புதன், 14 ஜூன், 2017

லக்ஷ்மி தேவி

ராதே கிருஷ்ணா 14-06-2017



லக்ஷ்மி தேவி

ஒரு சமயம் வைகுண்டத்தில் செந்தாமரை மலர்மீது அமர்ந்திருந்த மகாலட்சுமியை கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் தங்கள் தீர்த்தத்தால் நீராட்டின. எட்டுத் திக்குகளிலுள்ள அஷ்ட கஜங்கள் (யானைகள்) தங்கள் துதிக்கையால் நீரை முகர்ந்து லட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. பாற்கடல் ஆண் உருவம் எடுத்து லட்சுமி தேவிக்கு தாமரை மாலைகளையும் திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது. கந்தவர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
லட்சுமிதேவிக்கு நடக்கும் இந்த வைபவத்தைப் பார்த்து மகாவிஷ்ணு மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது சூரியனின் மகனான ரேவந்தன் பாற்கடலில் தோன்றிய உச்சிஸ்ரவஸ் என்ற குதிரைமீது அமர்ந்து வைகுண்டம் வந்தான். அந்த அழகான குதிரையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அப்போது லட்சுமிதேவியைப் பார்த்து, ""இவன் யார்?'' என்று கேட்டார் விஷ்ணு. குதிரையின் நினைவில் இருந்ததால் கணவர் கேட்டதை லட்சுமிதேவி கவனிக்கவில்லை. இதனால் கோபமடைந்த விஷ்ணு பெண் குதிரையாகப் பிறக்கும்படி லட்சுமியைச் சபித்தார்.
அதன்படி காளந்தி, தமசா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பெண் குதிரையாகத் தோன்றி வாழ்ந்து வந்தாள் மகாலட்சுமி.
தேவி இல்லாத வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு மகிழ்ச்சியில்லை. அதனால் அவளை அழைத்துப் போக ஆண் குதிரை வடிவமெடுத்து வந்த விஷ்ணு, பெண் குதிரையாகிய தேவியிடம் இன்பம் சுகித்தார். அதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தையை பிள்ளை வரம் வேண்டித் தவமிருக்கும் யயாதியின் மகன் துர்வசுவுக்கு தானமாகக் கொடுக்க விரும்பினார் மகாவிஷ்ணு. இதற்கு மகாலட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது விஷ்ணு, ""தேவி! நீ இந்த ஆண் குழந்தையை துர்வசுவுக்குக் கொடுத்தால் உனக்கு எல்லா வைபவங்களையும் வழங்கும் ஆற்றல் கிடைக்கும். அதைக் கொண்டு பூலோகத்தில் வாழும் மக்களுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் வழங்கலாம். அதனால் உன்னை வைபவலட்சுமி என்று போற்றித் துதிப்பார்கள். நான் உன்னைத் தேடி வந்ததுபோல் உன்னை வணங்கும் பெண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும்; இணைபிரியாமல் கணவனோடு சேர்ந்து வாழும் மகிழ்வையும் நீ கொடுக்கலாம். வைபவலட்சுமியாகிய உன் பெருமை உலகெங்கும் தெரியும்'' என்றார்.
மேலும், ""நான் உன்னோடு கூடியிருந்து பக்தர்கள் வேண்டும் எல்லா வரங்களையும் கொடுப்பேன்'' என்றும் உறுதி கூறி, லட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது, ""நான் அருளிய இந்த சுலோகத்தை தினமும் திருவிளக்குமுன் அமர்ந்து ஒன்பது முறை சொல்லும் பக்தைகளின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதோடு, மாங்கல்ய பலம் பெற்று புத்திரப் பேறுகளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்'' என்றாள் லட்சுமிதேவி.
அந்த சுலோகம்:
"மங்களே மங்களதாரே
மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா.'
இத்துடன் ஸ்ரீசூக்தம் மற்றும் விருப்பப்பட்ட லட்சுமி சம்பந்தப்பட்ட சுலோகங்களையும் சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக