புதன், 1 ஜனவரி, 2014

காஞ்சி மகாபெரியவா

ராதே கிருஷ்ணா 01-01-2014

காஞ்சி மகாபெரியவா





December 22, 2013 

நம் மதம் அடுப்பங்கரை மதம்தான்"

நேரு, அடிக்கடி விவேகானந்தாவை கோட் பண்ணி, "kitchen religion " "அடுப்பங்கரை மதம்" என்று ஹிந்து மதத்தை தாம் ரொம்ப நன்றாக பரிஹாசம் செய்கிறோம் என்று நினைக்கிறார், வாஸ்தவத்தில் அவர்தான் ஹிந்து மதத்தின் சாரத்தை புரிந்துகொண்டு அதற்கு certificate தருகிறார்; நம் மதம் அடுப்பங்கரை மதம்தான்" என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தார்.

"நாரதர் சனத்குமாரரிடம் போய் ஆத்மவித்தை உபதேசிக்க சொன்னார். அப்போது சனத்குமாரர், "ஆஹார சுத்தவ் சத்வ சுத்தி;" என்றுதான் ஆரம்பிக்கிறார். சாந்தோக்கிய உபநிஷத்திலேயே இந்த விஷயம் இருக்கிறது. "தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மை ஆவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈஸ்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் சித்திக்கும்" என்று சனத்குமாரரே kitchen religion ல்லதான் ஆரம்பிக்கிறார்" என்றார்.

இன்னொருத்தர் உதவியில்லாம அவாவா கார்யத்தை அவாவாளே பண்ணிக்கறா மாதிரி கல்வித்திட்டத்ல கொண்டு வரணும்ன்னுதானே சமூஹ சீர்திருத்தவாதிகள் சொல்லறா? அதுனாலதான், வாழ்க்கைக்கு முக்யமா வேணுங்கற அன்னத்தை அவனவன் ஸ்வயம்பாகம் பண்ணிக்க கத்துக் குடுத்துட்டா அதுதான் நெஜமான சீர்திருத்தம். சாஸ்த்ர வாக்யம் ஒண்ணு இருக்கு..."பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம்" அப்படீன்னா அம்பது வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கக்கூடாது. புருஷாளுக்கே வயசானாவிட்டு, சமையல் பண்ண தெரிஞ்சிருக்கணும்ன்னு சாஸ்த்ரம் சொல்றது. சமையல் தெரிஞ்சுட்டா, வானப்ரஸ்தம் போக வேண்டிய வயஸ்ல தாம்பத்யத்துக்கு திரும்பற ஆபாசம் நடக்காம இருக்குமோல்லியோ?

முன்னமாதிரி இல்லாம இப்போ பக்ஷிகள் மாதிரி பூலோகத்ல எங்கெங்கே வேலை உண்டோ, அங்கங்கே போகணுங்கற நெலைமைல ஸ்வயம்பாகம் அத்யாவஸ்யமாறது. சுத்தத்துக்கு சுத்தம்; ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோட வெந்ததும் வேகாததுமா, கண்ட கையால சமைச்சததை ஹோட்டல்ல சாப்ட்டு சாப்ட்டு, சின்ன வயஸ்லேயே அல்சர், அது இதுன்னு அவஸ்தை படாம இருக்கலாம். சின்னதா ரொட்டி, பொங்கல் மாதிரி பண்ணத் தெரிஞ்சிண்டா போறும். இப்போ என்னடான்னா, கணக்கு வழக்கில்லாம வ்யாதிகள்தான் சர்வ வ்யாபகமா இருக்கு.

ரொம்ப தூரம் ப்ரயாணம் பண்ணணும்னாக்கூட பூரி, சத்துமா இதுகளை பண்ணி எடுத்துண்டு, பாலையோ, மோரையோ விட்டு சாப்ட்டுக்கலாம். அரிசியை நன்னா செவக்க வறுத்து பொடிச்சு வெச்சிண்டா அதுதான் சத்துமா. அதுல பாலையோ, மோரையோ விட்டு சாப்டா, புஸ்ன்னு ஊறிண்டு பசியடங்கி, புஷ்டியாவும் இருக்கும். 'குக்கர், கிக்கர்' கூட வேண்டாம். சுலபமா நாலைஞ்சு தினுசு அதுல பண்ணிக்கலாம்தான். ஆனா, குக்கர்ன்னு ஆரம்பிச்சா, அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்ப புளி, காரம் ன்னு எல்லாம் கூடவே வரும். உடம்புக்கு வரும். பரிஹாரமா மருந்து, அந்த மருந்துல அநாச்சாரம்...ன்னு போய்ண்டிருக்கும். அதுனால, ஒரு சாமான், ரெண்டு சாமான்னு வெச்சிண்டு, ஸாத்வீகமா பெரியவா சொல்றா மாதிரி, மதுரமா, ஸ்நிக்தமா லேசான ஆகாரத்தை நாமே தயார் பண்ணி சாப்பிடணுங்கறதை "ஜன்ம வ்ரதமா" எடுத்துக்கணும். "ஸ்நிக்தம்" ன்னா பசையுள்ளதுங்கறதுக்காக நெய் சொட்ட சொட்ட இருக்கணும்னு அர்த்தமில்லே.வறட்டு வறட்டுன்னு இல்லாம பால்லையோ, மோர்லையோ ஊறினதா இருக்கணும்.

சரி. அப்பிடி ரொம்ப சிம்பிளா சமைசுண்டா, அதிதி சம்ஸ்காரம் எப்பிடி பண்ணறது? அதையும் பெரிய தர்மமா சொல்லியிருக்கேன்னா, வர்றவாளுக்கு பாலும், பழமும் குடுக்கலாம். நம்ம கையால குடுக்கறது, அவாளோட குக்ஷில போகணும். அவ்வளவுதான். அந்தக் காலத்ல திருடனுக்கு கூட பால்சாதம் போட்டுட்டா, அவன் அந்த ஆத்ல திருடமாட்டான். நல்ல எண்ணத்தை வளக்கறது பால். அதுனாலதான் பாலோட, பழத்தையும் சேத்து குடுக்கச் சொல்றேன்.

எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும். வேற மூர்த்தி, விக்ரஹம் இல்லாட்டா கூட, ப்ரத்யக்ஷ தெய்வமா இருக்கும் சூர்ய பகவானுக்கு நிவேதனம் பண்ணிடணும்




December 22, 2013 

மகாபெரியவாளின் மகிமை

எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா. குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ஹக்ரி என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது. கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது . கறையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமாஇருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா. அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்த கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது. அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்சாவுர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.

“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.

ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்” உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று. வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.

ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை. சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.

அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.

அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது.

நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது.

ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார்.

அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.



December 21, 2013 

உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?


பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் “உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை” என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை………..

“தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா”

“என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?”

“மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு”

“அதுக்கு நா என்ன பண்ணறது?”

“மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்”

“என்ன படிச்சிருக்கே?”

…………சொன்னார்.

“இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது”

“என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்”

“என்னை என்ன செய்ய சொல்றே?”

“மனஸ் சாந்தி அடையணும்”

“நீ என்ன பூஜை பண்றே?”

“அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்”

“ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?”

“ஆமாம்”

“அப்போ…….இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?”

மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

“ரொம்ப கோவிச்சுண்டுட்டேனா ! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!….ங்கறதாலதான் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே……….என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ….யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?……..நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…..க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !

இனி ?…………. எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.




December 21, 2013 

"விப்ரக்ஷயமா?..."

(நண்பர் கௌரிசங்கர் அனுப்பிய மெயிலிடுந்து)

டெல்லியிலிருந்து ஒரு பக்தர் பெரியவாளை தர்சனம் பண்ண வரும்போதெல்லாம் மயில்த்தோகை விசிறிகளை வாங்கிக் கொண்டு வந்து சமர்ப்பிப்பார். பெரியவாளும் அதை அவ்வப்போது உபயோகிப்பார். ஒருமுறை அந்த பக்தர் ஒரு டஜன் விசிறிகளை வாங்கிக் கொண்டு வந்து பெரியவா முன் வைத்தார். சாதாரணமாக எதையுமே தனக்கென்று வைத்துக்கொள்ளாத பெரியவா, அவ்விசிறிகளை கையோடு எடுத்து தான் அமர்ந்திருந்த மேனாவுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார். சிஷ்யர்களுக்கோ ஒரே குழப்பம்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலை ஈக்கள் நிறைய இருந்ததால், பெரியவா ஒரு மயில்தோகை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தபோது, சில ஜைனத் துறவிகள் பெரியவாளை தர்சனம் செய்ய வந்தனர். அவர்கள் ஸ்வேதாம்பரர்கள். வாயைத் துணியால் கட்டிக் கொண்டிருந்தனர். பெரியவா அவர்களிடம் ஹிந்தியில் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்.

"ஒங்களுக்கு தெரியுமோ? ஸம்ஸ்க்ருதத்ல "அமரகோசம்"ங்கற டிக்க்ஷனரியை தொகுத்தவரே அமரசிம்மன்..ங்கற ஜைனர்தான்!.." என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.

"நீங்கள்ளாம் தெனோமும் காலேல விப்ரக்ஷயம்..ன்னுட்டு ஒரு ப்ரார்த்தனை மாதிரி ஒண்ணு சொல்றதுண்டோ?.." என்று கேட்டார்.

"இல்லை ஸ்வாமி....எங்களுடைய குரு இனிமேல் அப்படிச் சொல்ல வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்...." என்று ஹிந்தியில் பதில் கூறினார் ஜைனத் துறவி.

இவர்களுடைய உரையாடல், ஹிந்தியில் இருந்தாலும், சிஷ்யர்களுக்கு அனேகமாக புரிந்தது. ஆனால் அவர்கள் பேசியதின் காரணம் புரியவில்லை.

"விப்ரக்ஷயமா?..."

பெரியவா இவர்களுடைய ஸந்தேஹத்துக்கு பதில் கூறினார்.

"அந்தக் காலத்ல, வேதவிஹிதமான யாக யக்ஞங்கள் ரொம்ப நடந்துண்டிருந்த காலத்ல, ஸாஸ்த்ரப்படி ஆடுகளை பலி குடுக்கறதுண்டு

. ஜைன ஆதிக்கம் ஜாஸ்தியானதும், "அஹிம்ஸா பரமோ தர்ம:" ங்கறது அவாளோட கொள்கையா இருந்ததால, உயிர்பலி குடுக்கற வைதிக நெறி மறைஞ்சு போகணும்..ன்னுட்டு, தெனோமும் காலங்கார்த்தால "விப்ரக்ஷயம்" அப்டீன்னா,

ப்ராஹ்மணா இல்லாமப் போகட்டும்"ன்னு, ப்ரார்த்தனையாவே பண்ற வழக்கத்தை follow பண்ணினா! ..."

பெரியவா தமிழில் கூறியது அத்துறவிகளுக்கு புரிந்ததால், " ஆமாம்..இந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் யாக-யக்ஞம் பண்ணுவது அனேகமாக நின்றே போய்விட்டது! அதனால், ஜீவஹிம்சையும் இல்லை! எனவே, விப்ரக்ஷயம் சொல்லவேண்டாம் என்று எங்கள் குருநாதர் கட்டளையிட்டுள்ளார்..."

[இதைக் கேட்டதும், பெரியவா எப்படி வருத்தப்பட்டிருப்பார்! வாஸ்தவந்தானே! ஜைன குரு சொன்னதை அப்படியே உண்மையாக follow பண்ணி "விப்ரக்ஷயம்" என்று எத்தனை சிஷ்யர்கள், எத்தனை முறை சொல்லியிருப்பார்கள்? அது இன்று பலித்தே விட்டது! அதேபோல், வைதீகர்களும் அன்றிலிருந்தே என்ன கஷ்டம் வந்தாலும், வேதத்தை விட்டுவிடாமல் அதை தழைக்கச் செய்வதற்கென்றே ஸந்ததிகளை தயார் செய்திருந்தால், இன்று இத்தனை சீர்கேடு இருந்திருக்காதே! இன்றைக்கும் international லெவலில், வெங்காயம், பூண்டு இல்லாமல் ஸாத்வீகமாக இருக்கும் சாப்பாட்டுக்குக் கூட, "ப்ராஹ்மண சாப்பாடு" என்றில்லாமல் "ஜெயின் food" என்றுதானே பெயர்?]

அவர்கள் எல்லாருக்கும் பெரியவா மேனாவுக்குள் போனவாரம் வைத்திருந்த மயில்தோகை விசிறிகளை ஆளுக்கொன்றாகக் குடுத்தார். மயிலை ஹிம்ஸை செய்யாமல், தானாக விழும் ரெக்கைகளைக் கொண்டு செய்யும் மயில்தோகை விசிறி, ஜைனத் துறவிகளுக்கு ஏற்றதே!



December 20, 2013 

"உங்கிட்ட இருக்கும் பணத்துக்கு நீ டிரஸ்டி மட்டும் தான். சொந்தக்காரன் இல்லை என்பதை புரிந்து கொள்,”

ஆடிட்டர் ஒருவர் தர்மகாரியங்களில் ஆர்வமாக ஈடுபடுவார். ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, சங்கர ஜெயந்தி என்று எந்த விழாவாக இருந்தாலும் அவர் முதல் ஆளாக முன்னிற்பார். ஏழை எளியவர்கள் மீது இரக்கம் கொண்டு உதவி செய்வார். அவரை ஊர்மக்கள் “பெரியவர்’ என்று தான் அழைப்பர்.

காஞ்சிப்பெரியவரிடத்தில் ஆடிட்டருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.

ஆடிட்டரின் மூத்த மனைவி காலமானபின், பெரியவரின் ஆசியுடன் இரண்டாம் கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு பையன்களும் ஒரு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகள் இருந்தனர். பெரியவரைத் தரிசிக்க வரும்போதெல்லாம் , ஆடிட்டரைப் பார்த்து,””கர்ணன் மாதிரி எல்லாருக்கும் தானதர்மம் செய்றே!” என்று அன்போடு சொல்வார். காலம் ஓடியது. ஆடிட்டரின் பிள்ளைகளும் ஆடிட்டர்களாகவே பணியாற்றினர். பெண்ணும் ஒரு ஆடிட்டரையே திருமணம் செய்து கொண்டு செல்வச்செழிப்போடு வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த பையனும் ஆடிட்டர் தான்.

பெற்றோர் மறைவுக்குப்பின், பிள்ளைகள் எல்லாம் தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், அப்பா வகித்து வந்த தர்ம ஸ்தாபனப் பதவிகளில் மூத்தமகன் இருந்து வந்தார். தான தர்மம் என்று யாரும் கேட்டால், “”அது என்ன விலை? எந்த கடையில் கிடைக்கும்?” என்று கேட்கும் அளவுக்கு அவருடைய நிலை மோசமாக இருந்தது.

ஒருசமயம், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதித்ததில், “கேன்சர்’ என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு பேர் சொல்ல ஒரு பிள்ளையும் இல்லை. அவரது மனதை கவலை வாட்டியது. குடும்பத்தின் மதிப்பிற்குரிய மகானான காஞ்சிப்பெரியவரைத் தரிசித்து வருவதென்று முடிவெடுத்து காஞ்சி மடத்திற்குப் புறப்பட்டார்.

“”சுவாமி! அடியேனின் பணிவான நமஸ்காரம்! எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய் ரொம்ப காலமாக இருக்கு! இப்போ கேன்சரும் வாட்டி வதைக்குது! மனசாலும், உடம்பாலும் நான் படும் அவஸ்தைகளை சொல்லி முடியாது. பெரியவா நீங்க தான் எனக்கு நல்வழிகாட்டி அனுகிரஹம் பண்ணணும்!” என்று சொல்லி அழுதார்.

“”உன்னை ரொம்ப நன்னாவே எனக்குத் தெரியும்! உங்கப்பா தானதர்மங்களை கர்ணன் மாதிரி செய்து வந்தார். அதனால் ஜனங்களெல்லாம் “பெரியவர்’ என்று அவரை மதிப்போடு கூப்பிடுவாங்க. விதியை யாராலும் மாத்தி எழுத முடியாது.
கிணத்திலே தண்ணீர் இருக்கு! ஆனால், அது தண்ணீரை தன்னுடையது என்று சொல்லி சொந்தம் கொண்டாடுவதில்லை! மரத்திலே பூக்கள் அடுக்கடுக்கா பூத்துக் குலுங்குது! ஆனால், பூவெல்லாம் எனக்குத்தான் என்று மரம் ஆர்ப்பரிப்பதில்லை! பசு பால் தருகிறது. பால் முழுவதும் தனக்கு தான் என்று பசு உரிமை பாராட்டுவதில்லை!

உனக்கும் பட்டம் பதவிகள் இருக்கிறது. ஆனால், அந்த பதவியின் பயனாக நாலுபேருக்கு நீ நல்லது செய்யவில்லை. அதனால் தான் இந்த வேண்டாத கஷ்டமெல்லாம் உனக்கு வந்துவிட்டது. பணத்தோடு மனுஷனுக்கு குணமும் மிக அவசியம். உங்கிட்ட இருக்கும் பணத்துக்கு நீ டிரஸ்டி மட்டும் தான். சொந்தக்காரன் இல்லை என்பதை புரிந்து கொள்,” என்று அவரது மனதில் பதியும்படி எடுத்துச் சொன்னார்.

அந்த ஆடிட்டர், தான் நடத்தி வந்த வாழ்க்கை முறையை எண்ணி வருந்தியதோடு இனிமேல் தந்தையைப் போல தானதர்மங்களை செய்து வாழ்வது என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பினார்.



December 20, 2013 

"கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.
விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்"

போன வார கல்கி.

நிஜமாக இல்லாததை ஒன்று, கனா என்று சொல்வோம்; அல்லது விளையாட்டு என்போம்.

எதுவோ ஒன்று நிஜமாக நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கிறோம். அது ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் விடுகிறது. ‘எல்லாம் கனவாப் போச்சு’ என்கிறோம். அந்தக் கனவான பொய் மாயமாகவே ஜகத்தைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.

விளையாட்டு என்பது நிஜமில்லாததுதான். ஏதோ சின்ன சோப்பை, பொம்மையை பெரிய அண்டான் குண்டான் மாதிரி வேஷம் கொடுத்து வைத்து, பாலப்பிராயத்துக் குழந்தைகள் அம்மா - அப்பா, தாத்தா - பாட்டி என்று தங்களுக்கு வேஷம் கொடுத்துக் கொண்டு பண்ணுவதுதான் விளையாட்டு. பெரியவர்கள் ‘ஸ்போர்ட்ஸ்’ என்று பண்ணும் விளையாட்டுகளும் வாழ்க்கையின் நிஜமான ப்ரச்னைகளுக்கு ஸம்பந்தப்படாமல், ஏதோ ஒரு பந்தை ஏதோ ஒரு goal-க்கு அடிக்க வேண்டும் என்று, காரணம் சொல்ல முடியாததான, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாததான காரியங்களாக இருக்கிறவை தானே? ‘எதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு ‘செஸ்’ காய்களைத் தள்ள வேண்டும்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

விளையாட்டுக்குச் சொன்னேன்: நிஜம்னு நினைச்சுட்டியா?" என்று கேட்கிறோமே, அங்கே நன்றாகவே தெரிகிற தோல்வியோ, விளையாட்டு என்கிறது நிஜமில்லை என்று! ‘விளையாட்டே வினையாச்சு’ என்றும் சொல்கிறோம். வினைதான் நிஜமாகவே நடப்பது. அப்படியானால், விளையாட்டு நிஜமில்லை என்றும், எதனாலோ அப்படிப்பட்டதுகூட நிஜமாகிவிட்டது என்றும்தானே அர்த்தமாகிறது?

‘மாயக்கனா’ என்கிறாற் போலவே ‘மாய விளையாட்டு’ என்று சொல்கிறதையும் கவனிக்க வேண்டும்.

இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிவிட்ட தோல்லியோ?

அதிலே கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்





December 19, 2013 

, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ?’

அன்பே அருளே புத்தகத்தில் ஸ்ரீ. பரணீதரன்

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

அதில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், ‘வருகை பதிவேடு’ காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.

இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சிரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.

அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.
இறுதியாக, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்’ என்ற உண்மையை சொன்னேன்.

‘என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு’ என்று விளக்கம் தந்தார்.





December 19, 2013 

மகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி

(திரு.சுவாமிநாதன் ZEE-T.V.யில்-சொன்னதும் முன்பே நான்
படித்ததும்)


மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடுவது வழக்கம். பல முக்கிய முடிவுகளை அவர் இங்கிருந்து தான் எடுப்பது வழக்கம். பல வி.ஐ.பி.க்களை இங்கு வைத்து சாதிப்பதும் வழக்கம். அவர்கள் அவ்வாறு அமர்ந்திருக்கும்போது சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். ஆனால் பரமாச்சாரியார் மட்டும் எதையும் சட்டை செய்யாமல் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொசு கடிப்பதர்க்கான ஒரு சிறு தடயத்தை கூட அவர் காட்டமாட்டார்.

அந்தக் கொட்டகையில் உள்ள பசு ஒன்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம். அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை. மடத்தின் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல மொத்தம் ஆறுபேர் வந்திருந்தனர். பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர்.

கன்றுக் குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள் துணுக்குற்றனர். இதை எப்படி பெரியவரிடம் போய் சொல்வது. பசுவை அன்னை காமாட்சியின் சொரூபமாகவே பார்த்து வழிபடுபவராயிற்றே அவர். இருப்பினும் இந்த முக்கிய விஷயத்தை அவரிடம் சொல்லத் தானே வேண்டும்? நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.

அமைதியாக கேட்ட அவர் பின்னர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். கீழே ஒரு தன துண்டை விரித்துப் போட்டார் பசுவின் எதிரே அமர்ந்தார். கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அந்த பசுவை உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு….. ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அது பிரசவித்தது. அதன் வயிற்றில் இருந்த அழகான கன்றுக்குட்டி வெளியே வந்தது. வெளியே வந்த கன்று அதற்கே உரிய துள்ளலுடன் எழுந்து நின்றது. தாய் மடி தேடி சென்றது.

எஸ்…. இறந்து போனது என்று ஆறு டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான்.

பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்த பின் மகான் அவர் பாட்டுக்கு உள்ளே போய்விட்டார்.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் இதை நம்பமுடியவில்லை. மருத்தவத்தையும் விஞ்சிய அற்புதமல்லவா இது ? அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.

மடத்தின் சிப்பந்திகளுக்கு பரமாச்சாரியாளின் மற்றொரு மகிமையை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.


December 18, 2013 

"கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்ட
வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்"

தகவல்'எஸ்.கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான்.

சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் குடும்பம் திண்டிவனத்தில் இருந்த போது,

குழந்தை சுவாமிநாதன் அந்த ஊரில் முறுக்கு, சீடை பண்ணி வியாபாரம் பண்ணி வந்த ஒரு பாட்டியிடம், கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் முறுக்கு சீடை வாங்கி உண்டு மகிழ்வான். வெண்ணையை திருடி தின்றாலும், தோழர்களுடன் பகிர்ந்து கொண்ட கண்ணன் போல், சுவாமிநாதனும், தோழர்களும் பாட்டியிடம் நிறைய வாங்கி உண்டார்கள். ஒருநாள் அந்த பன்னண்டு வயது பாலன் சொன்னான்...."பாட்டி! ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சு குடுத்திருக்கேனோல்லியோ? அதுனால எனக்கு வெலையக்கொஞ்சம் கொறைச்சு குடேன் " தர்மமான கமிஷனை கேட்டார்.

பாட்டி மறுத்தாள். இன்னுயிரையே இலவசமாக தரவேண்டிய பிக்ஷாண்டியின் அவதாரமென்று அறியாததால் ! சுவாமிநாதனும் விடாமல் அடமாக இருக்க, பாட்டி அசைந்து கொடுக்கவில்லை.

"போ! இனிமே ஒன்கிட்ட நான் வாங்க போறதே இல்லை" என்றான் கோபமாக.

"வாங்காட்டா போயேன்! ஏதோ நீ வாங்காட்டா, என் பொழைப்பே இல்லாம போயி, ஒன்னை பூர்ணகும்பம் வெச்சு கூப்பிடுவேன்னு நெனைச்சுண்டியோ?" பாட்டி அதைவிட கோவமாக சொன்னாள்.

"முடிவா சொல்லு பாட்டி...நான் வர மாட்டேன்னா வர மாட்டேன்!"
என்று மிரட்டிப் பார்த்தார்.அவள் மசியவில்லை.

"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-
நான் இனி ஒரு நாளும் வரமாட்டேன்!" என்று சவால் விட்டுப்
போன சிறுவன்,அதன் பிறகு அவள் வீட்டுப்படி ஏறவேயில்லை!



காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் விஜயம் செய்வதால், திண்டிவனமே விழாக்கோலம் பூண்டது. காரணம், ரெண்டு மாசம் வரை அந்த ஊரில் ஓடி விளையாடி செல்லப்பிள்ளையாக இருந்த சுவாமிநாதன்தான், இன்று சங்கராச்சாரியாராக விஜயம் செய்கிறார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும், தங்கள் வீட்டு குழந்தை பால தண்டாயுதபாணியாக ஜொலித்துக்கொண்டு வரப்போவதால், பூர்ணகும்பம் வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்.

அன்று சுவாமிநாதனிடம் முறுக்கிக்கொண்ட முறுக்கு பாட்டியும் பூர்ணகும்பம் ஸித்தம் பண்ணினாள். உள்ளே பழைய குரல் "போயேன். பூர்ணகும்பம் குடுத்து உன்னை கூப்பிடுவேனோ?" அன்று அந்த சமத்து சக்கரைக்கட்டியை விரட்டி அடித்தோமே! அது அப்புறம் இந்தபக்கம் தலையை காட்டவேயில்லை. இப்போதோ அது எட்டவொண்ணா மஹாகுரு பீடத்தில் ! குழந்தை சுவாமி நம்முடைய பூர்ணகும்பத்தை ஏற்குமா? இல்லை நிராகரிக்குமா?

இதோ குழந்தை குருஸ்வாமி தேஜஸ் பொங்கும் ரூபத்தோடு, பாட்டி வீட்டு வாசலில்! அன்று சமத்தாக அளவோடு நின்ற களை, இன்று முகத்தில் தாய்மை பொலிவோடு, தெய்வீகம் பொங்கியோட பாட்டி முன்னால் வந்து நிற்கிறது.

"இதோ நம் வீட்டுக்கருகே வந்து விட்டாரே! இப்போது நான்
என்ன செய்வேன் ?"என்று ஒன்றும் புரியாமல் கதறிக் கண்ணீர்
விடுகிறாள். அவள் வீட்டுக்கு எதிரேயே பல்லக்கு நின்றது.

"அந்த பாட்டி ஏன் உள்ளேயே இருந்து எட்டிப் பார்க்கிறார்?
வெளியே வரச் சொல்லுங்கள்' என்று அன்புக்கட்டளை
பிறக்கிறது.தயாராக இருந்த பூர்ண கும்பத்தைப் பார்த்த பெரியவா
"அவளிடமிருந்து அதை வாங்குங்கள்!" என்கிறார்.

அதைப் பெற்றுக் கொண்டு அவளிடம் "பார்த்தாயா!
கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்ட
வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்"
என்று சிரித்து அவள் பயத்தைப் போக்கினார்.

பக்தர்களிடம் தோற்பதில்தானே பகவான் மகிழ்ச்சி
காண்கிறார்.





December 18, 2013 

"ஆரியம் பாட மூன்று பேர், தமிழ் பாட நாலு பேர்".

(இந்த வார கல்கி)

தேவாரம் என்ற சொற்கோவிலைக் காப்பாற்றிக் கொடுத்தவன் தஞ்சாவூரில் இன்றும் லோகம் பிரமித்துக் கொண்டாடும்படியாக கற்கோவிலையும் கட்டினான். தான் பெற்ற வெற்றிகளுக்கு நன்றிக் காணிக்கையாகக் கட்டினான்.

வடக்கே இப்போது ஒரிஸ்ஸா என்கிறோமே அந்தக் கலிங்கம் வரை படையெடுத்துப் போய், கோதாவரி - கிருஷ்ணா நதிகளுக்கு மத்தியிலே கீழைச் சாளுக்கியவர்கள் ஆண்டு கொண்டிருந்த வேங்கை நாடு, தெற்கு ஈழம் என்னும் இலங்கை, இப்போது லட்சத்தீவு என்கிற அராபினய ஸீ ஐலண்ட்ஸ் எல்லாவற்றøயும் ஜெயித்துத்தான் ராஜராஜன் என்று காரணப் பெயர் வாங்கினான். அவனுடைய சொந்தப் பெயர் அருண்மொழி வர்மன் என்பது.

பெயற்கேற்ப தேவாரமாகிய அருள்மொழிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறான். சேக்கிழாருக்கும் அருண்மொழித் தேவர் என்றே இயற்பெயர். அவர் அருள்மொழியான "பெரிய புராண'த்தைச் செய்திருக்கிறார்.
ராஜராஜனாக ஆனவுடன்

நமக்கானால் தற்பெருமையும் தலைக்கனமும்தான் ஏற்படும். ஆயுஸ் பரியந்தம் தனக்கும் அப்புறம் பின் ஸந்ததிக்கும் ராஜ்யாதிகாரம் என்றில்லாமல் ஒரு அஞ்சு வருஷம் மினிஸ்டர் என்று ஆகிவிட்டாலே தனக்காக வெற்றி விழா, பாராட்டுவிழா, கிரீடச் சூட்டு, கேடயச் சூட்டு எல்லாம் பண்ணிக் கொள்கிறோம்

. அவனோ ராஜராஜனானவுடன் தன் பேராற்றல், நெற்றி, வீரதீரம் அத்தனையும் ஈச்வரப் பிரஸாதம்தான் என்பதாக, தான் அடங்கி, ஈஸ்வரனையே பெரியவனாக, அம்பாளையே பெரியவளாக வைத்து மஹா பெரிய கோவிலைக் கட்டினான். பெருமை எல்லாம் பகவானைச் சேர்ந்ததுதான் என்று உணர்த்தும்படியாக அந்தக் கோயிலில் எல்லாம் பெரிசாக, பெயர்களிலும் "பெரிய' ஸம்பந்தம் இருக்கும்படியாகச் செய்தான். இங்கே ஈச்வரனுக்கும் ராஜராஜனை முன்னிட்டு "ராஜராஜேச்சுரம்' என்று வாஸ ஸ்தானம் ஏற்பட்டிருக்கிறது. ராஜராஜனும் பெரிய பார்டன் ஆப் ஆர்ட் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் ஃபைன் ஆர்ட் என்பவை ஜீவனை ரிஃபைன் பண்ணிப் பரமாத்மாவிடம் கொண்டு போய்க் கலக்கும்படியாகச் செய்ய வேண்டும் என்ற பெரிய லட்சியமுள்ளவன்

. அதனால் வேதமும் திருமுறைகளும் ஓதுவது மட்டுமில்லாமல் தமிழ், ஸமஸ்கிருதம் இரண்டிலும் ஈச்வரபரமான வேறு பாடல்களும் பாடுவதற்கென்று ஆரியம் பாடுவோர், தமிழ் பாடுவோர் என்று இரண்டு சாரரை ராஜராஜச்வரத்தில் நியமித்தான். ஆரியம் பாட மூன்று பேர், தமிழ் பாட நாலு பேர்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்





December 17, 2013 

ஆடவல்லானின் ஆனந்த தாண்டவம்

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. “மாதங்களில் மார்கழியாகவும், நாட்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன்” என பகவான் கண்ணன் மார்கழியின் சிறப்பினை பகவத் கீதையில் போற்றுகிறான்.

பக்தி மயமாக விளங்குகிறது மார்கழி மாதம். அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் திருக்கோயில்களில் திருப்பாவை- திருவெம்பாவை பாடல்களைப் பாடி இறைவனை வணங்குகின்றனர். வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்தில் சிறப்பான விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுவது போன்று, சிவாலயங்களில் திருவாதிரை விழா நடைபெறுகிறது. இந்நன்னாளில் ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. எனவே “”ஆதிரை நாள் உகந்தான்” “”ஆதிரை நன்னாளான்” என்று திருமுறைகள் போற்றுகின்றன.

தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கி இறைவன் ஆடிய நடனம் ஆனந்த நடனம். பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி தாருகாவனத்தில் அன்று ஆடிய நடனத்தை தில்லையில் மீண்டும் ஆதிரை நன்னாளில் சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படுகிறது. இன்னாளில் நடைபெறும் தரிசனத்தை “ஆருத்ரா தரிசனம்” எனச் சிறப்பித்து அழைக்கிறோம். சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறும் “ஆருத்ரா தரிசன காட்சி” மிகவும் சிறப்பானது. அன்று இறைவனுக்கு படைக்கப்படும் “திருவாதிரை களியும்’ சுவையானது.

தமிழகத்தில் பல திருக்கோயில்களில் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெறுகிறது. திருவாதிரை அன்று நடராஜப் பெருமான் பல திருக்கோயில்களில் வீதி உலா வருவதும் உண்டு.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகரம் கோயிலில் திருவாதிரை நாளில் எழுந்தருள “அதிரை விடங்கர்’ என்ற திருமேனி செய்து அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் உள்ள திருவாய்மூர் திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை நாளில் “வட்டணை ஆடல் உடையார்’ என்ற ஆடவல்லான் திருமேனி உலா வந்ததை கல்வெட்டுகளின் வாயிலாக அறியலாம்.

aadaநடராஜப் பெருமான் திருநடனம் ஆடிய சிறப்பான திருத்தலங்களாக, சிதம்பரம் – கனகசபை, மதுரை – வெள்ளிசபை, திருநெல்வேலி – தாமிரசபை; திருக்குற்றாலம் – சித்திரசபை, திருவாலங்காடு – இரத்தினசபை என ஐந்து சபைகள் கூறப்படுகின்றன.

சென்னை-திருத்தணி செல்லும் பாதைக்கு அருகே திருவாலங்காடு அமைந்துள்ளது. அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். வடாரண்யம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் உவந்து ஆடிய அம்பலம் இது. உலகம் உய்ய இறைவன் இங்கு ஆடிய “”ஊர்த்துவ தாண்டவமே” முதன்மையான தாண்டவம்.

இறைவனின் ஐந்து செயல்களில் “அருளல்’ என்னும் செயலை இந்தத் தாண்டவம் குறிக்கிறது. காளியின் செருக்கைப் போக்குவதற்காக ஆடிய திருநடனம் இது. மிக வேகமாக சுழன்று ஆடியதால் “சண்ட தாண்டவம்’ என்றும், “அணுக்கிரக தாண்டவம்” என்றும் அழைக்கப்படுகின்றன. “”ஆடினார் காளி காண ஆலங்காட்டடிகளாரே” என நாவுக்கரசர் பெருமான் போற்றுகின்றார். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் போற்றப்பட்ட சிறப்பு மிகு தலம் இது. ஊர்த்துவதாண்டவத்தை பெருங்கூத்து எனவும் செய்கரிய நடனம் என்றும் போற்றுகின்றனர்.

காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு ஆடவல்லான் பெருமானிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இறைவன் ஆடும் கூத்தின் சிறப்பினை அம்மையாரின் திருப்பதிகங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. திருமூலர் பெருமானும் ஊர்த்துவதாண்டவத்தின் பெருமையை அழகாக விளக்குகிறார்.

திருவாலங்காடு திருக்கோயிலில் வழிபடப்பெறும் ஊர்த்துவதாண்டவ மூர்த்திக்கு மார்கழி திருவாதிரை நாளில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. (18.12.2013 அன்று இரவு சிறப்பு அபிஷேகமும், 19.12.2013 அன்று கோபுர தரிசனமும், பழையனூர் சென்று வந்து நடராஜப் பெருமான் காட்சி அளிக்கும் தரிசன நிகழ்ச்சியும் இத்தலத்தில் நடைபெற உள்ளன).

மார்கழி மாதத்தில் திருவாதிரையில் தாண்டவமூர்த்தியான நடராஜப் பெருமானை வழிபடுவது நல்லது என காரண ஆகமம் கூறுகிறது. அந்த வழிபாட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் கிடைக்கும் என்கிறது.
 — with Mrt Srinivasan.




December 17, 2013 

"காமாக்ஷியும், காமகோடியும்"
( செயலர் ஜி.வைத்தியநாதன்.)

தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.

”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது. பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.

‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா
நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப்
பெரியவாகிட்டே சொன்னோம்.

அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து
ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!

காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்! அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு
சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா
அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!


December 17, 2013 

பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு !

(திருப்பாவை – திருவெம்பாவை (மகா பெரியவா)

மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் – தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் – விடியற்காலை நாலு மணியிலிருந்தே !

சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை.

இது தவிர, திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள்.

பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி – பரிசுகள் !
இத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது ?

தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது.

அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக்கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன.

1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.
மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.

‘ அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ ?’
உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.

ஒரே குரலில், ‘தெரியாது’ என்று பதில் வந்தது.

‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’

இரண்டு நிமிஷ நடை.

‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..
‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..’

பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !

அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..
‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’

அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் !

திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.

பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.

மார்கழி மாதம் வந்தது.

பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.

‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் ‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?

‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.

அப்புறம் கேட்பானேன் !

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் !

ஓரிரு ஆண்டுகள் சென்றன.

ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள்.

‘ஞாபகம் இருக்கா ? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும் ? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே ? — இப்போ யாரவது பாடராளா ?…’

இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு !




December 16, 2013 

ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார்.
“பெரிய குடும்பம், வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படி ரொம்ப கொறைச்சல், ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார்.

“நீ…. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?”

“இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்”

“நீ அங்கே இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு இரு. பரம்பரையா அம்பாளை பூஜை பண்ணின குடும்பம். மாட்டுக் கொட்டகைல இருங்கோ. அதோட, இன்னொண்ணும் கேளு. எல்லா க்ரஹங்களையும் நன்னா. திட்டறயோன்னோ ! ….உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!…இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது”.

“குரு…ங்கறது பெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்….அவரைப் போய்நீசன், பாபி, வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபிங்கறே! கிரகங்கள் சரியான எடத்ல இல்லை…..கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!”

“பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க வரவா கிட்டே “பொருத்தமில்லை” ன்னு நிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே! பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும், பையனுக்கு புத்திர பாக்கியம் கேள்விக் குறிங்கற மாதிரி சொல்லலாம். முப்பது வயசாகியும் நெறைய பொண்கள் கல்யாணம் ஆகாம இருக்கா. அப்பிடிப்பட்டவாளுக்கு வரன், ஜாதகபொருத்தம் பாக்க வந்தா, முடிஞ்சவரை நிராகரிக்காம பதில் சொல்லணும்”.

“கல்யாண விஷயத்ல, பொண், பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம, குலம், கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும். பழங்காலத்ல ஜாதகப்பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை”.

ஜோஸ்யர் திருப்தியோடு, “இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்” என்று சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு போனார்.
















































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக