ஞாயிறு, 17 ஜூன், 2012

லிங்க புராணம்

ராதே கிருஷ்ணா 17-06-2012

லிங்க புராணம்



temple
தோற்றுவாய்: சூதர், நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் ... மேலும்

temple
24. ஜலந்தரன் வரலாறு: ஜலத்திலிருந்து தோன்றிய அசுரன் ஜலந்தரன் எனப்பட்டான். அவன் பரமனை நோக்கித் தவம் செய்து தேவர்களால் தன்னை வெல்லமுடியாதவாறு வரம் பெற்றான். அளவற்ற ... மேலும்



















லிங்க புராணம் பகுதி-1மே 29,2012




தோற்றுவாய்: சூதர், நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் பதினொன்றாவது புராணம் ஆகும். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது. இதைப் பக்தியுடன் கேட்பவர் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்து இருப்பர் என்றார்.
1. பஞ்ச பூதங்களின் தோற்றம்
பேரொளியாய் விளங்கும் ஜோதி சொரூபம் சிவம். அந்த ஜோதி லிங்கத்திலிருந்து அனைத்துலகுக்கும், ஆதாரமானதும், வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று. தமக்கென வித்து ஏதுமின்றி, அனைத்து உயிருக்கும் தானே வித்தாகி பிறந்திருக்கும் அப்பெருமானின் ஏவலாய் மாயையிடம் இருந்து மகத்தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடிய அகங்காரம் உண்டானது. தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது. பேரொலியிடமிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் உண்டாயின.
வைகாரிகம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து இந்திரியங்களுக்கு அதிஷ்டான தெய்வம் உண்டாயிற்று. தைஜசம் என்னும் அகங்காரத்தினிடமிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், மனமும் உண்டாயின. தத்துவங்கள் ஓர் அண்டமாகி பிரளய நீரில் மிதந்து கொண்டிருக்கையில் அதற்கு உயிர் உண்டாகி அதில் பிரம்மன் தோன்றுவார். அவரே அயன், அரி, அரன் என்று படைத்தல், காத்தல், அழித்தல் என்ற காரியங்களுக்கேற்ப அழைக்கப்படுகின்றார். பிரம்மாண்டத்தினிடையே பதினான்கு லோகங்களும் அடங்கி உள்ளன. அகங்காரத்தை மகத்தத்துவம் சூழ்ந்திருக்கும். அதனைப் பிரகிருதி புருஷன் தன்னிடம் லயம் கொண்டிருப்பான். பிரளயத்தின் முடிவில் மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விடுவர்.
2. கால அளவு
இதில் பிரம்மனின் பகல், இரவு பற்றி நான்கு யுகங்கள், யுகச் சந்திகள் பற்றி விளக்குவது, மனிதர்களின் கால அளவுகளும் தேவர்களுக்கான கால அளவுகளும் விவரிக்கப்படுவதே கால அளவு (அ) காலப் பரிமாணம் எனப்படுகிறது.
3. சிருஷ்டி
அனைத்துக்கும் எட்டாது விளங்கும் அந்தப் பரம்பொருளுக்குத் தோற்றமோ அளவோ கிடையாது. அனைத்தும் அதனிடமிருந்து உண்டாகி, அதனையே அடைகின்றன. திருமால் பாம்பணையில் துயில் கொள்கையில் நான்கு லோகங்களும் பிரளய வெள்ளத்தில் அழிந்து விட்டன. அதைக் கண்டு அவர் பன்றியாக உருவெடுத்து (வராக அவதாரம்) நீரில் மூழ்கி அவற்றை மீட்டு வந்து முன் போல் அமைத்து சிருஷ்டிகளைத் தொடங்கலானார். பிரமன் சிருஷ்டியைத் தொடங்கி தாமச சிருஷ்டிகள் எனப்பட்ட ஐந்து வகை சிருஷ்டிகள் அவரிடமிருந்து தோன்றின. அவை தமசு, மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் ஆகும். அடுத்து பசு முதலான விலங்குகள், தேவர்கள், மனிதர்கள், பூதம், பேய் முதலான சிருஷ்டிகள் தோன்றின. பின்னர் பிரம்மனிடமிருந்து சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர், ருத்திரர் தோன்றினர். அவர்கள் சிருஷ்டித் தொழிலில் ஈடுபடாமல் மகேசுவரனிடம் மனத்தைச் செலுத்தி அவனது தியானத்தில் ஈடுபட்டனர். அடுத்து பிரமன், புலஸ்தியர், கிருது, பிருகு, அத்திரி, மரீசி, புலகர், தக்கன், வசிஷ்டர், ஆங்கிரசு, தருமர் ஆகிய பத்துப் பேரைத் தோற்றுவித்தார். அவர்கள் மூலம் உலகிலே சிருஷ்டியைப் பரப்ப சுவாயம்பு மனு என்ற ஆணையும், சதரூபை என்னும் பெண்ணையும் பிரமன் படைத்தார். இவ்வாறு சிருஷ்டி பெருகலாயிற்று. தக்கன் மகள் சசியை வையகம் அனைத்துக்கும் ஆதிகாரணனான ஈசன் மணந்தார். ஈசன் அனேக ருத்திரதைத் தோற்றுவித்தார். உலகம் முழுவதும் அவர்கள் நிறைந்தனர். சம்சார பந்தத்தில் சிக்காது, சிறப்பின்றி ருத்திரர்களை ஈசன் படைத்ததைக் கண்டு பிரமன் அவரிடம் அவ்வகை சிருஷ்டி உலகுக்கு ஏற்றதல்ல என்று கூற, ஈசன் நீ குறிப்பிடும் சிருஷ்டிகள் எமக்கு ஏற்றதல்ல; அவற்றை நீயே படைப்பாயாக என்று பிரம்மனிடம் தெரிவித்தார். நான்முகன் மாயையைக் கொண்டு சிருஷ்டிகளை வகுத்தார். ருத்திரன் தாம் படைத்த சிருஷ்டிகளை யோகத்தால் உலகை விட்டு மறையச் செய்தார்.
4. அஷ்டாங்க யோகம்
ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று, அதனால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர், அத்திரி, வியாசர் முதலியோரால் உலகின் பிரசித்தமாயிற்று.
1. பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம் வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி, தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள், மனைவியருடன் காட்டில் உறைவர்.
2. பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம். இதன் மூலம் சவுசம், தவம், மகிழ்ச்சி, ஜபம், சிவ பிரணிதானம் ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால், ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி, திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது, வளர்பிறை அமாவாசை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம், இரண்டாம் நாள் இரண்டு கவளம் என்று கூட்டிக் கொண்டே சென்று பௌர்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் தேய்பிறையில் நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறைநெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது மகிழ்ச்சி ஆகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.
3. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது பத்மாசனம் போன்ற பல. அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.
4. பிராணாயாமம் : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம், மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம், சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும், இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன.
1. உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது பிராணவாயு.
2. கீழ்நோக்கிப் பிரிவது அபானவாயு.
3. உடலெங்கும் நிறைந்து இரத்த ஓட்டம், சீரணமான உணவு உடலில் பரவ உதவுவது வியானவாயு.
4. உறுப்புகளின் சந்திகளில் தங்குவது உதானவாயு.
5. உடலைச் சமனப்படுத்தவது சமன வாயு.
6. விக்கல், கக்கல் ஏற்படக் காரணமானது கூர்ம வாயு.
7. தும்மலை உண்டாக்குவது கிரிகா வாயு.
8. கொட்டாவிக்கு உதவுவது தேவதத்தவாயு.
9. உடலை வீங்கச் செய்வது தனஞ்செய வாயு.
10. நாகன் வாயு - பாடுதல், கண் சிமிட்டல், மயிர்க்கூச்சலுக்கு உதவுவது.
இந்தப் பத்துவித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.
5. பிரத்தியாகாரம் : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.
6. புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது தாரணை.
7. ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது தியானம் ஆகும்.
8. ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய் மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும். இந்த எட்டும் யோக அங்கங்கள் ஆகும்.
யோகம் கடைப்பிடிக்கும் போது பல இடையூறுகள் ஏற்படும். அவை நோய், சிரத்தையின்மை, பிரமாதம், ஐயுறல், விஷயங்களில் இச்சை, துன்பம், அப்பிரதிஷ்டை, பிராநிதி தரினம் என்று கூறப்படும் ஆதிதெய்வீகம், ஆதிபௌதிகம், ஆத்யாத்மிக துக்கங்கள் என்பன. இவையே அன்றி குறிப்பாக உணரக்கூடிய உபசருக்கம் ஆறு உள்ளன. அவை முறையே பிரதிபை, தேவதரிசனம், சிரவணம், வார்த்தை, சுவாதம், ரசனை ஆகும். மேலும் பஞ்சபூதத்தின் குணங்கள், பிரமத்தின் குணங்கள் என்று பல குணங்களும் விளக்கப்பட்டன. யோகியானவள் தன் முயற்சிக்கு ஏற்படும் இடையூறுகளை நன்குணர்ந்து அவற்றை விலக்கி, எம்பெருமான் திருவடிகளைச் சேவித்தால் அவர் அருளைப் பெற்று முக்தி அடைவான். யோகத்தைக் கடைப்பிடித்து ஈசன் அருள்பெறலாம். அதுமட்டுமின்றி நல்லறத்தைக் கடைபிடித்து அவ்வழி நின்றோர்க்கும் ஈசன் அருள் கிட்டும். ஒரு சமயம் பார்வதி சிவபெருமானிடம், எந்த வழியில் வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்று கேட்டார். ஒரு சமயம் பிரம்மனிடம் தான் கூறியதைப் பார்வதிக்கு எடுத்துரைத்தார். மகாமேரு முதல் மங்கையர் வரை எவராக இருந்தாலும் உள்ளம் கனிந்து உருகி என்னிடம் செலுத்தும் அன்புக்கு நான் அருள் செய்வேன் என்றார்.
5. ஈசனின் ஐவகைத் தோற்றம்
1. சுவாத லோகித கற்பத்தில் பிரமன் ஈசனைத் தொழுது தியானிக்கும் போது, ஈசன் அவர் முன் அழகிய இளம்பாலகனாய்த் தோன்றினார். இது சத்தியோசாதம் என்னும் தோற்றம்.
2. படைப்புக் கடவுள் பிரம்மன், ஈசன் திருவடிகளில் அர்ச்சித்து வேதங்களால் துதித்தார். அப்போது ஈசன் திருமேனியிலிருந்து நான்கு முனிவர்கள் தோன்ற இத்தோற்றத்தை மனதில் தியானித்து ஈசனை வழிபடுவோர் சிவலோகம் அடைவர். முப்பதாவது இரத்த கற்பத்தில் பிரமன் ஈசனைத் தியானித்த போது சடையில் பாம்பணிந்து, கரங்களில் மானும், மழுவும் ஏந்தி ஈசன் தோன்றினார். இத்தோற்றம் வாமதேவம் எனப்படும்.
3. அப்போது பந்த பாசம் அறுத்த; தெளிந்த ஞானம் பெற்ற நால்வர் ஈசனிடம் தோன்றி உலகம் உய்ய தருமம் கடைப்பிடித்தும், மற்றவர்களுக்கு உணர்த்தியும் பல்லாண்டுகள் வாழ்ந்து ஈசன் திருவடிகளை அடைந்தனர். இத்திருவுருவைத் தியானித்து வணங்கி வழிபடுவோர் பிறப்பிறப்பு நீங்கி செஞ்சடையோன் தாள் சேர்வர். பீதகற்பத்தில் நான்முகனுக்கு, எம்பெருமான் சடையில் இளம் மதி அணிந்து தோன்றினார். இத்தோற்றம் தத்புருஷம் எனப்படும். ஆனந்தம் கொண்டு பிரமன் பரமனைப் பூசித்து வேதங்களால் துதித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஈசனார் அழகிய காயத்திரியை உண்டாக்கி அவருக்கு அளித்தார். உத்தமமான காயத்திரியைப் பக்தியுடன் ஆராதிப்பவர்களுக்கு நரகவாசம் இல்லை. கைலாச வாசம் தேடி வரும். ஈசன் திருமேனியிலிருந்து தோன்றிய நால்வர் நரகவாசமளிக்கும் கர்மாக்களை நீக்கி பஞ்சாக்ஷரத்தை உணர்ந்து ஜபித்து முதலில் ஈசன் திருவடியில் சேர்ந்தனர். இத்தத் புருஷனைத் தியானித்து அவரடித் தாமரையை வழிபடுவோர் பிறவிக்கடல் நீந்தி கயிலையை அடைவர்.
4. நீல கற்பத்தில் முக்கண்ணன் நெருப்பும், வாளும் கைகளில் ஏந்தி கரியரூபத்துடன் தோன்றினார். இது அகோரரூபம். மிக்க ஆனந்தத்துடன் பிரமன் அகோர வடிவில் ஈசனைப் பூசிக்க ஐயன் மனமகிழ்ந்து வேண்டுவன கேள் என்றிட பிரமன் ஐயனிடம் என்றும் குன்றாத அன்பைத் தர பிரார்த்தித்தார். அப்போது சிவனார் யாராலும் யாகம் செய்யும் அந்தணரைத் தடுத்து நிறுத்த முடியாதென்று உரைத்தார். சிவமந்திரத்தை லட்சம் முறை உச்சரித்தோர் பாபங்கள் நீங்கி கைலாசத்தில் வீற்றிருப்பர் என்று அருள்பாலித்து மறைந்தார்.
5. விஸ்வரூப கற்பத்தில் மலரயன் சிவனாரைத் தியானித்த போது ஈசன் சடையில் பிறைச் சந்திரன், நெற்றிக்கண், கோரைப்பற்கள் கொண்டு இருபுறம் இரு மாதர்களுடன் தோன்றினார். அப்போது பிரமன் சிவனாரின் இருபுறம் இருக்கும் மாதர்கள் யாவர் என்று வினவ, ஒருத்தி தேவர்களை ஈன்ற அன்னை, மற்றவள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் வாணி என்று கூறினார். இவ்வாறு  இப்பகுதியில் பரமனின் ஐவகைத் தோற்றம் விளக்கப்பட்டுள்ளன.
6. அரி, அயன் கண்ட ஜோதி
பிரகிருதித் தத்துவமே ஒளிப் பிழம்பாய் லிங்கமாய் மாறியது. திங்கள் முடிசூடி, நஞ்சுண்ட முக்கண்ணனே அந்த லிங்கமாகி நின்றான். பிரளய வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது நாராயணன் யோக துயில் கொண்டு இருந்தான். நித்திரை கலைந்து எழுந்த பிரமன் உலகை மீண்டும் படைக்க எண்ணுகையில் பிரளய நீரில் மாதவனைக் கண்டார். நாராயணன் தானே சகல உலகங்களையும் தோற்றுவிப்பவன் என்றான். ஈரேழு புவனங்களையும் அனைத்து உயிர்களையும் படைப்பவன் நானே என்றான் பிரம்மன். இருவரில் யார் பெரியவன் என்ற போட்டி துவங்கி சண்டையாக மாறியது. அவ்வமயம் அங்கே அவர்கள் எதிரில் ஓர் ஒளி தோன்றியது. அதன் அடிமுடி காணப்படாததால் அது என்ன என்று இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதன் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் புறப்பட, அடியைக் காண வராக வடிவில் நாராயணன் புறப்பட்டான். இருவரும் முடி, அடி காணமுடியாமல் களைத்துத் திரும்பி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அவர்கள் அகந்தை அகன்றது. இருவரும் கைகூப்பி அனற்பிழம்பாக, ஜோதி லிங்கமாக நிற்கும் அப்பொருளை வணங்கினர். அண்டம் கிடுகிடு என நடுங்குமாறு பேரொலி ஒன்று கேட்டது. அப்போது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் சடையில் பிறைச்சந்திரன் கைகளில் மான் மழுவேந்தி எம்பெருமான் தரிசனம் அளித்தார். இருவரும் வணங்கினர். அவர்கள் அப்பொருளைப் பலவாறு போற்றி சிரம்தாழ்த்த, கரம்கூப்பி, ரோமாஞ்சனம் பெற்றவராய் வணங்கினர். மகிழ்ச்சி அடைந்த ஈசனார் தன் வலப்புரத்தில் தோன்றியவன் மலரோன் என்றும், இடப்புறத்தில் தோன்றியவன் திருமால் என்றும் கூறி இருவரும் தம் மக்களாகிய முருகன், கணபதிக்கு ஒப்பானவர்கள் என்றுரைத்து வேண்டுவதைக் கேட்குமாறு பணித்தார். நான்முகன் அவருடைய அருளைப் பெற்ற தனக்கு வேறென்ன வேண்டும் என்று கூறி சிவனாரிடம் என்றும் குறையாத பக்தி அருள் செய்யுமாறு வேண்டினார். அவ்வாறே என்று அருள்பாலித்தார் பரமன். மாதவனிடம் பத்ம கற்பத்தில் நான்முகன் அவருக்குப் புத்திரனாக உந்திக் கமலத்தில் தோன்றுவான் என்று அருளினார். அன்று முதல் ஈசனார் லிங்க வடிவில் அடியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
7. பகவான் உந்தியில் தோன்றிய பரமன்
மாதவன் உந்தித் தோன்றல் மலரோன் பிரம்மனாவான். மாதவனுக்கும், மலரோனுக்கும் ஏற்பட்டபோட்டி பற்றி ஏற்கனவே கண்டோம். அப்போது திருமால் பிரமனிடம், உலகைப் படைப்பவன் அவன் என்றால், ஈரேழு உலகங்களையும் அவன் உதிரத்தில் காட்டமுடியுமா என்று கேட்டு பிரமன் வாய்வழிச் சென்று அவன் வயிற்றில் சகல புவனங்களையும் கண்டு திருப்தி பெற்றவனாய் வெளிவந்தான். அப்போது பிரமன் திருமாலிடம் ஐயம் தீர்ந்ததா என்று கேட்டு, அவர் வயிற்றிலும் அனைத்து லோகங்களையும் காட்ட முடியுமா என்று கேட்க, திருமால் அதற்கு ஒப்பி அவர் வாய்வழியாகச் செல்ல அனுமதித்தார். நான்முகன் நாராயணன் வயிற்றை அடைந்து அங்கே சகல புவனங்களையும் கண்டான். பின்னர் திரும்ப எண்ணி மேல் நோக்கிப் புறப்பட, அஃதறிந்த மாதவன் அவர் வெளிப்படாதிருக்க வழியில்லாது செய்து விட்டார். வெளியில் செல்லும் வழியை அடைய முடியாமல் சுற்றிச் சுற்றிக் களைந்து விட்டார் பிரமன். அப்போது மாதவன் தொப்புள் குழியிலிருந்து தாமரை மலரின் தண்டைக் கண்டார். தன் உடலை அணுவாக்கிக் கொண்டு தண்டின் வழியே மேலே ஏறி வந்தார். மேலே வந்ததும் மொட்டின் மீது வெளிப்பட்டு மலர் மேல் அமர்ந்தார். அப்போது அங்கே சூலம் ஏந்தி சிவபெருமான் தோன்றினார். ஆனால் அவரை அடையாளம் தெரியாமல் பிரம்மன், நான் வெளிவர முடியாமல் வழிகளை மறைத்தது மட்டுமின்றி புதிய தோற்றத்துடன் நிற்கிறாயா நீ என்று திருமாலைக் கேட்பதாக எண்ணி ஈசனிடம் கேட்டார். அது கேட்டுத் திருமால் பிரம்மனிடம் அவன் பெருமையை அறிய தானே வழிகளை அடைத்ததாகவும், அவனைத் தன் மகனாகக் கமலத்தில் இருத்திக் கொள்ளவே அவ்வாறு செய்ததாகவும் மாலவன், மலரவனிடம் கூறினான். அப்பொழுது தன் எதிரில் இருக்கும் அப்புருஷன் யார்? என்று பிரமன் கேட்க, நாராயணன் இவருக்கு நிகர் இவரே! இவரைத் தவிர வேறு தலைவன் இல்லை. சகல ஜீவராசிகளுக்கும் இவரே உயிராக விளங்குகிறார் என்றார். மாயையால் சூழப்பட்ட பிரம்மனால் ஈசனை உணர முடியவில்லை. ஒவ்வொரு கற்பத்திலும், பிரம்மன் மாயையால் மயங்கி அலைய, ஈசன் அவர் மயக்கம் தீர அழற்சுடராகத் தோன்றி அருளுகிறார். இனியாவது ஈசனை உணர்ந்து அவரைத் தொழுது அருள் பெறுவாய் என்று மாதவன் பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். இருவரும் பக்தியோடு ஈசனைத் துதித்துப் போற்றினர்.
8. ருத்திரர் தோற்றம்
பிரமன் தவம் மேற்கொண்டு தன் படைப்புத் தொழிலைத் தொடங்க, கொடிய நஞ்சுடை பாம்புகள் தோன்றின. அதனால் வேதனைப்பட்ட அயன் உயிரை விட, பிரமனின் ஆவி பதினோரு ருத்திரராகியது. அழுது கொண்டே தோன்றியதால் அவர்கள் ருத்திரர் எனப்பட்டனர். ஈசன் தோன்றி பிரமனை உயிர்ப்பித்தார். எழுந்த பிரமன் சிவபெருமானைத் துதிக்க ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் உருவில் பரமன் காணப்பட்டான். சத்தியோசாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரம், விஸ்வரூபம் என்ற வடிவங்களில் தோன்றியதுடன் காயத்திரியையும் தோற்றுவித்தார். பரமன் பிரமனிடம் துவாபர யுகத்தில் வியாசர் தோன்றி வேதங்களைப் பகுத்தளிப்பார். என்னிடம் தோன்றிய நால்வர் ஞானத்தை அனைவருக்கும் உணர்த்துவதோடு அவர்களும் சிறந்த ஞானம் பெற்று கைலையங்கிரியை அடைவர். இந்திரனும், திருமாலும் நீயும் லிங்கபூசை செய்து கிடைத்தற்கரிய பேறு பெறுவீர்களாக என்று கூறி மறைந்தார். இவ்வுடலைப் புனிதம் ஆக்குபவை, ஆற்றில் நீராடல், அக்கினிப் பிரவேசம், மந்திரங்களை உணர்ந்து நடத்தல் ஆகும். நீராடும் போது வருணனையும், சிவனையும் பக்தியுடன் தியானிக்க வேண்டும்.
தருப்பை, பலாச இலை, நறுமண மலரை நீரில் தோய்த்து சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். அதே போல கைகளில் நீர் ஏந்தி மந்திரம் ஜபித்து மும்முறை அர்க்கியம் விட வேண்டும். ஆயிரத்தெட்டு முறை காயத்திரி ஜபிக்க வேண்டும். பின்னர் முனிவர்களுக்கு, தேவர்களுக்கு பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்து சுத்தாசனத்தில் அமரவேண்டும். பட்டு, மான்தோல், கம்பளி ஆகியவற்றின்மீது அமரலாம். தர்ப்பையின் மீது அமர்தல் சிறப்புடையது. பவித்திரம் அணிந்து வலது முழங்கால் மீது இடதுகையின் மீது வலதுகையை வைத்து பிரம்ம யஜ்ஞம் செய்ய வேண்டும். பிரணவத்தை உச்சரித்து நெற்றி, கைகள், மார்பு, வயிறு தோள்களிலும் கழுத்துகளிலும் விபூதியைப் பக்தியுடன் தரித்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்து உடலைப் புனிதமாக்க வேண்டும். விநாயகரையும், முருகனையும் பிம்பத்தில் ஆவாகனம் செய்து உமாமகேசுவரனைத் தியானித்து வாசம் கொண்ட நீரால் மந்திர ஜபத்துடன் அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து ஆடை ஆபரணங்களை அணிவித்து, தூய மலர் கொண்டு அர்ச்சித்து, தூப தீப நைவேத்தியங்களால் ஆராதித்துக் கற்பூரம் காட்டித் தரிசிக்க வேண்டும்.
பரப்பிரம்மம் இருபத்தாறாம் தத்துவம்
அப்பிரம்மத்தை நாடும் உயிர் இருபத்தைந்தாம் தத்துவம். அவ்வியத்தம் இருபத்தி நான்காம் தத்துவம், மகத்தத்துவம், அலங்காரம், பஞ்ச தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம், பஞ்சபூதங்கள் ஆகிய இருபத்திரண்டும் சேர்ந்து இருபத்து மூன்று தத்துவங்களாகும். இருபத்தாறாம் தத்துவமாய் நின்ற தனி முதலே கர்த்தா. அவரிடமிருந்து தோன்றிய மூவரும் இவ்வுலகை நடத்திச் செல்கின்றனர்.
9. தாருகாவனத்தில் திகம்பர சந்நியாசி
தாருகாவனத்தில் இருந்து முனிவர்களுக்கு உண்மையை உணர்த்த எண்ணி சிவபெருமான் புறப்பட்டார். திகம்பரராய், சிறந்த அழகனாய், கையில் ஓடு ஏந்தி பிக்ஷõடனாராய் புறப்பட்டார் ஈசன். அவரைக் கண்ட ரிஷிபத்தினிகள் தம் சுய அறிவின்றி, ஈசன் வசத்தினராகி அவரைப் பின் தொடர அனைவருடனும் முனிவர்கள்  இருந்த யாகசாலைக்கு அருகில் வந்தார் ஈசன். இந்நிலையில் முனிவர்கள் சினம் கொண்டு யாரோ ஒரு காமுகனை தன் பத்தினிகள் பின் தொடர்ந்து வந்திருப்பதைக் கண்டு நிலைகுலைந்தனர். அவர்கள் அந்த திகம்பர சன்னியாசியைச் சபித்தனர். ஆனால், அவர்களுடைய சாபம் பலனற்றுப் போகவே திகைப்படைந்தனரே அல்லாமல், வந்தவர் பரமன் என்பதை அறிந்து கொள்ளவில்லை. அப்போது சன்னியாசி திடீரென்று மறைந்துவிட்டார். சன்னியாசி மறைந்தவுடன் கொடுந்துன்பங்கள் முனிவர்களைப் பற்றிக் கொண்டன. செய்வதறியாது அவர்கள் உதவிக்காக பிரமனை நாடினர். நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த பிரமன் முனிவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். நீங்கள் பெரும் தவறு இழைத்துவிட்டீர்கள். முக்கியமாக அனைத்துக்கும் மேலான பரம்பொருள் ஒன்று இருப்பதை ஏற்கவில்லை. அதனை உணர்த்துவதற்கே எம்பெருமான் உங்களிடையே வந்தார். அவரை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. சாபமும் கொடுத்தீர்கள். அந்த அபசாரமே வெப்ப நோயால் உங்களைத் துன்புறுத்துகிறது என்றார். ஈசனிடம் பக்தி உள்ளவன், அதிதியாக வரின், அவனை ஈசனாகவே எண்ணி உபசரிக்க வேண்டும் என்ற மறைகள் கூற்றை நீங்கள் அறியவில்லை. அதிதியை உபசரித்து அழியாப் பேரின்பம் பெற்ற சுதரிசனன் வரலாற்றைக் கேளுங்கள் என்று அந்த வரலாற்றைக் கூறினார் பிரமன்.
10. சுதரிசனன் வரலாறு
உத்தம குலத்தில் பிறந்த அந்தணன் சுதரிசனனும், கற்பிற் சிறந்த மனைவியும், அன்றாடம் தன் இல்லத்திற்கு வரும் அதிதிகள் மனம் கோணாமல் அவர்களுக்கு உணவிட்டு, மகிழ்வித்து அனுப்பி வந்தனர். ஒருநாள் ஓர் அதிதி வந்தார். அவரையும் எல்லா வகையிலும் உபசரித்து உணவூட்டினர். இடையில் சுதரிசனன் ஓர் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் மனைவியிடம் அதிதி மனம் கோணாமல் அவரை உபசரிக்குமாறு கூறிவிட்டுச் சென்றான். உணவருந்திய அதிதி அவளிடம் தனக்கு உடல் சுகமும் அளிக்கும்படி கேட்டான். அவள் பதைபதைத்து விட்டாள். கற்புக்குப் பங்கம் வரும், அல்லது அதிதிக்கு உபசாரக் குறைவு ஏற்படும் என்று எண்ணி செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது சுதரிசனன் வீடு திரும்பினான். அதிதிக்கு எல்லாச் சௌகரியமும் கிடைத்ததா? பூரண திருப்தியா? என்று கேட்க மனைவி பதைபதைத்திருக்க, அதிதி அந்தணர் மனைவி அறுசுவை உண்டியுடன், உடலுக்குச் சுகம் அளித்து திருப்தி கொடுத்தாள் என்று கூறினார். அப்போது அந்தணன் சினமோ, வெறுப்போ கொள்ளாமல், தன் மனைவியை அவர் அனுபவித்து விட்டதால் அவள் அதிதியின் சொத்து என்று கூறி, அவளையும் உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டினான். அப்போது அந்த அதிதி மறைந்து விட்டார். அங்கே அவர்களுக்குச் சிவபெருமான் காட்சி தந்து, தான் அவர் மனைவியைத் தீண்டவும் இல்லை. அவள் கற்புக்கரசி. புனிதமானவள். பிறவிப் பெரும் துயரினின்று நீங்கள் இருவரும் விடுபட்டு என்னிடம் வந்து சேர்வீராக என்று அருள்பாலித்தார். இவ்வாறு அதிதி பூஜையின் மேன்மையைப் பிரமன் தாருகாவனத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், அம்முனிவர்கள் இறைவன் திருவடிகளிலேயே சரண் புக, அவரை வழிபடின் அவர் அருளால் முனிவர்களின் துன்பங்கள் நீங்கும் என்று அறிவுறுத்தினார். அடுத்து, பிரமன் அவர்களுக்குத் துறவின் தன்மையை எடுத்துக் கூறியதுடன் துறவிகள் மட்டுமின்றி மற்றோரும் ஈசன் பேரருளுக்குப் பாத்திரமானவர்களே. தாம் செய்யும் கர்மாக்களை அந்தப் பெருமானுக்கே அர்ப்பணித்து, அனைத்திலும் ஈசனைக் காண்பவர் முக்தி அடைவர் என்றார்.
11. காலனை வென்ற சுவேதன் வரலாறு
சுவேதன் என்ற மறையோன் தன் வாழ்நாள் மிகக்குறைவே என்று அறிந்து ஈசன்தாள் பற்றி, சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் வழிபட்டு வந்தான். எந்த நேரமும், அவன் செயல் நினைப்பு அனைத்தும் ஈசனைப் பற்றியதாகவே இருந்தது. அவன் ஆயுள் முடியும் நேரம் காலனே நேரில் வந்தான். காலனைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. மேலும் ஈசன் திருவடிகளைப் பற்றினார்க்கு யாராலும், எவ்விதமும் துன்பம் நேராது என்று காலனிடம் சொன்னான். உன்னால் எனக்கு என்ன பயம் என்றான். அதைக் கேட்ட காலன் கடுஞ்சினம் கொண்டு பாசக்கயிற்றை சுவேதன் மீது வீசினான். கயிறு இறுகத் தொடங்கியது. ஆனால் சுவேதன் என்னைக் காப்பது நீயே அல்லவா? என்று எண்ணியவாறு தான் பூஜித்து வந்த லிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். அடுத்த கணம் லிங்கத்திலிருந்து தோன்றிய பரமன் கோபத்துடன் காலனை உற்று நோக்க அவன் வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தான். பரமன் சுவேதனுக்கு அழியா வாழ்வைக் கொடுத்து தம் கணங்களில் ஒருவனாக இருக்க அருள் செய்தார். உயிரற்றுக் கிடந்த யமுனை எழுப்பி அவனிருப்பிடம் அனுப்பி வைத்தார். சுவேதன் வரலாற்றைக் கூறிய பிரமன் முனிவர்களிடம், ஈசனைத் தியானித்து அவரைப் பக்தியுடன் ஆராதித்து வாருங்கள். சிவலிங்கம் ஒன்றை அமைத்து அதில் ஈசனைத் தியானித்து மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள். உங்கள் அன்புக்கு ஈசன் கட்டுண்டு அருள்புரிவான் என்றார். அவ்வாறே முனிவர்கள் பக்தியுடன் பூசிக்க திருப்தி அடைந்த ஈசன் அவர்களுக்கு அருள்புரிய முன் தோன்றிய அதே திகம்பர சந்நியாசி கோலத்தில் தாருகாவனம் வந்து சேர்ந்தார். இம்முறை முனிவர்கள் ஈசனை அன்புடன் வரவேற்றனர். வணங்கினர். முனி பத்தினிகளும் அவர்களுடன் ஈசனை வழிபட்டனர். மேலும் அவர்கள் ஈசனை நோக்கி, நாங்கள் செய்த அபசாரங்களை மன்னித்து, அடியார்களாகிய எங்களிடம் அளவற்ற அன்பு பூண்டு, பக்தியுடன் நாங்கள் அளிக்கும் உபசாரங்களை மனமுவந்து ஏற்று அருளவேண்டும் என்று வேண்டினர். அப்போது ஈசனின் திகம்பர வடிவம் மறைந்து, கைகளில் மானும், மழுவும் ஏந்தி உமாதேவியுடன் காட்சி அளித்தார். முனிவர்கள் பரமானந்தக் கடலில் மூழ்கினர். நெஞ்சம் உருக ஈசனைப் பக்தியுடன் துதித்து வணங்கினர். சுவேதன் வரலாறு, மார்க்கண்டேயன் வரலாறு போன்றது. மேலும், விரிஞ்சன் முதலான தேவர்கள் பாசுபத விரதத்தை ஆற்றியே அழியா உயர் பதத்தை அடைந்தனர். ஆகவே நீங்களும் அவ்விரதத்தைப் பக்தியுடன் கடைப்பிடியுங்கள் என்று கூறி மறைந்தார் ஈசன். முனிவர்களும் பக்தியுடன் பாசுபத விரதத்தைக் கடைப்பிடித்து வல்வினைகள் தொலையப் பெற்றனர்.
12. மாயனை வென்ற ததீசி
சனத்குமாரர் நந்தியை வணங்கி, ஐயனே, ததீசி முனிவர் மாயனை வென்ற, தாங்கள் கூற்றினைக் கடந்த வரலாற்றினை அன்பு கூர்ந்து சொல்ல வேண்டும் என்று வேண்டினார். ஒரு சமயம் பிரமன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வச்சிராயுதம் பெற்றும் மக்கள் நலம் காக்கும் மன்னனாகத் திகழ்ந்தான். மன்னனும், ததீசியும், ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது யார் பெரியவர் என்ற போட்டி எண்ணம் தோன்ற ஒவ்வொருவரும் தானே பெரியவன் என்று வாதித்தனர். மன்னவர்களை அண்டியே மறையோர் வாழ்கிறார் என்று கூற, ததீசி முனிவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்தணனே பெரியவர்.  எம்மை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்று கூறி அரசன் தலையில் ஓங்கி அறைந்தார். மன்னன் மிக்க கோபத்துடன் வஜ்ஜிராயுதத்தை எடுத்து ததீசி மார்பிலே அடிக்க, அவர் ரத்தம் கக்கி துடிதுடித்து மயங்கி விழுந்தார். நினைவு திரும்பியதும் முனிவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். ததீசி சுக்கிராச்சாரியாரை நோக்கித் தவம் இயற்ற அவர் தோன்றினார். அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் கூறி, அரசரின் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேர்வதற்கு முன் இருந்த உடலைப் பெற வேண்டினார். அப்போது சுக்கிரர் தனக்கு அச்சக்தி இல்லை என்றும் பரமனை வழிபட்டுக் கோரியதை பெறுமாறும் அறிவுறுத்தினார். ததீசி முனிவர் சிவனை வழிபட, அவர் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேரா தேகத்தை அருள வேண்டினார். அவ்வாறே ஈசனார் வரம் அருள ததீசி அரசனுடைய அரண்மனைக்கு வந்தார். வந்தவர் மன்னனிடம் இப்போது உன் பலத்தைக் காட்டு என்று கூற, மன்னன் மறுபடியும் முனிவரை வஜ்ஜிராயுதத்தால் தாக்க, வஜ்ஜிராயுதம் பொடிப் பொடியாகி விட்டது. முனிவர் கேலியாகச் சிரித்து விட்டுச் சென்றார். மன்னன் திருமாலைக் குறித்து தவமியற்ற, அவரும் அவன் முன் தோன்றினார். மன்னன் நிகழ்ந்தவற்றைக் கூறி ததீசியின் உடலைச் சோதிக்க ஒரு ஆயுதம் வேண்ட, ஈசனார் திருவருள் பெற்று முனிவரைப் பணிய வைப்பது எப்படி முடியும். எனினும் தானே அந்தணனாக அங்கு வருவதாகக் கூறினார். இவ்வாறு தோன்றிய திருமாலைப் பார்த்த முனிவர், பரந்தாமா அன்பனுக்கு அருள் புரிய ஏன் இந்த வேடம்? என்று கேட்க, என திருமால் சுய உருவில் தோன்றி முனிவரிடம் வேணியன் அருள் பெற்றவரால் ஆகாதது உண்டோ! மன்னன் சுபன் என் பக்தன். அவனுடன் நட்புடன் இருக்க வேண்டுகிறேன் என்றார். ததீசி அதை ஏற்கவில்லை. தான் நேரில் வந்து கேட்டும் ஏற்காத முனிவர் மீது கோபம் கொண்ட திருமால், அவர்மீது சக்கராயுதத்தை வீச, முனிவர் ஈசனைத் தியானித்து நின்றார். சக்கரம் முனிவரை மும்முரம் வலம் வந்து திருமாலிடமே திரும்பியது. அப்போது முனிவர், இந்தச் சக்கரம் நீலகண்டன் தந்ததல்லவா! அது அவர் பக்தருக்குத் துன்பம் தருமா? என்று கேட்டார். இப்போரில் மாதவனுக்கு உதவ வந்து தேவர்கள் தோற்று ஓடினர். தன்னந்தனியாய் நின்ற மாதவன் மாயையால் முனிவரைக் குழப்ப, ஈசன் தந்த ஞானக்கண் மூலம் முனிவர் எதையும் நன்கு காண முடிந்தது. இவ்வாறு ததீசி முனிவரை வெல்ல முடியாமல் விஷ்ணு மயங்கி இருக்கையில் அங்கே பிரமன், சிவன் தோன்றி இருவரையும் கோபம் நீங்கி சாந்தமடையுமாறு வேண்டினார். திருமால் ததீசியிடம் அவர் தவத்துக்குத் தலை வணங்குவதாகக் கூறி பாற்கடல் திரும்பினார். அது கண்ட சுபன் பாற்கடல் சென்று மாதவனிடம் தன் நிலைமை என்ன என்று கேட்க திருமால் விரோதம் நீக்கி நட்பு பெறுமாறு கூற, மன்னன் ததீசியை வணங்கித் தான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். முனிவரும் முன்போல் அவனிடம் நட்பு கொண்டிருந்தார். அடுத்து, நந்தி காலனைக் கடந்த விவரத்தைக் கூறலானார்.
13. சிலாதரும் நந்தியும்
சிலாதர் என்ற முனிவர் இந்திரனைக் குறித்துத் தவம் செய்ய, இந்திரன் தோன்ற, இறவாப் புதல்வன் ஒருவனை வேண்டினான். அதற்கு இந்திரன், பிரமனே பரார்த்தம் இரண்டும் கடந்த பின் இறப்பை அடைவதால் அத்தகைய புதல்வனைக் கோருவது சாத்தியமாகாது என்றான். பின்னர் சிலாதர் சிவனை வேண்டிப் பல்லாண்டுகள் தவம் செய்ய அவர் உடம்பிலுள்ள எலும்புகள் தவிர மற்றவை எல்லாம் அரிக்கப்பட்டன. அந்நிலையில் ஈசன் அவர் முன் தோன்றி அவர் உடலை முன்போல் ஆக்கி அவர் வேண்டுதலுக்கு இணங்க, தானே அவருடைய மகனாக நந்தி என்ற பெயரில் தோன்றுவதாகக் கூறி மறைந்தார். அடுத்து சிலாதன் ஒரு யாகம் செய்ய, அதிலிருந்து நந்தி தோன்றினார்.  அவருக்கு மூன்று கண்கள், நான்கு கரங்கள் இருந்தன. ஒரு கையில் சூலம், மற்றொன்றில் கதையும் இருந்தன. வைரக் கவசம் இருந்தது. அப்போது கந்தவர்கள் பாடினர். தேவலோக நடனமாதர்கள் நடனமாடினர். நந்தியை சிலாதர் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல, அவர் சாதாரண மானிடக் குழந்தையாக மாறிவிட்டார். ஏழாண்டு வயதிலேயே அவர் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். மித்திரர், வருணர் எனும் இரு தேவர்கள் சிலாதரைக் காண வந்தனர். நந்தியின் உடலில் எல்லா சுபலக்ஷணங்களும் காணப்படுகின்றன. எனினும் எட்டு வயதுக்குள்ளாகவே இறந்து விடுவான் என்றனர். இதுகேட்ட சிலாதர் வருந்தி அழ, அதைக் காணச் சகியாத நந்தி சிவபெருமானைப் பிரார்த்திக்கலானார். அப்போது சிவபெருமான் நந்தியின் முன் தோன்றி நந்திக்கு மரணமே இல்லை. எப்போதும் சிவனார் அருகிலேயே அவர் இருப்பார் என்று கூறி, தன் கழுத்திலிருந்து ஒரு கழுத்தணியை எடுத்து நந்தியின் கழுத்தில் அணிவித்தார். உடனே நந்தி ஒரு தெய்வ வடிவம் பெற்றார். பத்துக் கரங்கள், மூன்று கண்களுடன் தோன்றிய அவரைப் பார்வதி தன் மகனாக ஏற்றாள். அன்று முதல் அவர் கணநாதராக சிவத்தொண்டு செய்து வந்தார்.
14. யுகங்களும், யுக தருமங்களும்
கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு. கிருத யுகத்தில் மக்கள் ஈசன் திருவடியை எப்போதும் துதி செய்த வண்ணம் இருப்பர். தரும தேவதைக்கு நான்கு கால்கள் இருக்கும். அனைவருக்கும் வாழ்நாள் ஒரே அளவில் இருக்கும். வருண பேதங்கள் இன்றி, மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பர். ஆசிரம வேறுபாடுகள் இல்லை. ஞானம் தெளிந்தவர்களாய் பரமன் அருளுக்குப் பாத்திரங்களாக இருப்பர். எங்கும் எல்லாம் இன்பமயம். மக்கள் சாத்துவிக குணம் உடையவர்களாய் பொறாமை, பொச்சரவு முதலியன இன்றி எல்லா உலகுக்கும் செல்லலாம். திரேதா யுகத்தில் சிறந்த யாகங்கள் புரிவர். தரும தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருக்கும். மழை பொழியும். மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து காய் கனிகள் குறைவின்றிக் கிடைக்கும். மக்கள் சினமுற்று சண்டையிடுவர். மக்கள் பொன், பொருள், ஆடைகள் அறுசுவை ஆகியவற்றில் விருப்பம் கொண்டிருப்பர். இளம் கன்னியர்களுடன் கூடி, இன்பமாக வசதியுள்ள வாழ்வு வாழ்வர். மன்னர்கள் நாட்டைப் பெருக்க போர் புரிவர். எளியோரை, வலியோர் வாட்டுவர். சில அரசர்கள் தரும நெறியில் நின்று உயர் பதம் அடைவர். துவாபர யுகத்தில் மக்களுக்கு கோபம், போட்டி மனப்பான்மை, சண்டை சச்சரவு இருக்கும். இந்த யுகத்தில் தரும தேவதை இரண்டு கால்களை இழந்து இரண்டு கால்களிலேயே நிற்கும். இந்த யுகத்தில் பாபம், புண்ணியம் வேறுபாடு புரியாமல் குழம்பிய மனத்துடன் மக்கள் தவிப்பர். சரியான குழம்பி இருக்கும். வியாசர் வேதங்களைப் பாகுபடுத்தி நான்காக வகுப்பார். புராணங்களும் இயற்றுவார். கலியுகத்தில் மெய்ஞானம் விளங்கத் தானம் புரிவர். தரும தேவதை இந்த யுகத்தில் மூன்று கால்களையும் இழந்து ஒற்றைக் காலிலே இருக்கும். அதர்மம் தலைதூக்கி பொய்ம்மை, கொடுமை, இழப்பு, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியவை தழைத்திருக்கும். அந்தணர், அரசர், வணிகர் பலவகை இன்னல்களுக்கு ஆளாவர். ஒழுக்கம் தவறி நடப்பர். மன்னர்கள் (அ) ஆட்சியாளர்கள் பொன்னும், பொருளும் சேர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பர். அந்தணர்கள் வேதம், வேள்வி பின்பற்றாமல் போக வாழ்வு வாழ்வர். வணிகர் பேராசை கொண்டு அதர்ம வழிகளில் செல்வர். வேடதாரிகள் மிகுதியாக இருப்பர். பெண்களிடம் ஒழுக்கக் குறைவு காணப்படும்.
கிருதயுகத்தில் ஓராண்டு தவம் செய்து பலன் பெறுவர். திரேதா யுகத்தில் மூன்றே மாதங்களில் அத்தகைய பலனைப் பெறலாம். துவாபர யுகத்தில் ஒரே மாதத்தில் பெறலாம். கலியுகத்தில் இறைவனிடம் பக்தி செலுத்தி, தூய உள்ளத்துடன் பூசனை புரிந்து ஒரே நாளில் அருளும், மேற்படி பலனும் பெறுவர். ஈசன் திருவடிகளில் சரண் புகுந்து அவரே அனைத்தும் எனக் கொள்பவர் வீடுபேறு பெறுவர்.
15. ஈசனுக்குப் பற்பல உருவங்கள்
ஒரு நாமம் ஓரூருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ
-மாணிக்கவாசகர்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருட்சோதி. பிரணவ வடிவன், ஞானச்சொரூபன் ஆகிய ஈசனுக்கு அவரவர் செய்யும் கருமம், அவரவர் இச்சைக்கேற்ப விளங்கிடும் பற்பல உருவங்களைக் காண்போம்.
1. ஈசனின் தலை சுவர்க்கம்; ஆகாயம் தொப்புள்; சூரியன் சந்திரன், அக்கினி-முக்கண்கள்; திக்குகள் செவி; பாதாளம் திருவடி, விண்மீன்கள், முத்துக்களாலான ஒரு மணி மாலை, விண்ணவர்கள் புயங்கள், அலைகடல்கள் ஆடை, ஞானம் ஒளி; மேகங்கள் ஜடாபாரங்கள்; வாயு-மூச்சு; பிரகிருதியே தேவி என்று இயற்கை வடிவில் ஈசனைக் காண்பர். அவர் முகத்திலிருந்து அந்தணர், தோள்களிலிருந்து இந்திரன், உபேந்திரன்; தொடையிலிருந்து வணிகர்கள், மற்றவர் பாதங்களிலிருந்து தோன்றினர். விருப்புடன் சிவபெருமான் சில உருவங்களைத் தாங்கினார்.
2. தியானத்தின் மூலம் உயர்ந்தோர் தம் சிந்தையில் கண்டு, ஒளிமயமான அப்பெருமானை வழிபட்டு குழகனே அருளாம் என்று வந்தனை செய்வர். அந்த லிங்கம் வாயிகலிங்கம் ஆகும்.
3. பரமன் உமாதேவியோடும், முருகனுடனும், பிறை அணிந்தவனாக காணப்படுவது சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும்.
4. திரிசூலம் தாங்கி நான்கு கரங்கள், மூன்று கண்கள், ஏக பாதத்துடன் விளங்குபவர் ஏகபாத மூர்த்தி எனப்படுபவர்.
5. இரு முகம், ஏழு புயம், மூன்று பாதங்கள் கொண்ட வடிவம் யஞ்ஞ தேவன்.
6. உமாமகேசுவரராக ரிஷபாமூர்த்தியாகத் தோன்றுவது ஓர் உருவம்.
7. நந்தியுடன், சிவகணங்கள் பரமனைப் பணிந்து வணங்கிடும் உருவம் கண் கொள்ளாக் காட்சி ஆகும்.
8. ஒரு கையில் உடுக்கை, மற்றொன்றில் தீ, தூக்கிய பாதம், ஒரு கை தொங்க, மற்றொன்று அபயகரமாக நடனமாடும் உருவம் நடராஜர் ஆகும்.
9-12 . மேலும் ஈசன் கொண்ட பஞ்சத்தோற்றங்கள் வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம் ஆகியவை.
13. இடுப்பில் சிங்கத்தின் தோல், புயங்களில் பொன்னகைகள், மார்பில் சங்குமணி ஆரம், ஜடையிலே பிறைமதி, கையில் குருதியுடன் கூடிய கபாலம் கொண்ட உரு ஒன்று.
14. அபயக்கரம், வரதஹஸ்தம், சூலமேந்திய கரம், தாமரைக் கொண்ட கரம் என்று நான்கு கைகளுடன் உள்ள உருவம்.
15. நெற்றிக்கண் தீ கக்க, மண்டையோட்டு மாலை அணிந்து, அயன், அரி, அரவம் கையில் பற்றி சுடுகாட்டில் வெண்ணீறு பூசி ஆடும் நடன உருவம்.
16. ஜலந்தரனைக் கால் கட்டை விரலால் பூமியில் வட்டம் எழுதி, அச்சக்கரத்தால் அவன் உயிர் வாங்கி ஜலந்தாரசுர வதமூர்த்தி வடிவம்.
17. கூரிய சூலம் தாங்கி, தேவியை அணைத்து லிங்கத்திலிருந்து தோன்றி காலனை அழித்த கால சம்ஹாரமூர்த்தி உருவம்.
18. தேவர்கள் அமைத்த தேரிலே இருந்து முப்புரங்களைச் சிரிப்பினால் எரித்துச் சாம்பலாக்கிய திரிபுர தகனமூர்த்தி உருவம்.
19. வேலவனை இடது தொடையில் அமர்த்தி அருள் புரியும் குகானுக்கிரக மூர்த்தி.
20. அவ்வாறே விநாயகரை சுமந்திருக்க காணப்படும் விநாயக அனுக்கிரக மூர்த்தி.
21. சப்த மாதர்களுக்கு அனுக்கிரகம் செய்த சப்தகன்னியர் அனுக்கிரக மூர்த்தி.
22. காளியாகிய துர்க்கைக்கு அருள்புரியும் துர்க்கானுக்கிரக மூர்த்தி மற்றும் ஜோதிலிங்க மூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி, பைரவ மூர்த்தி போன்றவைகளே அன்றி ஈசன் விளையாட்டாக கொண்ட கோலங்கள் எதையும் வடிவுற அமைத்து வழிபடுவோர் எம்பெருமான் பேரருளுக்குப் பாத்திரராகி வினைகள் நீங்கப்பெற்று என்றென்றும் அவன் திருவடி நிழலிலே வாழ்ந்திருக்கும் பேறு பெறுவர்.
16. பாசுபத விரதம்
நந்திகேச்வரர் சனத்குமாரருக்கு உபதேசித்த பாசுபத விரதம் பற்றி சூதர் முனிவர்களுக்கு விவரிக்கலானார். பிரமாதி தேவர்கள் கைலயங்கிரி வாசனை கைகூப்பித் தொழுது பசுபாசம் அகன்றிட அருள்புரியுமாறு பிரார்த்திக்க ஈசன் பாசுபத விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூற அவர்களும் அந்த விரதத்தை அனுஷ்டித்து பசுத்தன்மை நீங்கப்பெற்றனர். பாசுபத விரதம் என்பது ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனைத் தரக்கூடியது. சித்திரைத் திங்களில் படிக லிங்கத்தில் ஈசனை ஆவாகனம் செய்து, அபிஷேகம் செய்து, அலங்கரித்து பொற்றாமரை நடுவில் வைத்து நறுமண மலர்கள் கொண்டு அர்ச்சித்து, தூப தீப நைவேத்ய உபசாரங்கள் செய்து, இறைவன் நாமத்தை உளமுருக ஜபித்து வணங்க வேண்டும். தென்திசையில் அகில், மேற்கில் மனோசிலை, வடக்கில் சந்தனம், கிழக்கில் அரிதாரம் ஆகியவற்றை பீடத்தின் அருகில் வைத்து ஈசனை ஆராதிக்க வேண்டும். வைகாசியில் வைர லிங்கத்தை வைத்தும், ஆனியில் மரகத லிங்கம், ஆடியில் முத்துலிங்கம், ஆவணியில் நீலலிங்கம், புரட்டாசியில் மரகத லிங்கம், ஐப்பசியில் கோமேதக லிங்கம், கார்த்திகையில் பவள லிங்கம், மார்கழியில் வைடூர்ய லிங்கம், தையில் புஷ்பராக லிங்கம், மாசியில் சூரியகாந்தத்தால் ஆன லிங்கம், பங்குனியில் பளிங்குக் கல்லினால் ஆன லிங்கம் என்று வைத்து பரமனைத் தொழ வேண்டும். ரத்தினங்களுக்குப் பதிலாக பொன், வெள்ளி, செம்பினால் ஆகிய லிங்கங்களையும் பூஜிக்கலாம். இவ்வாறு பன்னிரண்டு மாதங்களும் நன்கு பூசை செய்து, அந்தணர்களுக்கு உணவு முதலிய உபசாரங்கள் செய்து அவர்களை ஈசன் வடிவாக எண்ணி அர்ச்சித்து வணங்கி லிங்கங்களைத் தானம் செய்ய வேண்டும். பூஜித்த லிங்கங்களைச் சிவாலயத்தில் சேர்க்கலாம். பின்னர் வியபோகன தோத்திரத்தால் சிவனைத் துதிக்கவேண்டும். அவ்வாறு செய்பவர்கள் பசுபாசம் நீங்கி சிவலோகம் அடைவர்.
நம: சிவாய சுத்தாய நிர்மலாய யசஸ்விநே:
துஷ்டாந்தகாய ஸர்வாய பவாய பரமாதிமநே
என்று தொடங்கும் துதி வியபோகன ஸ்தோத்திரம் ஆகும்.
உமாமகேசுவர விரதம் : அஷ்டமி, சதுர்த்தசி ஆகிய நாட்களில் உபவாசமிருந்து ஓராண்டு விரதம் இயற்றிய பின் பொன்னாலோ, வெள்ளியாலோ லிங்கத்தை அழகுடன் செய்து உமையுடன் பிரதிஷ்டித்து என் வினை தீர்த்தருள்வாய் என்று பிரார்த்தித்து மேள தாளங்களுடன் லிங்கத்தைச் சிவாலயத்துக்கு எடுத்துச் சென்று மறையோர்க்குப் பொருள்களுடன் தானம் செய்ய வேண்டும். பசும்பொன்னால் அமைந்த லிங்கத்துடன் ரிஷபமும், சூலமும் அமைத்து ஓராண்டு வழிபடுவோர் சிவலோகப் பிராப்தி அடைவர். இந்த உமாமகேசுவர விரதத்தை ஆண் பெண் இருபாலாரும் பக்தியுடன் கடைபிடிக்கலாம். ஈசன் திருவருளை வேண்டி அனுஷ்டிக்கும் விரதத்தின் முடிவில் பஞ்சாக்ஷரத்தை பக்தியுடன் பூஜிக்க வேண்டும்.
17. பஞ்சாக்ஷர மந்திர பெருமை
ஒரு சமயம் தேவி ஈசனிடம் பஞ்சாக்ஷர மந்திரத்தின் பெருமையைப் பற்றிக் கேட்க, ஈசன் ஐந்தெழுத்தின் மகிமை குறித்து பார்வதி தேவிக்கு விவரித்தார்.
பரமன் கூறியதாவது : சிருஷ்டிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட பிரமன் படைக்கும் சக்தி அடைய என் அருள் வேண்டி என்னைத் துதி செய்ய, வேதங்களும் போற்றி வணங்கும் பஞ்சாக்ஷரத்தை (திரு ஐந்தெழுத்தை) அவனுக்கு என் ஐந்து முகங்களாலும் உபதேசம் செய்ய, பிரமன் சகல ஞானமும் பெற்று படைக்கத் தொடங்க அவனிடமிருந்து தசப் பிரம்மாக்கள் தோன்றினர். அவர்கள் இல்லற பந்தம் பற்றாதிருப்பதற்காக தவம் செய்ய நான் அவர்கள் முன் தோன்றி யோகத்தையும், ஐந்தெழுத்தையும் உபதேசித்தேன். அவர்கள் அதனை வையகம் முழுவதும் பரப்பினர். வேதத்தின் சாரமாகவும், விவரிக்க முடியாத உட்பொருளை உடையதும், முக்தியும் அளிக்கவல்லதாக பஞ்சாக்ஷரத்தை ஜபித்தவர் பிறவித் துன்பம் நீங்கப் பெறுவர் என்றார் பரமன்.
ஜபிக்கும் முறை
ஈசனை நன்கு உணர்ந்து, அவர் திருஉருவைத் தெளிவுற மனத்திலேயே சிந்தித்து, அவர் அருள் ஒன்றையே வேண்டி உருகி ஐந்தெழுத்தை ஜபிக்க வேண்டும். திருவைந்தெழுத்தை குரு முகமாக உபதேசம் பெற வேண்டும். நாளொன்றுக்கு எத்தனை என்று சங்கல்பித்துக் கொண்டு விரதம் எடுத்து, இரவு மட்டும் உணவு கொண்டு ஆற்றங்கரை, சமுத்திர தீரம், சிவாலயம் ஏதாவது ஓரிடத்தில் உடல், உள்ளம் தூய்மையோடு இறைவனை வணங்கி வல்வினைகள் நீங்கிடப் பிரார்த்தனை கொண்டு ஜபிக்க வேண்டும். தினமும் ஜபிப்பதாயின் பகல் உணவுக்கு முன் ஜபிக்க வேண்டும். எண்ணிக்கையை விரலினால், விரல் ரேகையால் (அ) மணிகளைக் கொண்ட ஜபமாலையால் எண்ண வேண்டும்.
ஜபமாலை, பவளமணி மாலை, ஸ்படிக மாலை, முத்து மாலை, ருத்ராக்ஷமாலை ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். ஈசன் திருவடிகளை மனத்தில் சிந்தித்து ஜபிப்பதே உத்தமமான பலன்களைத் தரவல்லது. திருவைந்தெழுத்தை ஜபிப்பவர்கள் தூயவராக இருத்தல் வேண்டும். பஞ்சமபாதகங்கள் பற்றிய எண்ணமே கூடாது. ஈசன் திருவடிகளைத் தியானித்து சிறிதளவே உணவு உட்கொள்ள வேண்டும். பட்டை விரித்து அல்லது பலகையின் மீது அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். ஆசாரியனே இறைவன். இறைவனே ஆசாரியன். மந்திரமே இறைவன். ஆகவே குருவைப் பணிந்து அவர் ஆசி பெற்று ஜபத்தைத் தொடங்க வேண்டும். தெளிந்த உள்ளத்தில் ஈசன் திருஉருவைத் தியானித்து, மலரடி வணங்கி அருள் வேண்டிப் பிரார்த்தித்து, அமைதியான மலைக்குகையில் அமர்ந்து புலனடக்கத்தோடு பத்துலக்ஷம் முறை பஞ்சாக்ஷரம் ஜபிப்பவர்கள், வல்வினைகள் பொடிபட இறைவன் திருவடி நிழலில் சேர்வர்.
18. சிவனார் சனகாதியர்களுக்கு அருளுதல்
ஒரு சமயம் சனகாதி முனிவர்கள் பரமேச்வரனை அணுகி அவர்களுக்கு அருள்புரிய வேண்டினர். அப்பொழுது பரமன் அவர்களுக்கு அருளியது, ஜீவன் உற்பிசம், சுவேதசம், சராயுசம், அண்டசம் எனப்படும் நால்வகைப் பிறப்புகளுக்குள் உட்படுகிறது. ஷட்கோசம் எனப்படும் உதிரம், தோல், தசை, எலும்பு, மூளை, நிணம் எனும் ஆறினோடு ஜீவன் அன்னை வயிற்றில் தோன்றி இறக்கும் வரையில் துன்பமே அடைகிறது. வித்தையானது பரமவித்தை, பரவித்தை என இருவகை. நான்மறைகளைக் கற்று அவற்றால் பெறுவது பரமவித்தை. அறிவினால் உணரப்படுவது பரவித்தை ஆகும். மேலும் நிறம், குணம், மாசுமறுவற்று, உறுப்புகள் ஏதுமின்றி கருத்துக்கு எட்டாதது, தன்னைத் தவிர வேறு பொருள் இல்லாத பரம்பொருளை அறிவது பரவித்தை. பரம் என்றும் பரமன் என்றும் சொல்லப்படும் பரம்பொருள் ஒன்றே. முத்தொழில் புரிவதும் அதுவே. அழியும் உலகப்பொருள்களைத் தவிர வேறொன்று உண்டு என்று உள்ளத்தில் தியானித்து அதனில் மனத்தைச் செலுத்தினோர் இன்புற்றிருப்பர். கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் சித்தம், புத்தி, மகம், அகங்காரம் ஆகியவற்றை உடைய ஆத்மா ஜீவாத்மா எனப்படும். பதினான்கு இந்திரியமும், பதினான்கு வாயுக்களும் கொண்ட மனித உடலில் எழுபத்திரண்டாயிரம் நாடிகள் உள்ளன. அன்னத்தின் மயமான கோசம் பூதான்மா, பிராணமய கோசம் இந்திரியான்மா, மனோமய கோசமானது கால ஆன்மா, ஆனந்தமய கோசம் முறையே உரைக்கப்படாமல் நின்றது விஷயான்மா. இவ்வாறு கற்றறிந்தோர் தெரிந்து உணர்வார்கள்.
தெளிந்த ஞானமுள்ள குருவைப் பணிந்து, அவரருள் பெற்றுக் கருமங்கள் யாவும் முடித்துச் சுத்த நெறியில் இருப்போமானால் ஈசனைக் காணமுடியும். உயர் ஞானம் பெற்றார் இருவினைகள் ஒழிந்து போகின்றன. எனவே, பிறவாப் பேரின்ப முக்தியை அடைய விரும்புவோர் முதலில் தெளிந்த ஞானத்தைப் பெறுவகையே முயற்சிக்க வேண்டும். தெளிந்த ஞானமுடையவனுக்கு வேறு உடல் வராது முக்தியே சித்திக்கும். ஞானம் பெறாது முக்தி அடைய முடியாது. ஞானத்தைச் சிறந்த தியானத்தால் மட்டுமே பெற இயலும். உந்திக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தின் முடிவில் மென்மையான தாமரை இருப்பதாகத் தியானிப்பது ஞானத்தின் முதல் அங்கம் அணிமா முதலிய எண் வகை சித்திகள் அத்தாமரைக்கு இதழ்களாகும். அம்மலரின் மீது அனைத்துக்கும் ஆதியாய் தனியாய் தெளிந்த பரஞ்சுடராய் ஈசன் உலவுவதாகச் சிந்திக்க வேண்டும். அவ்விதமே உச்சியிலும், ஞான ஒளியாய் நினைவிற்கு எட்டாப் பரம்பொருளாய் விளங்கும் ஈசனைத் தெளிவுடன் கண்டு அப்பொருளின் திவ்ய வடிவில் தன்னையே மறந்து தன்னையும் ஈசனாகவே காண்பவர் கிடைத்தற்கரிய பேரின்ப வீட்டை அடைவர்.
பூமிக்குச் சர்வன், புனலுக்குப் பவன், அக்கினிக்கு ருத்திரன், காற்றுக்கு உக்கிரன், ஆகாயத்தில் பீமன், சூரிய மண்டலத்துக்கு மகாதேவன், சந்திர மண்டலத்துக்கு ஈசானன், பரமேச்வரன் ஆன்மாவுக்கெல்லாம் பசுபதியாகவும், அஷ்டமூர்த்தியாகவும் விளங்குகிறார். நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் ஞானம் வரும். ஞானம் வந்ததும் அறிவு தெளிவுறும். அடுத்து, பரம வைராக்கியம் ஏற்படும். அதனால் யோகம் சித்திக்கும். யோகத்தின் மூலம் அழியாத பேரின்ப வாழ்வைப் பெறலாம். ஞானம், தியானம் இவற்றை அனுஷ்டிக்கும் ஆன்மாவுக்கு பந்தம் நீங்கிவிடும். மாயையை அறிந்தோன் பற்றற்று தன்னைக் காத்துக் கொள்வான். தேவி வித்தை என்றும், ஞானசக்தி, க்ரியாசக்தி என்றும் கூறப்படுகிறாள். என்னுடன் உள்ள தேவி என் உடலின் ஒரு பகுதியே ஆவாள். இந்தச் சராசரங்களில் நிலவும் உலகங்கள் அனைத்தும் மாயாவிகாரமே. இவ்விதம் சொன்ன பரமன் பார்வதியின் முகம் நோக்க, ஈசன் திருவுள்ளத்தை அறிந்த தேவி அன்று பகலிலேயே சனகாதியருக்கு மாயையை அகற்றி பிறவாப் பேரின்ப வீட்டை அடைய அருள்புரிந்தாள்.
19. அனுசரிக்க வேண்டிய ஆசார விதிகள்
எண் வகை சித்திகள். 1) அணுவைப் போலாகும் சக்தி அணிமா. 2) பஞ்சென இலேசாக இருத்தல் லகிமா. 3) பருத்தல் மகிமா. 4) நினைத்த இடம் செல்லும் சக்தி பிராத்தி. 5) யாவையும் உணர்ந்திடும் சக்தி பிராகாமியம். 6) அனைத்திலும் ஆணை செலுத்திடும் சக்தி ஈசத்துவம். 7) நினைத்த உருவை எடுத்தல் வாசித்துவம். 8) பிறப்பொடு இறப்பு நீக்கல் சாயுச்சியம். இந்த எண்வகை சித்திகள் பெற்றவர் அழியாப் பரம்பொருளாய், மூவர்க்கும் முதலாய் பரஞ்சுடராய் விளங்கும் இறைவனை உணர்ந்து சமாதியிலிருந்து முக்தி பெறுவர். சித்திகளைப் பெறாதவர்களும் கூட ஈசனை நன்குணர்ந்து அவரைத் தம் மனத்திலே இருத்தி தியானத்தால் முக்தி அடைவர். பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேறிப் பிறப்பிறப்பு அற்ற பேரின்ப வாழ்வு பெற ஜோதிப் பிழம்பான சுடரொளியின் மலரடிகளைச் சேவித்தல் வேண்டும். பிரம்மச்சாரி சிறந்த குருவை அடைந்து உபதேசம் பெற்று, இயம நியமங்களை குறைவற ஆற்ற நன்னெறியில் பிரம்மச்சரிய வாழ்வைக் கடைப்பிடிக்க பிரம்மச்சாரி பிøக்ஷ பெற்றே உணவு உட்கொள்ள வேண்டும். முற்றும் துறந்தவர்களைக் கண்டால், மும்முறை வலம் வந்து வணங்க வேண்டும். தண்டம், கமண்டலம், குடை, செருப்பு, மான் தோல் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். வசிக்கும் கிரகத்தில் தரையைப் பசுஞ்சாணத்தால் மெழுகித் தூய்மையாக்க வேண்டும்.
வேதியருக்குப் பத்து நாட்களும், வேந்தருக்குப் பன்னிரண்டு நாட்களும், வைசியருக்குப் பதினைந்து நாட்களும், பின்னவருக்கு முப்பது நாட்களும் தீட்டு உண்டாம். மங்கையர் தீட்டமான நான்காம் நாள் விடியற்காலையில் நீராடி சூரிய தரிசனம் செய்து பால் (அ) பஞ்சகவ்யம் உட்கொள்ள வேண்டும். நீராடிய 4,6,8,10,12,14,16 நாட்களில் கணவனுடன் கூடினால் புதல்வரையும் மற்ற நாட்களில் கூடினால் பெண் குழந்தையும் பெறுவர். துறவிகள் இடம் தேடிவரும் உணவை உட்கொள்ள வேண்டும். எதிலும் ஆசை கொள்ளக்கூடாது. துர் நிமித்தங்களையும், கனவுகளையும் கண்டவர் வடதிசை சென்று, பஞ்சகவ்வியத்தில் ஒன்றை உட்கொண்டு, பிரணவம் ஓதி, பரமனைத் தியானித்து வேண்டினால் தோஷம் நீங்கி மரணம் அடையமாட்டார்.
20. காசியின் சிறப்பு
காசியின் மகிமை ஏராளம். கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் காசியே முக்தி தரும் நகரம். இத்தலத்தில் ஈசன் என்றும் நீங்காது உறைவதால் இதற்கு அவிமுக்தேச்வரம் என்ற பெயர் உண்டு. முனிவர் அவ்வியன் காசியில் பரமனை வழிபட்டு வீடுபேறு பெற்றார். குபேரன் நவநிதிகளைப் பெற்றான். சம்வர்த்தன் என்பவன் இங்கு ஈசனை வழிபட்டு பரமன் திருவடிகளை நீங்காத வாழ்வு பெற்றான். இங்குதான் வியாசர் இறைவனின் திருவடிகளைப் பெற்றார். மாயோன், நான்முகன், அக்கினி, சூரியன், சந்திரன், இந்திரன் ஆகியோரும் இந்தக் காசியில் பரமனை வழிபட்டு அவர் திருவருளைப் பெற்றனர். காமதேனு காசியில் ஈசனை லிங்க வடிவில் ஆராதித்துப் பேறு பெற்றது அந்த இடம் கோப்பிந்ரேக்கம் ஆகும். அந்த லிங்கத்தின் பெயர் கோப்பியேச்சுவரர் ஆகும். பிரம்மன் கபிலாகாரம் என்ற குளக்கரையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் பெயர் ரிஷபத்து வாசன். மற்றொரு லிங்கத்தை பத்திரோதயம் என்ற தடாகக் கரையில் பிரதிஷ்டை செய்ய, அதனை மாதவன் வழிபட்டான். அது அரணிய சர்ப்யேசுவரர் எனப்படும். மற்றொரு லிங்கம் பிரம்மன் வழிபட்டது. இச்சுவலினேச்சுவரர் எனப்படுகிறது.
பர்வதராஜனால் காசியில் வழிபாடு செய்யப்பட்ட லிங்கம் சைலேச்சுவரர் ஆகும். மற்றொரு லிங்கம் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அசுரர்களாலும், அமரர்களாலும் வழிபாடு பெறப்பட்டது. அது மத்திமேசர் ஆகும். சுக்கிராச்சாரியாரால் அமைக்கப்பட்டது சுக்கி ரேசுவரர் ஆகும். இத்தலத்தில் உயிர்விடும் மனிதனே அன்றி மற்ற எந்த ஜீவராசியும் முக்தி அடையும். பிரளய காலத்திலும் அழியாது விளங்கும் இத்தலம் அவிமுக்தம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது. இவ்வாறு காசியின் சிறப்பைத் தேவிக்கு விளக்கிய ஈசன் அவிமுக்தீசுவர லிங்கத்தில் மறைந்தார். எனவே, கற்றோர்கள் தங்கள் அந்திமக் காலத்தை உணர்ந்து, காசிக்குச் சென்று தங்கி, கங்கையில் நீராடி பிரணவம் ஜபித்து, ஈசன் திருவடிகளை, ஒரு கணமும் மறவாது தியானித்து ஆவி நீத்து பிறவாப் பேரின்ப வீட்டை அடைவர்.
21. கணத் தலைவனாகிய அந்தகன்
சிவனைத் தவிர வேறு எவராலும் வெற்றி கொள்ள முடியாத பராக்கிரமம் வேண்டும் என அந்தகாசுரன் பிரம்மனிடம் வரம் வேண்டினான். அவன் இரணியாக்ஷனின் மகன். அவன் திக் விஜயம் புறப்பட்டு உலகை வென்று பின் விண்ணுலகை முற்றுகையிட்டான். தேவர்கள் திருமாலிடம் உதவிக்காகச் செல்ல வைகுந்தத்தை முற்றுகையிட்டான் அசுரன். ஈசனால் மட்டுமே அவனுக்கு மரணம் என்று வரம் பெற்றவனானதால் எல்லோரும் ஈசனிடம் முறையிட, பரமன் அவர்களுக்கு அபயம் அளித்தார். அங்கு வந்த அந்தகாசுரன் சிவனை வணங்கி, தேவர்களை விட்டு செல்லும்படி விடும்படி கேட்டான். சிரித்தார் சிவபெருமான். தேவர்களை விட்டுச் செல்லுமாறு அந்தகனிடம் கூற, அவன் ஈசனையே எதிர்த்தான். அதனால் அளவில்லாக் கோபம் கொண்ட பரமன், அசுரர்களை அழித்தார். அந்தகாசுரனை சூலத்தால் குத்தி உயரத் தூக்கி நிறுத்தினார். அந்தகன் உடலிலிருந்து குருதி பாய அவன் ஆணவம் அழிந்தது. ஈசன் கைப்பட்டதால் அவன் பாபங்கள் தொலைந்தன. அவனிடம் சத்வகுணம் மிகுந்திட, அவன் இருகரம் கூப்பி ஈசனைத் தொழுதான். சரணம் அடைந்த அவனுக்கு அபயம் அளித்து ரக்ஷிக்குமாறு வேண்டினான் அந்தகாசுரன். அந்தகனைச் சூலத்திலிருந்து இறக்கி விட அவன் ஈசனை வலம் வந்து வணங்க, ஈசன் கரம் பட்டு அவன் பொன்மேனி பெற்று புனிதனாக, அவனைக் கணங்களுக்குத் தலைவனாக்கினார் பெருமான்.
22. வராகன் சுயரூபம் பெறுதல்
இரணியாக்ஷன் வராஹ வடிவில் வந்த பரந்தாமனை எதிர்த்துப் போரிட, வராஹாவதாரம் எடுத்த திருமால் அசுரன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளி, அவன் மார்பில் ஏறி கூரிய கோரைப் பற்களால் அவன் மார்பைப் பிளந்து இரத்தத்துடன், ஆவியையும் குடித்து, அவன் பதுக்கி வைத்திருந்த பூமியை மீட்டுத் தம் கொம்புகளில் தாங்கியவாறு வெளிப்பட்டார். அது கண்டு தேவர்களும், நிலமாதும் மகிழ்ச்சி பெற்றனர். அரக்கனைக் கொன்ற பின்னும் அரியின் கோபம் தணியவில்லை. அதனால் அச்சமுற்ற தேவர்கள் பரமேச்வரனிடம் முறையிட ஈசன் மாதவனை நெருங்கி அவருடைய கடைவாய் கொம்புகளில் ஒன்றைப் பற்றி உடைத்தார். அப்போது பன்றி வடிவில் இருந்த பரந்தாமன் சுயரூபம் பெற்று ஈசனைத் துதி செய்து வணங்கினார்.
23. நரசிம்மர் வெறி அடங்குதல்
பக்த பிரகலாதன் தந்தையாகிய இரணியகசிபுவிடம், ஸ்ரீமந் நாராயணனிடம் விரோதம் பாராட்ட வேண்டாம் என்றும் அழிவைத் தடுக்க அவரிடம் பக்தி கொள்ளுமாறும் வேண்டினர். அப்போது இரணியகசிபு, இப்போது அந்த நாராயணன் வந்து உன்னைக் காப்பாற்றட்டும் என்று கூறி ஆங்கோர் கம்பத்தை உதைக்க, அதிலிருந்து திருமால் நரசிம்ம வடிவில் தோன்றி இரணியகசிபுவைக் கொன்றார். தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைத் துதி செய்து சாந்தமடையுமாறு வேண்டினர். லக்ஷ்மியும் பிரகலாதனும் பிரார்த்தித்தனர். இரணியன் மார்பைப் பிளந்து குருதியுடன் ஆவியையும் குடித்த அச்சுதன் வெறி அடங்காதது குறித்து விண்ணப்பித்து அவரைச் சாந்தமுறச் செய்யுமாறு பரமனிடம் வேண்டினர். ஈசன் சரபம் என்ற பறவை வடிவுடன் நரசிம்மன் முன் வர சரபமும், நரசிம்மமும் மோதினர். முடிவில் நரசிம்மர் களைத்துவிட ஈசன் அவரது தோலைக் கிழித்து உரித்துத் தன் மேல் போர்த்திக் கொண்டார். நரசிம்மரின் வெறி அடங்கியது. அவர் சாந்தமடைந்தார்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


லிங்க புராணம் பகுதி-2மே 29,2012




24. ஜலந்தரன் வரலாறு:ஜலத்திலிருந்து தோன்றிய அசுரன் ஜலந்தரன் எனப்பட்டான். அவன் பரமனை நோக்கித் தவம் செய்து தேவர்களால் தன்னை வெல்லமுடியாதவாறு வரம் பெற்றான். அளவற்ற பராக்கிரமத்தைப் பெற்ற ஜலந்தரன் வரங்கள் பெற்றவுடன் அகந்தை கொண்டு திக்விஜயம் புறப்பட்டான். இந்திரனை ஓடச்செய்து தேவர்களை வென்றான். அடுத்து அக்கினி, இயமன், நிருதி, வாயு, குபேரன் ஆகியோர்களை வென்று தன் வயப்படுத்திக் கொண்டதுடன் வைகுந்தம் சென்றிட, திருமால் கருடன் மீதேறி அவனுடன் போர் செய்தார். ஆனால், அசுரனை ஈசன் ஒருவனாலேயே அழிக்க முடியும் என்றறிந்து மாயையால் இருளைத் தோற்றுவித்து அந்த மாயையில் மறைந்து விட்டார். அடுத்து, அவன் பார்வை கயிலாயத்தின் மீது பட சிவனாரையும் எதிர்க்க முற்பட்டான். அப்போது சிவபெருமான், ஜலந்தரா, நீ சொன்னது அனைத்தும் சரியாக இருக்கலாம். ஆனால், நான் கண்கூடாகக் காணவில்லை என்று கூறித் தன் கால் கட்டைவிரலால் பரமேச்வரன் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அசுரனிடம் அதை எடுத்துத் தலைமீது வைத்து அவன் பிரதாபத்தை நிரூபிக்குமாறு சொன்னார். அவன் மிகவும் ஏளனமுடன் இலகுவில் வட்டத்தைப் பெயர்த்து விட்டான். ஆனால், அதை மேலே உயர்த்துவது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. மிகவும் முயற்சி செய்து அதனைக் கழுத்துக்கு நேராகக் கொண்டு வர, அது சக்கராயுதமாக மாறி அவன் கழுத்தைத் துண்டித்தது. அசுரன் உடல் பூமியில் சரிந்தது. அவனுடைய மனைவியர் அங்கு வந்து அவன் உடலை எடுத்து வைத்துக் கொண்டு புலம்பினர். அப்போது சிவனார் அவர்களிடம், ஜலந்தரன் என் கையால் இறந்ததால் உத்தம லோகத்தை அடைந்துள்ளான் என்று கூறி அவனுடைய மனைவியர்களையும் அவனுடன் சென்று மகிழ்ந்திருக்குமாறு கூறி அருளினார்.
25. அரிக்குச் சக்கராயுதம் அளித்தல்
ஜலந்தரன் மரணத்துக்குப் பின் அவனுடைய புதல்வர்கள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர முற்பட்டனர். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அப்போது பரந்தாமன் சிறிது காலம் பொறுத்திருங்கள். நான் ஈசனைக் குறித்துத் தவம் செய்து ஜலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தை அவரிடமிருந்து பெற்று வருகிறேன் என்றார். திருமால் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரத்தெட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய முற்பட்டார். முடிவில் ஒரு மலர் ஈசனால் மறைக்கப்பட்டு விட்டதால் குறைந்தது. அப்போது அரி தன் கண் மலரை எடுத்து ஈசன் திருநாமம் கூறி அர்ச்சனையை முடித்தார். அப்போது சிவனார் தோன்றி அவர் பக்தியை மெச்சி, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் வேண்டும் வரம் கேட்குமாறு கூறினார். அப்போது திருமால் மறுபடியும் அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வருவதால் ஜலந்தரனை அழித்த சக்கராயுதத்தை அளித்து, அதன் மூலம் தேவ சத்ருக்களை ஒழிக்கும் வலிமையை அருள்புரியுங்கள் என்று வேண்டினார். ஈசனும் அவ்வாறே சக்ராயுதத்தை அளித்து ஆசி கூறினார். மேலும், தனக்காக அர்ப்பணித்த கண் மலரையும் திரும்பி அளித்தார். ஈசன் அளித்த சக்கராயுதத்தால் மாதவன் அசுரர்களை வென்று தேவர்களின் துன்பங்களை நீக்கி அருளினான்.
26. தக்கன் நடத்திய வேள்வியும், அதன் விளைவும்
தக்கன் தன் மகள் சதியை ஈசனுக்குத் திருமணம் செய்து வைத்தான். தக்கன் மகள் என்பதால் தேவி தாட்சாயிணி என்றும் அழைக்கப்பட்டாள். தக்ஷபிரஜாபதியை இந்திராதி தேவர்கள் வணங்குவதால் மருமகனாகிய ஈசன் தன்னை வணங்கி கவுரவிப்பதில்லை என்று அவன் ஆணவத்தின் காரணமாக ஈசன் மீது பகை கொண்டான். தக்கன் மாபெரும் யாகம் ஒன்று நடத்தினான். பிரமாதி தேவர்கள் எல்லார்க்கும் அழைப்பு அனுப்பி, ஈசனுக்கு மட்டும் அனுப்பவில்லை. எனினும், தாட்சாயிணி அழைப்பில்லாமலே யாகத்திற்கு வர அவரைக் கவுரவிக்கவில்லை. மேலும், ஈசனைப் பற்றியும் அவதூறாகப் பேசினான். அவமதிப்புக்கு உள்ளான தாட்சாயிணி அக்கினியில் உடலைத் துறந்துவிட்டு இமவான், மேனை தம்பதிகளின் வேண்டுதலுக்கேற்ப அவர்களுக்குப் புத்திரியாக அவதரித்தாள். இதனால் மிகவும் கோபம் கொண்ட பரமசிவன் வீரபத்திரனைத் தோற்றுவித்து, உடனே புறப்பட்டுச் சென்று தக்கன் வேள்வியை அழித்து, அவனைத் தண்டித்து திரும்புமாறு ஆணையிட்டார். வீரபத்திரன் தக்கன் யாக சாலையை அடைந்து அங்கிருந்தாரை எல்லாம் விரட்டி அழித்து, கடைசியில் தக்கன் தலையைப் பற்றி இழுத்து, அவன் தலையைச் சீவி நிலத்திலே எறிந்தான். இந்த நிலையில் பிரமன் தோன்றி தேவர்களைத் தக்கபடி தண்டித்தாகி விட்டது. யாகம் அழிக்கப்பட்டது. இனி சாந்தம் கொண்டு ஈசனிடம் திரும்புமாறு பிரார்த்தித்தான். மேலும், தேவர்களை மன்னிக்குமாறும் வேண்டிக்கொண்டார் பிரமன். தேவர்களும் அவ்வாறே சிவனாரை அணுகி தங்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொள்ள, அவரும் இறந்தவர்களை எல்லாம் உயிர்ப்பித்து மன்னித்தருளினார். தக்கனும் சிவபெருமானை வலம் வந்து நெஞ்சம் உருக பிரார்த்திக்க, அவனை மன்னித்து கணங்களின் தலைவனாக்கினார்.
27. மன்மதனை எரித்தல்
இமவான் மகளாய் பிறந்த பார்வதி சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தாள். ஈசன் சனகாதியருக்கு யோகம் உபதேசிக்க நிஷ்டையில் இருந்தார். இவர்கள் இருவர் மீதும் மலர்பாணம் தொடுத்து முருகன் அவதாரத்திற்கு வழிகோல தேவர்கள் மன்மதனை வற்புறுத்தி அனுப்பினர். அவனும் சிவனார் மீது மலர்க்கணைகள் தொடுக்க, கண் விழித்துப் பார்த்த முக்கண்ணனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் எரிந்து சாம்பலாகினான். அப்போது மன்மதனின் மனைவி ரதி, காமன் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி அவனை உயிர்ப்பித்து தனக்களிக்குமாறு வேண்டினாள். சிவபெருமான் கருணை கொண்டு ரதியிடம், காமன் அவள் கண்ணுக்கு மட்டும் தெரிவானென்றும், கிருஷ்ணனுக்கு மகனாகப் பிறந்து அனைவரும் அறிய உடல் பெறுவான் என்றும் அருள்புரிந்தார்.
28. பார்வதி, பரமசிவன் திருமண வைபவம்
நிஷ்டை கலைந்து எழுந்த ஈசன் ஒரு முதிய அந்தணர் வடிவில் பார்வதி முன் தோன்ற, உமையும் அவரை யார் என்று அறிந்து உபசரித்து, தன் விருப்பப்படி திருமணம் நிறைவேற அருள்புரிய வேண்டினாள். மகிழ்ச்சியுற்ற மகேசுவரன் சுயஉருவை காட்டி அவ்வாறே ஆகும் என்று கூறி மறைந்தார். நடந்தவற்றை எல்லாம் பார்வதி இமவானிடம் தெரிவித்தாள். அடுத்து இருதரப்பிலும் திருமண ஏற்பாடுகள் நடைபெறலாயின. குறிப்பிட்ட நாளில் எல்லோரும் பரமன் வருகையை நோக்கிக் காத்திருந்தனர். உமாதேவி புனித நீராடி புத்தாடை அணிந்து, ஆபரணங்கள் தரித்து அற்புத கோலத்துடன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. திடீரென்று பார்வதியின் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திருப்பதை அனைவரும் கண்டனர். இந்திரன் அது ஓர் அசுரனோ என எண்ணி அதன்மீது வஜ்ஜிராயுதத்தை ஓங்க, அவன் கை அசைவற்றுப் போயிற்று. மற்றவர்களும் வெகுண்டு எழுந்தனர்.  நான்முகன் எல்லோரையும் அமைதிப்படுத்தி குழந்தையை நெருங்கி போற்றி வழிபட்டார். இறைவனே குழந்தையாக வந்திருக்கிறார். அவரைப் பணிந்து தொழுது அருளைப் பெறுங்கள் என்று கூறினார். இறைவன் ஜோதியாக தன் சுயஉருவைக் காட்டிட, இமவானும் மேனையும் அவரை வலம் வந்து வணங்கி தமது புத்திரி உமையை மனமுவந்து திருமணம் செய்து கொள்ளுமாறு பிரார்த்தித்தனர். பிரமனும் ஈசனை அணுகி அவரை வணங்கி தேவியின் திருக்கரம் பற்றி அனைவரையும் மகிழ்விக்குமாறு வேண்டினார். அப்போது பரமன், பிரம்மனிடம் விசுவகர்மாவைக் கொண்டு மாளிகைகளை நிர்மாணிக்கச் செய்யுமாறு கூறினார்.
திருமண முகூர்த்த நேரம் நெருங்கிட, சர்வ அலங்கார பூஷிதராய் ஈசன் உமையவள் திருக்கரத்தைப் பற்றக் காத்திருந்தார். அவருடைய மணக்கோலத்தைக் கண்டு முனிவர்களும், மற்றவர்களும் மகிழ்வுற்றனர். உமாதேவியாரும் புனித நீரால் நீராட்டப்பட்டு, ஆடை அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு லக்ஷ்மி, சரஸ்வதி, இந்திராணி ஆகியோர் தேவியைத் தாங்கிவர திருமண மண்டபத்தை அடைந்தாள் பார்வதி. அப்போது அயன், விஷ்ணுவிடம் அவரது உடன்பிறந்தாளைச் சிவபெருமானுக்கு அனைவரும் மகிழ்ந்திட அளிக்குமாறு கூறினார். உடனே மாதவன், பரமன் தாள் பணிந்து வணங்கி, அவரது பாதங்களை கைகளால் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, கங்கை நீரால் கழுவி, நறுமலர்கள் கொண்டு பக்தியுடன் அர்ச்சித்தார். பின்னர் திருமால் ஈசனிடம், தங்களையே பதியாக அடைய அல்லும் பகலும் தேவி தியானித்து வருகிறாள். அவனை மனமுவந்து ஏற்றருள் புரியவேண்டும் என்று வேண்டினார். பிரமன் ஈசனை நெருங்கி அவர் அனுமதி பெற்று, ஹோம காரியங்களைத் தொடங்கினார். பரமன் தேவியுடன் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து எங்கும் ஆனந்தம் பொங்கிட மங்கள நாணைத் தேவிக்கு அணிவித்தார். திருமணம் முடிந்த பின் ஈசன் உமையுடன் புறப்பட்டுக் காசியை அடைந்தார். அங்கே இமவான் லிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசன் உருவைத் தியானித்து வழிபட்டு மேனையுடன் மேலான உயர் பதத்தை அடைந்தன்.
நம: பார்வதி பதயே, ஹரஹர மகாதேவ
29. பரமன் பார்வதிக்குக் கூறிய யோகம்
தேவி கேட்டுக் கொண்டபடி ஈசன் கயிலையில் ஒருநாள் அவருக்கு யோகம் பற்றி எடுத்துரைத்தார்.
யோகம் ஐந்து வகைப்படும்.
1) இறைவனைத் தியானித்து அருமறை மந்திரங்களை ஜபிப்பது மந்திர யோகம் ஆகும்.
2) தூய மனதுடன் ரேசகம், பூரகம் செய்து கும்பத்தில் ஆன்மாவை நிறுத்துவது பரிச யோகம் எனப்படும்.
3) உலகில் அனைத்தையும் மறந்து, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, உள்ளத்தில் இறைவனைக் காண்பது பாவ யோகம் ஆகும்.
4) உலகம் வேறு, தான் வேறு என்ற பேதமின்றி உள்ளும் புறமும் தன்னையே காண்பது ஞான யோகம் ஆகும்.
5) சோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாய், பழுதில்லாததாய், ஆதியாய் உறையும் பொருளை அறிவது மகா யோகம் எனப்படும்.
மகாயோகத்தை அடைந்தவர், அஷ்டமா சித்திகள் பெறுவர். யோகத்தில் அமருபவர்கள் முதலில் அயனையும், அரியையும் பக்தியுடன் தியானித்து வணங்கி பின்னரே மகேசுவரனைப் பற்றுதல் நினைக்க வேண்டும். இவ்வாறு தான் பெற்ற உபதேசத்தைச் சனத்குமாரர், வியாசருக்குத் தெரிவிக்க, அதனை அவரிடமிருந்து சூதர் அறிந்து கொண்டார். இவ்வாறாக, நைமிசாரணியத்து முனிவர்கள் உள்ளம் மகிழ ஈசன் மகிமையை எடுத்துக்கூறிய சூதர் சிவபெருமான் மலரடிகளைத் தலை தாழ்த்தி  வணங்கினார். முனிவர்களும் மகிழ்ச்சியுடன் சென்னி மேல் கைகூப்பி நான்மறைகளால் துதித்தனர். அவ்வமயம், அங்குப் பேரொளி ஒன்று தோன்றியது. அதனிடையே மலரோன் மலர்ந்த முகத்தோடு முனிவர்களுக்குத் தரிசனம் தந்தார். லிங்க புராணத்தைச் சொன்னவரும், கேட்டவரும் கேட்கச் செய்தவரும் சிவலோகத்தை அடைவர் என அருளினார். இப்புராணத்தைப் படிப்பவரும், கேட்பவரும் கொடும் பாவங்கள் நீங்கப் பெற்றவராய் சிவலோக வாழ்வைப் பெற்றுப் பேரின்பம் எய்துவர்.
30. தேவர் துயர்துடைத்த ஐங்கரன்
ஒருநாள் ஈசன் உமையுடன் இருக்கும் போது தேவர்கள் அவர்களை அடைந்து வணங்கி தானவர்களால் தாம் படும் வேதனைகளைப் பற்றிக்கூறி, அவர்கள் தொடங்கும் எக்காரியமும் நிறைவேறாமல் இருக்க ஓர் உத்தம புருஷனைத் தோற்றுவிக்கப் பிரார்த்தித்தனர். ஈசன் அவர்களை அனுக்கிரகிப்பதாகக் கூறி அருள் செய்தார். தேவியுடன் அருகில் இருந்த உத்தியானவனத்திற்குச் சென்று ஐங்கரனைத் தோற்றுவிப்போம் என்றார். இருவரும் யானைகளாக மாறி ஓடியாடி மகிழ, அங்கே அப்போதே வேழ முகத்தோன் தோன்றினான். குமாரனைக் கண்டு உச்சி முகந்து மகிழ்ந்தனர். தேவி குழந்தையை மடியில் வைத்து அன்பு செய்ய வேழமுகத்தோன் கீழே இறங்கிக் கைகொட்டி நடனம் புரியலானார். அப்போது பரமன் அவனை அருகழைத்து, நீ என் கணங்களுக்கு எல்லாம் தலைவனாகி, கணபதி என்ற பெயர் பெறுவாய். நீ மகிழ்ச்சியுடன் நடனம் புரிவதால் நர்த்தன கணபதி என்று பெயர் பெறுவாய். அனைவரும் உனக்கே முதல் பூஜை செய்ய வேண்டும். உன் அருள் பெற்ற காரியம் இனிது நிறைவேறும். உன்னைப் பூசிக்காமல் செய்தால் தடைகள் (அ) விக்கினங்கள் ஏற்படும். அதனால் உனக்கு விக்கினேச்வரன் என்று பெயர். தானவர்கள் கெ அவர்களின் காரியங்களைத் தடை செய்து தேவர்களைக் காத்திடுவாயாக. அதற்கான சக்தியை உனக்கு அளித்தேன் என்று கூறி விநாயகரை ஆசிர்வாதித்தார் பெருமான். ஈசன் ஐங்கரனுக்கு அளித்த கவுரவங்களைத் தேவி அங்கீகரித்தாள். இந்திராதி தேவர்கள் வேழ முகத்தானை வேண்டித் துதித்தனர். அவர்கள் செய்த துதிகளால் அருள்புரிவதாகக் கூறி அபயம் அளித்தார். அதனால் அசுரர்கள் கொட்டம் குறைந்து, அவர்கள் செய்வன தடை செய்யப்பட்டன.
31. சிவபெருமான் காளியுடன் நடனமாடுதல்
தாருகன் என்னும் அசுரன் பிரமனிடம் தனக்குப் பெண்ணாலேயே மரணம் என்ற வரம் பெற்றான். அவன் தேவர்களைப் பல அல்லல்களுக்கு உள்ளாக்கினான். ஆனால், பெண்கள் இருக்குமிடம் செல்வதில்லை. அவனால் நேரிடும் துன்பங்களைத் துன்பங்களைத் தாங்க முடியாத தேவர்கள் பரமனிடம் முறையிட்டனர். அப்போது ஈசன் தாருகனுக்கு ஒரு பெண்ணாலேயே மரணம் என்பதால் தேவியைப் பிரார்த்திக்குமாறு அறிவுரை தந்தார். அருகிலிருந்து உமாதேவியைத் தேவர்கள் பலவாறு துதிசெய்து மகிழ்வித்தனர். அதனால் தேவி தன் அம்சத்தை ஈசன் உடலில் செலுத்த, அவள் உள்ளம் அறிந்த பரமன், நீலகண்ட விஷத்தில் இருந்து தேவியின் அம்சத்தைக் கொண்டு காலகண்டியைத் தோற்றுவித்தார். தோன்றிய காலகண்டி உமாமகேச்வரரை வணங்கி தனக்கு இடும் பணியாது என்று வினவ, தாருகனைக் கொன்று திரும்புமாறு பணித்தாள் பார்வதிதேவி. உக்கிரமான காலகண்டி ஈசனைத் தியானித்து, பூதப் பிரேத பிசாசுகளை பயங்கர ஆயுதங்களுடன் தோற்றுவித்து அவர்கள் பின் தொடர தாரகன் இருக்கும் இடத்தை அடைந்து அவனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள். மற்ற அசுரர்களும் அழிக்கப்பட்டனர்.
இந்தப் போரினால் காளி வெறி கொண்டு அலைய, அவளைச் சாந்தப்படுத்துமாறு அனைவரும் ஈசனையே வேண்டினர். ஈசன் ஒரு பாலகனாகி ஓவென அழ, குழந்தையைக் கண்ட காலகண்டி மனம் இரக்கம் கொண்டு புன்சிரிப்புடன் குழந்தையை வாரி எடுத்துக் கொஞ்சி பால் கொடுக்க, அப்பாலகன் பாலுடன் அக்காளியிடம் கோபத்தையும் பருகி விட அவள் சாந்தம் கொண்டாள். ஈசனிடம் வந்த காளியின் கோபம் எட்டு ÷க்ஷத்திர பாலகர்களாக உருவெடுத்தது. காளியை மகிழ்விக்க ஈசன் நடனமாடினார். குழந்தையின் நடனம் கண்ட காளியும், கைகொட்டிக் குழந்தையுடன் நடனமாட, மற்ற பூத பிரேத பிசாசுகளும் ஆடின. அன்று முதல் காளியால் உலகில் எத்தகைய தீமையும் நேராதிருக்க சிவபெருமான் மாலையில் காளியுடன் நடனமாடுகிறார்.
32. பாலுக்கு அழுத பாலகன்
பாலகன் உபமன்யுவுக்குப் பாலுக்காக அவனருகில் பரமன் பாற்கடலையே வரவழைத்தார்.
33. கௌசிகன் செய்த நாம சங்கீர்த்தனம்
கௌசிகன் என்னும் ஓர் அந்தணன் சாமகானம் பண்ணுவதில் சமர்த்தன். அவன் ஊர் ஊராய் சென்று பகவானைத் துதித்து அவன் நாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தான். ஒரு சமயம் அவன் ஒரு விஷ்ணுத் தலத்தை அடைந்தான். அவன் கானத்தால், உள்ளம் பக்தியால் நிரம்பி வழிந்த பத்மன் என்பவன் கௌசிகனையும், அவனது குடும்பத்தினரையும் தன் கிருகத்திலேயே இருக்கச் செய்து அவனுக்குச் சீடனாகி அனைவருக்கும் அன்னமிட்டு வந்தான். அவன் கானத்தில் பத்மனைப் போல் உள்ளம் பறிகொடுத்த மாலவன் என்ற வைசியன் பஜனைக்குத் தீபம் ஏற்றி கைங்கரியம் செய்து வந்தான். கௌசிகன் புகழ் அருகிலிருந்த ஊர்களிலும் பரவி கலிங்க ராஜனுடைய காதுகளுக்கும் எட்டியது. அவன் கௌசிகனைத் தரிசிக்க வந்தான். அரசனை வரவேற்று உபசரித்தான் கௌசிகன். ஆனால் அரசன் தன்னைப் புகழ்ந்து பாடவேண்டும் என்று கூறியதால் மனவேதனைப்பட்டான் கௌசிகன். இறைவனைத் தவிர வேறு எவரையும் புகழ்ந்து பாடுவதில்லை என்று கூற அரசன் சினம் கொண்டான். மன்னனின் நிர்பந்தம் அதிகமாக வேறுவழியின்றி கௌசிகன் தன் நாக்கைத் துண்டித்துக் கொண்டான். சிறிது காலம் சென்றபின் கௌசிகன், அவனது சிஷ்யர்கள் கலா கதி அடைந்து வைகுந்த வாசம் பெற்றனர். பத்மன் குபேர பதவியைப் பெற்றான். தீப கைங்கரியம் செய்த மாயவன் வைகுந்தத்தில் தீபம் ஏற்றும் பணியைப் பெற்றான். இவ்வாறு கைங்கரியம் புரிபவர்களை மாதவன் தன் இருப்பிடம் அழைத்துக் கொண்டு அருள் செய்கிறார்.
34. நாரதர் கோட்டானிடம் பாடம் கேட்டல்
வைகுந்தத்தில் மாதவன் தும்புருவை அருகில் அமர்த்தி, அவரைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெருமையைத் தானும் பெற நாரதர் ஈசனைக் குறித்துத் தவம் செய்தார். தவத்தின் இடையில் ஓர் அசரீரி நாரதரிடம், மானசோத்திர பர்வத்தில் உள்ள கானபிந்து என்னும் கோட்டானிடம் பாடம் கேட்டு மனோபீஷ்டம் நிறைவேறப் பெறுவாய் என்றது. பலநாள் திரிந்து கடைசியில் கானபிந்துவைக் கண்டுபிடித்தார் நாரதர். அந்தக் கோட்டான் நாரதரைப் பார்த்து, தாங்கள் யார்? இங்கு வந்த காரணம் யாது? என்று கேட்க, நாரதர் நடந்ததைக் கூறி அருள்புரியுமாறு வேண்டினார். கானவிந்து மகிழ்ச்சியுற்று, அவருக்குச் சிறந்த ஞானத்தை உண்டாகச் செய்வதாகக் கூறியது. அப்போது நாரதர் கானவிந்துவிடம் மகாஞானியான அவர் கூகை உடல் பெற்றிருக்கும் காரணத்தைக் கூற வேண்டினார்.
கூகை கூறிய சுயசரிதை
புவனேசுவரன் என்றொரு அரசன் இருந்தான். அவன் ஆயிரக்கணக்கான வாஜ்பேய யாகம், அசுவமேத யாகம் ஆகியவற்றுடன் அந்தணர்களுக்குப் பொன்னும் பொருளும் தானம் செய்தான். எனினும் அவன் ஒரு தவறான காரியத்தைச் செய்தான். பகவானை அடிபணிந்து பாடிடும் பக்தர்களை அழைத்துத் தன் புகழ்பாடும்படி கட்டாயப்படுத்தி இம்சைகள் பல புரிந்தான். ஒரு நாள் ஆற்றங்கரையில் ஹரிமித்திரர் என்றொரு பக்தர் மாதவனை வழிபட்டு, அவரைக் குறித்து மெய்யுருகிப் பாடிக் கொண்டிருக்கையில், மன்னன் புவனேசுவரனுடைய வீரர்கள் அங்குத் தோன்றி, அவரை மன்னன் புவனேசுவரன் முன் கொண்டு நிறுத்தினர். அவன் அவரை அடித்து, அவன் பொருள்களைப் பிடுங்கிக் கொண்டு நாட்டை விட்டு விரட்டி விட்டான். ஆனால் ஹரிமித்திரர் அனைத்தும் அச்சுதன் செயலென்று நாட்டை விட்டு வெளியேறினார். சில காலத்தில் புவனேசுவரன் வானுலகை அடைய, அவனைத் தருமராஜன் முன்பு கொண்டு நிறுத்தினர். அவனுக்குப் பயங்கர பசி. அத்தகைய துன்பத்திற்கு தான் ஆளான காரணத்தைத் தருமராஜனிடம் கேட்டான்.
ஹரிமித்திரர் என்ற விஷ்ணு பக்தரை இம்சைக்கு ஆளாக்கிய பாபமே இந்தப் பசியைப் போக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டான் புவனேசுவரன். அதற்குத் தருமராஜன், பூலோகத்தில் அரிய கோட்டானாகப் பிறந்து, முன்னர் எடுத்திருந்த அரச உடலையே தின்று, பசி ஆற்றிக் கொள்ள வேண்டும். இந்த மன்வந்தரம் முழுவதும் அவ்வாறே இருந்து முடிவில் மானிடராகப் பிறப்பாய் என்றான் தர்மராஜன். மேலும், தண்டனையை அனுபவித்து வரும்போது ஒருநாள் விண்ணுலகம் செல்லும் ஹரிமித்திரரைக் கண்டு என் நிலையை எடுத்துக்கூறி மன்னிக்குமாறு வேண்டினேன். மற்றும் நான் இழைத்த கொடுமைகளுக்குப் பிராயச்சித்தமாக கானம் செய்து இல்வாழ்க்கையை முடிக்க விரும்புவதாகத் தெரிவித்து எனக்கு சங்கீதத்தைக் கற்பிக்கும்படி மன்றாடினேன். அவரும் இரக்கம் கொண்டு சங்கீதம் போதித்தார். பல ஆண்டுகள் அவரிடம் சங்கீதம் கற்றுத் தேர்ந்தேன். கந்தர்வர்கள் என்னிடம் வந்து சங்கீதம் கற்றுச் சென்றனர். முற்பிறவியில் செய்த தீவினைகளுக்குப் பிராயச்சித்தமாக நான் இப்போது காலம் முழுவதும் இறைவனைக் குறித்து கானம் செய்வதிலேயே கழித்து வருகிறேன் என்றது. நாரதர், கானவிந்துவிடம் சங்கீதம் பயின்றார். முடிவில் குருதக்ஷிணையாக என்ன எதிர்பார்க்கிறாய்? என்று கேட்டார். அப்போது கூகை இந்த மன்வந்தரத்தின் முடிவில் பிரம்மன் பதவிக்காலம் முடிந்து இரவிலே ஓய்வு எடுத்து மீண்டும் சிருஷ்டியைத் தொடங்கும் போது எனக்கு உத்தமப் பிறவி வாய்க்க வேண்டும். இதையே நான் விரும்புகிறேன் என்று கூறியது.
அடுத்த மன்வந்தரத்தில் அவர் கருடனாகப் பிறவி எடுப்பீர்கள் என்று அருள்செய்து புறப்பட்டார் நாரதர். மாதவனை அடைந்து தாள் பணிந்து வணங்கினார். நாரதர் உள்ளத்தை உணர்ந்த மாதவன் நாரதரிடம் நீ இன்னும் சங்கீதத்தில் முழுத்தேர்ச்சி அடையவில்லை. துவாபர யுகத்தில் நான் கிருஷ்ணவதாரம் எடுக்கும்போது என்னை அடைந்து சங்கீதத்தில் முற்றிலும் தேர்ந்தவனாய் தும்புருவுக்குச் சமானமாக விளங்கலாம் என்றார். அவ்வாறே நாரதர் துவாரகைக்கு வர, கிருஷ்ணனும் அவரை வரவேற்று ஜாம்பவதியிடம் ஒரு பருவம் சங்கீதம் கற்றுக் கொள்ளுமாறு சொன்னார். அவ்வாறே பயிற்சி பெற்று கிருஷ்ணனிடம் வந்து யாழினில் இசைத்துக் காட்டினார். கண்ணன் மகிழ்ந்து மற்ற ஏழு மனைவியாரிடமும் அவ்வாறே கானம் கற்குமாறு அனுப்பினார். அவ்வாறே ஒவ்வொருவரிடமும் ஒரு பருவம் கற்றுப் பயிற்சி முடிந்து கிருஷ்ணனிடம் வந்து தன் புலமையைக் காட்டினார். அதுமுதல் நாரதர் தும்புருவுக்குச் சமானமாக கௌரவிக்கப்பட்டார். வைகுந்தத்தில் திருமால் சிவபூஜை செய்யும்போது நாரதரை அழைத்துப் பாடச்சொல்லித் தாம் மகிழ்வதோடு ஈசனையும் மகிழச் செய்தார்.
35. ஸ்ரீமதி, ஸ்ரீவிஷ்ணு திருமணம்
திரிசங்கு என்ற மன்னன், மனைவி தர்மவதியுடன் வாழ்ந்து வந்தான். தர்மவதி தினமும் விஷ்ணு ஆலயம் சென்று அங்குத் தங்கி விரதம் இருந்து வர அவர்களுக்கு ஒரு மைந்தன் பிறந்தான். அவனுக்கு அம்பரீஷன் எனப்பெயரிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான். அம்பரீஷன் வளர்ந்து வருகையில் அச்சுதன் பக்தனாக விளங்கினான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவனை ஸ்ரீமதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அவள் மணப்பருவம் அடைந்து ஸ்ரீமந் நாராயணனையே திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். ஆனால், நாரதரும் பர்வதரும் போட்டி போட்டுக்கொண்டு அவளை மணக்க விரும்பி அம்பரீஷனை நாட அவர்களின் முகங்கள் அவர்கள் திருமாலிடம் பெற்ற வரத்தின்படி குரங்காகக் காட்சி அளித்தன. காலையில் மாலையை வைத்துக் கொண்டு வந்த  அவர்கள் இருவருக்கும் நடுவே தோன்றிய ஸ்ரீஹரிக்கு மாலையிட்டு மணந்தாள். முனிவர்கள் திருமாலுக்குச் சாபம் கொடுத்தனர். அதன்படி திருமால் இராமவதார காலத்தில் சீதையை இராவணன் தூக்கிச்செல்ல அனுமார், சுக்கிரீவன் ஆகிய குரங்குகளின் உதவியால் சீதையை மீட்டு அயோத்தி திரும்பினார்.
36. ஜேஷ்டாதேவி வரலாறு
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காகப் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷத்துடன் ஒரு கன்னிகையும் தோன்றினாள். அவர் பெயர் ஜேஷ்டாதேவி (மூதேவி). அப்போது பாற்கடலில் தோன்றி, பலவற்றையும் பலர் விரும்பி எடுத்துக் கொண்டனர். ஆனால், ஜேஷ்டாதேவியை யாரும் விரும்பவில்லை. ஏற்கவில்லை. அவளைத் துரத்தினர். இந்நிலையில் தேவர்கள் பிரபன் என்ற ஒருவனைப் படைத்து அவனுக்கு ஆசைவார்த்தைகள் கூறி ஜேஷ்டையை மணக்கச் செய்தனர். பிரபன் ஜேஷ்டையை மணந்து அவளை அழைத்துக்கொண்டு நல்லவர்கள் வாழும் ஊர்களுக்குச் சென்றான். ஆனால் ஜேஷ்டாதேவிக்கு அவன் தங்குமிடங்களில் தங்கமுடியாது இருந்தது. எனவே, லக்ஷ்மி, நாராயணன் திருமணத்தால் பொறாமை கொண்ட இவள் கணவனை அவன் செல்லும் இடங்களில் எல்லாம் தங்கச் செய்யாமல் கிளப்பிக் கொண்டு வந்தாள். இதனால் கோபம் கொண்ட பிரபன் அவள் செய்கைக்கான காரணத்தைக் கேட்டான். அப்போது அவள் நல்லவர்கள் இருக்கும் இடங்களிலும், யாகம் முதலிய நல்ல காரியங்கள் நடைபெறும் இடங்களிலும் தான் இருக்க முடியாதென்பதை அவனுக்கு விளக்கினாள். அப்போது தான் அவள் சுயரூபம் அவனுக்குத் தெரிய வந்தது. எனவே அவளிடமிருந்து தன்னைக் கழற்றிக் கொள்ள விரும்பினான். அதற்காக அவன் ஒரு யுக்தி செய்தான். அவளிடம் அவளைப் பற்றி இப்போது தான் நன்கு தெரிந்து கொண்டதாகக் கூறி, அவர்கள் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டு வருவதாகக் கூறி அவளை ஒரு குளக்கரையில் காத்துக் கிடக்கச் செய்து அவளைத் தனியே விட்டு விட்டுப் புறப்பட்டான். அப்போது அவள் தன் ஆகாரத்துக்கு வழிசெய்யுமாறு கேட்டாள். அவன் பூஜை செய்யாதவர்களுடைய பொருள் எல்லாம் அவளைத் சேர்ந்ததே என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.
நெடுநேரம் ஆகியும் அவன் திரும்பி வராதது கண்டு கணவரைத் தேடிப் புறப்பட்டாள் ஜேஷ்டாதேவி. வழியில் ஸ்ரீதேவியும், ஸ்ரீவிஷ்ணுவும் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஓ வென அழுதுகொண்டே மாதவன் கால்களில் விழுந்தாள். நிகழ்ந்ததை எல்லாம் எடுத்துக்கூறி கதறி அழுதாள். அவளுக்குத் திருமால் ஆறுதல் கூறி, அவள் கணவன் திரும்பி வரும் வரை ஓர் நிரந்தர இடத்தைக் காட்டினார். யாரொருவன் அவரைப் பூஜித்து, ஆனால் ஈசனை நிந்தனை செய்வானோ அவன் வீட்டில் அவள் தாரளமாக வாசம் செய்யலாம் என்றும், அவன் பொருள்களைப் புசித்து பசி ஆறி வரலாம் என்றும் கூறி சமாதானப்படுத்தினார். திருமால் கூறிய வண்ணம் தனக்கொரு இடத்தைத் தேடிச் சென்றாள் ஜேஷ்டாதேவி. இன்னமும் தன் கணவனைத் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறாள். அப்போது முனிவர்கள் ஜேஷ்டியை தன்னிடம் நெருங்கவிடாது இருக்க என்ன வழியைக் கடைபிடிக்க வேண்டும் என்று சூதரைக் கேட்டனர். அப்போது சூதர், மாதவனுடைய அரிய திருநாமமான அஷ்டாக்ஷரியை எவன் ஒருவன் பக்தியுடன் ஜபித்து வருகிறானோ அவனிடம் ஜேஷ்டை ஒருபோதும் நெருங்க மாட்டாள். அந்த இடத்தில் லக்ஷ்மிவாசம் செய்கின்றாள் என ஒதுங்கிச் சென்று விடுவாள்.
37. சிவ ஷடாக்ஷரி மகிமை
நமசிவாய என்பது பஞ்சாட்சரம் (அ) திருவைந்தெழுத்து. அத்துடன் ஓம் என்ற பிரணவத்தைச் சேர்த்தால் அது ஷடாக்ஷரி (அ) ஆறெழுத்து ஆகும். அதாவது ஓம் நம சிவாய, ம் ஒற்றெழுத்து கணக்கில் வராது. (ஓம்-1, ந-2, ம-3, சி-4, வா-5, ய-6). வினயன் என்ற அந்தணனுக்கு ஓர் ஆண் மகன் பிறக்க, அவனை ஐதரேயன் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். அவனைக் குருகுல வாசத்துக்குக் கல்வி கற்க அனுப்பி வைத்தான். ஆனால் அவனுக்குக் கல்வியில் சிறிதும் நாட்டம் இல்லை. ஆனால், அவனுக்கு சிவபக்தி ஏற்பட்டு அவன் திருஆறெழுத்தை மனத்துக்குள்ளாலேயே ஜபித்து வந்தான். மகன் கல்வி கற்காமல் மூடனாகத் திரிவது கண்டு பொறாத வினயன், மகன் ஐதரேயனையும், அவனுக்குப் பரிந்து பேசிய தன் மனைவியையும் வீட்டை விட்டுத் துரத்தினான். ஐதரேயன் தாயாருடன் ஊர் ஊராக அலைந்தான். தாயாருக்கு மூடனான மகனுடன் சுற்றுவதில் வெறுப்பு ஏற்பட்டு, ஒருநாள் மகனே! நீ இவ்வாறு சுற்றுவது சரியல்ல. உன்னால் எனக்கு வேதனையே அதிகரிக்கிறது. உன்னை விட்டுச் செல்ல பாசம் இடம் கொடுக்கவில்லை. எங்கேயாவது ஆறு (அ) குளத்தில் விழுந்து இறந்து விடுவதுதான் ஒரே வழி என்று கூறி அழுதாள். தாயின் கண்ணீர் ஐதரேயன் மனத்தில் சலனத்தை உண்டாக்கியது. உடனே அவன், அம்மா உன் விருப்பப்படியே கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றவனாக விளங்குவேன் என்று கூறி வேதியர் யாகம் செய்யும் இடத்தை அடைந்தான். அவ்வமயம் வேதங்கள் ஓதி யாகம் செய்து கொண்டிருந்த அவர்களுக்குத் திடீரென்று மேலே சொல்ல நா எழாமல் தவித்தனர். அவர்களைச் சமீபித்த ஐதரேயன் தனக்குத் தெரிந்த ஒரே மந்திரமான சிவஷடாக்ஷரியை அவர்கள் காதுகளில் விழுமாறு ஜபித்தான்.
அம்மந்திரம் அந்தணர்கள் காதினில் விழுந்த உடனே, மாயை அகன்றது. அவர்கள் மேலும் வேதத்தைத் தொடர்ந்து யாகத்தைச் செய்து முடித்தனர். அவன் கூறிய திருமந்திரத்திலேயே, தடைப்பட்ட காரியம் பூர்த்தி அடைந்தது. அவ்வேதியர்கள் அகம் மகிழ்ந்து அவனைத் தொழுது கொண்டாடினர். மேலும் அவன் வாக்கிலிருந்து வெளிப்பட்ட மந்திரத்தால் தான் தடை நீங்கி யாகம் பூர்த்தியாகியது என்று கூறி ஐதரேயனைப் பாராட்டி யாகம் முடிவடையும் வரையில் அவனைத் தங்களுடனேயே நிறுத்திக் கொண்டனர். நல்லவர் சகவாசத்தால் வேத மந்திரங்களுடைய உச்சாடனங்களையும் கேட்கப் பெற்றதால் ஐதரேயனுக்கு சகல சாஸ்திரங்களும் தாமே புரிந்தன. அவன் புலமையைக் கண்டு அனைவரும் அவனைப் பாராட்டி வணங்கினர். மகிழ்ச்சி பெற்ற தாயுடன் பலகாலம் வாழ்ந்திருந்து முடிவில் அவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஐதரேயன் வைகுந்தம் அடைந்தான். எவரொருவர் ஷடாக்ஷரியை ஜபிக்கின்றாரோ அவருக்கு மாதவனுடைய அருள் கிட்டி வைகுந்த வாசமும் கிட்டும்.
38. பஞ்சாக்ஷர ஜபம்
அஷ்டாக்ஷரி, ஷடாக்ஷரி, பஞ்சாக்ஷரி ஆகிய சிவநாமங்களில் பஞ்சாக்ஷரியே மிகச் சிறந்ததாகும். திருஐந்தெழுத்து. பஞ்சாக்ஷரியை ஜபித்தால் அந்தணரைக் கொன்ற பாவம் நீங்கி விடும். அரியும், அயனும் பஞ்சாக்ஷரத்தையே போற்றிக் கொண்டாடுகின்றனர். ஒரு சமயம் மாதவன் மேகமாகி ஈசனைச் சுமக்க அவர் உடல் இளைத்து விட்டது. ஈசனைக் குறித்துத் தவம் செய்ய பரமன் அருளால் திருமால் உடல் அதற்கு முன் இருந்ததைவிட மிகவும் வலுப்பெற்றது. அந்தக் கற்பம் மேகவாகன கற்பம் எனப்பட்டது. அந்தக் கற்பத்தில் துவாபர யுகத்தில் துண்டுமூகன் என்றொரு அந்தணர், மனைவி விசாலையுடன் வாழ்ந்து வந்தான். அத்தம்பதியருக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அப்போது அவர் இல்லத்திற்கு வந்திருந்த மித்திரர், வருணர் என்ற இருவரும் குழந்தையின் முகத்தைப் பார்த்து அவன் பிறந்த நேரம் தீயமுகூர்த்தம் ஆனதால் கெடுதல் விளையும் என்று கூறிச் சென்றனர். எனவே அவர்கள் மகிழ்ச்சி துயரமாயிற்று.
ஒரு நாள் வசிஷ்ட முனிவர் அங்கு வந்தார். அவர் குழந்தை பிறந்த நேரம் குருபார்வை இருப்பதால், கொடிய கொலையே அவன் செய்தாலும் அப்பாவம் அவனைப் பற்றாது என்றார். புராணப்படல நேரத்தில் துண்டுமூகன் தீதுறு சொற்கள் பேசியதால் அவர்கள் குமாரன் பெற்றோர்க்கு வருத்தம் தரக்கூடிய முகூர்த்தத்தில் பிறந்தான் என்றார். அந்தப் பாலகனுக்கு அத்தம்பதியர் உரிய காலத்தில் உபநயனமும், மற்றும் நற்குலப் பெண் ஒருத்தியைத் திருமணமும் செய்து வைத்தனர். திருமணத்துக்குப்பின் அவன் காமம், கள்ளுண்டல், கொலை என்று தவறான வழிகளில் நடக்கலானான். பெற்றோர்களின் புத்திமதி அவனை மாற்றவில்லை. ஒருநாள் அவன் மதுமயக்கத்தால் மனைவி, பெற்றோர் ஆகியோரை வாள் கொண்டு வெட்டி வீழ்த்தினான். இந்தச் செய்தி மன்னன் காதில் விழ அவன் இவனை பிரஷ்டம் செய்து விட்டான். அவனும் பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியில் காசி அடைந்து கங்கையில் நீராடினான். அவன் நீராடி வருகையில் ஆங்கொரு வேதியரின் புராண படலத்தைக் கேட்டான். கங்காஸ்நானமும், புராணம் கேட்டதும் அவனது தீயபுத்தி அகன்றது. அப்பிறவியில் மட்டுமல்ல, முற்பிறவிகளிலும் அவன் செய்து வந்த பாபங்கள் விலகிட அவன் ஈசனைப் பக்தியுடன் ஆராதிக்கலானான். தினமும் காலையில் நீராடி ஈசனை வழிபட்டு தான் செய்த பாபங்களை நீக்குமாறு சிவனிடம் முறையிட்டான். கருணாகரனான எம்பெருமான் அவனுக்குப் பஞ்சாக்ஷரத்தை உபதேசித்து ஜபித்து வருமாறு அருள்புரிய அவனும் தவறாமல் பக்தியுடன் பஞ்சாக்ஷரம் ஜபித்ததுடன் மறைகளையும் குறையின்றிக் கற்றுப் பாசுபத விரதம் இருந்தான். இறுதியில் இவ்வுலக வாழ்வை நீத்துக் கைலாயத்தை அடைந்தான். அவன்பால் அன்பு கொண்ட ஈசன் அவனை கணங்களுக்குத் தலைவனாக இருக்கும் பேற்றினை அளித்தார். அனைத்தும் ஐந்தெழுத்தின் மகிமையே அன்றோ!
39. ஒட்டகமான சனத்குமாரர்
ஒருநாள் சனத்குமாரர் சிவத்தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஈசன், உமையோடும் கணங்களோடும், நந்தி முன் செல்ல அவ்வழியே சென்று கொண்டு இருந்தார். இதனால் சனத்குமாரன் யோகநிலை கலைந்தது. மனம் ஐம்புலன்கள் சலனம் பெற்றன. அவர் கண் விழிக்காமல் தியானத்திலிருந்தார். பரமன் அருகில் சென்றும் அவரை வணங்கவில்லை. உமாதேவியார் ஈசனிடம் அவன் அருகிலிருப்பதை விட்டு விட்டு எங்கோ தேடுகிறார் சனத்குமாரர் என்றாள். கோபம் அடைந்த நந்திகேசுவரர் ஒட்டகத்தைப் போல் ஈசனை வணங்காதிருக்கும் இவன் ஒட்டகமாக மாறட்டும் என்று சபித்தார். கண்களைத் திறந்து பார்த்த சனத்குமாரர் தான் ஒட்டகமாயிருப்பதை உணர்ந்து தந்தையாகிய பிரம்மனை அடைந்து முறையிட்டார். பிரம்மன் ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து, ஈசனைப் பக்தியோடு தியானிக்க அவர் முன் தோன்றிய பரமனிடம் சனத்குமாரர் சிவ தியானத்தில் இருந்தாரே அன்றி தவறிழைக்கவில்லை. அவன் மீண்டும் சுயஉருபெற அருளுமாறு வேண்டினார். அப்போது பரமன் தன் பக்தன் நந்தியின் சாப பலன் இது. எனவே அவரிடமே அருள்பெற உபாசிக்குமாறு கூறினார். அவ்வாறே சனத்குமாரர் நந்தியை உபாசித்து வழிபட அவரும் மனமகிழ்ந்து சனத்குமாரருக்கு சுயஉரு பெற அருளினார். சுயஉருபெற்ற சனத்குமாரர் ஈசனைப் பணிந்து தொழ கயிலைக்குச் சென்றார். அங்கே அவர் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். உலகனைத்தும் பசுவாகி, மாயையாகிய கயிற்றால், பதியாகிய பரமனுடன் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதன் பொருளை நந்தி அவருக்கு உரைக்க அவர் வியாசருக்கு அதனை உபதேசித்தார்.
40. சிவசக்தி விபூதி
ஒவ்வோர் ஆணும் பெண்ணும் சிவசக்தி வடிவேயாகும். பரம்பொருள் சிவன்-மாயை பார்வதி; ஆதிபுருஷன்-சிவன்; பிரகிருதி-உமை; பெண்ணே கௌரி, பொருள் இறைவன்; சொல்-அம்மை; பகல்-பரமன், இரவு-தேவி; யஜ்ஞமே-சிவன்; யாகதக்ஷிணை-கௌரி. கடன்-வேணியன், கரை-உமாதேவி, ருத்திரன்-ஈசன், அவன் ஒளி-கௌரி, வாயு-சிவன், அவன் மனைவி-மனோரமா தேவி, வருணன்-கைலாசநாதன், அவர் மனைவி நித்தி-அம்மை, சூரியன்-பரமன், அவன் மனைவி-சுவர்க்கலை உமையாள், இறைவன்-சந்திரன், சதிதேவி-ரோகிணி. இவ்வாறு ஆண் சொரூபம் அனைத்தும் ஈசனே. பெண் பாலர் அனைவரும் தேவியின் திருவுருவம், பிரபஞ்சத்தில் அனைத்தும் இறைவன்-இறைவி சொரூபம். தன் முதலாக விளங்கும் ஈசனே எங்கும் வியாபித்து இருக்கிறார். எனவே உமாமகேசுவரனைப் பார்வதி பரமேச்வரனை சேர்த்தே வழிபட வேண்டும். அதுவும் உய்யும் வகையாகும். எனவே, ஈசனைத் தனியாக வழிபடுவது தக்க பலனைத் தராது. அர்த்தநாரியாக வழிபட வேண்டும்.
41. ஈசன் சான்னியத்தியம்
ஈசன் இல்லாத இடம் ஏது? அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்றான் பிரகலாதன். எனவே அனைத்திலும் ஈசன் சான்னித்தியம் உள்ளது. இருப்பினும் ஆகாயம், வாயு, அக்கினி, நீர், பூமி, சூரியன், சந்திரன், யாகம் செய்பவர் என்னும் எட்டிலும் ஈசன் அஷ்டமூர்த்திகளாய் உறைகின்றார்.
1. வெப்பத்தைக் கொடுத்து ஒளியைப் பரப்பும் சூரியன் சிவசொரூபமே. சூரியனுடைய கதிர்களில் அமுதம் மழையையும் சந்திரன் பனியையும், சுக்கிலம் வெய்யிலையும், சுழுமுனை சந்திரனுக்கு ஒளியையும், அரிகேசம் பிரகாசத்தையும் அளிக்கின்றன.
மேலும், விசுவகர்மா எனும் கதிர்கள் புதனுக்கு ஒளியையும், சத்துவிகம் - செவ்வாய்க்கும், சருவாவசு - வியாழனுக்கும், விச்சு - சுக்கிரனுக்கும் ஒளியைத் தருகின்றன.
2. தேவியின் அமிசமான சந்திரன் தனது கலைகளுடன் விண்ணவரையும், தென் புலத்தாரையும் அமுதத்தால் நிறைவிக்கிறார்.
3. யாகம் செய்யும் வேதியர்கள் இறை அமிசமாய் விளங்கி யாகத்தையும், மற்ற கர்மாக்களையும் செய்து வானவர்க்கும் மற்றோர்க்கும் உணவு அளிக்கின்றனர்.
4. நீர் உடலின் உள்ளும் புறமும் இருந்து வளர்ச்சிக்கு உதவுகிறது. பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் உணவைப் பெற்றுத் தருகிறது.
5. காற்று அதாவது வாயு எங்கும் பரந்திருந்து, உடலில் உள்ளும் புறமும் இருந்து இயங்குகின்றது.
6-7. மேற்படி நீர் நிறைந்த சாகரமும், தீயும், காற்றும், நிறைந்த ஆகாயமும் வெளியில் பூமியும் தங்குகின்றன.
1. பவன் என்பது பூமியின் சொரூபமாய் விளங்கும் ஈசனின் மூர்த்தம் தரும்.
2. சர்வன் என்பது நீருருவாகி உலகெலாம் பரந்து மருவும் ஈசன் மூர்த்தம்.
3. பசுபதி என்பது தீயாகி அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கும் மூர்த்தம்.
4. ஈசானன் என்பது வாயு சொரூபமான ஈசன் மூர்த்தம்.
5. பீமன் என்பது ஆகாய சொரூபமாக விளங்கும் இறைவன் மூர்த்தம்.
6. ருத்திரன் என்பது சூரியன் சொரூபமாக விளங்கும் மூர்த்தம்.
7. மகாதேவன் என்பது சந்திரனாய் விளங்கும் ஈசுவரமூர்த்தம்.
8. உக்கிரன் என்பது வானவருக்கும் தென்புலத்தார்க்கும் உணவளிக்கும் யாகம் செய்யும் மறைவராக விளங்கும் ஈசுவா மூர்த்தம்.
1. வாயு மனைவி சிவை. அவள் யுரோசவானைப் பெற்றாள்.
2. பீமன் மனைவி திக்கு - அவள் சக்கரனைப் பெற்றாள்.
3. ருத்திரன் (அ) சூரியன் மனைவி சுவர்ச்சலை. அவனது மகன் சனீஸ்வரன்.
4. மகாதேவன் (சந்திரன்) மனைவி ரோகிணி. அவனது மகன் புதன்.
5. அந்தணன் அமிசம் உக்கிரன் மனைவி தீக்ஷõபத்தினி அவள் மகன் சந்திரன்.
6. பவன் (பூமி) உயிர்களுக்குத் திண்மையான தேகத்தைத் தருகின்றார். பவன் மனைவி மகாதேவி சுக்கிரனை ஈன்றாள்.
7. சர்வன் பத்தினி விகோசி - அங்காரகனை ஈன்றாள்.
இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இறைவன் விளங்குவதால் அவரது திருஉருவை பக்தியுடன் மனத்திலே தியானித்து வழிபட்டு அவர் அருளைப் பெற பாடுபடவேண்டும் என்று நந்திகேசுவரர் சனத்குமாரருக்கு அஷ்ட மூர்த்திகளின் மகிமையை எடுத்துக் கூறினார்.
42. பஞ்ச பிரும்ம சொரூபம்
நந்திகேசுவரர் அடுத்து பஞ்சபிரும்ம ஸ்வரூபம் பற்றி விளக்கலானார். முத்தொழில் புரிய அருளும் அம்மையை இடமாகக் கொண்ட உமாபதி பஞ்ச பிரும்ம மாய் தோற்றம் கொண்டு இவ்வையகத்தில் நிறைந்திருக்கின்றார்.
1. ஈசான பிரும்மம் : சகல உயிர்களிலும் ஆன்மாவாக இருந்து கர்மாக்களின் பலன்களை அனுபவிப்பவராக விளங்குவது.
2. தத்புருஷ பிரும்மம் : இச்சை கொள்ளும் வகையில் ஆன்மாவை மறைக்கும் பிரகிருதியாகிய ஈசன் சொரூபம் இது.
3. அகோர பிரும்மம் : புத்தி வடிவிலே தேகத்தில் உறையும் ஈசன் சொரூபம் இது.
4. வாமதேவ பிரும்மம் : அகங்கார வடிவமாக இருப்பது.
5. சத்யோஜாத பிரும்மம் : மனம்.
செவி இந்திரியம் - ஈசன் ; த்வக் தோல் இந்திரியம் - தத்புருஷன்; கண் இந்திரியம் - அகோரன்; நாக்கு இந்திரியம் - வாமதேவன்.
வாக்கு - ஈசானன்; கைகள் - தத்புருஷன்; பாதம் - வாமதேவன்; குய்ய இந்திரியம் - சத்தியோ ஜாதர்.
இவ்வாறு நம் தேகத்திலே ஈசன் பரம்பிரம்ம சொரூபியாக ஞானேந்திரியமாக விளங்கும் பஞ்சபிரும்மமான இறைவன் கர்மேந்திரங்கள் ஐந்திலும் அவ்வாறே திகழ்கிறார். அழியாது உரையும் பரப்பிரம்மம் ஆன்மாவே.
சப்த தன் மாத்திரையை ஈசானர் தோற்றுவிக்க அதிலிருந்து ஆகாயம் உண்டாகிறது.
ஸ்பரிச தன் மாத்திரையை தத்புருஷன் உண்டாக்க, அதிலிருந்து காற்று தோன்றுகிறது. ரூப தன் மாத்திரையை அகோரன் ஏற்படுத்த அதிலிருந்து நெருப்பு உண்டாகும். ரச தன் மாத்திரையை வாமதேவன் படைக்க நீர் உண்டாகியது. சத்தியோஜதன் தந்த தன் மாத்திரையைப், படைத்து அதிலிருந்து ஆழிசூழ் உலகை உண்டாக்கினார். ஆகாய ரூபமாய் விளங்கும் ஈசானனே சர்வ வியாபியான பரமாத்மா ஆகும். ஒளி உருவாகி இனிது விளங்கும் தத்புருஷனே ஜீவாத்மா ஆகும். அழலுருவாகி உறையும் அகோரனை உடம்பாக மறைநூல் வல்லுநர் கொள்வர். கடல்நீர் உருவாகும் வாமதேவனை ஜீவாத்மா என்பர். மண்ணின் வடிவாய் விளங்கும் சத்தியோஜதன் விரிந்து நின்ற எதையும் தன்னருளால் தரித்திடுவார்.
இவ்விதமாக இருபத்தைந்து தத்துவங்களிலும் பஞ்ச பிரும்ம சொரூபியாய் விளங்கும் பரம்பொருளைச் சரணடைந்து தியானித்து பக்தியுடன் மலர்கள் முதலியவற்றைக் கொண்டு அர்ச்சித்து வழிபடவேண்டும்.
1. சதசற்பதி : சத்தாகி, அசத்தாகி அவற்றின் பதியாகி உறைபவன் அவன்.
2. அவியக்தன் : வடிவற்று இருப்பவன். அவனை நன்குணர்ந்த முனிவர்கள் அவியக்தர் எனப்படுவர்.
3. இருபத்து நான்கு தத்துவங்கள் ÷க்ஷத்ரம் என்றும் அவற்றை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் ஈசனை ÷க்ஷத்திரக்ஞன் என்றும் கூறுவர்.
அறிவாம் உயர்நித வித்தையாய், பிராநிதியாகும்; அவித்யையாய், உறை செய்கின்ற தாதாவாய், விதாதாவாய் அவற்றைக் கடந்து அழியாத முதல்வனாகி உறைபவன் பரமேச்வரனே அன்றிவேறில்லை. இவ்வாறு ஈசன் பெருமையை நந்திகேசுவரர் சனத்குமாரருக்கு எடுத்துக் கூறினார்.
43. சிவசூரியனைக் கண்ட தேவர்கள்
இறைவன் ÷க்ஷத்ரக்ஞன். அவன் பிரகிருதியுடன் சேர்ந்து காணப்படும் ரூபம் வியக்தம். அதுவே காலம். எனவே பரமன் காலரூபி எனப்படுகிறான். ஆகையால், ÷க்ஷத்ரக்ஞன் புருஷன்; பிரகிருதி பிரதானம். புருஷன் அகிலத்தைப் படைக்கும் போது ஹிரண்யகர்ப்பர் எனப்படுவார். பரிபாலிக்கும் போது தத்புருஷர் ஆவார். அண்ட பேரண்டங்களையே உருவாகக் கொள்ளும்போது விராட்புருஷன் ஆவார். ஞானிகள் உள்ளத்து உறையும் இறைவனை அந்தர்யாமி என்பர். எந்தத் தத்துவத்தையும் கடந்து விளங்கும் போது பரன் என்பர். பரமாத்மாவை பரமான்மா என்றும் குறிப்பிடுவர். ஒளிக்கதிர்கள் சூரியனிடமிருந்து தோன்றுகின்றன. அதேபோல் உலகில் எல்லாம் ஈசனிடமிருந்தே தோன்றுகின்றன. பிரம்மன் சோம யாகம் இயற்றினார். அவ்வமயம் சிவனாரை அனைவரும் ருத்திர ஜபத்தால் உள்ளம் உருகித் துதித்தார்கள். அதனால் மகிழ்ச்சி அடைந்த ஈசன், கோடி சூரியப் பிரகாசத்தோடு தோன்றினார். ஆனால் அவர்களால் பரமனை அறிய முடியாமல், அவரை யார் என்று கேட்டனர். அப்போது ஈசன் நகைத்து தானே அழியாப் பரம்பொருள் என்றும், அனைத்தும் தன் சொரூபம் என்றும் கூறி மறைந்துவிட்டார். தங்கள் துரதிருஷ்டத்தை எண்ணி வருத்தமுற்ற அவர்கள் சிவபெருமானை மனமுருகப் பிரார்த்தித்து வணங்கினர். அப்போது அங்கு ஒரு பேரொளி கோடி சூரிய பிரகாசத்தோடு விளங்க, ஒளி மண்டலத்திலே நான்கு முகங்கள் பன்னிரண்டு கரங்கள் கொண்டு தேவியுடன் காட்சி அளிக்கும் சிவ சூரியனைக் கண்டனர். மேற்குத் திசையில் வெண்ணிற சத்வோஜாத முகம். வடக்கில் சிவந்த வாமதேவன் முகம்; கிழக்கில் பொன்னிற தத்புருஷ முகம் என விளங்கிய ஈசனைக் கண்டனர். மேலும், நான்கு முகங்கள் கொண்ட பாஸ்கரன் வலப் புறத்தில் விளங்க, நான்கு முகங்களும் ஒளிதிகழ் பானு பின்புறம், கதிர் ஒளி வீசும் நான்குமுக ஆதித்தன் இடப்புறம் கொண்டு நெடுங்கதிர் விரிக்கும் நான்கு முகங்கள் கொண்ட ரவியைக் கண்டனர்.
மேலும், கிழக்கில் வித்தாரை என்னும் சக்தி, தெற்கில் சுதாரை, மேற்கில் போதினி, வடக்கில் அப்பியாயினி, பீடத்திலே தீøக்ஷ என்ற சக்தி, மின்னென ஒளிரும் சூக்ஷ்மை என்ற சக்தி, தழல் அனைய முகத்தோடு ஒளிரும் சேவை என்ற சக்தி ஆகியோருடன் சிவசூரியன் அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டனர். மேலும் பவளமேனி வீழுதி, பனி மலர் தாமரைமேனி விமலை, கோங்க மலர் மேனி குவளை விழி அமோகை எனும் சக்தி, தவளநகை வித்துதை சக்தி சூழ்ந்திருக்கக் கண்டனர். பொன் மேனியாள் பத்திரையும், பால்வண்ண மேனியாள் நான்கு முக சர்வதோமுகி மற்றும் கிரகங்கள் சூழ தேவியுடன் ஈசனைக் கண்ட தேவர்கள் அவரைப் பலவாறு துதித்து வணங்கினர். அவரை வேதியர், அரசர், வணிகர் ஆகிய மூவர்ணத்தாரும் பூசை செய்யத் தக்கவரே என்று கூறி சிவசூரியன் மறைந்து விட்டார்.
44. குருவை இழந்த தேவர்கள்
குருவில்லா வித்தை பாழ் என்பது ஒரு முதுமொழி. தேவர்களுக்கு குரு வியாழ பகவான் (அ) பிரகஸ்பதி ஆவார். ஒரு சமயம் தேவகுரு பிரகஸ்பதி இந்திரனைக் காணவந்தார். இந்திராணியிடம் அப்போது பேசிக் கொண்டிருந்த இந்திரன் அவரை வரவேற்று, மரியாதை செய்யவில்லை இதனால் கோபம் கொண்ட அவர் மறைந்துவிட்டார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் தேவர்களைத் தாக்கிட, இந்திரன் பிரமனைச் சரண் அடைந்து உதவிட வேண்ட, பிரமன் குரு சென்ற காரணத்தைக் கூறி உடனடியாக ஒரு குருவைத் தேவர்கள் முதலில் பெற வேண்டும் என்றார். பிரமனின் ஆலோசனைப்படி இந்திரன் சகல கலைகள் கற்றறிந்த துவஷ்டாவின் குமாரன் விசுவரூபனை வேண்டிட அவனும் தேவர்களுக்குக் குருவானான்.
தேவர்களுக்குக் குருவான விசுவரூபனுக்கு அசுரர் மீதும் அன்பு உண்டு. அவன் ஒரு யாகத்தைத் தொடங்கி தேவர்களுக்குச் சமமாக அசுரர்களுக்கும் அவிப்பாகம் ஒதுக்கினான். அதை வெறுத்து, எதிர்த்தான் இந்திரன். ஆனால், விசுவரூபன் தன்னை கட்டுப்படுத்த முடியாதென்று கூறி விட்டான். இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன் விசுவரூபனுடைய மூன்று தலைகளையும் துண்டித்து ஓமகுண்டத்தில் தள்ளினான். இதனால் விசுவரூபனின் தந்தை துவஷ்டா இந்திரனைப் பழி வாங்க ஒரு புருஷனைத் தோற்றுவிக்க அபிசார ஹோமம் செய்தான். அதிலிருந்து தோன்றிய விருத்திராசுரன் இந்திரனை அழிக்க எண்ணி அவன் மீது போர் தொடுக்க இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. போரில் தோற்று ஓடிய இந்திரன் பிரம்மனுடன் முறையிட அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கைவிரித்துவிட்டார். எனினும், ததீசி முனிவரின் முதுகெலும்பை எடுத்து ஆயுதமாக்கி வஜ்ஜிரமந்திரத்தால் உருவேற்றி அதைக் கொண்டு விருத்திராசுரனைச் சம்ஹரிப்பாயாக என்றார். இந்திரன் பூலோகம் சென்று ததீசி முனிவர் பாதங்களில் பணிந்து வேண்டிட, அவரும் மகிழ்ந்து தன் உயிரை யோகாக்கினியில் தியாகம் செய்திட, அவர் முதுகு எலும்பை எடுத்து ஆயுதமாக்கி அதனைப் பூசித்து, இறைவனைத் தியானித்து விருத்திராசுரனுடன் போர் செய்து அவனைக் கொன்றான்.
அசுரபயம் நீங்கிய இந்திரன் இறைவன் திருவருளைப் போற்றிக் கொண்டாடினான். பிரகஸ்பதி இருக்கும் இடம் அடைந்து அவரை வணங்கி தன் அபசாரத்தை மன்னித்து முன் போல் குருவாக இருந்து அருள் புரிய வேண்டினான். பிரகஸ்பதியும் கோபம் தணிந்து மறுபடியும் தேவர்கள் குருவானார். சூரியன் வச்சிர மந்திரத்தை ஜபித்து, தினமும் தன் பாதையில் குறுக்கிடும் அரக்கர்களை ஒழித்து பொன்னொளி வீசுகின்றான். வஜ்ஜிர மந்திரத்தைப் பக்தியோடு ஜபிப்பவர் பகை யாவும் ஒழிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
45. தானங்கள் மூலம் சிவப்ரீதி
தூய உள்ளத்தோடு சிவனை வழிபட்டு தானம் செய்வோர்க்கு அவர் அருள் கிட்டும். பரமனுக்குப் பிரீதியாக மன்னன் அளிக்கவேண்டிய தானங்கள் பதினாறு ஆகும். விவரம் அறியவும்.
1. இரணிய அசுவ தானம் : நூற்றெட்டு (அ) ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்னால் அழகிய குதிரை செய்து, அதற்கு வெள்ளியால் முகபடாமும், கால்குளம்புகளுக்குப் பட்டயமும் கட்டி மலர் மாலைகளால் அலங்கரித்து ஒரு மண்டபத்தின் நடுவே உள்ள மேடையில் வைத்து முறைப்படி அர்ச்சித்து பூஜை செய்து, ஒழுக்கமான அந்தணனை வருவித்து ஆசனத்தில் இருத்தி சகல உபசாரங்களும் செய்து பூஜித்து வழிபட்டு வணங்கி பொன் குதிரையுடன் ஐந்து கழஞ்சு பொன் தக்ஷணையும் சேர்த்துத் தர வேண்டும்.
2. இரணிய கர்ப்பதானம் : மண்டபம் அமைத்து அதன் நடுவில் ஆயிரம் கழஞ்சுப் பொன்னாலான கலசத்தை அமைத்து, அதன்மீது ஐநூறு கழஞ்சுப் பொன்னாலான மூடியை அமைக்க வேண்டும். உளுந்தைக் கீழே பரப்பி அதன் மீது கலசத்தை வைத்து, அதனை அரி, அயன், அரன், உமையாகவும், இருபத்து நான்கு தத்துவங்களாலும் நினைத்து, இருபத்தாறாவது தத்துவமாக அதன் மூடியை எண்ணி கலசத்தில் பஞ்சகவ்வியம் விட்டு மூடிவிடவேண்டும்.
பின்னர், ஓமகுண்டத்தில் பஞ்சப் பிரம்ம மந்திரத்தால் ஓமம் செய்து தக்காரைக் கொண்டு விருப்புடன் செய்ய வேண்டும். தன்னை இருபத்தைந்தாம் தத்துவமாய் விளங்கும் புருஷனாய் நினைத்து கலசத்தைத் தொட்டு கிழக்கு நோக்கி அமர்ந்து சிவகாயத்திரியை ஜபிக்க வேண்டும். மறுநாள் காலை புனித நீராடி புரோகிதரைக் கொண்டு அக்கலசத்துக்குக் கர்ப்பாதானம், சீமந்தம் செய்வித்து, அதன் வலப்புறம் அத்திப் பழச்சாறைப் பிழிந்திட வேண்டும். அந்தணர்களுக்கு அறுசுவை உண்டி அளிக்கவேண்டும். முப்பது கழஞ்சுப் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும், நூறு கழஞ்சுப் பொன்னும் புரோகிதருக்கு அளிக்க வேண்டும். மற்றவர்களுக்குப் பத்துக் கழஞ்சு பொன் தக்ஷிணை அளிக்கவேண்டும்.
3. இரணிய கன்னிகா தானம் : அரசன் ஒரு சிறந்த மறைகுலத்தில் பிறந்த பெண்ணைத் தன் பெண்ணாக பாவித்து, மறைகள் கற்றுத் தேர்ந்த உத்தம வேதியர் குல பிரம்மச்சாரிக்கு கன்னிகாதானம் செய்துவிக்க வேண்டும். பெண்ணுக்கும், பிள்ளைக்குமான துணி, மணி, நகை அனைத்தையும் அளித்து அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்வித்து, அந்த நூதன தம்பதியர் எக்குறையும் இன்றி மனமொத்து நல்லதோர் புதிய வாழ்க்கை தொடங்கி நடத்த வேண்டிய தேவையான பொருள்களைக் கொடுத்திட வேண்டும்.
4. இரணிய ரிஷபதானம் : ஆயிரம் (அ) நூறு கழஞ்சு பொன்னில் ஒரு ரிஷபம் செய்து, கொம்புகளுக்கு வெள்ளிக் கவசம், வாலில் முத்துக்கள், கழுத்தில் பதுமராகம், உடலில் கோமேதகம் ஆகியவற்றை ஒளி சிந்தப் பதித்து மண்டபத்தின் நடுவில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். ஈசனைப் பூஜித்து, ரிஷபத்தைத் தக்ஷிணையோடு மறையவருக்குத் தானம் செய்ய வேண்டும்.
5. கணபதி தானம் : நூறு கழஞ்சு பொன்னாலான கணபதியை அழகாகச் செய்து மண்டபத்தின் நடுவில் பீடத்தில் வைத்து உள்ளம் கனிந்து பூஜை செய்ய வேண்டும், ஈசனையும், அஷ்டதிக் பாலர்களையும் அந்தந்த திக்கிலே அமைத்து வணங்கி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அடியேன் வல்வினைகளை எல்லாம் தீர்த்தருள்வாய் என்று பிரார்த்திக்க வேண்டும்.
எட்டு குண்டங்களில் ஓமம் செய்து. ஏழு மறையவர்களுக்கு அவர்கள் மனைவியருடன் பூஜை செய்து, ஆபரணங்கள் செய்து திருப்திபடுத்த வேண்டும். கணபதி பிரதிமையைத் தக்ஷிணையுடன் புரோகிதருக்கு தானம் செய்ய வேண்டும்.
6. கற்பக விருக்ஷ தானம் : நூறு கழஞ்சு பொன்னால் ஒரு கற்பக தருவைச் செய்து அதன் கிளைகளில் கோமேதகம், நீலம் போன்ற ஒளி மணிகளைப் புதைக்க வேண்டும். தளிர்கள் பவழத்தாலும், முனைகள் மரகதத்தாலும், மலர்கள் புஷ்பராகத்தாலும், கனிகள் பதுமராகத் தாலும் அழகுற அமைத்து, பட்டாடை களால் அலங்கரித்து மண்டபத்தின் நடுவே பிரதிஷ்டை செய்து ஓமம் வளர்த்து முறைப்படி சிவலிங்கத்தைப் பூசை செய்ய வேண்டும்.
அந்தக் கற்பகத் தருவை சிவப்பிரீதியாக ஆலயத்தில் சேர்ப்பிக்கலாம் அல்லது கற்றறிந்த மறையவருக்குத் தானமாக அளிக்கலாம். தானத்துக்குப் பின் சிவலிங்கத்துக்கு ஆயிரம் குடம் பாலாபிஷேகம் செய்து பிராமண போஜனம் செய்விக்க வேண்டும்.
7. சொர்ண கஜதானம் : ஆயிரம் (அ) ஐநூறு கழஞ்சாலான யானை ஒன்றைச் செய்து மண்டபத்தின் நடுவில் வைத்துப் பூசை செய்ய வேண்டும். பின்னர் உமா மகேச்வரனைப் பூஜை செய்து அந்தச் சொர்ண கஜத்தை ஒரு சிவாலயத்திற்கு அளிக்க வேண்டும். இன்றேல் நான்மறை உணர்ந்த வேதியருக்குத் தானம் கொடுக்கலாம். மீண்டும் இறைவனைப் பூஜித்து மறையவர்களுக்கு சமாராதனை நடத்த வேண்டும்.
8. சொர்ண தேனு தானம் : ஆயிரம், ஐநூறு, இருநூற்றைம்பது, நூற்றுஒன்று என (சக்திக்கேற்றவாறு) உபயோகித்து ஒரு பசு பொன்னால் அமைக்க வேண்டும். கொம்புகளில் பதுமராகம், குளம்புகளில் வைரங்கள், புருவ நடுவில் முத்து, காலில் வைடூரியம், பற்களில் புஷ்பராகம் ஆகியவை அலங்காரமாய் பதித்திடல் வேண்டும். அதன் அளவில் பத்தில் ஒரு பங்கு உடைய கன்று ஒன்றும் செய்து அதனருகில் வைக்க வேண்டும்.
பின்னர் மண்டபத்தின் நடுவில் பீடத்தில் தேனுவையும், கன்றையும் வைத்து ஆடை, அணிகலன்களால் அலங்கரித்து, தூபதீப நைவேத்தியங்களுடன் பூஜை ஓமத்துடன் செய்து இறைவனை வணங்கித் தியானித்து அந்தப் பசு, கன்று இரண்டையும் மறைவழி தவறாது நடக்கும் வேதியருக்கு முப்பது கழஞ்சுப் பொன் தக்ஷிணையுடன் அளிக்க வேண்டும்.
9. சொர்ணபூமி தானம் : அரசு, வில்வம், பலாசு, கருங்காலி எனப்படும் மரங்களில் ஒன்றால் மண்டபம் அமைத்து, ஆயிரம் கழஞ்சுப் பொன்னால் ஒரு சதுரம் ஏற்படுத்தி, அதன் நடுவில் மேரு பர்வதம், ஏழுகடல், ஏழு தீவுகள் உள்ள மலைகளையும், கண்டங்களையும் அமைத்து விதிப்படி பூசை செய்ய வேண்டும். பூஜை முடித்து பூமியின் அளவில் ஏழில் ஒரு பங்கு சொர்ணத்துடன் எள்ளையும் தானமாக புரோகிதருக்கு அளிக்கவேண்டும்.
10. திக்குபாலகர் தானம் : எட்டு குண்டங்களுடன் ஒரு மண்டபம் அமைக்கவேண்டும். வேதியர் எட்டுப் பேரை திக்குபாலகர்களாக நினைத்துப் பூஜை செய்ய வேண்டும். அவர்களுக்கு நடுவே ஈசனை லிங்கத்தில் ஆவாகனம் செய்து பூசை புரிய வேண்டும். திக்குப் பாலகர்களுடைய மந்திரத்தால் ஓமம் விதிப்படி செய்யவேண்டும். ஒவ்வொருவருக்கும் பத்துக் கழஞ்சு பொன்னால் ஆன விமானமும், பத்துக் கழஞ்சு தக்ஷிணையும் கொடுத்து மறையவர்களை கவுரவிக்க வேண்டும். தங்கள் வெவ்வினைகள் நீங்கிட பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். மறுபடியும் சிவ பூஜை செய்து அந்தணர்களுக்கு அமுது அளிக்க வேண்டும்.
11. திலபத்ம தானம் : இதில் எள்ளும் தாமரையும் இருப்பதால் இந்தத் தானம் இப்பெயர் பெற்றது. தூய இடத்தில் பசுஞ்சாணத்தால் மெழுகி, வெள்ளைப் பட்டை விரித்து அதன் மீது மூன்று கல அளவு எள்ளைக் குவிக்க வேண்டும். அதன் நடுவே மூன்று கழஞ்சு பொன்னால் உமையின் பிரதிமையைச் செய்து பிரதிஷ்டிக்க வேண்டும். பிறகு உமாமகேச்வரரை முறைப்படி பூஜை செய்து அந்தணருக்கு எள்ளுடன் பொற்றாமரையையும், உமையவள் பிரதிமையையும், தக்ஷணையுடன் தானம் செய்யவேண்டும்.
12. திலபர்வத தானம் : திலம் - எள்; பர்வதம் - மலை. எள்ளை மலை போல் குவித்து வைத்துப் பூசைக்குப் பின் தானம் செய்வதால் இதற்கு இப்பெயர் வந்தது. பத்து சாண் அளவு தண்டம் மண்டப நடுவில் ஏற்பாடு செய்து அது முற்றிலும் மறையுமாறும், அதற்கு மேலும், அதற்குக் குறைவாகவும் எள்ளைக் குவித்து, அதன் மீது யந்தரம் வரைந்து, புத்தாடையால் மூடி தும்பைப் பூ வைத்து அதன் மீது ஈசன் பள்ளி கொள்வதாக எண்ணி ருத்திரரைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் பூஜை செய்யவேண்டும். பின்னர் மறையோருக்கும், புரோகிதருக்கும் தக்ஷிணை வழங்கி திலபர்வத தானம் தரவேண்டும்.
13. துலாபுருஷ தானம் : பூஜை, ஜபம் ஆகியவை அனைத்தும் பூர்ணகுதியோடு முடிவு பெற்ற பிறகு வேதியர்கள் மறைகள் கொண்டு ஆசீர்வதிக்க, வாத்தியங்கள் முழங்க, சர்வ அலங்காரங்களுடன் கிழக்கு முகமாக ஒரு தட்டிலே மன்னன் அமரவேண்டும். மற்றொரு தட்டில் மன்னன் எடைக்குப் பொன்னை வைத்து அதனை அந்தணர்களுக்குத் தானமாக வழங்க வேண்டும். புரோகிதருக்கு நூறு கழஞ்சு பொன்னும், மறையவர்களுக்குத் தலா பத்துக் கழஞ்சு பொன்னும் கொடுத்து கவுரவிக்க வேண்டும். சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
14. லக்ஷ்மி தானம் : ஆயிரம், ஐநூறு (அ) நூற்றி எட்டு கழஞ்சில் லக்ஷ்மியின் திருஉருவம் செய்து மண்டபத்தில் பீடம் மீது அமர்த்தி முறைப்படி பூசனை புரிய வேண்டும். திருமகளுக்குத் தெற்கில் திருமாலை ஆவாகனம் செய்து இருவரையும். பூஜை செய்ய வேண்டும். பின்னர் அப்பிரதிமையை அன்புடன் கையில் தாங்கி, அதில் இருப்பதில் ஒரு பங்கு பொன் சேர்த்து நான்மறைகள் கற்றுணர்ந்து அறவழி பிழையாது நடக்கும் அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டும்.
15. பசுக்கள் ஆயிரம் தானம் : ஆயிரம் பசுக்களைக் கன்றுடன் கொண்டு வந்து கொம்பு, முகம், கழுத்துக்கு நூற்றொரு கழஞ்சுப் பொன்னால் அணிகள் செய்து அணிவிக்க வேண்டும். கால்களில் குளம்புகளுக்கு வெள்ளியில் பட்டை கட்டி மாலைகளால் அலங்கரித்து, அவற்றை விதிப்படி பூஜை செய்து பசு ஒன்றுக்குப் பத்துக் கழஞ்சு பொன் தக்ஷிணையோடு ஆயிரம் வேதியர்களுக்குத் தானம் செய்யவேண்டும்.
16. விஷ்ணு பிம்ப தானம் : எல்லாத் தானங்களிலும் உயர்ந்தது இதுவாகும். இதில் ஆயிரம் கழஞ்சு பொன்னால் மாதவன் பிம்பம் செய்து, ஈசனைத் தியானித்து மாதவனை அர்ச்சித்து, ஓமம் செய்து மறைகள் உணர்ந்த மறையோனுக்கு அந்தப் பிம்பத்தைத் தக்ஷிணையுடன் தானம் செய்ய வேண்டும்.
லிங்க புராணம் முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்






































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக