ஞாயிறு, 17 ஜூன், 2012

மச்ச புராணம்

ராதே கிருஷ்ணா 17-06-2012

மச்ச புராணம்



temple
1. தோற்றுவாய்: பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் இருபதுக்கும் மேற்பட்டவை என்று பாகவதம் கூறுகிறது. எனினும் அவற்றுள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, பலராம, ... மேலும்
 
temple
8. ஸ்ரீவெங்கடேஸ்வரரும், அலமேலு மங்கைத் தாயாரும்
கஜனி முகம்மதுவுக்கு ஓர் அழகிய மகள் இருந்தாள். அவளுடைய அந்தப்புரத்திற்கு ஸ்ரீவெங்கடேச்வரர் ஓர் இரவு வந்து தன்னைப் ... மேலும்
 














மச்ச புராணம் பகுதி-1மே 30,2012







1. தோற்றுவாய்: பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் இருபதுக்கும் மேற்பட்டவை என்று பாகவதம் கூறுகிறது. எனினும் அவற்றுள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, பலராம, (பவுத்த) கிருஷ்ண, கல்கி ஆகிய பத்தும் தசாவதாரங்கள் என்ற பெயரில் மிகவும் புகழ்பெற்றன. தசாவதாரங்களில் பதினெண் மகாபுராணங்களில் மச்ச, கூர்ம, வராக, வாமன அவதாரங்கள் தனித்தனி புராணங்களாக உள்ளன. அவற்றுள் மச்சாவதாரமே பகவான் விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் என்று கூறப்படுகிறது. புராணங்களை ராஜசிக, சாத்துவிக, தாமசிக புராணங்கள் என்று வகைப்படுத்தினர். அவற்றுள் மச்சபுராணம் ஒரு தாமசிக புராணம். இது 24,000 ஸ்லோகங்கள் கொண்ட ஒரு நடுத்தர அளவுள்ள புராணம்.
மச்சம் என்றால் மீன். இந்த மச்ச புராணம் முதன் முதலாக பகவான் மீனாக அவதரித்தபோது சுவாயம்பு மனுவுக்குக் கூறினார். இப்புராணத்தைச் சூதமுனிவர் சனகாதி முனிவர்களுக்கு கூறலானார். இதன் சுருக்க வரலாறு விஷ்ணு புராணம், பாகவத புராணங்களிலும் உள்ளன.
சிருஷ்டி
நரர்கள் எனப்படும் மானிடர்களுக்கு பிராணாதாரமான நீரில் பகவான் விஷ்ணு உறைவதால் அவருக்கு நாராயணன் என்று பெயர். சூனியத்திலிருந்து அதாவது அசத்திலிருந்து சத்து தோன்றியது. ஜலாசயத்தின் மீது ஆலிலையில் சயனித்துக் கொண்டிருந்த பகவான் நாபியிலிருந்து எழுந்த கமலத்தில் நான்முகன் தோன்றி சிருஷ்டி செய்ய ஆரம்பித்தான். விஷ்ணு பிரம்மாவிடம் பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உன் படைப்புக்கு உதவும். சிருஷ்டியைத் தொடங்கு என்று கூறினார். பிரகிருதி சரஸ்வதி சொரூபம். பிரகிருதியும், புருஷனும் கூடிட பிரம்மாவின் முகத்திலிருந்து காயத்திரி மந்திரமாகிய இருபத்து நான்கு எழுத்துக்கள் உண்டாயின. அதன் பிறகு பிரம்மாவின் நெற்றியிலிருந்து தக்ஷ பிராஜாபதி தோன்றிட சிருஷ்டி வளர்ச்சி பெறலாயிற்று. ஜீவகோடிகள் தோன்றின. உலக விவகாரம் அறிய உதவும் நிலையில் காலப்பிராமணம் உருவாகியது. மேலும், படைப்பு விவரங்களும் பல புராணங்களில் உள்ளவாறே ஆகும்.
2. பகவான் விஷ்ணுவின் மச்சாவதாரம் (முற்பகுதி)
சத்தியவிரதன் என்ற மன்னன் தருமவான். விஷ்ணு பக்தன். சத்தியசந்தன். நாட்டு மக்களும் சத்தியமே பேசுமாறு ஆண்டு வந்ததால் சத்திய விரதன் என்ற பெயர் பெற்றான். தினமும் நதியில் நீராடி சந்தியாவந்தனம் செய்து அர்க்கியம் கொடுப்பது வழக்கம். ஒருநாள் காலை அவ்வாறு அர்க்கியம் தர இரு கைகளிலும் நீர் எடுக்க அதில் ஒரு மீன் இருந்தது. அதைத் தண்ணீரில் விடப் போக அது தன்னை மற்ற உயிரினங்கள் கொன்று விடும். எனவே அவற்றிடமிருந்து தன்னைக் காத்திடுமாறு வேண்டிக் கொள்ள அதை அவர் தன் கமண்டலத்தில் விட்டார். மறுநாள் காலை அது கமண்டலம் அளவு வளர்ந்து நிறைந்திருக்க அதனை ஒரு பெரிய கங்காளத்தில் இட அதையும் நிறைக்குமளவு வளர்ந்து விட்டது. எனவே அதை ஓர் ஏரியில் கொண்டு விட்டார் அங்கும் அது மிகப்பெரியதாகி ஏரியின் அளவு ஆகிவிட மிகவும் கஷ்டப்பட்டு அதைச் சமுத்திரத்தில் கொண்டுவிட்டார்.
அப்போது அது சத்தியவிரதனிடம் பேசிற்று. நான் நாராயணன். மச்சாவதாரம் எடுத்துள்ளேன். பக்தி, சிரத்தை, கருணையுடன் என்னைக் காப்பாற்றினீர். இன்னும் பதினைந்து நாட்களில் ஒரு பிரளயம் வரும் அனைத்து உயிர்களும் இறந்துவிடும். அப்போது நீ ஒரு பெரிய ஓடத்தில் ஒவ்வொரு உயிருக்கும் ஆன விதைகளைச் சேர்த்து அதில் ஏற்றிக்கொண்டு தயாராக இரு. உன்னுடன் சப்த ரிஷிகளும் ஓடத்தில் ஏறிக்கொள்வர். உங்கள் அனைவரையும் நான் கடலில் மூழ்கிப் போகாமல் பிரளயத்தில் இழுத்துச் சென்று பிரளயம் முடியும் வரையில் காத்திடுவேன் என்றது. மன்னன் சத்தியவிரதன் அந்த நாளை எதிர்பார்த்து நின்றான்.
பிரளயத்தில் ஏற்பட்டு எங்கும் ஜலமயமாக, ஓடத்தில் ஏற்றப்பட்ட விதைகளும், சப்த ரிஷிகளும், சத்தியவிரதனும் பாதுகாப்பாக இருந்தனர். மச்சமாகிய பகவான் அவற்றைக் காத்து வந்தார். பிரளயம் முடிந்து உலகம் சகஜ நிலை அடைந்து பூபாகம் மேலெழச் சூரியன் தோன்றியது. பிரம்மா தன் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். ஆனால் அவர் பணியை அவரால் செய்ய இயலவில்லை. அதற்கான சக்தி சாமர்த்தியம் அவரிடம் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் வேதங்களைச் சோமகன் என்னும் அரக்கன் அபகரித்துச் சென்று சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டான். பிரம்மா நாராயணனைத் தியானம் செய்தார்.
இரண்டாம் பகுதி
நாராயணன் பிரம்மாவின் எதிரில் தோன்ற பிரம்மா அவரிடம் வேண்டினார், ஏ மஹானுபாவா! நீர் சர்வசராசர சிருஷ்டியிலும் சேர்ந்து சைதனியம் அளிக்கும் பரமாத்மா. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். சோமகன் என்னும் அரக்கன் வேதங்களை அபகரித்துக் கொண்டு சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான். வேதங்களின்றி என்னால் சிருஷ்டி காரியத்தை நடத்த இயலவில்லை. கருணாமூர்த்தி! வேதங்களை மீட்டுத் தந்தருள்வீராக என்றார். நாராயணன் ஒரு பெரிய சுறாமீன் வடிவில் மஹா மச்சாவாதரம் எடுத்து வேதங்களை மீட்க புறப்பட்டார். சோமகாசுரன் வேதங்களை விழுங்கி விட்டான். ஆனால், அவன் பசி தீரவில்லை. எனவே மேலும் ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்த அவன் முன் சுறாவடிவில் விஷ்ணு வர அது தனக்கேற்ற உணவென்று அதை விழுங்க வந்தான். இப்படி இருவருக்கும் பயங்கர போர் நடைபெற்றது. மீன் தன் வாலால் நீரை அடிக்க நீர் மேலெழுந்தது. அத்துடன் அரக்கனும் மேல் எழுந்து விழுந்தான். மிகவும் கோபம் கொண்ட அரக்கன் தன் கைகளால் மீனை இரண்டாகக் கிழிக்க முயல, சுறாமீன் வடிவில் இருந்த விஷ்ணு அவனைப் பற்களால் கொத்திக் கொதறி, அவன் வயிற்றைக் கிழித்து வேதங்களையும், தக்ஷணாவர்த்த சங்குவையும் எடுத்துக் கொண்டு பிரம்மாவின் முன் தோன்றி வேதங்களை அளித்தார். சங்கைத் தான் தரித்தார்.
மேலும் அரக்கன் விழுங்கியதால் வேதங்களில் சில பகுதி காணப்படவில்லை. அவற்றை ஞாபகப்படுத்தி பூர்த்தி செய்க என்று பிரம்மாவிடம் கூறி மறைய, மச்சாவதாரம் முடிவுபெற்றது.
3. கச்ச, தேவயானி வரலாறு
ராக்ஷச குருவான சுக்கிராச்சாரியாரின் அழகிய மகள் தேவயானி. மகளின் மீது அதிகப் பிரியம் கொண்ட அவர் கேட்பது எதையும் மறுக்காமல் வளர்த்து வந்தார். விருஷபர்வன் என்பவன் ராக்ஷச அரசன். அவனுக்குச் சுக்கிரன் குருவாவார். தேவாசுரர்களிடையே அடிக்கடி ஏதாவதொரு காரணத்தால் போர் நிகழும். அத்தகைய போரில் இறக்கும் அசுரர்களை, குரு சுக்கிராச்சாரியார் மிருத சஞ்ஜீவனி என்னும் வித்தை மூலம் உயிர்ப்பித்து வந்தார். இதனால் அரக்கர்கள் தொகை மேலும் மேலும் வளர, தேவர்கள் தொகை குறைந்து கொண்டே வந்தது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திராதி தேவர்கள் தம் குல குருவான பிரகஸ்பதியிடம் இதற்கு ஏதாவது ஒரு வழி செய்து தேவர்களைக் காத்திடுமாறு வேண்டினான். (அப்போது அமிர்தம் கடையப்படவில்லை)
பிரகஸ்பதி தன் மகன் கச்சனை அழைத்து மிருத சஞ்ஜீவனி வித்தையின் பெருமையைக் கூறி, சுக்கிராச்சாரியாரிடம் குருகுலவாசம் செய்து வித்தைகள் கற்பிக்குமாறு வேண்டு, அவர் மறுக்கமாட்டார். அதே சமயம் வித்தைகளுடன் மிருத சஞ்ஜீவனி வித்தையையும் கற்றுக்கொண்டு வா என்று சொல்லி அனுப்பினார். அவனும் அழகன். பணிவு போன்ற நல்லொழுக்கங்கள் நிறைந்து குருவின் மனதை மட்டுமின்றி தேவயானியின் இதயத்தையும் கொள்ளை கொண்டான். இது அசுரர்களுக்குப் பிடிக்கவில்லை. பகைவனுடைய ஆள் என்பதால் அவனை ஒழித்துக் கட்ட உபாயம் செய்தனர். ஒரு நாள் கச்சன் காட்டில் மாடுகள் மேய்க்கச் சென்றபோது அரக்கர்கள் கச்சனைக் கொன்று ஒரு மரத்தில் தொங்க விட்டனர். மாடுகள் வழக்கம்போல் வீடு திரும்பின. ஆனால் கச்சனைக் காணவில்லை. இதனைத் தேவயானி, தன் தந்தையிடம் கூற, அவர் தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து கச்சனை உயிர்ப்பித்தார். இவ்வாறு சுக்கிரரால் உயிர்ப்பிக்கப்பட்ட கச்சனைக் கண்ட அரக்கர்கள் மேலும் கோபம் கொண்டு மறுபடியும் அவனை ஒழிக்க திட்டமிட்டனர்.
இம்முறை அவனை எரித்து அந்தச் சாம்பலை மதுவில் கரைத்து சுக்கிராச்சாரியாரைக் குடிக்க வைத்தனர். அவர் மயங்கி வீழ்ந்தார். கச்சனைக் காணாத தேவயானி தந்தையிடம் அது பற்றி கூற, மயங்கிக் கிடந்த அவர் பேசாதிருந்தார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிய தேவயானி அழுது கொண்டிருப்பதைக் கண்டு, செய்தி அறிந்து அவளிடம் கச்சனை உயிர்ப்பித்தாலும், பகைவர்களான அரக்கர்கள் திரும்பத் திரும்ப அவனைக் கொல்லுவர். அவன் மரணமடைந்து தனியனாகட்டும் என்று கூறினார். மது மயக்கம் முழுவதுமாக ஒழிந்து, சுக்கிரர் உலகெங்கும் தன் ஞானதிருஷ்டியால் கச்சனைத் தேடியும் எதுவும் அறிய முடியாமல் கடைசியில் நிகழ்ந்ததை உணர்ந்தார். மிருத சஞ்ஜீவனி வித்தையைப் பயன்படுத்தி, அவர் வயிற்றைக் கிழத்துக் கொண்டு அவனை வெளிவருமாறு அழைத்தார். அப்போது கச்சன் சுக்கிரரிடம் தான் குருவின் வயிற்றைக் கிழித்து வெளிவந்தால் அவர் இறந்துவிடுவார். அதனால் குருஹத்யை, பிரம்மஹத்யை தோஷம் ஏற்படும். தாங்கள் மரணமடைந்தால் தங்களை உயிர்ப்பிக்கும் மார்க்கத்தை நான் அறியேன். எல்லா வித்தைகளும் கற்பிப்பதாகக் கூறிய தங்கள் வாக்குத்தானமும் நிறைவேறாது. அதனால் உங்களுக்கு மோட்சம் கிட்டாது. எனவே நான் உங்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவரமாட்டேன் என்றான்.
அப்போது சுக்கிராச்சாரியார், பிரகஸ்பதி மகனான நீ இத்தனை விதமாக ஆலோசனை செய்வதில் வியப்பேதுமில்லை. எந்த வித்தையைக் கற்க நீ என்னிடம் சீடனாக வந்தாயோ அது உனக்குக் கிடைக்கும். அதற்கு அரக்கர்களே உனக்கு உதவினார்கள். உனக்கு நான் மிருத சஞ்ஜீவனி வித்தையைப் போதிக்கிறேன். அக்கறையுடன் கற்றுக்கொள். வெளயில் வந்த பிறகு அதைப் பயன்படுத்தி என்னை உயிர்ப்பிக்கச் செய் என்று கூறி, அந்த வித்தையைப் போதித்தார். கச்சன், சுக்கிரர் உடலிலிருந்து வெளிவந்து அவரை உயிர்ப்பித்து மகிழ்ந்தான். சுக்கிரரும் மனநிறைவுடன் கச்சனைப் பார்த்து உனக்கு எல்லா வித்தைகளும் என்னருளால் கிடைக்கும். இனி நீ இங்கிருந்தால் உன்னைக் கொன்று விடுவர் என்று கூறி ஆசிர்வதித்து அவனைப் போகவிட்டார். கச்சன் தந்தை உடலிலிருந்து உயிருடன் வெளிவந்து, தந்தையையும் உயிர்ப்பித்து கண்டு பெருமகிழ்ச்சி கொண்ட தேவயானி, கச்சனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்ட, அவன் குருபுத்திரி தனக்குச் சகோதரி என்றும், அதனால் திருமணம் செய்து கொள்வது தகாத செயல் என்று கூற, தேவயானி கோபம் கொண்டு அவன் கற்ற மிருதசஞ்ஜீவனி வித்தை பலனளிக்காமல் போகுமாறு சபித்தாள்.
அதுகேட் கச்சன் தனக்குப் பலனளிக்காவிட்டாலும், தன் மூலம் பிறர் கற்றுப் பலன் பெறுவார்கள் என்று கூறி, தன்னைத் தேவயானி அக்கிரமமாக சபித்ததைக் கூறி, அவனும் அவளுக்குப் பிராமணன் அல்லாத ஒருவனே கணவனாவான் என்று சபித்து விட்டுச் சொர்க்கலோகம் சேர்ந்தான். அங்கு அவன் தேவர்களுக்கு மிருதசஞ்ஜீவனி வித்தையைக் கற்பித்தான். பின்னர் யயாதி மன்னனுக்கும் தேவயானிக்கும் விவாகம் நடந்தது. (யயாதி வரலாறு-விஷ்ணு புராணத்தில் காண்க.)
4. அகஸ்தியரும் இந்திரனும்
பதரிகாசிரமத்தில் நர நாராயணர்கள் தவம் செய்து வந்தனர். அவர்கள் விஷ்ணுவின் அம்சமே. அவர்கள் தவத்தைக் கெடுக்க இந்திரன் சில அப்சர ஸ்திரீகளை அனுப்பினான். அது கண்ட அவர்கள் மனமாற்றம் கொள்ளவில்லை. மேலும் தங்கள் தொடையிலிருந்து ஓர் அழகியைத் தோற்றுவித்தனர். (ஊரு=தொடை) ஊருவிலிருந்து தோன்றிய அவளுக்கு ஊர்வசி என்று பெயரிட்டு இந்திரனுக்குப் பரிசாக அனுப்பி வைத்தனர். ஊர்வசி இந்திரனிடம் செல்லும் போது அவள் அழகினால் கவரப்பட்ட சூரியன் அவளை இச்சித்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னைக் கண்டு சேருமாறு கூற அவளும் ஒப்பினாள். அவ்வாறு சூரியனுக்காக சென்று கொண்டிருந்த அவளை வருணன் கண்டு மோகித்துத் தன்னுடன் வருமாறு கூற அவள் முதலில் சூரியன் அழைத்ததால் அவரைத் திருப்தி செய்வதே தருமம் என்று கூற, வருணன், அப்படியானால் அவருடன் இருக்கும்போது தன்னையே மனதில் நினைக்குமாறு கூறினான். அவள் அவ்வாறே நடந்து கொள்ள, அவள் மனம் மாறுபட்டு நடப்பதை உணர்ந்த சூரியன் அவளை நடுவிலேயே விட்டு விட்டுச் சென்று விட்டான். அத்துடன் அவளை வேசி ஆகுமாறு சபித்தான். அதற்குள் சூரியன் விந்துவும், ஊர்வசியையே நினைத்துக் கொண்டிருந்த வருணன் விந்துவும் வெளிப்பட இரண்டும் கீழே விழுந்தால் தோஷமென்று ஒரு கலத்தில் சேர்த்தனர்.
ஒரு சமயம் நிமி என்னும் விதேக நாட்டு மன்னனும், வருணனும் நிமி வீட்டில் சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது வசிஷ்டர் அங்கு வந்தார். வந்தவர் நிமி விருந்துபசாரம் செய்யாததால் நிமியை உடம்பில்லாமல் போகுமாறு சபித்தார். நிமியும் வசிஷ்டரை உடம்பில்லாமல் போகுமாறு சபித்தார். அத்துடன் உடம்பு இல்லாவிட்டாலும் உயிர்களின் கண் இரப்பையில் சேர்ந்திருப்பேன் என்றான் நிமி. அதனால் இரப்பை அடித்துக் கொள்வது நிமிஷம் எனப்படுகிறது. உடலை இழந்த வசிஷ்டர் தான் எங்கே சேர்வது என்று எண்ணிக் கொண்டிருக்கையில் மித்ரா வருணருடைய வீரியத்தில் பிரவேசிக்குமாறு வருணன் உபாயம் சொல்ல வசிஷ்டர் ஆத்மா அக்கலத்தில் சேர்ந்தது. அந்த மித்ரா வருணர் வீர்ய கலத்திலிருந்து சிறிது காலத்தில் வசிஷ்டர், அகஸ்தியர் என்று இரட்டையர் தோன்றினர். ஒரு சமயம் பலம் பெற்றிருந்த அசுரர்கள், தேவர்களுக்கு உபத்திரவம் செய்ய இந்திரன், அக்கினி, வாயு இருவரையும் வேண்டி அவர்கள் உதவியுடன் அரக்கர்களை விரட்ட அவர்கள் தலைவர்கள் கடலில் சென்று ஒளிந்தனர். கடலில் ஒளிந்துள்ளவர்களை தம்மால் ஒன்றுமே செய்ய இயலாதென்று அக்கினியும், வாயுவும் கூறினர்.
பின்னர் இந்திரன் அகஸ்தியரிடம் சென்று, தாங்கள் மித்ர வருணர்களின் அம்சமாகத் தோன்றியவர். மகா தபஸ்ஸாலி. உன்னால் ஆகாதது ஒன்றும் இல்லை. அரக்கத் தலைவர்களில் சிலர் சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் மறுபடியும் வெளியே வந்து கொடுமைகள் புரிவர். நீங்கள் கடல் நீரை வற்றச் செய்து விட்டால் அவர்களை நான் கொன்று விடுவேன் என்று இந்திரன் கூற அகஸ்தியர் கடல் நீரை ஆசமனம் செய்து குடித்து விட்டார். பின்னர் இந்திரன் அரக்கர்களை அழிக்க முற்பட மயன், தாரகன், வித்யுன்மாலி என்ற மூவர் தப்பி ஓடிவிட்டனர்.
5. திரிபுராசுரர்கள்
மயன், தாரகன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்களும் பிரம்மாவைக் குறித்து கோரத்தவம் செய்து பொன் நகரம், வெள்ளி நகரம், இரும்பு நகரம் என்று ஆளுக்கொரு நகரம் வேண்டினர். மேலும் நினைத்தபோது நினைத்த இடத்திற்குச் செல்லக்கூடிய வரமும், மூவரையும் ஒருங்கே கொல்லக்கூடிய ஒருவராலேயே தமக்கு மரணம் உண்டாக வேண்டும் என்றும் வரங்கள் கேட்டுப் பெற்றனர். அத்தகைய வரங்கள் பெற்ற அம்மூவரும் நினைத்த இடத்திற்குச் செல்வதும் அங்குள்ளவர்களுக்குத் தொல்லை கொடுப்பதுமாய் இருந்தனர். இதனால் மூவுலகில் உள்ளவர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அச்சத்தில் வாழ்ந்து வந்தனர். பிரம்மாதி தேவர்கள் கைலைக்குச் சென்று பரமசிவனை வணங்கி, உங்கள் கோபத்தால் சகல உலகங்களும் ஒரே கணத்தில் பஸ்பமாகிவிடும். உங்களுக்கு இந்தத் திரிபுராசுரர்கள் ஒரு பொருட்டா! தயை புரிந்து இம்மூவரைக் கொன்று எங்களுக்கு விமோசனம் அளியுங்கள் என்று வேண்டினர்.
அப்போது பரமன் தேவர்கள் தனக்குத் தேவையான உதவிகள் செய்யுமாறு வேண்டினார். அதாவது பூமி தேராகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் அதன் நாணாகவும், விஷ்ணு அம்பாகவும், பிரம்மா தேரோட்டியாகவும், சூரியன், சந்திரன் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும்....அதில் நான் ஆரோகணித்து தேவர்களின் படைகளுடன் போருக்குச் செல்வேன் என்று கூற, அப்படியே எல்லாம் நிகழ்ந்தன. அவ்வாறு போர் செய்யச் சென்ற பரமன் அற்பர்களாகிய அரக்கர்கள் மீது பாணம் எய்தார். அந்தப் பாணம் முதலில் பொன் நகரையும், அடுத்து வெள்ளி நகரையும், இறுதியில் இரும்பு நகரத்தையும் வரிசையாக உடைத்தெரிந்து துவம்சம் செய்தது. முப்புரங்களோடு மூன்று அரக்கர்களும் அழிந்தனர். இவ்வாறு திரிபுராசுரர்களைப் பரமசிவன் வென்று அழித்தார்.
6. பரப்பிரம்மம் காட்டிய வழி
பிரம்மாவின் படைப்பில் அனைத்து லோகங்களும், தேவர்கள், அசுரர்கள், மானிடர்கள் ஆகியோரும், அவர்களுக்கான உணவு, உடை, உறைவிடம் ஆகியனவும், மனஅமைதிக்கான யஜ்ஞ யாகாதிகள், வேதங்கள் போன்றவையும் குருகுல வாசம், குரு சீடன், போதனை, பூஜாவிதானம் போன்றவையும் சனாதன தர்மம் என்பவையும் ஏற்பட இவற்றைப் பின்பற்றுவோர் ஆஸ்திகர்கள் எனவும், மற்றவர் மிலேச்சர்கள் (அ) நாத்திகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வாறு அமைதிப் பூங்காவாக இருந்த உலகில் மிலேச்சர்களுடன் அரக்கர்கள், தசியர்கள் அதாவது கள்ளர்கள், வழிபறிக் கொள்ளைக்காரர்கள் ஆகியோரும் உருவாகிப் பெருகினர். இவர்களால் தொல்லைகள் ஏற்பட்டுப் பெருகிட மக்கள், அரசனிடம் முறையிட அனைவரும் பிரம்மாதி தேவர்களைப் பிரார்த்தனை செய்தனர். அரி, அரன், அயன் என்னும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்திடம் தங்களுக்குத் தக்க வழிகாட்டுமாறு வேண்டினர். பரப்பிரம்மம் வழிமுறைகளை அருளியது.
நாராயணனிடம், லக்ஷ்மியுடன் உலகில் பல பெயர்களுடன் அவதரித்து துஷ்ட சம்ஹாரம், சிஷ்டபரிபாலனம் செய்யுமாறு கூறியது. அப்படியே பரமசிவனைப் பார்த்து பார்வதி சமேதனாய் புனிதத் தீர்த்த தலங்களை இருப்பிடமாகக் கொண்டு சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் செய்யுமாறு ஆஜ்ஞாபித்தது. அவ்வாறே விஷ்ணு பதரியில் நர நாராயணன், பிரயாகையில் மாதவன், ஹரித்வாரில் ஸ்ரீஹரி, திருவரங்கத்தில் அரங்கன், திருப்பதியில் வெங்கடேசுவரர், மதுராவில் ஸ்ரீகிருஷ்ணன் என்று தோன்றி மக்களைக் காப்பாற்றி வருகிறார். சிவபெருமானும் சவுராஷ்டிராவில் சோமநாதர், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனன், உஜ்ஜயினில் மகாகாலன், சேதுவில் ராமேஸ்வரன் என்றும், மேலும் பல இடங்களில் குறிப்பாக துவாதச ÷க்ஷத்திரங்களில் சோதிர்லிங்கமாகவும் தோன்றி அருள்கிறார். பிரம்மா அவரவர் கர்மபலன்களை அனுசரித்து அவர்கள் தலை எழுத்தை நிர்ணயிப்பதாகக் கூறினார்.
பார்வதி சக்திவடிவில் பதினெட்டு சக்தி பீடங்களில் இருந்து அருள்கிறாள். மற்றும் பல இடங்களில் பல பெயர்களிலும், கிராமங்களில் கிராம தேவதைகளாகவும் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். இவ்வாறு பரப்பிரம்மம் காட்டிய வழியில் யாவும் அமைந்தன.
7. ராமசர்மா, யவன மன்னனாதல் ராமசர்மாவின் பிறப்பு
கவுதமி ஆற்றங்கரையில் ஓர் அக்கிரகாரம். அனைவரும் வேத, வேதாங்க சாஸ்திரப் பண்டிதர்கள். மிகவும் செழிப்புடன் அக்கிரகாரவாசிகள் வாழ்ந்து வந்தனர். அந்த அக்கிரகாரத்தில் நாராயண சர்மா என்றொரு அந்தணர், தனது தர்மபத்தினியாகிய சோவிதம்மாளுடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ராமசர்மா என்றொரு புத்திரன். அவனுக்கு ஏழாண்டில் உப நயனம் செய்வித்து குருகுலத்தில் வேத சாஸ்திரங்கள் கற்க சேர்த்துவிட்டார்.
துஷ்ட சகவாசம்
அவன் குருகுலத்தில் இருக்கும்போதே வித்தைகள் கற்று முடியும் முன்பே, உலக அனுபவம் ஏற்படும் முன்பே தாய் தந்தையர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தனர். மரணமடைவதற்கு முன் அவனைத் தாய்மாமனிடம் ஒப்படைத்து அவனைப் பாதுகாத்து வருமாறு வேண்டினர். ராமசர்மாவை விட அவனது சொத்தில் அக்கறை கொண்ட தாய்மாமன் அவனது கல்வியைத் தடை செய்து, வாய்க்கு வந்த படி திட்டி வளர்க்க, சிறுவயதிலிருந்து அவன் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு துஷ்ட சகவாசம் கொண்டு திரியலானான்.
காசி யாத்திரை
ஆனால், அவன் மீது அக்கறை கொண்ட அவனது உற்றார் உறவினர் அவனுக்கு நல்லுரை வழங்கிட, அவன் மனம் மாறி மேலும் கல்வி கற்றிட காசிக்குச் சென்றான். அங்குக் காசிவிசுவநாதரைத் தரிசிக்க ஆலயத்திற்குச் செல்ல அங்கு வடவாயிலில் ஒரு பெயர்ப்பலகையைக் கண்டான். அதில் கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டிருந்தது. காசியிலுள்ள கங்கை நீரை எடுத்துச் சென்று ராமேசுவரத்தில் உள்ள ராமேச்வரனுக்கு அபிஷேகம் செய்து, அங்கிருந்து கடல் நீரைக் கொண்டு வந்து எனக்கு (விசுவநாதருக்கு) அபிஷேகம் செய்தால் உலகை ஒருமுறை சுற்றிவந்த பலன் கிடைக்கும். மும்முறை பூமியைச் சுற்றிய பலன் பெற்றவர் முன் நான் காட்சி தந்து வேண்டிய வரத்தை அளிப்பேன்-காசி விஸ்வநாதன். உடனே ராமசர்மா ஒரு காவடியில் இருபக்கமும் இரண்டு கலசங்களில் கங்கை நீருடன் ராமேசுவரம் சென்று ராமேச்வரனுக்கு அபிஷேகம் செய்து, அங்கிருந்து கடல் நீரை கொண்டு வந்து காசி விச்வநாதருக்கு அபிஷேகம் செய்தான். இவ்வாறு இருமுறை வெற்றியுடன் நடைபெற்றது. ஆனால் மூன்றாவது முறை ராமேச்வரத்திலிருந்து கொண்டு வந்த நீர் காசிக்கருகில் வரும் போது கீழே கொட்டிவிட்டது. மறுபடியும் அவன் முயற்சி செய்ய அப்போதும் அவ்வாறே நீர் தரையில் போயிற்று. இதனால் கோபம் கொண்டான் ராமசர்மா.
ஒரு தடியுடன் விச்வநாதரை அணுகி தலையைப் பிளந்து, நிராசையுடன் தன் தலையையும் பிளந்து கொள்ள எண்ணிப் புறப்பட்டான். அப்போது விச்வநாதர் அசரீரியாய் ஒலித்தார். என்னை அடிக்க வேண்டாம். நீ இருமுறை செய்த அபி÷க்ஷகத்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எனவே உனது அடுத்த பிறவியில் உன்னைச் சக்கரவர்த்தி ஆக்குகிறேன். ஐயம் கொள்ளாமல் என் பேச்சைக் கேட்டு வீடு திரும்புவாயாக என்றது அசரீரி.
மறுபிறவி
ஓர் அந்தணனுக்கு உபநயனம் ஆனவுடன் இரண்டாவது பிறவி வருகிறது. ஏற்கனவே உபநயனம் ஆன தான் மரணம் அடைந்தால்தான் இரண்டாவது பிறவி (அ) சந்நியாசியானாலும் மறுபிறவி எடுத்ததாகும். இவ்வாறு எண்ணிய அவன் மறுநாள் காலையில் மணிகர்ணிகா கட்டத்திற்குச் சென்று நீராடி, அனுஷ்டானம் முடித்துக் கொண்டு புறப்படுகையில் அபரசங்கரர் என்ற பெயர் கொண்ட கீர்த்திவாய்ந்த மகான் எதிரில் பட்டார். அவரை வணங்கி தனக்கு ஆதுர சந்நியாசம் வழங்குமாறு வேண்டினார். (அதாவது மிகமுக்கியமான சமயம் (அ) மரண வேளையில் பெறும் சந்நியாசம்) அப்போது அவர் கேட்ட பல வினாக்களுக்கு ராமசர்மா தகுந்த விடைகள் அளிக்க, அவர் மகிழ்ச்சியுற்று ஆதுர சந்நியாசத்துக்காக ஒப்புதல் அளித்து உபதேசம் செய்தார்.
தியானத்தில் ஆழ்தல்
உடனே அவன் ஆலயம் சென்று பரமனிடம் சாஸ்திரப்படி நான் ஆதுர சந்நியாசம் பெற்ற மறுபிறவி அடைந்தேன். எனவே எனக்கு வாக்களித்தபடி சக்கரவர்த்தி ஆக்கு என்றான். பரமன் என்னை அச்சுறுத்தி வரம் பெற ஆசைப்படுகிறாய். நான் வாக்குக் கொடுத்தது, கொடுத்ததுதான். நீ கமண்டலம், தண்டம், காஷாய உடை அனைத்தையும் கங்கையில் எறிந்துவிட்டு ஆற்றின் பிரவாகத்தை எதிர்த்துக் கொஞ்ச தூரம் நடந்து செல். அங்கொரு வடவிருட்சம் (ஆலமரம்) காணப்படும். அதன்கீழ் அமர்ந்து என்னைத் தியானித்தால் உனக்கு ராஜயோகம் கிடைக்கக் காரணமாகும் என்றார். அவனும் அவ்வாறே செய்து தியானத்தில் ஆழ்ந்தான்.
யவன மன்னன் ஆதல்
கங்கை ஆற்றுக்கருகில் ஒரு முகம்மதிய ராஜ்யம் இருந்தது. அதன் சுல்தான் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டான். அந்நாட்டு வழக்கப்படி மந்திரிகள் ஒரு யானையிடம் மாலை ஒன்றைக் கொடுத்து ஓட்டிச் செல்கையில் அது பல இடங்களில் திரிந்துச் சென்று இறுதியில் கங்கைக் கரையை அடைந்து அதன் கரையில் வடவிருக்ஷத்தின் கீழ் தியானத்திலிருந்த ராமசர்மாவின் கழுத்தில் போட்டு அவனை யவன மன்னன் ஆக்கியது.
யவன மன்னன் வாழ்க்கை
பின்னர் அந்த யானை ராமசர்மாவை தன் மீது உட்கார வைத்துக் கொண்டு அரண்மனையை அடைய மந்திரி, பிரதானிகள் மற்றும் பலர் அவனை வரவேற்று அவனுக்கு ராஜ்யாபி÷க்ஷகம் செய்து வைத்தனர். அவனுக்குக் கஜினி முகம்மது என்ற பட்டப்பெயரும் வழங்கினர். முகம்மதிய குருமார்களாகிய பக்கிரிகள் அவனுக்கு அம்மதச் சடங்குகளைக் கற்பித்தனர். அவனும் தனது சனாதன தர்மத்தைக் கைவிட்டு முகம்மதிய மதக்கோட்பாடுகளுடன் நாட்டை ஆண்டு வந்தான். தான் விரும்பியவாறே ராஜயோகம் அனுபவித்து வந்தான். மேலும், முன் சுல்தானுக்கு இருநூறு மனைவிகள் இருந்தனர். அவர்கள் இவன்மீது மோகம் கொண்டு நெருங்கி வர அவர்களுடன் சுகங்கள் அனுபவித்தான். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அவன் மனதில் பச்சாத்தாபம் ஏற்பட்டது. உத்யான வனத்தில் அமர்ந்து யோசிக்கலானான். தன் முன் வாழ்க்கையையும், தற்போதைய வாழ்க்கையையும் எண்ணிப் பார்த்தான். தான் பலாத்காரமாகப் பெற்ற வரம் பற்றியும், பரமன் செய்த சோதனையையும் எண்ணினான். தனது பித்ருக்களுக்குச் சிரார்த்தம் கூட செய்ய முடியாமல் மதப்பிரஷ்டம் ஆகி உள்ளேன். என் மாற்றம் கண்டு அவர்கள் அழுதுகொண்டிருப்பர். நானே வைதகி மத விரோதி ஆகிவிட்டேன்.
ஒருநாள் அவன் சபை கூட்டி, அவர்களிடம் தேவாலயங்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து கோயில் சொத்துக்களைக் கொள்ளை அடிக்குமாறும், நாடு முழுவதும் முகம்மதிய மதத்தைப் பரவச் செய்யுமாறும் ஆணையிட அவர்களும் அவ்வாறே செய்யலானார்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



மச்ச புராணம் பகுதி-2மே 30,2012






8. ஸ்ரீவெங்கடேஸ்வரரும், அலமேலு மங்கைத் தாயாரும்
கஜனி முகம்மதுவுக்கு ஓர் அழகிய மகள் இருந்தாள். அவளுடைய அந்தப்புரத்திற்கு ஸ்ரீவெங்கடேச்வரர் ஓர் இரவு வந்து தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறி அதுபற்றி வேறொருவருக்கும் தெரியாமல் இருக்குமாறு கூறினார். இவ்வாறு தினமும் இரவில் இருவருடைய சந்திப்பும் நடைபெற்று வந்தது. எனினும் இது பற்றி ஐயப்பட்டு, காவலாளிகள் எங்களுக்குத் தெரியாமலேயே ஓர் ஆண் அந்தப்புரத்தில் பிரவேசித்து இளவரசியுடன் பேசிச் செல்கிறான் என்று சுல்தானிடம் கூறினர். சுல்தான் அந்தப்புரம் வந்து தன் பெண்ணிடம் வரும் ஆண் யார் என்று கேட்க, அவள் மவுனம் சாதிக்க அவள் தலையை வெட்ட அவன் கத்தியை ஓங்க, அங்கு விக்கிரக வடிவில் இருந்த ஸ்ரீவெங்கடேச்வரர் அவன் கையைப்பிடித்து இவ்வாறு கூறினார். அன்று நீ பலாத்காரமாக என்னிடம் வரம் பெற்றாய். அது சாதுவான வழி இல்லாததால் உன் மதத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டு யவன மன்னன் ஆனாய். இன்னும் உன் அஞ்ஞானம் அழியவில்லை. உன் சனாதன இந்து மதத்தையே அழிக்க முற்பட்டாய். மதங்கள் வேறானாலும் தெய்வம் ஒன்றே என்பதை உணரவில்லை நீ. உனக்கு அறிவுரை வழங்கவே வந்தேன். உன்னால் தொல்லைகளுக்கு ஆளான அர்ச்சகர்கள் உன் கோட்டத்திலேயே உள்ளனர்.
உன்னால் அழிக்கப்பட்ட கோயில்களைப் புனர் நிர்மாணம் செய்து, அவற்றில் விக்கிரகங்களையும், லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து, அர்ச்சகர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் கொடுத்து அனுப்பி வை. இல்லாவிடில் உன்னுடைய எல்லாச் செல்வங்களும் உன்னை விட்டு விலகி விடும் என்று எச்சரிக்கை செய்து மறுபடியும் விக்கிரமாக மாறிவிட்டார். கஜனி முகம்மது தனக்கு அறிவுரை அளித்துக் கண்களைத் திறந்துவைத்த இறைவனுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுற்று, தன் தவருக்குப் பச்சாத்தாபப்பட்டு அவர் கூறியபடியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான். ஸ்ரீவெங்கடேச விக்கிரகமும், திருப்பதி அர்ச்சர்களும் அங்கு இருந்தனர். அவர்கள் தமது விக்கிரகத்தை தம்மிடம் கொடுத்தனுப்புமாறு வேண்ட அவன் அவ்வாறே தந்து, அத்துடன் பாவபரிகாரமாக தன் மகளையும் சுவாமி சேவைக்குத் தக்க சன்மானங்களுடன் அனுப்பி வைத்தான். மற்றும் கோயிலுக்குக் காணிக்கையாகப் பொன்னும் பொருளும், கோவில் நிர்வாகத்திற்காகச் சில கிராமங்களையும் எழுதிக் கொடுத்தான். பாதுகாவலாகப் படைகளையும் அனுப்பி வைத்துத் தன் இருப்பிடம் திரும்பினான்.
அலர்மேல் மங்கைத் தாயார்: ஸ்ரீ வெங்கடேச்வர விக்கிரகம் முகம்மதுவால் அபகரிக்கப்பட்டு விலகி விட நிலமகள், மலர்மகள், நீலாதேவி ஆகியோர் வருத்தமுற்றிருக்க தற்போது ஸ்ரீவெங்கடேச்வரர் முகம்மதுக்கு அறிவுரை வழங்கிட, அவன் மனம் மாறி ஸ்ரீவெங்கடேசுவரர், அர்ச்சகர்கள் ஆகியோர் முகம்மதுவின் மகள் வேலைக்காரியாக வருவது குறித்துக் கூறினார். அத்துடன் மகாலக்ஷ்மியைப் புகழ்ந்து துதி செய்தார். தேவி உன்னைப் பெற்றவர்கள் செல்வம் பெற்றவர்களாவர். அல்லாதவர் அனைத்தும் இல்லாதவராவர். உன்னை ஜகன் மாதாவாக பூசிப்பவர்களுக்கு நீ அஷ்ட ஐச்வர்யமும் அளிப்பாய். உன்னை இதயத்தில் ஏற்று, கவுஸ்துப மணியைத் தரித்திருக்கும் மகாவிஷ்ணு ஸ்ரீநிவாசனெனப் பேர் பெற்றார். உன்னாலேயே பெருமாளுக்கு மந்திர சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அனைத்தும் கிடைத்தன. உன் பக்தர்களுக்கு நீ கல்ப தருவாய் அனைத்தும் அருள்கிறாய். உன் மகிமையை என்னென்று புகழ்வது என்றெல்லாம் நாரதர் போற்றினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மகாலக்ஷ்மி நாரதரிடம், மற்றப்பெண்கள் மீது மோகம் கொண்ட ஒருவரை நம்பக்கூடாது. எனவே இந்த சேஷாத்திரி மலையில் நான் இருக்கமாட்டேன் என்று கூறி சுகமுனிவர் ஆசிரமத்துக்குச் சென்று, அவரால் தக்க மரியாதைகளுடன் வரவேற்று, உபசரிக்கப்பட்டு அவர் நிர்மாணித்த கமலாகரத்தில் தங்கி இருந்தாள்.
நாரதர் உலக சஞ்சாரம் செய்து கொண்டு யவனப் பெண்ணுடன் சேஷாத்திரி மலைக்கு வந்து கொண்டிருக்கும் ஸ்ரீவெங்கடேச்வரரை நமஸ்கரித்து, லக்ஷ்மி தேவியின் விவகாரத்தைக் கூறி அனைவரையும் சேக்ஷõத்திரிக்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் ஸ்ரீவெங்கடேச்வரர் சுகமுனிவர் ஆசிரமம் அடைய மகாலக்ஷ்மி மகிழ்ச்சியுற்று தான் அங்கேயே இனி தங்கி இருக்கப் போவதாகவும் முனிவர்களும், தேவர்களும், பக்தர்களும் இங்கு வந்து என்னைத் தரிசிப்பார்களாக. இவ்விடத்தை அனைவரும் புனிதமாக்கியதால் இனி இவ்விடம் அலர்மேல் மங்கை புரம் என்ற பெயரில் விளங்குவதாக. நானும் அலர்மேல் மங்கை என்ற பெயரில் இங்கிருப்பேன். நீ இரவில் ஏழு மலைகள் இறங்கி வந்து ஏற்றிடுக என்றாள் மகாலக்ஷ்மி. தேவர்களும் அங்கு ஆலய நிர்மாணம் செய்து பூசித்து வரலாயினர். இவ்வாறு சூதமுனிவர் சனகாதி முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.
9. பிரம்மதத்தன்
கவுசிக முனிவருக்கு சுவஸ்ரிபன், குரோதனன், ஹிம்ஸ்ரன், பிஸ்துனன், கவி, வாகஷ்டன், பித்ரிவர்த்தி என்று ஏழு குமாரர்கள். இந்த எழுவரும் கர்க்கமுனிவரின் சீடர்கள். கவுசிகள் இறந்த பிறகு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. கர்க்கர் தன் சீடர்களைப் பசுக்களை மேய்த்து வர காட்டிற்கு அனுப்பினார். சகோதரர்கள் மிகவும் பசியினால் அவதியுற அவர்கள் ஒரு பசுவைக் கொன்று தின்றனர். பசுவைக் கொல்வது மகாபாவம் என்று இளையவன் கூற ஈமச்சடங்குகளைச் செய்வதன் மூலம் பாவத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறி பசுவைக் கொல்வதற்கு முன் சடங்குகளைச் செய்து முடித்தனர். ஆசிரமம் திரும்பிய அவர்கள் ஒரு பசுவைப் புலி அடித்துத் தின்று விட்டதாகக் கூறினர். பசுவதை பாவத்தினால் மறுபிறவியில் அவர்கள் வேடர்களாய் பிறந்தனர். ஆனால், அவர்கள் ஜதிஸ்மரர்களாக விளங்கினர். அதாவது முற்பிறவி இரகசியங்களை அறிந்திருந்தனர். எனவே வேடர்களாகப் பிறந்ததற்கு வருத்தமடையாமல் பட்டினி கிடந்து உயிர் விட்டனர். அடுத்து அவர்கள் மான்களாகப் பிறந்தனர். அப்போது முற்பிறவி ரகசியங்களை அறிந்ததால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தனர். அடுத்து அவர்கள் பறவைகளாய்ப் பிறந்தனர். அவர்களுள் நால்வர் பற்றற்று தியானத்தில் மூழ்கினர். மற்ற மூவர்கள் அத்தகைய பேற்றினைப் பெறவில்லை.
ஒரு சமயம் பாஞ்சால மன்னன் விப்ரஜன் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். அவனால் கொல்லப்பட்ட ஒரு பறவை அடுத்த பிறவியில் அரசனாகப் பிறக்க விரும்பியது. இரண்டு பறவைகள் மந்திரிகளாகப் பிறக்க ஆசைக் கொண்டன. மன்னனாக விரும்பிய பறவை மன்னன் விப்ரஜன் மகனாகப் பிறந்தது. இரண்டு பறவைகள் மந்திரிகளாகப் பிறந்தன. அந்த மந்திரிகளின் பெயர்கள் புண்டரீகன், சுவலகன் ஆகும். இவர்கள் மன்னனுடன் இருந்த மந்திரிகளின் மகன்களாகப் பிறந்தனர். மற்ற மூன்றும் பற்றற்ற அந்தணர்களாய் பிறந்தன. அவர்களால் கொல்லப்பட்ட பசு கல்யாணி என்ற பெயரில் தோன்றியது. பிரம்மதத்தன் கல்யாணியை மணந்தான். பிரம்மதத்தன் எல்லா உயிரினங்களின் மொழியும் அறிந்திருந்தான். ஒருநாள் நந்தவனத்தில் பிரம்மதத்தன், கல்யாணியுடன் உலாவிக் கொண்டிருக்க இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டறிந்தான்.
ஆண் எறும்பு பெண் எறும்பிடம், அது ஏன் தன் மீது கோபமாய் உள்ளது என்றும், பேச மறுக்கிறது என்றும் கேட்டது. பெண் எறும்பு தன்னைத் தொந்தரவு செய்யாமல் போய் விடுமாறு கூறிற்று. மேலும் அது ஆண் எறும்பைப் பார்த்து அது தன்னை அதிகம் நேசிப்பதாகக் கூறியும், ஆனால் முன் நாள் சர்க்கரைத் துணுக்கை வேறொரு எறும்புக்குக் கொடுக்கக் காரணம் என்ன என்றும் கேட்டது. அப்போது ஆண் எறும்பு தான் அந்த எறும்பை இந்தப் பெண் எறும்பு என்று எண்ணிக் கொடுத்ததாகவும், அது தான் செய்த தவறு என்றும், இனி ஒரு போதும் அவ்வாறு செய்யமாட்டேன், மன்னித்து சிரிக்குமாறு வேண்டியும், அதனைக் கோபத்துடன் பார்க்க தன்னால் முடியவில்லை என்றும் கூறியது. அவை ஒன்று கூடின. இதனைக் கேட்ட பிரம்மதத்தன் சிரிக்க, கல்யாணி அவன் சிரிப்புக்குக் காரணம் கேட்க, அவன் நிகழ்ந்ததைக் கூற, கல்யாணி நம்பவில்லை. என்ன செய்வதென்று அவனுக்குத் தோன்றவில்லை. இரவில் கனவில் விஷ்ணு தோன்றி, மறுநாள் காலை வரை காத்திருக்குமாறும், மறுநாள் காலை அவன் மனம் அமைதி அடையும் என்றும் கூறினார். சகோதரர்களில் நால்வர் சுதரித்திரன் என்றே அந்தணரின் புதல்வர்களாகப் பிறந்து பற்றற்று கானகம் சென்று தவம் செய்ய விரும்பினர். அவர்கள் திரிதிமனன், தத்துவதர்சி, வித்யாசந்தன், தயோத்சுகன் என்று பெயர் பெற்றிருந்தனர்.
ஆனால், சுதரித்திரன் அவர்களைத் தடுத்து, தனது தள்ளாத வயதில் தன்னைக் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடன் என்றும், இல்லாவிடில் தான் பட்டினியுடன் இறக்க நேரிடும் என்று கூறித் தடை செய்தான். அவர்கள் சுதரித்திரனிடம் அவன் பட்டினியாக இருக்க வேண்டாம். பிரம்மதத்தனிடம் செல்வம் கேள் என்றும், அவன் பொன்னும் பொருளும், கிராமங்களும் அளிப்பான் என்றனர். மேலும் அவனிடம் கர்க்க முனிவர், வேடர்கள், மான்கள், பறவைகளைப் பற்றி நினைவூட்டும்படிக் கூறினர். பின்னர் தவம் செய்ய வனம் சென்றனர். பிரம்மதத்தன் கனவு கண்ட மறுநாள் சுதரித்திரன் அவனைக் காண வந்தான். பழைய செய்திகளை நினைவூட்டினான். அவன் அந்த பிராமணனுக்குச் செல்வம் பல நல்கி, தன் நாட்டை இளவரசன் விச்வக்சேனனுக்கு பட்டம் கட்டிவிட்டுத் தவம் செய்ய கானகம் சென்றான். அவனுடன் புண்டரீகனும், சுவலகனும் வனம் சென்றனர். இவ்வாறு கவுசிகனின் ஏழு புத்திரர்களும் வீடுபேறு எய்தினர். விப்ரஜ மன்னன் விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின்படி அவன் மகன் உயிரினங்களின் மொழிகளை அறிய முடிந்தது.
10. வச்சிரங்கன்
காசியபர் மனைவி திதிக்குத் தோன்றிய மருத்துக்கள் இந்திரனின் நண்பர்களாகி விட, திரும்பவும் திதி தேவர்களை வெல்ல ஒரு மகனுக்காக காசியபரிடம் வேண்டினாள். அதற்கு அவர் அவள் பல்லாயிரமாண்டுகள் தவம் செய்தால் தான், இந்திரனை வெல்வதற்கு வச்சிராயுதம் போன்ற திடமான உடல் கொண்ட ஒரு புத்திரனைப் பெறமுடியும் என்று அறிவுரை கூறினார். அவ்வாறே அவள் தவமிருந்து பெற்ற குழந்தை வச்சிரம் போல் உடல் பெற்றிருந்ததால் அவனுக்கு வச்சிரங்கன் என்று பெயரிடப்பட்டது (வச்சிர+அங்கன்). தாயின் சொற்படி அவன் இந்திரனை வென்று, அவனைத் தாயின் முன் கொண்டு வந்து நிறுத்தி கொல்லத் தயாரானான். இதைத் தடுக்க பிரம்மாவும், காசியபரும் அங்கு தோன்றி, இந்திரனைக் கொல்ல வேண்டாம் என்றும், மரியாதையை இழந்த ஒருவன் கொல்லப்பட்டவனாகவே கருதப்படுவான். உன்னால் தோற்கடிக்கப்பட்ட இந்திரன் இறந்தவனே ஆவான். எங்கள் சொற்படி அவனை விட்டுவிடுவதே நல்லது. எனவே இந்திரனைப் போக விடு என்றனர்.
நான் என் தாயின் சொற்படி நடந்தேனே தவிர, இந்திரனைக் கொல்ல வேண்டுமென்றில்லை. உங்களில் ஒருவர் என் பிதா, மற்றொருவர் உலகப் படைப்பாளியாகிய பிதாமகர். நான் இந்திரனைப் போக விடுகிறேன். அதற்கு முன் எனக்கொரு வரம் அளியுங்கள் என்று கேட்டான். நான் பெருமளவில் தவம் செய்ய அருள்புரிக எனக் கேட்க அவ்வரம் அளிக்கப்பட்டது. மேலும், பிரம்மா வரங்கி என்றொரு அழகியைத் தோற்றுவித்து வச்சிரங்கனுக்கு மணம் செய்வித்தார். வச்சிரங்கன் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றினான். வச்சிரங்கி பொறுமையுடன் அவனுக்காகக் காத்திருந்தது மட்டுமின்றி அவளும் தவம் புரியலானாள். அச்சமயம் அடிப்பட்ட புலியான இந்திரன் சும்மா இருக்கவில்லை. அவன் குரங்கு வடிவில் வச்சிரங்கியின் ஆசிரமத்தில் உள்ள மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்தான். அங்கு வளர்ந்துள்ள புல்லை எல்லாம் ஆடு உருவத்தில் தின்று அழித்தான். பின்னர் மேகமாக வந்து பெருமழை பெய்து ஆசிரமத்தை மூழ்கடிக்கச் செய்தான். அவள் அதைத் தடுக்கவோ, தன்னைக் காத்துக் கொள்ளவோ முயலவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். தவம் முடிந்து வந்த வச்சிரங்கன் நடந்ததை எல்லாம் அறிந்து இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு மகனை வேண்டித் தவம் செய்ய பிரம்மா தோன்றி தேவர்களுக்குச் சிம்மசொப்பனம் போன்ற ஒரு மகன் பிறப்பான். அவன் பெயர் தாரகன் என்று கூறி மறைந்தார். வயது வந்ததும் வச்சிராங்கன் தாரகனை அரசனாக்கி மகுடாபி÷க்ஷகம் செய்வித்தான்.
11. தாரகனின் தவமும், அவன் கொல்லப்படுதலும்
தான் மிகவும் சக்தி வாய்ந்தவனாக ஆனாலொழிய தேவர்களை வெல்ல முடியாதென்று பரிபத்திர மலையில் ஒரு குகையில் தவம் செய்யச் சென்றான். அன்னபானம் நீக்கி தன் உடலிலிருந்து மாமிசம் எடுத்து அக்கினியில் சேர்த்துக் கோரத் தவம் செய்தான். அவன் முன் பிரம்மா தோன்றி, அவனுக்கு வேண்டிய வரம் யாதெனக் கேட்டார். தேவர்களை வெல்வதற்குத் தான் மரணம் இல்லாதவனாகவும், யார் கண்ணுக்கும் புலப்படாதவனாகவும் இருக்கும் வரம் வேண்ட, பிரம்மா மரணம் இல்லாதது உலகில் எதுவும் இல்லை. எனவே மரணத்துக்கு எத்தனை கடினமான நிபந்தனை வேண்டுமாயினும் தருகிறேன் என்றார். அப்படியானால் நான் ஏழு ஆண்டு பாலகனால் மட்டுமே கொல்லப்பட வேண்டும் என்று தாரகன் வேண்டிட, பிரம்மாவும் அந்த வரத்தை அளித்தார். வரமும், பலமும் பெற்ற தாரகன் பெரும்படைத் தலைவர்களுடன் தேவர்களுடன் போர் செய்தான். அதில் விஷ்ணுவிடம், காலநேமி என்பவன் போர் செய்ய விஷ்ணுவின் கதை அவன் மீது பிரயோகிக்கப்பட்டது. அவன் மயங்கி விழுந்தான். மற்றொரு அரக்கர் தலைவன் கிராசனன் தலையைச் சக்கராயுதம் வெட்டியது. ஜம்பா என்பவனால் விஷ்ணு தாக்கப்பட இந்திரன் அவனை ஒரு தெய்வீக ஆயுதத்தால் தாக்கிக் கொன்றான்.
இனி தாரகனை வெல்ல வழி அறியாமல் தேவர்கள் பிரம்மனை அண்டி வேண்டினர். அப்போது சிவபெருமான் திருமணம் நடந்து சிவபாலன் பிறந்தால் தாரகன் அழிக்கப்படுவான் என்றார். பின்னர் தேவர்கள் வேண்டியவாறு மன்மதன் சிவபெருமானிடம் தன் மலர் பாணங்களை எய்து அரனால் எரிக்கப்பட்டு விட்டான். பின்னர் பார்வதி பரிணயம் நடைபெற்றது. சிவன் கண் பொறிகளிலிருந்து குமரன் தோன்றி ஏழு வயது வந்தவுடன் தாரகனைக் கொன்று தேவர்களைக் காத்தருளினார். (காமதகனம், பார்வதி பரிணயம், முருகன் அவதாரம், தாரகாசுரன் சம்ஹாரம்-விரிவு கந்தபுராணம், சிவபுராணங்களில் காண்க).
12. காளி, கவுரியானாள்
ஒரு சமயம் சிவபெருமான் தமாஷாக பார்வதியைப் பார்த்து காலி (காளி) என்றழைத்தார். (காலி=கருப்பி) பார்வதி கருப்பாய் இருப்பதால் அவ்வாறு அழைத்தார். பரமன் என்றெண்ணி பார்வதி தவம் செய்து அழகு பெறச் சென்றாள். மரவுரி தரித்தும், வெய்யிலிலும், மழையிலும், அக்கினியிலும் இருந்து உபவாசமும் இருந்து தவம் செய்ய பிரம்மா அவள் முன் தோன்றி அவள் நல்ல அழகி ஆகும் வரம் தந்தார். தவத்திற்குச் செல்வதற்கு முன் பார்வதி நந்தியிடம், வேறெந்த பெண்ணையும் உள்ளே விடக்கூடாது என்று ஆணையிட்டுச் சென்றாள். ஆதி என்ற ஓர் அரக்கன் பிரம்மனை நோக்கித் தவம் புரிந்து ஒரு வரம் கேட்டான். தனக்கு மரணமே வரக்கூடாது என்று. பிரம்மா அதை மறுத்தார். ஆனால் அவன் தன் உருவை இரண்டு முறை மாற்றினால் அவன் மரிப்பான் என்று வரம் தந்தார். ஆதி பாம்பு உருவில் நந்தியை ஏமாற்றி உள்ளே நுழைந்தான். முதல் உருமாற்றம் இது. அடுத்து பார்வதியின் உருவில் பரமனை நெருங்கினான். பரமனும் அவளை வரவேற்றான். அவள் கோபம் தணிந்து திரும்பி வந்ததற்கு மகிழ்ச்சி என்றார். சிறிது நேரத்தில் அவள் பார்வதி அல்ல என்று அறிந்த சிவனார் ஆதி என்ற அந்த அரக்கனைக் கொன்றார்.
பிரம்மாவிடம் வரம் பெற்ற பார்வதி கவுரி (அழகி) என்னும் பெயர் பெற்றாள். பார்வதியின் உடல் அணுவிலிருந்து (செல்) கவுசிகி என்ற தேவி தோன்றினாள். கோசம் (செல்) என்பதால் கவுசிகி ஆனாள். அவள் உடலில் பார்வதியின் கருப்புநிறம் இணைந்தது. பிரம்மா கவுசிகயை விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்குமாறு கூற அவள் அங்கு வசிக்கச் சென்றாள். அதனால் அவளுக்கு விந்திய வாசினி என்ற பெயர் உண்டாயிற்று. (மார்க்கண்டேய புராணத்திலும் கவுசிகி பற்றிய விவரம் காண்க.)
13. கட்டட நிர்மாணக்கலை
கட்டட நிர்மாணக்கலை வளர்ச்சியில் பதினெண் முனிவர்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. அவர்கள் பிருகு, அத்திரி, வசிஷ்டர், விசுவகர்மா, மயன், நாரதர், நக்னஜிதன், விஹலக்ஷன், புராணதரன், பிரம்மா, கார்த்திகேயன், நந்தீசுவரன், சவுனகன், கர்க்கர், வாசுதேவன், அனிருத்தன், சுக்கரன், பிருகஸ்பதி.
கட்டட நிர்மாணத்திற்கு முன் கவனிக்க வேண்டியவை
1. சைத்ர (சித்திரை) மாதத்தில் கட்டடம் துவங்கக்கூடாது. அப்படித் துவங்குபவர் நோய்வாய்படுவர்.
2. விசாகம் (வைகாசி) கட்டடம் ஆரம்பிக்க நல்ல நேரம். அவருக்குப் பசு சம்பத்து நிறைய இருக்கும்.
3. ஆக்கிரஹாயனம் (மார்கழி) மாதம் (மாசி) பால்குனம் (பங்குனி) ஆகியவையும் கட்டடம் பணி துவங்குவதற்கான நல்ல மாதங்களே. ஆக்கிரஹாயனத்தில் ஆரம்பிப்பவர் தானிய விருத்தியும், மாசி மாதம் தொடங்குபவர் சகலவித சம்பத்தும், பங்குனியில் ஆரம்பிப்பவர் பொன்னும், புத்திரர்களும் பெறுவர்.
4. ஆஷாட மாதமும் (ஆடி) கட்டடம் துவங்க நல்ல மாதமே. அவனுக்கு நிறைய பிராணிகளும், பணியாளர்களும் இருப்பர்.
5. ஜேஷ்ட, சிராவண, பாத்ர, ஆசுவின, பவுஷ மாதங்கள் நல்லவை அல்ல. (அதாவது ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, தை).
(கொடுக்கப்பட்ட தமிழ் மாதம் பெயர்கள் கூறப்பட்ட நேஷனல் மாதக் காலண்டர் மாதங்களுக்கு எது, எது என்று அறியவே. மாதங்களின் நிகழ்ச்சிகள் மேலே கூறியவை தமிழ்நாட்டில் மாறுபடுகின்றன. அதாவது நமது பஞ்சாங்கப்படி ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மட்டுமே கட்டடக் காலிட தவிர்க்கப்படுகின்றன.)
கிழமைகளில் ஞாயிறும், செவ்வாயும் கூடாது. மற்ற நாட்கள் ஏற்கக்கூடியவை. அசுவினி, ரோகிணி, மூலம், உத்தரம், உத்தராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் நட்சத்திரங்கள் கட்டடம் துவங்க உகந்தவை.
கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்ந்தெடுத்தல் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பது போன்றவையே. வீடுகள் பலவகைப்படும்.
1. நாராயணன் கோயிலுக்கு நாலுபக்கம் வாசல் என்ற முதுமொழிப்படி ஆலயங்களுக்கு நான்கு புறம் வாயில்கள், கோபுரங்கள் இருக்கலாம். ஆனால், வீடுகளுக்கு அவ்வாறு கூடாது. இது சர்வதோபத்ர எனப்படும்.
2. மேற்கில் வாயில் இல்லாத வீடு நந்தியவர்த்தம் எனப்படும்.
3. தெற்கில் வாயில் இல்லாதது வர்த்தமனம் எனப்படும்.
4. கிழக்கில் வாயில் இல்லாதது ஸ்வஸ்திகர் எனப்படும்.
5. வடக்கில் வாயில் இல்லாதது ருசிகம் எனப்படும்.
சாதாரண மக்கள் இல்லம் முப்பத்திரண்டு முழம் (அ) 16 கஜம் (அ) 48 அடி நீளம் இருக்க வேண்டும். சமூகப்பிரஷ்டன் வீடு 16 முழம் (அ) 8 கஜம் நீளம் இருக்கலாம். மரங்கள் வீட்டின் பின்புறம் இருத்தல் நலம். மேலும், எவ்வகையான மரம் தேர்ந்தெடுக்க வேண்டும், அரண்மனைகள் நிர்மாணம் போன்றவையும் கூறப்பட்டுள்ளன. அடுத்து விக்கிரகங்கள் அமைப்பது பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
(விவரங்கள்-அக்கினி புராணம் காண்க)
அடுத்து மண்டபங்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
1) 64 தூண்கள் கொண்டது புஷ்பக மண்டபம். 2) 62 தூண்கள் கொண்டது புஷ்பபத்திர மண்டபம். 3) 60 தூண்கள் கொண்டது சுவ்ரத மண்டபம். 4) 58 தூண்கள் கொண்டது அமிர்தநந்தன மண்டபம். 5) 56 தூண்கள் கொண்டது தவுஷல்ய மண்டபம். 6) 54 தூண்கள் உடையது புத்திஸங்கீர்ண மண்டபம். 7) 52 தூண்கள் உடையது கஜபத்திர மண்டபம். 8) ஜயவாஹ மண்டபத்துக்கு 50 தூண்கள். 9) 48 கால்கள் உடையது ஸ்ரீவத்ச மண்டபம். 10) 46 தூண்கள் உடையது விஜய மண்டபம். 11) வாஸ்து கீர்த்தி மண்டபத்திற்கு 44 தூண்கள். 12) சிருதிஞ்ஜய மண்டபத்துக்கு 42 கால்கள். 13) யஜ்ஞபத்திர மண்டபத்துக்கு 40 தூண்கள். 14) 38 தூண்கள் உடையது விசால மண்டபம். 15) சுஷ்லிஷ்ட மண்டபத்திற்கு 36 தூண்கள். 16) சத்ருமர்த்தன மண்டபம் 34 தூண்கள். 17) பாக பஞ்ச மண்டபம் 32 தூண்கள். 18) 30 தூண்கள் நந்தன மண்டபம். 19) 28 தூண்கள் மானவ மண்டபம். 20) 26 தூண்கள் மான பத்திரக மண்டபம். 21) சுக்கிரீவ மண்டபம் 24 கால்கள். 22) ஹரித மண்டபம் 22 தூண்கள். 23) கர்ஹிகர மண்டபம் 20 கால்கள். 24) சதர்த்திகா மண்டபம் 18 தூண்கள். 25) 16 கால் மண்டபம் சிம்ம மண்டபம். 26) சியாமபத்திர மண்டபம் 14 கால்கள். 27) 12 தூண்கள் உடையது சமுத்திர மண்டபம். இவை முக்கோணம், அரைவட்டம், செவ்வக அமைப்பில் நிர்மாணம் செய்யலாம்.
14. தான தருமங்கள்
(அக்கினி புராணம், கருட புராணம், பவிஷ்ய புராணம் போன்ற பல புராணங்களிலும் தான பலன்கள் உள்ளன. காண்க)
1. துலாபுருஷ தானம் : தற்போது குருவாயூரில் நடைபெறுகிறது. ஸ்ரீகிருஷ்ண துலாபாரம் புகழ் மிக்கது. இதில் எடைக்கு எடை தராசில் பொருள்களை நிறுத்தி அளிப்பது.
2. ஹிரண்ய கர்ப்பதானம் : அந்தணர்க்கு பொருள், பணம் அளிப்பது.
3. பிரம்மாண்ட தானம் : உலக உருவை அளிப்பது.
4. கல்பாபதாப தானம் : பொன்னால் மரம் செய்து அளிப்பது.
5. கோ ஸஹஸ்ர தானம் : பசுக்கள் தானம் (ஆயிரம்)
6. காமதேனு தானம் : பசுவும், கன்றும் பொன்னால் செய்து அளித்தல்
7. ஹிரண்ய அசுவதானம் : பொன்னாலான குதிரை.
8. அசுவ ரத தானம் : குதிரைகளுடன் கூடிய தேர் (பொன்னால் ஆனது).
9. ஹேம ஹஸ்தி ரத தானம் : பொன் யானை, ரதம்.
10. பஞ்சலங்கலக தானம் : ஏர் 5 மரத்தாலானவை. ஐம்பொன்னாலானவை அளித்தல்.
11. தரை தானம் : தரை போன்ற பொன் வடிவம்.
12. விச்வசக்கர தானம் : பொன் சக்கரம்.
13. மகாகல்பலதா தானம் : பொன்னாலான பத்து கொடிகள்.
14. சப்த சாகர தானம் : ஏழு குதிரைகள் (அ) கிண்ணங்கள் உப்பு, பால், நெய், பாகு, தயிர், சர்க்கரை, புனிதநீர் ஆகியவை நிரப்பி அவற்றுள் பொன் விக்கிரகங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், யமன், லக்ஷ்மி, பார்வதி ஏழ்கடல் வடிவமாக எண்ணித் தானம் அளித்தல்.
15. ரத்தின தேனு தானம் : பொன்னாலான பசுவின் உறுப்புக்களில் ரத்தினங்கள் புதைந்து அளிக்கப்படும் தானம்.
16. மகா பூத கட தானம் : பொன், ஆபரணங்களால் நிரப்பப்பட்ட கலத்தைத் தானமாக அளித்தல். இப்படிப்பட்ட தானங்கள் நல்ல புண்ணியம் தரும் என்று எண்ணி செய்யப்படுவது நலம் பயக்கும்.
மச்சபுராணம் முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக