திங்கள், 7 நவம்பர், 2011

பகவத்கீதை - Part -3 ( அத் 11 முதல் அத் 17 வரை )

ராத கிருஷ்ணா 07 - 11 - 2011

பகவத்கீதை - Part -3

( அத்தியாயம்  11 முதல் அத்தியாயம் 17 வரை )

பதினோன்றாம் அத்தியாயம்
பகவத்கீதை | விச்வரூபதர்சன யோகம்



இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான். விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுவதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான்.
பிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். அர்ஜுனனது வேண்டுதல் 1-4 -ஞானக்கண்ணை வழங்குதல் 5-8 -அனைத்தும் ஈசன் எனத் தொகுத்துக் காணுதல் 9-14 -தான் கண்ட விசுவரூபத்தை அர்ஜுனன் விளக்கியுரைத்தல் 15-31 -கால சொரூபியாகிய ஈசன் தமது செயலைத் தாமே செய்துமுடிக்கிறார் 32-34 -அர்ஜுனன் செய்கிற ஸ்துதி 35-44 -அர்ஜுனன் விசுவரூபதர்சனம் தனக்குப் போதுமென்றது 45-46 -அர்ஜுனனுக்குக் கிட்டிய தனி வாய்ப்பு 47-49 -மீண்டும் எடுத்த சாந்த சொரூபம் 50-51- வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டிய முறை 52-55.
அர்ஜுந உவாச
1. மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம்
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விகதோ மம  
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், மத் அநுக்ரஹாய-என் மீது அருள் பூண்டு, த்வயா அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம்-உன்னால் ஆத்ம ஞானம் என்னும், பரமம் குஹ்யம்-மிக உயர்ந்ததும் மறைத்துக் காப்பாற்றத் தக்கதுமான, யத் வச: உக்தம்-எந்த உபதேசம் கூறப் பட்டதோ,
தேந மம-அதனால் என்னுடைய, அயம் மோஹ: விகத:-இந்த மோகம்/மயக்கம் தீர்ந்து போயிற்று.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று.
தம்முடைய ஒரு சிறு அம்சம் இவ்வுலகனைத்தும் ஆனது என்றும், தாம் அகிலாண்டத்தையும் தாங்கிக் கொண்டு அதற்கப்பாலும் இருப்பதாக பகவான் சொன்னார். அதைக் கேட்ட அர்ஜுனன் தான் அந்த சொரூபத்தை நேரே சாக்ஷõத்கரிக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டான்.
அவன் பகர்ந்ததன் உட்கருத்தாவது :
என்னைப்பற்றியும், உலகைப்பற்றியும், உலகுக்கும் எனக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், என் கடமையைப் பற்றியும் நான் இது பரியந்தம் கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் வெறும் மயக்கமேயாம். தாம் உபதேசித்தருளிய பரதத்துவ போதத்தால் அந்த மோஹம் அகன்று போயிற்று. மேலும் :
2. பவாப்யயௌ ஹி பூதாநாம் ஸ்ருதௌ விஸ்தரஸோ மயா
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்  
ஹி-ஏனெனில், கமலபத்ராக்ஷ-தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், மயா த்வத்த:-என்னால் உங்களிடமிருந்து, பூதாநாம் பவ அப்யயௌ-உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும், விஸ்தரஸ: ஸ்ருதௌ-விரிவாகக் கேட்டேன், ச அவ்யயம் மாஹாத்ம்யம் அபி-அவ்வாறே அழிவற்ற பெருமையும் (கேட்கப் பட்டது).
பொருள் : உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.
பகவான் சுருக்கமாகச் சொன்னேன் என்றதை அர்ஜுனன் விரிவாகச் சொல்லப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறான். இருவர் கருத்தும் அவரவர் நிலைமையில் உண்மையே.
அனைத்துக்கும் பகவான் முதற் காரணமாயிருக்கிறார். ஆனால் அவர் ஒன்றிலும் கட்டுப்படுவதில்லை. நடைமுறைகளனைத்துக்கும் விளக்கம் அவரிடத்திருந்து பெறலாம். இத்தனையும் உண்டு பண்ணியும் அவரிடத்துத் தேய்வு ஒன்றுமில்லை. இவை யாவும் அவருடைய மஹிமையாம்.
3. ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஸ்வர
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஸ்வரம் புரு÷ஷாத்தம  
பரமேஸ்வர-பரமேசுவரா, புரு÷ஷாத்தம-மனிதர்களில் உயர்ந்தவனே, த்வம் ஆத்மாநம் யதா ஆத்த-நீ உன்னைப் பற்றி எவ்வாறு கூறினாயோ, ஏதத் ஏவம்-அது அவ்வாறே, தே ஐஸ்வரம் ரூபம்-உன்னுடைய ஈசுவர ரூபத்தை, த்ரஷ்டும் இச்சாமி-காண விரும்புகிறேன்.
பொருள் : பரமேசுவரா, புரு÷ஷாத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.
எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவாகிய அவரிடம் ஞானம், ஐசுவரியம், பலம், சக்தி, வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்திருக்கின்றன. பகவான் என்னும் சொல்லுக்கு ஷட்குண சம்பன்னன் என்று பொருள். ஆறுவித தெய்வ சம்பத்துக்கள் அவரிடம் இருக்கின்றன. அத்தனை மஹிமைகளோடு கூடிய அவரைக் காண அர்ஜுனன் விரும்பியது இயல்பே.
4. மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ
யோகேஸ்வர ததோ மே த்வம் தர்ஸயாத்மாநமவ்யயம்  
ப்ரபோ-பிரபுவே, மயா தத் த்ரஷ்டும் ஸக்யம் இதி-என்னால் அதை பார்க்க முடியும் என்று, யதி மந்யஸே-நீ கருதுவாயெனில், யோகேஸ்வர:-யோகேசுவரா, தத:-அப்போது, த்வம் ஆத்மாநம் அவ்யயம்-நீ உன்னுடைய அழிவற்ற ஆத்மாவை, மே தர்ஸய-எனக்குக் காட்டுக.
பொருள் : இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.
யோகத்துக்கும் யோகிகளுக்கும் தலைவன் யோகேசுவரன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பஞ்ச கிருத்தியங்கட்கும் தலைவன் இறைவன். காட்சியளித்தல் அல்லது அருளல் வேண்டுமென்று அர்ஜுனன் விண்ணப்பிக்கிறான். ஈசுவரனது விசுவரூபத்தைக் காணவேண்டுமென்பது அவன் விருப்பம். ஞான தர்சனம் கொடுத்தருள யோகேசுவரனுக்கு இயலும்.
தன்னுடைய தீர்மானத்துக்கு முக்கிய ஸ்தானம் தராது, ஈசுவரனுடைய அனுக்கிரகத்துக்கு முதன்மை கொடுப்பது பக்தனுடைய இயல்பு. மனிதன் எதற்குத் தகுதியுடையவன் அல்லது தகுதியற்றவன் என்று தான் அறிந்துகொள்வதைவிட பகவானே அதை உள்ளபடி அறிகிறார்.
இங்ஙனம் அர்ஜுனனால் விண்ணப்பிக்கப் பெற்றதும் :
ஸ்ரீ பகவாநுவாச
5. பஸ்ய மே பார்த ரூபாணி ஸதஸோऽத ஸஹஸ்ரஸ:
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச  
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஸதஸ: ஸஹஸ்ரஸ:-பல நூறாகவும், பல்லாயிரமாகவும், நாநாவிதாநி ச-பல வகை, நாநாவர்ண ஆக்ருதீநி ச-பல நிறம் அளவு பலவாக, அத-இப்போது, திவ்யாநி ரூபாணி பஸ்ய பார்த-திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா!
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பல நூறாகவும், பல்லாயிரமாகவும், வகை பல, நிறம் பல, அளவு பலவாகும் என திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா.
தெய்வத்தோடு சம்பந்தப்படாதவைகள் போல் தென்படுபவைகள் உண்மையில் தெய்வப் பெற்றியுடைத்திருக்கின்றன. ஆகையால் அவைகள் திவ்வியமானவைகள் எனப்படுகின்றன. வடிவத்திலும் நிறத்திலும் தன்மையிலும் வேறுபட்டு, எண்ணிக்கையில் அடங்காதிருப்பவைகளெல்லாம் ஒரு பொருளின் எண்ணிறந்த தோற்றங்கள் என்பது இனி விளங்கும்.
ஒவ்வொரு வஸ்துவும் நாராயணன். மனிதன் நாராயணன்; ஜீவப் பிராணி நாராயணன். ரிஷியும் நாராயணன்; போக்கிரியும் நாராயணனே. உலகில் உள்ள யாவும் நாராயணனே. நாராயணன் பல விதமான திருவிளையாடல்களைச் செய்தருள்கின்றான். எல்லாப்பொருள்களும் அவனுடைய பல்வேறு உருவங்களாகவும் அவனது பிரபாவத்தின் தோற்றங்களாகவும் இருக்கின்றன.
6. பஸ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஸ்விநௌ மருதஸ்ததா
பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஸ்யாஸ்சர்யாணி பாரத  
பாரத-அர்ஜுனா! ஆதித்யாந் வஸூந் ருத்ராந்-ஆதித்யர்களை, வசுக்களை, உருத்திரர்களை,
அஸ்விநௌ மருத:-அசுவினி தேவரை, மருத்துக்களை, பஸ்ய-பார், ததா-அவ்வாறே, அத்ருஷ்ட பூர்வாணி-இதற்கு முன் கண்டிராத, பஹூநி ஆஸ்சர்யாணி பஸ்ய-பல ஆச்சரியங்களைப் பார்.
பொருள் : ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.
நீ இதுவரையில் கண்டிருந்தது மிகமிகக் குறைந்தது. மேலும் காணக்கிடப்பது கணக்கில் அடங்காதது என்பதை நீ இப்பொழுது உணர்வாய். அதுமட்டுமல்ல :
7. இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஸ்யாத்ய ஸசராசரம்
மம தேஹே குடாகேஸ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி  
குடாகேஸ-அர்ஜுனா, அத்ய இஹ மம தேஹே-இன்று, இங்கே என்னுடலில், ஏகஸ்தம்-ஒரே இடத்தில், க்ருத்ஸ்நம் ஜகத்-உலகம் முழுவதும், அந்யத் ச-அவ்வாறே மேற்கொண்டு, யத் த்ரஷ்டும் இச்சஸி-நீ எதைக்காண விரும்பினும், பஸ்ய-காண்.
பொருள் : அர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப்பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண்.
பாண்டவர்கள் கௌரவர்களை ஜயிப்பதா அல்லது கௌரவர்கள் பாண்டவர்களை ஜயிப்பதா? இதில் எது உசிதம் என்று தனக்குத் தெரியவில்லையென்று அர்ஜுனன் இரண்டாம் அத்தியாயம் ஆறாவது சுலோகத்தில் சொன்னான். அதுபோன்ற மர்மங்களைத் தெரிந்துகொள்ள விருப்ப மிருந்தாலும் அவைகளைத் தெரிந்துகொள்க. விசுவரூபதர்சனத்தில் அண்டங்களின் அமைப்பும், நடைமுறையும் மற்றும் யாவும் உள்ளபடி விளங்கும்.
ஆனால் அக்காட்சி ஊனக்கண்ணால் காணக் கூடியதா? இதற்கு விடை வருகிறது :
8. ந து மாம் ஸக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷúஷா
திவ்யம் ததாமி தே சக்ஷú: பஸ்ய மே யோகமைஸ்வரம்  
து அநேந ஸ்வசக்ஷúஷா-ஆனால் இயற்கையான இக்கண்களால், மாம் த்ரஷ்டும் ஏவ ந ஸக்யஸே-என்னை பார்க்க முடியாது, தே திவ்யம் சக்ஷú: ததாமி-உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன், மே ஐஸ்வரம் யோகம் பஸ்ய-என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.
பொருள் : உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.
பிராகிருத கண்கொண்டு பிரகிருதியைத்தான் காணமுடியும். அதிலேயும் தூரத்தில் இருப்பதைப் பார்க்க தூர திருஷ்டிக் கண்ணாடியின் உதவிவேண்டும். நுண்பொருளை அதற்கேற்ற கண்ணாடியின் துணைகொண்டே காணலாம். அங்ஙனம் ஈசுவரனது விசுவரூபத்தைக் காண்பதற்கு ஞானக்கண் தேவை. நெறியான வாழ்க்கை யுடையவர்க்கு அது இறைவனது அருளால் உண்டாகிறது. பஞ்சேந்திரியங்களின் துணையின்றியே ஞானக் கண்ணானது அவ் இந்திரியங்களின் தொழில்களைச் செய்கிறது. அதற்குமேல் ஈசுவர மஹிமையை வேண்டியவாறு தெரிந்து கொள்ளவும் ஞானக் கண்ணுக்கு இயலும். தெளிந்த மனமே ஞானக் கண்ணாகிறது.
பெரியோர்கள் பக்தியைக் கண்களில் தீட்டும் மைக்கு ஒப்பிட்டிருக்கின்றனர். ஸ்ரீமதி ராதை ஒரு சமயம் ஸகிகாள், நான் எனது கிருஷ்ணனை எல்லாவிடங்களிலும் காண்கிறேன் என்றான். அதற்குக் கோப ஸ்திரீகள், தோழி, நீ பக்தியாகிய அஞ்சனத்தைக் கண்களில் இட்டுக்கொண்டிருக்கிறாய். ஆதலால்தான் அப்படித் தெரிகின்றது என்றார்கள்.
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவது போன்று அந்த விசுவரூபக் காட்சியை ஸஞ்ஜயனும் வியாசபகவானும் அதே சமயத்தில் காண்கிறார்கள். தான் கண்டபடி ஸஞ்ஜயன் அதை திருதராஷ்டிரருக்கு விளக்குகிறான்.
ஸஞ்ஜய உவாச
9. ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஸ்வரோ ஹரி:
தர்ஸயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஸ்வரம்  
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், ராஜந்-அரசே, மஹாயோகேஸ்வர: ஹரி:-யோகத்தலைவனாகிய ஹரி, ஏவம் உக்த்வா தத:-இவ்வாறு உரைத்துவிட்டு அப்பால், பார்தாய-பார்த்தனுக்கு, பரமம் ஐஸ்வரம் ரூபம்-மிக உயர்ந்த தன் கடவுள் வடிவை, தர்ஸயாமாஸ-காட்டினான்.
பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.
10. அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஸநம்
அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்  
அநேக வக்த்ர நயநம்-(அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது, அநேக அத்புத தர்ஸநம்-பல அற்புதக் காட்சிகளுடையது, அநேக திவ்ய ஆபரணம்-பல திவ்ய ஆபரணங்கள் பூண்டது, திவ்ய அநேக உத்யத ஆயுதம்-பல தெய்வீக ஆயுதங்கள் ஏந்தியது.
பொருள் : (அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.
உலகெலாம் அவன் சொரூபமாதலால் அவனுக்கு முகங்களும் கண்களும் கணக்கில் அடங்காதவைகள். மனிதனது சிற்றறிவுக்கு எட்டாத அரும்பெரும் செயல்கள் அவனால் நடைபெறுகின்றன. வாதலால் அவனிடத்து அற்புத தர்சனங்கள் நிறைந்துள்ளன. அழகுக்குப் பிறப்பிடம் அவன். பிரகிருதியிலும் அதற்கப்பாலும் உள்ள செந்தரியம் யாவும் அவனுடையவைகள். அதை முன்னிட்டு அவன் தெய்விக ஆபரணங்களை அணிந்தவன் எனப்படுகிறான். தேவகாரியம் எவ்விதத்திலும் நடைபெற்று விடுகிறது. யாரும் அதற்கு இடைஞ்சல் செய்ய முடியாது. அவன் ஏந்தியிருக்கும் திவ்விய ஆயுதங்கள் பல அத்திறனை விளக்குகின்றன.
11. திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்
ஸர்வாஸ்சர்யமயம் தேவமநந்தம் விஸ்வதோமுகம்  
திவ்ய மால்ய அம்பரதரம்-திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது, திவ்ய கந்த அநுலேபநம்-திவ்ய கந்தங்கள் பூசியது, ஸர்வ ஆஸ்சர்ய மயம்-எல்லா வியப்புக்களும் சான்றது, அநந்தம்-எல்லையற்றது, விஸ்வதோமுகம் தேவம்-எங்கும் முகங்களுடைய தேவரூபம்.
பொருள் : திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம்.
இயற்கையை உடலாய் ஏற்றுக்கொண்டு அதனுள் இறைவன் உயிராய் ஒளிருமிடத்து இவ்வருணனைகளெல்லாம் ஊனக்கண்ணால் காண்பவர்களுக்கே பொருத்த முடையவைகளாகின்றன. பின்பு, ஞானக்கண் கொண்டு காணுமிடத்து தெய்வப் பெற்றியே யாண்டும் பொலியும்.
12. திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா
யதி பா: ஸத்ருஸீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந:  
திவி-வானத்தில், ஸூர்யஸஹஸ்ரஸ்ய-ஆயிரம் சூரியன்கள், யுகபத்-ஒரே நேரத்தில், உத்திதா-உதயமானால், பா: யதி பவேத்-பிரகாசம் எப்படி இருக்குமோ, ஸா-அந்த பிரகாசம்,
தஸ்ய மஹாத்மந:-அந்த மகாத்மாவின், பாஸ-ஒளிக்கு, ஸத்ருஸீ-நிகராக, ஸ்யாத்-இருக்கலாம்.
பொருள் : வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.
தெரிந்த ஒன்றை உபமானமாகக் கொண்டுதான் தெரியாத ஒன்றை ஏகதேசம் அறிந்துகொள்ளலாம். காணாதவர்க்கு ஈசனது காந்தி ஒன்றும் விளங்காது. உண்மையில் அவன் அவனுக்கே ஒப்பாவான். ஒருமிக்க உதயமான ஆயிரம் ஞாயிறுகளோடு ஒப்பிடுவதே அவன் ஒப்பில்லான் என்பதை விளக்குகிறது. ஆதலால் அவன் ஒருவனே மஹாத்மா என்னும் சொல்லுக்கு இலக்காகிறான்.
13. தத்ரைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா
அபஸ்யத்தேவதேவஸ்ய ஸரீரே பாண்டவஸ்ததா  
பாண்டவ: ததா-பாண்டவன் (அர்ஜுனன்) அப்போது, அநேகதா ப்ரவிபக்தம்-பல பகுதிப்பட்டதாய், க்ருத்ஸ்நம் ஜகத்-வையகம் முழுவதும், தேவதேவஸ்ய-அந்தத் தேவ தேவனுடைய, தத்ர ஸரீரே-அந்த உடலில், ஏகஸ்தம்-ஒரே இடத்தில், அபஸ்யத்-கண்டான்.
பொருள் : அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.
வேற்றுமையில் ஒற்றுமை குடி கொள்வது இயற்கையின் அமைப்பு. வானவர், மக்கள், விலங்கு, பறவை, நிலைத்திணை ஆகிய எண்ணிறந்த இனங்களாக உயிர்கள் வடிவெடுக்கின்றன. இவையாவும் சேதனத்தின் பல்வேறு தோற்றங்கள். மண், உலகு, கீழ் உலகு, மேல் உலகு ஆகிய இவையாவும் போகத்துக்குரிய இடங்களாகின்றன. போகப் பொருள்கள் பல இவ்வுலகெங்கும் நிறைந்திருக்கின்றன. இவை யாவும் உயிர்க்குயிராய், அறிவுக் கறிவாய் உள்ள இறைவனில் அடங்கியிருப்பது ஒற்றுமையைக் காட்டுகிறது.
14. தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தநஞ்ஜய:
ப்ரணம்ய ஸிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிரபாஷத  
தத: ஸ: தநஞ்ஜய:-அப்போது அந்த தனஞ்ஜயன், விஸ்மய ஆவிஷ்ட:-பெரு வியப்பு அடைந்து, ஹ்ருஷ்ட ரோமா:-மயிர் சிலிர்த்து, தேவம்-அக்கடவுளை, ஸிரஸா ப்ரணம்ய-தலை குனிந்து வணங்கி, க்ருத அஞ்ஜலி:-கைகளைக் கூப்பிக் கொண்டு, அபாஷத-கூறினார்.
பொருள் : அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.
தேவதர்சனம் மனதின்கண் பெரிய மாறுதலை உண்டுபண்ணுகிறது. அது அகத்தும் புறத்தும் சில அறிகுறிகளுடன் பரிணமிக்கிறது. வியப்படைதல் உள்ளத்தின் இயல்பு. உரோமம் சிலிர்த்தல், தலைவணங்குதல், கைகூப்புதல் முதலியன உடலின் கண் தோன்றும் பரவசச் செயல்களாம். இனி, மன நிறைவு நிறைவுமொழியாய்ப் பொங்கி வழிகிறது. அது வருமாறு :
அர்ஜுந உவாச
15. பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
ஸர்வாம்ஸ்ததா பூதவிஸேஷஸங்காந்
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்தம்
ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச திவ்யாந்  
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், தேவ! தவ தேஹே-தேவனே, உன் உடலில், ஸர்வாந் தேவாந்-எல்லாத் தேவர்களையும், ததா பூதவிஸேஷஸங்காந்-அவ்வாறே அநேகப் பிராணி வர்க்கங்களையும், கமல ஆஸநஸ்தம்-தாமரை மலரில் வீற்றிருக்கும், ஈஸம் ப்ரஹ்மாணம்-ஈசனாகிய பிரமனையும், ஸர்வாந் ருஷீந்-எல்லா ரிஷிகளையும், திவ்யாந் உரகாந் ச-தெய்வீக சர்ப்பங்களையும், பஸ்யாமி-காண்கிறேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.
உயிர்களுக்கெல்லாம் தலைவனாயிருப்பதால் நான்முக பிரம்மா ஈசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் மஹாவிஷ்ணுவின் உந்திக் கமலத்தில் வீற்றிருப்பவர். சரம் அசரம் ஆகிய உயிர்த் தொகுதிகள் யாவும் விசுவ ரூபத்தில் அடங்கப்பெற்றிருக்கின்றன. வாஸுகி முதலிய ஸர்ப்பங்களும் வசிஷ்டர் முதலிய ரிஷிகளும் அங்குத் தென்படுகின்றனர்.
16. அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம்
பஸ்யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம்
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம்
பஸ்யாமி விஸ்வேஸ்வர விஸ்வரூப  
விஸ்வேஸ்வர-எல்லாவற்றுக்கும் ஈசனே, அநேகபாஹூ உதர வக்த்ர நேத்ரம்-பல தோளும், வயிறும், வாயும், விழிகளுமுடைய, அநந்த ரூபம்-எல்லையற்ற வடிவாக, த்வாம் பஸ்யாமி-உன்னைக் காண்கிறேன், விஸ்வரூப!-எல்லாம் தன் வடிவாகக் கொண்டவனே, தவ அந்தம் ந பஸ்யாமி-உன்னுடைய முடிவேனும் நான் பார்க்கவில்லை, மத்யம் ந-இடையும் காணவில்லை, புந: ஆதிம் ந-மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை.
பொருள் : பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன்.
தோன்றிய யாவும் அவனேயாகி அவைகளுக்கு அப்பாலும் அவனே இருக்கிறான் என்பது பொருள்.
17. கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச
தேஜோராஸிம் ஸர்வதோ தீப்திமந்தம்
பஸ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத்
தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்  
கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச-மகுடமும், கதையும், சக்கரத்தோடு, ஸர்வத: தீப்திமந்தம் தேஜோராஸிம்-எங்கும் ஒளிரும் ஒளிதிரளாகவும், தீப்த அநல அர்க த்யுதிம்-தழல்படு தீயும் ஞாயிறும் போல, துர்நிரீக்ஷ்யம்-பார்க்கக் கூசுகின்ற, ஸமந்தாத்-எங்கும் நிறைந்ததுமாக,
அப்ரமேயம் த்வாம் பஸ்யாமி-அளவிடற்கரியதாக உன்னைக் காண்கிறேன்.
மகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன்.
சொப்பனத்தில் காணும் ஜோதி ஊனக் கண்ணுக்குத் தட்டுப்படுதல் இல்லையெனினும் அதில் கண் கூசுவது போன்றிருக்கிறது. அதிலும் பரந்த பாங்கில் ஞானக் கண்ணுக்கும் கூசுதல் உண்டாகிறது. அவ்வொளி உள்ளத்தை உறுதிப்படுத்தும் தன்மையது. ஞானக்கண் மற்ற இந்திரியங்களைவிடப் பன்மடங்கு தெளிவுடையது எனினும், அதைக்கொண்டும் விசுவ ரூபத்தை முழுதும் அளக்க முடியாது. ஆகையால் அது அப்ரமேயம் எனப்படுகிறது.
சத்வ குணத்தின் நிறம் தூவெண்மை. ஆத்ம பிரகாசம் அதன்கண் தோயுமிடத்து அது சுடர்விட்டெரியும் சூரியாக்கினி போன்று மிளிர்வது இயல்பு.
இத்தகைய காட்சியை அடையப்பெற்ற அர்ஜுனன் சித்தாந்தப்படுத்துவது யாது என்றால்:
18. த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம்
த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்
த்வமவ்யய: ஸாஸ்வததர்மகோப்தா
ஸநாதநஸ்த்வம் புரு÷ஷா மதோ மே  
அவ்யயம்-அழிவிலாய், பரமம் வேதிதவ்யம்-அறியத்தக்கதில் சிறந்தது, த்வம் அஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்-நீயே உலகத்தில் உயர் தனி உறைவிடம், அக்ஷரம்-கேடிலாய், த்வம் ஸாஸ்வத தர்ம கோப்தா-நீ என்றும் நிலையாக அறத்தினை காப்பாய், த்வம் ஸநாதந: புருஷ:-சநாதன புருஷன் நீயே, மே மத:-எனக் கொண்டேன்.
பொருள் : அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; சநாதன புருஷன் நீயெனக் கொண்டேன்.
பகவானை அறிந்தவன் பரத்துக்கு உரியவன் ஆகின்றான். ஆதலால் பகவான் ஒருவரே சாதகன் ஒருவனால் அறியத்தகுந்தவர். சஞ்சரிக்கும் மேகத்துக்குச் சலனமற்ற ஆகாசம் இருப்பிடமாவது போன்று உலகம் யாவுக்கும் இருப்பிடம் பரமாத்மா. உலகம் அழியும் பொழுது அவர் மாறாதிருக்கிறார். அவருடைய சந்நிதான விஷேத்தால் தர்மம் - இயற்கையின் நடைமுறை-கோணாது நிகழ்கிறது. இவை யாவும் இப்பொழுது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷமாகின்றன. மேலும் அவன் அறிவதாவது :
19. அநாதிமத்யாந்தமநந்தவீர்ய
மநந்தபாஹும் ஸஸிஸூர்யநேத்ரம்
பஸ்யாமி த்வாம் தீப்தஹுதாஸவக்த்ரம்
ஸ்வதேஜஸா விஸ்வமிதம் தபந்தம்  
த்வம் அநாதி மத்ய அந்த-ஆதியும் நடுவும் அந்தமுமில்லாதவனாகவும், அநந்தவீர்யம்-வரம்பில்லாத வீரனாகவும், அநந்தபாஹும்-கணக்கிலாத் தோளுடையவனாகவும், ஸஸி ஸூர்ய நேத்ரம்-ஞாயிறுந் திங்களும் கண்களாகவும், தீப்த ஹுதாஸ வக்த்ரம்-கொழுந்து விட்டெறியும் தீ போன்ற வாயுடன் கூடியவனாகவும், ஸ்வதேஜஸா-தம்முடைய வெப்பத்தினால், இதம் விஸ்வம் தபந்தம் பஸ்யாமி-இந்த உலகத்தை எரிப்பவனாகவும் காண்கிறேன்.
பொருள் : ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன்.
காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்படாமையினால் அவருக்கு ஆதி நடு அந்தமில்லை. உலகத்தைப் படைத்துக் காத்துத் துடைப்பது அவருக்கு விளையாட்டாக நடைபெறுவதாதலால் அவர் அனந்த வீரியமுடையவர். உலகத்திலுள்ள கைகளையெல்லாம் கொண்டு அவர் தமது காரியத்தைச் செய்துமுடிப்பதால் அவர் கணக்கற்ற கைளையுடையவர் என்று சொல்லப்படுகிறார். இந்திரியங்களுக்குப் பிரகாசத்தைக் கொடுப்பது ஆத்மா. சந்திரன், சூரியன், அக்கினி ஆகியவைகள் பெற்றுள்ள ஒளி பரமாத்மாவினிடத்திருந்து பிரதிபலிக்கின்ற ஒளிகளாம். அகிலாண்டத்திலும் ஆத்ம பிரகாசம் ஜ்வலிப்பதால் உபசாரமாக ஞாயிறு திங்கள் கண்களென்றும், தீ வாயென்றும் வர்ணிக்கப்படுகின்றன. விறகுக் கட்டையில் தீ வியக்தமாவது போன்று விசுவத்தின் வாயிலாகப் பரம்பொருள் வியக்தமாகிறது.
20. த்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேந திஸஸ்ச ஸர்வா:
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம்
லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்  
மஹாத்மந்-மகாத்மாவே! த்யாவா ப்ருதிவ்யோ:-வானத்துக்கும் பூமிக்கும், இதம் அந்தரம் - இந்த இடைவெளியும், ஸர்வா: திஸ: ச-எல்லாத் திசைகளும், த்வயா ஏகேந ஹி வ்யாப், தம்-உன் ஒருவனாலேயே நிறைந்திருக்கிறது, தவ இதம் அத்புதம் உக்ரம் ரூபம்-உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தை, த்ருஷ்ட்வா-கண்டு, லோகத்ரயம் ப்ரவ்யதிதம்-மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.
பொருள் : வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளான் என்பது இப்பொழுது அர்ஜுனனுக்கு பிரத்யக்ஷமாக விளங்குகிறது. இனிமையும் பயங்கரமும் ஆகிய இரண்டும் இறைவன்பால் உள. அவைகளுள் ஈண்டு பயங்கரக் காட்சியை பார்த்தன் பார்க்கிறான். அவனது மனப்பான்மையே அதற்குக் காரணம். பயங்கரமான யுத்தக்காட்சி தன்னுடைய சிருஷ்டியென்று முதலில் எண்ணினான். உலகைத் திருத்தியமைக்கத் தெய்வமே அத்தகைய உக்கிர வடிவெடுக்க வல்லவனென்று இப்பொழுது உணர்கிறான்.
வெற்றி யாருடையது என்ற ஐயம் அர்ஜுனனுக்கு இருந்தது (அத். 2; சு.6) அதை அகற்றுதற்கான காட்சியை பகவான் தருகிறார். பாண்டவர்களுக்கே வெற்றி என்பது விளங்குகிறது. அதைக் காணலுற்ற குந்தி மைந்தன் கூறுகிறான் :
21. அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஸந்தி
கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா:
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி:  
அமீ ஸுரஸங்கா: ஹி-இந்த வானவர் கூட்டமெல்லாம், த்வாம் விஸந்தி-நின்னுள்ளே புகுகின்றது, கேசித் பீதா: ப்ராஞ்ஜலய: க்ருணந்தி-சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர், மஹர்ஷி ஸித்தஸங்கா:-மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார், ஸ்வஸ்தி இதி உக்த்வா-மங்களம் உண்டாகட்டும் என்று கூறி, புஷ்கலாபி: ஸ்துதிபி:-வண்மையுடைய புகழுரைகள் சொல்லி, த்வாம் ஸ்துவந்தி-உன்னை புகழ்கின்றார்.
பொருள் : இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார்.
நர வடிவெடுத்து வந்துள்ள வசுக்கள் முதலிய தேவகணங்கள் தங்கள் பூலோக லீலையை முடித்துக்கொண்டு பகவானிடத்து ஒடுங்குகின்றனர். பூ பாரம் ஒழிகிறது என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் அவர்கள் மௌனமாக மறைகிறார்கள். பகவானுடைய உக்கிர விளையாட்டை ஒருவாறு அறிந்துகொண்ட சிலர் சிரசின்மீது கைகூப்பி நடுங்கி வணங்குகின்றனர். அச்சத்தால் நிறைமொழி யொன்றும் இயம்ப அவர்களுக்கு இயலவில்லை. உலகுக்குக் கேடுகள் பல வரப்போகின்றனவென்று குறிப்பால் அறிந்த நாரதர் போன்ற மஹரிஷிகளும் கபிலர் போன்ற சித்தர்களும் சம்பூரண ஸ்தோத்திரங்களால், சொற்சுவையும் பொருட் சுவையும் நிறைந்த புகழ்களால் உலகுக்கு மங்களம் உண்டாகுக என்று போற்றினார்கள். உடலில் உள்ள கேடுகளை நீக்குதற் பொருட்டு நோய் வருவது போன்று உலகில் உள்ள கேடுகளை நீக்குதற்பொருட்டு இறைவன் இத்தகைய ஸம்ஹாரச் செயலைச் செய்க. அதினின்று நன்மை விளைக என்ற கருத்தடங்கிய பாசுரங்களைப் பேரறிஞர் பாடிப் போற்றினார்கள். இறைவனது ஆணையால் நடைபெறும் உலகச் செயல்களில் பொருள் படாதவை ஒன்றுமில்லையென்பது பேரறிஞருக்கு விளங்குகிறது.
22. ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா
விஸ்வேऽஸ்விநௌ மருதஸ்சோஷ்மபாஸ்ச
கந்தர்வயக்ஷõஸுரஸித்தஸங்கா
வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்சைவ ஸர்வே  
யே ருத்ராதித்யா-எந்த ருத்திரர்கள் ஆதித்தியர்கள், வஸவ: ச-வசுக்களும், ஸாத்யா:-ஸாத்யர்,
விஸ்வே-விசுவேதேவர், அஸ்விநௌ ச-அசுவினி தேவரும், மருத: ச-மருத்துக்கள், உஷ்மபா: ச-உஷ்மபர், கந்தர்வ யக்ஷ அஸுர ஸித்த ஸங்கா-கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும், ஸர்வே ஏவ விஸ்மிதா: ச-எல்லோரும் வியப்புடன், த்வாம் வீக்ஷந்தே-உன்னைப் பார்க்கிறார்கள்.
பொருள் : ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.
ஊஷ்மபர் என்பது உஷ்ணமாயிருப்பதைப் பானம் செய்பவர்கள் என்று பொருள்படுகிறது. பித்ரு தேவர்கள் அங்ஙனம் அருந்துதலில் மகிழ்ச்சியடைகிறார்கள். அத்தகைய தேவகணங்களும் பகவானுடைய விசுவ ரூபத்தை முழுதும் தெரிந்துகொள்ள இயலாதவர்களாயிருக்கிறார்கள். தங்கள் அறிவுக்கு எட்டியவளவு அவர்கள் அந்த ரூபத்தைக் கண்டு வியந்து நிற்கிறார்கள்.
23. ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம்
மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்
பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம்
த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம்  
மஹாபாஹோ-பெருந்தோளாய், பஹு வக்த்ர நேத்ரம்-பல வாய்களும், விழிகளும், பஹு பாஹூ ஊரு பாதம் பஹூதரம்-பல கைகளும், பல கால்களும் பல வயிறுகளும், பஹுதம்ஷ்ட்ராகராலம்-பல பயங்கரமான பற்களுமுடைய, தே மஹத் ரூபம் த்ருஷ்ட்வா-உன் பெரு வடிவைக் கண்டு, லோகா: ப்ரவ்யதிதா:-உலகங்கள் நடுங்குகின்றன, ததா அஹம்-யானும் அங்ஙனமே.
பொருள் :  பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே.
தன் மனநிலையையே ஒருவன் உலகின்கண் காண்கிறான். பகவானது விசுவரூபத்தையும் அவரது பயங்கரச் செயலையும் முன்பு அர்ஜுனன் கண்டு அறிந்தவன் அல்லன். அதை அவன் இப்பொழுது முதல் கண்டு கலங்குகிறான். உலகிலுள்ள மற்ற உயிர்களும் கலங்குவதாக அவன் காட்சியில் படுகிறது. அவனது நிலையில் இருக்கிறவர்களுக்கெல்லாம் கலக்கமேயாம். ஏன் அவனுக்கு அச்சம் ஏற்பட்டதெனின் அதற்கு விடை அவனது வாயினின்று வருகிறது :
24. நப:ஸ்ப்ருஸம் தீப்தமநேகவர்ணம்
வ்யாத்தாநநம் தீப்தவிஸாலநேத்ரம்
த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா
த்ருதிம் ந விந்தாமி ஸமம் ச விஷ்ணோ  
ஹி விஷ்ணோ-ஏனெனில் விஷ்ணுவே! நப:ஸ்ப்ருஸம்-வானைத் தீண்டுவது, தீப்தம் அநேகவர்ணம்-பல வர்ணங்களுடையது, வ்யாத்தாநநம்-திறந்த வாய்களும், தீப்தவிஸாலநேத்ரம்-கனல்கின்ற விழிகளுமுடைய, த்வாம் த்ருஷ்ட்வா-உன்னைக் கண்டு, ப்ரவ்யதிதா அந்தராத்மா-பயத்தினால் நிலைகொள்ளாமல், த்ருதிம் ஸமம் ச ந விந்தாமி-தைரியத்தையும் அமைதியையும் நான் அடையவில்லை.
பொருள் : வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி காணவில்லை.
காணாத ஒன்றைக் காணுமிடத்து ஒருவனுக்குக் கலக்கம் உண்டாவது இயல்பு. கோர சொரூபத்தை சாந்த சொரூபத்தோடு சேர்த்துணரும் பரியந்தம் மனக் கலக்கத்தை மாற்றலரிது.
அம் மனக்கலக்கத்தால் மேலும் விளைந்தது யாது? விடை வருகிறது :
25. தம்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி
த்ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி
திஸோ ந ஜாநே ந லபே ச ஸர்ம
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ  
தம்ஷ்ட்ராகராலாநி ச-கோரைப் பற்களால் பயங்கரமானவையும், காலாநலஸந்நிபாநி-பிரளய கால தீ போன்ற, தே முகாநி த்ருஷ்ட்வா-உன் முகங்களை, திஸோ ந ஜாநே-திசைகள் தெரியவில்லை, ச ஸர்ம ந லபே-சாந்தி தோன்றவில்லை, தேவேஸ ஜகந்நிவாஸ-தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடமே, ப்ரஸீத-அருள் செய்க.
பொருள் : அஞ்சுதரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க.
ஒரு சூரியனை அல்லது சந்திரனை இலக்காக வைத்துக் கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. பார்க்குமிடமெங்கும் பரஞ்சோதியாயிருப்பதால் திக்குகள் தென்படாமற் போய்விட்டன. ஊழித்தீயானது பொருள்களையெல்லாம் விழுங்குவது மீண்டும் நாள் அமைதியடைதற் பொருட்டு சாந்த சொரூபத்தைக் காட்டியருள்வீராக.
26. அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை:
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ
ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை:  
27. வக்த்ராணி தே த்வரமாணா விஸந்தி
தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி
கேசித்விலக்நா தஸநாந்தரேஷு
ஸந்த்ருஸ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை:
அமீ த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஏவ-இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும்
அவநிபாலஸங்கை: ஸஹ த்வாம்-மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் உன்னுள்ளே (புகுகின்றனர்), பீஷ்ம: த்ரோண: ச-பீஷ்மனும், துரோணனும், ததா அஸௌ ஸூதபுத்ர: - அவ்விதமே சூதன் மகனாகிய இந்த கர்ணனும், அஸ்மதீயை: அபி யோதமுக்யை: ஸஹ-நம்மைச் சார்ந்த முக்கியப் போர்வீரர்களுடன் கூட.
தே தம்ஷ்ட்ராகராலாநி-உன்னுடைய கொடிய பற்களுடைய, பயாநகாநி-பயங்கரமான க்த்ராணி-வாய்களில், த்வரமாணா விஸந்தி-விரைவுற்று வீழ்கின்றனர், கேசித் தஸந அந்தரேஷு விலக்நா:-சிலர் உன் பல்லிடுக்குகளில் அகப்பட்டு, சூர்ணிதை உத்தமாங்கை: - பொடிபட்ட தலையினராக, ஸந்த்ருஸ்யந்தே-காணப்படுகின்றனர்.
பொருள் : இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்.
பொருள் : கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர். (26-27)
சூதபுத்திரன் என்றால் தேர் ஓட்டியின் மகன் என்று பொருள் இங்கு இச்சொல் கர்ணனைக் குறிக்கிறது.
அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் பெரும்பகை. அத்தகைய பகைவனே அழிவதை முற்கூட்டி அர்ஜுனன் அறிகிறான் அதற்குமேல் பகைவர் எல்லாரும் அழிவதையும் அவன் அறிகின்றான். தன் பக்கத்திலும் பெரிய வீரர்கள் பலர் மடிவது திண்ணம். போரின்போக்கு பொதுப்பட பூபாரத்தைக் குறையிருப்பதாயிருக்கிறது. யாருக்காவது தனி நன்மை வந்தமையும் அறிகுறிகள் தென்படவில்லை.
28. யதா நதீநாம் பஹவோऽம்புவேகா:
ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி
ததா தவாமீ நரலோகவீரா
விஸந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி  
நதீநாம் பஹவ: அம்புவேகா:-பல ஆறுகளின் வெள்ளங்கள், ஸமுத்ரம் ஏவ அபிமுகா :-கடலையே நோக்கி, யதா த்ரவந்தி-எவ்வாறு பாய்கின்றனவோ, ததா-அவ்வாறே, அமீ நரலோகவீரா-இந்த மண்ணுலக வீரர்கள், அபிவிஜ்வலந்தி தவ வக்த்ராணி-சுடர்கின்ற உன் வாய்களில்விஸந்தி-புகுகிறார்கள்.
பொருள் : பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.
மலையினின்று வெளிவந்ததும் நதிகள் கடலைநோக்கி ஓடியாக வேண்டும். அதைத்தவிர அவைகளுக்குப் புகலிடம் வேறு ஏதுமில்லை இந்த மண்ணுலக வீரர்கள் என்னென்னவோ மனக் கோட்டை கட்டுகின்றனர். ஆனால் அவர்களெல்லாம் உமது விராட் வடிவத்தில் மறைவது திண்ணம். அவர்கள் இன்னும் உண்மையை அறியவில்லை யெனினும் நீர் அவர்களை எடுத்து விழுங்க ஆரம்பித்துவிட்டீர்.
29. யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா
விஸந்தி நாஸாய ஸம்ருத்தவேகா:
ததைவ நாஸாய விஸந்தி லோகா
ஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்தவேகா:  
பதங்கா-விளக்குப் பூச்சிகள், ஸம்ருத்தவேகா:-மிகவும் விரைவுடன், ப்ரதீப்தம் ஜ்வலநம் - எரிகின்ற விளக்கில், நாஸாய யதா விஸந்தி-அழிவதற்காக எவ்வாறு புகுகின்றனவோ, ததா ஏவ-அவ்விதமே, லோகா: அபி நாஸாய-உலகங்களும் அழிவதற்காக, ஸம்ருத்தவேகா:-மிகவும் விரைவுடன், தவ வக்த்ராணி விஸந்தி-உன் வாய்களில் புகுகின்றன.
பொருள் : விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.
சமுத்திரத்தில் சங்கமமான நதிகள் தமது நாமரூபங்களை இழக்கின்றன. ஆயினும் நதியின் நீருக்கு அழிவில்லை. தீயில் வீழும் விட்டில் பூச்சிகள் உடலையே இழக்கின்றன. போர்முனையில் கூடிய வீரர்கள் தங்கள் சுபாவத்தால் தூண்டப்பெற்று, அறிவை இழந்து உடலையும் இழக்க முந்துகின்றனர். அவர்களை அழித்துப் புதிய வடிவில் அமைப்பதன் மூலம் அவர்களைத் திருத்துதற்குப் பகவான் துணைபுரிகிறார்.
30. லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தால்
லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி:
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம்
பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ  
ஸமக்ராந் லோகாந்-அனைத்து உலகங்களும், ஜ்வலத்பி: வதநை: க்ரஸமாந:-கனல்கின்ற வாய்களால் விழுங்கிக் கொண்டு, ஸமந்தாத்-எப்புறத்தும், லேலிஹ்யஸே-(நாக்குகளால்) தீண்டுகிறாய், விஷ்ணோ-விஷ்ணுவே, தவ உக்ரா: பாஸ-நின் உக்கிரமான சுடர்கள், ஸமக்ரம் ஜகத்-வையம் முழுவதையும், தேஜோபி: ஆபூர்ய ப்ரதபந்தி-வெப்பத்தினால் நிரப்பி சுடுகின்றன.
பொருள் : கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.
எங்கும் வியாபித்திருப்பவர் விஷ்ணு. அவர் மங்கள சொரூபமாக எங்கும் வியாபித்திருப்பது போன்று ஊழித்தீயாக உக்கிர சொரூபம் எடுத்து வியாபகமாவதும் உண்டு. உலகைச் சீர்படுத்த வேண்டிய நெருக்கடியில் அவர் அங்ஙனம் செய்கிறார். ஆனால் அவர் போக்கை அறியாத அர்ஜுனன் விண்ணப்பித்ததாவது :
31. ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ
நமோऽஸ்து தே தேவவர ப்ரஸீத
விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம்
ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்  
தேவவர-தேவர்களில் சிறந்தவனே, உக்ரரூப:-உக்கிர ரூபந் தரித்த, பவாந்-நீ க:-யார்? நமோऽஸ்து-உன்னை வணங்குகிறேன், ப்ரஸீத-அருள் புரி, ஆத்யம் பவந்தம்-ஆதியாகிய உன்னை, விஜ்ஞாதும் இச்சாமி-அறிய விரும்புகிறேன், ஹி-ஏனெனில், தவ ப்ரவ்ருத்திம் ப்ரஜாநாமி-உன்னுடைய செயலை அறிகிலேன் (புரிந்து கொள்ள முடியவில்லை).
பொருள் : உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.
அழகுத்தெய்வம் மனதைக் கவர்கிறது. அக் கவர்ச்சியே வணக்கமென்று சொல்லப்படுகிறது. பின்பு, பயங்கர சொரூபம் இன்னொரு போக்கில் உள்ளதைக் கவர்கிறது. அச்சமூட்டுகிற உக்கிர மூர்த்தியின் அருள் பிரசாதத்தை எப்படியாவது பெறவேண்டுமென்று மனது நடுநடுங்கி விண்ணப்பிக்கிறது. அப்படி அச்சமூட்டும் தெய்வத்தின் அருளாலேயே அச்சம் வெல்லப்படுகிறது. பயங்கர மூர்த்தியோடு அங்ஙனம் பயந்து செய்யும் இணக்கமும் வணக்கமெனக் கருதப்படுகிறது. ஜீவர்களின் இயல்பு உக்கிர மூர்த்தியை விரும்பி வணங்குவது அல்ல என்பதை ஈண்டு அர்ஜுனனது செயல் விளக்குகிறது. தேவர்கள் உட்பட அகிலத்துக்கும் முழுமுதற் பொருள் ஈசன் என்பது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷம். ஆனால் அதனாலேயே அவன் அவரை முழுதும் அறிந்துகொண்டவன் அல்லன். ஒரு மனிதனும் அவனது செயலும் தொடர்ந்து சம்பந்தப்பட்டவைகள். செயலைக் கொண்டு மனிதனை அறியலாம். செயலைக்கொண்டு கடவுளையும் ஒருவாறு அறியலாம். அர்ஜுனன் விரும்புவதும் அதுவே. பகவானது கிருத்தியங்களைக்கொண்டு பகவானது மகிமைகளை அறிய அவன் அவாவுறுகின்றான். அவ்விருப்பத்தை அவன் அஞ்சி வெளியிடுவானாயினன். அதற்கு பகவானது விடையும் வருகிறது :
ஸ்ரீபகவாநுவாச
32. காலோऽஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்தோ
லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த:
ருதேऽபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே
யேऽவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா:  
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்த:-உலகத்தை அழிக்க பெருகி வளர்ந்துள்ள, கால: அஸ்மி-காலனாக இருக்கிறேன், இஹ லோகாந் ஸமாஹர்தும்-இப்போது உலகனைத்தையும் அழிப்பதற்காக, ப்ரவ்ருத்த:-தொடங்கி இருக்கிறேன், யே யோதா: ப்ரத்யநீகேஷு அவஸ்திதா:-எந்த போர் வீரர்கள் எதிரில் இருக்கின்றார்களோ, ஸர்வே த்வாம் ருதே அபி-அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும்,  ந பவிஷ்யந்தி-இருக்க மாட்டார்கள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்
நீ யார்? என்ற கேள்விக்கு நான் வல்லமை வாய்ந்த காலம் என்று பகவான் விடை விடுக்கிறார். பகவானுக்கு அமைந்த பல விளக்கங்களுள் அவர் மஹா காலம் என்பதும் ஒன்று. காலம் முன்னும் பின்னும் அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிறது. செயல்களுக்கு இடையில் உள்ள இடையீடாக அது நமக்குத் தோன்றுகிறது. பிறகு செயல்களுக்கே அது அளவையாகிறது. பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தன்பால் அடக்கி வைத்திருப்பது போன்று காலமானது செயல்கள் யாவையும் தன்பால் அடக்கிவைத்திருக்கிறது; ஆதலால் அது எல்லாம் வல்லது. மலையுச்சிக்குப் போகப்போக சமவெளியில் உள்ள மேடுபள்ளங்களெல்லாம் ஒரே வெளியாய்த் தென்படுகின்றன. காலத்தை அகண்டாகாரக் காட்சியில் காணுமிடத்து அண்டங்களின் கிருத்தியங்களெல்லாம் அதில் வீழ்ந்து மறைகின்றன. நிகழ்கின்ற அனைத்தையும் என்றென்றும் அளந்து கொண்டிருக்கின்ற காலமே பகவத் சொரூபமாகிறது.
உம் செயல் யாது? என்ற கேள்விக்கு உலகங்களையும் உலக மக்களையும் எடுத்து விழுங்குவது தம் பிரவிருத்தி என்று பகவான் சொல்லுகிறார். தோன்றியவைகளைச் சிறிது சிறிதாக அவர் சதா விழுங்கிக்கொண்டிருப்பது போன்று பெருவாரியாக சில வேளைகளில் விழுங்கவேண்டிய அவசியம் வருகிறது. மகாபாரத யுத்தம் அத்தகைய தொன்று. சிறிது சிறிதாக அழிவதை இயற்கையின் போக்கு என்கிறோம். பெருமிதமாக அழிவது யாருடைய செயல்; ஏன் அப்படி நடைபெறுகிறது என்று வியப்படைகிறோம். அவையாவும் ஈசன் செயல். எந்த வேளையில் உலகை எப்படி அழிக்க வேண்டுமோ அப்படி அவர் அழிக்கிறார். சிறியது பெரியது ஆகிய எல்லாம் அவர் செயல் என்று அறிபவன் அவரை உண்மையில் போற்றுகிறான். பின்பு, பயங்கரமான எச்செயலைக் கண்டும் அவன் நடுங்குவதில்லை.
பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலிய போர் வீரர்கள் அழிவது திண்ணம் என்று அர்ஜுனனுக்கு இப்பொழுது காட்டப்படுகிறது. பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல் தகுமோ என்று தயங்கிய தனஞ்ஜயனுக்கு அச்செயல் தன்னுடையதல்ல என்ற தேற்றம் இப்பொழுது பகவானால் ஏற்படுகிறது. கர்ணன் மடிவதும் தன்னைப் பொருத்ததன்று என்று அர்ஜுனன் அறிவிக்கப்படுகிறான். அர்ஜுனன் யுத்தத்தில் இறங்காவிட்டாலும் அவர்கள் அழியப்போகிறார்கள். அப்படியானால் அர்ஜுனன் யுத்தத்தில் தலையிடுவானேன்? இக்கேள்விக்கு விடைவருகிறது.
33. தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஸோ லபஸ்வ
ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்
மயைவைதே நிஹதா: பூர்வமேவ
நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்  
தஸ்மாத் த்வம் உத்திஷ்ட-ஆதலால் நீ எழுந்து நில், யஸ: லபஸ்வ-புகழெய்து, ஸத்ரூந் ஜித்வா-பகைவரை வென்று, ராஜ்யம் ஸம்ருத்தம் புங்க்ஷ்வ-செழிப்பான ராஜ்யத்தை ஆள்வாயாக, ஏதே பூர்வம் ஏவ மயா நிஹதா:-இவர்கள் முன்பே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள், ஸவ்யஸாசிந்-இடது கையாளும் அம்பு எய்யும் வீரனே! நிமித்தமாத்ரம் பவ-நீ வெளிக் காரணமாக மட்டுமே இருப்பாயாக!
பொருள் : ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய்.
ஜீவர்கள் செயல் புரிதலை அல்லது புரியாதிருத்தலை முன்னிட்டு பகவானுடைய காரியம் எவ்விதத்திலும் மாறுதல் அடையாது. அவனது திட்டத்தில் யாண்டும் ஒழுங்கும் உறுதியும் உண்டு. அதில் கலந்துகொள்ளுகிறவளவு ஜீவனுக்கு எல்லா நன்மையும் உண்டு. அதன் பொருட்டு அவன் எழுந்திருப்பது அவனது முதற் கடமையாகும். ஆத்ம போதம் பெற்று எழுந்திருக்கிறவளவு அவன் செயலுக்குத் தகுதியுடையவனாகிறான். நற்செயல் புகழைத் தருகிறது. நன்மைக்கு இடைஞ்சலாயிருப்பவனே பகைவன். அவனை வெல்லுவது நன்மைக்காகப் பாடுபடுவதாகும். தான் மட்டும் நன்மை செய்தால் போதாது. நன்மைக்கு இடையூறு உண்டு பண்ணுபவனை எதிர்ப்பது ராஜதர்மம். தர்மத்தை நன்கு கடைப்பிடிப்பவர்க்கு இம்மையுமுண்டு, மறுமையுமுண்டு, முக்தியுமுண்டு. அதில் முதலாவது இகலோக வாழ்க்கையில் சிறப்பு. ஆக, செல்வம் நிறைந்த ராஜ்யத்தோடு கூடிய இகலோக வாழ்க்கை வாய்ப்பது தர்மத்தின் பலனாம். அது படிப்படியாக முக்திக்கும் எடுத்துச் செல்லவல்லது.
அதர்மத்தில் மூழ்கிய எதிரிகளை மாய்க்க பகவான் திட்டம் போட்டுள்ளார். அர்ஜுனன் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒப்புக்குப் போர் புரிந்தாலும் போதுமானது. ஆயினும் அவனைப்பற்றிய உண்மை யென்ன? இடது கையாலும் நன்கு அம்பு எய்ய அவன் வல்லவன். துணிந்து சண்டை செய்வானானால் யாரையும் தோற்கடிக்க வல்லவன். அத்தகையவன் இந்தச் சிறந்த சந்தர்ப்பத்தைக் கைவிடலாகாது. தேவர்களையும் வெல்லவல்ல துரோணர், பீஷ்மர் முதலியவர்களை வென்றான் என்ற கீர்த்தி பகவான் கையில் கருவியாயிருப்பதால் எளிதில் வந்தமையும். தக்க வேளையில் தக்க கடமையைச் செய்கின்றவனுக்கு எல்லா மேன்மைகளும் எளிதில் வாய்க்கின்றன.
தான் கண்காட்சி மனோகற்பிதமோ என்ற ஐயமும் யாரெல்லாம் உண்மையாகவே மடியப்போகின்றார்கள் என்ற ஐயமும் அர்ஜுனனுக்கு வருகிறது. அவைகளை நீக்குதற்கு பகவான் மேலும் பகர்கிறார்:
34. த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச
கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா
யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்  
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம்-துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும், ததா அந்யாந் அபி யோதவீராந்-அவ்வாறே மற்ற யுத்த வீரர்களையும், த்வம் ஜஹி-நீ கொல், மா வ்யதிஷ்டா-அஞ்சாதே, யுத்யஸ்வ-போர் செய்,
ரணே ஸபத்நாந் ஜேதாஸி-போர் களத்தில் பகைவரை வெல்வாய்.
பொருள் : துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்.
துரோணரையும் பீஷ்மரையும் கொல்லுவது தர்மத்துக்கு முரண்பட்டதன்று என்பது ஏற்கனவே புகட்டப்பட்டது. இனி, அவர்களைக் கொல்லமுடியுமா என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் துரோணர் தெய்வீக அஸ்திர சஸ்திரங்களை யுடையவர்; மேலும் குரு பீஷ்மருக்கோ அவர் விரும்பினாலொழிய மரணம் வராது. இதுவரையில் அவரை யாரும் வென்றது கிடையாது. ஜயத்ரதனுடைய தலையை யார் பூமியில் வீழ்த்துகிறானோ அவனுடைய தலை வெடித்துப் பூமியில் விழும்படி ஜயத்ரதனுடைய தந்தை கடுந்தவம் புரிகிறார். ஆக, அதுவும் கஷ்டத்துக்கு ஏதுவான யுத்தம். இனி, கர்ணன் விஷயமும் அப்படியே இருக்கிறது. அவன் இந்திரனிடத்திருந்து சக்தி என்னும் ஆயுதத்தைப் பெற்றிருக்கிறான். கர்ணன் அதை யார்மீது பிரயோகித்தாலும் அது வீண் போகாது. அர்ஜுனனைக் கொல்லுதற்கென்றே அவன் அதை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான். இந்த நெருக்கடிகளை நினைத்து அர்ஜுனன் அஞ்சி வருந்துவது இயல்பு.
ஆனால் பகவானே அவர்களைத் திருவுளங் கொண்டுள்ளார். அவர்களுடைய வல்லமையை ஏற்கனவே கரந்தாயிற்று. சித்திரத்தில் வரைந்த சிங்கங்களைத் துடைப்பது போன்று அவர்களை ஒடுக்குவது எளிதாகும். வேடன் கையில் உள்ள அம்புபோன்று பகவானுடைய திட்டத்துக்குக் கருவியாயிருப்பது அர்ஜுனன் கடமையாகும். ஆனால் வெல்ல முடியாதவர்களை அவன்தான் வென்றான் என்ற கீர்த்தி அவனுக்கு வரும். இக்கருத்துகளை பகவான் பார்த்தனுக்குத் தெளிவுறுத்துகிறார். இதைக் கேட்ட அர்ஜுனன் என்ன செய்தான்? அது ஸஞ்ஜயரால் விளக்கப்படுகிறது :
ஸஞ்ஜய உவாச
35. ஏதச்ச்ருத்வா வசநம் கேஸவஸ்ய
க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம்
ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய  
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், கேஸவஸ்ய ஏதத் வசநம் ஸ்ருத்வா-கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டு, கிரீடீ வேபமாந: க்ருதாஞ்ஜலி: நமஸ்க்ருத்வ-பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி செய்து, பூய: ஏவ க்ருஷ்ணம் ப்ரணம்ய-மீண்டும் கண்ணனை வணங்கி, பீதபீத: ஸகத்கதம் ஆஹ-அச்சத்துடன் வாய் குழறி சொல்லுகிறான்.
பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.
கிரீடம் தரித்துள்ள கோமகன் யாருக்கும் தலை வணங்கலாகாது. அச்சம் தவிர்ப்பது அவனது தர்மம். பிறர் வணங்க அவ்வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுதல் அரசனுக்கு முறை. திட்பத்துடன் உறுதிமொழி கூறுதல் அவனது இயல்பு. இங்கு ஈசுவரனது முன்னிலையில் அம் முறைமைகளெல்லாம் பறந்தோடுகின்றன. கடவுள் முன்னிலையில் குறுகுதல் உயிர்களது முடிவான செயல் என்பது வெளியாகிறது.
அப்படிக் குறுகிய அர்ஜுனன் யாது மொழிந்தான் ? விடை வருகிறது:
அர்ஜுந உவாச
36. ஸ்தாநே ஹ்ருஷீகேஸ தவ ப்ரகீர்த்யா
ஜகத்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச
ரக்ஷõம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி
ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா:  
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஹ்ருஷீகேஸ-இருஷீகேசா, தவ ப்ரகீர்த்யா-உன் பெரும் பெயரில் (புகழில்), ஜகத் ப்ரஹ்ருஷ்யதி-உலகம் மகிழ்கிறது, அநுரஜ்யதே ஸ்தாநே ச-இன்புறுவதும் பொருந்தும், பீதாநி ரக்ஷõம்ஸி திஸ: த்ரவந்தி-ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், ச ஸர்வே ஸித்தஸங்கா:-மேலும் சித்தர் கூட்டத்தினர், நமஸ்யந்தி-வணங்குகிறார்கள்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.
முன்பு காணாத மோட்டார் வண்டி முதலியவற்றை நாட்டுப் புறத்தார் பார்த்தால் உடனே அச்சம் கொள்ளுதல் இயல்பு. காணாத அற்புதச்செயலை முதன் முதல் கண்டதும் அதனிடத்துப் பீதி கொள்ளுதல் அறிவிலிகளின் இயல்பு. ராக்ஷஸர்கள் இறைவனைப் பற்றிய ஞான மில்லாதவர்கள்; அகங்கரித்து அடாத செயலில் ஈடுபடுபவர்கள். அத்தகையவர் இறைவனது உலக நடை முறையைத் தொகுத்துக் காணுமிடத்து நடுங்கி நாலா பக்கமும் ஓடுவார்கள். மோட்டார் வண்டி ஒன்றன் அமைப்பையும் பயனையும் அறியுமளவு மக்கள் அதை மெச்சுவார்கள். அங்ஙனம் பகவானது மகிமைகளைத் தெரிந்துகொள்ளுமளவு பக்தர்கள் அவனைப் போற்றிப் புகழ்வார்கள். அப்படிச் செய்வதில் அவர்களுக்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. இனி, மோட்டார்வண்டியைப் பயன்படுத்துபவரோ ஒரு சிறு கூட்டத்தார். பகவானை வணங்கி அவனிடத்து யோகம் செய்து அவனுக்கு உரியவர் ஆகின்றவர்கள் சித்தர்கள். அங்ஙனம் நிறை நிலைகள் யாவையும் அவர்கள் எய்துகின்றனர். உலகை அறிகின்றவளவு ஒருவன் உலகைப் பயன்படுத்துகிறான். பகவானை அறிகின்றவளவு ஒருவன் பண்பும் பயனும் அடைகிறான். இது அர்ஜுனனுக்கு அனுபவ பூர்வமாக இப்பொழுது விளங்குகிறது. ஆக. ராக்ஷசர் முதல் சித்தர் ஈறாக அவரவர் அறிவுக்கு எட்டியவாறு கடவுளோடு இணக்கம் வைப்பது யுக்தமானதே என்று பார்த்தன் பகர்கிறான்.
தெய்விகம் வாய்ந்த ரிஷிகள் ஈசுவரனுடைய நெருங்கிய உறவினரைப் போன்றவர்கள். அவர்கள் அவனுடைய நண்பர்கள் போலவும், ஸகாக்கள் போலவும், உறவினர்கள் போலவும் இருக்கின்றனர். சாதாரண மனிதர்கள் எல்லாரும் எட்டிய உறவினர் போன்றவர்கள். அவர்கள் கேவலம் ஈசுவர சிருஷ்டிகள் மாத்திரமே.
37. கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்
கரீயஸே ப்ரஹ்மணோऽப்யாதிகர்த்ரே
அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ
த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்  
மஹாத்மந்-மகாத்மாவே! ப்ரஹ்மண: அபி ஆதிகர்த்ரே-பிரம்ம தேவனையும் ஆதியில் படைத்தவனாகவும், கரீயஸே-மூத்தவராகவும் உள்ள, தே கஸ்மாத் ந நமரேந்-உனக்கு ஏன் வணங்கமாட்டார்? அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ-அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, யத் ஸத் அஸத்-எது சத்தாகவும் அசத்தாகவும், தத்பரம்-அவற்றைக் கடந்ததாகவும் உள்ள, அக்ஷரம்-அழிவற்ற பரம்பொருள் த்வம்-நீ.
பொருள் : மகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அசத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.
பகவானைப் போற்றி வணங்கும் எண்ணம் இயல்பாகவே சித்தர்களது உள்ளத்தில் எழுகின்றது. ஏனென்றால் அவர் எல்லாருக்கும் பெரியவர், மஹாத்மா, காலதேச நிமித்தத்தில் கட்டுப்படாதவராதலால் அவர் அனந்தர். தேவர்களுக்கெல்லாம் அவரே அதிபதி. ஜகத்துக்கு இருப்பிடமாக அவர் இருக்கிறார். உலகைப் படைத்த ஹிரண்யகர்பன் அல்லது நான்முக பிரம்மாவுக்கும் அவர் முதற்காரணம். உலகாகத் தோன்றியுள்ளது ஸத்; தோன்றாத மூலப்பிரகிருதி அஸத் எனப்படுகிறது. தோன்றிய உலகம் அதனிடத்திருந்து வருவதால் அது சிறிதும் தேய்வடைவதில்லை. ஆகையால் அது அக்ஷரம். ஸத் அஸத் இரண்டையும் அது கடந்திருப்பதால் அது பரம். பகவான் இத்தனையுமாயிருப்பதால் அவரை வாழ்த்தி வணங்காது வேறு என்ன செய்ய முடியும்? பெரியதைப் போற்றுவதால் ஒருவன் பெரியவனாகிறான்.
38. த்வமாதிதேவ: புருஷ: புராண:
த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம
த்வயா ததம் விஸ்வமநந்தரூப  
த்வம் ஆதிதேவ:-நீ ஆதிதேவன், புராண: புருஷ:-பழமையான புருஷன், த்வம் அஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்-நீ இந்த அகிலத்தின் பரம நிலையம், வேத்தா ச வேத்யம் ச-நீ அறிவோன், நீ அறிபடு பொருள், பரம் தாம: அஸி-பரமபதம், அநந்தரூப-அநந்தரூபனே,
த்வயா விஸ்வம் ததம்-உன்னால் உலகனைத்தும் நிறைந்துள்ளது.
பொருள் : நீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள், நீ பரமபதம்; அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்.
யாவும் அவரிடத்திருந்து உதயமாவதால் அவர் ஆதிதேவன். பிரபஞ்சம் என்னும் புரியிலே அவர் வாசம் செய்வதால் அவர் புருஷன். அவருக்கு மூத்தவர் ஒருவருமில்லை. ஆகையால் அவர் புராணன் அல்லது தொல்லோன். மஹா பிரளயத்தில் அனைத்துக்கும் அவர் ஒடுங்குமிடமாதலால் அவர் நிதானமாகிறார். அறியும் தன்மை அவரிடத்திருந்து வருகிறது. ஆதலால் அவர் வேத்தா. அறியப்படு பொருள்களெல்லாம் அவரிடத்திருந்து வந்தனவாதலால் அவர் வேத்யம். கடலில் அலை தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் அது ஒடுங்குவது போன்று உலகம் அவரிடத்துத் தோன்றி, இருந்து, மறைகிறது. ஆதலால் அவர் யாண்டும் அதற்குப் பெருநிலம் அல்லது பரம்தாமம் ஆகிறார். அதுவே மஹா விஷ்ணுவுடைய பரமபதம் எனப்படுவது. அவர் இன்னும் என்னவாகிறார் எனில் :
39. வாயுர்யமோऽக்நிர்வருண: ஸஸாங்க:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஸ்ச
நமோ நமஸ்தேऽஸ்து ஸஹஸ்ரக்ருத்வ:
புநஸ்ச பூயோऽபி நமோ நமஸ்தே  
வாயு: யம: அக்நி: வருண: ஸஸாங்க:-வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், த்வம் ப்ரஜாபதி-நீ பிரம்மன், ப்ரபிதாமஹ: ச-பிரமனுக்கும் தந்தை (பிதாமகன்-பிரம்மன்), ஸஹஸ்ரக்ருத்வ: நமோ நமஸ்தே அஸ்து-ஆயிரமுறை கும்பிடுகிறேன், பூய: அபி-மீண்டும், தே நம: - உனக்கு நமஸ்காரம், புந: ச நம:-திரும்ப திரும்ப நமஸ்காரம்.
பொருள் : நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டானாகிய பிரம்மன் நீ, உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டுமீட்டும் உனக்கு “நமோ நம!
காச்யபர் முதலிய லோகபிதாக்களுக்கு பிரஜாபதி என்று பெயர். பிரம்மா உலகுக்குப் பாட்டனார் ஆகிறார். அவருக்கு தந்தை விஷ்ணு. ஆகையால் முப்பாட்டனார் என்பது பகவானையே குறிக்கிறது. நமஸ்கரிப்பதற்கு முடிவின்மையானது பக்திப் பெருக்கை விளக்குகிறது.
40. நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே
நமோऽஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோऽஸி ஸர்வ:  
தே புரஸ்தாத் அத ப்ருஷ்டத நம:-உன்னை முன் புறத்தேயும் பின்புறத்தேயும் கும்பிடுகிறேன்
ஸர்வ-எல்லாமாவாய், தே ஸர்வத ஏவ நமோऽஸ்து-உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன்,
அமிதவிக்ரம:-எல்லையற்ற வீரியமுடையாய், அநந்தவீர்ய:-அளவற்ற வலிமையுடையாய், ஸமாப்நோஷி-சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய், தத: ஸர்வ: அஸி-எனவே நீ அனைத்துமாக இருக்கிறாய்.
பொருள் : உன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன்; எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.
எங்குத் திரும்பிப் பார்த்தாலும் எல்லாம் இறைவனுடைய சொரூபம். ஆகையால் நாலா பக்கங்களிலும் அவனுக்கு நமஸ்காரம் செய்வது பொருத்தமாகும். வீரியம் என்பது வல்லமை. அளவற்ற வல்லமையை ஒருவன் உடைத்திருந்தும் அதைக் கையாளாது விட்டுவிடலாம் அதனால் அது வீணாகிறது. பகவான் அத்தகையவரல்லர். தமது முடிவற்ற வல்லமையை எண்ணிறந்த விதங்களில் அவர் செயலுக்குக் கொண்டு வருகிறார். இந்த ஜகத் நடைமுறையே அதற்குச் சான்று. ஆதலால் அவர் பரந்த பராக் கிரமத்தையுடையவர் எனப்படுகிறார். பழம் என்று சொல்லுமிடத்து அதன் சதை, மேல் தோல், கொட்டை ஆகிய எல்லாம் அதில் அடங்கப் பெறுகின்றன. அங்ஙனம் பகவான் என்று சொல்லுமிடத்து, ஜகத் ஜீவகோடியனைத்தும் அவரிடத்து அடங்கப்பெறுகின்றன. அவரைப் போற்றுதலில் எல்லாம் போற்றப்படுகின்றன; எல்லாவற்றையும் போற்றுதலில் அவர் போற்றப்படுகிறார்.
பகவானைப்பற்றிய உண்மையை அறிந்த அர்ஜுனனுக்கு மனப்பான்மை மாறுகிறதா? விடை வருகிறது :
41. ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி
அஜாநதா மஹிமாநம் தவேதம்
மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி
42. யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி
விஹாரஸய்யாஸநபோஜநேஷு
ஏகோऽதவாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷõமயே த்வாமஹமப்ரமேயம்

தவ இதம் மஹிமாநம் அஜாநதா-இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், ஸகா இதி மத்வா-தோழன் என்று கருதி, ப்ரமாதாத் அபி வா ப்ரணயேந-தவறுதலாலேனும் அன்பாலேனும், ஹே க்ருஷ்ண! ஹே யாதவ! ஹே ஸகே! இதி-ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா என்று யத் ப்ரஸபம் உக்தம் ச-எது துடிப்புற்று சொல்லி யிருப்பதையும்
விஹார ஸய்யாஸந போஜநேஷு-விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், ஏக:-தனியிடத்தேனும், அதவா-அன்றி, தத்ஸமக்ஷம் அபி-மற்றவர் முன்னேயெனினும்,
அவஹாஸார்தம்-வேடிக்கையாக, யத் அஸத்க்ருத: அஸி-எந்தவிதமாக அவமதிக்கப் பட்டாயோ, தத் அப்ரமேயம் த்வாம் அஹம் க்ஷõயே-அவற்றையெல்லாம் அளவற்ற பெருமையுடைய உன்னை நான் பொறுக்கும்படி வேண்டுகிறேன்.
பொருள் : இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ஏ கண்ணா, ஏ யாதவா ஏ தோழா என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும்.
பொருள் : விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!
பகவானைப்பற்றிய மெய்யறிவு வந்ததும் அர்ஜுனனுடைய மனப்பான்மை அடியோடு மாறுகிறது. கிருஷ்ணனாகத் தோன்றிய தோற்றம் ஒன்றுமட்டுமல்ல; இவ்வுலகிலுள்ள தோற்றங்கள் யாவும் ஈசுவரனுடையவகளே. அறியாமையினால் நாம் அவைகளை அலட்சியப் படுத்துகிறோம். அவைகளைப் பாராட்டுமளவு நமக்கு நல்லறிவு வருகிறது. நல்லறிவுக்கு மற்றோர் அறிகுறியுண்டு. நம் அறிவு எவ்வளவு தெளிந்தது எனினும் நம் அறிவால் அவனை முழுதும் அளந்துவிட முடியாது. வணக்கம் நிறைந்த இணக்கம் இறைவனிடத்தும் இறைவனது சிருஷ்டியின் கண்ணும் வைக்கக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இதுவே தெளிவுபட்ட மனமாறுதல் ஆகிறது.
அர்ஜுனன் கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதற்குக் காரணம் யாது? விடை வருகிறது : (41-42)
43. பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர்கரீயாந்
ந த்வத்ஸமோऽஸ்த்யப்யதிக: குதோऽந்யோ
லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபாவ  
த்வம்-நீ, அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய-இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு, பிதா-தந்தை ஆவாய், ச பூஜ்ய: அஸி-இவ்வுலகத்தால் தொழத் தக்கவன், கரீயாந் குரு-மிகவும் சிறந்த குரு,
த்வத்ஸம: ந அஸ்தி-உனக்கு நிகர் யாருமில்லை, அபி அப்யதிக: குத: அந்ய:-எனில் உனக்கு மேல் வேறுயாவர்? லோகத்ரயே அப்ரதிமப்ரபாவ-மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
பொருள் : சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
சிருஷ்டி முழுதுக்கும் ஈசுவரன் முதற்காரணமாதலால் அவர் நகர்வன, நிலைத்திருப்பன அனைத்துக்கும் பிதா என்று அழைக்கப்படுகிறார். அத்துடன் பெருமை யனைத்தும் அமையப் பெற்றிருப்பதால் அவர் எல்லாராலும் போற்றுதற்கு உரியவராயிருக்கிறார். ஈசன் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு ஒப்பானவரே இல்லை யென்றால் அவரினும் உயர்ந்தவரைக் காண்பது எங்ஙனம்? ஆக, உலக நடைமுறைக்கு அதிபதியாக இருப்பவர் ஈசுவரன் ஒருவரே எனலாம். ஒருவருக்கு மேற்பட்ட ஈசுவரர்கள் இருப்பார்களானால் உலக நடைமுறையில் ஒழுங்கின்மை உண்டாகும். ஒருவர் சிருஷ்டிக்க எண்ணுகையில் மற்றொருவர் ஸம்ஹாரம் செய்ய நினைப்பாரானால் ஒரு செயல் மற்றொரு செயலோடு முரண்பட்டுக் குழப்பம் வந்து அமையும். மற்று ஒழுங்கான உலக நடைமுறைக்குத் தலைவனாக ஈசன் ஒருவரே இருக்கிறார். அவர் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு மிக்கார் யாருமல்லாததால் மனிதன் என்ன செய்ய வேண்டும்?
44. தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாமஹமீஸமீட்யம்
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு:
ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்  
தஸ்மாத் காயம் ப்ரணிதாய ப்ரணம்ய-ஆதலால், உடல் குனிய வணங்கி, ப்ரஸாதயே-அருள் கேட்கிறேன், ஈட்யம் ஈஸம் தேவ-வேண்டுதற்குரிய ஈசனே! பிதா புத்ரஸ்ய இவ-மகனைத் தந்தை போலும், ஸக்யு: ஸகா இவ-தோழனைத் தோழன் போலும், ப்ரிய: ப்ரியாயா:-அன்பனையன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்), த்வாம் அஹம் ஸோடும் அர்ஹஸி-நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்
பொருள் : ஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும், அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.
பகவானது மகிமையை அறியும்போது அவன் போற்றுதற்குரிய பொருள் என்பது புலப்படுகிறது. ஆதலால் அர்ஜுனன் காயத்தால் வீழ்ந்து வணங்குகிறான். போற்றுதற்கு உரிய பொருள் அவன் என்று அறிவதால் பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள இணக்கம் தடைப்படுவதில்லை. அது படிப்படியாக நெருங்கி ஐக்கியத்தை உண்டுபண்ணுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் பிரிக்கமுடியாத தொடர்வுண்டு. ஆனால் பயபக்தியால் பிள்ளை பிதாவிடத்துச் சம உரிமை கொண்டாடுவதில்லை. தொடர்வு இருப்பது மட்டும் அல்ல, உயர்வு தாழ்வு பாராட்டாத தோழமையும் உண்டு என்பது அடுத்தபடியாகச் சொல்லப்படுகிறது. அத் தோழமையில் இனிமையும் உண்டு என்று காதல் நிலையில் வைத்து அது மேலும் விளக்கப்படுகிறது. அத்தகைய பேரிணக்கத்தில் குற்றங்காணாது குணமே காணும் பண்பு நன்கு அமையப் பெறுகிறது.
பராபக்தியில் பக்தன் ஈசுவரனைத் தனக்கு அத்யந்தம் நெருங்கிய அன்பனாகக் கருதுகிறான். அது கிருஷ்ண பரமாத்மாவிடம் கோபஸ்திரீகளுக்கு இருந்த பக்தி போன்றது. அவர்கள் அவரை எப்பொழுதும் கோபிகாநாதன் என்று கருதி யழைத்தனரே தவிர ஜகந்நாதன் என்று கருதி அழைத்ததில்லை.
அர்ஜுனன் எத்தகைய வடிவத்தைத் தொடர்ந்து காண விரும்பினான் என்பது மேலும் அவனது வாயினின்று வெளியாகிறது : 
45. அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோऽஸ்மி த்ருஷ்ட்வா
பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே
ததேவ மே தர்ஸய தேவ ரூபம்
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ  
அத்ருஷ்டபூர்வம்-இதற்கு முன் காணாததை, த்ருஷ்ட்வா ஹ்ருஷித: அஸ்மி-கண்டு மகிழ்சியுறுகிறேன், மே மந: பயேந ப்ரவ்யதிதம் ச-என் மனம் அச்சத்தால் சோர்கிறது, தத் தேவரூபம் ஏவ மே தர்ஸய-அந்த தேவ வடிவத்தையே எனக்கு காட்டுக, தேவேஸ ஜகந்நிவாஸ-தேவேசா, ஜகத்தின் நிலையமே, ப்ரஸீத-அருள் செய்க.
பொருள் : இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்சியுறுகிறேன்; எனினும் என் மனம் அச்சத்தால்சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே எனக்கருள் செய்க.
விசுவரூபத்தைக் காட்டியருள வேண்டுமென்று அர்ஜுனன் பிரார்த்தித்தான். அதற்கு இரங்கிய பகவான் யுத்த நெருக்கடிக்குப் பொருத்தமாயிருந்த ஸம்ஹார சொரூபத்தை விசேஷமாகக் காட்டியருளினார். அதனால் அர்ஜுனனுக்கு யுத்தத்தைப் பற்றிய மயக்கம் ஒழிந்தது. எனினும் எப்பொழுதும் அதிலேயே திளைத்திருக்க தனஞ்ஜயனுக்குப் பிடிக்கவில்லை. கொந்தளிப்புள்ள கடலில் மீன் மருளுவது போன்று அவன் மயங்கினான். யாண்டும் இன்பம் தருகிற சாந்த சொரூபத்தைக் காணவேண்டுமென்று விண்ணப்பித்தான். உக்கிரரூபம் எடுப்பதும் பகவானது லீலை என்பதைத் தெரிந்து கொண்டால் போதுமானது. அக் காட்சியிலேயே நிலைபெற்றிருக்க பக்தன் விரும்புவதில்லை.
சிங்கம் போலப் பொய்க்கோலம் பூண்டுகொண்ட ஹரி, பார்க்க வெகு பயங்கரமாகத்தான் இருக்கிறான். அவன் தன் தங்கை விளையாடுமிடத்துக்குச் சென்று பயங்கரமாகக் கூச்சலிடுகிறான். அதைக்கேட்டு நடுநடுங்கிய அவள், இந்த குரூரப் பிராணியிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமே யென்று துக்கத்தோடு உரக்கக் கூச்சலிட்டு அழுகிறாள். ஆனால் ஹரி தன் வேஷத்தைக் கலைத்து விட்டதும், பயந்து போயிருந்த சிறுமி தனது பிரிய சகோதரனைக் கண்டு, ஓ அண்ணாதானா இது என்று சொல்லிக் கொண்டு அவனிடம் ஓடுகிறாள். மாயையாகிற கோலத்தில் பிரம்மம் தன்னை மறைத்துக் கொள்கிறது. அப்பொழுது அது இரக்க மற்ற மூர்த்தியாகவும் தோன்றுகிறது. மாயையை அகற்றிவிட்டால் பிரம்மம் அன்புருவான அந்தர்யாமியாகவே தோன்றும்.
தான் விரும்பும் வடிவம் இன்னதென்று இனி அர்ஜுனன் தெளிவுபடுத்துகிறான்:
46. கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த
மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ
தேநைவ ரூபேண சதுர்புஜேந
ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்தே  
கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம்-கிரீடமும் கதையும் கையில் சக்கரமுமாக, ததா ஏவ த்வாம் த்ரஷ்டும் அஹம் இச்சாமி-அந்த விதமாகவே உன்னைக் காண நான் விரும்புகிறேன், விஸ்வமூர்தே-அகில மூர்த்தியே, ஸஹஸ்ரபாஹோ-ஆயிரத் தோளாய், தேந ஏவ சதுர்புஜேந ரூபேண-அதே நான்கு தோலுடன் கூடிய வடிவினை, பவ-எய்துக.
பொருள் : முன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரத் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.
இரண்டு கைகளையுடைத்திருப்பவர் மக்கள். நான்கு கரங்கள் கடவுள்பால் வைத்து அறிவது அவருடைய அமானுஷிய சக்திக்கு அறிகுறியாகும். கெட்டிக்காரன் ஒருவன் பல கைகளை யுடையவனாகக் கருதப்படுகிறான். இனி, கடவுள் விசுவ வடிவத்துடன் இருப்பவர்; ஆதலால் கைகளெல்லாம் அவருடையவைகளேயாம். ஒரு தொழிற்சாலையில் இருப்பவர்கள் அத்தனை பேரும் தொழில் புரிகிறார்கள்; எனினும் தொழில் வல்லமையைக் காட்டுதற்கு அதில் திறமை வாய்ந்த ஒருவனது வேலைப்பாடு மற்றவர்களுக்குக் காண்பிக்கப்படுகிறது. கிருஷ்ணனது மானுட வடிவத்தின் மூலம் தெய்வச் செயல் யாவும் அறியப்படுகின்றன. ஆதலால் தான் எப்பொழுதும் கண்டுவந்த மானுட வடிவத்தையே மீண்டும் காட்டும்படி குந்தியின் மகன் வேண்டுகிறான்.
சில வேளைகளில் சிலருக்குத் தன் வடிவத்தை நான்கு கரங்களுடன் கிருஷ்ணன் காட்சி கொடுத்ததாகப் பாகவதப் புராணம் கூறுகிறது.
தமது காட்சியை பகவான் மாற்றியருள்கிறார். மேலும் அர்ஜுனனுக்கு ஆறுதல் அளிக்கின்றார்.
47. ஸ்ரீ பகவாநுவாச
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம்
ரூபம் பரம் தர்ஸிதமாத்மயோகாத்
தேஜோமயம் விஸ்வமநந்தமாத்யம்
யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம்  
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அர்ஜுந-அர்ஜுனா, ப்ரஸந்நேந-அருள் கொண்டு, மயா ஆத்மயோகாத்-என்னுடைய யோக சக்தியினால், பரம் தேஜோமயம்-மிகச் சிறந்ததும் ஒளி மயமானதும், ஆத்யம் அநந்தம்-முதல் ஆனதும் முடிவற்றதுமான, யத் மே விஸ்வம் ரூபம்-எந்த என்னுடைய விஸ்வ ரூபத்தை, தவ தர்ஸிதம்-உனக்குக் காட்டப் பட்டதோ, இதம் த்வத் அந்யேந-இவ்வடிவம் உன்னைத் தவிர (வேறு எவராலும்), ந த்ருஷ்டபூர்வம்-பார்க்கப் படவில்லை.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது.
ஈசுவர சாக்ஷõத்காரம் பண்ணினது அர்ஜுனனுடைய தனி யுரிமை யென்று பொருள்படுத்தலாகாது. மெய்ப்பொருள் காட்சிக்குத் தனியுரிமையிருக்குமானால் அது எல்லார்க்கும் பொது, எங்கும் வியாபகம், எல்லார்க்கும் அந்தராத்மா என்ற பேருண்மை அடிபட்டுப்போம். அதனுடைய பரிபூரணத்துக்குக் குறையும் வந்துவிடும். கருத்து யாது எனின் சகுணப் பிரம்மம், நிர்க்குண பிரம்மம்-அதன் இத்தனைவிதப் படித்தரங்கள் ஆகிய இவை யாவையும் தொகுத்து ஒருங்கே காட்சி காண்பவர் மிகச் சிலர். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் காணவில்லை என்பது அதன் சிறப்பைக் குறிக்கிறது.
48. ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநைர்
ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை:
ஏவம்ரூப: ஸக்ய அஹம் ந்ருலோகே
த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர  
வேத யஜ்ஞ அத்யயநை: தாநை:-வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், க்ரியாபி-கிரியைகளாலேனும், உக்ரை: தப: அபி ச-உக்ரமான தவங்களாலும் கூட,
ந்ருலோகே-மனித உலகில், த்வத் அந்யேந-உன்னையன்றி, ஏவம் ரூப:-இந்த உருவத்தில், அஹம் த்ரஷ்டும் ஸக்ய-நான் காண இயலாதவன், குருப்ரவீர-குருகுலத்தில் சிறந்த வீரா!
பொருள் : வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா!
வேதத்தை அத்யயனம் செய்வது என்பதைச் சிலர் நெட்டுருப் போட்டு ஓதுதல் என்று பொருள்படுத்துகின்றனர். அதுவெறும் ஞாபகசக்தியையும் மனப்பாடம் பண்ணும் திறமையையும் உண்டுபண்ணுகிறது. அதற்குமேல் அதை அர்த்தம் பண்ணவும் அதில் சொல்லியுள்ள யாகங்களைச் செய்யவும் கற்றுக் கொள்ளவேண்டும். அப்படி நான்கு வேதங்களை அறிந்து எல்லா யாகங்களையும் அனுஷ்டிக்கத் தெரிந்துகொண்டால் வேதாத்யயனம் பூர்த்தியாகிறது. தனக்குப் பயன்படும் பொன், பசு முதலியவைகளைப் பிறர்க்கு வழங்குவது தானமாகும். பலவந்தத்தால் பொருளை ஏராளமாகச் சிரமப்பட்டுச் சேகரித்து அபிஷேகம் அலங்காரம் முதலியவைகளில் பெருமிதமாகச் செலவிடுவது கர்மமாகும். சாந்திராயண விரதம் போன்றவைகள் உக்கிர தபசு ஆகின்றன. இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறவர்கள் பவுர்ணமியன்று பதினைந்து கவளம் அன்னம் உண்கின்றனர். பிறகு நாள் ஒரு கவளம் கிருஷ்ணபக்ஷத்தில் குறைத்துக்கொண்டுவந்து அமாவாசையன்று ஒரு கவளம் உண்கின்றனர். திரும்பவும் சுக்கிலபக்ஷத்தில் நாள் ஒரு கவளம் அதிகப்படுத்திக்கொண்டு போகின்றனர். இவ் விரதத்தால் பெரிதும் சித்த சுத்தி உண்டாகிறது.
விலைகொடுத்து ஒரு பொருளை வாங்குவது போன்று இத்தகைய யக்ஞ, தான, தப கர்மங்களால் ஈசுவரப் பிராப்தி யடைந்துவிடலாம் என்பதில்லை. அவனை அடைதற்கு அவன் அருளையே நாடி நிற்கவேண்டும். அவனை அடைந்தவர்களும் அவனை முழுதும் அறிந்துகொண்டவர்கள் அல்லர்.
கொஞ்சம் சாராயத்தைக் குடித்ததும் சிலர்க்குப் போதையுண்டாகிறது. இன்னும் சிலர்க்குப் போதையுண்டாக இரண்டு மூன்று புட்டிகள் வேண்டியிருக்கிறது. ஆயினும் இருவகையினரும் அடையும் ஆனந்தம் ஒன்றுதான். அதுபோல, ஈசுவர மகிமையில் தினையளவைக் கண்டதும் சிலருக்கு ஆனந்தம் உண்டாகிறது. வேறு சிலருக்கு ஈசுவர ஸந்நிதானத்தில் நேருக்கு நேராக வந்த பிறகு தான் ஆனந்தமுண்டாகிறது. ஆயினும் இருவரும் அடையும் ஆனந்தம் ஒன்றே.
49. மா தே வ்யதா மா ச விமூடபாவோ
த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம்
வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம்
ததேவ மே ரூபமிதம் ப்ரபஸ்ய  
ஈத்ருக் மம கோரம் ரூபம் த்ருஷ்ட்வா-இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு, தே வ்யதா மா-உனக்கு கலக்கம் வேண்டாம், மா விமூடபாவ: ச-மதி மயக்கமும் வேண்டாம், த்வம் வ்யபேதபீ:-நீ அச்சம் நீங்கி, ப்ரீதமநா:-இன்புற்ற மனத்துடன், தத் ஏவ மே இதம் ரூபம் புந: ப்ரபஸ்ய-எனது இந்த வடிவத்தை மறுபடி பார்!
பொருள் : இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே, அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்!
கொந்தளிப்புள்ள கடல் தேங்கியிருக்கும்போது மனமகிழ்வுண்டாவது போன்று ஹம்ஹார மூர்த்தியின் காட்சி சாந்த மூர்த்தியின் காட்சியாக மாறுகையில் அதைப் பார்க்கும் ஜீவனுக்கு மனவமைதி ஏற்படுவது இயல்பு.
ஸஞ்ஜய உவாச
50. இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா
ஸ்வகம் ரூபம் தர்ஸயாமாஸ பூய:
ஆஸ்வாஸயாமாஸ ச பீதமேநம்
பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா  
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், வாஸுதேவ: இதி அர்ஜுநம் உக்த்வா-இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடம் கூறி, பூய: ததா ஸ்வகம் ரூபம் ச-மறுபடியும் அதே விதமான தன்னுடைய உருவத்தையும், தர்ஸயாமாஸ-காட்டினான், புந: மஹாத்மா ஸௌம்யவபு: பூத்வா-அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி, ஏநம் பீதம் ஆஸ்வாஸயாமாஸ-இந்த அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.
பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடங் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.
வசுதேவர் வீட்டில் எப்படிப் பிறந்தாரோ அப்படிப்பட்ட வடிவத்தை இப்பொழுது காட்டியருளினார். உயிர்களுக்குப் பாடம் புகட்டுதற்கு வேண்டியவளவே அவர் அச்சமூட்டுகிறார். பின்பு இனிய வடிவங்காட்டி அவர்களை மகிழ்விக்கிறார். அவர் இத்தகைய தன்மையுடையவராயிருப்பதால் அவர் மஹாத்மா வாகிறார்.
அர்ஜுந உவாச
51. த்ருஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந
இதாநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத:  
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஜநார்தந-ஜனார்த்தனா, தவ இதம் ஸௌம்யம் மாநுஷம் ரூபம்-நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தை, த்ருஷ்ட்வா இதாநீம்-கண்டு இப்போது, ஸசேதா: ஸம்வ்ருத்த: அஸ்மி-நிலையான மனம் கொண்டவனாக ஆகிவிட்டேன், ப்ரக்ருதிம் கத:-இயற்கை நிலையெய்தினேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.
எல்லாம் ஈசன் வடிவெனினும் சிங்கத்தின் வடிவெடுத்துள்ள ஈசனிடத்திருந்து சிறிது எட்ட நிற்க ஜீவன் விரும்புகிறான். அவனிடத்து ஜீவபோதம் இருக்குமளவு இத்தகைய மனப்பான்மையும் இருக்கும்.
ஸ்ரீ பகவாநுவாச
52. ஸுதுர்தர்ஸமிதம் ரூபம் த்ருஷ்டவாநஸி யந்மம
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஸநகாங்க்ஷிண:  
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மம யத் ரூபம் த்ருஷ்டவாந் அஸி - என்னுடைய எந்த வடிவம் இப்போது பார்த்தாயோ, இதம் ஸுதுர்தர்ஸம்-இது காண்பதற்கு அரிதானது, தேவா அபி-தேவர்கள் கூட, நித்யம் அஸ்ய ரூபஸ்ய-எப்போதும் இந்த உருவத்தை, தர்ஸந காங்க்ஷிண:-காண விருப்பம் கொண்டு இருக்கிறார்கள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்குக் கண்டனை, தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.
தேவர்கள் இச்சித்துக்கொண்டிருக்கிறார்களாதலால் அவர்கள் இன்னும் இறைவனை முழுதும் கண்டதில்லை. ஒரு நதியில் நீராடப் போகின்றவன் அதை ஓர் இடத்தில் ஸ்பரிசித்து மூழ்கி நீராடினால் அந்நதியைக் கண்டவன் ஆகிறான். ஆனால் அது உற்பத்தியாகுமிடத்திலிருந்து சமுத்திரத்தில் சங்கமமாகும் பரியந்தம் அதைப் பார்த்தவர்கள் மிக மிகச் சிலர். அங்ஙனம் அர்ஜுனன் இறைவனைக் கண்டதுபோன்று அவரைப் பெரிதும் அறிந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.
கடவுளைக் காண்பதற்கு சாதகர்கள் கையாண்ட உபாயங்கள் எவை? விடை வருகிறது :
53. நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
ஸக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா  
யதா மாம் த்ருஷ்டவாந் அஸி-எவ்வாறு நீ என்னைப் பார்த்தாயோ, ஏவம்வித: அஹம் - இவ்விதமாக நான், வேதை: த்ரஷ்டும் ந ஸக்ய-வேதங்களாலும் காணப் பட முடியாதவன், தபஸா ந-தவத்தாலும் இல்லை, தாநேந ந-தானத்தாலும் இல்லை, இஜ்யயா ச ந-வேள்வியாலும் இல்லை.
பொருள் : என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.
பொற்காசு ஒன்றை இழந்தவன் அதன்மீது நின்றுகொண்டே அதை எவ்வளவு தேடினாலும் அதை அடையமாட்டான். வேதம், வேள்வி, தானம், தபசு முதலியன மனிதனைப் பண்படுத்துதற்குப் பயன்படலாம். ஆனால் கடவுளைக் காண இவையாவும் உதவமாட்டா.
கடவுளைக் காண வேறு என் செய்வது? விடை வருகிறது:
54. பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப  
து பரந்தப-ஆனால், எதிரிகளை எரிப்பவனே! அர்ஜுந-அர்ஜுனா, ஏவம் வித: அஹம் - இவ்விதமாக நான், அநந்யயா: பக்த்யா-வேறெதுவும் வேண்டாத பக்தியால், த்ரஷ்டும் ஸக்ய-காணுதல் இயலும், தத்த்வேந ஜ்ஞாதும் ப்ரவேஷ்டும் ச-உள்ளபடி அறியவும் ஒன்றவும் (முடியும்).
பொருள் : பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.
அனன்ய பக்தி-கடவுளைத்தவிர வேறு ஒன்றையும் நாடாத பக்தி. அது கடவுளுக்குப் புறம்பாக எதையும் பொருள்படுத்துவதில்லை. எல்லாம் அவன் மயம், எல்லாம் அவன் செயல் என்ற மனநிலை அனன்ய பக்தியினின்று வருகிறது.
ஒரு ராஜ மாளிகையில் சிப்பந்திகள் நடந்துகொள்ளும் முறையினின்று அரசன் அதில் வீற்றிருக்கின்றான் என்று யூகித்து உணரலாம். அந்த உணர்ச்சி மட்டும் போதாது. அரசனைக் கண்கூடாகக் காண்பது அதிலும் மேல். இனி, அவனைக் காண்பதிலும் பெரிய நிலையொன்று உண்டு. அரசனோ ஒட்டி உறவாடுதலே சாலச்சிறந்தது. அங்ஙனம் அனன்ய பக்தியால் ஒருவன் கடவுளின் சாந்நித்தியத்தை முதலில் உணர்கிறான். அதன்மேல் தர்சனம் உண்டாகிறது. பிறகு தானே அதில் ஒடுங்குகிறான். இத்தனையும் செய்ய வல்லது பக்தி.
பலர் பாலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பாலைப் பருகினவர்கள் அதிலும் சிலரே.
ஊனக்கண் கொண்டு கடவுளைக் காணமுடியுமா என்ற பேச் செழுந்தது. இல்லை; ஊனக் கண்களால் காணமுடியாது. பக்தி பண்ணும்போது அன்பு மயமான சரீரம் ஒன்று நமக்குள் உண்டாகிறது. அச்சரீரத்துக்கு அன்பு மயமான கண்களும் காதுகளும் உண்டு. அவற்றால் நீ இறைவனைக் காணவும் கேட்கவும் முடியும்.
பக்தியைப் பெருக்கி இறைவனை அடைதற்கு என்ன செய்ய வேண்டும்? விடை வருகிறது :
55. மத்கர்மக்ருந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித:
நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ  
பாண்டவ-பாண்டவா! ய: மத்கர்மக்ருத்-எவன் செய்ய வேண்டிய கடமைகளை என் பொருட்டே செய்வானோ, மத்பரம:-என்னையே அடையவேண்டும் என்று குறிக்கோள் கொள்வானோ, மத்பக்த:-என்னிடம் பக்தி கொண்டவனோ, ஸங்கவர்ஜித:-பற்றற்றவனோ, ஸர்வபூதேஷு நிர்வைர:-எவ்வுயிரிடத்தும் பகை இல்லாதவனோ, ஸ:-அவன் மாம் ஏதி-என்னையே அடைகிறான்.
பொருள் : என்தொழில் செய்வான், எனைத் தலைக் கொண்டோன்,என்னுடைய அடியான் பற்றெலாம் இற்றான், எவ்வுயி ரிடத்தும் பகைமை யிலாதான் யாவன், பாண்டவா! அவனென்னை எய்துவான்.
எல்லா ஜீவர்களும் கர்ம சொரூபம். ஒருவன் எத்தகையவன் என்பதை அவன் செய்யும் கர்மம் விளக்குகிறது. மக்களுள் கடவுளுக்கென்றே கர்மம் செய்பவன் சிறந்தவன். அரசாங்கத்துக் கென்றே கர்மம் செய்கிறவர்கள் உளர். அதன் மூலம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வது அவர்களிற் சிலரது குறிக்கோள். ஆனால் பக்தனோ கடவுளை அடைதலையே ஒப்பற்ற குறிக்கோளாகக் கொள்கிறான்.
ஆயுளெல்லாம் ஒருவன் சிறைவாசம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதில் விருப்பமில்லாது அவன் அவ்வாழ்வை நடத்துகிறான். ஆனால் கடவுள் வழிபாடு அத்தகையதன்று. நாள்தோறும் புதிய இனிமை அதினின்று பிறக்கிறது. இறைவன்பால் அளவில்லா அன்பு ஊற்றெடுக்கிறது.
இறைவனிடம் அன்பு அதிகரிக்கின்றவளவு உலகப் பொருள்களிடத்துப் பற்று அகலுகிறது. ஒருவன் மற்றொருவனை வெறுப்பதற்குக் காரணம் தான் அடையவிரும்பும் பொருளை மற்றொருவன் கைக்கொள்ள முயலுவதால் வருகிறது. பக்தனுக்கோ ஒரு பொருளிலும் பற்றில்லை யாதலால் அதை முன்னிட்டு யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்லை. மனிதன் எதன்பால் தன்னை ஒப்படைக்கின்றானோ அதை அவன் அடைகிறான். கடவுள்பால் தன்னை ஒப்படைப்பவன் கடவுளை அடைகின்றான்.
ஈசுவரனிடம் நமக்கு எவ்வளவு தீவிரமான பக்தி இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா? தனது கணவனிடம் ஒரு கற்புடைய மாதுக்கு இருக்கும் அன்பு, தான் புதைத்து வைத்த பணத்தினிடம் ஒரு லோபிக்கு இருக்கும் ஆசை, உலகப் பொருள்களைப் பெறவேண்டுமென்று பற்றுள்ளவர்கள் கொள்ளும் ஆவல் இந்த மூன்றும் ஒன்று கூடினாற்போன்ற தீவிர பக்தியானது ஈசுவரனைக் காணவேண்டியதற்காக உன் மனதில் உதித்திருக்குமானால் அப்போது அவனை நீ நிச்சயமாக அடைவாய்.

பன்னிரண்டாம் அத்தியாயம்
பகவத்கீதை | பக்தி யோகம்

ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்கார மற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில் தான் கடவுளுக்கு அதிக பிரீதி. சகுண நிர்க்குண பிரம்ம உபாஸனைகள் 1-5 -சகுண பிரம்ம உபாஸனை முறைகள் 6-12 -பக்தனது பேரியல்புகள் 13-20.
அர்ஜுந உவாச
1. ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:  
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், யே பக்தா: ஏவம் ஸததயுக்தா:-எந்த பக்தர்கள் இவ்வாறு யோகத்தமர்ந்து, த்வாம் பர்யுபாஸதே-நின்னை வழிபடுகிறார்களோ, யே ச அக்ஷரம் அவ்யக்தம் அபி-மேலும் எவர்கள் அழிவற்ற வஸ்துவை வழிபடுகிறார்களோ,
தேஷாம் யோகவித்தமா: கே-இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்ற “அவ்யக்த” வஸ்துவை வழிபடுவோரா இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
முன் அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் சொல்லியபடி சகுண பிரம்ம உபாசனை செய்வது சிறந்ததா அல்லது நிருபாதி, நிர்விஷய, நிர்க்குண பிரம்ம உபாசனை செய்வது சிறந்ததா என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
2. மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா:  
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மயி மந: ஆவேஸ்ய-என்னிடத்தே மனத்தைச் செலுத்தி, நித்யயுக்தா:-நித்திய யோகிகளாய், யே-எந்த பக்தர்கள், பரயா ஸ்ரத்தயா உபேதா:-சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக, மாம் உபாஸதே-என்னை வழிபடுகிறார்களோ, தே யுக்ததமா-அவர்கள் யோகிகளிலேயே மேலானவர் என்று, மே மதா:-என்னால் மதிக்கப் படுபவர்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.
பகவான் விசுவரூபத்தை யுடையவர்; பரமேசுவரன். அவர் சகுண பிரம்மம். உலகுக்கு அந்தர்யாமியாயிருந்து அதை ஆளுகிறார். யோகிகளுக்கெல்லாம் அவரே மேலான ஈசுவரன். சர்வக்ஞன் என்று அவரைத்தான் சொல்ல வேண்டும். முழுமனதையும் ஒழுங்குப்படுத்தி அவர்மீது செலுத்துகிறவர்கள் பக்தர்கள். அவர்களுக்கு விருப்பு, வெருப்பு, மனக்கிலேசம் முதலியன கிடையா. இரவும் பகலும் இறைவனைப் பற்றிய சிந்தனை யொன்றே அவர்களின் உள்ளத்தில் குடிகொள்கிறது. அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பதும் இறைவன் பொருட்டேயாம். ஆதலால் அவர்கள் சிறந்த யோகிகள் ஆகிறார்கள்.
கடவுளை அரூபியெனத் தியானிப்பது முற்றிலும் சரியானதே. ஆனால் அதுதான் உண்மை, மற்றக் கொள்கைகளெல்லாம் பொய் என்று எண்ணிவிடாதே. அவன் ரூபி எனத் தியானிப்பதும் சரியானதே. ஆனால் அவனை நீ காணும் வரையில் உனது பிரத்தியேகமான கொள்கையைக் கைவிடாதே. அப்பால் எல்லாம் தெளிவாகும்.
மற்று, நிர்க்குண நிராகார பிரம்மத்தை உபாசிப்பவர்கள் சிறந்த யோகிகள் ஆகமாட்டார்களா? அதற்கு விடை வருகிறது :
3. யே த்வக்ஷரமநிர்தேஸ்யமவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம்  
4. ஸந்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய:
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:  
து யே அக்ஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம்-எவர், அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), ஸர்வத்ரகம் அசிந்த்யம்-எங்கும் நிறைந்ததும், மனம்-புத்திகளுக்கு அப்பாற்பட்டதும், கூடஸ்தம் அசலம் த்ருவம்-நிலையற்றதும், அசைவற்றதும் , உறுதி கொண்டதுமாகிய பொருளை, பர்யுபாஸதே-வழிபடுகின்றனரோ.
இந்த்ரியக்ராமம் ஸந்நியம்ய-புலன்களின் கூட்டத்தை நன்கு அடக்கி, ஸர்வத்ர ஸமபுத்த, :-எங்கும் சமபுத்தியுடையோராய், ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய, தே மாம் ஏவ ப்ராப்நுவந்தி-அவர்களும் என்னையே அடைகிறார்கள்.
பொருள் : இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ
பொருள் : இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்
நிர்க்குண பிரம்மம் எத்தகையது என்பது விளக்கப்படுகிறது. அது அநிர்தேச்யம்-உலகப்பொருள் எதனோடும் சீர்தூக்க இடந்தருகிறதில்லை யாதலால் அது எத்தகையது என்ற சொல்லால் விளக்க முடியாது. உலகமோ தோன்றவும் மறையவும் செய்கிறது. தோன்றியபொழுது வியக்தமாகவும் மறைந்தபொழுது அவ்யக்தமாகவும் உலகம் இருக்கிறது. ஆனால் பரபிரம்மத்தின் கண் இத்தகைய விகாரம் ஒன்றும் கிடையாது. அதீதத்தில் அது இருந்தபடி இருக்கிறது. ஆதலால் அது அவ்யக்தம். கடலின் கீழ் உள்ள பனிக்கட்டி தோன்றாது இருந்தபடி இருப்பது போன்றதா பிரம்மம் என்ற கேள்வி எழுகிறது. அப்படியல்ல, இது ஸர்வத்ரகம்-அங்கு இங்கு என்று சொல்ல இடந்தராது நீக்கமற எங்கும் நிறைபொருள். இடமே அதனுள் ஒடுங்கியது எனலாம். சொப்பனத்தில் பார்த்த ஒரு பெரிய இடம் மனதில் ஒடுங்குகிறது. அதே மனதானது நன்மை தீமை, இன்ப துன்பம் ஆகியவைகளை எண்ணவும் உணரவும் செய்கிறது. ஆனால் அம்மனது பிரம்மத்தை உணரவல்லதன்று. பிரம்மம் அசிந்த்யம்-சிந்தனைக் கெட்டாதது. கூட என்ற சொல் மாறுபடும் தன்மையுடையது என்று பொருள்படுகிறது. பிரபஞ்சம் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. மாறுபடும் பிரபஞ்சத்துக்கு பிரம்மம் இருப்பிடமாகிறது. நிலையற்றதை இது நிலைத்திருந்து தாங்குவதால் இதற்கு கூடஸ்தன் என்று பெயர். ஓயாது மாறுபடுகிற மேகத்தைத் தூக்கிக்கொண்டு காற்று நகர்ந்தோடுகிறது. சலிப்பது காற்றின் இயல்பு. பிரம்மத்திலோ சலனம் இல்லை. அது அசலம்-நகராதது. இனி, ஆகாசம் அசைவதில்லை. இருந்தபடி அது தோன்றுகிறது. பிரளயத்தில் இருந்தபடி அது அழிகிறது. பிரம்மம் அத்தகையதோ? அல்ல, அது த்ருவம்-நிலைபேறு உடையது. சுத்த சைதன்யமாகிய அது கால தேச வர்த்தமானத்தால் அடிபடாதிருப்பதால் அது அக்ஷரம், அதாவது அழியாதது.
இனி, நிர்க்குண பிரம்ம உபாசனைக்குத் தகுதியுடையவர் யார் எனின், அவர்களிடத்து சமபுத்தி யிருக்க வேண்டும். இன்பம் தருபவைகள், துன்பம் தருபவைகள் ஆகிய இரண்டையும் ஒரே பான்மையுடன் கருதுதல் சமபுத்தியாகும். இந்திரியக் கூட்டங்களை யெல்லாம் யார் நன்கு கட்டியாளுகிறார்களோ அவர்களுக்கே மனதின் நடுநிலை வந்தமைகிறது. மனதின் நடுநிலை என்பது உலகுக்குப் பயன்படாது பிணம்போன்று கிடப்பதல்ல. எல்லா உயிர்களையும் பிரம்ம சொரூபமாகக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அவர்களின் நன்மையில் நாட்டம் வைத்திருப்பதற்குச் சேவை செய்வதே அறிகுறியாகும். ஒரு சிலர் பிரம்ம சொரூபத்தில் லயித்துக் கர்மமற்றிருப்பார்கள். அங்ஙனம் ஜீவர்களை யெல்லாம் பிரம்ம சொரூபமாகக் காண்பதும் அந்த ஜீவர்களுக்கு பரம நன்மையை விளைவிக்கிறது. தைலதாரை போன்று இடையறாது மனது பிரம்ம சொரூபத்தில் போவது உபாஸனையாகும்.
மணியை அடிக்கும்போது, அடுத்தடுத்து வரும் அதன் ஒவ்வொரு ஓசையும் தனித்தனி உருவத்தையுடையதுபோலத் தோன்றும்; ஆனால் அடிப்பதை நிறுத்தினால் ஓசை சிறிது நேரம் வரையில் கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தொழியும். தெளிவற்ற சப்தமோ உருவமில்லாதது போலத் தோன்றுகிறது. மணியின் ஓசையைப் போலக் கடவுள் உருவமுள்ளவனாயும் உருவமில்லாதவனாயுமிருக்கிறான்.
இரண்டு உபாஸனையும் ஒன்று எனில் எதை வேண்டுமானாலும் ஒருவன் உபாஸிக்கலாமா? உபாஸிக்கலாகாது. ஏனென்றால் : (3-4)
5. க்லேஸோऽதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே  
அவ்யக்த ஆஸக்த சேதஸாம்-உருவற்ற (அவ்யக்த) பிரம்மத்தில் மனதை ஏற்படுத்தும், தேஷாம் க்லேஸ: அதிகதர:-அந்த மனிதர்களுக்கு சாதனையில் உழைப்பு அதிகம், ஹி தேஹவத்பி-ஏனெனில் உடலில் பற்றுள்ளவர்களால், அவ்யக்தா கதி-உருவற்ற பிரம்ம விஷயமான மார்க்கம், து:கம் அவாப்யதே-மிகுந்த சிரமத்துடன் அடையப் படுகிறது.
பொருள் : ஆனால், அவ்யக்தத்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம், உடம்பெடுத்தோர் அவ்யக்த நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.
இருதர உபாஸகர்களும் அடையும் குறி ஒன்றே. ஆனால் தேகாபிமானம் உடைய ஒருவனுக்கு நிர்க்குண பிரம்ம உபாஸனையைவிட சகுண பிரம்ம உபாஸனை எளிது. நிர்க்குண பிரம்ம உபாஸகன் துவக்கத்திலேயே உடல் பற்றை அறவே நீக்க வேண்டும். பிஞ்சாகிக் காயாகிக் கனியாகின்றவிடத்து மேலோடு பழத்தினின்று தானாகப் பிரிந்து போகிறது. அங்ஙனம் ஞான முதிர்ச்சி யடைபவனுக்கு தேகாபிமானம் போய்ஒழிகிறது. தேகப்பற்றுடையவனுக்கு எளிதாயிருப்பது சகுண பிரம்ம உபாஸனை. அதில் துவக்கி மேல் நோக்கிப் போகின்றவனுக்கு சாதனத்தில் அதிக சிரமம் ஏற்படுவதில்லை.
ஞானயோகி நானே பிரம்மம் என்கிறான். ஆனால் சரீரத்தை ஆத்மன் என்று கருதும் வரையில் அவ்வித பாவனை கெடுதியை உண்டுபண்ணும். அவனை அத்யாத்மிக வாழ்க்கையில் முன்னேறச் செய்யாமல் நாசப்படுத்திவிடும். அவன் மற்றவர்களை ஏமாற்றுகிறதோடு தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறான்.
இனி, ஈசுவர உபாஸனை எப்படிச் செய்யவேண்டும்? விடை வருகிறது :
6. யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா:
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே  
7. தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்
பவாமி நசிராத்பார்த மய்யாவேஸிதசேதஸாம் 
து மத்பரா:-ஆனால் என்னையே கதியாகக் கொண்ட, யே ஸர்வாணி கர்மாணி-எந்த பக்தர்கள் எல்லா கர்மங்களையும், மயி ஸந்ந்யஸ்ய-என்னிடம் சமர்ப்பணம் செய்து, மாம் ஏவ - என்னையே, அநந்யேந யோகேந-பிறழாத யோகத்தால், த்யாயந்த உபாஸதே-இடையறாது நினைத்து வழிபடுவார்களோ,
பார்த-பார்த்தா! மயி ஆவேஸித சேதஸாம்-என்பால் அறிவைப் புகுத்திய, தேஷாம் நசிராத்-அவர்களை சீக்கிரமாகவே, அஹம் ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்-நான் மரணவடிவான சம்சாரக் கடலிலிருந்து, ஸமுத்தர்தா பவாமி-கரையேற்றுபவனாக ஆகிறேன்.
பொருள் :  எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?
பொருள் : என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்
விசுவ ரூபத்தையுடைய ஈசுவரனைத் தவிர வேறு ஒன்றையும் பற்றுக்கோடாகக் கொள்ளாது அவனையே சார்ந்து யார் அவனுக்கென்றே பணி செய்யும் பான்மை யுடையவர்களாயிருக்கிறார்களோ அவர்கள் பிறப்பு இறப்பு மயமாயுள்ள சம்சாரப் பெருங் கடலினின்று விரைவில் கரையேற்றப்படுகிறார்கள்.
ஈசுவரானுபவத்துக்கும் அடையாளங்கள் உள்ளன. பக்தி எவனிடம் பொங்கித் ததும்புகின்றதோ அவனுக்கு வெகு சீக்கிரத்தில் ஈசுவர தரிசனம் கிடைக்குமென்று தெரிந்துகொள்.
அதற்காக ஜீவன் செய்யவேண்டியதென்ன? விடை வருகிறது : (6-7)
8. மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஸய
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஸய:  
மயி ஏவ மந: ஆதத்ஸ்வ-என்னிடமே மனதை நிலைநிறுத்து, மயி புத்திம் நிவேஸய -என்னிடமே புத்தியை ஈடுபடுத்து, அத: ஊர்த்வம்-அதற்கு மேல், மய்யேவ நிவஸிஷ்யஸி-என்னிடமே வாழ்வாய், ந ஸம்ஸய:-ஐயமில்லை.
பொருள் : மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.
உணர்ச்சி மயமாயிருப்பது மனது. தீர்மானிக்கும் தன்மையது புத்தி. இவ்விரண்டும் அந்தக் கரணத்தின் பிரிவுகள். ஒருவனது உடல் எங்கே இருக்கிறது என்பதிலிருந்து அவனது வாசஸ்தானத்தை அறிய வொண்ணாது. உள்ளம் எங்கிருக்கிறதோ மனிதன் அக்கணமே அங்கிருக்கிறான். இப் பூவுலகிலேயே சிலர் நரக வாசம் செய்கின்றனர்; வேறு சிலர் விண்ணுலகு நண்ணியவர் போன்று இன்பமடைகின்றனர். இங்கு இருந்தபடியே சித்தத்தைச் சிவத்தின்பால் வைத்து அவனது சந்நிதி சேருவார் உளர். அகம் எப்படியோ புறம் அப்படி. உள்ளத்தை இறைவனிடம் வைத்தது முதற்கொண்டு ஒருவன் இறைவனிடத்தே வசிக்கிறான் என்பதற்கு அவனது மனநிலையே சான்று. ஆதலால் அதைப் பற்றி ஐயமில்லை என்கிறார் பகவான்.
உலகத்தில் மனிதன் பிறக்கும்போது, வித்தியாகுணம் அவித்யா குணம் என்ற இரண்டு குணங்களுடன் பிறக்கிறான். வித்தியா குணம் முக்தியை அடையச் செய்யும். அவித்யா குணமோ மனிதனை உலகப் பற்றுக்குள்ளாக்கும். பிறக்கும்போது இவ்விரு குணங்களும் தராசின் தட்டுகளைப் போலச் சரிசமமாக இருக்கும். சீக்கிரமத்தில் உலக இன்பங்கள் ஒரு தட்டிலும் ஆத்ம விஷயங்கள் மற்றொரு தட்டிலும் ஏற்றப்படுகின்றன. மனம் உலக சுகங்களை விரும்புமானால் அவை வைக்கப்பட்டிருக்கும் தட்டு கனத்துக் கீழே செல்லும். அவ்வாறன்றி ஆத்ம விஷயத்தை மனம் பற்றுமானால் அவ்வாத்ம விஷயங்களடங்கிய தட்டு ஈசுவரனை நோக்கித் தாழும்.
உள்ளத்தை உறுதியாக இறைவன்பால் வைக்க இயலாதவர் என்ன செய்வது? விடை வருகிறது:
9. அத சித்தம் ஸமாதாதும் ந ஸக்நோஷி மயி ஸ்திரம்
அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய  
அத சித்தம்-ஒரு வேளை சித்தத்தை, மயி ஸமாதாதும்-என்னிடம் நிறுத்தி வைப்பதற்கு, ந ஸக்நோஷி-முடியாவிட்டால், தத: அப்யாஸ யோகேந-அப்போது (இறைவன் திருநாமம் ஓதுதல் போன்ற) பயிற்சியினால், மாம் ஆப்தும் இச்ச தநஞ்ஜய-என்னை அடைய விரும்பு அர்ஜுனா!
பொருள் : என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு.
மனது உறுதியாக இறைவன்பால் நிலைத்து நின்றுவிடுமானால் அது முதிர்ந்த பக்தியாகிறது. அப்படியல்லாது அது விஷயாதிகளில் சலித்து ஓடும் தன்மையதானால் பழக்கத்தால் அதை ஒழுங்குப்படுத்தவேண்டும். விஷயங்களிலிருந்து அதை மீட்டெடுத்து பகவானிடம் வைப்பதற்கு அப்பியாச யோகம் என்று பெயர். நல்லியல்பு, கெட்ட இயல்பு இரண்டுக்கும் அப்பியாசமே காரணமாகிறது. பழக்கத்தால் ஆகாததை ஆகும்படி செய்யலாம்.
ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான்; விளையாடுவான். அதைக் கைகளில் தூக்கிக்கொண்டு போவான்; அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தைக் கவனித்த ஓர் அறிஞர் நாயுடன் அப்படிப் பழகலாகாது என்றார். நாயின் சொந்தக்காரன் அதைக் கேட்டதும் நாயைத் தூர எறிந்துவிட்டான். இனி, அதனோடு கொஞ்சிக் குலாவுவதில்லை என்றும் தீர்மானித்தான். தன் எஜமானனது மாறிய மனதை நாய் அறியவில்லை. அது அடிக்கடி அவனிடம் ஓடிவந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனதில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த ஆசை என்னும் நாயை நீ விடவேண்டுமென்றாலும் அது உன்னை எளிதில் விடாது; இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிரமத்தில் அதனுடைய தொந்தரைகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும்.
மனது அப்பியாசம் என்ற கட்டுக்கு அடங்குவது இல்லவே இல்லை. அப்பொழுது என் செய்வது? விடை வருகிறது :
10. அப்யாஸேऽப்யஸமர்தோऽஸி மத்கர்மபரமோ பவ
மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி 
அப்யாஸே அபி அஸமர்த அஸி= (இவ்விதமான) பயிற்சியில் கூட திறமை அற்றவனாக இருந்தால், மத் கர்ம பரம: பவ-எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லட்சியமாகக் கொண்டிரு, மதர்தம் கர்மாணி குர்வந் அபி-என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும், மாம் அவாப்ஸ்யஸி-என்னை அடைவாய்.
பொருள் : பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.
அப்பியாசம் செய்ய மனது ஒருப்படாதவிடத்து அது நெடு நாளாக வழக்கமாகச் செய்துவந்த வினையில் ஈடுபடுகிறது. பற்றுதலால் வந்த வினையைத் தனக்கென்று செய்யாது ஈசுவரனுக்காக வென்று செய்யுங்கால் சாதகன் இறைவன் கையில் கருவி போல ஆகிறான். கருவிக்குத் தனிச் சுதந்திரம் கிடையாது. சாதகன் தன்னைக் கருவியாக எண்ணி வினையாற்றுவதால் சித்த சுத்தி உண்டாகி ஞானத்தைப் பெற்றுப் பக்குவமடைகிறான். இறைவனுக்குக் கைங்கரியம் செய்வதால் ஜீவபோதம் போய்ப் பரபோதம் வருகிறது.
எல்லாம் ஈசுவரனுடைய ஆக்ஞையால் நடக்கின்றனவென்றும் தான் ஈசுவரன் கையில் வெறும் கருவியென்றும் எவனுடைய மனதில் பதிகின்றதோ அவன் ஜீவன் முக்தனாவான். ஈசுவரா, உனது காரியத்தை நீயே செய்தருள்கிறாய். ஆனால் நான் செய்கிறேன் என்று ஜனங்கள் சொல்கின்றனர்.
கர்மத்தைத் தனக்காகவென்றே செய்யும் தன்மை யுடையவனுக்குக் கர்மபந்தம் ஒழிய வழியில்லையா? விடை வருகிறது :
11. அதைததப்யஸக்தோऽஸி கர்தும் மத்யோகமாஸ்ரித:
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்  
மத்யோகம் ஆஸ்ரித:-என்னை அடைவது என்ற யோகத்தை சார்ந்து நின்று, தத் அபி-இதைக் கூட, கர்தும் அத: அஸக்த: அஸி-செய்யத் திறமையற்றவனாக இருந்தால், தத: யதாத்மவாந்-அப்போது தன்னைத்தான் கட்டுப்படுத்தி, ஸர்வகர்மபலத்யாகம் குரு-எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
பொருள் : இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
முழு மனதை இறைவனுக்கென்றே ஒப்படைத்து விடுவது சிறந்தது. அதில் சாதனம் பூர்த்தியடைகிறது. அப்பெருநிலையில் நிலைத்திருக்க இயலாதவர்கள் பழக்கத்தால் மனதை இறைவன்பால் திருப்பவேண்டும். மனம் வெளிஉலகப் பிரவிருத்தியில் நாட்டம் கொள்ளும் தன்மையதானால் அப்பியாசம் செய்வதும் கடினமாகும். அப்பொழுது பகவானுக்கென்றே பணிவிடை  செய்வது சிலாக்கியம். கர்மத்தில் வைத்த பற்றுதலாலும், தன் கர்மத்துக்குத் தானே கர்த்தாவென்று எண்ணுவதாலும் கர்மபலத் தியாகம் உண்டாவதில்லை. பெரும்பற்றுடையவன் குறிப்பிட்ட சில வேளையிலாவது தன் கர்மமெல்லாம் ஈசனுடைய கர்மம் என்று தனக்கு ஞாபகமூட்டி வருவானாகில் அந்த எண்ணம் நாளடைவில் அவனைப் பக்குவப்படுத்தும்.
உன்னால் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஸ்வபாவம் ஒவ்வொருவனையும் கர்மம் செய்யும்படி ஏவுகின்றது. ஆகையால் கர்மங்கள் முறையாகச் செய்யப்படட்டும். கர்மம் பற்றுதலின்றிச் செய்யப்படுமானால் அது பகவானிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். இகபரங்களில் உண்டாகும் பாவ புண்ணியங்களில் வெறுப்பு விருப்புக் கொள்ளாமல் செய்யப்படும் கர்மம் பற்றுதலற்றதாகும். இவ்வித மனோபாவத்துடன் செய்யப்படும் கர்மம் முடிவில் கடவுளிடம் கொண்டுபோகும் மார்க்கமாக அமைகிறது.
பக்குவமடைதலின் அறிகுறி யாது? அதன் விளக்கம் வருகிறது :
12. ஸ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஸிஷ்யதே
த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம்  
அப்யாஸாத் ஜ்ஞாநம் ஸ்ரேய:-பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது, ஜ்ஞாநாத் த்யாநம் விஸிஷ்யதே-ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது, த்யாநாத் கர்மபல த்யாக:-தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது, த்யாகாத் அநந்தரம் ஸாந்தி-அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது (தியாகத்தின் மூலம் அமைதி கிடைக்கிறது).
பொருள் : பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.
ஒருவன் ஆலயத்தை வலம் வந்து சர்வ திக்கிலும் திரும்பி நமஸ்காரம் செய்கிறான். தான் ஏன் அப்படிச் செய்யவேண்டுமென்று அவனுக்குத் தெரியாது. எல்லாரும் செய்வதைப் பார்த்துக் குருட்டுப் போக்காக அவனும் அப்பழக்கத்தில் ஈடுபடுகிறான். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுதற்கே அத்தகைய வழிபாடு ஏற்பட்டுள்ளது என்பது அவனுக்குத் தெரியாது. விவேகமில்லாத அந்த அப்பியாசத்தைக் காட்டிலும் கடவுள் எங்கும் நிறைபொருள் என்ற வாசா ஞானம் சிறந்தது. அந்த வாசா ஞானத்தோடு நின்று விடுவதை விட சாதகன் காண்கின்ற அனைத்தும் பரமன் மயம் என்று தியானிப்பது மேலானது. அனைத்தையும் கடவுள் மயமாகத் தியானித்து அவைகளைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணலாகாது. தான் வாழ்ந்திருப்பது கடவுளுக்காக வென்று கருதித் தனது கர்மத்தின் பயன் முழுவதையும் அவனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டும். தான் செய்கின்ற கர்மம் தனக்காகவல்ல, கடவுளுக்காகவே செய்யப்படுகிறது என்ற நினைவு தோன்றுகிற அதே வேளையில் சாந்தியும் வருகிறது. தனக்கென்று தொழில் புரிபவன் அசாந்தியடைகிறான். இறைவனுக்கென்று தொழில் புரிபவன் இன்பமடைகிறான்.
ஒரு பருந்து அலகில் ஒரு மீனைக் கௌவிக் கொண்டிருந்தது. அதைப் பிடுங்குதற்காகச் சில காக்கைகளும் பருந்துகளும் அப் பருந்தைப் பின்தொடர்ந்து கொத்தி ஆரவாரித்தன. அது எத்திக்கில் சென்றாலும் காகங்களும் பருந்துகளும் கூடவே பறந்து சென்றன. தொந்தரவைப் பொறுக்கமாட்டாமல் அப்பருந்து மீனை அப்பால் போட்டுவிட்டது. உடனே அதை வேறொரு பருந்து கௌவிக்கொள்ள காகங்களும் மற்ற பருந்துகளும் இந்தப் புசிய பருந்தைத் தொந்தரவு செய்யத் தொடங்கின. ஆனால் உபத்திரவத்தினின்று தப்பித்த முதல் பருந்து சாந்தமாய் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. இப்படி சாந்தமாய் விருக்கும் பக்ஷியைப் பார்த்து வணங்கி, ஓர் அவதூதர், பருந்தே, நீ எனக்கு குரு. உலகப்பற்றுக்களாகிய சுமையை மனிதன் கீழே போடாத வரையில் அவனால் உலக சஞ்சலங்களினின்றும் தப்பித்துக்கொள்ள முடியாது. அவனுக்குச் சமாதானம் ஏற்படாது. இதை நீ எனக்குக் கற்பித்தாய் என்றார்.
எத்தகையவன் கடவுளுக்கு உவந்த பக்தனாகிறான்? விடை வருகிறது :
13. அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ  
14. ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய:
மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:  
ய: ஸர்வபூதாநாம் அத்வேஷ்டா-எவர் எவ்வுயிரையும் பகைத்தலின்றி, மைத்ர: கருண ஏவ -அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், நிர்மம நிரஹங்கார:-யானென்பதும் எனதென்பதும் நீங்கி, ஸமது:கஸுக: க்ஷமீ-இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்.
ஸததம் ஸந்துஷ்ட:-எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், யதாத்மா த்ருடநிஸ்சய:-தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், மயி அர்பித மந: புத்தி:-என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து, மத்பக்த: ஸ: யோகீ-என் தொண்டனாகிய யோகி, மே ப்ரிய:-எனக் கினியவன்.
பொருள் : எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,
பொருள் : எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.
வெறுப்பானது வேற்றுமையை வளர்க்கிறது; உடலெங்கும் விஷத்தை உண்டுபண்ணுகிறது. ஆதலால் வெறுப்பு நல்வாழ்க்கைக்கு உதவாது. வெறுப்பு அற்றிருந்தால் மட்டும் போதாது. ஜடப்பொருள்கள் வெறுப்பதில்லை. உயிர் வாழ்பவன் எல்லா உயிர்களிடத்தும் நட்புக்கொள்ளவேண்டும். அன்பின் வழியது உயிர் நிலை; அஃது இலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. ஆக, நட்பே உயிர்களை இணைக்கின்றது. பிறரைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதற்கு ஒருவன் உறவாடலாம். அது பொருந்தாது. தன் வாழ்க்கை பிறருக்குப் பயன்படும்படி செய்யவேண்டும். அப்பொழுதே அது கருணை எனப் பெயர் பெறுகிறது. பிறரிடத்துக் கருணை காட்டுவதால் தன் பொருளுக்கே நஷ்டம் வரலாம். அதைப் பொருள்படுத்தாத நிலை மமகாரம் அற்ற நிலையாம். எனது என்ற எண்ணம் ஒழிந்து பட்டுப்போகிறது. உடல் அபிமானம் அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது. கருணையின் மேலீட்டால் பக்தன் ஒருவனுக்கு அஹங்காரம் அறவே அகன்றுவிடுகிறது. தன் பொருள், தன் உடல்வாழ்க்கை இவைகளை மதியாமையினால் ஒருவனுக்கு இன்பமே வந்தமையலாம் அல்லது துன்பமே வந்தமையலாம். அவைகளை இன்ப துன்பமாக அவன் பாகுபடுத்துவதில்லை. தனக்குற்ற துன்பத்தைச் சகித்துக்கொண்டு துன்பம் செய்தவனிடத்துப் பொறாமை பூணலாம். பக்தன் ஒருவன் அப்படிப் பொறாமை கொள்வதில்லை. தன்னைத்தானே மன்னிப்பது போன்று மற்றவர்களையும் மன்னிக்கிறான். துன்பத்தைச் சகித்தல் ஒருவித எதிர்மறை நிலையாகிறது. பக்தனோ இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற கோட்பாட்டின்படி சந்தோஷமுடையவனாயிருக்கிறான். வாழ்க்கையில் அடக்கமும் ஒழுங்குப்பாடும் நன்கு அமைந்திருப்பதால் அவன் யோகியாகிறான். பாரமார்த்திக விஷயத்தில் அவனுக்குச் சந்தேகம் கிடையவே கிடையாது. அதைப்பற்றி அவனுக்கு உறுதியான நிச்சய புத்தி யிருக்கிறது. யோகத்தால் தான் பெற்ற தெள்ளிய மனதையும் புத்தியையும் அவன் கடவுளுக்கென்றே ஒப்படைக்கிறான். இங்ஙனம் பகவானிடத்து பக்தி பண்ணுபவனே அவனுக்கு முற்றும் உவந்த தோழனாகிறான்.
மனிதன் சமர்ப்பிக்கும் சொத்துக்களையெல்லாம் ஈசுவரன் மதிக்கிறானோ? இல்லவே இல்லை. பக்தியையும் பிரேமையையும் எவனொருவன் ஸமர்ப்பிக்கிறானோ அவனுக்கு மட்டுந்தான் ஈசுவரனுடைய கிருபை உண்டாகும். தன் பொருட்டு உண்டாகும் பக்திப் பிரேமைகளையும் விவேக வைராக்கியங்களையுமே ஈசுவரன் சிலாகித்துக் கொண்டாடுகிறான். (13-14)
இன்னும் யார் அவனுக்கு உவந்தவர்கள்? விடை வருகிறது :
15. யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய:
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய:  
யஸ்மாத் லோக: ந உத்விஜதே-எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, ச லோகாத் ந உத்விஜதே-எவன் உலகத்தாரை வெறுப்பதில்லையோ, ச ஹர்ஷ அமர்ஷ பய: உத்வேகை-களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும், ய: முக்த: ஸ: மே ப்ரிய:-எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்.
பொருள் : எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்
பக்தன் ஒருவனுடைய வாழ்க்கை உலகுக்கு ஒரு நாளும் இன்னல் விளைவிப்பதில்லை. இன்னல்போன்று தோன்றும் சில செயல்கள் உண்மையில் ஹிதமாகவே முடியும். ஆசிரியர் மாணாக்கனைக் கண்டிப்பது, மருத்துவர் ரணவைத்தியத்தில் நோயாளிக்குத் துன்பம் விளைவிப்பது, அறப்போரில் வீரன் எதிரியைத் தாக்குவது இவையாவும் வெளித்தோற்றத்திற்கு இடர் போன்று இருப்பினும் உண்மையில் உலகுக்குச் செய்த நன்மைகளாகும். இனி, தனது உடல் வாழ்க்கையில் தனக்கு என்ன தான் கேடுவந்தாலும் அதனால் அவன் கிலேசமடைவதில்லை. துன்பப்படாத உயர்ந்த மன நிலையையுடைய ஒருவனைப் புற உலகம் எவ்விதத்திலும் வருத்தப்படுத்த முடியாது. அப்பர், பிரஹ்லாதன் போன்றவர்கள் இதற்குச் சான்றாகிறார்கள்.
எத்தகைய பயிற்சியால் இத்தகைய மனநிலை வருகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை இதே சுலோகத்தில் வருகிறது. இன்பந்தரும் பொருள்களைப் பெற்று ஒருவன் களிப்புறலாகாது. களிப்புக்கு வசப்படும் மனது துன்பத்துக்கும் வசப்படக் கூடியது என்பதாகிறது. உறுதியான மனதே இன்பதுன்பம் இரண்டையும் சமனாகப் பாராட்டுகிறது. அமர்ஷம் என்பது சினம். ஒருவனுக்குக் கோபம் வருகின்றவளவு மனவலிவு குறைகின்றது. வலிவுடைய மரம் காற்றில் அசைவதில்லை. வலிவில்லாத கொடி காற்றில் அசைகிறது. கோபத்துக்கு உட்படாத மனது வலிவு பெற்று இன்பதுன்பங்களை நிகராகக் கருதுகிறது. பயம் மரணத்துக்கு ஒப்பானது. அஞ்சும் போதெல்லாம் ஒருவன் அழிந்துபட்டுப் போகிறான். அஞ்சாதிருப்பவனே உயிர் வாழ்கிறான். அச்சம் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. கலங்கிய நீரில் பிம்பம் தெரிவதில்லை. தெளிந்த நீரில் பிம்பம் தெரிகிறது. அங்ஙனம் கலங்கிய மனதில் ஆத்ம சொரூபம் விளங்குவதில்லை. கலங்கா நெஞ்சம் படைத்தவனே இறைவனைக் காண்கிறான் இறைவனைக் கண்டதும் அவனுக்கு உவந்த பக்தனாகிறான்.
பிறருடைய குணதோஷங்களைப் பற்றிப் பேசுவதில் காலத்தைச் செலவிடுபவன் தன் காலத்தை வீணிலே கழிப்பவனாகிறான். ஏனெனில் அப்படிச் செலவிடப்பட்ட காலம் தன்னையாவது ஈசுவரனையாவது பற்றிச் சிந்திக்கப்படாமல் பிறரைப்பற்றி யாதொரு பிரயோஜனமுமில்லாமல் சிந்திக்கப்பட்ட காலமாகிறது.
16. அநபேக்ஷ: ஸுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத:
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:  
அநபேக்ஷ: ஸுசி:-எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், தக்ஷ உதாஸீந:-திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கதவ்யத:-கவலை நீங்கியவனாய், ஸர்வ ஆரம்ப பரித்யாகீ-எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து, ஸ: மத்பக்த: மே ப்ரிய:-என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்.
பொருள் : எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்
இந்திரியங்கள் வாயிலாக வரும் இன்பங்களில் ஆசையற்றவன் அனபேக்ஷனாகிறான். அங்ஙனம் ஆசைகளை யகற்றுமளவு அவன் (சுசி:) தூயவனாகிறான். மனம், மொழி, மெய் மூன்றும் மாசற்றிருப்பது தூய்மை. அதனால் செயலில் சாமர்த்தியமுண்டாகிறது. எதிர்பாராது ஒரு கணப்பொழுதில் வந்தமையும் கருமத்தை உள்ளபடி அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப நடந்து கொள்ளவும் அவனுக்கு இயலுகிறது. அதை முன்னிட்டே அவனை தக்ஷ: என்று அழைக்கவேண்டும். செயலாற்றும் வல்லமையைத் தனக்கு ஒத்தவர்களுக்கு ஒருவிதமாகச் செய்தலும் ஒவ்வாதவர்களுக்கு வேறு விதமாகச் செய்தலும் அவனிடத்தில்லை. நிறைகோல் போன்று ஓரம் சாராது எல்லார்க்கும் பொதுவாக நடந்து கொள்வதனால் அவன் உதாஸீனன் ஆகிறான். அப்படி நேர்மையாக நடந்து கொள்பவனுக்கு மனத்துயரம் ஒரு நாளும் உண்டாவதில்லை. அவனுக்குக் கவலை கிடையாதெனினும் கர்ம பலனில் பற்றுவைத்திருக்கலாம் என்று நினைத்தல் கூடும். ஆனால் உண்மையில் அவன் பற்று அற்றவன். தனக்கென்று கருமம் செய்வதையெல்லாம் அவன் அறவே துறந்தவன் ஆகிறான். இறைவனிடத்திருந்து அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை யாதலால் அவன் உண்மையான பக்தனாகிறான். ஆகையினாலே அவன் பகவானுக்கு மிக இனியவன் ஆகிறான்.
தன் மனதை ஏமாற்றாத ஒருவனே பகவானது சந்நிதானத்தை அடையப்பெறுவான். அதாவது கள்ளங்கபடமற்ற தன்மையும் உண்மையான அன்பும் பரமனை அடைய உற்ற பாதைகளாகும்.
17. யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸுபாஸுபபரித்யாகீ பக்திமாந்ய: ஸ மே ப்ரிய:  
ய: ந ஹ்ருஷ்யதி-எவன் எதற்காகவும் மகிழ்வதில்லையோ, ந த்வேஷ்டி-எதையும் வெறுப்பதில்லையோ, ந ஸோசதி-எதற்காகவும் துயரப் படுவதில்லையோ, ந காங்க்ஷதி-எதற்காகவும் ஆசைப் படுவதில்லையோ, ஸுப அஸுப பரித்யாகீ-நன்மையையுந் தீமையையுந் துறந்த,
ஸ: பக்திமாந் மே ப்ரிய:-தொண்டனே எனக் கினியவன்.
பொருள் : களித்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன்.
இன்பமூட்டுகிற பொருளைப் பெற்றால் உலக மக்கள் மகிழ்கின்றனர். பக்தனுக்கோ அத்தகைய பொருள் வருவதால் மகிழ்ச்சி உண்டாவதில்லை. வேண்டாதவை வந்து வாய்க்குமிடத்து அவர்கள் வெறுக்கின்றனர். பக்தனுக்கு அது கிடையாது. விரும்பிய பொருள் கிடைக்கவில்லை அல்லது கைவிட்டுப் போய்விட்டது என்ற துன்பம் அவனுக்கில்லை. கடவுள் பக்தியிலேயே அவனுக்குத் திருப்தியுண்டாகிறபடியால் ஆசைப்பட வேண்டிய அவசியம் பக்தனுக்கில்லை. அன்புருவாய் இருக்கும் குழந்தைக்குப் பாபபுண்ணியம் இரண்டும் தெரியாது. பக்தியின் மேலீட்டால் பக்தனும் நன்மை தீமை யிரண்டையும் மறந்துவிடுகிறான். இத்தகைய பாங்குள்ளவனே பகவானுக்கு உவந்த பக்தனாகிறான்.
விருப்பு, வெறுப்பு, அச்சம் இவைகள் குடிகொண்டிருக்குமிடத்துக்கு ஈசுவரன் வருவதில்லை.
18. ஸம: ஸத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ:
ஸீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித:  
19. துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித்
அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர:
ஸத்ரௌ ச மித்ரே ச-எவன் பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மாந அபமாநயோ: ஸம: - மானத்திலும், அவமானத்திலும் சம பாவனையுடன் எவன் இருக்கிறானோ, ததா ஸீதோஷ்ண ஸுகது:கேஷு ஸம:-குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டவன்,
ஸங்கவிவர்ஜித:-பற்றறுத்தவனோ.
துல்ய நிந்தா ஸ்துதி மௌநீ-புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யேந கேநசித் ஸந்துஷ்ட:-யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான், அநிகேத:-குறியற்றான் (வசிக்கும் இடத்தில் தனக்கு என்ற பற்று அற்றவன்), ஸ்திரமதி:-திடமான புத்தி உடையவன், பக்திமாந் நர: மே ப்ரிய:-இத்தகைய பக்தன் எனக் கினியவன்.
பொருள் : பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.
பொருள் : புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான். குறியற்றான், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய பக்தன் எனக் கினியவன்
எல்லாரும் ஈசனுடைய குழந்தைகள். ஈசனுடைய வடிவங்களைப் பகையென்றும் நட்பென்றும் பிரிப்பது பொருந்தாது. புதிதாக ஏற்படும் களவுக் காதலர் அவமானத்துக்கு அஞ்சுகின்றனர்; மானத்தைக் காப்பாற்ற முயலுகின்றனர். முதிர்ந்த காதலோ அஃதொன்றையும் பொருள்படுத்துவதில்லை. முதிர்ந்த பக்தியின் போக்கும் அத்தகையது. உடலில் அபிமானம் உடையவனுக்குக் குளிர் உண்டு; வெப்பம் உண்டு. அவைகளின் காரியமாக வரும் இன்ப துன்பம் முதலியனவுண்டு. உழைப்பாளி உடலைப் பொருள்படுத்தாது உழைப்பிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பது போன்று பக்தன் பகவத் சேவையிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கிறான். வெயில், மழை, உணவு, ஓய்வு இவைகளைப் பற்றி அதிகம் நினைக்க அவனுக்கு நேரமில்லை. உடல் அபிமானம் நீங்குமளவு அவன் இயல்பாகவே பற்றற்றவன் ஆகிறான் நடு வீதியில் நின்றுகொண்டு அழுகின்ற ஆள் ஒருவனைப் பார்த்து உலகம் இகழ்கிறது. அவன் உற்றானை இழந்த துயரத்தால் அழுவானாயின் உலகத்தவர் இகழ்ச்சியைப் பொருள்படுத்தான். பக்தன் கடவுளைக் காண விரும்பி அழுகிறான். அவனைப் பித்தன் என்று உலகம் இகழ்தலைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை. மேடையில் நன்றாகப் பாடும் ஒருவனை உலகம் புகழ்கிறது. அது பாடகனுக்கு உற்சாக மூட்டுகிறது. பக்தனோ பரம்பொருளைப் போற்றிப் பாடுகிறான். பரம்பொருளின் பெருமையே அவனைப் பாடச் செய்கிறது. உலகத்தவர் புகழ்ச்சியில் அவனுக்குப் பொருள் ஒன்றுமில்லை. இறைவனது புகழைத் தவிர வேறு எதையும் அவன் பேசாதிருப்பதால் அவன் மௌனியாகிறான். சொந்த ஊருக்கு மகிழ்வுடன் திரும்பிப்போகிறவனுக்கு வழிப் பயணத்தில் வசதிகள் அதிகம் அமையாவிட்டால் அவன் அவைகளைக் குறித்து மனக்கிலேசமடைவதில்லை. ஊருக்குப் போகும் உற்சாகம் முன்னணியில் நிற்கிறது. பக்தனோ தனது தாய் தந்தையாகிய தெய்வத்தைக் குறித்துப் பயணம் போகிறான். உலக வாழ்க்கை என்ற வழியில் கிடைக்கின்ற எதைக்கொண்டும் அவன் திருப்தியடைகிறான். நன்றே வரினும் தீதே வரினும் அவனுக்குத் தொல்லை யொன்றுமில்லை. மேலும் தனக்கென்று வசிக்குமிட மொன்றை அவன் உரிமைப்படுத்துவதும் கிடையாது. அகப்பட்ட வளையில் ஸர்ப்பம் சிறிது காலம் சுருண்டிருப்பது போன்று தற்செயலாய் நேர்ந்த இடத்தைப் பக்தன் தங்குமிடமாக்குகிறான். ரயில் வண்டியில் எவ்விடத்தில் இருக்க இடம் கிடைத்தாலும் பிரயாணிக்கு ஒன்றே. பக்தனது நிலையும் அத்தகையதே. மாறுபடுகிற உலகில் மாறுபடாத கடவுள் நாட்டத்திலேயே பக்தன் கண்ணுங்கருத்துமாயிருப்பதால் அவன் ஸ்திர புத்தியுள்ளவனாகிறான். நாட்டமெல்லாம் கடவுளிடத்திலேயே இருப்பதால் அவனே பக்தனாகிறான். ஆக, அவன் கடவுளுக்கு இனியவன் ஆவது இயல்பு.
உலகத்தைப்பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனத்தைச் சஞ்சலப்படுத்தும்படி செய்துகொள்ளாதே. செய்யவேண்டிய காரியம் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் ஈசுவரனிடம் நிலைத்திருக்கட்டும். (18-19)
20. யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே
ஸ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தேऽதீவ மே ப்ரியா:  
தர்ம்யாம்ருதமிதம்-இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை, யதா உக்தம் பர்யுபாஸதே-யான் சொல்லியபடி வழிபடுவோர், ஸ்ரத்ததாநா-நம்பிக்கையுடையோர், மத்பரமா-என்னை முதலாகக் கொண்டோர், தே பக்தா: மே அதீவ ப்ரியா:-அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.
பொருள் : இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.
எல்லாவிதமான சாதனங்களுக்கும் சிரத்தை இன்றியமையாததாதலால் அது ஈண்டு பக்தியோடு இணைத்து இயம்பப்படுகிறது. பகவானைக் கதியாகக்கொள்வது பக்தனுடைய இயல்பு. அதனால் அவன் செயலற்றவன் ஆய்விடுகிறானல்லன். தர்மத்தை உறுதியாக அனுஷ்டிக்கிறான். அருளோடு முக்தி என்னும் பெருநிலம் தர்மத்தினின்று வருவதால் தர்மமே அமிர்தத்துக்கு (மூவா மருந்துக்கு) ஒப்பாகிறது. தர்மத்தைக் கையாளுபவன் யாரும் அழிந்துபட்டுப் போகமாட்டான். அன்பும் அறநெறியும் யாரிடத்திருக்கிறதோ அவன் இறைவனுக்கு உவந்தவன் ஆகிறான்.
பக்தியில் வைதிக பக்தி என்பது ஒன்று. அதாவது சாஸ்திரங்கள் விதிக்கிறபடி பக்தி பண்ணுதலாம். பகவந் நாமத்தைப் பலதடவை உச்சாரணம் பண்ணுதல், உபவாசமிருத்தல், தீர்த்த யாத்திரை போதல், வேண்டிய ஸாமக்கிரியைகளைக் கொண்டு பூஜை பண்ணுதல் முதலியன வைதிக பக்தியில் சேர்ந்தவை. இப்படி நெடுங்காலம் பக்தி செய்தால் ஈசுவர பக்தியில் இன்னும் உயர்ந்த நிலையாகிய ராக பக்தி யைக் பெறக்கூடும். எல்லாவற்றிற்கும் பிரேமைதான் முக்கியம். உலகப்பற்று முற்றிலும் அகல வேண்டும். முழுமனதும் ஈசுவரனிடம் பொருந்தவேண்டும். அப்போதுதான் அவனை அடையமுடியும். ராக பக்தியில்லாமல் அவனை அடையமுடியாது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
பக்தி யோகோ நாம த்வாதசோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் பக்தியோகம் என்ற பன்னிரண்டாம் அத்தியாயம்.

பதின்மூன்றாம் அத்தியாயம்
பகவத்கீதை | ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம்



இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது. இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை. அத்தகைய நிலையைப் பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேண்டும்.
ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும். அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்தினாலும், ஞானயோகத்தினாலும் பெறலாம். தாவர, ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.
இருப்பதெல்லாம் பிரகிருதி புருஷன் மயம் 1-3 -இவைகளைப்பற்றிய உண்மை வெளியாகிய விதம் 4 -ஷேத்ரதிரத்தின் பாகுபாடுகள் 5-6 -ஞானத்துக்கு ஏதுவாயிருப்பவைகள் 7-11 -பிரம்மம் எத்தகையது 12 -ஞானபரிபாகத்தின் விளைவு 13-15 -ஒன்று பலவாகத் தோன்றுகிறது 16-17 -பக்தியினின்று ஞானம் வருகிறது 18 -புருஷனும் பிரகிருதியும் யாண்டும் உள 19-20 -பிறவிக்கு வித்து 21 -பிரம்மஞானம் பிறவிப் பெருங்கடலை அகற்றுகிறது 22-23 -நான்கு யோகங்கள் 24-25 -ஒன்று என்று அறிவது முக்தி 26-28 -கர்மம் பிரகிருதிக்கு உரியது 29-30 -பிரம்மம் தன் மயம் 31-34.
அர்ஜுந உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞமேவ ச
ஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸவ
அர்ஜுந உவாச கேஸவ-அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா, ப்ரக்ருதிம் புருஷம் ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞ ச-பிரகிருதி, புருஷன், ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞன், ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச - ஞானம், ஞேயம் என்னும், ஏதத் வேதிதும்-இவற்றை அறிய, இச்சாமி-விரும்புகிறேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகின்றான் பிரகிருதி, புருஷன், ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞன், ஞானம், ஞேயம் என்னும் இவற்றை அறிய விரும்புகிறேன்.
ஸ்ரீ பகவாநுவாச
1. இதம் ஸரீரம் கௌந்தேய ஷேத்ரமித்யபிதீயதே
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:  
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், கௌந்தேய-குந்தி மகனே, இதம் ஸரீரம் ஷேத்ரம் இதி-இந்த உடம்பு ஷேத்ரதிரம் என்று, அபிதீயதே-சொல்லப்படுகிறது, ஏதத் ய: வேத்தி-இதனை எவன் அறிகிறானோ, தம் ஷேத்ரஜ்ஞ இதி-அவனை ஷேத்ரதிரக்ஞன் என்று
தத்வித: ப்ராஹு:-ஞானிகள் கூறுகிறார்கள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு ஷேத்ரதிரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை ஷேத்ரதிரக்ஞ னென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.
எது கெட்டுப் போகாது காப்பாற்றப்படுகிறதோ அது ஷேத்ரதிரம். உடலானது அங்ஙனம் காப்பாற்றப்படுகிறது. இனி, ஷேத்ரதிரம் என்பதற்கு மற்றொரு பொருள் வயல் என்பதாம். வேலை செய்வதற்கு ஏற்றவளவு அது விளைவு தரக்கூடியது. நல்லது கெட்டது ஆகிய இரண்டும் பூமியில் விளையும். நமது தேகம் ஷேத்ரதிரம் எனப்படுகிறது. இதில் அவரவர் கர்மபலனை அனுபவிக்கின்றனர். ஆக, ஜீவனுக்கு தர்ம ஷேத்ரதிரமாவது அவனது உடல். உள்ளே இருந்து உடலை அறிகிற பொருள் எதுவோ அது ஷேத்ரதிரக்ஞன்.
மானிட சரீரம் ஒரு பானையைப்போன்றுள்ளது. மனம், புத்தி, இந்திரியங்கள் அப்பானையில் இடப்பட்ட ஜலம், உருளைக்கிழங்கு, அரிசி இவைகளுக்குச் சமானம். இவையெல்லாம் அடங்கிய பானை யொன்றை அடுப்பின்மீது வைத்தால், அடுப்பின் நெருப்பு அவைகளை வேகச் செய்யும். அவைகளை ஒருவன் தொட்டால் அவனது விரல்களைச் சுட்டுவிடும். என்றாலும் அவ்வுஷ்ணம் வாஸ்தவத்தில் பானையினுடையதன்று. ஜலம், அரிசி, உருளைக்கிழங்கு இவைகளினுடையதுமன்று. அதுபோலவே, மனிதனிடம் உள்ள பிரம்மத்தின் சக்தியால்தான் அவனுடைய மனம், புத்தி, இந்திரியங்கள் எல்லாம் தத்தம் வேலைகளைச் செய்கின்றன.
அண்டத்திலுள்ள ஷேத்ரதிரங்களுக்கிடையில் தொடர்வு ஏதேனுமுண்டா? விடை வருகிறது :
2. ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வஷேத்ரேஷு பாரத
ஷேத்ரஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம  
பாரத-பாரதா, ஸர்வஷேத்ரேஷு-எல்லா ஷேத்ரதிரங்களிலும், ஷேத்ரஜ்ஞம் அபி-ஷேத்ரதிரக்ஞனும், மாம் வித்தி-நானே என்றுணர், ச ஷேத்ரஷேத்ரஜ்ஞயோ:-ஷேத்ரதிரமும், ஷேத்ரதிரக்ஞனும் (பற்றி அறியும்), யத் ஜ்ஞாநம்-எது ஞானம், தத் ஜ்ஞாநம் மம மதம்-அதுவே ஞானமென்பது என் கொள்கை.
பொருள் : பாரதா, எல்லா ஷேத்ரதிரங்களிலும் ஷேத்ரதிரக்ஞன் நானே என்றுணர். ஷேத்ரதிரமும், ஷேத்ரதிரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.
ஷேத்ரதிரம் என்பது பிரகிருதி; ஷேத்ரக்ஞன் என்பது புருஷன். பிரகிருதியின் சேர்க்கையால் அதன் கூறுபாடுகளைப் புருஷன் தன்னுடையது என்று கருதுகிற பொழுது அவன் ஜீவாத்மாவாகிறான். ஸ்படிகத்துக்குப் பக்கத்தில் வைத்த புஷ்பத்தின் நிறத்தை ஸ்படிகத்தினுடையது என்று எண்ணுவது போன்றது அது. பிரகிருதி பேதம் அனந்தம். ஆதலால் ஜீவாத்மாக்களும் அனந்தம்.
பிரகிருதியின் சேர்க்கையால் உபாதியோடு கூடியதாகத் தென்படுகிற ஆத்மா உண்மையில் பிரகிருதியின் தன்மையை வாங்கிக்கொள்கிறதில்லை; வாங்கிக் கொண்டது போன்றது அது தென்படுகிறது. பிரகிருதியை உடைத்திருந்தும் அதில் கட்டுப்படாது இருக்கிற ஆத்மாவுக்கு ஈசுவரனென்று பெயர். அவர் ஒருவரே இத்தனை ஜீவர்களுக்கும் அந்தர்யாமியாயிருக்கிறார். அவருக்கு அன்னியமாக இந்த ஜீவர்களும் ஜகத்தும் இல்லை. ஆகையால் அவர் எல்லா ஷேத்ரதிரங்களுக்கும் ஷேத்ரதிரக்ஞனாக இருக்கிறார்.
இனி, ஞானம் என்பது ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞன் பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டு தத்துவங்களையும் முறையாக அறிவதேயாம். ஷேத்ரதிரத்தைப்பற்றிய வித்தை அபரவித்தை யென்றும், ஷேத்ரதிரக்ஞனைப்பற்றிய வித்தை பரவித்தை யென்றும் பகரப்படுகின்றன. வேதங்கள், வியாகரணம், கலைஞானங்கள், பூத பௌதிக சாஸ்திரங்கள் இவையாவும் அபரவித்தை. பிரம்ம ஞானமோ பரவித்தை. அபரவித்தையில் துவக்கிப் பரவித்தையில் ஆராய்ச்சி முற்றுப்பெறுவதே ஞானமாகும். தனியாக ஷேத்ரதிரத்தை ஆராய்ந்து அதை மட்டும் கையாளுவது உலோகாயதம். அதை ஷேத்ரதிரக்ஞனோடு இணைத்து ஆராய்வது சிறந்ததும் பாராட்டத்தக்கதுமாகிய அபரவித்தையாம்.
ஒரு புராண வரலாறு இக்கோட்பாட்டை நன்கு விளக்குகிறது. கார்த்திகேயனும் கணபதியும் பரமசிவனுக்குப் பிள்ளைகள். உள்ளதை எல்லாம் துருவி ஆராய்ந்துவிட்டு முதலில் வருபவனுக்குக் கனியொன்று தருவதாகக் கடவுள் தம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னார். குமரக் கடவுள் உலகம் யாவையும் அளந்தறிய விரைந்து ஓட்டம் பிடித்தார். நடக்கமுடியாத கணபதியோ கடவுளையே சுற்றிவந்து கனியைக் கேட்டார். அதற்குள் சுப்ரமண்யமும் உலகம் யாவையும் அறிந்து விட்டுக் கடவுள் அருகில் வந்துசேர்ந்தார். இருவரும் வல்லவர் ஆயினர். கணபதி அறிந்தது ஷேத்ரதிரக்ஞனாகிய ஈசுவரனை. சுப்ரமண்யம் அறிந்தது ஷேத்ரதிரமாகிய பிரபஞ்சம் முழுதையும். இவ்விருவர் ஆராய்ச்சியின் தொகுதியே முழு ஞானமாகிறது.
இக்காலத்து அறிஞர் கையாளுகிற பௌதிக ஆராய்ச்சி ஷேத்ரதிரத்தைப்பற்றிய ஞானத்துக்குப் பெருந்துணையாகும். சுப்ரமண்யக் கடவுள் உலகெல்லாம் ஆராய்ந்துவிட்டுப் பரமனுடைய சன்னதி வந்தது போன்று இக்காலத்திய பௌதிக ஆராய்ச்சியும் பரமனுடைய அடியை நோக்கிப் போவதன் அறிகுறிகள் தென்படுகின்றன. கடவுளுக்கு அன்னியமாக உலகம் இல்லை. கடவுளோடு இணைத்தே உலகத்தை அறிந்துகொள்ளும்போது அது மெய்ஞ்ஞானமாகிறது.
பணத்தை வைத்திருப்பதாலேயே ஒருவன் பணக்காரனாகி விடமாட்டான். பணக்காரனுடைய வீட்டிற்கு அடையாளம் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் விளக்குகள் எரிவதாகும். ஏழைக்கு எண்ணெய் கிடைக்காதாகையால் அத்தனை விளக்குகளை ஏற்றமாட்டான்.
பகவானது ஆலயமாகிய இச்சரீரத்தை அந்தகாரத்தில் வைத்திருக்கக்கூடாது. அதில் ஞான விளக்கு ஏற்றப்படவேண்டும். உன் ஹிருதயமாகிய அறையில் ஞானவிளக்கை ஏற்றித் தெய்வத்தின் திவ்விய முகத்தைக் காண்பாய். ஒவ்வொருவரும் ஞானத்தை அடையமுடியும். நான் என்கிற குறுகிய ஆன்மா என்றும், விசாலமான பரமான்மா வென்றும் இரண்டுவகையுண்டு. ஒவ்வொரு சிறு ஆன்மாவும் அதாவது ஜீவான்மாவும் பரமான்மாவோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரசக்தி இருக்கிறது. இந்த மின்சாரம் கம்பெனியிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் செலுத்தப்படுகிறது. தகுந்த அதிகாரிகளிடம் மனுச் செய்ய வேண்டியதுதான். அப்போது உன் வீட்டில் மின்சார விளக்கைப் பெறுவாய். பரஞானம் உனது உடல் வாழ்க்கையையும், உன்னையும், உனது தெய்வத்தையும் விளக்கும்.
3. தத்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஸ்ச யத்
ஸ ச யோ யத்ப்ரபாவஸ்ச தத்ஸமாஸேந மே ஸ்ருணு  
தத் ஷேத்ரம் யத்-அந்த ஷேத்ரதிரமென்பது யாது? ச யாத்ருக்-எவ்வகைப்பட்டது? ச யத்விகாரி-என்ன மாறுதல்களுடையது? யத: யத் ச-எங்கிருந்து வந்தது? ஸ: ய: ச-அவன் (ஷேத்ரதிரக்ஞன்) யார்? யத்ப்ரபாவ ச-அவன் பெருமை எப்படிப்பட்டது? தத் ஸமாஸேந மே ஸ்ருணு-இவற்றை சுருக்கமாக என்னிடமிருந்து கேள்.
பொருள் : அந்த ஷேத்ரதிரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? ஷேத்ரதிரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.
வேத வேதாந்தம் புகட்டுவதெல்லாம் இவ்விரண்டு தத்துவங்களையே யாம். இவ்விரண்டின் நிலைகளை விளக்குதற்கென்று அமைந்தவைகளெல்லாம் கலைகளாகின்றன.
அது எப்படி யென்று அடுத்த சுலோகத்தில் பகவான் விளக்குகிறார்.
4. ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக்
ப்ரஹ்மஸூத்ரபதைஸ்சைவ ஹேதுமத்பிர்விநிஸ்சிதை:  
ருஷிபி: பஹுதா கீதம்-ரிஷிகளால் பலவகைகளிலே பாடப் பட்டது, விவிதை: சந்தோபி: ப்ருதக்-பலவிதமான சந்தங்கள் (வேத மந்திரங்கள்) மூலமாகவும் தனித்தனியே கூறப் பட்டது,
ச விநிஸ்சிதை: ஹேதுமத்பி-நல்ல நிச்சயமுடையனவுமாகிய, யுக்திகளுடன் விளங்கும்,
ப்ரஹ்மஸூத்ரபதை: ஏவ-பிரம்ம சூத்திர பதங்களிலும் இசைக்கப்பட்டது.
பொருள் : அது (ஷேத்ரதிரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.
முடிந்த நிலையை விளக்குதற்குக் கலையைக் கவிகள் நன்கு கையாண்டிருக்கிறார்கள். மெய்ப்பொருள் எக்காலத்துக்கும் உண்மையாதலால் அது நிலையெனப்படுகிறது. தெளிவற்ற சொற்களைக்கொண்டு விளக்கினாலும் மெய்ப்பொருளுக்குள்ள மதிப்புக் குறைவதில்லை. ஆனால் ரிஷிகளோ அதை விளக்குதற்கு இயல் இசை இரண்டையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இயல் என்பது தெளிந்த மொழி. உலகில் உள்ள எம்மொழியும் தெளிந்ததாகுங்கால் அது உள்ளத்தைக் கவரவல்லது. இசை அல்லது பாட்டுக்கு மற்றொரு வன்மையுண்டு. எல்லா உயிர்களையும் அது வசப்படுத்த வல்லது. துஷ்ட ஜந்துக்களும் இசைக்கு இணங்கி நல்லியல்பு பெறுகின்றன. உணர்ச்சியைக் கிளப்பவும் அதைச் செப்பனிடவும் வல்லது கீதம். இனிமையும் ஆனந்தமும் அதனால் வளர்க்கப்படுகின்றன. ஆக, மெய்ப்பொருள் விளக்கத்தில் ரிஷிகள் இயல் இசை ஆகிய இரண்டையும் நன்கு கையாளுதல் மூலம் அதில் விருப்பத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துள்ளார்கள். தனியாக உணர்ச்சியை மட்டும் வளர்த்தால் போதாது. பகுத்தறிவைக்கொண்டும் மெய்ப்பொருளை ஆராய்தல் வேண்டும். யுக்திக்கு ஒத்திருப்பது உண்மை. ஆகையால் யுக்தி அல்லது பகுத்தறிவை முறையாகக் கையாளுமளவு உண்மை நிரூபிக்கப்படுகிறது.
ஆக, வேத வேதாந்தத்தை நிறுவிய மேலோர் மக்களிடத்து உணர்ச்சி, அறிவு ஆகிய இரண்டையும் நன்கு வளர்த்தல் பொருட்டு இயல், இசை, யுக்தி இவைகளைச் செவ்வையாகக் கையாண்டிருக்கிறார்கள்.
யுக்திக்கு ஒவ்வாத உணர்ச்சியோ பாங்கற்ற மனக்குழைவு ஆகும். பக்தியின் பெயரால் சிலர் வெறும் மனக்கசிவு உடையவர்களாய் இருக்கிறார்கள். திண்மை அல்லது உறுதிப்பாட்டை அவர்கள்பால் காணமுடியாது. மற்று, வெறும் விசாரத்தில் ஈடுபடுகிறவர்களது நுண்ணறிவு உலர்ந்த அறிவாய்ப் போய்விடுகிறது. எண்ணெயில்லா யந்திரம் போன்றது அவர்களுடைய வாழ்க்கை. அறிவு பெருகியிருந்தாலும், நெஞ்சத்தில் ஈரமின்மை பாராட்டத்தக்கதன்று. நிறை மனிதன் என்பவன் நெஞ்சக் குழைவும் அறிவு வளர்ச்சியும் ஒருங்கே அமையப் பெற்றவனாம். அதாவது ஒவ்வொருவனிடத்தும் அன்பும் அறிவும் சேர்ந்திருக்க வேண்டும்.
நாரத மஹரிஷியினிடத்திருந்தது போன்று ஞானமிச்ர பக்தி, அதாவது ஞானத்தோடு கலந்துள்ள பக்தி சாதகர்களுக்கு முற்றிலும் வேண்டப்படுகிறது.
5. மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச
இந்த்ரியாணி தஸைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா:  
6. இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸங்காதஸ்சேதநா த்ருதி:
ஏதத்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்  
மஹாபூதாநி அஹங்கார: புத்தி: ச-மகா பூதங்கள் (ஐம் பூதங்கள்), அகங்காரம், புத்தி, அவ்யக்தம் ஏவ-அவ்யக்தம், தஸ இந்த்ரியாணி ச-பத்து இந்திரியங்கள் (புலன்கள்), ஏகம் ச - மனதுடன் சேர்த்து (பதினொன்று), பஞ்ச இந்த்ரியகோசரா:-இந்திரிய நிலங்கள் ஐந்து (சுவை, ஒளி, ஓசை போன்ற புலன் நுகர் பொருட்கள்).
இச்சா த்வேஷ:-வேட்கை, பகைமை, ஸுகம் து:கம்-இன்பம், துன்பம், ஸங்காத: சேதநா - உடம்பு, சைதன்ய சக்தி, த்ருதி:-உள்ளத்துறுதி, ஸவிகாரம்-ஆகிய மாறுபாடுகள் உடைய, ஏதத் ஷேத்ரம்-இந்த ஷேத்ரதிரம், ஸமாஸேந உதாஹ்ருதம்-சுருக்கி சொல்லப் பட்டது.
பொருள் : மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,
பொருள் : வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணவு, உள்ளத்துறுதி இவையே ஷேத்ரதிரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.
ஆகாசம், வாயு, அக்கினி, அப்பு, பிருத்துவி ஆகிய ஐந்து பூதங்களும் சூக்ஷ்மமாக எங்கும் நிறைந்திருக்கிறபடியால் அவைகள் மஹாபூதங்கள் என்று சொல்லப்படுகின்றன.
அகங்காரம் - இது மஹாபூதங்களுக்குக் காரணமாகிறது. பூதங்கள் மூலமாக எழும் இருக்கிறேன் என்ற உணர்ச்சி அஹங்காரம் என்ற பெயர் பெறுகிறது.
புத்தி - இது நிச்சயவடிவு அல்லது தீர்மானம் செய்யும் தன்மையது. மஹத் என்ற பெயரும் இதற்கு வழங்கப்படுகிறது. இது அஹங்காரத்துக்குக் காரணமாயுள்ளது.
அவ்யக்தம் என்பது மூலப்பிரகிருதி என்று பொருள்படுகிறது. தோன்றா நிலையில் இருப்பதால் இதன்கண் விகாரம் அல்லது வேறுபாட்டைக் காணமுடியாது. இது புத்திக்குக் காரணமாகும். இவையாவும் ஈசுவர சக்தி.
தெய்விகம பொருந்திய என் மாயை கடத்தற்கு அரிது என்று ஏழாவது அத்தியாயம் பதினான்காம் சுலோகத்தில் பகவான் பகர்கிறார். இவைகளைத் தம்முடைய எட்டுவிதப்பிரகிருதி என்றும் பகவான் ஏழாவது அத்தியாயம் நான்காவது சுலோகத்தில் சொல்லுகிறார்.
பத்து இந்திரியங்கள் : கண் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து பத்து ஆகின்றன.
மனம் - இது சங்கல்ப விகல்ப மயமானது. எண்ணமும் ஐயமும் இதைச் சேர்ந்தவைகள். மனமானது பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது. பத்துத் தலைகளையுடைய ராவணன் பத்து இந்திரியங்களையுடைய மனதின் புறத்தோற்றமாக வந்தவன்.
இந்திரியார்த்தங்கள் - சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்த - வடிவங்களாயுள்ள ஐந்து இந்திரியங்களின் விஷயங்களாம்.
இவைகளையெல்லாம் தொகுத்து இருபத்து நான்கு தத்துவங்கள் என்று சொல்லுகிறது சாங்கிய தர்சனம்.
இச்சை, துவேஷம் முதலியன ஆத்மாவின் குணங்களென்று வைசேஷிகர் சொல்லுவார்கள். ஆனால் இவையாவும் அறியப்படும் தன்மையுடையனவாதலாலும், இவைகள் மூலமாக ஷேத்ரதிரத்தைப் பற்றிய போதமே வளர்க்கப்படுகிறதாதலாலும் இவைகளை பகவான் ஷேத்ரதிரம் என்று பகர்கின்றார்.
இச்சை என்பது விருப்பு. இன்பம் கொடுக்கும் ஒரு பொருளைத் திரும்பவும் பெற எண்ணங்கொள்வது இச்சை. இது அந்தக்கரணத்தின் தர்மமாகும்.
துவேஷம் என்றால் வெறுப்பு. துன்பம் கொடுக்கும் ஒரு பொருளை அல்லது அவ்வினத்தைச் சேர்ந்த ஒன்றைக் காணுமிடத்து அதை விலக்க நினைப்பது வெறுப்பு.
ஸுகம் இன்பமென்று பொருள்படுகிறது. அனுகூலமாகத் தோன்றி அமைதி தந்து ஸத்வகுணத்தை வளர்ப்பது எதுவோ அது ஸுகம். காணப்படு பொருளாதலால் இது ஷேத்ரதிரம் என்று அழைக்கப்படுகிறது. துக்கம் அல்லது துன்பம் பிரதிகூலமாகத் தோன்றி அமைதியின்மையை வளர்க்கிறது.
ஸங்காதம் என்பது உடலமைப்பு. உடலையும் இந்திரியங்களையும் ஒன்றாகப் பொருத்தி வைப்பதற்கு ஸங்காதம் என்று பெயர். பல பாகங்கள் ஒன்றாகப் பொருத்தப்பெற்று ஒரு யந்திரம் ஆகிறது. அங்ஙனம் வெவ்வேறு அங்கங்கள், அவயவங்கள், இந்திரியங்கள் முறையாக அமையப்பெற்று உடல் அல்லது ஷேத்ரதிரம் உருவெடுக்கிறது.
சேதனம் என்னும் சொல்லுக்குப் பொருள் உணர்வு. தீயோடு தொடர்வுள்ள இரும்பு தீயை விளக்குவது போன்று, இந்திரியங்கள் ஆத்ம சைதன்யத்தை உணர்வாக விளக்குகின்றன. இந்திரியங்கள் வாயிலாக சேதனம் அறியப்படுகிறது. அது தேகாத்ம புத்தியை வளர்க்கிறது. ஆகவே அது ஷேத்ரதிரம் என்று சொல்லப்படுகிறது.
திருதி என்றால் உறுதி. உடலும் இந்திரியங்களும் சோர்வடையும் தன்மையுடையவைகள். அவைகளைத் தளரவொட்டாது பொருத்தமாகத் தாங்கிப் பிடிப்பது எதுவோ அது திருதி. இதன் வலிவால் உடல் வாழ்க்கை நெடிது நிலைபெறுகிறது. காணப்படு பொருள் ஆதலால் இதுவும் ஷேத்ரதிரத்தோடு சேர்க்கப்படுகிறது. இச்சை முதல் திருதி பரியந்தம் இவையாவும் அந்தக் கரணத்தின் விகாரங்களாம்.
ஷேத்ரதிரம் என்று உடலை முதல் சுலோகத்தில் சொல்லியதன் முழுவிளக்கம் இந்த இரண்டு சுலோகங்களில் வந்து அமைகிறது.
இந்தச் சரீரம் உபயோகமற்றதும், அழிந்துபோகக்கூடியதுமானால் ஆத்மசாதகர்கள் ஏன் இதை ஜாக்கிரதையுடன் காப்பாற்றுகிறார்கள்? உள்ளே ஒன்றுமில்லாத வெறும் பெட்டியை ஒருவரும் ஜாக்கிரதையாகப் பாதுகாப்பதில்லை. விலையுயர்ந்த நகைகளும், பணமும், பொருள்களும் உள்ள பெட்டியை எல்லாரும் பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். அதுபோல, பக்தர்கள் ஈசுவரன் வாசம் செய்கிற இந்தச் சரீரத்தைப் பாங்குடன் காப்பாற்றுகிறார்கள். இதைப் பராமுகமாக விட்டுவிட மாட்டார்கள். நமது சரீரங்களெல்லாம் ஈசுவரனாகிய பொக்கிஷம் நிறைந்த பெட்டிகளாகும்.
சாதகன் எத்தகைய பாங்குடன் இருந்தால் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனை அறிகிற ஞானம் வருகிறது? இதற்கு விடை வருகிறது: (5-6)
7. அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷõந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஸௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:  
அமாநித்வம்-கர்வமின்மை, அதம்பித்வம்-டம்பமின்மை, அஹிம்ஸா-ஹிம்சை செய்யாமை,
க்ஷõந்தி-பொறுமை, ஆர்ஜவம்-நேர்மை, ஆசார்ய உபாஸநம்-ஆசாரியனை வழிபடுதல், ஸௌசம்-தூய்மை, ஸ்தைர்யம்-ஸ்திரத்தன்மை, ஆத்மவிநிக்ரஹ:-தன்னைக் கட்டுதல்.
பொருள் : கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.
ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞனைப் பற்றிய ஞானம் வெறும் ஏட்டுக் கல்வியால் வருவதன்று. வாழ்க்கையின்மூலம் தன்னைப் பண்படுத்துவதாலேயே ஞானம் வளர்கிறது. மற்றவர்களைவிட மேலோனாகத் தன்னை நினைத்துக்கொள்ளாதிருத்தல் அமானித்வம் என்னும் பெயர் பெறுகிறது. தற்பெருமை ஜீவபோதத்தை வளர்க்கிறது. தற்பெருமையின்மை பரபோதத்தை வளர்க்கிறது. அடுத்தபடியாகத் தன் செயலைச் சிலாகித்துப் பேசலாகாது. ஏனென்றால் செயலெல்லாம் உண்மையில் ஈசனுடையவைகள். அவைகளைத் தனது என்று தருக்கிப்பதால் அக்ஞானமே வளர்கிறது. உயிர்களுக்கு ஹிம்சை செய்யும் எண்ணம் அவைகளை ஈசுவரனுக்குப் புறம்பாக கருதுவதால் வருகிறது. அவைகளுக்குத் தீங்கு செய்யாதிருப்பதால் ஞானம் வளர்கிறது. இனி, மற்ற உயிர்களிடத்திருந்து தனக்குத் துன்பம் வரும்பொழுது அதைப் பொறுத்திருத்தல் வேண்டும். ஓர் உதாரணத்தால் இதை விளக்குவோம். பேசும்பொழுது தன் பல் தன் உதட்டைக் கடித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் பல்லைப் பகைப்பதில்லை. ஏனென்றால் பல்லும் உதடும் தன் சொரூபம். உயிர்கள் தனக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்திருக்குமளவு அவைகளைத் தன்மயமாயுணரும் தன்மை வருகிறது. ஆர்ஜவம் அல்லது நேர்மையென்பது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையாகும். எண்ணியபடியே இயம்புவது கள்ளங்கபடமற்ற மனதுக்கே இயலும். அது ஞான வளர்ச்சிக்கு முற்றிலும் இன்றியமையாதது. ஆசாரியருக்குப் பணிவிடை செய்வதால் தன்னை ஆசாரியருக்கு உரியவனாகச் சாதகன் செய்து கொள்கிறான். மனிதன் யாருக்குப் பணிவிடை செய்கின்றானோ, யாரை உபாசிக்கின்றானோ அவருடைய பான்மையெல்லாம் தனக்கே வந்தமைகின்றன. ஆதலால் குரு சேவை முற்றிலும் வேண்டப்படுகிறது. உடலையும் உள்ளத்தையும் தூயதாக வைத்துக் கொள்ளுதல் சௌசம் எனப்படுகிறது. நீராடுதல் போன்ற செயலால் உடல் தூயதாகிறது. இந்திரியார்த்தங்களிலுள்ள கேடுகளை ஓர்ந்து அவைகள்பால் பற்றுவைக்காதிருப்பது உள்ளத்தின் தூய்மையாகும். ஆத்ம சாதனம் எத்தனை காலம் நடைபெறுவதாயிருந்தாலும் அதனால் மனத் தளர்ச்சியுண்டாகாது. இடைவிடாது முயற்சியிருக்குமானால் அது ஸ்தைர்யம் எனப்படுகிறது. உடலும் இந்திரியங்ளும் வெளியுலகில் விஷயாதிகளில் செல்லும் தன்மையுடையவைகள். அவைகளை அப்படிச் செல்லவொட்டாது தடுத்து சன்மார்க்கத்தில் ஈடுபடும்படி செய்வது தன்னடக்கமாகும்.
8. இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கதோஷாநுதர்ஸநம்  
இந்த்ரிய அர்தேஷு வைராக்யம் ச-இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அநஹங்கார: ஏவ-அகங்காரம் இல்லாமை, ஜந்ம ம்ருத்யு-பிறப்பு, இறப்பு, ஜராவ்யாதி-நரை, நோய், து:க தோஷ-துக்கம், தோஷம், அநுதர்ஸநம்-இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.
பொருள் : இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.
ஐந்து இந்திரியங்களுக்கு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து விஷயங்களிருக்கின்றன. தூண்டிலில் உள்ளதைச் சுவைக்க முயன்று மீன் மாய்கிறது. தீயின் ஒளியை விரும்பி விட்டில் பூச்சி வதையுண்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நாடிக் காட்டானை பழகிய பெண் யானையின் மூலம் மக்களிடம் பிடிபடுகிறது. ஓசையைக் கேட்டு மூச்சடக்கி மானானது வேடர் வசப்படுகிறது. நாற்றத்தை நாடி மலரில் வண்டு மாட்டிக்கொள்கிறது. இனி, இந்திரிய போக விஷயங்கள் ஐந்திலுமே ஈடுபடும் மனிதன் கதி என்னாவது? இதை எண்ணிப்பார்த்து அவைகளிடத்துப் பற்று வைக்காதிருக்கவேண்டும்.
சரீரத்தைத் தான் என்று அபிமானிப்பது அஹங்காரம். அப்படி அபிமானம் கொள்ளாதிருப்பது அகங்காரமின்மையாகும்.
நன்றாக விசாரித்துப் பார்க்குமிடத்து பிறப்பு முதலிய யாவும் துன்பத்தை உண்டுபண்ணுபவைகளாய் இருக்கின்றன. அப்படி வரும் துன்பங்களைத் தானே உண்டுபண்ணியிருக்கலாம், அல்லது இயற்கையில் அவை வந்து அமைந்திருக்கலாம், அல்லது தெய்வா தீனமாக அவைகள் ஏற்பட்டிருக்கலாம். இப்படி விசாரிப்பதால் விஷயங்களில் விரக்தி வருகிறது. மனது அந்தர்முகமாக ஆத்மாவிடம் திரும்புகிறது. அங்ஙனம் ஞானத்துக்கு அது தகுதியுடையதாகிறது.
இந்திரிய விஷயங்களின் மீதுள்ள பற்று எவ்வளவுக்குக் குறைந்து வருமோ அவ்வளவுக்குக் கடவுளிடத்து பக்தி அதிகரித்து வரும்.
9. அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு  
புத்ர தார க்ருஹாதிஷு-மகனையும் மனைவியையும், வீட்டையும், அஸக்தி-பற்றின்மை, அநபிஷ்வங்க:-தன்னுடைமையெனக் கருதாமை, ச-மேலும், இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு - விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே, நித்யம் ஸமசித்தத்வம்-எப்போதுமே சமசித்தமுடைமை.
பொருள் : பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை
பொருள்களை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமலிருந்தாலும் அவைகளிடத்துப் பற்றுதல் உண்டாகலாம். அப்படிப் பற்று வர இடந்தரலாகாது. மனைவி, மக்கள், வீட்டினிடத்து வைக்கும் அளவுக்கு மிஞ்சிய பற்றுதலால் தன்னை அவர்கள் மயமாய் உணரும் தன்மை வந்தமைகிறது. உற்றாருக்கு வந்த நோய் தனக்கே வந்ததாகவும், உற்றார் மடியத் தானே செத்துப்போனதாகவும் உணர்தல் அபிமானத்தால் வருகிறது. அதற்குப் பதிலாகத் தன்னையும் மற்ற எல்லா உயிர்களையும் இறைவனது குழந்தைகளாகக் கருதவேண்டும். உலக நிகழ்ச்சிகளில் வேண்டப்படுவனவாகவும், வேண்டப்படாதவைகளாகவும் பிரிவுபடுவது பற்றுடையார்க்கேயாம். மற்று, மனதை நடுநிலையில் வைப்போர்க்கு நலம் கேடு இரண்டும் ஒரே பாங்குடன் புலனாகும். இத்தகைய மன நிலையினின்றே ஞானம் உதிக்கிறது.
தன் உறவினர் ஒருவர்மேல் அபரிமிதமான பாசம் வைத்திருந்ததால் பகவானிடம் மனம் குவியப் பெறாத ஒரு பக்தரிடம் பகவான் அவர் நேசிக்கும் உறவினரைக் கடவுள் சொரூபமாகப் பாவித்து அன்பு வைக்கும்படி உபதேசித்தார். இவ்விஷயமாக உபதேசிக்கும்போது பகவான் கூறியதாவது - உன் ஆசைக்குப் பாத்திரமானவரிடம் உன் இஷ்ட தெய்வத்தைக் காண்பாயாகில், சுலபமாக மனம் பகவானை நாடிச் செல்வதை உணர்வாய்.
10. மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஸஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி  
மயி அநந்யயோகேந-என்னிடம் பிறழ்ச்சியற்ற யோகத்துடன், அவ்யபிசாரிணீ பக்தி: ச - தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, விவிக்த தேஸ ஸேவித்வம்-தனியிடங்களை மேவுதல்,
ஜநஸம்ஸதி அரதி-ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை.
பொருள் : பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை
பகவானுக்கு ஒப்பான பொருள் வேறு ஒன்றுமில்லை யென்று உறுதிகொண்டு முழுமனதையும் அவனிடத்தே திருப்புதல்வேண்டும். தன் மனதை பக்தன் பங்குபோடுவதில்லை. அது முழுதையும் இறைவனுக்கென்றே கொடுத்துவைக்கிறான்.
துஷ்ட ஜந்துக்களால் இடைஞ்சல் உண்டாகாததும், ஆரோக்கியமானதும், இயற்கை வனப்பு வாய்ந்ததும், தூயதும், மனதுக்கு இனியதுமான இடத்தில் வசிப்பது ஆத்ம சாதனத்துக்குப் பொருத்தமானது. நல்லாரோடு கூடியிருத்தல், பிறகு அவர்களிடத்திருந்தும் பிரிந்து தனித்திருத்தல் தவத்துக்கும் ஞான வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றன.
தீபத்தைக் கண்டதும் பூச்சி இருட்டிலிருந்து ஓடி வருகின்றது. சர்க்கரைப் பாகிலேயே எறும்பு பிராணனை விடுமன்றி அதினின்றும் திரும்பிப் போகிறதில்லை. அதுபோல பக்தனும் ஈசுவரனையே எப்போதும் பற்றி நிற்பானாகையால் மற்ற பொருள்களையெல்லாம் அவன் கைவிட்டுவிடுகிறான்.
11. அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஸநம்
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோऽந்யதா  
அத்யாத்ம ஜ்ஞாந நித்யத்வம்-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்த்வஜ்ஞாந அர்த தர்ஸநம்-தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு, ஏதத் ஜ்ஞாநம்-இவை ஞான மெனப்படும், யத் அத: அந்யதா அஜ்ஞாநம்-இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம், இதி ப்ரோக்தம்-என்று சொல்லப் பட்டது.
பொருள் : ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞான மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.
ஏழாவது சுலோகத்தில் அமானித்வம்-தற்பெருமை யின்மை என்பதில் துவக்கி இந்த சுலோகத்தில் தத்துவ ஞானார்த்த தர்சனம் என்பது முடிய இவை யாவும் ஞானம் எனப்படுகின்றன. இத்தகைய மனநிலைகள் ஞான வளர்ச்சிக்குக் காரணமாயிருப்பதால் இம்மனநிலைகளே ஞானமாகக் கருதப்படுகின்றன. இவைகளுக்கு எதிரிடையான மனநிலைகளாகிய தற்பெருமை, தருக்கு, ஹிம்சை, பொறாமை, மனக்கோணல், குருபராமுகம், மாசு, தளர்ச்சி, அடங்காமை, ஆசை, அஹங்காரம், கேடறியாமை, பற்று, உற்றாரைச் சார்தல், ஓரம் சார்தல், காமியபக்தி, சகவாச தோஷம், ஆத்மஞான விசாரமின்மை-ஆகிய இவையாவும் அக்ஞானத்தை வளர்க்கின்றன.
ஈசுவரன் எங்கும் நிறைந்திருப்பவரானால் நம்மால் ஏன் அவரைப் பார்க்க முடியவில்லை? பாசியும் நாணலும் மிகுந்திருக்கும் குளத்தின் கரையில் நின்றுகொண்டால் அக்குளத்தில் ஜலமே இல்லையென்றுதான் நீ சொல்வாய். ஜலத்தைக் காணவேண்டுமானால் குளத்தின் மேற்பரப்பிலிருந்து பாசியை அகற்றவேண்டும். மாயையாகிற திரையால் மூடப்பட்ட கண்களையுடைய நீ ஈசுவரனைக் காணமுடியவில்லையென்று குறை கூறுகிறாய். அவரைக் காணவேண்டுமானால் உனது கண்களினின்றும் மாயையாகிய திரையை அகற்று.
ஞானத்தால் வரும் பயன் யாது? விடை வருகிறது :
12. ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்நுதே
அநாதி மத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே  
யத் ஜ்ஞேயம்-எது அறியப் படவேண்டியதோ, யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்தால், அம்ருதம் அஸ்நுதே-சாகாமல் இருப்பானோ, தத் ப்ரவக்ஷ்யாமி-அதை விளக்கிக் கூறுவேன், அநாதி மத்-அநாதியாகிய, பரம் ப்ரஹ்ம-பரப்பிரம்மம், ஸத் ந உச்யதே-“சத்” என்பதுமில்லை, அஸத் ந-“அசத்” என்பதுமில்லை.
பொருள் : ஞேயம் எதுவென்பதைச் சொல்கிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம், அதை “சத் என்பதுமில்லை, அசத் என்பதுமில்லை.
ஒன்பதாவது அத்தியாயம் பத்தொன்பதாவது சுலோகத்தில் பகவான் தம்மை (ம்ருத்யு:) சாவு என்றும் (அம்ருதம்) சாகாமையென்றும் சொன்னார். மேலும் தம்மை (ஸத்) உளதென்றும் (அஸத்) இலதென்றும் சொன்னார். ஸகுணப் பிரம்மம் பிரபஞ்ச சொரூபமாக இருக்கும்போது எல்லா முரண்பாடுகளும் அவரிடத்துச் சந்திக்கின்றன. வியாவகாரிக நிலையில் வைத்து விரைவில் மறையும் மக்கள் சாகின்றவர்கள் என்றும், நெடிது நிலைத்திருக்கும் தேவர்கள் சாகாதவர்கள் என்றும் சொல்லப்பட்டனர். அங்ஙனமே குணத்தோடு சம்பந்தப்பட்டுத் தோன்றியுள்ள காரியப் பிரம்மம் ஸத் என்று சொல்லப்பட்டது. அதனுடைய தோன்றா நிலை அஸத் என்று சொல்லப்பட்டது.
இத்தகைய விவகாரங்கள் யாவும் நிர்க்குண பிரம்மத்திடத்துக் கிடையா. அதைத் தோன்றியுளதென்றும் இலதென்றும் சொல்லலாகாது; அது தோற்றம் மறைவு அற்றது. அதனாலே தான் பரப்பிரம்மம் என்று அது அழைக்கப்படுகிறது. அது ஆதி அந்தம் அற்றது. மாறுபாடே அதனிடத்து இல்லை. அம்ருதம் என்பது அதற்கே முற்றிலும் ஒவ்வும். அபரோக்ஷõனுபூதியில் அறியத் தக்கது அதுவே. அதை அறிந்தபின் ஜீவனுக்குத் தான் வேறு, அது வேறு என்ற பேதமில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மமாகிறான். ஆகையால் சாகாத்தன்மை பிரம்மஞானியினுடையதாகிறது. பிரம்ம நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்பது அதுவே. அது மனம் மொழியைக் கடந்த பெருநிலை.
அகண்ட பரம்பிரம்மத்தை ஸமாதியில் மட்டும்தான் அறியலாகும். அப்பால் ஒரே மௌனம்; ஜீவன் ஜகத் இவைகளைப்பற்றிய ஆராய்ச்சி, ஞானம் அக்ஞானம் என்ற விவாதம் இவைகளெல்லாம் அடங்கிவிடுகின்றன. ஸ்வரூபத்தைத் தவிர வேறொன்றும் ஆங்கில்லை. உண்மையில் உப்புப் பிரதிமை பிரம்மாண்ட ஸமுத்திரத்தில் மூழ்கிய பிறகு தன்னுடைய கதையைச் சொல்ல வெளிவருவதில்லை. இதுதான் பிரம்ம ஞானம்.
இந்த அமிர்த சாகரத்தில் கலப்பதற்கு முன்பு சாதகன் காணும் காட்சி யாது? விடை வருகிறது :
13. ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோऽக்ஷிஸிரோமுகம்
ஸர்வத: ஸ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி  
தத் ஸர்வத: பாணிபாதம்-அது எங்கும் கைகால்களுடையது, ஸர்வதோ அக்ஷி ஸிர; முகம் - எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது, ஸர்வத: ஸ்ருதிமத்-எங்கும் செவியுடையது,
லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி-உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது.
பொருள் : அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்துநிற்பது.
கடலையணுகும் நதி கடலின் தன்மையைப் பெறுகிறது. நிர்க்குண பிரம்மத்தில் லயமாதற்கு முன்பு ஞானி ஜகத்திலுள்ள வடிவங்களை யெல்லாம் ஈசுவரசொரூபமாகப் பார்க்கிறான். அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை என்பது அவனுக்குப் பிரத்தியக்ஷமாகிறது.
அஹங்காரம் என்னிடம் இருக்கும் வரையில் ஜீவனாயும், ஜகத்தாயும் வேறு வேறு ஐசுவரியங்களுடன் தம்மைத் தோற்றுவிக்கும் ஈசுவரன் என் முன்னால் இருக்கின்றார்.
14. ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச  
ஸர்வ இந்த்ரிய குண ஆபாஸம்-எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது, ஸர்வ இந்த்ரிய விவர்ஜிதம்-எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது, ச அஸக்தம் ஏவ - பற்றில்லாதது, ஸர்வப்ருத் ச-அனைத்தையும் பொறுப்பது, நிர்குணம் குணபோக்த்ரு-குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.
பொருள் : எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.
பல வடிவங்களைக் காணுதற்குப் பகல் வேளை உதவுகிறது. ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொருள்களை விளக்குகிறது. பல பொருள்களின் விளக்கமாகச் சூரியப் பிரகாசம் ஒளிர்கிறது எனலாம். மேலும் சூரிய வெளிச்சம் இவ் வடிவங்கள் யாவையும் அற்றது. அவ் வடிவங்களில் அது பற்றற்றிருக்கிறது. ஆத்ம சைதன்யம் இந்திரியங்களில் அத்தகைய தொடர்வுடையதாயிருக்கிறது. சினிமாத் திரையானது படங்களை யெல்லாம் தாங்குவது போன்று சிதாகாசம் ஜகத்திலுள்ள அனைத்தையும் தாங்குகிறது. படத்தில் காணும் விதவிதமான வர்ணங்கள் திரையினுடைய வர்ணங்களல்ல. ஆனால் அத்தனை வர்ணங்களையும் திரை உள்ளபடி விளக்குகிறது. அங்ஙனம் முக்குணங்களும் பரமாத்மாவினிடத்து இல்லை. ஆயினும் குணங்களையெல்லாம் விளக்கவும் ரசிக்கவும் செய்கிறது அறிவு சொரூபமாகிய சிதாகாசம்.
ரூபியும் அரூபியுமான கடவுள் ஒன்றேதான். ஒன்றை நம்பினால் இன்னொன்றையும் நம்பினதாகும். எரியக்கூடிய சக்தியைத் தவிர்த்து நெருப்பையும், நெருப்பைத் தவிர்த்து எரிக்கிற சக்தியையும் சிந்திக்க வொண்ணாது. இன்னும் சூரிய கிரணங்களைத் தவிர்த்துச் சூரியனையும், சூரியனைத் தவிர்த்துச் சூரிய கிரணங்களையும் நினைக்க முடியாது; பாலைத் தவிர்த்து அதன் வெண்மையையும், வெண்மையைத் தவிர்த்துப் பாலையும் கருதவொண்ணாது. அது போல குணஸ்வரூபமான ஈசுவரனைத் தவிர்த்து நிர்க்குண ஸ்வரூபனையும், நிர்க்குண ஸ்வரூபனைத் தவிர்த்து குணஸ்வரூபனையும் சிந்திக்க முடியாது.
15. பஹிரந்தஸ்ச பூதாநாமசரம் சரமேவ ச
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்  
பூதாநாம் அந்த: பஹி: ச-பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது, சரம் அசரம் ஏவ ச-அசரமும் சரமுமாவது, தத் ஸூக்ஷ்மத்வாத்-நுண்மையால், அவிஜ்ஞேயம்-அறிய முடியாதது, அந்திகே ச-அருகில் இருப்பது, தூரஸ்தம் ச தத்-தூரமானது.
பொருள் : பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது.
கடலுக்குள் மிதக்கிற பனிக்கட்டிக்கு உள்ளும் புறமும் இருப்பது நீர். அங்ஙனம் பரமாத்மா நீக்கமற எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கிறார். கடலின் மேல்பாகம் அலைவீசி அசைகிறது; அடிபாகம் அசையாதிருக்கிறது. பரமாத்மா குணங்களோடு கூடிப் பிரகிருதியாக இயங்குகிறார். குணம் போனவிடத்து அவர் அசையாதிருக்கிறார். கடல் நீர் ஆவியாக மாறி சூக்ஷ்மமாகும் பொழுது கண்ணுக்குத் தென்படுவதில்லை. அங்ஙனம் சுத்த சைதன்யமாகிய நிர்க்குண பிரம்மம் பேரறிவு சொரூபம் எனினும் மன பரிபாகமாகாத மந்த அதிகாரிகளுக்கு அப்பொருள் அறியவொண்ணாதது.
தன் சொந்த பூமியில் தன் பாதத்துக்குக் கீழ் பொன் இருப்பதை அறியாதவனுக்கும் பொன்னுக்கும் வெகுதூரம். தன்னுள் இருக்கும் பரமாத்மாவை அறியாதவனுக்கு அவர் மறுமையில் எங்கேயோ இருப்பதாக எண்ணம். தன் அந்தராத்மா அவர் என்று அறிகிறவனுக்கு அவரைவிட அருகில் உள்ள பொருள் வேறொன்றுமில்லை.
ஸமாதி நிலையிலிருந்து இந்திரிய நிலைக்கு வருபவனுக்கு இலேசான அஹங்காரம் இருக்கும். இதனால் அவன் ஒரே கடவுளின் பல்வேறு தோற்றங்களாகத் தன்னையும் ஜீவர்களையும் ஜகத்தையும் காண்கிறான். உனக்கென்று தனி வியக்தி இருக்கும் வரையில், அதாவது உன்னிடம் அஹங்காரம் இருக்கும் வரையில் ஈசுவரன் உருவம் உள்ளவன் என்பதைத் தவிர வேறுவிதத்தில் அவனை உன்னால் தியானிக்கவோ, நினைக்கவோ, காணவோ முடியாது. அதுவரையில் அகண்ட நிர்க்குணப் பிரம்மத்தை நீ உள்ளும் புறமும் சகுணக் கடவுளாகத்தான் காணுவாய். சகுணக் கடவுளின் இந்தத் தோற்றங்கள் பொய்யானவையல்ல. சரீரம், மனம், உலகம் இவைகளைக் காட்டிலும் அவை பன்மடங்கு மெய்யானவை.
16. அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச  
ஜ்ஞேயம் தத்-அறியத் தக்க அது (பிரம்மம்), பூதேஷு அவிபக்தம் ச-உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல், விபக்தம் இவ ச ஸ்திதம்-பிரிவுபட்டதுபோல் நிற்பது. பூதபர்த்ரு-பூதங்களைத் தாங்குவது, ச க்ரஸிஷ்ணு-அவற்றை உண்பது, ச ப்ரபவிஷ்ணு-பிறப்பிப்பது.
பொருள் : உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.
ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொரு வடிவத்துக்குள்ளும் பிரிவுபட்டது போன்று தென்படுகிறது. பிரிவுபடுத்துகிற வடிவத்துக்குள்ளும் அது இடையீடின்றி வியாபித்திருக்கிறது. பரமாத்மா அத்தகையவர். பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தாங்குவது போன்று ஜகத், ஜீவன் ஆகிய அனைத்தும் ஆத்ம சைதன்யத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அவைகள் பிரளய காலத்தில் ஒடுங்குவது ஆத்மாவில்; சிருஷ்டி காலத்தில் தோன்றுவது ஆத்மாவில். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய மூன்று நிலைகளிலும் அவைகள் ஆத்மாவுக்குப் புறம்பாயில்லை. அலைகள் கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் ஒடுங்குவது போன்று இவையாவும் பரமாத்மாவிடம் தோன்றி, இருந்து, இறக்கின்றன.
மாசு மறுவற்று விளங்கிய ஆகாசத்தில் திடீரென்று மேகங்கள் தோன்றுவதையும் அடுத்த நிமிஷத்தில் அவை காற்றினால் அப்பால் போக்கப்படுவதையும் ஒருக்கால் கண்ட பரமஹம்ஸர் ஒருவர், மிகுந்த குதூகலத்துடன் குதிக்கத் தொடங்கி, இதைப் போன்றதுதான் ஜகத்தும்; முதலில் அது இருந்ததில்லை. பிரம்ம மாகிற நிர்மல ஆகாயத்தில் திடீரென்று தோன்றி இத்தனை பொருள்களையும் உண்டாக்கியது. பிறகு அதே பிரம்மத்தின் காற்றினால் அகற்றப்படுகிறது, என்றார்.
பிரளய காலத்தில் காரிருள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றையும் அது விழுங்கவும் செய்கிறது எனலாம். பரபிரம்மம் அத்தகையதோ என்ற ஐயம் ஏற்படலாம். அதற்கு விடை வருகிறது.
17. ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்  
தத் ஜ்யோதிஷாம் அபி ஜ்யோதி:-ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி, தமஸ:-இருளிலும், பரம் ஜ்ஞாநம்-உயர்ந்த ஞானம், ஜ்ஞேயம்-அறியத் தக்கது, ஜ்ஞாநகம்யம்-ஞானத்தால் எய்தப்படுபொருள், ஸர்வஸ்ய ஹ்ருதி விஷ்டிதம்-எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது, உச்யதே-என்று கூறப் படுகிறது.
பொருள் : ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்ததென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படுபொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.
சுயம் ஜோதியாகத் தென்படும் சூரியன் நக்ஷத்திரம் முதலியவைகள் பிரளய காலத்தில் தங்கள் ஒளியை இழந்து மறைகின்றன. புத்தியானது ஆத்மாவிடத்து வாங்கிய உணர்ச்சியை இழக்கலாகிறது. ஆத்மாவோ தன் ஒளியை ஒருக்காலும் இழப்பதில்லை. ஜடப் பொருள்களுக்கு உண்டாகிற இருளும் வெளிச்சமும் ஆத்ம சைதன்யத்தை அணுகமாட்டா. நள்ளிருளில் ஒருவனுக்குத் தன் உடலும் உடையும் தென்படுவதில்லை. ஆயினும் நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி இருளில் மறைவதில்லை. சூரிய வெளிச்சத்தில் அவ்வுணர்ச்சி அதிகமாகத் தோன்றுவதுமில்லை. ஆத்ம சைதன்யத்தின் அறிவைக் கொண்டே சூரியனையும் அறிகிறோம், இருளையும் அறிகிறோம். அந்த ஆத்மா ஞானவடிவு. அது தன்னைத்தானே அறிகிறது. அது தன்னைத்தானே சார்ந்திருக்கும்பொழுது தன்னை நிறைபொருளாக உணர்கிறது. ஆக, ஆத்மாவால் அடைதற்கு உரியது ஆத்மாவே. அது ஹிருதய கமலத்தில் யாண்டும் நிலைத்திருக்கிறது.
உள்ளே (ஹிருதயத்தில்) ஈசுவரனை உணர்பவன் புறம்பேயும் அவனைக் காண்பான். தன்னுள்ளே ஈசுவரனைக் காணாதவன் தனக்கு வெளியேயும் அவனைக் காணமாட்டான். ஆகவே தேகாலயத்தில் தெய்வத்தைக் காண்பவன் அகிலாண்டத்திலேயும் அவனைக் காண்பான்.
18. இதி ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத:
மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே  
இதி ஷேத்ரம்-இங்ஙனம் ஷேத்ரதிரம், ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச-அவ்வாறே அறிவு (ஞானம்), அறியப் படு பொருள் (ஞேயம்), ஸமாஸத: உக்தம்-சுருக்கமாகச் சொல்லப் பட்டது, மத்பக்த: ஏதத் விஜ்ஞாய-என் பக்தன் இதையறிந்து, மத்பாவாய உபபத்யதே-எனது தன்மையை அடைகிறான்.
பொருள் : இங்ஙனம் ஷேத்ரதிரம், ஞானம், ஞேயன் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.
மனிதன் எதனிடத்துத் தன் முழுமனதைச் செலுத்துகிறானோ அதை அறிய வல்லவனாகிறான். ஈசுவரனை உபாசிக்கிறவன் ஈசுவரனை அறிகிறான். இத்தனையுமாய் இலங்குவது ஈசனே என்ற ஞானம் வந்த பிறகு யாண்டும் அவன் ஈசனுடைய சான்னித்தியத்திலேயே இருந்து ஈசனை அடையத் தகுந்தவனாகிறான்.
ஈசுவரனைக் கண்டவனே ஞானி. அவன் அப்போது குழந்தையின் சுபாவமுடையவனாகின்றான். குழந்தைக்குத் தனி வியக்தித்வம் ஒன்று இருக்கிறதென்றாலும் அது வாஸ்தவமானதல்ல; வெளித் தோற்றம் மட்டுமே. குழந்தையின் இயல்பு வயது வந்தவனுடையதைப் போன்றதன்று.
19. ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி
விகாராந்ஸ்ச குணாந்ஸ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்  
ப்ரக்ருதிம் புருஷம் ச உபௌ ஏவ-பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும், அநாதீ வித்தி ச-அநாதி , (ஆரம்பம் இல்லாதது) என்றுணர், விகாராந் ச-வேறுபாடுகளும், குணாந் அபி-குணங்களும்,
ப்ரக்ருதிஸம்பவாந் ஏவ-பிரகிருதியிலேயே பிறப்பன என்று, வித்தி- அறிந்து கொள்.
பொருள் : பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.
காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டதாகத் தென்படும் போது அது பிரகிருதி என்றும், மாயை யென்றும், இயற்கை யென்றும் அழைக்கப்படுகிறது. புத்தி முதல் ஜடப்பொருள் பரியந்தம் வெவ்வேறு வடிவெடுக்கும் தன்மை பிரகிருதியினிடமுண்டு. முக்குணங்களாகப் பரிணமிப்பதும் அதுவே. அது நிர்விகாரியாய் நிர்க்குணமாய்ப் பேரறிவாய்த் தன்மயமாயிருக்கும் போது புருஷன் என்ற பெயர் பெறுகிறது. ஆயினும் பொருள் ஒன்று ஆதலால் இவை இரண்டும் அத்வைதம். உண்டாக்கப்பட்டதல்லவாதலால் அது அனாதி.
ஸமுத்திர ஜலம் சிலவேளை அமைதியாயும், சிலவேளை அலைகள் பொங்கிக் கொந்தளித்தும் இருப்பதுபோல பிரம்மமும் மாயையும் இருக்கின்றன. சலிக்கும் சமுத்திரம் மாயை; சலனமற்ற சமுத்திரம் பிரம்மம்.
20. கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே
புருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே  
கார்ய கரண கர்த்ருத்வே-கார்யங்களையும் கரணங்களையும் ஆக்கும் விஷயத்தில், ப்ரக்ருதி ஹேது: உச்யதே-பிரகிருதியே காரணம் என்பர், ஸுக து:காநாம் போக்த்ருத்வே-சுக துக்கங்களை அனுபவிப்பதில், புருஷ: ஹேது உச்யதே-புருஷன் (ஜீவாத்மா) காரணம் என்பர்.
பொருள் : கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷனென்பர்.
தந்தையே மைந்தன் ஆகின்றான். மைந்தனுடைய செயல்களில் சில தந்தைக்கு இன்பமூட்டுகின்றன; வேறு சில துன்பமூட்டுகின்றன. புருஷனே பிரகிருதி ஆகின்றான். பிரகிருதியின் வெவ்வேறு விகாரங்களே உடலாகவும், இந்திரியங்களாகவும் பரிணமிக்கின்றன. அவ்விந்திரியங்கள் ஞானேந்திரியங்களாகவும் கர்மேந்திரியங்களாகவும் பாகுபடுகின்றன. ஜீவாத்மாவானது பிரகிருதியோடு மேலும் சம்பந்தப்படுதற்கு இந்திரியங்கள் பயன்படுகின்றன. அத்தகைய சம்பந்தம் இன்ப துன்பமாக வடிவெடுக்கிறது. இங்ஙனம் புருஷன் பிரகிருதியோடு சேர்வதால் புருஷன் பாடம் கற்று வருகிறான். இப்படி ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துவதே பிரகிருதியின் தொழில்.
பிரம்ம ஞானப் பிராப்தி. பரமானந்த போகம் முதலியவைகளெல்லாம் மாயையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. இல்லாவிட்டால் இவையெல்லாம் நமக்கு லபிக்குமெனக் கனவிலும் கண்டவர் எவர்? மாயையிலிருந்துதான் துவைதமும் மற்ற வியவகாரமும் உண்டாகின்றன. மாயைக்கு அப்பால் போகம், போகி என்பவை கிடையா.
ஜீவன் என்னபோக்கில் பாடம் கற்கின்றான் என்பது அடுத்து எழும் வினாவாகின்றது. அதற்கு விடை வருகிறது :
21. புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்‌க்தே ப்ரக்ருதிஜாந்குணாந்
காரணம் குணஸங்கோஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு  
ப்ரக்ருதிஸ்த: ஹி-பிரகிருதியில் நின்றுகொண்டு, புருஷ:-புருஷன் (ஜீவாத்மா), ப்ரக்ருதிஜாந் குணாந் புங்‌க்தே-பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான், குணஸங்க:-குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே, அஸ்ய ஸத் அஸத் யோநி ஜந்மஸு-இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக், காரணம்-காரணமாகிறது.
பொருள் : புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.
வெயிலில் நிற்பவன் வெயிலை அனுபவிக்கிறான். பனியில் நிற்பவன் பனியை அனுபவிக்கிறான். அங்ஙனம் ஜீவாத்மா பிரகிருதியோடு பொருந்தியிருக்கையில் பிரகிருதியின் தன்மைகளையெல்லாம் தன்னுடையவைகளெனக் கருதி அனுபவிக்கிறான். நான் இன்பம் துய்க்கிறேன், நான் துன்பம் துய்க்கிறேன், நான் மயங்கிப்போனேன், நான் அறிவுடையவனாயிருக்கிறேன்-இவை போன்ற உணர்ச்சிகள் குணத்தோடு பற்று வைப்பதால் வருகின்றன. இனி, பிறப்புக்குக் காரணமாயிருப்பதும் பற்றுதலே. மேலான குணத்தோடு பற்று வைப்பவன் தேவன் போன்ற மேலானவனாகப் பிறக்கின்றான். கீழான குணத்தில் பற்று வைப்பவன் விலங்கு போன்ற கீழானவனாகப் பிறக்கிறான். மேலானதும் கீழானதும் கலந்த குணத்தில் பற்று வைப்பவன் சாதாரண மனிதனாகப் பிறக்கிறான்.
இப்படித் தொடர்ந்து வருகிற ஜனன மரண சம்சாரத்தினின்று விடுதலையடைதற்கு வழியொன்றுமில்லையா? விடை வருகிறது :
22. உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஸ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேऽஸ்மிந்புருஷ: பர:  
உபத்ரஷ்டா அநுமந்தா ச-மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், பர்தா போக்தா மஹேஸ்வர: -சுமப்பான், உண்பான், மகேசுவரன், இதி அஸ்மிந் தேஹே பர புருஷ:-இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன், பரமாத்மா அபி ச உக்த:-பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.
பொருள் : மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.
உடலிலே இத்தனை செயல்கள் நடைபெறுகையில் அக்ஞானத்தில் உழலும் ஜீவனானவன் தன்னை இத்தனைக்கும் கர்த்தாவாக எண்ணுகிறான். அந்த ஜீவ சைதன்யமே பரமாத்மாவின் தோற்றமாகும். உள்ளே இருக்கும் உத்தமன் எத்தகையவன் என்று கேட்குமிடத்து, அவன் :
உபத்ரஷ்டா - அருகிலிருந்து காண்போன் அல்லது சாக்ஷியாக இருக்கிறான். சொக்கட்டான் ஆடுபவர்களை விட அதைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு யார் எங்கே எக்குற்றம் செய்கிறார்கள் என்பது நன்கு புலப்படுகிறது. மனத்தகத்து சாக்ஷியாயிருக்கும் பரமாத்மா உடலிலும் உள்ளத்திலும் நிகழ்வனவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அனுமந்தா - அனுமதி அல்லது சம்மதம் கொடுப்பவர். ஒன்றும் தெரியாத அவிவேகி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். பார்த்ததை நல்லதென்று ஆமோதிக்கவோ, அல்லது கெட்டதென்று நிராகரிக்கவோ அவனுக்குத் தெரியாது. அறிஞனுக்கோ அது சாலும். ஜகத்தின் நடைமுறைக்குப் பரமாத்மா அங்ஙனம் அனுமந்தாவாயிருக்கிறார்.
பர்த்தா - விளையாட்டைப் பார்க்கவும் அனுமதிக்கவும் ஒருவனுக்கு இயலலாம். ஆனால் அதற்கு ஆகிற செலவு கொடுத்து அதை ஆதரிக்க இயலுகிறவன் அதிலும் மிக்கான் ஆகிறான். அவனைப் பர்த்தா என்று சொல்லவேண்டும். தாங்குபவன் என்பது அதன் பொருள். சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குவது போன்று பரமாத்மா பிரகிருதியைத் தாங்குகிறார்.
போக்தா - சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குகிறது எனினும் அப்படத்தை ரசிக்க அதனால் இயலாது. திரை ஜடப்பொருளாயிருப்பதே அதற்குக் காரணம். மனைவிக்குக் கணவன் பர்த்தா. அதற்குமேல் அவளுடன் கூடின இல்வாழ்க்கைக்கு போக்தாவாக, அதாவது இல்வாழ்க்கையை அனுபவிப்பவனாக அவன் இருக்கிறான். அங்ஙனம் சித் சொரூபியாகிய, ஆனந்த சொரூபியாகிய பரம புருஷன் பிரகிருதிக்கு போக்தாவாக இருக்கிறார்.
மகேச்வரன் - கணவன் மனைவியை ஆதரித்து அவளுடன் கூடிய இல்வாழ்க்கையை அனுபவிக்கலாம். ஆனால் மனைவி அவன் கட்டுப்பாட்டில் அடங்காதவளாயிருக்கலாம். பின்பு, பரம புருஷனோ அரசன் போன்றவர். ராஜாவுக்கு அவனுடைய பிரகிருதிகளெல்லாம் உட்பட்டவைகள். மகேச்வரனது ஆளுகைக்குப் பிரகிருதி அல்லது ஷேத்ரதிரம் முற்றிலும் கட்டுப்பட்டது. அவருடைய ஆணையை மீறுதற்கு அதற்கு இயலாது.
இத்தனை விதங்களில் அவர் இயற்கையோடு தொடர்வு வைத்திருந்தும் அவர் இயற்கையில் கட்டுப்பட்டவரல்லர். ஆகையால் அவர் பரமாத்மன், அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டவர். இங்ஙனம் இத்தேகத்தினுள்ளேயே பிரகிருதியின் செயல் ஒன்றிலும் கட்டுப்படாதவராக, ஆனால் அதற்கு ஆதரவும், ஒழுங்குப்பாடும் தருபவராகப் பரம புருஷன் வீற்றிருக்கிறார்.
புருஷ பிரகிருதியின் மூலமாகவே உலகம் உண்டாயிற்று. அது எப்படி யென்று தெரியுமா? வீட்டு எஜமானன் ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு அதிகாரம் செலுத்துகிறான். வீட்டு எஜமானி இப்பக்கமும் அப்பக்கமும் ஓடி அலைந்து அலுவல்களைக் கவனிக்கிறாள். சுறுசுறுப்பாக வேலைபார்த்து, வீட்டுக்கு வருபவர்களையும் வரவேற்றுக் கவனித்துக்கொள்கிறாள். அடிக்கடி தன் கணவனிடம் சென்று அலுவல்கள் எவ்வாறு நடந்து வருகின்றன வென்பதை அறிவிப்பதோடு ஆலோசனைகளையும் கேட்டு வருகிறாள். தலைவனும் குறிப்பறிந்து தன் சம்மதத்தைத் தலையசைப்பின் மூலமாகத் தெரிவிக்கிறான். பிரகிருதி புருஷன் இவர்களது காரியமும் இப்படித்தான் நடைபெற்று வருகிறது.
பிரகிருதி புருஷனைப்பற்றிய ஞானத்தினின்று வரும் நலன் ஏதாவது உண்டா? விடை வருகிறது :
23. ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ
ஸர்வதா வர்தமாநோऽபி ந ஸ பூயோऽபிஜாயதே  
ஏவம் புருஷம் ப்ரக்ருதிம் ச-இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், குணை: ஸஹ-அதன் குணங்களையும், ய: வேத்தி-எவன் அறிகிறானோ, ஸ: ஸர்வதா வர்தமாந: அபி-அவன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், பூய: ந அபிஜாயதே-மறு பிறப்பில்லை.
பொருள் : இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.
கண்ணாடியின் எதிரே தோன்றும் வடிவங்களின் பிம்பத்தை அப்படியே காட்டவல்லது கண்ணாடி. ஆனால் கண்ணாடி அதனால் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரகிருதியின் விகாரங்களால் பிரம்மமும் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மாகிறான். பிராரப்த கர்மத்தால் உடலில் ஏற்படும் இன்ப துன்பங்களில் அவன் கட்டுப்படுவதில்லை. கானல் நீர் போன்றுள்ள பிரகிருதியின் தோற்றத்தைப் போற்றிப் பாராட்டுவதால் அவனுக்குப் பிரகிருதியில் பற்று ஒன்றும் உண்டாவதில்லை. ஜகத் என்பது வெறும் தோற்றம் என்று அவன் அதைப் புறக்கணிப்பதால் அவனுக்கு நஷ்டம் வருவதுமில்லை. இவ்வுடலம் இருக்கும்வரை அதில் வாழ்க்கை பிராரப்தத்துக்கு ஏற்றவாறு விதவிதமாய் நடைபெறுகிறது. அதற்கிடையில் ஞானி ஜீவன்முக்தனாய் வாழ்கிறான். உடல் வீழ்ந்த பிறகு அவன் இன்னொரு பிறவி எடுப்பதில்லை. தீயில் வெந்த கயிறு கட்டுதற்கு உதவாது. அங்ஙனம் ஞானாக்கினியில் வெந்த சஞ்சித ஆகாமிய கர்மம் இன்னொரு பிறவியை உண்டுபண்ண மாட்டா.
சூளையில் வேகாத மண்பாண்டம் உடைந்தால் அம்மண்ணை வேறு புதிய பாண்டம் உண்டாக்கக் குயவன் உபயோகிப்பான். ஆனால் சூளையில் வெந்த மண்பாண்டம் உடைந்தாலோ அதன் துண்டுகளை அப்பால் அவன் உபயோகிக்க முடியாது. அதுபோல ஒருவன் அக்ஞானத்துடன் மரணமடைந்தால் மறு ஜன்மம் அடைவான். ஆனால் உண்மை ஞானமாகிய அக்கினியால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறு ஜன்மம் கிடையாது.
ஞானத்தை அடைதற்கான வழிகள் எவை? விடை வருகிறது :
24. த்யாநேநாத்மநி பஸ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே  
கேசித் ஆத்மாநம் ஆத்மநா-சிலர் ஆத்மாவில், ஆத்மாவால், த்யாநேந ஆத்மநி பஸ்யந்தி-தியானத்தின் மூலமாக ஆத்மாவை அறிகிறார்கள், அந்யே ஸாங்க்யேந யோகேந-பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள், அபரே கர்மயோகேந ச-பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.
பொருள் : சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.
ராஜயோகம், ஞானயோகம், கர்மயோகம் ஆகிய மூன்றும் இங்குச் சொல்லப்பட்டுள்ளன. பக்தியோகம் அடுத்த சுலோகத்தில் வருகிறது.
25. அந்யே த்வேவமஜாநந்த: ஸ்ருத்வாந்யேப்ய உபாஸதே
தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்ருதிபராயணா:  
து அந்யே ஏவம் அஜாநந்த:-வேறு சிலர் இவ்வாறு அறியாமல், அந்யேப்ய ஸ்ருத்வா-அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை, உபாஸதே ச-வழிபடுகிறார்கள், தே ஸ்ருதிபராயணா: அபி-அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின், ம்ருத்யும் அதிதரந்தி ஏவ-மரணத்தை வெல்வார்.
பொருள் : இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.
பக்தியோகம் மற்ற மூன்று யோகங்களைவிட மிக எளியது. சாஸ்திர ஞானமும் விவேகமும் இதற்கு ஏராளமாய் வேண்டியதில்லை. ஆயர் குலத்து தித்த பெண்களே கல்வியறிவின்றி, நூல் ஆராய்ச்சியின்றி, சுத்த பக்தியால் கண்ணனை அடைந்தார்கள் என்றால் விவேகமும் வைராக்கியமும் உடைய மேலோர்க்கு அது இன்னும் எவ்வளவு எளிதாகாது?
பகவத் பக்தியை ஒரு புலியோடு ஒப்பிடலாம். புலியானது மிருகங்களை விழுங்குவதுபோல், பக்தியானது காமாதிகளான பெரும் பகைவர்களை விழுங்குகிறது. பகவத் பக்தி ஒருதரம் நன்றாக உண்டாகிவிட்டால், காமம் குரோதம் முதலிய கெட்ட பாசங்கள் முற்றிலும் நசிந்துவிடும். பிருந்தாவனத்து கோபஸ்திரீகள் கிருஷ்ணனிடம் வைத்த தீவிரபக்தியால் இப்படிப்பட்ட நிலைமையை அடைந்திருந்தனர்.
கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய நான்கும் ஸ்ரீமத் பகவத்கீதையில் சம அந்தஸ்துப் பெறுகின்றன. ஒன்றைக் குறைபடுத்துதலும் மற்றொன்றை மிகைப்படுத்துதலும் கீதையில் இல்லை. இந்த நான்கு யோகங்களில் ஏதேனும் ஒன்றே போதுமானது. ஏதேனும் ஒரு யோகத்தின் மூலமாக மனிதன் பரிபூரணத் தன்மையடையலாம். பின்பு நான்கு யோகங்களும் சமரசம் அடைதலே சாலச்சிறந்தது. கர்மயோகம் ஆற்றலைத் தருகிறது. ராஜயோகம் மனோவலிவை வளர்க்கிறது. பக்தி அன்பைப் பெருக்குகிறது. ஞானம் அறிவை வளர்க்கிறது. நிறை மனிதனிடத்து இவையாவும் பூரண வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
இனி, நான்கு யோகங்களையும் முறையாகக் கையாளுவதால் வரும் நிறை ஞானம் விளக்கப்படுகிறது.
26. யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்
ஷேத்ரஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப  
பரதர்ஷப:-பரதக்காளையே, யாவத் கிஞ்சித் ஸ்தாவர ஜங்கமம்-எத்தனை எத்தனை ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும், ஸத்த்வம் ஸஞ்ஜாயதே-பிராணிவர்க்கம் உண்டாகின்றதோ, தத் ஷேத்ர ஷேத்ரஜ்ஞ ஸம்யோகாந்-அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்தது, வித்தி-என்று அறி.
பொருள் : பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.
சினிமாத் திரையும் அதன்மீது படுகிற நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் சேர்க்கையும் படக் காட்சிக்குக் காரணங்களாகின்றன. அசையாத திரையின் துணையால் அசையும் மனிதன் ஒருவனது தோற்றம் அங்கே தென்படுகிறது. நிறத்தின் அமைப்பு விசேஷத்தால் அவ்விடத்தில் தீப்பற்றி எரிவது போன்று காட்சி உண்டாகிறது. நிழல், நிறம் இவைகளின் தன்மை திரையின் மீது ஏற்றப்படுகிறது. பின்பு திரையின் தன்மையானது நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் மீது ஏற்றப்படுகிறது. படத்தோற்றத்துக்கு இதுவே காரணம். சித் ஆகாசம் என்கிற திரையின் மீது முக்குண மயமான ஷேத்ரதிரம் அரோபிக்கப்படுகிறது - அதாவது ஏற்றுவிக்கப்படுகிறது. இங்ஙனம் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனுடைய சேர்க்கையால் ஜடமாகிய ஷேத்ரதிரம் அறிவுடையதுபோல் தென்படுகிறது. உண்மையில் அறியும் தன்மை ஆத்மாவினுடையது. பிறவாத, இறவாத ஆத்மாவானது பிறந்து இறப்பதுபோன்று தென்படுகிறது. பிறப்பும் இறப்பும் - அதாவது தோன்றுவதும் மறைவதும் ஷேத்ரதிரத்தினுடைய இயல்பு. இது ஆத்மாவினிடத்து நிகழ்கிறது என்ற மித்தியா ஞானம் அக்ஞானிக்கு உண்டாகிறது. தீப்பற்றி எரிகிற சினிமாக் காட்சி தென்பட்டாலும் திரையில் தீப்பற்றிவிடாது என்ற ஞானம் அதன் தத்துவத்தை அறிகிறவர்களுக்குண்டு. உலகம் உண்டாவது, நிலைபெறுவது , மறைவது என்பதெல்லாம் இத்தகையது என்று ஞானி உள்ளபடி அறிகிறான். ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனைப் பாகுபடுத்தி உள்ளபடி அறிவதே ஞானம்.
நீ வியக்தி ஸ்வரூபனாக இருக்கும் வரையில், அதாவது நீ ஜீவனாய் இருக்கும் வரையில், வெண்ணெய், மோர் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும்; அதாவது ஈசுவரன் ஜகத் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும். உவமையை விளக்கிச் சொல்வோமானால் முதன் முதலில் இருந்த பாலானது ஸமாதி மூலமாய் அறியப்படும் பிரம்மமாகும்; வெண்ணெய் ஈசுவரனாகும்; மோர் இருபத்துநான்கு தத்துவங்களாலான உலகமாகும்.
ஞானம் அடைந்தவன் பரமாத்மாவை எப்படிக் காண்கிறான்? விடை வருகிறது ?
27. ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம்
விநஸ்யத்ஸ்வவிநஸ்யந்தம் ய: பஸ்யதி ஸ பஸ்யதி  
ய: விநஸ்யத்ஸு ஸர்வேஷு பூதேஷு-எந்த மனிதன் அழியக் கூடிய எல்லா பூதங்களிலும், அவிநஸ்யந்தம் ஸமம் திஷ்டந்தம்-அழியாதவனாகவும் சமமாக நிற்பவனாகவும், பரமேஸ்வரம்-பரமேச்வரனை, பஸ்யதி-பார்க்கிறானோ, ஸ: பஸ்யதி-அவனே காட்சி உடையவன்.
பொருள் : எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரசுராமன். அழிவனவற்றில் அவன் அழிவான். அவனைக்காண்போனே காட்சியுடையோன்.
படங்கள் அனைத்துக்கும் சினிமாத் திரை சமமாயிருக்கிறது. படத்தின் அமைப்பில் இதன் இடத்தில் அது இருக்கிறது, இன்ன இடத்தில் இல்லை என்பது கிடையாது. இனி, படங்களெல்லாம் ஓயாது தோன்றி மறைகின்றன. திரையோ மாறுதல் அடையாது நிலைத்திருக்கிறது. சித் ஆகாசம் என்னும் திரையின் மீது ஜகத் என்னும் படம் உண்டாகி அழிந்துகொண்டிருக்கிறது. சினிமா என்னும் படம் உயிரற்ற ஓவியம். ஜகத் என்னும் படமோ உயிர் ஓவியம். ஏனென்றால் அதற்கு ஆதாரமாயுள்ள சித் ஆகாசம் அல்லது பரமாத்மாவிடமிருந்து அது சைதன்யத்தை, அதாவது உணரும் தன்மையைப் பெறுகிறது. ஜகத்து அல்லது ஷேத்ரதிரத்துக்கு உயிர் வழங்குவதால் அது பரமேசுவரன் எனப்படுகிறது. திரையின்றிப் படமில்லை. பரமேசுவரனின்றி உலகம் ஒன்றுமில்லை. அப்பரமேசுவரனையும் அவன் மயமாக உலகத்தையும் காண்பவனே உண்மையைக் காண்பவன் ஆகிறான். மற்றவர்கள் படத்தை மெய்யென நினைக்கும் குழந்தைகள் போன்றவர்களாய் இருக்கின்றனர்.
சூரியன் உலக முழுதிலும் சமனாகப் பிரகாசித்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால் ஒரு சிறுமேகம் அதை நம் கண்ணுக்குத் தெரியாது மறைத்து வைக்கிறது. அங்ஙனம் மாயையாகிய திரை எங்கும் நிறைபொருளை - கடவுளை, நம் கண்ணுக்குத் தெரியாது மறைக்கிறது. மாயையை நீக்கிப் பார்ப்பவருக்கு எல்லாம் சச்சிதானந்த சொரூபமாகத் தோன்றும்.
ஈசுவரக் காட்சி காண்பவனது வாழ்க்கையில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? விடை வருகிறது :
28. ஸமம் பஸ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஸ்வரம்
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்  
ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதம் ஈஸ்வரம்-எங்கும் சமமாக ஈசன் நிற்பதை, ஸமம் பஸ்யந் - சமமாகவே பார்த்துக் கொண்டு இருப்பவன், ஆத்மாநம் ஆத்மநா ந ஹிநஸ்தி-தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான், தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.
பொருள் : எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.
மனிதன் செய்கிற எல்லாக் கேடுகளுக்கும் காரணமாயிருப்பது அக்ஞானம். கேடுகளிலெல்லாம் பெரிய கேடு தன்னை ஷேத்ரதிரம் அல்லது பிரகிருதியாக நினைத்துக்கொள்வது. சரீரத்தைத் தான் என்று நினைப்பவன் பல பிறவிகளை எடுக்கிறான். ஒவ்வொரு தடவையும் தன் உடல் கூற்றை அழித்துக்கொண்டு புதிய பிறவியெடுக்கிறான். அழியாத ஆத்மா அக்ஞானத்தால் பலதடவை அழிக்கப்பட்டது போன்று ஆகிறது. மற்ற உயிர்களை மனிதன் தனக்கு வேறானவைகளாக நினைப்பதால் அவைகளுக்குத் தீங்கு செய்கிறான். இது மித்தியா ஞானம் அல்லது மயக்கத்தின் பயனாகும். பிரம்மஞானி பிரம்மத்துக்கு அன்னியமாக எதையும் காண்பதில்லை. அவனுக்கு உலகமெல்லாம் ஒரே பிரம்ம சொரூபமாகக் காட்சி கொடுக்கிறது. அதுவே அவன் அடைகிற பரகதியாம்.
குருவியின் கூண்டு அழிந்துபோனால், அக்குருவி ஆகாயத்தில் பறந்துபோய்விடுகிறது. அதுபோல, சரீர உணர்ச்சியும் உலக உணர்ச்சியும் மனத்தைவிட்டு நீங்கினால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய ஆகாயத்தில் பறந்து சென்று சமாதிநிலையில் ஐக்கியமாகிறது.
பூவுலகில் நடைபெறுகிற கிருத்தியங்களுக்கும் பிரம்மஞானிக்கும் ஒருவிதமான தொடர்வும் இல்லையா? இக்கேள்விக்கு விடை வருகிறது :
29. ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ:
ய: பஸ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஸ்யதி  
ச ய:-மேலும் எவன், ஸர்வஸ: கர்மாணி-எங்கும் தொழில்கள், ப்ரக்ருத்யா ஏவ க்ரியமாணா,நி-இயற்கையாலேயே செய்யப்படுகின்றன, ததா ஆத்மாநம் அகர்தாரம் பஸ்யதி-ஆதலால் தான் கர்த்தா இல்லையென்று காண்பானே, ஸ: பஸ்யதி =காட்சியுடையான்.
பொருள் : எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்
சூரியன் இருக்குமிடத்தில் வெளிச்சம் உண்டு. அக்கினி இருக்குமிடத்தில் வெப்பம் உண்டு. அங்ஙனம் பிரம்மத்தின் சன்னிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் கிருத்தியங்கள் வேண்டிவாறு நடைபெறுகின்றன. நிறைஞானியின் பிர கிருதியாகிய உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் சம்பூரண நிலை சிறிதும் கலைந்து விடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான்.
பரம்பொருளை சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யாத நிஷ்கிரியர் என்ற கோட்பாட்டில் பிரம்மம் அல்லது புருஷன் என்று சொல்லுகிறேன். ஆனால் அத்தொழில்களைச் செய்தருளுகின்றார் என்ற கோட்பாட்டில் சக்தி, மாயை, பிரகிருதி என்ற பெயர்களுள் ஒன்றால் அழைக்கிறேன்.
ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞனுக்கிடையில் உள்ள தொடர்வு அடுத்த சுலோகத்தில் இன்னும் நன்கு விளக்கப்படுகிறது :
30. யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஸ்யதி
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா  
யதா பூத ப்ருதக் பாவம்-எப்போது பலவகைப்பட்ட பூதங்களின் தன்மை, ஏகஸ்தம்-ஒரே ஆதாரமுடையன, தத: ஏவ விஸ்தாரம் ச-அந்த ஆதாரத்தில் இருந்து (பரமாத்மாவிடம் இருந்து) விரிவடைந்தனவாகவும், அநுபஸ்யதி-காண்கிறானோ, ததா ப்ரஹ்ம ஸம்பத்யதே-அப்போது பிரம்மத்தை அடைகிறான்.
பொருள் : பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.
அலை, திவலை, நுரை முதலிய தனித்தனி வடிவங்களெல்லாம் கடலுக்குப் புறம்பாயில்லை. எல்லாம் கடல் என்ற ஒரு பொருளிலே நிலைத்திருக்கின்றன. மேலும் அவைகளெல்லாம் கடலிருந்தே உண்டானவைகள். கடலே தனது சக்தியால் அத்தனைவித வடிவெடுத்திருக்கிறது. அது போன்று மாயா சக்தியின் வல்லமையால் பல்லுயிர்களாகத் தோன்றியிருப்பவைகளெல்லாம் பரபிரம்மத்திடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அந்த மாயா சக்தியே பிரம்மத்துக்கு அன்னியமானதல்ல. யார் ஒருவன் சுவானுபூதியில் இதை அறிகின்றானோ அத்தகைய பிரம்மஞானி பிரம்மமாகிறான்.
இயங்காப் பரபிரம்மமும் இயங்கும் சக்தியும் உண்மையில் ஒன்றேயாம். அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபி எவனோ அவனே ஸர்வசக்தி, ஸர்வ ஞானம், ஸர்வானந்தம் இவைகளையுடைய ஜகன் மாதாவாகவுமாகிறான். நெருப்பும் அதன் வெப்பமும் ஒன்றானவை. அக்கினியின்றி உஷ்ணத்தையும் உஷ்ணமின்றி அக்கினியையும் மனத்தினால் சிந்திக்க முடியாது. சக்தியும் பிரம்மமும் ஒன்று. சக்தி கர்மம் செய்கிறது. அந்த கர்மம் பிரம்மத்தைச் சார்கிறதா? இதற்கு விடை வருகிறது :
31. அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய:
ஸரீரஸ்தோऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே  
கௌந்தேய-குந்தியின் மகனே, அநாதித்வாத்-ஆதியின்மையால், நிர்குணத்வாத் - குணமின்மையால், அயம் பரமாத்மா அவ்யய:-இந்தப் பரமாத்மா கேடற்றான், ஸரீரஸ்த: அபி-இவன் உடம்பிலிருந்தாலும், ந கரோதி-செயலற்றான்; ந லிப்யதே-பற்றற்றான்.
பொருள் : ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.
மாயா காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டவைகள் ஆதலால் அவைகளுக்குத் துவக்கமுண்டு. பரபிரம்மம் சிருஷ்டிக்கப்பட்ட தல்ல; எனவே அது ஆதியில்லாதது. மாயா காரியங்கள் குண சம்பந்தப்பட்டவைகள். எதற்குக் குணம் மாறுகிறதோ அது கேடடைகிறது. பரமாத்மா குணமில்லாதது; ஆதலால் அதனிடத்து மாறுதல் ஒன்றுமில்லை. அது கேடு அடைவதில்லை. நிறை பொருள் அசையாதது; ஆகையால் அதனிடத்துக் கர்மம் கிடையாது. அசையாத ஒன்று, கர்மம் செய்யாத ஒன்று எதையும் போய்ப் பற்றுவதில்லை.
பிரம்ம ஞானியினுடைய சரீரத்துக்கு ஏற்படும் அழிவு அவனுக்குரியதன்று. சரீரம் செய்கிற வேலை அவனுடைய தன்று. கடலின் மேற் பரப்பு ஆடுகிறது, அலையாக மோதுகிறது, பற்றுகிறது; அதன் உட்புறம் சலனமற்றுத் தன்மயமாயிருக்கிறது. நிறை ஞானியினுடைய தன்மையும் அத்தகையது.
பிரம்மம் எப்படிப்பட்டது? பிரம்மத்துக்குக் குணங்கள் இல்லை, சலனமில்லை, அது போக்கு வரவற்றது; மகாமேரு பர்வதத்தைப் போல் நிலைத்திருப்பது.
எதுபோன்று பரமாத்மா செயலற்றுப் பற்றற்று இருக்கிறது? அது மேலும் விளக்கப்படுகிறது :
32. யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஸம் நோபலிப்யதே
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே  
யதா ஸர்வகதம் ஆகாஸம்-எங்குமிருந்தாலும் ஆகாசம், ஸௌக்ஷ்ம்யாத் ந உபலிப்யதே-தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், ததா தேஹே-அவ்வாறே உடம்பில், ஆத்மா ஸர்வத்ர அவஸ்தித:-ஆத்மா எங்கணுமிருந்தாலும், ந உபலிப்யதே-பற்றுறுவதிலன்.
பொருள் : எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுறுவதிலன்.
ஜலமானது உறைந்த பனிக்கட்டியாக, இளகிய நீராக, நுண்ணிய ஆவியாக மூன்று நிலைகளில் இருக்கிறது. நுண்ணிய நிலையில் அதை அழுக்குப்படுத்த முடியாது. பஞ்ச பூதங்களுள் ஆகாசம் மிக நுண்ணியது. ஆகையால் அதை மற்றவைகள் அழுக்காக்குவதில்லை. இனி ஆத்மாவைவிட நுண்ணியது ஒன்றுமில்லை. ஆதலால் அது எதுனாலும் தோய்வுறாதிருக்கிறது. ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. பூமி முதலியவைகளில் உள்ள வடிவங்கள் ஆகாசத்தைப் பிளவுபடுத்துவதில்லை. எண்ணிறந்த உடல்களில் பிளவுபடாது நிறைந்துள்ள சிதாகாசம் அல்லது பரமாத்மா எதிலும் பிளவுபடாது, தோய்வுறாது, களங்கமடையாக இருக்கிறது.
ஞானம் அக்ஞானம், நன்மை தீமை, தர்மம் அதர்மம் இப்படிப்பட்ட துவந்தங்களுக்கு அப்பாலும் மேற்பட்டும் பிரம்மம் இருக்கிறது.
இன்னும் அது அத்தகையது?
33. யதா ப்ரகாஸயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி:
ஷேத்ரம் ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஸயதி பாரத  
பாரத-பாரதா, யதா ஏக: ரவி-எப்படி சூரியன் ஒருவனாய், இமம் க்ருத்ஸ்நம் லோகம் - இவ்வுலக முழுவதையும், ப்ரகாஸயதி-ஒளியுறச்செய்கிறானோ, ததா ஷேத்ரீ-அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், க்ருத்ஸ்நம் ஷேத்ரம் ப்ரகாஸயதி-ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.
பொருள் : சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுவதையும் எங்ஙனம் ஒளியுறச்செய்கிறானோ, அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.
பூமி முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுக்கிறான். ஆனால் பூமியிலுள்ள நன்மை கேடுகளால் சூரியன் பாதிக்கப்படுவதில்லை. இங்ஙனம் உலக முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுப்பதுபோன்று பரமாத்மா அகிலாண்டத்துக்கும், சரம் அசரம் அனைத்துக்கும் சைதன்யத்தை அல்லது அறிவை வழங்குகிறார். அந்தந்த ஜீவனது அறிவில் ஏற்படும் நலம் கேடு முதலியன பரமாத்மாவைப் பந்தப்படுத்துவதில்லை.
பிரம்மம் ஒரு விளக்கின் ஒளிப்பிழம்பைப் போன்றது. விளக்கின் வெளிச்சத்தில் நீ பாகவதத்தைப் படித்தாலும் படிக்கலாம்; அவ்வெளிச்சத்தின் உதவியைக்கொண்டே பிறரைக் கெடுக்க வேண்டி ஒரு பொய்ப் பத்திரத்தை எழுதினாலும் எழுதலாம். எல்லார்க்கும் அறிவு என்னும் வெளிச்சத்தைத் தருவது பிரம்மம். ஆனால் அது நன்மை தீமைகளோடு சம்பந்தப்படுவதில்லை.
முடிவான கருத்து யாதுவெனின்:
34. ஷேத்ரஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷúஷா
பூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்  
ஏவம் ஷேத்ர ஷேத்ரஜ்ஞயோ:-இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள,
அந்தரம்-வேற்றுமையையும், பூதப்ரக்ருதிமோக்ஷம் ச-ப்ரக்ருதி, பிரக்ருதியினுடைய செயல்கள் இவற்றிலிருந்து விடுபடுவதையும், யே ஜ்ஞாநசக்ஷúஷா விது-எவர்கள் ஞானக் கண்ணால்
தே பரம் யாந்தி-அவர்கள் பரம்பொருளை அடைகின்றனர்.
பொருள் : ஞானக் கண்ணால் இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதப் பிரக்ருதியினின்றும் விடுதலை பெற்று பரம்பொருளை அடைகின்றனர்.
நோயையும் நோயாளியையும் நன்கு அறிகின்றவளவு மருத்துவன் நோயை நீக்க வல்லவன் ஆகிறான். இரண்டில் ஒன்றைத் தெரியாது போனாலும் சிகிச்சை சிலாக்கியப்படாது. அங்ஙனம் புருஷன் பிரகிருதி ஆகிய இரண்டையும் உள்ளபடி அறிதல் வேண்டும். எது புருஷன், எது பிரகிருதி என்று பாகுபடுத்துதலும் அவசியமானது. இதற்கெல்லாம் மேலாக ஞானவாழ்க்கையின் வாயிலாக ஞானக்கண்ணைப் பெறுதல் மிக முக்கியமானது. வெறும் சாஸ்திர ஞானம் போதாது. ஞானக்கண் திறக்கப்பெறுமிடத்து ஜீவர்கள் பிரகிருதியில் கட்டுண்டு கிடப்பதெல்லாம் அக்ஞானத்தால் என்பது விளங்கும். அதற்கெல்லாம் மேலாகப் பிரகிருதியானது புருஷனைச் சார்ந்திருக்கிறதென்றும், புருஷன் பிரகிருதியைச் சார்ந்திருப்பதில்லையென்றும், பிரகிருதி புருஷனுக்கு அன்னியமானதல்லவென்றும் சுவானுபூதியில் தோன்றும். அத்தகைய அபரோக்ஷ அனுபூதியைப் பெறுபவன் பிரம்ம ஞானியாகிறான். அவனே முக்தன் ஆகிறான்.
உலகம் மாயை யென்று சொல்லுவது எளிது. ஆனால் அதன் பொருள் இன்னதென்று உனக்குத் தெரியுமா? அது மிகுதி ஒன்றையும் வைக்காத கற்பூரத்தைக் கொளுத்துவது போலாம். சாம்பலை மிகுதியாக்கும் விறகுக் கட்டைகளைக் கொளுத்துவது போன்றதன்று. விசாரணை முடியும் நிலையில், உயர்ந்த சமாதி நிலை கிட்டும். அப்போது நான், நீ, உலகம் என்ற உணர்ச்சி கொஞ்சமேனும் இராது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகோ நாம
த்ரயோதசோத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷத்தின்கண் ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்ற பதின்மூன்றாம் அத்தியாயம்.

பதினான்காம் அத்தியாயம்
பகவத்கீதை | குணத்ரய விபாக யோகம்



தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும் சேர்க்கிறார். பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக்கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.
ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது; தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைத் தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான். பிரம்ம ஞானம் மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது 1-2 -பிறவிக்கு மூலகாரணம் 3-4 -குணங்களின் செயல் 5-10 -குணங்களின் முன்னீட்டத்தை அறிவது எப்படி 11-18 -குணாதீதம் முக்தி நிலை 19-20 -குணங்களைக் கடந்தவனது லக்ஷணம் 21-27.
ஸ்ரீபகவாநுவாச
1. பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:  
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், யத் ஜ்ஞாத்வா ஸர்வே முநய:-எதை அறிந்து எல்லா முனிவர்களும், இத: பராம் ஸித்திம் கதா:-இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்களோ, ஜ்ஞாநாநாம் உத்தமம்-அந்த ஞானங்களிலேயே உயர்ந்த, பரம் ஜ்ஞாநம்-பரம ஞானத்தை, பூய: ப்ரவக்ஷ்யாமி-மறுபடி உரைக்கிறேன்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.
முன்னமே பகரப்பட்ட இந்த ஞானத்தை இன்னொரு போக்கில் பகவான் பகர்கிறார். பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் மேலும் அடையவேண்டியது ஒன்றுமில்லை. மனது பரிபக்குவம் அடைந்தவர்களுக்கு ஞான சாதனம் மிக எளியது எனினும், பக்குவம் அடையாதவர்களுக்கு அது மிகக் கடினமானது. ஆதலால் வெவ்வேறு பாங்குகளிலே வைத்து அது விளக்கப்படுகிறது. ஞான பராயணர்களாயிருந்தவர்கள் முனிவர் என்ற பெயர் பெற்றனர். ஞான முதிர்ச்சிக்கு ஏற்ப அவர்களிடத்து சித்தி அல்லது பரிபூரண நிலை அமைவதாயிற்று. பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் நிறைநிலை எய்துகின்றனர் எனினும், அவர்களது உடல் வாழ்க்கை குறைபாடுடையது போன்று தென்படுகிறது. உடலில் குற்றத்தைப் புருஷனது குற்றம் என்றெண்ணி மயங்கி விடலாகாது. அவ்வுடலத்தைத் துடைத்தான பிறகு முனிவர்கள் பரிபூரணமாகிய பரவெளியில் கலக்கின்றனர். அதற்கேற்ற ஞானம் வேறு ஒரு முறையில் இங்கு விளக்கப்படுகிறது.
ஈசுவரனை அறியும் வித்தை பரவித்தை எனப்படும். சாஸ்திரங்கள், தத்துவம், தர்க்கம், இலக்கணம் முதலியன வெல்லாம் மனத்தில் பெருங்குழப்பத்தையுண்டாக்கும். கிரந்தங்கள் எல்லாம் கிரந்தி (முடிச்சு)களைப் போன்றுள்ளன. பரவித்தையைக் கற்பிக்குமானால்தான் அவைகள் பயன்படுவனவாகும்.
பிரம்ம வித்தையின் பயன் யாது?
2. இதம் ஜ்ஞாநமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:
ஸர்கேऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச  
இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய-இந்த ஞானத்தை அடைந்து, மம ஸாதர்ம்யம் ஆகதா:-அதனால் என்னியல்பு பெற்றோர், ஸர்கே அபி ந உபஜாயந்தே-படைப்புக் காலத்தில் பிறவார், ப்ரலயே ந வ்யதந்தி ச-ஊழியிலும் சாகமாட்டார்.
பொருள் : இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.
கடலைச் சார்ந்த உப்புப் பொம்மை கடலில் தன் வியக்தியை இழக்கிறது; அதே வேளையில் கடலின் சொரூபத்தைப் பெறுகிறது. ஞானியின் நிலை அத்தகையது. பிரம்ம சொரூபத்தில் அவன் ஒன்றாகிறான். அது பிரகிருதி மயமான தோற்றம் ஒடுக்கம் எல்லாம் கடந்திருப்பதால், அதை அடைகின்றவனுக்குப் பிறப்பு, இறப்பு, பிணி முதலியன கிடையா.
வேகவைத்த நெல்லைப் பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது. வேகவைக்காத நெல்தான் முளைவிடும். அதுபோல ஸித்தனான பிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறுஜன்மம் அடைவதில்லை. அஸித்தனோ தான் ஸித்தனாகும் வரையில் திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க வேண்டும்.
பிறவி எப்படி உண்டாகிறது? விடை வருகிறது :
3. மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத  
பாரத-பாரதா, மம மஹத்ப்ரஹ்ம யோநி-பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம், அஹம் தஸ்மிந் கர்பம் ததாமி-அதில் நான் கருத்தரிக்கிறேன், தத: ஸர்வபூதாநாம் ஸம்பவ: பவதி - எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
பொருள் : பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
பிரகிருதிக்கு பிரம்மா என்பது மற்றொரு பெயர். சதுர்முக பிரம்மா என்பதும் அதுவே. முக்குணமாயுள்ளது அது; சராசரம் அனைத்துக்கும் அது உபாதான காரணம். காரியமாகப் பரிணமித்துள்ள அனைத்துமாய் அவைகளுக்கு அப்பால் இன்னும் தோன்றா நிலையிலும் அது இருக்கிறது. ஆதலால் அது மஹத்பிரம்மா எனப்படுகிறது. எங்கும் வியாபிக்கும் தன்மை அதனிடத்துள்ளது.
பூமியில் விதையை நடுகிறோம். பூமி யோனியாயிருக்கிறது. விதை கர்ப்பமாகப் பரிணமிக்கிறது. சிசு உண்டாவதில் பெண் பால் பிரகிருதி தத்துவமாகவும் ஆண்பால் புருஷ தத்துவமாகவும் காரியப்படுகிறார்கள். அங்ஙனம் மூலப்பிரகிருதி என்ற யோனியில் ஆத்ம சைதன்யம் என்ற கர்ப்பம் வைக்கப்படுகிறபொழுது ÷க்ஷத்திர-÷க்ஷத்திரக்ஞனுடைய சம்யோகம் ஏற்படுகிறது. பிரகிருதியில் பிரகாசிக்கும் புருஷன் ஹிரண்யகர்ப்பன் என்று பெயர் பெறுகிறான். அவனுடைய எண்ணிறந்த கிரணங்களே உயிர்கள் அனைத்துமாய் இருக்கின்றன. ஜீவர்களும் ÷க்ஷத்திரக்ஞன் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அறியுந்தன்மை அவர்களுக்கும் உண்டு. அவித்தையால் ஏற்பட்ட உபாதிக்கும், காமத்துக்கும், கர்மத்துக்கும் ஏற்ப எண்ணிறந்த ஜீவாத்மாக்கள் உண்டாகின்றன. அவைகளின் பாங்குகளும் எண்ணிறந்தவைகளாம்.
அடுத்த சுலோகத்தில் இக்கருத்து இன்னும் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது.
4. ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா  
கௌந்தேய-குந்தியின் மகனே, ஸர்வயோநிஷு-பல விதமான பிறப்பிடங்களிலும், யா: மூர்தய: ஸம்பவந்தி-எந்த உடல்கள் (வடிவங்கள்) கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ,
தாஸாம் மஹத் ப்ரஹ்ம: யோநி:-அவை எல்லாவற்றிற்கும் பிரக்ருதியே பிறப்பிடம் (கருத்தரிக்கும் தாய்), அஹம் பீஜப்ரத: பிதா-நான் விதை அளிக்கும் தந்தை.
பொருள் : எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.
கர்ப்பாசயங்கள் அல்லது யோனிகள் கணக்கற்றவை. தேவர்களாக, நரர்களாக, விலங்குகளாக, பறவைகளாக, பூச்சிகளாக, புழுக்களாக, ஸ்தாவரங்களாக அவ்வவைகளுக்கேற்ற யோனிகளிடத்திருந்தே உயிர்களெல்லாம் உண்டாகின்றன. இவைகளுக்கெல்லாம் தாயாயிருப்பவன் மூலப்பிரகிருதி. அவள் பெரிய நாயகி என்று அழைக்கப்படுகிறாள். தந்தையாயிருப்பவர் பரமாத்மா.
பிரகிருதி எங்ஙனம் உயிர்களை பந்தப்படுத்துகிறது? விடை வருகிறது :
5. ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்  
மஹாபாஹோ-பெருந்தோளாய், ஸத்த்வம் ரஜ: தம இதி-சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள், ப்ரக்ருதிஸம்பவா: குணா:-பிரகிருதியில் எழுவன, தேஹே-இவை உடம்பில், அவ்யயம் தேஹிநம்-அழிவற்ற ஆத்மாவைப், நிபத்நந்தி-பிணைக்கின்றன.
பொருள் : சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.
பிரகிருதி முக்குணமயமாயிருக்கிறது. உருவம் முதலிய பண்புகள் ஒரு பொருளைச் சார்ந்திருப்பது போன்று குணம் என்ற பண்பு பிரகிருதி சொரூபமாகிய குணியைச் சார்ந்திருக்கிறது என்று எண்ணலாகாது. அக்கினியும் அதன் உஷ்ணமும் வேறானவைகளல்ல, ஒன்றே. அங்ஙனம் பிரகிருதியும் குணமும் ஒன்றேயாம். உலகத்தில் உள்ள நிறங்களை யெல்லாம் மூன்று அச்சில் தொகுத்துப் படங்கள் தீட்டிவிடலாம். அதே பாங்கில் பிரகிருதி முழுதும் முக்குணங்களில் அடங்கியிருக்கிறது. முக்குணங்கள் என்பனவும் பிரகிருதி என்பதும் சொரூபத்தில் ஒன்றேயாம். முக்குணங்களை முப்பாழ் என்று சொல்லுவதும் உண்டு.
பிரகிருதி அல்லது ÷க்ஷத்திரம் ÷க்ஷத்திரக்ஞனைச் சார்ந்திருக்கிறது. குணசொரூபம் அல்லாத அவனை குணம் எப்படிப் பிணிக்க முடியும்? பிணிக்கப்படாத ஆத்மா அக்ஞானத்தால் பிணிக்கப்பட்டது போன்று தென்படுகிறது. நீர் அசைவதால் நீரிலுள்ள சூரிய பிம்பம் அசைகிறது. சூரியனே அசைவது போன்று பிம்பத்தினின்று தென்படுகிறது. உண்மையில் சூரியன் அசைவதில்லை. அங்ஙனம் கட்டுப்படாத ஆத்மா கட்டுப்பட்டது போன்று தென்படுகிறது.
இனி, முக்குணங்களின் தன்மை விளக்கப்படுகிறது :
6. தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக  
அநக-பாவமற்றவனே, தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம்-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது, அநாமயம்-நோவற்றது, ஸுகஸங்கேந-அது இன்பச் சேர்க்கையாலும், ஜ்ஞாநஸங்கேந ச-ஞானச் சேர்க்கையாலும், பத்நாதி-கட்டுப்படுத்துவது.
பொருள் : அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.
கண்ணாடி ஒன்று தூயதாய் இருப்பதோடு சத்துவகுணத்தை ஒப்பிடலாம். அழுக்குப்படியாததும் ஸ்படிகம் போன்று அமைந்ததுமான கண்ணாடியின் வாயிலாக வெளிச்சம் நன்கு வெளியாகும். சத்துவகுணம் அங்ஙனம் ஆத்மப் பிரகாசத்தை விளக்கவல்லது. ஒப்பமான கண்ணாடியின் மூலம் அப்புறம் பார்த்தால் அது காட்சியை இடர்ப்படுத்துவதில்லை. பொருள்கள் உள்ளபடி அதன் வாயிலாக விளங்குகின்றன. அவைகளை உள்ளபடி கண்டறிவது ஞானம். புறப்பொருள்களைப் பார்த்தறியும்போது அவைகள் தரும் இன்பத்தில் நாட்டம் வருகிறது. சுகத்தை அனுபவிப்பதற்கு ஏற்றவாறு அதில் பற்றுதல் உண்டாகிறது. இன்னும் அதிக சுகத்தைப் புறப்பொருள்கள் எப்படித் தரும் என்ற ஆராய்ச்சி மேலும் ஞானப்பற்றை வளர்க்கிறது. புற உலகத்தைப்பற்றிய ஞானமும் அதனிடத்திருந்து பெறும் சுகமும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகளாயிருக்கின்றன. ஆதலால் சத்துவகுணம் ஓங்கப்பெற்றுள்ள ஒருவன் மனதைப் பிரவிருத்தியிலே திருப்புவானாகில் அவனுக்கு சுகப்பற்றும் பிரகிருதி ஞானப்பற்றும் ஏராளமாயுண்டாகின்றன. மற்ற பந்தங்களை யெல்லாம்விட ஸத்துவகுணம் உண்டுபண்ணுகிற பந்தம் மிக வலிவு வாய்ந்தது. அந்த பந்தத்தை உடைத்தெறிவது மிகக் கஷ்டமானது. ஏனென்றால் ஆத்மானந்தத்துக்கு ஒப்பான சுகத்தை அது கொடுக்கிறது; நுண்ணறிவையும் அது வளர்க்கிறது. சுகத்துக்கும் அறிவுக்கும் அப்பால் செல்ல மனிதனுக்கு விருப்பம் வருவதில்லை.
7. ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்  
கௌந்தேய-குந்தி மகனே, ராகாத்மகம் ரஜ:-விருப்ப இயல்புடையது ரஜோகுணம், த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் வித்தி-அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள், தத் தேஹிநம் கர்மஸங்கேந-அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால், நிபத்நாதி-கட்டுகிறது.
பொருள் : ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.
ரஜோகுணம் ஆசை வடிவெடுத்து முடிவில்லாத பிரவிருத்தியை உண்டுபண்ணுகிறது. காவிக்கல் வெள்ளை வஸ்திரத்தைச் சிவப்பாக்குவது போன்று ரஜோகுணம் ஆத்மாவுக்கு வர்ணம் கொடுக்கிறது. திருஷ்ணா அல்லது வேட்கை யென்பது அடையாத பொருளின்மீது அடையவேண்டுமென்று கொண்டுள்ள விருப்பம். ஆஸங்கம் அல்லது பற்றுதல் என்பது பெற்றுள்ள பொருளை விட்டுப் பிரியலாகாது என்ற மனப்பான்மை. தோற்றத்திலுள்ள இவ்வுலகப் பொருள்களில் பற்றும், தோன்றாதுள்ள மறுமையில் பற்றுதலும் ரஜோகுணத்தால் ஆத்மாவுக்கு வருகின்றன. விறகுக் கட்டையானது எரிகின்ற தீயை வளர்ப்பது போன்று ரஜோ குணம் வினைப்பற்றை வளர்க்கிறது. கர்மம் செய்யாத ஆத்மாவைக் கர்த்தாவாகப் பண்ணிவைப்பது இக்குணம். ரஜோகுணம் இருக்கும் வரையில் கர்மத்தில் பற்றும் தன்னைக் கர்த்தாவென்று எண்ணுகிற எண்ணமும் ஆத்மாவுக்குண்டு.
8. தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத  
பாரத-பாரதா! ஸர்வதேஹிநாம் மோஹநம் தம:-உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ, அஜ்ஞாநஜம் வித்தி-அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள், தத் ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி-அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்,
நிபத்நாதி-கட்டுப்படுத்துகிறது.
பொருள் : தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!
அக்ஞான இருளினின்று வருவது தமோகுணம். இது விவேகத்தை மறைக்கும் தன்மையுடையது. சத்வகுணத்தைக் கெடுப்பது ரஜோகுணம். தமோகுணமோ சத்துவம், ரஜஸ் ஆகிய இரண்டையும் கெடுக்கிறது. அதனால் அறிவற்று, உணர்ச்சியற்று, செயலற்று மனிதன் ஜடம்போன்று ஆய்விடுகிறான்.
மூன்று குணங்களும் தொகுத்து மீண்டும் பகரப்படுகின்றன:
9. ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத  
பாரத-பாரதா, ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி-சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது,
ரஜ: கர்மணி-ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது, தம: து ஜ்ஞாநமாவ்ருத்ய-தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை), ப்ரமாதே உத ஸஞ்ஜயதி-மயக்கத்தில் பிணிக்கிறது.
பொருள் : சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.
ஒரு மனிதன் எதில் பற்று வைத்திருக்கிறானோ அதிலிருந்து அவனிடத்து எக்குணம் தலையெடுத்திருக்கிறது என்பது விளங்கும். விதவிதமான இன்பங்களை அனுபவிக்கவேண்டுமென்று விரும்புபவனிடத்து சத்துவகுணம் முன்னணியில் இருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாகப் பலவிதமான அலுவல்களில் ஈடுபட ஆசைப்படுபவனிடத்து ரஜோகுணம் ஓங்கியிருக்கிறது. மேகம் சூரியனை மறைப்பது போன்று தமோகுணம் ஞானத்தை மறைக்கிறது. தனக்கு ஏற்பட்டுள்ள கடமைகளைச் செய்யாது விட்டு விடுவதால் தமோகுண விருத்தியுடையவனுக்குக் கவலை யொன்றும் உண்டாவதில்லை. காலத்தை வீணாகக் கழிப்பது, பொருள் விரயமாவது ஆகியவைகளைக் குறித்து அவன் வருந்துவதில்லை. ஜடம்போன்று அவன் செயலற்றுக் கிடப்பான்.
இக்குணங்களின் ஆதிக்கம் எப்படி நடைபெறுகிறது? அதற்கு விடை வருகிறது :
10. ரஜஸ்தமஸ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத
ரஜ: ஸத்த்வம் தமஸ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா  
பாரத-பாரதா, ரஜ: தம: ச அபிபூய ஸத்த்வம் பவதி-ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது, ஸத்த்வம் தம: ச ரஜ:-சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி, ரஜோ குணம் நிற்கிறது, ததா ஏவ ஸத்த்வம் ரஜ: ச தம:-அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.
பொருள் : பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.
தேகம் எடுத்துள்ள ஒருவனிடத்து மூன்று குணங்களும் இருக்கின்றன. அவைகளுள் ஒரு குணம் முன்னணிக்கு வரும்பொழுது மற்ற இரண்டும் பின்னணிக்குப் போய்விடுகின்றன. விழித்திருந்து அமைதியே வடிவெடுத்தவனாக மனிதன் ஆகும்போது சத்துவகுணம் ஓங்கிநிற்கிறது. அப்பொழுது இன்பமும் ஞானமும் விரிவடைகின்றன. ரஜோகுணம் தலையெடுக்கின்றபொழுது விதவிதமான கர்மத்தில் மனிதன் ஈடுபடுகின்றான். பின்பு தமோ குணம் ஓங்குமிடத்து, மனிதன் கற்கவும் முடியாது, கர்மம் செய்யவும் முடியாது; சோம்பலும் தூக்கமும் வருகின்றன. நாள்தோறும் மூன்று குணங்களும் மாறி மாறி முன்னணிக்கு வருகின்றன. இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.
அந்தந்த குணத்தின் செயல் மேலும் விளக்கப்படுகிறது :
11. ஸர்வத்வாரேஷு தேஹேऽஸ்மிந்ப்ரகாஸ உபஜாயதே
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத  
யதா அஸ்மிந் தேஹே ஸர்வத்வாரேஷு-எப்போது இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும், ப்ரகாஸ ஜ்ஞாநம் உபஜாயதே-ஞான ஒளி பிறக்கிறதோ, ததா ஸத்த்வம் உத-அப்போது சத்வ குணம், விவ்ருத்தம் இதி வித்யாத்-வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.
பொருள் : இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.
பல வர்ணங்கள் தீட்டிய கண்ணாடிகள் அமைக்கப்பெற்றுள்ள பெட்டி ஒன்றனுள் தீபம் வைத்தால் எல்லாக் கண்ணாடிகள் வாயிலாகவும் அதன் வெளிச்சம் வெளியாகும். தீபத்தின் பிரகாசத்திற்கேற்ப வெளிச்சமும் அதிகரிக்கும். மனிதனுடைய உடல் அத்தகைய பெட்டி போன்றது. கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய இந்திரியங்கள் வாயில்களாகின்றன. குண வேறுபாட்டுக்கு ஏற்ற ஆத்மப் பிரகாசம் இந்திரியங்கள் வாயிலாக ஒளிர்கின்றது. சத்துவகுணம் ஓங்குமிடத்து ஆத்மப் பிரகாசம் நன்கு மிளிர்கிறது. பார்ப்பதில், கேட்பதில், ஒவ்வொரு இந்திரியத்தையும் கையாளுதலில் எழிலும் தெளிவும் திகழ்கின்றன. இந்நிலையில் மெய்யறிவு ஓங்குகிறது.
12. லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஸம: ஸ்ப்ருஹா
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப  
பரதர்ஷப-பாரதக்காளையே! ரஜஸி விவ்ருத்தே-ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து, லோப: ப்ரவ்ருத்தி-அவா, முயற்சி, கர்மணாம் ஆரம்ப:-தொழிலெடுப்பு, அஸம: ஸ்ப்ருஹா - அமைதியின்மை, விருப்பம், ஏதாநி ஜாயந்தே-இவை தோன்றுகின்றன.
பொருள் : அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம் இவை ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே!
பிறர் பொருள்களையெல்லாம் தன்னுடையவையாக்கிக் கொள்ள விரும்புதல் பேராசை அல்லது லோபமாகிறது. இந்திரியங்கள் வாயிலாக வெளியுலக வியவகாரங்களில் முனைந்து போதல் பிரவிருத்தியெனப்படுகிறது. அப்படிச் செல்வதால் புதிய புதிய கர்மங்களைத் துவக்குவதில் ஊக்கம் உண்டாகிறது. அங்ஙனம் துவக்கிய கர்மங்களில் வெற்றியடையும்பொழுது மகிழ்வும், தோல்வியடையும்பொழுது மனச்சோர்வும் உண்டாகி, அமைதியின்மையை வருவித்துவிடுகிறது. தொடுத்த கர்மங்களைச் செப்பனிட விருப்பம் ஏற்படுவதால் வினைவேட்கை அல்லது தொழில் தாகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவை யாவும் ரஜோகுணத்தின் அறிகுறிகளாம்.
13. அப்ரகாஸோऽப்ரவ்ருத்திஸ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந  
குருநந்தந-குருகுலச்செல்வமே! தமஸி விவ்ருத்தே- தமோ குணம் ஓங்குமிடத்தே, அப்ரகாஸ: அப்ரவ்ருத்தி: ச ப்ரமாத: மோஹ ஏவ ச-ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம்,
ஏதாநி ஜாயந்தே-இவை பிறக்கின்றன.
பொருள் : ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே!
தமோகுணத்தின் ஆதிக்கத்தால் மனத்தகத்து இருள் சூழ்கிறது; அதனால் விவேகம் மறைந்துபட்டுப்போகிறது. ஒரு செயலையும் செய்யாது சோம்பித் திரியும் தன்மை தலையெடுக்கிறது. அஜாக்கிரதையே வடிவெடுத்தவனாக மனிதன் மாறியமைகிறபடியால் அவன் தவறுதல் செய்தற்கு இடம் ஏற்படுகிறது. மதி மயக்கம் அல்லது திரிவுபட்ட அறிவும் அதன் பயனாக வருகிறது.
குணம் மேலோங்குதற்கும் மறுபிறப்புக்கும் தொடர்வு உண்டா? இதற்கு விடை வருகிறது :
14. யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே  
யதா தேஹப்ருத் ஸத்த்வே ப்ரவ்ருத்தே- எப்போது மனிதன் சத்வம் ஓங்கி நிற்கையிலே, ப்ரலயம் யாதி-இறக்கிறானோ, ததா து உத்தமவிதாம்-அப்போது மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின், அமலாந் லோகாந்-களங்கமற்ற உலகங்களை, ப்ரதிபத்யதே -அடைகிறான்.
பொருள் : சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.
உடலை விடும்பொழுது உள்ளத்தில் என்ன எண்ணம் நிலைத்திருக்கிறதோ அதற்கு ஏற்ப மறுபிறப்பு அமைகிறது. சத்துவ குணம் ஓங்கியிருக்கும்பொழுது தெய்விக சிந்தனையிருப்பது உறுதி. பிரம்மலோகம் முதலிய இடங்களில் சத்துவகுணமே நிறைந்திருப்பதால் அம்மனிதன் அந்த லோகத்தை அடைகிறான். உத்தமத்தை அறிந்தவர்கள் என்று ஈண்டு இயம்பப்படுவது பிரம்மா அல்லது ஹிரண்யகர்ப்பனை அறிந்தவர்களாம். ஆனால் அவர்களுடைய அந்த ஞானம் இன்னும் பரஞானம் ஆகவில்லை.
15. ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே  
ரஜஸி ப்ரலயம் கத்வா-ரஜோ குணத்தில் இறப்போன், கர்மஸங்கிஷு ஜாயதே-கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான், ததா தமஸி ப்ரலீந:-அவ்வாறே, தமஸில் இறப்போன், மூடயோநிஷு ஜாயதே =மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
பொருள் : ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
முன்பு சொன்ன சத்துவகுணத்தில் உடலை வகுப்பவன் முழு அறிவோடு அமைதியாகச் சாகிறான். ரஜோகுணத்தில் மரணமடைபவன் பதைபதைப்போடும், பேராவலோடும், துன்பத்தோடும் உயிர் துறக்கிறான். இடையறாது கர்மம் செய்யும் பாங்குடையவனாக அவன் பிறக்கிறான். தமோகுணத்தில் தேகத்தை விடுபவன் பிரக்ஞையின்றி ஜடநிலையில் சாகிறான். அவன் மிருகமாக அல்லது அறிவிலியாகப் பிறக்கிறான்.
தமோகுணத்தில் இருப்பவன் ரஜோகுணத்துக்கு வரமுயல வேண்டும். ரஜோகுணத்தில் இருப்பவன் சத்துவகுணத்திற்கு மேலேறுதல் முறை. ஏனென்றால் :
16. கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்  
ஸுக்ருதஸ்ய கர்மண:-நற்செய்கையின், பலம் து ஸாத்த்விகம்-பயனே சத்வ இயல்புடைய, நிர்மலம் ஆஹு:-நிர்மலத் தன்மை என்று கூறுவர், ரஜஸ: பலம் து:கம்-ரஜோ குணத்தின் பயன் துன்பம், தமஸ: பலம் அஜ்ஞாநம்-தமோ குணத்தின் பயன் அறிவின்மை.
பொருள் : சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.
தமோகுணத்தினின்று தொழிலின்மையும் தீவினையும் தோன்றுகின்றன. அதனால் மனிதனுக்கு முன்னேற்றம் இல்லை. ஆழ்ந்து செயலில் ஈடுபடும்போது அது துன்பத்தை விளைவிக்கும். ஆனால் அத்துன்பம் வேண்டப்படாததல்ல. துன்பப்படுபவனே தன்னைத் திருத்தியமைக்கிறான். மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துன்பம் பயன்படுவதுபோன்று வேறு எதுவும் பயன்படுவதில்லை. துயரத்தால் தன்னைத் தூயவனாக்குகின்றவன் நற்செயலுக்கு வருகிறான். அப்பொழுது தர்மம் அவன் மூலம் திகழ்கிறது. அதனால் அவன் சத்துவகுணம் எய்துகிறான்; தூயவன் ஆகிறான்.
குணங்களின் பயன் இன்னும் எவ்விதமாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :
17. ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞாநமேவ ச  
ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே-சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது, ரஜஸ: லோப ஏவ ச-ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமஸ: ப்ரமாத மோஹௌ ச-தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஜ்ஞாநம் ஏவ பவத:-அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
பொருள் : சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
இதனால்தான் மனிதன் படிப்படியாகக் கீழான குணங்களினின்று மேலான குணங்களுக்குப்போக ஓயாது முயலவேண்டும். மேலும் :
18. ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:
ஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:  
ஸத்த்வஸ்தா : ஊர்த்வம் கச்சந்தி-சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள், ராஜஸா: மத்யே திஷ்டந்தி-ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள், ஜகந்ய குண வ்ருத்திஸ்தா:-மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க், தாமஸா: அத: கச்சந்தி-தாமஸர் கீழே செல்வர்.
பொருள் : சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.
ஜீவர்கள் மேலான அல்லது கீழான பிறப்பெடுப்பதற்கும் குணவளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. சத்துவகுணம் ஓங்கப்பெற்ற ஒருவன் தெய்வப் பிறப்பும், விவேகம் வைராக்கியம் வாய்க்கப்பெற்ற மானுடப் பிறப்பும் எடுக்கிறான். அவைகளின் வாயிலாக அவன் படிப்படியாகப் பரத்தை நோக்கிச் செல்லுகிறான். ரஜோகுணம் நிறைந்துள்ளவன் கர்மங்கள் பல செய்கின்றானெனினும் விவேகமின்மையால் முன்னேற்றமடைவதில்லை. பிற்போக்கில் போவதுமில்லை. தனக்கு விவேகம் வரும் வரையில் அவன் நெடுங்காலம் வினையாற்றுவதிலேயே கருத்துடையவனாயிருக்கிறான். ஆனால் தமோகுணத்தில் ஆழ்ந்தவனோ படிப்படியாகக் கீழ்மையையே அடைகிறான். கீழ்மையகற்றி மேன்மையடைந்தால் மட்டும் போதுமா? விடை வருகிறது :
19. நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஸ்யதி
குணேப்யஸ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோऽதிகச்சதி  
யதா த்ரஷ்டா குணேப்ய:-எப்போது பார்ப்பவன் குணங்களை, அந்யம் கர்தாரம் ந அநுபஸ், யதி-தவிர வேறான ஒன்றை கர்த்தா (செயலை செய்பவன்) என்று பார்ப்பதில்லையோ, குணேப்ய: ச பரம் வேத்தி-குணங்களுக்கு மேலுள்ள பொருளை (பரமாத்மாவை) அறிகிறானோ,
ஸ: மத்பாவம் அதிகச்சதி-அவன் என் இயல்பை அறிவான்.
பொருள் : குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.
மூன்று குணங்களும் பிரகிருதி சொரூபமாதலால் இக்குணங்களுக்குப் புறம்பாகக் கர்மத்துக்குக் கர்த்தா யாருமில்லை. முக்குணங்களே கர்த்தாக்களாகின்றன. இந்திரியங்கள், இந்திரியார்த்தங்கள் எல்லாம் குணத்தினின்று உண்டானவைகள். கீழான குணத்தைக் கடந்து மேலான குணத்துக்கு வருவது ஜீவிதத்தின் லட்சியமாகும். பின்பு சுத்த சத்துவகுணத்தை யடைந்தால் போதுமா? அதற்குமேல் ஒன்றுமில்லையா? உண்டு. முக்குணங்களையும் கடந்து அப்பால் செல்லுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும். முக்குணங்களுக்கு அப்பால் இருக்கிறது பரமாத்மா. அது ஒரு செயலுக்கும் கர்த்தா அல்ல. அது வெறும் சாக்ஷி மாத்திரம். அப்பரமாத்மாவை அறிகிறவன் பரமாத்மாவுக்கு உரியவன் ஆகிறான். இன்னும் பரமாத்மாவின் சொரூபமும் அவனுக்குரியது ஆகிறது.
மனிதனுடைய ஹிருதயத்தில் ஈசுவரன் தோற்றமடைவதன் அடையாளங்கள் யாவை? அருணோதயத்தின் போது தோன்றும் பிரகாசம் சூரியனுடைய உதயத்தைத் தெரிவிக்கின்றது. அது போல, ஈசுவரன் உள்ளத்தில் உதயமாவதற்கு முன்னால், சுயநலம் கருதாத்தன்மை, பரிசுத்தம், சன்மார்க்கம் ஆகிய குணங்கள் உண்டாகின்றன.
பிரம்ம சாக்ஷõத்காரத்தால் வரும் நன்மை யாது? விடை வருகிறது :
20. குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்
ஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோऽம்ருதமஸ்நுதே  
தேஹீ தேஹஸமுத்பவாந்-உடம்பிலே பிறக்கும், ஏதாந் த்ரீந் குணாந் அதீத்ய-இந்த மூன்று குணங்களையும் கடந்து, ஜந்ம ம்ருத்யு ஜரா து:கை:-பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும், விமுக்த: அம்ருதம் அஸ்நுதே-விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.
பொருள் : உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.
பிரம்ம சொரூபத்தை அடைதல் என்பதன் பொருள் இங்கு விளக்கப்படுகிறது. குணங்களால் ஆகிய உடலில் ஜீவன் வசிக்கிறான். ஆனால் அவன் உடலோடு சம்பந்தப்பட்டவனல்லன். தேகத்துக்குரிய பிறப்பு, இறப்பு, மூப்பு இவைகளால் வரும் துன்பம் ஜீவன் முக்தனுக்குக் கிடையாது. இவ்வுடலில் இருக்கும் பொழுதே அவன் தங்கு தடையற்ற பிரம்மானந்தத்தில் இருக்கிறான். குணாதீதத்தில் அவன் பேரானந்தம் துய்க்கிறான்.
சரீரம் தோன்றியிருக்கிறது. அது மறுபடியும் நசித்துப் போகும். ஆனால் ஆத்மாவுக்கு மட்டும் நாசமே இல்லை.கொட்டைப் பாக்கைப்போல் ஆத்மாவும் உடலும் இருக்கின்றன. பாக்கு முற்றினால் கொட்டை வேறு, மேல்தோல் வேறாகிவிடும்; முற்றாமல் காயாக இருக்கும்போது அப்படிப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஈசுவர தரிசனம் உண்டான பிறகு ஆத்மா வேறு, சரீரம் வேறு என்ற ஞானம் உதிக்கும்.
இப்பொழுது கேள்வி ஒன்று கேட்பதற்கான சந்தர்ப்பம் உண்டாகிறது. அர்ஜுனன் அதைப் பயன்படுத்துகிறான்.
அர்ஜுந உவாச
21. கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே  
அர்ஜுந உவாச ப்ரபோ!-அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, ஏதாந் த்ரீந் குணாந் அதீத:-மூன்று குணங்களையும் கடந்தோன், கை: லிங்கை: பவதி-என்ன அடையாள ங்களுடையவன்? ச கிமாசார:-எங்ஙனம் ஒழுகுவான்? கதம் ஏதாந் த்ரீந் குணாந் அதிவர்ததே-இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
மூன்று குணங்களையும் கடந்திருப்பதன் அறிகுறிகள் எவை? கடந்தவன் பிறகு உடல் வாழ்க்கையை எப்படி நடாத்துகிறான்? ஒருவன் முக்குணங்களைக் கடக்க ஆரம்பித்துவிட்டான் என்று எப்படித் தெரிந்துகொள்வது ?
இதுதான் அர்ஜுனனுடைய கேள்வி. இதற்கு விடை வருகிறது :
ஸ்ரீபகவாநுவாச
22. ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி  
ஸ்ரீபகவாந் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பாண்டவ-பாண்டவா, ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹம் ஏவ-ஒளி, தொழில், மயக்கம் – இவை, ஸம்ப்ரவ்ருத்தாநி-தோன்றும்போது,
ந த்வேஷ்டி-இவற்றைப் பகைத்திடான், நிவ்ருத்தாநி ந காங்க்ஷதி-நீங்கியபோது இவற்றை விரும்பான்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.
சத்துவ குணத்தில் கட்டுண்டிருப்பவன் அறிவையும் இன்பத்தையும் வேண்டுகிறான். சாஸ்திர ஞானப்பற்று மிக வல்லமை வாய்ந்தது. எளிதில் அது மனதைவிட்டு அகலாது. கேள்வியறிவும் இன்பமும் வாய்க்காதவிடத்து ஒருவன் பேராவலோடு அவைகளை நாடுகிறான். சத்துவ குணத்தைக் கடந்து அப்பாற் சென்றவனுக்கு இந்த விருப்பு வெறுப்பு இரண்டும் இல்லை. ரஜோகுணத்தின் வசப்பட்டவன் சும்மா இருக்கமுடியாது. ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். சில கர்மங்களில் அவனுக்கும் பெருவிருப்பம் உண்டாகிறது. வேறு சில கர்மங்களில் தாங்கவொண்ணா வெறுப்பு உண்டாகிறது. நல்ல கர்மம் என்று தனக்குத் தோன்றுவதை அவன் ஆவலோடு செய்கிறான். கெட்ட கர்மம் என்று தோன்றுவதை அவன் சினந்து வெறுக்கிறான். குணத்தைக் கடந்தவனோ மறந்தும் கேடுடைய கர்மம் செய்ய முடியாது. தோட்டியின் வேலையிலிருந்து தேவாராதனை ஈறாக எத்தொழிலையும் அவன் பற்றற்றுச் செய்கிறான். அப்படிச் செய்யத் தொழிலொன்றும் இல்லாது போய்விட்டால் அதனால் துன்பம் ஒன்றும் அவனுக்கில்லை. தமோகுணப் பற்றுடையானுக்குச் சோம்பலிலும் தூக்கத்திலும் விருப்பம். அதற்குப் பங்கம் வந்தால் வெறுப்பு. குணாதீதத்தில் இருப்பவனுக்கு விழிப்பும் உறக்கமும் ஒன்றே. தூய கண்ணாடியின் முன்னிலையில் எது தோன்றினாலும் அதை அது அப்படியே விளக்குகிறது. அக்கண்ணாடியில் ஒன்றும் தோன்றாதிருக்கும்பொழுது கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. அதன் முன்னிலையில் பொருள்களின் தோற்றத்தாலும் மறைவாலும் கண்ணாடிக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. குணாதீதத்தில் சென்றவனது மனத்தகத்து முக்குணங்களின் தோற்றமும் மறைவும் அத்தகைய இடம் பெறுகின்றன. குணங்களின் செயல்களுக்கிடையில் அவன் குணாதீதனாய் இருக்கிறான். அதாவது அவன் யாண்டும் ஸஹஜ நிஷ்டையில் இருக்கிறான்.
ஜீவன் முக்தர்கள் உலகத்தில் வாழ்வது எங்ஙனம்? மீன் கொத்திப் பறவைகளைப்போன்று அவர்கள் உலகில் வாழ்கின்றார்கள். அப்பறவை நீரில் ஆழ முழுகுகிறது என்றாலும் அதன் சிறகுகள் தண்ணீரால் நனைவதில்லை. இரண்டொரு துளி நீர் ஒட்டிக் கொண்டிருக்குமானால், சரீரத்தை அசைத்துச் சுலபமாக அதனை நீக்கிவிடுகிறது.
இது அர்ஜுனனுடைய முதற்கேள்விக்கு விடை :
23. உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே
குணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்டதி நேங்கதே  
ய: உதாஸீநவத் ஆஸீந:-புறக்கணித்தான் போலே இருப்பான், குணை: ந விசால்யதே-குணங்களால் சலிப்படையான், குணா: ஏவ வர்தந்தே இதி-குணங்கள் சுழல்கின்றன என்று, ய: அவதிஷ்டதி-எவன் எண்ணி இருக்கிறானோ, ந இங்கதே-அவன் அதிலிருந்து நிலை குலைவதில்லை.
பொருள் : புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். குணங்கள் சுழல்கின்றன என்றெண்ணி அசைவற்று நிற்பான்.
மலையில் உள்ள மரம் செடி கொடிகளெல்லாம் அசைந்தாலும் மலை அசைவதில்லை. அங்ஙனம் ஆத்மாவைச் சார்ந்துள்ள குணங்களெல்லாம் அசைந்தாலும் ஆத்மா அசைவதில்லை. உதாசீனன் அல்லது ஒரு பக்ஷமும் சாராதவனாய் குணாதீதத்தில் சென்ற ஞானி நடுவு நிற்கின்றான். மேலும் :
24. ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந:
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:  
ஸ்வஸ்த: ஸமது:கஸுக:-தன்னிலை உணர்ந்து நிற்பவன் துன்பத்தையும் இன்பத்தையும் நிகராக கொண்டவன், ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந:-ஓட்டையும், கல்லையும், பொன்னையும், சமமாக காண்பவன், ப்ரிய அப்ரிய: துல்ய தீர:-இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன், துல்ய நிந்தா ஆத்ம ஸம்ஸ்துதி:-இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.
பொருள் : துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்; ஓட்டையும், கல்லையும், பொன்னையும், நிகராகக் காண்பான்; இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.
தன் உடலாக வடிவெடுத்திருப்பதும் குணங்கள்; புறவுலகாக வடிவெடுத்திருப்பதும் குணங்கள். இங்ஙனம் குணங்கள் குணங்களோடு விதவிதமாகச் சம்பந்தப்பட்டிருக்கையில் ஆத்ம சொரூபத்தை முற்றும் அறிந்துள்ள ஞானி ஆத்ம திருப்தனாக, குணாதீதனாக இருக்கிறான்.
25. மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ:
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே  
மாநாபமாநயோ: துல்ய:-மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான், மித்ரா அரிபக்ஷயோ: துல்ய:-நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான், ஸர்வாரம்பபரித்யாகீ-எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், ஸ: குணாதீத: உச்யதே -அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள் : மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.
குணங்களில் கட்டுண்டு அக்ஞானத்தில் இருப்பவர்களுக்கு மானம், அவமானம், நட்பு, பகை முதலியன உண்டு. ஜீவபோதம் இருப்பதால் தனக்கெனத் தொழில் புரிதலும் உண்டு. குணங்களைக் கடந்த நிறை ஞானிக்கு இவையொன்றுமில்லை. இந்த மூன்று சுலோகங்களும் அர்ஜுனனுடைய இரண்டாவது கேள்விக்கு விடையாக வந்துள்ளன.
எந்த உபாயத்தைக் கையாண்டு ஞானி மூன்று குணங்களையும் கடக்கிறான் என்ற கேள்விக்கு இனி விடை வருகிறது :
26. மாம் ச யோऽவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே  
ச ய: அவ்யபிசாரேண-மேலும் எவன் வேறுபாடில்லாத, பக்தியோகேந மாம் ஸேவதே-பக்தியோகத்தால் என்னை வழிபடுகிறானோ, ஸ: ஏதாந் குணாந் ஸமதீத்ய-அவன் இந்த குணங்களைக் கடந்து, ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.
பொருள் : வேறுபாடில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.
பரம பிரேமை சொரூபமாயிருக்கிற பக்தி யோகத்தால் யார் ஒருவன் அனைத்தையும் நாராயண சொரூபமாகக் கருதி அந்தர்முக திருஷ்டியில் ஆத்மானு சந்தானம் செய்துகொண்டே இருக்கிறானோ அவன் பிரம்ம சொரூபம் ஆகிறான். வெளிச்சம் வர இருள் இருக்குமிடம் தெரியாது மறைவதுபோன்று பிரம்ம சாக்ஷõத்காரத்தில் திரிகுணத்தைக் கடத்தல் மிக எளிதாகிறது.
பக்தனுக்கு ஈசுவரன் பல்வேறு உருவங்களில் தோன்றுகிறான், ஆனால் சமாதியில் பிரம்மஞானத்தை அடைந்தவனுக்கு அவன் அகண்ட நிராகார நிர்க்குணப் பிரம்மமாக இருக்கின்றான். இதில் தான் ஞானமும் பக்தியும் ஸமரஸப்படுகின்றன.
முக்குணங்களைக் கடக்க பக்தியைத் தவிர வேறு மார்க்கங்கள் இல்லையா? விடை வருகிறது :
27. ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச
ஸாஸ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச  
ஹி அவ்யயஸ்ய ப்ரஹ்மண: ச-ஏனெனில் அழிவற்றதான பிரம்மத்துக்கும், அம்ருதஸ்ய -சாவற நிலைக்கும், ஸாஸ்வதஸ்ய தர்மஸ்ய ச-என்றும் இயலும் அறத்துக்கும், ஐகாந்திகஸ்ய ஸுகஸ்ய-தனிமையின்பத்துக்கும், அஹம் ப்ரதிஷ்டா-நானே உறைவிடம்.
பொருள் : சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம்.
நான்கு யோகங்களும் இங்கு சமரசம் அடைகின்றன. முன் சுலோகத்தில் பக்தியும் அதன் மூலம் அடையப்படும் சகுண பிரம்மமும் விளக்கப்பட்டன. அழியாத மோக்ஷநிலையாகிய நிர்க்குண பிரம்மம் ஞானத்தின் மூலம் அடையப்படுகிறது. கர்மயோகத்தின் மூலம் பகவத் கைங்கரியம் செய்து சாசுவதமான தர்மம் அடையப்பெறுகிறது. பின்பு ராஜயோகத்தின் மூலம் அமிர்ததாரையினின்று உதிக்கும் ஒப்பற்ற சுகம் அடையப்பெறுகிறது. ஆக, இந்த நான்கு யோகங்களும் குணாதீதத்துக்குச் செல்ல உற்ற உபாயங்களாகின்றன. இந்த நான்கு யோகங்களும் சேர்ந்தே கையாளப்படவேண்டும். அவைகளை அப்படி அனுஷ்டிக்கின்றவன் குணங்களைக் கடந்துகொண்டிருப்பவன் ஆகிறான். இது கடைசிக் கேள்விக்கு விடையாகிறது.
ஒரு மனிதன் ஒரு காட்டு வழியே போய்க்கொண்டிருந்தான். வழியில் மூன்று திருடர்கள் அவனை மடக்கிப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் இருந்த பொருள்கள் எல்லாவற்றையும் அவர்கள் பிடுங்கிக்கொண்டனர். அப்பால் முதல் திருடன் இவனை உயிருடன் வைத்திருப்பதில் என்ன லாபம்? என்று சொல்லித் தன் கத்தியை உருவி அவனை வெட்டப் போனான். அப்போது இரண்டாவது திருடன் இவனைக் கொல்வதால் லாபம் என்ன? கை கால்களைக் கட்டி ஒரு பக்கத்தில் போட்டுவிட்டுப்போகலாம், என்றான். உடனே அவர்கள் அப்படியே செய்து சாலையின் பக்கத்தில் அவனைப் போட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் கொஞ்சதூரம் சென்றதும் மூன்றாவது திருடன் திரும்பி அவனிடம் வந்து, அப்பா, உனக்கு நோகிறதா? நான் உன் கட்டுகளை அவிழ்த்து, உன்னை விடுதலை செய்கிறேன், இரு என்று சொல்லிக் கட்டுகளை அவிழ்த்துவிட்டு என்னுடன் வா; வழியைக் காட்டுகிறேன் என்று வெகுதூரம் அழைத்துக்கொண்டு போனான். அப்பால் அவன், அதோ பார்; உன் வீடு தெரிகிறது, இந்த வழியே போவாயானால் சீக்கிரம் வீடுபோய்ச் சேருவாய் என்றான். இதைக் கேட்டதும் வழிப்போக்கன் நன்றியறிவுடன், அப்பா, நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். என்னுடன் கூட என் வீட்டுக்கு வரக்கூடாதா? என்று கேட்டான். அதற்குத் திருடன், நான் வரக்கூடாது. போலீஸார் வந்து என்னைப்பிடித்துக் கொள்வார்கள், என்று சொல்லிப் போய்விட்டான்.
இந்த உலகந்தான் அந்தக் காடு; ஸத்வ, ரஜஸ், தமோகுணங்கள் மேற்கூறிய மூன்று திருடர்கள். ஜீவன்தான் காட்டுவழியே போன பிரயாணி. ஆத்ம ஞானம் அவனிடம் இருந்த பொருள். தமோகுணமும் ரஜோகுணமும் உலக பந்தங்களாகிய சங்கிலியால் அவனைக் கட்டுகின்றன. உலக பந்தங்களிலிருந்து அவனை ஸத்துவ குணம் காப்பாற்றுகின்றது. ஸத்துவகுணத்தைச் சரணமடையும் ஜீவன் தமோ ரஜோகுணங்களின் பயன்களாகிய காமக்குரோதாதி மாயைகளினின்றும் விடுதலையடைகின்றது. உலக பந்தங்களினின்றும் ஜீவனைக் கரையேற்றுவது அந்த ஸத்துவகுணந்தான் என்றாலும் அந்த ஸத்துவகுணமும் ஒரு திருடனே. பரமபதத்துக்குச் செல்லும் வழிவரையில் ஒருவனை அது அழைத்துவந்து, அதோ உன் வீட்டைப்பார், என்று சொல்லிவிட்டு மறைந்துபோகிறது. ஸத்துவகுணமும் பரம பதத்தினருகே செல்லாது.


பதினைந்தாம் அத்தியாயம்
பகவத்கீதை | புரு÷ஷாத்தம யோகம்


பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புரு÷ஷாத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து, முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பது போல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது.
இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.
ஸம்ஸார விருக்ஷம் 1-2 -மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 -எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 -பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 -ஜீவதத்துவ விளக்கம் 7-9 -ஞானக்கண் 10-11 -பரமாத்மனது சொரூபம் 12-15 -ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.
ஸ்ரீபகவாநுவாச
1. ஊர்த்வமூலமத:ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித் 
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஊர்த்வமூலம்-மேலே வேர்கள், அத:ஸாகம் - கீழே கிளை, அஸ்வத்தம்-அரச மரம, அவ்யயம்-அழியாதது, ப்ராஹு-என்று கூறுவார்கள், யஸ்ய சந்தாம்ஸி பர்ணாநி-எந்த (அரச மரத்திற்கு) வேதங்களே கிளைகளோ, தம்-சம்சாரம் என்ற அந்த அரசமரத்தை, ய: வேத-எவர் அறிகிறாரோ, ஸ: வேதவித்-அவனே வேத மறிவோன்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.
அச்வத்தம் என்பது அரசமரம். ஈண்டு அது ஆலமரம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அரசமரம் ஆலமரம் இவையிரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவைகள்; ஆலமரம் உபமானத்துக்கு முற்றிலும் பொருத்தமுடையதாகிறது. ஆலம் விழுது மற்ற வேர்களுக்கு நேர் மாறாக வேலைசெய்கிறது. வேர் கீழே பூமியில் சத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்கிறது. ஆலம் விழுதோ மேலே கிளையில் சத்தை வாங்கிக்கொண்டு கீழ் நோக்கி வருகிறது. அச்வத்தம் என்னும் சொல்லுக்குப் பொருள் ஒருநாள் இருப்பது போன்று அடுத்தநாள் அது இருப்பதில்லை என்பதாகிறது. ஸம்ஸாரமாகிய ஜகத் அத்தகையது. ஆலம் விழுது மேலே சத்தை வாங்கிக்கொண்டு கீழே இறங்கி வருவது போன்று மாயப்பிரபஞ்சம் மேலே பரம்பொருளிடத்திருந்து சத்தை வாங்கிக்கொண்டு கீழே பிரகிருதியாகப் பரிணமித்து வருகிறது. தோன்றாநிலையில் சக்தி பிரம்மத்துக்கு அபின்னமாயிருக்கிறது. பிரம்மம் இருக்கும்வரை சக்தியும் இருக்கிறது. ஆகையால் ஸம்ஸாரத்துக்கு அது முடிவற்ற முதற்காரணமாகிறது. அச்சக்தி மூல பிரகிருதியாக, மஹத் தத்துவமாக, அகங்கார தத்துவமாக இப்படியெல்லாம் கிளைகளாகக் கீழே பிரிந்து வருகிறது. கீழே வரவர அது ஸ்தூலமாகப் பரிணமிக்கிறது.
பிரபஞ்சம் முழுதும் அந்த அரசமரத்தோடு ஒப்பிடப்படுகிறது. இலைகள் இல்லாவிட்டால் மரம் உருப்படாது. அங்ஙனம் இயற்கையை உருப்படுத்தி வைத்திருப்பது வேதம். இவ்வுலக சம்பந்தமான அறிவைப் புகட்டுகின்ற நூல்கள் அனைத்தும் சேர்ந்து வேதம் எனப் பொருள்படுகிறது. பண்டை நான்மறை மட்டும் வேதமல்ல. நவீன ரசாயன சாஸ்திரம், இயற்கை நூல் ஆகிய அனைத்தும், எல்லா மொழிகளும் எல்லா மொழிகளிலுள்ள நூல்களும் சேர்ந்து வேதம் எனப்படுகின்றது. நலம், கேடு ஆகிய இரண்டையும் பெறுதற்கான வழிகளை வேதம் விளக்குகிறது. பிரம்ம ஞானம் அடையும் வரையில் இப்பிரபஞ்ச வாழ்க்கைக்கு முடிவில்லை. அது நீடூழி நிலைத்திருக்கிறது. அக் காரணத்தை முன்னிட்டே அது அவ்யயம் அல்லது அழிவற்றது எனப்படுகிறது. எழுதிவைத்த நூலைப் படிப்பவன் வேதவித்து ஆகான்; பிரபஞ்ச நடைமுறையை உள்ளபடி அறிந்துகொள்பவன் வேதத்தை அறிபவன் ஆகின்றான். நல்லறிவு பெற முயலுபவனுக்கு மொழியினுடைய துணையைவிட இயற்கையின் நடைமுறையின் துணை மிகவும் முக்கியமானது.
ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்திலிருக்கும் போது உருத்தெரியாத ஹோ என்ற சப்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக்கிழங்குக்கும் மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் இம்மாதிரியாக மனிதர்கள் பேரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாகக் கேட்கிறான். ஒருவன் ஈசுவரனிடமிருந்து வெகு தூரத்துக்கு அப்பாலிருக்கும் வரையில் அவன் குழப்பத்திலும் காரண காரிய வாதப்பிரதிவாத அமளியிலுமே இருப்பான். ஆனால் அவன் ஈசுவரனை நெருங்குங்கால் காரண காரிய வாதம், வாதப் பிரதி வாதம் எல்லாம் நின்றொழிகின்றன. தெய்விக ரகஸ்யங்களெல்லாவற்றையும் வெகு தெளிவாயும் ஸ்பஷ்டமாயும் அறிந்துகொள்கிறான்.
முக்குணமயமாகப் பிரகிருதி இருப்பதும் முக்குணத்தைக் கடந்து அப்பால் பரமாத்மா இருப்பதும் பதினான்காவது அத்தியாயம் விளக்கியது. இந்த அத்தியாயம், அந்தப் பரமாத்மாவிடத்திருந்து இப்பிரபஞ்சம் கிளையாகக் கீழே இறங்கிவந்திருக்கிறது என்று விளக்குகிறது. அம்பிகை துர்க்காதேவியின் வடிவு இந்த இரண்டு அத்தியாயங்களின் கருத்துக்களை நன்கு விளக்குகிறது. தரையின் மீது கன்னங்கரேலென்று நிற்கிற மஹிஷாசுரனை அம்பிகை மர்த்தனம் புரிகின்றாள். அவள் சிங்கத்தின்மீது உயர நின்றுகொண்டிருக்கிறாள். மஞ்சள் மேனியுடைய அவள் சிவப்பு வஸ்திரம் அணிந்திருக்கிறாள். ஆயுதங்கள் பல கையாளுகின்றாள். மஹிஷாசுரன் தமோகுணத்தின் பிரதிநிதியாகவும், துர்க்கை ரஜோகுணத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள். அம்பிகையின் தலைக்குமேல் சதாசிவம் தூவெண் வடிவெடுத்து ஆழ்ந்து ஆத்ம நிஷ்டையிலிருக்கிறார். அவரது வெண்ணிறம் சத்துவகுணத்தைக் காட்டுகிறது. அவர் தன்னில் தானாயிருப்பது பரதத்துவத்தை விளக்குகிறது. உருவமில்லாத அவரிடத்திருந்து சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள் மூன்று வடிவெடுத்து ஒன்றன் கீழ் ஒன்றாக வருகின்றன. மேலே போகப் போகக் கர்மத்தின் போராட்டம் குறைகிறது. கீழே எல்லாம் ஒரே அமளி என்பதை அம்பிகையும் மஹிஷாசுரனும் புரியும் போர் விளக்குகிறது. அக்கருத்தை அடுத்த சுலோகம் தெளிவுபடுத்துகிறது.
2. அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸாகா
குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:
அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி
கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே 
தஸ்ய குணப்ரவ்ருத்தா-(சம்சாரமென்னும் அந்த மரத்தின்) அதன் கிளைகள் குணங்களால், விஷயப்ரவாலா:-(புலன் நுகர் போகப் பொருட்கள் என்னும்) விஷயத் தளிர்களுடன் கூடிய,
ஸாகா:-தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள், அத: ஊர்த்வம் ச ப்ரஸ்ருதா:-கீழும் மேலுமாக பரவியுள்ளன, மநுஷ்யலோகே கர்ம அநுபந்தீநி-மனித உலகில் கர்ம பிணைப்புகளாக, மூலாநி-அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும், அத ச-கீழும் (மேலும்) ஆக, அநுஸந்ததாநி-(எல்லா உலகங்களிலும்) பரவி உள்ளன.
பொருள் : அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.
சம்சாரமாகிய இப் பிரபஞ்சத்துக்கு அரசமரமே மேலும் தகுந்த உபமானமாக அமைகிறது. அதன் கிளைகள் மேலும் கீழும் நாலாபக்கமும் பரவியிருக்கின்றன. இப் பிரபஞ்சம் என்ற மரத்துக்கு மிக மேலானதாக இருக்கும் கிளை பிரம்மாவும் பிரம்ம லோகமுமாம். கீழான கிளை மானுடலோகமும் மற்றுமுள்ள அஃறிணை உயிர்களுமாம். ஞானத்துக்கு ஏற்ப மேலான பிறவியும், வெறும் கர்மத்துக்கு ஏற்பக் கீழான பிறவியும், ஞானமும் கர்மமும் கலந்திருப்பதற்கேற்ப நடுத்தரமான மானுடப்பிறவி போன்றவையும் அமைகின்றன. கிளைகளுள் சாரமிருந்தால்தான் அவைகள் தளிர்விடும். இந்திரியங்கள் வாயிலாக இந்தியார்த்தங்களில் உழல்வது இந்த சம்சாரத்துக்குத் தளிர்களாகின்றன. இந்தக் குணங்கள் இருக்கும் வரை கிளைகள் தளிர்த்துக்கொண்டேயிருக்கும்.
ஒரு மரத்துக்கு இரண்டுவிதமான வேர்களிருக்கின்றன. ஒன்று ஆணிவேர்; மற்றவைகள் சல்லிவேர்; மாயாஸஹிதனாகிய ஈசுவரனிடத்திருந்து ஜகத் கீழே வந்திருப்பதால் ஈசுவரன் இந்த அசுவத்தத்துக்கு மேலே உள்ள ஆணிவேர். பூவுலகில் விதவிதமான கர்மங்களாகப் பரிணமித்து வருவது சல்லிவேர்கள். சல்லி வேர்களை இடையிடையே களைவதால் மரம் பண்படுகிறது. அங்ஙனம் பூவுலகில் கர்மங்களைச் செப்பனிடுவதால் மனிதன் திருந்தியமைகின்றான். அவனுடைய இயல்பை மாற்றுதற்குக் கர்மம் பயன்படுகிறது. நல்லியல்பில் அல்லது கெட்ட இயல்பில் பந்தப்படுத்தி மனிதனைப் பிறப்பு இறப்பு மயமான பூவுலகில் பிடித்து வைத்திருப்பதும் கர்மம் என்கின்ற வேர். இது ஜீவர்கள் எல்லார்க்கும் பொதுவானதால் வேர் எங்கும் பரவியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
3. ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே
நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா
அஸ்வத்தமேநம் ஸுவிரூடமூலம
ஸங்கஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா 
அஸ்ய ரூபம் ததா-இந்த மரத்தின் உருவத்தைப் போல, இஹ ந உபலப்யதே-இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை, ந அந்த: ந ஆதி ச ந ஸம்ப்ரதிஷ்டா-முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை, ஸுவிரூடமூலம் ஏநம் அஸ்வத்தம்-அஹங்காரம், மமகாரம், முற்பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை, த்ருடேந அஸங்கஸஸ்த்ரேண சித்த்வா-பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு.
பொருள் : ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப்பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,
இப்படி ஈண்டு இயம்பப்பட்ட பிரபஞ்சம் என்ற அசுவத்த மரத்துக்கு நிலைத்த வடிவம் ஒன்றுமில்லை. அதனிடத்து நாம் ஒரு வடிவத்தைக் காணுமுன்பு அது இன்னொரு வடிவெடுத்துவிடுகிறது. பார்க்கும்பொழுதெல்லாம் அதற்குப் புதியதொரு வடிவம் வருகிறது. நிலைத்த சொந்த வடிவம் ஒன்று அதற்கில்லை. இது எப்பொழுது ஆரம்பித்ததென்று யாருக்கும் தெரியாது. இதற்கு முடிவு ஏதேனும் உண்டா? பிரம்மஞானம் அடைந்தவனுக்கு இது முடிவடைகிறது. மற்றவர்களுக்கு இது முடிவில்லாததாயிருக்கிறது. துவக்கமும் முடிவும் காட்டாத இது இடையில் எப்படி இருக்கிறது? இதன் இருப்பு எத்தகையது? - இதுவும் விளங்குவதில்லை. ஆக, இதை முழுதும் விளக்க யாரே வல்லவர்! மரத்தை வெட்டுதற்குக் கோடரி வேண்டும். அங்ஙனம் மாயா காரியமாகிய பிரபஞ்ச வாழ்க்கை என்ற மரத்தை வெட்டுதற்குப் பற்றின்மை அல்லது வைராக்கியம் என்ற வாள் ஒன்றே தகுந்தது. பற்றின்மை எவ்வளவு வலியதோ அவ்வளவு விரைவில் சம்சார விருக்ஷம் வெட்டப்படும்.
வண்ணாத்திப் புழு, தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. அதுபோல உலகப்பற்றுள்ள ஆத்மா அதனுடைய ஆசைகளாகிய வலையில் சிக்கிக்கொள்கிறது. ஆனால் அந்தப் புழு ஓர் அழகிய வண்ணாத்திப் பூச்சியாகப் பரிணமிக்கும்போது, கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து வெளிச்சத்தையும் காற்றையும் ஆனந்தமாய் அனுபவிக்கிறது. அதுபோல விவேகம் வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால், உலகப்பற்றில் உழலும் ஆத்மாவானது மாயையாகிய வலையைக் கிழித்துக்கொண்டு வெளிப்படக்கூடும்.
4. தத: பதம் தத்பரிமார்கிதவ்யம்
யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ 
தத: யஸ்மிந் கதா பூய: ந நிவர்தந்தி-அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, தத் பதம் பரிமார்கிதவ்யம்-அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்,
ச யத: புராணீ-மேலும் எதனிடமிருந்து பழமையான, ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா-சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ, தம் ஏவ ஆத்யம் புருஷம்-அந்த ஆதி புருஷனையே,
ப்ரபத்யே-சரணம் அடைகிறேன்.
பொருள் : அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத முடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.
உலகப்பற்று அறவே நீங்குவது எதிர்மறைச் செயல். அது மட்டும் போதாது. பிறகு அது உடன்பாட்டுச் செயலாக மாறவேண்டும். பிரம்ம பதத்தை ஆவலோடு தேடுதல் அவசியமாகிறது. பிரபஞ்ச வாழ்க்கைக்கும் பிரம்மபதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒன்று பிறவிப் பெருங்கடலாகப் பரிணமிக்கின்றது. மற்றொன்று பிறப்பு இறப்பைக் கடந்த பெருநிலை. அது முழுமுதற் பொருள் என்றும் ஆதி புருஷன் என்றும் அழைக்கப்படுகிறது. அது அகண்ட சச்சிதானந்த வஸ்து. கடலினின்று மேகம் வருவது போன்று கர்ம சொரூபமாயுள்ள தொல்லுலகம் அப்பரம புருஷனிடத்திருந்து வந்துள்ளது. அத்தொல்லுலகம் தோன்றுவதாலும் பரம புருஷனுக்கு லாப நஷ்டம் ஒன்றுமில்லை. கானலினின்று கானல் நீர் தோன்றுவதுபோன்று அவனிடத்து உலகம் தோன்றி ஒடுங்குகிறது. அந்த ஆதி புருஷனிடத்து அடைக்கலம் புகுதலே சம்சார விருக்ஷம் திரும்பவும் தழையா திருக்கும்படி செய்தற்கு உற்ற உபாயம்.
கண்டுபிடிக்கப்பட்டதும் திருடன் ஓடிப்போகிறான். அதுபோல மாயையின் சுபாவம் இன்னதென்று நீ ஆராய்ந்து கண்டு பிடிக்குமிடத்து, அது உன்னிடமிருந்து ஓடிப்போகிறது.
பற்று நீங்கிப் பரத்தைச் சார்ந்திருப்பது இனித் தெளிவுபட விளக்கப்படுகிறது :
5. நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா
அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞைர்
கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் 
நிர்மாநமோஹா-செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள், ஜிதஸங்கதோஷா-பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள், அத்யாத்மநித்யா-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விநிவ்ருத்தகாமா:-விருப்பங்களினின்றும் நீங்கியோர், ஸுகது:கஸம்ஜ்ஞை: த்வந்த்வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், அமூடா:-மடமையற்றோர், தத் அவ்யயம் பதம் கச்சந்தி-அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.
பொருள் : செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர், இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.
மனத்தகத்து அமைந்துள்ள மாசுகளெல்லாம் நீங்கப்பெறுதல் ஒரு புறம். தீவிரமாகப் பரமாத்மாவிடத்து நாட்டம் கொள்ளுதல் மற்றொரு புறம். ஒரு சாதகனிடத்து இந்த இரண்டு பாங்குகளும் சேர்ந்து அமைகின்றவளவு அவன் விரைந்து பரிபக்குவமடைகிறான். முற்றிலும் பரிபக்குவம் அடைந்தவனுக்குக் கேடு என்பது இல்லை.
பந்தப்பட்ட ஆத்மா மனுஷ்யனாகும்; மாயையாகிய சங்கிலியில் கட்டுப்படாத ஆத்மா ஈசுவரனாகும்.
6. ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக:
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம 
யத் கத்வா-எதை அடைந்த பிறகு, ந நிவர்தந்தே-திரும்பி வருவதில்லையோ, தத் ஸூர்யோ ந பாஸயதே-அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை, ந ஸஸாங்க: ந பாவக:-சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை, தத் மம பரமம் தாம-அதுவே என் மேலான வீடு (பரம பதம்).
பொருள் : அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.
கடலினுள் பாய்ந்த நதி கடலாகிறது. அங்ஙனம் பரத்தைச் சார்ந்த மனிதன் பரவெளியில் ஒன்றுபடுகிறான். அதுவே சித் ஆகாசம் எனப்படுகிறது. இருட்டறையில் உட்கார்ந்திருக்கும் ஒருவனுக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வை சூரிய வெளிச்சம் விளக்குமா? விளக்காது. அப்படியே சந்திரனும், தீயும் அதை விளக்கமாட்டா. இருக்கிறேன் என்ற உணர்வை அந்த உணர்வே விளக்குகிறது. அந்த உணர்வு அல்லது பிரக்ஞை யாண்டும் நிலைத்துள்ளது. அது தெளிவடைந்த நிலையே பரமபதம் எனப்படுகிறது. தெளிவடைந்த பிறகு அது அகண்டாகாரமாய் விரிகிறது. அதன்கண் போக்குவரத்து இல்லை; பிறப்பு இறப்பு இல்லை. கால தேச வர்த்தமானம் எல்லாம் அதனுள் ஒடுங்கி மறைகின்றன. இப் பரவெளியில் கலக்கின்ற ஜீவன் முக்தர்கள் திரும்பவும் ஜீவபோதத்துக்கு வருகிறதில்லை.
கற்பூரத்தைக் கொளுத்திவைத்தால் மிகுதி யொன்றுமிருப்பதில்லை. பகுத்தறிவு (விவேகம்) ஒழிந்து; மகோன்னதமான ஸமாதி நிலையைப் பெற்றால், அப்பொழுது நான் என்பதும் நீ என்பதும் உலகமென்பதும் இரா. ஏனென்றால் இந்த மனமும் மமகாரமும் விசுத்தப் பிரம்மத்தில் ஒன்றாய்க் கலந்துவிடுகின்றன.
ஜீவாத்மாவானது பரமாத்மாவுக்குப் புறம்பானதாயிருந்து பிறகு பிரம்மஞானத்தால் அதற்குரியதாகின்றதா? விடை வருகிறது :
7. மமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி 
ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா, மம அம்ஸ ஏவ-எனது அம்சமே! ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள, மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும் கர்ஷதி-ஈர்க்கிறது.
பொருள் : எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.
ஸநாதன - எக்காலத்தும் என்று சொல்லுவதன் கருத்து அது ஜீவனாக இருக்கும்பொழுதும் பரமாத்மாவுக்கு உரியதே. பரமாத்மாவுக்கு வேறாக இருந்து பிறகு அதில் கலத்தல் என்பதல்ல. அறியாமையினால் பிரகிருதியில் தன்னைக் கட்டுண்டவனாக நினைத்துக்கொள்பவன் ஜீவாத்மா. பிரகிருதியின் சேர்க்கையாலே அவனுக்கு இந்திரியங்கள் உண்டாகின்றன. அந்நிலையில் ஜீவன் போகியென்று அழைக்கப்படுகிறான். போகியாக போகத்தில் கட்டுண்டிருப்பவர்களெல்லாம் ஜீவலோகத்திலிருப்பவர்களே. இந்திரிய நிக்கிரகம் செய்கின்றபொழுது ஒருவன் யோகியாகின்றான். புலனடக்கத்துக்கு ஏற்றவாறு அவன் பரத்தைச் சார்ந்தவனாகிறான்.
ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்வுக்குத் தகுந்த உபமானம் ஒன்று சொல்லலாம். பானைக்குள் உள்ள வெளி கடாகாசம் எனப்படுகிறது; பரந்து எங்கும் நிறைந்துள்ள வெளி மஹாகாசம் எனப்படுகிறது. கடாகாசம் எப்பொழுதும் மஹாகாசத்துக்குள்ளேயே இருக்கிறது. பானையை உடைப்பதால் அதற்குள் உள்ள ஆகாசத்துக்கு ஒரு கேடும் வருவதில்லை. கடாகாசம் என்ற பெயர் தரித்திருக்கும்பொழுதும் அது மஹாகாசமே.
பிரகிருதியோடு வைத்த தொடர்வால் ஜீவன் கர்த்தாவென்றும் போக்தாவென்றும் சொல்லப்படுகிறான். கர்த்தா போக்தா வென்ற உபாதியை நீக்கிவிட்டால் ஆத்மாவின் எதார்த்த நிலை வந்தமைகிறது. ஜீவாத்மாவாக இருக்கும்போது அது பரமாத்மாவின் அம்சம். ஜீவபோதம் அற்றுப்போனால் எஞ்சியிருப்பது பரமாத்மாவே.
ஜீவனின் உண்மை ஸ்வபாவம் சச்சிதானந்தமே. இவ்வளவு உபாதிகள் எல்லாம் அகங்காரத்தினால் உண்டாயின. ஆதலால் ஜீவனுக்குத் தன் உண்மை சுபாவமே மறந்துபோயிற்று.
ஜீவன் உபாதியைப் பெறும் விதம் எப்படி? விடை வருகிறது :
8. ஸரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்வர:
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தாநிவாஸயாத் 
வாயு: ஆஸயாத் கந்தாந் இவ-காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல, ஈஸ்வர: அபி-உடலை ஆளும் ஜீவாத்மாவும், யத் உத்க்ராமதி - எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ, ஏதாநி ச க்ருஹித்வா-மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு, யத் ஸரீரம் அவாப்நோதி ஸம்யாதி-எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்.
பொருள் : கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன், யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.
உடலை ஆளும் தன்மையுடையவனாதலால் ஜீவன் இங்கு ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறான். காற்று தன்னளவில் ஒரு வித மணமும் இல்லாதது. புஷ்பத்தோடு வைக்கிற சேர்க்கையால் அதற்கு மணம் உண்டாகிறது. அந்த மணத்தைப் பிறகு சிறிது சிறிதாக நீக்கவும் அதற்கு இயலும். ஜீவன் பிரகிருதியோடு வைக்கிற தொடர்வால் உபாதியுடையவனாகிறான். பிரகிருதியினிடத்துப் பற்று நீங்குகிறவளவு ஜீவன் சுத்த சைதன்யமாகிறான். ஆனால் பிரகிருதியில் பற்று வைத்திருக்கிறவளவு ஜாலவித்தைக்காரன் போன்று அவன் நடந்துகொள்கிறான். ஓரிடத்தில் தன்னுடைய சாமான்களையெல்லாம் விரித்துவைத்து வேடிக்கை பண்ணுகிறான். பிறகு அவைகளையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு இன்னோர் ஊருக்குப் போகிறான். அங்ஙனம் ஜீவன் மனதையும் இந்திரியங்களையும் பிறக்கும்பொழுது விரிக்கிறான்; சாகும்பொழுது ஒடுக்குகிறான்.
இந்திரியங்களைக்கொண்டு ஜீவன் என்ன செய்கிறான்? விடை வருகிறது :
9. ஸ்ரோத்ரம் சக்ஷú: ஸ்பர்ஸநம் ச ரஸநம் க்ராணமேவ ச
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுபஸேவதே 
அயம் ஸ்ரோத்ரம் சக்ஷú: ச-கேட்டல், காண்டல், ஸ்பர்ஸநம் ரஸநம் க்ராணம் மந: ச-தீண்டுதல், சுவை, மோப்பு, மனம், அதிஷ்டாய ஏவ-இவற்றில் நிலைகொண்டு, விஷயாந் உபஸேவதே-ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.
பொருள் : கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.
ஐம்பொறிகளும் ஐந்துவித ஜன்னல்கள் ஆகின்றன. ஜன்னல் இல்லாத வீட்டுக்குள் ஒருவனை அடைத்து வைத்துவிட்டால் வெளியுலகோடு அவன் தொடர்வு வைக்க முடியாது. காற்றும் வெளிச்சமும் நீரும் உணவுமில்லாவிடில் அவன் செத்துப் போவான். ஐம்பொறிகள் ஐந்து பூதங்களோடு தொடர்வு வைக்க உதவுகின்றன. ஆகாசத்தின் தன்மாத்திரையாகிய ஓசையைக் கேட்கக் காது உதவுகிறது. அக்னியின் தன்மாத்திரையாகிய வடிவத்தைக் காணக் கண் உதவுகிறது. வாயுவின் தன் மாத்திரையாகிய ஊறு அல்லது ஸ்பரிசத்தை உணர்தற்கு உடல் உதவுகிறது. நீரின் நீர்மையாகிய சுவையை அறிய நாவு உதவுகிறது. நிலத்தின் பாங்காகிய நாற்றத்தைப் பெற நாசி பயன்படுகிறது. மனதோ இவ் ஐந்துக்கும் பொது. உடல் என்னும் கோட்டைக்குள் இருக்கும் ஜீவனானவன் ஐம்பொறிகளின் வகை தெரிந்துகொள்ளுதற்கு மனம் என்னும் கருவியே பாலம்போன்று அமைந்துள்ளது. வெளியுலகினின்று இன்பதுன்ப மயமான செய்திகள் அவனுக்கு இங்ஙனம் எட்டுகின்றன.
10. உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாநசக்ஷúஷ: 
உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும், ஸ்திதம் வா-நிற்கையிலும், புஞ்ஜாநம் வா - உண்ணுகையிலும், குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும், விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை, ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.
பொருள் : அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.
அறிவிலிகளுக்கு ஸ்தூல உடல் காட்சியும் உடலின் மூலம் வெளியுலகினின்று பெறும் இன்பதுன்பம் மட்டும் விளங்குகின்றன. உடலுக்குள் தங்களது மேலாம் சொரூபமாகவிருக்கும் உத்தமனைக் காண அவர்களுக்கு இயலாது. இந்திரியங்கள் புறவுலகைப் பார்ப்பதற்கென்றே அமைந்தவைகள். அவைகளின் வசப்பட்டவர்களே மூடாத்மாக்கள். விழாக்களில் பெரிய பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு அவைகளின் உட்புகுந்து சிலர் விளையாடுகின்றனர். அறிவுடையவர்க்குப் பொம்மையின் உள்ளிருக்கும் மனிதன் வேறு என்பது தெரியும். அங்ஙனம் ஞானக் கண்ணுடையார்க்கு உடல் என்னும் பொம்மைக்குள் இருக்கும் ஆத்மா வேறு என்பது தெரியும்.
மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள். ஒன்று சிவப்பாயும், மற்றொன்று நீலமாயும், வேறொன்று கருப்பாயுமிருந்த போதிலும் அவைகளுக்குள்ளிருக்கும் பஞ்சு ஒன்றே. அதுபோலத் தான் மனிதனும். ஒருவன் பார்வைக்கு அழகாக இருக்கிறான். இன்னொருவன் கருப்பாயிருக்கிறான். மற்றொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான். என்றாலும் ஈசுவரன் அவர்கள் எல்லாருள்ளும் வாசம் செய்கிறான்.
ஞானக்கண்ணைப் பெறுவது எங்ஙனம்? விடை வருகிறது :
11. யதந்தோ யோகிநஸ்சைநம் பஸ்யந்த்யாத்மந்யவஸ்திதம்
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்யசேதஸ: 
யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள், ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர், ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள், அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.
பொருள் : முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.
யோகி, ஆத்ம. பரிபாகம் அடையாத அறிவிலி ஆகிய இருவர்க்கும் முயற்சி பொதுவானது. முயற்சியின்றி ஒன்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மனபரிபாகமில்லாத மனிதன் வெறும் மாடுபோல் உழைக்கிறான். வெறும் வினைப்பயனே அதன் விளைவு ஆகும். முயலுகின்ற யோகியோ ஆத்ம பரிபாகம் அடைகிறான். உலகக் கிருத்தியங்களைச் செய்து சாதிப்பதற்கிடையில் ஒழுக்கத்தாலும் தவத்தாலும் யோகியானவன் மனதைப் பண்படுத்துகிறான். அந்தர்முகமாகவும் அதைத் திருப்பிப் பழகுகிறான் அங்ஙனம் சித்தசுத்தி அடையப்பெற்று, அது ஆத்ம சொரூபத்தில் தேங்கியிருப்பது ஆத்ம தரிசனத்துக்கு இன்றியமையாததாகிறது.
நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரம் ஒன்று இருந்தாலும் அதன் வழியாக ஜலமெல்லாம் ஒழுகிப்போம். அதுபோல சாதகன் ஒருவனது மனதில் உலகப்பற்று வெகு அற்பமாக இருந்தாலும்கூட அவனது பிரயத்தனங்களெல்லாம் வீணாய் முடியும்.
பரமாத்ம தரிசனம் அடைந்தவர்கள் அதை எப்படிக் காண்கிறார்கள்? விடை வருகிறது :
12. யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேऽகிலம்
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம் 
ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி, அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும், யத் அக்நௌ ச - தீயிலுள்ளதும், தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.
பொருள் : சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.
வெளிச்சத்தைக் கொண்டுதான் ஜடப் பொருள்கள் இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்ளலாம். நாம் கண்டறிந்த வெளிச்சங்களுள் சூரியன், சந்திரன், தீ இவைகளிடத்திருந்து வருபவை சர்வ சாதாரணமானவைகள். எங்கு வெளிச்சம் இருக்கிறதோ அங்கு சத்துவகுணத்தின் தோற்றமுண்டு. மினுக்கெடுத்த சுவரில் அல்லது கண்ணாடியில் முகம் நன்றாய்த் தெரிவதுபோன்று சத்வ குணத்திலே ஆத்ம சைதன்யம் ஒளிர்கிறது. ஆத்ம சைதன்யத்தை விளக்குகின்ற சத்வகுணமும் பரமாத்மாவினிடத்திருந்து வந்தது. சூரிய வெளிச்சம் ஜடப்பொருள் இருக்கிறது என்று விளக்குவதுபோன்று ஆத்ம சைதன்யம் நான் இருக்கிறேன் என்ற பிரக்ஞையை விளக்குகிறது. சூரியனிடத்து இருப்பது ஜடப்பிரகாசம். நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சியோ ஆத்மப் பிரகாசம். ஜடப்பிரகாசத்துக்கு மூலகாரணமாயிருப்பது ஆத்மப் பிரகாசம். அது எப்படி என்று ஆராய்வோம். இரண்டு அறைகளினுள்ளே சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. ஓர் அறையினுள் ஆள் யாருமில்லை. சூரிய வெளிச்சம் இருக்கிறது என்று பொருள்படுத்துவார் ஆங்கில்லை. இருக்கிறேன் என்ற உணர்ச்சி அந்த வெளிச்சத்துக்கும் கிடையாது. அவ் அறையினுள் வெளிச்சம் இருப்பதும் இல்லாததும் ஒன்றே. மற்ற அறையில் வெளிச்சம் இருக்கிறது. மனிதன் ஒருவன் இருக்கிறான். தான் இருப்பதற்கும் அவ்வெளிச்சம் இருப்பதற்கும் அம்மனிதனே அத்தாட்சியாகிறான். சந்திரன், சூரியன், அக்னி சொரூபமாக ஈசுவரனிடத்திருந்து வந்துள்ள ஜடப் பிரகாசத்தை ஈசுவரன் என்னும் ஆத்மப்பிரகாசம் அல்லது ஆத்ம சைதன்யம் அறிகிறது. அறிபவனுடைய அறிவே அறியப்படுபொருளை விளக்குகிறது. சூரியன், சந்திரன், அக்கினி முதலியன அறியப்படு பொருள்களாம்.
மேலும் அந்த ஆத்ம சைதன்யம் உயிருக்கு உயிராய் இருக்கிறது. எப்படியெனின் :
13. காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: 
ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து, ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன், ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி, ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.
பொருள் : நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.
ஈசுவர சக்தி ஓஜஸ் என்கிற பெயர் பெறுகிறது. அது அண்டமெங்கும் வியாபித்து அதை உறுதியாய்த் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. சராசரங்களெல்லாம் அதனிடத்திருந்து நிலைபேறு பெறுகின்றன. சுவைக்கேற்ற ரசம் சந்திரனிடத்திருக்கிறது என்பதும், அது படிவதால்தான் பூமியிலுள்ள பயிர்களெல்லாம் செழித்து வளர்கின்றன என்பதும், அவ்வவைகளின் இயல்பை நன்கு பெற்று வருகின்றன வென்பதும் கோட்பாடு. இங்ஙனம் உயிர்களைத்துக்கும் ஏற்ற உயிர்ச்சக்தி பரமாத்மாவினிடத்திருந்து வருகிறது.
அவரிடத்திருந்து வரும் மூன்றாவது வல்லமை யாதென்று இனி விளக்கப்படுகிறது :
14. அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித:
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் 
அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன், ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி, வைஸ்வாநர: பூவா - வைசுவாநரன் என்கிற அக்னியாகி, சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.
பொருள் : நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.
வயிற்றுக்குள் இருந்துகொண்டு உணவைச் செமிக்கும் அக்கினிக்கு வைசுவானரன் என்கிற பெயர் ஏற்பட்டுள்ளது. அதற்கு உணவு நான்கு விதங்களில் அளிக்கப்படுகிறது. மெல்லுதல், உறிஞ்சுதல், நக்குதல், விழுங்குதல் ஆகிய நான்கு விதங்களில் உணவானது உட்கொள்ளப்படுகிறது. ரொட்டிபோன்ற கடின பதார்த்தம் மெல்லப்படுகிறது. இளம் நுங்கு போன்றது உறிஞ்சப்படுகிறது. தேன் நக்கப்படுகிறது. பாயசம் விழுங்கப்படுகிறது. இவையாவையும் ஜீரணம் செய்வது வைசுவானரன் என்ற அக்கினி.
ஆற்றல் சொரூபமாக இருப்பதுமல்லாமல் மற்றொரு மகிமை பகவானிடத்துண்டு. அதாவது :
15. ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம் 
ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான், ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன, ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ - எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான், வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.
பொருள் : எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.
எல்லாருடைய உள்ளத்திலும் பிரக்ஞை அல்லது அறிவு சொரூபமாக அவர் இருக்கிறார். ஆதலால் முன் செய்தவைகளைப் பற்றிய ஞாபகமும், ஓர்ந்து உணரவேண்டிய ஞானமும், அவைகள் தேவையில்லாதபோது அவைகளை அழித்துவிடுதலும் ஆகிய இவையாவும் ஆத்ம சைதன்யத்திலிருந்தே வருகின்றன. வேதம் என்பது பிரபஞ்சம். இயற்கையில் இத்தனையுமாயிருப்பது பரம் பொருள். இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு ஈசுவரனது மஹிமையையே விளக்கிக்கொண்டிருக்கிறது. அழியும் பொருள்களின் மூலம் அவனது அழியாத் தன்மை ஒருபுறம் காண்பிக்கப்படுகிறது. அவன் அறிவாளி என்பதை ஒவ்வொரு ஜடப்பொருளின் அமைப்பும் எடுத்து உணர்த்துகிறது. அவன் இன்ப வடிவினன் என்பதற்கு இயற்கை யாவும் சான்றாகிறது. அவனுடைய ஆற்றலும் இயற்கையினூடு தோன்றிக்கொண்டிருக்கிறது. ஈசன் அழகன் என்பதற்கு இவ்வுலகமே எடுத்துக்காட்டாகும். இயற்கைத் தாய் திரிபுரசுந்தரி எனப்படுவதும் இக்காரணத்தை முன்னிட்டேயாம். பிரபஞ்சமே அவனுக்கு விளக்கம். ஆனால் இந்த விளக்கத்தில் அவன் அடங்கியவன் அல்லன். அது அவனுடைய ஒரு சிறு பகுதி. இவையாவையும் அவன் உணர்கிறான். ஆதலால் அவன் வேதவித்-வேதத்தை அறிபவன் அல்லது இயற்கையை அறிபவன் ஆகிறான். பிரபஞ்சத்தைக் கடந்து வேதாந்த சொரூபமாயிருப்பதும் பரமாத்மாவே.
பரமாத்மாவின் சொரூப விளக்கத்தின் படித்தரங்கள் வருமாறு :
16. த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே 
லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என, இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர், ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும், கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
பொருள் : உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
நிலவுலகம் இருக்கும் வரையில் அதில் நீர் உண்டு. அது ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர், மழை நீர், மேகம் என்று வெவ்வேறு வடிவும் பெயரும் எடுக்கிறது. இந்த வடிவங்களெல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மை யுடையவைகள். நீரோ அக்ஷரம் அல்லது பிரளயம் வரும் வரையில் நிலைத்திருப்பது. அங்ஙனம் ஜகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மையுடையவைகள். ஈசுவரன் என்ற புருஷனுக்கு இவைகள் உபாதியாகையால் இவைகளும் புருஷன் எனப்படுகின்றன. பரமாத்மாவைச் சார்ந்துள்ள மாயா சக்தியோ அக்ஷர புருஷன் அல்லது என்றைக்கும் நிலைத்திருப்பது ஆகிறது. பிரம்மஞானம் அடைந்தவனுக்கு மட்டும் அது வியவகாரமயமான தோற்றத்தில் இல்லை. மற்று ஈசுவரனை அது சாசுவதமாகச் சார்ந்துள்ளது. கூடஸ்தன் என்பது வெவ்வேறு வடிவங்களும் தோற்றங்களும் மாயக்காட்சிகளும் காட்டவல்லது என்று பொருள்படுகிறது. ஈசுவரன் அல்லது சகுண பிரம்மத்தின் வெவ்வேறு சொரூபங்களாகிய சிவன், சக்தி, விஷ்ணு முதலியன ஒன்றுசேர்ந்து கூடஸ்தன் ஆகிறது. இதுவும் புருஷனுடைய உபாதியாகையால் புருஷன் என்றே அழைக்கப்படுகிறது. பிரபஞ்ச மயமான மாயாசக்தி என்றென்றைக்கும் இருக்கிறது. அதன் வடிவங்கள் மட்டும் புதியன புதியனவாக மாறியமைகின்றன.
பழத்தின் மேல்தோல், சதை, கொட்டை எல்லாம் மரத்தின் ஒரே மூல விதையினின்றும் உண்டாகின்றன. அதுபோல ஒரே ஈசுவரனிடமிருந்து ஜீவ, ஜட, சித்து, அசித்து ஆகிய ஸர்வ சிருஷ்டிப் பொருள்களும் தோன்றுகின்றன.
இனி, பரமாத்மா எப்படி இருக்கிறார் என்றால் :
17. உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: 
ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து, பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ, அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும், உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ, உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன், அந்ய:-இவரில் வேறுபட்டோன்.
பொருள் : இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.
சகுண பிரம்மம் அல்லது ஈசுவரன் மாயாசஹிதன். உலகங்களும் உயிர்களும் (ஜகத், ஜீவன்) அவருடைய தோற்றங்களாம். நமது பண்பட்ட தூய அறிவுக்கு எட்டும் விபூதிகள் யாவும் ஈசுவரனைச் சார்ந்தவைகள். அதற்கு அப்பாற்பட்டவர் புரு÷ஷாத்தமன். அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாவதில்லை. சுத்தசைதன்யமாக நீக்கமற அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவரிடத்து அவரது பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன. அவரே முழுமுதற்பொருளாகிய பரபிரம்மம். நிர்க்குண பிரம்மம் என்றும், நாராயணன் என்றும், சதாசிவம் என்றும் அவர் சமயங்களால் அழைக்கப்படுகிறார்.
சரீரத்தில் ஈசுவரன் எவ்வாறு வசிக்கிறான்? பீச்சாங்குழலின் உள்ளேயிருக்கும் கம்பியைப்போல அவன் சரீரத்தில் வாசஞ்செய்கிறான். அதாவது சரீரத்தின் உள்ளேயிருக்கிறானென்றாலும் அச் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவனவல்லன்.
18. யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம: 
யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும், அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ, அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும், புரு÷ஷாத்தம: ப்ரதித: அஸ்மி-புரு÷ஷாத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.
பொருள் : நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புரு÷ஷாத்தம னென்று கூறப்படுகிறேன்.
க்ஷரம் என்பது அழியும் தன்மையுடைய பிரபஞ்சம். இது அரசமரத்தோடு ஒப்பிட்டு ஏற்கனவே விளக்கப்பட்டது. அக்ஷரம் என்பது உலகுக்கு மூலகாரணமாயிருக்கும் மூலப் பிரகிருதியோடு கூடிய ஈசுவரன். சித் சக்தியாக இப் பொருளைக் கருதுமிடத்து பரமேசுவரி என்று அவள் பெயர் பெறுகிறாள். ஜீவாத்மாக்களெல்லாம் ஈசுவரனில் அடங்கியிருக்கிறார்கள். நிர்க்குண நிர் விகாரமாயிருப்பவர் பரபிரம்மம். பக்தர்களும் கவிகளும் அவரைப் புரு÷ஷாத்தமன் என்று அழைப்பதற்கு அவரது பெருநிலையே காரணமாகிறது.
இத்தகைய புரு÷ஷாத்தமனை அறிந்தவன் எத்தகைய பாங்குடையவனாகிறான்? விடை வருகிறது :
19. யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புரு÷ஷாத்தமம்
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத 
பாரத:-பாரதா! ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை, ஏவம் புரு÷ஷாத்தமம் ஜாநாதி - இவ்வாறு புரு÷ஷாத்தமன் என்று அறிகிறானோ, ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும், மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.
பொருள் : மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புரு÷ஷாத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.
பொருள் ஒன்று. மதிமயக்கம் உள்ளவனுக்கு அது உலகாகக் காட்சி கொடுக்கிறது; மயக்கம் நீங்கப்பெற்றவனுக்கு அது கடவுள் காட்சி கொடுக்கிறது. கடவுள் காட்சியில் சில படித்தரங்கள் இருக்கின்றன. அனைத்தையும் ஆதரிப்பவராக அவர் முதலில் தோன்றுகிறார். அனைத்தும் அவரிடத்து அடங்கியிருக்கின்றன. பின்பு அவரே அனைத்தும் ஆகியிருக்கிறார். அடுத்தபடி தோற்றத்தளவில் அனைத்தும் இருக்கின்றன; உண்மையில் அவர்தான் இருக்கிறார். அவர் யாண்டும் உள்ளது உள்ளபடி இருக்கிறார். பூரணப் பொருளாகிய அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாகிறதில்லை. இது ஞானத்தின் முடிவான நிலை. கடவுள் காட்சி பெற்றவனே எல்லாம் அறிந்தவன் ஆகிறான். ஏனென்றால் அதற்குமேல் அவன் அறியவேண்டியது ஒன்றுமில்லை. கடவுள் காட்சி பெற்றவுடனே மனப்பான்மையும் மாறியமைகிறது. மனது எந்த அவஸ்தையிலிருந்தாலும் அது கடவுளை வழுத்தும் பாங்குடையதாகிறது. தெய்வ வழிபாடே வடிவுடையதாகிறது அது.
ஈசுவர தரிசனத்தைப் பெற்ற பிறகு, ஈசுவரன் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதாகவே பக்தனுக்குத் தோன்றும். ஆனால் ஈசுவரனுடைய மேலான தோற்றம் மனிதனிடம் காணப்படுகிறது. இன்னும் அதைவிட மேலான தோற்றமோ சுத்தசாத்விக பக்தர்களிடம் இருக்கும்.
கடவுள் காட்சியிலேயே நிலைபெறுவதால் மனிதன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :
20. இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமிதமுக்தம் மயாநக
ஏதத்‌புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்ச பாரத 
அநக:-குற்றமற்றோய், இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை, மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது, ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்ய, த்தக்கது செய்பவன் ஸ்யாத்-ஆகிறான்.
பொருள் : குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.
பகவத்கீதை முழுதும் சாஸ்திரம் எனப்படுகிறதெனினும் இந்த அத்தியாயம் மட்டும் சிறப்பாக சாஸ்திரம் எனப்படுகிறது. ஏனென்றால் வேதாந்தத்தின் சரீரம் முழுதும் இதில் இருக்கிறது. பரத்தை அறிபவனே ஞானியாகிறான். அவனுடைய கடமைகளெல்லாம் பிரம்மஞானத்தைப் பெறுதலில் முற்றுப்பெறுகின்றன. பரத்தை அறிய முயலுவதைவிட மேலான கடமை மனிதனுக்கு இல்லை. பரத்தை அறிந்துகொள்ளுதற்கு நிகரான குறி வேறு எதும் இல்லை. பரத்தை அறிதற்கு மேலான புருஷார்த்தமில்லை. பரத்தை அறிபவன் பரத்தை அடைகிறான். பரத்தை அறிபவன் பரன் ஆகிறான். அவனே முக்தனாகிறான்.
பெறுதற்குரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே ஈசுவரனை அறிய முயலாது போனால் அவன் வீணில் பிறந்தவனேயாவான்.

பதினாறாம் அத்தியாயம்
பகவத்கீதை | தெய்வாசுர சம்பத் விபாக யோகம்



முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார். அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.
மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.
தெய்வீக இயல்பு 1-3 -அஸுர இயல்பு 4 -இரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6 -அஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18 -ஆஸுரனது வீழ்ச்சி 19-21 -அஸுர இயல்பினின்று விடுதலை 22 -சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24.
ஸ்ரீபகவாநுவாச
1. அபயம் ஸத்த்வஸம்ஸுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி:
தாநம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்  
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அபயம் ஸத்த்வஸம்ஸுத்தி-அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஜ்ஞாநயோக வ்யவஸ்திதி:-ஞான யோகத்தில் உறுதி, தாநம் தம ச-ஈகை, தன்னடக்கம், யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாய:-வேள்வி, கற்றல், தப ஆர்ஜவம்-தவம், நேர்மை.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.
அறியாமையினின்று அச்சம் வருகிறது. அஞ்சுபவன் ஒன்றுக்கும் உதவான். அஞ்சாமையோ மேன்மையனைத்தையும் கொடுக்கிறது. ஒவ்வொரு தெய்வமும் அபயகரம் உடைத்திருப்பது, அஞ்சாமையும் தெய்வத்தை அணுகுதலும் ஒன்றே என்று விளக்குதற்காம். உள்ளத்தூய்மை என்பது வஞ்சகமும் பொய்யுமின்றிப் பிறரோடு இணக்கம் கொள்ளுதலாம்.
நித்திய அநித்திய வஸ்துக்களைத் தெளிவுபட அறிதல் ஞானம். அப்படி அறிந்தான பிறகு அதற்கேற்ப ஒழுகுதல் யோகமாகிறது. இங்ஙனம் ஞானத்திலும் யோகத்திலும் யாண்டும் நிலைத்திருத்தல் வேண்டும். தனக்குப் பயன்படுகிற பொருள் பிறர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவைகளை அன்புடனும் பணிவுடனும் வழங்குதல் தானமாகிறது.
தமம் அல்லது பொறிகளை அடக்குதல் என்பது வெளியுலகில் உள்ள விஷயங்களின்மீது, அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திரியங்களை உலவவிடாது தடுத்தலாம். தான் செய்கின்ற கிருத்தியங்களின் மூலம் தன்னைக் கடவுளுக்கென்றே ஒப்படைத்தல் யாகம் என்று பெயர் பெறுகிறது. தேவாராதனைகளையெல்லாம் யாகமென்று சொல்லலாம்.
பாரமார்த்திக விஷயங்களைப் புகட்டுகிற சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பது சுவாத்யாயம் என்ற பெயர் பெறுகிறது.  உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற முயலுதல் தவம். சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் கோணலில்லாத் தன்மையே ஆர்ஜவம் அல்லது நேர்மை.
2. அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஸாந்திரபைஸுநம்
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்  
அஹிம்ஸா-கொல்லாமை, ஸத்யம்-வாய்மை, அக்ரோத:-சினவாமை, த்யாக:-துறவு, ஸாந்தி-ஆறுதல், அபைஸுநம்-வண்மை, பூதேஷு தயா-ஜீவதயை, அலோலுப் த்வம் - அவாவின்மை, மார்தவம் ஹ்ரீ:-மென்மை, நாணுடைமை, அசாபலம்-சலியாமை.
பொருள் : கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,
உயிர்களைத் தனக்கும் இறைவனுக்கும் புறம்பாக நினைக்கும் பொழுது அவைகளுக்குத் தீங்கு செய்து தனக்கு வேண்டியதைப் பெறலாம் என்ற எண்ணம் வருகிறது. அவைகளையெல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டவைகளாக அறியும்போது அஹிம்சை தானாக வந்தமைகிறது. கடவுள் ஒருவரே மெய்ப்பொருள் என்னும் தத்துவத்துக்கு ஒப்ப உணர்வதும் உரைப்பதும் சத்தியமாகும். மற்றவர்கள் தன்னை ஹிம்சை செய்கின்றபொழுது தான் அவர்களைத் தன்மயமாயுணர்ந்து அவர்களிடத்துக் கோபித்துக் கொள்ளாதிருப்பது குரோதமின்மையாகும். பொருள்களெல்லாம் பரமனுக்கு உரியவைகளென்று அறிந்து அவைகளிடத்து உரிமை பாராட்டாதிருப்பது தியாகம். மனதின்கண் அமைந்துள்ள நடு நிலை சாந்தி எனப்படுகிறது. உயிர்களிடத்து இரக்கம் அல்லது பூத தயை என்பது துன்புறுபவர்களைப் பார்த்து மனம் கசிதல். இந்திரியார்த்தங்களிடத்து இந்திரியங்கள் உலவும் பொழுதும் மனப்பற்று வாராதிருத்தல் அலோலுப்த்வம் அல்லது பிறர் பொருளை விரும்பாமை என்பதாகிறது. பிறரைத் தாழ்த்திப் பேசுதல் சிற்றியல்புடையாரது போக்கு. அது பைசுனம் எனப்படுகிறது. பிறரது சிறப்பைப்பற்றியே பேசும்பொழுது அது அபைசுனம் எனப்படுகிறது. புறங்கூறாமை அல்லது கோள் சொல்லாமை சீரியரது பாங்காகும். மார்தவம் அல்லது மிருதுத்தன்மை அல்லது இனிமை பண்பட்டவர்களிடத்தே காணப்படும். மற்றவர்கள் தங்களைப் புகழும்போது நல்லார்க்கு நாணம் வருகிறது. தகாத செயலில் ஈடுபடவும் அவர்கள் நாணுகின்றனர். மனம் சலனமடையும்போது அதன் புறத்தோற்றமாகிய உடலும் அனாவசியமாக அசைகிறது. உள்ளத்தையும் உடலையும் காரணம் ஏற்பட்டாலொழிய அசையாது வைத்திருப்பது அமைதி பெற்றவர்களுடைய செயலாகும்.
3. தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசமத்ரோஹோ நாதிமாநிதா
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத  
தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசம்-ஒளி, பொறை, உறுதி, சுத்தம், அத்ரோஹ:-துரோகமின்மை –
ந அதிமாநிதா-செருக்கு கொள்ளாமை, தைவீம் ஸம்பதம்-தெய்வ சம்பத்தை, அபிஜாதஸ்ய பவந்தி-எய்தியவனிடம் காணப்படுகின்றன, பாரத-பாரதா.
பொருள் : ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!
கயவர்களுக்கிடையில் பயப்படாதிருத்தல் தேஜஸ் அல்லது தைரியமாம். பிறர் செய்த தீங்குகளுக்காக அவர்களைத் தண்டிக்க வல்லவனாயிருந்தும் அவர்களை மன்னிப்பதுடன், அதை மறந்து விடுவது க்ஷமை என்ற பெயர் பெறுகிறது. மனதின்கண் அமைந்துள்ள திருதி அல்லது உறுதியானது உடலுக்கும் இந்திரியங்களுக்கும் உண்டாகின்ற சோர்வை நீக்குகிறது. விரைவில் சோர்வு உண்டாகாதும் அது தடுக்கவல்லது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் அழுக்குப்படியாதிருத்தல் சௌசம் அல்லது தூய்மையாம். உடலின் அழுக்கை நீக்குவது யாருக்கும் எளிது. மனத்தகத்துக் கீழான எண்ணம் வராது தடுப்பதால் அது தூயதாகிறது. எண்ணம் சுத்தமாயிருந்தால் சொல்லும் தானே சுத்தியடைகிறது. பிறர்க்குத் தீங்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதிருந்தால் அது அத்ரோகம் அல்லது வஞ்சகமின்மையாகிறது. பிறர் தன்னை மிக மதிக்க வேண்டும் என்று நினைப்பது செருக்கு. அச்சமின்மையிலிருந்து செருக்கின்மை ஈறாக இவையாவும் தெய்வ சம்பத்துக்களாகின்றன.
இனி, இதற்கு மாறாயுள்ள அசுர சம்பத்து விளக்கப்படுகிறது :
4. தம்போ தர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்  
பார்த-பார்த்தா, தம்ப: தர்ப: அபிமாந ச-டம்பம், இறுமாப்பு, கர்வம், க்ரோத: பாருஷ்யம் ஏவ ச-சினம், கடுமை, அஜ்ஞாநம் ஏவ-அஞ்ஞானம், ஆஸுரீம் ஸம்பதம்-அசுர சம்பத்தை, அபிஜாதஸ்ய-எய்தியவனிடம் காணப் படுகின்றன.
பொருள் : டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!
ஒழுக்கத்தில் தன்னைச் சிறந்தவனாகக் காட்டிக்கொள்ளுதலும், ஆடை ஆபரணங்களைக்கொண்டு தன்னை மிகைபட அலங்கரித்தலும் பகட்டாகிறது. தனக்குக் கல்வியும், செல்வமும், குலமும் மிக வாய்த்திருப்பதாக எண்ணித் தற்பெருமை கொள்ளுதல் இறுமாப்பாம். அழகில்லாதவனை அழகன் என்றும், குருடனைக் கண்ணன் என்றும், கீழோனை மேலோன் என்றும் சொல்லிப் பரிகசிப்பது கடுமைக்குச் சான்றாகிறது. தர்மம் அதர்மம் ஆகியவைகளைப்பற்றித் தவறுதலாக நினைப்பது அக்ஞானமாம்.
பக்ஷணங்களின் மேல்கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும். அவைகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் வேறு வேறு விதமானவைகளாக இருக்கும். உள்ளிருக்கும் பொருள்களுக்கு ஏற்ப பக்ஷணங்கள் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். அதுபோல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே விதமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்.
இயல்பு வேறுபாட்டால் வரும் பயன் யாது? விடை வருகிறது :
5. தைவீ ஸம்பத்விமோக்ஷõய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ  
தைவீ ஸம்பத் விமோக்ஷõய-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், ஆஸுரீ நிபந்தாய மதா-அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை, பாண்டவ-பாண்டவா, தைவீம் ஸம்பதம் அபிஜாத: அஸி-தேவ சம்பத்தை எய்தி விட்டாய், மா ஸுச:-துயரப்படாதே.
பொருள் : தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.
முற்பிறப்பில் மனிதன் செய்த முயற்சி வீண்போவதில்லை. தேவ இயல்பு சம்சார பந்தத்திலிருந்து விடுபடுதற்கு ஏதுவாகிறது. அசுர இயல்பு பிறப்பு இறப்புக்குக் காரணமான பந்தத்தைப் பலப்படுத்துகிறது. தன்னிடத்துள்ள இயல்பு எத்தகையதோவென்று அர்ஜுனனுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஜீவனுடைய முக்கால நிலைமைகளை அறிகிற பகவானுக்கு அர்ஜுனனுடைய வரலாறு நன்கு தெரியும். அவனுக்கு ஆறுதல் சொல்லுவதோடுகூட தெய்வ சம்பத்தையுடைய அவன் முக்திக்கும் தகுந்தவனாகிறான் என்கிறார் பகவான். ஒரு ஜன்மத்தில் அடைந்த பயிற்சி அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக அவனிடத்து அமைகிறது என்பதும் விளங்குகிறது.
ஜீவர்களுடைய இயல்புகளை யெல்லாம் சுருக்கமாக எப்படி வகைப்படுத்தலாம்? விடை வருகிறது :
6. த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு  
பார்த-பார்த்தா, அஸ்மிந் லோகே-இவ்வுலகத்தில், பூதஸர்கௌ த்வௌ ஏவ-உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும், தைவ ஆஸுர ச-தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது, தைவ: விஸ்தரஸ: ப்ரோக்த-தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன், ஆஸுரம் மே ஸ்ருணு-அசுர இயல் பற்றி என்னிடம் கேள்.
பொருள் : இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.
ஸ்தாவர ஜங்கமங்களாகிய உயிர் வகைகள் அனைத்திடத்தும் ஏற்றத்தாழ்வுபட தெய்வ சம்பத்தோ அல்லது அசுர சம்பத்தோ உண்டு. ஒன்று இனியது; மற்றொன்று இன்னாதது. ஒன்று ஆத்ம வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது; மற்றொன்று பிற்போக்கை உண்டாக்குகிறது. மனிதர்களுக்கிடையில் உள்ள அசுர இயல்பு இனி விரிவாக விளக்கப்படுகிறது. கருத்தில் வைக்கத் தகுதியற்ற எதிர்மறையான எண்ணங்களும் போதனைகளும் கீதையில் காணப்படுவது அரிது. ஈண்டு அத்தகைய கருத்துக்கள் வருவது ஒரு காரத்தை முன்னிட்டேயாம். சாதகர்கள் அவைகளின் தோஷத்தை யறிந்து அவைகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அசுர இயல்பு விரித்து விளக்கப்படுகிறது.
7. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விதுராஸுரா:
ந ஸௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே  
ஆஸுரா: ஜநா-அசுரத் தன்மை கொண்டோர், ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது-தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார், தேஷு ஸௌசம் ந-அவர்களிடம் தூய்மையேனும் இல்லை, ஆசார: ச ந-ஒழுக்கமேனும் இல்லை, ஸத்யம் அபி ந வித்யதே-வாய்மையேனும் காணப்படுவதில்லை.
பொருள் : அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
நலம் தருவது எதுவோ அது செய்யத்தகுந்தது. அது தர்மம் எனப்படுகிறது. கேடு விளைவிப்பது எதுவோ அது செய்யத்தகாதது. அத்தகையது அதர்மம் எனப்படுகிறது. விலங்கு இனங்களும் ஓரளவு நலம் கேடுகளை அறிந்துகொள்கின்றன. அசுர இயல்புடையார்க்கு அவை விளங்குவதில்லை. அவர்கள் மனதில் எழும் எண்ணங்கள் தூயவைகளல்ல, உடலில் ஆகும் செயல் ஒழுக்கமில்லாதது; பின்பு அவர்கள் வாயில் பேசுவது உண்மையல்ல. ஆக, முக்கரணங்களும் அவர்களால் முறைதவறிக் கையாளப்படுகின்றன.
ஏன் அவர்கள் அப்படித் தாறுமாறாக நடந்துகொள்ளுகிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்களிடமிருந்து வரும் விடையாவது :
8. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஸ்வரம்
அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்  
ஜகத் அஸத்யம் அப்ரதிஷ்டம்-இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும், அநீஸ்வரம்-கடவுளற்றதென்றும், அபரஸ்பரஸம்பூதம்-சொல்லுகிறார்கள், காமஹைதுகம்-காமத்தை ஏதுவாக உடையது, அந்யத் கிம் தே ஆஹூ:-இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்?
அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள். சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள். அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர். காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை.
சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம். பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை. பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும், தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான்.
இக்கொள்கை எத்தகைய வாழ்க்கையாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :
9. ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோऽல்பபுத்தய:
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோऽஹிதா:  
ஏதாம் த்ருஷ்டிம் அவஷ்டப்ய-இந்தக் காட்சியில் நிலைபெற்று, அல்பபுத்தய: நஷ்டாத்மாந: - அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள், அஹிதா:-தீமையையே நினைப்பவர்களாக, உக்ரகர்மாண:-கொடிய தொழில் செய்பவர்களாக, ஜகத: க்ஷயாய ப்ரபவந்தி-உலக நாசத்திற்கே முனைகிறார்கள்.
பொருள் : இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.
இந்திரியங்களின் வசப்பட்டு விரைந்து விஷயங்களில் மூழ்குமளவு ஒருவன் புல்லறிவாளன் ஆகிறான். தன்னையே அழித்துக் கொள்ளுதல் அதன் முதற்படி. அதர்மம் அபரிமிதமாய்க் கையாளப்படுகிறது. உலகுக்கும் அது கேடாய் முடிகிறது. பொய்யும் அதர்மமும் வாழ்க்கைத் திட்டமல்ல என்பதற்கு அவனுடைய கொடியே செயலே சான்றாகிறது.
அசுர இயல்புடையவரது தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது என்று வினவுமிடத்து அதன் விரிவான விளக்கம் வருகிறது :
10. காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா:
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தேऽஸுசிவ்ரதா:  
தம்பமாந மதாந்விதா:- டம்பமும் மதமும் பொருந்தியவராய், துஷ்பூரம்-நிரம்பவொண்ணாத,
காமம் ஆஸ்ரித்ய-காமத்தைச் சார்ந்து, மோஹாத் அஸத்க்ராஹாந் க்ருஹீத்வா-மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு, அஸுசிவ்ரதா: ப்ரவர்தந்தே-அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
பொருள் : நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
11. சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா:
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா:  
ப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம்-பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில், உபாஸ்ரிதா:-பொருந்தி, காமோபபோகபரமா: ச-விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ஏதாவத் இதி நிஸ்சிதா:-உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக.
பொருள் : பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், உண்மையே இவ்வளவுதான் என்ற நிச்சய முடையோராய்,
மரணத்தோடு அவர்களது ஆசை முடிவுபெறுவதாக மற்றவர்களுக்குத் தென்படுகிறது. ஆனால் திரும்பப் பிறக்கும்பொழுது அதே ஆசை தோற்றத்துக்கு வருகிறது. ஆகையால் அது பூர்த்தி பண்ண முடியாத ஆசையாகிறது. கொடிய துன்ப துயரங்களை மிகுதியாக அனுபவித்தாலும் லௌகிகர்களுக்கு நற்புத்தி உண்டாவதில்லை. ஒட்டகங்களுக்கு முட்செடிகளில் ஆசை அதிகம். அவைகளைத் தின்னத்தின்ன ஒட்டகங்களின் வாயிலிருந்து ரத்தம் அதிகமாகப் பெருகும். என்றாலும், அவைகள் முட்செடிகளைத் தின்பதை விடுவதில்லை.
அதைப்போல் அநேகரால் ஏமாற்றப்பட்டபோதும் ஆபத்துக்கள் அநேகம் வந்துற்றபோதும் லௌகிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். அடுத்த கணத்தில் எல்லாவற்றையும் மறந்து உலக விஷயங்களையே தேடி அலைகின்றார்கள். ஒருவனது மனைவி இறந்துவிடுகிறாள்; அல்லது தன்னை விட்டு ஓடிவிடுகின்றாள். ஆனாலும் திரும்பவும் விவாகம் செய்துகொள்ள முற்படுகிறான் ! அல்லது அவனது குழந்தை இறந்துவிடுகிறது; கதறி அழுகின்றான் ! பெரிதும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து வருந்துகிறான். என்றாலும் மறு கணத்தில் அந்தக் குழந்தையின் நினைவே இல்லாது அவன் வாழ்க்கை நடத்துகிறான்! குழந்தையைப் பறிகொடுத்த தாய் துக்கத்தால் சோகமாகிவிடுகின்றாள். ஆனால் சற்றுப் பிறகு அவள் தன் நகைகளைச் சரிப்படுத்துவதிலும், நல்ல புடவைகள் உடுத்துவதிலும், வாசனை சோப்பைத் தேடுவதிலும் ஈடுபடுகிறாள்! பெண் குழந்தைகளின் விவாகங்களால் பெற்றோர் தரித்திர தசையை அடைந்து விடுகிறார்கள்; பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன ! இவர்கள் வழக்கு வியாச்சியங்களில் சகல பொருள்களையும் இழந்துவிட்டு வருந்தினாலும் மேலும் வழக்கு சம்பந்தமாக நீதி ஸ்தலத்திற்குப் போவதை நிறுத்துகிறதில்லை. குழந்தைகளைக் காப்பாற்ற வழியில்லாமற் போனாலும் ஒவ்வொரு வருஷமும் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தவறுவதில்லை. என்ன ஆச்சரியம் !
12. ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்  
ஆஸாபாஸஸதை-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால், பத்தா:-கட்டுண்டு, காம க்ரோதபராயணா:-காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க், காமபோகார்தம்-காம போகத்துக்காக, அந்யாயேந அர்த ஸஞ்சயாந்-அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க,
ஈஹந்தே-விரும்புகிறார்கள்.
பொருள் : நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.
செல்வத்தை நேர்மையான வழியில் சம்பாதித்து நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்களானால் அது திரவிய யக்ஞமாகின்றது. பேராசையில் கட்டுண்டு, பொய்யும் களவும் புரிந்து பொருளைப் பெருமிதமாகத் தேடி போகத்தில் மூழ்குவது அசுரச் செயலாகிறது. மனிதர்கள் இருவகுப்பினர்-மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர் (மனுஷ்யர்). அறிவு விளங்கப்பெற்றவர் (மன்-ஹுஷ்யர்). ஈசுவரனை அடையவேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையவர்கள் பின்னர் சொன்ன வகுப்பினர். காமமும் காசாசையும் பிடித்து அலைபவர்கள் மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்கள்.
13. இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்  
மயா அத்ய இதம் லப்தம்-என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது, இமம் மநோரதம் ப்ராப்ஸ்யே-இன்ன மனோரதத்தை இனி எய்துவேன், மே இதம் தநம் அஸ்தி - என்னிடம் இந்த செல்வம் உள்ளது, புந: அபி இதம் பவிஷ்யதி-இனி இன்ன பொருளை பெறுவேன்.
பொருள் : இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”
14. அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி
ஈஸ்வரோऽஹமஹம் போகீ ஸித்தோऽஹம் பலவாந்ஸுகீ  
அஸௌ ஸத்ரு மயா ஹத:-இன்ன பகைவரைக் கொன்று விட்டேன், ச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே-இனி மற்றவர்களைக் கொல்வேன், அஹம் ஈஸ்வர: போகீ-நான் ஆள்வோன், நான் போகி, அஹம் ஸித்த:-நான் சித்தன், பலவாந்-பலவான், ஸுகீ-சுகத்தை அனுபவிப்பவன்.
பொருள் : இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”
15. ஆட்யோऽபிஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்ருஸோ மயா
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா:  
ஆட்ய: அபிஜநவாந் அஸ்மி-நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன், மயா ஸத்ருஸ: அந்ய: க: அஸ்தி-எனக்கு நிகர் வேறு யாவருளர்? யக்ஷ்யே-வேள்வி செய்கிறேன், தாஸ்யாமி-கொடுப்பேன்; மோதிஷ்ய-களிப்பேன், இதி அஜ்ஞாநவிமோஹிதா:-என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்.
பொருள் : நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
16. அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேऽஸுசௌ  
அநேகசித்தவிப்ராந்தா-பல சித்தங்களால் மருண்டோர், மோஹ ஜால ஸமாவ்ருதா:-மோகவலையில் அகப்பட்டோர், காமபோகேஷு ப்ரஸக்தா:-காம போகங்களில் பற்றுண்டோர்,
அஸுசௌ நரகே பதந்தி-இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
பொருள் : பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
மன நிலைக்கு ஏற்றபடி வெளியுலகம் காட்சி கொடுக்கிறது. தெளிந்த மனமுடையவர்களுக்கு உலகம் சுவர்க்கமாகக் காட்சி கொடுக்கிறது. கெட்ட மனமுடையவர்களுக்கு அதே உலகம் கொடிய நரகமாகப் பிரதிபலிக்கிறது.
அசுரர்களும் யாகம் செய்வதுண்டு. அதன் விதம் வருகிறது :
17. ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா:
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்  
ஆத்மஸம்பாவிதா:-இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், ஸ்தப்தா:-முரடர், தந மாந மத அந்விதா:-செல்வச் செருக்கும் மதமுமுடையோர், தே நாமயஜ்ஞை-அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி, தம்பேந அவிதி பூர்வகம் யஜந்தே-டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர்.
பொருள் : இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.
இக்காலத்தில் சிலர் கோயில்கள் கட்டுவிப்பதும், விழாக்கள் கொண்டாடுவதும், ஆராதனை அபிஷேகங்கள் செய்வதும் இத்தகைய சிற்றியல்புகளுடையவைகளாகின்றன. தங்களை விளம் பரப்படுத்திக்கொள்ளுதல் ஒன்றே இவர்களின் கருத்தாகும். கடவுளின் பெருமைக்கென்றே வினையாற்றுவது தெய்வ சம்பத்துடையவர்களது இயல்பு. தங்களது சொந்தப் பெருமைக் கென்றே வினையாற்றுவது மற்றவர்களுடைய இயல்பு.
18. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோऽப்யஸூயகா:  
அஹங்காரம் பலம் தர்பம்-அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:-விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய, அப்யஸூயகா:-பிறரை இகழ்கின்றவர்களாக, ஆத்மபரதேஹேஷு-மற்றவர் உடல்களிலும் உள்ள, மாம் ப்ரத்விஷந்த-என்னை வெறுக்கிறார்கள்.
பொருள் : அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.
தங்களிடத்து உண்மையாகவே அமைந்துள்ள சில மேன்மைகளை மிகைப்படுத்தியும், இல்லாத சில சிறப்புக்களை இருப்பதாகப் பாவித்தும் அகங்கரிக்கின்றனர் அசுர இயல்புடையவர்கள். அவித்தியா சொரூபமான இத்தகைய ஆணவத்தை அகற்றுவது எளிதன்று. பின்பு, தங்களிடத்து வாய்த்த பலத்தையெல்லாம் மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதிலேயே உபயோகிக்கின்றனர். இனி, இறுமாப்பு ஒருவனை நெறி பிறழ்ந்து போகும்படியே தூண்டுகிறது.
எல்லார் உள்ளத்திலும் ஈசுவரன் வீற்றிருக்கிறான் என்பதை மறந்து, அவனது மேலான ஆலயமாகிய உடலைக் கீழ்மைப் படுத்தி இறைவனையே அவர்கள் புறக்கணிக்கின்றனர். அதனால் அசுரர்களுக்கு உண்டாகும் வீழ்ச்சியாவது :
19. தாநஹம் த்விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாம்யஜஸ்ரமஸுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு  
த்விஷத: க்ருராந்-வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும், நராதமாந் தாந் அஸுபாந், -உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, அஹம் அஜஸ்ரம்-நான் எப்போதும், ஸம்ஸாரேஷு-சம்சாரத்தில், ஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி -அசுர பிறப்புகளில் எறிகிறேன்.
பொருள் : இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.
வினைக்கேற்ற பிறவியுண்டாகிறது. வினையின் வேகம் தொடர்ந்து போகுமளவு பிறவியும் வளர்கிறது. இக்காரணத்தை முன்னிட்டே பகவான் இங்ஙனம் பகர்கிறார்:
20. ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்  
கௌந்தேய-குந்தியின் மகனே! மூடா: மாம் அப்ராப்ய ஏவ-இம்மூடர் என்னை யெய்தாமலே,
ஜந்மநி ஜந்மநி-பிறப்புத் தோறும், ஆஸுரீம் யோநிம் ஆபந்நா:-அசுரக் கருக்களில் தோன்றி, தத: அதமாம் கதிம் யாந்தி-மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள்.
பொருள் : பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!
கெட்ட இயல்பு ஒருவனை இன்னும் அதிகக் கேடுடையவனாக்குகிறது. ஆதலால் கீழ்மையிலேயே அவன் மேலும் மேலும் செல்பவனாகின்றான். மலையுச்சியினின்று கீழே உருண்டு வருகிற கல் பள்ளத்தாக்கு வரையில் விரைவது போன்று அசுரன் ஒருவன் புல்லிய நிலையின் எல்லை காணும் வரையில் கீழ்மையுறுகிறான்.
இத்தகைய கீழ்மைக்கு மூலகாரணம் யாது ? விடை வருகிறது :
21. த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநமாத்மந:
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்  
இதம் ஆத்மந: நாஸநம்-இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான, த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம்-இம் மூன்று நரக வாயில்கள், காம: க்ரோத: ததா லோப-காமம், சினம், அவா, தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத்-ஆதலால், இம்மூன்றையும் விடுக.
பொருள் : ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.
அசுரப்பான்மைக்குப் பிறப்பிடம் ஈண்டுக் காட்டப்படுகிறது. இம்மூவிதக் குற்றங்களிலிருந்து அரக்கத்தன்மை வளர்கிறது. லோபம் என்பது போகப் பொருள்களைத் தனக்கென்றே கட்டிப் பிடித்தலாம். மனிதன் மேன்மையடைதற்கு இம்மூன்றும் இடந் தருவதில்லை. இவைகளை நீக்கினால் மனிதன் மேலோன் ஆவான். இவைகளில் உழன்று உழன்று இறுதியில் உள்ளத்தினுள் விரக்தியுண்டாகும் வரையில் ஒருவன் அசுரப் பிறவிகளில் அழுந்தியாகவேண்டும்.
பின்பு அவன் எப்படி மேன்மையடைகிறான்? விடை வருகிறது :
22. ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர:
ஆசரத்யாத்மந: ஸ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்  
கௌந்தேய-குந்தியின் மகனே, ஏதை: த்ரிபி: தமோத்வாரை: விமுக்த:-இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன், நர: ஆத்மந: ஸ்ரேய: ஆசரதி-தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான், தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.
பொருள் : இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.
துக்கங்களுக்கெல்லாம் காரணம் அக்ஞானம். அக்ஞானத்தினின்றே காமம், குரோதம், லோபம் வருகின்றன. ஆக, அக்ஞான இருள் நரகத்துக்கு வாயிலாகிறது. அதினின்று விலகியவன் சிறப்பு எய்துகிறான். முக்தியடைதல் அவனுக்கு இயல்பாக வந்தமைகிறது. கெட்டவன் ஒருவன் திரும்பி மேல்நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டால் அவன் அதிவிரைவில் முன்னேற்றமடைந்து வருகிறான். ஏனென்றால் காமத்தையும் குரோதத்தையும் லோபத்தையும் அவன் நீக்க வல்லவனாகிறான்.
அசுரத் தன்மையை அகற்றி மேன்மையடைதற்கு வழிகாட்டுவது எது? விடை வருகிறது :
23. ய: ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்  
ய: ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவன் சாஸ்திர விதியை மீறி, காமகாரத: வர்ததே-விருப்பத்தால் தொழில் புரிவோனோ, ஸ: ஸித்திம் ந அவாப்நோதி-அவன் ஸித்தி பெற மாட்டான், பராம் கதிம் ந-பரகதி அடைய மாட்டான், ஸுகம் ந-அவன் இன்பம் எய்த மாட்டான்.
பொருள் : சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.
சித்தி அல்லது பரிபூரணத் தன்மையடைகின்றவனுக்கு வாழ்க்கை சுகமுடையதாகத் துவங்கி முக்தியடைதலில் முடிவு பெறுகிறது. இன்னதைச் செய் என்றும், இன்னதைச் செய்யாதே என்றும் சாஸ்திரம் ஆணையிடுகிறது. ஆசைக்கு அடிமையானவன் செய்யவேண்டாமென்பதைச் செய்கிறான்; செய்ய வேண்டியதைச் செய்யாது தவிக்கிறான். சாஸ்திரமோ மனிதனை மேலோனாக்குதற்கென்று அமைந்தது. ஆசையை வென்று சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்க்கு அசுர இயல்பைக் களைந்து தெய்வ சம்பத்தைப் பெறுவது எளிதாகிறது.
இக்காரணத்தை முன்னிட்டுச் சாதகன் ஒருவன் செய்ய வேண்டியதாவது :
24. தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யாகார்யவ்யவஸ்திதௌ
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ரவிதாநோக்தம்
கர்ம கர்துமிஹார்ஹஸி  
தஸ்மாத் தே-ஆதலால் உனக்கு, இஹ கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ-எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில், ஸாஸ்த்ரம் ப்ரமாணம்-நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள், ஜ்ஞாத்வா-அதை அறிந்து, ஸாஸ்த்ர விதாந உக்தம்-சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை, கர்தும் அர்ஹஸி-செய்யக் கடவாய்.
பொருள் : ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.
சம்சார சாகரத்தைக் கடந்து அப்பாற் செல்லுதற்கு சாஸ்திரம் உற்ற துணையாகிறது. ஆதலால் இவ்வுலகில் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் இதினின்று மீளுதற்குக் கையாளுகிற கர்மங்களெல்லாம் சாஸ்திரத்துக்கு உடன்பாடானவைகளாயிருக்க வேண்டும். முற்றிலும் தெய்வ சம்பத்தில் ஊறியிருப்பவர்கள் இயல்பாகவே சாஸ்திரத்தின் ஆணையைப் பின்பற்றுபவர்களாயிருப்பார்கள். அவர்களுடைய செயலும் சாஸ்திரப் பிரமாணமும் ஒன்றுபட்டிருக்கின்றன.
நீங்கள் எந்த சாஸ்திரத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஓர் அன்பர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார். நான் ஒரு சாஸ்திரத்தையும் பின்பற்றுவதில்லை. என் சித்தமிசை குடிகொண்டுள்ள தெய்வத்தின் அனுமதி கேட்டு என் வாழ்க்கையை நடாத்துகிறேன். ஆகையால் நான் தவறிப் போவதில்லை; என் வாழ்க்கை சாஸ்திரத்துக்கு முரண்படாது என்றார் அவர்.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே
தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகோ நாம
சோடசோத்யாய:

பதினேழாம் அத்தியாயம்
பகவத்கீதை | சிரத்தாத்ரய விபாக யோகம்



அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.
மூன்றுவித சிரத்தை 1-7 மூன்றுவித உணவு 8-10 -மூன்று வித ஆராதனை 11-13 -மூன்றுவிதத் தபசு 14-19 -மூன்றுவித தானம் 20-22 -குறைகளை நிறையாக்குதல் 23-28.
அர்ஜுந உவாச
1. யே ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:  
அர்ஜுந உவாச, க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, யே ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவர்கள் சாஸ்திர விதியை மீறி, ஸ்ரத்தயா அந்விதா: யஜந்தே-ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ, தேஷாம் நிஷ்டா து கா-அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம:-சத்துவமா அல்லது ரஜசா, தமசா?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)
ஈண்டுக் கேள்வியொன்று கிளப்ப அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. முன்னேற்றமடைய வேண்டுமென்று யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவனிடத்து சிரத்தையிருக்கிறது. ஆதலால் அவன் காமம், குரோதம், லோபம் இவைகளின் வசப்படமாட்டான். ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி ஒன்றும் நினையாது தேவாராதனை செய்கிற பாங்குடன் கர்மங்களில் ஈடுபடுகிறான். அப்படிச் செய்வதால் அவன் மேன்மையடைகின்றானா இடைநிலையில் ரஜோகுணத்துக்குட்பட்டு நின்றுவிடுகிறானா அல்லது தமோகுணத்துக்கு உரியவனாய்க் கீழ்மையடைகின்றானா? மனித வாழ்க்கையில் சாஸ்திரத்தின் ஆணை முற்றிலும் இன்றியமையாததா, என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
2. த்ரிவிதா பவதி ஸ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்ருணு  
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், தேஹிநாம் ஸ்வபாவஜா-ஜீவர்களிடம் இயற்கையான சுபாவத்தால் உண்டான, ஸா ஸ்ரத்தா-அந்த நம்பிக்கை, த்ரிவிதா பவதி-மூன்று வகையாகத் தோன்றுகிறது, ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி-சாத்விகம், ராஜசம், தாமசம் என, தாம் ஸ்ருணு-அதைக் கேள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.
முற்பிறப்பில் செய்த வினைகள் சம்ஸ்காரங்களாக மனதில் பதிந்து அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக வடிவெடுக்கிறது. பிறகு இயல்புக்கு ஏற்றபடி அவன் புதிய ஜன்மத்தில் வினையாற்றுகிறான். இயல்பையும் வினையையும் கொண்டு ஒருவனிடம் படிந்துள்ள குணத்தைக் கண்டுபிடிக்கலாம்.
3. ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்ரத்தா பவதி பாரத
ஸ்ரத்தாமயோऽயம் புரு÷ஷா யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:  
பாரத-பாரதா, ஸர்வஸ்ய ஸ்ரத்தா ஸத்த்வாநுரூபா பவதி-யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே அமைகிறது, அயம் புருஷ: ஸ்ரத்தாமய:-மனிதன் சிரத்தை மயமானவன், ய: யத் ஸ்ரத்த: ஸ:-எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ அவன்,
ஸ: ஏவ-அந்தப் பொருளேதான் ஆகிறான்.
பொருள் : பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.
விழிப்பும், மன எழுச்சியும், வகையுடன் விரைந்து வினையாற்றுதலும், வினையாற்றுதலில் உள்ள மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இத்தனையும் சேர்ந்து சிரத்தையெனப் பெயர் பெறுகிறது. இதுவரையில் மனிதன் அடைந்துள்ள பாங்கு, இனி அவன் அடையப்போவது, இவை யாவையும் அவன்பால் உள்ள சிரத்தையைக் கொண்டு அளந்துவிடலாம். வானை நோக்கி வீசிய கல், அதற்குக் கொடுத்த வேகத்துக்கு ஏற்ப உயரப் போகிறது. மரம் தன் உள்வலிவுக்கு ஏற்ப வானுற வளர்கிறது. அங்ஙனம் மனிதனிடத்துள்ள சிரத்தைக்கேற்ப அவன் மேலோன் ஆகிறான். நசிகேதன் என்னும் ரிஷி புத்ரன் சிரத்தையே வடிவெடுத்தவன் ஆனான். அவனுடைய தந்தை ஆற்றிய விச்வஜித் யக்ஞம் குறைபட்ட யக்ஞமாயிருந்தது. மைந்தனுக்கு அக்குறையைக் காணப்பிடிக்கவில்லை. ஆகவே சிரத்தையானது அவனுடைய மனதுதகத்து எழுந்தது. தந்தையின் ஆணைப்படி அவன் யமலோகத்துக்குச் சென்றான். பிதாவின் குறைபிலையை நிறைநிலையாக்கினான். உலக முன்னேற்றத்துக்கு ஏதுவான முயற்சி யாது என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் தானே ஆத்ம ஞானத்தை யமனிடமிருந்து கற்றுக் கொண்டான். இத்தனையும் சீரிய சிரத்தையால் அவனுக்கு அமைந்தன. ஒருவனுடைய சிரத்தையை அளப்பது அவனையே அளப்பதற்கு ஒப்பாகிறது.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
சிரத்தையானது வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வடிவெடுக்கிறது. அவைகளில் ஒன்று ஆராதனை அல்லது வழிபாடு. அது வருமாறு :
4. யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷõம்ஸி ராஜஸா:
ப்ரேதாந்பூதகணாம்ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:  
ஸாத்த்விகா தேவாந் யஜந்தே-ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர், ராஜஸா: யக்ஷரக்ஷõம்ஸி-ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்), அந்யே தாமஸா ஜநா:-மற்றத் தமோ குணமுடையோர், ப்ரேதாந் பூதகணாந் ச-பிரேத பூத கணங்களுக்கு, யஜந்தே-வேள்வி செய்கிறார்கள்.
பொருள் : ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.
அவரவர் தன்மைக்குத் தகுந்தாற்போன்று மனிதர் மனிதரோடு இணக்கம் வைக்கிறார்கள். நல்லவர் நல்லாரைச் சார்தலும், கெட்டவர்கள் கெட்டவர்களோடு இணக்கம் வைப்பதும் இயல்பு. அதேபோன்று தெய்வ வழிபாட்டிலும் படித்தரங்கள் பல அமைகின்றன. சாத்விக குணமுள்ள நல்லார் பரமாத்மாவைப் பற்றி நிற்கின்றார்கள். பரமாத்மாவின் சொரூபங்களாக சிவம், சக்தி, விஷ்ணு, கணபதி, சுப்ரமணியம் முதலிய தெய்வங்கள் இலங்குகின்றன. இயற்கையில் துஷ்டத்தனம் நிறைந்த சக்தியைக் கையாளுபவர்கள் ரஜோகுணத்தினின்று வந்த சிற்றியல்பை உடையவர்களேயாம். அத்தகையவர்கள் வழிபாட்டுக்காகவென்று கற்பித்துக்கொள்ளும் தெய்வங்களும் கொடூரம் வாய்ந்தவைகளாக, துஷ்டத்தனம் நிறைந்தவைகளாக இருக்கும். சோம்பலும் அக்ஞான இருளும் நிறைந்தவர்கள் அதற்கேற்ற இயற்கையின் பகுதியைப் பாராட்டுகிறார்கள். தமோகுணம் பொருந்தியவர்கள் கற்பிக்கும் வனதேவதைகள் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்கு செய்பவைகளாகத் தென்படும். இவர்களுள் சாத்துவிக சுபாவமுடையவர்கள் மிகச் சிலர். பெரும்பான்மையோர் போக்கு எத்தகையது எனின்:
5. அஸாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:  
6. கர்ஷயந்த: ஸரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:
மாம் சைவாந்த:ஸரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஸ்சயாந்  
யே ஜநா:-எந்த மக்கள், அஸாஸ்த்ரவிஹிதம்-நியமத்தை மீறி, தம்ப அஹங்கார ஸம்யுக்தா: - டம்பமும் அகங்காரமுமுடையராய், காமராக பல அந்விதா:-விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரம் தப: தப்யந்தே-கோரமான தவஞ் செய்கிறார்களோ.
ஸரீரஸ்தம் பூதக்ராமம் ச-உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும், அந்த:ஸரீரஸ்தம் மாம் ஏவ - அகத்திலுள்ள என்னையும், கர்ஷயந்த:-வருத்துகிறார்கள், தாந் அசேதஸ:-அந்த அறிவு கெட்டவர்கள், ஆஸுர நிஸ்சயாந் வித்தி= அசுர நிச்சய முடையோரென்றுணர்.
பொருள் : (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.
பொருள் : இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.
அசுர இயல்புடையவர்கள் புரியும் கொடுந்தவம் அவர்களுக்கே இன்பம் தருவதில்லை. முள்ளின்மீது படுத்துக்கிடக்கின்றனர்; கையைத் தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கின்றனர். பார்க்கின்றவர்களுக்கும் அக்காட்சி துன்பமளிக்கிறது. சூரியனையே உற்று நோக்குதல் போன்ற செயல்களால் இந்திரியங்களை அவர்கள் பாழாக்குகிறார்கள். மனதினுள் மனசாக்ஷியாக சர்வேசுவரன் வீற்றிருக்கிறார். சலனமடைந்த நீரில் சந்திர பிம்பம் நன்றாக விளங்காததுபோன்று பகட்டும், ஆணவமும், ஆசையும் நிறைந்துள்ள அவர்களது மனதில் ஈசுவர சான்னித்தியம் உணரப்படுவதில்லை. இறைவன் புறக்கணிக்கப்படுகிறார். இன்ப துன்பம் கடந்துள்ள அவர் துன்புறுத்தப்படுவர் போன்று காணப்படுகிறார். சான்றோர்கள் செல்லும் நெறி இதுவன்று. ஆதலால் இது சாஸ்திரத்துக்குச் சிறிதும் பொருந்தாது. இத்தகைய பாங்குடையவர்களே அசுரர் ஆவர்.
இன்னும் எவைகளைக்கொண்டு மக்களை வகைப்படுத்தலாம் என்று கேட்குமிடத்து அதற்கு விடை வருகிறது : (5-6)
7. ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஸ்ருணு  
ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி-ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும், த்ரிவித: பவதி - மூன்று வகைப்படுகிறது, ததா யஜ்ஞ: தப: தாநம்-அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும்,
தேஷாம் இமம் பேதம்-அவற்றின் வேற்றுமையைக், ஸ்ருணு-கேள்.
பொருள் : ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.
யக்ஞம் அல்லது யாகம் என்பது நாளடைவில் தேவாராதனை என்னும் வடிவெடுத்துள்ளது. முன்னாளில் தீ மூட்டி அதன்மூலம் நிகழ்ந்த வழிபாடானது காலக்கிரமத்தில் ஆலய வழிபாடாக மாறியிருக்கிறது.
8. ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா:  
ஆயு: ஸத்த்வ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி-உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி, விவர்தநா:, ரஸ்யா: ஸ்நிக்தா:-மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, ஸ்திரா: ஹ்ருத்யா: ஆஹாரா:-உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள், ஸாத்த்விகப்ரியா:-சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.
பொருள் : உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.
பிரீதியானது என்பது பசியை உண்டுபண்ணுவது என்றும், ஸ்திரமானது என்பது நெடுநேரம் தாங்குவது என்றும் பொருள்படும். சத்தில்லாத உணவு விரைவில் ஜீரணமாகிவிடுகிறது. அது உடலுக்கு பலம் கொடுக்காது. மற்று, ஜீரணம் பண்ணமுடியாத கடினமான உணவு ஜீரணக் கருவிகளைக் கெடுத்துவிடுகிறது. அதனால் ஆயுளும் குறைந்துபோம். இந்த உணவு வகைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுதல் இயல்பு. காலையில் உண்ணும் உணவு இலேசானதாக இருக்கவேண்டும். இரவில் உண்ட உணவில் பெரும் பகுதி தூங்கப்போகும்பொழுது ஜீரணமாயிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களில் உடலுக்குக் கதகதப்பைத் தரும் உணவை அருந்துதல் அவசியம். வெப்பம் நிறைந்த நாடுகளிலோ குளிர்ச்சி தருகிற உணவு வேண்டப்படுகிறது.
பகல் வேளையில் வேண்டியவாறு உணவு அருந்து, ஆனால் இரவில் அருந்தும் உணவைப் பெரிதும் குறைத்துவிடு.
9. கட்‌வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஸோகாமயப்ரதா:  
கடு அம்ல லவண தீக்ஷ்ண-கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும், அதிஉஷ்ண-அதிகச் சூடு கொண்டன, ரூக்ஷ விதாஹிந:-உலர்ந்தன, எரிச்சலுடையன, ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: - இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர், து:க ஸோக ஆமயப்ரதா:-இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.
பொருள் : கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.
நாவில் சுரீலென்று பாய்கிறது; கண் சிவந்து கண்ணீர் சொட்டுகிறது; நாசியில் நீர் வடிகிறது; தலை சுழல்கிறது; வயிறு எரிகிறது-இத்தகைய பாங்குடையவைகள் ரஜோகுணத்தை வளர்க்கும் உணவுகள். ஆயுளைக் குறைக்கும் தன்மை இவைகளிடத்தில் உண்டு.
10. யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்  
யத் போஜநம் யாதயாமம்-எந்த உணவு கெட்டுப் போனது, கதரஸம்-சுவையற்றது பூதி - அழுகியது, பர்யுஷிதம் ச-பழையது, உச்சிஷ்டம் ச-எச்சில் பட்டது, அமேத்யம் அபி-அசுத்தம், தாமஸப்ரியம்-தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.
பொருள் : பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.
மூன்று மணி நேரத்துக்கு முன்பு சமைக்கப்பட்ட உணவு யாமம் கழிந்த உணவாகிறது. ஆகையால் அது சுவையிழந்து விடுகிறது. மேலும் அது ஊசிப்போய் துர்நாற்றமெடுக்கிறது. முந்திய இரவு சமைத்தது பழைய உணவாகிறது. மற்றொருவர் உண்டு எஞ்சியிருக்கும் உணவு எச்சில்பட்டது அல்லது உச்சிஷ்டமானதாகிறது. இன்னும் சில உணவுகள் தீண்டுதற்கும் தகுதியற்றவைகளாகின்றன. தமோகுண இயல்புடையார் இத்தகைய உணவுகளை விருப்புடன் புசிக்கின்றனர்.
இனி, ஈசுவர ஆராதனையிலுள்ள மூன்று படித்தரங்கள் விளக்கப்படுகின்றன:
11. அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக:  
ய: விதித்ருஷ்ட:-எவர் விதிகள் சொல்லியபடி, யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ-வேள்வி புரிதல் கடமையென்று, இதி மந: ஸமாதாய-மனம் தேறி, அபலாகாங்க்ஷிபி: இஜ்யதே-பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ, ஸ ஸாத்த்விக:-அந்த வேள்வி சத்துவ குணமுடையது.
பொருள் : பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.
குழந்தையைப் பராமரிக்கும் தாய் கைம்மாறு கருதாது சேவையைத் தன் கடமையென்று செய்கிறாள். நல்லார் கடவுள் வழிபாடு செய்வது கைம்மாறு கருதியல்ல. கடவுளை வழிபடுவதே அவர்களது இயல்பு. அந்த ஆராதனை சாஸ்திர ஆணைக்கு முற்றும் ஒத்ததாயிருக்கிறது. சத்துவகுண மேலீட்டால் வரும் வேள்வி அத்தகையது. பாண்டவர் ஐவர் திரௌபதியுடன் வனவாசம் செய்தபொழுது அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள்  எண்ணிக்கையில் அடங்கா. தர்மமே வடிவெடுத்துள்ள தங்களுக்கு இத்தனை துன்பங்கள் ஏன் வரவேண்டும்? என்று திரௌபதியானவள் கணவன் தர்மராஜாவிடம் கேட்டாள். அதற்கு விடையாக தர்மராஜா பகர்ந்ததாவது:- தேவீ, தூரத்தில் தென்படும் ஹிமயமலையைப் பார். மகிமை நிறைந்த அதை நான் வணங்குகிறேன். துன்பம் ஒன்றையும் நான் அறியேன். இங்ஙனம் நல்லதை வணங்குவது அவரது இயல்பு ஆயிற்று.
சாத்விகம் நிறைந்தவர்களுடைய மனப்பான்மைக்கு இது சான்றாகும்.
12. அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்
இஜ்யதே பரதஸ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்  
து பரதஸ்ரேஷ்ட-பாரதரிற் சிறந்தாய்! தம்பார்தம் ஏவ ச பலம் அபி அபிஸந்தாய- ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு, யத் இஜ்யதே- வேள்வி வேட்கப் படுகிறதோ, தம் ராஜஸம் யஜ்ஞம் வித்தி-அது ராஜச வேள்வி என்று உணர்
பொருள் : பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!
கடையில் பண்டம் மாற்றுவது போன்று, தனது விருப்பத்தை நிறைவேற்றிவைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி வணங்குவது சிறந்த வழிபாடாகாது. தற்பெருமைக்காகவென்று பூஜைகள் பல செய்வாரும் உளர். தங்களை விளம்பரப்படுத்திகொள்வதற்காகத் தெய்வ வழிபாடு செய்கிறவர்களும் உண்டு. இவ்விருவித ஆராதனைகள் ரஜோ குணத்தினின்று உதிப்பவைகளாம்.
13. விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்
ஸ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே  
விதிஹீநம்-விதி தவறியது, அஸ்ருஷ்டாந்நம்-பிறர்க்குணவு தராததும், மந்த்ரஹீநம்-மந்திர மற்றது, அதக்ஷிணம்-தக்ஷிணையற்றது, ஸ்ரத்தாவிரஹிதம்-நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது, யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே-இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.
பொருள் : விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.
எந்த ஆராதனையில் குற்றமிருக்கிறதோ அது வேதநெறி வழுவியதாகும். அன்னதானம் எல்லா உயிர்களுக்குமிடையிலுள்ள தொடர்வை நிலைநாட்டுகிறது. அன்னம் வழங்காதவிடத்து வேற்றுமை பரவுகிறது. அதனால் கேடு விளைகிறது. நல்லெண்ணமில்லாத செயல் மந்திரமில்லாத செயல் எனப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாகவுள்ள எண்ணமே அதற்குச் சிறப்பளிக்கிறது. ஆழ்ந்த எண்ணமில்லாத வழிபாடு யந்திரம் செய்கிற செயலுக்கு ஒப்பாகிறது. கடவுள் வழிபாடு சம்பந்தமான கிரியைகளைப் பிரதிபலன் எதிர்பாராது செய்துவைப்பவர் புரோகிதர் ஆகிறார். புரோகிதர்க்கும் அறிவு ஒழுக்கமுடைய மற்றவர்க்கும் வழங்கும் பொருள் தக்ஷிணை எனப்படுகிறது. தக்ஷிணை வழங்காத வழிபாடானது பிறரைப் பொருள் படுத்தாதது எனவே அது வழிபாடாகாது. ஊக்கமின்றி, விசுவாசமின்றிக் கடனைக் கட்டுவது போன்று செய்யப்படும் காரியம் சிரத்தையற்றதாகிறது. இத்தனை குறைபாடுகளோடு கூடியதால் அந்த ஆராதனை கீழ்த்தரமானதாகிறது.
மனிதன் சிரத்தையோடு எதைப் பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணைபுரிகிறது. தவம் யாது என்பது இனி விளக்கப்படுகிறது.
14. தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஸௌசமார்ஜவம்
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே  
தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம்-தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், ஸௌசம் ஆர்ஜவம் ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச-தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை, ஸாரீரம் தப உச்யதே-இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
பொருள் : தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
தப: என்பது உலையில் உருக்குதல் என்று பொருள்படுகிறது. பூமியில் வெட்டிய தாதுக்களை உருக்கித் தூய உலோகங்களாக்கிறோம். துருப்பிடித்த உலோகங்களை உருக்கிப் புதியதாக்குகிறோம். அங்ஙனம் தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பிக்கிறான். மெய், மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களோடு கூடியவன் மனிதன். இம்மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அதன் விவரம் வருகிறது.
பரப்பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். பாரமார்த்திக வாழ்க்கையில் புதிய பிறவியெடுத்தவர்கள் பிராம்மணர். நல்வாழ்க்கையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பவர்கள் குருமார்கள். மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்களை வணங்குவது மேன்மையடைதற்கு உற்ற உபாயம். நீராடி உடலைத் தூயதாய் வைத்திருத்தல் வேண்டும். காயத்தைக்கொண்டு செய்கிற செயல்களெல்லாம் ஒழுக்கம் நிறைந்திருக்குமிடத்து அது ஆர்ஜவம் அல்லது நேர்மையெனப் பெயர் பெறுகிறது. சம்போகத்துக்குக் கருவியாயிருப்பது உடல். இந்திரியங்கள் வாயிலாக வரும் அவ் இன்பங்கள் துன்பங்களாகப் பிறகு பரிணமிக்கின்றன. போகம் என்னும் குறைவின்கண் சென்றழியாது யோகம் என்னும் நிறைநிலையில் தன்னைக் காப்பது பிரம்மசரிய விரதமாம். தேகத்தால் மற்ற தேகங்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பது அஹிம்சை உடலைக் கொண்டு செய்கிறபடியால் இவையாவும் ஒன்று சேர்ந்து சரீர சம்பந்தமான தவமெனப்படுகிறது.
15. அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே  
யத் அநுத்வேககரம் ஸத்யம் ச-சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, ப்ரியஹிதம்-இனியது, நலங் கருதியதுமாகிய, வாக்யம் ச-சொல்லுதல், ஸ்வாத்யாய அப்யஸநம் ஏவ-கல்விப் பயிற்சி, வாங்மயம் தப: உச்யதே-இவை வாக்குத் தவமெனப்படும்.
பொருள் : சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.
காயத்தால் அடித்துத் துன்புறுத்துவதைவிடக் கொடியது கடுஞ்சொல் சொல்லிக் காய்தல். தவசி ஒருவனுக்கு அது பொருந்தாது. சில வேளைகளில் உண்மையை உரைக்குங்கால் அது துன்பந்தருவதாகிறது. ஆதலால் பொய் பேசலாமாவென்றால் அது ஒண்ணாது. சத்தியத்தையே சொல்லவேண்டும். எப்போக்கில் சத்தியம் சொல்லவேண்டும்? ஏற்றுக்கொள்பவர்களுக்கு இன்பம் தருவதாய் அது இருத்தல் வேண்டும்.
மெய்ம்மையே மொழிந்து முகஸ்துதி செய்யலாமா? கடும் சொல்லைக் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் மிகக் குறைவு. இச்சகம் கேட்டு, இறுமாப்புற்றுக் கெட்டுப் போனவரோ பலர். ஆகையால் முகஸ்துதி மொழியலாகாது. கேட்கின்றவர்களுக்கு இதம் தரும் இன் சொற்களையே செப்புதல் வேண்டும்.
பரத்தினை சாக்ஷõத்கரித்த பெருமக்கள் பூரித்துப் பகர்ந்துள்ள ஆப்த வாக்கியங்களே வேதமெனப்படுகின்றன. இதை வேதாந்தமென்பது இன்னும் பொருத்தமுடையதாகும். வேத வேதாந்தம் எம்மொழியில் வேண்டுமானாலும் அமையலாம். அவை யாண்டும் அருள் நிறைந்திருக்கும். அத்தகைய சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதிப் பழகுவதால் சொல் சுத்தப்படுகிறது. பிறகு அது சாதகனது சொந்த அருள் மொழியாகவும் வடிவெடுக்கிறது. இங்குப் பகர்ந்துள்ள நான்கு பகுதிகளும் முறையாக அமையப்பெற்றதே வாக்கு மயமான தபசாகிறது.
16. மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:
பாவஸம்ஸுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே  
மந: ப்ரஸாத:-மன மகிழ்ச்சி, ஸௌம்யத்வம்-அமைதி, மௌநம்-மௌனம், ஆத்மவிநிக்ரஹ: - தன்னைக் கட்டுதல், பாவஸம்ஸுத்தி:-எண்ணத் தூய்மை, இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே-இவை மனத் தவமெனப்படும்.
பொருள் : மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத்தவமெனப்படும்.
சோர்வடையாது, குழப்பமடையாது, குதூகலத்தில் அமைதியுற்றிருத்தல் மனப்பிரசாத்மாம். சீரிய எண்ணங்களே உள்ளத்தில் உதிக்க இடந் தருதலும், கெட்ட எண்ணங்களை வரவொட்டாது தடுத்தலும், ஈசுவர சிந்தனை தைலதாரை போன்று ஊற்றெடுப்பதும் மௌன மெனப்படும். சொல்லிலும் செயலிலும் விடச் சிந்தனையில் தன்னடக்கம் பயிலுதல் சாலச்சிறந்தது. சிந்தனையில் அடக்கம் பழகியவனுக்கு வாயடக்கமும் மெய்யடக்கமும் தாமே வந்து அமைகின்றன. மனதில் உண்டாகிற உணர்ச்சி பாவமெனப்படுகிறது. வியவகார வேளையிலும் இந்த உணர்ச்சி தூயதாயிருத்தல் வேண்டும்.
17. ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே  
அபலாகாங்க்ஷிபி: யுக்தை: நரை:-பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால், பரயா ஸ்ரத்தயா தப்தம்-உயர்ந்த நம்பிக்கையுடன், தத் த்ரிவிதம் தப:-மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம், ஸாத்த்விகம் பரிசக்ஷதே-சாத்வீகமெனப்படும்.
பொருள் : பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.
பயனை விரும்புமளவு தவம் புனிதத்தை இழக்கிறது. பயன் விரும்பாதிருப்பதும், செய்யும் தவத்தை நிறுத்தாதிருப்பதும் சாத்விகர்களது போக்கு. வெற்றியே வாய்த்திடினும் தோல்வியே தோன்றிடினும் அவைகளால் அலக்கழிக்கப்படாதிருப்பவர்கள் யோகத்தில் உறுதிபெற்றவர்களாகின்றார்கள். அவர்களது பெரு முயற்சியோ ஒருபொழுதும் தளர்ச்சியடைவதில்லை. முக்கரணங்களைக் கொண்டு அவர்கள் முறையாகப் பாடுபடுகின்றனர்.
18. ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்  
யத் தப:-எந்த தவம், ஸத்காரமாநபூஜார்தம் ச ஏவ-மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்), தம்பேந க்ரியதே-ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய, இஹ ராஜஸம் ப்ரோக்தம்-தவம் ராஜசமெனப்படும், தத் அத்ருவம் சலம்-அஃது நிலையற்றது; உறுதியற்றது.
பொருள் : மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.
தவம் ஒன்றுதான் தங்களைத் தக்கவர்களாகத் திருத்தியமைக்கிறது என்ற தெளிவு ராஜஸ இயல்புடையவர்களுக்கு வருகிறதில்லை. வெறும் வெளி வேஷத்துக்காகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள். தவமுடையவர்களென்று மற்றவர்கள் தங்களைப் பாராட்டி வரவழைக்க வேண்டும்; போற்றிப் புகழவேண்டும்; வீழ்ந்து வணங்க வேண்டும் - இப்பாங்குடன் தவமிழைப்பவர் போன்று அவர்கள் நடிக்கின்றனர். பாசாங்காகச் செய்யும் அத்தவம் சில நாட்களுக்கு நடைபெறும். பிறகு அது இல்லாது மறைந்து போகும். செய்யும் பொழுதே அதில் உறுதிப்பாடு ஒன்றும் இராது. இப்பூவுலகில் மட்டும் அது பெயரையும் புகழையும் தற்காலிகமாகத் தருகிறது.
19. மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்  
யத் மூடக்ராஹேண-எந்த மூடக் கொள்கையுடன், ஆத்மந: பீடயா வா-தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு, பரஸ்ய உத்ஸாதநார்தம் க்ரியதே-பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய, தத் தப: தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தவம் தாமசம் எனப்படும்.
பொருள் : மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.
விவேகமில்லாதவர்கள் தவத்தின் உட்கருத்தை உள்ளபடி அறிகிறதில்லை. திரிவுபட அதைப் பொருள்படுத்துகிறார்கள். பட்டினி கிடந்து, உடலைக் குலைத்து, அதைத் தீயில் வாட்டி, நீரில் நனைத்துச் சிறிது சிறிதாகத் தற்கொலை செய்வது போன்று தங்களையே அவர்கள் துன்புறுத்திக்கொள்கிறார்கள். அல்லது ஏவல் முதலிய மாந்திரிகச் செயல்களால் பிறரை அழிக்க அவர்கள் முயலுகிறார்கள். அக்ஞான இருளில் தோன்றிய இத்தகைய தபசு தாமசமெனப்படுகிறது.
20. தாதவ்யமிதி யத்தாநம் தீயதேऽநுபகாரிணே
தேஸே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்  
தாதவ்யம் இதி யத் தாநம்-கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம், தேஸே காலே ச பாத்ரே ச-தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும், அநுபகாரிணே தீயதே - கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ, தத் தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்-அந்த தானம் சாத்வீகமென்பர்.
பொருள் : கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.
செய்த உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் எதிர்பார்ப்பது வியாபாரமாகிறது; அது தானமாகாது. தனக்குப் பயன்படும் பொருள் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டுமென்று மனமுவந்து கொடுப்பது தானம். கொடுத்த பொருள் யாரிடம் சென்றால் பலருக்குப் பெரிதும் பயன்படுமோ அவரே தகுந்த பாத்திரமாகிறார். ஒரு நாட்டிலிருப்பவர்க்கு வேறு ஒரு நாட்டிலுள்ள நிலம் அல்லது பொருளை தானம் பண்ணுவது தக்கவிடத்தில் செய்யப்பட்டதாகாது. இருக்குமிடத்திலேயே நன்கு பயன்படுவதே சிறந்த தானமாகிறது. பயன்படுத்துகிற காலத்துக்கு மிக முன்போ பின்போ கொடுப்பது காலத்தில் செய்த தானமாகாது. தக்க தருணத்தில் பயன்படும்படி தானம் செய்வதே மேலானது.
21. யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வா புந:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்  
து யத் பரிக்லிஷ்டம் ச-ஆனால் மன வருத்தத்துடன், ப்ரத்யுபகாரார்தம் வா-கைம்மாறு வேண்டியும், பலம் உத்திஸ்ய புந: தீயதே-பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ, தத் தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த தானத்தை ராஜசமென்பர்.
பொருள் : கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.
தானம் கொடுக்கும் விஷயத்தில் வலது கை செய்வதை இடது கை அறியலாகாது என்பது கோட்பாடு. அதாவது அவ்வளவு அடக்கத்துடனும் பணிவுடனும் ஊக்கத்துடனும் பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கவேண்டும். ரஜோகுணமுடையவனது பாங்கு இதற்கு முற்றிலும் மாறானது. ராஜஸ சுபாவமுடையவனுக்குத் தன் பொருளைப் பிறர்க்குக் கொடுக்க விருப்பமில்லை. வருத்தப்பட்டுக்கொண்டு அரை மனதோடு தானம் பண்ணுகிறான். அப்படிக் கொடுக்கும்பொழுதும் அது தனக்குப் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று எதிர் பார்க்கிறான். தான் ஒரு மடங்கு தானம் செய்தால் தெய்வம் தனக்குப் பத்து மடங்காகப் பலனைக் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறான். இது கொடுப்பவர் ஏற்பவர் ஆகிய இருதரத்தாருக்கும் துன்பம் விளைவிக்கிறது. ரஜோகுணமுடையவனிடத்து மற்றொரு மனப்பான்மையுண்டு. ஒரு பொது ஸ்தாபனத்துக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ அவன் ஏதாவது கைங்கரியம் செய்தால் அதைபற்றித் தனக்கு நிரந்தரமான விளம்பரம் வேண்டுமென்கிறான். தன்னுடைய பெயரை மிக முன்னணியில் பகட்டுடன் பொறித்து வைக்கவேண்டுமென்பது அவனுடைய விருப்பம். தன்னுடைய சொந்தப் பதுமையை அத்தகைய பொது இடங்களில் வைத்துப் பாராட்டவேண்டுமென்பதும் அம் மனிதனுடைய பெருவிருப்பமாகும். இனி, தேவாலயங்களில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்தப் பெயர் சொல்லி அர்ச்சனை பண்ண வேண்டுமென்று விரும்புகிறான். இத்தகைய விருப்பமும் ரஜோ குணத்தினின்று உதித்ததாம்.
22. அதேஸகாலே யத்தாநமபாத்ரேப்யஸ்ச தீயதே
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்  
யத் தாநம் அஸத்க்ருதம்-எந்த தானம் மதிப்பின்றி, அவஜ்ஞாதம்-இகழ்ச்சியுடன், அதேஸகாலே ச-தகாத இடத்தில், தகாத காலத்தில், அபாத்ரேப்ய தீயதே-தகாதர்க்குச் தரப் படுகிறதோ,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தானம் தாமசமெனப்படும்.
பொருள் : தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.
புனிதமற்றதும் வசிக்க உதவாததும் தகாத இடமாகிறது. தூங்கும் வேளை, உடலின் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் வேளை, வேறு அலுவல்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் வேளை-ஆகிய இவைகள் தானம் செய்தற்குத் தகாத காலங்களாம். ஒழுக்கம் கெட்டவர்கள், அடக்கம் பயிலாதவர்கள், பொதுநல சேவை செய்யாதவர்கள், பணத்தை வீண் விரயம் செய்பவர்கள் ஆகியவர்கள் தானத்துக்குத் தகுதியற்றவர்களாம். முகமலர்ச்சியோடு கூடி வரவேற்பும், உபசாரமும் இல்லாது போவதுமன்றி, புன் மொழிகளால் இகழ்ந்து பேசி, ஏற்பவர்களுக்கு மன வருத்தம் உண்டுபண்ணிக் கொடுக்கும் தானம் தாமசமானது.
ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்க உத்தியோகஸ்தர் போன்றவர்களின் வற்புறுத்தலுக்காக இணங்கிக்கொடுக்கும் தானம் தமோகுணமானது. லஞ்சம் அல்லது கைக்கூலி கொடுப்பதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு பொதுநலத்துக்கு நன்கொடை கொடுப்பதாக வெளிக்குக் காட்டிக்கொள்வது பொருத்தமான தானமாகாது. ஒழுக்கமின்மையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அத்தகைய தானம். அது தமோகுணத்தைச் சேர்ந்ததாகும்.
செய்கின்ற யக்ஞ, தான, தபக் கர்மங்களில் குற்றம் வாராது காப்பது எப்படி என்ற வினா எழலாம். அதற்கு விடை வருகிறது :
23. ஓம்தத்ஸதிதி நிர்தேஸோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா  
ஓம் தத் ஸத் இதி த்ரிவித:-ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக, ப்ரஹ்மண: நிர்தேஸ: ஸ்ம்ருத:-பிரம்மத்தைக் குறிப்பது என்பர், தேந புரா-அதனால் முன்பு, ப்ராஹ்மணா: வேதா: ச யஜ்ஞா: ச-பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும், விஹிதா:-வகுக்கப்பட்டன.
பொருள் : ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.
ஓம் தத் ஸத் என்ற மூன்று பெயர்களால் பிரம்மம் சர்வ சாதாரணமாக அழைக்கப்படுகிறது. மூன்றும் மூன்று குறிப்புப் பெயர்களாக அதற்கு அமைந்துள்ளன. அது ஓசையாகப் பரிணமிக்கிறது. ஓசையினின்று உலகெலாம் உண்டாகிறது. ஆதலால் அது நாதப்பிரம்மம் எனப்படுகிறது. ஓம் என்பது அகிலாண்டத்தின் ஓசையின் தொகை. ஓசையின் தொகை ஓம்கார சொரூபமாக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது. பிரணவம் என்றும் அதைப் பகர்வது உண்டு. ஆக, பிரம்மத்தை ஓம்கார வடிவினன் என்பது ஒவ்வும். கற்புடைய மாது ஒருத்தி தன் கணவனை அவர் என்று குறித்துச் சொல்லுகிறான். அங்ஙனம் ஞானிகள் அது என்று சொல்லும்பொழுதெல்லாம் பிரம்மத்தைக் குறிக்கிறார்கள் (தத்) என்னும் சொல் அது என்று பொருள்படுகிறது. பெரியபொருளைப் பெயரிட்டு அழையாது வெறும் தத் என்ற பதத்தால் வேதம் அதைப் பல்கால் குறிப்பிடுகிறது.
எது சத்தியமாயுள்ளதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் அடிபடாதிருப்பது பிரம்மம். எனவே அது ஸத் என்னும் பெயர் பெறுகிறது. ஆக, ஓம் தத் ஸத் என்பதன் பொருள் ஓசை வடிவமாயுள்ள அந்த பிரம்மமே மெய்ப்பொருள் என்பதாம்.
பாலினின்று மோரும் வெண்ணெயும் உண்டாகின்றனவெனினும் சிறந்தபொருளாகிய வெண்ணெயே பாலினின்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரம்மத்தினிடத்திருந்து அனைத்தும் உண்டாயின வெனினும் அவைகளுள் சிறப்பாயுள்ள அந்தணர், வேதம், வேள்வி முதலியன உண்டாயினவென்று சொல்லப்படுகின்றன. உயிர் வகைகளுள் சிறந்தவர்கள் செந்தண்மையே வடிவெடுத்துள்ள அந்தணர். அறிவைப் புகட்டும் நூல்களுள் சிறந்தவைகள் வேதம். செயல்களுள் புனிதமும் நல்லுணர்ச்சியும் நிறைந்தவைகள் வேள்வி அல்லது யக்ஞம். நாத பிரம்மமாகத் தோன்றியுள்ள பிரபஞ்சத்தில் இம் மூன்றும் முக்கியமானவைகளென்று குறிப்பிடப்படுகின்றன.
இம் மந்திரங்கள் எதற்கு உதவுகின்றனவென்று இனி இயம்பப்படுகிறது :
24. தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்  
தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாம்-ஆதலால், பிரம்மவாதிகள், விதாநோக்தா: யஜ்ஞ-விதிப்படி புரியும் வேள்வி, தாந தப: க்ரியா:-தவம், தானம் என்ற கிரியைகள், ஸததம் ஓம் இதி-எப்போதும் ஓம் என்று, உதாஹ்ருத்ய ப்ரவர்தந்தே-தொடங்கிச் செய்யப்படுகின்றன.
பொருள் : ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ஓம் என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.
குறைபாடில்லாத கர்மமில்லை. குறைபாட்டை முகாமையாகக் கொண்டு கர்மம் செய்யாமலிருக்க முடியாது. தேகமெடுத்தவன் கர்மம் செய்யாமலிருக்க முயற்சி பண்ணுவதும் பொருந்தாது. கர்மத்தில் உள்ள அக்குறைபாட்டைப் போக்குதற்குக் கர்மம் ஒவ்வொன்றும் ஓம் என்று உச்சரித்துக் கொண்டு துவக்கப்படுகிறது. அதாவது இயற்கையின் நடைமுறைக்கு ஒத்ததாக ஒவ்வொரு செயலும் இருக்கவேண்டும். இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. ஜீவர்களின் முன்னேற்றத்துக்கு அந்த ஒழுங்குப்பாடு துணைபுரிகிறது. அருள் நிறைந்த அந்தத் திட்டத்தை உணர்ந்து அதற்கேற்றபடி வினையாற்ற வேண்டும். இச்செயல் நாளடைவில் விக்கினேசுவர பூஜையாக வடிவெடுக்கலாயிற்று. விக்கினேசுவரனே ஓம்கார வடிவினன். செய்கிற வினை ஒவ்வொன்றிலுள்ள விக்கினத்தை நீக்குதற்கும், அதை வெற்றிகரமாக முடித்தற்கும் விநாயக வணக்கம் செய்யப்படுகிறது. ஓசையெல்லாம் ஓங்காரத்தில் ஒடுங்குவது போன்று தனித்த செயல்களெல்லாம் இயற்கைத் திட்டத்திற்கு ஒத்திருக்கவேண்டும். அப்பொழுது அது குறையின்றி நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரித்து ஒவ்வொரு கர்மத்தையும் துவக்குவதன் உட்கருத்து இதுவேயாம்.
25. ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:
தாநக்ரியாஸ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:  
தத் இதி-தத் என்ற சொல்லை உச்சரித்து, பலம் அநபிஸந்தாய-பயனைக் கருதாமல், விவிதா: யஜ்ஞதப:க்ரியா:-பல வகைப்பட்ட வேள்வியும் தவமும், தாநக்ரியா: ச-தானமுமாகிய கிரியைகள், மோக்ஷகாங்க்ஷிபி: க்ரியந்தே-மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
பொருள் : தத் என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
தத் என்று பிரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்ற பொழுது எல்லாம் அவன் உடைமை யென்றும், எல்லாம் அவன் செயல் என்றும் எண்ணம் வருகிறது. கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது தனக்கென்று செய்யப்படும்பொழுது அதில் தோஷம் அதிகரிக்கிறது. போர்புரிதல் போன்ற கர்மங்கள் கேடு நிறைந்தவைகளாகும். ஆனால் சில நெருக்கடியில் அத்தகைய கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும். உலக நடைமுறையில் ஈசனது பெருந்திட்டத்தை அறிபவன் அவை யாவும் ஈசன் செயல் என்று கருதி அவனுடைய ஆராதனையாக அச்செயலைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் கர்மபலன் தன்னுடையதாகாது என்கிற தெளிவு ஏற்படுகிறது; பரத்திலேயே நாட்டமதிகரிக்கிறது. அதனால் முமுக்ஷúத்வம் வந்தமைகிறது. பின்பு யக்ஞமும் தபசும் தானமும் அதற்கேற்ற சாதனங்களாக மிளிர்கின்றன.
26. ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே  
ஸத் இதி-ஸத் என்ற சொல், ஏதத் ஸத்பாவே-உண்மை யென்ற பொருளிலும், ஸாதுபாவே ச ப்ரயுஜ்யதே-நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது, பார்த-பார்த்தா, ததா ப்ரஸஸ்தே கர்மணி-புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும், ஸத் ஸப்த: யுஜ்யதே -ஸத் என்ற சொல் வழங்குகிறது.
பொருள் : ஸத் என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ஸத் என்ற சொல் வழங்குகிறது.
முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத பிரம்மமே ஸத் என்று சொல்லப்படுகிறது. பிரமமம் ஒன்றுதான் உள்ளது. பிரபஞ்சமும் அதிலுள்ள ஜீவர்களும் அஸத் என்றாலும் புத்திரன் பிறந்தால் அவனைக் குறித்துச் சிரஞ்சீவி என்கிறோம். நிலையற்ற உயிரை நிலையானதென்று சொல்லுவது உபசாரத்துக்காக. லௌகீக வாழ்க்கை முறையில் உண்மையல்லாததை உண்மை யென்று பாவித்தல் வேண்டும் என்ற கருத்துடன் ஸத் என்ற சொல் வழங்கப்படுகிறது.
சாது பாவம் என்பது நன்மையை வளர்க்கும் கருத்து. பிரம்மம் ஒன்றே நிர்தோஷம் அல்லது குற்றமற்றது. பாக்கி அனைத்திடத்தும் சிறிதளவாவது கேடு உண்டு. கேடு உடைய மனிதனைக் கெட்டவன் என்று சொல்லலாகாது. அவனை நல்லவன் என்றே சர்வகாலமும் சொல்லிக்கொண்டிருந்தால் நல்லவனாகி வருகிறான். சாது பாவம் உலகத்தைச் சீர்திருத்த உற்ற உபாயமாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான சிறந்ததொரு கோட்பாடு ஆகிறது. இதற்காகவும் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது.
இனி, ஸ்வஸ்தி வசனமும் ஸத் எனப்படுகிறது. மங்கள மல்லாததை மங்களமென்று சொல்லி மனதை ஒழுங்குபடுத்துதற்கு அது உதவுகிறது. பொய்யானதெல்லாம் பொருந்தியது நம் உடல். அதை மெய் யென்று மொழிகிறோம். மங்களம் வேண்டி அங்ஙனம் மொழிகிறோம். விவேகமுடையவர்க்கு விவாகத்தைவிடக் கொடியது ஒன்றுமில்லை யென்பது விளங்கும். மனிதனுடைய வீழ்ச்சிக்கு விவாகம் காரணம். அமங்களமான மணச்சடங்கை சுபகாரியம் என்கிறோம். அஸத் தை ஸத் என்கிறோம். மங்களமல்லாததை மங்களமாக்குதற்கு ஸத் என்ற சொல்லை வழங்குகிறோம்.
பொய்யானதும், கெட்டதும், பொருந்தாததுமான உலக வாழ்வை நித்தியமானதென்றும், நலம் நிறைந்ததென்றும், முற்றிலும் பயன்தர வல்லதென்றும் எண்ணுவது அவசியம். வாழ்வில் இனிமை காண்பதற்கு அது உற்ற உபாயமாகிறது. ஸத் என்னும் சொல் அத்தகைய மனநிலையை வருவிக்கிறது.
இன்னும் எதற்கெல்லாம் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது? விடை வருகிறது :
27. யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே  
யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஏவ-வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும், ஸத் இதி உச்யதே-ஸத் எனப்படுகிறது, ச ததர்தீயம்-மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்,
கர்ம ஏவ ஸத் இதி அபிதீயதே-கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.
பொருள் : வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ஸத் எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.
யாகம், தபசு, தானம் ஆகியவைகளை முறையாகச் செய்தால் அவைகள் இயல்பாகவே ஸத் என்னும் சொல்லுக்கு இலக்காய் இருக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். உயரமாக வீடு கட்டுதற்கு முதலில் மூங்கில், பலகை முதலியவைகளைக் கொண்டு சாரம் கட்டுகிறோம். வீடு கட்டுவது நிலைத்துள்ள செயல். சாரம் கட்டுவது நிலையற்ற செயல். அப்படியிருந்தும் சாரம் கட்டினால்தான் வீடுகட்ட முடியும். நிலைத்த செயலுக்குத் துணை புரிகின்றவளவு சாரம் கட்டுதல் இன்றியமையாத செயல் ஆகிறது. யாகம், தபசு, தானம் ஆகியவைகள் தம்மளவில் நிலைத்த செயல்கள் ஆகா. நிலைபொருளாகிய தெய்வத்தை அடைதற்கு அவைகள் பயன்படுகின்றனவாதலால் அவைகள் ஸத் கர்மங்கள் எனப்படுகின்றன. முறை தவறிச் செய்யப்படும் பொழுதும் ஸத் என்ற மந்திரத்தை உச்சரித்துச் செய்துவந்தால் அவைகளிடத்துள்ள குறைபாடுகள் நீங்கி அவைகள் நாளடைவில் நலம் பெறுகின்றன. அதற்கும் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். பத்ரிகாச்ரமம் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன் இந்தியாவின் தென்முகமாக நடந்து செல்வானானால் அது முறை தவறிய முயற்சி. தனது விருப்பம் ஹிமயமலையில் பத்ரிகாச்ரமம் போய்ச் சேர்வது என்று அவன் வழி நெடுகச் சொல்லி வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது விஷயம் தெரிந்த ஆள் ஒருவன் அவனுடைய செயலைத் திருத்தியமைக்கத் தோன்றி வருவான். தென் திசையை நோக்கிப் போகலாகாது. வட திசையை நோக்கிப் போகவேண்டும் என்ற ஆணை பிறக்கும். பிறகு அவன் பத்ரிகாச்ரமம் போய்ச் சேருவான். அங்ஙனம் கடவுளைக் குறித்துச் செய்யும் செயல் துவக்கத்தில் குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் திருத்தியமைக்கப் பெறுகிறது. தன் பொருட்டுச் செய்யும் கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது கேடுடையதாகிறது. கடவுள்பொருட்டுச் செய்யப்படும் கர்மம் எவ்வளவு குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் ஸத் கர்மமாய் மாறி மேன்மையுறுகிறது.
28. அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ  
பார்த-பார்த்தா, அஸ்ரத்தயா ஹுதம் தத்தம்-அசிரத்தையுடன் வேள்வியும் தானமும், தப்தம் தப: ச-செய்யும் தவமும், யத் க்ருதம்-கர்மமும், அஸத் இதி உச்யதே-அஸத் எனப்படும்,
தத் இஹ நோ ப்ரேத்ய ச ந-அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை.
பொருள் : அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், அஸத் எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;
யாகத்தையும் தானத்தையும் தபசையும் முறையாகச் செய்தால் பரபோதம் மேலிடுகிறது. ஜீவபோதம் தேய்கிறது. இச் செயல்களைச் சுயநலத்துடன் செய்தால் ஜீவபோதம் மேலும் வளர்கிறது. இயற்கையினின்று வருகிற இன்பங்களை அனுபவிப்பதற்கு ஜீவபோதம் வேண்டும். பரம்பொருளிடத்திருந்துவரும் பேரானந்தத்தை அனுபவிக்கப் பரபோதம் வேண்டும். சிரத்தையில்லாத மனிதனுக்கு ஜீவபோதமும் இல்லை; பரபோதமும் இல்லை.
சிரத்தையில்லாது செய்யும் கர்மம் எத்தகையதாயிருந்தாலும் அது எவ்வுலகுக்கும் பயன்படாது. கர்மம் செய்வதால் யந்திரங்கள் முன்னேற்ற மடைவதில்லை. அவைகள் ஒழுங்காக நன்கு உழைக்கின்றன. ஆனால் எப்பொழுதும் அவைகள் யந்திரமாகவே இருக்கின்றன. சிரத்தையில்லாத மனிதனும் யந்திரம் போன்று ஆய்விடுகிறான். யாகம், தானம், தபசு ஆகியவைகளுக்குப் புறம்பாயுள்ள மற்றக் கர்மம் என்று சொல்லுவது, தனியாக இவ்வுலகுக்கு மட்டும் பயன்படுகிற கல்வி, செல்வம், உடல்திட்பம் முதலியன அடங்கப்பெற்ற செயலாம். பொருள் சம்பாதிப்பதை அதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். சிரத்தையில்லாதவன் பொருள் சம்பாதிக்க முடியாது. தற்செயலாய் அவனுக்குப் பொருள் சேர்ந்தால் அவன் அதைக் காப்பாற்றமுடியாது. அதை அனுபவிக்கவும் அவனால் இயலாது. யாருக்கும் பயன்படாது அது விரயமாய்விடும். சிரத்தையுடன் செய்யப்படுகிற கர்மங்களெல்லாம் நன்மை பயக்கின்றன. சிரத்தையுடன் செய்யும் பொழுதே ஓம் தத் ஸத் என்று உச்சரித்துக்கொண்டு செய்தால். அம்மூன்று சொற்களுக்கும் அடிப்படையாகவுள்ள பரம் பொருளை நினைந்து செய்ததாகும். அதனால் கர்மங்களில் இயல்பாயுள்ள கேடுகள் நீங்கி நலம் நிறைகிறது. பரத்தைப்பெற அதுவே உற்ற உபாயமாகிறது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக