செவ்வாய், 25 நவம்பர், 2014

ஓர் பக்தனுக்கு இறுதி சடங்குகளை செய்தான்

ராதே கிருஷ்ணா 26-11-2014





நாம் இறைவனை வாஞ்சையோடு அப்பா என்று அழைக்கின்றோம் ஆனால் அந்த இறைவன் மகன் ஸ்தானத்திலிருந்து ஓர் பக்தனுக்கு இறுதி சடங்குகளை செய்தான் என்றால் அவன் கருணையே கருணை ! வாருங்கள் நிகழ்ச்சிக்கு போவோம்.

திருக்குடந்தை திருத்தலத்தில் வில்லேந்திய கோலத்தில் உற்சவர் பெருமாள் காட்சியளிக்கிறார். மூலவர் சயனகோலம். சாரங்கம் என்ற வில்லை கையிலேந்தி உற்சவர் அருள்பாளிப்பதால் இக்கோயிலுக்கு சாரங்கபாணி கோயில் என்று பெயர். தாயார் திருநாமம் கோமளவல்லி !

லக்ஷ்மி நாராயணன் என்று ஒருவர் சாரங்கபாணி பெருமாளிடம் ஆழ்ந்த பக்திகொண்டிருந்தார். அர்ச்சாவதாரமாக, அழகு மிகுத்து சயனித்திருக்கும் இந்த பெருமாளுடைய கோயிலுக்கு அப்போது ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. இது லக்ஷ்மிநாராயணன் என்ற அந்த பக்தனை பெரிதும் வாட்டியது. தானே தன்னந்தனியாக ராஜகோபுரம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டான். பிரம்மசாரியான அவன் தன் வாழ்நாள் முழுவதையும் இந்த பணிக்காகவே அர்ப்பணித்தான். தனக்கான குடும்ப வாழக்கையை பற்றி ஒரு சனமும் யோசித்ததில்லை. அவனது உற்றார்களும் நண்பர்களும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியும் அவன் மறுத்துவிட்டு ராஜகோபுரம் கட்டுவதிலேயே வாழ்நாள் முழுவதையும் செலவிட்டான். உறவினர்கள் எல்லோரும், "உன் இறப்புக்கு பிறகு ஈமக்கடன் செய்ய உனக்கு வாரிசு வேண்டாமா ? அதற்க்காகவது திருமணம் செய்துகொள்" என்று வற்புறுத்தினார்கள். அவனோ, "எல்லாம் பெருமாள் பார்த்துக்கொள்வார், எனக்கென்ன கவலை என்று அவர்களிடம் அலட்சியமாகவும், அதே சமயம் ஆழ்மனதில் பெருமாள் மீது பக்தியுடனும் உறுதியாக சொன்னான். தன் காலத்திலேயே மிகுந்த சிரமத்துடன் சிறுது சிறிதாகப் பொருள் ஈட்டி, பலரிடமும் யாசகம் பெற்று அந்த ராஜகோபுரத்தை முழுமையாகக் கட்டி முடித்தான். அவன் ஆசை நிறைவேறிய திருப்தியில் மோட்சமும் அடைந்தான்.

இப்போது ஊரார் கையைப் பிசைந்துக் கொண்டு நின்றார்கள். இவனுக்கு யார் இறுதி சடங்கு செய்வது? ஒரே வீம்பாக திருமணம் செய்துகொள்ளாமல் வாரிசு அற்றவனாய் ஈமசடங்கு கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று ஊர்மக்கள் வருந்தினர். அன்றிரவு ஆலய அர்ச்சகரின் கனவில் சாரங்கபாணி பெருமாள் தோன்றினார். "என் கையில் தர்ப்பையை வைத்து, பிறகு அதை எடுத்துச் சென்று என் பக்தனான லட்சுமி நாராயணனுக்கு ஈம சடங்குகள் செய்யுங்கள்" என்றார்.

பெரிதும் அதிசியத்தப்படி மறுநாள் பொழுது விடிந்ததும் ஊராரிடம் தன் கனவைச் சொன்னார் அர்ச்சகர் சுவாமி. யாராலும் நம்பவே முடியவில்லை. அதப்படி பெருமாள் இப்படி ஒரு காரியம் செய்வார் என்று அதிசயித்தார்கள். உடனே அர்ச்சகர் தர்ப்பை புல்லை கையில் எடுத்துக் கொண்டு சந்தேகித்த பக்தர்களுடன் கோயிலுக்குச் சென்று கதவை திறந்து கருவறைக்கு சென்றார்கள். கருவறையில் பெருமாள் ஈர உடையுடன் பூணூலை இடமாக அணிந்து காட்சி கொடுத்ததை பார்த்ததும் அனைவரும் வெலவெலத்து நின்றனர்! என்ன அதிசியம் இது ! லட்சுமி நாராயணனன்தான் எவ்வளவு கொடுத்துவைத்தவன் ! அனைவருக்கும் கண்ணீர் பெருகியது. பகவான் சொன்னபடியே அவர் திருக்கரத்தில் தர்பையை வைத்த அர்ச்சகர், பிறகு அதை எடுத்துச் சென்று பெருமாள் சார்பாக லட்சுமி நாராயனனனுக்கான இறுதிச் சடங்கை முறைப்படி நிறைவேற்றி வைத்தார்.

அன்பர்களே! பக்தன் லட்சுமி நாராயணன் இறைவன் திருவடி அடைந்தது ஒரு தீபாவளி திருநாளன்று. தீபாவளி, அமாவாசையுடன் அனுசரிக்கப்படுவதால், இப்போதும் சாரங்கபாணி கோயிலில் பக்தன் லட்சுமி நாராயணனுக்கு, ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்று ஸ்ரார்த்ததை பெருமாள் நடத்தி வைக்கிறார். இதில் மேலும் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் அன்றைய தினம் பெருமாள் அமுது செய்வது ஸ்ரார்த்ததுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத்தான்; வழக்கமான பிரசாதங்கள் இல்லை. தன் மீது பக்தி கொண்ட பரம பக்தன் ஒருவனுக்கு பெருமாள் இவ்வளவு கீழிறங்கி வந்து அவன் நற்கதி அடைய, தரப்பை புல்லையும் ஏந்துகிறார் என்றால் இந்த கருணையை புகழ வார்த்தைகள்தான் ஏது.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த கோபுரம் உயரத்தில் மூன்றாவதாக போற்றப் படுகிறது. (ஸ்ரீரங்க கோபுரம் 236 அடி உயரம் ஸ்ரீ வில்லிபுத்தூர் 165 அடி இத்தல ராஜகோபுரம் 150 அடி)

அன்பர்காள்! பக்தர் லட்சுமி நாராயணன் எங்கே நாம் எங்கே ! இன்று நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு நாம ஜபம் மட்டுமே ! வாருங்கள் ஜெபிப்போம் !

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !

என் வணக்கத்துக்குரிய ஆன்மீக அன்பர்களே
தங்கள் நலம் மட்டுமே விரும்பும்
அன்பன் ரமணி ராமஸ்வாமி
 — with Lalitha NarayananLakshmi Narasimhan,



































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக