புதன், 25 ஏப்ரல், 2012

ஸ்ரீமத் பகவத் கீதா தமிழில் ( அத். 16 to அத். 18 )


ராதே கிருஷ்ணா 25-04-2012

ஸ்ரீமத் பகவத் கீதா தமிழில் ( அத். 16 to அத். 18 )



பகவத்கீதை
Bhagavad Gita in Tamil
பகவத்கீதை - அத்தியாயம் விபரம்
arrow முதல் அத்தியாயம்arrow  இரண்டாம் அத்தியாயம்
arrow மூன்றாம் அத்தியாயம்arrow நான்காம் அத்தியாயம்
arrow ஐந்தாம் அத்தியாயம்arrow ஆறாம் அத்தியாயம்
arrow ஏழாம் அத்தியாயம்arrow எட்டாம் அத்தியாயம்
arrow ஒன்பதாம் அத்தியாயம்arrow பத்தாம் அத்தியாயம்
arrow பதினோன்றாம் அத்தியாயம்arrow பன்னிரண்டாம் அத்தியாயம்
arrow பதின்மூன்றாம் அத்தியாயம்arrow பதினான்காம் அத்தியாயம்
arrow பதினைந்தாம் அத்தியாயம்arrow பதினாறாம் அத்தியாயம்
arrow பதினேழாம் அத்தியாயம்arrow பதினெட்டாம் அத்தியாயம்
arrow ஸ்ரீ கீதா மஹாத்மியம்
  தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




முதல் அத்தியாயம்
temple
1. அர்ஜுன விஷாத யோகம்
குரு÷க்ஷத்திரப் போரில் தனக்கு எதிராளியாக தனது உறவினர்களே இருக்கின்றனர் என அர்ஜுனன் வருந்தினான். அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, ... மேலும்










இரண்டாம் அத்தியாயம்
temple
போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி ... மேலும்


1

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

மூன்றாம் அத்தியாயம்
temple
கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். ... மேலும்




நான்காம் அத்தியாயம்
temple
அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு ... மேலும்



ஐந்தாம் அத்தியாயம்
temple
கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கியிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை ...மேலும்











ஆறாம் அத்தியாயம்
temple
கர்ம யோக ஞான யோகங்களில் சித்திபெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தியடைந்தவன் வேறு ... மேலும்









ஏழாம் அத்தியாயம்
temple
பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் ... மேலும்




 எட்டாம் அத்தியாயம்
temple
முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் ... மேலும்









ஒன்பதாம் அத்தியாயம்
temple
இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு ... மேலும்










பத்தாம் அத்தியாயம்
temple
பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. ... மேலும்










 பதினோன்றாம் அத்தியாயம்
temple
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். ... மேலும்










பன்னிரண்டாம் அத்தியாயம்
temple
ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது ...மேலும்











பதின்மூன்றாம் அத்தியாயம்
temple
இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு ... மேலும்











பதினான்காம் அத்தியாயம்
temple
தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் ...மேலும்










பதினைந்தாம் அத்தியாயம்
 
temple
பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புரு÷ஷாத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து, ... மேலும்
 








 பதினாறாம் அத்தியாயம்
 
temple
முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் ... மேலும்
 







பதினேழாம் அத்தியாயம்
 
temple
அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் ... மேலும்
 









பதினெட்டாம் அத்தியாயம்
 
temple
சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது ... மேலும்
 









ஸ்ரீ கீதா மஹாத்மியம்
 
temple
ஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம:
தாரோ உவாச:
1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ
தரை சொன்னது:
பகவானே, ... மேலும்












பதினாறாம் அத்தியாயம்
 
temple
முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் ... மேலும்
 



பதினாறாம் அத்தியாயம்
பகவத்கீதை | தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
அக்டோபர் 17,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார். அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.
மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.
தெய்வீக இயல்பு 1-3 -அஸுர இயல்பு 4 -இரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6 -அஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18 -ஆஸுரனது வீழ்ச்சி 19-21 -அஸுர இயல்பினின்று விடுதலை 22 -சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24.
ஸ்ரீபகவாநுவாச
1. அபயம் ஸத்த்வஸம்ஸுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி:
தாநம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் 
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அபயம் ஸத்த்வஸம்ஸுத்தி-அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஜ்ஞாநயோக வ்யவஸ்திதி:-ஞான யோகத்தில் உறுதி, தாநம் தம ச-ஈகை, தன்னடக்கம், யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாய:-வேள்வி, கற்றல், தப ஆர்ஜவம்-தவம், நேர்மை.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.
அறியாமையினின்று அச்சம் வருகிறது. அஞ்சுபவன் ஒன்றுக்கும் உதவான். அஞ்சாமையோ மேன்மையனைத்தையும் கொடுக்கிறது. ஒவ்வொரு தெய்வமும் அபயகரம் உடைத்திருப்பது, அஞ்சாமையும் தெய்வத்தை அணுகுதலும் ஒன்றே என்று விளக்குதற்காம். உள்ளத்தூய்மை என்பது வஞ்சகமும் பொய்யுமின்றிப் பிறரோடு இணக்கம் கொள்ளுதலாம்.
நித்திய அநித்திய வஸ்துக்களைத் தெளிவுபட அறிதல் ஞானம். அப்படி அறிந்தான பிறகு அதற்கேற்ப ஒழுகுதல் யோகமாகிறது. இங்ஙனம் ஞானத்திலும் யோகத்திலும் யாண்டும் நிலைத்திருத்தல் வேண்டும். தனக்குப் பயன்படுகிற பொருள் பிறர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவைகளை அன்புடனும் பணிவுடனும் வழங்குதல் தானமாகிறது.
தமம் அல்லது பொறிகளை அடக்குதல் என்பது வெளியுலகில் உள்ள விஷயங்களின்மீது, அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திரியங்களை உலவவிடாது தடுத்தலாம். தான் செய்கின்ற கிருத்தியங்களின் மூலம் தன்னைக் கடவுளுக்கென்றே ஒப்படைத்தல் யாகம் என்று பெயர் பெறுகிறது. தேவாராதனைகளையெல்லாம் யாகமென்று சொல்லலாம்.
பாரமார்த்திக விஷயங்களைப் புகட்டுகிற சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பது சுவாத்யாயம் என்ற பெயர் பெறுகிறது.  உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற முயலுதல் தவம். சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் கோணலில்லாத் தன்மையே ஆர்ஜவம் அல்லது நேர்மை.
2. அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஸாந்திரபைஸுநம்
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் 
அஹிம்ஸா-கொல்லாமை, ஸத்யம்-வாய்மை, அக்ரோத:-சினவாமை, த்யாக:-துறவு, ஸாந்தி-ஆறுதல், அபைஸுநம்-வண்மை, பூதேஷு தயா-ஜீவதயை, அலோலுப் த்வம் - அவாவின்மை, மார்தவம் ஹ்ரீ:-மென்மை, நாணுடைமை, அசாபலம்-சலியாமை.
பொருள் : கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,
உயிர்களைத் தனக்கும் இறைவனுக்கும் புறம்பாக நினைக்கும் பொழுது அவைகளுக்குத் தீங்கு செய்து தனக்கு வேண்டியதைப் பெறலாம் என்ற எண்ணம் வருகிறது. அவைகளையெல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டவைகளாக அறியும்போது அஹிம்சை தானாக வந்தமைகிறது. கடவுள் ஒருவரே மெய்ப்பொருள் என்னும் தத்துவத்துக்கு ஒப்ப உணர்வதும் உரைப்பதும் சத்தியமாகும். மற்றவர்கள் தன்னை ஹிம்சை செய்கின்றபொழுது தான் அவர்களைத் தன்மயமாயுணர்ந்து அவர்களிடத்துக் கோபித்துக் கொள்ளாதிருப்பது குரோதமின்மையாகும். பொருள்களெல்லாம் பரமனுக்கு உரியவைகளென்று அறிந்து அவைகளிடத்து உரிமை பாராட்டாதிருப்பது தியாகம். மனதின்கண் அமைந்துள்ள நடு நிலை சாந்தி எனப்படுகிறது. உயிர்களிடத்து இரக்கம் அல்லது பூத தயை என்பது துன்புறுபவர்களைப் பார்த்து மனம் கசிதல். இந்திரியார்த்தங்களிடத்து இந்திரியங்கள் உலவும் பொழுதும் மனப்பற்று வாராதிருத்தல் அலோலுப்த்வம் அல்லது பிறர் பொருளை விரும்பாமை என்பதாகிறது. பிறரைத் தாழ்த்திப் பேசுதல் சிற்றியல்புடையாரது போக்கு. அது பைசுனம் எனப்படுகிறது. பிறரது சிறப்பைப்பற்றியே பேசும்பொழுது அது அபைசுனம் எனப்படுகிறது. புறங்கூறாமை அல்லது கோள் சொல்லாமை சீரியரது பாங்காகும். மார்தவம் அல்லது மிருதுத்தன்மை அல்லது இனிமை பண்பட்டவர்களிடத்தே காணப்படும். மற்றவர்கள் தங்களைப் புகழும்போது நல்லார்க்கு நாணம் வருகிறது. தகாத செயலில் ஈடுபடவும் அவர்கள் நாணுகின்றனர். மனம் சலனமடையும்போது அதன் புறத்தோற்றமாகிய உடலும் அனாவசியமாக அசைகிறது. உள்ளத்தையும் உடலையும் காரணம் ஏற்பட்டாலொழிய அசையாது வைத்திருப்பது அமைதி பெற்றவர்களுடைய செயலாகும்.
3. தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசமத்ரோஹோ நாதிமாநிதா
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத 
தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசம்-ஒளி, பொறை, உறுதி, சுத்தம், அத்ரோஹ:-துரோகமின்மை –
ந அதிமாநிதா-செருக்கு கொள்ளாமை, தைவீம் ஸம்பதம்-தெய்வ சம்பத்தை, அபிஜாதஸ்ய பவந்தி-எய்தியவனிடம் காணப்படுகின்றன, பாரத-பாரதா.
பொருள் : ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!
கயவர்களுக்கிடையில் பயப்படாதிருத்தல் தேஜஸ் அல்லது தைரியமாம். பிறர் செய்த தீங்குகளுக்காக அவர்களைத் தண்டிக்க வல்லவனாயிருந்தும் அவர்களை மன்னிப்பதுடன், அதை மறந்து விடுவது க்ஷமை என்ற பெயர் பெறுகிறது. மனதின்கண் அமைந்துள்ள திருதி அல்லது உறுதியானது உடலுக்கும் இந்திரியங்களுக்கும் உண்டாகின்ற சோர்வை நீக்குகிறது. விரைவில் சோர்வு உண்டாகாதும் அது தடுக்கவல்லது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் அழுக்குப்படியாதிருத்தல் சௌசம் அல்லது தூய்மையாம். உடலின் அழுக்கை நீக்குவது யாருக்கும் எளிது. மனத்தகத்துக் கீழான எண்ணம் வராது தடுப்பதால் அது தூயதாகிறது. எண்ணம் சுத்தமாயிருந்தால் சொல்லும் தானே சுத்தியடைகிறது. பிறர்க்குத் தீங்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதிருந்தால் அது அத்ரோகம் அல்லது வஞ்சகமின்மையாகிறது. பிறர் தன்னை மிக மதிக்க வேண்டும் என்று நினைப்பது செருக்கு. அச்சமின்மையிலிருந்து செருக்கின்மை ஈறாக இவையாவும் தெய்வ சம்பத்துக்களாகின்றன.
இனி, இதற்கு மாறாயுள்ள அசுர சம்பத்து விளக்கப்படுகிறது :
4. தம்போ தர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம் 
பார்த-பார்த்தா, தம்ப: தர்ப: அபிமாந ச-டம்பம், இறுமாப்பு, கர்வம், க்ரோத: பாருஷ்யம் ஏவ ச-சினம், கடுமை, அஜ்ஞாநம் ஏவ-அஞ்ஞானம், ஆஸுரீம் ஸம்பதம்-அசுர சம்பத்தை, அபிஜாதஸ்ய-எய்தியவனிடம் காணப் படுகின்றன.
பொருள் : டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!
ஒழுக்கத்தில் தன்னைச் சிறந்தவனாகக் காட்டிக்கொள்ளுதலும், ஆடை ஆபரணங்களைக்கொண்டு தன்னை மிகைபட அலங்கரித்தலும் பகட்டாகிறது. தனக்குக் கல்வியும், செல்வமும், குலமும் மிக வாய்த்திருப்பதாக எண்ணித் தற்பெருமை கொள்ளுதல் இறுமாப்பாம். அழகில்லாதவனை அழகன் என்றும், குருடனைக் கண்ணன் என்றும், கீழோனை மேலோன் என்றும் சொல்லிப் பரிகசிப்பது கடுமைக்குச் சான்றாகிறது. தர்மம் அதர்மம் ஆகியவைகளைப்பற்றித் தவறுதலாக நினைப்பது அக்ஞானமாம்.
பக்ஷணங்களின் மேல்கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும். அவைகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் வேறு வேறு விதமானவைகளாக இருக்கும். உள்ளிருக்கும் பொருள்களுக்கு ஏற்ப பக்ஷணங்கள் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். அதுபோல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே விதமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்.
இயல்பு வேறுபாட்டால் வரும் பயன் யாது? விடை வருகிறது :
5. தைவீ ஸம்பத்விமோக்ஷõய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ 
தைவீ ஸம்பத் விமோக்ஷõய-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், ஆஸுரீ நிபந்தாய மதா-அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை, பாண்டவ-பாண்டவா, தைவீம் ஸம்பதம் அபிஜாத: அஸி-தேவ சம்பத்தை எய்தி விட்டாய், மா ஸுச:-துயரப்படாதே.
பொருள் : தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.
முற்பிறப்பில் மனிதன் செய்த முயற்சி வீண்போவதில்லை. தேவ இயல்பு சம்சார பந்தத்திலிருந்து விடுபடுதற்கு ஏதுவாகிறது. அசுர இயல்பு பிறப்பு இறப்புக்குக் காரணமான பந்தத்தைப் பலப்படுத்துகிறது. தன்னிடத்துள்ள இயல்பு எத்தகையதோவென்று அர்ஜுனனுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஜீவனுடைய முக்கால நிலைமைகளை அறிகிற பகவானுக்கு அர்ஜுனனுடைய வரலாறு நன்கு தெரியும். அவனுக்கு ஆறுதல் சொல்லுவதோடுகூட தெய்வ சம்பத்தையுடைய அவன் முக்திக்கும் தகுந்தவனாகிறான் என்கிறார் பகவான். ஒரு ஜன்மத்தில் அடைந்த பயிற்சி அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக அவனிடத்து அமைகிறது என்பதும் விளங்குகிறது.
ஜீவர்களுடைய இயல்புகளை யெல்லாம் சுருக்கமாக எப்படி வகைப்படுத்தலாம்? விடை வருகிறது :
6. த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு 
பார்த-பார்த்தா, அஸ்மிந் லோகே-இவ்வுலகத்தில், பூதஸர்கௌ த்வௌ ஏவ-உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும், தைவ ஆஸுர ச-தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது, தைவ: விஸ்தரஸ: ப்ரோக்த-தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன், ஆஸுரம் மே ஸ்ருணு-அசுர இயல் பற்றி என்னிடம் கேள்.
பொருள் : இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.
ஸ்தாவர ஜங்கமங்களாகிய உயிர் வகைகள் அனைத்திடத்தும் ஏற்றத்தாழ்வுபட தெய்வ சம்பத்தோ அல்லது அசுர சம்பத்தோ உண்டு. ஒன்று இனியது; மற்றொன்று இன்னாதது. ஒன்று ஆத்ம வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது; மற்றொன்று பிற்போக்கை உண்டாக்குகிறது. மனிதர்களுக்கிடையில் உள்ள அசுர இயல்பு இனி விரிவாக விளக்கப்படுகிறது. கருத்தில் வைக்கத் தகுதியற்ற எதிர்மறையான எண்ணங்களும் போதனைகளும் கீதையில் காணப்படுவது அரிது. ஈண்டு அத்தகைய கருத்துக்கள் வருவது ஒரு காரத்தை முன்னிட்டேயாம். சாதகர்கள் அவைகளின் தோஷத்தை யறிந்து அவைகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அசுர இயல்பு விரித்து விளக்கப்படுகிறது.
7. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விதுராஸுரா:
ந ஸௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே 
ஆஸுரா: ஜநா-அசுரத் தன்மை கொண்டோர், ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது-தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார், தேஷு ஸௌசம் ந-அவர்களிடம் தூய்மையேனும் இல்லை, ஆசார: ச ந-ஒழுக்கமேனும் இல்லை, ஸத்யம் அபி ந வித்யதே-வாய்மையேனும் காணப்படுவதில்லை.
பொருள் : அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
நலம் தருவது எதுவோ அது செய்யத்தகுந்தது. அது தர்மம் எனப்படுகிறது. கேடு விளைவிப்பது எதுவோ அது செய்யத்தகாதது. அத்தகையது அதர்மம் எனப்படுகிறது. விலங்கு இனங்களும் ஓரளவு நலம் கேடுகளை அறிந்துகொள்கின்றன. அசுர இயல்புடையார்க்கு அவை விளங்குவதில்லை. அவர்கள் மனதில் எழும் எண்ணங்கள் தூயவைகளல்ல, உடலில் ஆகும் செயல் ஒழுக்கமில்லாதது; பின்பு அவர்கள் வாயில் பேசுவது உண்மையல்ல. ஆக, முக்கரணங்களும் அவர்களால் முறைதவறிக் கையாளப்படுகின்றன.
ஏன் அவர்கள் அப்படித் தாறுமாறாக நடந்துகொள்ளுகிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்களிடமிருந்து வரும் விடையாவது :
8. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஸ்வரம்
அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம் 
ஜகத் அஸத்யம் அப்ரதிஷ்டம்-இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும், அநீஸ்வரம்-கடவுளற்றதென்றும், அபரஸ்பரஸம்பூதம்-சொல்லுகிறார்கள், காமஹைதுகம்-காமத்தை ஏதுவாக உடையது, அந்யத் கிம் தே ஆஹூ:-இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்?
அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள். சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள். அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர். காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை.
சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம். பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை. பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும், தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான்.
இக்கொள்கை எத்தகைய வாழ்க்கையாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :
9. ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோऽல்பபுத்தய:
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோऽஹிதா: 
ஏதாம் த்ருஷ்டிம் அவஷ்டப்ய-இந்தக் காட்சியில் நிலைபெற்று, அல்பபுத்தய: நஷ்டாத்மாந: - அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள், அஹிதா:-தீமையையே நினைப்பவர்களாக, உக்ரகர்மாண:-கொடிய தொழில் செய்பவர்களாக, ஜகத: க்ஷயாய ப்ரபவந்தி-உலக நாசத்திற்கே முனைகிறார்கள்.
பொருள் : இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.
இந்திரியங்களின் வசப்பட்டு விரைந்து விஷயங்களில் மூழ்குமளவு ஒருவன் புல்லறிவாளன் ஆகிறான். தன்னையே அழித்துக் கொள்ளுதல் அதன் முதற்படி. அதர்மம் அபரிமிதமாய்க் கையாளப்படுகிறது. உலகுக்கும் அது கேடாய் முடிகிறது. பொய்யும் அதர்மமும் வாழ்க்கைத் திட்டமல்ல என்பதற்கு அவனுடைய கொடியே செயலே சான்றாகிறது.
அசுர இயல்புடையவரது தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது என்று வினவுமிடத்து அதன் விரிவான விளக்கம் வருகிறது :
10. காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா:
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தேऽஸுசிவ்ரதா: 
தம்பமாந மதாந்விதா:- டம்பமும் மதமும் பொருந்தியவராய், துஷ்பூரம்-நிரம்பவொண்ணாத,
காமம் ஆஸ்ரித்ய-காமத்தைச் சார்ந்து, மோஹாத் அஸத்க்ராஹாந் க்ருஹீத்வா-மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு, அஸுசிவ்ரதா: ப்ரவர்தந்தே-அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
பொருள் : நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
11. சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா:
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா: 
ப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம்-பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில், உபாஸ்ரிதா:-பொருந்தி, காமோபபோகபரமா: ச-விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ஏதாவத் இதி நிஸ்சிதா:-உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக.
பொருள் : பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், உண்மையே இவ்வளவுதான் என்ற நிச்சய முடையோராய்,
மரணத்தோடு அவர்களது ஆசை முடிவுபெறுவதாக மற்றவர்களுக்குத் தென்படுகிறது. ஆனால் திரும்பப் பிறக்கும்பொழுது அதே ஆசை தோற்றத்துக்கு வருகிறது. ஆகையால் அது பூர்த்தி பண்ண முடியாத ஆசையாகிறது. கொடிய துன்ப துயரங்களை மிகுதியாக அனுபவித்தாலும் லௌகிகர்களுக்கு நற்புத்தி உண்டாவதில்லை. ஒட்டகங்களுக்கு முட்செடிகளில் ஆசை அதிகம். அவைகளைத் தின்னத்தின்ன ஒட்டகங்களின் வாயிலிருந்து ரத்தம் அதிகமாகப் பெருகும். என்றாலும், அவைகள் முட்செடிகளைத் தின்பதை விடுவதில்லை.
அதைப்போல் அநேகரால் ஏமாற்றப்பட்டபோதும் ஆபத்துக்கள் அநேகம் வந்துற்றபோதும் லௌகிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். அடுத்த கணத்தில் எல்லாவற்றையும் மறந்து உலக விஷயங்களையே தேடி அலைகின்றார்கள். ஒருவனது மனைவி இறந்துவிடுகிறாள்; அல்லது தன்னை விட்டு ஓடிவிடுகின்றாள். ஆனாலும் திரும்பவும் விவாகம் செய்துகொள்ள முற்படுகிறான் ! அல்லது அவனது குழந்தை இறந்துவிடுகிறது; கதறி அழுகின்றான் ! பெரிதும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து வருந்துகிறான். என்றாலும் மறு கணத்தில் அந்தக் குழந்தையின் நினைவே இல்லாது அவன் வாழ்க்கை நடத்துகிறான்! குழந்தையைப் பறிகொடுத்த தாய் துக்கத்தால் சோகமாகிவிடுகின்றாள். ஆனால் சற்றுப் பிறகு அவள் தன் நகைகளைச் சரிப்படுத்துவதிலும், நல்ல புடவைகள் உடுத்துவதிலும், வாசனை சோப்பைத் தேடுவதிலும் ஈடுபடுகிறாள்! பெண் குழந்தைகளின் விவாகங்களால் பெற்றோர் தரித்திர தசையை அடைந்து விடுகிறார்கள்; பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன ! இவர்கள் வழக்கு வியாச்சியங்களில் சகல பொருள்களையும் இழந்துவிட்டு வருந்தினாலும் மேலும் வழக்கு சம்பந்தமாக நீதி ஸ்தலத்திற்குப் போவதை நிறுத்துகிறதில்லை. குழந்தைகளைக் காப்பாற்ற வழியில்லாமற் போனாலும் ஒவ்வொரு வருஷமும் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தவறுவதில்லை. என்ன ஆச்சரியம் !
12. ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந் 
ஆஸாபாஸஸதை-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால், பத்தா:-கட்டுண்டு, காம க்ரோதபராயணா:-காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க், காமபோகார்தம்-காம போகத்துக்காக, அந்யாயேந அர்த ஸஞ்சயாந்-அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க,
ஈஹந்தே-விரும்புகிறார்கள்.
பொருள் : நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.
செல்வத்தை நேர்மையான வழியில் சம்பாதித்து நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்களானால் அது திரவிய யக்ஞமாகின்றது. பேராசையில் கட்டுண்டு, பொய்யும் களவும் புரிந்து பொருளைப் பெருமிதமாகத் தேடி போகத்தில் மூழ்குவது அசுரச் செயலாகிறது. மனிதர்கள் இருவகுப்பினர்-மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர் (மனுஷ்யர்). அறிவு விளங்கப்பெற்றவர் (மன்-ஹுஷ்யர்). ஈசுவரனை அடையவேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையவர்கள் பின்னர் சொன்ன வகுப்பினர். காமமும் காசாசையும் பிடித்து அலைபவர்கள் மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்கள்.
13. இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம் 
மயா அத்ய இதம் லப்தம்-என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது, இமம் மநோரதம் ப்ராப்ஸ்யே-இன்ன மனோரதத்தை இனி எய்துவேன், மே இதம் தநம் அஸ்தி - என்னிடம் இந்த செல்வம் உள்ளது, புந: அபி இதம் பவிஷ்யதி-இனி இன்ன பொருளை பெறுவேன்.
பொருள் : இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”
14. அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி
ஈஸ்வரோऽஹமஹம் போகீ ஸித்தோऽஹம் பலவாந்ஸுகீ 
அஸௌ ஸத்ரு மயா ஹத:-இன்ன பகைவரைக் கொன்று விட்டேன், ச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே-இனி மற்றவர்களைக் கொல்வேன், அஹம் ஈஸ்வர: போகீ-நான் ஆள்வோன், நான் போகி, அஹம் ஸித்த:-நான் சித்தன், பலவாந்-பலவான், ஸுகீ-சுகத்தை அனுபவிப்பவன்.
பொருள் : இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”
15. ஆட்யோऽபிஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்ருஸோ மயா
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: 
ஆட்ய: அபிஜநவாந் அஸ்மி-நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன், மயா ஸத்ருஸ: அந்ய: க: அஸ்தி-எனக்கு நிகர் வேறு யாவருளர்? யக்ஷ்யே-வேள்வி செய்கிறேன், தாஸ்யாமி-கொடுப்பேன்; மோதிஷ்ய-களிப்பேன், இதி அஜ்ஞாநவிமோஹிதா:-என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்.
பொருள் : நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
16. அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேऽஸுசௌ 
அநேகசித்தவிப்ராந்தா-பல சித்தங்களால் மருண்டோர், மோஹ ஜால ஸமாவ்ருதா:-மோகவலையில் அகப்பட்டோர், காமபோகேஷு ப்ரஸக்தா:-காம போகங்களில் பற்றுண்டோர்,
அஸுசௌ நரகே பதந்தி-இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
பொருள் : பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
மன நிலைக்கு ஏற்றபடி வெளியுலகம் காட்சி கொடுக்கிறது. தெளிந்த மனமுடையவர்களுக்கு உலகம் சுவர்க்கமாகக் காட்சி கொடுக்கிறது. கெட்ட மனமுடையவர்களுக்கு அதே உலகம் கொடிய நரகமாகப் பிரதிபலிக்கிறது.
அசுரர்களும் யாகம் செய்வதுண்டு. அதன் விதம் வருகிறது :
17. ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா:
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம் 
ஆத்மஸம்பாவிதா:-இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், ஸ்தப்தா:-முரடர், தந மாந மத அந்விதா:-செல்வச் செருக்கும் மதமுமுடையோர், தே நாமயஜ்ஞை-அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி, தம்பேந அவிதி பூர்வகம் யஜந்தே-டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர்.
பொருள் : இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.
இக்காலத்தில் சிலர் கோயில்கள் கட்டுவிப்பதும், விழாக்கள் கொண்டாடுவதும், ஆராதனை அபிஷேகங்கள் செய்வதும் இத்தகைய சிற்றியல்புகளுடையவைகளாகின்றன. தங்களை விளம் பரப்படுத்திக்கொள்ளுதல் ஒன்றே இவர்களின் கருத்தாகும். கடவுளின் பெருமைக்கென்றே வினையாற்றுவது தெய்வ சம்பத்துடையவர்களது இயல்பு. தங்களது சொந்தப் பெருமைக் கென்றே வினையாற்றுவது மற்றவர்களுடைய இயல்பு.
18. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோऽப்யஸூயகா: 
அஹங்காரம் பலம் தர்பம்-அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:-விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய, அப்யஸூயகா:-பிறரை இகழ்கின்றவர்களாக, ஆத்மபரதேஹேஷு-மற்றவர் உடல்களிலும் உள்ள, மாம் ப்ரத்விஷந்த-என்னை வெறுக்கிறார்கள்.
பொருள் : அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.
தங்களிடத்து உண்மையாகவே அமைந்துள்ள சில மேன்மைகளை மிகைப்படுத்தியும், இல்லாத சில சிறப்புக்களை இருப்பதாகப் பாவித்தும் அகங்கரிக்கின்றனர் அசுர இயல்புடையவர்கள். அவித்தியா சொரூபமான இத்தகைய ஆணவத்தை அகற்றுவது எளிதன்று. பின்பு, தங்களிடத்து வாய்த்த பலத்தையெல்லாம் மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதிலேயே உபயோகிக்கின்றனர். இனி, இறுமாப்பு ஒருவனை நெறி பிறழ்ந்து போகும்படியே தூண்டுகிறது.
எல்லார் உள்ளத்திலும் ஈசுவரன் வீற்றிருக்கிறான் என்பதை மறந்து, அவனது மேலான ஆலயமாகிய உடலைக் கீழ்மைப் படுத்தி இறைவனையே அவர்கள் புறக்கணிக்கின்றனர். அதனால் அசுரர்களுக்கு உண்டாகும் வீழ்ச்சியாவது :
19. தாநஹம் த்விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாம்யஜஸ்ரமஸுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு 
த்விஷத: க்ருராந்-வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும், நராதமாந் தாந் அஸுபாந், -உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, அஹம் அஜஸ்ரம்-நான் எப்போதும், ஸம்ஸாரேஷு-சம்சாரத்தில், ஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி -அசுர பிறப்புகளில் எறிகிறேன்.
பொருள் : இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.
வினைக்கேற்ற பிறவியுண்டாகிறது. வினையின் வேகம் தொடர்ந்து போகுமளவு பிறவியும் வளர்கிறது. இக்காரணத்தை முன்னிட்டே பகவான் இங்ஙனம் பகர்கிறார்:
20. ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம் 
கௌந்தேய-குந்தியின் மகனே! மூடா: மாம் அப்ராப்ய ஏவ-இம்மூடர் என்னை யெய்தாமலே,
ஜந்மநி ஜந்மநி-பிறப்புத் தோறும், ஆஸுரீம் யோநிம் ஆபந்நா:-அசுரக் கருக்களில் தோன்றி, தத: அதமாம் கதிம் யாந்தி-மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள்.
பொருள் : பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!
கெட்ட இயல்பு ஒருவனை இன்னும் அதிகக் கேடுடையவனாக்குகிறது. ஆதலால் கீழ்மையிலேயே அவன் மேலும் மேலும் செல்பவனாகின்றான். மலையுச்சியினின்று கீழே உருண்டு வருகிற கல் பள்ளத்தாக்கு வரையில் விரைவது போன்று அசுரன் ஒருவன் புல்லிய நிலையின் எல்லை காணும் வரையில் கீழ்மையுறுகிறான்.
இத்தகைய கீழ்மைக்கு மூலகாரணம் யாது ? விடை வருகிறது :
21. த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநமாத்மந:
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் 
இதம் ஆத்மந: நாஸநம்-இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான, த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம்-இம் மூன்று நரக வாயில்கள், காம: க்ரோத: ததா லோப-காமம், சினம், அவா, தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத்-ஆதலால், இம்மூன்றையும் விடுக.
பொருள் : ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.
அசுரப்பான்மைக்குப் பிறப்பிடம் ஈண்டுக் காட்டப்படுகிறது. இம்மூவிதக் குற்றங்களிலிருந்து அரக்கத்தன்மை வளர்கிறது. லோபம் என்பது போகப் பொருள்களைத் தனக்கென்றே கட்டிப் பிடித்தலாம். மனிதன் மேன்மையடைதற்கு இம்மூன்றும் இடந் தருவதில்லை. இவைகளை நீக்கினால் மனிதன் மேலோன் ஆவான். இவைகளில் உழன்று உழன்று இறுதியில் உள்ளத்தினுள் விரக்தியுண்டாகும் வரையில் ஒருவன் அசுரப் பிறவிகளில் அழுந்தியாகவேண்டும்.
பின்பு அவன் எப்படி மேன்மையடைகிறான்? விடை வருகிறது :
22. ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர:
ஆசரத்யாத்மந: ஸ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம் 
கௌந்தேய-குந்தியின் மகனே, ஏதை: த்ரிபி: தமோத்வாரை: விமுக்த:-இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன், நர: ஆத்மந: ஸ்ரேய: ஆசரதி-தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான், தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.
பொருள் : இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.
துக்கங்களுக்கெல்லாம் காரணம் அக்ஞானம். அக்ஞானத்தினின்றே காமம், குரோதம், லோபம் வருகின்றன. ஆக, அக்ஞான இருள் நரகத்துக்கு வாயிலாகிறது. அதினின்று விலகியவன் சிறப்பு எய்துகிறான். முக்தியடைதல் அவனுக்கு இயல்பாக வந்தமைகிறது. கெட்டவன் ஒருவன் திரும்பி மேல்நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டால் அவன் அதிவிரைவில் முன்னேற்றமடைந்து வருகிறான். ஏனென்றால் காமத்தையும் குரோதத்தையும் லோபத்தையும் அவன் நீக்க வல்லவனாகிறான்.
அசுரத் தன்மையை அகற்றி மேன்மையடைதற்கு வழிகாட்டுவது எது? விடை வருகிறது :
23. ய: ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் 
ய: ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவன் சாஸ்திர விதியை மீறி, காமகாரத: வர்ததே-விருப்பத்தால் தொழில் புரிவோனோ, ஸ: ஸித்திம் ந அவாப்நோதி-அவன் ஸித்தி பெற மாட்டான், பராம் கதிம் ந-பரகதி அடைய மாட்டான், ஸுகம் ந-அவன் இன்பம் எய்த மாட்டான்.
பொருள் : சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.
சித்தி அல்லது பரிபூரணத் தன்மையடைகின்றவனுக்கு வாழ்க்கை சுகமுடையதாகத் துவங்கி முக்தியடைதலில் முடிவு பெறுகிறது. இன்னதைச் செய் என்றும், இன்னதைச் செய்யாதே என்றும் சாஸ்திரம் ஆணையிடுகிறது. ஆசைக்கு அடிமையானவன் செய்யவேண்டாமென்பதைச் செய்கிறான்; செய்ய வேண்டியதைச் செய்யாது தவிக்கிறான். சாஸ்திரமோ மனிதனை மேலோனாக்குதற்கென்று அமைந்தது. ஆசையை வென்று சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்க்கு அசுர இயல்பைக் களைந்து தெய்வ சம்பத்தைப் பெறுவது எளிதாகிறது.
இக்காரணத்தை முன்னிட்டுச் சாதகன் ஒருவன் செய்ய வேண்டியதாவது :
24. தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யாகார்யவ்யவஸ்திதௌ
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ரவிதாநோக்தம்
கர்ம கர்துமிஹார்ஹஸி 
தஸ்மாத் தே-ஆதலால் உனக்கு, இஹ கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ-எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில், ஸாஸ்த்ரம் ப்ரமாணம்-நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள், ஜ்ஞாத்வா-அதை அறிந்து, ஸாஸ்த்ர விதாந உக்தம்-சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை, கர்தும் அர்ஹஸி-செய்யக் கடவாய்.
பொருள் : ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.
சம்சார சாகரத்தைக் கடந்து அப்பாற் செல்லுதற்கு சாஸ்திரம் உற்ற துணையாகிறது. ஆதலால் இவ்வுலகில் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் இதினின்று மீளுதற்குக் கையாளுகிற கர்மங்களெல்லாம் சாஸ்திரத்துக்கு உடன்பாடானவைகளாயிருக்க வேண்டும். முற்றிலும் தெய்வ சம்பத்தில் ஊறியிருப்பவர்கள் இயல்பாகவே சாஸ்திரத்தின் ஆணையைப் பின்பற்றுபவர்களாயிருப்பார்கள். அவர்களுடைய செயலும் சாஸ்திரப் பிரமாணமும் ஒன்றுபட்டிருக்கின்றன.
நீங்கள் எந்த சாஸ்திரத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஓர் அன்பர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார். நான் ஒரு சாஸ்திரத்தையும் பின்பற்றுவதில்லை. என் சித்தமிசை குடிகொண்டுள்ள தெய்வத்தின் அனுமதி கேட்டு என் வாழ்க்கையை நடாத்துகிறேன். ஆகையால் நான் தவறிப் போவதில்லை; என் வாழ்க்கை சாஸ்திரத்துக்கு முரண்படாது என்றார் அவர்.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே
தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகோ நாம
சோடசோத்யாய:
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

பதினேழாம் அத்தியாயம்
 
temple
அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் ... மேலும்
 








பதினேழாம் அத்தியாயம்
பகவத்கீதை | சிரத்தாத்ரய விபாக யோகம்
அக்டோபர் 17,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.
மூன்றுவித சிரத்தை 1-7 மூன்றுவித உணவு 8-10 -மூன்று வித ஆராதனை 11-13 -மூன்றுவிதத் தபசு 14-19 -மூன்றுவித தானம் 20-22 -குறைகளை நிறையாக்குதல் 23-28.
அர்ஜுந உவாச
1. யே ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: 
அர்ஜுந உவாச, க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, யே ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவர்கள் சாஸ்திர விதியை மீறி, ஸ்ரத்தயா அந்விதா: யஜந்தே-ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ, தேஷாம் நிஷ்டா து கா-அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம:-சத்துவமா அல்லது ரஜசா, தமசா?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)
ஈண்டுக் கேள்வியொன்று கிளப்ப அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. முன்னேற்றமடைய வேண்டுமென்று யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவனிடத்து சிரத்தையிருக்கிறது. ஆதலால் அவன் காமம், குரோதம், லோபம் இவைகளின் வசப்படமாட்டான். ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி ஒன்றும் நினையாது தேவாராதனை செய்கிற பாங்குடன் கர்மங்களில் ஈடுபடுகிறான். அப்படிச் செய்வதால் அவன் மேன்மையடைகின்றானா இடைநிலையில் ரஜோகுணத்துக்குட்பட்டு நின்றுவிடுகிறானா அல்லது தமோகுணத்துக்கு உரியவனாய்க் கீழ்மையடைகின்றானா? மனித வாழ்க்கையில் சாஸ்திரத்தின் ஆணை முற்றிலும் இன்றியமையாததா, என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
2. த்ரிவிதா பவதி ஸ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்ருணு 
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், தேஹிநாம் ஸ்வபாவஜா-ஜீவர்களிடம் இயற்கையான சுபாவத்தால் உண்டான, ஸா ஸ்ரத்தா-அந்த நம்பிக்கை, த்ரிவிதா பவதி-மூன்று வகையாகத் தோன்றுகிறது, ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி-சாத்விகம், ராஜசம், தாமசம் என, தாம் ஸ்ருணு-அதைக் கேள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.
முற்பிறப்பில் செய்த வினைகள் சம்ஸ்காரங்களாக மனதில் பதிந்து அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக வடிவெடுக்கிறது. பிறகு இயல்புக்கு ஏற்றபடி அவன் புதிய ஜன்மத்தில் வினையாற்றுகிறான். இயல்பையும் வினையையும் கொண்டு ஒருவனிடம் படிந்துள்ள குணத்தைக் கண்டுபிடிக்கலாம்.
3. ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்ரத்தா பவதி பாரத
ஸ்ரத்தாமயோऽயம் புரு÷ஷா யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ: 
பாரத-பாரதா, ஸர்வஸ்ய ஸ்ரத்தா ஸத்த்வாநுரூபா பவதி-யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே அமைகிறது, அயம் புருஷ: ஸ்ரத்தாமய:-மனிதன் சிரத்தை மயமானவன், ய: யத் ஸ்ரத்த: ஸ:-எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ அவன்,
ஸ: ஏவ-அந்தப் பொருளேதான் ஆகிறான்.
பொருள் : பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.
விழிப்பும், மன எழுச்சியும், வகையுடன் விரைந்து வினையாற்றுதலும், வினையாற்றுதலில் உள்ள மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இத்தனையும் சேர்ந்து சிரத்தையெனப் பெயர் பெறுகிறது. இதுவரையில் மனிதன் அடைந்துள்ள பாங்கு, இனி அவன் அடையப்போவது, இவை யாவையும் அவன்பால் உள்ள சிரத்தையைக் கொண்டு அளந்துவிடலாம். வானை நோக்கி வீசிய கல், அதற்குக் கொடுத்த வேகத்துக்கு ஏற்ப உயரப் போகிறது. மரம் தன் உள்வலிவுக்கு ஏற்ப வானுற வளர்கிறது. அங்ஙனம் மனிதனிடத்துள்ள சிரத்தைக்கேற்ப அவன் மேலோன் ஆகிறான். நசிகேதன் என்னும் ரிஷி புத்ரன் சிரத்தையே வடிவெடுத்தவன் ஆனான். அவனுடைய தந்தை ஆற்றிய விச்வஜித் யக்ஞம் குறைபட்ட யக்ஞமாயிருந்தது. மைந்தனுக்கு அக்குறையைக் காணப்பிடிக்கவில்லை. ஆகவே சிரத்தையானது அவனுடைய மனதுதகத்து எழுந்தது. தந்தையின் ஆணைப்படி அவன் யமலோகத்துக்குச் சென்றான். பிதாவின் குறைபிலையை நிறைநிலையாக்கினான். உலக முன்னேற்றத்துக்கு ஏதுவான முயற்சி யாது என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் தானே ஆத்ம ஞானத்தை யமனிடமிருந்து கற்றுக் கொண்டான். இத்தனையும் சீரிய சிரத்தையால் அவனுக்கு அமைந்தன. ஒருவனுடைய சிரத்தையை அளப்பது அவனையே அளப்பதற்கு ஒப்பாகிறது.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
சிரத்தையானது வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வடிவெடுக்கிறது. அவைகளில் ஒன்று ஆராதனை அல்லது வழிபாடு. அது வருமாறு :
4. யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷõம்ஸி ராஜஸா:
ப்ரேதாந்பூதகணாம்ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: 
ஸாத்த்விகா தேவாந் யஜந்தே-ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர், ராஜஸா: யக்ஷரக்ஷõம்ஸி-ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்), அந்யே தாமஸா ஜநா:-மற்றத் தமோ குணமுடையோர், ப்ரேதாந் பூதகணாந் ச-பிரேத பூத கணங்களுக்கு, யஜந்தே-வேள்வி செய்கிறார்கள்.
பொருள் : ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.
அவரவர் தன்மைக்குத் தகுந்தாற்போன்று மனிதர் மனிதரோடு இணக்கம் வைக்கிறார்கள். நல்லவர் நல்லாரைச் சார்தலும், கெட்டவர்கள் கெட்டவர்களோடு இணக்கம் வைப்பதும் இயல்பு. அதேபோன்று தெய்வ வழிபாட்டிலும் படித்தரங்கள் பல அமைகின்றன. சாத்விக குணமுள்ள நல்லார் பரமாத்மாவைப் பற்றி நிற்கின்றார்கள். பரமாத்மாவின் சொரூபங்களாக சிவம், சக்தி, விஷ்ணு, கணபதி, சுப்ரமணியம் முதலிய தெய்வங்கள் இலங்குகின்றன. இயற்கையில் துஷ்டத்தனம் நிறைந்த சக்தியைக் கையாளுபவர்கள் ரஜோகுணத்தினின்று வந்த சிற்றியல்பை உடையவர்களேயாம். அத்தகையவர்கள் வழிபாட்டுக்காகவென்று கற்பித்துக்கொள்ளும் தெய்வங்களும் கொடூரம் வாய்ந்தவைகளாக, துஷ்டத்தனம் நிறைந்தவைகளாக இருக்கும். சோம்பலும் அக்ஞான இருளும் நிறைந்தவர்கள் அதற்கேற்ற இயற்கையின் பகுதியைப் பாராட்டுகிறார்கள். தமோகுணம் பொருந்தியவர்கள் கற்பிக்கும் வனதேவதைகள் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்கு செய்பவைகளாகத் தென்படும். இவர்களுள் சாத்துவிக சுபாவமுடையவர்கள் மிகச் சிலர். பெரும்பான்மையோர் போக்கு எத்தகையது எனின்:
5. அஸாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா: 
6. கர்ஷயந்த: ஸரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:
மாம் சைவாந்த:ஸரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஸ்சயாந் 
யே ஜநா:-எந்த மக்கள், அஸாஸ்த்ரவிஹிதம்-நியமத்தை மீறி, தம்ப அஹங்கார ஸம்யுக்தா: - டம்பமும் அகங்காரமுமுடையராய், காமராக பல அந்விதா:-விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரம் தப: தப்யந்தே-கோரமான தவஞ் செய்கிறார்களோ.
ஸரீரஸ்தம் பூதக்ராமம் ச-உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும், அந்த:ஸரீரஸ்தம் மாம் ஏவ - அகத்திலுள்ள என்னையும், கர்ஷயந்த:-வருத்துகிறார்கள், தாந் அசேதஸ:-அந்த அறிவு கெட்டவர்கள், ஆஸுர நிஸ்சயாந் வித்தி= அசுர நிச்சய முடையோரென்றுணர்.
பொருள் : (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.
பொருள் : இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.
அசுர இயல்புடையவர்கள் புரியும் கொடுந்தவம் அவர்களுக்கே இன்பம் தருவதில்லை. முள்ளின்மீது படுத்துக்கிடக்கின்றனர்; கையைத் தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கின்றனர். பார்க்கின்றவர்களுக்கும் அக்காட்சி துன்பமளிக்கிறது. சூரியனையே உற்று நோக்குதல் போன்ற செயல்களால் இந்திரியங்களை அவர்கள் பாழாக்குகிறார்கள். மனதினுள் மனசாக்ஷியாக சர்வேசுவரன் வீற்றிருக்கிறார். சலனமடைந்த நீரில் சந்திர பிம்பம் நன்றாக விளங்காததுபோன்று பகட்டும், ஆணவமும், ஆசையும் நிறைந்துள்ள அவர்களது மனதில் ஈசுவர சான்னித்தியம் உணரப்படுவதில்லை. இறைவன் புறக்கணிக்கப்படுகிறார். இன்ப துன்பம் கடந்துள்ள அவர் துன்புறுத்தப்படுவர் போன்று காணப்படுகிறார். சான்றோர்கள் செல்லும் நெறி இதுவன்று. ஆதலால் இது சாஸ்திரத்துக்குச் சிறிதும் பொருந்தாது. இத்தகைய பாங்குடையவர்களே அசுரர் ஆவர்.
இன்னும் எவைகளைக்கொண்டு மக்களை வகைப்படுத்தலாம் என்று கேட்குமிடத்து அதற்கு விடை வருகிறது : (5-6)
7. ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஸ்ருணு 
ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி-ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும், த்ரிவித: பவதி - மூன்று வகைப்படுகிறது, ததா யஜ்ஞ: தப: தாநம்-அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும்,
தேஷாம் இமம் பேதம்-அவற்றின் வேற்றுமையைக், ஸ்ருணு-கேள்.
பொருள் : ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.
யக்ஞம் அல்லது யாகம் என்பது நாளடைவில் தேவாராதனை என்னும் வடிவெடுத்துள்ளது. முன்னாளில் தீ மூட்டி அதன்மூலம் நிகழ்ந்த வழிபாடானது காலக்கிரமத்தில் ஆலய வழிபாடாக மாறியிருக்கிறது.
8. ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா: 
ஆயு: ஸத்த்வ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி-உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி, விவர்தநா:, ரஸ்யா: ஸ்நிக்தா:-மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, ஸ்திரா: ஹ்ருத்யா: ஆஹாரா:-உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள், ஸாத்த்விகப்ரியா:-சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.
பொருள் : உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.
பிரீதியானது என்பது பசியை உண்டுபண்ணுவது என்றும், ஸ்திரமானது என்பது நெடுநேரம் தாங்குவது என்றும் பொருள்படும். சத்தில்லாத உணவு விரைவில் ஜீரணமாகிவிடுகிறது. அது உடலுக்கு பலம் கொடுக்காது. மற்று, ஜீரணம் பண்ணமுடியாத கடினமான உணவு ஜீரணக் கருவிகளைக் கெடுத்துவிடுகிறது. அதனால் ஆயுளும் குறைந்துபோம். இந்த உணவு வகைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுதல் இயல்பு. காலையில் உண்ணும் உணவு இலேசானதாக இருக்கவேண்டும். இரவில் உண்ட உணவில் பெரும் பகுதி தூங்கப்போகும்பொழுது ஜீரணமாயிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களில் உடலுக்குக் கதகதப்பைத் தரும் உணவை அருந்துதல் அவசியம். வெப்பம் நிறைந்த நாடுகளிலோ குளிர்ச்சி தருகிற உணவு வேண்டப்படுகிறது.
பகல் வேளையில் வேண்டியவாறு உணவு அருந்து, ஆனால் இரவில் அருந்தும் உணவைப் பெரிதும் குறைத்துவிடு.
9. கட்‌வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஸோகாமயப்ரதா: 
கடு அம்ல லவண தீக்ஷ்ண-கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும், அதிஉஷ்ண-அதிகச் சூடு கொண்டன, ரூக்ஷ விதாஹிந:-உலர்ந்தன, எரிச்சலுடையன, ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: - இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர், து:க ஸோக ஆமயப்ரதா:-இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.
பொருள் : கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.
நாவில் சுரீலென்று பாய்கிறது; கண் சிவந்து கண்ணீர் சொட்டுகிறது; நாசியில் நீர் வடிகிறது; தலை சுழல்கிறது; வயிறு எரிகிறது-இத்தகைய பாங்குடையவைகள் ரஜோகுணத்தை வளர்க்கும் உணவுகள். ஆயுளைக் குறைக்கும் தன்மை இவைகளிடத்தில் உண்டு.
10. யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம் 
யத் போஜநம் யாதயாமம்-எந்த உணவு கெட்டுப் போனது, கதரஸம்-சுவையற்றது பூதி - அழுகியது, பர்யுஷிதம் ச-பழையது, உச்சிஷ்டம் ச-எச்சில் பட்டது, அமேத்யம் அபி-அசுத்தம், தாமஸப்ரியம்-தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.
பொருள் : பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.
மூன்று மணி நேரத்துக்கு முன்பு சமைக்கப்பட்ட உணவு யாமம் கழிந்த உணவாகிறது. ஆகையால் அது சுவையிழந்து விடுகிறது. மேலும் அது ஊசிப்போய் துர்நாற்றமெடுக்கிறது. முந்திய இரவு சமைத்தது பழைய உணவாகிறது. மற்றொருவர் உண்டு எஞ்சியிருக்கும் உணவு எச்சில்பட்டது அல்லது உச்சிஷ்டமானதாகிறது. இன்னும் சில உணவுகள் தீண்டுதற்கும் தகுதியற்றவைகளாகின்றன. தமோகுண இயல்புடையார் இத்தகைய உணவுகளை விருப்புடன் புசிக்கின்றனர்.
இனி, ஈசுவர ஆராதனையிலுள்ள மூன்று படித்தரங்கள் விளக்கப்படுகின்றன:
11. அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக: 
ய: விதித்ருஷ்ட:-எவர் விதிகள் சொல்லியபடி, யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ-வேள்வி புரிதல் கடமையென்று, இதி மந: ஸமாதாய-மனம் தேறி, அபலாகாங்க்ஷிபி: இஜ்யதே-பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ, ஸ ஸாத்த்விக:-அந்த வேள்வி சத்துவ குணமுடையது.
பொருள் : பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.
குழந்தையைப் பராமரிக்கும் தாய் கைம்மாறு கருதாது சேவையைத் தன் கடமையென்று செய்கிறாள். நல்லார் கடவுள் வழிபாடு செய்வது கைம்மாறு கருதியல்ல. கடவுளை வழிபடுவதே அவர்களது இயல்பு. அந்த ஆராதனை சாஸ்திர ஆணைக்கு முற்றும் ஒத்ததாயிருக்கிறது. சத்துவகுண மேலீட்டால் வரும் வேள்வி அத்தகையது. பாண்டவர் ஐவர் திரௌபதியுடன் வனவாசம் செய்தபொழுது அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள்  எண்ணிக்கையில் அடங்கா. தர்மமே வடிவெடுத்துள்ள தங்களுக்கு இத்தனை துன்பங்கள் ஏன் வரவேண்டும்? என்று திரௌபதியானவள் கணவன் தர்மராஜாவிடம் கேட்டாள். அதற்கு விடையாக தர்மராஜா பகர்ந்ததாவது:- தேவீ, தூரத்தில் தென்படும் ஹிமயமலையைப் பார். மகிமை நிறைந்த அதை நான் வணங்குகிறேன். துன்பம் ஒன்றையும் நான் அறியேன். இங்ஙனம் நல்லதை வணங்குவது அவரது இயல்பு ஆயிற்று.
சாத்விகம் நிறைந்தவர்களுடைய மனப்பான்மைக்கு இது சான்றாகும்.
12. அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்
இஜ்யதே பரதஸ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம் 
து பரதஸ்ரேஷ்ட-பாரதரிற் சிறந்தாய்! தம்பார்தம் ஏவ ச பலம் அபி அபிஸந்தாய- ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு, யத் இஜ்யதே- வேள்வி வேட்கப் படுகிறதோ, தம் ராஜஸம் யஜ்ஞம் வித்தி-அது ராஜச வேள்வி என்று உணர்
பொருள் : பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!
கடையில் பண்டம் மாற்றுவது போன்று, தனது விருப்பத்தை நிறைவேற்றிவைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி வணங்குவது சிறந்த வழிபாடாகாது. தற்பெருமைக்காகவென்று பூஜைகள் பல செய்வாரும் உளர். தங்களை விளம்பரப்படுத்திகொள்வதற்காகத் தெய்வ வழிபாடு செய்கிறவர்களும் உண்டு. இவ்விருவித ஆராதனைகள் ரஜோ குணத்தினின்று உதிப்பவைகளாம்.
13. விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்
ஸ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே 
விதிஹீநம்-விதி தவறியது, அஸ்ருஷ்டாந்நம்-பிறர்க்குணவு தராததும், மந்த்ரஹீநம்-மந்திர மற்றது, அதக்ஷிணம்-தக்ஷிணையற்றது, ஸ்ரத்தாவிரஹிதம்-நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது, யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே-இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.
பொருள் : விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.
எந்த ஆராதனையில் குற்றமிருக்கிறதோ அது வேதநெறி வழுவியதாகும். அன்னதானம் எல்லா உயிர்களுக்குமிடையிலுள்ள தொடர்வை நிலைநாட்டுகிறது. அன்னம் வழங்காதவிடத்து வேற்றுமை பரவுகிறது. அதனால் கேடு விளைகிறது. நல்லெண்ணமில்லாத செயல் மந்திரமில்லாத செயல் எனப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாகவுள்ள எண்ணமே அதற்குச் சிறப்பளிக்கிறது. ஆழ்ந்த எண்ணமில்லாத வழிபாடு யந்திரம் செய்கிற செயலுக்கு ஒப்பாகிறது. கடவுள் வழிபாடு சம்பந்தமான கிரியைகளைப் பிரதிபலன் எதிர்பாராது செய்துவைப்பவர் புரோகிதர் ஆகிறார். புரோகிதர்க்கும் அறிவு ஒழுக்கமுடைய மற்றவர்க்கும் வழங்கும் பொருள் தக்ஷிணை எனப்படுகிறது. தக்ஷிணை வழங்காத வழிபாடானது பிறரைப் பொருள் படுத்தாதது எனவே அது வழிபாடாகாது. ஊக்கமின்றி, விசுவாசமின்றிக் கடனைக் கட்டுவது போன்று செய்யப்படும் காரியம் சிரத்தையற்றதாகிறது. இத்தனை குறைபாடுகளோடு கூடியதால் அந்த ஆராதனை கீழ்த்தரமானதாகிறது.
மனிதன் சிரத்தையோடு எதைப் பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணைபுரிகிறது. தவம் யாது என்பது இனி விளக்கப்படுகிறது.
14. தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஸௌசமார்ஜவம்
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே 
தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம்-தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், ஸௌசம் ஆர்ஜவம் ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச-தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை, ஸாரீரம் தப உச்யதே-இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
பொருள் : தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
தப: என்பது உலையில் உருக்குதல் என்று பொருள்படுகிறது. பூமியில் வெட்டிய தாதுக்களை உருக்கித் தூய உலோகங்களாக்கிறோம். துருப்பிடித்த உலோகங்களை உருக்கிப் புதியதாக்குகிறோம். அங்ஙனம் தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பிக்கிறான். மெய், மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களோடு கூடியவன் மனிதன். இம்மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அதன் விவரம் வருகிறது.
பரப்பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். பாரமார்த்திக வாழ்க்கையில் புதிய பிறவியெடுத்தவர்கள் பிராம்மணர். நல்வாழ்க்கையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பவர்கள் குருமார்கள். மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்களை வணங்குவது மேன்மையடைதற்கு உற்ற உபாயம். நீராடி உடலைத் தூயதாய் வைத்திருத்தல் வேண்டும். காயத்தைக்கொண்டு செய்கிற செயல்களெல்லாம் ஒழுக்கம் நிறைந்திருக்குமிடத்து அது ஆர்ஜவம் அல்லது நேர்மையெனப் பெயர் பெறுகிறது. சம்போகத்துக்குக் கருவியாயிருப்பது உடல். இந்திரியங்கள் வாயிலாக வரும் அவ் இன்பங்கள் துன்பங்களாகப் பிறகு பரிணமிக்கின்றன. போகம் என்னும் குறைவின்கண் சென்றழியாது யோகம் என்னும் நிறைநிலையில் தன்னைக் காப்பது பிரம்மசரிய விரதமாம். தேகத்தால் மற்ற தேகங்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பது அஹிம்சை உடலைக் கொண்டு செய்கிறபடியால் இவையாவும் ஒன்று சேர்ந்து சரீர சம்பந்தமான தவமெனப்படுகிறது.
15. அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே 
யத் அநுத்வேககரம் ஸத்யம் ச-சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, ப்ரியஹிதம்-இனியது, நலங் கருதியதுமாகிய, வாக்யம் ச-சொல்லுதல், ஸ்வாத்யாய அப்யஸநம் ஏவ-கல்விப் பயிற்சி, வாங்மயம் தப: உச்யதே-இவை வாக்குத் தவமெனப்படும்.
பொருள் : சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.
காயத்தால் அடித்துத் துன்புறுத்துவதைவிடக் கொடியது கடுஞ்சொல் சொல்லிக் காய்தல். தவசி ஒருவனுக்கு அது பொருந்தாது. சில வேளைகளில் உண்மையை உரைக்குங்கால் அது துன்பந்தருவதாகிறது. ஆதலால் பொய் பேசலாமாவென்றால் அது ஒண்ணாது. சத்தியத்தையே சொல்லவேண்டும். எப்போக்கில் சத்தியம் சொல்லவேண்டும்? ஏற்றுக்கொள்பவர்களுக்கு இன்பம் தருவதாய் அது இருத்தல் வேண்டும்.
மெய்ம்மையே மொழிந்து முகஸ்துதி செய்யலாமா? கடும் சொல்லைக் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் மிகக் குறைவு. இச்சகம் கேட்டு, இறுமாப்புற்றுக் கெட்டுப் போனவரோ பலர். ஆகையால் முகஸ்துதி மொழியலாகாது. கேட்கின்றவர்களுக்கு இதம் தரும் இன் சொற்களையே செப்புதல் வேண்டும்.
பரத்தினை சாக்ஷõத்கரித்த பெருமக்கள் பூரித்துப் பகர்ந்துள்ள ஆப்த வாக்கியங்களே வேதமெனப்படுகின்றன. இதை வேதாந்தமென்பது இன்னும் பொருத்தமுடையதாகும். வேத வேதாந்தம் எம்மொழியில் வேண்டுமானாலும் அமையலாம். அவை யாண்டும் அருள் நிறைந்திருக்கும். அத்தகைய சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதிப் பழகுவதால் சொல் சுத்தப்படுகிறது. பிறகு அது சாதகனது சொந்த அருள் மொழியாகவும் வடிவெடுக்கிறது. இங்குப் பகர்ந்துள்ள நான்கு பகுதிகளும் முறையாக அமையப்பெற்றதே வாக்கு மயமான தபசாகிறது.
16. மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:
பாவஸம்ஸுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே 
மந: ப்ரஸாத:-மன மகிழ்ச்சி, ஸௌம்யத்வம்-அமைதி, மௌநம்-மௌனம், ஆத்மவிநிக்ரஹ: - தன்னைக் கட்டுதல், பாவஸம்ஸுத்தி:-எண்ணத் தூய்மை, இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே-இவை மனத் தவமெனப்படும்.
பொருள் : மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத்தவமெனப்படும்.
சோர்வடையாது, குழப்பமடையாது, குதூகலத்தில் அமைதியுற்றிருத்தல் மனப்பிரசாத்மாம். சீரிய எண்ணங்களே உள்ளத்தில் உதிக்க இடந் தருதலும், கெட்ட எண்ணங்களை வரவொட்டாது தடுத்தலும், ஈசுவர சிந்தனை தைலதாரை போன்று ஊற்றெடுப்பதும் மௌன மெனப்படும். சொல்லிலும் செயலிலும் விடச் சிந்தனையில் தன்னடக்கம் பயிலுதல் சாலச்சிறந்தது. சிந்தனையில் அடக்கம் பழகியவனுக்கு வாயடக்கமும் மெய்யடக்கமும் தாமே வந்து அமைகின்றன. மனதில் உண்டாகிற உணர்ச்சி பாவமெனப்படுகிறது. வியவகார வேளையிலும் இந்த உணர்ச்சி தூயதாயிருத்தல் வேண்டும்.
17. ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே 
அபலாகாங்க்ஷிபி: யுக்தை: நரை:-பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால், பரயா ஸ்ரத்தயா தப்தம்-உயர்ந்த நம்பிக்கையுடன், தத் த்ரிவிதம் தப:-மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம், ஸாத்த்விகம் பரிசக்ஷதே-சாத்வீகமெனப்படும்.
பொருள் : பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.
பயனை விரும்புமளவு தவம் புனிதத்தை இழக்கிறது. பயன் விரும்பாதிருப்பதும், செய்யும் தவத்தை நிறுத்தாதிருப்பதும் சாத்விகர்களது போக்கு. வெற்றியே வாய்த்திடினும் தோல்வியே தோன்றிடினும் அவைகளால் அலக்கழிக்கப்படாதிருப்பவர்கள் யோகத்தில் உறுதிபெற்றவர்களாகின்றார்கள். அவர்களது பெரு முயற்சியோ ஒருபொழுதும் தளர்ச்சியடைவதில்லை. முக்கரணங்களைக் கொண்டு அவர்கள் முறையாகப் பாடுபடுகின்றனர்.
18. ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் 
யத் தப:-எந்த தவம், ஸத்காரமாநபூஜார்தம் ச ஏவ-மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்), தம்பேந க்ரியதே-ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய, இஹ ராஜஸம் ப்ரோக்தம்-தவம் ராஜசமெனப்படும், தத் அத்ருவம் சலம்-அஃது நிலையற்றது; உறுதியற்றது.
பொருள் : மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.
தவம் ஒன்றுதான் தங்களைத் தக்கவர்களாகத் திருத்தியமைக்கிறது என்ற தெளிவு ராஜஸ இயல்புடையவர்களுக்கு வருகிறதில்லை. வெறும் வெளி வேஷத்துக்காகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள். தவமுடையவர்களென்று மற்றவர்கள் தங்களைப் பாராட்டி வரவழைக்க வேண்டும்; போற்றிப் புகழவேண்டும்; வீழ்ந்து வணங்க வேண்டும் - இப்பாங்குடன் தவமிழைப்பவர் போன்று அவர்கள் நடிக்கின்றனர். பாசாங்காகச் செய்யும் அத்தவம் சில நாட்களுக்கு நடைபெறும். பிறகு அது இல்லாது மறைந்து போகும். செய்யும் பொழுதே அதில் உறுதிப்பாடு ஒன்றும் இராது. இப்பூவுலகில் மட்டும் அது பெயரையும் புகழையும் தற்காலிகமாகத் தருகிறது.
19. மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம் 
யத் மூடக்ராஹேண-எந்த மூடக் கொள்கையுடன், ஆத்மந: பீடயா வா-தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு, பரஸ்ய உத்ஸாதநார்தம் க்ரியதே-பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய, தத் தப: தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தவம் தாமசம் எனப்படும்.
பொருள் : மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.
விவேகமில்லாதவர்கள் தவத்தின் உட்கருத்தை உள்ளபடி அறிகிறதில்லை. திரிவுபட அதைப் பொருள்படுத்துகிறார்கள். பட்டினி கிடந்து, உடலைக் குலைத்து, அதைத் தீயில் வாட்டி, நீரில் நனைத்துச் சிறிது சிறிதாகத் தற்கொலை செய்வது போன்று தங்களையே அவர்கள் துன்புறுத்திக்கொள்கிறார்கள். அல்லது ஏவல் முதலிய மாந்திரிகச் செயல்களால் பிறரை அழிக்க அவர்கள் முயலுகிறார்கள். அக்ஞான இருளில் தோன்றிய இத்தகைய தபசு தாமசமெனப்படுகிறது.
20. தாதவ்யமிதி யத்தாநம் தீயதேऽநுபகாரிணே
தேஸே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் 
தாதவ்யம் இதி யத் தாநம்-கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம், தேஸே காலே ச பாத்ரே ச-தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும், அநுபகாரிணே தீயதே - கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ, தத் தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்-அந்த தானம் சாத்வீகமென்பர்.
பொருள் : கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.
செய்த உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் எதிர்பார்ப்பது வியாபாரமாகிறது; அது தானமாகாது. தனக்குப் பயன்படும் பொருள் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டுமென்று மனமுவந்து கொடுப்பது தானம். கொடுத்த பொருள் யாரிடம் சென்றால் பலருக்குப் பெரிதும் பயன்படுமோ அவரே தகுந்த பாத்திரமாகிறார். ஒரு நாட்டிலிருப்பவர்க்கு வேறு ஒரு நாட்டிலுள்ள நிலம் அல்லது பொருளை தானம் பண்ணுவது தக்கவிடத்தில் செய்யப்பட்டதாகாது. இருக்குமிடத்திலேயே நன்கு பயன்படுவதே சிறந்த தானமாகிறது. பயன்படுத்துகிற காலத்துக்கு மிக முன்போ பின்போ கொடுப்பது காலத்தில் செய்த தானமாகாது. தக்க தருணத்தில் பயன்படும்படி தானம் செய்வதே மேலானது.
21. யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வா புந:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம் 
து யத் பரிக்லிஷ்டம் ச-ஆனால் மன வருத்தத்துடன், ப்ரத்யுபகாரார்தம் வா-கைம்மாறு வேண்டியும், பலம் உத்திஸ்ய புந: தீயதே-பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ, தத் தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த தானத்தை ராஜசமென்பர்.
பொருள் : கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.
தானம் கொடுக்கும் விஷயத்தில் வலது கை செய்வதை இடது கை அறியலாகாது என்பது கோட்பாடு. அதாவது அவ்வளவு அடக்கத்துடனும் பணிவுடனும் ஊக்கத்துடனும் பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கவேண்டும். ரஜோகுணமுடையவனது பாங்கு இதற்கு முற்றிலும் மாறானது. ராஜஸ சுபாவமுடையவனுக்குத் தன் பொருளைப் பிறர்க்குக் கொடுக்க விருப்பமில்லை. வருத்தப்பட்டுக்கொண்டு அரை மனதோடு தானம் பண்ணுகிறான். அப்படிக் கொடுக்கும்பொழுதும் அது தனக்குப் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று எதிர் பார்க்கிறான். தான் ஒரு மடங்கு தானம் செய்தால் தெய்வம் தனக்குப் பத்து மடங்காகப் பலனைக் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறான். இது கொடுப்பவர் ஏற்பவர் ஆகிய இருதரத்தாருக்கும் துன்பம் விளைவிக்கிறது. ரஜோகுணமுடையவனிடத்து மற்றொரு மனப்பான்மையுண்டு. ஒரு பொது ஸ்தாபனத்துக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ அவன் ஏதாவது கைங்கரியம் செய்தால் அதைபற்றித் தனக்கு நிரந்தரமான விளம்பரம் வேண்டுமென்கிறான். தன்னுடைய பெயரை மிக முன்னணியில் பகட்டுடன் பொறித்து வைக்கவேண்டுமென்பது அவனுடைய விருப்பம். தன்னுடைய சொந்தப் பதுமையை அத்தகைய பொது இடங்களில் வைத்துப் பாராட்டவேண்டுமென்பதும் அம் மனிதனுடைய பெருவிருப்பமாகும். இனி, தேவாலயங்களில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்தப் பெயர் சொல்லி அர்ச்சனை பண்ண வேண்டுமென்று விரும்புகிறான். இத்தகைய விருப்பமும் ரஜோ குணத்தினின்று உதித்ததாம்.
22. அதேஸகாலே யத்தாநமபாத்ரேப்யஸ்ச தீயதே
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம் 
யத் தாநம் அஸத்க்ருதம்-எந்த தானம் மதிப்பின்றி, அவஜ்ஞாதம்-இகழ்ச்சியுடன், அதேஸகாலே ச-தகாத இடத்தில், தகாத காலத்தில், அபாத்ரேப்ய தீயதே-தகாதர்க்குச் தரப் படுகிறதோ,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தானம் தாமசமெனப்படும்.
பொருள் : தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.
புனிதமற்றதும் வசிக்க உதவாததும் தகாத இடமாகிறது. தூங்கும் வேளை, உடலின் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் வேளை, வேறு அலுவல்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் வேளை-ஆகிய இவைகள் தானம் செய்தற்குத் தகாத காலங்களாம். ஒழுக்கம் கெட்டவர்கள், அடக்கம் பயிலாதவர்கள், பொதுநல சேவை செய்யாதவர்கள், பணத்தை வீண் விரயம் செய்பவர்கள் ஆகியவர்கள் தானத்துக்குத் தகுதியற்றவர்களாம். முகமலர்ச்சியோடு கூடி வரவேற்பும், உபசாரமும் இல்லாது போவதுமன்றி, புன் மொழிகளால் இகழ்ந்து பேசி, ஏற்பவர்களுக்கு மன வருத்தம் உண்டுபண்ணிக் கொடுக்கும் தானம் தாமசமானது.
ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்க உத்தியோகஸ்தர் போன்றவர்களின் வற்புறுத்தலுக்காக இணங்கிக்கொடுக்கும் தானம் தமோகுணமானது. லஞ்சம் அல்லது கைக்கூலி கொடுப்பதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு பொதுநலத்துக்கு நன்கொடை கொடுப்பதாக வெளிக்குக் காட்டிக்கொள்வது பொருத்தமான தானமாகாது. ஒழுக்கமின்மையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அத்தகைய தானம். அது தமோகுணத்தைச் சேர்ந்ததாகும்.
செய்கின்ற யக்ஞ, தான, தபக் கர்மங்களில் குற்றம் வாராது காப்பது எப்படி என்ற வினா எழலாம். அதற்கு விடை வருகிறது :
23. ஓம்தத்ஸதிதி நிர்தேஸோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா 
ஓம் தத் ஸத் இதி த்ரிவித:-ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக, ப்ரஹ்மண: நிர்தேஸ: ஸ்ம்ருத:-பிரம்மத்தைக் குறிப்பது என்பர், தேந புரா-அதனால் முன்பு, ப்ராஹ்மணா: வேதா: ச யஜ்ஞா: ச-பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும், விஹிதா:-வகுக்கப்பட்டன.
பொருள் : ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.
ஓம் தத் ஸத் என்ற மூன்று பெயர்களால் பிரம்மம் சர்வ சாதாரணமாக அழைக்கப்படுகிறது. மூன்றும் மூன்று குறிப்புப் பெயர்களாக அதற்கு அமைந்துள்ளன. அது ஓசையாகப் பரிணமிக்கிறது. ஓசையினின்று உலகெலாம் உண்டாகிறது. ஆதலால் அது நாதப்பிரம்மம் எனப்படுகிறது. ஓம் என்பது அகிலாண்டத்தின் ஓசையின் தொகை. ஓசையின் தொகை ஓம்கார சொரூபமாக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது. பிரணவம் என்றும் அதைப் பகர்வது உண்டு. ஆக, பிரம்மத்தை ஓம்கார வடிவினன் என்பது ஒவ்வும். கற்புடைய மாது ஒருத்தி தன் கணவனை அவர் என்று குறித்துச் சொல்லுகிறான். அங்ஙனம் ஞானிகள் அது என்று சொல்லும்பொழுதெல்லாம் பிரம்மத்தைக் குறிக்கிறார்கள் (தத்) என்னும் சொல் அது என்று பொருள்படுகிறது. பெரியபொருளைப் பெயரிட்டு அழையாது வெறும் தத் என்ற பதத்தால் வேதம் அதைப் பல்கால் குறிப்பிடுகிறது.
எது சத்தியமாயுள்ளதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் அடிபடாதிருப்பது பிரம்மம். எனவே அது ஸத் என்னும் பெயர் பெறுகிறது. ஆக, ஓம் தத் ஸத் என்பதன் பொருள் ஓசை வடிவமாயுள்ள அந்த பிரம்மமே மெய்ப்பொருள் என்பதாம்.
பாலினின்று மோரும் வெண்ணெயும் உண்டாகின்றனவெனினும் சிறந்தபொருளாகிய வெண்ணெயே பாலினின்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரம்மத்தினிடத்திருந்து அனைத்தும் உண்டாயின வெனினும் அவைகளுள் சிறப்பாயுள்ள அந்தணர், வேதம், வேள்வி முதலியன உண்டாயினவென்று சொல்லப்படுகின்றன. உயிர் வகைகளுள் சிறந்தவர்கள் செந்தண்மையே வடிவெடுத்துள்ள அந்தணர். அறிவைப் புகட்டும் நூல்களுள் சிறந்தவைகள் வேதம். செயல்களுள் புனிதமும் நல்லுணர்ச்சியும் நிறைந்தவைகள் வேள்வி அல்லது யக்ஞம். நாத பிரம்மமாகத் தோன்றியுள்ள பிரபஞ்சத்தில் இம் மூன்றும் முக்கியமானவைகளென்று குறிப்பிடப்படுகின்றன.
இம் மந்திரங்கள் எதற்கு உதவுகின்றனவென்று இனி இயம்பப்படுகிறது :
24. தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம் 
தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாம்-ஆதலால், பிரம்மவாதிகள், விதாநோக்தா: யஜ்ஞ-விதிப்படி புரியும் வேள்வி, தாந தப: க்ரியா:-தவம், தானம் என்ற கிரியைகள், ஸததம் ஓம் இதி-எப்போதும் ஓம் என்று, உதாஹ்ருத்ய ப்ரவர்தந்தே-தொடங்கிச் செய்யப்படுகின்றன.
பொருள் : ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ஓம் என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.
குறைபாடில்லாத கர்மமில்லை. குறைபாட்டை முகாமையாகக் கொண்டு கர்மம் செய்யாமலிருக்க முடியாது. தேகமெடுத்தவன் கர்மம் செய்யாமலிருக்க முயற்சி பண்ணுவதும் பொருந்தாது. கர்மத்தில் உள்ள அக்குறைபாட்டைப் போக்குதற்குக் கர்மம் ஒவ்வொன்றும் ஓம் என்று உச்சரித்துக் கொண்டு துவக்கப்படுகிறது. அதாவது இயற்கையின் நடைமுறைக்கு ஒத்ததாக ஒவ்வொரு செயலும் இருக்கவேண்டும். இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. ஜீவர்களின் முன்னேற்றத்துக்கு அந்த ஒழுங்குப்பாடு துணைபுரிகிறது. அருள் நிறைந்த அந்தத் திட்டத்தை உணர்ந்து அதற்கேற்றபடி வினையாற்ற வேண்டும். இச்செயல் நாளடைவில் விக்கினேசுவர பூஜையாக வடிவெடுக்கலாயிற்று. விக்கினேசுவரனே ஓம்கார வடிவினன். செய்கிற வினை ஒவ்வொன்றிலுள்ள விக்கினத்தை நீக்குதற்கும், அதை வெற்றிகரமாக முடித்தற்கும் விநாயக வணக்கம் செய்யப்படுகிறது. ஓசையெல்லாம் ஓங்காரத்தில் ஒடுங்குவது போன்று தனித்த செயல்களெல்லாம் இயற்கைத் திட்டத்திற்கு ஒத்திருக்கவேண்டும். அப்பொழுது அது குறையின்றி நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரித்து ஒவ்வொரு கர்மத்தையும் துவக்குவதன் உட்கருத்து இதுவேயாம்.
25. ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:
தாநக்ரியாஸ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி: 
தத் இதி-தத் என்ற சொல்லை உச்சரித்து, பலம் அநபிஸந்தாய-பயனைக் கருதாமல், விவிதா: யஜ்ஞதப:க்ரியா:-பல வகைப்பட்ட வேள்வியும் தவமும், தாநக்ரியா: ச-தானமுமாகிய கிரியைகள், மோக்ஷகாங்க்ஷிபி: க்ரியந்தே-மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
பொருள் : தத் என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
தத் என்று பிரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்ற பொழுது எல்லாம் அவன் உடைமை யென்றும், எல்லாம் அவன் செயல் என்றும் எண்ணம் வருகிறது. கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது தனக்கென்று செய்யப்படும்பொழுது அதில் தோஷம் அதிகரிக்கிறது. போர்புரிதல் போன்ற கர்மங்கள் கேடு நிறைந்தவைகளாகும். ஆனால் சில நெருக்கடியில் அத்தகைய கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும். உலக நடைமுறையில் ஈசனது பெருந்திட்டத்தை அறிபவன் அவை யாவும் ஈசன் செயல் என்று கருதி அவனுடைய ஆராதனையாக அச்செயலைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் கர்மபலன் தன்னுடையதாகாது என்கிற தெளிவு ஏற்படுகிறது; பரத்திலேயே நாட்டமதிகரிக்கிறது. அதனால் முமுக்ஷúத்வம் வந்தமைகிறது. பின்பு யக்ஞமும் தபசும் தானமும் அதற்கேற்ற சாதனங்களாக மிளிர்கின்றன.
26. ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே 
ஸத் இதி-ஸத் என்ற சொல், ஏதத் ஸத்பாவே-உண்மை யென்ற பொருளிலும், ஸாதுபாவே ச ப்ரயுஜ்யதே-நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது, பார்த-பார்த்தா, ததா ப்ரஸஸ்தே கர்மணி-புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும், ஸத் ஸப்த: யுஜ்யதே -ஸத் என்ற சொல் வழங்குகிறது.
பொருள் : ஸத் என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ஸத் என்ற சொல் வழங்குகிறது.
முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத பிரம்மமே ஸத் என்று சொல்லப்படுகிறது. பிரமமம் ஒன்றுதான் உள்ளது. பிரபஞ்சமும் அதிலுள்ள ஜீவர்களும் அஸத் என்றாலும் புத்திரன் பிறந்தால் அவனைக் குறித்துச் சிரஞ்சீவி என்கிறோம். நிலையற்ற உயிரை நிலையானதென்று சொல்லுவது உபசாரத்துக்காக. லௌகீக வாழ்க்கை முறையில் உண்மையல்லாததை உண்மை யென்று பாவித்தல் வேண்டும் என்ற கருத்துடன் ஸத் என்ற சொல் வழங்கப்படுகிறது.
சாது பாவம் என்பது நன்மையை வளர்க்கும் கருத்து. பிரம்மம் ஒன்றே நிர்தோஷம் அல்லது குற்றமற்றது. பாக்கி அனைத்திடத்தும் சிறிதளவாவது கேடு உண்டு. கேடு உடைய மனிதனைக் கெட்டவன் என்று சொல்லலாகாது. அவனை நல்லவன் என்றே சர்வகாலமும் சொல்லிக்கொண்டிருந்தால் நல்லவனாகி வருகிறான். சாது பாவம் உலகத்தைச் சீர்திருத்த உற்ற உபாயமாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான சிறந்ததொரு கோட்பாடு ஆகிறது. இதற்காகவும் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது.
இனி, ஸ்வஸ்தி வசனமும் ஸத் எனப்படுகிறது. மங்கள மல்லாததை மங்களமென்று சொல்லி மனதை ஒழுங்குபடுத்துதற்கு அது உதவுகிறது. பொய்யானதெல்லாம் பொருந்தியது நம் உடல். அதை மெய் யென்று மொழிகிறோம். மங்களம் வேண்டி அங்ஙனம் மொழிகிறோம். விவேகமுடையவர்க்கு விவாகத்தைவிடக் கொடியது ஒன்றுமில்லை யென்பது விளங்கும். மனிதனுடைய வீழ்ச்சிக்கு விவாகம் காரணம். அமங்களமான மணச்சடங்கை சுபகாரியம் என்கிறோம். அஸத் தை ஸத் என்கிறோம். மங்களமல்லாததை மங்களமாக்குதற்கு ஸத் என்ற சொல்லை வழங்குகிறோம்.
பொய்யானதும், கெட்டதும், பொருந்தாததுமான உலக வாழ்வை நித்தியமானதென்றும், நலம் நிறைந்ததென்றும், முற்றிலும் பயன்தர வல்லதென்றும் எண்ணுவது அவசியம். வாழ்வில் இனிமை காண்பதற்கு அது உற்ற உபாயமாகிறது. ஸத் என்னும் சொல் அத்தகைய மனநிலையை வருவிக்கிறது.
இன்னும் எதற்கெல்லாம் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது? விடை வருகிறது :
27. யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே 
யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஏவ-வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும், ஸத் இதி உச்யதே-ஸத் எனப்படுகிறது, ச ததர்தீயம்-மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்,
கர்ம ஏவ ஸத் இதி அபிதீயதே-கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.
பொருள் : வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ஸத் எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.
யாகம், தபசு, தானம் ஆகியவைகளை முறையாகச் செய்தால் அவைகள் இயல்பாகவே ஸத் என்னும் சொல்லுக்கு இலக்காய் இருக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். உயரமாக வீடு கட்டுதற்கு முதலில் மூங்கில், பலகை முதலியவைகளைக் கொண்டு சாரம் கட்டுகிறோம். வீடு கட்டுவது நிலைத்துள்ள செயல். சாரம் கட்டுவது நிலையற்ற செயல். அப்படியிருந்தும் சாரம் கட்டினால்தான் வீடுகட்ட முடியும். நிலைத்த செயலுக்குத் துணை புரிகின்றவளவு சாரம் கட்டுதல் இன்றியமையாத செயல் ஆகிறது. யாகம், தபசு, தானம் ஆகியவைகள் தம்மளவில் நிலைத்த செயல்கள் ஆகா. நிலைபொருளாகிய தெய்வத்தை அடைதற்கு அவைகள் பயன்படுகின்றனவாதலால் அவைகள் ஸத் கர்மங்கள் எனப்படுகின்றன. முறை தவறிச் செய்யப்படும் பொழுதும் ஸத் என்ற மந்திரத்தை உச்சரித்துச் செய்துவந்தால் அவைகளிடத்துள்ள குறைபாடுகள் நீங்கி அவைகள் நாளடைவில் நலம் பெறுகின்றன. அதற்கும் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். பத்ரிகாச்ரமம் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன் இந்தியாவின் தென்முகமாக நடந்து செல்வானானால் அது முறை தவறிய முயற்சி. தனது விருப்பம் ஹிமயமலையில் பத்ரிகாச்ரமம் போய்ச் சேர்வது என்று அவன் வழி நெடுகச் சொல்லி வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது விஷயம் தெரிந்த ஆள் ஒருவன் அவனுடைய செயலைத் திருத்தியமைக்கத் தோன்றி வருவான். தென் திசையை நோக்கிப் போகலாகாது. வட திசையை நோக்கிப் போகவேண்டும் என்ற ஆணை பிறக்கும். பிறகு அவன் பத்ரிகாச்ரமம் போய்ச் சேருவான். அங்ஙனம் கடவுளைக் குறித்துச் செய்யும் செயல் துவக்கத்தில் குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் திருத்தியமைக்கப் பெறுகிறது. தன் பொருட்டுச் செய்யும் கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது கேடுடையதாகிறது. கடவுள்பொருட்டுச் செய்யப்படும் கர்மம் எவ்வளவு குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் ஸத் கர்மமாய் மாறி மேன்மையுறுகிறது.
28. அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ 
பார்த-பார்த்தா, அஸ்ரத்தயா ஹுதம் தத்தம்-அசிரத்தையுடன் வேள்வியும் தானமும், தப்தம் தப: ச-செய்யும் தவமும், யத் க்ருதம்-கர்மமும், அஸத் இதி உச்யதே-அஸத் எனப்படும்,
தத் இஹ நோ ப்ரேத்ய ச ந-அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை.
பொருள் : அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், அஸத் எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;
யாகத்தையும் தானத்தையும் தபசையும் முறையாகச் செய்தால் பரபோதம் மேலிடுகிறது. ஜீவபோதம் தேய்கிறது. இச் செயல்களைச் சுயநலத்துடன் செய்தால் ஜீவபோதம் மேலும் வளர்கிறது. இயற்கையினின்று வருகிற இன்பங்களை அனுபவிப்பதற்கு ஜீவபோதம் வேண்டும். பரம்பொருளிடத்திருந்துவரும் பேரானந்தத்தை அனுபவிக்கப் பரபோதம் வேண்டும். சிரத்தையில்லாத மனிதனுக்கு ஜீவபோதமும் இல்லை; பரபோதமும் இல்லை.
சிரத்தையில்லாது செய்யும் கர்மம் எத்தகையதாயிருந்தாலும் அது எவ்வுலகுக்கும் பயன்படாது. கர்மம் செய்வதால் யந்திரங்கள் முன்னேற்ற மடைவதில்லை. அவைகள் ஒழுங்காக நன்கு உழைக்கின்றன. ஆனால் எப்பொழுதும் அவைகள் யந்திரமாகவே இருக்கின்றன. சிரத்தையில்லாத மனிதனும் யந்திரம் போன்று ஆய்விடுகிறான். யாகம், தானம், தபசு ஆகியவைகளுக்குப் புறம்பாயுள்ள மற்றக் கர்மம் என்று சொல்லுவது, தனியாக இவ்வுலகுக்கு மட்டும் பயன்படுகிற கல்வி, செல்வம், உடல்திட்பம் முதலியன அடங்கப்பெற்ற செயலாம். பொருள் சம்பாதிப்பதை அதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். சிரத்தையில்லாதவன் பொருள் சம்பாதிக்க முடியாது. தற்செயலாய் அவனுக்குப் பொருள் சேர்ந்தால் அவன் அதைக் காப்பாற்றமுடியாது. அதை அனுபவிக்கவும் அவனால் இயலாது. யாருக்கும் பயன்படாது அது விரயமாய்விடும். சிரத்தையுடன் செய்யப்படுகிற கர்மங்களெல்லாம் நன்மை பயக்கின்றன. சிரத்தையுடன் செய்யும் பொழுதே ஓம் தத் ஸத் என்று உச்சரித்துக்கொண்டு செய்தால். அம்மூன்று சொற்களுக்கும் அடிப்படையாகவுள்ள பரம் பொருளை நினைந்து செய்ததாகும். அதனால் கர்மங்களில் இயல்பாயுள்ள கேடுகள் நீங்கி நலம் நிறைகிறது. பரத்தைப்பெற அதுவே உற்ற உபாயமாகிறது.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

பதினெட்டாம் அத்தியாயம்
 
temple
சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது ... மேலும்
 








பதினெட்டாம் அத்தியாயம்
பகவத்கீதை | மோஷ சந்நியாச யோகம்
அக்டோபர் 18,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும். எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.
அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம் என்று மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.
ஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6 -தாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8 -ஸாத்விக தியாகம் வேண்டும் 9-12 -கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16 -ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 -முக்குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40 -நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48 -கர்மயோகமே கர்மஸந்யாஸமாகிறது 49-57 -அஹங்காரம் கொடியது 58-60 -எல்லாம் ஈசன் செயல் 61-62 -உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63 -சரணாகதி தத்துவம் 64-66 -கீதைக்கு அதிகாரி யார்? 67-71 -ஞானோதயம் 72-73 -ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.
அர்ஜுந உவாச
1. ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஸ ப்ருதக்கேஸிநிஷூதந  
அர்ஜுந உவாச மஹாபாஹோ-அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய், ஹ்ருஷீகேஸ-ஹ்ருஷீகேசா, கேஸிநிஷூதந-கேசியைக் கொன்றவனே, ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம்-சந்நியாசத்தின் இயல்பையும், த்யாகஸ்ய ச-தியாகத்தின் இயல்பையும், ப்ருதக் வேதிதும் இச்சாமி-பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
ஏற்கனவே இயம்பியுள்ள முக்கியமான கோட்பாடுகள் முடிவுரையில் மீண்டும் ஒருமுறை விமர்சனம் செய்யப்படுகின்றன. ஆக, இந்த அத்தியாயத்தின் முதற்பகுதியானது யோகங்களையெல்லாம் தொகுத்து சமரசப்படுத்தும் பாங்கில் அமைகிறது. ஒரே கோட்பாட்டை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் விளக்கலாம். புதிய வடிவம் பெறுமிடத்து அது புதிய கோட்பாடாகவே தென்படும். சந்தர்ப்ப பேதத்தை முன்னிட்டும் பழைய கோட்பாடு புதிய போதனை போன்று தென்படுவது இயல்பு. யானையின் அவயவம் ஒவ்வொன்றுக்கும் தன்னளவில் அழகு இருக்கிறது. அவைகளையெல்லாம் தொகுத்து யானை வடிவத்தில் பார்க்குங்கால் அவைகளின் அழகு பன்மடங்கு அதிகரிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்களும் பதினெட்டு யோகங்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன. அவைகள் அனைத்துக்கும் பொதுவாக யோக சாஸ்திரம் என்னும் பெயர் இந்த அத்தியாயத்தில் பூர்த்தி பெறுகிறது.
கேசி என்ற அசுரன் குதிரை வடிவெடுத்துக் கிருஷ்ணனை விழுங்க வாயைத் திறந்துகொண்டு வந்தான். கண்ணனோ தன் கையை அதன் வாயினுள் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டான். ஆதலால் அவனுக்கு கேசி நிஷூதனன் என்ற பெயர் வந்தது. கை வலிவை இங்குக் காட்டியதால் அவன் மகாபாகு என்றும் அழைக்கப்படுகிறான். இச் செயல்களுக்கிடையில் அவன் இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனா யிருந்தமையால் ஹிருஷீகேசனாகிறான்.
அத் 5-சுலோ 13, அத் 9-சுலோ 28 இவைபோன்ற இடங்களில் பகவான் சந்நியாசத்தைப் பற்றிப் பகர்ந்தார்.
அத் 4-சுலோ 20, அத் 12-சுலோ 11 இவைபோன்ற இடங்களில் தியாகத்தைப்பற்றிச் சொன்னார். இவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன வென்பது கேள்வி.
வாழ்க்கையைப்பற்றிய கோட்பாடுகளில் சந்நியாசமும் தியாகமும் மிகச் சீரியவைகளாகும். அவைகளை வெறும் சாஸ்திரத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியாது. தீப்பற்றி எரிவது போன்று படம் வரையலாம். ஓவியத்தில் தீட்டிய தீயானது உணவு சமைக்க உதவாது. உண்மையாக எரிந்துகொண்டிருக்கும் தீ ஒன்றே அச்செயலுக்கு உதவும். எரிகின்ற தீ போன்றவை தியாகமும் சந்நியாசமும். யார் ஒருவர் சந்நியாசியோ அல்லது தியாக மூர்த்தியோ அவர்தான் அவ் உயர் நிலையை மற்றவர்க்கு வழங்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணன் அச் செயலைச் செய்யத் தகுந்தவரா என்ற கேள்வி எழுகிறது.
அர்ஜுனனால் அவர் ஹிருஷீகேசன் என்றும் மஹாபாகு என்றும் கேசிநிஷூதனன் என்றும் அழைக்கப்பட்டார். சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்துப் பரிபூரணன் ஆகும் வரையில் உள்ள படித்தரங்கள் எல்லாம் இம் மூன்று சொற்களில் அடங்கியிருக்கின்றன. அசுரனைக் கொல்லுதல் தீமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுதற்கு அறிகுறியாகும். எல்லா உயிர்களும் தீமையை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் உயிருக்கும் அதனதன் நிலையில் எதிர்ப்பும், பகையும், தீமையும் உண்டு. இயற்கையில் யாண்டும் இக்காட்சியைக் காணலாம். தீமையை வெல்லுதலில் மற்ற உயிர்கள் ஏகதேசம் வெற்றி பெறுகின்றன; மனிதனோ பெரும் வெற்றி பெறுதற்கு அடையாளமாகக் கிருஷ்ணன் பெருந் தோள்வலிவு பெற்றவன் (மகாபாகு) ஆகிறார். உடல் அமைப்பில் பரிபூரணநிலை அவரிடத்திருக்கிறது. மனத்தகத்து உள்ள கேடுகள் இந்திரியங்கள் மூலம் வெளியாகின்றன. கிருஷ்ணனோ இந்திரியங்களையும் மனதையும் முற்றிலும் வென்றவர். ஆதலால் அவருக்கு ஹிருஷீகேசன் என்ற பெயர் வந்தது. ஜன்மம் எடுத்தவனது பரிபூரண நிலைக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீ கிருஷ்ணன். யோகேசனாகிய அவரே சந்நியாசத்தையும் தியாகத்தையும் விளக்கவல்லவர். அத்தகையவரிடம் அர்ஜுனன் இக்கேள்வி கேட்டது முற்றிலும் பொருத்தமானதாம்.
ஸ்ரீபகவாநுவாச
2. காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது:
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:  
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம்-விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது, ஸந்ந்யாஸம் கவய: விது:-சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர், ஸர்வகர்மபல த்யாகம்-எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல், த்யாகம் விசக்ஷணா: ப்ராஹு-தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
காமிய கர்மம் என்பது இம்மையில் தனக்குப் பட்டம், புகழ், பேர், புத்திர பாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம் முதலியன அமையவேண்டுமென்று ஆசைப்படுவதும், மறுமையில் சுவர்க்காதி பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம். இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சந்நியாசம். இது சில ஞானியர்கள் கருத்து. வேறு சில ஞானிகள் நித்திய, நைமித்திய, காமியமாகிய எல்லாக் கர்மங்களின் பயனை விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர். சந்நியாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒரே கருத்தைத்தான் விளக்குகின்றன. அற்றது பற்று எனில் உற்றது வீடு. இது விஷயத்தில் பேரறிஞர்களுக்கிடையில் அபிப்பிராய வித்தியாசமில்லை. தனது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா யிருப்பவைகளை யெல்லாம் துறந்துவிட வேண்டும். காமிய கர்மங்கள் புதிய பந்தங்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளை நிறைவேற்றுதற்குப் புதிய பிறவிகள் எடுத்தாகவேண்டும். பிறவிப்பிணி வேண்டாமென்கிற விவேகிகள் அதற்குப் புதிய வித்துக்களை விதைக்கலாகாது. ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்துக்கு ஒப்பான இவ்வுடல் வாழ்க்கை தானாகப் பட்டுப்போம் பரியந்தம் அதைத் தன் போக்கில் விட்டுவிடுவது முறை என்பது சில ஞானிகளின் கோட்பாடு. வேறு சிலர் புதிய மரத்துக்கு விதையும் நடவேண்டாம், பழைய மரத்தை விட்டும் வைக்கவேண்டாம் என்கின்றனர். அனைத்தையும் வேரறக் களைதல் வேண்டும் என்பது அவர்களது கோட்பாடு. கர்மத்தை அறவே ஒழித்துவிடவேண்டுமாம்.
சத்வகுணமுள்ளவர்களுக்குக் கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள் தாமாகவே அவர்களைவிட்டு விலகிவிடுகின்றன. வலிய முயன்றாலும் அவர்களால் கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்ய விடமாட்டார். கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுவிக்கப்படுகிறாள்! குழந்தை பிறந்த பிறகு அவள் முழுக் கவனத்தையும் குழந்தையைப் பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள். அதேபோல, சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும் பகவான் அகற்றிவிடுகின்றார். ஆனால் சத்வகுணம் வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உலகக் கடமைகளையும் கவனிக்க வேண்டும். ஒரு பணக்காரனுடைய வேலையாள்போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு, வீட்டு அலுவல்களையெல்லாம் கவனிக்க வேண்டும். இதுவே கர்மயோகமெனப்படும். இவ்வித பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு, பகவந் நாமத்தை உச்சரித்து அவனை தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம் அடங்கும்.
3. த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே 
ஏகே மநீஷிண:-சில அறிஞர், கர்ம தோஷவத்-கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி,
த்யாஜ்யம் இதி ப்ராஹு-விட்டுவிடவேண்டும் என்கிறார்கள், யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை, ந த்யாஜ்யம் இதி ச அபரே-விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்.
பொருள் : சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.
கர்மங்கள் அனைத்திலும் காரணம், காரியம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. காரணம் இருக்கும் வரையில் காரியமும் உண்டு. மழை பெய்கிறது; அது காரணம். பூமி நனைகிறது; புதிதாகக் கட்டுகிற வீடும் நனைகிறது. இவ்விரண்டும் காரியங்கள். பூமி நனைதல் என்னும் காரியம் கிருஷிகனுக்கு நல்லது. புதிதாகக் கட்டுகிற வீடு நனைதல் என்பது கட்டுகிறவனுக்குக் கெட்டது. ஆக, மழைபெய்தல் என்னும் கர்மத்தில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. தீபம் எரிகிறது. அது பகவத்கீதை வாசிக்க உதவுகிறது. அச்செயலை நலம் எனலாம். தீபத்தில் பூச்சிகள் பறந்து வந்து வீழ்ந்து சாகின்றன. அச்செயலோ கொடியது. ஆக, தீபம் எரிதலில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. உயிர் வாழ்ந்திருக்க சுவாசிக்கிறோம். உயிர் வாழ்க்கை தேவாராதனைக்கென்றே பயன்படுத்தப்படுகிறது. அது சீரிய செயல். சுவாசிக்கும் மனிதன் காற்றிலுள்ள எண்ணிறந்த சிற்றுயிர்களைக் காற்றுடன் உறிஞ்சி ஒழிக்கிறான். அது கொடிய செயல். இங்ஙனம் எல்லாச் செயல்களிலும் நலமும் கேடும் நிறைந்திருக்கின்றன. கர்மத்திலுள்ள கேடுகளையெல்லாம் கருத்தில் வாங்கும் மனிதர் கர்மம் துறத்தற்குரியதென்று பகர்கின்றனர். வேள்வி, தானம், தபசு ஆகிய வினைகளில் கேடு இருந்தாலும் அவைகளை விடலாகாது. மக்கள் அவைகளைச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டும் சிலரது கருத்து. ஏனென்றால் வாழ்க்கையிலேயே கேடு இருக்கிறது. அதை முன்னிட்டு வாழ்க்கையை யாரும் அழித்துவிடுவதில்லை. ரோஜாச் செடியில் முள் உண்டு. முள்செடி என்று எண்ணி அதைப் பயிர் செய்யாவிட்டால் மணமும் அழகும் நிறைந்த மலர் நமக்குக் கிடைக்காது. விஷம் கொடியது. உடலினுள் சென்றால் அது உயிரை வாங்கிவிடும். பின்பு அதே விஷத்தை ஒளஷதமாக மாற்றியமைத்தால், அதை உடலினுள் செலுத்தலாம்; உயிரையும் அது காப்பாற்றவல்லது. கர்மம் அத்தகையது. மனிதனை அது பந்தப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் அதே கர்மத்தை யாகமாகவோ, தபசாகவோ, தானமாகவோ செய்தால் தோஷம் நீங்கப்பெற்று நலன் உண்டாகும். ஆக, இத்தகைய ஸத் கர்மங்களை நீத்தலாகாது என்பது அவ் அறிஞரது கோட்பாடு.
அப்படியானால் இவைகளைப் பற்றிப் பகவானது கோட்பாடு யாது? விடை வருகிறது :
4. நிஸ்சயம் ஸ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித: 
பரதஸத்தம-பாரதரில் சிறந்தவனே, புருஷவ்யாக்ர-புருஷப் புலியே, தத்ர த்யாகே மே நிஸ்ச, யம் ஸ்ருணு-தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள், ஹி த்யாக: த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:-தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
பொருள் : பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
சந்நியாசமும் தியாகமும் ஒன்றே என்பது பகவானுடைய கோட்பாடு. தியாகமே வாழ்க்கைக்குப் பற்றுக்கோடு ஆகிறது. பார்க்குமிடமெங்கும் இயற்கை இக்கோட்பாட்டை விளக்கிக் கொண்டிருக்கிறது. தன்னிடத்துள்ள வெப்பத்தை சூரியன் ஓயாது தியாகம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதனால் கோளங்களில் உள்ள உயிர்கள் வாழ்ந்திருக்க முடிகிறது. மரத்தைப் பற்றிப் பிடித்திருக்கிற காயானது கனிந்ததும் தனக்குப் பற்றுக்கோடாயிருந்த மரத்தைத் தியாகம் செய்கிறது. அப்படி அது மரத்தை விடுதலில் பண்பும் பயனும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன. தாய் ஒருத்தி தன் சொரூபமாகக் கர்ப்பத்தில் சிசுவை வைத்திருக்கிறாள். பத்து மாசம் ஆனதும் அதை அவள் தன் உடலினின்று தியாகம் செய்யாவிட்டால் அவளுக்கும் கெடுதல், அக்குழவிக்கும் கெடுதல். பழுதுபட்ட சரீரத்தை ஜீவன் தியாகம் செய்கிறான். சுகம் பெறுதற்கு தியாகம் ஒன்றே உற்ற உபாயம். மனிதனுக்குப் பாடம் புகட்டுதற்கென்றிருக்கிறது கர்மம். தனக்குப் பயன்படுகிற பள்ளிக்கூடத்தை மாணாக்கன் ஒருநாள் தியாகம் பண்ணியாகவேண்டும். ஆயுளெல்லாம் அப்பள்ளிக்கூடத்தில் கட்டுண்டு இருப்பது அவனுடைய குறிக்கோள் அன்று. கர்மத்தை மனிதன் முடிவில் துறந்து அதற்கு அதீதத்தில் போக வேண்டும். கர்மத்தை விடுதற்கு முன்பு கர்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதாவது :
5. யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்
யஜ்ஞோ தாநம் தபஸ்சைவ பாவநாநி மநீஷிணாம் 
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை, ந த்யாஜ்யம்-விடக் கூடாது,
தத் கார்யமேவ-செய்யவே வேண்டும், யஜ்ஞ: தாநம் ச தப ஏவ-வேள்வியும் தானமும், தவமும், மநீஷிணாம் பாவநாநி-அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
பொருள் : வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
பட்டுப்புழு தனக்கென்று கூடு கட்டுகிறது. கட்டிய கூட்டுனுள் பிறகு அது அடைபட்டுப் போகிறது. சிறைவாசம் செய்வது போன்று நெடுநாள் அதனுள் கிடக்கிறது. தன்னைப் பந்தப்படுத்தும் செயலை அது தனக்குத்தானே செய்துகொள்கிறது. அப்படித் தன்னை அடைத்து வைப்பதில் பயன் ஒன்று உண்டு. புழுவாக இருந்தது, அழகிய பட்டுப்பூச்சியாக மாறுகிறது. இனி வெளிச்சத்தையும், காற்றையும், வெட்ட வெளியையும் காண அது வெளியே வந்தாக வேண்டும். அதற்காகத் தான் கட்டிய கூட்டை அது தானே உடைத்துத் தள்ளுகிறது. முதலில் கூட்டைக் கட்டுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் பின்பு கூட்டை உடைப்பதில் இருக்கிறது. மனிதனுக்குக் காமிய கர்மங்ளெல்லாம் கூடு கட்டுதற்கு ஒப்பானவை. காமிய கர்மத்தின் வாயிலாக உலக வாழ்வின் தரத்தை மனிதன் கற்றுக்கொள்கிறான். அவனைப் பக்குவப்படுத்துதற்கு அது பயன்படுகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது; அதாவது பற்று நீங்குகிறது. இவ்வுலக வாழ்வைக் கடந்து பரத்தினைச் சார வேண்டுமென்ற எண்ணம் உதிக்கிறது. அதன் பிறகு செய்கிற செயல்கள் யக்ஞமாகவும், தானமாகவும், தபசாகவும் மாறியமைகின்றன. பட்டுப்பூச்சி கூட்டை உடைத்தல் என்கிற செயலைச் செய்கிறது. ஆத்ம சாதகனிடத்து அதற்கு நிகரான செயல் யக்ஞம், தானம், தபசு ஆகியவைகளில் அடங்கியிருக்கிறது. ஆகையால் வேள்வி, தானம், தபசு ஆகியவைகளை எல்லா மனிதர்களும் செய்யவேண்டும். அவைகளைச் செய்கின்றவளவு உலகுக்கு நன்மை உண்டாகிறது. இப்பூவுலக வாழ்க்கை அதனால் மேன்மையடைகிறது. அதற்குமேல் மற்றொரு பிரயோஜனமும் உண்டு. அவைகளைக் கையாளும் வகை தெரிந்துள்ள அறிஞர்களை அவைகள் புனிதப்படுத்துகின்றன.
அறிஞர் யார்? விடை வருகிறது :
6. ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச
கர்தவ்யாநீதி மே பார்த நிஸ்சிதம் மதமுத்தமம் 
து பார்த-ஆனால் பார்த்தா, ஏதாநி கர்மாணி ஸங்கம் த்யக்த்வா-இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பலாநி ச-பயன்களை வேண்டாமலும், கர்தவ்யாநி இதி-செய்ய வேண்டும் என்பது, மே உத்தமம் நிஸ்சிதம் மதம்-என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.
பொருள் : ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.
தாய் ஒருத்தி தன் உடலினின்று பாலை உண்டுபண்ணித் தன் குழந்தைக்கு ஊட்டுகிறாள். குழந்தையின் பொருட்டுத் தான் பத்தியம் இருக்கிறாள்; ஊண் உறக்கத்தை ஒழிக்கிறாள். பசு ஒன்று தன் கன்றுக்கும் உலகுக்கும் பாலைத் தன் உடலிலிருந்து உண்டுபண்ணிக் கொடுக்கிறது. இவ்விரண்டும் சுயநலம் கருதாத கர்மத்துக்கு நல்ல சான்றுகளாகின்றன. தியாகத்தின் உச்ச நிலையை ஆங்குக் காணலாம். தவத்துக்கு விளக்கமும் அச்செயல்களில் அடங்கியிருக்கிறது. பின்பு அதற்கு நிகரான தானத்தை வேறு எங்கும் காணமுடியாது. இடையறா யக்ஞம் இவ்வுயிர்களிடத்து ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பற்றற்ற செயலின் பண்பை இங்குக் காண்கிறோம். கொடுக்கின்றவர், ஏற்கின்றவர் ஆகிய இரு தரத்தாரும் புனிதமடைகின்றனர். பற்றுதலையும் பயனையும் ஒழித்தவர்களே மேன்மைக்கு இருப்பிடமாகின்றனர். ஆசையை வென்ற மேலோர் இவ்வுலகக் கிருத்தியங்களை யக்ஞமாகச் செய்வார்களானால் இவ்வுலகமே பரலோகமாகக் காட்சி கொடுக்கும். உலகம் மேன்மையடைதற்கு ஏற்ற கோட்பாடு இதுவாதலால் இது பகவானுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை யெனப்படுகிறது.
ஈசுவரனை அடைய விரும்புவோரும் ஸாதன மார்க்கத்தில் அபி விருத்தியைக் கோருவோரும் ஆசையாகிய வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்களாகார்.
7. நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித: 
து நியதஸ்ய கர்மண:-ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை, ஸந்ந்யாஸ: ந உபபத்யதே-துறத்தல் தகாது, மோஹாத் தஸ்ய பரித்யாக-மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல், தாமஸ: பரிகீர்தித:-தமோ குணத்தால் நேர்வதென்பர்.
பொருள் : நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
பருவத்தில் பழுத்த பழங்களை உதிர்த்து உலகுக்கு ஊட்டுவது பழம் உதிர் சோலையின் தியாகமாகும். அதற்காகப் பூத்துக் காய்த்துக் கனியாக்குவது அச்சோலையின் நித்திய கர்மமாகும். சோலையின் தியாகத்தை விரைவில் பயன்படுத்தவேண்டுமென்று எண்ணிய அறிவிலி காய்களை மரங்களினின்று பிடுங்குகின்றான். அது பலவந்தத்தில் செய்த தியாகமாகும். அங்ஙனம் பறித்த காய்கள் கனிதற்குப் பதிலாக வெம்பிப்போம். சுவையற்ற கனியும் முளைக்கப்போடத் தகுதியற்ற விதையும் அதன் பயனாகும். அறியாமையினால் செய்வித்த கர்மத் தியாகத்தின் விளைவு அது.
மனிதனுடைய பரிபாகத்துக்கு ஏற்றவாறு நித்திய கர்மம் உயர்கிறது. உண்பதும் உறங்குவதும் அறிவிலிக்கு நித்திய கர்மமாயிருப்பது போன்று விவேகிக்கு யக்ஞம், தானம், தபசு முதலியன நித்திய கர்மமாகின்றன. உடல் இருக்கும் பரியந்தம் நித்திய கர்மம் நடைபெறவேண்டும். ஏனென்றால் உடல் வாழ்வும் நித்திய கர்மமும் இணைபிரியாதவைகள். மேலோனை அது மேலும் மேலும் பரிசுத்தப்படுத்திக்கொண்டே வருகிறது. அவிவேகத்தால் அதை விடுவதால் கேடு விளையும். அக்ஞான இருள் இன்னும் அதிகரிக்கும். பணக்காரனைப் போன்று தானும் சுகஜீவனம் செய்ய வேண்டுமென்று கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோகுணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் அது போன்றது.
மனம் சச்சிதானந்தத்தில் லயமாகிற வரையில் ஒருவன் பகவந் நாமத்தை உச்சரிப்பதும், உலகக் காரியங்களைக் கவனிப்பதும் ஆகிய இரண்டையும் செய்து வரவேண்டும்.
8. து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஸபயாத்த்யஜேத்
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத் 
யத் கர்ம-எது செய்ய வேண்டிய கருமமோ, து:கம் ஏவ இதி-துன்பமாகக் கருதி, காய க்லேஸ பயாத்-உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால், த்யஜேத்-செய்யாமல் விடுவானேயானால், ஸ:-அவன். ராஜஸம் த்யாகம் க்ருத்வா-அவன் ராஜஸ தியாகம் செய்து, த்யாக பலம் ந லபேத் ஏவ-தியாகப் பயனை அடையமாட்டான்.
பொருள் : உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப்பயனை அடையமாட்டான்.
மெய் வருத்தமில்லாத மண்ணுலக வாழ்க்கையில்லை. உலகக் கடமைகளைச் செய்து வருத்தப்பட வேண்டாமென்றும், சந்நியாச ஆஸ்ரமம் எடுத்துக்கொண்டு பிறர் செய்யும் உபகாரத்தைப் பெற்று நிம்மதியாக சுகஜீவனம் செய்யலாமென்றும் தியாகம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போவது சிரமமென்றெண்ணிச் சிறுவன் ஒருவன் பள்ளிக்கூட வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவானாகில், அங்குப் படித்து முடித்தவன் அடைகிற பயனை அவன் அடையமாட்டான். அதாவது அவனுக்கு நல்லறிவும் மேலாம் படிப்பும் உண்டாகமாட்டா. பரிபூரணமடைந்தவன் செய்கிற கர்மத்தியாகம் மோக்ஷமாகிறது. ஆகையால் அதுவே தியாகபலன் எனப்படுகிறது. உழைப்புக்கு அஞ்சுபவனுக்கு அது கிட்டாது.
போர்க்களத்துக்கு யுத்த சன்னத்தனாக வந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று தியாகபுத்தி வருகிறது. உற்றாரைக் கொன்று துன்பமடைதல் வேண்டாமென்கிற மனப்பான்மை வருகிறது. வலிய வந்துள்ள அறப்போர் புரிவது அவனுடைய நித்திய கர்மமாகிறது. நெறிவழுவாத வேந்தனுக்கு உறவினரைவிட அறம் பெரியது. அறப்போரை அவன் புறக்கணிக்க எண்ணியது ரஜோ குணத்தினின்று உதித்த தியாகம். ஆகவே பகவான் அதற்குச் சம்மதம் கொடுக்கவில்லை.
9. கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத: 
அர்ஜுந நியதம் யத் கர்ம-அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை, கார்யம் இதி ஏவ-இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால், ஸங்கம் பலம் ச த்யக்த்வா - ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து, க்ரியதே-செய்தால், ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக: மத:-அதுவே சாத்விக தியாகம் எனப்படும்.
பொருள் : நியமத்துக் கிணங்கிய செய்கையை, இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.
தாமஸத் தியாகத்திலும் ராஜஸத் தியாகத்திலும் கர்மமே செய்யாது விட்டொழிக்கப்படுகிறது. சாத்விக தியாகத்திலோ கர்மம் நின்றுபோவதில்லை. கர்மம் முறையாக நடைபெறுகிறது. நித்திய கர்மம் உட்பட எல்லாக் கர்மங்களுக்கும் கர்மபலன் உண்டு. சாத்விக சாதகனோ கர்மத்துக்குத் தான் கர்த்தா என்று அபிமானிக்காது, கர்மத்தில் பற்றுவைக்காது, வினைப்பயனை விரும்பாது தன் கடமையென அதைச் செய்து வருகிறான். அத்தகைய மனநிலையே அமைதியையும் அந்தக்கரண சுத்தியையும் உண்டுபண்ணுகிறது.
மருத்துவ சாலையில் சிகிச்சை பெறுகிற நோயாளி மருத்துவ சாலையிலேயே இருக்கவேண்டும் என்ற பற்றுதல் உடையவன் அல்லன்; சிகிச்சை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வினைப்பயனை விரும்புபவனும் அல்லன். ஆயினும் அங்குத் தங்கியிருந்து தன் கடமையாகிய சிகிச்சை பெறுதல் என்ற கர்மத்தை அவன் முறையாகச் செய்கிறான். அவனே உண்மையில் நோயைத் தியாகம் பண்ணியவன் ஆகிறான். கர்மபலத் தியாகம் சாத்விக சாதகனுக்கு அத்தகையதாகிறது.
ஆனால் நோயினிடத்து நோயாளிக்குக் கசப்பு ஏற்படுகிறது. தனது நித்திய கர்மத்தை சாத்விக குணமுடைய தியாகி மேலான பாங்கில் கருதுகிறான். சுவாசிப்பது உயிர் வாழ்பவைகளுக்கு நித்திய கர்மமாகிறது. அவ் உயிர் வகைகளுள் ஆரோக்கியமுடைய மனிதன் முறையாக ஆழ்ந்து சுவாசிக்கிறான். ஆயினும் சுவாசிப்பதற்குத் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனிடத்தில்லை. உண்மையில் உடல் உணர்ச்சியின்றி உடல் வாழ்க்கை வாழ்பவனே நோயற்ற நிலையில் இருப்பவன் ஆகிறான். கடவுள் வழிபாடு. சமூக சேவை. தியானம் முதலியன நல்ல ஆத்மசாதகனது நித்திய கர்மங்களாகின்றன. அவைகளை அவன் ஒழுங்காகச் செய்கிறான். அப்படி வினையாற்றுதற்கிடையில் அவன் கர்மத்தைப்பற்றிய உணர்ச்சியில்லாதிருக்கிறான். ஆத்ம போதத்தில் அவன் நிலைத்திருக்கிறான். அந்த மனநிலையே சாத்விகத் தியாகமாகிறது.
அவன் பற்றற்றவன் என்பதை எத்தகைய மனப்பான்மை விளக்குகிறது? விடை வருகிறது :
10. ந த்வேஷ்ட்யகுஸலம் கர்ம குஸலே நாநுஷஜ்ஜதே
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஸய: 
ஸத்த்வஸமாவிஷ்ட: மேதாவீ-சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், சிந்நஸம்ஸய: த்யாகீ =ஐயங்களையறுத்த தியாகி, அகுஸலம் கர்ம-இன்பமற்ற செய்கையை, ந த்வேஷ்டி-வெறுப்பதில்லை, குஸலே ந அநுஷஜ்ஜதே-இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை.
பொருள் : சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.
சத்வ குணத்திலேயே உறுதியாக நிற்பவன் தெளிந்த மனமுடையவனாகிறான். தூயதும் தெளிந்ததுமாகிய உள்ளத்தில் ஞானம் உருவெடுக்கிறது. ஆத்ம சொரூபத்தையும் பிரகிருதி சொரூபத்தையும் அவன் உள்ளபடி உணர்கிறான். அக்காரணத்தை முன்னிட்டு அவன் மேதாவியென்று அல்லது பேரறிஞனென்று அழைக்கப்படுகிறான். அத்தகையவனுக்குக் கர்மமும் அகர்மமும் நன்கு விளங்குகின்றன. நிலைக்கண்ணாடி போன்றது அகர்மமாகிய ஆத்ம சொரூபம். பிம்பங்களைக் காட்டும்பொழுதும் காட்டாதிருக்கும்பொழுதும் கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. கர்மம் நடைபெறும் பொழுதும் நடைபெறாத பொழுதும் ஆத்ம சைதன்யம் தன்மயமாயிருக்கிறது. அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமை யொன்றும் வருவதில்லை. கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை. பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பிப்பதற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது. ஆத்ம சாக்ஷியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப்பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.
அர்ஜுனனது ஸ்வதர்மம் அறப்போர் புரிவதாம். உழைத்துப் பாடுபடுவது எல்லார்க்கும் ஏற்பட்டுள்ள தர்மம். இச்செயல்களைத் துன்பம் நிறைந்தவைகளாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்த பேரறிஞருக்கு அவைகளைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. அவைகளை வெறுக்காது, மனதை நடுநிலையில் நிறுத்தித் தம் கடமையை அவர்கள் முறையாகச் செய்கின்றனர். உண்டு, உடுத்துக் களித்திருப்பது பாமரர்களுக்கு இன்ப வினைகளாகின்றன. அவர்கள் அவைகளைப் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் சத்வம் நிறைந்த விவேகி அவைகளில் மகிழ்வுறுவது கிடையாது. இன்ப துன்ப வினைகளைச் சமனாக அவன் நினைக்கின்றான். அதுவே அவனது பற்றற்ற நிலைக்கு அறிகுறியாகும்.
பற்றற்றுக் கர்மம் செய்தற்குப் பதிலாகக் கர்மத்தை ஏன் அடியோடு விட்டு விடலாகாது? விடை வருகிறது :
11. ந ஹி தேஹப்ருதா ஸக்யம் த்யக்தும் கர்மாண்யஸேஷத:
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே 
ஹி தேஹப்ருதா-மேலும் உடம்பெடுத்தவனால், அஸேஷத: கர்மாணி-முழுதுமே செய்கைகளை, த்யக்தும் ந ஸக்யம்-விட்டுவிட முடியாது, ய கர்ம பலத்யாகீ-எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, ஸ: து த்யாகீ இதி அபிதீயதே-அவனே தியாகி யெனப்படுவான்.
பொருள் : (மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.
ஒருவன் ஆகாய விமானத்தில் ஊர்ந்து செல்லுகிறான். அதனுள் அமர்ந்திருக்கும் பரியந்தம் அவனுக்குப் பிரயாணி என்று பெயர். அவ் விமானம் அழகான சமவெளிக்கு மேலே பறக்கிறது; ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்துக்கு மேலே பறக்கிறது; மேகப் படலங்களைப் பொத்துக்கொண்டு போகிறது; மழையில் நனைகிறது; வெயிலில் காய்கிறது; கடலுக்கு மேலே வானத்தில் நீந்துகிறது; ஆங்கு மேலும் கீழும் ஆக இரண்டு இடங்களிலும் ஆபத்து உண்டு. விமானத்தின் உள்ளே இருக்கும் பிரயாணி இத்தனைவிதச் செயல்களுக்கும் உட்பட்டாக வேண்டும். அவனுக்கு விருப்பமில்லாத இடத்துக்கும் அவன் அஞ்சுகிற இடத்துக்கும் விமானம் செல்லாது இருக்கமுடியாது. பயணத்தின் திட்டப்படி அது போயாகவேண்டும். விமானத்தின் போக்கில் நிகழ்வனவற்றைப்பற்றிக் கவலையற்றவனாகப் பிரயாணி தன் அலுவலைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். தொல்லையை ஒழிப்பதற்கு அது ஒன்றே உற்ற உபாயம். உடல் வாழ்வு என்ற பயணத்தில் ஆத்மா அங்ஙனம் இருந்து பழகவேண்டும்.
தேகம் இருக்கும் வரையில் கர்மமும் உண்டு. மூச்சு விடுவதே கர்மம். சுவாசிக்காது யார் வாழ முடியும்? உண்பது கர்மம்; உறங்குவது கர்மம். ஆக, உடல் எடுத்தவனுக்குக் கர்மத்தை விடுதல் என்பது வெறும் பேச்சு. கர்மத்தை விடமுயலுபவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். மற்று, கர்மத்தைப் பற்றற்றுச் செய்யவேண்டும். விவேகி ஒருவனது விவேகத்துக்கு ஏற்றவாறு பற்றற்றுக் கர்மம் செய்தல் அமைகிறது. உடலில் பட்ட காயத்தை நாம் நன்கு கவனிக்கிறோம். அதை ஜாக்கிரதையாகக் கட்டி வைக்கிறோம். அதன் பொருட்டுப் பணச் செலவு செய்து மருந்து முதலியன போடுகிறோம். அப்படியெல்லாம் செய்வது அக்காயம் நிலைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல; காயத்தை ஒழித்தல் பொருட்டே அவ்வளவு கவனம் செலுத்துகிறோம். அதில் பற்றற்றிருந்து அதைப் பாங்கு படுத்துகிறோம். அவரவர் கர்மத்தை அங்ஙனம் பற்றற்றுச் செய்ய வேண்டும். கர்மத்தை மனிதன் நீத்துவிட முடியாது; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்னும் எண்ணத்தை நீத்துவிடவேண்டும். அப்படிச் செய்கின்றவனே தியாகி யாகின்றான். பற்றற்றவனுக்கு வினைப்பயன் இல்லை.
பின்பு பற்றுடையவனுக்கோ? விடை வருகிறது :
12. அநிஷ்டமிஷ்டம் மிஸ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் 
அநிஷ்டம் இஷ்டம் மிஸ்ரம் ச-வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என, த்ரிவிதம் கர்மண: பலம்-மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள், அத்யாகிநாம் ப்ரேத்ய பவதி-தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது, ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந -சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
பொருள் : வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
நரகப் பிராப்தியும் விலங்கு இனமாகப் பிறப்பதும் இன்னாதது அல்லது அனிஷ்ட கர்மபலனாகிறது. சுவர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இஷ்ட கர்மத்தின் பலன். பூவுலகப் பிராப்தியும், மக்களாகப் பிறத்தலும் கலப்புக் கர்மத்தின் பயனாகும். இனியது, இன்னாதது ஆகிய இரண்டும் சேர்ந்தது கலப்புக் கர்மம். கர்ம பலத்தில் பற்று வைக்கிறவர்களுக்குப் பிறவிகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. அவைகள் வாயிலாக சுகதுக்கங்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டும். கர்மபலனில் பற்று வைக்காதவர்களுக்குப் பிரபஞ்ச சம்பந்தமான இன்பமுமில்லை, துன்பமுமில்லை; பிறப்பும் இறப்பும் உண்டாவதில்லை. அவர்கள் முக்தியடைகிறார்கள்.
எடுத்த பிறவிகளுள் இது கடைசி ஜன்மம்; இத்துடன் பிறவியை ஒழித்துவிட்டு முக்தியடையும் நிலையில் இருப்பவர்களைச் சில அறிகுறிகளால் கண்டுகொள்ளலாம். அத்தகைய ஜீவன் முக்தர்கள் எப்பொழுதும் ஆத்ம திருப்தர்களாக இருக்கிறார்கள். நிழல் போன்று உடல் அவர்களைச் சார்ந்திருக்கிறது. அவ்வுடலின் மூலம் ஒழுங்காகக் கர்மம் நடைபெறுகிறது. ஆனால் அதை ஜீவன் முக்தர்கள் கருத்தில் வாங்கிக்கொள்ளார்கள்.
தியாகியல்லாதவர்கள் இனி எடுக்கப்போம் பிறவி எத்தகையது என்பதையும் இப்பொழுது இவ்வுலகிலேயே யூகித்துத் தெரிந்துகொள்ளலாம். தூங்கி எழுந்திருப்பது போன்றவை ஜனன மரணம். தூங்குகிற மனிதன் அதே சரீரத்தில் எழுந்திருக்கிறான். செத்தவன் புதிய சரீரத்தில் புதிய இடத்தில் எழுந்திருக்கிறான். படுக்கப்போம்பொழுது கெட்டவனாயிருந்தவன் தூங்கியெழுந்திருக்கும்போதும் கெட்டவனே. நல்லவனுடைய நிலைமையும் அத்தகையது. இங்கு இவ்வுலகில் இருக்கும் போதே நரகத்தில் இடர்ப்படுபவர் உண்டு; விலங்கு போன்று வாழ்பவர் உண்டு. சுவர்க்க வாழ்வை இங்கேயே காண்பவர் உண்டு. இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள மனுஷ நிலையில் இருப்பாரும் உளர். இதே அமைப்பு சரீரத்தை மாற்றும்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆக, இயல்புக்கு ஏற்ற உடல் அமைப்பு உண்டாகிறது.
கர்மத்துக்குத் தன்னைக் கர்த்தாவென்று நினைக்கிறவனுக்குக் கர்ம பலன் உண்டாகிறது. அவன் சுக துக்கங்களுக்கு ஆளாகிறான் உண்மையில் மனிதன் கர்மத்துக்குக் கர்த்தாவா? இக் கேள்விக்கு விடை வருகிறது :
13. பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம் 
மஹாபாஹோ-பெருந்தோளாய், க்ருதாந்தே ஸாங்க்யே-கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில், ஸர்வகர்மணாம் ஸித்தயே-எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு, ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி-ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன, மே நிபோத-(அவற்றை) என்னிடம் கேட்டுணர்.
பொருள் : எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.
சாங்க்ய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். கபில முனிவர் இயற்றியுள்ள சாங்கியம் வேறு. ஆறு சாஸ்திரங்களில் அது நான்காவது ஸ்தானம் பெறுகிறது. பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றிய கோட்பாடுகளை அது விளக்குகிறது. வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி கர்மம் செய்வதெல்லாம் விரைவில் ஒழுங்காகக் கர்மத்தை முடித்துக்கொண்டு கர்மாதீதத்தில் போவதற்கே யாம். கர்மசொரூபமாயுள்ள இயற்கையானது ஜீவாத்மாவுக்கு ஒரு பள்ளிக்கூடம் போன்று இருக்கிறது. அறிவு வேண்டுமென்கிற ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும். அங்கு வீண்காலம் கழிக்கலாகாது. ஒழுங்காகப் பயிற்சி பெறவேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும். கற்றபின் பள்ளிக் கூடத்தைவிட்டு வெளியில் வருவதுதான் மாணாக்கனது குறிக்கோள். பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே அவ்வுண்மையை அவன் தெரிந்துகொள்கிறான். மனிதன் கர்ம மயமான உலகில் இருக்கும்போதே கர்மத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எது எவ்விதத்தில் கர்மத்துக்குக் காரணமாகிறது என்பது இனிப் பகரப்படுகிறது :
14. அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் 
அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும், கர்தா ச-செயலை செய்பவன், ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள், விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).
பொருள் : அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.
ஒரு மோட்டார் வண்டி ஓடுகிறது. அதன் இயக்கத்துக்கு முகாமையாயிருப்பவைகள் எவை என்று தெரிந்துகொள்ளவேண்டும். அத்தகைய வண்டி ஒன்றைப் பூட்டுதற்கு முன்பு கணக்கற்ற ஆணிகள், வில்லைகள், தகடுகள், சக்கரங்கள். இரும்புச் சட்டங்கள் குவியல் குவியலாகத் தொழிற்சாலையில் வைத்திருப்பதைக் காணலாம். மரத்தில் ரப்பர் பால் இருக்கிறது. மண்ணினுள் பெட்ரோல் என்னும் எண்ணெய் இருக்கிறது. மண்ணின்மேல் நீர் இருக்கிறது. விண்ணில் காற்று இருக்கிறது. இனி, இவைகளை முறையாகப் பொருத்தியமைக்குமிடத்தே வண்டி யுண்டாகிறது. தொழிற்சாலை அதற்கு அதிஷ்டானம் அல்லது இருப்பிடம். தொழிற்சாலைக்குச் சொந்தக்காரன் அதற்குக் கர்த்தாவாகிறான். சக்கரங்கள், ஓட்டும் கருவி, நிறுத்தும் கருவி முதலியன அதன் இந்திரியங்கள் ஆகின்றன. அதற்கு விசைகொடுக்கும் பெட்ரோல் எண்ணெய் அதன் பிராணன் ஆகிறது. பலப்பல காரியங்களுக்கு அவ்வண்டியைப் பயன்படுத்தலாம். அதை ஓட்டும் சாரதி அதற்கு அதிஷ்டான தெய்வமாகிறான். இதே முறையில் தான் உடல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.
விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம், ஞானம் முதலியவைகளை விளக்குதற்கு இருப்பிடமாயிருப்பது உடல். ஆகையால் அது அதிஷ்டானம் எனப்படுகிறது. இன்ப துன்பங்களாகிய உபாதிகளை ஏற்றுக்கொண்டு அவைகளை அனுபவிக்கும் அகங்காரமே கர்த்தா எனப்படுகிறது. ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இவைகள் வெவ்வேறு இந்திரியங்களெனப்படுகின்றன. பிராணன், அபானன் முதலியவைகளின் பலவகைப்பட்ட செயல்கள் அதன்பின் குறிக்கப்படுகின்றன. பிராணனுடைய துணையின்றி ஒரு செயலும் நடைபெறாது. அந்த ராத்மாவாகிய தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு அதிஷ்டான தெய்வமாகிச் செயல்புரிகிறது.
15. ஸரீரவாங்‌மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: 
நர: ஸரீர வாக் ‌மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும், யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும், ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும், தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.
பொருள் : மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.
வெவ்வேறு காரணங்களைக் கொண்டு அமைத்துள்ள மோட்டார் வண்டியைக் கொலை, களவின் பொருட்டு ஒரு சாரார் எடுத்துச் செல்லலாம். ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னொரு சாரார் அவ்வண்டியைச் செலுத்தலாம். நோயாளிக்கு விரைவில் சிகிச்சை செய்வதற்கு அது உதவுகிறது. களியாட்டத்தில் வீண்பொழுது போக்குதற்கும் அது பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்குதற்கும் அதே வாகனம் உதவுகிறது.
கிட்டத்தட்ட அதே முறையில் உடலை நாம் பயன்படுத்துகிறோம். தர்ம÷க்ஷத்திரம் என்று இவ்வுடல் இயம்பப்படுகிறது. செய்கின்ற ஸத்கர்மங்கள் அனைத்துக்கும் ஐந்து ஹேதுக்களாலாகிய உடல் வாழ்வு பயன்படுகிறது. இதே உடலத்தைத் தேவாலயமாகப் பாராட்டிப் பயன்படுத்துபவரும் உளர். இத்தகைய செயல்களெல்லாம் தர்மத்துக்கு உடன்பாடானவைகள். ஆகவே அவைகள் நியாயமானவைகள். அதர்மமே வடிவெடுத்து வந்து அடாத செயலைச் செய்தற்கும் இவை காரணங்களாகின்றன. இவ் ஐந்தின் துணையின்றி நலம் கேடு ஆகிய எச்செயலும் நடைபெறுவதில்லை.
உடலின் மூலம் நிகழ்கின்ற செயல்களைச் சாதாரண வாழ்க்கை முறையில் திரிகரணங்களைக்கொண்டு செய்தவைகள் என்கிறோம். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் கரணங்களாகின்றன. எண்ணுவதும், பேசுவதும், செய்வதும் ஒவ்வொன்றும் தன்னளவில் கர்மமாகிறது. எண்ணத்தால் நிகழும் கர்மங்கள் எண்ணிறந்தவை.
இனிக் கர்ம நடைமுறைக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :
16. தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:
பஸ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஸ்யதி துர்மதி: 
து ஏவம் ஸதி-இங்ஙனமிருக்கையில், ய: அக்ருதபுத்தித்வாத்-எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை, தத்ர கேவலம் ஆத்மாநம்-அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய, ஆத்மாவை, கர்தாரம் பஸ்யதி-கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ,
ஸ துர்மதி: ந பஸ்யதி-அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
பொருள் : இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
இக்கோட்பாட்டை அறிதற்கும் மோட்டார் வண்டி ஒன்றை அமைப்பதையே மீண்டும் உபமானமாக எடுத்துக்கொள்ளலாம். மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களும் அவ்வண்டியமைப்புக்கு இன்றியமையாதவைகளாகின்றன. வண்டிக்குத் தேவையானவைகளெல்லாம் பூமியினின்று வந்தவைகள். அவைகளை யெல்லாம் கொடுத்து உதவியது பூமி. பிறகு வண்டி ஓடுதற்கு நிலைக்களமாயிருப்பதும் பூமி. ஆனால், மோட்டார் வண்டியின் செயல் ஒன்றிலும் பூமி சம்பந்தப்பட்டதல்ல. அது எப்பொழுதும் தன்மயமாயிருக்கிறது. வண்டி ஓடும் விஷயத்தில் பூமியைக் கர்த்தாவென்று கருதுவது பொருந்தாது.
எது கர்மம் செய்கிறதோ அது கர்த்தா. பிரகிருதியின் கூறுபாடுகள் கர்மம் செய்கின்றன. மேலே சொன்ன ஐந்தும் பிரகிருதியினுடைய கூறுபாடுகள். ஐந்து காரணங்களில் ஒன்றாகிய அந்தராத்மா அல்லது தெய்வம் பிரகிருதியோடு சேர்ந்ததா அல்லது ஆத்ம சொரூபமா என்ற கேள்வி எழுகிறது. எங்கும் வியாபகமாகிய ஆகாசத்துக்கு அடுத்தபடியில் இருப்பது வாயு. அது கிட்டத்தட்ட ஆகாசம் போன்றது என்றாலும் அது ஆகாசம் ஆகாது. ஆகாசம் அசைவற்றது. வாயு அசையும் தன்மையது. இங்குத் தெய்வம் என்று சொல்லுவது சித் ஆபாசனாகிய ஜீவாத்மா. அது சேதனம் போன்று தோன்றுகிறது. உண்மையில் அது ஜடமாகிய பிரகிருதியே. ஆத்மாவின் சன்னிதான விசேஷத்தால் பிரகிருதி வேலை செய்கிறது. சித் ஆகாசத்தில் அது தோன்றி, நின்று பிறகு நீங்குகிறது. ஆத்மாவோ செயலற்றது. அது சுத்த சைதன்யம். மாயாசக்தியாகிய பிரகிருதி அதை ஆரோபித்து அதன்மீது தோன்றிக்கொண்டிருக்கிறது. அதனால் ஆத்ம சொரூபத்துக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. கர்மத்துக்கு அப்பாற்பட்டுள்ள சுத்த சைதன்யம் அல்லது பேரறிவு மனிதனது எதார்த்த சொரூபம். புத்தி தெளிவடையாதவனுக்கு இது விளங்குவதில்லை. ஆகையால் அவன் உண்மையைக் காண்கிறானில்லை.
17. யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே 
யஸ்ய அஹங்க்ருதோ பாவ ந-எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ, யஸ்ய புத்தி ந லிப்யதே-பற்றுதல்கள் அற்று மதியுடையவன், ஸ: இமாந் லோகாந்-அவன் இந்த உலகங்கள் அனைத்தையும், ஹத்வா அபி ந ஹந்தி ந நிபத்யதே-கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்.
பொருள் : நான் எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.
தன்னைக் கர்த்தாவென்று கருதுவதிலும், அகங்காரம் கொள்ளுதலிலும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் காட்டுகிறான். நாடக மேடையில் ஒருவன் கொலை புரிபவன் போன்று நடிக்கிறான். மற்றொருவன் கொலையுண்பவனாக நடிக்கிறான். மற்று, இதே செயல் உலகில் உண்மையாக நிகழ்கிறது. பாசாங்காகச் செய்த கர்மம் அகங்காரத்தையோ கர்த்ருத்வத்தையோ உண்டு பண்ணவில்லை. வாஸ்தவத்தில் நிகழ்ந்த கொலைச் செயலானது அதில் சம்பந்தப்பட்டவர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தது. இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று கூடியது ஞானியின் செயல். போர்க்களத்தில் அர்ஜுனன் தன் பாட்டனாராகிய பீஷ்மரைக் கொன்றான். ஆயினும் கொன்றவனாக அவன் தன்னைக் கருதவில்லை. ஏனென்றால் அகங்காரமும் பற்றுதலும் அவனுடைய மனதைவிட்டு அகன்றுவிட்டன. பீஷ்மர் கொல்லப்பட்டவராகத் தம்மைக் கருதவில்லை. அணிந்திருந்த சட்டையைப் பலவந்தமாகக் கிழித்து எறிந்ததற்கு ஒப்பாயிற்று அவர் உடலைக் களைந்த செயல்.
கண்ணாடியில் ஒருவனுடைய பிம்பம் தோன்றி ஆடுகிறது. அத்தோற்றத்துக்கும் ஆட்டத்துக்கும் கர்த்தா கண்ணாடியல்ல. இனி, அந்தப் பிம்பம் கண்ணாடியில் பதிந்திருப்பதும் இல்லை. பிம்பத்தை விளக்குதற்கிடையில் கண்ணாடி பற்றற்றிருக்கிறது.
ஆத்ம சைதன்யத்தின்மீது பிரகிருதியின் செயல்களெல்லாம் தோன்றுகின்றன. அதனால் ஆத்மா ஒரு செயலும் செய்வதன்று. அப்பேரறிவு பிரகிருதியை விளக்கியதால் அது பிரகிருதியில் பந்தப்பட்டதுமல்ல. தனது நிஜசொரூபமாகிய சைதன்யத்தில் உறுதிபெற்றிருப்பவன் உடலும் இந்திரியங்களும் செய்கின்ற செயலிலே கட்டுண்டு போவதில்லை. கொல்லுதல் முதலியன பிரகிருதியின் வியவகாரங்களேயாம்.
புருஷன் யாதொரு காரியத்தையும் செய்யாது சலனமற்றுக் கிடக்கிறான் என்றும், பிரகிருதியே சகலத்தையும் செய்துவருகின்ற தென்றும், புருஷன் வெறும் சாக்ஷிமாத்திரமாகத்தானிருக்கிறானென்றும் சாங்கியதர்சனம் கூறுகின்றது. மேலும், பிரகிருதியும் புருஷனில்லாது எதனையும் செய்யவியலாது என்றும் அது கூறுகின்றது.
18. ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ: 
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா-அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், த்ரிவிதா கர்மசோதநா-இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன, கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித:-கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும், கர்மஸங்க்ரஹ:-கர்மத்தின் அமைப்பு ஆகும்.
பொருள் : அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.
அறிவு அல்லது ஞானம் என்பது இவ்வுலக சம்பந்தமான ஞானம். அறியப்படுபொருள் அல்லது ஞேயம் என்பது பொதுவாயுள்ள உலகப் பொருள்கள். அறிபவன் அல்லது பரிக்ஞாதா என்பவன் உபாதிகளோடு கூடியுள்ள ஜீவன். இம்மூன்றும் சேர்ந்து திரிபுடி எனப்படுகிறது. ஒன்று உள்ள இடத்தில் மற்ற இரண்டும் இருக்கும். அதாவது அறிபவன் ஒருவன் இருந்தால் அறிவு என்னும் இயல்பு அவனுக்குரியதாகிறது. அத்தகையவன் எதை அறிகிறான் என்ற கேள்வி வருகிறது. முக்கோணம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதுபோன்று திரிபுடியும் இணைந்திருக்கிறது. இம்மூன்றினுடைய சேர்க்கையால் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் கர்மம் நடைபெறுகிறது. கர்மத்தில் இனியது எது, இன்னாதது எது என்ற பாகுபாடு திரிபுடியால் ஏற்படுகிறது.
கருவியில் அகக்கருவி, புறக்கருவி என இருவகை உண்டு. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய இவை அந்தக்கரணம் அல்லது அகக்கருவி. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்தும் புறக்கருவிகளாம். இவைகள் ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆகப் பரிணமிக்கின்றன. கர்மம் செய்பவனாகிய ஜீவனே கர்த்தாவாகிறான். இங்ஙனம் ஞானமும் கர்மமும் ஜீவனிடத்து இணைபிரியாது அமைந்திருக்கின்றன. ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துதற்கு ஞானமும் கர்மமும் இன்றியமையாதவைகள். படிப்பும் விளையாட்டும் சேர்ந்திருந்தால்தான் சிறுவன் ஒருவன் முன்னேற்றமடைய முடியும். அவனது உடலும் உள்ளமும் சேர்ந்தே வளரவேண்டும். ஜீவாத்மாவோ ஞான அனுபவம் இருக்கிறவளவு கர்மத்தைச் செவ்வையாகச் செய்கிறான். முயன்று வினையாற்றும்பொழுது அது ஞான அனுபவத்தை உண்டுபண்ணுகிறது. ஆக, ஞான திரிபுடியும் கர்ம திரிபுடியும் அவனுக்குத் தேவை.
ஜீவன் பெறுகிற ஞானத்திலும், செய்கின்ற கர்மத்திலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாட்டைக் காண்கிறோம். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் யாது? விடை வருகிறது :
19. ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குணபேதத:
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி 
குணஸங்க்யாநே-குணங்களை யெண்ணுமிடத்தே, ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச-ஞானம், கர்மம், கர்த்தா, குணபேதத:-இவை குண பேதங்களால், த்ரிதா ஏவ-மும்மூன்று வகைப்படும் என்று,
ப்ரோச்யதே-சொல்லப் படுகின்றன, தாநி அபி யதாவத் ச்ருணு-அவற்றையும் உள்ளபடி கேள்.
பொருள் : குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.
ஆறு சாஸ்திரங்களுள் சாங்க்ய சாஸ்திரம் நான்காவது ஸ்தானம் பெறுகிறது. இது கபில முனிவர் இயற்றியது. பிரகிருதி தத்துவங்களை விளக்குதற்கு இது முடிவான பிரமாணம். ஆகையால் குணங்களின் பாகுபாடுகளை இந்நூலினின்றே தெரிந்துகொள்ளவேண்டும். பல புருஷர்கள் இருப்பதாக சாங்க்ய சாஸ்திரம் சொல்லுகிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை சாங்க்ய சாஸ்திரம் சொல்லுவதில்லை. பரபிரம்மத்தை அறிதற்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமல்ல. அதற்கு வேதாந்த சாஸ்திரமே பிரமாணமாகிறது. முக்குணமயமாயுள்ள இயற்கைத் தத்துவங்களுக்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமாகிறது. அவைகளை உள்ளபடி கேள் என்று பகவான் பகர்வது யுக்திக்கும் அனுபவத்துக்கும் அவைகள் ஒவ்வும் என்பதாம்.
அதிகாரி பேதம் என்பது முக்கியமானதொரு கோட்பாடாகும். உத்தமம், மத்திமம், அதமம் என்று அதிகாரியின் பேதம் பிரித்தெடுக்கப்படுகிறது. தலைமாணாக்கன், இடைமாணாக்கன், கடைமாணாக்கன் என்பது இதுவே. உத்தம அதிகாரிக்குச் சிறிது புகட்டினாலும் உண்மை விளங்குகிறது. அவனுக்கு மௌனோப தேசம் ஒப்பற்ற உபதேசமாகிறது. கீழ்நிலைக்குப் போகப் போக உபதேசம் வெவ்வேறு வடிவெடுத்தாகவேண்டும். பின்பு, புகட்டுகின்றவனிடத்து வல்லமையிருந்தால் மிக மந்த அதிகாரிக்கும் ஓரளவு உண்மையைப் புகட்டலாம்.
20. ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம் 
ஏந விபக்தேஷு-எந்த ஞானத்தினால் தனித்தனியான, ஸர்வபூதேஷு-உயிர்கள் அனைத்திலும், அவிபக்தம் அவ்யயம் ஏகம் பாவம்-பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை, ஈக்ஷதே - காணுகிறானோ, தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்தி-அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி.
பொருள் : பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.
பிரகிருதியின் கூறுகள் வேறுவேறாய்ப் பிரிந்துள்ளன. சராசரங்களனைத்தும், ஜட சேதனங்களனைத்தும் மாயா காரியங்களே. அவைகளுக்கெல்லாம் ஆதாரமாயிருப்பது பரமாத்மா. அது ஏக வஸ்து. ஆகாசத்தைப் போன்று அது பிளவுபடாதது. ஜகத் அதனிடத்திருந்து தோன்றி வருவதால் அது குறைவுபடுகிறதில்லை. ஏனென்றால் அது அகண்ட வஸ்து; கூடுதல் குறைதல் என்பது அதற்கு இல்லை. ஆகையால் அது அழியாதது. ஆகாசமானது பாண்டங்களில் பிளவு படுவதில்லை. அங்ஙனம் வெவ்வேறு பூதத்திடத்து ஆத்மா வெவ்வேறு ஆத்மாவாக வடிவெடுக்கவில்லை. துவைதமல்லாத இந்த ஆத்மாவை உள்ளபடி அறிவது சாத்விக ஞானமாம்.
காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும்கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.
21. ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம் 
து யத் ஜ்ஞாநம்-ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக, ஸர்வேஷு பூதேஷு-உயிர்களனைத்திலும், ப்ருதக்விதாந் நாநாபாவாந்-வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள், ப்ருதக்த்வேந வேத்தி-பிரித்துக் காணும், தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்தி-அந்த ஞானம் ராஜசம் என்றுணர்.
பொருள் : உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.
ஒவ்வொரு தேகத்திலும் ஒரு தனி ஆத்மா இருக்கிறதென்றும், அதற்கு அலாதி லக்ஷணங்கள் இருக்கின்றன வென்றும் அறிவது ராஜஸ அறிவு. பொன் தாதுவைப் பூமியில் வெவ்வேறு பிரதேசங்களில் வெட்டி யெடுக்கலாம். தாதுவில் படிந்துள்ள அழுக்கு தேசத்துக்கு ஒருவிதமாயிருக்கலாம். அவ் அழுக்குகளை யெல்லாம் நீக்குதல் முறை. அழுக்கு நீங்கப்பெற்ற பின் தூய தங்கம் ஒரே பாங்குடையது. இது இன்ன தேசத்துத் தங்கம் என்ற வேற்றுமை போய்விடுகிறது. உபாதிபேதத்தால் ஆத்மாக்கள் பலவாகத் தென்படுகின்றன. உபாதிகளுக்கு முதன்மை கொடுப்பது ரஜோகுண அறிவின் இயல்பு. உபாதிகள் என்ற அழுக்கை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கிற சுத்த சைதன்யம் அல்லது ஆத்ம சொரூபம் யாண்டும் ஒன்றே என்பது விளங்கும். கனவு இல்லாத ஆழ்ந்த உறக்கத்துக்கு சுழுத்தி என்று பெயர். ஆங்கு வெவ்வேறு பிரக்ஞைகள் இல்லை. வேற்றுமையைக் கடந்துள்ள அந்நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒற்றுமையை உணர அது உதவும்.
22. யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம் 
து யத் ஏகஸ்மிந் கார்யே-ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை, க்ருத்ஸ்நவத் ஸக்தம்-அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், தத் அஹைதுகம்-யுக்திக்கு பொருந்தாததும், அதத்த்வார்தவத்-உண்மையில் அறியாததும், அல்பம் ச-அற்பத் தன்மை உடையதும், தாமஸம் உதாஹ்ருதம்-தாமசமென்று கூறப்படும்.
பொருள் : காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.
பஞ்ச பூதங்களால் ஆகிய தேகத்தை ஆத்மாவென்று கருதுபவர் இருக்கின்றனர். கடவுள் வழிபாட்டுக்கு விக்கிரகம் துணைபுரிகிறது. கல்லால் அல்லது மரத்தால் செய்த விக்கிரகத்தையே கடவுளாக நினைப்பவர் உளர். அந்த விக்கிரகம் சிதைவுபட்டுப் போனால் கடவுள் அழிந்துபோய்விட்டார் என்பது அத்தகையவர் நம்பிக்கையாகும். ஒரு காரியத்தை முழுதுமென்று பற்றிக் கொள்ளுதற்கு இது சான்று ஆகும். தான் தேகத்தைவிட மேலானவன் என்பதையும், கடவுள் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் மந்த புத்தியுள்ள அம்மனிதன் அறியான். விக்கிரகமானது கடவுளுடைய சொரூபத்துக்கு வெறும் புறச் சின்னமாகிறது. கடவுள் அவ்வடிவத்தில் அடங்கியவர் அல்லர். புல்லறிவாளர்க்கு இது விளங்குகிறதில்லை. தமோ குணத்தில் உதித்துள்ள அவ்வறிவை ஆராய்ந்து பார்த்தால் அது யுக்திக்குப் பொருந்தாதது என்பது விளங்கும். யுக்திக்கு அது முற்றிலும் முரண்பட்டது. உண்மைக்கும் அப்புல்லறிவுக்கும் வெகுதூரம். நன்மை ஒன்றும் அவ்வறிவினின்று விளைவதில்லை. ஆக, அது அற்பமானதென்று இயம்பப்படுகிறது.
23. நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே 
யத் கர்ம-எந்த செய்கை, நியதம் ஸங்கரஹிதம்-விதிப்படி பற்றுதல் இன்றி, அபலப்ரேப்ஸுநா-பயனைக் கருதாமல், அராகத்வேஷத:-விருப்பு வெறுப்பின்றி, க்ருதம்-செய்யப் படுகிறதோ, தத் ஸாத்த்விகம் உச்யதே-அது சாத்விக மெனப்படும்.
பொருள் : பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை, சாத்விக மெனப்படும்.
சுவாசிப்பது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கர்மமாகிறது. ஆயினும் அது விருப்பு வெறுப்பு அற்றுச் செய்யப்படுகிறது. ஒருவனுக்கு நியமிக்கப்பட்டுள்ள கர்மமே அவனுடைய நித்திய கர்மமாகிறது. நித்திய கர்மம் மனபரிபாகத்துக்கு ஏற்றபடி மாறுகிறது. கணிதத்தில் கூட்டல் கழித்தல் போடுவது புதிதாகப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கும் சிறுவன் ஒருவனுக்கு நித்திய கர்மமாகும். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கனுக்கு அத்தகைய கணக்குப்போடுவது நித்திய கர்மமாகாது. அவனது வகுப்புக்கேற்ற மேலான கணக்குகளை அவன் போடவேண்டும். அதுபோன்று அவரவர் பரிபாகத்துக்கு ஏற்றபடி சமுதாயத்தில் எல்லார்க்கும் கடமையுண்டு. அறப்போர் புரிந்து தீமையைக் களைந்து நலத்தைக் காப்பாற்றுவது அர்ஜுனனுக்கு நியமிக்கப்பட்ட கர்மமாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகைய மேலான கடமையுண்டு. அதை முறையாகச் செய்யவேண்டும்; சுவாசிப்பது போன்று இடைவிடாது செய்யவேண்டும். பின்பு, அதில் பற்றுவைக்காது செய்யவேண்டும். பற்று அற்றவன் தன்னை எக்கர்மத்துக்கும் கர்த்தாவென்று எண்ணுவதில்லை; வெறும் கருவியென உணர்கிறான். அது சாத்விகமான கர்மமாகும்.
சாத்விக இயல்புடையவன் செய்யும் ஆத்ம சாதனங்களை ஆடம்பரமாக மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதில்லை. கூடிய வரையில் தனியாக அவன் அவைகளைச் செய்து முடிக்கிறான். இரவில் மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கொசு வலைக்குள் உட்கார்ந்துகொண்டு அமைதியாகத் தியானம் செய்கிறான்.
24. யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந:
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம் 
து யத் கர்ம-ஆனால் எந்த செயல், புந: காமேப்ஸுநா-விருப்பங்களுக்கு வசப்பட்டவனால், வா ஸாஹங்காரேண-அல்லது அகங்காரமுடையவனால், பஹுலாயாஸம்-செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை, தத் ராஜஸம் உதாஹ்ருதம்-அது ராஜசம் எனப்படும்.
பொருள் : விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.
ஆசையில் இரண்டுவிதமுண்டு. ஒன்று மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துணைபுரிவது. அருள் தாகம், சீலத்தில் விருப்பம், பரோபகாரச் சிந்தனை முதலியன வேண்டப்படும் ஆசைகளாகின்றன. ஆனால் மனிதனை உலக பந்தத்தில் மேலும் ஆழ்த்தும் கீழான ஆசைகளை அகற்றவேண்டும். முறையாக, அளவாகப் பணம் சம்பாதிப்பதும் செலவிடுவதும் திரவிய யக்ஞமாகும். ஆனால் பொருந்தாத வழிகளில் மனிதன் பணம் சம்பாதிக்கும் யந்திரமாய் மாறிவிடலாகாது. அப்பேராசையானது அவனிடத்திருக்கும் மனுஷத்தன்மைகளையெல்லாம் பாழாக்குகிறது.
சரீரம் உடைத்திருப்பதே ஒருவித அகங்காரம். அதை சுகபோகத்துக்கென்றே வைத்திருப்பது, அதை அலங்கரிப்பது, கொழுக்கச் செய்வது முதலியன கொடிய அகங்காரமாகும். கிடைப்பதற்கு அரிய மானுடப் பிறவி அதனால் அனர்த்தமாய்ப் போகிறது. தனக்கு நிகரானவர் யார் இருக்கிறார் என்ற எண்ணத்துடன் உடலை வளர்ப்பவருடைய தடித்த அகங்காரம் ரஜோகுணத்திலிருந்து உண்டானது. சரீரம் ஈசனுடைய ஆலயம் என்ற எண்ணத்தால் அதை வெல்லவேண்டும்.
துஷ்ட அகங்காரம் என்பது யாது? என்னைத் தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது; என்னிலும் மேம்பட்டவர் யார்? என்று சொல்லுகிற அகங்காரந்தான்.
25. அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே 
யத் கர்ம அநுபந்தம்-எந்தச் செய்கையின் பின்விளைவையும், க்ஷயம்-அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், ஹிம்ஸாம்-துன்பத்தையும், பௌருஷம் ச-செய்வானது திறமையையும், அநவேக்ஷ்ய-கருதாமல், மோஹாத் ஆரப்யதே-அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ, தத் தாமஸம் உச்யதே -தாமச மெனப்படும்.
பொருள் : செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.
தமோகுணம் நிறைந்த மனிதனுக்குத் தான் தொடுத்த கர்மத்தினின்று விளைவது நன்மையா, கேடா என்று எண்ணிப்பார்க்கும் நல்லறிவு இல்லை. உடலின்கண் உள்ள வலிவு நஷ்டமும், பொருள் நஷ்டமும், ஆயுள் நஷ்டமும் சேர்ந்து உண்டாகும் என்பது அறிவின்மையில் ஆழ்ந்திருப்பவனுக்கு விளங்காது. அவனுடைய முயற்சி தனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் துன்பத்தை உண்டு பண்ணும் தன்மையது. தான் படைத்துள்ள திறமையானது தான் எடுத்துக்கொண்டுள்ள கர்மத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான். விவேகமின்மையே அதற்குக் காரணமாகும்.
மிகுந்த தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள். கள்ளங் கபடமற்ற மனதையுடையவராயிருந்தால் கடவுள் காட்சி கிடைக்கும். அவ்வித எளிய மனதை யுடையவர்க்கே கடவுள் தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது வழக்கம். ஆனால் எளிமை, உண்மை இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக் கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும் உண்டு. பக்தனாக இருக்கவேண்டும்; ஆனால் அதன்பேரில் மூடனாக இருக்கக்கூடாது. எப்பொழுதும் மெய்ப்பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்தியத்திலிருந்து அநித்தியத்தையும் அகற்றுவதற்காக மனதிலே விசாரணை செய்து பார்க்கவேண்டும். பிறகு அநித்தியத்தை அகற்றிவிட்டு நித்திய வஸ்துவின்மீது மனதை நிறுத்த வேண்டும்.
ஞானத்தையும் கர்மத்தையும் பாகுபடுத்தியான பிறகு பகவான் இனி கர்த்தாவைப் பாகுபடுத்துகிறார்.
26. முக்தஸங்கோऽநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே 
முக்தஸங்கோ-பற்றற்றவனாகவும், அநஹம்வாதீ-நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும், த்ருத்யுத்ஸாஹஸமந்வித:-உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும், ஸித்தி அஸித்த்யோ நிர்விகார:-வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும், கர்தா ஸாத்த்விக உச்யதே-உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.
பொருள் : நசைக ளற்றான், நானென்ப தற்றான், உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.
எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான். எனவே அவன் பற்று நீங்கியவன் ஆகிறான். உடல் தன்னுடையது என்பது அல்லாது அது ஈசனுடைய ஆலயமென்று சாதகன் கருதுகிறான். அவ்வுடலின் மூலம் நிகழ்கின்ற கர்மங்களுக்குத் தான் பொறுப்பாளன் அல்லன்; அது ஈசன் செயல் என்று அவன் உறுதியாக உணர்கிறான். ஆதலால் அவனிடத்து அகங்காரமில்லை. தன்னை பகவானுடைய தொண்டன் என்று கருதுகிறபடியால் தொடுத்த கர்மங்களில் அவனுக்கு உறுதியும் ஊக்கமும் உண்டாகின்றன.
பற்றுடையார் வெற்றியில் மகிழுறவும், தோல்வியில் துன்புறவும் செய்கின்றனர். கடவுளுடைய செயல் என்று எண்ணுபவன் கர்மத்துக்குக் கர்த்தாவாகத் தோன்றுகிறானெனினும், மனத்தினுள் எல்லாம் ஈசன் செயல் என்ற திடநம்பிக்கையிருப்பதால் அவன் நிர்விகாரியாக, மனதின்கண் வேறுபாடு அடையாதவனாக இருக்கிறேன்.
கள்ளங் கபடமற்ற மனமிருந்தால் ஈசுவரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல, கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன.
27. ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோऽஸுசி:
ஹர்ஷஸோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: 
ராகீ-வேட்கையுடையோன், கர்மபலப்ரேப்ஸு-செய்கைப் பயன்களை விரும்புவோன், லுப்த:-லோபி (பேராசை உள்ளவன்), ஹிம்ஸாத்மக:-இடர் செய்வோன், அஸுசி:-தூய்மை யற்றோன், ஹர்ஷஸோகாந்வித:-இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன், கர்தா ராஜஸ: பரிகீர்தித:-இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்
பொருள் : வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.
ஏதேனும் ஒருவிதத்தில் பிறர் பொருளைத் தன்னுடையதாக்கிக்கொள்ள முயலுபவன் உலுத்தன் அல்லது உலோபியாகிறான். அதன் பொருட்டு மற்றவர்களைத் துன்புறுத்தவும் அவன் ஆயத்தமாயிருக்கிறான். அத்தகையவன் எண்ணுவதிலும், பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக்கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை. விரும்பியது வந்தமையுங்கால் அவன் விரைவில் மகிழ்வடைகிறான். வேண்டாதது வந்தமையுங்கால் அவன் விரைவில் சோகித்துத் துன்பப்படுகிறான்.
ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்வம் (கர்த்தா என்று உணரும் பான்மை) இத்தகையதாம்.
வீண் கர்வம் பிடித்தவனாகயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென அது நினைத்துக்கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச் சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும் மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.
28. அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஸடோ நைஷ்க்ருதிகோऽலஸ:
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே 
அயுக்த:-கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன், ப்ராக்ருத:-அறிவு முதிர்ச்சி அடையதவன்,
ஸ்தப்த:-கர்வமுடையவன், ஸட:-வஞ்சகம் உடையவன், நைஷ்க்ருதிக:-பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன், விஷாதீ-கவலை கொண்டவன், அலஸ:-சோம்பேறியும், தீர்கஸூத்ரீ ச-காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், கர்தா தாமஸ உச்யதே - இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்
பொருள் : யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.
அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் உடைய மனது யோகத்துக்கு உரியது. அத்தகைய நல்லியல்பு ஒன்றும் இல்லாத மனது ஈண்டு உரைக்கப்படுகிறது. புத்தி வளர்ச்சியடையாது பாமரனாகவும் பாலன் போன்றும் இருப்பவன் பிராகிருதன். வணங்க வேண்டிய இடத்தில் வணங்காதிருப்பவன் முரடனாகிறான். வேலை செய்தற்கு விருப்பமில்லாது தன் வல்லமையை யெல்லாம் மறைத்து வைத்துக்கொள்பவன் வஞ்சகனாகிறான். பிறருக்கிடையில் வேண்டுமென்ற பகைமையை உண்டுபண்ணுபவன் பழிகாரனாகிறான். செய்ய வேண்டியதை ஒன்றும் செய்யாதிருப்பவன் சோம்பேறி. மனம் தளர்ந்து யாண்டும் துன்பம் துய்க்கும் தன்மையன் ஒருவன் அரும்பெரும் செயலுக்கு அருகன் ஆகான். துன்பப்படுபவனிடத்திருந்து பேராற்றல்களெல்லாம் மறைந்துபட்டுப் போகின்றன. தற்காலிகமாகத் துன்பத்தின் வசப்பட்டிருந்த அர்ஜுனனைத் தட்டி யெழுப்புதற்கே கீதா உபதேசம் நிகழ்வதாயிற்று. ஒரே நாளில் முடிக்கவேண்டிய வேலையை ஒரு மாதத்துக்கு நீட்டிக்கொண்டு போகிறவன் காலத்தை வீணே கடத்துபவன் ஆகிறான். அதனால் அவனது வாழ்க்கைப் பயன் குன்றுகிறது.
ஒரு செம்படவன் ஆற்றில் வலையை வீசி அநேக மீன்களைப் பிடித்தான். சில மீன்கள் வலைக்குள் அசைவற்றிருந்து வெளியே போகக் கொஞ்சமேனும் பிரயத்தனப்படாமலிருந்தன. வேறு சில மீன்கள் பிரயத்தனப்பட்டுத் துள்ளிக் குதித்தன. ஆனால் வெளியே போக முடியவில்லை. இன்னும் சில மீன்கள் எப்படியோ வலையைவிட்டுத் தப்பித்துக்கொண்டு போய்விட்டன. உலகத்திலுள்ள மனிதர்களும் இவ்வாறு மூவகையினராக இருக்கின்றனர். 1. முக்தியடையப் பிரயத்தனப்படாது பந்தப்பட்டிருப்பவர்கள் 2. பிரயத்தனப்படும் முமுக்ஷúக்கள் 3. விடுதலையடைந்த முக்தர்கள்.
அறிவும் உறுதியும் பெறுகிற படித்தரங்கள் இனி விளக்கப்படுகின்றன:
29. புத்தேர்பேதம் த்ருதேஸ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஸ்ருணு
ப்ரோச்யமாநமஸேஷேண ப்ருதக்த்வேந தநஞ்ஜய 
தநஞ்ஜய-தனஞ்ஜயா, குணத: ஏவ-குண வகையால், புத்தே: த்ருதே: ச-புத்திக்கும் மன உறுதிக்கும், த்ரிவிதம் பேதம்-மூன்று விதமான வேறுபாட்டை, அஸேஷேண ப்ருதக்த்வேந-முழுமையாகவும் பகுத்தும், ப்ரோச்யமாநம் ஸ்ருணு-உரைக்கிறேன், கேள்.
பொருள் : குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.
திக்விஜயம் செய்தபொழுது அர்ஜுனன் தேவலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தனத்தையெல்லாம் ஜயித்தானாதலால் அவன் தனஞ்ஜயன் என்ற பெயர் பெற்றான். யாருக்கும் பயன் படாது ஓர் இடத்தில் அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைப் பயன்படுகிற இடத்துக்கு மீட்டெடுத்துக்கொண்டு வருவது அரசனுடைய கடமையாகும்.
செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டுந் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் பகரப்படுகிறது. அத்தகைய புத்தியினிடத்து மூன்றுவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன. செய்யவேண்டிய காரியத்தைத் தளர்வுறாது திட்பத்துடன் செய்வது உறுதி அல்லது திருதி என்று பெயர் பெறுகிறது. அதுபோன்ற மனவலிவின்கண் மூன்று படித்தரங்கள் அமைந்திருக்கின்றன.
உப்பினாலும் துணியினாலும் கல்லாலும் செய்யப்பட்ட மூன்று வகைப் பதுமைகள் இருக்கின்றன. அவைகளைத் தண்ணீரில் அமிழ்த்தினால் முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது தன் உருவத்துடனிருந்தே நிறையத் தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக்கொள்ளும். மூன்றாவதில் தண்ணீரே நுழையாது. முதல் பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு ஒன்றி ஐக்கியமாய்விடும் மனிதனைக் குறிக்கும். அவன் முக்த புருஷன். இரண்டாவது பதுமை திவ்யானந்தத்தையும் திவ்ய ஞானத்தையுமுடைய வாஸ்தவமான பக்தனைக் குறிக்கும். மூன்றாவதோ, ஞானமானது கொஞ்சமேனும் நுழையாத ஹிருதயத்தையுடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.
அவ் அறிவுக்கும் உறுதிக்கும் இனி விளக்கம் வருகிறது :
30. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ 
பார்த-அர்ஜுனா, யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச-எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம், கார்யாகார்யே பயாபயே ச-செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தம் மோக்ஷம் ச வேத்தி-பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும், ஸா புத்தி: ஸாத்த்விகீ-அந்த புத்தியே சாத்விக புத்தியாம்.
பொருள் : தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.
பிரபஞ்சத்தில் ஜீவனைப் பந்தப்படுத்திப் பிறப்பு இறப்பைப் பெருக்கிக்கொண்டுபோகும் கர்மம் பிரவிருத்தி எனப்படுகிறது. மற்று, மோக்ஷத்துக்கு ஏதுவான கர்மம் நிவிருத்தி என்று சொல்லப்படுகிறது. இதையே அகர்மம் என்றும் சந்நியாசம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் கர்மத்தைக் கடப்பதற்கு அது உறுதுணையாகிறது. கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து எதைச் செய்தால் மனிதனுக்கு நலன் வருகிறதோ அது செய்யத் தகுந்த கர்மம். எதைச் செய்தால் கேடு உண்டாகுமோ அது தகாத கர்மமாகிறது. தகாத கர்மத்தைச் செய்ய மனிதன் பயப்படவேண்டும். பெயரளவில் அது பயமெனப்படுகிறது. உண்மையில் அது வீரத்தின் தோற்றமாம். விஷப் பாம்பு, புலி முதலியவைகளுடன் பழகப் பயப்படவேண்டும். அதாவது மடத்தனமாகப் பாதுகாப்பின்றி அவைகளின் அருகில் செல்லலாகாது. தானாக வந்தமைகிற மரணத்துக்குப் பயப்படலாகாது. பிசாசு, பூதகணங்கள் முதலியவைகளைப்பற்றிப் பயப்படுவதில் பொருளில்லை. அவைகளைப்பற்றிய பயமெல்லாம் அக்ஞானத்தால் வருவது. இல்லாததை இருப்பதாகக் கோழைநெஞ்சம் கற்பித்துக் கொண்டு அஞ்சுகிறது. பிரவிருத்தியும், தகாத கர்மமும், பயமும் பந்தத்தை உண்டுபண்ணுகின்றன. நிவிருத்தியும், தக்க கர்மமும், அபயமும் மோக்ஷத்தைத் தருகின்றன. அக்ஞானத்தால் பந்தம் ஏற்படுகிறது. ஞானத்தால் மோக்ஷம் விளைகிறது. சாத்விக புத்தி இவைகளையெல்லாம் நன்கு ஓர்கிறது.
இவ்வுலகம் அநித்தியமா? நீ ஈசுவரனை அறியாமலிருக்கும் வரையில் அது அநித்தியந்தான். ஏனெனின், நீ ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஈசுவரனைக் காண்பதில்லை. ஆகவே, நான், எனது என்ற மனோபாவம் உன்னிடம் ஆழ்ந்துகிடக்க, நீ உலக வசத்தவனாகிறாய். இவ்விதம் அக்ஞானத்தினால் மதிமயங்கிய நீ, விஷயப்பொருள்களையே கருதுபவனாகி, மாயையாகிய சமுத்திரத்தில் மேலும் மேலும் ஆழமாக மூழ்கிக்கொண்டேயிருக்கிறாய். வழி நேராக இருப்பினும், ஸம்ஸாரத்தினின்று கரையேற வொண்ணாதபடி மாயையானது மனிதர்களுடைய கண்களை முற்றிலும் குருடாக்கி வருகின்றது. ஸம்ஸாரம் எவ்வளவு அநித்தியமென்பது உனக்கே தெரியும். நாம் வசிக்கிற வீட்டைப் பற்றிச் சற்று யோசனை செய்வோம். எத்தனை பேர்கள் அதில் பிறந்து இறந்து போயிருக்கின்றனர்! உலகப் பொருள்கள் ஒரு நிமிஷத்தில் நம் முன்னர் தோன்றி, அடுத்த நிமிஷத்தில் மறைந்து போகின்றன. பந்துக்கள் என யாரை நீ கருதுகிறாயோ அவர்கள் நீ கண்மூடிய பிறகு உனக்குப் பந்துக்கள் ஆகிறதில்லை. அப்படியிருந்தும் லௌகிகனுடைய பற்று எவ்வளவு பலமானது ! குடும்பத்தில் அவனுடைய பராமரிப்பை எதிர்பார்ப்பவர் ஒருவருமில்லாத காலத்தில் கூட அவனுக்குக் காசிக்குப் போய்வரச் சந்தர்ப்பப்படுவதில்லை. பக்தி சாதனம் செய்ய அவனுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. பேரன் ஹரீசன் என்ன செய்வான்? என்ற விசாரம் அவனை உலகத்தோடு பிணிக்கின்றது. மீன்பறியின் வாய் எப்போதும் திறந்திருக்கிறது; என்றாலும் மீன்கள் வெளியே ஓடிப் போவதில்லை. வண்ணாத்திப்புழு தான் இழைத்த கூண்டிலேயே கிடந்து சாகின்றது. அப்படிப்பட்ட ஸம்ஸாரம் அநித்தியமென்றும் அழிந்து போகக்கூடியதென்றும் ஏற்படவில்லையா?
31. யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ 
பார்த-பார்த்தா. யயா தர்மம் அதர்மம் ச-எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும், கார்யம் அகார்யம் ஏவ ச-செய்யத் தக்கது, தகாதது, அயதாவத் ப்ரஜாநாதி-உள்ளபடி அறியாத, ஸா புத்தி: ராஜஸீ-புத்தி ராஜச மெனப்படும்.
பொருள் : தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.
அசைகின்ற நீரில் பிம்பம் உள்ளபடி தெரிகிறதில்லை. அங்ஙனம் ராஜஸ புத்தியில் சாஸ்திரோக்தமான தர்மமும் காரியமும் உள்ளபடி தென்படமாட்டா; திரிவுபட்டே தென்படுகின்றன. சூதாடுதலாகிய தகாத காரியத்தைத் தகுந்த காரியமாக துரியோதனன் எண்ணி தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான். தனக்கு உரியதல்லாத ராஜ்யத்தை உரியதென்று பற்றிக்கொண்டு பாண்டவரைப் போரில் தூண்டியது அதர்மச் செயல். ஆயினும் அவன் அதை தர்மமென்று எண்ணினான்.
ரஜோகுணத்தினின்று உதித்த புத்தியுடையவனிடத்துப் பெருமிதமான உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பில் நேர்மையைக் காணமுடியாது. அயலார் இருவர் கிருஷியோ, வர்த்தகமோ, கைத்தொழிலோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுள் ரஜோகுண விருத்தியுடையவன் தனது ஆற்றலையும் அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான். ஆனால் அம்முயற்சி ஆக்கத்துறையில் இராது. அயலான் சம்பாதித்ததைத் தான் அபகரித்துக்கொள்ள அவன் எத்தனிப்பான்; அல்லது அயலானுக்கு நலம் செய்வது போன்று வெளிப்படையில் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனைக் கெடுக்க எத்தனிப்பான்; வெளிப்படையாக அவனோடு போட்டி போட்டும் அவனை அழிப்பான். தன்னருகில் அமைதியாக வாழ்ந்திருக்க அவன் யாரையும் விடமாட்டான்; ஏதேனும் ஒரு விதத்தில் அயலானை அல்லல்படும்படி செய்துவைப்பான். வழக்குக் தொடுப்பதில் ரஜோகுணத்தானுக்கு நிகரானவனைக் காணமுடியாது. காலமெல்லாம் நீதி மன்றங்களில் வியாச்சியங்களும் வில்லங்கங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். மெய்யைப் பொய்யாக்குதலிலும் பொய்யை மெய்யாக்குதலிலும் அவன் வல்லவன். முறை தவறிய முயற்சியிலேயே அவன் பெருமகிழ்வடைவான். நேர்மையாக நடந்துகொள்பவர்களை ஒன்றுக்கும் உதவாத அப்பாவிகளென்று அவன் ஏளனம் பண்ணுவான். நல்லார் அருகில் அவன் ஒருநாளும் செல்லான். பாரமார்த்திக வாழ்வு சம்பந்தமான பேச்சு அவனுக்குக் கசப்பாக இருக்கும். பிழைக்கத் தெரியாதவர்களது போக்கு அத்தகையது என்று அவன் அனுதாபம் காட்டுவான் அல்லது பராமுகமாய் இருப்பான். கெட்ட வழியில் சம்பாதிக்கும் அவன் செல்வம் கெட்ட காரியத்துக்கே ஓயாது போய்க்கொண்டிருக்கும். நல்ல காரியத்துக்குச் செல்வத்தைச் சிறிதேனும் அவன் ஈயான். ரஜோகுணத்தில் உதித்த அறிவு செய்யும் செயல்கள் இவை போன்றவைகளாம்.
32. அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா
ஸர்வார்தாந்விபரீதாம்ஸ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ 
பார்த-பார்த்தா, யா தமஸா ஆவ்ருதா-எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய், அதர்மம் தர்மம் இதி ச-அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும், ஸர்வார்தாந் விபரீதாந் ச-எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக, மந்யதே-நினைக்கிறதோ, ஸா புத்தி: தாமஸீ-அது புத்தி தாமச புத்தியாம்.
பொருள் : பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.
நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. நோயாளி ஒருவன் மருந்தை அருந்தமாட்டேன் என்று நோயை வளர்க்கிற உணவை உண்டால் என்னாகுமோ அதுவே தாமஸபுத்தியின் விளைவு. அறிவிலியாகிய சிறுவன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை; துஷ்டப் பிள்ளைகளுடன் கூடிக்கொண்டு வீண்காலம் போக்குகிறான். அவனுக்குப் பள்ளிக்கூடம் போவது கெட்டதாகத் தோன்றுகிறது. கூடாநட்புக் கொள்வதை நலமென நினைக்கிறான். முதியவர்களில் பலர் உழைத்துப்பாடுபடுவதில்லை; சோம்பலே வடிவெடுத்திருக்கின்றனர். உழைப்பவர், சுகஜீவனம் பண்ணத் தெரியாதர்கள் என்று அன்னவர் நினைக்கின்றனர். கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி ஆகியவைகளில் அவர்களுக்குக் கசப்பு ஏற்படுகிறது. வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை என்பது அவர்களது கருத்து. விருத்தாப்பியத்தில் அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர். ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும், குற்றத்தைக் குணமாகவும் ஓர்தலில் தமோகுண விருத்தியுடையவர்க்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. ஆண்மை தரக்கூடிய நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாடமாட்டார்கள். சூதாடுவது போன்ற விளையாட்டுகளில் அவர்கள் வீண் காலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள்.
இனி, திருதி விளக்கப்படுகிறது :
33. த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ 
பார்த-பார்த்தா, யயா அவ்யபிசாரிண்யா த்ருத்யா:-எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால், யோகேந-யோகத்தின் மூலம், மந: ப்ராண இந்த்ரியக்ரியா:-மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை, தாரயதே-நிலை நிறுத்துகிறானோ, ஸா த்ருதி: ஸாத்த்விகீ-அந்த உறுதியே சாத்வீகமாவது.
பொருள் : மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.
திருதி என்னும் சொல்லை உறுதி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். மனத்தகத்து அமையும் திட்டம் என்பதும் அதுவே. நல் வாழ்க்கையில் நிலைத்துள்ள மனதுக்கு அது உண்டாகிறது. சூரிய வெளிச்சம் கிரணங்களாகச் சிதறடைந்து போகிறது. அக்கிரணங்களைத் திரும்பவும் ஒருமுகப்படுத்தினால் பேரொளி உண்டாகிறது. அப்பேரொளியை எப்பொருளின்மீது திருப்பினாலும் அப்பொருளை அது நன்கு விளக்கிக் காட்டவல்லது. அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரண நிலை திருதி என்பதாகிறது. திருதி படைத்துள்ள யோகியின் மனதும், பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன. இந்தச் செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன. அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும், கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் தத்தம் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம் விதவிதமான ஈசுவர வழிபாடுகளாகின்றன. வஸ்திரத்தில் அமைந்துள்ள நூலானது பல இழைகளைக் கொண்டது. அங்ஙனம் திருதி என்பது மனம், பிராணன், இந்திரியங்கள் ஆகியவைகளின் உயர்ந்த செயல்களைக் கொண்டது. நூலானது ஊசியின் காதிலே நுழைதற்கு இழைகள் பிளவுபடாதிருக்க வேண்டும். இழைகள் குவிந்து இருந்தால் ஊசியின் காதில் எளிதில் செல்லும். ஆனால் ஊசியின் காது அடைபட்டிருந்தால் குவிந்த நூலும் வளைந்துபோய்விடும். உள்ளே நுழையாது. ஏனென்றால் நூலில் உறுதியில்லை. யோகி ஒருவனுடைய திருதியோ குவிந்த நூல்முனை போன்றும், கூரிய உறுதியான ஊசிமுனை போன்றும் இருக்கும். அத்தகைய பண்பட்ட திருதியானது பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வேறு எப்பொருளுக்கும் அது பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதன்று. காந்த ஊசி யாண்டும் வடதிசையையே நோக்கி நிற்பதுபோன்று யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது. அந்த உறுதிப்பாடு சாத்விகமானது. அது மனிதனை மேலோன் ஆக்குகிறது.
34. யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேऽர்ஜுந
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ 
து பார்த-ஆனால் பார்த்தா, அர்ஜுந-அர்ஜுனா, பலாகாங்க்ஷீ-பயன்களை விரும்புவோன், யயா த்ருத்யா-எந்த உறுதியினால், ப்ரஸங்கேந-மிகுந்த பற்றோடு, தர்மகாமார்தாந் தாரயதே-அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ, ஸா த்ருதி: ராஜஸீ-அந்த உறுதி ராஜசம் ஆகும்.
பொருள் : பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.
புருஷார்த்தம் அல்லது உறுதிப்பொருள் நான்கு, தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம் அவை. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது. தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும் சுவர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. உலகப்பற்றைப் பொதுவாக இரண்டாகப் பிரித்து வைக்கலாம். காசு ஆசை அல்லது பொருளில் பற்றுதல்; இது எவ்வளவு உறுதியாக மனதைப்ற்றிப்பிடித்திருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாது. உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்துவிட்டு மனிதன் அல்லும் பகலும் உழைக்கிறான். அதன் பயனாக இன்னும் கொஞ்சம் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை அவனை அச்செயலில் தூண்டுகிறது. சொந்த ஊரையும் உற்றாரையும் உறவினரையும் பிரிந்து தூர தேசத்துக்கு ஒருவன் போகிறான். அதிகம் திரவியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனை ஆங்கு இழுத்துச் செல்லுகிறது. இனி, உடலின் தேவைகளையும் சுருக்கிக்கொண்டு ஒருவன் பாடுபடுகிறான். மேலும் செல்வம் சேரவேண்டும் என்ற நோக்கம் அவனை அப்படித் தூண்டுகிறது. அடுத்தபடியாக இருப்பது இன்பத்தில் வைத்துள்ள பற்றுதல். எல்லா உயிர்களும் இன்பத்தை நாடுகின்றன. இன்பம் கிடைப்பதாலேயே அவைகள் இவ்வுலக வாழ்க்கையை விரும்புகின்றன. அவைகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளெல்லாம் காமத்தை நிறைவேற்றுதற்பொருட்டேயாம். சலிப்படையாது, தளர்வுறாது எல்லா உயிர்களும் உழைக்கின்றன. இன்பத்தின் பொருட்டே அவைகள் அங்ஙனம் செய்கின்றன. வெவ்வேறு உயிர்கள் வெவ்வேறு விதங்களில் இன்பத்தைப் பெறலாம். ஏதேனும் ஒருவிதத்தில் அது அகப்பட்டால் போதுமானது. உயிரைக் கொடுத்து இன்பத்தைப் பெற அவைகள் எத்தனிக்கின்றனவென்றால் அது மிகையாகாது. நல்லறம் பயிலுதல் பொருளையும் இன்பத்தையும் பெற்று வைத்திருத்தல் பொருட்டேயாம். பொருளோடும் இன்பத்தோடும் கூடிய அறம் இவ்வுலக சம்பந்தமானது. இம்மைக்கு ஏதுவாகிய அறம் பொருள் இன்பங்களில் பெரும் பற்றுதல் வைப்பது ரஜோகுணத்தின் இயல்பு. ஆகையால் இம்மூன்றைக் கடைப்படிக்கும் உறுதி ராஜஸமானது. அது மனிதனை உலக பந்தத்திலேயே ஆழ்த்தி வைக்கிறது.
தாபஜுரத்தினால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும் வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா? அதுபோல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றன்பங்களில் ஆசை வைத்த உலகப்பற்றுள்ளவன் ரூப லாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால் அவனால் ஆசையை அடக்க முடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம்.
35. யயா ஸ்வப்நம் பயம் ஸோகம் விஷாதம் மதமேவ ச
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ 
யயா-எந்த (மன உறுதியினால்), ஸ்வப்நம் பயம் ஸோகம்-உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும், விஷாதம்-ஏக்கத்தையும், மதம்-செருக்கையும், ந விமுஞ்சதி-விடமுடியவில்லையோ, பார்த த்ருதி: ஸா தாமஸீ-பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
பொருள் : பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
தமோகுணமும் அக்ஞான இருளும் ஒன்றோடொன்று சேர்ந்தவைகளாகின்றன. தூங்குகின்ற நிலை ஜட அவஸ்தைக்கு ஒப்பானது. கனவு காணும் இயல்பும் அதில் அடங்கியிருக்கிறது. பகற் கனவு காணும் தமோகுண முடையவனை உலகில் காணலாம். அத்தகையவன் விழித்திருந்து வியவகாரம் செய்வது தூக்கத்தில் சொப்பனம் காண்பது போன்று உறுதியற்றது. அவன் புரியும் செயல்கள் உலகுக்குப் பயன்படாதவைகளாகும்.
தமோகுண உறுதிக்குத் தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே குருடன். தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இன்மைக்கு அவன் அந்தகனாயிருந்தது புறச் சின்னமாகும். துரியோதனன் முதலாயினோர் அவனுக்குப் புதல்வர்களாயிருந்ததும் பொருத்தமானது. ஏனென்றால் அக்ஞானத்தினின்றே கேடுகள் அனைத்தும் உதிக்கின்றன. குருட்டு அரசனுக்கு ராஜ்யத்தில் பெரும் பற்றுதல் இருந்தது. தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று. அவர்கள் புரிந்த அடாத செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை யடைந்தான். ஆனால் புதல்வர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான். ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன் போன்றவர்களது புத்திமதியைக் கேட்க அவன் ஆயத்தமாயில்லை. எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. விவேகமில்லாத அவ்வேந்தன் விடாது பிடித்த திருதியானது தமோகுணத்தினின்று உதித்ததாம்.
திருதராஷ்டிரன் போன்ற மக்கள் பலரை இன்று நாம் சமூகத்தில் காணலாம். முன்னோர்கள் தேடி வைத்த செல்வம் அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஆனால் நல்லறிவும் முயற்சியும் அவர்களிடத்து இல்லை. அந்த அளவில் அவர்கள் குருடரேயாவர். உண்பதும் உறங்குவதுமே அவர்களுக்கு முக்கியமான தொழில்களாகும். செல்வத்தை முறையாகக் காக்கவும் வளர்க்கவும் அவர்களுக்குத் தெரியாது. எனவே அது கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும். செல்வத்தில் சில பகுதி விரயமான பிறகே அவர்களுக்கு விஷயம் விளங்குகிறது. பின்பு அதைக் குறித்து அவர்கள் துன்பத்தில் அழுந்துவார்கள். மனக்கலக்கத்துக்கு இங்கு மூலத்தில் விஷாதம் என்னும் சொல் அமைந்திருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாதம் என்பதாம். அதாவது தற்காலிகமாக அவனுக்கு மனம் கலங்கிற்று. தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவருக்கோ ஓயாத மனக்கலக்கமாம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்வு துர்மேதை என்னும் சேற்றில் கட்டிய வீடு போன்றது. ஓயாது அது இடிந்துவிழுந்துகொண்டே இருக்கும். இத்தனைவிதக் கேடுகளுக்கிடையில் தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவர்களை விட்டு அகலுவதில்லை. இது தமோகுணத்தினின்று உதித்த உறுதியாம்
36. ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஸ்ருணு மே பரதர்ஷப
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி 
பரதர்ஷப-பாரதக் காளையே! இதாநீம் த்ரிவிதம் ஸுகம்-இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை, மே ஸ்ருணு-என்னிடமிருந்து கேள், யத்ர அப்யாஸாத் ரமதே-எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, து:காந்தம் ச நிகச்சதி-எதனில் துக்க நாச மெய்துவானோ.
பொருள் : பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,
உயிர் வாழ்க்கைக்கு உற்சாகம் தருவது சுகப்பிராப்தி. சுகம் வேண்டாத உயிர் எவ்வுலகிலும் இல்லை. அதன் பொருட்டு ஜீவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு ஓரளவில்லை. ஆயினும் அதை அடைதலில் தார தம்மியமுண்டு. மின்னல்போன்று சிலருக்கு அது தோன்றுகிறது. இதோ, சுகம் கிட்டிவிட்டது என்று உணருதற்கு முன்பு அது மாயமாய் மறைந்து போகிறது. மீண்டுமொரு நீண்ட முயற்சி. இங்ஙனம் பெருமுயற்சிக்கிடையில் இன்பப்பேறு மின்னல் போன்று இடையீடு உடையதாகிறது. இன்னும் சிலர்க்கு அது ஓட்டைப் பாத்திரத்தில் கொட்டும் ஜலம் போன்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. பிறகு எங்கே போய் மறைகிறது. ஏன் போகிறது என்பதும் பிடிபடுவதில்லை. பூரணகும்பம் போன்று ஒரு நாளைக்கு இன்பம் நிறைநிலையடையும் என்று நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கையே வாழ்க்கைக்குத் தூண்டுகோலாகிறது. ஏதோ ஒரு சிலர்க்கு வளர்பிறை போன்று சுகம் ஓங்குகிறது. அது இடர்ப்படுவதில்லை. இன்பம் துய்ப்பதில் வாய்க்கும் இத்தகைய ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் ஏதாவது உண்டா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அப்பியாசம் அல்லது பயிற்சியானது வாழ்க்கையை வேண்டியவாறு மாற்றியமைக்க வல்லது. உடலுக்கு ஏற்ற பயிற்சி யுண்டு. அதே பாங்கில் உள்ளத்துக்கு ஏற்ற பயிற்சிகளும் உண்டு. ஜன்மாந்தரத்தின் வாசனைகள் என்று சொல்லுவது எல்லாம் பயிற்சியினின்று வந்தவைகள். பயிற்சியை மாற்றினால் வாசனையை மாற்றலாம். அப்பியாசத்தின் மூலம் சுபாவத்தையே மாற்றியமைக்கலாம். விலங்கினிடத்து ஒழுங்குப்பாட்டை உண்டு பண்ணுதற்கும் பயிற்சி பயன்படுகிறது. அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்குக் கையாளுவது போதாது. இடையறாப் பழக்கமாக அது வடிவெடுக்க வேண்டும். துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் இன்பத்தைப் பெறுதற்கும் அப்பியாசம் சிறந்ததொரு உபாயமாகிறது.
37. யத்ததக்ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம்
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம் 
யத் அக்ரே விஷம் இவ-எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய், தத் பரிணாமே அம்ருதோபமம்-அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ, தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம்-அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது, தத் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்-அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது.
பொருள் : எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.
வைராக்கியமும் தியானமும் கூடிய பாரமார்த்திக வாழ்க்கை துவக்கத்தில் துன்பம் நிறைந்ததாகத் தென்படுகிறது. பிறகு மனத்தெளிவினின்று விளையும் சித் சுகோதயம் ஒப்பு உயர்வு அற்றது. அது ஒன்றே பிறவிப் பெரும்பயன் என்பது அப்பொழுது விளங்குகிறது.
பாரமார்த்திக வாழ்வினின்று வரும் பேரின்பம் சாதாரண சாதகர்களுக்குப் பிடிபடாது போகலாம். ஆனால் நல்லொழுக்கத்தின் பயனை எல்லாரும் எளிதில் காணலாம். விஷயங்களில் விரைந்து செல்லும் இந்திரியங்களைத் தடுத்து ஆளுதல் ஆரம்பத்தில் கஷ்டமாயிருக்கும். அதில் வெற்றிபெற்றான பிறகு வரும் நிலைத்த இன்பமானது நிலையற்ற விஷய சுகத்தைவிட மேலானது என்பது விளங்கும். யோகிகளுடைய வாழ்க்கையையும் போகிகளுடைய வாழ்க்கையையும் சீர்தூக்கிப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும்.
முற்காலத்தில், ஜயபுரியிலிருக்கும் கோவிந்தஜீயின் கோவிலிலிருந்த அர்ச்சகர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதில்லை ஆகவே அவர்கள் ஆத்ம சக்தியால் வெகு பலம் படைத்தவர்களாக இருந்தனர். ஒரு சமயம் அவ்வூர் அரசன் அவர்களைத் தன்னிடம் வரும் படி சொல்லியனுப்பினான். அவர்கள் போகாமல், அரசனைத்தான் எங்களிடம் வரச் சொல்லுங்கள், என்று பதில் அனுப்பினர். அப்பால், அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டனர். அதன்பின் அர்ச்சகர்களை அரண்மனைக்கு வரவழைக்க வேண்டிய அவசியம் அரசனுக்கு இல்லாது போயிற்று. ஏனெனில், அவர்கள் தாமாகவே அரசனிடம் வந்து, மகராஜ்! நாங்கள் ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கிறோம். சுவாமிக்குச் சாத்திய புஷ்பங்களைக் கொணர்ந்திருக்கிறோம். அங்கீகரிக்கவேண்டும், என்று சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட அவசியம் நேர்ந்துவிட்டது பாவம்! அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்! ஒரு நாளைக்கு வீடுகட்டவேண்டியிருந்தது. இன்னொரு நாள் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யவேண்டியிருந்தது. வேறொரு நாள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டியிருந்தது. இப்படியாக அவர்களுக்கு இடைவிடாத பணமுட்டுப்பாடு உண்டாயிற்று. அதனால் ராஜசபைக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தது.
பிறர்க்கு அடிமையாக வேலை செய்வதன் பயனை நீங்களே நன்கு உணர்வீர்கள். ஆங்கிலமும் மேனாட்டுப் பயிற்சியும் பெற்ற வாலிபர்களில் அநேகர் பிறர்க்கு அடிமைவேலை செய்து தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் உதைகளை வாய்பேசாது பெற்று அனுபவிக்கின்றார்கள். ஏன் அவ்வளவு அவமதிப்புக்கெல்லாம் அவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா? அவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பொதுப்பட பெண்ணாசையே யாகும்.
இந்திரிய நிக்கிரகம் அல்லது புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம். அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்படான். உலப்பில்லா ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.
38. விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத் ததக்ரேऽம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம் 
யத் விஷயேந்த்ரிய ஸம்யோகாத்-எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால், அக்ரே அம்ருதோபமம்-தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து, பரிணாமே விஷமிவ - விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ, தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த இன்பம் ராஜசம் எனப்படும்.
பொருள் : விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.
இந்திரியங்களைக் கொண்டு இந்திரியார்த்தங்களை அணைந்து பெறும் இன்பம் நஞ்சு ஆகிறது. அதனால் பலம் குறைகிறது. வீரியத்துக்கு விரயம் உண்டாகிறது. அதாவது ஆண்மையோடு செயலாற்ற இயலாது. ரூபம் அல்லது சுந்தர வடிவம் குலைகிறது. வயோதிகம் விரைவில் வருகிறது. நிறம் மங்குகிறது. இயல்பாக மேதாவியாக வேண்டியவன் விஷய சுகத்தால் புல்லறிவாளனாகித் தாழ்வுறுகிறான். இறைவனைப்பற்றிய ஞாபகசக்தி ஒழிந்து போகிறது. செல்வமும் கையைவிட்டுச் சென்று அழிகிறது. ஊக்கத்தோடு வினையாற்றும் வல்லமை வருவதில்லை. அதர்மமே மேலும் மேலும் தலையெடுக்கிறது. அதனால் வாழ்க்கையே நரகவேதனையாய்க் கழிகிறது. ஓட்டைப் பாத்திரத்தில் வார்க்கும் ஜலம் போன்று இன்பம் தோன்றவும் மறையவும் செய்கிறது.
வாழ்வு என்னும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வண்டி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தம் போன்று இன்பம் கொடுத்தன. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் என்பது உண்டு. யாரும் அதைத் தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச் செயல் மரணம். அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் என்னும் விஷம் வந்தது. அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள். எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை. முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவி வேந்தனாகிய சங்கர மகாதேவனிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும். இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெறவேண்டும்.
39. யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம் 
யத் ஸுகம் அக்ரே ச அநுபந்தே ச-எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும், ஆத்மந: மோஹநம்-ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், நித்ரா ஆலஸ்ய ப்ரமாத: உத்தம் - உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும், தத் தாமஸம் உதாஹ்ருதம்-அது தாமசமென்று கருதப்படும்,
பொருள் : தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.
ஏதேனும் ஒருவிதத்தில் தனக்கு இன்பம்கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான். சுகத்தை அவன் அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுதே அது மயக்கத்தைக் கொடுத்துத் துன்பமாக மாறியமைகிறது. கள் குடித்தல் அல்லது மதுபானத்தை அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வெறியில் விவேகம் போய்விடுகிறது. மற்றவர் ஏளனம் செய்வது குடிகாரனுக்குப் புலப்படுவதில்லை. மிகைபட்ட துக்கத்தை அது உண்டுபண்ணுகிறது. வெறி அடங்கியதும் தளர்வுற்ற மனதும் வலிவற்ற உடலும் மேலும் துன்பத்தை விளைவிக்கின்றன. அவன் சோம்பலே வடிவெடுத்தவன் ஆகிறான். இங்ஙனம் துவக்கத்திலும் இடைவேளையிலும் இறுதியிலும் தமோகுணப் பிரவிருத்தி துன்பத்தையே வளர்க்கிறது. மின்னல் போன்று இடையிடையே இன்பம் தோன்றி உடனுக்குடனே மறைந்தது தான் மிச்சம்.
ஒட்டகம் முட்செடியைப் பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள்தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டின;õலும் அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.
40. ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை: 
ப்ரக்ருதிஜை:-இயற்கையில் தோன்றும், ஏபி: த்ரிபி: குணை:-இம்மூன்று குணங்களினின்றும், முக்தம்-விடுபட்ட, யத் ஸத்த்வம் ஸ்யாத்-எந்த உயிர் இருக்குமோ, தத் ப்ருதிவ்யாம் வா-அது மண்ணுலகத்திலோ, திவி தேவேஷு வா-வானுலகத்தில் தேவருள்ளேயொ, புந: ந அஸ்தி-வேறு இடங்களிலோ இல்லை.
பொருள் : இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.
புல்முதல் பிரம்மா ஈறாக எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரகிருதியில் கட்டுண்ட ஆத்மாக்களாவார்கள். அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி, முக்குணங்களைக் கடக்கும் வரையில் அவர்கள் எல்லாரும் பத்தாத்மாக்களேயாம். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. குணபேதத்துக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைவதும் இயல்பு. ஜீவர்கள் எல்லாரிலும் மிகப்பெரியவர் பிரம்மா. அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயொழிய முக்தியல்ல. அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாது படைப்புத் தொழில் நிகழாது. பிரகிருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள ஒரு பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போன்று பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் பிரம்மாவானவர் கிரமமுக்தியடைகிறார். அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார்.
ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும் ஸமாதி நிலையை அடையும் போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் ஸமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம். முக்குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை. அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.
இனி, மோக்ஷத்துக்கு ஏதுவான மார்க்கங்கள் விளக்கப்படுகின்றன :
41. ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை: 
பரந்தப-எதிரிகளை வாட்டுபவனே, ப்ராஹ்மண க்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச-பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய, கர்மாணி-தொழில்கள், ஸ்வபாவப்ரபவை: குணை:-அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி, ப்ரவிபக்தாநி-வகுப்புற்றனவாம்.
பொருள் : பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.
ஸ்வபாவம் என்பது ஈசுவரனுடைய பிரகிருதி அல்லது மாயை. அது முக்குணமயமாயுள்ளது. குணத்துக்குத் தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்தினின்று பெறுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்ப சுபாவம் மாறுகிறது. அதாவது கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். சுபாவம் எப்படியோ அப்படி வருணம் மாறுகிறது. ஆக, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்தினின்றும் கர்மத்தினின்றும் தெரிந்து கொள்ளலாம். சுபாவமோ மிக சூக்ஷ்மமானது. எளிதில் அதைத் தெரிந்துகொள்ள முடியாது. ஞானிகளுக்கு மட்டும் அது கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ள வஸ்துபோன்று நன்கு விளங்கும். பின்பு, கர்மமோ ஸ்தூலமானது. ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய வருணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
வர்ணபேதத்தை பகவான் சிருஷ்டிக்கலாமா, உயர்வு தாழ்வை அவர் உண்டுபண்ணலாமா என்ற கேள்விகள் பிறப்பதுண்டு. இந்தியாவில் வர்ணபேதமும், மேலோன் கீழோன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையில் அந்நாடு சிறந்த நாடு ஆகாது என்று கருதுவாரும் உளர்.
சிருஷ்டி என்பதன் பொருளே பேதத்தை உண்டுபண்ணுவது என்பதாகும். எல்லாம் ஒரே இயல்பை யடைவதும் சம்ஹாரம் ஆவதும் ஒன்று. ஆக, பேதம் இருந்தாகவேண்டும். உடலில் அவயவ பேதம் உண்டு. வயதில் குழந்தை, யுவன், விருத்தன் என்ற பேதம் உண்டு. பாலில் ஆண்பால் பெண்பால் என்ற பேதம் உண்டு. மனபரிபாகத்திலும் புரிகின்ற செயலிலும் உள்ள பேதம் வர்ணபேதம் என்று சொல்லப்படுகிறது. இது சிருஷ்டி முழுதிலும் அமைந்திருக்கிறது. அப்படி அமைக்காது சிருஷ்டி செய்யவும் முடியாது. வர்ணபேதம் இயற்கையின் அமைப்பு. அது இந்தியாவில் பாங்கை உள்ளபடி அறிந்துகொள்ளவில்லை. ஆக, வர்ணபேதத்தை அங்கீகரிப்பதைத் தவிர மனிதன் வேறு ஒன்றும் செய்யமுடியாது.
உலகில் எங்கும் வர்ணபேதம் இருக்கிறது. ஆனால் மேல் நிலைக்கு வந்திருப்பவன் கீழ் நிலையில் இருப்பவனை அலட்சியப்படுத்தலாகாது. அப்படி அலட்சியப்படுத்தும் சமூகம் விரைவில் கீழ்நிலைக்கு வந்து சேரும். இக்கோட்பாடு எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.
வருணத்துக்குரிய கர்மத்தின் பிரிவினை வருமாறு :
42. ஸமோ தமஸ்தப: ஸௌசம் க்ஷõந்திரார்ஜவமேவ ச
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம் 
ஸமோ தம: தப:-மன அடக்கமும், புலனடக்கமும், தவமும், ஸௌசம்-தூய்மை, க்ஷõந்தி-பொறுமை, ஆர்ஜவம்-நேர்மை, ஆஸ்திக்யம்-ஆத்திகம், ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ - ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும், ஸ்வபாவஜம் ப்ரஹ்ம கர்ம-இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
பொருள் : அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
ஒருவன் பிறந்த குடியை முன்னிட்டு ஒருவனை பிராம்மணன் என்கிறது லௌகிகம். மனபரிபாகத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்து ஒருவனை பிராம்மணனென்கிறது வேதாந்தம். எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராம்மணன் தோன்றலாம். ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது. வேதாந்தம் விளக்குகிறபடி பிராம்மண இயல்பை அடையப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது. ஆனால் அந்நிலையை அடைய மனிதன் முயலவேண்டும்.
கட்டுப்பாடான வாழ்க்கையே வடிவெடுத்தவன் அந்தணன். மனவடக்கமும் பொறிகளின் அடக்கமும் இயல்பாக அவனிடத்து அமைந்திருக்கின்றன. பரத்தை நாடித் தவம் புரிதல் ஒன்றே அவன் தொழில். தவத்தால் அவனது மனம் மொழி மெய் ஆகிய திரிகரணங்களும் தூய்மையடைகின்றன. புறவுலகினின்று அவனுக்கு ஏற்படும் இடுக்கண்களிடத்து பிராம்மணன் பொறுமையே வடிவெடுத்தவனாகிறான். துன்புறுத்துவார் யாரையும் அவன் நொந்துகொள்வான். தனது சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் அவன் நேர்மையே வடிவெடுத்தவனாகிறான். சாஸ்திர ஞானத்துக்கும் சுவானுபவ ஞானத்துக்கும் அவன் களஞ்சியமாகிறான். சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான். ஆஸ்திக்யம் அல்லது ஈசுவர நம்பிக்கையென்பது கடவுளைச் சார்ந்திருப்பது கடவுளுக்கென்றே உயிர் வாழ்தலாம். அந்தணன் அருளுக்கே உரியவன் ஆகிறான். பொருளை அவன் ஒருபொழுதும் தேடான். எளிய வாழ்க்கையே வடிவெடுத்தவன் அவன். உடலை அலங்கரிப்பது அந்தணன் செயலன்று. எல்லா உயிர்களிடத்தும் அவன் அருளைச் சொரிந்து செந்தண்மை பூண்டொழுகுகிறான். ஸ்ரீராமகிருஷ்ணரது ஜீவிதம் அந்தணன் ஒருவனுடைய பாரமார்த்திக வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இத்தகைய வாழ்வுடையவனே பிராம்மணன். இங்ஙனம் பண்பாடு அடைந்துள்ள பிராம்மணன் தொகை அதிகரிக்கின்றவளவு உலகத்துக்கு ÷க்ஷமம் உண்டாகிறது.
43. ஸௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்
தாநமீஸ்வரபாவஸ்ச க்ஷõத்ரம் கர்ம ஸ்வபாவஜம் 
ஸௌர்யம்-சூரத் தன்மை, தேஜ:-ஒளி, த்ருதி:-உறுதி, தாக்ஷ்யம் ச-திறமை, யுத்தே அபி அபலாயநம்-போரில் புறங்காட்டாமை, தாநம் ஈஸ்வரபாவ: ச-ஈகை, இறைமை (ஆளும் தன்மை), ஸ்வபாவஜம் க்ஷõத்ரம் கர்ம-இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.
பொருள் : சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.
அறம் அல்லது தர்மமே வடிவெடுத்திருப்பவன் க்ஷத்திரியன் ஆகிறான். சமூகத்தினுடைய இகலோக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமையாகும். க்ஷத்திரியன் என்பதன் பொருள் உடலில் காயம் பட்டவன் என்பதாகிறது. நலத்தை நிலைநாட்டுதற்காக உடல் வாழ்க்கையை அவன் ஒப்படைத்திருக்கிறான். அப்பெரு முயற்சியின் விளைவாக உடல் அடிக்கடி புண்பட்டாலும் அல்லது சிதைக்கப்பட்டாலும் அதை அவன் பொருள்படுத்தான். பீஷ்மர் வதைக்கப்பட்டது போன்று க்ஷத்திரியன் ஒருவனுடைய தேகம் வதைக்கப்படுமானால், அதற்கிடையில் அவர் படைத்திருந்த உயர்ந்த மனப்பான்மையை அவன் கொண்டிருப்பானானால் அவ்வரசன் நன்கு வாழ்ந்தவன் ஆவான். இனி, எல்லாரும் அரசன் ஆகமுடியுமா என்ற கேள்வி எழலாம். நாடு ஆளும் முறையில் எல்லாரும் அரசர் ஆகவேண்டியதில்லை. சமூகத்தில் மேலாம் பொறுப்பை நிறைவேற்றும் பாங்கில் பலபேர் அரசர் ஆகலாம்.
கேடும், கேடுடைய மனிதனும் ஒன்றே. நல்லான் ஒருவன் கேடுடைய மனிதனை யாண்டும் எதிர்க்கக் கடமைப்பட்டிருக்கிறான். பயிர்களுக்கிடையில் உள்ள களைகளைக் களையக் கிருஷிகன் கடமைப்பட்டிருப்பது போன்று சமூகத்தில் அறம் பிறழ்பவர்களை அடக்கவும், ஒடுக்கவும், வெல்லவும், ஒழிக்கவும் அறவாளன் கடமைப்பட்டிருக்கிறான்.
எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்கவல்லவன் சூரத்தன்மை யுடையவனாகிறான். அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. எவ்வளவு ஏராளமாக உழைத்தாலும் களைப்பை அறியாத மனநிலை திருதி அல்லது உறுதி எனப்படுகிறது. காலதேச வர்த்தமானம் அறிந்து எதிரியை வல்லமையோடு தாக்கக் கூடிய நிலைக்குச் சாதுரியம் என்று பெயர். திடீரென்று எதிரி வந்து தாக்குவானாகிலும் மனம் தளராது நொடிப் பொழுதில் தூக்கி வினைசெய்வது சாதுரியமாகிறது. சில வேளைகளில் பின்னோக்கிச் சென்று எதிரியைப் பின்பு வளைத்து அடிப்பதும் சாதுரியமாம். ஆனால் பகைவனுக்குப் பயந்து போர்க்களத்தினின்று புறங்காட்டி யோடிப் பிழைக்க நினைப்பவன் க்ஷத்திரியனாகான். பகைவனுக்கு அடிமைப்படுவதைவிட வீரத்துடன் எதிர்த்து நின்று அடிபட்டுச் சாவது மேல். குடிகளை முறையாக ஓம்புதலே தானமென்று சொல்லப்படுகிறது. வள்ளலாக இருந்து அவர்களுக்கு அரசன் யாண்டும் பொருளை வழங்கவேண்டும். மக்கள் நேர் கோடாவண்ணம் அவர்களை ஆளுதல் இறைமையாகிறது. இதற்கு ஈச்வர பாவம் என்பது மூலம். தலைவனாயிருத்தல் என்றும் இச்சொல் பொருள்படும். இரண்டு அல்லது மூன்று பேர்களுடன் சேர்ந்து வாழும் பொழுதும் ஒன்றும் தலைவனாகத் திகழலாம். எப்பொழுதும் தலைவன் ஆவது தகைமையினாலேயாம். சுயநலம் கருதாது காரியத்தை நிர்வகிப்பவனும் அதை வெற்றிகரமாகக்கொண்டு சாதிப்பவனும் தலைவன் ஆகிறான். தாய் ஒருத்தி வீட்டுக்குத் தலைவியாகிறாள். ஏனென்றால் அன்புடன் பணிவிடை செய்யும் திறமையும், காரியங்களை நன்கு நிர்வகிக்கும் திறமையும் அவளிடத்து உண்டு. இறைமை வாய்க்கப்பெற்ற மக்கள் மேன்மக்கள் ஆகின்றனர். பகைவரிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் நாட்டு மக்களிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் சேர்ந்து ஈண்டு விளக்கப்பட்டுள்ளன. அந்தணனுடைய அருளையும் வைசியனுடைய பொருளையும் அரசன் இனிய முறையில் சேகரிக்கிறான். அவைகளுடன் தனது ஆண்மையை அவன் உவந்து கலக்கிறான். பின்பு, இவையாவும் அவன் உலக நன்மைக்கு எடுத்து வழங்குகிறான். பாரமார்த்திகத் துறையிலே விவேகானந்த சுவாமிகள் இச்செயலைச் செய்திருக்கிறார்; அவர் ஒரு ராஜரிஷி.
44. க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் 
க்ருஷி கௌரக்ஷ்ய வாணிஜ்யம்-உழவு, பசுக்காத்தல், வணிகம், வைஸ்யகர்ம ஸ்வபாவஜம் - இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம், பரிசர்யாத்மகம் கர்ம-மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல், ஸூத்ரஸ்ய அபி-சூத்திரனுக்கு, ஸ்வபாவஜம்-அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
பொருள் : உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
பயிர்த்தொழில் புரிவது, ஆடுமாடுகளை வளர்த்தல், வியாபாரம் பண்ணுதல், தொழிற்சாலைகளை நிறுவுதல் ஆகிய இவையாவும் செல்வத்தை உண்டுபண்ணும் தொழில்களாம். சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தைப் பெருக்குபவர்களெல்லாம் வைசியர்கள். இக்காலத்தில் புதியதாகத் தோன்றியுள்ள வக்கீல்களும் டாக்டர்களும் இடை அல்லது கடைத்தரமான வைசியர்கள். இவர்கள் சமூகத்துக்குச் செல்வத்தை உண்டுபண்ணுபவர்களல்லர்; செல்வத்தை ஏற்பவர்களாம். இகலோக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன தானியங்களை விருத்தி பண்ணுவதும், மூலப்பொருள்களைச் சேகரிப்பதும், அவைகளைப் பண்படுத்திப் பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பதும், வாணிகத்தின் மூலம் பொருள்களை நாலா பக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசிய தர்மமாகும். கஞ்சா, அபினி, மதுபானம் போன்றவை மக்களுடைய நல்வாழ்வைக் கெடுக்கின்றன. அத்தகைய பொருள்களை உண்டு பண்ணுவதும், அவைகளில் வர்த்தகம் பண்ணுவதும் வைசிய தர்மமாகாது.
பிறரிடத்து வேலைக்காரனாயிருந்து இட்டவேலையைச் செய்து சம்பளம் ஏற்று ஜீவிப்பவன் சூத்திரனாகிறான். இக்காலத்துக் குமாஸ்தாக்களெல்லாரும் சூத்திரர்களாம். நல்ல மனப்பான்மையுடன் ஆசிரிய வேலை செய்கிறவர்கள் பிராம்மண கர்மம் செய்கிறார்கள். அரசாங்கத்தில் முறையாக ஆட்சி முறையைச் செலுத்துபவர்கள் க்ஷத்திரிய கர்மம் இயற்றுகிறார்கள். அவர்கள் சம்பளம் ஏற்பதில் குறையில்லை. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவென்று அத் தொழில்களை நாடுவார்களானால் அவர்கள் சூத்திரர்களாகிறார்கள். கைக்கூலி அல்லது லஞ்சமேற்கிற எல்லாரும் சூத்திர்களேயாம். உடல் வாழ்க்கை ஒன்றில் மட்டும் கருத்து வைத்திருப்பவன் சூத்திரன். அதற்கு மேல் மேலான சிந்தையும் செயலும் உடையவன் செய் தொழிலுக்கு ஏற்ப வைசியன், க்ஷத்திரியன் அல்லது பிராம்மணன் ஆகிறான்.
இந்த நான்கு வர்ணங்களும் மனபரிபாகத்தைப் பொறுத்தவைகள். உலகெங்கும் உள்ள ஜன சமூகங்களில் இவைகள் இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதரர்க்கிடையில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு வர்ணத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாம். ஒரு சமுதாயத்தில் உள்ள மக்களுள் பெரும் பான்மையோர் ஏதேனும் ஒரு வர்ணத்தின் சுபாவத்தை உடைத்திருக்கலாம். பள்ளிக்கூடம் ஒன்றில் கீழ் வகுப்பும் மேல் வகுப்பும் இருப்பதுபோன்று சமுதாயத்தில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள். மேல் வகுப்பில் இருப்பவனுக்குக் கீழ் வகுப்பின் படாமும் தெரியும். அங்ஙனம் நான்கு வர்ணங்களின் கர்மங்களையும் நன்கு செய்யத் தெரிந்தவன் அந்தணன். மூன்று வர்ணங்களின் கர்மங்களை நன்கு செய்யத் தெரிந்தவன் க்ஷத்திரியன். இங்ஙனம் வினையாற்றும் திறமை கீழே இறங்கி வருகிறது.
கர்மயோகத்துக்கு ஒப்பானது சூத்திரனுடைய தர்மம். ராஜயோகத்துக்கு ஒப்பாகிறது வைசியனுடைய தர்மம். ராஜயோகி தன் சொரூபத்தில் உள்ள சக்தியைச் சேகரிக்கிறான். வைசியன் புறவுலகில் சக்திக்குச் சின்னமாயிருக்கும் பொருளைச் சேகரிக்கிறான். பக்தியோகத்தின் வடிவினன் ஆகிறான் க்ஷத்திரியன். சமூகத்தினிடத்து அன்பு கொண்டிருந்தால்தான் அதனிடத்து நல் வாழ்க்கையை அவன் வழங்க முடியும். சமூகத்துக்குப் பெருங்கேடு செய்பவன் கொடுங்கோல் வேந்தன். ஞானயோகத்துக்கு எடுத்துக்காட்டாவான் பிராம்மணன். சிருஷ்டி முழுதையும் பிரம்ம சொரூபமாக அவன் காண்கிறான். நான்கு யோகமும் ஒரு மனிதனிடத்து ஒழுங்காக அமைந்திருந்தால் அவன் நிறைமனிதன் ஆகிறான். பின்பு நான்கு வர்ண தர்மங்களையும் ஒருங்கே ஆற்ற வல்லவனே நிறைமனிதன் ஆகிறான். நான்கு வர்ணங்களும் ஒரு சமூகத்தில் நன்கு அமைந்திருந்தால் அது தலை சிறந்த சமூகமாகும்.
நல்ல சமூகம் ஒன்றில் உள்ள பாடசாலைகளில் படிப்பைக் கட்டாயப்படுத்தி எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நான்கு வர்ணங்களுக்குரிய பயிற்சிகளைக் கொடுத்து அவரவர் பாங்குக்கு ஏற்ப மேலே வரத் தூண்டுதல் செய்தால் இரண்டு மூன்று தலை முறைகளுக்குள் அந்தச் சமுதாயத்தைத் தலையாயதாக்கலாம்.
45. ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு 
ஸ்வே ஸ்வே கர்மணி-தனக்குத் தானே உரிய கர்மத்தில், அபிரத: நர:-மகிழ்ச்சியுறும் மனிதன்,
ஸம்ஸித்திம் லபதே-ஈடேற்றம் பெறுகிறான், ஸ்வகர்மநிரத:-தனக்குரிய தொழிலில் இன்புறுவோன், யதா ஸித்திம் விந்ததி-எங்ஙனம் சித்தியடைகிறான் என்று, தத் ஸ்ருணு-அதைக் கேள்.
பொருள் : தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரியதொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.
பயிற்சியால் எந்தக் கர்மத்துக்குத் தகுதியுடையவனாக மனிதன் தன்னைச் செய்துகொள்கிறானோ அது அவனுடைய ஸ்வகர்மமாகிறது. ஸ்வதர்மம் என்பதும் அதுவே. ஸ்வகர்மத்தை மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் செய்பவன் நல்ல ஆத்ம சாதகன் ஆகிறான். அர்ஜுனனுக்குத் தன் ஸ்வதர்மத்தில் வெறுப்பு ஏற்பட்டது சீரிய மனப்பான்மையின் விளைவு அன்று. தற்காலிகமாகத் தோன்றிய மனக் குழப்பமே அதற்குக் காரணமாயிற்று. பள்ளியில் படிக்கும் மாணாக்கன் ஒருவன் தனது வகுப்பிலும் பாடத்திலும் மகிழ்வு கொள்ளுதல் வேண்டும். தன் கர்மத்தில் களிப்புறுபவனே முன்னேற்றமடைகிறான். படிப்புப் பூர்த்தி யாவதற்குப் பள்ளிப் பிள்ளை மேல் வகுப்புக்குப் போவது அவசியம். மற்று, ஆத்ம சாதகன் பரிபக்குவம் அடைதற்கு ஸ்வகர்மத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை. தோட்டி வேலை செய்கிற ஒருவன் அவ்வேலையில் மகிழ்வுறுதல் வேண்டும். வேலையில் மேலானது என்பதும் கீழானது என்பதும் கிடையாது. மனத்தகத்து உள்ள மாசு ஆனது கர்மத்தில் மாசு படிந்திருப்பது போன்று காட்சி கொடுக்கிறது. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மன நிலையுடன் அதைச் செய்தால் மனபரிபாகமடையலாம். அதன் விவரம் வருமாறு:
46. யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ: 
யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ, யேந இதம் ஸர்வம் ததம் - எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ, தம்-அந்த பரமாத்மாவை, ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும், மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.
பொருள் : உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.
இப்பிரபஞ்சத்தை முறையாக இயக்குவது ஈசனுடைய செயல். இதில் பயன்படாத உயிர் என்பது ஒன்றுமில்லை. ஒவ்வொரு ஜீவனும் அவனவன் தொழிலை முறையாகச் செய்தவன் மூலம் பிரகிருதியின் நடைமுறைக்கு நன்கு துணைபுரிகிறான். ஆகையால் அறிவுடைய மனிதன் தான் எக் கர்மத்தை நன்கு செய்ய முடியுமோ அதை ஈசுவர ஆராதனையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் அவன் மனபரிபாகம் அடைகிறான். ஞானத்தைப் பெறுதற்கும் ஈசுவரனை அடைதற்கும் அக்கர்மம் சாதனமாகிறது.
ஈசுவர ஆராதனை வேறு, அவரவர் தொழில் புரிவது வேறு என்று பலர் எண்ணியிருக்கின்றனர். கடவுள் வழிபாட்டின் தத்துவம் அறியாதவரே அத்தகைய எண்ணம் கொள்ளுவர். செய்கிற ஒவ்வொரு வேலையும் தேகத்துக்கு வலிவு கொடுக்கிறது என்பதை நாம் காண்கிறோம். தேகப்பயிற்சியையும் பொருள் சம்பாத்தியத்தையும் ஒரே தொழிலில் அடக்குவது சாத்தியம். இனி, அதே தொழிலை தேவாராதனையாகச் செய்யவும் முடியும். வியாதன் ஒருவன் கசாப்புக்கடை வைத்து ஜீவனம் பண்ணினான். அதே தொழில் அவனுக்கு சமுதாய சேவையும் ஆயிற்று; தேவாராதனையும் ஆயிற்று. அவன் பரமஞானியானான். அவன் ஒரு துறவிக்குச் செய்த உபதேசம் வியாதகீதை என்னும் பெயர் பெற்றுள்ளது. வயிற்றுப் பிழைப்புக்கு என்பதை அடியோடு மறந்துவிட்டு ஈசுவர ஆராதனை யென்றே கருதி ஒருவன் தன் தொழில் புரியலாம். அத்தகைய உணர்ச்சியின் வாயிலாக அவனது தொழில் அதிவிரைவில் அவனை ஈசனிடம் அழைத்துச் செல்கிறது. உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் வழிபாடாக வடிவெடுக்கிறது.
தென்னை நெற்று ஒன்றில் தேங்காய், ஓடு, மட்டை முதலியன இருக்கின்றன. தேங்காயை உண்ண மட்டையை உரித்து ஓட்டை உடைக்கவேண்டும். ஸ்வகர்மத்தை தேவாராதனையாகச் செய்வது மட்டையை உரித்து ஓட்டை உடைப்பதற்கு ஒப்பாகும். அதனால் தெய்வம் என்னும் தேங்காய் நமக்குரியதாகிறது.
47. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் 
ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும், விகுண: ஸ்வதர்ம: ஸ்ரேயாந்-தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று, ஸ்வபாவ நியதம் குர்வந்-இயற்கையி லேற்பட்ட தொழிலை, கில்பிஷம் ந ஆப்நோதி-பாவமடைய மாட்டான்.
பொருள் : பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.
சுபாவத்திலமைந்த கர்மமே ஸ்வதர்மம் அல்லது தனக்கு உகந்த தொழில் எனப்படுகிறது. அர்ஜுனனுக்கு நன்றாகப் போர்புரிய முடியாவிட்டாலும் யுத்த நெருக்கடியில் அவன் போர் புரிவதே உசிதம். துஷ்டர்கள் சமூகத்துக்குக் கேடு செய்து கொண்டிருக்கையில் தான் வனத்துக்குச் சென்று நன்கு தவம் புரிவது அவனுக்கு ஒவ்வாது. போக்கிரிகளை எதிர்த்துப்போராடி மாய்வது மேல்.
வைத்தியத்தில் பயிற்சிபெற்ற ஒருவன் தனக்கு வாக்குவன்மையிருக்கிறதென்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது. விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தன் தொழிலை மாற்றலாகாது. அதனால் காலமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றன. குறைந்த முயற்சியில் பரந்த காரியத்தைச் சாதிப்பவன் நல்ல யோகியாகிறான். உலக வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதும் ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவதும் யோகிக்குக் குறிக்கோள். எந்த நகையை வேண்டுமானாலும் பொன்னாக மாற்றலாம். பொன்னாக்கும் விஷயத்தில் பாதி வேலையை ஒரு நகையிலும் மற்றப் பகுதியை இன்னொரு நகையிலும் செய்யலாகாது; பொருள் நஷ்டம், அறிவின்மை ஆகிய இரண்டும் ஆங்குப் புலப்படும். எக்கர்மத்தை முறையாகச் செய்தாலும் அது கடவுள் வழிபாடாகிறது. தனக்கு வாய்த்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரபுத்தியில்லாதவன் யோகியாக முடியாது. அப்படியானால் பொல்லாங்கு நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை ஆயத்தப்படுத்தியவன் அதை வேண்டாமென்று விலக்கிவிட்டுத் தூய்மை திகழும் தவச் செயலில் துணியலாகாதா என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது.
48. ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா: 
கௌந்தேய-குந்தி மகனே, ஸஹஜம் கர்ம ஸதோஷம் அபி-இயல்பான தொழில் குறையுடையதாயினும், ந த்யஜேத்-கைவிடலாகாது, ஹி தூமேந அக்நி: இவ-ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல, ஸர்வாரம்பா-எல்லா தொழில்களிலும், தோஷேண ஆவ்ருதா:-சூழ்ந்தே நிற்கின்றன.
பொருள் : குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது. எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.
விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நின்று ஆராய்பவனுக்கு இப்பேருண்மை விளங்கும். அதாவது கேடு இல்லாத கர்மம் இப்பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம்; அதனால் காற்றிலுள்ள அணுப்போன்ற உயிர்கள் மடிகின்றன. உண்கிறோம்; மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாது போகிறது; கருவி கரணங்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம். பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை. அப்படியானால் நல்வினை தீவினை யென்று பிறகு ஏன் பாகுபடுத்துகிறோம் ? தீவினையகற்றி நல்வினையை நன்கு இயற்றுக, என்று சான்றோர் சாற்றியிருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. விறகுக்கட்டை எரிகிறது. எந்த விறகில் அதிகம் புகையிருக்கிறதோ அது கெட்ட விறகு. எதில் புகை குறைந்திருக்கிறதோ அது நல்ல விறகு. ஒரு சந்தர்ப்பத்தில் அதிக நலத்தையும் குறைந்த கேட்டையும் உண்டு பண்ணும் ஒரு வினையானது மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகையான கேட்டையும் குறைந்த நலத்தையும் விளைவிக்கலாம். காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு ஒருவினையில் அமைந்துள்ள நலமோ, கேடோ மாறுபாடு அடைகிறது. வினைப்பயனை விரும்புவர் இவைகளையெல்லாம் தூக்கி வினைசெய்கிறார்கள். யோகியின் இயல்பு மிக உயர்ந்தது. தனக்கு அமைந்த கடமையை அவன் தேவ ஆராதனையாகச் செய்கிறான். வழிப்போக்கன் ஒருவன் ஒரு சத்திரத்தில் கிடைத்த விறகைக்கொண்டு சமைத்துப் புசித்துவிட்டுப் புறப்படுகிறான். நல்ல விறகு கிடைக்கவில்லையென்று ஆங்கு அவன் காத்திருக்க மாட்டான். யோகி ஒருவன் எடுத்த உடல் எக் கர்மத்துக்குத் தகுதியானதோ அக்கர்மத்தை தேவ ஆராதனையாகச் செய்து முடிக்கிறான். தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும். ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதோ அதைச் செய்வது முறை.
தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது :
49. அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதிகச்சதி 
அஸக்தபுத்தி:-பற்றற்ற மதியுடன், விகதஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந-விருப்பம் தவிர்த்தவனாக, ஜிதாத்மா-தன்னை வென்றவன், ஸர்வத்ர-எங்கும், பரமாம் நைஷ்கர்ம்யஸித்திம்-செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி), அதிகச்சதி-அடைகிறான்.
பொருள் : யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.
கர்மயோகி ஒருவன் ஓயாது வினையாற்றுகிறான். ஓய்வு ஒழிவை அவன் அறிந்தவன் அல்லன். அவனைப் பார்ப்பவர் கண்ணுக்கு அவன் இத்தகைய காட்சி கொடுக்கிறான். மற்று மனதினுள் அவனுடைய இயல்பு எத்தகையது என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தையாவது தேசத்தையாவது தனக்குச் சொந்தமானதென்று அவன் அபிமானிப்பதில்லை. ஊரெல்லாம் அவனுக்குச் சொந்தமெனலாம்; அல்லது ஓர் ஊரும் இல்லான் எனலாம். பொருள்கள் பல அவனால் கையாளப்படுகின்றன. அவைகள் வந்ததும் போனதும் அவனுடைய மனதில் ஒரு விகாரத்தையும் உண்டுபண்ணவில்லை. பாலத்தில் ஒருபுறம் நீர் வருகிறது; மற்றொருபுறம் அது வடிகிறது; நீரில் பற்றற்றுப் பாலம் இருக்கிறது. பொருளில் யோகியின் மனது அங்ஙனம் பற்றற்று இருக்கிறது. மக்களுள் எத்தனைபேர் தன்னைச் சார்ந்திருக்கின்றனர், உதாசீனராயிருப்பவர் யார், பகை கொள்பவர் யார் என்றெல்லாம் அவன் எண்ணுவதில்லை. பற்றற்ற புத்தியின் பாங்கு இதுவாம். கடலில் அலைகள் தோன்றுவது போன்று சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம். யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது. சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பவன் என்று அவனை இயம்பவேண்டும். போகத்துக்கு உரிய பொருள்களை ஏராளமாகச் சிறு குழந்தையின் முன்னிலையில் கொண்டுவரலாம். அவைகளைப் போகவஸ்து என்று குழந்தை பொருள்படுத்துவதில்லை. யோகியின் மனநிலையும் அப்படிப்பட்டது. ஏனென்றால் அவன் ஆசையற்றவன். நிராசையின் நேர்மை அத்தகையது. அதுபோன்ற மன நிலையுடையவன் சந்யாசி யாகிறான். ஏனென்றால் கர்மாதீதத்திலுள்ள பிரம்மத்தில் அவன் நிலைபெற்றவனாகிறான். நைஷ்கர்ம சித்தி அல்லது வினையொழிந்த பெருநிலையென்பதும் பரப்பிரம்மம் என்பதும் ஒன்றேயாம்.
50. ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா 
ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா-ஞானத்தினுடைய உயர்ந்த நிலை, யா-எதுவோ, ஸித்திம் ப்ராப்த:-(அந்த) நிலையை அடைந்த மனிதன், யதா ப்ரஹ்ம ஆப்நோதி-எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ, ததா-அந்த நிலையை, ஸமாஸேந ஏவ-சுருக்கமாக, மே நிபோத - என்னிடமிருந்து தெரிந்து கொள், கௌந்தேய-குந்தி மைந்தனே!
பொருள் : சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.
சித்தியடைதல் என்பது பக்குவப்படுதல் என்று பொருள்படுகிறது. பக்குவப்படுத்துதல் இயற்கையின் இடையறாத் தொழில் ஆகிறது. சேதனம் அசேதனம் ஆகிய எல்லாப் பொருள்களும் ஓயாது பண்பட்டுக்கொண்டு வருகின்றன. பூமியிலே ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அடுப்புக்கரியானது நாளடைவில் வைரமாக மாறுகிறது. பளபளப்புடைய ஆபரணமாகி அது காதை அலங்கரித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு களிக்கிறோம். அத்தகைய பரிபாகம் அடைதற்கு அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. சுவை நிறைந்த ஆப்பிள் கனியொன்றை உண்டு மகிழ்வடைகிறோம். அது அடைந்துள்ள சித்தியானது நமக்கு ஆனந்தத்தை ஊட்டுகிறது. மகிழ்வடையும் நாம் சித்தியின் பொருட்டு ஆப்பிள் செடி எடுத்துக்கொண்ட முயற்சியை எண்ணிப்பார்ப்பதில்லை. வெயிலும், மழையும், பனியும், நீரும், நிலமும், காற்றும் அதன் பண்பாட்டுக்குத் துணைபுரிந்திருக்கின்றன. ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் சித்தியடைய முயன்று வருகிறது.
எல்லா உயிர்களின் முயற்சிகளுக்கிடையில் மனிதனது முயற்சி மிக மேலானது. மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவத்தில் அமைகிறது. ஸ்தூல வடிவத்தோடு அழிந்தும் போகிறது. மனிதனுடைய பரிபாகம் மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனைப்போன்று இன்னொரு மனிதன் இருப்பதில்லை. எத்தனை மனிதரோ அத்தனைவித மனபரிபாகம் உண்டு எனலாம். பல ஜன்மாந்தரங்களில் அது வந்து அமைகிறது.
யோக சாதனங்கள் எல்லாம் மனதை ஒழுங்குபடுத்துதற்கென்றே அமைந்துள்ளன. திண்ணிய மனதையுடையவனே சித்தன். பிறகு அம்மனிதன் பரஞானத்தைப் பெறுதலும் பரத்தை அடைதலும் எளிதில் கைகூடுகின்றன. ஆகையால் அதை விஸ்தரித்து விளக்க வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால் போதுமானது.
51. புத்த்யா விஸுத்த்யா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச
ஸப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச 
விஸுத்த்யா புத்த்யா யுக்த:-தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், த்ருத்யா ஆத்மாநம் நியம்ய ச-உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஸப்தாதீந் விஷயாந் த்யக்த்வா-ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து, ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச-விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு.
பொருள் : தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,
சுத்தியடைந்துள்ள ஒரு பொருளில் அதற்கு அன்னியமானது ஒன்றும் இருக்கலாகாது. சுத்த ஜலம் என்று சொல்லுமிடத்து அது ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து உண்டானது. வேறு எப்பொருளுக்கும் அதில் கலந்திருக்க இடமில்லை. பரிசுத்தமான புத்தி எது என்பது கேள்வி. தூய கண்ணாடி போன்றது அது. நீலக்கண்ணாடியில் மஞ்சள் வஸ்துவைப் பார்த்தால் அது பச்சை நிறமுடையது போன்று தென்படும். நிறமில்லாத தூய கண்ணாடியில் பார்த்தால் மஞ்சள் மஞ்சளாகவே தோன்றும். புத்தியின்கண் உள்ள கலக்கம் அதை அழுக்குப்படுத்துகிறது. கோணலான புத்தியில் காணப்படு பொருளும் குற்றமுடையதாகத் தென்படும். சுத்தியடைந்த புத்தியானது ஐயமும் திரிவும் நீங்கப் பெற்றுள்ளது. இறைவனைப்பற்றிய நினைவு அதனிடத்து இடையறாது நிலைத்திருக்கும். உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளுபவன் மேலோன் ஆகிறான். மிகைப்பட்ட பொருள்களை ஆத்ம சாதகன் தனக்கென்று வைத்துக் கொள்வதில்லை. உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள், உடை முதலியவைகளைத் தவிர வேறு ஆடம்பரமான பொருள்களை அவனிடத்துக் காண முடியாது. அப்பொருள்களிடத்தும் அவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக இருக்கிறான். அடக்கமும் எளிய வாழ்வும் வடிவெடுத்தவன் ஆகிறான் அவன். மேலும் :
52. விவிக்தஸேவீ லக்வாஸீ யதவாக்காயமாநஸ:
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித: 
விவிக்தஸேவீ-தனி இடங்களை நாடுவோனாய், லக்வாஸீ-எளிய உணவு உண்பவனாக,
யதவாக்காயமாநஸ:-வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி, நித்யம் த்யாநயோகபர:-தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து, வைராக்யம் ஸமுபாஸ்ரித:-பற்றின்மையை நன்கு பற்றியவனாய்.
பொருள் : தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,
விஷயப் பற்றுடன் கூடிய லௌகிக புத்தியுடைய ஒருவன் பலபேருடன் சேர்ந்திருந்து காலங்கழிக்க விரும்புகிறான். பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போன்று அவன் ஆகிறான். யோகிக்கோ தனித்திருக்குமளவு பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு மனதைப் பரிசீலனை பண்ண இயலுகிறது. உணவு உடலைப் பேணுவதுபோன்று ஏகாந்தம் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது. சாதனத்தில் முதிர்ந்தவன் தனித்திருக்கும்போது ஆத்ம போதத்தில் திளைத்திருக்கிறான். மிகைபட்ட உணவு உடலுக்குச் சுமையாகிறது; சோம்பலையும் உண்டுபண்ணுகிறது. குறைபட்ட உணவு பலவீனத்தில் கொண்டுசேர்க்கும். அளவுடன் உண்பவன் யோகியாகிறான். மனதில் தெளிவும் உடலில் ஊக்கமும் அதனால் உண்டாகின்றன. யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே அவனுடைய உள்ளத்தில் உண்டாகின்றன. மனது அடங்கியிருப்பதற்கு அது அறிகுறியாகும். அவன் மிகைபடப் பேசான். பயன் படாத புன்மொழிகள் அவன் வாயினின்று வரமாட்டா. மொழியை அடக்கியதன் பயன் அதுவாம். நல்ல சாதகனது உடல் யாண்டும் அசைவற்றிருக்கும். அனாவசியமாக அது இயங்காது. ஆத்ம சொரூபத்தில் மனது மகிழ்ந்து குவிந்திருப்பது தியானமாகிறது. உலக வியவகாரம் பண்ணுவது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானது அவனுக்குத் தியானம் பண்ணுவது. வைராக்கியம் என்பது பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில் பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம்.
53. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே 
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்-அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல், விமுச்ய-விடுத்து, நிர்மம: ஸாந்த:-மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்,
ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மமாகத் தகுவான்.
பொருள் : அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.
மனிதன் வேறு, அவன் அணிந்திருக்கும் உடை வேறு. உடையைத் தன் சொரூபமாக எண்ணி இன்பமும் துன்பமும் அடைவார் உண்டு. அது ஒருவிதமான அகங்காரம். ஜன்மாந்தரங்களில் தனக்கு வந்தமையும் எண்ணிறந்த தேகங்களைத் தான் என்று அபிமானித்தல் பிறவிக்கு ஏதுவான அகங்காரமாகும். ஆத்ம போதத்தில் வளரும் வன்மை அல்லது பலம் வேண்டப்படுகிறது. அத்தகைய சீரிய பலமில்லாதவன் ஆத்மாவை அடையமாட்டான். பின்பு ஆசைக்கு ஒருவிதமான பலம் உண்டு. அதை ஆசையின் வேகம் என்று சொல்லுகிறோம். ஆசையின் வேகம் கெட வேண்டும். காமங்களை நிறைவேற்றுதற்கு வருவிக்கப்படும் பலம் வேண்டப்படுவதன்று. தனக்கு உடல் வலிவு மிகவும் அமைந்திருக்கிறதென்று மகிழ்ந்து ஒருவன் அதர்மத்தில் ஈடுபடுவதுண்டு. அத்தகைய இயல்பு செருக்கு என்னும் பெயர் பெறுகிறது. குற்றங்கள் பல செய்வதற்குச் சிலர்க்கு உடல் வலிவே முதற்காரணமாகிறது. இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்குக் காமம் என்று பெயர். காமத்துக்கு இடைஞ்சல் பண்ணுகிறவனிடத்து சினம் வருகிறது. குரோதம் என்பது இதுவே. உடல் வாழ்க்கைக்குப் பொருள் தேவை. ஆனால் நான் பொருள் படைத்தவன் என்ற எண்ணம் உதவாது. ஆத்ம சாதனத்துக்கும் தர்மானுஷ்டானத்துக்கும் அது இடைஞ்சலாகிறது. பொருள் படைத்தவன் என்ற உணர்வு பரிக்கிரஹமெனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில் அகப்படுவதுமாகிய பொருளை யோகி ஒருவன் உடைத்திருக்க வேண்டும். பின்பு, அதைத் தன்னுடையதென்று அவன் கருதலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரமெனப்படுகிறது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் யாரிடத்து அமைந்திருக்கின்றனவோ அம்மனிதன் சாந்தியடைகிறான். அவனுக்கு மனத்தெளிவு இயல்பாக உண்டாகிறது. அதனால் அவன் பிரம்மத்தையடையத் தகுந்தவனாகிறான். அது எப்படியெனில் :
54. ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம் 
ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன், ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
பொருள் : பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
ஞானம் பெரியதா, பக்தி பெரியதா என்னும் கேள்வி பலர் உள்ளத்தில் எழுகிறது. சிலர் ஞானம் பெரியது என்பர்; இன்னும் சிலர் பக்தி பெரியது என்பர். அப்படி யெல்லாம் பகர்வது அவரவர் மனப்பான்மையை விளக்குகிறது. முதிர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் ஒன்றே. குழந்தை ஒன்றுக்குத் தாயினிடத்து அன்பு பெருக்கெடுத்திருக்கிறது. தாயும் தன் குழந்தையினிடத்து ஆழ்ந்து அன்பு காட்டுகிறாள். பக்தியின் தோற்றத்தை இருவரிடத்திலும் காண்கிறோம். இதில் ஞானம் எங்கே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். குழந்தை தாய்க்குரியது; தாயே அக்குழந்தையாக வடிவெடுத்திருக்கிறாள் என்ற ஞானம் அதில் மறைமுகமாயிருக்கிறது.
ஒரு பணக்காரனிடம் எத்தனையோ யாசகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களை யார் என்று கவனியாது அம்மனிதன் தானம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் தோன்றிய வயிராகிகள் கூட்டத்தில் இருந்த பதினைந்து வயது இளைஞன் அப்பணக்காரனுடைய மனதைச் சிறிது கவர்ந்தான். அவ் இளைஞனது இடக் கன்னத்தில் இருந்த தழும்பும் முகச்சாயலும் ஆராய்ச்சிக்கு உரியவைகளாயின. பிரக்ஞைகெட்டு ஆற்றங்கரையில் கிடந்த குழந்தையைத் தாங்கள் எடுத்து வளர்த்ததாக வயிராகிகள் சொன்னார்கள். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு படகு விபத்து ஒன்றில் தான் இழந்துவிட்ட குழந்தை இப்பொழுது அகப்பட்டான் ! விசாரித்து உண்மையைத் தெரிந்தவுடன் தந்தையின் மனதில் அன்பு சுரந்தது. ஞானத்தினின்று அன்பு தோன்றுவதற்கு இது சான்று ஆகும். ஆக ஞானமுள்ள இடத்தில் பக்தியிருப்பதும், பக்தியுள்ள இடத்தில் ஞானம் இருப்பதும் இயல்பு. பிரம்ம ஞானத்தில் உறுதி பெறுகின்றவனுக்கு ஈசுவர பக்தி மேலிடுகிறது. தன்னையும் மன்னுயிர்கள் எல்லாவற்றையும் ஒரே பாங்குடன் அவன் காண்கிறான். ஏனென்றால் எல்லா உயிர்களும் ஈசுவரனுடைய பல்வேறு தோற்றங்கள் என்பது அவனுக்கு நன்கு விளங்குகிறது. தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென்று அவன் துயரப்படுவதுமில்லை; தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதுமில்லை. ஏழாம் அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தில் பகர்ந்த மேலாம் பக்தி ஈண்டுக் குறிப்பிடப்படுகிறது.
55. பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம் 
மாம் ய: ச-என்னை யார் எனவும், யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும், பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான், தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர், ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
பொருள் : யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு. டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில், அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும். அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.
பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது. ஞானத்தோடுகூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது. உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான். இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.
ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும். ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம். வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும். இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால் இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே. ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.
56. ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம் 
மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன், ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும், ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், மத்ப்ரஸாதாத்-எனதருளால், ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை, அவாப்நோதி-எய்துகிறான்.
பொருள் : எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.
முடிந்த நிலையில் எப்படி ஞானமும் பக்தியும் ஒன்றோ அதை விதத்தில் முடிந்த நிலையில் ஞானமும் கர்மமும் ஒன்றாகின்றன. சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தைத் தியாகம் பண்ணுவதில்லை; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்ற எண்ணத்தைத் தியாகம் செய்கிறான். தான் கர்த்தா என்ற எண்ணம் போய்விடும்பொழுது அத்துடன் ஜீவபோதமும் போயொழிகிறது. தன்னைக் கர்த்தாவென்று எண்ணிக்கொள்ளாது ஏராளமாகக் கர்மம் செய்பவனுக்கு ஆயாசம் வருவதில்லை. தன்னைக் கர்த்தா வென்று எண்ணிக்கொள்பவனுக்கோ விரைவில் ஆயாசம் வருகிறது. அவன் சிறிது வினையாற்றினாலும் அது ஏராளமானதாகத் தோன்றும். மனநிலையே அதற்குக் காரணம். ஈசுவரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈசுவரனை நினைக்கிறான். தன்னை நினைப்பதில்லை. ஈசுவர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான். கடலைச் சென்று அடையும் வரையில் நதிக்குச் சொந்த வியக்தியிருக்கிறது; சொந்தச் செயலும் இருக்கிறது. கடலினுள் நுழைந்த பிறகு நதி என்று பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்துகொள்ளலாம்; நதியினுடையதன்று. ஈசுவரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனது பாங்கு அத்தகையது. சரீரம் என்ற வடிவம் இருக்கிறது எனினும் அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் பரபோதமாம். அச்சரீரத்தில் நிகழ்கின்ற கிருத்தியங்கள் எல்லாம் ஈசன் செயலேயாம். அங்ஙனம் வித விதமான செயல்கள் நிகழலாம். போர் புரிவது போன்ற பயங்கரமான செயல் நடைபெறலாம். அக்கர்மங்களைச் சொந்தம் பாராட்டுதற்கு ஜீவபோதம் மிச்சமில்லை. நிலைத்த நித்தியமான பரபோதம் ஜீவனால் அடையப்பெற்றதாகிறது.
கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின் முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள் கொள்ளவேண்டாம். ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.
ஆகையால் நீ வாழவேண்டிய விதமாவது :
57. சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ 
ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம், சேதஸா-அறிவினால், மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு, புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று, மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு, ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
பொருள் : அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
ஒரு மனிதனை ஓர் அரசாங்க உத்தியோகத்தில் வைத்தால் அந்த அரசாங்கத்துக்குரிய ஆதிக்கம் அவனிடத்துச் சிறிது வருகிறது. தன் கடமையை முறையாகச் செய்துகொண்டுபோனால் இன்னும் அதிகமான பொறுப்பும் ஆதிக்கமும் அவனுக்கு வரும். அந்த உத்தியோகஸ்தன் சமூகத்தில் ஆணை செலுத்துதற்கிடையில் அப்பதவியில் தனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லையென்றும் எல்லாம் அரசாங்கத்தினுடைய தென்றும் அறிவானாகில் அவன் தனது பதவியைப்பற்றிய புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். அதைத் தனது என்று சொந்தம் பாராட்டுவானாகில் அவன் விவேகத்தைப் பெற்றவன் ஆகான். அதே முறையில் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் வியக்தியைப்பற்றிய உண்மையை ஜீவன் அறிவானானால் அவன் புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். தான் என்பதற்கு இலக்காகத் தன்னிடத்து இருப்பது யாது என்று அவன் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தனது என்பதற்கு இலக்காக இருப்பது எது என்று அடுத்தபடியாக விசாரித்துப் பார்க்க வேண்டும். கர்மத்தையும் அதே விதத்தில் துருவிப் பார்ப்பது அவசியம். தான் என்பதும், தனது என்பதும், தன் செயல் என்பதும் உண்மையில் இல்லை.
புத்தியோகத்தைச் சார்ந்திருப்பவன் இங்கு பகவான் இடுகின்ற ஆணைகளை யெல்லாம் அப்படியே நிறைவேற்றி வைப்பான். காயத்தால் அவன் கர்மங்களை விட்டொழிக்க மாட்டான். விவேகத்தின் துணைகொண்டு கர்மத்தில் வைத்த பற்றுதலையே ஒழித்து விடுவான். சர்வேசுவரனுடைய கிருத்தியமே யாண்டும் நிகழ்கிறது. எந்த ஜீவன் அதற்குக் கருவியாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் செயல் நின்றுவிடாது. ஈசுவரன் செயலை ஈசுவரனுக்காகச் செய்வது சந்நியாசமாகிறது. பரம்பொருளில் ஒடுங்குவதைத் தவிர ஜீவாத்மாவுக்கு வேறு ஒரு அலுவலும் கிடையாது. அதற்காகத் தனது முழு மனதையும் பரம்பொருளிடத்து நாட்டி வைத்தல் வேண்டும்.
பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள், குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா? இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் நமக்கு உண்மையாகத் தோன்றும். ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும். ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால் மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம் பகவான் என்பதை அவ் அன்பினின்று நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.
புத்தியோகத்தால் விளையும் நலன் எது வெனின்:
58. மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி
அத சேத்த்வமஹங்காராந்ந ஸ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி 
மத் சித்த:-என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய், ஸர்வதுர்காணி-எல்லாத் தடைகளையும், மத்ப்ரஸாதாத்-எனதருளால், தரிஷ்யஸி-கடந்து செல்வாய், அத அஹங்காராத் த்வம் ந ஸ்ரோஷ்யஸி சேத்-அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், விநங்க்ஷ்யஸி-அழிந்து போவாய்.
பொருள் : என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.
உலக வைபவத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம்; மற்றது அகவுலகம். விக்கினங்களும் இடைஞ்சல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகமாகிய மனதிலும் உண்டு. வெளியுலகைத் திருத்தியமைக்கின்றோம். நோய் வரக் கூடிய இடத்தை நோயற்ற இடமாக்கலாம். நீர் இல்லாத இடத்துக்கு நீர் கொண்டு வரலாம். வெப்பம் நிறைந்த இடத்தில் வெப்பத்தைக் குறைக்கலாம். இப்படியெல்லாம் செய்வது புறவுலகில் உள்ள விக்கினங்களை அகற்றுவதாகும். நவீன பௌதிக சாஸ்திரத்தின் துணைகொண்டு அச்செயல் ஏராளமாகச் செய்யப்படுகிறது. ஆனால் அதனாலேயே உலகுக்கு இன்பம் வந்தமையாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட முக்கியமானது அகவுலகமாகிய மனதைத் திருத்தியமைப்பது மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு கெட்டதாயிருந்தாலும் மனதைத் திருத்தியமைத்துக்கொண்டவனுக்கு அது கேடு செய்யாது.
இடைஞ்சல்களும் விக்கினங்களும் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மன நிலையில்தான் இருக்கின்றன. மனதை ஈசன் பால் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடைஞ்சல்களும் ஈசன் செயலாகவே தோன்றும். அதற்குச் சிறந்த சான்று அப்பரது வாழ்க்கையில் நிகழ்கிறது. வந்த விக்கினங்களைக் குறித்து அவர் பகர்ந்ததாவது :
நாமார்க்குங் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலையில்லோம்;
ஏமாப்போம், பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பமில்லை;
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்
சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
ஆனால் துன்பங்கள் எல்லாம் அஹங்காரத்தினின்றே வருகின்றன.
என்னதான் முயன்றாலும் ஈசுவரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது. நீ ஈசுவரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்து விடும் என்று நம்பாதே. உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். நான் கர்த்தா என்ற எண்ணம் உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈசுவரனைக் காணமாட்டாய். நானே கர்த்தா வென்று எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈசுவரன் ஒரு போதும் தோன்றுவதில்லை.
அஹங்காரத்தில் விளையும் கேடு யாது? விடை வருகிறது :
59. யதஹங்காரமாஸ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி 
யத் அஹங்காரம் ஆஸ்ரித்ய-எந்த அகங்காரத்தின் வசப்பட்டு, ந யோத்ஸ்யே இதி மந்யஸே-நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ, தே ஏஷ: வ்யவஸாய: மித்யா-இந்தத் தீர்மானம் பொய்யானது, ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி-(ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்.
பொருள் : நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.
கைக்குழந்தை ஒன்றின் முன்னிலையில் கொலையும், களவும், சூதும் நிகழ்கின்றன. கொலை புரிவதைப் பார்த்துக் குழந்தை சிரித்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதனிடத்து இன்னும் அஹங்காரம் தோற்றத்துக்கு வரவில்லை. பெரியவனாக வளர்ந்த பின் வியாபகத்துக்கு வரக்கூடிய அவனுடைய சுபாவமும் இப்பொழுது குழந்தைப் பருவத்தில் தோன்றா நிலையில் இருக்கிறது. கொலையையும், களவையும், சூதையும் குழந்தை ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது. அஹங்காரம் அடையப்பெறாத குழந்தையின் காட்சியில் அக்கொடிய செயல்கள் இல்லை. ஆனால் கொடுமையை உலகில் காண்பவர்களின் கடமை வேறு. குழந்தை போன்று தாங்கள் ஆயிருப்பதாக அவர்கள் பாசாங்கு செய்யலாகாது. அர்ஜுனனுக்கு பகவான் பகர்வதாவது :
இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்திரிய சுபாவத்துக்கு ஒத்தது. தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவன் நீ. தீமை தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு நீ சும்மாவிருக்க முடியுமா? தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக்கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது. அங்ஙனம் உன் சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாகத் தீர்மானிப்பது உன் ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும். எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்குக் கேடு வேறு ஒன்றுமில்லை.
தீமையைப் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் காயத்தால் செயல் புரிய மாட்டேன் என்று உன் இயல்பைக் கரக்கின்றாய். ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அகங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணாகத் தீர்மானிக்காதே.
அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா. மேலும் :
60. ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோऽபி தத் 
கௌந்தேய-குந்தியின் மகனே! யத் மோஹாத் கர்தும் ந இச்சஸி-எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தத் அபி ஸ்வேந ஸ்வபாவஜேந கர்மணா-அதையும் நீ, உன்னுடைய இயல்பான கர்ம வினையால், நிபத்த:-கட்டப் பட்டு, அவஸ: கரிஷ்யஸி-தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.
பொருள் : இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.
ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது இயல்பு அல்லது சுபாவம் உள்ளுற உறைந்து கிடக்கிறது. அதன் வேகம் எத்தகையது என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு கொடிய நோயைப் போக்குதற்கு ஒருவன் மருந்து உண்ண வேண்டியது அவசியமாயிற்று. மருத்துவனும் அதற்கேற்ற மருத்தைக் கொடுத்தான். பிறகு அதற்குப் பத்தியம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது. நோயாளி மருந்து உண்ணும்போது குரங்கைப்பற்றி நினைக்கலாகாது என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதுதான் பத்தியம் ! அது மிக எளியது என்று நோயாளி எண்ணிக்கொண்டு பத்தியத்துக்கு உட்பட இசைந்தான். காலையில் மருந்து ஜாடியைக் கையில் எடுத்த பொழுதெல்லாம் குரங்கைப்பற்றிய எண்ணம் முன் வந்து நின்றது. பத்திய நிபந்தனையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை! எணணத்துக்கு எவ்வளவு வலிவோ அதைவிட அதிகம் வலிவுண்டு இயல்பில் பிறந்த வினைக்கு.
மற்றொரு சான்றும் இங்குத் தேவையாகிறது. பிறரைத் தாக்கித் துன்புறுத்தும் ஒருவன் தானே அடியுண்ண விரும்புவதில்லை. அத்தகையவன் பிறரால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டான். கனவில் அவனுடைய நிலைமை அனுதாபத்துக்கு உரியதாயிருக்கிறது. உண்மையில் பிறர் யாரும் வந்து அவனைப் புடைக்கவில்லை. அவனது சுபாவத்தினின்று உதித்த சித்த விருத்தி அச்செயலை வரவழைத்துக்கொண்டது. கனவில் அடிபடுவதினின்று தப்பித்துக்கொள்ள அவனுக்குச் சுதந்தரம் இல்லை. தன் இயல்பில் பிறந்த வினையின் வன்மை அத்தகையது. சுவர்க்கத்துக்குச் சென்றாலும் நரகத்துக்குச் சென்றாலும் மனிதன் தன் இயல்பைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறான். தன் நிழல் எப்படித் தன்னைவிட்டுப் பிரிவதில்லையோ, தன் சுபாவமும் அப்படியே தன்னைவிட்டுப் பிரிவதில்லை. அதிலிருந்து உதிக்கும் கர்மத்தை அவன் செய்தே ஆகவேண்டும். மற்று அதன் வேகத்தை முறையாகக் கையாளுதலே அதை ஒடுக்குதற்கு உற்ற உபாயமாகும்.
வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும் அது நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகுபிடிவாதமுள்ள அக்ஞானம். எவ்வளவுதான் சிரமப்பட்டபோதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.
வினையின் வேகத்தை முறையாகக் கையாளுதல் என்பதன் பொருள் யாது? விடை வருகிறது:
61. ஈஸ்வர: ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந திஷ்டதி
ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா 
அர்ஜுந-அர்ஜுனா, யந்த்ராரூடாநி ஸர்வபூதாநி-உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும், ஈஸ்வர:-ஈசுவரன், மாயயா ப்ராமயந்-மாயையினால் சுழற்றிக் கொண்டு, ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸே-எல்லா உயிர்களின் உள்ளத்தில், திஷ்டதி-நிற்கிறான்.
பொருள் : அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் போர்க்களத்துக்கு வந்த கோலமே இக்கோட்பாட்டை விளக்குகிறது. ரதத்தின் மீது அர்ஜுனன் ஏறியிருந்தான். அந்த ரதம் உடலுக்குச் சமானம்; அவன் ஜீவாத்மாவாகிறான். ரதமும் இயங்கியது. பார்த்தனும் போர் புரிந்தான். இயங்கியதைப் பற்றிய உணர்ச்சி ரதத்துக்கு இல்லை. சண்டை செய்ததைப் பற்றிய உணர்ச்சி அர்ஜுனனுக்கு இருந்தது. நிகழ்ந்தது தன் செயல் என்று எண்ணியிருந்த அப்போர்வீரன் அது உண்மையில் ஈசன் செயல் என்று அறிந்து கொள்ளக் கடமைப்பட்டிருந்தான். கிருஷ்ணன் தேர் ட்டினான்; ஆனால் ஆயுதம் எடுத்துப் போர்புரியவில்லை. அங்ஙனம் எல்லாருடைய ஹிருதய கமலத்திலும் அவன் சாக்ஷியாக வீற்றிருக்கிறான்.
அர்ஜுனன் என்பது வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்படுகிறது. தூய மனமுள்ளவன் உண்மையைத் தெரிந்துகொள்ள வல்லவனாகிறான். ஹிருதயத்தில் வீற்றிருக்கின்ற சர்வேசுவரனின் சன்னிதான விசேஷத்தால் மாயை இயங்குகிறது. இயங்குகின்ற மாறை அதன் வசப்பட்டிருக்கிறவர்களையெல்லாம் இயக்குகிறது. சக்கரங்களில் கட்டுண்ட பொம்மைகள் போன்று அவர்கள் அசைகிறார்கள். அசைவைத் தங்கள் சொந்தக் கர்மமென்று அவிவேகிகள் எண்ணிக்கொண்டு அதைச் செய்வேன் என்றும், இதைச் செய்யமாட்டேனென்றும் இச்சா சுதந்தரம் பாராட்டுகிறார்கள். அதனால் மாயையில் அவர்கள் அதிகம் கட்டுண்கின்றனர். ஈசா, நீ ஆட்டுவிக்கும் விதத்தில் நான் ஆடுகிறேன் என்ற மன நிலை வேண்டும். விதவிதமான ஜீவர்களைக் கருவிகளாகக் கொண்டு ஈசன் தன் செயலைச் செய்து கொள்கிறான் என்ற எண்ணத்துடன் கர்மம் செய்தலே அதை முறையாகக் கையாளுவதாகும்.
பாம்புக்குப் பல்லில் விஷமிருந்தபோதிலும் அவ்விஷத்தால் அது தீமையை அடைவதில்லை. ஆனால் அது பிறரைக் கடித்தால் அவ்விஷம் கடியுண்டவனுக்கு மரணத்தைத் தரும். இதைப்போல ஈசுவரனிடத்திலும் மாயை உள்ளது. ஆனால் அது அவரைப் பந்தப்படுத்தாது. ஜகத் முழுதையும் அவர் தனக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.
கடவுள் ஆட்டுவிக்கிறார் என்ற கருத்தில் வரும் பயன் இனி விளக்கப்படுகிறது :
62. தமேவ ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம் 
பாரத-பாரதா, ஸர்வபாவேந-எல்லா வடிவங்களிலும், தம் ஏவ ஸரணம் கச்ச-அவனையே சரணெய்து! தத்ப்ரஸாதாத்-அவனருளால், பராம் ஸாந்திம் ஸாஸ்வதம் ஸ்தாநம்-பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை, ப்ராப்ஸ்யஸி-அடைவாய்.
பொருள் : அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.
எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடைதல் ஜீவாத்மாவினது செயற்கரிய செயலாகும். உடலைத் தன்னுடையது என்று கருதுதல், தன் செயலுக்குத் தான் கர்த்தாவென்று நினைத்தல், உலக நடைமுறையில் தனக்குத் தனியந்தஸ்து ஒன்று உண்டு என்று எண்ணுதல் இவையாவும் ஜீவபோதத்தை வளர்க்கின்றன. அது தஞ்சமாகாது. கடலில் அலை இருப்பதுபோன்று ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருக்கின்றன. அலைக்குச் சொந்தமான நீர் கிடையாது. ஜீவனுக்குச் சொந்தமான சரீரம் கிடையாது. அலைக்கிருக்கின்ற வடிவம் வேளைக்கு ஒன்று. தேகத்துக்கு இருக்கிற வடிவமும் அத்தகையது. அலையின் செயலோ உண்மையில் கடலின் செயல். கடலுக்கு அன்னியமாக அலை இருக்கமுடியாது. ஜீவனுடைய செயல்களெல்லாம் உண்மையில் ஈசனுடைய செயல்கள். ஈசனுக்கு அன்னியமாக ஜீவர்கள் இல்லை. இப்பேருணர்ச்சியில் நிலைபெற்றிருப்பது தஞ்சமாகும்.
பாண்டவர், விதுரர், திரௌபதி, குசேலர் முதலாயினோர் கிருஷ்ணனைத் தஞ்சமடைந்திருந்தனர். உடன் பிறந்த சகோதரர்கள் தசரத ராமனைத் தஞ்சமடைந்திருந்தனர். குகன், சுக்ரீவன், விபீஷணன் முதலாயினோர் அவனைத் தஞ்சமடைந்தனர். அங்ஙனம் அடைக்கலம் புகுந்தவர்க்கு மன அமைதி உடனே உண்டாயிற்று. கைகேயி, வாலி, ராவணன் முதலியவர்கள் அடைக்கலம் புகவில்லை; அவர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர்.
ஈசனுடைய அருள் என்னும் காற்று சதா வீசிக்கொண்டிருக்கிறது. தங்களை முற்றும் ஈசனிடம் ஒப்படைத்தவர்கள் அக்காற்றைப் பயன்படுத்தும் மாலுமிகளுக்குச் சமமானவர்கள். காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குக் கஷ்டமில்லை. அருளைப் பயன்படுத்தும் அன்பனுக்கு அல்லல் இல்லை. அவன் கர்மம் செய்வதற்கிடையில் கர்ம பந்தம் கலைகிறது. சாந்தியும் முக்தியும் அவனுக்கு வாய்க்கின்றன.
ஸ்ரீ ராதை தன் கற்பு நிலையை நிரூபிப்பதற்கு ஆயிரம் துவாரங்கள் உள்ள ஒரு பாத்திரத்தில் ஜலங்கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டாள். ஒரு துளி ஜலங்கூடக் கீழே விழாமல் அவள் கொண்டுவந்தவுடன், அங்கிருந்தவர்கள் எல்லாரும் இவளைப் போல் கற்புடைய ஸ்திரீ ஒருத்தி இதுவரையில் இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவது மில்லை என்று வெகுவாகச் சிலாகித்தனர். அப்போது ராதை ஏன் என்னை சிலாகிக்கிறீர்கள்? கீர்த்தியெல்லாம் கிருஷ்ணனுடையதே என்று சொல்லுங்கள். நான் கேவலம் அவனுடைய பணிப்பெண் என்றாள்.
63. இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா
விம்ருஸ்யைததஸேஷேண யதேச்சஸி ததா குரு 
இதி குஹ்யாத் குஹ்யதரம் ஜ்ஞாநம்-இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை, மயா தே ஆக்யாதம்-என்னால் உனக்கு கூறப்பட்டது, ஏதத் அஸேஷேண விம்ருஸ்ய-இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து, யதா இச்சஸி ததா குரு-எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
பொருள் : இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
விளங்காத ஒன்றை இரகசியம் என்றும் மறைபொருள் என்றும் பகர்கிறோம். இயற்கையின் உட்பொருள் முழுதும் நமக்கு விளங்குகிறதில்லை. அது ரகசியமாய் மறைந்து கிடக்கிறது. இயற்கையைப்பற்றி இக்காலத்தில் நாம் அறிந்துள்ள பல மர்மங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்தன. உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம். மின் சக்தியை உண்டு பண்ணும் முறை இப்பொழுது நமக்குத் தெரிந்திருக்கிறது. இயற்கையில் இதுகாறும் மறைந்து கிடந்த விசையானது இப்பொழுது வெளிப்படையாயிற்று. அந்த விசையின் தன்மை எத்தகையதென்றும், அதை எப்படி உண்டுபண்ணுவது என்றும், அதை எங்ஙனம் உபயோகப்படுத்தலாம் என்றும் புகட்டுவது சாஸ்திரம். விளங்காததை விளக்குவது சாஸ்திரம். இயற்கையைப் பற்றி அப்படி எண்ணிறந்த சாஸ்திரங்கள் இருக்கின்றன. மானுட வாழ்க்கையைப் பற்றிய சாஸ்திரம் இருக்கிறது. அது பிரம்ம வித்தையென்றும் யோக சாஸ்திரம் என்றும் பெயர் பெற்று உள்ளது. அனுஷ்டான முறையில் சாஸ்திரம் நமக்கு அளிக்கப்படும்பொழுது அது உடன்பாட்டு முறையென்றும் எதிர்மறை முறையென்றும் இரண்டுவித வடிவெடுக்கிறது. இன்னதைச் செய் என்று ஆக்ஞாபிக்கும்பொழுது அது உடன்பாட்டு முறை. இன்னதைச் செய்யாதே என்று ஆக்ஞாபிக்கும் பொழுது அது எதிர்மறை முறை. ஏன் ஒரு விதத்தில் ஒழுகவேண்டும், ஏன் மற்றொரு விதத்தில் ஒழுகலாகாது என்பதற்குத் தக்க காரணங்களையும் அது எடுத்துப் போதிக்கிறது. யுக்தி பூர்வமாகக் புகட்டுவது சாஸ்திரம். குருட்டு நம்பிக்கையை சாஸ்திரம் ஆமோதிப்பதில்லை. குருட்டு நம்பிக்கையை விரைவில் கலைத்துவிடலாம். ஆனால் யுக்திக்கும் அனுபவத்துக்கும் ஒத்திருக்கும் கோட்பாட்டை யாரும் அசைக்க முடியாது.
மிக ஆழ்ந்தவைகளான வாழ்க்கைத் தத்துவங்களைக் கருணை கூர்ந்து கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு எடுத்து வழங்கினார். அவர் புகட்டியவைகளை வேண்டியவாறு ஆராய்ச்சி செய்வதற்கான இச்சா சுதந்தரத்தையும் அவனுக்கு அவர் அன்புடன் அளித்தார். உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. உண்மை தனக்குத் தானே சான்று ஆகிறது. உண்மையை நன்றாக அலசி ஆராய்ந்து நீ விரும்பியதைச் செய் என்கிறார் பகவான். உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந்தரம் முற்றிலும் அவசியமானது. அடிமைத் தனத்தில் அடக்கி வைக்கப்பட்ட உயிர் ஓங்கி வளராது. புகட்ட வேண்டிய யாவையும் சொல்லியான பிறகு, அவைகளுள் விரும்பியதைச் செய் என்று கிருஷ்ணன் அனுமதி கொடுக்கிறார். சான்றோர் புகட்டும் செந்நெறியின் சிறப்பு இதுவேயாம்.
மனிதனுடைய முயற்சிகளெல்லாம் எதில் முற்றுப்பெறுகின்றன என்ற முடிவான உண்மையை இனி மூன்று சுலோகங்களில் பகவான் பகர்கின்றார்.
64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் 
ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய, மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை, பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள், மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன், தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.
பொருள் : மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.
நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும். இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது. சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான். அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது- பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம். வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது. ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.
புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது. எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன். உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத் தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன் கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டுபண்ணும் கானமோ மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது. பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான். இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.
உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல, பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.
பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :
65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே 
மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக, மத்பக்த:-என் தொண்டனாகுக, மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க, மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக, மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய், ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.
பொருள் : உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.
சத்தியம் சொல்லுகிறேன் என்று சத்தியப்பொருளாகிய பகவான் பகர்கிறார். சூரியனிடத்திருந்து கிளம்பி வருவதெல்லாம் அக்கினி சொரூபம். வெப்பத்தைத் தவிர வேறு ஒன்றும் ஆங்கில்லை. பரமாத்மா உடல் தாங்கி வந்து உரைப்பது சத்தியமே. அதைப் பின்பற்றுகின்ற சான்றோரது ஜீவிதம் அதை சத்தியமென்றே நிரூபிக்கிறது. நீ எனக்குப் பிரியமானவன் என்பது மகாவாக்கியம். ஜீவர்கள் எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குதற்கான பரிபாகம் வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம் பகரப்படுகிறது. துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளும் பிரியத்தைப் படிப்படியாய் உறுதிப்படுத்திக்கொண்டு போகின்றன. அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும் தாழ்? நானே நீ, நீயே நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை. இது வெறும் பேச்சில் நிரூபிக்கப்படுவதன்று ; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாம்.
வண்டியில் ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்லுவது நெறி. ஊரை அடைவது குறி. கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே. அவனைத் துணையாகக்கொண்டு அவனை அடைகிறோம். அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளால் அவனை அடைகிறோம். அவன் யாண்டும் துணைபுரிந்தும், அவன் துணையை ஏற்க நம்மில் பலர் மறுக்கிறோம். இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நிற்பது நமது பண்படாத மனது. அந்த மனது பல ஜன்மாந்தரங்களில் வேறு பல காரியங்களுக்கு உதவிவந்தது. விழலுக்கு நீர் இறைத்தவாறு அது அநித்தியப் பொருள்களை நாடிநின்றது. ஆனால் அது கடவுளை அடைதற்கே கருவியாக அமைவது அவசியமாகிறது. உள்ளம் அவனுக்கே இடமாக வைக்கப்படவேண்டும். மனிதன் செய்யவேண்டிய செயல் அதுவேயாம். அவன் மீது பக்தி பண்ணுமளவு மனது மிக உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான். பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன் ஊறியிருப்பதால் செயல்கள் அனைத்தின் வாயிலாக இறைவனுக்கு அவன் இடையறா நமஸ்காரம் செய்கிறான். கடலை அணுகிய நதியானது கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அங்ஙனம் இத்தகைய பான்மையைப் பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம் செய்கிறார். உறுதிமொழி கூறுகிறார்.
ஒன்பதாவது அத்தியாயம் முப்பத்தொன்றாவது சுலோகத்தில் பக்தன் அழிந்துபட்டுப் போவதில்லை என்பதைப் பிரகடனம் பண்ணும்படி அர்ஜுனனைத் தூண்டினார். இறுதியில் அப் பேருரையைப் பகர பகவான் தாமே முன் வந்துள்ளார்.
தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுவதற்கு மிகவும் தவிப்பதைப் போல, ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.
பகவான் கூறும் அந்த உறுதிமொழிதான் யாது? விடை வருகிறது :
66. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச: 
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு, மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ - என்னையே சரண் புகு, ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும், அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன், மா ஸுச:-துயரப்படாதே.
பொருள் : எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.
ஜீவன் செய்கிற செயல்களிலெல்லாம் கடைசியான செயல் ஈசனிடத்து அடைக்கலம் புகுதலாம். அடைக்கலம் புகுதல் என்பதன் பொருள், தன் முயற்சி போதவில்லை அல்லது பலிதமாக வில்லை; ஆகையால் தெய்வத்தினிடம் தஞ்சமடைந்து அவர் துணையையும் கொஞ்சம் தேடிக்கொள்ளலாம் என்பதல்ல. சிற்றோடை பெரிய நதியில் கலந்து பிறகு சமுத்திரத்தில் சங்கமமாவது போன்றது சரணாகதி. ஜீவனுடைய இச்சா சுதந்தரமெல்லாம் ஈசுவர சங்கற்பத்தில் சேர்ந்துவிடுகிறது. தனக்கெனத் தனிச் செயல் ஒன்றுமில்லை. ஈசன் செயல் கடலின் செயல் போன்றது. ஜீவன் செயல் அலையின் செயல் போன்றது. அலையானது கடலுக்கு அன்னியமானதல்ல. ஜீவன் செயலெல்லாம் உண்மையில் ஈசுவரன் செயல். கர்மயோகம் ஜீவனை முடிந்த இந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.
பக்தன் எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக்கிறான். தனக்கு வரும் நன்மை கேடுகளெல்லாம் கடவுளது ஆணை. ஆகையால் ஒரு செயலை நன்கு என்றும் மற்றொரு செயலைக் கேடு என்றும் பக்தன் பொருள்படுத்துவதில்லை. தர்மம் அதர்மம் ஆகிய இரண்டும் ஈசன் செயல் என்ற புனித நிலையை அடைவனவாகின்றன.
அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!
பக்தர்கள் எல்லாரும் அடைக்கலம் என்னும் பெருநிலையை அடைந்திருக்கிறார்கள். இறைவனது பேரன்பில் அவர்கள் தங்களை மறந்துவிட்டார்கள். ஞாபகக் குறைவில் ஒருவன் நடுவீதியில் நடப்பானாகில் அவன் ஓடும் வண்டிகளால் ஆபத்துக்கு உள்ளாவான். பக்தனோ அன்பில் தன்னை மறந்தவன் என்றாலும் ஒரு சிறு செயலிலும் சொப்பனத்திலும் அவன் பிழைபோவதில்லை. ஒழுங்குப்பாடே வடிவெடுத்ததாக அவனது வாழ்க்கை நடை பெறுகிறது. தாயின் மார்பில் அணைக்கப்பெற்ற சேய்போன்று அவன் சரணாகதியில் இன்பம் துய்க்கிறான்.
இனி ஞானியின் ஞானோதயமும் சரணாகதி எனப்படுகிறது. கண்ணாடியில் நல்லது கெட்டது ஆகிய இரண்டின் பிம்பங்கள் தோன்றலாம். எனினும் கண்ணாடியின் சொரூபம் மாறுவதில்லை. தர்மம் அதர்மம் என்று சொல்லப்படும் கர்மங்களெல்லாம் பிரகிருதியினுடையவைகள். அந்தராத்மாவாயிருக்கும் சித் சொரூபம் என்னும் பரவெளியை அவைகள் பாதிக்கமாட்டா. சுத்த சைதன்யமாகிய தன்னில் தானாயிருப்பவன் உபாதிகளையெல்லாம் தியஜித்து பரவெளியில் ஒன்றாய்விடுகிறான். பேரறிவு அல்லது பேருணர்வு ஒன்றே பாக்கியிருக்கிறது. உள்ளும் புறமும் என்கிற பாகுபாடுகள் அப்பரவெளிக்கில்லை. ஞானியடையும் சரணாகதி இதுவே.
யோகி, பக்தன், ஞானி ஆகிய மூவரும் அடையும் சரணாகதி ஒன்றேயாம். அது மூன்று விதமாக விளக்கப்படுகிறது. சத் சொரூபத்தில் யோகி லயமாகிறான்; சித் சொரூபத்தில் ஞானி லயமாகிறான்; ஆனந்த சொரூபத்தில் பக்தன் லயமாகிறான்.
சிறு குழந்தையொன்று தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறது. அதனிடத்து மற்றவர்கள் காட்டும் அன்பை அங்கீகரிக்கும் பரிசு அதற்கு வந்திருக்கிறது. ஆனால் அதனுடைய மனது இன்னும் விகாரப்படவில்லை. எந்த நாட்டுக்கு உரிய குழந்தை எந்த மொழி பேசும் குழந்தை, எத்தகைய பழக்க வழக்கங்களையுடையது ஆகிய பேதங்களையும் பாகுபாடுகளையும் அது இன்னும் அறியவில்லை. பூர்வ ஜன்மத்திலிருந்து அது கொண்டுவந்திருக்கும் இயல்புகளும் இன்னும் அவ்யக்தமாக மறைந்து கிடக்கின்றன. அதாவது அதன் மனத்தகத்து இருக்கும் மனோதர்மங்களெல்லாம் இன்னும் வடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் குழந்தையானது ஞானிக்கு ஒப்பானது. அதன்பால் உள்ள அபேத நிலை உயிரனைத்தையும் தனக்குரிய தாக்குகிறது. குழந்தையின் தூய அன்புக்கு வசப்படாத உயிர் இல்லை.
தான் அடைந்துள்ள மன பரிபாகத்தால் ஞானி குழந்தை போன்று ஆகிறான். அந்தக்கரண மடங்கத் துறப்பதுவே எந்தத் துறவினும் நன்று என்பது கோட்பாடு. ஞானியாவதற்கு முன்பு விதவிதமான இயல்புகள் மனதைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்றன. அவரவர் ஸ்வதர்மம் என்பது அதுவே. ஸ்வதர்மத்தைக் கையாளுதலே ஸ்வதர்மத்தை விட்டொழிப்பதற்கு உற்ற உபாயம். நோய் வந்தால் அது தன் வேலையைச் செய்ய இடங் கொடுப்பதே அதை ஒழிப்பதற்கு உபாயமாகிறது. நோயை அடக்கினால் வேறு ஒரு நோயாக அது வடிவெடுக்கும். வந்துள்ள நோய் உடலில் வேலை செய்தால் அந்நோய் ஓய்ந்து அறவே அகன்றுபோம். நாம் எடுத்துக்கொண்ட ஸ்வதர்மம் அத்தகையது. ஸ்வதர்மத்தைக் கையாண்டு அதன் வேகத்தை ஒழித்து விடுவது நம் குறிக்கோள். மழைபெய்து மேகம் ஒழிந்துபோனால் எஞ்சியிருப்பது வெட்டவெளி. பற்றற்று தர்மம் செய்து தர்மத்தை ஒழித்துவிட்டால் எஞ்சியிருப்பது சுத்த சைதன்யமாகிய ஆத்ம சொரூபம்.
தனக்கு அன்னியமானதெல்லாம் தன்னை வந்து சாரும் பொழுது அது அழுக்கு அல்லது பாபம் ஆகிறது. ஜீவபோதம் பெற்றிருப்பது பாபம்; அது தனது நிஜ சொரூபமல்ல. கடலுக்குள் வந்த நதியின் நதித்தன்மையை நீக்கிவிட்டுக் கடலின் தன்மையைப் பெறும்படி அது செய்துவைக்கிறது. பரமாத்மாவை சரணடைந்த ஜீவனிடத்திருந்து ஜீவபோதம் என்ற பாபத்தை அகற்றிவிட்டு பரபோதத்தை அது வழங்குகிறது. ஜீவபோதத்திலிருந்து விடுதலை யடைவதே மோக்ஷமாம். பரமாத்மா அமிர்த சொரூபம்; அதனுள் அழிவு என்பதில்லை. அது பரமானந்தம். ஆக, அதனுள் துன்பமில்லை. அது பரஞானச்சுடர் ; ஆக, அதனுள் அக்ஞான இருள் இல்லை. சத்தியம், ஞானம், ஆனந்தம் பிரம்மம். அந்தக்கரணம் அகன்றபின் ஜீவன் பிரம்மமே.
கோழைத்தனத்தை அகற்று ; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய் என்ற கருத்துடன் கீதா ஆசாரியன் கீதையைத் துவக்கினான். உன் கடமைகளை யெல்லாம் நீத்து விட்டு எனது அகண்ட சத் சித் ஆனந்த சொரூபத்தில் திளைத்திருப்பாயாக என்று கீதாசாரியன் முடிவு கூறினான். இடையில் பகர்ந்துள்ள யாவும் கர்மத்தைக் கடப்பதற்கு உற்ற உபாயங்களாம். அவனைச் சரணடைந்து, அவன் அருளை நாடி நிற்பவர்க்கு அவனருளால் அவனுடைய போதனையும் நன்கு விளங்கும். பிறகு ஜீவபோதத்தைக் கலைத்துவிட்டு அவனுடைய அகண்ட ஸத் சித் ஆனந்த சொரூபத்தில் இரண்டறக் கலத்தலும் எளிதாகின்றது.
பரிபூரண சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன், அன்றைய வேலையை முடித்த பிறகு தலையணையின் மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய்ப் புகைச் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆனந்த நிலையைப் போன்றது அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.
இத்துடன் கீதா உபதேசம் முற்றுப் பெறுகிறது. இந்தக் கீதா சாஸ்திரத்தைப் படித்தும் அனுஷ்டித்தும் பயன் அடைய வல்ல அதிகாரி யார் என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :
67. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்யஸூயதி 
தே இதம் கதாசந-உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும், அதபஸ்காய-தவமிலாதோனுக்கும், அபக்தாய ச-பக்தியில்லாதோனுக்கும், அஸுஸ்ரூஷவே-கேட்க விரும்பாதோனுக்கும், ய: மாம் அப்யஸூயதி-என்பால் பொறாமையுடையோனுக்கும், ந வாச்யம்-சொல்லாதே.
பொருள் : இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.
வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் அடங்கப் பெற்றது பகவத்கீதை. அதை முறையாக எல்லார்க்கும் எடுத்து வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தியமையும். ஆனால் இதை யாருக்குப் புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான் பண்ணுகிறார். கண்ணில்லாதவர்க்குச் சித்திரம் பயன்படாதது போன்று தவம் அல்லது நெறியான வாழ்க்கையில்லாதவர்களுக்குக் கீதோபதேசம் பெரும் பயன் அளிக்காது. வெறும் தவம் மட்டும் போதாது. அது பக்தியோடு கூடியதாயிருக்க வேண்டும். பக்தியே தவத்தைத் தூயதாக்குகிறது. பிறகு பக்தியின் அறிகுறியாக சேவை வந்தமைகிறது. ஈசனிடத்தும் உயிர்களிடத்தும் விருப்பமிருக்குமளவே தொண்டுபுரிய ஒருவன் துணிகிறான். தோன்றாத் துணையாயுள்ள ஈசுவர பக்தி பண்ணுகிறவர்களுள் தோற்றத்தில் வந்துள்ள கிருஷ்ணனைச் சாமான்ய மனிதன் என்று இகழ்பவர் உண்டு. பலவிதச் செருக்கும் தேகாத்ம புத்தியும் உடையவர்கள் அக்காலத்தில் இருந்ததுபோன்று எக்காலத்திலும் இருக்கிறார்கள். அப்படி அகங்கரிக்கிறவர்கள் கீதையின் உட்கருத்தை அறிந்துகொள்ளமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு அதைப் புகட்டுவது பயன்படாது. அசுச்ரூஷவே என்பது கேட்க விருப்பமில்லாதவனுக்கு என்றும் பொருள்படுகிறது. தன்னைப்பற்றிய பெரிதாக நினைத்துக்கொண்டோ அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டோ இதை ஊக்கத்தோடு கேட்க மனமில்லாதவனுக்கு இதை உபதேசிக்கலாகாது.
மழைத்தண்ணீர் மேட்டுநிலத்தில் தங்கிநிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்துவிடுகிறது. அதுபோல ஈசுவர கிருபையானது தற்பெருமையும், கர்வமுமுள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கிநிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் அது தங்கிநிற்கும்.
ஈசுவர கைங்கரியமாக கீதா பிரசாரம் செய்பவன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது:
68. ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய: 
ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி, இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை), மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ, மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான், அஸம்ஸய:-ஐயமில்லை.
பொருள் : இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.
மனிதன் பிறர்க்கு எதை எடுத்து மனமுவந்து வழங்குகிறானோ அது அவனுக்குச் சொந்தமாகிறது. தனக்கென்று எதைப் பிடித்து வைக்கிறானோ அது சொந்தமாவதில்லை. உடலுக்கு இன்றியமையாத ஒன்றை முதல் சான்றாக எடுத்துக்கொள்வோம். உணவு இல்லாது யாரும் உயிர்வாழ முடியாது. உணவைத் தனக்கென்று தேடிவைத்துக் கொள்ளுதல் உயிர்களிடத்து அமைந்துள்ள இயல்பு. ஒருவன் பிறர்க்கு உணவு வழங்கிப் பிறகு தான் உண்கிறான். மற்றொருவன் பிறரைப்பற்றி ஒன்றும் நினையாது தனக்கென்றே தேடிவைத்து உண்கிறான். இவ் இருவருள் பிறரைப்பற்றி நினைப்பவன் அடைகிற உடல் நலனை மற்றவன் அடையமாட்டான். இதை ஒவ்வொருவனும் தன் சொந்த அனுபவத்தில் காணலாம்.
அடுத்தபடியாக அறிவுக்கு உரியது கல்வி. கற்பவர்களுள் நன்கு கற்பவன் யார் என்ற கேள்வி எழுகிறது. தனக்கு என்று கற்பவனைவிடப் பிறர்க்குப் பயன்படுமாறு புகட்டுதற்குக் கற்பவன் நன்கு கற்கிறான். பிறர்க்குப் புகட்டும்பொழுதெல்லாம் தனது அறிவு தெளிவடைகிறது. பிறர்க்கு ஒரு விஷயத்தை விளங்கச் செய்யுமளவு தனக்கே அது நன்கு விளங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்குமளவு நீர் ஊறுவதுபோன்று கல்வியைப் புகட்டுமளவு ஒருவனிடத்துக் கல்வி வளர்கிறது.
பகவத் விஷயங்களைப் பக்தர்களிடத்து பக்தி விசுவாசத்தோடு எடுத்தோதுவதே பகவத் சேவையாகிறது. தன்னை ஓர் ஆசாரியன் என்று அத்தகையவன் அகங்கரிப்பதில்லை. அகங்காரம் கொள்கிறவனுக்கு பக்தி பெருகுவதில்லை. பகவத் மகிமையானது நல்லார்க்கிடையில் பேசப்பெறுகிறது என்று இன்புறுபவனுக்கு அன்பும் அறிவும் வளர்கின்றன. அத்தகைய பேச்சாளன் பணிவுடன் செய்யும் பகவத் கைங்கரியமாக அது கருதப்படுகிறது. கடவுளை அடைதலே அதில் விளையும் பயனாகும்.
பகவான், பாகவதம் (சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.
சாஸ்திரங்களின் உட்கருத்தை நல்லாரிடம் பரப்புபவனைக் கடவுள் எப்படிப் பொள்படுத்துகிறார்? விடை வருகிறது:
69. ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரியக்ருத்தம:
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி 
தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம-அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன், மநுஷ்யேஷு கஸ்சித் ச ந-மானிடருள்ளே வேறில்லை, புவி தஸ்மாத் மே-உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு, ப்ரியதர: அந்ய:-எனக்கு உகந்தவன் வேறு எவனும், ந பவிதா-ஆக மாட்டான்.
பொருள் : மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.
எல்லாச் செயல்களும் இறைவனுடைய செயல்களே. இயற்கை விளக்குவதெல்லாம் இறைவனுடைய மகிமையையேயாம். அவ்விளக்கங்கள் அனைத்திலும் பகவத் கீதையின் விளக்கம் தனிப்பெருமை பெற்றுள்ளது. இயற்கையின் சிறப்பை அது விளக்குகிறது. வாழ்க்கைத் தத்துவத்தை அது விவரித்துச் சொல்லுகிறது. அனைத்துக்கம் மூலப்பொருள் எது என்பதை அது இயம்புகிறது. பரவித்தை அபரவித்தை ஆகிய இரண்டும் கீதையில் அடங்கியிருக்கின்றன. அதாவது கடவுளை அடைதற்கான வழியும் இவ்வுலக வாழ்க்கையை நன்கு நடாத்துதற்கான வழியும் கீதையினால் புகட்டப்படுகின்றன. அதன் போதனையைக் கேட்டு அதன்படி நடப்பவன் விரைவில் நல்லான் ஆவது திண்ணம். ஆகவே தக்கார்க்கிடையிலே கீதா தத்துவத்தைப் புகட்டுதற்கொப்பான செயல் வேறு எதுவுமில்லை. அப்படிப் புகட்டுபவனைப் போன்று கடவுளுக்குச் சொந்தமானவனும் வேறு யாருமில்லை. கடவுளின் மகிமை அவன் மூலம் நன்கு வெளியாவதே அதற்குக் காரணமாகிறது.
வீட்டுக் கூரையின் மேலிருந்து விழும் மழை ஜலம் புலித்தலை போன்ற குழாயின் மூலமாகக் கீழே தரையில் விழும்போது, பார்வைக்குப் புலித்தலையினின்றும் விழுவதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது ஆகாயத்திலிருந்து விழுகிறது. அதுபோல, தெய்விகம் வாய்ந்த மனிதர்கள் கூறும் உபதேச மொழிகள் பார்வைக்குக் கேவலம் மனிதர்களிடமிருந்து வருவனவாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் ஈசுவர ஸன்னிதியினின்றே வருகின்றன.
பிறர்க்கு எடுத்துப் புகட்ட இயலாதவர்க்கும் கீதையின்பால் ஒரு கடமையுண்டு. அது யாதெனின் விடை வருகிறது :
70. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: 
இமம் ஆவயோ: தர்ம்யம் ஸம்வாதம்-நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை, ய: அத்யேஷ்யதே-எவன் கற்றறிகிறானோ, தேந ச அஹம்-அவனாலும் நான், ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம்-ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன், இதி மே மதி:-இஃதென் கொள்கை.
பொருள் : நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.
கேள்வியால் கீதையை அறிந்துகொள்வது போன்று சொந்த ஆராய்ச்சியாலும் கீதையை அறிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். கீதையை ஓதி அறிவது பகவத் விஷயத்தை அறிவதாகிறது. பகவத் விஷயத்தை நன்கு அறிந்தவனே பகவானை வழுத்த வல்லவனாகிறான். உண்மையை அறிந்து அதற்கேற்ற பிரகாரம் வாழுதல் சிறந்த பிரசாரமாகிறது. வாழ்க்கையைப்பற்றிய மேலாம் தத்துவத்தை உபதேசிப்பவன் ஒருவன் இருக்கிறான். அக்கோட்பாட்டின்படி வாழ்பவன் மற்றொருவன் இருக்கிறான். இவ்விருவருள் நல்வாழ்வு வாழ்பவனே நல்ல பிரசாரம் செய்கிறான். நல்ல பேச்சைவிடச் சிறந்தது நல்ல பழக்கம். பேசுபவர் ஏராளமாயிருக்கின்றனர்; நல்வாழ்வு வாழ்பவர் மிகச் சிலரே. கீதையை ஓதும் அவர்களது நல்வாழ்வு மற்றவர்களை நல்வழியில் தூண்டுகிறது. ஆக, அது ஞான யக்ஞ ஆராதனை என்னும் பெயர் பெறுகிறது.
தனக்குத் தானே கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு இயலவில்லை. அப்பொழுது அவன் என் செய்வது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :
71. ஸ்ரத்தாவாநநஸூயஸ்ச ஸ்ருணுயாதபி யோ நர:
ஸோऽபி முக்த: ஸுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம் 
ய: நர:-எந்த மனிதன், ஸ்ரத்தாவாந்-நம்பிக்கை உடையவனாக, அநஸூய: ச-பொறாமை போக்கியவனாக, ஸ்ருணுயாத் அபி-கேட்பது மட்டுமே செய்வானெனினும், ஸ: அபி முக்த:-அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்யகர்மணாம் ஸுபாந் லோகாந்-புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை, ப்ராப்நுயாத்-எய்துவான்.
பொருள் : நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.
உணவை அலட்சியப்படுத்துபவன் தனது உடல் வாழ்வை அலட்சியப்படுத்துகிறான். உணவுப் பொருளின் தத்தவத்தை அறிந்து ஒருவன் உணவு உண்கிறான். மற்றொருவன் அதன் தத்துவம் தெரியாது விருப்புடன் அதைப் புசிக்கிறான். அறிந்தவன் அறியாதவன் ஆகிய இருவரும் உணவினின்று பெறும் நன்மை ஒன்றேயாம். அதே விதத்தில் கீதா சாஸ்திரத்தைச் சிரத்தையோடு கேட்டுத் தெரிந்துகொள்பவன் எல்லா நன்மைகளையும் அடைகிறான். பிறர்க்கு எடுத்துப் புகட்டுவதால் அது ஒருவன் மனிதன் நன்கு பதிகிறது. பக்தி விசுவாசத்துடன் கேட்பதால் இன்னொருவன் மனதில் அது பதிகிறது. இருவரும் கீதா தத்துவத்தை அறிந்துகொண்டவர் ஆகின்றனர். மனதுக்கு ஊட்டும் நல்லெண்ணங்களுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர். பகவத் விஷயங்களைக் கேட்பது சம்ஸ்காரங்களுள் சிறந்த சம்ஸ்காரமாகிறது. பக்தி சிரத்தையுடன் கேட்பவன் கீழ்மையினின்று விடுதலையடைந்து முன்னேற்றமடைவது உறுதி.
மாணாக்கனுக்கு எல்லாம் பிடிபட்டு விட்டதாவென்று ஓர்வது ஆசிரியரின் இயல்பு. அக்கோட்பாட்டுக்கு இணங்க பகவான் இப்பொழுது கேட்பதாவது:
72. கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய 
பார்த-பார்த்தா, ஏதத் த்வயா ஏகாக்ரேண சேதஸா-உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு, கச்சித் ஸ்ருதம்-கேட்கப் பட்டதா? தநஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ:-தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம், கச்சித் ப்ரநஷ்ட:-அழிந்து விட்டதா?
பொருள் : பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?
ஞானோபதேசம் புகட்டுபவர் புகட்டப் பெறுபவனிடத்து எதை எதிர்பார்க்கிறார் என்பது ஈண்டு விளங்குகிறது. ஒருமை மனது உண்மையைத் தெரிந்துகொள்ளுதற்கு முற்றிலும் அவசியமானது. எவ்வளவு தான் புகட்டினாலும் சிதறடைந்த மனது போதனையின் உட்பொருளைத் தெரிந்துகொள்ளாது. கொஞ்சம் எடுத்துப் புகட்டினாலும் குவிந்த மனது புகட்டப்பெறும் கோட்பாட்டை உள்ளபடி வாங்கிக்கொள்கிறது. புகட்டப்பெறுபவன் அத்தகைய நலன் அடையவேண்டும் என்பதே புகட்டுபவரது எண்ணம்.
குவிந்த மனது ஞானத்துக்கு உரியதாகிறது. சூரியகிரணங்கள் குவிந்து வருமளவு அவை பேரொளி பெறுகின்றன. ஒளிப்பிழம்பு மற்றப் பொருள்களையும் விளக்க வல்லது; தன்னையும் அது சர்வகாலமும் விளக்கிக்கொண்டிருக்கிறது. அங்ஙனம் குவிந்த மனது ÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரக்ஞனாகிய பொருள்களை உள்ளபடி தெரிந்துகொள்கிறது. ஞான வெளிச்சமும் அக்ஞான இருளும் ஒன்று சேர்ந்து இருக்கமாட்டா. ஞானவெளிச்சத்தில் பொருள் உள்ளபடி தென்படுகிறது. அக்ஞான இருளில் அதே பொருள் வெவ்வேறு வடிவெடுத்துத் தென்படுகிறது. இருளில் தென்பட்ட ஒரு வடிவத்தைத் திருடன் போலீஸ்காரன் என்று நினைத்தான். அதே வடிவத்தைப் போலீஸ்காரன் திருடன் என்று எண்ணினான். அச்சம் கொண்ட ஒருவன் அவ்வடிவத்தைப் பிசாசு என்று பொருள்படுத்தினான். வெளிச்சத்தில் அதை ஏற்கனவே பார்த்திருந்த ஒரு விவேகி அத்தகைய மயக்கம் ஒன்றும் கொள்ளவில்லை. அதை ஒரு மரக்கட்டை என்று உள்ளபடி ஓர்ந்தான். ஞானோதயம் பிறந்திருக்குமிடத்து அக்ஞான ஸம்மோஹம் தானே அகன்றுபோகிறது. அத்தகைய தெளிந்த நிலை அர்ஜுனனுக்கு வந்துவிட்டதாவென்று பகவான் வினவுகிறார்.
நல்லாசிரியரை அடையும் தலைமாணாக்கன் அடையப்பெறும் தகைமையானது அர்ஜுனனுடைய விடையிலிருந்து வெளியாகிறது :
அர்ஜுந உவாச
73. நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ 
அர்ஜுந உவாச அச்யுத!-அர்ஜுனன் சொல்லுகிறான், அச்சுதா, த்வத்ப்ரஸாதாத் மோஹ: நஷ்ட:-நின்னருளாலே மயக்கம் அழிந்தது, மயா ஸ்ம்ருதி: லப்தா-நான் நினைவு அடைந்தேன், கதஸந்தேஹ: ஸ்தித: அஸ்மி-ஐயம் விலகி நிற்கிறேன், தவ வசநம் கரிஷ்யே-நீ செய்யச் சொல்வது செய்வேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.
போர் புரியமாட்டேன் என்று சொல்லித் தேர்த் தட்டின் மீது அர்ஜுனன் சும்மா இருந்துவிட்டான். அப்படிச் சும்மா இருந்தவன் உபதேசம் கேட்ட பிறகு ஒரு சிறந்த செயலைச் செய்தான். மிச்சமின்றித் தன்னை மாதவனிடம் ஒப்படைக்கலாயினான். விறகுக்கட்டையானது பச்சையாயிருந்தாலும் உலர்ந்திருந்தாலும் தன்னைத் தீயினிடம் ஒப்படைத்தால் அது தானே அக்கினி சொரூபத்தை யடைகிறது. அங்ஙனம் அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு சிஷ்யன் ஆனான். பிரபத்தியும் பண்ணலானான். அதாவது மேலும் நிகழ்வது எதுவானாலும் தான் கண்ணனிடமிருந்து பின் வாங்குவதில்லை; அதைப்பற்றி நினைப்பதும் இல்லையென்று முடிவு கட்டினான். தீயில் குதிக்கின்ற விட்டில் பூச்சி அதன் விளைவைப்பற்றி நினைப்பதில்லை. பகவானிடம் பிரபத்தி பண்ணுபவன் மனநிலை அத்தகையது. செயற்கரிய அச்செயலை தனஞ்ஜயன் செய்தான்.
அத்தகையவனுக்கு கீதோபதேசம் நிகழ்ந்தது. அது நல்லார் அனைவருக்கும் நலம் தரும் அருள் விருந்து. எக்காலத்துக்கும் உதவுகிற இன்னமுது என்று அதை இயம்பவேண்டும். பெரு வாழ்வுக்கு அதுவே உற்றதுணை. பிறவிப்பிணியைப் போக்கவல்ல அருமருந்து அது. ஆனால் உலகில் ஒருவர்க்காக ஆயத்தப்படுத்தும் அரிய பொருள் ஒன்று வேறு யாருக்கோ உதவுவதாக முடிந்துவிடுவதுண்டு. ஓர் இடத்தில் மேகம் கூடி மற்றோர் இடத்தில் போய் அது பொழிவது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்து போவதைக் காண்கிறோம். கீதா சாஸ்திரம் அப்படிப் போய்விடவில்லை. ஒருவன் பொருட்டு உதித்த அந்த அருள் வெள்ளம் உலகனைத்துக்கும் யாண்டும் அருட்பேறு ஆயிற்று. யாருக்காக அந்த ஆரமுது உதயமாயிற்றோ அவன் அதை வாய்மடுத்து உண்டு பெரும் பேறு பெறலானான். அதன் விளைவை இங்குக் காண்கிறோம். இதுவரையில் அக்ஞானத்திலிருந்த அர்ஜுனன் பெரியதொரு வாக்குமூலம் பண்ணுகிறான். அவன் பெற்றபேறு எது என்பதை அந்த வாக்குமூலமே நிரூபிக்கிறது. அவன் வாயினின்று வந்த ஒவ்வொரு சொல்லிலும் பொருள் ஏராளமாகப் புதைந்து கிடக்கிறது :
அச்யுதா என்று தன்னை ஆட்கொண்டவனை அவன் அழைக்கிறான். அச்யுதன் என்பது பெருநிலையினின்று பிறழாதவன் எனப் பொருள்படுகிறது. தீயில் குதித்த வீட்டில் பூச்சி தீயின் செயலுக்கு இரையாகிறது. அச்யுதனிடம் அடைக்கலம் புகுபவன் தானும் பிறவி என்னம் படுகுழியில் வீழாத பெருநிலையடைவனன்றோ! அர்ஜுனன் பெற்ற பேறு அதுவே.
மோஹ: நஷ்ட :- மோகம் அழிந்து ஒழிந்தது, அல்லது மயக்கம் போய்விட்டது என்பது முதல் வாக்குமூலம். மயக்கம் வரும்பொழுது நடுப்பகலில் விண்ணில் நக்ஷத்திரம் தென்படும். வாமனன் போன்ற சிறிய ஆள் ஈரடியாலே மூவுலகளக்கும் பெரிய ஆள்போன்று அவனுக்குத் தென்படுவான். அத்தகைய மயக்கம் அர்ஜுனனைப் பிடித்திருந்தது. இவ்வுலக வாழ்வு அவனுக்கு ஒரு பெரிய தலைச்சுமையாகத் தோன்றியது. அதைக் கீழே இறக்கிவைக்கவும் முடியவில்லை; தூக்கிக்கொண்டு நடக்கவும் இயலவில்லை. இப்படித் தனக்குத்தானே அவன் கற்பித்துக்கொண்டிருந்த மயக்கம் ஒழிந்தது.
ஸ்ம்ருதி: மயா லப்தா - ஞாபகம் என்னால் அடையப் பெற்றுள்ளது என்பது இரண்டாவது வாக்குமூலம். மயங்கியிருப்பவனுக்கு, தான் எங்கு, எக்காரணத்தால், எந்நிலையில் இருக்கிறான் என்பது விளங்காது. மயக்கம் தெளிந்த பிறகே உண்மையான ஞாபகம் வருகிறது. தான் ஏன் மண்ணில் கிடந்தான் என்பதைப் பிறகு சிந்திக்கிறான்; எதைப் பிதற்றினான் என்று விசாரிக்கிறான். பின்பு அதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தன் எதார்த்த நிலையைப் பற்றி நினைவு கூர்கிறான். தனது பேரியல்பைப்பற்றிய ஞாபகம் இப்பொழுது அர்ஜுனனுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஜீவனும் மயக்கத்தால் ஜனன மரணங்களுக்கு ஆளாயினான். சித்த சுத்தியடைந்த பிறகு உறுதியான ஞாபகம் வருகிறது. அது தனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இணக்கத்தைப்பற்றிய ஞாபகமாம். ஜீவன் எத்தகைய பெருநிலைக்குரியவன் என்பதை அந்த ஞாபகம் விளக்குகிறது.
த்வத் ப்ரஸாதாத் - உமது பிரசாதத்தால் அல்லது உமது அருளால் என்பது மூன்றாவது வாக்குமூலம். மயங்கிக் கிடந்த ஒருவனை மற்றொருவன் கிருபைகூர்ந்து, நீர் தெளித்து, விசிறி வீசிப் பிரக்ஞைக்குக் கொண்டு வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அச்செயல் சாமானியமானதன்று. அது பாராட்டுதற்குரிய பெருஞ்செயலாம். ஈண்டு அர்ஜுனனுக்கு மயக்கம் தெளிந்ததும், தனது மேலாம் சொரூப ஞாபகம் வந்ததும் தன் சுயப் பிரயத்தனத்தாலன்று. அது சுயப்பிரயத்தனம் என்று எண்ணி அவன் செருக்குறலாகாது. அது கண்ணனது காருண்யத்தால் விளைந்தது. குந்தியின் மகன் அதற்குக் கடப்பாடு உடையவன் ஆனான். முழுமனதோடு அதை எடுத்து அவன் மொழிந்துகொள்கிறான். ஜீவாத்மா பரபோதம் பெறும்போது அது பரம்பொருளின் பேரருள் என்று இயம்புகிறான். தன் முயற்சியின் சிறுமையும், அவனருளின் பெருமையும் அப்பொழுது உள்ளபடி அவனுக்கு விளங்குகிறது.
ஸ்தித: அஸ்மி- உறுதியாய் இருக்கிறேன் என்பது இதன் பொருள். இது நான்காவது வாக்குமூலம். புயல் காற்றும் பெருமழையும் சேர்ந்து வந்தமையுங்கால் மரம், செடி, கொடியெல்லாம் அசைகின்றன, ஒடிகின்றன வேருடன் பெயர்த்து எடுக்கப்படுகின்றன. அந்நிலைமையில் அவைகளுள் உறுதி பெற்றிருப்பது ஒன்றுமில்லை. பூமியில் உள்ள மண்ணும் பறித்தெடுக்கப்படுகிறது. ஆனால் மலையொன்றோ இதற்கெல்லாம் அசைவதில்லை. அது உறுதியாக நிற்கிறது. ஞானம் அங்ஙனம் உறுதி பெற வேண்டும். அத்தகைய ஞானம் அடையப்பெற்றவன் ஸ்திதப் பிரக்ஞன் எனப்படுகிறான். அர்ஜுனன் இப்பொழுது ஸ்திதப் பிரக்ஞன் ஆய் உள்ளான். தன் சொரூபத்தைப்பற்றி இப்பொழுது அவன் கொண்டுள்ள பேரறிவை யாரும் கலைத்துவிடமுடியாது. பரஞானம் அடையப்பெற்றபின் அது மறைந்துவிட்டுப் போவதில்லை.
கத ஸந்தேஹ : - சந்தேகங்கள் போய்விட்டன. இது ஐந்தாவது வாக்குமூலம். ஆத்ம சொரூபத்தை அனுபூதி வாயிலாக சாக்ஷõத்கரித்தவனுக்கு அதைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. இன்னும் உயிரோடிருக்கும் ஒருவனுக்குத் தன் உயிர் வாழ்க்கையைப் பற்றி எப்படிச் சந்தேகம் உண்டாவதில்லையோ அப்படி அனுபூதி பெற்றவனுக்கு ஆத்ம சொரூபத்தைப்பற்றிச் சந்தேகம் வருவதில்லை.
தவ வசனம் கரிஷ்யே என்பது உமது சொற்படி செய்வேன் என்று பொருள்படுகிறது. இது கடைசி வாக்குமூலம். அவன் எதைச் செய்ய ஆரம்பத்தில் மறுத்தானோ, அதைச் செய்ய இப்பொழுது துணிந்தான். செய்வது இன்னதென்று இப்பொழுது விளங்கிற்று. மெய்ஞ்ஞானம் பெற்றதே அதற்குக் காரணமாயிற்று. சாஸ்திரம் புகட்டுவதும், குரு கிருபை புரிவதும், சாதகன் அனுபவ பூர்வமாகப் பெறுவதும் முடிந்த நிலையில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
தவளைக்குஞ்சினுடைய வால் விழுந்ததும் அது தண்ணீரிலும் தரையிலும் வாழக்கூடும். அக்ஞானமாகிய வால் மனிதனிடமிருந்து விழுந்துவிட்டால் அவனுக்க முக்தியுண்டாகிறது. அப்போது அவன் கடவுளிடத்தும், அதுபோலவே உலகத்தினிடத்தும் நன்கு வாழக்கூடியவனாகிறான்.
ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதம் இத்துடன் முடிவடைகிறது. இனி, இது மற்ற சம்பவங்களுடன் தொடர்வு பெறுவது மேலும் சில சுலோகங்களில் விளக்கப்படுகிறது :
ஸஞ்ஜய உவாச
74. இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:
ஸம்வாதமிமமஸ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம் 
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், இதி அஹம்-இப்படி நான், வாஸுதேவஸ்ய மஹாத்மந: பார்தஸ்ய ச-வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும், இமம் அத்புதம் ரோமஹர்ஷணம்-இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும், ஸம்வாதம் அஸ்ரௌஷம்-உரையாடலைக் கேட்டேன்.
பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.
உள்ளத்தில் பேருணர்ச்சி உண்டானால் மயிர்க்கூச்செடுக்கிறது. நல்லது கெட்டது இரண்டும் உடலில் மயிர் சிலிர்க்கச் செய்யும். பொதுவாக நல்ல விஷயந்தான் நல்லவர்களுக்கு இப்படிப் புளகாங்கிதம் உண்டாகும்படி செய்யும். பேசுபவனாகிய கிருஷ்ணன், பேசப்படுபவனாகிய அர்ஜுனன், பேசும் விஷயமாகிய கீதா தத்துவம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்து ஸஞ்ஜயன்பால் புளகாங்கிதம் உண்டாக்கியதில் வியப்பொன்றுமில்லை. திருதராஷ்டிரனுக்கு அது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதற்குச் சரித்திரமே சான்றாயிருக்கிறது.
அர்ஜுனனை மகாத்மாவென்று மொழிவதன் மூலம் அவன் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுபவர்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
தொலைவில் போர்க்களத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பாஷணையைக் கேட்க ஸஞ்ஜயனுக்கு எப்படி முடிந்தது என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :
75. வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்
யோகம் யோகேஸ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷõத்கதயத: ஸ்வயம் 
யோகேஸ்வராத் க்ருஷ்ணாத்-யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து, பரம் குஹ்யம்-பரம ரகசியமான, ஏதத் யோகம் ஸ்வயம்-இந்த யோகத்தை தான், ஸாக்ஷõத் கதயத:-நேராகவே சொல்லும்போது, அஹம் வ்யாஸப்ரஸாதாத்-நான் வியாசனருளால், ஸ்ருதவாந்-கேட்டேன்.
பொருள் : யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.
ஸஞ்ஜயனுக்கு ஞானக் கண்ணை வழங்கியவர் வியாசர். ஆகையால் கிருஷ்ணனுடைய திவ்விய தர்சனத்தைப் பெறவும் விச்வரூப தர்சனத்தைப் பெறவும் அவர் பகர்ந்ததை யெல்லாம் அப்படியே கேட்கவும் அவனுக்கு இயன்றது. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன் படுவதுபோன்று தான் பெற்ற பேறு யாது, அது யாருடைய அனுக்கிரகத்தால் ஆயிற்று என்பதை சஞ்ஜயன் தெரிவிக்கிறான்.
அது பெரும்பேறு என்பதற்கு அத்தாட்சி மேலும் வருகிறது :
76. ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்
கேஸவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: 
ராஜந்-அரசனே, கேஸவார்ஜுநயோ:-கேசவ அர்ஜுனரின், அத்புதம் புண்யம் ச இமம் ஸம்வாதம்-வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை, ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து, முஹுர்முஹு:-மீண்டும் மீண்டும், ஹ்ருஷ்யாமி-மகிழ்கிறேன்.
பொருள் : அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.
ஸஞ்ஜயன் அடைந்த மகிழ்வு சாஸ்திரத்தின் மகிமையைக் குறிக்கிறது. நலத்தை அடையப்பெற்ற நல்லார் அந்த நலத்தினின்று உலப்பிலா ஆனந்தத்தை அடைவது இயல்பு.
77. தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந: 
ராஜந்-அரசனே! ஹரே: அதி அத்புதம்-ஹரியின் மிகவும் அற்புதமான, தத் ரூபம் ச-அந்த ரூபத்தை, ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து, மே மஹாந் விஸ்மய:-எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது, ச புந: புந: ஹ்ருஷ்யாமி-மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.
பொருள் : அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.
பல யோகிகளுக்கும் பக்தர்களுக்கும் காண்பதற்கரிய விசுவரூப தரிசனத்தைத் தற்செயலாய் ஸஞ்ஜயன் கண்டான். சூழ்நிலையால் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் இது மிகப்பெரியது. விசுவரூப தரிசனத்தின் ஒரு சிறு பகுதியைக் காணாத ஜீவன் ஜகத்தில் இல்லை. வியப்புக்குரியதும் மனதை மேல் நிலைக்குக் கொண்டு போகக் கூடியதும் எதுவானாலும் அது இறைவனுடைய மகிமையேயாம். ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தகைய காட்சிகள் கிடைக்கின்றன. பெரும்பாலார்க்கு அவைகளைப் பயன்படுத்தும் வழி தெரிகிறதில்லை. திரும்பத் திரும்ப அக்காட்சிகளைப் பற்றி நினைப்பது ஒருவித தியானமாகும். மனது அதனால் நன்கு பண்படுகிறது. தனது மனதை உயிர்நிலைக்குக் கொண்டுபோன காட்சி எதுவென்று சாதகன் ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதை பக்தியுடன் ஞாபகத்துக்குக் கொண்டு வரவேண்டும்.
78. யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம 
யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ண:-எங்கு யோகக் கடவுள் கண்ணனும், யத்ர தநுர்தர: பார்த:-எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ, தத்ர ஸ்ரீ: விஜய: பூதி:-அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும், த்ருவா நீதி-நிலை தவறாத நீதியும் (இருக்கும்),
மம மதி:-என் உறுதியான கருத்து (இது).
பொருள் : கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்? அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.
இது ஸஞ்ஜயனுடைய சொந்த அபிப்பிராயம் என்றாலும் சிறந்த கீதை தத்துவங்களில் இதுவும் ஒன்றாகும். கண்ணன் யோகேசுவரனாதலால் புருஷார்த்தங்களெல்லாம் அவன் மூலம் நிறைவேறுகின்றன. தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில் ஜீவாத்மாவுக்கு எது வாய்க்கப்பெற்றாலும் அது யோகமாகிறது. அவைகளுள் சிறப்பாயுள்ள மோக்ஷத்தைக் கிருபைகூர்ந்து வழங்க வல்லவன் கிருஷ்ணன். முதல் அத்தியாயத்தில் தனுசைத் தூர எறிந்து விட்டவனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான். முயற்சியற்ற அல்லது முயற்சி குன்றிய வாழ்க்கையை அது எடுத்துக் காட்டுவதாகும். இப்பொழுது காண்டீவம் என்னும் வில்லை ஏந்திய அர்ஜுனன் காட்சி கொடுக்கிறான். கிருஷ்ணனுடைய யோக வல்லமையும் பார்த்தனுடைய பராக்கிரமமும் சேர்ந்து ஆகாத காரியத்தை ஆக்குவிக்கும். இதைக் கேட்ட பிறகாவது திருதராஷ்டிரனுக்கு மனது மாறியிருக்கவேண்டும் ! அதாவது தன் பிள்ளைகளுக்கு வெற்றியுண்டாகாது; உயிர் நஷ்டமும், பொருள் நஷ்டமும் ஏற்படுவது உறுதி. அதைத் தடுக்க ஒருவிதத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருக்கவேண்டும். ஆனால் அவிவேகமே வடிவெடுத்திருப்பவனுக்கு அது ஒன்றும் விளங்காது. கடவுளே அருகிலிருந்து கொண்டு செய்கிற செயலும் அவனுக்குப் புலப்படாது.
தெய்வத்தின் சகாயமும் மனிதனுடைய நேர்மையான முயற்சியும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். மனிதனுக்கு ஆகவேண்டியதை யெல்லாம் தெய்வம் செய்துவைக்கும் என்று நினைத்துக் கொண்டு தன் முயற்சியை நிறுத்திவிடலாகாது. பிறகு துர்யோதனன் கூட்டம் செய்தது போன்று ஈசுவரனது திட்டத்தைப் புறக்கணித்துவிட்டுத் தனது சொந்த முயற்சியால் எல்லாம் ஆய்விடும் என்று கருதி வினையாற்றலாகாது. யாண்டும் கடவுளைச் சார்ந்திருந்து தன் கடமையைக் கடவுள் பொருட்டு முழுமனதுடன் செய்யவேண்டும்.
கார் இருளில் கண் தெரியாது. பேர் ஒளியிலும் கண் தெரியாது. கண்தெரியாமையை முன்னிட்டுக் கார் இருளையும் பேர் ஒளியையும் ஒன்றாகக் கருதலாகாது. தமோ குணத்தில் புதைந்து கிடப்பவன் வினையாற்ற மாட்டான். சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் வினையாற்றுவதில்லை. அதை முன்னிட்டு அவர்கள் இருவரும் ஒப்பாகமாட்டார்கள். தேகம் எடுத்திருப்பவன் தேகம் இருக்கும் வரையில் நல்வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வினையை ஈசுவர ஆராதனையாகச் செய்ய வேண்டும். அதனால் ஞான முதிர்ச்சி தானே வந்தமைகிறது. இகம் பரம் ஆகிய இரண்டிலும் வாழ்க்கையின் குறிக்கோள் இனிது நிறைவேறுகிறது. பாரமார்த்திக வாழ்வின் பெயரால் சோம்பித் திரிபவனும், சமுதாயத்துக்கு வெறும் சுமையாக வாழ்ந்திருப்பவனும் கீதா தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகார். தூக்கி வினையாற்றுபவனே வேதாந்தம் அறிந்தவனாகிறான்.
ஸ்ரீ என்பது இங்கு ராஜ்யலக்ஷ்மி. எடுத்துக்கொண்ட காரியங்களெல்லாம் ஈசுவர சங்கற்பத்துக்கு உட்பட்டவைகளாக இருக்கவேண்டும். அப்பொழுது விஜயம் அல்லது வெற்றி நிச்சயமாக வந்தமையும். அதற்குமேல் நல்ல முயற்சியுடையவனுக்குச் செல்வமும் சீரும் சிறப்பும் வளரும். வெற்றியையும் ஆக்கத்தையும் முன்னிட்டுக் கடவுளை நம்பியிருப்பவன் முறைதவறி நடந்து கொள்ளமாட்டான். நேர்மையையும், நிலைத்த நீதியையும், தெளிந்த ராஜ தர்மத்தையும் அவனிடத்துக் காணலாம்.
ஈசுவர கிருபையும் ஜீவப்பிரயத்தனமும் ஒன்று சேருமானால் இகபரமிரண்டுக்கும் அவை நல்ல சாதனமாகின்றன. அவைகளின் சேர்க்கையே சிறந்த யோகமாகிறது. மற்ற யோகங்களெல்லாம் அதினின்று உருவெடுக்கின்றன. ஈசுவர கிருபை சந்ததமும் நம் பொருட்டுக் காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாம் நேர்மையாக முயற்சி செய்வது ஒன்றே பாக்கி. இப்பொழுதே முயலுவது முறை.
சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் வீழ்கிறது; ஆனால் ஜலம், கண்ணாடி, மெருகிட்ட உலோகம் இவைபோன்ற வஸ்துக்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் தெய்விக ஒளியும். அது எல்லாரிடத்தும் சமமாயும் பாரபக்ஷமின்றியும் வருகின்றது. என்றாலும் ந்லலாருடைய தூய மனமும், ஸாதுக்களுடைய இருதயமுமே அவ்வொளியை நன்றாய்ப் பிரதிபலிக்கச் செய்கின்றன.
பகவத் பக்திகொண்ட பரிசுத்த பக்தர்களுக்காகவே பகவான் உலகத்தில் அவதாரம் செய்கின்றார். அவதார புருஷரோடு வருபவர்கள் நித்தியமுக்தர்களாவார்கள்; அல்லது கடைசி ஜன்மம் எடுத்தவர்களாவார்கள்.
இதி ஸ்ரீமஹாபாரதே சதஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம்வையா
ஸிக்யாம் பீஷ்மபர்வணி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன
ஸம்வாதே மோக்ஷஸந்யாஸயோகோ நாம
அஷ்டாதசோऽத்யாய:
வியாசர் இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய மஹாபாரதத்தில், பீஷ்மபருவத்தில், பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் மோக்ஷ ஸந்யாஸ யோகம் என்ற பதினெட்டாம் அத்தியாயம்.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

ஸ்ரீ கீதா மஹாத்மியம்
 
temple
ஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம:
தாரோ உவாச:
1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ
தரை சொன்னது:
பகவானே, ... மேலும்











 ஸ்ரீ கீதா மஹாத்மியம்
ஸ்ரீ கீதா மஹாத்மியம்
அக்டோபர் 19,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
ஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம:
தாரோ உவாச:
1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ
தரை சொன்னது:
பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?
ஸ்ரீ விஷ்ணுர் உவாச:
2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே
ஸ்ரீ விஷ்ணு சொன்னது:
கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும், அவனே முக்தன், இவ்வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.
3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்
கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹாபாபமும் தீண்டுவது கிடையாது. தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான்.
4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை
கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.
5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:
தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும், நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.
6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே
யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்
தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி
எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ, ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.
7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்
கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்
கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை. கீதாஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.
8. கீதா மே பரமா வித்யா பிரம்மரூபா ந சம்ஷய:
அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா
எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது பிரம்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய், அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.
9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமு கதோர்ஜுன
வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா
மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது.
10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்
உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ, அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.
11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா
முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன் கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.
12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்
மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்காஸ்நான பலனை அடைகிறான். ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.
13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்
பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திரலோகத்தையடைந்து அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான்.
14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே
வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன் ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.
15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்
கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம் பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான். கீதையைப் படித்துக்கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான்.
17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்
கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான். மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.
18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே
மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனாயிருப்பானாகில் அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.
19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.
ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.
20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்
இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள் நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது.
21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:
கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம்.
22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்
இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.
சுத உவாச:
23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்
சூதர் சொன்னது:
கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான்.
கீதா மாஹாத்மியத்தில் பகர்ந்துள்ள இக்கருத்துக்கள் ஒரு விதத்தில் மிகைப்பட்டவைகளாகும். ஆகவே அவைகளை இருக்கிறபடி வாச்சியார்த்தம் பண்ணலாகாது. தாய் ஒருத்தி குழந்தைக்கு உணவூட்டுகிறாள். விளையாட்டில் கருத்துடைய குழந்தையோ ஆகாரம் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறது. உணவு உண்டால் விளையாட்டுச் சாமான்கள் சில வாங்கித்தருவதாகத் தாய் இயம்புகிறாள். உண்மையில் விளையாட்டுச் சாமான்களை விடக் குழந்தைக்கு அதிகம் பயன்படுவது ஆகாரமே. கீதா மாஹாத்மியம் அங்ஙனம் சிறிய பொருள்களில் ஆசை காட்டிப் பெரிய பொருளை மறைமுகமாக வழங்க முயலுகிறது. இனி, உணவைச் சிறிது சிறிதாக நாள்தோறும் ஏற்று வந்தால் அது நன்கு ஜீரணமாகி உடல்மயமாய் மாறியமைகிறது. அங்ஙனம் கீதையின் கோட்பாடுகளில் அப்போதைக்கப்போது ஏற்கும் சிறுபகுதிகள் நாளடைவில் நிறைஞானமாகவும் யோகமாகவும் சாதகனுக்கு அமைவனவாகின்றன. அதன் மூலம் அவன் இகலோகத்தில் சாதிக்க வேண்டியவைகளை யெல்லாம் நன்கு சாதித்து விட்டுப் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வல்லவனாவான்.
இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




























































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக