ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஸ்ரீ தயா ஸதகம்

ராதே கிருஷ்ணா 23-08-2015








ஸ்ரீ தயா ஸதகம்–8 October 19, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
நிசாமயது மாம் நீளா யத் போக படலைர் த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்ய பக்த தோஷேஷு அதர்சநம்
பொருள் – இவளுடைய போக மயக்கங்கள் மூலமாக ஸ்ரீநிவாஸனின் கண்கள் நம்முடைய குற்றங்களை காணாமல் மறைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நீளாதேவி என்னும் நப்பின்னை, தனது திருக்கண்களால் என்னைக் கடாக்ஷிப்பாளாக.
விளக்கம் – அதிகமான காமம் உள்ளவர்களுக்குப் படலை என்னும் கண்புரை (cataract) நோய் உண்டாகும் என்று வைத்திய சாஸ்த்ரம் கூறுகிறது. கண்புரை உள்ளவர்களால் சரியாகப் பார்க்க இயலாது. இங்கு ஸ்ரீநிவாஸனின் நிலை இது போன்று ஆகிறது. நீளாதேவி அளவற்ற இன்பத்தை ஸ்ரீநிவாஸனுக்கு அளித்து, தனது குழந்தைகளான அடியார்களின் குற்றங்களை அவன் காண இயலாமல் மறைத்து விடுகிறாள்.
ஆயினும் ஸ்ரீநிவாஸன் நமது குற்றங்களைக் காணாமல் இருப்பதில்லை. அவன் நீளாதேவிக்காக அவ்விதம் காணாமல் இருப்பது போன்று பாவனை செய்கிறான் என்பதை, பாவிதம் என்ற பதம் கூறுகிறது. தயாசதகத்தில் இந்த ஒரு ச்லோகத்தில் மட்டுமே, தயை என்பது கூறப்படாமல் உள்ளதைக் காண்க.
படம் – ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவியுடன் திருச்சேரை ஸ்ரீசாரநாதப் பெருமாள் (நன்றி: http://www.pbase.com/svami)

ஸ்ரீ தயா சதகம் – 7 October 18, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வந்தே வ்ருஷகிரி ஈசஸ்ய மஹிஷீம் விச்வ தாரிணீம்
தத் க்ருபா ப்ரதிகாதானாம் க்ஷமயா வாரணம் யயா
பொருள் – இந்த உலகம் முழுவதையும் தாங்குபவளும், ஸ்ரீநிவாஸனின் மஹிஷியும், ஸ்ரீநிவாஸனின் கருணை நம் மீது விழுவதற்கு ஏற்படும் தடைகளைத் தடுப்பவளும், க்ஷமை என்ற பெயர் கொண்டவளும் ஆகிய பூமாதேவியை வணங்குகிறேன்.
விளக்கம் – இங்கு ஸ்ரீநிவாஸனின் இடது புறம் அமர்ந்துள்ள பூமா தேவியைக் கூறுகிறார். நமது அறியாமையால் செய்யும் பாவங்கள், ஸ்ரீநிவாஸனின் தயை நம்மிடம் ஓடி வருவதைத் தடுக்கின்றன. இவ்விதம் தடுக்கப்பட்ட அவனது தயைக்கு உண்டான தடையை, தனது க்ஷமை என்ற குணம் மூலமாக நீக்கி, ஸ்ரீநிவாஸன் நமது குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு, தனது கருணையை நம் மீது காண்பிக்கும்படிச் செய்கிறாள்.
படம் – மலையப்பன் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களுடன்

ஸ்ரீ தயா சதகம் – 6 October 17, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஸமஸ்த ஜநநீம் வந்தே சைதந்ய ஸ்தந்ய தாயினீம்
ச்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாம் இவ ரூபிணீம்
பொருள் – இந்த உலகம் முழுமைக்கும் தாயாக உள்ளவளும், ஸ்ரீனிவாஸனின் கருணையே வடிவம் எடுத்தது போன்றவளும் , அவனிடத்தில் நாம் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் உண்டாக ஞானம் என்னும் தாய்ப்பாலை அளிப்பவளும், ஸ்ரீனிவாஸனுக்கே சிறப்பை அளிப்பவளும் ஆகிய அலர்மேல்மங்கையை வணங்குகிறேன்.
விளக்கம் – குருபரம்பரையில், விஷ்வக்சேனருக்கு அடுத்து உள்ள மஹாலக்ஷ்மியைக் கூறுகிறார். தாய்ப் பாலானது மனிதனுடைய உடலைப் பேணி வளர்ப்பது போன்று, ஞானம் எனபது ஜீவனைப் பேணி வளர்ப்பது என்பதால் இதனைக் கூறுகிறார். இந்த ஸ்லோகத்தில் மஹாலக்ஷ்மியையும், அடுத்த ஸ்லோகத்தில் பூமாதேவியையும், அதற்கும் அடுத்த ஸ்லோகத்தில் நப்பின்னை பிராட்டியையும் கூறவுள்ளார்.
நாம் ஸ்ரீனிவாஸன் அருகே செல்லும்போது நம்மிடம் உள்ள குற்றங்களை ஸ்ரீனிவாஸனின் கண்களில் படாமல் நப்பின்னை மறைத்து விடுகிறாள். இதனையும் மீறி ஸ்ரீனிவாஸனின் கண்களில் நமது குற்றம் தென்பட்டு விட்டால், பூமாதேவி அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு செய்து விடுகிறாள். நமது குற்றங்களை ஸ்ரீனிவாஸன் ஏற்றுக் கொண்டாலும் நமக்கு உதவ வேண்டும் என்ற குணத்தை மஹாலக்ஷ்மியே ஏற்படுத்துகிறாள்.
இங்கு கவியின் சாமர்த்தியத்தைச் சற்று காண வேண்டும். ச்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய என்றார். ஸ்ரீநிவாஸனின் மேன்மைக்கு இவளே காரணம் என்றார். அனைவரிடமும் கருணையாக இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு மேன்மை உண்டாகும். அந்தக் கருணை ஸ்ரீநிவாஸனுக்கு உண்டாக இவளே காரணம், ஆகவே அவன் மேன்மைக்கு இவளே காரணம் என்றார்.

ஸ்ரீ தயா ஸதகம்-5 October 16, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அசேஷ விக்க்ந சமநம் அநீக ஈச்வரம் ஆச்ரயே
ஸ்ரீமத: கருணா அம்போதௌ சிக்ஷா ஸ்ரோத இவ உத்திதம்
பொருள் – ஸ்ரீநிவாஸனை நாம் அடைவதற்குத் தடையாகவுள்ள அனைத்து இடையூறுகளையும் நீக்குபவர்; ஸ்ரீநிவாஸனின் கருணை என்ற ஏரியில் இருந்து “தவறு செய்பவர்களைத் திருத்துவது” என்ற வாய்க்கால் போன்று வெளிவந்தவர்; ஸ்ரீநிவாஸனின் சேனைக்குத் தலைவராகவுள்ளவர் – இப்படிப்பட்ட விஷ்வக்சேனரை வணங்குகிறேன்.
விளக்கம் – ஒரு ஏரியானது தன்னுள் அடங்காமல் மென்மேலும் பொங்கி வழிவது போன்று ஸ்ரீநிவாஸனின் தயை என்பது பொங்கிப் பெருகுகிறது. இந்தத் தயை என்பது, தன்னை அண்டியவர்களின் துன்பத்தை நீக்குவது என்ற போதிலும், தவறுக்கு ஏற்ற தண்டனை விதிப்பதும் அதன் கடமையாகும். இல்லை என்றால் வழி தவறி நடப்பதே வழக்கமாகிவிடும். இப்படி தண்டனை கொடுக்கும் வடிவாக தயையானது விஷ்வக்சேனர் உருவம் எடுத்தது.
சிக்ஷை என்றால் கல்வி, தண்டனை என்று இரு பொருள் உண்டு. தவறு செய்பவர்களுக்கு ஏற்ற தண்டனையை அளித்து, பின்னர் அவர்கள் மேலும் அதே போன்ற தவறுகளைச் செய்யாமல் அவர்களுக்கு உபதேசம் செய்தல் என்னும் பொருள்பட இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார்.
படம் – விஷ்வக்சேனர், திருப்பெரும்புலியூர் என்னும் க்ஷேத்ரத்தில் ஸேவை சாதிக்கிறபடி. (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ தயா ஸதகம்-4 October 15, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
பராசர முகாந் வந்தே பகீரத நயே ஸ்த்திதாந்
கமலா காந்த காருண்ய கங்கா ப்லாவித மத்விதாந்
பொருள் – பகீரதன் பெரும் தவம் செய்து கங்கையை உலகிற்குக் கொண்டு வந்தான். இது போன்று பராசரர் முதலான முனிவர்கள், ஸ்ரீநிவாஸனின் தயை என்னும் கங்கையைக் கொண்டு வந்தனர். அந்த நதியில் நம்மை மூழ்கச் செய்த அவர்களை நான் வந்தனம் செய்கிறேன்.
விளக்கம் – பராசரர் போன்ற மஹரிஷிகள் அருளிச் செய்த புராணங்கள் மூலமாகவே, அந்தப் புராணங்களைக் கற்பதன் மூலமே ஸ்ரீநிவாஸனின் தயை எப்படிப்பட்டது என்று நம்மால் உணர இயலும். அவற்றைப் பாராயணம் செய்வதன் மூலமும், கேட்பதன் மூலமும், நாம் ஸ்ரீநிவாஸனின் தயை என்ற கங்கையில் நீராடி, நமது பாவங்களை நீக்கிக் கொள்கிறோம்.
முதலில் மஹரிஷிகளைக் கூறாமல் ஆழ்வார்களைக் கூறியது ஏன்? பராசரர் போன்றவர்கள் பக்தியை மட்டுமே பெரிதாகக் காட்டி, ஸ்ரீநிவாஸனின் தயை குணத்தை விட பலம், தேஜஸ் போன்றவற்றை அதிகமாகக் காட்டுபவர்கள் ஆவர். ஆகவே, அவர்கள் மூலமாக ஸ்ரீநிவாஸனின் தயை பற்றி அதிகம் அறிய இயலாது. ஆனால் ஆழ்வார்கள் சரணாகதி என்பதையே பெரிதாகக் காட்டியவர்கள் ஆவார்கள். பக்தியைவிட இந்தச் சரணாகதி நெறி பன்மடங்கு உயர்ந்தது. திருவாய்மொழி போன்றவற்றில் ஸ்ரீநிவாஸனின் தயை என்பதை மட்டுமே உயர்வாகக் கூறப்பட்டது.
மஹரிஷிகள் தங்கள் தவத்தால் புராணங்களையும், பகீரதன் போன்றவர்கள் தங்கள் தபோ பலத்தால் கங்கை போன்றவற்றையும் ஏற்படுத்தினார்கள். ஆக இவை மனிதர்களால் வெளிப்பட்டது. ஆனால், ஆழ்வார்களைக் கொண்டு ஸ்ரீநிவாஸன் தனது தயை குணத்தை தானாகவே வெளிப்படுத்தினான். ஆக, இது இறைவனால் வெளிப்பட்டது.
எனவே மஹரிஷிகளுக்கு முன்பாக ஆழ்வார்களைக் கூறியது பொருத்தமே ஆகும்.

ஸ்ரீ தயா சதகம் – 3 October 14, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
க்ருதிந: கமலா வாஸ காருண்ய ஏகாந்திந: பஜே
தத் தே யத் ஸூக்தி ரூபேண த்ரிவேதீ ஸர்வ யோக்யதாம்
பொருள் – மூன்று வேதங்களும் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் மூலமே அனைவரும் கற்கும் விதமாக அமைந்தன. ஸ்ரீநிவாஸனின் தயை என்பதை மட்டுமே தங்கள் புகலிடம் என்று புகுந்த ஆழ்வார்களின் பிரபந்தங்களையே, அந்தப் பிரபந்தங்களை அருளிச் செய்த ஆழ்வார்களையே நான் விடாமல் தொழுகிறேன்.
விளக்கம் – வேதங்கள் சாதாரண மனிதர்களால் கற்க இயலாமல் உள்ளதையும், ஒரு சில பிரிவினர் மட்டுமே கற்பதற்கு ஏற்றதாக உள்ளதையும் ஸ்ரீநிவாஸனின் தயாதேவி பார்த்தாள். அவள் செய்தது என்னவெனில் – நித்யஸூரிகளின் அவதாரமாகவே ஆழ்வார்களை அவதரிக்கச் செய்து, அவர்கள் மூலமாகவே வேதங்களைத் தமிழ்ப்படுத்தினாள். ஆழ்வார்கள் ஸ்ரீநிவாஸனின் தயை என்பதே வடிவெடுத்தது போன்றவர்கள் ஆவர்.

ஸ்ரீ தயா சதகம்-2 October 13, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
விகாஹே தீர்த்த பஹுளாம் சீதளாம் குரு ஸந்ததிம்
ஸ்ரீநிவாஸ தயா அம்போதி பரிவாஹ பரம்பராம்
பொருள் – ஸ்ரீநிவாஸனின் தயை என்பது பெரிய ஏரி போன்று உள்ளது. அதிலிருந்து ஓடிவரும் குளிர்ந்த நதியில் ஆங்காங்கே உள்ள படித்துறைகளாக ஆசார்ய பரம்பரை உள்ளது. அவற்றில் இறங்கி நான் நீராடுகிறேன்.
விளக்கம் – இங்கு ஸ்ரீநிவாஸனின் தயை என்பது ப்ரவாகங்களாக, கருணையே உருவான நம்முடைய ஆசார்ய பரம்பரையாக வந்தது என்றார். இந்த ஆசார்யர்களின் நூல்கள் என்ற குளிர்ந்த நீரில் நீராடுவதால், அனைத்துத் தாபங்களும் நீங்கும். இங்கு ஒவ்வொரு ஆசார்யனையும் ஒவ்வொரு படித்துறையாகக் கூறினார். ஏரியில் இறங்கி நீராடுவதை விட, படித்துறைகளில் நின்று நீராடுவது பாதுகாப்பானது என்று கருத்து. அதிக வேகத்துடன் ஓடி வரும் ஸ்ரீநிவாஸனின் தயை என்ற வெள்ளத்தில் நாம் நேரடியாக இறங்கி நீராட இயலாது என்பதால், நமக்கு வழிகாட்டும் படித்துறைகளாக ஆசார்யர்கள் உள்ளனர் என்று கருத்து.
படம் – திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரிணி.

ஸ்ரீ தயா சதகம் – 1 October 12, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
2 comments

ஸ்ரீ:


ஸ்ரீமதே ராமானுஜாய நம:


ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரஹ்மணே நம:


ஸ்ரீ பத்மாவதி ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பரப்ரஹ்மணே நம:

ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருவடிகளே சரணம்

தனியன்
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
(ஸ்வாமி தேசிகன் – திருவரங்கம் பெரியகோயில்)

ஸ்லோகம் – 1

ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸ அனுகம்பயா
இக்ஷுஸார ஸ்ரவந்த்யா இவ யந்மூர்த்யா சர்க்கராயிதம்.
பொருள் – ஸ்ரீநிவாஸனுடைய தயை என்பது கருப்பஞ்சாறாகப் பெருகி உள்ளது. இது ஆறு போன்று ஓடிச்சென்று, சர்க்கரைக் கட்டி போன்று உறைந்து நின்றது. இப்படிப்பட்ட சர்க்கரை மலையாகிய திருவேங்கடமலையை நான் சரணம் அடைகிறேன்.
விளக்கம் – வேம் என்றால் பாவம் என்று பொருள். கடம் என்றால் கொளுத்துவது எனறு பொருள். ஆக வேங்கடம் என்றால் பாவங்களைக் கொளுத்துவது என்றாகிறது. ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம், பாவத்தை மட்டுமே விரும்பிச் செய்யும் நமது பிழைகளைப் பொறுத்துக் கொள்வதையே தனது இயல்பாக உடையது. ஆக வேங்கடமலையும் இதனையே செய்கிறது. எனவே ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம் செய்கின்ற செயலையே வேங்கடமலையும் செய்வதால், அந்தத் தயை குணமே திருவேங்கட மலையாக நின்றதோ என்று தோன்றுகிறது.
ஸ்ரீநிவாஸன் ஒரு பெரிய கரும்பு என்று வைத்துக் கொண்டால், அந்தக் கரும்பிலிருந்து வரும் சாறானது, ஆறு போன்று பெருகி, மலையாக உறைந்தது. கரும்பின் சக்கைகளை நீக்கி விட்டுச் சாறை மட்டும் எடுத்துக் கொள்வது போல் – ஸ்ரீநிவாஸனிடம் உள்ள “பாவங்களுக்குத் தண்டனை விதிப்பது” போன்ற செயல்களைத் தள்ளி விட்டு, சாறு போன்ற தயை குணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்
தயை குணம் இல்லாதவனை கல் போன்றவன் என்பார்கள் . இங்கு தயை குணத்தை, கல் போன்ற ஒரு மலையுடன் ஒப்பிட்டுக் கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி எழலாம். இதற்குச் சமாதானம் – மலை எவ்விதம் அசையாமல் உள்ளதோ, அது போன்று நம்மிடம் ஸ்ரீநிவாஸனின் தயை என்பது அசையாமல் உள்ளது என்று கருத்து. இங்கு உள்ள ஆறு என்பது ஸ்ரீநிவாஸனின் தயையானது, ஆகாச கங்கை போன்ற திருமலையில் உள்ள நதிகளைப் போன்று உள்ளதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
சரணாகதி செய்வதற்கு நமது பாவங்கள் நீங்க வேண்டும். ஆகவே, நமது பாவங்களை நீக்குதல் என்னும் செயலைச் செய்யும் திருவேங்கடமலையை முதலில் சரணம் அடைந்தார்.
அநுகம்பை என்ற பதம் ஒரு ஜீவன் துன்பம் எற்பட்டு நடுங்கும்போது, அவன் மீது கொண்ட இரக்கம் காரணமாகத் தானும் (ஸ்ரீநிவாஸனும்) நடுங்குவதாகப் பொருள். வேதங்களில் சூரியன் முதலானோர் ஸ்ரீநிவாஸனுக்குப் பயந்து நடுங்கியபடி, தங்களது செயல்களைச் செய்கின்றனர் என்று கூறும்போது இங்கு ஸ்ரீநிவாஸன், ஜீவன் ஒருவன் துன்பத்தினால் நடுங்கும்போது தானும் நடுங்குவதாக வியப்பாகக் கூறினார்.
ஸ்ரீமத் பாகவதத்தில் ஆறாவது ஸ்கந்தம், 18ஆவது அத்யாயம், 65 ஆவது ச்லோகத்தில் இந்திரன் “ஸ்ரீநிவாஸா அநுகம்பயா” என்று கூறியதை, இங்கு இவரும் கூறுகிறார்.

ஸ்ரீ தயா சதகம் – 18 October 29, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அநுகுண தசா அர்ப்பிதேந ஸ்ரீதர கருணே ஸமாஹித ஸ்நேஹா
சமயஸி தம: ப்ரஜாநாம் சாஸ்த்ர மயேந ஸ்த்திர ப்ரதீபேந
பொருள் – மஹாலக்ஷ்மியைத் தரித்தவனின் கருணை தேவியே! சாஸ்திரம் என்னும் நிலையாக எரியும் தீபத்தில், ஸத்வ குணம் என்னும் திரி கொண்டு, அன்பு என்னும் எண்ணெய் ஊற்றி நீ ஏற்றுகிறாய். இதன் மூலம் மக்களின் அறியாமை என்ற இருள் நீக்கப்படுகிறது.
விளக்கம் – பதினோராவது ச்லோகத்தில் ப்ரளயத்தைப் பற்றிக் கூறினார். இதனை ஏற்படுத்துவதும் தயாதேவியே என்றார். 17-ஆவது ச்லோகத்தில் தயை மூலமாகவே ஸ்ருஷ்டி ஏற்படுவதாகக் கூறினார். அதன் அடுத்த நிலையான சாஸ்திரங்கள் உண்டாவதை இங்கு கூறினார்.
முதலில் ப்ரளயம் உண்டாகிறது. அடுத்து ஸ்ருஷ்டி ஏற்படுகிறது. இவை இரண்டும் உடல் தொடர்பு கொண்டவையாகும். ஒன்றில் உடல் அழிக்கப்படுகிறது, மற்றொன்றில் உடல் உருவாகிறது. அடுத்த நிலையாக நான்முகன் படைக்கப்பட்டு, அவனுக்கு வேதங்கள் அளிக்கப்படுகின்றன. இது ஆத்மா தொடர்புடையது. இந்த நிலையை இங்கு கூறுகிறார்.
படம் – நமது அறியாமை என்னும் இருளை நீக்கும் திருவேங்கடவனுக்கு தீபாராதனை.

ஸ்ரீ தயா சதகம்-17 October 28, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அசித் அவிசிஷ்டாந் ப்ரளயே ஜந்தூந் அவலோக்ய ஜாத நிர்வேதா
கரண களேபர யோகம் விதரஸி வ்ருஷசைலநாத கருணே த்வம்
பொருள் – ஸ்ரீநிவாஸனின் தயாதேவியே! ப்ரளயத்தின்போது அனைத்து உயிரினங்களும் அசேதனப் பொருள்கள் போன்று, அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு நீ மனம் வருந்துகிறாய். உடனே, ப்ரளயத்தில் உனக்கு ஏற்பட்ட விருப்பத்தை நீக்கி, அவர்களுக்குப் புலன்களுடன் கூடிய உடலை அளிக்கிறாய்.
விளக்கம் – கடந்த ச்லோகத்தில் தயாதேவியே ப்ரளயத்தின் காரணம் என்று கூறி, இங்கு அவளே ஸ்ருஷ்டிக்கும் காரணம் என்று கூறுவதைக் காண்க. இதன் கருத்து, தயாதேவியால் தூண்டப்பட்ட ஸ்ரீநிவாஸன் இவற்றைச் செய்கிறான் என்பதாகும்.
இங்கு கூறப்பட்ட யோகம் என்பது ப்ரளயத்தின் பின் ஒவ்வொரு ஜீவனுக்கும் உடல் மற்றும் புலன்கள் அளிக்கும் செயலாகும். கரணம் என்றால் ஞானேந்திரியங்கள் ஆகும். ஜீவன் கரணம் மற்றும் களேபரத்தோடு இணையும்போது, அவனுக்குச் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்யத் தேவையான திறன் ஏற்படுகிறது.
படம் – ப்ரளயம் முடிந்து ஸ்ருஷ்டிக்கு முன்பாகத் தனியாக உள்ள ஸ்ரீமந் நாராயணன். மஹாநாராயண உபனிஷத் – ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் – அவன் தனியாகவே இருந்தான் – என்றல்லவோ முழங்கியது?

ஸ்ரீ தயா சதகம்-16 October 27, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment

ஆஸ்ருஷ்டி ஸந்ததாநாம் அபராதாநாம் நிரோதிநீம் ஜகத:
பத்மா ஸஹாய கருணே ப்ரதி ஸஞ்சர கேளிம் ஆசரஸி
பொருள் – பத்மாவதியுடன் கூடிய ஸ்ரீநிவாஸனின் தயாதேவியே! இந்த உலகம் ஸ்ருஷ்டி செய்யப்பட்டது முதலாக, இந்த உலகில் உள்ளவர்கள் தொடர்ந்து பாவங்கள் செய்தபடியே உள்ளனர். இதனைத் தடுக்க நீ ப்ரளயம் என்னும் விளையாட்டைச் செய்கின்றாய் போலும்.
விளக்கம் – ப்ரதி ஸஞ்சரம் என்ற பதம் ப்ரளயத்தைக் குறிக்கும். ஸஞ்சரம் என்றால் பரத நாட்டிய சாஸ்திரத்தில் “பின்னோக்கிச் செல்லுதல்” என்று பொருள். ப்ரளயத்தின்போது அனைத்தும் பகவானிடம் மீண்டும் சென்று ஒன்றி விடுவதால் (லயித்து விடுவதால்), இந்தப் பதம் ப்ரளயத்தைக் குறிக்கும்.
தயாதேவி ஸ்ரீநிவாஸனிடம் உள்ளபோது மிகவும் கொடூரமான செயலாகிய ப்ரளயம் எவ்விதம் உலகை அழிக்கிறது? இதற்கான விடையைக் காண்போம். குழந்தைகள் மிகவும் பொல்லாத செயல்களையே செய்து வருவதாக வைத்துக்கொள்வோம். இதனைக் கண்ட அவற்றின் தாயானவள், அந்தக் குழந்தைகளின் பொல்லாத்தனத்தை மறக்கச் செய்ய முயற்சிப்பாள். பல முயற்சிகளும் தோல்வி அடைந்த பின்னர், இறுதி முயற்சியாக, அக்குழந்தைகளை உறங்க வைப்பதை நாம் காணலாம். அது போன்று நமது பாவச் செயல்களைப் போக்க தயாதேவி எத்தனையோ முயற்சி செய்கிறாள். இறுதியில், நமது பாவங்களை மறக்கடிப்பதற்காக, ஸ்ரீநிவாஸன் மூலம் ப்ரளயத்தை ஏற்படுத்தி, அனைத்தையும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறாள்.
மீண்டும் ஸ்ருஷ்டியின்போது ஜீவங்களுக்கு உடல் என்பது தயாதேவியின் மூலமே கிட்டுகிறது. ஒரு மனிதனிடம் ஒரு படகைக் கொடுத்து, நதியில் செல்லும்படிக் கூறியதாக வைப்போம். அவன் படகில் செல்லாமல் தன் விருப்பப்படி நதியில் மூழ்கிச் சென்றான் என்றால், படகு கொடுத்தவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா? இதே போன்று, உடல் கொடுத்த தயாதேவிக்கு, மனிதர்கள் தவறான பாதையில் செல்வதைக் கண்டு வருத்தம் ஏற்படுகிறது. ஒரு நாட்டிய மேடையில் நடைபெரும் நிகழ்வுகள் அபஸ்வரமாக ஒலிக்கும்போது, நாட்டியமாடுபவர்கள் பின் நோக்கி நகர்வது வழக்கம். இந்த உலகையே நாட்டிய மேடையாகக் கொண்டால், அங்கு அபஸ்வரம் உண்டானால், தயாதேவியானவள் ப்ரளயம் ஏற்படுத்தி விடுகிறாள்.
படம் – ப்ரளயம் உண்டாகிய நிலையில், மிகவும் பெரியதான ஆலமரத்தின், மிகவும் சிறியதான இலையில், காண்பவர்கள் – இந்தக் குழந்தை உருண்டு விழுந்து விடப் போகிறது – என்று அச்சம் கொள்ளும் வகையில் உள்ள ஸ்ரீநிவாஸன்.

ஸ்ரீ தயா சதகம்-15 October 26, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வ்ருஷகிரி க்ருஹமேதி குணா: போத பல ஐச்வர்ய வீர்ய சக்தி முகா:
தோஷா பவேயு: ஏதே யதி நாம தயே த்வயா விநாபூதா:
பொருள் – தயாதேவியே! திருமலையில் இல்லறத்தில் உள்ள ஸ்ரீநிவாஸனுடைய ஞானம், பலம் , வீர்யம், ஐச்வர்யம், சக்தி போன்றவை உன்னுடன் சேர்ந்து இல்லாமல் பிரிந்தால் என்னவாகும் என்றால் – அவை குணங்களாக இருப்பதை விடுத்து, மக்களுக்குத் தீமை ஏற்படுத்தும் குற்றங்களாகவே மாறி விடும்.
விளக்கம் – பகவானின் உயர்ந்த குணங்கள் அவனுக்கு எவ்விதம் குற்றம் ஏற்படுத்தும்? தயை இல்லாமல் ஞானம் மட்டும் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்த ஞானம் என்பது நாம் செய்யும் தவறுகளை ஸ்ரீநிவாஸனுக்கு உணர்த்தி, அதற்கான தண்டனையையும் அவன் அளிக்கும்படிச் செய்து விடும். ஆக தயை இல்லாமல் அனைத்து குணங்களும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கருத்து.
இங்கு ஸ்ரீநிவாஸனை ஸ்வாமி தேசிகன், க்ருஹஸ்தன் என்று கூறுவதைக் காண்க. யதிராஜ சப்ததியில் ஸ்ரீநிவாஸனை – கமலா க்ருஹமேதி – என்றார். இது போன்று ரகுவீர கத்யத்தில் இராமனை க்ருஹஸ்தன் என்று வர்ணித்தார்.
க்ருஹஸ்தன் என்று ஸ்வாமி கூறுவதில் வேறு காரணம் உள்ளது – ப்ரம்மச்சாரி, ஸந்ந்யாஸி முதலானவர்கள் க்ரஹஸ்தனையே தங்களுக்கு உதவியாக கொள்கின்றனர். ஆக க்ருஹஸ்தனுக்கு பல உயர்ந்த குணங்கள் இருப்பது அவசியம் ஆகிறது. ஆகவே ஸ்ரீநிவாஸனுக்கு இந்தப் பெயர் பொருத்தமே என்று ஸ்வாமியின் கருத்து.
படம் – தயாதேவியுடன் எப்போதும் இணைந்து உள்ள ஸ்ரீநிவாஸன்.

ஸ்ரீ தயா சதகம் – 14 October 25, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
க்ருபண ஜந கல்பலதிகாம்
க்ருத அபராதஸ்ய நிஷ்க்ரியாம் ஆத்யாம்
வ்ருஷகிரி நா தயே த்வாம்
விதந்தி ஸம்ஸார தாரிணீம் விபுதா:
பொருள் – ஸ்ரீநிவாஸனின் தயை தேவியே! வேறு கதியில்லாதவர்களுக்கு அனைத்தையும் வழங்கும் கற்பகக் கொடி நீயே! பாவம் செய்தவர்களுக்கு அபயம் அளிக்கும் முதல் பிராயத்சித்தம் நீயே! ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிப்பவர்கள் கரையேறுவதற்கு உதவுபவள் நீயே – இப்படி அல்லவோ அறிஞர்கள் உன்னைக் கூறுகின்றனர்?
விளக்கம் – கற்பகக் கொடி என்பது கேட்டதை மட்டுமே அளிக்குமே தவிர பாவங்களை நீக்கவோ, ஸம்ஸாரத்தைக் கடக்கவோ உதவாது. பாவங்களை நீக்க தானம் செய்தல் போன்ற சிரமமான பரிகாரங்கள் பல செய்ய வேண்டும். ஸம்ஸாரத்தைக் கடக்க ஞானயோகம், கர்ம யோகம், பக்தியோகம் ஆகியவற்றில் ஈடுபடவேண்டும் . இது போன்ற எந்தச் சிரமமும் இன்றி தயாதேவி நமக்கு உதவுகிறாள்.
படம் – கற்பக மரம் ஒன்று கற்பக மரம் மீதே அமர்ந்து வரும் விசித்திரமான காட்சி (திருமலை ப்ரஹ்மோத்ஸவம்)

ஸ்ரீ தயா சதகம் – 13 October 24, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
பகவதி தயே பவத்யா வ்ருஷகிரிநாதே ஸமாப்லுதே துங்கே
அப்ரதிக மஜ்ஜநாநாம் ஹஸ்த ஆலம்ப: மத் ஆகஸாம் ம்ருக்ய:
பொருள் – பெருமை மிகுந்த தயாதேவியே! உனது தயை என்ற வெள்ளமானது கரை புரண்டு ஓடுகிறது. என்னுடைய பாவங்கள் அதில் மூழ்கி விடுகின்றன. இந்த வெள்ளத்தில் ஸ்ரீநிவாஸனும் மூழ்கியபடி இருப்பதால், அவனது கைகளில் எனது பாவங்கள் தேடும்படி ஆகின்றன.
விளக்கம் – ஸ்ரீநிவாஸன் மிகவும் உயர்ந்த மலை மீது உள்ளான். தயையின் வெள்ளமானது அந்த மலையையும் மூழ்கடித்து, அவனையும் மூழ்கச் செய்கிறது. இவ்விதம் ஸ்ரீநிவாஸனே மூழ்கிவிடும் போது, தனது பாவங்கள் மூழ்காமல் இருக்குமா என்று வியக்கிறார்.
பொதுவாக ப்ரளயத்தின்போது இந்த உலகை பகவானே மூழ்கடிப்பது வழக்கமாகும். ஆனால் இங்கு தயையின் வெள்ளத்தில் அவனே மூழ்கி நிற்கிறான். இவ்வாறு செய்யும்போது எனது பாவங்களுக்குக் கை கொடுத்து மீண்டும் காப்பாற்றுபவர்கள் யார் உள்ளனர்?
கிருஷ்ணன் கீதையில் – ஞானம் என்பது அனைத்தையும் எரித்து விடும் – என்றான். ஆனால் கருணையே வடிவான தயாதேவியால் நம் பாவங்களை எரிப்பது என்ற கொடுமையான செயல்களை கூடச் செய்ய இயல்வதில்லை. மாறாக, நமது பாவங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஸ்ரீநிவாஸனை மூழ்க வைத்து, அவனுடைய அந்த நினைவுகளைக் கழுவி விடுகிறாள்.
திருவேங்கடம் என்ற பதத்தில் உள்ள வேம் என்பது எரித்தல், பொசுக்குதல் என்பதாகும். நமது பாவங்களை எரிப்பது திருவேங்கட மலை என்பது இருக்க, இங்கு இவர் உண்மையில் அவ்வாறு நிகழ்வதில்லை, அவை மூழ்கடிக்கப்படுகின்றன என்றார்.
படம் – திருமலையில் தயை வெள்ளமாக ஓடி வரும் காட்சி.

ஸ்ரீ தயா சதகம் – 12 October 23, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அபி நிகில லோக ஸுசரித முஷ்டிந்தய துரித மூர்ச்சநா ஜுஷ்டம்
ஸஞ்ஜீவயது தயே மாம் அஞ்ஜந கிரிநாத ரஞ்ஜநீ பவதீ
பொருள் – தயை தாயே! இந்த உலகில் நாம் செய்யும் புண்ணியங்கள் அனைத்தையும் ஒரே பிடியில் விழுங்கவல்ல பல பாவங்களை நான் செய்தபடி உள்ளேன். அந்தப் பாவங்களின் விஷம் காரணமாக மயங்கிக் கிடக்கின்றேன். ஸ்ரீநிவாஸனை நீ எவ்விதம் மகிழ்விக்கிறாயோ அதே போன்று என்னையும் உயிர்ப்பிக்க வேண்டும்.
விளக்கம் – ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தின் முதல் இரண்டு ச்லோகங்களை இங்கு கையாளுகிறார். முதல் ச்லோகத்தில், எம்பெருமானார் – அகில புவன – என்று கூறியதை இவர் – நிகில லோக – என்று மாற்றியும்; இரண்டாவது ச்லோகத்தில் – ஸஞ்ஜீவிநீம் – என்று வ்யாசரின் ப்ரஹ்ம சூத்திரத்தை அமிர்தம் என்று கூறியது போல் இவரும் ஸஞ்ஜீவயம் என்றும் கூறினார்.
இங்கு மயக்கம் என்பது தான் செய்த பாவம் என்ற விஷத்தால் ஏற்பட்டது என்றும்; அவை தனது ஆத்மாவை அறியாமை என்ற மயக்கத்தில் ழூழ்க வைத்தன என்றும் கூறினார். தாய் ஒருவள் தனது குழந்தை மயக்கம் வந்து விழும்போது மூலிகைகளை எடுத்து வந்து வைத்தியம் செய்வாள். தான் மயக்கத்தில் உள்ளபோது திருமலையில் கிடைக்கும் அபூர்வமான மூலிகையான ஸ்ரீநிவாஸனின் தயை என்பதன் மூலம் தனது மயக்கம் தெளிய வாய்ப்புண்டு என்றார்.
மேலும் இங்கு அஞ்ஜனகிரிநாதன் என்று கூறியது காண்க. இதிலும் ஸ்வாமி தேசிகனின் சாமர்த்தியம் புலப்படுகிறது. எப்படி? இலட்சுமணன் மூர்ச்சை அடைந்து விழுந்தபோது ஸஞ்ஜீவினி பர்வதத்தை அனுமன் (அஞ்ஜனா தேவி அனுமனைப் பெற தவம் இடந்த இடம் என்ற பொருத்தம் காண்க) தூக்கி வந்து உயிர் பிழைக்க வைத்தான் அல்லவா? அது போன்று நீயும் (தயாதேவி) என்னை உயிர்ப்பிக்க வேண்டும் – என்றார்.
படம் – அஞ்ஜனகிரிநாதனை அஞ்ஜனையின் புத்திரன் அனுமன் தன் மீது எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரும் காட்சி.

ஸ்ரீ தயா சதகம் – 11 October 22, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
இரண்டாம் பத்து
இந்தப் பத்து ச்லோகங்களில் (11-21) ஸ்ரீநிவாஸனின் அதிபோக்யத்வம் என்பதை விளக்குகிறார். இது ஸ்ரீநிவாஸனின் அனுபவிக்கத்தக்க தன்மைகளாகும். இவை மூலம் ஸ்ரீநிவாஸன் தனது தயை குணம் காரணமாக எவ்வாறு அனைவருக்கும் இனிமையானவனாகவும், அனுபவிக்கும்படியாகவும் உள்ளான் என்று கூற உள்ளார்.
11. அநுசர சக்த்யாதி குணாம்
அக்ரேஸர போத விரசித ஆலோகாம்
ஸ்வாதீன வ்ருஷகிரீசாம்
ஸ்வயம் ப்ரபூதாம் ப்ரமாணயாமி தயாம்.
பொருள் – தயாதேவியின் பின்னே சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம் மற்றும் தேஜஸ் என்ற ஐந்து குணங்களும் வேலைக்காரர்கள் போன்று செல்கின்றன. அவளுக்கு முன்னே வழிக்காட்டியபடி ஞானம் என்ற குணம் செல்கிறது. இப்படிப்பட்ட தயாதேவி, தன்னிடம் வசப்பட்ட ஸ்ரீநிவாஸனை தன்னிடமே கொண்டவளாய் , அதனால் தானே மேன்மையுடையவளாய் உள்ளாள். இப்படிப்பட்ட தயாதேவியை நான் சரணமடைகிறேன்.
விளக்கம் – இங்கு தயாதேவியப் பற்றித் துதிக்கத் தொடங்கிய உடனேயே, தான் (தயாதேவி) எப்படிப்பட்டவள் என்று அவளே வெளிப்படுத்தியதைக் காண்க . ஒரு ச்லோகம் அவனைப் பற்றி முழுமை அடையும் முன்பே இவள் ஓடி வந்து தன்னை உணர்த்திக் கொண்டதற்கு இதுவே சான்றாகும்.
இங்கு இரண்டு கேள்விகள் எழலாம் – எல்லையற்ற குணங்கள் கொண்ட ஸ்ரீநிவாஸனை துதிக்காமல் அவனுடைய தயை என்ற குணத்தை மட்டும் துதித்தது சரியா? பகவான் என்ற சொல்லுக்கு ஏற்றம் தரும் ஆறு குணங்களும், தயை என்ற ஒரு குணத்திற்கே அடங்கின என்பது சரியா? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்து வரும் ஒன்பது ச்லோகங்கள் மூலம் நிரூபிக்கிறார்.
ஸ்ரீநிவாஸனின் அடியார்கள் யாரேனும் துயரம் கொண்டால் அவர்கள் எழுப்பும் துயர ஒலி தயாதேவிக்குக் கேட்கிறது. இவள் பரபரப்பு அடைந்து , தனது அந்தக் குழந்தையை காக்க வேண்டும் என்று ஓடுகிறாள். இவள் ஸ்ரீநிவாஸனின் பட்டமஹிஷியாக உள்ள போதிலும், குழந்தைக்காக ஓடும் அவசரத்தில் பல்லக்கைத் தேடி அதில் செல்வதில்லை. ஆக இவள் ஓடும் போது, சக்தி போன்ற குணங்கள் இவளுக்கு பின்னேயே ஓடி வருகின்றன.
அந்தக் குழந்தை (துன்பத்தில் உள்ள அடியார்) எங்கு, எதற்காகக் குரல் கொடுத்தது என்று வெளிச்சம் இட்டு காண்பிப்பதற்காக, ஞானம் என்ற குணம் தயாதேவிக்கு வழிகாட்டியபடி முன்னே ஓடுகிறது.
அந்தக் குழந்தையை சென்று அடைந்த பின்னர் அவள் பின்னே ஓடி வந்த சக்தி முதலான குணங்கள், தயாதேவியின் விருப்பம் காரணமாக, அந்தக் குழந்தைக்கு உதவத் தொடங்குகின்றன.
ஸ்வாதீன என்ற பதம் காண்க. இதன் மூலம் தயாதேவிக்கு ஸ்ரீநிவாஸன் முழுமையாகக் கட்டுப்பட்டவன் என்று உணர்த்துகிறார். ஸ்ரீநிவாஸனிடம் தயாதேவி இல்லாமல் எதுவும் நிகழாது. ஸ்ரீநிவாஸனே இவளுக்கு வசப்பட்டுள்ளான் என்றால், இவளுக்கு எஜமானன் யார் என்ற கேள்வி ஏற்படும். அதற்கு விடையாக – ஸ்வயம் ப்ரபூதம் – இவளே இவளுக்கு எஜமானி என்றார்.
ப்ரமாணயாமி – என்று ஏன் கூறவேண்டும்? ப்ரமாணம் என்றால் சாட்சி என்று பொருள். தேசிகர் இந்த ச்லோகத்தை இயற்றும் வரையில் தயாதேவியின் பெருமை எத்தகையது என்பதை விளக்க வேறு நூல் ஆதாரங்களே இல்லை எனலாம் . தயாசதகம் என்ற இந்த நூலை மட்டுமே தயாதேவியின் பெருமைகள் விளக்கும்ஆதாரம் எனலாம். அதனால் அந்தப் பதத்தை இட்டார்.

ஸ்ரீ தயா சதகம் – 10 October 21, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
1 comment so far
அகிஞ்சந நிதிம் ஸூதிம் அபவர்க்க த்ரிவர்க்கயோ:
அஞ்சனாத்ரி ஈஸ்வர: தயாம் அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.
பொருள் – எந்த விதமான கதியும், வேறு ஏதும் உபாயம் இல்லாமலும் உள்ளவர்கள் சரணம் அடைவதற்கு ஏற்ற நிதி போன்றதும்; மோக்ஷம் என்பதை வழங்குவதும்; அறம்-பொருள்-இன்பம் என்பவற்றை அளிப்பதும்; எந்த விதமான தோஷங்களும் அற்றதும் ஆகிய ஸ்ரீநிவாஸனுடைய தயை என்னும் தேவியைத் துதிக்கிறேன்.
விளக்கம் – ஹனுமானின் தாயான அஞ்சனா தேவி தனக்கு ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்று தவம் இருந்து மலை ஆதலால், அஞ்சனாத்ரி என்று வழங்கப்படும் திருவேங்கடமலையின் நாயகனாக ஸ்ரீநிவாஸன் உள்ளான். அவனுடைய தயை என்பதைப் பற்றி இந்தச் ச்லோகம் தொடங்கிக் கூற உள்ளார்.
இங்கு நிதி என்ற சொல்லானது வெகு ஆழத்தில் உள்ள புதையலைக் குறிக்கும். அதனை அடைய வேண்டும் என்றால், பல ஆட்கள் கொண்டு முயன்றால் மட்டுமே இயலும். இதனை ஏழைகள் செய்வது இயலாது . ஆனால் இந்தத் தயை என்னும் நிதி, எந்த முயற்சியும் இல்லாதவர்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் வேண்டியவற்றை அளிக்கவல்லதாகும். கிஞ்சித் என்றால் சிறிதளவு என்று பொருள். இந்தச் ச்லோகத்தில் அகிஞ்சன என்ற பதம் மூலம் அவனது தயையைப் பெற “இந்தச் சிறிதளவு” என்பது கூட அவசியமில்லை என்று கூறினார்.
ந்மது வாழ்வில் அடையப்படவேண்டிய குறிக்கோளாக (புருஷார்த்தம்) நான்கு கூறப்படுகின்றன. இவையாவன – தர்ம( அறம்) , அர்த்த(பொருள்) , காம(இன்பம்) மற்றும் மோக்ஷம் என்பதாகும். இங்கு இந்த வரிசை மாறி தேசிகர் முதலில் மோக்ஷத்தைக் கூறியது காண்க. இது ஏன்? தயை தேவிக்கு மிகவும் உயர்ந்த புருஷார்த்தம் என்னும் மோக்ஷத்தை அளிப்பதிலேயே அதிக விருப்பம் உள்ளது. ஆனால் சாதாரண மக்கள் இந்த உயர்ந்த பலனைத் தள்ளி, அழியக்கூடிய மற்ற மூன்று பலன்களையும் எதிர் பார்ப்பதால் அவற்றைப் பின்னே கூறினார். அழியக் கூடிய இந்த மூன்று பலன்களும் தயா தேவியால் நமது பிடிவாதம் காரணமாகவே அளிக்க படுகின்றது; அவளாகவே விரும்பி அல்ல. இதை உணர்த்தவே வரிசை மாற்றிக் கூறினார். இங்கு அஞ்சனம் என்ற பதம் குற்றம் என்பதையும் கூறும் என்றாலும், நிரஞ்சனாம் – குற்றமற்றவள் என்று முன்பின் விரோதமாக கூறுகிறார். இது ஏன்?
ஸ்ரீநிவாஸன் இயல்பாகவே தோஷம் அற்றவன். ஆக தயா தேவியும் குற்றம் அற்றவளாகவே இருத்தல் வேண்டும். ஆனால் நீதியைச் சரிவர நிலை நாட்ட வேண்டிய ஸ்ரீநிவாஸனை, அவனது தயை என்ற குணம், நம் போன்று குற்றம் செய்பவர்களையும் மன்னிக்கும்படி செய்து விடுகிறது. இதனால் நீதி சரிவர அமையவில்லை எனலாம் அல்லவா? ஆக ஸ்ரீநிவாஸனை திசை திருப்பிய குற்றம் தயா தேவிக்கு உள்ளது என்று ரஸோக்த்தியாகக் கூறுகிறார்.
படம் – அனைவருக்கும் தனது தயையைப் பொழிந்தபடி நிற்கும் திருவேங்கடவன் (படம் நன்றி – திருமலை திருப்பதி தேவஸ்தானம்)
ஸ்ரீ தயா சதகம் முதல் பத்து சுபம்

ஸ்ரீ தயா சதகம் – 9 October 20, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
கமபி அநவதிம் வந்தே கருணா வருணாலயம்
வ்ருஷ சைல தடஸ்தாநாம் ஸ்வயம் வ்யக்திம் உபாகதம்.
பொருள் – எல்லை இல்லாததும், திருமலையின் அருகில் உள்ளவர்களுக்கு தானாகவே தோற்றம் அளிப்பதும் ஆகிய கருணை என்ற கடலை வணங்குகிறேன்.
விளக்கம் – இதுவரை ஆசார்ய பரம்பரையில் கீழிருந்து மேலாகக் கூறி வந்து, முதல் குருவான ஸ்ரீநிவாஸனிடம் முடிக்கிறார்.
ஸ்ரீநிவாஸனின் தயை என்பது மிகவும் உயர்ந்ததாகும். அதனைக் கடல் என்று ஒப்பிடுவது சரியல்ல என்று கூறலாம். ஏன்? இலங்கைக்குச் செல்வதற்காகக் கடலிடம் சென்ற ஸ்ரீராமனை, அந்தக் கடலரசன் அவமானம் செய்தான். அப்படி உள்ளபோது அந்தக் கடலை உவமையாகக் கூறுவது எவ்விதம் சரியாகும்? இந்த ஐயத்தை நீக்கவே கருணைக்கடல் என்று கூறினார்.
அவதி என்றால் எல்லையும் கூடியது என்று பொருள். இங்கு அநவதி என்பதன் மூலம் எல்லையற்றது என்பதை உணர்த்தினார். திருமலை அப்பன் தானாகவே தோன்றியவன் என்பதை ஸ்வயம் வ்யக்த என்பதன் மூலம் கூறினார்.
தடஸ்த என்ற பதம் மூலம் உபனிஷத்துகளில் உள்ள ஒரு கருத்தைக் கூறுகிறார். தடஸ்தர் என்றால் குளத்தில் இறங்காமல், கரையிலேயே நின்று கைகளை நீட்டுபவர் என்பதாகும் . இதன் மூலம் உணர்த்தப்படுவது என்ன? யார் ஒருவர் பரப்ரஹமத்தை அறிந்து கொண்டு விட்டோம் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்குப் ப்ரஹ்மம் தெரிவது இல்லை; யார் ஒருவர் பரப்ரஹ்மத்தை அறிய இயலாது என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பரப்ரஹ்மம் புலப்படும்.
ஆக “நாம் அறிவோம்” என்று இறங்கினால் ஸ்ரீநிவாஸன் தூரத்திலேயே நிற்பான். இறங்குவதற்கு அஞ்சி, கரையிலேயே நின்றால் தானாகவே அவன் வருவான்.
மேலும் இதன் மூலம் உணர்த்தப்படுவது – நாம் நமது முயற்சியால் அவனை அடைந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு அவன் தென்படுவதில்லை. யார் ஒருவனைத் தனக்குப் ப்ரியமானவன் என்று ஸ்ரீநிவாஸன் நினைக்கிறானோ அவனுக்குத் தன்னையும், தனது கருணையையும் வழங்கி, தன்னையும் வெளிப்படுத்துவான். இதனையே தேசிகர் ஸ்வயம் என்ற பதம் மூலம் கூறுகிறார்.
படம் – ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யவேண்டும் என்று நம்மாழ்வார் துதித்த திருமலை திருவேங்கடவன் (நன்றி – இஸ்கான், பெங்களூரு)


ஸ்ரீ தயா சதகம்-28 November 8, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
கருணே துரிதேஷு மாமகேஷு
ப்ரதிகாராந்தர துர்ஜயேஷு கிந்ந:
கவசாயிதயா த்வயைவ சார்ங்கீ
விஜய ஸ்த்தாநம் உபாச்ரித: வ்ருஷாத்ரீம்.
பொருள் – கருணாதேவியே! எனது பாவங்கள் எந்தவிதமான ப்ராயச்சித்தம் மூலமும் வெல்ல இயலாததாக உள்ளன. இதனைக் கண்டு வருத்தம் கொண்டவனும், சாரங்கம் என்னும் வில்லை உடையவனும் ஆகிய ஸ்ரீநிவாஸன், உன்னைத் தனது கவசமாகப் பூண்டான். இவ்விதம் நமது பாவங்களை எதிர்த்து வெற்றி பெறும் இடமாகத் திருமலையை ஏற்றான்.
விளக்கம் – நாம் பாவங்கள் என்னும் எண்ணற்ற அம்புகளை ஸ்ரீநிவாஸன் மீது தொடுத்தபடி நின்று, அவன் மனதைப் புண்படுத்திகிறோம். இவை நீங்கும்படி பலவிதமான ப்ராயச்சித்தங்கள் என்னும் சேனைகளை அவன் ஏற்படுத்தினால் கூட, அவற்றால் நமது பாவங்களை வெல்ல இயலவில்லை. இதனால் அவன் தயாதேவியைத் தனது கவசமாகப் பூண்டு நமது பாவங்களை எதிர் கொள்கிறான். இந்தப் போரில் அவன் வெற்றி பெறும் இடமாகத் திருமலை உள்ளது.
இங்கு சார்ங்கம் என்னும் வில் உடையவன் என்று ஸ்வாமி தேசிகன் கூறுவதில் ஒரு காரணம் உள்ளது. ஸர்வவல்லமை கொண்ட அவனால் நமது பாவங்களை விரட்ட இயலாதா? அவனால் முடியவில்லை என்றாலும் அவனது சார்ங்கம் விரட்டிவிடும். ஆயினும் அவன் இங்கு அவ்விதம் செய்ய விரும்பவில்லை. தன்னுடைய தயாதேவி மூலம் நம்மை சீர்படுத்துவதையே விரும்புகிறான். இதனால் அவளைத் தனது கேடயமாகக் கொண்டு நிற்கிறான் என்று கருத்து.
படம் – பல ஆயுதங்கள் தாங்கி நிற்கும் மலையப்பன் (நன்றி – tirupatitimes.com)

ஸ்ரீ தயா சதகம் – 27 November 7, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அதிலங்கித சாஸநேஷு வபீக்ஷ்ணம்
வ்ருஷசைலை அதிபதி: விஜ்ரும்பித ஊஷ்மா
புந: ஏவ தயே க்ஷமா நிதாநை:
பவதீம் ஆத்ரியதே பவதீ அதீநை:
பொருள் – தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது ஆணைகளை மீறி நடப்பவர்களிடம் மிகுந்த கோபம் கொள்கிறான் . ஆயினும் அந்தக் குற்றங்களை நீ மன்னிப்பதாக உள்ளதால் உன்னை நாடுகிறான்.
விளக்கம் – “ஊஷ்மா” என்றால் கடுமையான ஜுரம் என்றும், “நிதான” என்றால் அதற்குரிய மருந்து என்றும் ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். தான் படைத்த மனிதர்கள் தவறான வழிகளில் நடப்பதைக் கண்டு ஸ்ரீநிவாஸனுக்கு ஜுரம் வந்து விடுகிறது. அவனுக்கு ஏற்ற வைத்தியங்களை தயாதேவி செய்கிறாள். இதன் மூலம் அவனைக் காப்பாற்றுகிறாள். “புனரேவ” என்ற பதம் மூலம் – தயாதேவியை ஸ்ரீநிவாஸன் மறக்கும்போதுதான் இவ்விதமாக உயிர்கள் பாவம் செய்து, அவனுக்கு ஜுரம் ஏற்படுகிறது என்பதையும்; அதன் பின்னர் அவன் தயாதேவியிடம் திரும்பும்போது அந்த ஜுரம் நீங்கப் பெறுகிறது என்பதையும் கூறினார்.
தயாதேவி ஸ்ரீநிவாஸனுக்கு பொறுமை என்னும் ஊசிமருந்தை செலுத்தும்போது, அவனுடைய ஜுரமானது இறங்கிவிடுகிறது.
இதன் மூலம் தயாதேவி ஸ்ரீநிவாஸனை விட்டுச் சிறிது அகன்றாலும், ஸ்ரீநிவாஸனுக்குத் துன்பம் ஏற்படுகிறது என்று கருத்து.

ஸ்ரீ தயா சதகம்-26 November 6, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
கமலா நிலயஸ் த்வயா தயாளு: கருணே நிஷ்கருணா நிரூபணே த்வம்
அத ஏவ ஹி தாவக ஆச்ரிதாநாம் துரிதாநாம் பவதி த்வத் ஏவ பீதி:
பொருள் – தயாதேவியே! ஸ்ரீநிவாஸசன் உன்னால் கருணை உள்ளவன் என்று ஆகிவிடுகிறாள். ஆனால் உனக்குக் கருணை இல்லையோ என்று தோன்றுகிறது – காரணம், உன்னை அண்டியவர்களின் பாவங்கள், உன்னைக் கண்டு அல்லவோ நடுங்குகின்றன?
விளக்கம் – தயையைக் கண்டு அடியார்களின் பாவங்கள் நடுங்குகின்றன. அந்தப் பாவங்கள் குறித்து, தயாதேவிக்கு கருணை ஏற்படுவதில்லை. ஆனால் தனது தொடர்பு உள்ள அனைவரையும் கருணை கொண்டவர்களாக மாற்றுவது தயாதேவியின் இயல்பாகும். இவளது தொடர்பு உள்ளதால்தான் ஸ்ரீநிவாஸனே கருணை உள்ளவனாக இருக்கிறான் என்றார்.
படம் – கருணாமூர்த்தியான ஸ்ரீநிவாஸன்

ஸ்ரீ தயா சதகம்-25 November 5, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அபஹிஷ்க்ருத் நிக்ரஹாந் விதந்த:
கமலா காந்த குணாத் ஸ்வதந்த்ரதா ஆதீந்
அவிகல்பம் அநுக்ரஹம் துஹாநாம்
பவதீம் ஏவ தயே பஜந்தி ஸந்த:
பொருள் – தயாதேவி! ஸ்வதந்திரம் போன்ற ஸ்ரீநிவாஸனின் எண்ணற்ற குணங்கள், தண்டனை அளிப்பதை விலக்குவதில்லை. இதனை அறிந்த பெரியவர்கள், அனுக்ரஹத்தை மட்டுமே அருளும் உன்னைச் சரணம் அடைந்தனர்.
விளக்கம் – ஸ்வதந்திரம் என்பது அனைவருக்கும் எஜமானனாக (ப்ரபு) உள்ள தன்மையாகும். இந்த நிலையானது, தன்னுடைய ஆணையை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்காமல் இருக்காது. ஆக ஸ்ரீநிவாஸனின் குணங்கள் காப்பது, தண்டிப்பது என்ற இரண்டுக்கும் பொதுவானதாகும்.
ஆனால் தயாதேவியோ காப்பதற்கு மட்டுமே உள்ளாள். தண்டிப்பது என்றால் அவளுக்கு என்னவென்றே தெரியாது. பசுவானது தனது கன்றுக்குப் பால் சுரப்பது போல், இவள் அனுக்ரஹத்தைச் சுரக்கிறாள். இதனால் அறிஞர்கள் தயாதேவியையே அண்டுகின்றனர்.

ஸ்ரீ தயா சதகம் – 24 November 4, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ப்ரணத ப்ரதிகூல மூல காதீ ப்ரதிக: கோபி வ்ருஷாசல ஈச்வரஸ்ய
களமே யவஸ அபசாய நீத்யா கருணே கிங்கரதாம் தவ உபயாதி
பொருள் – தயாதேவியே! தனது அடியார்களை விரோதிப்பவர்களை அழிக்க வல்லதாக ஸ்ரீநிவாஸனின் கோபம் உள்ளது. இது பயிரில் உள்ள களைகளை அழிக்கும் விதமாக உள்ளது. இந்த கோபம் உனக்கு வேலையாளாக உள்ளது.
விளக்கம் – கடந்த ச்லோகத்தில் ஸ்ரீநிவாஸனின் கோபத்தை, ப்ரளயத்தில் இருந்து ஸ்ருஷ்டிக்கு மாற்றுவதன் மூலம் தவிர்ப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த கோபம் வீணாகப் போவதை தயாதேவி விரும்புவதில்லை. ஆகவே அதனை அடியார்களின் துன்பங்கள் மீது செல்லும்படிச் செய்து விடுகிறாள்.
ஸ்ரீநிவாஸனுக்கு விரோதிகள் யாரும் இல்லை. ஆனால் அவனது அடியார்களின் விரோதிகளை, தனது விரோதி என்றே அவன் கொள்கிறான். இந்தக் கோபம் தயாதேவிக்கு அடிமையாக உள்ளது என்றார். இதன் பொருள் – இவள் நினைத்தால் அந்தக் கோபம் ஸ்ரீநிவாஸனிடம் ஏற்படுவதும் , ஏற்படாமல் போவதும் நிகழ்கிறது – என்பதாகும்.
இங்கு தயாதேவியின் வேலையாளாக இருப்பதற்கு ஸ்ரீநிவாஸனின் கோபம் முயல்கிறதே அல்லாமன், தயாதேவி அதனைத் தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று எண்ணவில்லை – என்னும் கருத்து வெளிப்படுகிறது.
படம் – இந்தக் கருணை ததும்பும் திருமுகத்தை நோக்கினால், உள்ள கோபமும் தீர்ந்துவிடும். அப்படி உள்ளபோது, இவனுக்கா கோபம் வரும்? அதனையும் மீறி இவனுக்குக் கோபம் வருகிறது என்றால், குற்றத்தின் அளவு எந்த எல்லைக்குச் சென்றிருக்க வேண்டும்? (நன்றி – tirupatitimes.com)

ஸ்ரீ தயா சதகம்-23 November 3, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஜலதே: இவ சீததா தயே த்வம்
வ்ருஷசைல அதிபதே: ஸ்வபாவ பூதா
ப்ரளய ஆரபடீ நடீம் தத் ஈக்ஷாம் ப்ரஸபம்
க்ராஹயஸி ப்ரஸத்தி லாஸ்யம்
பொருள் – தயாதேவியே! கடலுக்கு எவ்விதம் குளிர்ச்சி என்பது ஸ்வபாவமோ அது போன்று ஸ்ரீநிவாஸனுக்கு நீ ஸ்வபாவமாக உள்ளாய். ப்ரளய காலத்தில் அவனது ஸங்கல்பம் மிகவும் கொடுமையாக ஆடுகிறது. இவ்விதம் ஆடும் அந்த நாட்டியக்காரியை திசை திருப்பி, மென்மையான ஸ்ருஷ்டி என்னும் நடனம் ஆடும்படிச் செய்கிறாய்.
விளக்கம் – நீரானது எவ்வளவு சூடாக இருந்தாலும் சிறிது நேரம் கழித்து தனது இயல்பான தன்மையான குளிர்ச்சியை அடைந்து விடும். இது போன்று, நாம் எவ்வளவு கொடிய பாவங்கள் செய்தாலும் கோபம் கொள்ளும் ஸ்ரீநிவாஸன், உடனேயே தனது ஸ்வபாவமான கருணையை அடைந்து விடுகிறான்.
இங்கு ஆரபடீ என்பது அகோர தாண்டவம் என்னும் கொடிய நடனமாகும். இதனை ஆண்கள் ஆடினால் தாண்டவம் என்றும், பெண்கள் ஆடினால் ஆரபடீ என்று கூறுவர். இதன் எதிர்பதம் லாஸ்யம் என்னும் இனிமையான நடனமாகும். இங்கு ப்ரளயம் என்பதை ஆரபடி என்றும், ஸ்ருஷ்டி என்பதை லாஸ்யம் என்பதாகவும் கூறினார்.
தயாதேவி தனது முயற்சியால் ப்ரளயம் என்ற குணத்தில் இருந்து, ஸ்ருஷ்டி என்ற குணத்திற்குத் திருப்புகிறாள் என்று தோன்றும். ஆனால் அது உண்மை அல்ல – காரணம் பகவானின் ஸங்கல்பத்திற்கு மாறாக எதுவும், யாராலும் நடக்க இயலாது. அவனுடைய ஸ்வபாவம் கருணை உள்ளதாக இருப்பதாலும், அந்த நேரம் அறிந்து தயாதேவி அவனிடம் விண்ணப்பிப்பதாலும், அவன் ஸ்ருஷ்டி செய்கிறான்.
ஸ்வாமி தேசிகன் தன்னுடைய யாதாவாப்யுதயம் என்னும் காவியத்தில், கண்ணன் காளியனின் தலைகளில் ஆரபடீ நடனம் ஆடியதாகக் கூறுகிறார்.
படம் – காளியனின் தலைகளில் தனது அழகான திருவடிகள் பதியும்படி நடனம் ஆடும் ஸ்ரீநிவாஸன்.

ஸ்ரீ தயா சதகம்-22 November 2, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment

கலசோததி ஸம்பதோ பவத்யா:
கருணே ஸந்மதி மந்த்த ஸம்ஸ்க்ருதயா:
அம்ருத அம்சம் அவைமி திவ்ய தேஹம்
ம்ருத ஸஞ்ஜீவநம் அஞ்ஜநாசல இந்தோ:
பொருள் – தயாதேவியே! நீ திருப்பாற்கடல் போன்று மிகவும் பெருமையுடன் உள்ளாய். அதில் அறிவு என்ற மத்து மூலம் நல்லவர்கள் கடையும்போது, நிகழ்ந்தது என்ன? இறந்தவர்களை எழுப்பவல்ல அம்ருதம் போன்ற ஸ்ரீநிவாஸனின் சந்திரனை ஒத்த திருமேனி வெளிப்பட்டது என்று எண்ணுகிறேன்.
விளக்கம் – இங்கு ஸ்ரீநிவாஸனுடைய திவ்ய மங்கள விக்ரஹம், தயாதேவி தன்னுள் இருந்து கொடுத்த அம்ருதம் என்று கூறுகிறார்.
பகவானின் ரூபங்கள் ஆகமங்களில் 5 விதமாகக் கூறப்பட்டுள்ளது. அவையாவன:
  1. பர – பரமபதம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளவன்
  2. வ்யூஹ – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருந்தன், 12 வடிவங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன்.
  3. ஹார்த – ஒவ்வொரு ஜீவனிலும் அந்தர்யாமியாக உள்ளவன்
  4. விபவ – இராமன், க்ருஷ்ணன் போன்ற திருஅவதாரங்கள்
  5. அர்ச்ச – திருவரங்கம் நம்பெருமாள் போன்ற திவ்யமங்கள விக்ரஹங்கள், சாளக்ராமம் முதலானவை.
திவ்யதேஹம் என்ற பதம் மூலம் ஸ்வாமி தேசிகன், இந்த 5 ரூபங்களையும் சேர்த்தே குறித்த போதிலும், “அஞ்ஜனாசல இந்தோ – திருமலையின் சந்திரன்” – என்று கூறியதால், அர்ச்சா ரூபத்தையே கூறினார் என்று கொள்ளவேண்டும்.
திருப்பாற்கடல் கடையப்பட்டபோது அதிலிருந்து – அமிர்தம், சந்த்ரன் போன்றவை வெளிப்பட்டன. இவை அனைத்தையும் மிகவும் பொருத்தமாக ஸ்வாமி இங்கு கூறுவதைக் காண்க.
படம் – சந்த்ரன் போன்று குளிர்ந்த ஸ்ரீநிவாஸனை மேலும் குளுமைப்படுத்தினால் அவன் திருமேனி தாங்குமோ?

ஸ்ரீ தயா சதகம் – 21 November 1, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஸமய உபநதை: தவ ப்ரவாஹை: அநுகம்பே க்ருத ஸம்ப்லவா தரித்ரீ
சரணாகத ஸஸ்ய மாலிநி இயம் வ்ருஷசைல ஈச க்ருஷீவலம் திநோதி
பொருள் – தயாதேவியே! இந்த உலகம் சரியான நேரத்தில் ஓடிவரும் உனது கருணையால் சூழப்பட்டுள்ளது. அதில் உள்ள பயிர்களின் வரிசையாக, ஸ்ரீநிவாஸனைச் சரணமடைந்தவர்கள் உள்ளனர். இதனைக் கண்ட , ஸ்ரீநிவாஸன் என்ற உழவன் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறான்.
விளக்கம் – ஸமய என்ற பதம் எம்பெருமானாரின் சரணாகதி மார்க்கத்தைக் குறிக்கும். இந்த மார்க்கம் உண்டான பிறகே, இந்த பூமி எங்கும் எம்பெருமானைச் சரணம் அடைந்தவர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
அதற்கு முன்பு பாவங்களைத் தடையற்றுச் செய்து வந்த மனிதர்கள், பலர் இருந்தனர். அவர்களின் சுமையைத் தாங்க இயலாமல், அந்தந்த காலங்களில் பூமாதேவி பகவானிடம் முறையிட்டபடி இருந்தாள். அவனும் அவ்வப்போது பல்வேறு அவதாரங்கள் எடுக்க நேரிட்டது. ஆனால், எம்பெருமானாருக்குப் பிறகு பூமியில் சரணாகதி செய்தவர்கள் அதிகமாக, பாவம் செய்தவர்கள் குறைய – இதனால் பூமி தேவிக்கு பாரமும் குறைந்தது.
இங்கு “வ்ருஷசைல” என்று கூறியதைக் காண்க. இதன் மூலம் ஸ்ரீநிவாஸன் என்ற உழவன் தனது நிலமான இந்தப் பூமியை, உழவன் ஒருவன் எவ்விதம் உயரமான இடத்திலிருந்து கண்காணிப்பானோ அது போன்று செய்கிறான் என்பது உணர்த்தப்பட்டது.
படம் – உயிர்கள் உய்ய ஒரே வழியாய் உள்ள எம்பெருமானார். திருமலையில் உள்ள இந்த எழில் திருமேனியானது ஆசார்ய முத்திரையில் உள்ளதைக் காண்க (நன்றி – திருமலை திருப்பதி தேவஸ்தானம்).

ஸ்ரீ தயா சதகம்-20 October 31, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
நயநே விருஷாசல இந்தோ: தாரா மைத்ரீம் ததாநயா கருணே
த்ருஷ்டஸ் த்வயா ஏவ ஜநிமாந் அபவர்க்கம் அக்ருஷ்ட பச்ச்யம் அநுபவதி
பொருள் – தயாதேவியே! திருமலையில் உதித்த குளிர்ந்த சந்திரன் போன்ற ஸ்ரீநிவாஸனின் திருக்கண்களின் விழியினுடைய நட்பை நீ கொண்டுள்ளாய் . உன்னால் பார்க்கப்பட்ட மனிதன் ஒருவன், உழவு போன்ற சிரமம் இன்றி கிட்டும் பலன் போன்று, எந்த விதமான முயற்சியும் இன்றி மோக்ஷம் அடைகிறான்.
விளக்கம் – தாராமைத்ரீ என்றால் “கண்டவுடன் அன்பு” என்பதாகும். இதற்கு எந்தவிதமான காரணமும் இருக்காது. தயாதேவியின் பார்வை நம் மீது விழுந்தது என்றால், எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸ்ரீநிவாஸனின் பார்வை நம் மீது விழுந்து விடும். அவளது பார்வையைத் தொடர்ந்தே இவனது பார்வையும் செல்கிறது என்று கருத்து.
ஒரு தோட்டமானது தோட்டக்காரனின் கவனிப்பு இல்லாமலேயே, மழை முதலானவற்றின் மூலமாகச் செழித்து வளரக்கூடும். இது போன்று மோக்ஷத்துக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் ஏதும் அவசியம் இன்றி, நமக்கு தயாதேவியின் கருணை காரணமாக, மோக்ஷத்திற்கான முயற்சிகளையும் அவனே மேற்கொண்டு, நமக்கு மோக்ஷ பலன் அளிக்கிறான்.
படம் – கருணை பொங்கும் ஸ்ரீநிவாஸனின் திருப்பார்வை (நன்றி – இஸ்கான், பெங்களூரு).


ஸ்ரீ தயா சதகம் : 19 October 30, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ரூடா விருஷாசல பதே பாதே முககாந்தி பத்ரளச் சாயா
கருணே ஸுகயஸி விநதாந் கடாக்ஷ விடபை : கராபசேய பலை:
பொருள் – தயாதேவியே! நீ ஸ்ரீநிவாஸனின் திருவடிகளில் இருந்து வெளிப்படுகிறாய். அவனது திருமுகத்தில் காணப்படும் ஒளி மூலமாகவே, இலைகள் நிறைந்த மரம் போன்று அழகு பெறுகிறாய். உன்னை வணங்கி, உனது நிழலைச் சிலர் அடையக் கூடும். அவர்களுக்கு, மிகவும் எளிதாகப் பறிக்கவல்ல “கடாக்ஷம்” என்னும் பழங்களைக் கொடுத்து இன்பம் அளிக்கிறாய்.
விளக்கம் – தயாதேவியானவள் ஸ்ரீநிவாஸனின் திருவடிகளில் தனது வேரைக் கொண்டுள்ளாள். ஆக இவள் ஸ்ரீநிவாஸனின் திருவடிகளை அடைபவர்களுக்கு மட்டுமே புலப்படுகிறாள்.
ஸ்ரீநிவாஸன் தனது திருமுகத்தைக் கவிழ்த்து, தனது திருவடிகளில் உள்ள தயை என்னும் இந்த மரத்தைக் காண்கிறான். அவனுடைய பார்வையில் இருந்து விழும் ஒளி மூலமாக அந்த மரத்தில் தயை என்னும் நிழல் அளிக்கவல்ல இலைகள் தழைக்கின்றன.
இந்த மரத்தின் கிளைகளாக ஸ்ரீநிவாஸனின் கடாக்ஷங்கள் உள்ளன. இந்த மரத்தில் உள்ள பழங்களானவை, தயாதேவியை யார் ஒருவர் மிகவும் பணிவாக, தரையோடு தரையாகக் கிடந்து அண்டுகிறார்களோ அவர்களுக்கு, தங்கள் கைகளால் எளிதாகப் பறிக்கும்படி உள்ளது.
படம் – ஸ்ரீநிவாஸனின் திருவடிகள். இவை ச்லோகத்தில் உள்ளவை போன்றே பசுமையான நிறம் கொண்டவையாக உள்ளது காண்க (நன்றி – இஸ்கான், பெங்களூரு) .

ஸ்ரீ தயா சதகம் -38 November 18, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
திசி திசி கதிவித்பி: தேசிகை நீயமாநா
ஸ்த்திரதரம் அநுகம்பே ஸ்த்யாந லக்நா குணை: த்வம்
பரிகத வ்ருஷசைலம் பாரம் ஆரோபயந்தீ
பவ ஜலதி கதாநாம் போதபாத்ரீ பவீத்ரீ
பொருள் – தயா தேவியே! சிறந்த வழிகளை அறியும் ஆசார்யர்களால் நீ பல திசைகளிலும் செலுத்தப்படுகிறய். ஸ்ரீநிவாஸனின் குணங்கள் என்ற உறுதியான கயிறுகளால் கட்டப்பட்ட படகு போன்று நீ உள்ளாய். நீ ஸம்ஸாரத்தில் உள்ளவர்களை ஏற்றிக்கொள்கிறாய். அவர்களைத் திருமலை என்ற ஸ்ரீநிவாஸனின் கரையில் சேர்த்து விடுகிறாய்.
விளக்கம் – இங்கு தயாதேவியை ஒரு படகு என்று வர்ணிக்கிறார். அந்தப் படகு சரியானபடி அமைக்கப்பட்டிருக்கவேண்டும். சரியான மாலுமிகளால் வழி நடத்தப்படவேண்டும். சரியான பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும். சரியான இலக்கை நோக்கிச் செல்லவேண்டும்.
இங்கு ஸ்ரீநிவாஸனின் குணங்கள் என்ற கயிற்றினால் தயாதேவி என்ற படகு கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தப் படகை வழி நடத்தும் மாலுமிகளாக ஆசார்யர்களைக் கூறினார். ஸம்ஸாரத்தில் சிக்குண்டு, பல பாவங்களைச் செய்தபடி உள்ளவர்களே இந்தப் படகில் ஏறத் தகுதியானவர்கள் ஆவர். அவர்கள் சென்று சேர வேண்டிய சரியான திசையானது திருமலையாகும்.
படம் – படகானது சரியான கரையை அடையவேண்டும் என்று கலங்கரை விளக்கம் அமைத்து, அதில் விளக்கு பொருத்தியிருப்பர். இங்கு ஸ்வாமி தேசிகன் கூறும் கரையாக ஸ்ரீநிவாஸன் உள்ளான். அவனை நமக்கு ஸஹஸ்ர தீபம் மூலம் காண்பிக்கும் காட்சி.

ஸ்ரீ தயா சதகம் -37 November 17, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வ்ருஷகிரி ஸவிதேஷு வ்யாஜத: வாஸபாஜாம்
துரித கலுஷிதாநாம் தூயமாநா தயே த்வம்
கரண விலய காலே காந்திசீக ஸ்ம்ருதீநாம்
ஸ்மரயஸி பஹுலீலம் மாதவம் ஸாவதாநா
பொருள் – தயாதேவியே! திருமலையின் அருகில் ஏதோ ஒரு காரணத்தினால் வசித்து வந்தாலும், அவர்கள் பாவம் செய்தால் நீ அவர்களைக் குறித்து வருத்தம் கொள்கிறாய். அவர்களது புலன்கள் ஒடுங்கி அந்திமகாலம் நெருங்கும்போது, அவர்களின் நினைவுகள் பல்வேறு விஷயங்களில் சிதறினாலும், நீ செய்வது என்னவென்றால் – பல்வேறு லீலைகள் புரியும் ஸ்ரீநிவாஸன், அவர்களை நினைக்கும்படியாக நீ செய்து விடுகிறாய்.
விளக்கம் – இங்கு “ஏதோ ஒரு காரணம்” என்பது கவனிக்கத்தக்கது. இங்கு ஸ்ரீநிவாஸனின் இருப்பிடத்தின் அருகில் வாசம் செய்பவர்கள், அவனுடைய நினைவுடன் வாசம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை உணர்த்துகிறார்.
இப்படிப்பட்டவர்கள் எந்த வகையான பாவம் செய்தாலும், அவர்கள் இறக்கும்போது ஸ்ரீநிவாஸனின் நினைவே அவர்களுக்கு வரவில்லை என்றாலும் தயாதேவி உதவுவதாகக் கூறுகிறார். இது திருமலையின் மகிமையைக் குறிக்கும். தயாதேவி ஸ்ரீநிவாஸனுக்கு இவர்களின் நினைவை உண்டாக்கி அவர்கள் பக்கம் திருப்புகிறாள்.
  • ஸ்ரீமத் பகவத் கீதை (8-6) – யாம் யாம் வாபி ஸ்மரண் – அந்திம காலத்தில் எந்தப் பொருளை நினைத்து…
  • வராக புராணம் – அஹம் ஸ்மராமி பக்தாம் நயாமி பரமாம் கதிம் – எனது பக்தனை அவனது இறுதிகாலத்தில் நான் (பகவான்) நினைத்துக்கொண்டு, அவனுக்கு உயர்ந்த கதி அளிப்பேன்.
பகவானுக்கு நமது அந்திம காலத்தில், நம்முடைய நினைவை ஏற்படுத்துபவள் தயாதேவியே ஆவாள்.
படம் – அந்திமகாலத்தில் தானாகவே நம்மை எண்ணி நம்மிடம் வரும் வராஹப்பெருமாள் திருமலையில் ஸேவை சாதிக்கிறபடி (நன்றி – திருமலை திருப்பதி தேவஸ்தானம்)

ஸ்ரீ தயா சதகம்-36 November 16, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
பரஹிதம் அநுகம்பே பாவயந்த்யாம் பவத்யாம்
ஸ்த்திரம் அநுபதி ஹார்தம் ஸ்ரீநிவாஸே ததாந:
லலித ருசிஷு லக்ஷ்மீ பூமி நீளாஸு நூநம்
ப்ரதயதி பஹுமாநம் த்வத் ப்ரதிச்சந்த புத்த்யா
பொருள் – தயாதேவியே! மக்களுக்கு நன்மை செய்வதை மட்டுமே நீ சிந்தித்தபடி உள்ளாய். உன்னிடம் ஸ்ரீநிவாஸன் எதனையும் எதிர்பாராமல் மிகுந்த அன்பு கொண்டுள்ளான். அவன் அழகான ஒளி பொருந்திய மஹாலக்ஷ்மி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோரிடம் மதிப்பு கொண்டு இருப்பது ஏன் என்றால் – அவர்களை உனது பிரதிபிம்பம் என்று நினைக்கிறான். இது உறுதியே.
விளக்கம் – கடந்த ச்லோகத்தில், தயாதேவியின் சொற்களுக்கு இணங்கவே ஸ்ரீநிவாஸன் பல அவதாரங்கள் செய்து பூமியில் வாடுவதாகக் கூறினார். இதனால் நமக்கு ஓர் ஐயம் ஏற்படலாம் – நம்மை இவ்விதம் வாடும்படிச் செய்துவிட்டாளே என்று தயாதேவி மீது ஸ்ரீநிவாஸனுக்கு வெறுப்பு ஏற்படுமா என்பதாகும். இதற்கான விடையை இங்கு கூறுகிறார்.
ஸ்ரீநிவாஸனின் அன்பு எந்தவித காரணமும் இல்லாமல் தயாதேவியிடம் உள்ளது என்பதை “அநுபதி” என்று கூறினார். ஸ்ரீநிவாஸன் தனது தேவிகளை தயாதேவியின் பிரதிபிம்பம் என்று கருதுவதால் மட்டுமே அவர்களிடம் அன்பாக உள்ளான் என்றும் கூறினார்.
படம் – ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமலையப்பன்.

ஸ்ரீ தயா சதகம் – 35 November 15, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அவதரண விசேஷை: ஆத்ம லீலாப தேசை:
அவமதிம் அநுகம்பே மந்த சித்தேஷு விந்தந்
வ்ருஷப சிகரிநாத: த்வத் நிதேசேந நூநம்
பஜதி சரண பாஜாம் பாவிந: ஜந்ம பேதாந்
பொருள் – தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான். இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான். ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான். இது உனது கட்டளையால் அல்லவா?
விளக்கம் – கடந்த ச்லோகத்தில் தயாதேவி தனது வாதத்தினால் குற்றம் செய்த ஜீவனுக்கு மோக்ஷத்தைப் பெற்றுக்கொடுக்கிறாள் என்று கூறினார். ஆனால் அந்த ஜீவனுக்குப் பதில் அவனுக்கு ஏற்படவேண்டிய தண்டனையை வேறு யாராவது அனுபவித்தே தீர வேண்டும் (காரணம் கர்மபலன் என்பது அனுபவித்துக் கழிக்கப்பட வேண்டியதாகும். எந்தப் பரிகாரம் மூலமும் கர்மபயன்களை, அனுபவிக்காமல் அழிக்க இயலாது). தயாதேவியின் சொற்களுக்கு இணங்கி, ஸ்ரீநிவாஸனே அந்த ஜீவனுக்கு பதிலாகப் பல பிறவிகள் எடுக்கிறான். ஆக நாம் நமது கர்மபலன் காரணமாக எடுக்க வேண்டிய பிறவிகளை, தான் எடுத்து அனுபவிக்கிறான் என்று கருத்து.
மேலும் தன்னிடம் சரணம் அடைந்தவர்கள் செய்த தவறுகளுக்காக, அவர்கள் எடுக்க வேண்டிய பிறப்பு என்ற சுமைகளை தானே ஏற்கிறான். இதனைத் தனது லீலை என்று ஒரு பெயருக்காக மட்டுமே கூறிக் கொள்கிறான்.
இவ்விதம் பிறந்த அவன் – ஹிரண்யன், சிசுபாலன், இராவணன் போன்றவர்களால் இழிவும் படுத்தப்பட்டான். இதனைக் கீதையில் – என்னை புரிந்து கொள்ளாதவர்கள் என்னை அவமதிக்கிறார்கள் – என்று நொந்து கொண்டான்.
படம் – நமக்காக இங்கு வந்து நிற்கும் திருவேங்கடமுடையான்

ஸ்ரீ தயா சதகம்-34 November 14, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment

அநுபவிதும் அக ஓகம் ந அலம் ஆகாமி கால:
ப்ரசமயிதும் அசேஷம் நிஷ்க்ரியாபி: ந சக்யம்
ஸ்வயம் இதி ஹி தயே த்வம் ஸ்வீக்ருத ஸ்ரீநிவாஸா
சிதிலித பவபீதி: ச்ரேயஸே ஜாயஸே ந:
பொருள் – தயாதேவியே! எனது பாவங்களின் பயனை நான் முழுவதுமாக அனுபவிப்பதற்கு எதிர்காலம் முழுமையும் போதாது. அப்பாவங்களைத் தகுந்த ப்ராயசித்தம் செய்து ஒழிக்கலாம் என்றால் அதுவும் இயலாது. ஆகவே ஸ்ரீநிவாஸனை நீ வசப்படுத்தியவளாய், எங்களைக் காக்க, எங்களை ஸம்ஸாரத்தில் இருந்து நீக்கும்படியாக உள்ளாய்.
விளக்கம் – (கடந்த ச்லோகத்தில் தயாதேவி தனக்காக வாதாடுவதாகக் கூறினாள். அந்த வாதத்தை இங்கு விளக்குகிறார்)
தயாதேவி (ஸ்ரீநிவாஸனும் பத்மாவதியும் நீதிபதிகளாக வீற்றுள்ள சபையில்) : “இந்த ஜீவன் எண்ணற்ற பாவத்திற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் தீர்ப்பு வழங்கினால், இவன் வாழ்க்கை காலத்திற்குப் பின்னும் தண்டனை காலம் நீடிக்குமே! அப்படி என்றால், இவன் அந்த தண்டனை காலத்தை அனுபவித்து, தனது வினைப்பயனை எவ்வாறு கழிக்க இயலும்?”
நீதிபதிகள் : “இவன் புண்ணியம் செய்த அளவிற்கு ஏற்ற பாவ பலனை கழித்து விட்டு, எஞ்சிய பாவத்திற்கு மட்டும் தண்டனை தருகிறோம். இது சரியான தீர்ப்புதானே?”
தயாதேவி : “அப்படி என்றால் முழுமையான வினைப்பயனை மன்னித்து விடலாமே”
சபையில் உள்ளவர்கள் (ஸ்ரீநிவாஸனின் மற்ற குணங்கள்) : “முழுமையாக மன்னிக்க இயலாது. வேண்டுமென்றால் இவன் வேறு ஏதேனும் ப்ராயச்சித்தம் செய்து விட்டு போகட்டுமே”
தயாதேவி : “உங்களுக்கு இவனைத் தெரியாது. இவன் ப்ராயச்சித்தம் செய்யும்படியான குற்றங்களே செய்வது இல்லை. இவனது குற்றங்களுக்கு ப்ராயச்சித்த விதிகளே இதுவரை இல்லை”
இரு வாதங்களையும் கேட்ட ஸ்ரீநிவாஸனும் பத்மாவதியும் தயாதேவியிடம், “இவர்கள் போன்றவர்களுக்காக நீ இந்தப் பூமியில் இருந்து, இவர்களின் பயத்தைப் போக்கியபடி இருப்பாயாக”, என்று கூறினர்.
படம் – மலர்களால் ஸ்ரீநிவாஸனை மூடி, அவன் நமது பாவங்களைப் பார்க்க இயலாமல் தயாதேவி செய்கிறாளோ? (நன்றி – tirupatitimes.com)

ஸ்ரீ தயா சதகம்-33 November 13, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
பல விதரண தக்ஷம் பக்ஷபாத அநபிஜ்ஞம்
ப்ரகுணம் அநுவிதேயம் ப்ராப்ய பத்மா ஸஹாயம்
மஹதி குண ஸமாஜே மாந பூர்வம் தயே த்வம்
ப்ரதிவதஸி யதார்ஹம் பாப்மநாம் மாமகாநாம்
பொருள் – தயாதேவியே! நாங்கள் செய்த வினைகளுக்குத் தகுந்தபடி பலனை அளிப்பதில் வல்லவன்; ஓர வஞ்சனை இன்றி தீர்ப்பு அளிப்பவன்; நேர்மையான குணம் உடையவன்; எளிதாக அணுகவல்லவன்; பெரியபிராட்டியைத் துணையாக கொண்டவன் – இப்படிப்பட்ட ஸ்ரீநிவாஸனை நீ அடைந்து அவனது குணங்கள் வீற்றுள்ள சபையில், எனது பாவங்களுக்காக எதிர்வாதம் செய்கிறாய்.
விளக்கம் – இங்கு ஸ்ரீநிவாஸனை நீதிபதியாகவும், பெரிய பிராட்டியை துணை நீதிபதியாகவும் கூறுகிறார். இங்கு நீதிபதிகளின் மூன்று முக்கிய தன்மைகள் கூறப்பட்டன.
1. குற்றத்திற்குத் தகுந்த தண்டனை அளிப்பதில் வல்லவராக இருக்கவேண்டும். இதனை “பல விதரண தக்ஷம்” என்று கூறினார்.
2. நீதிபதியானவர் வாதிக்கோ அல்லது பிரதிவாதிக்கோ சாதகமாகவும் ஓரவஞ்சனையாகவும் இருத்தல் கூடாது. இதனை “பக்ஷபாதா அநபிஜ்ஞம்” என்றார்.
3. சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவேண்டும். இதனை “ப்ரகுணமனு” என்று மநுதர்மத்தின் மூலம் கூறினார். அந்த நீதிபதி சட்டத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதை – விதேயம் – வசப்பட்டவன் – என்று கூறினார்.
அடுத்து சிக்கலான வழக்காக இருந்தால் ஒரே நீதிபதி தீர்ப்பு கூறாமல் பல நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு மூலமே தீர்ப்பு வழங்குவது பழக்கமாகும். இதனை “பத்மா ஸஹாய” என்று கூறினார்.
இங்கு குற்றவாளியின் சார்பாக தயாதேவி வாதாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. இங்கு “குண” என்ற பதம் ஆண்பாலில் உள்ளது. ஆக , ஸ்ரீநிவாஸனின் குணங்கள் என்னும் ஆண்மக்கள் அமர்ந்துள்ள சபையில், தனக்காக ஒரு பெண் வாதாடுவதை உயர்த்திக் காட்டினார். (இதிலிருந்து ஸ்வாமி பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதையை உணரலாம்).
தயாதேவி எவ்விதம் வாதாடினாள்? ஏதோ சில வார்த்தைகள் மூலமாகவா என்றால், அப்படி அல்ல என்றார். அவள் “மாநபூர்வம்” – தகுந்த ஆதாரங்களுடன் வாதாடினாள் என்றார்.
ஆக இந்தச் ச்லோகம் மூலம் ஸ்வாமி தேசிகன், தனக்கு ஸ்ரீரங்கநாச்சியார் அளித்த – ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர் – அனைத்து வித்தைகளும் அறிந்தவர் – என்ற பட்டத்தை நிரூபித்தார்.
படம் – நம் ஸ்வாமிக்கு “ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர்” என்று பட்டம் வழங்கி, அதற்காக ஸ்வாமியைவிடத் தான் மிகவும் மகிழ்வாக அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ தயா சதகம்-32 November 12, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அவிதித நிஜயோக க்ஷேமம் ஆத்ம அநபிஜ்ஞம்
குணலவ ரஹிதம் மாம் கோப்துகாமா தயே த்வம்
பரவதி சதுரை: தே விப்ரமை: ஸ்ரீநிவாஸே
பஹுமதிம் அநபாயாம் விந்தஸி ஸ்ரீதரண்யோ:
பொருள் – தயாதேவியே! நான் எனது குற்றம் குறைகளை அறியாதவன், என்னையே அறியாதவன், உயர்ந்த குணங்கள் ஏதும் இல்லாதவன் ஆவேன். இப்படிப்பட்ட என்னை, உனக்கு வசப்பட்ட ஸ்ரீநிவாஸன் மூலம் நீ காத்து நின்றதால் – மஹாலக்ஷ்மியிடமும், பூமாதேவியிடமும் மிகுந்த பெருமை பெற்றாய்.
விளக்கம் – ச்லோகம் 30 ல், தன்னைச் சிறை பிடித்து ஸ்ரீநிவாஸனிடம் சேர்க்கும்படிக் கூறினார். அவனது சபையில் – நான் (ஸ்வாமி தேசிகன்) ஸம்ஸாரத்தில் இருந்து விடுதலை பெற்று மோக்ஷம் பெறத் தகுதி உடையவனா? அல்லது மறுபிறவி எடுத்து தண்டனை பெறத் தக்கவனா என்று விசாரணை நடக்க உள்ளது. சரியான தீர்ப்பு அங்கு வழங்கப்படும். ஆயினும் என் போன்ற பாவிகளுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு. இதனால் என் பொருட்டு தயாதேவி செய்த முயற்சிகள் அனைத்தும் விணாகிவிடும்.
ஆக தயாதேவி ஸ்ரீநிவாஸனை மயக்கி, தன் வயப்படுத்திக் கொள்கிறாள். அவன் சரியான தீர்ப்பு கூறாதபடி, எனக்கு நன்மை செய்யும் விதமாக, தீர்ப்பை அமைக்கிறாள். மஹாலக்ஷ்மியும் பூமாதேவியும் குற்றம் செய்த தங்களது குழந்தையான என்னை, தாயாதேவி இவ்விதம் ஸ்ரீநிவாஸனை வசப்படுத்தி என்னைக் காப்பாற்ற முயற்சி செய்ததைக் கண்டு அவளைப் புகழ்கின்றார்கள்.
படம் – நீதிபதியாக நிற்கும் ஸ்ரீநிவாஸன் (நன்றி – திருமலை திருப்பதி தேவஸ்தானம்)

ஸ்ரீ தயா சதகம்-31 November 11, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அசிதில கரணே அஸ்மிந் அக்ஷத ச்வாஸ வ்ருத்தௌ
வபுஷி கமந யோக்யே வாஸம் ஆஸாதயேயம்
வ்ருஷகிரி கடகேஷு வ்யஞ்ஜயத்ஸு ப்ரதீதை:
மது மதந தயே த்வாம் வாரிதாரா விசேஷை:
பொருள் – மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீநிவாஸனின் கருணையே! இந்த உடல் தனது புலன்கள் தளராத நிலையில் உள்ளபோதே, மூச்சு தடைப்படாது உள்ளபோதே, நடக்கும் திறன் தளராமல் உள்ளபோதே , நான் செய்ய விருப்புவது – உனது குணங்களை வெளிப்படுத்துவது போல் விழும் அருவிகள் கொண்ட திருமலையின் அடிவாரத்தில் வாழ்வேனாக.
விளக்கம் – ஸ்வாமி தேசிகன் வாழ்ந்த காலத்தில் திருமலை மீது செல்ல எளிதான பாதையோ வாகனங்களோ இல்லை. திடமான உடல், தீர்க்கமான புலன்கள் ஆகியவை இருந்தால் மட்டுமே செல்லமுடியும். ஆகவே ஸ்வாமி, தான் நன்றாக உள்ளபோதே திருமலைக்குச் செல்லவேண்டும் என்று வேண்டுகிறார்.
திருமலையில் உள்ள அருவிகள் ஸ்ரீநிவாஸனின் திருக்கல்யாண குணங்கள் போன்று குளிர்ந்து விளங்குகின்றன. அவை அனைவருக்கும் அவன் போன்று பயனளிக்கும் விதமாகவும், தெளிந்தும் உள்ளன.
படம் – திருமலையில் உள்ள ஆகாசகங்கை.

ஸ்ரீ தயா சதகம்-30 November 10, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அஹம் அஸ்மி அபராத சக்ரவர்த்தீ
கருணே த்வம் ச குணேஷு ஸார்வபௌமீ
விதுஷீ ஸ்த்திதிம் ஈத்ருசீம் ஸ்வயம் மாம்
வ்ருஷ சைலே ஈச்வர பாதஸாத் குரு த்வம்
பொருள் – தயாதேவியே! நான் குற்றம் செய்பவர்களுக்கும் பாவங்களுக்கும் சக்ரவர்த்தியாக உள்ளேன். நீயோ ஸ்ரீநிவாஸனின் குணங்களுக்கு பேரரசியாக உள்ளாய். இவ்விதம் எனது நிலைமையை அறிந்த நீ, நீயாகவே முன் வந்து என்னை ஸ்ரீநிவாஸனின் திருவடிகளில் நிற்கும்படிச் செய்ய வேண்டும்.
விளக்கம் – இங்கு தன் மீது தயாதேவி படை எடுத்து வந்து, தனது குற்றங்கள் என்ற நாட்டைக் கைப்பற்றித் தன்னையும் சிறைபிடித்து ஸ்ரீநிவாஸனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அவ்விதம் அவனிடம் கொண்டு சென்று, அவனது தாமரை போன்ற திருவடிகளில் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகிறார்.
படம் – ஸ்வாமி தேசிகன் விரும்பிய ஸ்ரீநிவாஸனின் தாமரை போன்ற திருவடிகள் (திருமலையில் ஸேவை சாதிக்கிறபடி) .


ஸ்ரீ தயா சதகம்-29 November 9, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
மயி திஷ்ட்டதி துஷ்க்ருதாம் ப்ரதாநே
மித தோஷாந் இதராந் விசிந்வதீ த்வம்
அபராத கணை: அபூர்ண குக்ஷி:
கமலா காந்த தயே கதம் பவித்ரீ
பொருள் – தயாதேவியே! பாவம் செய்தவர்களில் முதன்மையானவனாக உன் முன்பாக நான் உள்ளேன். நீ என்னைக் கவனிக்காமல், குறைவான பாவங்கள் செய்தவர்களைத் தேடுகிறாய். இவ்விதம் நீ செய்தால், குறைந்த பாவங்கள் மட்டுமே உனது வயிறுக்குக் கிடைக்கும். இவ்விதம் வயிறு நிறையாமல் நீ எவ்விதம் வாழ்வாய்?
விளக்கம் – இங்கு தயாதேவிக்கு உணவாக நாம் செய்யும் பாவங்கள் கூறப்படுகிறது. நமது பாவங்களை அவள் தீர்ப்பதால் இவ்விதம் கூறப்பட்டது.
கடந்த ச்லோகத்தில் நமது பாவங்கள் காரணமாக ஸ்ரீநிவாஸன் துன்பம் அடைகிறான் என்று கூறினார். இங்கு அதே பாவங்கள் அதிகமாகும்போது தயாதேவிக்கு மகிழ்வு அதிகமாவதாகக் கருத்து. இதன் காரணம் – பாவங்கள் அதிகமாகும்போது, நமக்கு அதிகமாக உதவக்கூடிய வாய்ப்பு கிட்டியது என்று மகிழ்வதாகக் கொள்ளவேண்டும்.
படம் – திருமலையில் இருந்த ஹாதிராம் என்ற அடியாருடன் ஸ்ரீநிவாஸன் அன்றாடம் தாயக்கட்டம் விளையாடுவது வழக்கம். நாம் நமது பாவங்கள் அனைத்தையும் நீக்கி, ஹாதிராம் அளவிற்கு பக்தியில் உயர்ந்தால் நம்மிடமும் இதுபோன்று வருவான் என்பதில் ஐயமில்லை.


ஸ்ரீ தயா சதகம் – 48 November 28, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
தைவாத் ப்ராப்தே வ்ருஷகிரி தடம் தேஹிநி த்வத் நிதாநாத்
ஸ்வாமிந் பாஹி இதி அவச வசநே வந்ததி ஸ்வாப மந்த்யம்
தேவ: ஸ்ரீமாந் தசதி கருணே த்ருஷ்டிம் இச்சந் த்வதீயாம்
உத்காதேந ச்ருதி பரிஷதாம் உத்தரேண ஆபிமுக்யம்
பொருள் – தயாதேவியே! உன்னால் உதவப்பட்டு புண்ணிய செயல்கள் பல செய்த ஒருவன், தனது உயிர் பிரியும் நேரத்தில் திருமலையின் அடிவாரத்திற்கு வந்து, “ஸ்வாமி! என்னை காக்க வேண்டும்”, என்று கூறக்கூடும். உடனே ஸ்ரீநிவாஸன் தனது கடைக்கண் பார்வையை பெற விரும்பியவனான அந்த மனிதனுக்கு நன்மை செய்யும் விதமாக, வேதங்களின் தொடக்கத்தில் உள்ள “ஓம்” என்பதை அளிக்கிறான்.
விளக்கம் – “ஓம்” என்ற பதத்திற்கு “அப்படியே செய்கிறேன்”, என்று பொருள் உண்டு. மரணம் அடையும் நேரத்தில் திருமலையை அடைந்து, “என்னைக் காப்பாயாக”, என்று கூறும்போது ஸ்ரீநிவாஸன் இவ்விதம் கூறுகிறான். இது ஏன் என்றால், ஸ்ரீநிவாஸன் தனது மனதில், “இந்த மனிதனைக் காப்பாற்றினால் மட்டுமே தயாதேவி நம் மீது விருப்பம் கொள்வாள்”, என்று எண்ணுகிறான்.
படம் – தான் உபதேசிக்கும் ப்ரணவத்திலேயே, தன்னைக் குறிக்கும் ப்ரணவத்திலேயே நடனம் செய்யும் கண்ணன்.

ஸ்ரீ தயா சதகம் – 47 November 27, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வித்வத் ஸேவா கதக நிகஷை: வீத பங்க ஆசயாநாம்
பத்மா காந்த: ப்ரணயதி தயே தர்ப்பணம் தே ஸ்வசாஸ்த்ரம்
லீலா தக்ஷாம் த்வத் அநவஸரே லாளயந் விப்ரலிப்ஸாம்
மாயா சாஸ்த்ராணி அபி தமயிதும் த்வத் ப்ரபந்ந ப்ரதீபாந்
பொருள் – தயாதேவியே! தேத்தாங்கொட்டை எவ்விதம் தண்ணீரைத் தூய்மைப்படுத்துமோ அது போன்று, ஞானிகள் மூலம் மக்களின் மனதை ஸ்ரீநிவாஸன் தூய்மைப்படுத்துகிறான். அவர்களுக்கு உன்னைத் தெளிவாகக் காட்டும் கண்ணாடி போன்ற பாஞ்சராத்ர சாஸ்திரத்தையும் அருள்கிறான். நீ இல்லாத நேரம் பார்த்து, உனது அடியவர்களின் எதிரிகளை அடக்க மோஹ சாஸ்திரங்களை இயற்றுகிறான் .
விளக்கம் – வேதத்தில் உள்ள சாஸ்திரங்கள், பலவகையான தேவதைகளைக் கூறி, அவர்களின் பெருமையையும் கூறுவதாக உள்ளனவே! இதற்கான சமாதானத்தை கூறுகிறார். இங்கு கூறப்படும் சாஸ்திரம் என்பது ஸ்ரீமந்நாராயணன், தானே இயற்றிய பகவத் சாஸ்திரம் அல்லது பாஞ்சராத்ர ஆகமம் என்பதைக் குறிக்கும். இதில் மற்ற தேவதைகளைப் பற்றி ஏதும் கூறப்படுவதில்லை. ஸ்ரீநிவாஸனின் தயாதேவியை முழுமையாக ப்ரதிபலிக்கும் கண்ணாடி போன்றது இந்தச் சாஸ்த்ரம் என்றார்.
தேத்தாங்கொட்டை என்பது நீரில் உள்ள மண்ணைத் தனியே பிரித்து, நீரைத் தெளிய வைக்கும். இது போன்று ஞானிகள் அருகில் சென்று நாம் செய்யும் தொண்டு மூலம் நமது மனம் தூமையை அடையும்.
உன்னைச் சரணம் என்று அடைந்த அடியார்களுக்கு இருக்கும் பகைவர்கள், தனக்கும் பகைவர்களே என்று ஸ்ரீநிவாஸன் எண்ணுகிறான். அவர்களை மேலும் தவறான பாதையில் நடத்திச் செல்வதற்காக மோஹசாஸ்த்ரங்களை ஏற்படுத்துகிறான். இது போன்ற மாயா சாஸ்திரங்களைக் கற்ற அவர்கள், தர்மத்தை கைவிட்டு, அதர்ம வழியில் சென்று, இறுதியாக நரகம் சென்று விடுவர். இது ஸ்ரீநிவாஸனின் லீலையே ஆகும்.
படம் – (சற்றேறக்குறைய) ஆசார்ய முத்திரையில் உள்ள ஸ்ரீநிவாஸன் (திருப்பதி கோவிந்தராஜன்) பாஞ்சராத்ர ஆகம உபதேசம் செய்தபடி உள்ளானோ?

ஸ்ரீ தயா சதகம் – 46 November 26, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
பீமே நித்யம் பவ ஜலநிதௌ மஜ்ஜதாம் மாநவாநாம்
ஆலம்பார்த்தம் வ்ருஷகிரிபதி: த்வத் நிதேசாத் ப்ரயுங்க்தே
ப்ரஜ்ஞா ஸாரம் ப்ரக்ருதி மஹதா மூல பாகேந ஜூஷ்டம்
சாகா பேதை: ஸுபகம் அநகம் சாச்வதம் சாஸ்த்ர பாணிம்
பொருள் – இந்த உலகில் மனிதர்கள் ஸம்ஸாரம் என்னும் பயங்கரமான ஸமுத்திரத்தில் மூழ்கியபடி உள்ளனர். அவர்கள் கரையேறும் பொருட்டு – ஞானமே சாரமாகவும், பெருமை உடையதாகவும், ப்ரணவத்தின் மூலத்துடன் சேர்ந்ததாகவும், சாகைகள் என்ற விரல்கள் கொண்டதாகவும், தோஷங்கள் அற்றதாகவும் இருக்கும் சாஸ்த்ரம் என்னும் தனது அழகான திருக்கரத்தை உனது கட்டளைக்கு ஏற்ப ஸ்ரீநிவாஸன் நீட்டுகிறான்.
விளக்கம் – ச்லோகத்தின் பொருளிலேயே விளக்கம் தெளிவாக உள்ளதால், மேலும் விளக்கம் கூறப்படவில்லை.
படம் – தன்னுடைய அழகான திருக்கரம் நீட்டி, அதில் அபயஹஸ்த முத்திரையும் காண்பிக்கும் திருவேங்கடமுடையான் (நன்றி – tirupatitimes.com)

ஸ்ரீ தயா சதகம் – 45 November 25, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஸாரம் லப்த்வா கமபி மஹத: ஸ்ரீநிவாஸ அம்புராசே:
காலே காலே கந ரஸவதீ காளிகா இவ அநுகம்பே
வ்யக்த உந்மேஷா ம்ருகபதி கிரௌ விச்வம் ஆப்யாயயந்தீ
சீல உபஜ்ஞம் க்ஷரதி பவதீ சீதளம் ஸத் குண ஓகம்
பொருள் – தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் என்ற கடலில் இருந்து உயர்ந்த சாரத்தை நீ எடுத்துக் கொண்டாய். சரியான காலங்களில் பெய்யும் சரியான அளவுடன் கூடிய மழையைப் போன்று, நீ திருமலையை உனது குளிர்ந்த குணங்கள் மூலம் நனைக்கிறாய். இதன் மூலம் இந்த உலகம் முழுவதும் குளிர்வடையும்படிச் செய்கிறாய்.
விளக்கம் – கடல் நிறைய நீர் உண்டு. ஆனால் அந்த நீரை அப்படியே உபயோகிக்க இயலாது. அதில் உள்ள சாரத்தை மேகம் எடுத்து, மழையாகப் பெய்யும்போது மட்டுமே அந்த நீர் பயன்படும். இங்கு இது போன்று, ஸ்ரீநிவாஸனின் குணங்கள் என்பது நமக்கு நேரடியாகப் பயன் அளிக்காது. தயாதேவி மூலமாகவே, அவனது கடல் போன்ற குணங்கள் நமக்குப் பயன் அளிக்கும். மேலும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதம் பாராமல் மழை பெர்ய்வது போன்று, தயாதேவியும் தனது கருணை மழையை, ஏற்றத்தாழ்வு பாராமல் பொழிகிறாள்.
படம் – திருமலையில் உள்ள ஆகாசகங்கை. இதில் உள்ள நீரானது, ஸ்வாமி தேசிகன் கூறுவது போன்று ஸ்ரீநிவாஸன் என்னும் கடலில் இருந்து தயாதேவியால் எடுக்கப்பட்டதோ?

ஸ்ரீ தயா சதகம் -44 November 24, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
யஸ்மிந் த்ருஷ்டே தத் இதர ஸுகை: கம்யதே கோஷ்பதத்வம்
ஸத்யம் ஜ்ஞாநம் த்ரிபி: அவதிபி: முக்தம் ஆனந்த ஸிந்தும்
த்வத் ஸ்வீகாராத் தம் இஹ க்ருதிந: ஸூரி ப்ருந்த அநுபாவ்யம்
நித்ய அபூர்வம் நிதிம் இவ தயே நிர்விசந்தி அஞ்ஜந அத்ரௌ
பொருள் – ஸ்ரீநிவாஸன் மூன்று எல்லைகளை யும் கடந்து, ஸத்யம் – ஞானம் – ஆனந்தம் என்று நித்யசூரிகள் அனுபவிக்கும்படி உள்ளான். அவனைக் கண்டால் எந்தவித உலக விஷயங்களும், பசுவின் குளம்பு அடி அளவு போன்று அற்பமாக இருக்கும். இப்படிப்பட்ட ஆனந்தக் கடலாகிய அவனை, நீ உன்னுடையவனாக ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டாய். இதனால் இந்தப் பூமியில் உள்ளவர்கள் புண்ணியம் செய்தவர்களாக, ஸ்ரீநிவாஸனை திருமலையில் என்றும் உள்ள செல்வமாக அனுபவித்து வருகின்றனர்.
விளக்கம் – மூன்று எல்லைகள் என்பது என்ன? பரம்பொருளைத் தவிர்த்து மற்ற பொருள்கள் அனைத்தும் தேசபரிச்சேதம், காலபரிச்சேதம் மற்றும் வஸ்துபரிச்சேதம் என்னும் எல்லைக்கு உட்பட்டவையாகும். ஓர் இடத்தில் உள்ள பொருள் மற்றோர் இடத்தில் (அதே நேரத்தில்) இல்லை என்பது தேச பரிச்சேதம் ஆகும். பரம்பொருள் அனைத்து இடத்திலும் உள்ளதால் இந்த எல்லை கிடையாது. ஒரு பொருள் ஒரு நேரத்தில் உள்ளது, மற்றொரு நேரத்தில் இல்லாதது என்ற எல்லையுடன் காணப்படலாம். இது கால பரிச்சேதம் ஆகும். பரம்பொருள் மட்டுமே எப்போதும் உள்ளது. ஒரு பொருள் அந்தப் பொருளாக மட்டுமே இருக்கமுடியும், வேறொரு பொருளாக இருக்க முடியாது. இது வஸ்து பரிச்சேதம் ஆகும். பரம்பொருள் அனைத்துப் பொருள்களுமாகவே உள்ளது. ஆக பரம்பொருளான ஸ்ரீநிவாஸனுக்கு இந்த மூன்று எல்லைகளும் கிடையாது.
தைத்திரீய உபநிஷத் – பரம் பொருளை, “ஸத்யம், ஞானம், அனந்தம்”, என்று கூறியது. இங்கு ஸ்வாமி தேசிகன், அனந்தம் என்ற பதத்திற்குப் பதிலாக – த்ரிபி அவதிபீ முக்தம் – மூன்று எல்லைகளில் இருந்தும் விடுபட்டவன் என்று கூறினார்.
படம் – வேதங்கள் முழங்கும் “ஸத்யம் ஞானம் அனந்தம்” என்னும் ப்ரஹ்மமாகிய ஸ்ரீநிவாஸன். (நன்றி – tirupatitimes.com)

ஸ்ரீ தயா சதகம் -43 November 23, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
நாபீ பத்ம ஸ்ப்புரண ஸுபகா நவ்ய நீலோத்பல ஆபா
க்ரீடா சைலம் கமபி கருணே வ்ருண்வதீ வேங்கடாக்க்யம்
சீதா நித்யம் ப்ரஸதநவதீ ச்ரத்ததாந அவகாஹ்யா
திவ்யா காசித் ஜயதி மஹதீ தீர்க்கிகா தாவகீநா
பொருள் – தயாதேவியே! திருவேங்கடம் என்னும் மலையில் ஒரு பொய்கை (ஏரி) உள்ளது. அது உனதாக உள்ளது. மிகவும் பெரியதாகவும் உயர்ந்தும் குளிர்ந்தும் உள்ளது. உந்தியில் உள்ள தாமரை மலரால் மேலும் அழகு பெற்றது. கருநெய்தல் மலர் போன்ற ஒளி உடையது. நம்பிக்கை உள்ளவர்கள் நீராடும் இடமாக உள்ளது.
விளக்கம் – இங்கு ஸ்ரீநிவாஸனின் திருமேனியை ஒரு ஏரியாகக் கூறுகிறார். ஏரியின் நடுவில் தாமரை மலர் இருந்தால் அழகு பெறும் அல்லவா? இங்கு ஸ்ரீநிவாஸனின் நாபியில் உள்ள தாமரை மலரைக் கூறினார். கடும் கோடை நாள் ஒன்றில் நடந்து வந்த மனிதன், குளிர்ந்த நீர் உள்ள ஏரியைக் கண்டால் அதில் நீராடி இன்பம் அடைவான் அல்லவா? இதேபோன்று, தாபத்ரயத்தால் வாடும் மனிதர்கள் ஸ்ரீநிவாஸன் என்னும் ஏரி மூலம் இன்பம் அடையலாம். நம்மாழ்வார் – தாமரை நீள் வாச தடம் – என்று பகவான் தன்னிடம் தாமரை மலர் சூழ்ந்த மணம் வீசும் ஏரி போன்று வரவேண்டும் – என்றார். இதே கருத்தை அடியொட்டி, இவரும் கூறுவது காண்க.
ச்ரத்ததநா என்ற பதம் காண்க. இதன் பொருள் – யாருக்கு அவன் மீது நம்பிக்கையும், பக்தியும், அன்பும் உள்ளதோ அவர்களே நீராடுவார்கள் என்று கருத்து. இது ஆண்டாள் திருப்பாவையில் அருளிச்செய்த – நீராடப் போதுவீர் போதுமினோ – என்பதை அடியொட்டி உள்ளதைக் காண்க.
ஸ்வாமி தேசிகன் பகவானை – ஹரி ஸரஸ் – என்று முகுந்தமாலையிலும் வர்ணிப்பதைக் காணலாம்.
படம் – ஸ்ரீநிவாஸனே இங்கு காணப்படும் ஸ்வாமி புஷ்கரிணியாக இருக்கிறானோ?

ஸ்ரீ தயா சதகம் – 42 November 22, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ப்ராஜாபத்ய ப்ரப்ருதி விபவம் ப்ரேக்ஷ்ய பர்யாய து:க்கம்
ஜந்ம ஆகாங்க்ஷந் வ்ருஷகிரி வநே ஜக்முஷாம் தஸ்த்துஷாம் வா
ஆசாஸாநா: கதிசந விபோ: த்வத் பரிஷ்வங்க தந்யை:
அங்கீகாரம் க்ஷணம் அபி தயே ஹார்த்த துங்கை: அபாங்கை:
பொருள் – தயாதேவியே! ப்ரம்மன் முதலானவர்களின் செல்வத்தை ஒரு சில உயர்ந்தவர்கள் துன்பம் என்றே கருதவர். அப்படிப்பட்டவர்கள் – நீ அணைத்துக் கொள்வதாலும், அதனால் பெருமை பெற்றதாலும், உனது மகிழ்ச்சியால் உயர்வு பெற்றதாலும் ஆகிய ஸ்ரீநிவாஸனின் கடாஷம் என்பது தங்கள் மீது ஒரு நொடியாவது விழவேண்டும் என்று விரும்புகின்றனர். இதனை எதிர்பார்த்து திருமலையில் உள்ள அசையும் பொருளாகவோ அல்லது அசையாத பொருளாகவோ ஆகிய பிறவியை விரும்புகின்றனர்.
விளக்கம் – இங்கு குலசேகர ஆழ்வார் அருளிச்செய்த “ஊனேறு செல்வத்து” என்று தொடங்கும் பெருமாள் திருமொழியின் கருத்தைக் கூறுகிறார். அதில் ஆழ்வார் – குருகாய்ப் பிறப்பேன், மீனாய்ப் பிறப்பேன், தம்பமாய்ப் பிறப்பேன், பொன்வட்டிலாய்ப் பிறப்பேன் என்று கூறி, இறுதியில் “எம்பொருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே” என்று கூறினார். இங்கு இவ்வித விருப்பத்தை ஏன் உயர்ந்தவர்கள் மட்டுமே கொள்வதாகக் கூறினார்? காரணம் அவர்கள் ஸ்ரீநிவாஸனின் அழகான கண்களால் (அபாங்கி) பார்க்கப்பட்டு இவ்விதம் ஆயினர். மேலும் அந்தப் பார்வை – “ஹார்த்த துங்கை” – மிகவும் அன்பு நிறைந்த பார்வை என்று கூறினார். மேலும் அந்தப் பார்வை தயாதேவியால் அணைக்கபட்டது என்று கூறினார். ஸ்ரீநிவாஸனின் பார்வை ஒரு நொடி பட்டால் கூட, நம் வாழ்வு உயர்ந்ததாகும். இதனை வால்மீகி, “இராமனை யார் காணவில்லையோ, இராமன் யாரைக் காணாமல் உள்ளானோ, அப்படிபட்டவன் உலகினரால் பழிக்கப்படுவான்” என்றார். ஆக நாம் இவ்விதம் இருக்காமல், ஸ்ரீநிவாஸனின் பார்வை நம் மீது விழும்படி வாழவேண்டும்.
படம் – கடாக்ஷம் அலையென வீசும் திருப்பார்வையுடன் கூடிய ஸ்ரீநிவாஸன்.

ஸ்ரீ தயா சதகம் -41 November 21, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
1 comment so far
ஆஜ்ஞாம் க்க்யாதிம் தநம் அநுசராந் ஆதிராஜ்ய ஆதிகம் வா
காலே த்ருஷ்ட்வா கமல வஸதே: அபி அகிஞ்சித் கராணி
பத்மா காந்தம் ப்ரணிஹிதவதீம் பாலநே அநந்ய ஸாத்யே
ஸார அபிஜ்ஞா: ஜகதி க்ருதிந: ஸம்ச்ரயந்தே தயே த்வாம்
பொருள் – தயாதேவியே! இந்த உலகின் உண்மையான தன்மையை அறிந்த புண்ணியசாலிகள் – ஸ்ரீநிவாஸனின் திருநாபியில் உதித்த தாமரையில் வாழும் ப்ரம்மனின் கட்டளை, புகழ், செல்வம், அடியாட்கள், ஆளும் தன்மை ஆகிய அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிறிய பயனைக் கூட அளிக்க இயலாமல் காணாமல் போவதைக் காண்கின்றனர். ஆகையால் அவர்கள் மற்ற யாராலும் செய்ய இயலாத செயலாகிய அடியார்களைக் காக்கும் செயலை உடைய ஸ்ரீநிவாஸனையே வசப்படுத்திய உன்னைச் சரணம் என்று பற்றுகின்றனர்.
விளக்கம் – இந்த உலகில் மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவன் ப்ரம்மனாகிய நான்முகன் ஆவான். அவனது பதவியே ஒரு நேரத்தில் ஆட்டம் கண்டுவிடும் என்றால், நம் போன்ற அற்பர்களின் நிலை பற்றிக் கூறவும் வேண்டுமா? ப்ரம்மனின் ஆளும் தன்மை (ஆஜ்ஞாம்), புகழ் (க்யாதி), தனம், வேலையாட்கள் (அனுசராந்) மற்றும் உலக ஆட்சி (ஆதிராஜ்ய ஆதிகம்) ஆகிய அனைத்தும் ஒரு காலத்தில் ஏதும் இல்லாமல் போய்விடும். உதாரணமாக வேதங்களைத் தொலைத்துவிட்டு, ஏதும் செய்யாமல் ப்ரம்மன் நின்றான் அல்லவா? ஆகவே அனைத்தும் அறிந்தவர்கள் உன்னை நாடுகின்றனர். காரணம், இந்த உலகைக் காக்கும் ஸ்ரீநிவாஸனும், அந்தக் காக்கும் செயலை நீ கட்டளை இடுவதால் அல்லவோ செய்கிறான்?
படம் – அனைத்தையும் காக்கும் ஸ்ரீநிவாஸனின் களைப்பை நீக்குகின்றனரோ?

ஸ்ரீ தயா சதகம் – 40 November 20, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
த்வயி பஹுமதி ஹீந: ஸ்ரீநிவாஸ அநுகம்பே
ஜகதி கதிம் இஹ அந்யாம் தேவி ஸம்மந்யதே ய:
ஸ கலு விபுத ஸிந்தௌ ஸந்நிகர்ஷே வஹந்த்யாம்
சமயதி ம்ருகத்ருஷ்ணா வீசிகாபி: பிபாஸாம்
பொருள் – தயாதேவியே! இந்த உலகில் உள்ள ஒருவன் உன்னை மதித்து, உன்னை நாடாமல் மற்றொரு தெய்வத்தைப் பெரிதாக எண்ணக்கூடும். இப்படிப்பட்டவன் புனிதமான கங்கை ஓடும்போது, அதன் அருகில் உள்ள கானல் நீரில் தனது தாகத்தைத் தீர்க்க முயல்பவன் போன்றவன் ஆவான்.
விளக்கம் – ஸ்ரீநிவாஸனின் தயை என்பது நமது பாவங்கள் அனைத்தையும் தீர்க்கவல்ல நதி போன்று ஆகும். அந்த நதியானது அவன் கருணை என்னும் குளிர்ச்சியுடன், நமக்கு அருகிலேயே எப்போதும் வற்றாமல் ஓடியபடி உள்ளது. இதனை உணராத ஒருவன் வேறு ஒரு தெய்வத்தை அண்டுவது எப்படி உள்ளது என்றால் – கங்கை அருகில் உள்ளபோது, கானல் நீரைத் தேடி மான்கள் செல்லுவது போன்று ஆகும்.
ம்ருகத் த்ருஷ்ணா என்ற பதம் கானல் நீரைக் குறிக்கும். ம்ருகம் என்பது மான்களைக் குறிக்கும். அவை கானல் நீரை, உண்மையான நீர் என்று எண்ணி ஓடுவதால் இந்தப் பதம் இடப்பட்டது.
படம் – நமது பாவங்கள் அனைத்தையும் தீர்க்கவல்ல கங்கை போன்ற ஸ்ரீநிவாஸனுக்கு, தூய தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் நடைபெறும் காட்சி (நன்றி – tirupatitimes.com)


ஸ்ரீ தயா சதகம் -39 November 19, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
பரிமித பலஸங்காத் ப்ராணிந: கிம்பசாநா:
நிகம விபணி மத்யே நித்ய முக்த அநுஷக்தம்
ப்ரஸதநம் அநுகம்பே ப்ராப்தவத்யா பவத்யா
வ்ருஷகிரி ஹரிநீலம் வ்யஞ்ஜிதம் நிர்விசந்தி
பொருள் – பலன்களில் விருப்பம் உள்ள அற்ப மனிதர்கள் தங்கள் ஆசை காரணமாக வேதங்கள் என்ற கடைத்தெருவில் புகுந்து விடுகின்றனர். அவர்கள் மீது நீ கொண்ட அனுக்ரஹம் காரணமாக, அவர்கள் திருமலையின் நாயகனான இந்திர நீல மணியை அனுபவிக்கின்றனர்.
விளக்கம் – வேதங்கள் என்பது பல விஷயங்களும் உலவுகின்ற கடை வீதி போன்றதாகும். அங்கு அற்ப பலன்கள் முதல் உயர்ந்த மோக்ஷ பலன் வரை அனைத்தும் கிடைக்கும். அங்கு வரும் அற்ப மக்கள் சிலர், தங்களுக்குத் தேவையான அற்ப பலன்கள் மட்டுமே அளிக்கக்கூடிய பொருள்களை மட்டுமே அனுபவிப்பர் (அந்தப் பகுதிகளை மட்டுமே ஓதுவார்கள்). இதனைக் கண்ட தயாதேவி, “இங்கு மோக்ஷம் போன்ற உயர்ந்த பொருள்கள் கிடைக்கும்போது, இந்த மக்கள் அழியக்கூடிய பொருள்களை விரும்புகின்றனரே”, என்று வருத்தம் கொள்கிறாள். இந்நிலையில் அவர்களுக்காக மனம் இறங்கி, அவர்களை மோக்ஷ பாதையில் திருப்ப எண்ணி, ஸ்ரீநிவாஸன் என்னும் நீல மணியைக் காண்பிக்கிறாள்.
படம் – ஸ்வாமி தேசிகன் கூறும் நீலமணியானது, சின்னசேஷ வாஹனத்தில் பவனி வரும் காட்சி.



ஸ்ரீ தயா சதகம் – 58 December 8, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வ்ருஷகிரி க்ருஷ்ண மேக ஜநிதாம் ஜநி தாப ஹராம்
த்வத் அபிமதிம் ஸுவ்ருஷ்டிம் உபஜீவ்ய நிவ்ருத்த த்ருஷ:
பஹுஷு ஜலாசயேஷு பஹுமாநம் அபோஹ்ய தயே
ந ஜஹதி ஸத்பதம் ஜகதி சாதகவத் க்ருதிந:
பொருள் – தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் என்ற கரிய மேகத்தில் இருந்து, ஸம்ஸார தாபத்தை நீக்கவல்ல உனது அபிமானம் என்ற மழையைப் பொழிய வைக்கிறாய். புண்ணியம் செய்தவர்கள் – மழை நீரை மட்டுமே பருகி உயிர் வாழும் சாதகப்பறவை போன்று, இந்த மழையையே பருகியபடி உள்ளனர். இவ்விதம் இந்த மழையைக் கொண்டு, தங்கள் தாபம் நீங்கப் பெற்ற அவர்கள், இந்த வழியை விடாமல் உள்ளனர்.
விளக்கம் – இந்த உலகில் சாதகப்பறவை என்ற பறவையானது தனது தாகத்தைத் தீர்த்து கொள்ள, மழை நீரை மட்டுமே நம்பி இருக்கும். இந்தப் பறவையானது குளம் அல்லது ஆறுகளில் இருந்து நீரைப் பருகுவதற்காகக் குனிந்து முயற்சித்தால், அதன் தொண்டையில் உள்ள ஒரு குழி போன்ற அமைப்பு தடுத்துவிடும்.
இங்கு சரணாகதி செய்ய நினைப்பவர்களை சாதகப்பறவையாகவும், ஸ்ரீநிவாஸனின் கருணையை மழையாகவும் கூறினார். ஆக சரணாகதி செய்பவர்கள், சாதகப்பறவையானது மழை நீரை மட்டுமே எதிர்பார்ப்பது போன்று, ஸ்ரீநிவாஸனின் கருணையை மட்டுமே நினைத்தபடி இருக்கவேண்டும் என்று கருத்து.
படம் – ஸ்வாமி தேசிகன் கூறும் கருமேகம்.

ஸ்ரீ தயா சதகம் – 57 December 7, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஸகருண லௌகிக ப்ரபு பரிக்ரஹ நிக்ரஹயோ:
நியதிம் உபாதி சக்ர பரிவ்ருத்தி பரம்பரயா
வ்ருஷப மஹிதர ஈச கருணே விதரங்கயதாம்
ச்ருதி மித ஸம்பதி த்வயி கதம் பவிதா விசய:
பொருள் – தயா தேவியே! இந்த உலகில் உள்ள பிரபுக்களின் தயை என்பது அவர்களுக்கு வேண்டியவர்களிடம் உண்டாவதையும், வேண்டாதவர்களிடம் வெறுப்பு உண்டாவதையும் காணலாம். நன்கு அறிந்தவர்கள், இந்த விருப்பு-வெறுப்பு என்பது சக்கரம் போன்று மாறிமாறி வரும் என்று உணர்ந்து கொள்கின்றனர். இவ்விதம் அறிந்தவர்களுக்கு வேதங்கள் மூலம் கூறப்பட்ட உனது பெருமை பற்றி எவ்விதம் சந்தேகம் ஏற்படும்? (ஏற்படாது)
விளக்கம் – இந்த உலகில் உள்ள பிரபுக்கள் தங்களிடம் பணிவாக நடந்து கொள்பவர்களிடம் அன்புடனும், விரோதமாக நடப்பவர்களிடம் கோபத்துடனும் உள்ளனர். இந்த உலகில் உள்ள சாதாரண பிரபுக்களே இவ்விதம் நீதியுடன் நடக்கும்போது, ஸ்ரீநிவாஸன் அவரவர்கள் நடந்து கொள்ளும் முறைக்கு ஏற்ப பலன் தருவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்விதம் நடந்து கொண்டால் ஸ்ரீநிவாஸன் நம்மைக் கை விடமாட்டான் என்ற நம்பிக்கை வேண்டும். ஆக இந்த ச்லோகத்தில் சரணாகதிக்கு இன்றியமையாததாக உள்ள மூன்று செயல்கள் கூறப்பட்டுள்ளன. அவையாவன:
  1. ஸ்ரீநிவாஸன் விதித்தவற்றை ஏற்று நடப்பது
  2. அவன் விதிக்காதவற்றை செய்யாமல் இருப்பது
  3. அவன் கை விட மாட்டான் என்று மஹாவிச்வாசம் கொள்வது
படம் – இந்த முனிவர் போன்று நாமும் சாஸ்த்ரத்தை மீறாமல், அவனே கதி என்று இருந்தோம் என்றால், இங்கு முனிவரின் திருவடிகள் தன்னுடைய திருமார்பை உதைத்ததால் நோவுபட்டதோ என்று கனிவுடன் காண்பது போன்று, நம்மிடமும் வசப்படுவான்.

ஸ்ரீ தயா சதகம் – 56 December 6, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஜகதி மிதம்பசா த்வத் இதரா து தயே தரளா
பல நியம உஜ்ஜிதா பவதி ஸந்தபநாய புந:
த்வம் இஹ நிரங்குச ப்ரசகந ஆதி விபூதிமதீ
விதரஸி தேஹிநாம் நிரவதீம் வ்ருஷசைல நிதிம்
பொருள் – தயாதேவியே! இந்த உலகத்தில் உள்ள மற்ற தேவதைகளின் தயை என்பது அற்பமான பலன்களைத் தரவல்லது, நிலையற்றது, பயன் அளிக்கும் என்ற நிச்சயம் அல்லாதது, துன்பம் அளிக்கக்கூடியது ஆகும். நீ தடையில்லாத சக்தி மட்டும் ஐஸ்வர்யம் உடையவளாக இருந்து கொண்டு, இந்த உலகில் உள்ள அனைவருக்கும் திருமலையில் உள்ள ஸ்ரீநிவாஸன் என்ற நிதியை அளிக்கிறாய்.
விளக்கம் – சரணாகதிக்கு முக்கியமான சிந்தனை என்னவென்றால், பகவானைத் தவிர நம்மைக் காக்க வல்லவர்கள் வேறு யாரும் இல்லை என்ற சிந்தனையாகும். இந்த உலகில் ப்ரம்மன், இந்திரன் போன்ற பல தேவதைகள் இருந்தபோதிலும் அவர்களால் மோக்ஷம் என்ற பலனை அளிக்க இயலாது. அவர்கள் அளிக்கும் பலன்கள் – உயர்ந்த பலன்கள் அளிக்காதவை என்ற நிலையும், துன்பங்களையும் அளிக்கவல்ல நிலையும் கொண்டதாகும். நம்மாழ்வார் – அவ்வருள் அல்லன் அருளும் அல்ல – என்பது காண்க . இத்தகைய உயர்ந்த பலனை தயாதேவி மட்டுமே அளிக்க வல்லவள் ஆவாள். அவள் அளிக்கும் பலன் எது என்றால் ஸ்ரீநிவாஸனே ஆவான்.
படம் – தயாதேவி நமக்கு அளிக்கும் திருவேங்கடமுடையான் என்னும் செல்வம்.

ஸ்ரீ தயா சதகம் – 55 December 5, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
நிகம ஸமாச்ரிதா நிகில லோக ஸம்ருத்தி கரீ
பஜத் அக கூல முத்ருஜ கதி: பரிதப்த ஹிதா
ப்ரகடித ஹம்ஸ மத்ஸ்ய கமடா த்யவதார சதா
விபுத ஸரித் ச்ரியம் வ்ருஷகிரி ஈச தயே வஹஸி
பொருள் – நீ அனைத்து வேதங்களாலும் போற்றப்படுகிறாய். அனைத்து உலகிற்கும் செழுமை அளிக்கிறாய். உன்னை அண்டியவர்களின் பாவங்கள் என்ற கரையை உடைக்கும் நதியாக உள்ளாய். துன்பம் கொண்டவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறாய். அன்னம், மீன், ஆமை போன்றவற்றை உடைய கங்கையின் பெருமையை நீ கொண்டுள்ளாய்.
விளக்கம் – கங்கை வேதங்களாலே போற்றப்பட்டது; இதே போன்று தயாதேவியும் வேதங்களால் போற்றப்படுகிறாள். கங்கையானது தான் பாய்ந்து வரும் இடங்களை வளப்படுத்துகிறது; இதே போன்று தயாதேவி அனைவரையும் செழிக்க வைக்கிறாள். கங்கை தான் வரும் பாதையில் உள்ள கரைகளை உடைத்துப் பாய்கிறது. இதே போன்று தயாதேவியும் நமது பாவங்கள் என்னும் கரைகளை உடைக்கிறாள். கங்கையில் அன்னம், மீன், ஆமை முதலான உயிர்கள் ஆனந்தமாக உள்ளன. இதே போன்று தயாதேவி மூலம் ஸ்ரீநிவாஸன் ஹம்ஸம், மத்ஸ்யம் மற்றும் கூர்மம் முதலான அவதாரங்கள் எடுக்கிறான்.
படம் – தன்னை அடைந்து, நீராடுபவர்களை மட்டுமே கங்கை தூய்மைப்படுத்துகிறாள். ஆனால், ஸ்ரீநிவாஸனை மனதால் நினைத்தாலே போதுமானது; அவர்களை தயாதேவி தூய்மைப்படுத்திவிடுகிறாள்.

ஸ்ரீ தயா சதகம் – 54 December 4, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
Tags: 
add a comment
த்ருத புவநா தயே த்ரிவித கதி அநுகூல தரா
வ்ருஷகிரி நாத பாத பரிரம்பவதீ பவதீ
அவிதித வைபவா அபி ஸுரஸிந்து: இவ ஆதநுதே
ஸக்ருத் அவகாஹமாநம் அப தாபம் அபாபம் அபி
பொருள் – தயாதேவியே! இந்த உலகம் முழுவதையும் தாங்குபவளாக, மூன்றுவிதமான பலன்களுக்கு உதவியாக உள்ளவளாக, ஸ்ரீநிவாஸனின் திருவடிகளுடன் தொடர்பு கொண்டவளாக நீ உள்ளாய். இவ்விதம் உனது பெருமையை அறியாதபோதும் உன் தொடர்பு ஏற்பட்ட ஒருவன், புண்ணிய நீராகிய கங்கையில் நீராடியது போன்று தனது பாவம் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்.
விளக்கம் – இங்கு கங்கைக்கும் தயாதேவிக்கும் உள்ள ஒற்றுமையைக் கூறுகிறார். இவற்றை த்ரித புவந, த்ரிவித கதி அனுகூலதர, வ்ருஷகிரி நாத பாத பரிரம்பவதி – என்று விளக்குகிறார். த்ருத புவந என்றால் மூன்று உலகங்களையும் காப்பது என்பதாகும். கங்கையானது இந்த உலகிற்குத் தேவையான நீர் அளித்துக் காப்பதுபோல், இவள் கருணையால் காக்கிறாள். த்ரிவதகதி என்றால் மூன்றுவிதமான ஓட்டம் கொண்டது என்பதாகும். கங்கையானது – ஆகாயம், பூமி, பாதாளம் என்ற மூன்று இடங்களிலும் பாய்வது போன்று, இவள் ஐச்வர்யம், கைவல்யம், மற்றும் மோக்ஷம் ஆகியவற்றின் காரணமாக உள்ளாள். ஆக தயாதேவி ஐச்வர்யகாமன் (செல்வம் விரும்புபவன்), கைவல்யார்த்தி (பரமாத்மாவைவிடத் தனது ஆத்மாவை விருப்புவன்), மோக்ஷார்த்தி ஆகியவர்களுக்கு உதவுகிறாள். கங்கைக்கு மஹாவிஷ்ணுவின் திருவடித் தொடர்பு உள்ளது போல் இவளுக்கும் ஸ்ரீநிவாஸனின் திருவடிகளின் தொடர்பு உள்ளது.
படம் – தயாதேவி எவ்விதம் ஏற்றத் தாழ்வுகள் காணாமல் பொங்கிப் பாய்ந்து வந்து உதவுகிறாளோ, அதுபோன்று மேடுபள்ளம் பாராமல் பாய்ந்து வரும் கங்கையின் வெள்ளம் – ரிஷிகேஷ் அருகில்.

ஸ்ரீ தயா சதகம் – 53 December 3, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
Tags: 
add a comment
அபி கருணே ஜநஸ்ய தருண இந்து விபூஷணதாம்
அபி கமல ஆஸநத்வம் அபி தாம வ்ருஷாத்ரி பதே:
தரதமதா வசேந தநுதே நநு தே விததி:
பர ஹித வர்ஷ்மணா பரிபசேளிம கேளிமதீ
பொருள் – மற்றவர்களுக்கு நன்மை செய்வதை மட்டுமே குறிக்கோளாக உள்ள வடிவம் எடுத்த தயாதேவியே! உனது லீலைகள் எவ்விதம் உள்ளது என்றால் – உன்னை அண்டியவர்களின் தன்மைக்கு ஏற்ப இளம் சந்திரனை தலையில் சூடிய சிவனின் பதவியையும், தாமரையில் அமர்ந்த ப்ரம்மனின் பதவியையும், ஸ்ரீநிவாஸனின் இடமாகிய பரமபதத்தையும் அளிக்க வல்லதாகும்.
விளக்கம் – மிகுந்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவன் சிவனாகவோ அல்லது சிவனைவிட மேம்பட்ட ப்ரம்மனாகவோ ஆகமுடியும். இதனை தயாதேவியே செய்விக்கிறாள். இதனையும் மீறி மோக்ஷத்தை விரும்பி, அதற்கான உபாயமான ஸ்ரீநிவாஸனைக் கைக்கொண்டால் பரமபதத்தை அளிக்கிறாள்.
இங்கு மற்ற தெய்வங்களைத் தூஷிக்காமல் ஸ்வாமி தேசிகன் அழகான பதங்கள் மூலம் அவர்களைக் கூறுவது காண்க. தருண இந்து விபூஷணதாம் என்பது சிவனைக் குறிக்கும். கமல ஆஸன என்பது ப்ரம்மனைக் குறிக்கும்.
படம் – இந்தச் சிவபதவியும், ப்ரம்ம பதவியும் ஸ்ரீநிவாஸன் மூலமாக, தயாதேவியே அளிக்கிறாள்.

ஸ்ரீ தயா சதகம் – 52 December 2, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
Tags: 
add a comment
அபிமுக பாவ ஸம்பத் அபிஸம்பவிநாம் பவிநாம்
க்வசித் உபலக்ஷிதா க்வசித் அபங்குர கூடகதி:
விமல ரஸ ஆவஹா வ்ருஷகிரி ஈச தயே பவதீ
ஸபதி ஸரஸ்வதீ இவ சமயதி அகம் அப்ரதிகம்
பொருள் – தயாதேவியே! ஸரஸ்வதி நதியானது ஒரு சில இடங்களில் கண்ணுக்குப் புலப்பட்டும், ஒரு சில இடங்களில் புலப்படாமலும் தடையில்லாமல் ஓடுவது போன்று நீயும் உள்ளாய். எப்படி எனில் – தெளிவாக உள்ள அன்பு என்பதைக் கொண்டு உன்னிடம் வருபவர்களின் தீராத பாவங்களை நீக்கி, வற்றாத செல்வம் அளிக்கிறாய்.
விளக்கம் – இங்கு மறைவதும் தெரிவதும் ஆகிய தன்மைகளுடன் நதி ஓடுவதாக ஏன் கூறவேண்டும்? நமக்குத் துன்பங்கள் ஏற்படுவது என்பது, நம்மை நல்வழியில் திருத்துவதற்காக, ஸ்ரீநிவாஸன் தனது கருணையால் அந்த நிலையை உண்டாக்குவதே ஆகும். இந்த நிலையில் தயாதேவி மறைமுகமாக உதவி செய்கிறாள். நமது பாவம் அனைத்தும் பலவிதமான துன்பம் என்ற தண்டனை மூலம் நீக்கப்படுகின்றன. ஆனால் வெளிப்பார்வைக்கு இது துன்பம் போன்று தோன்றலாம். இத்தகைய பாவங்கள் நீங்கினால் மட்டுமே மோக்ஷம் பெற இயலும் என்பதால் பாவங்களுக்கான ப்ராயச்சித்தம் துன்பம் என்னும் வடிவில் வருகிறது.
த்ரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி கலப்பதை நாம் காண்கிறோம். இந்த இடத்தில் கங்கையும் யமுனையும் போன்று நம்மால் ஸரஸ்வதீயைக் காண இயலவில்லை. இதன் காரணம் அவள் மறைமுகமாகக் கலப்பதே ஆகும். இதே போன்று தயாதேவியும் நமக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் உதவியபடி உள்ளாள்.
படம் – ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்மபூமியாம் குருக்ஷேத்ரத்தின் அருகில் உள்ள ஸரஸ்வதி நதியின் அழகான தோற்றம்.

ஸ்ரீ தயா சதகம் – 51 December 1, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
Tags: ,,
add a comment
அடுத்த பத்து ச்லோகங்களுக்கு ஓர் அறிமுகம்
மோக்ஷம் கிட்டுவதற்கு முன்னால் ஒருவனது பாவங்கள் அழியவேண்டும். இதனை மேலே கூறினார். இனி அடுத்த கட்டமாக இந்த பத்து ச்லோகங்களில் சரணாகதி செய்ய போகிறார். சரணாகதி என்பது ஸ்வாமி தேசிகன் இந்த உலகிற்கு அளித்த மிகப் பெரிய பரிசாகும். இதனை மோக்ஷத்திற்கான நேரடிப்பாதை என்று இவரே உபதேசித்தார்.
அதிக்ருபண: அபி ஜந்து: அதிகம்ய தயே பவதீம்
அசிதில தர்ம ஸேது பதவீம் ருசிராம் அசிராத்
அமித மஹா ஊர்மி ஜாலம் அதிலங்க்ய பவ அம்புநிதிம்
பவதி வ்ருஷாசல ஈச பத பத்தந நித்ய தநீ
பொருள் – தயாதேவியே! எந்த விதமான உதவியும் இல்லாத ஒருவன் – மிகவும் அழகானதும், அழியாததும், பகவானை அடையும் பாலம் போன்றதும் ஆகிய உன்னைச் சரணம் என்று அடைந்துவிட்டால் போதும். இன்பம், துன்பம் என்று மாறிமாறி எழும் அலைகள் நிறைந்த ஸம்ஸாரக் கடலில் இருந்து மீண்டு, ஸ்ரீநிவாஸனின் திருவடி என்ற அழியாத செல்வத்தைப் பெற்று விடுகிறான்.
விளக்கம் – இந்தச் ச்லோகத்தில் (51) சரணாகதி அடையும் வழியைக் கூறிவிட்டு, 59 ஆவது ச்லோகத்தில் இந்த வழியை உபதேசித்த ஆசார்யர்களைத் துதித்து, 60 வது ச்லோகத்தில் சரணாகதி செய்கிறார்.
சரணாகதிக்கு வேண்டிய முக்கியமான தகுதியானது ஆகிஞ்சன்யம் மற்றும் அனன்யகதித்வம் – வேறு எந்த உதவியும் இல்லாதவன், இவனைத் தவிர்த்து கதி இல்லாதவன் – என்பதாகும். இவை மிகவும் அவசியமாகும்.
இங்கு தயாதேவியை ஸம்ஸாரம் என்ற கடலைக் கடக்க உதவும் பாலமாக உருவகம் செய்து கூறுகிறார்.
படம் – சரணாகதிக்கு உபாயமான திருமலையில் உள்ள திருவேங்கடமுடையானின் திருவடிகள்.

ஸ்ரீ தயா சதகம் – 50 November 30, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
திவ்ய அபாங்கம் திசஸி கருணே யேஷு ஸத் தேசிக ஆத்மா
க்ஷிப்ரம் ப்ராப்தா: வ்ருஷகிரி பதிம் க்ஷத்த்ரபந்து ஆதய: தே
விச்வ ஆசார்யா: விதி சிவ முகா: ஸ்வ அதிகார உபருத்தா:
மந்யே மாதா ஜட இவ ஸுதே வத்ஸலா மாத்ருசே த்வம்
பொருள் – தயாதேவியே! நீ ஒருவனுக்கு அருள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, உன் கடைக்கண் பார்வையை வைத்தால் போதும். அவர்களின் ஆசார்ய உருவமாக நீயே வந்து, அவர்கள் க்ஷத்திரபந்து போன்று பாவம் செய்தவர்களாக இருந்தாலும் ஸ்ரீநிவாஸனை அடைந்து விடுவர். உலகின் ஆசார்யர்களாக உள்ள ப்ரம்மன், சிவன் முதலானோர் தங்களுடைய பதவிகளில் கட்டுண்டு மோக்ஷம் பெறாமலேயே இருந்து விடுகின்றனர். மந்த புத்தியுள்ள குழந்தையிடம் தாய் சற்று அதிகமான அன்பு வைப்பது போல என் போன்றவர்கள் விஷயத்தில் உனக்கு அதிகமான அன்பு உண்டு என்று நினைக்கிறேன்.
விளக்கம் – க்ஷத்ரியர்களில் மிகவும் தாழ்ந்தவன் க்ஷத்திரபத்து என்பவன் ஆவான். இவன் காடு மலைகள் எங்கும் அலைந்து, ஒரு ரிஷி மூலமாக, “கோவிந்தா”, என்ற திருநாம உபதேசம் பெற்று மோக்ஷம் அடைந்தான். இப்படிப்பட்டவனை திருத்திய அந்த ரிஷி போன்ற வடிவங்களிலேயே தயாதேவி வருவதாகக் கூறுகிறார்.
இந்த உலகிற்கே குருவாக விளங்கும் ப்ரம்மன், சிவன் முதலானோர் மோக்ஷம் பெற அனைத்து தகுதிகளும் உடையவராக இருந்தாலும் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரே மோக்ஷம் பெறுகின்றனர். இப்படி உள்ளபோது, பாவம் செய்தவர்கள் கூட ஆசார்யனை அண்டினால் மோக்ஷம் கிட்டி விடும் என்பது எப்படி என்று சாத்தியமாகும்? இதற்கு விடையாக – சாமர்த்தியம் உள்ள குழந்தைகளை விட மந்தமான புத்தி உள்ள குழந்தைகளிடம் தாய்க்கு அன்பு அதிகமாக இருக்கும். இதனால் க்ஷத்திரபந்து போன்றவர்கள் மோக்ஷம் பெறுகின்றனர் என்றார்.
படம் – எம்பெருமானாரின் அழகான திருமேனி, பெரியகோயிலில் சேவை ஸாதிக்கிறபடி. இந்த ஆசார்யனாக வந்ததும் தயாதேவியே என்கிறார் ஸ்வாமி தேசிகன்.


ஸ்ரீ தயா சதகம் – 49 November 29, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ச்ரேயஸ் ஸூதிம் ஸக்ருதபி தயே ஸம்மதாம் ய: ஸகீம் தே
சீத உதாராம் அலபத ஜந: ஸ்ரீநிவாஸஸ்ய த்ருஷ்டிம்
தேவ ஆதீநாம் அயம் அந்ருணதாம் தேஹவத்தவே அபி விந்தந்
பந்தாந் முக்தோ பலிபி: அநகை: பூர்யதே தத் ப்ரயுக்தை:
பொருள் – தயாதேவியே! உனது தோழியாக உள்ளதும், மோக்ஷம் அளிப்பதும், குளிர்ச்சியாக உள்ளதும் ஆகிய ஸ்ரீநிவாஸனின் கடைக்கண் பார்வையை ஒரு முறையாவது பெற்று விட்டால் நிகழ்வது என்ன? அப்படிப்பட்ட மனிதன், இந்த உடலுடன் இருக்கும்போதே ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டவனாகவும், தேவர்கள் முதலானோரின் கடன்களில் இருந்து விடுபட்டவனாகவும், தேவர்களால் அளிக்கப்பட்ட உயர்ந்த அன்பளிப்புகளைப் பெற்றவனும் ஆகிறான்.
விளக்கம் – ஒரு மனிதன் பிறக்கும் நேரத்திலேயே, அவனது முன்வினைப் பயன் காரணமாக பகவானின் கடைக்கண் பார்வை, அவன் மீது விழக்கூடும். இதனை ஜாயமாந கடாக்ஷம் என்பார்கள். இந்தக் கடாக்ஷம் ஏற்பட்டால் ஆசார்ய தொடர்பு கிட்டி, மோக்ஷத்திற்கான ப்ரபத்தியை செய்து கொள்வான். இப்படிப்பட்ட கடாக்ஷம், அந்த மனிதனுக்கு மோக்ஷம் கிட்டும் வரையில் அவனுக்கு நேரும் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி நன்மை செய்தபடி இருக்கும். இந்தக் கடைக்கண் பார்வை மூலம் ப்ரபத்தி கைகூடியவனுக்கு வரும் நன்மைகளை எண்ண இயலாது.
உடல் உள்ளவரை ஒரு மனிதன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கடன்பட்டபடியே உள்ளான். தேவர்களின் கடன் அவிர்பாகம் அளிப்பதாலும், முனிவர்களின் கடன் வேதங்கள் கற்பதாலும், பித்ருக்களின் கடன் வம்சத்தை உருவாக்குவதாலும் அடைக்கப்படும். ஆனால் இந்தக் கடன்கள் அனைத்தும் ப்ரபத்தி மூலம் கழிந்து விடுகின்றன.
படம் – மிகவும் அபூர்வமான நேத்ர தர்சன புகைப்படம்.


ஸ்ரீ தயாசதகம்-68 December 18, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஜகத் ஜந்ம ஸ்த்தேம ப்ரளய ரசநா கேளி ரஸிக:
விமுக்தி ஏக த்வாரம் விகடித கவாடம் ப்ரணயிநாம்
இதி த்வயி ஆயத்தம் த்விதயம் உபதீக்ருத்ய கருணே
விசுத்தாநாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத: ஸ்துதிபதம்
பொருள் – தயாதேவியே! இந்த உலகில் உள்ள அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கின்ற செயல்கள் என்னும் விளையாட்டின் மீது மிகுந்த சுவை சொண்டவனாக உள்ளான்; தன் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்தவர்களுக்கு மோக்ஷம் என்ற கதவைத் திறந்து அதன் உள்ளே செல்லும் வழியாக உள்ளான். இப்படிப்பட்ட இரண்டு தன்மைகளும் உன் வசப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீநிவாஸன் இந்த இரண்டு தன்மைகளையும் உன்னிடமிருந்து கைக்கொண்டதன் காரணமாக வேத வரிகளால் போற்றப்படக் கூடியவனாக உள்ளான்.
விளக்கம் – வேதங்கள் இவனைத் தவிர வேறு யாரையும் புகழ்வதில்லை. இவனை அவை இரண்டு காரணங்களுக்காக மிகவும் புகழ்கின்றன. ஒன்று – இவன் படைத்து, காத்து, அழிக்கவும் செய்கிறான்; இரண்டு – மோக்ஷம் பெறத் தகுதி உள்ள ஜீவனுக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்து, மோக்ஷம் அளிக்கிறான்.
இங்கு கேளி என்ற பதமும், ரஸிக என்ற பதமும் காண்க. இவற்றின் மூலம் இந்தச் செயல்களை ஸ்ரீநிவாஸன் யாருடைய கட்டளைக்கு இணங்கவும் செயயவில்லை என்பதும், தன்னுடைய விளையாட்டிற்காகவே செய்கிறான் என்றும் விளங்கும்.
ப்ரணயிநாம் என்ற பதம் காண்க. தன்னிடம் சரணம் அடைந்தவர்களை வெறும் சரணாகதர்கள் என்று அவன் நினைப்பதில்லை. தன்னை விரும்பும் நண்பனாகவும், தனது காதலனாகவும் அவர்களைப் பார்க்கிறான். இப்படிப்பட்டவர்களுக்கு அவன் மோக்ஷம் என்ற பரிசை அளிக்கிறான். இங்கு மோக்ஷம் எனபது அவனாகவே நமக்கு அளிக்கும் பரிசு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
படம் – வேதங்களால் போற்றப்படும் மலையப்பன் (நன்றி – ஓம்கார ஆடியோஸ்)

ஸ்ரீ தயாசதகம்-67 December 17, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
sl67.jpg
தயே துக்த உதந்வத் வ்யதியுத ஸுதாஸிந்து நயத:
த்வத ஆச்லேஷாத் நித்யம் ஜநித ம்ருத ஸஞ்ஜீவந தசா:
ஸ்வதந்தே தாந்தேப்ய: ச்ருதி வதந கர்ப்பூர குளிகா:
விஷுண்வந்த: சித்தம் வ்ருஷ சிகரி விச்வம்பர குணா:
பொருள் – திருமலையில் நின்றபடி இந்த உலகத்தைத் தாங்கி நிற்கும் ஸ்ரீநிவாஸனுடைய திருக்கல்யாண குணங்களில் உன்னுடைய சேர்க்கையும் தெரிகிறது. இதனால் நடப்பது என்ன? திருபாற்கடலுடன் அமிர்தக் கடல் கலந்தால், எவ்விதம் இறந்தவர்களையும் பிழைக்க வைக்கும் சக்தி உண்டாகிறதோ அது போன்று – வேதங்களின் வாயில் கர்ப்பூரக் குளிகைகள் போன்றும், இந்த்ரியங்களை வென்றவர்களுக்கு ரசிக்கும்படியும் உள்ளன.
விளக்கம் – கடந்த ச்லோகத்தில் ப்ரம்மன், ருத்ரன் மற்றும் இந்திரன் ஆகியோர் சிறப்பது தயாதேவியால் மட்டுமே என்றார். இந்தச் ச்லோகத்தில், ஸ்ரீநிவாஸனின் குணங்கள் சிறப்பதும் இவளாலேயே என்றார். தயாதேவி இல்லை என்றால், ஸ்ரீநிவாஸனின் குணங்களும் குற்றங்களாகிவிடும் என்று 15-ஆவது ச்லோகத்தில் கூறினார். இங்கு தயாதேவியின் பெருமைகளை பல விதமாகக் கூறுகிறார். அவையாவன:
1. ஸ்ரீநிவாஸனின் குணங்களுடன் இவள் சேரும்போது, திருப்பாற்கடலுடன் அமிர்தம் சேர்வது போன்றுள்ளது என்றார். அமிர்தம் எவ்வாறு இறந்தவர்களையும் பிழைக்க வைக்குமோ அதுபோன்று, தயாதேவி மூலமாக அறிவிழந்த பலரும் ஞானம் பெறுகின்றனர்.
2. கர்ப்பூர உருண்டைகளை வாயில் அடக்கிக் கொண்டால் நறுமணம் வீசும். இது போன்று தயாதேவி வேதங்களில் புகுந்து அவை ஸ்ரீநிவாஸனின் குணங்களைப் போற்றுவதன் மூலம் மேலும் மணம் பெறச் செய்கிறாள்.
3. புலன்களை வென்றவர்களுக்கு தயாதேவி மிகுதியான இன்பம் அளிக்கிறாள்.
படம் – தயாதேவியால் தனது திருக்கல்யாண குணங்கள் மேன்மை பெற்ற ஸ்ரீநிவாஸன்.

ஸ்ரீ தயாசதகம் -66 December 16, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
த்வயா த்ருஷ்ட: துஷ்டிம் பஜதி பரமேஷ்டி நிஜபதே
வஹந் மூர்த்தி: அஷ்டௌ விஹரதி ம்ருடாநீ பரிப்ருட:
பிபர்த்தி ஸ்வாராஜ்யம் வ்ருஷ சிகரி ச்ருங்காரி கருணே
சுநாஸீர: தேவ அஸுர ஸமர நாஸீர ஸுபட:
பொருள் – திருவேங்கடமலைக்கு ஆபரணமாக உள்ள ஸ்ரீநிவாஸனின் தயாதேவியே! மிக உயர்ந்த இடத்தில் உள்ள ப்ரம்மன் உனது பார்வையால் கடாக்ஷம் பெற்ற தன்னுடைய இருப்பிடத்தில் மகிழ்வுடன் உள்ளான். உன்னுடைய பார்வையைப் பெற்ற பார்வதியின் நாயகனான சிவன் எட்டு மூர்த்திகளுடன் சுகமாக உள்ளான். உனது பார்வை பெற்றவனும், தேவ அசுரர்களின் யுத்தத்தில் வென்றவனும் ஆகிய இந்திரன் தேவலோகத்தை ஆள்கிறான்.
பொருள் – இந்தச் ச்லோகத்தின் மூலம் ப்ரம்மன், ருத்ரன் மற்றும் இந்திரன் ஆகியோர் தங்களது அதிகாரப் பதவியில் இருப்பது தயாதேவியின் காரணமாகவே என்றார்.
படம் – இவர்கள் தங்கள் பதவியில் உள்ளதே பாதுகையால்தான் என்றார்.

ஸ்ரீ தயா சதகம் – 65 December 15, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
நிஷாதாநாம் நேதா கபிகுலபதி: காபி சபரி
குசேல: குப்ஜா ஸா வ்ரஜ யுவதய: மால்யக்ருத் இதி
அமீஷாம் நிம்நத்வம் வ்ருஷ கிரி பதே உந்நதிம் அபி
ப்ரபூதை: ஸ்ரோதேபி: ப்ரஸபம் அனுகம்பே ஸமயஸி
பொருள் – தயாதேவியே! வேடர்களின் தலைவனான குகன், குரங்குகளின் அரசனான சுக்ரீவன், காட்டுப் பெண்ணான சபரி, கிழிந்த உடை அணிந்த குசேலன், கூனியான குப்ஜை, இடைப்பெண்களான கோபிகைகள், மாலை தொடுப்பவன் – இப்படியாகப் பலரது தாழ்வையும், ஸ்ரீநிவாஸனின் உயர்வையும் உன்னுடைய கருணை என்ற வெள்ளம் மூலமாக ஒன்றாக்குகிறாய்.
விளக்கம் – பகவானின் மிகவும் உயர்ந்த குணம் ஸௌசீல்யம் என்பதாகும். இது உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பேதம் பாராமல் அனைவருடனும் கலந்து பழகும் தன்மையாகும். இந்தச் ச்லோகம் மூலம் தயாதேவி பகவானின் இந்தக் குணம் வெளிப்படும்படிச் செய்வதை உணர்த்துகிறார்.
இங்கு இராமாயணத்தில் இருந்து மூன்று உதாரணங்களும், பாகவதத்திலிருந்து நான்கு உதாரணங்களும் கூறப்படுகின்றன. முதலாவதாக கூறப்பட்டவன் குகன் ஆவான். இவன் இராமனால் – எனது தோழன் இவன் – எனப்பட்டவன் ஆவான். அடுத்து சுக்ரீவன் கூறப்பட்டான். இராமன் சுக்ரீவனிடம், “உனக்கு ஒரு ஆபத்து வரும் என்றால், சீதை என்னிடம் வந்து என்ன பயன்?”, என்றான். அடுத்துக் கூறப்பட்டவள் சபரி ஆவாள். இவள், தான் உண்ட பழம் சுவையாக இருந்தால் மட்டுமே இராமனுக்கு அளித்தாள். அதனையும் இராமன் ஏற்றான்.
இராமன் தொடக்கத்தில் இருந்தே மனிதனாகத் தன்னை காட்டிக் கொண்டதால் அவனிடம் இந்த சீல குணம் வெளிப்படுவது வியப்பில்லை. ஆனால் கண்ணன் பிறந்தது, வளர்ந்தது போன்ற ஒவ்வொரு நிலையிலும் தன்னைப் பரம்பொருளாகவே வெளிப்படுத்தினான். அவன் பலரிடமும் இதே சீல குணத்தை காண்பித்தான். அவன் (கண்ணன்) மிக உயர்ந்த நிலையில் உள்ளபோது, தன்னை நாடி வந்த ஏழையான குசேலனுக்கு அளித்த கௌரவத்தில் அவன் சீலம் வெளிப்பட்டது. குப்ஜை என்ற கூனிப்பெண் கம்சனுக்குச் சந்தனம் அரைத்து எடுத்துச் செல்லும் போது, எதிரில் வந்த கண்ணனுக்கு அந்தச் சந்தனத்தை பூசினாள். அவனும் உடனே அவளது ஊனத்தை நேர்படுத்தினான்.
அடுத்து ஏதும் அறியாத, ஆண்டாள் கூறியது போல் – அறிவு ஒன்றும் இல்லா ஆய்குலம் – என்னும் இடையர்களுடன் சரிசமமாகக் கலந்து பழகினான். அடுத்து மதுராவில் மாலை தொடுத்துப் பிழைப்பு நடத்திய மாலை கட்டும் ஒருவன் வீட்டுக்குச் சென்று, அவனைக் கௌரவம் செய்தான். இவை அனைத்தும் தயாதேவியின் செயல்களே ஆகும் என்றார்.
படம் – சீலத்தின் எல்லை வெளிப்பட்ட திருஅவதாரங்கள்.

ஸ்ரீ தயா சதகம் – 64 December 14, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அபாம் பத்யு: சத்ரூந் அஸஹந முநே: தர்ம நிகளம்
க்ருபே காகஸ்ய ஏகம் ஹிதம் இதி ஹிநஸ்தி ஸ்ம நயநம்
விலீந ஸ்வாதந்த்ரிய: வ்ருஷகிரி பதி: த்வத் விஹ்ருதிபி:
திசதி ஏவம் தேவ: ஜநித ஸுகதிம் தண்டன கதிம்
பொருள் – தயாதேவியே! திருவேங்கடமுடையான் உனது லீலைகள் காரணமாகத் தனது சுதந்திரத்தை இழந்து உன்னிடம் வசப்பட்டு நிற்கிறான். இதனால் அவன் செய்தது – ஸமுத்திரராஜனின் பகைவர்களை அழித்தான்; இராமனின் பெருமையை பொறுத்துக் கொள்ள முடியாத பரசுராமனின் புண்ணியம் என்ற விலங்கை அழித்தான்; காகாசுரனின் ஒரு கண்ணை நீக்குவது அவனுக்கு நன்மை என்று கருதி அழித்தான். இப்படியாக தண்டனை வழங்கும் செயலையும் நன்மை விளையும்படிச் செய்கிறான்.
விளக்கம் – கடந்த ச்லோகத்தில் தயாதேவியின் செயல்களால் ஸ்ரீநிவாஸன் தண்டிப்பது இல்லை என்று கூறினார். இந்தச் ச்லோகத்தில் அவன் அப்படியே தண்டித்தாலும் அந்த தண்டனை நன்மை அளிக்கும்படியாக உள்ளது என்று கூறுகிறார். இங்கு இராமாயணத்தில் இருந்து மூன்று உதாரணங்களைக் கூறுகிறார். கடலைக் கடப்பதற்காக வெகு நேரம் காத்து இருந்த ராமன், ஸமுத்திரராஜன் வராத காரணத்தால் கோபத்துடன், “இந்தச் ஸ்முத்திரத்தையே வற்றச் செய்து விடுகிறேன். வானரங்கள் அதன் பின்னர் மண் மீதே நடந்து போகலாம்”, என்று கூறி அம்பைத் தொடுத்தான். அந்த நேரத்தில் பதறியபடி ஓடிவந்த ஸமுத்திரராஜனைக் கண்டு சாந்தமானான். ஆனால் தொடுத்த ராமபாணம் வீணாகிவிடக்கூடாது என்பதால் அந்த அம்பை, ஸமுத்திரராஜனின் பகைவர்கள் மீது ஏவினான். இங்கு ஸமுத்திரராஜனை அபாம் பதி: என்றதைக் காண்க. இதன் பொருள் – புண்ணிய நதியின் கணவன் என்பதாகும். இவ்விதம் ஸ்வாமி தேசிகன் கூறுவதற்குக் காரணம் உள்ளது. கோபத்துடன் நின்ற ராமனிடம் ஓடி வரும்போது ஸமுத்திரராஜன தனியாக வராமல், கங்கை – யமுனை போன்ற தனது மனைவிகள் சூழ வந்ததாக வால்மீகீ கூறுகிறார். இதனை சுட்டிக் காட்டவே ஸ்வாமி இந்தப் பதத்தைச் சாமர்த்தியமாக அமைத்தார்.
இராமன் சீதையை மணம் முடித்து வரும்போது எதிரில் வந்த பரசுராமன் அவனை எதிர்த்தார். அப்போது இராமன் தனது வில்லை முறித்தபோது, அதனை எங்கு விடுவது என்று பரசுராமனையே கேட்க, அவரது வேண்டுகோளின்படி அவரது புண்ணியங்கள் மீதே தொடுத்தான். இதன் மூலம் பரசுராமன் மோக்ஷம் பெறத் தடையாக இருந்த அவரது புண்ணியங்கள் என்ற விலங்கு நீங்கியது. இங்கு பரசுராமனை அஸஹந முநி – பொறுமை இல்லாத முனிவர் – என்று முரணாகப் பதங்கள் இட்டு குறிப்பிட்ட சாமர்த்தியம் காண்க.
அடுத்து சீதையின் ஸ்தனங்களைக் கொத்திய காகாசுரனைப் பற்றிக் கூறுகிறார். இதனைக் கண்ட இராமன் ஒரு புல்லை எடுத்து, அதனையே ப்ரஹ்மாஸ்திரமாக ஏவினான். எங்கும் சுற்றிய காகம், இராமனின் திருவடிகளிலேயே சரணம் என்று புகுந்தது. ஆனால் தனது பாணம் வீணாகக் கூடாது என்பதற்காக, அதன் ஒரு கண்ணை மட்டும் பறித்தான்.
படம் – ஸ்வாமிக்கு ஸ்ரீநிவாஸன் இராமனாகவே தோன்றினான் போலும். இராமன், பெரியகோயிலில் சேவை ஸாதிக்கிறபடி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ தயா சதகம் – 63 December 13, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அநந்ய அதீந: ஸத் பவதி பரதந்த்ர: ப்ரணமதாம்
க்ருபே ஸர்வ த்ரஷ்டா ந கணயதி தேஷாம் அபக்ருதிம்
பதி: த்வத் பாரார்த்த்யம் ப்ரதயதி வ்ருஷ க்ஷமாதர பதி:
வ்யவஸ்த்த்தாம் வையாத்யாத் இதி விகடயந்தீ விஹரஸி
பொருள் – தயாதேவியே! திருவேங்கடத்தின் சக்ரவர்த்தியாகிய ஸ்ரீநிவாஸன் யாருக்கும் வசப்பட்டவன் அல்லன். இவ்விதம் சுதந்திரமான அவன் செய்வது என்ன? தன்னை வணங்குபவர்கள், தன்னிடம் சரணம் அடைந்தவர்கள் இட்டதே தனக்குச் சட்டம் என்று அவர்களிடம் வசப்பட்டு நிற்கிறான். அனைத்தையும் எப்போதும் காண்பவனாக உள்ளபோதிலும், தன்னிடம் சரணம் புகுந்தவர்களின் குற்றங்களை அவன் கணக்கில் கொள்ளுவதில்லை. உனக்கு அவன் கணவனாக இருந்தபோதிலும், உனக்கு அடிமை என்றே தன்னைக் காண்பித்துக் கொள்கிறான். இப்படியாக நீ வரம்பை மீறியபடி, அவனிடம் தைரியமாக விளையாடுகிறாய் போலும்.
விளக்கம் – அவன் அனைவருக்கும் எஜமானனாக உள்ளவன், சுதந்திரன் என்றே அனைவரும் போற்றுகின்றனர். ஆனால் நீ உனது செயலால் அவனைச் சரணம் அடைந்தவர்களிடம், அவன் கீழ்ப்படிந்து நடக்கும்படிச் செய்கிறாய். க்ருஷ்ண கர்ணாம்ருதத்தில் லீலா சுகர் கூறியது போன்று தேர் ஓட்டுவது, குதிரைகளை கழுவுவது, தூது செல்வது போன்ற செயல்களை செய்யும்படி நீ செய்து விடுகிறாய். அத்துடன் நீ நீற்பதில்லை, அவன் அனைத்தையும் காண்பவனாக உள்ளபோதிலும் தனது அடியார்களின் குற்றங்களைப் பார்க்காமல் இருக்கும்படிச் செய்துவிடுகிறாய். அப்படியே பார்த்தாலும், அவைகளைக் காணாதது போன்று அவன் தனது கண்களை மூடிக்கொள்கிறான். அனைத்தையும் அறிந்த அவனை ஏதும் அறியாதவன் போன்று மாற்றி விடுகிறாய். அவன் அனைத்திற்கும் சேஷியாக, யஜமானன் போல் இருந்தாலும் உனக்கு அடிமையாகவே உள்ளான். இங்கு திருவேங்கடமுடையானின் மேன்மையைத் தாழ்த்திக் கூறுவது போல் இருந்தாலும், அவனது ஸௌலப்யத்தைத் துதிக்கிறார்.
படம் – கன்றுகளிடம் கண்ணன் காட்டிய பாசத்தை இன்றளவும் நம்மிடம் கண்ணனாகிய ஸ்ரீநிவாஸன் காட்டி வருகிறான்.

ஸ்ரீ தயா சதகம் – 62 December 12, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
விவித்ஸா வேதாளீ விகம பரிசுத்தே அபி ஹ்ருதயே
படு ப்ரத்யாஹார ப்ரப்ருதி புடபாக ப்ரசகிதா:
நமந்த: த்வாம் நாராயண சிகரி கூடஸ்த்த கருணே
நிருத்த த்வத் த்ரோஹா: ந்ருபதி ஸுத நீதிம் ந ஜஹதி
பொருள் – தயா தேவியே! அறிஞர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசை என்னும் பேயை ஒழித்து, தூய்மை அடைந்து விடுகின்றனர். ஆயினும் புலன்களை அடக்குதல் போன்ற கடினமான செயல்களுக்கு அஞ்சியபடி உன்னைச் சரணம் புகுகின்றனர். அதன் பின்னர் உனக்குத் துரோகம் செய்யாமல் அரசகுமார நீதியைக் கடைபிடித்தபடி உள்ளனர்.
விளக்கம் – இங்கு வேதாளி என்பது பெண் பேய் ஆகும். அதற்குக் கேட்டவற்றை கொடுத்தபடி இருக்க வேண்டும். இல்லை என்றால், ஆளை விழுங்கி விடும். இதனை ஆசையுடன் ஒப்பிடுகிறார். ஆசை என்பது மனதை கலக்கி, உயிரையும் எடுத்து விடும் இயல்புடையது. இவ்விதம் உள்ள ஆசையை அழித்துவிட்டாலும், பக்தி யோகம் என்பது கடினமாகவே உள்ளது. பக்தி யோகத்திற்குப் புலன் அடக்கம், ப்ராணாயாமம் போன்ற கடினமான செயல்கள் அங்கமாக உள்ளன. இதனைக் கடைபிடிப்பதில் உள்ள சிக்கல்களை அறிந்தவர்கள், உன்னைச் சரணம் அடைகின்றனர். இவ்விதம் சரணம் அடைந்த பின்னர் அவர்கள் தவறு செய்யாமல் உள்ளனர். ஒரு அரசனின் மகன் அரசனின் ஆணையை மீறி நடந்தால், அரசன் தனது மகனாக உள்ளதால் சிறு தண்டனை மட்டுமே அளிப்பான். இதனை அரசகுமார ந்யாயம் என்பர். இது போன்று தயாதேவியும், தன்னிடம் சரணம் புகுந்தவர்கள் தவறு செய்தால் சிறு தண்டனை மட்டுமே அளிக்கிறாள்.
படம் – நாராயணகிரி மலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸன் என்று இந்தச் ச்லோகத்தில் கூறினார். அந்த நாராயணகிரியில் காணப்படும் திருவேங்கடமுடையானின் திருவடிகள்.

ஸ்ரீ தயா சதகம் – 61 December 11, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அகூபாரை ஏக உதக ஸமய வைதண்டிக ஜவை:
அநிர்வாப்யாம் க்ஷிப்ரம் க்ஷபயிதும் அவித்யாக்க்ய படபாம்
க்ருபே த்வம் தத்தாத்ருக் ப்ரதிம வ்ருஷ ப்ருத்வீதர பதி
ஸ்வரூப த்வைகுண்ய த்விகுண நிஜபிந்து: ப்ரபவஸி
பொருள் – தயாதேவியே! மிகவும் பெரியவனான ஸ்ரீநிவாஸனின் ஸ்வரூபத்தை விட நீ நான்கு மடங்கு பெரியவளாக உள்ளாய். ப்ரளயத்தின்போது, விதண்டாவாதம் செய்பவர்களின் பேச்சுக்கு ஒப்பாக எழும்பும் பேரலைகளால் அணைக்க இயலாத அவித்யை என்னும் வடவாமுகாக்நியை நீ அணைக்கிறாய்.
விளக்கம் – சரணாகதியை அனுஷ்டித்த பின்னர் முக்தர்கள் போன்று தோஷங்கள் அற்றவராக வேண்டும். அவித்யை என்னும் அஜ்ஞானம் தொலைவது சரணாகதியின் பலனாகிய மோக்ஷமாகிறது. அவித்யை என்று கர்மமும் அழைக்கப்படும். இந்தக் கர்மம் என்பது ப்ரளய காலத்திலும் நீங்குவதில்லை. ப்ரளய காலத்தில் கிளம்பும் வடவாமுகாக்நி, அனைத்து உலகங்களையும் தகிக்கச் செய்வதாகும். அந்த அக்னியை அணைக்கும் வலிமை கொண்ட ஸமுத்திரங்கள் கூட, கர்மங்களை ஏதும் செய்ய இயலாது. அப்படிப்பட்ட அலைகளின் செயல்கள், கர்மத்தைப் பொறுத்தவரையில், வெட்டிப்பேச்சு பேசுபவர்களின் வாதம் போன்றதாகும் என்றார். ஆனால், தயாதேவியோ, தனது ஒரு துளியால் கர்மத்தை அழித்துவிடுகிறாள்.
படம் – ப்ரளய காலத்திலும் அழிக்க இயலாத நமது கர்மங்களை, மிகவும் எளிதாக அழிக்கவல்ல திருவேங்கடமுடையானின் திருவடிகள் (நன்றி – இஸ்கான்).

ஸ்ரீ தயா சதகம் – 60 December 10, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ம்ருது ஹ்ருதயே தயே ம்ருதித காம ஹிதே மஹிதே
த்ருத விபுதே புதேஷு விதத ஆத்ம துரே மதுரே
வ்ருஷகிரி ஸார்வபௌம தயிதே மயி தே மஹதீம்
பவுக நிதே நிதேஹி பவமூலஹராம் லஹரீம்
பொருள் – மென்மையான இதயத்தையும், தேவர்களைக் காக்கும் தன்மையையும், ஆசையை அடக்கியவர்களுக்கு நன்மை அளிப்பவளும், உலகைக் காக்கும் பொறுப்பை ஆசார்யர்களிடம் விட்டவளும், ஸ்ரீநிவாசனுக்குப் பிரியமானவளும், அனைத்து மங்களங்களுக்கும் இடமாக உள்ளவளும், இனிமையானவள் என்ற போற்றப்படுபவளும் ஆகிய தயாதேவியே! இந்த ஸம்ஸாரம் என்ற துயரத்தை அடியோடு நீக்க உனது கருணை என்னும் அலையை என் மீது வீசுவாயாக (ஸ்ரீனிவாஸன், தயையே வடிவாக உள்ளவன். ஆக அவனிடத்தில் சரணம் புகுவதை மறைமுகமாக அவனுடைய தயை இடத்தில் சரணம் புகுவதாகக் கூறினார்).
விளக்கம் – இந்தச் ச்லோகத்தின் மூலம் சரணாகதியை ஸ்வாமி தேசிகன் கூறினார். திருவாய்மொழி 6-10ல் இறுதிப் பாசுரத்தில் (6-10-10) ஸ்வாமி நம்மாழ்வார் ஸ்ரீநிவாஸனிடம் – அகலகில்லேன் இறையும் – என்று தொடங்கி – புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே – என்று நிறைவு செய்து, அவனிடம் சரணாகதி செய்தார். அவரைப் போன்றே இவரும் அதே 6-10ல் சரணாகதி செய்தது குறிப்பிடத்தக்கது.
படம் – ச்லோகம்19ல், ஸ்ரீநிவாஸனின் திருவடிகளில் தோன்றியவளாகத் தயாதேவியைக் கூறினார். இங்கு அவளிடம் சரணாகதி அடைவது என்பது, அவளுக்கு ஆதாரமாக உள்ள அவனது திருவடிகளில் சரணாகதி அடைவதே ஆகும். ஸ்வாமி தேசிகன் சரணாகதி அடைந்த திருவேங்கடமுடையானின் திருவடிகள் (திருமலையில் உள்ளபடி).


ஸ்ரீ தயா சதகம் – 59 December 9, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
alavandar.jpg
த்வத் உதய தூலிகாபி: அமுநா வ்ருஷசைல ஜுஷா
ஸ்த்திர சர சில்பிநா ஏவ பரிகல்பித சித்ரதிய:
யதிபதி யாமுந ப்ரப்ருதய: ப்ரதயந்தி தயே
ஜகதி ஹிதம் ந ந: த்வயி பரந்யஸநாத் அதிகம்
பொருள் – தயாதேவியே! அனைத்து உலகங்களையும் படைக்கவல்ல சிற்பியாக ஸ்ரீநிவாஸன் உள்ளான். அவன் யதிகளின் தலைவரான ராமானுஜர், ஆளவந்தார், போன்றவர்களின் புத்தி என்னும் சுவரில், தத்துவ உபதேசங்களை எழுதினான். இத்தகையை எழுதுகோலாக நீயே உள்ளாய். இதன் மூலம் அந்த ஆசார்யர்கள் உன்னிடம் ப்ரபத்தி (சரணாகதி , பரந்யாஸம்) என்ற உபாயத்தை விட இந்த உலகில் வேறு உயர்ந்த உபாயம் ஏதும் இல்லை என்றனர்.
விளக்கம் – (மேலே உள்ள பொருள் தெளிவாக உள்ளதால், மேலும் விளக்கப்படவில்லை).
படம் – சரணாகதி உபாயத்தை எம்பெருமானாருக்கும், அவர் மூலமாக நமக்கும் அருளிய ஆளவந்தார்.

ஸ்ரீ தயா சதகம் –78 December 28, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
க்ஷண விலயிநாம் சாஸ்த்ர அர்த்தாநாம் பலாய நிவேசிதே
ஸுர பித்ரு கணே நிர்வேசாத் ப்ராக் அபி ப்ரளயம் கதே
அதிகத வ்ருஷ க்ஷ்மா ப்ருத்நாதாம் அகால வசம்வதாம்
ப்ரதிபுவம் இஹ வ்யாசக்க்யு: த்வாம் க்ருபே நிருபப்லவாம்
பொருள் – தயாதேவியே! சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட கர்மங்களுக்கான பலன்களை அளிப்பதற்கென்று தேவர்கள், பித்ருக்கள் போன்றவர்களின் கூட்டம் உள்ளது. ஆனால் இவர்கள் அளிக்கும் பலன்கள் மிகவும் குறைந்த காலத்திலேயே மறைந்து விடுகின்றன. மேலும் இவர்களும் அந்தப் பலன்கள் அழிவதற்கு முன்பாகவே அழித்து விடுகின்றனர். ஆனால் நீயோ ஸ்ரீநிவாஸனை அடைந்தவளாக, காலத்திற்குக் கட்டுப்படாதவளாக, யாராலும் தடுக்க இயலாதவளாக உள்ளாய். இதனை உணர்ந்த அறிஞர்கள் அவர்களின் இடத்தில் நீ இருப்பதாகக் கூறினர்.
விளக்கம் – யாகம், ஹோமம் முதலான கர்மங்களை, விரும்பும் பலனை அடையும் பொருட்டு சாஸ்திரங்கள் விதித்துள்ளன. அத்தகைய பலனை அளிப்பதற்காக தேவர்களையும் பித்ருக்களையும் ஸ்ரீநிவாஸன் நியமித்துள்ளான். அவர்களும் அவன் ஆணைக்கு ஏற்ப நமக்குப் புண்ணிய பலன்களை அளிக்கின்றனர்.
ஆனால் நம்முடைய புண்ணிய பலன்கள் நமக்குக் கிட்டும் காலம் வரையில் அந்தத் தேவர்களும், பித்ருக்களும் அழியாமல் இருப்பதற்கு உத்திரவாதம் இல்லை. அவர்கள்அழிந்து விட்டால் நமக்கு அந்தப் பலன்களை யார் அளிப்பார்கள்? அந்தச் செயலை தயாதேவியே செய்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
படம் – நன்றி http://www.devshoppe.com

ஸ்ரீ தயா சதகம் –77 December 27, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அநிதரஜுஷாம் அந்தர் மூலே அபாய பரிப்லவே
க்ருத வித் அநகா விச்சித்ய ஏஷாம் க்ருபே யம வச்யதாம்
ப்ரபதந பல ப்ரத்யாதேச ப்ரஸங்க விவர்ஜிதம்
ப்ரதிவிதிம் உபாதத்ஸே ஸார்த்தம் வ்ருஷாத்ரி ஹிதைஷிணா
பொருள் – தயாதேவியே! எந்தப் பலன்களையும் நாடாமல், எந்தத் தெய்வங்களையும் நாடாமல் உன்னையே சரணம் என்று பற்றியவர்களுக்கு, அவர்களது பலன் தர ஆரம்பித்து விட்ட கர்மங்கள் காரணமாக, புத்தியால் உணர்ந்தும் பாவம் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். இதன் மூலம் அவர்கள் பாவங்களுக்கு ஆளானாலும், அவர்கள் செய்த சரணாகதியை நீ மறக்காமல், அந்தப் பாவத்திற்காக அவர்களுக்கு வரப்போகும் யமனின் தொடர்பை விலக்குகிறாய். அவர்கள் செய்த சரணாகதிக்கு இடையூறு இல்லாமல் ஸ்ரீநிவாஸனுடன் கலந்தபடி உள்ள நிலையை பரிகாரமாகச் செய்கிறாய்.
விளக்கம் – சரணாகதி செய்தவனுக்கு அவன் தற்போது வாழ்கின்ற வாழ்க்கை என்பது பலன் தர ஆரம்பித்துவிட்ட கர்மங்களை (ப்ராரப்த கர்மம்) ஒட்டியே உள்ளது. எனவே அவன் செய்யக்கூடாததை செய்தாலும், செய்ய வேண்டியதைக் கைவிட்டாலும் பாவம் வந்து சேர்கிறது. சரணாகதி செய்த ஒருவன் தன்னுடைய மனம் அறிந்து தவறுகளைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எண்ணிய போதிலும், அவன் அனுபவித்துக் கழிக்க வேண்டிய கர்மங்களானவை, அவனைத் தவறு செய்யத் தூண்டுகின்றன. இதனால் அவனது சரணாகதி கழிந்து விடுமா என்றால் – இல்லை. தயாதேவி அவன் செய்த சரணாகதியை மறப்பதில்லை. அவனுக்கு மோக்ஷம் தருவதாக ஸ்ரீநிவாஸன் அளித்த வாக்குறுதியை தயாதேவி காப்பாற்றுகிறாள்.
ஆனால் செய்த பாவங்களுக்கான பலன் என்பது யமனின் பிடியில் அகப்படக் காரணமாகி விடுவதால், அந்தப் பாவங்களை நீக்க வேண்டிய உபாயத்தை தயாதேவி தகுந்த ப்ராயச்சித்தம் மூலமாகச் செய்து விடுகிறாள். இது சிறு தண்டனையாகவோ, ப்ராயச்சித்த ப்ரபத்தியாகவோ இருக்கலாம்.
படம் – ஒருமுறை சரணாகதி செய்தவனை எப்போதும் மறக்காத திருவேங்கடமுடையான்.

ஸ்ரீ தயா சதகம் –76 December 26, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வ்ருஷகிரி ஸுதா ஸிந்தௌ ஜந்து: தயே நிஹித: த்வயா
பவ பய பரீதாப சித்த்யை பஜந் அகமர்ஷணம்
முஷித கலுஷ: முக்தே: அக்ரேஸரை: அபிபூர்யதே
ஸ்வயம் உபநதை: ஸ்வ ஆத்ம ஆநந்த ப்ரப்ருதி அநுபந்திபி:
பொருள் – தயாதேவியே! உன்னால் திருவேங்கடமலையில் உள்ள அமிர்தக் கடலில் சேர்க்கப்படும் ஒருவன் தன்னுடைய ஸம்ஸார பயம், தாபத்ரயம், பாவங்கள் ஆகியவை நீங்கப் பெறுகிறான். இதனால் மிகுந்த தூய்மை அடைகிறான். இவ்விதமாக அவன் அங்கு பாவங்கள் அழிக்கும் சரணாகதியை அடைந்தவனாகிறான். இதன் மூலம் தன் முன்பாக தானாகவே வரும் மோக்ஷ ஆனந்தம், தனக்கு அந்தர்யாமியாக உள்ள ஸ்ரீநிவாஸனை அனுபவிக்கும் ஆனந்தம் முதலானவற்றால் சூழப்படுகிறான்.
விளக்கம் – அகமர்ஷணம் என்னும் ஒரு நீராடுதல் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய நீராட்டம் மூலம் ஒருவனது பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். ருக் வேதத்தில் உள்ள அகமர்ஷண ஸூக்தத்தை கூறியபடி அன்றாடம் நீராடினால், ஒருவனது பாவம் நீங்கிவிடும். அகமர்ஷணம் என்னும் நீராடுவதை ஸ்ரீநிவாஸன் என்னும் அமிர்தக் கடலில் செய்யும்போது, ஒருவனது பாவங்கள் அடியுடன் நீங்கி விடும் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய பாவங்களை அளிக்கவல்ல ப்ரபத்தியை தயாதேவி செய்விக்கிறாள். இதன் மூலமாக அவனுக்கு மோக்ஷம் கிட்டுவது உறுதியாகும். அப்படிப்பட்ட மோக்ஷத்தின் ஆனந்தத்தை அனுபவிக்கும் வரை, அவன் தன்னுடைய அந்தர்யாமியாக உள்ள ஸ்ரீநிவாஸனை எண்ணியபடி, அவனது கைங்கர்யத்தில் ஈடுபட்டபடி இருந்து ஆனந்தத்தில் திளைக்கிறான். இப்படியாக தயாதேவி பலவாறு உதவுகிறாள்.
படம் – திருமலையில் உள்ள அமிர்தக்கடல்.

ஸ்ரீ தயா சதகம் –75 December 25, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
feet.jpg
அதி விதி சிவை: ஐச்வர்ய ஆத்ம அநுபூதி ரஸை: ஜநாந்
அஹ்ருதயம் இஹ உபச்சந்த்ய ஏஷாம் அஸங்க தசா அர்த்திநீ
த்ருஷித ஜநதா தீர்த்த ஸ்நாந க்ரம க்ஷபித ஏநஸாம்
விதரஸி தயே வீத ஆதங்கா வ்ருஷாத்ரி பதே: பதம்
பொருள் – தயாதேவியே! ப்ரம்மனுக்கும் சிவனுக்கும் மேலாக உள்ள ஐச்வர்யம் மற்றும் கைவல்யம் ஆகியவற்றை உனக்கு மனம் இல்லாதபோதும், இந்த உலக மக்களுக்கு அளிக்கிறாய். இதன் மூலம் அவர்களை ஆனந்தம் அடைவது போன்று செய்து, அவர்கள் அந்தப் போகங்களில் உள்ள பற்றுதல்களை நீக்கும்படிச் செய்கிறாய். இதன் மூலம் அவர்களுக்கு வைராக்யம் ஏற்படுத்தி, ஸ்ரீநிவாஸனின் திருவடிகளை அடையும்படிச் செய்கிறாய். இது எப்படி உள்ளது என்றால் – ஒருவனின் பாவத்தைத் தீர்க்க அவனை கங்கை நதியில் நீராட வைக்கும் எண்ணம் கொண்ட ஒருவன், அவனிடம், “இந்த நதியில் இறங்கி உன்னுடைய தாகத்தைத் தீர்த்து கொள்வாய்”, என்று கூறி மறைமுகமாக அவன் பாவங்களை அழிப்பது போன்று உள்ளது.
விளக்கம் – முரட்டுக் குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விடும் தாய், பின்னர் சரியான காலம் வரும்போது அவர்களை அடக்குகிறாள். அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கும் சிறந்த அறிவு உண்டாகி விடுகிறது.
நாம் உலக விஷயங்களை விரும்புவதை அறிந்த தயாதேவி, அதனை ஆதரிக்கிறாள். நாம் அந்த விஷயங்களிலேயே மூழ்கி, நாளடைவில் சிறந்த ஞானம் கிட்டப் பெறுகிறோம். அந்த நேரத்தில் நம்முடைய பாவங்கள் அகன்று விடுகின்றன. அதன் பின்னர் மோக்ஷத்தின் மீது விருப்பம் உண்டாகிறது. இந்த மன மாற்றத்திற்காகவே காத்திருந்த தயாதேவி, சட்டென்று நம்மை ஸ்ரீநிவாஸனின் கருணைக்கு இலக்காக்கி, அவனது திருவடிகளையும் நமக்கு அளிக்கிறாள்.
படம் – தயாதேவி நம்மைச் சேர்க்கும் திருமலை அப்பனின் திருவடிகள் (நன்றி – இஸ்கான்).

ஸ்ரீ தயா சதகம்-74 December 24, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஹிதம் இதி ஜகத் த்ருஷ்ட்யா க்லுப்தை: அக்லுப்த பலாந்தரை:
அமதி விஹிதை: அந்யை: தர்மாயிதை: ச யத்ருச்சயா
பரிணத பஹுச்சத்மா பத்மா ஸஹாய தயே ஸ்வயம்
ப்ரதிசஸி நிஜ அபிப்ரேதம் ந: ப்ரசாம்யத் அபத்ரபா
பொருள் – மஹாலக்ஷ்மியின் நாதனான ஸ்ரீநிவாஸனின் தயாதேவியே! இந்த உலகினரால் – தகுந்த பயன் அளிக்கவல்ல புண்ணியச் செயல்கள்; பலனைத் தரவல்லது என்று என்று அறியாமல் செய்த புண்ணியச் செயல்கள்; தர்மம் என்ற வகையில் செய்யப்பட்ட புண்ணியச் செயல்கள்; தற்செயலாகச் செய்யப்பட்டப் புண்ணியச் செயல்கள்; வேறு பல புண்ணிய ச் செயல்கள் – இப்படியாக நாங்கள் பலவற்றைச் செய்தோம். இப்படிப்பட்ட தர்மங்களை நீயாகவே யூகித்துக்கொண்டு, காப்பாற்றுதலுக்குத் தகுதியே இல்லாத என் போன்றவர்களைக் காப்பாற்றுவதில் மற்றவர்களுக்கு வெட்கம் உண்டானாலும், நீ அந்த வெட்கத்தை கைவிட்டு, நாங்கள் விரும்பியதை நீயாகவே அளிக்கிறாய்.
விளக்கம் – உயர்ந்த பலனை பெறுவதற்கு, அந்தப் பலனை அடையும் தகுதி என்பது சரியான கர்மங்கள் மூலம் அமையும். ஆனால் மோக்ஷம் என்ற புருஷார்த்தமோ அல்லது தயாதேவியின் கருணையோ கிட்டுவதற்கு எந்த நற்செயலும் நம்மிடம் இருப்பதில்லை. இதனை உணர்ந்த தயாதேவி, நாம் செய்த நல்ல செயல்களைத் தானாகவே பட்டியல் இட்டுப் பார்க்கிறாள்.
நற்செயல்கள் பலவகைப்படும். அவையாவன:
  • ப்ராஸங்கிக ஸுக்ருத் – உலகின் நன்மைக்காகச் செய்யப்படுபவை, கிணறு வெட்டுதல் போன்றவை.
  • ஆனுஷங்கிக ஸுக்ருத் – ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யும் கர்மமானது, எதிர்பாராத விதமாக மேலும் ஒரு பலனை அளிக்கும் நிலையாகும்.
  • அபுத்திபூர்வக ஸுக்ருத் – நம்மை அறியாமலேயே செய்யும் நற்செயல் மூலம் விளையும் பயன்.
  • யாத்ருச்சிக ஸுக்ருத் – தற்செயலாக விளையும் பயன்.
நம்மிடம் எந்த உபாயமும் இல்லாதபோது நம்மைக் காப்பாற்ற நினைப்பது வெட்கம் அளிக்கக்கூடிய செயலாகும். ஆனால் அந்த வெட்கத்திற்குப் பரிகாரமாக, நம்மை அறியாமல் நாம் செய்த புண்ணியங்களை எண்ணி தயாதேவி நம்மைக் காக்கிறாள்.
படம் – நம்மிடம் உள்ள ஏதேனும் ஓர் அற்பச் செயலை சாக்காக வைத்தாவது காக்க எண்ணும் ஸ்ரீநிவாஸன்.

ஸ்ரீ தயா சதகம்-73 December 23, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஸ்வயம் உதயிந: ஸித்த ஆதி ஆவிஷ்க்ருதா: ச சுப ஆலயா:
விவித விபவ வ்யூஹ ஆவாஸா: பரம் ச பதம் விபோ:
வ்ருஷகிரிமுகேஷு ஏதேஷு இச்சா அவதி ப்ரதிலப்தயே
த்ருட விநிஹிதா நிச்ரேணி: த்வம் தயே நிஜ பர்வபி:
பொருள் – தயாதேவியே! ஸ்வயமாகத் தோன்றிய விக்ரஹங்கள் கொண்ட திவ்ய தேசங்கள், சித்தர்கள் முதலானவர்களால் வெளிப்படுத்தப்பட்ட திவ்ய தேசங்கள், பலவகையான விபவ அவதாரங்கள், பலவகையான வ்யூஹ திருமேனிகள், அனைத்து உலகிற்கும் நாயகனான பரவாஸுதேவன் வீற்றுள்ள பரமபதம், திருவேங்கடமலை – முதலான இடங்களில் அவரவர்களுக்கான விருப்பத்திற்கு ஏற்ப வணங்கி, அதற்கான பலனை மக்கள் பெருகின்றனர். இப்படிப்பட்ட பலன்களை அடைவதற்கு அவர்கள் ஏற்கவல்ல ஏணியாக நீயே உள்ளாய்.
விளக்கம் – இங்கு எம்பெருமானின் ஐந்து வகையான திருமேனிகளைக் கூறுகிறார். அவையாவன:
  1. தானாகவே அவன் வெளிப்பட்ட க்ஷேத்ரங்கள் மற்றும் சித்தர்கள் மூலம் வெளிப்படுட்த்தப்பட்ட க்ஷேத்ரங்கள் – இவற்றில் அர்ச்சையாக உள்ளான்.
  2. இராமன் , கண்ணன் முதலான திருஅவதாரங்கள் விபவம் எனப்படும்.
  3. வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் ஆகிய நான்கும் வ்யூஹம் எனப்படும்.
  4. ஆவாசா என்று ச்லோகத்தில் உள்ள பதம் வீட்டைக் குறிக்கும். இதன் கருத்து எம்பெருமான் அந்தர்யாமியாக உள்ள நிலையாகும்.
  5. பர ரூபம் எனப்படும் பரவாஸுதேவன்
மேலே உள்ள அனைத்து நிலைகளுக்கும் தலைவன் போன்று திருவேங்கடமுடையான் உள்ளான் என்று கூறுகிறார். இவற்றை அடைய உதவும் ஏணியாக தயாதேவி உள்ளாள். ஏணியானது ஏறவும் இறங்கவும் பயன்படும். இது போன்று இங்கு தயாதேவி என்னும் ஏணியானது நாம் ஸ்ரீநிவாஸனிடம் ஏறிச் செல்ல உதவும், அவன் நம்மிடம் இறங்கி வரவும் உதவும் என்று கருத்து.
படம் – திருமலைக்குச் செல்லும் படிக்கட்டு. ஸ்வாமி தேசிகன் கூறும் ஏணியாக இவையே உள்ளன போலும்.

ஸ்ரீ தயா சதகம் –72 December 22, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வ்ருஷகிரி பதே: ஹ்ருத்யா விச்வ அவதார ஸஹாயிநீ
க்ஷபித நிகில அவத்யா தேவி க்ஷமா ஆதி நிஷேவிதா
புவந ஜநநீ பும்ஸாம் போக அபவர்க்க விதாயிநீ
விதமஸி பதே வ்யக்திம் நித்யாம் பிபர்ஷி தயே ஸ்வயம்
பொருள் – தயாதேவியே! திருவேங்கடமுடையானின் திருமார்பில் வசிப்பவளாகவும், அவனது அனைத்து அவதாரங்களிலும் துணை நிற்பவளும், அனைத்து பாவங்களையும் நீக்குபவளும், பொறுமை முதலான குணங்களால் ஆராதிக்கப்படுபவளும், அனைத்து உலகங்களுக்கும் தாயாக உள்ளவளும், உலகில் உள்ளவர்களுக்குப் பல பயன்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவளும் ஆகிய நீ – தமோ குணம் சற்றும் இல்லாத பரமபதத்தில் நித்யமாக உள்ள உனது திருமேனியைக் கொண்டுள்ளாய்.
விளக்கம் – இந்தச் ச்லோகத்தில் மஹாலக்ஷ்மிக்கும் தயாதேவிக்கும் பொருந்தும் விதமாகப் பலவற்றைக் கூறியது காண்க. இதன் மூலம் மஹாலக்ஷ்மியே தயாதேவியின் ஸ்வரூபம் என்று உணர்த்துகிறார். தயை என்ற ஒரு குணத்தைத் துதிப்பதும், அந்த குணத்தை உபாஸிப்பதும் எவ்விதம் பொருந்தும் என்று ஸ்வாமி தேசிகனிடம் சிலர் கேட்டனர். அவர்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக, இந்தச் ச்லோகம் மூலம் தயை என்பவள் ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியே என்று கூறுகிறார்.
இங்கு இந்தச் ச்லோகத்தில் தயே, தேவி என்று இரண்டு பதங்களையும் உபயோகித்ததை காண்க. இதன் மூலம் மஹாலக்ஷ்மியும், தயாதேவியும் ஒன்றே எனக் கூறி இவ்விதம் பதங்களை இட்டார் போலும்.
படம் – தயாதேவியும் இவளும் ஒன்றே எனக் கூறுகிறார்.

ஸ்ரீ தயா சதகம் –71 December 21, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
த்ரிவித சிதசித் ஸத்தா ஸ்த்தேம ப்ரவ்ருத்தி நியாமிகா
வ்ருஷகிரி விபோ: இச்சா ஸா த்வம் பரை: அபராஹதா
க்ருபண பர ப்ருத் கிங்குர்வாண ப்ரபூத குணாந்தரா
வஹஸி கருணே வைசக்ஷண்யம் மத் ஈஷண ஸாஹஸே
பொருள் – தயாதேவியே! மூன்று வகையாக உள்ள சேதனம் மற்றும் அசேதனம் ஆகியவற்றின் ஸ்வரூபம், இருப்பு, செயல் ஆகியவற்றை நீயே நியமிக்கிறாய். மற்றவர்களால் தடுக்கப்படாமல் உள்ளாய். ஆதரவு இல்லாதவர்களின் சுமையைத் தாங்குபவளாக உள்ளாய். ஸ்ரீநிவாஸனின் குணங்களை அனைத்தும் உனக்குத் தொண்டு செய்பவளாக, உயர்ந்த குணங்கள் கொண்டவளாக நீ உள்ளாய். ஸ்ரீநிவாஸனின் இச்சை என்பதன் வடிவமாக உள்ளாய். இப்படிப்பட்ட நீ எனக்கு அருள் புரிவது என்னும் துணிவுடைய செயலைச் செய்யும் சாமர்த்தியம் கொண்டுள்ளாய்.
விளக்கம் – இங்கு ஸ்ரீநிவாஸனின் இச்சா ரூபமாக தயாதேவி கூறப்பட்டாள். அனைவரையும் காப்பாற்றவேண்டும் என்பதே ஸ்ரீநிவாஸனின் இச்சை – அதுவே தயாதேவி ஆகும். இது பின்வருமாறு கூறப்படுகிறது:
மூன்று விதமான தேதனங்கள் – நித்யர், முக்தர், பக்தர்; மூன்று விதமான அசேதனங்கள் – ப்ரக்ருதி, காலம், சுத்த ஸத்வம். இந்த ஆறின் ஸ்வரூபம் இருப்பு மற்றும் செயல்பாடு ஆகிய அனைத்தும் ஸ்ரீநிவாஸனின் இச்சையால் நியமிக்கப்படுகிறது. ஆக இதனை தயாதேவியே நியமிக்கிறாள்.
தயாதேவியே யாராலும் கட்டுப்படுத்த இயலாதவளாக உள்ளாள். இதன் கருத்து – ஸ்ரீநிவாஸனின் விருப்பம் என்பது யாராலும் கட்டுப்படுத்த இயலாதது என்பதாகும்.
ஸ்ரீநிவாஸனே பகவத் கீதையில் – என்னை உபாஸிப்பவர்களின் யோகம் மற்றும் க்ஷேமங்களை நானே சுமப்பேன் என்று கூறினான். ஆக நம்முடைய பாரங்களை அவனது இச்சா ரூபமான தயாதேவி சுமக்கிறாள்.
இவ்விதம் நமக்கு உதவ தயாதேவிக்கு வேலையாட்கள் வேண்டாமா? இவளது வேலைக்காரர்களாக ஸ்ரீநிவாஸனின் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் ஆகிய குணங்கள் உள்ளன.
என் போன்ற கொடியவன் மீதும் உன்னுடைய கடாக்ஷத்தை நீ திருப்ப முயல்வது எத்தனை துணிச்சலான செயல்! உன்னுடைய இந்தச் சாகசம் எத்தனை சாமர்த்தியமாக உள்ளது!
படம் – திருவேங்கடமுடையான்.

ஸ்ரீ தயா சதகம் –70 December 20, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
கிலம் சேதோ வ்ருத்தே: கிம் இதம் இதி விஸ்மேர புவநம்
க்ருபே ஸிம்ஹ க்ஷ்மாப்ருத் க்ருதமுக சமத்கார கரணம்
பரந்யாஸ சந்ந ப்ரபல வ்ருஜிந ப்ராப்ருத ப்ருதாம்
ப்ரதிப்ரஸ்த்தாநம் தே ச்ருதி நகர ச்ருங்காடக ஜுஷ:
பொருள் – தயாதேவியே! வேதங்கள் என்னும் நகரத்தின் நான்கு வழிகளும் கூடும் பாதையில் நீ நிற்கின்றாய். அங்கு பரந்யாசம் என்பதன் மூலம் மறைக்கப்பட்ட பாவங்களை சுமந்து கொண்டு வருபவர்களை நீ பார்க்கிறாய். இவ்விதமான உபகாரத்தை கொண்டு வரும் அவர்களை எதிர்நோக்கிச் செல்கிறாய். இதனைக் காண்பவனும், இந்த உலகையே வியக்க வைக்கும் தன்மை கொண்ட சிங்கமலை என்று போற்றப்படும் திருமலையின் வித்வான் ஆனவனும் ஆகிய ஸ்ரீநிவாஸன், “இது என்ன விந்தையான செயல்”?, என்று வியக்கிறான்.
விளக்கம் – வேதம் என்னும் நகரத்தை அடைய நான்கு பாதைகள் உள்ளன. அவை தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் என்பதாகும். அந்தந்த பாதையில் செல்பவர்கள் அந்தந்த பயனை அடைவார்கள். இப்படியாக அந்த நான்கு வழியில் செல்பவர்கள் சேரும் சந்தியில் தயாதேவி நிற்கிறாள். எந்தப் பலனை விரும்பி, எந்த வழியாக வரப்போகிறார்கள் என்று எதிர் பார்த்தபடி நிற்கிறாள்.
இவற்றில் மோக்ஷத்தை விரும்பிச் சரணாகதி செய்தவன், அந்தச் சரணாகதி மூலம் தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு மோக்ஷ பாதை வழியாக வருகிறான். இப்படியாக தயாதேவிக்கு நைவேத்தியம் போன்று, தன்னுடைய பாவங்களைச் சரணாகதி என்னும் துணியால் மூடி வருகிறான். இதனை முற்றிலுமாக உணர்ந்த தயாதேவி, அவன் கொண்டுவரும் நைவேத்தியம் என்னவென்று காணாமலேயே அவனை மிகவும் ஆவலுடன் வரவேற்கிறாள். ஆக, பரந்யாசம் என்ற உபாயத்தில் தயாதேவி தன்னையே மறந்து விடுகிறாள். இதனைக் கண்ட அனைவரும், ஸ்ரீனிவாஸனும், “தயாதேவியின் புத்திக்கு ஏதேனும் ஆகிவிட்டதா? பாவம் செய்தவர்களையும் இப்படி எதிர் கொண்டு வரவேற்கிறாளே”, என்று வியக்கின்றனர். தயாதேவியின் இந்தச் செயலை நன்றாகச் சாஸ்திரம் அறிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இதனாலேயே ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநிவாஸனை வித்வான் என்று கூறினார்.
படம் – திருமலைக்குச் செல்லும் பாதை. இந்தப் பாதையில் சென்றால், நமக்காக தயாதேவி காத்து நிற்பது உறுதி.


ஸ்ரீ தயாசதகம்-69 December 19, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
கலி க்ஷோப உந்மீலத் க்ஷிதி கலுஷ கூலங்ககஷ ஜவை:
அநுச்சேதை: ஏதை: அவட தட வைஷம்ய ரஹிதை:
ப்ரவாஹை: தே பத்மா ஸஹசர பரிஷ்காரிணி க்ருபே
விகல்ப்யந்தே அநல்பா: வ்ருஷசிகரிண: நிர்ஜ்ஜர கணா:
பொருள் – பெரியபிராட்டியின் நாயகனான ஸ்ரீநிவாஸனுக்கு ஆபரணமாக விளங்கும் தயாதேவியே! இந்த உலகில் கலியின் குழப்பம் காரணமாகப் பாவங்கள் வேகமாக வளர்கின்றன. அந்தப் பாவங்கள் என்னும் கரையை உடைக்கும் வேகத்தை கொண்டதும், ஓய்வே இல்லாததும், மேடுபள்ளம் என்ற வேறுபாடு காணாததும் ஆகிய உன்னுடைய கருணை என்னும் ப்ரவாஹம் எப்படி உள்ளது என்றால் – திருவேங்கடமலையில் பாய்கின்ற மிகப் பெரிய அருவிகளில் உள்ள வெள்ளம் போன்று உள்ளது.
விளக்கம் – திருமலையில் உள்ள அருவிகள் கரை புரண்டு, மேடுபள்ளம் காணாமல் ஓடுவதாகும். அவ்விதம் அவை ஓடும்போது, அனைத்து அசுத்தங்களையும் நீக்கியபடி ஓடுகின்றன. இதே போன்று தயாதேவியின் ப்ரவாஹங்கள் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் பாவங்களை நீக்கியபடி ஓடுகிறது.
இங்கு தயாதேவியை – பத்மா ஸஹசர பரிஷ்காரிணி – என்று கூறியதைக் காண்க. இதன் மூலம் தயாதேவி, ஸ்ரீநிவாஸனுக்கும் பத்மாவதிக்கும் ஆபரணம் போன்று உள்ளாள் என்று கூறினார்.
படம் – திருமலையில் பாய்கின்ற இந்த ஆகாசகங்கையானது, ஸ்வாமி தேசிகன் கூறுவது போன்று தயாதேவியோ?

ஸ்ரீ தயா சதகம் – 88 January 7, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
க்ருபே பரவத: த்வயா வ்ருஷ கிரீசிது: க்ரீடிதம்
ஜகத் ஹிதம் அசேஷத: தத் இதம் இத்தம் அர்த்தாப்யதே
மதச்சல பரிச்யுத ப்ரணத துஷ்க்ருத ப்ரேக்ஷிதை:
ஹத ப்ரபல தாநவை: ஹல தரஸ்ய ஹேலா சதை:
பொருள் – தயாதேவியே! உன்னிடம் வசப்படுள்ள ஸ்ரீநிவாஸனின் லீலைகள் அனைத்தும் இந்த உலகின் நன்மைக்காகவே ஆகும். இந்த வியப்பான செயல்கள் உண்மை என்பது, கலப்பையை கையில் கொண்ட பலராமனின் செயல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அவன் மதி இழந்த நிலை என்பதைக் கைக்கொண்டு அசுரர்களை அழித்தார்.
விளக்கம் – தயாதேவி ஸ்ரீநிவாஸனைப் பலராமனாக அவ தரிக்க வைத்தாள். க்ஷத்ரியனாகப் பிறந்த பலராமன், அரசர்கள் போன்று தானும் மதுவைப் பருகும் பழக்கம் கொண்டான். அதனால் மதி மயங்கியது போன்று தன்னைக் காட்டிக் கொண்டான். இதன் மூலம் தன்னுடைய அடியார்களின் குற்றங்களைக் காணாதவர் போன்று நடந்து கொண்டான். அதே நேரத்தில் கண்ணனுடன் சேர்ந்து பல அரக்கர்களையும் அழித்தான்.

ஸ்ரீ தயா சதகம் – 87 January 6, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
க்ருபே க்ருத ஜகத் ஹிதே க்ருபண ஜந்து சிந்தாமணே
ரமா ஸஹசரம் ததா ரகுதுரீணயந்த்யா த்வயா
வ்யபஜ்யத ஸரித்பதி: ஸக்ருத் அவேக்ஷணாத் தத்க்ஷணாத்
ப்ரக்ருஷ்ட பஹு பாதக ப்ரசம ஹேதுநா ஸேதுநா
பொருள் – அனைத்து உலகிற்கும் நன்மை புரிபவளாகவும் வேறு கதி இல்லாத உயிர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவளாகவும் உள்ள தயாதேவியே! முன்பு ஒரு காலத்தில் மஹாலக்ஷ்மியின் துணைவனான ஸ்ரீநிவாஸனை, ரகுவம்சத்தில் சிறந்தவனான இராமனாகத் திருஅவதாரம் செய்வித்தாய். அப்போது உனது கடாக்ஷம் காரணமாக அனேக கொடிய பாவங்கள் அழியக் காரணமாக அமைக்கப்பட்ட அணையால் கடல் பிளக்கப்பட்டது.
விளக்கம் – இந்த உலகில் வேறு கதி இல்லாதவர்கள் அனைவருக்கும் அடைக்கலமாக நின்றவன் இராமனே ஆவான். மிக உயர்ந்த சரணாகதி தத்துவமானது ஓங்கி வெளிப்படுவதும் இராமாயணத்திலேயே ஆகும். சரணாகதிக்குத் தகுந்த ப்ரமாணமாக விளங்குவது இராமாயணம் ஆகும்.
சரணாகதியில் பெரியபிராட்டி வழிகாட்ட, அவள் பின்னே செல்வது மரபாகும். இங்கு ஸ்வாமி தேசிகன் “ரமா ஸஹசரம்” என்ற பிராட்டியை முன் நிறுத்திக் கூறியது காண்க. சரணாகதிக்கு முக்கியமான தகுதியானது நம்முடைய பாவங்கள் கழிவதாகும். இராமன் அமைத்த சேது பாலத்தை ஒருமுறை தரிசித்தாலே பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். ஆக இராமன் சேது பாலத்தை அமைத்து, சரணாகதி கிட்ட வழி செய்தது காண்க.
இராமனுக்குக் கடலரசன் மீது கோபம் வரவழைத்து, வானரசேனைகள் கடலைத் தாண்டும் விதமாக இராமன் பாலம் அமைக்கும்படிச் செய்தது தயாதேவியின் செயலே ஆகும். இதன் உட்கருத்து – பாவம் நிறைந்த பெரும் கடலான ஸம்ஸார த்தைக் கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு வஸ்துவை ஏற்படுத்தி, இப்படியாக ஒரு சுலபமான முறையில் பாவங்கள் நீங்கும்படிச் செய்தது தயா தேவையின் தந்திரமாகும்.

ஸ்ரீ தயா சதகம் – 86 January 5, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
பரச்வத தபோதந ப்ரதந ஸத் க்ரது உபாக்ருத
க்ஷிதீச்வர பசு க்ஷரத் க்ஷதஜ குங்கும ஸ்த்தாஸகை:
வ்ருஷாசல தயாளுநா நநு விஹர்த்தும் ஆலிப்யதா:
நிதாய ஹ்ருதயே தயே நிஹத ரக்ஷிதாநாம் ஹிதம்
பொருள் – தயாதேவியே! கருணை மிகுந்த ஸ்ரீநிவாஸனால் கொல்லப்பட்டதன் மூலம் க்ஷத்ரிய அரசர்கள் காப்பாற்றபட்டனர். இப்படியாக அவர்களின் க்ஷேமத்தை விருப்பியவரும், கோடாலியைக் கொண்டவரும் ஆகிய பரசுராமரின் யுத்தம் என்ற யாகத்தால், யாகப்பசுக்கள் போன்று அரசர்கள் பலி ஆக்கப்பட்டனர். அவர்களது உடலில் இருந்து பாய்கின்ற இரத்தம் என்ற குங்குமச் சாந்தினால் நீ பூசப்பட்டாய் போலும்.
விளக்கம் – பல பேரைக் கொன்ற செயல் எவ்விதம் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நன்மையாகும் என்ற கேள்வி எழலாம். இதற்கான சமாதானத்தையும் ஸ்வாமி தேசிகன் சாமர்த்தியமாக விளக்குகிறார். கண்ணன் கீதையில் யுத்தம் என்பதை ஒரு யஜ்ஞமாகவே காணவேண்டும் என்று கூறினான். ஒரு யஜ்ஞத்தில் பசுக்களை வதம் செய்வது வழக்கம் ஆகும். ஆனால் அந்தப் பசு வதை என்பது பாவம் ஆகாது. எப்படி என்றால் யாகத்தில் கொல்லப்பட்ட பசுக்கள் மிகவும் உயர்ந்த சரீரம் எடுத்து, ஸ்வர்கம் செல்வதாக வேதங்கள் கூறுகின்றன. ஆக அந்தப் பசுவதை உண்மையில் பசுக்களுக்கு நன்மையே செய்கின்றது அல்லவா? அதே போன்று பரசுராமனுடன் நடந்த யுத்தம் என்ற யஜ்ஞத்தில் மாய்ந்த அரசர்கள் பசுக்கள் போன்று நன்மை அடைந்தனர் எனலாம்.
தயாதேவியை மிகவும் கருணை வாய்ந்தவள் என்று 108 ச்லோகங்கள் இயற்ற வந்த ஸ்வாமி தேசிகனுக்கு, பரசுராமனின் செயல்கள் நற்செயலாக இருந்தபோதிலும், அவை கொடுமையான செயலாகவே தோன்றியது போலும். அதனால்தான் கருணையே வடிவமான தயாதேவி, ஸ்ரீநிவாஸனைத் தூண்டுவதாக பல ச்லோகங்களில் கூறிய போதிலும், இந்த ச்லோகத்தில் அவ்விதம் கூறாமல் விட்டது காண்க.

ஸ்ரீ தயா சதகம் – 85 January 4, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ப்ரஸக்த மதுநா விதி ப்ரணிஹிதை: ஸபர்யா உதகை:
ஸமஸ்த துரிதச் சிதா நிகம கந்திநா த்வம் தயே
அசேஷம் அவிசேஷத: த்ரிஜகத் அஞ்ஜநாத்ரி ஈசிது:
சர அசரம் அசீகர: சரண பங்கஜேந அங்கிதம்
பொருள் – தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் த்ரிவிக்ரமனாக உயர்ந்தபோது அவனது திருவடிகள் ப்ரம்மனால் ஸமர்ப்பிக்கப்பட்ட நீரால் நனைக்கப்பட்டது; தேன் நிரம்பியது போன்று காணப்பட்டது; பாவங்கள் அனைத்தையும் நீக்கியவிதமாக இருந்தது. இப்படியாக இருந்த ஸ்ரீநிவாஸனின் தாமரை போன்ற திருவடியைக் கொண்டு இந்த உலகம் முழுவதும் எந்தவிதமான வேற்றுமையும் இன்றி நீ முத்திரை இட்டாய்.
விளக்கம் – இங்கு ஸ்வாமி தேசிகனின் கவித்திறனை ஆராயலாம். ஸ்ரீநிவாஸனின் திருவடிகளைக் கொண்டு தயாதேவி அனைத்து இடங்களிலும் முத்திரை இட்டாள் என்று கூறினார். முத்திரை இடுவதற்கு மை எனப்படும் அஞ்சனம் தேவையாகும். இதனால் ச்லேடையாக ஸ்ரீநிவாஸனை அஞ்சநாத்ரி ஈச என்று சாமர்த்தியமாகச் சொற்களை அமைத்துள்ளதைக் காண்க.

ஸ்ரீ தயா சதகம் – 84 January 3, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஸடா படல பீஷணே ஸரபஸ அட்டஹாஸ உத்படே
ஸ்ப்புரத் க்ருதி பரிஸ்ப்புடத் ப்ருகுடிகே அபி வக்த்ரே க்ருதே
தயே வ்ருஷகிரி ஈசிது: தநுஜ டிம்ப தத்த ஸ்தநா
ஸரோஜ ஸத்ருசா த்ருசா ஸமுதித ஆக்ருதி: த்ருச்யஸே
பொருள் – தயாதேவியே! அடர்ந்த பிடரி மயிர்க்கற்றைகளால் பயங்கரமாக இருந்தது; மிகவும் வேகத்துடனும் அச்சம் அளிப்பதாகவும் இதன் சிறப்பு இருந்தது; கோபத்தில் புருவங்கள் நெரித்தபடி நின்றன; கோபத்தில் இந்த நரஸிம்ஹனின் திருமுகம் ஜொலித்தது – அப்படிப்பட்ட கோபமான முகத்தில் இருந்த திருக்கண்கள், தாமரை போன்று மகிழ்வுடன் ப்ரஹ்லாதனுக்கு தாய் பால் ஊட்டும் தாய் போன்று மகிழ்வைக் காண்பித்தது. இது ஏன் என்றால் அந்தத் திருக்கண்களின் வடிவமாக நீ இருந்ததாலேயே ஆகும்.
விளக்கம் – ஹிரண்யன் பெற்ற வரத்திற்கு ஏற்ப பகல்-இரவு அல்லாத நேரம், உயிர் உள்ளது-உயிர் இல்லாதது என்னும்படியான நகம் என்ற ஆயுதம், மனிதன்-மிருகம் அல்லாத நரஸிம்ஹம் என்று எண்ணிப் பார்க்க இயலாத சேர்க்கையில் ஸ்ரீநிவாஸன் வந்தது வியப்பல்ல. ஆனால் மற்றோரு மிகவும் வியப்பான செயலை ஸ்வாமி தேசிகன் கூறுகிறார். அது என்ன? ஹிரண்யனுடன் யுத்தம் செய்தபோது கோபத்தில் கண்கள் நெருப்பு போன்று காணப்பட்டன; நரசிம்ஹத்தின் பிடரி மயிர்கள் அந்தக் கண்களை மறைத்தபடி முன்னே விழுந்தன; கண்களுக்கு மேலே உள்ள புருவங்கள் கோபத்தில் துடித்தன; கண்களுக்கு கீழே இருந்த வாய் மூலம் உலகையே நடுங்க வைக்கும் கர்ஜனை மற்றும் சிரிப்பு வெளிப்பட்டது. இவை அனைத்தும் அந்தக் கண்களில் ப்ரதிபலித்தன. ஆனால் அதே கண்கள் அருகில் நின்ற ப்ரஹ்லாதனை குளிரும்படி கடாக்ஷித்தன. இது என்ன ஒரு வியப்பான சேர்க்கை! ஒரே கண்கள் மூலம் விரோதி மீது கோபமும், அதே நேரத்தில் அதே கண்கள் மூலம் பக்தன் மீது கடாக்ஷமும் செலுத்தியது இந்த ஒரு அவதாரத்தில் மட்டுமே காணலாம்.
ஆனால் உக்கிரமான நரசிம்ஹத்தின் திருக்கண்களில் குளுமை எவ்விதம் வந்தது? அங்கு தயாதேவி இருந்த காரணத்தினால்தான் என்று கூறலாம்.

ஸ்ரீ தயா சதகம் – 83 January 2, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
யுகாந்த ஸமய உசிதம் பஹதி யோக நித்ரா ரஸம்
வ்ருஷ க்ஷிதிப்ருத் ஈச்வரே விஹரண க்ரமாத் ஜாக்ரதி
உதீர்ண சதுரர்ணவீ கதந வேதிநீ மேதிநீம்
ஸமுத்ருதவதீ தயே தத் அபிஜுஷ்டயா தம்ஷ்ட்ரயா
பொருள் – தயாதேவியே! ப்ரளய காலம் நடக்கும்போது ஸ்ரீநிவாஸன் தனது அழகான கண்களை மூடியபடி, யோகநித்திரையின் இன்பத்தை அனுபவித்தபடி சயனித்துள்ளான். அதன் பின்னர் தன்னுடைய லீலைகளை நடத்துவதற்கான நேரம் வந்தவுடன் விழித்துக் கொள்ளும்போது, நான்கு கடல்களாலும் பூமியானது விழுங்கப்படுகிறது. அந்த நேரத்தில் இந்தப் பூமியை உன்னுடைய சேர்ந்துள்ள வராஹனின் கோரைப்பற்கள் மூலமாக மேலே உயர்த்தினாய்.
விளக்கம் – வராஹங்கள் பொதுவாக நீரில் விளையாடியபடி தங்களது கோரைப்பற்களின் இடையில் கிழங்கை எடுப்பது வழக்கம். இங்கு வராஹனாக ஸ்ரீநிவாஸன் நின்றபோது அவனது குளம்பு அளவிற்கே நான்கு கடல்களும் இருந்தன. அந்த நீரில் இருந்து பூமியை ஒரு கிழங்கு போல் எளிதாக எடுத்துக் கொண்டான்.
படம் – வராஹனின் குளம்பு அளவு கூட கடல்கள் இல்லை என்பதைக் காண்க.

ஸ்ரீ தயா சதகம் – 82 January 1, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ப்ரஸூய விவிதம் ஜகத் தத் அபிவ்ருத்தயே த்வம் தயே
ஸமீக்ஷண விசிந்தந ப்ரப்ருதிபி: ஸ்வயம் தாத்ருசை:
விசித்ர குண சித்ரிதாம் விவித தோஷ வைதேசிகீம்
வ்ருஷாசல பதே: தநும் விசஸி மத்ஸ்ய கூர்ம ஆதிகாம்.
பொருள் – தயாதேவியே! இந்த உலகைப் படைத்து, அதனைப் பாதுகாக்க எண்ணும் நீ, பார்த்தல்-நினைத்தல் முதலான செயல்களைச் செய்ய விரும்புகிறாய் போலும். அதனால்தான் நீ – விசித்ரமான குணங்கள் கொண்டதும், தோஷங்களுக்கு அப்பால் உள்ளதும் ஆகிய ஸ்ரீநிவாஸனின் மீன், ஆமை முதலான திருமேனிகளில் புகுந்து விடுகிறாய் போலும்.
விளக்கம் – இந்த உலகைப் படைத்த பின்னர், இதில் உள்ள உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தயாதேவிக்கு வந்துவிடுகிறது. தனது குழந்தைகள் போன்ற நம்மை அவள் எவ்வாறு பாதுகாக்கிறாள் – ஸ்ரீநிவாஸன் எடுக்கும் மீன், ஆமை முதலான அவதாரங்களில் இவள் புகுந்து விடுவதம் மூலம் ஆகும். இதன் மூலம் எப்படி நம்மைக் காக்கிறாள்?
மீன்கள் தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண் பார்வை மூலமே காப்பாற்றியபடி இருக்கும் (ச்லோகத்தின் பொருளில் உள்ள பார்த்தல் என்பது காண்க). ஆமைகள் தங்கள் குட்டிகளை, தங்களது எண்ணத்தின் மூலமே வளர்க்கும் திறன் உள்ளவை (ச்லோகத்தின் பொருளில் உள்ள நினைத்தல் என்பது காண்க) ஆகும்.
இது போன்று, மீனாக ஸ்ரீநிவாஸன் மச்சாவதாரம் எடுக்கும்போது, அவன் கண்களின் கடாக்ஷத்தில் இவள் புகுந்து, அந்தப் பார்வை நம் மீது விழும்படிச் செய்கிறாள். அவன் ஆமையாக கூர்மாவதாரம் செய்யும்போது, தனது சிந்தனை முழுவதையும் நம் மீது வைக்கும்படிச் செய்கிறாள்.
படம் – நன்றி http://www.crystalinks.com/avatars.html

ஸ்ரீ தயா சதகம் – 81 December 31, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
க்ருபே விகத வேலயா க்ருத ஸமக்ர போஷை: த்வயா
கலி ஜ்வலந துர்க்கதே ஜகதி காளமேகாயிதம்
வ்ருஷ க்ஷிதிதர ஆதிஷு ஸ்த்திதிபதேஷு ஸாநுப்லவை:
வ்ருஷாத்ரி பதி விக்ரஹை: வ்யபகத அகில அவக்ரஹை:
பொருள் – தயாதேவியே! எல்லையற்ற கருணை கொண்டவளாகிய உன்னால் பூரணமாகக் காக்கப்படுகிறது; இந்த உலகின் அனைத்துத் துன்பங்களையும் நீங்கச் செய்கிறது; திருவேங்கடமலை முதலிய திவ்யதேசங்களில், ஆதிசேஷன் போன்ற பரிவாரங்களுடன் கூடி உள்ளது – இப்படியாக எங்கும் உள்ள ஸ்ரீநிவாஸனின் அர்ச்சை விக்ரஹங்கள், கலி என்னும் வேதனை அளிக்கவல்ல நெருப்பினால் வருந்தும் உலகிற்கு, மழை மேகம் போன்று உள்ளன.
விளக்கம் – அடுத்து வரும் 10 ச்லோகங்களில் தசாவதாரத்தைக் கூற உள்ளார். அதன் அவதாரிகையாக இங்கு அர்ச்சாவதாரத்தைப் பற்றிக் கூறுகிறார்.
வ்யபகத அகில அவக்ரஹை – என்றால் அனைத்துப் பஞ்சங்களும் நீக்கப்படுகின்றன என்பதாகும். இது மழை இல்லாத நிலை, அதிகமாக மழை பெய்யும் நிலை போன்றவையாகும். இந்த நிலைகள் அனைத்தும் ஆங்காங்கே உள்ள அர்ச்சாவதார விக்ரஹங்கள் மூலமாக நீங்கிவிடுகின்றன.
மழை பொழியும் மேகங்கள் மலை உச்சியில் காணப்படுவது போன்று, கருணை பொழியும் ஸ்ரீநிவாஸனின் விக்ரஹங்கள் திருமலை போன்ற உச்சிகளில் உள்ளன. மேகங்களுக்கு இடி-மின்னல் போன்றவை ஆதரவாக உள்ளது போன்று, இவனுடைய அர்ச்சாவதார விக்ரஹங்களுடன் ஆதிசேஷன், கருடன் போன்றவர்களும் அர்ச்சையில் உள்ளனர். இந்தக் கலி காலத்தில் உள்ள பாவங்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டு, நெருப்பு போன்று வருத்துகின்றன. இந்த வேதனையை நீக்கும்விதமாக, கார்மேகம் போன்ற ஸ்ரீநிவாஸனின் விக்ரஹங்கள் உள்ளன.
படம் – கார்மேகம் போன்று நிறம் மட்டும் அல்ல, குணங்களாலும் அப்படியே உள்ள ஸ்ரீநிவாஸனின் நேத்ர தரிசனம்.

ஸ்ரீ தயா சதகம் – 80 December 30, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ப்ரணஹித தியாம் த்வத் ஸம்ப்ருக்தே வ்ருஷாத்ரி சிகா மணௌ
ப்ரஸ்ருமர ஸுதா தாரா ஆகாரா ப்ரஸீததி பாவநா
த்ருடமிதி தயே தத்த ஆஸ்வாதம் விமுக்தி வலாஹகம்
நிப்ருத கருத: நித்யாயந்தி ஸ்த்திர ஆசய சாதகா:
பொருள் – தயாதேவியே! உன்னுடன் எப்போதும் சேர்ந்தே நிற்கும் ஸ்ரீநிவாஸனிடம் மனதை ஒருவன் நிலை நிறுத்தி, இடைவிடாமல் த்யானிக்கக் கூடும். அவனுக்கு, அந்தத் த்யானம் என்பது அமிர்தப் பெருக்காக விளங்குகிறது. இவன் போன்றவர்களுக்கு மோக்ஷம் என்னும் மழையைப் பொழிகின்ற மேகமாக ஸ்ரீநிவாஸன் உள்ளான். மழை நீரை மட்டுமே நம்பியுள்ள சாதகப் பறவைகள் போன்று, இவ்விதம் த்யானம் செய்பவர்கள், ஸ்ரீநிவாஸன் என்னும் மேகத்தை எதிர்பார்த்தபடி, உறுதியுடன் உள்ளனர்.
விளக்கம் – இங்கு மோக்ஷம் அடைவதற்காக ஸ்ரீநிவாஸனிடம் மனதைச் செலுத்தி, பக்தி யோகத்தில் ஈடுபடுவதைக் கூறினார். அவர்களுக்கு ஸ்ரீநிவாஸன், த்யானத்தை மேலும் வளர்க்கிறான். இவர்கள், சாதகப் பறவைகள் போன்று, மோக்ஷம் என்னும் மழையைப் பொழியவல்ல ஸ்ரீநிவாஸனை எதிர்பார்த்தபடி உள்ளனர்.
படம் – ஸ்ரீநிவாஸன் என்னும் மேகம் பொழிய உள்ள கருணை என்னும் மழைக்காக காத்து நிற்கும் சாதகப் பறவைகள்.


ஸ்ரீ தயா சதகம் –79 December 29, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
த்வத் உபஸதநாத் அத்ய ச்வ: வா மஹா ப்ரளயே அபி வா
விதரதி நிஜம் பாத அம்போஜம் வ்ருஷாகல சேகர:
தத் இஹ கருணே தத் தத் க்ரீடா தரங்க பரம்பரா
தரதமதயா ஜுஷ்டாயா: தே துரத்யயதாம் விது:
பொருள் – தயாதேவியே! உன்னை நாங்கள் சரணம் அடைவதால் ஸ்ரீநிவாஸன் செய்வது என்ன? தன்னுடைய தாமரை போன்ற திருவடிகளை அவன் எங்களுக்கு இன்றோ, நாளையோ அல்லது ப்ரளய காலத்திலேயோ நிச்சயம் அளித்துவிடுவான். இப்படியாக எங்களைக் காப்பாற்றும் விஷயத்தில் அவனது நினைவுகளை தொடர்ச்சியாக எழும் உனது அலைகள் தூண்டியபடி உள்ளன. இதனைத் தடுக்க இயலாது என்று அறிஞர்கள் உணர்ந்த்துள்ளனர்.
விளக்கம் – தயாதேவியைச் சரணம் அடைந்த ஒருவனுக்கு, ஸ்ரீநிவாஸன் தன்னுடைய கைங்கர்யம் என்னும் மோக்ஷத்தை அளித்தே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் தயாதேவியை மீறி ஸ்ரீநிவாஸனால் நடக்க இயலாது. ஆனால் அவரவர்களின் கர்மங்கள், உபாஸனைகள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப, இத்தகைய மோக்ஷம் என்பது கிட்டும் காலமானது வேறுபடுகிறது.
படம் – தனது வலது திருக்கரத்தால் தாமரை போன்ற திருவடிகளைக் காண்பித்து, “இதனைப் பற்றுவாயாக”, என்று கூறுகிறான். இடது திருக்கரத்தால் தனது அழகான திருமேனியைத் தொட்டுக் காண்பித்து, “அவ்விதம் நீ திருவடியைப் பற்றினால், நான் உன்னைக் கரையேற்றுகிறேன்”, என்று உறுதி செய்கிறான்.


ஸ்ரீ தயாசதகம் – 98 January 17, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஜஹ்யாத் வ்ருஷாசல பதி: ப்ரதிகே அபி ந த்வாம்
கர்ம உபதப்த: இவ சீதளாம் உதந்வாந்
ஸா மாம் அருந்துத பரந்யாஸந அநுவ்ருத்தி:
தத் வீஷணை: ஸ்ப்ருச தயே தவ கேளி பத்மை:
பொருள் – பெரிய கடலானது எத்தனை வெய்யில் அடித்தாலும், தனது இயல்பான குளிர்ச்சியைக் கைவிடாமல் உள்ளது. அந்தக் கடல் போன்ற ஸ்ரீநிவாஸன், எங்களது பாவங்களைக் கண்டு எங்கள் மீது கோபம் கொண்டாலும், உன்னை விடாமலேயே உள்ளான். ஒரு முறைக்கு மேல் உன்னிடம், “என்னைக் காப்பாற்றுவாயாக”, என்று கூறினால் மனவேதனை அடையும் தன்மையுள்ள நீ, உனது விளையாட்டுப் பொருளான தாமரை போன்ற ஸ்ரீநிவாஸனின் கடாக்ஷங்களால் என்னைத் தொடுவாயாக.
விளக்கம் – ஸ்ரீநிவாஸனிடம் சரணாகதி அடைந்தவர்கள், அதன் பின்னர் செய்யும் பாவங்களைக் கண்டு அவனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிறது. அவனது கோபம் கண்டு நீ அஞ்சியபடி மறைந்து கொள்கிறாய். ஆயினும் அவன் உன்னை மீண்டும் கண்டுபிடித்து, உன் மூலமாக எங்களுக்கு உரிய தண்டனையைச் சிறிதளவாக ஆக்கிவிடுகிறான். த்ரௌபதி தன்னை ஒருமுறை “கோவிந்தா” என்று அழைத்ததே தன்னைப் பெரும் கடனாளி ஆக்கிவிட்டதாகக் கண்ணன் கூறினான் அல்லவா? அப்படி உள்ளபோது மறுபடியும் காப்பாற்று என்று உன்னிடம் வேண்டினால் நீ நொந்து கொள்வது நியாயமே ஆகும்.

ஸ்ரீ தயாசதகம் – 97 January 16, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஔத்ஸுக்ய பூர்வம் உபஹ்ருத்ய மஹா அபராதாந்
மாத: ப்ரஸாதயிதும் இச்சதி மே மந: த்வாம்
ஆலிஹ்ய தாந் நிரவசேஷம் அலப்த த்ருப்தி:
தாம்யஸி அஹோ வ்ருஷ கிரீச த்ருதா தயே த்வம்
பொருள் – தாயாகிய தயாதேவியே! எனது மனமானது நான் செய்யும் மிகப் பெரிய பாவங்களை ஆசையுடன் உனக்குச் சமர்ப்பணம் செய்தபடி உள்ளது. இதன் மூலம் உன்னை மகிழ்விக்க எண்ணுகிறது. அப்படிப்பட்ட அதனையும் நீ ஏற்றுக் கொண்டு, மீதம் வைக்காமல் உண்கிறாய். இப்படியாக உண்ட பின்னரும் த்ருப்தி அடையாமல் உள்ளாயே!
விளக்கம் – தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் தயாதேவிக்குச் சமர்ப்பணம் என்று அளித்தாலும், அவள் அவற்றை மிகவும் மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறுகிறார் – காரணம் பாவங்கள் அதிகரித்தால்தான் இந்தக் குழந்தையை அதிக அளவு காப்பாற்ற இயலும் என்று தயாதேவி நினைக்கிறாள்.

ஸ்ரீ தயாசதகம் – 96 January 15, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ஸந்தந்யமாநம் அபராத கணம் விசிந்த்ய
த்ரஸ்யாமி ஹந்த பவதீம் ச விபாவயாமி
அஹ்நாய மே வ்ருஷ கிரீச தயே ஜஹீமாம்
ஆசீ விஷ க்ரஹண கேளி நிபாம் அவஸ்த்தாம்
பொருள் – தயாதேவியே! தொடர்ச்சியாகச் செய்யப்படும் என்னுடைய பாவக்கூட்டங்களை நினைத்து நான் நடுங்கியபடி உள்ளேன். உன்னுடைய கருணையை நன்றாகத் த்யானிக்கிறேன். இவ்விதம் கொடிய விஷம் கொண்ட பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விளையாடுவது போன்ற என்னுடைய நிலையை நீ மாற்ற வேண்டும்.
விளக்கம் – தன்னுடைய செயலானது பாம்பாட்டியின் செயல் போன்று உள்ளது என்றார். பாம்பாட்டி பாம்புடன் விளையாடும்போது, அவனை அவைகளில் சில கடித்துவிடும். உடனே அவன் தகுந்த வைத்தியம் செய்து கொள்வான். பின்னர் மீண்டும் விளையாடும்போது, இதே நிலை உண்டாகும். இது போன்று பாவம் – ப்ராயச்சித்தம் என்றே வாழ்க்கையைக் கடத்துவதாகக் கூறுகிறார். இந்த நிலையில் இருந்து தன்னை மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறார்.

ஸ்ரீ தயாசதகம் – 95 January 14, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
விக்ஷேபம் அர்ஹஸி தயே விபலாயிதே அபி
வ்யாஜம் விபாவ்ய வ்ருஷசைல பதே: விஹாரம்
ஸ்வாதீந ஸத்த்வ ஸரணி: ஸ்வயம் அத்ர ஜந்தௌ
த்ராகீயஸீ த்ருடதரா குண வாகுரா த்வம்
பொருள் – தயாதேவியே! உனக்கு அடங்கியதும், ஸத்வ குணத்தால் ஆனதும், நீண்டதாகவும், உறுதியானதாகவும் உள்ள ஸ்ரீநிவாஸனின் குணம் என்னும் வலையாக நீ உள்ளாய். உங்களிடம் இருந்து என் போன்ற விலங்குகள் எத்தனை தூரம் ஓடினாலும், ஸ்ரீநிவாஸனின் வேட்டை என்பதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, என் போன்றவர்கள் சென்ற வழியை அறிந்து, பிடித்துக்கொண்டு, உங்களிடம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
விளக்கம் – நாங்கள் உலக விஷயம் என்னும் காடுகளில் மேய்ந்தபடி உள்ளோம். எங்களை பிடிக்கும் வேட்டை என்பதைச் சாக்காக வைத்துக் கொண்டு, நாங்கள் திரிகின்ற இடத்திற்கு நீ ஸ்ரீநிவாஸனை அழைத்து வரவேண்டும். நாங்கள் எங்கே ஓடி ஒளிந்தாலும், எத்தனை தூரம் ஓடினாலும், எளிதாகப் பிடிக்கும்படி, நீ நீளமான கயிறாக வேண்டும். நாங்கள் உனது வலையை அறுத்துக் கொண்டு ஓட முயற்சித்தாலும், நீ உறுதியான கயிறாக இருக்க வேண்டும். விக்ஷேபம் என்றால் வீசுதல் என்று பொருள். இங்கு தயாதேவி கடாக்ஷத்தை வீசவேண்டும் என்று கூறுகிறார்.

ஸ்ரீ தயாசதகம் – 94 January 13, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
மா ஸாஹஸ் உக்தி கந கஞ்சுக வஞ்சித அந்ய:
பச்யத்ஸு தேஷு விததாமி அதிஸாஹஸாநி
பத்மா ஸஹாய கருணே ந ருணத்ஸி கிம் த்வம்
கோரம் குலிங்க சகுநே: இவ சேஷ்டிதம் மே
பொருள் – தயாதேவியே! மற்ற மனிதர்களிடம் ஸாஹஸம் செய்யாதே (அசட்டுத் துணிச்சலுடன் காரியம் செய்யாதே) என்று கூறியபடி, உத்தமான மனிதன் என்று வேஷம் போட்டபடி , அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நான் (ஸ்வாமி தேசிகன்) ஸாஹஸச் செயல்களைச் செய்கிறேன். குலிங்கம் என்ற பறவையின் செயல் போன்ற எனது துணிவான செயலை நீ ஏன் தண்டிக்காமல் உள்ளாய்?
விளக்கம் – கடந்த ச்லோகத்தில் சாஸ்திரங்களை மீறுவது தவறு என்று தெரிந்தும் அதனைத் தான் செய்வதாகக் கூறினார். இங்கு அந்த செயல்களைச் செய்யக்கூடாது என்று மற்றவர்களுக்கு உபதேசித்தபோதிலும், அவைகளைத் தான் செய்வதாகக் கூறுகிறார். இதற்கு குலிங்கம் என்ற பறவையை உதாரணமாகக் கூறுகிறார். அந்தப் பறவையின் வாயில் இருந்து எப்போதும் “மா சாகஸம்” – ஸாகஸம் செய்யாதே என்ற ஒலி வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பறவையானது, சிங்கம் உறங்கும்போது அதன் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாமிசத்தை இழுத்துக் கொண்டுவரும். இதனை போன்றே தானும் செய்வதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ தயாசதகம் – 93 January 12, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
விஜ்ஞாத சாஸந கதிர் விபரீத வ்ருத்த்யா
வ்ருத்ர ஆதிபி: பரிசிதாம் பதவீம் பஜாமி
ஏவம் விதே வ்ருஷகிரீச தயே மயி த்வம்
தீநே விபோ: சமய தண்டதரத்வ லீலாம்
பொருள் – தயாதேவியே! சாஸ்திரங்கள் எதனைத் தடுக்கின்றன, எதனைச் செய்தால் தண்டனை அளிக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆயினும் வ்ருத்ராஸுரன் முதலானவர்கள் கடைப்பிடித்த தகாத வழியை நான் பின்பற்றியபடி உள்ளேன். இப்படியாக நான் நின்றாலும் – என்னை ஏதும் அறியாதவன் என்று எண்ணியும், உன்னிடம் சரணம் புகுந்தவன் என்ற காரணத்தாலும் ஸ்ரீநிவாஸன் என்னைத் தண்டிக்கும் நிலையை நீ தணிக்க வேண்டும்.
விளக்கம் – சாஸ்திரங்களை நன்றாக அறிந்தவன் தவறு செய்தால் தண்டனை அதிகம் என்பதும், சாஸ்திரம் தெரியாதவர்கள் தவறு செய்தால் தண்டனை குறைவு என்றும் கூறப்படுகிறது. இங்கு தனக்குச் சாஸ்திரம் தெரிந்த காரணத்தால், தனக்குத் தண்டனை அதிகம் என்று ஸ்வாமி உணர்ந்தார். எனவே தனக்காக ஸ்ரீநிவாஸனிடம் பரிந்து பேசும்படிக் கூறினார்.

ஸ்ரீ தயாசதகம் – 92 January 11, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
நைஸர்க்கிகேண தரஸா கருணே நியுக்தா
நிம்ந இதரே அபி மயி தே விததி: யதி ஸ்யாத்
விஸ்மாபயேத் வ்ருஷகிரி ஈச்வரம் அபி அவார்யா
வேலா அதிலங்கந தசா இவ மஹா அம்புராசே:
பொருள் – தயாதேவியே! உன்னுடைய கருணை என்னும் வெள்ளமானது, காப்பாற்றும் தன்மையைக் கொண்டுள்ளது. அந்த வேகத்துடன் வீசும் உனது வெள்ளம், தாழ்மை என்பதே இல்லாமல் அஹங்காரம் என்ற உச்சியில் நிற்கின்ற என் வரையில் வந்து வீசுகிறது. இப்படியாக கரையை உடைத்துக் கொண்டு வீசுகின்ற உன்னுடைய கருணை என்னும் வெள்ளமானது, ஸ்ரீநிவாஸனையே வியப்பில் ஆழ்த்துகிறது.
விளக்கம் – ஸ்ரீநிவாஸன் மலையின் உச்சியில் நிற்கிறான். நான், என்னுடைய அஹங்காரம் காரணமாக, அவனுக்குக் கட்டுப்படாதவன் என்னும் சிந்தனையுடன், அவனையும்விட உயர்ந்தவன் என்ற எண்ணத்துடன் உள்ளேன். ஆனால் உன்னுடைய வெள்ளமானது, நான் இருக்கும் உயரமான இடத்தையும் எட்டிப் பிடித்துவிடுகிறது. இப்படியாக தன்னுடைய தலைக்கு மேலே ஓடும் வெள்ளத்தை ஸ்ரீநிவாஸன் வியந்து பார்க்கிறான். தன்னுடைய திருமலை மூழ்கிவிடும் ப்ரளயகாலம் வந்துவிட்டதோ என்று எண்ணுகிறான்.
படம் – திருமலையில் பாய்கின்ற வெள்ளம். இதுதான் ஸ்வாமி தேசிகனால் கூறப்படுகிறதோ?

91 ஸ்ரீ தயா சதகம் January 10, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
விச்வ உபகாரம் இதி நாம ஸதா துஹாநாம்
அத்யாபி தேவி பவதீம் அவதீரயந்தம்
நாதே நிவேசய வ்ருஷாத்ரி பதே: தயே த்வம்
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரம் த்வயி மாம் த்வயா ஏவ
பொருள் – தயாதேவியே! இப்படியாகக் கூறியபடி இந்த உலகிற்கு நீ பல நன்மைகளை எப்போதும் அளித்து வருகிறாய். ஆயினும் உன்னை நான் தொடர்ந்து அலக்ஷ்யம் செய்தபடியே உள்ளேன். உன் மூலமாக, உன்னிடத்தில் என்னுடைய ரக்ஷணத்தை (என்னைக் காப்பாற்றும் பொறுப்பு) நான் வைத்துள்ளேன். இப்படிபட்ட என்னை, நீ ஸ்ரீநிவாஸனிடம் எப்போதும் வைத்திருப்பாயாக.
விளக்கம் – துஹாநாம் என்ற பதம் கறத்தல் என்ற பொருள் தரும். இதன் மூலம் தயாதேவி ஸ்ரீநிவாஸனைப் பசுவாக நினைத்து, அவனிடமிருந்து கருணையைப் பால் போன்று கறந்து நமக்கு அளிக்கிறாள் என்று கருத்து. தாயானவள் குழந்தைக்கு இவ்விதம் பால் புகட்டும்போது, அந்தத் தாயை குழந்தை தள்ளிவிடக் கூடும். ஆயினும் தாயானவள் பொறுமையுடன் குழந்தையைக் கவனிக்கிறாள். இது போன்றே தானும் (ஸ்வாமி தேசிகன்) தயாதேவியை உதாஸீனம் செய்தாலும், தன்னை அவள் கைவிடக்கூடாது என்கிறார். தாமாகவே சென்று தயாதேவியிடம் சரணாகதி அடைந்து, அதன் பின்னர் அவளை அலட்சியம் செய்தால் அவள் நம்மைக் கைவிடுவது சரியே. ஆனால் அவளாகவே வந்து நம்மைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவதாக அல்லவோ கூறி உள்ளாள்? இவ்விதம் விரதம் பூண்டபின், நம்மிடம் குறை கண்டு காப்பாற்ற மறுத்தால், அந்த விரதத்திற்குப் பங்கம் வந்து விடும் அல்லவா? எனவே அந்தப் பங்கம் ஏற்படாமல் இருக்க ஸ்ரீநிவாஸனுக்கு நாம் எப்போதும் கைங்கர்யம் செய்யும்படி உள்ள நிலையை அளிக்கவேண்டும் என்றார்.

ஸ்ரீ தயா சதகம் – 90 January 9, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வ்ருஷாத்ரி ஹய ஸாதிந: ப்ரபல தோ: மருத் ப்ரேங்க்கித:
த்விஷா ஸ்ப்புட தடித் குண: த்வத் அவஸேக ஸம்ஸ்காரவாந்
கரிஷ்யதி தயே கலி ப்ரபல கர்ம நிர்மூலந:
புந: க்ருத யுகாங்குரம் புவி க்ருபாண தாராதர:
பொருள் – தயாதேவியே! திருவேங்கட மலையில் வாசம் செய்பவனும், குதிரை ஓட்டுவதில் வல்லவனும் ஆகிய ஸ்ரீநிவாஸனின் தோள்களில் இருந்து எழும் காற்றால் வீசப்பட்டதும், மின்னல் போன்று ஒளி வீசுவதும், உன்னுடைய தோய்த்தல் காரணமாகச் சுத்தி அடைந்ததும் ஆகிய கத்தி என்னும் கருமேகம் – கலியுகத்தில் பூமியில் உள்ள தாபங்களை வேருடன் அறுத்து, க்ருதயுகம் உண்டாவதற்குத் தேவையான் முளைகளை உற்பத்தி செய்யப்போகிறது.
விளக்கம் – இங்கு கல்கி அவதாரம் குறித்துக் கூறுகிறார். கலி காலத்தின் இறுதியில் இந்த உலகில் பாவம் நிறைந்த மக்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களை அழித்துவிட்டுப் புதிய பயிர் போன்று புதிய யுகத்தைத் தொடங்கி வைப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேகம் எங்கும் பரவுவதற்கு காற்று அவசியமாகும். இந்தக் காற்றானது, ஸ்ரீநிவாஸன் தனது கத்தியை வீசுவதால் உண்டாகிறது. மலை மீது குதிரையில் அமர்ந்தபடி காற்று வீசினால், மேகம் எங்கும் பரவ ஏதுவாகும் அல்லவா?


ஸ்ரீ தயா சதகம் – 89 January 8, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ப்ரபூத விபுத த்விஷத் பரண கிந்ந விச்வம்பரா
பர அபநயநச் சலாத் த்வம் அவதார்ய லக்ஷ்மீ தரம்
நிராக்ருதவதீ தயே நிகம் ஸௌத தீப ச்ரியா
விபச்சித் அவகீதயா ஜகதி கீதயா அந்தம் தம:
பொருள் – தயாதேவியே! சிறந்த வலிமை கொண்ட தேவர்களுக்குப் பகைவர்களாக விரும்பிய அசுரர்களின் பாரத்தால் பூமாதேவி வருந்தினாள். அவளது வருத்தத்தை நீக்குவது என்ற ஒரு பாசாங்கு செய்து ஸ்ரீநிவாஸனைக் கண்ணனாக அவதரிக்கச் செய்தாய். அப்போது – வேதம் என்னும் மாளிகையின் உச்சியை அடைய உதவும் ஒளி போன்றதும், அனைத்து அறிவுள்ளவர்களால் போற்றப்படுவதும் ஆகிய ஸ்ரீமத் பகவத் கீதை மூலம் இந்த உலகை சூழ்ந்த அஜ்ஞானம் என்னும் இருளை நீக்கினாய்.
விளக்கம் – இந்தப் பூமியின் பாரத்தை நீக்கவும், நம்முடைய சுமைகளை நீக்கவும் மஹாலக்ஷ்மியால்தான் இயலும் என்று உணர்ந்த ஸ்ரீநிவாஸன் கண்ணனாக அவதரித்தபோது தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியையும் சுமந்து வந்தான். இதனை விளக்கவே ஸ்வாமி தேசிகன், லக்ஷ்மீதரம் என்று அருளிச் செய்தார். இங்கு கீதையின் இரண்டு பெருமைகளைச் சுட்டிக் காண்பிக்கிறார்.
வேதம் என்னும் மாளிகையில் நாம் உள்ளே புகுந்து அனைத்தையும் உணரவைக்கும் விளக்காக கீதை உள்ளது என்பது முதல் பெருமையாகும். அனைவராலும் போற்றப்படும் உன்னதமான சாஸ்திரமாகக் கீதை உள்ளது என்பது இரண்டாவது பெருமையாகும்.
இங்கு உள்ள அவிகீதயா என்ற பதம் காண்க. விகீதா என்றால் ஆக்ஷேபம் செய்தல் என்று பொருள் ஆகும். ஆனால் கீதை அனைவராலும் ஏற்றுக் கொள்ளபடுவதால் அவிகீதயா என்றார்.
இராமன் நம்மிடம் இருந்தான் என்பதற்கும், கண்ணன் நம்மிடம் இருந்தான் என்பதற்கும் இக்காலத்தில் வேள்வி எழலாம் என்று ஸ்வாமி தேசிகன் அன்றே தீர்க்க தரிசனமாக முடிவு காட்டினார் போலும். எனவேதான் இராமன் இருந்ததற்கான சாட்சியாக விளங்கும் சேது பாலத்தையும், கண்ணன் இருந்ததற்கான ஆதாரமான ஸ்ரீமத் பகவத் கீதையையும் கூறினார் போலும்.

ஸ்ரீ தயாசதகம் -108 January 27, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
காமம் ஸந்து மித: கரம்பிதகுண அவத்யாநி பத்யாநி ந:
கஸ்ய அஸ்மிந் சதகே ஸத் அம்பு கதகே தோஷ ச்ருதிம் க்ஷாம்யதி
நிஷ்ப்ரத்யூஹ வ்ருஷாத்ரி நிர்ஜ்ஜர ஜரத்காரச் சலேந உச்சலந்
தீந ஆலம்பந திவ்ய தம்பதி தயா கல்லோல கோலாஹல:
பொருள் – வருத்தத்தில் உள்ளவர்கள் பற்றும் இடமாகத் திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் அலை பெரிதாக முழங்கியபடி ஓடுகிறது; தடையில்லாமல் திருமலையில் ஓடுகின்ற அருவிகள் பெரும் முழக்கம் செய்தபடி உள்ளன; இவை சாதுக்களுக்குத் தேத்தாங்கொட்டை போன்று உள்ளன. எனது இந்தச் ச்லோகங்கள் எத்தனை குற்றம் கலந்ததாக இருந்தாலும் இருக்கட்டும். இந்தத் துதிகளில் குற்றம் கூறுபவர்களின் சொற்கள் என்ன ஆகும் என்றால் – இப்படியாக உள்ள பலவிதமான முழக்கங்கள் காரணமாக அவர்களது குற்றச்சாட்டுகள் யாருக்கும் கேட்காது. அவ்விதம் யார் காதிலாவது கேட்க, இந்த அலை முழக்கங்கள் இடம் கொடுக்குமா?
விளக்கம் – திருமலையில் திவ்ய தம்பதிகளின் கருணை என்ற அலை பெரும் ஒசையுடன் கொட்டும் அருவிகளில் எப்போதும் ஓடியபடி உள்ளது . தனது ச்லோகங்களில் குற்றம் கூறுபவர்களின் குரல்கள், இந்த அருவிகளின் ஓசையில் அடங்கிவிடும் என்று கூறுகிறார். தயாதேவி அனைத்து குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவள் என்றாலும், தனது துதிகளின் மீது குற்றம் கூறுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாள் என்று வேடிக்கையாக கூறுகிறார்.
ஆயினும் இவ்விதம் குற்றம் சொல்லுபவர்களைத் தயாதேவி, தனது சொற்களைக் காப்பாற்றுவதாகத் தண்டிக்காமல் விட்டு விடுகிறாள் என்றார்; அவர்களது குரலை மட்டும் மறையச் செய்கிறாள்.
தேத்தாங்கொட்டை என்பது தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதாகும். இந்தச் ச்லோகமானது தேத்தாங்கொட்டை போன்று மனதைத் தெளிய வைக்கும் என்றார்.
ச்லோகத்தில் உள்ள ந: என்ற பதம் காண்க. இந்த பதம் நாங்கள் என்ற பொருளைக் குறிக்கும். இதன் மூலம் ஸ்ரீநிவாஸன், அவனது ஸங்கல்பம் மற்றும் தன்னையும் கூறி – எங்கள் மூவரின் இந்தச் ச்லோகம் என்று கூறினார்.
இந்த ச்லோகத்தைத் தொடங்கும்போது தயாதேவியை இறுகிப்போன சர்க்கரை மலையாகக் கூறினார். முடிக்கும்போது தயாதேவியை, தனது ச்லோகத்தைக் கேட்டு “கல்லோல கோலாஹல” என்று – ஓடி வரும் தயாதேவியாகக் கூறி முடித்தார்.

ஸ்ரீ தயாசதகம் ஸம்பூர்ணம்

ஜயதி யதிராஜ ஸூக்தி: ஜயதி முகுந்தஸ்ய பாதுகாயுகளீ
ததுபயதந: த்ரிவேதீம் அவத்யயந்த: ஜயந்தி புவி ஸந்த:
கவிதார்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

அலர்மேல்மங்கை திருவடிகளே சரணம்

திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்

தூப்புல் பிள்ளை திருவடிகளே சரணம்

ஸ்ரீ தயாசதகம் -107 January 26, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
விச்வ அநுக்ரஹ மாதரம் வ்யதிஷஜத் ஸ்வர்க்க அபவர்க்காம் ஸுதா
ஸத்ரீசீம் இதி வேங்கடேச்வர கவி: பக்த்யா தயாம் அஸ்துத
பத்யாநாம் இஹ யத் விதேய பகவத் ஸங்கல்ப கல்ப த்ருமாத்
ஜஞ்ஜ்ஜாமாருத தூத சூத நயத: ஸாம்பாதிக: அயம் க்ரம:
பொருள் – அனைத்து உலகிற்கு கடாக்ஷம் அளிக்கவல்ல தாயாகவும், அமிர்தம் போன்று இனியவளும், ஸ்வர்கம் மற்றும் மோக்ஷத்தை அளிப்பவளும் ஆகிய தயாதேவியே! வேங்கடேசன் என்னும் கவி, பக்தியுடன் இவ்விதமாகத் துதித்தார். இந்தத் துதியில் துதிக்கப்பட்ட தயாதேவி இட்டதே சட்டமாக ஸ்ரீநிவாஸனின் ஸங்கல்பம் உள்ளது. இந்தச் ஸங்கல்பம் என்ற கற்பக மரத்திலிருந்து, என்னுடைய புத்தி மூலம் இந்த 100 கனிகள் பெறும் காற்றில் விழுந்தது போன்று உதிர்ந்தன.
விளக்கம் – எந்த ஒரு பலனும் பகவானின் ஸங்கல்பம் மூலமே கிட்டும். அப்படிப்பட்ட பகவத் ஸங்கல்பம் என்பது கற்பகம் மரம் போன்று இருந்தாலும், அது தயாதேவிக்கு அடங்கியதாகவே உள்ளது. இந்த ஸ்துதியானது, அப்படிப்பட்ட பகவத் ஸங்கல்பம் மூலம், தயை என்னும் காற்று வீசி விழுந்த கனிகள் என்று கூறுகிறார். ச்லோகத்தில் உள்ள ஸ்வர்கம் என்ற பதம் தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்றையும் குறிக்கும். இந்த மூன்றையும், மேலும் மிக உயர்த்த புருஷார்த்தமான மோக்ஷத்தையும் அளிப்பது தயாதேவியே என்று கூறினார். இதில், தான் பக்தியுடன் இயற்றியதாகக் கூறினாலும், பகவத் ஸங்கல்பமே உயர்ந்தது என்று உணர்த்துவதை காண்க.

ஸ்ரீ தயாசதகம் -106 January 25, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
சதகம் இதம் உதாரம் ஸம்யக் அப்யஸ்யமாநாந்
வ்ருஷகிரிம் அதிருஹ்ய வ்யக்தம் ஆலோகயந்தீ
அநிதர சரணாநாம் ஆதிராஜ்யே அபிஷிஞ்சேத்
சமித விமத பக்ஷா சார்ங்க தந்வா அநுகம்பா
பொருள் – யார் யார் எதனை விருப்பினாலும், அதனை அளிக்கும் வள்ளல் போன்று இந்த நூறு ச்லோகங்களும் அவர்கள் விரும்புவதை அளிக்க வல்லது. இதனை நன்றாக, பாராயணமாகப் படிப்பவர்களை – திருமலை மீது எழுந்தருளி, ஏற்றத் தாழ்வின்றி கடாக்ஷிக்கும் ஸ்ரீநிவாஸனின் தயாதேவியானவள், அவர்களது விரோதிகளை அடக்கி விடுவாள். வேறு கதி இல்லாத சரணாகதர்களின் கூட்டத்திற்குச் சக்ரவர்த்தி என்ற முடி சூட்டுவாள்.
விளக்கம் – அப்யாஸம் என்றால் பலமுறை படிப்பதாகும். ஸம்யக் என்றால் சரியாகப் படிப்பதாகும். ஆக இதனை மீண்டும் மீண்டும் சரியாகப் படிப்பதன் பலனைக் கூறுகிறார். இவ்விதம் படிப்பவர்களை தயாதேவி திருவேங்கடமலையின் மேலே நின்று கொண்டு பார்த்தபடி உள்ளாள். அவர்களுக்குத் தன் கடாக்ஷத்தை வீசியபடி உள்ளாள்.

ஸ்ரீ தயாசதகம் -105 January 24, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அநவதிம் அதிக்ருத்ய ஸ்ரீநிவாஸ அநுகம்பாம்
அவிதத விஷயத்வாத் விச்வம் அவரீடயந்தி
விவித குசல நிவீ வேங்கடேச ப்ரஸூதா
ஸ்துதி: இயம் அநவத்யா சோபதே ஸத்வ பாஜாம்
பொருள் – ஸ்ரீநிவாஸனின் எல்லையற்ற தயை குணத்தைக் குறித்து, அவனது கருணையை இலக்காக கொண்டு, இந்த ஸ்துதியானது வேங்கடேசனிடம் இருந்து தோன்றியது. இதில் உள்ள அனைத்தும் உண்மையாக, பொய்யில்லாமல் இருப்பதால், யாரையும் வெட்கம் அடையச் செய்யாதவாறு உள்ளது. அனைத்துச் க்ஷேமங்களையும் அளிக்கவல்ல செல்வமாக உள்ளது. தோஷங்கள் அற்றதாக உள்ளது. இப்படியாக இந்த ஸ்துதி, ஸத்வ குணம் உள்ளவர்களுக்கு இனிமையை அளிக்கும்படி இருக்கிறது.
விளக்கம் – ச்லோகம் 102, 103 ல், இந்த ஸ்துதியை தான் இயற்றியதாகக் கூறினார். ஆனால் ச்லோகம் 104 ல், இந்த ஸ்துதியை தன் மூலமாக ஸ்ரீநிவாஸனே இயற்றியதாகக் கூறினார். “கவிதார்க்கிக ஸிம்ஹம்” என்று பெயர் பெற்றவர் இப்படி முன்பின் முரணாகப் பேசலாமா என்ற வேள்வி எழலாம். அதற்கு இந்தச் ச்லோகத்தில் ஸமாதானம் கூறுகிறார். எப்படி எனில் – இந்த ஸ்துதியை வேங்கடேசன் ஆகிய ஸ்ரீநிவாஸன் இயற்றினான் என்பதும், வேங்கடேசனாகிய ஸ்வாமி தேசிகன் இயற்றினார் என்பதும் ஆகிய இரண்டுமே உண்மையாகுகிறது (ச்லோகத்தில் உள்ள வேங்கடேசன் என்னும் பதம் இருவரையுமே குறிக்கும்).
இங்கு யாருக்கும் வெட்கம் உண்டாகாது என்று ஏன் கூறவேண்டும்? ஒரு வஸ்துவிடம் இல்லாத தன்மையை, அதற்கு இருப்பதாகப் பொய்யாகக் கூறித் துதித்தால் – துதிக்கப்படும் வஸ்து, துதிக்கப்படும் வஸ்துவைத் துதிப்பவர் ஆகிய இருவருக்குமே வெட்கம் ஏற்படும். ஆனால் இந்த ஸ்துதியில் உள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மையாக இருப்பதால் யாருக்கும் வெட்கம் ஏற்படாது என்றார்.

ஸ்ரீ தயாசதகம் -104 January 23, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
வேதாந்த தேசிக பதே விநிவேச்ய பாலம்
தேவ: தயாசதகம் ஏதத் அவாதயத் மாம்
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷம் இவ வேங்கட சைலநாத:
பொருள் – தயாதேவியே! எப்போதும் லீலைகள் செய்வதையே ஸ்வபாவமாகக் கொண்டுள்ள ஸ்ரீநிவாஸன், ஏதும் அறியாத இந்தத் தூப்புல் பிள்ளையை, வேதாந்தாசார்யன் என்ற ஸ்தானத்தில் வைத்தான். சரியான நேரத்தில் வீணையைக் கையில் எடுத்து மீட்டுவது போன்று, என்னை இந்த தயாசதகத்தை இயற்ற வைத்தான்.
விளக்கம் – இங்கு ஸ்ரீநிவாஸனை வீணை வித்வானாகவும், தன்னை அவனால் மீட்டப்பட்ட வீணையாகவும் கூறுகிறார். வீணை இனிமையாக ஒலி எழுப்பியது என்றால், அது வீணை வித்வானின் திறமையே அன்றி வீணையின் திறமையால் அல்ல.
அர்ஜுனனைத் தேர்த் தட்டில் ஒரு சாக்கு போக்காக மட்டுமே அமர வைத்து, தானே போர் நிகழ்த்திய கண்ணனைப் போன்று, தன்னை முன் நிறுத்தி, தன் மூலமாக தயாதசகம் இயற்றினான் என்று கருத்து.
தன்னை வேதாந்தாசார்யன் என்று கௌரவித்ததாகக் கூறியதன் பொருள் என்ன? ஒரு முறை திருவரங்கத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த திருஅத்யயன உற்சவத்தை, அத்வைதிகள் – தமிழில் கோவில் உற்சவங்கள் நடத்தக்கூடாது – என்று ஆட்சேபம் செய்தனர். அப்போது நம்பெருமாள் நியமனத்தின் பேரில் அங்குள்ள ஆசார்யர்கள், ஸ்வாமி தேசிகனைத் திருவரங்கத்திற்கு வருமாறு பணித்தனர். நம்பொருமாளின் உத்தரவை ஏற்று திருவரங்கம் வந்த ஸ்வாமி தேசிகன், தனது வாதத்தால் அத்வைதிகளை வென்றார். இதன் மூலம் அத்யயன உற்சவத்தின் மேன்மையை நிலை நாட்டினார். இந்தச் செயலை கண்டு மகிழ்ந்த அழகிய மணவாளன் ஸ்வாமிக்கு – வேதாந்தாச்சாரியன் — என்று விருது அளித்து கௌரவித்தான்.
இங்கு ஸ்ரீநிவாஸனைப் பற்றி கூறும் போது திருவரங்கனை ஏன் கூறவேண்டும்? அமலனாதிபிரானில் – வடவேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் – என்று கூறியதால், ஸ்ரீநிவாஸனே திருவரங்கன் என்பதும், பெரியபெருமாளே ஸ்ரீநிவாஸன் என்பது புலப்படுகிறது.

ஸ்ரீ தயாசதகம் -103 January 22, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ப்ராய: தயே த்வத் அநுபாவ மஹா அம்புராசௌ
ப்ராசேதஸ ப்ரப்ருதய: அபி பரம் தடஸ்த்தா:
தத்ர அவதீர்ணம் அதலஸ்ப்ருசம் ஆப்லுதம் மாம்
பத்மாபதே: ப்ரஹஸந: உசிதம் ஆத்ரியேதா:
பொருள் – தயாதேவியே! பெரிய கடல் போன்ற உனது பெருமையின் கரையிலேயே வால்மீகி முதலான முனிவர்கள் நின்று விட்டனர். அப்படிப்பட்ட கடலில் நான் இறங்கி, அதன் தரையில் கால் படாமல் மூழ்கியபடித் தவிக்கிறேன். என்னைப் பார்த்து ஸ்ரீநிவாஸனும் பெரியபிராட்டியாரும் சிரிக்கின்றனர். இப்படிப்பட்ட என்னை, நீயே ஆதரிக்க வேண்டும்.
விளக்கம் – ச்லோகத்தில் உள்ள “அதலஸ்ப்ருசம்” என்ற பதம், தரை காண இயலாமல் தவிக்கும் நிலையைக் கூறுகிறது. தங்களது குழந்தை தத்தித்தத்தி நடப்பதைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்து சிரிப்பது போல் தனது நிலை கண்டு ஸ்ரீநிவாஸன் சிரித்தான் என்றார்.
இங்கு ஸ்ரீநிவாஸன் தனது மனதில், “நம்மாலேயே தயாதேவியை முழுவதுமாக அறிய இயலவில்லை. இப்படி உள்ளபோது இவன் புரிந்து கொண்டானோ?”, என்று கேலியாகச் சிரிப்பதாகவும் கொள்ளலாம்.
படம் – நன்றி – http://www.tirumala.org

ஸ்ரீ தயாசதகம் -102 January 21, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
அத்ய அபி தத் வ்ருஷகிரீச தயே பவத்யாம்
ஆரம்பமாத்ரம் அநிதம் ப்ரதம ஸ்துதீநாம்
ஸந்தர்சித ஸ்வபர நிர்வஹணா ஸஹேதா:
மந்தஸ்ய ஸாஹஸம் இதம் த்வயி வந்திந: மே
பொருள் – தயாதேவியே! இன்று தொடங்கி இயற்றப்பட்ட ச்லோகம் முதலாக, எல்லையற்ற காலமாக இருந்து வரும் வேதங்கள் உட்பட அனைத்தும் உன்னைப் பற்றிப் புகழத் தொடங்கின. ஆயினும் ஓர் அடி கூட நகராமல் அப்படியே நின்று விட்டன. இப்படிப்பட்ட மேன்மை உடைய உனது விஷயத்தில், குறைந்த புத்தியே உடையவனான எனது இந்தத் துணிவான செயலை நீ பொறுத்துக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் பொறுமை காட்டும் நீ, உன்னைப் பற்றிய விஷயத்தைத் தொடங்கிய என் விஷயத்திலும் பொறுமை கொள்ளவேண்டும்.
விளக்கம் – அனைத்துக் குற்றங்களையும் தயாதேவி பொறுத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில், தான் (ஸ்வாமி தேசிகன்) துதி பாடியதாகக் கூறுகிறார். அனைத்தையும் அறிந்த வேதங்கள், பகவானின் குணங்களைப் புகழத் தொடங்கி – யதோ வாசோ நிவர்த்தந்தே – வாக்கும் மனமும் அவனை எட்ட முடியாமல் திருபுகின்றன – என்று கூறியது. அப்படிப்பட்ட பகவானின் குணங்களைப் புகழத் தொடங்கினாலும் மன்னிக்கலாம்; ஆனால் தான் புகழத் தொடங்கியது – பகவானின் குணங்களுடைய பேரரசியாக உள்ள தயாதேவியை என்பதால் மன்னிக்க இயலாத குற்றம் புரிந்ததாக வருந்துகிறார். இந்தக் குற்றத்தை தயாதேவி பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
படம் – நன்றி http://www.tirumala.org

ஸ்ரீ தயாசதகம் – 101 January 20, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
நிஸ்ஸீம வைபவ ஜுஷாம் மிஷதாம் குணாநாம்
ஸ்தோது: தயே வ்ருஷகிரீச குணேச்வரீம் த்வாம்
தை: ஏவ நூநம் அவசை: அபிநந்திதம் மே
ஸத்யாபிதம் தவ பலாத் அகுதோபயத்வம்
பொருள் – தயாதேவியே! எல்லையற்ற மேன்மை உடையதான ஸ்ரீநிவாஸனின் மற்ற திருக்கல்யாண குணங்கள் அனைத்தும் பார்த்துக்கொண்டு நிற்கும்போது, அவைகளின் தலைவி போன்று இருக்கும் உன்னை நான் துதித்தேன். இதனைக் கண்டு அந்தக் குணங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அவைகள் என்னைக் கொண்டாடின. இதனைக் காணும்போது, உனது பலம் மூலமாக யாருக்கும் அஞ்சாத தன்மை சித்திக்கும் என்பது உண்மையாகிறது.
விளக்கம் – ஸ்ரீநிவாஸனுடைய மற்ற குணங்கள் பார்த்து கொண்டு இருக்கும்போதே, அவற்றைப் புறக்கணித்து, தயை குணத்தை மட்டும் புகழ்ந்ததைப் பற்றிக் கூறுகிறார். தயை குணத்தின் மேன்மை காரணமாகவும், தயை குணத்தின் மீது மற்ற குணங்களுக்குப் பொறாமை இல்லாத காரணத்தாலும் அவை தன்னைக் கோபிக்கவில்லை என்றார். இதன் காரணம் – தயாதேவியைத் துதிப்பவர்களுக்கு யார் மூலமாகவும் அச்சம் ஏற்படாது.

ஸ்ரீ தயாசதகம் – 100 January 19, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
ந அத: பரம் கிமபி மே த்வயி நாதநீயம்
மாத: தயே மயி குருஷ்வ ததா ப்ரஸாதம்
பத்த ஆதர: வ்ருஷகிரி ப்ரணயீ யதா அஸௌ
முக்த அநுபூதிம் இஹ தாஸ்யதி மே முகுந்த:
பொருள் – தயாதேவியே! இதற்கு மேல் உன்னிடம் விண்ணப்பிக்க வேண்டியது வேறு எதுவும் இல்லை. திருவேங்கட மலையில் மிகவும் விருப்பத்துடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாஸன் என்னிடம் மிகுந்த அன்பு செய்ய வேண்டும். அவன் பரமபதத்தில் முக்தர்களுக்கு எத்தகைய அனுபவம் அளிப்பானோ, அதனை எனக்கு நீ அருளிச் செய்ய வேண்டும்.
விளக்கம் – தயாதேவி ஸ்வாமி தேசிகனிடம், “கிம் தே பூய: ப்ரியமிதி கில ஸ்மேர வக்த்ரா விபாஸி (ஸ்ரீஸ்ருதி – 23) – உனக்கு இன்னும் நான் என்ன செய்ய வேண்டும், நீ என்ன விரும்புகிறாய்?”, என்று கேட்டாள். அதற்கு ஸ்வாமி, “பரமபதத்தில் முக்தர்கள் பெறும் ஆனந்தத்தை நான் இந்தப் பூமியிலேயே பெற வேண்டும்”, என்றார்.
ஸ்வாமி தன்னுடைய அபீதிஸ்தவத்தில் (20) – ப்ரபோ .. முகுந்த … ரங்கதாம்நி …. வயம் ஸ்வயம் ஸமுதிதம் தவ வபு: ஸதா நிசாமயந்த: த்ரிதச நிர்வ்ருதிம் புவி விந்தேமஹி – ஸ்ரீரங்கநாதா! அழகியமணவாளா! தானாகவே வெளிப்பட்ட உன்னுடைய அற்புதமான திருமேனியை எப்போதும் சேவித்தபடி, முக்தர்கள் பெறும் ஆனந்தத்தை, இந்தத் திருவரங்கத்திலேயே வாழ்ந்து நான் பெறுவேனாக – என்று கூறியது காண்க. இங்கு முகுந்த என்ற பதத்தையே பெரியபெருமாளுக்கு உபயோகித்தார். ஆக ஸ்ரீநிவாஸனின் அன்புடனும், தயாதேவியின் கடாக்ஷத்துடனும் திருவரங்கத்திலே வசிப்பது ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம் எனலாம். ஆயினும் ச்லோகத்தில் உள்ள இஹ என்ற பதம் திருமலையையைக் குறிப்பதாக கொண்டு – திருமலையில் வசிப்பதை விரும்பியதாகவும் கொள்ளலாம்.


ஸ்ரீ தயாசதகம் – 99 January 18, 2008

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்
add a comment
த்ருஷ்டே அபி துர்பலதியம் தமநே அபி த்ருப்தம்
ஸ்நாத்வா அபி தூளி ரஸிகம் பஜநே அபி பீமம்
பத்த்வா க்ருஹாண வ்ருஷசைல பதே: தயே மாம்
த்வத் வாரணம் ஸ்வயம் அநுக்ரஹ ச்ருங்க்கலாபி:
பொருள் – தயாதேவியே! என் கண் முன்பாக உள்ள பொருள்களைக் கண்டு எனது புத்தி கலங்குகிறது. நீ அதனை அடக்க முயற்சி செய்தாலும் எனது புத்தி மேலும் கர்வம் கொள்கிறது. எத்தனை நீராடினாலும் புழுதியை விரும்பும் யானை போன்றும், எத்தனை உபசாரம் செய்தாலும் மயங்காமல் விளங்குவதும் ஆகிய எனது புத்தியை நீ உனது கடாக்ஷம் என்ற சங்கிலி கொண்டு காட்டுவாயாக.
விளக்கம் – யானையைத் தொட்டு நம் வசப்படுத்த முடியாது, வ்லை வீசிப் பிடிக்க இயலாது. அதற்குத் தெரியாமல், பின்னே வந்து, சங்கிலியால் கட்டியே அதனை அடக்க இயலும். அரண்மனைக்கு அழைத்து வந்து, எத்தனை உபசாரம் செய்தாலும், அந்த சுகத்தைக் காட்டிலும், சுதந்திரமாக திரிவதையே விரும்பும். எத்தனை நீராட்டி வைத்தாலும் புழுதியை மேலே பூசிக் கொள்வதையே விரும்பும்.
மேலே உள்ள யானையைப் போன்று தனது புத்தி உள்ளதாகக் கூறுகிறார். யானை புழுதியை இறைப்பது போன்று, தன் மீது பாவம் என்பதைப் பூசிக் கொள்வதாகக் கூறுகிறார். அநுக்ரஹம் என்ற பதத்திற்கு – கடாக்ஷம், பின்னே வந்து பிடித்தல் – என்று இரு பொருள்கள் உண்டு. த்வத் வாரணம் என்ற பதத்திற்கு – உனது யானை, உன்னை ஒதுக்குபவன் – என்று இரு பொருள்கள் உண்டு. ஆக, யானையாகிய தன்னை, பின்னே வந்து சங்கிலியால் கட்டுவதே இயலும் என்றார்.
ஸ்ரீபராசரபட்டர் அருளிச் செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் – ஸ்நாத்வா அபி தூளி ரஸிகம் – யானையானது தன் மீது புழுதியை இறைத்துக் கொள்வது போன்று, பெரியபெருமாள் எனது தாழ்வான துதிகளை ஏற்றுக் கொள்கிறான் – என்பதைக் காண்க. பட்டர் உபயோகித்த – ஸ்நாத்வா அபி தூளி ரஸிகம் – என்ற பதங்களையே ஸ்வாமி தேசிகன் கையாண்டதைக் காண்க.
தான் அருளிச் செய்த யதிராஜ சப்ததியில் (59) – யதி க்ஷோணீ பர்த்து: பாத யுகளம் … மாமக மந: மாதங்க ப்ரதம நிகளம் – ஸ்ரீபாஷ்யகாரரின் அழகான இரண்டு திருவடிகளும் … எனது மனமாகிய மதம் கொண்ட யானையின் முதல் விலங்கு – என்றார்.
இதே கருத்தை, தான் அருளிச் செய்த பகவத் த்யான ஸோபானத்தில் (7) – மே சிந்தா ஹஸ்திநீ பூஷணானாம் ரச்மிபி: த்ருட நியமிதா சித்ரம் ஆலாந – யானை போன்ற தனது மனமானது, திருவரங்கனின் அழகான திருக்கரங்கள் என்னும் மரத்தில், அவன் அணிந்துள்ள திருவாபரணங்களின் ஒளி என்னும் கயிறு கொண்டு கட்டப்பட்டுவிட்டது – என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக