சனி, 4 ஜூலை, 2015

கான்சருக்கு அரிய மருந்து-பெரியவாளின் கண்டுபிடிப்பு"

ராதே கிருஷ்ணா 04-07-2015






"கான்சருக்கு அரிய மருந்து-பெரியவாளின் கண்டுபிடிப்பு"

இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். பகிர்ந்து கொண்டவர் ஸ்ரீ மடம் பாலு.

ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள்.

பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.

'ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக்காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில் கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல். கான்சர் குணமாகி விடும்' என்றார்கள் பெரியவா.

அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தே விட்டது. (துரதிருஷ்டவசமாக அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போய் விட்டது)

கணேசய்யரின் சம்சாரத்தின் பிரார்த்தனையின்படி, அந்த அம்மையார் எண்பது வயதுக்கு மேல், மகாப் பெரியவாளின் கனகாபிஷேகத்தைக் கண்டு களித்து விட்டு, நிம்மதியாகச் சிவபதம் அடைந்தாள்.




நம் கலி தீர ஜகத் குருநாதர் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா உணர்த்திய அத்வைதம்!

இது த்வைதம் அன்று! அத்வைதம்!
இரண்டாவது ஒன்று இருந்தால், அது நம்மைவிடச் சக்தி உள்ளதாக இருந்தால், பயம் உண்டாகிறது. அழகாக இருந்தால் ஆசை உண்டாகிறது; சித்த விகாரம் உண்டாகிறது. இரண்டாவது இல்லாவிட்டால் ஆசை இல்லை; த்வேஷம் இல்லை; பயம் இல்லை. இப்படி இரண்டாவது இல்லாமல் பண்ணுவது தான் அத்வைதம். இரண்டாவது இல்லையானால் பயம் நீங்குகிறதென்று உபநிஷத் சொல்கிறது. இரண்டாவதாக ஒன்றை நினைத்து விட்டாயோ பயத்துக்கு விதை போட்டு விட்டாய் என்கிறது: "த்விதீயாத்வை பயம் பவதி"
இரண்டாவது அன்று! ஒளிவீசும் ஒன்று அத்வைதம்!
ஒளிவீசும் ஒன்று அத்வைதம்!
அத்வைதம் ஒன்று! அத்வைதம் ஒன்று!
ஒன்று! என்று உணர்த்திய உயர்வான அத்வைதம்!
உணர்த்திய உயர்வான அத்வைதம் காஞ்சி ஜகத்குருநாதர் அத்வைதம்
கலி தீர்த்த காஞ்சி ஜகத் குருநாதர் சங்கரரின் அத்வைதம்
காத்தருள் புரியும் காஞ்சி ஜகத்குருவின் அத்வைதம்
கருணையே வடிவான காஞ்சி ஜகத்குருவின் அத்வைதம்
தன்னலமில்லாத தாயவரின் அத்வைதம்
தன்னிலை மறந்துருகும் அன்பரைக் காக்கும் அத்வைதம்
இன்னல்களைப் போக்கும் அருளை சேர்த்திருக்கும்
ஈடிணை இல்லாத ஈஸ்வரனின் அத்வைதம்...
உணர்த்திய உயர்வான அத்வைதம்
இது ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா
உன்னுள் நீ எனை நினைத்தாய்
உன்னுறு மட்டுமோ நான்?
உரு தாண்டியே திகழ்வேன்!
உன் அகத்தில் பிரதிபலிக்கும்
உன்னுருவைக் காண்கின்றாய்
உள்ள உருவெல்லாம் பிரதிபலிக்கும்
தடாகமும் நானே, பல்லுயிரும் நானே
விருக்ஷமும் அதேறும் ,பூச்சி புழுவும்
எறும்பு ஈறாய் ஜீவன் அனைத்தும் நானே
என்னை உணரவே பிரபஞ்சம் உணர்வாய்! உன்னுள்
உன்னைத் தாண்டினால் நீ எனை உணர்வாய் !(உணர்த்தும் அத்வைதம்)
இது நான்-
புண்ணியம் வழங்கிடும் புண்ணியன் உம் தோற்றம்
புண்ணியத்தாலே மண்ணினில் கண்டதும்
புண்ணியம் வேண்டியே பொன்னடி பணிந்திட
புண்ணியம் வருமே உம்மருளாலே….
உம்மருளாலே உம் தாள் வணங்கி
உம்மருள் வேண்டி உம் நிழல் நாடிட
உம்மருள் தருவாய் அவனியில் வாழ்ந்திட
உம்மருள் வருமே உம்மில் சேர்த்திட.
இது ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா-
எண்ணுவார் மனதில் எல்லாம் ஒளிவீசும்
நறும்புகை மணம் சுமக்கும் காற்றும் நானே
மணமும், அதன் குணமும், காணமுடியாததும்,
காணும் தினமும் விடியலும், உறக்கமும் நானே!
நீ என்பதும் நானென்பதும் ஒன்றே என்பதறிய
நீ தன்னுள் காணவே புரியும், பிரபஞ்ச சக்தி நாமே!
என்னை(அத்வைதம்) நீ உணர
அழகிய முகம் தோன்றும்
செவியில் வேணுகானம் இனிமையாய் கேட்கும் .
இகபர சுகமனைத்தும் இனிதே அமையும்
இவ்வுலகில் வாழும் காலமெல்லாம் சொர்க்கமாகும்.
எல்லாம் ஈச்வரனாகி ஒன்றாகி விட்டால் எந்தக் கிளர்ச்சியும் இல்லை. ஒரே சாந்திதான். அப்போது எல்லாம் நாமாக ஆகிறோம். நமக்கே நம் மேல் ஆசை அப்பொழுது ஏற்படாது. ஆசையில்லாவிட்டால் பாபம் இல்லை. பாபம் இல்லையென்றால் தேகம் இல்லை. இந்த தேகம் இருக்கிறபோதே அது இல்லை என்ற ஞானம் உண்டாகிவிடும். இது போனபின் இன்னொரு தேகம் வராது. அப்படியே அத்விதீயமான ஆனந்தத்தோடு ஒன்றாகியிருப்போம். தேஹம் இல்லாவிட்டால் துக்கமே இல்லை. அந்த துக்க நிவர்த்திக்கு அத்வைதம் மருந்து. இரண்டாவது இல்லாமற் பண்ணுவது அத்வைதம். எல்லாம் பகவானாகப் பார்ப்பது அத்வைதம். உள்ளதை உள்ளபடி பார்ப்பதுதான் அத்வைதம்.
பிரபஞ்சத்திலுள்ள ஸகல வஸ்துக்களும் பொய்யாகப் போய், அவற்றைக் கண்ட அறிவு ஒன்றுதான் மிச்சம். ஸத்யமான வஸ்து அதுதான். அதற்குத்தான் அத்வைதம் என்று பெயர்.
இது உண்மை! இது உண்மை! இது உண்மை!
இது சத்தியம்! இது சத்தியம்!
இந்த நிலைக்கு வருவதற்கு ஸுலபமான ஸாதனம் பக்தி உபாஸனை என்று அப்பைய தீக்ஷிதர் சொல்லியிருக்கிறார். அதை எல்லோரும் அநுஸரித்து அத்வைத ஸித்தியை அடைய வேண்டும்.
ஸ்ரீ மஹா பெரியவா கதி என்று உம் பதம் சரணடைந்தேன்!
உம்முடன் நான் வாழ்ந்திட்ட காலமெல்லாம் சொர்க்கம்.
உம்மை உணரவே பிரபஞ்சம் உணர்ந்து தாம் அத்வைதம் உணர்ந்து
இவ்வுலகில் வாழும் காலமெல்லாம் சொர்க்கமாகும்
விதி என்ன செய்யும் ஐயா ? உம் இதயமே குளிர்ந்தால்
மண்ணினில் உணர்ந்து கண்ட அத்வைதம்!
உன்னைத் தாண்டினால் நீ எனை உணர்வாய் ! என உணர்த்திய அத்வைதம்!
சரணாகதி அடைந்தோர்க்கு அருள் மழை பொழிந்த மஹாமுனிவர் தாள் பணிவோம்!
மறுபடி மறுபடி உம் திருவடி சரணம்!
நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த சாக்ஷாத்
மஹேஸ்வர ஸ்வரூபமாகிய கலி தீர்த்த ஜகத் குருநாதர் ஸ்ரீ மஹா பெரியவா!
அத்வைத சங்கர ஸ்ரீ வித்யா சங்கர ஸ்ரீ வித்யா சங்கர வினய சங்கர
ஸ்ரீ வித்யா சங்கர வினய சங்கர ஸ்ரீ மங்கள சங்கர ஸ்ரீ ஜகத் குரு சங்கர
ஸ்ரீ மங்கள நாயக போற்றி! ஸ்ரீ மஹா ஸ்வாமியே! போற்றி போற்றி!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர
Dr.KRISHNAMOORTHI BALASUBRAMANIAN


நடுக்காவிரியில் “காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி-(காஞ்சி மஹா பெரியவா)
திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே காஞ்சி மஹா பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் மஹா பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.
சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக் கொண்டிருந்தது.
முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் மஹா பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.
அப்போது மஹா பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் மஹா பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு மஹா பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும்.
ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.
திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
“எந்திரு..சீதே…ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை..” என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர் க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!
மஹா பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின் ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் !
“பெரியவா……இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு…..கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!” என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து மஹா பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.
“ராமா!…..ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா…போ!”

“உத்தரவு பெரியவா……” அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு மஹா பெரியவா முன் நின்றார். மஹா பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார்.
பிறகு, “ராமா…..இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு……அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்…..அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்” என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.
மஹா பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்…..அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! “கணேசன்” என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.
இப்போதும் மஹா பெரியவா சொன்னபடி நடுக்காவிரியில் “காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி” கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.






"வசம்பு தடவும்படி சம்பு அல்லவா சொல்லியிருக்கிறார்!'

(பெரியவாளின் சிறுநீரக சிகிச்சை)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

"சிறுநீரகங்கள் வேலை செய்யவில்லை.ரொம்பவும்
சிரமம். ஸ்பெஷலிஸ்டுகளிடம் போய் மருந்து
சாப்பிட்டு ஏகப்பட்டது செலவழித்தாயிற்று"-(ஒரு நபர்)

பெரியவா எதிரே வந்து நின்று ஒரு குரல் அழுதார்.
பொதுவாக இம்மாதிரி நிலைமைகளில் கருணை
பொங்கப் பேசும் பெரியவா,அப்போது கடுமையாகச்
சாடினார்கள்.

"எல்லாரும் தப்பு-அதர்மம் பண்ணிவிட்டு, கஷ்டம்
வந்தபிறகு இங்கே வருகிறா. தான் தப்பு செய்ததைப்
புரிஞ்சுக்கிறதில்லே. நான் என்ன செய்யட்டும்?"

ஏன் இந்தக் கோபம்?- என்று யாருக்கும் புரியவில்லை.
பின் பெரியவா சொன்னார்கள்.;

"தர்ம கார்யத்துக்குன்னு இவரோட மூதாதையர்கள்
டிரஸ்ட் வெச்சிருக்கா. நன்றாக விளைகிற நிலம்.
தண்ணீர்ப் பந்தல் வைத்து தர்மம் செய்யணும்,இவர்.
அந்த சொத்தையே விற்று சாப்பிட்டுட்டார்.

சிறுநீரகக் கோளாறு என்று சொல்லிக்கொண்டு
வந்தவருக்கு நெஞ்சில் உறைத்தது.

"இனிமேல் தண்ணீர்ப் பந்தல் வைத்து தர்மம் செய்கிறேன்"
என்று உறுதிமொழி அளித்தார்.

பெரியவா மனம் இளகி, "வசம்பு தெரியுமா? நாட்டு
மருந்துக் கடையிலே கிடைக்கும். அதை அறைத்து
அடிவயத்திலே தடவிண்டு வா..." என்றார்கள்.

பத்து பன்னிரண்டு நாள்கள் சென்றபின் அதே நபர்
தரிசனத்துக்கு வந்தார். பெரியவாள் கேட்பதற்கு
முன்னதாகவே, "இப்போ டிரபிள் ஏதும் இல்லை" என்றார்.

டிரபிள் எப்படி வரும்?

'வசம்பு தடவும்படி சம்பு அல்லவா சொல்லியிருக்கிறார்!'





நாச்சியார் கோவில்!
கல் கருடன்!

(இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும்)


கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.

திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.
கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம்.இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.

கருவறையில் பெருமாளோடு, பிரம்மா, ப்ரத்யும்னன்,பலராமன், அநிருத்தன்,புருஷோத்தமன் ஆகிய ஐவரும் உடன் அருள்பாலிக்கின்றனர். ஒரு சமயம், மேதாவி என்ற முனிவர் ஒருவர், திருமகள் தனக்கு மகளாகவும், ஸ்ரீமன் நாராயணன் தனக்கு மருமகனாகவும் அமைந்திட வேண்டும் என விரும்பி தவம் செய்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவ்வுலகோருக்கு நாரணின் பஞ்சவியூக திவ்ய தரிசனத்தை காண்பித்திட வேண்டியும், திருமகள் குழந்தை உருவெடுத்து இத்தலத்தில் அவதரித்தார். அழகேயான அந்த குழந்தையை முனிவர் எடுத்து வளர்க்கலானார். குழந்தையும் திருமண பருவம் எட்டியது. அச் சமயம் நாராயணன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், சாம்பன் மற்றும் வாசுதேவன் என தனது பஞ்சவீயூகத் தோற்றமான ஐந்துரு கொண்டு திருமகளை தேடி இத் தலம் வந்தடைந்தார்.அப்போது கருடாழ்வார் லட்சுமி தேவி இங்கு வஞ்சுளவல்லியாக வளர்வதை அவர்களிடம் தெரிவித்தார். முனிவரின் ஆசிரமத்தில் திருமகள் வளர்வதை அறிந்தார். தனது ஐந்துருவில் ஆசிரமம் சென்றார். முனிவர் வந்தோர்க்கு அமுது படைத்தார். வாசுதேவன் கை அலம்ப செல்கையில், முனிவரின் மகளாய் வளரும் திருமகளின் கரம் பிடித்தார்.

திருமகள் அலற, முனிவர் அங்கு வர, திருமால் தனது ஐம்பொன் திருமேனி காட்டினார். முனிவரிடம் " முனிவரே, உமது தவம் பலிக்கவே யாம் இந்த நாடகம் நடத்தினோம்". என்றார். தன் தவம் பலித்த மகிழ்ச்சியில் முனிவர் ஐயனிடம், " பெருமானே, எனக்கு நீர் தரிசனம் தந்தது போல் இத் தலத்தில் யாவரும் தரிசிக்கும் வண்ணம் என்றென்றும் அருள்புரிய வேண்டும். எனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியின் பெயராலேயே இத் தலம் அழைக்கப்படவேண்டும். இத் தலம் வந்து உம்மை சேவிப்பவர் அனைவருக்கும் முக்தி தர வேண்டும்". என வரங்கள் கேட்டார். பரந்தாமனும் அவ்வாறே ஆகட்டும் எனக் கூறி முனிவருக்கு காட்சி தந்த கோலத்திலேயே இத் தல கருவறையில் அனைவருக்கும் காட்ச்யருள்கிறார். இத்தலம் வந்து சேவிப்போருக்கு பெரும் பேறு அளிக்கிறார். பின்னர் பெருமாள் வஞ்சுளவல்லி திருமணம் நடந்தேறியது. பெருமானின் திருமணத்திற்கு உதவிய கருடாழ்வாருக்கும் நாச்சியார் கோவிலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர். உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை.

இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும். இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .இந்த கருடனில் இன்னொரு சிறப்பு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குவது ஆகும். எல்லாக் கருடனிலும் எட்டு நாகங்களே ஆபரணமாக இருக்கும். இங்கு ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

. நாச்சியார் கோயில் "கருட சேவை" மிகப் பிரசித்தம். மிக விஷேசம். ஆண்டாளின் தகப்பனாரன பெரியாழ்வார் இவரது சொரூபமே . இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழை இலையில் கலந்து இவரது திருமேனியில் சாற்றினால், சாற்றுவோர் அனைத்து வித இஷ்ட சித்திகளையும் பெறுவர். இவருக்கு பட்டு முதலிய வஸ்திரங்களை சார்த்த நினைத்தவை நடந்திடும். ஆடி மாத சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்க நன் மகப் பேறு கிடைக்கும். மணமாகாத, திருமணம் தடை பட்டு வரும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். இவரது ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும்.

இவரை நினைத்து வணங்கினால் விஷ ஜந்துக்களிடமிருந்து, முக்கியமாக பாம்புகளிடமிருந்து காத்தருள்வார். வியாழக் கிழமைகள் மாலை வேளைகளும், சனிக் கிழமைகள் காலை வேளைகளும் இவரை தரிசனம் செய்ய சிறந்த காலங்களாகும்.
திருமங்கை ஆழ்வாருக்கு சுவாமியே சமாச்ரயணம் செய்து வைத்ததால் ஆழ்வாரால் ‘நம்பி’ என்று மங்களாசாசனம் செய்யப்பட்டவர் பெருமாள். இரு கரங்களுடம் எளிமையாக காட்சி தருகிறார். இது ஒரு மாடக் கோயில் ஆகும்.படிகள் ஏறிச்சென்று பெருமாளை சேவிக்கவேண்டும்.

சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களைக் கொண்டது. இராஜகோபுரம் 5 அடுக்குகளும், 76 அடி உயரமும் உடையது. கருவறைக்கு மேல் உள்ள விமானமும் கோபுரம் போன்றே அமைந்திருப்பது அரிதானது. (இதே போன்ற அமைப்பு உள்ள மற்றொரு கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்!). கண்ணன் காடு (கிருஷ்ணாரண்யம்) எனப்படும் ஐந்து தலங்களில் இதுவே ஆரம்பத் தலம். மற்றவை: திருச்சேறை, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் மற்றும் திருக்கண்ணங்குடி.

முக்தி அளிக்கும் 12 தலங்களில் ஒன்று.

கோச்செங்கண் என்ற சோழ மன்னன் சிறந்த சிவபக்தன். போரில் தோற்ற போது இங்கு நீராடி தெய்வ வாளினைப் பெற்று எதிரிகளை வென்றான். வைணவ பக்தன் ஆனான். இந்த ஆலயத்தை கட்டுவித்தான் என்ற வரலாறும் உண்டு.
அதிசயத் தலமாம் திருநறையூர் செல்லுவோம்! திருமாலின் அருள் பெறுவோம்!





மாமாயன்

ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிா் காற்று அடிக்கிறது.பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை.ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மணி.

யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை; அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.

அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் ருக்மணி பிராட்டி.

அவள் நித்யம் இரண்டு படி பாலைச் சுண்டக் காய்ச்சி பாிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இ்ன்றைக்கு அவள் பால் பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான்.

அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள் தூக்கத்திற்குத் தடை பால் பருகாதது. அவள் பால் சாப்பிட்டால் இவனுக்கு தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி ருக்மணி பிராட்டி கிடுகிடுவென்று ஒரு பசுவைத் தானே கறந்தாள்.பாிமள திரவியங்கள் போட்டு பாலைக் காய்ச்சினாள். தானே படகைச் செலுத்திக்கொண்டு அக்கரைக்குப் போனாள். ராதிகா என்ற பக்தையின் குடிசைக் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த ராதிகா,எதிரே மஹாலக்ஷ்மி பாத்திரத்துடன் நிற்பதைப் பாா்த்து ப்ரமித்துப் போனாள்.

கையில் பாலைக் கொடுத்தவுடன், பாலைப் பருகினாள்.பாத்திரத்தை வாங்கிக் கொணடு வந்துவிட்டாள் ருக்மணி. 'நித்திரை போவான் போல யோகு செய்யும் பிரான்' பரமாத்மா. தலையோடு கால் போா்த்திக்கொண்டு படுத்திருந்தான். ருக்மணி வருவதைப் பாா்த்ததும் கண்ணை மூடிக்கொண்டான்.
பரமாத்மா தூங்கிவிட்டான் என்று சந்தோஷப்பட்டு ருக்மணி, அவன் திருவடியைத் தொட்டு வணங்க வேண்டும் என்று போா்வையை நீக்கி திருவடியைப் பாா்த்தாள்.

இது கா்க பாகவத்தில் சொல்லப்பட்ட சாித்திரம். வடதேசத்தில் இதை நித்யம் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு.

திருவடியில் பாா்த்தால் ஒரே கொப்புளங்கள்.பகவானை எழுப்பினாள் ருக்மணி.பிசுபிசுவென்று தூரல் போட்டுக் கொண்டிருக்கிறது. குளிா் காற்று வீசுகிறது. காலையிலிருந்து வெளியில் எங்கும் போகவும் இல்லை. இப்படி திருவடியில் அக்னியில் கால் வைத்ததுபோல் கொப்புளித்து இருக்கே? என்று கேட்டாள்.

ராதிகா பால் பருகினாள் அல்லவா!அதனால்தான்! என்றான் பரமாத்மா.

ராதிகா பால் பருகியதற்கும், கால் கொப்புளித்ததற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டாள் ருக்மணி.

நீ சுடச் சுட கொண்டுபோய் கொடுத்தாய். உன்னைப் பாா்த்த அதிசயத்தில் அப்படியே பாலைப் பருகிவிட்டாள் அவள். அதனால் என் கால் கொப்புளித்துவிட்டது என்றான்.

இதைக் கேட்ட ருக்மணி சிாித்துவிட்டாள். சுடச்சுட பாலைப் பருகினாள் என்றால் அவள் நெஞ்சு அல்லவா கொப்புளித்துப் போகவேண்டும். தங்கள் திருவடி ஏன் கொப்புளித்தது? என்று கேட்டாள்.

பகவான் சிாித்துக் கொண்டே சொன்னான்.'அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடிதானே!பால் சுடச்சுட என் திருவடியில்தானே விழுந்தது! என்றான்.

மஹாலக்ஷ்மியான ருக்மணி தாயாா் நடுங்கிவிட்டாள். ருக்மணித் தாயாரான மஹாலக்ஷ்மிக்கே தொியாத பக்தி ராதிகாவின் பக்தி. அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடியே என்று சொன்னான் என்றால் இது 'மாமாயத்வம்' இல்லாமல் வேறு என்ன!ருக்மியையே ப்ரமிக்க வைத்து பக்தா்களின் உயா்த்தியை எடுத்துக் காட்டினான். எப்படி வேண்டுமானாலும் பேசுவான். எதையும் சாஸ்திராா்த்தமாக்குவான்.தன் வாக்கை நிா்த்தாரணம் பண்ணக்கூடியவன்; உத்தம பக்தியை வெளிக்காட்டக் கூடியவன் . அதனால் மாமாயன்.

( Sri Mukkur Lakshminarasimmachariar Swamy)





"ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?…"..”

கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்-துவங்கிய வரலாறு

நன்றி-அமிர்தவாஹினி-2013 அக்டோபர்.

ஒருநாள் விடியக்காலம் ஞான பானுவை தன்னுள் கொண்ட காஞ்சி மடம் மெல்ல விழித்துக்கொண்டிருந்தது. ரம்யமான அதி தெய்வீகமான சூழல். பெரியவாளுடைய விஸ்வரூப தர்சனம் முடிந்து அவரவர் அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர். தன்னுடைய அணுக்கத் தொண்டர்களிடம் அந்த நேரம் பெரியவா விஸ்ராந்தியாக பேசிக்கொள்ளுவது உண்டு. அன்றும் அப்படியே பொழுது விடிந்தது ……

“ஏண்டா……நம்மூர்ல எத்தனையோ ஆயிரக்கணக்கான கோவில் இருக்கு. ஆனா, அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ? …. மதுரைவீரனுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ? பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பமெல்லாம் வயத்துக்கு மூணுவேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?… இதையெல்லாம் யாராவுது அப்பப்போ விஜாரிக்கறேளோ?..”

பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் “நிச்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை” என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.



“……ஏன் கேக்கறேன்னா….ஏதோ மூணு நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ!..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராம்மணர் வந்து நமஸ்கரித்தார்.


பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிப்பவர்கள் லிஸ்டில் இவருடைய பெயர் இருக்கும்.


சென்னை IIT யில் ப்ரொபஸராக இருப்பவர். நமஸ்காரம் பண்ணியபின் மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை, வலக்கையின் நடுவிரலையும், கட்டைவிரலையும் சேர்த்து போடும் “டொக்” கென்ற பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சத்தம் திரும்பிப் பார்க்கவைத்தது.

ஆள் காட்டி விரலால் “இங்கே வா” என்று சைகை பண்ணினார்.

விடியக்காலை தர்ஸனத்திலேயே ஒருமாதிரி ஆனந்த மயக்கத்தில் இருந்த ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திக்குமுக்காடிப் போனார். பவ்யமாக அருகில் வந்து நின்றார்.

“ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?…..” குழந்தை மாதிரி கேட்டதும், நெக்குருகிப் போனார் பட்.



மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷையாகப் போடும் தெய்வம், ஒரு மாச சம்பளத்தை கேட்கிறதே! என்று அதிர்ந்து பேச நா எழாமல் நின்றார்.



“என்ன….. யோசிக்கறே போலருக்கு?…… ஏதோ, இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்னை பாத்தேன்னோல்லியோ…கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். குடுப்பியா?…..” மறுபடியும் குழந்தை ஸ்வாமி கேட்டது.


வேரறுந்த மரம் மாதிரி பாதத்தில் விழுந்தார் பட்.

“பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து என்ன வேணுன்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு இதைத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நிலைக்கப் போறது?…”

உடனேயே நாலாயிரம் ரூபாயை பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார்.

அவரிடமிருந்த வந்த பணத்தை கொண்டுதான் “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்துகொண்டு வருகிறது.

டிரஸ்ட் துவங்கியதும் வேதமூர்த்தி என்பவர் ” ஹிந்து” பேப்பரில் விரிவான செய்தியாக எழுதியிருந்தார். பெரியவா அதைப் படித்துப்பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்.

அப்போது அங்கே வந்த ராகவன் என்ற ஆடிட்டரிடம் “இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கே…. இதை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?…” குழந்தை ஸ்வாமி கேட்டார்.

ராகவனுக்கோ சந்தோஷம் தலைகால் புரியவில்லை. உடனே ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வந்து குடுத்தார்.

“ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் எடுத்துண்டு வந்தியோ?….”

“இல்லே பெரியவா….. ஆத்துல இருக்கும்”



“மெட்ராஸ்ல IIT ல ராமலிங்க பட்…ன்னு ஒர்த்தன் இருப்பான்… அவன்ட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காசு வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே நீ பண்ணின பெரிய கைங்கர்யம்…” சிரித்துக்கொண்டே ஆசிர்வதித்தார்.














































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக