புதன், 17 செப்டம்பர், 2014

பெரியவா இன்றும் நம்முடன் தான் இருக்கிறார்

ராதே கிருஷ்ணா 18-09-2014



பெரியவா இன்றும் நம்முடன் தான் இருக்கிறார் (sharing message)





Photos from Halasya Sundaram Iyer's post in Mahaperiavah
By Halasya Sundaram Iyer
பெரியவா இன்றும் நம்முடன் தான் இருக்கிறார் (sharing message)

'பெரியவா இருந்த இடத்திலே இருந்து வெகு அருகில்தான் வரதராஜ பெருமாள் கோயில். அந்தக் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தபோது, பெரியவாளைத் தனியா வந்து அங்கே இருந்து யாரும் அழைச்சதா தெரியலே. அதையெல்லாம் பெரியவா எதிர்பார்க்கவும் மாட்டார். மாடவீதியிலேயே, உசரமான ஒரு வீட்டுத் திண்ணையில் ஏறி நின்றுகொண்டு, கோபுர தரிசனம் செய்தார். சந்நிதி தெரு சந்திக்கிற இடத்திலே ஜீயர் சுவாமிகள் இவரைப் பார்த்துவிட்டு, ''பெரியவா அவசியம் வந்து சேவிக்கணும்!'' என்று கேட்டுக்கொண்டார். ஜீயர் கேட்டுக்கொண்டதற்காக, மறுபடியும் ஒருதடவை வந்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுத்தான் போனார் பெரியவா.

பெரியவா காலையில் எப்போது வெளியே கிளம்புவார் என்று யாருக்கும் தெரியாது; நினைத்தாற் போலிருந்து, திடீரென்று புறப்பட்டுவிடுவார். நாம்தான் எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டும். ஒருநாள் விடியற்காலை 4 மணி இருக்கும். குள்ள சந்திரமௌலி படுத்துக்கொண்டிருந்தான். கதவு சாத்தியிருந்தது. பல் தேய்த்து சுத்தம் செய்துகொண்டுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கதவு நன்றாகத் திறந்து கிடக்கிறது. பெரியவாளைக் காணோம்!

எல்லோருக்கும் ஒரே பயமாகப் போய்விட்டது. பாடசாலை வெங்கட்ராம சாஸ்திரி பேரன், 'நான் போய்த் தேடிப் பார்த்துட்டு வரேன்’ என்று புறப்பட்டான். சாலையில் டிரெயினேஜ் குழாய்கள் போடுவதற்காகப் பள்ளம் தோண்டிப் போட்டிருந்தார்கள். அதிகாலை நேரம். கும்மிருட்டு. மேடும் பள்ளமுமாக வீதி ரொம்பவும் மோசமாக இருந்தது.

திரௌபதி அம்மன் கோயில் பக்கத்தில் பெரியவா நடந்து போய்க்கொண்டிருந்தார். வெள்ளையாக அகிம்ஸா பட்டு ஒன்றைப் போர்த்திக்கொண்டு, தண்டத்தை உள்ளே மறைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். பெரியவாதான் அது என்று ஓர் ஊகத்தில் தெரிய வந்ததும், அவன் அவரைத் தொடர்ந்து ஓடினான். வடக்கு மாட வீதியில்தான் அவரைப் பிடிக்க முடிந்தது. நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே... அவர் நடை வேகத்துக்கு இணையாக நம்மால் எல்லாம் நடக்கவே முடியாது!

பெரியவாளுக்கு பள்ளம், மேடு எல்லாம் ஒன்றும் தெரியாது. கூடப்போகிறவர்தான் அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்த பெரியவா, மேடாக இருந்த ஓர் இடத்தில் கால் தடுக்கிவிடாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக, அருகிலே ஓடிய சாஸ்திரி பேரன் அவரை நெருங்கி, 'பெரியவா, படி, படி!’ என்று எச்சரிக்கை செய்தான். திடீரென்று அவனைப் பார்த்த பெரியவா, 'என்னடா நீ, இந்த வயசிலே போய் என்னைப் படி, படின்னு சொல்றியே... படிக்கிற வயசா எனக்கு?’ என்று குறும்பாகக் கேட்டார். பெரியவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்!' என்ற வைத்தியநாதன், பெரியவா பற்றிய அடுத்த தகவலுக்குள் தாவினார்.

'1977-ல் மேற்கு கோதாவரி ஜில்லா வில் பெரிய மழை கொட்டு கொட்டு என்று கொட்டி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடலில் அலை எல்லாம் 30-40 மீட்டர் உயரத்துக்கு வீசியடிச்சுது. ஆயிரக்கணக்கில் ஜனங்கள் மாண்டு போனார்கள். பிணவாடையையும், அசௌகரியங்களையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் அதை எல்லாம் அப்புறப்படுத்தி, அபர காரியங்களை எல்லாம் செய்தார்கள்.

இந்த விஷயம் பெரியவா காதுக்கு எட்டியபோது, அவரால் துக்கம் தாங்க முடியலே. ஆனா, 'அந்த மாதிரி துர்மரணம் அடைஞ்சவா ளோட ஆன்மா நற்கதி அடையணும்னா, மோட்ச தீபம் ஒரு லட்சம் ஏத்தணும்’ என்று பெரியவா சொன்னார். அதன்படி, இரண்டு மூன்று நாளைக்கு தினசரி ஒரு டின் எண்ணெய் வீதம் விளக்குகளுக்கு ஊற்ற வேண்டியிருந்தது. லட்ச தீப விளக்கு ஏற்றப்பட்ட பிறகுதான், பெரியவா மனசு ஓரளவு சமாதானம் ஆச்சு!

இந்தச் சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக இன்னொரு செய்தியையும் சொல்லணும். விஜய ராகவாச்சார்யார் என்று ஒரு முதிய ஸ்ரீவைஷ்ணவர், தேனம்பாக்கத்தில் பெரியவாளைப் பார்த்து வேதாந்த சாஸ்திர விசாரம் பண்ண எப்போதும் வருவார். அதிலும் குறிப்பாக, பிரதோஷம் அன்று கோயிலுக்கு வராமல் இருக்கவே மாட்டார்.
அவர் ஒரு பிரதோஷ நாளன்று சிவஸ்தானத் துக்கு வந்து பெரியவாளோடு பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு வந்து விட்டது. ஏதோ சொல்ல வந்த மாதிரி இருந்தது. ஆனால், அவரால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியலே. எழுதித் தர முடியுமா என்றுகூட பெரியவா முயற்சி பண்ணினார். முடியாது என்கிற மாதிரி அவர் தலையை அசைத்தார். அதற்குள் அவர் ஆவி பிரிந்துவிட்டது.

உயிர் பிரிந்த இடம்- சரியாக நந்தி அருகில்! அவருக்கும் ஒரு மோட்ச தீபம் வைக்க வேண்டுமென்று பெரியவா சொன்னார். அதன்படி, கோபுரத்தின்மேல் விளக்கு வைக்க ஏறினார் குமரேசன் என்பவர். விளக்கை வைத்துவிட்டுத் திரும்பியவர், நிலை தடுமாறி அப்படியே கீழே சரிந்து விழுந்துவிட்டார். ஆனால் ஆச்சரியம்... அத்தனை உயரத்திலிருந்து விழுந்தபோதும் அவருக்கு பலமான அடி கிடி எதுவும் படவில்லை; பயப்படும்படியாக எதுவும் ஆகவில்லை. (அவர் இப்போது ஓரிக்கை மணிமண்டபத்தில் பணி புரிந்துகொண்டிருக்கிறார்.) எல்லாம் பெரியவாளின் அனுக்கிரகம்தான்!'

சிறிது இடைவெளி விட்ட வைத்தியநாதன், மறுபடியும் பெரியவா தொடர்பான பேச்சைத் தொடர்ந்தார்...

'ஒருமுறை சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் பெரியவாளை தரிசிப்பதற்காகத் தேனம்பாக்கம் வந்திருந்தார். காலையில் வரதராஜ பெருமாள் தரிசனத்தை முடித்துக் கொண்டு, 8 மணி சுமாருக்குப் பெரியவாளை தரிசனம் பண்ண இரண்டு பெரிய கார்களில் குடும்ப சகிதமாக வந்தார் அவர். 'பெரியவா இப்போ வந்துடுவார். உட்காருங்கள்!’ என்று மடத்துச் சிப்பந்திகள் அவரை உபசரித்து உட்கார வைத்தார்கள்.

பெரியவா வந்ததும், அவரை தரிசனம் செய்து ஆசிகள் வாங்கிக் கொண்ட பிறகு, வாத்தியத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார் பண்டிட் ரவிசங்கர். பெரியவா மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார். வாசித்து முடித்ததும் ரவிசங்கருக்கு சந்தோஷமாக இருந்தது. இப்படித் தனிமையாக, பெரியவாளுக்கு முன்பாக அமர்ந்து சிதார் வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததை, தன் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்று மகிழ்ந்து போனார்.

'எனக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. பெரியவா ஆழ்ந்து ரசித்து என் சங்கீதத்தை அனுபவிச்சுக் கேட்டார்!’ என்று நெகிழ்ச்சியாகச் சொல்லிவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார், பண்டிட் ரவிசங்கர்.'

தமது நினைவில் பதிந்திருந்த, பெரியவா பற்றிய சிலிர்ப்பான தகவல்களைச் சொல்லி முடித்தார் வைத்தியநாதன்.

மகா பெரியவாளுடன் சாதாரண மக்களுக்கு இருந்த அனுபவங்கள் ஏராளம். அவர் மறைந்த பிறகும்கூட அவர் வாழ்ந்த ஸ்தலங்களுக்கு வந்து, அவர் சாந்நித்தியத்தை- அவர் ஏற்படுத்திய 'வைப்ரேஷன்’களை இன்றும் அனுபவித்து மகிழ்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். பெரியவா இப்போதும் நம்முடனேயே இருந்து, நம்மை எல்லாம் வாழ்த்திக்கொண்டு இருப்பதாக நினைப்பதால் தான், அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் 100 அடி ஸ்தூபி மண்டபத்துக்கும், தேனம்பாக்கத்துக்கும், ஓரிக்கை மணிமண்டபத்துக்கும் மக்கள் இன்றைக்கும் திரளாக வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

ஆமாம்... பெரியவா, இன்றைக்கும் நமக்காக நம்முடனேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்!



























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக