செவ்வாய், 5 மே, 2015

திருப்பாவை

ராதே கிருஷ்ணா 06-05-2015


திருப்பாவை

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
டிசம்பர் 14,2011
அ-
+
Temple images

திருப்பாவைத் தனியன்கள்
பட்டர் அருளிச்செய்தது
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய
உய்யக் கொண்டார் அருளியவை
நேரிசை வெண்பா

அன்ன வயற்புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை,
பாடி யருளவல்ல பல்வளையாய்,-நாடிநீ
வேங்கடவற் கென்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
பெரியாழ்வார் திருமகளார் ஆண்டாள். பெரியாழ்வாருக்குக் கண்ணன்மீது ஆசை. அதைவிட மிகுதியான ஆசை ஆண்டாளுக்கு. கண்ணனையே மணாளனாகப் பெற ஆசைப்பட்டாள். அவனுக்குக் குற்றேவல் அந்தரங்கக் கைங்கர்யம் செய்ய விரும்பினாள். கைங்கர்யமே சிறந்த புருஷார்த்தம். அதுவே நீங்காத செல்வம். அவனுக்குக் கைங்கர்யம் செய்ய நினைப்பதும் செய்வதும் அவனுடைய அருளால்தான். ஸ்ரீமத் நாராயணனே நமக்குக் கைங்கர்ய செல்வம் தருவான் என்பதை ஆண்டாள் அறுதியிட்டு அனைவரையும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறாள். பக்தர்கள் திருப்பாவையையேனும் அறிந்து தினமும் அனுஸந்திக்க வேண்டும்.
இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா
நாராயணனே பறை தருவான்
474. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
நோன்பு நோற்போர் மேற்கொள்ள வேண்டியவை

475. வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
உத்தமன் பேர்பாட நீங்காத செல்வம் நிறையும்
476. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
யாங்கள் வாழ மழைபொழியச் செய்

477. ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று
அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
தாமோதரனைச் சொல்லு

478. மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
அரி என்று எங்கும் பேரொலி

479. புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பொழுது புலர்ந்து விட்டதே! எழுந்திரு
480. கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
பாவாய்! எழுந்திரு

481. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
மாதவன் திருநாமங்களைச் சொல்

482. தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
பறைதரும் புண்ணியன் நாராயணன்
483. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
யாவரும் வந்தனர்: நீ எதற்காக உறங்குகிறாய்?
484. கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
மனத்துக்கு இனியவனைப் பாடுகிறோமே! நீயும் வா

485. கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
பிள்ளைகள் யாவரும் வந்தனர்: நீயும் நீராட வா
486. புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
எங்களை எழுப்புவதாக அன்றோ நீ சொன்னாய்!

487. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
நீயும் வந்து மாயனைப்பாடு
488. எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
திருப்பள்ளி எழுச்சி பாடவா
489. நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
யாவரும் உறங்காது எழுமின்
490. அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.
நப்பின்னை நங்காய்! மகிழ்ந்து வந்து கதவைத்திற

491. உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
தத்துவமன்று! வாய் திற
492. குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
விமலா? நப்பின்னை நங்காய்! எழுந்திருங்கள்

493. முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
போற்றிப் புகழ்ந்து வந்தோம்! துயிலெழாய்
494. ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
கண்கள் இரண்டும் கொண்டு எங்களை நோக்கு
495. அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்க
496. மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
உன் சேவகம் போற்றி வந்தோம்! இரங்கு
497. அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
நெடுமாலே! பறை தருதி
498. ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஆலினிலையாய்! அருள்
499. மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
பறைதருக; யாங்கள் சன்மானம் பெறுவோம்
500. கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
உறவை ஒழிக்கமுடியாது

501. கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
உனக்கே நாம் ஆட்செய்வோம்

502. சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவாய்
503. வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
அடிவரவு : மார்கழி வையத்து ஓங்கி ஆழி மாயனை புள்ளும் கீசு கீழ்வானம் தூமணி நோற்று கற்று கனைத்து புள்ளின் உங்கள் எல்லே நாயகன் அம்பரம் உந்து குத்து முப்பத்து ஏற்ற அங்கண் மாரி அன்று ஒருத்தி மாலே கூடாரை கறவை சிற்றம் வங்கம்-தை.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நாச்சியார் திருமொழி தனியன்கள்
திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது...நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில்-மெல்லியலாள்
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயன்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள், தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலைத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி, அவள் தூநற் பாதம் துணைநமக்கே
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி
1. தையொரு திங்கள்
கண்ணனை அடையவேண்டும் என்று ஆண்டாள் விரும்பினாள். மார்கழி மாதம் முழுதும் நோன்பு நோற்றாள். அவன் வரவில்லை. அவனை அடைந்தே தீர்வது என்று தீர்மானித்தாள். நல்ல பயனை யாரைக்கொண்டு அடைந்தால் என்ன? பிரிந்தவர்களைச் சேர்த்துவைப்பவன் மன்மதன். அவன் உதவியை நாடுகிறாள். நீ என்னைக் கண்ணனோடு சேர்த்து வைக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். அவனைக் குறித்து நோன்பு நோற்கிறாள் காமனைக் கொண்டு காமனைப் பயந்த காளையான கண்ணனை அடைய விரும்புகிறாள்.
கண்ணன் இணக்கு எனக் காமனைத் தொழுதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காமனே! வேங்கடவற்கு என்று என்னை விதி
504. தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.
புள்வாய் பிளந்தவனை அடைய எனக்கு உதவு
505. வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில்
புகவென்னை யெய்கிற்றியே
வேங்கடவாணனென்னும் விளக்கினில்புக எனக்கு உதவு
506. மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே
துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துக் கொண்டேன்
507. சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்
508. வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே
கமலவண்ணன் என்னை நோக்குமாறு அருள்
509. உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களைக் கொண்டுவைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய்
திரிவிக்கிரமன் என்னைத் தொடுமாறு அருள்
510. காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
கேசவனின் கால்பிடிக்கும் பாக்கியத்தை எனக்குக் கொடு
511. மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடை திறலுடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்
கடல்வண்ணனுக்கே பணிசெய்து வாழ்வேன்
512. தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்
அழுதழு தலமந்தம் மாவழங்க ஆற்றவு
மதுவுனக் குறைக்குங்கண்டாய் உழுவதோ
ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே
வைகுந்தப் பதவி அடைவர்
513. கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்தங்கோர் கரியலற
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே
அடிவரவு: தை வெள்ளை மத்தம் சுவரில் வான் உருகாயுடைய மாசு தொழுது கருப்பு-நாமமாயிரம்
2. நாமமாயிரம்
மன்மதன் வரும் காலம் பங்குனி மாதம். அவன் வருகைக்காக ஆயர் பெண்கள் வீதிகளை அழகு மிளிரச் செய்கிறார்கள்; கோலமிடுகிறார்கள்; மணலாலும், மற்றப் பொருள்களாலும் மிகச் சிறிய விளையாட்டு வீடுகளை அமைக்கிறார்கள். கண்ணன் விரைவாக வந்து அவற்றை அழிக்க முயல்கிறான். கண்ணா! நாங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறாய். உன் முகத்தைக் காட்டுகிறாய்! புன்முறுவல் செய்கிறாய்! எங்கள் சிற்றிலையும் அழிக்கிறாய், நெஞ்சையும் அழிக்கிறாய்! இது நியாயமா? என்று கூறுகிறார்கள்.
சிறுமியர் மாயனைத் தம் சிற்றில் சிதையேல்! எனல்
கலி விருத்தம்
நாராயணா! எங்கள் சிற்றிலைச் சிதையாதே
514. நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னேஉன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதைதவிருமே
காமன்போதரு காலமென்றுபங் குனிநாள்கடை பாரித்தோம்
தீமைசெய்யும் சிரீதராஎங்கள் சிற்றில்வந்து சிதையேலே
எங்கள்மீது ஏன் இரக்கம் உண்டாகவில்லை?
515. இன்றுமுற்றும் முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்றுபாலக னாகியாலிலை மேல்துயின்றவெம் மாதியாய்
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் கம்மெழாததெம் பாவமே
ஆனைகாத்தவனே! அருளாய்
516. குண்டுநீருறை கோளரீமத யானைகோள்விடுத் தாய்உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் கைகளால்சிர மப்பட்டோம்
தெண்டிரைக்கடற் பள்ளியாய்எங்கள் சிற்றில்வந்து சிதையேலே
கண்ணா! உன்முகம் மாயமந்திரமோ!
517. பெய்யுமாமுகில் போல்வண்ணாஉன்றன் பேச்சும்செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திரந் தான்கொலோ
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை நோவநாங்களு ரைக்கிலோம்
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே
எங்கள் உள்ளம் உன்னை நோக்கியே ஓடுகிறது
518. வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும் உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா கேசவாஉன் முகத்தனகண்க ளல்லவே
இலங்கையை அழித்தவனே! எம்மைத் துன்புறுத்தாதே
519. முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
சுற்றிலோம், கடலை அடைத்து அரக்- கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! எம்மை வாதியேல்.
யாங்கள் சிறுமியர்: எங்களை ஏன் துன்புறுத்துகிறாய்?
520. பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை
யாதுமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்
ஓதமாகடல் வண்ணாஉன்மண வாட்டிமாரொடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே
எங்களைத் துன்புறுத்துவதால் உனக்கு என்ன பயன்?
521. வட்டவாய்ச்சிறுகாதையோடு சிறுசுளகும்மணலுங்கொண்டு
இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரங்கையிலேந்தினாய்
கட்டியுங்கைத் தாலின்னாமை அறிதியேகடல்கண்ணனே.
சிற்றிலும் சிதைப்பான், சிந்தையும் சிதைப்பான் கோவிந்தன்
522. முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய்எம்மைப்
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்
குறை நீங்கி வைகுந்தம் அடைவர்
523. சீதைவாயமுதமுண்டாய் எங்கள்சிற்றில்நீசிதையேலென்று
வீதிவாய்விளையாடும் அயர்சிறுமியர்மழலைச்சொல்லை
வேதவாய்த்தொழிலாளர்கள்வாழ் வில்லிபுத்தூர் மன்விட்டுசித்தன்றன்
கோதைவாய்த்தமிழ்வல்லவர் குறைவின்றிவைகுந்தஞ்சேர்வரே.
(சிறுமியர் கடற்கரைக்கோ, ஆற்றங்கரைக்கோ சென்றால் மணலைக் குவித்து அதில் வாயில்கள் வைத்து விளையாட்டு(மேடுகள்) வீடுகள் அமைப்பது வழக்கம். இதைச் சிற்றில் (சிறுமை+இல்) என்று கூறவர்.)
அடிவரவு: நாமம் இன்று குண்டு பெய் வெள்ளை முற்றிலாத பேதம் வட்ட முற்றத்தூடு சீதை-கோழி.
3. கோழியழைப்பதன்
ஆயர் பெண்கள் கோழி கூவும் முன்பே (விடியற்காலையில்) எழுந்தார்கள். நீராடுவதற்கு அருகிலுள்ள பொய்கைக்குச் சென்றனர். உறங்கும் கண்ணன் சூரியன் உதிக்கும்முன்பு எழுந்திருக்கமாட்டான் என்று நினைத்தனர். ஆனால், கண்ணன் கோபியர் வருவதற்குமுன்பே அங்கு வந்து மறைந்திருந்தான்; இவர்களது சேலைகளைக் கவர்ந்துகொண்டான்; அருகில் இருந்த குருந்த மரத்தின்மீது அமர்ந்துகொண்டான். மாயனே! ஆயர் கொழுந்தே! நீ எப்படி இங்கு வந்தாய்! ஆயர்கள் எழுந்திருக்கும் முன் நாங்கள் வீடு செல்லவேண்டும்! நாங்கள் இந்தப் பொய்கைக்கு வருவது உனக்குத் தெரிந்துவிட்டது! இனி இப்பொய்கைக்கு வரவே மாட்டோம். தயைசெய்து எங்கள் சேலைகளைக் கொடுத்துவிடு என்னும் பாவனையில் ஆண்டாள் அருளிச் செய்கிறாள். இது கோபீ வஸ்த்ராபஹார சரித்திரத்தின் பகுதியாகும்.
கன்னியரோடு கண்ணன் விளையாடல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அரவணையில் பள்ளிகொண்டவனே! தொழுகிறோம். 
524. கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோம்  இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே
மாயனே! எங்கள் ஆடைகளைத் தருக
525. இதுவென் புகுந்ததிங் கந்தோ இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய்முடி மாலே மாயனே எங்க ளமுதே
விதியின்மை யாலது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண் டரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்
இலங்கை அழித்தவனே! எங்கள் பட்டுத் துணிகளைத் தருக
526. எல்லே யீதென்ன இளமை எம்மனை மார்காணி லொட்டார்
பொல்லாங்கீ தென்று கருதாய் பூங்குருந் தேறி யிருத்தி
வில்லாலி லங்கை யழித்தாய்நீ வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தரு ளாயே
கண்ணீர் விடுகிறோமே! இரக்கம் இல்லையா?
527. பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ணநீர்கள் அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய் இலங்கை யழித்த பிரானே
குரக்கர சாவதறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்
பிரானே! எம் சிற்றாடைகளைத் தந்துவிடு
528. காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவி
வேலைப் பிடித்தெந்னை மார்கள் ஓட்டிலென் னவிளை யாட்டோ
கோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதே
கோலங் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்
வேதனை தாங்க முடியவில்லை; பட்டாடைகளைத் தந்துவிடு
529. தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்களெங் காலைக் கதுவ
விடத்தே ளெறிந்தாலே போல வேதனை யற்றவும் பட்டோம்
குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே
படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே
எம் தாயர் கோபிப்பர்; ஆடைகளைக் கொடுத்துவிடு
530. நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாமுணர் வானே
ஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார்
போர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே
ஆயர் கொழுந்தே! அருள் செய்
531. மாமிமார் மக்களே யல்லோம் மற்றுமிங் கெல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையி ராத்துயில் வானே
சேமமே லன்றிது சாலச் சிக்கென நாமிது சொன்னோம்
கோமள ஆயர்கொ ழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்
அசோதை திட்டுவாள்; ஆடைகளைக் கொடு
532. கஞ்சன் வலைவைத்த வன்று காரிரு ளெல்லில் பிழைத்து
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் நின்றஇக் கன்னிய ரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசுமையி லீகூறை தாராய்
வைகுந்தம் புகலாம்
533. கன்னிய ரோடெங்கள் நம்பி கரிய பிரான்விளை யாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன்பட்டன் கோதை
இன்னிசை யால்சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம்போய்
மன்னிய மாதவ னோடு வைகுந்தம் புக்கிருப் பாரே
அடிவரவு: கோழி இது எல்லே பரக்க காலை தடத்தவிழ் நீரில் மாமிமார் கஞ்சன் கன்னி-தெள்ளியார்.
4. தெள்ளியார் பலர்
மனக்கவலை கொண்டவர் தம் எண்ணம் நிறைவேறுமா என்று அறிவதற்குக் குறி பார்ப்பது வழக்கம். வட்டமாகக் கோடிட்டு அதனுள் பல சுழிகளைப் போடுவது. பிறகு அவற்றை எண்ணிப் பார்க்கும்போது இரட்டையாக இருந்தால் எண்ணம் நிறைவேறும். ஒற்றையாக இருந்தால் நிறைவேறாது. இவ்வாறு பார்ப்பதும் ஒரு குறி. ஓர் ஆயர்மகள் இவ்வாறு கோடிட்டு, கோவலன்வரில் கூடிடு கூடலே என்று கூறி பகவானை அடைய வேண்டும் என்ற பேராவலோடு குறி பார்க்கிறாள். ஆண்டாளுக்கு இப்படியும் ஒரு அனுபவம்.
கூடலிழைத்தல்
கலி விருத்தம்
அழகர் வருவார் என்றால் கூடலே கூடு
534. தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளு மிடத்தடி வொட்டிட
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே
வாமனன் வந்து கூட்டுவார் என்றால் கூடலே கூடு
535. காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே
வசுதேவர் கோமகன்வரில் கூடலே கூடு
536. பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்அணி வாணுதல் தேவகி
மாம கன்மிகு சீர்வசு தேவர்தம்
கோம கன்வரில் கூடிடு கூடலே
காளிங்க நர்த்தனம் செய்தவன் வருவானா?
537. ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்த னார்வரில் கூடிடு கூடலே
மதயானை உதைத்தவன் என்னைக் கூடுவானா?
538. மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு
ஓடை மாமத யானை யுதைத்தவன்
கூடு மாகில்நீ கூடிடு கூடலே
மதுரை வேந்தன் வருவானா?
539. அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்திக ழும்மது ரைப்பதி
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே
அசுரர்களைக் கொன்றவன்வரின் கூடலே கூடு
540. அன்றின் னாதன செய்சிசு பாலனும்
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே
துவராபதிக் காவலன் வருவானா?
541. ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே
வாமனன் வரின் கூடலே கூடு
542. கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே
அழகன் வருவான் எனில் கூடலே கூடு
543. பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழக னார்வரில் கூடிடு கூடலே
பாவம் வராது
544. ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே
அடிவரவு: தெள்ளியார் காட்டில் பூமகன் ஆய்ச்சி மாட அற்ற அன்று ஆவல் கொண்ட பழகு ஊடல்-மன்னு.
5. மன்னு பெரும்புகழ்
சோலையில் வாழும் குயிலே! நீ என்னோடு இருக்கிறாய்! கண்ணனின் பிரிவால் நான் துன்புறுவது உனக்கே தெரியும்! நீ இனிய குரலைப் பெற்று என்ன பயன்? கண்ணன் எங்கு இருக்கிறான் என்பது உனக்குத் தெரியும். அவனைக் கூவி என்னிடம் அழைத்துக்கொண்டு வா! புண்ணியனை வரக் கூவாய்! என்று ஆண்டாள் குயிலை வேண்டுகிறாள். இப்பத்துப் பாடல்களைப் பக்தியோடு கூறுவோர் திருமந்திரத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனை அடைவர்.
கண்ணனைக் கூவியழைக்குமாறு குயிலுக்குக் கூறல் (குயிற்பத்து)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குயிலே! என் பவளவாயன் வரக் கூவாய்
545. மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய்
குயிலே! என் வேங்கடவன் வரக் கூவாய்
546. வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்
குயிலே! என்தலைவன் வரவில்லை: அவன் வரக் கூவாய்
547. மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்குங் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங் கேட்டுஉன்
காதலி யோடுடன் வாழ்குயி லேஎன் கருமாணிக் கம்வரக் கூவாய்
குயிலே! வைகுந்தன் வரக் கூவாய்
548. என்புரு கியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன்
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணிய னைவரக் கூவாய்
குயிலே! என் காதலன் வரக் கூவாய்
549. மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்
இளங்குயிலே! என் தத்துவனை வரக் கூவாய்
550. எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே
அழகிய குயிலே! சங்குசக்ரபாணியை வரக் கூவாய்
551. பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி
சிறுகுயிலே! திருமாலை விரைந்து கூவாய்
552. சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்  அவனைநான் செய்வன காணே
சிரீதரனிடம் மையல் கொண்டேன்: அவனை வரக் கூவாய்
553. பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லேகுறிக் கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்  பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.
குயிலே! இன்று நாராயணனை வரக் கூவு
554. அன்றுல கம்மளந் தானையுகந் தடிமைக்கண வன்வலி செய்ய
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன்
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்
நமோ நாராயணாய என்று சொல்லுவதற்குச் சமம்
555. விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுறவென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயி லேஎன்ற மாற்றம்
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் பட்டர்பி ரான்கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலைவல்லார்நமோ நாராய ணாயவென் பாரே
அடிவரவு: மன்னு வெள்ளை மாதலி என்பு மென்னடை எத்திசை பொங்கிய சார்ங்கம் பைங்கிளி அன்று விண்-வாரணம்.
6. வாரணமாயிரம்
கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கணவு கண்டாள்; தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப்பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைப் பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். கையைப் பிடித்துக்கொண்டு தீ வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்துவைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ! என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள்.
மாயவன் தன்னை மணஞ்செயக் கண்ட தூய நற்கனவைத் தோழிக்குரைத்தல்
கலி விருத்தம்
திருமண ஏற்பாடுகள் நடைபெறக் கனாக்கண்டேன்
556. வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
கோவிந்தனாகிய காளைவரக் கனாக்கண்டேன்
557. நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்,
எனக்கு மணமாலை சூட்டக் கனாக்கண்டேன்
558. இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
கங்கணம் கட்டுவதாகக் கனாக்கண்டேன்
559. நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
மதுரை மன்னன் வரக் கனாக்கண்டேன்
560. கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
மதுசூதன் என் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன்
561. மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்
கண்ணன் என்கைபற்றித் தீவலம் செய்யக் கனாக்கண்டேன்
562. வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்து
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்
நான் அம்மி மிதிப்பதாகக் கனாக்கண்டேன்
563. இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்
பொரிமுகம் தட்டுவதாகக் கனாக்கண்டேன்
564. வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
மணநீரால் மஞ்சனமாட்டுவதாகக் கனாக்கண்டேன்
565. குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
566. ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே
(பகவானுக்கு இடாத அன்னமும், வாரணமாயிரம் அனுஸந்திக்காத திருமணமும் பயனற்றவை. ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அனுஸந்திப்பது வழக்கம். இப் பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்)
அடிவரவு: வாரணம் நாளை இந்திரன் நாற்றிசை கதிர் மத்தளம் வாய் இம்மைக்கும் வரிசிலை குங்குமம் ஆயன்-கருப்பூரம்.
7. கருப்பூரம் நாறுமோ
வெண் சங்கே! பாஞ்சசன்னியமே! பஞ்சாயுதங்களுள் நீயே பெரும்பேறு பெற்றவன்! நீ அடைந்த பாக்கியத்தை என்ன வென்று கூறுவது! கண்ணபிரான் திருப்பவளச் செவ்வாயோடு தொடர்பு கொண்டுள்ளாய்! வாயமுதைப் பருகுகிறாய்! நீ பெற்ற செல்வமே பெருஞ்செல்வம்! இந்திரனும் உனக்கு நிகராக மாட்டான்! ஆனால் ஒன்று! எல்லா கோபியர்களுக்கும் உரியதான கண்ணன் வாயமுதத்தை ஆக்கிரமித்து நீ ஒருவனே பருகுவது நல்லதன்று! என்று கூறுகிறாள் ஆண்டாள்.
பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடுஞ் சுற்றமாக்கல்
கலிவிருத்தம்
மாதவனின் வாய்ச்சுவையும் பரிமளவும் எத்தகையவை!
567. கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
சங்கே! நீ பிறந்தது எங்கே! வளர்ந்தது எங்கே!
568. கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்
உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில்கு டியேறித் தீயவ சுரர் நடலைப்ப
டமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே
கோலச் சங்கே! வாசுதேவன் கையில் வீற்றிருக்கிறாயே!
569. தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே
வலம்புரியே! இந்திரனும் உனக்கு நிகராகமாட்டான்
570. சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே
மதுசூதன் வாயமுதை நீயே உண்கின்றாயே!
571. உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன் னியமே
செங்கண்மாலின் வாயில் தீர்த்தமாடுகிறாய்
572. போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே
சங்குத் தலைவனே! நீ பெற்ற செல்வம் அழகானது
573. செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்
செங்கட் கருமேனி வாசுதே வனுடைய போல்
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா! உன்செல்வம் சாலவ ழகியதே!
சங்கே உன்மீது பெண்கள் குற்றம் சொல்கின்றனர்
574. உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணம் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே!
பெருஞ்சங்கே! அமுதை நீ மட்டும் உண்பதோ?
575. பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே!
இவற்றைப் பாடுவோர் அணுக்கராவர்
576. பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே
அடிவரவு: கருப்பூரம் கடலில் தடவரை சந்திர உன்னோடு போய் செங்கமல உண்பது பதினாறா பாஞ்ச-விண்
8. விண்ணில் மேலாப்பு
பிரிவாற்றாமையால் வாடும் தலைவி தலைவனைக் குறித்தோ, தலைவன் தலைவியைக் குறித்தோ ஒருவரைத் தூது விடுவது நம் நாட்டின் பழமையான வழக்கம். மேகம், கிளி, நாரை முதலியவற்றைத் தூது விடுவதை இலக்கியங்களில் காணலாம்.
பகவான் நீல நிறம் கொண்டவன், நீல நிறத்தில் ஆண்டாளுக்கு ஆசை. மழை காலம்! திருவேங்கடமலையிலிருந்து மேகங்கள் வருகின்றன. மேகங்காள்! உங்களோடு திருவேங்கடமுடையானும் வருகிறனோ? அவனோடு சேர்ந்தால்தான் என் உயிர் தரித்திருக்கும். இதை அவனிடம் சொல்லி என்னை ஏற்கச் செய்யுங்கள் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
மேகவிடு தூது
தரவு கொச்சகக் கலிப்பா
மேகங்காள்! என் வேங்கடவன் உங்களோடு வந்தனோ?
577. விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?
வேங்கடத்தான் ஏதேனும் சொல்லியனுப்பினானோ?
578. மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே
கோவிந்தனையே பாடி உயிர் தரித்திருப்பேன்
579. ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்
எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே
அலர்மேல்மங்ககை மணாளனுக்கே என் உடல் உரிமை
580. மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே
எனது நிலையை வேங்கடவனுக்குக் கூறுங்கள்
581. வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.
நாரணற்கு எனது மெலிவைச் செப்புமின்
582. சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்துஎன்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே.
வேங்கடவன் வந்தால் உயிர் நிற்கும்
583. சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே
அவர் இதமான உரை தருவாரா?
584. கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை
வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே!
பாம்பணையான் வார்த்தை பொய்த்து விடுமோ?
585. மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாதுஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே
இந்த மேகவிடுதூது படிப்போர் பரமன் அடியர் ஆவர்
586. நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே
அடிவரவு: விண் மா ஒளி மின் வான் சலம் சங்கம் கார் மத நாகத்தின்-சிந்துர
9. சிந்துரச் செம்பொடி
ஆண்டாள் திருமாலிருஞ்சோலையின் அழகிலும், அழகரின் திருமேனி சவுந்தர்யத்திலும் ஈடுபடுகிறாள். வானில் படர்ந்து விளங்கிய கார்முகில் மழையை நன்றாகப் பொழிந்தது. மழை காலத்திற்கு உரிய பூக்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பூத்துப் பரவி இருந்தன. இவை ஆண்டாள் பிரிவுத் துன்பத்தை அதிகமாக்கின. திருமாலிருஞ்சோலை மணாளனிடம் இவள் மனம் சென்றது.
திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடல்
கலிநிலைத்துறை
நான் உய்வேனோ?
587. சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ
அவனளித்த மாலை செய்த யுத்தம்
588. போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்
ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே
என் கைவளை பறித்துச் சென்றுவிட்டாரே!
589. கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்
திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.
அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?
590. பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே
அடைக்கலம் புக எனக்கு ஓரிடம் கூறுங்கள்
591. துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே
நான் சமர்ப்பிப்பதை அழகர் ஏற்பாரோ?
592. நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ
கைங்கர்யம் செய்துகொண்டே இருப்பேன்
593. இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே
குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்கின்றன
594. காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே
அவனது சங்கொலியும் நாணொலியும் என்று கேட்பேன்?
595. கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்
நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ
திருமாலடி சேர்வர்
596. சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது
வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற
சுந்தரனை சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே
(திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது 6, 7 பாசுரங்களை மிகவும் பக்தியோடு அனுசந்திப்பது வழக்கம்.
ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில் வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம் உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.)
அடிவரவு: சிந்துர போர் கருவிளை பைம்பொழில் துங்கநாறு இன்று காலை கோங்கலரும் சந்தொடு-கார்.
10. கார்க்கோடல் பூக்காள்!
காந்தள் மலர்களே! உங்களைப் போன்ற நீலவண்ணன் கண்ணன் எங்கே? கண்ணனின் பவள வாயைப் போன்ற பழங்களைக் கொண்ட கொடியே! அவனை சத்யவாதி என்று எல்லோரும் கூறுகின்றனர். என் விஷயத்தில் மாறிவிட்டானோ? கண்ணனின் புன்முறுவலை நினைவூட்டும் முல்லைக் கொடியே! என் எதிரில் தோன்றி என்னை வருத்தாதே! குயில்களே! ஈதென்ன கூச்சல்? திருவேங்கடவன் வந்து எனக்கு நல்வாழ்வு அளிக்குமாறு பாடக் கூடாதோ? மயில்களே!  இது என்ன ஆட்டம்! குடக் கூத்தாடியவனை நினைவூட்டுகிறீர்களே! ஓயாது ஒலிக்கும் கடலே! உன்னிடம் தானே திருவனந்தாழ்வான் இருக்கிறான். அவன்மீது படுத்திருக்கும் பகவானிடம் என் துயர் சொல்லேன் என்று ஆண்டாள் புலம்புகிறாள். கோதாய்! என்ன சொல்லியும் கண்ணன் வரவில்லை! உன் தந்தை பெரியாழ்வார் அழைக்கும்போது கட்டாயம் வருவான். அப்போது அவனைச் சேவிக்கலாம் என்று தோழி கூறி ஆறுதல் அடைவிக்கிறாள்.
மாற்செய் வகையொடு மாற்றம் இயம்பல்
கலிநிலைத்துறை
காந்தள் மலர்களே! கடல் வண்ணன் எங்குற்றான்?
597. கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது அணிதுழாய்த்
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல் லேனந்தோ.
பகவானுடைய சோதியில் என்னைச் சேர்ப்பீர்களா?
598. மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய்
மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாதுஎம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே
பாம்பணையார்க்கும் நாக்கு இரண்டோ?
599. கோவை மணாட்டி நீயுன் கொழுங்கனி கொண்டுஎம்மை
ஆவி தொலைவியேல் வாயழ கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றிப் பாம்பணை யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே
முல்லைக் கொடியே! அவர் சொல் பொய்யோ?
600. முல்லைப் பிராட்டி நீயுன் முறுவல்கள் கொண்டுஎம்மை
அல்லல் விளைவியே லாழிநங் காய்உன்ன டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந் திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே
குயில்காள்! அவர் என்னைக் கூடுவாரா?
601. பாடும் குயில்காள் ஈதென்ன பாடல்நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து
கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே
மயில்களே! எனது நிலையைப் பாருங்கள்
602. கணமா மயில்காள் கண்ணபி ரான்திருக் கோலம்போன்று
அணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே
எனக்கு வேறு வழியே இல்லை
603. நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக் கினியொன்று போதுமே
அழகர்பிரானை நான் தழுவத்தான் வேண்டும்
604. மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே
கடலே! என் துயர்களை நாகணைக்கே உரைத்தி
605. கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே
விட்டுசித்தர் அழகரை வருவிப்பாரோ?
606. நல்லஎன் தோழி நாக ணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்
வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை
வல்லி பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே
அடிவரவு: கார் மேல் கோவை முல்லை பாடும் கண நட மழையே கடலே நல்ல-தாம்.
11. தாமுகக்கும்
ஆண்டாள் பகவானை நினைத்து ஏங்குகிறாள். உடல் இளைக்கிறது. கை வளைகள் கழன்று விழுகின்றன. அப்போதும் அவன் அவ்விடம் வரவில்லை. ஆண்டாள் வருந்துகிறாள்; கண்ணனாகிய அரங்கன் தன் கையில் ஆசைப்பட்டு சங்கை வைத்திருக்கிறான். ஆனால் என் கையிலுள்ள சங்கு வளைகளைக் கீழே விழுமாறு செய்தவிட்டான். மூவடிமண் பெற மாவலியிடம் நடந்து சென்றானே! அவனையே விரும்பும் எனக்கு நடையழகைக் காட்டக் கூடாதோ? பெண்ணின் வருத்தமறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்டானே! என் விஷயத்தில் மட்டும் வேறுபடுவானேன்? தம்மை விரும்புகிறவரைத் தாமும் விரும்புவார் என்ற வார்த்தை பொய்யாகாமல் இருக்கவேண்டும் என்கிறாள்.
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்
தரவு கொச்சகக் கலிப்பா
என் சங்கு வளைகளைத் திருவரங்கர் கவர்ந்துவிட்டாரே!
607. தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே
என் வளைகள் கழல்கின்றனவே!
608. எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே
என் இடரை அவர் தீர்ப்பாரா?
609. பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே
என் வளைமீது அவருக்கு என்ன ஆசை?
610. மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே
என் பொருள் அவருக்கு எதற்கு?
611. பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே
நான்மறையின் சொற்பொருளாய் நின்றவரன்றோ அவர்?
612. கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே
தம் நன்மைகளையே அவர் எண்ணுகிறாரே!
613. உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே
அவர் எவ்வளவெல்லாம் பேசினார்!
614. பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
அவரது ஊர் அரங்கமே
615. கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே
அவர் சொல் பொய்க்காது
616. செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே
அடிவரவு: தாம் எழில் பொங்கு மச்சு பொல்லா கை உண்ணாது பாசி கண்ணாலம் செம்மை- மற்று.
12. மற்றிருந்தீர்
உறவினர்களே! நான் பகவத் விஷய ஆசையின் மேல் நிலையில் இருக்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் பயனில்லை. அது என் காதில் விழாது; பதிலும் கூறமாட்டேன். என்னைக் காப்பாற்ற நினைத்தால் இவ்வாறு செய்யுங்கள்: கண்ணன் தன் வீரத்தைக் காட்டி மகிழ்வித்த வட மதுரைக்குக் கொண்டு போய் விடுங்கள். என் விரக நோயை நீங்கள் தீர்க்கமுடியாது. திருவாய்ப்பாடிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவனைச் சேவித்தால்தான் நோய் தீரும் என்கிறாள் ஆண்டாள்.
சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு
ஆறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மதுரைப்புறத்து என்னை அழைத்துச் செல்லுங்கள்
617. மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் ஊமைய ரோடு செவிடர்வார்த்தை
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி
மற்பொருந் தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்
மாயனின் ஆய்ப்பாடிக்கே என்னை அனுப்புங்கள்
618. நாணி யினியோர் கருமமில்லை நாலய லாரும் அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்துசெய்து பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்
நந்தகோபாலன் இருக்கைக்கு என்னை உய்த்திடுமின்
619. தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான் கொந்தள மாக்கிப்
பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
யமுனைக் கரைக்கே என்னைச் செலுத்துங்கள்
620. அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் சிறுமா னிடவரைக் காணில்நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய் யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
காளியனுச்சியில் நடமாடிய பொய்கைக்கு என்னை உய்த்திடுமின்
621. ஆர்க்குமென் நோயி தறியலாகா தம்மனை மீர்துழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன் கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக் காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
கண்ணன் பக்கல் என்னை அனுப்புங்கள்
622. கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின்
திருத்துழாய் மாலையை எனக்குச் சூட்டுங்கள்
623. வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானமி லாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையு முள்மெலிவும் ஓதநீர் வண்ணனென் பானொருவன்
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்
கோவர்த்தனத்திற்கு என்னை உய்த்திடுமின்
624. கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
பற்றியுரலிடை யாப்புமுண்டான் பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ
கற்றன பேசி வசையுணாதே காலிக ளுய்ய மழைதடுத்து
கொற்றக் குடையாக வேந்திநின்ற கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்
துவராபதிக்கு என்னைச் செல்ல விடுங்கள்
625. கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும்
ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில் உலகளந்தானென்றுயரக்கூவும்
நாட்டிற்றலைப்பழியெய்தி உங்கள்நன்மையழிந்துதலையிடாதே
சூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதிக்கென்னையுய்த்திடுமின்.
இவற்றைப் பாடுவோர் வைகுந்தப்பதவி அடைவர்
626. மன்னு மதுரை தொடக்கமாக வண்துவ ராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழ லாள்துணிந் ததுணிவை
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே
அடிவரவு: மற்று நாணி தந்தை அங்கை ஆர்க்கும் கார்த்தண் வண்ணம் கற்றினம் கூட்டில் மன்னு-கண்ணன்.
13. கண்ணனென்னும்
தாய்மார்களே! எனக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு, கண்ணன் அணிந்த பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என்மீது வீசுங்கள். அவனணிந்த திருத்துழாயைக் கொண்டு வந்து என் கூந்தலில் செருகுங்கள். அவனுடைய வனமாலையைக் கொண்டு வந்து என்மீது போட்டுப் புரட்டுங்கள். அவன் நடந்து சென்ற இடங்களிலுள்ள மண்ணைக் கொண்டு வந்து என்மீது பூசுங்கள். இம்முறைகளுள் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் நீங்கள் என்னைக் காப்பாற்றலாம் என்று ஆண்டாள் கூறுகிறாள்.
அச்சுதன் அணிபொருட்கொண்டு அவலம் தணிமின் எனல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்ணனது பீதாம்பரத்தைக் கொண்டு வீசுங்கள்
627. கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டுஎன்னை வாட்டம் தணிய வீசீரே
திருத்துழாயை என் கூந்தலில் சூட்டுங்கள்
628. பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே
கண்ணன் சூடிய மாலையை எனக்குச் சூட்டுங்கள்
629. கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்
நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே
கண்ணனின் வாய்ச்சுவை எனக்கு வேண்டும்
630. ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கீரே
கண்ணன் ஊதும் குழல்வாய் நீரைத் தடவுங்கள்
631. அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே
கண்ணனின் திருவடிப் பொடியைப் பூசுங்கள்
632. நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே
என்னைக் கண்ணனுடன் இணையுங்கள்
633. வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே
என் மார்பைப் பறித்துக் கண்ணன் மார்பில் எறிவேன்
634. உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே
ஒருநாள் கண்ணன் உண்மை சொல்வானா?
635. கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே
துன்பக் கடலிலிருந்து நீங்குவர்
636. அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே
அடிவரவு: கண்ணன் பால் கஞ்சை ஆரே அழில் நடை வெற்றி உள்ளே கொம்மை அல்லல்-பட்டி
14. பட்டி மேய்ந்து
தன்னைச் சேர்ந்தவர்கள் துன்புற்றால் பகவான் எப்படிப் பொறுத்துக்கொள்வான்? கண்ணனைப் பிரிந்து ஆண்டாள் பெருந்துன்பமடைந்தாள். அத்துன்பமெல்லாம் தீருமாறு கண்ணன் ஆண்டாள் எதிரில் நின்று சேவை தருகிறான்.
கண்ணன் பசுக்களை மேய்த்து விளையாடுவதையும், தோழர்களோடு விளையாடுவதையும், அவன்மீது வெயில் படாமல் இருக்கக் கருடன் விரித்துப் பறப்பதையும், உடலில் வியர்வைத் துளிகள் படிந்த யானைக்குட்டிபோல் கண்ணன் விளையாடுவதையும், சங்கு சக்கரங்களைக் கொண்ட பரமபுருஷன் கேசம் தோளில் புரண்டு அலையும்படி விளையாடுவதையும் விருந்தாவனத்தில் கண்டோம் என்று கூறுகிறாள் ஆண்டாள்.
முதலை வாய்ப்பட்ட களிறு பகவான் அருளால் மீட்கப்பட்டு துயர் தீர்ந்ததுபோல் ஆண்டாளும் பிரிவுத் துன்பத்திலிருந்து மீண்டு பெருமகிழ்வு அடைந்தாள். இப்பத்தும் கூறுவோர் துன்பத்திலிருந்து விடுபட்டுக் கவலையின்றி வாழ்வர்.
விருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமை கூறல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
பலதேவனின் தம்பியை விருந்தாவனத்தே கண்டோம்
637. பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
கண்ணன் விளையாட்டைக் கண்டோம்
638. அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
கருடனது சிறகின்கீழ் வருவானைக் கண்டோம்
639. மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
வியர்த்து விளையாடும் கண்ணனைக் கண்டோம்
640. கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்  ஈசன் றன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
விருந்தாவனத்தே வீதியில் கண்ணனைக் கண்டோம்
641. மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
உதயசூரியன் போலும் கண்ணனைக் கண்டோம்
642. தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே
கருநிறக் கண்ணனைக் கண்டோம்
643. பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
விளையாடும் கண்ணனைக் கண்டோம்
644. வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
அசுரர்களை அழித்த கண்ணனைக் கண்டோம்
645. நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
எம்பெருமான் அடிக்கீழ் வாழ்வர்
646. பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே
அடிவரவு: பட்டி அனுங்க மால் கார்த்தண் மாதவன் தருமம் பொருத்தம் வெளிய நாட்டை பருந்தாள்-இருள்
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
  4  2 Google +0 
 

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

Thiruppavai


The Tiruppavai (Tamil:திருப்பாவை) is a collection of thirty stanzas (paasuram) in Tamil written by Andal also Nachiyar, in praise of the Lord Perumal, (Vishnu). It is part ofDivya Prabandha, a work of the twelve Alvars, and is important in Tamil literature. Kodhai Devi or Andal incarnated on this earth in the 98th year after the beginning of the Kali Era (3102 BC).[1] She performed a wonderful vratham or prayer called Dhanurmasa vratham to tell us that, by practicing this vratham, one can attain all materialistic happiness along with the eternal bliss. The period, from when the sun moves into the constellation of Dhanurrasi or Sagittarius and until it moves out to the constellation of Makara or Capricorn is known as Dhanurmasam.

What Tiruppavai says

A summary: After the sun sets, the period just before the ensuing dawn is called Bramhamuhurtham according to vedic scriptures. It is an auspicious time for it gives good thoughts and intentions. Practices like meditation and penances done during this hour, gives favorable results. According to Vedic calendar, 1 Earth-year is equal 1 celestial day. So the last 6 months on the earth (every year) is equal to 1 celestial night. Hence, the predawn period, the Bramhamuhurtha, for the heavenly beings falls in the month of Dhanurmasam. Andal taught us this Dhanurmasa Vratham because she wanted us to spend these auspicious days in contemplation of God. This vratham was performed forKrishna. Krishna means good happiness. Man is always in the quest for happiness, in order to attain which, he engages himself in various kinds of jobs. But pursue of materialistic happiness will eventually lead to sorrow. So, Andal performed this vratham desiring the eternal blissful God. She desired and attained him.
It is not easy for man to know who God is and the means to reach him. Air is not visible to our naked eye. We know the presence of air, because if we stop breathing, we die. Similarly, according to the poem, we must realize that there is a divine energy which is the cause and controller of our activities, our present form and name. He can be easily attained in his form as an idol or archa murthi. He exists as an archa murthi with the same auspicious qualities as he is in his highest divine abode Paramapadam. Let us worship him and ask him whatever we want. He will suitably grant us everything. Kodhai Devi instilled such a faith through her pasurams(poems).
According to the poem God is only one and he appears in various forms for our sake. He accepts our offerings and blessings even when he is worshipped in an idol-form in our house. It is for this reason Kodha Devi performed the vratham near the deity Vatapathrasai. She desired for Lord Sri Ranganatha, she worshipped Lord Sundarabahu, she asked us to reach Sri Venkatachalapathi. This she did to create the faith that God exists in all forms. By whatever name one calls, he is there for us, dwelling on the 7 hills as Srinivasa or Lord Balaji in Tirumala, the God of the Kali Yuga, the primeval cause of the creation, the husband of Lakshmi Devi who is Srimannarayana. In order to remind us of this, Andalprayed, so we might be able to do service in the temple of Venkateshwara.
According to the poem the symbolic undertone behind Andal’s entreaty to her friends to wake up and seek Krishna subsumes the essence of the three basic mantras in the Vaishnava tradition — the Tirumantram, Dvayam and Charama Sloka that signify the truth of the Paramatma or the Supreme being who dwells in everything. There is a hidden meaning in the 27th Pasuram for example, where Andal explains the importance of an acharya whose guidance is mandatory for a disciple to get these trio of mantras. If the meaning is taken literally, it appears that Kodhai Devi is asking for some of the ornaments for the vratham, but in there explains the importance of these 3 mantras in a symbolic way. Every Pasuram has this detailed undertone which must actually be realized.
Tiruppavai is said to be 'Vedam Anaithukkum Vithagum', meaning it is the seed of the vedam. As the entire tree and the trees coming from it are hidden in the subtle seed, so is the entire essence of vedam hidden in Tiruppavai which can be revealed only under the guidance of an acharya or a guru who is well versed in vedic scriptures.
This entire hidden essence is mentioned in the Andal's verses in the form of poetry.

Pavai Genre

Thiruppavai belongs to the Pavai genre of songs, a unique Tamil tradition sung in the context of the Pavai vow (Vratham or ritual) observed throughout the month of Margazhi. SriVaishnavas sing these stanzas every day of the year in the temple as well as in their homes. This practice assumes special significance during Margazhi: each day of this month gets its name from one of the thirty verses. There are references to this vow in the late-sangam era Tamil musical anthology Paripadal.
Andal's thirty songs contain the cardinal principles of Vaishnava dharma during the month of Marghazhi. Vaishnavas sing these songs to bring peace, prosperity and Divine Grace. Andal assumes the guise of a cowherd in these 30 verses. Andal appears intent upon performing a particular religious vow to marry the Lord, thereby obtain His everlasting company, and inviting all her girl-friends to join her. Towards the end we learn that she did not actually perform a religious rite; but is simply praying to be granted the service of the Lord for eternity. She yearns for everlasting happiness and service of the Lord.

Overview

The first five stanzas provide an introduction to the main theme, its principle and purpose. According to Andal one should give up luxuries during this season. Sincere prayers to the God would bring abundant rain and thus prosperity. Offering Lord Krishna fresh flowers would expiate sins committed earlier and those that may be committed in future.
In the next ten stanzas she describes the importance of community participation. She invites her friends to gather flowers. She essays the ambience at her village, the chirping of birds, colorful blossoms, the musical sound of butter-churning, herds of cattle with tinkling bells, the sounding of the conch from the temple.
She visits each household and awakens all her friends to join her for a bath in a nearby pond. She also praises the incarnations of the Lord. The next five stanzas describe her visit to the temple accompanied by her friends. She desires to render Suprabhata gently to wake up the Lord. The group appeases the temple guards, enters the temple and recites prayers extolling the parents of Lord Krishna and begging them to wake up Krishna and Balarama. Then they approach Neela Devi, the consort of the Lord, to have adarshan.
The last nine stanzas are on the glories of the Lord. On receiving his blessings Andal lists her demands; milk for the vrata, white conch, lamps, flowers, and rich costume and jewellery, plenty of ghee and butter. The concluding stanza is an envoie identifying her as the daughter of Vishnucittar who made this garland of 30 pasurams and says those who recite with devotion will have Lord’s blessings. 

Verses and Explanation

The Thiruppavai also includes 3 thaniyans (literally, 'singletons' or stand alone verses) composed by later authors to introduce older texts. The first tanniyan, 'Nila tungastana...' in Sanskrit was composed by Parasara Pattar, and the next two tanniyans, 'Anna vayal pudhuvai...' and "Choodi kodutha..." (translated below) were composed by Sri Uyyakondar.
Thaniyan
This is a song which is a prelude to Tiruppavai and is generally termed as taniyan or "that which stands separately".
Andal from the swan filled Puduvai,
Sang she, in her sweet voice,
Several enchanting sweet odes,
For being sung during,
The worship and adulation of Pavai.
They are but a garland to him,
From her who wore them first,
Before presenting them to Him.
Each Pasuram(ode to Gods) of Thiruppavai is generally named by the first few words of the poem.These are given first and a translation into verse given then:-
Song Name-Raga-ThalaVerseExplanation
1. Margazhi Thingal
Nattai - Adi
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
In this month of Marghazhi,
On this day filled with the light of moon,
Come for bathing,
Oh ladies who are richly dressed,
And Oh ladies in rich homes of cowherds,
For he with the sharp spear,
He who kills his enemies without mercy,
He who is the son of Nanda gopa,
He who is the darling son of Yasodha,
Who wore scented flower garlands,
He who is a lion cub,
He who is pretty in black colour,
He who has small red eyes,
He who has a face like the well-lit moon,
And He, who is our Lord Narayana,
Is going to give us big drums,
So that we bathe and that is our Pavai (Vratham or practice),
In a way that the whole world sings about.
2. Vaiyathu Vazhvirgal
Gowla - Adi
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
Oh, people of this world,
Be pleased to hear of those penances,
That we daily do for the worship of Pavai,
We will sing of those holy feet,
Of Him who sleeps in the ocean of milk,
We will not take the very tasty ghee,
We will avoid the health giving milk,
We will daily bathe before the dawn,
We will not wear any collyrium to the eye,
We will not tie flowers in our hair,
We will not do Any act that is banned,
We will not talk ill of any to any one else,
We will give alms and do charity,
As much as we can,
And do all those acts to make others free of sorrow,
This is our Vratham (Pavai).
3. Ongi Ulagalandha
Arabhi - Adi
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
If we sing the praise of Him,
Who grew big and measured the world,
And worship our Goddess Pavai,
Then would there be at least three rains a month,
And the red paddy plants would grow big,
And in their fields would the fish swim and play,
And the spotted bees after sipping honey,
To their hearts content,
Would sleep in the flower themselves
After having their fill,
And the cows with big udder
Would fill milk pots to the brim,
And healthy cows and never diminishing wealth,
Would fill the country,
And all this I assure by our vratham / practice.
4. Azhi Mazhai Kanna
Varali - Adi
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
Please obey our wishes,
Oh rain God who comes from the sea,
Enter the sea, please, and bring water to your fill,
And with zest and sound take it up,
And like the God of the deluge become black,
And shine like the holy wheel in the hands,
Of The God Padmanabha who has powerful biceps,
And make booming pleasing sounds,
Like the right spiraled conch,
And rain with out stop like the arrow storm,
From Saranga the bow of Vishnu and descend on us,
To make this world happy,
And to help us take bath in month of Margahzhi,
5. Mayanai Mannu
Sri - Adi
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
To Him the enchanter of all,
To Him the son of Mathura in the north,
To Him who played and frolicked,
In the shores of holy Yamuna,
To Him who is the ornamental lamp,
Of the family of cow herds,
And to the Damodhara who made,
His mothers womb holy,
We came after a holy bath,
And offered pure flowers at his feet,
And sang with our mouth,
And brought the thoughts of him in our mind,
And we were sure,
That all our mistakes of the past,
And all that we will do in future,
Will vanish as ashes in fire,
6. Pullum Chilambina
Shankarabharanam - Misrachapu
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
Did you not hear alternate twittering birds making loud noises,
Did you not hear the loud sound of white conch,
From the temple of the king of Garuda,
Oh, girls please wake up,
Let us hear the holy sounds of “Hari , Hari”.
From the savants and sages,
Calling him who drank the poisonous milk from the ghost,
Him who kicked and killed the ogre of the cart,
And him who sleeps on the great serpent Adi Sesha
So that it goes through our mind,
And make our mind cool
7. Keesu Keesu
Bhairavi - Misrachapu
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
Did you not hear, Oh slow witted girl,
The twittering sound of black birds of the morn,
Which sounds like a talk between them,
Did you not hear the tingling sound,
When the big and small coin like pendants,
Rub against each other,
Did you not hear the sound of vigorous pull,
Of the curd churner being pulled,
By the flower bedecked cow herdesses,
Did you not hear the sound of twirling curd,
When churned using the mixer,
Oh, leader among girls, How can you sleep,
When they sing the names sweetly.
Of Narayana and Kesava,
Oh, She who is sparkling,
Be pleased to open the door,
8. Keezh Vanam
Dhanyasi - Adi
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
The eastern sky has become white,
The buffaloes are free to walk and graze,
The remaining lasses, have stopped from going,
All those who wanted to go,
And have come to call you,
Oh girl filled with happiness, Please wake up.
Let us all sing and get gifts,
From Him who has killed the horse like ogre,
By pulling apart his mouth,
From Him who killed the wrestlers, Sent to kill him,
From the Narayana, who is first among the Gods,
And prostrate before him.. Please hear what we tell.
And decide for yourself,
9. Thoomani Madaththu
Hameer Kalyani - Adi
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
Oh my uncle’s daughter, who sleeps,
In the soft cotton bed,
In the pearl filled Villa,
Well lit from all sides,
And full of the smoke of incense,
Please open the ornamental door.
Oh aunt, why don’t you wake her up,
Is your daughter dumb or deaf, Or down right lazy,
Or she is in trance of deep pleasurable sleep,
Let us all call him the great enchanter,
Madhavan and he who lives in Vaikunta,
By several of His names,
And get benefited,
10. Notru Swargam
Todi - Misrachapu
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.
Oh lady fine, who has entered the heaven,
Due to penance done in last birth,
Won’t you reply,please
Won’t you open the door,please
If we pray the God Narayana,
Having with him the scented garland,
Made of holy basil,
He would give us gifts, many,
He is the same who is holy in times ancient,
Sent Kumbhakarna to his death,
After beating him in the field of war.
Did that ogre give you his sleep,
Before he went off from here,
Oh lass who is very lazy,
Oh lass, who is like pretty jewels,
Wake up from your sleep, well,
And open the door.
11. Katru Karavai
Huseni - Misrachapu
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
Oh daughter of the cattle baron,
Who milks herds of cows,
And wages war on enemies
And makes his enemies loose their strength,
Oh Golden tendril, Oh lass who has the mount of venus,
Like the hood of the snake, Wake up and come,
When your flock of friends,
Have come to your courtyard, And sing of Krishna,
Who has the colour of the cloud, Oh rich, rich lady,
How can you neither move nor talk, And lie in deep trance,
12. Kanaithilam Katrerumai
Kedaragowla - Adi
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
Hey, sister of the rich one, who owned,
The mooing she buffalo with a calf,
Which took pity on the calf,
And gave out plenty,
Of milk to it through its udder,
And made his courtyard slushy with milk,
We are assembled in thine yard,
In the dripping fog, And sing about Him,
Who killed in anger the king of Southern Lanka,
And who is very dear one,
But open your mouth, you don’t..
At least wake up now,
Why this very deep slumber,
For people of all houses around,
Have already become alert
13. Pullin Vaai Keendanai
Atana - Misrachapu
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
The lasses have reached,
The place of prayer for Pavai,
Singing the fame of our Lord.
Who killed the ogre who came like a stork.
And who cut off the heads of the bad ogre, One by one.
The nevus has risen in the morn,
The Jupiter has vanished from the sky,
The birds are making lot of sound,
Of beautiful one with wide eyes red as a flower.
Without taking bath by dipping
again and again in ice cold water,
Would you prefer to sleep.
Oh lass, On this holy day,
Do not stay aside, And come to bathe with us.
14. Ungal Puzhakkadai
Anandabhairavi - Adi
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
In the pond in the backyard of your house.
The lily in the ponds have opened,
The night flowers have closed,
The white toothed sages,
Who wear clothes as red as,
The powder of brick, Are going to their temples.
To sound the conch.
You who promised to wake us up, Please wake up,
Are you not ashamed, You chatter box,
Let us all sing about the lotus eyed one,
Who has a holy conch and disc in his hands,
15. Elle Ilam kiliye
Begada - Misrachapu
எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
“Hey, little bird, Are you still sleeping? ”
“Don’t disturb my sleep , Lasses, I will just come”.
“You are good in your speech, We know what you mean.”
“You be good, but leave me alone”
“Come quickly, why is it different for you?”
“Have every one gone?” “Gone, think they have gone”
“Please wake up and sing,
Of he who killed the big elephant,
Of him who can remove enmity from enemies,
And of him who is the holy enchanter,
16. Nayaganaai Ninra
Mohanam- Adi
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
Hey, He who guards the palace of Nanda Gopa,
Hey, who guards the ornamental door with flags,
Please be kind to open the door with bells,
For yesterday the enchanter Kannan,
Has promised to give beating drums,
To us the girls from the houses of cow herds.
We have come after purification,
To wake Him up with song,
So do not talk of this and that, Hey dear man,
And open the door with closed latches,
17. Ambarame Thanneere
Kalyani - Khandachapu
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.
Hey Nandagopa, who does good deeds and charity,
Who gives water, cloth and food to others,
Please wake up.
Our lady Yasodha, who is the light of the homes of cow herds,
She who is dear to all the ladies, Please wake up
Hey, Krishna who is the king of Gods,
Who went up tearing the sky.
Please wake up, and do not sleep.
Hey Baladeva, who wears pure golden anklets,
Please wake up along with your brother,
18. Undhu Madha Kalitran
Saveri - Misrachapu
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
Hey, Who is the fair daughter in law,
Of Nanda gopa, who has several elephants,
And who is a great hero who never ran away from his enemies,
Hey Lady Nappinnai, who has hair surrounded by holy scent,
Please be kind to open the door.
The cocks are everywhere waking us up,
The koels flock on the jasmine Pandals,
And coo so that we all wake up,
Hey Lady who happily plays ball,
To help us sing your Lords fame,
With your hands with tingling bangles,
Please open the door with happiness,
19. Kuthu Vilakeriya
Sahana - Misrachapu
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
In the light of the oil lamp,
On the ornamental four legged ivory cot,
On the soft bed filled with cotton,
Reclining on the busts of Nappinnai,
You sleep, Oh he who has a flower like heart,
Please open your mouth.
She who has, wide black eyes with collyrium.
We know that you will never allow him to wake up,
For you can never bear to be away from Him,
This is not that good,
And cannot be accepted by us.
20. Muppathu Muvar
Senchurutti - Misrachapu
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
Please wake up Oh, Lord,
Who removed sorrow and fear,
From the thirty three sections of Devas,
Even before they approached you,
Oh Lord, Who is glittering like gold,
Oh Lord, who has inimitable valour, Please wake up,
Oh Lady Nappinnai, Who has desirable busts like golden pots.
Who has little red mouth,
And who has thin narrow hips,
Please wake up, Oh Goddess of wealth.
Please give mirror and fan,
Just now to your consort,
And allow us to take bath,
21. Etra Kalangal
Nadanamakriya - Misrachapu
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
Oh son of him,
Who owned several cows,
Which gave so much milk,
That always the milking vessel got overflowed, Please wake up.
Oh Lord, who is full of mercy,
Oh Lord, who is better than the best,
Oh lord, who is the light that began the world,
Please wake up.
Like your flock of defeated enemies,
Falling at your feet in surrender,
We came praising you, So that we get fame,
22. Angan Maa Gnalathu
Yamuna Kalyani - Misrachapu
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
Like all the famous kings
Of the wide World, that is pretty,
Have crowded near your cot,
After surrendering their ego,
We also have come near.
Will not the sight,
Of your red eyes which is like the lotus
Fall little by little on us?
If you see us using those eyes,
Which are like sun and the moon,
All the curse on us will vanish,
23. Maari Malai Muzhainjil
Manirangu - Misrachapu
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
Like the majestic lion wakes up with ire,
From the mountain cave in the rainy season,
Looks with fiery sight,
And with deep angry sweat from all the hairs,
Turns up its head with awe,
And comes out making lots of din,
Hey Lord, who is the colour of the blue lotus,
Come from your temple to here,
And sit on the majestic royal throne,
And hear with compassion,
For why we have come here,
24. Anru Ivvulagam
Sindhu Bhairavi - Adi
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
We worship your feet which measured the world then,
We worship your fame of winning over the king of Southern Lanka,
We worship thine valour in breaking
the ogre who came like a cart,
We worship thy strength which threw the calf on the tree,
We worship thine goodness in making
the mountain as an umbrella,
And we worship the great spear in your hand,
which led to your victory,
We have come hear to sing always for ever your praises,
And get as gift the drums to sing,
25. Oruthi Maganaai Pirandhu
Behaag - Adi
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
Being born to woman,
And in the same night in hiding.
You became the son of another,
But this he could not tolerate,
And wanted to cause more harm to you,
And you great one, became,
The fire in the stomach of that Kamsa,
We have come here with desire for a drum,
And if you give the drum to us,
We would sing about thine great fame and wealth,
And would end our sorrows and become happy,
26. Maale! Manivanna
Kunthala Varali - Adi!
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
Oh Lord Vishnu,
Oh lord who is like the blue sapphire,
If you ask us what we need,
In your great grace and great deeds,
For our holy bath of Marghazhi,
We will ask for very many conches
Like the milk white conch of yours called Pancha Janya,
Very many big drums whose sound can be heard everywhere,
Several musicians of fame to sing “Pallandu ”
Several beautiful pretty lamps,
Several flags and cloths to make tents,
Oh, He who sleeps on a banyan leaf at time of deluge,
Please give us them all,
27. Koodaarai Vellum
Poorvi Kalyani - Misrachapu
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
Hey Lord Govinda,
who is known for victory over enemies,
After singing you we will get drums and many gifts,
And after being praised by all the people,
Wear we will the golden flower on our hair,
Wear we will golden bracelets,
Wear we will golden ear studs,
Wear we would then the golden flowers on the ear,
Wear we will ornaments on the legs,
Wear we will pretty new dresses,
Eat we will rice mixed with milk,
Covering the rice fully with ghee,
And with the ghee dripping from our forehands,
We will be together and be happy,
28. Karavaigal Pin Chendru
Kambhoji - Adi
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
Belonging to the ignorant family of cow herds,
Drive we would the cattle to the forest,
And there we would all eat together,
But We are blessed that you are one of us..
Oh Govinda who does not have any short comings.
None can ever break the ties that we have with you,Oh Lord,
We are but ignorant girls, who do not know the world,
And in ignorance and love we have called you by name.
So please be not be angry on us,
And please give us drums, Oh Lord,
29. Chitram Chiru Kale
Malayamarutam - Misrachapu
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
Please hear why,
In this very early dawn,
We have come to worship,
Your golden holy feet.
You were born in our family of cow herds,
And we are but there to obey your every wish,
And not come to get only the drums from you,Oh Govinda.
For ever and for several umpteen births,
We would be only related to you,
And we would be thine slaves,
And so please remove all our other desires,
30. Vanga Kadal Kadaintha
Surutti - Misrachapu
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
He who sings with out error,
The thirty odes in sweet Tamil,
Of the story of how the rich ladies,
With faces like moon,
Who worshipped and requested,
The Madhava who is also Lord Kesava,
Who churned the ocean of milk,
For getting a drum to worship Goddess Pavai,
As sung by Kodhai who is the dear daughter,
Of Vishnu Chitta the bhattar,
From the beautiful city of Puduvai,
Will be happy and get the grace,
Of our Lord Vishnu with merciful pretty eyes.
And four mountain like shoulders, for ever.





Thiruppavai திருப்பாவை 
(Visit thiruppavai.swayamvaraparvathi.com for Audio with lyrics in Tamil and English)
Thaniyan
Anna vayaRpudhuvai aandaaL arangaRkupஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்
Pannu thiruppaavaip palpadhiyam, Innisaiyaalபன்னு திருப் பாவைப் பல் பதியம்! - இன்னிசையால்
paadikkoduththaaL naRpaamaalai, Poomalaiபாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
Soodikk koduththaaLaich solluசூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
Soodik koduththa sudark kodiyE, tholpaavaiசூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை
Paadi aruLavalla palvaLaiyaai - Naadi Neeபாடி அருள வல்ல பல் வளையாய் - நாடி நீ
VengadavaRku ennai vidhi onRa immaaRRamவேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
Aangadavaa vaNNamE nalguநாங் கடவா வண்ணமே நல்கு!
Thiruppavai in EnglishThiruppavai in Tamil (திருப்பாவை)
1. Margazhi Thingal or Margali Thingal1. மார்கழித் திங்கள் 
Maargazhi-th thingal madhiniraindha nannalalமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
Neeradap pothuveer pothumino nerizhayeer!நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
Seermalgum aaipadi selvachirumeergalசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
Kooerval kodum thozhilam Nandagopan kumaranகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
Er aarndha kanni Yosadai ilam singamஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
Kaar mein-ch-chengan kadhir madhiyam pol mukathanகார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
Narayanane namakke parai tharuvaanநாராயணனே நமக்கே பறை தருவான்
Paaror pugazha-p-padindul-el or empaavaaiபாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
2. Vaiyathu Vazhvirgal2. வையத்து வாழ்வீர்காள்!
Vaiyathu Vaazhveerkaaal! Naamum nam paavaikuவையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
Seyyum kirisaigal keleero paar-k-kadalulசெய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
Payya-th-thuyinra parama adi paadiபையத் துயின்ற பரமனடி பாடி
Ney-unnom paal unnom! Naatkaale neeraadiநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
Mai-ittu ezhuthom, malar ittu naam mudiyomமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
Seyyaadana seyyom; thee kuralai senrodhomசெய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
Aiyamum pichayyum aanthanayyum kaikaatiஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
Uyyumaaru enni uganthu-el or em paavaai. உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
3. Oongi ulagalandha3. ஓங்கி உலகளந்த 
Ongi ulagalanda uthaman per paadiஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
Naangal nam paavaiku chaatri neeradinaalநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
Theenginri nadellaam thingal mummaari peiduதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
Ongu peru sennal oodu kayal ugalaஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
Poomkuvalai-p-podhil porivandu kannpaduppaபூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
Thengaade pukkirundu seertha mulai patriதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
Vaanga-k-kudam niraikkum vallal perum pasukkalவாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
Neengade selvam niraindhu-el or em paavaai. நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
4. Azhi mazhai kanna4. ஆழிமழைக் கண்ணா 
Aazhi mazhai kanna! Onrum nee kai karavelஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
Aazhiyul pukku mugundhu koda aathu, ariஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
Oozhimudalvan uruvam pol mei karuthuஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
Paazhi am tholudai Padmanabhan kaiyilபாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
Aazhipol minni valampuripol minru adhirndhuஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
Thaazhaade Sarngaam udhaitha saramazhai polதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
Vaazha ulaginil peidhidaai; naangalumவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
Maargazhi neerada magizhndu-el or em paavaai. மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
5. Mayanai5. மாயனை 
Maayanai mannu vada Madhurai maindhanaiமாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
Thuyao-peruneer Yamunai-t-thuraivanaiதூய பெருநீர் யமுனைத் துறைவனை
Aayar kulathinil thonrum mani vilakkaiஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
Thaayai kudal vilakkam seida Dhamodharanaiதாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
Thooyomaai vandhu naam thoomalar thoovi-t-thozhudhuதூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
Vaayinaal paadi manatthinaal sendhikkaவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
Poya pizhayum pugutharuvaan ninranavumபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்
Theeyinil thoosaakum seppu-el or empaavaaiதீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
6. Pullum Silambina kaan 6. புள்ளும் சிலம்பின காண் 
Pullum sillambina kaan; pull araiyan koililபுள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
Vellai vili sangin peraravam kettilaiyoவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
Pillaai! ezhundirai peymulai nanjunduபிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
Kalla-ch-chakatam kalallazhi-k-kaalochiகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
Vellathu aravil thuyil amarandha vithhinaiவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
Ullathuk kondu munivarkalum yogikalumஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
Mella ezhundu 'Hari' enra per aravamமெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
Ullam pukundhu kulirndhu-el or empaavaai உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
7. Kichu Keechendrm7. கீசுகீசு என்றும்
Keechu keechu enru engum aanauchaathan kalandhuகீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
Pesina Pecharavam kettilyo peyppennay!பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
Kaasum pirappum kalakalapp-k-kai perthuகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
Vaasanarumkuzhal aaichiar maththinaalவாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
Osaipadutha thayir aravam kettilayo?ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
Nayaka-p-penn pillai! Naarayanan moorthyநாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
Kesavanai-p-paadavum nee kette kidaththiyo!கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
Thesamudayai Thirav-el or empaavaai தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
8. Kizh vaanam vellendru8. கீழ்வானம் வெள்ளென்று 
Keezh vaanam vellendru! erumai siru veeduகீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
Meyvaan paranthana kan! mikkulla pillaikalumமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
Poovan pokinraarai-popokaamal kaathu unnai-kவான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
Koovuvaan vandhu ninrom! kothu kalamudayaகூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய 
Paavaai! ezhunthiraai! paadi-p-parai konduபாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
Maavai-p-pilanthaanai, mallarai maatiyaமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
Devaathi dhevanai chenrunaam sevithalதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
Aa Aaa enru aaraindhu arul-el or empaavaai ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.
9. Thoomani Maadathu (thumani madathu)9. தூமணி மாடத்து 
Thoomani maadathu sutrum vilakkeriyaதூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
Dhoopam kamazha thuyil anai mel kann valarumதூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
Maamaan magale! mani-k-kadavam thaalthiravaai!மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்
Maameer! Avalai ezhuppeero! Un magal thaanமாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்
Oomayo? anri-ch-chevido? ananthalo?ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
Ema-p-perum thuyil manthira-p-pattalo?ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
Maa maayan, Maadhavan, Vaikuntan, enrenruமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
Naamam palavum navinru-el or empaavaaiநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
10. Notru suvargam 10. நோற்றுச் சுவர்க்கம் 
Notru Suvargam puguginra ammanai!நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
Maatramum thaaraaro vaasal thiravaadaarமாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
Naatrathuzhaai mudi Naraayana: nammaalநாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
Potra-p-parai tharum punniyanal pandorunaalபோற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
Kootrathin Vaai veezhnda Kumbakarananumகூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
Thotrum unakke perum thuyilthan thandhaanoதோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
Aatra ananthal udayaai! arumkalameஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
Thetramaai vandhu thira-el or empaavaai தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
11. Katru karavai11. கற்றுக் கறவை
Katru-k-karavai kanangal pala karandhuகற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
Setrar thiral azhiya-ch-chenru seru-ch-cheyyumசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
Kutram onrlladha kovalar tham porkodiyeகுற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!
Putraravu algul punamayile! podharaai!புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்
Sutrathu thozimaar ellarum vandu ninசுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
Mutram pugundhu mugil vannan perpaadaமுற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட 
Sitraadhe pesaade selva-p-pendaatti neeசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ
Etrukku urangum porul?-el or empaavaai எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
12. Kanaithilam Katrerumai 12. கனைத்திளம் கற்றெருமை 
Kanaithu ilam katrerumai kanrukku irangiகனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
Ninaithu mulai vazhiye ninru paal soraநினைத்து முலை வழியே நின்று பால்சோர
Nanaithu illam serarkkum narchelvan thangaai!நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
Panithalai veezha nin vaasal kadai-patriபனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
Sinathinaal then ilangai-k-komaanai-ch-chetraசினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
Manaththukkiniyaanai paadavum nee vaaithiravaai!மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
Iniththan ezhundiraai, eethenna peruakkam!இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
Anaithu illaththuaarum arindhu-el or empaavaaiஅனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
13. Pullinvai keendanai13. புள்ளின் வாய் கீண்டானைப் 
Pullinvaai keendaanai-p-pollar arakkanaiபுள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
Killikkalainthaanai-k-keerthimai paadi-p-poiகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
Pillaikal ellarum paavai-k-kalam pukkaarபிள்ளைகள் எல்லாரும்  பாவைக் களம்புக்கார்
Velli ezhundhu viyazham urangitruவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
Pullum silambina kaan podhari-k-kanninaai!புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
kullak-kulira-k-kudaindhu neeraadaatheகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
Palli-k-kidathiyo! Paavaai Nee nannaalaalபள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்
Kallam thavirundhu kalandhu-el or empaavaai கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
14. Ungal puzhakkadai14. உங்கள் புழக்கடை
Ungal puzhai-k-kadai-th-thottathu vaaviyulஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
Sengazhuneer vaai negizhndhu aambal vaai koombina kaanசெங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
Sengal podi-k-koorai vennpal thavathavarசெங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
Thangal thirukkoil sangiduvaan poginraarதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
Engalai munnam ezhuppuvaan vaai pesumஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
Nangaai! Ezhundiraai! Naanaadhai! Naavudayai!நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
Sangodu chakkaram endhu thadakkaiyanசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
Pangaya-k-kannanai-p-paadu-el or empaavaai பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
15. Elle Ilam Kiliye15. எல்லே இளம்கிளியே 
Ellay! Illam Kiliye! Innam urungudhyo!எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?
Chill enru azhayen min Nangaimeer! Podharukinrenசில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
Vallai un katturaikal pande un vaai arithumவல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
Valleergal neengale! Naanthan aayiduga!வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக
ollai nee podaai, unakkenna verudayaiஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
Ellarum pondhaaro? Pondhaar pondhu ennikkolஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
Vallaanai-k-konraanai, maatraarai maatrazhikkaவல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
Vallaanai Mayanai-p-paadu-el or empaavaai வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
16. Nayaganai ninra16. நாயகனாய் நின்ற 
Naayaganai ninra Nadagopanudayaநாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
Koil Kaappaane! Kodi thonrum thoranaகோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
Vaayil kaappaane! Mani-k-kadavam thal thiravaaiவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
Aayar sirumiyaromukku arai paraiஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
Maayan Manivannan, nennale vaai nerndhaan!மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
Thooyomaai vandhom, thuyil ezha-p-paaduvaanதூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
Vaayal munnam munnam maatraadhe amma! Neeவாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
Neyanilai-k-kadhavam neeku-el or empaavaai நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
17. Ambarame Thannere17. அம்பரமே தண்ணீரே 
Ambaramay, thanneeray, soray aram seyyumஅம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
Emperumaan! Nandagopaala! Ezhundhiraai!எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
kombanaar-k-kellam kozhunday kulavilakkayகொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
Emperumaatti! Yosodhaai! Arivuraai!எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்
Ambaran oodaruththu ongi ulagalandhaஅம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
Umberkomanne! Urangaadhu ezhundhiraai!உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
Semborkk-kazhaladi-ch-chelvaa! Baladeva!செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
Umbiyum neeyum urang-el or empaavaai உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். 
18. Undhu madhakalitran 18. உந்துமத களிற்றன் 
Undhu madhakalitran, odhaadha thol valiyanஉந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
Nandagopalan marumagale! Nappinnai!நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
Gandham kamazhum kuzhalee! Kadai thiravaai?கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
Vandhengum kozhi azhaithana kaann! Maadhavi-p-வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
Pandalmel palkaal kuyilinangal koovina kaanபந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
Pandhaar virali! Un maiththunan per paada-ch-பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்
Chenthaamarai-k-kaiyaal seeraar valai olippaசெந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
Vandhu thiravaai magizhundhu-el or empaavaaiவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 
19. Kuthu Vilakeriya (Kuthu vilakku Eriya)19. குத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய)
Kuthuvilakkeriya-k-kottukkaal kattil melகுத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
Methnra pancha sayanathin meleriமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
Koththalar Poonkuzhal Nappinnai kongaiymelகொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
Viththu kidantha malar maarbha! vaai thiravaai!வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
Maiththadam kanninnaai, nee un manaalanaiமைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
Ethanai podhum thuyilezha vottaai kaanஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
Ethanai elum pirivaatrakillaaiyaalஎத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
Thathuvamanru thagav-el or empaavaai தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். 
20. Muppathu Moovar (Muppathu muvar)20. முப்பத்து மூவர் 
Muppaththu moovar amarar-ku-munsenruமுப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
Kappam thavirkkum kaliye! Thuyilezhaai!கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்
Seppamudayaai! Thiraludayaai! Settraarkuசெப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
Veppam kodukkum vimalaa! Thuyilezhaai!வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
Seppanna menmulai-ch-chevvaai-ch-chirumarungalசெப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
Nappinnai nangaai!Thiruvey! Thuyilezhaai!நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
Ukkamum thattoliyum thanthun manaalanaiஉக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
Ippothe emmai neer att-el or empaavaai இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
21. Etra Kalangal21. ஏற்ற கலங்கள் 
Yetra kalangal ethir pongi meethalippaஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
Maatraadhe paal soriyum vallal perum pasukkalமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
Aatra-p-padaithaan magane! arivuraai!ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
Uuttramudayaai!Periyaai! Ulaginilஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
Thotramaai ninra sudare! thuzhilezhaai!தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
Maatraar unakku valitholaindhu un vaasarkannமாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
Aatraathu vandhu unnadi paniyumma poleyஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
Pottriyaam vandhom pugazhndu-el or empaavaai போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
22. Anganmaa Gnalathu22. அங்கண்மா ஞாலத்து 
Anganmaa gnaalaththarasar abhimaanaஅங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
Bangamaai vandhu nin palli-k-kattil keezhayபங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
Sangam iruppaar pol vandhu thalaip-peydhomசங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
Kinkini vaai seidha thaamarai poo-p-poleyகிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
Sengansiru-ch-chiridhey emmel vizhiyaavo!செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
Thingalum aadhityanum ezhundaar polதிங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
Angann irandum kond engal mel nokkudhiyelஅங்கண் இரண்டும் கொண்டு  எங்கள்மேல் நோக்குதியேல்
Yengal mel shaapam nirandhe-el or empaavaaiஎங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
23. Maari malai muzhanjil23. மாரி முலை முழஞ்சில்
Maarimalai muzhainjil manni-k-kidandhurangumமாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
Seeriya Singam arivuttru-th-thee vizhiththuசீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
Verimayirponga eppaadum perndhthariவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
Moori nimirndhu muzhangi-p-purappattuமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
Podharuma poley nee poovai-p-poovanna! Unபோதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
Koil ninru ingane pondharuli koppudayaகோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
Seeriya singaadhanath-thirundhu yam vandha kaariyamசீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
Aaraindhu arul-el or empaavaai காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
24. Anru ivvulagam24. அன்று இவ்வுலகமளந்தாய்
Anru ivvulagam alandhaai adi potri!அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
Senru angu then ilangai settrai! thiral potri!சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
Ponra-ch-chakatam udaiththaai pugazh potri!பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
Kanru kunilaai erindhaai! kazhal potri!கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
Kanru kudayaai eduthaai gunam potri!குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
Venru pagai kedukkum nin kaiyil vel potri!வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
Enrenru un sevakame eththi-p-parai kolvaanஎன்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
Inru yaam vandhom irangu-el or empaavaai இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்
25. Oruthi Maganai Pirandhu25. ஒருத்தி மகனாய்
Oruththi maganaai-p-pirandhu or iravilஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
Oruththi maganaai oliththu valaraஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
Tharikkilaanaagi-th-thaan theengu ninaindhaதரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
Karuththai pizhai-p-piththu kanjan vayittrilகருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
Neruppenna ninra nedumaley! unnaiநெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
Aruththuthu vandhom parai tharudhi yaagilஅருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
Thiruththakka selvamum sevakamum yaampaadiதிருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
Varuththamum theerndhu magizhndhu-el or empaavaaiவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
26. Maaley! Manivanna!!26. மாலே! மணிவண்ணா!!
Maaley! Manivanna! Maargazhi neeraaduvaamமாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
Melaiyaar seivanangal venduvana kettliyelமேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
Gnalath-thai ellam nadunga muralvanaஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
Paalanna Vannathu un Paanchajanyameyபாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
Polvana sangangal poi-p-paadu udaiyanaveபோல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
Saalap-preum paraiyey pallaandu isaippareyசாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
Kola vilakkey kodiyey vidhaanameகோல விளக்கே கொடியே விதானமே
Aalin ilayai! arul-el or empaavai ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
27. Koodadarai vellum (Kudarai vellum)27. கூடாரை வெல்லும் 
Koodaarai vellum seer Govinda! Unrannaiகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
Paadi-p-paraikondu yaamperu sammaanamபாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
Naadu pugazhum parisinaal nanraagaநாடுபுகழும் பரிசினால் நன்றாக
Choodagame thol valaye thoday sevi-p-poovayசூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
Paadagame enranaya palkalanum yaam anivomபாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
Aadai uduppom adhanpinnay paar choruஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
Mooda nei peidhu muzhangai vazhivaara-மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
Koodi irundhu kulirndhu-el or empaavaai கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
28.Karavaigal Pin Chenru28. கறவைகள் பின்சென்று 
Karavaigal pinsenru gaanam serndhu unbhomகறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
Arivonrum illaadha aai-kulaththu unrannaiஅறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
Piravi Perunthanai punniyam yaamudaiyomபிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
Kurai onrum illadha Govindaa! Un rannoduகுறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
Uravel namakku ingu ozhikka ozhiyaadhuஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
Ariyaadha pillaikalom anbinaal unrannaiஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
Siruper azhaiththanavum seeri arulaadheசிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
Iraivaa! Nee thaaraai parai-el or empaavaaiஇறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
29. Chitram Chiru Kale29. சிற்றஞ் சிறுகாலே 
Sittran sirukaale vandhu unnai seviththu unசிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
Pottraamarai adiye pottrum porul kelaaiபொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
Pettram mayththunnum kulaththil pirandhu neeபெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
Kuttreval engalai kollamal pogaathuகுற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
Ittrai parai kolvaan anru kaann Govindaa!இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
Ettraikkum azh-azh piravikkum un thannodaஎற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
Uttrome yaavom unakke nam aatcheivom!உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
Mattrai nam kaamangal maattru-el or empaavaai மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
30. Vanga Kadal Kadanthu30. வங்கக் கடல் கடைந்த 
Vanga-k-kadal kadaindha maadhavaani kesavanaiவங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
Thingal thirumugathu seyzhayaar senru irainjiதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
Anga-p-paraikonda aattrai ani puduvaiஅங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
Painkamala thanntheriyal pattar piraan kothai sonnaபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
Sangath-thamizhmaalai muppadum thappaameசங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
Ingi-p-parisuraippaar eerirandu maalvarai-th-thoolஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
Senkam thirumugaththu selvaththirumaalaalசெங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
Engum thiruvarul petru inburuvar empaavaai எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

Kothai Piranthavoor Govindan VaazhumUr
கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
SothimaNi maadam thOnrumUr --neethiyAlசோதி மணிமாடந் தோன்றுமூர் - நீதியால் 
nalla patthar vaazhumUr nAnn maRaihaLOthumUrநல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
VilliputthUr VedakkOnUrவில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

Paathahangal theerkkum Paramandi Kaattum
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
vedam anaitthukkum vithAhum- Kothai Tamizhவேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
Iyainthumainthum aRiyAtha maanidaraiஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
vyaam sumappathum vampuவையம் சுமப்பது வம்பு

ThiruvAdippUratthu sehatthuthitthAL VaazhiyE
திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே 
ThiruppAvai muppathum seppinAL VaazhiyEதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
PeriyAzhwAr peRReduttha peNN piLlai vaazhiyEபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
PerumbhUthUr mmamunikkup-pinnAnAL vaazhiyEபெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
oru NooRRu nARpatthu moonRu uraitthAL vaazhiyEஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
UyarangarkkE kaNNIuhanthaLitthAl VaazhiyEஉயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
maruvAruntirumalli vaLa naadi vaazhiyEமருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
van Puthuvai naharkkOthai malarpadhangal VaazhiyEவண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே













































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக