ஞாயிறு, 5 அக்டோபர், 2014

நமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செலவு எகிறிக்கொண்டே போகின்றதா ? என்ன செய்வதன்றே தெரியவில்லையா ?

ராதே கிருஷ்ணா 06-10-2014


நமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செலவு 





Status Update
By Namasivayam Balakrishna
நமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செலவு எகிறிக்கொண்டே போகின்றதா ? என்ன செய்வதன்றே தெரியவில்லையா ?
80, 85 வயதை தாண்டிய முதியோர் பெருமக்கள் நம்மில், நமதுவீடுகளில், நமது நாட்டில் வாழ்ந்துவருவது, நமக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போவது இன்னும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அவர்கள் தொடந்து அளவிலா அன்பையும், அரவணைப்பையும், அறிவுரைகளையும், நல்லாசிகளையும் தந்து, நோய் நொடியற்று நீண்டகாலம் வாழ வேண்டுகிறோம்.
உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இன்று மருத்துவச்செலவு, குறிப்பாக புற்றுநோய், இதயநோய், மூளைநோய்கள், சிறுநீரகம் மாற்றுதல் போன்ற பெரிய அறுவைசிகிச்சைகளுக்காக ஆகும் செலவு பலஇலட்சங்களைத் தாண்டும்.
என்ன செய்வது? இந்த பாழாய்ப்போன நோய்கள் இந்தப் பெரியவர்களையும் விட்டுவைப்பதில்லையே? இன்னும் கொஞ்சகாலம் தானே இருக்கப்போகின்றார்கள் ? நலமாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று ஏன் விடுவதில்லை? புரியவில்லை! படைத்தவன் தான் சொல்லவேண்டும் !
பணவசதி உள்ள பெருந்தனவான்கள் மனவசதி இருந்தால் செலவு செய்ய பிரச்சனையேயில்லை. கீழ்மட்டத்தில் உள்ளவர்களோ - நினைத்தும் பார்க்கமுடியாது. அநேகமானவர்கள் இந்த நோய்தான் பிடித்துள்ளது என்று அறியும்முன்னே சென்று விடுகின்றனர். ஆகவே அங்கும் பிரச்சனையில்லை.
ஆனால் பிரச்சனை, பெரும் பிரச்சனை, உங்களைப்போன்ற, என்னைப்போன்ற நடுத்தரவர்கத்தவருக்குத் தான். பாசத்திற்கும். பணத்திற்கும் நடுவே பெரும் போராட்டம். ஒருபக்கம், என்ன செலவானாலும் பரவாயில்லை என்று எண்ணம். மறுபக்கம் இருக்கின்ற எல்லாவற்றையும் செலவழித்த பின்னும் ஒரு பயனும் இல்லை என்றால், இருப்பவர்களின் வாழ்க்கை என்னாவது என்ற கேள்வி. அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம். செலவுசெய்திருந்தால் பிழைத்து இருப்பார்களோ? தப்பு பண்ணிவிட்டோமோ என்ற குற்றஉணர்ச்சி நம்மை வாழ்நாள் முழுவதும் வாட்டுமோ என்று அடிமனதில் நிகழும் போராட்டம். வாழ்க்கையே தடுமாற்றம் தான் – போராட்டம்தான். ஒருநிமிடம் ! இதில் சம்பந்தப்பட்ட பெரியவர்கள், முதியவர்கள் - அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தீர்களா ?
பொதுவாகப் பெரியவர்கள், முதியவர்கள் தாம் இதுவரை நல்லபடியாக வாழ்ந்ததற்கு, இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டு, எஞ்சி இருக்கும் நாட்களிலும் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருந்து இறைவனடி சேரவேண்டும் என்றுதான் தினமும் பிரார்த்தித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதுவரை சாதித்தது போதும் இன்னும் சாதிக்க ஒன்றும் இல்லை என்றுதான் நினைக்கின்றார்கள்.
அப்படி ஏதாவது நோய் வரினும் அதிகக்கஷ்டப்படாமல், உடல் வேதனைஇல்லாமல், முக்கியமாக சொந்த, பந்தங்களுக்கு, மற்றவர்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் அழைத்துக்கொள் என்றுதான் இறைவனை வேண்டுகிறார்கள்.
ஓன்று மட்டும் நிச்சயம். எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான் ! வருவதும், போவதும் யார் கையிலும் இல்லை. ஒரு நொடி கூட முன்போ, காலதாமதமாகவோ வரவோ, போகவோ முடியாது. இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கமுடியாது.
அதனால், பொதுவான பெரியவர்கள், முதியவர்களின் எண்ணத்தை இங்கு பதிவு செய்யவிரும்புகின்றேன். நானும் ஒரு முதியவன் என்பதால் இந்தத் தகுதி எனக்கு இருக்கின்றது என்றே நம்புகிறேன். இனிமேலாவது, முதியவர்களுக்கு மருத்துவச்செலவிற்காக, உங்களிடம் உள்ள சேமிப்புமுழுவதையும், சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ செலவழிக்க வேண்டாம். நீங்கள் முதியவர்களை உங்கள் வீட்டில் வைத்துகொண்டு அன்பாக, அரவணைப்பாக பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் அதிகக்கஷ்டப்படாமல், உடல் வேதனைப்படாமல் இருக்க வேண்டிய மருந்துகளை மட்டும் தவறாமல் கொடுத்து வாருங்கள். மற்றவற்றை ஆண்டவன் பார்த்துக்கொள்வான். கவலைப்படாதீர்கள்.

இதை நீங்கள் அறிவுரையாக, ஏன், அன்புக்கட்டளையாகவே ஏற்றுகொள்ளுங்கள் ! இனிதே வாழுங்கள் !!










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக