செவ்வாய், 25 நவம்பர், 2014

மணி மணியாய் சிந்தனை பாகம் - 2

ராதே கிருஷ்ணா 25-11-2014

மணி மணியாய் சிந்தனை பாகம் - 2

ருக்மணி சேஷசாயி பாட்டி சொன்ன கதைகள்






Friday, October 31, 2014

நினைவில் நிற்கும் நிலாச்சோறு

பௌர்ணமியன்று அந்த நிலவைப் பார்த்தேன்.என் நினைவு எங்கோ சென்றது.இரவு எட்டுமணி.இந்த நேரம்தான் சிறுவர்கள் இரவு உணவைத் தேடும் நேரம். சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன் எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது என் பாட்டி எங்களுக்கு சோறிட்டதை நினைவு கூர்ந்தேன்.பெரிய கிணற்றடி. சுற்றி மண் தரை யோ காரையிட்ட தரையோ பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.
நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிலும் தென்னை மா எலுமிச்சை மரங்களும் அருகில் மல்லி ரோஜா சாமந்தி பாரிஜாதம் போன்ற மலர்ச் செடிகளும் நிறைந்திருக்கும் ரம்யமான தோட்டம்.  அங்கு நடுவே அமர்ந்து கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் குழம்போ ரசமோ ஊற்றிப் பிசைந்து கொண்டு வந்து 'பசங்களா, வாங்க எல்லாரும். கதைவேணுமானா சீக்கிரமா வரணும் "என்று ஒரு அதட்டல் போடுவார்.
விளையாடிக்கொண்டிருந்த பத்துப் பேரும் ஓடிவந்து பாட்டியின் அருகே உட்காரப் போட்டி போடுவோம்.
ஒரு வழியாக எங்கள் சண்டையைத் தீர்த்துவிட்டுக் கதை சொல்லும் போதே ஒவ்வொரு உருண்டையாய் பாத்திரத்திலிருந்து கைகளில் விழும்.

இடையிடையே முழுங்கு, இருடா அவசரப்படாதே, ஏண்டி பறக்கறே, ம்..னு சொல்லு என்ற வசனங்களுடன் கதை நடக்கும். அந்தப் பாத்திரம் காலியாகும் வரை கதையும் தொடர்ந்துகொண்டிருக்கும்.அடுத்தவீட்டு அம்மாள் தன குழந்தை சாப்பிட அடம்பிடிப்பதாகச் சொல்லி எங்களுடன் சாப்பிட அமர்த்திவிடுவார்.நாங்களும் ஒரு விருந்தாளியை வரவேற்பது போல அந்தக் குழந்தையை நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அருகே அமர்த்திக் கொள்வோம்.அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி  சிரிப்பு பொங்கும் அந்தக் குழந்தையும் அழுகையை மறந்து சிரிப்பதோடு எங்கள் பாட்டியின் கையிலிருந்து கவளம் கவளமாக சாதத்தை வாங்கி தானே உண்டு விட்டுப் பெருமையோடு எங்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இந்த நினைவு காரணமாக எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தபின்னர் நான் பெற்ற நிலாச்சோறு மகிழ்ச்சியை என் பிள்ளைகளும் பெறவேண்டுமென  விரும்பினேன். எனவே சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு நிலாச்சோறு தான். என் பிள்ளைகளின் நண்பர்கள் தோழிகள் வீட்டுக்கு வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களையும் நிலாச்சாப்பாட்டுக்கு அமர்த்திவிடுவேன்.இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோது அந்தப்பையன்களில் ஒருவன்  என்னிடம் நிலாச்சாப்பாட்டை நினைவு வைத்துக் கொண்டு கேட்டபோது நான் நெகிழ்ந்துபோனேன். நம் பிள்ளைகளின் உணர்வு இன்னும் மங்காமல் இன்னும் நம் பாரம்பரியத்தில் அமிழ்ந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.இளைஞர்கள் இப்போது நிலாச்சாப்பாடு போட்டாலும் கைநீட்டத்  தயார்தான்.போடுவதற்குத் தாய்மார்கள் தயாரா?

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, October 27, 2014

chillaraich chettiaar.

.                         . சில்லரைச் செட்டியார்.


      ஒரு ஊரில் சில்லறைச் செட்டியார் என்று ஒருவர் இருந்தார்.அவர் அந்தஊரில் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார்.அவருக்கு இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. சில்லறைச் செட்டியார் என்ற பெயரே நிலைத்துவிட்டது.அந்தப் பெயர் வந்த காரணம்தான் இந்தக் கதை.
        ஒருநாள் நல்ல வெய்யில் நேரம். செட்டியார் கடையில் மிகவும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.நிறையப்பேர் சாப்பிட வந்திருந்தனர்.சமையலறையில் சமையல் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது.அடுப்பில் சமைக்கும் பதார்த்தத்தின் வாசனை வெளியே வரை கமகமத்தது.
       ஒரு வழிப்போக்கன் சாப்பாட்டுக்கடையின் திண்ணையில் வந்து அமர்ந்தான்.சாப்பாட்டு நேரமானதால் தான் கொண்டுவந்திருந்த பழைய சோற்று . மூட்டையைத் திறந்து அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டான்.
         சாப்பிட்ட களைப்பில் திண்ணையில் சாய்ந்தான்.அப்போது சில்லறைச் செட்டியார் வெளியே வந்தார். படுத்திருக்கும் வழிப்போக்கனைப் பார்த்தார்.
"ஏனப்பா, உள்ளே போய்  சாப்பிடுவதுதானே. நல்ல சாப்பாடு. விலையும் குறைவு."
"உண்மைதானுங்க. நல்ல வாசமுங்க. .வயத்துல பசியைக் கெளப்பிடுச்சிங்க..
உங்க புண்ணியத்துல அந்த  வாசத்தைப்  பிடிச்சிகிட்டே பழையதைத் தின்னுட்டேனுங்க"என்றபடியே புறப்பட எழுந்தான்.
செட்டியார் விடுவாரா?

எங்கேப்பா புறப்பட்டுட்டே?வாசம் பிடிச்சியில்லே எனக்கு ஒரு சாப்பாட்டுக்கான மூணு அணாவை எண்ணி வச்சுட்டுப் போ."

"அய்யா, நான்தான் சாப்பிடவே இல்லீங்களே?"

"ஏதாவது பேசினேன்னா திண்ணையிலே உக்காந்ததுக்கும் வாடகை கேப்பேன்."

வழிப்போக்கனிடமோ  இருப்பதே வழிச் செலவுக்கு அவன் வைத்திருக்கும்  .மூன்றணாதான். என்ன செய்வான் பாவம். ஆனால் செட்டியாரோ விடுவதாயில்லை.அவனை இழுத்துக் கொண்டு அவ்வூர் நியாயாதிபதியிடம் சென்றார்.தன வழக்கை எடுத்துக் கூறி அவன் பிடித்த வாசனைக்கு ஒரு சாப்பாட்டுக்குண்டான மூன்றணா தரவேண்டும் என்று முறையிட்டார். நியாயாதிபதி வழக்கை மீண்டும் மீண்டும் கேட்டார்.

வழிப்போக்கன் அழுதுகொண்டே நின்றான்.

தீர்ப்புக் கூறினார்."நீ அவர் .கடை  வாயிலில் அமர்ந்து வாசனை பிடித்தபடி சாப்பிட்டதற்குப் பணம் தரவேண்டியதுதான். ஆனால் சாப்பாட்டின் வாசனை பிடித்ததுபோல சில்லறையை உன் கையில் வைத்து கலகலவென்று சத்தப் படுத்து. அதன் ஒலிதான் அவனுக்கு விலை.நீ பிடித்த வாசனைக்கு அவன் கேட்கும் காசின் ஒலிதான் கூலி.என்று கூறி வழக்கை முடித்தார்.
          இப்படி அநியாயமாக சம்பாதிக்க நினைத்ததனால் மூன்றணா சில்லறைக்காக நியாயசபைக்குச் சென்றதால் ஜனங்கள் இவரை சில்லறைச் செட்டியார் என்று அழைக்கிறார்கள்.எப்படி தீர்ப்பு.














Sunday, October 12, 2014

ராமனின் கோபம்

                                 ராமலக்ஷ்மணர்கள் வனவாசம் செல்லத் தயாராகி விட்டார்கள். சீதையும் பின்தொடர்கிறாள்.சீதை செல்லமாக ஆசையுடன் வளர்க்கும் கிளி அரண்மனை வாயிலில் இருந்த கூண்டுக்குள் இருந்தது.  நடக்கும் விபரீத நிகழ்ச்சிகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.வனவாசத்திற்கு ஸ்ரீராமனுடன் புறப்படும் சீதாதேவி தான் வளர்த்துவரும் கிளியின் அருகில் வந்ததும் நின்றாள்.'கிளியை மிகுந்த அன்புடன் பார்த்தாள் . மிகுந்த வாத்சல்யத்துடன் கூறினாள்.                                                                                                                                                                                                                                             "என் உயிரையே உன்மேல் வைத்திருக்கிறேன்.நான் சீக்கிரமே திரும்பி வருவேன். அதுவரை ஜாக்கிரதையாக இரு." என்று கூறி விடை பெற்றாள்.                           சீதை கிளியிடம் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமனுக்குக் கோபம் வந்துவிட்டது.அவன் சீதையைப் பார்த்து சற்றே மனத் தாங்கலுடன் கூறினான்.
 "சீதே, சற்றுநேரம் முன்னர்தான் என் ப்ராணனே  நீங்கள்தான். தாங்கள் இல்லாமல் நான் ஒரு கணமும் உயிர் வாழமாட்டேன் என்று வாதாடினாய்..  மறு 
நிமிடமே கேவலம் ஒரு கிளியிடம் உன் பிராணன் இருப்பதாகக் கூறுகிறாய்.இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை." சற்றே சினத்துடன் கேட்ட மணாளனின் முகத்தைப் பார்த்த சீதை அச்சத்துடன் வாயடைத்து நின்று விட்டாள். 
அதைப் பார்த்த வசிஷ்டர் புன்னகையுடன் குறுக்கிட்டார்.
"ராமா, உன் அவதார ரகசியத்தை நினைத்துப் பார்.சீதை அந்த மகாலக்ஷ்மியின் அம்சம். அவள் கிளியிடம் பேசும்போது ஒருகால் வாயிலின் வெளியேயும் மற்றொரு கால் வாயிலுக்கு உள்ளேயும் வைத்துக் கொண்டு பேசினாள் .இதன் பொருள் என்னவென சிந்தித்தாயா.கிளியைக் காரணமாக வைத்து லக்ஷ்மி அம்சமான சீதை திரும்பி வரும்வரை அயோத்திக்கு லக்ஷ்மி கடாட்சம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால்தான் அந்தக் கிளியிடம் தன உயிர் இருப்பதாகக் கூறினாள்."       என்று கூறி ராமனை சமாதானப் படுத்தினார்.
உண்மையை உணர்ந்துகொண்ட ராமனும் சீதையின் அன்புக்கும் அறிவுக்கும் அகமகிழ்ந்து அவள் கரம் பற்றி வனத்தை நோக்கி நடந்தான். இளவலும் .பின்தொடர்ந்தான்..  

Monday, August 18, 2014

கண்ணனின் லீலை என்ற தலைப்பில் மணம் என்பதற்குப் பதில் மனம் என்றும்எண்ணெய் என்பதற்குப் பதில் என்னை என்றும் பதிவாகியுள்ளது. தயவு செய்து திருத்திப் படிக்கவும்.
அன்புடன் பாட்டி.

57.கண்ணனின் லீலை.

கோகுலாஷ்டமி கொண்டாடிய மகிழ்ச்சியில் அனைவரும் இருப்பீர்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளும் உங்களுடன் பட்சணம் செய்ய உங்களுக்கு உதவியிருப்பார்களே.அதுதான் வீட்டில் நெய் மனமும் என்னை வாசனையும் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறதே.
                   சரி. பூஜையும் முடித்து முறுக்கு சீடை  ஸ்வீட் பழம் பாயசம் என்று நிவேதனப் பொருட்களை எல்லாம் ஒரு பிடி பிடித்திருப்பீர்கள்.ருசியாகவே இருந்திருக்கும். ஏனென்றால் அம்மாக்களும் பாட்டிகளும் அந்தக் கண்ணனுக்காக மட்டுமல்லாமல்  தங்கள் வீட்டுக் கண்ணனையும் நினைத்துக் கொண்டு செய்கிறார்கள் அல்லவா. ருசியாகத்தானே இருக்கும். 
         அந்த ருசியோடு இன்றைய கதாநாயகனைப் பற்றிய ஒரு செய்தியையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். கண்ணனின் லீலைஎன்னும் அந்தருசியில்  மூழ்கி மகிழுங்கள்.
      கண்ணனின் தாயாரான யசோதை கண்ணனிடம் எங்கும் போகக் கூடாது என்று சொல்லி தயிர் கடையும் இடத்தில் உட்காரவைத்துவிட்டுப் போய் விட்டாள்.கண்ணனும் சாதுவாக அமர்ந்திருந்தான்.ஆனால் அவனால்  முடியுமோ.வாசலில் நண்பர்களின் சப்தம் கேட்டவுடன் வெளியே ஓடிவந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
         யார் வீட்டில் கோபி வேலையாக இருக்கிறள் என்று பார்த்து அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
வழக்கம்போல வெண்ணைப் பானை உரியில் இருந்ததைப் பார்த்தான் கண்ணன்.அவனுக்குத்தான் தெரியுமே எப்படி அதை எடுப்பது என்று.உரியில் கை வைக்கும் முன்பாகவே அதில் ஒரு மணி கட்டியிருப்பதைப் பார்த்துவிட்டான் கண்ணன்.
         அந்த வீட்டு கோபி கண்ணன் வந்து உரியைத் தொட்டால் சப்திக்குமாறு ஒரு மணியைக் கட்டியிருந்தாள் .அதைப் பார்த்துவிட்டு மெதுவாக அந்த மணியிடம் சொன்னான். "ஏ மணியே, நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை மணி அடிக்காதே." மணி சம்மதித்து அமைதியாக இருந்தது.
         இப்போது முதல் பானை இறங்கிற்று. அடுத்து இரண்டாம் பானையும் இறங்கிற்று.இனி உரியில் இருப்பது ஒரே பானை தான். நண்பர்கள் வெண்ணை தின்பதைப் பார்த்து மகிழ்ந்தவாறே உரியின் மேலிருந்த பானைக்குள் தன கையை வைத்து ஒரு உருண்டை வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான் கண்ணன்.
        அதுவரை அமைதியாக இருந்த மணி கணகண
வென்று அடித்து ஒலி எழுப்பியது. வேகமாகக் கீழே குதித்த கண்ணன் "ஏ மணியே, ஏன்  அடித்தாய்?நான்தான் அடிக்காதே என்றேனே. இவ்வளவு நேரம் சும்மா இருந்துவிட்டு இப்போது ஏன்  அடிக்கிறாய்?"
        "கண்ணா, பரந்தாமா, யுக யுகமாய் உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவதுதானே வழக்கம் இன்று நீ வெண்ணை உண்ணும் போது எப்படி நான் ஒலி 
எழுப்பாமல் இருப்பேன்?" கண்ணன் அமைதியானான்.
           அதற்குள் கோபி வந்துவிடவே எல்லோரும் வெளியே ஓடினார்கள். ஆனால் அடுத்தவீட்டு கோபி தண்ணீர் எடுக்க யமுனைக்குச் செல்வதைப் பார்த்து அவள் வீட்டுக்குள் நுழைந்தனர்.அங்கும் உரியில் மணி கட்டியிருப்பதைப் பார்த்தான் கண்ணன்.
         அவனுக்கா தெரியாது.தன ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காமல் பிடித்துக் கொண்டு மறுகையால் வெண்ணையைத் தின்று விட்டு ஓடினான்.
இவர்கள் கூட்டமாக ஓடுவதைப் பார்த்த கோபியர் தங்களுக்குப் பயந்து ஓடும் கண்ணனின் அழகில் மயங்கி நின்றார்கள்  கோகுலாஷ்டமியன்று உரியடிப்பது, ஓடிப்பிடிப்பது, ஒளிந்து விளையாடுவது போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறோம்.என்ன,
வீட்டுப் பலகாரதோடு கண்ணனின் விளையாட்டும் ருசியாக இருந்ததா?




















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, July 28, 2014

இராமானுஜன் --சினிமா விமரிசனம்.


நான் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் "ராமானுஜன்" கப்பலோட்டிய தமிழன், பாரதியார்,போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படம் நம் மனதைக் கவரும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது.
                                                       படத்தின் வரலாறு சுவாரசியமாகப் படமாக்கப் பட்டுள்ளதால் தொய்வில்லாமல்  சலிப்பின்றி நகர்கிறது. பாடல் காட்சிகளுக்கு இடமில்லாவிட்டாலும் கோவிலில் தாயும் மகனும் பாடும் பாடல் மனதைக் கவர்கிறது.இசையும் மிகவும் மென்மையாக இதமாக இருக்கிறது.நடித்தவர்களும் சரியாக நடித்தார்கள். ராமானுஜனாக  சரியான நடிகர்தான் நடித்துள்ளார்.
                                                       19-ம் நூற்றாண்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து பல எதிர்ப்புகளுக்கிடையே தன திறமையைக் காட்டி உலகுக்குத் தன்னை அடையாளம் காட்டியவர் ராமானுஜன். அந்த மேதையைப் புரிந்துகொண்டு அவருக்குத் தக்க உதவிகளைச் செய்தவர்கள் லண்டனில் இருந்த கணிதப் பேரறிஞர்கள்.

           அவரின் வரலாற்றை  மிகச் சுவையோடு கொண்டு சென்றிருக்கின்றனர்
இடையிடையே காதல் காட்சிகளும் இது ஒரு திரைப் படம் என்பதை நினைவூட்டவே ரசிக்கத் தக்க முறையில் அமைக்கப் பட்டுள்ளது பாராட்டுக்குரியது.அவர் பட்டங்களும் பதவிகளும் பெற்றதைப் பார்க்கும்போது நாமே பட்டம் பெற்றுவிட்டதைப் போல ஒரு மனத் திருப்தி ஏற்பட்டது.அந்த அளவுக்கு ராமானுஜன் துன்பப் பட்டிருக்கிறார் என்பதை அறிந்ததாலேயே.அவர் அடைந்த மகிழ்ச்சியை நாமும் அடைகிறோம்.
                                   ஆனால் அவர் நோய்வாய்ப் பட்டு துன்புறுகையில் எல்லா மாமியார்களையும் போலவே ராமானுஜனின் அம்மாவும் மகனிடம் மருமகளை நெருங்க விடாமல் செய்வது அந்தக் கால மாமியாரை நினைவூட்டுகிறது. ஆனாலும் அதன் காரணத்தை அவர் கூறும்போது அந்த முகத்தில் தெரியும் வேதனையை , உள்ளக்குமுறலை முகத்தில் காட்டி அவரும் ஒரு தாய் என்பதைத் தன                                         நடிப்பின்மூலம சிறப்பாக  வெளிக்காட்டுகிறார் சுகாசினி.
                                       கடைசிக் கட்டத்தில் படத்தில் அமைத்துள்ள காட்சிகள் என்னை அமைதிப் பெருமூச்சு விட வைத்தது.ஆம்.எல்லாப் படங்களிலும் வருவது போல இறந்தவரைப் படுக்கவைத்து மாலையிட்டு மூக்கில் பஞ்சடைத்து அனைவரும் சுற்றி நின்று ஓலமிட்டு அழ என்று பார்க்கவே விரும்பாத காட்சிகளைக் காட்டாமல் வார்த்தையிலேயே விளங்க வைத்திருப்பது சிறப்பு  டைரக்டருக்கு ஒரு ஷொட்டு வைக்கலாம்.
                                      கடைசியில் கடல் கடந்தவர் பரிகாரம் செய்யவில்லை என்று அவருக்கு சம்ஸ்காரம் செய்ய மறுத்து அனைவரும் சென்று விட வீடே அமைதியாக இருக்கிறது.இந்தக் காட்சி  யாருக்கும் கண்ணில் நீரை வரவழைக்கும்.   ஒரு சிறந்த மேதைக்குக் கிடைத்த மரியாதை இத்தகையதா என மனம் கலங்கியது. ஆனாலும் பாரதி, விவேகானந்தர் போன்ற மாமேதைகளைப் போலவே ராமானுஜனும் இளம் வயதில் புகழுடம்பை எய்திவிட்டார்.   இவரது பெயரால்  ராமானுஜன் விருது    அளிக்கப் படுவது ஒன்றே இவருக்கு நாம் அளிக்கும் அஞ்சலி.
இத்தகைய சிறந்த படத்தைத் தயாரித்தமைக்காக அதன் தயாரிப்பாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாணவர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.ஒரு மேதை எவ்வளவு துயருக்கு நடுவே எதிர்நீச்சல் போட்டு வெற்றிவாகை சூடுகிறார் என்பது பிள்ளைகளுக்கு ஒரு படிப்பினையாகும்.       












                                                 .

Saturday, June 21, 2014

வீரனுக்கு மரியாதை.

பாரதப் போர் முடிந்தபின் தருமன் கண்ணனிடம் கேட்டான்."கண்ணா, இவ்வளவு பாவங்களைப் புரிந்து இந்தப பாரதப் போரில் வெற்றிபெற்று  நாட்டுக்கு மன்னனாகியுள்ளேனே . என் பாவங்களைப் போக்கிக் கொள்ள வழி சொல்."
கண்ணனும் சொன்னான்."போர்க்களத்தில் கடும்போர் புரிந்து அம்பு பட்டு உத்தராயண புண்யகாலத்துக்காகக் காத்திருக்கிறாரே உன் தாத்தா பீஷ்மர்.அவரிடம் செல். அவர்  வார்த்தைகளைக் கேள் உன் பாவங்கள் விலக அவர் வழி சொல்வார்."என்று கூறி தருமனை பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் போர்க்களத்திற்கு அழைத்து வந்தான்.

அங்கே பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தார்.அங்கே சென்ற தருமன் தன பாவங்கள் தொலைய வழி கேட்டான். "அவனிடம் நீ செய்தவை பாவங்கள் என்றா எண்ணுகிறாய். இறைவனை உடன் வைத்துக் கொண்டிருக்கும் உனக்கு சந்தேகம் வரலாமா?அல்லது கண்ணன் உன் அருகிலிருப்பதால் அவன் இறைவன் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவில்லையா?என்று சொல்லி கண்ணனின் பெருமைகளைக் கூற ஆரம்பித்தார்.அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றாயிற்று.இந்த நாமத்தைச் சொன்னால் சகல பாவங்களும் தீரும் என்று அவர் வாக்கிலேயே கேட்டான் தருமன். அத்துடன் பீஷ்மர் கூறிய இந்த சஹஸ்ரநாமத்தைக் கண்ணன் பீஷ்மரின் அருகே அமர்ந்து கேட்டான்.

ஒரு சுலோகம் "சங்க ப்ருந் நந்தகி  சக்ரி சார்ங்க தன்வா கதாதரஹா "என்று பீஷ்மர் கூறியவுடன் கண்ணன் தன கைகளில் சங்கு, நந்தகி என்ற வாள், சக்கரம், சார்ங்கம் என்றவில், கதை என்ற ,பஞ்சாயுதங்களை ஏந்தி பீஷ்மருக்கு ஒரு போர்வீரனைப்போல் தரிசனம் கொடுத்தார்.
அந்த விஸ்வரூப தரிசனத்தைப் பார்த்தவாறே அந்த வீரன் தன உயிரை விட்டான்.இது ஒரு உண்மையான க்ஷத்ரிய வீரனுக்கு அவனது இறுதிக்காலம் முடியும்போது அளிக்கும் இராணுவ மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ளவே இந்தக் காட்சியைக் காட்டி பீஷ்மருக்கு அருள் புரிந்தான் கண்ணன்.போரில் உயிர்நீத்த வீரனுக்கு மரியாதை செய்வதைக் கண்ணன் அன்றே நடத்திக் காட்டியுள்ளான்.


--





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, April 27, 2014

புலமைத் திறம்..

           ஒரு கிராமத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு தனது புலமை மீது மிகவும் பெருமை.தனது புலமையை அறியும் திறம் அவ்வூரில் யாருக்கும்
இருப்பதாக அவர் எண்ணவில்லை.
       ஒருநாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டு தன்
ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.வரப்பின் மீது கவனமாக நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று ஆ.,! என்று கத்தினார்.
         அவர் பின்னால் வந்து கொண்டிருந்த அவரது நண்பர் வேகமாக அருகில் வந்தார். "புலவரே! என்ன ஆயிற்று?" என வினவினார்.
      புலவருக்குத் தன புலமையைக் காட்டவேண்டுமெனத் தோன்றியது போலும்.உடனே அவர்,"முக்காலில் செல்கையிலே நான்முகத்தான் பின்னவன் தன் நற்கரும்புக்  காட்டுக்குள் ஐந்து தலைப் பாம்பு தீண்டியது."
என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்.
உடனே அந்த நண்பர் புலவரின் குறும்பைப் புரிந்து கொண்டார்.பிறரை ஒன்றும்  தெரியாதவர் என்று மட்டம் தட்டுவதையே பெருமையாக எண்ணி வந்தவருக்குப் பாடம் புகட்ட எண்ணினார்.
உடனே நண்பர்,"ஓஹோ., அப்படியா, பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலேடுத்துத் தேய்."என்று சொல்லிவிட்டு நடந்தார்.
புலவரும் அவர் சொன்னபடியே செய்து விட்டு நடந்தார்.
அதன்பின் அவர் யாரையும் அவமதிப்பதையும் விட்டு விட்டார்.தன்னைப்போல் சிறந்த புலமை இருந்தும் அதை வெளிக்காட்டாது இருக்கும் தன நண்பரின் சான்றாண்மையைப் புரிந்து கொண்டார்.
இனி அவர்கள் பேசிக்கொண்டதன் பொருளைப் பார்ப்போம்.புலவர், சொன்னது"கையில் கோலுடன் செல்லும்போது அவ்வூரில் பிரம்மன் என்பவரின் தம்பியின் கரும்புக்காட்டுக்குள் நெருஞ்சி முள் குத்தியது"
இதற்கு அவர் நண்பர் சொன்னது."பத்துரதன் என்பவன் தசரதன்.அவன் புத்திரன் ராமன்.அவன் மித்திரன் சுக்ரீவன்.அவன் சத்துரு வாலி.அவன் பத்தினி தாரை.அவள் காலை எடுத்தால் தரை.எனவே தரையில் தேய் "
தன்னைவிடத் திறமையாகப் பேசும் திறம் படைத்தவரான நண்பரின் புலமையைப் புரிந்து கொண்ட புலவரின் கர்வம் நீங்கியது.














Wednesday, March 19, 2014

53.கண்ணன் சொன்ன பாடம்.
               பரந்தாமனும் பக்தவத்சலனுமான கண்ணன் உண்மை அன்புக்குக் கட்டுப்பட்டவன் என்பது உண்மைதான். அதேசமயம் தன அன்புக்கு உகந்தவராயினும் அகந்தையோ கர்வமோ கொண்டுவிட்டால் அவனைத் திருத்தித் தன்வயமாக்கிக் கொள்ளும் பேரன்பனும் அவன்தான்.ஒரு சிறு நிகழ்ச்சியின் மூலம் இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
              கோபிகையர்  கூட்டமாக  ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவே ராதையும் கண்ணனை எண்ணிக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தாள்.அப்போது திடீரென்று அவர்களின் நடுவே கண்ணனும் வந்து ஆடிப்பாடத் தொடங்கினான்.மனமகிழ்ந்த கோபிகையர் ஒவ்வொருவரும் கண்ணன் தன்மீதுதான் அதிக அன்பு வைத்துள்ளான் என எண்ணிக் களித்தபடி ஆடிக்கொண்டிருந்தனர்.
                அப்போது திடீரென கண்ணன் ராதையின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினான்.கோபியரும் கண்ணா, கண்ணா, என அழைத்தவாறே பின்னால் ஓடினர்.கண்ணனின் கையைப் பற்றியிருந்த ராதை ஓடிக்கொண்டே "கண்ணா, உனக்கு எல்லாரைவிட என்மீதுதானே அன்பு அதிகம்?"எனக் கேட்டாள்.அந்த மாயக் கண்ணனும்,"இதிலென்ன சந்தேகம் ராதா,நீதான் என் அன்புக்குப் பாத்திரமானவள்."என்றான் கள்ளச் சிரிப்போடு.
                உடனே ராதை கண்ணா "என்னைத் தூக்கிக் கொண்டு போவாயா?கால் வலிக்கிறது."என்றவளை "அதற்கென்ன, மிக்க மகிழ்ச்சியோடு தூக்கிச் செல்கிறேன்."என்றவன் ராதையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.சிறிது தூரம் சென்றனர்.வழியில் பெரிய புன்னை மரமொன்று பூக்கள் சொரிந்தபடி  நின்றிருந்தது.அதைப்பார்த்த ராதை,"கண்ணா, இந்த மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு ஆடவேண்டும்போல் இருக்கிறது."என்றாள்
               உடனே கண்ணனும் "அதற்கென்ன, ஆடேன்"என்றபடி அவளைத் தன தோளில்  சுமந்தான். தன இரு கால்களையும் கண்ணனின் தோள்மீது வைத்துக் கொண்டு  மரக்கிளையைப் பற்றினாள்  ராதை.
கண்ணனும்,"ராதை பத்திரம் நன்றாகக் கிளையைப் பற்றிக்கொள்"என்று சொன்னவன் அவளை மரத்தின் மீது ஊசலாடவிட்டுவிட்டு மறைந்தான்.இப்போது ராதை மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டு தவித்தபடி இருந்தாள்
             அதேசமயம் இவர்களைத் தொடர்ந்து ஓடிவந்த கோபிகையர், கண்ணனும் ராதையும் ஓடிய பாத தடங்களைப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து அவர்களும் நடந்தனர்.சிறிது தூரம் சென்றதும் ஒருவர் ஓடிய தடம்  மட்டுமே தெரிந்தது. தொடர்ந்து அந்த தடத்தைப் பார்த்துக் கொண்டே கண்ணா,கண்ணா, எனக்  கூவியவாறே ஓடினர்.சிறிது தொலைவு வந்தவுடன் அந்தத் தடமும் மறைந்து விட்டது.
            இப்போது கோபிகையர் திகைத்து நின்று விட்டனர். கண்ணா, என அவர்களின் வாய் கூவியவாறு இருந்தது. அப்போது மரத்தின் மேலிருந்து "ஏ ,கோபியரே, என்னைக் கீழே இறக்குங்கள் நான் மரத்தில் தொங்குகிறேன்"என்ற குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தனர். அங்கே ராதை மரத்தின் பெரிய கிளையைப் பிடித்துத் தொங்குவது தெரிந்தது.கீழே இறங்கிய ராதை என்னைக் கண்ணன் பாதியில் விட்டு விட்டுப் போய்  விட்டான். என்றாள் கண்ணீர் மல்க.
           ஒரு கோபி கூறினாள்,"அடி பைத்தியமே கண்ணனின் பிடி இருக்க அதை விட்டு போயும் போயும் மரக்கிளைக்கு ஆசைப்பட்டாயே. அவன் கையல்லவோ கிடைக்கவோண்ணாத கை. உனக்கு கண்ணன் உன் கையைப்  பிடித்து ஓடியதும் கர்வம் வந்து விட்டது. அந்தப் பரந்தாமனை எண்ணிய நெஞ்சம் அத்தகைய எண்ணங்களை எண்ண லாமா?அதனால்தான் கண்ணன் உன்னை விட்டு விட்டான்.
        இனியும் அத்தகைய கர்வம் கொள்ளாது அவனை எண்ணிக் காதல் கொண்டு கசிந்து உருகி ஆட்கொள்ள வருமாறு வேண்டிக் கொள்" என்றவுடன் தன தவறை உணர்ந்தாள்  ராதை.

         இறைவனை அடையும் வழியை ராதை மட்டுமா அறிந்து கொண்டாள்?எந்த அகந்தையோ கர்வமோ இல்லாதமனதிலே இறைவன் விரும்பி வந்து அமர்வான் என்ற உண்மையை நாமும்  புரிந்து கொண்டோமல்லவா?












Thursday, March 13, 2014

52.navaneedha naattiyam.

           52  நவநீத நாட்டியம்.
                             கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.இவனது நாட்டியத்தைக் காண ஆசைப்பட்ட யசோதை அவனை ஆடச் சொன்னதுதான் நவநீத நாட்டியம் எனப்பட்டது.
           யசோதை வழக்கம்போல தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன்
அப்போது அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு வெண்ணை திரள்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது யசோதை "கண்ணா, பானைக்குள் பூதம் இருக்கு. அது வெளியே வந்து உன்னை விழுங்கி விடும்." என்று பயமுறுத்தி தூரப் போகச் சொன்னாள்.
                    அவள் சொன்னதுபோலவே கண்ணனும் பயப்படுபவனைப்போல கண்களை உருட்டி வாயைப்பொத்தி "ஆமாம்மா, அந்த பூதம் உன்னை விழுங்கிவிட்டால் நான் யாரை அம்மா என்று அழைப்பேன். நீயும் தூர வந்து விடு என்று அபிநயித்தான்.அதைப்பார்த்த யசோதை சிரித்தபடியே
"கண்ணா, நான் தயிர் கடையும் வரை நீ நாட்டியம் ஆடினால் உனக்கு யானைத் தலையளவு வெண்ணை தருவேன்."என்றாள்.
                "அப்படியா, சரி."என்றவனிடம்யசோதை "நான் மத்திலிருக்கும் கயிற்றை வலது பக்கம்  இழுக்கும் பொது வலது கால் தூக்கியும்  இடது பக்கம் இழுக்கும் பொது இடது கால் தூக்கியும் நாட்டியம் ஆடவேண்டும் "என்றாள்.
             அவள் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு  வெண்ணைக்காக
கால்மாற்றி மாற்றி ஆடினான் கண்ணன். யசோதையும் மத்தை வேகவேகமாக இழுத்து கண்ணனை வேகமாக நாட்டியம் ஆடவைத்தாள்.

            யசோதையின் வேலையும் முடிந்தது. கண்ணனின் நாட்டியமும் முடிந்தது. ஆடிக்களைத்தவனாக வெண்ணை தின்னும் ஆசையுடன் தாயின் முன்னே வந்து நின்றான் கண்ணன்.யசோதையும் தன கையில் யானைத்தளையளவு திரண்ட வெண்ணையை எடுத்துப் பானைக்குள் போட்டு  மூடிவிட்டாள். சிறிய கடுக்காயளவு வெண்ணையை எடுத்து அதையும் இரு பங்காக்கி ஒரு பங்கை கண்ணனின் கையில் வைத்தாள்
             அந்தவெண்ணையைக் கையில் வாங்கிய கண்ணன் தாயைப் பார்த்துச் சிரித்தான்.அந்தவெண்ணையை வாயில் போட்டுக் கொண்டு அடுத்த கையை நீட்டினான். அவனது சிரிப்பின் அழகில் மயங்கிய யசோதை இன்னொரு உருண்டை வெண்ணையைக் கையில் வைத்தாள்  உடனே அடுத்த கையை நீட்டிச் சிரித்தான் திருடன். யசோதை மீண்டும் ஒரு உருண்டை வெண்ணையை அவன் கையில் வைத்தாள்
               அவள் முதலில் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு வெண்ணையை வாங்கியபின் புன்னகைத்தவாறே ஓடிவிட்டான் அந்தக் கள்ளன்.தன்னை மறந்து கண்ணனின் புன்னகையில் மயங்கி அமர்ந்திருந்தாள்
யசோதை.
        வெண்ணைக்காகக் கண்ணன் ஆடிய நாட்டியமே நவநீத நாட்டியம் எனப் படும். நவநீதம் என்றால் வெண்ணை என்று பொருள். கண்ணனின் லீலை எண்ணி எண்ணி மகிழத் தக்கது.




Tuesday, February 25, 2014

51. கண்ணனிடம் ஏமாந்த யசோதை.

  கோகுலத்தில்கண்ணனால்பெரும்தொல்லை கோபியருக்கு.
கண்ணனில்லாவிடிலோ தொல்லை. அதைவிடப் பெரும் தொல்லை. தனிமைத் தொல்லை.
        கண்ணனால் தொல்லைகளையும் துன்பத்தையும் அனுபவிக்கவேண்டும் அதை யசோதையிடம் சொல்லி மகிழவேண்டும் இதுதான் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தவர்களல்லவா கோபியர். 
 வசுதேவர் வருவதைக் கூடக் கவனிக்காமல் கோபத்துடன் தயிர் கடைந்து கொண்டிருந்தாள் யசோதை. வசுதேவரும் அவளைப் பார்த்து "ஏன் யசோதா, வழக்கம்போல உன் மகனைப் பற்றி யாரேனும் புகார் கொடுத்தார்களா?"என்றார் மெதுவாக.
      "வேறென்ன, இந்தக் கண்ணனுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லையே. ஊர்வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வருகிறான்." 
"அப்படி என்ன செய்தானாம் கண்ணன்?"  
"ஒருத்தி புதுப் பாவாடையில் மண் அள்ளிப் போட்டான் என்கிறாள்.ஒருத்தி பின்னலைப் பிடித்து இழுக்கிறான் என்கிறாள். வேரொருத்தியோ  வாயில் கட்டெறும்பைப் பிடித்துப் போட்டுவிட்டான் என்கிறாள். கடைசியில் பழத்தைப் பறித்துக் கடித்து எச்சில் படுத்திக் கொடுத்தான் என்கிறாள் "
"இதோ பார். அந்த கோபியர் என்ன சொன்னார்களோ எனக்குத் தெரியாது.வேண்டுமானால் நீ  கண்ணன்   பின்னால் சென்று பார்."
"சரி உங்கள் சொற்படி நான் அவன் பின்னே சென்று பார்க்கிறேன் என்று வேகமாக வெளியே வந்த யசோதை தெருவில் தான் வருவது தெரியாமல் மறைந்து நின்று கண்ணனைப் பார்த்தாள்.
   தெரு முனையில் ஒருத்தி பின்னலை அசைத்துக் காட்டி நின்றாள். கண்ணன் தன்னைப் பாராமல் போகிறானே என்ற ஏக்கம் அவள் முகத்தில் தெரிந்தது.சற்று தொலைவில் இன்னொருத்தி பாவடையை பிடித்துக் கொண்டு அழகுடன் நின்றால். அவளையும் கண்ணன் கவனியாதவன் போல் தலை குனிந்து நடந்தான்.
அதேபோல் சற்றுத் தொலைவில் கையில் பழத்தை வைத்துக் கொண்டு ஒருத்தி கண்ணனை வா வா என அழைப்பதைப் போல நின்றாள் இவர்களையெல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு ஒன்றுமறியாதவன் போல வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன்.
           தன மகன் எவ்வளவு நல்லவனாக இருக்கிறான் இவனைப் பற்றி கோள் சொல்லும் கோபியரைக் கடிந்தவாறே  வீட்டுக்குள் நுழைந்த யசோதை தன மகனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள்.
    கண்ணனும் கள்ளச் சிரிப்புடன் கோபியரோடு தாயும் ஏமாந்து போனதை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டான்.
       கண்ணனின் கள்ளத்தனம் நம்மையும் புன்னகைக்க வைக்கிறது இல்லையா.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, February 16, 2014

raadhaiyin kaadhal.

ராதையின் காதல் 
           நந்தகோபரின் மனையில் வளர்ந்து வந்த கண்ணன் செய்த லீலைகள் கேட்டுக்கேட்டு மகிழத் தக்கவை.அதிலும்  கோபியரின் அன்புடன் கூடிய பக்தி நம்மை மெய்  சிலிர்க்க வைக்கக் கூடியது. எல்லா    கோபிகையரிலும்  ராதை கொண்ட அன்பு அதீதமானது. கண்ணனும் அப்படியே அவளிடம் அதிக அன்பு வைத்திருந்தான்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் வனத்திலும் சோலைகளிலும் யமுனைக் கரையிலும் ஆடலும் பாடலுமாக இருந்ததைக் கண்டு கோகுலத்து மக்கள் யசோதையிடம் வந்து புகார் கூறினர்.
         அத்துடன் ராதையின் தாயிடமும் ராதையைப் பற்றிக் குறை கூறவே அவளும் ராதையைக் கண்டிக்கத் தொடங்கினாள்.அதனால் இப்போது கண்ணனும் ராதையும் சந்திக்க இயலாமல் தவித்தனர்.கண்ணனிடம் யசோதை அவன் வெளியில் எங்கும் போகாமல் வேலைகளைக் கொடுத்து அவனை அருகிலேயே வைத்திருந்தாள்.இருவரும் எப்போது சந்தர்ப்பம் வரும் வெளியே போய் சந்திக்கலாம் எனக் காத்திருந்தனர்.
         கண்ணனுக்கு அவன் அன்புக்கினியவளைக் காண இயலாத ஏக்கம். ராதைக்கு அதைவிட அதிக ஏக்கம்.எப்படியாவது கண்ணனை சந்திக்க வழி தேடினாள்.
        அன்று ராதையின் இல்லத்திற்கு மாடு கறக்க யாரும் வரவில்லை.மாடுகள் தவித்தபடி குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்தக் குரலைக் கேட்டு யசோதையும் பாவம் மாடுகள் தவிக்கின்றன. என்று              இரக்கப்பட்டாள்.இதையே காரணமாக வைத்துக் கொண்டு "நான்வேண்டுமானால் அவர்கள் வீட்டு மாடுகளைக் கறந்துவிட்டு வரட்டுமா?"என்றான் சாதுவாக.வேறு எங்கோ கவனமாக இருந்த யசோதை "சரி போய்விட்டு சீக்கிரமாக வந்துவிடு".என்று கூறி அனுப்பினாள்.
        உடனே கண்ணன் ராதையின் இல்லம் நோக்கி காற்றாய்ப் பறந்தான்.கண்ணனின் வருகையை அறிந்த ராதையும் அம்மாவிடம் "அம்மா, நான் தயிர் கடைந்து வெண்ணை எடுக்கிறேன்" என்றவுடன் அவள் தாயும் "அப்படியே செய்" என்று கூறவே ராதையும் தயிர் கடையும் மத்து பானை சகிதமாக உள்ளே சென்றாள்.
       கீழே கண்ணன் அமர்ந்து மாடு கறக்கும் காட்சி நன்கு கண்ணுக்குத் தெரியும் வண்ணம் மாடியின் சன்னல் ஓரத்தில் பானையை வைத்துக் கொண்டு வேக வேகமாகத் தயிர் கடைந்தாள்  ராதை.அதே சமயம் மாடியில் இருக்கும் ராதையைப் பார்த்துப் புன்னகைத்தவாறே கண்ணன் மாடு கறந்தபடி அமர்ந்திருந்தான். பலநாட்கள் பார்க்க இயலாதிருந்ததால் தன்  காதலையெல்லாம் கண்களின் வழியே அவனை நோக்கி ஓடவிட்டாள்  ராதை.
           இரண்டு பேரும் வெகு நேரம் இவ்வாறு அமர்ந்திருக்க ராதையின் தாய்
கறந்த பாலை எடுத்துச் செல்ல வந்து திகைத்து நின்றாள்.
"ஏய் கண்ணா,என்ன வேலை செய்கிறாய் நீ?"என்று அதட்டியதும் விழித்தவன் அப்போதுதான் இதுவரை தான் கறந்தது காளைகளை வைத்து எனப் புரிந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து ஓடினான்.சலித்துக் கொண்டவளாய் ராதையின் தாய்

 "ஏய் ராதா, வெண்ணை திரண்டிருக்கும் எடுத்து வை" என்றவாறே பாத்திரத்துடன் வந்தாள் அப்போதுதான் ராதை தயிரே ஊற்றாமல் வெறும் பானையைக் கடைந்து கொண்டிருந்தாள்  எனக் கண்டாள் .
"என்னடீ இது?"தாய் திகைத்து நிற்பதைக் கண்டு சிரித்தவாறே கண்ணனின் பின்னே ஓடிவிட்டாள்  ராதை

இந்த அழகிய காட்சியை நாராயணீயம் என்ற காவியத்தில் கண்டு படித்து மகிழலாம். ராதையின் பக்திக்குக் கட்டுண்ட கண்ணன் அவளிடம் கட்டுப்பட்டு நின்ற நிலை அவள் சிறந்த பக்திக்கு ஒரு எடுத்துக் காட்டு அல்லவா?







Saturday, February 15, 2014

மறக்க இயலாதவை.

என் கணவர் அடிக்கடி சொல்லும் சொற்கள் இவை.ஏணி , தோணி, வாத்தியார், நார்த்தங்காய் இவற்றை நாம் என்றும் மறக்க இயலாது.ஏனெனில் இவை நான்கும் நம்மை உயர்த்துவன. எப்படியெனச் சொல்கிறேன்.
        முதலில் ஏணி. இது இருந்த இடத்திலேயே இருக்கும் ஆனால் ஏறுபவரை உயரத்தில் கொண்டு விடும்.
         இரண்டாவது,தோணி.அதாவது படகு.இதுவும் நீரில் மிதக்கும் ஏறுபவரைக் கரை சேர்க்கும்.தான் கரையேறாது.
          மூன்றாவது வாத்தியார்.வகுப்பில்  பயிலும் மாணவனை உயர்த்துவார். ஆனால் அவர் அதே வகுப்பில் இருப்பார்.
          கடைசியாக நார்த்தங்காய் ஊறுகாய்.எவ்வளவு தயிர்சாதம் இலையில் வைத்தாலும் ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாய் வைத்தால் அந்த ஊறுகாய் அப்படியே இருக்க தயிர்சாதம் முழுவதும் வயிற்றுக்குள் போய்விடும்.
         இந்த நான்கு விஷயமும் நம்மால் மறக்க இயலாது என்று அவர் சொன்னது உண்மைதான் எனத் தோன்றுகிறது நீங்களும் ஒப்புக்கொள் வீர்களல்லவா?






Friday, December 13, 2013

பண்பை வளர்க்கும் பண்டிகைகள்


நம் பண்டிகள்கள் எல்லாமே அன்பையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிறந்தவைதான் என்றாலும் அவற்றின் உள்  நோக்கமே வேறு. குடும்ப ஒற்றுமை, பாசம் மரியாதை ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறை  இவற்றை வளர்ப்பதே முக்கியமாகக் கருதப் படுகிறது.
                         எங்கள் இல்லத்தில் நடக்கும் தீபாவளி ப்பண்டிகையை 
இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.எங்கள் குடும்பம் மிகப் பெரியது.
எங்கள் பெற்றோருக்கு நாங்கள் எட்டுக் குழந்தைகள்.இப்போது அனைவரும் ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக உள்ளோம்.எல்லோரும் பேரக்குழந்தைகள் எடுத்து அவர்களுக்கும் திருமனமாகியுள்ளது.
                      ஒவ்வொரு தீபாவளியன்றும் அதிகாலை கங்கா  ஸ்னானத்தை
முடித்து புத்தாடை புனைந்து அனைவரும் எங்கள் குடும்பத்தின் பெரியவர் வீட்டில் கூடுவோம்.ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டில் காலைச் சிற்றுண்டி இனிப்புடன் பரிமாறப்படும். எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து பேசி மகிழ்வோம். இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம். ஒரு குடும்பம் வர சற்று தாமதமானாலும் அனைவரும் கூடும் வரை காத்திருப்போம்.யாரேனும் வெளிநாடு சென்றிருந்தால் ஒழிய மற்றையோர் அனைவரும் சேர்ந்திருப்பர்.எங்களின் எட்டு குடும்ப அங்கத்தினர்களும் குறைந்தது ஐம்பது பேர் ஒன்றாய்க் கூடியிருப்போம்.
                       அனைவரும் வந்து சேர்ந்தபின் வீட்டின் பெரியவர் தன மனைவியுடன் வந்து நிற்பார்.அவரை முறைப்படி அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவர் என வயது வாரியாக காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவர்.பெரியவர் வணங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பணம் கொடுப்பார்.மூன்று வயது கொள்ளுப்பேரக் குழந்தை வணங்கி கைநீட்டி பணம் பெற்று மகிழ்வதை நாங்கள் கைதட்டி வரவேற்போம்.நாற்பத்தி எட்டுப் பேரும் வணங்கி ஆசிபெற்றபின் அவருக்கு அடுத்தமூத்தவர் வந்து நிற்பார் அவருக்கு இளையவர்கள காலில் விழுந்து ஆசி பெறுவர். இந்த வரிசையில் கடைசிப் பேரக் குழந்தை தன்னை விடஇளையவருக்கு ஆசிவழங்கி கையில் பணம் கொடுக்கும் போது அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரிப்போம்.ஏனெனில் ஆசிவழங்கும் ஒவ்வொரு மூத்தவரும் பணம் கொடுப்பார்கள்.அவரவர் வருமானத்திற்கு ஏற்ப பத்து ஐந்து என அனைவருக்கும் அளிப்பார்.
                          சிறுவர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதுடன் கொடுக்கும் குணம் ஆசிகூறுவது  அன்பு செலுத்துவது ஆகிய  நல்ல பண்புகள் அவர்களுக்கு வளர்வது உறுதியன்றோ. அதன்பின் அனைத்து சிறுவர்களும் பட்டாசு கொளுத்தி மகிழ்வர்.அதன்பின் தேநீர் அருந்தியபின் அவரவர் இல்லம் திரும்புவோம்.
                   இந்தமாதிரி தீபாவளி நாளில் நாங்கள் கூடுவது சுமார் ஐம்பது வருடங்களாக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டு பண்டிகை முடிந்தபின்னும் அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம்.இது எங்கள் அனைவருக்கும் ஒரு ஊக்க டானிக் போல உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Wednesday, October 30, 2013

நீங்களே நீதிபதிகள்.



--


         ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோவிலில் உள்ள தாயாரைத் தரிசித்து விட்டு கோதண்டராமரைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு முதிய பெண்மணி எண்பது வயதிருக்கும்  பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்.அவரைத் தாண்டி சென்ற பின் என்  பின்னால் பெரியதாகப் பேச்சுக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.ஆச்சரியப் பட்டுப் போனேன். அந்த பெண்மணி செல்போனைக் கையில் வைத்துப்  பேசிக் கொண்டிருந்தார்.
         அடுத்தநாள் காலையில் காவிரியாற்றில் குளிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் நெடுக இருந்த குடிசைவீடுகளில் இருந்து தொலைக் காட்சிகளின் ஒலி  கேட்டுக் கொண்டிருந்தது.ஒரு வீட்டின் வாயிலில் இருந்து இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
"இவ்வளவு தூரம் வரணுமா?ஒரு போன் அடிக்கலாமில்லே?"
"உன் நம்பர் தெரியல்லே.என் போன்ல வரிசையா இருவது நெம்பர் இருக்கு."
"எப்படி வந்தே? சைக்கில்லையா?"
"டூ வீலர்லதான்"
இந்த உரையாடலும் ஒரு குடிசை வீட்டின் முன்னாலிருந்துதான் வந்தது.
இந்த நாட்டை ஏழை நாடு என்றோ வளரும் நாடு என்றோ சொல்ல முடியுமா, என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
              மறுநாள் அதிகாலை துலா ஸ்நானம் செய்வதற்காக காவிரிக்குச் சென்றேன்.அங்கே ஒலிபெருக்கியில் "கம்பியைத் தாண்டிச் செல்லாதீர்கள்.
காவிரியில் புதைகுழிகள் உள்ளன.கம்பிக்கு உள்ளேயே குளியுங்கள்"என்று அறிவிப்புச் செய்து கொண்டிருந்தனர்.  உள்ளே கால் வைக்கவே கூசும் அளவுக்கு குப்பையும் துணிகளும் நிறைந்திருந்தது.ஒருபக்கம் துணி துவைப்பவர்கள் பல் துலக்குபவர்கள் என உள்ளூர் மனிதர்கள் நிறைந்திருந்தனர்.
                தைரியமாகக் கம்பியைத் தாண்டி நடுஆற்றில் சென்று பலரும் குளித்தனர். நாங்களும் அங்கே சென்று குளித்துக் கரையேறினோம். படித்துறையைத் தாண்டி வர இயலாதபடி சிறுநீர் நாற்றம் குடலைப் புரட்டியது.பூலோக வைகுண்டம் என்று புகழப் படும் ஸ்ரீரங்கத்தின் புனிதத் தன்மை  இந்த நிலையால் பங்கப் பட்டிருப்பதை எண்ணி மனதுக்குள் புழுங்கினேன். ஆற்றின் கரையைச் சுத்தப் படுத்த அங்கங்கே ஆட்கள் இருந்து சுத்தம் செய்தால் ஆற்றின் பரிசுத்தமும் புண்ணிய க்ஷேத்திரத்தின் புனிதமும் காப்பாற்றப் படுமே என்று எண்ணினேன்.இப்போது இந்த நிலையைப் பார்த்தால் நம் நாடு முன்னேறியுள்ளது என்று சொல்லமுடியுமா?இரண்டு காட்சிகளையும் பார்த்து நாட்டின் நிலையைக் கூறுங்கள். நீங்களே நீதிபதிகள்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, October 22, 2013

பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்.

பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்.

நாம் சாதாரணமாகவே  தினமும் தவிக்கும் காரியம் ஒன்று உண்டு.தேடுவது. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு வீடு முழுவதும் தேடும் நிகழ்ச்சி எல்லோர் வீடுகளிலும் நடக்கும் காரியம்.இப்படித் தேடுவதால் எத்தனை நேரம் விரயம். சில சமயங்களில் முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாமல் போவதும் உண்டு.
ஒரு பொருளை அததற்குண்டான இடத்தில் வைப்பதும் வைத்த இடத்தை நினைவில் வைத்துக் கொள்வதும் மிக மிக அவசியமான ஒன்று.
அப்படியிருந்தால் நமக்கு நேரம் மிச்சம் வேலை மிச்சமாகும். அதனால் உண்டாகும் அவசரமும் பதட்டமும் இருக்காது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நாமும் சரி பள்ளி கல்லூரிக்குப் போகும் பிள்ளைகளும் சரி நன்கு பழக்கப் படுத்திக்  கொள்ளவேண்டும்.
எல்லா வீடுகளிலும் காலை நேரம் பாருங்கள் எவ்வளவு கலாட்டா நடக்கிறது.
பென்சிலைக் காணோம், என் சாக்ஸ் எங்கே, என் ஹோம்வொர்க் நோட்டைக் காணோம் இங்கேதான் வைத்தேன் என்னும் குரல்கள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது. இதில் சில பள்ளி செல்ல விருப்பமில்லாதவர்கள் வேண்டுமென்றே நோட்டை ஒளித்துவிட்டு நோட்புக் இல்லை அதனால் இன்று பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அடம் பிடிப்பதும் உண்டு.
இவர்கள் மட்டுமல்ல ஆபீஸ் போகும் பெரியவர்களும் இந்த கலாட்டா செய்வது உண்டு.இதற்கெல்லாம் காரணம் முக்கியமான பொருள்களை உரிய இடத்தில் வைக்காததும்  வைத்த இடத்தை மறந்து போவதும்தான் 
இப்படிப்பட்ட நிலைமை ஏற்படாதிருக்க சிறு வயதிலேயே பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் குழந்தைகளையும் பழக்கப் படுத்த வேண்டும்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, October 4, 2013

கற்றுக் கொடுங்கள்.

ஒருமுறை அருகே இருந்த ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன்.எங்கள் அருகே இருந்த ஒரு பெண் தன மூன்று வயது கூட நிரம்பாத மகளுக்கு தன கைபேசி எண்ணைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.என் உடன் வந்திருந்த தோழி அதைப் பார்த்துக்  கிண்டலாகச் சிரித்தாள்.
     நான் அவளிடம் என் சிரிக்கிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவள்,"
"இந்த சின்ன வயதிலேயே பத்து எண்களை இந்தக் குழந்தையால் 
எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.இந்தப் பெண் தன மகளை இப்போவே பெரிய அறிவாளியாகக முயற்சிப்பது பைத்தியக்காரத்தனமாகப் படவில்லையா?"என்று சிரித்தாள்.
அப்போது நான் சிரித்தேன்.இந்தக் காலத்துப் பெண்களுக்கு  எத்தனை கெட்டிக்காரத்தனம்? இதை இவள் புரிந்து கொள்ளவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
     சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை அவளுக்குக் கூறினேன் அதையே இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"அப்போது என் மகனுக்கு ஐந்து வயது. அப்போதுதான் சற்றுத தொலைவில் உள்ள  பெரிய பள்ளியில் சேர்த்திருந்தோம் தினமும் பள்ளி வண்டியிலேயே சென்று வந்தான்.கொஞ்ச நாட்கள் வரை எந்த பிரச்னையும் இல்லை. நிம்மதியாக இருந்தேன்.ஒருமுறை நான் விடுமுறையில் இருந்தேன். அன்று மாலையில் மகனுக்குப் பிடித்த பூரி கிழங்கு செய்து வைத்துக் காத்திருந்தேன்.
பள்ளிவிடும் நேரம் கடந்து ஒரு மணி நேரம் ஆனபின்னரும் குழந்தை வரவில்லையே என்று ஆட்டோ பிடித்துப் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, 
பள்ளி காலியாக இருந்தது.எல்லோரும் போய்விட்டார்கள் யாரும் இல்லையென்று காவல்காரர் சொல்லிவிட்டார்.எனக்கு என்ன செய்வது என்று புரியவேயில்லை.வேண்டாத தெய்வமில்லை.அடுத்து ஒருமணி ஓடிவிட்டது.நான்கு மணிக்கு வரவேண்டிய பையன் ஆறு மணியாகியும் வரவில்லையே என்று தவித்தபடியே இருந்தேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல் தொலைபேசி வசதி பரவலாக இல்லை.அதனால் என் கணவர் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
வாசலிலேயே காத்திருந்தேன். அப்போது அடுத்தவீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்று அழைத்தனர். ஓடினேன். என்ன செய்தியோ என்று என் உள்ளம் தவித்தது."ஹலோ,யார் பேசுவது?"
"அம்மா, உங்க பையன் எங்க கூட இருக்காம்மா."
உடனே ஒரு நிம்மதி என் மனதில் பரவியது.மகன் நலமாக இருக்கிறான்."ரொம்ப நன்றிங்கய்யா. எந்த இடத்திலே இருக்கான்? நான் வந்து அழைத்து வரேன் "
"சரிங்கம்மா. கவலைப் படாதீங்க. பயல் ஜாலியா எங்களோட அரட்டை அடிச்சுகிட்டு இருக்காம்மா.கேக் பிஸ்கட் குடுத்து உக்கார வச்சிருக்கோம்.அடையாறு பஸ் டிப்போவுக்கு வாங்க"என்று கூறி முடித்தார் அந்த நடத்துனர்.அதே சமயம் என்கணவரும் உள்ளே வந்தார்.அவரிடம் செய்தியைச் சொன்னவுடன் அப்படியே அடையாறு நோக்கிப் புறப்பட்டார்.
                      சுமார் அரைமணி நேரம் கழித்து மகனுடன் அவர்  வந்ததைப் பார்த்தவுடன்தான் என் தவிப்பு அடங்கியது.அவன் "அம்மா, எங்கள் பள்ளி வேன் ரிப்பேர்.அதனால எங்களை பஸ்ல எத்திவிட்டுட்டாங்க.அந்த பஸ் நம்ம ஸ்டாப்புக்கு வரவேயில்லை.அதனால நான் இறங்கவேயில்லை.எல்லா பஸ்ஸும் நிக்கிற இடத்துக்குப் போயிட்டேன். அந்த அங்கிள் டீ கேக் வாங்கிக் குடுத்தாரு.அப்புறமாதான் அடுத்தவீட்டு போன் நம்பர் குடுத்து உங்களுக்கு போன் பண்ணச் சொன்னேன்.
  "போன் நம்பர் உனக்கு எப்படித் தெரியும்?"
 "நானே பார்த்து வச்சிகிட்டேன்."
நல்லவேளையாக தொலைபேசி எண் தெரிந்திருந்தது.இல்லையேல் போலீசில்தான் ஒப்படைத்திருப்பார்கள்.போன் எண்ணைப் போலவே வீட்டு விலாசத்தையும் கற்றுக் கொடுத்திருந்தால் இத்தனை கஷ்டம் இருந்திருக்காது.
இந்த அனுபவம் இல்லாமலேயே இந்தக் காலத்துப் பெண் எவ்வளவு கவனமாகக் கற்றுக் கொடுக்கிறாள். இதை நாம் பாராட்டவேண்டும்."என்றவுடன் அந்தப பெண்ணை இப்போது மரியாதையுடன் பார்த்தாள்  என் தோழி.
இந்த என் அனுபவத்தை அறிந்த பிறகேனும் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் முன் பெயர் விலாசம் தொலைபேசி எண் இவற்றைக் கற்றுக் கொடுங்கள்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, June 8, 2013

சித்திரமும் கைப்பழக்கம்.


ஒரு முறை என் தோழி ரஞ்சனி நாராயணன்  பேஷன் ஜுவெல்லரி பற்றி எழுதியிருந்தார். நானும் அந்த நகைகள் செய்யக் கற்றுக் கொண்டு செய்து வருகிறேன். சில மாதிரிகளை இங்கு காட்டியுள்ளேன்.
அவர் சொன்ன யோசனைப்படி லிஸ்ட் எழுதி எடுத்துச் சென்றதால் பொருள் வாங்கும் பொது மிகவும் சுலபமாக இருந்தது. கடைக்காரர் சொல்லும்பொருளின்  பெயரைக் குறிப்பிட்டுக் கேட்க  முடிந்தது. நல்ல யோசனை கூறிய திருமதி ரஞ்சனிக்கு என் நன்றி.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, June 3, 2013

அலட்சியம் வேண்டாம்



யார் சொல்லையும் அலட்சியப் படுத்துவது நமக்கே துன்பத்தைத்தரும். ஆகையால் எந்த ஒரு சொல்லையும் செயலையும் அலட்சியப் படுத்தக் கூடாது. ஒருமுறை உறவினர்களுடன ஹம்பிஎன்றஇடத்தைச்சுற்றிப்பார்க்கசென்றிருந்தோம்.ஒருவாரமாகவே நவப்ருந்தாவனம் மந்த்ராலயம் போன்ற பல இடங்களைத் தரிசித்துவிட்டு ஹம்பி வந்து சேர்ந்தோம்.காலை பத்துமணிக்கு கோயில்,மண்டபங்கள், அரண்மனை முதலியன பார்த்துக் கொண்டே வந்தோம்.
விஜயநகரப்பேரரசின் தலைநகராக சிறப்பொடு விளங்கிய அந்த நகரின் 
 வரலாற்றுப் பெருமை அறிந்திருந்த நாங்கள் அதன் இன்றைய சிதிலமடைந்த நிலையைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தோம்.மனம் முழுதும் அந்த அழகிய தலைநகரின் அவலநிலையைப பார்த்த துயரம் நிறைந்திருந்தது. என் கணவர் மட்டும் சுற்றுப் புறத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார். அவர் எப்போதும் முன்னெச்சரிக்கையோடு இருப்பவர்.
அவர் எங்கள் கூட்டத்தைப் பார்த்து "எல்லோரும் கைப்பையை மறைத்து  வைத்துக் கொள்ளுங்கள் இங்கு குரங்குகள் அதிகமாக உள்ளன. பையைப் பறித்து விடும்."என்றார்.
நாங்கள் அனைவரும் எங்கள் கைப்பைகளை முடிந்தவரை மறைத்துக் கொண்டும் கவனமாகப் பிடித்துக் கொண்டும் வந்தோம்.எங்கள் குழுவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் மட்டும் சற்று அலட்சியமாக கையிலேயே வைத்துக் கொண்டபடி "குரங்குதானே,கையிலிருந்தெல்லாம்  பையைப் பிடுங்காது".என்று சொல்லி அலட்சியமாக நடந்தார்.
சற்று நேரத்தில் நாங்கள் அங்கிருந்த  யந்த்ரோதாரக ஆஞ்சநேயரின்கோவிலுக்குச்சென்றோம்.படிகளில் ஏறும்போது "என் பை பை...சூ.. சூ..பிடி பிடி" என்று ஒரே கூக்குரலும் கூச்சலும் கேட்டது.என் கணவர் சொன்னது போலவே அந்த ஆசிரியரின் கையிலிருந்த பையைப்  பறித்துக் கொண்டு ஓடியது ஒரு குரங்கு.
கூட்டம் கூடியது. ஆளுக்கு ஒரு பக்கமாக குரங்கைத் துரத்த பலரும் அந்தப் பையைக் காப்பாற்றப் போராடினர். பழம் கொடுத்தாலும் பயமுறுத்தினாலும் எதற்கும் அசையவில்லை அந்தக் குரங்கு. அந்தப் பையின் ஜிப்பைத் திறப்பதிலேயே கவனமாக இருந்தது அது.  யாரும் நெருங்க முடியாத உயரமான பாறைமேல் அமர்ந்துகொண்டிருந்தது.அந்த குரங்கைச் சுற்றிலும் அருவி நீர் கொட்டிக் கொண்டிருந்தது. பாறைக்குப்பாறை  தாவிச் சென்று கொண்டிருந்த குரங்கைத் தொடர்ந்து பலரும் ஓடிக்கொண்டிருந்தனர்.
பாவம், அந்த ஆசிரியரின் முகத்தில் இப்போது கவலை தாண்டவமாடியது.குரங்கு ஜிப்பைத் திறக்காமல் இருக்கவேண்டுமே என்று தவிப்பது தெரிந்தது.
ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை.குரங்கு தன பல்லால் கடித்து பையைத் திறந்தது.
உள்ளே இருந்த புத்தம்புது பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து காற்றில் பறக்கவிட்டது. காற்றின் வேகத்தால் ரூபாய் நோட்டுக்கள் காற்றில் பறந்து நீரில் விழுந்து மிதந்தன. அதைப்பார்க்க நதியில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல காட்சியளித்தது.சில பாறைகளிலும் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தன.
கண்களில் நீர்மல்க அந்த ஆசிரியர் ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டார்."ஆஞ்சநேயா, வரும் ஸ்ரீராமநவமியன்று தயிர்சாதம் தானம் செய்கிறேன்.பானகமும் நீர்மோரும் விநியோகம் செய்கிறேன்."
உன்னைக்குறைவாக மதிப்பிட்டது தவறு என்று உணர்ந்துவிட்டேன்" என்று வேண்டினார்.
திடீரென்று கூட்டம் ஆஹாஹா என்று ஆரவாரமிட்டது.
காரணம் அந்தக் குரங்குதாவிச்சென்று  ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு கைநிறைய நூறுரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை வைத்துக் கொண்டு அதை முகர்ந்து பார்த்துவிட்டு வீசியது.பார்த்துக் கொண்டிருந்த கொண்டிருந்த எங்களுக்கே உடல் வியர்த்தது என்றால் அந்த ஆசிரியருக்கு எப்படி இருந்திருக்கும். 
பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த நூறு ரூபாய்க் கட்டு பாறை மீதிருந்து சரிந்து சரிந்து ஓரிடத்தில் வந்து ஒரு நோட்டு ஈரமான பாறையில் ஒட்டிக் கொள்ள அதனோடு இணைக்கப் பட்டிருந்த மற்ற நோட்டுக்கள் தொங்கிக்கொண்டு நின்றன.
நீரில் விழாமல் தொங்கும் அந்த ரூபாயை எப்படி எடுப்பது?பலரும் ஏற முயற்சித்தனர்.முடியவில்லை அனைவருக்குமே அப்போது இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
திடீரென்று ஒரு சிறுவன் ஒரு பதினாறு வயதிருக்கும்.தலையில் முண்டாசு. கையில் ஒரு கொம்பு.கருமையான நிறமும் களையான முகமுமாய்த் தோன்றினான். விறு விறுவென்று குரங்கு ஏறுவதைப் போலவே மலையின்மீது ஏறினான்.அந்தப்பாறையில் இருந்த ரூபாய்க் கட்டையும் ஆங்காங்கே விழுந்திருந்த நோட்டுக்களையும் பொறுக்கிக் கொண்டு வந்து கண்களில் நீருடன் நின்றிருந்த ஆசிரியரிடம் கொடுத்தான்.
நன்றி சொன்னவர் அவனுக்கு நூருரூபாய்த் தாளை எடுத்துக் கொடுத்தார். பெற்றுக் கொண்ட சிறுவன் அடுத்த நொடியில் காணவில்லை.ரூபாயை எண்ணிப் பார்த்தவர் "நல்லவேளை எட்டாயிரத்தில் எழுநூறு ரூபாய்தான் நீரில் போயிருக்கிறது மீதி அப்படியே கிடைத்துவிட்டது"என்றபடியே கண்களைத் துடைத்துக் கொண்டார்.
ஒரு சிறு அலட்சியம் எவ்வளவு போராட்டமாகிவிட்டது! யார் சொன்ன சொல்லையும் அலட்சியப் படுத்தக் கூடாது என்ற இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு பாடமாகத்தான் இருக்கும் அல்லவா?

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com

Friday, May 10, 2013

சிறு துரும்பு.



--
இளம் வயதிலேயே கதை எழுதி அதை என் அப்பா அம்மாவிடம் படித்துக் காட்டுவேன் .. அதன் பின்தான் பத்திரிகைக்கோ வானொலிக்கோ  அனுப்புவது வழக்கம். அன்றும் அப்படித்தான் ஒரு  சிறுகதை எழுதி அதை படித்துக் காட்டிக் கொண்டிருந்தேன்.
கதையின் நடுவே ஒரு வரி வந்தது."அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் டக் டக்கென நடந்து உள்ளே வந்து கொண்டிருந்தார்." இந்த வரிகளை நான் படிக்கும்போது உண்மையாகவே போலீஸ்காரர் உள்ளே வந்தார்.
என் தந்தையார் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க, இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"உங்கள் வீட்டில் இரண்டு மாதங்களுக்கு முன் ஏதேனும் பொருள் திருட்டுப் போனதா?" என்று.
நானும் என் தாயாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.எங்கள் வீட்டில் நடந்த அந்த நிகழ்ச்சியை நாங்கள் தந்தையாரிடம் சொல்லவில்லை.அதனால் அவர் "எங்கள் வீட்டில் திருடு ஒன்றும் நடக்கவில்லை."என்று சொன்னபோது நான் குறுக்கிட்டு "இல்லை சார், இரண்டு புதுப் புடவைகள் திருட்டுப்போய் விட்டன."என்றேன்.
"அதானே பார்த்தேன் திருடியவனே உங்கள் வீட்டில் திருடியதாகச் சொன்னானே "
"ஆமாம் ஐயா, ஏதோ ஏழை.அவன் பெண்டாட்டி கட்டிக்கொள்ளட்டும்னுதான் நாங்களும் சும்மா இருந்துட்டோம் "
"அப்படியெல்லாம் திருட இடம் கொடுக்கக் கூடாது.நாளைக்கு ஆதாரத்தோட ஸ்டேஷனுக்கு வந்து புடவையை வாங்கிக் கொள்ளுங்க." என்றார்.
நாங்களும் சரியெனத் தலையை ஆட்ட அவரும் சென்றுவிட்டார்.
என் தந்தையார், "என்ன ஆதாரம் இருக்கிறது?புடவை வாங்கிய ரசீது  இன்னுமா இருக்கும்?
என்ன தலைவலி இது. புடவையை வாங்காவிட்டாலும் தவறாச்சே இப்போ ஆதாரத்துக்கு எங்கே போவது?"என்று சிந்தனை வயப்பட்டார்.
அப்போதுதான் நான் எழுதியிருக்கும் தினசரிக் குறிப்பு நினைவுக்கு வநதது.சிறிய பழைய நோட்டுப் புத்தகத்தில் ஒவ்வொருநாளும் தேதி போட்டு நிகழ்வுகளை எழுதியிருந்தேன்.இரண்டு மாதங்களுக்குமுன் தேதியைப் புரட்டிப் பார்த்தபோதுதான் அந்தப் புடவை வெளியில் காயப் போட்டிருந்தது காணாமல் போனதை எழுதியிருந்தேன்.மறுநாள் என் தந்தையார் அந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு  சென்று புடவைகளை வாங்கிவந்தார். அத்துடன் இன்ஸ்பெக்டர் டயரி எழுதிய என்னைப் பாராட்டியதாகவும் சொன்னார்.
சாதாரண டைரிக்குறிப்பு ஒற்று சாட்சியாக நின்ற வேடிக்கையை எண்ணிச் சிரித்தேன் நான். என் அம்மாவோ இதுதான் சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது.என்றார். 
உண்மைதானே!






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, April 4, 2013

இப்படியும் சிலர்.


                            எங்கள் இல்லத்திற்கு தூரத்து உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு பெண்மணி வந்திருந்தார். அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். நல்ல சிவந்த நிறத்துடன் ஒல்லியான தேகத்துடன் இருந்தார்.தன மகனும் மருமகளும் மிகவும்பாராமுகமாக இருப்பதாகவும் உறவுக்காரர்கள் யாருக்கேனும் உதவி செய்து கொண்டு இருந்து விடுவதாகவும் சொல்லவே என் மகளும் சம்பந்தியும் அவளைத் தங்கள் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டனர். சுமார் ஒரு வாரம் வரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்  அந்த அம்மாள்.

                        அடுத்தவாரம் ஒரு நாள் என்மகள் உடல் நலமில்லைஎன்று டாக்டரைப் பார்க்கப் போய்விட்டாள்  நானும் ஊரில் இல்லை. வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு அலமாரியிலிருந்த நகைப் பையிலிருந்து சிறு சிறு தோடு மூக்குத்தி தங்கக் காசுகள் என சட்டெனத் தெரியாதசிறுசிறு  பொருளாக சுமார் நான்கு சவரனுக்கு மேல் எடுத்து தன மடியில் முடிந்து கொண்டு விட்டாள்  என்மகள் வீடு வந்தவுடன் தன மகனிடமிருந்து விபத்து ஏற்பட்டு விட்டதாகப் போன்  வந்துள்ளது ஒரு வாரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்  விட்டாள் 

                       இரண்டு மூன்று நாட்கள் கழித்து என் மகள் தங்கள் ஒரு சவரன் காசைக் கடையில் கொடுத்து நகையாகச் செய்யவேண்டும் எனத் தேடும்போது தான் பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரிந்தது.எங்கேயோ வைத்து விட்டேன் என்று பல இடங்களிலும் தேடினாள் அதற்குள் ஒரு வாரம் ஓடிவிட்டது.அந்த அம்மாள் வேலைக்கு வருவதாகச் சொன்னாளே இன்னும் வரவில்லையே என்றவுடன் சந்தேகம் அவள்மேல்  தோன்றியது.

                     ஊரிலிருந்து திரும்பி வந்த நான் என் மகளின் வீட்டில் வைத்துவிட்டுச் சென்ற என் நகைகளைப் பார்த்தபோது என் திருமணத்தில் போட்ட மூக்குத்தி வரலக்ஷ்மி அம்மனுக்குப் போடும் நகைகள் காசுகள் என ஒன்றரைப் பவுனுக்குக் காணாமல் போயிருந்தன.
                     அவளைத் தேடிப்பிடித்து பயமுறுத்திக் கேட்டபோது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அழுதாள். அந்த நகைகளை மார்வாடி கடையில் விற்றதையும் கூறி அழைத்துச் சென்றாள் எனக்கோ நான் அம்மனுக்கு ஐம்பது வருடங்களாகப் போட்டு வந்த அந்த மூக்குத்திகள் கிடைக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு.ஆனால் மார்வாடியோ அம்மா நாங்கள் பழைய பொருட்களை ஒரு நாள் வைத்திருப்போம் மறுநாள் உருக்கிவிடுவோம். என்று உதிர்த்த கற்களைக் காட்டினார். எனக்கோ கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வடிந்தது.அந்தப் பெண் பத்தாயிரம் ரூபாயை எனக்கும் , என்மகளுக்கு ஒரு சவரன் சங்கிலியும் கொடுத்து சரி செய்துவிட்டாள் . ஆனால் இன்று ஒரு மூக்குத்தியின் விலை பத்தாயிரத்தைத் தொடுகிறது. பொக்கிஷமாக நான் ஐம்பது ஆண்டுகளாக பத்திரமாகப் பாது காத்துவந்த அம்மனின் மூக்குத்திகள் என்னை விட்டுப் போகக் காரணமான அந்தப் பெண்மணியின் செயலை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சிக்கிறேன்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


Thursday, March 28, 2013

மூத்தோர் மனம்

மூத்தோர் மனம் 

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அருகே இருந்த ஒரு மூதாட்டி கலங்கிய தன கண்களைத் துடைத்துக் கொண்டே வந்தார்.பார்க்கவே பரிதாபமாக இருந்தது.அருகே அமர்ந்திருந்த  அவர.கணவர் சற்றுக் கடுமையாகஅவரைக் கடிந்து கொண்டபடியே சமாதானம் செய்தபடி இருந்தார். நானும் மனம் பொறுக்காமல் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
காரணத்தை அவர் கூறியபோது அந்த அம்மாள் எவ்வளவு கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கிறார் எனப் புரிந்து கொண்டேன்.வேறொன்றுமில்லை.இவர்கள் இருவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு போய்வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் தன மகன் திரும்பிச் சென்று விட்டதைத் தங்களை அலட்சியப் படுத்திவிட்டதாக எண்ணி அழுகிறாள் அந்தத் தாய்.
அந்தத் தாயை ஒருவழியாக சமாதானம் செய்தேன்.வெகுநேரம் கழித்தே அந்த அம்மாள் சமாதானமானார்கள்.எனக்கும் இந்தத் தாயைப் பார்த்தபோது அந்த மகன் சற்று நேரம் நின்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருக்கும் இந்தத் தாயுள்ளம். இதை இந்தத் தலைமுறை ஏன் நினைத்துப் பார்க்க மறுக்கிறது என்று தெரியவில்லை.
நான் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் அவர்களிடம் குறிப்பாக அந்த அம்மாளிடம் சொல்லிக் கொண்டு இறங்கினேன்.இந்த நிகழ்ச்சி என் மனதில் பதிந்திருந்ததால் நான் அதன்பின் எங்கு சென்றாலும் வீட்டில் சொல்லிக் கொண்டு போகும் பழக்கத்தை அனைவருக்கும் சொல்லிவைத்தேன்.
அன்று பள்ளிக்குச் சென்றபோது ஒரு ஆசிரியரின் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.அனைவரும் அவர்களின் இல்லம் சென்றோம். அந்த ஆசிரியர் தன தாய்க்கு ஒரே பிள்ளை.தினமும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே செல்லும் அவர் அன்று தாயிடம் சொல்லிக் கொள்ளாமல் பள்ளிக்கு வந்துள்ளார்.அவர் வந்து ஒருமணி நேரத்தில் தாயார் திடீர் மரணமடைந்துள்ளார்.
தாயாரின் பிரிவுக்காக அழுததைவிட கடைசிநாள் தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேனே. அந்தத் தாயின் மனத்தைக் கடைசி நாளில் ஏங்க வைத்துவிட்டேனே என்று அவர் கதறியது மனதை உருக்குவதாக இருந்தது.
இன்றைய இளைய தலைமுறைக்கு இளமையில் உறவுகளின் அருமை பாசம் புரிவதில்லை. அந்த பாசத்தை உணரும்போது உறவுகள் இருப்பதில்லை.
இதை இளைய தலைமுறை உணர்ந்து கொண்டால் இடைவெளிக்கு எது இடம்?

















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasaye
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, March 21, 2013

பேத்தியின் திருமண விமரிசனம்.

 என் பேத்தியின் திருமணம் பற்றிய விமரிசனம்.
கடந்த பிப்ரவரி மாதம் 9--ஆம் தேதி அமெரிக்க மாப்பிள்ளையும் அவரது பெற்றோர் நண்பர்கள் என எட்டுபேர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்களை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு இல்லம் திரும்பினோம். 12---ஆம் தேதி காலை எட்டு மணிக்கு அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்றனர் பெண்வீட்டார்.அவர்களை கவனித்துக் கொள்ள பெண்ணின் சித்தப்பா கூடவே இருந்தார்.அவரும் சிகாகோவில் வசிப்பவர். அமெரிக்க பழக்கங்கள் அறிந்தவர்.
                              எட்டு மணிக்கு எங்கள் குல முறைப்படி (மாத்வா )  ஆச்சாரியார் மந்திரங்கள் ஓதி நாந்தி தேவுரு சமாராதனை பாதபூஜை என்று அனைத்தையும் மிகவும் அக்கறையோடு மாப்பிள்ளை வீட்டார் கவனித்தனர்.பனிரெண்டு மணிக்கு சுமங்கலி பிரார்த்தனையின்போது மாப்பிள்ளையின் தாயார் திருமதி மார்த்தா ரே உடன் இருந்து எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
                              மாலையில் மூன்று மணிக்கு முன்பாகவே ஜானவாசம் தொடங்கியது. பெண்பார்க்கும் வைபவத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கப் பார்த்தனர்.அவர்கள் அனைவரும் நமது நாட்டுப் பட்டுப் புடவை உடுத்தி தலையில் மல்லிகை சூடியிருந்தது மிகவும் அழகாக உள்ளது என்று அனைவரும் பாராட்டியபோது மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு புன்னகைத்தனர்.
                              திருமதி மார்த்தாவும் திரு ரே அவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கீழே அமர்ந்து மிகவும் அக்கறையுடன் ஆச்சாரியார் சொன்னபடி செய்து கொண்டு வந்தனர்.பெண்ணுக்குப் பொட்டு வைத்து பூமுடித்து புடவை கொடுத்து பின் அவர்கள் வாங்கி வந்த நகையை அணிவித்தனர்.
அதேபோல் மாப்பிள்ளையை அமரவைத்து அவருக்கும் பாண்ட்டு ஷர்ட் கொடுத்து செயின் மோதிரம் போட்டபின் விளையாடல் சாமான்கள் ஒவ்வொன்றாகக் கொடுக்க அவர்கள் வாங்கி வைத்தனர்.அதன்பின் அனைவரும் டிபன் சாப்பிட்டபின் அலங்காரம் செய்துகொண்டு வரவேற்புக்குத் தயாரானார்கள்.
                             திருமண வரவேற்புக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்திருநதனர்.இரவு விருந்து  கேண்டில் லைட் டின்னர் என்று சொன்னார்கள்.வட்ட மேஜையில் நடுவே அலங்கார மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பமாக அமர்ந்து விருந்து உண்டார்கள். பார்க்க அழகாக இருந்தது.அனைவரும் விரைவாகவே தூங்கப் போய்விட்டார்கள். அதற்குமேல் ஐந்து சுமங்கலிகள் அமர்ந்து கருகமணியும் தாலிப் பொட்டும் கோர்த்து மங்கல நாண்  கொர்த்துவைத்தனர்.
                              மறுநாள் காலை நான்கு மணிக்கே பெண்ணை அமரவைத்து மங்கள ஸ்நானம் செய்வித்து கௌரி பூஜையில் அமரவைத்த்னர்  
சரியாக ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.மாப்பிள்ளைக்கு காசியாத்திரை அலங்காரம் செய்தனர்.காசியாத்திரை செல்லவேண்டும் எனக் கூறியபோது நான் திருமணத்திற்கல்லவா வந்துள்ளேன் என்னை ஏன் காசியாத்திரை அனுப்புகிறீர்கள் எனக் கேட்டபோது அனைவரும் சிரித்தபின் ஆச்சாரியார் விளக்கினார்.
                               பெண்ணின் தாயார் மாப்பிள்ளைக்கு குங்குமம் வைத்து கண்மை இட்டு அலங்கரித்தபின் கையில் விசிறியும் தோளில் பையுமாக 
காசியாத்திரை சென்று வந்தார்.ஆரத்தி எடுத்தபின் நேராக மாப்பிள்ளை மணமேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.அந்தரபட்டா  என்று சொல்லப்பட்ட திரை விரிக்கப்பட்டது. கௌரி பூஜையில் இருந்த மணப்பெண்ணை மாலையிட்டு கைபிடித்து அவளின் தாய்மாமன் மணமேடைக்கு அழைத்து வந்தார். மங்களாஷ்டகம் சொல்லி முடித்தபின் சீரகமும் வெல்லமும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.பின்னர் கன்னிகாதானம், அரிசி போடுதல், மாலை மாற்றுதல் எல்லாம் முடிந்தது. முஹூர்த்தப் புடவை மேல் தேங்காய் மஞ்சள் குங்குமம் அதன்மீது திருமாங்கல்யம் வைத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தனர்.பின்னர் ஆச்சாரியார் மாங்கல்யம்......தந்துனானேனா   என்று மந்திரம் ஒத மாப்பிள்ளை ஜேசன் மணமகள் சினேகாவின் கழுத்தில் மங்கல நாண்  பூட்டினான். அனைவரும் மலரும் அட்சதையும் தூவி ஆசி வழங்கினர்.
இவ்வாறாக சினேகா ஜேசன் திருமணம் இனிதே நடந்தது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் இந்தியாவுக்கு வந்து இந்திய முறைப்படி தன மகனுக்கு திருமணம் செய்து கொண்ட ரே, மார்த்தா தம்பதிகளை அனைவரும் பாராட்டினர்.அவர்களும் நம் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதோடு அதை அந்த இரண்டு நாட்களும் கடைப் பிடித்த அந்த நாகரீகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பின் வரும் புகைப் படங்கள் மூலம் திருமணம் எப்படி நடந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
என் பேத்திக்கு அனைவரும்  நல்லாசி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Photo
Like ·  · Share · Tuesday at 6:00pm · 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

மகளிர் தினம்.

மகளிர் தினம்.

கடந்த 16-ம் தேதி அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் மகளிர் தின விழா சந்திரசேகர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அவ்வமயம சிறப்பான மகளிரைப்  (நீலாம்பிகை, ருக்மணி அருண்டேல், தில்லையாடி வள்ளியம்மை, வை.மு.கோதைநாயகி முதலியோர்) பற்றி திருமதிகள் சாரதா நம்பியாரூரான், பர்வீன் சுல்தானா ஹேமா சந்தானராமன் உள்ளிட்ட  ஆறு மகளிர் பேசினார்கள்.இந்த மேடையில்  அடியேனும்  75 அகவை கண்ட மூத்த எழுத்தாளர் என்று .மதுரை நகர நீதிபதியாக விளங்கும் திருமதி வாசுகி அம்மையாரின் பொற்கரங்களால் பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவப் படுத்தப் பட்டேன். எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு விக்ரமன் அய்யா அவர்களுக்கும், செயலாளர் அன்புச் சகோதரி திருமதி வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, February 19, 2013

அப்பா சொன்ன கதை.

என் இள  வயதில் மிகவும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தேன். ஒருநாள் தேர்வு சமயத்தில் படிக்காமல் பண்டிகைநாள் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன்.ஆசிரியரான என் அப்பா அப்போது உள்ளே வந்தார். ஒரு வினாவைக்  கேட்டு அந்தப் பாடம் படித்தாயா?என்றார். நான் இன்னும் -படிக்கவில்லை என்றபோது, "இன்னும் சற்று நேரத்தில் தேர்வு எழுதவேண்டும் என்ற பயமோ பதட்டமோ இன்றி கோலம் போடுகிறாயே எப்படி மதிப்பெண் வரும்" என்று நிதானமாகத்தான் கேட்டார். ஆனாலும் எனக்குக் கண்ணில் நீர் வந்து விட்டது.அதைக் கவனித்த என் தந்தையார் "போ ஒருமுறை படித்ததையாவது திருப்பிப் பார்" என்றார். கோலத்தை அவசரமாக முடித்துவிட்டு உள்ளே சென்றேன்.
      அன்று இரவு சாப்பிடும்போது, என்னை அன்போடு பார்த்த அப்பா, "நீங்கள் படிக்க நான் வசதி செய்து தருகிறேன் அதனால் உங்களுக்கு படிப்பின் அருமை தெரியவில்லை.ஆனால் நான் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு சாதாரண வேலையில் இருந்து கொண்டே மேல் படிப்புப் படித்தேன்.பணம் கட்ட நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா?" என்று சொன்ன போது நான் கையில் எடுத்த சோற்றுக் கவளத்தை வாயில் போடாமல் பொம்மை போல் அமர்ந்து கேட்டேன்.
       "என் நாற்பதாவது வயதில் தான் நான் பி.ஏ. பரீட்சைக்குப்  படித்தேன்.தேர்வுக்குக் கட்ட பணம் இல்லாமல் அலைந்து திரிந்து அந்தப் பணத்தைச் சேர்த்தேன்.அப்படியும் போகவர பேருந்து கட்டணமும் தேர்வுக்கான கட்டணமும்தான் சேர்க்க முடிந்தது.
தேர்வுக்குப் பணம் கட்டக் கடைசி நாளானதால் விடுப்பு எடுத்துக் கொண்டு மதுரைக்குச் சென்று பணம் கட்டிவிடலாம் என்று மன தைரியத்தோடு சென்றேன்.எங்கள் பள்ளி தனியார் பள்ளியானதால் சரியான காரணத்தைச் சொல்லியும் அரைநாள் விடுப்புதான் கொடுத்தனர்.இப்போதே ஒருமணியாகி விட்டதே என்று வேகவேகமாக பேருந்தைப் பிடித்து மதுரைக்குப் பயணமானேன்.பாதிவழி போனதும் என் கடிகாரத்தைப் பார்த்தேன்.பணம் கட்ட என்னும் ஒருமணி நேரமே இருந்தது.அந்தக காலத்தில் பரீட்சைக்குப் பணம் கட்டுவது என்பதே  சிரமமான காரியமாக இருக்கும். மனம் பதை பதைப்புடன் அமர்ந்திருந்தேன்.
        திடீரென்று ஒரு பெரும் ஓசை கேட்டது.எல்லா பயணிகளும் என்ன என்ன என்று கீழே இறங்கினர்.நானோ பெரும் அவசரத்தில் இருந்தேன் இன்னும் பத்து நிமிடங்களில் சென்று சேர்ந்து விடலாம் பணமும் கட்டி விடலாம் என எண்ணியிருக்கும் இந்த சமயம் வண்டி நின்று விட்டதே என கண்களில் நீர் நிறைய ஏறக்குறைய அழுது விட்டேன்.நடத்துனரோ இனி இன்னொரு வண்டி வந்தால் அதில் ஏற்றிவிடுகிறேன் நில்லுங்கள் எனக் கூறியதும் என் ஆசை அடியோடு நொறுங்கி விட்டது.அந்தக் காலத்தில் அபராதத்துடன் பணம் கட்டும் பழக்கம் எல்லாம் கிடையாது.
       மதுரை சென்றடைய இன்னும் இரண்டு மைல் இருந்தது ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்கள்.என்னால் நிற்கவோ காத்திருக்கவோ இயலவில்லை.எனவே ஓடத் தொடங்கினேன்.வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஓடுவதை பலரும் பார்த்தாலும் நான் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.ஒருவழியாக ஐந்து மணிக்குள் கலெக்டர் ஆபீஸ் முன் சென்று பெருமூச்சுடன் நின்றேன்.பணம் கட்டும் இடம் சென்று நின்று பூர்த்தி செய்த விண்ணப்பத் தாளைக் கொடுத்துவிட்டு பணத்தை எண்ணினேன். "ஐயோ, ஒரு ரூபாய் குறைகிறதே. பேருந்துக்கான பணத்தைச் சேர்த்தாலும் போதவில்லையே."என்று தவித்தேன்.நேரம் ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.கட்டணம் வசூலிப்பவரோ "என்ன சார், நேரமாச்சு.அஞ்சு மணிக்குள்ளே குளோஸ் பண்ணணும். சீக்கிரம்."என்றார்.முகம் சிவக்க, உடல் வியர்வையில் நனைய, கண்கள் குளமாக ஏறக்குறைய பித்துப் பிடித்தவன் போல் நின்ற என் பரிதாப நிலையை நினைத்து நானே வெட்கப் பட்டேன்."சார் பணம் ஒரு அரை  ரூபாய் குறைகிறது.என்ன செய்யறதுன்னு தெரியல்லே.
ரெண்டு மைல் ஓடிவந்தப்போ கீழே விழுந்துடுச்சுன்னு நினைக்கிறேன்."என்றேன் கண்களின் நீரைத் துடைத்தபடியே. அப்போது ஒரு முதியவர் என் தோளைத் தட்டி ஒரு ரூபாயை நீட்டினார்.
ஐயா என்று பேச ஆரம்பித்த என்னை முதலில் பணம் கட்டு என்று ஜாடை செய்தார்.பணம் கட்டியவுடன் கவுண்டர் மூடப்பட்டது.
என் மன உளைச்சலும் மூடிக்கொண்டது.பணம் கொடுத்து உதவிய அந்த பெரிய மனிதருக்கு நன்றி சொல்லி மீதிப் பணத்தைக் கொடுக்க நினைத்துத் தேடினால் அவரைக் காணோம். உதவிசய்த கையோடு அவர் சொல்லாமலேயே சென்று விட்டார். நான் அவர் நின்ற இடத்தைத் தொட்டு வணங்கினேன்.அதன்பின் மேலே படித்துப் பட்டம் வாங்கி இன்று ஒரு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறேன்.என் வாழ்நாளில் இந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்.அதனால் படிப்பதை சாதாரணமாக எண்ணிவிடாதே.என்றார்.அந்த அப்பாவின் மீது எனக்கிருந்த அன்பு வளர்ந்ததோடு மரியாதையும் கூடிவிட்டது.இந்த விடாமுயற்சியை நானும் பின்பற்ற முடிவு செய்தேன்.அவரது அனுபவம் எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையும் என எண்ணுகிறேன்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக