வியாழன், 21 மார்ச், 2013

குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

ராதே கிருஷ்ணா 21-03-2013



குழந்தை வளர்ப்பென்ன சவாலா?






6MAR

குழந்தை வளர்ப்பென்ன சவாலா? பகுதி 1

 
 
இன்றைய நாட்களில் அதிகமாக பேசப்படும் சில விஷயங்களில் குழந்தை வளர்ப்பும் ஒன்று. பத்து பிள்ளை பெற்றாலும் குழந்தைகளை அசாதாரணமாய் வளர்த்த இந்த கலாச்சாரத்தில், இன்றோ குழந்தை வளர்ப்பு நம்மைப் பாடாய் படுத்துகிறது. குழந்தையும் படுத்துகிறது! கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள் பலர். என்ன செய்வது? சத்குரு சொல்கிறார்…
சத்குரு:
லட்சிய மனிதர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குவது எப்படி என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குப் பிறந்த குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள். அது உங்களுக்குத் தரப்பட்ட பெருமையே தவிர, அதனை ஒரு உரிமையாக நீங்கள் கருதக் கூடாது. அவர்கள் உங்கள் உடைமைகளும் அல்ல!
வீட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாள்தோறும் கோபம், அச்சம், பரபரப்பு, பாதுகாப்பின்மை ஆகியவற்றையே குழந்தைகள் எதிர்கொண்டிருந்தால் அவர்கள் எப்படி ஆனந்தமாக வாழ முடியும்?

குழந்தைகள் வளர்கிறபோது பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்கு எதையாவது கற்றுத்தர வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், உங்கள் குழந்தைகளோடு முதலில் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிக ஆனந்தமாக இருக்கிறீர்கள், நீங்களா… உங்கள் குழந்தைகளா? உங்களைவிட உங்கள் குழந்தை ஆனந்தமாக இருக்கிறது என்றால், வாழ்க்கைக்கு ஆலோசகராக இருக்கிற தகுதி குழந்தைக்குத்தானே இருக்கிறது!
ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அது கற்றுக்கொடுப்பதற்கான நேரம் அல்ல, நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நேரம். நீங்கள் எப்படிச் சிரிப்பது என்பதையே மறந்துவிட்டீர்கள், எப்படி விளையாடுவது என்பதையும் மறந்துவிட்டீர்கள். ஒரு குழந்தை வருகிறபோது, இவற்றை நீங்கள் மறுபடியும் கற்றுக்கொண்டு அற்புதமான மனிதராக மலரலாம். மாறாக, மனிதர்கள் குழந்தைகளைப் பெரியவர்கள்போல நடந்து கொள்ள வைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். வாழ்க்கையை நீங்கள் புரிந்துகொண்ட விதங்களில் உங்கள் குழந்தைகளை வளர்க்க முற்படாதீர்கள். அவர்கள் என்னவாக வேண்டுமோ, அப்படி ஆகட்டும்!
வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஒரு குழந்தைக்கு நீங்கள் எதைக் கற்றுக்கொடுத்துவிட முடியும்? பிழைப்புக்கு என்று சில தந்திரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகோடு உங்களுக்கு இருக்கும் தொடர்பு காரணமாக, அந்தத் தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவை உங்களை எந்த விதத்திலும் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கவில்லை. உங்களைவிட உங்கள் குழந்தை, வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அதற்குக் கற்றுக்கொடுப்பதற்குப் பதில் நீங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கினால், அன்பும் ஆதரவும் கனிந்த ஒரு வலிமையான உறவை அந்தக் குழந்தையுடன் வளர்த்துக்கொண்டால், அதுவே உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம்!
நீங்கள் வளர்ந்து வந்த பருவத்தில் உங்களுக்குள் ஏதாவது சிக்கல் வந்தால், நீங்கள் உங்கள் பெற்றோரை அணுகினீர்களா அல்லது நண்பர்களை அணுகினீர்களா? உங்களில் பெரும்பாலானவர்கள் நண்பர்களைத்தான் அணுகியிருப்பீர்கள். ஏனென்றால், உங்கள் பெற்றோருக்கு எதுவும் புரியவே இல்லை. அவர்களும் அதே அபத்தங்களை 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்து வந்திருப்பார்கள். ஆனால் அவற்றை மறந்துவிட்டு ஏதோ வேறொரு கிரகத்தில் இருந்து வந்தது போல் விசித்திரமாக நடந்துகொள்வார்கள்.
பெற்றோர்கள் இப்படி நடந்துகொண்டால் பிள்ளைகள் வெளியில்தான் உதவி தேடிப் போவார்கள். தங்கள் நண்பர்களிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். அந்த நண்பர்களும் உங்கள் குழந்தை போலவே குழப்பத்தில் இருப்பதால் வழிகாட்டுதல் எந்த விதத்தில் இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியாது. தனக்குத் தெரிந்ததை அது சொல்லும். எனவே மிகச் சிறந்த வழி என்னவென்றால், உங்களை எளிதாக அனுகும் விதத்தில் இணக்கமான நல்லுறவை குழந்தைகளோடு வளர்த்துக்கொள்வதுதான். குழந்தைகளிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்காதீர்கள், அன்பை எதிர்பாருங்கள்.
குழந்தைகள் தங்களை மதித்து நடக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகிறார்கள். நீங்கள், உங்கள் குழந்தைகளுக்குச் சில ஆண்டுகள் முன்னதாக பூமிக்கு வந்தீர்கள். உடலளவில் குழந்தையைவிட பெரிதாக இருக்கிறீர்கள். பிழைப்புக்கு சில தந்திரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இவற்றைவிட எந்த விதத்தில் நீங்கள் உங்கள் குழந்தையைக் காட்டிலும் மேம்பட்டிருக்கிறீர்கள்?
உங்கள் இயல்புகளை குழந்தைகளின் மீது திணிக்காமல் நட்பு ரீதியான உறவை உருவாக்கிக்கொண்டால், அவர்கள் தவறான பாதைக்கு போக வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அதே நேரம் 100% உத்தரவாதம் கிடையாது. எப்போது ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டீர்களோ, அப்போதே சில அபாயங்களுக்கும் நீங்கள் தயாராக வேண்டும். ஏனென்றால், உங்கள் குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தப் போவது நீங்கள் மட்டுமல்ல, உங்கள் வீதி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது, தொலைக்காட்சி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் பள்ளியில் இருப்பவர்களும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.
இப்படி லட்சக்கணக்கான தாக்கங்கள் ஏற்படப் போகின்றன. அவற்றில் எந்தத் தாக்கத்தின் மீது உங்கள் குழந்தைக்கு மிகுந்த ஈர்ப்பு இருக்கிறதோ, அதை நோக்கிச் செல்லப் போகிறது. பெற்றோருடன் இருப்பதுதான் தங்களின் மிகப் பெரிய ஈர்ப்பு என்ற உணர்வை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஆனந்தமான, அறிவுப்பூர்வமான, அற்புதமான மனிதராக உங்களை வெளிப்படுத்திக் கொண்டால், உங்கள் குழந்தை வேறெந்தத் துணையையும் தேடிப் போகாது. எளிய விஷயங்களைக்கூட உங்களிடம் வந்து கேட்கத் தொடங்கும்.
அன்பும் ஆனந்தமும் மிக்க சூழலில் உங்கள் குழந்தைகளை நீங்கள் உருவாக்கினால், தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. வீட்டிலோ, பள்ளியிலோ, சமூகச் சூழலிலோ துயரமான சூழலில் குழந்தை வளர நேர்ந்தால்தான் தவறுகள் நடக்கின்றன. வீட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாள்தோறும் கோபம், அச்சம், பரபரப்பு, பாதுகாப்பின்மை ஆகியவற்றையே குழந்தைகள் எதிர்கொண்டிருந்தால் அவர்கள் எப்படி ஆனந்தமாக வாழ முடியும்? அன்புக்கும் ஆனந்தத்துக்கும் நீங்கள் உதாரணமாய் திகழ்ந்தால், நன்மைகள் தானாக நிகழும்.


பெற்றோரின் லட்சணம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் குணங்கள் குழந்தைகளிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி விரிவாக அலசி அதற்கான தீர்வையும் நம்மிடம் விவரிக்கிறார் சத்குரு. காத்திருங்கள் அடுத்த பகுதி விரைவில்…




குழந்தை வளர்ப்பென்ன சவாலா? பகுதி 2





21MAR

குழந்தை வளர்ப்பென்ன சவாலா? பகுதி 2

 
 
பெற்றோரின் லட்சணம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் குணங்கள் குழந்தைகளிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் விரிவாக அலசுகிறார் சத்குரு. அத்துடன் நாம் எளிதாக கடைபிடிக்கக் கூடிய சில குறிப்புகளையும் வழங்குகிறார். படியுங்கள்…

சத்குரு:
பெற்றோர்களுக்கென்று எத்தனையோ லட்சியங்கள் உண்டு. வாழ்வில் அவர்களால் என்னவெல்லாம் ஆக முடியவில்லையோ, அப்படியெல்லாம் அவர்கள் குழந்தைகளை ஆக்கிப்பார்க்க நினைக்கிறார்கள். தங்களுடைய பெற்றோர் வழங்கிய சில அடிப்படைகளைத் துணையாகக்கொண்டு தாங்கள் ஓரளவு செயல்பட்டது போல, தாங்கள் வழங்கும் சில அடிப்படைகளின் உதவியோடு தங்கள் குழந்தைகள் செயல்பட வேண்டும் என்று பெற்றோர் கருதுவது இயற்கை. ஆனால் ஒரு சில பெற்றோர்கள் அதீத ஆர்வம் காரணமாக தங்கள் குழந்தைகளிடம் கொடுமையாக நடந்துகொள்வதும் உண்டு. இன்னும் சிலரோ, குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்வதாகக் கருதி அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்து குழந்தைகளை வலிமையில்லாமலும் உலகுக்குப் பயன்படாத வகையில் வளர்த்துவிடுவதும் உண்டு.
குழந்தைகளுக்கு தயவுசெய்து ஆன்மிகத்தை அறிமுகம் செய்யாதீர்கள். இது ஒரு செடிக்கு மலர்ச்சியைச் சொல்லிக்கொடுப்பது போன்றது.

சொல்லப்போனால், குழந்தை வளர்ப்பில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சொல்வதற்கு சரியான எல்லைக் கோடுகள் இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு அளவிலான கவனம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப அதனிடம் செலுத்த வேண்டிய கனிவின் அளவும் கண்டிப்பின் அளவும் வேறுபடுகிறது.
குழந்தைகளுக்கு விதிக்கின்ற கட்டுப்பாடுகள் மிகவும் கொடுமையாக உள்ளன. பள்ளியிலும் வீடுகளிலும், இந்தக் கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு மிகுந்த சிரமம் தருவதாய் இருக்கின்றன. பொதுவாகவே பள்ளி வாழ்க்கை குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தன்மையை முற்றிலும் அகற்றுவதாகவே உள்ளது. குழந்தைத்தன்மையை அகற்றிவிட்டால், பெரியவர்கள் போல் நடந்துகொள்கிற குழந்தைகள்தான் மிஞ்சுவார்கள். இதை எல்லா இடங்களிலும் பார்க்கிறீர்கள். பல பெரியவர்கள் பதின் பருவத்தினர் போல் நடந்து கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் குழந்தைத்தன்மையை இழந்திருக்கிறார்க்ள்.
இந்நிலை மேலை நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் தங்கள் குழந்தைத்தன்மையை இழந்தவர்கள், பிற்காலத்தில் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். ஒரு குழந்தை குழந்தையாக இருப்பது மிகவும் முக்கியம். அந்தக் குழந்தையை பெரியவர்களாக்க எந்த அவசரமும் இல்லை. ஒரு குழந்தை குழந்தைத்தனமாக நடந்து கொள்வது அற்புதமான விஷயம். ஆனால் பெரியவர்கள் குழந்தைத்தனமாக நடந்துகொண்டால் அது வளர்ச்சியின்மையின் அடையாளம்!
நீங்கள் உங்கள் குழந்தையை நல்லவிதமாக வளர்க்க ஆசைப்பட்டால், முதலில் உங்களுக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த இயலும் என்று பார்க்க வேண்டும். இதற்கு ஓர் எளிய பரிசோதனையைச் செய்து பார்த்தாலே போதும். ஓரிடத்தில் தனியாக அமர்ந்து உங்கள் வாழவில் எதையெல்லாம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தீவிரமாகச் சிந்தித்துப் பாருங்கள். அந்த மாற்றங்களை அடுத்த மூன்று மாதங்களில் கொண்டுவர என்ன வழி என்று சிந்தியுங்கள். அந்த மாற்றங்கள் வெளியுலகைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது. உங்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகள், உங்கள் பேச்சு, உங்கள் செயல்முறைகள், உங்கள் பழக்கங்கள் ஆகியவற்றை மூன்று மாதங்களில் உங்களால் மாற்றிக்கொள்ள முடிந்தால் உங்கள் குழந்தைக்கு போதனை செய்கிற உரிமை உங்களுக்கு உண்டு.
குழந்தையை வளர்ப்பதில் ஆலோசனைகள் உதவாது. ஒவ்வொரு குழந்தையையும் கூர்ந்து கவனித்து அதன் வளர்ச்சிக்கு என்ன தேவை, அதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்கிற புரிதல்தான் முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் அரியதோர் அற்புதம்!
இளம் குழந்தைகளுக்கு தயவுசெய்து ஆன்மிகத்தை அறிமுகம் செய்யாதீர்கள். இது ஒரு செடிக்கு மலர்ச்சியைச் சொல்லிக்கொடுப்பது போன்றது. எந்தச் செடிக்கும் ஒரு பூவை எப்படி மலர்விப்பது என்று சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அதேபோல குழந்தைகளுக்கு ஆன்மிக போதனை அவசியம் இல்லை. எந்த அடையாளத்தையும்ஏற்றுக்கொள்ளாத விதத்தில், உங்களோடும்கூட தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வளர்வதற்கு, உங்கள் குழந்தைக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். மனதில் எந்த அடையாளமும் இல்லாமல் வளர்கிற குழந்தை ஆன்மிகத் தன்மையோடுதான் மலரும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தந்த அபத்தங்களையும் தந்திரங்களையும் மறக்கடிக்கச் செய்தால், இயல்பாகவே உங்கள் குழந்தை ஆன்மிகத்தன்மையை அடையும்.
குழந்தைப் பருவத்திலிருந்தே குறிப்பிட்ட சில விஷயங்கள் உங்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடையாளங்களை இறுகப் பற்றிக்கொள்ளுமாறு பலரும் உங்களை ஊக்குவித்து வந்திருக்கிறார்கள். உங்கள் பெற்றோர்களும் உங்கள் ஆசிரியர்களும் அந்த அடையாளங்களை உங்கள் மேல் திணித்திருக்கிறார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களின் கல்வி முறையாக இருக்கிறது. உங்கள் தலைவர்கள் உங்கள் சாதி, இனம், நாடு ஆகிய அடையாளங்களை நீங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒவ்வொருவருக்கும் இப்படி ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது.
இவையெல்லாம் எந்தப் பொருளுமற்றவை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் செய்கிற ஒரு விஷயம் மிகவும் பயனுள்ளது என்பதற்காகவே அதனோடு உங்களை ஆழமாக அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எப்போது உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ, அப்போதே நீங்கள் உருக்குலைந்து போகிறீர்கள். உருக்குலைந்து போனவர்களால் மக்களுக்கு நலவாழ்வைக் கொண்டுவர இயலாது. உங்களுக்கு நல்ல நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அடையாளங்களாலேயே இந்த உலகத்தை பல லட்சம் துண்டுகளாகச் சிதறடித்துவிடுகிறீர்கள். இது மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்கு எந்த விதத்திலும் உதவாது.
எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஆன்மீக போதனையை வழங்காதீர்கள். அவர்களது உடல் மற்றும் மன மேம்பாட்டுக்காக சில எளிய யோகப் பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ளலாம், அதுவே போதுமானது!
முற்
























































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக