வெள்ளி, 1 ஜனவரி, 2016

பட்டா வாங்குவது மிக அவசியம்

ராதே கிருஷ்ணா 01-01-2016











சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.

பட்டா பெயர் மாற்றம்;
*********************************

ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நாம் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா பெறாமல் இருந்தால், அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம். அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம். அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது! என்று சொல்லலாம்.

உட்பிரிவு பட்டா:
************************
அதன் மூலம் உங்களிடம் சொத்து விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை மறைக்கலாம். அல்லது நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தின் பகுதியையும் சேர்த்து மற்றவருக்கு விற்றுவிட முயற்சிக்கலாம். அப்படி விற்பனை நடந்துவிட்டால் சொத்தை வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும். நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பது அவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும். அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த சொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு விடும்.

உதாரணமாக சர்வே எண் 50/1–ல் அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சர்வே எண் 50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு செய்து இரண்டு பட்டாவாக மாற்றப்படும். அதாவது சர்வே எண் 50/1 என்பது 50/1ஏ அடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 50/1பி அடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும், நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனி தனியாக பட்டா கொடுக்கப்படும்.

கவனமாக இருக்க வேண்டும்:
*********************************************
இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் போன்றவை மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள் எல்லைப்பகுதிகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும். அதனால் உங்கள் சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம் வந்துவிடும். அதனால் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த உரிமையாளர் முழு சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது தவிர்க்கப்படும்.

அதே நேரத்தில் பாகப்பிரிவினை வாயிலாக வந்த சொத்தை வாங்குவதாக இருந்தால் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர் பெயரில்தான் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள் எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும்.

காலம் தாழ்த்தக்கூடாது:
**************************************
அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு அவர் பட்டா வாங்காமல் இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் பழைய பட்டா இருக்கும். அதில் இருந்து அவர் தனியாக தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில் இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய சுலபமாக இருக்கும்.

அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை அடிப்படையில் பட்டா வாங்காமல் இருந்தால் அத்தகைய சொத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் பட்டாவை பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி விடும். அவர்களுடைய வாரிசுகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே அமையும். எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும் உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.










குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ…

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான

சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.

3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.

4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.

5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், http://www/consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.

8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்… ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.

9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.

10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.

12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்.
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக