புதன், 5 ஆகஸ்ட், 2015

பத்ரிநாத் - ஸ்தல வரலாறு....

ராதே கிருஷ்ணா 05-08-2015






பத்ரிநாத் - ஸ்தல வரலாறு....
*************************************************************************************
மூலவர் - பத்ரி நாராயணன்
தாயார் - அரவிந்தவல்லி / மஹாலக்ஷ்மி
தல விருட்சம் - பதரி (இலந்தை மரம்) 
தீர்த்தம் - தப்த குண்டம்
விமானம் - தப்த காஞ்சன விமானம்
மாநிலம் - உத்ராஞ்சல்
பத்ரிநாத் சென்று அடைந்து பக்தர்கள் - கோயிலின் ராஜகோபுரம் முன்பு இருக்கும் தப்த குண்டத்தில், நீராடி, மேலும் நித்தியக் கடன்களை முடித்துக் கொண்டு, சிம்ம துவாரத்தில் இருக்கும் கருட பகவானை தரிசித்துவிட்டு, பத்ரி விசால் பகவானை தரிசிக்க, கோவிலின் பிரகாரத்தை அடைகின்றனர்.
தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் இதமான சூடாக உள்ளது.
இது பத்ரி யாத்ரிகர்களுக்கு பகவானின் அனுக்கிரகம். இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து, பூசை செய்ய வசதியாக அமைந்துள்ளது. கோயிலின் கருவறையில் எழுந்தருளி இருக்கும் சிலை பகவானாகவே வணங்கப்படுகிறார்.
பத்ரிநாத் பகவானின் மூர்த்தி சுயம்பு. தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, அபிஷேகத்தின் சமயம், பூஜை, அபிஷேகம் செய்யும் நம்பூதிரி சாலக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார். பத்ரிநாத் பகவான் (மூலமூர்த்தி - சாளக் கிராம சிலை) பத்மாசனத்தில் அமர்ந்து, தரிசனம் அளிக்கிறார்.
பகவானின் ஜடா மண்டல் (ஜடை விழுது) மேலும் கம்புக்ரீவா (மூன்று கீறுள்ள கழுத்து) நன்றாகக் காணப்படுகிறது. பகவானின் நான்கு கரங்கள் தெரியும். சங்கு சக்ர கதாதாரியாக சதுர்புஜ பகவான் பத்ரிநாராயணன் மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன் (விஷ்ணு) நாராயண சொரூபமாக சேவை சாதிக்கிறார். பகவானின் கருவறையில், உற்சவமூர்த்தி, நாரதர், தனாதிபதி குபேரர், மேலும் கருட பகவானின் விக்ரகங்களையும், சுதர்சன சக்கரம், சரணபாதுகை முதலியவைகளையும் தரிசிக்கிறோம்.
பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி - நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது.
(குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும்). தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள மகாலக்ஷ்மி சந்நிதியில், மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள்.
குளிர்காலத்தில், சுமார் 6மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை, பாண்டுகேச்வர் - ஜோதிர்மட் (ஜோஷீமட்) கோயிலுக்கு எழுந்தருளச் செய்து, அங்கு கிரமப்படி நித்ய ஆராதனை நடை பெறுகிறது. மறுபடியும் அக்ஷய திருதியைக்கு மறுநாள், கோயில் கதவுகள் திறக்கப்படுகின்றன.
பத்ரிவிசால் கோயிலில் இந்த 6மாத காலம் தேவர்கள் ஆராதனம் செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
தரிசன நேரம் : காலை 5.00மணி முதல் 6.00வரை அபிஷேகம் - தரிசனம் - பக்த யாத்ரிகர்கள் அபிஷேக தரிசனம் செய்யலாம்.
காலை 9.00மணி - பாலபோக் (காலசந்தி)
மதியம் 12.00 – ராஜபோக் (உச்சிகாலம்)
இதற்குப் பிறகு மதியம் 3.00மணிவரை
சந்நிதிக் கதவு மூடப்பட்டிருக்கும்.
மாலை 3.00மணிக்கு சந்நிதி திறக்கப்படும்.
இரவு 9.00மணிவரை தரிசனம் செய்யலாம்.
உரிய கட்டணம் செலுத்தி அர்ச்சனை, கற்பூர ஆரத்தி முதலியன செய்யலாம். மாலை தரிசனத்தின் சமயம் கற்பூர ஆரத்தி, (தீப ஆராதனை) ரஜத (வெள்ளி) ஆரத்தி தரிசனம் செய்யலாம். இரவு 9.00மணிக்கு சயன ஆரத்தி சேவிக்கலாம்.
ஆரத்தி (தீப ஆராதனை) சமயத்தில் பகவானின் தரிசனம் செய்வது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது. கோயிலின் பின்புறம் இலட்சுமி நரசிம்ம மந்திரில் (தனிக் கோயில்), ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத் ராமானுஜர் மேலும் இலட்சுமி நரசிம்மன் சந்நிதிகள் உள்ளன.






























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக