திங்கள், 11 செப்டம்பர், 2017

பாட்டி சொல்லும் கதைகள் - ருக்மணி சேஷசாயி - 2010

ராதே கிருஷ்ணா 29-11-2014


பாட்டி சொல்லும் கதைகள் - ருக்மணி சேஷசாயி
 2011

Saturday, December 31, 2011


புத்தாண்டு வாழ்த்து.

பாட்டி சொல்லும் கதைகளின் வாசகர்களுக்கும் விமரிசித்தவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தும் உங்களின் அன்புச் சகோதரி
ருக்மணி சேஷசாயி.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, December 15, 2011


78- புண்ணியத்தின் பலன்-

ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வ்ந்தார். சிறு வயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று சிறந்த மனிதராய் திகழ்ந்தார்.அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக் கொடுப்பவர் யாருமில்லை.
அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக் கொடுத்தார்களே அன்றி அள்ளிக் கொடுக்கவில்லை.அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை.
அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப் பேசி வந்தாள்.
அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்றசெல்வ வளம் மிக்கவராகத் திகழ்ந்தார்.அவரது நிலையைச் சொல்லிக் காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச் சேர்க்கும் வழியைப் பின்பற்றும்படி கூறிவந்தாள்.
அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவதாகக் கூறிப்  புறப்பட்டார்.
அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாகத் தன் வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்.இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர்.

தனபாலனின் வில் வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்கவிறு விறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.
இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி  தாயார் பார்த்தாள். பின்அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப் பார்த்தாள்.
கண்களை மூடிப் படுத்திருந்த அந்த மாயக் கண்ணன் புன்னகை புரிந்தார்.
அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன அநீதி. சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக் கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை?அவருக்கு செல்வ வளத்தைத் தரக்கூடாதா?"என்றாள் சற்றே கோபத்துடன்.
அதே புன்னகையுடன் நாராயணர்"என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி?செல்வத்தை அள்ளிக் கொடுக்கவேண்டியதுதானே?" என்றார் கள்ளச் சிரிப்போடு.
"நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத் தடுத்தார் நாராயணர்.
"லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜன்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை.நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்."
"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி.அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்."என்றவளைப் பார்த்துப் புன்னகைத்த நாராயணர்,
"சரி. உன் விருப்பப் படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால்  இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்." என்று அனுமதியளித்தார்.
மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன் மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.
அதே சமயம் தன் கையிலிருந்த பொன் மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி.கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையைத் தாண்டிச் சென்று தன் கண்களைத் திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல்நடப்பது  ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானு கோடி நன்றிப்பா" என்று இரு கை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.
வைகுண்ட நாராயணன் சிரித்தார்."என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே."
"சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கிறேன்."
"சரி.உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன்.
இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.
தன் முன் கிடக்கும் அந்த மூட்டையைக் கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன்.மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள்.
நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள்.இப்போதும் இறைவன் புன்னகைத்தார்.
"லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார்.உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.என்ன செய்வது.அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்."என்றார் பெருமூச்சுடன்.அதேசமயம் கையில் எடுத்த செல்வத்தைப் 
பிரித்துப் பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாதஅந்தப்  பாதையில் யார் இந்த மூட்டையைப் போட்டிருப்பார்?யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான்.

அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று  அடைந்த தனபாலன்  தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டு இருந்தான்.அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்துஏன் இங்கேயே தங்கிவிட்டாய்? என்று  விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச் சொன்னான்.தான் தவறவிட்ட திரவியத்தைப் பற்றிக் கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக் கொடுத்து ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா?நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான். தனபாலனும் அதைப்  பெற்றுக் கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான்.மிகுந்த நல்ல காரியம் செய்து விட்டது  போல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்தசெல்வம் அவனைச் சேரவில்லை பார்.இது அவனது பூர்வ ஜன்மவினை."என்றார் அதே புன்னகையோடு.
இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனைச் செல்வந்தனாக ஆக்க முடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே  அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி."என்று கூறித  தலைவணங்கி நின்றாள்.
நாமும் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் நன்மையே நினைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, November 25, 2011


77-- பாட்டி சொன்ன கதை- பகுதி- 2

பாட்டி சொன்ன கதை- பகுதி- 2
 தொலைவில்  தெரிந்த  ஒரு   வீட்டை  நோக்கிச்  சென்றனர் . சகோதரர்கள் இருவரும் அந்த வீட்டின் வாயிலில் சென்று நின்றனர். உள்ளிருந்து  பெரும் வெளிச்சம் தெரிந்தது.உள்ளே ஏதோ யாகம் நடப்பதைப் போல நெருப்பு எரிந்து  கொண்டிருந்தது. 
வாயிலில் நின்றபடியே சஞ்சயன் அழைத்தான்."ஐயா, யார் உள்ளே இருக்கிறீர்கள்?" இரண்டு மூன்று முறை அழைத்தபின்" உள்ளே வாருங்கள்" என்று ஒரு கட்டைக் குரல் கேட்டது.இருவரும் மெதுவாக உள்ளே நுழைந்தனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியப் படுத்திற்று.ஒரு மனிதன் ஜடாமுடியும் தாடியுமாக இருந்தவன் தன் கையில் ஒரு செடியை வைத்துக் கொண்டு அதை நெருப்பில் காட்டிக் கொண்டிருந்தான். அந்த செடியிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் வடிந்து கீழே எரியும் நெருப்பில் விழுந்து கொண்டிருந்தது.
அவன் தன் வேலையை நிறுத்தாமல் "உங்களுக்கு என்ன வேண்டும்?"என்றான் கடுமையான குரலில்.
சஞ்சயன் "ஐயா, நாங்கள் ரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள்.அனாதைகள். தாங்கள் அடைக்கலம் தரவேண்டும்.யாரேனும் குருவை நாடிப் பிழைப்பதற்காக நாங்கள் அலைகிறோம்."என்றான் பணிவாக.
"அப்படியானால் எனக்குத் துணையாகப் பணி செய்யுங்கள். உங்களுக்கு நான் பிறகுதான் வித்தைகளைக் கற்றுத் தருவேன்."என்றுகூறி ஒரு கிண்ணத்திலிருந்து உணவு வகைகளை எடுத்துச் சாப்பிடக் கொடுத்தான்.
            இப்படியே சில நாட்கள் சென்றன.எப்போதும் அந்த மனிதன் நெருப்பின் முன் அமர்ந்து செடியை நெருப்பில் காட்டிக் கொண்டே இருப்பதைப் பார்த்த சஞ்சயன் எப்படியாவது இந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்தான்.கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனிதனின் மனதில் தன் சேவையால் இடம் பிடித்தான்.
தம்பியை முரடனாகக் காட்டிக் கொள்ளச் சொன்னதால் அவனை விட சஞ்சயன் நல்லவன் என்று முடிவு செய்தான் அந்த மனிதன். ஒரு மந்திரவாதி என்பதைக் கண்ணாடி மூலமாகக் கண்டு பிடித்தான் சஞ்சயன்.
யாருமில்லாத அந்த காட்டுக்குள் தனக்கு பணிசெய்ய இருவர் வந்தது அந்த மந்திரவாதிக்கு மிகவும் வசதியாக இருந்தது.எனவே அவர்களைத் தனக்கு சீடர்களாக வைத்துக் கொண்டான்.துர்ஜயன் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதோடு நிறுத்திக் கொண்டான்.ஆனால் சஞ்சயனுக்குச் சில பொறுப்பான பணிகளைக் கொடுத்தான்.
ஒரு அமாவாசை தினம் வந்தது.மந்திரவாதி சஞ்சயனைப் பார்த்து "சஞ்சயா, என் பெற்றோருக்குத் தர்ப்பணம் கொடுத்து பல ஆண்டுகளாகின்றன.இப்போது நீங்கள் இருவரும் இருப்பதால் அந்த தர்ப்பணம்  கொடுத்து வர விரும்புகிறேன்."என்றான்.
சஞ்சயன் "அப்படியே குருவே. நான் தங்களுடன் துணை வருகிறேன். இங்கே தம்பி பார்த்துக் கொள்வான்" என்றான்.
துர்ஜயனை நம்பாத மந்திரவாதி துர்ஜயனை  உடன் வருமாறு சொல்லிவிட்டு  சஞ்சயனை அந்தச் செடியை விடாமல் நெருப்பின் முன் பிடித்துக் கொள்ளச் சொன்னான்.
பிறகு துர்ஜயனுடன் தொலைவில் உள்ள ஆற்றை நோக்கிச் சென்றான்.அவர்கள் கண் மறைந்ததும் சஞ்சயன் அந்தச் செடியைக் கீழே வைத்துவிட்டு அந்த இடத்தை சோதனை செய்யத் தொடங்கினான்.பலமூலிகை, எலும்பாலான உருவங்கள், மட்பாண்டங்கள் இவற்றோடு சிறு சிறு கல் பொம்மைகளும் இருந்தன.
திடீரென சஞ்சயனுக்கு மந்திரவாதி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றவே அவன் என்ன செய்கிறான் என்பதை அறிய விரும்பினான்.தன் கையிலிருந்த கண்ணாடியைப் பார்த்து அதில் தன் குரு என்ன செய்கிறார் எனக் கேட்டுப் பார்த்தான்.
பார்த்தவுடன் திடுக்கிட்டான்.அதில் தன் தம்பி துர்ஜயனை ஒரு கல் பொம்மையாக ஆக்கித்  தன் மடியில் கட்டிக்கொள்வதையும் அவனது உடல் நடுங்குவதையும்,அவன் வேகமாக அங்கிருந்து வருவதையும்  பார்த்தான்.உடனே பழையபடி செடியைத் தன் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சஞ்சயன்.
கோபத்துடன் உள்ளே நுழைந்த மந்திரவாதி "அடேய், சஞ்சயா, ஏனடா செடியைக் கீழே வைத்தாய்? உன்னால் என் தவத்துக்கு குறை ஏற்பட்டுவிட்டதே.ஓடு இனியும் என்முன் நில்லாதே."என்று விரட்டி விட்டான்.
"ஐயா, என் தம்பி..."
"அவன் நீரோடு போய் விட்டான். அவனை இனி நீ பார்க்க இயலாது. போய்விடு இங்கிருந்து.இல்லையேல் சபித்துவிடுவேன்."என்றபோது இவனை என்ன உபாயத்தால் வெல்வது என்ற சிந்தனை வயப்பட்டவனாகத் தலைகுனிந்து வெளியேறினான் சஞ்சயன்.
அவன் மனம் மட்டும் தம்பியின் பிரிவால் மௌனமாக அழுது கொண்டிருந்தது.கால் போன போக்கில் நடந்து ரத்தினபுரியை அடைந்தான்.வருத்தத்துடன் இரத்தினபுரி ராஜவீதியில் நடந்துகொண்டிருந்தான்.ஊர் மக்கள் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்.என்னவென்று விசாரித்தபோது பல ஆண்டுகளாக அழுது கொண்டிருந்த ராஜகுமாரி சில நாட்களுக்கு முன் ஒரு நாழிகைப் பொழுது அழுகையை நிறுத்தி சிரித்தாள். மீண்டும் அழத் தொடங்கிவிட்டாள். மன்னர் இது எப்படி நடந்தது எனத் தெரியாமல் தவிக்கிறார்.ஊர் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தான்.
சஞ்சயன் சிந்தித்தான்.சடாரென அவனுக்கு நினைவுக்கு வந்தது.மந்திரவாதியின் கையிலிருந்த அந்தச் செடிக்கும் இளவரசி அழுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கவேண்டும் என நினைத்தான்.ஏனெனில் சஞ்சயன் ஒரு நாழிகைப் பொழுது அந்தச் செடியைக கீழே வைத்த அதே நேரம்தான் இளவரசி இங்கே அழுகையை நிறுத்தியிருக்கிறாள்.என்பதைப் புரிந்து கொண்டான்.உடனே மன்னனைச் சந்திக்க அரண்மனை சென்றான்.மன்னனைக் கண்டு தான் எப்படியும் ஒரு மாதத்திற்குள் இளவரசியின் அழுகையை நிறுத்துவதாகக் கூறிப் புறப்பட்டான்.
தன்னுடன் நான்கு வீரர்கள் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களுடன் ஒரு ரிஷி போல வேடமணிந்து புறப்பட்டான் சஞ்சயன்.அவர்கள் அனைவரும் மந்திரவாதி இருக்கும் இல்லத்தின் அருகே காட்டுக்குள் தங்கினர். சஞ்சயன் மட்டும் கமண்டலத்துடன் நதிக்குப் போவதுபோல் மந்திரவாதியின் வீட்டுக்குள் சென்றான்.இடத்தைவிட்டு எழாத மந்திரவாதி" யார்நீ இங்கு ஏன் வந்தாய்?" என்று இரைந்தான்.
"குழந்தாய் உனக்கு உன் ஆயுளைப் பற்றக் கூறவே நான் வந்தேன்." என்றான். மந்திரவாதி பெரிதாக நகைத்தான்.
"என்ன, ஏன் ஆயுளைப் பற்றியா?" 
"ஆம் மகனே, உனக்கு இன்னும் சிறிது நேரத்தில் ஆயுள் முடியப் போகிறது."
"இதோ பார் உன் தலை இப்போது உருளப் போகிறது." என்றபடியே இடது கையால் கத்தியை வீசினான்.ஆனால் காட்டில் அம்மை கொடுத்த வாளால் அதைத் தடுத்தான் சஞ்சயன்.மந்திரவாதி திடுக்கிட்டான். தன் மந்திரசக்திவாய்ந்த வாளைத் தடுத்த அந்த சன்னியாசியை எதிர்க்க எழுந்து நின்றான்.
தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த மந்திரவாதியிடமிருந்து குனிந்து தப்பிய சஞ்சயன் அந்தச் செடியைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான்.ஒரு கையில் செடியும் மறுகையில் மந்திர வாளுமாக ஓடிய சஞ்சயனைப் பின் தொடர்ந்து ஓடினான் மந்திரவாதி.ஆனால் தங்களின் மறைவிடத்திற்கு சென்று தன் வீரர்களுடன் சேர்ந்து கொண்டான் சஞ்சயன். அந்தச் செடியைக் கீழேவைக்காமல் தன் மடியில் இருந்த கண்ணாடியை  எடுத்துப் பார்த்தான். "கண்ணாடியே இந்தச் செடியைப் பாதுகாப்பாக எங்கே வைப்பது என்பதைக் காட்டு" என்றபடி கண்ணாடியைப் பார்த்தான்.
கண்ணாடிக்குள் அருகே இருந்த ஆறு தெரிந்தது. சற்றும் தாமதிக்காத சஞ்சயன் இரண்டு வீரர்களுடன் ஆற்றை நோக்கி வேகமாகச் சென்றான்.தூரத்தில் வந்து கொண்டிருந்த மந்திரவாதி தன் கையைச் சுழற்றி ஏதோ முணு முணுத்தான்.ஆனால் அவன் அவசரத்தில் தன் மந்திரக் கொலைக் கொண்டு வர மறந்து விட்டான். அதனால் அவனது மந்திரம் எதுவும் பலிக்கவில்லை.சற்றும் தாமதிக்காத சஞ்சயன் அந்தச் செடியை ஆற்றில் தூக்கி எறிந்தான்.
அதைப் பார்த்த மந்திரவாதி" ஐயோ என் தவமெல்லாம் போயிற்றே. நூறு பேரைப் பலியிட்டு மகாசக்தியைப் பெற எண்ணினேனே.என் கனவும் தவமும் போச்சே.உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றபடி சஞ்சயன் மீது பாய்ந்தான். அதற்குள் உடன் வந்திருந்த வீரர்கள் அவனைப் பாய்ந்து பிடித்துவிலங்கிட்டனர்.
அவனையும் இழுத்துக் கொண்டு அவன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர்.சஞ்சயன் அவனது வீட்டைச் சோதனை போட்டான் எல்லாவற்றையும் தூக்கி வீசினான். வேகம் வேகமாகத் தன் தம்பியைத் தேடினான்.மந்திரவாதியோ சிரித்தான்."உன் தம்பிதான் நீரோடு போய் விட்டானே அவனை இங்கு ஏன் தேடுகிறாய்" என்று திமிறுடன் பேசினான்..
மறைவாகச் சென்ற சஞ்சயன் கண்ணாடியை எடுத்து தம்பியைப் பற்றிக் கேட்க அது ஒரு பெட்டியைக் காட்டிற்று.மிகவும் கஷ்டப்பட்டுத் தேடி அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்தான் சஞ்சயன்.அதைத் திறந்தபோது தொண்ணூற்று ஒன்பது பொம்மைகள் அந்தப் பெட்டிக்குள் இருப்பதைக் கண்டான்.
 செடியும் முழுவதும் வாடியபின் சஞ்சயனைச் சேர்த்து நூறு பேராக பலி கொடுக்க எண்ணியருந்தான் அந்த மந்திரவாதி என்பதைப் புரிந்து கொண்டான்.அப்போதுதான் அவனுக்கு மேலும் பல சக்திகள் கைகூடும் என்ற செய்தியையும் அறிந்தான்.
இந்த தொண்ணூற்று ஒன்பது   பேரும் உயிர் பெற என்ன வழி என்று மந்திரக் கண்ணாடியைக்  கேட்க அது மந்திரவாதியின் மந்திரக்கோலைக் காட்டிற்று.அது எரியும் நெருப்புக்குக் கீழே இருப்பதைக் காட்டவே குடம் நீரைஎடுத்து நெருப்பை அணைத்தான்.அதே சமயம் மந்திரவாதி உயிரற்றுக் கீழே விழுந்தான்.அந்த மந்திரக் கொலை எடுத்துத் தன் தம்பிமீது தட்டவே அவன் உயிர் பெற்று எழுந்தான். தம்பியைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தான்.பின் தொண்ணூற்று ஒன்பது அரசகுமாரர்களும் உயிர் பெற்று எழுந்து சஞ்சயனை வணங்கினர். 
பின்னர் அனைவரும் ரத்தினபுரியை அடைந்தனர்.ரத்தினாங்கியும் தன் அழுகையை நிறுத்தி ஆனந்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டாள். 
வெற்றி பெற்று வரும் சஞ்சயனையும் பிற அரசகுமாரர்களையும் வரவேற்க மன்னன் ரத்தினவர்மன் காத்திருந்தான்.
இதற்குள் வெற்றிச் செய்தியை சஞ்சயனின் தந்தை சத்திய சீலருக்கு அறிவித்து சஞ்சயன் ரத்தினாங்கி இருவரின்  திருமணத்திற்கு வரும்படி தூதுவரை அனுப்பிவிட்டான் ரத்தினவர்மன்.
வெற்றிவிழாவும் பட்டமேற்பு விழாவும் ஒன்றாக நடந்தது.இரத்தினபுரிக்கு மன்னனாக சஞ்சயனும் சத்தியபுரி மன்னனாக துர்ஜயனும் பட்டமேற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அத்துடன் இவர்களின் நல்லாட்சியால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான சஞ்சயனின் நல்ல பண்பையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தனர்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, November 11, 2011


76 -பாட்டி சொன்ன கதை.பகுதி -- 1

பாட்டி சொன்ன கதை. பகுதி -- 1
இந்த முறை சற்று வித்யாசமாக இருக்கட்டும் என்று எனக்கு என் பாட்டி சொன்ன கதையை உங்களுக்குச் சொல்கிறேன் இது ரசிப்பதற்கு மட்டும் என்று நினைக்காமல் இதிலும் ஏதேனும் நல்ல விஷயம் இருக்கும் என்று தோன்றினால் அதைப் புரிந்து  கொள்ளவும்.
          இரத்தினபுரி என்ற நாட்டை ரத்தினவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ரத்னாங்கி என்ற பெயருள்ள மகள் ஒருத்தி இருந்தாள்.அவள் பிறந்த நாள் முதல் அழுது கொண்டே இருந்தாள். அவள் பெரியவளான பின்பும் அழுகையை நிறுத்தவில்லை.
அவள் அழும் காரணத்தை மன்னன் எவ்வளவு கேட்டும் கூறாமல் அழுதுகொண்டே இருந்தாள். யாராலும் அவள் அழுகையை நிறுத்தவே இயலவில்லை.அதனால் அவளைத் தனியே ஒரு அரண்மனையில் விட்டு சில சேடிப் பெண்களையும் துணைக்கு வைத்து விட்டான் மன்னன் ரத்தினவர்மன்.தனக்குப் பின் நாடாள வேண்டிய  தன் மகள் இவ்வாறு எப்போதும் அழுது கொண்டிருக்கிறாளே என்று மன்னன் மிகவும் கவலைப் பட்டான்.தன் மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தான்.
            அவனது மந்திரிகளுள் ஒருவர் ஒரு ஆலோசனை சொன்னார்.அதன்படி தன் மகளின் அழுகையை யார் நிறுத்துகிறார்களோ அவருக்கே அவளை திருமணம் முடித்து தன் நாட்டையும் தருவதாக பறை அறைவித்தான்.
இச்செய்தி அக்கம்பக்கத்து நாடுகளுக்கும் எட்டவே பல நாட்டு அரசகுமாரர்களும் ரத்னாங்கியின் அழுகையை நிறுத்த எண்ணம் கொண்டு இரத்தினபுரிக்கு வந்தனர்.ஆனால் எவ்வளவு முயற்சித்தும் ரத்னாங்கியின் அழுகையை யாராலும் நிறுத்த இயலவில்லை.
           ரத்தினபுரிக்குப் பக்கத்து நாடான சத்தியபுரியின் மன்னன் சத்தியசீலன். அவனுக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தமகன் சஞ்சயன்.இரண்டாவது மகன் துர்ஜயன்.இவர்கள் இருவரும் இரத்தினபுரியின் இளவரசியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளது அழுகையைத் தாங்கள் நிறுத்துவதாகக் கூறிவிட்டு சத்தியசீலனிடம் ஆசிபெற்றுப் புறப்பட்டனர்.
இருவரும் காட்டுவழியேகுதிரையில்பயணம் செய்து  களைத்துப் போய் ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தனர்.அப்போது அருகே யாரோ முனகும் சத்தம் கேட்கவே சஞ்சயன் திரும்பிப் பார்த்தான். ஒரு வயதான அம்மா அங்கே படுத்திருந்தாள். அவளிடம் சென்று விசாரிக்க சஞ்சயன் எழுந்தபோது துர்ஜயன் அவனைத் தடுத்தான்.ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சஞ்சயன் அந்த அம்மாளிடம் என்னவாயிற்று என்று கேட்டான்.
"அப்பா, நான் என் குடிசைக்குப் போகவேண்டும். நடக்கமுடியவில்லை.தண்ணீர் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து தருகிறாயா?"
அப்போது அங்கே வந்த துர்ஜயன்,"வேறு வேலையில்லை? சஞ்சயா, நமக்கு நேரமாகிறது போகலாம் வா," என்று அவனை அழைத்தான்.அவனைத் தடுத்து நிறுத்திய சஞ்சயன் தன்னிடம்  இருந்த குடுவையிலிருந்து கொஞ்சம் நீரை அந்த அம்மைக்குக் கொடுத்தான். தாகம் தீர்ந்த அந்த அம்மாவும் அவனை வாழ்த்தினாள்.அத்துடன் தன் இடுப்பில்  இருந்த ஒரு வாளை எடுத்துக் கொடுத்தாள். "இந்த வாள் உன் கையில் இருக்கும் வரை நீ எல்லோரையும் ஜெயித்துக் கொண்டே இருப்பாய்."என்று ஆசி கூறி அனுப்பினாள்.
அவளை வணங்கி அந்த வாளைப் பெற்றுக் கொண்ட சஞ்சயன் தம்பியுடன்  இரத்தினபுரி நோக்கிப் புறப்பட்டான்.

              வெகு தொலைவு வந்தும் காட்டைவிட்டு வெளியே வர வழி தெரியவில்லை. வழி தவறி விட்டோம் என சஞ்சயன் அறிந்து கொண்டான்.தம்பியிடம் இது பற்றி சொன்னபோது அவன் இங்கேயே படுத்துக் கொள்வோம் என்று படுத்து விட்டான்.நிலவு வெளிச்சத்தில் சஞ்சயன் தண்ணீர் தேடிப் புறப்பட்டான்.அருகே ஒரு சுனை தெரிந்தது. அதை நெருங்கிய போது அருகே ஒரு முதியவர் முள் செடி மீது படுத்திருந்தார்.
அவர்" தம்பி தயவு செய்து என்னைத் தூக்கி அந்தப் பக்கமாகப் படுக்கவை. உனக்குப் புண்ணியமாய்ப் போகும்" என்றபோது சஞ்சயன் ஐயோ பாவம் என்றபடி அவரைத்தூக்க அவர் திடீரென்று மறைந்தார். அங்கே ஒரு கந்தர்வன் தோன்றினார்.
"சஞ்சயா, சாபத்தால் பல ஆண்டுகளாக இந்தக் காட்டில் தவித்தபடி கிடந்தேன்.ஒரு பௌர்ணமி நாளில் நல்ல மனம் படைத்த அரசகுமாரன் உன்னைதொட்டால்  நீ உன் சாபம் நீங்கப் பெறுவாய் என்று முனிவர் கூறினார். இன்று பௌர்ணமி. யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்துக் கிடந்தேன்.நீ வந்தாய். உன்னால் என் சாபம் நீங்கப் பெற்றேன்.
இதோ இந்தக் கண்ணாடியைப் பெற்றுக்கொள். நீ பார்க்கவிரும்பும் செய்தியை இது உனக்குக் காட்டும்."என்று கூறி ஒரு சிறு கண்ணாடியைக் கொடுத்தார்.
நன்றி சொல்லிய சஞ்சயன் வணங்கி அதைப் பெற்றுக் கொண்டான். கந்தர்வன் மறைந்தபின் சஞ்சயன் நீரை குடுவையில் நிரப்பிக் கொண்டு தம்பி இருக்கும் இடத்துக்கு வந்து படுத்துக் கொண்டான்.
மறுநாள் சூரியன் உதிக்கும் முன் இருவரும் எழுந்து புறப்பட்டனர்.நேரம்  ஆக ஆக இருவருக்கும் நல்ல பசி எடுத்தது. எங்காவது மனிதரோ வீடோ தென்படாதா எனத் தேடினர்.வெகு தொலைவில் ஏதோ புகை மூட்டம் தெரியவே அந்த இடத்தை நோக்கி இருவரும் வேகமாகத் தங்கள் குதிரையைச் செலுத்தினர்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Wednesday, October 26, 2011


நல்வாழ்த்து

பாட்டி சொல்லும் கதைகளைப் படித்து ரசிப்பவர்களுக்கும் படித்ததை விமர்சிக்கிறவர்களுக்கும் மற்றுமுள்ள இனிய சகோதர சகோதரியருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன், 
ருக்மணி சேஷசாயி


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Saturday, October 15, 2011


75- கணக்கு நேரான கதை


ஒரு முறை தெனாலிராமன் அரசவைக்குள் செல்ல முயன்றான்.அப்போது காவலர் அவனை வழி மறித்தனர்.
"ஏன் என்னை வழி மறிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது," எங்களைக் கவனித்துவிட்டுச் செல்" என்றனர்  காவலர்.அப்போது ராமன் புரிந்து கொண்டான்.அவர்கள் கையூட்டுக் கேட்கின்றனர் என்பதை.அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று அறிவுறுத்தவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
"ஐயா, நான் ஒரு புலவன் அரசரிடம் பாடிக் காட்டிப் பரிசில் பெற்றுப் போகவே வந்தேன்.உங்கள் விருப்பப் படியே அரசர் கொடுக்கும் பரிசிலை நான் அப்படியே உங்களிடம் தந்து விடுகிறேன். நீங்கள் பார்த்துக் கொடுப்பதை நான்பெற்றுச் செல்கிறேன்." என குழைந்து பேசினான்.
காவலரும் அவனை எச்சரித்து உள்ளே அனுப்பினர். 
அவைக்குள் நுழைந்த ராமன் மக்களுடன் கலந்து அமர்ந்து கொண்டான்.அந்த அவைக்கு பல வழக்குகள் வந்தன. அவற்றுக்கெல்லாம் அப்பாஜி யின் ஆலோசனையின் படி மன்னர் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மூன்று சகோதரர்கள் வந்து ராயரை வணங்கி நின்றனர்.
அவர்களின் வழக்கு என்ன என்று மன்னர் கேட்டார். வந்த மூவரில் மூத்தவன் கூறினான்.
"மகாராஜா, எங்கள் தந்தையார் ஒரு யானைப் பாகன். அவரிடம் இருந்த சொத்துக்கள் மொத்தம் பதினேழு யானைகள்தான்.அவற்றை எங்களுக்குப் பாகம் பிரித்து எழுதி வைத்துள்ளார்."
"அப்புறமென்ன? அவரது சொல்படி பாகத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டியதுதானே? அதிலென்ன சிக்கல்?"
"அதில்தான் சிக்கல் மகாராஜா,"
அமைதியாக நின்றிருந்த அப்பாஜி கேட்டார்."உங்கள் வழக்கை விவரமாகக் கூறுங்கள்.அப்போதுதான் மன்னர் சரியான தீர்ப்பு வழங்க முடியும்."
இப்போது இரண்டாவது மகன் கூறினான்."பிரபு, எங்கள் தந்தையார் மூத்தவனுக்கு சரிபாதி யானையைத் தரச் சொல்லியுள்ளார்.பதினேழில் பாதி எட்டரை அல்லவா?எப்படிக் கொடுப்பது? முதலாவதுதான் சிக்கல் என்றால் அடுத்தது அதற்குமேல் இருக்கிறது."
"அதையும் சொல்லிவிடப்பா."என்றார் அப்பாஜி.
இரண்டாவது மகனான எனக்கு மீதியில் மூன்றில் ஒரு பங்கு.எட்டரையில் மூன்றில் ஒரு பங்கு எப்படிக் கணக்கிடுவது?"
"மூன்றாமவனுக்கு?"என்று  கேட்ட ராயரிடம் "மீதியில் மூன்றில் ஒரு பங்கு என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார். இந்த உயிலின் படி தாங்கள்தான் எங்களின் பாகத்தைச் சரியாகப் பிரித்துத் தரவேண்டும்."என்று வேண்டுகோள் வைத்தான் மூன்றாவது மகன்.
அப்பாஜியும் கிருஷ்ண தேவராயரும் சிந்தனை வசப்பட்டனர்.எவ்வளவு யோசித்தும் கணக்கைத் தீர்க்கும் வழி தோன்றவில்லை.ஆனால் இதில் ஏதோ ரகசியம் இருக்கும் என்று மட்டும் மன்னருக்குத் தெரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை.
வெகு நேரம் சபை அமைதியாக இருந்தது.மக்களின் கூட்டத்திலிருந்து தெனாலிராமன் எழுந்து நின்றான்.
"மாமன்னர் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் சம்மதித்தால் இந்த வழக்கை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றான் வணங்கியபடியே.
ராமகிருஷ்ணனைக் கண்டு மன்னர் புன்னகைத்தார். "வா ராமகிருஷ்ணா, உன் தீர்ப்பை நீ சொல்."
ராமன் உடனே ஓடிச் சென்று சபை நடுவே நின்றான்.
"மகாராஜா, இப்போது பதினேழு யானை பொம்மைகளைக் கொண்டு வரச் சொல்லுங்கள்." என்றான்.அதன்படியே பொம்மைகள் ராமனுக்கு முன்னால் வைக்கப் பட்டன.
"எல்லோரும் பாருங்கள்.இப்போது நானும் ஒரு யானையில் வருகிறேன்.எங்கே இன்னொரு யானைபொம்மை கொண்டு வாருங்கள்."
இன்னொரு யானை பொம்மை கொண்டு வரப்பட்டது.
ராயர் கேள்விக்குறியுடன் ராமனைப் பார்த்தார்.ராமன் "மகாராஜா மன்னிக்க வேண்டும்.நீதி சொல்லும் நான் யானையின் மேல் வரக்கூடாதா?"என்று சொல்லவே சிரித்தபடி அனுமதியளித்தார் ராயர்.
இப்போது ராமன் கணக்கை சீராக்கத் தொடங்கினான்."ஐயா,இப்போது மொத்தம் பதினெட்டு யானைகள் உள்ளன அல்லவா? முதல் மகனான உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"இவற்றில் சரி பாதி."
"அப்படியானால் ஒன்பது.சரிதானே?"
"சரிதான் ஐயா."தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒன்பது யானைகளுடன் அவன் விலகி நின்றான்.."அடுத்த மகன் வாருங்கள்" அடுத்தவன் வந்து நின்றான்.
"உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"மீதியில் மூன்றில் இரண்டு  பங்கு."
"மீதி எவ்வளவு?" 
"ஐயா,மீதி ஒன்பது அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆறு."
"இதோ உமக்கு ஆறு யானைகள்."கடைசியாக மீதி மூன்று யானை பொம்மைகள் இருந்தன.மூன்றாமவனை அழைத்த ராமன் "உமக்கு எவ்வளவு யானைகள் ?" என்று கேட்டான்.
அவனும் "எனக்கு மீதியில் மூன்றில் இரண்டு பங்கு" எனக கூற அவனுக்கு மீதியிருந்த மூன்று யானைகளில் இரண்டு யானையைக் கொடுத்தான் ராமன். 
"இப்போது மீதி இருப்பது ஒரு யானை. நான் ஏறி வந்த அந்த  யானையின் மீதே நான் ஏறிச் செல்லலாமா மகாராஜா"?என்று கேட்டுவிட்டு பணிவுடன் நின்றான் ராமன்.
உயிலின்படி முதல் மகனுக்கு ஒன்பது யானைகளும் இரண்டாவது மகனுக்கு ஆறு யானைகளும் மூன்றாவது மகனுக்கு  இரண்டு யானைகளும் உரியன   என தீர்ப்புக்கூறினார் மன்னர்.சிறப்பாக பாகப்பிரிவினை செய்த தெனாலிராமனைப் பாராட்டிய ராயர் அவனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார்.
தெனாலி ராமனுக்கு உடனே வாயில்காப்போனின் நினைவு வந்தது.
 "மகாராஜா, நான் கேட்கும் பரிசைத் தாங்கள் தட்டாமல் தரவேண்டும்.மறுக்கக்கூடாது."
"மறுக்கமாட்டேன். கேள் ராமகிருஷ்ணா"
"எனக்குப் பரிசாக நூறு கசையடிகள் வேண்டும்.அதையும் இந்தச் சபையிலேயே தரவேண்டும்."
அனைவரும் திகைத்தனர்.ராமனுக்கு என்ன பைத்தியமா?
ஆனால் ராமன் மீண்டும் அதையே கூறவே வேறு வழியில்லாமல் மன்னரும் காவலனிடம் ராமனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.அவனும் கசையைத் தடவியபடி வந்து நின்றான்.அப்போது ராமன் "மகாராஜா, எனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியை ஒருவருக்கும் மீதியை மற்றொருவருக்கும் தருவதாக வாக்களித்துள்ளேன் அவர்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரவேண்டும்."என்றான்.
 ராயர் புரிந்து கொண்டார். அவர்  கண்கள் சிவந்தன.உடனே அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.இரண்டு வாயில் காப்போரும் நடுங்கியபடியே வந்து நின்றனர்.
மன்னர் "என் நாட்டிலே லஞ்சமா கேட்டாய்?அரண்மனையில் பணிபுரியும் நீ லஞ்சம் கேட்டதற்காக உன் தலையைக் கொய்தால் என்ன?"
எனக் கேட்டு அவர்களுக்கு ஐம்பது கசையடிகள் கொடுத்துச சிறையிலும் அடைக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.
பின்னர் ராமகிருஷ்ணனுக்குப்  பெரும்பொருள் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினார்.
 சரியானபடி தீர்ப்புக் கூறியதுமல்லாமல் லஞ்சம் கேட்டவனுக்கும் அறிவு வரும்படி செய்த தெனாலிராமனைப் பாராட்டியபடி மக்கள்  கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, October 3, 2011


74- பேராசை பெருநஷ்டம்

பெருமாள் என்பவரும் நாகப்பன் என்பவரும் மிகவும் நண்பர்களாக இருந்தனர். எப்போதும் இருவரும் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். ஒன்றாகவே அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.அவ்வூரில் அனைவருக்கும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது தெரியும்.
இருவருக்கும் திருமணம் முடிந்து பலகாலம் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லை.நாகப்பன் எல்லாத தெய்வங்களையும்  வேண்டிக்கொண்டார். சில ஆண்டுகளில் நாகப்பனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகன் பிறந்த மகிழ்ச்சியைத தன் சக்திக்கும் மீறி ஒரு விழாவாகக் கொண்டாடினார் நாகப்பன்.பின்னர் தன் மகனுக்காக மிகவும் பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்தார் நாகப்பன்.அவரது கடும் உழைப்போடு சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் எப்போதும் செல்வம் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்ததால் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டார் நாகப்பன்.
நாகப்பனின் மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது மனைவியும் இறந்து விட்டதால் தன் மகனை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டி வந்தது. இப்படி எல்லாப் பொறுப்புகளும் சேர்ந்ததால் நாகப்பன் விரைவிலேயே கடும் நோய்க்கு ஆளானார்.தன் மகனுக்கு  இப்போதுதான் பத்து வயதாகிறது. தனக்குப் பின் தன் மகனைப பார்த்துக் கொள்ள சரியான ஆள் தன் உயிர்நண்பன் பெருமாள்தான் என முடிவு செய்தார்.
நண்பனை அழைத்தார்.
"பெருமாள், நான் இனி வெகு நாட்கள் வாழ மாட்டேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நீதான் என் மகனைப பார்த்துக் கொள்ள வேண்டும்."
"என் உயிர் நண்பன் நீ. உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்."
"அப்படிச் சொல்லாதே. நான் விட்டுச் செல்லும் கடமைகளை நிறைவேற்றுவதுதான் இந்த உன் உயிர் நண்பனுக்கு நீ செய்யும் கடமையும் கைம்மாறும் ஆகும். எனவே என் மகனை உன் மகனாகப் பார்த்துக் கொள்."எனக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டு பத்து வயதான தன் மகனின் கரங்களைப் பிடித்துத் தன் நண்பன் பெருமாளின் கரங்களில் வைத்தார் நாகப்பன்.
"மகனே, குமரா, இனி இவர்தான் உனக்கு தாயும் தந்தையும்.இவரது சொல் கேட்டு நடந்து பெரியவனாகி என்னைப் போல் நல்லவன் என்று பெயர் பெறவேண்டும்."
தந்தையின் சொல்லைக் கேட்ட குமரன் "அப்படியே செய்கிறேன் அப்பா."என்றான் அழுதுகொண்டே.
நாகப்பன் தன் நண்பனைப் பார்த்து "பெருமாள், என்னுடைய இத்தனை நாள் சேமிப்பாக பத்து லட்சம் ரூபாய்களை உன்னிடம் தருகிறேன் என் மகனுக்குத் தக்கவயது வந்ததும் நீவிரும்பும் பணத்தை அவனுக்குக் கொடுத்து அவனையும் வாழ வைக்கவேண்டுமென்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்."என்று தன் கரங்களைக் கூப்பிக் கேட்டுக் கொண்டார் நாகப்பன்.
"இது என் கடமை நாகப்பா.நீ கவலையே படாதே.உன் மகன் நல்லபடியாக வாழ்வான்."என்ற பெருமாளின் சொல்லைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நாகப்பன்.
சிலநாட்களில் நாகப்பன் இறந்துவிட குமாரனைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்த்து வ்ந்தார் பெருமாள். ஆண்டுகள் கடந்தன.
இப்போது குமரனுக்கு இருபது வயதாகிவிட்டது. அவனுக்குத் தன் தந்தையார் கூறியது நினைவுக்கு வந்தது. தந்தை விட்டுச் சென்ற பணியத் தான் தொடர்ந்து செய்ய விரும்பினான்.அத்துடன் இனியும் பெருமாளுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை.எனவே தனியே வாழ்வது என்று முடிவு செய்தான். 
ஒருநாள் பெருமாளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.பெருமாளும் மகிழ்ச்சியுடன் "அதற்கென்ன, அப்படியே செய்.உன் விருப்பமே என் விருப்பம்."என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.அத்துடன் நாகப்பன் தன்னிடம் கொடுத்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயையும் அவனிடம் கொடுத்தார்.அதைக் கண்டு திகைத்தான் குமரன்.
"ஐயா, என் தந்தையார் தங்களிடம் பத்துலட்சம் கொடுத்துள்ளார். தாங்கள் ஒரு லட்சம் திருப்பித் தருகிறீர்களே?இத்தனை ஆண்டுகள் நான் உழைத்ததற்கும் தாங்கள் எந்தப் பணமும் தரவில்லை. இன்றோ என் பணத்தையே தராமல் இப்படிச் செய்கிறீர்களே! தங்கள் நண்பருக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?"
பெருமாள் கோபத்துடன் பேசினார்."இதோ பார் உன் தந்தையார் என்னிடம் கூறும்போது நான் விரும்பும் பணத்தை உனக்குத் தரச் சொன்னாரல்லவா?அதன்படிதான் செய்துள்ளேன்.போய்வா.இதை வைத்துப் பிழைத்துக் கொள்."
வாலிபனான குமரன் மனம் அழுதது.பெருமாளின் பேராசையைக் கண்டு மனம் வருந்தினான்.ஆனால் தன் தந்தை தனக்காகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை விட்டுவிடவும் மனம் இல்லை.என்ன செய்வது என்று சிந்தித்தான்.
அந்த ஊரில் மரியாதை ராமன் என்று ஒரு திறமைசாலி அறிவாளி இருந்தார். அவர் பல வழக்குகளை நல்ல விதமாகத் தீர்த்துவைப்பதாகக்  கேள்விப்பட்டான்.அவரது துணையை நாடுவது என்று முடிவு செய்தான்.
நேராக மரியாதைராமன் இருந்த இல்லத்தை நோக்கிச் சென்றான்.அவரிடம் தன் வழக்கை எடுத்துச் சொன்னான்.மரியாதைராமன் வழக்கைக் கூர்ந்து கேட்டுக் கொண்டார்.மறுநாள் பெருமாளையும் தன் இல்லத்திற்கு வரச் சொன்னார்.இப்போது பெருமாளும் குமரனும் மரியாதைராமன் முன் நின்றனர்.
மரியாதைராமன் பெருமாளிடம் விசாரித்தார்.பெருமாள்"ஐயா, நாகப்பன் இறக்கும்போது என்னிடம் பத்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தது உண்மைதான்.குமரனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் என்னிடம் கொடுத்ததும் உண்மைதான்.நாகப்பன்  சாகும்போது நான் விரும்பும் பணத்தைத் தன் மகனுக்குக் கொடுக்கும்படி கூறிவிட்டுச் சென்றான்.அதனால் நான் ஒரு லட்சம் ரூபாயை குமரனுக்குக் கொடுத்தேன்.இது எப்படித் தவறாகும் ஐயா?" என்றார்.
மரியாதைராமன் சிரித்தார்."சரிதான்.நாகப்பன் கூறியது போல்தான் செய்திருக்கிறீர்கள்.ஆனால் நீ விரும்பும் பணத்தைத் தருமாறு கூறினாரல்லவா?அதில்தான் ஒரு சந்தேகம்.நீர் விரும்பும் பணத்தைத்தான் கொடுத்தீரா?"
பெருமாள் இடைமறித்துக் கூறினார்."அதிலென்ன சந்தேகம்?நான் விரும்பிய பணத்தைத்தான் கொடுத்திருக்கிறேன்."
"இல்லையே நீர் விரும்பிய பணத்தைத் தரவில்லையே. உமது நண்பர் என்ன சொல்லிச் சென்றார்?நீர் தர விரும்பிய பணம் என்று சொல்லவில்லையே. நீர் விரும்பும் பணம் என்றுதானே சொன்னார். அப்படியானால் நீர் தர விரும்பியது ஒரு லட்சம். நீர் விரும்பியது ஒன்பது லட்சம் அல்லவா?"
பெருமாள் திடுக்கிட்டார்."ஐயா, "தடுமாறினார்.
"உமது நண்பரின் வார்த்தையின்படி நீர் விரும்பும் பணம் ஒன்பது லட்சம் அல்லவா?அந்த ஒன்பது லட்சத்தை குமரனிடம் கொடுத்து விடவேண்டும்.அத்துடன் பத்து ஆண்டுகளாக அவனிடம் வேலை வாங்கிக் கொண்டு ஊதியம் ஏதும் தராததால் அவனுக்கு பத்தாண்டு ஊதியமாக ஒரு லட்சத்தையும் தந்து விட வேண்டும்.இதுவே என் தீர்ப்பு."
தனது பேராசையின் காரணமாக தனக்குக் கிடைக்கவேண்டிய ஒரு லட்சமும் கையை விட்டுப் போனதற்காக மனம் வருந்திய படியே சென்றார் பெருமாள்..
ஊர் மக்களும் பேராசை பெருநஷ்டமாகியது.பேராசைப்பட்ட பெருமாளுக்கு இது நல்ல தண்டனைதான் என்று பேசிக்கொண்டே கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Tuesday, September 20, 2011


73- திலகாஷ்ட மகிஷ பந்தனம்.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவ ராயருக்கு ஒரு சந்தேகம் வந்தது. நமது மந்திரிகள் மிகுந்த சாமர்த்திய சாலியாக உள்ளனரா என்று சோதித்து அறிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார்.அதனால் அன்று சபை கூடியதும் ஒரு வினா எழுப்பினார்.
"சபையோரே, நேற்று இரவு என் அறைக்குள் ஒரு திருடன் நுழைந்தான். அவன் என் மார்பின்மீது எட்டி உதைத்தான்.அத்துடன் அவனது இரண்டு கைகளாலும் என்னைக் கன்னத்தில் அடித்தான். அவனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று நீங்களே கூறுங்கள்."
"அவன் எங்கே இருக்கிறான் பிரபு?"
"அவனைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன்."
"அவனைக் கை கால்களை வெட்டி வீசவேண்டும்.  இல்லையில்லை.அவனுக்கு  மரண தண்டனைதான் தரவேண்டும்.அவனை நகரத்து வீதியில் நிற்கவைத்து கசையால் அடிக்கவேண்டும்."
ஒவ்வொருவரும் ஆத்திரத்துடன் பேச மன்னர் புன்னகை புரிந்தார்.
அமைதியாக இருந்த அப்பாஜியைப் பார்த்து "அப்பாஜி உங்களுக்கு ஒன்றும் தோன்ற வில்லையா?"என்று கேட்டார் மன்னர்.
புன்னகையுடன் எழுந்த அப்பாஜி"மன்னா,உங்களை உதைத்த கால்களுக்கு மாணிக்கப் பரல் வைத்த தங்கக் காப்புப் போடவேண்டும்.தங்களை அடித்த கைகளுக்கு வைர வளையல் செய்து போடவேண்டும்.தங்களின் அன்புப் பிடிக்குள் நீங்கள் கட்டி வைத்திருக்கும் இளவரசன் அல்லாது இந்தக் காரியத்தைச் செய்ய வல்லவர்கள் யார் பிரபு?" என்று கூறியபோது மன்னர் " பலே அப்பாஜி பலே!",என்று மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
"நேற்றிரவு என் மகன்தான் என்னைக் காலால் உதைத்துத் தன் பிஞ்சுக் கரங்களால் என் கன்னத்தில் அடித்து விளையாடினான்.அவனைத்தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன்.அப்பாஜி சரியான பதில் அளித்துவிட்டார்."
இந்த சொல்லைக் கேட்ட சபையோர் பலத்த ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
அப்போது மன்னரின் சபைக்கு ஒரு புலவர் வந்திருப்பதாகக் காவல்காரன் வந்து அறிவிக்கவே,அவரை வரவேற்குமாறு அப்பாஜி கூறினார்.மிகுந்த ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்த அந்த புலவர்  தன்னை மிகவும் கற்றவர் எனவும் தன்னை வெல்ல யாராலும் முடியாது எனவும் அப்படி யாரேனும் தன்னை வென்று விட்டால் தான் பெற்ற பட்டங்களையும் தன் பரிசுப் பொருள்களையும் கொடுப்பதாகவும்  கூறினார்.
அவரது ஆரவாரத்தைப் பார்த்த அங்கிருந்த புலவர்கள் சற்றுப் பயந்தனர்.தாங்கள் தோற்று விட்டால் தங்களால் விஜயநகர அரசுக்குக் கெட்டபெயர் வந்து விடுமே எனத் தயங்கினர்.ராயரோ அவையில் உள்ள புலவர்களை நோக்கி 
" நம் நாட்டில் இந்தப் புலவரை வெல்ல யாரும் இல்லையா?" எனக் கேட்டார்.
 அப்போது தெனாலிராமன் எழுந்து நின்றான்."அரசே, தாங்கள் அனுமதித்தால் நான் இந்தப் புலவருடன் வாதிடுகிறேன்."
"செய் ராமகிருஷ்ணா, நம் நாட்டில் தோல்வியென்பதே வரக்கூடாது."
ராமன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்."ஐயா புலவரே. இப்படி வாரும்.என்னிடம் இருக்கும் இந்த நூலில் இருந்துதான் தங்களிடம் வினாக்கள் கேட்கப் போகிறேன்.எல்லா வினாக்களுக்கும் தவறாமல் தாங்கள் பதில் கூறவேண்டும் அப்படிக்கூறிவிட்டால் நீர் வென்றவர் ஆவீர்".                                                
வந்த புலவர் "அது என்ன நூல் எனத் தெரிந்தால்தானே நான் பதில் கூறமுடியும்?"என்றார் தயங்கியபடியே.
ராமன் அலட்சியமாக"திலகாஷ்ட மகிஷ பந்தனம்தானய்யா"என்று கூறியதும் அந்தப் புலவர் திகைத்தார்.
"என்னது? திலகாஷ்ட மகிஷ பந்தனமா? அப்படி ஒரு நூலை நான் படித்ததே இல்லையே."
"என்ன, இந்த நூலை நீர் படிக்கவில்லையா?என்ன புலவரைய்யா நீர்? இந்த நூலைப் படிக்காமல் உம்மை நீர் புலவர் என்று வேறு கூறிக் கொள்கிறீர்! தெரியவில்லைஎன்றால் தோல்வியை ஒப்புக் கொண்டு ஊர் போய்ச் சேரும் முதலில் இந்த நூலைத் தேடிப் படியுங்கள்."
"பிரபு, நான் இந்த நூலைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் இன்றுடன் என் பட்டங்கள் அனைத்தையும் துறந்தேன் என் பரிசுப் பொருளை இந்தத் தெனாலி ராமனுக்கே கொடுத்துவிடுகிறேன்."
என்றார் தலை குனிந்தபடியே.
"உமது பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம் அதை நீரே எடுத்துக் கொண்டு போய்ச் சேரும்" என்று அவரைப் போக விட்டான் தெனாலி ராமன்.
அவர் செல்வதைப்  புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமனிடம் ராயர் மதுவாகக் கேட்டார்."ராமகிருஷ்ணா, அது என்ன நூல்? நான் கூட கேள்விப்படாததாக உள்ளதே?"
ராமன் புன்னகையுடன் "இதுதான் அரசே,"என்றபடி தன்னிடம் இருந்த ஒரு மூட்டையை அவிழ்த்துக் காட்டினான்.அதில் ஒரு எள்ளுச் செடியும் அதைக் கட்டிய கயிறும் இருந்தது.மன்னர் ஒன்றும் புரியாமல் என்ன இது? என்றபோது ராமன் விளக்கினான்.
"அரசே, திலம் என்றால் எள். காஷ்டம் என்றால் காய்ந்த செடி.திலகாஷ்டம் என்றால் காய்ந்த எள்ளுச் செடி.மகிஷ பந்தனம் என்றால் எருமையைக் கட்டும் கயிறு. இதோ இந்த எள்ளுச் செடிகளை கயிற்றால் கட்டியிருக்கிறேன்.
இதைச் சேர்த்துச் சொன்னால் திலகாஷ்ட மகிஷ பந்தனம்.இதைத்தான் கூறினேன். அவர் இது ஏதோ புதிய நூல் என்று பயந்து ஓடிவிட்டார்."
"கர்வத்தோடு வந்தவரை அவரது கர்வம் அடங்கும்படி செய்து விட்டாய் பலே, ராமகிருஷ்ணா,உன் சமயோசித புத்தியால் நம் சாம்ராஜ்யத்தின் பெருமையைக் காப்பாற்றினாய்.அது சரி அவர் இந்தநூலைக் காட்டும்படி கூறியிருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றுகேட்டபோது ராமன் சிரித்தான்.
"அவ்வப்போது தோன்றும் யோசனைகளுக்கேற்றபடி அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி சமாளிப்பேன் மகாராஜா.முதலில் அருகே வரும் பிரச்னையை சமாளிக்க வேண்டும்.அதுதான் என் குறிக்கோள்."
"பலே ராமகிருஷ்ணா, உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன்."என்று கூறிய மன்னர் ராமனுக்குப் பரிசளித்து மகிழ்ந்தார்.
ராமன் சமயோசிதம் நிறைந்தவன் என்றுமட்டுமே  நினைத்துக் கொண்டிருந்தனர்.இந்த செய்கையால் அவன் துணிச்சல் மிகுந்தவன் என்பதையும் அனைவரும்  புரிந்துகொண்டு அவனைப் பாராட்டினர்.










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, September 9, 2011


72- தெய்வத்தின் குரல்.

ஒரு காட்டில் மரப் பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கும்.ஒருநாள் திடீரென்று
இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?என்று சந்தேகம் வந்தது.பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும்.என்று சமாதானம் செய்து கொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகுக்கு இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லாருக்கும் படியளப்பவன் ஆயிற்றே.
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?என்ற  சந்தேகம்  வந்ததும் அந்த கழுகு தான் அமர்ந்து தியானம் செய்யும் பாறைமீது நின்று
" இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?"என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
உடனே விண்ணிலிருந்து ஒரு குரல் "உனக்கு இன்று உணவு உண்டு."என்ற பதில் கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சியுடன் இன்று இரை தேடும் வேலை இல்லை எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறைமீது அமர்ந்து இருந்தது.
நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத்தொடங்கியது.ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறைதியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று மாலையும் போயிற்று.இரவு வந்துவிட்டது."இனி நம்  இருப்பிடம் செல்ல வேண்டியதுதான்.நம்மை இறைவனே ஏமாற்றி விட்டாரே" என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
அப்போது ஒரு குரல் கேட்டது
 "என்ன குழந்தாய், சாப்பிட்டாயா?"என்றதைக் கேட்டதும் கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"இறைவா, நீ எனக்கு  இன்றுஉணவு உண்டு என்று கூறிய பிறகுதானே நம்பிக்கையோடு நான் தியானத்தில் அமர்ந்தேன்.
ஆனால் இன்று என்னைப் பட்டினி போட்டு விட்டாயே! உன் கணக்கு தப்பா, என் நம்பிக்கை தப்பா?"
 என்று அழுது கொண்டே கேட்டது.
இறைவன் சிரித்தார். 
"குழந்தாய், சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது."
கழுகு பின்னால் சென்று பார்த்தது.அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது. கழுகு புன்னகை புரிந்தது. 
இறைவனிடம் "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?"என்றபோது இறைவன் பதிலளித்தார். 
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்து விட்டது நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.திரும்பிப் பார்க்கும் முயற்சி கூடச் செய்யாமல் உணவு எப்படிக்கிட்டும்?.
அவரவர் உணவுக்குத் தகக உழைப்பை அவரவரே செய்ய வேண்டும் அப்போதுதான் உணவு இருப்பதும் தெரியும் கிடைப்பதும் நடக்கும். கடுகளவேனும் முயற்சி வேண்டும்.ஒருவேளை உணவு கூட உழைக்காமல் உண்ணக் கூடாது.
இதை நீமட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்.
இனியாவது புரிந்து கொள்." என்று கூறிய இறைவன் கழுகுக்கு ஆசி வழங்கி மறைந்தார்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கிற்று.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, September 5, 2011


71..யானையின் எடை.

வெகு நாட்களாக வெளியூர் சென்றிருந்த தெனாலிராமன் தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான்.அவன் ஊருக்குள் நுழையும்போதே மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடிப் பேசுவதைக் கண்டான்.காரணம் அறியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான்.தெனாலிராமன் வீட்டு வேலைக்காரர்கள் இருவரும் அடிக்கடிக் கூடி நின்று எதைப் பற்றியோ ஆலோசனை செய்தபடி இருந்தனர்.
தெனாலி ராமனுக்கு பெரும் ஆச்சரியம். ஊருக்குள் வரும்பொழுதுதான் மக்கள் கூடிநின்று பேசினார்கள் என்றால் நம் வீட்டு வேலைக்காரர்களும் அதேபோல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே என்று யோசித்தான்.அவனால் காரணம் கண்டு பிடிக்க முடியாததால் தன் வேலைக்காரர்களுள் ஒருவனை அழைத்தான்.
"டேய், உண்மையைச்சொல். என்னகாரணமாகக் கூடிக் கூடிப் பேசுகின்றீர்கள். ஏதேனும்  திட்டம் தீட்டுகிறீர்களா?"
வேலைக்காரன் பயந்தான்."ஐயா, சாமி நாங்க நம்ம ஊருக்கு வந்திருக்குற வடநாட்டு வியாபாரியைப் பற்றிப்  பேசுறோமுங்க"
"அவரைப் பற்றி அப்படி என்ன பேச்சு?"
"அதுங்களா? அவரு ஒரு பொருள் வச்சிருக்கிறாராம் அதன் எடை என்னன்னு கண்டு பிடிச்சிட்டா எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம்.அப்படி கண்டு பிடிக்க முடியலைனா காலம் பூராவும் அவருக்கு அடிமையா அவருக்குப் பணிவிடை செய்து வாழணுமாம்."
தெனாலிராமன் சிந்தித்தான்.அரசபைக்குச் சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தான்.
மன்னர் கிருஷ்ணதேவ ராயரும் வியாபாரியின் இந்த சவாலை ஏற்கவும் முடியாமல் 
விடவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார்.
தெனாலிராமன் சபைக்கு வந்ததும் மன்னர் அவரிடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கூறினார்.
ராமகிருஷ்ணனும் அதை ஏற்றுக் கொண்டு வியாபாரியிடம் கேட்டான்.
"ஐயா, தாங்கள் எடை காணவேண்டும் என்று கூறும் பொருள் என்னவோ?"
வியாபாரி மிகுந்த கர்வத்துடன் பேசினான்."அதற்கு முன் என் நிபந்தனை தெரியுமா உமக்கு? நான் ஜெயித்தால் நீர் எமக்கு அடிமை.ஆனால் நீர் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவேன்."
"உங்கள் நிபந்தனையை நான் ஒப்புக் கொள்கிறேன்.நான் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவது என்பது உண்மைதானே?"
"ஒப்புக் கொள்கிறேன்."
"அப்படியானால் நானும் ஒப்புக் கொள்கிறேன்.எந்தப் பொருளுக்கு எடை சொல்ல வேண்டும்?சொல்லுங்கள்."
வியாபாரி புன்னகைத்தான்.கள்ளச் சிரிப்புடன் தெனாலிராமனைப் பார்த்துச் சொன்னான்.
"வீதியில் நிற்கும் என் யானையின் எடை என்ன என்று சொல்லவேண்டும்"
சபையே அதிர்ந்தது.யானையை எப்படி எடை போடுவது?எந்தத் தராசில் நிற்க வைப்பது என்று அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.மன்னரும் சிந்தனை வயப்பட்டார்.
தெனாலிராமன் இதற்கு மறுநாள் பதில் கூறுவதாகச் சொல்லி இல்லம் திரும்பினான்.
இரவு தன் மனைவியிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்குத் திடீரென்று யோசனை தோன்றியது.
மறுநாள் பொழுது விடிந்ததும் வியாபாரியிடம் அவனது யானையின் எடையைக் கூறுவதாகக் கூறி அழைத்தான். மக்களும் ராமன் எப்படி யானையை எடை போடுகிறான் என்பதைப் பார்க்கக் கூடிவிட்டனர்.
மன்னரும் மக்களுடன் சேர்ந்து ஆவலுடன் பார்த்து நின்றார்.
ராமன் வடநாட்டு வியாபாரியை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான்.அவனும் தன் யானையை நடத்திக்கொண்டு ராமனுடன் சென்றான்.நதிக்கரையை அடைந்தவுடன் அங்கிருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான் ராமன்.அந்தப்படகில் யானையை ஏற்றியவுடன் அதைத் தண்ணீரில் மிதக்கவிடச் சொன்னான்.படகு மிதந்தது.படகு நீருக்குள் அமிழ  நீர்படகில்  எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் குறித்துக் கொண்டான்.பின்னர் மரக்கட்டைகளை அந்தப் படகில் வைத்து நீருக்குள் விட்டான். படகு அமிழ வெளிப்புறம் நீர் உயர்ந்தது. 
யானையை வைத்து எடை பார்த்தபோது உயர்ந்த அதே அளவு நீர் உயர்ந்ததும் கட்டைகளை நிறுத்திவிட்டான்.இப்போது படகில் வைக்கப்பட்ட கட்டைகளின்  எடைதான் யானையின் எடை. இந்தக் கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்த்தால் யானையின் எடை தெரிந்துவிடும். 
"அரசே, கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்."

மன்னர் கிருஷ்ண தேவராயர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.வியாபாரியைப் பார்த்து "அய்யா, நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்கள் ராமன் சரியான விடை தந்து விட்டான்.அவனிடம் சொன்னது போல் பரிசைத் தருவதுதான் நியாயம்."என்று கூறியவுடன் வியாபாரி தலை குனிந்து ஒப்புக் கொண்டான்.
ஆனால் இடைமறித்த ராமன் "மகாராஜா, பொறுங்கள்."என்றவன் வியாபாரியைப் பார்த்துக் கூறினான்.
"ஐயா வியாபாரியே! நான் வெற்றி பெற்றால் தாங்கள் என்ன தருவதாகக் கூறினீர்கள்?"
"எடைக்கு எடை பொன் தருவதாகக் கூறினேன்."
"அது சரி யாருடைய எடைக்கு எடை என்று நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே.எடையைப் பார்த்துச் சொன்னவரின் எடைக்கா அல்லது யானையின் எடைக்கா?என்பதைத் தெளிவாகச் சொல்லாததால் நான் யானையின் எடைக்கு எடை பொன் கேட்கிறேன்."
ராமனின் வார்த்தைகளைக் கேட்ட வியாபாரி மயங்கிச் சரிந்தான்.யானையின் எடைக்கு எடை பொன்னுக்கு அவன் எங்கே போவான்.எனவே அவனைச் சிறையில் அடைக்குமாறு மன்னர் கட்டளையிட்டார்.
பல நாடுகளில் மக்களை அடிமைப் படுத்திச் சிறுமைப் படுத்திய வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் அது.என்று மன்னர் தீர்ப்பளித்தார். 
ராமனுக்குப் பெரும் பொன்னைப் பரிசாகக் கொடுத்து அவனை வாழ்த்தினார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில்  உண்டு என்பதை நிரூபித்த  தெனாலிராமனை மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
எனவே யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு என்பதையும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதையும் நாம் புரிந்து கொண்டால் நலமடைவோம்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, August 1, 2011


70-சோதிடம் தந்த பரிசு

முற்காலச் சேரர்களில் புகழ் பெற்றவன் சேரலாதன். முதலாம்  நூற்றாண்டின் கடைசியில் சேர நாட்டை ஆண்டவன். நாட்டை விரிவாக்கி வளமிக்கதாகஆக்குவதற்கு அரும்பாடு பட்டவன்.அது  தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்று வந்த காலம்.
அப்போது திருமணப் பருவத்தில் இருந்த சேரலாதன் சோழ மன்னன் மகள் நற்சோணை என்பவளை மணந்து இல்லறத்தையும் இனிதே நடத்தி வந்தான். இவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.மன்னர் பரம்பரைக்கே உரிய கல்வி கேள்வி கலைகளில் சிறந்து வீரமும் பண்பும் உடையவராய்த் திகழ்ந்தனர்.மன்னன் சேரலாதன் தன் மக்கள் இருவரையும் கண்ணின் மணிகள் எனப்  போற்றி வந்தான். ஆண்டுகள் உருண்டன.

ஒரு நாள் அரியணையில் மன்னன் சேரலாதன் அமர்ந்திருந்தான்.அவனருகே இளவல்கள் மூத்தவன் செங்குட்டுவன் இளையவன் இளங்கோ இருவரும் அமர்ந்திருந்தனர். வீரமும் வலிமையையும் கொண்டவனாக முதல் மகனும் அறிவு ஒளிரும் கண்களுடன் இரண்டாவது மகனும் அமர்ந்திருந்ததைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான் சேரலாதன். நாட்டு மக்களும் தங்களின் இளவரசர்களைப் பார்த்துப் பூரித்திருந்தனர்.
அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னனை வணங்கி நின்றான்.என்ன என்பது போலப் பார்த்தான் மன்னன்.
"அரசே! சோதிடர் ஒருவர் தங்களைக் காண வந்துள்ளார்."
"வரச்சொல்"
உள்ளே நுழைந்த சோதிடர் மன்னனை மிகவும் பணிவோடு வணங்கினார்.
"வாருங்கள் சோதிடரே. அமருங்கள்" மந்திரியார் அவரை அவரது ஊர் பெயர் சோதிடத்தில் அவருக்குள்ள அனுபவம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சேரர் அரண்மனையை அவர்  நாடிவரக் காரணம் யாது எனவும் வினவினார்.
"மன்னர் பெருமானே. தங்கள் பிள்ளைகள் பிறந்த நேரத்தை அறிய நேர்ந்தது.அது பற்றி இளவரசர்களின் எதிரகாலம் பற்றிக் கூறிச் செல்லவே நான் வந்தேன்."
மன்னன் மகிழ்ச்சியுடன் அவரை "கூறுங்கள்" என்று  சொன்னான்.
"அரசே தங்களின் மக்களில் மிகவும் புகழ் பெறப் போகிறவர் தங்களின் இளைய மகனே. அவரே இந்த மண்ணை ஆளப் போகிறார்."
மன்னன் திகைத்தான். மக்கள் பதறினர். மூத்தவன்  செங்குட்டுவன் நிலைகுலைந்தான். இளங்கோ சோதிடரை வெறுப்புடன் பார்த்தான். 
மந்திரியாரோ மூத்தவன் இருக்க இளையவன் மன்னனாவதா அது எப்படி நடக்கும்? என்ற வினாவைக் கண்களில் ஏற்றிமன்னனைப் பார்த்தார்.
சேரலாதன் செங்குட்டுவனின் முகத்தைப் பார்த்தான்..அதில் தோன்றிய ஏமாற்ற உணர்ச்சியையும் அவன் தன் தம்பியை வெறுப்புடன் பார்த்த பார்வையையும் கவனித்தான்..
அந்த இடத்தின் அமைதியைக் குலைத்தபடி எழுந்தான் இளங்கோ.
"சோதிடரே, உமது சோதிடம் பொய்யாகும்படி இப்போதே நான் என் முடிவைக் கூறுகிறேன். இந்த அரியணை மீது எனக்கு சற்றும் உரிமையில்லை என்பதை இந்தச் சபை அறியக் கூறுகிறேன்."
சேரலாதன் முகத்தில் சற்றே நிம்மதி தோன்றியது.ஆனால் அதைக் குலைக்கும் வண்ணமாக  செங்குட்டுவன் பேசினான்.
"நீ வேண்டாமென்றாலும் நாளை உன் மக்கள் உரிமை கோரலாமல்லவா?"
சபையோர் பேச்சு மூச்சற்று அமர்ந்திருந்தனர். அப்போது யாரும் எதிர் பாரா வண்ணம் 
இளங்கோ ஆசனத்தை விட்டு எழுந்தான்."அண்ணா! என்மீது சந்தேகமா? இருங்கள் இதோ வருகிறேன்" என்றவன் உள்ளே சென்றான். சற்று நேரத்தில் அங்கு ஒரு துறவி தோன்றினார். ஆம்.இளங்கோதான் தலையை மழித்து காவி உடுத்தி துறவியாக சபையின் முன் தோன்றினான்.
அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் அமைதியாகப்  பேசினான் இளங்கோ.
"தந்தையே, என்னை மன்னியுங்கள். இவ்வுலக வாழ்வில் எனக்குப் பற்றில்லை. இந்த சோதிடர் மீதும் சினம் கொள்ள வேண்டாம்.நான் துறவறம் ஏற்க இவர் ஒரு கருவி அவ்வளவே. என்னை வாழ்த்தி எனக்கு விடை கொடுங்கள்." 
இப்போதுதான் செங்குட்டுவனின் சகோதரபாசம் தலை தூக்கியது.
"தம்பி, என்னை விட்டு எங்கே போகிறாய்? என்னை மன்னித்து விடடா"
"கலங்கவேண்டாம் அண்ணா, நீங்கள் நினைக்கும்போது நான் அரண்மனைக்கு வருவேன்"
மகிழ்ச்சியுடன் தொடங்கிய சபை துயரத்துடன் முடிந்தது.
இப்போது செங்குட்டுவன் மன்னனாக பட்டமேற்றுள்ளான். மதுரை சென்று திரும்பியுள்ள புலவர் பெருமான் சீத்தலைச் சாத்தனாருடனும் பட்டமகிஷியுடனும் சில மெய்க்காப்பாளர் சூழ மலைவளம் காணப் புறப்பட்டான் செங்குட்டுவன். புலவருக்கு ஒரு துணை இருந்தால்தான் அங்கு பேச்சும் சுவையாக இருக்கும் என எண்ணிய செங்குட்டுவன் மறவாமல் தம்பி இளங்கோவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையும் செழிப்பும் கண்களைக் கவர்ந்தன.இளைப்பாற ஓரிடத்தில் அமர்ந்தான் மன்னன்.மூலிகைகளின் வாசமும் வாசனைப் பொருள்களின் மணமும் மனதை மயக்கக் கூடியவையாக இருந்தன.
அந்த ரம்யமான சூழலில் சில  காட்டுவாசிகள் மன்னனைப் பணிந்தனர்.தேன், மான், புலித்தோல், வாசனைத் திரவியங்கள் எனப் பலவகைப் பொருள்களைக் காணிக்கையாக மன்னன் முன் இட்டு வணங்கி எழுந்தனர்.
அவர்கள் முகங்களில் ஏதோ கலவ ரம் தெரிந்தது.காரணம் கேட்ட மன்னனுக்கு அவர்களின்  தலைவன் பதிலளித்தான்.
"சாமி, மகாராசா, நேத்து ஒரு பொண்ணு மலப்பக்கமா நின்னுச்சுங்க. அப்ப ஒரு பெரிய தேரு ஆகாயத்திலேருந்து அதும் பக்கத்தில நின்னுச்சுங்க. தேருல இருந்து ஒரு அழகான பையன் வந்து அந்தம்மாளைக் கைபிடிச்சு உக்காத்தி வச்சுகிட்டு ஆகாயத்தில பறந்து போயிட்டான்."
செங்குட்டுவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.அருகே இருந்த சீத்தலைச் சாத்தனார் புன்னகை புரிந்தார்.
"மன்னா, இவர்கள் கண்டது உண்மையே. கற்புக்கரசி கண்ணகியை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவளை அவள் கணவன் கோவலன் கையைப் பற்றி விண்ணுலகுக்கு அழைத்துச் சென்ற காட்சி தான் இவர்கள் கண்முன் நிகழ்ந்துள்ளது."
இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னனும் மற்றையோரும் ஆவலுடன் கண்ணகியின் கதையைக் கூறுங்கள் என்றனர். 
கூத்தனாரும் கண்ணகி கதையைச் சுருக்கமாகக்  கூறினார்.
 கதையைக் கேட்ட மன்னன் செங்குட்டுவன் "சாத்தனாரே, அருமையான இந்தக் கற்பரசியின் கதையை வருங்காலம் அறியும்படி ஒரு காப்பியமாகப் படைத்துவிடுங்கள். " என்று வேண்டிக்கொண்டான்.
கூத்தனாரோ அதை மறுத்து"மன்னா, என்னினும் தமிழறிவும் புலமையும் மிக்கவரான இளங்கோ அடிகளே அதைச் செய்ய ஏற்றவர். அவரே இந்த காப்பியத்தை இயற்றட்டும்." என்று காப்பியம் எழுதும் பணியை இளங்கோவிடம் ஒப்படைத்தார்.  
தம்பியைத் திரும்பிப் பார்த்தான்  மன்னன் .
"மன்னவன் பணியென்றால் மறுப்பேதுமில்லை" என்று கூறி அப்பணியைத் தானே ஏற்றுக் கொள்வதாக இசைந்தார் அடிகள். 
அப்போது மாடலன் என்ற மறையோன் தென்னாட்டு மன்னர்களின் வீரத்தைப் பற்றி வடநாட்டு மன்னர்களான கனகரும் விஜயரும் இகழ்ந்து பேசியதைக்  கேட்டதாகக் கூறினார். 
இதைக் கேட்ட செங்குட்டுவன் கண்கள் சிவந்தன உதடுகள் துடித்தன.
"அடிகளாரே, நமது வீரத்தை இகழ்ந்த அந்த வீணர்களின் தலையில் இமயத்தின் கல்லேற்றி கங்கையில் நீராட்டி அக்கல்லில் கண்ணகிக்குச் சிலை வடித்துக் கோவில் எழுப்புவோம்.இப்போதே படை வடக்கு நோக்கிப் புறப்படும் 
நான் வீரப் போரைக் கவனிக்கிறேன் அடிகளே, நீர் சொற்போரைக் கவனியுங்கள். "
இரண்டு நிகழ்ச்சிகளும் விரைவிலேயே நடந்து முடிந்தன.
ஆனால் காலப் போக்கில் கண்ணகியின் கற்கோவில் மறைந்து விட்டது.இளங்கோ இயற்றிய சொற்கோவில் ஆன சிலப்பதிகாரம் என்ற நூல் தமிழன்னையின் கால் சிலம்பு எனும் அணிகலனாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அது ஒலிக்கும் குரல் தமிழின் பெருமை மட்டுமல்ல இளங்கோவின் பெருமையையும்தான். ஒரு சோதிடம் நமக்கு சிலப்பதிகாரம் என்னும் அழியாச் செல்வத்தைப் பரிசாகக் கொடுத்துள்ளது என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அல்லவா?




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, July 14, 2011


69- சோதிடம் பலித்தது


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரத கண்டத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களுள் விக்கிரமாதித்யன் என்ற மன்னன் மிகவும் பெருமை வாய்ந்தவன்.இவனது  சபையில்  மிகவும்  திறமை  வாய்ந்தஅறிஞர்கள்  இருந்தனர். வானசாஸ்திரம் கணிதம் மருத்துவம் சோதிடம் போன்ற பலதுறைகளில் இவர்கள் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினர்.
 மன்னன் விக்கிரமாதித்யனும் இவர்களை மிகவும் பெருமையுடன் போற்றி வந்தான்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னனுக்கும் மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. நாடே கோலாகலமாகக் கொண்டாடியது.குழந்தையின்  பெயர்  சூட்டு  விழாவன்று குழந்தையின் ஜாதகத்தையும் கணித்துத் தருமாறு மன்னன் சோதிட திலகமான மிஹிரர் என்பவரிடம் வேண்டுகோள் விடுத்தான்.மிஹிரர் அந்தக் குழந்தையின் பிறந்த நேரம் சரியில்லை என்பதை அறிந்துகொண்டதால் ஜாதகம் கணிப்பதில் தாமதம் காட்டினார்.

மன்னன் அவரிடம் பலமுறை  வற்புறுத்திக் கேட்டபின்னர் மிஹிரர் மன்னனிடம் கூறினார்."மன்னா, உன் மகனுக்கு ஆயுள் பலம் கிடையாது.ஏழாவது வயதில் இவனுக்கு மரணம் ஏற்படும்."

மன்னன் திகைத்தான். "இதை மாற்ற வழியே இல்லையா? ஏதேனும் பரிஹாரம் அல்லது பிராயச்சித்தம் செய்தால் என் மகனது உயிர் நிலைக்குமா? சொல்லுங்கள்" என்று தவித்தான்.

எந்த பரிஹாரத்தாலும் இவனது உயிரைக் காப்பாற்ற இயலாது" என்றபோது விக்ரமாதித்யன் உள்ளத்தில் ஒரு பிடிவாதம் தோன்றியது. எப்படியும் தன் மகனைக் காப்பாற்றியே தீருவது என்று தீர்மானம் செய்தான்.

மிஹிரரோ அவன் விதியை மாற்ற இயலாது. அவன் ஒரு மிருகத்தால் உயிர் இழப்பது உறுதி என்றார்.

விக்கிரமாதித்யன் என் மகனை எந்த மிருகமும் நெருங்காது பாதுகாப்பேன் என்று முடிவு செய்தான்.

அதற்காக எழுநிலை மாடம் ஒன்று கட்டினான். ஏழாவது மாடத்தில் சகல வசதிகளுடன் தன் மகனைத் தங்க வைத்தான்.கீழ்ப் பகுதியில் மன்னன் தன் இருப்பிடத்தை வைத்துக் கொண்டு கண்ணும் கருத்துமாகத் தன் மகனைப் பாது காத்தான். 

கடைசியில் இளவரசனின் ஏழாவது வயதும் பிறந்தது. ஒவ்வொரு நாளும் மன்னன் தன் மகனை மேல் மாடியில் சென்று பார்த்து வந்தான். ஒரு நாள் மன்னன் தன் மகனைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு வந்தான். அப்போது மிஹிரரும் மன்னனுடன் இருந்தார்.
"என்ன மிஹிரரே! என் மகன் உயிருக்கு இனி ஒன்றும் பயமில்லையே? அவன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானல்லவா? "
"ஆம் மன்னா. இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் அவன் உயிர் பிரிந்து விடும்."
"என்ன! எந்த மிருகமும் இங்கு வராதபோது எப்படி அவனுக்கு மரணம் சம்பவிக்கும்.?"
"மன்னா, என் சோதிடம் பொய்க்காது.ஒரு மிருகத்தால் அவன் உயிர் பிரிவது என்னும் அரைநாழிகை பொழுதில் நடக்கும்."
மன்னன் ஒரு சேவகனை அழைத்தான்." நீ உடனே மேல் மாடிக்குச் சென்று இளவரசனைப் பார்த்து விட்டு வா."
எனக் கூறி அனுப்பினான்.
அந்த சேவகனும் சென்று பார்த்துவிட்டு "மகாராஜா, நமது இளவரசர் பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்."என்று பணிவுடன் கூறினான்.
மன்னன் மிஹிரரைப் பார்த்துப் புன்னகைத்தான்.
"மன்னா,இந்த சேவகன் பாதிவழியில் இறங்கிக் கொண்டிருக்கும் போதே இளவரசர் உயிர் பிரிந்து விட்டது."
அமைதியாக மிஹிரர் கூற மன்னன் மேல் மாடத்திற்கு ஓடினான். அங்கே ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அலறினான்.அள்ளி எடுத்து  அணைத்துக் கொண்டான்.

"இத்தனை பாதுகாப்பிருந்தும் இது எப்படி நடந்தது?"
"மன்னா, கலங்காதே.நீ கட்டிய இந்த ஏழாவது மாடியில் அழகான தூண்களில் யாளியின் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. அந்த யாளிகள் வாயைத் திறந்து கொண்டு இருப்பதைப் பார். அதன்  வாய்க்குள் உன் மகன் போட்ட பந்து விழ அதனை எடுக்கச் சென்றபோது யாளியின் கூர்மையான பற்கள் இளவரசனின் பிடரியில் குத்தி அவன் உயிர் பிரிந்துள்ளது." 

"மிஹிரரே உமது சோதிடத்தை நான்எளிதாக  நினைத்துவிட்டேன். தாங்கள் சாதாரண மிஹிரர் அல்ல. வராகமிஹிரர். வராகத்தினால் என் மகன் உயிர் பிரியும் என்று சோதிடம் சொன்ன தங்களின் அறிவை நான் பாராட்டுகிறேன். இனி வருங்கால சரித்திரம் தங்களை வராஹமிஹிரர் என்று பாராட்டும்."

விக்கிரமாதித்யன் சபையிலிருந்த நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்களுள் வராஹமிஹிரரும் ஒருவராக இடம்  பெற்றார்.






-- ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, June 23, 2011


68-பக்தி கொடுத்த பரிசு


.        அக்பர் பாதுஷா டில்லியில் அரசாண்டிருந்த காலம்.அவரது சபையிலே சூர்தாஸ் என்ற மகான் ஒருவர் இருந்தார்.மிகச் சிறந்த அறிவாளியான இவர் கல்வி கேள்வியிலும் அரசியல் அறிவிலும் சிறந்து விளங்கினார்.  அக்பர் பாதுஷா இவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.இவருடன் அடிக்கடி வேதாந்த விசாரணையும் செய்து வ்ந்தார்.
ஒரு முறை கோகுலம் பிருந்தாவனம் அடங்கிய பகுதிக்கு ஒரு அதிகாரியை நியமிக்க  வேண்டி வந்தது. பக்திமானாகிய சூர்தாசரே அதற்குத் தகுதியானவர் என்றுமுடிவு செய்த அக்பர்பாதுஷா  அவரையே  அதிகாரியாக நியமித்தார். கண்ணன் பிறந்து வளர்ந்த பகுதிக்குத் தாம் அதிகாரியாக நியமிக்கப் பட்டதற்காக  மிகவும் மகிழ்ந்தார் சூர்தாசர்.

மிக்க மகிழ்வுடன் தமது பதவியை ஏற்கப் புறப்பட்டார். வழியெங்கும் கண்ணன் லீலைகள் புரிந்ததை நினைவு கூர்ந்தவாறு சென்றார்.அந்த எண்ணத்துடனே வந்து பதவி ஏற்றுக்கொண்டார்.ஒரு மெய்யன்பர் தமக்கு அதிகாரியாக வந்துள்ளதை அறிந்து மக்களும் பேருவகை எய்தினர்.

 இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.சூர்தாசர் அரசாங்கப் பணி தவிரஆண்டவன் பணியும்  செய்து வரலானார்.தமக்கென உள்ள செல்வம் அனைத்தையும் அடியார்களுக்காகச் செலவழித்தார்.தமது செல்வத்தைப் பயனுள்ள வழியில் செலவிட முடிந்ததே என்று மக்களுக்கு வாரி வாரி வழங்கினார்.
காலப் போக்கில் செல்வம் செல்வோம் எனச் சென்றுவிட சூர்தாசர் வறியவரானார். இறைவன் பணி செய்ய இவரிடம் இப்போது செல்வம் இல்லை.

இந்த சமயத்தில் திருவிழாவும் வந்தது. அடியார்களின் திருக் கூட்டமும் வந்தது. செலவு செய்யக் கையிலே பணமில்லாத போது பாதுஷாவுக்குச் சேரவேண்டிய வரிப்பணமும் வந்து சேர்ந்தது.அந்தப் பொருளை எடுத்து கைங்கர்யம் செய்தால் என்ன என்று எண்ணிய சூர்தாசர் மன்னனின் வரிப் பணத்தை எடுத்துச் செலவு செய்து விட்டார்."இது பகவத் கைங்கர்யம். மன்னனே செய்ய வேண்டியது. நான் செய்ததால் மன்னனுக்கும் இறைவன் அருள் கிட்டும்" என தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

இப்படியே சில நாட்கள் சென்றன.ஊரிலுள்ள பொறாமைக்காரன் ஒருவன் நேரில் டில்லி மாநகருக்கே சென்று பாதுஷாவிடம் கோள் மூட்டினான்.
சூர்தாசர் சிறந்த மனிதராயினும் மன்னனின் ஆணை  இன்றி வரிப்பணத்தைச் செலவு செய்தது பெருங்குற்றம்  மதுரா, பிருந்தாவனம், துவாரகா, ஆகிய மாவட்டங்களிலிருந்து வரவேண்டிய  வரிப்பணம் நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக வசூலித்து வரவேண்டும்.என உத்தரவிட்டான்.

இந்தப் பணத்தைக் கட்டத் தவறினால் சூர்தாசரைக் கைது செய்யவும் அதிகாரம் அளித்துத் தன் முத்திரையையும் 
கொடுத்தனுப்பினான்.
வீரர்கள்  மதுராவை அடைந்து அரசரின் மடலைக் காட்டுமுன்பாகவே சூர்தாசர் செய்தியை யூகித்துத்  தெரிந்து கொண்டார்.வந்த வீரர்களை வரவேற்று உபசரித்து மிகுந்த மரியாதையுடன் அவர்களுடன் பேசினார்.
"அன்பர்களே, நான் அரசரின் வரிப் பணத்தை வீணாகச் செலவு செய்து விட்டேன் என்று தானே உங்களை மன்னர் இங்கு அனுப்பியுள்ளார்.அது வீண் புரளி. நான் மன்னரின் பணத்தை வராகனாக வைக்காமல் சிறந்த நவரத்தினங்களாக வாங்கி வைத்துள்ளேன். அவற்றைக் கொண்டு போக உங்களுக்கு சிரமம் ஏதும் இருக்காதல்லவா? "
சூர்தாஸின் இந்த மொழிகளைக் கேட்ட வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.சூர்தாசர் உள்ளே சென்று ஒரு பெட்டி நிறைய கூழாங்கற்களைப் போட்டு மூடி அதன் மேல் ஒரு கடிதமும் வைத்து அனுப்பினார். 

அந்தக் கடிதத்தின் செய்தி இதுதான்.
"மன்னர் பெருமானே! அரசாங்கப் பணத்தை எடுத்துச் செலவு செய்தது உண்மையே.அது அடியார்களுக்காக செலவிடப் பட்டது.புனித நகரங்களுக்கு வரும் அடியார்களின் நலனுக்காக தங்களின் செல்வம்  செலவிடப் பட்டது.
இந்த மிகச் சிறந்த பணியால் இறைவனின் திருவுள்ளம் குளிரும். அதனால் தங்களின் நாட்டுக்கும் ஆட்சிக்கும் இது பெருமையையும் புண்ணியத்தையும் தரும்.இதனால் நாடும் செழிக்கும் நாமும் தூயராவோம் என்றே இப்படிச் செய்தேன். இது தவறு எனில் என்னை மன்னித்து விடுங்கள்."
.பெட்டியையும் கடிதத்தையும் அனுப்பிவிட்டு சூர்தாசர் அருகே இருந்த காட்டுக்குள் சென்று தியானத்தில் அமர்ந்தார்.
அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட எண்ணித் தேடிய வீரர்கள் சூர்தாசரைப் பாராமலேயே கடிதத்தையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அரண்மனை அடைந்தனர்.

கொண்டு வந்த பெட்டியை அக்பர் பாதுஷாவின் முன் வைத்து வணங்கி நின்றனர் வீரர்கள்.ஒருவன் சூர்தாஸ் அளித்த கடிதத்தை மன்னனிடம் கொடுத்தான்.கடிதத்தைப் படித்த அக்பர் திகைத்தார்.வீரர்களைப் பார்த்துக் கேட்டார்.
"இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?"
"மகாராஜ், இதில் நவரத்தினங்கள் இருப்பதாக சூர்தாஸ் மகாராஜ் கூறினார்."
அந்தப் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார் பாதுஷா. உள்ளே கண்களைப் பறிக்கும் பிரகாசத்துடன் நவரத்தினங்கள் ஒளி வீசின.
பாதுஷா குழப்பத்தில் ஆழ்ந்தார்.கடிதத்தில் வரிப்பணத்தை செலவு செய்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பணத்தின் மதிப்புக்கு மேலேயே மதிப்புள்ள நவ ரத்தினங்கள் பெட்டியிலுள்ளன.இதில் எது உண்மை? எது பொய்? ஒன்றும் புரியவில்லை பாதுஷாவுக்கு.
உடனே சூர்தாசரை அழைத்து வர ஆணையிட்டார்.
மதுராவுக்கு விரைந்த வீரர்கள் அவரைக் காட்டில் தியானத்தில் இருக்கும் போது கண்டு வணங்கினர். மன்னரின் 
ஆணையை அறிந்து உடனே புறப்பட்டார். சூர்தாசரின் பெருமையையும் மகிமையையும் அறிந்து கொண்ட அக்பர் அவரை வாயிலிலேயே நின்று வரவேற்று அழைத்துச்  சென்றார்.உண்மையை அனைவரும் அறிந்தனர்.

சூர்தாசரின் பஜனைக்கும் பக்திப் பாடல்களுக்கும் மயங்கிய கண்ணன் அவரது விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறான். தன் பக்தனின் வாக்குப்பொய்க்கக் கூடாது என்று பெட்டியில்  நவரத்தினங்களை நிரப்பிக் கொடுத்துள்ளான். ஆண்டவனே கட்டுப் படும் அளவு பக்தியுடைய சூர்தாசரிடம் மேலும் அன்பு பெருகியது அக்பருக்கு.
தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அக்பர் மீண்டும் அதே பகுதிக்கு அதிகாரியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால் இறைபக்தி செய்வதை விட்டு அரசாங்க சேவகம் செய்வதை விரும்பவில்லை என்பதை சூர்தாசர்  விளக்கியும் மன்னர் ஒப்புக் கொள்ளவில்லை.
"தாங்கள் பதவியில்  இருந்துகொண்டே இறைவன் பணியும் செய்யலாமே."
"அரசே, ஒருமுறை சிக்கல் தோன்றிவிட்டால் தொடர்ந்து உமது கட்டளையை நான் கேட்டே எந்தப் பணியும் செய்ய நேரும். அதனால் எனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்னைச் சுதந்திரமாக இருக்கவிடுங்கள்."
அரசர் சிந்தித்தார்.
"தாசரே! நீர் எனக்கு திறை செலுத்த வேண்டாம்.எனக்கு உட்படவும் வேண்டாம் இந்த மூன்று மாவட்டங்களையும் உமக்கே உரிமையாகக் கொடுத்தேன். இனி நீர் சுதந்திரமாக தொண்டு  செய்யலாம்"

இதக் கேட்ட சூர்தாசர் சற்றே அமைதியாக நின்றார். அக்பர் அவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு "தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினார்.

அரசரின் மனம் பக்தியில் நிரைந்துள்ளது இதனால் மக்கள் நல்வாழ்வு பெறவும் வழி ஏற்படும் என எண்ணிய சூர்தாசர் 
"அரசே, தாங்கள் இவ்வளவு கூறியபின் மறுக்க இயலவில்லை.தாங்கள் இன்று முதல் சாதுக்களின் சேவையும் ஹரிபக்தியும் செய்து வாருங்கள் என ஆசி கூறிவிட்டு மதுராவிற்குப் புறப்பட்டார்.

பெட்டியிலிருந்த நவரத்தினங்களையும் திருப்பணிக்கே கொடுத்து அவரை மிகுந்த மரியாதையுடன் அனுப்பிவைத்தார் அக்பர்பாதுஷா.
சூர்தாசர் எம்பெருமான் கண்ணனின் திருவருளையும் அவனது திருவிளையாடல்களையும் எண்ணிப் பாடல் இசைத்தவாறே மதுரா வந்து சேர்ந்தார்.ஒரு பக்தனின் வேண்டுகோளுக்காக அவன் சொல்லைக் காக்க கல்லை நவரத்தினமாக்கிய கண்ணனின் பேரன்பை எண்ணி எண்ணி உருகினார். அவரதுஉள்ளத்தில்  பக்திக்காக ஆண்டவன் அளித்த பரிசை எண்ணும்போதெல்லாம் கண்ணன் மீது அன்பு மேலும் பெருகியது. அவனைப் பாடுவதே தன் கடன் என எண்ணி பாடல்களைப் பாடிப் பரவசத்துடன் வாழ்ந்தார். அவரது பாடல்கள் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் அவரது வாழ்க்கை அவரது பக்திச் சிறப்பையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, June 17, 2011


அறிமுகம்


அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். பாட்டிசொல்லும் கதைகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் படித்து எனக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தக் கதைகள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பயன்பட்டிருக்குமேயானால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்காக எழுதிவந்த நான்இப்போது என்னையொத்த அன்புச் சகோதரர்களுடன் பேசுவதற்காகவும் என் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மணி மணியாய் சிந்தனை என்ற புதிய தளத்தைத் தொடங்கியுள்ளேன். இதில் நான் அடைந்த அனுபவங்கள், நான் ரசித்த காட்சி, நான்படித்த புத்தகம் என்ற என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விழைந்துள்ளேன்.
பாட்டி சொல்லும் கதைகளுக்கு அளித்த ஆதரவைப் போலவேஇந்த  மணி மணியாய் சிந்தனை என்ற தளத்துக்கும் ஆதரவு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் சகோதரி 
ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, June 12, 2011


67 சத்தியம் தவறாத மன்னன்.

                                    
        ஒரு முறை தேவலோகத்தில் வசிஷ்டருக்கும் விச்வாமித்திரருக்கும் பெரும் வாக்குவாதம் நடந்தது.பொய் சொல்லாத மானிடரும் உண்டு என்று வசிஷ்டர் கூற "பொய் பேசாத மனிதர்களே இருக்கமாட்டார்கள். மனிதனாய்ப் பிறந்த அனைவரும் பொய் பேசியே தீருவார்கள்" என வாதிட்டார் விசுவாமித்திரர்.

"அப்படியானால் பூவுலகில் அயோத்தியில்மன்னனாக உள்ள ஹரிச்சந்திரனை  ஒரு பொய் சொல்ல வைத்து விடுங்கள். உங்களிடம் நான் தோற்றதாக ஒப்புக் கொள்கிறேன்." என்று கூறினார் வசிஷ்டர்.

"அப்படியே. ஹரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைக்கிறேன். வருகிறேன் ." என்று கூறிய விசுவாமித்திரர் கோபமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
பூலோகம் வந்தவர் நேராக அயோத்தி மன்னனை நாடிச் சென்றார். அவரது அறிவு சிந்திக்கத் தொடங்கியது.ஏதாவது சிக்கலில் இந்த அரசனை சிக்கவைத்துப் பின்னர்தான் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அரண்மனையில் நுழைந்த மகரிஷியை மரியாதையுடன் வரவேற்றான் மன்னன் ஹரிச்சந்திரன்.அவனை வாழ்த்திய விசுவாமித்திரர்
 "ஹரிச்சந்திரா! நான் செய்யும் யாகத்திற்கு சிறிது பொருள் தேவைப் படுகிறது அதனால் உன்னை நாடி வந்துள்ளேன்."என்றார்.

மிகவும் மகிழ்ந்த ஹரிச்சந்திரன் ஆயிரம் பொற்காசுகளை அளித்தான். அதைப் பெற்றுக்கொண்ட விசுவாமித்திரர் ஹரிச்சந்திரனை நோக்கி,"மன்னா, இந்தப் பொற்காசுகள் உன்னிடமே இருக்கட்டும். தேவையானபோது வந்து பெற்றுக் கொள்கிறேன்." என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.

நாட்கள் கடந்தன. விசுவாமித்திரர் மீண்டும்  ஹரிச்சந்திரனை நாடிச் சென்றார்.வழக்கம்போல மன்னன் அவருக்கு வரவேற்பு அளித்து அமரச் செய்தான்.பின் அன்புடன் கேட்டான்.
"சுவாமி, நான் செய்யும் காரியம் ஏதேனும் உள்ளதா சுவாமி?"

"ஹரிச்சந்திரா, நீ சொன்ன சொல் தவறாதவன் என்றும்சத்தியமே பேசுபவன் என்றும் அறிந்தேன்.நேற்று என் கனவில் உன் நாட்டை எனக்குத் தானமாகக் கொடுப்பது போல் கனவு கண்டேன்.அப்படி நடக்குமா என்ன!"
கள்ளச் சிரிப்பைத் தன் இதழ்களில் நெளிய விட்டபடி கேட்டார் விசுவாமித்திரர்.

"முனி சிரேஷ்டரே, கனவிலே சொன்னால் என்ன நனவிலே சொன்னால்தான் என்ன? சொன்னது சொன்னதுதான்.
என் நாட்டைத் தங்களுக்குத் தானமாக இப்போதே தருகிறேன்."

மகிழ்ச்சியுடன் கூறிய ஹரிச்சந்திரன் உடனே தன் நாட்டை முனிவருக்குத் தானமாக தாரை வார்த்துக் கொடுத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் தன் மனைவி மகன் லோகிதாசன் சகிதம் அரண்மனையை விட்டுப் புறப்பட்டான்.

அதைக் கண்ட விசுவாமித்திரர், "நில் ஹரிச்சந்திரா, என் ஆயிரம் பொற்காசுகளைத் தந்துவிட்டுப் போ."

"சுவாமி அந்தப் பணமும் அரண்மனை கருவூலத்தில் தான் உள்ளது."

"அதுநீ மன்னனாக இருக்கும் போது. இப்போது அனைத்துச் செல்வங்களையும் தானமாகத் தந்து விட்டாய். இப்போது அவை எனக்குச் சொந்தம்.எனவே நீ தரவேண்டிய ஆயிரம் பொற்காசுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?"

ஹரிச்சந்திரன் என்ன பதில் கூறுவான்! தலை குனிந்து நின்றான். அப்போது முனிவர்  மெதுவாக அவன் அருகில் வ்ந்தார்."ஹரிச்சந்திரா, நான் ஆயிரம் பொற்காசுகளை உன்னிடம் தரவே இல்லை என ஒரு பொய் சொல்லிவிடு உன் நாட்டையே நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" `

 ஹரிச்சந்திரன் திடுக்கிட்டான். பொய் சொல்வதா! அது என்னால் இயலாது என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு நடந்தான்.

விசுவாமித்திரர் விடவில்லை."என் ஆயிரம் பொற் காசுகளுக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ" என்றார்.தான் சம்பாதித்துத் தருவதாகக் கூறிய மன்னன் ஒரு சீடனைத் தன்னுடன் அனுப்பும்படி கூறி அவனையும் அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். 
 காட்டில் அலைந்து திரிந்த அரச குடும்பத்தினர் தங்கள் பசியைத் தாங்கிக் கொண்டு தங்களுடன் வந்த சீடனின் பசியைப் போக்கப் பாடுபட்டனர்.அந்த சீடனோ விசுவாமித்திரரின் கட்டளைப் படி வேண்டுமென்றே பசி பசி என்று மன்னனைப் பாடாய்ப் படுத்தினான்.

எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அந்தச் சீடனை அனுப்பிவிடத் துடித்தான் மன்னன்.என்ன செய்வது என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

சில நாட்கள் கழிந்ததும் அரச தம்பதியர் காட்டை விட்டு ஒரு ஊருக்குள் புகுந்தனர் அந்த ஊரில் காலகண்டன் என்னும் ஒரு செல்வந்தர்வாழ்ந்து வ்ந்தார். அவர்  வீட்டில்பணிப  பெண்ணாகத தன் மனைவி சந்திரமதியை விற்றான்.அந்தத் தொகை கடன் தீர்க்கப் போதாமையால் ஹரிச்சந்திரன் இடுகாட்டில் பிணம் சுடும் வேலைக்குப் போனான். அதில் கிடைக்கும் வருமானத்தை கடனுக்குக் கொடுத்து வந்தான்.கிடைக்கும் அரிசியை உணவாக உண்டு வந்தான்.

நாட்கள் நகர்ந்தன.அடிமையாக வேலை செய்துவந்த சந்திரமதியை மட்டுமல்லாது அவள் மகன் லோகிதாசனையும் கடுமையாக வேலை வாங்கினாள் காலகண்டன் மனைவி.

ஒருநாள் காலகண்டன் லோகிதாசனை தர்ப்பைப் புல் பறித்துவர காட்டுக்கு அனுப்பினான்.அங்கு நாகப் பாம்பு லோகிதாசனைக் கடிக்க அவன் மரணமடைந்தான்.உடன் சென்ற சிறுவர்கள் வந்து சொன்ன இச் செய்தியைக் கேட்ட சந்திரமதி துடித்தாள்.

மகனை அடக்கம் செய்து சீக்கிரமே திரும்பவேண்டும் என்ற தன் எஜமானனின் கட்டளையைத் தலைமேல் தாங்கிய சந்திரமதி காட்டுக்கு ஓடினாள்.அங்கே தன் மகனின் உயிரற்ற உடலைக் கண்டு கதறினாள். கடமை நினைவுக்கு வரவே தன் மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு இடுகாடு நோக்கிச் சென்றாள்.

அங்கே தன் மகனைக் கிடத்தி அழுதுகொண்டே சிதை மூட்டினாள்.அப்போது அங்கே வந்த ஹரிச்சந்திரன் ,
"பெண்ணே! கால்படி அரிசியும் முழத் துண்டும் கால்பணமும் கொடுக்காமல் நீ இந்தப் பிணத்தை எரிக்க முடியாது."
என்றான்.
"ஐயா! நான் பரம ஏழை. அடிமையாகப் பணி புரிகிறேன்.என்னிடம் ஏது பணமும் அரிசியும்?தயவு செய்யுங்கள்"என்று மன்றாடினாள்.
"உன் கணவனிடம் கேட்டு வா"
"என் கணவர் இங்கு இல்லை ஐயா. என்னிடமும் எந்த பணமும் இல்லை."
"அப்படியானால் உன் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை விற்று எனக்குச் சேர வேண்டியதைக் கொடு." திடுக்கிட்டாள் சந்திரமதி.தன் கணவன் ஒருவனைத் தவிர அன்னியர் யார் கண்ணுக்கும் தென்படாதது அந்த மாங்கல்யம். எனவே தன் முன்னே நிற்பது தன் கணவனே எனத் தெரிந்து கொண்டாள்.
அதனால் அவனது  சொற்களைக் கேட்டதும்  சந்திரமதி "ஐயோ சுவாமி! தாங்களா? தங்களுக்கா இந்த நிலை? நான்தான் உங்கள் சந்திரமதி.இறந்து கிடப்பவன் நம் மகன்." என்று கதறினாள்.
சந்திரமதியின் இந்த சொற்களைக்  கேட்ட ஹரிச்சந்திரன் மகனது உடலைக் கட்டிக் கொண்டு அழுதான்.பிறகு ஒருவாறு மனம் தேறி மனைவியைப் பார்த்துக் கூறினான்.
" சந்திரமதி நீ உன் எஜமானனிடம் சென்று நான் கேட்ட பொருட்களைக் கொண்டு வா. அதுவரை இந்த உடலை நான் பார்த்துக் கொள்கிறேன்"
சந்திரமதி அழுதாள்."உங்கள் மகனுக்குக் கூடவா நீங்கள் பணம் கேட்கிறீர்கள்?"
"என் எஜமானனுக்கு நான் உண்மையானவனாக இருக்கவே விரும்புகிறேன்.நீ சென்று வா."
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த விசுவாமித்திரருக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது. தன் வாதத்தில் வசிஷ்டரிடம் தோற்று விடுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.
ஹரிச்சந்திரனுக்கு மேலும் துன்பம் கொடுக்க எண்ணினார்.
சந்திரமதி நடந்து செல்லும் பாதையில் அந்நாட்டு மன்னனின் மகனது இறந்த உடல் விழும்படி செய்தார்.காசிராஜாவின் மகனைக் கொன்றவள் எனப் பழி சுமததப் பட்டாள் சந்திரமதி. 
அதனால் அவளே குற்றவாளி எனத் தீர்ப்பளித்த காசி மன்னன் அவளைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டான்.கொலைக் களத்துக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரமதியைக் கொல்லவேண்டிய கடமையை ஹரிச்சந்திரனே ஏற்க வேண்டியதாயிற்று.
அந்த நிலையிலும் மனம் கலங்காது நின்றான் ஹரிச்சந்திரன்.அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர் "ஹரிச்சந்திரா! இப்போதேனும் நான் சொல்வதைக் கேள். எனக்கு வாக்குக் கொடுக்கவில்லை என ஒரு பொய் சொல்லிவிடு. மீண்டும் அரசபதவி, அமோகமான வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்."எனக் கூறியதைப் புன்னகையுடன் மறுத்தான் ஹரிச்சந்திரன்.
அவன் எஜமான் கட்டளையிட்டவுடன் கத்தியை ஓங்கி சந்திரமதியின் கழுத்தில் வீசினான். என்ன ஆச்சரியம் கத்தி மாயமானது கழுத்தில் மாலையுடன் நின்றாள் சந்திரமதி.
சிவனும் பார்வதியும் வசிஷ்டரும் தோன்றிஆசி கூறினர்.காசிமன்னன் மகனும் லோகிதாசனும் எழுந்து ஓடிவந்து இறைவனை வணங்கி நின்றனர்.
விசுவாமித்திரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இறைவன் திருவாய் மலர்ந்தருளினார்."ஹரிச்சந்திரா, உலகில் உண்மை, சத்தியம் என்ற பண்புகள் உள்ளவரை உன் பெயரும் நின்று நிலைக்கும். உன்நாட்டை அடைந்து பல்லாண்டுகள் வாழ்வாயாக."என்று ஆசி வழங்கி மறைந்தார்.
வசிஷ்டரும் விசுவாமித்திரரும் ஆசி வழங்க நாட்டை அடைந்தான் ஹரிச்சந்திரன்.
வசிஷ்டர் புன்னகை புரிந்தார். "மகரிஷி! ஒரு மனிதனின் பெருமையை உலகுக்குக் காட்டவேண்டுமெனில் அவன் புடம் போடப் படவேண்டும் அதனால்தான் ஹரிச்சந்திரனுக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்தீரோ?"
"ஆம் இம்மன்னனது பெருமையை உலகில் நிலை நாட்ட வேறு வழியில்லையே"என்று புன்னகைத்தார் விசுவாமித்திரர்.

எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் தன் கொள்கையில் சற்றும் வழுவாத ஹரிச்சந்திரனின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடமல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

Tuesday, May 31, 2011


முக்திநாத் யாத்திரை

அன்பு நெஞ்சங்களே, கடந்த பதினைந்து நாட்களாகத் தங்களைச் சந்திக்கவில்லை.  நான் முக்திநாத் (நேபாளம்) என்ற வடதேச யாத்திரை சென்றிருந்ததுதான் காரணம். என் இனிய அனுபவங்களை இந்தக் கட்டுரையின் மூலம் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நாங்கள் நாற்பது பேர் இரவு பதினொரு மணிக்கு ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டோம். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தோம். மறுநாள் சுமார் நாற்பது மணி நேரத்திற்குப் பின் கோரக்பூர் என்ற நகரத்தை அடைந்தோம்.
அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் கழித்து நேபாளத்திலுள்ள பைரவா என்ற நகரை அடைந்தோம். நகருள் நுழையும் முன் இந்திய நேபாள எல்லையில் உள்ள  ஒரு வளைவுத் தூணைக் கடந்தோம்.
    



வழியெங்கும் மலைத் தொடர்கள் பசுமை போர்த்தவண்ணம் அழகுறக் காட்சியளித்தன.விரைவிலேயே இருட்டிவிட்டதால் தொடர்ந்து காட்சிகளைக் காண இயலவில்லை. இரவு பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது.அவ்வூரில் ஹோட்டல் அசோகாவில் தங்கினோம்.மறுநாள் காலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு சுமார் பதினொரு மணிக்கு திரிகூட மலைக்கு வந்தோம்.இங்கு மூன்று மலைகள் இணைந்திருப்பதால் இதற்குத் திரிகூடமலை என்று பெயர்.

இங்கு கண்டகி நதி ஓடுகிறது. இந்த நதியில் தான் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது.இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது.நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.
                                                                      



இங்கு கண்டகியில் ஸ்நானம் செய்து கோயிலைப் பார்த்து வணங்கி இங்கேயே மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். பிற்பகல் மூன்று மணிக்குப் பேருந்தில் புறப்பட்டு இரவு சுமார் பனிரெண்டு மணிக்கு மலைகளின் நடுவே இருக்கும் போக்ரா என்ற நகரை அடைந்தோம். ஒரு பெரிய பள்ளத்தாக்குக்குள் ஒரு பெரிய நகரமே உள்ளது.இந்த நகருக்கு வருமுன்னர் பல மலை வளைவுகளைக் கடந்தோம்.இங்கு ஹோட்டல் திபெத்தில் தங்கினோம்.




காலையில் புறப்பட்டு ஏரியின் நடுவே ஒரு சிறிய தீவில் குடிகொண்டுள்ள வாராஹி தேவியைப் படகில் சென்று தரிசித்தோம்.பின்னர் அங்கிருந்து விந்தியாவாகினி, ராதாக்ருஷ்ணா,ஐந்து லிங்க மூர்த்தி,சப்த சிரஞ்சீவி,தரிசனம் முடித்து, எதிரே உள்ள தேவி பால்ஸ் என்ற நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம்.இங்கு கண்டகி நதி வெண்மையாகப் பாய்வதால் இதற்கு ஸ்வேத கண்டகி என்று பெயர்.










பின்னர் சுமார் ஒரு மணிக்கு குப்தேஷ்வர் என்ற சிவன் கோயிலை அடைந்தோம். இங்கே சிவலிங்கம் பெரிய ஐந்து தலை நாகத்துடன் இருப்பதுபோல் உள்ளது சுமார் நூறு படிகளில் கீழே இறங்கிப் பாதாளத்துள் லிங்கத்தைத் தரிசித்தோம்.இதன் பின்னரும் இன்னும் சிவலிங்கம் படிகளின் கீழே இருப்பதாகச் சொன்னார்கள்.சிலர் இறங்கிப் பார்த்தனர். என்னால் முடியாததால் மேலே ஏறிவிட்டேன்.

குகைக்குள் நீர் சொட்டிக் கொண்டே இருந்ததால் எங்கும் ஈரமாக இருந்தது.இரண்டு மணிக்கு இருப்பிடம் திரும்பி சாப்பிட்டு ஓய்வு. மாலையில் சிலர் ஷாப்பிங் சென்றனர்.

மறுநாள் காலை எட்டுமணிக்கு போக்ரா விமான நிலையத்தை அடைந்தோம்.பத்து மணிக்கு விமானம் ஏறினோம். பனி மலைகளின் நடுவே பறந்து சென்ற விமானம் பத்தரை மணிக்கு ஜோம்சொம் என்ற ஊரை அடைந்தது.அங்கு ஒம்ஹோம் என்ற ஹோட்டலை  அடைந்தோம்.அங்கிருந்து பனிரெண்டு மணிக்குப் புறப்பட்டு பேருந்தில் ஏறி ஜீப் உள்ள இடத்திற்கு வந்தோம்.அங்கே ஜீப்பில் ஏறி சுமார் இரண்டு மணி நேரம் கடும் மலைப் பாதையில் பயணித்தோம்.சுமார் பதினான்காயிரம் அடி உயரத்தில் ஜீப்பில் பயணிக்கும் போது சற்றே அச்சமாகத்தான் இருந்தது.அந்த வழியிலேயே கண்டகி நதி கருப்புநிறமாக ஓடுகிறது.இங்கு இதற்கு காலாகண்டகி என்று பெயர்என்று சொன்னார்கள்.



ஒருவழியாக முகதிநாத்தின்  அடிவாரம் வந்து அடைந்தோம். அங்கிருந்து ஐந்து நிமிட நடைப் பயணம் மேற்கொண்டோம்.கடும் குளிர். பனிமழைவேறு. அந்த உயரத்தில் பிராணவாயு குறைவாக இருந்ததால் சற்றே மூச்சுத் திணறல் வேறு இருந்தது. வாய்விட்டு முக்திநாதா  என்று அழைத்துக் கொண்டே நடந்தோம்.அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மோட்டார் பைக்கில் பயணம் செய்து முக்தி நாத் கோவிலின் அடிவாரம்  வந்து சேர்ந்தோம்.
மோட்டார் பைக்கில் பயணம் செய்யும் போது நான்கடி அகலப் பாதையில் கற்களின் மேல் பயணிக்கும் போது முக்தி அடைந்து விடுவோம் என்றே தோன்றியது.அங்கே திபெத்தியர்கள் ஒவ்வொரு பைக்கிலும் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு வெகு சுலபமாக ஓட்டுகிறார்கள்.நம்மிடம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போதே நமக்கு அச்சமாக இருக்கிறது.










இறங்கிய இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரம் படிகளாகச் சற்றுத் தொலைவு நடந்து கோவில் வளாகத்தில் நுழைந்தோம். கோவில்  சிறியதாக இருந்தது  பனிப்பொழிவு அதிகரித்துவிடவே குளிரிலும் ஈரத்தாலும் நடுங்கினோம்.அந்தக் கோவிலில் சற்றும் ஒதுங்க இடம் இல்லை. அனைவரும் அந்தப் பனிப் பொழிவிலேயே நின்றிருந்தனர்.கர்ப்பக்கிரகம் இருக்கும் இடம் மட்டுமே பத்துக்குப் பத்து என்ற அளவில் ஒரு அறையாக இருந்தது.பின்னால் ஹோமம் செய்யும் இடம் அதேபோல சிறிய இடமாக இருந்தது.கோவிலைச் சுற்றி கண்டகிநதி நூற்றிஎட்டு நீர் வீழ்ச்சியாக விழுகிறது.








ஆண்கள் அந்த  குளிரிலும்  எல்லாநீரிலும்  குளித்துவிட்டு  இறைவனை  தரிசனம்  செய்தனர். .பெண்கள்  நீரைத்தலையில்  தெளித்துக்  கொண்டோம். ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக நின்ற அந்த நாராயணரின் அழகில் நாங்கள் பட்ட துன்பம் அதிகமாகத்  தோன்றவில்லை.  

கொண்டுபோயிருந்த திராக்ஷை கல்கண்டு பிரசாதங்களையும் பட்டுத் துணியையும் இறைவனின் பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டோம்.அங்கு இரண்டு பெண்கள் மட்டுமே பூஜை செய்கிறார்கள். இது அவர்களுக்குப் பரம்பரை உரிமை என்று கூறினார்கள். .

தரிசனம் முடித்து நாங்கள் கீழே இறங்கினோம். இடது பக்கம் படிகள் போலப் பாதை சென்றது.அங்கிருந்து ஒரு கிலோமீட்டர்  தூரத்தில் ஜ்வாலா நரசிம்மர் குடிகொண்டுள்ளதாகக் கூறினார்கள்.அங்குதான் ஜடபரத ரிஷி தவம் செய்த இடம் என்று கூறினார்கள்.ஆனால் அங்குசெல்ல இயலாதபடி பனி கொட்ட ஆரம்பித்தது. 


விரைவில் கீழே இறங்குங்கள் இல்லையேல் உங்களால் இறங்க இயலாது என்றதால் விரைவாகக் கீழே இறங்கி பைக்கிலும் ஜீப்பிலும் பயணித்து பேருந்தை அடைந்தோம்.ஓம் ஹோமை அடைந்து சூடாகத் தேநீர் குடித்தபோதும் குளிர் விடவில்லை சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகே உடல் ஒரு நிலையை அடைந்தது.

மறுநாள் விமானம் செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகமாகவே இருந்தது.பனிப் பொழிவும் மேகக் கூட்டமும் அதிகமானால் விமான சேவை நிறுத்தப் படும். நல்லவேளையாக முதல் விமானத்திலேயே  புறப்பட்டு போக்ரா வந்து சேர்ந்தோம்.  விமானத்திலிருந்து   கீழே  பார்த்த பொழுது   போக்ரா  ஒரு  பெரிய  நகரம்  என்று  தெரிந்தது .


பத்து   மணிக்கு  போக்ராவில்  ஹோட்டல் திபெத் ஹோமில் ஓய்வு.மாலையில் கடைவீதிக்குச் சென்றோம்.மறுநாள் போக்ராவிலிருந்து காட்மண்டுவிற்குப் புறப்பட்டோம். சுமார் நாலேகால் மணிக்கு மனகாம்னா தேவி என்ற கோவிலைப் பார்க்க பேருந்து நின்றது.அங்கிருந்து நூறு படிகளில் இறங்கி விஞ்ச் புறப்படும் இடம் வந்தோம்.வரிசையில் நின்று ஆறு ஆறு பேராக விஞ்சில் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குப் பறந்தோம்.

போக்ரா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் ஒரு மலை மீதுதான் இந்தக் கோவில் உள்ளது.
மனகாமனாதேவி  கோவில் கொண்டுள்ள இடம் சுமார் நான்காயிரம் அடி உயரே உள்ள ஒரு மலைப் பகுதி. இந்த மலையைச் சுற்றிக் கொண்டு திரிசூலி என்ற நதி ஓடுகிறது.கோவிலிலும் நல்ல கூட்டம் வரிசையில் நின்று தரிசித்தோம்.அங்கே இன்னும் ஆடு கோழி பலி நடக்கிறது.எங்கள் கண் எதிரேயே பல ஆடுகள் பலியாயின.சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின் மீண்டும்வின்ச்சில்  ஏறிமலையைக் கடந்து வந்தோம்.பின்  எங்கள் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தோம். 






இரவு பனிரெண்டரை மணிக்குக் காத்மாண்டுவை அடைந்தோம். மகாராஜா ஹோட்டலில் இரவு ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம்.இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று.இந்த இடத்தில்தான் அர்ஜுனன் தவம் செய்து பாசுபதாஸ்த்திரத்தை அடைந்ததாக வரலாறு.



ஒரு பசு லிங்கம் ஒன்றின் மீது பால சொரிய அந்த லிங்கத்தை எடுத்து எரிய அடிப்பாகம் கேதார்நாத்திலும் மேல்பகுதி பசுபதினாத்திலும் விழுந்ததாகக் கூறினார்கள். அகோரம் வாமதேவம் முதலான பஞ்ச முகங்களைக் கொண்ட சிவனைத் தரிசித்தோம்.கோவிலின் பின் பகுதியில் காலபைரவர் பெரிய உருவமாகக் காட்சியளித்ததைத் தரிசித்தோம்.நாகர், விநாயகர் என்ற பல சந்நிதிகள் உள்ளன கோவிலின் முன்னால் பாக்மதி என்ற நதி ஓடுகிறத

சற்றுத் தொலைவில் குப்தேச்வரிஎன்ற தேவியை பத்து படிகளுக்குக் கீழே நீருள் படுத்த நிலையில் உள்ள தேவியை தரிசித்தோம்.இது தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த இடம். இந்த வயிற்றுப்  பகுதியில் தீர்த்தம் வந்துகொண்டே இருக்கிறது.இது ஒரு சக்தி  பீடம் எனக் கூறினர்.
உணவு நேரத்திற்குப் பின் மாலை நான்கு மணிக்கு நீருள் படுத்திருக்கும் ஜல நாராயணர்  தரிசித்தோம்.இவருக்கு புடா நீலகண்டன் என்று பெயர். ஒரு விவசாயி நீலகண்டன் என்ற பெயருடையவன் தன் நிலத்திலிருந்து இச் சிலையை எடுத்ததால் அவன் பெயரால் இவர் பெரிய நீலகண்டன் என்று அழைக்கப் படுகிறார்.

மாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு இரவு ஒரு மணிக்கு நாராயணா  காட்   
அடைந்தோம்.


இந்த இடம் சாளிக்ராமக்ஷேத்ரம் என்று அழைக்கப் படுகிறது.இங்கு கண்டகி,நாராயணி, அந்தர்வாகினி என்னும் மூன்று நதிகள் இணைந்து ஓடுகின்றன. இங்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்கிறார்கள்.காசியில் செய்வதுபோல் இங்கும் நடத்தப் படுகிறது.இங்கு உள்ள கண்டகி நதி ஸ்நானம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஏராளமான சாலிக்ராம கற்களைப் போலவே தோற்றம் கொண்ட கற்கள் நதிக் கரையில் பரவிக் கிடந்தன.சிலவற்றைப் பொறுக்கிக் கொண்டோம்.



அங்கிருந்து புறப்பட்டு ஜனகபுரியை இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தோம்.இங்கு "மானக்கி"என்ற ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலையில் புறப்பட்டு ஜனகரின் அரண்மனை, கனகபவன் என்று அழைக்கப்படும் ஜானகியின் அந்தப்புரம்,சீதாகல்யாண மண்டபம், சீதை கிடைத்த இடம், வில் விழுந்த இடம் முதலிய இடங்களைப் பார்த்தோம்.ராமர் வில் ஒடித்த இடம்,இங்குதான் ஐயாயிரம் ரிஷிகள் ஒரு காலத்தில் யாகம் செய்தனர். அந்த ஊரில் எல்லாதைவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய சிவன் கோவிலையும் பார்த்தோம்.



அந்த கோவில் வளாகத்திலேயே எங்கள் உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்.இரவு பதினொரு மணிக்கு பைரவா என்ற நேப்பால எல்லையிலுள்ள ஊரில் அதே ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலை ஏழு மணிக்கு சோனாலி என்ற இந்திய எல்லைக்குள் நுழைந்தோம். ஏனோ மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றது.

இரவு ஏழு மணிக்கு உ.பி.டூரிஸ்ட் பங்களா வந்து சேர்ந்தோம்.காலையில் வாரணாசியில் படகில் ஏறி பஞ்சகாட் சென்றோம்.அங்கு கங்கையில் ஸ்நானம் தர்ப்பணம் முடிந்ததும் சுமார் நூறு படிகளில் ஏறி பிந்து மாதவனைத் தரிசித்தோம்.

பின்னர் காசி விஸ்வநாதர், அன்னபூரணி,  விசாலாக்ஷி தரிசனம் செய்தோம்.இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டு மொகல்சராய் என்ற இடத்தில் ரயிலில் ஏறினோம். பத்தாம் தேதி இரவு முதல் பனிரெண்டாம் தேதி பிற்பகல் இரண்டு மணிவரை ரயில் பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.

பதினான்கு நாட்கள் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். இந்த நல்ல யாத்திரையை செய்யும் சக்தியையும் சந்தர்ப்பத்தையும் அளித்த முக்தி நாதனுக்கும் மற்றுமுள்ள புண்ணிய தலங்களில் கோவில் கொண்டிருக்கும்  எல்லா தெய்வங்களுக்கும்  ஆயிரம் நமஸ்காரங்களைக் கூறிக்கொள்கிறேன்.

















                                             ஸ்ரீதேவி பூதேவி சஹித ஸ்ரீ முக்தி நாதர்.




ருக்மணி சேஷசாயி 



பாட்டி சொல்லும் கதைகள் - ருக்மணி சேஷசாயி - 2010

Thursday, December 23, 2010


55th story சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.

                          சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.
ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் பெரியாழ்வார் என்று பெயர் பெற்ற பெரியார் ஒருவர்  வாழ்ந்து வந்தார். இளமையில் இவர் பெற்றோர் இவருக்கு விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு தக்க வயதில் கல்வி கற்பித்தனர்.

இளம் வயதிலேயே திருமாலிடம் பேரன்பு கொண்ட விஷ்ணு சித்தர் தமக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நல்ல மலர்களையும் துளசியையும் பயிரிட்டு தினமும் மாலை கட்டி அவ்வூரில்  உள்ள திருமாலுக்குச் சார்த்தி வந்தார்.


தினமும் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதும் அதைப் பராமரிப்பதும் பின் புத்தம் புது மலர்களால் பெருமானுக்கு மாலை
கட்டிக் கொடுப்பதுமாகத் தெய்வத்திற்குப் பெரும் தொண்டாற்றிவந்தார்.

பூமாலைதொடுத்துவந்த விஷ்ணுசித்தர் இறைவனுக்குப் பாமாலையும் பாடிவந்தார். இவர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தியமையால் 'பெரியாழ்வார்' என்று வைணவர்கள் இவரைக் கூறலானார்கள்.

ஒருநாள் மலர்பறிக்கும்போது துளசிச் செடியருகே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்.ஓடிச் சென்று பார்த்தபோது அங்கே அழகே உருவான ஒரு பெண்குழந்தையைக் கண்டார்.களிப்பு மிகக் கொண்டார். அன்று ஆடிமாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி பூரம் நட்சத்திரம்.

அக்குழந்தையைத் தனது மகளாகப் பாவித்து  கோதை எனப் பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்து வரலானார். கோதைக்கு உணவூட்டும் போதே அந்த ரங்கமன்னாரிடத்தில் பக்தியையும் சேர்த்தே ஊட்டினார் பெரியாழ்வார். அதனால் கோதையும் அந்தக் கண்ணனே தனக்கு மணாளன் என்று எண்ணி அவனையே சதா சர்வ காலமும் எண்ணியும் பாடியும் வந்தாள்..

அரங்கன் மீது கொண்ட பேரன்பினால் சதாசர்வமும் அவனையே  நினைந்து பக்திப் பரவசத்துடன் தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள் கோதை. பக்தி மேலீட்டினால் நாள்தோறும் விஷ்ணுசித்தர் அரங்கனுக்காகக் கட்டிவைத்திருக்கும் மலர்மாலையை  அவர் அறியாவண்ணம் எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து என் இறைவனுக்கு நான் இணையாக உள்ளேனா எனத் தனக்குள் சிந்திப்பாள்.

அந்த கண்ணனுக்கு இணையாகத் தானும் அணிகலன் அணிந்து தன்னை அழகு படுத்திப் பார்ப்பாள்.பின்னர் தந்தையார் அறியாவண்ணம் மாலையைக் களைந்து முன்போலவே வைத்து விடுவாள்.

இதனை அறியாத பெரியாழ்வாரும் அம்மாலையை இறைவனுக்கு சமர்ப்பித்து வ்ந்தார். மனமகிழ்வுடன் இறைவனும் அம்மாலையை ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு பலநாட்கள் கழிந்தன. ஒருநாள்  மாலைகட்டி வைத்துவிட்டு வெளியே சென்றார் பெரியாழ்வார். வழக்கம்போல அம்மாலையை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்துகொண்ட கோதை கண்ணாடியின்முன் நின்று தன் அழகினைக் கண்டு பெருமானுக்கு  இந்த அழகு ஈடாமோ என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று விரைவிலேயே இல்லம் திரும்பிய பெரியாழ்வார் கழுத்தில் மாலையுடன் ஆடியின்முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகள் கோதையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

பாசம் மிகுந்த மகளாயினும் பரமனுக்கு உரியதைப் பாழ்படுத்தி விட்டாளே என்று பதைபதைத்தார். மகளைக் கடிந்துகொண்ட
வர் இறைவனுக்குச் செய்யும் பணிக்கு ஊறு நேர்ந்ததே என வருந்தியிருந்தார்.

அன்றிரவு இறைவன் ஆழ்வாரின் கனவில் தோன்றினார்."அன்பினால் நம்மை ஆண்டவளான- கோதை சூடிக்கொடுத்த பூமாலையே நமக்குப் பெருவிருப்பமானது. அத்தகைய  மாலையையே கொணர்க" எனக் கூறி மறைந்தார்.

துயில் நீங்கிய விஷ்ணுசித்தர் தமது மகள் கோதை ஒரு அவதார மங்கை என உணர்ந்து கொண்டார்.அன்பால் ஆண்டவனையே ஆண்டவளானதால்  அவளை ஆண்டாள் எனவும் மலரைச் சூடிப் பின் இறைவனுக்கு அளித்ததால் சூடிக்கொடுத்த நாச்சியார் எனவும் அழைக்கலானார்.

பருவ வயதை அடைந்த கோதை அந்தக் கண்ணனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளாய் அவனை அடையும் வழியைச் சிந்தித்தாள். ஆயர் குல மங்கையர் போல இறைவனை அடைய பாவைநோன்பு நோற்றாள். இறைவனுக்கு உகந்த மாதமாகிய மார்கழிமாதத்தில்  அதிகாலை  எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தன் அன்பை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் பாடல் மூலமாக வெளிப்படுத்தி மகிழ்ந்திருந்தாள்.

தன் மகளுக்கு மணமுடிக்கும் விதமாக விஷ்ணுசித்தர் ஆண்டாளுக்கேற்ற மணமகனைத் தேடலானார்.ஆனால் ஆண்டாளோ நான் அந்த திருமாலுக்கே உரியவள்.மானிடர் யாரையும் மணந்து வாழமாட்டேன் என்று உரைத்துவிட்டாள்.

பின்னர் அந்தத் திருமாலின் பெருமைகளைப் பற்றிக் கூறும்படி கேட்க தந்தையாராகிய பெரியாழ்வாரும் இறையனாரின் பெருமைகளை விவரித்துக் கூறினார்.தந்தையார் கூறுவதைக் கேட்கக் கேட்க ஆண்டாள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.அவற்றில் அரங்கநாதனின் பெருமையைக் கேட்டு அவருக்கே தான் மனையாளாக ஆகவேண்டும் என்னும் பெரு விருப்புக் கொண்டாள்.


நாளாக நாளாக திருவரங்கன் இவளை மணமுடிக்கக் கூடுமோ?இது நடக்கும் செயலோ? என மிகவும் கவலை கொண்டார் பெரியாழ்வார்.

அன்றிரவு  அரங்கன் அவரது கனவில் தோன்றி " ஆண்டாளை கோவிலுக்கு அழைத்து வாரும் யாம் அவளை ஏற்போம்" எனக்கூறி மறைந்தார்.

அதேபோல் அந்நாட்டு மன்னனான பாண்டியனின் கனவிலும் தோன்றி "நீ பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று பெரியாழ்வார் மகளான கோதையை திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக.அவளை முத்துப் பல்லக்கில் ஏற்றி பரிவாரங்களுடன் அழைத்து  வருவாயாக." எனவும் கூறினார்.

அதே சமயம் கோதை நாச்சியாரும் "மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"எனத் தான் கண்ட கனவினை பத்துப் பாடல்களில் பாடி அந்த அரங்கனின் அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

இறைவன் கட்டளைப் படி மன்னனும் மற்றையோரும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் திருவரங்கத்துக்கும் இடையிலுள்ள பாதையை முத்துப் பந்தர் அமைத்து அழகு படுத்தி  பெரியாழ்வாரின் இல்லம் சென்று வணங்கி ஆண்டவனின் கட்டளையை எடுத்து இயம்பினர்.

ஆண்டாளை ஏற்றிக்கொண்டு முத்துப் பல்லக்கு புறப்பட்டது வழிநெடுகிலும் மக்கள் "ஆண்டாள் வந்தாள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்" என முழங்கினர்.

திருவரங்கம் கோயிலுக்குள் நுழைந்த கோதை இறைவனை கண்ணாரக் கண்டு மெய் சிலிர்த்தாள்.அந்த  அழகும் அன்பும்  ஈர்க்க கோதை சிலம்பு ஒலிக்க பாம்பணைமேல் பள்ளி கொண்ட பெருமானிடம் ஓடினாள். அப்படியே மறைந்தாள். ஆண்டாள் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டாள்.

அரங்கன் அர்ச்சகர் மூலமாக "பெரியாழ்வாரே நீர் எனக்கு மாமனாராகிவிட்டீர். ஸ்ரீவில்லிப்புத்தூருக்கே சென்று அங்கே உமது தொண்டினைச் செய்து கொண்டிரும்" எனக் கூறி வழியனுப்பி வைத்தார்.

மார்கழியில் பாவைநோன்பிருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்கு ஆண்டாளின் வரலாறு இன்றும் சான்றாக நிற்கிறது.இன்றும்  மார்கழி மாதத்தின் சிறப்பை அவளது   முப்பது திருப்பாவைப் பாடல்கள் இயம்பி
நிற்கின்றன.
















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

Monday, December 13, 2010


54th story. சாணக்கிய சபதம்

                                                சாணக்கிய சபதம்.
நமது நாட்டு வரலாற்றில் பல வம்சத்தவரின் ஆட்சிமுறையைப் பார்க்கலாம். அவற்றுள் மௌரியர்வம்சம்  மிகச் சிறப்புடன் பாரத நாட்டை ஆண்டது. இந்த மௌரிய வம்சம் தொடங்கிய கதை மிகவும் சுவாரசியமானது.


நந்த வம்சத்தின்  கடைசி அரசன் தனனந்தன். இவனது சபைக்கு கௌடில்யர் என்ற அந்தணர் வ்ந்தார். அவரை ஏளனம் செய்து அவையிலிருந்து  வெளியேற்றினான் மன்னன்.

விருந்தினருடன் உணவு அருந்த அமர்ந்த கௌடில்யரை யாசகம் கேட்க வந்தவன் என்று கூறி மண் சட்டியில் உணவு உண்ணக் கொடுத்தான்.அவமானமும் கோபமும் அடைந்த கௌடில்யர் "இதேபோல் நந்த அரசனை மண் சட்டியில் உணவு உண்ண வைப்பேன் அதுவரை என் குடுமியை முடிய மாட்டேன்." என்று சபதம் செய்தார்.

கோபமாக வெளியேறிய கௌடில்யரைப் பார்த்து நவநந்தர்களும் கைகொட்டி நகைத்தனர்.

கௌடில்யர் மிகவும் திறமைசாலி. அத்துடன் சிறந்த ராஜதந்திரம் அறிந்தவர். அதனால் அவருக்கு சாணக்யர் என்ற பெயர் நிலைத்தது. மிகவும் சிந்தனையுடன் நடந்தவர் ஒரு காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார்..நல்ல வெய்யில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

திடீரென அவரது காலை ஒரு புல் கற்றை தடுக்கிவிட்டது. அதைப் பார்த்தவர் அந்தப் புல்லைப் பிடுங்கித் தூரப் போட்டார். சற்று தூரம் நடந்ததும் மீண்டும் அந்தப் புல்லைப் பார்த்தார். அருகே வந்தவர் அந்தப் புல்லைப் பறித்தார். அதைத் தீயிட்டுக் கொளுத்தினார். அந்த சாம்பலைத் தன் வாயில் போட்டு நீரைக் குடித்தார். பின் புன்னகையுடன் நடந்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஓடி வந்து அவர் காலில் பணிந்தான். இளம் பாலகனின் முகத்தைப் பார்த்த சாணக்யர் அவனது அறிவாற்றலைப் புரிந்து கொண்டார். அந்தச் சிறுவன் தனக்கு அடைக்கலம் அளிக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.

"உன் பெயர் என்ன?"

"சந்திரகுப்தன். நான் நந்த அரசனின் குமாரன்.  என் தாயார் மூரா அரண்மனை பணிப்பெண்ணாக இருந்ததால்  நந்தர்கள் என்னை அரசகுமாரனாக ஏற்காமல் கொல்லத் திட்டமிட்டனர். நான் தப்பிவந்து இங்கு மறைந்து கொண்டுள்ளேன். எனக்கு இனி தாங்கள்தான் துணை."

சாணக்யர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். பொருத்தமானவன்தான் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளான் எனத் தெரிந்து கொண்டார்.

அன்று முதல் சந்திரகுப்தனுக்கு ஆசிரியராகவும் ஆலோசகராகவும் விளங்கிய சாணக்யர் அவனுக்குத் தாயாகவும் இருந்து பேணிக் காத்தார்.
அரசருக்குரிய போர்ப்பயிற்சியையும்  அரசாட்சி முறையையும் கற்பித்தார்.

அவற்றையெல்லாம் கவனத்துடன் கற்றுக்கொண்டான் சந்திரகுப்தன். நந்தர்களின் மீது படையெடுக்கக் காலம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
போதிய படைவீரர்கள் சேர்ப்பதற்காக ரகசியமாக பணியாற்றினார் சாணக்யர்.

ஒருநாள் இருவரும் ஆலோசனை செய்தவாறே காட்டின் நடுவே நடந்து கொண்டிருந்தனர். ஒரு இடத்திற்கு வந்தவுடன் சாணக்யர் திடீரென நின்றார்.
அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக சத்தம் வருவதைக் கவனித்தார்.

உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். என்ன ஆச்சரியம். பூமிக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதை போவது தெரிந்தது.அதன் வழியே கவனமாக அடி வைத்துச் சென்றார் சாணக்யர்.

ஒரு பெரும் அறைபோலிருந்த இடத்தில் பெரும் புதையல் இருப்பதைப்  பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் சாணக்யர்.
செல்வத்தைக் காட்டி இனி படையை எளிதாகத திரட்டலாம் என மகிழ்ந்தார்.

அவரது எண்ணம் போலவே விரைவில் பெரும் படை திரண்டது. பெரும் கேளிக்கைகளில் மூழ்கியிருந்த நந்தர்களை சந்திரகுப்தன் எளிதாக வென்று நாட்டைக் கைப் பற்றினான். விரைவில் மன்னனாக முடிசூடிக் கொண்டான். சாணக்யர் அவனது ராஜகுருவாகவும் மந்திரியாகவும் ஆலோசகராகவும் இருந்து பணியாற்றினார்.

சிறையில் அடைபட்டிருந்த நவ நந்தர்கள் கையில் ஒவ்வொரு மண் சட்டியைக் கொடுத்து உணவு அருந்தக் கொடுத்தார். பசியுடன் இருந்த அவர்களும் அந்த உணவை ஆவலுடன் உண்ணும் போது சாணக்யர் உள்ளே நுழைந்தார்.

"தனனந்தா ! உணவு போதுமா? இன்னும் வேண்டுமா? சட்டியில் உண்ணும் உணவு தங்கப் பாத்திரத்தில் உண்பதற்கு ஒப்பாக உள்ளதா? அறிவாளிகளை அறிந்துகொள்ளாத மூடனே, நீ அரசனாக இருக்கவே தகுதியற்றவன். அடிமையாக இருக்கவே தகுதியானவன். இதோ என் சபதப்படி உன்னைப் பழைய சட்டியில் உணவருந்த வைத்துவிட்டேன் என் குடுமியை இப்போது முடிந்துகொள்கிறேன்."

குடுமியை முடிந்து கொண்ட கௌடில்யர் அரண்மனை வந்தடைந்தார். சந்திரகுப்தனின் பேரரசின் புகழுக்கு முக்கிய காரணமானவர் இந்த கௌடில்யர் என்னும் சாணக்யரே. விஷ்ணுவர்த்தனர் என்றும் இவருக்கு வேறு பெயர் உண்டு. இவரே அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதியவர்.
சந்த்ரகுப்தமௌரியர்தான் நந்த வம்சத்தை அழித்து மௌரிய வம்சத்தைத தொடங்கியவர். தமிழகம் தவிர பாரதநாடு முழுவதையும் ஆட்சிசெய்தவர். 

நம் இந்திய வரலாற்றில் சாணக்யர் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

Thursday, December 2, 2010


53rd story. முள்ளங்கித் திருடன்

                                                     முள்ளங்கித் திருடன்.
                 ஓர் ஊரில் ஒரு முதியவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். கிழவி எப்போதும் சிடுசிடுப்புடன் தன் கணவரைத் திட்டிக் கொண்டே இருப்பாள்.அந்தக் கிழவரோ மிகவும் அமைதியுடனும் பொறுமையுடனும் எல்லாத் திட்டுகளையும் வாங்கிக் கொண்டே அவளுக்கும் பணிவிடை செய்து வந்தார்.
      
காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போவது வரை கிழவி அவரை ஏதேனும் வேலைகள் ஏவிக்கொண்டே இருப்பாள். கயிற்ருக் கட்டிலில் சாய்ந்துகொண்டு தண்ணீர் கொண்டுவா பாத்திரம் கழுவி வை கடைக்குப் போ என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள்.


எல்லா வேலைகளையும் கிழவர் முகம் சுளிக்காமல் செய்து முடிப்பார்.சில நாட்கள் அவர்களுக்குத் தேவையான உணவைக் கூட கிழவரே செய்து முடிப்பார். 

கிழவிக்கு ஆசை அதிகம்.

அவளது ஆசைக்குத் தக்கபடி தன் கணவர் சம்பாதிக்கவில்லை என்று கிழவிக்குக் கோபம். எனவே வேலையாவது செய்யட்டும் என்று கிழவரை உட்காரவிடாது விரட்டிக் கொண்டே இருப்பாள்.


கிழவர் தன் மனைவியைப் போல் சோம்பேறி இல்லை. மிகவும் உழைப்பாளி. மிகவும் அன்பும் பண்பும் உடையவர். தன் மனைவிக்கு அவர் உதவி செய்வதை மகிழ்ச்சியுடன் செய்தார்.

சற்று ஓய்வு நேரம் கிடைத்தாலும் அதைப் பயனுள்ள வகையில் கழிப்பார். தன் வீட்டருகே கிழவர் ஒரு சிறிய தோட்டம் போட்டிருந்தார். அதில் 
நிறைய காய்கறிகளைப் பயிரிட்டிருந்தார்.


அந்தத் தோட்டத்தில் வளரும் காய்கறி கீரைகளைக்  கொண்டுபோய் விற்று வந்த பணத்தில் அரிசி பருப்பு முதலியவற்றை வாங்கிவருவார்.கிழவிக்கோ தனக்கு நல்ல புடவை இல்லையே கழுத்துக்கு நகை இல்லையே என்ற குறை நிரம்ப இருந்தது. அதனால் நிறைய சம்பாதிக்காத தன் கணவரையும் அவர் வாங்கிவரும் பொருட்களையும் அலட்சியப் படுத்தி வந்தாள்.
 .
கிழவர் ஒருமுறை தோட்டத்தில் முள்ளங்கியைப் பயிரிட்டிருந்தார். அவை நன்கு செழித்து வளர்ந்து பறிப்பதற்குத் தயாராக இருந்தன. மறுநாள் அவற்றைப் பறித்து வியாபாரத்துக்குக் கொண்டு செல்ல கிழவர் நினைத்திருந்தார். 

அன்று அதிகாலையிலேயே எழுந்து தன் காலைக் கடன் முடித்து விட்டு முள்ளங்கிபறிக்கத் தோட்டத்திற்கு வ்ந்தார். பாத்தியைப் பார்த்தவருக்குத் திக்கென்றது. அங்கே பாதிக்குமேல் முள்ளங்கியைக் காணோம். கவலையுடன் கிழவர் வேறு வேலை பார்க்கக் கிளம்பிப் போய் விட்டார்.


அன்று இரவு கிழவருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. தன்னுடைய சிறிய தோட்டத்திற்கு வரும் திருடன் யாராக இருக்கும்?என சிந்தித்தவாறு படுத்திருந்தார். ஏதோ சத்தம் தோட்டத்திலிருந்து கேட்கவே திடுக்கிட்டு எழுந்தார்.

விளக்கைக் கையிலே பிடித்துக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றார். சத்தம் முள்ளங்கிப் பாத்தியிலிருந்துதான் வருகிறது எனத் தெரிந்துகொண்டு மெதுவாக அருகே சென்று பார்த்தார். எதுவும் அவர் கண்ணுக்குப் படவில்லை. கீச்சு மூச்சென்று சத்தம் மட்டும் வந்துகொண்டு இருந்தது.

கிழவர் கூர்ந்து பார்த்தவர் ஆச்சரியப் பட்டுப் போனார். ஒரு முள்ளங்கி படுத்தவாக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. அது எங்கே நகர்கிறது எனக் கவனித்தபோது அருகே இருந்த ஒரு மரப் பொந்துக்குள் போவதைக் கவனித்தார். சட்டென்று அந்தப் பொந்தைத் தன் கையால் மூடிக் கொண்டார்.

நகர்ந்து கொண்டிருந்த முள்ளங்கியும் நின்று விட்டது. அதன் அடியிலிருந்து சுண்டைக்காய் அளவுக்குத் தலைகள் தெரிந்தன.கீசுகீசென்று கத்தியவாறு முள்ளங்கியைக் கீழே போட்டு விட்டு நின்றன அந்த விரலளவு உருவங்கள்.

அந்த சுண்டுவிரல் அளவு உருவங்களைப் பார்த்து கிழவர் ஆச்சரியப்பட்டாலும் தன் முள்ளங்கியைத் திருடியதால் கோபத்துடன் "ஏய்! யார் நீங்கள்?" என்று அதட்டலாகக் கேட்டார்.

சுண்டுவிரல் மனிதர்கள் கிழவரின் காலடியில் வந்து நின்று கொண்டு கை கூப்பினர. கீச்சு கீச்சென்று அவர்கள் கத்தியது முதலில் புரியாவிட்டாலும் பழகிய பிறகு புரிந்தது.

"நாங்கள் முள்ளங்கிப் பிரியர்கள். எங்களுக்கு முள்ளங்கிதான் ஆகாரம். உங்கள் தோட்டத்து முள்ளங்கியைக் கேளாது எடுத்தது தப்புதான். எங்களை மன்னித்து விடுங்கள். தாத்தா, எங்களை மன்னித்துவிட்டால் உங்களுக்கு ஒரு பரிசு கொடுப்போம்." என்று கூறியது ஒரு குள்ள உருவம்.


"ஏய்! முள்ளங்கித் திருடா! எனக்கு என்ன பரிசு நீ தரப் போகிறாய்?" என்றபடியே கையை விலக்கி வழிவிட்டார் கிழவர். பொந்துக்குள் ஓடிய குள்ள
மனிதன் ஒரு அலுமினிய கிண்ணத்தை இழுத்துக் கொண்டு வந்து கிழவர் முன் வைத்தான். கிழவர் அதைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்.

"பூ, இதுதானா! இதில் வைக்க என்ன சாமான் என்னிடம் இருக்கிறது? இதைக் கடையில் போட்டால் கூட என்ன காசு வரப் போகிறது?"

"தாத்தா!இது மந்திரக்கிண்ணம். இது எங்களுக்குப் பயன்படாது. இதில் நீசாப்பிட விரும்பும் உணவுப் பண்டங்கள் எல்லாம் வரும்.  உனக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்லிக் கையை விடு." என்றான் முள்ளங்கித் திருடன்.

"அப்படியா!" என ஆச்சரியப் பட்டகிழவர் "எனக்கு லட்டு வேண்டும்" என்று சொன்னபடியே கிண்ணத்துக்குள் கையை விட்டார். பழைய காலத்துத் திருப்பதி லட்டு போன்ற பெரிய லட்டு அவர் கையில் வந்தது. கிழவர் சந்தோஷத்துடன் அதைச் சாப்பிட்டார்.

முள்ளங்கித் திருடர்களுக்கும் லட்டு தின்னக் கொடுத்தார். ஆனால் அதை மறுத்த குள்ளர்கள் "தாத்தா! இந்தக் கிண்ணம் எங்களுக்குப் பயன்படாது. இதை நீங்களே கொண்டுபோய் பயனடையுங்கள்." என்றுசொன்னபோது கிழவர் மகிழ்ச்சியில் மிதந்தார்.

"குள்ளர்களே! உங்களை நான் என்றும் மறவேன். உங்களுக்காக என் தோட்டம் முழுவதும் இனி முள்ளங்கிதான் பயிரிடப் போகிறேன். தாராளமாக இனி வேண்டும்போதெல்லாம் முள்ளங்கியைப் பறித்துச் செல்லுங்கள். நன்றி. நான் வருகிறேன்" என்றபடியே வீட்டுக்குள் சென்றார் கிழவர்.

வீட்டுக்குள் நுழைந்த கிழவர் அந்தக் கிண்ணத்தைத் தன் முன் வைத்துக் கொண்டு அமர்ந்தார். அப்போது அங்கே வந்த அவர் மனைவி கடுகடுத்த முகத்துடன் அவரைப் பார்த்தாள்.

"இப்படி உட்கார்ந்து விட்டால் வேளைக்கு சாப்பாடு போடுவது யார்?"என்றாள் கோபமாக.

"உனக்கு இப்போது என்ன டிபன் வேண்டும்?" என்றார் கர்வமாக.

"ம்... இட்லியும் வடையும் பாயாசமும் வேண்டும். தர முடியுமா உன்னால்?" கேட்டுவிட்டு நொடித்தாள் கிழவி.

"இதோ பார்." என்றபடியே அவள் கேட்ட பலகாரங்கள் ஒவ்வொன்றாக கிண்ணத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் கிழவர்.
கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி. வயிறார உண்டாள். அந்தக்கிண்ணத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவள் கண்களில் பேராசை தெரிந்தது.

நாட்கள் கடந்தன. ஒருநாள் காலை கிழவர் தன் கிண்ணத்தைத் தேடினார். அதைக் காணவில்லை. கிழவியும் சேர்ந்து தேடினாள். 
கிடைக்கவில்லை.

சற்று நேரம் கவலையோடு இருந்தவருக்கு முள்ளங்கித் திருடர்களின் நினைவு வந்தது. அவர்களைப் பார்க்க தோட்டத்திற்குச் சென்றார்.
கவலையோடு வந்து அமர்ந்த கிழவரைப் பார்த்த குள்ளர்கள் என்னவென்று விசாரித்தனர்.

"நீங்கள் அன்போடு கொடுத்த கிண்ணம் காணாமல் போய்விட்டது. யாரோ எடுத்துச் சென்று விட்டனர்." என்றார் கவலையோடு.

குள்ளர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர். பின்னர் "கவலைப் படாதீர்கள் தாத்தா" என்றபடியே பொந்துக்குள் சென்று ஒரு தோல்பையைக் கொண்டுவந்து போட்டனர்.

"தாத்தா, இந்தப் பையில் கைவைத்தால் உங்களுக்கு வேண்டிய பணம் கிடைக்கும். எடுத்துக் கொள்ளுங்கள். 
வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள்."

கிழவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பி வ்ந்தார். ரகசியமாகவே அந்தப் பையை வைத்துக் கொண்டு வேண்டிய
பணத்தை மட்டும் எடுத்துச் செலவு செய்தார்.

சிலநாட்கள் கழிந்தன.கிழவர் வேலை ஏதும் செய்யாமலேயே எப்படிப் பணம் சம்பாதிக்கிறார் என்பதை அறிய விரும்பினாள் கிழவி.
கணவரிடம் கேட்டுப்பார்த்தாள். அவர் சொல்வதாக இல்லை. ஒருநாள் கிழவர்  அந்தப் பையிலிருந்து பணம் எடுப்பதைப் பார்த்து விட்டாள்
மீண்டும் அவள் கண்களில் பேராசை தெரிந்தது.

சில நாட்கள் கழித்து அந்தப் பையும் காணாமல் போயிற்று. கிழவர் வருத்தத்துடன் நண்பர்களான குள்ளர்களைத் தேடிச் சென்று அழுதார்.
குள்ளர்களும் அவரைச் சமாதானம் செய்து ஒரு பிரம்பைக் கொடுத்தனர். "இதைப் பேசாமல் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
உபயோகிக்கவேண்டாம்." என்று கூறினர்.

கிழவரும் சரிஎனச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அந்தப் பிரம்பைப் பார்த்த கிழவி "அது என்ன கொடுக்கும் சொல்லுங்கள்."என 
நச்சரித்தாள்.

அதுவரை பொறுமையாக இருந்த கிழவர்,"ம்.. இதைத் தொட்டால் அடி கிடைக்கும்." என்றார் எரிச்சலோடு. அதே சமயம் அதைக் கையில் எடுத்த 
கிழவி அலறினாள். அந்தப் பிரம்பு கிழவியை அடிக்கத் தொடங்கியது.

"ஐயோ, நிறுத்துங்கள். வலி உயிர் போகிறது. நான் எடுத்ததையெல்லாம் கொடுத்துவிடுகிறேன்."என்று அவள் கத்தியவுடன் பிரம்பு நின்றது.
அழுதுகொண்டே கிழவி தான் மறைத்து வைத்திருந்த கிண்ணத்தையும் தோல்பையையும் கொண்டுவந்து வைத்தாள்.

அதைப் பார்த்த கிழவர் "அடி பைத்தியமே இந்தப் பொருள்கள் நம் இருவருக்கும் தானே. இதை மறைத்து வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்.
உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ தைரியமாக இதிலிருந்து  எடுத்துக் கொள்ளலாமே. " என்றபோது கிழவி கண் கலங்கினாள்.

"உங்கள் நல்ல உள்ளத்தை நான் புரிந்துகொள்ளாமல் பேராசைப் பட்டுவிட்டேன். எனக்குப் புத்தி வந்தது. என்னை மன்னித்து விடுங்கள்"
என்று சொன்னவள் கண்ணீரைத் துடைத்தார் கிழவர். கிழவி மனநிறைவோடு சிரித்தாள்.

'நல்லஉள்ளம் நன்மை செய்யும் என்பதும் பேராசை துன்பத்தையே தரும்' என்பதையும் கிழவி  புரிந்து கொண்டாள்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

Monday, November 22, 2010


52nd story. கப்பலோட்டிய தமிழன்.

                                          கப்பலோட்டிய தமிழன்.

                                        இந்திய  நாட்டு விடுதலைப்  போராட்டத்தின் தனிப்பெரும் தாரகையாக ஒளிவீசும் தலைவராக

வ.உ.சிதம்பரம் பிள்ளை விளங்கினார்.திருநெல்வேலி மாவட்டம் ஒட்டப்பிடாரம்என்ற ஊரில் உலகநாதம் பிள்ளை

பரமாயி அம்மையார்  என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்தத் தம்பதி செய்த தவப்பயனாய் 1872-ம் ஆண்டு செப்டம்பர்

திங்கள் 5-ம் நாள் இவர்களுக்கு சிதம்பரம் பிள்ளை மகனாக அவதரித்தார். இதே ஓட்டப்பிடாரத்தில் தான் "மன்னவன்

காணிக்கு ஏது கிஸ்தி" என்று கேட்டு வெள்ளையரை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மனும் பிறந்தான்.

இந்திய மண்ணுக்குப் பரணி பாடிய பாரதியார் பிறந்த ஊரும் இந்த ஊருக்கு  அருகே இருக்கும் எட்டயபுரத்தில்தான்.

 ஒட்டப்பிடாரம் வாழையடி வாழையாக வீரர்களைப் பெற்றெடுத்த திருநாடு.


சிதம்பரத்தின் உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள்  இரண்டு சகோதரியர். இளம் வயதிலேயே தமிழ் மீது ஆழ்ந்த

பற்றுக் கொண்டிருந்தார். பல நன்னெறி நூல்களைப் பழுதறக் கற்றார். இவர் பள்ளிப் படிப்பும் பின் கல்லூரியில்

மெட்டி ரிகுலேஷனும் படித்து   முடித்தார்.

இளமையில் மற்போர் சிலம்பு கத்திவீசுதல்  போன்ற வீர விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்.சட்டக் கல்வி

பெற விரும்பியவர் தந்தையின் ஆதரவுடன் 1895-ம் ஆண்டு வழக்கறிஞரானார். இத்துறையில் புகழ் பெற்றவர்

வருவாய் மட்டுமே பெரிது என என்ணாது ஒழுக்கம் நேர்மை பிறர் நலம் பேணல் இவற்றையே குறிக்கோளாகக்

கொண்டிருந்தார்.

ஏழைகளுக்கு இறங்கும் ஏழை பங்காளராக இருந்தார். ஆயிரக்கணக்கில் பணம் வருவதாக இருந்தாலும் அநீதியின்

பக்கம் இவர் நா அசையாது. ஆங்கிலேயர்களே இவரது தொழில் திறமை கண்டு அஞ்சினர்.

இளம் வயதில் மணம் முடித்த இவர் விரைவிலேயே  மனைவியை இழந்தார். பெற்றோர் இவருக்கு மீனாட்சி என்ற மங்கையை

மறுமணம் செய்து வைத்தனர். அம்மாதரசி இவர் காரியம் யாவினும் கை கொடுத்து வாழ்ந்தார்.

                  வெள்ளையர் ஆதிக்கம் கண்டு மிகுந்த  துயர் கொண்டார். நாட்டுரிமை வேண்டி வீரர்கள்  தாக்குதல்

தொடங்கியபோது  வடக்கே  திலகரும்  தெற்கே சிதம்பரனாரும்  தளபதிகளாக இருந்து  போராட்டங்களைத்

தலைமை தாங்கி நடத்தினர். சிதம்பரம்  வியாபாரத்தால் ஆங்கிலேயரை அடக்க எண்ணினார். அதற்குப்

பொருத்தமாகக் கப்பல் விடுவது என்று முடிவு செய்தார்.  பலசெல்வந்தர்களின் உதவியுடனும் திலகர் பெருமானின்

பேருதவியுடனும் சுதேசிக்கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். கப்பல் புறப்பட்டபோது சுதந்திரமே

கிடைத்துவிட்டது போல் மக்கள் மகிழ்ந்தனர்.  வெள்ளையர்கள் பேரிடி தாக்கியதுபோல் திகைத்தனர்.

                         ஏழைகளுக்காகப் பாடுபட்டவர் மில் முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்க்க வீரக்கனல்  தெறிக்கும்

சொற்பொழிவாற்றினார். சுப்பிரமானியா சிவா என்ற துறவியாரும் இவருடன் இணைந்து சொற்பொழிவாற்றி

உறங்கிக்கிடந்த நெஞ்சங்களைத் தட்டி எழுப்பினார்.  இரண்டு ஆண்டுகளில் சிதம்பரம்  நடத்திய கூட்டங்களும் போராட்டங்களும் ஏராளம்.

 பாரதத்தின் பெருமையெல்லாம் அழிந்து கொடுமையும் அவமதிப்பும் தலைதூக்கி நின்றதைக் கண்டு பிள்ளையவர்களின் 


மனம் பதை பதைத்தது. அடிமைப்பட்ட தாய் நாட்டைக் காப்பதே இனி தனது கடமை என எண்ணினார். காங்கிரசிலிருந்த தீவிரவாதம் என்னும் 

பகுதியில் இணைந்தார். திலகர் பெருமானின் தலைமையில் முற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் ஒன்று திரண்டனர். தென்னாட்டில் ஆதரவு 

தேடும் பொறுப்பினை திலகர் சிதம்பரத்திடம் ஒப்படைத்தார். சுதேசிப்பற்று அந்நியப்பொருள் புறக்கணிப்பு தேசியக் கல்வி  ஆகியவற்றை மக்களுக்கு 

விளக்கினார் பிள்ளையவர்கள். 

இவரது ஆவேசப்பேச்சுக்களினால் எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சாயிற்று. நெல்லை மாவட்டம் மற்றொரு வங்காளமாயிற்று. ஆங்கிலேயருக்குத் 

துணைபுரிபவர்களுக்கு எந்த வேலையும் செய்வதில்லை என மக்கள் கூறிவிட்டனர். மாவட்டம் முழுவதும் சிதம்பரம்பிள்ளை இட்டதே 

சட்டமாயிற்று. அவரது ஆணைக்காக மக்கள் காத்திருந்தனர். இந்நிலையை அடக்க ஆங்கில அரசு முடிவு செய்தது.

                                 தூத்துக்குடி மில் தொழிலாளருக்காக வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த வ.உ.சி யை கலெக்டர் "விஞ்ச்" துரை 

திருநெல்வேலிக்கு வந்து தன்னைக் காணுமாறு உத்தரவு பிறப்பித்தார். கைதாவோம் என அறிந்திருந்தும் அஞ்சாநெஞ்சம் படைத்த பிள்ளையவர்கள் 

தன் நண்பர் சுப்பிரமணிய  சிவாவுடன் சென்று கலெக்டரைச் சந்தித்தார். அங்கே அடுக்கடுக்காகக் குற்றங்களை அள்ளி வீசினார் விஞ்ச். அதில் 

முக்கியமான பெருங்குற்றம் வந்தேமாதரம் எனக் கூறியது.
                    "தாய் நாடு வாழ்க எனக்கூறியது பெருங்குற்றமானால் அக்குற்றத்தை உயிர் உள்ளவரை செய்து கொண்டே இருப்போம் உங்கள் 

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டோம் எங்கள் உயிர் பிரிந்தாலும் உள்ளத்தின் சுதந்திரப் பற்று மாயாது." என்று வீர முழக்கமிட்டார் சிதம்பரனார்.

 ஆத்திரமடைந்த விஞ்ச் துரை இவர்களை மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட அதை ஏற்காத பிள்ளையவர்களும் சிவாவும் 

சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார் நீதிபதி. இதை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நாற்பது 

ஆண்டுகள் அனுபவிக்கவேண்டும் என்று கூறினார். சிவாவுக்குப் பத்தாண்டுகள் சிறைவாசம் என்றும் தீர்ப்பாயிற்று.


                         முப்பத்தைந்தே வயதான சிதம்பரம் தன் வயதான பெற்றோரையும் பச்சிளம் குழந்தைகளையும் அன்பு மனைவியையும் பிரிந்து 

சிறையில் வாடும் நிலையை எண்ணி நாட்டு மக்கள் துயருற்றனர்.  நாட்டுக்கு உழைத்த நல்லவருக்கு ஏற்பட்ட நிலை கண்டு தமிழ்நாடு மட்டுமின்றி 

இந்தியா  முழுவதும் அதிர்ச்சி வெளியிட்டது. நண்பர்கள் பெருமுயற்சியால் இரண்டு ஆயுள்தண்டனை ஆறு ஆண்டு சிறைவாசமாக மாற்றப்பட்டது.

"கப்பலோட்டிய தமிழன்" எனப் பாராட்டப் பட்ட வ.உ.சி.யை கோவைச் சிறையிலும் கண்ணனூர் சிறையிலும் செக்கிழுக்க வைத்தனர். கல்லுடைக்கச் 

செய்தனர். அறுசுவை உண்டு  அரசர்போல் வாழ்ந்த செல்வச்  சிதம்பரனாரை கூழ் குடிக்க வைத்து கொடுமைப் படுத்தினர்.


                          ஆறு ஆண்டுகளுக்குப் பின் விடுதலையானார் வ.உ.சி.அவர்கள். அரசு அவரைப் பழிவாங்கியது. அரசநிந்தனைக் குற்றத்திற்காக 

தண்டனை பெற்றதால் வ.உ.சி.யின் வழக்கறிஞர் சான்றிதழ் பறிமுதலாயிற்று. வருவாய் இன்றி வறுமையில் வாடினார் வ.உ.சி. அப்போதும் 

பொதுநலப் பணிகளை அவர் விட்டுவிடவில்லை. புகைவண்டித் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்து பல நன்மைகளைச் செய்தார். நல்லமனம் 

படைத்த நீதிபதி "வாலஸ் " என்பவரின் உதவியால் பறிக்கப்பட்ட சான்றிதழ் மீண்டும் கிடைத்தது. அப்போது காந்தியடிகள் ஒத்துழையாமை 

இயக்கத்திற்கு ஆதரவு தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். வ.உ.சி. இதற்கு உடன்படவில்லை. திலகர் பெருமானின் தேசியப் பாதையை 

விட்டு இவர் விலகவில்லை. 

                                 வீரர் சிதம்பரனார் சிறந்த இலக்கியவாதியுமாவார். சிறையில் கல்லுடைத்தபோது இவர் கவிதையும் வடித்தார். இவர் எழுதிய 

கடிதங்கள் அனைத்தும் கவிதை வடிவில் கற்போர் நெஞ்சை உருக்கும் தன்மை வாய்ந்தன.சமயப் பாடல்கள், தனிப்பாடல்கள் இயற்றினார்.

"மெய்யறிவு" மெய்யறம்" போன்ற அறநூல்களை இயற்றினார். "மனம்போல் வாழ்வு", வலிமைக்கு மார்க்கம், அகமே புறம்" என்ற மொழிபெயர்ப்பு 

நூல்களையும் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற சிறந்த நூல்களுக்கு உரைகளையும் எழுதினார். தமிழ் மீது பற்று காரணமாக 

தமிழ்மருத்துவமான சித்த மருத்துவத்தை வலியுறுத்திவந்தார்.

சிதம்பரம்பிள்ளை ஒழுக்கசீலர். தன்னலம் பாராது பிறர் நலம் பேணும் பெருந்தகையாளர். பாரதியாரின் உயிர் நண்பராய்த் திகழ்ந்தார். உயர் பண்புகள் 

அனைத்தும் பெற்றவர். நாட்டுவிடுதலை ஒன்றே மூச்சாகக் கொண்டு வாழ்ந்திருந்தவர். தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டதால் இவர் பெற்ற பையன் 

வறுமையும் பிணியுமே. நோய்வாய்ப்பட்ட போதும் தன் பிணிக்கு வருந்தாது அடிமைப் பிணிக்காகவே வருந்தினார். உயிர் நண்பர்  மஹாகவி 

பாரதியாரின் தேசியப் பாடல்களைக் கேட்டவண்ணம் 1936-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் நாள் சுதந்திரம் வாங்காமல் சாகிறேனே என்ற ஏக்கச் 

சொற்களோடு அவர் ஆவி பிரிந்தது.

"கப்பலோட்டிய தமிழன்" என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற வ.உ.சிதம்பரனார் தமிழக வீரப் பெருமக்கள் வரிசையில் தனி இடம் பெற்றவர். நாட்டு 

மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி விடுதலைப் புரட்சியை உண்டாக்கிய சிறந்த தேசபக்தர். சிதம்பரனாரின் வரலாறு இம்மண்ணில் ஒரு மங்காத 

காவியமாகும்.

கப்பலோட்டிய தமிழரின் நினைவாக இந்த வாரம் அவரது தியாகத்தை நாமும் நினைவு கூறுவோம். அவரைப் போல நாட்டுப் பற்று மிக்கவராய்த் திகழ்வோம்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

Sunday, November 14, 2010


51st story. தீபாவளி பிறந்த கதை

                       தீபாவளி பிறந்த கதை.
நரகன் என்னும் அசுரன் பூவுலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். மண்ணுலகும் வானுலகும் அவனிடம் துன்பப் பட்டுக்

கொண்டிருந்தது. இது போதாது என்று அவன் சாகாவரம் பெற எண்ணினான். எனவே நரகன் சிருஷ்டி கடவுளான பிரும்மாவைக் குறித்துத் தவம் 

மேற்கொள்ள முடிவு செய்தான்..

அவனது தாயான பூமிதேவியும் "மகனே! நீ சாகாவரம் பெற்று விட்டால் என் மனம் மிகவும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெறும். உன் எண்ணப்படியே 

பிரும்மதேவரிடம் சாகாவரம் பெற்று வருவாயாக" என்று ஆசி கூறி அனுப்பினாள். தாயின் அனுமதி பெற்று நரகன் பிரும்மாவைக் குறித்துத் தவம் 

மேற்கொண்டான். காலம் கடந்தது. நரகன் கடுமையான தவத்தை மேற்கொண்டிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரும்மாவும் அவன் முன் 

தோன்றினார்.

"நரகா! உனது கடுந்தவம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எதற்காக இந்தத் தவம்? என்ன வரம் வேண்டும் உனக்கு?"

கனிவுடன் கேட்டார் பிரும்மா.

"சுவாமி! எனக்கு தாங்கள் சாகாவரம் அளிக்க வேண்டும். புவனங்கள் அனைத்தையும் நான் ஒருவனே ஆளவேண்டும். எனக்கு அழிவென்பதே 

இருக்கக் கூடாது. இந்த வரத்தைத் தாங்கள் அளிக்கவேண்டும்."

"நரகா! உலகங்கள் யாவையும் நீ அடிமைப் படுத்தி வாழ்வாய் என்ற வரம் தருகிறேன். ஆனால் சாகாவரம் தருவது என்பது இயலாதது. ஆனால் 

நீ எப்படி சாகவிரும்புகிறாயோ அப்படியே சாக வரம் தருகிறேன். கேள்."

நரகன் அருகே நின்ற தன் தாயின் முகத்தைப் பார்த்தான். சற்றே சிந்தித்தவன் புன்னகை செய்து கொண்டான்.

"அம்மா!, தங்களின் அன்புக்குரிய மகன் நான். தங்களின் கையினாலேதான் நான் மரணமடைய வேண்டும் எனக் கேட்கிறேன். தாங்கள் எப்படி அம்மா 

என்னைக் கொல்வீர்கள்? அதனால்   எனக்கு யாராலும் ஏன் தேவராலும் மூவராலும் கூட  மரணம் நேராது .எப்படி அம்மா என் வரம்?"

பூமிதேவி மனமகிழ்வுடன் புன்னகைத்தாள்.

"மிகவும் சரி மகனே. அப்படியே வரத்தைப் பெற்றுக்கொள்."

நரகாசுரன் பிரும்மாவைப் பணிந்தான். 

"தேவாதி தேவா! என் தாயின் கையினாலேதான் நான் மரணமடைய வேண்டும். வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது."

புன்னகை புரிந்த பிரம்மா "அப்படியே தந்தேன்" என வரம் தந்து மறைந்தார்.

நரகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தாயை வணங்கினான்.

காலம் உருண்டது. நரகனின் அட்டஹாசம் அளவிடற்கரியதாக இருந்தது. தேவரும் மூவரும் நாராயணனிடம் முறையிட்டனர்.


நாராயணன் கிருஷ்ணனாக அவதரித்து மாமனான கம்சனை சம்ஹாரம் செய்தான்.ருக்மணி சத்யபாமாவை மணந்து துவாரகையில் மன்னனாக 

ஆட்சி செய்து வந்தான். அப்போது மக்கள் நரகனிடம் படும் துன்பத்தைப் பற்றி அவனிடம் முறையிட நரகனுடன் போர் தொடுக்கப் புறப்பட்டான் 

கண்ணன். போர்க்கோலம் பூண்ட கிருஷ்ணன் தன் மனைவி சத்யபாமாவை தன் தேரினை ஒட்டிவரக் கூறினார். தேரோட்டுவதிலும் போர்க்களப் 

பயிற்சியிலும் தேர்ந்தவளான சத்யபாமாவும் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள்.  

நரகாசுரனுக்கும் கிருஷ்ணனுக்கும் கடும் போர் நடந்தது. தேவர்கள் அச்சத்துடன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நரகனின் வரம் பற்றி 

அறிந்தவர்களாதலால் என்ன நடக்குமோ என்று கவலையுடன் கவனித்தனர். நரகன் விடுத்த ஆயுதத்தால் கிருஷ்ணன் மயங்கி வீழ்ந்தான். 

இதைக் கண்ட சத்யபாமா தேரில் நின்றவண்ணம் கிருஷ்ணனின் கையில் இருந்த வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டாள். அப்போது 

அவளைக் கவனித்த நரகன் திகைத்து நின்றான். சற்றும் தாமதியாது கோபத்துடன் பாமா விடுத்த அம்பு நரகனின் மார்பைத் துளைத்தது. 

நரகன் கீழே  விழுந்தான். அதே சமயம் மயங்கியவர் போல் விழுந்திருந்த கிருஷ்ணன் எழுந்து பாமாவின் அருகே வந்தான். தேவர்கள் மலர்மாரி 

பொழிந்தனர். உயிர் பிரியும் நிலையில் நரகன் பாமாவைப் பார்த்து " அம்மா" என அழைத்தான். அந்தக் குரல் கேட்ட பாமாவிற்கு தன் முற்பிறவி 

நினைவிற்கு வந்தது. பூமாதேவியின் வடிவமும் கொண்டாள். தன் மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு அழுதாள். 

"மகனே! நானே உன் இறப்புக்குக் காரணமாகிவிட்டேனே. நீ கேட்ட வரம் பலித்துவிட்டதே மகனே! இந்த அம்மாவை மன்னித்து விடடா மகனே."

"அம்மா! கலங்காதீர்கள். தங்கள் கையினால் நான் மடிவதில் எனக்கு மகிழ்ச்சியே."

கிருஷ்ணன் நாராயணனாக வடிவம் தாங்கி அருகே வந்து நின்றார்

." நரகா! உன் வரத்தின் படியே நீ முடியவேண்டும் என்பதற்காகவே சத்தியபாமாவை உடன் அழைத்து வந்தேன். அவள் கையினாலேயே 

நீமடியவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறியதல்லவா" 

"தந்தையே, உலகில் தோன்றிய எந்த உயிரும் மறைந்தே தீரும் என்ற உண்மை என்னால் நிரூபிக்கப் பட்டுவிட்டது."

 "உண்மை. நரகா, உனக்கு என்ன வேண்டும் கேள். "

 "எனக்கு தாங்கள் ஒரு வரம் தரவேண்டும்" 

"மீண்டும் எழவேண்டும் என்பதைத்தவிர  வேறு என்ன வேண்டுமானாலும் கேள்."  மிகவும் கவனமாகப் பேசினான் நாராயணன்.

"இல்லை தந்தையே. நான் மறைந்த இந்த நாளை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டும். இருளிலிருந்து ஒளிக்குத் திரும்பும் மக்கள் மனங்களில் 

மகிழ்ச்சியைப் போலவே ஊரெங்கும் ஒளிபெற்றுத் திகழ வேண்டும். இந்த வரத்தைத் தாங்கள் அருளவேண்டும்."

நாராயணன்  மகிழ்ச்சியுடன் "ததாஸ்து"  என அருள் செய்தான்.

போர்க்களம் விட்டு அரண்மனை திரும்பிய கிருஷ்ணனும் நரகனின் மறைவைக் கொண்டாடும் படிப் பணித்தான். உலக மக்களும் வானுலக 

தேவர்களும் நரகாசுரனின் இறப்பைப் பெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாமும் இந்தநாளை ஒளித் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறோமல்லவா. தீபஒளித் திருநாள் என்ற பெயரில் நாம் கொண்டாடும் பண்டிகையே 

தீபாவளித் திருநாள் எனப் படுகிறது.

"அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்."
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

Friday, October 22, 2010


50th story. புரோகிதர் ஏமாந்தார்.


                                                                  புரோகிதர் ஏமாந்தார்.

   \ஒரு சமயம் தெனாலி ராமனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.வெகு நாட்களாகியும் காய்ச்சல் குறையவில்லை.ராமனால் கண் விழித்துப் பார்க்கக் கூட

இயலவில்லை.  அவனது  நிலை கண்டு ராமனின் மனைவி மிகவும் பயந்து விட்டாள். தன் கணவனுக்கு ஏதோ தோஷம் பிடித்துள்ளது. அவனது 

ஜாதகத்தைப் பார்த்துப் பரிஹாரம் செய்ய வேண்டும் என எண்ணினாள். அதனால் ஒரு புரோகிதரை அழைத்துப் பரிகாரம் கேட்டாள். அந்தப் புரோகிதர் 

ஏற்கனவே ராமனால் சூடு போடப்பட்டவர். அவர் இந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

"இவன் புரோகிதர்களுக்குச் சூடு போட்டது பெரிய பாவம்.அதனால்தான் ராமன் காய்ச்சலால் கஷ்டப் படுகிறான். இதற்குப் பரிகாரம் செய்ய  

புரோகிதருக்கு நூறு பொன் காணிக்கை செலுத்தவேண்டும். பிறகுதான் குணமடைவான்." என்று கூறினார். 


             ராமனின் மனைவி மிகுந்த கவலைப் பட்டாள்.அவள் புரோகிதரிடம்," ஐயா புரோகிதரே, எங்களிடம் நூறு பொன் இல்லையே.தாங்கள் கேட்கும் 

தொகை எங்கள் சக்திக்கு மீறியதாக உள்ளதே.வேறு ஏதேனும் வழி சொல்லுங்கள்." என்று கூறினாள்..

புரோகிதர் சம்மதிக்கவில்லை."எப்படியாவது பொன் கொடுத்தால்தான் பரிகாரம் செய்வேன். அப்போதுதான் ராமன் எழுந்திருப்பான். விரைவில் 

பொன்னைக் கொடுக்க வழி பாருங்கள். பிறகு பரிகாரம் செய்கிறேன் " என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் . ராமனின் மனைவி யோசித்தாள்.

தங்களிடம் இருக்கும் குதிரை அவள் நினைவுக்கு வந்தது. புறப்பட்ட  புரோகிதரை மீண்டும் அமரச் சொன்னாள். புரோகிதர் புன்னகையுடன் 

அமர்ந்தார்.

"ஐயா! எங்களிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதை விற்றுத் தருகிறோம். தயவு செய்து என் கணவருக்குப் பரிகாரம் செய்து அவர் தோஷத்தை 

நிவர்த்தி செய்து விடுங்கள். அவர் எப்படியாவது எழுந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்." என்று வேண்டிக்கொண்டாள்.

குதிரையை விற்றுப் பொன் தருவதாகச் சொன்னதும் புரோகிதருக்கு ஆசை அதிகமாகியது. அந்தக் குதிரை இருநூறு பொன்னுக்கு விலை 

போகும்.அந்தப் பொன் முழுவதையும் அடைய விரும்பிய புரோகிதர் "அப்படியானால் அந்தக் குதிரையை என்ன விலைக்கு விற்றாலும் அந்தத் 

தொகை முழுவதையும் அப்படியே கொடுத்து விட வேண்டும். அதற்கு உறுதியளித்தால் நான் நல்ல முறையில் பரிகாரம் செய்கிறேன்." என்றார்.

ராமனின் மனைவியும் அதற்குச் சம்மதித்தாள். 

அதன்பிறகு புரோகிதர் ஏதோ பரிகாரம் செய்தார். சில நாட்களில் ராமன் பூரண குணமடைந்தான். அதற்குள் புரோகிதர் குதிரையை விற்றுப் பொன் 

தரும்படி பலமுறை கேட்டுவிட்டார். அவரின் நச்சரிப்புத் தாளாமல் ராமன் குதிரையை விற்றுத் தரச் சம்மதித்தான். 

ஒருநாள் ராமன் தன் குதிரையுடன் ஒரு பூனையையும் கூட்டிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். எங்கே ராமன் தன்னை ஏமாற்றிவிடுவானோ என 

எண்ணிய புரோகிதரும் அவனுடன் புறப்பட்டார்.

ராமன் வைத்திருந்த குதிரை நல்ல அரேபியக் குதிரை. நல்ல விலைக்குப் போகும். அந்தப் பணம் முழுவதையும் புரோகிதருக்குக் கொடுக்க அவன் 

விரும்பவில்லை. சந்தையில் ராமன் குதிரைக்குப் பக்கத்தில் பூனையை நிற்க வைத்தான்."பூனையின் விலை இருநூறு பொன். குதிரையின் விலை 

ஒரு காசு."என்று கூறினான்." பூனையை வாங்குபவருக்கே குதிரையைக் கொடுக்க முடியும்." என்ற நிபந்தனையையும் விதித்தான். 

குதிரையை வாங்க விரும்பியவர் பூனைக்கும் சேர்த்து இருநூறு பொன்னும் ஒரு காசும் கொடுத்தார். பூனையை விற்ற இருநூறு பொன்னைத் தான் 

வைத்துக் கொண்டு குதிரையை விற்ற ஒரு காசை புரோகிதரிடம் கொடுத்தான் ராமன்.

புரோகிதரால் ஒன்றும் பேசமுடியவில்லை. தன்னுடைய பேராசையினால் விளைந்த நஷ்டத்தை எண்ணி வருந்தினார். ராமனின் அறிவாற்றலை 

அவரால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

Wednesday, September 29, 2010


49th story.மாறிய மனம்.

                                                                      மாறிய மனம்.
பரமசிவம் அவன் பெற்றோருக்கு ஒரே பையன். மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான்.அவன் அப்பா அவன் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவார். அவன் அம்மாவோ சாப்பிட அவன் விரும்பியதையெல்லாம் செய்து தருவார்.  அதனால் கஷ்டம் என்பதே என்னவென்றே அறியாமல் வாழ்ந்து வந்தான்.
அவன் அம்மா காய்ச்சலால் துன்பப்படும்போது கூட கவலைப்படாமல் தனக்கு வேண்டிய தின்பண்டத்தைச் செய்து தரச் சொல்லி ரகளை செய்வான்.
             அவன் மனம் எப்போதும் எதைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை.அவனும் யாரையாவது துன்பப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவான் .நாய் கல்லடிபட்டு நொண்டிச் செல்வதையும், ஓணான் கயிற்றில் கட்டப்பட்டுத் துடிப்பதையும் பார்த்து மகிழ்வான்.அந்த ஊரில் அழகு தரும் பொன்னியாறு ஓடிக்கொண்டிருந்தது.சிறுவர்கள் விடுமுறை நாட்களில் அந்த ஆற்றில் நீந்திக் குளிப்பது வழக்கம். வயிறு பசிக்கும்போதுதான் வீட்டு நினைவு வரும். அதுவரை நீந்திக் கொண்டிருப்பார்கள்.
             அன்று ஞாயிற்றுக்கிழமை. பரமசிவம் அவன் நண்பர்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தான். உச்சி வேளையாதலால் ஆற்றில் கூட்டமில்லை. ரவி என்ற பையன் "டேய், கூட்டமில்லாமல் இருக்கு. நல்லா நீந்தலாம்டா. வாடா குளிக்கலாம்." என்றபடியே ஆற்றில் இறங்கினான். ராமு "ஊஹூம், நான் மாட்டேன். எனக்கு நீந்தத் தெரியாது."என்றபடியே தள்ளி நின்றான். அந்த ஆண்டுதான் அவர்கள் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். அவன் அப்பா ஒரு வங்கி அதிகாரி.  
ஆனால் பரமசிவம் அவன் கையைப் பற்றி இழுத்தான்."பயப்படாதே. நான் உனக்கு நீந்தக் கத்துக் குடுக்கறேன். வா"  ராமுவுக்கும் அவர்களைப்போல நீருக்குள் அமிழ்ந்து விளையாட ஆசையாக இருந்ததால் மெதுவாக ஆற்றில் இறங்கினான். பத்து நிமிடமாக அவனை இழுக்க முயற்சித்தவனுக்குத  திடீரென அவனைத் துன்புறுத்திப் பார்க்க ஆசை வந்துவிட்டது. முழங்கால் அளவு நீரில் நின்றவனை கையைப் பற்றி இழுத்து நீருக்குள் தள்ளிவிட்டான்.
பயந்து போன ராமு பதறியபடி எழ முயன்றான்."டேய், இப்படியெல்லாம் பண்ணாதே....." என்றபடியே பயத்துடன் கரையை நோக்கி நடந்தான் .அவனை பரமசிவம் மீண்டும் இழுத்து நீருள் தள்ளினான்."ஆ, ஆ, என வாயைப் பிளந்தபடியே நீருக்குள் தவிக்கும் ராமுவைப் பார்த்துச் சிரித்தான் பரமசிவம்.
அவனது தவிப்பைப் பார்த்து ரசித்தான். தன்னைக் காத்துக் கொள்ள ராமு படும் துன்பத்தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தான். 
அப்போது ரவி பரமசிவத்தின் காதில் நீரை ஊற்றவே அவனிடம் சண்டைக்குப் போனான். அந்தசமயம் ராமு கரையேறி மணலில் படுத்துக் களைப்பைப் போக்கிக் கொண்டான்."சே, என்ன நண்பன் இவன், உயிருக்குப் போராட வைத்து விட்டானே. இனிமேல் இவனுடன் சேரவே கூடாது." என்று எண்ணியவன் தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் பின்னால் பரமசிவம் "டேய், பயந்தாங்குளி ஓடுடா ஓடு..." என்று சிரிப்பதை ராமு பொருட்படுத்தவேயில்லை.
             ஐந்து  நாட்கள் கழிந்தன. அன்று சனிக்கிழமை. பள்ளி பிற்பகல் விடுமுறை.சாப்பிட்டுவிட்டு ஊரைச்  சுற்றி வந்தான் பரமசிவம். தெருக்கோடியில் ஒரு வீடு. அது ஒரு கிட்டங்கி.வீடு முழுவதும் வெல்ல மூட்டைகளை அடுக்கியிருப்பார்கள். வீட்டு வாயிலில் வெல்ல வாசனை கும்மென்று அடிக்கவே மெதுவாக உள்ளே நுழைந்தான். உள்ளே  வெல்லம். அச்சு வெல்லம் பனைவெல்லம், மண்டைவெல்லம், என வகை வகையாகப் பார்த்தவனுக்கு நாக்கில் நீர் ஊறியது வெல்ல கட்டிகளை எடுத்துத் தன் பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டான். வேண்டியமட்டும் தின்றான். திடீரென்று அவன் மீது ஏதோ விழுந்தது. பயந்து போனவனாய் "ஐயோ, அம்மா "என அலறினான். மேலும் இரண்டு எலிகள் மேலே விழவே துள்ளி ஓடினான். இரண்டு எலிகள் அவனைக் கீறிவிட்டு ஓடின. பயந்து போன பரமசிவம் அறையை விட்டு வெளியே வந்தான். வீடு ஒரே இருட்டாய் இருப்பதைப் பார்த்து மேலும் பயந்தான்."ஐயோ, இதென்ன இவ்வளவு இருட்டா இருக்கு. கொஞ்ச நேரம் முன்னே வெளிச்சம் இருந்துதே!. இப்போ வாசற்படியே தெரியலியே.ஐயோ, அம்மா,  அம்மா..."அலறினான் பரமசிவம். அவனையும் வெல்ல மூட்டை என எண்ணிய எலியும் பெருச்சாளியும் அவன் மேலே விழுந்து கீறின.உடம்பில் எரிச்சல். மனதில் பயம், காற்றில்லாததால் திணறினான். அவன் வரும்போது திறந்திருந்த கதவை அவன் உள்ளே இருக்கும் போது யாரோ மூடிவிட்டுச் சென்று விட்டார்கள். இதை உணர்ந்து கொண்ட பரமசிவன் அலறினான்."யாராவது என்னைக் காப்பாத்துங்க. பயமா யிருக்கு யாராவது வாங்க.ஐயோ, அம்மா..."வெகுநேரம் அலறியவாறு இருந்தான். வியர்வையில் அவன் சட்டை முழுவதும் நனைந்து விட்டது.
வெல்லம் சாப்பிட்டதால் மிகுந்த தாகமும் ஏற்பட்டது. இருட்டறையில்  தண்ணீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு நிமிடம் போவது கூடக் கடினமாக இருந்தது.அப்போதுதான் அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
"காற்றுக்காக நான் இப்போது தவிக்கிறேனே இப்படித்தானே ராமுவும் அன்று தவித்திருப்பான். மீண்டும் மீண்டும் அவனை நீருக்குள் தள்ளி வேடிக்கை பார்த்தேனே. அவனின் துன்பம் கண்டு சிரித்தேனே....கடவுளே! நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சுடு. இனிமேல் யாரையும் துன்புறுத்த மாட்டேன். என்னைக் காப்பாத்து." மனமிரங்கி  அழுதான். கதவைத் தேடிப் பிடித்து படபடவெனத் தட்டினான்.
          திடீரெனக் கதவு திறந்தது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர். பாதி மயக்கத்தில் சரிந்து உட்கார்ந்திருந்த பரமசிவத்தைப் பார்த்து அவனைத் தூக்கி வெளியே அமர்த்தினர்."நீ ஏண்டா உள்ளே போனே? வெல்லம் திருடவா?"
"வேற எதுக்குப் போவான் படிக்கவா போவான்?"
"ஏலே, வெல்லம் திருடி! உங்கம்மா உன்னைக் காணோமின்னு ரொம்ப நேரமா தேடிக்கிட்டிருக்காங்க. நீ இங்க வந்து மாட்டிகிட்டிருக்கே பொறியிலே அகப்பட்ட எலி மாதிரி."
"நல்ல வேளை பூட்டு சரியாப்பூட்டியிருக்கான்னு பாக்க வந்தது நல்லதாப்போச்சு. இல்லையின்னா  நாளைக்கு ஞாயித்துக்கெழமை பூராவும் இவன் உள்ளாறவே இருந்துருக்கணும். ஏலே, பெருச்சாளி எலி கடிச்சுதாலே?"
"ஆமா."பரமசிவம் அழுதுகொண்டே சொன்னான்.வெளிக்காற்று உடம்பில் பட்டதும் புத்துணர்ச்சி பெற்றான்.
"அண்ணாச்சி.வெல்லம் தின்கிற ஆசையிலே உள்ளே போயிட்டேன்.மன்னிச்சுடுங்க இனிமே இப்படிச் செய்ய மாட்டேன்."சிவந்த கண்களைத் துடைத்தவாறே சொன்னான் பரமசிவம். 
"போடா, போய் உங்கம்மாவைப் பாரு. பாவம் எங்கெங்கயோ தேடிக்கிட்டு இருக்காங்க. இந்தா. இந்த வெல்லக்கட்டியை எடுத்துக்கிட்டுப் போ."
ஒரே ஓட்டமாக ஓடினான் வீட்டுக்கு. ஊரெங்கும் தேடி விட்டு பிள்ளையைக் காணோமென்று அழுதுகொண்டிருந்த அம்மாவின் மடியில் தலை வைத்துக கொண்டவனுக்கு தான் எவ்வளவு துன்பப் பட்டோம் என்பது புரிந்தது.
அம்மாவின் மடி அவனுக்கு சுவர்க்கமாக இருந்தது.
மற்றவர் துன்பத்தை நினைத்துப் பார்க்காததால்தான் துன்பப் படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியைக் கண்டேன். இனி அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வேன்.யாரையும் கஷ்டப்படுத்தவே மாட்டேன்.என்று அம்மாவின் மடியில் தலைவைத்தவன் தனக்குள் உறுதி பூண்டான்.
பரமசிவனின் மனம் மாறியதை அறியாமலேயே அவன் கிடைத்து விட்டதற்காக மகிழ்ந்தார் அவன் அம்மா.
முற்பகல் செய்யின் பிற்பகல்  விளையும் என்பதைப் புரிந்து கொண்டான் பரமசிவம்.
யாருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அப்படி விளைவித்தால் நமக்கும் அத்துன்பம் வந்துசேரும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
                                             " பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா 
                                              பிற்பகல் தாமே வரும்."     என்ற வள்ளுவரின் திருக்குறளையும் மறக்கலாகாது.









              

Blog: http://chuttikadhai.blogspot.com

Tuesday, September 21, 2010


48th story.நின்னினும் நல்லன்


                                                           நின்னினும் நல்லன்.
முற்காலச் சோழ மன்னர்களுள் தலைசிறந்த மன்னனாக விளங்கியவன் கரிகாற்பெருவளத்தான். இவனது இயற்பெயர் திருமாவளவன் என்பதாகும்.
இளம் வயதில் தந்தையை இழந்த இவன் பகைவர்களுக்கு அஞ்சி தாயுடன் மறைந்து வாழ்ந்தான். இவனை வளர்த்தவர் இரும்பிடர்த்தலையார் என்பவராவார். இவர் திருமாவளவனின் தாய்மாமன் ஆவார். சிறந்த தமிழ்ப் புலமை மிக்க இவர் வளவனுக்கு ஆசானாகவும் இருந்தார். இவர் பாடிய பாடல் புறநானூறு என்னும் சங்க இலக்கியத்தில் இடம்  பெற்றுள்ளது.
மறைந்து வாழ்ந்த வளவனை அவன் பகைவர் கவர்ந்து சென்று ஒரு காட்டின் நடுவே உள்ள வீட்டில் அடைத்து வைத்தனர். சோழ மன்னனின் மகனான வளவனைக் கொன்று நாட்டை அபகரிக்கவே பகைவர் சூழ்ச்சி செய்தனர். அதனால் வளவனை அடைத்திருந்த வீட்டிற்குத் தீ வைத்தனர். இந்தத் தீயில் வளவன் உயிர் நீப்பான் இனி சோழநாடு நம் வசமாவது திண்ணம் என நம்பியிருந்தனர் பகைவர். தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. உள்ளே அடைபட்டிருந்த வளவன் "மாமா, மாமா" என அலறினான். வெகு நேரமாக வளவனைக் காணாத இரும்பிடர்த்தலையார் அவனைத் தேடி அலைந்தார். காட்டுக்குள் தேடி வரும்போது வளவனின் அலறல் சத்தம் கேட்டது பதறியபடியே குரல் வந்த திசையில் ஓடினார். எரியும் ஒரு குடிசைக்குள் இருந்து வரும் ஒலி வளவனுடையது என்று அறிந்தார். மிகவும் போராடி வளவனை மீட்டார் இரும்பிடர் தலையார். அந்த நெருப்பில் வளவனின் கால் ஒன்று கருகிப் போனது. அன்று முதல் வளவன் கரிகால்வளவன்  ஆனான். பின்னர் இரும்பிடர்தலையாரின் பெருமுயற்சியால் கரிகால்வளவன் சோழநாட்டு அரியணை ஏறினான்.சிறந்த அறிவாளியான இரும்பிடர்தலையாரின் துணையுடன் சிறப்புடன் சோழநாட்டை ஆண்டான். மக்கள் விரும்பும்  நல்லாட்சி புரிந்தான். பிற்காலச் சோழர்களில் ராஜராஜன் சிறந்த மன்னன். அதுபோல முற்காலச் சோழ மன்னர்களுள் கரிகாலன் சிறந்த மன்னனாகத் திகழ்ந்தான்.
                    இளம் வயதிலேயே அரசு கட்டிலேறிய கரிகால்பெருவளத்தான் மக்களுக்குப் பெரும் நன்மைகளைச் செய்தான். காடு திருத்தி நாடாக்கினான். காவிரிக்குக் கரை எடுத்தான்.
நீர்ப்பாசன வசதிக்காகக் "கல்லணை" என்ற பெரிய அணையைக் கட்டுவித்தான். இவனது அரும்பெரும்  செயல்களைப் பாராட்டி "பட்டினப்பாலை" என்னும் நூலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர் இயற்றியுள்ளார்.  இப்புலவருக்கு பதினாறு லட்சம் பொற்காசுகளைப் பரிசாகத் தந்து போற்றினான் கரிகாலமன்னன்..
கரிகாலன் இளம்வயதினன்தானே என்று எண்ணி சேரமான் பெருஞ்சேரலாதன் "வெண்ணி" என்ற இடத்தில் போருக்கு வந்தான். இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போர்க்களத்தில் கரிகாலன் எறிந்த வேல் சேரலாதனின் மார்பில் பாய்ந்தது .மார்பைப் பிளந்து முதுகு வழியே வெளியே வந்தது. இது கரிகாலனின் உடல்  வலிமையைக் 
காட்டுவதாக அமைந்திருந்தது. இப்போரைப் பார்த்த "குயத்தியார்" என்ற பெண்பாற்புலவர் கரிகாலனின் வெற்றியைப் பாராட்டி வியந்தார். அத்துடன் சேரலாதனின் மானத்தையும் பாராட்டிப் பாடியுள்ளார்.
சேரலாதன் மேல் வேகமாகப் பாய்ந்த வேல் மார்பை ஊடுருவியதால் முதுகில் புண்பட்ட சேரலாதன் புறப்புண்ணுக்கு
நாணி வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். வடக்கிருத்தல் என்பது ஆற்றின் நடுவே உள்ள கல்லின்மேல் தருப்பைப் புல்லைப் பரப்பி அதன்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் ஆகும். புறப்புண் பட்டால் அது வீரத்திற்கு இழுக்கு 
என்று நாணிய சேரலாதன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். இவனது மானத்தைக் கண்ட வெண்ணிக்குயத்தியார் பெருவியப்பெய்தி கரிகால் மன்னனை விடச சேரலாதன் சிறந்தவன் என்று பாடியுள்ளார்.
வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரைப் பற்றிப் பாடியதால் இப்புலவர்  வெண்ணிக் குயத்தியார் என்று அழைக்கப்பட்டார்.
"கரிகால் வளவ! வெண்ணிப் போரில் பகைவரை எதிர்த்து வெற்றி கொண்ட வீரனே! நீ குறி பார்த்து எறிந்த வேலானது 
சேரனின் மார்பில் பாய்ந்து முதுகுப் புறமாக ஊடுருவிப் புண்ணாக்கியது. இதனால் சேரன் புறப்புண்ணுக்கு நாணி 
வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். புறப்புண் பட்டது வீரத்திற்கு இழுக்கு என்று நாணங்கொண்ட சேரன் வடக்கிருத்தலால் உலகில் பெரும்புகழ் பெற்று விட்டான். நீ வீரத்துடன் போரிட்டதால் வெற்றிப் புகழ் பெற்றாய். ஆனால் உன்னால் ஏற்பட்ட புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருத்தலால் பெரும்புகழ் பெற்றுவிட்டான் சேரன். எனவே நின்னினும் நல்லனன்றே. எனப் பாடி சேரனது மானத்தைச் சிறப்பித்துள்ளார் புலவர்.
இப்பாடல் சங்க இலக்கியமான புறநானூற்றில் இடம் பெற்று இவ்வரலாற்று உண்மையை நமக்கு எடுத்து இயம்புகின்றது.
மானம் போனபின் வாழாமை முன்னினிதே என்ற கூற்றை நிரூபித்து உயிர்கொடுத்து மானம் காத்த சேரனது புகழ் என்றும் நிலைத்திருக்கும் அன்றோ.





Tuesday, September 14, 2010


47th story.பாரதியின் பக்தி

                                                பாரதியின் பக்தி.
மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் நமது நாட்டுக்குக் கிடைத்த பெரும் செல்வம் ஆவார். அந்த மஹாகவி சொல்வது போலவே வாழ்ந்து காட்டியவர்.
இவர் தன்னை அழகு படுத்திக் கொள்வதில் பெரும் விருப்பம் உடையவர். காசியில் வாழ்ந்து வந்தபோது வடநாட்டவர்போல் உடையையும் உருவத்தையும் மாற்றிக் கொண்டு கம்பீரமாகத் திகழ்ந்தார். "ஜாதி மதங்களைப் பாரோம்" என்று பாடியபடியே இவர் எல்லாஜாதியாருடனும் கை கோர்த்து நடப்பார். இவரது முறுக்கிய மீசையையும் முண்டாசுக் கட்டையும் இவரது அத்தையின் கணவர் கிருஷ்ணசிவன்  வெறுத்தார்.வைதீக ஆசாரத்தில் ஊறிய பலருக்கும் இது பிடிக்கவில்லை.ஆனாலும் அதை வெளியில் சொல்லாமல் இருந்தனர். பாரதியும் அதிகம் அவர் கண்ணில் படாமலே இருந்தார்.
 அந்தணர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவதையும் அவரது அத்தையின் கணவர் விரும்பவில்லை.பாரதியிடம் கடுமையாகக கூறினார்."நீ என்றைக்கு உன் கிராப்பையும் மீசையையும்  எடுத்துவிட்டு குடுமி வைத்துக் கொண்டு வருகிறாயோ அன்றுதான் எங்களுடன் பந்தியில் அமர்ந்து சாப்பிடலாம்" என்று கூறிவிட்டார். 
இதைக் கேட்டு அத்தை மிகவும் வருத்தப் பட்டார். ஆனால் பாரதி சற்றும் வருந்தவில்லை.நாட்கள் ஓடின. அவ்வூரில் ஒரு சிவமடம் இருந்தது. அங்குள்ள கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப் படும். அதேபோல் அந்த ஆண்டும் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் பட்டிருந்தது.அந்தக் கோயிலுக்கு பாரதியின் அத்தையின் கணவர் கிருஷ்ணசிவன்  தான் தலைவர். திருவாதிரைத திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தார்கள்.பூஜை எல்லாம் முடிந்தது. தீபாராதனை நேரம் வந்தது. மார்கழிமாதம் திருவாதிரை நாளன்று திருவெம்பாவை பாடாமல் தீபாராதனை எப்படிச் செய்வது. அன்று பார்த்து ஓதுவார் வரவில்லை . அவர் வேறு காரியமாகச் சென்று விட்டார். தலைவராக இருப்பதனால் பொறுப்பு அதிகம் அல்லவா. தீபாராதனை செய்ய இயலாமல் தவித்தார்.
யாருக்கும் மனப்  பாடமாக திருவெம்பாவை சொல்ல வராது. அனைவரும் கச முசவென்று பேசிக்கொண்டு நின்றிருந்தனர்.
அவ்விடத்தில் உற்சவத்தின்போது பெண்கள் வந்து பாடுவதும் முறையல்ல.எனவே பதை பதைத்து நின்றிருந்தார்.
அப்போது பாரதியின் அத்தை பாரதிக்குக் கிராப்புத்தலை மறைய முண்டாசு கட்டி நெற்றியில் விபூதிப் பட்டையிட்டு ருத்திராக்ஷ மாலை ஒன்றை கழுத்தில் அணிவித்து மெதுவாக அங்கே அவரை அழைத்து வந்தார். மறைவான இடத்தில் நின்றபடி மெதுவாக "நம்ம சுப்பையா இல்லையா. நன்னா ச்பஷ்டமாப பாடுவானே." என்றார். தலைவரான 
கிருஷ்ணசிவன் பாரதி பாடுவதற்கு வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
திருவெம்பாவை பாடல் அனைத்தையும் மிகத் திருத்தமாகவும் இனிமையாகவும் பாரதி பாடி முடித்தார்.அதன்பின் முறைப்படி தீபாராதனை முடிந்தது.
திடீரென பாரதி மிகக் கம்பீரமான குரலில் பக்திப் பெருக்கோடு "பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ உந்தன் பாத தரிசனம் "
என்ற நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஒன்றை உள்ளம் உருகப் பாடினார்.கேட்டிருந்த அத்துணை பெரும் உள்ளம் நெகிழ்ந்து பரவசமானார்கள்.
அங்கு கூடியிருந்த அந்தணர்கள் அனைவரும் பாரதியின் உள்ளார்ந்த பக்தியையும் ஞானத்தையும் அறிந்து கொண்டனர்.அவரது பக்திக்குத் தலைவணங்கினர். கிருஷ்ணசிவன் பாரதியைத் தழுவிக் கொண்டார். சிறுவயதிலேயே மிகுந்த ஞானத்துடன் விளங்கியபாரதியின் பக்தியையும் இப்போது உணர்ந்து கொண்டார்.
"பாரதி, குடுமியும் பூணூலும் எங்களைப் போன்ற சாதாரண மனிதருக்குத்தான் தேவை. நீ மகா ஞானி. உன்னைப் போன்ற மனம் படைத்தவருக்கு இந்த வேஷங்கள் தேவையில்லைஅப்பா." என்று உள்ளம் உருகிக் கூறினார் பாரதியைப் புரிந்து கொண்ட கிருஷ்ணசிவன். மீண்டும் பாரதி பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார் என்று சொல்லவும் வேண்டுமா? 
தெய்வத்தையும் தேசத்தையும் இரண்டு கண்களாகப் பார்த்தவர் பாரதி. தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும் 
என்றும், தெய்வம் நமக்குத் துணை என்றும்,பாடிய பாரதியின் பக்தியின் பெருமையை  அளவிட முடியாது.
செப்டம்பர் 11 ம் நாள் புகழுடம்பு எய்திய பாரதியாரை நம்மால் மறக்க இயலுமோ?






Monday, September 6, 2010


46th story. உயர்வுக்கு வழி

                                                         உயர்வுக்கு வழி.
ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு நான்குமகன்களஇருந்தனர்.நால்வரும்சோம்பேறிகள்.ஒற்றுமையில்லாதவர்கள்.எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டும் அப்பாவின் உழைப்பில் உட்கார்ந்து உண்டு வாழ்ந்தும்  வந்தனர். முதியவர் கடும் உழைப்பாளி. தன் பிள்ளைகள் யாரும் தன்னைப்போல் உழைக்கவில்லை என்பதோடு தனக்கு யாரும் உதவவில்லையே எனவும் மிகவும் வருந்தினார்.ஒரு நாள் முதியவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்கவும் இயலவில்லை.
எனவே தன் பிள்ளைகளை அழைத்தார். அவர் முன்னே நால்வரும் வந்து நின்றனர்.முதியவர் அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
"என் மக்களே, எனக்கு வயதாகிவிட்டது. இன்னும் நெடுநாள் நான் வாழமாட்டேன்.என் காலம் முடிந்து விட்டால் நீங்கள் எப்படி வாழப் போகிறீர்கள் என்பதே எனக்குக் கவலையாக உள்ளது. தயவு செய்து ஒற்றுமையாக இருந்து நமது நிலத்தில் பயிரிட்டு வாழப் பழகுங்கள்."என்றார்.
நால்வரும் வெவ்வேறு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். அவர்கள் மனநிலையை அறிந்து கொண்டார்.
"பிள்ளைகளா,உங்களுக்கு நான்கு எருதுகளின்  கதை தெரியுமா? நான்கும் ஒற்றுமையாக மேய்ந்தபோது சிங்கத்தால் அவைகளைக் கொல்ல முடியவில்லை. நான்கும் சண்டையிட்டுக் கொண்டு தனித்தனியே நின்றபோது சிங்கம் ஒவ்வொன்றாகக் கொன்று தின்றது. இதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்றபடியே  தன் அருகே இருந்த மரக் குச்சிகள் இருந்த ஒரு கட்டினை எடுத்துக் கொடுத்தார்.
"இதை அப்படியே  ஒடிக்க முடியுமா பாருங்கள். யாராலாவது முடியுமா முயற்சித்துப் பாருங்கள்." என்றார். ஒவ்வொருவரும் அந்த குச்சிகள் நிறைந்த கட்டினை ஒடிக்க முயற்சித்துத்  தோற்றனர். அனைவரும் தங்களால் முடியவில்லை என ஒப்புக் கொண்டு தலை குனிந்து நின்றனர்.
முதியவர் இப்போது அந்தக் குச்சிகளை ஒவ்வொன்றாக பிரித்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குச்சியைக் கொடுத்து ஒடிக்கச் சொன்னார். நால்வரும் குச்சிகளை விரைவில் ஒடித்துப் போட்டனர். 
"இதுதான் உங்களின் பலமாகும். நீங்கள் நால்வரும் ஒன்றாக இருந்தால் உங்களை யாராலும் அழிக்க முடியாது.சண்டையிட்டுக் கொண்டிருந்தால் விரைவில் மற்றவர் உங்களை அழித்து விடுவார்கள்.எனவே முதலில் ஒற்றுமையாக இருங்கள்"
தங்களின் தந்தையாரின் அறிவுரையைக் கேட்ட பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கத் தொடங்கினர்.
சில மாதங்களுக்குப் பின் ஒருநாள் முதியவர் தன் பிள்ளைகளை அழைத்து தன் வயலில் புதையல் இருப்பதாகவும்  அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றும்  கூறிவிட்டு இறந்து விட்டார்.
பிள்ளைகள் நால்வரும் புதையலைத் தேடி வயலுக்குச் சென்றனர்.நால்வரும் சேர்ந்து நிலத்தை நன்கு கொத்தியும் உழுதும் தேடினர்.எந்தப் புதையலும் கிட்டவில்லை. சோர்ந்து போய் அமர்ந்திருந்தபோது பக்கத்து நிலத்துக்குச்  சொந்தக்காரர்  தன்னைப் போல் நிலத்தில் விதைக்கச் சொன்னார்..அவரது 
சொற்படியே நிலத்தில் விதைத்தனர். நான்கு மாதங்களில் நல்ல விளைச்சலைக் கொண்டுவந்து வீடு சேர்ந்தனர். அப்போதுதான் தங்கள் தந்தையார் கூறிய புதையல் அதுதான் எனப் புரிந்து கொண்டனர்.அத்துடன் நல்ல உழைப்பினால் உடலும் மனமும் உற்சாகமாக இருப்பதை எண்ணிப் பார்த்து இத்தனை நாள் வீணாகக் கழித்தோமே என வருந்தினர். ஒற்றுமையின் சிறப்பையும் உழைப்பின் பெருமையையும் அறிந்து கொண்டனர்.இனி அவர்கள் வாழ்வின் உயர்வைத் தவிர தாழ்வை அடையமாட்டார்கள். நாமும் ஒற்றுமையின்  பெருமையையும் உழைப்பின் சிறப்பையும் அறிந்து அதன்படியே நடப்போம் என உறுதி கொள்வோம்.

Monday, August 30, 2010


45th story.பக்த பிரகல்லாதா.

  
                                             பக்த பிரகல்லாதா.
இறைவன் நம்மைக்காக்க ஓடிவரவேண்டுமெனில் நாம் அவனிடம் காட்டும் பக்தியே சிறந்த வழி. அத்தகு பக்தியை மிகச் சிறிய வயதிலேயே காட்டி இறைவனான நாராயணனை தனக்காக இறங்கி வரச் செய்தவன் பிரகல்லாதன்.  இவனது தந்தையே ஹிரண்யகசிபு என்ற அசுர குல மன்னன். இவன் சாகா வரம் வேண்டி பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா இவன் முன் காட்சியளித்தார். ஹிரண்யகசிபு தான் சாகாதிருக்கும்படி வரம் கேட்டான்.ஆனால் பிரம்மா அவ்வாறு வரம் தர இயலாது நீ எப்படியெல்லாம் சாகக்கூடாது என விரும்புகிறாயோ அப்படியே வரம் தருவேன் என்றார். அதன்படி நீரிலும் நிலத்திலும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மனிதனாலும் மிருகத்தாலும் அசுரனாலும்  பகலிலும் இரவிலும் எந்தவகையான ஆயுதத்தாலும் நான் மரணமடையக் கூடாது என வரம் கேட்டான். பிரம்மாவும் அப்படியே தந்தேன் எனக் கூறி மறைந்தார்.மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனை திரும்பினான் ஹிரண்யகசிபு.
அங்கே தன் மனைவி கயாது இந்திரனுக்குப் பயந்து ஆசிரமத்தில் மறைந்து வாழ்வதை அறிந்து கடுங்கோபம் கொண்டான். அத்துடன்  தனக்கு மகன் பிறந்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியும் கொண்டான்.
மனைவி மகனுடன் அரண்மனை திரும்பி சிறப்பாக விழா கொண்டாடினான். அதைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரையும் சிறைபிடித்தான். நவகிரஹங்களையும் தனக்கு அடிமைகளாக்கினான்.
சாகாவரம் பெற்றதால் தானே இறைவன் எனக் கூறிக்கொண்டான்.இனி எல்லாக் கோயில்களிலும் தனது உருவச் சிலையே வைக்கப்பட்டு அதற்கே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படவேண்டுமென ஆணை பிறப்பித்தான். ஈரேழு  பதினான்கு உலகங்களுக்கும் தானே அதிபதி என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான்.
அவன் மகன் பிரகல்லாதன்  ஐந்து வயது பாலகனானான். கல்வி பயில்வதற்காக ஆசிரமத்திற்கு அனுப்ப முடிவு செய்தான் ஹிரண்யன்.
அசுரகுரு சுக்ராச்சாரியாரின் புதல்வர்கள் சண்டா அம்ர்கர் என்ற இருவரிடமும் தன புதல்வனை அனுப்பிவைத்தான். அவர்களிடம் கல்வி பயிலும் போது ஆசிரியர் " ஓம் நமோ ஹிரண்யாய நமஹா" என்று கற்பித்தார். ஆனால் ஹரியே இறைவன் என்று கூறிய பிரகல்லாதன் "ஓம் நமோ நாராயணாய நமஹா" என்றுஅனைவருக்கும்   
போதித்தான். ஆசிரியர் ஹிரண்யகசிபுவின் ஆணைக்கு அஞ்சினர்.எவ்வளவு சொல்லியும் பிரகல்லாதன் "ஹரியே இறைவன்" எனக் கூறி வந்தான்.
நாட்கள் கழிய தன மகனின் கல்வி பற்றி அறிய விரும்பினான் ஹிரண்யன். பிரஹல்லாதனை அரண்மனைக்கு வரவழைத்தான்.அன்புடன் மகனைத் தன் தொடை மீது அமர்த்திக் கொண்டான்.மகனைக் கொஞ்சிய ஹிரண்யன்" மகனே! உலகிற்கெல்லாம் தலைவன் யார்?" எனக்கேட்டான். தன் மகன் வாயால் "தாங்களே தலைவர்" எனக் கூறுவதைக்  கேட்க விரும்பினான் ஹிரண்யன்.
சற்றும் தயங்காத பிரகல்லாதன் "ஹரியே உலகிற்கு தெய்வம். அவரே சகலமும் ஆவார்." எனக்கூறக்கேட்ட ஹிரண்யன் மிகுந்த கோபம் கொண்டான்.பலவிதமாகக்  கேட்டும் அவன் மாறாமல் அதையே கூறினான்.ஹிரண்யகசிபுவின் கோபம் எல்லை மீறியது."இவனை யானைக் காலில் வைத்து அழித்து விடுங்கள் " என ஆணை இட்டான்.
அதன்படி . பிரகல்லாதனை தரையில் உட்காரவைத்து யானையை ஏவினர் காவலர். ஆனால் அந்த யானை வணங்கி அவனைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு அரண்மனை சென்றடைந்தது.
அனைவரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.ஹிரண்யன் மிகவும் கோபம் கொண்டான்."இவனை நடுக்கடலில் வீசிவிட்டு வாருங்கள்" என ஆணை பிறப்பித்தான்.
நடுக்கடலில் வீசப்பட்ட பிரகல்லாதனை மகாலட்சுமி பாதுகாப்பாகக் கரை சேர்த்தாள். மீண்டும் பிரகல்லாதன் அழுது கொண்டிருந்த தன் தாயிடம் வந்து சேர்ந்தான். கயாது மகனைக் கட்டி முத்தமிட்டாள்.
இதைக் கேள்வியுற்ற ஹிரண்யன் மனைவி மூலமாக மகனுக்கு உபதேசம் செய்யச் சொன்னான். இறைவன் நாமத்தைத் தவிர வேறு  பெயரை கூற மறுத்துவிட்டான் பிரகல்லாதன்.
சிலநாட்கள் கழிந்தன. இப்போதாவது மகன் மனம் மாறியிருப்பானா 
என ஆசையுடன் மகனை அழைத்தான் ஹிரண்யன். ஆனால் எப்போதும் போல் நாராயண நாமத்தையே உச்சரித்தான் பிரகல்லாதன்.
மிகவும் கோபம் கொண்ட ஹிரண்யன் அவனை  மலையுச்சியிலிருந்து வீசுமாறு உத்தரவிட்டான்.
காவலர் அதேபோல் மலையுச்சியிலிருந்து வீசினர். பிரகல்லாதன் கீழே விழுமுன் அவனை மகாலட்சுமி தாங்கிக் கொண்டாள். காவலர் அரண்மனை வந்து சேரும் முன்னே பிரகல்லாதன் அரண்மனை அடைந்தான்.
ஹிரண்யகசிபு திகைத்தான். இவனை ஒவ்வொரு முறையும் காப்பாற்றும் ஹரி எங்கே ஒளிந்திருப்பான் எனத் தேட முனைந்தான்.
கடைசி முறையாக தன் மகனுக்கு ஆலகால விஷத்தைக் கொடுக்குமாறு கயாதுவிடமே கொடுத்தான். தாயே மகனுக்கு விஷத்தைக் கொடுப்பதா எனத துடித்தாள் கயாது.
ஆனால் மன்னனின் ஆணையை மீறமுடியாமல் அழுதுகொண்டே விஷத்தைக் கொடுத்தாள் கயாது.
தன் மகன் கையில் விஷக் கிண்ணத்தைக் கொடுத்தவள் மயங்கி விழுந்தாள்.
புன்னகையுடன் நாராயணன் நாமத்தைக் கூறிக் கொண்டே ஆலகால விஷத்தைப் பருகினான் பிரகல்லாதன்.என்ன ஆச்சரியம் அந்த பயங்கரமான விஷம் அவனுக்கு அமுதம்போல ஆகியது. இதைக் கண்ட ஹிரண்யன் மிகவும் கோபத்துடன் "உன் ஹரி கோழை போல மறைந்து நின்று உன்னைக் காப்பாற்றுகிறானே,அவனை நேரில் வரும்படி சொல். அனைத்து உலகங்களுக்கும் அவன் தலைவனா நான் தலைவனா பார்க்கிறேன்" என்று கர்ஜித்தான். 
"எங்கேயடா உன் ஹரி? எங்கே மறைந்துள்ளான்?" 
"அவர் எங்கும் இருப்பார்.எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பார்."
ஹிரண்யன் ஒவ்வொரு இடமாகக் காட்டி இங்கே இருப்பானா என்றபடியே கேட்டுக் கொண்டே வந்தான். கடைசியில் ஒரு தூணைக் காட்டி இங்கே இருப்பானா என்று கேட்டான் ஹிரண்யன்.
"ஹரி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்."
கைகளைக் குவித்தபடி கூறினான் பிரகல்லாதன். பெருஞ் சிரிப்புடன் அந்தத் தூணைத்  தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான் ஹிரண்யன்.பெருஞ்சத்தத்துடன் தூணைப் பிளந்து கொண்டு பயங்கர சிங்க முகத்துடன் நரசிங்க உருவத்தில் நாராயணன் குதித்தான்.
அந்த உருவத்தைப் பார்த்தவுடன் ஹிரண்யன் "பலே மகனே! நான் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ஹரியைக் காட்டிக் கொடுத்தாயடா"என்று கூறி தன் கதையைத் தூக்கி ஹரியை அடித்தான். மறுகணம் அந்த கதாயுதத்தை இரண்டாக ஒடித்து வீசினான் ஹரி. அப்போது மாலை நேரம். நரசிங்கம்ஹிரன்யனைத  தன் கரங்களில் தூக்கிக் கொண்டு வாயிற்படியில் அமர்ந்தான் அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு தன் இரு கரங்களிலும்  உள்ள கூறிய நகங்களால் ஹிரண்யனின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குடலை அள்ளி மாலையாகப் போட்டுக் கொண்டான்.
ஹிரண்யகசிபு வதம் செய்யப் பட்டான்.
அவன் பிரம்மாவிடம் கேட்ட வரத்தின் படியே பகலும் இரவுமற்ற மாலை நேரத்தில் மனிதனும் மிருகமும் அல்லாத நரசிங்க உருவத்தில் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லாது வாயிற்படியில் நிலத்திலும் நீரிலும் இல்லாது மடியில் ஆயுதங்கள் ஏதுமின்றி கை நகங்களால் அவனை சம்ஹாரம் செய்தான் நாராயணன்.
.கோபத்தின் உச்சத்தில் இருந்த நரசிங்கத்தை தேவர்கள் மலர் மாறி பொழிந்தும் ஸ்தோத்திரங்கள் செய்தும் குளிர்வித்தனர். ஆயினும் சினம் தணியாத ஹரியை பிரகல்லாதன் அருகே சென்று பிரார்த்தனை செய்தான்.அவனை அருகே பார்த்தபின் சினம் தணிந்து அருள் பார்வை பார்த்தான் ஹரி. பிரகல்லாதனை மடியில் வைத்து ஆசி வழங்கினான்.
பல ஆண்டுகள் நாட்டை ஆண்டபின் வைகுண்டம் வருவாயாக என அருளி மறைந்தான். பிரகல்லாதன் இளம் சிறுவனாக  இருந்தாலும் இறைபக்தியில் சிறந்திருந்த காரணத்தால் இறைவன் வரிசையில் வைத்துப் போற்றப் படுகிறான். இவனே கலியுகத்தில் மகான் ஸ்ரீ ராகவேந்திரராகப் பிறவி எடுத்து பக்தியையும் தர்மத்தையும் உலகில் பரப்பியவன்.

Saturday, August 28, 2010


44th story. jayavijayar.

                            ஜெயவிஜயர் .
இறைவனைக் காண நம்பிக்கையே சிறந்த வழி என்பதை பிரகல்லாதனின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது. ஒருமுறை மகாவிஷ்ணுவின் பாதங்களை வருடியபடி மகாலட்சுமி அமர்ந்திருந்தாள். அப்போது சனகாதி முனிவர்கள்  நாராயணனைக் காண வந்தனர்.அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள் வைகுண்டத்தின் காவலர்களான ஜெயனும் விஜயனும்.
அதனால் கோபமடைந்த சனகாதி முனிவர்கள் பூலோகத்தில் பிறவி எடுத்து உழல்வீர்களாக என்று சபித்தனர்.அதைக்கேட்டு வருந்திய ஜெயனும் விஜயனும் . நாராயணனிடம் தஞ்சமடைந்தனர். நாராயணரும் அவர்களுக்கு அபயம் அளித்தார். "பக்திமான்களாக இருந்து ஏழு பிறவிகளில் என்னை வந்து அடைவீர்களா? எனக்குப் பகைவர்களாக இருந்து மூன்றுபிறவிகளில் என்னை  வந்து அடைவீர்களா?" என்று கேட்டார், ஜெயா விஜயர்கள் பதை பதைத்தனர். ஏழு பிறவிகள் தங்களை விட்டுப் பிரிந்திருப்பதா? எங்களால் முடியாது. தங்களின் பகைவனாக இருந்தாலும் விரைவில் வைகுந்தம் வருவதையே விரும்புகிறோம் " என்றனர். நாராயணரும் அவ்வாறே வரமளித்தார்.
அதன் காரணமாகவே முதல் பிறவிஹிரண்யகசிபு,ஹிரன்யாக்ஷகன் எனவும், இரண்டாவது பிறவி இராவணன், கும்பகர்ணன், எனவும் மூன்றாவது பிறவி சிசுபாலன், தந்தவக்ரன் எனவும் பிறவிகள் எடுத்து இறைவனை பகைவனாக எண்ணி வாழ்ந்தனர்.அசுரவம்சத்தில் பிறந்து  தேவாதி தேவர்களை அடிமைப் படுத்தி ரிஷிகளைக்கொடுமைப் படுத்தினர். இவர்களில் முதல் பிறவியில் பிறந்த ஹிரன்யாக்ஷகன் மிகவும் கொடுமைவாய்ந்தவனாக இருந்தான்.
தேவர்களையும் ரிஷிகளையும் கொடுமைப் படுத்தியதோடு தானே இறைவன் எனவும் கூறிக் கொண்டான். மூன்று லோகங்களுக்கும்தானே அதிபதி என்று முடிவு செய்து அனைவரையும் ஆட்டிப் படைத்தான்.
கர்வம் மிகக் கொண்டு வைகுண்டத்திற்கு ஹரியைத்தேடிப்போனான். அங்கே ஹரியைக் காணாமல் எங்கே ஹரி என்று எங்கும்தேடினான்.பாபாத்மாவான ஹிரன்யாக்ஷகன் கண்களுக்கு ஹரி தெரிவானா? எங்கு தேடியும் ஹரியைக் காணாத கோபத்தில் பூமியை தூக்கி பாதளத்தில் அழுத்தினான்.பூமிதேவி வருந்தி  ஹரியை சரணடைந்தாள்.
 நாராயணன் வராக அவதாரம் எடுத்தான். பூமியைத் தன் மூக்கினால் தூக்கி அதன் இடத்தில் நிறுத்தினான். ஹிரன்யாக்ஷகன் கோபத்துடன் நாராயணன் மீது பாய்ந்தான். அவனுடன் போரிட்டு அவனைவதம்செய்தான் நாராயணன்.
ஹிரண்யகசிபு தன் தம்பி வருவான் எனக் காத்திருந்தான். அவன் வதம் செய்யப்பட்ட செய்தி கேட்டு வெகுண்டான். தன் தம்பியைக் கொன்ற ஹரியைத் தேடிச் சென்றான். எங்கும் ஹரியைக் காணாமல் திகைத்தான்.சாகாவரம் பெற்றாலே ஹரியுடன் போரிட்டு அவனை வெல்ல முடியும் என முடிவு செய்தான்.ஆகவே பிரம்மாவைக் குறித்து கடுந் தவம் மேற்கொண்டான். பலஆண்டுகள் தவமியற்றினான் ஹிரண்யகசிபு. அவன் மனைவி கயாது என்பவள் தேவர்கள் அரசனான இந்திரனுக்கு அஞ்சி நாரதரின் ஆசிரமத்தில் மறைந்து வாழ்ந்தாள். நாரதர் நாராயண. நாராயண, எனக் கூற அதைக் கேட்டுக் கொண்டிருந்த கயாது உறங்கி விட்டாள். உடனே அவள் வயிற்றிலிருந்த குழந்தை ம்...ம்...எனக் கேட்கத் தொடங்கியது. நாரதர் மனம் மகிழ்ந்தார். இக்குழந்தையால் உலகில்  பக்தி மணம் பரவும் என ஆசி கூறினார். அவனே பிரகல்லாதன் என்னும் அவதார புருஷன். விடாமுயற்சியும் நம்பிக்கையும் நினைத்ததை முடித்து வைக்கும் என்ற உண்மையை இவர்களின் வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பிரஹல்லாதனின் வரலாற்றை அடுத்த கதையில் பார்ப்போம்.

Tuesday, August 10, 2010


43rd story. sitrerumbum uyir kaakkum.

                                       சிற்றெறும்பும் உயிர் காக்கும்.
ஒரு கோவில் மாடத்தில் புறா ஒன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. தினமும் அந்தப் புறா இரை தேட அருகே இருக்கும் காட்டுப் பக்கம் போகும். அந்தக் காட்டில் ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது.அதன் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்தப் பழ மரத்தைத் தேடி புறா செல்வது வழக்கம். இப்படி புறா தினமும் பறந்து செல்வதை ஒரு கழுகு கவனித்து வந்தது. அதன் நாவில் எச்சில் ஊறியது. இந்தக் கொழுத்த புறாவைச் சாப்பிட்டால் எத்தனை ருசியாக இருக்கும் என்று நினைத்தது அந்தக் கழுகு. ஒருநாள் புறா அந்தக் காட்டை நோக்கிச் செல்லும் போது கழுகு பார்த்து விட்டது. புறாவைக் கழுகு துரத்த ஆரம்பித்தது. உணவுக்காகத் துரத்தும் கழுகை விட உயிருக்காகப் பறக்கும் புறாவின் வேகம் அதிகமாயிருப்பதில் ஆச்சரியம் இல்லையல்லவா?
எனவே புறா கழுகிடமிருந்து தப்பி கோவில் மாடத்தில் புகுந்து ஒளிந்து கொண்டது. ஏமாந்து போன கழுகு இன்னொரு சமயத்திற்காகக் காத்திருந்தது.
பொழுதும் விடிந்தது.வழக்கம்போல புறா இரை தேட காட்டிற்குச் சென்றது. வழக்கமான ஆலமரத்திற்குச் சென்று கிளையில் அமர்ந்திருந்தது.
அப்போது தற்செயலாகக் கீழே பார்த்தது. ஒரு சிற்றெறும்பு  நதியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியபடியே தத்தளித்துக் கொண்டிருப்பதைப்  பார்த்தது.
புறாவிற்கு அந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே மரத்தில் இருந்த இலைகளில் பெரிய இலையாகப் பறித்து நீரில் போட்டது. அந்தஎறும்பும்  புறாபோட்ட இலையின் மேல் ஏறிக் கரை சேர்ந்தது. ஓடிச் சென்று புற்றுக்குள் நுழைந்தது. புறாவும் மகிழ்ச்சியாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
சிலநாட்கள் கழிந்தன.வழக்கம்போல புறா ஆலமரத்திற்குச் சென்றது. அங்குள்ள பழங்களின் கொட்டைகளைச் சாப்பிட்டது. இந்தப் புறாவைக் கவனித்த வேடன் ஒருவன் புறாவைக் கொல்ல வில்லில் அம்பைப் பூட்டினான்.புறா தப்பிப் பறக்க நினைத்தபோது மேலே கழுகு பறப்பதைப் பார்த்துவிட்டது.பறக்காவிட்டால் வேடன் அம்பை விட்டுக் கொன்று விடுவான். பறந்து சென்றால் கழுகு கொன்று விடும். இன்று நமக்குச் சாவு நிச்சயம் என்று புறா எண்ணியது. கடைசி முறையாகக் கடவுளை வேண்டிக் கொண்டது. திடீரென்று "ஆஆ..."என்று வேடன் அலறும் சத்தம் கேட்டது. புறா கண்களைத் திறந்து பார்த்தது. தன்னைக் குறி பார்த்த வேடன்தன் கால்களைப்  பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் விட்ட அம்பும் குறி தவறி புறாவைப் பிடிக்கப் பறந்து கொண்டிருந்த கழுகின்மேல் பட்டு அதைக் கொன்று விட்டது. சரியான சமயத்தில் வேடனின் காலை எறும்பு  கடித்ததால்தான் அவனது குறி தவறித் தன் உயிரும் காப்பாற்றப் பட்டது. அத்துடன் தன் உயிரைப் பறிக்கக் காத்திருந்த கழுகினால் வந்த  ஆபத்தும் நீங்கியது.
மனதுக்குள் எறும்புக்கு நன்றி சொல்லிக் கொண்டே சந்தோஷமாகப் பறந்து சென்றது அந்தப் புறா. சிறு எறும்புதானே என நினைக்கலாகாது. அதுகூட ஒரு உயிரைக் காக்கமுடியும் என்பதைத தெரிந்து கொள்ள வேண்டும். எனவே யாரையும் எளியர் என்று எண்ணலாகாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் யாரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
Blog: http://chuttikadhai.blogspot.com

Saturday, August 7, 2010


42nd story.myththunanai viduviththa kadhai.

                                               மைத்துனனை விடுவித்த கதை.
கிருஷ்ண தேவ ராயருக்கு பழங்கள் என்றால் மிகுந்த விருப்பம். ஒரு பெரிய பழத்தொட்டத்தையே பராமரித்து வந்தார். அந்தத் தோட்டத்துப் பழங்களை மிகவும் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். அந்தத் தோட்டத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தார் .மாம்பழம், அன்னாசி, பப்பாளி,கொய்யா எனப் பலவகைப் பழ மரங்களை  அந்தத் தோட்டத்தில் வளர்த்து வந்தார் .எப்போதும் அத்தோட்டத்தில் பழங்கள் பழுத்துத் தொங்கிக்கொண்டே இருக்கும்.ஒரு நாள் தோட்டக்காரன் தோட்டத்தில் பழுத்த பழங்களைக் கொண்டு வந்து ராயர் முன் வைத்தான். அப்போது தெனாலிராமன் மன்னருடன்உரையாடிக்கொண்டு இருந்தான். எனவே அப்பழங்களில் சிலவற்றை மன்னர் ராமனுக்கும் கொடுத்தார். அவற்றை ராமன் தன் வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். அந்த சமயம் ராமனின் மைத்துனன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனுக்கும் சில பழங்களை ராமன் சாப்பிடக் கொடுத்தான்.
ராமனின் மைத்துனன் பெயர் மல்லையா. அவன் ராமன் கொடுத்த பழங்களைச் சாப்பிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.
ராமனிடம் அவன் "அத்தான், இதுபோன்ற ருசி மிகுந்த பழங்களை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை. ஏது இந்தப் பழங்கள்?" என்று விசாரித்தான்.
"இது நமது அரசருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து பறித்த பழங்கள். மன்னர் இவற்றை மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார்.  இன்று நீ செய்த அதிருஷ்டம் எனக்குக் கிடைத்த பழங்களை உண்ணும் பேறு பெற்றாய்."என்று பதிலளித்தான் ராமன்.
"அத்தான், ஊரில் அப்பா,அம்மா, இன்னும் மற்றவர்களுக்கும் இதைக் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் மகிழ்வார்கள். இன்று இரவு யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் பழங்களைப் பறித்துச் செல்கிறேன்." 
ராமன் பதறினான்."அடப்பாவி! கெடுத்தியே குடியை. அப்படியேதும் செய்து விடாதே. மாட்டிக்கொண்டால் மரண தண்டனை நிச்சயம். பிறகு உன்னை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நல்லபடியாய் ஊர் போய்ச் சேர்." என்று எச்சரித்தான்.
ஆசை வெட்கமறியாது பயமும் அறியாது என்பதற்கிணங்க மல்லைய்யாவை ஆசை பிடித்துத் தள்ளியது.  இரவு நேரம். அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். மல்லையா மெதுவாக எழுந்தான். யாரும் அறியா வண்ணம் அரசரின் பழத் தோட்டத்திற்குள் நுழைந்தான். பழங்களைப் பறித்து மூட்டையாகக் கட்டி கொண்டு மெதுவாக நடந்தான். ஆனால் இலைகளின் ஓசையால் காவலர் விழித்துக் கொண்டு மல்லைய்யாவைப  பிடித்துக்  கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கையும்  களவுமாகப் பிடிபட்ட மல்லையாவுக்கு மன்னர் மரண தண்டனை விதித்தார். இதையறிந்த ராமனும் அவன் மனைவியும் ஓடிவந்தனர்.
இவர்களைப் பார்த்தவுடன் கிருஷ்ண தேவராயர் "ராமா! நீ உன் மைத்துனனைக் காப்பாற்ற வந்துள்ளாய். ஆனால் நீ சொன்னபடி நான் சத்தியமாகச் செய்யப் போவது இல்லை."என்றார்.
ஒரு நிமிடன் சிந்தித்த ராமன் "தங்கள் சத்தியத்தை கண்டிப்பாகக் காப்பாற்றுவீர்களா அரசே?" என்றான்.
"சத்தியமாக. உன் சொல்படி நான் செய்யவே மாட்டேன்."
"அப்படியானால் என் மைத்துனனை கொன்று விடுங்கள் அரசே!"
கிருஷ்ண தேவராயர் திகைத்தார். ராமன் சொல்வது போல் செய்வது இல்லை என வாக்களித்து  விட்டாரே!  எனவே மல்லைய்யாவை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை மன்னருக்கு. மல்லைய்யாவை விடுதலை செய்தார். தன் சொல்லையே தனக்கு சாதகமாகப பயன்படுத்திக் கொண்ட ராமனின் திறமையைப்  பாராட்டினார் மன்னர்.
ஒருநன்மை ஏற்படுமானால் எந்த ஒரு  சொல்லையோ செயலையோ நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே உண்மையான அறிவு என்பதை இந்தக் கதையிலிருந்து அறியலாம்.




Monday, August 2, 2010


41st story.

                              அரங்கன் அழைத்த அன்பன்.
வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற தலைநகரம் உறையூர்.சோழ சாம்ராஜ்யத்தின் சிறப்புமிக்க நகரமாகத் திகழ்ந்தது இந்நகரம். இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயமே. சோழநாடு சோறுடைத்து என்னும் வாக்கிற்கிணங்க நெல்லும் கரும்பும் ஏராளமாக விளையும் நாடு சோழநாடு. அந்நகரில் ஒருநாள் சூரியன் உதிக்கும் போதே மிகப் பிரகாசமாக உதித்தான். பறவைகள் எல்லாம் உற்சாகமாகப்  பாடின. நன்னிமித்தங்கள் தோன்றின.
அந்நகரில் வாழ்ந்த பாணர் குலத்தில் பிறந்த ஒரு பாணன் நெல் வயலின் பக்கமாக நடந்து சென்றான். திடீரென்று ஒரு குழந்தை அழுகுரல் கேட்டது. நெற்பயிரை விலக்கிப் பார்க்க அங்கே பயிரின் ஊடே ஒரு அழகிய ஆண்  குழந்தை கிடக்கக் கண்டு அதை எடுத்து உச்சி மோந்தான். பிள்ளையில்லாத தனக்கு ஆண்டவனே அளித்த பரிசு என மிக மகிழ்ந்தான். அவன் மனைவியும் தனக்கு அமுதமே கிடைத்தது போல மகிழ்ந்தாள். திருமால் அருளால்கிடைத்த குழந்தை என மிகவும் சீராட்டிப்   பாராட்டி வளர்த்தனர். இவரும் தாம் புகுந்த குலத்துக்கு ஏற்ற யாழ் பாடலில் சிறப்புற்று விளங்கினார். எனவே பாணர் குலத்தார் யாவரும் இவரை பாணர் குலத் தலைவர் என ஏற்றுக் கொண்டனர். இவரின் சிறப்புக் கருதி இவரை திருப்பாணர் என அழைத்தனர்.
திருப்பாணர் திருவரங்கத்துத் திருமாலான திருவரங்கன் மீது மாறாத அன்பு பூண்டிருந்தார். அவர் மீது பாக்கள் பாடவேண்டும் என்ற எண்ணத்தினால் திருவரங்கம் வந்து சேர்ந்தார். இவர் தன்னைத் தாழ்ந்த குலத்தினன் என்று எண்ணிய காரணத்தால் திருவரங்கத்திற்குள் அடியிடாமல் காவிரியாற்றின் தெற்குக் கரையிலேயே நின்று அரங்கனின் திருக்கோயிலின் கோபுரத்தை தரிசித்து வந்தார். 
சிலநாட்கள் கழிந்தன. தினமும் வைகறையில்காவிரிக் கரையில் நின்று "ரங்கா, ரங்கா," என்றழைத்ததோடு கேட்பவர் உள்ளம் குளிரவு ம் இறைவன் மனம் மகிழவும் பக்தியால் உள்ளம் பரவசமடையப் பாடினார். இவ்வாறு தினமும் இவரது சேவை தொடர்ந்து நடந்தது.
ஒருநாள் வைகறை நேரம் திருப்பாணர் கையில் யாழ்மீட்டிக்கொண்டு இறைவனைக் குறித்துப் பாடிக் கொண்டு இருந்தார். அப்போது உலோகசாரங்க முனிவர் காவிரியில் நீராடித் திருமண் அணிந்து துளசி மாலையும் தாமரைமணி மாலையும் அணிந்து கொண்டு கையில் பொற்குடத்தை ஏந்திக் கொண்டு அங்கு வந்தார். திருவரங்கன் திருவாராதனம் செய்யும் பொருட்டு காவிரியில் நீர் கொண்டு போக அவ்விடம் வந்தவர் திருப்பாணர் தன்னை மறந்து பாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அவரை "ஏய்! தூர விலகிப் போ" என்று கூக்குரலிட்டார். உலகையே மறந்து இறைவனைப் பற்றிப் பாடிக்கொண்டிருந்த திருப்பாணனின்  காதில் இவரது கூக்குரல் விழவில்லை. அதனால் இவரைத் தூர விலக்குவதற்காக உலோகசாரங்கர் ஒரு சிறு கல்லை எடுத்து இவர் மீது வீசினார். அது பாணரின் நெற்றியில் பட்டது. தெளிவு பெற்ற பாணர் தன் எதிரே முனிவர் நிற்பதைப் பார்த்து உடல் நடுங்க கரம் குவித்து அவ்விடம் விட்டகன்றார்.
பின்னர் முனிவர் பொற்குடத்தில் நீர் முகந்து கொண்டு கோவிலுக்கு வந்தார். அரங்கனுக்கு அந்நீரை அபிஷேகம் செய்யும் பொருட்டு அருகில் சென்றார். அருகே சென்றவர் திடுக்கிட்டார். அரங்கநாதனின் நெற்றியிலிருந்து ரத்தம் பெருகி வந்துகொண்டிருந்தது. இச்செய்தி மன்னருக்கும் தெரிவிக்கப் பட்டது. உடனே மன்னன் மந்திரி பிரபுக்கள் புடைசூழ அங்குவந்து  சேர்ந்தான். இறைவனின் நெற்றியிலிருந்து குருதி பெருகக் காரணம் அறியாது அதைப் போக்கவும் வழியறியாது அனைவரும் திகைத்தனர்.
மன்னனோ "இறைவா! அரங்கப் பெருமானே அடியேனோ என்நாட்டு மக்களோ அறியாது ஏதேனும் பிழை செய்திருந்தால் பொறுத்து அருளவேண்டுகிறேன்.இக்குறை தீர வழிஎதேனும் காட்டியருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்..
அனைவரும் கவலையுடன் சென்றனர்.
இறைவன் திருப்பாணருக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டான் . அத்துடன் அவரது அன்பையும் பெருமையையும் உலகுக்கு உணர்த்த வும் முடிவு செய்தான். இறைவனின் திருவருள் பெற அன்பே முதன்மையானது என்பதை உலகத்தார் அறியச் செய்ய வேண்டும் என்று திருவுளம் கொண்டான்.
அன்று இரவு உலோகசாரங்க முனிவரின் கனவில் தோன்றிய இறைவன் "எனது அன்பனாகிய திருப்பாணனை அவன் இழிந்தவன் என எண்ணாமல் அவனை உன் தோள் மீது தூக்கி எம்முன் கொணர்க" எனக் கட்டளையிட்டான்.
இக்கனவை எண்ணி வியப்படைந்த உலோகசாரங்க முனிவர் இறைவன் கட்டளைப் படியே திருப்பாணனின் இருப்பிடம் சென்றார். பல அன்பர்கள் புடைசூழ முனிவர் வருவதைக் கண்டு திகைத்தான் பாணன். அவரை நெருங்கிய முனிவர் தன் தலைமேல் கரங்குவித்துஅவரை வணங்கி  இறைவனின் கட்டளையைக் கூறித் தன் தோள் மீது அமருமாறு வேண்டிக்கொண்டார்.ஆனால் பாணன் மறுத்தான். இழிந்த குலத்தவன் இறைவனின் கோயிலின் உள்ளே வருவது தகாது. அத்துடன் உம்மைத் தீண்டுவதும் தகாது. உம தோள் மீது ஏறுவதா! அபசாரம் என்று மறுத்தான்.ஆனால் முனிவர் அரங்கனின் கட்டளைக்குக் கீழ்ப் படிதலே அடியார்க்குக் கடன் என்பதை எடுத்துக் கூறி திருப்பாணனை சம்மதிக்கவைத்தார்.
உலோகசாரங்க முனிவர் பாணரைத் தன் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு இறைவன் முன் நிறுத்தினார். திருவரங்கன் சன்னதியில் நின்ற திருப் பாணன் அவனது அழகிய கோலத்தைப் பாடல்களாகப் புனைந்தான். மக்கள் அனைவரும் திருப்பாணாழ்வார் வாழ்க என்று வாழ்த்தினர்.
மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இறைவனின் திருவடியை  வணங்கி அதிலேயே மறைந்து பேரின்ப நிலையை அடைந்தார்.
திருப்பாணாழ்வார்.
உலோகசாரங்க முனிவர் மனதுக்குள் அழுதார். வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு சேவை செய்து வந்த தனக்கு நற்கதி கிட்டவில்லையே என ஏங்கினார்." உயர்ந்த குலத்தொன் என்ற எண்ணம் சிறிதும் இன்றிதிருப்பாணரைத தூக்கிக் கொண்டு வந்தமையால் உன் அன்பு உள்ளம் புரிகிறது. அதனால் உன்னையும் ஆட்கொண்டோம்" என்று அவருக்கும் பேரின்ப நிலையை அருளினார் இறைவன்.
இறைவன் அன்புருவானவன் அன்பு எங்கிருக்கிறதோ அங்கு இறைவன் இருப்பான். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது இறைவன் முன் கிடையாது.
அன்பே சிவம். அன்பே ஹரி. அன்பே சக்தி.என்ற உண்மையை வளரும் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்பாணாழ்வார் வரலாற்றிலிருந்து இந்த உண்மை நமக்குப் புரிகிறதன்றோ!






Monday, July 26, 2010


40th story.purandharadasar.

                                           புரந்தரதாசர்.
பண்டரிபுரத்துக்கு அருகே ஒரு சிற்றூர். அவ்வூரில் மாதவராவ் என்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி ரத்தினாபாய் என்ற மாதரசி. அவர்களுக்குப் பல ஆண்டுகளாக மகப்பேறு இல்லாதிருந்தது.   திருப்பதி சீனிவாசனை வேண்டிக்கொண்டனர் தம்பதிகள். ஏழுமலையான் தயவால் அவர்களுக்கு ஓர் அழகிய ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு சீனிவாசன் என்றே பெயரிட்டு அருமையாக வளர்த்தனர். தக்க வயதில் அவனுக்கு ஒரு லேவாதேவிக் கடை வைத்துக் கொடுத்து வியாபாரம் தொடங்கி வைத்தனர். லக்ஷ்மி பாய் என்ற பெண்ணையும் மணம் முடித்து வைத்தனர்.சீனிவாசன் இசைக் கலையிலும்  கல்வி கேள்விகளிலும் வல்லவனாக இருந்தான்.
அதேபோல் அவனது லோபித்தனமும் அதிகமாகவே இருந்தது. வட்டிக்கடையில் வியாபாரம் வளர வளர சீனிவாசனின் பேராசையும் வளர்ந்தது.
அதிக வட்டி வட்டிக்கு வட்டி என்று வாங்கலானான். அவனது பெற்றோரின் மறைவுக்குப் பின்  பூஜை ,பஜனை அன்னதானம் எல்லாம் மறைந்து போயின. எப்போதும் பணம் பணம் என்று அவன் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. லக்ஷ்மிபாய் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருந்தாள். கண்ணீர் விடுவதைத் தவிர கருணை உள்ளம் கொண்ட அந்த மாதரசிக்கு  வேறு வழி ஒன்றும் தெரியவில்லை.
ஓராண்டு கழிந்தது. லக்ஷ்மி பாயிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ருக்மணிபாய் என்று பெயரிட்டு அருமையாக வளர்த்து வந்தாள். பெண் குழந்தை பிறந்த பின்பும்  சீனிவாசனின் குணம் மாறவில்லை.
ஒருநாள் அந்தக் கிராமத்து வீதியில் ஒரு கிழவர் சீனிவாசனின் வீட்டைத் தேடிக்கொண்டு வந்தார். எதற்கு என்று கேட்டவர்களிடம் "கொஞ்சம் பணஉதவி வேண்டும் அவர் பணக்காரர் அல்லவா. அதுதான் அவரைத் தேடி வந்தேன்." என்றார். அனைவரும் கிழவரைப் பார்த்து "ஐயோ  பாவம்" என்று பரிதாபப் பட்டனர் .கிழவர் சீனிவாசனின் வட்டிக்கடையைத் தேடிச்சென்று அவன் முன் நின்றார். அவரது பஞ்சைக் கோலத்தைக் கண்ட சீனிவாசன் இவரிடம் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்தவர்" யாரையா நீர்? என்ன விஷயம்?" என்றார்.
கிழவர் தன் வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து ஆசிகூறினார். "ஓஹோ வியாபாரம் என்று நினைத்தேன் யாசகமா? இங்கு ஒன்றும் கொடுப்பதற்கு இல்லை போய் வாரும்" என்று குனிந்து எழுதத் தொடங்கினார்.கிழவர் விடாக் கண்டராக நின்றார்.                                                                                                             "என் மகனுக்கு உபநயனம செய்விக்கவேண்டும்.ஓராயிரம் வராகன் கொடுத்தால் உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சினார். ஒன்பது கோடிக்கு அதிபதியான சீனிவாசன் நவகோடி நாராயணன் என்று பாராட்டப்பட்டவன் தன்னிடம் பைசாகூட இல்லை என்று கடுமையாகப் பேசி அவரை வெளியில் பிடித்துத் தள்ளிவிட்டான். மக்கள் அவரைப் பார்த்துப் பரிதாபப் பட்டனர். லோபகுணமும் பேராசையும் உள்ள இவனா தருவான்.என்று பேசிக்கொண்டனர். 
கிழவர் விடுவதாயில்லை.தள்ளாடியபடியே அவரது வீட்டினுள் நுழைந்தார். வீட்டினுள் ஒரு முதியவர் வருவதைப் பார்த்த லக்ஷ்மிபாய் அவரை வரவேற்று வணங்கினாள். அவளிடம் தான் அவள் கணவனிடம் பட்ட அவமதிப்பைப் பற்றிச் சொல்லி வருந்தினார். "அம்மா! உன் கணவர் என்னை விரட்டி விட்டார். நீயாவது என்துயரைப் போக்குவாயா?  என் மகனுக்கு உபநயனம் செய்து வைக்கவேண்டும். அதற்கு ஆயிரம் வராகன் வேண்டும்.அதைக் கொடுத்து உதவி செய்வாயா அம்மா?"
அவரது வேண்டுதலைக் கேட்ட லக்ஷ்மிபாய் மனம் உருகினாள். தன்னிடம் பணம் இல்லையே என்று வருந்தினாள். ஆனாலும் அந்த ஏழைப்  பிராமணருக்கு உதவ வேண்டும் என்று எண்ணினாள். தன் தாய் வீட்டுச் சொத்தான தன் மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள். "பெரியவரே! என் மூக்குத்தியைத்  தந்துள்ளேன். இது இரண்டாயிரம் வராகன் பெறும். என் கணவருக்குத் தெரிந்தால் ஆபத்து. அதனால் வேற்றூருக்குச் சென்று விடுங்கள்."  என்றபோது பெரியவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்  கொண்டு அவளை ஆசீர்வதித்தார்.
பின்னர் வேகமாக நடந்து சீனிவாசனின் கடையை அடைந்தார்.
மீண்டும் வந்துவிட்ட முதியவரைக் கோபத்துடன் பார்த்தான் சீனிவாசன். ஆனால் மிகவும் அலட்சியத்துடன்  அவன் முன் அமர்ந்து கொண்டார் முதியவர். தனது கையிலிருந்த மூக்குத்தியைக் காட்டி,"இதன் விலை என்ன சொல். இதற்குரிய விலையைக் கொடு." என்றார் அதிகாரமாக.
மூக்குத்தியைத் திரும்பத் திரும்பப் பார்த்த சீனிவாசனுக்கு சந்தேகமாக இருந்தது. தன் மனைவியின் மூக்குத்திபோல இருக்கிறதே என்று நினைத்தார். கொஞ்ச நேரம் அமர்ந்திருங்கள் எனச் சொல்லிவிட்டு தன் வீட்டினுள் நுழைந்தான் சீனிவாசன். திடீரென்று வந்துள்ள கணவனைப் பார்த்துத் திகைத்தாள் லக்ஷ்மிபாய்.
அவளைப் பார்த்த சீனிவாசன் "லக்ஷ்மி, உன் மூக்குத்தியைக் கொண்டுவா." என்றவுடன் நடு நடுங்கிவிட்டாள் லக்ஷ்மி. என்ன செய்வது என்று அறியாமல் துளசி மாடத்தின்முன் சென்று வேண்டிக்கொண்டாள். "தாயே,கணவருக்குத் தெரியாமல் காரியம் செய்து விட்டேன். இப்போது என்னைக் காப்பது உன் பாரம் அம்மா. இல்லையேல் என் உயிரை எடுத்து விடு." என்று மனமுருக வேண்டிக்கொண்டாள்.அப்போது அவள் முன் இருந்த பஞ்சபாத்திரத்துள் அவளது மூக்குத்தி மின்னியது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு தேவிக்கு நன்றி சொல்லிவிட்டு கணவரிடம் ஓடோடி வந்து அந்த மூக்குத்தியைக் கொடுத்தாள் லக்ஷ்மிபாய். அதைப் பார்த்த சீனிவாசனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அது அவளுடைய மூக்குத்தி அன்று. அதைவிட உயர்ந்த வைரம். அத்தகைய வைரத்தை அவன் அதுநாள் வரை வாங்கியதே இல்லை. தன் மனைவியிடம் இந்த மூக்குத்தி ஏது. என்னிடம் உண்மையைச் சொல் என்று கேட்டான். லக்ஷ்மி பயத்துடன் தான் ஒரு பிராம்மணருக்குத தன்  மூக்குத்தியை தானமாகக் கொடுத்த செய்தியைச் சொன்னாள் .பின் இறைவனை வேண்ட அவன் பாத்திரத்துள் மூக்குத்தியைப் போட்ட செய்தியையும் கூறினாள். அதைக் கேட்ட சீனிவாசன் "லக்ஷ்மி அந்த பிராமணர் கடையில் உட்கார்ந்து இருக்கிறார். வா இருவரும் அவரை சேவிக்கலாம் என்று சொல்லி மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு கடைக்கு ஓடினார். அங்கே அந்தக் கிழவரையும் காணோம். அவன் பூட்டிவிட்டுச் சென்ற பெட்டியில் இருந்த மூக்குத்தியையும் காணோம். வந்தவன் இறைவனே என்பதைப் புரிந்துகொண்டான் சீனிவாசன். மெய் மறந்து  நெஞ்சுருக "என்னை ஆட்கொள்ள வந்த தெய்வமே!ஒரு முறை காட்சி தரமாட்டாயா? என்று ஏங்கித்  தவித்தது அவனது உள்ளம்.
அன்று வரை தான் செய்த தவறுகளையெல்லாம் எண்ணிப் பார்த்து வெட்கியது  அவன்உள்ளம்.  இனி இறைவனின் சேவை தவிர வேறொன்றும் தன் வாழ்வில் கிடையாது என்று முடிவு செய்துகொண்டான் சீனிவாசன். இறைவனின் பேரருள் அவன் உள்ளத்தை முழுவதுமாக மாற்றி விட்டது.
சீனிவாசனின் மனமாற்றம் ஊர்முழுவதும் பரவியது. இறைவனின் கருணையை எண்ணிப் புகழலாயினர். சீனிவாசனின் பெட்டியில் இருந்த செல்வமனைத்தும் கோவில் குளம்  சத்திரம் நந்தவனம் வேத பாடசாலை எனப் பலவகையாக உருவெடுத்தன. 
செல்வமனைத்தையும் தானம் செய்த சீனிவாசன் தன் கையில் தம்பூரி மீட்டியவாறு தெருவில் இறங்கி நடந்தான். கற்புக்கரசியான லக்ஷ்மிபாயும் அவன் மக்களும் உடன் நடந்தனர். செல்வமனைத்தையும் இறைவன் பணிக்கே செலவிட்டு அதே ஊரில் உஞ்சவிருத்தியை மேற்கொண்டான் சீனிவாசன். இசையில் வல்லவனான சீனிவாசன் பல பாடல்களை இயற்றினான். ஒருமுறை திருப்பதி சென்று இறைவனை வணங்கி அவன் மீது பாடல் புனைந்து வாழ்ந்தான். அப்போது அங்கிருந்த புரந்தரி என்ற தாசியின் இல்லத்தில் விருந்தினராகத் தங்கினர்.
ஒருநாள் நடுஇரவில் புரந்தரி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு வீணையை ஏந்திக் கொண்டு வெளியே சென்றாள். விடிந்தபின் இல்லம் வந்தாள்.மறுநாளும் அப்படியே சென்றாள். அடுத்தநாள் அவள் செல்லும்போது அவளை வழிமறித்து அவள் செல்லும் இடத்தைப் பற்றிக் கேட்டான் சீனிவாசன் .கோயிலுககுச் சென்று இறைவன் முன் பாடுவதாகவும் இறைவன் தம்முன் ஆடுவதாகவும் கூறவே  தானும் வருவதாகக் கூறினான்.
புரந்தரியும் அவனை உடன் அழைத்துச் சென்றாள். ஒரு தூண் மறைவில் நிற்க வைத்து இறைவனுடன் ஆடியும் பாடியும் மகிழ்ந்த அந்தக் காட்சி அற்புதமாக இருந்தது சீனிவாசனுக்கு.இறைவன் மறைவிலிருந்த சீனிவாசனை அழைத்து ஆசி கூறினார்.அவர் பாதங்களில் வீழ்ந்து எழுந்து பேச நா எழாது நின்றான் சீனிவாசன்.
அவனை புரந்தரியிடமே ஞானோபதேசம் பெறச் சொல்லி புரந்தரதாஸ் என்று பெயரிட்டு பாடல்களை இசைக்குமாறு அருள் செய்து மறைந்து போனான்.
அன்று முதல்  வாய் ஓயாது பாடல் இசைத்தவண்ணம் இருந்தார் புரந்தரதாசர். இறைவன் இவர் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்.தாசர் தம் வாழ்நாளில் சுமார் நான்கு லக்ஷத்து எழுபத்து ஐந்தாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இவை தாசர் பதங்கள் எனவும் தேவர் நாமா எனவும் போற்றப் படுகின்றன. தாசர் முக்தியடைந்த நன்னாளை ஹம்பி க்ஷேத்திரத்தில் இன்றும் கொண்டாடுகின்றனர்.
புரந்தரதாசர் நாரதரின் அவதாரம்.நாரதரைப் பூலோகத்தில் பிறவி எடுக்கச் செய்து அவரைத் தடுத்தாட்கொண்டு தாசருக்கு உபதேசித்தது போல நமக்கெல்லாம் உபதேசிக்கிறான் இறைவன். மனிதன் எத்தனை தவறுகள் செய்தாலும் அவன் மனம் திருந்தி தெய்வ வாழ்க்கையைப் பெறமுடியும் என்ற உண்மையை நாம் உணர்ந்து தவறு செய்திருந்தால் திருத்திக்கொண்டு நல்லமுறையில் வாழவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக