வெள்ளி, 21 மார்ச், 2014

"களக்காட்டூர்"

ராதே கிருஷ்ணா 21-03-2014

"களக்காட்டூர்" 



From the album: Timeline Photos
By Sasi Dharan
வீட்டு விசேஷத்திற்காக கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்தேன், விழா முடிந்ததும், வீட்டில் வெறுமனே உட்கார்ந்து டி.வி. பார்க்க மனம் ஒப்பாமல், வண்டியை எடுத்துக்கொண்டு அண்ணனுடன் வெளியே புறப்பட்டேன், 25 கிலோமீட்டர் பயணித்து "களக்காட்டூர்" என்ற ஊரை வந்தடைந்ததும், வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு, அந்த ஊரில் இருந்த டீ கடையில் விசாரித்தேன், அண்ணே.. இங்க ஒரு ஈஸ்வரன் கோயில் இருக்காமே வழி? என்றதும்.. பைக்ல வந்தீங்களா? கார்ல வந்தீங்களா? என்று மறுமுனையில் இருந்து கேள்வி வந்தது, பைக் தாண்ணே என்றதும் " இப்படியே மேற்கால ஊருக்குள்ள போங்க தம்பி, ஊர தாண்டினதும் ஏரி ஒண்ணு வரும், அந்த ஏரிக்கரை மேலயே ஒரு ஒன்றரை கிலோமீட்டர் போனா, வழி எங்க முடியுதோ அங்க தான் இருக்கு நீங்க தேடி வந்த கோயில்".

வண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் பயணப்பட்டேன், ஊர் எல்லையை தாண்டியதும் அவர் சொன்ன அந்த ஏரி கண்ணில் தென்பட்டது, அங்கு வந்த பெரியவர் ஒருவரிடம் மீண்டும் வழிகேட்டதில் கரையை கைகாட்டினார் "இதோ இது மேல தான் போகணும்". அப்போது தான் அந்த டீ கடைகாரர் "பைக்ல வந்தீங்களா? கார்ல வந்தீங்களா?" என்ற கேள்வியை ஏன் எழுப்பினார் என்பது புரிந்தது, அந்த பாதையில் ஒன்று நடந்து செல்ல முடியும் அல்லது இரு சக்கர வாகனம் இருந்தால் மட்டுமே செல்லமுடியும், கைகாட்டிய திசையில் பயணித்தேன், கரை மீது ஒரு ஒற்றையடிப் பாதை, பாதையை மறைத்தவாறு இருபக்கமும் கருவேல மரங்கள், வண்டி ஓட்டிக்கொண்டே செல்லும் போது சுரீல், சுரீல் என கருவேல மரத்தின் முட்கள் முகத்தை பதம் பார்த்தது, முள்ளுக்கு பயந்து கையை குறுக்கில் வைத்து தடுத்தவாறு வண்டியை கொஞ்சம் கவனக்குறைவாக ஓட்டினால் ஏரிக்குள் விழவேண்டியது தான், அனைத்தையும் கடந்து சென்றுகொண்டே இருக்கையில் ஒரு இடத்தில பாதை முடிவுற்றது, இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன், ஹா..நான் தேடி வந்த செல்வம் கைவிடப்பட்ட குழந்தையை போன்று தன்னந்தனியாய் ஒரு முட்புதருக்கருகில்!!.

இதோ வந்துவிட்டேன் என்று வண்டியை கரை மீது விட்டுவிட்டு கோயிலை நோக்கி ஓடினேன், 1100 வருடங்கள் கடந்த கோயில், விரிசல் விட்ட சுவர், விமானம் இடிந்து மொட்டையான கருவறை, கல்வெட்டுகளை மறைத்து சுவர் முழுக்க சுண்ணம். யாரும் வராத இடத்துக்கு இவன் யார் புதுசா ஒருத்தன் வந்திருக்கான் என்பதைப் போன்று அங்கு ஆடு மேக்கும் பெண்மணி வந்து எட்டிப் பார்த்தார், கோயில் பூட்டி இருக்கே தொறக்கமாட்டாங்களா? அய்யர் காலையில் மட்டும் தான் வருவாரு, வேணும்னா ஊருக்குள்ள போய் கூட்டி வாங்க என்றார். வார்த்தைகளை காதில் போட்டுகொண்டு கோயிலை சுற்றி சுற்றி வந்தேன். கோயில் சுவர்களை தடவிக்கொண்டே கல்வெட்டுகளில் அந்த பெயர் தென்படுகிறதா என்று தேடத் துவங்கினேன்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த கிராமத்தில் இருந்து ஒருவர் தஞ்சை செல்ல விழைகிறார், அவர் இந்த கிராமத்தின் அதிகாரி, பெயர் "காடன் மைந்தன்", அவர் செல்வதற்கு காரணம் இருந்தது தன்னுடைய ஊரில் இருக்கும் கோயிலில் தன் மன்னர் பெயரால் அவர் நலத்திற்காக விளக்கொன்று ஏற்ற அவருக்கு ஆசை, மன்னரை நேரில் சந்தித்து தன் விருப்பம் கூறி அதற்கு அனுமதி பெற விரும்பி காஞ்சிபுரம் அருகே இருக்கும் "களக்காட்டூர்" என்ற இந்த ஊரில் இருந்து தஞ்சை பயணப்பட்டார், யார் அந்த அரசன்? வேறு யார் நம் ராஜ ராஜன் தான்!. அரண்மனையில் அரசனை சந்தித்த அந்த அதிகாரி அரசே "தங்கள் நலம் வேண்டி என்னுடைய ஊரில் இருக்கும் கோயிலில் விளக்கேற்ற வேண்டும்" அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று காடன் மைந்தன் ராஜ ராஜனை பார்த்து கேட்க, அதற்கு ராஜ ராஜன் “ ஒரு அரசனான எனக்கு பொதுமக்களாகிய உங்கள் நலம் தான் முக்கியம். எனவே, என் ஒருவன் நலனிற்காக விளக்கேற்றுவதைக்காட்டிலும் ஊர் மக்களின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்த உலக மக்களின் நலனுக்ககாகவும் விளக்கு வைப்பதே சிறந்தது” என்று அவரை சமாதானப் படுத்தி ஊருக்கு அனுப்பி இருக்கிறார் !!.

அன்றைக்கு ஒரு சாதாரண கிராம அதிகாரியால் தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்து வந்த பேரரசனை நேரில் சந்தித்து பேசமுடிந்திருக்கின்றது!, அதுமட்டுமல்லாமல் " தன் நலனை இரண்டாம் பட்சமாக நினைத்து, உங்கள் நலனுக்காகவும், உங்கள் ஊர் மக்களின் நலனுக்காகவும், இந்த உலக மக்களின் நலனுக்ககாகவும் விளக்கு வைக்கவும்” என்று தன் நாட்டு மக்களின் நலத்தின் மீது எத்தனை அக்கறை கொண்டிருந்திருக்கிறான் ஒரு பேரரசன், என்ன ஒரு பண்பு!! தன் மக்கள் மீது என்ன ஒரு மதிப்பு! பாசம்!!

தஞ்சையில் இருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பிய அந்த அதிகாரி என்ன செய்தார் தெரியுமா? தன் மன்னன் ஆசையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாட்டு மக்களின் நலனுக்காக தினமும் இறைவன் முன் ஒரு விளக்கு ஏற்ற வாய்பாய் கொடை அளித்துள்ளார்!! அதுமட்டுமல்லாமல் தன் நாட்டு மக்களின் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் தன் மன்னன் எந்த குறையுமின்றி நலமுடன் இருக்க வேண்டும் என்று இன்னொரு விளக்கு ஏற்றவும் வழி செய்துள்ளார் அந்த அதிகாரி"!!மன்னன் மக்களை விட்டுக்கொடுக்கவில்லை, மக்கள் மன்னனை விட்டுக்கொடுக்கவில்லை!!.

சுண்ணாம்பு பூச்சுகளுக்கிடயே இருந்த அந்த கல்வெட்டை பார்த்ததும் மனம் கனத்தது, கூடுதலாக ராஜ ராஜனின் இயற் பெயரான "அருமொழி வர்மன்" என்ற பெயரை முதன் முதலாக கல்வெட்டில் கண்டேன், வண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த முள் வேலிகளுக்குள் புகுந்து அந்த ஒற்றை அடிப் பாதையில் பயணித்து ஊரை அடைந்து, விளக்கு வைக்க எண்ணெய்,திரி எல்லாம் வாங்கிகொண்டு, அய்யர் வீட்டையும் தேடி கண்டுபிடித்து அவரையும் உடன் அழைத்துக் கொண்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தேன், கோயில் திறக்கப்பட்டது, இறைவன் பரிதாபமாக இருந்தார், "வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வானம் மாறவில்லை, வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்"!! மிகவும் நல்ல அய்யர், வரலாற்று ஆர்வலர், தனக்கு முன்பிருந்தவர்கள் கல்வெட்டில் சுண்ணாம்பு பூசிவிட்டதை நினைத்து பெரிதும் வருத்தப்பட்டார், " 50 ரூபா மதிப்புள்ள விளக்கு, தட்டு கூட விட்டு வைக்க மாட்டேங்குறாங்க சார், அதனால தான் தினமும் பூஜை புடிஞ்சதும் இது எல்லாத்தையும் கையோட கொண்டு போய் கொண்டு வறேன்" என்றார், கோயிலின் நிலை குறித்து அவர் பேசும் போது அழக்கூடாது என்பதை மனதில் வைத்து பேசியதைப் போன்றே இருந்தது, நீண்ட நேரமாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன், ஒரு மணி நேரம் கடந்திருக்கும், நல்ல மனிதரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி ஏற்ப்பட்டது. உங்கள் பெயர் என்ன சார் என்று அவரிடம் கேட்டேன். "ராஜேந்திரன்" என்றார் அந்த ஒலி காதில் பாய்ந்ததும் உடல் சிலிர்த்தது!.

அங்கு விளையாடிக்கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் கோயிலுக்குள் ஓடிவந்தார்கள், அய்யருக்கு உதவினார்கள், இந்த கோயிலுக்கு தொடர்ந்து வர்றவங்க இவங்க மட்டும் தான் தம்பி", என்றார் இந்த முறை நான் அழக்கூடாது என்று பல்லைக் கடித்துக் கொண்டேன், கல்வெட்டில் "ஊருணி ஆழ்வார்" என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த இறைவனுக்கு வாங்கி வந்த எண்ணெய்யில் விளக்கு வைக்கும் படி கொடுதேன், மூன்று அகல் விளக்குகள் எடுத்தார் , மூன்றும் ஏற்றப்பட்டது, ஒண்ணு கொண்டு போய் வெளியே இருக்குற துர்கைக்கு வெச்சிட்டு வாங்க தம்பி என்று கொடுத்தார், வைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்தேன், தீபம் காட்டப்பட்டது, மனதில் எந்த கள்ளம் கபடமும் இல்லாத என்னை சுற்றி இருந்த அந்த நான்கு குழந்தைகளும் "ஓம் நம சிவாய" "ஓம் நம சிவாய" என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க அந்த சிறிய கோயிலில் ஒலி வெளியே செல்லமுடியாமல் அங்கேயே வட்டமிட்டு, மீண்டும் மீண்டும் காதுக்குள் வந்து ஒலித்துகொண்டே இருந்தது, மீதம் இருந்த இரண்டு விளக்குகள் கருவறைக்குள் கொண்டு சென்று இறைவன் முன் வைக்கப்பட்டது, குழந்தைகள் உச்சரித்துகொண்டே இருந்த ஓம் நம சிவாய அதிர்வலைகளுக்கு மத்தியில் இறைவனை வேண்டிக்கொண்டேன், இந்த கோயிலை மிதிக்க ஆசிர்வதித்த இறைவா உனக்கு என் நன்றி, இந்த கோயில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும், இங்கு மீண்டும் இரண்டு விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது ஒன்று " மக்கள் நலன் மீது இத்தனை அன்பு கொண்ட பேரரசன் ராஜ ராஜன் புகழ் சந்திர சூரியன் உள்ளவரை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்" என்பதற்காக இருக்கட்டும், மற்றொன்று அவன் ஆசைப்படி இந்த உலக மக்கள் நலனுக்காக இருக்கட்டும்!!. என்று வேண்டி முடித்தேன், அவ்வளவு நேரம் அடங்கி இருந்த கண்ணீர் அத்தனையும் மீறி ஏனோ வெளியே வந்துவிட்டது!.






























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக