வியாழன், 11 ஜூன், 2015

திருவண்ணாமலை கிரிவலம் செல்வோர்களுக்காக...

ராதே கிருஷ்ணா 12-06-2015






திருவண்ணாமலை கிரிவலம் செல்வோர்களுக்காக...

காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது.
அஷ்ட லிங்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ராஜகோபுரம் தரிசித்து, வெளியே வந்ததும், முதலாக வருபவர் இந்திர லிங்கம். தேவர்களின் தலைவன் இந்திரனால் நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் உரிய லிங்கம். நீண்ட ஆயுள், கீர்த்தி வழங்குபவர். கிழக்கு திசைக்கு அதிபதி.

இரண்டாவதாக வருபவர், அக்னி லிங்கம். அக்னி பகவானால், நிறுவப்பட்ட லிங்கம். பக்தர்களுக்கு, நோய் நொடிகளையும், பயத்தையும் போக்குபவர். சந்திரனுக்குரிய லிங்கம். அக்னிலிங்கத்துக்கு முன் வரும் அக்னி குளத்தில் நீரில் கால்கள் நனைய, எதிரில் இருக்கும் மலையை ஒரு பௌர்ணமி இரவில் பாருங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு still ஆக இருக்கும். அனுபவித்து பாருங்கள். தென்கிழக்கு திசைக்கு அதிபதி.

மூன்றாவதாக எம லிங்கம். எமதர்மரால், நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், செவ்வாய்க்குரிய லிங்கம். தேடி வரும் பக்தர்களுக்கு, நீண்ட ஆயுள் வழங்குபவர். தெற்கு திசைக்கு அதிபதி.



அடுத்து வருபவர் நிருதி லிங்கம். தென்மேற்கு திசைக்கு அதிபதி. கருவறை அருகில், நல்லதொரு ஆன்மிக அதிர்வை உணர முடியும். மற்ற தேவர்களை எல்லாம் நாம் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தாலும், நிருதி இதற்கு முன் நான் கேள்விப்படாதவர். சீரிய தவத்தினாலே, அவருக்கு இந்த பதவி. உலகில் உள்ள, அத்தனை பூதங்களுக்கும், தலைவர் நிருதி. நவ கிரகங்களில், ராகுவுக்கு உரிய லிங்கம். அண்டி வரும் பக்தர்களுக்கு, ஆரோக்கியம், புகழ், சொத்துக்களை அள்ளி வழங்குபவர். குழந்தை பேறு வேண்டுபவர்கள், இங்கே மனமுருகி வேண்ட, அவர்கள் பலன் அடைவது திண்ணம்.



அடுத்து வருபவர், வருண லிங்கம். வருண பகவானால், நிறுவப்பட்டு வழிபடும் லிங்கம். நீதிதேவனான சனி பகவானுக்கு உரிய லிங்கம்.இந்த உண்மை தெரிய வந்தால், பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அலைமோதும். . ஆனால், நடந்து செல்லும் பக்தர்களின் ஒரு அவசர கதி 'சல்யூட்' ஐ ஏற்றுக்கொண்டு அமைதியாக அருள் பாலிக்கிறார். வேண்டி வரும் பக்தர்களை நோய் களிலிருந்து விடுவிக்கிறார். குறிப்பாக நீரினால் ஏற்படும், அனைத்து வியாதிகளும் சொஸ்தமாகிவிடும். மேற்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார்.

ஆறாவதாக , வடமேற்கு திசைக்கு அதிபதியாக அருள்பாலிப்பவர் வாயு பகவானால் நிறுவப்பட்ட வாயு லிங்கம். நவ கிரகங்களில் 'கேது' வுக்குரிய லிங்கம். ஆத்மார்த்தமான வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இதயம், நுரையீரல், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளை நீக்குகிறார்.

அடுத்து வருபவர், வடக்கு திசைக்கு அதிபதியாக வரும் குபேரனால், நிறுவப்பட்டு வழிபட்டு வரும் குபேர லிங்கம். நவக் கிரகங்களில் 'குரு' பகவானுக்குரிய லிங்கம். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு , வாழ்வில் முன்னேற்றங்களைத் தந்து , பொருளாதார நிறைவை ஏற்படுத்தித் தருபவர்.

கிரி வலப் பாதையில், கடைசியாக வருபவர் ஈசான்ய லிங்கம். வட கிழக்கு திசைக்கு அதிபதியான ஈசன்யானால் நிறுவப்பட்ட லிங்கம். நவக் கிரகங்களில் புதனுக்குரிய லிங்கம். நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்குபவர்.

மேற்கூறிய அஷ்ட லிங்கங்கள் தவிர மலை சுற்றும் பாதையில் ஏராளமான இறை சந்நிதிகள் உள்ளன. வலம் வரும்போது அடி அண்ணாமலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள அம்மனின் அழகு முகத்தை அருகில் இருந்து தரிசித்துப் பாருங்கள். ஆதி அண்ணாமலை கோவிலுள் சென்று தரிசித்து வர நீங்கள் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். உள்ளே இருக்கும்போது நீங்கள் நிச்சயமாக ஒரு அதிர்வை உணர முடியும்.

அஷ்ட லிங்கங்களை நிறுவிய தேவர்கள் பலமுறை நேரில் வந்து சூட்சமமாக வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள்.
கலி முற்றி வரும் இந்த காலத்தில், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது எதோ ஒரு தேவை இல்லாத செயல் போல தோன்றுகிறது நிறைய மக்களுக்கு. ஆனால், வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு உள்ளேயே உழன்று கொண்டு , எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடும் அன்பர்களுக்கு , அண்ணாமலை ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
ஒரு முறை கார்த்திகை தீப தரிசனம், உங்கள் தலை முறைக்கே வழி காட்டும். சென்ற கார்த்திகை தீபத்திற்கு, கிட்டத் தட்ட 45 லட்சம் பக்தர்கள் கூடினர். தமிழ் நாட்டில் இது ஒரு அபூர்வ நிகழ்வு.
வாஸ்து சாஸ்திரப்படி , அற்புதமாக அமைந்த இரண்டு ஸ்தலங்கள் : திருவண்ணாமலையும் , திருப்பதியும் ஆகும். உங்கள் வாழ்வில் நீங்கள் மென்மேலும் உயர , உங்களால் முடிந்தவரை இந்த ஸ்தலங்களுக்கு சென்று இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். பரம்பொருளின் துணை உங்களுக்கு தேவையான நேரத்தில் கச்சிதமாக கிடைப்பது உறுதி.அருணகிரி நாதர் முதல் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி வரை பலப்பல மகான்கள் வாழ்ந்த ஸ்தலம்...

...ஓம் நம சிவாய...





































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக