சனி, 12 ஜூலை, 2014

தாயுமான தயாநிதி





Mannargudi Sitaraman Srinivasan added 2 new photos.
தாயுமான தயாநிதி
நினைத்தாலே நம் நெஞ்சிலும் நினைவிலும் உயர்ந்து நிற்பது.

Status Update
By Mannargudi Sitaraman Srinivasan
தாயுமான தயாநிதி
நினைத்தாலே நம் நெஞ்சிலும் நினைவிலும் உயர்ந்து நிற்பது.

சிராப்பள்ளி மலை . பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பர்யமுடையது.

இது ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் நடந்த போட்டியில் பிளவுபட்ட மேரு மலையின் சிகரங்களுள் ஒன்று என்பது திருக்குறிப்பு..

மூன்று முகடுகளுடன் மலை விளங்குகின்றது.

அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் திருக்கோயிலையும் சிகரத்தில் உச்சிப் பிள்ளையார் திருக்கோயிலையும் தன்னகத்தே உடைய இந்த மலையின் நடுவில் -

இருநூற்றைம்பது படிக்கட்டுகளுக்கு மேல் அமைந்துள்ளது மட்டுவார் குழலி அம்பிகை உடனாகிய தாயுமான ஸ்வாமி திருக்கோயில்!..

சகல உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆக நிற்கும் இறைவன் - சங்கடமுற்ற அபலைப் பெண்ணுக்குத் தாயாகவே வந்து பேறு பார்த்து பேரருள் புரிந்த திருத்தலம்.

மேற்கு நோக்கிய சந்நிதி. பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனி!..

இறைவன் - செவ்வந்தி நாதர், தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர்.
இறைவி - மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை.

தீர்த்தம் - காவிரி. சிவகங்கை. தலவிருட்சம் - வில்வம்.

அனுமக்கொடியினை உடையது இத்திருக்கோயில்.

ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் திருப்பதிகம் பாடிப் பணிந்த திருத்தலம்.

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!.. என மாணிக்கவாசகர் போற்றுகின்றார்.

அருணகிரிநாதர் சிராப்பள்ளி மலைக்கோயிலில் தரிசனம் செய்து திருப்புகழ் பாடியுள்ளார்.

இன்று சொல் வழக்கில் திருச்சி என்று திரிந்து போன இத்திருத்தலத்தின் ஆதி திருப்பெயர் - சிராமலை, சிரகிரி.

பின்னாளில் ஞானசம்பந்தர் காலத்துக்கு சற்று முன்னதாக - சிராப்பள்ளி!..

திருச்சிராப்பள்ளி மலையில் லலிதாங்குர பல்லவேஸ்வர க்ருஹம் எனும் குகைக் கோயில் அமைத்தவன் - அப்பர் சுவாமிகளைத் துன்புறுத்தியவனாகிய பல்லவ மன்னாகிய மகேந்திர வர்மன் (கி.பி 600-630) .

மகேந்திர பல்லவன் இக்குடைவரையில் எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்றினை அமைத்திருக்கின்றான். அதில், தான் சைவன் ஆனதையும் (S.I.I. Vol. I No. 33, 34.) ,

திருவதிகையில் அமண் பள்ளிகளை இடித்துக் குணபரேச்சுரம் எனும் கோயில் கட்டியதையும் குறிப்பிடுகின்றான்.

குணபரன் என்பது மகேந்திர வர்மனின் பட்டப் பெயர்.

திருச்சி மலைக்கோட்டை - 1880
சிராப்பள்ளி மலை மதுரை நாயக்க அரசர்களின் கைவசம் இருந்த காலத்தில் கோட்டையும் அரணும் அமைக்கப்பட்டன.

பல பெரும் போர்களைக் கண்ட பெருமையை உடையது இந்த மலை.

கொடூர கொள்ளையர்களுள் தலை சிறந்தவனான மாலிக்காபூர் முதற்கொண்டு பீஜப்பூர், விஜயநகரம், மராட்டியர் என பல ஆக்ரமிப்புகளைக் கண்டது - திருச்சி மலைக்கோட்டை..

நாயக்கர்களுக்கும் விஜய நகரப் பேரரசர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர் அவற்றில் முக்கியமானதாகும். அதன் பிறகு,

எஞ்சியிருந்த தஞ்சை நாயக்கர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே போர் நிகழ்ந்ததும் இங்கேதான்!..

வாணிகம் என்ற போர்வையுடன் வந்தேறிய ஐரோப்பியர்கள் - புண்ணிய பாரதத்தின் மண்ணுக்காகவும் பொன்னுக்காகவும் - முட்டி மோதிக் கொண்ட இடங்களுள் திருச்சி மலைக்கோட்டையும் ஒன்று!..

வேதாரண்யத்தில் பிறந்து - விஜயரங்க சொக்கநாதனின் அரசவையில் பெருங்கணக்கராக அருட்பணி புரிந்த தாயுமானவ ஸ்வாமிகள் பல காலம் நிஷ்டையில் இருந்ததும் இங்கே தான்!..

ராணி மங்கம்மாளின் பேரனான விஜயரங்க சொக்கநாதனின் மனைவி ராணி மீனாட்சியை சேவகர்களைக் கொண்டு சிறைப் பிடித்த சந்தா சாஹிப் ஆட்சி உரிமையை கை மாற்றிக் கொண்டது இங்கேதான்!..

பிரெஞ்சுப் படையின் துணையுடன் சந்தா சாஹிப் ஒருபுறமும் - ஆங்கிலேயப் படையின் துணையுடன் கர்நாடக நவாப் ஒருபுறமும் நின்று அடித்துக் கொண்டு ரத்தக் களறியாகியது இங்கேதான்!..

ஆங்கிலப் படைகளின் கொடூரத் தாக்குதலைத் தாளமுடியாது தோற்று ஓடிய சந்தா சாஹிப் அஞ்சி நடுங்கி ஒளிந்து கொண்டிருந்தது மலைக் கோட்டையின் குகையினுள் தான்!..

பிரெஞ்சு படைத் தளபதி டூப்ளே படுதோல்வி (ஜூன்1752) அடைந்து நின்றான்.

போரில் வெற்றிக் கனியைப் பறித்தவன் கிழக்கிந்தியக் கம்பெனியின் - சென்னைப் பிரிவில் சாதாரண எழுத்தராக வேலை செய்த ராபர்ட் கிளைவ்!..

ஆங்கிலேயன் - தமிழகத்தில் காலூன்றியது இந்தப் போரின் வெற்றியைக் கொண்டுதான்!..

இப்படி எல்லாம் இருந்தாலும் -

அனைத்து உயிர்க்கும் தந்தையான சிவபெருமான், தாயாகவும் எழுந்தருளிய பெருமைக்கு உரியது திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில்.

ரத்னாவதி. நேர்மையான தனவணிகனின் அன்பு மனைவி.
ஆதி நாதனாகிய செவ்வந்திநாதர் மீது அளவற்ற பக்தி அவளுக்கு!..

நல்லறமாகிய இல்லறத்தில் - கருவுற்றிருந்த அவள் தனக்கு சுகப் பிரசவம் ஆக வேண்டும் என பிரார்த்தனையுடன் அல்லும் பகலும் ஐயன் செவ்வந்தி நாதனையும் மட்டுவார் குழலியையும் வணங்கி வந்தாள்.

தொழில் நிமித்தம் வெளியூர் சென்ற கணவன் இன்னும் தன் வீடு திரும்பவில்லை. பேறுகாலம் நெருங்கியது. அவ்வேளையில் உற்றாரும் அருகில் இல்லை. அது ஈசனின் சித்தம் போலும். தனக்கு உதவி செய்ய வருமாறு ஆட்களின் மூலமாக தாயாருக்கு தகவல் அனுப்பினாள் ரத்னாவதி.

காவிரியின் மறுகரையில் இருந்த அவள் தாய், அன்பு மகள் விரும்பி உண்ணும் தின்பண்டங்களுடன் தாய்க்கும் சேய்க்குமான மூலிகை மருந்து வகைகளுடன் புறப்பட்ட போது காவிரியில் சற்றும் எதிர்பாராத வெள்ளப் பெருக்கு!.. செய்வதறியாது திகைத்தாள்.

காவிரியில் படகுப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைப்பட்டது. கலங்கித் தவித்த அவள், கண்களின் நேர் எதிரே - காவிரியின் மறுகரையில் சிராப்பள்ளி மலையும் கோயிலும் தான்..

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை!.. - என கை கூப்பி நின்றாள்.

அக்கரையில் அக்கறையுடன் - தாய்.. இக்கரையில் ஆதரவற்றவளாக மகள்!..

ஈசன் திருமுகத்தின் புன்னகை அரும்பிற்று.

அந்தத் தாயின் வடிவு கொண்டான். மருந்தீசனான எம்பெருமான் தயாபரன் - ரத்னாவதிக்கு மகப்பேறு மருத்துவனாக உதவினான்.

ஆண் மகவை ஈன்றாள் ரத்னாவதி. அவளுக்கு வேண்டியது அத்தனையும் - அத்தன் அருகிருந்து செய்தருளினன்.

காவிரியில் வெள்ளம் வடிந்தது. பதற்றத்துடன் பரிசலில் ஏறி, தன் மகளைப் பார்க்க ஓடிவந்தாள் அந்தத் தாய். பெற்றவளைக் கண்டதும் உற்றவளாய் இருந்து உதவி புரிந்த ஈசன் தன்னுரு கரந்தான்..

அங்கே, குழந்தை பிறந்து தன் மகள் சுகமாக இருப்பதைக் கண்டு தாய்க்கு திருப்தி. காவிரிப் பெருக்கினால் உடன் வர இயலாத ஆற்றாமையைக் கூறிய போது மகள் திடுக்கிட்டாள்.

என்ன சொல்கிறாய் அம்மா!.. நீதானே என் அருகிருந்து பிள்ளைப் பேறு பார்த்தாய்!..

நானா?.. நான் தான் அக்கரையில் இருந்தேனே!.. - என்றாள் தாய்.

அப்படியானால் - தாயாக வந்தது யார்!?..

வானில் பேரொளிப் பிழம்பு!..

தாயாக வந்தது யார்!?.. - என்ற வினாவுக்கு விடையாக - விடை வாகனத்தில் வந்தருளினன் - தாயாகிய தயாநிதி!..

யாம் பெற்ற பேறு யாவரும் பெற்றுய்ய வேண்டும் பெருமானே!.. - என்று வணங்கி நின்றனர் - தாயும் மகளும் தழைத்த சந்ததியுடன்!..

அது முதல், செவ்வந்தி நாதர் - தாயுமானவர் எனத் திருப்பெயர் கொண்டார்.

இங்கே குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என கருவறையில் வைத்து பூஜித்த வாழைப்பழங்களை பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கிறார்கள்.

சுகப் பிரசவ ஸ்லோகம் இதோ!..

ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின்
சம்போ ஸுகப்ரசவ க்ருத பவ தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே..

இந்த ஸ்லோகத்தினைப் பாராயணம் செய்து தினமும் வணங்கி வந்தால்,

செட்டிப் பெண்ணுக்கு அவளது தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்த ஸ்ரீதாயுமான ஸ்வாமியின் அருளால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் சாத்தியமாகும்!.. இது சத்தியமாகும்!..

பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவம். பத்தாம் நாள் தீர்த்தவாரி.

சித்திரையில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் - ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம். இந்த வைபவத்தின் போது பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்து மற்றும் தைலம் பிரசாதமாக தரப்படும்.

ஆடிப்பூரம், நவராத்திரி - என மாதந்தோறும் விசேஷ வைபவங்கள்.

இதில் உன்னதமாக - ஆனி மாத பௌர்ணமியை அனுசரித்து மூல நட்சத்திரத்தில் பலவகையான பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும் வாழைத்தார்களை நிவேதனம் செய்தும் ஸ்ரீதாயுமான ஸ்வாமியைப் பணிந்து வணங்குகின்றார்கள். காணற்கரிய காட்சி இது!..

இதே நாளில் உறையூரில் - அருளாட்சி செய்யும் ஸ்ரீவெக்காளி அம்மனுக்கும் மாம்பழ அபிஷேகம் நிகழ்கின்றது.

மேலும் - சில திருக்கோயில்களில் பலவகையான பழச்சாறுகளைக் கொண்டு பரமனுக்கு அபிஷேகம் நிகழ்கின்றது.

ஜ்யேஷ்ட மாதம் எனும் ஆனி மாத மூல நட்சத்திரத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து கனிந்த பழங்கள் பாயஸம் இவற்றுடன் விசேஷ பூஜை என்பது விதி.

வீடுகளில் - பஞ்சாமிர்தம் பலவகையான கனிந்த பழங்கள் மற்றும் பாயஸ நிவேதனம் சமர்ப்பித்து பூஜை செய்து மகிழலாம்.

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே!.. (1/98)
திருஞானசம்பந்தர்.

தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே!.. (5/85)
திருநாவுக்கரசர்.

அப்பர் பெருமான் - சிராப்பள்ளி ஈசனை - தமக்குத் தாயுமான நாதன் எனக் குறிப்பது சிந்தனைக்கு உரியது.

தாயுமான தயாபரன் தாள் - தலை மேற்கொள்வோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக