செவ்வாய், 3 டிசம்பர், 2013

காரடையான் நோன்பு

ராதே கிருஷ்ணா 03-12-2013

காரடையான் நோன்பு




மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது 

காரடையான் நோன்பு மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நான் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கெளரி விரதம், சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும், தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பார்கள். விரத பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச பூஜை) வழிபடுவார்கள், அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் “மாசிக்கயிறு பாசி படியும்” என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது. சாவித்திரி விரதத்தின் சிறப்பை புராணம் விளக்குகிறது. நெடுநாட்கள் பிள்ளைப் பேறு இல்லாமலிருந்த அசுபதி மன்னன், மகப்பேறு வேண்டி தான- தர்மங்கள் செய்து வந்தான். அதன் பயனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தும் கொண்டிருந்த அக்குழந்தைக்கு ‘சாவித்திரி’ என்று பெயரிட்டன. அவளுக்கு எட்டு வயதாகும் போது அங்கு வந்த நாரதர், அவளது எதிர்காலத்தைப் பற்றி கூறிச் சென்றார். தாய்- தந்தையரை தெய்வமாக மதிக்கும் சத்யவான் என்பவனை அவன் மணந்து கொள்வாள் என்றும்; சத்யவான் 21 ஆண்டுகள் வரைதான் வாழ்வான் என்றும் கூறியிருந்தார். சாவித்திரி சத்யவானையே மணந்து, அவனது வாழ்நாள் அதிகரிக்க பல விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டித்தாள், சத்யவானும் சாவித்திரியும் வேற்று நாட்டு அரசனால் நாடு கடத்தப்பட்டு ஒரு கானகத்தில் வசித்து வந்தனர். நாரதர் கூறியிருந்தபடி சத்யவானின் இறுதிநாள் வந்தது. அன்று சாவித்திரி தடுத்தும் கேளாமல் அவன் விறகு சேகரிக்க காட்டுக்குப் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். நண்பகல் வேளையில் சத்யவான் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தபோது, எமதர்ம ராஜன் அவன் உயிரைப் பறித்துச் சென்றான். சாவித்திரியின் கற்புத் திறத்தால் எமதர்மனின் உருவம் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவள் தன் கணவனின் உடலைக் கீழே கிடத்தி விட்டு, எமனைப் பின்பற்றிச் சென்றாள். அவளது காலடி ஓசை கேட்டுத் திரும்பிய எமனின் பாதங்களில் விழுந்து சாவித்திரி வணங்கினாள். அவளை “தீர்க்க சுமங்கலி பவ” என்று எமன் வாழ்த்தினான். சாவித்திரி எமனை வேண்டி பல வரங்களைப் பெற்றாள். அதில் தீர்க்க சுமங்கலியாக வாழ கணவன் உயிருடன் இருக்க வேண்டுமே என்று கூறி வம்சவிருத்தி அருளும்படி வேண்டியவரம் எமனைத் திகைக்க வைத்தது. சாதுர்யமாக தன் கணவனின் உயிரை அவள் மீட்டதை அறிந்தான் எமன். சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், “இதுவரை என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் நிறைவேறும். உலகம் உள்ளளவும் உன்னை நினைத்து மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில் விரதமிருப்பவர்களுக்கு உன் ஆசி கிட்டும், அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்’ என ஆசி கூறி அனுப்பினான். சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள், சிறிது நேரத்தில் தூக்கத்திலிருந்து விழிப்பது போல் சத்யவான் விழித்தெழுந்து, “உன்னைப் போன்ற பெண் ஒருத்தி என்னை மீட்டு வந்ததாகக் கனவு கண்டேன்” என்று கூறினான். அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும், எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள். சாவித்திரியும் சத்யவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்யவான் மீண்டும் தன் நாட்டைப் பெற்றான். அவனது பெற்றோர்கள் கண்பார்வை பெற்றனர். சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு அவளது காலம் வரை கெளரி நோன்பு எனக் கூறப்பட்டது. அதன்பின்னர் ‘சாவித்திரி நோன்பு’ என்ற பெயர் பெற்றது. சாவித்திரி காட்டில் இருந்து இந்த நோன்பை மேற்கொண்ட போது அங்கு அவளுக்குக் கிடைத்த காராமணி, கார் அரிசி ஆகியவற்றைக் கொண்டு காரடை செய்து நிவேதனம் செய்தாள். அதனால் இந்த நோன்பு நோற்கும் பெண்கள் நிவேதனத்தில் காரடைவைத்து, உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்’ என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள். திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, கணவரை நோய் நெடியின்றி காக்க இந்த நோன்பு கவசமாக இருக்கிறது. இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு பிள்ளைகளுடன் செளபாக்கிய வதியாய் பல்லாண்டு காலம் வாழ்ந்தாள் என்பது புராணம். அவளது சரித்திரத்தை நோன்பு தினத்தில் படிப்பதால் சகல செளபாக்கியங்களும் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக