களும், ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தைப் பகர்வார்களாயின். அவர்களுடைய கொடிய வினைகள் யாவும் நீங்கப் பெற்றுச் செல்வமும் நனி பெறுவர்.
526. நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயின ராயில் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.
தெளிவுரை : ஏழு நரகங்களில் புகுந்து ஆழும் தன்மையில் பாவங்களைப் புரிந்தாலும், வரந்தரும் ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை உரை செய்வாராயின், அவர்கள் உருத்திரகணத்தாரொடு சேர்ந்திருக்கும் பேற்றினைப் பெருவார்கள்.
527. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரப் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனைத் திருப்பாத விரலால் ஊன்றி அடர்த்தவன் ஈசன். அவ்அரக்கன் உய்தற்குக் காரணமாக இருந்தது, நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.
528. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரி தாகி அலந்தவர்
ஓது நாமம் நமச்சி வாயவே
தெளிவுரை : பிரமனும் திருமாலும், முறையே ஈசனின் திருமுடியையும், திருவடியையும் தேடிய பண்பினராகிக் காண முடியாத நிலையில் வருந்தி ஓதிய நாமமானது, நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும்.
529. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுது செய்
நஞ்சுஉள் கண்டன் நமச்சி வாயவே.
தெளிவுரை :  சமணர்களும் சாக்கியர்களும் கொடுமையான சொற்களைக் கூற, அவற்றை ஏற்காதவராயும் தேவர்கள் வேண்டுகோளுக்கும் அருள் செய்து கொடிய நஞ்சினை உட்கொண்டவரும் ஆகிய ஈசனின் திருநாமம். நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும்.
530. நந்தி நாம நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந்து ஏத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
தெளிவுரை : ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு, ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஏத்த வல்லவர்கள் பந்தபாசத்தை அறுக்க வல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
308. திருத்தண்டலை நீள்நெறி (அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில், தண்டலச்சேரி,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
531. விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே
சுரும்பும் தும்பியும் சூழ்சடை யார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய்கமு கின்வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி காண்மினே.
தெளிவுரை : விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும் திகழத் தரித்து, வண்டுகள் ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடி மேவும் சடை முடியுடைய ஈசனுக்கு உரிய இடமாவது, கரும்பும், நெல்லும், பாக்கு மரங்களும் உடைய தண்டலையில் திகழும் நீள்நெறியாகும். இத்தலத்தை நாடி ஈசனை ஏத்துமின்.
532. இகழும் காலன் இதயத்தும் என்னுளும்
திகழும் சேவடி யான்திருந் தும்இடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி காண்மினே.
தெளிவுரை : மார்க்கண்டேயராகிய சிவபக்தரை மதியாது இகழ்ந்துரைத்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்து அடர்த்தவர், சிவபெருமான். அப்பெருமான் திருஞானசம்பந்தரின் இதயத் தாமரையில் திகழ்ந்து விளங்கி, யாவும் இயற்றுபவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது. திருமகளும் அந்தணர்களும் விளங்கும் தண்டலை நீள் நெறியாகும். ஆங்கும் அப் பெருமானைத் தரிசித்து ஏத்துமின்.
533. பரந்த நீலப் படரெரி வல்விடம்
கரந்த கண்டத்தி னான்கரு தும்இடம்
சுரந்த மேதி துறைபடிந்து ஓடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.
தெளிவுரை : விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி, நீலகண்டராகிய ஈசன், கருதி வீற்றிருக்கும் இடமாவது, ஓடையில் எருமை படிந்து பாலைச் சொரிந்து விளங்கும் தண்டலையில் திகழும் நீள்நெறியாகும். ஆங்கு அப் பெருமானைத் தரிசித்து ஏத்துமின்.
534. தவந்த என்பும் தவளப் பொடியுமே
உவந்த மேனி னான்உறை யும்இடம்
சிவந்த பொன்னும் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.
தெளிவுரை : எலும்பு மாலையும், திருவெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் உறையும் இடமாவது, பொன்னும் முத்தும் பரவி மல்கும், தண்டலை நீள்நெறியாகும். ஆங்கு வீற்றிருக்கும் பெருமானைத் தரிசித்து ஏத்துமின்.
535. இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்க லில்அடர்த் தான்விரும் பும்இடம்
சலங்கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.
தெளிவுரை : இராவணனின் இருபது தோளும் நெரியுமாறு கயிலை மலை கொண்டு அடர்த்த ஈசன் விரும்புகின்ற இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும் முத்துக்களும் சங்குகளும் அலைகள் வாயிலாகக் கொண்டு நிலத்தின் செல்வமாகப் பெருக்கும் தண்டலை நீள் நெறியாகும். ஆங்கு வீற்றிருக்கும் பெருமானைக் கண்டு தரிசித்து ஏத்துமின்.
536. கருஅரு உந்தியி னான்முகன் கண்ணன்என்று
இருவ ரும்தெரி யாஒருவன் னிடம்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.
தெளிவுரை : படைத்தல் தொழிலைச் செய்யும் நான்முகன் திருமாலின் உந்திக்கமலத்தில் தோன்றியவர். அவரும், திருமாலும் தெரிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய கோயிலாகிய தண்டலை நீள்நெறியாகும். அப்பெருமானைக் கண்டு தரிசித்து ஏத்துமின்.
537. கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
குலவ மாட்டாக் குழகன் உறைவிடம்
சுலவு மாமதி லும்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் அன்பு கொண்டு ஏத்துதல் செய்யாதவராய்ப் புறத்தே இருக்க, சிவபெருமான் வீற்றிருக்கும் இடமானது, மதில்களுடன் விளங்கும் மாடமாளிகைகள் கொண்டு விளங்கும் தண்டலையில் மேவும் நீள்நெறி என்னும் திருக்கோயிலாகும். ஆங்கும் அப்பெருமானைக் கண்டு தரிசித்து ஏத்துமின்.
538. நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்துறை
சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வலார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.
தெளிவுரை : திருநீறு அணியப் பெற்ற அடியவர்கள் வாழும் தண்டலையில் வீற்றிருக்கும் நீள்நெறி நாதனை, அத்தகைய திருநீற்றின் செம்மை திகழும் மேன்மையர் விளங்கும் தோணிபுரத்தில் உறையும் ஞானசம்பந்தன் நவின்ற இத்திருப்பதிகத்தால் ஏத்த வல்லவர்கள், நிலைத்த செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப் பிணியும் நீங்கப் பெற்றவராவார்கள்.
திருச்சிற்றம்பலம்
309. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
திருச்சிற்றம்பலம்
539. செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேஅஞ்சல் என்றருள் செய்எனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வும்சுடர்
பைய வேசென்று பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : எமக்குப் பாதுகாவலாக விளங்கும் பெருமானே ! திருஆவலாயில் கோயில்கொள்ளும் தலைவனே ! அஞ்சாதே என்று அருள் செய்வீராக. பொய்த் தன்மை உடையவராகிய அமணர்கள் என்னை எரிக்குமாறு பற்ற வைத்த நெருப்பானது மெல்லச் சென்று பாண்டிய மன்னனுக்கு ஆகுக.
540. சித்த னேதிரு ஆலவாய் மேவிய
அத்த னேஅஞ்சல் என்றருள் செய்எனை
எத்த ராம்அம ணர்கொளு வும்சுடர்
பத்த மன்தென்னன் பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : ஈசன், எல்லாவிதமான ஆற்றல்களையும் உடைய சித்தர்; திருஆலவாயில் மேவி விளங்கும் அன்பிற்குரியவர். அஞ்சாதே என்று அருள்புரிவீராக. வஞ்சனையுடைய அமணர்கள் என்னை எரிக்குமாறு பற்ற வைத்த நெருப்பானது, சமணப் பற்றுடைய பாண்டிய மன்னனுக்கு ஆகுக.
541. தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்க னேஅஞ்சல் என்றருள் செய்எனை
எக்க ராம்அம ணர்கொளு வும்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே.
தெளிவுரை : தக்கன் செய்த தீய வேள்வியைத் தகர்த்து அருள் தன்மையை வழங்கிய ஆலவாயில் மேவும் சொக்கநாதனே ! அஞ்சாதே என உரைத்தருள்வீராக. செருக்குடைய அமணர்கள் என்னை எரிக்குமாறு செய்வித்த தீயானது அத்தகையோர் பக்கமே சார்ந்து சென்று, பாண்டிய மன்னனுக்கு ஆகுக.
542. சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்தியே னேஅஞ்சல் என்றருள்
தட்ட ராம்அம ணர்கொளு வும்சுடர்
பட்டி மன்தென்னன் பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : நன்னெறியாக விளங்கும் பெருமானே ! திருஆலவாயின்கண் மேவிய அட்ட மூர்த்தியே ! அஞ்சாதே என உரைத்தருள்வீராக. தீய குணத்தை உடைய அமணர் என்னை எரிக்கும் தன்மையில் வைத்த நெருப்பானது, கல்வியில் வல்லவனாகிய பாண்டிய மன்னனுக்கு ஆகுக.
543. நண்ண லார்புர மூன்றுஎரி ஆலவாய்
அண்ண லேஅஞ்சல் என்றருள் செய்எனை
எண்ணி லாஅம ணர்கொளு வும்சுடர்
பண்ணி யற்றமிழ் பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : பகைமை கொண்டு திரிந்த அசுரர்களின் மூன்றுபுரங்களை எரி செய்த ஆலவாய் அண்ணலே ! அஞ்சாதே என்று அருள் செய்வீராக. என்னை எரிக்கும் முனைப்புக் கொண்டவராய், நல்ல எண்ணம் இல்லாதவராகிய அமணர் கொளுத்திய நெருப்பானது, பண்ணின் இசையுடன் தமிழ் வழங்கும் பாண்டியற்கு ஆகுக.
544. தஞ்சம் என்றுன் சரண்புகந் தேனையும்
அஞ்சல் என்றருள் ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்துஅம ணர்கொளு வும்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : ஆலவாயில் வீற்றிருக்கும் அண்ணலே ! தஞ்சம் என்று உன்னைச் சரண் புகுந்த என்னை அஞ்சாதே என்று உரைத்தருள் புரிவீராக. வஞ்சம் உடையவராகிய அமணர்கள் என்னை எரிக்கும் தன்மையில் கொளுத்திய நெருப்பானது பாண்டிய மன்னனுக்கு ஆகுக.
545. செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
அங்க ணாஅஞ்சல் என்றருள் செய்எனைக்
கங்கு லார்அமண் கையர் இடும்கனல்
பங்கமில் தென்னவன் பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : கனல் போன்ற விழியுடைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருக்கும் அழகிய விழியுடையவனே ! அஞ்சேல் என உரைத்தருள்வீரா. என்னை எரிக்குமாறு இருள் கொண்ட நெஞ்சினராகிய அமணர்கள் வைத்த நெருப்பானது, பங்கம் இல்லாத பாண்டியனுக்கு ஆகுக.
546.தூர்த்தன் வீரம் தொலைத்தருள் ஆலவாய்
ஆத்த னேஅஞ்சல் என்றருள் செய்எனை
ஏத்தி லாஅம ணர்கொளு வும்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : தீய பண்புடையவனும் சிந்தை திரிந்தவனும் ஆகிய இராவணனுடைய வீரத்தை அழித்தும், வாளும் வாழ்நாளும் நல்கி அருள் புரிந்தும், திகழும் ஆலவாய் நாதனே ! அஞ்சேல் என்று உரைத்தருள் வீராக. நன்கு ஏத்திப் போற்றுதற்கு உரியவராய் இல்லாத அமணர்கள் என்னை எரிக்குமாறு கொளுத்தி வைத்த நெருப்பானது பாண்டிய மன்னனுக்கு ஆகுக.
547. தூவி னானயன் தானறி யாவகை
மேவி னாய்திரு ஆலவா யாய்அருள்
தூவி லாஅம ணர்கொளு வும்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : உலகத்தைத் தாவி அளக்க, நெடிது உயர்ந்தவராகிய திருமாலும், அயனாகிய பிரமனும் அறியாத வகையில் மேவிய நாதனே ! திரு ஆலவாயில் வீற்றிருக்கும் பெருமானே ! அருள் புரிவீராக. தூய்மை இல்லாத அமணர்கள் கொளுத்திய நெருப்பானது பரந்து சென்று பாண்டியனுக்கு ஆகுக.
548. எண்தி சைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்ட னேஅஞ்சல் என்றருள் செய்எனைக்
குண்ட ராம்அம ணர்கொளு வும்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.
தெளிவுரை : எட்டுத் திசைகளிலும் எழில் பரவும் பெருமை விளங்கும் ஆலவாயில் மேவிய அண்டர் நாயகனே ! அஞ்சேல் என்று அருள் செய்வீராக. சிறுமையுடைய அமணர்கள் என்னை எரிக்குமாறு கொளுத்திய நெருப்பானது, தொன்மையாக விளங்கும் பாண்டிய மன்னனுக்கு ஆகுக.
549. அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக்கு
ஒப்ப ஞானசம் பந்தன் உரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.
தெளிவுரை : திருஆலவாயில் வீற்றிருக்கும் ஆதி மூர்த்தியாகவும், என் தந்தையாகவும் விளங்கும ஈசனின் திருவருளால், நெருப்பின் வெப்பமானது பாண்டிய மன்னன்மீது பொருந்துமாறு, உலக நியதிக்கு ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்த இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள், தீமையினால் பற்றப்படாது செல்வந்தராகத் திகழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
310. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
திருச்சிற்றம்பலம்
550. வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.
தெளிவுரை : வீடு பேறு என்று சொல்லப்படும் முத்தி நலத்தை அன்றி வேறு அவா இல்லாத சிறப்புடைய பெருமக்கள், நின்னுடைய புகழ்ப் பாடலைப் பாடுகின்ற புகழின்கண் பரவி விளங்கும் பண்புடைய பெருமானே ! சுடுகாட்டில் விரும்பி ஆடும் நாதனே ! கபாலத்தைக் கையில் ஏந்திய ஈசனே ! நீண்ட பெருமை உடைய மதில் விளங்கும் கூடலில் திகழும் ஆலவாய் என்னும் திருக்கோயிலில் மகிழ்ந்து நிலவும் திருக்கோலந்தான் என்னே !
551. பட்டி சைந்த அல்குலாள் பாவையாள் ஓர்பாகமா
ஓட்டி சைந்த தன்றியும் உச்சியாள்ஒ ருத்தியாக்
கொட்டி சைத்த ஆடலாய் கூடல்ஆல வாயிலாப்
எட்டி சைந்த மூர்த்தியாய் இருந்தவாறுஇது என்னையே.
தெளிவுரை : பட்டுப் போன்ற உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாய் மேவும் பெருமானே ! சடை முடியில் கங்கையாளை உச்சியாய்க் கொண்டு திகழும் நாதனே ! கொடுகொட்டி என்னும் திருக்கூத்தினைப் புரியும் ஈசனே ! கூடலில் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கும் பரமனே ! அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே ! தேவரீருடைய அருள் வண்ணம் பெருகி இருக்குமாறு மேவிய செம்மைதான் என்னே !
552. குற்றம்நீ குணங்கள்நீ கூடலால வாயிலாய்
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்துநீ அருந்தமின்பம் என்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் உரைப்பதன்மு கம்மனே.
தெளிவுரை : ஈசனே ! மன்னுயிர்களின்பால் தோன்றிப் பற்றி நிற்கும் குற்றமாகிய வினையும் நீவிர் ! எப்பொருட்கும் இயல்பாய் இருந்து விளங்கும் குணமும் நீவிர் ! கூடலில் திகழும் ஆலவாயிலில் வீற்றிருக்கும் ஈசனே ! எனக்குச் சுற்றமாகி நின்று மேவுபவர் நீவிர் ! தலைவன் நீவிர் ! எப்பொருளுக்கும் அதன் விளக்கமாகவும் அவற்றால் பெறப்படும் இன்பமாக இருக்கும் மெய்ப் பொருளும் நீவிர் ! நீவிரே முற்றுமாய் விளங்கி என்னை ஆழ்த்துபவர். அவ்வாறு இருக்க, நின்னைப் புகழ்ந்து உரைத்து முகமன் உரைப்பது என்பது யாங்ஙனம் !
553. முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல்
அதிரவீசி யாடுவா யழகநீ புயங்கன்நீ
மதுரநீ மணாளநீ மதுரைஆல வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் கபாலம்ஏந்து சம்புவே.
தெளிவுரை : ஈசனே ! உயர்ந்ததாகவும் புனிதத் தன்மை உடையதாகவும் உடைய கங்கையைச் சடை முடியில் தரித்து விளங்கும் முதல்வன் நீவிர் ! நெருப்பின் அனல் வீசி ஒலி எழுப்பக் கைகளை வீசி ஆடுகின்ற பாங்குடைய அழகன் நீவிர் ! பாம்பினை அணிந்து விளங்கும் பெருமான் நீவிர் ! மன்னுயிர்களுக்குப் பேரின்பத்தை நல்கும் இனியவர் நீவிர் ! அழகிய மணவாளனாக விளங்குபவர் நீவிர் ! மதுரையின்கண் ஆலவாயில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! சதுரப்பாடு உடையவர் நீவிர் ! பிரமதேவனின் கபாலத்தை ஏந்திச் சுகமளிக்கும் பரம்பொருளே ! நின் கழலை ஏத்திப் போற்றுகின்றோம்.
554. கோல மாய நீள்மதிற்  கூடல்ஆல வாயிலாய்
பால னாய தொண்டு செய்து பண்டும்இன்றும் உன்னையே
நீல மாய கண்டனே நின்னையன்றி நித்தலும்
சீல மாய சிந்தையில் தேவர்வதில்லை தேவரே.
தெளிவுரை : அழகு மிக்க நீண்ட மதில் கொண்டு கூடலில் விளங்கும் ஆலவாயிலில் வீற்றிருக்கும் பெருமானே ! சண்டேசுவரர் பூசைத் தொண்டு புரிந்து உன்னையே போற்றி, யாண்டும் வழிபட மேவும் நீலகண்டனே ! தேவர்கள் நின்னை அன்றி நித்தமும் சிந்தித்து வழிபடத் தக்கவராய் வேறு யார் இருக்கிறார்கள் !
555. பொன்தயங்கு இலங்குஒளிந் நலங்குளிர்ந்த புன்சடை
பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலி
கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய்
நின்தயங்கி யாடலே நினைப்பதே நியமமே.
தெளிவுரை : பொன்னின் ஒளி விளங்குகின்றதைப் போன்று, நலம் திகழும் குளிர்ந்த சடை முடியானது, ஒளிக் கதிர்கள் வீசுமாறு திரு நடம் புரியும் சிவபெருமானே ! தோற்றம் பெறும் பிறப்பு என்னும் பான்மையில் மேவாத ஈசனே ! திரு முடியில் பிரணவ புஷ்பமாகிய கொன்றை மலரைத் தரித்துள்ள பெருமானே ! கூடல் பதியில் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கும் நாதனே ! தேவரீருடைய ஒளிமயமாகிய திருநடனக் காட்சியினை நினைந்து ஏத்துதலே வழிபடுகின்ற பாங்குடைத்து அல்லவா !
556. ஆதிஅந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதியந்தம் ஆயினாய் சோதியுள்ளொர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையால் கிளர்தருக்கி னார்க்கல்லால்
ஓதிவந்த வாய்மையால் உணர்ந்து ரைக்கலாகுமே.
தெளிவுரை : ஆலவாய் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற அண்ணலே ! ஆதியும் அந்தமுமாக இருப்பவர் நீவிர்; சோதியின் எல்லையாக விளங்குபவர் நீவிர்; பெருஞ்சோதிக்குள் சோதியாய் விளங்கி ஒளிரச் செய்பவர் நீவிர்; மெய்ஞ்ஞானமாகிய சிவஞானத்தால் விளங்கி மேம்படுபவர்களுக்கேயன்றி, தேவரீரின் அருள் தன்மையினை உணர்வதற்கும் உரைப்பதற்கும் கூடுமோ !
557. கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
துறையிலங்கை மன்னதைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.
தெளிவுரை : நீலகண்டத்தை உடைய பெருமானே ! இலங்கையின் மன்னனாகிய இராவணனுடைய தோள் நெரியுமாறு கயிலை மலையால் ஊன்றிய தேவரீர், வேதத்தின் பாடலாக மேவி, மதுரையில் திகழும் ஆலவாய் என்னும் திருக்கோயிலில் வீற்றிருப்பவர். ஒருமித்த மனத்தினால் எண்ணித் துதிப்பதே தேவரீரை வழிபடுவதற்குரிய நியமம் ஆகும்.
558. தாவணவ் விடையினாய் தலைமையாக நாள்தொறும்
கோவணங் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலுநின்
தூவணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே.
தெளிவுரை : தாவிச் செல்லும் இடப வாகனத்தை உடைய பெருமானே ! கோவண ஆடையை முதன்மையாகக் கொண்டு விளங்கும் நாதனே ! கூடலில் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கும் பரமனே ! செந்தாமரை மலரில் திகழும் பிரமனும், திருமாலும் தேவரீரை அளந்து அறியும்  தன்மை அற்றவராய், அயர்ச்சி அடைந்தனர் அல்லவா !
559. தேற்றமில் வினைத்தொழிற் றோரும் சமணரும்
போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்துபுண் ணியங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றி சைக்கும்மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.
தெளிவுரை : தெளிந்த பயனை நல்காத செயலின்கண் மேவும் தேரர்களும் சமணர்களும் நின்னுடைய திருவடியை வணங்கிப் போற்றிப் புண்ணியத்தைக் கொள்ளாதவராயினர். கூற்றுவனை உதைத்த திருப்பாதனே ! கூடலின் ஆலவாயின்கண் வீற்றிருக்கும் ஈசனே ! உலக மூர்த்தியாய் நின்று விளங்கி, உயிர்களுக்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிரோ அல்லவா !
560. போயநீர் வளங்கொளும் பொருபுனல் புகலியான்
பாயகேள்வி ஞானசம் பந்தனல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்ட ஆலவாயில் அண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.
தெளிவுரை : நீர் வளம் பெருகும் புகலியில், பரந்த கேள்வி ஞானம் மிக்க, வேதம் வல்ல ஞானசம்பந்தன் சிவபெருமானை ஏத்துதலாகிய நற்பண்பால் விளங்கும் சொல்மாலை கொண்ட ஆலவாய் அண்ணலை ஏத்திய இத்திருப்பதிகத்தை எண்ணத்தில் கொண்டும், சிந்தையில் பதித்தும் ஓதுபவர்கள், தீயவை யாவும் நீங்கப் பெற்றவராய் விளங்குவார்கள். அவர்கள், தேவர்களுக்கு ஒப்பாவார்கள்.
திருச்சிற்றம்பலம்
311. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
561. வானைக்காவலில் வெண்மதி மல்குபல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார் ஏதும்ஏதும் இல்லையே.
தெளிவுரை : வானின் இருளை நீக்கிக் காக்கும் தன்மையதாய் விளங்கும் வெண் மதியைச் சடை முடியில் தரித்து, தேன் அன்ன இனிய மொழியாற்றும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் சிவபெருமான், ஆனைக்கா என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப்பெருமானின் திருவடியை அபயம் கொண்டு வாழ்பவர்களுக்குப் பாதுகாவலாக வேறு எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு எத்தகைய பாவமும் நேராது.
562. சேறுபட்ட தண்வயல் சென்று சென்று சேண்உலா
ஆறுபட்ட நுண்துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணில்எண்ண வல்லரே.
தெளிவுரை : வயல்களின் வளம் பெருகுமாறு நெடுந் தொலைவு சென்று உலவி வருகின்ற காவிரி ஆற்றின் துறையில் மேவும் ஆனைக்காவில் வீற்றிருக்கும் அண்ணலாகிய சிவபெருமான். திருவெண்ணீறு பூசிய திருமேனி உடையவர். நிகரில்லாத அப் பெருமானின் திருவடிகளை ஏத்துபவர்கள், உலக மாயையில் சிக்க வைக்கும் அஞ்ஞானத்திலிருந்து வேறுபட்டராய், நற்கதிக்கு ஆளாகப் பெறுகின்ற சிவஞானம் கைவரப் பெற்றவராய் விளங்குபவர்கள் எனத் தேவர்கள் எண்ணி மகிழ்வார்கள்.
563. தாரமாய மாதராள் தானொர்பாகம் ஆயினான்
ஈரமாய புன்சடை ஏற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வவ்வினைகள் மாயுமே.
தெளிவுரை : தாரம் ஆகிய உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மேவும் சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் வைத்து விளங்குவதோடு சந்திரனைச் சூடியவர். சோழ மன்னன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்க, விலை உயர்ந்த ஆரத்தைத் திருமார்பில் ஏற்ற அவ் ஆனைக்காவின் அண்ணலை, முறையாக அன்பு பூண்டு வணங்கும் அடியவர்களின் தீவினை யாவும் நீங்கும்.
564. விண்ணில் நண்ணு புல்கிய வீரமாய மால்விடைச்
சுண்ணவெண்ணீறு ஆடினான் சூலமேந்து கையினான்
அண்ணல்கணணொர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம்ஒன்றும் இல்லையே.
தெளிவுரை : வானில் நண்ணிச் சென்று வீரம் விளைவிக்கும் பெருமையுடைய இடபத்தை உடையவராய், திரு வெண்ணீற்று மேனியராய், சூலப்படை ஏந்தும் திருக்கரத்தராய், முக் கண்ணுடைய மூர்த்தியாய் மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருவானைக்காவைத் தொழுது போற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டுள்ள அன்பர்களுக்குத் தீமையானது அணுகாது.
565. வெய்பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாள்மலர்க் கொன்றைதுன்று சென்னிஎம்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.
தெளிவுரை : கொடிய பாவமானது விலக வேண்டும் என்று விரும்புகின்ற அன்பர்களே ! தேவர்களைக் காத்து அருள் புரிந்தவராய், நீலகண்டனாகிய ஈசன், வெம்மை மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற இயல்புடையவராய், எந்நாளும் மலர்ந்து விளங்கும் கொன்றை மலரைச் சடை முடியில் தரித்து வீற்றிருக்கும், பொய்கை சூழ்ந்த ஆனைக்கா என்னும் திருத்தலத்தை அடைவீராக.
566. நாணும்ஓர்வு சார்வுமுன் நகையும்உட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்றுடைக் கறைகொள் மிடறனல்லனே.
தெளிவுரை : அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத தன்மையினை உணர்ந்து நாணுதலும், பதியை ஓர்ந்து அறிதலும், அறிந்ததன் பின் சார்ந்து இருத்தலும், சார்தலினால் மகிழ்ந்து விளங்குதலும், அத்தன்மையில் மனத்தை அடக்கி உள்கித் தியானம் செய்தலும் ஆகியன நன்மை உடையனவாகும். அத்தகைய நிலையால் காணும் பேறு, வேறு எத் தன்மையாலும் காண முடியாதது. அவ்வாறு பேசப்படுவதற்குக் கர்த்தாவாகிய ஈசன், ஆணும் பெண்ணும் சேர்ந்ததாகிய  அர்த்தநாரி திருக்கோலத்தில், ஆனைக்காவில் வீற்றிருக்கின்ற அண்ணல் ஆவார். அப்பெருமான் மூன்று கண்களையுடையவராய் நஞ்சினையுண்ட கறையுடைய கண்டத்தினராய் விளங்குபவர் அல்லவா !
567. கூருமாலை நண்பகல் கூடிவல்ல தொண்டர்கள்
பேரும்ஊரும் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
பாரும் விண்ணும் கைதொழப் பாயும்கங்கை செஞ்சடை
ஆரநீரொ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே.
தெளிவுரை : மிகுதியாக மாலை மற்றும் பகல் காலங்களில், அன்பின் மிக்கவராயும், சிவஞானப் பொலிவு உடையவராயும் உள்ள திருத்தொண்டர்கள் கூடி இருந்து, ஈசனின் திருநாம மகிமைகளையும், திருத்தலங்களின் சிறப்புக்களையும், அருளிச் செயல்களையும் பேசப்படுகின்ற பெற்றியுடையவராகிய சிவபெருமான், பூவுலகமும் விண்ணுலகமும் கைதொழுது ஏத்தக் கங்கையைச் செஞ்சடையில் பொருந்துமாறு தரித்தவர். அப் பரமன் வீற்றிருக்கின்ற திருவானைக்கா என்னும் தலத்தை அடைவீராக.
568. பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே.
தெளிவுரை : தாமரை மலரில் வண்டினம் ரீங்காரம் செய்யவும், அன்னப் பறவைகள் குளிர்ந்த துறையில் விளங்கவும் திகழ்கின்ற ஆனைக்காவில் வீற்றிருக்கும் அண்ணலை, நான்கு மறைகளாலும் திரும்பத் திரும்பப்போற்றி நின்று, திருக்கழலை  ஏத்துபவர்கள் மறுமைக் கண் விண்ணுலகத்தில் விளங்கி நிற்பார்கள்.
569. ஊனொடுண்டல் நன்றென ஊனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.
தெளிவுரை : ஈசனுக்கு, நல்ல சுவையுடைய இறைச்சி உணவு நனி வழங்குதலை மேற்கொண்டு, அதனை நன்றெனக் கருதி அமுது படைத்தவர், கண்ணப்ப நாயனார். அத்தகைய ஊன் உணவை ஈசனுக்குப் படைத்தல் அபசாரம் எனக் கருதி, அத்தகைய செயல் தீது என மருண்டார் சிவகோசரியார். இவ்விரு தொண்டர்களும் பேரன்பு பூண்ட காரணத்தால் பேசநின்ற தன்மையில் திகழும் சிவபெருமான், வானில் ஒரு கலையுடன், எஞ்சிய சந்திரனைச் சூடி, வளருமாறு செய்தவர். பசுவின் பஞ்ச கௌவியத்தை அபிடேகப் பொருளாக ஏற்று மகிழும் அப்பெருமான் வீற்றிருக்கும் ஆனைக்காவைச் சென்றடைவீராக.
570. கையில்உண்ணும் கையரும் கடுக்கள்தின் கழுக்களும்
மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
தையல்பாகம் ஆயினான் தழலதுஉருவத் தான்எங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பொய் நெறியில் மேவி, வேத நெறியை அறியதவராயினர். ஈசன், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். சோதி பொரூபமாகத் திகழ்பவர்; எங்கள் தலைவர். அப்பெருமான் வீற்றிருக்கும் பொய்கை சூழ்ந்து விளங்கும் ஆனைக்காவைச் சென்றடைமின்.
571. ஊழியூழி வையகத்து உயிர்கள் தோற்று வானொடும்
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.
தெளிவுரை : ஊழிக் காலந்தோறும் உயிர்களைப் படைக்கும் தொழில் மேவும் பிரமனுடன், திருமாலும் தேடிச் சென்று காணுதற்கு அரியவராகிய ஈசன், ஆனைக்காவில் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப்பெருமானைக் காழிப்பதியில் மேவும் ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன இத்திருப்பதிகத்தை, முறையாகக் கற்று ஓதவல்லவர்களின் கொடிய வினை யாவும் மாய்ந்தழியும்.
திருச்சிற்றம்பலம்
312. பொது திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
572. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதுஎல் லாம்அர நாமமே
சூழ்க வையக மும்துயர் தீர்கவே.
தெளிவுரை : உலகம் வாழும் பொருட்டுச் செய்யும் கேள்விகளைப் புரியும் அந்தணர்கள் வாழ்க ! அவ்வேள்விகள் நடைபெறுவதற்குத் துணையாக மேவும் தேவர்கள் வாழ்க ! அபிடேகம் அர்ச்சனை ஆகியவற்றுக்குப் பஞ்ச கௌவியத்தினை நல்கி உறுதுணையாய் விளங்கும் பசுக் கூட்டங்கள் வாழ்க ! இவ்வகையான வழிபாட்டின் காரணமாகக் குறைவில்லாது வானமானது மழை பொழிவதாகுக ! அத்தன்மையில் மன்னன், ஓங்கும் புகழ் பெற்று விளங்குக ! தீயநெறியில் சென்று அழிவை உண்டாக்கும் அனைத்தும் கெடுவதாக ! எல்லாம் அரன் நாமமாகிய திருவைந்தெழுத்தை ஓதி இருக்க அதுவே உலகில் யாங்கணும் சூழ்ந்து விளங்கி உயிர்களுக்குப் பேரின்பத்தை நல்கும் தன்மையால், உலகத்தில் தீவினையாலும், அஞ்ஞானத்தாலும் உண்டாகும் துயர் யாவும் தீர்க. இது, உலகம் இன்புற்று வாழ, ஓதி அருளிய வாழ்த்தாயிற்று.
573. அரிய காட்சிய ராய்த்தமது அங்கைசேர்
எரியர் ஏறுகந்து ஏறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கையர் ஆயினும்
பெரியர் ஆர்அறிவார் அவர் பெற்றியே.
தெளிவுரை : அரிய காட்சி உடையவராகிய சிவபெருமான், தமது அழகிய கையில் நெருப்பை ஏந்தி, இடப வாகனத்தில் வீற்றிருக்கும், நீலகண்டத்தை உடையவராய், மெய்யன்பின் உரிமை பூண்ட பக்தர்களுக்குக் காட்சி தருபவர். அப்பெருமான், சுடுகாட்டில் மேவி இருந்து, நடம்புரிபவர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்கள் என அட்ட மூர்த்தமாகியும் அண்டங்கள் யாவையும் பசு ஞானத்தாலும் புலன்களாலும் அறிய முடியாது. அன்பில் திளைத்தவராகிய ஈசனின் தன்மையை யாரோ அறிவர் !
574. வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா எழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யார்அவர் எவ்வகை யார்கொலோ.
தெளிவுரை : திருநீறானது, எல்லா ஒளியினும் விஞ்சிய சிவபெருமானின் திருமேனியின் ஒளியால் மணம் கமழச் செய்யும் பாங்காயிற்று. அத்தகைமையுடைய ஈசன், தாமே உலகின் முதலாகவும், ஈறாகவும் விளங்கிப் பின்னும் தோற்றுவித்தலால் தமக்குத், தோற்றுவிப்பவர் யாரும் இல்லாதவராய்த் தந்தையும் தாயும் அற்றவராய் விளங்கித் தம்மைச் சிந்தை செய்பவர் தம் வினையைத் தீர்த்தருளிப் பொய்ம்மையைப் போக்குபவர் ஆயினார். அத்தகைய எந்தையை எவ்வகையான சொல் கொண்டு உணர்த்த வல்லது !
575. ஆட்பால் அவர்க்குஅருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையும் குறுகாமை எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவைகேட்க தக்கார்
தெளிவுரை : சிவபெருமான், தன்னுடைய அடியவர்களுக்கு அருள் புரிகின்ற வண்ணமும், தொன்மைச் சிறப்புடைய மாண்பும், கேட்கப் புகுங்கால் அவை, ஆய்வுக்குள் அடங்காததும் எல்லையற்றுப் பெருகும் தன்மையுடையதும் ஆகும். எம் தந்தையாகிய அப்பெருமானுடைய திருவடிப் புகழ்ச்சியைச் செவிமடுக்கும் அடியவர்களுக்குக் கோள்களாலும் தீய வினைகளாலும் இடர்கள் உண்டாகாது.
576. ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்க நீங்கலுறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர்இறையே வந்துசார் மின்களே.
தெளிவுரை : அன்பில் தோய்ந்து குழைந்து சாதுக்கள் எனும் புகுழுக்குரியவர்களே ! காரண காரியங்களைக் காட்டியும், வேதவாக்கியங்கள், மேற்கோள்கள், உவமைகள் முதலான மொழியாலும் ஈசனை ஆய்வு செய்ய வேண்டாம். அப்பெருமான், யாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்; அளந்து அறிய முடியாதவர்; அரிய சோதியாய் விளங்குபவர். அப்பெருமானை, மனத்துக்கண் நிலை நிறுத்திப் பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவீராக.
577. ஆடும்எனவும் மருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்எனவும் புகழல்லது பாவம்நீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் எனக்கேட்டீ ராகில்
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்ட லாமே.
தெளிவுரை : சிவபெருமான், திருநடம் புரிவதும், மார்க்கண்டேயருக்காகக் கூற்றுவனைக் காலால் உதைத்து அழித்ததும், வேதங்களைப் பாடியருளியதும் ஆகிய செயல்கள் புகழ் விளங்கும் தன்மையா அல்லது மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா, அன்றிப் பிறப்பினை அறுத்துப் பிறவா நெறியினை அளிப்பதற்கா எனக் கேட்பீராயின், இவை தன்னை நாடியவர்களுக்கு அருள் செய்வதற்கே அன்றி வேறு எக்காரணமும் ஆகாது என உறுதியாகக் கூறலாம்.
578. கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டு அங்குஆட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண்மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டும் அன்றே.
தெளிவுரை : நறுமணம் கொண்ட மலர்தூவிப் போற்றி, உலகினில் உயர்ந்த தன்மையில் விளங்கிப் பால் கொண்டு, மணலால் ஆகிய சிவலிங்கத் திருமேனி குளிருமாறு, சண்டீசர் அபிடேகம் செய்தபோது, அவ்வடியவர்தம் உலகியல் தந்தையானவர் இடம் செய்யலானார். அவ்வாறு இடம் செய்த தந்தையின் காலை வெட்டினாலும், அச்செயலானது பாவமாகக் கருதப்படாத நிலையில், முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப் பேற்றிணை அளித்தருளினார். இத்தன்மையானது, அறிவு சார்ந்த பெரியோர்களால் சொல்லப்படுகின்ற செம்மை அல்லவா !
579. வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.
தெளிவுரை : வேத நாயகனாக விளங்கும் சிவபெருமானை முதலாகக் கொண்டு, உலக மக்கள் குற்றத்தில் மேவாது, நன்னெறியை உணர்கின்ற மாண்பால், சூத முனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும், ஒழுக்கத்தைப் போதிப்பதாகும்.
580. பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதுஇடர் கண்டு அருள்செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடம் கொண்டவர்க்குப்
பேராழி ஈந்த புகழும் புகழுற்ற தன்றே.
தெளிவுரை : பகைவர்கள் பெருகியதன் காரணமாக நலிந்து மேவும் உலகத்தைக் காக்கும் தொழில் பேணும் திருமால், கடலில் துயில் கொண்டிருந்ததை விடுத்து, ஈசனைப் பூசித்து வழிபட்டு, அப் பகைவர்களை வெல்லும் வகையில் ஆழிப் படையை வேண்டினார். அவர் வேண்டுகோளுக்கிணங்கிய சிவபெருமான், காத்தல் தொழில் நன்கு திகழப் போர் ஆற்றல் மிகுந்த அப் படையை அளித்தது, மெய்யான புகழ் ஆகும். அல்லவா !
581. மாலா யவனும் மறைவல்ல நான்முகனும்
பாலாய தேவர் பகரில் அமுதூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டுஅங்கு அமரர்க்கு அருள் செய்த்தாமே.
தெளிவுரை : உலகத்தைக் காக்கும் தொழில் பேணும் திருமாலும், படைக்கும் தொழில் மேவும் பிரமனும் மற்றும் பலராகிய தேவர்களும், அமுதம் கொண்டு மகிழும் விருப்பத்தால் கடலைக் கடைந்தனர். அப்போது அரியதாய் எழுந்த ஆலகால விடத்தை உட்கொண்டு காத்தவர் சிவபெருமான். இது, ஈசன், தேவர்களுக்கு அருள் புரிந்த செம்மையாகும்.
582. அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கி னானும்
தெற்றென்று தெய்வம் தெளியார் கரைக்கு ஒலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வில் ஊரவும் பண்பு நோக்கில்
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே.
தெளிவுரை : சிவபெருமான், முன்னர் உரைத்த அத்துணைப் புகழுக்கும் உரியவராகியவர். அதுவும் அன்றி, அவர், மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஆக்கித் தமிழ் வளர்த்து அருளிச் செய்தவர். ஈசனே  முழு முதற் பொருள் எனத் தெளிவு பெறாதவர்களுக்குத் தெளிவு பெற, இந்த அரிய ஓலையானது, வைகை ஆற்றில் எதிர் நோக்கிச் செல்லும் மாண்பினை நோக்கில், இடப வாகனத்தில் மீது இவர்ந்து மேவும் பெருமானே, இறைவன் எனத் தக்கவர், என்பதுதானே மெய்ம்மை !
583. நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்க ளும்பரவும் ஈசனை யேத்துபாடல்
பல்லார்க ளும்மதிக்கப் பாசுரம் சொன்னபத்தும்
வல்லார்கள் வானோர்உல காளவும் வல்லர் அன்றே.
தெளிவுரை : சிவஞானிகள் குழுமி விளங்கும் புகலியின் ஞானசம்பந்தன், மெய்யன்பர்களால் நன்கு பரவப்படும் ஈசனை ஏத்துகின்ற பாடலாவது, இத் திருப்பாசுரம் ஆகும். இதனை ஓத வல்லவர் வானுலகை ஆளும் வல்லமை பெற்றவராவர்.
திருச்சிற்றம்பலம்
313. திருவான்மியூர் (அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை காஞ்சிபுரம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
584. விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய் உமைநங்கையொர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூர்உறையும்
அரையா உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே.
தெளிவுரை : ஈசனே ! நீவிர், நறுமணம் கமழும் கென்றை மலரை அணிந்தவர்; விடத்தை உட்கொண்டு அதனால் கரிய நிறத்தினை உடய கண்டத்தினர்; புகழ் பல உடையவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறையும் அரசே  உம்மைத் தவிர என் மனம் பிறவற்றை நாடாது.
585. இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோடு அரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி யூர்உறையும்
அடிகேள் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
தெளிவுரை : இடியைப் போல முழங்கும் இடபத்தை உடைய ஈசனே ! தேவர்களுக்கு வாழ்வளிக்கும் நாதனே ! இடபக் கொடியும், சந்திரனும், அரவமும், கொன்றை மலரும் உடைய இறைவனே ! மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் உறையும் அடிகளே ! உம்மை அன்றி என்னுடைய மனமானது வேறொன்றை நாடாது.
586. கையார்வெண்மழுவா கனல் போல்திரு மேனியனே
மையார் ஒண்கண் நல்லாள் உமையாள் வளம் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூர்உறையும்
ஐயா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
தெளிவுரை : கையில் மழுப்படையுடைய பெருமானே ! நெருப்புப் போன்ற சிவந்த மேனியனே ! ஒளி மிக்க கண்ணுடைய நல்லாள் ஆகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் திருமார்பினை உடைய பரமன் ! கயல் பாயும் நீர் வளம் மிகுந்த திருவான்மியூரில் உறையும் தலைவனே ! என்னுடைய மனமானது தேவரீரை அன்றி வேறு எதிலும் சாராது.
587.பொன்போ லுஞ்சடைமேல் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாம் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா உன்னையல்லல் அடையாதுஎனது ஆதரவே.
தெளிவுரை : பொன் போன்ற சடை முடியின் மீது கங்கையைத் தரித்து விளங்கும் புண்ணியனே ! மின்னலைப் போன்று ஒளிரும் முப்புரி நூலினைத் தரித்து இடப வாகனத்தில் விளங்கும் வேதியனே ! இவ்வுலகமானது இனிமையுடன் திகழுமாறு திருவான்மியூரில் அன்புடன் விளங்கும் ஈசனே ! தேவரீரை அன்றி யுன் நெஞ்சமானது வேறொன்றையும் நாடாது.
588. கண்ணாரும் நுதலாய் கதிர்சூழ்ஒளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீறு அணிவாய்எழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மியூர் உறையும்
அண்ணா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
தெளிவுரை : நெற்றியில் கண்ணுடைய நாதனே ! ஒளி வீசும் திருமேனியுடைய பெருமானே ! எண்ணத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருவெண்ணீற்றைப் பூசி அணியும் பரமனே ! எழில் மிக்க பொழிலும் உறுதியான மதில்களும் உடைய திருவான்மியூரில் வீற்றிருக்கும் அண்ணாவே ! என் மனமானது உன்னை அல்லாது வேறொன்றினைச் சாராது.
589. நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்தலை ஒன்றினையும்
சேதீ சேதமில்லாத் திருவான்மியூர் உறையும்
ஆதீ உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே.
தெளிவுரை : நடுநிலையில் இருந்து நீதி வழங்கும் நாதனே ! தேவரீரை அன்றி நான் வேறு நெறியினைச் சிந்தித்ததில்லை. வேதங்களை ஓதும் பரமனே ! பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்து, நான்முகனாக விளங்கச் செய்த பெருமானே ! எத்தகைய குறைவும் அடையாது, செழித்து ஓங்கும் திருவான்மியூரில் உறையும் ஆதியே ! உம்மையன்றி என் மனமானது வேறு எதனையும் நாடாது.
590. வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவரும்
கானார் ஆனையின்தோல் உரித்தாய் கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மியூர் உறையும்
ஆனாய் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
தெளிவுரை : வானத்தில் பொருந்துகின்ற சிறந்த சந்திரனைச் சடை முடியில் சேர்த்து வைத்து இருப்பவரே ! காட்டில் உலவும் கரிய யானையின் தோலை உரித்த நீலகண்டனே ! தேன் துளிர்க்கும் மலர்களைக் கொண்ட சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் உறையும் நாதனே ! இடப வாகனத்தில் விளங்கும் ஈசனே ! என் மனமாவது தேவரீரை அல்லாது வேறு எதிலும் சார்ந்து நிற்காது.
591. பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மியூர் உறையும்
அறிவே உன்னை யல்லால் அடையாதுஎனது ஆதரவே.
தெளிவுரை : படம் கொண்டு விளங்கும் நாகத்தைப் படுக்கையாகக் கொண்டுள்ள திருமாலும், தாமரைப் பூவில் உறையும் பிரமனும், நெறி காட்டும் உமது நீண்ட கழலையும், மேலோங்கும் முடியையும், காண்பதற்கு அரிதாகிய ஈசனே ! மதில் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருக்கின்ற பேர் அறிவே ! தேவரீரையன்றி என் மனமானது வேறொன்றையும் நாடாது.
592. குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
திண்தேர் வீதியதார் திருவான்மி யூர்உறையும்
அண்டா உன்னை யல்லால் அடையாதுஎனது ஆதரவே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உண்மையான காரண கருத்துக்களை அறியாதவராய், உம்மைப் பேச வீற்றிருந்தீர். தேர் செல்லும் அகன்ற வீதிகளை நன்கு கொண்டு மேவும் திருவான்மியூரில் உறையும் அண்டர் நாயகனே ! தேவரீரையன்றி என் மனமானது வேறு எதனையும் நாடாது.
593. கன்றா ருங்கமுகின் வயல்சூழ்ந்த காழிதனில்
நன்றா னபுகழால் மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மியூரதன்மேல்
குன்றாது ஏத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.
தெளிவுரை : பாக்கு மரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற காழியில், நன்மைகள் மேவும் சைவ நெறியில் விளங்கிப் புகழ் கொண்டு திகழும் ஞானசம்பந்தன் உரை கொண்டு இடர் தீர்க்கும் திருவான்மியூரின்மேல் செப்பிய இத் திருப்பதிகத்தை ஏத்தி ஓத வல்லவர்களுக்குத் தீவினையானது விலகிச் செல்லும்.
திருச்சிற்றம்பலம்
314. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
594. இறையவன் ஈசன் எந்தை
இமையோர்தொழுது ஏத்த நின்ற
கறையமி கண்டன்வெண் தோடு
அணிகாதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான்
மலையாளொடு மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான்
பிரமாபுரம் பேணுமினே.
தெளிவுரை : இறைவனாகிய ஈசன், என் தந்தை. அப்பெருமான், தேவர்களால் தொழப்படுபவர்; கழுத்தில் நஞ்சு அருந்திய கறையுடையவர்; சங்கினால் ஆன தோடு என்கிற அணியைக் காதில் கொண்டுள்ளவர்; உரிய காலத்தில் வேதங்களை உபதேசம் செய்தவர்; மலை மகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; ஒளி தேவித் திகழும் செஞ்சடையில், பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர். அப்பெருமான், வீற்றிருக்கும் பிரமாபுரத்தை ஏத்துவீராக.
595. சடையினன் சாம வேதன்
சரிகோவண வன்மழுவாள்
படையினன் பாய்புலித்தோல்
உடையான் மறை பல்கலைநூல்
உடையவன் ஊனமில்லி
உடனாய்உமை நங்கையென்னும்
பெடையொடும் பேணும்இடம்
பிரமாபுரம் பேணுமினே.
தெளிவுரை : ஈசன், சடை முடி உடையவர்; சாமவேதன் என்னும் திருப்பெயர் பூண்டவர்; யாவராலும் மாறுபாடற்ற தன்மையில் விளங்கும் வேதத்தைக் கோவணமாகத் தரித்து இருப்பவர்; மழு என்னும் வாட்படை உடையவர்; புலியின் தோலை உடுத்தியவர்; வேதம் முதலான கலை நூல்களின் தலைவர்; எத்தகைய குறைபாடும் இல்லாதவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் விரும்புகின்ற இடமாகிய பிரமாபுரத்தை ஏத்துக.
596. மாணியை நாடு காலனுயிர்
மாய்தரச் செற்றுக்காளி
காணிய ஆடல் கொண்டான்
கலந்து ஊர்வழி சென்று பிச்சை
ஊணியல் பாகக் கொண்டு அங்கு
உடனே உமைநங்கை யோடும்
பேணிய கோயில் மன்னும்
பிரமாபுரம் பேணுமினே.
தெளிவுரை : ஈசன், மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனின் உயிரை மாய்த்தவர்; காளி தேவி காணுமாறு திருநடனம் புரிந்தவர்; பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி, ஊர்தொறும் சென்று பிச்சை ஏற்று உணவைத் கொண்டவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; அப்பெருமான் விரும்பி இருக்கும் கோயில், சிறப்புடன் திகழும் பிரமாபுரம் ஆகும். அதனை ஏத்துமின்.
597. பாரிடம் விண்ணும் எங்கும்
பயில்நஞ்சு பரந்து மிண்டப்
பேரிடர்த் தேவர் கணம்
பெருமான் இதுகா எனலும்
ஓரிடத் தேகரந்து அங்கு
உமைநங்கை யொடும்உடனே
பேரிட மாகக் கொண்ட
பிரமாபுரம் பேணுமினே.
தெளிவுரை : மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் விரிந்து பரந்து நஞ்சின் வெம்மையால் தேவர்கள் இடர் கொண்டு நலிந்து, பெருமானே ! காப்பாற்றுவீராக என்று வேண்டித் துதிக்க, அந்த விடத்தை ஓரிடத்தில் சாருமாறு தருவித்துக் கொண்டு, கண்டத்தில் கரந்து அருள் புரிந்தவர், சிவபெருமான். அப் பரமன், உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருக்கும் பெருமை மிகுந்த இடமாவது, பிரமாபுரம் ஆகும். அதனை ஏத்துக.
598. நச்சரவச் சடைமேல்
நளிர் திங்களும் ஒன்றவைத்துஅங்கு
அச்சம்எழ விடைமேல்
அழகார் மழு ஏந்திநல்ல
இச்சை பகர்ந்தும டக
இடுமின் பலி என்றுநாளும்
பிச்சைகொள் அண்ணல் நண்ணும்
பிரமாபுரம் பேணுமினே.
தெளிவுரை : ஈசன், நஞ்சு கொண்டு மேவும் அரவத்தைச் சடை முடியின் மீது இருத்திக் குளிர்ச்சி மிக்க சந்திரனை அதனுடன் ஒன்றி இருக்குமாறு செய்தவர்; இடப வாகனத்தின் மீது அமர்ந்து, அச்சம் தரும் மழுப் படையை ஏந்தியவர்; விருப்பத்துடன் பலி இடுமாறு வேண்டு நாள்தோறும் பிச்சை ஏற்பவர். அவ் ஈசன் வீற்றிருக்குமச் பிரமாபுரத்தைப் பேணுவீராக.
599. பெற்றவன் முப்புரங்கள்
பிழையா வண்ணம் வாளியினால்
செற்றவன் செஞ்சடையில்
திகழ்கங்கை தனைத் தரித்திட்டு
ஒற்றை விடையினனாய்
உமை நங்கையொடும் உடனே
பெற்றிமை யால் இருந்தான்
பிரமாபுரம் பேணுமினே.
தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தை உடையவர்; மூன்று புரங்களைத் தப்பித்துச் செல்லாதவாறு ஒரு அம்பு செலுத்திச் சாம்பலாக்கியவர்; கங்கையைத் தரித்தவர்; ஒற்றை இடபத்தை உடையவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு பெருமையாக விளங்குபவர். அப் பெருமான் வீற்றிருக்கும் பிரமாபுரத்தைப் பேணுவீராக.
600. வேத மலிந்த வொலி
விழவின் னொலி வீணையொலி
கீத மலிந்துடனே
கிளரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர் வான்
முகடேற வொண் மால்வரையான்
பேதையொடும் இருந்தான்
பிரமாபுரம் பேணுமினே.
தெளிவுரை : வேதங்களை ஓதுகின்ற ஒலியும், திரு விழாக்கள் நடைபெறுகின்ற ஒலியும், வீணையில் கீதங்களை இசைத்து மீட்டுகின்ற ஒலியும், ஒரு சேர எழுந்து கடலின் ஒலியை அடக்குகின்றவாறு, வானில் சென்று ஒலிக்க, பெருமையுடைய கயிலை மலையானாகிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருக்கும் பிரமாபுரத்தை ஏத்துவீராக.
601. இமையவர் அஞ்சி யோட
எதிர்வாரவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன்
அடர்த்து மலை அன்று எடுப்பக்
குமையது செய்து பாடக்
கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொடு இருந்தபிரான்
பிரமாபுரம் உன்னுமினே.
தெளிவுரை : இராவணனைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டனர். அவன், தன்னை எதிர்த்து நிற்பவர் இன்றிக் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த காலத்தில், ஈசன் திருப்பாத விரலால் சிறிது ஊன்ற, மலை அழுந்தி அவ் அரக்கனை நெரித்தது. மனம் வெதும்பி. உடல் சோர்ந்து துன்புற்று நலிந்த இராவணன், ஈசனைப் பாடிப் போற்ற, அவனுக்கு வீரவாளும், நீண்ட வாழ்நாளும் வரமாகக் கிடைத்தது. அத்தகைய வரத்தை நல்கிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருப்பது பிரமாபுரம் ஆகும். அதனை நினைத்து ஏத்துமின்.
602. ஞாலம் அளித்தவனும்
அரியும் அடி யோடுமுடி
காலம் பலசெலவும்
கண்டிலாமை யினால்கதறி
ஓலம் இடஅருளி
உமைநங்கை யொடும்உடனாய்
ஏல விருந்தபிரான் பிரமாபுரம் ஏத்துமினே.
தெளிவுரை : பூவுலகைப் படைத்த பிரமனும், திருமாலும் பலகாலம் ஈசனின் அடி முடியைத் தேடி அலைந்து, காண முடியாது அயர்ந்து பக்தியால் கதிறி ஓலம் இட்டனர். அத்தன்மையில் அவர்களுக்கு அருள் புரிந்த சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு பொருந்துமாறு வீற்றிருக்கும் இடம் பிரமாபுரம் ஆகும். அதனை ஏத்துமின்.
603. துவருறும் ஆடையினார்
தொக்க பீலியர் நக்கரையர்
அவரவர் தம்மைகள்கண்டு
அணுகேன்மின் னருள்பெறுவீர்
கவருறு சிந்தை யொன்றிக்
கழிகாலம் எல்லாம் படைத்த
இவர்அவர் என்றுஇறைஞ்சிப்
பிரமாபுரம் ஏத்துமினே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கொண்டுள்ள கொள்கைகளை அணுக வேண்டாம். இறைவனுடைய திருவருளில் நாட்டம் கொண்டு அதனைப் பெறுவதற்கு விரும்புவார்களே ! இக்காலத்தில் மட்டும் அல்லாது சென்ற காலத்திலும் எல்லாவற்றையும் தோற்றுவித்துக் காத்தருள் புரிபவர் சிவபெருமானே என்று சிந்தையில் தோய்ந்த விருப்பம் உடையவராய் வழிபடுவீராக. அப்பெருமான் வீற்றிருக்கின்ற பிரமாபுரத்தை ஏத்துவீராக.
604. உரைதரு நான்மறையோர்
புகழ்ந்து ஏத்த ஒண்மாதினொடும்
வறையென வீற்றிருந்தான்
மலிகின்ற பிரமபுரத்து
அரசினை யேத்தவல்ல
அணிசம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம்
எதிர்கொள்ள விரும்புவரே.
தெளிவுரை : பெரும் புகழுக் உரிய நான்மறை வல்ல பெருமக்களால் புகுழ்ந்து ஏத்த, ஒளி திகழ மேவும் உமாதேவியை உடனாகக் கொண்டு, மலை போன்று உறுதிப் பொருளாக விளங்குபவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் பிரமாபுரத்தின் அருளாட்சிச் சிறப்பினை, ஏத்திய ஞானசம்பந்தனின் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், கற்பகத் தரு முதலான நறு மணமலர்கள் பொலிந்து எழில் மேவும் தேவர் உலகத்தவர்களால், எதிர் கொண்டு வரவேற்கப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
315. திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்
605. விடையவன் விண்ணு மண்ணும்
தொழநின்றவன் வெண்மழுவாள்
படையவன் பாய்புலித் தோல்
உடைகோவ ணம்பல்கரந்தைச்
சடையவன் சாம வேதன்
சசிதங்கி சங்கவெண்தோடு
உடையவன் ஊனமில்லி
உறையும் இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தை உடையவர்; தேவர்களும் பூவுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவர்; ஒளி திகழும் மழுப் படையுடையவர்; புலித் தோலும் கோவணமும் உடையாகக் கொண்டவர்; பலவிதமான மலர்களைச் சடையில் சூடியவர்; சாமவேதன் என்னும் திருநாமத்திற்கு உரியவர்; சந்திரனைத் திருமுடியில் தாங்கி, சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் அணியைக் காதில் அணிபவர்; குறையேதும் இல்லாத குணக்குன்றாகிய அப்பெருமான், அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருக்கும் இடம், ஒற்றியூரே.
606. பாரிடம் பாணிசெய்யப்
பறைக்கட் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல்ஆடல்
இலயம்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன்
தலைவன்தலை யேகலனா
ஊரிடும் பிச்சை கொள்வான்
உறையும்இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : பூத கணங்கள் பண் இசைத்துப் பாடவும், பறைகள் கொட்டவும் பல்வேறு கணங்களையுடைய பேய்கள் பாடி ஆடவும், இலயம் கெடாதவாறு நிகழ்த்தும் திருக்கூத்தனைப் புரிபவர், ஈசன். இடப வாகனத்தை உடைய அப்பெருமான், படைத்தல் தொழில் மேவும் தலைவனாகிய பிரமனின் தலையைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு ஊரார் இடுகின்ற பிச்சை கொள்பவர். அவர் உறைவது ஒற்றியூரே.
607. விளிதரு நீரு மண்ணும்
விசும்போடு அனல் காலும்ஆகி
அளிதரு பேரருளால்
அரனாகிய ஆதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய்
கமழ்கொன்றையி னோடுஅணிந்த
ஒளிதரு வெண்பிறையான்
உறையும்இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : ஈசன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களாக விளங்கி, மன்னுயிர்களுக்கு அன்புடன் அருளும் பேரருளானவர். அப்பெருமான், அரன் என்று சொல்லப்படுகின்ற ஆதிமூர்த்தி. வண்டுகள் பண் செய்யும் நறுமணம் கமழ்கின்ற கொன்றை மலருடன், பிறைச் சந்திரனைச் சூடி அவ் இறைவன் உறையும் இடமாவது ஒற்றியூரே.
608. அரவமே கச்சதாக
அசைத்தான் அலர் கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த
விரையார்வரை மார்பன் எந்தை
பிரவுவார் பாவம் எல்லாம்
பறைத்துப்படர் புன்சடைமேல்
உரவுநீர் ஏற்ற பெம்மான்
உறையும் இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை அரையில் கச்சாகக் கட்டியவர்; கொன்றை மாலை சூடியவர்; முப்புரி நூல் தரித்த மலை போன்ற திரு மார்பினர். எம் தந்தையாகிய அப் பெருமான், பரவி ஏத்தும் அடியவர்களின் பாவத்தைத் தீர்த்தருள்பவர். சடைமுடியில் கங்கையைத் தரித்த அக்கடவுள் உறையும் இடம், ஒற்றியூரே.
609. விலகினார் வெய்ய பாவம்
விதியால் அருள் செய்து நல்ல
பலகினார் மொந்தை தாளம்
தகுணிச் சமும் பாணியாலே
அலகினால் வீசி நீர்கொண்டு
அடிமேல் அலர் இட்டுமுட்டாது
உலகினார் ஏத்த நின்றான்
உறையும் இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : ஈசன், கொடிய பாவங்களிலிருந்து விடுபட்ட பக்குவப்பட்ட நன் மாந்தர்களுக்கு நல்லுபதேசம் செய்விப்பவராய்ப் பலவிதமான வாத்தியங்களும் சேர்ந்து முழங்க, பாடல்களை இசைத்துத் தூய நீர் கொண்டு அபிடேகம் செய்தும் மலரால் தூவி அருச்சித்தும் ஏத்தியும் வழிபட வீற்றிருக்கும் இடமாவது, ஒற்றியூரே.
610. கமையொடு நின்றசீரான்
கழலும் சிலம்பும் ஒலிப்பச்
சுமையொடு மேலும் வைத்தான்
விரிகொன்றையும் சோம னையும்
அமையொடு நீண்ட திண்டோள்
அழகாய பொற் றோடுஇலங்க
உமையொடும் கூடி நின்றான்
உறையும் இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : அமைதியும் சாந்தமும் விளங்கப் பொலியும் சிவபெருமான், கழலும் சிலம்பும் ஒலிக்க நடம் புரிபவர். திருமுடியின்கண் சந்திரனையும், கொன்றை மலரையும் தரித்த அப்பெருமான், நீண்ட அழகிய தோளழகு உடையவர்; காதில் அழகிய பொன்மயமான தோடு அணிந்தவர். அவர், உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது ஒற்றியூரே.
611. நன்றியால் வாழ்வதுள்ளம்
உலகுக்குஆரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலும்
கருமால் வரையே சிலையாப்
பொன்றி னார் வார்சுடலைப்
பொடிநீறு அணிந்தார் அழலம்பு
ஒன்றினால் எய்தபெம்மான்
உறையும் இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : ஈசன், உலகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்னும் நற்குணத்தின் சிறப்பினால் மூன்று புரங்களையும் பெருமை வாய்ந்த மேரு மலையை வில்லாகக் கொண்டு, நெருப்பாகிய கணை ஒன்றினால் எய்து அழித்தவர். திருவெண்ணீறு அணிந்து பொலியும் அப்பெருமான் உறையும் இடம் ஒற்றியூரே.
612. பெற்றியால் பித்தன் ஒப்பான்
பெருமான் கரு மானுரி தோல்
சுற்றியான் சுத்தி சூலம்
சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன்
உடலைச் செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றும் ஆள்வான்
உறையும் இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : இயல்பால் பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான், மானின் தோலை உடுத்தியிருப்பவர்; நெருப்புக் கண்ணை நெற்றியில் கொண்டு விளங்குபவர்; கயிலை மலையைத் தெற்றிப் பெயர்த்த இராவணனை மலையின்கீழ் நெரியுமாறு நலியச் செய்தவர்; அடியவர்களை முழுமையாக ஆட்கொண்டு  அருள் புரிபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது ஒற்றியூரே.
613. திருவினார் போதினானும்
திருமாலுமொர் தெய்வம் உன்னித்
தெரிவினாற் காண மாட்டார்
திகழ்சேவடி சிந்தை செய்து
பரவினார் பாவம் எல்லாம்
பறை யப்படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான்
உறையும் இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் தெய்வத்தைக் காண வேண்டும் என நினைத்துத் தெரிந்தது போலக் கருதிச் சென்று பார்க்க முனைந்த போது, காண முடியாதவர்களாய் அயர்ந்து நிற்க; பின்னர் சிந்தனை செய்து பரவி ஏத்தப் பேரொளியாகக் திகழ்ந்தவர், சிவபெருமான். அத்தகைய பேரொளியாகிய பரமன், பரவும் அடியவர்தம் பாவங்களைக் களைந்து உறையும் இடம் ஒற்றியூரே.
614. தோகையம்பீலி கொள்வார்
துவர்க் கூறைகள் போர்த்து உழல்வார்
ஆகம செல்வணாரை
அலர் தூற்றதல் காரணமாகக்
கூகையம் மாக்கள் சொல்லைக்
குறிக் கொள்ளன்மின் ஏழுலகும்
ஓகை தந்தாள வல்லான்
உறையும்இடம் ஒற்றியூரே.
தெளிவுரை : மயில் தோலை கொண்டுள்ள சமணரும், துவர் ஆடையைப் போர்த்திய சாக்கியரும், ஆகம நெறியில் பூசிக்கப் பெறும் செல்வராகிய சிவபெருமானைப் பழித்துக் கூறும் சொற்களை ஏற்க வேண்டாம். ஏழுலகமும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்லராகிய அப்பெருமான் வீற்றிருக்கும் இடம், ஒற்றியூரே. அதனை ஏத்துமின்.
615. ஒண்பிறை மல்குசென்னி
இறைவன் உறை ஒற்றியூரைச்
சண்பையர்தம் தலைவன்
தமிழ்ஞான சம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல் பத்தும்
பரவிப் பணிந்து ஏத்தவல்லார்
விண்புனை மேலுலகம்
விருப்பெய்துவர் வீடுஎளிதே.
தெளிவுரை : ஒளிமிக்க பிறைச் சந்திரனைத் திருமுடியில் தரித்த சிவபெருமான் உறைகின்ற ஒற்றியூரைச் சண்பை என்னும் காழியின் தலைவனாகி தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன, பண்ணின் வளம் திகழும் இத் திருப்பதிகத்தைப் பரவியும் பணிந்தும் ஏத்தவல்லவர்கள், மறுமையில் விண்ணுலகத்தில் அழகுடன் விளங்கி இருந்து, முத்திப் பேற்றை எளிதாக எய்துவார்கள்.
திருச்சிற்றம்பலம்
316. திருச்சாத்தமங்கை (அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
616. திருமலர்க் கொன்றைமாலை
திளைக்கும் மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணி தன்னோடு
உடனாவதும் ஏற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேகம்
உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அருமலர் ஆதிமூர்த்தி
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : சிறப்பான கொன்றை மலரை மாலையாகக் கொண்டு மகிழும் தேவரீர், சந்திரனைத் தலையில் வைத்து விளங்குபவர்; தாமரை மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியோடு இணைந்து பாகத்தில் ஏற்று, அர்த்தநாரி திருக்கோலத்திலும் வேறாகத் திகழ, உடன் கொண்டு விளங்குமாறும் வீற்றிருப்பவர். அத்தகைய ஒப்பற்றவராயும் அருமை உடையவராயும் மேவும் ஆதிமூர்த்தி, பெருமையுடைய மலர்களைத் தரும் எழிலுடைய பெருஞ்சாத்த மங்கையில் உள்ள அயவந்தீசத்தில் உறைபவர் ஆவர்.
617. பொடிதனைப் பூசுமார்பில்
புரிநூல் ஒரு பால்பொருந்தக்
கொடியன சாயலாளோடு
உடனாவதும் கூடுவதே
கடிமண மல்கிநாளும்
கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக் கன்பரவ
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : சிவபெருமான், திருவெண்ணீறு பூசி, திருமார்பில் முப்புரி நூலை அணிந்த, பூங்கொடி போன்ற மென்மையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, அர்த்தநாரியாகவும் திகழ்பவர். நறுமண பொழில் விளங்கும் சாத்தமங்கையில், அப்பெருமான் திருநீலநக்க நாயனாரால் ஏத்தி வழிபட அயவந்தீசத்தில் அமர்ந்துள்ளவர்.
618. நூல் நலம் தங்குமார்பில்
நுகர் நீறு அணிந்து ஏறதுஏறி
மானன நோக்கி தன்னோடு
உடனாவது மாண்பதுவே
தானலங் கொண்டு மேகம்
தவழும் பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்த எம்மான்
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : முப்புரி நூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றைக் குழையப் பூசி, இடப வாகனத்தில் ஏறி, உமாதேவியை ஒரு பாகத்தில் இணைத்து, அர்த்தநாரியாகவும் உடனாகக் கொண்டு வேறாய் விளங்கியும் திகழ்பவர், சிவபெருமான். அப்பெருமான், பொழில் சூழ்ந்த சாத்த மங்கையில், ஆவின் நலம் பெருகும் பஞ்ச கௌவியத்தைத் திருமஞ்சனமாகக் கொண்டு, அயவந்தீசத்தில் வீற்றிருப்பவர்.
619. மற்றவில் மால்வரையா
மதில்எய்து வெண் ணீறுபூசிப்
புற்றர அல்குலா ளோடு
உடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை
நகர் கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளும் ஏத்த
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எய்து சாம்பலாகுமாறு செய்து, தேவர்களைக் காத்தருள் புரிந்த சிவபெருமான், திருவெண்ணீறு அணிந்தவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு, பாகமாகப் பெற்று அர்த்த நாரியாகவும் திகழ்பவர். இவை அப்பெருமானின் சிறப்புடைய செயல்களாகும். அவர், கற்றவர்களும் பாவம் அற்றவர்களும் விளங்குகின்ற சாத்த மங்கையில் மேவும் அயவந்தீசத்தில் வீற்றிருப்பவர்.
620. வெந்தவெண் ணீறுபூசி
விடையேறிய வேதகீதன்
பந்தண வும்விரலாள்
உடனாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம் வேதம்
தரித்தார் தொழும் சாத்தமங்கை
அந்தமாய் ஆதியாகிய
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : ஈசன் திருவெண்ணீறு பூசி, இடப வாகனத்தில் அமர்ந்து, உமாதேவியை உடனாகக் கொண்ட வீற்றிருக்கும் வேத கீதனாவார். அவர், வேதமும், அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற சாத்தமங்கையில், ஆதியும் அந்தமும் திகழும் மூர்த்தியாய் விளங்குபவர். அப் பெருமான் அயவந்தி என்னும் இடத்தில் வீற்றிருப்பவர்.
621. வேதமாய் வேள்வியாகி
விளங்கும் பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகம்
நிலைதான் சொல்லல் ஆவதொன்றே
சாதியான் மிக்கசீரால்
தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதியாய் நின்ற பெம்மான்
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : ஈசன், வேதமாய் விளங்குபவர்; வேத முறையால் விளங்கும் வேள்வியாகவும், ஞான வேள்வியாகவும் திகழ்பவர்; ஒண் பொருளாகவும் முத்திப் பேறாகவும் உள்ளவர். சோதியாயும், உமாதேவியை ஒரு பாகமாகவும் கொண்ட விளங்குபவர். அப் பெருமானை, இத் தன்மையுடையவர் என்று வாயினால் சொல்வது ஆகக்கூடிய செயலாகுமோ ! அத்தகைய சிறப்புடைய பெருமான், தக்கவர்கள் தொழுகின்ற சாத்தமங்கையில் ஆதிமூர்த்தியாய் அயவந்தியில் அமர்ந்திருப்பவரே.
622. இமயமெல் லாம்இரிய
மதில்எய்துவெண் ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த
நிலை தானுன்னல் ஆவதொன்றே
சமயமா றங்கம் வேதம்
தரித்தார்தொழும் சாத்தமங்கை
அமையவேறு ஓங்குசீரான்
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : இமயம் முதலான பெரிய மலைகளும் நிலை கலங்குமாறு முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மேவும் சிவபெருமானுடைய பெரிய நிலையினைப் பாராட்டிப் பேசுவது என்பது ஆகக்கூடிய செயலாகுமோ ! வேதத்தையும், அதன் ஆறு அங்கங்கள் முதலான சமய நூல்களையும் நன்கு ஆய்ந்து அறிந்த பெருமக்களால் தொழப்படும் சாத்த மங்கையில் ஓங்கும்கின்ற சிறப்புடன் திகழும் ஈசன், அயவந்தியில் வீற்றிருப்பவரே.
623. பண்ணுலாம் பாடல்வீணை
பயில்வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான்
மகள் பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியும்
தவழும்பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றஎம்மான்
அயவந்து அமர்ந்தவனே.
தெளிவுரை : சிவபெருமான், பண்ணின் இசை விளங்க வீணை மீட்டிப் பாடுபவர்; பரமயோகியானவர்; மலைக்கு அதிபனாகிய பர்வதராசனின் மகளாகிய பார்வதியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்ந்தவர். அப்பெருமான், குளிர்ச்சி பொருந்திய வெண் மதி தோயும் பொழில் சூழ்ந்த சாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி அயவந்தீசத்தில் அமர்ந்திருப்பவர்.
624. பேரெழில் தோளரக்கன்
வலிசெற்றதும் பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி
உடனாவதும் ஏற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு
கனகம் அனை யானும் காணா
ஆரழல் வண்ண மங்கை
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : எழில் கொண்ட தோளினால் மலையைப் பெயர்த்த இராவணனுடைய வலிமையை அடக்கிய சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு, தனித்தனியேயும், பாகத்தில் இணைந்து அர்த்தநாரியாயும் ஆகிய வண்ணத்தில் காட்சி நல்குபவர். அப்பெருமான், திருமாலோடு பிரமனும் தன்னைக் காண முடியாதவாறு, தீத்திரட்சியாய் மேவிச் சாத்த மங்கையில் செவ்வண்ணனாய் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருப்பவரே.
625. கங்கையோர் வார்சடைமேல்
அடையப்புடை யேகமழும்
மங்கையோடு ஒன்றிநின்றஅம்
மதிதான் சொல்லல் ஆவதொன்றே
சங்கையில் லாமறையோர்
அவர்தாம் தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தாய்
அயவந்தி அமர்ந்தவனே.
தெளிவுரை : ஈசனே ! கங்கையை நீண்ட சடை முடியில் கொண்டு விளங்குவதும், பக்கத்தில் மணம் மிகும் உமாதேவியை ஒன்ற வைத்து அர்த்தநாரியாய்த் திகழ்வதும் ஆகிய செம்மையுடைய அருஞ்செயல் சொல்லி முடியக்கூடய ஒன்றோ ! வேதங்களை நன்கு தெளிவாகக் கற்ற அந்தணர்கள் தொழுகின்ற சாத்த மங்கையில், கபாலம் ஏந்திய பெருமானாய் விளங்கும் தேவரீர், அயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருப்பவர்.
626. மறையினார் மல்குகாழித்
தமிழ்ஞானசம் பந்தன் மன்னும்
நிறையினார் நீலநக்கன்
நெடுமாநகர் என்று தொண்டர்
அறையும்ஊர் சாத்தமங்கை
அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும்
முறைமையால் ஏத்த வல்லார்
இமையோரிலும் முந்துவாரே.
தெளிவுரை : மறை வல்ல பெரியோர்கள் விளங்கும் காழியின் தமிழ் ஞானசம்பந்தன், சிறப்பின் மிக்க நிறை உடையவராகிய நீல நக்கருடைய திருநகர் என்று திருத்தொண்டர்களால் ஏத்தப் பெறும் சாத்தமங்கையில் மேவும் அயவந்தி என்னும் திருக்கோயிலின்மேல் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓது வல்லவர்கள், தேவர்களைவிட மேலானவர்கள் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
317. திருக்குடமூக்கு (அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
627. அரவிரி கோடல்நீடல் அணிகாவிரி யாற்றயலே
மரவிரி போது மௌவல் மணமல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன் குடமூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி இருந்தான்அவன் எம்மிறையே.
தெளிவுரை : கோடல் மலர் விளங்கும் அழகிய காவிரியின் அருகில் முல்லை மல்லிகை மலரும், தேன் துளிர்க்கும் குராமலரும் திகழும் குடமூக்கினை இடமாகக் கொண்டு அழகனாகிய சிவபெருமான், இரவில் திகழும் சந்திரனைச் சூடி வீற்றிருப்பவர். அப்பெருமானே எமது இறைவன்.
628. ஓத்துஅர வங்களோடும் ஒலிகாவிரி யார்த்தயலே
பூத்துஅர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்துஅர வங்கள்ஓவாக் குழகன்குட மூக்குஇடமா
ஏத்துஅர வங்கள்செய்ய இருந்தான்அவன் எம்இறையே.
தெளிவுரை : வேதங்கள் ஓதும் ஒலியோடு, காவிரி ஆற்று வெள்ளத்தில் ஒலியும் இணைந்து பரவ, மலர்ச் சோலைகளில் பூத்த மலர்களைக் கொண்டு ஏத்தித் தூப தீங்களைக் காட்டி அரநாமத்தை ஓதி உரைத்துப் போற்றித் துதி செய்து விளங்க, ஆரவாரத்துடன் திருக்கூத்து புரியும் அழகனாகய சிவபெருமான், குடமூக்கினை இடமாகக் கொண்டு வீற்றிருக்கின்றார். அப்பெருமானை, எல்லாரும் அர அர என ஓதி ஆரவாரித்தும், மெய்ப் புகழ் கூறியும் வணங்குகின்றனர். அவர் எம் கடவுள் ஆவார்.
629. மயில்பெடை புல்கியால மணல்மேல் மடஅன்னம் மல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங்கள் விரிப்பைம்பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாடல் உடையாண்குடை மூக்கிடமா
இயலொடு வானம்ஏத்த இருந்தான்அவன் எம்இறையே.
தெளிவுரை : ஆண் மயிலானது, பெண் மயிலோடு சேர்ந்து ஆடவும், அன்னப் பறவைகள் காவிரிக் கரையில் விளங்கும் மணலின் மீது நடை பயிலவும், வண்டினம் பண் செய்யும் பைம்பொழிலின்கண் குயிலானது பெடையோடு சேர்ந்து பாடலை இசைத்து விளங்கவும், குடமூக்கில் ஈசன் வீற்றிருப்பவர். வானவர்கள் ஏத்துமாறு இருக்கும் அப் பெருமானே எம் இறைவன் ஆவார்.
630. மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துஉமை யாள்வெருவ
அக்குஅரவு ஆமை யேன மருப்போடுஅவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாடல் உடையான்குட மூக்கிடமா
எக்கரை யாரும்ஏத்த இருந்தான் அவன் எம்இறையே.
தெளிவுரை : சிவபெருமான், புலியின் தோலை உரித்து நன்கு தாழ, அரையில் கட்டியவர்; உமாதேவி வெருவுமாறு எலும்பு, பாம்பு, ஆமை ஓடு, பன்றியின் கொம்பு ஆகியவற்றை அணியாகக் பூண்டு, கொக்கரை என்னும் வாத்தியம் பொருந்தப் பாடுபவர். அப்பெருமான், குடமூக்கை இடமாகக் கொண்டு அனைவரும் ஏத்த விளங்குபவர். அவர் எம் இறைவன்.
631. வடிவுடை வாள்தடங்கண் உமையஞ்ச வோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட உரிகொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடம்ஓங்கும் குழகன்குட மூக்கிடமா
இடிபடு வானம்ஏத்த இருந்தான்அவன் எம்இறையே.
தெளிவுரை : அழகிய ஒளி திகழும் அகன்ற கண்ணுடைய உமாதேவியார் அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துத் தனது திருவெண்ணீறு திகழும் மேனியில் போர்த்திய சிவபிரான், சடை முடியுடையவராய்க் கொடிகள் திகழும் நெடிய மாட மாளிகைகள் விளங்கும் குழகனாய்க் குடமூக்கின்கண், வானவர்கள் ஏத்திப் பரவுமாறு இருப்பவர். அப்பெருமான் எம் இறைவன் ஆவார்.
632. கழைவளம் கவ்வை முத்தம் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளம் மாவின்நல்ல பலவின்கனி கள்தங்கும்
குழைவளம் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தான் அவன் என்இறையே.
தெளிவுரை : முற்றிய மூங்கில்களின் வாயிலாக வெளிப்படும் முத்துக்கள் விரவும் காவிரி ஆற்றின் மருங்கில், மாங்கனிகளும் பலாவின் கனிகளும் பெருகும் சோலைகள் சூடி, சிவபெருமான் குடமூக்கினைத் தலமாகக் கொண்டு உமாதேவி உடனாகித் திகழ் வீற்றிருப்பவர். அப் பெருமான் எம் இறைவன் ஆவார்.
633. மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தான்எழில் வையம்உய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புற மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலம்ஏந்தி இருந்தான்அவன் எம்இறையே.
தெளிவுரை : மலை மகளாகிய உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு மகிழ்ந்து விளங்கும் சிவபெருமான், எழில் மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து, மூன்று புரங்களையும் சிதைத்தவர். பலாக் கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளப்பத்தையுடைய குடமூக்கில் மேவும் அப் பெருமான், சூலப்படையை ஏந்தியவர். அவர் எம் இறைவன் ஆவார்.
634.நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயர்ப் பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு பழமவீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ இருந்தான்அவன் எம்இறையே.
தெளிவுரை : நீண்ட முடிகள் பத்துடைய அரக்கனாகிய இராவணனுடைய உடலானது, இடர் கொண்டு நலியுமாறு கயிலை மலையின்கீழ் அடர்த்து விளங்கிய சிவபெருமான், வளைந்த மடல்களை உடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் குட மூக்கில் வீற்றிருப்பவர். அப்பெருமான் எம் இறைவன் ஆவார்.
635. ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல் நிரம்பா மதிசூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா
ஈருரி கோவணத்தோடு இருந்தான்அவன் எம்இறையே.
தெளிவுரை : நெருப்பினை உமிழ்ந்து மாற்றாரை அழிக்க வல்ல சக்கரப் படையுடைய திருமாலும், தாமரை மலரின் மீது விளங்கும் பிரமனும், அளப்பதற்கு அரியவராகிய சிவபெருமான், கங்கை திகழும் சடை முடியின் மீது, பிறைச் சந்திரனைச் சூடி விளங்குபவர். அப் பெருமான் உயர்ந்து ஓங்கி எரியும் சோதியாகிய அழகர். அப் பரமன் குடமூக்கினை இடமாகக் கொண்டு தோலும் கோவண ஆடையும் கொண்டு வீற்றிருப்பவர். அவர் எம்
636. மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றம்எல்லாம் உடையான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி இருந்தான்அவன் எம்இறையே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கூறுவன பயனற்றவை. தேவர்கள் விரும்பி ஏத்தி வழிபட நன்னலத்தை அருளும் சிவபெருமான், மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள் புரிபவர். அப் பெருமான், கொன்றை மலரைச் சூடிக் குடமூக்கினை இடமாகக் கொண்டு விளங்குபவர் அவர் எமது இறைவன்.
637. வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்குஅமர்ந்தான் அடிசேர் தமிழ்பத்தும் வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடுஎளிதே.
தெளிவுரை : ஒளி திகழ்கின்ற கொடிகளையுடைய மாட மாளிகைகள் பெருமையுடன் திகழும் வெங்குரு எனப்படும் காழி நகரில் விளங்குபவராகி, அனைவரிடத்திலும் நட்புக் கொண்டு சீர் மி உடையவராகித் தமிழில் வல்லவராய்த் திகழும் ஞானசம்பந்தன், நன்மையும் தண்மையும் உடைய குடமூக்கில் அமர்ந்த ஈசனின் திருவடியைச் சேரும் தமிழாக, இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தனர். இதனை ஓத வல்லவர்கள் உயர்ந்து மேவும் விண்ணுலகத்தை நண்ணுவார்கள். அவர்களுக்கு முத்திப் பேறு எளிதாகக் கைகூடும்.
திருச்சிற்றம்பலம்
318. திருவக்கரை (அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
638. கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்தலையில் பலிகொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
தெளிவுரை : ஈசன், நஞ்சினை அருந்திய கறை பொருந்திய கண்டத்தை உடையவர்; சுடுகாட்டினை, நடம் பயிலும் அரங்காக உடையவர்; பிறைச் சந்திரனையும் கொன்றை மலரையும் அணிந்தவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்குபவர்; பிரமனின் தலையினைக் கொய்து கபாலபாக ஏந்திப் பிச்சை கொள்பவர். அப்பெருமான், எங்கள் பிரானாய்த் திருவக்கரையில் வீற்றிருக்க, அவர்தம் திருவடியைக் தியானம் செய்வீராக.
639. பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியொர் பாகமதா
ஏய்ந்தவன் எண்ணிறந்தவ் இமையோகள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே.
தெளிவுரை : ஈசன, காலனைப் பாய்ந்து காலால் உதைத்தவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவர்; முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். பிறைச் சந்திரனைச் சடைமுடியில் சூடித் திருவக் கரையில் வீற்றிருக்கும் அப்பெருமானின் திருவடியை ஏத்தி வணங்குவோமாக !
640. சந்திர சேகரனே அருளாய்என்று தண்விசும்பில்
இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓர்அம்பினால்
மந்தர மேருவில்லா வளைத்தான்இடம் வக்கரையே.
தெளிவுரை : சந்திரனைச் சடை முடியின்கண் சூடி மேவும் சிவபெருமானே ! அருள் புரிவீராக ! என்று விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது ஏத்தி வேண்டுதல் புரிய, அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு, மேரு மலையை வில்லாகக் கொண்டு வளைத்து ஓர் அன்பினால் எய்தவர், ஈசன். அவருடைய இடமாவது திருவக்கரையாகும்.
641. நெய்யணி சூலமொழி நிறைவெண்மழு வும்மரவும்
கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்
மையணி மாமிடற்றான் உறையும்இடம் வக்கரையே.
தெளிவுரை : நெய் தடவப் பெற்ற சூலமும், மழுவும் படையாகக் கொண்டு திகழும் சிவபெருமான், அரவத்தைக் கையில் ஆபரணமாகக் கொண்டுள்ளவர்; நெருப்புக் கனலைக் கையில் ஏந்தி நடம் புரிபவர்; திருமேனியில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; விரித்து ஓதப் பெறும் வேதங்களைக் கோவணமாகக் கொண்டுள்ளவர். அப் பெருமான், கரிய கண்டத்தை உடையவராய் வீற்றிருக்கும் இடமாவது, திருவக்கரை ஆகும்.
642. ஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையும் குளிர்மத்தமும் சூடிநல்ல
மானன மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
தெளிவுரை : பன்றியின் கொம்பும் ஆமையின் ஓடும் அணிகலனாகக் கொண்டு, வளைந்த பிறைச் சந்திரனும், ஊமத்தம் மலரும் மூடி, நல்ல மான் விழியன்ன விழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, வக்கரை என்னும் திருத்தலத்தில் மேவிய பெருமான், அசுரர்களின் முப்புரங்கள் சாம்பலாகுமாறு எரி செய்த முதன்மையானவர் ஆவார்.
643. கார்மலி கொன்றையொடும் கதிர்மத்தமும் வாளரவும்
நீர்மலி யும்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை மேவியவன்
பார்மலி வெண்தலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.
தெளிவுரை : கார் காலத்தில் மலர்ந்து பெருகும் கொன்றை மலரும், பாம்பும், கங்கையும் சடை முடியின் மீது விளங்கித் திகழ, அதனுடன் பிறைச்சந்திரனைச் சூடிய சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு திருவக்கரையில் விளங்குபவர். அவர், பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்று உலவும் தன்மை உடையவர்.
644. கான்அண வும்மறியமான ஒரு கையதோர் கைமழுவாள்
தேன்அணவும் குழலாள் உமைசேர்திரு மேனியனான்
வான்அணவும் பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்
ஊன்அணவும் தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே.
தெளிவுரை : கானகத்தில் மேவும் மானை ஒரு கையில் ஏந்தி, மழுவாகிய ஒளி திகழும் படையினையும் ஏந்தித் தேன் மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொள்ளும் சிவபெருமான், வானை அணுகும் உயுர்ந்த பொழில் சூழ்ந்த திருவக்கரையில் வீற்றிருப்பவர். அப் பெருமான் பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சை ஏற்று உலவும் உத்தமனே.
645. இலங்கையர் மன்னனாகி எழில்பெற்ற இராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்துஅலற
நலங்கெழு சிந்தையனாய் அருள் பெற்றுலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.
தெளிவுரை : இலங்கையின் மன்னனாகிய இராவணன் கலங்குமாறு திருப்பாதத்தில் ஒரு விரலால் கயிலை மலையை அழுத்தி, முடிகள் பத்தும் அலறுமாறு செய்தவர், சிவபெருமான். அவ்வரக்கன் நற்சிந்தை கொண்டு போற்றி ஏத்த நன்கு அருள் செய்த அவர், சூலப் படை கொண்டு வீற்றிருக்கும் இடமாவது, திருவக்கரையே.
646. காமனை ஈடழித்திட்டு அவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் தாமரைமேல் அயனும் தரணியளந்த
வாமனனும் அறியா வகையான்இடம் வக்கரையே.
தெளிவுரை : மன்மதனுடைய பெருமை மிக்க தேகத்தை எரித்துச் சாம்பலாக்கி பின்னர் அவனுடைய தேவியானவள் இரந்து வேண்டிப் பிரார்த்திக்க அருள் புரிந்தவர், தேவர்களுக்கெல்லாம் கடவுளாகிய சிவபெருமான், தாமரைமேல் திகழும் சாமம் முதலான வேதங்களை ஓதுகின்ற பிரமனும், உலகினை அளந்த சோதியாகிய அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, திருவக்கரையே.
647. மூடிய சீவரத்தர் முதிர்பிண்டியர் என்றுஇவர்கள்
தேடிய தேவர்தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக்கென்றுபால் வீதிதொறும்
வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்இடும் வக்கரையே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் தேடுகின்ற தேவராலும் போற்றப்படும் தேவர்தம் தலைவராகிய ஈசன், நான்கு மறைகளையும் அருளிச் செய்து, வீதி தோறும் சென்று, பலி ஏற்றவர். அப்பெருமான், பிரம்மகபாலம் கொண்டு விளங்குகின்ற இடமாவது திருவக்கரையே.
648. தண்புனலும் அரவும் சடைமேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன் உறை வக்கரையைச்
சண்பையர் தம்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல் வல்லார் அவர்தம் வினை பற்றறுமே.
தெளிவுரை : கங்கையும், பாம்பும் சடை முடியில் விளங்கத் திகழும் சிவபெருமான் உறையும் பொழில் சூழ்ந்த திருவக்கரையைச் சண்பை நகர் எனப்படும் சீகாழியின் தலைவனாகிய தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன பண்ணிசை உடைய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினை அற்றவர்கள் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
319. திருவெண்துறை (அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
649. ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்
போதிய லும்முடிமேல் புனலோடுஅர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : சிவபெருமான், ஆதிமூர்த்தியானவர்; ஆதிரை என்னும் விண்மீனுக்கு உரியவர்; எரியும் நெருப்பைக் கையில் ஏந்தித் திருநடம் புரியும் மேலான அழகர்; தமது அங்கத்தின் ஒரு பாதியாய் உமாதேவியை ஏற்று மகிழ்ந்து விளங்குகின்ற பரம் பொருள்; கொன்றை முதலான மலர்களைச் சூடிய முடியின் மீது கங்கையும், பாம்பும் அழகுடன் பொருந்துமாறு புனைந்த வேதநாயகர். அப்பெருமான் காதலால் விரும்பி வீற்றிருக்கின்ற இடமாவது, வெண்டுறை ஆகும்.
650. காலனை ஓருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்
மாலைமதி யொடுநீர் அரவம்புனை வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : கூற்றுவனைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்த சிவபெருமான், பால், நெய், தயிர் ஆகிய பஞ்ச கௌவியத்தால் பூசிக் பெறுபவராய் பண்டரங்கம் என்னும் திருக்கூத்து புரிபவர். அப் பெருமான், சந்திரனையும் கங்கையையும் பாம்பையும் அழகு மிளிரச் சடை முடியில் புனைந்து, வேல் போன்ற கண்ணுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விரும்பி வீற்றிருக்கும் இடமாவது, வெண்துறையே.
651. படைநவில் வெண்மழுவான் பலபூதப் படையுடையான்
கடைநவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான்
உடைநவி லும்புலித்தோல் உடையாடை யினான்கடிய
விடைநவி லும்கொடியான் விரும்பும்இடம் வெண்டுறையே
தெளிவுரை : சிவபெருமான், மழுப்படை உடையவர்; பல வகையான பூதங்களை படை வீரர்களாகக் கொண்டுள்ளவர்; கீழ்த் தன்மையாகக் கருதப்படும் பாவங்களைச் செய்து நெற்றிக் கண்ணுடையவர்; புலித் தோலை உடையாகக் கொண்டு இருப்பவர்; மிகவும் விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக் கொடியாகக் கொண்டு இருப்பவர். அப்பெருமான் விரும்புகின்ற இடமாவது, வெண்துறையாகும். அதனை ஏத்துமின் என்பது குறிப்பு.
652. பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்
எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிரமன் தலையிற் பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : ஈசன், பண்ணில் விளங்கும் வீணையினை மீட்டும் மாண்பினர்; பரவித் தொழுகின்ற தொண்டர்களின் மனத்தில் வீற்றிருக்கும் விருப்பம் உடையவர்; தேவர்களுக்கெல்லாம் அறிவதற்கு அரியவராகியவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; பிரம கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்பவர். தேவர்களின் நாதனாகிய அப்பெருமான் விரும்பி மேவும் இடமாவது வெண்துறையாகும்.
653. பாரிய லும்பலியான் படியார்க்கும் அறிவரியான்
சீரிய லும்மலையாள் ஒருபாதமும் சேரவைத்தான்
போலிய லும்புரமூன்று டம்பொன்மலை யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : சிவபெருமான், உலகத்தில் மேவும் எல்லாப் பூசைகளையும் தாமே ஏற்பவர்; உலக மாந்தர்களின் அறிவால் அறிவதற்கு; சீர் மிக்க உமாதேவியை ஒரு பாகத்தில் பொருந்துமாறு வைத்தவர்; போர்த்தன்மை உடையவர்களாயும் பகைமை உடையவர்களாயும் உள்ள மூன்று அசுரர்களின் கோட்டைகளும் எரியுமாறு மேருமலையினை வில்லாகக் கொண்டு வளைத்து வீரம் புரிந்தவர். அப்பெருமான் விரும்பி மேவும் இடமாவது, வெண்துறையே.
654. ஊழிகளாய்உல காய் ஒருவர்க்கும் உணர்வரியான்
போழிள வெண்மதியும் புனலும்அணி புன்சடையான்
யாழின் மொழியுமையாள் வெருவவ் வெழில்வெண் மருப்பின்
வேழம் உரித்தபிரான் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : சிவபெருமான், ஊழிக்காலமாக விளங்குபவர்; உலகமாக விளங்குபவர்; யாராலும் உணர்வதற்கு அரியவர்; பிறைச் சந்திரனையும் கங்கையையும் சடைமுடியில் அணிந்து விளங்குபவர்; உமாதேவி வியக்குமாறு; யானையின் தோலை உரித்தவர். அப்பெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாவது, வெண்துறையே.
655.கன்றிய காலனையும் உருளக்கனல் வாய்அலறிப்
பொன்றமுன் நின்றபிரான் பொடியாடிய மேனியினான்
சென்றிமை யோர்பரவும் திகழ்சேவடி யான்புலன்கள்
வென்றவன் எம்இறைவன் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : சிவபெருமான், மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து வந்த காலனை அலறி வீழுமாறு அழித்தவர்; திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; தேவர்கள் சென்று பரவி ஏத்தும் சிறப்பான மலரடிகளை உடையவர்; புலன்களால் ஈர்க்கப்படாத பரம்பொருளாகவும், புலன்களை வென்று திகழும் சிவஞானிகளின் தலைவனாகவும் விளங்குபவர். அப் பெருமான் விரும்பி உறையும் இடமாவது, வெண்துறையே.
656. கரம்இரு பத்தினாலும் கடுவன்சின மாய்எடுத்த
சிரம்ஒரு பத்தும்உடை அரக்கன்வலி செற்றுகந்தான்
பரவவல் லார்வினைகள் அறுப்பான்ஒரு பாகமுன்பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : இருபது கரங்களை உடைய இராவணன், தனது பத்துத் தலைகளாலும் கயிலையைச் சினந்து எடுத்தபோது, அவனுடைய வலிமை அழியுமாறு செய்த சிவபெருமான், தன்னை ஏத்தி வழிபடும் பக்தர்களின் வினைகளை அறுப்பவர். ஒரு பாகத்தில் உமாதேவியைப் பொருந்துமாறு மேவும் திருக்கோலத்தை உடைய அப்பெருமான், விரும்பி உறையும் இடமாவது, வெண்துறையே.
657. கோல மலர்அயனும் குளிர்கொண்டல் நிறத்தவனும்
சீலம் அறிவரிதாய்த் திகழ்ந்தோங்கிய செல்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர்புன்சடை வெண்பிறையான்
வேலை விடமற்றான் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் சிவபெருமானுடைய சீலத்தை அறியதவர்களாய்த் தேடியபோது, அப்பெருமான் செந்தழலாய் ஓங்கி விளங்கியவர். சடை முடியின் மீது வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய அவர், கடலில் தோன்றி விடத்தைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டராய் விளங்கித் தேவர்களைக் காத்தவர். அப்பெருமான் விரும்புகின்ற இடமாவது வெண்துறையே.
658. நக்குரு வாயவரும் துவராடை நயந்துடையாம்
பொக்கர்கள் தம்உரைகள் அவைபொய்யென எம்இறைவன்
திக்கு நிறைபுகழார் திருதேவர் பிரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும்பும்இடம் வெண்டுறையே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கூறுபடை யாவும் பொய்யுரையாய்க் கொள்க. எல்லாத் திக்குகளிலும் புகழ் விளங்கத் திகழும் தேவர் பிரானாகிய எம் இறைவன், பொன் போன்ற சோதியாகிய விளங்குபவர். அப்பெருமான் விரும்பி மேவும் இடமாவது வெண்துறையாகும். இத்திருத்தலத்தைச் சார்ந்து சிவபெருமானைப் பரவுவீராக !
659. திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர்தம் தலைவன்
எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன் சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே.
தெளிவுரை : உறுதியான மதில்களையுடைய திருவெண்துறையில் மேவிய சிவபெருமானைக் கருதி, குளிர்ச்சி மிக்க பொழில் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் விளங்கும் தலைவனாகிய, பல்கலைகளில் வல்ல ஞானசம்பந்தன் சொல்லிய, பண்ணிசை திகழும் இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், வினையால் பற்றப்பட மாட்டார்கள். இது துன்பமற்ற வாழ்க்கையைப் பெறுவார்கள் என்பதனை உணர்த்திற்று.
320. திருப்பனந்தாள் (அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
660. கண்பொலி நெற்றியினான்திகழ் கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.
தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் கண் விளங்கிப் பொலியப் பெற்றவர்; கையினில் திகழும் வெண் மழுவைப் படையாகக் கொண்டு இருப்பவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு அர்த்தநாரியாய் உள்ளவர்; பெருமை மிகுந்த திருமாலை இடபமாகக் கொண்டவர்; விண்ணில் பொலியும் சந்திரனைத் தமது சிவந்த சடையின் மீது சூடியவர். வேதங்கள் யாவினும் வல்லராகிய அப்பெருமானுடைய ஊராவது, குளிர்ந்த பொழில் சூழ்ந்த பனந்தாள் ஆகும். ஆங்கு உள்ள திருத்தாடகை ஈச்சரத்தில், அவர் கோயில் கொண்டுள்ளவர். அப் பரமனை ஏத்துமின் என்பது குறிப்பு.
661. விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயல்ஏழுலகில் உயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவன் ஊர்பணந்தாள் திருத்தடாகை ஈச்சரமே.
தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதங்களையும் நன்கு விரித்து ஓதியவர்; தேவர்கள் எல்லாம் வந்து இறைஞ்சி ஏத்தப் புரங்கள் மூன்றும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; மன்னுயிர்களைப் பக்குவப்படுத்திப் பிரித்துச் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ச நிலையில் விளங்குமாறு செய்பவர்; செஞ்சடையில் கங்கையைத் தரித்தவர். அப் பெருமான் விளங்குகின்ற ஊராவது, பனந்தாள் ஆகும். ஆங்குத் திருத்தாடகை ஈச்சரத்தில் வீற்றிருக்கும் அப் பரமனை ஏத்துமின்.
662. உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமொர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவனூர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.
தெளிவுரை : சிவபெருமான், மான் தோலை உடையாகக் கொண்டுள்ளவர்; தனது திருவடியை நினைத்துப் போற்ற வல்லவர்களுடைய வினைகளை நீக்கி, முத்தி நலம் வாய்ப்பதற்கு உரிமையாக்குபவர்; வளர்ந்து எல்லையற்ற தன்மையில் விரிந்து பொருளை நல்கும் இனிய இசையுடைய நான்கு வேதங்களானவர்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை தான் அருந்தி, அதனைத் தனக்கு அமுதம்போல விளங்குமாறும் அற்புதம் புரிந்தவர்; தக்கனின் தீய நோக்குடைய வேள்வியைத் தடுத்து தகர்த்தவர். அப் பெருமானின் ஊர், திருப்பனந்தாள் ஆகும். ஆங்கு அவர் கோயில் கொண்டிருப்பது தாடகேச்சரம் என்னும் கோயில் ஆகும். அதனை ஏத்துமின்.
663. சூழ்தரு வல்வினையும் உடன் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல்பொங்கரவும் புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.
தெளிவுரை : இப் பிறவியில் பிராரத்த கன்மத்தால் விளையும் கொடிய வினைகளும், அதன் வாயிலாகத் தோன்றும் பிணிகளும் கொண்டு, வாடுகின்ற துன்பத்திலிருந்து மீண்டு எழ வேண்டும் எனக் கருதுவீராயின். திருப்பனந்தாளில் மேவும் திருத்தடாகை ஈச்சரத்தை நன்கு ஏத்தி வழிபடுவீராக. கங்கையும் பிறைச் சந்திரனும் நெருப்புப் போன்று கனன்று எழுகின்ற பாம்பும் புனைந்துள்ள சடைமுடியுடைய சிவ பெருமான், அத் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள் புரிபவர்.
664. விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன்எம்இறை சேரும்இடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணியுங் கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருதாடகை ஈச்சரமே.
தெளிவுரை : சிவபெருமான், விடத்தைக் கண்டத்தில் தேக்கி வைத்திருப்பவர்; இருள் சூழ்ந்த மயானத்தில் உமாதேவியோடு நடனம் புரிகின்ற தன்மையுடையவர். அப்பெருமான், எம் இறைவன் ஆவர். அவர் பொருந்தி விளங்குகின்ற இடமாவது, நாகம் முதலான பல வகையான மணிகளையும் அலைகளின் வாயிலாகக் கொண்டு வரும் புனல் வளம் சூழ்ந்த பனந்தாளில் மேவும் திருத்தாடகை ஈச்சரமே.
665. விடைஉயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகு பூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்கும் அணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத்தடாகை ஈச்சரமே.
தெளிவுரை : சிவபெருமான், வெற்றியை உடைய இடபத்தைக் கொடியாக உடையவர்; விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும் மற்றும் சூழ்ந்த எல்லா இடங்களிலும் திருவடி பதியுமாறு நடம் புரிய வல்லவர்; பூதகணங்களைக் கொண்டு மேவும் பெரிய படைகளை உடையவர்; கொன்றை மாலையுடன் வன்னி, எருக்கு ஆகியனவும் சேர்ந்து அணிந்து விளங்கும் சடை முடி உடையவர். அப்பெருமானுடைய ஊராவது பனந்தாள் ஆகும். ஆங்கு அவர் திருத்தாடகை ஈச்சரத்தில் கோயில் கொண்டு வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்தி உய்வீராக.
666. மலையவன் முன்பயந்த மடமாதையொர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையால் புரமூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதியாடரவும் அணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.
தெளிவுரை : சிவபெருமான், மலையரசனாகிய இமாவன் பயந்த மலைமகளை ஒரு கூறாக உடையவர்; மேருமலையை வில்லாகக் கொண்டு, வெம்மையுடைய அக்கினியைக் கணையாக்கி, மூன்று புரங்களையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; திருமுடியில் கங்கையும், சந்திரனும், பாம்பும் தரித்தவர். அப்பெருமானது ஊராவது திருப்பனந்தாள் ஆகும். ஆங்கு மேவும் திருத்தாடகை ஈச்சரத்தில் அவர் வீற்றிருப்பவர். அவரை ஏத்துமின்.
667. செற்றரக் கன்வலியைத் திருமெல்விர லால்அடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
புற்றர வம்புலியின் உரிதோலொடு கோவணமும்
தற்றவன் ஊர்பனந்தாள் திருதாடகை ஈச்சரமே.
தெளிவுரை : இராவணனுடைய வலிமையைத் திருப்பாத விரலால் அடர்த்து, முற்றும் திருவெண்ணீற்றால் குழையப் பூசிய திருமேனியுடைய சிவபெருமான், மும்மையும் விளங்குபவர்; அரவத்தை அணிந்தவர்; புலியின் தோலை உடுத்தியவர்; வேதங்களைக் கோவணமாக நன்கு பொருந்த அணிந்தவர், அவருடைய ஊராவது, திருப்பனந்தாள் ஆகும். ஆங்கு திகழும் திருத்தாடகை ஈச்சரத்தில் கோயில் கொண்டுள்ள அப்பெருமானை ஏத்தி உய்வீராக.
668. வில்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணு நாரண னும்அறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத் தாடகை ஈச்சரமே.
தெளிவுரை : மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் மிகுந்த கனலை உண்டாக்கும் நெருப்பை அம்பாகவும் கொண்டு, தீமை செய்த அசுரர்களின் மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான். பிரமன், திருமால் ஆகியோரால் அறிய முடியாத தன்மையர். அப் பெருமானுடைய ஊர் எனப்படுவது, திருப்பனந்தாள் ஆகும். ஆங்கு அவர் வீற்றிருக்கும் திருத்தாடகை ஈச்சரத்தை ஏத்தி உய்வீராக.
669. ஆதர் சமணரொடும் மடை ஐந்துலகில் போர்த்துழலும்
நீதர் உரைக்குமொழி யவை கொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ் புள்ளிரியப் பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் உரைக்கின்ற மொழிகள் பயனற்றவை. அவற்றை ஏற்க வேண்டாம். நின்மலனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் ஊராவது, தாமரை மலர் விளங்கும் பொய்கையும், பறவைகள் மல்கிய வளம் மிக்க பொழில்களும் விளங்கும், திருப்பனந்தாள் ஆகும். ஆங்குத் தடாகைஈச்சரத்தில் மேவும் அப் பரமனை ஏத்துவீராக.
670. தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரத்துக்
கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால்மிகு ஞானசம் பந்தனல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர்தம் வினை பற்றறுமே.
தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த பனந்தாள் என்னும் ஊரில் திகழும் திருத்தாடகை ஈச்சரத்தின்கண், பிறைசூடிய பெருமானாகிய ஈசனை முன் இருந்து நண்ணி, வணங்கிய காழி நகரின் தமிழ் ஞானசம்பந்தன், பண்ணுடன் இசைத்த இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், வினை நீங்கப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
321. திருச்செங்காட்டங்குடி (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
671. பைங்கோட்டு மலர்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனல்ஏந்தி விளையாடும் பெருமானே.
தெளிவுரை : பசுமையான புன்னை மரத்தில் திகழும் பறவைகளே ! தலைவனாகிய சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் பசலை நோய் கண்டு, உணவு இன்றி, என் உடலானது வெளிர்ந்து மெலிந்தது. அப் பெருமான் எனக்கு நீங்கப் பெறாத நோயைத் தந்தனர். அவர் செங்காட்டங்குடியில் விளங்கும் சிறுத் தொண்டர் பணி செய்ய, மயானத்தில் நின்று, கையில் அனலை ஏந்தி நடம் புரிபவர்.
672. பொன்னம்பூங் கழிக்கானல் புணர் துணையோடு உடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள் அன்றும்போய் வருவீர்கள்
கல்நவில்தோள் சிறுதொண்டன் கணபதீச் சரமேய
இன்னமுதன் இணையடிக்கீழ் எனது அல்லல் உரையீரே.
தெளிவுரை : அழகிய பூக்களை உடைய கழியருகில் உள்ள சோலைகளில், துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே ! அன்றில் பறவைகளே! நீங்கள் இச் சோலையிலிருந்து வெளியிடங்களுக்கும் சென்றும் வரும் இயல்புடையவர்கள். உறுதியான தோள் அழகு பொருந்திய சிறுத் தொண்டருடைய கணபதீச்சரத்தில் வீற்றிருக்கின்ற இனிய அமுதனாகிய சிவபெருமானுடைய திருவடியின்கீழ் இருந்து, என்னுடைய துயரத்தை உரைப்பீரோ ! உரைக்க வேண்டும் என்பது, குறிப்பு விண்ணப்பம் ஆயிற்று.
673. குட்டத்தும் குழிக்கரையும் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்குஎன் வருத்தம்சென்று உரையாயே.
தெளிவுரை : குட்டை, குழி, குளம் ஆகிய இடங்களில் விருப்பத்திற்கு ஏற்றவாறு இரையைத் தேர்ந்து கொள்ளுகின்ற பெரிய சிறகுகளையுடைய நாரையே ! சிறந்த ஞானியாகிய புகழ் மிகுந்த சிறுத்தொண்டர் விளங்குகின்ற செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் நீண்ட சடை முடி உடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ !
674. கானருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்
மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமரும் சடையார்க்குஎன் வருத்தம்சென்று உரையாயே.
தெளிவுரை : கடற்கரைச் சோலையின் அருகிலும், மற்றும் வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் உள்ள மீன்களை இரையாகத் தேரும் மடப்பம் கொண்டுள்ள நாரையே ! சிறுத்தொண்ட நாயனார் தம் செங்காட்டங்குடியில் மேவிய, கங்கை தரித்த சடையுடைய சிவபெருமானுக்கு, என்னுடைய வருத்தத்தை உரைப்பாயோ !
675. ஆரலாம் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலார்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்
சீருலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாம் சடையார்க்குஎன் நிலைமைசென்று உரையீரே.
தெளிவுரை : ஆரல், சுறவம் ஆகியன பாய்ந்து நிலவும் அகன்ற கழனிகளில் சிறகுகளை விரித்துச் சிறிய பறவைகள் பயில, விளங்கும் நாரையே ! சீரின் மிக்க சிறுத்தொண்டரின் செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் கங்கை தரித்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று, என்னுடைய நிலையினை உரையாயோ !
676. குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச் சென்னிக் கணபதீச் சரமேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.
தெளிவுரை : குளிர்ந்த பொய்கையின் துறையில் உள்ள கெண்டை மீன்கள் கவர்ந்து இரையாகக் கொண்டு, துணையைப் பிரியாது இருக்கும் நாரையே ! ஒருவருடைய குறையைக் கூறி, அதனைத் தீர்க்க வேண்டும் என்று வேண்டினால், அதனைத் தீர்த்து வைப்பது கடமை அல்லவா ! நீலகண்டராகியவரும், பிறைச் சந்திரனை முடியில் தரித்துக் கணபதீச்சரத்தில் மேவியவரும், சிறுத் தொண்டரால் வழிபடப் பெறும் ஈசனும் ஆகிய சிவபெருமானுடைய பெருமைக்குரிய அருளை, ஒரு நாள் அடையலாம் அல்லவா ! எனக்காக தூது சென்று என் துன்பத்தை ஈசனுக்கு உரைப்பாயாக, நலம் பெறுவாயாக என்பது குறிப்பு.
677. கருஅடிய பசுங்கால்வெண் குருகே ஒண்கழி நாராய்
ஒருஅடியாள் இரந்தாள்என்று ஒருநாள்சென்று உரையீரே
செருவடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறந்தவர்க்கே.
தெளிவுரை : கரிய சேற்றில் இளைய, பசுங்கால் வெண்குருகே ! ஒரு நாளாவது சென்று ஓர் அடியவள் உம்மை நினைத்து வாடுகின்றாள் என உரைப்பீராக; சிறுத்தொண்டரின் செங்காட்டம்குடி மேவும் சிவபெருமானுடைய திருவடியின் திருவருளைப் பெறலாம்.
678. கூராரல் இரைத் தேர்ந்து குளம்உலவி வயல்வாழும்
தாராவே மடநாராய் தமியேற்கு ஒன்று உரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்றன் அருள்ஒருநாள் பெறலாமே.
தெளிவுரை : கூர்மைத் தன்மையுடைய ஆரலை இரையாகத் தேர்ந்து, குளங்களிலும் வயல்களிலும் வாழ்கின்ற பறவையே ! மடப்பம் கொண்ட நாரையே ! எனக்காகச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியை உரைக்க மாட்டாயா ! சிறப்பான புகழ் கொண்டு விளங்கும் சிறுத்தொண்டர் விளங்கும் செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் பேராளராகிய ஈசனுடைய அருள், உனக்கு ஒரு நாள் கிடைக்கும்.
679. நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே உலகெல்லாம்
அறப்பலிதேர்ந்து உழல்வார்க்குஎன் அலர்கோடல் அழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின்று இழக்கோஎம் பெருநலமே.
தெளிவுரை : தேன் பொலியும் பூக்களையுடைய கழியின் கரையில் விளங்குகின்ற சோலையில் இருக்கும் பறவையே ! உலகம் முழுவதும் சென்றும் அறம் விளைத்தலை, மன்னுயிர்கள் பெற்று உய்யுமாறு, தான் அரிய பலியினைத் தேர்ந்து உழல்கின்ற பெருமான். ஈசன். அவர், நான் வாடுமாறும், பிறர் என்னைத் தூற்றுமாறும் செய்வது அழகாகுமா ! சிறப்பின் பெருமை எக்காலத்திலும் குறையாக சிறுத்தொண்டர் விளங்குகின்ற செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் போற்றித் துதி செய்யும் நான், எல்லா விதமான பெருமைக்குரிய நலங்களையும் இழப்பது முறைமையோ ! எனவே நீ சென்று ஈசன்பால் தூது உரைப்பாயாக என்பது குறிப்பு.
680. செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீறு அணிமார்பன் சிறுத்தொண்டன்
அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழ்உரைப்போர் தக்கோரே.
தெளிவுரை : செம்மையான பூம்புனல் பரந்து மேவும் செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் திருநீறு அணிந்த திருமார்பினராகிய சிறுத்தொண்டர் வேண்டியவாறு சீகாழியில் வீற்றிருக்கும் ஈசன் திருவடிகளைப் பரவும் சந்தம் மிகுந்த திருத்தமிழால் உரைத்த ஞான சம்பந்தனின் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், மனிதப் பிறவியின் தகுதிக்கு உரியவர் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
322. திருப்பெருவேளூர் (அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம் பேட்டை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
681. அண்ணாவும் கழுக்குன்றம் ஆயமலை யவைவாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்
கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரம்எரித்த
பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : ஈசன், திருவண்ணாமலையும் திருக்கழுக்குன்றமும் ஆகிய மலைகளில் வீற்றிருப்பவர்; விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் வியந்து ஏத்த அருள் செய்பவர்; உலகுக்குக் கண்ணாகவும் விளங்குபவர்; யாவரும் போற்றி வழிபடுவதற்கு உரிய கருத்து ஆனவர்; முப்புரங்களை எரித்தவர்; பெண்ணும் ஆணுமாக விளங்குகின்ற அர்த்தநாரியானவர். அப் பெருமான், பெருவேளூரில் பிரிதல் இன்றி விளங்குபவர். அவர் பிரியநாதர் ஆவார்.
682. கருமானின் உரியுடையர் கரிகாடர் இமவானார்
மருமானார் இவர்என்று மடவாளோடு உடனாவர்
பெருமான விடையூர்வது உடையார்வெண் பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : பெரு வேளூரில் வீற்றிருக்கும் பிரிய நாதர்; மான் தோலை உடையாகக் கொண்டவர்; சுடுகாட்டில் நடம் புரிபவர்; இமாசல அரசனின் மருமகனாகி, உமாதேவியோடு திகழ்பவர்; பெருமை உடைய இடபவாகனத்தில் ஊர்ந்து செல்பவர்; திருநீறு பூசி விளங்குபவர். அவர் பிஞ்ஞகன் எனப் போற்றப்படும் சிவபெருமான்.
683. குணக்கும்தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்
கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் மொழிந்தோர்க்கும்
வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்
பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : சிவபெருமான், கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு என எத் திக்கின்படியும், நெறிமுறை மாறுதல் இன்றி அருள் புரிபவர். அறியாமையும் அஞ்ஞானமும் மீதூர நாட்களைக் கழிப்பவர்களுக்கும், பக்தியால் தோத்திரப் பாடல்களை மொழிந்து போற்றுபவர்களுக்கும், காயத்தால் வணங்கி ஏத்தும் அடியவர்களுக்கும் அருள் புரிபவர். வணங்கிப் போற்றாதவர்களுக்கு மாறுபாடாக விளங்குபவர். அவர் பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரியநாதர் ஆவார்.
684. இறைக்கொண்ட வளையாளோடு இருகூறாய் ஒருகூறு
மறைக்கண்டத்து இறைநாவர் மதில்எய்த சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளிரும் சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரிய நாதர் என்னும் திருப்பெயர் தாங்கியுள்ள சிவபெருமான், கையில் வளையல் அணிந்த உமாதேவியை ஒரு கூறாகவும், தாம் ஒரு கூறாகவும் ஆகிய இரு கூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவர். ஒருகூறு ஆற்றும் தன்மையில் அவர், வேதங்களை ஓதுபவர்; முப்புரங்களை எய்த மேருமலையை வில்லாக உடையவர்; மிடற்றினில் நஞ்சினை அடக்கிக் கறை கொண்டு விளங்குபவர்; செவ்வொளி படரும் சடை முடியில் மீது பிறைச் சந்திரனைத் தரித்து விளங்குபவர். அப் பெருமானை ஏத்துமின் என்பது குறிப்பு.
685. விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்
குழையாதார் குழைவார்போல் குணநல்ல பலகூறி
அழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : உலகப் பொருள்களில் பற்றுக்கொண்டு விழையாமல், ஈசன்பால் விழைந்து, அப்பெருமானுடைய திருவிளையாடல்களாகிய புகழ்ச் செயல்களைப் பேசிப் போற்றியும், மருள் கொண்டு குழையாது, ஈசனின் திருவருளில் தோயப் பெற்ற அன்புடையவராகி ஏத்தியும் விளங்கும் அடியவர்கள், பெருமானே ! அருள் புரிவீராக ! என அழைத்தும், பக்தி உணர்வினால் ஏத்தியும் வாழ்த்தித் துதிக்க, அருள் செய்கின்ற பெருமான் பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரியநாதர் ஆவார்.
686. விரித்தார்நான் மறைப்பொருளை உமையஞ்ச விறல்வேழம்
உரித்தாராம் உரிபோர்த்து மதில்மூன்றும் ஒருகணையால்
எரித்தாராம் இமைப்பளவில் இமையோர்கள் தொழுதிறைஞ்சப்
பெருத்தார்எம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதங்களையும் விரித்துப் பொருள் வழங்கியவர்; யானையின் தோலை உரித்து அதனைத் திருமேனியில் போர்த்துக் கொண்டு, வீரத்தினையும் ஆற்றலையும் காட்டியவர்; மூன்று மதில்களையும் ஒரு கணை கொண்டு, எரிந்து சாம்பலாகுமாறு இமை நேரத்தில் செய்தவர்; தேவர்கள் தொழுது போற்றப் பேருருவமாய் விளங்கியவர். அப்பெருமான் பெருவேளூரில் மேவும் பிரியநாதர் ஆவார்.
687. மறப்பிலா அடிமைக்கண் மனம் வைப்பார்தமக்கெல்லாம்
சிறப்பிலார் மதில்எய்த சிலைவல்லார் ஒருகணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : ஈசன், தன்னை மறவாது, தமக்கு அடியவர் ஆகி உள்ளவர்தம் மனதில் வீற்றிருப்பவர். அப்பெருமான், சிறப்பினை இழந்தவர்களாகிய முப்புரத்து அசுரர்தம் கோட்டைகளை, ஒரு கணை தொடுத்து எரியச் செய்தவர்; அழிவு இல்லாதவர்; நின்மலராய் விளங்கும் பணியற்றவர்; கேடு இல்லாதவர்; பிறப்பு அற்றவர். அப் பெருமான், பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரியநாதர் ஆவார்.
688. எரியார்வேல் கடல்தானை இலங்கைக்கோன் றனைவீழ
முரியார்ந்த தடந்தோள்கள் அடர்த்துகந்த முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : எரிபோன்ற வேற்படை உடைய சேனைகளைக் கடல்போல் விரிந்து பெற்றுள்ள இராவணன் அலறுமாறு, வலிமையான தோள்களை நெரித்துப் பின்னர், அவன் இசை கேட்டு உகந்த முதல்வனாகிய சிவபெருமான், வில்லேந்திரவராய் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு பிரியாது வீற்றிருப்பவர். அப்பெருமான், பெருவேளூரில் மேவும் பிரியாநாதர் ஆவார்.
689. சேணியலு நெடுமாலும் திசைமுகனும் செருவெய்திக்
காணியல்பை அறிவிலராய்க் கனல்வண்ணர் அடிஇணைக்கீழ்
நாணியவர் தொழுதேத்த நாணாமே அருள்செய்து
பேணியஎம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : உலகினை அளப்பதற்குரிய நெடிய வடிவம் தாங்கிய திருமாலும், நான்முகனும் மாறுபட்டுத் தம்மைத் தாமே பெரியவர் எனக் கருதி, ஈசனை அளக்கும் தன்மையில் காணுதற்கு இயலாதவராய் இருக்க கனல் வண்ணராகிய அப்பெருமானின் திருவடியை நண்ணித் தொழுதனர். அத்தன்மையில் அருள் நல்கிய பெருமான் பெருவேளூரில் பிரிய நாதராய் விளங்குபவர்.
690. புற்றேறி உணங்குவார் புகையார்ந்த துகில் போர்பார்
சொல்தேற வேண்டாநீர் தொழுமின்கள் சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவும் மதகளிறும் இவையொழியப்
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
தெளிவுரை : சமணர், சாக்கியர்தம் உரைகளை ஏற்க வேண்டாம். தேரும் குதிரையும் யானையும் வாகனமாகக் கொள்ளாது, இடபத்தை வாகனமாகக் கொண்டு மேவும் பெருமானாகிய, பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரிய நாதனை, நீவிர் தொழுது ஏத்துமின்.
691. பைம்பொன்சீர் மணிவாரிப் பலவும்சேர் கனியுந்தி
அம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க்கு அருவினை நோய்சாராவே
தெளிவுரை : அழகிய பொன்னும் சிறப்பான மணிகளும் பல வகையான கனிகளும் பெருகவும், பொன்னாலாகிய அழகிய அணிகளை அணிந்த நங்கையர்கள் விளங்கும் பெருவேளூரில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய கழல் பரவி நவின்ற, வேதம் வல்ல ஞானசம்பந்தனின் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்குத் தீவினையும், அவ்வினையால் பிணிக்கப்படும் பிறவி நோய் முதலானவும் சாராது.
திருச்சிற்றம்பலம்
323. திருக்கச்சி நெறிக்காரைக்காடு (அருள்மிகு சத்யநாதர், திருக்காலீஸ்வரர்  திருக்கோயில், காஞ்சிபுரம்)
திருச்சிற்றம்பலம்
692. வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினில்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடம் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : ஈசன், உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்குபவர்; அழகிய கையில் போர்த் தன்மை உடைய மழுப்படையை ஏந்தி, வெண்ணீற்றினை அணிந்து விளங்குபவர். அப் பெருமான் மேகத்தைத் தொடும் நெடிய மணி மாடங்களும், கடை வீதிகளும் ஒலியைப் பெருக்கி நிலவுகின்ற கச்சியில், நீர் நிறைந்த மலர்ப் பொய்கை உடைய நெறிசேர் காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.
693. காரூரு மணிமிடற்றார் கரிகாடர் உடைதலை கொண்டு
ஊரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : சிவபெருமான், கரிய மணியைப் போன்ற மிடறு உடையவர்; மயானத்தில் இருந்தும் நடம் புரிபவர்; பிரம கபாலத்தை கையில் ஏந்தி, ஊர்தொறும் சென்று பிச்சை ஏற்பவர்; மான் தோலை உடுத்தி உள்ளவர். அப்பெருமான், தேர் செல்லும் நெடிய வீதிகளையுடைய, வளமையுடன் செழித்து மேவும் கச்சி மாநகரில், நீர்பெருகி விளங்கும் மலர்ப்பொய்கை உடைய நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.
694. கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமேல் இளமதியோடு
ஆறுஅணிந்தார் ஆடரவம் பூண்டுகந்தார் ஆன்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மேல் என்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : சிவபெருமான், கொடி போன்ற இடை உடைய உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு விளங்குபவர்; குளிர்ச்சி மிக்க சடை முடியின் மீது இளமையான சந்திரனையும், கங்கையையும் அணிந்தவர்; ஆடுகின்ற அரவத்தை ஆபரணமாகப் பூண்டு மகிழ்பவர்; வெள்ளை இடபத்தை வாகனமாகவும், இடபக் கொடியாகவும் உடையவர். மலை போன்ற அகன்ற திருமார்பில் எலும்பு மாலை அணிந்தவர்; திருவெண்ணீற்றினை நன்கு விரவிப் பூசி விளங்குபவர்; அப்பெருமான், பெருமையுடன் திகழும் கச்சியின் நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.
695. பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : சிறகுகளையுடைய வண்டுகள் தேன் கதுவும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டில் வீற்றிருக்கும் ஈசன், பிறைச்சந்திரனைச் சூடிய சடைகள் பின் பக்கம் நீண்டு தாழ்ந்து இருக்கப் பூத  கணங்கள் மறைகளை ஓதப் பாடலும் ஆடலும் கொண்டும், மழுப்படையை ஏந்தியும் விளங்குபவர்.
696. அன்றாலின் கீழிருந்துஅங்கு அறம்புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோள்அரவ நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : சிவபெருமான், ஆல மர நீழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தருளிய அருளாளர்; மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கிப் பகைவர்களாகிய மூன்று அசுரர் புரங்களை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப்பெருமான், கலிக்கச்சியில் மேவும் நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.
697. பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒரு நொடியில்
வில்மலையின் நாண்கொளுவி வெங்கணையால் எய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : வானவர்கள் பல்வகையான மலர்களைக் கொண்டு போற்றிப் பணிந்து இறைஞ்ச விளங்கும் ஈசன், நன்மை புரியாத வலிய அசுரர்களுடைய மூன்று நகரங்களையும் ஒரு நொடி நேரத்தில், மேரு மலையை வில்லாகக் கொண்டு, நாண் ஏற்றி, அக்கினிக் கணையால் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப் பெருமான், நின்மலனாய் விளங்குபவர். அவர், கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.
698. புற்றிடைவாள் அரவினொடு புனைகொள் றைமதமத்தம்
எற்றொழியா அலைபுனலோடு இளமதியம் ஏந்தசடைப்
பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : சிவபெருமான், புற்றில் விளங்கும் ஒளி மிக்க அரவத்தையும், கொன்றை மலரையும், ஊமத்த மலரினையும் ஏற்று, அதனுடன் ஓய்தல் இல்லாத அலைகளையுடைய புனலாகிய கங்கையோடு பிறைச் சந்திரனையும் சடை முடியில் பெற்றிருப்பவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு இருப்பவர்; நெற்றியில் ஒரு கண்ணுடையவர். அப்பெருமான் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.
699. ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை எழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்கும் சூழ்வயலும் மதில்புல்கி அழகமரும்
நீண்மறுகிற் கலக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : இராவணனை, எழில் மிகுந்த கயிலை மலையினால் அழுந்துமாறு திருப்பாத விரலால் ஊன்றிய சிவபெருமான், அவ்வரக்கன், போற்றி ஏத்திய போது நன்மை செய்தவர். அப்பெருமான், வயல்களும் மதில்களும் நெடிய வீதிகளும் கொண்டு விளங்கும் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.
700. ஊண்தானும் ஒலிகடல்நஞ்சு உடைதலையில் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்புஅணிவர் வரியரவோடு எழில்ஆமை
பூண்டாரும் ஓர்இருவர் அறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : சிவபெருமான், கடலில் தோன்றிய நஞ்சினை உணவாகக் கொண்டவர்; உடைந்த தலையாகிய பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர்; இறந்தவர்களின் எலும்பினை மாலையாக அணிந்தவர்; பாம்பு ஆமையும் அழகிய ஆபரணமாகக் கொண்டவர்; திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறியாத தன்மையில் பொங்கி எழும் நெருப்புப் பிழம்பாய் ஆனவர். அப்பெருமான், கலிக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.
701. குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகன் மெய்யல்ல
வண்டாரும் குழலாளை வரைஆகத்து ஒருபாகம்
கண்டாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் உரைக்கும் சொற்கள் மெய் அல்ல. ஈசன் உமாதேவியை மலை போன்ற தனது திருமேனியில் கொண்டுள்ளவர்; பெருமையுடைய கலிக்கச்சியின் நெறிக்காரைக் காட்டில் வீற்றிருப்பவர்.
702. கண்ணாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாரும் திருமேனிப் பெருமானது அடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந்த தமிழ்வல்லார் பரலோகத்து இருப்பாரே.
தெளிவுரை : கண்ணுக்கு விருந்தென மகிழ்ச்சி தரும் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டில் உறையும் உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ள ஈசனை வாழ்த்தி, குளிர்ச்சி மிக்க பொழில் சூழ்ந்த காழியின் தமிழ் ஞானசம்பந்தன் மொழிந்த, பண்ணிசை விளங்கும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பரம் பொருளின் உலகமாகிய ஈசன் உலகில் திகழ்வார்கள். இது சாலோக பதவியை நல்கும் என்பது குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
324. திருவேட்டக்குடி (அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி, புதுச்சேரி மாநிலம்)
திருச்சிற்றம்பலம்
703. வண்டிரைக்கும் மலர்க்கொன்றை
விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக்
காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்
துளங்குஒளி நீர்ச் சுடர்ப்பவளம்
தொண்டிரைக்கண் கொணர்ந்தெறியும்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : ஈசன், வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றை மலரை விரிந்த சடையின் மீது சூடியவர். அப் பெருமான், சீறி விளங்கும் அரவமும், பிறைச் சந்திரனும் சென்னியில் தரித்துக் கபாலத்தைக் கையில் கொண்டு விளங்குபவர். திருக்கழலைத் தொழுது போற்றித் தொண்டர் இறைஞ்சு, சுடர் விடுகின்ற பவளங்களைக் கொண்டிருக்கும் திருவேட்டக்குடியில் அவர் வீற்றிருப்பவர்.
704. பாய்திமிலர் வலையோடு
மீன்வாரிப் பயின்றுஎங்கும்
காசினியிற் கொணர்ந்துஅட்டும்
கைதல்சூழ் கழிக்கானல்
போய்இரவிற் பேயோடும்
புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாரும்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : பாய்ந்து செல்லும் படகு, வலையுடன் சென்று கடலில் இருந்து மீனவர்கள் மீன்களைக் கரையில் கொணர்ந்து சேர்க்க, தாழை சூழ்ந்த கழி உடைய சோலை திகழச், சிவபெருமான், நள்ளிரவில் மயானத்தில் பேய்க் கூட்டத்தோடு நின்று, கையில் நெருப்பை ஏந்தி, மகிழ்ந்து ஆடுபவர். அப் பெருமான் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.
705. தோத்திரமா மணல்இலிங்கம்
தொடங்கியஆன் நிரையின்பால்
பாத்திரமா ஆட்டுதலும்
பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தம்என மறைநால்வர்க்கு
அறம்புரிநூல் அன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாரும்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : வழிபாடு செய்வதற்காக மணலால் இலிங்கத்தை அமைத்து, பசுவின் பாலை அபிடேகமாகச் செய்து பூசித்த சண்டேச நாயனாருக்குக் கருணை கொண்டு அருள் வழங்கியவர், பரஞ்சோதியாகிய ஈசன். அவர், பேரன்புடன் தவம் பூண்டு ஒழுகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் அறங்களை உபதேசித்தவர். அப் பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையில் பொருந்த ஏற்றுத் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.
706. கலவம் சேர் கழிக்கானல்
கதிர்முத்தம் கலந்தெங்கும்
அலவம்சேர் அணைவாரிக்
கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்
நிலவம் சேர் நுண்ணிடைய
நேரிழையாள் அவளோடும்
திலகம்சேர் நெற்றியினார்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : கடற்கரைச் சோலைகள் கழியின் பக்கங்களில் சூழ்ந்து விளங்கவும், மயில்கள் தோலை விரித்து ஆடவும், கடல் நண்டுகள் பெருகித் திகழவும் உள்ள அகன்ற துறையில் உமாதேவியோடு திலகம் போன்று சுடர் தரும் நெற்றியை உடைய ஈசன் திரு வேட்டக் குடியில் வீற்றிருப்பவர்.
707. பங்கமார் கடல்அலறப்
பருவரையோடு அரவுஉழலச்
செங்கண்மால் கடையஎழு
நஞ்சருந்தும் சிவமூர்த்தி
அங்கநான் மறைநால்வர்க்கு
அறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடையப் பெற்ற போது கடல் நீர் அலைப்புண்டு சேறாகியது. ஆங்கும், திருமாலை முன்னிருத்திக் கடையைப் பெற்ற தருணத்தில் எழுந்த நஞ்சினை அருந்தித் தேவர்களைக் காத்தருளிய சிவமூர்த்தி, ஈசனே. அவர் நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் கூறும் அறத்தின் பொருளைச் சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்து, அதன் பயனையும் வழங்கியவர். அப்பெருமான், சந்திரன் திகழும் சடை உடையவராய்த் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.
708. நாவாய பிறைச்சென்னி
நலந்திகழும் இலங்கிப்பி
கோவத நித்திலங்கள்
கொணர்ந்தெறியும் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையால்
எயில்மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : சிவபெருமான், படகு போன்ற வடிவம் கொண்டு விளங்கும் சந்திரனைத் திருமுடியில் சூடி விளங்குபவர். சிப்பிகளிலிருந்து வெளியே வந்த நல் முத்துக்கள, அலைகள் வாயிலாகக் கொண்டு வந்து எறிந்த குளிர்ச்சி மிக்க கடற்கரைச் சோலை திகழும் திருவேட்டக்குடியில், அப்பெருமான் வெம்மையான கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு, முப்புரங்களை எரி செய்த தேவாதி தேவனாய் வீற்றிருப்பவர்.
709. பானிலவும் பங்கயத்துப்
பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைப்
கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோடு
ஒருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : வெண்ணிலவின் ஒளி போன்று வெண் தாமரை மலரானது ஒளிரவும், கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்கவும், கடற்கழியின் கரைகளில் தாழையானது மணம் கொண்டு திகழவும், மானின் விழியுடைய மலைமகளை ஒரு பாகமாகத் திருமேனியில் பிரியாது இணைந்து மேவும் சிவபெருமான், தேன் துளிர்க்கும் மலர்ச் சோலை விளங்கும் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.
710. துறையுலவு கடலோதம்
சுரிசங்கம் இடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை
நன்னீழற் கீழ்அமரும்
இறைபயிலும் இராவணன்றன்
தலைபத்தும் இருபதுதோள்
திறலழிய அடர்த்தாரும்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : கடலின் ஓதத்தால் உலவும் சங்குகளும் தேன் துளிர்க்கும் புன்னை மலர்களையுடைய பொழில்களும், விளங்கும் திருவேட்டக்குடியில் வீற்றிருக்கும் சிவபெருமான், இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய தலைகள் பத்தும், தோள்கள் இருபதும் தமது வலிமையை இழக்குமாறு அடர்த்தவர்.
711. அருமறைநான் முகத்தானும்
அகலிடநீர் ஏற்றானும்
இருவருமாய் அளப்பரிய
எரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி
மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : நான்கு மறைகளையும் ஓதுகின்ற பிரமனும், மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் வேண்டி, நீர்தாரையாய் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்து பார்ப்பதற்கு முனைந்து செல்ல, அவர்களுக்கு அரியவராய், நெருப்பு வண்ணத்தில் உயர்ந்து ஓங்கிய சிவபெருமான், பெருகும் புனல் வழியாக மணிகள் உந்திச் சேர்ந்து வளப்பத்தை நல்கவும் சுடர் விடும் பவளம் போன்ற திருவண்ணமேனியில் திருநீறு விளங்கப் பெற்றவராய்த் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.
712. இகழ்ந்துரைக்கும் சமணர்களும்
இடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற்
கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலின்
நிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார்
திருவேட்டக் குடியாரே.
தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் சிவபெருமானை இகழ்ந்து உரைப்பவர்கள். அவற்றை ஒரு பொருட்டாகக் கொள்ள வேண்டாம். வெண்மையான மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் அப்பெருமான் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர். அப்பரமனை ஏத்துமின்.
713. தெண்டிரைசேர் வயல்உடுத்த
திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்தமிழ்நூல் இவைபத்தும்
உணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுஉடுப்பில் வானவரோடு
உயர்வானத்து இருப்பாரே.
தெளிவுரை : தெளிந்த நீர் அலைகள் திகழும் வயல்களை உடைய திருவேட்டக் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் குளிர்ச்சி மிக்க சோலை சூழ்ந்த ஆரவாரம் பெருகிய விழாக்கள் மலிந்தோங்கும் காழியின் ஞானசம்பந்தனது ஒண் தமிழ் ஆகிய இத்திருப்பதிகத்தை, நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும் ஓதியும் வழிபடுபவர்கள், வானவர்களை நிகர்த்துத் தேவர் உலகத்தில் இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
325. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
714. சுரர்உலகு நரர்கள்பயில் தரணிதல
முரண்அழிய அரணமதில்முப்
புரம்எரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமன் இடமாம்
வரம்அருள வரன்முறையின் நிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமன்உயர் அரன்எழில்கொள் சரணஇணை
பரவவளர் பிரமபுரமே.
தெளிவுரை : ஈசன், தேவர்கள் உறைகின்ற விண்ணுலகமும், நரர்கள் எனப்படும் மனிதர்கள் வாழும் இப்பூவுலகமும் மாறுபட்டு அழியுமாறு செய்த, கோட்டை மதில்களை உடைய மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு, ஒரு சரத்தை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர். அப் பெருமானுடைய இடமாவது, பிரமன், தலையாய வேதவாசங்களால் அரனாரின் எழில் மிகுந்த புகழை ஓதிச் சரணடைந்து இணை மலரடியைப் பரவத் திகழும் பிரமபுரமே.
715. தாணுமிகு ஆணிசைகொடு ஆணுவியர்
பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோயில்பிடி
மாணிமது நாணும் வகையே
ஏணுகரி பூணழிய ஆணியல்கொண்
மாணிபதி சேண்அமரர் கோன்
வேணுவினை யேணிநகர் காணிதிவி
காணநடு வேணுபுரமே.
தெளிவுரை : இனிமையாக அன்பு செலுத்தி வணங்கும் தேவர்கள், கொடுமை புரியும் அசுரர்களால் நலிவடைந்து, அஞ்சியும் வியர்த்தும் வணங்கி ஏத்திய நிலையில், ஈசன் வலிமை மிகுந்த ஆண் யானையின் வடிவத்தைக் கொண்டருளினார். வளைந்த நெற்றியும் நீண்ட விழியும் உடைய உமாதேவியானவர் குற்றம் இல்லாத பெண் யானையாகத் தோன்றினார். அந்நிலையில் மது என்னும் அசுரன் நாணுமாறும், வலிமை கொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல் மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோன்ற செய்வித்த பெருமைக்கு உரிய ஈசன் விளங்கும் பதியாவது, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மூங்கிலின் மேலிருந்து தனது பதியை நோக்கும் வேணுபுரமே.
716. பகல்ஒளிசெய் நகமணியை முகைமலரை
நிகழ்சரண அகவு முனிவர்க்கு
அகலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவன்இடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை
மிகஅருள நிகரில் இமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிகழ்
அலர்பெருகு புகலிநகரே.
தெளிவுரை : சூரியனுடைய ஒளியை நிகர்த்த, மலையில் தோன்றும் மணிகளும், செந்தாமரை மலரின் மணமும் பெருக விளங்கும் ஒளி போன்ற திருவடியைச் சரண் அடைந்த சனகாதி முனிவர்களுக்கு, விரிந்து மேவும் எல்லாக் கலைகளும் நன்கு உணருமாறு உரை செய்தருளிய குருமூர்த்தமாக விளங்குபவர், சிவபெருமான். அத்தகைய பெருமானின் இடமாவது, பகை கொண்ட அசுரர்களை வேரறுக்கும் வகையில் ஆறுமுகமுடைய குமாரக் கடவுளை மிகுந்து விளங்குமாறு முகிழ்த்தருளிய காலத்தில், தேவர்கள் எல்லாம் புகலிடமாக விழைந்து மேவிய எழில் திகழும் புகலி நகரே.
717. அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர
வங்கள்எழில் தங்கும் இதழித்
துங்கமலர் தங்குசடை அங்கிநிகர்
எங்கள்இறை தங்கும் இடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்கும்எதிர்
பொங்கெரிபு லன்கள் களைவோர்
வெங்குருவி ளங்கிஉமை பங்கரசர
ணங்கள்பணி வெங்குருவதே.
தெளிவுரை : அழகிய சந்திரனும், கங்கை நதியும், அரவமும், எழில் கொண்டு மேவும் கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியின்கண் பொருந்த விளங்குகின்றவர் எங்கள் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இவ்வுலகின் கண், சூரியனை விஞ்சுமாறு வெம்மையைத் தருகின்ற புலன்களால் நேரும் துன்பத்தைக் களைபவர்கள் பணியும் வெங்குரு ஆகும். அது குருபகவான் விருப்பத்துடன் நண்ணி உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும்.
718. ஆணியல்பு காணவன வாணவியல்
பேணியெதிர் பாண மழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
பேணியற நாணி விசயன்
பாணியமர் பூணஅருள் மாணுபிர
மாணியிடம் ஏணிமுறையில்
பாணியுல காளமிக ஆணின்மலி
தோணி நிகர் தோணிபுரமே.
தெளிவுரை : ஈசன், வீரம் மிகுந்த ஆண் மகன் என்னும் தன்மையில், யாவரும் காணுமாறு காட்டில் வாழும் வேட்டுவ வடிவத்தைக் கொண்டு, விசயனின் அம்புறாத் தூணியும் வில்லின் நாணும் அறுந்து விழுமாறு செய்து, வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லையும் துணித்தவர். இவற்றால் நாணம் உற்ற விசயன் மற்போர் செய்ய, அவனுக்கு அருள் புரிந்தவர் அவர். அத்தகைய தெய்வத் தன்மை வாய்ந்தவரின் இடமாவது, பிரளய காலத்தில் நீர் சூழ்ந்து உலகம் யாவும் மூழ்கும் தன்மை கண்டாலும் ஆற்றல் பெருகுமாறு தோணியென விளங்கி, அழியாமை காணும் தோணிபுரமே.
719. நிராமய பராபர புராதன
பராவுசிவ ராகஅரு ளென்று
இராவும்எ திராயது பராநினை
புராணன்அம ராதிபதியாம்
அராமிசை யிராதொழில் தராயர
பராயண வராகஉருவா
தராயனை விராயெரி பராய்மிகு
தராய்மொழி விராய பதியே.
தெளிவுரை : ஈசன். எத்தகைய பிணிக்கும் ஆட்படாதவர்; நோய் அற்றவர்; மேலான கடவுள்; தொன்மைப் பழம் பொருளானவர்; பரவப்படும் சிவநாமத்தை இடையுடன் மொழிதலே அருள் ஈட்டுவதற்கு உரியதென, இரவும் பகலும் தியானத்தால் போற்றப்படும் புராணர். அப்பெருமான் அமரும் ஆதிபதியாவது, பாற்கடலில், அரவணையிலிருந்து எழுந்து அரநாமத்தைப் பாராயணம் செய்து, வெள்ளைப் பன்றியின் வடிவு தாங்கிய திருமால், இரணியாக்கதனைக் கொன்ற பழி தீரும் பொருட்டுப் பரவப்படுகின்ற பூந்தராய் என மொழியப்பெறும் பதியே.
720. அரணையுறும் முரணர்பலர் மரணம்வர
இரணம்மதில் அரமலிபடைக்
கரம்விசிறு விரகன்அமர் கரணனுயர்
பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறும்
அரவை யரி சிரம் அரியஅச்
சிரம்அரன சரணம்அவை பரவஇரு
கிரகம் அமர் சிரபுரம தே.
தெளிவுரை : மும்மதில்களை அரணாகக் கொண்ட அசுரர்கள், பலரும் மாண்டு அழியுமாறும், இரணங்கள் கொண்டு நலியுமாறும் துன்புறுத்தினர். அத்தகைய தீயோரை அழித்துத் தன்னை அடைந்தவர்களைக் காப்பவரும், வலிமையான அரன் படையைக் கொண்டுள்ளவரும் நற்கதி அருளுபவரும் சிவபெருமான் ஆவார். அவர் வீற்றிருக்கும் இடமாவது, எல்லாராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற்கடலில் இருந்து கடைந்து தருவித்த காலத்தில், தனக்கும் வேண்டும் எனப் பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச, அச்சிரமானது அரனைச் சரணம் அடைந்து இரண்டு கிரகங்களாகப் பொலியும் சிரபுரம் ஆகும்.
721. அறம் அழிவு பெறஉலகு தெறுபுயவன்
விறல்அழிய நிறுவிவிரல்மா
மறையின்ஒலி முறைமுரல்செய் பிறையெயிறன்
உறஅருளும் இறைவன் இடமாம்
குறைவின் மிக நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவன் எதிர் நிறைநிலவு பொறையன்உடல்
பெறஅருளும் புறவம் அதுவே.
தெளிவுரை : அறநெறிகள் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது ஆற்றல் அழியுமாறு, திருப்பாத விரலால் கயிலையை ஊன்றி நெரித்துச் சாமகானத்தால் ஏத்திப் போற்ற, அருள் புரிந்தவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, புறாவின் எடைக்குச் சரி நிகராகத் தனது சதையை வைத்து நிரம்பாது தன்னையே அதற்கு இணையாகக் கொள்ளுமாறு செய்த சிபிச் சக்கரவர்த்தியின் நீதியைப் புகழும் தேவர்கள் போற்றும் பெருமை உடைய புறவமே.
722. விண்பயில மண்பகிரி வண்பிரமன்
எண்பெரிய பண்படைகொள் மால்
கண்பரியும் ஒண்பொழிய நுண்பொருள்கள்
தண்புகழ் கொள் கண்டன் இடமாம்
மண்பரியும் ஒண்பொழிய நுண்புசகர்
புண்பயில விண்படரஅச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
பண்புகளை சண்பை நகரே.
தெளிவுரை : பெருமை மிகுந்த பிரமன் விண்ணில் உயர்ந்து சென்றும், எண்ணுவதற்கு அரியதாகிய வலிமை மிகுந்த சக்கரப் படையுடைய திருமால், மண்ணில் குடைந்து சென்றும், தேடியும் ஒளியின் தன்மையினையும் கரந்து நுண்ணிய பொருளாக விளங்கி, அத்தகைய இரு மூர்த்திகளாலும் காணப் பெறாது புகழ் கொண்டு மேவிய நீலகண்டர், சிவபெருமான். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, மண்ணுலகத்தில் தமது பெருமையை அழித்துக் கொள்ளும் தன்மையில், முனிவரை இழிவு செய்து பழி கொண்ட தனது இனத்தவர்களுக்கு, நற்கதி உண்டாகுமாறும், சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும், கண்ணபிரான் போற்றி ஏத்தப் பெயர் பெற்ற சண்பை நகரே.
723. பாழியுரை வேழநிகர் பாழமணர்
சூழும்உடல் ஆளர்உணரா
ஏழில்இசை யாழின்மொழி ஏழையவள்
வாழும்இறை தாழும்இடமாம்
கீழிசை கொள் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழஅரனுக்கு
ஆழியசில் காழிசெய ஏழுலகில்
ஊழிவளர் காழிநகரே.
தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் ஈசனை உணராதவர்கள். ஏழிசையும், யாழின் இனிமையும் போன்ற மொழி பகரும் உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கீழ் உலகில் பெருமையுடன் வாழ்பவர்களும், மேல் உலகத்தில் அரச போகத்தில் வாழ்பவர்களும் மற்றும் சூழ்ந்து விளங்குபவர்களும் வாழும் பொருட்டு நடனம் புரிந்த ஈசன்பால், ஆடலில் தோற்று அப்பெருமானைப் பூசித்துத் தன் குற்றமானது நீங்குமாறு ஏத்தி காளி தேவிக்கு அருளிய காழி நகரே.
724. நச்சரவு கச்செனஅ சைச்சுமதி
உச்சியின்மி லைச் சொருகையான்
மெய்ச்சிரம் அணைச்சு உலகில் நிச்சமிடு
பிச்சையமர் பிச்சன்இடமாம்
மச்சமத நச்சிமதம் அச்சிறுமி
யைச்செய்தவ அச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள்
நச்சமிடை கொச்சைநகரே.
தெளிவுரை : நஞ்சு பொருந்திய அரவத்தை இறுக்கமாகக் கட்டிச் சந்திரனைத் திருமுடியில் சூடிப் பிரமனுடைய சிரத்தைக் கையால் கொய்து, அதனைக் கபாலமாகக் கொள்ளும் பித்தராகியவர் சிவபெருமான். அவர் இடமாவது, மீனின் நாற்றத்தை விரும்பிய மீனவர் குலத்து நங்கையை விழைந்த கொச்சை நிலையை நீக்குமாறு ஏத்திய பராசர முனிவரின் செயல் கண்டு, தேவர்கள் விரும்பி நண்ணும் கொச்சைவயமே.
725. ஒழுகலரிது அழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியை நினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவும்உரை கழுமலரநகர்ப்
பழுதில்இறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழி தகையவே.
தெளிவுரை : கலியுகத்தில் ஒழுகத் தகும் அறங்களை மேற்கொள்ளுதல் அரிது என்னும் தன்மையில், உரோமச முனிவர் தமது குழுவினருடன் சார்ந்து சிவபெருமானைத் தொழுது, இழிந்ததாகிய மலத்தொகுதி நீங்கப் பெற்ற கழுமல நகரினைப் பழுதில்லாதவாறு இறைவனால் எழுதப்பெறும் மொழியாகி தமிழ் மொழியால், தமிழ் வல்லராகிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பாசுரங்களை மொழிதல் நற்பயனை விளைவிக்கும்.
திருச்சிற்றம்பலம்
326. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)
திருச்சிற்றம்பலம்
726. வாளவரி கோளபுலி கீளதுரி
தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில
கோளகளிறு ஆளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ
மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளும்இருள் கீளவிரி
தாளகயி லாய மலையே.
தெளிவுரை : சிவபெருமான், ஒளி மிக்கதும் வரிகளை உடையதும் ஆகிய புலியின் தோலை உடையாகக் கொண்டிருப்பவர்; எக்காலத்திலும் ஆனந்தமாக இருப்பவர்; பக்தர்களை ஆட்கொள்பவர்; கூரிய தந்தங்களையுடைய மதம் பொருந்திய கொடிய யானையை அடக்கி ஆண்டவர்; சிறந்த வில்லினை ஏந்திய தோளினர்; கூளிகள் தாளம் இட, நடம் புரிபவர். அப்பெருமான் திருவெண்ணீற்றினை நன்கு விளங்குமாறு, அணிபவர்; அப்பெருமானின் கயிலை மலையானது மேகம் பதிய மேவும் இருள் விலகுமாறு செய்யும் அடிவாரம் கொண்டதாகும்.
727. புற்றரவு பற்றியகை நெற்றியது
மற்றொருகண் ஒற்றைவிடையன்
செற்றதுஎயில் உற்றதுமை யற்றவர்கள்
நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
குற்றம்இல தெற்றென வினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றும்ஒளி
பெற்றகயி லாய மலையே.
தெளிவுரை : சிவபெருமான், அரவம் பற்றி விளங்கும் கையுடையவர்; நெற்றியில் ஒரு கண்ணுடையவர்; ஒற்றை இடபத்தை உடையவர்; முப்புரத்தை எரித்தவர்; உமாதேவியாரை ஒரு பாகமாக உடையவர்; உலகப் பற்றினை நீக்கிய அடியவர்களுக்கு நல்ல துணையாக விளங்குபவர். அத்தகைய பெருமான் விளங்கும் தலமாவது, மலையில் தோன்றும் மணிகளின் ஒளியை விஞ்சும் வகையில், கற்றவர்கள் போற்றி ஏத்துதலால் மேலோங்கத் திகழும் கயிலாய மலையாகும். இது, மேன்மையாய்த் திகழும் ஞான ஒளியின் சிறப்பினை உணர்த்துவதாயிற்று.
728. சிங்கவரை மங்கையர்கள் தங்களன
செங்கைநின்ற கொங்கு மலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்குஅகல
அங்கமொழி எங்கும் உளவாய்த்
திங்கள்இருள் நொங்கவொளி விங்கிமிளிர்
தொங்கலொடு தங்கஅயலே
கங்கையொடு பொங்குசடை எங்கள்இறை
தங்குகயி லாய மலையே.
தெளிவுரை : சிங்கம் போன்ற பெருமையுடைய மலைப் பகுதியில் மேவும் மங்கையர்கள், தங்கள் சிவந்த கைகளால் தேன் துளிர்க்கும் நறுமலர் கொண்டு தூவிப் போற்றி, தீவினையைக் களைந்தும் அஞ்ஞானத்தைப் போக்கியும் அருள்வீராக ! எனத் திரிகரண சுத்தியாய் வழிபாடு செய்து விளங்கச் சிவபெருமான், சந்திரனின் குறையைப் போக்கி வளரச் செய்து, மாலை அணிந்தும் கங்கையினைத் தரித்தும் விளங்குபவர். எங்கள் இறைவனாகிய சடைமுடியுடைய அப்பெருமான், தங்கி இருப்பது கயிலாய மலையே.
729. முடியசடை பிடியதொடு வடியமழு
வுடையர்செடி யுடைய தலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி
நொடியமகிழ் அடிகள் இடமாம்
கொடியகுரல் உடையவிடை கடியதுடி
யடியினொடும் இடியின் அதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியஅதர்
அடிகொள்கயி லாய மலையே.
தெளிவுரை : திருமுடியில் சடை உடையவராய் கூர்மையான மழுப் படை ஏந்தியும்; கொன்றை வன்னி, ஊமத்தம் முதலானவை சூடியும்; கொடுந் தொழிலால் பிறர்க்குத் தீமை விளைவிக்கும் அசுரர்கள் கெடுமாறு புரிந்தும்; கையில் பிரம கபாலம் ஏந்திப் பலி கொள்ளவும் உடையவர். சிவபெருமானை அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இடபத்தின் கனத்த குரலும் யானையின் பிளிறலும் இணைந்து மேகத்திலிருந்து தோன்றும் இடி முழக்கத்தை அடங்கச் செய்யும் கயிலாய மலையே.
730. குடங்கையின் நுடங்குஎரி தொடர்ந்துஎழ
விடம்கிளர் படங்கொள் அரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு
விடங்கனது இடம்தண் முகில்போய்த்
தடங்கடல் தொடர்ந்துடன் நுடங்குவ
இடங்கொள மிடைந்த குரலால்
கடுங்கலின் முடங்களை நுடங்குஅர
வொடுங்கு கயிலாய மலையே.
தெளிவுரை : உள்ளங்கையில் நெருப்பானது எரிந்து விளங்கப் படம் கொண்டு ஆடுகின்ற பாம்பானது ஒளிர்ந்து திருமேனியில் படர, நடம் புரியும் விடங்கராகிய சிவபெருமானுடைய இடமாவது, மேகங்கள் கடல் நீரை முகந்து, எல்லா இடங்களும் பரவி, இடிமுழக்கத்துடன் பொழிய அவ் இடியோசை கேட்ட நாகம், ஒடுங்குகின்ற கயிலாய மலையே.
731. ஏதமில பூதமொடு கோதைதுணை
ஆதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற
வாதுபயில் நாதன் நகர்தான்
தாதுபொழி போதுவிட வூதுசிறை
மீதுதுளி கூதல் நலியக்
காதல்மிகு சோதிகிளர் மாதுபயில்
கோதுகயி  லாய மலையே.
தெளிவுரை : குற்றம் ஏதும் இல்லாத பூத கணங்கள் விளங்க, உமாதேவியைத் துணையாகக் கொண்டு மேவும் வேதங்களை விரிக்கும் ஆதியாகிய சிவபெருமான், நீதிக் கருத்துக்களை ஓதி, மறவாது ஏத்தப்படும் தலைவனாகியவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, மகரந்தப் பொடிகள் கொண்டுள்ள மலர் அரும்புகளில் வண்டுகள் ஊதி மலர்ந்து அழகு மிளிர மேவும் கயிலாய மலையே.
732. சென்றுபல வென்றுலவு புன்தலையர்
துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றுஅமரர் என்றும் இறைவன் றன்னடி
சென்று பணிகின்ற நகர்தான்
துன்றுமலர் பொன்திகழ்செய் கொன்றைவிரை
தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளிறு என்றிவைமுன்
நின்றகயிலாய மலையே.
தெளிவுரை : நன்மக்கள், புலன்களை வென்றவராயும் பூதகணங்களுடன் சேர்ந்தும், தேவர்கள் உடன் நின்றும், எக்காலமும் இறைவன் திருவடியை பணிகின்றவராயினர். அக் கடவுளின் இடமாவது, கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரின் நறுமணம் பரப்பும் தென்றல் காற்று வீச, ஆண் யானையும் பெண் யானையும் கன்றும் உலவி மேவும் கயிலாய மலையே.
733. மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு
செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற இருக்கையை
ஒருக்குடன் அரக்கன் உணராது
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும்
நெருக்கென நிருத்தவிரலால்
கருத்தில ஒருத்தனை எருத்துஇற
நெரித்தகயி லாய மலையே.
தெளிவுரை : அனல் கக்கும் வீரத்தின் செருக்குடைய யானையைப் போன்றவன் இராவணன். அவன், ஈசன் விருப்புடன் அமர்ந்திருக்கும் இருக்கையாகிய கயிலை மலையை, உமையவள் அஞ்சுமாறு எடுத்தான். அப்போது அப்பெருமான், நடனம் புரியும் தமது திருப்பாத விரலால் அதனை ஊன்றி, அரக்கனை நெரியுமாறு செய்தார். அத்தகைய சிறப்புடையது கயிலாய மலையே.
734. பரியதிரை எரிய புனல் வரியபுலி
உரியதுடை பரிசை யுடையான்
வரியவளை அரியகணி யுருவினொடு
பெரியஎரி உருவமது தெரியஉரு
பரிவுதரும் அருமை யதனால்
கரியவனும் அரியமறை புரியவனும்
மருவுகயி லாய மலையே.
தெளிவுரை : சிவபெருமான், நெருப்பும் கங்கையும் கொண்டு விளங்கிப் புலித் தோலை ஆடையாகக் கொண்டிருப்பவர். அவர், உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு திகழ்பவர். அப் பெருமான், பிரிதல் இல்லாது வீற்றிருக்கும் இடமாவது; பெரிய சோதி வடிவமாகிப் பின்னர் பரிவு கொண்டு காட்சி தரத் திருமாலும் பிரமனும் மருவி ஏத்தும் கயிலாய மலையே.
735. அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை
கொண்டஇறை துண்டமதி யோடு
இண்டபுனை உண்டசடை முண்டதர
சண்டஇருள் கண்டர் இடமாம்
குண்டமண அண்டர்அவர் மண்டைகையில்
உண்டுளறி மிண்டு சமயம்
கண்டவர்கள்  கொண்டவர்கள் பண்டும்அறி
யாதகயி லாய மலையே.
தெளிவுரை : தேவர்கள் தொழுது போற்றும் சண்டேச நாயனாரின் சிவபூசையைக் கண்டு மகிழ்ந்து அடிமை கொண்ட சிவபெருமான், பிறைச் சந்திரனை, இண்டை மாலையால் அலங்கரிக்கப்பட்ட சடை முடியில் தரித்து, மண்டை ஓட்டினை மாலையாகக் கொண்டும், கரிய கண்டத்தினராயும் விளங்குபவர். அப்பெருமான் விளங்கும் இடமாவது, சமணரும் சாக்கியரும் அறியாத கயிலாய மலையே.
736. அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை
சந்தனமொடு உந்திஅகிலும்
கந்த மலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன்உரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகம் எளிதே.
தெளிவுரை : அழகிய குளிர்ச்சி மிக்க மலையிலிருந்து வந்த நீரில் அலைகளால் உந்தித் தள்ளப்படும் சந்தனம், அகில் ஆகியன பெருக, வாசனை வீசும் கொத்தான மரங்களைக் கொண்டு வானரங்கள் பரவி மேவும் கயிலாய மலையின் மீது, ஈசன் திருவடியை அணுகுகின்ற, சந்தம் விளங்கச் செம்மை நலம் வழங்கும் தமிழ் கொண்டு இசைத்த புகலியின் ஞானசம்பந்தனின் இத் திருப்பதிகத்தை ஓதி உரைக்க, வினை யாவும் நீங்கும் பரலோகம் எளிதாகக் கிட்டும்.
திருச்சிற்றம்பலம்
327. திருக்காளத்தி (அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் மாவட்டம், ஆந்திரா மாநிலம்)
திருச்சிற்றம்பலம்
737. வானவர்கள் தானவர்கள் வாதைபட
வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
மேவுமலை தன்னை வினவில்
ஏனமிள மானினொடு கிள்ளைதினை
கொள்ளஎழி லார்கவணினால்
கானவர்தம் மாமகளிர் கனகமணி
விலகுகா ளத்திமலையே.
தெளிவுரை : தேவர்களும் அசுரர்களும் துன்புற்று வருந்துமாறு பெருகிப் பாற்கடலிலிருந்து வந்த ஆலகால விடத்தைத் தானே அமுதம் போன்று ஏற்று உட்கொண்டு காத்தருளியவர் சிவபெருமான். அப் பெருமான் மேவும் மலையானது யாது என வினவின், அது காளத்தி மலையே ஆகும். அம்மலையானது பன்றி, மான் ஆகியன விளங்கும் இடம். ஆங்குக் கிளிகள், தினையைக் கொள்ளும் நோக்கில் வரக் காவல் மகளிர்கள் பொன் மணிகளைக் கவண் கற்களால் வீசுகின்ற பான்மையுடையது.
738. முதுசினவில் அவுணர்புர மூன்றும்ஒரு
நொடிவரையின் மூளஎரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்
விரும்புமலை தன்னை வினவில்
எதிர்எதிர வெதிர்பிணைய எழுபொறிகள்
சிதற எழில் ஏனமுழுத
கதிர்மணியின் வளர்ஒளிகள் இருள் அகல
நிலவுகா ளத்தி மலையே.
தெளிவுரை : முதிர்ந்த மேருமலையைப் போர் செய்யும் வில்லாகக் கொண்டு, அசுரர்களின் மூன்று புரங்களும் ஒரு நொடி நேரத்தில் எரிந்து சாம்பலாகுமாறு செய்யவல்ல சதுரர் சிவபெருமான். அவர் சந்திரனைத் தரித்த சடை உடையவர்; உயிர்களுக்கு நன்மை செய்பவர். அப்பெருமான், விரும்புகின்ற மலை யாது என வினவின், அது காளத்தி மலை ஆகும். அது எதிர் எதிராக உள்ள மூங்கில்கள் உராய்ந்து நெருப்பினைத் தோற்றுவித்த ஒளியும், பன்றிகள் மண்ணைக் குடைந்து பள்ளம் ஆக்க ஆங்குப் பொலியும் மணி வகைகளும் இருளை நீக்கி வாழ செய்யும் காளத்தி மலையே.
739. வல்லைவரு காளியைவ குத்துவலி
யாகிமிகு தாரகனை நீ
கொல்லென விடுத்தருள் புரிந்த சிவன்
மேவுமலை கூறி வினவில்
பல்பலஇ ருங்கனி பருங்கிமிக
உண்டவை நெருங்கி இனமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை
யாடுகா ளத்தி மலையே.
தெளிவுரை : வலிமை உடையவளாய் மேவும் காளி தேவியை நோக்கித் தாருகன் என்னும் அசுரனை அழிப்பாயாக என மொழிந்து அருள் புரிந்த சிவபெருமான் மேவும் மலையானது, பல சுவையான கனிகளை அருந்திய வானரங்கள், கற்கள் அதிருமாறு குதித்து விளையாடும் காளத்தி மலையே.
740. வேய்அனைய தோளுமையொர் பாகமது
வாகவிடை யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடில்நட
மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும்
வேடன் மல ராகுநயனம்
காய்கணையி னால்இடந்து ஈசனடி
கூடுகா ளத்தி மலையே.
தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தில் விளங்கித் தூய சந்திரனைச் சடை முடியில் தரித்துச் சுடுகாட்டில் நடம் புரியும் சிவபெருமானுடைய மலை யாது என வினவினால், அது காளத்தி மலையே. அது, திருவாயைத் தீர்த்தம் விளங்கும் கலசமாகக் கொண்டு வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர் தமது கண் மலரைக் கொடிய அம்பினால் இடந்து அப்பி, ஈசனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடையது.
741. மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு
மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்து உமையஞ்சவுரி போர்த்தசிவன்
மேவுமலை கூறிவினவில்
அலைகொள் புனல் அருவிபல சுனைகள்வழி
இழியவயல் நிலவு முதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை
சிந்துகா ளத்தி மலையே.
தெளிவுரை : கருமையுடைய மலையின் மீது தவழும் மேகம் போன்று வந்த மதம் பொருந்திய யானையை வீழ்த்தி, அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட சிவபெருமான் மேவும் மலையானது, நீர் பாயும் அருவியும் பல சுனைகளும், நீர் திகழும் வயல்களும், மூங்கிலில் தோன்றும் முத்துக்களின் ஒளியும் விளங்கும் காளத்தி மலையே.
742. பாரதம் விளங்கிய பகீரதன்
அருந்தவம் முயன்ற பணிகண்டு
ஆரருள் புரிந்து அலைகொள் கங்கைசடை
ஏற்றஅரன் மலையை வினவில்
வார்அதர் குருங்குறவர் சேவலின்
மடுத்தவர் எரித்த விறகில்
கார்அகில் இரும்புகை விசும்புகமழ்
கின்றகா ளத்தி மலையே.
தெளிவுரை : பாரத பூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் அரசன், பிதுரர்களுக்கு நற்கதி உண்டாகுமாறு செய்த அரிய தவத்தை மேற்கொண்டதை ஒட்டி, அருள் புரியும் பான்மையால், கங்கையைத் தமது சடையில் ஏற்றவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் மலையானது குறவர்கள் காவலுக்காக நெருப்பை மூட்டி எரித்த விறகில், அகில் கட்டைகளின் புகையானது ஆகாயத்தில் பரவிக் கமழும், காளத்தி மலையே.
743. ஆரும் எதி ராதவலி யாகிய
சலந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன்
இருந்தமலை தன்னை வினவில்
ஊரும்அரவம் மொளிகொள் மாமணி
உமிழ்ந்தவை உலாவி வரலால்
காரிருள் கடிந்துகன கம்மென
விளங்குகா ளத்தி மலையே.
தெளிவுரை : தன்னை எதிர்த்துப் போர் செய்யும் வலிமையை எவரும் பெற்றிராத சலந்தராசூரனைச் சக்கரப் படையால் வீழ்த்தி, உலகத்தைக் காத்தருள் புரிந்தவர், சிவபெருமான். அப் பரமன் வீற்றிருக்கும் மலையானது, நாகமானது மாணிக்கத்தை உமிழ்ந்து ஒளிபெருக்க இருள் மடியப் பொன்னென ஒளிரும் காளத்தி மலையே.
744. எரியனைய கரிமயிர் இராவணனை
ஈடழிய எழில்கொள் விரலால்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
மேவுமலை பெற்றி வினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்
நீடுவரை யூடுவரலால்
கரியி னொடு வரியுழுவை அரியினமும்
வெருவுகா ளத்தி மலையே.
தெளிவுரை : நெருப்புப் போன்ற வண்ணமும் சுருண்ட தன்மையும் கொண்ட முடியுடைய இராவணனின் வலிமை அழியுமாறு, திருப்பாத விரலால் கயிலை மலையை ஊன்றிப் பின்னர் அருள் புரிந்தவர், சிவபெருமான். அப் பெருமான் மேவி விளங்குகின்ற மலையானது, வில்லேந்திய வீரர்களாகிய வேடுவர்கள் ஆராவாரித்து மலையின் ஊடே வர, யானையும், புலியும், சிங்கமும், அச்சம் கொண்டு நிலவ மேவும் காளத்தி மலையே.
745. இனதளவில் இவனதடி இணையுமுடி
அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவரிய சகலசிவன்
மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு
மைந்தரும் மணம் புணருநாள்
கனகம்என மலர்கள் அணி வேங்கைகள்
நிலாவுகா ளத்தி மலையே.
தெளிவுரை : இவரது அளவும், திருவடியும், திரு முடியும் அறிய வேண்டும் எனத் தமக்குள் இகல் கொண்ட திருமால், பிரமன் ஆகிய இருவரும் முனைந்து தேடியும் அறிவதற்கு அரியவராகியவர், சிவபெருமான். அப்பெருமான் மேவும் மலையானது, தினைப் புனத்து வேடுவர்கள், திருமணக் காலங்களில் பொன் போன்ற மலர்களை அணிந்து நறுமணம் கொண்டு விளங்குதலைப் போன்று வேங்கை மலர்கள் பூத்துக் குலுங்கும் சிறப்புடைய காளத்தி மலையே.
746. நின்றுகவ ளம்பல கொள் கையரொடு
மெய்யில்இடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன்
மேவுமலை நாடிவினவில்
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர்
சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
யாடுகா ளத்தி மலையே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சிவபெருமானுடைய அருள் வழங்கும் நற்றிறத்தை அறியாதவர்களாய் உள்ளனர். அத்தகைய ஈசன் மேவும் மலையானது, குன்றில் விளங்கும் பொழிலில் குளிர்ச்சி மிக்க சந்தன மரங்களின் தழைகளைத் தனது கன்றுடன் சூழ்ந்து சேர்ந்து தின்றும், விளையாடியும் விளங்கும் பெண் யானைகள் விளங்கும் காளத்தி மலையே.
747. காடதுஇட மாகநட மாடுசிவன்
மேவுகா ளத்தி மலையை
மாடமொடு மாளிகைகள் நீடுவலர்
கொச்சைவயம் மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம்
பந்தனுரை நல்ல தமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்கள்
நல்லர்பர லோகம் எளிதே.
தெளிவுரை : சுடுகாட்டினை இடமாகக் கொண்டு நடனம் புரிகின்ற சிவபெருமான் மேவி வீற்றிருக்கின்ற காளத்தி மலையை, மாட மாளிகைகளை நெடிது விளங்குகின்ற கொச்சை வயம் எனப் பெறும் சீகாழியில், சிறப்புடன் திகழும், புகழில் மிக்க ஞானசம்பந்தன் உரை செய்த நலம் திகழும் இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட வல்லவர்கள், ஈசனுடைய உலகத்தில் திகழ்ந்து விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
328. மயிலாடுதுறை (அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
748. ஏனஎயிறு ஆடுஅரவொடு என்புவரி
ஆமைஇவை பூண்டினை ஞராய்க்
கானவரி நீடுழுவை அதளுடைய
படர்சடையர் காணிஎனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின்
மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
மூசுமயி லாடு துறையே.
தெளிவுரை : சிவபெருமான், பன்றியின் கொம்பும் படம் கொண்டு ஆடுகின்ற பாம்பும், எலும்பும், ஆமை ஓடும் பூண்டு இளைஞராய்ப் புலித்தோலை உடுத்திப் படர்ந்து விரியும் சடைமுடியுடன் விளங்குபவர். அப்பெருமானைக் கண்டு தரிசிப்பதற்கு உரிய இடம் எனப்படுவது, மயிலாடுதுறையே. வேதத்தில் வல்ல புகழ் மிகுந்த அந்தணர்கள் வேள்வி புரிந்து எழுப்பும் புகையானது, ஆகாயத்தில் சென்று தேவலோகத்தில் உள்ள கற்பகச் சோலையில் பதியும் எழில் கொண்டது அத்தலம்.
749. அந்தண்மதி செஞ்சடையார் அங்கண் எழில்
கொன்றையொடு அணிந்தழகராம்
எந்தம் அடிகட்கு இனிய தானமது
வேண்டில்எழி லார் பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியு ளால்
வந்ததிரை யுந்திஎதிர் மந்திமலர்
சிந்துமயி லாடு துறையே.
தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சிவந்த சடை முடியின் மீது சூடி, எழில் மிக்க கொன்றை மாலை தரித்த அழகராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இனிய இடமாவது, மயிலாடுதுறையே. அப் பதியானது, மணம் கமழும் சந்தனமும் அகில் மரக் கட்டைகளும் தனது அலைகளால் உந்தித் தள்ளிக் கொண்டு வரும் காவிரி, கரையில் உள்ள சோலைகளில் விளங்கும் மலர்களை, மந்திகள் சிந்துமாறு அசைக்கச் செய்யும் பாங்குடன் திகழ்வதாகும்.
750. தோளின்மிசை வரியரவ நஞ்சழல்
வீக்கிமிகு நோக்கரிய ராய்
மூளைபடு வெண்தலையில் உண்டுமுது
காடுறையும் முதல்வர் இடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி
உதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமண
நாறுமயி லாடு துறையே.
தெளிவுரை : தோளின் மீது அழகிய வரிகளையுடைய அரவமானது, நச்சுக் காற்றைச் சீறி விடுமாறு அதனை நன்கு அரையில் கட்டி, மிகுந்த அழகு உடையவராய்ப் பிரம கபாலம் ஏந்திப் பலி கொண்டு மயானத்தில் உறைபவர், சிவபெருமான். அவருடைய இடம் எனப்படுவது, காவிரியில் விளங்கும் வாளை மீன்கள், கரையோரங்களில் உள்ள கமுக மரங்களில் தாவிப் பாய பாளைகள் உதிர்ந்து கமழும் சிறப்புடைய மயிலாடுதுறையே.
751. ஏதமிலர் அரியமறை மலையர்மகள்
ஆகியஇ லங்கு நுதல் ஒண்
பேதைதட மார்பதுஇட மாகஉறை
கின்றபெரு மானதிடமாம்
காதன்மிகு கவ்வையொடு மவ்வல்அவை
கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி
கமழுமயி லாடு துறையே.
தெளிவுரை : சிவபெருமான், எத்தகைய மலக்குற்றமும் இல்லாதவர்; அரிய வேதமாக விளங்குபவர்; மலைமகளாகிய உமாதேவியை இடப் பாகமாகக் கொண்டு திகழ்கின்றவர். அப் பெருமானுடைய இடமாவது ஆரவாரித்து மேவும் அலைகளின் வாயிலாக மல்லிகை முதலான நறுமலர்கள் கொண்டு திகழும் காவிரி, சிறப்புடன் விளங்குகின்ற மயிலாடுதுறையே.
752. பூவிரி கதுப்பின்மட மங்கையர்
அகந்தொறும் நடந்து பலிதேர்
பாவிரி இசைக்குரிய பாடல்பயி
லும்பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்து இரு கரைக்குமணி
சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி
கொள்ளுமயி லாடு துறையே.
தெளிவுரை : விரிந்த பூக்களைக் கூந்தலில் சூடிய தாருகவனத்து மங்கையர்தம் இல்லம்தோறும் சென்று, கபலாம் ஏந்திப் பலி ஏற்றுப் பாடல் இசைக்கும் பழைமையானவர். அப்பெருமான், காவிரியில் பெருகும் நுரையின் வாயிலாக ஒளிமிக்க மணிகளை வாரி, இரு கரைகளிலும் சிந்த, வண்டுகள் அதனைக் கவரவும் வானரங்கள் மாமரங்களிலிருந்து குதித்து மகிழவும் விளங்கும் மயிலாடுதுறையில், பழம்பொருளாக வீற்றிருப்பவர் ஆவார்.
753. கடந்திகழ் கருங்களிறு உரித்துஉமையும்
அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழு மூவிலைநல் வேலுடைய
வேதியர் விரும்பும் இடமாம்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு
தொண்டை யெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
நாறு மயிலாடு துறையே.
தெளிவுரை : மதம் பொருந்திய யானையின் தோலை உரித்து உமாதேவியும் அஞ்சுமாறு கொண்ட திருக்கோலத்தினராகிய சிவபெருமான், ஆற்றல் மிக்க சூலப் படை உடையவராய் விளங்குபவர். வேதத்தை விரிக்கும் அவர் விரும்புகின்ற இடமாவது, இனிமையான எழில் மிக்க தேவமாதர்கள் புனலில் ஆடி மேவும் வாசம் கமழும் சிறப்புடைய மயிலாடுதுறையே.
754. அவ்வ திசை யாரும்அடி யாரும்உள
ராகஅருள் செய்தவர்கண் மேல்
எவ்வம்அற வைகலும் இரங்கிஎரி
யாடும் எமதுஈசன் இடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு
தென்கரை நிரந்து கமழும்பூ
மவ்வலொடு மாதவி மயங்கிமண
நாறுமயி லாடுதுறையே.
தெளிவுரை : எல்லாத் திக்குகளிலும் விளங்குகின்ற அடியவர்கள், நல்ல வகையில் வாழும் பொருட்டு அருள் புரிந்து, அவர்கள்பால் உள்ள தீய வினைகள் நீங்குமாறு நாள்தோறும் கையில் நெருப்பு ஏந்தி ஆடுகின்ற எமது ஈசன் வீற்றிருக்கின்ற இடமாவது ஆரவாரித்து, மணம் மிகுந்த மல்லிகை, மாதவி முதலான மலர்களை உந்தித் தள்ளி வரும், காவிரியின் தென் கரையில் உள்ள மயிலாடுதுறையே.
755. இலங்கைநகர் மன்னன்முடி ஒருபதினொடு
இருபதுதொள் நெரிய விரலால்
விலங்கலில் அடர்த்தருள் புரிந்தவர்
இருந்தஇடம் வினவுதிர் களேல்
கலங்கல் நுரை யுந்தியெதிர் வந்தகய
மூழ்கிமலர் கொண்டு மகிழா
மலங்கிவரு காவிரி நிரந்துபொழி
கின்றமயி லாடு துறையே.
தெளிவுரை : இராவணனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் நெரியுமாறு திருப்பாத விரலால் கயிலை மலையினை ஊன்றி அடர்த்துப் பின்னர் அருள் புரிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, யாது என வினவவீர்களானால், அது மயிலாடுதுறையே. அது வேகமாகக் கலங்கிய நுரை கொண்டு வரும் காவிரி நீர், வழியில் குளங்களில் உள்ள மணம் கமழும் பூக்களை எடுத்துக் கொண்டு கரை சேர்க்கும் சிறப்பால், எழில் மிகப் பொருந்திய நகர் ஆகும்.
756. ஒண்திறலி னான்முகனும் மாலுமிக
நேடியுண ராத வகையால்
அண்டமுறை அங்கியுரு வாகிமிக
நீண்டஅர ணாரது இடமாம்
கெண்டை இரை கொண்டுகெளிறு ஆருடன்
இருந்துகிளர் வாயறுதல் சேர்
வண்டல்மணல் கொண்டிமட நாரைவிளை
யாடும்மயி லாடு துறையே.
தெளிவுரை : மிகுந்த வலிமை உடைய பிரமனும், திருமாலும் தேடியும் உணர முடியாத வகையால், அண்டங்கள் யாவும் பொருந்தும் நெருப்பு வண்ணமாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கெண்டை, கெளிறு, ஆரல் ஆகியவை கிளர்ந்து இருக்கவும், கரையில், உள்ள நாரையானது வண்டல் மணலில் கிளறி ஆடும் மயிலாடுதுறையே.
757. மிண்வுதிறல் அமணரொடு சாக்கியரும்
அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்சடை எங்கள்பெரு
மானதிடம் என்பர் எழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய
தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை திளைக்கமது வந்தொழுகு
சோலைமயி லாடு துறையே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பழித்துக் கூறினாலும், ஆற்றல் மிகுந்தவராயும், இண்டை மாலை கொண்ட சடை முடி உடையவராயும் விளங்கும் ஈசனது இடமாவது, தெளிந்த அலைகள் கொண்டு மேவும் காவிரியின் தென்கரையில், நறுமண மலர்கள் விளங்கும் சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்து தேனுண்டு விளங்கும் மயிலாடுதுறையே.
758. நிணந்தரு மயானநில வானமதி
யாததொரு சூலமொடு பேய்க்
கணந் தொழு கபாலிகழல் ஏத்திமிக
வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
பந்தன்மயி லாடுதுறை யைப்
புணர்ந்ததமிழ் பத்தும்இசை யால்உறைசெய்
வார்பெறுவர் பொன்னுலகமே.
தெளிவுரை : வானுலகத்தவரும் பூவுலகத்தவரும் போற்றுமாறு சிறப்புடைய சூலப்படை உடைய ஈசன், கபாலம் ஏந்தியவராய்ப் பேய்க் கணங்கள் தொழ மயானத்தில் விளங்குபவர். அப்பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ள காழியில் மேவும் மறைவல்ல ஞானசம்பந்தன், மயிலாடுதுறையைப் பாடிய இத் தமிழ்ப்பதிகத்தை ஓதவல்லவர்கள், பொன்னுலகம் எனப் போற்றத் தகும் சொர்க்கத்தில் மகிழ்ந்து விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
329. திருவைகாவூர் (அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர்)
திருச்சிற்றம்பலம்
759. கோழைமிடறு ஆககவி கோளும்இல
வாகஇசை கூடும் வகையால்
ஏழையடி யார்அவர்கள் யாவைசொன
சொல்மகிழும் ஈசன்இடமாம்
தாழைஇள நீர்முதிய காய்கமுகின்
வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல்
சேறுசெயும் வைகாவிலே.
தெளிவுரை : கோழை பொருந்திய கண்டத்தை உடையவராகி, இசைத்துப் பாடும் பான்மை இலராயினும், தமக்குக் கூடுகின்ற இசையால் அன்பின் மிகுந்த அடியவர் எவ்வகையில் சொன்னாலும் அவற்றை ஏற்று மகிழ்பவர் சிவபெருமான். அப் பெருமானின் இடமாவது, தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் கமுக மரங்களில் விழ, அதன் பாளைகள் வாழையை உதிர்த்து வயல்களில் சேறாகத் திகழும் பெற்றியுடைய வைகாவூர் ஆகும்.
760. அண்டம்உறு மேருவரை அங்கிகணை
நாணரவ தாகஎழிலார்
விண்டவர்தம் முப்புரம்எ ரித்தவிகிர்
தன்னவன் விரும்பும்இடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை
யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டின்இசை பாடஅழகார் குயில்மிழற்று
பொழில் வைகாவிலே.
தெளிவுரை : வானத்தைத் தொடுகின்ற உயர்ந்த மேருமலையை வில்லாகவும் நெருப்பைக் கணையாகவும் கொண்டு, பகைமையுடைய முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, உலகிடை எழில் பெறச் செய்த விகிர்தன், சிவபெருமான். அப்பெருமான் விரும்பும் இடமாவது, வயல்களில் தாமரை மலர்கள் விளங்கவும், வண்டின் இசை பாடவும் அழகிய குயில்கள் அவற்றுக்கேற்ப இசைக்கவும் உள்ள பொழில் சூழ்ந்த வைகாவூர் ஆகும்.
761. ஊனமில ராகியுயர் நற்றவமெய்
கற்றவை உணர்ந்த அடியார்
ஞானமிக நின்றுதொழ நாளும்அருள்
செய்யவல நாதன் இடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு
கேபொழில்கள் தோறும் அழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள்
வந்தணவும் வைகாவிலே.
தெளிவுரை : மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் உண்டாகும் குற்றங்களைக் களைந்து, உயர்ந்தாகப் போற்றப்படுகின்ற நற்றவ நெறியில் நின்று, மெய்யாகிய ஞான நூல்களைக் கற்று உணர்ந்து அவ்வழியில் ஒழுகுகின்ற அடியவர்கள் நாள்தோறும் தொழுது போற்றி ஏத்த அருள் செய்ய வல்லவர், சிவபெருமான். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வளம் மல்கும் நிலவளமும் மேகம் சூழ்ந்த பொழிலும் விளங்குகின்ற வைகாவூர் ஆகும்.
762. இன்னஉரு இன்னநிறம் என்றறிவ
தேல்அரிது நீதிபலவும்
தன்னஉரு வாமெனமி குத்ததவன்
நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போய்வகையி னான்முழுது
உணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது
சேரும்வயல் வைகாவிலே.
தெளிவுரை : சிவபெருமான், இன்ன வடிவத்தை உடையவர், இன்ன வண்ணத்தைக் கொண்டவர் என்று அறிவது, அரிதாகும். அப்பெருமான் புண்ணியங்கள் பலவும் தன்னுடைய வடிவமாகும் என்னும் கொள்கையில், தவத்தின் நியமத்தொடு விளங்குபவர். அப்பெருமான் அமர்ந்து விளங்குகின்ற இடமாவது, முன் வினைப்பயனால் முனையும் தவத்தை மேற்கொண்டு திகழும் முனிவர்கள், காலை மாலை இருவேளையும் தொழுது போற்ற மருவும் வயல் சூழ்ந்த வைகாவூர் ஆகும்.
763. வேதமொடு வேள்விபல வாயின
மிகுத்துவிதி ஆறுசமயம்
ஓதியும் உணர்ந்தும்உள தேவர்தொழ
நின்றருள்செய் ஒருவன் இடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு
ஞாழலவை மிக்க அழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல
பாடுபொழில் வைகாவிலே.
தெளிவுரை : வேதங்களை ஓதி வேள்விகள் பல செய்து விதிக்கப் பெற்ற ஆறு சமயங்களை ஓதியும் உணர்ந்தும் உள்ள பூவுலகின் தேவர்களாகிய அந்தணர்கள் தொழுது போற்ற, அருள் செய்யும் ஒப்பற்றவராகியவர், சிவபெருமான். அவர் வீற்றிருந்து இடமாவது, மேன்மையாக விளங்குகின்ற தாழை, புன்னை, புலி நகக் கொன்றை ஆகியன விளங்கியும், மாதவி மலர்களின் மணம் கமழ வண்டுகள் பாடும் பொழில் கொண்ட வைகாவூர் ஆகும்.
764. நஞ்சமுது செய்தமணி கண்டன் நமை
யாளுடைய ஞான முதல்வன்
செஞ்சடையி டைப் புனல்க ரந்தசிவ
லோகன்அமர் கின்ற இடமாம்
அஞ்சுடரொடு ஆறுபதம் ஏழின்இசை
எண்ணரிய வண்ணமுள வாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது
சேரும்வயல் வைகாவிலே.
தெளிவுரை : நஞ்சினை உட்கொண்டு நீலகண்டனாகியவர். நம்மை ஆட்கொள்ளும் ஞான முதல்வராய். சிவந்த சடை முடியில் கங்கையைத் தரித்து மேவும் சிவலோக நாதராகிய , ஈசன். அப் பெருமான் வீற்றிருக்கின்ற இடமாவது, அழகிய தீபச் சுடரும் மந்திர வாசகங்களாலான தோத்திரங்களும் இசைத்து எண்ணுதற்கு அரியதாக, அளவற்ற தன்மையில் வண்ணமுடன் திகழுமாறு மகளிர்கள் தமது துணைவருடன் தொழுது போற்றுகின்ற வயல் வளம் பெருகி நிலவும் வைகாவூர் ஆகும்.
765.  நாளுமிகு பாடலொடு ஞானமிகு
நல்லமலர் வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும
வர்க் கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல
துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர்
வரியும்வயல் வைகாவிலே.
தெளிவுரை : நாள்தோறும் பக்தி மிகும் தோத்திரப் பாடலும் ஞானத்தால் மிகுந்து மேவும் அட்ட மலர்களாகிய கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியவற்றின் இயல்பினால் மிகுந்து உறுதியுடன், தோளும் கையும் குளிர அட்டாங்க வணக்கம் செய்து ஏத்திடும் பெருமக்களுக்கு அருள் செய்யும் சோதிவடிவாகியவர் சிவபெருமான். அவரது இடமாவது, சோலைகளிலிருந்து கனிகள் தாமே விழ, அந்த அதிர்ச்சியில் வாளை மீன் துள்ளிக் குதித்துத் தேன் துளிர்க்கும் மலர்களை உதிர்க்கத் திகழும் வயல் விளங்கும் வைகாவூர் ஆகும்.
766. கையிருப தோடுமெய்க லங்கிடவி
லங்கலை யெடுத்த கடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன்
நெரித்த அழ கன்றன் இடமாம்
கையின்மலர் கொண்டுநல காலையொடு
மாலைகரு திப்பலவிதம்
வையகம்எ லாம்மருவி நின்றுதொழுது
ஏத்தும்எழில் வைகாவிலே.
தெளிவுரை : இருபது கைகளும், வலிமையான உடம்பும் கொண்டு கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு செய்த அழகன், சிவபெருமான். அப் பெருமான் விளங்குகின்ற இடமாவது, கையில் மாலை கொண்டு காலையும் மாலையும் அடியவர்கள் தொழுது ஏத்தவும், எண்ணற்ற அன்பர்கள் பலவிதமான பக்தி மிகுந்த தோத்திரங்கள் செய்து போற்றவும், எழில் பெருக மேவும் வைகாவூர் ஆகும்.
767.அந்தம்முதல் ஆதிபெரு மானமரர்
கோனைஅயன் மாலும்இவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ
நின்றருள்செய் ஈசன்இடமாம்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய்
பூசியெழு தொண்டர்அவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை
யும்பதிநல் வைகாவிலே.
தெளிவுரை : அந்தம் முதல் ஆதி என யாவுமாய் நிலவுகின்ற சிவபெருமான், பிரமனும் திருமாலும் போற்றி செய்த இறைவனே ! எனத் தொழுது நிற்கத் தலைவராய் விளங்குபவர். அவர் வீற்றிருந்து அருள் புரியும் இடமாவது, அடியவர்கள் தியானமும் பக்தியும் பெருகத் திருநீறு அணிந்து, நறுமணம் கமழும் மலர்களைத் தூவி, வணங்கும் நற்பதியாகிய வைகாவூர் ஆகும்.
768. ஈசன்எமை யாளுடைய எந்தைபெரு
மான்இறைவன் என்றுதனையே
பேசுதல்செ யாஅமணர் புத்தரவர்
சித்தம்அணை யாஅவன்இடம்
தேசமது எலாம் மருவி நின்றுபர
வித்திகழ நின்ற புகழோன்
வாசமல ரானபல தூவியணை
யும்பதிநல் வைகாவிலே.
தெளிவுரை : சிவபெருமான், எம்மை ஆளுடைய எம்தந்தை அவர் எம் கடவுள் என்று, பேசாத சமணர் மற்றும் சாக்கியரின் சித்தத்தில் சாராதவர். அப் பெருமான் விளங்கும் இடமாவது, தேசமெல்லாம் புகழ்ந்தேத்தும் பெருமானைப் பரவி நன்மலர்கள் கொண்டு தூவிப் போற்றும் பதியாகிய வைகாவூர் ஆகும்.
769. முற்றுநமை யாளுடைய முக்கண்முதல்
வன்திவை காவிலதனை
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன்
ஞானசம் பந்தன் உரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்தும்இவை
வல்லவர் உருத்திரர்எனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பரி
யார்அவர்பெ ரும்புக ழொடே.
தெளிவுரை : முற்றுமாய் ஆட்கொண்டு நம்மைக் காத்து அருள் புரிகின்ற முக்கண்ணனாகிய ஈசன் விளங்குகின்ற திருவைகாவைச் சிரபுரத்தின் தலைவராகிய ஞானசம்பந்தன் உரை செய்த தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள்; உருத்திரர் எனப்படும் சிறப்புடையவர்களாய்ச் சிவலோகத்தில் பெருமையுடன் வாழ்வார்கள். இம்மையில் பெரும் புகழுடன் விளங்குபவர் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
330. திருமாகறல் (அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல், காஞ்சிபுரம் மாவட்டம்)
770. விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணல்அடி சேர்பவர்கள்
தீவினைகள் தீரும் உடனே.
தெளிவுரை : நன்றாக எடுத்து விளையும் கழனியில் பணி செய்யும் பெண்கள், பாடலும் ஆடலும் கொண்டு ஓசை எழுப்பி விளங்க, மேகத்தைத் தொடுகின்ற நீண்ட கொடிகளும் உயர்ந்த மாட மாளிகைகளும் அடர்ந்த பொழில்களும் கொண்டு மாகறல் என்னும் பதி விளங்குகின்றது. ஆங்கு வீற்றிருக்கும் சிவபெருமான், தேன் துளிர்க்கும் கொன்றை மலரும், கங்கையும், சந்திரனும், திகழும் சடையுடன் சிவந்த கண்களையுடைய மால் விடை கொண்டு விளங்குபவர். அப்பெருமான் திருவடியை நெஞ்சில் பதித்து ஏத்துபவர்களுடைய தீய வினைகள் யாவும் உடனே தீரும்.
771. கலையின்ஒலி மங்கையர்கள் பாடல்ஒலி
ஆடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடம்உயர் நீள்கொடிகள்
வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புனல் ஏந்துபெரு மானடியை
யேத்தவினை யகலு மிகவே.
தெளிவுரை : வேதங்களைப் பயிலும் ஒலியும், மங்கையர்கள் பாடலும் ஆடலும் கொண்டு அழகு பயிலும் செம்மையும் பொலிய, உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் பறந்து வீசத் திகழ்வது, மாகறல். ஆங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், கூர்மையான சூலப்படை ஏந்தி நெருப்புப் போன்ற சிவந்த சடை முடியின் மீது கங்கையைத் தரித்து உள்ளவர். அப்பெருமானின் இனிய திருவடியை ஏத்தி வழிபட, வினை யாவும் நீங்கும்.
772. காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன்  மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வான்அடியை
யேத்தவினை பறையும் உடனே.
தெளிவுரை : துந்துபி, சங்கு, குழல், யாழ், ஆகிய வாத்தியங்கள் முழங்க, காலை மாலை ஆகிய இருவேளையும் சிறப்பின் மிக்க வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழும் மாகறல் என்னும் பதியில் எழுந்தருளியிருப்பவர் ஈசன். அப்பெருமான், புலித்தோலை உடுத்தி, அதன் மீது நாகத்தை இறுகக் கட்டி, அழகு மிளிறப் பால் போன்று திகழும் திருவெண்ணீறு புனைந்து, விளங்குகின்றவர். அவர் திருவடியை ஏத்திப் பரவ, வினை யாவும் விரைவில் விலகிச் செல்லும்.
773. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்திஎழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபனல்
ஆடிமகிழ் மகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
செஞ்சடையி னான்அடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி
பாடுநுகரா எழுமினே.
தெளிவுரை : ஒளி உமிழும் கெட்டியான முத்தும் பொன்னும், மணியும் பெருக, எழில் மேவும் மேனியில் அணியாகப் பெற்ற மங்கையர், தமது துணைவருடன் மகிழும் பாங்குடைய மாகறலில் வீற்றிருப்பவர், சிவபெருமான். அப் பெருமான், தேன் கமழும் கொன்றை மலரும் குளிர்ந்த சந்திரனும், சிவந்த சடை முடியின்கண் அணிந்துள்ளவர்; அவர்தம் திருவடியை நன்கு பரவி ஏத்தி வழிபாடு செய்வதற்கு எழுவீராக ! அவ்வாறு வழிபட உங்கள் வினை யாவும் நீங்கும்.
774. துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சமலி பூம்பொழிலின் மயில்கள்நடம்
ஆடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
வானொர் மழு வாளன் வளரும்
நஞ்சம்இருள் கண்டம் உடை நாதனடி
யாரைநலி யாவினைகளே.
தெளிவுரை : நீலோற்பலம் மலர்ந்து விளங்கும் நீண்ட கழனிகளும், மேகத்தைத் தொடும் பொழிலின்கண் மயில்கள் நடனம் ஆடி மகிழும் சிறப்புடையது மாகறல் என்னும் பதி. ஆங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்பவர்; ஒப்பற்ற மழுப்படை உடையவர்; நஞ்சினை அருந்தியதால் வளர்ந்த கரிய கண்டத்தை உடையவர். அத்தகைய தலைவரின் அடியவர்களை வினையானது நலிவுறுத்தாது.
775. மன்னுமறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யால்இனிது இறைஞ்சிஇமை
யோரில்எழு மாகறல் உளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
கங்கையொடு திங்கள்எனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கஉயர்
வானுலகம் ஏறல்எளிதே.
தெளிவுரை : பெருமை பெறும் மறைவல்ல அந்தணர்களும், தவக் கோலம் தாங்கிய முனிவர்களும் இன்ன தன்மையால் இனிது இறைஞ்சித் தேவர்களைப் போன்று விளங்குகின்றனர். அத்தகையோர் மேவும் மாகறலில் வீற்றிருக்கும் சிவபெருமான், மின்னலைப் போன்ற மெல்லிய செஞ்சடைகள் விரிந்து பரவி, அதன் மீது பூவுலக மலர்களாகிய கொன்றை மற்றும் அட்ட புட்பங்களும் வான புட்பங்களாகிய கங்கையும் சந்திரனும் தரித்துள்ளவர். அப்பெருமானை நினைத்து வழிபடுபவர்களுடைய தொல்வினை யாவும் நீங்கும் அவர்கள் எளிதாய் உயர்ந்த உலகத்தை அடைவார்கள். இது சாலோக பதவியை அளிக்கும் என்பது குறிப்பு.
776. வெய்யவினை நெறிகள்செல வந்தணையு
மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானன் மது வார்கழனி
மாகறலு ளான்எழிலதார்
கையகரிகால் வரையின் மேலுதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சிடை
யாவினைகள் அகலு மிகவே.
தெளிவுரை : சஞ்சித பிராரத்த வினைகளை வீழ்த்தியும், இப் பிறவியில் அடையக்கூடிய ஆகாமியம் என்னும் வினையைப் பற்றி நிற்காதபடி வீழ்த்தவும் உள்ள அன்பர்களே ! உங்களுக்கு ஒரு மெய்ம்மையை உரைக்கின்றேன். மேகம் தவழும் சோலைகள் சூழ்ந்த கழனிகளை உடைய மாகறல் என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமான், எழில் மேவ, யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்து விளங்குபவர். அவர், யாவற்றுக்கும் தலைவர். அவருடைய திருவடியை நெஞ்சில் பதித்து வணங்குபவர்களைக் கண்டு வினை யாவும் அஞ்சி ஓடும். எனவே நீவிர் அத் திருத்தலத்திற்குச் சென்று திருமாகறலீசரை ஏத்துவீராக !
777. தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு
தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள்
ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
கச்சையுடை பேணிழயழகார்
பூசுபொடி ஈசன்என ஏத்தவினை
நிற்றல்இல் போகும் உடனே.
தெளிவுரை : பொன்னால் ஆகிய மாடங்கள் போன்று அழகிய வண்ணத்தில் உள்ள மாளிகைகளில் வெண்துகிலால் ஆன கொடிகள் புகை மேகத்தில் தோய விளங்கவும், சிறப்புடைய தவ வேந்தர்களால் வேள்வி இயற்றும் பெருமையுடைய மாகறல் என்னும் பதியில் சிவபெருமான் வீற்றிருப்பவர். அப்பெருமான், பாசுபதத் திருக்கோலத்தில், அழகிய  பாம்பினைத் தரித்தும், திருவெண்ணீறு பூசியும், திகழ்பவர். அப்பெருமானை ஏத்தி வழிபட, வினையானது முற்றிலும் விலகிச் செல்லும்.
778. தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு
நீர்குவளை தோன்றமது உண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறல் உளான்
சாயவிரல் ஊன்றியஇ ராவணன்
தன்மைகெட நின்றபெரு மான்
ஆயபுகழ் ஏத்தும்அடி யார்வினை
யாயினவும் அகல்வது எளிதே.
தெளிவுரை : தூய்மையான தாமரை மலரும், நெய்தல், குவளை ஆகியனவும் விளங்க, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிவண்டு பண்ணிசைத்து மகிழும் மாகறல் என்னும் பதியில் விளங்குகின்றவர், ஈசன். அவர் இராவணனுடைய வலிமை கெடுமாறு திருப்பாத விரலால் ஊன்றியவர். அப்பெருமானுடைய புகழ் கூறும் அடியவர்களின் வினை எளிதாக விலகிச் செல்லும்.
779. காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேலுணர்வு காமுறவி னார்
மாலும்மல ரானும்அறி யாமைஎரி
யாகிஉயர் மாகறல்உளான்
நாலும்எரி தோலும்உரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை அடிகள்அடி
யாரைஅடையா வினைகளே.
தெளிவுரை : அழகிய கழல்களை அணிந்த திருப்பாதத்தையும் நீண்ட திருச்சடையுடைய திரு முடியினையும் காண வேண்டும் என்கிற வேட்கை கொண்ட திருமாலும், பிரமனும் அறிய முடியாதவராய். உயர்ந்தவர், திருமாகறலீசர். எரிகின்ற நெருப்புக் கொண்டு விளங்கியும், யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டும், மாணிக்கத்தையுடைய நாகத்தை அணிந்தும் திகழ, இடபத்தை வாகனமாக உடைய அப்பெருமானுடைய அடியவர்களை, வினையானது சாராது.
780. கடைகொள் நெடு மாடமிக வோங்குகமழ்
வீதிமலி காழியவர்கோன்
அடையும் வகை யால்பரவி அரனைஅடி
கூடுசம் பந்தன்உரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில்
மாகறலுளான் அடியையே
உடையதமிழ் பத்தும்உணர் வார்அவர்கள்
தொல்வினைகள் ஒல்கும் உடனே.
தெளிவுரை : நெடிய மாடங்கள் திகழும் காழியின் தலைவராகி, எவ்வகையால் அடையும் வழியாகுமோ, அவ்வகையால் பரவி ஏத்திச் சிவபெருமானுடைய இனிய திருவடியில் கூடப் பெற்ற ஞானசம்பந்தன் உரைத்த, நீர் வளமும், வயல் வளமும் கூடிய பொழில் சூழ்ந்த மாகறலில் எழுந்தருளி உள்ள ஈசனின் திருவடிப் போதாகிய இத்திருப் பதிகத்தை, உரைப்பவர்களின் தொல்வினை விலகும்.
திருச்சிற்றம்பலம்
331. திருப்பட்டீச்சரம் (அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்  மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
781. பாடல்மறை சூடல்மதி பல்வளையொர்
பாகம் மதில் மூன்றொர் கணையால்
கூடஎரி யூட்டிஎழில் காட்டிநிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர
மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டி வினை வீடுமவரே.
தெளிவுரை : சிவபெருமான், வேதங்களால் ஓதப் படுபவர்; சந்திரனைச் சூடி இருப்பவர்; பல்வளை என்னும் திருநாமம் கொண்டுள்ள உமாதேவியாரை, ஒரு பாகமாகக் கொண்டு இருப்பவர்; மதில்கள் மூன்றினையும் ஒரு கணை தொடுத்து எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; வீரத்தின் எழிலாய் விளங்குபவர்; பொழில் சூழ்ந்த பழையாறையுள் மாட மாளிகை விளங்கும் மழபாடியுள் பட்டீச்சரத்தில் மேவி வீற்றிருப்பவர்; பாம்பினை அரையில் அசைத்துக் கட்டியவர். அப் பெருமான், சிவனடியார் திருக்கோலத்தில் உள்ளவர்களின் வினைகளை நீக்கி முத்தி நெறியை அருளிச் செய்வராவார்.
782. நீரின்மலி புன்சடையார் நீளரவு
கச்சையது நச்சிலைய தோர்
கூரின்மலி சூலமது ஏந்திஉடை
கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசரம்
ஏத்தவினை பற்றழியுமே.
தெளிவுரை : சிவபெருமான், சடை முடியில் கங்கை தரித்தவர்; நீண்ட அரவத்தைக் கச்சையாகக் கட்டியவர்; சூலப் படையை ஏந்திக் கோவண உடை கொண்டு விளங்குபவர்; மான் தோல் உடையவர்; கொன்றை மாலை தரித்தவர். அத்தகைய கடவுள், உலகத்தில் சிறப்புடன் விளங்கும் பழையாறையில் மேவும் பட்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப் பரமனை ஏத்தி வழிபட, வினை நீங்கும்.
783. காலைமட வார்கள்புனல் ஆடுவது
கௌவைகடி யார்மறு கெலாம்
மாலைமண நாறுபழை யாறைமழ
பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பன்உறை
பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்öருகி
விண்ணுலகம் ஆளு மலரே.
தெளிவுரை : மகளிர், காலை வேளைகளில் தண்ணீர்த் துறைகளில் நீராடி மகிழும் ஓசையும், மாலை நேரங்களில் வீதிகளில் பாடி விளையாடி விளங்குகின்ற ஓசையும் பழையாறையின் மழபாடியில் திகழ்வதாகும். ஆங்குப் பால் போன்ற திருவெண்ணீறு புனைந்த மார்பினராய்ப் பட்டீச்சரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் பரவி ஏத்துபவர்கள், இம்மையில் கடல் போன்ற செல்வத்தை உடையவர்களாயும் மறுமையில் விண்ணுலகத்தின் வளத்தினில் திளைப் பவர்களாயும் விளங்குவர்.
784. கண்ணின்மிசை நண்ணிஇழி விப்பமுகம்
ஏத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி
பட்டீசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுஉடன்
ஆதல்அது மேவல் எளிதே.
தெளிவுரை : ஈசனின் கண்களை, உமாதேவியார் தமது திருக்கரத்தால் புதைப்ப, அரும்பிய வியர்வைத் துளிகளைச் செஞ்சடையில் ஏற்றவர், அப்பெருமான். அவர், பண்ணின் இசை பெருகப் பலவகையான பாடல் களைப் பாடவும், ஆடவும் வல்லவர் வெண்மையான சந்திரனைச் சடை முடியில் தரித்தவர். அப் பரமன், மண்ணுலகில், இணையற்ற பெருமையுடைய மழபாடியில் விளங்கும் பட்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அவரை ஏத்துபவர்களுக்குத் தேவலோகத்தில் வாழ்கின்ற தேவர்களுடன் இணைந்து இருத்தலும், தேவர்களாக ஆதலும் எளிதாகும்.
785. மருவமுழவு அதிரமழ பாடிமலி
மத்தவிழவு ஆர்க்க வரைஆர்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
மேயபடர் புன்சடையினான்
வெருவ மத யானையுரி போர்த்துஉமையை
அஞ்சவரு வெள்விடையினான்
உருவம்எரி கழல்கள் தொழ உள்ளம் உடை
யாரைஅடை யாவினைகளே.
தெளிவுரை : முழவு என்னும் வாத்தியம் அதிர்ந்து ஒலிக்க, மழபாடியில் திருக்கோயில் திருவிழாக்கள் இனிது மேவ, பருவமழையின் காரணமாக வளமைகள் நனி பெருக ஒளி திகழும் பட்டீச்சரத்தில் இனிது வீற்றிருப்பவர், சிவபெருமான். அவர், படர்ந்த சடையுடையவர்; உமாதேவி அஞ்சி வியுப்புறுமாறு, யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; இடப வாகனத்தை உடையவர். நெருப்புப் போன்ற செம்மேனியராக விளங்கும் அப்பெருமானின் திருக்கழல்களைத் தொழுபவர்களுக்கு, வினையால் உண்டாகும் துன்பம் சாராது.
786. மறையினொலி கீதமொடு பாடுவன
பூதமடி மருவிவிர வார்
பறையினொலி பெரு நிகழ் நட்டம்அமர்
பட்டிசர மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை
யேற்றபுனல் தோற்ற நிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர்
தீத்தொழில்கள் இல்லர்மிகவே.
தெளிவுரை : வேதங்கள் ஒலிக்கப் பூதகணங்கள் சூழ்ந்து திருவடியைப் போற்ற, பறைகளின் ஒலியைப் பெருக்கித் திருக்கூத்து புரிபவர் சிவபெருமான். அவர், பட்டீச்சரத்தில் மேவிப் பிறைச் சந்திரனையும் கங்கையையும் சடை முடியில் தரித்து விளங்குபவர். அப் பெருமானை நியமமாக ஏத்தி வணங்குபவர்களுக்குத் துன்பத்தைத் தரும் வினைகள் விலகும்.
787. பிறவிபிணி மூப்பினொடு நீங்கிஇமை
யோர்உலகு பேணுலுறுவார்
துறவுயெனும் உள்ளம்உடை யார்கள் கொடி
வீதியழ காயதொகுசீர்
இறைவன்உறை பட்டீச்சரம் ஏத்திஎழு
வார்கள்வினை யேதும்இலவாய்
நறவவிரை யாலும்மொழி யாலும்வழி
பாடு மற வாதஅவரே.
தெளிவுரை : பிறவியாகிய பிணியும் மூப்பும் நீங்கித் தேவர்களால் போற்றப்படுகின்றவர்களும், உள்ளத்தால் உலகப் பற்றினைத் துறந்த சிவஞானிகளும் கொண்டு விளங்குகின்ற வீதிகளை உடைய சிறப்புடன், சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கோயிலாவது, பட்டீச்சரம் ஆகும். அதனை ஏத்தித் தொழுபவர்கள், வினை அற்றவர்களாய் விளங்குவர். அவர்கள், குணத்தாலும் வாக்காலும் ஈசனைப் போன்றவர்கள். இது சாரூப நிலையை அடையும் பெற்றியினை உணர்த்தியது.
788. நேசமிகு தோள்வலவன் ஆகியிறை
வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுஉண
ராத நிரம் பாமதியினான்
ஈசன்உறை பட்டிசரம் ஏத்தியெழு
வார்கள்வினை யேதும்இலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணல்எளி
தாம்அமரர் விண்ணுலகமே.
தெளிவுரை : இராவணன், தோள் வலிமையில் விருப்பம் உடையவனாகிக், கயிலையைப் பெயர்த்த போது, அவனுடைய வலிமையை அழித்து விளங்கிய சிவபெருமான், யாராலும் அறியப்படாதவர். அவர், பிறைச் சந்திரனைச் சூடிப் பட்டீச்சரத்தில் உறைபவர். அப் பெருமானை ஏத்தி வணங்குபவர்கள், வினையாவும் நீங்கப் பெற்றவர்களாய், இனியும் பிறத்தலை அடையாதவர்களாய் விளங்கி அமரர்தம் விண்ணுலகத்தை எளிதாக அடைவார்கள்.
789. தூயமல ரானும்நெடி யானும்அறி
யார்அவன தோற்ற நிலையின்
ஏயவகை யானதனை யார்அதுஅறி
வார் அணிகொள் மார்பின் அகலம்
பாயநல நீறதுஅணி வான்உமைத
னோடும் உறை பட்டிசரமே.
மேயவனது ஈரடியும் ஏத்தஎரி
தாகும்நல மேலுலகமே.
தெளிவுரை : சிவபெருமானது திருவண்ணத்தைப் பிரமன் திருமால் மற்றும் எவரும் அறியமாட்டார்கள். அழகு மிக்க அகன்ற திருமார்பில் நலம் திகழும் திருநீற்றைக் குழையப் பூசி விளங்குகின்ற ஈசன், உமாதேவியாரோடு உறையும் இடம் பட்டீச்சரம் ஆகும். அப் பெருமான் திருவடியை ஏத்த, மேன்மையான விண்ணுலக வாழ்க்கை எளிதாகக் கூடும்.
790. தடுக்கினை இடுக்கிமட வார்களிடு
பிண்டமது உண்டு ழல்தரும்
கடுப்பொடி யுடற்கவசர் கத்துமொழி
காதல் செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல் வயற்கொண்மழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசரம்
ஏத்தவினை பற்றறுதலே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும் அன்பற்ற மொழிகளை ஏற்க வேண்டாம். மடைகளில் கயல்கள் விளங்கும் வளப்பம் மிகுந்த வயல்கள் கொண்ட மழபாடி நகரில் மேவும் பழையாறையுள், கையில் மழுப் படை உடையவராய்ப் பட்டீச்சரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஏத்த, வினை நீங்கும்.
791. மந்தமலி சோலைமழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை
அந்தண் மறை யோர்இனிது வாழ்புகலி
ஞானசம் பந்தன் அணியார்
செந்தமிழர்கள் கொண்டினிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதிலவே.
தெளிவுரை : தென்றல் உலாவும் சோலை திகழ் மழபாடி நகரில் பழையாறை என்னும் பகுதியுள் முக்தி நலம் அளிக்கவல்ல பட்டீச்சரத்தில் மேவிய சிவபெருமானை, மறையவர்கள் இனிது வாழும் புகலியில் திகழும் ஞானசம்பந்தன், அணி திகழும் செந்தமிழால் உரைத்த இத்திருப்பதிகத்தை இனிது ஓதவல்ல திருத்தொண்டர்கள், வினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள். இது , துன்பமற்ற இனிய வாழ்க்கையை நல்கிப் பிறவாமையாகிய பேற்றினை அளிக்கும் என்பது குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
332. திருத்தேவூர் (அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
792. காடுபயில் வீடுமுறை யோடுகலன்
மூடுமுடை யாடைபுலி தோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு
வேதியர்தி ருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடஅரி
கோடல்கைம் மறிப்பநலமார்
சேடுமிகு பேடையன மூடிமகிழ்
மாடமிடை தேவூரது வே.
தெளிவுரை : ஈசன் திகழும் இடம், சுடுகாடு, கையில் உள்ள உண்கலன், பிரமனின் மண்டை ஓடு; உடுத்தும் உடை, புலித்தோல்; உட்கொள்வது, பிச்சை ஏற்ற உணவு. அப்பெருமான், இத்தகைய திருக்கோலத்தில் மேவியவராய், வேதத்தின் தலைவராய் வீற்றிருக்கும் பதியாவது, மயில் ஆடவும், வண்டு பாடவும், காந்தள் மலர் அசைந்து கைத்தாளம் போன்று சலசலக்கவும், அழகிய அன்னம் போன்ற மகளிர், மாடங்களில் நிலவும் தேவூர் ஆகும்.
793. கோளரவு கொன்றைநகு வெண்டலையெ
ருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு
செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள்
குங்குமம் விரைக்குமண மார்
தேளரவு தென்றல்தெரு வெங்குநிறை
வொன்றிவரு தேவூரது வே.
தெளிவுரை : சிவபெருமான், வளைந்த அரவம், கொன்றை மலர், வற்றிய மண்டை ஓடு, வன்னிப் பத்திரம், கொக்கிற்கு, கங்கை இவற்றைச் சடையில் வைத்திருப்பவர்; அத்தகைய இறைவனுடைய ஊரானது, இள மங்கையர்கள் பூசி விளங்கும் குங்குமக் குழம்பின் நறுமணமானது தென்றல் காற்று வருடத் தெருவெங்கும் நிறைந்து பெருகும் தேவூர் ஆகும்.
794. பண்தடவு சொல்லின் மலை வல்லியுமை
பங்கன் எமை யாளும் இறைவன்
எண்தடவு வானவர் இறைஞ்சுகழ
லோன் இனிது இருந்த இடமாம்
விண்தடவு வார்பொழில் உகுத்த நறவு
ஆடிமலர் சூடி விøயார்
செண்டடவு மாளிகை செறிந்துதிரு
வொன்றி வளர்தேவூரது வே.
தெளிவுரை :  பண்ணிசை போன்று இனிய சொல்லருள் பெருகும் மலைமகளாகிய உமாதேவியாரைப் பாகமாக உடைய சிவபெருமான், எம்மை ஆட்கொள்கின்ற இறைவன். எண்ணற்ற தேவர்களால் போற்றப்படுகின்ற அப்பரமன், இனிது வீற்றிருக்கும் இடமாவது விண்ணளவு உயர்ந்து மேவும் பொழிலில் விளங்குகின்ற தேன் துளிர்க்கும் மலர் சூடி மணம் கொண்டு விளங்குகின்ற திருமகள் வாசம் செய்யும் தேவூர் ஆகும்.
795. மாசில்மன நேசர்தமது ஆசைவளர்
சூலதரன் மேலைஇமையோர்
ஈசன்மறை யோதியெரி யாடிமிகு
பாசுபதன் மேவு பதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும்
மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது
வீதிநிறை தேவூரதுவே.
தெளிவுரை : மாசு இல்லாத மனத்தினராய், அன்பு கொண்டுள்ளவராய் மேவும் அடியவர்கள் மேன் மேலும் பெருகுமாறு, சூலத்தையுடைய சிவபெருமான், வேதங்களை ஓதியும், எரியேந்தி ஆடியும் காட்சி தருபவர். அப் பரமன் மேவும் பதியாவது, வாசம் பொருந்திய மலர்களைக் குயில் கோதியம் கூவியும், நாகணவாய்ப் பறவைகள் மொழிகளைப் பேசியும், ஈசனைப் போற்றுகின்ற அர ஒலியும், இசைத்துப் போற்றும் வீணையின் ஒலியும், கீதமும், வீதி எங்கும் மல்கித் திகழும் தேவூர் ஆகும்.
796. கானமுறு மான்மறியன் ஆனையுரி
போர்வைகனல் ஆடல் புரிவோன்
ஏனஎயிறு ஆமை யிளநாகம் வளர்
மார்பின்இமை யோர்தலைவன்ஊர்
வானணவு சூதம்இள வாழைமகிழ்
மாதவி பலாநிலவி வார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
பாடிவரு தேவூரது வே.
தெளிவுரை : சிவபெருமான், கானகத்தில் வாழும் மானைக் கரத்தில் கொண்டுள்ளவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; எரியும் நெருப்பைக் கரத்தி ஏந்தி ஆடல் புரிபவர்; பன்றியின் கொம்பு, ஆமையின் ஓடு, இளமையான நாகம் ஆகியவற்றை மார்பில் திகழப் பெற்றவர்; தேவர்களின் தலைவர். அப் பெருமானுடைய ஊரானது, நெடிது உயர்ந்த வாழை, மகிழ மரம், பலா மரம், மாதவி ஆகியவற்றின் தேனை உண்ட வரி வண்டுகள் மருண்டு மயங்கிய நிலையில் இசை பாடி மருவும் தேவூர் ஆகும்.
797. ஆறினொடு கீறுமதி யேறுசடை
ஏறன்அடை யார்நகர்கள் தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த
நீறனமை யாளும் அரனூர்
வீறுமலர் ஊறுமது வேறிவளர்
வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பவிள
வாளைவரு தேவூரது வே.
தெளிவுரை : சிவபெருமான், சடையில் கங்கையும் கீற்றுப் போன்ற சந்திரனும் தரித்துள்ளவர்; இடப வாகனத்தை உடையவர்; பகைமை கொண்ட முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; திருவெண்ணீற்றுத் திருமேனியர்; நம்மை ஆட்கொள்ளும் அரன் ஆவர். அப் பெருமானுடைய ஊராவது, செழிப்பான மலர்களிலிருந்து ஊறுகின்ற தேன், கழனிகளில் பாய்ந்து சேறுபடுத்தக் கயல்கள், வாளைகளை விளித்து அழைக்கும் நீரின் இனிமை திகழும் தேவூர் ஆகும்.
798. கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம்
அன்று அவிய நின்று நகைசெய்
என்றனது சென்று நிலை எந்தைதன
தந்தையமர் இன்ப நகர்தான்
முன்றிமிசை நின்றபல வின்கனிகள்
தின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி யொன்ற விளை
யாடிவலர் தேவூரது வே.
தெளிவுரை : சிவபெருமான் உலகம் எல்லாம் அழியும் படியாகக் கனன்று பகைத்து எழுந்த முப்புரத்து அசுரர்கள், எரிந்து சாம்பலாகுமாறு நகை செய்து நெருப்பினை உதிர்த்தவர்; எனது தந்தைக்குத்  தந்தை ஆனவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இனிய நகரானது, பலாக் கனிகளைத் தின்ற கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி மகிழும் தேவூர் ஆகும்.
799. ஓதமலி கின்ற தெனி லங்கையரை
யன்மலி புயங்கள் நெரியப்
பாதமலி கின்ற விரல் ஒன்றினில்
அடர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட
மாடலொடு பொங்கு முரவம்
சேதமலி கின்றகரம் வொன்றிதொழில்
ஆளர்புரி தேவூரது வே.
தெளிவுரை : இலங்கையின் அரசனாகிய இராவணனுடைய இருபது புயங்கள் நெரியுமாறு, திருப்பாத விரல் ஒன்றினால் அடர்த்த சிவபெருமானுடைய இடமாவது, மகிழ்ச்சியுடன் மகளிர் நடனம் புரியவும், வலிமை மிக்க கரங்களால் சேற்றில் நின்று வெற்றித் தொழில் எனத்தக்க உழவுத் தொழிலைப் புரியவும் திகழும் தேவூராகும்.
800. வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு
கண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள்
கண்ணஅ னலங்கொள் பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய
அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தஇசை
யாழ்மருவு தேவூரது வே.
தெளிவுரை : வண்ணமுகில் போன்ற எழில் கொண்டு மேவும் திருமாலும், தாமரை மலரில் விளங்கும் பிரமனும், எண்ணற்ற தேவர்களும் கருதிப் போற்ற அனற் பிழம்பாக ஓங்கிய இறைவனுடைய பதியானது, வண்ண மிகு வனப்பும், நுண்ணிய இடையும், அன்னநடையும், இனிய மொழியும் உடைய, மகளிர் விளங்குகின்ற உறுதியான மாளிகைகளில் செறிந்த இசையுடன் யாழின் இசை மருவும் தேவூர் ஆகும்.
801. பொச்சம்அமர் பிச்சைபயில் அச்சமணும்
மெச்சுமறு போதியருமா
மொச்சை பயில் இச்சைகடி பிச்சன்மிகு
நச்சரவன் மொச்ச நகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் மெச்சுதல் இல்லாத தன்மையில், அவர்கள் சொற்களை விலக்கிப் பித்தன் எனப்படுபவராய், நச்சுப் பொருந்திய அரவத்தை உடையராய், அடியவர்கள் குழுமி இருந்து போற்றுகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் நகர் எனப்படுவது முகில் தவழும் தேவூர் ஆகும்.
802. துங்கமிகு பொங்கரவு தங்குசடை
நங்களிறை துன்று குழலார்
செங்கயல்கண் மங்கைஉமை நங்கையொரு
பங்கள்அமர் தேவூ ரதன்மேல்
பைங்கமலம் அங்கணிகொள் திண்புகலி
ஞானசம் பந்தன் உரைசெய்
சங்கமலி செந்தழிழ்கள் பத்தும்இவை
வல்லவர்கள் சங்கையிலரே.
தெளிவுரை : நீண்டு வளர்ந்து, பொங்குகின்ற படம் கொண்டு விளங்கும் அரவத்தைச் சடையில் அணிந்த நம் இறைவன். உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு வீற்றிருக்கும் தேவூரின் மீது, தாமரை மலர்கள் அணிபெறத் திகழும் உறுதி மிக்க புகலியின் ஞானசம்பந்தன் உரை செய்த அருளழகு பொருந்திய இனிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள், ஐயம் அற்றவர்கள் ஆவர். சிவ ஞானத்தைப் பெற்றவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
333. திருச்சண்பை நகர் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
803. எந்தமது சிந்தைபிரி யாதபெரு
மான்என இறைஞ்சி இமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு
தீபமலி வாய்மை யதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள்
செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு
மேவுபதி சண்பை நகரே.
தெளிவுரை : எம் சிந்தையிலிருந்து பிரியாத பெருமானே ! என்று தேவர்கள் தொழுது போற்றித் தூப தீங்களால்  காலையும் மாலையும் மற்றும் சந்திக் காலங்களிலும் ஏத்தி அர்ச்சனைகள் செய்ய, வீற்றிருக்கின்ற சிவபெருமான், மணங்கமழும் கூந்தலை உடைய உமாதேவியாரை உடனாகக் கொண்டு விளங்குகின்ற பதியானது சண்பை நகர் ஆகும்.
804. அங்கம்விரி துத்தியரவு ஆமைவிரவு
ஆரம்அமர் மார்பில் அழகன்
பங்கய முகத்தரிவை யோடுபிரி
யாதுபயில் கின்ற பதிதான்
பொங்குபர வத்திரை கொணர்ந்துபவ
ளத்திரள் பொலிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்
பிறங்கொளிகொள் சண்பைநகரே.
தெளிவுரை : சிவபெருமான், படம் கொண்டு விளங்கும் அரவமும், ஆமை விரவும் ஆரமும் மார்பில் அணிந்து விளங்குகின்ற அழகர். அப் பெருமான் தாமரை போன்ற முகப் பொலிவுடய உமாதேவியை உடனாகக் கொண்டு பிரியாது விளங்குகின்ற பதியாவது, அலைகளின் வாயிலாகப் பவளத்தைச் சங்கும் முத்தும் விரவப் பெற்றப் பொலியும் வயல்களில் சேர்ந்து, ஒளியை விளங்கச் செய்யும் சண்பை நகர் ஆகும்.
805. பொழுமதி தாழுநதி பொங்கரவு
தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
மாதினொடு இருந்த பதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை
துன்னுபொழில் மாடு மடவார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தம்என
உந்துதகு சண்பை நகரே.
தெளிவுரை : சிவபெருமான், கங்கையும் அரவமும் பிறைச் சந்திரனும் சடையில் கொண்டு விளங்கி, உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருக்கும் பதியானது, வாழை, புலி நகக் கொன்றை, மகிழ மரம், புன்னை ஆகியன உடைய பொழில் சூழ, தாழை அரும்பினை யானையின் தந்தம் எனத் கருதி மயங்கும் சண்பை நகர் ஆகும்.
806. கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்
கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி
பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்தமது
வாய்மை வழுவாத மொழியார்
சட்டகலை யெட்டுமரு வெட்டும் வளர்
தத்தை பயில் சண்பை நகரே.
தெளிவுரை : முழவுகள் கொட்டி முழங்க, வட்டணை என்னும் நாட்டிய வகையில் நடனம் ஆடி, நெற்றிப் பட்டம் விளங்கும் நுதலும், தேன் மணம் கொண்டு விளங்கும் உமாதேவியை உடனாகக் கொண்ட ஈசன் மேவும் பதியாவது, சந்திரனின் ஒளி உள்ளே செல்ல முடியாதவாறு அடர்த்தியான பொழில் உடையதும், கலைகள் யாவும் நன்கு துலங்கப் பெற்று, அதனைக் கிள்ளைகள் பயிலுகின்ற சிறப்புடையதும் ஆகிய சண்பை நகர் ஆகும்.
807. பணங்கெழு பாடலினொடு ஆடல்பிரி
யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகம்உடை ஆகம்உடை
அன்பர்பெரு மானதுஇடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில்
நீடுவிரை யார்புறவெலாம்
தணங்கெழுவி ஏடலர்கொள் தாமரையில்
அன்னம்வளர் சண்பைநகரே.
தெளிவுரை : பண்ணின் இசையமைந்த பாடலும் ஆடலும் கொண்டு விளங்குகின்ற பரம்பொருளாகிய சிவபெருமான், உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாக விளங்குகின்றவராய், அன்புடையவர்களுக்கு நாதனாகத் திகழ்பவர். அவரது இடமாவது, ஒன்றுடன் ஒன்று இணங்கி இருக்குமாறு கொடிகளை உடைய மாடங்களையும் மதில்களையும் கொண்டு, மணங் கமழும் சோலைகளில் குளிர்ந்த தாமரை மலர்கள் விளங்க, அவற்றில் அன்னப் பறவைகள் துயிலும் சண்பை நகர் ஆகும்.
808. பாலனுயிர் மேலணவு கால னுயிர்
பாறஉதை செய்த பரமன்
ஆலுமயில் போல்இயலி யாயிழைத
னோடும் அமர்வு எய்தும்இடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர்
கிண்டிநறவு உண்டுஇசைசெயச்
சாலிவயல் கோலமலி சேல்உகள
நீலம்வளர் சண்பைநகரே.
தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த, காலன் மாயுமாறு, திருப்பாதத்தால் உதைத்த சிவபெருமான், மயில் போலும் சாயலை உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு இருக்கும் இடமாவது, நறுமணம் கமழும் சோலையில் உள்ள மலர்களின், வண்டு தேனை உண்டு இசைத்துப் பாடவும், சாலி என்னும் நெல் விளையும் வயல்களில் அழகிய சேல் உகள, நீலோற்பல மலர்கள் திகழவும் மேவும் சண்பை நகர் ஆகும்.
809. விண்பொய்அத னால்மழைவிழாது ஒழியி
னும்விளைவு தான்மிகஉடை
மண்பொய்அத னால்வளம்இ லாதுஒழியி
னும்தமது வண்மை வழுவார்
உண்பகர வாருலகில் ஊழிபல
தோறுநிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழும்அடி
யார்தமது தன்மையது வே.
தெளிவுரை : வானம் பொய்த்து அதனால் மழை பொழியாமலும், நிலம் வறட்சி கொண்டு வளமை இல்லாது போனாலும் தமது வள்ளல் தன்மையிலிருந்து வழுவாது அடியவர்களுக்கு அமுது செய்வித்தலை ஊழிதோறும் குறைவின்றிச் செய்யும் பதியாவது, சண்பை நகர் ஆகும். ஆங்கும் எழுந்தருளியுள்ள ஈசனின் திருவடியை வணங்கி ஏத்தும் அடியவர்கள், அத்தகைய வண்மை உடையவர்களே இது ஈசன் திருவருட் பொலிவை உணர்த்துதலாம்.
810. வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு
வித்தமதி யில்வலியுடை
அரக்கனது உரக்கரசி ரத்துற
அடர்த்தருள் புரிந்த அழகன்
இருக்கையத ருக்கன்முத லான இமை
யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்
கொண்டலன சண்பை நகரே.
தெளிவுரை : மலை மகளாகிய உமாதேவி கலங்குமாறு, அறிவற்ற நிலையில் துன்பம் செய்த இராவணனது வலிமையான கரங்களும் சிரங்களும் நலியுமாறு அடர்த்த சிவபெருமான், பின்னர் கசிந்து போற்ற அவ் அரக்கனுக்கு வாளும் வாழ்நாளும் ஈந்து அருள் புரிந்தவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சூரியன் முதலான தேவர்கள் குழுமி, விழாக் காலங்களில் ஏத்தி வழிபடும் சோலைகளும் பொழில்களும் மேவும் சண்பை நகர் ஆகும்.
811. நீலவரை போலநிகழ் கேழலுரு
நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர்
தீயுருவ மானவரதம்
சேலுமின வேலுமன கண்ணியொடு
நண்ணுபதி சூழ்புறவெலாம்
சாலிமலி சோலை குயில் புள்ளினொடு
கிள்ளைபயில் சண்பை நகரே.
தெளிவுரை : நீல மலை போன்ற பெரிய பன்றியின் உருவமும், நீண்ட அன்னப் பறவையின் உருவமும் கொண்ட திருமாலும், பிரமனும் அறிய முடியாத வாறு, வளர்ந்து எழுகின்ற தீயின் வடிவம் ஆகிய வரதனாகிய சிவபெருமான், சேல் போன்றும் வேல் போன்றும் விழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, விளங்குகின்ற பதியாவது, சாலி நெல் வயல்களும், குயில் முதலான பறவைகளுடன், கிளிகள் பயிலும் சோலைகளும் சூழ்ந்த சண்பை நகர் ஆகும்.
812. போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு
வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தென்றும்இலை
நன்றதுணர் வீர்உரைமினோ
ஆதியெமை யாளுடைய அரிவையொடு
பிரிவிலி அமர்ந்த பதிதான்
சாதிமணி தெண்டிரை கொணர்ந்து வயல்
புகஎறிகொள் சண்பை நகரே.
தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் ஓதுகின்ற பொய்யுரைகளைக் கொண்டு ஆற்றத் தகுந்த பயன் உடைய செயல் ஏதும் இல்லை. இதனை நன்கு உணர்வீர்களாக. முதற் கடவுளாகிய சிவபெருமான் எம்மை ஆளுடைய உமாதேவியாரோடு பிரிதல் இன்றி வீற்றிருக்கும் பதி எனப்படுவது, உயர்ந்து விளங்கும் மணிகளைக் கடலலைகள் வயிலாக வயல்களில் கொழிக்கும் வளப்பம் பொருந்திய சண்பை நகர் ஆகும்.
813. வாரின்மலி கொங்கைஉமை நங்கையொடு
சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின்முரல் தெண்கடல் விசும்புற
முழங்குஒலி கொள் சண்பைநகர்மேல்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்
ஞானசம் பந்தன் உரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்
சேர்வர்சிவ லோக நெறியே.
தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு, சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற ஊராகிய தெளிந்த கடலின் ஒலியானது வானில் எழும்பும் தன்மையில் முழங்குகின்ற சண்பை என்னும் நகர் மீது உலகில் புகழ் மிக்கு மேவும் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், சிவ லோகத்தை அடைவார்கள். இப் பிறப்பில், இனிய வாழ்க்கையும் மறுமையில் சாலோக பதவியும் கைகூடும் என்பது குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
334. திருவேதவனம்
திருச்சிற்றம்பலம்
814. கற்பொலிசு ரத்தின்எரி கானினிடை
மாநடம தாடிமடவார்
இற்பொலிகொ ளப்புகுதும் எந்தைபெரு
மானதிடம் என்பர்புவிமேல்
மற்பொலிக லிக்கடல் மலைக்குவடு
எனத்திரை கொழித்த மணியை
விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை
மார்கவரும் வேதவனமே.
தெளிவுரை : கற்பொடிகள் மிகுந்தும் வெம்மை பெருகவும் உள்ள மயானத்தின் இடையில் சிறப்பான நடனத்தை ஆடி, மகளிர்தம் இல்லங்களில் பொலிவுடை திருக்கோலம் தாங்கிப் பலி ஏற்கும் எம் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்று சொல்லப்படுவது, கடல் அலைகளால் வீசப்படும் பவளம் போன்ற நுதலும் கொடிபோன்ற மெல்லிய இடையும் கொண்ட உருத்திர கணிகையர் மேவும் வேதவனம் ஆகும்.
815. பண்டிரை பவம்புணரி யிற்கனக
மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிடம்
உண்டகுழ கன்றன் இடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின்
மீதணவு தென்றல் வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல்
வந்தமொழி வேதவனமே.
தெளிவுரை : மேருமலையை நாட்டி வாசுகி என்கிற நாகத்தைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது எழுந்த விடத்தினை உட்கொண்டு சிவபெருமானுடைய இடமாவது, வண்டுகள் பொழில்களில் ரீங்காரம் செய்யவும், இனிய தென்றல் மணம் கமழவும், கடலின் வெண் திரைகள் செம்பவளத்தைக் கொண்டு சேர்க்கவும் புகழ் பெருக்கும் வேத வனம் ஆகும்.
816. காரியன்மெல் லோதிநதி மாதைமுடி
வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழு நம்பர்உறைவு
என்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவின்ஒலி திண்பணிலம்
ஒண்படக நாளும் இசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதர்இசை
பாடல்ஒலி வேதவனமே.
தெளிவுரை : மேகம் போன்று கருமையான அடர்ந்த கூந்தலை உடைய கங்கையைச் சடை முடியில் வைத்து மலைமகளை ஒரு பக்கத்தில் மகிழ விளங்குகின்ற சிவபெருமான் உறைகின்ற இடம் எனப்படுவது, நெடிய மாடங்ள் கொண்ட வீதிகளில், தேர் ஓடும் ஒலியும், சங்கின் ஒலியும், முழவின் ஒலியும் நாள்தோறும் இசைப் பாடல்களைப் பாடும் மாதரின் ஒலியும் திகழ, மேவும் வேதவனமே.
817. நீறுதிரு மேனியின் மிசைத் தொளிபெ
றத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கள் தொறும் பிச்சைநுகர்
இச்சையர் இருந்த பதியாம்
ஊறுபொரு ளின்தமிழ் இயற்கிளவி
தேருமட மாதருடனார்
வேறுதிசை ஆடவர்கள் கூறஇசை
தேரும்எழில் வேதவனமே.
தெளிவுரை : திருவெண்ணீற்றைத் திருமேனியில் குழைய ஒளிருமாறு தடவி, இடப வாகனத்தில் ஏறி, உலகம் முழுவதும் சென்று பிச்சை ஏற்க விரும்பிய சிவபெருமான் வீற்றிருக்கின்ற பதியாவது, பல அரிய பொருள்களைத் தருகின்ற இனிய தமிழ்ச் சொற்களை மொழியும் மாதர்கள்பால், பிற இடங்களிலிருந்து வந்து மேவு ஆடவர்கள் சொற்பயிலும், எழில் மிகுந்த வேதவனமே.
818. கத்திரிகை துத்திரி கறங்குதுடி
தக்கையொடு இடக்கைபடகம்
எத்தனை உலப்பில்கரு வித்திரள்
அலம்ப இமை யோர்கள் பரச
ஒத்தர மிதித்துநட மிட்டவொரு
வர்க்குஇடமது என்பர்உலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள்
மிடைந்துகளும் வேதவனமே.
தெளிவுரை : கார்த்திகை, துத்திரி, கறங்கு, துடி, தக்கை, இடக்கை, படகம் எனப் பெறும் வாத்தியக் கருவிகள் முழங்க, அதற்கு ஏற்ற வகையில் திருப்பாதத்தை மிதித்து நடம் புரியும் ஒப்பற்ற பெருமானாகிய ஈசனுக்கு இடமாவது, உலகில் மெய்த்தன்மையை உணர்ந்த பக்தர்களும் சித்தர்களும் விளங்கி, மகிழ்ந்து உறையும் வேத வனமே.
819. மாலைமதி வாளரவு கொன்றைமலர்
துன்றுசடை நின்று கழலக்
காலையில் எழுந்தகதிர் தாரகை
மடங்கஅனல் ஆடும் அரனூர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டியின
வண்டுமது உண்டு இசைசெய
வேலையொலி சங்குதிரை வங்ககற
வங்கொணரும் வேத வனமே.
தெளிவுரை : மாலைக் காலத்தில் ஒளிர்ந்து தோன்றும் சந்திரனும், அரவமும், கொன்றை மலரும் சடை முடியில் பொருந்த தரித்து; காலையில் தோன்றும் கதிரவனும், நட்சத்திரங்களும் கொண்டுள்ள ஒளியின் வண்ணமும் அடங்குமாறு திருக்கரத்தில் அனலை ஏந்தி நடம் புரியும் சிவபெருமானது பதியானது, மரங்கள் தொறும் உள்ள மலர்களிலுள்ள தேனை உண்ட வண்டு இசை எழுப்பவும், கடல் ஒலி செய்யவும், அலைகள் சங்குகளையும் சுறாமீன்களையும் கொண்டு கரையில் சேர்க்கின்ற சிறப்புப் பொருந்திய இடம் வேத வனமே.
820. வஞ்சகம னத்தவுணர் வல்லரணம்
அன்றவிய வார்சிலை வளைத்து
அஞ்சகம் அவித்தஅம ரர்க்குஅமரன்
ஆதிபெரு மானதிட மாம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறியசெவ்
வாயவர்கள் பாடல்பயில்
விஞ்சக வியக்கர்முனி வக்கண
நிறைந்துமிடை வேதவனமே.
தெளிவுரை : வஞ்சகச் செயலையுடைய அசுரர்களின் வலிமையான கோட்டைகள் மூன்றினையும் மேருமலையை வில்லாகக் கொண்டு ஒரு கணையால் எய்து, எரிந்து சாம்பலாகுமாறு செய்த தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய ஆதிக் கடவுளான சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கனி இதழ்களால் இனிய பாடல்களைப் பாடும் மகளிர் விளங்கவும், இயக்கர்களும் முனிவர் கணங்களும் நிறைந்து போற்றவும் விளங்கும் வேத வனமே.
821. முடித்தலைகள் பத்துடை முருட்டுரு
அரக்கனை நெருக்கி விரலால்
அடத்தலமுன் வைத்துஅலம ரக்கருணை
வைத்தவன் இடம்பலதுயர்
கெடுத்தலை நனைத்தறம் இயற்றுதல்
கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர்
மல்குபதி வேதவனமே.
தெளிவுரை : கிரீடங்கள் பத்து கொண்ட முரட்டுத் தன்மையுடைய இராவணனைத் திருப்பாத விரலால் நெரித்துத் துன்புறத்திப் பின்னர் கருணை செய்த சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பலதுயரங்கள் வினைப் பயனால் நேர்ந்தாலும், அவற்றை அறச் செயல்கள் கொண்டு களையும் மாந்தர்களும், புலவர்களின் வறுமை கண்டு அவற்றை நீக்கி, நிதி அளித்து உபசரிக்கின்ற கொடை வள்ளல்களும், விளங்குகின்ற வேத வனமே.
822. வாசமலர் மேவியுறை வானுநெடு
மாலும்அறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதஅம ணாதரொடு
தேரர்குறு காதஅரனூர்
காசுமணி வார்கனக நீடுகட
லோடு திரை வார்து வலைமேல்
வீசுவலை வாணர்அவை வாரிவிலை
பேசும்எழில் வேதவனமே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் அறியாத பாங்கு உடைய ஈசனின் நெறியைச் சமணரும் சாக்கியரும் அறியாதவராய் நிற்க, அப் பரமன் வீற்றிருக்கும் இடமாவது, மீனவர்கள் கடலில் வலை வீசி மணியும் முத்தும் பொன்னும் விலை பேசும் எழில் மிகும் வேதவனமே.
823. மந்தமுர வங்கடல் வளங்கெழுவு
காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன
மேவுசிவன் இன்னருளினால்
சந்தம்இவை தண்டமிழின் இன்னிசை
யெனப்பரவு பாடல் உலகில்
பந்தன் உரை கொண்டுமொழி வார்கள்பயில்
வார்கள் உயர் வானுலகமே.
தெளிவுரை : கடல் வளம் பெருகும் காழிப்பதியில் சிறப்புடன் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் திகழும் ஞானசம்பந்தன், வேதவனத்தில் மேவும் வெண்ணீற்று மேனியானை சிவபெருமானை இனிய அருளால், சந்தம் விளங்கும் தமிழின் இசையாய்ப்பாடிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்கள், உயர்ந்த வானுலகத்தைப் பெறுவார்கள். இது மறுமையில் தோன்று சிறப்பினை உணர்த்துவதாயிற்று.
திருச்சிற்றம்பலம்
335. திருமாணிகுழி (அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
824. பொன்னியல் பொருப்பரையன் மங்கையொடு
பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
வித்தகர் மகிழ்ந்துறைஇடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளஇள
வள்ளைபடர் அள்ளல் வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
சேர்உதவி மாணி குழியே.
தெளிவுரை : அழகு பொருந்திய இமவான் மகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகவும் கங்கையைச் சடை முடியின் மீதும் வைத்து விளங்குபவர், சிவபெருமான். அவர், வன்னிப்பத்திரம் ஊமத்தம் மலர் ஆகியனவும் முடியில் தரித்த வீரம் பொருந்திய வித்தகர். அப்பரமன் மகிழ்ந்து உறையும் இடமாவது, வாளை என்னும் இனத்தைச் சார்ந்த மீன் குஞ்சுகள் துள்ளிக் குதிக்க எருமைகள் வயல்களில் சேற்றில் படிந்து மனைக்குச் சேரும் நீர் வளமும் நிலவளமும் உடைய மாணி குழியே.
825. சோதிமிகு நீறதுமெய் பூசியொரு
தோலுடை புனைந்து தெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி
பேசும்அர னார்மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ
வண்டுமுரல் தண் பழனமிக்கு
ஓதமலி வேலைபுடை சூழுலகில்
நீடுஉதவு மாணிகுழியே.
தெளிவுரை : ஈசன், சோதி வடிவாகிய திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; தோலை உடையாகக் கொண்டு அழகுடன் மிளிர்பவர்; தெருக்கள் தோறும் சென்று மாதர்தம் இல்லம் புகுந்து இசைத்துப் பாடி, வசிய வார்த்தைகளைப் பேசுபவர். அத்தகைய சிவபெருமான் மகிழ்ந்து விளங்குகின்ற இடமாவது, மகரந்தங்களையுடைய தாமரையின் மணங் கமழ வண்டு இசைபாட வயல்கள் மிகுந்தும், கடல் அலைகளின் ஓதம் சூழ்ந்தும் விளங்கும் மாணிகுழியே.
826. அம்பனைய கண்ணுமை மடந்தையவன்
அஞ்சிவெரு வச்சினம் உடைக்
கம்பமத யானையுரி செய்தஅர
னார்கருதி மேயஇடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி
மாடமது நீடி அழகார்
உம்பர்அவர் கோனகரம் என்னமிக
மன்னுஉதவி மாணிகுழியே.
தெளிவுரை : அம்பு போன்ற கூரிய விழியுடைய உமாதேவியை அஞ்சச் செய்யுமாறு வந்த யானையின் தோலை உரித்த சிவபெருமான் கருதி வீற்றிருக்கும் இடமாவது, நறுமணம் கமழும் மலர்ச் சோலை சூழவும், மணிமாடங்கள் உடைய அழகிய தேவ லோகத்து நகரமாகிய அமராவதியை போன்றும், மன்னும் உதவி மாணி குழியே.
827. நித்தநிய மத்தொழில னாகிநெடு
மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய
நின்றசிவ லோகன் இடமாம்
கொத்தலர் மலர்ப்பொழில் நீடுகுல
மஞ்ஞைநட மாடலது கண்டு
ஒத்தவரி வண்டுகள் உலாவிஇசை
பாடுஉதவி  மாணிகுழிய.
தெளிவுரை : நித்தமும் அநுட்டான முறைப்படி வழிபாடு செய்யும் பொருட்டுத் திருமால், குறுகிய வடிவத்தையுடைய வாமன வடிவம் தாங்கி, ஒரு மித்த நிலையில் பூசிக்க ஈசன் மேவும் இடமாவது, கொத்தாகப் பூக்கும் மலர்ப் பொழிலில் மயில் நடனமாட  அதனைக் கண்ட வரி வண்டுகள் உலவி இசைபாடுகின்ற எழில் மேவும் உதவி மாணி குழியே.
828. மாசின்மதி சூடுசடை மாமுடியார்
வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க
ளுக்கருள்செய் நம்பன்இடமாம்
வாசமலி மென்குழல் மடந்தையர்கள்
மாளிகையின் மன்னியழகார்.
ஊசன்மிசை யேறினி தாகஇசை
பாடுஉதவி மாணிகுழியே.
தெளிவுரை : மாசு இல்லாத சந்திரனைச் சூடிய பெருமை பொருந்திய நீண்ட சடை முடி உடைய சிவபெருமான், வன்மையுடைய அசுரர்களின் மூன்று நகரங்களையும் நாசம் செய்து, நற்குண நற்செய்கைகள் உடைய தேவர்களுக்கு அருள் செய்தவர். அப் பரமன், விளங்குகின்ற இடமாவது, நறுமணம் கமழும் மெல்லிய கூந்தலையுடைய மங்கையர்கள், தமது மாளிகையில் உள்ள ஊஞ்சலின் மீது ஏறி அமர்ந்து, இனிமையான இசை பாடும் உதவி மாணி குழியே.
829. மந்த மலர் கொண்டுவழி  பாடுசெயு
மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை
செய்தமணி  கண்டன்இடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட
மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண
மார்உதவி மாணி குழியே.
தெளிவுரை : மலர் தூவி வழிபாடு செய்த மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த காலனுடைய உயிரை மாய்க்கத் திருப்பாதத்தால் உதைத்த, நீலகண்டனாகிய சிவபிரான் வீற்றிருக்கும் இடமாவது, சந்தனம் அகில் ஆகிய மரங்களும் மலர்களும் கொண்டு உந்தித் தள்ளி வரும் கெடில நதியின் நீர் பாயும் வயல்களின் சிறப்புடைய உதவி மாணிகுழியே.
830. எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி
செய்யஇறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சுதனை யுண்டுலகம்
உய்யஅருள் உத்தமன்இடம்
பண்பயிலும் வண்டுபல கொண்டிமது
உண்டு நிறை பைம்பொழிலின்வாய்
ஒண்பலவின் இன்கனி சொர்ந்துமண
நாறுஉதவி மாணிகுழியே.
தெளிவுரை :தேவர்கள் வணங்கி நின்று துதி செய்ய, கருணை வயத்தராய் உண்பதற்கு உரியது அல்லாத நஞ்சினை உண்டு, உலகம் யாவும் உய்யுமாறு அருள் செய்த உத்தமன் வீற்றிருக்கும் இடமாவது, பண் இசைத்து உலவும் வண்டு, மலரில் உள்ள மகரந்தங்களைக் குடைந்து தேனை உண்டும், பைம் பொழில்கண் உள்ள பலாவின் இனிய கனியிலிருந்து தேன் மணம் திகழவும் விளங்கும் உதவி மாணி குழியே.
831. எண்ணமது இன்றிஎழிலார் கைலை
மாமலை எடுத்ததிறலார்
திண்ணிய அரக்கனை நெரித்தருள்
புரிந்தசிவ லோகன்இடமாம்
பண்ணமரு மென்மொழியி னார்பணை
முலைப்பவள வாயழக தார்
ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுன
லாடுஉதவி மாணிகுழியே.
தெளிவுரை : முழு முதலாக விளங்குகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையின் பெருமையும், அப் பெருமானின் அளவற்ற ஆற்றலையும் ஆராயாது, மலையை எடுத்தான் இராவணன். அவனை நெரித்துப் பின்னர் அவன் கசிந்து அழுது ஏத்தித் துதிக்க அருள் புரிந்தவர், ஈசன். சிவலோக நாதனாகிய அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பண் போன்ற இனிய மொழி உடைய மகளிர் குடைந்து புனலாடும் எழில் கொண்ட உதவி மாணி குழியே.
832. நேடுமய னோடுதிரு மாலும்உண
ராவகை நிமிர்ந்து முடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தம்இத
ழிச்சடைஎம் ஈசன்இடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி
மாதவி செருந்தி குரவின்
ஊடுலவு புன்னைவிரை தாதுமலி
சேர்உதவி மாணிகுழியே.
தெளிவுரை : தேடிச் சென்று மேவும் பிரமனும் திருமாலும் உணராத வகையில் சோதிப் பிழம்பாக வடிவுகொண்டு, சடை முடியின் மீது பிறைச் சந்திரன், ஊமத்தம், கொன்றை ஆகியவற்றைத் தரித்து விளங்குபவர், சிவபெருமான். அவரது இடமாவது, மல்லிகை குருந்தை, மாதவிக் கொடி, செருந்தி, குரவம் புன்னை என விளங்கும் மணம் மிகும் தாதுக்கள் மலிந்த உதவி மாணி குழியே.
833. மொட்டையம ணாதர்முது தேரர்மதி
யில்லிகண் முயன்றனபடும்
முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய்
யாதமுதல் வன்றன் இடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய
வாழையில் விழுந்தஅதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுஉதிர
வேறுஉதவி மாணிகுழியே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சொல்லும் முரண் கொண்ட சொற்களை ஏற்காத ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, தென்னை மரங்களிலுள்ள இளநீர்,  வாழையிலும் பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதறி மேவும் மாணி குழியே.
834. உந்திவரு தண்கெடில மோடுபுனல்
சூழுதவி மாணி குழி மேல்
அந்திமதி சூடியஎம் மானையடி
சேரும்அணி காழி நகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும்
ஞானசம் பந்தனதுசொல்
முந்திஇசை செய்து மொழிவார்களுடை
யார்கள்நெடு வானநிலனே.
தெளிவுரை : நீர்ப் பெருக்குடன் வரும் கெடில நதி சூழ்ந்த உதவி மாணி குழியின் மீது, பிறைச் சந்திரனைச் சூடிய எமது தலைவனாகிய ஈசன் திருவடியைப் பொருந்தி மேவும் காழி நகரினனாய்ச் சந்தம் பெருகும் தண்மை பொருந்திய தமிழ் உணர்ந்த ஞானசம்பந்தன் உரைத்த திருப்பதிகத்தை, முனைந்து விருப்பத்துடன் ஓதுபவர்கள் இந்நிலவுகத்திலும், வானுலகத்திலும் யாவையும் வாய்க்கப் பெறுவார்கள். இது இம்மையில் பதினாறு பேறும் பெறுவர் என்பதும் மறுமையில் உயர்ந்ததாகிய முத்திப் பேறும் பெறுவர் என்பதும் குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
336. திருவேதிகுடி (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி, தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
835. நீறுவரி யாடரவொடு ஆமைமனவு
என்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல்
ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை
நாரஇணை வாளை மடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவளம்
ஆரும்வயல் வேதிகுடியே.
தெளிவுரை : ஈசன் திருவெண்ணீறு, வரிகளை உடைய அரவம், ஆமை, சங்கு மணி, எலும்பு ஆகியவற்றைத் தரித்து விளங்குபவர்; இடப வாகனத்தை உடையவர்; யாவராலும் போற்றப்படுபவர்; ஆதி முதலாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பாக்கு மரங்களும் வாழை மரங்களும் திகழவும், வாளையானது மடுவில் குதித்து விளையாடவும், வளம் பொருந்திய வயல்களும் கொண்ட வேதிகுடியே.
836. சொற்பிரிவி லாதமறை பாடிநடம்
ஆடுவர்தொல் ஆனையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவர்எந்
நாளும் வளர் வானவர் தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன்
அயின்றவர் இயன்ற தொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நகர்
என்பர்திரு வேதிகுடியே.
தெளிவுரை : இசையும் சொல்லின் மெய்ப் பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப் பாடி, நடம் புரியும் சிவபெருமான், யானையின் தோலை உரித்து அதனைத் தோளில் தரித்துக் கொண்டவர்; தேவர்கள் தொழுது போற்ற நஞ்சினை பருகிக் கண்டத்தில் தேக்கிக் காத்தருளியவர்; மலையரசன் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு இருப்பவர். அப் பரமனின் இடமாவது, திருவேதிகுடியே.
837. போழுமதி பூணரவு கொன்றைமலர்
துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழும்அரு ளாளர்இரு
ளார்மிடறர் மாதர்இமை யோர்
சூழும் இர வாளர்திரு மார்பில்விரி
நூலர்வரி தோலர் உடைமேல்
வேழஉரி போர்வையினர் மேவுபதி
என்பர்திரு வேதிகுடியே.
தெளிவுரை : ஈசன், பிறை மதியும், நாகமும் பூண்டு இருப்பவர்; கொன்றை மலர் தரித்துள்ள சடை முடியின் மீது கங்கையைக் கொண்டு விளங்கும் அருளாளர்; கரிய மிடற்றினை உடையவர்; தேவர் உலகில் ஆடவரும் மகளிரும் சூழ்ந்து, இரந்து ஏத்தும் அருளாளர்; திருமார்பில் முப்புரி நூல் அணிந்து விளங்குபவர்; அழகிய புலித் தோலை உடையாகக் கொண்டு உடுத்தி, அதன் மீது யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர். அப் பெருமான் மேவும் பதியாவது திருவேதிகுடியே.
838. காடர்கரி காலர்கனல் கையர் அனல்
மெய்யர்உடல் செய்யர் செவியில்
தேடர்தெரி கீளர்சரி கோவணவர்
ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடை யார்கள் அடி யார்கள் மல
ரோடுபுனல் கொண்டு பணிவார்
வேடம்ஒளி யானபொடி பூசியிசை
மேவுதிரு வேதி குடியே.
தெளிவுரை : சிவபெருமான், மயானத்தை இடமாகக் கொண்டவர்; யானையின் தோலினை உரித்துக் கொன்று காலனாகத் திகழ்ந்தவர்; நெருப்பினைக் கையில் ஏந்தியவர்; நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியின் வண்ணம் உடையவர்; தோடு என்னும் அணியைச் செவியில் அணிந்தவர்; இடபத்தை வாகனமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானுடைய தொன்மையான நகராவது, பாடிப் போற்றும் அடியவர்கள், புனித நீரால் அபிடேகம் செய்து மலர் தூவி ஏத்தி ஒளி மிக்க திருவெண்ணீறு அணிந்த திருகோலத்தினராய் அருள் மணம் பெருக விளங்கும் திருவேதிகுடியே.
839. சொக்கர்துணை மிக்கஎயில் உக்குஅற
முனிந்து தொழு மூவர் மகிழத்
தக்கஅருள் பக்கம்உற வைத்தஅர
னார்இனிது தங்கு நகர்தான்
கொக்கரவம் உற்ற பொழில் வெற்றிநிழல்
பற்றிவரி வண்டிசை குலாம்
மிக்கமரர் மெச்சியினிது அச்சம்இடர்
போகநல்கு வேதிகுடியே.
தெளிவுரை : சிவபெருமான், பேரழகு வாய்ந்தவராய் யாவரும் மயங்குமாறு திகழ்பவர்; முப்புரங்களைச் சாம்பலாகுமாறு செய்த நாளில் ஆங்கு இருந்து அசுரர்களின் மூன்று போர் தொழுது போற்ற, அவர்களைக் காத்து அருள் புரிந்தவர். அப் பெருமான், இனிது வீற்றிருக்கின்ற நகரானது, மாமரங்கள் சலசலப்புடன் ஓசை எழுப்பவும், வண்டு இசை எழுப்பவும், தேவர்கள் தமது அச்சமும் இடரும் நீங்குமாறு வந்து ஏத்தும் திருவேதி குடியே.
840. செய்யதிரு மேனிமிசை வெண்பொடி
யணிந்து கரு மானுரிவை போர்த்து
ஐயம்இடும் என்றுமட மங்கையொடும்
அகந்திரியும் அண்ணல் இடமாம்
வையம்விலை மாறிடினும் ஏறுபுகழ்
மிக்கிழிவி லாதவகையார்
வெய்ய மொழி தண்புலவ ருக்குரைசெய்
யாதஅவர் வேதிகுடியே.
தெளிவுரை : ஈசன், சிவந்த திருமேனியின் மீது திருவெண்ணீறு அணிந்து விளங்குபவர்; கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர். தாருக வனத்து மாதர்கள்பால் சென்று பிச்சை ஏற்றுத் திரியும் அண்ணல். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, உலகில், இயல்பாகிய வளமை குன்றி, மாறுபாடு கொண்டாலும், தமது வள்ளல் தன்மையிலும் புகழிலும் குறைவுபடாது புலவர்களுக்கு நன்மொழி உரைத்து ஆதரிக்கும் பெற்றியுடையவர் விளங்கும் வேதி குடியே.
841. உன்னியிரு போதும்அடி பேணும்அடி
யார்தம் இடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழல்
இருந்ததுணை வன்றன்இடமாம்
கன்னியரொடு ஆடவர்கள் மாமணம்
விரும்பி அரு மங்கலம்மிக
மின்னியலு நுண்ணிடை நன்மங்கையர்
இயற்றுபதி வேதிகுடியே.
தெளிவுரை : காலை மாலை ஆகிய இரு வேளையிலும் தொழுது ஏத்தும் அடியவர்களுடைய இடர்களைத் தீர்த்து அருள் புரியும் சிவபெருமான். சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லால மரத்தின் கீழ் இருந்து தட்சிணாமூர்த்தி திருக்கோலம் தாங்கி அறப் பொருள்களை உணர்த்தியவர். அப்பெருமான் விளங்குகின்ற இடமாவது, கன்னிப் பெண்களும் ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் கொள்ளும் அரியதொரு மங்கலத் திருநாளில் விளக்கிடுதல், நலங்கிடுதல், சிகை அலங்கரித்தல், பூமுடித்தல், அம்மி மிதித்தல் முதலான சுபச் சடங்குகளை நடத்தி வைக்கும் நுண்ணிய இடையுடைய நன்மங்கையர்கள் திகழ மேவும் வேதி குடி என்னும் பதியே.
842. உரக்கரநெ ருப்புஎழ நெருக்கி வரை
பற்றியவொ ருத்தன்முடி தோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கினிது
நல்கியரும் அங்கணன் இடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும்
ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்ணிசை
உலாவுதிரு வேதிகுடியே.
தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த்து எடுக்கப் பற்றிய இராவணனுடைய வலிமையான கரங்களும், முடிகளும், தோளும், அனல் கொண்டு வதைபடுமாறு அடர்த்த சிவபெருமான், அவ்வரக்கனுடைய இசைக்கு இரங்கி, இனிது அருள் புரிந்தவர். அப் பெருமானுடைய இடமாவது, குவிந்த இதழ்களையுடைய மங்கையும் ஆடவரும் நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் பொருத்தத் தடவ, அதன் எழில் மணமானது விண்ணில் பரவும் செம்மையுறும் திருவேதி குடியே.
843. பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி
அங்கையானு நேட எரியாய்த்
தேவும்இவர் அல்லர்இனி யாவர்என
நின்றுதிகழ் கின்றவர இடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியது
அறாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர்
வீதிநிகழ் வேதி குடியே.
தெளிவுரை : பிரமனும், திருமாலும் தேவி நிற்கத் தீப்பிழம்பாய் மேவி, இப்பெருமானை அன்றி வேறும் கடவுள் இல்லை என ஏத்தப் பெறும் சிவபெருமான், திகழ்கின்ற இடமாவது, புலவர்கள், நன்கு விளங்கும் இயற்றமிழை உரைக்கவும், கேள்விச் செல்வத்தினை நீங்காத கொடை வள்ளல்கள் செவி மடுக்கவும், செல்வம் மிகுந்த நெடிய மாடமாளிகைகளும், வீதிகளும் திகழ்கின்ற வேதி குடியே.
844. வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்
மனத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றும் உணராதஅடி
யார்கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்று அறு வகைப்பொருள்
தெரிந்துஎழு இசைக்கிளவி யால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ்
கின்றதிரு வேதிகுடியே.
தெளிவுரை : சமணர்களும் தேரர்களும் மொழியும் சொற்கள் பற்றுக் கோடாக அமையாதெனக் கொண்டு, அதனை ஏற்றுக் கொள்ளாத அடியவர்களின் நெஞ்சில் உறைபவர், சிவபெருமான். அப்பெருமான், ஐம்புலன்களை வென்று அடக்கி, அறுவகைச் சமய நெறிகளாகிய பாசுபதம், மகாவிரதம், காபாலிகம், வாமனம், பைரவம், சைவம், என்பனவற்றை நன்கு தெரிந்து, ஏழு வகையான சுரங்களைக் கொண்டு இசை எழுப்பி வெம்மை தரும் சினத்தை ஒழித்த அருளாளர்கள், மேவி விளங்குகின்ற திருவேதிகுடியே.
845. கந்தமலி தண்பொழில்நன் மாடம்இடை
காழிவளர் ஞானம் உணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு
வேதிகுடி யாதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள்
என்னநிகழ் வெய்திஇமை யோர்
அந்த உலகு எய்திஅர சாளும்அது
வேசரதம் ஆணைநமதே.
தெளிவுரை : குளிர்ச்சி மிக்க பொழில் சூழ்ந்த சீகாழி என்னும் பதியில் விளங்குகின்ற ஞானம் திகழப் பெற்ற ஞானசம்பந்தனின் செம்மை மிகும் தமிழ் கொண்டு, வேதி குடியில் வீற்றிருக்கும் ஆதியாகிய ஈசனின் கழலைச் சிந்தித்து ஏத்துபவர்கள், நல்லவர்களாய்த் திகழ்வார்கள்; மறுமையில் தேவர் உலகத்தை அடைந்து அரசபோகத்தைக் கைவரப் பெறுவார்கள் இது நமது ஆணை.
திருச்சிற்றம்பலம்
337. திருக்கோகரணம் (அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம், உத்தர் கன்னடா, கர்நாடகா மாநிலம்)
திருச்சிற்றம்பலம்
846. என்றும்அரி யான்அயல வர்க்குஇயல்
இசைப் பொருள்கள் ஆகிஎனதுள்
நன்றும்ஒளி யான்ஒளிசி றந்தபொன்
முடிக்கடவுள் நண்ணும் இடமாம்
ஒன்றியம னத்தடியர் கூடிஇமை
யோர்பரவு நீடரவமார்
குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை
மிடைந்துவளர் கோகரணமே.
தெளிவுரை : சிவபெருமான், நினையாத பேர்களுக்கு எக்காலத்திலும் அரியவர்; இயற்றமிழும், இசைத் தமிழும் ஆகி எனத உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவர்; பொன் போன்று ஒளிரும் சடை முடியுடைய கடவுள். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, ஒருமித்த மனத்தை உடைய அடியவர்களுடன் தேவர்கள் கூடி இருந்து பரவுகின்ற குன்றுகளும் சோலைகளும் திகழ மேவும் கோகரணமே.
847. பேதைமட மங்கையொரு பங்கிட
மிகுத்து இடபம் ஏறியமரர்
வாதைபட வண்கடல்எ ழுந்தவிடம்
உண்டசிவன் வாழும் இடமாம்
மாதரொடும் ஆடவர்கள் வந்தடி
இறைஞ்சிநிறை மாமலர்கள்தூய்க்
கோதைவரி வண்டிசை கொள் கீதமுரல்
கின்றவமர் கோகரணமே.
தெளிவுரை : ஈசன், உமாதேவியாரை ஒர பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாகி, இடப வாகனத்தில் விளங்கித் தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு காத்தருளியவர். அப் பரமன் வாழ்கின்ற இடமாவது, ஆடவரும் மங்கையரும் வந்து திருவடியை ஏத்தி, நிறைந்த மாமலர்களைத் தூவிப் போற்ற, வண்டுகள் கீதம் இசைக்கும் சோலை வளர் கோகரணமே.
848. முறைத்திறம்உ றப்பொருள்தெ ரிந்துமுனி
வர்க்கருளி ஆலநிழல்வாய்
மறைத்திறம்அ றத்தொகுதி கண்டுசம
யங்களைவ குத்தவன்இடம்
துறைத்துறை மிகுத்தருளி தூமலர்
சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு
சாரன்மலி கோகரணமே.
தெளிவுரை : அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் மும்மலத் தொகுதி முதலாக உள்ள முறையின் திறங்களையும் பொருத்தமாகத் தெளிவிக்குமாறு, சனகாதி முனிவர்களுக்கு வகுத்துக் கொடுத்து உபதேசித்த சிவபெருமான் இருக்கும் இடமாவது, துறைகள்தோறும் உள்ளஅருவி நீரானது மலர்களைச் சுமந்து, மலையின் மீது உந்தித் தள்ளி யானையின் பிளிறலுக்குப் பொருந்த ஒலி எழுப்பும் சாரலையுடைய கோகரணமே.
849. இலைத்தலை மிகுந்தபடை எண்கரம்
விளங்கஎரி வீசிமுடி மேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில்
வைத்தஅழ கன்றன் இடமாம்
மலைத் தலை வகுத்தமுழை தோறும்உழை
வாளரிகள் கேழல் களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை
யாடிநிகழ் கோகரணமே.
தெளிவுரை : ஈசன், இலை போன்ற அலகுடைய சூலப் படை உடையவர்; எட்டுக் கரங்களை உடையவர்; நெருப்பினைக் கையில் ஏந்தி வீசி நடம் புரிபவர்; சடை முடியின் மீது கங்கையைத் தரித்து விளங்குபவர். அத்தகைய அழகனுடைய இடமாவது, மலைப்பக்கம் உள்ள குகைகளில் மான்களும் சிங்கங்களும் பன்றிகளும் யானைகளும் பெண் யானைகளும் கூடி விளையாடி மகிழும் கோகரணமே.
850. தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய
வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெம்
ஆதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடத்துமற வாளரொடு
வேடர்கள் பயின்று குழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி
தீரநல்கு கோகரணமே.
தெளிவுரை : ஈசன், தலை மாலை  அணிந்தவர்; கொன்றை, எருக்கும், வன்னி ஆகியவற்றைச் சடை முடியில் பொருந்தத் தரித்தவர்; தபோதனர்; ஆதிக் கடவுள். அவர் விளங்குகின்ற பதியாவது. படைத் தொழிலை உடைய வீரர்கள் தமது பகைமை ஒழிந்து நன்னீரில் படிய விளங்கும் கோகரணமே.
851. நீறுதிரு மேனிமிசை யாடிநிறை
வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடஇசை கொண்டிடு
பலிக்குவரும் ஈசனிடமாம்
ஆறுசம யங்களும் விரும்பியடி
பேணியர னாகமமிக
கூறுமனம் வேறிரதி வந்தடியர்
கம்பம்வரு கோகரணமே.
தெளிவுரை : ஈசன், திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்கித் திகழ்பவர்; திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்யுமாறு தூக்கி ஆடுபவர்; இசை பாடிப் பலி ஏற்று வருபவர். அப்பெருமான் திகழும் இடமாவது, ஆறு சமயங்களும் திருவடியைப் பேணி ஆகம விதிப்படியும், மனத்தில் இனிமை பூரிக்கவும், பக்தியில் திளைக்கவும் மேவும் கோகரணமே.
852. கல்லவட மொந்தைகுழல் தாளமலி
கொக்கரையர் அக்கு அரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவர்
ஆளுநகர் என்பர்அயலே
நல்லமட மாதர் அர நாமமும்
நவிற்றிய திருத்தழுழுகக்
கொல்லவிட நோயகல் தரப்புகல்கொ
டுத்தருளு கோகரணமே.
தெளிவுரை : கல்லவடம், மொந்தை, குழல், தாளம் ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்பத் திருவடியைத் தூக்கி வைத்து தாளமிட்டு, எலும்பினில் அறையில் வைத்துக் கட்டி, நச்சுப் பல்லும், படமும் கொண்டு ஆடும் நாகத்தை அணிந்து, கோவண ஆடை உடையவராய் விளங்குகின்றவர், சிவபெருமான். அவருடைய நகர் எனப்படுவது, நற்குண நற்செய்கைகளை உடைய பெண்கள் அரனுடைய திருநாமத்தை நெஞ்சில் இருத்திப் புனித தீர்த்தத்தில் ஆடி, வினை தீர்க்கும் சிறப்புப் பொருந்திய கோகரணமே.
853. வரைத்தல நெருக்கிய முருட்டிருள்
நிறத்தவன வாய்கள் அலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு
மான்இனிது மேவும் இடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி
வாகிவினை தீரஅதன்மேல்
குரைத்தலை கழற்பணிய ஒமம்வில
கும்புகைசெய் கோகரணமே
தெளிவுரை : முரட்டுத்தனமும், கரிய வண்ணமும் உடைய இராவணன் தலை, கயிலை மலையினால் நெரியுமாறு திருப்பாத விரலைச் சிறிது அழுத்திய சிவபெருமான் இனிது மேவுகின்ற இடமாவது, முனிவர்களும் வேத விற்பன்னர்களும் பணிந்து அரநாமத்தினை ஓதி வேள்வி  புரிய, அப் புகையானது பரவி விளங்கும் கோகரணமே.
854. வில்லிமையி னால்விறல் அரக்கனுயிர்
செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுளது என்றுஇகலி நேடஎரி
யாகி உயர்கின்ற பரனூர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமும்
இறைஞ்சி நிறை வாசம் உருவக்
கொல்லையில் இளங்குறவர் தம்மயிர்
புலர்த்திவளர் கோகரணமே.
தெளிவுரை : இராவணனை வில்லாற்றலால் வென்ற திருமாலும், வேதத்தை ஓதும் பிரமனும் தமக்குள் இகல் கொண்டு விளங்கினர். அதனை நீக்கிக் கொள்ளும் தன்மையினால் அரனை நோக்கிச் செல்ல, சோதி வடிவாகி உயர்ந்து விளங்கிய அப் பெருமானுடைய ஊரானது, தேவர்கள் இறைஞ்சி ஏத்தச் சோலைகளில் மேவும் இளம் குற மாதர்கள், நறுமணம் கமழும் தமது கூந்தலை உலர்த்தி வருடும் எழில் மிகுந்த கோகரணமே.
855. நேசமின் மனச்சமணர் தேரர்கள்
நிரந்தமொழி பொய்கள் அகல்வித்து
ஆசைகொள் மனத்தை அடியாரவர்
தமக்கருளும் அங்கணன் இடம்
பாசமது அறுத்துஅவனி யிற்பெயர்கள்
பத்துடைய மன்னவனைக்
கூசவகை கண்டுபின் அவற்குஅருள்கள்
நல்கவல கோகரணமே.
தெளிவுரை : நேசமற்ற சமணரும் தேரரும் கூறும் சொற்களை அகற்றி, அடியவர்கள் கூறும் புகழ் மொழிகளை ஏற்று அருள் புரிகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இவ்வரிய பூவுலகில் பத்துப் பெயர்களையுடைய அர்ச்சுனன், நாணும்படி போர் செய்து, பின்னர் அருள் புரியும் பெற்றியுடைய கோகரணம் ஆகும்.
856. கேடலர வீனும்விரி சாரல்முன்
நெருங்கிவளம் கோகரணமே
ஈடமினி தாகஉறை வானடிகள்
பேணியணி காழி நகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய்
ஞானசம் பந்தன் மொழிகள்
பாடவல பத்தரவர் எத்திசையும்
ஆள்பவர்பர லோகம் எளிதே
தெளிவுரை : கோடல் மலர்கள் நெருங்கி மேவும் சாரலையுடைய கோகரணத்தினை இடமாகக் கொண்டு இனிது உறையும் அடிகளாகிய ஈசனைப் பேணி, அணிமிகும் காழி நகரில் மேவும் ஞானசம்பந்தன் நாடிய தமிழ்ச் சொல்லாகிய இசைமிகும் இத்திருப்பதிகத்தைப் பாடவல்ல பக்தர்கள், இவ்வுலகத்தில் எல்லா இடங்களிலும் மேன்மையாக விளங்குவார்கள்; மறுமையில் பரனுடைய உலகமானது எளிதில் கைகூடும். இது இம்மையில் விளங்கும் சிறப்பினையும் மறுமையில் உண்டாகும் மேன்மையையும் ஓதுதல் ஆயிற்று.
திருச்சிற்றம்பலம்
338. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
857. சீர்மருவு தேசினொடு தேசமலி
செல்வமறை யோர்கள் பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி
னான் அமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயம் உயர்ந்தவயல்
சூழ்பழன நீடஅருகே
கார்மருவு வெண்கனக மாளிகை
கவின்பெருகு வீழிநகரே.
தெளிவுரை : நற்புகழும், அழகின் ஒளியும், தேசமெல்லாம் புகழும் அருள் செல்வமும் உடைய மறையவர்கள் பணிந்து ஏத்தக் கொன்றை மாலை அணிந்து, நீண்ட சடையுடைய சிவபெருமான் உறையும் வெற்றி மிகும் பதியாவது, தாமரை மலர்கள் சூழ்ந்த வயல்களும், மேகம் சூழ்ந்த வெண்மையான கனகம் திகழும் மாளிகைகளும், அழகு பெருக விளங்குகின்ற வீழிநகரே.
858. பட்ட முழவிட்ட பணி லத்தினொடு
பன்மறைகள் ஓதுபணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்யஅருள்
செய்தழல் கொள் மேனியவன்ஊர்
மட்டுலவு செங்கமல வேலிவயல்
செந்நெல்வளம் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி
வேதியர்கள் வீழிநகரே.
தெளிவுரை : முழவும் சங்கும் ஒலிக்க, விரிந்து பெருகிய வேதங்களை ஓதும் அரிய பணிகளை மேற்கொள்ளும் அந்தணர்கள், வெற்றித் துதிகள் செய்து வணங்க, அருள் புரிபவர், தழல் போன்று செம்மேனியராக விளங்கும் சிவபெருமான். அப் பெருமானுடைய ஊரானது, நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்கச் செந்நெல் பெருகும் வயல் வளம் மிக்கதாய், வளம் பெருகும் பொழில் சூழத் தென்றலின் மணம் கமழும் பதியாகிய வேதியர்கள் நிலவும் வீழிநகரே.
859. மண்ணிழிசு ரர்க்குவள மிக்கபதி
மற்றமுள முன்னுயிர்களுக்கு
எண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி
லார்பொழில் இலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட
மஞ்ஞைநடம் ஆடஅழகார்
விண்ணிழிவி மானம்உடை விண்ணவர்பி
ரான்மருவு வீழிநகரே.
தெளிவுரை :  தேவலோகத்திலிருந்து பூவுலகத்திற்கு வந்த தேவர்களுக்கு வளம் மிகுந்த பதியாகவும் மன்னுயிர்களுக்கு எண்ணற்ற இன்பங்களைத் தந்து விளங்குவதாகவும், எழில் மிகுந்த பொழில்களில் மேவும் வண்டுகள், பண்ணின் இசை மாறுபடாதவாறு இசைக்க, மயில்கள் ஆட மேன்மையுடன் இலங்குவதாகவும் விளங்குவது அழகு மிக்க விண்ணிலிருந்து  கொண்டு வரப் பெற்று வழிபடப் பெறும் விமானம் மருவும், வீழிநகரே.
860. செந்தழிழர் தெய்வமறை நாவர்செழு
நற்கலை தெரிந்த அவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள்
செய்யஅமர் கின்றஅரனூர்
கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர்
தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி
ரும்புபதி வீழிநகரே.
தெளிவுரை : பக்திப் பெருக்கினால் இனியதாகிய தமிழ்த் தோத்திரங்கள் பாடும் அன்பர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும், மெய்ஞ்ஞானம் உணரப் பெற்ற இத்தகைய மாண்பினரோடு நற்குண நற்செய்கைகள் உடைய ஞானிகள், உடன் சேர்ந்து அர்ச்சனை செய்து போற்றி ஏத்த வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய ஊரானது, கொத்தாகப் பூக்கும் பொழில்களும், வயல்களும், குளிர்ந்த நீர் நிலைகளும் வளம் பெருகி விளங்க, அருளாற்றலை மேலும் சிறக்க வைக்கும் வேள்வித் திறத்தை ஆற்றும் வேத விற்பன்னர்களும் விரும்புகின்ற பதியாகிய வீழிநகரே.
861. பூதபதி யாகியபு ராணமுனி
புண்ணியநன் மாதை மருவிப்
பேதமதுஇ லாதவகை பாகமிக
வைத்தபெரு மானதுஇடமாம்
மாதவர்கள் அன்னமறை யாளர்கள்
வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதுஇலா தவகை இன்பம்அமர்
கின்றஎழில் வீழிநகரே.
தெளிவுரை : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்களுக்கும் பதியாகிய தொன்மையான தவத்தின் சொரூபமாகிய சிவபெருமான், புண்ணிய தேவியாகிய உமாதேவியை வேறுபாடு இல்லாதவாறு, திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமான் திகழும் இடமாவது, மாதவர்களும் அந்தணர்களும் வளர்த்து மேவும் வேள்வியினால் பிணி, மழையின்மை, வறுமை, அறியாமை முதலான குற்றங்கள் நீங்கப் பெற்று இன்பம் பெருக்குகின்ற எழில் மிக்க வீழிநகர் ஆகும்.
862. மண்ணின்மறை யோர்மருவு வைதிகழும்
மாதவமும் மற்றும் உலகத்து
எண்ணில்பொரு ளாயவை படைத்தஇமை
யோர்கள்பெரு மானது இடமாம்
நண்ணிவரு நாவலர்கள் நாள்தொறும்
வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர்
நீள்புரிசை வீழிநகரே.
தெளிவுரை : இப்பூவுலகத்தில், அந்தணர்கள் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களும், மகாமுனிவர்கள் ஒழுகி வரும் தவநெறிகளும், உலகத்தில் ஆங்காங்கு ஒழுகப் பெறும் அறங்களும் வகுத்த இறைவன், இமையோர்களின் தலைவராகிய சிவபெருமான் ஆவார். அப் பெருமானுடைய இடமாவது, புலவர் பெருமக்கள் நாள்தோறும் ஈசனின் புகழைப் போற்றி, அருள் பொலிவினை ஏத்தி மிளிர்கின்றதும், உயர்ந்த மாட மாளிகைகளும் மதில்களும் கொண்டு திகழும் வீழிநகரே.
863. சந்திரநன் மாமறையி னோடுவளர்
வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தரவி சும்பணவி அற்புதம்
எனப்படரும் ஆழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி
நீடுகதிர் விட்ட ஒளிபோய்
வெந்தழல் விளக்குஎன விரும்பினர்
திருந்துபதி வீழிநகரே.
தெளிவுரை : வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது ஆகாயத்தில் சென்று அடைந்து, அற்புதம் போன்று இருளைப் பரப்ப, கடலைக் கடைந்த மந்தர மலையைப் போன்று, உயர்ந்த மணி மாடங்களில் உண்டாகும் ஒளியானது, புகையால் விளைந்த இருளைப் போக்கி, ஒளிக் கதிரை வீசி மிளிரும் தகைமையில் விளங்குவதாகும். அத்தகைய தழலானது விளக்குப் போன்று உள்ள பதி வீழிநகரே.
864. ஆனவலியின் தசமுகன் தலைஅ
ரங்கஅணி ஆழி விரலால்
ஊன்அமர் உயர்ந்த குரு திப்புனலில்
வீழ்தரஉ ணர்ந்த பரன்ஊர்
தேன்அமர் திருந்துபொழில் செங்கனக
மாளிகை திகழ்ந்த மதிலோடு
ஆனதிரு உற்றுவளர் அந்தணர்
நிறைந்த அணி வீழிநகரே.
தெளிவுரை : தன்னுடைய வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய தலை அழுந்துமாறு, அணிமிகும் திருப்பாத விரலைப் பதித்து, அவ் அரக்கனின் உடலில் இருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் திகழும் ஊரானது, தேன் மணம் விளங்கும் பொழிலும் செம் பொன் மாளிகைகளும் நெடுமதில்களும் கொண்டு செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய வீழிநகர் ஆகும்.
865. ஏனவுரு வாகிமண்இ டந்தஇமை
யோனும் எழில் அன்னஉருவம்
ஆனவனும் ஆதியினோடு அந்தம் அறி
யாதஅழல் மேனியவன் ஊர்
வான்அணவ மாமதில் மருங்கலர்
நெருங்கிய வளங்கொள் பொழில்வாய்
வேனல்அமர்வு எய்திட விளங்குஒளியின்
மிக்க புகழ் வீழிநகரே.
தெளிவுரை : ஏனமாய் வடிவம் கொண்ட திருமாலும் அன்னப் பறவையாய் வடிவு கொண்ட பிரமனும் தோற்றமும் முடிவும் அறிய முடியாதவாறு, அழல் மேனியராகிய சிவபெருமான் திகழும் ஊரானது, உயர்ந்த பொழிலும், நெடிய மதில்களும் கொண்டு வெயிலின் வெம்மைக்கேற்ற வாசம் திகழ விளங்கும் புகழ்மிக்க வீழிநகரே.
866. குண்டமண ராகியொரு கோலமிகு
பீலியொடு குண்டிகை பிடித்து
எண்திசையும் இல்லதொரு தெய்வம்உளது
என்பர்அது என்னபொருளாம்
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை
விரும்பு பரன் மேவுபதிசீர்
வெண்தரள வாணகைநன் மாதர்கள்
விளங்கும் எழில் வீழிநகரே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் மிகுந்த ஆற்றல் உடைய தெய்வம் ஒன்று உளது என்பதால் என்ன பயன் ! வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பி ஏத்தும் சிவபெருமான் திகழும் ஊர், முத்தன்ன வெண்ணகையுடைய கற்பின் மாதர்கள் விளங்குகின்ற எழில் மிக்க வீழிநகரே.
867. மத்தமலி கொன்றைவளர் வார்சடையில்
வைத்த பரன் வீழிநகர் சேர்
வித்தகணை வெங்குருவில் வேதியன்
விரும்புதமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வமலி
கின்றசிவ லோக மருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு
போகமொடு யோகமவர தே.
தெளிவுரை : ஊமத்த மலர், கொன்றை மலர் முதலானவை விளங்கும் நீண்ட சடை உடைய சிவபெருமான் வீழி நகரில் மேவி விளங்கும் வித்தகர். அப் பரமனை, வெங்குருவில் விளங்கும் ஞான சம்பந்தன் விரும்பி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், அழகிய விமானம் திகழும் செல்வச் செழிப்புடைய சிவலோகத்தில் சார்ந்து, சத்துவ குணத்தினராய் விளங்கி, சிவபோதம் மிக்கவராகியும், யோக நிலை உடையவராகியும் திகழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
339. திருத்தோணிபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
868. சங்கு அமரு முன்கைமட மாதையொரு
பாலுடன் விரும்பி
அங்குடன் மேலுறஅ ணிந்தபிணி
தீரஅருள் செய்யும்
எங்கள்பெரு மானிடம்எ னத்தகுமு
னைக்கடலின் முத்தம்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு
தோணிபுரம் ஆமே.
தெளிவுரை : சங்கு வளையல் அணிந்த உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பிப் பொருத்தி, அர்த்தநாரியாய் விளங்கி, எலும்பினைத் திருமேனியில் அணிந்து, மன்னுயிர்களின் எல்லாப் பிணிகளும் தீருமாறு அருள் செய்யும் எங்கள் பெருமான் திகழும் இடம் எனப்படுவது, கடலிலிருந்து முத்துக்களும் இரத்தினங்களும்  சங்குகளும் அலைகள் வாயிலாகக் கரைக்கு நாடிவரும் சிறப்புடைய தோணிபுரம் ஆகும்.
869. சல்லரிய யாழ்முழவ மொந்தைகுழல்
தாளமது இயம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு
பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநடம் ஆடுசடை
அண்ணல்இடம் என்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர்
தோணிபுரும் ஆமே.
தெளிவுரை : பம்பை, யாழ், முழவு, மொந்தை, புல்லாங்குழல், தாளம் முதலான வாத்தியங்கள் ஒலிக்க, இமவான் மகளாகிய உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாக நிலை செய்து நெருப்பினைக் கரத்தில் ஏந்தி, இருளில் நடனம் ஆடுகின்ற சடை முடியுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்பது, தொண்டர்கள் துதி செய்து ஏத்த அருள் வளரும் தோணிபுரம் ஆகும்.
870. வண்டரவு கொன்றைவளர் புன்சடையின்
மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்அரையில் ஆர்ததபர
மேட்டிபழி தீரக்
கண்டரவ ஒண்கடலின் நஞ்சம்அமுது
உண்டகட வுள்ஊர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு
தோணிபுரம் ஆமே.
தெளிவுரை : வண்டுகள் ஒலித்து ஆரவாரிக்கும் கொன்றை மலர் விளங்குகின்ற சடை முடியின்மேல் சந்திரனை வைத்துப் பாம்பினை அரையில் அசைத்துக் கட்டிய சிவபெருமான், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதம் என ஆக்கி உட்கொண்ட இறைவன். அப்பெருமானின் ஊர் என்பது, தொண்டர்கள் சேர்ந்து வழிபடும் எழில் மல்கும் தோணிபுரம் ஆகும்.
871. கொல்லைவிடை யேறுடைய கோவணவன்
நாவணவு மாலை
ஒல்லையுடை யான்அடைய லார்அரணம்
ஒள்ளழல் விளைத்த
வில்லையுடைய யான்மிக விரும்புபதி
மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய்
தோணிபுரம் ஆமே.
தெளிவுரை : இடப வாகனத்தில் விளங்குகின்ற சிவபெருமான், கோவணத்தை ஆடையாகக் கொண்டு இருப்பவர்; அடியவர்கள் பாடிப் போற்றித் தொழப்படும் பாமாலைகளை உடையவர்; திருத் தொண்டர்கள் ஆராவாரத்துடன், பக்தியில் திளைத்தவராய், ஒல் என்னும் ஒலிக் குறிப்பு விளங்கும் அரநாமமும், சிவ நாமமும் எழுப்பி ஓதப் பெறும் மாண்பினர்; பகைமை கொண்டு தேவர்களுக்குத் தீங்கு இழைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு விளைவித்த மேருவை, வில்லாக உடையவர். அப்பெருமான் விருப்புடன் மேவி விளங்குகின்ற பதியாவது, தொண்டர்கள் வேண்டுகோள் செய்து பாராட்டும் சொற்களை முழுமையாக ஏற்று, அவர்களுடைய இடர்களைத் தீர்த்து அருள் வழங்கும் எழில் மிகுந்த தோணிபுரம் ஆகும்.
872. தேயுமதி யஞ்சடையி லங்கிட
விலங்கல்மலி கானில்
காயும்அடு திண்கரியின் ஈருரிவ
போர்த்தவன் நினைப்பார்
தாயென நிறைந்ததொரு தன்மையினர்
நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை
தோணிபுரம் ஆமே.
தெளிவுரை : சிவபெருமான், ஒளிக்கதிர்களை உடைய கலைகள் யாவும் தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரனைச் சடைமுடியில்  வைத்து, மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர்; மலைகளும் மரங்களும் விளங்கும் காட்டில் சினத்துடன் போர் செய்ய வந்த வலிமை உடைய யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டு விளங்குபவர்; தன்னை நினைத்துப் போற்றுகின்ற அன்பர்களுக்குத் தாய் போன்று அன்பு காட்டி, அரவணைத்து மகிழ்ச்சி அளித்துப் பாதுகாக்கும் தன்மையுடையவர். அப்பரமன், நல்லருள் புரியும் பாங்கில் விளங்குகின்ற இடமாவது, அந்தணர்கள் வேதங்களால் நியமப்படி ஓதி வழிபடுகின்ற தோணிபுரம் ஆகும்.
873. பற்றலர்தம் முப்புரம் எரித்தடி
பணிந்தவர்கள் மேலைக்
குற்றமது ஒழித்தருளுங்  கெள்கையினன்
வெள்ளின்முது கானில்
பற்றவன் இசைக்கிளவி பாரிடம்
தேத்த நடம் ஆடும்
துற்றசடை அத்தன்உறை கின்றபதி
தோணிபுரம் ஆமே
தெளிவுரை : சிவபெருமானைப் போற்றித் துதி செய்து உய்யும் நெறியினை மேவாதவராய்ப் பகைமை கொண்டு, தீய செயல்களில் முனைந்தவர்கள் அசுரர்கள். அவ் அசுரர்களுடைய மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். ஈசன். இவர், பணிந்து போற்றும் அடியவர்களுடைய வினைகளைக் களைந்து அருள் புரிபவர்; மயானத்தில் பற்றுக் கொண்ட பூதகணங்கள் இசை எழுப்பி ஏத்த, நெருக்கமாக விளங்கும் சடை முடியுடைய அத்தனாய் உறைகின்ற பதியானது, தோணிபுரம் ஆகும்.
874. பண்ணமரு நான்மறையர் நூன்முறை
பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை
பேசுமடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள்
செய்தலுடை யானூர்
துண்ணணென விரும்புசரி யைத்தொழிலர்
தோணிபுரம் ஆமே.
தெளிவுரை : ஈசன், பண்ணின் வழி ஓதப் பெறும் நான்கு மறைகளும் ஆனவர்; வேதங்களும் ஆகமங்களும் நூல் முறையில் விரித்து அருளியவர்; மோன நிலையில் சின் முத்திரையினை மார்புப் பாகத்தில் தாங்கி சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவர்; உமாதேவியாரைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; தமது பெருமையைப் பேசும் அடியவர்கள்பால் மெய்ப் பொருளாக விளங்கித் தீர்ப்பதற்கு அரியதாகிய வலிமை மிகுந்த வினைகளைத் தீர்த்து அருள் செய்பவர். அப் பெருமான் விளங்குகின்ற ஊரானது, அன்பின் வயப்பட்டு விரும்பி, மிக வேகமாகவும் துடிப்பாகவும் அணுக்கத் தொண்டுகள் மேவும் அடியவர்கள் திகழும் தோணிபுரம் ஆகும்.
875. தென்திசைஇலங்கையரையன் திசைகள்
வீரம்விளை வித்து
வென்றிசை புயுங்களை அடர்த்தருளும்
வித்தகன் இடம்சீர்
ஒன்றிசை இயற்கிளவி பாடமயில்
ஆடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல்
தோணிபுரம் ஆமே.
தெளிவுரை : தென்திசையில் விளங்கிய இலங்கையின் வேந்தனாகிய இராவணன் திக்கு விஜயம் செய்து வீரத்தை நிலை நாட்டிய புயுங்கனை அடர்த்து நெரித்துப் பின்னர் அருள் செய்த வித்தகராகிய சிவபெருமான் விளங்கும் இடமாவது, பொருந்திய இசையில் குயில்பாட, மயில் ஆட, சோலைகளில் உள்ள வண்டும் தும்பியும் சுருதியென ரீங்காரம் செய்யும் எழில் மிகும் தோணிபுரம் ஆகும்.
876. நாற்றமிகு மாமலரின் மேலயனும்
நாராணனும் நாடி
ஆற்றலத னால்மிகவு ளப்பரிய
வண்ணம்எரி யாகி
ஊற்றமிகு கீழுலகு மேலுலகும்
ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளும்அரி யான்உறைவு
தோணிபுரம் ஆமே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் தமது ஆற்றலைக் கொண்டு நாடியும், காண ஒண்ணாதவாறு, அரிய வண்ணம் பொருந்திய சோதியாகிக் கீழுலகும் மேலுலகும் ஓங்கி எழுகின்ற சிவபெருமான் உறையும் இடமாவது, தோணிபுரம் ஆகும்.
877. மூடுதுவர் ஆடையினர் வேடநிலை
காட்டுஅம ணாதர்
கேடுபல சொல்லிடுவர் அம்மொழி
கெடுத்தடைவி னான்அக்
காடுபதி யாகநட மாடிமட
மாதொடுஇரு காதில்
தோடுகுழை பெய்தவர்த மக்குஉறைவு
தோணிபுரம் ஆமே.
தெளிவுரை :  சமணரும் சாக்கியரும் கூறும் மொழிகள் பயன் தரத்தக்கன அல்ல என, அதனைக் கொள்ளாது ஈசன், மயானத்தை இடமாகத் தேர்ந்து நடம் புரிந்து, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். ஒரு காதில் தோடும் மற்றொன்றில் குழையும் அணிந்து மேவும் அப்பெருமான், தமக்கு உறைவிடமாகக் கொள்ளும் இடம், தோணிபுரம் ஆகும்.
878. துஞ்சிருளில் நின்றுநட மாடிமிகு
தோணிபுர மேய
மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம்
பந்தனசொல் மாலை
தஞ்சம்என நின்றிசைமொ ழிந்தஅடி
யார்கள்தடு மாற்றம்
வஞ்சமலிர் நெஞ்சிருளு நீங்கியருள்
பெற்றுவளர் வாரே.
தெளிவுரை : மயான இருளில் நடம் புரியும் ஈசன், தோணிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார். அப் பரமனை வணங்குகின்ற திருஞானசம்பந்தர் அருளிய சொல் மாலையாகிய இத் திருப்பதிகத்தைத் தஞ்சம் என்று ஏத்திச் சரண் அடைந்து ஓதும் அடியவர்கள், மனத்தில் தடுமாற்றம் கொண்டு, வறிதே அலையாது, தெளிந்த சிந்தனை உடையவர்களாய்த் திகழ்வார்கள்; நன்னெறியினின்றும் விலகாதவர்களாய், வஞ்சம் இருளானது நெஞ்சில் கொள்ளாத வராய், ஈசனின் அருள் பெற்று வளரும் சீலம் உடையவர்கள் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
340. அவளிவனல்லூர் (அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
879. கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி
நூலொடுகு லாவித்
தம்பரிசி னோடுகடு நீறுதட
வந்திடபம் ஏறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில்
கல்வரைவி லாக
அம்புஎரிய வெய்தபெரு மான்உறைவது
அவளிவநல் லூரே
தெளிவுரை : ஈசன், வண்டு உலவும் கொன்றை மலர் தரித்துள்ளவர்; முப்புரி நூல் திகழும் திருமார்பினர்; திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர்; ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு, அம்பு தொடுத்து எய்து எரியுமாறு செய்தவர். அப்பெருமான் உறைவது அவளிவள்நல்லூர் ஆகும்.
880. ஓமையன கள்ளியன வாகையன
கூகைமுரல் ஓசை
ஈமம்எரி சூழ்கடலை வாசமுது
காடுநடம் ஆடித்
தூய்மையுடை அக்கொடுஅர வம்விரவி
மிக்குஒளி துலங்க
ஆமையொடு பூணும்அடி கள்உறைவது
அவள்இவள்நல் லூரே.
தெளிவுரை : மாமரம், கள்ளி, வாகை ஆகிய மரங்களும், கூகைகளின் ஓசையும், கொள்ளி, நெருப்பு சூழ்ந்த சுடலையின் வாடை உடைய மயானத்தில் நடனம் ஆடித் தூய்மையான எலும்பும், அரவமும் விரவி ஒளி துலங்க, ஆமையின் ஓட்டினை அணிகலனாகப் பூண்டு விளங்குகின்ற அடிகள் உறைவது, அவள்இவள் நல்லூரே.
881. நீறுடைய மார்பில்இம வான்மகளொர்
பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழகு
ஆயதொரு கோலம்
ஏறுடைய ரேனும்இடு காடுஇரவில்
நின்றுநடம் ஆடும்
ஆறுடைய வார்சடையி னான்உறைவது
அவள் இவள்நல் லூரே.
தெளிவுரை : சிவபெருமான், திருநீறு அணிந்து விளங்கும் திருமார்பில், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்பவர்; ஆணும் பெண்ணும் இணைந்த அர்த்தநாரி திருக்கோலத்தில், இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; சுடுகாட்டில் மேவி இரவில் நடனம் புரிபவர்; கங்கையைச் சடை முடியில் வைத்து இருப்பவர். அப் பெருமான் உறைவது அவள் இவள் நல்லூரே.
882. பிணியும்இலர் கேடும்இலர் தோற்றம்இலர்
என்றுஉலகு பேணிப்
பணியும்அடி யார்களன பாவமற
இன்னருள்ப யந்து
துணியுடைய தோலும்உடை கோவணமும்
நாகம்உடன் தொங்க
அணியும்அழ காகஉடை யான்உறைவது
அவள்இவள்நல் லூரே.
தெளிவுரை : ஈசன், மன்னுயிர்களுக்கு உள்ளது போன்று பிணியும், அழிவும், தோற்றமும் இல்லாதவர் எனப் போற்றிப் பணியும் அடியவர்களுடைய பாவம் யாவும் நீங்குமாறு செய்து, இனிய அருள் புரிபவர்; தோலை உடையாகக் கொண்டுள்ளவர்; கோவண ஆடை அணிந்துள்ளவர்; நாகத்தை அணியாகக் கொண்டு மேவுபவர். அப்பெருமான் உறையும் இடமாவது அவள்இவள்நல்லூரே.
883. குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன
பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை இண்டை புனைவார் கடவுள்
என்றமரர் கூடித்
தொழலும்வழி பாடும்உடை யார்துயரும்
நோயும்இலர் ஆவர்
அழலும்மழு ஏந்து கையினான் உறைவது
அவள்இவள்நல் லூரே.
தெளிவுரை : குழலின் ஓசை போன்று வரி வண்டு ரீங்காரம் செய்யும் மென்மையான அழகிய மலர்களைக் மாலையாகத் தொடுத்துத் திருக்கழலில் சாத்தி, அமரர்கள், சிவபெருமானைத் தொழுது போற்றுபவர் அமரர்கள், சிவபெருமானைத் தொழுது போற்றுபவர் ஆயினர். அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்களுக்கு உடலால் ஆகிய நோயும் ஏனையவற்றால் நேரும் துயரும் இல்லை. அவ்வாறு அருள் புரியும் ஈசன் உறைவது, அவள்இவள்நல்லூரே.
884. துஞ்சல்இல ராய்அமரர் நின்றுதொழுது
ஏத்தஅருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி
தாகியொரு நம்பன்
மஞ்சுநறி மிர்ந்துஉமை நடுங்கஅக
லத்தொடுஅ ளாவி
அஞ்சமத வேழஉரி யான்உறைவது
அவள்இவள்நல் லூரே.
தெளிவுரை : தளர்தல் இன்றித் தேவர்கள் நின்று தொழுது ஏத்த, நஞ்சினை உண்டு அருள் செய்த சிவபெருமான், தமது திருவண்ணத்தை, மிடற்றினில் கரியதாகவும் பிற இடங்களில் வெண்மையாகவும் விளங்கச் செய்தவர்; யானையின் தோலை உரித்து உமாதேவி அதன் தோற்றத்தைக் கண்டு நடுங்கும் எழிலாய், அகன்ற திருமார்பில் பதியுமாறு போர்த்துக் கொண்டவர். அப் பெருமான் உறைவது அவள்இவள் நல்லூரே.
885. கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி
னோடுமிசை செய்யப்
பீடரவ மாகுபடர் அம்புசெய்து
பேரிடப மோடும்
காடரவம் ஆகுகனல் கொண்டிரவி
நின்றுநட மாடி
ஆடரவம் ஆர்த்தபெரு மான்உறைவது
அவள் இவள்நல் லூரே.
தெளிவுரை : மொந்தை, குழல், யாழ், முழவு ஆகிய வாத்தியங்கள் சேர்ந்து இசைக்கவும், நாகத்தை அரையில் கட்டி, இடப வாகனத்தில் இருந்தும், கைகளை நன்கு வீசி ஆடுவதால் கங்கையில் நீர்த்துளிகள் வீசிறவும், இரவில் நடம் புரியும் ஈசன் உறைவது, அவள்இவள்நல்லூரே.
886. ஒருவரையு மேல்வலிகொ டேன்என
எழுந்தவிற லோன்இப்
பெருவரையின் மேலொர்பெரு மானும்உள
னோஎனவெ குண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல்
கைகள்உடை யோனை
அருவரையில் ஊன்றியடர்த் தான்உறைவது
அவள் இவள்நல் லூரே.
தெளிவுரை : தனக்கு மேல் யாரும் வலிமையாக இருப்பதற்கு விட மாட்டேன் என வீரத்துடன் எழுந்து, இக் கயிலை மலையின்மேல் ஒரு பெருமான் உளனோ ! என வெகுண்டு, மலையைப் பெயர்த்த, பெரிய மலையைப் போன்ற உறுதியும் கடலைப் போன்ற ஆற்றலும் கொண்ட அரக்கனாகிய இரவணனை, மலையின் கீழ் நெரியுமாறு செய்தவர், சிவபெருமான். அப்பெருமான் உறைவது அவள்இவள் நல்லூரே.
887. பொறிவரிய நாகமுயர் பொங்கணை
அணைந்த புக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர்
மேல்விழுமி யோனும்
செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக
நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவது
அவள் இவள்நல் லூரே.
தெளிவுரை : நாகத்தை அணையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ் மிக்க திருமாலும், நறுமணமும் தேனும் உடைய தாமரை மலரின் மேல் விளங்கும் சிறப்புடைய பிரமனும், பிறர்க்கு அரிய வலிமையான தோற்றம் கொண்டு தமது ஆற்றல் முழுவதும் செலுத்தித் தேடியும், சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான் உறையும் இடமாவது, அவள்இவள் நல்லூரே.
888. கழியருகு பள்ளியிட மாகவரு
மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயில் நின்றடிசில்
உள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு
நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மான்உறைவது
அவள் இவள்நல் லூரே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சொல்லும் பழிப்புச் சொற்களை ஏற்க வேண்டாம். பக்தி பெருக நின்று தொழுது ஏத்தும் அடியவர்தம் கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து விளங்குகின்றவர், சிவபெருமான். அப் பெருமான் உறைவது அவள்இவள்நல்லூரே.
889. ஆனமொழி யானதிற லோர்பரவும்
அவள்இவள்நல் லூர்மேல்
போனமொழி நன்மொழிக ளாயபுகழ்
தோணிபுர வூரன்
ஞனாமொழி மாலைபல நாடுபுகழ்
ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள்
தீயதிலர் தாமே.
தெளிவுரை : நலம் பெருகும் செம்மை மொழி கொண்டு போற்றும் அருளாளர்களால் பரவப்படும் அவள் இவள்நல்லூர்மேல், பெருமையுடைய நன்மொழியால் புகழ் போற்றும் தோணிபுரத்தில் விளங்குகின்ற, ஞான மொழி மாலையாய்ப் பல நாட்டினர் புகழும் ஞான சம்பந்தன் உரைத்த, தேன் போன்ற இத்திருப்பதிகத்தை ஓதிப் போற்றுபவர், துயர் அற்றவர் ஆவர். தீமை, அவர்களை அணுகாது.
திருச்சிற்றம்பலம்
341. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
890. வண்டுஇரிய விண்டமலர் மல்குசடை
தாழவிடை யேறிப்
பண்டுஎரிகை கொண்டபர மன்பதியது
என்பர்அதன் அயலே
நண்டுஇரிய நாரைஇரை தேரவரை
மேல்அருவி முத்தம்
தெண்டிரைகள் மோதவிரி போதுகம
ழும்திருந லூரே.
தெளிவுரை : வண்டு அமரும் மலர் சூடிய சடை முடியுடைய சிவபெருமான், இடப வாகனத்தவராகிக் கையில் நெருப்பு ஏந்திய பரமன். அவர் விளங்கும் பதியாவது, அருவிகள் முத்துக்களைக் கொண்டு சேர்க்கவும், நறுமண அரும்புகள் மலரவும் விளங்கும் திருநல்லூரே.
891. பல்வளரு நாகமரை யார்த்துவரை
மங்கையொரு பாகம்
மல்வளர் புயத்தில்அணை வித்துமகி
ழும்பரமன் இடமாம்
சொல்வளர் இசைக்கிளவி பாடிமட
வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கள் முறை யேத்தவள
ருந்திருந லூரே.
தெளிவுரை : நச்சுப் பல் வளர்ந்து மேவும் நாகத்தை அரையில் கட்டி, மலை மங்கையாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு, வலிமையான இடப் பாகத்தில் பொருந்தி மகிழும் சிவபெருமான், மகிழ்ந்து விளங்குகின்ற இடமாவது, மகளிர், பொருட் செறிந்த பாடல்களைப் பாடி, அதற்கு இசைய நடனம் ஆடி, வேதம் ஓதவல்ல அந்தணர்கள் நியதிப்படி ஏத்த, வளமை கொண்டும் புகழ் மிக்கும் விளங்கும் திருநல்லூரே.
892. நீடுவரை மேருவில தாகநிகழ்
நாகம்அழல் அம்பால்
கூடலர்கள் மூவெயில் எரித்தசூழ
கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுனல் நின்றுதிக
ழும் நிமலன் இடமாம்
சேடுலவு தாமரைகள் நீடுவய
லார்திருந லூரே.
தெளிவுரை : பெரிய மலையாகிய மேருவை வில்லாகவும், வாசுகி என்னும் நாகத்தை நாணாகவும், அக்கினியை அம்பாகவும் கொண்டு, பகைவராகிய அசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்த சிவபெருமான், சடை முடியின் மீது கொன்றை மலரும், கங்கையும் திகழத் தரித்துள்ள நிமலன் ஆவார். அப்பெருமானின் இடமாவது, பெருமை மிக்க தாமரை மலர்கள் வயல்களில் நெடிது திகழும் வளப்பம் உடைய திருநல்லூரே.
893. கருகுபுரி மிடற்கரி காடர்எரி
கையதனில் ஏந்தி
அருகுவரு கரியின்உரி அதளர்பட
அரவர்இடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மண நாறமயில்
ஆலமரம் ஏறித்
திருகுசின மாந்திகனி சிந்துமது
வார்திருந லூரே.
தெளிவுரை : சிவபெருமான், கரிய மிடற்றினை உடையவர்; மயானத்தில் விளங்கிக் கையில் எரியும் நெருப்பு ஏந்தி நடனம் புரிபவர்; பாய்ந்து, தாக்க வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; படம் கொண்டு ஆடும் நாகத்தை ஆரமாகக் கொண்டு விளங்குபவர். அப்பரமனுடைய இடமாவது. நறுமணம் கமழும் அழகிய பொழிலில், மயில் நடம் புரிய, குரங்குகள் மரத்தின் மீது ஏறிச் சினந்து கனிகளை உதிர்த்து தேன் அருந்தும் எழில் திகழும் திருநல்லூரே.
894. பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல்
பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுதல்
ஆளர்அவர் இடமாம்
இடிகொள்முழ வோசைஎழிலார் செய்தொழி
லாளர்விழ மல்க
செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள்
சேர்திருக லூரே.
தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு தரித்த திருமார்பினர்; முப்புரி நூல் அணிந்தவர்; கங்கையும், நாகமும் சடை முடியில் தரித்தவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்கும் முதற் பொருளானவர்; அவரது இடமாவது, இடி போன்ற முழவின் ஓசை ஒலிக்கத் திருவிழாக்களை நடத்தித் தீய வினைகளைத் தீர்த்துக் கொள்ளும் இனியவர்கள் சேர்ந்து விளங்கும் திருநல்லூரே.
895. புற்றரவர் நெற்றியொர்கண் ஒற்றைவிடை
ஊர்வர்அடை யாளம்
சுற்றம்இருள் பற்றியபல் பூதம்இசை
பாடநடை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கள்
முற்றும்எயில் மாளச்
செற்றவர் இருப்பிடம் நெருக்குபுன
லார்திருந லூரே.
தெளிவுரை : ஈசன், புற்றில் வசிக்கும் நாகத்தை உடையவர்; நெற்றியில் ஒரு கண் கொண்டு விளங்குபவர்; ஒற்றை இடபத்தை வாகனமாகக் உடையவர்; அடையாளம் காண முடியாத இருளில் பல பூதங்கள் இசை பாட நடனம் ஆடுபவர்; மறையுணர்ந்த அந்தணர்களால் ஏத்தப்படுபவர்; பகைமை கொண்ட அசுரர்களின் முப்புரங்ள் எரியுமாறு செய்தவர். அப் பெருமானுடைய இருப்பிடமாவது, நீர் வளம் நிறைந்த திருநல்லூரே.
896. பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர்
ஞாலம் இடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்ச
துலங்கியவெண் ணீற்றர்
கங்கைஅர வம்விரவு திங்கள்சடை
அடிகள்இடம் வினவில்
செங்கயல் வதிக்குதிகொ ளும்புனலது
ஆர்திருந லூரே.
தெளிவுரை : ஈசன், பொங்கி எழுந்து படம் எடுத்து ஆடும் அரவத்தைத் தரித்தவர்; எலும்பினைத் திருமேனியில் அணிபவர்; கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்க ஆரவாரம் செய்த சுற்றித் திரிபவர்; திருமேனியில் வெண்ணீறு பூசியவர்; கங்கையும், அரவமும், சந்திரனும் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப் பரமனுடைய இடமானது, செங்கய லானது சேற்றில் குதித்துத் துள்ள, நீர் பெருகும் வளமையுடைய திருநல்லூரே.
897. ஏறுபுகழ் பெற்றதெனி லங்கையவர்
கோனையரு வரையில்
சீறியவ னுக்கருளும் எங்கள்சிவ
லோகன்இட மாகும்
கூறும்அடி யார்கள்இசை பாடிவலம்
வந்தயரும் அருவிச்
சேறுகமரானவழி யத்திகழ்
தருந்திருந லூரே.
தெளிவுரை : புகழ் மிக்க இராவணனைக் கயிலை மலையில் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர் அவனுக்கு அருளும் தன்மையில், வாழ் நாளும் வாளும் அளித்த பெருமான், எங்கள் சிவலோகநாதனாகிய சிவ பெருமான் ஆவார். அப் பெருமானின் இடமாவது. அடியவர்கள் இசை பாடி நகர் வலம் வந்து, பக்திப் பெருக்கால் கண்ணீர் மல்கித் திகழ, அதன் ஆற்றலால் செங்கழனிகள் குளிர்ந்து திகழும் திருநல்லூரே.
898. மாலுமலர் மேலயனு நேடியறி
யாமைஎரி யாய
கோலம்உடை யான்உணர்வு கோதில்புக
ழான்இடம தாகும்
நாலுமறை அங்கமுதல் ஆறும்எரி
மூன்றுதழல் ஓம்பும்
சீலம் உடை யார்கள் நெடு மாடம்வள
ருந்திருந லூரே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிச் சென்றும் அறியாத நிலையில், சோதி வடிவாகிய திருக்கோலம் உடையவராய் விளங்குகின்ற ஈசனின் இடமாவது நான்கு வேதமும் ஆறு அங்கமும் மூன்று தழலும் ஓம்புகின்ற சீலம் உடைய தூய் அந்தணர்கள் திகழும் நெடிய மாட மாளிகைகள் கொண்ட திருநல்லூரே.
899. கீறும் உடை கோவணம் இலாமøயில்
ஒல்ஓவியத வத்தர்
பாறும்உடல் மூடுதுவர் ஆடையர்கள்
வேடம் அவை பாரேல்
ஏறுமட வாளொடு இனிதுஏறிமுன்
இருந்தஇடம் என்பர்
தேறுமன வாரம் உடையார்குடி
செயுந்திருந லூரே.
தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கொண்டு மேவும் கோலத்தைக் கண்டு, அதனை ஒரு பொருட்டாக ஏற்க வேண்டாம். உமாதேவியை உடனாகக் கொண்டு, இடபத்தின் மீது இனிது ஏறி அமர்ந்து விளங்கும். ஈசனின் தொன்மையான இடம் என்பது, அன்புடையவர்களாய், சிவபெருமானே முழுமுதற் பெருமான் எனத் தெளிந்தவர்களாய் மேவும் சிவனடியார்கள் வாசம் செய்யும் திருநல்லூரே.
900. திரைகள்இரு கரையும்வரு பொன்நில
வும்திருந லூர்மேல்
பரசுதரு பாணியை நலந்திகழ்செய்
தோணிபுர நாதம்
உரைசெய் தமிழ் ஞானசம் பந்தன்இசை
மாலைமொழி வார்போய்
விரைந்து செய்மலர் தூவவிதிபேணுகதி
பேறுபெறு வாரே.
தெளிவுரை : காவிரியின் இருகரையும் அலைகள் பெருக நிலவும் திருநல்லூரின் மழுவேந்திய ஈசனை, நலம் திகழும் வயல்களை உடைய தோணிபுர நாதனாகிய தமிழ்ஞான சம்பந்தன் இசைத்த, இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள், பிரமனால் மலர் தூவி ஏத்தப் பெறும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
342. திருப்புறவம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
901. பெண்ணியல் உருவினர் பெருகியபுனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.
தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் அர்த்தநாரி வடிவினர்; கங்கையும் பிறைச் சந்திரனும் தரித்துள்ளவர்; மிடுக்காகச் செல்லும் இடபத்தை வாகனமாக உடையவர்; திருவடியைத் தொழுது போற்றும் அடியவர்களின் பிணிகளைத் தீர்த்தருள் புரிபவர். அப் பெருமான் கண்ணி விளங்குகின்ற உயர்ந்த பதியாவது, புண்ணியம் சேர்க்கும் மறைகளை ஓதுகின்ற அந்தணர்கள், நிறைந்த புகழுடன் வேதங்களை நாள்தோறும் ஓதுகின்ற புறவமே ஆகும்.
902. கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமும்ஓர் அரவமு மலரரை மிசையினில்
திக்குடை மருவிய உருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குடன் உறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.
தெளிவுரை : ஈசன், கொக்கு வடிவில் தீங்கு செய்த அசுரனை மாய்த்து, அதன் இறகை வெற்றிச் சின்னமாகக் கொண்டவர்; பிறைச் சந்திரனைச் சூடிய குளிர்ச்சி மிக்க சடை முடி உடையவர்; எலும்பு மாலையும், அரவமும் திகழ அரையில் கட்டியவர்; திகம்பரர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானை உறைவது, நறுமண மலர்கள் திகழும் புறவமே ஆகும்.
903. கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை யுமையொரு
பங்கியல் திருஉரு வுடையவர் பரசுவொடு இரலைமெய்
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறைபதி
பொங்கிய பொருகடல் கொளஅதன் மிசையுயர் புறவமே.
தெளிவுரை : தேன் மணம் கமழும் கூந்தலும், அழகிய வளையலும் அணிந்து மேவும் உமாதேவியைத் திருமேனியின்கண் அங்கமாகத் திகழும் சிவபெருமான், மழுப்படையுடன் மானைக் கரத்தில் கொண்டு விளங்குபவர்; இடப வாகனத்தை உடையவர். அப் பெருமான் உறையும் பதியாவது, பிரளய காலத்தில், கடலால் சூழப் பெற்றாலும் அதில் மிதந்து அழியாது மேவும் புறவமே ஆகும்.
904. மாதவம் உடைமறை யவன்உயிர்கொளஒரு மறலியை
மேதகு திருவடிஇறையுற உயிரது விலகினார்
சாதக உருவியல் கானிடை உமைவெரு வுறவரு
போதக உரியதன் மருவினர் உறைபதி புறவமே.
தெளிவுரை : சிறப்பான தவத்தையுடைய மறைவராகிய மார்க்கண்டேயருடைய உயிரைக் கொள்ளும் தன்மையில் நின்ற காலனைப் பெருமை மிகுந்த திருப்பாதத்தால் உதைத்து, நொடிப் பொழுதில் அவன் உயிரை விலக்கிய சிவபெருமான், உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். அப்பெருமான் உறையும் பதி, புறவமே ஆகும்.
905. காமனை அழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொடு ஒளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.
தெளிவுரை : ஈசன், மன்மதனை எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர்; பகைவராகிய அசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து கடவுள்; அவருடைய பதியானது, பிரமன், நீரும் மலரும் கொண்டு வழிபட, வேள்வி இயற்றி வேத மந்திரங்களும் வாத்தியங்களும் திகழத் தூப தீபம் கொண்டு விளங்குகின்ற புறவமே ஆகும்.
906. சொல்நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅருளினர் உறைமுதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே.
தெளிவுரை : சிவபெருமான், போற்றிச் சொல்லப்படும் சொல்லின் பொருளில் இனிமையாய் விளங்குபவர். வேதங்களின் கருத்தாக விளங்கிப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழிலை உடையவர்; மகாசங்கார காலத்தில் யாவும் தன்னுள் ஒடுங்கி அடங்கத் தனித்து விளங்குபவர்; இடைப்பட்டு விளங்கும் காலத்தில் மையப் பொருளாய் விளங்கி யாவும் உணர்ந்து ஆட்சி புரியும் பெருமை உடையவர்; திருவடியைப் போற்றி வணங்கும் அடியவர்களின் முன் வினையாகிய சஞ்சித கன்மத்த முற்றிலும் நீக்குபவர். அப் பெருமான் உறையும் தொன்மையான பதியானது, புன்னை மலரின் அரும்புகள் மலர்ந்து மகரந்தத் தாதுக்கள் சிந்தும் பொழில் திகழும் அழகு மிகுந்த புறவமே ஆகும்.
907. வரிதரு புலியதள் உடையினர் மழுஎறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவதொர் இயல்பினர்
புரிதரு குழல்உமை யொடும்இனிது உறைபதி புறவமே.
தெளிவுரை : ஈசன், வரிகளையுடைய புலியின் தோலை உடையாகக் கொண்டுள்ளவர்; மழுப்படையுடையவர்; மண்டை ஓட்டை மாலையாகக் கொண்டு முடியின்மீது அணியும் பெருமை மிகுந்தவர்; நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; தேவர்களால் தொழப்படுபவர். அப்பெருமான், உமாதேவியோடு இனிது உறையும் பதியாவது புறவமே ஆகும்.
908. வசிதரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருஉரு வுடையவர் உறைபதி புறவமே.
தெளிவுரை : வாளேந்திய கோலத்தோடு, உலகில் வன்மைசெய்த இராவணனின் உடலும் பத்துத் தலைகளும் நெரியுமாறு அழுத்தி, ஒரு விரலால் நிறுவிய ஈசன், திருவெண்ணீறு அணிந்த திருவடிவினராய் உறையும் பதி, புறவமே ஆகும்.
909. தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனும் எழுவகைப்
போனக மருவினன் அறிவரி யவர்பதி புறவமே.
தெளிவுரை : தேன் கமழும் தாமரை மலரில் விளங்கும், படைத் தொழில் வாயிலாக மன்னுயிர்களுக்குப் பிறப்பினைத் தரும் பிரமனும், ஏழுலகங்களையும் காத்து விளங்கும் திருமாலும், அறிவதற்கு அரியவராக விளங்கும் ஈசன் உறையும் பதியாவது, புறவமே ஆகும்.
910. கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடும்இனி நினைவுறு நிமலர்தம் உறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும் சொற்கள் பொருளற்றவை. அவற்றை விடுக. இனிமேல் ஈசனைத் தியானம் செய்து வழிபடுக ! அப் பெருமான் உறையும் பதியாவது, அந்தணர்கள் வேதம் ஓத நிறைந்த புகழின் ஒலி மேவும், புறவமே ஆகும்.
911. போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதியர் அதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய ஒருபதும் உரியதொர் இசைகொள உரைசெயும்
நீதியர் அவர்இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.
தெளிவுரை : மலர்கள் விளங்கும் பொழில் சூழ்ந்த அணிமிகும் புறவம் என்னும் நல்ல நகரில் உறையும் புனிதனாகிய ஈசனை, வேதியர்களின் தலைவராய்த் தமிழில் சிறப்புடையவராய், விருப்பம் உடையவராய் விளங்கும் திருஞானசம்பந்தர் ஓதிய இத்திருப்பதிகத்தை, உரிய இசையுடன் ஓதுபவர்கள், மெய்ம்மையாளர்களாய்ப் பூவுலகில் பிறவியின் நற்பேறு உடையவர்களாய்த் திகழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
343. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
912. மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரால்
பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
விட்டொளி உதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே.
தெளிவுரை : நறுமலர் விரிய மணம் தரும் சுருண்ட கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழும் ஈசன், சடை முடியின்கண் கட்டப் பெற்று விளங்கும் கங்கை, அரவம், பிறைச் சந்திரன் ஆகியவற்றுடன் விளங்கும் பதி, வீழிமிழலையே.
913. எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி இளமுலைப்
பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர் கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.
தெளிவுரை : ஈசன், எண்ணற்ற வளையல்களும், நெறிப் படுத்திப் புனைந்த கூந்தலும், எழில் மொழியும், இளநகிலும் உடைய உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு, அர்த்தநாரியாய் மேவுபவர்; பெருகித் தோன்றிய கடல் விடத்தை மிடற்றில் தேக்கித் தேவர்களைப் பாதுகாத்தவர்; நெற்றியில் கண்ணுடையவர்; விரைவாக நடை பயிலும் இடப வாகனத்தையுடையவர்; நெருப்பினை ஏந்தியவர்; விண்ணில் திகழும் பிறைச் சந்திரனைச் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப் பெருமான் விளங்கும் பதியானது, வீழிமிழலையே.
914. மைத்தரு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
வைத்தவர் மதகரி யுரிவை செய்தவர்தமை மருவினார்
தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே.
தெளிவுரை : மை திகழும் மலைமகளை ஒரு பாகமாக வைத்த சிவபெருமான், மதம் பொருந்திய யானையின் தோலை உரித்தவர்; தம்மை விரும்பித் தாளத்துடன் பாடிப் போற்றும் பக்தர்களுக்குப் பெருமையுடன் விளங்குபவர்; நாகத்தை அணிந்து விளங்குபவர்; மண்டை ஓட்டினைக் கொண்டுள்ளவர். அப் பெருமானுடைய இடம் வீழிமிழலையே.
915. செவ்வழல் எனநனி பெருகிய உருவினர் செறிதரு
கவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை அழிதர முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழிமிழலையே.
தெளிவுரை : ஈசன், செந்நிறமாகிய  அழல் போன்று சிவந்த மேனி உடையவர்; கவ்வும் அழல் போன்ற சீற்றம் உடைய அரவத்தை அணிந்துள்ளவர்; சுடர் விடும் மழுப்படை உடையவர்; தொழுது ஏத்தாது, பகைமை கொண்ட, மூன்று சினம் மிகுந்த அசுரர்களையும் அவர்களுடைய வலிமை மிக்க மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர். அப் பெருமானின் பதியாவது, வீழிமிழலையே.
916. பைங்கண தொருபெரு மழலைவெள் ளேற்றினர் பலியெனா
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ வாரமா
வெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.
தெளிவுரை : அழகிய கண்ணும், மென்மையான முழக்கமும் உடைய வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமான், எல்லா இடங்களிலும் பலிஏற்றுத் திரிந்தவர்; தேவர்களால் தொழுது ஏத்தப்படுபவர். அப்பெருமான், தேவர்களாலும், அன்பின் மிக்க அடியவர்களாலும் தொழுது ஏத்தப் படுபவராயும், அரவத்தை அணிந்தவராயும் உறையும் பதியாவது, வீழிமிழலையே.
917. பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொர் அரவினர் பதிவிழி மிழலையே.
தெளிவுரை : ஈசன், பொன்போன்று ஒளிரும் சடை முடி உடையவர்; திருவெண்ணீறு அணிந்த திருமேனியர்; தன்னை நினைத்து ஏத்துதல் செய்யும் அடியவரின் வினையைக் களைந்து, முன்னின்று அருள் புரியும் ஒப்பற்றவர்; இனிமையுடன் பாடுகின்ற ஒழுக்க சீலர்; திருமார்பில் அரவத்தைப் பூண்டு விளங்குபவர்; அப் பெருமானின் பதியாவது வீழிமிழலையே.
918. அக்கினொடு அரவுஅரை அணிதிகழ் ஒளியதொர் ஆமைபூண்டு
இக்குஉக மலிதலை கலன்என இடுபலி ஏகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடும் இசைவதொர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
தெளிவுரை : எலும்பும் அரவமும் திகழ, ஒளிரும் ஆமை ஓடு பூண்டு, கரும்பு போன்று இனிய சொற்களைப் பேசி, பிரம கபாலம் ஏந்தி, இடுகின்ற பலியை ஏற்கின்ற சிவபெருமான்; கொக்கரை, குழல், முழவு முதலான வாத்தியங்களை விழாக் காலங்களில் அடியவர்கள் இசைக்க, ஏற்று மகிழும் பெற்றி உடையவர். அப் பெருமான் உறைவது, நறுமணம் கமழும் பொழில் விளங்கும் வீழி மிழலையே.
919. பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமொடு அடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
ஒதமொடு ஒலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமொடு உறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே.
தெளிவுரை : திருப்பாதத்தின் ஒரு விரலைக் கொண்டு கயிலை மலையை அழுத்தி, இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் செய்த ஈசன், பூத கணங்களும், அடியவர்களும் தொழுது ஏத்தும் புகழ் மிக்கவர்; கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் தேக்கி வைத்தவர். அப் பெருமான் விளங்கும் பதியாவது, வேதங்களை ஓதுதலும் வேள்விகள் இயற்றுதல், பூசித்தல் முதலான உற்ற தொழில்களைப் பேணும் அந்தணர்கள் மேவும் வீழிமிழலையே.
920. நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதியில்
நாரணன் எனஇவர் இருவரு நறுமலர் அடிமுடி
ஒருணர் வினர்செலல் உறலரும் உருவினொடு ஒளிதிகழ்
வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.
தெளிவுரை : நீரில் விளங்கும் தாமரையின்மேல் விளங்கும் பிரமனும் திருமாலும் ஆகிய இவர்கள் இருவரும் திருமுடியையும் திருவடி மலரையும் காண வேண்டும் என்னும் ஒரே உணர்வினராய்ச் சென்றும் காணற்கு அரியவராகிய வீரம் விளைவிக்கும் ஆற்றலுடைய சிவபெருமான் உறையும் இடமாவது, நறுமண மலர்ப் பொழில் திகழும் வீழிமிழலையே.
921. இச்சையர் இனிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவென உணர்விலர்
மொச்சைய அமணரும் முடைபடுதுகிலரும் அழிவதோர்
விச்சையர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
தெளிவுரை : ஈசன், பிச்சை கொண்டு திரிவதில் விருப்பம் உடையவர் என்பதன் பெருமையைச் சிறிதும் அறிய இயலாதவர்கள், சமணரும், சாக்கியரும் ஆவர், அத்தகைய பெருமையுடைய ஈசன் உறையும் இடமாவது, நறுமலர்ப் பொழில் மேவும் வீழிமிழலையே.
922. உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவர்உறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுலகு உறுகதி பெறுவரே.
தெளிவுரை : ஈசனால் கருதப்படும் அருமறையின் ஒலியினை முறையாகப் பாடி இசைத்து ஏத்தும், மறையவர்கள் உறைகின்ற எழில் திகழ விளங்குவது, வீழிமிழலை. இத் திருத்தலத்தைப் புகலியில் மேவும் ஞானசம்பந்தன் வண் தமிழால் ஓதிய இத் திருப்பதிகத்தை ஓதி ஏத்துபவர், துயர் அற்றவர் ஆவர்; பெருமை உடைய உயர்ந்த கதியாகிய முத்திப் பேறு அடைவர்.
திருச்சிற்றம்பலம்
344. திருச்சேறை (அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
923. முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட உரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
தெளிவுரை : உமாதேவி வெருவுமாறு, வெறி கொண்டு வந்த மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டு வீரம் விளைத்த சிவபெருமான், மணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், சந்திரனும், மண்டை ஓடும் கொண்டு விளங்குகின்ற சடை முடியுடைய அடிகள் ஆவார். அவருடைய வளநகர் திருச்சேறையே.
924. புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினன்
மனமுடை யடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொடு அரசிலை யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகள்தம் வளநகர் சேறையே.
தெளிவுரை : நறுமணம் கமழும் மலர்களைப் பறித்துத் தூவித் தொழுகின்ற அடியவர்களுக்கும், மனம் கனிந்து ஏத்தித் தியானம் செய்யும் அன்பர்களுக்கும் துயர் களைந்து அருள் புரியும் பெற்றியுடையவர், சிவபெருமான். அவர், கோர்க்கப் பெற்ற மணிகளும் அரச இலையைப் போன்று புனையப் பெற்ற மாலைகள் உடையதும், முதிர்ந்த சினத்தை உடையதும் ஆகிய இடபத்தை உடைய அடிகள் ஆவார். அப் பெருமானின் வளநகரானது, திருச்சேறையே.
925. புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபமது ஏறுவர் ஈடுலா
வரிதரு வளையினர் அவரவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.
தெளிவுரை : ஈசன், முறுக்கிய சடை முடியுடையவர்; புலியின் தோலை அரையில் கட்டியவர்; நெருப்புப் போன்ற செவ்வண்ணத் திருமேனியில் வெண்மையான திருநீற்றைப் பூசி விளங்குபவர்; இடப வாகனத்தில் ஏறுபவர்; தாருக வனத்தில் உள்ள மகளிர் இல்லம் தோறும் மகிழ்வுடன் திரிந்து பலி ஏற்றவர்; அத்தகைய தன்மையுடைய பெருமான் உறையும் வளநகரானது, திருச்சேறையே.
926. துடிபடும் இடையுடை மடவர லுடன்ஒரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை அரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரிபொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
தெளிவுரை : சிறிய இடை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான், இடி முழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை உடையவர்; படம் கொண்டு ஆடும் அரவத்தைக் கொண்டுள்ளவர்; திருநீறு அணிந்த திருமேனியர்; புலியின் தோலை உரித்து அரையில் கட்டியவர்; ஒளி மிக்க சடை முடி உடையவர். அப் பெருமான் உறையும் வளநகரானது, திருச்சேறையே.
927. அந்தரம் உழிதரு திரிபுரம் ஒருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை அரவுஅரி வாளியால்
வெந்துஅழி தரஎய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறம்உடை அடிகள்தம் வளநகர் சேறையே.
தெளிவுரை : ஈசன், ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை ஒரு நொடியின் கால அளவையில், மேரு மலையை வில்லாகக் கொண்டு, அதன் இடையில் வாசுகி என்னும் நாகத்தை நாணாகக் கட்டித் திருமால், அக்கினி, வாயு ஆகியோரை அம்பாகக் கொண்டு செலுத்தி, வெந்து அழியுமாறு செய்து, வனப்புடைய வீரம் காட்டியவர் : அவர், விடத்தை மணி போன்று திகழுமாறு கண்டத்தில் தேக்கியவர். தழல் போன்ற சிவந்த நிறம் உடைய அவ் அடிகள், விளங்கும் இடமாவது, வளமையான நகராகிய திருச்சேறையே.
928. மத்தரம் உறுதிறன் மறவர்தம் வடிவுகொடு உருவுடைப்
பத்தொரு பெயருடைய விசயனை அசைவுசெய் பரிசினால்
அத்திரம் அருளும்நம் அடிகளது அணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
தெளிவுரை : மேருமலையைப் போன்று உறுதியான வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கிப் பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்டுள்ள விசயனைப் பொருது தளரச் செய்தும், அத்திரங்களை அருளிச் செய்த தமது அடிகளாகிய சிவபெருமான், அழகு மிளிர விளங்குகின்ற வளமையான நகரானது, செறிந்த பொழில் சூழ்ந்த திருச்சேறையே.
929. பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படுதலை இடுபலி யதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
தெளிவுரை : ஈசன், அரிய வேதங்களை ஓதியவர்; ஐந்து தொழில்களை ஆற்றும் திரு நடனம் புரிபவர்; உலகத்தில் அடியவர்கள் மலர் கொண்டு தூவிப் போற்றித் துதிக்க, அருள் புரிபவர்; பிரமனுடைய கபாலத்தை ஏந்திப் பலி ஏற்று மகிழ்பவர்; அப்பெருமான், பெருமையுடன் திகழும் வளமை பொருந்திய நகரானது, செறிந்த பொழில் திகழும் திருச்சேறையே.
930. கட்டுர மதுகொடு கயிலைநன் மலைமலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிசெய்தார்
மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள்செயும்
சிட்டர்தம் வளநகர்செறி பொழில் தழுவிய சேறையே.
தெளிவுரை : நல்ல உறுதியான உடற்கட்டு கொண்டு விளங்கிய அரக்கனாகிய இராவணன், கயிலை மலையைத் தனது பெருகிய கரங்களால் பெயர்த்து எடுக்க, அக் கொடியவனுடைய உடலும் முடிகள் பத்தும் நெரித்தவர், சிவபெருமான். நறுமணம் கமழும் மலரடிகளைத் தொழுது போற்ற அருள் செய்பவர். அத்தகைய ஈசன் வீற்றிருக்கும் வளமையான நகரமாவது, அடர்த்தியான பொழில் விளங்கும் திருச்சேறையே.
931. பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடியவை அறிகிலார்
நின்றிரு புடைபட நெடுஎரி நடுவெயொர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும், தாம் இத்தகைய வடிவத்தைக் தாங்கி இறைவனுடைய காட்சியைப் பெறலாம் என்னும் பரிசில் முனைந்து சென்று, திருவடியும் திருமுடியும் தேடியும் காணப் பெறாதவராய் நிற்க, அவர்களுக்கு இடையில், நெடிய சோதிப் பிழம்பாய் வெளிப்பட்டு அருளிய சிவபெருமான் விளங்கும் நகரானது, திருச்சேறையே.
932. துகள்துறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடமது உறுசிறு மொழியவை நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
தெளிவுரை : சாக்கியரும், சமணரும் நகைப்பிற்கு இடமாகும் சிறுமொழிகளைக் கூறுபவர்களாவர். அவற்றை ஏற்க வேண்டாம். இளம் பிறைச் சந்திரனும், அரவமும், கங்கையும் திகழும் சடை முடியுடைய அடிகளாகிய ஈசன் விளங்கும் வளமையான நகராவது, திருச்சேறையாகும். ஆங்கு வீற்றிருக்கும் இறைவனை ஏத்துமின்.
933. கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடும் இடம்என உறைவதொர் சேறைமேல்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம் பந்தன
சொல்தக வுறமொழிபவர் அழிவிலர்துயர் தீருமே.
தெளிவுரை : நன்மையே வழங்கும் வேதங்களை, நன்கு கற்றுப் பயிலும் அடியவர்கள், அடி தொழும், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் ஈசனின் இடமாகிய திருச்சேறையின்மீது, புகலியில் மேவும் ஞானசம்பந்தன் சொல்லிய தகுதியுடைய மொழியாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள், அழிவற்றவர் ஆவர். அவர்கள் துயர் யாவும் விலகும்.
திருச்சிற்றம்பலம்
345. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)
திருச்சிற்றம்பலம்
934. தளிர்இள வளர்ஒளி தனதுஎழில் தருதிகழ் மலைமகள்
குளிர்இள வளர்ஒளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரின வளர்ஒளி மருவுநள் ளாறர்தம் நாமமே
மிளிர்இள வளர்எரி யிடில்இவை பழுதிலை மெய்ம்மை
தெளிவுரை : இளந்தளிர் போன்று பெருகி வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியை உடனாகக் கொண்டு. விளங்குகின்ற நள்ளாற்று நாதரின் திருநாமம் தாங்கிய, போகமார்த்த பூண் முலையாள் என்னும் திருப்பதிகம் எழுதப் பெற்ற ஓலையை எரியில் இட்டால், பழுது இல்லாது காக்கும் என்பது மெய்ம்மையே.
935. போதமர் தருபுரி குழல்எழில் மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம் தெழில்உரு அனையநள் ளாறர்தம் நாமமே
மீதமது எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்கப் பெற்ற கூந்தலை உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குதலின் காரணமாக, எழில் வண்ணம் கொண்டு திகழும் நள்ளாறரின் திருநாமத்தை மேலான தமது தீயினில் இட்டால் பழுதடையாது என்பது மெய்ம்மையே.
திருப்பதிம் எழுதப் பெற்ற ஓலையானது எரியாது. பச்சைத் திருப்பதிகமாகத் திகழும் என்பது குறிப்பு.
936. இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி எழில்வடம்
கட்டுறு கதிரிள வனமுலை இணையொடு கலவலின்
நட்டுறு செறிவயல் மருவுநள் ளாறர்தம் நாமமே
இட்டுறும் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : மணிகள், அழகுடன் பதிக்கப் பெற்று விளங்கும் அணிகலன்களும், ஒளி திகழும் மாலைகளும் கொண்டு மேவும் உமாதேவியாருடன், இணைந்து விளங்குகின்ற நள்ளாற்றின் திருநாமத்தைப் பதித்து நெருப்பில் இட்டால், அது எரிந்து பழுதாகாது. இது மெய்ம்மையே.
937. மைச்சணி வரியரி நயனிதொல் மலைமகள் பயனுறு
கச்சணி கதிரின வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை அடிகள்நல்லாறர்தம் நாமமே
மெச்சணி எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : மை திகழும் அழகிய விழியுடைய தொன்மையாய் நிலவும் உமாதேவி, பரஞானம், அபரஞானம் ஆகியவற்றை உடனாகிய தன்மையில், அப்பெருமாட்டியை உடனாகக் கலந்து, நஞ்சு அணிந்த கண்டத்தை உடைய அடிகளாகிய நள்ளாறரின் திருநாமத்தை, அணி திகழும் நெருப்பில் இட்டால், பழுது ஆகாது. இது மெய்ம்மையே.
938. பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருபணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள்ளாறர்தம் நாமமே
விண்ணியல் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : பெருமையுடன் விளங்குகின்ற உமாதேவியை உடனாகக் கொண்டு அர்த்தநாரியாய் மேவும் சிவபெருமான். குளிர்ந்த நீர் வளம் திகழும் நள்ளாறர் ஆவர். அவருடைய திருநாமத்தை, விண்ணின் இயலாய் விளங்கும் நெருப்பில் இட்டாலும், இவ் ஓலைச் சுவடியில் உள்ள திருப்பதிகமானது பழுதடையாது. இது மெய்ம்மையே.
939. போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகள் நள்ளாறர்தம் நாமமே
மீதுறும் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : மலர்களைக் கொண்டு விளங்கும் கூந்தலை உடைய உமாதேவியார், பொன்னை அணியாகக் கொண்டு விளங்கி, மேவ, அப் பெருமாட்டியைப் பொருந்துமாறு பாகம் கொண்டு அர்த்தநாரியாக விளங்குகின்ற நள்ளாறர், அத்தகைய நிறம் கொண்டு விளங்குபவர் ஆயினார். அவருடைய திருநாமத்தை, மிகுந்து எரியும் நெருப்பில் இட்டால் பழுது அடையாது. இது மெய்ம்மையே.
940. கார்மலி நெறிபுரி கரிகுழல் மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தம் நாமமே
ஏர்மலி யெரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : மேகம் போன்ற அடர்த்தியான சுருண்ட கூந்தல் உடைய உமாதேவியைப் பொருந்துமாறு பாகத்தில் கொண்டு, மண்டை ஓட்டை உடைய நள்ளாற்றின் ஈசன் திருப்பெயரைப் பெருகி எரியும் நெருப்பில் இட்டால், பழுது அடையாது. இது மெய்ம்மையே.
941. மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்னியல் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுகன் நெரியநள் ளாறர்தம் நாமமே
மின்னியல் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : சிறந்து விளங்குகின்ற ஒளி போன்று திகழும் உமாதேவியார் பொன் போன்ற உயர்ந்த மணிகளை கொண்டு விளங்க, அப் பெருமாட்டியை உடனாகக் கொண்டு, அர்த்தநாரியாகித் தசமுகனாகிய இராவணனை நெரியுமாறு செய்து மேவுபவர், திருநள்ளாறர். அவருடைய திருநாமமானது எழுதப் பெற்ற ஓலையை மின்னலைப் போன்று எரியும் நெருப்பில் இட்டால் பழுது இல்லை; இது மெய்ம்மையே.
942. கான்முக மயிலியல் மலைமகள் கதிர்விடு கனமிகு
பால்முகம் இயல்பணை இணைமுலை துணையொடு பயில்தலின்
நான்முகன் அரிஅறிவரிய நள்ளாறர்தம் நாமமே
மேன்முக எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : அடர்ந்த சோலையில் விளங்கும் மயிலின் தன்மையுடைய ஞானாம்பிகையாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு, பிரமனும் திருமாலும் தேடியும் அறிவதற்கு அரியவராகிய நள்ளறாருடைய திருநாமமாவது, மேலோங்கி எரியும் நெருப்பில் இட்டால் பழுது அடையாது; இது மெய்ம்மையே.
943. அத்திர நயனிதொல் மலைமகள் பயனுறும் அதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டுஅமணர்பொய் பெயருநள் ளாறர்தம் நாமமே
மெய்த்திரள் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.
தெளிவுரை : அம்பு போன்று கூரிய விழி நோக்குடைய உமாதேவியைப் பொருந்த விளங்குமாறு, சமணர் சாக்கியர்களுக்குத் தோன்றாதவராகிய திருநள்ளாறரின் திருநாமத்தைக் கற்பனைக்கு இடமின்றி, பெரிய எரியின் திரட்சியாய் ஓங்கும் நெருப்பில் இட, இந்தத் திரு ஓலை பழுதடைவதில்லை. இது மெய்ம்மையே.
944. சிற்றிடை அரிவைதன் வனமுலை இணையொடு செறிதரும்
நற்றிறம் உறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை எரியினில்இட இவை கூறிய
சொல்தெரி ஒருபதும் அறிபவர் துயரிலர் தூயரே.
தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் நற்றிறம் உடைய ஈசனொடு திருஞானம் பெருகும் மேன்மையில் ஞானசம்பந்தன், கொற்றவன் ஆகிய பாண்டியன் முன்பாக, ஈசனின் புகழ் பாடும் திரு ஓலையை நெருப்பில் இடுகின்றபோது, கூறிய இத் திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள், துயர் அற்றவர்கள் ஆவார்கள். அவர்கள், துயவர்களாய் மும்மலம் நீங்கப் பெற்றவர்களாய் விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
346. திருவிளமர் (அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல், திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
945. மத்தகம் அணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெரு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.
தெளிவுரை : ஈசன், திருநுதலின்கண் இருந்து அழகினைக் கொள்ள வேண்டும் என்று விழைந்த சந்திரனை உடையவர்; ஒளிர்ந்து மேவும் மணியைப் பெற்றுத் திகழ வேண்டும் என்னும் நாட்டத்தில் மேவும் அரவத்தை உடையவர். அத்தகைமையில் அருளின் தன்மையானது பெருகும் செம்மையில் திகழும் உமாதேவியாரை உடனாகக் கொண்டு மேவும் வித்தகராகிய சிவபெருமான் உறைவது, விரிந்த பொழில் சூழ்ந்த வளம் மிக்க நகராகிய விளமர் என்பதே.
946. பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி
ஒட்டிலகு இணைமர அடியினர் உமையுறு வடிவினர்
சிட்டிலகு அழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
விட்டிலகு அழகுஒளி பெயரவர் உறைவது விளமரே.
தெளிவுரை : ஈசன், பட்டுத் துகில் அணிந்த தாருகவனத்தில் உள்ள மாதர்கள்பால், ஒட்டி இணைந்து, மரத்தால் ஆகிய மிதியடிகளை அணிந்து, பிச்சை ஏற்றவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்கும் அர்த்தநாரியானவர்; கைச் சிட்டிகையில் கொள்ளும் திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; இடப வாகனத்தில் அழகுடன் விளங்குபவர், அப் பெருமான் உறைவது விளமர் ஆகும்.
947. அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதொர் அரவொடு
செங்கதிர் எனநிறம் அனையதொர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழல் முழவினொடு இசைதரு சரிதையர்
வெங்கதிர் உறுமழு உடையவர் இடம்எனில் விளமரே.
தெளிவுரை : ஈசன், அழகிய ஒளிக்கதிர்களை வீசுகின்ற சுயம் பிரகாசம் உடையவர்; அரையின் இடையில் ஒளி உமிழும் வெண்மையான அரவத்தைக் கட்டியவர்; செழுமையான மாணிக்கம் முதலான உயர்ந்த மணிகளைச் சிவந்த ஒளி வீசும் திருமார்பில் அணிந்துள்ளவர்; சங்கு ஒலித்து முழக்கவும், அதிர்ந்து ஒலி எழுப்பும் பறையும், குழலின் இசையும், முழவின் ஓசையும் இயம்புதல் செய்ய, நன்கு இசை கூட்டிப் பாடும் சீலம் உடையவர். சுடர் மிகும் தீக்கதிர்களை உடைய வீரம் திகழும் மழுப்படை உடையவர். அத்தகைய சிறப்புடைய பெருமான் வீற்றிருக்கும் இடமாவது யாது எனில், அது விளமர் என்பதே.
948. மாடமது எனவளர் மதிலவை எரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை உரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில் இடமுறை நடநவில்
வேடமது உடையவர் வியன்நகரதுசொலில் விளமரே.
தெளிவுரை : சிவபெருமான், தீமையை விளைவித்த கொடிய அசுரர்களின் மூன்று புரங்களை எரித்தவர்; வேதத்திற்கு விளக்க உரை செய்தவர்; பெருமையுடன் விளங்கும் ஒழுக்க நெறியைப் பேணிக் காத்து ஒழுகுபவர்; நன்கு இசைத்துப் பாடுபவர்; சுடுகாட்டினை இடமாகக் கொண்டு நடம் புரியும் திருவேடப் பொலிவு உடையவர். அப்பெருமானுடைய பெருமை மிக்க நகரானது விளமர் என்பதே.
949. பண்தலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாகக்
கொண்டலை குரைகழல் அடிதொழு மவர்வினை குறுகிலர்
விண்தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண்தலை  பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.
தெளிவுரை : பண்ணின் இசையை நல்கும் யாழ் போன்று மொழி நவிலும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான், திருப்பாதத்தில் விளங்கும் கழலானது நன்கு ஒலி கொள்ளுமாறு ஆடி விளங்குபவர். அப்பெருமானுடைய திருவடியைத் தொழுபவர்களுக்கு வினைத் துன்பம் இல்லை, விண்ணுலக தேவர்கள் தோத்திரம் செய்து போற்ற அருள் புரியும் விறல் மிக்கவராகிய அப்பெருமான், பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்கும் விமலர். அவருடைய வளமையான நகர் விளமர் என்பதே.
950. மனைகள்தொறு இடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகடல் இடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதிள் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.
தெளிவுரை : சிவபெருமான், தாருக வனத்தில் மனைகள் தோறும் சென்று பலி ஏற்றவர்; சந்திரனைப் பதித்த சடை உடையவர்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கறையுடைய மிடற்றினை உடையவர்; போர் முனைப்புடன் எழுந்த அசுரர்களின் மூன்று புரங்களின் கோட்டைகளை எரி செய்தவர்; தனது திருக்கழலைப் பரவிப் போற்றும் அடியவர்களுடைய வினையைத் தீர்த்து அருள் புரிவதை இயல்பாக உடையவர்; அப்பெருமான் விளங்குகின்ற நகர், விளநகர் என்பதே.
951. நெறிகமழ் தரும்உரை உணர்வினர் புணர்வுறு மடவரல்
செறிகமழ் தரும்உரு வுடையவர் படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட வரவினர் விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர் இடம்எனில் விளமரே.
தெளிவுரை : சிவபெருமான், சரியை கிரியை முதலான நான்கு மார்க்கங்களையும் ஆகமங்கள் முதலான சாத்திரங்களையும் உரை செய்தவர்; தன்னிற் பிரியாத உமாதேவியாரோடு சிறப்பாக விளங்கி, அர்த்த நாரியாய் மேவித் திகழ்பவர்; பலவகையான படைகளை ஆயுதமாகப் பெற்றுள்ளவர்; படம் கொண்டு ஆடும் அரவத்தை உடையவர்; சடை முடியில் மணம் கமழும் மலர்களைத் தரித்திருப்பவர். அப் பெருமானுடைய இடம் விளமர் என்பதே.
952. தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கடல் அடைபுனல் திகழ்சடை புகுவதொர் சேர்வினார்
விண்கடல் விடமலி அடிகள்தம் வளநகர் விளமரே.
தெளிவுரை : ஈசன், இராவணனைப் பண்படும் தன்மையில் மலையின்கீழ் நெறியுமாறு செய்தவர்; கடலை அடையும் கங்கையைத் திருமுடியில் சேர்த்து இருத்தியவர்; கடல் நஞ்சினை மிடற்றில் தேக்கி வைத்தவர். அப் பெருமானின் வளநகர் விளமர் என்பதே.
953. தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல்செய்து இருவரை வெருவுற ஆரழல் ஆயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறினர் இடம்எனில் அளிஇனம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.
தெளிவுரை : திருத்தொண்டு செய்யும் அடியவர்களைத் தளர்ச்சியுறுமாறு, துன்பம் புரிந்த காலனை வீழ்த்திப் பின்னர் தமது ஆணையின்படி ஒழுகுமாறு பணித்த சிவபெருமான்; திருமால், பிரமன் ஆகிய இருவரும் அச்சம் கொண்டு நிற்குமாறு பேர் அழல் ஆகியவர். மேகம் போன்ற கரிய கண்டத்தையுடைய அப்பெருமான் விளங்கும் இடம், வண்டினம் இசைக்க, நறுமலர் விளங்கும் பொழில் உடைய விளமர் என்பதே.
954. ஒள்ளியர் தொழுதெழ உலகினில் உரைசெயு மொழிபுல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.
தெளிவுரை : அறிஞர்கள், உலகில் ஈசனைத் தொழுது போற்றி வணங்க, சாக்கியரும் சமணரும் அத்தகைய தவத்தை அறியாதவர் ஆயினர். அதனை மெய்யாகக் கருதாது. வெள்ளிய பிறைச்சந்திரனைச் சடை முடியில் மேவிய விளமர் என்னும் நகரில் விளங்கும் ஈசனை ஏத்துமின்.
955. வெந்தவெண் பொடியணி அடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.
தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்து மேவும் விளமர் என்னும் பதியில் விளங்கும் ஈசனைச் சிந்தையுள் இருத்தி, செழுமையான புகலியில் திகழும் ஞானசம்பந்தன் மொழிந்த இத் திருப்பதிகத்தை உரைப்பவர்கள், வினை அற்றவர்கள் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
347. திருக்கொச்சைவயம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
956. திருந்துமா களிற்றின் மருப்பொடு
திரள்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமும் குடசமும்
பீலியும் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட்
டாறுசூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ்
நெஞ்சமே புகலதாமே.
தெளிவுரை : நெஞ்சமே ! யானையின் தந்தமும், திரட்சியான மணிகளும், சந்தன மரங்களும், குருந்தை, மா, குரவம், மலைமல்லிகை , மயிற் பீலி ஆகியனவற்றை உந்திக் கொண்டு வயல்களில் புகும் கோட்டாறு சூழும் கொச்சை வயம் என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் போற்றி வாழ்க. அதுவே, ஈசனைச் சரணம் புகுதலாகிய நெறியாகும்.
957. ஏலமார் இலவமோடு இனமலர்த்
தொகுதியாய் எங்குநுந்திக்
கோலமாம் இளகொடு கொழுங்கனி
கொன்றையுங் கொண்டு கோட்டாறு
ஆலியா வயல்புகு மணிதரு
கொச்சையே நச்சி மேவும்
நீலமார் கண்டனை நினைமட
நெஞ்சமே அஞ்சல் நீயே.
தெளிவுரை : மணம் கமழும் ஏலம், இலவங்கம், நறுமணம் மலர்கள், நன்கு பழுத்த கனிகள், கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக உந்தி வரும் கோட்டாறு பாயும் வயல் வளம் திகழும் கொச்சை வயம் என்னும் பதியில், விரும்பி மேவும் நீல கண்டராகிய சிவபெருமானை, நெஞ்சமே ! நினைத்து ஏத்துவாயாக ! உனக்கு ஏத்தகைய துன்பமும் இல்லை, அஞ்சாதே.
958. பொன்னுமா மணிகொழித்து எறிபுனல்
கரைகள்வாய் நுரைகள்உந்திக்
கன்னிமார் முலைநலம் கவரவந்து
ஏறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடம்
கொச்சையே மருவி நாளும்
முன்னைநோய் தொடருமாறு இல்லைகாண்
நெஞ்சமே அஞ்சல் நீயே.
தெளிவுரை : நெஞ்சமே ! பொன்னும், மணியும் கொழித்துப் பெருகிக் கரையில் எறியும் சிறப்புடைய கேட்டாறு சூழ விளங்கும் கொச்சை வயம் என்னும் பதியில், உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருக்க, முன் வினையானது தொடராது; அஞ்சல் வேண்டாம்.
959. கந்தமார் தேதகைச் சந்தனக்
காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையன் பவரளிக்
குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட்
டாறுசூழ் கொச்சை மேய
எந்தையார் அடிநினைத்து உய்யலாம்
நெஞ்சமே ! அஞ்சல் நீயே.
தெளிவுரை : நெஞ்சமே ! இப் பிறவியில் உய்யும் வழி தெரியவில்லையே என்று கவலை கொள்ளாதே ! அஞ்சவும் வேண்டாம். வாசனை மிக்க தாழை, சந்தனம், வாழை, வண்டுகள் சூழ்ந்த குவளை மலர் ஆகியவற்றைச் சுமந்து செல்லும் கோட்டாறு சூழ்ந்த கொச்சை வயம் என்னும் பதியில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய சிவபெருமான் திருவடியை, நினைந்து ஏத்துவாயாக. உனக்கு அனைத்தும் கைகூடும்.
960. மறைகொளும் திறலினார் ஆகுதிப்
புகைகள்வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனல்அணி செழும்பதி
திகழ்மதில் கொச்சை தன்பால்
உறைவிடம் எனமன மதுகொளும்
பிரமனார் சிரம்அறுத்த
இறைவனது அடியினை இறைஞ்சிவாழ்
நெஞ்சமே அஞ்சல் நீயே.
தெளிவுரை : நெஞ்சமே ! நீ அஞ்ச வேண்டாம். வேதங்களை ஓதும் மறையவர்கள், வேள்வி இயற்றி அதன் ஆற்றலால் மழை வளம் பெருகி ஓங்கும் சிறப்புடைய கொச்சை வயம் என்னும் பதியைத் தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபெருமானுடைய திருவடியை ஏத்தி வாழ்வாயாக.
961. சுற்றமும் மக்களும் தொக்கஅத்
தக்கனைச் சாடி அன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப்
பங்கமா உள்கினாய்ஓர்
குற்றமில் அடியவர் குழுமிய
வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவம் அருள்புரி நம்பனை
நம்பிடாய் நாளுநெஞ்சே.
தெளிவுரை : நெஞ்சமே ! தீய நோக்கத்துடன் இயற்றிய தக்கனது வேள்வியையும் அதற்குத் துணையாக இருந்தவர்களையும் தகர்த்த சிவபெருமான், மலை அரசன் மகளாக அவதரித்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், குற்றமற்ற அடியவர்கள் வாழ்கின்ற வீதி சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவி நல்ல தவப் பயனை அருளிச் செய்பவன் நம்பன். அப்பெருமானை மனம் உவந்து ஏத்துக. நாள்தோறும் நம்பிக்கையுடன் ஏத்துக.
962. கொண்டலார் வந்திடக் கோலவார்
பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித்து ஏறிமா
முகில்தனைக் கதுவு கொச்சை
அண்டவா னவர்களும் அமரரும்
முனிவரும் பணிய ஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே
உள்குநீ அஞ்சல் நெஞ்சரே.
தெளிவுரை : பொழில்கள் சூழ்ந்து விளங்க, மூங்கில்களைப் பிடித்து உயர்ந்து ஏறிய வானரங்கள் மேகங்களைக் கையால் பற்றும் எழிலை உடையது கொச்சை வயம். அத்தகைய பதியில் விளங்குகின்ற, நீலகண்டராய் மேவும் சிவபெருமானை. இவ்வண்டத்தில் மேவும் தேவர்கள். முனிவர்கள் மற்றும் ஏனைய அண்டங்களில் உள்ளவர்கள் ஆகிய அனைவரும் பணிகின்றனர். நெஞ்சமே ! நீ அஞ்சாதே. அப் பெருமானை ஏத்துக. உனது அச்சம் யாவும் தீரும் என்பது குறிப்பு.
963. அடலெயிற்று அரக்கனார் நெருக்கிமா
மலையெடுத்து ஆர்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார்
உறைவிடம் ஒளிகொள் வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமும்
தொத்துவண் புன்னைமாடே
பெடையொடும் குருகினம் பெருகுதண்
கொச்சையே பேணுநெஞ்சே.
தெளிவுரை : இராவணன், ஆரவாரித்துக் கயிலை மலையைப் பெயர்த்த போது, திருப்பாத விரலை ஊன்றி அடர்த்து விளங்கிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பூங்கொடிகளில் வெண் மலர்களும், பவளம் போன்ற செம்மலர்களும், முத்துப் போன்ற அரும்புகளும் கொத்தாக விளங்கப் புன்னை மரங்களில், பறவை இனம் தம் பெடையுடன் மகிழ்ந்துறையும் கொச்சைவயம் ஆகும். நெஞ்சமே ! அந் நகரினைப் பேணுக.
964. அரபினில் துயில்தரும் அரியுநற்
பிரமனும் அன்றயர்ந்து
குரைகழல் திருமுடி அளவிட
அரியவர் கொங்கு செம்பொன்
விரிபொழில் இடைமிகு மலைமகள்
மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார்
கொச்சையே கருது நெஞ்சே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் திருவடியையும் திருமுடியையும் தேடிக் காண முடியாதவாறு அரிய பொருளாகிய சிவபெருமான், தேன் மணக்கும் செம் மலர்கள் விளங்கும் பொழில்களுக்கு இடையில் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருப்பது கொச்சை வயம் ஆகும். அதனை, நெஞ்சமே ! கருதுவாயாக. தலத்தையும் ஆங்கு உறையும் ஈசனையும் ஏத்துக என்பது குறிப்பு.
965. கடுமலி உடலுடை அமணரும்
கஞ்சியுற் சாக்கியரும்
இடும்அற உரைதனை இகழ்பவர்
கருதுநம் ஈசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை
யவர்பணிந்து ஏத்தஞாலம்
உடையவன் கொச்சையே உள்கிவாழ்
நெஞ்சமே அஞ்சல் நீயே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் இகழ்ந்து உரைக்கும் சிவபெருமான், தேவர்கள் போற்றுகின்ற நாயகராகவும், நான்கு மறைகளும் பயின்ற அந்தணர்கள் ஏத்தும் நாதராகவும் விளங்குபவர். அப் பெருமான் உறையும் இடம் கொச்சைவயம். அதனை, நெஞ்சமே ! ஏத்துக. அச்சத்தை விடுக.
966. காய்ந்துதம் காலினால் காலனைச்
செற்றவர் கடிகொள் கொச்சை
ஆய்ந்துகொண்டு இடம்என இருந்தநல்
அடிகளை ஆதரித்தே
ஏய்ந்தொல் புகழ்மிகும் எழில்மறை
ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர்
நல்லவா னுலகின் மேலே.
தெளிவுரை : காலனைத் திருப்பாதத்தால் மாய்த்த அடிகளாகிய சிவபெருமான். தமது இடமாகத் தேர்ந்து கொண்டது கொச்சை வயம் ஆகும். ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனைப் போற்றி உரைத்த புகழ் மிகுந்த ஞானசம்பந்தரின் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், நன்மை வளரும் வானுலகில், மேன்மையாய் விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக