ஞாயிறு, 17 ஜூன், 2012

பிரம வைவர்த்த புராணம்

ராதே கிருஷ்ணா 17-06-2012

பிரம வைவர்த்த புராணம்



temple
1. தோற்றுவாய்: பிரம வைவர்த்த புராணம் ஒரு ராஜஸிக புராணம். மேலும், பிரமாண்ட புராணம். மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம் ஆகியவையும் ராஜஸிக ... மேலும்
 
temple
18. லக்ஷ்மி கடாக்ஷம்
இப்புராணம் ஸ்ரீலக்ஷ்மியைப் பற்றியும் கூறுகிறது. சிருஷ்டியின் போது கிருஷ்ணன் இடது பக்கத்திலிருந்து ஓர் அழகிய தேவி தோன்றி இரண்டு பகுதியாகி ... மேலும்
 














பிரம வைவர்த்த புராணம் பகுதி-1மே 30,2012






1. தோற்றுவாய்: பிரம வைவர்த்த புராணம் ஒரு ராஜஸிக புராணம். மேலும், பிரமாண்ட புராணம். மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம் ஆகியவையும் ராஜஸிக புராணங்களே. இது பிரம்ம காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், ஸ்ரீகிருஷ்ண காண்டம் என்று நான்கு காண்டங்களைளக் கொண்டது. பிரம வைவர்த்த புராணம் ஏன் அப்பெயர் பெற்றது. அது பிரமனைப் பற்றியும், அவருடைய வைவர்த்தம் (பரிணாம வளர்ச்சி) பற்றியும் விவரிக்கிறது. இது 18,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஸ்ரீகிருஷ்ண ஜன்ம காண்டத்தில் பிரம்மாவின் சகுணம், நிர்க்குணம் இரண்டையும் விவரிக்கிறது. இப்புராணம்  கிருஷ்ணன் பிரம்ம கல்பத்தில் சிருஷ்டியை எப்படி விரிவாக்கினார் என்று விவரிக்கிறது. கல்விக்கதிபதி சரசுவதியைக் காமதேனு எனக் கொண்டால் சுருதிகள் (வேதக்ரந்தங்கள்) கன்றுகள் ஆகும். பிரம வைவர்த்த புராணம் பால் ஆகும். வேதவியாசர் அந்தப் பசுவிலிருந்து அதைக் கறந்து எடுத்தார்.
பிரளயத்தினால் பாதிக்கப்பட்ட அறியாமை மிக்க மக்கள் இடைவிடாது பாயும் இந்த இனிய பாலைக் குடிக்கச் செய்தார். இந்த பிரம வைவர்த்தக புராணத்தைச் சூதமுனிவர் முனிவர்களுக்கு நைமிசாரண்யத்தில் கூறலானார். முதல் காண்டத்தில் கடவுளர்கள், மனிதர்கள் பற்றியும்; இரண்டாம் காண்டத்தில் கடவுளர்கள், தேவிகள், அவர்களை வழிபடும் முறை மற்றும் பலவித சொர்க்கங்கள், நரகங்கள், நோய்கள், நிவாரண வழிகள் என்பவையும்; மூன்றாவது காண்டத்தில் கிருஷ்ணாவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றியும் விவரிக்கப்படுகின்றன.
2. படைப்பு
உலக அழிவான பிரளயத்தின் போது பூலோகம், சொர்க்கலோகம் இவை இரண்டிற்கும் அவற்றிற்கும் விண்ணுலகுக்கும் இடைப்பட்ட புவர் லோகம் ஆகிய மூன்றும் அழிந்தன. இவற்றிற்கு மேல் ஸ்ரீ லக்ஷ்மியும், நாராயணனும் உறையும் வைகுந்தலோகம். சிவலோகம் காலியாக இருந்தன. ஆனால் கிருஷ்ணனின் கோலோகம் (கோ-பசு) மட்டும் சிருஷ்டியின் போது, அழிவின் போதும் மாற்றம் ஏதுமின்றி விளங்கியது. இப்புராணம் கிருஷ்ணனைப் பற்றியே உயர்வாகக் கூறுவதால் கிருஷ்ணனே பரப்பிரம்மம் என்கிறது. எனவே, கிருஷ்ணனது இடம் கோலோகம் என்றும், விஷ்ணுவினது வைகுந்தம் என்றும் வேறுபடுத்திக் கூறுகிறது. கோலோகம் கிருஷ்ணன் ஒளிமிக்கதாய் அணி பெற்றதால் அதிசயமாகப் பிரகாசமாய் விளங்குகிறது. மஞ்சள் நிறம் கொண்டு குழல் கொண்டதாய் காணப்பட்டது. சந்தனம் பூசி, கவுஸ்துப மணியுடன், ஸ்ரீவத்ஸ மறுவுடன் தோன்றிற்று. முடி தரித்து ரத்தின கசித மயமான அரியணையில் அமர்ந்திருந்தது. காட்டு மலர்களாலான மாலை அணிந்து வனமாலி எனப்பட்டது என்றும் இளமையுடன் கோபாலனாக (இடையனாகத்) தோற்றமளித்தது. என்றும் அழியாப் பிரம்மம் பரமாத்மா என்றும் கூறப்படுகிறது.
சிருஷ்டி
கிருஷ்ணனின் இச்சைப்படி இருண்டு நீர், காற்று இன்றி இருந்த அண்டம் சிருஷ்டிக்கப்பட்டது. கிருஷ்ணன் வலது புறத்திலிருந்து நாராயணன் தோன்றினார். சத்துவ குணம் நிறைந்தவராய் கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர், கவுஸ்துபம், வில் கொண்டு தோற்றம் உண்டாயிற்று. நான்கு கரங்களுடன் நீலநிறம் கொண்டிருந்தான் நாராயணன். நாராயணன் கிருஷ்ணனைப் போற்றி எதிரில் ஆசனத்தில் அமர்ந்தான். அடுத்து கிருஷ்ணனின் இடதுபுறத்திலிருந்து தாமச குணத்துடன் கூடிய மூன்று கண்களுடன், சடாமுடியுடன் திரிசூலம் ஏந்தியவராய் சிவன் தோற்றுவிக்கப்பட்டார். கிருஷ்ணனின் நாபியிலிருந்து தாமரையில் பிரம்மன் தோன்றினான். அவன் ராஜஸ குணம் நிறைந்தவன். முதியவனாய், வெள்ளை முடியுடன் வெண்ணிற ஆடை அணிந்து, கையில் கமண்டலம் ஏந்தி நான்கு முகங்களுடன் தோன்றினான். இருவரும் கிருஷ்ணனைப் போற்றி எதிரில் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்.
கிருஷ்ணனின் மார்பிலிருந்து யமதர்மராஜன் தோன்றினான். மேற்கூறப்பட்ட நால்வரும் கிருஷ்ணனைத் துதி செய்து அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர். கிருஷ்ணன் வாயிலிருந்து வெள்ளாடைகளை உடுத்தி, வீணையும் புத்தகமும் ஏந்தியவளாய் சரசுவதி தோன்றினாள். கிருஷ்ணனின் மனதிலிருந்து பொன்னிற மகாலக்ஷ்மி தோன்றினாள். ராஜசகுணம் கொண்ட அவள் சுவர்க்கத்தில் சுவர்க்கலக்ஷ்மி என்றும், மன்னர்களுக்கு ராஜலக்ஷ்மி என்றும் தோற்றம் அளித்தாள். கிருஷ்ணனின் எண்ணத்திலிருந்து போர்த் தேவதையான துர்க்கைத் தோன்றினாள். இவ்வாறே கிருஷ்ணனின் நாவிலிருந்து மந்திர தேவதையான சாவித்திரியும், மனக்காட்சியிலிருந்து காதல் தேவன் மன்மதனும் மன்மதனின் இடப்பக்கத்திலிருந்து அவன் மனைவி ரதிதேவியும், தோன்றிய பின் அக்கினி, வருணன், வாயு ஆகியோரும் அவர்களது மனைவியராகிய ஸ்வாஹா, வருணனி, வாயவி ஆகியோரும் படைக்கப்பட்டனர்.
அடுத்து கிருஷ்ணனிடமிருந்து பேரண்டம் தோன்றியது. அவ்வமயம் எங்கும் நீர் மயம். அந்த அண்டம் நீரில் மிதந்தது. அதிலிருந்து ஒரு பெரிய உருவம் தோன்றியது. அதுவே மகாவிஷ்ணு. மகாவிஷ்ணுவின் காதுகளிலிருந்து மது, கைடபன் என்ற இரண்டு ராக்ஷசர்கள் தோன்றினர். அவர்கள் தோன்றிய உடனே பிரம்மாவைக் கொல்லப் போக நாராயணன் அவர்களை தொடைகளுக்கு இடையில் நசுக்கிக் கொன்று அவர்கள் உடல் கொழுப்பிலிருந்து நிலவுலகைத் தோற்றுவித்தார். (மேதா-கொழுப்பு) எனவே பூமி மேதினி எனப்படுகிறது. (கிருஷ்ணன் புகழ்பாடும் இந்தப்புராணம் எல்லாம் கிருஷ்ணனே என்பதால் சிருஷ்டி விவரமும் மாற்றிக் கூறப்பட்டுள்ளது.)
காலம் உருவாதல்
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு. இவை நான்கும் சேர்ந்து மகாயுகம் எனப்படும். 360 மகாயுகங்கள் ஒரு திவ்ய யுகம் (இது கடவுளர்களுக்கு (அ) தேவர்களுக்கு ஒரு யுகம்) 71 திவ்யயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்தரம். 14 மன்வந்தரங்கள் சேர்ந்து பிரம்மாவுக்கு ஒருநாள். அத்தகைய 360 நாட்கள் சேர்ந்து பிரம்மாவுக்கு ஓர் ஆண்டு. அத்தகைய 108 ஆண்டுகள் கிருஷ்ணனுக்கு ஒரு நிமிடம் (அ) கல்பம் எனப்படும். இவ்வாறு பல கல்பங்கள், பிரம்ம கல்பம், வராகக்கல்பம், பத்ம கல்பம் போன்றவை. பிரம்ம கல்பத்தில் மது கைடபர்களின் உடலிலிருந்து பூமி தோற்றுவிக்கப்பட்டது. வராகக் கல்பத்தில் உலகம் காணாமல் போகத் திருமால் வராகவதாரம் எடுத்து அதை மீட்டார். பத்ம கல்பத்தில் பிரம்மா திருமால் உந்திக்கமலத்தில் தோன்றி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகங்களைச் சிருஷ்டித்தார்.
படைப்பு தொடர்கிறது
கோலோகத்தில் உள்ளது ராச மண்டபம். கிருஷ்ணன் அங்கிருந்த போது அவருடைய இடது பக்கத்திலிருந்து தோன்றினாள் ராதை. (ராதையைப் பற்றி பத்மபுராணம், பிரம வைவர்த்த புராணம் மட்டுமே கூறுகின்றன. மற்றவையில் விவரம் இல்லை). ராதையின் மயிர்க்கால்களிலிருந்து ஆயிரக்கணக்கான கோபிகைகள் தோன்றினர். கிருஷ்ணன் உடல் துளைகளிலிருந்து கோபாலகர்கள் தோன்றினர். கால்நடைகள் எனப்படும் பசு, எருது, கன்றுகள், குதிரைகள், சிங்கங்கள், அன்னங்கள் எல்லாம் கிருஷ்ணனின் உடலிலிருந்தே தோன்றின. சிவனுக்கு எருதுவும், பிரம்மாவுக்கு அன்னமும், தர்மனுக்கு ஆண்குதிரையும், துர்க்கைக்கு சிங்கமும் பரிசளிக்கப்பட்டன. ஐந்து அதிசயத் தேர்கள் தோன்ற ராதை, நாராயணன் ஆகியோருக்கு இரண்டும், மற்ற மூன்று கிருஷ்ணனுக்கும் சேர்ந்தன.
கிருஷ்ணன் உடலிலிருந்தே குபேரனும், குபேரனிலிருந்து அவன் மனைவி மனோரமாவும் தோன்றினர். மேலும், கிருஷ்ணனின் உடல் பகுதியிலிருந்தே குஹ்யகர்கள் என்ற குபேரனுடைய சேவகர்களும், சிவபெருமானின் சேவகர்களாகிய பூதங்கள், நாராயணின் சேவகர்களாகிய பர்ஷுவதர்களும் தோன்றினர். கிருஷ்ணனின் ஏற்பாட்டின்படி மகாலக்ஷ்மியும், சரசுவதியும் நாராயணனையும், சாவித்திரி பிரம்மாவுக்கும், ரதி மன்மதனுக்கும், மனோரமா குபேரனுக்கும் திருமணங்கள் நடந்தன. ஆனால், துர்க்கையைச் சிவனுக்கு மணம் செய்விக்க முற்பட்டபோது அவள் அதை மறுக்க, அவளை துறவியாக இருக்க கிருஷ்ணன் அனுமதித்தார். ஆனால், பல கல்பங்களுக்குப் பிறகு துர்க்கையை மணந்தார். அதுவரை அவள் கிருஷ்ணனுடனேயே இருந்தாள். அடுத்து, கிருஷ்ணன் பிரம்மாவுக்கு ஓர் அழகிய மாலையை அணிவித்து, தவம் இயற்றுமாறு ஆணையிட்டு அதன்பின் படைப்புத் தொழிலைச் செய்யக்கூறி, கோபிகைகள், கோபாலர்களுடன் பிருந்தாவனம் சென்றார்.
3. பிரமன் படைத்தவை
கிருஷ்ணன் சொற்படி பிரமன் உலகைப் படைத்தார். அடுத்து சுமேரு, கைலாயம், மலயம், ஹிமாலயம், உதயசலம், அஷ்டாசலம், சுபேலம், கந்தமாதனம் என்று மலைகளாய் படைத்தார். பல ஆறுகளையும், நகரங்களையும், ஊர்களையும் படைத்தார். லவண, இக்ஷு, சுரா, சர்பி, ததி, துக்த, ஜல சமுத்திரங்களையும், ஜம்புத்வீபம், சுகத்வீடம், குசத்வீபம், பிலக்ஷத்வீபம் என்ற ஏழு நிலப்பிரிவுகளையும் உருவாக்கினார். அடுத்து பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்திய லோகம் என்பவற்றையும், அதல, விதல, சுதல, தலாதள, மஹாதள, பாதாள, ரஸதல நரகங்களையும் சிருஷ்டித்தார். இவை அனைத்தும் கூடியே பிரம்மாண்டம் எனப்படும். இவை எல்லாம் மாயா உருவங்களே. விஷ்ணுலோகம், சிவலோகம், கோலோகங்கள் மட்டும் அழியாமல் நிலைத்திருப்பன. பிரம்மனின் மனைவி சாவித்திரிக்கு நான்கு வேதங்கள் தோன்றின. மற்றும் ஆறு ராகங்கள், முப்பத்தாறு ராகிணிகள், கால அளவு ஆகியவை படைக்கப்பட்டன.
பிரம்மனது நாபியிலிருந்து தேவலோகச் சிற்பி விசுவகர்மா தோன்றினார். அடுத்து எட்டு வசுக்கள், சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரைப் படைத்து, உற்பத்தியைப் பெருக்கச் சொல்ல அந்த நால்வரும் கிருஷ்ணனை நோக்கித் தவம் செய்யச் சென்றனர். இதனால் கோபம் கொண்ட பிரம்மனது நெற்றியிலிருந்து தோன்றிய தீயிலிருந்து ருத்திரன் தோன்றினான் (சில புராணங்கள் பதினோறு ருத்திரர்கள் என்று கூறும்).
பிரம்மனது வலது செவியிலிருந்து புலஸ்தியரும், இடது காதிலிருந்து புலஹரும், வலது புறத்திலிருந்து கிரதுவும், வலது நாசித்துவாரத்திலிருந்து அரணியும், இடது துவாரத்திலிருந்து அங்கிரசரும், வலது பக்கத்திலிருந்து பிருகுவும், இடது பக்கத்திலிருந்து தக்ஷனும், நிழலிலிருந்து கர்தமரும், உந்தியிலிருந்து பஞ்சசிக்ஷõவும், மார்பிலிருந்து வதுவும், கழுத்திலிருந்து நாரதரும், புஜங்களிலிருந்து மரீசியும், திரும்ப கழுத்திலிருந்து அபந்தரதமனும், நாவிலிருந்து வசிஷ்டரும், கீழுதட்டிலிருந்து பிரசேதரும், இடது அக்குளிலிருந்து ஹம்சரும், வலது அக்குளிலிருந்து யதியும் தோன்றினர். இவர்களை எல்லாம் உற்பத்தியைப் பெருக்குமாறு பிரமன் கூற, நாரதர் மறுக்க அவரைத் தீய, துராசை உள்ள கந்தர்வனாக பிரம்மத்தைப் பற்றி ஞான மற்றவனாகவும், ஒரு வேலைக்காரிக்கு மகனாகவும் பிறக்குமாறு சபித்தார். பதிலுக்கு நாரதரும் பிரமனுக்கு மரியாதையும், பூஜையும் இல்லாதவாறு சபித்தார். மற்றவர்கள் படைப்பில் இறங்கினர். மரீசிக்குக் காசியபரும், அத்திரிக்குச் சந்திரனும், பிரதேசருக்குக் கவுதமரும், புலஸ்தியருக்கு அகத்தியரும் பிறந்தனர்.
4. மனுவும் சதரூபையும்
பிரமன் சுவயம்புவ மனுவையும், அவன் மனைவி சதரூபையையும் தோற்றுவித்தான். அவர்களுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரண்டு புத்திரர்களுடன் ஆகுதி, தேவஹுதி, பிரசுதி என்ற மூன்று புத்திரிகளும் பிறந்தனர். அந்த மூன்று புத்திரிகளும் முறையே ருசிமுனிவர், கார்தம முனிவர், தக்ஷன் என்ற மூவரையும் மணந்தனர். தக்ஷன், பிரசுதி தம்பதியரின் அறுபது புத்திரிகளில் இருபத்தேழு பேர் சந்திரனையும், எண்மர் தர்மராஜனையும், பதினோறு பேர் பதினோறு ருத்திரர்களையும், மற்றுமொரு பதின்மூன்று பேர் காசியப முனிவரையும், மீதி ஒருத்தி சிவபெருமானையும் மணந்தனர். தர்மனின் முதல் மனைவி மிருதி நரன், நாராயணன் என்ற இருவரைப் பெற்றெடுத்தாள். மற்ற மனைவிகள் சந்தோஷம் (திருப்தி) தைரியம் (அமைதி) ஹர்ஷ (மகிழ்ச்சி) போன்றவர்களை பெற்றெடுத்தனர்.
ருத்திரர்களின் புத்திரர்கள் சிவகணங்கள் ஆயினர். சதி சிவனை மணந்தாள். பின்னர், அவள் தக்ஷயஜ்ஞத்தின் போது அக்னிப் பிரவேசம் செய்து உயிரை விட்டு, அடுத்த பிறவியில் இமவானின் மகளாகப் பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவபெருமானை மணந்தாள். காசியப முனிவர் மனைவியரில் அதிதி தேவர்களையும், திதி ராக்ஷசர்களையும், கத்ரு பாம்புகளையும், வினதா பறவைகளையும், சுரபி பசுக்கள், எருமைகள் ஆகியவற்றையும் சரம நாளுகால் பிராணிகளையும், தனு தானவர்களையும் மற்ற மனைவியர் மற்றவர்களையும் தோற்றுவித்தனர். சந்திரன் தன் மனைவியரில் ரோகிணியை மட்டும் அதிகமாக நேசிக்க, மற்றவர்கள் தந்தை தக்ஷனிடம் முறையிட, அவன் சந்திரனைத் தேய்ந்து போகுமாறு சபிக்க, சிவனருளால் கடைசி கலை திரும்பவும் வளரும் அருள் பெற்ற கதையைப் பல புராணங்களில் காணலாம். அதன் பிறகு தன் மனைவியர் அனைவரையும் சமமாக நடத்தினான்.
பிருகு முனிவரின் மகன் சியவனர், கிரதுவின் மகன்கள் குள்ளமான பாலகில்யர்கள் என்ற முனிவர்கள், ஆங்கீரச முனிவருக்கு பிருஹஸ்பதி, உததிதீயன், சம்பரன் என்போர், வசிஷ்டரின் மகன் பராசரின் தந்தையாகிய சகிரி, பராசரின் மகன் வியாசர், அவர் மகன் சுகதேவன், புலஸ்தியரின் புத்திரர்கள் விஸ்வச்ரவன், குபேரன், அவருடைய மற்ற புத்திரர்கள் இராவணன், கும்பகர்ணன், விபீஷனன் ஆகியோர். புலஹருக்கு வடச்யன், ருசிக்குச் சாண்டில்யன், கவுதமனுக்கு சவர்ணி, பிருஹஸ்பதிக்குப் பரத்வாஜன். இவர்கள் சந்ததியர் அனைவரும் அந்தணர்களே. அவர்கள் காசியப, பரத்வாஜ, வத்ச்ய, சவர்ணி, சாண்டில்ய கோத்திரத்தில் பிறந்தவர்கள். மற்ற அந்தணர்கள் பிரமன் முகத்திலிருந்து தோன்றினர். சூரியன், சந்திரன், மனுவின் புத்திரர்கள் க்ஷத்திரியர்கள், மற்ற க்ஷத்திரியர்கள்; பிரம்மாவின் புஜத்திலிருந்து தோன்றினர். வைசியர்கள் பிரம்மாவின் முழங்காலிலிருந்தும், மற்றவர்கள் பாதத்திலிருந்தும் பிறந்தார்கள் என்பது புராணக்கூற்று. மேலும் பல இனங்கள், வம்சங்கள் பற்றியும் இப்புராணம் கூறுகிறது.
5. உறவு முறைகள்
பிரமன் கூறியவாறு உறவுகள் சொல்லப்படுகின்றன என்கிறது இப்புராணம். அந்த உறவுப் பெயர்கள் அனைத்தும் வடமொழிச் சொற்களாகவே உள்ளன. தாய், தந்தை, பாட்டன், பாட்டி, அத்தை, சித்தி, பெரியம்மா மகன், மகள், கணவன், மனைவி, மாமனார், மாமியார், பேரன், பேத்தி, மருமகன், மருமகள் போன்றன. ஒருவன், உயிர் அளித்தவன், அன்னமளித்தவன், அச்சம் தருபவன், ஆசிரியர் என தொழிலுக்கேற்ப பெயர் பெறுகிறான். பலர் அன்னையின் தாயாராக (பாட்டி) கருதப்படுகின்றனர். பெற்ற தாய், மாற்றாந்தாய், தந்தையின் தாயார், (பாட்டி) தாயின்தாய், அத்தை, சித்தி(அ) பெரியம்மா, எசமான் மனைவி, காப்பார் மனைவி, மற்றும் தாயார் என்று அழைக்கப்படும் பெண்மணிகள் அனைவரும் தாயே. அதாவது தாய்க்குச் சமமாவர். மேலும் நண்பர்கள், பிரியமானவர்கள் என்று பல உறவினர்களையும், நட்பினர்களையும் பொன்னே போல் போற்ற வேண்டும்.
6. உபவர்ஹனன்
கந்தமாதன பர்வதத்தின் மீது, புத்திரப்பேறு இல்லாத கந்தர்வ தம்பதியினர் இருந்தனர். அவர்களுக்குச் சிவனருளால் நாரதர் மகனாக அவதரித்தார். வசிஷ்டர் அவனுக்கு உபவர்ஹனன் என்று பெயரிட்டார். உப (அதிகப்படியான) வர்ஹரன் (பிரார்த்திகை). கந்தர்வ மன்னன் தன் ஐம்பது புத்திரிகளையும், உபவர்ஹரனுக்கு மணம் செய்து வைத்தார். ஒரு சமயம் உபவர்ஹனன் பிரம்மாவைத் தரிசிக்க சென்று சமயம் அங்கிருந்து ரம்பையின் மீது காதல் கொண்டு மணந்தான். இதனால் கோபம் கொண்ட பிரம்மா, நாரதன் உடனே மரிக்குமாறு சபித்தார். உபவர்ஹனனின் முக்கிய மனைவியான மாலவதி, இதனால் மிகவும் கோபம் கொண்டு பிரம்மா, சிவன், யமன் மூவரையும் சபிப்பதாக அச்சுறுத்தினாள். அவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் ஓர் அந்தண இளைஞன் வடிவில் மாலவதி முன் தோன்றினார். அவர் தேவர்களிடம் உபவர்ஹனுக்கு உயிரளிக்க வேண்டும் என்றார். பிரம்மா நாரதன் உடலின் மீது நீர் தெளித்தார். அவன் புத்துயிர் பெற்றான். சூரியன் கண்பார்வை கொடுத்தார். வாயு பகவான் மூச்சளித்தார். இறுதியில் கிருஷ்ண பகவான் அவன் இதயத்தில் பிரவேசிக்க அவன் உயிர்பெற்றெழுந்தான்.
காலனுக்கு மனைவி மிருத்யுகன்யை அவர்களுடைய புத்திரி ஜரா (முதுமை) பொதுவாக விதி முடிந்தவர்கள் உயிரை யமன் பறித்துச் செல்வான். எனவே ஒருவனுக்கு நோய் உண்டாகிறது. மாலவதி அந்தண இளைஞனிடம் நோய்கள், நோய்க்காரணங்கள் பற்றிக்கூறுமாறு வினவ அந்த இளைஞன் எல்லா நோய்களுக்கும் காரணம் காய்ச்சல். அது அஜீர்ணத்தால் ஏற்படுகிறது. காய்ச்சலுக்கு கபம், வாதம், பித்தம், சிலேட்டுமம் ஆகிய நான்கும் காரணம். நோய்கள் 64 வகைகளாகும். நோய்களின் காரணங்கள், நிவாரணங்கள் பற்றிக்கூறும் சாஸ்திரம் ஆயுர்வேதம். கிருஷ்ணன் சதுர்வேதங்களை இயற்றிய பிறகு பிரம்மா ஆயுர்வேதம் இயற்றினார். அதற்குப் பின் தோன்றிய வைத்திய நூல்கள் அனைத்திற்கும் மூலம் ஆயுர்வேதம் தான்.
ஒருவனுக்கு நோய் வராமலிருக்க செய்ய வேண்டியவை : தூய்மை, தலை, காது, பாதங்களுக்கு எண்ணெய் தேய்த்தல், கண்களைத் தூயநீரால் கழுவுதல், அன்றாடம் உடற்பயிற்சி செய்தல், தண்ணீரில் குளித்தல், சந்தனம் பூசிக்கொள்ளுதல், சரிவிகித உணவு, கட்டுப்பாடுடன் உண்ணுதல், தயிர் சேர்த்துக் கொள்ளுதல் (பகலில் மட்டும்) இவ்வாறு உணவு நியமனம், தூயஉடை, இருப்பிடத்தூய்மை ஆகியவற்றுடன் நல்லொழுக்கம் கொண்டு பாவம் செய்யாதிருத்தல் போன்றவை நோயை அண்டவிடாமல் தடுக்கும். பின்னர் உபவர்ஹனன் இறந்திட்டான். அவன் மனைவி மாலவதியும் அடுத்த பிறவியிலும் உபவர்ஹனனே தனக்குக் கணவனாக வேண்டுமென்று பிரார்த்திக் கொண்டே உயிரை விட்டாள். அடுத்த பிறவியில் மனு வம்சத்தினான சிரிஞ்ஜயன் என்ற மன்னனுக்கு மகளாய்த் தோன்றினாள். அவள் ஒரு ஜதிஸ்மாரை-அதாவது முற்பிறவி விவரம் நினைவில் கொண்டவள். கன்யாகுப்ஜ இராணிகலாவதியின் புதல்வனாக உபவர்ஹனன் பிறந்தான். அவன் பிறப்பதற்கு முன் அந்நாட்டில் பஞ்சம் தாண்டவமாடியது. அவன் பிறந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது. எனவே நீர்கொடுப்பவன் என்ற பொருள் கொண்ட நாரதன் என்ற பெயர் பெற்றான்.
7. நாரதர் வரலாறு
ஓர் அடர்த்தியான காட்டில் நாரதர் கிருஷ்ணனைக் குறித்து தவம் செய்து கொண்டிருக்க, கிருஷ்ணர் அவர்முன் தோன்றி உடனே மறைந்துவிட மிகவும் வருத்தமுற்றான் நாரதன். அப்போது நாரதன் மரணமடைந்து பின் தெய்வீக உருவடையும்போது மறுபடியும் கிருஷ்ணனைக் காணலாம் என்றோர் அசரீரி கூறிற்று. நாரதர் மிகவும் பிரம்மமுடன் இணைந்து விட பிரம்மாவின் சாபம் முடிவுற்றது. நாரதர் உலகில் வாழ்ந்தபோது பிரம்மா அவனை அழைத்து கிருகஸ்தா சிரமத்தில் பிரவேசிக்குமாறு கூற, அது தன் தவத்தைக் கெடுக்கும் என்றார். பிரம்மன் நாரதனுக்கு பிரம்மச்சரியம், கிரகஸ்தியம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் ஆகியவை பற்றி விளக்கி இல்லறம் ஏற்று ஒரு புத்திரனைப் பெறுதல் அவன் கடமை என்றார். அடுத்து நாரதன் சிவலோகம் சென்று சிவனைத் தரிசிக்க அவர் வாழ்க்கை முறைகள் பற்றி அறிவுரை பகன்றார். மேலும், கிருஷ்ணனைப் பூசித்தலில் சிறந்த வழி சாலக்கிராம பூஜை என்று கூறி பூசை முறைகளையும், உணவுக்கட்டுபாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். யமனும் பூசையில் ஆத்மார்த்த பக்தியும், உண்மை உணர்வும் மிகவும் அவசியம் என்றார்.
சிவலோகத்திலிருந்து பதரிக்குச் சென்ற நாரதன் அங்கு நாராயண முனிவரின் ஆசிரமத்தைக் கண்டார். முனிவர் நவரத்தினமய ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி அப்சரசுகளும், கந்தர்வர்களும் சூழ்ந்திருந்தனர். நாரதன் முனிவரைக் கண்டதும் அவர் நாரதனை அமரச் செய்து கிருஷ்ணன் வரலாற்றைப் பற்றி விவரித்தார். (நாராயண முனிவர் வேறு. ஸ்ரீமந்நாராயண பகவான் வேறு) (இந்தப் பிரம வைவர்த்த புராணத்தில் பிரமகாண்டம் பகுதி முடிந்தது.)
8. பிரகிருதியின் உருவங்கள்
நாராயண ரிஷி நாரதருக்கு ஐந்து அடிப்படை பிரகிருதி பற்றி விளக்கினார். பிர என்றால் மிகச்சிறந்தது. கிருதி என்றால் உற்பத்தி. எனவே பிரகிருதி என்றால் மிகச்சிறந்த உற்பத்தி என்று பொருள்படும். உற்பத்தியில் தலையாயது பெண் தெய்வங்கள். அவர்களிலும் குறிப்பாக துர்கை, ராதை, லக்ஷ்மி, சரசுவதி, சாவித்திரி மிக முக்கிய வடிவங்கள். மற்ற தேவதைகள் இவர்கள் மூலம் உற்பத்தியாகி இவர்களுடைய அம்சங்களுடன் விளங்குபவை. அவை புனித கங்கை, புனித துளசி, நாகதேவதை மானசை, பிறந்த சிசுக்களுக்கான தேவதை ஷஷ்தி, தேவி மங்களச்சண்டி, காளி வசுந்தரா (பூமி). அடிப்படை பிரகிருதியிலிருந்தே எல்லாப் பெண்களும் தோன்றினர். எனவே பெண்களைத் துன்புறுத்துவது, அவர்களுக்குத் தீமையிழைப்பது, பிரகிருதி தாய்க்கு செய்யும் கொடுமைகள் என அறிதல் வேண்டும். அவர்களுக்கும் அளிக்கும் மரியாதை பிரகிருதி தேவிக்கு அளிக்கும் மரியாதை ஆகும். சக்திக்கு ராஜசம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று அடிப்படை குணங்கள் உண்டு. பிரகிருதியின் சத்துவகுணம் கொண்ட பெண்மணிகள் நல்லொழுக்கம் கொண்டவராய், கணவனே கண் கண்ட தெய்வமாய் இருப்பவர்.
பிரகிருதியின் ராஜச குணம் படைத்த பெண்டிர் தன்னலம் கொண்டு, வாழ்க்கையின் இன்பங்கள் துய்ப்பதில் நாட்டம் கொண்டவராய் இருப்பர். தாமச குணம் கொண்ட பெண்கள் கூர்மையான நாக்குடையவராய் சண்டை சச்சரவில் ஈடுபட்டும், நம்பிக்கையற்றவராய், கணவனுக்குத் துரோகம் செய்பவர்களாய் இருப்பர். பரமாத்மாவுடன் இணைந்து இருப்பதே பிரகிருதி. அது தனிப்பட்டதல்ல. பிரகிருதி இன்றி பரமாத்மா இல்லை. சிருஷ்டி துவக்கத்தில் கிருஷ்ணர் தன்னில் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் பிரித்துக் கொண்டார். அந்த அழகிய பெண்வடிவமே பிருகிருதி ஆகும். அவருக்கே ராதை, ராதிக என்ற பெயரும் உண்டு. இப்பகுதியில் ராதை, கிருஷ்ணருக்குச் சிருஷ்டியில் உதவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இனி பிரகிருதி காண்டத்தில் சரஸ்வதி பற்றிய விவரங்கள். அதாவது பிரகிருதியைப் பூசிக்கும் விரதங்களும் மற்றும் பல கதைகளும் தரப்படுகின்றன.
9. வேதவதியும் சீதாதேவியும்
ஸாவர்ணி என்ற மன்னன் வினயமின்றி இருந்ததால் கோபம் கொண்ட சூரியன் அவனைத் தேசப்பிரஷ்டம் செய்ய, அதனால் கோபம் கொண்ட சிவன் சூரியனைச் சூலத்தால் குத்தமுனைய அவன் பயந்து பிரம்மனை நாட, பிரம்மன், கிருஷ்ணனைச் சரணமடையுமாறு கூற, அவன் சென்று கிருஷ்ணனிடம் சரணடைந்தான். அப்போது அங்கே வந்த சிவனைச் சாந்தமடையச் செய்து கிருஷ்ணன் சூரியன் தந்த சாபத்தின்படி ஸாவர்ணி தேசப்பிரஷ்டம் ஆவான். ஆனால், அவனது மக்கள் நாடாள்வர் என்றார். மேலும் லக்ஷ்மி தேவி அவர்கள் வம்சத்தில் குழந்தையாய் அவதரிப்பாள் என்றார். ஸாவர்ணியின் மகன் விருஷத்வஜன், அவன் குமாரன் ருதுத்வஜன். அவனுக்குத் தர்மத்வஜன், குசத்வஜன் என்று இரண்டு புத்திரர்கள். அவர்களுள் குசத்வஜன், மனைவி மாலாவதியிடம் லக்ஷ்மியின் அமிசமான வேதவதி பிறந்தாள். அவள் பிறந்தபோது வேத ஒலி கேட்டதால் அவள் பெயர் வேதவதி எனப்பட்டது. வேதவதி விஷ்ணுவையே மணக்க வேண்டி புஷ்கரதீரத்தில் பிரம்மனை நோக்கித் தவம் செய்ய பிரம்மா தோன்றி அடுத்த ஜன்மத்திலேயே அந்தப் பேறு கிடைக்குமென ஆசிர்வதித்து மறைந்தார்.
வேதவதி தவம் செய்து கொண்டு இருக்கையில் அங்கு ராவணன் வந்து மோகம் கொண்டு அவளைத் தன்னை மணக்குமாறு வேண்டி பலாத்காரம் செய்ய முயன்றான். அவனுக்கு அதிதி பூஜை செய்ய நினைத்த அவள் மிக்க கோபம் கொண்டு தன் வலிமையால் அவனைத் தடுத்து என்னாலேயே உனக்கு மரணம் ஏற்படும் என்று சபித்தாள். பின்னர் யோக சக்தியால் கங்கையில் குதித்து உயிர் விட்டாள். அடுத்த பிறவியில் வேதவதி இலங்கையில் ஒரு தாமரைப்பூவில் பெண் குழந்தையாகத் தோன்றிட அதை ராவணன் ஒரு பெட்டியில் வைத்துக் கடலில் மிதக்க விட்டான். அந்தப் பெட்டி மிதிலை நகரை அடைந்தது. ஜனக மகாராஜன் ஏர்கொண்டு நிலத்தை உழ ஏர்க்காலில் பெட்டி சிக்கியது. திறந்து பார்க்க அதில் கண்ட குழந்தையை எடுத்து வளர்த்து இராமனுக்கு மணம் செய்வித்த விவரம், ராமன் ராவணனைக் கொன்றது ஆகியவற்றை இராமாயணம் கூறும். வேதவதியே சீதையாக அவதரித்தாள்.
10. மூன்று தேவியர்
நாரதரிடம் நாராயணன் கூறினார். மாக மாதத்தில் (மாசி) பஞ்சமி அன்றும், வித்தை கற்கத் துவங்கும் விசயதசமி அன்றும் சரசுவதியைத் துதிக்க வேண்டும். வெண்மலர்கள், சந்தனப்பசை, வெள்ளை நிற ஆடை, வெண் சங்கு உபயோகிக்க வேண்டும். பூஜையின் போது மேலும் வெண்ணெய், தயிர், பால், கருப்பஞ்சாறு, வெல்லம், தேன், சர்க்கரை, சதைப்பற்றுள்ள பழங்கள், தேங்காய், இஞ்சி, வாழைப்பழம், நெய்யில் (அரிசிமாவு (அ) கோதுமை மாவு) கொண்டு தயாரித்த இனிப்புகள் நைவேத்தியம் செய்ய வேண்டும். முதலில் லக்ஷ்மி, சரசுவதி, கங்கை மூவரும் நாராயணனின் தேவிகளாக இருந்தனர். ஒருநாள் சரசுவதி கங்கை மீது பொறாமைப்பட்டு சண்டை போட முதலில் லக்ஷ்மி அமைதியாக இருந்தாள். அவள் சரசுவதி, கங்கை இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றாள். சரசுவதி லக்ஷ்மியிடம் ஏன் முதலிலேயே தடுக்காமல் வேடிக்கை பார்த்தாய்? என்று கோபப்பட்டு அவளை மரமாகவும், நதியாகுமாறும் சபித்தாள்.
கங்கை சரசுவதியை நோக்கி நீ லக்ஷ்மியை நதியாகச் சபித்ததனால் நான் உன்னையும் நதியாகுமாறு சபிக்கிறேன் என்றாள். உடனே சரசுவதி கங்கையும் நதியாகுமாறு சபித்தாள். லக்ஷ்மி துளசியானாள், மற்றும் பதுமாவதி ஆறு ஆனாள். கங்கை பாகீரதி நதி ஆனாள். சரசுவதி அதே பெயரில் நதியானாள். நாராயணன் கங்கையைச் சிவனிடமும், சரசுவதியைப் பிரம்மாவிடமும் அனுப்பி தான் லக்ஷ்மியுடன் இருந்தார். ஏனெனில் சண்டையில் லக்ஷ்மி அமைதியாக நடந்து கொண்டாள். ஒருவனுக்கு மூன்று மனைவியர் வேதத்துக்கு விரோதமானது.
11. கலியுக முடிவும் கல்கி அவதாரமும்
சாபங்கள் உண்மையாக, மூன்று தேவியரும் ஆறுகளாகினர். கலியுகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்திட லக்ஷ்மி சாபம் நீங்கித் திரும்பவும் நாராயணனை வந்தடைந்தாள். சரசுவதி, கங்கை இருவரும் கூட நாராயணனை அடைந்தனர். கலியுகத்தில் தூய்மையும், புனிதமும் உலகில் இல்லாமல் போகும். கலியுகம் பொதுவாக கொடிய காலமாகவே விளங்கும். மக்கள் லஞ்சம் வாங்குபவராகவும், இம்சை செய்பவர்களாகவும், நாணயமற்றவர்களாகவும் இருப்பர். துளசியை பூசையில் சேர்க்கமாட்டார்கள். வருணாசிரம தருமங்கள் மாறிவிடும். பிராமணர்கள் சமையல் செய்பவர்களாகவும், மாடு மேய்ப்பவர்களாகவும் இருப்பர். இல்லறத்தில் சண்டை, சச்சரவு, கலவரம், கணவன் மனைவி தகராறு போன்றவை ஏற்படும். ஆறு, குளங்கள் வற்றிட செடி, கொடிமரங்கள் பலன் தராமல் போகும். பயிர்கள் அழியும், பசுக்கள் பால் வற்றும், உணவுக் கட்டுப்பாடுகள் இருக்காது. மக்கள் குறைவற்ற உருவங்களுடன் இருப்பர். விரைவில் முதுமை அடைவர். கலியுக முடிவில் தர்மம் ஒழியும், நாராயணனே விஷ்ணுயசன் என்ற பிராமணனுக்குப் புத்திரனாகக் கல்கி அவதாரம் எடுப்பார். குதிரை சவாரி செய்து, வாள் கொண்டு உலகில் மிலேச்சர்களை அழிப்பார். அவர் மறையும் போது உலகில் குழப்பம், அராஜகம் காணப்படும்.
பசி, பட்டினி, பஞ்சம் ஏற்பட்டு பிரளயம் ஏற்படும். இவ்வாறு கலியுகம் முடிய மறுபடியும் சத்தியயுகம் துவங்கும். இவ்வாறு சிருஷ்டியும், அழிவும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். பிரம்மாவின் ஆயுள் முடியும் போது அண்டம் அனைத்தும் நீரில் மூழ்கிவிடும். பிரம்மாவும் கிருஷ்ணனில் ஐக்கியமாகி விடுவார். இது பிராகிருதிக பிரளயம் எனப்படும். இதில் பிரகிருதியும் கிருஷ்ணனுடன் இணைந்து விடும். எனவே, புல் முதல் பிரம்மா வரை அனைத்தும் நிலையற்றவை. தோன்றி மறைபவையே. ஆனால், கிருஷ்ணன் மட்டும் நிலையானவர் அழிவற்றவர் என்பதை உணர வேண்டும்.
12. வசுந்தரா என்னும் புவிமகள்
நாராயணன் அடுத்து நாரதனிடம் பூதேவி, புவிமகள் என்று பல பெயர்களில் பேசப்படும் வசுந்தரா பற்றிக் கூறலானார். மது கைடபர்களின் கொழுப்பினால் ஆனதால் அதனை மேதினி என்கின்றனர். ஆனால், அது சரியில்லை. மேலும் மது கைடபவர்களுக்கு முன்பே பூமி இருந்தது. ஒருவேளை அந்த அரக்கர்களின் கொழுப்பு பூமியில் சேர்ந்திருக்கலாம். எனவே, உலகம் எவ்வாறு தோன்றியிருக்கும் என்பதை நாராயணன் கூறுகிறார். பிரளயத்தினால் உலகம் நீரில் மூழ்கியபோது கிருஷ்ணன் ஒரு பெரிய உருண்டையைத் தன் உடலிலிருந்து எறிய அது பல ஆண்டுகள் மிதந்திட அதன் துளைகள் கடின பொருள்களால் மூடிட அந்த உருண்டையே நீரிலிருந்து வெளிப்பட்டது. இவ்வாறு தோற்றமும் மறைவும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
வராஹ கல்பத்தில் பிரம்மா மூழ்கியுள்ள புவியை வெளிக்கொண்டு வருமாறு வேண்டிட, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக் கொன்று புவியை மீட்டார். எனவே, புவிமாது வராகத்தில் மனைவியாக அதாவது விஷ்ணு பத்தினியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பூதேவி அங்காரகனை ஈன்றாள். இதனால் வராகமூர்த்தியின் கூற்றுப்படி நிலத்தைப் பயிரிடுவதற்கு முன்பும், அதில் வீடு கட்டும் முன்பும், புதுமனை புகும் போதும், கிணறு, ஏரி, குளம் அமைக்கும் போதும் பூமி பூஜை செய்யப்படுகிறது. அவ்வமயம் நைவேத்தியம் செய்யக்கூடிய பொருள்கள், முத்துக்கள், ரத்தினங்கள், சங்குகள், விளக்கு, புத்தகம், மலர்கள், துளசி இலை, ஜபமாலை போன்றவை இவற்றை அப்படியே பூமியில் வைக்காமல் ஒரு தட்டில் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு தோன்றிய பூமி (அ) வசுந்தராவுக்கும் பல காரணப் பெயர்கள் ஏற்பட்டன. அவை உர்வி, இஜ்யை, öக்ஷளனி, க்ஷிதி, காசியபி, விசுவாம்பவை, அனந்தை, பிருதிவி என்பவை.
13. கங்காவதாரம்
பகீரதன் தவத்துக்கு மெச்சி, கிருஷ்ணன் அழைக்க, கங்கை புவியில் அவதரித்தாள். சகர புத்திரர்கள் மோட்சம் பெற உதவினாள். ஒருமுறை கங்கையில்-புனித நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும். ஒரு புனித நாளில் நீராடினால் பல பிறவிகளில் ஏற்பட்ட பாவங்கள் நீங்கும். மேலும், கங்கை நீரைக் கண்டாலும், தொட்டாலும் பாவம் தொலையும். கங்கை காற்று உடல் நலம் தரும். கங்கையின் பெயர் உச்சரித்தாலே பாவம் அகலும். தெரியாமலே கங்கை நீர் ஸ்பரிசத்தாலும் பாவம் போய்விடும் என்று கிருஷ்ணன் கூறினார். கங்கை பூமியில் இருக்கும் போது லவண சமுத்திரம் கங்கையின் பதி ஆகும். கங்கையைப் பகீரதன் பூமிக்கும் கொண்டு வந்ததால் பாகீரதி எனப்பெயர் பெற்றான். இந்திரலோகத்தின் வழியாகப் பாயும்போது மந்தாகினி என்று பெயர். பாதாளத்தில் பாயும் போது யோகவதி, விஷ்ணுபஷத்தில் தோன்றியதால் விஷ்ணுபதி. க=என்றால் போ; கங்க் என்றால் விண்ணும், மண்ணும். விண்ணிலும் மண்ணிலும் ஓடுவதால் கங்கை என்று பெயர் உண்டாயிற்று.
14. துளசி, சங்கசூடன் வரலாறு
மன்னன் குசத்வஜனின் மனைவி மாதவியின் மகள் பிருந்தா. அழகு நிறைந்த அவள் விஷ்ணுவே தனக்குக் கணவனாக வேண்டும் என்று காட்டில் கடுந்தவம் செய்து வந்தாள். அவள் தவத்தை மெச்சிய பிரம்மன் அவள் முன்தோன்றி இப்பிறவியில் அவள் சங்கசூடன் என்ற அரக்கனையே மணப்பாள் என்றும், அடுத்த பிறவியில் துளசிச் செடியாகி விஷ்ணுவுடன் இணைவாள் என்றும் கூறி மறைந்தார். குசத்வஜனின் மகளான பிருந்தா முற்பிறவி பற்றி நினைவு கூர்ந்தாள். அவள் முற்பிறவியில் கோலோகத்தில் ஒரு கோபிகையாக கிருஷ்ணன் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கிருஷ்ணன் மீது காதல் கொண்ட அவள் ராதையின் மீது பொறாமை கொண்டதால் ராதை அவளைப் பூமியில் பிறக்குமாறு சபித்தாள். பிரம்மா, சந்திரசூடனின் முற்பிறவி பற்றி எடுத்துரைத்தாள். சந்திரசூடன் முற்பிறவியில் கிருஷ்ணனுடைய சேவர்களில் ஒருவனாக சுதாமன் என்ற பெயரில் இருந்தான். அந்த கோபன் பிருந்தா கோபி மீது காதல் கொண்டான். இதனை ராதை தடுத்ததுடன், சந்திரசூடன் ஓர் அரக்கனாகப் பிறக்குமாறும் சாபமிட்டாள். இப்போது உலகில் சந்திரசூடன் ஓர் அரக்கனாகப் பிறந்தாலும், இங்கு பிருந்தாவையே மணக்க விரும்பி பிரம்மனை வேண்டினான். பிருந்தா ராதையின் கோபம் காரணமாக சந்திரசூடனை மணக்கத் தயங்கினாள். எனவே, பிரம்மன் அவளுக்கு ஒரு மந்திரத்தைக் கற்பித்து அதை உச்சரிப்பதன் மூலம் ராதையைத் திருப்திபடுத்தி சந்திரசூடனை மணக்க அவள் அனுமதியைப் பெற்று, அவனை மணந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.
சந்திரசூடன் அரக்கனாதலால் அவன் தேவர்களுக்குத் தொல்லைகள் அளித்து தேவர்களின் உடைமைகளைப் பறித்துக் கொள்ள, அவர்கள் பிரம்மாவிடம் முறையிட, அவர் தேவர்களுடன் கிருஷ்ணனிடம் சென்று சரணடைந்து முறையிட்டனர். அப்போது கிருஷ்ணன் சந்திரசூடனுக்குத் தான் ஒரு ரøக்ஷ அளித்திருப்பதாகவும், அதனைத் தானே ஒரு பிராமணன் வடிவில் சென்று அவனிடமிருந்து அகற்றிவிடுவதாகவும் கூறி, அவனை அழிக்க சிவபெருமானுக்கு ஒரு சூலமும் அளித்தார். அப்போது பிரம்மா அவனுக்கு, அவன் மனைவி வேறொருவனைக் கணவனாகக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே அவனை அழிக்கமுடியும். அவ்வாறு ஏற்படாத வரையில் அவனை யாராலும் அழிக்க முடியாது என்று வரம் அளித்திருப்பதாகக் கூறினார். சந்திரசூடன் ஒரு கிருஷ்ண பக்தன். சிவனுக்கு அவனைக் கொல்ல மனமில்லை. எனவே, அவனுக்கு நல்லுபதேசம் செய்து நல்வழிப்படுத்த முயன்றார். அதனை ஏற்காத அவனுக்கும் தேவர்களுக்கும் போர் ஏற்பட்டது. சந்திரசூடன் கந்தன், காளி, சிவபெருமான் ஆகியோருடன் போர் புரிந்தான்.
போர் சிறிது நேரம் ஓய்ந்திருந்த போது கிருஷ்ணன் ஓர் அந்தணன் வடிவில் சந்திரசூடனிடம் சென்று அவன் கழுத்திலிருந்த ரøக்ஷயை யாசித்துப் பெற்றுக் கொண்டார். பின்னர் சந்திரசூடன் உருவில் அவன் இல்லம் அடைய பிருந்தா அந்த மாயத்தை அறியாமல் அவருடன் வாழ்ந்தாள். அந்தச் சமயம் பார்த்து சிவன், கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட சூலத்தால் சந்திரசூடனைக் குத்திக் கொன்றார். பிருந்தா நிகழ்ந்ததை அறிந்த உடன் கிருஷ்ணன் கல்மனமுடையன் என்று கல்வடிவமாகச் சபிக்க சாலக்கிராமம் உருவானது. கிருஷ்ணன் அவளைச் சமாதானப்படுத்தி இப்போது அவள் ஒரு தெய்வ வடிவம் பெற்று வைகுந்தம் அடைவாள் என்று கூறிச் சமாதானப்படுத்தினார். அங்கு அவள் கிருஷ்ணனுடன் இணைவாள் என்றார். பூமியில் அவளுடைய உடல் கண்டகி என்னும் புனித ஆறாகி பாரதத்தில் பாய்கிறது. அவள் கூந்தல் துளசிப்புதராக வளர்ந்தது.
15. துளசியின் மகிமை
துளசி மிகவும் புண்ணிய செடியாகும். துளசி தீர்த்தத்தில் நீராடினால் சகல புனித தீர்த்தங்களிலும் நீராடின பலன் தரும். ஒரு பிராமணனுக்கு ஒரு துளசிதளம் தானம் செய்தால் ஆயிரக்கணக்கில் கோதானம் செய்த பலன் கிடைக்கும். கையில் துளசியுடன் பொய் சொன்னால் நெடுநாள் நரகம் சித்திக்கும். மரணிக்கும் போது துளசி தீர்த்தம் உட்கொண்டால் நேரே விஷ்ணு லோகத்தை அடைவர். துளசிக்கு பிருந்தை, பிருந்தாவனி, விஷ்வபவானி, விச்வபூஜிதை, புஷ்பமாயை, நந்தினி, கிருஷ்ண ஜீவனி என்று பல பெயர்கள் உண்டு. கார்த்திகை மாத பவுர்ணமியில் துளசி பூஜை மிகவும் சிறந்தது.
16. சாளக்கிராமம்
துளசியின் சாபப்படி சாளக்கிராமம் கிருஷ்ணனையே குறிக்கும். அதுவும் புனிதமானது, புண்ணியம் தரவல்லது. சாளக்கிராமத்தைப் பூசிப்பவரின் பிரம்மஹத்தி தோஷமும் நிவர்த்தி ஆகும். அநேக புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் சாளக்கிராமம் முக்கி எடுக்கப்பட்ட நீரில் நீராடினால் கிடைக்கும். தொடர்ந்து சாளக்கிராமம் தீர்த்தங்களைப் பருகியவர் நேராக விஷ்ணுலோகம் அடைவர். துளசி மரித்தவுடன் அவள் கூந்தல் கண்டகி நதி ஆயிற்று. அதன் கரையில் நாராயணன் மலையாகி நின்றார். அம்மலையில் வஜ்ரடங்கள் எனப்படும் பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றின் பற்கள் வச்சிரம் போல் கூர்மையானவை. அம்மலை மீது காணும் உருண்டை கற்களில் இப்பூச்சிகள் துளைகள் செய்கின்றன. இவையே சாளக்கிராம உருவங்கள். பலவகை சாளக்கிராமம் பற்றி கருடபுராணம் விவரிக்கிறது. சந்திரசூடனைக் கொன்ற பிறகு சிவபிரான் அவனுடைய உடலைச் சமுத்திரத்தில் எறிந்து விட, அந்த எலும்புகளிலிருந்து பலவகை சங்குகள் உற்பத்தி ஆயின. சிவனைத் தவிர மற்ற எல்லா கடவுளர்க்கும் சங்கு தீர்த்த அபிஷேகம் சிறந்தது. சங்கு ஊதப்படும் வீட்டை விட்டு லக்ஷ்மி எப்போதும் பிரியமாட்டாள். சங்கு தோய்ந்த தீர்த்த ஸ்னாநம் அனைத்து புண்ணிய தீர்த்த நீராடலுக்கும் சமம்.
17. சாவித்திரி விரதம்
சாவித்திரி தேவதை வேதங்களைப் பிறப்பித்தவள். அவள் சூரியனுக்கும் மந்திரங்களுக்கும் தாய் ஆவாள். அவள் பொன்னிறமேனியாள். அழகிய ஆடை, ஆபரணங்கள் அணிந்து புன்சிரிப்புடன் திகழ்வாள். அவளுக்கு ஆசனம், தீர்த்தம், அரிசி, சந்தனம், தூபம் மாலை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சாவித்திரி விரதம் ஜேஷ்ட (ஆனி) மாதம், திரயோதசி அன்று செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் செய்ய வேண்டும். பதினான்கு வகை பழங்கள் நிவேதனம் செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். மாத்ர நாட்டு மன்னன் அசுவபதிக்கு பராசர முனிவர் இந்த விரத மகிமை பற்றியும், செய்முறைகளைப் பற்றியும் கற்பித்தார். இந்த விரதத்தை மேற்கொண்ட அசுவபதி முன் சாவித்திரி தேவி தோன்றிட, அதன் பலனாக அவன் மனைவி ராணிமாலதிக்கு அத்தேவியே மகளாகப் பிறந்தாள். அப்படிப் பிறந்த சாவித்திரி துயுமதி தேசன் மகன் சத்தியவானை மணந்தாள். மணந்த ஓராண்டுக்குள்ளாகவே ஒரு விபத்து நிகழ்ந்தது. சத்தியவான் சாவித்திரியுடன் காட்டில் விறகும், பழங்களும் சேகரித்து வரச்சென்றான். அங்கு அவன் மரத்திலிருந்து கீழே விழுந்து மடிந்தான்.
பிறகு யமன் சத்தியவான் உயிரை எடுத்துச் செல்ல, சாவித்திரி அவனுடன் வாதாடி வெற்றி பெற்று, சாதுர்யமாக தன் மாமனார், மாமியார்களுக்குக் கண்களின் குருடு நீங்கி பார்வை பெற்றதும், தனக்கு மகன் வேண்டும் என்று யமனிடம் பெற்றதும், வரம் பெற்ற பிறகு யமன், சத்தியவானை உயிருடன் சாவித்திரிக்கு அளித்ததும் பல புராணங்களில் கூறப்பட்டன. இவையே இன்றி சாவித்திரி, யமன் உரையாடலில் யமன் கூறியதாகப் பல செய்திகள் இந்த வைவர்த்த புராணத்தில் காணப்படுகின்றன. யமன் முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப ஒருவன் பிறப்பும் இறப்பும் ஏற்படுவதைப் பற்றிக் கூறுகிறான். மற்றும் தான வகைகள் அவற்றின் பலன்களைப் பற்றியும் இயமன் கூறினான். பெருமளவில், நிலம், அரிசி பிராமணனுக்கத் தானம் செய்தவர் விஷ்ணுலோகம் அடைவர். வீடு தானம் அளித்தவர் தேவலோகம் அடைவர். வீடு தானம் அளித்தவர் தேவலோகம் அடைவர். கால்நடைகள், செம்பு, பொன் தானம் அளித்தவர் சூரியலோகம் அடைவர். ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்குத் தன் கன்னிகையை தானம் செய்வித்தால் சந்திரலோகம் அடைவான். அல்லது விஷ்ணுலோகம் சேர்வான். கறவை பசுக்கள், துணிமணிகள், சாலக்கிராமங்கள், குடை, காலணி, தீபம், படுக்கை, குதிரை, யானை, பல்லக்கு போன்ற தானங்களும் சிறந்த பலன்களைத் தரும்.
அடுத்து, யமன் பலவகை விரதங்கள் பற்றி எடுத்துக் கூறுகிறான். சிவராத்திரி அன்று வில்வதளம் கொண்டு சிவனை ஆராதிப்பவர் சிவலோகம் அடைவர். ராமநவமி விரதம் அனுஷ்டித்தவர் விஷ்ணு லோகத்தில் நீடித்து வாழ்வர். கார்த்திகை மாதத்தில் ராசமண்டபம் கட்டி பூசை, பஜனை செய்தால் கோலோகம் கிட்டும். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் வைகுண்டலோகம் அடைவர். ஜேஷ்ட (ஆனி) மாதம் சதுர்த்தசி திதியில் சாவித்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் பிரம்மலோகம் பெறுவர். மாக (அ) மாசி மாதத்தில் பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை, விரதம் இருந்தால் வைகுண்டலோகம் அடைவர். உலகைச் சுற்றி வந்து எல்லா தீர்த்தங்களிலும் புனித நீராடுபவர் வீடு பேறு பெறுவர். அவர்களுக்கு மறுபிறவி கிடையாது. இவையேயன்றி மிகப்பெரிய யாகங்கள் பற்றியும் யமன் கூறுகிறான். அசுவதேம யாகம் செய்பவர் இந்திரலோகத்தில் பாதி பெற்று இனிது வாழ்வர். ஒரு ராஜசூய யாகம் செய்தவன் அசுவமேதயாகம் செய்த பலனைப் போல் நான்கு மடங்கு பலன் பெறுவான். ஆனால், எல்லாவற்றிலும் சிறந்த விஷ்ணு யஜ்ஞம் செய்தவர், ஆயிரம் ராஜசூய யாகப் பலனைப் பெறுவார்.
யமன் எண்பத்தாறு நரகலோகங்களைப் பற்றிக் கூறுகிறார். அவற்றுள் அக்னி குண்டம், கர குண்டம், தப்தம்ர தப்த பாஷணா, கூர்ம, கோல, சஞ்சனா, கஜ தம்ஷா, அசிபதிர குண்டம், கும்பிபாகம், காலகத்திரம், அந்தகூபம், தூமாந்தம், விஷனம், திபசூர்ணம், தாலனம் என்று சிலவற்றைப் பற்றிக் கூறுகிறார். கருமநெறி தவறுபவர்கள் அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப நரகில் தள்ளப்பட்டு உயிர்கள் மிகவும் வருத்தமடையும். (மேலும் விரதங்களை, நரகங்கள் ஆகியவற்றின் விவரங்களை விஷ்ணுபுராணம், அக்னிபுராணம் ஆகியவற்றில் காண்க)
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


பிரம வைவர்த்த புராணம் பகுதி-2மே 30,2012






18. லக்ஷ்மி கடாக்ஷம்
இப்புராணம் ஸ்ரீலக்ஷ்மியைப் பற்றியும் கூறுகிறது. சிருஷ்டியின் போது கிருஷ்ணன் இடது பக்கத்திலிருந்து ஓர் அழகிய தேவி தோன்றி இரண்டு பகுதியாகி இடப்புறம் உள்ளது மகாலக்ஷ்மியாகவும், வலப்புறம் உள்ளது ராதிகாவாகவும் சிருஷ்டி ஆயின. கிருஷ்ணன் இடதுபக்கத்திலிருந்து நான்கு கரங்கள் கொண்ட நாராயணனும், வலப்புறத்திலிருந்து இருகரங்களும் தோன்ற நாராயணன் லக்ஷ்மியையும், கிருஷ்ணன் ராதையையும் மனைவியாக்கிக் கொண்டனர். மகாலக்ஷ்மி சொர்க்கத்தில் சொர்க்கலக்ஷ்மி என்றும், மன்னர்களிடம் ராஜ்யலக்ஷ்மி, இல்லங்களில் கிரகலக்ஷ்மி என்றும் பலவாறு பெயர்கள் பெற்றாள். பிரம்மா, விஷ்ணு, மனுவால் பூசிக்கப்படுகிறார். சூரிய, சந்திர மண்டலங்களில் பாலில், தானியங்களில், உடைகளில் சந்தனம், நகைகள், தூய இடங்கள், இல்லங்களில், பூமாலைகளில் மங்கல கலசங்களில் அவளைக் காணலாம்.
இந்திரன் லக்ஷ்மியைப் பூசித்தல்
ஒரு சமயம் கோபம் நிறைந்த துர்வாசன் விஷ்ணுவிடமிருந்து ஒரு பாரிஜாத மாலையைப் பெற்றார். அதனை இந்திரனுக்கு அளிக்க குடிபோதையில் இருந்த அவன் அம்மலரை யானையின் தலைமீது வைத்தான். மலர் பரிசை கவுரவிக்காமல் உதாசீனம் செய்த இந்திரன் செயல் பிரம்மஹத்தி தோஷத்துக்குச் சமமானது. இதனால் கோபம் கொண்ட முனிவர் லக்ஷ்மி (செல்வம்) அவனை விட்டு அகலுமாறு, யானை (ஐராவதம்) தலை வெட்டப்பட்டு சிவன் மகனின் தலையாகும் என்றும் சபித்தார். இந்திரன் துர்வாசரை வணங்கித் தன்னை மன்னித்தருளுமாறு வேண்டிட அவரும் மனம் குளிர்ந்து விஷ்ணுவின் பெருமை பற்றி விவரித்தார். முனிவரின் சாபப்பலனாக எல்லாவற்றையும் இழந்த இந்திரன் பிரகஸ்பதியுடன் பிரம்மனிடம் சென்று வேண்டிட, அவர் அனைவரையும் விஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார்.
லக்ஷ்மி வாசம்
விஷ்ணு, இந்திரன் இழந்த செல்வங்களை மறுபடியும் அடைவான் என்று கூறியதுடன், எவ்வாறெல்லாம் செல்வம் இழக்கப்படும் (அ) லக்ஷ்மி இல்லாது போவாள் என்று கூறினார். துளசிச் செடி இல்லாத வீடு, சங்கு ஒலிக்காத வீடு, சாலக்கிராமம் பூசிக்கப்படாத இல்லம், விஷ்ணு பக்தர்களைப் பழிக்கும் கிரகம், பிராமணருக்கு உணவளிக்காத மனை, விருந்தினரை வரவேற்று உபசரிக்காத இல்லம் போன்ற இடங்களை லக்ஷ்மி நாட மறுப்பாள். சமயச் சடங்குகள் செய்யாத அந்தணன், விஷ்ணுவை பூசிக்காதவர், பிராமணர்களுக்கு மரியாதை அளிக்காமல், மற்றவர்களுக்கு சேவை செய்பவர்கள் ஆகியோர் வீட்டை விட்டு லக்ஷ்மி விலகி விடுவாள் என்றார்.
அமுத மதனம், லக்ஷ்மி தோற்றம்
பிறகு பிரம்மாவிடம் நாராயணன் தேவர்களைக் கொண்டு அமுதம் கடைய தேவவைத்தியர் தன்வந்திரி, உச்சைச்வரக் குதிரை, ஐராவதம் என்னும் யானை, சுதர்சன சக்கரம் போன்றவையுடன் இறுதியில் ஸ்ரீலக்ஷ்மியும் தோன்றினார். (அமுத மதனம் பற்றிப் புராணங்கள் மாறுபட்ட சிறு சிறு செய்திகளைத் தருகின்றன) ஸ்ரீலக்ஷ்மி தோன்றியவுடன் வனமாலை கொண்டு விஷ்ணுவுக்கு மாலை இட்டாள். அதனால் விஷ்ணு வனமாலி எனப்படுகிறார். சிவன், இந்திரன் மற்ற தேவர்கள் லக்ஷ்மி தேவியைத் துதி செய்தனர். ஸ்ரீலக்ஷ்மிக்கு சந்தனம், பாரிஜாத புஷ்பம் மேலும் பல மங்கலப் பொருள்கள் அளிக்கப்பட்டன. விசுவகர்மா நவரத்தின ஆசனம் அளித்தார். கங்கை நீர், மலர்கள், சந்தனம், சங்கில் புனிதப்புற்கள், தூபம், தீபம், அன்னம், சர்க்கரை, நெய், பால், வெற்றிலை, கருப்பஞ்சாறு, பட்டாடை ஆபரணங்கள் அளிக்கப்பட்டன. தேவர்களுக்கு வரங்கள் தந்து ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவின் மடியில் அமர்ந்தாள்.
கணேசர் உருவாதல்
ஐராவதத்தின் தலைமீது பாரிஜாதம் வைக்க அது புனிதமாகியது. அன்று முதல் அனைவரும் கணேசரை எல்லாவற்றிலும் முதன் முதலாகப் பூசிக்க வேண்டுமென்று ஆணையிட்டார். சனியின் சாபத்தால் சிவ, பார்வதி மகனாகத் தோன்றிய கணேசரின் தலை வெட்டப்பட்ட, ஐராவதத்தின் தலை பொருத்தப்பட்டு உருவான கணேசர் கடவுளர்களுக்கெல்லாம் முதல் கடவுளாகத் துதிக்கப்படுகிறார்.
19. ராதாகிருஷ்ணன் ராதையைப் பூசித்தல்
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று ராதையைப் பூசிக்க வேண்டும். மலர்கள், தூபம், தீபம், கந்தம், ஆபரணம், பழங்கள், இனிப்புகளுடன் பதினாறு பொருள்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ராதையின் பேரை முதலில் சேர்த்து ராதா கிருஷ்ணா, இராதா-மாதவா என்று உச்சரித்துப் பூசிக்க வேண்டும். சந்தனம், குங்குமம், பெற்று மந்தஹாச முகத்துடன், அழகாக முடிந்த கூந்தல், கை, கால்கள், விரல்கள் முழுவதும் ஆபரணங்களுடன் அவள் காட்சி தருவாள். வராக கல்பத்தில் ராதை கோகுலத்தில் விருஷபானு, கலாவதி தம்பதியர்க்குத் திருமகளாய்த் தோன்றினாள். வைசியர்களான அவர்கள் அவளை ராயனன் என்ற வைசியனுக்கு மணமுடிக்க முனைந்த போது அவள் தன் நிழலை அங்கு விட்டு விட்டு கோலோகத்திக்குத் திரும்பி வந்து விட்டாள். நிழலுக்கும் ராயனனுக்கும் திருமணம் நடந்தது. பன்னிரண்டு வயதான ராதையின் நிழலுக்கே விவாகம் நடந்தது. அதன் பின் பதினான்கு ஆண்டுகள் கழிந்து கோகுலத்தில் கிருஷ்ணன் பிறந்தான். நந்தகோபர் மனைவி யசோதையின் சகோதரனே ராயனன். அவன் கிருஷ்ணனுக்குத் தாய்மாமன்.
கிருஷ்ணன், ராதை கோகுலத்தில் சிலகாலம் வாழ்ந்து பிறகு பிரிந்தனர். கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ணன் விரஜா என்பவளுடன் ஆடிக்கொண்டிருக்கையில் அதுபற்றி கேள்விப்பட்ட ராதை தேரேறி அவனிடம் விரைந்தாள். அவளிடம் பொறாமை, கோபம் குடிகொண்டிருந்தது. இதுபற்றி கிருஷ்ணனின் தோழன் சுதாமன், கிருஷ்ணனை எச்சரித்தான். எல்லோரும் ஓடிவிட விரஜா மட்டும் தற்கொலை செய்து கொண்டாள். கோலோகத்தைச் சுற்றி விரஜா ஒரு நதியானாள். அவள் தோழிகள் அதன் உபநதிகள் ஆயினர். கிருஷ்ணனோ, விரஜாவோ இல்லாதது கண்ட ராதை தன் இருப்பிடம் திரும்பினாள். கிருஷ்ணன், சுதாமனைக் கண்டவுடன் ராதை கண்டவாறு ஏசினாள். இதனால் கோபம் கொண்ட சுதாமா ராதையைத் திருப்பித் திட்டினான். கிருஷ்ணன் எதிரில் அவமானப்பட்ட ராதை சுதாமனை அசுரனாகும்படி சாபம் கொடுத்தாள். உடனே சுதாமனும் அவளை இடைக்குலத்தில் பிறந்து கிருஷ்ணனைப் பிரிந்து அவதிப்பட வேண்டுமென்று சபித்தான்.
சாபம் தீர்ந்த பிறகு அனைவரும் கோலோகம் அடைந்தனர். ராதையைப் பூசிப்பதால் துரதிருஷ்டங்களும், உடல் நலக்குறைவும் நீங்கும். சுயஜனன் என்ற மன்னன் ஒரு சமயம் சுதபாசன் என்ற அந்தணணால் சபிக்கப்பட்டான். உன்னை லக்ஷ்மி விட்டுச் செல்வாள். உன் இராஜ்ஜியத்தை இழப்பாய். மந்த புத்தியுடன் தொழுநோயால் பாதிக்கப்படுவாய் என்று பிராமணன் சபித்தான். மன்னன் மன்னிப்பு வேண்ட சுதபாசன் என்னும் அந்த அந்தணன் ராதையைப் பூசித்து சாப நிவாரணம் பெறுமாறு கூறிட மன்னன் அவ்வாறே செய்து தொல்லைகள் நீங்கப் பெற்றான்.
20. துர்க்கையும், துர்க்கை வழிபாடும்
துர்க்கை என்ற பெயர், அவள் அதே பெயர் கொண்ட அரக்கனைக் கொன்றதால் ஆகும். மேலும் பல அரக்கர்களையும் அவள் கொன்றிருக்கிறாள். தேவர்களும், மற்ற கடவுளர்களும் பலவித ஆயுதங்களை அளித்தனர். மற்றும் அவர்களுடைய சக்தியெல்லாம் இணைந்தே அவள் வடிவெடுத்தாள். அவள் அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தாள். துர்க்கை சிவபெருமானின் மனைவி. எனவே சிவை என்ற பெயரும் அவளுக்கு உண்டு. நாராயணன் சக்தியும் பெற்றிருப்பதால் அவள் நாராயணி எனப்படுகிறாள். விஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்டவள் எனவே வைஷ்ணவி என அழைக்கப்படுகிறாள். விஷ்ணு மாயை என்ற பெயரும் கொண்டுள்ளாள். மேலும் அவளுக்குப் பல பெயர்கள் உண்டு. இஷானி, சத்தியை, நித்தியை, சனாதனி, பகவதி, சர்வாணி, சர்வமங்கள, அம்பிகை, கவுரி, பார்வதி ஆகியவை. கிருஷ்ணனே துர்க்கையைப் பூசிக்கிறான். பிரம்மா, சிவன் மற்றும் இந்திராதி தேவர்களும் அவளைத் துதிக்கின்றனர். மற்றொரு கல்பத்தில் மன்னன் சுரதனும், வைசிய சமாதியும் அவளைப் பூசித்தனர்.
நந்தி மன்னன், சுரதா மன்னனை நாட்டை விட்டே விரட்டிவிட்டான். அவன் குதிரை மீது அமர்ந்து நாட்டை விட்டு ஓடினான். புஷ்பரத்ரா என்னும் ஆறு பாய்கின்ற காட்டை அடைந்தான். ஆற்றங்கரையில் மன்னன் சுரதா, சமாதி என்ற வைசியனைக் கண்டான். சமாதியை அவன் மனைவி மக்கள் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். சுரதாவும், சமாதியும் இணைந்து பயணம் செய்து புஷ்கர தீர்த்தத்தை அடைந்தனர். அங்கே மேதஸ் என்ற முனிவரைக் கண்டனர். துர்க்கையைப் பூசை செய்யுமாறு அவர் அறிவுரை தந்தார். நெடுநாட்கள் தவம் செய்த இருவரின் முன் துர்க்கை தோன்றி சுரதாவுக்கு நாட்டையும், சமாதிக்குக் கிருஷ்ணனுடன் இணைவதையும் அருளினாள். துர்க்கை மறைந்த பிறகு மண்ணால் அவன் உருவமைத்து மன்னன் வழிபட்டு வந்தான். அரிசி, இனிப்புப் பண்டங்கள், மலர்கள், தூபம் போன்ற சாதாரண படையல்களுடன் காய்கறிகள், மிருக பலியையும் சுரதா படைத்தான், அதாவது ஆடு, மான், பூசணிக்காய் ஆகியவை. பூசைக்குப் பின்னர் சுரதா அம்மன் உருவை நீரில் சேர்த்துவிட்டான். ஆச்வின் மாதத்தில் துர்க்கை பூசையை மன்னன் சுரதா ஆரம்பித்து வைத்தார்.
ரத்தின இருக்கையில் துர்க்கையில் வடிவத்தை இருக்கச் செய்ய வேண்டும். உருவம் பொன்னிறத்தில், முக்கண்களுடன், ரத்தின கிரீடம் மற்று ஆபரணங்களும் அணிந்து இருக்க வேண்டும். கூந்தல் இடதுபுறம் சுருட்டப்பட்டும், நெற்றியில் சந்தனம், குங்குமம் நிறைந்தும் இருக்க வேண்டும். மிருகபலி இல்லாமல் நடத்தப்படும் துர்க்கை பூசை வைஷ்ணவி (அ) சாத்துவிக பூஜை எனப்படும். அது வைஷ்ணவர்களால் செய்யப்படுகிறது. விலங்குகளைப் பலி கொடுத்து செய்யப்படும் பூஜை துர்க்கை பூஜை.
ராஜசிக பூஜை : ஆஸ்வின் (புரட்டாசி) மாதத்தில், கிருஷ்ண பக்ஷத்தில் நவமி அன்று தொடங்கி பதினைந்து நாட்கள் நடைபெற வேண்டும். சுக்கில பக்ஷ தசமி அன்று துர்க்கையை நீரில் சேர்க்க வேண்டும். பலிகளைச் சப்தமி நவமி திதிகளில் அளிக்கலாம். ஆனால், அஷ்டமியில் கூடாது.
21. மற்ற பெண் தெய்வங்கள்
அடுத்து, நாரதருக்கு ஸ்வாஹா, ஸ்வாதா, தக்ஷிணா, ஷத்தி, மங்களசண்டி, மனசா, சுரபி ஆகிய பெண்தெய்வங்கள் பற்றி கூறப்படுகிறது.
ஸ்வாஹா : சிருஷ்டியின் துவக்க காலத்தில் தேவர்கள் பிரம்மலோகம் சென்று அவர்களுடைய முதல் சாப்பாடு பற்றிக் கேட்க, பிரம்மாவின் வேண்டுகோளை ஏற்று யாகவடிவில் விஷ்ணு இருக்க யாகத்தீயில் தேவர்களுக்கான உணவு அளிக்கப்பட்டது. ஆனால், அது அவர்களைச் சென்று சேரவில்லை. அதனால் தேவர்கள் மறுபடியும் பிரம்மாவை வேண்ட கிருஷ்ணர் பிரகிருதியை வேண்டுமாறு பிரம்மாவுக்கு அறிவுரை தந்தார். பிரகருதி, ஸ்வாஹா ஆனாள். அதுவே அக்னியின் எரிக்கும் சக்தி. ஸ்வாஹாவின் உதவியின்றி அக்னியால் எதையும் எரிக்க முடியாது என்று பிரம்மா அக்னியிடம், ஸ்வாஹாவை மணந்து கொள்ளுமாறு கூறினார். அவர்களுக்கு மூன்று மகன்கள் தோன்றினர். அவையே தாக்ஷிணா, காருதஸ்பத்ய, ஆஹவனியம் என்பவை. எனவே தீயில் பொருள்களை இடும் போது ஸ்வாஹா என்பதைச் சேர்த்து மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஸ்வாதா : ஆரம்ப காலத்திலேயே பிரம்மா முன்னோர்களின் அதாவது பித்ருக்களையும் தோற்றுவித்தார். பிராமணர்கள் பித்ருக்களுக்குப் பிண்டங்கள் தரவேண்டுமென்று கட்டளையிட்டார். முக்கியமாக நீத்தார் கடன் எனப்படும் மறைந்த முன்னோர்களுக்காக செய்யப்படும் சிரார்த்தங்களில் இடவேண்டும். துவக்க நிலையில் அவை பித்ருக்களைச் சென்று சேரவில்லை. எனவே, பசி கொண்ட பித்ருக்கள் பிரம்மனிடம் சென்று முறையிட அவர் ஸ்வாதா என்ற தேவதையைத் தோற்றுவித்து அவனை முன்னோர்களுக்கு அளித்தார். எனவே பித்ருக்களுக்குப் பிண்டம் அளிக்கும்போது மந்திரத்துடன் ஸ்வாதா சேர்த்து உச்சரிக்க வேண்டும். அப்போதுதான் நாம் இடும் பிண்டம் பித்ருக்களைச் சென்றடையும்.
தக்ஷிணை : அதேபோல் யாகத்தின் மனைவி தக்ஷிணை. எனவே, சமயச் சடங்கு முடிந்தவுடன் பிராமணனுக்குத் தக்ஷிணை அளிக்க வேண்டும். இன்றேல் அந்தச் சடங்கு பயனற்றதாகும். எனவே யாகம் முடிந்தவுடன் பிராமணர்களுக்குத் தக்ஷிணை கட்டாயம் தரவேண்டும்.
ஷஷ்தா : பிரகிருதி அன்னையில் ஆறில் ஒரு பங்கு ஷஷ்தா எனப்படுகிறது. அவள் கந்தன் (அ) கார்த்திகேயனின் (அ) தேவசேனனின் மனைவி ஆவாள். பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய அவள் குழந்தைகளின் தேவதை; பிள்ளை வரம் அளிப்பவள் மற்றும் சிசுக்களைக் காத்து நீண்ட நாட்கள் வாழ்ந்திட அருள்புரிபவள். மன்னன் பிரிய விரதன் ஸ்வயம்பு மனுவின் புத்திரன். அவன் தவமிருந்து ஒரு மகனை அடைய அவன் இறந்தே பிறந்தான். மன்னன் குழந்தையுடன் மயான பூமிக்குச் சென்று தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தான். அப்போது ஷஷ்தா தேவி அவன் முன் தோன்றி குழந்தைக்குப் புத்துயிர் ஊட்டினாள். தன்னைப் பற்றி உலகுக்கு அறிவிக்குமாறு அவனிடம் சத்தியம் செய்து வாங்கினான். ஒவ்வொரு மாதமும் ஷஷ்டி அன்று ஷஷ்டாதேவியைப் பூசிக்க வேண்டும். மற்றும் சிசு பிறந்தா ஆறாம் நாளும், இருபத்தொன்றாம் நாளும் அவளைத் துதிக்க வேண்டும். சிசுவைச் சார்ந்த அனைத்து நாட்களிலும் அவனைப் பூசிக்க வேண்டும். பூ, பழம், தீப, தூப நைவேத்தியங்களை அளிக்க வேண்டும்.
மங்கள சண்டி : நீலநிறக் கண்களும், அழகுமேனியும் கொண்ட மங்களசண்டி, துர்கையின் வடிவே. பெண்களுக்குக் கண்கண்ட தெய்வம். அவள் நல்வாழ்வு, செழுமை, செல்வமுடைய வாழ்வு ஆகிய மங்களங்களைக் குறையாமல் அளிக்கக்கூடிய திறமை கொண்டவள். சிவபெருமான் திரிபுராசுரர்களெனும் அரக்கர்களுடன் போர் செய்கையில் சில கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டி இருந்ததால் துர்கையைத் துதி செய்தார். விஷ்ணு கூறியவாறு, சிவன் முன் துர்கை மங்கள சண்டியாகத் தோன்றி பரமனின் திறமை, தீரம் ஆகியவற்றை அதிகரித்து அருளினார். அதுவே மங்கள சண்டிகைக்கு நடத்தப்பட்ட முதல் பூசனை. அடுத்து விஷ்ணுவுக்கும், பிருதிவிக்கும் பிறந்த அங்காரகன் அவளைத் துதி செய்தான். மனு குலத்தோன்றல் மன்னன் மங்களன் அவளை வழிபட்டான். அடுத்து ஸ்திரீகள் மங்கள நாயகியைச் செவ்வாய்க் கிழமை அன்று பூசித்தனர். அதன்பின் ஆண்களும் அவளை வழிபடத் தொடங்கினர். இவ்வாறு அவள் பெருமையும், புகழும் பரவத் தொடங்கின. செவ்வாயன்றே அவள் பூசை. (சண்டி=திறமையுள்ளவள். மங்களா-நலமும் செல்வமும் அளிப்பவள். எனவே மங்கள சண்டி எனப்படுகிறாள்.)
மனசா : மனம் அதாவது காசியபரின் மனசிலிருந்து தோன்றியதால் இவள் மனசாதேவி எனப்படுகிறாள். அவள் மிகவும் அழகாகத் தோற்றம் கொண்டிருப்பதால் உலகிலேயே அழகி என்ற பொருளோடும் ஜகத்கௌரி என்றும் பெயர் பெற்றாள். நாகராஜன் சோதரி என்பதால் நாகவாகினி (நாக சகோதரி) என்று பெயர். அவள் நாகங்களுக்கு அரசி என்ற கருத்தில் நாகேச்வரி எனப்படுகிறாள். அவள் பாம்பு விஷத்தை அகற்றுவாள் (ஹரனா) என்பதால் விஷஹாரி எனப்படுகிறாள். அஸ்திக முனிவர் தாய் ஆனதால் அஸ்திக மாதா எனப்படுகிறாள். மனசா கிருஷ்ணனை நோக்கி தவம் செய்து சக்திபெற்றாள். மேலும், அவள் சிவபக்தையும் கூட. அவள் பாம்பை யஜ்ஞோபவிதமாகத் தரித்திருக்கிறாள். அவளுக்கு தீபம், மலர்கள், தூபம் அளிக்கலாம்.
பழங்காலத்தில் மக்கள் பாம்பென்றால் மிகவும் பயந்தனர். ஏனெனில், பாம்பு கடித்தால் மரணம் தான். அதற்கு சிகிச்சை இல்லை என்ற நிலை. பிரம்மாவின் அறிவுரைப்படி காசியபர் மானசாவைத் தோற்றுவித்தார். பாம்பு கடிக்கான மந்திரத்திற்கு அவள் அதிஷ்டமான தேவதை ஆவாள். மானசாதேவி சிவனைப் பூஜித்து இறந்தவரை உயிர்ப்பிக்கும் கலையைக் கற்றாள். அவள் புஷ்கரத்தில் கிருஷ்ணனைப் பூசை செய்ய உலகம் முழுவதும் உன்னைப் பூசிக்கும் என்றார் அவர். ஜரக்கரு என்ற முனிவரை மனசா மணந்தாள். ஒரு மாலை, மனசாவின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தார். சூரியாஸ்தமன நேரம் ஆகி விட்டது. ஜரத்கரு விழித்தெழுந்து மாலை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பதற்காக அவரை எழுப்பினாள். இல்லாவிட்டால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என நினைத்தாள். ஆனால் தன்னை எழுப்பியதற்காக மிக்க கோபம் கொண்ட ஜரத்கரு கணவனுக்குத் தீங்கு செய்யும் மனைவி கும்பிபாக நரகம் அடைவாள். கணவன் தூக்கத்தைக் கலைக்கும் மனைவி காலசூத்திர நரகத்தை அடைவாள். இவ்வாறு கூறி அம்முனிவர் தவம் செய்யச் சென்றுவிட்டார்.
மனசா கைலாயம் சென்றாள். அங்கே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் அஸ்திகன். அஸ்திகன் வளர்ந்து சிவனின் சலுகையைப் பெற்றான். மனசா காசியபர் ஆசிரமம் சேர்ந்தாள். பரீக்ஷித்து தக்ஷகன் என்ற பாம்பால் கடிக்கப்பட்டான். அதனால் பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயர் சர்ப்ப சஸ்திர யாகம் செய்து பாம்புகள் அதில் விழுந்து மரிக்க தக்ஷகன் இந்திரனிடம் சரணடைய, இந்திரன் மனசா தேவியைப் பிரார்த்திக்க, அவள் தன் மகன் அஸ்திகனை தக்ஷகனைக் காப்பாற்ற ஆணையிட்டாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரன் மனஸாதேவியை மணிமய ஆசனத்தில் இருத்தி, மந்தாகினி ஆற்றின் புனித நீரால் அபஷேகம் செய்வித்துப் பூசை செய்தான். மனசா தேவியைப் பூசிப்பவர் பாம்பைக் கண்டு அச்சங்கொள்ளத் தேவையில்லை ஏனெனில் அவர் அத்தேவியின் பாதுகாப்பில் இருக்கிறார்.
சுரபி : சுரபி, பசுக்களுக்கெல்லாம் தாய் ஆவாள். ஒருநாள் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருக்கும்போது பால்குடிக்க விரும்பினார். உடனே அவருடைய இடதுபுறத்திலிருந்து சுரபியைத் தோற்றுவித்தார். ஒரு மணிமயக் கலத்தில் பால் கறந்து குடித்தார். மீதமுள்ள பால் க்ஷீர சரோவரம் (பாற்கடல்) என்ற பெரிய ஏறி (நீர்நிலை) ஆயிற்று. இந்த இடம் கிருஷ்ணன், ராதை, கோபியர்களுக்கு உல்லாச இடமாயிற்று. சுரபியின் உடலிலிருந்து பல காமதேனுக்குள் தோன்றின. காமதேனு பசுக்கள் வேண்டியதெல்லாம் அளித்தன. இவற்றிலிருந்து தோன்றியவையே இன்று உலகில் காணும் பசுக்கள். கிருஷ்ணரே சுரபியை வழிபட்டார். வராக கல்பத்தில் ஒரு சமயம் விஷ்ணு மூவுலகிலும் பாலே இல்லாமல் செய்ய, பிரம்மாவின் ஆணைப்படி தேவர்கள் எல்லாம் சுரபியைப் பிரார்த்திக்க உலகில் மறுபடியும் பால் நிரம்பியது. தீபாவளிக்கு அடுத்த நாள், கார்த்திகை மாதத்தில் சுரபி பூசை சிறப்பானது. இத்துடன் பிரகிருதி காண்டம் நிறைவு பெறுகிறது. சுரபிப் பூஜையில் பொன், பூ, ஆடை, அணிகலன்கள், பசு, கன்று அளித்தல் சிறந்தது.
22. கணேசர்-கணேச காண்டம்
ஸ்ரீகணேசர் வரலாற்றைக் கூறும் இப்பகுதி கணேச காண்டம் எனப்படும். பிரகிருதி, கிருஷ்ணனை முன்னிட்டு விரதம் செய்து கணேசனை மகனாகப் பெற்றாள். உண்மையில் கிருஷ்ணன் தன்னில் ஓர் அம்சத்தையே கணேசராக மாற்றினார். மக்கள் ÷க்ஷமத்தை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது. நாரதர் வேண்டுகோளை ஏற்று நாராயணன் கணேச காண்டத்தைக் கூறினார். பார்வதி புண்யக விரதம் அனுஷ்டித்தாள். கிருஷ்ணனே ஒரு குழந்தையாக அவள் படுக்கையில் தோன்றியது. பெற்றோர்கள் குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டு முனிவர்கள், பிராமணர்கள், யாசகர்களுக்குத் தானதர்மங்கள் செய்தனர். இவ்வாறு கோலாகலமாக விழா நடைபெறுகையில் சூரிய புத்திரன் சனி அங்கு வந்தான். சனி குழந்தையைக் கண்டுகொள்ளாமலே இருக்க, பார்வதி அது குறித்து சனியைக் கேட்டாள்.
சனி மீது சாபம்
அப்போது சனி, என் மீது ஒரு சாபம் இருக்கிறது. அதன்படி தான் எதை நோக்கினாலும் அது அழிய வேண்டும். சித்திரதன் என்ற கந்தர்வன் மகள் என் மனைவி. அவளை உதாசீனப்படுத்தியதால் அவள் இவ்வாறு எனக்குச் சாபமிட்டாள் என்றான் சனி. பார்வதியும், அங்குக் குழுமியிருந்த பெண்களும் அதுகேட்டு நகைத்தனர். சனி கூறியதைச் சாதாரணமாக எண்ணிப் பார்வதி சனியைத் தங்களைப் பார்க்கும் படி கூறினாள்.
சனி பார்வை
இதனால் உந்தப்பட்ட சனி குழந்தை மீது மட்டும் தன் பார்வையைச் செலுத்தினான். நேரிடைப் பார்வையாக இன்றி ஓரக்கண்ணால் மட்டுமே பார்த்தான். அவன் பார்வை பட்டவுடன் பார்வதியில் மடியிலிருந்த குழந்தை தலையின்றிக் கிடந்தது. (கோலோகத்தில் கிருஷ்ணனுடன் தலை இணைந்து விட்டது.) இதைக்கண்டு அனைவரும் திகைத்திட, பார்வதி மயக்கமுற்றாள்.
கணேசனுக்குத் தலை
கிருஷ்ணன் கருடாரூடனாய் ஓர் ஆற்றங்கரையில் ஐராவதம் உறங்குவதைக் கண்டு அதன் தலையை சுதர்சன சக்கரத்தால் அகற்றி கைலாயம் அடைந்து தலையின்றிக் கிடந்த பார்வதியின் குழந்தையின் கழுத்தில் பொருத்தி உயிர்பெறச் செய்தார். பார்வதியையும் மயக்கம் தெளிந்து எழச் செய்தார்.
சனி ஊனமாதல்
இந்நிகழ்ச்சியால் எல்லோரும் மகிழ்ச்சி கொண்டு விழா எடுத்து பிராமணர்களுக்கும், முனிவர்களுக்கும் தான தருமங்கள் அளித்துக் கொண்டாடினர். எனினும், சனி மீது பார்வதி கொண்ட கோபம் தணியவில்லை. அவள் சனியை முடமாகும்படிச் சபித்தாள். நடந்த சம்பவங்களுக்கு சனி காரணமில்லை என்றும், பார்வதியின் உந்துதலின் பேரிலேயே குழந்தையை சனி பார்த்ததாகவும் கூறி, தேவர்கள் பார்வதியை சமாதானப்படுத்த முயன்றனர். அவள் சினம் சிறிது குறைந்தாலும், சனியின் ஊனம் முழுவதும் குணமாகாமல் அதன் பலன் சிறிது காணப்பட்டது.
குழந்தை கணேசனுக்கு பரிசுகள் குவிந்தன. பிரம்மா கமண்டலம் தந்தார். பிருதிவி எலி வாகனம் அளித்தாள். பார்வதி இனிப்பு திண்பண்டங்கள் தானியங்களாலான பணியாரம், கொழுக்கட்டை, பால், தேன், பழம், நெய், தாம்பூலம் அளித்தாள். கணேசனை இமவானும், மேனகையும், பார்வதியும் பூக்கொண்டும், சந்தனம் புனிதநீர் படைத்தும் பூசித்தனர்.
கணேசனின் பல பெயர்கள்
கஜம் (யானை) ஆனனம் (முகம்) கொண்டதால் கணேசர் கஜானனன் எனப்படுகிறார். வயிறு பெருத்து நீண்டிருப்பதால் லம்போதரன் என்றும், பரசுராமன் ஒரு தந்தத்தை ஒடித்து விட்டதால் ஏகதந்தன், ஒற்றைக்கொம்பன் என்றும், விக்கினங்களை (தடைகளை) போக்குவதால் விக்கினஹரன் (அ) விக்னேசன் என்றும் கணேசர் அழைக்கப்படுகிறார். மேலும் அவர்க்கு ஹேரம்பன், விநாயகர், சூர்ப்பகர்ணன், கஜபக்தர்கள், குகராஜஸ என்று பலபெயர்கள் உண்டு. விஷ்ணுவின் தீர்ப்புப்படி கணேசன் முதற்கடவுளாகப் பூசிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எடுத்த காரியம் பலன் தராது. கணேசனுக்கு புஷ்டியையும், கார்த்திகேயனுக்கு (முருகனுக்கு) தேவ சேனையையும் சிவ,பார்வதி மணம் செய்வித்தனர்.
நாரதர் கேள்வி : கணேசர் விக்கினம் தவிர்ப்பவர் என்றால் அவர் தலை எப்படி வெட்டப்பட்டது. அந்த விக்கினம் எப்படி நிகழ்ந்தது என்று கேட்டார். அதற்கு நாராயன் கூறிய விவரம் : மாலி, சுமலி என்பவர்கள் சிவபக்தர்கள். சூரியன் அவர்களைக் கொல்ல முயற்சிக்க சிவபிரான் சூரியனைத் தனது சூலத்தால் அடிக்க உலகமே இருண்டு போயிற்று. இதுகண்ட சூரியனின் தந்தை காசியபர் கோபம் கொண்டு தன் மகன், சூரியனை சிவபெருமான் சூலத்தால் அவன் மார்பில் தாக்கியதால் சிவபாலன் கணேசன் தலை வெட்டப்படும் என்று சபித்தார். விஷ்ணு ஆனைத்தலையைப் பொருத்தினார். அதிலிருந்த இரண்டு தந்தங்களில் ஒன்று இல்லாமல் போனது ஏன்? என்று நாரதர் கேட்டார்.
ஏகதந்தன்
ஜமதக்கினி முனிவரின் மகன் பரசுராமன். ஜமதக்கினி கார்த்தவீரியன் என்ற அரசனால் கொல்லப்பட்டான். எனவே பரசுராமர் மிக்கக் கோபம் கொண்டு எல்லா அரசர்களையும் கொன்று குவித்தார். சிவபெருமான் பரசுராமனின் குருவானதால் அவருக்கு மரியாதை செலுத்த பரசுராமன் சிவன் இருப்பிடம் சென்றார். அப்போது அவரை உள்ளே செல்ல விடாமல் கணேசர் தடுத்தார். கணேசர் மரியாதையுடன் பரமன் நித்திரையிலிருப்பதாகக் கூறியும், பரசுராமன் தான் உடனே பரமனைக் காணவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளே செல்ல முயன்றார். இருவருக்கும் தகராறு முற்றியது. அப்போது கணேசர் தந்தத்தை நீளச்செய்ய, அதனைப் பரசுராமர் தன் கைக்கோடாரியால் வெட்ட தந்தப் பகுதி பூமியில் விழுந்தது. கணேசர் மிக்க கோபம் கொண்டார். எனவே தான் கணேசர் ஏகதந்தர் (அ) ஒற்றைக்கொம்பர் ஆனார்.
இவ்வாறு நிகழ்ந்திட விழித்தெழுந்த சிவனும் பார்வதியும் இரத்தம் வழியும் மகன் கணேசனை அருகில் அழைத்து பரசுராமனிடம் கணேசன் பல பரசுராமர்களை வென்று கொல்லும் சக்தி உடையவன். அவன் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஓர் ஈயைக் கூடத் துன்புறுத்தவில்லை. பரசுராமன் கணேசனை மலர், தூப, தீப, நைவேத்தியங்களுடன் பூசை செய்தான் என்று விளக்கமளித்தார். கணேசர் பூசையில் துளசி மட்டும் கூடாது. அது ஏன் என்று நாரதர் கேட்க நாராயணன் கூறினார்.
கணேசரும் துளசியும்
ஒரு சமயம் கங்கைக் கரையில் கணேசரைத் சந்தித்த துளசி, கணேசரின் அதிசயத் தோற்றத்தைக் கண்டு, அவரை அணுகித் தான் மன்னன் தர்மத்வஜனின் மகள் என்றும், தன்னை மனைவியாக ஏற்குமாறும் வேண்டினாள். அதற்கு கணேசர் தனக்கு மணம் புரிய எண்ணம் இல்லை என்றும், விவாகம் துயரத்தை உண்டாக்கும் என்றும், மேலும் கங்கை தனக்குத் தாயனையள் என்றும் கூறி மறுத்தார் கணேசர். அப்போது கணேசர் நினைப்பது போல் திருமணமின்றி இருக்க கடவார் என்று சபித்தாள். கணேசரும் துளசியை அரக்கன் கையில் அவள் அகப்படுவாள் என்றும், துளசி ஒரு புதராகுமாறும் சபித்தார். துளசி வருத்தமுற்று கணேசர் கோபத்தைத் தணிக்க கணேசர், பூக்களிலெல்லாம் துளசி தலைசிறந்ததாகவும், விஷ்ணு பூசையில் முக்கியமாகும். ஆனால், என் பூசையில் மட்டும் துளசியை ஏற்பதில்லை என்று கூறினார். இந்தப் புராணத்தை உபன்யாசம் செய்யும் பவுராணிகளுக்குத் தங்கப் பூணூலும், வெண்குடையும், குதிரை, பூமாலை, பழம், இனிப்பு ஆகியவை வழங்கப்படவேண்டும். இத்துடன் கணேச காண்டம் முடிவு பெறுகிறது.
23. ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம காண்டம்
ஸ்ரீ பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணாவதாரப் பகுதியில் சொல்லப்பட்டவையே இந்த பிரமவை வர்த்த புராணத்தில் இறுதி நான்காவது காண்டமாக ஸ்ரீகிருஷ்ண ஜன்ம காண்டத்தில் கூறப்படுகிறது. (விரிவை பாகவதம், விஷ்ணு புராணங்களில் ஸ்ரீகிருஷ்ணாவதாரப் பகுதியில் காண்க)
(அவற்றில் கூறப்படா சில முக்கிய செய்திகள் மட்டும் இங்கு தரப்படுள்ளன.) இதில் கிருஷ்ணன் ராதை வரலாறு விசேஷமாகக் கூறப்படுகிறது.
வரலாறு
கோலோகத்தில் ஸ்ரீதாமன் ராதையை ஒரு யாதவப் பெண்ணாகப் (இடையன் மகளாக) பிறக்குமாறு சபிக்க, அவள் கிருஷ்ணனை விட்டுப் பிரிவது குறித்து மிகவும் வருத்தமுற்றாள். இந்நிலையில் உலகில் துஷ்டசம்ஹாரம் சிஷ்டபரிபாலனம் செய்ய, பூமாதேவியின் வேண்டுகோளின்படி கிருஷ்ணன் புவியில் பிறக்கின்றான். இங்கு மாயை குழந்தை வடிவில் வந்து அசரீரியின் கூற்று இதில் மாறுபட்டுள்ளது.
அசரீரி
முட்டாள் கம்சா, ஏன் அனாவசியமாய் என்னைக் கொல்லப் பார்க்கிறாய்? உன்னைக் கொல்பவன் வேறிடத்தில் வளர்கிறான். உரிய காலத்தில் தன்னை வெளிப்படுத்துவான் இதனால் அப்பெண் குழந்தையைக் கொல்லாமல் தேவகியிடம் கொடுத்து விடுகிறான் கம்சன். அந்தப் பெண் குழந்தை பெரியவளானவுடன் ஏகநம்ஷா என்ற பெயரில் துர்வாச முனிவருக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்.
முற்பிறவி
நந்தன் ஒரு வசு, துரோணர் என்று பெயர் கொண்டவன். அவன் மனைவி யசோதை. துரோணரின் மனைவி தாரை. அவர்கள் வேண்டுகோளின்படி கோகுலத்தில் அவர்கள் மகனாகக் கிருஷ்ணன் வளர்கிறான். புவியில் காசியப முனிவர் வாசுதேவனாகவும், அதிதி தேவகியாகவும், கத்ரு ரோஹிணியாகவும் தோன்றினர்.
பூதனை
கம்சனின் சகோதரி பூதனை. கிருஷ்ணனெனும் மாயக்குழந்தையை விஷம் ஊட்டிக் கொல்லச் சென்று கிருஷ்ணனால் கொல்லப்பட்டாள். பூதனை முற்பிறவியில் அசுரமன்னன் பவியின் புதல்வி ரத்னமாலா. ஒரு யாகத்தில் விஷ்ணு வாமனனாகத் தோன்ற அவள் அவனைக் குழந்தையாக்கிப் பாலுட்ட வேண்டுமென்று விரும்பினாள். அதுவே பூதனை வரலாறு.
அரக்கர்கள் முற்பிறவி
கிருஷ்ணனால் கொல்லப்பட்ட திருணாவர்த்தன் என்னும் அரக்கன் முற்பிறவியில் மன்னன் சகஸ்ராக்ஷன் என்ற பாண்டிய குலத்தவன்.
கிருஷ்ணர்
கார்க்க முனிவர் நந்தன் குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார். கிருஷ்ணன் என்றால் கருப்பு நிறம் உடையவன் என்று பொருள். ஆனால் இப்புராணத்தில் கிருஷ=மோக்ஷம், ந=மிக உயர்ந்த(அ)சிறந்த எனவே கிருஷ்ணன் என்றால் மிக உயர்ந்த மோக்ஷம் அளிப்பவன் என்று பொருள் தரப்படுகிறது. பாலராமனுக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு.
தாமோதரன்
கிருஷ்ணன் யசோதை உரலில் கயிறு கொண்டு கட்டியதாகக் கூறுவது வழக்கம். (தாம=கயிறு; உதரன்=வயிறு உடையவன்)-கயிறு கட்டிய அடையாளம் காரணமாக தாமோதரன் என்று கிருஷ்ணனுக்குப் பெயர். ஆனால் இப்புராணத்தில் கிருஷ்ணனை நீண்ட துணியால் கட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், மரங்களுடன் கட்டியதாகக் கூறுகிறது இப்புராணம்.
கோபி ராதை
ஒரு நாள் கிருஷ்ணனுடன் மாடுகளை ஓட்டிச் சென்ற நந்தன் கிருஷ்ணனை அங்குக் காணப்பட்ட ஒரு பெண்ணின் காவலில் விட்டு விட்டுச் செல்ல, அந்தப் பெண் ராதையும், கிருஷ்ணனும் ஆடி மகிழ்ந்தனர். பின்னர் கிருஷ்ணனைக் காணாமல் வருந்திய ராதையிடம் கிருஷ்ணன் தினமும் இரவில் பிருந்தாவனம் வந்து மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் நிழல் மட்டும் வீட்டில் இருந்தது. பார்வதி தவம் செய்து கொண்டிருந்தாள். அன்றாட பூசைக்கு அவள் அருகிலிருந்து சித்திரா என்னும் ஏரியில் பூக்கும் மலர்களைப் பறித்துப் பூசைக்கு உபயோகித்து வந்தாள். அந்த மலர்கள் அவளுக்காக ஏற்பட்டவை. அவற்றை வேறு யாராவது பறித்தால் அரக்கர்களாவர் என்று சாபம் உண்டு. இதை அறியாத கந்தர்வர்கள், அம்மலர்களைப் பறித்தனர். அவர்கள் விஷ்ணு பக்தர்கள். அவர்களே பகாசுரன், பிரலம்பாசுரன், கேசி என்ற அரக்கர்களாகி கிருஷ்ணனால் மடிந்தனர். பார்வதி செய்த அந்த விரதம் ராதாகிருஷ்ணன் ஆகியோரை முன்னிட்டே இவ்விரதம் செய்யும் பெண்மணியின் கணவன் சகல வளங்களையும் பெறுவான்.
பிருந்தாவனம்
கோபர்கள் சண்டிகாதேவியை ஓர் ஆலமரத்தின் அடியில் பூசை செய்து விட்டு உறக்கத்தில் வீழ்ந்தனர். அந்த இரவில் தேவ கலைஞன் விசுவகர்மா பிருந்தாவனத்தில் தேவையான வீடுகளை நிர்மாணம் செய்து அதில் ஒவ்வொரு கோபன் பெயரும் எழுதிவிட காலையில் எழுந்த கோபர்கள் அவரவர் பெயர் கொண்ட வீட்டில் புகுந்தனர் பிருந்தாவனத்தில். சுவயம்புவ மனுவின் குலத்தோன்றல் மன்னன் கேதாரன். அவன் மகள் விருந்தை (அ) பிருந்தை. எனவே, அவ்விடம் பிருந்தாவனம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு ஒரு வரலாறு இருக்க பிரம வைவர்த்த புராணம் பிருந்தாவனம் ஏற்பட்ட வரலாற்றை வேறு விதமாகக் கூறுகிறது. ராதையின் பல பெயர்களில் ஒன்று பிருந்தை. அவளும் கிருஷ்ணனும் ஆடிப்பாடி மகிழ்ந்த இடம் என்பதால் பிருந்தாவனம் என்று ஆயிற்று.
அந்தண ஸ்திரீகள்
அந்தணர்கள் பத்தினிகள் ஒரு சமயம் கிருஷ்ணனும் அவர் தோழர்களும் பிராமணர்களிடம் சென்று உணவு கேட்க அவர்கள் இடவில்லை. அடுத்து கிருஷ்ணன் ஆணைப்படி கோபர்கள் அந்தணர் தன் மனைவியரிடம் வேண்ட அவர்கள் கிருஷ்ணன் இருக்குமிடத்துக்கு உணவுப்பொருள்களுடன் வந்து அவர்களின் பசி தீர்த்தார்கள். அவர்கள் கிருஷ்ணனிடம் அவர் தரிசனத்திலேயே அவர்கள் எப்போதும் இருக்கும் வரம் வேண்டினர். விண்ணிலிருந்து ஒரு விமானம் வர அப்பெண்டிர் அனைவரும் கோலோகம் சென்று ஆனந்தமடைந்தனர். அவர்களுடைய நிழல்களே அந்தணர்களின் இல்லத்தை அடைந்தன.
காளீய மர்த்தனம்
விஷப்பாம்பின் பெயர் காளியன். தன் மனைவியுடன் மடுவில் வசிக்க நீர் விஷமாகி ஆடுமாடுகள் மரணமடைய அவற்றை ஒழிக்க கிருஷ்ணன் காளியன் மடுவில் குதித்தான். காளியன் கிருஷ்ணனை விழுங்கினான். அதனால் உட்புறம் எரிய ஆரம்பிக்க கிருஷ்ணனை கக்கினான் காளியன். காளியன் படம் மீது ஏறி மிதிக்க பளு தாங்காமல் காளியன் விஷம் கக்கி மயங்கினான்.  காளியன் மனைவி சுரசை கிருஷ்ணனைப் பிரார்த்திக்க, ஒரு விமானம் வந்தது. அதில் சுரசை கோலோகம் சென்றடைந்தாள். ஆனால் அவள் நிழலைக் காளியன் பெற்று அந்த மடுவை விட்டு நீங்கி ரமணகம் என்னும் இடம் சென்றான்.
கோவர்த்தன்
கோவர்த்தனம் (கோ=பசு; வர்த்தனம்=செழிப்புடன் வளர்தல்). கோவர்த்தனத்தை சுண்டு விரலால் தூக்கினான் என்பதை இதில் இடது கையால் தூக்கினான் என்று கூறப்பட்டுள்ளது. இந்திரன் கோவர்த்தன கிரியை உடைக்க வஜ்ராயுதத்தைப் பயன்படுத்தினான்.
உஷை
தேனுகாசுரன் என்னும் அசுரனின் முற்பிறவி. பலிச்சக்கரவர்த்தியின் மகன் சஹசிகன். கந்தமாதனபர்வத்தில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சஹசிகன் திலோத்தமையுடன் வந்தான். அவர்கள் முனிவரைக் கவனிக்காமல் கேளிக்கையில் ஈடுபட முனிவர் தவத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. துர்வாசர் சஹசிகன் மறுபிறவியில் கழுதையாகப் பிறந்து கிருஷ்ணனால் கொல்லப்படுவான் என்று சபித்தான். திலோத்தமையை பாணாசுரன் மகளாய்ப் பிறந்து கிருஷ்ணனின் பேரன் அநிருத்தனை மணப்பாள் என்றார்.
துர்வாசர் தோல்வி
சஹசிகன், திலோத்தமையால் தவம் பங்கப்பட்ட துர்வாசர், திரிந்து கொண்டிருந்தபோது அவுரவ முனிவர் மகள் கந்தவியைக் கண்டு அவளை மணக்க விரும்பினார். அவள் சண்டைக்காரி என்று அவுரவர் கூற துர்வாசர் அவளுடைய நூறு திட்டுகளை மன்னிப்பதாகக் கூறி அவளை மணந்தார். அவுரவ முனிவர் அவளுக்கு அறிவுரை கூறி அனுப்பினார். ஒருமுறை நூற்றுக்கு மேல் திட்டிட துர்வாசர் அவளைச் சாம்பலாகுமாறு சபித்தார். பின்னர் வருத்தம் கொண்ட அவரைக் கிருஷ்ணன் சிறுபையன் வடிவில் வந்து சமாதானப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட அவுரவ முனிவர் துர்வாசர் பெரிய தோல்வியைச் சந்திப்பார் என்று சபித்தார்.
அம்பரீஷனிடம் கோபம் கொண்டு துர்வாசன் ஒரு வீரனை வாளுடன் தோற்றுவித்து அம்பரீஷனைத் தண்டிக்க முயல சுதர்சன சக்கரம் தோன்றி வீரன் கழுத்தை வெட்டிக் கொன்றது. பின்னர் துர்வாசரைத் துரத்த அவர் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரிடம் உதவியை நாடப்பலனின்றி மறுபடியும் அம்பரீஷரையே அடைந்து  மன்னிக்குமாறு வேண்டிட, சக்கரம் சாந்தி அடைந்தது. அது முதல் துர்வாசர் விஷ்ணு பக்தர்களிடம் கோபம் கொண்டு சபிக்காமல் இருந்தார். கோபியர்களின் ஆடையைக் கவர்ந்து கதம்ப மரத்தின் மீதமர்ந்த கிருஷ்ணனை யமுனையில் நீராடிக் கொண்டிருந்த கோபியர் ஆடைகளைத் தருமாறு வேண்டிட, கிருஷ்ணனை ராதை நீரிலேயே அமர்ந்து தியானித்து அவன் புகழ் பாடிட ஆடைகளைக் கோபியர் பெற்றனர். கிருஷ்ணனின் சிறப்பான சக்திகளை உணர்ந்து கோபியர் இல்லம் அடைந்தனர். ராஜலீலையின் போது கிருஷ்ணன் ராதையுடன் என்றும் சுற்றித்திரிந்து கடைசியில் மலய மலையை அடைந்து ஆங்கோர் ஆலமரத்து அடியில் கேதகிப் புதர்கள் அருகில் அமர, கிருஷ்ணன் ராதைக்குப் பல கதைகள் கூறலானான்.
அஷ்டவக்கிரர்
மேற்கூறியவாறு ராதையும், கிருஷ்ணனும் அமர்ந்திருந்த போது அங்கு அஷ்டவக்கிர முனிவர் வர, அவரைக் கண்டு ராதை சிரிக்க கிருஷ்ணர் அவளைச் சிரிக்காமல் தடுத்தார். பின்னர் அம்முனிவரின் முற்பிறவி வரலாற்றைக் கூறினார். முற்பிறவியில் தேவலன் என்ற அந்தணனாகப் பிறந்து மனைவியுடன் வாழ்ந்த அவர், பிறகு எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த நிலையில் தேவலோக ரம்பை அவரைக் கண்டு தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்ட, அவர் மறுத்தார். அப்போது அவள் வக்கிர புத்தி படைத்த அம்முனிவர் உடலும் வக்கிரமாகுமாறும், அவர் அதுவரையில் பெற்ற புண்ணியமும் இழக்குமாறும் சபித்தாள். அதுகேட்ட அந்தணர் தீக்குளிக்க முற்பட்டபோது கிருஷ்ணன் தோன்றித் தடுத்து அவருக்கு அஷ்டவக்கிரன் என்று பெயர் சூட்டினார். பின்னர், நெடுங்காலம் தவம் இயற்றி வந்த அவர், ராதையையும், கிருஷ்ணனையும் கண்டதும், அவர்களை வணங்கித் துதித்திட அவர் சாபம் நீங்கியது.
பிரம்மன் மோகினி
மோகினி என்ற அப்சரஸ் பிரம்மனை மணக்க விரும்ப, அவர் வெறுக்க, அவள் இனி பிரம்மாவைத் துதிப்பதை யாவரும் நிறுத்தி விடுமாறு சபித்தாள். பிரம்மன் நாராயணனிடம் முறையிடச் சென்றார். அங்கு நான்கு முகங்கள் கொண்ட பிரமன், பத்துத் தலைகள், நூறு தலைகள், ஆயிரம் தலைகள் கொண்ட பிரம்மன்களைக் கண்டு குழப்பமுற்று அது குறித்து நாராயணனைக் கேட்க அவர், இப்பேரண்டத்தில் உள்ள பல உலகங்களில் பல பிரம்மாக்கள் உள்ளனர் என்றார். அதுகேட்ட பிரம்மாவின் அகம்பாவம் நீங்கியது. பிரம்மன் புனிதகங்கையில் நீராடினால் மோகினியின் சாபம் நீங்கிவிடும் என நாராயணன் அருளினார். அதனால் பிரம்மா அகம்பாவம் நீங்கிப் பணிந்தார்.
சிவன் பணிவடைதல்
ஒரு சமயம் சிவபெருமான் விருகாசுரனுக்கு அவன் யார் தலைமீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பல் ஆவர் என அவன் வேண்டியவாறு வரம் தர அவன் சிவன் தலைமீது கைவைத்துப் பார்க்க வர, அவர் விஷ்ணுவிடம் சரணடைந்தார். அங்கு வந்த விருகாசுரனிடம் விஷ்ணு இந்தப் பொய் கூறும் சிவனை எப்படி நம்புகிறாய். அவர் உனக்கு வரம் தரவே இல்லை. வேண்டுமானால் உன் தலை மீது கை வைத்துச் சோதித்துப் பார் என, அவன் தன் தலைமீது கையை வைக்க எரிந்து போனான். இதனால் மனம் போனபடி வரம் அளித்து வந்த சிவன் பணிவு கொண்டார்.
இந்திரன் கர்வத்தை அடக்குதல்
ஒருசமயம் இந்திரன் கர்வமடைந்து பிரகிருதி தேவியை உதாசீனப்படுத்த அதனால் சாபம் பெற்று இந்திரயோகம், லோகம் அனைத்தையும் இழந்தான். பின்னர் விசுவகர்மாவைக் கொண்டு அமராவதி நகரை புதுப்பித்தபோது திருப்தி அடையாத அவன் மேலும் மேலும் அப்பணியிலேயே விசுவகர்மாவை ஈடுபடுத்த விசுவகர்மா வேறெந்தப் பணியிலும் ஈடுபட முடியாமல் பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் அவனை விஷ்ணுவவிடம் அழைத்துச் சென்று விவரிக்க, விஷ்ணு சிறுபாலன் வடிவம் கொண்டு இந்திரன் முன் தோன்றினார். இந்திரனை நோக்கி அந்த பாலன் எத்தனை அழகிய நகரம் இது! வேறெந்த விசுவகர்மாவும் இத்தனை சிறப்பாக அமைக்கமாட்டான். இன்னும் எத்தனை காலம் விசுவகர்மாவை வேலை வாங்கப் போகிறாய்? என்று இளைஞன் கேட்டான். இதனால் கோபம் கொண்டு இந்திரன் இளைஞனிடம், உனக்கு எத்தனை இந்திரன்களைத் தெரியும்? எத்தனை விசுவகர்மாக்களை அறிவாய்? என்று கோபத்துடன் கேட்டான்.
மணல் துளிபோல் எண்ணற்ற இந்திரன்கள் உள்ளனர். பேரண்டத்தில் உள்ள ஒவ்வோர் உலகத்திலும் ஒவ்வோர் இந்திரன். ஒரு இந்திரனின் ஆயுள்காலம் எழுபத்தோர் யுகங்கள். பிரம்மனின் ஒரு நாள் காலத்தில் இருபத்தெட்டு இந்திரர்கள் தோன்றி மறைந்தனர். (அவ்வமயம் சாரை சாரையாக ஓர் எறும்பு வரிசை காணப்பட்டது. பையன் அந்த வரிசையைக் காட்டி சிரித்துக் கொண்டே சொன்னான்.) இவற்றை நானே படைத்தேன். இவை ஒவ்வொன்றும் முற்பிறவியில் ஒரு இந்திரன். ஆனால் இப்போது எறும்புகளாய் பிறந்திருக்கின்றன என்றான். இந்திரன் வெட்கமடைந்து தன்னுடைய பொய் கர்வத்தை விட்டு விசுவகர்மாவைப் போகவிட்டான்.
அக்னி பணிதல்
ஒரு சமயம் அக்னி மூவுலகையும் எரிக்க முற்பட்டது. அதுசமயம் விஷ்ணு ஒரு சிறுவன் வடிவில் அக்னி முன் தோன்றி ஒரு நாணலைக் கொடுத்து எரிக்குமாறு கேட்டது. அப்போது அக்னி தன் சுவாலைகளால் சிறுவனை சூழ்ந்து கொண்டது. ஆனால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. நாணலும் எரிக்கப்படவில்லை. இவ்விதம் விஷ்ணு அக்னியின் கர்வத்தை அழித்தார். (அடுத்து இராமாயணம் பற்றியும் இப்புராணம் கூறுகிறது. அது எல்லோர்க்கும் தெரிந்ததாகையால் இங்கு கொடுக்கப்படவில்லை).
கம்சன், ராதை கண்ட கனவு
கம்சன் இரவினில் மிகவும் பயங்கரமான கனவுகள் கண்டு மனம் கலங்கி புரோகிதர் சாக்கியரை அழைத்துக் கூறிட அவர் ஒரு யாகம் செய்து அதில் சிவதனுசைப் பூசிக்க வேண்டும் என்றும் நடுவில் வில் உடைந்துவிட்டால் கம்சனுக்கு மரணம் நிச்சயம். அதை முன்னிட்டு கிருஷ்ணனை மதுரைக்கு வருவித்துக் கொன்று விடலாம் என்றும் கூறினான்.
ராதையை விட்டுப் பிரிதல்
கிருஷ்ணனை அழைத்து வர அக்ரூரரைக் கம்சன் அனுப்பினான். ராதையும் சந்திரன் விழுவது போலவும் உலகமே இருளில் மூழ்கி விட்டதாகவும் கனவு கண்டாள். அப்போது கிருஷ்ணன் ராதையைச் சமாதானப்படுத்தி கோலோகத்தில் ஸ்ரீதாமன் கொடுத்த சாபம் பற்றி நினைவூட்டி தானும் அவளும் நூறாண்டு காலம் பிரிந்திருந்து பின்னர் இணைவோம் என்றும் கூறினார். பின்னர் ராதையைச் சமாதானப்படுத்தி நந்தன், யசோதை இருவருக்கும், பிரிவு கூறி பலராமனுடன் மதுரைக்குப் புறப்பட்டான் கிருஷ்ணன். மதுரை செல்லும் வழியில் எதிர்ப்பட்ட கூனியை ஓர் அழகியாக மாற்றி, அவளுக்கு அவள் முற்பிறவியில் சூர்ப்பணகை என்பதை நினைவூட்டினார்.
அவர் ஆசனத்தின் மீதேறி சுதர்சனச் சக்கரத்தால் கம்சன் தலையை வெட்டினார். மதுரைக்கு வந்த நந்தனிடம் தன்னை அவர்கள் மகனாக நினைப்பதை மறக்குமாறு கூறினார். மேலும், ராதை உண்மையில் கோபி அல்ல. அவளைத் தோற்றுவித்து நானே என்றும் கூறினார். அவள் பிரகிருதி தேவி. நானே விஷ்ணு, பிரம்மா, சிவன், சூரியன், அக்கினி, வாயு என்றும் எல்லாவற்றிலும் நானே உள்ளேன், என்னில் அனைத்தும் குடிகொண்டுள்ளன. நானே பரமாத்மா, நானே பரப்பிரம்மம் என்றார். மேலும் அன்றாடச் சடங்குகள், சகுனங்கள், கனவுகள், தானதருமம், கிரகணங்கள் பலவகை மக்களின் கடமைகள் நல்லொழுக்க விவரங்கள் ஆகியவற்றைப் பற்றியும் விவரித்தார்.
உத்தவர் தூது
மதுரையில் தங்கி இருக்கும்போது உத்தவரைக் கிருஷ்ணன் பிருந்தாவனத்துக்கு தூது அனுப்பினார். அங்கு சென்ற உத்தவர் ராதை மிகவும் மெலிந்து சோகமே உருவாகக் காட்சி அளித்தாள். பட்டாடை, ஆபரணங்கள் இன்றி எளிமையாகக் காணப்பட்டாள். ஆனால், உத்தவரைக் கண்டு அவரிடம் கிருஷ்ணனைப் பற்றிய செய்திகள் கேட்டு மகிழ்ச்சியுற்று அவருக்கு அளவில்லாப் பரிசுகள் அளித்தாள். மதுரை திரும்பி வந்ததும் உத்தவர், தான் ராதையிடம் கிருஷ்ணர் பிருந்தாவனம் வந்து ராதையைச் சந்திப்பார் என்று கூறினேன். இவ்வாறு கிருஷ்ணன் அவர்கள் தூங்கும் போது கனவில் ஒரு நாடகம் நடத்தினார். ஆனால், விதிவேறு மாதிரி இருந்தது. கிருஷ்ணனும், பலராமரும், சந்தீப முனிவரிடம் கல்வி கற்க அடைந்தனர். அங்கு கோபர் வடிவில் குருகுலவாசம் செய்து பின்னர் மதுரைக்கு ராஜஉடையில் வந்தார். அடுத்து துவாரகை நகரை உருவாக்கி, குரு÷க்ஷத்திரப் போரில் கவுரவர்களுக்கு எதிராக பாண்டவர்களுக்கு உதவி செய்தார். (மகாபாரதம் எல்லோரும் அறிந்த கதைதானே.)
ராதா கிருஷ்ணன் இணைதல்
சித்தாஸ்ரமம் சென்று கிருஷ்ணனும் ராதையும் கணேசரை வழிபட்டனர். அப்போது அங்கு பார்வதி வந்து ஸ்ரீதாமன் சாபம் முடிந்தது. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்றாள். பிரபாச தீர்த்தத்தில் இணைந்ததாக வேறோர் இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ராதை கோகுலம் அடைய கிருஷ்ணன் கோகுலத்தினர்க்குப் பழக்கமான உடையில் ராதையிடம் வந்து சேர்ந்தார். ராதை மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனைச் சேர்ந்திட கோகுலவாசிகள் கிருஷ்ணனை மலர்மாலைகள், தாம்பூலம், தேன், பட்டாடைகளுடன் மகிழ்ச்சி கொண்டு வரவேற்றனர். கோலோகத்திலிருந்து வந்த தேவலோகத் தேரில் ஏறி ராதையும் கிருஷ்ணனும் பிருந்தாவனம் அடைந்தனர். கிருஷ்ணன் குழலூதும் நந்தகோபாலன் சிறுவனாகக் காட்சி அளித்தார். ஓர் ஆலமரத்தடியிலிருந்து கிருஷ்ணன் கோகுலவாசிகள் அனைவரிடமும் பிரம்மன் முதல் புல்வரையில் எல்லாமே மாயைதான் என்று கூறி, வரப்போகும் கலியுகத்தின் கொடுமைகளை விவரித்து எல்லோரையும் கோலோகம் செல்லச் செய்தார். மறுபடியும் ராதை தேவியாகி பொன்மய ஆசனத்தில் பெண்டிர் புடை சூழ வீற்றிருந்தார். கிருஷ்ணன் 100 ஆண்டுகள் மதுரையிலும் துவாரகையிலும், நந்தன் வீட்டில் 11 ஆண்டுகளும், ராதையுடன் பிருந்தாவனத்தில் 14 ஆண்டுகளும் (125) இருந்தார். பாகவதத்தில் கிருஷ்ணன் வேடனால் அம்பெய்யப்பட்டு உடலை விட்டு வைகுந்தம் சேர்ந்து அவதாரத்தை முடித்தார் என்று கூறப்பட்டது.
ஆனால், இப்புராணம் அவர் முடிவை வேறுவிதமாக வருணிக்கிறது. அவதார முடிவில் லக்ஷ்மி துவாரகையை விட்டு அகன்றார். நிலம் நடுங்கிற்று. யாதவர்கள் தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு மடிந்தனர். ஜரா என்ற வேடம் தவறாக அம்பெய்தான். அம்பினால் அடிப்பட்ட கிருஷ்ணனைக் காண பிரம்மாவும், தேவர்களும் வந்தனர். எல்லோரையும் சமாதானப்படுத்தினார் கிருஷ்ணன். வேடன் ஜராவை கோலோகம் அனுப்பினார். பலராமர் உடல் சேஷநாகத்துடன் இணைந்து வாசுதேவர் காசியபரிலும், தேவகி அவர் மனைவி அதிதி உடலிலும் கூடினர். துவாரகை கடலில் மூழ்கியது. கிருஷ்ணன் உடலிலிருந்து ஓர் உருவம் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலருடன் தோன்றி விமானத்திலிருந்து இறங்கி க்ஷீரோதத்தை (பாற்கடலை) அடைந்தது. இவ்வாறு இடதுபுறத்தில் இருந்த ஓருருவம் பிரிய, வலதுபுறத்திலிருந்து யாதவச் சிறுவன் கோபாலன் (அ) கோபபாலகன் உரு வெளிப்பட்டது. இது நிகழ்ந்தது ஸ்வேதத் வீபத்தில்.
நான்கு கரங்கள் கொண்ட நாராயணன் வைகுந்தம் அடைந்தார். கோபாலன் குழலூதிக் கொண்டே கோலோகம் அடைந்தான். எல்லோரும் ஹரி ஹரி என்று ஹரி நாமஸ்மரணம் செய்தனர். கோலோகத்தில் கிருஷ்ணன் ராதையுடன் ரத்தின மய ஆசனத்தில் அமர அங்கு ராதா நாதா, ராதேசா என்று கோஷம் கேட்டது.
24. நாராயணனும் நாரதனும்
நாரதன் அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியுற்று இனி இமயத்தில் தவம் செய்யச் செல்லலாமா? என்று கேட்க, நாராயணன் நாரதன் கந்தர்வனாக இருந்த போது மணந்த ஐம்பது மனைவியர்களுள் ஒருத்தி சிவனருள் பெற்று மன்னன் சிரிஞ்ஜயன் மகளாகப் பிறந்து நாரதனுக்காகக் காத்திருப்பதாகக் கூறி அவளை மணப்பது அவன் கடமை என்றார். அவ்வாறே அவளை மணந்து நாரதன் பகவானை மறந்துவிட்டான். அப்போது அந்தப் பற்றிலிருந்து நாரதனை சனத்குமாரன் விழித்தெழச் செய்து கிருஷ்ணநாமம் ஜபித்துக் கொண்டே திரியுமாறு கூறினார். பலகாலம் கிருஷ்ணனைக் குறித்து தவம் செய்து கொண்டே நாரதன் நாராயணனுடன் இணைந்தான்.
பிரம வைவர்த்த புராணம் முற்றும்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக