சனி, 13 ஜூன், 2015

மஹா பெரியவா சொன்னதின் சாராம்சம்.

ராதே கிருஷ்ணா 14-06-2015







மஹா பெரியவா சொன்னதின் சாராம்சம்.

'' மறைந்த நம் தாய் தந்தையருக்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்?

யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களைப் போய்ச் சேருமா?, வெறுமே எள்ளும் நீரும் இறைத்தல் அவர்களுக்கு திருப்தி தருமா? வெறும் மூட நம்பிக்கை என்று சில அரைகுறைகள் இன்றும் கேட்கின்றனர். இவற்றுக்கு பெரியவா தரும் விடை தான் இன்றைய செய்தி

மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும்.

''ஆதித்யம்'' (ஒர் அதிதிக்காவது உணவு படைப்பது) விருந்தோம்பல் இதுதான். இது மனுஷ யக்ஞம்.

பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. பிரம்மம் என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் வேதம் என்று அர்த்தம். வேதம் ஒதுவதும், ஒதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷி களின் திருப்திக்காக ஏற்பட்டது.

எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் பூத யக்ஞம் அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம். எனவே தான் நாம் பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிக தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.

வேத நெறியில் சொல்லப்பட்டதையே தான் ஏறக்குறைய திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்.

''தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.'' புரியலையா? விளக்கம் இதோ.

தென்புலத்தார் = பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையார்களுக்கும் நமது கடைமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். '' மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ'' (''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ") என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையார் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.

அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம்,சிரார்த்தம் இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும். பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் .

''எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன. அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா?'' -- ஒரு சீர்த்திருத்தக்காரர் வாய்விட்டுக் கேட்கிறார். அவரை விடுங்கள் இதை படிக்கும், படிக்கக் கேட்கும் உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம்.

ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். காலேஜில் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே பையன் அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தான் தெரியும். எப்போதோ அடித்திருக்கிறார். சில நேரம் சிலருக்கு மணி ஆர்டர் அனுப்பியிருக்கிறார். அது என்ன ''தந்தி மணியார்டர் ''? அவருக்கு புரியவில்லை. அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் ''தந்தி மணியார்டர் ''பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் நாளை போய் சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார். குமாஸ்தா

பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர்,

''என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு நீங்கள் அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச் சேரும்?'' -- அப்பா
''அது போய்ச் சேர்ந்துவிடும்'' -- குமாஸ்தா . கட்டுக் கடகடஎன்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ருபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே பணம் எப்படிப் போய் சேரும். நான் கொடுத்த பணம் இங்கயே இன்னும் பெட்டியில் இருக்கிறதே '' என்று அப்பாவுக்குச் சந்தேகம். ஆனால் பணம் போய் சேர்ந்து விட்டது.

தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும்.

நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேச்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.









ராம் ராம், இந்த நாள்இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 52

கல்வித் திட்டத்தில் கால அளவைகள்

தற்காலத்தில் வேத பாடசாலைகளில் பன்னிரண்டு வருஷ கோர்ஸ் வைப்பது வழக்கமாயிருந்தது. பாஷ்யங்களையும் நன்றாகப் படித்து நல்ல அர்த்த ஞானம் பெறுவதற்கு இதற்கப்புறம் எட்டு வருஷம் படிக்கவேண்டியிருக்கிறது. பூர்வகாலத்தில் மாணவனின் புத்தியைப் பொறுத்ததும், அவன் எந்த வித்யைகளை எவ்வளவு தூரம் அப்யஸிக்க விரும்புகிறான் என்பதைப் பொறுத்தும் வித்யாப்யாஸ காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பன்னிரண்டு வருஷமே பொதுவாக ஏற்பட்டது. அதம பக்ஷம் ஒன்பது வருஷம். பதினெட்டு வருஷ, முப்பத்தாறு வருஷக் கோர்ஸ்களும் இருந்திருக்கின்றன. வாழ்நாள் முழுதும் நன்றாக ஸ்பெஷலைஸ் பண்ணிக்கொண்டே போவதற்கு வஸதியாக, ‘இத்தனை வருஷம்’ என்று கட்டுப்படுத்தாமல் கோர்ஸ்கள் வைத்திருந்ததாகக்கூட மநுஸ்ம்ருதியிலிருந்து தெரிகிறது. அறிவுக்கே தன்னை அர்பணித்துக் கொண்டு, கல்யாணம் க்ருஹஸ்தாச்ரமம் இல்லாமல் கல்வியிலேயே ஒருவள் ப்ரஹ்மசாரியாக வாழ்நாள் முழுதும் ஈடுபட்டிருக்க தர்ம சாஸ்த்ரம் அநுமதி தருகிறது. சுத்த ப்ரஹ்மசாரியாக இருக்கக்கூடியவன், விசேஷமான புத்தி ப்ரகாசமுள்ளவன் என்பதாக குரு நன்றாகப் பரீக்ஷித்து நிச்சயப்படுத்திக் கொள்ளக்கூடியவனுக்கு மாத்திரமே இப்படி ஆச்ரம விதிகளிலிருந்து விலக்கு தந்திருக்கிறது. அவனைத்தான் நைஷ்டிகன், நைஷ்டிக ப்ரம்மசாரி என்பது.

கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு வருஷத்தையும் இரண்டு டெர்ம்களாகப் பிரித்திருந்தார்கள். முதல் டெர்ம் சுமார் ஐந்து மாஸம் கொண்டது. இரண்டாவது டெர்ம் சுமார் ஏழு மாஸ காலம். முதல் டெர்முக்கு ‘உபாகர்மம்’ என்றும் இரண்டாவது டெர்முக்கு ‘உத்ஸர்ஜனம்’ அல்லது ‘உத்ஸர்கம்’ என்றும் பெயர்.

உபாகர்மம் என்றவுடன் சில பேருக்காவது ‘ஆவணியாவட்டம்’ – அதவாது வருஷா வருஷம் புதுப்பூணூல் போட்டுக் கொள்ளும் நாள் – என்று நினைவுக்கு வரலாம்.

இது ரிக் வேதிகளுக்கு ச்ராவண மாஸத்தில் ச்ரவண நக்ஷத்ரம் வரும் நாள். ச்ராவண மாஸம் என்பது ஆடி அமாவாஸ்யையிலிருந்து ஆவணி அமாவாஸ்யை வரையுள்ள காலம். ச்ராவணி என்பதன் திரிபுதான் ஆவணி.

யஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் என்பது ச்ராவண மாஸப் பௌர்ணமியன்றாகும்.

ரிக் வேதிகள் ச்ரவண நக்ஷத்ரத்தை வைத்து நாளை நிர்ணயிக்கிறார்கள்; யஜுர் வேதிகள் பௌர்ணமித் திதியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள்.

மிகவும் பூர்வ காலத்தில் ச்ராவண மாஸப் பூர்ணிமை தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரத்தன்றேதான் வந்து கொண்டிருந்தது, அதனால்தான் அந்த மாஸத்துக்கே அப்படிப் பேர். தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரமும் பௌர்ணமியும் ஒன்றாகவே இருந்த காலத்தில் அந்த நாளில்தான் ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இருவரும் உபாகர்ம டெர்மை ஆரம்பித்தார்கள். அப்புறம் க்ரஹக் கோளாறில் அம்மாஸப் பௌர்ணமியன்று ச்ரவண நக்ஷத்ரத்துக்கு அடுத்ததான அவிட்டம் வந்தபோதும் யஜுர் வேதிகள் பௌர்ணமித், பெனர்ணமித் திதியிலேயே உபாகர்மாவை வைத்துக் கொண்டார்கள். தர்ம சாஸ்த்ரங்களில் குறிப்பாக ‘ச்ராவண பூர்ணிமையில் உபாகர்மம் செய்யவேண்டும்’ என்றே சொல்லியிருப்பதால் (பூர்ணிமைத்) திதியை யஜுர் வேதிகள் முக்யமாக எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவிட்டத்தில் அந்தப் பூர்ணிமை வந்தாலும் அன்றைக்கே உபாகர்மா செய்தார்கள்.

இதுதான் “ஆவணி அவிட்டம்” – அதாவது “ஆவணியாவட்டம்” என்று நாம் சொல்வது.

ரிக்வேதிகள் இப்போதும் திதியைப் பார்க்காமல் சரவண நக்ஷத்திரத்திலேயே உபாகர்மாவைத் தொடர்ந்து செய்தார்கள். இன்று வரைக்கும் அப்படித்தான் நடக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் உபாகர்மாவை “ச்ராவணம்” என்றே சொல்வது இதனால்தான். இப்படியாக, ரிக்வேதிகளுடைய உபாகர்மாவுக்கு அவிட்ட ஸம்பந்தமேயில்லை. ஆனாலும் தக்ஷிணத்தில் யஜுர்வேதிகளே பெரும்பாலாராயிருப்பதால் அவர்கள் கொடுத்த “ஆவணியாவட்ட”ப் பெயரையே ரிக் வேதிகளும் தங்களுடைய உபாகர்மாவுக்கும் சொல்கிறார்கள்!

இப்போதும் சில வருஷங்களில் ச்ராவண மாஸப் பௌர்ணமி ச்ரவண நக்ஷத்ரத்திலேயே வருகிறது. அப்போது ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இரண்டு பேருக்கும் ஒரே நாளில் உபாகர்மா வருகிறது.

ஸாமவேதிகள் இதற்கு ஒரு மாஸம் தள்ளி (ஆவணி அமாவாஸ்யையிலிருந்து புரட்டாசி அமாவாஸ்யை வரையுள்ள ஒரு மாத காலமாகிய) பாத்ரபத மாஸத்தில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் உபாகர்மா செய்கிறார்கள். அநேகமாக அது பிள்ளையார் சதுர்ததியாகவோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னே பின்னேயோ இருக்கும். ஹஸ்தமும் பஞ்சமியும் ஒன்று சேர்ந்திருந்தால் விசேஷமென்று சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. ச்ராவண மாஸப்பூர்ணிமையும் ச்ரவணமும் தப்பாமல் சேர்ந்தே வந்த அக்காலத்து பாத்ரபதமாஸத்தில் ஹஸ்தம் பஞ்மியிலேயே வந்திருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அது அநேகமாகப் பிள்ளையார் சதுர்த்தியன்றோ, அல்லது அதற்கு முதல் தினமான த்ரிதீயையாகவோ வருகிறது.

உபாகர்மம் என்பதே இப்போது பல பேருக்குத் தெரியாத வார்த்தை! (தாங்கள் என்ன வேதம் என்பதுகூட அநேகம் பேருக்குத் தெரியாமலிருக்கலாம்!) தெரிந்தவர்களில் பெரும்பாலாரும் அது பழைய பூணூல் சிக்குப்பிடித்து அழுக்காகி விட்டதே என்று புதுப் பூணூல் மாற்றிக் கொள்கிற ஒரு நாள் என்றுதான் நினைக்கிறார்கள். உண்மையில் பூணூல் மாற்றிக்கொள்வதென்பது உபாகர்மாவிலே ஒரு சின்ன அங்கம்தான்.

உபாகர்மா என்பது அந்த ஒரு நாளோடு போகாமல் அடுத்த ஐந்தாறு மாஸங்களான ஒரு டெர்முக்கு ஆரம்ப நாளாக இருப்பதாகும்.

இந்த முதல் டெர்மில் மூலமான வேதத்தை மட்டும் ஆசார்யர் கற்றுக் கொடுத்துச் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள். அதாவது ‘ச்ருதி’ என்றே சொல்லப்படுவனவான வேதஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துக்கள் ஆகியவற்றில் பாடம் நடக்கும். புஷ்யமாஸம் என்கிற நம் தை பிறக்கும்வரையில் இந்தப் பாடம் தொடரும். (புஷ்யத்துக்குத் ‘தைஷம்’ என்றும் பெயர் உண்டு. ‘தைஷம்’ தான் ‘தை’ ஆயிற்று.)

அப்போது ‘உத்ஸர்ஜனம்’ என்கிற கர்மாவைச் செய்து ச்ருதி பாடத்தை முடிப்பார்கள். புஷ்யமாஸம் பூர்ணிமையிலாவது அதற்கு முன்வரும் ரோஹிணியிலாவது உத்ஸர்ஜனகர்மா செய்யவேண்டும்.

ஸாமகர்கள் (அதாவது ஸாமவேதிகள்) புரட்டாசியில்தான் உபாகர்மம் செய்வதால், அத்யயன டெர்ம் ஐந்து மாஸமோ அல்லது குறைந்த பக்ஷம் நாலரை மாஸமோ இருக்கவேண்டும் என்ற விதிப்படி, அவர்கள் மாக பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். தை அமாவாஸ்யைக்குப் பதினைந்து நாட்கள் கழித்துவரும் பௌர்ணமியே மாக பூர்ணிமை.

உத்ஸர்ஜனம் என்றாலும் விஸர்ஜனம் என்றுதான் அர்த்தம் – அதாவது “விட்டு விடுவது”. வேத அத்யயன – அத்யாபனங்களை ஒரு கட்டத்தில் விட்டுவிடுவதற்காகச் செய்யும் வைதிக கர்மா உத்ஸர்ஜனம். மறுபடி ஏழு மாஸம் கழித்து அடுத்த “ஆவணியாவட்ட”த்தில், விட்ட கட்டத்திலிருந்து வேத பாடத்தைத் தொடங்கவேண்டும். ‘உபக்ரமணம்’, என்றால் தொடங்குவது என்று அர்த்தம், அதனால்தான் அன்று செய்கிற கர்மாவுக்கு ‘உபாகர்மா’ என்று பெயர்.

வேதத்தில் புதுப்பாடங்கள் இல்லாத இந்த ஏழு மாஸந்தான் இரண்டாவது “டெர்ம்”. இதில் வேதாங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களான* சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவார்கள். ஏனைய எல்லா வித்யைகளைக் கற்றுக் கொடுப்பதும் இந்த டெர்மில்தான். உபாகர்மாவுக்கான நாள் வந்தவுடன் இதை நிறுத்திவிட்டு, வேத பாடங்களுக்குப் போவார்கள்; அதை உத்ஸர்ஜனம் பண்ணினவுடன் மறுபடி இந்த வேதாங்கங்களிலும் காவ்யம் முதலான இதர வித்யைகளிலும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பார்கள், இந்த உத்ஸர்ஜனம்தான் வடக்கே “ஸரஸ்வதி பூஜா” என்று சொல்லும் வஸந்த பஞ்சமி.

தற்போது “ஆவணியாவட்டம்” என்று பண்ணுவதில் போளியும் வடையும்தான் முக்யமாயிருக்கின்றன! ஒரு டெர்ம் முழுதும் கற்க வேண்டிய வேத பாடங்களில் ஆரம்ப ஸூக்தத்தை மட்டும் உபாகர்மாவன்று வாத்யார் சொல்ல, மற்றவர்கள் தப்பும் தவறுமாகத் திருப்பிச் சொல்லி விடுகிறார்கள். அதுமட்டுமில்லை. ‘விட்டு விடும்’ உத்ஸர்ஜன கர்மாவையும் அன்றே பண்ணி (இப்படி ஒன்று வாத்யார் பண்ணி வைப்பதாகக்கூடப் பல பேருக்குத் தெரிவதில்லை), வேதாங்கங்களிலும் ஒவ்வொன்றில் ஒவ்வொரு ஸூத்ரத்தை மாத்ரம், வாத்யார் சொல்வதைத் திரும்பவும் உளறிக் கொட்டிவிட்டு முடிப்பதாக ஏற்பட்டிருக்கிறது. ஒரேயடியாக இந்த ஆவணியாவட்டத்துக்கே ‘உத்ஸர்ஜனம்’ செய்யாமல் எதனாலோ விட்டு வைத்திருக்கிறார்கள்! வடை, போளிக்காக இருக்கலாம். இப்படி நாமே நம்மைப் பரிஹஸித்துக் கொள்ளும்படியான துர்த்திசையில் இருக்கிறோம்.

வித்யாப்யாஸ காலத்தில் ஒரு ப்ரஹ்மசாரியானவன் இப்படி மாறி மாறி வேதம், வேதாங்காதி இதர வித்யைகள் என்று இரண்டு டெர்ம்களில் படித்தப் பன்னிரண்டு வருஷங்களில் பூர்த்தி பண்ணவேண்டும். தன் வேத சாகையையும் தன் வேதத்தையும் மட்டுமின்றி மற்ற வேதங்களையும் படிப்பது, இரண்டு வேதம் தெரிந்த த்விவேதி, மூன்று வேதம் தெரிந்த த்ரிவேதி, நாலுவேதம் தெரிந்த சதுர்வேதி என்றெல்லாம் ஆவது; வேதாங்கம் மட்டுமில்லாமல் மற்ற வித்யைகளையும் படிப்பது; இதர ஜாதியாருக்கான வித்யைகளையும் கற்பது; ஸ்பெஷலைஸ் செய்வது என்றெல்லாம் போகும்போதுதான் பதினெட்டு வருஷம், முப்பத்தாறு வருஷம்கூட குருகுலவாஸம் செய்வார்கள்.

*இரண்டாம் பகுதியில் ‘வேத மதம்’ என்ற பிரிவில் “ஷடங்கங்கள்” என்ற உரையும் அதை அடுத்து வரும் உரைகளும் பார்க்க.



3 hrs ·

காஞ்சி மடத்தின் பீடாதிபதியாகும்போது, மகா பெரியவாளுக்கு வயது 13. கும்பகோணம் மடத்தில் அவரைப் பார்க்க வருவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது. இதனால், வேத பாடங்களைக் கற்பதற்கு அவரால் நேரம் ஒதுக்கவே முடியவில்லை. என்ன செய்வது என மடத்து அதிகாரிகள் யோசித்தனர். முசிறி- தொட்டியம் சாலையில், காவிரியின் வடகரையில் உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் அவரைத் தங்கவைக்கலாம் என முடிவு செய்தனர்.
10-ஆம் நூற்றாண்டில், இந்தக் கிராமம் செழிப்பாக இருந்துள்ளது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், இந்தக் கிராமத்தை அந்தணருக்குத் தானம் அளித்துள்ளதைத் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன. இங்கேயுள்ள சிவாலயம், எத்தனை பிரமாண்டம் என்பது, நிலத்தை அகழ்ந்தபோதுதான் தெரிந்ததாம்! இந்தக் கடவுளின் திருநாமம் தில்லைநாதன்; கடவுளுக்குப் பரிசாக இந்த ஆலயம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊருக்கு அருகில் ஸ்ரீநிவாசநல்லூர் எனும் கிராமம் உள்ளது. இங்கும் ஆலயம் உண்டு. இரண்டு ஊர்களின் ஆலயங்களும், சோழர் காலத்திய கட்டமைப்புடன் திகழ்கின்றன. ஒருகாலத்தில், மகேந்திரமங்கலம் கிராமம் போர்க்களமாகவும் இருந்துள்ளதாம்! ‘கோயில் பற்றிய குறிப்புகள், தமிழில் வசன நடையில் இல்லாமல், கவிதை நடையில் இருப்பது சுவாரஸ்ய மாக உள்ளது’ என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் இரா.நாகசாமி.
இத்தனைப் பெருமைமிகு மகேந்திரமங்கலத்தில், 1911 முதல்14-ஆம் வருடம் வரை, வேதங்களைக் கற்றறிந்தார், காஞ்சி மகான். மாணவர்கள் அனைவரும் ஆசிரியரை வணங்கும் வேளையில், சின்னஞ்சிறிய மாணவரை ஆசிரியரே வணங்க வேண்டியிருந்தது. காரணம், இவர் மடாதிபதியாயிற்றே! இந்தப் பாடசாலையை, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த குவளக்குடி சிங்கம் அய்யங்கார் என்பவர் நடத்தி வந்தார். முதல் மாடியில் வேத பாடசாலை. அந்தக் கட்ட டத்தை வேறெந்தக் காரியத்துக்கும் பயன்படுத்தக்கூடாது எனக் கல்லில் சாசனம் எழுதி, பத்திரப் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளார் சிங்கம் அய்யங்கார். தற்போது அவருடைய பேரன் மற்றும் குடும்பத்தார், வேத பாடசாலையை நிர்வகித்து வருகின்றனர். காஞ்சிப் பெரியவா, இங்கிருந்தபோது துளசிச் செடி நட்டு வளர்த்தாராம். அதனைத் தினமும் வழிபட்டுவிட்டுத்தான், வேதம் கற்பாராம். அந்தத் துளசிச் செடியை இன்றைக்கும் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலப் பகுதியை, சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒருவர் வாங்கி, செங்கல் சூளை போடுவதற்காகத் தோண்டினார். அப்போதுதான் புதையுண்ட நிலையில் இருந்த ஆலயமும், அதன் பிரமாண்டமும் தெரிந்ததாம். நந்தியின் திருமுகம் மட்டும் சற்றே சிதிலமாகியிருந்தது. அந்தக் களத்து மேட்டிலேயே சிவலிங்கத்தையும் நந்தியையும் வைத்திருந்தனர். 60-களில் இங்கு வந்த மகா பெரியவா, ‘பகவான் இப்படி வெயிலிலும் மழையிலும் இருக்காரே’ என வருந்தினாராம். பழையபடி பெரிய கோயிலாக இல்லாது போனாலும், சின்னதாக ஒரு கோயில் கட்டலாமே என விரும்பினாராம். பிறகு, 2006-ஆம் வருடம், ஸ்ரீஜெயேந்திரர் இங்கு வந்தபோது, பெருமாள் கோயிலுக்கு அருகில் கூரை போட்டு, கோயிலாக அமைத்தாராம்.
இங்கு வரும்போதெல்லாம், அருகில் உள்ள ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கும் செல்வாராம் பெரியவா. ஆயிரம் படிகளை மளமளவென்று அவர் ஏறிக் கடப்பதைப் பார்ப்பதே அத்தனை அழகு! இந்த ஊருக்குஸ்ரீஆதிசங்கரர் விஜயம் செய்திருக்கிறார். இதை றிந்த மகா பெரியவா, சந்தியா வந்தனப் படித்துறைக்குச் செல்லும் வழியில் உள்ள மடத்தில், ஸ்ரீஆதி சங்கரருக்கு திருவிக்கிரகம் ஸ்தாபித்துள்ளார். இப்போது அவருக்கு அருகிலேயே மகா பெரியவாளுக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்துள்ளார், ஸ்ரீஜெயேந்திரர். ”இங்கே அனுதினமும் ஆதிசங்கரர், மகா பெரியவா இரண்டு பேருக்கும் பூஜைகள் நடந்துண்டிருக்கு” என்கிறார் ராமமூர்த்தி குருக்கள். ”ஸ்வாமி ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்- ஸ்ரீதிரிபுரசுந்தரிக்கு இங்கு கோயில் எழுப்பிவிட்டால், மகா பெரியவாளின் விக்கிரகத்தை அந்தக் கோயிலில் வைத்து வழிபடலாம்” என்கிறார் தேசியவாதியான காந்திப்பித்தன். காஞ்சி மகானுடன் பழகியவராம் இவர்.
”பெரியவா ஆசைப்பட்ட மாதிரி அங்கே கோயில் கட்டி, சிவலிங்கத்தையும் நந்தியையும் பிரதிஷ்டை பண்ண ஏற்பாடு பண்ண முடியாதா?” என்று கிருஷ்ண கான சபா செயலாளர் பிரபுவிடம் கேட்டாராம் ஸ்ரீஜெயேந்திரர். அவரின் வேண்டுகோளை ஏற்ற பிரபு, ஆலயம் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளார். கடந்த வருடம் பூமி பூஜை போடப்பட்டபோது, மொத்த மக்களும் திரண்டு விட்டார்களாம்!
மகா பெரியவாளின் விக்கிரகத் திருமேனியை வடித்த சுவாமிநாத ஸ்தபதிதான், கோயில் பணியை ஏற்றிருக்கிறார். ”பெரியவாளோட விக்கிரகத்தின் கண்களைத் திறக்கும் நேரத்துல உடம்பே சிலிர்த்துப் போச்சு! அவரோட விருப்பமான, இந்தக் கோயில் கட்டுற பணி கிடைச்சிருக்கிறது, எனக்குக் கிடைச்ச பாக்கியம்!” என்று சொல்லிச் சிலிர்க்கிறார் ஸ்தபதி. மூலவர், அம்பாள், பஞ்சபரிவாரம், ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீசண்டிகேஸ்வரர் முதலான அனைத்து தெய்வ மூர்த்தங்களும் அமைக்கப்பட உள்ளதாம்!
”மகா பெரியவா படிச்ச வேதபாடசாலையைப் பார்க்கறதே புண்ணியம். அவரோட விருப்பப்படி கோயில் அமையறது, இந்த ஊருக்குக் கிடைச்ச வரம்” என்கிறார் மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த ஜெயராமன். மகாபெரியவா இங்கு படித்தபோது, அவருடன் நெருங்கிப் பழகியவராம் இவரின் தாத்தா.
மகேந்திரமங்கலம், இனி மங்கலகரமான தலமாகத் திகழும் என்பது உறுதி!






கல்யாணம் ஆன பிறகு சந்தியாவந்தனம் குளிக்காமல்
செய்யலாமா?

(கிரகஸ்தர்களுக்கு பெரியவாளின் அறிவுரை)

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

புத்தகம்-தாயுமான மகான்-3

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

வீட்டில் ஸ்ரீ மகா பெரியவாளுக்கு பூஜை செய்பவர்கள்
வபனம் செய்து கொண்ட அன்று பூஜை செய்யலாமா?
என்ற கேள்விக்கு, அன்று பூஜை செய்யாமல் இருப்பது
நல்லது என்றார் பாலுமாமா.

வீட்டில் இருப்பவர்கள் பகவானுக்கு பூஜை செய்ய
என்ன செய்யலாம்? என்ற கேள்விக்கு ஸ்ரீ பகவானுக்கு
ஒரு உத்திரனி தீர்த்தம் விட்டு,சந்தனம் இட்டு,பூவை
போட்டு,பால் காண்பித்து இல்லையேல் கற்கண்டு
திராட்சை,கற்பூரம் காண்பித்தால் போதும்.
வில்வம் முக்கியம்.

இதை நான் (பாலு) ஸ்ரீ மகா பெரியவாளிடம் எப்படி பூஜை
செய்யலாம் என்றபோது ஸ்ரீமகாபெரியவா எனக்கு
சொன்னதை கூறி உள்ளேன் என்றார்.

குடுமி இல்லாதவர்கள் காதில் கூர்ச்சம் வைத்துக் கொள்ளலாம். தினம் தலைக்கு ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் ஒருஈரத்துணியால் தலையை
துவட்டிக் கொள்ளுங்கள் என்றார்.

கல்யாணம் ஆன பிறகு சந்தியாவந்தனம் குளிக்காமல்
செய்யலாமா? என்ற கேள்விக்கு,

"செய்யலாம், விபூதி இட்டுக்கொண்டு செய்யலாம்.
சந்தியா, ஸ்நானம்,ஜெபம், ஹோமம் என்று உள்ளது.
சந்தி முதலில்,பிறகு ஸ்நானம் என்று உள்ளது.
விபூதி தண்ணீரில் குழைத்தும் இட்டுக் கொள்ளலாம்.

விருத்தி (குழந்தை பிறந்த தீட்டு) கோயிலுக்கு
போகக் கூடாது.
 — with Kunchithapatham Kashyap.




கல்லூரிக்கு சென்ற மஹா ஸ்வாமி
திருச்சிராப்பள்ளியில் மாமுனிவர் தங்கி இருந்த சமயம் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர் மஹானிடம் வந்து தங்கள் கல்லூரியில் பெரியவரின் பொற்பாதம் பட வேண்டும்,குழந்தைகளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். மோன குரு பதில் ஏதும் சொல்லவில்லை.அவரும் தொடர்ந்து விண்ணப்பித்தவாறே இருந்தார். ஒரு நாள் அவரிடம் நாளை காலை உன் காலேஜிக்கு வரேன். நீயும் உன் மனைவியும் ஒரு பசுமாடு கன்றுக்குட்டியோடு காத்திருங்கோ என்றார்.பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி.அப்படியே தயாராக இருக்க மஹானும் வந்தார்.பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரித்தார். பக்தரிடம் என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ அங்கெல்லாம் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சுண்டு நீ முன்னாலே போ பின்னாலேயே நான் வரேன் என்றார். அப்படியே எல்லா இடமும் சென்று வந்தபின் வெளியே வந்து திருப்தியா உனக்கு என்று கேட்க அவர் என்ன பதில் சொல்வார்.கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். ஶ்ரீமடம் திரும்பிய மஹான் மாலை அடியார்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது காலையில் காலேஜ்க்கு போன பேச்சு வர,ஒருவர் பெரியவா ஏன் காலேஜ்ல பசு மாட்டு பின்னாலேயே போனார் என்று கேட்டார்.சிரித்த மஹான் அவன் எங்கிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான்.நான் வந்தா அவன் காலேஜ் ச்ரேயஸ்னு நினைச்சு கூப்பிட்டான்,ஆனால் அந்த காலேஜ் ஸ்தீரிகள் படிக்கும் காலேஜ்.அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா.மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம்.அதனால் என் ஆசாரத்துக்கு அங்க போய் எப்படி மிதிக்கிறது? அதனால தான் யோசனை செய்தேன்.அவன் ஆசையும் நிறைவேறணும் என் ஆசாரமும் கெடக்கூடாது.அதுக்கு ஒரே வழி,எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்திரத்தில இருப்பதால்,பசுமாட்ட முன்னால் விட்டு பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன் என்று சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பில் இருந்து மீளவே இல்லை.இப்படியும் தர்ம சூட்சமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? காலத்தின் மேல் பழி போட்டு பழி பாபங்களுக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த இப்பூமியில் ஒரு அறநெறிச் செம்மலா அன்பையும் அறத்தையும் அழகாக் இணைக்கும் சாமர்த்தியம் நம் காஞ்சி மஹானைத் தவிர வேறு யாருக்கு இருக்கும். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

ஜயவருடத்துதித்த ஜகத்குருவே!
முல்லைப் பூவே! முத்து மணியே! ஜயவருடத்துதித்த ஜகத்குருவே!
புன்னகைக் காவி உடையணிந்து புதியதோர் உலகம் காண புறப்படுகின்றார்!
இந்த வாச மலர் முல்லைப் பூ!(குரு தட்சிணா மூர்த்திக்கு முல்லைப் பூ)
முல்லைப் பூவே!” முல்லைப் பூவே!
முத்து மணியே! ஜயவருடத்துதித்த ஜகத்குருவே
பிள்ளை வடிவில் பேசும் நிலவே! தத்தித் தத்தி
தாவும் குயிலே! முத்தம் தந்து
முகிழ்க்கும் மலரே!” புலம் பெயர் மண்ணின்
பொய்யான வாழ்வையும் அது தரும் அவலங்களையும்
எப்படியோ இனம் காட்டுகிறார்! “வெளி நாடு!”
வாடைக்காற்று வந்த போதும்
வண்ண மலர்கள் மலர்ந்த போதும்
வாழ்வில் இங்கு அமைதி இல்லையே!” அடையாளம் காண்!”
புன்னகைக் காவி உடையணிந்து
புதியதோர் உலகம் காண புறப்படுகின்றார்!
அன்பு வழி நின்று மனிதம் வளர்க்க
அறைகூவல் விடுக்கின்றார்!
“புதிய உலகம்” எனக்குள்ளே நீர்!
இந்த உறவும் இந்த நெருக்கமும்
என்றும் வேண்டும் எமக்குள்ளே!
“என்னுள் நீர்!” விழிமூடும் போதும்
விளக்காக நீர்! மொழி பேசும் போதும்
இதழாக நீர்! உள்ளத்தில் நல்
உணர்வாக நீர்! தன்னம்பிக்கை யூட்டும்
ஒரு நன்னம்பிக்கை கவிதை!
அத்வைத அருளோடு அதன் பொருளும் தந்து
அதனோடு அத்வைத சிறப்பும் தந்து
ஆனந்த அத்வைத வாழ்வு தந்து
இருள் நீக்கி அத்வைத ஒளி சேர்த்து
ஈகையுடன் அத்வைத வரமளித்து
உணர்வின் உணர்வோடு நீர் கலந்து
ஊனங்கள் நீக்கித் தந்து
எண்ணிய யாவும் கைகூட
ஏற்றங்கள் தந்து எமை காக்கும் ஐயனே
ஒவ்வொரு நாளும் உம்மையே வேண்டுகின்றேன்
ஓடி வந்தெனைக் காத்திடுவாரே
ஔஷதப் பொருள் நீரே
குருவின் உருவே திருமகள் மகவே
அன்பின் வடிவே அமைதியின் பொருளே
அடியவர் நினைவே அருளில் மழையே
தொழுதிடும் அடியவர் அடைவார் பலனே
காஞ்சி ஓரிக்கை தபோவனமே
நீர் இருந்தாளும் அருந்திருத்தலமே
வருபவர் எவரும் அடைவார் நலமே
புகழும் பெயரும் பெறுவார் அவரே
திகழும் ஒளியாய் ஜொலிப்பார் அவரே
அண்டங்கள் பார்த்திடவே ஆலகாலம் தனையுண்ட
ஈஸ்வரனின் ரூபமே இறையம்சமே
ஊசி முனை தவமிருந்து உலகெல்லாம் காத்தருளும்
அன்பான அன்னையின் அருளுருவே
வேதங்கள் நான்கும் சாத்திரங்கள் ஆறும்
போற்றிய பாடிய தேவாம்சமே.....
அஞ்சாதே என்று அனுதினமும் சொல்லும்
அருளாளர் உம் தன் காருண்யமே
நெஞ்சத்தில் நிறுத்தியே நாள் தோறும் வேண்டினேன்
தஞ்சம் தந்தருள்வார் குருநாதரே.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!!
ஸ்ரீ மஹா சுவாமிகளின் திருமலர்ப்பாதம் தொழுவோம் திருவருள் பெறுவோம்.
பூமிப் பந்தையே ஒரு நொடியில் புரட்டிப்போடும் ஒரு நெம்புக்கோல் கவிதை இது!
Courtesy: Dr.Krishnamoorthi Balasubramanian
Dedicated to Sri Maha Periyava 122nd Jayanthi Maho









































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக