புதன், 20 ஜூன், 2012

நாலாயிர திவ்விய பிரபந்தம் - மூன்றாவதாயிரம்


ராதே கிருஷ்ணா 21-06-2012



நாலாயிர திவ்விய பிரபந்தம் 
நாலாயிர திவ்விய பிரபந்தம்









மூன்றாவதாயிரம் பகுதி-1



பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி
இயற்பா: பொய்கையாழ்வார் காஞ்சீபுரத்தில், ஒரு பொய்கையிலுள்ள தாமரை மலரில் தோன்றினார். அப்பொய்கை யதோக்தகாரி சன்னதி அருகில் உள்ளது. இவர் ஐப்பசித் திருவோணத்தில் பிறந்தார். அடியவர்கள் வாழ அருளிய இப்பிரபந்தம் அந்தாதித் தொடரில் அமைந்துள்ளது.
முதல் திருமொழி
தனியன்
முதலியாண்டான் அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
அடியவர்கள் வாழ இயற்றினார் பொய்கையார்
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு-வையத்து
அடியவர்கள் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து.
இடர் நீங்க இப்பாமாலை சூட்டினேன்
2082. வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.
எல்லாவற்றையும் படைத்தவன் நீ
2083. என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.
நீ கண்ட நெறியை நான் அறியேன்
2084. பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.
ஐம்பொறிகளை அடக்கினால் உன்னை அறியலாம்
2085. நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
ஆலமமர் கண்டத் தரன்.
அரனும் அரியும் ஒருவனே
2086. அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,
உரைநூல் மறையுறையும் கோயில், - வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று.
பகவானை மறப்பேனோ?
2087. ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.
எல்லாம் படைத்தவன் கண்ணன்
2088. திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்
திசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க்
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த,
காரோத வண்ணன் படைத்த மயக்கு.
போரில் சூரியனை மறைத்தவன்
2089. மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்
தியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள்
தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,
போராழிக் கையால் பொருது?
வராகாவதாரம் எடுத்தவன்
2090. பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்?
மண்ணும் விண்ணும் விழுங்கியவன்
2091. மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்?
திருமாலையே வாழ்த்தித் தொழுவேன்
2092. வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது  தாந்தொழா - பேய்முலைநஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
காணாகண் கேளா செவி.
வராகனே எல்லாம் ஆனவன்
2093. செவிவாய் கண்மூக் குடலென் றைம்புலனும்
செந்தீபுவிகால் நீர்வண் பூதமைந்தும் -அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே
ஏனமாய் நின்றாற் கியல்வு.
ஆதியாய் நின்றவர் திருமாலே
2094. இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர்.
உலகளந்தவர் உருவமே ஆதியானது
2095. அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி, இவரிவ
ரெம்பெருமா னென்று, - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த
மூர்த்தி யுருவே முதல்.
மூவரில் முதல்வன் கடல் வண்ணனே
2096. முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய
நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,
பல்லார் அருளும் பழுது.
அரவணைத் துயில்பவனையே தொழுதேன்
2097. பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்,
கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்
அடலோத வண்ணர் அடி.
திரிவிக்கிரமன் உலகளந்த விதம்
2098. அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,
முடியும் விசும்பளந் ததென்பர், - வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா னுலகளந்த நான்று
கண்ணபிரானின் திருவிளையாடல்கள்
2099. நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,
பொருது டைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால்.
கடலே! நீ என்ன தவம் செய்தாய்!
2100. மாலுங் கருங்கடலே என்நோற்றாய், வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று.
செங்கண்மால் திருவடிகளையே யாவரும் வணங்குவர்
2101. பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,
செற்றார் படிகடந்த செங்கண்மால், - நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,
நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.
மனமே! பகவானின் திருவடிகளையே அடைந்திடு
2102. நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,
சென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும்
படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,
அடையாழி நெஞ்சே அறி.
கண்ணா! உன் லீலைகளை உலகமே அறியும்
2103. அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,
பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும்
காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,
தாம்பேகொண் டார்த்த தழும்பு.
மாலே! உன் அடையாளம் எங்கும் உள்ளது
2104. தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த
பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல்.
கண்ணா! என்னே நின் திருவிளையாடல்!
2105. விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி
உரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா
தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?
ஓங்கோத வண்ணா. உரை.
திருமாலையே என் உள்ளம் துதிக்கும்
2106. உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரகதமே போல, - திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி யெழும்.
திருவேங்கடமலையே தேவர் நினைக்கும் மலை
2107. எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.
திருமால் திருக்கைகளின் தீரச்செயல்கள்
2108. மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,
சிலையால் மராமரமேழ் செற்று, - கொலையானைப்
போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
காக்கோடு பற்றியான் கை.
எல்லோரும் உன் உடலில் கூறுகள்
2109. கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்
தைய மலர்மகள்நின் னாகத்தாள், - செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
இறையான்நின் ஆகத் திறை.
செங்கண்மாலே எல்லாமானவன்
2110. இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,
அறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,
செங்கண்மால் கண்டாய் தெளி.
திருத்துழாயான் திருவடிகளையே பெரியோர் நாடுவர்
2111. தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.
அரியின் அடிகளையே எண்ணுக
2112. புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,
அரியுருவும் ஆளுருவுமாகி, - எரியுருவ
வண்ணத்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால்,மற்
றெண்ணத்தா னாமோ இமை?
அரவணையானை எல்லாத் தேவர்களும் நினைவர்
2113. இமையாத கண்ணால் இருளகல நோக்கி,
அமையாப் பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல்,
ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்
நாகத் தணையான் நகர்.
வேதங்களை அருளியவன் பெயரையே நினைக
2114. நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்
பகர மறைபயந்த பண்பன், - பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,
அந்தியா லாம்பனங் கென்?
கண்ணா! நீ யசோதையிடம் பால் குடித்தது உண்மையா?
2115. என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்
முன்னொருவ னாய முகில்வண்ணா, - நின்னுருகிப்
பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலைதந்த ஆறு?
நெடுமாலே! எங்கள் சொற்குற்றங்களை மன்னித்துவிடு
2116. ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,
கூறிய குற்றமாக் கொள்ளல்நீ - தேறி,
நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து
முடியான் படைத்த முரண்?
மாவலியிடம் மண் வேண்டிய மாயம் என்னே!
2117. முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்
தரணி தனதாகத் தானே - இரணியனைப்
புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ
மண்ணிரந்து கொண்ட வகை?
திருமால் உகந்த ஊர் திருப்பதியே
2118. வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, - திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்.
திருமால் வாழுமிடம் திருவேங்கடமே
2119. ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
பேர எறிந்த பெருமணியை, - காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
என்னென்ற மால திடம்.
நாரணன் செய்த செயல்கள் எத்துணை!
2120. இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது.
வேங்கடமே திருமாலின் குன்று
2121. பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புனம்துறந்த வேழம், - இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்
கோன்வீழ கண்டுகந்தான் குன்று.
குற்றங்களையும் குணமாகக் கொள்பவன் ஆழியான்
2122. குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு.
திருமால் திருமகளையே பெரிதும் நினைக்கின்றார்
2123. திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?
திருத்துழாயானைப் பூசித்தால் மனமாசு தீரும்
2124. மனமாசு தீரு மறுவி னையும் சார,
தனமாய தானேகை கூடும், - புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
தாம்தொழா நிற்பார் தமர்.
அடியார்கள் உகந்த உருவம் கொண்டவன் பகவான்
2125. தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம்.
மனமே! பரமனின் பண்பை நாமே அறியலாம்
2126. ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, - பூமேய
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,
பாதமத்தா லேண்ணினான் பண்பு.
யாவரும் அரியின் அடிகளையே பணிவர்
2127. பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,
வெண்புரிநூல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்
போகத்தால் பூமியாள் வார்.
பகவானின் திருவடிகளை மெய்ஞ்ஞானத்தவரே காண்பர்
2128. வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீஇ, - கூரிய
மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்.
நெஞ்சே ! ஆழியான் அடிசேர மகிழ்ச்சி கொள்
2129. கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,
சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,
மருவாழி நெஞ்சே மகிழ்.
பகவானை அடையப் பல முயற்சிகள் வேண்டும்
2130. மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,
நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், - முகில்விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்
ஆதிகாண் பார்க்கு மரிது.
புலனடக்கிப் பூசித்தால் ஆழியானைக் காணலாம்
2131. அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்
பரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்
ஏற்றானைக் காண்ப தெளிது.
நரசிம்மன் என்ற பெயரை நினை
2132. எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்
பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண்.
யாவரும் எப்போதும் திருமாலைத் தொழுவர்
2133. எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,
வண்ண மலரேந்தி வைகலும், - நண்ணி
ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று.
ஆதிசேஷனின் தொண்டு
2134. சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்
புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு.
திருமால் செய்த அருஞ்செயல்கள்
2135. அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குடம்முலைமல் குன்றம், - கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்
டட்டெடுத்த செங்கண் அவன்.
பக்தர்கட்குத் துன்பமே வராது
2136. அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்
அவன்தமரே யென்றொழிவ தல்லால், - நமன்தமரால்
ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்.
எம்மானை யாரே அறிவார்?
2137. பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை,
ஆரே அறிவார்? அதுநிற்க, - நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்
அடிக்கமலந் தன்னை அயன்.
நமோ நாரணா! என்று சொல்லக் கற்றேன்
2138. அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,
உயநின் திருவடியே சேர்வான், - நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,
சொன்மாலை கற்றேன் தொழுது.
மனமே! பரமனைத் தொழு எழு
2139. தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,
எழுதும் எழுவாழி நெஞ்சே, - பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,
அந்தரமொன் றில்லை அடை.
துன்பங்கள் தீரப் பரமனடி சேர்
2140. அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், - நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்
தன்விலங்கை வைத்தான் சரண்.
உலகம் ஆழியானையே அறியும்
2141. சரணா மறைபயந்த தாமரையா னோடு,
மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், - அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,
ஓராழி சூழ்ந்த வுலகு.
திருமாலின் படைப்பே யாவையும்
2142. உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும், - உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்
புந்தியி லாய புணர்ப்பு.
அரவணையானுடைய தோளின் செயல்கள்
2143. புணர்மருதி னூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து,
மணமருவ மால் விடையேழ் செற்று, - கணம்வெருவ
ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,
சூழரவப் பொங்கணையான் தோள்.
என் அவயங்கள் பரமன் தொடர்பையே நாடும்
2144. தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,
கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், - நாநாளும்
கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,
நாணாமை நள்ளேன் நயம்.
திருமாலையே நான் துதிப்பேன்
2145. நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
உயவேன் உயர்ந்தவரோ டல்லால், - வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
வருமாறென் நம்மேல் வினை?
பகவானை வணங்குவோர் அடையும் பயன்கள்
2146. வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், - நினைதற்
கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்.
திருமாலின் திருநாமத்தைக் கற்று ஓது
2147. காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும், - வேலைக்கண்
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,
பேராழி கொண்டான் பெயர்.
மலர்மகள் மணாளனையே நம் உணர்வு நோக்கும்
2148. பெயரும் கருங் கடலே நோக்குமாறு, ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,
ஒருவனையே நோக்கும் உணர்வு.
பகவானே! உன் பெருமைகளை உணர்பவர் யார்?
2149. உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,
உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீகிடந்த பால்?
நீ படுத்திருந்த ஆலிலை தாங்கிய மரம் எங்குள்ளது?
2150. பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், - ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ?
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.
திருமாலையே மந்திரத்தால் சொல்லு
2151. சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு,
சொல்லுந் தனையும் திருமாலை, - நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,
நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.
நெஞ்சமே! அவனன்பையே வேண்டினேன்
2152. நன்றுபி ணிமூப்புக் கையகற்றி நான்கூழி,
நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,- என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்,
அடலாழி கொண்டான்மாட் டன்பு.
என் அவயவங்கள் ஆழியானையே அணுகுகின்றன
2153. அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், - முன்பூழி
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ்.
மனமே! துழாயானையே கருது
2154. புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, - திகழ்நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,
உடலும் உயிருமேற்றான்.
பகவானே யாவருக்கும் காவல்
2155. ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.
திருமாலைச் சிந்திப்பவர்க்குத் துன்பமே இல்லை
2156. காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச்
சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி.
பரமபதம் அளிக்கும் இடம் வேங்கடம்
2157. வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த
சீரான் திருவேங் கடம்.
பகவானே என்றால் துன்பம் நீங்கும்
2158. வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்.
பரமனின் தாள்களைத் தொழு
2159. இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை
பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.
பழிப்பது யாரை?
2160. கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,
மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்
ஆரங்கை தோய அடுத்து?
மாமேனி மாயவனுக்கே அடிமையாகு
2161. அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,
படுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை,
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,
அல்லாதும் ஆவரோ ஆள்?
பரமன் பெயரே நரகத்தைத் துரத்தும்
2162. ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,
வாளமர் வேண்டி வரைநட்டு, - நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை?
இராமபிரானுக்குரிய மலை வேங்கடமே
2163. படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்
தொடையலோ டேந்திய தூபம், - இடையிடையின்
மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்
மான்மாய எய்தான் வரை.
பசுக்களைக் காத்து ஏழு காளைகளை எதிர்த்தாயே!
2164. வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்
நிரைவிடையேழ் செற்றவா றென்னே, - உரவுடைய
நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,
பேராழி கொண்ட பிரான்?
எம்பிரானே! உன் பெருமை யாரறிவார்?
2165. பிரான்உன் பெருமை பிறரா ரறிவார்?,
உராஅ யுலகளந்த ஞான்று, - வராகத்
தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை
அடிக்களவு போந்த படி?
மனமே! நீ எங்ஙனம் பாம்பணையானைக் கண்டுகொள்வாய்
2166. படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்
கொடிகண் டறிதியே? கூறாய், - வடிவில்
பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,
நெறிநின்ற நெஞ்சமே நீ.
திருக்கோவலூரில் திருமால் நின்ற பான்மை
2167. நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா, - வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி .
பரமனைக் காண வழி கிடைத்துவிட்டது: இனி நரகமில்லை
2168. இனியார் புகுவா ரெழுநரக வாசல்?
முனியாது மூரித்தாள் கோமின், - கனிசாயக்
கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,
நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.
ஆழியான் அடிகளையே நாடிச் சூடுவேன்
2169. நாடிலும் நின்னடியே நாடுவன், நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும்
பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,
என்னாகி லென்னே எனக்கு?
பரமன் அருளாலேயே பரமனைக் காணலாம்
2170. எனக்கா வாரா ரொருவரே, எம்பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,
மாமேனி காட்டும் வரம்.
மாதவ! நீ இரணியனைப் பிளந்த பான்மை சிறந்தது
2171. வரத்தால் வலிநினைந்து மாதவநின் பாதம்,
சிரத்தால் வணங்கானா மென்றே, - உரத்தினால்
ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,
ஓரரியாய் நீயிடந்த தூன்?
பரமனே! நின் அடிசேராதார்க்குச் சுவர்க்கம் இல்லை
2172. ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,
ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், - ஏனத்
துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,
மருவாதார்க் குண்டாமோ வான்.
பகவானே! வெண்ணெயால் உன் வயிறு நிரம்பியதே!
2173. வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு.
ஆழியானே! நீ இரணியனைப் பிளந்தது பிரமாதம்!
2174. வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய்மடுத்த தென்நீ, - பொறியுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்
சேவடிமே லீடழியச் செற்று.
பரமனே! உன்னையே என் நாக்கு ஏத்தும்
2175. செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,
மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,
இறையேனும் ஏத்தாதென் நா.
நமோ நாராயணா என்பதே சிறந்த மந்திரம்
2176. நாவாயி லுண்டே நமோநார ணா என்று,
ஓவா துரைக்கு முரையுண்டே, - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்
தீக்கதிக்கட் செல்லும் திறம்.
செங்கண்மாலே எல்லாம் ஆவான்
2177. திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,
அறம்பாவ மென்றிரண்டு மாவான், - புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,
கண்டாய் கடைக்கட் பிடி.
பரமனே! யாவரும் நின்னருளையே நாடுவர்
2178. பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்
அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, - பொடிசேர்
அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.
அரியும் சிவனும் ஒருவரே
2179. பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும், - என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன்.
உள்ளத்தில் உள்ளவன் திருமாலே
2180. உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் - துளன்கண்டாய்,
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளனென் றோர்.
மனத்தில் மாயவனையே வைத்திடு
2181. ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
மாயவனை யேமனத்து வை.
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்

பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி

முதலாழ்வார்களில் நடுநாயகமாக விளங்குகிறவர் பூதத்தாழ்வார். இவர் மாமல்லபுரம் என்ற திருக்கடல்மல்லையில் மாதவிப் பந்தலில் உள்ள ஒரு குருக்கத்தி மலரில் தோன்றினார்; எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக்கொண்டே ஸத்தைப் பெற்றவர். இவரது நட்சத்திரம் ஐப்பசி அவிட்டம். இவர் அன்பைத் தகளியாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், பகவானைப் பற்றிய சிந்தையை இடுதிரியாகவும் கொண்டு ஞான விளக்கு ஏற்றியவர். இவரும் ஒரு யோகியாக விளங்கினார்.
தனியன்
திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
பூதத்தாழ்வார் திருவடிகளை வணங்கினேன்
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை-நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங் கழல்.
ஞான விளக்கை நான் ஏற்றினேன்
2182.அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
நாரணன் பேர் சொன்னால் தேவராகலாம்
2183. ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு.
பரமன் பாதம் பணிவோர் புகழ் பெறுவர்
2184. பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்.
மலர்கொண்டு பணிந்தேன்
2185. நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி.
திருமாலே! நின்னடி எங்குள்ளது?
2186. அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து.
ஐம்புலனடக்கி அருச்சித்தால் அவனடி காணலாம்
2187. அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
காரோத வண்ணன் கழல்.
ஆழியான் மலரடியை நினை
2188. கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே உகந்து.
பேய்ச்சியிடம் பாலுண்ட பான்மை என்னே!
2189. உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, - உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
அலைபண்பா லானமையால் அன்று.
யசோதைக்கு என்ன கைம்மாறு உண்டு?
2190. அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,
பெருமுறையா லெய்துமோ பேர்த்து.
உயிர்க் காவலன் நீயே
2191. பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை.
நெடுமாலே ! நின்னை வணங்கினால் பேரின்பம் கிட்டும்
2192. கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்.
அரவணையான் பாதமே ஏத்து
2193. அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து.
கஜேந்திரன் பேரருள் பெற்றானே!
2194. தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் பு கொண்டு,அன் - றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு.
மக்களே! பரமனை வணங்கிப் பரிசுத்தம் அடையுங்கள்
2195. பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.
தேரோட்டி, மானைத் துரத்தினான்: ஓய்வு தேவை தானே!
2196. திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு.
மனத்தில் திருமாலை வை
2197. தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று.
குறைதீர்ப்பவன் திருமால்
2198. மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,
சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு.
தாமரைக் கண் மால் செய்த செயல்கள்
2199. கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிற லோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு.
சகடாசுரனை வென்றாயே
2200. வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி.
நாரணன் நாமங்களை ஏத்தி பெறுக
2201. பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம்.
வாமனன் தாள் சேர்ந்தால் நரகம் இல்லை
2202. தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, - வாமன்
திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே
அருநரகம் சேர்வ தரிது.
முயன்றால் பரமன் அருள் கிட்டும்
2203. அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.
ஞாலம் அளந்தவன் யாவரையும் வாழ்விப்பான்
2204. தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.
பஞ்ச பூதங்களாகவும் இருப்பவன் பரமனே
2205. அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்,
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், - அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத,
சீற்றத்தீ யாவானும் சென்று.
இராமபிரான் நின்ற இடம் வேங்கடமே
2206. சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,
கொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்
வாயோங்கு தொல்புகழான் வந்து.
தேவர்கட்கும் வாழ்வளிப்பவன் பரமனே
2207. வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், - உந்திப்
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,
படியமரர் வாழும் பதி.
மனம் திருமாலையே தேடியோட வேண்டும்
2208. பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம்.
கண்ணனே வேங்கடத்திலும் அரங்கத்திலும் உள்ளான்
2209. மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்.
இலங்கையை அழித்தவனே கண்ணன்
2210. மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
அகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ.
திருமாலின் திருவிளையாடல்கள்
2211. நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,
நீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,
பேரோத மேனிப் பிரான்.
அருச்சனை செய்தால் அரியின் உருவைக் காணலாம்
2212. பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு, - வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.
திருமாலே! நின்னைப் போற்றி மகிழ்வுற்றேன்
2213. மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.
வேங்கடவனையே நான் பணிந்தேன்
2214. துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால், - பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
வாய்திறங்கள் சொல்லும் வகை.
என் பாக்கியத்தால் உனக்கு அடிமைப் பட்டேன்
2215. வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி.
நின் பெருமையை விரும்பினால் ÷க்ஷமம் உண்டாகும்
2216. இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று
காமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது.
மனமே! மண்ணுண்டானையே நினை
2217. சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர், - அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டேன் னெஞ்சே. இரு.
பாவங்கள் நீங்கும் வழி நின்னைப் பணிதலே
2218. இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,
திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லா மெமக்கு.
எப்போதும் மாதவன் பேர் ஓது
2219. எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,
தமக்கென்றும் சார்வ மறிந்து , - நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லோத்து.
வேதம் ஓதுக; இல்லையேல் மாதவன் பேர் ஓதுக
2220. ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,
உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.
விரைவில் திருமாலை நினையுங்கள்
2221. சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
போகத்தா லில்லை பொருள்.
மணிவண்ணன் பாதங்களை நினை
2222. பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளா லறமருளு மன்றே, - அருளாலே
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
நீமறவேல் நெஞ்சே நினை.
திருமாலையே யான் என்றும் நினைப்பேன்
2223. நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,
துறந்தார் தொழுதாரத் தோள்.
வீராதி வீரனும் முடிவில் பரமனடியில் வீழ்வான்
2224. தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும்,
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே என்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு?
மாதவன் பேரையே ஓதி நினை
2225. சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு.
யாவரும் வேங்கடவனையே வணங்குவர்
2226. உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,
தளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பயின்று.
திருமால் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள்
2227. பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்.
அரியின் பாதம் தொழுது எழுமின்
2228. மாலை யரியுருவன் பாத மலரணிந்து,
காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து.
திருமாலிருஞ் சோலையைத் திருமால் விரும்பினான்
2229. உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை.
நெஞ்சே! கண்ணனையே அழை
2230. மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
அஞ்சாதென் னெஞ்சே அழை.
திருமாலே ஆயவனும் யாதவனும்
2231. அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து.
ஆழிவண்ணன் பாதத்தை நினை
2232. மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்,
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை, - மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்.
திருமாலை உள்ளவாறு அறிவார் யார்?
2233. நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,
அறம்பெரிய னார தறிவார்? – மறம்புரிந்த
வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து ,
நீளிருக்கைக் குய்த்தான் நெறி.
நாம் விரும்புவது திருவேங்கடமே
2234. நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,
அறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாது
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,
வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு.
திருமாலை உள்ளத்தே இருத்தினேன்
2235. வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்
திளங்கோயில் கைவிடேல் என்று.
ஆழியானை என்றும் மறந்தறியேன்
2236. என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
நின்று நினைப்பொழியா நீர்மையால், - வென்றி
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
கடலாழி நீயருளிக் காண்.
திருமகள் திருமாலை அடையாளம் காட்டுவாள்
2237. காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,
நாணப் படுமென்றால் நாணுமே? - பேணிக்
கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,
திருமாலை நாங்கள் திரு.
திருமகள் மணாளனை வாழ்த்துங்கள்
2238. திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், - உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,
நாற்றிசையும் கேட்டீரே நாம்?
ஆழியானையே பாடு
2239. நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, - வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,
அருள்நீர்மை தந்த அருள்.
திருமாலை மனமார நோக்கு: அஞ்ஞானம் நீங்கும்
2240. அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, - இருள்திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,
ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து.
ஒளியுருவமே நாரணன் உருவம்
2241. ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று.
திரிவிக்கிரமனைத் துதித்தால் பெரும்பேறு கிட்டும்
2242. நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம், - அன்று
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு.
ஆயர்களின் ஏற்றையே வணங்கினேன்
2243. பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்
பெருத்தெருத் தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய்,
எருத்திருந்த நல்லாயர் ஏறு.
ஏழு எருதுகளை அடர்த்தவனே யாவர்க்கும் அருள் செய்பவன்
2244. ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
ஏறேறிப் பட்ட இடுசாபம் - பாறேறி உண்டதலை
வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
கண்டபொருள் சொல்லின் கதை.
கண்ணா! உன்னைப் பாட எனக்கு அருள் செய்
2245. கதையும் பெரும்பொருளும் கண்ணாநின் பேரே,
இதய மிருந்தவையே ஏத்தில், - கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,
பருமொழியால் காணப் பணி.
கண்ணா! நின் சேவடியில் பணிந்தேன்
2246. பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், - துணிந்தேன்
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது.
நாரணன் பேர் ஓது; நரகம் இல்லை
2247. இதுகண்டாய் நன்னெஞ்சே! இப்பிறவி யாவது,
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய்
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,
காரணமும் வல்லையேல் காண்.
கனவில் திருமேனி கண்டேன்: வினைகள் ஓடிவிட்டன
2248. கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
கண்ணனே பாற்கடல் கடைந்த பரமன்
2249. வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரைமத் தாக, - வலிமிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணாகம் கொம்பொசித்த கோ.
யாராக இருந்தாலும் திருமாலையே வணங்குவர்
2250. கோவாகி மாநிலம்காத்து,நங்கண்முகப்பே
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் - பூவேகும்
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,
தண்கமல மேய்ந்தார் தமர்.
எந்தை எழுந்தருளியுள்ள இடங்கள்
2251. தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம்.
திரிவிக்கிரமாவதாரத்தின் காட்சி
2252. இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்
றடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும்
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,
பூவா ரடிநிமிர்ந்த போது.
திருப்பதியில் வானரங்களும் வேங்கடவனையே பூசிக்கும்
2253. போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் - போது
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங் கடவன்பே ராய்ந்து.
மாலுக்கு அடிமையாகவிரும்பி அருச்சிப்பேன்

2254. ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
வாய்ந்த மலர்தூவி வைகலும், - ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்
இறைக்காட் படத்துணிந்த யான்.
தவம் செய்தே இந்தப் பாமாலை பாடினேன்
2255. யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், - யானே
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
பெருந்தமிழன் நல்லேன் பெரிது.
எம்பெருமானின் இருப்பிடம் திருவேங்கடமலை
2256. பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று ,
இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,
வான்கலந்த வண்ணன் வரை
அறிவன் அடிகளை ஓதிப்பணிக
2257. வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,
விரைப் பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
ஓதிப் பணிவ தூறும்.
உத்தமன் பெயரை ஓராயிரம் முறை நாள்தோறும் உரை
2258. உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம்,
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், - உறுங்கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்ஞா றெப்பொழுதும்,
சாற்றி யுரைத்தல் தவம்.
எல்லா மூர்த்திகளும் திருமாலையே வணங்குவர்
2259. தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி
நிவர்ந்தளப்ப நீட்டியபொற் பாதம், - சிவந்ததன்
கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்
பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின்.
திருமாலின் செயல்கள் நிகரற்றவை
2260. பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல் நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர்.
திருமாலே! நின் சேவடிமேல் அன்பு கொண்டேன்
2261. நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், - ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல்?
சோதிவடிவு கொண்டவன் திருமால்
2262. பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
வான்திகழும் சோதி வடிவு.
மலர்மங்கை திருமாலை விட்டுப்பிரியமாட்டாள்
2263. வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், - அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
கோலத்தா லில்லை குறை.
பரமன் அருளையே நான் எதிர்பார்த்திருந்தேன்
2264. குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
மறையாங் கெனவுரைத்த மாலை, - இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,
மாயன்கண் சென்ற வரம்.
நரசிம்மன் திருவடிகளே உலகத்தில் அமிழ்தம்
2265. வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
உரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,
அங்கண்மா ஞாலத் தமுது.
ஆழியானையே நான் ஏத்தித் தொழுதேன்
2266. அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், - அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று.
மேக மணிவண்ணனை நான் எங்ஙனம் காண்பேன்?
2267. நவின்று ரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?
திருக்கோட்டியூர்ப் பெருமானைத் தொழுதேன்
2268. இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை, - அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,
திருக்கோட்டி எந்தை திறம்.
அரங்கனை வழிபடுவார்க்கே அமரருலகு கிடைக்கும்
2269. திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு.
வாமனனாய் மண் கொண்ட பான்மை என்னே!
2270. கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,
அதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப்
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,
மாணியாய்க் கொண்டிலையே மண்.
எம்பெருமானைத் தொழுவதே பெரும் பேறு
2271. மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, - நண்ணித்
திருமாலை செங்க ணெடியானை, எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்.
உலகளந்தவன் அடிகளையே வணங்குக
2272. பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,
முன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல்
அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்
அளந்தா னவஞ்சே வடி.
நெடியானின் திருநாமம் ஏத்துக
2273. அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்
படியான் கொடிமேல்புள் கொண்டான், - நெடியான்றன்
நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும்
காமமே காட்டும் கடிது.
கண்ணனை ஏத்துக: நரகம் இல்லை
2274. கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,
கொடிதென் றதுகூடா முன்னம், - வடிசங்கம்
கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்
சுண்டானை ஏத்துமினோ உற்று.
பாடகத்தானையே ஏத்தித் தொழுமின்
2275. உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு.
அத்தியூரான் என் உள்ளத்தில் உள்ளான்
2276. என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், - முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்.
அத்தியூரானே யாவர்க்கும் தலைவன்
2277. அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
தேவர்கட்கெல்லாம் தலைவன் நெடுமால்
2278. எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,
செங்க ணெடுமால் திருமார்பா, - பொங்கு
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.
எனது நெஞ்சில் இருப்பவன் கண்ணன்
2279. கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,
உண்ட துலகேழு முள்ளொடுங்க, - கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை.
தேவர்கள் யாவரும் திருமாலைப் பூசிப்பர்
2280. இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல
சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால்.
கண்ணனிடம் யான் கொண்ட அன்பு அளவற்றது
2281. மாலே! நெடியோனே! கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா! வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு .
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்

பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

இத்திருவந்தாதியை அருளியவர் பேயாழ்வார். இவர் சென்னையிலுள்ள மயிலையில், ஒரு கிணற்றிலுள்ள செவ்வல்லிப்பூவில் அவதரித்தார். இவரும் ஒரு யோகி. இவர் பிறந்த நாள் ஐப்பசி மாதச் சதயம். இவரது இப்பிரபந்தம் லக்ஷ்மீகடாட்சம் தரும்.
தனியன்
குருகை காவலப்பன் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
மனமே! பேயாழ்வார் திருவடிகளையே போற்று
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு-ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே! உகந்து
ஆழிவண்ணனை இன்று கண்ணாரக் கண்டேன்
2282. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்  திகழு
மருக்கனணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பா லின்று
திருமாலே! நின்னைக்கண்டு பெரும்பயன் பெற்றேன்
2283. இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம்.
நரகம் தீர்ப்பவன் திருமாலே
2284. மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,
வருநரகம் தீர்க்கும் மருந்து.
செங்கண்மால் திருவடிகளே அருமருந்து
2285. மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.
ஆழியானின் அழகுத் தோற்றம்
2286. அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு.
ஆழியானின் அழகே அழகு
2287. அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,
அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,
கங்கைநீர் கான்ற கழல்.
மனமே! கருடவாகனனைத் தொழுவோம்
2288. கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,
நண்ணற் கரியானை நாம்.
நாரணன் திருப்பெயர்களைச் சொல்லித் தொழு
2289. நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
கண்ணனையே காண்கநங் கண்.
மணிவண்ணன் உறுப்புகள் தாமரையே
2290. கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,
மண்ணளந்த பாதமும் மற்றவையே,- எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,
திருமா மணிவண்ணன் தேசு.
திருமால் பெயரை ஓதினால் எல்லாம் கிடைக்கும்
2291. தேசும் திறலும் திருவும் உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு.
பகவான் எங்கும் உள்ளான்
2292. நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவி னான்.
ஐம்புலன் அடக்கினோர் பரமனைக் காண்பர்
2293. அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி.
திரிவிக்கிரமாவதாரத்தின் தோற்றம்
2294. படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு.
பெண்ணாசையை ஒழி: பரமன் அருள் கிட்டும்
2295. மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து.
அரவணையான் என் மனத்தில் தங்குகிறான்
2296. பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து.
திருவல்லிக்கேணியான் ஓர் ஒளி விளக்கு
2297. வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக் காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று.
செங்கண்மாலையே என் வாய் வாழ்த்துக
2298. சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய்.
மாலே! நினக்கு அடிமையாக அருள்
2299. வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள்.
பூசனை செய்வார்க்குப் பரமன் அருள் உண்டு
2300. அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
முந்தையராய் நிற்பார்க்கு முன்.
திருமாலே! நினக்கு எதுவும் அரியதில்லை
2301. முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக
மீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே
திருமாலே செங்க ணெடியானே, எங்கள்
பெருமானே நீயிதனைப் பேசு.
சக்கரத்தான் வடிவுபற்றி எவ்வளவோ பேசலாம்
2302. பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு.
மனமே! தேவநாதனை உள்ளபடி காண விரும்பு
2303. வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,
செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு.
திருத்துழாயான் திருவடிகளையே என்மனம் நாடும்
2304. விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம்துழாய் மாலாய் வரும்.
மனமே! ஆழியான் அடிகளையே சேர்
2305. வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும் சுடராழி
யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது.
கண்ணனைத் தொழுக: தீங்கில்லை
2306. தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து.
திருத்துழாயான் எழுந்தருளியுள்ள இடங்கள்
2307. சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம்கடவார் தண்டுழா யார்.
உலகுக்குக் காரணமானவனையே அடைக
2308. ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங் கடலை,- நேரே
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து.
திருமாலின் திருவிளையாடல்கள்
2309. அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
பேய்ச்சிபா லுண்ட பிரான்.
கண்ணனைச் சேர்: அச்சமேயில்லை
2310. பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,
தெருளா மொழியானைச் சேர்ந்து.
திருமால் தங்கியிருக்கும் இடங்கள்
2311. சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
இறைபாடி யாய இவை.
நரசிம்மன் வீற்றிருக்கும் கோயில்கள்
2312. இவையவன் கோயில் இரணியன தாகம்,
அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்
பாகத்தான் பாற்கடலு ளான்.
கோபாலகன் விரும்பிய இடங்கள்
2313. பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், - பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்தொசித்த கோபா லகன்.
மாலே! தேவர்கட்கு அமுதம் அளித்தாயே!
2314. பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.
மனமே! கண்ணனையே காண்
2315. அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்.
கண்ணனையே கண்டு தொழுவோம்
2316. காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை.
உலகளந்தவனின் ஐம்படைகள்
2317. கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய
படைபரவ பாழி பனி நீ ருலகம்,
அடியளந்த மாயன் அவற்கு.
திருமாலுக்கே நான் அடிமை
2318. அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,
திகழும் திருமார்வன் தான்.
எல்லாம் திருமாலின் உருவமே
2319. தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,
தானே தவவுருவும் தாரகையும், - தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இறை.
வேங்கடவன் என் மனத்தில் உள்ளான்
2320. இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.
பக்தர்களின் மனத்தில் உள்ளவன் புருடோத்தமன்
2321. உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான்,
மண்ணெடுங்கத் தானளந்த மன்.
உலகளந்தானின் பிரம்மாண்டமான தோற்றம்
2322. மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்
குடையாக ஆகாத்த கோ.
நரசிம்மனே கண்ணன்
2323. கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.
கண்ணனின் வயிற்றில் இவ்வுலகம் அடங்கியது
2324. சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
புனமேய பூமி யதனை, - தனமாகப் பேரகலத்
துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
ஓரகலத் துள்ள துலகு.
மனமே! கண்ணன் அடியிணைகளை நண்ணு
2325. உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
பூரித்தென் நெஞ்சே புரி.
வராகனே வேங்கடவன்
2326. புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,
திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு
முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை.
திருமால் கடல் கடைந்த பான்மை
2327. மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரன்.
எங்கள் நரகத்தை ஒழித்தவன் திருமாலே
2328. நின்ற பெருமானே நீரேற்று, உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா, - அன்று
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ.
கண்ணா! என்னை நின் அருஞ்செயல்கள்!
2329. நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று?
நரசிம்மனும் வாமனனும் கண்ணனும் ஒருவரே
2330. செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல்
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,
மூரிச்சுரியேறு சங்கினாய். சூழ்ந்து.
திருமாலே சுனையில் முதலை கொன்றவன்
2331. சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
அணிநீல வண்ணத் தவன்.
இலங்கை எரித்தவனே கண்ணன்
2332. அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,
இலங்கா புரமெரித்தான் எய்து.
ஏழு மராமரங்களைத் துளைத்தவனே வாமனன்
2333. எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று.
மனமே! ஆலிலைத் துயின்றவனைத் தொழு
2334. முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,
இயன்றமரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர்
மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,
தண்ணலங்கல் மாலையான் தாள்.
வராகனே கண்ணன்
2335. தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா
மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,
பெண்ணகலம் காதல் பெரிது.
திருமாலின் கண் தாமரையே
2336. பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,
கரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்
நீணெடுங்கண் காட்டும் நிறம்.
திருமாலின் உண்மைப் பொலிவு நமக்குத் தெரியாது
2337. நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,
இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,
பூமங்கை கேள்வன் பொலிவு.
திருமாலின் திருவடிகளையே யான் சூடுவேன்
2338. பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.
வாமனன் வாழ்விடம் வேங்கடமே
2339. தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.
திருமாலின் அடிசேர்ந்து வாழும்வகை அறிந்தேன்
2340. வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று.
கண்ணனின் லீலைகள்
2341. பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,
முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு.
திருக்கடிகையில் திருமால் எழுந்தருளியுள்ளான்
2342. பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர்.
திருமால் எழுந்தருளியுள்ள திருப்பதிகள்
2343. விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
அரியும் அரனும் ஒருவரே
2344. தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து.
வெஃகாவில் திருமால் ஓய்வு கொள்கிறாரோ?
2345. இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு.
நரசிம்மன்தான் கண்ணன்
2346. அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை,- பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.
மதுகைடவரை வதைத்தவன் திருமால்
2347. காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,
அதுகே டவர்க்கிறுதி ஆங்கே.
சங்கும் சக்கரமும் ஒளி வீசும்
2348. ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,
ஓங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்
பகரு மதியென்றும் பார்த்து.
கண்ணனுக்கு உரிய மலை வேங்கடம்
2349. பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்
கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.
வேங்கடம் பாடுக; துழாய் சூடுக
2350. வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,
பூண்டநா ளெல்லாம் புகும்.
யானைகளும் வேங்கடவனை வணங்கும்
2351. புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி
உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,
கண்டு வணங்கும் களிறு.
கண்ணனுக்கு உரிய குன்று வேங்கடம்தான்
2352. களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,
ஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி
விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று.
வேங்கடமலை மிக உயரமானது
2353. குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை,
சென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே,
மேலை இளங்குமரர் கோமான் இடம்.
நாவின் கடமை கண்ணன் கழலைப் போற்றுதலே
2354. இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,
வடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,
நாத்தன்னா லுள்ள நலம்.
யசோதைதான் கண்ணனுக்குப் பாலூட்டினாள்
2355. நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,
நிலமே புரண்டு போய் வீழ , - சலமேதான்
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.
கண்ணன் பயிலும் இடம் திருமலையே
2356. சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு.
திருமாலையே தொழு: தீவினைகள் சேரா
2357. பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.
இராமன் திருவடிகளே நமக்குக் காவல்
2358. ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன்
நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த
அடிப்போது நங்கட் கரண்.
மாயனை ஓது: அதுவே பெருங்காவல்
2359. அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந் த மொய்ம்பன், - சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து.
திருமாலை நினை: பிறப்பே இராது
2360. ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று.
அரவணையானையே அனைவரும் நினைப்பர்
2361. நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,
ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய - வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் திருமாலே
2362. நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,
ஓராது நிற்ப துணர்வு.
உணரவும் காணவும் அரியவன் திருமால்
2363. உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
எங்கணைந்து காண்டும் இனி.
திருமால் என் உள்ளத்தில் உள்ளான்
2364. இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,
இனியவன் காண்பரிய னேலும், - இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,
உள்ளத்தி னுள்ளே யுளன்.
திருமாலை மனத்தால்தான் உணரலாம்
2365. உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்
துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,
கண்டா ருகப்பர் கவி.
தெவிட்டாத பேரழகு உடையவன் கண்ணன்
2366. கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்
ஏற்றுயிரை அட்டான் எழில்.
நீர்மேகம் அன்னவன் நெடுமால்
2367. எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,
கார்வானம் காட்டும் கலந்து.
மரகத மேனியன் கண்ணன்
2368. கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின்மேனி
மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
அந்திவான் காட்டும் அது.
திருத்துழாய் மார்வனையே தொழுக
2369. அதுநன் றிதுதீதென் றையப் படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.
குழலூதினவன் குன்று வேங்கடமே
2370. முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு.
மண்ணளந்த மாலின் தோற்றம்
2371. சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா
றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,
வண்டுழாய் மாலளந்த மண்.
கண்ணன் கயிற்றால் கட்டுண்ட காட்சி என்னே!
2372. மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன்.
மாயன் திருவடிகளையே நினை
2373. மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,
மகனா மவன்மகன்றன் காதல் - மகனை
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
நிறைசெய்தென் நெஞ்சே. நினை.
ஆலிலைமேல் துயின்றவனை மனத்தில் வை
2374. நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து.
மாயன் என் மனத்தில் என்றும் உள்ளான்
2375. உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து,
திருமால் திருவடிகளையே வாழ்த்து
2376. புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து.
திருமாலை எல்லாத் தேவர்களும் வணங்குவர்
2377. வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,
அடித்தா மரையாம் அலர்.
மாயனின் பெருமைதான் என்னே!
2378. அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,
மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்
கெண்ணத்தா னாமோ இமை.
நரகம் அடையாமல் காப்பவன் நாரணன்
2379. இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
திருமாலின் திருவடிகளே நமக்குத் துணை
2380. தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு.
திருமகளைத் தழுவியவன் திருமால்
2381. சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு.
பேயாழ்வார் திருவடிகளே சரணம்
திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி
இவ்வாழ்வார் திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார். இவருக்குப் பக்தி ஸாரர் என்றும் திருநாமம். ஸ்ரீ சுதர்சன ஆழ்வானே திருமழிசையாழ்வாராக அவதரித்தார். ஸ்ரீ மந் நாராயணனின் பரத்துவத்தை அனைவருக்கும் அறிவிப்பவர் நான்முகன் என்று இந்த அந்தாதி தொடங்குவதால் இதற்கு நான்முகன் திருவந்தாதி என்று பெயர் ஏற்பட்டது. இவரது அவதார நன்னாள் தை மாதம் மகம் நட்சத்திரம்.
தனியன்
சீராமப்பிள்ளை அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
திருமழிசைப்பிரானடி வாழ்த்து
நாரா யணன்படைத்தான் நான்முகø, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல்- சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து
இந்த அந்தாதியின் உட்பொருளைக் கொள்க
2382. நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான்முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.
ஆழியானே ஆதியந்தமானவன்
2383. தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
ஆருமறியார் அவன்பெரு மை, - ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
அருள்முடிவ தாழியான் பால்.
நாராயணனை யானே நன்கறிந்தேன்
2384. பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?
எல்லாப் பொருள்களுமானவன் நாரணன்
2385. ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து.
நான்மறையானவன் நரசிம்மனே
2386. தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
அருநான்கு மானாய் அறி.
மாதவனைத் துதியாதார் ஈனர்கள்
2387. அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
ஈனவரே யாதலால் இன்று.
நாரணனே! நான் உன்னையன்றியிலேன்
2388. இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.
மனமே! மாலே நமக்குத் துணை
2389. இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை.
எல்லோரும் நாரணன் அடிகளையே வாழ்த்துவர்
2390. குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு.
திருமாலின் மேனியை யானே காணவல்லவன்
2391. ஆங்கார வாரம் அது கேட்டு, அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து.
திருமாலையே வாழ்த்தித் தொழுக
2392. வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை
வழாவண்கை கூப்பி மதித்து.
ஆழியானையே மதி
2393. மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித் தாய்
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு.
வேதமுதற்பொருள் நாராயணனே
2394. வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
கூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன்.
நரகத்தைத் தவிர்ப்பவன் நாராயணனே
2395. நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன் - பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட் டாழ்வார் பலர்.
தேவதேவனின் திருவடிகளையே வாழ்த்துக
2396. பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை.
கண்ணனையே யான் எண்ணுவேன்
2397. நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால்.
ஆழியானையே வணங்குக
2398. ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.
நரசிம்மனை ஏத்துவோரே வெற்றி பெறுவர்
2399. மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை, - வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம்.
வைகுந்தம் தருபவன் ஆழியான்
2400. தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.
தேவதேவனே எல்லாமாக இருப்பவன்
2401. நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை,
நரசிம்மனின் அழகுத் தோற்றம் பிரமாதம்
2402. இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் - இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு.
நரசிம்மனின் தாள்களையே பணிமின்
2403. அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து.
பக்தி உழவனுக்குத் திருமால் அருள்புரிவார்
2404. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
திருமாலையே புகழ்க
2405. நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் - புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை.
மண்ணளந்த பான்மை என்னே!
2406. வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே, வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
வயிர வழக்கொழித்தாய் மற்று.
கடல் வண்ணா! நின்னையே தொழுவேன்
2407. மற்றுத் தொழுவா ரொருவ ரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்கு மாறு.
திருமாலை நினைக: அதுவே பெரும்பேறு
2408. மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள் - நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது.
திருமாலுக்கு உகந்த இடம் என் மனம்
2409. இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை
தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை,
ஊனொடுங்க எய்தான் உகப்பு.
ஒளியுருவனே திருமால்
2410. உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன்.
என் உள்ளத்தில் உறைபவன் திருமால்
2411. அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல்.
நாராயணனையே ஏத்துக
2412. மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை.
கண்ணன் திருவடிகளை அடைக
2413. கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப்
பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி.
கண்ணனின் திருவிளையாடல்
2414. அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு - வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு.
திருக்கோட்டியூர்க் கோமானையே ஏத்துவேன்
2415. குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்.
அரவணையான் ஓய்வு கொள்கின்றானோ?
2416. தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை.
பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
2417. நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத் தனா வான்.
திருமாலே எல்லாவற்றையும் படைத்தவன்
2418. வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு.
நீர்வண்ணனே நம்மை ஆட்டுவிப்பவன்
2419. அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன், உகைக்கு மேல்,
எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும்,
அப்போது ஒழியும் – அழைப்பு.
திருவேங்கடவனையே அழைப்பேன்
2420. அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு.
வேங்கடவன் கால்வலையில் சிக்கினேன்
2421. வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண்.
என் உள்ளம் புகுந்தவன் வேங்கடவன்
2422. காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர - பேணி
வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று.
வினை கெடுப்பவன் வேங்கடவன்
2423. சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு.
எல்லாத் தெய்வங்களும் வேங்கடவனையே தொழும்
2424. மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.
எல்லோரும் வேங்கட மலைக்கே செல்லுங்கள்
2425. கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து.
யாவரும் பூசிப்பதற்கு ஏற்றவன் வேங்கடவனே
2426. புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப - தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.
வேங்கடவனை நினைத்தலே நன்று
2427. வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று.
வேங்கடமே மணிவண்ணனின் ஊர்
2428. நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் ,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்.
வினை தீர்க்கும் மலை வேங்கடமே
2429. வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை.
நாராயணன் நாமத்தையே சொல்க
2430. மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று.
கண்ணனை எண்ணுவதே உய்யும் வழி
2431. கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு.
கண்ணனே! நின்னையே நினைந்து உயர்ந்தேன்
2432. எனக்காவா ராரொரு வரேஎம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால - புனக்காயா
வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை.
கண்ணபிரானையே ஏத்துக
2433. விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர்.
காகுத்தனே என் தெய்வம்
2434. கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறல்மின் தேவு.
எல்லாத் தெய்வங்களுமாக இருப்பவன் திருமாலே
2435. தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை.
திருமாலே! நின் திருவடிப் பெருமைதான் என்னே!
2436. கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர்.
திருமாலுக்கு இணையே இல்லை
2437. அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு.
நல்வினை தீவினைகளாக இருப்பவன் கண்ணனே
2438. ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்.
திருமாலிடமே யான் அன்பு காட்டினேன்
2439. என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச
மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயனுக் காக்கினேன் அன்பு.
கேசவா! நான் உன் அடிமை: ஆண்டுகொள்
2440. அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.
அரங்கா! உன்னையே நான் விரும்புவேன்
2441. ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மைய - கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்.
மதுசூதனனைச் சரணடை: துன்பம் வராது
2442. மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு.
திருத்துழாய் சூடிப் பிறப்பை அறுமின்
2443. திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து.
திருமாலைப் பூசித்தே பொழுது போக்குக
2444. தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது.
நாரணனையே பூசித்தப் துதியுங்கள்
2445. போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை,- நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை, சொல்லுவதே சூது.
மாதவனையே எண்ணுக: வைகுந்தம் கிடைக்கும்
2446. சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை - யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லீ ரிடம்.
நெடுமாலுக்கு இடம் என் நெஞ்சம்
2447. இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்கு,- திடமாக
வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம்.
எது நேர்ந்தாலும் ஏத்துக நாரணனை
2448. வலமாக மாட்டாமை தானாக, வைகல்
குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை
நம்பதியை ஞானப் பெருமானை,
சீரணனை யேத்தும் திறம்.
நாரணன் பக்தர்க்கு யமபயம் இல்லை
2449. திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.
வேதப் பொருளாக இருப்பவன் மாதவனே
2450. செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.
வராகனை யான் நன்கு அறிவேன்
2451. தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் - யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய்.
பகவத்கீதை கற்க: மெய்ஞ்ஞானம் பெறலாம்
2452. சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.
நாரணனே நல்லறமும் வேதமும் தவமும்
2453. இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,
சொல்லற மல்லனவும் சொல்லல்ல - நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
யாவதீ தன்றென்பா ரார்.
ஆழியான் பெருமையை அறிவார் யார்?
2454. ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன்வைத்த
பண்டைத்தா னத்தின் பதி.
மாயவனையே என் நாக்கு ஏத்தும்
2455. பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லதொன் றேத்தாதென் நா.
வைகுந்தச் செல்வனையே நான் பாடுவேன்
2456. நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு.
சாஸ்திரங்களுக்குத் தலைவன் திருமால்
2457. பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
றனமாயை யிற்பட் ட தற்பு.
கடல் வண்ணன் என் தீவினைகளைப் போக்கினான்
2458. தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு.
நாரணன் நாமமே கேட்டிரு
2459. கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெய ரே கேட்டிருந்து,அங்
காரலங்க லானமையா லாய்ந்து.
ஆதிப் பெருமானை நினைக: வைகுந்தம் காணலாம்
2460. ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்
வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து.
கண்ணன் லீலைகளையே கேளுங்கள்
2461. விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
கரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு,படுநரகம்
வீடின வாசற் கதவு.
எனக்குத் தமிழ் கற்பித்தவன் கண்ணன்
2462. கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்
வினையாவி தீர்ந்தேன், - விதையாக நற்றமிழை
வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து.
கண்ணன் என் மனத்தில் கலந்துவிட்டான்
2463. கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே - அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து.
எல்லோர்க்கும் இறைவன் திருமால்தான்
2464. வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர்.
கண்ணனைத் தொழுதலே தொழில்
2465. பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்.
இராமபிரான் என் மனத்தில் உள்ளான்
2466. தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன்.
உள்ளுவார் உள்ளத்துள்ளவன் திருமால்
2467. உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை.
எல்லாவற்றையும் உண்டவன் கண்ணன்
2468. இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார் - சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர்.
துயர் தீர்ப்பானைப் பாடுக: அதுவே வாழ்வு
2469. உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது.
பாற்கடலான் பாதமே நினைக
2470. பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு,
விண்ணாள வேண்டுமா? வேங்கடவனைப் பூசியுங்கள்
2471. வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர்.
தேவர்கள் யாவரும் திருமாலையே பூசிப்பர்
2472. தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று.
சிரீதரனுக்கே நான் அடிமை
2473. என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு.
கண்ணா! நின்னை யாரும் மறக்கமாட்டார்
2474. காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.
அரவணையாய் ! அடியேனுக்கு அருள்
2475. மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று.
திருமாலே! நின் அடிமை நான்: வைகுந்தம் அளி
2476. ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை
இடநாடு காண இனி.
நாரணனே ஆதி காரணன்; எனக்குத் தெரியும்
2477. இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை - இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


மூன்றாவதாயிரம் பகுதி-2



நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேத ஸாரமான திருவிருத்தம்
நம்மாழ்வார் தமது அன்பு மிகுதியை எம்பெருமான் முன்னிலையில் விண்ணப்பம் செய்வதாக இப்பிரபந்தம் அமைந்துள்ளது. இப்பிரபந்தத்தில் முதற் பாசுரம் கடைசிப் பாசுரம் நீங்கலாக மற்றப் பாசுரங்கள் எல்லாம் அகப்பொருள் இலக்கணத்துறைகளாக அமையப்பெற்றவை. ஆழ்வார் பெண் தன்மையை ஏறிட்டுக்கொண்டு பேசும் பிரபந்தம் இது.
நம்மாழ்வார் தலைவி: எம்பெருமானார் தலைவர். திருவிருத்தம் முழுவதும் நாயக நாயகி பாவத்தில்தான் பாடப்பட்டுள்ளது. அகப்பொருள் இலக்கணத்தை நினைவில் வைத்துக்கொண்டு ஈண்டுள்ள பாசுரங்களைப் படிக்கவேண்டும். ஒவ்வொரு பாடலிலும் அமைந்துள்ள அகப்பொருள் துறை அவ்வப் பாடலின் தலைப்பில் தரப்பெற்றுள்ளது.
தனியன்
கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது
கட்டளைக் கலித்துறை
திருவிருத்தம் கற்று இனிதே வாழ்க
கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்!உயி ரின்பொருள்கட்கு
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே
எம்பெருமானே! என் விண்ணப்பம் கேட்டருள்
2478. பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா
மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே.
தலைவியின் வேறுபாடுகண்ட தோழி வியந்து கூறல்
2479. செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண் ணாட்டவர் மூதுவராம்
தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே.
பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து கூறுதல்
2480. குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும்,
நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல்,
தண்ணந்துழாய் அழல்போ லடும்சக்க ரத்தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்
தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின் போன தனிநெஞ்ச கமே.
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு இரங்கல்
2481. தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது, தண்ணந்துழாய்க்
கினிநெஞ்ச மிங்குக் கவர்வது யாமிலம், நீநடுவே
முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத் தான்முடி சூடுதுழாய்ப்
பனிநஞ்ச மாருத மே,எம்ம தாவி பனிப்பியல்வே?
வாடைக்கு நலிந்த தலைவியின் நிறமாற்றம் கண்டு தோழி இரங்கல்
2482. பனிப்பியல் வாக வுடையதண் வாடை,இக் காலமிவ்வூர்
பனிப்பியல் வெல்லாம் தவிர்ந்தெரி வீசும், அந்தண்ணந்துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத்தி றத்துக்கொலாம்
பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு நான்று தடாவியதே?
தலைவியின் அழகு கண்டு வியந்த தலைவன் கூற்று
2483. தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு,
கடாயின கொண்டொல்கும் வல்லியீ தேனும், அசுரர்மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்
நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே.
கார் காலம் வந்ததே என்று தலைவி மயங்கல்
2484. ஞாலம் பனிப்பச் செரித்துநன் நீரிட்டுக் கால்சிதைந்து
நீலவல் லேறு பொராநின்ற வானமிது திருமால்
கோலம்சுமந்து பிரிந்தார் கொடுமை குழறுதண்பூங்
காலங்கொ லோவறி யேன்வினை யாட்டியேன் காண்கின்றவே.
தலைவன் பொருள்வயின் பிரிதலைக் குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்குக் கூறுதல்
2485. காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில்,இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன,இதெல்லா மறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும்
சேண்குன்றம்  சென்றுபொருள்படைப் பான்கற்ற திண்ணனவே.
தலைவன், தலைவியின் நீங்கலருமை கூறல்
2486. திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்விண் ணாடனைய
வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுட ராடிவெண் முத்தரும்பி
வண்பூங் குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே.
தலைவன் குறையுற உரைத்தல்
2487. மாயோன் வடதிருவேங் கடநாடவல் லிக்கொடிகாள்
நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடும்தொண்டை யோஅறை யோவி தறிவரிதே.
தலைவன், பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு உரைத்தல்
2488. அரியன யாமின்று காண்கின்ற  கண்ணன் விண்ணனையாய்!
பெரியன காதம் பொருட்கோ பிரிவென  ஞாலமெய்தற்
குரியன வொண்முத்தும் பைம்பொன்னுமேந்தி யோரோகுடங்கைப்
பெரியன கெண்டைக்குலம்  இவையோ வந்து பேர்கின்றவே.
தலைவி நெஞ்சொடு கலாய்த்துத் தன் ஆற்றாமை கூறல்
2489. பேர்கின்றது மணிமாமை பிறங்கியள்ளற்பயலை
ஊர்கின்றது கங்கு லூழிகளே  இதெல்லா மினவே
ஈர்கின்ற சக்கரத்தெம்பெருமான் கண்ணன் தண்ணந்துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார்  தந்து போன தனிவளமே.
இருளுக்கும் வாடைக்கும் தலைவி இரங்கல்
2490. தனிவளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசவியப்
பனிவளர் செங்கோ லிருள்வீற் றிருந்தது, பார்முழுதும்
துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந்
தினிவளை காப்பவ ரார்,எனை யூழிக ளீர்வனவே.
நலம் பாராட்டல்
2491. ஈர்வன வேலுமஞ் சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ
பேர்வன வோவல்ல தெய்வநல் வேள்கணை, பேரொளியே
சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம் மான்விசும்பூர்
தேர்வன, தெய்வமன் னீரகண் ணோவிச் செழுங்கயலே.
தலைவனது கருத்தறிந்து தோழி உரைத்தல்
2492. கயலோ நுமகண்கள்? என்று களிறுவினவி நிற்றீர்,
அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை, கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும்
பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே.
தலைவி இருள் வியந்து உரைத்தல்
2493. பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயி டும்,கண்ணன் விண்ணனையாய்
பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்
பலபல சூழ லுடைத்து,அம்ம! வாழியிப் பாயிருளே.
தலைவி கடலை நோக்கித் தேர்வழி தூரல் என்றல்
2494. இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி தூரல், அரவ ணைமேல்
இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வதுபோல்
இருள்விரி சோதிப், பெருமா னுறையு மெறிகடலே.
கார் கண்டு அழிந்த தலைவியின் ஆற்றாமைக்குப் பாங்கி இரங்கல்
2495. கடல்கொண் டெழுந்தது வானம்அவ் வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண் டெழுந்த வதனா லிது,கண்ணன் மண்ணும்விண்ணும்
கடல்கொண் டெழுந்தவக் காலங்கொ லோபுயற் காலங்கொலோ
கடல்கொண்ட கண்ணீர் அருவிசெய் யாநிற்கும் காரிகையே.
செவிலி பழிக்கு இரங்கல்; பாங்கி இரங்கலுமாம்
2496. காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னே
மாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோ
சாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார்
சேரிகை யேரும், பழியா விளைந்தென் சின்மொழிக்கே.
வெறி விலக்கு(வேலனது வெறியாட்டை விலக்குதல்)
2497. சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம் - இந் நோயினதென்
றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ மன்றிது – வேல நில்நீ
என்மொழி கேண்மினென் அம்மனை மீர்உல கேழுமுண்டான்
சொல்மொழி, மாலயந் தண்ணந்து ழாய்கொண்டு சூட்டுமினே.
விடை தழுவிவந்த தலைவனை வியத்தல். ஏறுகோள் கூறி வரைவு கடாதல் என்னலுமாம்
2498. சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே.
தோழி தலைவனை நகையாடுதல்
2499. கொம்பார் தழைகை சிறுநா ணெறிவிலம் வேட்டைகொண்டாட்
டம்பார் களிறு வினவுவ தையர்புள் ளூரும்கள்வர்
தம்பா ரகத்தென்று மாடா தனதம்மில் கூடாதன
வம்பார் வினாச்சொல்ல வோஎம்மை வைத்ததிவ் வான்புனத்தே?
தலைவன் குறையுற உரைத்தல்
2500. புனமோ புனத்தய லேவழி போகும் அருவினையேன்
மனமோ மகளிர்! நுங்காவல் சொல்லீர் புண்டரீகத்தங்கேழ்
வனமோ ரனையகண் ணான்கண்ணன் வானா டமரும்தெய்வத்
தினமோ ரனையீர்க ளாய்,இவை யோநும் இயல்புகளே?
பிரிவாற்றாத தலைவியின் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல்
2501. இயல்வா யினவஞ்ச நோய்கொண் டுலாவும், ஓரோகுடங்கைக்
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள் தம்மொடும், குன்றமொன்றால்
புயல்வா யினநிரை காத்தபுள் ளூர்திகள் ளூரும்துழாய்க்
கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென் னாங்கொலெம் கோல்வளைக்கே?
தலைவனின் தாரை விரும்பிய தலைவி ஆற்றாது கூறுதல்
2502. எங்கோல் வளைமுத லாகண்ணன் மண்ணும்விண் ணும்அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்கும் மால்திறல் சேரமர்
தங்கோ னுடையதங் கோனும்ப ரெல்லா யவர்க்கும்தங்கோள்
நங்கோ னுகக்கும் துழாய்எஞ்செய் யாதினி நானிலத்தே?
தலைவன் தனது நகரை காட்டுதல்
2503. நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே.
தார் பெற்ற தலைவி முன்பு வருத்திய வாடை மகிழ்தல்
2504. சேமம்செங் கோனருளே,செருவாரும்நட் பாகுவரென்
றேமம் பெறவையம் சொல்லும்மெய் யே,பண்டெல் லாம்மறைகூய்
யமங்க டோறெரி வீசும்நங் கண்ணனந் தண்ணந்துழாய்த்
தாமம் புனைய,அவ் வாடையீ தோவந்து தண்ணென்றதே.
பிரிவாற்றாத தலைவி வாடைக்கு வருந்தி இரங்கல்
2505. தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம்- நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும்- வள்வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா! அருளாய்
எண்ணந் துழாவு மிடத்துஉள வோபண்டும் இன்னன்னவே?
தலைவி அன்னங்களை வெறுத்துரைத்தல்
2506. இன்னன்ன தூதெம்மை ஆளற்றப் பட்டிரந் தாளிவளென்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய்வரும், நீலமுண்ட
மின்னன்ன மேனிப் பெருமா னுலகில்பெண் தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொ லோகுடிச் சீர்மையி லன்னங்களே.
தலைவி அன்னம் வண்டானங்களையும் தூது வேண்டுதல்
2507. அன்னம்செல் வீரும்வண் டானம்செல் வீரும் தொழுதிரந்தேன்
முன்னம்செல் வீர்கள் மறவேல்மி னோகண்ணன் வைகுந்தனோ
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச் சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல் லீரோ இதுவோ தகவென் றிசைமின்களே .
மேகங்களைத் தூதாகக் கூறுதல்
2508. இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.
போலி கண்டுரைத்தல்
2509. மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே?
தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்துக் கூறல்
2510. அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோஇவற் றின்புறத் தாளென்றெண்ணோ?
தெருளோம் அரவணை யீர்இவள் மாமை சிதைக்கின்றதே.
தலைவி இழைத்த கூடல் அழிவிற்கு இரங்கிய பாங்கி தலைவற்குரைத்தல்
2511. சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறிதன் சீறடியால்
உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப்
பதைக்கின்ற மாதின் திறத்துஅறி யேஞ்செயற் பாலதுவே.
மாலைப் பொழுதுக்கு ஆற்றாத தலைவி வாடை கண்டு இரங்கல்
2512. பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே.
தலைவன் கொடுமையைப் பாங்கி கூறல்
2513. துழாநெடுஞ் சூழிரு ளென்றுதன் தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோஇலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே!
சுரத்தின் அருமை நினைந்து நற்றாய் இரங்கல்
2514. கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல்
2515. கடமா யினகள் கழித்து,தம் கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை நின்ற தவமிதுகொல்,
குடமாடி யிம்மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்உரு வொத்தன நீலங்களே.
தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி மகிழ்தல்
2516. நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள்
போல,பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர்
ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்,எம் பிரான்கண்ணின் கோலங்களே.
பொழுது கண்டிரங்கிய தலைவி பாங்கியர்க்கு வரைவு விருப்புரைத்தல்
2517. கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய, குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம் நிறைந்தன, நேரிழையீர்!
ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை நோக்குவ தென்றுகொலோ
தலைவி வாடைக்கு வருந்தல்
2518. என்றும்புன் வாடை யிதுகண் டறிதும் இவ் வாறுவெம்மை
ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம் ஓங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றிநின் றென்னைவன் காற்றடுமே.
தலைவனது கண்ணழகில் ஈடுபட்ட தலைவி வியந்துரைத்தல்
2519. வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்த வென்பால் எம்பிரான தடங்கண்களே.
தலைவனது உருவெழிலைத் தலைவி உரைத்தல்
2520. கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே,
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோஎம்பி ரான தெழில்நிறமே?
தலைவனது பெருமையைத் தலைவி உரைத்தல்
2521. நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால்எம்பி ரான்றன் பெரு மையையே.
தலைவி தலைவனது உதவியை நினைந்துரைத்தல்
2522. பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங் கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவ ர்நம்போல்
வரும்கேழ் பவருளரே? தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறுமே? சொல்லு வாழி மடநெஞ்சமே.
நெஞ்சு விடுதூது
2523. மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே.
தலைவியின் மெலிவுக்குச் செவிலி இரங்கல்: பாங்கி இரங்கலுமாம்
2524. திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும் என் னாங்கொலென் மெல்லியற்கே
தான் நல்ல நிமித்தம் கண்டு ஆறியிருத்தலைத் தலைவி தோழிக்கு உரைத்தல்
2525. மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில்மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென் காணும்என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன் பல்லியின்
சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே,
இருள் மிகுதி கண்ட தலைவி தோழிக்கு கூறல்
2526. பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்இப் பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாயமண் ணேரன்ன ஒண்ணுதலே.
மீண்டு வரும் தலைவன் தேர்ப்பாகனொடு கூறல்
2527. ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே.
கடலோசைக்கு ஆற்றாது தலைவி இரங்கல்
2528. மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான்.
அலைகண்டு கொண்ட அமுதம்கொள் ளாதுகடல் பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத்
துலைகொண்டு தாயம் கிளர்ந்துகொள் வானொத் தழைக்கின்றதே!
கால மயக்கு
2529. அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்திரு மால்கொடி யானென்று வார்கின்றதே.
கட்டுவிச்சி கூறல்
2530. வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம்,
சேரா யினதெய்வ நன்னோயிது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ்
வேரா யினும்நின்ற மண்ணாயி னும்கொண்டு வீசுமினே.
வண்டு விடுதூது
2531. வீசும் சிறகால் பறத்திர் விண்ணாடு நுங்கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!
தலைவியின் நலத்தைத் தலைவன் பாராட்டுதல்
2532. வண்டுகளோ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே?
தலைவன் இரவிடைத் தன்னைக் கலந்தமையைத் தலைவி தோழிக்குரைத்தல்
2533. வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழிஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின் தேன்
புயலுடை நீர்மையி னால் தடவிற்றென் புலன்கலனே.
தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர் மறுத்தல்
2534. புலக்குண்டலப்  புண்டரீகத்த போர்க்கெண்டை  வல்லியொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன  கண்ணன்கையால்
மலக்குண்டமுதஞ்சு ரந்த மறிகடல் போன்றவற்றாற்
கலக்குண்டநான்று கண்டார்  எம்மை யாருங்கழறலரே
தலைவன் பெருமையை உரைத்துத் தோழி தலைவியை ஆற்றுதல்
2535. கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன்என் னோவிங் களக்கின்றதே?
இரவு நீட்டிப்புக்குத் தலைவி ஆற்றாமை கண்டு செவிலி இரங்கல்; பாங்கி இரங்கலுமாம்
2536. அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய வாயுள ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்செய்ய வாய தடமுலையே.
தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்கல்
2537. முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான்
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே.
பாங்கி தலைவனது சீலத்தைத் தலைவிக்குக் கூறுதல்
2538. வாசகம் செய்வது நம்பரமே? தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால்
தாயவன் ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு உரைத்தல்
2539. இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது,
அறையோ எனநின் றதிரும் கருங்கடல், ஈங்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால்
முறையோ? அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே.
தலைவனை இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிதல்
2540. வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்துஅடி யேனொடிக் கால மிருகின்றவே
தலைவன் பெயர் கூறித் தரித்திருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல்
2541. இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த
திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர் யாமும்அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல்திரு நாமச்சொல் கற்றனமே.
தலைவியின் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாங்கனொடு கூறல்
2542. கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்றுஓ ரோகருமம்
உற்றுப் பயின்று செவியொடு சாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும் மிளர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே.
தலைவன் பாங்கனிடம் உற்றது உரைத்தல்: கழற்றெதிர் மறுத்தலுமாம்
2543. உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே.
தலைவன் பாங்கனுக்குத் தனது வலியழிவை உரைத்தல்
2544. காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்கண்க ளாய துணைமலரே.
கால மயங்கு
2545. மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய்
கலந்தார் வரவெதிர் கொண்டுவன் கொன்றைகள் கார்த்தனவே.
மாலைப் பொழுதுக்கு இரங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல்
2546. காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே?
வாரேற் றிளமுலை யாய்வருந் தேலுன் வளைத்திறமே
இரவின் நெடுமைக்குத் தலைவி இரங்கல்
2547. வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை
விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை
உளைவான் புகுந்து இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே.
செவிலி வெறுத்தலைத் தலைவி தோழியர்க்கு உரைத்தல்
2548. ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம் பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு அஃதேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிக ளோ உரை யீர்எம்மை அம்மனை சூழ்கின்றவே.
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு வருந்தல்
2549. சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை,
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோவந்து தோன்றிறு வாலியதே.
பிறையுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு பாங்கி இரங்கல்
2550. வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்தமி யாடி தளர்ந்ததுவே.
தலைவனது தார்மணம் கொண்டு வரும் தென்றலைத் தலைவி மகிழ்ந்து பாங்கிக்கு உரைத்தல்
2551. தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக்
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்தோ! வந்துலாகின்றதே.
தலைவன் தலைவியை வியந்து பதி வினாதல்
2552. உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர்,குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ,வையமோ? நும்நிலையிடமே.
தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி நிலவுக்கு வருந்தி நெஞ்சொடு கூறல்
2553. இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய்,
வடம்போ தினையும் மடநெஞ்சமே,நங்கள் வெள்வளைக்கே
விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின்
தடம்போ தொடுங்க,மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே.
மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல்
2554. திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை
வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே.
பிரிவாற்றாத தலைவி, தலைவனது ஆற்றலைக் கருதி, நெஞ்சழிந்து இரங்கல்
2555. நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோள்துணித்த
வலியும் பெரு மையும் யாஞ்பு சால்லும் நீர்த்தல்ல, மைவரைபோல்
பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே
மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே.
தலைவனைப் பிரியாத மகளிரின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல்
2556. வேதனை வெண்புரி நூலனை, விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே.
மாலை நேரம் கண்டு தலைவி இரங்கல்
2557. சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த,
பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த
பேரர சேஎம் விசும்பர சேஎம்மை நீத்துவஞ்சித்த
ஓரர சேஅரு ளாய்,இரு ளாய்வந் துறு கின்றதே.
வெறி விலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல்
2558. உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப்
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே!
தலைவனது கண்ணழகுக்குத் தலைவி இரங்கல்
2559. எரிகொள்  செந்நாயி றிரண்டுட னேயுத யம்மலைவாய்,
விரிகின்ற வண்ணத்த எம்பெரு மான்கண்கள், மீண்டவற்றுள்
எரிகொள் செந்தீவீழ் அசுரரைப் போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோ,வைய முற்றும் விளரியதே?
அன்றிலின் குரலுக்கு ஆற்றாத தலைவியின் நிலைகண்டு தோழி இரங்குதல்
2560. விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை,
முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும்
தளரில்கொலோ வறியேன்,உய்ய லாவதித் தையலுக்கே.
தலைவனைக் காணத் தலைவி விரைதல்
2561. தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும்,
ஐயநல் லார்கள் குழிய விழவினும், அங்கங்கெல்லாம்
கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான்
மையவண்ணா! மணியே,முத்தமே! என்றன் மாணிக்கமே!
மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல்
2562. மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த
மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன்னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே!
தலைவனைப் பிரிந்த தலைவி புலம்பல்
2563. அடைக்கலத் தோங்கு கமலத் தலரயன் சென்னியென்னும் ,
முடைக்கலத் தூண்முன் அரனுக்கு நீக்கியை, ஆழிசங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க் கன்றாய்ச் சிவன்தாம்புகளால்
புடைக்கலந் தானை,எம் மானையென் சொல்லிப் புலம்புவனே?
அன்றிலுக்கும் கடலுக்கும் ஆற்றாத தலைவியின் நிலைக்குத் தோழி இரங்கல்
2564. புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும் , பூங்கழிபாய்ந்
தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே?
போலி கண்டு வருந்துகின்ற தலைவியின் ஆற்றாமைக்கு இரங்கல்
2565. திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங் கேவரும் தீவினையே?
தலைவனது புணர்ச்சிக்கு விரைகின்ற தலைவி இரங்கல்
2566. தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை,
பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே?
தலைவனைப் பிரிந்த தலைவி, கால நீட்டிப்புக்கு ஆற்றாமல் உரைத்தல்
2567. தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால்,
நிலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே
நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம்
தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே.
தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்றல்
2568. சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே
வினைவயிற் பிரிவின்கண் தலைவனை நினைந்து தலைவி இரங்கல்
2569. பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதி  வாய்,
நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நின்னை விண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.
இருள்கண்டு அஞ்சுகின்ற தலைவி தன் தோழியரையும் செவிலியரையும் வெறுத்தல்
2570. காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே.
தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனை அடைந்து வியந்து கூறல்
2571. மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?
தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல்
2572. யாதானு மோராக் கையில்புக்கு,அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்னமே, அதனால்
யாதானும்பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே.
வெறி விலக்குவிக்கத் தலைவி நினைத்தல்
2573. வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.
தலைவனது பிரிவால் தூக்கம் கொள்ளாத தலைவி இரங்கல்
2574. எழுவதும் மீண்டே படுவதும் பட்டு,எனை யூழிகள்போய்க்
கழிவதும் கண்டுகண் டெள்கலல் லால்,இமை யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக்கண் ணாரக்கண்டு
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண் டோகண்கள் துஞ்சுதலே?
தலைவனது அருமையை நினைந்து கவல்கின்ற தலைவிக்கு தோழி கூறல்
2575. துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே.
தனக்குத் தலைவனிடத்துள்ள அன்பின் உறுதியைத் தலைவி தோழிக்குக் கூறல்
2576. ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே
நூற் பயன்( பிறவித் துன்பம் இல்லை)
2577. நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் சுறும்வல் லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே
*************
நம்மாழ்வார் அருளிச்செய்த  யஜுர் வேத ஸாரமான திருவாசிரியம்
தனியன்
அருளாய்ப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தல்
கலி விருத்தம்
நம்மாழ்வாரை வாழ்த்துவோம்
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதி
ஆசிரியப் பாவதனால் அருமறைநூல் விரித்தானை
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்
ஆசிரியப்பா
அரவணையில் அறிதுயில் அமர்ந்து,
மூவுலகையும் அளந்த சேவடியோய்!
2578. செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய், திகழ்பசுஞ்சோதி மரகதக் குன்றம்,
கடலோன் கைமிசைக் கண்வளர்வதுபோல், பீதகஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து, சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
பச்சைமேனி மிகப்பகைப்ப, நச்சுவினைக் கவர்தலை அரவி னமளியேறி,
எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவனிய னிந்திரன் இவர்முதலனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுலகளந்த சேவடி யோயே.
படைத்து உண்டவன்பால் கொள்ளும் அன்பே சிறந்தது
2579. உலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு,
அவாவா ருயிருகி யுக்க,நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல்,
அமுத வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றி னொடுநல்வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?
பாற்கடல் கடைந்த பரமனுக்கே ஊழிதோறும் நான் அடிமை ஆக வேண்டும்
2580. குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து
வரைபுரை திரைபொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே?
மாயன் திருவடிகளையே வாழ்த்தித் தொழுவேன்
2581. ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,
யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே.
நெடியேனுக்கன்றி இவ்வுலகம் யாருக்கும் அடிமை யாகாது
2582. மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே
ஆதிமூலமே முதற் பெருங்கடவுள்
2583. ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.
ஆலிலைச் சேர்ந்த மாயனே மாபெருந் தெய்வம்
2584. நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்
பெருமா மாயனை யல்லது, ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.
அடிவரவு: செக்கர் உலகு குறிப்பு ஊழி மாமுதல் ஓஓ! உலகு நளிர்-முயற்றி
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
****************
நம்மாழ்வார் அருளிச்செய்த அதர்வண வேத ஸாரமான பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் தம் பெருமைகளைக் கூறிக் கொள்ளும் பிரபந்தம் இது. எல்லா உலகங்களையும் தம்மிடத்தே கொண்ட ஸ்ரீ மந்நாராயணமூர்த்தி பெரியவர். அவரையும் தம்மிடம் கொண்டவர் ஆழ்வார், அதனால் பகவானைவிடத் தாமே பெரியவர் என்ற பாசுரத்தை இப்பிரபந்தத்தில் அருளிச் செய்துள்ளபடியால் இது பெரிய திருவந்தாதி ஆயிற்று.
தனியன்
எம்பெருமானார் அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
நம்மாழ்வாரின் நாமத்தையே கூறுக
முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,- சந்த
முருகூரும் சோலைசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன்பேர் கூறு.
மனமே! நாரணன் புகழ் பாடுவோம்
2585. முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்
செங்கண்மாலே எங்கள் மால்!
2586. புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.
நாராயணா! யாவும் நின் செயல்
2587. இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்?
கண்ணனுக்கு அடிமையான என்னினும் சிறந்தவர் இல்லை
2588. என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று.
மாயனே! தாயும் நீ, தந்தையும் நீ
2589. பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ!
மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி.
கண்ணா! என்னைக் கைவிடப் பார்க்கிறாயா?
2590. நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோம் யாம்?
வாரகனே! நின் திருவடியில் உள்ளது என் மனம்
2591. யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
அம்மா!நின் பாதத் தருகு.
பாரளந்தவரே! நும்மை யடையும் வழி தெரியவில்லை
2592. அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண்காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு.
மனமே! திருமாலையே சிந்தித்திரு
2593. நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் - எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.
மனமே! அகங்காரம் ஏன்? திருமாலை நினை
2594. இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்.
திருமாலே! ஐம்பெரும் பூதங்களும் நீயே
2595. நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ.
மனமே! கண்ணன் தாள் வாழ்த்து
2596. நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
இறைவா! நின் திருமேனி ஒளியைக் காட்டு
2597. வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே,
எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்.
மனமே! தீவினையைச் சேராதே
2598. சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.
பள்ளிகொண்டானையே புகழ்
2599. பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.
மாயனே! நின் மாயங்களை நீயே எனக்குச் சொல்
2600. சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.
அடியார்கள் என்றும் வாழ்ந்திடுவர்
2601. சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,
தாள்வரைவில் லேந்தினார் தாம்.
கண்ணா! நின் பழைய உருவை யாரறிவார்?
2602. தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
மனமே! கண்ணனைக் காணலாம்
2603. சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண்.
என் மனம் திருமாலைத் தீண்டிவிட்டது
2604. காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று.
கண்ணன் கழலிணையை என் நெஞ்சால் கட்டிவிட்டேன்
2605. சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,
காருருவன் தான்நிமிர்த்த கால்.
திருமால் என் மனத்தில் குடிபுகுந்தார்
2606. காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்
தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம்,
வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.
எவ்வுயிர்க்கும் தாய் தந்தை திருமாலே
2607. இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி - இளைப்பெய்த,
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
புருடோத்தமன் ஈடிணை அற்றவன்
2608. தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்.
கண்ணனால் மனத்துன்பத்தை மாற்றினேன்
2609. ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்.
இறைவன் அருளால் தீவினையை நீக்கினோம்
2610. யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
அருளென்னும் தண்டால் அடித்து.

நெடியவனே! நீ எப்படி உலகங்களை அளந்தாய்?
2611. அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல்
முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.
செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,
அறிகிலாமால் நீயளந்த அன்று.
ஆழியானை அகக்கண்ணால் காணலாம்
2612. அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து.
எனக்கு எளியன் எம்பெருமான்
2613. உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.
திருமாலைச் சிந்தித்தால் வல்வினை ஓடிவிடும்
2614. இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு?
திருமாலை நீழல்போல் பின்பற்றினோம்
2615. அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.
தாமோதரனுக்கே அடிமை செய்
2616. தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?
திருமாலை விரும்பு: துன்பமே வராது
2617. யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,- யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
பாறுபா றாக்கினான் பால்.
ஆழியானே! நின் பண்பைக் கேட்டால் தீவினை நீங்கிவிடும்
2618. பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,
நீதியாய்! நிற்சார்ந்து நின்று.
என் நெஞ்சிலிருந்து அகலாதவன் நரசிம்மன்
2619. நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்?
கண்ணனுக்கே உன்னை அர்ப்பணம் செய்
2620. அவனாம் இவனாம் உவனாம், மற்றும்ப
ரவனாம் அவனென் றிராதே,- அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
அவனே எவனேலும் ஆம்.
தண் துழாய் மாலையானை வாழ்த்துவோம்
2621. ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை.
மாயனைத் துதித்துப் பாவத்தைப் போக்குக
2622. அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
இமைக்கும் பொழுதும் இடைச்சி - குமைத்திறங்கள்,
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,
பேசியே போக்காய் பிழை.
நாரணன் புகழ்பேசிப் பிழைப்பாயாக
2623. பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.
பூதனையைக் கொன்ற கண்ணனை வாழ்த்து
2624. வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி.
கண்ணன் அருளால் இவ்வுலகம் என்றும் இருக்கும்
2625. வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
பன்னாளும் நிற்குமிப் பார்.
இவ்வுலகம் எம்பெருமானுக்கே ஆட்பட்டது
2626. பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு
ஆவான் பூகாவால் அவை.
மாயனை வாழ்த்தி மனத்துயர் போகுக
2627. அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ,
மனத்துயரை மாய்க்கும் வகை.
திருமாலை வாழ்த்தாமல் இருப்பது பாவம்
2628. வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,
மேலைத்தாம் செய்யும் வினை.
திருமால் திருவடிகளை வணங்கு: தீவினை அகலும்
2629. வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,
தினையாம் சிறிதளவும் செல்ல - நினையாது
வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,
நாயகத்தான் பொன்னடிகள் நான்.
வெந்நரகில் சேராமல் காப்பவன் திருமாலே
2630. நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
நீகதியா நெஞ்சே! நினை.
எங்கும் நிறைந்திருப்பவர் திருமால்
2631. நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு.
கண்ணனை எண்ணிப் பேரின்பம் அடைக
2632. எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
கொன்றானை யேமனத்துக் கொண்டு.
கருநிறப் பொருள்கள் கண்ணனையே நினைவூட்டும்
2633. கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.
கண்ணனின் மனம் கடினமானதோ?
2634.பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம்.
ஐம்புலன் அடக்கி அரியின் அடிகளைக் காண்
2635. மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,
சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய
தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,
வண்டுழாம் சீராக்கு மாண்பு.
வாமனனைப் புகழ்வதே வாய்க்கு உணவாகும்
2636. மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்
சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்
கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா
துண்ணவாய் தானுறுமோ ஒன்று.
வைகுந்தத்திலும் இனியது திருமாலின் புகழை நினைத்தல்
2637. ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது,
உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்.
கண்ணன் தாள் பணிந்தோம்: துயர் நீங்கினோம்
2638. வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா! மருங்கு.
மனக்கவலை தீர்ப்பவர் நாகணையார்
2639. மருங்கோத மோதும் மணிநா கணையார்,
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
மனக்கவலை தீர்ப்பார் வரவு.
மாயவர் காட்டும் வழியே இனிய வழி
2640. வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே!
ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி.
நரசிம்மன் என் வினையை மாற்ற மாட்டானா?
2641. வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
வாழ்வடங்க மார்விடந்த மால்.
மாலே! நினக்குக் குற்றேவல் புரியவே விரும்புகிறேன்
2642. மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு.
அரவணையானையே சிந்தியுங்கள்
2643. மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
மாயனே மாபெருந்தெய்வம்
2644. பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை.
தேவர்கள் திரிவிக்கிரமனையே பூசிப்பர்
2645. இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.
மண்ணளந்த மாலே பிணிக்கு மருந்து
2646. மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின்.
இராமவதாரத்தில் அரியின் அருஞ்செயல்
2647. பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
பருச்செவியு மீர்ந்த பரன்.
திருமாலையே தேவர்கள் தொழுவர்
2648. பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்
கைதான் தொழாவே கலந்து.
மனமே! கேசவனுக்குப் பாமாலை சூட்டு
2649. கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
மனமே! மாயவனை அறிந்துகொள்
2650. சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே!
அறிகண்டாய் சொன்னேன் அது.
கண்ணன் தாள் வாழ்த்துவதைக் கற்றிடு
2651. அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்
அதுவோர் பொருளில்லை யன்றே? - அதுவொழிந்து
மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே!
கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.
அடியேனுள்ளம் விட்டு நீங்காதவன் நாரணன்
2652. கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம்.
திருமாலையே யான் சிந்திப்பேன்
2653. அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?
ஆழியானே என் தந்தையும் தாயும்
2654. அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே இனி
அரியே ஆதிமூலம்
2655. இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.
எல்லாம் பகவானிடம் அடக்கம்
2656. முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர் - முதல்வா,
நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ.
கருநிறப்பூக்கள் கண்ணனை நினைவூட்டும்
2657. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
கண்ணன் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்?
2658. என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே!
புடைதான் பெரிதே புவி.
ஆழியானே! நீ என் உள்ளத்தில் உள்ளாய்
2659. புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
உலகளந்தவனே! உன்னை நினைப்பவர்க்கு அழிவில்லை
2660. உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்?
உலகளந்த மூர்த்தி! உரை.
பரமனே! நின்னைப் பற்றியே யான் பேசுவேன்
2661. உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை.
இராமனின் பண்புகளையே ஊணாக உண்
2662. துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும்,
சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், - கணைநாணில்
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
ஓவாத வூணாக உண்.
எப்பிறவி எடுத்தாலும் கண்ணனுக்கே யான் அடிமை
2663. உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே,
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
பேராயற் காளாம் பிறப்பு.
மண்ணளந்தவனே! நின்னை ஏத்தாத நாள் வீணான நாள்
2664. பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்.
ஆழியானே என்னை எப்பொழுதும் ஆள்பவன்
2665. பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து.
அந்தோ! இராமபிரானை நினையாமல் இளமை கழிந்ததே!
2666. தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்ந்து.
மனமே! கண்ணனையே வாழ்த்து
2667. அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய், - செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன்
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
மனமே! கண்ணனையே பூசித்து வணங்கு
2668. வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,
தங்கத்தா னாமேலும் தங்கு.
கண்ணனின் கருநிறம் கொள்ளக் கார்முகில் தவம் செய்ததோ?
2669. தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்.
திருமாலை நினைப்பவரின் வினைத்துயர் நீங்கும்
2670. கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது.
கண்ணன் கழலிணை எண்ணுக
2671. இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல்.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
****************
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை
திருமங்கையாழ்வாருக்கு-நாலுகவிப் பெருமாள் என்று விருது உண்டு; கவிபாடுவதில் தன்னேரில்லாத் தலைவர். நாலுகவிகளில் சித்திர கவியும் ஒன்று. அந்தச் சித்திர கவிகளில், எழுகூற்றிருக்கையும் அடங்கும். இப்பிரபந்தம் தேர் வடிவத்தில் அமைக்கப்பட்ட பிரபந்தம். இதன் இலக்கணம் வீர சோழியத்தில் கூறப்பட்டுள்ளது. இப்பிரபந்தம் நாற்பத்தாறு அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களைப் பெற்று வருவதோடு ஈற்றடி நாற்சீர்களைக் கொண்டு முடிவதால் இது நிலைமண்டிலவாசிரியப்பாவாகும். இவ்வகைப் பிரபந்தத்தை இயற்றியவர் ஆழ்வார்களுள் இவர் ஒருவரேயாவார்.
தனியன்
எம்பெருமானார் அருளிச்செய்தவை
நேரிசை வெண்பா
திருமங்கையாழ்வார் வாழ்க
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன்-வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்!
கட்டளைக் கலித்துறை
திருமங்கையாழ்வார் திருவடிகளே நமக்குத் துணை
சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்
ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே
ஆசிரியப்பா
திருமாலே! பிரமனை ஈன்றாய்! இராவணனைக் கொன்றாய்! மூவுலகு அளந்தாய்!
2672. ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில்,
ஒருமுறை அயனை யீன்றனை,ஒருமுறை
இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள்
இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
அட்டனை, மூவடி நானிலம் வேண்டி,
முப்புரி சுலொடு மானுரி யிலங்கும்.
மார்வினில், இருபிறப் பொருமா ணாகி,
ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,
கஜேந்திரனைக் காப்பாற்றினாயே!
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை
ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி
ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள்
இருநீர் மடுவுள் தீர்த்தனை முத்தீ
மகான்களால் அறியத் தக்கவன் ஆயினாயே!
நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை, ஐம்புலன்
அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி
முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்
ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர்
எத்தேவரும் அறிய முடியாதவனாய் நின்றாயே!
அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்
ஐவாய் அரவோடு ஆறுபெ நூதி சடையோன்
அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,
யோக நித்திரையில் அமர்ந்தாயே!
ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய
அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும்
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி
ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து
மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,
எல்லாமாகி, எங்கும் நின்றாயே!
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை,
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,
அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து
பரமனே! எம் துன்பங்களை நீக்கியருள்க
நின்றனை,குன்றா மதுமலர்ச் சோலை
வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி
மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித்
திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக்
கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில்
இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென்
திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன்
வணங்க, ஆடர வமளியில் அறிதுயில்
அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன்
வருமிடர் அகல மாற்றோ வினையே.
கட்டளைக் கலித்துறை
(இது கம்பர் பாடிய பாடல் என்பர்)
பள்ளிகொண்டான் பாதங்கள் எம்மனத்தில் கிடப்பன
இடங்கொண்ட நெஞ்சத் திணங்கிக் கிடப்பன
என்றும்பொன்னித்
தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்ததண்
பூங்குடந்தை
விடங்கொண்ட வெண்பால் கருந்துத்திச் செங்கண்
தழலுமிழ்வாய்
படங்கொண்ட பாம்பிணைப் பள்ளிகொண் டான்திருப்
பாதங்களே
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



மூன்றாவதாயிரம் பகுதி-3



திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய மடல்
எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் அவனுடைய குடக்கூத்தில் அகப்பட்டுக்கொண்டாள் ஆய்ச்சி ஒருத்தி, அவள் அவனை அனுபவிக்கமுடியாமல் வருந்தி மடலேறத் துணிந்தாள். திருமங்கையாழ்வாரும் அப்படிப்பட்ட பெண் நிலைமையை  ஏறிட்டுக்கொண்டு, பரகால நாயகி. தன் ஆசையை வெளியிடும் பிரபந்தங்கள் சிறியதிருமடலும், பெரிய திருமடலும் நாயகனின் பிரிவைத் தாங்கமுடியாத நாயகி, அவனோடு கூடுவதற்காகச் செய்யும் துணிச்சலான செயலே மடலூர் தல் எனப்படும்.
தன்னை விட்டுப் பிரிந்த தலைவனை ஒரு படத்தில் எழுதி, அதையே பார்த்துக்கொண்டு, அலங்காரம், ஊண் உறக்கமின்றி, பனைமடலையும் கையில் எடுத்துக்கொண்டு, தலைமயிரையும் விரித்துக்கொண்டு, இவன்தான் என்னைக் கைவிட்டான்; இரக்கமற்றவன் என்று அவனது செயல்களைக் கூறிக் கதறிக் கொண்டு, பலரும் நடுங்கி இரக்கங் கொள்ளும்படி தெரு வழியே திரிந்து உழல்வதே மடலூர் தல் எனப்படும். இலக்கண முறைப்படி திருமடல் ஒரே பாட்டாகக் கருதப்படுகிறது. மடலூர் வேன் என்று அச்சுறுத்திக் கூறும் திருமங்கையாழ்வார் மடலூர்ந்ததாகக் கூறப்படவில்லை; மடலேறவும் இல்லை. அகப்பொருள் இலக்கணப்படி, பெண்கள் மடலேறவும் கூடாது. கடலன்னகாமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பொருந்தக்க தில் என்னும் குறட்பா இக்கருத்தையே வலியுறுத்தும்.
தனியன்
பிள்ளைத் திருநிறையூர் அரையர் அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
சிறிய திருமடலின் பெருமை என்னே!
முள்ளிச் செழுமலரோ தாரான் முளைமதியம்
கொள்ளிக்கென் உள்ளம் கொதியாமே-வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்
கலி வெண்பா
முதல் திருமொழி
நிலமங்கையில் எழில்
2673. காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று
பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கையென்னும் – இப்
பாரோர் சொலப்பட்டமூன்னன்றெ அம்மூன்றும்
ஆராயில் தானே அறம்பொரு ளின்பமென்று
முயலைவிட்டுக் காக்கையைத் தொடர்வதா?
2674. ஆராரிவற்றினி டையதனை எய்துவார்
சீரார் இருலையும் எய்துவர் - சிக்கெனமது
2675. ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகத்தார் சொல்லும்சொல்
ஒராமையாமாரதுவுரைக்கெங்கௌõமெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி
தேரார் நிரைகதிரோன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆராவமுதமண்கய்தி -- அதில்நின்றும்
தலைவனைத் தலைவி கண்டு மெலிந்தமை
2676. வாரதொழிவதன்னுண்டு - அதுநிற்க
ஏரார்முயல்விட்டு காக்கைப்பின் போவதே
ஏரா யிளமுலையீர் என்றனக் குற்றதுதான்
காரார்க்குழலெடுதுக்கட்டி - கதிர்முலையை
2677. வாரார வீக்கி மணிமெகலை திருத்தி
ஆராரயில் வேற்க ணஞ்சனத்தின் நீரணிந்து
சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான்
நீரார் கமலம்போல் செங்கன்மால் என்றுருவன்
பாரோர்களெல்லாம் மகிழ பரைகரண்க
சீரார் குடமரியண்டெந்தி செழுந்தெருவெ
2678. ஆரா ரெனைச் சொல்லி ஆடுமதுகண்டு
ஏராரிள்முலயார் அன்னையிரும் அல்லரும்
வாராயொவென்னர்க்குச் சென்றென் என்வல்வினையால்
காரார் மணினிரமும் கைவளையும் காணேன் நான்
குறி கேட்க முயலுதல்
2679. ஆரானும் சொல்லிற்றுதம் கொள்ளேன்--அறிவழிந்து
தீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி
ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னை சீரார் செழும்புழுதிக்காப்பிட்டு  செங்குரிஞ்சி
2680. தாரார் நௌமாலை சாதர்க்கு தான்பின்னும்
நேராதன ஒன்னுனேர்ந்தான்—அதனாலும்
2681. தீராதெஞ்சிந்தைநோய் தீராதென் பேதுறவு
வாராது மாமை அதுகண்டு மற்றாண்கே
ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார்
பாரோர்ச்சொலப்படும் கட்டுப் படித்திரேல்
தலைவியினது மனநோயின் காரணத்தைக் குறத்தி சொல்லுதல்
2682. ஆரானும் மெய்படுவன் னென்றார் அது கேட்டு
காரார் குழற்கொண்டை கட்டுவிச்சி கட்டெரி
சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா
வேரா விதிர்விதிரா மெய்சிலிர்க்கைமோவ
இரண்டாந் திருமொழி
2683. பேராயிரமு டயான் நென்றாள்—பேர்த்தெயும்
காரார் திருமெனி காடினாள் -- கைய்யதுவும் 
2684. சீரார் வலம்புரியெ யென்றள் – திருதுழாய்த்
தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா
நீரெதுமண்சேன்மின் நும்மகளை நோய்செய்தான்
ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான்
தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்
கூரார்வெல்கண்ணீர் உமக்கரியக் கூருகெனொ
ஆரா லிவய்யம் அடியளப் புண்டதுதான்
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது -- மத்து
ஆராலெ கன்மாரி கார்த்ததுதான் -- ஆழினீர்
2685. ஆரால் கடைந்திட ப்பட்டது, அவன் காண்மின்
ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும்
ஆராத தன்மயனா ஆங்கொருநாள் ஆய்ப்பாடி
சீரார்க் கலையல்குல் சீரடிச்செந்துவர்வை
வாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டு
ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு
நாராருரியேற்றி நங்கமயயைத்ததனை
போரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம்
ஓராதவன்போல் உறங்கியறிவுற்று
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைனீட்டீ
2686. ஆராத வெண்ணைவிழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன்போல் கிடந்தானை கண்டவளும்
வாராத்தான் வைத்து காணாள் வயிறடித்திங்கு
ஆரார் புகுது வாரைய ரிவரல்லால்
நீரா மிதுசெய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால்
2687. ஊரார்களெல்லாரும் காணௌரலோடெ
தீராவெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப
ஆரா வயிதினோ டாற்றாதான் அன்றியும்
நீரார் நெடும்கயத்தை சென்றலைக்க நின்னுரப்பி
2688. ஊரார்களெல்லாரும் காணௌரலோடெ
தீராவெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப
ஆரா வயிதினோ டாற்றாதான் அன்றியும்
நீரார் நெடும்கயத்தை சென்றலைக்க நின்னுரப்பி
2689. கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்
ஈரா விடுத்தவட்கு ழத்தூனை வென்னரகம்
2690. சேரா வகையெ சிலைகுனித்தான் செந்துவர்வாய்
வாரார் வனமுலையால் வைதேவி காரணமா
ஏரார்த்தடந்த்தோ ளிராவணனை ஈரைந்து
சீரார் சிரமறுத்து செற்றுதுகந்த செங்கண்மால்
2691. போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை
கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு, குடல் மாலை
2692. சீரார் திருமார்ப்பிம் மெல்கட்டி செங்குருதி
சோரா கிண்டந்தனை குங்குமத்தாள் கொட்டி
ஆரவெழுந்தன் அரியுருவாய் அன்றியும்
பேர்வாமனாகிய காலத்து ழவடிமண்
2693. தாரா யெனக்கென்று வேண்டிக் கலத்தினால்
நீரேற் றுலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை-
ஆராத போரி லசுர்ர்களுந் தாணுமாய்
காரார் வரைநட்டு நாகங் கயிறாக
மூன்றாந் திருமொழி
2694. பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத்துழாய்
தார் ஆர்ந்த மார்வன் தடமால் வரைபோலும்
போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலரி
நீராமலர்க்கமலம் கொண்டொர் னெடுங்கையால்
நாராயணா வோ மணிவண்ணா நாகனையாய்
வாராய். யென்னாரிடரை நீக்காய் – எனவெகுண்டு
2695. தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூறாக
ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்பெருமான்
பேராயிரமுடயான் பேய்பெண்டீர் னும்மகளை
தீராநோய் செய்தானெனவுரைதாள் சிக்கனுமற்று
தாய் தன் கவலை தீர்தல்
2696. ஆரானும் அல்லாமை கேட்டங்கள் அம்மனையும்
போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாய்
தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே -- மற்று
ஆரானுமல்லனே யென்றொழிந்தாள் நானவனைக்
தலைவி பொறுத்திருந்த காரணம்
2697. காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றத் திரிதருவன், பின்னையும்
2698. ஈராப்புகுதலும் இவ்வுடலைத் தன்வாடை
சோராமருக்கும் வகையரியேன், சூழ் குழலார்
2699. ஆரானுமேசுவர் என்னு மதன்பழியெ
வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன்
தூது சென்ற மனம் திரும்பவில்லை
2700. வாராய் மடனெஞ்சே வந்து, மணிவண்ணன்
சீரார் திடுத்துழாய் மாலை நமக்கருளி
தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை
ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும்
போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு
காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்
வாராதே யென்னை மரந்ததுதான், வல்வினையேன்
என் கவலையை விசாரிப்பவர் யார்?
2701. ஊரார் உகப்பதே ஆயினேன் மற்றெனக் கிங்கு
ஆராய்வாரில்லை அழல்வாய் மெழுகு போல்
2702. நீராய் உருகும் என்னாவி நெடுங்கண்கள்
ஊரார் உறங்கிலும் தானுறங்க உத்தமந்தன்
2703. பேராயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் பொலும் காமத்தராயினார்
நான்காந் திருமொழி
கற்பில் சிறந்த வாசவதத்தை வத்ஸராஜன் பின்னால் சென்று விடவில்லையா?
2704. ஆரே பொல்லாமை அறிவார் அதுனிற்க
ஆரானு மாதானும் அல்லலவள் காணீர்
வாரார் வனமுலை வாசமததை வென்று
ஆரானும் சொல்லப்படுவாள் – அவளும்தன்
2705. பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ
தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள்
ஊராரிகழ்ண்திடப் பட்டாளே, மற்றெனக்கிங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே  நானவனை
தலைவி சென்று தேடிய திவ்விய தேசங்கள்
2706. காரார் திருமேனி காணுமலவும்போய்
சீரார் திருவேங் கடமே திருக்கொவல்
ஊரே மதிட் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மனுதிருத்தான் வெள்ள றையே வெஃகாலே
பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கணமங்கை
2707. காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்
காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை
சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை
2708. ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை
ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த
2709. சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப்
தலைவனின் நாமங்களைச் சொல்லி தலைவி மடலூர எண்ணுதல்
2710. பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவெ
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்
நேரிசை வெண்பா
(இது கம்பர் பாடியது என்பர் சிலர்)
திருநறையூரில் மடலூரக் கடவேன்
ஊரா தொழியேன் உலகறிய ஒண்ணுதலீர்!
சீரார் முலைத்தடங்கள் சேரளவும்-பாரெல்லாம்
அன்றோங்கி நின்றளந்தான் நின்ற திருநறையூர்
மன்றோங்க வூர்வன் மடல்
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல்
தர்மார்த்த காமமோட்ச புருஷார்த்தங்களில் மோட்சம் என்பது காணாத பொருளுக்கு உரிய வார்த்தையாகவே இருக்கிறது. நான் சென்று வந்தேன் என்று எவரும் வந்து மோட்சம் இப்படிப்பட்டது எனச் சொல்லவில்லை. அறம் பொருளால் பெறப்படுவது காமமேயாதலால் காமபுருஷார்த்தமே சிறந்தது. நான் பகவத் காமத்தைப் பற்றினேன் அதனால் பகவானை அடைய மடலூரத் துணிந்தேன். காமபுருஷார்த்தத்தை விரும்பாதவர்கள் ரசிகர்களல்லர். மடலூரக் கூடாது என்பதை நான் ஏற்கவில்லை. நாயகனை விட்டுப் பிரிய மனமில்லாமல் பெண்கள் இருந்ததில்லையா? சீதை, வேகவதி, உலூபிகை, உஷை முதலிய பெண்களின் வரலாற்றைச் சிந்தியுங்கள் என்றும்
திருநறையூர் எம்பெருமானை வணங்கியது முதல் எனக்குப் பகவத் காமமகிற மனநோய் ஏற்பட்டுவிட்டது. அனைவர்க்கும் இன்பமளிக்கும் பொருள்களெல்லாம் எனக்கு வருத்தத்தை அளிக்கின்றன. இவை எல்லாம் எனக்கு வேண்டாதவாறு செய்தவன் ஸ்ரீமந் நராயணன். இவன் இருக்கும் திருவிண்ணகர் முதலிய இடங்களுக்குச் சென்று, அவனிடம் என் உடலைக் காட்டி என் நிலையைக் கூறுவேன். அப்படியும் என்னை ஏற்காவிட்டால், அவன் செயங்களை ஊரறியச் சொல்லி அம்பலப்படுத்துவேன் ; மடலூர்வேன் என்றும் திருமங்கையாழ்வார் தம்மைத் தலைவி நிலையில் அமைத்துக்கொண்டு பாடுகிறார்.
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
நறையூர் நம்பியின் அருள்தான் வேண்டும்
பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
நன்னுதலீர்! நம்பி நறையூரர்-மன்னுலகில்
என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து
கலி வெண்பா
உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்
முதல் திருமொழி
2711. மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,
மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச,
2712. துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,
என்னும் விதானத்தின் கீழால், - இருசுடரை
மன்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்
பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை
2713. தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,
என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,
2714. என்னும் இவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத்
2715. தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட
பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,
மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறைதான்
சொன்னவர் கண்டதில்லை: கண்டவர் சொன்னதில்லை
2716. மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,
நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும்
2717. பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது, ஓர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,
என்னும் இவையே சுகர்ந்துடலம் தாம்வருந்தி,
துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன்
2718. மன்னும் அழல்சுகர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து,
தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,
இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,
மோட்சத்தைக் கண்டவரைக் காட்டுங்கள்
2719. என்னவும் கேட்டறிவ தில்லை உளதென்னில்
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,
அன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும்
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,
2720. அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்
கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, - அதுநிற்க,
இரண்டாந் திருமொழி
தேவர் உலகத்து இன்பம் வேண்டாம்; தெய்வ இன்ப வழியில் செல்வோம்
2721. முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,
அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர்
2722. கொல்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண்
கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து ,ஆங்
2723. கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,
2724. முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,
அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,
பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,
இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,
மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண்
2725. மின்னி டையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்,
அன்ன நடைய அரம்பய ர்த்தம் வகைவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்
2726. மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,
மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,
2727. துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,
சின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம்
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்
2728. மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல்
நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர்       
மின்னி டைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்,
2729. பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங்   
இன்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,
2730. அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,
இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே
மூன்றாந் திருமொழி
மாதர் மடலூரலாம் என்று வடமொழி கூறுகிறதே!
2731. அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம்  மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,
2732. மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,
தென்னுறையில் கேட்டறிவதுண்டு-அதனை யாம்தெளியோம்
மடலூர விரும்பாதவர்கள் ரசிகர்கள் அல்லர்
2733. மன்னும் வடநெறியே வேண்டினோம்வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,
2734. அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்
இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்
2735. மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,
2736. உன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த்
துன்னும் மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்,
2737. தம்முடலம் வேவத் தளராதார், - காமவேள்
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,
2738. பொன்னொடு வீதி புகாதார் தம் பூவணைமேல்
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,
இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,
பொன்னனையார் பின்னும் திருவுறுக போர்வேந்தன்
சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்
2739. தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து ,
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,
2740. மன்னும் வளநாடு கைவிட்டு , - மாதிரங்கள்
மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு
கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,
கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்
துன்னு வெயில்வறுத் த வெம்பரமேல் பஞ்சடியால்,
நான்காந் திருமொழி
2741. மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே
2742. பின்னும் கருநெடுங்கண் செவ்வாய்ப் பிணைநோக்கின்,
மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்
கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங்
கன்னவனை நோக்கா தழித்துரப்பி, - வாளமருள்
கல்னவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,
2743. பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்
2744. கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,
தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,
பன்னாக ராயன் மடப்பாவை, - பாவைதன்
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,
2745. தன்னுடைய கொங்கை முகநெரிய, - தான் அவன்றன்
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது
2746. நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே சூழ்கடலுள்,
2747. பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,
தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,
கன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய     
2748. இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,
மன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன்      
2749. என்னை இதுவி ளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,
கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,
மன்னிய பேரின்பம் எய்தினாள் மற்றிவைதான்
2750. என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,
மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா
ஐந்தாந் திருமொழி
2751. மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,
அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்
2752. கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள
மின்னி எரிவீச மேலெடுத்த சூழ்கழற்கால்
பொன்னுலகம் ஏழும் கடந்தும்பர் மேல்சிலும்ப
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?
நறையூர்ப் பெருமானைக் கண்டேன்; மயங்கினேன்
2753. பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,
2754. என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்
மன்னன் திருமர்பும் வாயும் அடியி ணையும்,
2755. பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்         
பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்,
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வ ளையும்,
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர்
2756. இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,         
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,
முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்,
அன்ன திருவுருவம் நின்ற தறியாதே,
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
மன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த            
மன்மதன் துன்புறுத்துகிறானே!
2757. இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.
தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ,
தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,
என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்
கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,
கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தௌப் பொதவணைந்து,
2758.  தன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல்  
என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்,
என் இளமையின்பம் எம்பெருமானுக்கே உரியது
2759. பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே,பேதையேன்           
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,
நன்னறு வசமற் றாரானும் எய்தாமே,
மன்னும் வறு நிலத்து வாளாங் குகுத்ததுபோல்,
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,
மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப்           
2760. பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி,
முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர்
மன்னும் மருந்தறிவி ரில்லையே மல்விடையின்
ஆறாந் திருமொழி
விடையின் மணிக்குரல் கேட்டு நான் ஏங்குகிறேன்
2761. துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்
கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்
2762. தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,
கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,
என்னிதனைக் காக்குமா சொல்லீர்? இதுவிளைத்த
தசாவதாரம் எடுத்தவனே என்னை மயக்கியவன்                    
2763. மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள்
முன்னம் விடுத்த முகில்வண்ணன் – காயாவின்
2764. சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல்
அன்ன கடலை மலையிட் டணைகட்டி,
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,
பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து
2765. தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை,ஆயிரங்கண்          
மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னுலகும்,
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை
பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,
2766. கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீ ர்த்து,
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய  
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த
2767. மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,
மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,
பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,
கொன்னவிலும் கூர்சுதிமேல் வைத்தெடுத்த கூத்தனை,
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்
தன்னின் உடனே சுழல மலைதிரித்து,ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய
2768. மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை மற்றன்றியும்,             
தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்,
மன்னும் குறளுருவின் மாணியாய், - மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்
2769. மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,
2770.மன்னா தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்
ஏழாந் திருமொழி
2771. மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த
பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்
கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,
மண்ணுலகில் மாயவன் தரும் காட்சிகள்
2772. தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, தாமரைமேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை,
பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை,
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,
2773. மன்னிய தண்சேறை வள்ளலை, - மாமலர்மேல்      
அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,
என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை,
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்
பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை,
2774. மன்னும் அரங்கத்தெம் மாமணியை, -வல்லவாழ்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,
தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,
2775. மன்னும் கடன்மல்லை மாயவனை, - வானவர்தம்     
சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,
தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,
அன்னத்தை மீனை அரியை அருமறையை,
2776. முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, - கோவலூர்      
மன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப்,
பின்னும் முலையுண்ட பிள்ளையை, - அள்ளல்வாய்   
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,
2777. தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை,          
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை,
2778. மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,
கொன்னவிலும் ஆழிப் படையானை, - கோட்டியூர்     
2779. அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை,
மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை,
மன்னிய பாடகத்தெம் மைந்தனை, - வெஃகாவில்,       
2780. உன்னிய யோகத் துறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை,
என்னை மனங் கவர்ந்த ஈசனை, - வானவர்தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை,
எட்டாந் திருமொழி
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
2781. அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,
நென்னலை யின்றினை நாளையை, - நீர்மலைமேல்    
2782. மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
தென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில்         
2783. மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, - நான்வணங்கும்
2784. கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை யெல்லாம் அறிவித் தால் எம்பெருமான்,
2785. தன்னருளும் ஆகமும் தாரானேல், - தன்னைநான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்,
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
2786. தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன் தான்முனநாள்
மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்,
துன்னு படல்திறந்து புக்கு, - தயிர்வெண்ணெய்       
தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண்       
2787. மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றல்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,
முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்..
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,
தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,
மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப,
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,
என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்
தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,
மன்னன் இராவணன்றன் நல்தங்கை, - வாளெயிற்றுத்
2788. துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,
தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,
மன்னிய திண்ணெனவும் வாய்த்த மலைபோலும்,
2789. தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும் –மற்றிவைதான்   
2790. உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,
முன்னி முளைத்தெழுந்தோங்கி யொளிபரந்த,
மன்னியம்பூம் பெண்ணை மடல்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
நேரிசை வெண்பா
(இது கம்பர் பாடியது என்பர்)
உலகறிய மடலூர்வேன்
என்னிலைமை யெல்லா மறிவித்தா லெம்பெருமான்,
தன்னருளும் ஆகமும் தாரானேல்-பின்னைப்பேய்
ஒண்டுறைநீர் வேலை யுலகறிய வூர்வன்நான்
வண்டறைபூம் பெண்ணை மடல்
மண்ணிற் பொடிப்பூசி வண்டிரைக்கும் பூச்சூடி
பெண்ணை மடல்பிடித்துப் பின்பின்னே-அண்ணல்
திருநறையூர் நின்றபிரான் தேர்போகும் வீதி
பொருமறையாச் செல்வம் பொலிந்து
இயற்பா சம்பூர்ணம்.


மூன்றாவதாயிரம் பகுதி-4



இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்
வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை
நேரிசை வெண்பா
அமுதனார் திருவடிகள் பழவினைகளை நீக்கும்
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும்,-என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான் !
கட்டளைக் கலித்துறை
நெஞ்சே! இராமானுச நூற்றந்தாதியை ஓத இசைக
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது, ஓங்கும் அன்பால்
இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே !
(சோமாசியாண்டான் அருளியதென்பர்)
இராமானுச! உன் திருநாமங்கள் என் நாவில் தங்கும்படி அருள்
சொல்லின் தொகைகொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்,
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமானுச ! இதென் விண்ணப்பமே.
(வேதப்பிரான்பட்டர் அருளியதென்பர்)
அமுதன் அந்தாதி பாடித் தந்தான்: இனி நமக்குக் குறையில்லை
இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை
கனிதந்த நெஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த பிரபந்த காயத்திரி என்னும்
இராமானுச நூற்றந்தாதி
கட்டளைக் கலித்துறை
இராமானுசனின் திருநாமங்களைச் சொல்வோம்
2791.  பூமன்னுமாது பொருந்திய மார்பன், புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன், பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ, நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே.
இராமானுசனின் சீலத்தையே நினைப்பேன்
2792. கள்ளார்பொழில்தென்னரங்கன், கமலப்பதங்கள் நெஞ்சிற்
கொள்ளாமனி சரைநீங்கிக், குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு, ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.
மனமே! என்னை இராமானுசன் அடியார்க்கு அடியவனாக்கினாயே! உன்னை வணங்கினேன்
2793. பேரியல் நெஞ்சே ! அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப், பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கன்பு செய்யும்
சீரியபேறுடையார், அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே.
நான் திருமாலை வணங்கச் செய்தவன் இராமானுசன்: இனி எனக்கு அழிவில்லை
2794. என்னைப் புவியில் ஒருபொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினை வேரறுத்து, ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த இராமானுசன் பரன்பாதமுமென்
சென்னித் தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே,
இராமானுசனைப் பாடுவதால் என் கவியில் யாரும் குற்றம் காணமாட்டார்
2795. எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று, இசையகில்லா
மனக்குற்றமாந்தர் பழிக்கில் புகழ், அவன்மன்னியசீர்
துதிக்கும் பரமன், இராமானு
இனக்குற்றம்காண கில்லார், பத்திஏய்ந்த இயல்விதென்றே.
இராமானுசனின் பெரும்புகழ் கூற முயல்கின்றேன்
2796. இயலும் பொருளும் இசைத்தொடுத்து, ஈன்கவிகளன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை, மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன், அவன்றன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே.
இராமானுசனைப் பாடுவதால் இனி எனக்கு வருத்தமில்லை
2797. மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்சமுக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம்கூரத்தாழ்வான் சரண்கூடியபின்,
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ்பாடியல்லா
வழியைக் கடத்தல், எனக்கினியாதும் வருத்தமன்றே.
பொய்கையாரை நினைக்கும் இராமானுசன் எம் இறைவன்
2798. வருத்தும் புறவிருள்மாற்ற, எம்பொய்கைப் பிரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி, ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன், இராமானுசனெம் இறையவனே.
பூதத்தாரைப் போற்றும் இராமனுசனையே போற்றுக
2799. இறைவனைக் காணும் இதயத்திருள்கெட, ஞானமென்னும்
நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித்தாள்கள், நெஞ்சத்
துறையவைத்தாளும் இராமானுசன் புகழ்ஓதும் நல்லோர்
மறையினைக்காத்து, இந்த மண்ணகத்தே மன்னவைப்பவரே.
இராமனுசனின் அடியார்க்கடியார் சிறப்படைவர்
2800. மன்னிய பேரிருள் மாண்டபின், கோவலுள்மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும், தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கன் புபூண்டவர்தாள்
சென்னியிற்சூடும், திருவுடையாரென்றும் சீரியரே.
இராமானுசனின் அன்பர் பெருமை அளவிடமுடியாதது
2801. சீரிய நான்மறைச் செம்பொருள், செந்தமிழாலளித்த
பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள், சரணாம்பதுமத்
தாரியல் சென்னி இராமானுசன்றனைச் சார்ந்தவர்தம்
காரியவண்மை, என்னால் சொல்லொணாதிக் கடலிடத்தே.
இராமானுசனின் அடியார்கட்கே யான் அன்பு செய்வேன்
2802. இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன், இணையடிப்போ
தடங்கும் இதயத்திராமானுசன், அம்பொற்பாதமென்றும்
கடங்கொண்டிறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல் செய்யாத்
திடங்கொண்ட ஞானியர்க்கே, அடியேனன்பு செய்வதுவே.
இராமானுசன் திருவடிகளே எனக்குக் கதி
2803. செய்யும் பசுந்துளவத் தொழில்மாலையும், செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ்மாலையும், பேராதசீரரங்கத்
தையன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியா
மெய்யன், இராமானுசன் சரணேகதி வேறெனக்கே.
இராமானுசன் என்னைக் கைவிடமாட்டான்
2804. கதிக்குப்பதறி, வெங்காளமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற்றேன், கொல்லிகாவலன் சொல்
பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன், இராமானுசனென்னைச் சோர்விலனே.
இராமானுசனைச் சேராதவரை யான் சேரேன்
2805. சோராதகாதல் பெருஞ்சுழிப்பால், தொல்லை மாலையொன்றும்
பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும், பான்மையன்தாள்
பேராதவுள்ளத் திராமானுசன்றன் பிறங்கியசீர்
சாராமனி சரைச்சேரேன், எனக்கென்ன தாழ்வினியே.
ஆண்டாள் திருவருளால் வாழ்பவன் இராமானுசன்
2806. தாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து, தலமுழுதும் கலியே
ஆள்கின்ற நாள்வந்தளித்தவன் காண்மின், அரங்கர்மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்றவள்ளல், இராமானுசனென்னும் மாமுனியே.
இராமானுசனை அடைந்தோர் இன்பதுன்பங்களை மதியார்
2807. முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக், கலைபரவும்
தனியானையைத் தண்டமிழ் செய்த நீலன்றனக் குலகில்
இனியானை, எங்கள் இராமானுசனை வந்தெய்தினரே.
இராமானுசனே எனக்குப் பெருந்துணை
2808. எய்தற்ரிய மறைகளை, ஆயிரம் இன்தமிழால்
செய்தற்குலகில் வரும் சடகோபனைச், சிந்தையுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர்சீரை உயிர்களெல்லாம்
உய்தற்குதவும், இராமானுசனெம் உறுதுணையே.
திருவாய்மொழியின் பெருமையை விளக்கிய இராமானுசனே ஆரமுது
2809. உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும், உயர்குருவும்
வெறிதரு பூமகள் நாதனும், மாறன் விளங்கியசீர்
நெறிதரும் செந்தமிழ் ஆரணமேயென்றிந் நீணிலத்தோர்
அறிதரநின்ற, இராமானுசனெனக் காரமுதே.
நாதமுனியை ரசிக்கும் இராமானுசன் என் பெருஞ்செல்வம்
2810. ஆரப்பொழில் தென்குருகைப் பிரான், அமுதத்திருவாய்
ஈரத்தமிழின் இசையுணர்தோர்கட்கு, இனியவர்தம்
சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள்நாத முனியை நெஞ்சால்
வாரிப்பருகும், இராமானுசனென்றன் மாநிதியே.
ஆளவந்தார் திருவடிகளை வணங்கும் இராமானுசனே என்னைக் காத்தான்
2811. நிதியைப் பொழியும் முகிலென்று, நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்தூய் நெறிசேர்
எதிகட்கிறைவன்யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய, இராமானுசனென்னைக் காத்தனனே.
இராமானுசனே என் பொக்கிஷம்
2812. கார்த்திகையானும் கரிமுகத்தானும், கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு, மூவுலகும்
பூத்தவனே ! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
திர்த்தனையேத்தும், இராமானுசனென்றன் சேமவைப்பே.
இராமானுசனையே முப்போதும் வாழ்த்துவேன்
2813. வைப்பாயவான் பொருளென்று, நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை, இருநிலத்தில்
ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்சநெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன், என்னாம் இது அவன் மொய்புகழ்க்கே.
இராமானுசனைக் கண்டு உயர்ந்தேன்
2814. மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும்மூத்து, அதனால்
எய்த்தொழிந்தேன் முனநாள்களெல்லாம், இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்
கைத்தமெய்ஞ்ஞானத்து, இராமானுசனென்னும் கார்தன்னையே.
இராமானுச! நின் சீர் எனக்குத் தித்திக்கின்றது
2815. காரேய்கருணை இராமானுச, இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர்நின்னருளின் தன்மை, அல்லலுக்கு
நேரேயுறை விடம் நான் வந்த நீ யென்னை உய்த்தபினுன்
சீரேயுயிர்க்குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.
இராமானுசன் என்னை என்றும் ஆட்கொள்வான்
2816. திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என்செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கியமேகத்தை, மேவும்நல்லோர்
எக்குற்றவாளர் எதுபிறப்பேதியல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு, அவ்வியல்வே நம்மையாட் கொள்ளுமே.
இராமானுச! நின் வள்ளல் தன்மை என்னே!
2817. கொள்ளக் குறைவற்றிலங்கிக், கொழுந்து விட்டோங்கியவுன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம்நீ புகுந்தாய்,
வெள்ளைச் சுடர்விடும் உன்பெருமேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும், இராமானுச ! என்தனிநெஞ்சமே !
இராமானுசனையே என் வாய் புகழும்
2818. நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்தநிமலன், நங்கள்
பஞ்சித் திருவடிப்பின்னை தன்காதலன், பாதம்நண்ணா
வஞ்சர்க்கரிய இராமானுசன் புகழ் அன்றியென்வாய்
கொஞ்சிப் பரவகில் லாது, என்னவாழ்வின்று கூடியதே !
இராமானுசனின் அடியார்களைச் சேரும் நான் எந்நாளோ?
2819. கூட்டும்விதியென்று கூடுங்கொலோ, தென்குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னைத், தன்பத்தியென்னும்
வீட்டின் கண்வைத்த இராமானுசன் புகழ்மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என்நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே.
இராமானுசனே என்னை ஆண்டவர்
2820. இன்பந்தரு பெருவீடுவந்தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந்தருநிரயம் பலசூழிலென்? தொல்லுலகில்
மன்பல்லுயிர்கட்கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன், இராமானுசனென்னை ஆண்டனனே.
மனமே! இராமானுசனைப் பொருந்திவிட்டோமே!
2821. ஆண்டுகள் நாள்திங்களாய், நிகழ்கால மெல்லாம்மனமே !
ஈண்டு பல்யோனிகள் தோறுழல்வோம், இன்றோரெண்ணின்றியே
காண்டகுதோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டவன்பாளன், இராமானுசனைப் பொருந்தினமே.
இராமானுசனை அடைபவர்க்கு எல்லாப் பயன்களும் சேரும்
2822. பொருந்திய தேசும் பொறையும் திறலும்புகழும், நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும், செறுகலியால்
வருந்தியஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த
அருந்தவன், எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.
திருமாலின் பஞ்சாயுதங்களே இராமானுசனாக அவதரித்தன
2823. அடையார் கமலத்தலர் மகள்கேள்வன், கையாழியென்னும்
படையோடு நாந்தகமும் படர்தண்டு மொண்சார்ங்கவில்லும்
புடையார் புரிசங்கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று,
இடையே இராமானுச முனியாயின இந்நிலத்தே.
இராமானுசனின் புகழ்தான் என்னே?
2824. நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை, என்பெய்வினைதென்
புலத்தில் பொறித்தவப் புத்தகச்சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது, இராமானுசன்றன் நயப்புகழே.
இராமானுசனின் திருவடிகளையே யான் போற்றுவேன்
2825. நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே, சிலமானிடத்தைப்
புயலே எனக் கவிபோற்றி செய்யேன், பொன்னரங்கமென்னில்
மயலேபெருகும் இராமானுசன் மன்னு மாமலர்த்தாள்,
அயரேன், அருவினை என்னையெவ்வாறின்றடர்ப்பதுவே?
இராமானுசன் அருள் நிறைந்தவன்
2826. அடல்கொண்ட நேமியன் ஆருயிர்நாதன், அன்றாரணச்சொல்
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப்பப், பின்னும்காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
படரும்குணன், எம்இராமானுசன்றன் படியிதுவே.
இராமானுசனின் அடியார்களே எனக்கு நல்வழி காட்டினார்
2827. படிகொண்ட கீர்த்தி இராமாயண மென்னும் பத்திவெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமானுசன் குணங்கூறும், அன்பர்
கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்துள்ளங்கனியும் நல்லோர்
அடிகண்டு கொண்டுகந்து, என்னையும் ஆளவர்க்காக்கினரே.
இராமானுசனின் அருள் அளவிடமுடியாதது
2828. ஆக்கியடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே
போக்கிப்புறத் திட்டதென் பொருளாமுன்பு. புண்ணியர்தம்
வாக்கிற்பிரியா இராமானுச ! நின் அருளின்வண்ணம்
நோக்கில் தெரிவரிதால், உரையாயிந்த நுண்பொருளே.
மனமே! இராமானுசனே நமக்குக் காவல்
2829. பொருளும் புதல்வரும் பூமியும், பூங்குழலாருமென்றே
மருள் கொண்டிளைக்கும் நமக்கு நெஞ்சே ! மற்றுளார்தரமோ?
இருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன்ஈறில் பெரும்புகழே
தெருளும் தெருள்தந்து, இராமானுசன் செய்யும் சேமங்களே.
எல்லாம் கண்ணனுக்கே அர்ப்பணம் என்றவன் இராமானுசன்
2830. சேமநல்வீடும் பொருளும் தருமமும், சீரியநற்
காமமும் என்றிவைநான் கென்பர்; நான்கினும் கண்ணனுக்கே
ஆமதுகாமம் அறம்பொருள் வீடிதற்கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமானுசனிந்த மண்மிசையே.
இராமானுசனால் யாவரும் நாரணன் அன்பர்களாயினர்
2831. மண்மிசை யோனிகள் தோறும்பிறந்து, எங்கள் மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்துதோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற்காயினரே.
இராமானுசன் என் சிற்றின்ப ஆசையை அகற்றினான்
2832. ஆயிழையார் கொங்கைதங்கும் அக்காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியைவந்தெடுத்தானின்று; மாமலராள்
நாயகன் எல்லாவுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன், தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே.
இராமானுசன் என்று சொல்லுங்கள்: பற்று நீங்கும்
2833. சுரக்கும் திருவும் உணர்வும், சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினைபற்றறவோடும், படியிலுள்ளீர் !
உரைக்கின்றனனு மக்கியானறஞ்சீறும் உறுகலியைத்
துரக்கம் பெருமை, இராமானுசனென்று சொல்லுமினே.
இராமானுசன் திருநாமத்தையே கற்க
2834. சொல்லார் தமிழொருமூன்றும், சுருதிகள் நான்கு மெல்லை
இல்லா அறநெறியாவும் தெரிந்தவன், எண்ணருஞ்சீர்
நல்லார்பரவும் இராமானுசன் திருநாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர், எதுபேறென்றுகாமிப்பரே.
இராமானுச! நின் சரணே எனக்குப் பெரும்பேறு!
2835. பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி, அப்பேறளித்தற்
காறொன்றுமில்லை மற்றைச் சரண்அன்றி, என்றிப்பொருளைத்
தேறுமவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மை சொல்லால்
கூறும்பரமன்று, இராமானுச ! மெய்ம்மைகூறிடிலே.
மாறன் மறையை உணர்ந்த இராமானுசனை வணங்குக
2836. கூறும்சமயங்கள் ஆறும்குலையக், குவலயத்தே
மாறன் பணித்தமறையுணர்ந்தோனை, மதியிலியேன்
தேறும்படியென் மனம் புகுந்தானைத் திசையனைத்தும்
ஏறும்குணனை, இராமானுசனை இறைஞ்சினமே.
இராமானுசனையே நினைக்கின்றேன்: எனக்கு நிகரே இல்லை
2837. இறைஞ்சப்படும்பரன் ஈசன் அரங்கனென்று, இவ்வுலகத்
தறம்செப்பும் அண்ணல் இராமானுசன், என் அருவினையின்
திறம்செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே
நிறைந்தொப்பற விருந்தான், எனக்காரும் நிகரில்லையே!
இராமானுச! என் இழிகுணத்திற்கு நின்னருளே கதி நின்னருளுக்கும் நானே இடம்
2838. நிகரின்றி நின்றவென்நீ சதைக்கு, நின்னருளின்கணன்றிப்
புகலொன்றுமில்லை அருட்குமஃமேபுகழ், புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச ! இனிநாம்பழுதே
அகலும்பொருளென், பயனிருவோமுக்கு மானபின்னே?
இராமானுசனால் அறநெறி தழைத்தது
2839. ஆனதசெம்மை அறநெறி, பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றியிறந்தது வெங்கலி, பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங்கன் கழல்சென்னிவைத்துத்
தானதில்மன்னும், இராமானுசனித்தலத்துதித்தே.
இராமானுசனின் திருவடிப் பெருமையே பெருமை
2840. உதிப்பனவுத்தமர்சிந்தையுள், ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன, கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென்புன் கவிப்பாவினம் பூண்டனபாவு தொல்சீர்
எதித்தலை நாதன், இராமானுசன்றன் இணையடியே.
என்னை ஆட்கொள்ளவே இராமானுசன் அவதரித்தான்
2841. அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய், அன்றுபாரதப் போர்
முடியப்பரிநெடுந்தேர் விடுங்கோனை, முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசனென்னை ஆளவந்திப்
படியிற்பிறந்தது, மற்றில்லை காரணம் பார்த்திடிலே.
அற்புதச் செயல்களைச் செய்தவன் இராமானுசன்
2842. பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப, இப்பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்தரங்கன் செய்யதாளிணையோ
டார்த்தான், இவையெம் இராமானுசன் செய்யும் அற்புதமே.
யாவும் திருமாலினுடையவை என்று நாட்டியவன் இராமானுசன்
2843. அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர்காமுறுசீலன், கருதரிய
பற்பல்லுயிர்களும் பல்லுலகியாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை, இந்நானிலத் தேவந்து நாட்டினனே.
இராமானுசனால் விளைந்த பயன்கள் எண்ணில
2844. நாட்டியநீசச்சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டியவேதம் களிப்புற்றது, தென்குருகைவள்ளல்
வாட்டமிலா வண்டமிழ் மறைவாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டியசீலத்து, இராமானுசன்றன் இயல்வுகண்டே.
இராமானுசனைத் தொழுவதே எங்கள் குடியின் இயல்பு
2845. கண்டவர்சிந்தைகவரும், கடிபொழில் தென்னரங்கன்
தொண்டர்குலாவும் இராமானுசனைத், தொகையிறந்த
பண்டருவேதங்கள் பார்மேல் நிலவிடப்பார்த்தருளும்
கொண்டலைமேவித் தொழும், குடியாமெங்கள் கோக்குடியே.
இராமானுசனை அடைந்தேன்: இனி மற்றொன்றை நினையேன்
2846. கோக்குலமன்னரை மூவெழுகால், ஒருகூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும்புனிதன், புவனமெங்கும்
ஆக்கியகீர்த்தி இராமானுசனை அடைந்தபின் என்
வாக்குரையாது, என்மனம் நினையாதினி மற்றொன்றையே.
இராமானுசனைச் சேர்ந்தேன்: பிறவற்றை அறியேன்
2847. மற்றொரு பேறுமதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவரே தனக்குற்றவராக் கொள்ளும் உத்தமனை,
நற்றவர் போற்றும் இராமானுசனையிந் நானிலத்தே
பெற்றனன், பெற்றபின் மற்றறியேனொரு பேதைமையே.
பிற சமயங்களை வாதில் வென்றவன் இராமானுசன்
2848. பேதையர்வேதப் பொருளிதென்றுன்னிப், பிரமம்நன்றென்றோதி
மற்றெல்லா உயிரும் அஃதென்று, உயிர்கள் மெய்விட்டாதிப்
பரனொடொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம்
வாதில்வென்றான், எம்இராமானுசன் மெய்ம்மதிக்கடலே.
நாரணன் தன்மையை உணர்த்தியவன் இராமானுசன்
2849. கடலளவாயதிசையெட்டினுள்ளும், கலியிருளே
மிடைதருகாலத்திராமானுசன், மிக்கநான் மறையின்
சுடரொளியாலவ் விருளைத் துரந்திலனேல் உயிரை
உடையவன், நாரணன் என்றறிவாரில்லை உற்றுணர்ந்தே.
இராமானுசனே எங்கள் குலக்கொழுந்து
2850. உணர்ந்தமெய்ஞ் ஞானியர்யோகந் தொறும், திருவாய்மொழியின்
மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும், மாமலராள்
புணர்ந்த பொன்மார்பன்  பொருந்தும் பதிதொறும்புக்குநிற்கும்
குணந்திகழ் கொண்டல், இராமானுசனெங் குலக்கொழுந்தே.
இராமானுசன் புகழால் இவ்வுலகு அதிசயம் கண்டது
2851. கொழுந்து விட்டோடிப்படரும் வெங்கோள்வினையால், நிரயத்
தழுந்தியிட்டேனை வந்தாட் கொண்டபின்னும், அருமுனிவர்
தொழுந்தவத்தோனெம் இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்
கெழுந்தது, அத்தால் நல்லதிசயங்கண்ட திருநிலமே.
இராமானுசனைப் பணிந்து இருவினைப் பாசம் போக்கினேன்
2852. இருந்தேன் இருவினைப்பாசம் கழற்றி, இன்றியான் இறையும்
வருந்தேன் இனியெம் இராமானுசன், மன்னுமாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க் கொன்றும் நன்மை செய்யாப்
பெருந்தேவரைப்பரவும், பெரியோர்தம்கழல் பிடித்தே.
இராமானுச! நின் அடியைத் தொடர எனக்கு அருள் செய்
2853. பிடியைத்தொடரும் களிறென்ன, யானுன் பிறங்கியசீர்
அடியைத் தொடரும்படி நல்கவேண்டும், அறுசமயச்
செடியைத் தொடரும்மருள் செறிந்தோர் சிதைந்தோடவந்திப்
படியைத்தொடரும், இராமானுச ! மிக்கபண்டிதனே.
இராமானுசனால் வாதியர் வாழ்வு வீழ்ந்துவிட்டது
2854. பண்டருமாறன் பசுந்தமிழ், ஆனந்தம்பாய்மதமாய்
விண்டிடஎங்கள் இராமானுச முனிவேழம், மெய்ம்மை
கொண்டநல்வேதக் கொழுந்தண்ட மேந்திக்குவலயத்தே
மண்டி வந்தேன்றது, வாதியர்காள் ! உங்கள் வாழ்வற்றதே.
இராமானுசன் தந்த ஞானத்தின் பயன்
2855. வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு, என்றும் மறையவர்தம்
தாழ்வற்றது தவம்தாரணி பெற்றது, தத்துவநூல்
கூழற்றதுகுற்ற மெல்லாம்பதித்த குணத்தினர்க்கந்
நாழற்றது, நம்இராமானுசன் தந்த ஞானத்திலே.
சரண் கொடுத்து வானம் கொடுப்பவன் இராமானுசன்
2856. ஞானம்கனிந்த நலங்கொண்டு, நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன், வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது, தன்தகவென்னும் சரண்கொடுத்தே.
உயிர்களுக்கு இராமானுசனே காவல்
2857. சரணம் அடைந்ததருமனுக்காப், பண்டுநூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன், தன்னை வணங்கவைத்த
கரணம் இவையுமக்கன்றென்றி ராமானுசனுயிர்கட்(கு)
அரணங்க மைத்திலனேல், அரணார் மற்றிவ்வாருயிர்க்கே?
கீதையின் செம்மைப் பொருளை விளக்கியவன் இராமானுசன்
2858. ஆரெனக்கின்று நிகர்சொல்லின், மாயனன்றைவர் தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின், செம்மைப் பொருள் தெரியப்
பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினிற்சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.
என்னை ஆட்கொண்டவன் இராமானுசன்
2859. சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து, முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு, அவைஎன்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து,
எந்தை இராமானுசன், வந்தெடுத்தனன் இன்றென்னையே.
இராமானுச! எனக்கு அருள் செய்வதுதான் நலன்
2860. என்னையும் பார்த்தென் இயல்வையும்பார்த்து, எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதேநலம், அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில்நலமுளதே? உன்பெருங்கருணை
தன்னையென் பார்ப்பர், இராமானுச ! உன்னைச்சார்ந்தவரே.
இராமானுச! உன் தாளிணைக்கீழ் சிந்தை சார்ந்தது
2861. சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக்கீழ், அன்புதான் மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு, உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினைநீ செய்வினையதனால்
பேர்ந்தது, வண்மைஇராமானுச ! எம்பெருந்தகையே.
புகழோருடன் என்னைச் சேர்த்துவைத்தவன் இராமானுசன்
2862. கைத்தனன் தீயசமயக்கலகரைக், காசினிக்கே
உய்ந்தனன் தூயமறை நெறிதன்னை, என்றுன்னியுள்ளம்
நெய்த்தவன் போடிருந்தேத்தும் நிறைபுகழோருடனே
வைத்தனன் என்னை, இராமானுசன் மிக்கவண்மை செய்தே.
இராமானுசனை நினைப்பதே எனக்கு நிலை
2863. வண்மையினாலுந்தன் மாதகவாலும், மதிபுரையும்
தண்மையினாலுமித்தாரணியோர்கட்குத், தான்சரணாய்
உண்மைநன் ஞானம் உரைத்த இராமானுசனையுன்னும்
திண்மையல்லாலெனக்கில்லை, மற்றோர்நிலைதேர்ந்திடிலே.
சேராதவரைச் சிதைத்தவன் இராமானுசன்
2864. தேரார்மறையின் திறமென்று, மாயவன் தீயவரைக்
கூராழிகொண்டு குறைப்பது, கொண்டல் அனையவண்மை
ஏரார்குணத்தெம் இராமானுசனவ்வெழில்மறையில்
சேராதவரைச் சிதைப்பது, அப்போதொரு சிந்தைசெய்தே.
இராமானுச! நின் புகழே என்னை மெய்க்கின்றது
2865. செய்த்தலைச்சங்கம் செழுமுத்தம்ஈனும், திருவரங்கர்
கைத்தலத்தாழியும் சங்கமுமேந்தி, நங்கண்முகப்பே
மொய்த்தலைத் துன்னைவிடேனென்றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக்கும் வந்து, இராமானுச ! என்னைமுற்றுநின்றே.
இராமானுச! எனக்கு எல்லாச் செல்வங்களும் அருள்
2866. நின்றவண் கீர்த்தியும்நீள் புனலும், நிறைவேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்தநாடும் குலவிய பாற்கடலும்,
உன்றனக் கெத்தனை இன்பந்தரும் உன் இணைமலர்த்தாள்
என்றனக்கும் அது, இராமானுச ! இவையீந்தருளே.
ஒருவரும் ஈயாத இன்னருள் ஈர்ந்தவன் இராமானுசன்
2867. ஈந்தனன் ஈயாத இன்னருள், எண்ணில் மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல்பொருளால், இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினாலென் வினைகளை வேர்பறியக்
காய்ந்தனன், வண்மை இராமானுசற்கென் கருத்தினியே?
இராமானுச! என்னைப் பெரும் பக்தனாக்கினாயே!
2868. கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம்கழற்றிக், கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து, நீயிந்தமண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கியபின்னென்னெஞ்சில்
பொருத்தப்படாது, எம்இராமானுச ! மற்றொர் பொய்ப்பொருளே.
இராமானுசனே நம்மை உய்யவைப்பவன்
2869. பொய்யைச்சுரக்கும் பொருளைத்துரந்து, இந்தப் பூதலத்தே
மெய்யைப்புரக்கும் இராமானுசன்நிற்க, வேறுநம்மை
உய்யக்கொளவல்ல தெய்வமிங்கியா தென்றுலர்ந்தவமே
ஐயப்படா நிற்பர், வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே.
இராமானுசனின் அடியார்களுக்கே நான் தாஸன்
2870. நல்லார்பரவும் இராமானுசன், திருநாமம்நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள்யவர், அவர்க்கே
எல்லாவிடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்,
சொல்லால் மனத்தால் கருமத்தினால், செய்வன் சோர்வின்றியே.
இராமானுச! நின் அருளுக்குப் பதிலுதவியே இல்லை
2871. சோர்வின்றி உன்றன் துணையடிக்கீழ்த், தொண்டுபட்டவர்பால்
சார்வின்றி நின்றஎனக்கு, அரங்கன் செய்யதாளிணைகள்
பேர்வின்றியின்று பெறுத்தும் இராமானுச ! இனியுன்
சீரொன்றிய கருணைக்கு, இல்லைமாறு தெரிவுறிலே.
இராமானுசனே பெரும் புண்ணியன்
2872. தெரிவுற்றஞானம் செறியப்பெறாது, வெந்தீவினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றானென்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி, இராமானுசனென்னும் சீர்முகிலே.
இராமானுசனின் திருவடிகளே பேரின்பம் தரும்
2873. சீர்கொண்டு பேரறம்செய்து, நல்வீடுசெறிது மென்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன், உன்பதயுகமாம்
ஏர்கொண்ட வீட்டை எளிதினில்எய்துவன் உன்னுடைய
கார்கொண்டவண்மை, இராமானுச ! இதுகண்டுகொள்ளே.
இராமானுசனைக் கண்டு அவன் அடியார்க்கடியனாயினேன்
2874. கண்டுகொண்டேனெம் இராமானுசன்றன்னைக், காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன் தொண்டர்பொற்றாளில், என் தொல்லைவெந்நோய்
விண்டுகொண்டேன் அவன்சீர் வெள்ளவாரியை வாய்மடுத்தின்(று)
உண்டுகொண்டேன், இன்னம் உற்றனஓதில் உலப்பில்லையே.
இராமானுசன் அடியாரின் திருவடிகளே எனக்குப் பற்று
2875. ஓதியவேதத்தின் உட்பொருளாய், அதன் உச்சிமிக்க
சோதியைநாதன் எனவறியாதுழல்கின்ற தொண்டர்,
பேதைமைதீர்த்த இராமானுசனைத் தொழும்பெரியோர்
பாதமல்லாலென்றன் ஆருயிர்க்கு, யாதொன்றும் பற்றில்லையே.
இராமானுச பக்தர்களே எம்மை ஆள்பவர்
2876. பற்றாமனிசரைப்பற்றி, அப்பற்றுவிடாதவரே
உற்றாரெனவுழன்றோடிநையேனினி, ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார்யவர், அவரெம்மை நின்றாளும் பெரியவரே.
இராமானுச ஞானம் பெறாதவரைக் கலி வருத்தும்
2877. பெரியவர்பேசிலும் பேதையர்பேசிலும், தன்குணங்கட்குரியசொல்
என்றும்உடையவன் என்றென்று, உணர்வில்மிக்கோர்
தெரியும்வண் கீர்த்தி இராமானுசன் மறைதேர்ந்துலகில்
புரியநன்ஞானம், பொருந்தாதவரைப் பொரும்கலியே.
இராமானுச ஞானம் பெற்றோரே சிறந்தவர்கள்
2878. கலிமிக்க செந்நெல்கழனிக்குறையல், கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டுதன்னுள்ளம் தடித்து, அதனால்
வலிமிக்கசீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலிமிக்கதென்று, இப்புவனத்தில் வந்தமைபோற்றுவனே.
இராமானுச! நின்னைத் துதியாமல் என்னால் இருக்கமுடியவில்லை
2879. போற்றருஞ்சீலத்திராமானுச, நின்புகழ்தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வதுதீரில், உன்சீர்தனக்கோர்
ஏற்றமென்றே கொண்டிருக்கிலுமென் மனம் ஏத்தியன்றி
ஆற்றகில்லாது, இதற்கென்னினைவா யென்றிட்டஞ்சுவனே.
இராமானுச பக்தர்களைப் பூசியாதவர் வருந்துவர்
2880. நினையார் பிறவியை நீக்கும்பிரானை, இந்நீணிலத்தே
எனையாளவந்த இராமானுசனை, இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர்தாள்களில் பூந்தொடையல்
வனையார், பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.
அரங்கனை விளக்கிய இராமானுசன் பெரும் புண்ணியன்
2881. மருள்சுரந்தாகமவாதியர்கூறும், அவப்பொருளாம்
இருள்சுரந்தெய்த்த உலகிருள்நீங்கத், தன்ஈண்டியசீர்
அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
பொருள்சுரந்தான், எம்இராமானுசன் மிக்கபுண்ணியனே.
இராமானுச! எனக்கும் அருள் செய்தாயே! காரணம் என்ன?
2882. புண்ணியநோன்பு புரிந்துமிலேன், அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங்கேள் விநுவன்றுமிலேன், செம்மைநூற்புலவர்க்கெண்ணருங்
கீர்த்தி இராமானுச ! இன்றுநீபுகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும், நின்றவிக்காரணம் கட்டுரையே.
இராமானுசன் என் தீவினையை வேரோடு களைந்தான்
2883. கட்டப்பொருளை மறைப்பொருளென்று, கயவர்சொல்லும்
பெட்டைக்கெடுக்கும் பிரானல்லனே, என்பெருவினையைக்
கிட்டிக்கிழங்கொடு தன்னருள் என்னுமொள்வாளுருவி
வெட்டிக்களைந்த, இராமானுசனென்னும் மெய்த்தவனே.
இராமானுசனின் புகழையே போற்றுவேன்
2884. தவந்தரும் செல்வும் தகவும்தரும், சரியாப்பிறவிப்
பவந்தரும் தீவினைபாற்றித்தரும், பரந்தாமமென்னும்
திவந்தரும்தீதில் இராமானுசன் தன்னைச்சார்ந்தவர்கட்(கு)
உவந்தருந்தேன், அவன்சீரன்றியானொன்றும் உள்மகிழ்ந்தே.
யாவருக்கும் வீடளிக்கவே இராமானுசன் வேதங்களை வளர்த்தான்
2885. உண்ணின்றுயிர்களுக் குற்றனவே செய்து, அவர்க்குயவே
பண்ணும் பரணும் பரிவிலனாம்படி, பல்லுயிர்க்கும்
விண்ணின் தலைநின்று வீடளிப்பானெம் இராமானுசன்
மண்ணில் தலத்துதித்து, உய்மறைநாலும் வளர்த்தனனே.
இராமானுசனே எம் இறைவன்
2886. வளரும்பிணி கொண்டவல்வினையால், மிக்கநல்வினையில்
கிளரும் துணிவுகிடைத்தறியாது, முடைத்தலையூன்
தளரும் அளவும்தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்(கு)
உளரெம்இறைவர், இராமானுசன்றன்னை உற்றவரே.
அடிமை செய்ய என்னைத் தூண்டியவன் இராமானுசன்
2887. தன்னையுற்றாட் செய்யும்தன்மையினோர், மன்னுதாமரைத்தாள்
தன்னையுற்றாட் செய்யஎன்னையுய்த் தானின்று, தன்தகவால்
தன்னையுற்றாரன்றித் தன்மையுற்றாரில்லை என்றறிந்து
தன்னையுற்றாரை, இராமானுசன்குணம் சாற்றிடுமே.
மனமே! இராமானுசனே சரணம் என்று கூறு
2888. இடுமே இனியசுவர்க்கத்தில், இன்னம்நரகிலிட்டுச்
சுடுமேயவற்றைத் தொடர்தரு தொல்லைச், சுழல்பிறப்பில்
நடுவேயினிநம் இராமானுசன் நம்மைநம் வசத்தே
விடுமேசரணமென்றால், மனமே ! நையல்மேவுதற்கே.
இராமானுசனால் நீசர் மாண்டனர்
2889. தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும், தாழ்சடையோன்
சொற்கற்றசோம்பரும் சூனியவாதரும், நான்மறையும்
நிற்கக்குறும்புசெய்நீசரும்மாண்டனர் நீணிலத்தே
பொற்கற்பகம், எம்இராமானுசமுனி போந்தபின்னே.
இராமானுச! நின் திருவடிகளிலேயே என்னை இருத்து
2890. போந்ததென்னெஞ் சென்னும்பொன்வண்டு, உனதடிப்போதில் ஒண்சீர்
ஆம்தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி, நின்பாலதுவே
ஈந்திடவேண்டும் இராமானுச ! இது அன்றியொன்றும்
மாந்தகில்லாது, இனிமற்றொன்று காட்டிமயக்கிடலே.
இராமானுசன் என்னை உய்யக்கொண்டான்
2891. மயக்கும் இருவினைவல்லியிற்பூண்டு, மதிமயங்கித்
துயக்கும்பிறவியில் தோன்றியஎன்னைத், துயரகற்றி
உயக்கொண்டு நல்கும்இராமானுச ! என்றதுன்னையுன்னி
நயக்குமர்க்கிதிழுக்கென்பர், நல்லவர்என்றுநைந்தே.
இராமானுச! நின்னருள் என்னிடம் எப்படி வளர்ந்தது?
2892. நையும் மனமுன் குணங்களைஉன்னி, என்நாவிருந்தெம்
ஐயன்இராமானுசனென்றழைக்கும், அருவினையேன்
கையும்தொழும் கண்கருதிடுங்காணக் கடல்புடைசூழ்
வையம் இதனில், உன்வண்மையென் பாலென் வளர்ந்ததுவே?
இராமானுசன் எனக்கு நன் ஞானம் அளித்தான்
2893. வளர்ந்தவெங்கோபமடங்கலொபன்றாய், அன்றுவாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன், கீர்த்திப்பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமானுசனென்றன் மெய்வினைநோய்
களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற்கனியென்னவே.
இராமானுச! நின் புகழ் பேசுவது ஒன்றுதான் எனக்கு வேண்டும்
2894. கையிற்கனியென்னகண்ணனைக் காட்டித்தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கியசீரன்றி வேண்டிலன்யான், நிரயத்
தொய்யில் கிடக்கினும் சோதிவிண்சேரினும் இவ்வருள்நீ
செய்யில்தரிப்பன், இராமானுச ! என்செழுங் கொண்டலே !
அடியேனுக்கு இருப்பிடம் இராமானுச பக்தர் கூட்டமே
2895. செழுந்திரைப்பாற்கடல்கண்டுயில்மாயன், திருவடிக்கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில்மேவுநன்ஞானி, நல்வேதியர்கள்
தொழுந்திருப்பாதன் இராமானுசனைத் தொழும்பெரியோர்
எழுந்திரைத்தாடும் இடம், அடியேனுக்கிருப்பிடமே.
இராமானுசனின் இருப்பிடம் என் இதயம்
2896. இருப்பிடம் வைகுந்தம்வேங்கடம், மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர், அவைதம்மொடும்வந்
திருப்பிடம்மாயனி ராமானுசன்மனத்தின்றவன்வந்
திருப்பிடம், என்றன் இதயத்துள்ளே தனக்கின்புறவே.
இராமானுச! என்னை உன் அடியார்க்கடியன் ஆக்கு
2897. இன்புற்ற சீலத்திராமானுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து, எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவதொன்றுண்டு உன்தொண்டர்கட்கே
அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கியங்காட்படுத்தே.
மனமே! இராமானுசனின் திருவடி நம் தலைமீது தாங்கவேண்டுமென்று திருமகளைப் போற்றுவோம்
2898. அங்கயல் பாய்வயல் தென்னரங்கன், அணி ஆகமன்னும்
பங்கயமாமலர்ப் பாவையைப்போற்றதும், பத்தியெல்லாம்
தங்கியதென்னத்தழைத்து நெஞ்சே ! நந்தலைமிசையே
பொங்கியகீர்த்தி, இராமானுசனடிப்பூமன்னவே.
திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
































































































1 கருத்து: